பின்பற்றுபவர்கள்

திரைப்படப் பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரைப்படப் பார்வை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 செப்டம்பர், 2011

தலயின் தறுதலை - மங்காத்தா !

திரைப்படம் என்பது பொழுது போக்கு சார்ந்தது தான், மக்களின் வாழ்வியலுக்கு பாடம் நடத்துபவை அல்ல என்பதை அழுத்தமாக பதிவு செய்திருக்கிறது மங்காத்தா குழு. கதை நாயகன் திறன் படைத்தவனாக இருந்தால் போதும் நல்லவனாக இருப்பது தேவையற்றது என்று காட்சிக்கு காட்சி சொல்லி நகர்த்தி இருக்கிறார்கள், நாயகனின் பெண்கள் மீதான தொடர்பு காமம் அல்லது தன் நலம் சார்ந்த ஒன்றாகவே காட்சிகள் நகர்கின்றன. படம் முழுவதும் மது மற்றும் சிகெரெட் புகை. அன்புமணி ராமதாஸ்கள் ஏன் இன்னும் போர்கொடித் தூக்க வில்லை என்று தெரியவில்லை. பணத்தின் மீதே குறி கொண்ட ஒருவருக்கு ஒழுக்கங்கள் எதுவும் இருக்காது என்பதாகத்தான் காட்சிகள் அதை ஞாயப்படுத்துகின்றன. படம் முழுவது டிஸ்யூம் டிஸ்யூம் துப்பாக்கிச் சண்டை, இறைச்சல்.

புலிவேசம் படம் செட்டியார்களை அவமானப்படுத்துகிறது என்று போர்கொடித் தூக்கிய செட்டியார் சமூகம், இங்கு ஒட்டுமொத்தமாக கோவணம் உருவப்படுவதை கண்டு கொண்டார்களாத் தெரியவில்லை, படத்தில் வரும் கிரிக்கெட் சூதாட்டப் பணத்தை வைத்து தொழில் செய்யும் புக்கியாக செட்டியார் வருகிறார், படமும் அவர் அரசை ஏமாற்றி சூதாட்டப்பணத்தை பிரித்துக் கொடுப்பவராகத்தான் காட்டுகிறார்கள், பெரும்பாலும் சமூகவிரோதிகள், அரசை ஏமாற்றுபவர்கள், தீவிரவாதிகள் என்பதற்கு ரெடிமேடாகவே முஸ்லிம் பாத்திரம் ஒன்றை கதைகளில் வைத்திருக்கும் திரை உலகம், இதில் ஒரு முஸ்லிம் இளைஞரை செட்டியாரின் அடியாளாகக் காட்டுகிறது.

ஆகஸ்ட் 15ல் பிறந்ததற்காக தேசப் பக்தி படங்களாக நடித்துத் தள்ளிய அர்ஜுன் போலிஸ் அதிகாரியாக வந்து கொள்ளைப் பணத்தில் பங்கு பிரிக்கும் அஜித்தின் நண்பர் என்பதை இறுதிக்காட்சியில் சொல்கிறார்கள், அர்ஜுனின் தேசபக்தி கோவணம் முற்றிலுமாக அவிழ்ந்து தொங்குகிறது, பணத்திற்காக நண்பர்கள் அடித்துக் கொள்வதாகவும் துரோகம் செய்வதாகவும், காதலியை ஏமாற்றுவதாகவும் காட்டிய படத்தில் அர்ஜுன் மற்றும் அஜித் நல்ல நண்பர்கள் என்று சொல்லி அவர்களின் திட்டபடி பணம் கொள்ளையடிக்கப்பட்டு, ஸ்விஸ் வங்கியில் பாதுகாப்பு உகந்ததல்ல அதனால் லண்டன் பேங்குகளில் பணம் போடப்பட்டதாக அர்ஜுன் அஜித்திடம் சொல்லுகிறார். அர்ஜுன் வரும் காட்சிகளெல்லாம் அர்ஜுனின் வேறு படத்தில் இருந்து இந்தப்படத்திற்கு ஊடுறுவி வந்து செல்வது போன்று இருந்தது. பாலியல் வண்புணர்ச்சி காட்சிக்கு மணிரத்னம் முதலியோர் பிரியாமணியை நாடுவது போல் படுக்கை அறையில் கண்ணீர் விடும் காட்சிக்கு அஞ்சலி நல்ல தேர்வு. மற்றப்படி படத்தில் அவருக்கு வேலை இல்லை. ஹாலிவுட் படங்களில் வரும் நாயகிகள் போல் ஆண்டிரியாவும், லட்சுமிராயும் வந்து போகிறார்கள். போக்குவரத்து விளக்குகளை ஹேக் செய்வது உள்ளிட்ட ஹைட்டெக் காட்சி அமைப்பதாக எடுக்கப்பட்ட காட்சிகள் சரியான சொதப்பல்கள்.

மாமனார் - மருமகள் உறவு பற்றிய சொல்லி சிந்துசமவெளி , செல்லவராகவனின் துள்ளுவதோ இளமை ஆகியவை ஒரு சிலரின் எதார்த்தங்களை படமாக்கியது போல் இந்த படமும் தாவூத் இப்ராஹிம் போன்ற பணத்தை குறியாக வைத்து செயல்படும் ஒருவரைப் பற்றிய ஒருவரிக் கதையாக நகர்ந்து முடிகிறது, அழுகாச்சி, செண்டிமென்ட் ஆகியவற்றைப் புறந்தள்ளும் கதைகள் தமிழில் வரத் துவங்கி இருகின்றது. பொழுது போக்குகளில் சமூகம் நலம் என்ற கோட்பாடுகளில் திரப்படங்களைப் பார்த்தவர்களுக்கு இது போன்ற படங்கள் உவர்பாகத்தான் இருக்கும். பொழுது போக்கு திரைப்படம் என்ற அளவில் ஓகே. கெட்டவனை கெட்டவனாகவே காட்டி முடிப்பது பின் நவீனத்துவா இல்லையா ? இலக்கிய ஆர்வலர்களின் ஆராய்ச்சிக்கு உரியது.

