பின்பற்றுபவர்கள்

22 ஜூன், 2012

பசு மாடுகளை கொல்லலாமா ?

பசுமாடு புனிதம் என்று நான் நினைப்பதில்லை, ஆனால் அதன் மீது மிகுந்த மதிப்பு உண்டு, எந்தவித பலனும் பாராமல் நமக்கு பாலை தருவதால் சிலர் அதை தாய்க்கு ஈடாகப் போற்றுவதில் எனக்கு உடன்பாடு உண்டு, பால் சைவமா ? பால் கன்றுக்குத் தானே, அதையே நீங்க திருடி குடிக்கிறீர்கள் என்று கேட்பவர்களில் எவரும் மாட்டு இறைச்சியையோ, வேறு எந்த விலங்கின் இறைச்சியையோ உண்ணாதவர்கள் இல்லை, பசுவதைப் பற்றி விவாதங்கள் வரும் போது எதிர் தரப்பு 'பசும் பால்' பற்றிய கேள்வியை எழுப்பி பசுவிடம் பால் சுரப்பது கன்று குட்டிக்குத் தானே ? என்று கேட்பர். பசுக் கொலைகள் என்பதில் நான் புனிதத்துவத்தை முன்னிறுத்தி தடுக்க விரும்பியதில்லை, மாறாக அதன் மூலம் பெற்ற பாலிற்கான நன்றிக்கடன் என்ற அளவில் அவற்றை கொல்லாமல் விட்டால் என்ன என்றே கேட்பதுண்டு. பசுவைப் பொருத்த அளவில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் வீட்டு விலங்காக வளர்க்கப்படுபவை, மற்ற வீட்டு விலங்குகளுக்கு இருப்பது போல் காம்புகளின் எண்ணிக்கையையும் மடியையும் ஒப்பிட, பசுவிடம் சுரக்கும் பால் அதன் இனவிருத்திக்கு மறைமுகமாக உதவுவதற்கு வளர்ப்பவர்களுக்கு இரண்டு காம்பு, கன்றுக்கு இரண்டு காம்பு என்றே அமைந்திருக்கும், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு பல காம்புகள் அமைந்திருந்தாலும் அவை ஈனும் குட்டிகளுக்கு அவை சரியாகவே இருக்கும், தவிர அவற்றை பயன்படுத்தி மனிதனுக்கு பழக்கம் இல்லை, உபரியான பால் என்பதை உற்பத்தி செய்வதில் மாடும், அடுத்து ஆடும் உள்ளன, சிலர் ஆட்டின் பாலையும் விரும்பிக் குடிப்பார்கள், அவற்றை ஆடு இழப்பதால் குட்டிகளுக்கும் பெரிய இழப்பு இல்லை, காரணம் கன்று குட்டிகளைப் போல் அன்றி ஆட்டுக் குட்டிகள் பிறந்த அடுத்த நாளே புல்லை சுவைக்கக் கற்றுக் கொள்ளும்,என்பதால் ஆட்டின் பாலைக் கறப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர். 

பசு இரண்டு கன்றுகள் போடுவது எப்போதாவது நடைபெறுவது தான், மரங்கள் தன் இனவிருத்திக்கு விதையை மூடியிருக்கும் பழத்தை இலவசமாகக் கொடுப்பது போல் பசுக்களின் பரிணாமத்தில் பால் உற்பத்தி என்பது கன்று அருந்தும் அளவை விட மிகுதியானது, குறிப்பாக மனிதர் உள்ளிட்ட விலங்கினங்கள் அனைத்திற்கும் பலவகையான சுரப்பிகள் உண்டு, குறிப்பிட்ட பருவகாலங்களில், சுரப்பிகள் தூண்டுதலில் வர உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் பொழுது அவை தொடர்ந்து வேலை செய்யும், பால், தேன், மனித உமிழ் நீர் மற்றும் அனைத்து சுரப்பிகளும் அதன் உற்பத்தியை செய்து கொண்டு தான் இருக்கும், எனவே இரத்தம் தான் பாலாக மாறுகிறதா, தேனாக மாறுகிறதா என்பதவிட சுரப்பிகள் சுரப்பதற்கு இரத்தம் எரிபொருளாக பங்காற்றுகிறது என்பதைத் தவிர்த்து, இரத்தம் தான் பாலாக மாறுகிறது எனவே சைவ விரும்பிகள் அதை குடிப்பது தவறு என்பதை நான் புறம் தள்ளுவேன், தீவிர பவுத்த சைவர்கள் இரத்தம் தான் பால் என்று கருத்தில் சோயா பாலைத்தான் குழந்தைகளுக்கும் கொடுத்து பழக்குகிறார்கள். நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடே என்றாலும் உடலில் அதன் மூலம் உற்பத்தி ஆவது இரத்தம் தான் என்பதால் இது குறித்த கருத்துகளை புறம் தள்ள முடியும். பசு மட்டுமல்ல காளையின் உடல் அமைப்பும் அதன் உறுதியான மேல் கழுத்தும் உழவு செய்வதற்கு அதனைப் பூட்டுவதற்ப உறுதியாகத்தான் இருக்கும். மனிதர்களுக்கு லாபம் தர அவைகளால் முடியவில்லை என்றால் அவற்றை வீட்டு விலங்குகளாக வளர்த்திருக்கவும் மாட்டார்கள்.

