பின்பற்றுபவர்கள்

21 அக்டோபர், 2008

தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா ?

தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது, கிருஷ்ணனின் மகனான நரகா அசுரனை அவன் மனைவி பூமாதேவி அழித்தாள் என்றும் இறக்கும் தருவாயில் மனம் மாறியவன் கொடியவன் ஒருவன் அழிந்தான் என்று நினைத்து அந்த நாளை மகிழ்வு கொண்ட்டாட்மாக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுதல் வைத்தான் என்றும் அதனால் தீபாவளிக் கொண்டாடப்படுவதாக தென் இந்திய சமய நம்பிக்கையில் சொல்லப்படும் ஒரு கதை.

தென் இந்தியாவில் தான் தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்த கதை சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் இராவணன் அழிந்த பிறகு தசராவிற்கு பிறகு கொண்டாடப் படுவதாகவும், இரவணன் இறப்பைக் கொண்டாடுவது தான் தீபாவளி என்று சொல்லப்படுகிறது. பல்வேறு தேவித் திருக்கதைகளில் ஒவ்வொரு தேவியரும் எந்தந்த அரக்கர்களை அழித்தார்கள் என்று சொல்லி, தசரா பண்டிகை கொண்டாடப்படும் போதும் அசுரர் கதைகள் சொல்லப்படுகிறது.

பசு நெய்க்கு மாற்றாக ஆமணக்கு விதையை விளக்கெறிக்க பெளத்தர்கள் கண்டுகொண்டு அதனை பயன்படுத்த தொடங்கிய நாளே தீபாவளி என்றும் போதிப் பண்டிகைதான் போகிப் பண்டிகையாக பெயர் மாற்றப்பட்டது என்றும் போகி குறித்து மற்றொரு கதையும் சொல்லுவார்கள்.

சமண மதத்தில் கடைசியாக வந்த 23 ஆம் திருத்தங்கர் மகாவீரர் நிர்வானம் (முக்தி) அடைந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக சமணர்கள் கருதுகின்றனர்.

*****

மதங்களே இல்லாத கால கட்டங்களில் ஐம் பூதவழிபாடுகள் இந்தியாவெங்கிலும் இருந்திருக்கிறது. ஆரியர்கள் அக்னியை வழிபட்டார்கள் என்றும், திராவிடர்களும் தீயை வழிபட்டு இருக்கிறார்கள் என்பதை 'வேள்வி' என்னும் தூய தமிழ்ச்சொல் சங்ககாலம் முற்பட்டே புழக்கத்தில் இருப்பதை வைத்து அறிய முடிகிறது. (தீ > தீபம் > தீபாவளி - தீப ஆவளி அதாவது தீபங்களின் வரிசை என தமிழ் சொல்லுக்கும் தீபாவளிக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது என்பதை அறிய முடிகிறது) ஆரியர் திராவிட வேறுபாடு இன்றி தீபாவளி என்பது பொதுவாகக் கொண்டாடிய ஒரு பண்டிகையாகத் தான் இருக்க முடியும் என்றே நினைக்கிறேன். சமண மதம் உருவாகியபோது சமணர்கள் தீபாவளி கொண்டாட்டத்துக்கு மகாவீரர் முக்தி நாளை காரணமாக்கிக் கொண்டார்கள், பவுத்தர்கள் ஆமணக்கு எண்ணையை காரணமாக்கிக் கொண்டார்கள். ஆரியர்கள் இராமயணக் கதையைக் காரணமாக்கிக் கொண்டார்கள், தென் இந்தியாவில் நரகாசுரன் கதையைக் காரணமாக்கிக் கொண்டார்கள், தென்னிந்தியாவில் இந்த வலிந்த காரணம் கூட சைவம் வைணவம் பரவத் தொடங்கிய போதுதான் காரணமாக்கப்பட்டு இருக்க வேண்டும், அதற்குமுன் வேறு காரணம் இருந்திருக்க வேண்டும்.

*********

இப்போது மற்றவற்றைப் சற்று பார்ப்போம், இந்திய சமய தத்துவங்கள் அனைத்தும் ஆரியர்களுடையது அதனால் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எப்போதும் ஒலிக்கிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததாகச் சொல்லப்பட்டக் காலத்தில் அவர்களிடம் உருவ வழிபாடு என்று எதுவும் கிடையாது, இந்திரன் என்னும் அரசன் தவிர்த்து ஆரிய வேதங்களில் உருவ வழிபாட்டைப் போற்றியதாகக் தெரியவில்லை. ப்ரம்ம தத்துவமே, பரப் பிரம்மே உயர்ந்தது என்று கூறும் ஆரிய வேள்வி வழிபாட்டு வழியில் உருவவழிபாடு என்பது மிகவும் கீழான வழிபாடு. இந்திய தெய்வங்கள் ஆரியமய மாக்கப்பட்டது என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அவை அனைத்தும் ஆரியர்களுடையது என்று கூறும் திராவிட(வரட்டு) வாதம் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், ஆரிய வருகைக்கு முன்பு நாம் பண்பாடோ, தெய்வவழிபாடோ, பண்டிகைகளோ அற்றவர்களாக இருந்தோம் என்று வாக்கு மூலம் கொடுப்பது போலத்தானே இருக்கிறது.

இன்றைக்கும் ஒரிஜினல் ஆரியர்கள் என்று பார்த்தால் இந்தியாவெங்கும் 5 விழுக்காட்டுக்கும் குறைவே, இவர்கள் திராவிடர்களை அழித்தார்கள், திராவிடர்களைத்தான் அசுரர், அரக்கன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள், மேலும் அவர்களால் அழிக்கப்பட்டோம் என்று அறிந்தே நம் அதைக் கொண்டாலாமா ? என்றும் கேட்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ?

ஆரியர்கள் திராவிடர்களை அரக்கர் அசுரன் என்று சொன்னது உண்மை என்று வைத்துக் கொண்டாலும், ஆரிய பெண்கள் போராடி அசுரர்களை அழித்தார்கள் என்று சொன்னால் அது அபத்ததிலும் அபத்தம் தானே. நரகாசுரன் என்பவன் ஆண், அவனை அழித்தாகச் சொல்லப்படுவது பெண் தெய்வம் பூமாதேவி. எந்த காலத்தில் ஆரிய பெண்கள் போர் படையை நடத்திச் சென்றார்கள் ? அது எந்த வேதத்தில் மறைமுகமாகச் சொல்லப்பட்டு இருக்கிறது ? தசரா பண்டிகையின் போதும் பெண் தெய்வங்கள் ஒவ்வொன்றும் ஒரு அரக்கனை, அசுரனை அழித்தாகச் சொல்லப்படுவதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், அசுரன், அரக்கன் என்று சொல்வதையெல்லாம் திராவிடர்களைத் தான் என்று சொல்வதை நிராகரிக்கிறேன். அசுரர்களும், இராமயணத்தில் சொல்லப்பட்ட இராவணனும் திராவிடன், தமிழன் என்று நம்பினீர்கள் என்றால் இலங்கைக்கு நடுவே இன்றும் இராமர் பாலம் இருப்பதாக திரிக்கும் கதைகளைக் கூட நிராகரிக்க முடியாது என்பது ஏன் இவர்களுக்குத் தெரியவில்லை ?

தீபாவளிக் கொண்டாட்டத்திற்குச் சொல்லப்படும் பல்வேறு கதைகளில் அசுரனை அழித்தாகச் சொல்லப்படுவதும் ஒரு கதைதான். அதை ஆழமாக ஆராய்ந்தது போல் ஆரிய - திராவிட போர் என்றும் திராவிடர்களை வெற்றிக் கொண்ட நாள் தீபாவளி, அதனால் தீபாவளியைக் கொண்டாடுவதை மானமுள்ள தமிழன் கொண்டாடுவதைத் தவிர்க்க வேண்டும் என்று சொல்லும் மிதமிஞ்சிய உணர்வு பூர்வ உரைகளையெல்லாம் நிராகரிக்கிறேன்.

மனித வாழ்விலும் மனதிலும் சூழ்ந்திருக்கும் பல்வேறு இருள்கள் நீங்கி ஒளி (வெளிச்சம்) பெறவேண்டும் என்று உருவகத்தில் கொண்டாடப் படுவதே தீபாவளி என்று நினைக்கிறேன். இந்தியாவில் இந்திய சமயத்தினர் அனைவருமே கொண்டாடும் போது தமிழர்களுக்காக புதுக் கதைகள் சொல்லப்பட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை நிராகரிக்கச் சொல்வதில் ஒப்புதல் இல்லை. தமிழர்களும் இந்தியாவில் ஒரு அங்கம் தானே.
இணைந்து, இசைந்து இந்திய சமயத்தினராக இருப்பவர்கள் தானே. தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவது என்னைப் பொருத்து தவறே அல்ல. கதைகள் பிடிக்காதவர்கள் கதைகளை நிராகரிக்கலாம். எல்லாமே பார்பன சூழ்ச்சி என்று சொல்லி இந்திய சமய பண்பாடுகளை அனைத்தையும் நிராகரிப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்.

******

வாழ்வில் இருள் சூழ்ந்துள்ள ஈழத் தமிழ்மக்களுக்கும், மன இருள் சூழ்ந்து உள்ளோர்க்கும் இந்த தீபாவளியில் வெளிச்சம் கிடைக்கட்டும் !

அனைருக்கும் இனிய தீபத் திருநாள் வாழ்த்துக்கள் !

83 கருத்துகள்:

வெண்பூ சொன்னது…

நல்ல கருத்துக்கள் கோவி.கண்ணன். தைரியமாக சொன்னதற்கு பாராட்டுக்கள்..

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

வேண்டுமென்றே இக்கதைகள் கூறப்படுகிறது என்றால் யாருக்கு என்ன இலாபம்?

தீபத் திருநாளை எளிமையாக கொண்டாடினால் யாரும் எதுவும் சொல்லன் போவதில்லை... அதிலும் சாங்கியம் சடங்கு, படையலிடுதல் என ஏகபட்ட சிந்தனைக்கு ஒவ்வாத நிகழ்வுகள் ஏன் உள்ளன?

நல்லதந்தி சொன்னது…

இன்னிக்குத் தான் கோவிசார்,இந்து சமயத்தைப் பற்றி தெளிவான ஒரு அலசலை எழுதியிருக்கிறார்.ஸ்வாமி ஓம்கார் போன்றவர்களின் சேர்க்கையாக இருக்குமோ?.தவறாக எழுதியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.என் மனதில் பட்டதை எழுதினேன்.

வஜ்ரா சொன்னது…

ஆரியர்கள் அக்னியை வழிபட்டார்கள், தமிழர்கள் தீயை வழிபட்டார்கள் என்கிறீர்கள். ஆரியக்கடவுள் அக்னியும் தமிழ்க்கடவுள் தீக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா ?

ஹிஹிஹி ..இரண்டுமே சுடும். :D

கடிஜோக் தவிர ஒரு சீரியஸ் திராவிடக் கேள்வி.

அப்ப, ஆரியர்களும் தமிழர்களும் ஒரே கடவுளை வணங்கும் இரண்டு பிரிவினரா?

SP.VR. SUBBIAH சொன்னது…

////மனித வாழ்விலும் மனதிலும் சூழ்ந்திருக்கும் பல்வேறு இருள்கள் நீங்கி ஒளி (வெளிச்சம்) பெறவேண்டும் என்று உருவகத்தில் கொண்டாடப் படுவதே தீபாவளி என்று நினைக்கிறேன். இந்தியாவில் இந்திய சமயத்தினர் அனைவருமே கொண்டாடும் போது தமிழர்களுக்காக புதுக் கதைகள் சொல்லப்பட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை நிராகரிக்கச் சொல்வதில் ஒப்புதல் இல்லை. தமிழர்களும் இந்தியாவில் ஒரு அங்கம் தானே.
இணைந்து, இசைந்து இந்திய சமயத்தினராக இருப்பவர்கள் தானே. தீபாவளியை தமிழர்கள் கொண்டாடுவது என்னைப் பொருத்து தவறே அல்ல.///

கொன்னுட்டீங்க தலைவரே! எழுந்திருப்பதற்கு பத்து நாட்கள் ஆகும்!:-)))

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
நல்ல கருத்துக்கள் கோவி.கண்ணன். தைரியமாக சொன்னதற்கு பாராட்டுக்கள்..
//

வெண்பூ,

பாராட்டுக்கு நன்றி !

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

//பிடிக்காதவர்கள் கதைகளை நிராகரிக்கலாம். எல்லாமே பார்பன சூழ்ச்சி என்று சொல்லி இந்திய சமய பண்பாடுகளை அனைத்தையும் நிராகரிப்பது நம்மை நாமே ஏமாற்றிக் கொள்வதற்கு ஒப்பாகும்//

Super

கோவி.கண்ணன் சொன்னது…

//VIKNESHWARAN said...
வேண்டுமென்றே இக்கதைகள் கூறப்படுகிறது என்றால் யாருக்கு என்ன இலாபம்?//

அவரவர்களுக்கு ஏற்றக் கதைகளைக் கூறிக் கொண்டார்கள் அதில் தவறு இருப்பது போல் தெரியவில்லை.

//தீபத் திருநாளை எளிமையாக கொண்டாடினால் யாரும் எதுவும் சொல்லன் போவதில்லை... அதிலும் சாங்கியம் சடங்கு, படையலிடுதல் என ஏகபட்ட சிந்தனைக்கு ஒவ்வாத நிகழ்வுகள் ஏன் உள்ளன?//

சாங்கிய சடங்கை விடுங்க, அன்னிக்கு 10000 ஆடுகள் கூடுதலாக விற்குமே. கொண்டாட்டங்கள் கடன் வாங்கியாவது கொண்டாடனுமாம், அப்பதான் பணப்புழக்கமும், மனப்புழுக்கமும் குறையுமாம். பட்டிமன்ற ராஜா தான் சொன்னார்.