நான் பார்த்த அளவில் இந்தப்படம் நாயகனின் குணம், கதை முடிவு வரை சினிமா மரபுகளை உடைத்துள்ளது. பணத்தீன் மீது வெறி கொண்டு அலைபவர்களின் இலட்சனம் இது தான் என்று காட்ட முயன்று இருக்கிறார்களா ? தெரியவில்லை. நீலப்படங்களில் எதாவது மெஜேஜ் இருக்கும் என்று நம்பினால் இந்தப்படத்திலும் அது போன்று எதாவது இருக்கலாம். அஜித் - அர்ஜுன் இந்தப் படத்தில் நடித்தது துணிச்சலான முடிவு. துப்பாக்கிச் சத்தங்களும், சிகிரெட் புகைகளும், மதுக்கூடமும் உங்களுக்கு பிடித்து இருந்தால் இந்தப் படத்தைப் பார்க்கலாம். மங்காத்தா ஆடுபவர்களுக்கு பணம் ஒன்று தானே குறிக்கோள், அது தான் படத்தின் கதையும், தயாரிப்பாளர் இயக்குனர் ஆகியோரின் நோக்கமும், அஜித் பில்லாவுக்கு பிறகான தொடர் தோல்விகளால் துணிச்சலாகவே இப்படத்திற்கு மங்காத்தா ஆடி வெற்றி பெற்றுள்ளார். மரண தண்டனைக்கு எதிராக 'விருமாண்டி' படத்தில் கூவிய கமலஹாசன், மரண தண்டனையை ஞாயப்படுத்தி உன்னைப் போல் ஒருவன் செய்யவில்லௌயா ? எல்லாம் பணத்தை நோக்கிய மங்காத்தாவே. படத்தில் பஞ்சு வசனத்திற்கு அடிமையாகும் ரசிகர்கள் தான் புரிந்து கொள்வதில்லை,.

நான் எவ்ளவு நாளைக்குத்தான் நல்லவனாக இருப்பது திமுகவினரால் நெருக்கடிக்குள்ளான அஜித் தயாநிதி அழகிரி தயாரிப்பிலேயே அதை நொந்து வெளிப்படுத்தி இருப்பதற்கு பாராட்டுகள். தலை தறுதலையாகவே நடித்திருக்கிறார்.

சரோஜா படத்தைப் போலவே ப்ளாஸ் பேக்கில் படம் முழுவதையும் மாற்றிச் சொல்வது வெங்கட் பிரபுக்கு இது இரண்டாவது படம், இனி தொடர்ந்தால் பல்பாகத் தான் அமையும்.

24 டிசம்பர், 2010

மன்மதன் அம்பு - அம்மணத் துறவி !

சதீலீலாவதி போன்ற முழுநீள நகைச்சுவைப் படம். படத்தின் தலைப்பு நாயகன் நாயகியின் பெயர் அதாவது மதனகோபால் என்கிற மதன் (மாதவன்), அம்பு (3ஷா). பணக்காரப் பையன் நடிகையைக் காதலித்தால் அவளை பலவாறு சந்தேகப்படுவான் என்கிற ஒருவரிக் கதையை நகைச்சுவையாக சொல்லி இருக்கிறார்கள். கதை, வசனம், திரைக்கதை கமலஹாசன். கிரேஷியுடன் பல்வேறு படங்களில் பணியாற்றியதன் அனுபவம் கமலஹாசனின் வசனங்களில் தெரிகிறது, கொஞ்சோண்டு வேறுபாடு நகைச்சுவையை கொஞ்சம் தத்துவமாக அவ்வப்போது சொல்கிறார்.

நடிகையைக் காதலிக்கும் மாதவன் அவளின் நடவடிக்கையை நம்பாமல் அவள் சுற்றுலா போகும் வெளிநாட்டிற்கு (பாரிஸ்- வெனிஸ்) அவளைப் பின் தொடர்ந்து கண்காணித்து தகவல் அனுப்ப ஒரு தனியார் புலனாய்வாளரை (ஸ்பை) அனுப்புகிறார். அவ்வாறு அனுப்பப்படுபவர் கமல். கமல் ஒத்துக் கொண்ட செல்லக் காராணம் நண்பருக்கு (ராமேஷ் அரவிந்த்) கேன்ஷராம், அதற்கு நிறைய பணம் தேவைப்படுவதால் இந்த ஒற்றர் வேலைக்குச் செல்கிறாராம். ஊர்வசியும், இராமேஷ் அரவிந்தின் மனைவியாக வெறும் அழுகைக் காட்சிக்காக வந்துபோகிறார். ஒற்றராகச் செல்லும் கமல் த்ரிசாவின் நடவடிக்கையில் சந்தேகப்படும் படி இல்லை என்பதை மாதவனுக்கு தெரிவிக்க, சரி திரும்ப வந்துவிடு என்று கூறி கேன்சருக்கு பணம் கொடுக்க மறுக்கிறார். மாதவன் ஏமாற்றியதால் மாதவனை ஏமாற்ற திரிஷாவைப் பற்றி புதிதாக கிசுகிசுக்க, திரும்பவும் பின் தொடர கேட்டுக் கொள்ளப்பட்டு பண உதவியும் செய்யப்படுகிறது. இதற்கிடையே மாதவன் சந்தேகப்படுவதை திரிசா அறிந்து கொள்வதாகவும், கமலுடைய மனைவி விபத்தில் இருந்ததற்கு திரிஷா முன்பு ஏற்படுத்திய விபத்து என்பதாக கதை செல்ல மாதவன் மீது இருந்த காதல் கமல் மீது மாறுகிறது திரிசாவுக்கு.......முடிவில் என்ன ஆகியது என்பதை சதிலீலாவதி, ஒளவைசண்முகி போன்று நகைச்சுவை குழப்பங்களுடன் சொல்லி இருக்கிறார்கள்.

உஷா உதுப் மாதவனின் அம்மாவாக வந்து பிராமணாள் பாஷை பேசி மாதவனும் திரிஷாவும் எப்போது பிரிவார்கள் என்று காத்திருக்கிறார். சில இடங்களில் கமலின் வசனம் மிகவும் கூர்மையாக உள்ளது. பாரிஸ் நகரத்தி ஈழத்தவர் சிலரை நடிக்க வைத்திருப்பதும், அவர்கள் பேசும் ஈழத்து தமிழும் நகைச்சுவையாக இருந்தது

திரிசாவின் சிறுவயது தோழியாக வரும் சங்கீதாவும், அவருடைய இரு குழந்தைகளாக நடிக்கும் குழந்தைகள் கலக்கி இருக்கிறார்கள். மாதவனும் சிறப்பாக செய்திருக்கிறார். திரிஷா நிறைய (விதவிதமான கவர்ச்சி) ஆடைகளில் வருகிறார். சொந்தக் குரல் போல முதலில் கொஞ்சம் கடுமையாக இருந்தது போல் தெரிந்தது பிறகு அவ்வாறு தெரியவில்லை. ஈஎம்சி ஹனிபா செயயவேண்டிய பாத்திரம் ஒன்றை வேறொரு மலையாள நடிகரை வைத்து செய்திருக்கிறார்கள். கப்பல் கப்பல் என்றெல்லாம் விளம்பரப்படுத்திய அளவுக்கு கப்பல் காட்சிகள் தனியாகத் தெரிவதாக ஒன்றும் இல்லை. நட்புக்காக துவக்கக் காட்சியில் ஆடுகிறார் சூரியா. சிங்கீதம் சீனிவாசராவ் படம் போல் இருந்தது, கே எஸ் இரவிகுமாரின் டச் என்பதாக ஒரு காட்சியும் சொல்ல முடியவில்லை (கமல் படத்தில் இயக்குனர்கள் டம்மி பீஸ் தானே)