மற்றபடி பசு தெய்வம், என்பதையோ புனிதம் என்பதையோ நான் ஏற்றுக் கொள்வதில்லை, பால் கொடுக்கும் உயிர்களில் தாய்க்கு அடுத்து பசு வருவதால் அதன் மீது மதிப்பு உண்டு, எங்கள் வீட்டில் ஒரே வேளையில் நான்கு பசுமாடுகள் வரை வளர்த்திருக்கிறோம், எங்க ஊரில் உடமையாக பசு வைத்திருக்து பால் கறந்து குடிப்பது ஒரு மதிப்பு என்று பெற்றோர்கள் நினைத்திருந்தார்கள், வீட்டுக்கு பயன்படுத்தியது போல் 'சாஸ்திரத்திற்கு' என்று கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மற்றவர்களுக்கு விற்பார்கள், கறந்த பாலை அப்படியே கொடுத்தால் நல்லது இல்லையாம், என்கிற முட நம்பிக்கையும் பெற்றோர்களுக்கு உண்டு, சென்ற முறை ஊருக்குச் சென்ற பொழுது மாடுகள் ஒன்றையும் காணும், ஏன் என்று கேட்க, அவற்றை பராமரிக்க முடியவில்லை என்று அம்மா சொன்னாங்க, அம்மாவுக்கு பசு மாடு லஷ்மி என்ற நம்பிக்கை உண்டு, மாடுகளுக்கு லஷ்மி, சரஸ்வதி என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பார்கள். இன்றும் கூட வீட்டு வாசலில் சாணம் தெளிப்பதை வளக்கமாகத்தான் வைத்திருக்கிறார்கள், சாணக் கரைசல் ஒரு கிரிமி நாசினி என்றே சொல்லப்படுகிறது, பெரும்பாலும் களி மண் சுவர்களையும் தரையையும் கொண்ட குடிசை வீடுகளில் சாணம் கரைத்து மொழுகுதல் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது. அந்த காலத்தில் வீடுகளைச் சுற்றி புதர்கள் இருந்ததால் சாண வாசனை போகும் வரைத ஊர்வன மற்றும் பூச்சி வகைகள் வீட்டுக்குள் வராது என்பதற்காக மாதம் ஒருமுறையேனும் வீட்டை மொழுகுவது பெண்களின் வீட்டு வேலைகளில் ஒன்றாக இருந்தது. பசு மாடு லக்‌ஷிமி என்கிறீர்களே வளர்த்ததில் எதாவது ஒரு பசு மாட்டையாவது அவை வயதாகி சாகும் வரை வளர்த்திருக்கிறீர்களா ? நான்கு ஈற்றுகள் முடிந்த பிறகு வேறு எங்காவது இரண்டாம் ஈற்று என்று விற்றுவிடுவது தானே வழக்கம், வாங்கியவர்கள் அதை கேரளாவுக்கு தானே கொண்டு செல்வார்கள், என்று கேட்டதற்கு அம்மாவிடம் இருந்து வந்த பதில் 'அதோட தலையெழுத்து நாம என்ன செய்ய முடியும் ?' என்பதே, பசுமாடு வளர்ப்பவர்களின் அனைவரும் நிலைகளும் இது தான். இதைப் பார்க்கும் பொழுது பசுவின் மீது கட்டப்படும் புனிதத்தை அதனை நம்புவர்களே மீறிவிடுகிறார்கள் என்னும் போது மற்றவர்கள் பசுவை அடித்து திண்பதில் நாம் என்ன குறை சொல்ல முடியும் ? 

பசுக்களை அடிமாடுகளாக மாற்றுவது அதனை வளர்த்தவர்களின் செயலே அன்றி அதனை வாங்குபவர்களோ, வெட்டி திண்பவர்களோ கிடையாது, கைவிடப் பட்ட மாடுகள் தான் அடிமாடுகள் ஆகின்றன. எருமையும் தானே பால் கொடுக்கிறது, அதனை ஏன் புனிதமாகக் கருதாமல் எமனாகக் கருதுகிறார்கள், நம் மனதில் இருக்கும் கருப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மையும் அதனை இழிவு படுத்திப் பார்ப்பதில் வரும் மகிழ்ச்சியும் தான், தமிழர்களில் பெரும் விழுக்காட்டினர் கருப்பு நிறம் தான் என்பதால் தமிழர்களுக்கு எருமை மாடுகளை எமனாகக் காட்டுவதற்கு தகுதியே கிடையாது.