:)

10:24 PM, October 21, 2008
//

கோவி.கண்ணன் சொன்னது…

//நல்லதந்தி said...
இன்னிக்குத் தான் கோவிசார்,இந்து சமயத்தைப் பற்றி தெளிவான ஒரு அலசலை எழுதியிருக்கிறார்.ஸ்வாமி ஓம்கார் போன்றவர்களின் சேர்க்கையாக இருக்குமோ?.தவறாக எழுதியிருந்தால் மன்னித்துக் கொள்ளவும்.என் மனதில் பட்டதை எழுதினேன்.
//

நல்லதந்தி சார்,

நமக்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால் எல்லாம் சரியாகவே இருப்பதாக தெரிவது மன விஸ்கி.

ஸ்வாமி ஓம்கார் ? அவருக்கும் இந்த பதிவுக்கும் என்ன சம்பந்தம் ?

எனக்கு நெருக்கமாக பல ஆன்மிகப் பதிவர்கள் இருக்கின்றனர். அதில் ஸ்வாமி ஓம்காரும் ஒருவர். அது அனைவருக்குமே தெரியும்.

இங்கே விவரித்து எழுதி இருப்பதை Saturday, October 21, 2006 அன்று சுறுக்கமாக தீபாவளியின் புராணங்கள் எதுவாக இருந்தால் என்ன ? என்ற தலைப்பில் ஒரு கவிதையாக எழுதி இருக்கிறேன். படித்துப் பார்த்துவிட்டு இன்று எழுதியதில் எதாவது மாற்றம் இருக்கிறதா என்று சொல்லுங்க.

:)

பாராட்டிச் சொல்ல உங்களுக்கு மனது வராவிட்டாலும், ஊகமாக தெரிவித்த உங்கள் கருத்திற்கும் நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//Vajra said...
ஆரியர்கள் அக்னியை வழிபட்டார்கள், தமிழர்கள் தீயை வழிபட்டார்கள் என்கிறீர்கள். ஆரியக்கடவுள் அக்னியும் தமிழ்க்கடவுள் தீக்கும் என்ன ஒற்றுமை தெரியுமா ?


ஹிஹிஹி ..இரண்டுமே சுடும். :D

கடிஜோக் தவிர ஒரு சீரியஸ் திராவிடக் கேள்வி.

அப்ப, ஆரியர்களும் தமிழர்களும் ஒரே கடவுளை வணங்கும் இரண்டு பிரிவினரா?
//

Vajra,
இரண்டிலும் உணவு அக்கினி மற்றும் தீயால் சமைக்கப்படுவது என்றாலும் ஆரிய பவனுக்கும் முனியாண்டி விலாசுக்கும் உள்ள ஒற்றுமையைச் சொல்லிவிட்டால் உங்கள் கேள்விக்கான விடை எளிது. :)

நல்லதந்தி சொன்னது…

//நமக்கு ஏற்றுக் கொள்ளும் வகையில் இருந்தால் எல்லாம் சரியாகவே இருப்பதாக தெரிவது மன விஸ்கி.//

:))
///பாராட்டிச் சொல்ல உங்களுக்கு மனது வராவிட்டாலும், ஊகமாக தெரிவித்த உங்கள் கருத்திற்கும் நன்றி !//
பதிவைப் படித்து விட்டு அசந்து மெய்மறந்து போனதாலே பாரட்டி எழுத நினைச்சதை எழுத மறந்துட்டேன்!.தப்பா நினைக்காதீங்க சார்.பதிவுக்கு என் மனம் மகிழ்ந்த பாரட்டுகள்! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//SP.VR. SUBBIAH said...
கொன்னுட்டீங்க தலைவரே! எழுந்திருப்பதற்கு பத்து நாட்கள் ஆகும்!:-)))
//

சுப்பையா ஐயா,

10 நாள் டூ மச், இன்னும் 5 நாள் தான் தீபாவளிக்கு இருக்கிறது. நீங்கள் தீபாவளி கொண்டானும் ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...


Super
//

Radhakrishnan ஐயா,

பாராட்டுக்கு நன்றி !

பெயரில்லா சொன்னது…

//அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா?/

சரியான கேள்வி கோவி.

//மனித வாழ்விலும் மனதிலும் சூழ்ந்திருக்கும் பல்வேறு இருள்கள் நீங்கி ஒளி (வெளிச்சம்) பெறவேண்டும் என்று உருவகத்தில் கொண்டாடப் படுவதே தீபாவளி //

ஆமாங்க அப்படி நெனைச்சுத்தான் செலவானாலும் பரவாயில்லன்னு கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.

//இந்தியாவில் இந்திய சமயத்தினர் அனைவருமே கொண்டாடும் போது தமிழர்களுக்காக புதுக் கதைகள் சொல்லப்பட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை நிராகரிக்கச் சொல்வதில் ஒப்புதல் இல்லை.//

திராவிடநாடுங்கிறது ஆந்திரா, கர்னாடகா, கேரளம் எல்லாம் செர்ந்ததுதானே? அங்கு ஏன் இந்தக் கதைகள் எடுபடுவதில்லை?

வடுவூர் குமார் சொன்னது…

எல்லோர் வாழ்விலும் வெளிச்சம் வரட்டும்.
நெய்யில் இருந்து ஆமணக்கு விஷயம் இப்போது தான் தெரியவந்தது.
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

RATHNESH சொன்னது…

நானெல்லாம் தீபாவளி கொண்டாடுவதே கிடையாது. புத்தாடை அணிந்து சத்தம் வராத பட்டாசு வெடித்து மத்தாப்பு கொளுத்தி பலகாரம் பரிமாறி உண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன்,நண்பர்களைச் சந்திப்பதோடு சரி.

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
நானெல்லாம் தீபாவளி கொண்டாடுவதே கிடையாது. புத்தாடை அணிந்து சத்தம் வராத பட்டாசு வெடித்து மத்தாப்பு கொளுத்தி பலகாரம் பரிமாறி உண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன்,நண்பர்களைச் சந்திப்பதோடு சரி.
//

RATHNESH,

தீபாவளி கொண்டாட்டமெல்லாம் சிறுவர்களுக்குத்தான், 16 வயது வரைக் கூட தீபாவளிக் கொண்டாட்டங்கள் மகிழ்ச்சியாகத்தான் இருந்தது.

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
எல்லோர் வாழ்விலும் வெளிச்சம் வரட்டும்.
நெய்யில் இருந்து ஆமணக்கு விஷயம் இப்போது தான் தெரியவந்தது.
உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.
//

வாழ்த்துக்கு நன்றி குமார் அண்ணா !

நாமக்கல் சிபி சொன்னது…

//கொன்னுட்டீங்க தலைவரே! எழுந்திருப்பதற்கு பத்து நாட்கள் ஆகும்!:-)))//

இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்!

(ஜால்ரா அல்ல)

நாமக்கல் சிபி சொன்னது…

//நானெல்லாம் தீபாவளி கொண்டாடுவதே கிடையாது. புத்தாடை அணிந்து சத்தம் வராத பட்டாசு வெடித்து மத்தாப்பு கொளுத்தி பலகாரம் பரிமாறி உண்டு தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுடன்,நண்பர்களைச் சந்திப்பதோடு சரி.
//

இத்தனைக்கும் நேரம் இருக்கா என்ன?

லீவு நாளில் மெதுவா (அதிகாலை 10/11 மணிக்கு, மத்தநாளில் அர்த்த ராத்தியியிலே எழுந்து ஆஃபீஸ் கெளம்பணும்) எழுந்து டிவி பார்த்துகிடே டிஃபன்(!?), லஞ்ச் முடிச்சாலே ராத்திரி ஆயிடும். அதுக்குள்ளே அடுத்த நாள் ஆபீஸ் போகணுமேன்னு கவலை வந்துடும்

நாமக்கல் சிபி சொன்னது…

//பதிவைப் படித்து விட்டு அசந்து மெய்மறந்து போனதாலே பாரட்டி எழுத நினைச்சதை எழுத மறந்துட்டேன்!.தப்பா நினைக்காதீங்க சார்.பதிவுக்கு என் மனம் மகிழ்ந்த பாரட்டுகள்! :)
//

இதையும் நான் வழிமொழிகிறேன்!

கோவி.கண்ணன் சொன்னது…

மேலே இருந்த லிங்க் வேலை செய்யவில்லை.

இங்கே விவரித்து எழுதி இருப்பதை Saturday, October 21, 2006 அன்று சுறுக்கமாக தீபாவளியின் புராணங்கள் எதுவாக இருந்தால் என்ன ? என்ற தலைப்பில் ஒரு கவிதையாக எழுதி இருக்கிறேன்.

குடுகுடுப்பை சொன்னது…

திருவிழாக்கள் மகிழ்ச்சி தரும் ஒன்று, தீபாவளியும் அதில் ஒன்று.தமிழர்களை ஆரியர்,திராவிடர் என்று பேசி காழ்ப்புணர்ச்சியை தூண்டுவதை விட்டுவிட்டு ஒற்றுமையாக இருக்க ஏதாவது செய்வோம்.

நல்ல பதிவு.

மணிகண்டன் சொன்னது…

கோவி சார்,

ரொம்ப நல்ல பதிவு. என்னால இந்த அளவுக்கு விளக்கம் தெரியாமலே கூட ஒரு பண்டிகையை கொண்டாட முடியும் !

இங்க இந்த கேள்வி வேணாம் தான் ! இருந்தாலும் கேக்கனும்ன்னு தோனுது.

2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ?

தமிழ்நாடுல ப்ராமின் சதவீதம் எவ்வளவு ? உங்களோட வேறு சில கருத்துக்கும் இதே யார்ட்ச்டிக் யூஸ் பண்ணி இருக்கீங்களா ? எங்க கேட்டாலும் 2000 வருஷம் / 2000 வருஷம்ன்னு தான சொல்லிக்கிட்டு இருக்கீங்க. 2000 வருஷமா 2 சதவீதம் மக்கள் தொகைய கொண்ட ஒரு சமுதாயம் மற்ற அத்தன சமுதாயத்தையும் எதிர்ப்பே இல்லாம அமுக்கி வைக்க முடிஞ்சபோது !

குமரன் (Kumaran) சொன்னது…

இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் கோவி.கண்ணன்!!

இந்த இடுகையைப் படித்ததும் உங்கள் மற்ற இடுகைகளைப் படிக்கும் போது தோன்றாத ஒரு நல்லுணர்வு தோன்றி முகத்தில் புன்சிரிப்புடன் இருக்கிறேன். (உள்ளதை நேர்மையா சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க). :-)

அங்கும் இங்கும் ஒரு சில கருத்துகளில் மறுப்பு சொல்லும்படி இந்த இடுகையும் அமைந்திருந்தாலும் மொத்தத்தில் ஒத்துப்போவதால் 'மன விஸ்கி' தரும் மயக்கத்தில் ஒன்றும் சொல்ல வரவில்லை. :-)

இரத்னேஷுக்குச் சொன்ன விடையில் எனக்கு மறுப்பு உண்டு. அதை மட்டும் சொல்லுகிறேன். எனக்கு இன்றைக்கும் தீபாவளி பட்டாசு வெடித்துக் கொண்டாடப் பிடிக்கும். அதற்காகவே ஜீலையிலேயே (அமெரிக்க விடுதலை நாளுக்கு இங்கே பட்டாசு கிடைக்கும்) பட்டாசு வாங்கி வைத்துவிட்டேன். சென்ற சனிக்கிழமையே வார இறுதி தீபாவளிக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. பெரியவர்களும் சிறுவர்களுமாக ஒரு இருபது பேர் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தோம். :-) இன்னும் இருக்கின்றன. :-)

ஹேமா சொன்னது…

நன்றி கோவி கண்ணன்.நல்லதொரு தீபாவளி விரிவாக்கம்.இதற்கு நடுவிலும் எங்களையும் நினைத்து ஒரு வரி.மனதிற்கு இதமாக இருக்கிறது.நன்றி.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

சி தயாளன் சொன்னது…

நன்றி..

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்

துளசி கோபால் சொன்னது…

மனுசர்கள் எல்லாரும் அவுங்கவுங்க மனசில் இருக்கும் கெட்ட எண்ணங்களை ( இதுதாங்க அரக்கன்) ஒழிச்சுக்கட்டி, நல்லவனா இருக்க முடிவு செஞ்சுக்கிட்டதை விளக்கு ஏத்திக் கொண்டாடுவதுதான் தீபாவளி.

அனைவருக்கும் தீபாவளிக்கான இனிய வாழ்த்து(க்)கள்.

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//"தீபாவளியை தமிழர்கள் கொண்டாடலாமா ?"//

கோவியாரே!
தீபாவளியை சும்மா அலசு அலசுன்னு அலசி இருக்கிறீர்கள்.
வெடியெல்லாம் வெடிக்கபோறதில்லை.

தலைப்பிற்கு விடை இருக்கும் என்று தேடிப் பார்த்தேன்.
கிடைக்கவில்லை.
அதனால் எனது முன்பதிவு!
பொங்கல் வாழ்த்துக்கள்!!

IlayaDhasan சொன்னது…

// இந்திய தெய்வங்கள் ஆரியமய மாக்கப்பட்டது என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம்,//


என‌க்கு சுத்த‌மாக‌ புரிய‌வில்லை ...ஆரிய்ர்க‌ளிட‌ம் உருவ‌ வ‌ழிபாடு இல்லை என்று சொல்லிவிட்டு பின் உருவ வழிபாடு ஆரியர்களுக்கு கடை நிலை வழிபாடு அதனால் இந்திய தெய்வங்கள் ஆரிய‌ ம‌ய‌மாக்க‌ப்ப‌ட்ட‌து என்பதை ஏற்றுக் கொள்ளலாம் என்று சொல்வதின் அர்த்தம் ... திராவிடர்களிடம் ஆரம்பத்தில் உருவ வ‌ழிபாடு இல்லை என்பதை ஒத்து கொள்கிறீர்கள் என்று தானே அர்த்தம்...அப்ப்டி யென்றால் ஆரியர்கள் பல கட்டு கதைகளை சொல்லி உருவ வழிபாட்டைப் புகுத்தி அதில் ஒரு ப்குதியாக இந்த தீபாவளி பண்டிகையை புகுத்தி இருக்க்லாம் என்று ஏன் எடுத்து கொள்ளக் கூடாது?