தேவி பிராசாத் இசையமைப்பில் மூன்று பாடல்கள். ஒன்றில் பிரஞ்சுக்கார மனைவியுடன் நினைவுகளை பின்னோக்கி, காட்சிகளையும் பின்னோக்கி ஓட்டுகிறார் கமல், காட்சி புதுமையாக இருந்தது, அப்பறம் முக்கியமான ஒன்று படத்தில் நீக்கியதாகச் சொல்லப்பட்ட தொந்திக் கணபதி, நிர்வாNa துறவிகள், வரலட்சுமி ..... கமல் கவிதைப் பாடல் வெட்டாமல் ஓடியது. அதனை காட்சி படுத்திய ஒளிப்பதிவு சிறப்பு ஐந்து நிமிடம் ஓடும் காட்சியில் வெட்டே இல்லை (சிங்கிள் டேக்)

மற்றபடி இது ஒளவை சண்முகி போன்று என்றும் பார்க்கும் அளவுக்கெல்லாம் காட்சிகளுடனான நகைச்சுவையுடன் மீண்டும் பார்தால் ரசிக்குமா என்று தெரியவில்லை, என்னால் இரண்டாம் முறை பார்க்க முடியாது.

மன்மதன் அம்பு கதைன்னு எதையும் தேடமுடியாது, திரைகதை உண்டு மற்றபடி இது கூர்மையற்ற நகைச்சுவை மொக்கை, எதிர்ப்பார்ப்பு எதுவும் இல்லை என்றால் ஒருமுறை பார்க்கலாம்.

8 அக்டோபர், 2010

ஷங்கர் குழப்பியுள்ள கடவுள் மற்றும் உயிர் !

நாம எதைப் பற்றி மிகுதியான ஆர்வம் கொண்டிருக்கிறோமோ, அது நம்மைக் கடக்கும் போது அதை கண்டிப்பாக தவறவிட்டுவிடமாட்டோம். அது நம் எண்ணத்தில் ஊறிய சமூகம் சார்ந்த கருத்துக்களாக இருந்தாலும் சரி, நாம் விரும்பும் ஒரு பொருளாக இருந்தாலும் சரி.

*****

கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? இது எந்திரன் படத்தில் ரோபோவிடம் கேட்கப்படும் கேள்வி...

இதற்கு ரோபோ சொல்லும் விடை

'என்னைப் படைச்சவர் இவர், இதே போல் ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னால் ஒருவர் இருக்கிறார்......எனவே கடவுள் இருக்கிறார்;

இந்த விடைக்கு திரையரங்கில் பலர் கைத்தட்டினார்கள்.

ரோபோவே சொல்லிவிட்டது எனவே கடவுள் உண்டு என்று கொள்வதா ? அல்லது கடவுளுக்கு ரோபோ சாட்சியா என்பதையெல்லாம் விட ரோபோவுக்கு என்ன (புரோகிராம் வழி) சொல்லப்பட்டு இருக்கிறதோ அதன் படிதான் சொல்லும், எனவே இந்த விடையை ரோபோ சொல்லிய விடை அல்லது ரோபோ கடவுள் இருப்பிற்கு சாட்சி என்றெல்லாம் கொள்ள முடியாது. ரோபோ என்ன ரோபோ நம்ம ஊரில் பாம்பு பால் குடித்துவிட்டு, பிள்ளையார் கழுத்தில் படர்ந்து கடவுள் இருப்பதை நிருபனம் செய்துவிடும். நல்ல பாம்புகள் நிருபனம் செய்யாத வேறொரு கடவுளையா ரோபோ நிருபனம் செய்துவிடப் போகிறது...... ?
நம் நாட்டில் நாகப் பாம்புகள் அதற்காவே புற்றுகளில் குடி இருக்கின்றன. :))))

இது நகைச்சுவைக்கு என்றாலும் கூட, எந்திரன் படத்தில் முதலில் கடவுள் இருப்பை உறுதிப்படுத்தும் ரோபோவை விஞ்ஞானி எந்திரன் குழப்பி இருப்பார். அதாவது ரோபோவுக்கு 'உயிர் மற்றும் உணர்ச்சிகள்' பற்றி விளக்கும் காட்சி, அந்த இடத்தில் ரோபோ உயிர் என்றால் என்ன ? என்று கேட்க....'எப்படிச் சொல்றது......பூமியில் உயிர் என்பதே.....பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எதோ ஒரு (கோள்) மோதலில் ஏற்பட்ட விபத்தினால் ஏற்பட்ட ஒன்று' என்பதாக பரிணாம கோட்பாட்டை விளக்குவார்

இதை படம் பார்க்கும் எத்தனை பேர் உள்வாங்கினார்கள் என்று தெரியவில்லை, ரோபோ விடையாக சொல்லும் கடவுள் உண்டு என்பதற்கு முற்றிலும் மாற்றாக பிற்பகுதியில் உயிர்களின் உருவாக்கம் என்பது தற்செயலாக நடந்த ஒன்று விஞ்ஞானி அறிவியல் (பரிணாமக்) கோட்பாட்டை விளக்கி இருப்பார். பார்வையாளர்கள் எப்படி உள்வாங்கி கொள்ள வேண்டும் ? கடவுள் இருக்கார் ஆனால் எதையும் படைக்கல, மனிதர்கள் எந்திரங்களை படைக்கிறார்கள் எந்திரங்களுக்கு மனிதர்கள் தான் கடவுள். பரிணாமக் கோட்பாட்டின் படி தற்செயலாக நடந்த விபத்தில் யாராலும் படைக்கப்படாத மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு ?

இந்த படத்தில் சொல்லும் இந்த 'கடவுள்' மற்றும் 'உயிர்' குறித்த தகவல் ஒரு விவாதத்தை தோற்றுவித்துள்ளது என்று நினைக்க ஒன்றும் இல்லை. படத்தில் இடம் பெறும் இந்த இரு சொல்லாடல்கள் முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு அற்றவையாகவும் முரண்பாடாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் மாற்றாக கடவுள் பற்றிய கேள்வியில் தசவதாரம் படத்தில் கமல் 'கடவுள் இல்லைன்னு சொல்லவில்லை, இருந்தா நல்லா இருக்கும்...' என்று தான் சொல்லுகிறேன் என்றது கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும் குழப்பமற்ற 'நச்'

1 மே, 2010

சுறா - வுல எல்லாமே இருக்கு !