அந்த காலத்து ஆட்கள் எல்லாவற்றையும் மதித்தார்கள், போற்றினார்கள் என்று பொத்தாம் பொதுவாக பலர் கூறுவதும், நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள், பசு புனிதம் என்று நம்பப்பட்ட காலங்களில் சிறுநகரங்களிலும், சிற்றூர்களிலும் (கிராமம்) ஊருக்கு ஒன்றாவது கால்நடை பட்டி உண்டு, இந்தப் பட்டிகள் பெரும்பாலும் ஆடுமாடுகளை அடைத்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும், அடுத்தவர் வயலில் இறங்கி மேயும் போது அவை பிடிபட்டால் பட்டியில் ஒப்படைக்கப்படும், பட்டி நடைமுறைகள் ஆடுமாடுகளுக்கு உடைமையானவர்கள் அவற்றிற்கு நஷ்ட ஈடு தலையாரியிடம் கொடுத்து அவற்றை விடுவிக்க வேண்டும், விடுவிக்கும் வரை பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுமாடுகள் பட்டினிதான், அப்படி பட்டினி போட்டு அடைத்து வைத்திருப்பது 10 நாட்கள் வரை தொடரும், அதற்குள் உடல் வற்றி வெறும் எலும்பும் தோலுமாக ஆக அவற்றை ஏலம் விடுவார்கள், ஏலம் எடுப்பவர்கள் ரூ 20 க்கும் 30க்கும் ஏலம் எடுத்துச் செல்வார்கள். பெரும்பாலும் வழி தவறி வந்த ஆடுமாடுகள் தான் மீட்பவர் வரும் வரை பட்டினி கிடக்க நேரிடும். இது எவ்வளவு கொடுமை பாருங்க, தான் செய்தது தவறே என்று அறியாத விலங்கினங்களை எப்படியெல்லாம் கொடுமைபடுத்தி இருக்கிறார்கள். அவ்வாறு அடைக்கப்படும் ஆடுமாடுகளில் ஈனும் நிலையில் உள்ளவைகளும் கூட உண்டு, எங்கள் வீட்டு மாடு ஒரு முறை பின் தொடையில் ஆழமான பேனா கத்தி கீரலுடன் வந்து சேர்ந்தது, எங்கு சென்றது யார் கீறினார்கள் என்றே தெரியவில்லை, பேச இயலாத உயிர்களை முன்பு வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் கொடுமை செய்திருக்கிறார்கள், அதற்கு பதிலாக அவற்றை ஒரு நிமிடத்தில் வெட்டி இறைச்சி ஆக்குவது அவற்றிற்கு செய்யும் கொடுமைகளில் மிகவும் குறைவானது தான். முன்னோர்களெல்லாம் தவறு செய்யாதவர்கள் அவர்கள் விலங்குகளிடம் எவ்வளவு அன்பு செலுத்தி இருக்கிறார்கள் பாருங்கள், இன்றைக்கு புளுகிராஸ் அமைப்புகள் பெருகியதால் பட்டிகள் மறைந்துவிட்டன, ஆனாலும் அடிமாட்டு விற்பனைகளுக்கு குறைவே இல்லை.


இன்றைய மக்கள் தொகையின் தேவைகளுக்கு ஈடு கொடுக்க பசுவிடம் பால் எந்திரம் வழியாகத்தான் கறக்கப்படுகிறது. எந்திரங்கள் உறிஞ்சும் போது மாடுகளுக்கு ஏற்படும் வலி கூடுதல் ஆனதே. 

பசு புனிதம் என்று கூறுவதால் அவற்றை போற்றத் தேவையில்லை, ஆனால் அவற்றின் பலன் பெற்ற நன்றி உடையவர்கள் என்பதால் அதனைப் போற்றுவதில் தவறு இல்லை. பசுவதைகள் மட்டுமல்ல எந்த ஒரு விலங்கையும் வதைப்பது மிகப் பெரிய தவறு அதற்கான உரிமையும் நமக்கு இல்லை. இன்றைக்கு இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வெளிநாடுகளில் மாடுகள் பெருகியதே ஓசோன் படலம் விரிந்ததன் காரணமாகச் சொல்கிறார்கள், மாடுகளின் சாணத்தில் மீத்தேன் இருப்பதால் அவை ஓசோன் மண்டலத்தை ஓட்டைப் போடுகிறது என்கிறார்கள், சாணங்களை உடனடியாக உரமாக மறுபயீனீடு செய்யாமல் அவற்றை தேக்கி வைத்திருப்பதாலும், அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமலும் கொட்டுவதால் அவற்றில் உற்பத்தியாகும் மீத்தேன் அளவும் மிகுதி. மாடுகள் உற்பத்தியை, மாட்டுப் பண்ணைகளை குறைத்துவிட்டால் பனிப் பகுதிகளின் ஆயுளை கூட்டி, கடல் நீரால் உலக அழிவு என்கிற பேரபத்தையும் தள்ளிப் போடலாம். 