பட்டுக்கோட்டை பாரி.அரசு சொன்னது…

கோவி!

அடையாளங்கள், குறியீடுகள் வழியான அரசியல் பற்றிய விழிப்பு ஏதுமின்றி எழுதப்பட்ட... பார்ப்பானிய தன்மையுள்ள பதிவு!

//
அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ?
//

என்ன அறிவு? என்ன அறிவு?

மாவீரன் அலக்சாண்டர் என்றழைப்பட்டவன் உடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
வெறும் சில நூறு குதிரை வீரர்கள்.

வரலாற்றை புரிந்துக்கொள்ள... பகுத்தல், தர்க்கம், காரணம் ஆய்தல் அப்புறம் கொஞ்சம் கணக்கு போடணும்...

சின்ன நிகழ்வை மட்டும் சொல்லிவிட்டு போயிடுறேன்...
பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம்(அதிரை) என்ற ஊர் உள்ளது.
அங்கே ஒரு இசுலாமியர் இருந்தார் (ராவுத்தர் என்று நினைவு).
அவருக்கு அந்த பகுதியில் இருக்கிற அத்தனை கிராமங்களும் ஏறக்குறைய முத்துபேட்டை வரை அடங்கி பயந்து இருந்தார்கள்...
ராவுத்தரிடம் இருந்தது வெறும் பத்து குதிரை வீரர்கள் மட்டுமே!
ஆனால் மொத்த கிராமங்களின் மக்கள் தொகை பல ஆயிரம்...
இங்கே எண்ணிக்கை முக்கியமில்லை!

கடைசியாக...
இங்கிலாந்து மக்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
அவர்கள் எப்படி உலகத்தில் மிக அதிகமான நிலபரப்பை காலணியாதிக்கத்தில் வைத்திருந்தார்கள்?

ஆட்காட்டி சொன்னது…

அப்ப எதுக்கு இந்தக் கட்டுக் கதைகள். எல்லாம் நம்ம ஏமாத்த தானே? அதை கடாசிடுவமா?

IlayaDhasan சொன்னது…

//ஆரிய வருகைக்கு முன்பு நாம் பண்பாடோ, தெய்வவழிபாடோ, பண்டிகைகளோ அற்றவர்களாக இருந்தோம் என்று வாக்கு மூலம் கொடுப்பது போலத்தானே இருக்கிறது.
//
ஆரம்பத்தில் திராவிடர்களிடம் உருவ வழிபாடு இல்லாத போது, ஆரிய கடவுளை அல்லது அவன்/அவள் அரக்கர்களை அழித்த‌ செயலை ஒரு பண்டிகையாக கொண்டாட அவசியம் ஏன் என்பது தானே கேள்வி ஒழிய..திராவிடர்கள் பண்டிகையே கொண்டாடவில்லயா என்று கேட்பது ஒரு அபத்தமே...

Robin சொன்னது…

//அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ? //
அன்றைக்கு இரண்டு விழுக்காடுதான் ஆரியர்கள் இருந்தார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்?

Rajaraman சொன்னது…

நான் உங்களை சில பின்னூட்டங்களில் கடுமையாக திட்டியிருக்கிறேன். மன்னிக்கவும். இப்போது உங்களின் யதார்த்தமான பதிவுக்கு மனப்பூர்வமாக என் பாராட்டுக்களை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். அது என்ன இவ்வளவு தெளிவுள்ள நீங்கள் சமயங்களில் செந்தழல் ரவி போன்று கண்மூடித்தனமாக எழுதுகிறீர்கள். மேலும் திரும்பவும் சொல்கிறேன் நான் பிராமணன் இல்லை. ஆனால் இந்து சமய பற்றுள்ள, தாய் மொழி பற்றுள்ள ஒரு இந்திய பிரஜை.

Rajaraman சொன்னது…

கோவி சார், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நம் பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் மேலும் உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் நம் தமிழ் நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. மிக்க நன்றி..

மீன்துள்ளியான் சொன்னது…

///சமண மதத்தில் கடைசியாக வந்த 23 ஆம் திருத்தங்கர் மகாவீரர் நிர்வானம் (முக்தி) அடைந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக சமணர்கள் கருதுகின்றனர்.///
என் அண்ணன் இதை "மகா வீரர் இறந்த நாளை " இந்துக்கள் கொண்டாடடுவதாக கூறினான் .
ஏன்னா அவர் இருந்த வரை சமணம் தானே மக்களிடம் இருந்தது.

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

மீன்துள்ளியான் சொன்னது…

///சமண மதத்தில் கடைசியாக வந்த 23 ஆம் திருத்தங்கர் மகாவீரர் நிர்வானம் (முக்தி) அடைந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக சமணர்கள் கருதுகின்றனர்.///
என் அண்ணன் இதை "மகா வீரர் இறந்த நாளை " இந்துக்கள் கொண்டாடடுவதாக கூறினான் .
ஏன்னா அவர் இருந்த வரை சமணம் தானே மக்களிடம் இருந்தது.

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்

anujanya சொன்னது…

கோவிஜி,

உங்களிடம் எதிர்பார்க்காத பதிவு. ஆயினும் என்னளவில் இது முன்நோக்கும் பார்வை கொண்ட பதிவு. நாம் யாவருமே நமக்கு முன்முடிவுகளுடன் சொல்லப்பட்ட வரலாறுகளை முற்றிலும் நம்பி அவற்றின் அடிமையாகி விட்டோம். ஆங்கிலத்தில் History is a story as told by the victor; History is only a version என்றெல்லாம் பிரயோகங்கள் உண்டு. அந்த விதத்தில் போகவேண்டிய பாதையில் கவனம் செலுத்துவது மேலும் முக்கியம். The way forward.

உங்களின் வரலாற்று ரீதியான தர்க்கங்களை ஏற்கவோ நிராகரிக்கவோ எனது வரலாற்றறிவு இடம் தரவில்லை. எனினும், வரலாறுகளை நான் பெரும்பாலும் புறக்கணிக்கக் கற்றுக்கொண்டிருக்கிறேன், அவைகள் சொல்லப்படும் இடத்தையும், விதத்தையும் வைத்து.

உங்கள் மனத்துணிவுக்கு எனது பாராட்டுக்கள். உங்கள் புது நண்பர்களையும், மாற்றுக்கருத்துக் கொள்பவர்களையும் சமாளிக்கும் திறமை எப்போதுமே உங்களுக்கு உண்டு. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

அனுஜன்யா

கோவி.கண்ணன் சொன்னது…

//நாமக்கல் சிபி said...
//கொன்னுட்டீங்க தலைவரே! எழுந்திருப்பதற்கு பத்து நாட்கள் ஆகும்!:-)))//

இதை நான் அப்படியே வழிமொழிகிறேன்!

(ஜால்ரா அல்ல)
//
நாமக்கல் சிபி,
நான் அவருக்கு போட்ட மறுமொழியைப் பார்த்தும் வழி மொழியிறிங்களா ? வாத்தியார் தீபாவளி கொண்டாட வேண்டாமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வடகரை வேலன் said...
//அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா?/

சரியான கேள்வி கோவி.

//மனித வாழ்விலும் மனதிலும் சூழ்ந்திருக்கும் பல்வேறு இருள்கள் நீங்கி ஒளி (வெளிச்சம்) பெறவேண்டும் என்று உருவகத்தில் கொண்டாடப் படுவதே தீபாவளி //

ஆமாங்க அப்படி நெனைச்சுத்தான் செலவானாலும் பரவாயில்லன்னு கொண்டாடிக்கிட்டு இருக்கோம்.

//இந்தியாவில் இந்திய சமயத்தினர் அனைவருமே கொண்டாடும் போது தமிழர்களுக்காக புதுக் கதைகள் சொல்லப்பட்டு தீபாவளிக் கொண்டாட்டத்தை நிராகரிக்கச் சொல்வதில் ஒப்புதல் இல்லை.//

திராவிடநாடுங்கிறது ஆந்திரா, கர்னாடகா, கேரளம் எல்லாம் செர்ந்ததுதானே? அங்கு ஏன் இந்தக் கதைகள் எடுபடுவதில்லை?
//

வடகரை வேலன் அண்ணாச்சி,

நன்றி !

கதைகளில் நல்ல புனைவோ கொஞ்சமாவது உண்மையோ இருந்தால் தான் எடுபடும்,
ஒரு கற்பனைக் கதைக்கு பதிலாக எதிர்கதை எழுதினால் அதும் சொதப்பலாகத்தான் இருக்கும் !

கோவி.கண்ணன் சொன்னது…

//குடுகுடுப்பை said...
திருவிழாக்கள் மகிழ்ச்சி தரும் ஒன்று, தீபாவளியும் அதில் ஒன்று.தமிழர்களை ஆரியர்,திராவிடர் என்று பேசி காழ்ப்புணர்ச்சியை தூண்டுவதை விட்டுவிட்டு ஒற்றுமையாக இருக்க ஏதாவது செய்வோம்.

நல்ல பதிவு.

12:24 AM, October 22, 2008
//

குடுகுடுப்பை, கருத்துக்கு நன்றி ! இரண்டு பக்கமும் நிறைய பிரச்சனைகள் இருக்கு, ஆனால் யாரும் திருந்த மாட்டாங்க. :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
கோவி சார்,

ரொம்ப நல்ல பதிவு. என்னால இந்த அளவுக்கு விளக்கம் தெரியாமலே கூட ஒரு பண்டிகையை கொண்டாட முடியும் ! //

மணிகண்டன்,

ஆமாங்க, தீபாவளி கொண்டாட்டம் இந்திய சமய பொதுப் பண்டிகையாக பழக்கத்துக்கு வந்துவிட்ட ஒன்று, அதனால் அதைக் காரணங்கள் சொல்லித் தவிர்பதை ஏற்கமுடியவில்லை. காரணங்களும் கதைகளைப் போலவே ஊகமாக இருப்பதால் அவை ஏற்கத்தக்கதாக இல்லை.

//இங்க இந்த கேள்வி வேணாம் தான் ! இருந்தாலும் கேக்கனும்ன்னு தோனுது.

2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ? //

பாரி.அரசு பதில் சொல்லி இருக்கார் பாருங்க, ஆனால் அவர் சொல்லிய பதிலில் எனக்கு ஒப்புதல் இல்லை, அதனால் தான் நானும் அதே கேள்வியைக் கேட்டு இருக்கிறேன்.

//தமிழ்நாடுல ப்ராமின் சதவீதம் எவ்வளவு ? உங்களோட வேறு சில கருத்துக்கும் இதே யார்ட்ச்டிக் யூஸ் பண்ணி இருக்கீங்களா ? எங்க கேட்டாலும் 2000 வருஷம் / 2000 வருஷம்ன்னு தான சொல்லிக்கிட்டு இருக்கீங்க. 2000 வருஷமா 2 சதவீதம் மக்கள் தொகைய கொண்ட ஒரு சமுதாயம் மற்ற அத்தன சமுதாயத்தையும் எதிர்ப்பே இல்லாம அமுக்கி வைக்க முடிஞ்சபோது !//

அமுக்கி வைத்தது, ஆளுமை செய்தது இதெல்லாம் பல்லவர் காலத்துக்கு பிறகு நடந்தவையாக இருக்கலாம், அதற்கு முன்பு அப்படி எதுவும் இருந்ததாக வரலாற்றில் இல்லை. திருவள்ளுவரின் திருக்குறள் ஒன்றில் கூட தீண்டாமைப் பற்றி சொல்லவில்லை என்பதிலிருந்தே அன்று பிறப்பு வழி தீண்டாமை இருந்ததது போல் தெரியவில்லை. 2000 ஆண்டுகளாக பார்பனர் ஆதிக்கம் செலுத்தினார்கள் என்று சொல்வதெல்லாம் தகவல்பிழைகள் தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள் கோவி.கண்ணன்!!//

குமரன்,
உங்கள் இல்லத்தினருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள்.

//இந்த இடுகையைப் படித்ததும் உங்கள் மற்ற இடுகைகளைப் படிக்கும் போது தோன்றாத ஒரு நல்லுணர்வு தோன்றி முகத்தில் புன்சிரிப்புடன் இருக்கிறேன். (உள்ளதை நேர்மையா சொல்றேன். தப்பா எடுத்துக்காதீங்க). :-) //

ஒருவரை எளிதில் கோபப்படுத்திவிடலாம், மகிழ்ச்சி அளிப்பது தான் கடினம். அது நம் இருவருக்குமே நன்கு தெரிந்தவை :). இந்த இடுகை உங்களுக்கு மகிழ்ச்சி அளித்திருப்பதில் எனக்கும் பெருமகிழ்ச்சி.