கடந்த 10 ஆண்டுகளில் வந்த விஜய் படங்களில் 80 விழுக்காடு படங்களைப் பார்த்திருப்பேன். விஜய்படங்களுக்கு திரையரங்கில் கூட்டம் அள்ளுது, குருவி படத்தை பினாங்கில் பார்த்த போதும் அங்கு அலைமோதிய கூட்டம் (லோக்கல் மலேசிய மக்கள்) விஜய் தனக்கான ரசிகர் பட்டாளத்தை கட்டியமைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறார் என்று தான் தெரிந்தது, குருவிக்கு பிறகு வந்த நான்கு திரைப்படங்களுக்கும் முதல் நாள், முதல் வார இறுதிகளில் திரையரங்கில் கூட்டம் அலைமோதியது. விஜய் படங்கள் வெற்றியா தோல்வியா என்பதைவிட எப்போதும் விஜய் படங்களை எதிர்பார்த்து பெரிய கூட்டம் திரையரங்கிற்கு வருகிறது என்பது உண்மை. அவர்களில் யாரும் விஜய் படங்கள் மாபெரும் வெற்றிபெரும் என்று எதிர்பார்ப்பதில்லை என்பதை அவர்களின் தொடர்சியான வருகை சொல்லிவிடுகிறது.

இதனால் தான் என்னவோ விஜய் பாணி படங்களை மட்டுமே விஜய் செய்ய முடிவு செய்து இருக்கிறார், என்று தெரிகிறது. நான்கு சண்டைகள், நான்கு பாடல்கள், அதில் இரண்டு குத்து பாட்டு, அரசியல் தனமான வில்லன், அவனை எதிர்க்கும் விஜய் இவைதான் விஜய்படங்களின் கதையாக இருக்கிறது. சுறா படத்தில் மீனவ இளைஞன் சுறாவாக வருகிறார், வழக்கம் போல் மீனவர்கள் குடியிருக்கும் புறம்போக்கு நிலத்தை தீம் பார்க் கட்ட குறிவைக்கும் வில்லனுடன் மோதி தன்னைச் சார்ந்த மீனவர்களுக்கு காங்கிரீட் வீடு கட்டித்தருகிறார். சைட் டிஸ் போல கவர்ச்சிக்கு அப்போதைக்கு சரியான மார்கெட் உள்ள ஒரு நடிகை, இதில் தங்கத்தாரகை என்று ரசிகர்களால் விசில் அடிக்கப்படும் தமன்னா. படத்தின் நகைச்சுவைக்காக வடிவேலு. வெண்ணிறாடை மூர்த்தியை ரசிக்க பெரும் கூட்டம் இருக்கிறது என்பதை அவர் வரும் ஒரு காட்சியில் விசிலடித்து மகிழ்ச்சியை தெரிவித்தனர் பலர். பழம்பெரும் நடிகர்களில் எஞ்சி இருப்பவர் வெண்ணிறாடை மூர்த்தி, அவரின் வசனங்கள் இருபொருள் கொண்டது என்ற விமர்சனம் இருந்தாலும், தெருக் கூத்துகளில் அதுபோலவே கேட்டுப் பழக்கப்பட்டதால் வெண்ணிறாடை மூர்த்தி வசனங்களை பலரும் உள்ளுக்குளாவது ரசிக்கவே செய்கின்றனர். இந்த வயசிலேயும் பிட்டு ரோலாக இருந்தாலும் பட்டுன்னு நடிச்சு கொடுத்து சும்மா மனுசன் அசத்தி இருக்கிறார்.

விஜய்படம் கலைப்படம் என்று விளம்பரப்படுத்தப்படுவதில்லை. பொழுது போக்குபடம் தான். சினிமாவுக்கு போவது பொழுது போக்குக்குத்தான் என நினைக்கும் ரசிக மனநிலையை விஜய் படங்கள் பூர்த்தி செய்கின்றன. அதுக்கு மேல எதுவும் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனக்கு படத்தில் இடைவேளை எப்போ வரும் என்ற அயற்சி மிஞ்சியது, அதன் பிறகு விறுவிறுப்பாக படம் சென்றது. மீனவர்கள், (ரிக்ஷா காரர்கள்) ஆட்டோகாரர்கள் என்று அடையாளப்படுத்தும் அளவுக்கு உள்ள பெரும் திரளான கடைநிலை வாழ்க்கை வாழும் திரைப்பட ரசிகர்களை குறி(த்து)வைத்து படம் செய்த எம்ஜிஆர், ரஜினி இவர்களின் வரிசையில் விஜய் பயணிக்கிறார். எம்ஜிஆர், ரஜினி அப்படியான படம் செய்யும் போது இவர் செய்யக் கூடாதா ?

படத்தைப் பார்த்துவிட்டு விஜயை திட்டுகிறவர்கள் எம்ஜிஆர், ரஜினியை கூட திட்டலாம், ஏனெனில் அவர்களும் அவர்களின் ரசிகர்களுக்காக அவர்கள் பாணி படங்களைத்தான் எடுத்தார்கள். விஜய்படத்திற்கு என்ன எதிர்ப்பார்ப்பு வைத்துச் செல்கிறோமோ அது இந்த படத்தில் இருக்கிறது. விஜய் ரசிகர்களுக்கான மற்றொரு படம் சுறா.... நன்றாக கவனித்தேன் படம் பார்த்து விட்டு வெளியே வந்தவர்கள் வரும் போது எதிர்மறையாக விமர்சனம் செய்து முனுகியது போல் தெரியவில்லை. வெளியீடு ஆகி இரண்டாம் நாள் என்பதால் படத்தின் பார்வையாளர்கள் 90 விழுக்காடு விஜய்ரசிகர்கள் தான். நான் விஜய் ரசிகன் இல்லை, இருந்தாலும் விஜய் படம் இப்படித்தான் இருக்கும் என்று நினைத்தே சென்றேன். படம் ஏமாற்றவில்லை.

30 மார்ச், 2010

அங்காடித் தெரு - திரைபார்வை !

ஸ்டார் வேல்யூ, டைரக்டர் வேல்யூ என்ற பிரிவாக திரைப்படங்கள் பார்க்கப்படுவதும் விமர்சனம் செய்வதும் நடைமுறை, இந்த வகையில் ஒரே படத்திற்கு பல்வேறு பதிவர்களிடமிருந்து 50க்கும் மேற்பட்ட விமர்சனங்கள் வரும். செல்வராகவன், கவுதம் மேனன் படங்களுக்கு மிகுதியான விமர்சனங்கள் வந்தது. அங்காடித் தெரு பற்றி கேபிள் சங்கர் பதிவைப் படித்ததும் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன். மற்றப் படங்களின் விமர்சனங்களை விட இந்தப் படம் பற்றி எழுதும் போது 'இவருமா ?' என்று சிலருக்கு சலிப்பு ஏற்படுத்தினாலும், மேலும் பார்க்காத ஒருவர் படம் பார்க்க விரும்புவார் என்கிற நம்பிக்கையில் எழுதுகிறேன்.

