இரஜினியின் எந்திரன் அவதாரம் அட்டகாசம். இரஜினிக்குள் இருந்த வில்லன் நடிப்பு அப்படியே தான் இருக்கிறது, இதுவரை அதை வில்லன் பாத்திரங்களுக்கு அறைகூவல் விடும் கதாநாயகனுக்காக மட்டுமே வில்லானாக தெரியும் படி நடித்தார். இந்தப் படத்தில் முழுமையாக இல்லாவிட்டாலும் வில்லன் பாத்திரத்தில் சிறப்பாக நடிக்க முடியும் என்று நிருபனம் செய்திருக்கிறார். இவ்வளவு நாட்களாக இவருக்குள் இருந்த வில்லனை தூங்கவைத்தவர்கள் தயாரிப்பாளர்களா இயக்குனர்களா ? அல்லது மாஸ் ஹிரோ என்று இவரே போட்டுக் கொண்ட வேடமா ? தெரியவில்லை. இருந்தாலும் முதல் முறையாக பல ஆண்டுகளுக்கு பிறகு நடிப்பு அறைகூவல் விடும் வில்லன் பாத்திரத்தில் தன்னாலும் செய்ய முடியும் என்று காட்டி இருப்பது திரை ரசிகர்களுக்கு மகிழ்ச்சி மற்றபடி இது போன்ற நடிப்பு இரஜினி ரசிகர்களுக்கு ஏமாற்றமே. காதல் பாடல்களில் இரஜினி ரசிகர்களுக்கான ஸ்டைல் இருக்கிறது. மற்றபடி சயின்டிஸ்ட் ரஜினி ஒரு பயந்தாங்கொள்ளிக் கேரக்டர் என்பதை ரஜினி ரசிகர்களால் ஜீரணிக்க முடியாது. சூப்பர் ஸ்டாரின் நடிப்பு அட்டகாசம், இன்னும் ஒருமுறை பார்க்கக் கூட எனக்கு தோன்றுகிறது. என் மகளுக்கும் எந்திரன் மிகவும் பிடித்திருந்ததாம்.
ஷங்கர் படம் தான் என்பதற்கு கிராபிக்ஸ் காட்சிகளைத் தவிர்த்தும், ரிச் சீன்ஸ் எனப்படும் செலவு மிக்கக் காட்சிகளைத் தவிர்த்து படத்தில் ஷங்கர் முத்திரைகள் இல்லை. வழக்கமாக ஊழலை ஒழிக்கிறேன். லஞ்சத்தை எதிர்க்கிறேன் என்று காட்சிப்படுத்துபவர் துவக்கத்தில் ரோபோவை இராணுவத்திற்கு பயன்படுத்தப் போவதாக கதையை நகர்த்தி அதையும் இடையில் மீட்டுக்கொண்டார். அவருக்கே அவரது தேசியவா(வியா)தி அவதாரம் போரடித்துவிட்டது போலும், அதனால் கதையை மாற்றும் கட்டாயத்தில் ரோபோ ஐஸ்வர்யாவை (சனா) காதலிக்க எடுக்கும் முயற்சியில் கொள்ளையடிப்பது, அதை விஞ்ஞானி ரஜினி எப்படி முறியடிக்கிறார் என்பதாக ஒரு வித காதல்கதை போல் சொல்ல முயற்சித்திருக்கிறார். ஒரு சில நையாண்டி வசனங்கள் சுஜாதா எழுதியவை என்பதாக தெரிகிறது. படத்தில் முழுதுமாக சுஜாதா பணியாற்றி இருந்திருந்தால் படம் கலகலப்பாக நகர்ந்திருக்கும். 2 1/2 மணி நேரத்திற்கும் மேலாக படம் ஓடுவது அயர்ச்சியைத் தருகிறது.
இடைவேளை வரையிலும் கூட ரோபோவை வைத்து ஸ்பைடர் மேன் அவதாரம் போல் எதுவும் பெரிதாக காட்சிகள் வைக்கப் போகிறார்களோ என்பதற்கு ஒரு ட்ரைன் சண்டைக்காட்சியைத் தவிர்த்து எதுவும் இல்லை. பிற்பாதியின் பாதியில் தான் படம் வேகமாக நகர்கிறது. பாடலுக்கு அழகாக நடனம் ஆடுகிறார் ஐஸ். விஞ்ஞானி ரஜினியின் ஐஸும் சந்திக்கும் காட்சிகள் ஒருவருக்கொருவர் கோவித்துக் கொள்வதாகவும் அதன் முடிவில் பாடல் என்பதை அமைத்திருக்கிறார்கள், படத்தில் ரஜினிக்கும் ஐஸுக்கும் காதல் எவ்வாறு வந்தது என்பதைக் காட்ட மெனக்கடாமல் அவர்களை காதலர்களாகவே அறிமுகப்படுத்துகிறார் ஷ்ங்கர். பிறகு ரோபோ ரஜினி ஐஸை காதலிக்கக்த் துவங்குவதால் இரண்டுமுறை காதல் உருவாகும் காட்சிகளை அமைப்பது போர் என்று விட்டிருப்பார் போலும். ஐஸுக்கும் ரஜினிக்கும் படத்தில் கெமிஸ்ட்ரி பிசிக்ஸ் எதுவும் தெரியவில்லை, காட்சிகளில் சேர்ந்து நடிக்கிறார்கள் அதுவும் ரசிகர்களுக்கு அவர்களின் வயது தெரிந்திருப்பதால், இருவரிடமும் அது போல் பெரிதாக ரொம்பவும் எதிர்பார்க்க முடியவில்லை.

ரஹ்மான் இசைதான் படத்தை முழுதாமாக தூக்கி நிறுத்தி இருக்கிறது. அத்தனை பாடல்களும் ஏற்கனவே கேட்டுச் சென்றதால் படத்தில் காட்சிகளுடன் பார்க்க இன்னும் சிறப்பாகவே இருந்தது.
மனிதர்களைப் போல் சிந்திக்கத் தெரியும், உணர்ச்சிவசப்படும் ரோபாக்களால் மனித இனத்துக்கு பலன் எதுவும் இல்லை, மனித இனத்துக்கு போட்டியாகவும் எதிரியாகவும் அமையும், அதை அழித்துவிட வேண்டும் என்பதாக ஷங்கர் நீதிபதிகள் மூலம் தீர்ப்பு எழுதி இருக்கிறார். வருணாசிரம தருமத்தில் ஊறிய இந்தியாவில் சிந்திக்கத் துவங்கினால் உருவாகும் பிரச்சனையை நன்று அறிந்து, அதனால் தானே சூத்திரன் படிக்கக் கூடாது அவன் உடல் வழியான வேலையை மட்டும் பார்த்தால் போதும் என்று சொல்லி சூடுவைத்தார்கள், அதையே சன்குழுமம் ஷங்கரும் இரஜினி என்கிற ரோபோவை வைத்து சொல்லி இருக்கிறார். எந்திரன் ஷங்கரின் மனுதர்மம்.
ரஜினி, ரஹ்மான் இவர்களின் உழைப்பிற்காகவும், தமிழில் இதுவரை வராத கிராபிக்ஸ் முயற்சிக்காக படம் பார்கலாம்.