//அங்கும் இங்கும் ஒரு சில கருத்துகளில் மறுப்பு சொல்லும்படி இந்த இடுகையும் அமைந்திருந்தாலும் மொத்தத்தில் ஒத்துப்போவதால் 'மன விஸ்கி' தரும் மயக்கத்தில் ஒன்றும் சொல்ல வரவில்லை. :-) //

தரவுகள் கொடுப்பதில் நான் ரொம்ப 'வீக்' அதுக்கு பெரிய காரணமோ, சோம்பலோ இல்லை, தரவுகளாகக் காட்டுபடும் தரவுகள், எந்த தரவின் அடிப்படையில் எழுதப்பட்டதோ என்று அடிப்படை ஐயத்தினால், பொதுக்கருத்துக்களை மட்டுமே பொதுவாக தொட்டு பேசுகிறேன். உதாரணம் விக்கிபீடியா தரவுகளில் இருக்கும் தவறுகள் நமக்கு தெரிகிறது, ஆனால் அதை 50 ஆண்டுகளுக்கு பிறகு பயன்படுத்துவர்களுக்கு தரவில் இருக்கும் தவறு எதுவுமே தெரியாது இல்லையா :)

//இரத்னேஷுக்குச் சொன்ன விடையில் எனக்கு மறுப்பு உண்டு. அதை மட்டும் சொல்லுகிறேன். எனக்கு இன்றைக்கும் தீபாவளி பட்டாசு வெடித்துக் கொண்டாடப் பிடிக்கும். அதற்காகவே ஜீலையிலேயே (அமெரிக்க விடுதலை நாளுக்கு இங்கே பட்டாசு கிடைக்கும்) பட்டாசு வாங்கி வைத்துவிட்டேன். சென்ற சனிக்கிழமையே வார இறுதி தீபாவளிக் கொண்டாட்டங்கள் தொடங்கிவிட்டன. பெரியவர்களும் சிறுவர்களுமாக ஒரு இருபது பேர் பட்டாசு கொளுத்தி மகிழ்ந்தோம். :-) இன்னும் இருக்கின்றன. :-)
//

சிங்கையில் வெடிக்கெல்லாம் தடை, வீடியோவில் தான் வெடிவெடிப்பதைப் பார்க்க முடியும், அதுவும் ஒலியை கூடுதலாக வைத்துவிட்டால் பக்கத்துவீட்டுக்காரவங்க பிராது கொடுத்துடுவாங்க, புகையில்லா பூத்திரிகள் கிடைக்கும், 4 நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மகளுக்கு வாங்கியது இன்னும் தீராமல் கிடக்கு, ஒரு பெட்டியில் 100 - 200 பூத்திரிகள் இருக்கும். எப்போதாவது மாலை வேளைகளில் கடற்கரைக்குச் சென்றால் அங்கு கொளுத்துவோம். சிங்கை தீபாவளியையே ஆண்டு தோறும் கொண்டாடுவதால் என் மகளுக்கு உண்மையான தீபாவளி கொண்டாட்டம் என்றால் என்னவென்றே தெரியாது. தீபாவளியை பெற்றோர்களுடன் கொண்டாடிய மகிழ்ச்சி அதன் பிறகு கிடைக்கவில்லை. இப்போது மகளுக்காக கொண்டாடுகிறோம், அவளும் வருங்காலத்தில் இதே போன்று சொல்லுவாளோ தெரியவில்லை.

நவநீதன் சொன்னது…

தீபாவளி ஒரு வியாபாரத்திற்காக கொண்டாட படும் பண்டிகை...
அப்படியே கொண்டாடி விட்டு போவோமே...

// அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ? //
ஆரியர்கள் திராவிடர்களை சுரண்டித் தான் பிழைத்தார்கள் என்பது உண்மை. ஆரியர்கள் ஏமாற்றும் அளவுக்கு திராவிடர்கள் ஏமாளிகளாக இருந்தார்கள் என்பது உண்மை. இதை ஆரியர்களாலேயே மறுக்க முடியாது...
ஏமாற்றுவதும் தவறு... ஏமாளியாய் இருப்பதும் தவறு...
யாரைப் பற்றியும் குறை சொல்லி எதுவும் ஆகப் போவதில்லை...

நல்ல விதமாக தீபாவளியை பாதுகாப்பாக கொண்டாடுவோம் ..
தீபாவளி வாழ்த்துக்கள்...

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜோதிபாரதி said...

கோவியாரே!
தீபாவளியை சும்மா அலசு அலசுன்னு அலசி இருக்கிறீர்கள்.
வெடியெல்லாம் வெடிக்கபோறதில்லை.//

ஜோதிபாரதி,
இங்கே வெடியும் கிடைக்காது அப்பறம் எங்கே வெடிப்பது.

//தலைப்பிற்கு விடை இருக்கும் என்று தேடிப் பார்த்தேன்.
கிடைக்கவில்லை.//

விடிய விடிய டீவி சீரியல் பார்த்துட்டு, கண்ணீரே வரலைன்னு சொல்வது போல் இருக்கு !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//பாரி.அரசு said...
கோவி!

அடையாளங்கள், குறியீடுகள் வழியான அரசியல் பற்றிய விழிப்பு ஏதுமின்றி எழுதப்பட்ட... பார்ப்பானிய தன்மையுள்ள பதிவு!//

மேம்போக்காக, 'தன்மையுள்ள' என்று மட்டுமே சொல்லிவிட்டு, பிறர் (நீங்கள் அல்ல) மற்றவர்களுக்கு கொடுக்கும் பார்பன அடிவருடி பட்டத்தை எனக்கு கொடுக்காமல் இருப்பதற்காக வன்மையாக கண்டிக்கிறேன். ஒரு சிலர் எவருக்கும் பார்பன அடிவருடி பட்டம் கொடுப்பது போல் பட்டமளிப்பு அதிகாரம் உங்கள் கையில் இல்லையா ? நடுநிலை தவறுகிறீர்கள். :)

//என்ன அறிவு? என்ன அறிவு?

மாவீரன் அலக்சாண்டர் என்றழைப்பட்டவன் உடன் இருந்த வீரர்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா?
வெறும் சில நூறு குதிரை வீரர்கள்.

வரலாற்றை புரிந்துக்கொள்ள... பகுத்தல், தர்க்கம், காரணம் ஆய்தல் அப்புறம் கொஞ்சம் கணக்கு போடணும்...

சின்ன நிகழ்வை மட்டும் சொல்லிவிட்டு போயிடுறேன்...
பட்டுக்கோட்டை அருகே அதிராம்பட்டினம்(அதிரை) என்ற ஊர் உள்ளது.
அங்கே ஒரு இசுலாமியர் இருந்தார் (ராவுத்தர் என்று நினைவு).
அவருக்கு அந்த பகுதியில் இருக்கிற அத்தனை கிராமங்களும் ஏறக்குறைய முத்துபேட்டை வரை அடங்கி பயந்து இருந்தார்கள்...
ராவுத்தரிடம் இருந்தது வெறும் பத்து குதிரை வீரர்கள் மட்டுமே!
ஆனால் மொத்த கிராமங்களின் மக்கள் தொகை பல ஆயிரம்...
இங்கே எண்ணிக்கை முக்கியமில்லை!

கடைசியாக...
இங்கிலாந்து மக்களின் மொத்த எண்ணிக்கை எவ்வளவு?
அவர்கள் எப்படி உலகத்தில் மிக அதிகமான நிலபரப்பை காலணியாதிக்கத்தில் வைத்திருந்தார்கள்?

11:48 AM, October 22, 2008//

பாரி.அரசு அவர்களே,

வரலாறுகளை திருப்பிப் பார்த்தால் எங்கும் மோசடிகளே மிஞ்சும், இதில் என்னவோ பார்பனர்கள் மட்டுமே தவறிழைத்தது போலவும் மற்றவர்களெல்லாம் உத்தமர்களாக இருந்தது போலவும் நினைக்க என்னால் முடியாது. மும்மன்னர்களாக தமிழகத்தை ஆண்ட சேர சோழ பாண்டியர்கள் ஒருவருக்கு ஒருவர் துரோகம் செய்து கொள்ளாமலேயே மற்றவர்கள் மீது அன்பு செலுத்தி நல்ல ஆட்சி நடத்தினார்களா ? சோழ நாட்டில் பிறந்த நீங்கள் பாண்டிய மன்னனை தமிழர் துரோகி என்பீர்களா ?

நீங்கள் சொல்வது போல் வைத்துக் கொண்டாலும், வெளியில் இருந்து வரும் எந்த சக்தியும் கைக்கூலிகள் இல்லாது ஒரு இடத்தை ஆக்கிரமித்துவிட முடியாது. எட்டன்பன்களின் வரலாறும் எழுதப்பட்டால் தான் எல்லா உண்மையும் தெரியும். பார்பன எதிர்ப்பு என்று நாம் எழுதும் வரலாற்றில் இரட்டை டம்ளர், வன்கொடுமை, உயர்சாதி தீண்டாமைகள்ளைக் கூட வசதியாக மறைத்துவிட்டே எழுதுகிறோம் என்பது தானே உண்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆட்காட்டி said...
அப்ப எதுக்கு இந்தக் கட்டுக் கதைகள். எல்லாம் நம்ம ஏமாத்த தானே? அதை கடாசிடுவமா?

11:53 AM, October 22, 2008
//
ஆட்காட்டி ,
கட்டுக் கதைகளைப் போலவே கட்டுக்கதைகளை சுட்டுவதாக கட்டுக் கட்டாக கதைகளும் இருக்கிறதே, எல்லாவற்றையும் தான் புறக்கணிக்க வேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஹேமா said...
நன்றி கோவி கண்ணன்.நல்லதொரு தீபாவளி விரிவாக்கம்.இதற்கு நடுவிலும் எங்களையும் நினைத்து ஒரு வரி.மனதிற்கு இதமாக இருக்கிறது.நன்றி.தீபாவளி நல்வாழ்த்துக்கள்.
//

ஹேமா, நன்றி !
நம்ம வீட்டு பட்டாசு சத்தம், பக்கத்து வீட்டில் தூக்கத்தில் இருப்பவர்கள் வெறுக்கும் அளவுக்கு இருக்கக் கூடாது என்பதையும் நினைத்துப் பார்ப்பது நல்லது தானே. முடிந்தால் கொண்டாட்டத்தையும் குறைத்துக் கொண்டு அவர்களுக்கு ஆறுதலாக இருப்பது தானே மனிதத்தன்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//'டொன்' லீ said...
நன்றி..

அனைவருக்கும் இனிய தீபத்திருநாள் வாழ்த்துகள்

8:05 AM, October 22, 2008//

உங்களுக்கும் வாழ்த்துகள் 'டொன்' லீ

கோவி.கண்ணன் சொன்னது…

//IlayaDhasan said...
//ஆரிய வருகைக்கு முன்பு நாம் பண்பாடோ, தெய்வவழிபாடோ, பண்டிகைகளோ அற்றவர்களாக இருந்தோம் என்று வாக்கு மூலம் கொடுப்பது போலத்தானே இருக்கிறது.
//
ஆரம்பத்தில் திராவிடர்களிடம் உருவ வழிபாடு இல்லாத போது, ஆரிய கடவுளை அல்லது அவன்/அவள் அரக்கர்களை அழித்த‌ செயலை ஒரு பண்டிகையாக கொண்டாட அவசியம் ஏன் என்பது தானே கேள்வி ஒழிய..திராவிடர்கள் பண்டிகையே கொண்டாடவில்லயா என்று கேட்பது ஒரு அபத்தமே...//

பஞ்சபூத வணக்கம் ஆரம்பத்தில் எல்லா இனக்குழுவுக்குள்ளும் இருந்தவைதான், சூரியனை வழிபடுவதாக தீ வழிபாடு எல்லா நாட்டு மக்களிடமும் வழக்கத்தில் இருந்திருக்கிறது, திராவிட நிலப்பரப்புகள் குறிஞ்சி முல்லை மருதம், நெய்தல் பாலை என்று ஐந்தினையாக பிரிக்கப்பட்டு ஒவ்வொன்றிற்கும் ஒரு தெய்வம் உண்டு அவையே இன்று வேவ்வேறு பெயர்களில் 100, 1000 மாக அவதாரம் எடுத்து இருக்கிறது. முதன் முதலாக பெண் தெய்வ வழிபாடு சமணர்களிடம் தான் இருந்தது. தமிழர் வழிபாட்டில் ஆரிய கடவுள் என்று எதுவுமே இல்லை, எல்லாம் ஆரியமயமாக்கப்பட்டு சமஸ்கிரதம் சொல்லிக் கொடுக்கப்பட்ட கடவுள்கள் தான் என்று சொன்னீர்கள் என்றால் மறுக்க மாட்டேன். :) நம்முடைய தாயை யாரோ ஒருவர், இவர் என் தாய், உனது வளர்ப்புத் தாய் என்று சொல்லிவிட்டார் என்றால், அவர் பழிசொல்கிறார், பழி துடைப்போம் என்று தாயைத் தூக்கி வெளியில் போட்டுவிடுவோமா ?

Me சொன்னது…

மன்னிக்க வேண்டும் கோவியாரே. கடந்த சில மாதங்களாக உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது "You too Kovi?" என்கிற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

தேர்தல் அரசியலில் ஈடுபட்டால் சமரசங்கள் செய்துக் கொள்ளவேண்டி வரும் என்பதால்தான் பெரியார் தமது அமைப்பு தேர்தல்களில் போட்டியிடாது என்று முடிவெடுத்தார். நீங்கள் சமரசம் செய்துக் கொள்ள காரணம் எதுவென்றுதான் எனக்குப் புரியவில்லை.

பதிவில் சில கருத்துகளில் நான் முற்றிலும் முரண்படுகிறேன். உதாரனமாக

//அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா?//

இதே கருத்தின்படி பார்த்தால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவை பல நூற்றாண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை ஆளவே இல்லையென்று சொல்லவருகிறீர்களா? ஒரு லட்சம் வீரர்கள் கொண்ட இப்ராகிம் லோடியின் படையை முதலாம் பானிபட் போரில் வெறும் பத்தாயிரம் வீரர்களைக்கொண்ட பாபர் வெல்லவில்லையா?. இத்தனைக்கும் லோடியிடம் யானைப் படை இருந்தது பாபரிடம் கிடையாது.