மாடுகளை கொன்று திண்பவர்களை விட, செத்தமாடுகளை உண்பவர்கள் தாழ்வானவர்கள் இல்லை, ஏனெனில் மாடுகள் இன்னார் உண்ணுவார்கள் என்பதற்காக இறப்பதில்லை, மாடுகளின் பாலைக் குடிப்பதில் தவறு இல்லை, மாடுகளை பாலுக்காக மட்டுமே வளர்த்து பின் அதனை புறக்கணிப்பது தவறு , அது போல் மாட்டு இறைச்சிகள் உண்பது தவறு இல்லை, ஆனால் தவிர்க்கலாம், போதிய இறைச்சிகாக அதன் உற்பத்தியை கூட்டுவதும் தவறே, அதன் எதிர் பலனை நாம் தான் அனுவிப்போம்.

'பிஸ்மில்லா' என்று சொல்வது கூட மாடுகளைக் கொல்வதன் கட்டுப்பாடுகள் குறித்தது, ஆனால் கறியின் சுவையில் அதனை உரிமையாக்கிக் கொ(ள்)ல்கிறார்கள். விலங்கினங்களை கொல்வது தவறு என்கிற கருத்து இல்லை என்றால் அவற்றை கொல்லும் போது பிஸ்மில்லா சொல்வதும், அவற்றை அப்படி சொல்லப்பட்டதை மட்டுமே 'ஹலால்' என்று சொல்வதும் கூட தேவையற்றது தானே.

21 ஜூன், 2012

குடியரசு தலைவர் தேர்தல் குளறுபடிகள் !


பிரணாப் நன்றி உள்ளவராக இருந்தார், மன்மோகன் பிரதமர் ஆனதற்கு ஒத்துழைப்புக் கொடுத்தார் என்பதுடன் அடுத்து ராகுலை பிரதமராக மாற்றுவதற்கு காங்கிரசுக்கு இருக்கும் ஒரே வாய்ப்பு பிராணப் தான். ஆட்சி அவர்களுடையது என்பதால் நாம் அதில் கருத்து கூறுவதைத் தவிர்த்து ஒன்றும் செய்ய முடியாது. இதுவரை தென்னிந்தியர், வட இந்தியர் என்று மாறி மாறி வாய்ப்புக் கொடுத்து வந்தார்கள், இந்த முறை அதற்கும் ஆப்பு வைத்து வட இந்தியர் வசமே தொடர்ந்து குடியரசு தலைவர் பதவி போகிறது என்பது தவிர்த்து எனக்கு அதில் வேறு அரசியல்கள் தெரியவில்லை, குடியரசு தலைவராக யார் வந்தாலும் பொம்மையாக இருந்து கொண்டு வெளிநாட்டு சுற்றுலாக்களை அரசு செலவில் அனுபவிப்பதைத் தவிர்த்து அரசியல் ரிதியான தீர்வுகளுக்கு அப்பதவியில் எதுவும் இல்லை என்பதைத்தான் கடந்த குடியரசு தலைவர்கள் அனைவரும் நிறுபனம் செய்துவந்துள்ளனர், எனவே அது ஒரு கவுரவப் பதவி என்பது தவிர்த்து மக்கள் நலன் சார்பானது என்று சொல்ல எதுவும் இல்லை. காங்கிரசின் அடுத்த பிரதமர் திட்டம் அறிந்தவர்கள் இந்த குடியரசு தலைவர் தேர்தலில் காங்கிரசின் எண்ணம் ஈடேறக் கூடாது என்று அப்துல் கலாமை முன் மொழிந்தனர், துவக்கத்தில் ஆசை இருந்த அவர் பின்பு பின்வாங்கிவிட்டார். எனக்கும் கலாமே மீண்டும் குடியரசு தலைவர் ஆவதில் உடன்பாடு இல்லை, அது ஒரு கவுரவப் பதவி என்னும் போது வாய்ப்பை மற்றவருக்கும் வழங்குவது தான் நல்லது, சுதந்திர இந்தியாவில் கலாமை தவிர நல்லவர்களே இல்லையா ? இல்லை என்று நினைப்பது நமக்கே பெறுத்த அவமானம். 