விளிம்பு நிலைக்கும் நடுத்தரவர்கத்திற்கும் இடைப்பட்ட மக்களின் வாழ்க்கையின் போக்குகள் பற்றி நன்றாக சொல்லி இருக்கிறார்கள். ஐந்து மாடி ஜவுளிக்கடைகளின் கிழிந்த பக்கங்கள் படத்தில் காட்சி படுத்தப்பட்டு இருக்கிறது. கூலித் தொழிலாளிகளுக்கு முடிந்த அளவில் பிடித்தம் செய்து ஊதியம் வழங்கிவிட்டு கோடிகளில் லாபம் பெரும் நிறுவனங்கள் உபரிப் பணத்தை (விளம்பர) நடிகைகளின் படுக்கை அறையில் நிறைத்துவிடுகிறார்கள் என்பது நாம் அறிந்த தகவல் தான்.

கொத்தடிமை முறை தற்போது இல்லை என நினைக்கிறோம், ஆனால் அது வேறொரு வடிவமாக தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது. இது போன்ற படங்களைப் பார்க்கும் போதும், உழைப்பால் உயர்ந்தவர்கள் என்று ஒருசிலரை அடையாளம் காட்டி தன் முனைப்பு கட்டுரையாக எழுதுவதையெல்லாம் படித்த பிறகு, தான் கஷ்டப்பட்டு வந்ததை உணர்ந்த ஒருவன் அதே போல் கஷ்டப்படுபவர்களுக்கு எந்த ஒரு உதவியும் செய்யாமல் முடிந்த அளவுக்கு அவர்களை பிழிந்தே, சுரண்டியே தான் மேலும் மேலும் வளர்கிறான் என்பது மென்று விழுங்கக் கூடிய உண்மையாக இருக்கிறது.

ஒருமுறை அசோக் நகர் சரவண பவனுக்குச் சென்றேன். அங்கு சப்ளையராக பல சிறுவர்கள் இருந்தார்கள். இவர்களுக்கு 18 வயதிற்கும் குறைவாக இருக்கலாம் என்று நினைத்து ஒருவனிடம் கேட்டேன். 'தம்பி உனக்கு என்ன வயது ?' கொஞ்சம் யோசித்துவிட்டு 18 என்றான். 18 என்று சொல்ல அவ்வளவு யோசனையா ? என்று நினைக்கும் போதே அவன் பொய்தான் சொல்கிறான் என்று விளங்கியது.

பல ஐந்து மாடிகள் அண்ணாச்சி கடைகளில் வேலை செய்யும் சிறுவர்கள் 15 - 18 வயதிற்குள் இருப்பவர்களே மிகுதி என்று நினைக்கிறேன். 18 வயதிற்கும் மேல் அவனுக்கு விவரம் தெரிந்துவிடும், இது போன்ற கடைகள் பிழிந்து எடுக்கிறார்கள் என்று கண்டிபாக உணர்ந்தே ஓடிவிடுவார்கள்.

சிறுவர்களுக்கு வேலை கொடுப்பது சட்டபடி குற்றம் என்றாலும் அவர்களின் வயதைக் கூட்டிச் சொல்லச் சொல்லி எப்படியோ வேலையில் வைத்துக் கொள்கிறார்கள். சிறுவர்கள் வேலைக்கு வருவது வெறும் வறுமை தான் காரணம் என்பதைவிட சிறுவயதில் பீடி சுற்றி, வெடி சுற்றி அவர்கள் காசுகளைப் பார்ப்பதால் பிறகு படிப்பதற்கு அவர்களால் இயலாமல் போய் பதினைந்து வயதிலேயே ஐந்து மாடிக் கடைகளின் விறிந்த வலையில் விழுந்துவிடுகிறார்கள்.

திரைப் படம் என்பது நம் கண் முன் நடக்கும் காட்சியின் பதிப்பு என்பதாக அமைந்திருக்கும் மற்றொரு படமாக அங்காடித் தெரு மனதில் நிறந்திருக்கிறது. இது வெற்றிப்படமா தோல்வி படமா என்பதைவிட இது போன்ற படங்களின் மூலம் நடப்புகளை தமிழ் திரை பதிவு செய்துள்ளது என்று எதிர்காலத்தில் நினைவு கூறத்தக்கப்படம் என்று தான் சொல்லுவேன்.

திருநெல்வேலி வட்டார மொழியில் கைதேர்ந்தவர் என்பதால் ஜெயமோகனின் பேச்சுரை படத்திற்கு சிறப்பாகவே பொருந்துகின்றன. பாடல்கள் நன்றாக இருந்தாலும் பின்னனி இசை அவ்வளவு சிறப்பாக இல்லை.

வசந்தபாலன் மற்றொரு பாலா என்று தினமலரில் யாரோ ஒருவர் பின்னூட்டங்களில் குறிப்பிட்டு இருந்தார். எனக்கும் சரி என்றே தோன்றுகிறது.

வாழ்க்கைச் சூழலில் ஒன்றாக இருக்கும் நம்மில் ஒருவன் தான் நமக்கான படைப்பை உருவாக்க முடியும் என்பதை நிருபனம் செய்யும் மற்றும் ஒரு இயக்குனர் வசந்த பாலன்.

படத்தின் இயல்பான முடிவு, வாழ்ந்து காட்டுகிறேன் என்கிற நாயகனின் அறைகூவல்.....மற்ற படங்களில் என்றால் ஐந்து மாடி முதலாளிக்கு பதிலாக பத்து மாடிக்கு முதலாளியாக நாயகன் உயர்ந்ததாக காட்டுவார்கள். இங்கு அந்த வாழ்ந்து காட்டுதல் என்பது இவனிடம் வேலையை விட்டா வழியே இல்லையா ? இருக்கே...வேறொரு வேலை என்பதாக முடிகிறது. மேலும் மேலும் வாழ்க்கையில் உயர்வது என்பது மட்டுமே வாழ்க்கை என்று நம்ப வைக்கப்படும் திரைச் சூழலில் இயல்பாக தொடர்வதும் கூட வாழுதல் தான் என்று சொல்லப்படுகிறது. குள்ளமனிதன் - விலைமகள் மனைவி, கண் தெரியதா பெரியவரின் கடை, கட்டண கழிப்பிடம் நடத்தும் மற்றொரு வேலை அற்ற இளைஞன் என அதற்கேற்றபடியே கதையில் வரும் பிற பாத்திரங்களின் வாழ்க்கைச் சூழலும் கூட காட்டப்படுகிறது. நம்பிக்கையும், பொருளியல் சமூக உயர்வு மட்டுமே வாழ்க்கை அல்ல....பிரச்சனைகளில் இருந்து, விபத்திலிருந்து மீண்டு(ம்) தொடர்வது கூட வாழ்க்கை தான் எனச் சொல்லும் படத்தின் தகவல் (மெசேஜ்) ரொம்ப புடிச்சிருக்கு.