//ஆரியர்கள் திராவிடர்களை அரக்கர் அசுரன் என்று சொன்னது உண்மை என்று வைத்துக் கொண்டாலும், ஆரிய பெண்கள் போராடி அசுரர்களை அழித்தார்கள் என்று சொன்னால் அது அபத்ததிலும் அபத்தம் தானே//

புராணங்களும் இதிகாசங்களும் புனைவுகள் என்று எண்ணும்பட்சத்தில் பெண்களிடம் தோற்றுப் போன கோழைகள்தான் திராவிடர்கள் என்னும் நச்சுக் கருத்தை விதைக்க இப்படி ஒரு கதையை புனைந்திருக்கக் கூடியதற்கான சாத்தியக்கூறுகளை உங்களால் மறுக்க முடியுமா?

தீபாவளி கொண்டாடுவதற்கான முழுச் சுதந்திரமும் உங்களுக்கு சவூதி அரேபியா போன்ற மதவாத நாடுகளைத் தவிர மற்ற மலேசியா, அமீரகம், கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் உட்பட எல்லா நாடுகளிலும் இருக்கிறது. அதே சமயம் அதைக் கொண்டாடுவதில்லை என்கிற முடிவெடுக்கும் சுதந்திரமும் தமிழுணர்வு கொண்டவர்களுக்கு நிச்சயம் உண்டு.


இவ்விடத்தில் ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது “எல்லாருக்கும் நல்லவனாய் அந்த ஆண்டவனாலும் இருக்க முடியாது”. கடவுள் நம்பிக்கையில்லாதவர்களுக்காக வேண்டுமானால் இந்த சொலவடையை ”எல்லாருக்கும் நல்லவனாய் அந்த மகாத்மா காந்தியாலும் இருக்க முடியாது” என மாற்றிச் சொல்லலாம். எல்லாருக்கும் நல்லவனாய் இருக்கும் முயற்சி எதிர்மறையான விளைவுகளை ஏற்பட்டுத்தும் வாய்ப்பு அதிகமாக உண்டு என்பதை மட்டும் நினைவு படுத்துகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajaraman said...
நான் உங்களை சில பின்னூட்டங்களில் கடுமையாக திட்டியிருக்கிறேன். மன்னிக்கவும். இப்போது உங்களின் யதார்த்தமான பதிவுக்கு மனப்பூர்வமாக என் பாராட்டுக்களை தெரிவிக்க கடமை பட்டுள்ளேன். அது என்ன இவ்வளவு தெளிவுள்ள நீங்கள் சமயங்களில் செந்தழல் ரவி போன்று கண்மூடித்தனமாக எழுதுகிறீர்கள். மேலும் திரும்பவும் சொல்கிறேன் நான் பிராமணன் இல்லை. ஆனால் இந்து சமய பற்றுள்ள, தாய் மொழி பற்றுள்ள ஒரு இந்திய பிரஜை.

12:32 PM, October 22, 2008
//

Rajaraman,

பாராட்டுக்கு நன்றி, நான் உங்களிடம் பூணூல் தேடவில்லை, வலைப்பதிவில் எனக்கு நெருக்கமாக எத்தனை பார்பன நண்பர்கள் இருக்கிறார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா ? நான் பார்பன எதிரி என்று உங்களுக்கு யார் சொன்னது ? ஏன் என்னிடம் நீங்கள் பார்பனரா இல்லையா என்றெல்லாம் என்னிடம் சொல்கிறீர்கள்.

ஒரு ஓவியனாக ஒவியன் வரையும் அனைத்து ஓவியங்களிலும் கவனம் எடுத்துதான் வரைவான், அதில் ஒரு சில சரியாக இல்லாமல் கூட போகும், மற்றபடி நன்றாக வரையப்பட்ட ஓவியங்களை வாங்குபவர்கள் அவர்களுக்கு என்ன பிடிக்கிறதோ அதைத்தான் வாங்குவார்கள். பாராட்டு என்பது ஒருவரின் செயலுக்காக இல்லாமல் பாராட்டுபவரின் மன திருப்தியின் வெளிப்பாட்டிற்கான பாராட்டு என்பதாகத் தானே நடப்பில் / மனித இயல்பில் இருக்கிறது. நான் எழுதியவையில் பல உங்களுக்கு மிகையாக பட்டிருப்பதும் மனித இயல்புதான் :)

கோவி.கண்ணன் சொன்னது…

//Meenthulliyaan said...
///சமண மதத்தில் கடைசியாக வந்த 23 ஆம் திருத்தங்கர் மகாவீரர் நிர்வானம் (முக்தி) அடைந்த நாளே தீபாவளியாகக் கொண்டாடப் படுவதாக சமணர்கள் கருதுகின்றனர்.///
என் அண்ணன் இதை "மகா வீரர் இறந்த நாளை " இந்துக்கள் கொண்டாடடுவதாக கூறினான் .
ஏன்னா அவர் இருந்த வரை சமணம் தானே மக்களிடம் இருந்தது.

அன்புடன்
மீன்துள்ளி செந்தில்
//

Meenthulliyaan,

மாகாவீரர், புத்தர் போன்றோரின் இறந்த நாளை நிர்வானம் அல்லது முக்தி அடைந்த நாளாகச் சொல்லுவார்கள். சமணம் பவுத்ததுக்கு முன் தோன்றியது என்றாலும் அனைவரும் அதனைப் பற்றி இருந்தார்கள் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. அப்படி இருந்தால் இன்று மார்வாடி ஜெயின்களிடம் மட்டுமே அந்த மதம் இருக்க முடியுமா ?

கோவி.கண்ணன் சொன்னது…

// Robin said...
//அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ? //
அன்றைக்கு இரண்டு விழுக்காடுதான் ஆரியர்கள் இருந்தார்கள் என்று எப்படி சொல்கிறீர்கள்?//

ஆரியர் திராவிடர்களின் கலப்பு எப்போதுமே நடப்பது தான், இன்றும் கூட நடந்து கொண்டு தானே இருக்கிறது, இன்றைக்கு மொத்த பார்பனர்கள் 5 விழுக்காடு அளவுக்கு இருக்கிறார்கள். சீனர்கள் சிங்கப்பூர் மலேசியா குடியேறிய போது அங்கு இருந்த மலாய் மக்களுடன் கலந்தார்கள், அது போல் பார்பனர்கள் மற்றும் திராவிடர்கள் இருப்பக்கமும் கலப்பு இயல்பாகவே இருந்திருக்கிறது. இராமனுஜர் போன்றோர் தீட்சைக் கொடுத்து பார்பனர் அல்லாதவர்களை தென்கலை ஐயங்கார்களாக மாற்றினார். ஆக ஒரிஜினலாக 2 விழுக்காடு அளவுக்குத்தான் பார்பனர்களின் குடியேற்றம் இந்தியாவில் நிகழ்ந்திருக்க வேண்டும்

ஒரிஜினல் பார்பனர்களை காஷ்மீரத்து பண்டிட்டுகள் என்கிறார்கள், இவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான், காஷ்மீரத்திலும் குஜராத்திலும் இவர்கள் இருக்கிறார்கள். நிறம் வெள்ளைக்காரர்களின் நிறத்தை ஒத்து இருப்பார்கள். நான் வெஜ் நன்றாக சாப்பிடுவார்கள் அவர்கள் தான் ஒரிஜினல் பார்பனர்கள்.

தற்பொழுது ஆரியர் / திராவிடர் என்பதே வெள்ளைக்காரரின் சூழ்ச்சி என்று சொல்லும் பார்பனர்கள், 'ஆரிய' அடைமொழியுடன் 'ஆரியபவன்' என்று பார்பனர்களால் நடத்தப்படும் உணவகங்களையோ, ஆரிய சமாஜங்களையோ மறுப்பதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Rajaraman said...
கோவி சார், உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும், நம் பதிவுலக அனைத்து நண்பர்களுக்கும் மேலும் உலகின் அனைத்து பகுதிகளிலும் வாழும் நம் தமிழ் நெஞ்சங்களுக்கும் என் மனமார்ந்த தீபாவளி பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.. மிக்க நன்றி..
//

உங்களுக்கும் நெஞ்சார்ந்த தீபாவளி வாழ்த்துக்கள் !

கோவி.கண்ணன் சொன்னது…

// உறையூர்காரன் said...
மன்னிக்க வேண்டும் கோவியாரே. கடந்த சில மாதங்களாக உங்கள் பதிவுகளைப் படிக்கும்போது "You too Kovi?" என்கிற கேள்வி மனதில் எழுவதை தவிர்க்கமுடியவில்லை.

தேர்தல் அரசியலில் ஈடுபட்டால் சமரசங்கள் செய்துக் கொள்ளவேண்டி வரும் என்பதால்தான் பெரியார் தமது அமைப்பு தேர்தல்களில் போட்டியிடாது என்று முடிவெடுத்தார். நீங்கள் சமரசம் செய்துக் கொள்ள காரணம் எதுவென்றுதான் எனக்குப் புரியவில்லை.

பதிவில் சில கருத்துகளில் நான் முற்றிலும் முரண்படுகிறேன். உதாரனமாக

//அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா?//

இதே கருத்தின்படி பார்த்தால் எண்ணிக்கையில் மிகவும் குறைந்த இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவை பல நூற்றாண்டுகள் ஆண்டிருக்கிறார்கள். அவர்கள் இந்தியாவை ஆளவே இல்லையென்று சொல்லவருகிறீர்களா? ஒரு லட்சம் வீரர்கள் கொண்ட இப்ராகிம் லோடியின் படையை முதலாம் பானிபட் போரில் வெறும் பத்தாயிரம் வீரர்களைக்கொண்ட பாபர் வெல்லவில்லையா?. இத்தனைக்கும் லோடியிடம் யானைப் படை இருந்தது பாபரிடம் கிடையாது.

//ஆரியர்கள் திராவிடர்களை அரக்கர் அசுரன் என்று சொன்னது உண்மை என்று வைத்துக் கொண்டாலும், ஆரிய பெண்கள் போராடி அசுரர்களை அழித்தார்கள் என்று சொன்னால் அது அபத்ததிலும் அபத்தம் தானே//

புராணங்களும் இதிகாசங்களும் புனைவுகள் என்று எண்ணும்பட்சத்தில் பெண்களிடம் தோற்றுப் போன கோழைகள்தான் திராவிடர்கள் என்னும் நச்சுக் கருத்தை விதைக்க இப்படி ஒரு கதையை புனைந்திருக்கக் கூடியதற்கான சாத்தியக்கூறுகளை உங்களால் மறுக்க முடியுமா?

தீபாவளி கொண்டாடுவதற்கான முழுச் சுதந்திரமும் உங்களுக்கு சவூதி அரேபியா போன்ற மதவாத நாடுகளைத் தவிர மற்ற மலேசியா, அமீரகம், கத்தார் உள்ளிட்ட இஸ்லாமிய நாடுகள் உட்பட எல்லா நாடுகளிலும் இருக்கிறது. அதே சமயம் அதைக் கொண்டாடுவதில்லை என்கிற முடிவெடுக்கும் சுதந்திரமும் தமிழுணர்வு கொண்டவர்களுக்கு நிச்சயம் உண்டு.


இவ்விடத்தில் ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது “எல்லாருக்கும் நல்லவனாய் அந்த ஆண்டவனாலும் இருக்க முடியாது”. கடவுள் நம்பிக்கையில்லாதவர்களுக்காக வேண்டுமானால் இந்த சொலவடையை ”எல்லாருக்கும் நல்லவனாய் அந்த மகாத்மா காந்தியாலும் இருக்க முடியாது” என மாற்றிச் சொல்லலாம். எல்லாருக்கும் நல்லவனாய் இருக்கும் முயற்சி எதிர்மறையான விளைவுகளை ஏற்பட்டுத்தும் வாய்ப்பு அதிகமாக உண்டு என்பதை மட்டும் நினைவு படுத்துகிறேன்.

4:06 PM, October 22, 2008
//

உறையூர்காரன்,

விரிவான பின்னூட்டத்திற்கு மிக்க நன்றி,

மூடநம்பிக்கை என்பதை வெறும் பழமை வாதம், ஆன்மிக அபத்தம் என்ற சொல்லில் அடக்குவது எந்த அளவுக்குச் சரி ?

வழிவழியாக வருவதாக பலர் அதன் பொருள் தெரியாமலேயே செய்து வருவார்கள், தேவையற்றது, வின் செலவு என்றாலும் அதைச் செய்துவருவார்கள் அது ஒருவகையான மூட நம்பிக்கை, காலத்திற்கு ஒவ்வாது என்று விலக்கிக் கொள்ள மனது வராத மூடநம்பிக்கை. மதங்களிலும் ஆன்மிகத்திலும் இருக்கும் மூட நம்ப்பிக்கைகள் பற்றி நான் உங்களுக்கு விளக்கத் தேவை இல்லை.

ஆனால் தலைவன், தலைமை சொல்லிவிட்டது என்பதற்காக அதை விடாப் பிடியாக பிடித்துத் தொங்குபவர்களைப் பற்றி என்ன சொல்வது ? பெரியாரின் கருத்துக்கள் அன்றைக்கு தேவையாக இருந்த ஒன்று என்பதில் எனக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. ஆனால் பெரியார் ஒன்றைக் குறித்து சொல்லிவிட்டாரே என்று அதை எப்போதும் பிடித்துக் தொங்கிக் கொண்டு இருப்பது எந்த விதத்தில் ஞாயம் ? பெரியார் கொள்ளைகையை ஏற்றுக் கொண்டவர்களில் எத்தனை பேர் தங்கள் மகள் பெண் அடிமையாக இருக்க வேண்டாம் என்று திருமணம் செய்து கொடுக்காமல் வைத்திருக்கிறார்கள் ? இன்றைய தேதிக்கு பெண்களை அடிமை படுத்துவது தான் அவ்வளவு எளிதா ? பெண்களை அடிமையாக வைத்திருந்த காலத்தில் பெண்கள் குறித்து திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக் கொள்வது பற்றிய பெரியார் கருத்து மிகச் சரி, ஆனால் இன்று பொருந்துமா ?