கலாம் சிறுபான்மை மதத்தைச் சார்ந்தவர், சிறுபான்மையினருக்கு நாங்களும் மதிப்பு கொடுக்கிறோம் என்று காட்ட பாஜகவும் கலாம் எங்கள் 'சாய்ஸ்' என்றது, நெற்றியில் குங்குமப் பொட்டும், பொது இடங்களில் பகவத் கீதையும் சொல்லும் முஸ்லிம்கள் இருந்தால் பாஜக பிரச்சனை செய்யாது, பாஜக எதிர்பார்க்கும் அனைத்து அடையாளங்களும் இஸ்லாமியர் அப்துல்கலாமிடம் இருப்பதால் கலாமை அவர்கள் முன்மொழிந்ததில் வியப்பும் இல்லை. கலாமினால் ஏற்பட்ட நன்மைகள் என்பதில் குழந்தைகளுக்கு போடும் மாறுவேடப் போட்டி முக்கிய பங்கு அளிக்கிறது, முன்பெல்லாம், கிருஷ்ணன், முருகன், பாரதியார், காந்தி, விவேகாநந்தர், அன்னை தெரசா,  என்று குறிப்பிட்ட வேடங்கள் மட்டுமே போட முடிந்தது,  தற்பொழுது மாறுவேடப் போட்டிகளில் அப்துல்கலாமின் முகமும் வருகிறது. அதையும் தென்னிந்திய குழந்தைகள் மிகுதியாகப் போடுகிறார்கள்

கூடங்குளம் விவகாரத்தில் கலாமின் அரசு சார்பு அறிக்கைகள் அவர் மீதான நல்லெண்ணங்களை குறைத்துவிட, அப்துல்கலாம் மீண்டும் குடியரசு தலைவர் வேட்பாளர் என்று சொல்லும் பொழுது பலருக்கு பெரிதாக ஆர்வம் இல்லை. காங்கிரசை மீறி வேறொருவருக்கு ஆதரவு கொடுக்க முடியாத நிலையில் திமுகவின் ஒட்டுமொத்த ஆதரவும் பிராணப்புக்கு உண்டு, கொல்லர் தெருவில் ஊசி விற்பதுபோல் உடன் பிறப்புகள், குடியரசு தலைவரை தேர்ந்தெடுப்பதில் திமுகவின் பங்கு குறித்து பெருமிதமாக 'கலைஞர் கிங்க் மேக்கர்', அதாவது கருணாநிதி கைகாட்டுபவர் தான் குடியரசு தலைவர் ஆவாராம், பேராசிரியர் அன்பழகன் இன்னும் திடகாத்திரமாகத்தானே இருக்கிறார், கருணாநிதி அவரைக் கைக்காட்டி கிங்க் மேக்கர் என்று நிறுபனம் செய்ய வேண்டியது தானே ? மத்திய அரசை எதிர்த்து எதையும் தன்னிச்சையாக செய்ய முடியாதவர்களை குறிப்பிட்டு 'கிங்க் மேக்கர்' பட்டம் கொடுக்கும் போது நகைக்காமல் இருக்க முடியவில்லை.

இப்போது புதிதாக 'கிங் மேக்கர்' பட்டியலில் கேப்டன் விஜயகாந்தும் இணைந்துள்ளார், அவர் குடியரசு தலைவர் தேர்தலை புறக்கணிப்பதாகக் கூறியதும், தேமுதிகவின் கனிசமான சட்டமன்ற உறுப்பினர்கள், கனமான வாக்குகள் ஆகியவற்றைக் குறி(வை)த்து காங்கிரசார் விஜயகாந்தின் கட்சிப்படி வாசலில் ஆதரவு கேட்டு காத்துக் கிடக்கின்றனர், மத்திய அரசின் தொடர்பான பேரங்களுக்கு விஜயகாந்திற்கு நல்ல வாய்ப்பு, அதனை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவே தேர்தல் புறக்கணிப்பு என்று அறிவித்தார் என நினைக்கிறேன். கருணாநிதி கிங்க் மேக்கர் என்றால் விஜயகாந்தும் கிங்க் மேக்கர் தானே.

கலாம் போட்டியிடாத நிலையில் ஜெ, மம்தா மற்றும் பாஜகவினர் கையை பிசைந்துவருகிறார்கள், கடைசி நேர பேரங்களில் பிரணாப் தான் அடுத்த குடியரசு தலைவர் ஆகும் வாய்ப்புகள் பலமாகவே உள்ளது. வெளியே தெரியாத பேரங்கள் குறித்து நாம் அறிந்திருந்தும் ஆளும் கட்சி எதிர்கட்சி ஆதரவுகள் குறித்து நாம் நம்பிக் கொண்டு இருக்கிறோம். அரசியல் பேரங்களைப் பொருத்த அளவில் கிடைப்பதில் பெரிய பங்கு ஆட்சியாளர்களுக்கு, மற்றவர்களுக்கு விழுக்காடு குறையும். கிடைப்பது போதாமல் ஆட்சி அதிகாரம், அதில் கிடைக்கும் வசதிகள், மாலை மரியாதைகள் இதற்காகத்தான் அரசியல் கட்சிகள் தங்களுக்குள் போட்டி போடுகிறார்கள். எம்ஜிஆர் ஆட்சி காலத்தில் குறிப்பிட்ட பங்கு கருணாநிதிக்கு போகும் என்று பேச்சுகள் உண்டு. சென்ற முறை கருணாநிதி ஆட்சியில் ஜெ மீது புதிய வழக்குகள் எதுவும் போடவில்லை, தற்பொழுது ஜெ ஆட்சியிலும் கருணாநிதி குடும்பத்தார் மீதான வழக்குகள் பெரிதாக எதுவும் போடவில்லை, கட்சியின் அடுத்த மட்டத்தில் மட்டும் வழக்குகளை வைத்துக் கொள்கிறார்கள். இதே போன்றதே பாஜக மற்றும் காங்கிரசின் ஆட்சி முறைகளும்.