துவக்கத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தும் சிறைக் கூடம் போன்ற உணவுக் கூட மற்றும் இரவு நேரக் காட்சிகள் படத்தில் பிற்பகுதியில் வேறு மாதிரி இயல்பாக காட்டப்படும் போது அவ்வளவு அதிர்ச்சி ஏற்படுத்தாதது திரைக்கதையின் சிறு தொய்வு.

கலைப்படம், கருத்துப் படம், சிறப்பான வசனங்கள் என்ற அளவில் அங்காடித் தெரு பல்பொருள் அங்காடி.

27 பிப்ரவரி, 2010

கார்த்திக் - ஜெஸ்ஸி - பாஸ்தா !

இளைய சூப்பர் ஸ்டார் என சிம்புவின் அறிமுகத்துடன் துவங்குகிறது படம், பொறியியல் கல்லூரி முடித்து திரையில் இயக்குனராக வாய்ப்புக்கு அலையும் வாலிபனாக சிம்பு, மலையாளம், ஆங்கிலம் கூடவே தமிழ் மிகுதியாக பேசும் சிம்புவை விட வயதில் கூடியவராக த்ரிஷா அறிமுகம் ஆகுகிறார்கள், முதல் சந்திபிலேயே இருவருக்கும் பற்றிக் கொள்கிறதாம், அதை சிம்பு வெளிப்படுத்த துடித்து வெளிப்படுத்துகிறார். மதம், பெற்றோர் எதிர்ப்பு இவைகளை சுட்டிக்காட்டி மறுத்தப்படியே சிம்புவுக்காக ஏங்கும் த்ரிஷா. த்ரிஷாவை விரட்டிக் கொண்டு கேரளா வரை செல்லும் காதல் பின்னர் சென்னை திரும்பும் வழியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் தொடர்வண்டி காட்சிகள். த்ரிஷாவின் வீட்டுக்கு தெரிவதால் காதலுக்கு பலமான எதிர்ப்பு, இடையில் த்ரிஷாவுக்கு தேவலயத்தில் ஆலப்புழையில் திருமணம் நடை பெறும் நேரத்தில் வேண்டாம் என்று ஓடிவரும் த்ரிஷா......எனக்கு ஏன் உன்னை புடிச்சிருக்கு, உன்னை ஏன் நான் காதலிக்கனும் படம் முழுவதும் இதையே திரும்ப திரும்ப பேசி சலிக்க வைக்கிறார்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பம் பெற்றே ஆகவேண்டும் போன்ற படித்தவர்களிடம் எடுபடாத இந்த காலத்திலும் அலைகள் ஓய்வதில்லை மற்றும் பல படங்களில் காட்டிய அதே பார்முலா.....திகட்டுகிறது......போதும் விட்டுடுங்க

படத்தின் இறுதி காட்சியாக காதலர்கள் சேர்ந்தாங்கன்னு சிம்பு எடுக்கும் படத்தின் முடிவாகவும் சேரவில்லை என்பது படத்தின் முடிவாகவும் காட்டுறாங்க படம் முடிவினால் தொங்கினால் எதையாதாவது ஒண்ணை வெட்டிவிட்டு ஒட்டலாம் என்ற திட்டம் போல. கவுதம் மேனன் தமிழ் சினிமாவை ஒலக தரத்திற்கு மாற்றுகிறேன் என்கிற பேரில் முத்த காட்சிகளை படம் முழுவதும் ஓட விடுகிறார். சிறுவர்களையும் பெண்களையும் அழைத்துச் செல்பவர்கள் நெளியக் கூடும். நாயகனும் நாயகியும் அழகானவர்களாகவும் அவங்க இல்லத்து உறுப்பினர்கள் சுமாரனவர்களாகவும் காட்டுவது இந்த படத்திலும் தொடருகிறது. ஏஆர் ரஹ்மான் இசை பாடல்கள் வரி தெளிவாக புரியவில்லை. வரிகள் இருக்கிறது என்பதை ஆங்கில துணை தலைப்புகள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடிகிறது (வெளி நாட்டில் வெளியாகும் படங்களில் இவை உண்டு)

சிம்புவுக்கு நண்பராக வரும் கேமராமேன் சிரிப்பை வரவழைக்கும் இயல்பான பேச்சுரை மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது. படத்தில் சிம்புவும் அவரும் மட்டுமே நன்றாக செய்திருக்கிறார்கள், 75 விழுக்காடு சிம்பு த்ரிஷா காட்சிகள் தான், மற்ற கவுதம் மேனன் படங்களைப் போலவே கதாநாயகனின், நாயகியின் குரல் படம் முழுவதும் பேசுகிறது. கவுதம் மேனனின் ஆக்சன் படங்கள் அளவுக்கு காதல் படங்கள் எடுபடவில்லை. சி செண்டர் எனப்படும் சிறு நகரங்களில் படம் ஒடாது என்றே நினைக்கிறேன். மிகவும் மெதுவாக நகர்கிறது. கல்லூரி மாண மாணவிகளுக்கு த்ரிஷா மேல் ஈர்ப்பு இருக்குமான்னு தெரியவில்லை ஏ பி செண்டர்களிலும் ஓடுமான்னு தெரியவில்லை, தயாரிப்பாளர் உதய நிதியின் கவலை அதை விடுவோம். திருமணம் ஆகாத இளம் பெண்கள் புடவை கட்டுவது இந்த படத்தின் வழியாக மறுபடியும் பேஷனாகலாம், படத்தில் த்ரிஷா புடைவைக் காட்சிகள் நிறைய இருக்கிறது.

இந்த படத்தின் மூலம் என்ன சொல்லவருகிறார்கள் என்றே தெரியவில்லை, கிறித்துவ மலையாள பெண்ணை தமிழ் இந்து வாலிபன் காதலித்தால் அவன் நிறைய அலையனும் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது தான் கவுதம் சொல்ல வருகிறாரான்னு தெரியல. படம் முழுவதும் காதல் பிரிவு ஏற்கனவே 80 களில் தென்றலே என்னைத் தொடு ஜெயஸ்ரீ மற்றும் மோகன் நடிப்பில் வெளியாகி இருந்தது, அது சுவையார்வமாக இருந்தது. உதட்டு முத்தம் சென்சார் படாம இருக்க அதை அமெரிக்க சூழலில் எடுக்கலாம் என்பதைத் தவிர கவுதம் அமெரிக்கா வரை படத்தை இழுத்ததற்கு வேறு அழுத்தமான காரணம் தெரியவில்லை. பிரிவின் வலி பிடிச்சிருக்காம், த்ரிஷா அடிக்கடி சொல்கிறார்.