நான் சொல்வது சரியா தவறா என்று ஆராய்ந்தே அதைப் பின்பற்றுங்கள் என்று அவரது கருத்தை எடைபோடும் உரிமையையும் அவர் கொடுத்து இருக்கிறார்.

//புராணங்களும் இதிகாசங்களும் புனைவுகள் என்று எண்ணும்பட்சத்தில் பெண்களிடம் தோற்றுப் போன கோழைகள்தான் திராவிடர்கள் என்னும் நச்சுக் கருத்தை விதைக்க இப்படி ஒரு கதையை புனைந்திருக்கக் கூடியதற்கான சாத்தியக்கூறுகளை உங்களால் மறுக்க முடியுமா?//

நம்மால் ஒன்றிற்கு சரியான விளக்கமோ, ஆதாரமாகக் கொடுக்க முடியாவிட்டால் ஊகத்தை அது மிகவும் மட்டமான ஊகமாக இருந்தாலூம் பரவாயில்லை என்று அதைச் சொல்லி நமது கருத்தை வழியுறுத்துகிறோமே, இதுதான் பகுத்தறிவா ?

தலைமை சொன்னதை பிடித்து தொங்கிக் கொண்டே இருப்பதும் ஒருவகையான மூட நம்பிக்கை, கண்மூடித்தனமான தனி மனித வழிபாடு, தந்தை பெரியார் தனது கொள்கைகள் குறித்து அது போல் இருங்கள் என்று வழியுறுத்தியதும் இல்லை. கருத்துகள், சித்தாந்தங்கள் எல்லாவற்றிற்குமே கால எல்லைகள் உண்டு. பெரியாரை விட இன்னும் புரட்சியாக சிந்திக்க கூடியவர் வந்தால் பெரியார் கருத்துகள் கூட காணாமல் போகும் என்பது தானே உண்மை.

துளசி கோபால் சொன்னது…

வழியுறுத்தியதும் இல்லை = வலியுறுத்தியதும் இல்லை

கோவி.கண்ணன் சொன்னது…

//துளசி கோபால் said...
வழியுறுத்தியதும் இல்லை = வலியுறுத்தியதும் இல்லை
//

நன்றி !

பின்னுட்டத்தில் திருத்த முடியாதே :(

கோவி.கண்ணன் சொன்னது…

//அனுஜன்யா 1:21 PM, October 22, 2008

உங்கள் மனத்துணிவுக்கு எனது பாராட்டுக்கள். உங்கள் புது நண்பர்களையும், மாற்றுக்கருத்துக் கொள்பவர்களையும் சமாளிக்கும் திறமை எப்போதுமே உங்களுக்கு உண்டு. உங்களுக்கும் தீபாவளி வாழ்த்துக்கள்.

அனுஜன்யா
//

அனுஜன்யா பாராட்டுக்கு நன்றி,

மனதில் பட்டதை சொல்ல மனத் துணிவு மட்டும் போதாது, மற்றவர்களுக்கு சகிப்புத் தன்மைக் கான அளவு உண்டு என்ற புரிந்துணர்வும் இருக்க வேண்டும், எந்த அளவுக்கு மற்றவர்களின் மனம் கோணாது சொல்ல வேண்டும் என்ற புரிதல் இருந்தால் சொல்லிவிட முடியும், கருத்து சுதந்திரம், மனத் துணிவு என்ற பெயரில் துணிந்தே அவதூறுகளை பல(ர்) அள்ளித் தெளிக்கும் போது, மனதில் பட்ட பொதுக்கருத்துக்களை புரியும் வண்ணம் எழுதுவதை மனத் துணிவு என்று வகைப்படுத்த முடியுமா ?

பாராட்டுக்கு நன்றி ! உங்களுக்கும் தீபாவளிக்கு வாழ்த்துகள் !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

//தலைமை சொன்னதை பிடித்து தொங்கிக் கொண்டே இருப்பதும் ஒருவகையான மூட நம்பிக்கை, கண்மூடித்தனமான தனி மனித வழிபாடு, தந்தை பெரியார் தனது கொள்கைகள் குறித்து அது போல் இருங்கள் என்று வழியுறுத்தியதும் இல்லை. //

நூத்துல ஒரு வார்த்த!

ரசிக்கும் படியாக இருந்தது.
இந்த கருத்தை வரவேற்கிறேன். கோவியானந்தாவின் பொன்மொழிகளில் சேர்த்து விடுங்க,


தலையாட்டும் பொம்மைகளை அடிமைகளாகக் கருதுவோம்.
சொல்புத்தி கொஞ்சம் இருந்தால் போதும். சொந்த புத்திதான் தேவை. அதுதான் பகுத்தறிவு என்பது சரியாக இருக்கும்.


ஒருவனின் அரசியல் தலைவனோ தலைவியோ தனக்குப் பிடிக்காதவற்றை புகுத்தினால், அதற்குத் தலையாட்டி ஆமாம் சாமி போடுபவனை பெரியார் சொன்னது போல் முட்டாள் என்றுதான் சொல்லவேண்டும். அரசியல் தலைவனை அண்டித்தான் பிழைக்க வேண்டும் என்கிற கட்டாயம் இருக்கிறதா?

கோவி.கண்ணன் சொன்னது…

//உறையூர்காரன் said... இவ்விடத்தில் ஒரு சொலவடை நினைவுக்கு வருகிறது “எல்லாருக்கும் நல்லவனாய் அந்த ஆண்டவனாலும் இருக்க முடியாது”. கடவுள் நம்பிக்கையில்லாதவர்களுக்காக வேண்டுமானால் இந்த சொலவடையை ”எல்லாருக்கும் நல்லவனாய் அந்த மகாத்மா காந்தியாலும் இருக்க முடியாது” என மாற்றிச் சொல்லலாம். எல்லாருக்கும் நல்லவனாய் இருக்கும் முயற்சி எதிர்மறையான விளைவுகளை ஏற்பட்டுத்தும் வாய்ப்பு அதிகமாக உண்டு என்பதை மட்டும் நினைவு படுத்துகிறேன்.
//

உறையூர்காரன்,
எல்லோருக்கும் நல்லவனாய் ? அப்படியெல்லாம் நான் முயற்சி செய்வதே இல்லை. நெருங்கிய நண்பர்கள் இருக்கிறார்கள், அவர்களுக்காக என் கருத்தை மாற்றிக் கொள்ளவோ, என் பொருட்டு அவர்களின் கருத்தை மாற்றிக் கொள்ளச் சொல்லி இதுவரை வலியுறுத்தியது இல்லை. ஒரு குடும்பத்தில் இருக்கும் ஒருவர் அனைவருக்குமே நல்லவராக இருந்துவிட முடியாது என்பது தானே மனித இயல்பும்.

நண்பரிடம் பிணக்கைப் போக்கிக் கொள்ள விரும்பியே சென்று பேசினாலும், எதோ ஆதாயத்துக்கு வந்திருப்பதாகவும் நடிப்பதாகவும் தூற்றும் நண்பர்கள் இருக்கிறார்கள் என்பது பதிவுலகில் நான் கற்றுக் கொண்ட பாடம்.

கட்டுரையின் தன்மைகளை எனது தனிப்பட்ட உள் நோக்க செயலாக நினைத்து 'எல்லோருக்கும் நல்லவனாக இருப்பதற்காக எழுதுகிறேன்' என்று நினைத்துக் கொண்டால் அதற்கு நான் என்ன செய்ய முடியும். எழுதியவன் என்ற முறையில் அப்படி எந்த நோக்கத்திற்காவும் எழுதவில்லை என்று என்னால் சொல்ல முடியும்.

வால்பையன் சொன்னது…

எவ்வளவு ஆராய்ச்சி தேவையில்லை
தமிழகத்தில் தீபாவளிக்கு லீவும் போனசும் கிடைப்பதால் தீபாவளி இருக்கட்டும்.

இப்படிக்கு வாழும் தகுதியை வளர்த்துக் கொள்ள நினைப்பவன்

நையாண்டி நைனா சொன்னது…

என்னுடைய அறியாமையை போக்குங்கள் அண்ணா.....
/*
தீபாவளியைப் பற்றி பல்வேறு கதைகள் கூறப்படுகிறது, கிருஷ்ணனின் மகனான நரகா அசுரனை அவன் மனைவி பூமாதேவி அழித்தாள் என்றும் இறக்கும் தருவாயில் மனம் மாறியவன் கொடியவன் ஒருவன் அழிந்தான் என்று நினைத்து அந்த நாளை மகிழ்வு கொண்ட்டாட்மாக்கிக் கொள்ள வேண்டும் என்று வேண்டுதல் வைத்தான் என்றும் அதனால் தீபாவளிக் கொண்டாடப்படுவதாக தென் இந்திய சமய நம்பிக்கையில் சொல்லப்படும் ஒரு கதை.

தென் இந்தியாவில் தான் தீபாவளி கொண்டாட்டத்திற்கு இந்த கதை சொல்லப்படுகிறது. வட இந்தியாவில் இராவணன் அழிந்த பிறகு தசராவிற்கு பிறகு கொண்டாடப் படுவதாகவும், இரவணன் இறப்பைக் கொண்டாடுவது தான் தீபாவளி என்று சொல்லப்படுகிறது. பல்வேறு தேவித் திருக்கதைகளில் ஒவ்வொரு தேவியரும் எந்தந்த அரக்கர்களை அழித்தார்கள் என்று சொல்லி, தசரா பண்டிகை கொண்டாடப்படும் போதும் அசுரர் கதைகள் சொல்லப்படுகிறது. */

தெய்வத்தாலேயே தன் மகனை நல்லவனாக வளர்க்க முடியாத போது... நீங்கள் என்னை எப்படி அண்ணா நல்லவனாக வளர்க்க முடிந்தது.
ஒருவனின் மரணத்தை கொண்டாடும் சமூகம் நம்முடைய சமூகமா?
கொண்டாட்டம் என்றாலும் நாம் கொண்டாடும் போது வெற்றி விழா தானே கொண்டாடுவோம், மரணத்தை கொண்டாடும் மூர்க்க புத்தி நமக்கு எப்போது வந்தது? ஏன் வந்தது?
ஒருவன் எவ்வளவோ கொடுமைகள் செய்திருந்தாலும், அவன் இறந்த பிறகு அவன் கொடுமைகளை கூறி அவனை பழிக்காமல், அவன் செய்த சிறு நன்மைகளை கூறி அவனுக்கு பெருமை சேர்ப்பது தானே நம் வரலாறு.
கொண்டாடுவதற்கு ஒரு காரணம் வேண்டும், அதற்காக அவர் அவர்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு கதையை 'செட்-அப்' செய்து கொண்டார்கள். அப்படி என்றால் கதைக்கெல்லாமா கொண்டாட்டம்?

suvanappiriyan சொன்னது…

இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

நையாண்டி நைனா சொன்னது…

/*இப்போது மற்றவற்றைப் சற்று பார்ப்போம், இந்திய சமய தத்துவங்கள் அனைத்தும் ஆரியர்களுடையது அதனால் அதனைப் புறக்கணிக்க வேண்டும் என்ற குரல் எப்போதும் ஒலிக்கிறது. ஆரியர்கள் இந்தியாவிற்குள் வந்ததாகச் சொல்லப்பட்டக் காலத்தில் அவர்களிடம் உருவ வழிபாடு என்று எதுவும் கிடையாது, இந்திரன் என்னும் அரசன் தவிர்த்து ஆரிய வேதங்களில் உருவ வழிபாட்டைப் போற்றியதாகக் தெரியவில்லை. ப்ரம்ம தத்துவமே, பரப் பிரம்மே உயர்ந்தது என்று கூறும் ஆரிய வேள்வி வழிபாட்டு வழியில் உருவவழிபாடு என்பது மிகவும் கீழான வழிபாடு. இந்திய தெய்வங்கள் ஆரியமய மாக்கப்பட்டது என்று சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம், ஆனால் அவை அனைத்தும் ஆரியர்களுடையது என்று கூறும் திராவிட(வரட்டு) வாதம் பற்றி கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், ஆரிய வருகைக்கு முன்பு நாம் பண்பாடோ, தெய்வவழிபாடோ, பண்டிகைகளோ அற்றவர்களாக இருந்தோம் என்று வாக்கு மூலம் கொடுப்பது போலத்தானே இருக்கிறது.*/


சரியான ஆய்வண்னா..உங்கள் ஆய்வு. உங்களுக்கு தெரிந்தது கூட இங்கே உள்ள மற்றவர்களுக்கு தெரியவே மாட்டேங்குது.
நானும், நம்ம பக்கத்து வீட்டு சங்கரன் கிட்டே சொன்னேன் அண்ணா, "இங்கே உள்ள உருவ வழிபாட்டு கோவில் எல்லாம் நம்முடையது, அங்கே வேலை செய்ரவங்க எல்லாரும் நம்ம ஆளுங்க" என்று அதை கேட்டுட்டு அவன் விழுந்து விழுந்து சிரிச்சாம்னே... அவன் ஏன் அண்ணா அப்படி சிரிச்சான்? இவன் சிரிக்கிறததை பார்த்துட்டு அந்த பக்கமா வந்த நம்ம குருக்கள் சாமி " டாய் ஆபிஸ்டுகளா... அங்கே என்னடா.? அழிச்சாட்டியம் பண்ணின்றுகேள்... வேலை முடிஞ்சதொண்னா... ஜல்தியா ஆத்துக்கு போங்க டா" என்று சொன்னாருண்னா.... இதை கேட்ட சங்கரன் இன்னும் சிரிச்சிக்கிட்டே .. நான் சொன்ன செய்தியை அவர்கிட்டே சொல்லிட்டான். அதை கேட்ட அவரு உங்களையும் என்னையும் திட்ட ஆரம்பிச்சிட்டார்னே... என்னை திட்டுனா கூட தாங்கிபேன் அண்ணா... உங்களையும் அவர் ஏன் அண்ணா திட்டனும். சரி திட்டுறது தான் திட்டுறாறு நம்ம பேசுற மாதிரி திட்ட வேண்டியது தானே....