பிரணாப் வேண்டாம் என்று பாஜக செல்வதற்கு அடிப்படைக் காரணங்கள் என்ன ? தாங்கள் சிறுபான்மையினர் ஆதரவாளர்கள் என்று கலாமைக் காட்டி செல்வாக்கு பெறவேண்டும் என்று நினைப்பதைத் தவிர்த்து ? 

பிரணாப்புக்கே வாய்ப்பு என்றால் நாம் வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது என்று வழக்கம் போல் சொல்லுவோம். வேறு என்ன செய்ய முடியும்.

என்னைக் கேட்டால் கட்சிகளில் வளர்ந்து அமைச்சர்கள் ஆனவர்களை அந்தப் பதவிக்கு தேர்ந்தெடுக்காமல், ஐபிஎஸ், ஐஏஎஸ் அரசு அதிகாரிகளில் ஒருவரை தேர்ந்தெடுக்கலாம், குடியரசு தலைவர் பதவியையும் பிரதமர் பதவி போல் கட்சி சார்ந்த பதவியாக்கி கேவலப்படுத்தி வருகிறார்கள்.

15 ஜூன், 2012

விருந்தும், மருந்தும் !


விருந்தும், மருந்தும் மூன்று நாளைக்கு மேல் இருந்தால் தொல்லை தான் என்பது இந்த காலத்து பழமொழி இல்லை, 100 ஆண்டுக்கு முன்பே சொல்லி வைக்கப்பட்டது தான், காரணம் இரண்டுமே ரொம்ப நாளைக்கு நீடித்தால் தனிமனிதனுக்கு இழப்பு, இங்கு விருந்து என்பது விருந்தினர்களையும் மருந்து என்பது நோய்களுக்கான மருந்து, இவையெல்லாம் வந்து உடனே செல்லும் அளவில் இருப்பதே நல்லது என்ற பொருளில் தான் சொல்லப்படுகிறது, 2000 ஆண்டுகளுக்கு முன்பு மோப்பக் குழையும் அனிச்சம், நோக்கக் குழையும் விருந்து என்ற குறளில் முகம் காட்டுவது விருந்தினர்களையும் அவர்களது உறவையும் கெடுத்துவிடும் என்பது வள்ளுவர் வாக்கு, அவர் காலத்தில் விருந்தினர்கள் தொலைவில் இருந்து வந்தவர்களாக இருந்திருக்கக் கூடும், தவிர அவர்களுக்கான பணிவிடை என்பது உணவும் உறைவிடமும் கொடுத்து உதவுவது என்ற அளவில் தான் இருந்திருக்கும். பின்னர் நூற்றாண்டுகளின் மாற்றங்களில் விருந்தினர்கள் மூன்று நாளைக்கு மேல் தங்குவது தொல்லை தான் என்றே உணர்ந்து பழமொழி வடிவெடுத்திருக்கிறது.