படம் பார்த்தவர்களுக்கு காதுவலியும் காதில் இரத்தம் வராத குறையாக வெளியே முணுகிக் கொண்டே செல்கிறார்கள். படப் பிடிப்பும், சிம்புவின் இயல்பான நடிப்பும், நகைச்சுவையாக பேசும் கேமரா மேனாக வரும் கணேஷ் ஆகியோர் தான் படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படி இருக்கிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா ? காதலில் பிசிஸ்க்ஸும் தெரியல கெமிஸ்ட்ரியும் தெரியல. சிம்பு மட்டும் பாஸ். படத்தில் எதையோ பெரிய முடிவாகச் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்பு ஏற்படுத்தி தொடர்ந்து பார்க்க வைத்ததைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயா ? பழைய பாஸ்தா மாவு.



பிகு: இந்த படத்தை பதிவர்கள் டொன்லி, ஜோதிபாரதி, விஜய் ஆனந்த், முரு, சரவணன், வெற்றி கதிரவன்,ஜெகதீசன் ஆகியோருடன் பார்த்தேன். யாரும் நல்லா இருக்கிறது என்று சொல்லவில்லை.

4 ஜூலை, 2009

நாடோடிகளும் நடுத்தரவர்க்கத் தீண்டாமையும் !

காதல், நட்பு இவற்றை அடிப்படையாகக் கொண்ட எத்தனையோ திரைப்படங்கள் வெற்றிப் பெற்றிருக்கின்றன. காதலில் வெற்றி என்பதை போராட்டக் களமாகவும் அதில் போராடி காதலர்களுக்கு வெற்றியைத் தருபவர்களாக நண்பர்களையும் நிறைய படத்தில் காட்டிவிட்டார்கள். அது மட்டுமல்ல காதலும் நட்பும் தனிமனிதனுக்கு இன்றியமையாத ஒன்று என்பதால் திரையுலகினர் அனைவருமே அன்றாடம் புது அரியில் மாவு அரைக்கிறார்கள். சமுத்திரக்கனி அதே போன்று அரிசியை எடுத்துக் கொண்டு மாவு அரைப்பதுடன் அந்த அரிசு மாவு ஆவதற்கு முன் அரிசியில் இருக்கும் கற்களை பொறுக்குபவர்களின் துன்பங்களைக் காட்டி இருக்கிறார். காதல் வெற்றி பெறாவிட்டாலும் நட்பு தோற்காது என்பதைச் செய்தியாகச் சொல்லும் பொருட்டு, காதலுக்கு உதவிய நண்பர்கள் படும் பாட்டை அழுத்தமாகச் சொல்ல காதலைச் சாகடித்து இருக்கிறார்.

"பணக்காரர்கள்" என்று வானத்தில் இருந்து எவரும் குதித்துவிடுவதில்லை. பரம்பரை பணக்காரர்கள் உண்டு, ஆனால் மொத்த பணக்காரர்களை ஒப்பிடும் போது பரம்பரைப் பணக்காரர்கள் பணக்கார சமூகத்தில் குறைவுதான். கடுமையான உழைப்பில் இருந்து பணக்காரர்களாக மேலே வந்தவர்களே மிகுதி. ஆனால் நடுத்தரவர்கம் "பணக்காரர்கள்" என்ற சொல்லில் பணக்காரர்கள் பற்றிய மிக மட்டமான பிம்பத்தையே கட்டமைத்து இருக்கின்றன. இதற்கு முழுக்க முழுக்க திரைத்துரையினரே காரணம். அன்றாடம் காய்ச்சிகளும், பணக்காரர்களும் ஒழுக்கம் மில்லாதவர்கள் என்பதாகவே நடுத்தரவர்கத்தினரால் பார்க்கப் படுகிறது. நடுத்தர வர்கம் என்கிற சமூகத்தின் மனத் தீண்டாமை இது போன்ற தாழ்வான எண்ணங்கள் என்றே நினைக்கிறேன். பணக்காரர்கள் எதையும் செய்யத் தயங்கமாட்டார்கள், ஒழுக்கமற்றாவர்கள், வரட்டு கவுரவக்காரர்கள், பண்பாடு அற்றவர்கள் இன்னும் என்ன என்ன சமூக ஒழுங்கீனங்கள் இருக்கிறதோ அத்தனையும் பணக்காரர்களுக்கும், அன்றாடம் காய்சும் ஏழைகளுக்கும் இருப்பதாகவே நடுத்தரவர்கம் நினைத்துக் கொண்டிருக்கிறது. பொதுச் சமூகம் என்றால் அது தாங்கள் தான் என்பதையும் நடுத்தரவர்க்கம் சொல்லித் திரி(க்)கிறது. இவற்றையெல்லாம் சொல்லவும், சமூகம் பற்றிய எண்ணங்களைக் கட்டமைக்க போதிய நேரங்கள் இருப்பதும், வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமானால் மேல்தட்டு பணக்கார வர்கத்தின் மீதான பொறாமையுமே இத்தகைய கட்டுமானங்களைத் தொடர்ந்து செய்வதற்குக் காரணம். முன்பெல்லாம் திரையில் வில்லன்களாக கூலிப்படையாக இயங்கும் ஒருவரையோ, அல்லது முரட்டு முகம் கொண்டவர்களையோ காட்டுவார்கள், தற்போதெல்லாம் வில்லன்கள் என்றால் அது பணக்கார வர்கம் என்பதாகவே காட்டப்படுகிறது.