நையாண்டி நைனா சொன்னது…

/*இன்றைக்கும் ஒரிஜினல் ஆரியர்கள் என்று பார்த்தால் இந்தியாவெங்கும் 5 விழுக்காட்டுக்கும் குறைவே, இவர்கள் திராவிடர்களை அழித்தார்கள், திராவிடர்களைத்தான் அசுரர், அரக்கன் என்றெல்லாம் சொல்லி இருக்கிறார்கள், மேலும் அவர்களால் அழிக்கப்பட்டோம் என்று அறிந்தே நம் அதைக் கொண்டாலாமா ? என்றும் கேட்கிறார்கள். அன்றைய காலகட்டத்தில் 2 விழுக்காடே இருந்த ஒரு இனம் 98 விழுக்காட்டு மக்களிடம் போராடி வெற்றி பெற்று இருக்க முடியுமா ? */

பின்னே எதுக்கு நாம் இன்னும் இட ஒதுக்கீடு கேட்டு போராடிக்கொண்டிருக்கிறோம்.
எண்ணிக்கையில் மிகவும் குறைந்த இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவை ஆளவே இல்லையென்று சொல்கிறீர்களா? இல்லை வரலாறும் திராவிட புரட்டோ?
உங்களுக்கு தெரிந்த இந்த விஷயம், குஜராத் மக்களுக்கும், ஒரிஸா மக்களுக்கும் தெரியாமல் போனததின் மர்மம் என்ன?
100 பேர் உள்ள ஊரில் 60% வாக்கு பதிவில் 50% பெற்ற ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் போது, உண்மையில் அந்த கட்சியின் செல்வாக்கு 30% தானே.

நையாண்டி நைனா சொன்னது…

தனி பதிவா போடலாம்னு தான் அண்ணா எழுதினேன்.... அதற்கு முன்பு தங்களிடம் தெளிவு பெற்று விடலாம் என்று இங்கேயே போட்டுட்டேன் அண்ணா...

தமிழ் ஓவியா சொன்னது…

தீபாவளி தமிழர் விழாவா? சிந்தியுங்கள்!


தீபாவளி

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவது தமிழனுக்கு மானக்கேடும், முட்டாள்தனமுமான காரியம் என்று 50 ஆண்டுகளாக எழுதியும் பேசியும் வருகின்றேன். இதன் பயனாய் அநேக தமிழ் மக்கள் இப்பண்டிகையைக் கொண்டாடாமல் நிறுத்திவிட்டார்கள். என்றாலும், இன்னமும் பல தமிழ் மக்கள் தங்கள் இழிநிலையை, மானஈனத்தை உணராமல் கொண்டாடி வருகிறார்கள்!

இக்கொண்டாட்டமானது தமிழ் மக்களுடைய இழிவையும் முட்டாள்தனத்தையும் காட்டுவது மாத்திரமல்ல; தமிழர் (திராவிடர்கள்) ஆரிய இனத்தானுக்கு அடிமை, அவனது தலைமைக்கு அடிமை, மீட்சி பெற விருப்பமில்லாத மானங்கெட்ட ஈனப் பிறவி என்பதைக் காட்டிக் கொள்ள போட்டி போடுகிறார்கள் என்பதையே காட்டுகிறது.

“மானமும் பகுத்தறிவும் உடையவனே மனிதன்; அஃதிலார் மனித உருவமுள்ள மிருகமே ஆவர்’’ என்ற அறிவுரைப்படி மானமில்லா மக்களே இப்போது தீபாவளி கொண்டாடுகிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டியிருக்கிறது.

ஆரியரின் இறக்குமதியே தீபாவளி! வெளிநாட்டிலிருந்து பிழைக்கும் வழி தேடிக் கொண்டு நம் நாட்டிற்குள் புகுந்த ஆரியர் அக்காலத்தில் அவர்கள் இருந்த காட்டுமிராண்டித் தன்மைக்கு ஏற்ற மடமையினால் கொண்ட கருத்துகளை மதுக்குடி வெறியில் உளறி வைத்த தன்மைக்கு ஏற்ப தொகுத்துக் களியாட்டம் ஆடிய ஆட்டங்களை தமிழ் மக்கள் என்ன சூழ்நிலையாலோ ஏற்று, அவற்றிற்கு அடிமையாகி, பின்பற்றி தாங்களும் அப்படியே களியாட்டம் ஆடி வருகிறார்கள்.

அதன் பயனாய், அம்மடமையும் அல்லது வெறி உளறலுமே இன்று தமிழ் மக்களுக்கு கடவுளர்களாக, மதமாக, நீதி நெறிகளாக, பண்டிகை - விரதம், நோன்பு - உற்சவங்களாக நல்லநாள் தீயநாளாக, அப்பாத்திரங்களே நல்லவர்களாக, தீயவர்களாக ஆக்கப்பட்டு இருந்து வருகின்றார்கள்.

இஸ்லாம், கிறிஸ்துவம் முதலிய மார்க்கங்களாலும், வெள்ளையர் ஆட்சியாலும் உலக மக்களிடையே ஒரு அளவுக்குத் தலைகீழான மாறுதல் ஏற்படும்படியான கல்வி அனுபவமும் ஞானமும் ஏற்பட்டிருந்தும்கூட, இந்த மடமை மிக்க ஆரிய வலையில் சிக்கிய தமிழ் மக்களிடையில் பெரிதும் சிறுஞானமும் மாறுதலும் ஏற்படாமல் அம்மடமையிலேயே மூழ்கித் திளைத்து வருகிறார்கள்!

எவ்வளவு சொன்னாலும் அறிவும் அனுபவமும் இல்லாத சில இளைஞர்கள் (மைனர்கள்) பித்தலாட்டத்தாலும், வஞ்சகம் துரோகம் மோசத்தாலும் வாழ வேண்டிய தீய எண்ணத்தில் தேர்ச்சி பெற்ற பரத்தையரிடம் சிக்கிவிட்டார்களேயானால், எப்படி - யார் - எவ்வளவு அறிவையும் நன்மையையும் போதித்தாலும் அதை காதில் வாங்கக் கூட செவிப்புலனை ஒதுக்காமல் தன் உள்ளம் முழுவதையும் பரத்தையிடமே ஒப்புவித்து, அவளிடம் ஓடவே வழி தேடுவார்களோ அதேபோல் நடந்து கொள்கிறார்கள்!

இப்படி நடப்பவர்கள் பாமர மக்கள் மாத்திரமல்லாமல் தமிழ்ப் பண்டிதர்கள், அதுவும் டாக்டர் பட்டம் பெற்றவர்கள் உள்பட தமிழ்ப் பண்டிதர்கள் முதல் பெரும் புலவர்கள் மற்றும் இங்கிலீஷ் வேதாந்தத்தில், இங்கிலீஷ் விஞ்ஞானத்தில் உடற்கூறு, பூகோளக் கூறு இவைகளில் நிபுணர்கள் உள்பட எல்லாத் தமிழர்களும் இந்தக் காட்டுமிராண்டி மடமைக்கும் அடிமைப்பட்டு, சிந்தனையின்றி நடந்து கொள்வதென்றால் தீபாவளி கொண்டாடுவது என்பதில் உள்ள தமிழனின் இழிவுக்கும், மடமைக்கும், மானமற்ற தன்மைக்கும் இதைவிட வேறு எதை எடுத்துக் காட்டாகக் கூற முடியும்?

நம் பள்ளிகளும் கல்லூரிகளும் பல்கலைக் கழகங்களும் நம் மக்களுக்கு இந்த, இப்படிப்பட்ட மடமையை உணரும் அளவுக்குக்கூட அறிவைக் கொடுக்க வில்லையென்றால் இக்கல்விக் கூடங்கள் மடமையையும் மானமற்ற தன்மையையும் பயிர் செய்யும் வளமுள்ள விளைநிலம் என்பதைத் தவிர வேறு என்னவென்று சொல்ல முடியும்? இதில் வதியும் - பயிலும் மாணவர்களுக்கு எந்தவிதத்தில் தான் மானமும் அறிவும் விளைய முடியும்?

தீபாவளி என்றால் என்ன? (புராணம் கூறுவது)

1. ஒரு காலத்தில் ஒரு அசுரன் உலகத்தைப் பாயாகச் சுருட்டிக் கொண்டு போய் கடலுக்குள் ஒளிந்து கொண்டான்.

2. தேவர்களின் முறையீட்டின்மீது மகாவிஷ்ணு பன்றி அவதாரம் (உரு) எடுத்து கடலுக்குள் புகுந்து அவனைக் கொன்று உலகத்தை மீட்டு வந்து விரித்தார்.

3. விரித்த உலகம் (பூமி) அப்பன்றியுடன் கலவி செய்ய ஆசைப்பட்டது.

4. ஆசைக்கு இணங்கி பன்றி (விஷ்ணு) பூமியுடன் கலவி செய்தது.

5. அதன் பயனாய் பூமி கர்ப்பமுற்று நரகாசூரன் என்ற பிள்ளையைப் பெற்றது.

6. அந்தப் பிள்ளை தேவர்களை வருத்தினான்.

7. தேவர்களுக்காக விஷ்ணு நரகாசூரடனுடன் போர் துவங்கினார்.

8. விஷ்ணுவால் அவனை வெல்ல முடியவில்லை. விஷ்ணுவின் மனைவி நரகாசூரனுடன் போர் தொடுத்து அவனைக் கொன்றாள்.

9. இதனால் தேவர்கள் மகிழ்ச்சி அடைந்தார்கள்.

10. இந்த மகிழ்ச்சியை (நரகாசூரன் இறந்ததற்காக) நரகாசூரனின் இனத்தாரான திராவிட மக்கள் கொண்டாட வேண்டும்.

இதுதானே தீபாவளிப் பண்டிகையின் தத்துவம்! இந்த 10 விஷயங்கள்தான் தமிழரை தீபாவளி கொண்டாடும்படி செய்கிறதே அல்லாமல், வேறு என்ன என்று யாருக்குத் தெரியும்? யாராவது சொன்னார்களா? இதை ஆராய்வோம். இக்கதை எழுதிய ஆரியர்களுக்குப் பூமிநூல்கூடத் தெரியவில்லை என்று தானே கருத வேண்டியிருக்கிறது?

பூமி தட்டையா? உருண்டையா? தட்டையாகவே இருந்தபோதிலும் ஒருவனால் அதைப் பாயாகச் சுருட்ட முடியுமா? எங்கு நின்றுகொண்டு சுருட்டுவது? சுருட்டினால் தூக்கிக் கட்கத்திலோ தலை மீதோ எடுத்து போக முடியுமா? எங்கிருந்து தூக்குவது? கடலில் ஒளிந்து கொள்வதாயின், கடல் அப்போது எதன்மீது இருந்திருக்கும்? விஷ்ணு மலம் தின்னும் பன்றி உருவம் எடுக்க வேண்டிய அவசியம் என்ன? அரக்கனைக் கொன்று பூமியை விரித்ததால் பூமிக்கு பன்றிமீது காதல் ஏற்படுவானேன்?

பூமி மனித உருவமா? மிருக உருவமா? மனித உருவுக்கும் மிருக உருவுக்கும் கலவியில் மனிதப் பிள்ளை உண்டாகுமா? பிறகு சண்டை ஏன்? கொல்லுவது ஏன்? இதற்காக நாம் ஏன் மகிழ்ச்சி அடைய வேண்டும்?

இவைகளைக் கொஞ்சமாவது கொண்டாடும் தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் சிந்திக்க வேண்டாமா? நரகாசூரன் ஊர் மாகிஷ்மகி என்ற நகரம். இது நர்மதை ஆற்றின் கரையில் இருக்கிறது. மற்றொரு ஊர் பிரகத் ஜோதி ஷா என்று சொல்லப்படுகிறது. இது வங்காளத்தில் விசாம் மாகாணத்துக்கு அருகில் இருக்கிறது. இதை திராவிட அரசர்களே ஆண்டு வந்திருக்கிறார்கள். வங்காளத்தில் தேவர்களும் அசுரர்களும் யாராக இருந்திருக்க முடியும்?

இவைகள் ஒன்றையும் யோசிக்காமல் பார்ப்பனன் எழுதி வைத்தான் என்பதற்காகவும், சொல்கிறான் என்பதற்காகவும், நடுஜாமத்தில் எழுந்து கொண்டு குளிப்பதும், புதுத்துணி உடுத்துவதும், பட்டாசு சுடுவதும், அந்தப் பார்ப்பனர்கள் வந்து பார்த்து, “கங்காஸ்நானம் ஆயிற்றா?’’ என்று கேட்பதும், நாம் ‘ஆமாம்’ என்று சொல்லிக் கும்பிட்டுக் காசு கொடுப்பதும், அவன் காசை வாங்கி இடுப்பில் சொருகிக் கொண்டு போவதும் என்றால், இதை என்னவென்று சொல்வது?

சிந்தியுங்கள்! சிந்தியுங்கள்!!

மாணவர்களே! உங்கள் ஆசிரியர்களுக்கு மானம், புத்தி இல்லாவிட்டாலும் நீங்களாவது சிந்தியுங்கள். எதற்காக இவ்வளவு சொல்லுகிறேன் என்றால் இக்கதை எழுதின காலத்தில் (ஆரியர்) பார்ப்பனர்கள் எவ்வளவு காட்டு மிராண்டிகளாக இருந்திருக்க வேண்டும்? அந்தக் காலத்தில் நாம் மோசம் போனது, ஈனநிலை அடைந்தது ஏன்? என்பதை தமிழன் ஒவ்வொருவரும் நன்கு சிந்திக்க வேண்டும் என்பதற்கு ஆகவேயாகும்.