*****

அந்தக் காலம் போல் இந்தக் காலம் இல்லை என்று சிலர் மனிதர்களையும் அவர்கள் தம் சமூக வாழ்வியலை ஒப்பிட்டு அலுத்துக் கொள்வது உண்டு, எந்த காலத்திலும் மனிதர்களின் மனம் பெரிய அளவில் மாறுபடுவது கிடையாது, அப்படியே ஏற்பட்டிருக்கும் மாற்றம் என்பவை இன்றைய வாழ்க்கைச் சூழல் ஏற்றியிருக்கும் சுமைகளின் அழுதத்தினால் தான் மாறி இருக்கின்றன. இதைத் திறந்த மனத்துடன் ஒப்பிட்டுக் கொள்ளத்தான் வேண்டும். எந்த காலத்திலும் மனிதனின் பொருளாசைகள், பேராசைகள் தான் நாடுகளின் எல்லைகளை விரித்திருக்கிறது, ஆட்சிப்பிடிக்குள் கொண்டு வந்திருக்கிறது, இதைத்தாண்டி உலக மக்களுக்கு நன்மைச் செய்யப் போகிறேன் என்று கூறி அரசை விரிவு படுத்தியவர்கள் எவரும் இல்லை, அதே போன்று மனிதனின், குறிப்பாக ஆண்களின் காம இச்சைகளும் எல்லாக் காலத்திலும் மிதமிஞ்சியதாகவே தான் இருந்திருக்கிறது , இன்றைக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு பல மனைவிகளை மணந்து கொண்டார்கள், பின்னர் பொருளாதார வசதிக் குறைவால் சின்னவீடு என்ற அளவுக்குச் சுறுக்கிக் கொண்டனர், தற்போது கள்ள உறவுகள் மூலம் அவற்றைத் தொடர்கிறார்கள், அனைவரையும் இப்படிச் சொல்லமுடியாவிட்டாலும், அதில் ஈடுபடுவர்களின் செயல் முறைகள் தான் மாறி இருக்கின்றதே அன்றி எங்க காலத்து ஆளுங்க 'அதில்' கில்லாடிகள் என்று சொல்லிக் கொள்ள எதுவும் இல்லை. மனிதனுக்கு பசியும் தூக்கமும் பொதுவானதாகவே இருந்துவருகிறது என்னும் போது மற்றத் தேவைகளின் ஒப்பீடுகளிலும் பெரிய மாற்றங்கள் இல்லை என்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். கென்னடிக்கு மர்லின் மன்றோ கிடைத்தது போல் கிளின்டனுக்கு ஒரு மோனிகா. இன்றைய தேதிக்கு சட்டச்சிக்கல் என்பதால் ஒரே மனைவியை மட்டும் மணந்து கொண்டிருப்பவர்கள் அனைவரையும் நாம் உத்தமர் என்று பட்டம் சூட்டிவிட முடியாது, பாலியல் தொழிலில் ஈடுபடுபவர்கள், அவர்களின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை குறையும் போது இன்றைய ஆண்கள் உத்தமர்கள் என்றோ அந்த காலத்தவர் 'அதில்' கில்லாடிகள் என்றோ நாம் ஒப்புக் கொள்வோம்.

இப்பொழுதெல்லாம் உறவினர்கள் கண்டு கொள்ளப்படுவதில்லை, அவர்கள் எப்பொழுது கிளம்புவார்கள் என்று முள்மேல் நிற்கும் மனநிலையே உள்ளது என்று பதிவர் பெரியவர் பழனி கந்தசாமி மாறுவது மனமா ? காலமா ? எழுதி இருக்கிறார். மனிதர்கள் பணத்தை தேடி அலைகிறார்கள் என்று எழுதி இருக்கிறார். உண்மை தான், பிதுங்கும் மக்கள் தொகையில் கிடைக்கும் வாய்ப்புகளை பயன்படுத்தி மேலே வருவதே பெரும் அறைகூவல் என்னும் நிலைக்குச் சென்ற பிறகு இதில் வருத்தப்பட என்ன இருக்கிறது ? இந்த நிலைக்குக் காரணம் என்ன ? பொறுப்பற்ற முறையில் பெருகிய மக்கள் தொகை தானே ? இவற்றைக் கட்டுப்படுத்துவதில் சமூகம் அக்கரைக் கொண்டிருந்தால் பொருளியல் ஓட்டத்தில் ஓடிக் கொண்டிருக்கும் நிலையே நமக்கு வந்திருக்காது, கடவுள் கொடுக்கிறான் என்று 10 குழந்தைகள் வரை பெற்றுப் போட்டு 80 ஆண்டுகளில் 30 கோடியில் இருந்து 100 கோடியை அடைந்துவிட்டு நாம் புலம்புவதால் என்ன பயன் ? இன்றைய தம்பதிகளுக்கு மட்டும் நிறைய குழந்தைகளைப் பெற்றுக் கொள்ளும் ஆசையே இல்லையா ?, பெற்றெடுக்கும் அவஸ்தை என்பதை ஒப்பிட்டு பெண்களுக்கு இரண்டு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ள விருப்பம் இல்லாவிட்டாலும் குடும்பத் 'தலைவன்' என்கிற அந்தஸ்தில் 100 குழந்தைகளுக்குக் கூட தந்தையாகும் ஆசை ஆணுக்கு உண்டு, ஆனால் ஒன்று இரண்டு குழந்தைகள் பெற்றுக் கொண்டு அவற்றிற்கு தேவையான படிப்பும் வசதியும் செய்து வளர்த்துவிட்டால் போதும் என்ற மனநிலையில் தான் ஆண்கள் இரு குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவதை நினைத்துப் பார்க்கவே தவிர்த்துவருகின்றனர். இத்தகைய கட்டுப்பாடுகள் ஆண்களின் மீது இன்றைய போட்டி நிலைச் சமூகம் ஏற்படுத்தி உள்ளவை தான்.