நாடோடிப் படத்தில் போராடி சேர்த்துவைக்கப்படும் காதல் திருமணம் முறிந்து போவதற்குக் காரணமாக காதலனின் அரசியல் செல்வாக்கு மிக்க தாய், காதலியின் பெரும் பணக்கார அப்பா மற்றும் காதலன் காதலி இருவரும் பணம் இல்லாமல் வாழ்க்கையைத் தொடர முடியாத அளவுக்கு அவர்கள் பணக்கார வாழ்க்கை வாழ்ந்தால் மனம் மாறி ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு பிரிவதாகக் கதைச் சொல்லி இருக்கிறார்கள். இதில் இயல்பு என்பது துளிகூட இல்லை. ஒரு பணக்கார பையன் நடுத்தர வர்க்கத்தினர் போல் துரத்தித் துரத்திக் காதலிப்பதாகவும் காதல் கைகூட நண்பர்களை நாடுவதாகவும் சொல்லப்படுகிறது. எந்த ஒரு பணக்காரப் பையனும் துரத்தி துரத்தி காதல் செய்வான் என்பது வெறும் கட்டுமானம் தான். அந்த காதலுக்குத் தடையாக அரசியல் செல்வாக்கு மிக்க தாயும், பணக்கார அப்பாவும் தடையாக இருக்கிறார்கள் என்பதும் கட்டுமானம் தான். காதலன் காதலி 'அனுபவித்த' பிறகு பிரிகிறார்கள், அதுதான் அவர்களின் நோக்கமே என்பதாகவேறு சொல்லப்படுகிறது. பணக்கார வர்கத்தில் அனுபவித்தல், டேட்டிங்க் இவை இயல்பு என்றாலும் அதற்காக மெனக்கட்டு காதல் திருமணம் என்கிற வழக்கங்களையெல்லாம் செய்து அவ்வாறு பாலியல் வேட்கையை அனுபவித்துவிட்டு பின்பு கழட்டி விடுவார்கள் என்று காட்டுவதெல்லாம் மிகவும் மோசமான கற்பனையாகவே படுகிறது. பணக்காரர்களுக்கு காதல் இன்னொரு பணக்காரர் மீது இருக்கலாம் அல்லது ஏழையின் மீது கூட இருக்கலாம் அது வெற்றியும் பெற்றிருக்கிறது என்பதை இதே திரையுலகம் பலமுறை காட்டியுள்ளது, ஆனால் மாறுபட்டக் கதை என்கிற பார்வையில் பணக்காரக் காதலைக் கொச்சைப் படுத்தும் ஒரு செயலாகவே படத்தில் சொல்லப்படாத செய்தியாக படம் பார்த்ததும் உணர்ந்தேன்.


சமுத்திரக்கனிக்கு பணக்காரர்கள் மீது ஏன் இவ்வளவு வெறுப்பு என்று தெரியவில்லை, நான்கு படங்கள் வெற்றிகரமாக அமைந்தால் இவரும் அந்த பட்டியலில் ஒருவர் என்பதை ஏன் மறந்தார் என்று தெரியவில்லை. அதே போல் நடுத்தரவர்க 'கருணாவின்' காதல் தோற்றுப் போவதற்கு ஒரு சப்பைக் காரணமாக அவருடைய முறைமாமன் தன் முறை மருமகனுக்கு அரசாங்க வேலை எதிர்பார்பதாகவும் குற்ற வழக்கில் சிக்கியுள்ளதால் கருணா (சசிகுமார்)சிக்கியுள்ளதால் கருணாவை மாப்பிள்ளையாக ஏற்றுக் கொள்ள எதிர்ப்பு தெரிவித்து அந்த காதல் முறிவதாகச் சொல்லி இருக்கிறார். ஒரு காதல் முறிவதற்கு பணக்காரத் திமிரும், மற்றொருக் காதல் முறிவுக்கு நடுத்தரவர்கத்தின் ஞாயமான காரணம் இருப்பதாகவும் காட்டி இருக்கிறார்.

படத்தில் இடைவேளை வரை மண்வாசனை இருக்கிறது, படத்தில் நடித்த முதன்மைக் கதை பாத்திரங்கள் சிறப்பாக நடித்திருக்கின்றன. நல்லப் பொழுது போக்குப் படம், ஆனால் படத்தின் பணக்காரர்கள் மீதான நடுத்தரவர்கத்தின் வன்மம், தாழ்வுணர்வு ஆகியவை சமூகத் தீண்டாமையாக சமுத்திர கனியின் சிந்தனைகள் மூலம் வெளிச்சமிடப் பட்டு இருக்கிறது. சமுத்திரக் கனிக்கு நடுத்தரவர்கத்தின் பிரதிநிதி என்று யாரும் பட்டம் கொடுத்தார்களா என்று தெரியவில்லை. ஒரு நல்லப் படத்தில் பணக்காரர்கள் பற்றிய மோசமானக் கட்டமைப்பைச் செய்து அதை மக்கள் மனதிலும் விதைத்திருக்கிறார். படத்தின் வெற்றிக்காக மாறுபட்டக் கதை என்கிற பெயரில் பல இயக்குனர்கள் இது போன்ற அபத்தங்களைச் செய்துவிடுவதுண்டு அதற்குக் காரணம் அறியாமையாகக் கூட இருக்கலாம். ஆனால் ஒரு பட இயக்குனர் படத்தில் சொல்லப்படும் செய்திகளில் கட்டுமானங்களின் மூலம் சொல்லாமல் சென்று சேரும் செய்திகள் எவை என்றும் ஓரளவு தெரிந்து கொண்டிருக்க வேண்டும். அப்படி திறனாய்வுடன் செய்யப்படும் படங்கள் இயல்பான சமூகக் கதைகளை பிரதிபலிக்கும் மற்றவை எல்லாம் அள்ளித் தெளித்த கோலங்கள் தான்.

பரம ஏழைகளும், பணக்காரர்களும் சமூகத்தின் கூறுகள் அவர்கள் பண்பாடு அற்றவர்கள் என்று அவர்களை மோசமாக சித்தரிக்கும் சமூகத் தீண்டாமைகளில் நடுத்தரவர்கத்தினர் வெளியே வந்து தாமும் முன்னேற வேண்டும்.

முஸ்லீம்கள் என்றால் கடத்தல் காரர்கள், கிறித்துவர்கள் என்றால் காபரே டான்ஸ் ஆடுபவர்கள், பணக்காரர்கள் என்றால் பண்பாடு அற்றவர்கள் என்ற கருத்தை திரையுலகம் தான் பொதுமக்களிடம் தவறான கருத்தாக விதைத்துள்ளது.

சாரி சமுத்திரக் கனியின் 'நாடோடிகள்' கட்டிடம் உறுதி அடிக்கட்டுமானம் ஆட்டம். தயவு செய்து இது போல் தவறான கட்டுமானம் செய்து சமூகத்திற்கு தவறான எண்ணங்களை விதைகாதீர்கள். காதலர்களை சேர்த்து வைக்க நண்பர்கள் படும் பாடு காட்டப்படாது தான், ஆனால் அதை அழுத்தமாகச் சொல்ல மற்றொரு (பணக்கார) சமூகத்தைக் கேவலாமாக சித்தரிக்கத் தேவை இல்லை. உங்கள் படத்தை ஓகோ என்று சொல்ல என்னால் முடியவில்லை. மண்வாசனைக்காகவும், இயல்பான பேச்சுரை, நகைச்சுவைக்காக ஒருமுறைப் பார்க்கலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்