---------------தந்தைபெரியார் "விடுதலை" பிறந்தநாள் விழா மலர் -94 - நூல்: இந்துமதப்பண்டிகைகள்" பக்கம் 26 - 31

IlayaDhasan சொன்னது…

//நம்முடைய தாயை யாரோ ஒருவர், இவர் என் தாய், உனது வளர்ப்புத் தாய் என்று சொல்லிவிட்டார் என்றால், அவர் பழிசொல்கிறார், பழி துடைப்போம் என்று தாயைத் தூக்கி வெளியில் போட்டுவிடுவோமா ?//
அந்த மாதிரி தாயே இல்லை எனும் போது எங்கிருந்து உன் தாய் வளர்ப்புத் தாய் என்று கூற முடியும். என் தாய் பெரிது ,உன் தாய் பெரிது என வீண் சண்டை செய்ய காரணமே அப்படி ஒரு தாய் இருப்ப்தாக கற்பிதம் செய்ததால் வந்த வினை தான் என்பதை மறுக்க முடியுமா உங்களால்?

கோவி.கண்ணன் சொன்னது…

//வால்பையன் 5:29 PM, October 22, 2008
எவ்வளவு ஆராய்ச்சி தேவையில்லை
தமிழகத்தில் தீபாவளிக்கு லீவும் போனசும் கிடைப்பதால் தீபாவளி இருக்கட்டும்.
இப்படிக்கு வாழும் தகுதியை வளர்த்துக் கொள்ள நினைப்பவன்
//

ஆராய்ச்சித் தேவை இல்லை, வாழும் தகுதியை வளர்த்துக் கொள்வது பற்றியாவது சொல்லுங்க :)

கோவி.கண்ணன் சொன்னது…

//நையாண்டி நைனா said...
தெய்வத்தாலேயே தன் மகனை நல்லவனாக வளர்க்க முடியாத போது... நீங்கள் என்னை எப்படி அண்ணா நல்லவனாக வளர்க்க முடிந்தது.
ஒருவனின் மரணத்தை கொண்டாடும் சமூகம் நம்முடைய சமூகமா?
கொண்டாட்டம் என்றாலும் நாம் கொண்டாடும் போது வெற்றி விழா தானே கொண்டாடுவோம், மரணத்தை கொண்டாடும் மூர்க்க புத்தி நமக்கு எப்போது வந்தது? ஏன் வந்தது?
ஒருவன் எவ்வளவோ கொடுமைகள் செய்திருந்தாலும், அவன் இறந்த பிறகு அவன் கொடுமைகளை கூறி அவனை பழிக்காமல், அவன் செய்த சிறு நன்மைகளை கூறி அவனுக்கு பெருமை சேர்ப்பது தானே நம் வரலாறு.
கொண்டாடுவதற்கு ஒரு காரணம் வேண்டும், அதற்காக அவர் அவர்கள் அவர்களுக்கு பிடித்த ஒரு கதையை 'செட்-அப்' செய்து கொண்டார்கள். அப்படி என்றால் கதைக்கெல்லாமா கொண்டாட்டம்?//

நையாண்டி நைனா, ரொம்ப லாஜிக்காக கேள்விக் கேட்டால் அதில் நம்பிக்கை இருப்பதாகத்தானே பொருள் ?
என்னப் பொருத்து கல்லுக்குள் தேரை இருக்கும், மற்றதெல்லாம் இருக்காது, சில பழக்கவழக்கங்கள் ஒரு சில நன்மைக்காக ஏற்பட்டு இருக்கிறது, தீபாவளி கதையை தள்ளிவிட்டு பாருங்கள், உறவினர்கள் மற்றும் பெற்றோர்களுடன் ஒரு நாளைக் கொண்டாடுவது, ஊரில் உள்ள் அனைவருமே ஒரு நாள் இப்படி மகிழ்ந்திருப்பது சரியான சமூக செயலாகத்தான் படுகிறது. உங்களுக்கு அந்த கதை பிடிக்கவில்லை என்றால் தமிழகம் எங்கும் தடையற்று மின்சார வெளிச்சம் கிடைக்கும் நாளாக ஒரு நாளை தீபாவளியாகக் கொண்டாடுங்களேன் :)

கோவி.கண்ணன் சொன்னது…

// சுவனப்பிரியன் said...
இணைய நண்பர்கள் அனைவருக்கும் இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

6:13 PM, October 22, 2008//

நன்றி சுவனப்பிரியன் !

கோவி.கண்ணன் சொன்னது…

// நையாண்டி நைனா said...
சரியான ஆய்வண்னா..உங்கள் ஆய்வு. உங்களுக்கு தெரிந்தது கூட இங்கே உள்ள மற்றவர்களுக்கு தெரியவே மாட்டேங்குது.
நானும், நம்ம பக்கத்து வீட்டு சங்கரன் கிட்டே சொன்னேன் அண்ணா, "இங்கே உள்ள உருவ வழிபாட்டு கோவில் எல்லாம் நம்முடையது, அங்கே வேலை செய்ரவங்க எல்லாரும் நம்ம ஆளுங்க" என்று அதை கேட்டுட்டு அவன் விழுந்து விழுந்து சிரிச்சாம்னே... அவன் ஏன் அண்ணா அப்படி சிரிச்சான்? இவன் சிரிக்கிறததை பார்த்துட்டு அந்த பக்கமா வந்த நம்ம குருக்கள் சாமி " டாய் ஆபிஸ்டுகளா... அங்கே என்னடா.? அழிச்சாட்டியம் பண்ணின்றுகேள்... வேலை முடிஞ்சதொண்னா... ஜல்தியா ஆத்துக்கு போங்க டா" என்று சொன்னாருண்னா.... இதை கேட்ட சங்கரன் இன்னும் சிரிச்சிக்கிட்டே .. நான் சொன்ன செய்தியை அவர்கிட்டே சொல்லிட்டான். அதை கேட்ட அவரு உங்களையும் என்னையும் திட்ட ஆரம்பிச்சிட்டார்னே... என்னை திட்டுனா கூட தாங்கிபேன் அண்ணா... உங்களையும் அவர் ஏன் அண்ணா திட்டனும். சரி திட்டுறது தான் திட்டுறாறு நம்ம பேசுற மாதிரி திட்ட வேண்டியது தானே....//

நையாண்டி நைனா, சொல்லிட்டுப் போறார். போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டம் கோவி.கண்ணனுக்கே என்று விட்டுடுங்க.

பார்பனர்கள் பேசுவது டயலக்ட் அதாவது வட்டாரவழக்கு என்று சொல்ல முடியாது, குழுக்குறி என்ற வகையில் வரும்.

கோவி.கண்ணன் சொன்னது…

// நையாண்டி நைனா said...


பின்னே எதுக்கு நாம் இன்னும் இட ஒதுக்கீடு கேட்டு போராடிக்கொண்டிருக்கிறோம்.
எண்ணிக்கையில் மிகவும் குறைந்த இஸ்லாமியர்களும் ஆங்கிலேயர்களும் இந்தியாவை ஆளவே இல்லையென்று சொல்கிறீர்களா? இல்லை வரலாறும் திராவிட புரட்டோ?
உங்களுக்கு தெரிந்த இந்த விஷயம், குஜராத் மக்களுக்கும், ஒரிஸா மக்களுக்கும் தெரியாமல் போனததின் மர்மம் என்ன?
100 பேர் உள்ள ஊரில் 60% வாக்கு பதிவில் 50% பெற்ற ஒரு கட்சி ஆட்சி அமைக்கும் போது, உண்மையில் அந்த கட்சியின் செல்வாக்கு 30% தானே.

6:18 PM, October 22, 2008
//

வெள்ளைக்காரனிடம் அதிகாரம் இருந்தது என்று தானே அதற்கு எதிராக போராடினோம், முன்னேறிய சமுகத்தை ஒடுக்குவது என்ற வகையில் வராது, பகிர்ந்தளித்தல் என்ற வகையில் வருகிறது. இடப்பங்கீடு என்று தான் சொல்லுவார்கள். 40 % எந்தபக்கம் சாய்கிறவர்கள் என்று தெரியாதே :)

கோவி.கண்ணன் சொன்னது…

// நையாண்டி நைனா said...
தனி பதிவா போடலாம்னு தான் அண்ணா எழுதினேன்.... அதற்கு முன்பு தங்களிடம் தெளிவு பெற்று விடலாம் என்று இங்கேயே போட்டுட்டேன் அண்ணா...//

தெளிவாகவும் கோர்வையாகவும் எழுதி போடுங்கள், இந்த பதிவு அப்படி எல்லாம் இருக்கான்னு கேட்காதிங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ் ஓவியா said...
தீபாவளி தமிழர் விழாவா? சிந்தியுங்கள்!
//

தமிழ் ஓவியா,

நானும் தீபாவளி தமிழர் விழா என்று சொல்லவில்லை, இந்திய சமயங்களில் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு காரணங்களுக்காகக் கொண்டாடப் படுகிறது.

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதிபாரதி,

மறுபாதி பின்னூட்டத்திற்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//IlayaDhasan said...
//நம்முடைய தாயை யாரோ ஒருவர், இவர் என் தாய், உனது வளர்ப்புத் தாய் என்று சொல்லிவிட்டார் என்றால், அவர் பழிசொல்கிறார், பழி துடைப்போம் என்று தாயைத் தூக்கி வெளியில் போட்டுவிடுவோமா ?//
அந்த மாதிரி தாயே இல்லை எனும் போது எங்கிருந்து உன் தாய் வளர்ப்புத் தாய் என்று கூற முடியும். என் தாய் பெரிது ,உன் தாய் பெரிது என வீண் சண்டை செய்ய காரணமே அப்படி ஒரு தாய் இருப்ப்தாக கற்பிதம் செய்ததால் வந்த வினை தான் என்பதை மறுக்க முடியுமா உங்களால்?//

என்னைப் பொருத்து வள்ளலாரும், பெரியாரும் ஒன்று தான். வள்ளலார் மூட நம்பிக்கையை வளர்த்தார் என்று உங்களால் சொல்ல முடியுமா ? பெரியாரே வள்ளலார் பற்றி அவ்வாறு சொன்னது கிடையாது.

நான் யாரையும் இறை நம்பிக்கைக் கொள்ளுங்கள் என்றெல்லாம் சொல்லவில்லை, அப்படி நம்பிக்கொண்டு இருப்பவர்களையோ, நம்பாமல் இருப்பவர்களையோ தூற்றும் உரிமை யாருக்கும் கிடையாது.

தமிழனுக்கு பண்பாடே இல்லை, தமிழன் வணங்கிய தெய்வங்களெல்லாம் காட்டுமிராண்டித்தனமானது என்று அவர்கள் சொல்வதற்கும் நீங்கள் அதற்கு ஒப்புதல் கொடுப்பதும் ஒன்றாகவே எனக்கு தெரிகிறது. ஒன்று தூற்றுவது என்றால் மற்றது கடிந்து கொள்வது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

Matra சொன்னது…

These questions are for the commentators who speak against Deepavali celebration by Thamizhs.

a) You say Deepavali should not be celebrated by Thamizh people since as per your opinion, it is non-Thamizh.

Will you also boldly say Thamizh Christians/Muslims should not celebrate Christmas/Ramzan since they are foreign in origin ?. Why only speak against Hindu customs/traditions ?.

b) You people speak against caste saying that all are equal but also speak about a distinct Thamizh race. Can you explain ?.

c) If according to you Thamizh speaking people are a distinct race and should stay that way, did they suddenly come up in this world ?. Did they always speak only Thamizh from the day they were created ?. If that is the case instead of Evolution, how did it happen ?. Did some supernatural power create Thamizhs ?. In that case can we call that power God ?. Then why do you peple also say there is no God ?.

There are a lot more questions..

IlayaDhasan சொன்னது…

a) Yes If Tamizh Christian or Muslim Christian say that only specific caste in their community is born out of so-called GOD's whatever part of the body and all others are lower than them.,so they have all right to ill-treat other people in any manner they want in the name of holy story lies..do u see such thing in those communities?

b) By saying distinct tamizh race,we are not lowering others in any manner..think about one group feeling superior always and imposing all sorts of restrictions on others.. did tamizh race try to demean other language people like that ever...can you share with me any stories where tamizh race entered into another race's stream and slowly injected 'superiority poison' and made that another race to bow-down to tamizh race?
c) I dont understand how you are relating evolution with GOD. As part of evolution some poison was injected into a specific race's thinking..as we are in the another stage of evolution why not revalidate such thinking and throw away those idiotic practises instead of resisting the evolution?

IlayaDhasan சொன்னது…

made typo on my earlier reply read Muslim Tamizh's instead of Muslim Christian....Want to add another point about why only Hindu tradition...Arya's story says Tamizh race's are Daemons and most of the Arya's functions are celeberating their victories against such Daemons...I never heard a Muslim Holy Story or Christian Holy Story in which Tamizh Race's was shown as Daemons and they were banished by their 'version' of GOD...can you clearly understand the difference are still wanting to be admant on the point where we are insulting only Hindus not others?

Matra சொன்னது…

Ilayadhasan, you havent really answered my questions.

a) The caste system as we know now is a much later creation. Some people have misinterpreted Hinduism to justify discrimination/domination over others. Why blame Hinduism ?. Why not reformism like Ramanuja etc ?.
Hinduism even accepts atheism.

Haven't Christians / Muslims also have named people who dont believe in their version of God as sinners/satans etc and fit to be killed. History is full of incidents where these people have indulged in killing and subjugation of non-believers in the name of their religion. Goan Inquisition, Spanish Inquisition, destruction of the Native American people are just a few samples. Havent many native cultures been destroyed in the name of these religions ?.We see imposition of
European culture and Arab culture in the name of these religions.(This also answers your second point b).

From your statements, what I understand is that you people have a certain idea of Thamizh culture which should not include any Hinduism and are putting forward various arguments directly and indirectly for that sake.

c) Can you define idiotic practises ?. Will it only include anything relating to Hinduism ?.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்