இன்றைய தேதிக்கு இளைஞர்களின் (ஆண் / பெண் தம்பதிகளின்) இலக்கே தனக்கென ஒரு சொந்த வீடு கட்டிக் கொள்வது, 55 வயதை நெருங்கும் எவரும் கடந்த கால பொருளியல் நிலைமை, குறைவான ஊதியம் என்ற நிலையில் கிட்டதட்ட ஓய்வு பெரும் நிலையில் சொந்த வீட்டைக் கட்டும் நிலைக்கு வந்திருக்கிறார்கள், தற்பொழுது சொந்த வீட்டுக் கனவு 30 - 35க்குள் கை கூடிவிடுகிறது, 'அப்பன்காரன் சம்பாதித்து வைத்திருந்தால்' ஒரு வீடுகட்ட நான் நாயாகப்படும் நிலை வந்திருக்காது' என்கிற இளைஞர்களின் மனக் குரலை எங்கும் கேட்கமுடிகிறது, முனிசிபல் பள்ளியில், அரசு இலவசக் கல்வியில், முயற்சிகளில் ஓரளவு படித்து வெளியே வந்தவர்களுக்கு முதலில் இருக்க நல்ல வீடு வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட்டு அதற்காக கடுமையாக உழைக்கும் மனநிலையில் வேலைக்கும் போகும் பெண் தான் வேண்டும் என்று கூறி திருமணமும் செய்து கொள்கின்றனர், பின்னர் ஓய்வில்லாத உழைப்பு, இதில் உறவினர்களுக்கு விருந்து வைக்கவும் உபசரிக்கவும் நேரம் இருக்குமா ? மாமனார் மாமியார் வந்தாலே எப்போ கிளம்புவாங்க என்று இருக்கும் சூழலில் பிற உறவினர்களுக்கு ஊட்டிவிடுவது என்பது நினைத்துப் பார்க்கக் கூடாத ஒன்று. போட்டித் தன்மை மிக்க உலகில் தனியார் நிறுவனங்களில் பார்க்கும் வேலையைத் தக்கவைத்துக் கொள்ளும் போராட்டம், அதற்கான தகுதியை வளர்த்துக் கொள்வது, கூடவே வாரிசுகளுக்கு நல்ல கல்வி அளிக்க, நல்ல பள்ளிகளை தேர்ந்தெடுப்பது, அவர்களை மகிழ்ச்சியாக வைத்திருப்பது என்றெல்லாம் உட்கார நேரம் இல்லாத வாழ்க்கைச் சூழலில் உறவினர்களை கண்டு கொள்வதற்கான நேரம் ?

எனது வீட்டுக்கு அருகே, மூன்று பேருந்து நிறுத்தம் தள்ளி குடி இருக்கும் நண்பரை குடும்பத்துடன் வீட்டுக்கு வரச் சொன்னோம், அவருடைய மனைவி  'உங்க மகளுக்கு தொடக்க நிலைக் கல்வியின் இறுதி ஆண்டு படிப்பு நடக்கிறது, நீங்கள் இருவரும் வேலைக்குச் சென்றுவருகிறீர்கள், நிறைய வேலை இருக்கும், எப்போதும் ஓடிக் கொண்டி இருப்பீர்கள் என்பது தெரியும், தேர்வெல்லாம் முடியட்டும் என்று கூறி அழைப்பை மறுத்தார்' தேர்வு முடிய இன்னும் ஆறுமாத காலம் இருக்கிறது என்றாலும், அவர்கள் சொல்வது சரிதான் என்று தோன்றியது, அதையே தான் அவர்களும் நம்மிடம் எதிர்பார்க்கிறார்கள், நாம் நிலைமை புரியாமல் அவர்கள் வீட்டுக்குச் செல்லும் போது அவர்கள் திட்டமிட்ட வேலைகள் எல்லாமும் தடையாகிப் போகும் போது 'இவர்களை யார் அழைத்தது ?' என்று நினைக்கத்தான் செய்வார்கள்,  குடும்பங்கள் சுறுங்கி, நேரங்கள் திட்டமிட்டவையாக மாறிவிட்டப் பிறகு உபரி நேரங்கள் கிடைப்பதே தற்காலிக ஓய்விற்கானது. குடும்பத்திற்கானது என்ற நிலையில் விருந்தினர்களை முன்பு போல் பல நாள் தங்கிச் செல்லவதை மகிழ்ச்சியான மனநிலையுடன் கொண்டாட முடியுமா ? நம்மால் ஒழுங்காக கவனிக்க முடியாத சூழலில், பணிவிடை செய்ய முடியாத சூழலில், விருந்தினரை அவமானப்படுவதை தவிர்க்க, உறவினர்கள் வந்தாலும் உடனே கிளம்பிடுவது தான் நல்லது என்றே நினைக்கின்றனர்.

சென்னை போன்ற பெருநகரங்களில் வாடகைக்கு குடி இருப்பவர்களுடன் அருகே வீட்டு உரிமையாளரும் குடி இருந்தால் வீட்டு விருந்தினரை 'எப்போ கிளம்புவீர்கள் ?' என்று வீட்டு உரிமையாளரே கேட்பார். காரணம் இடம் குறித்து அல்ல, தண்ணீர். இது போல் நிறைய இடற்கள் உண்டு, இன்னிக்கு அடுப்பங்கரைக்கு ஓய்வு, சமைக்க வேண்டாம் மதியம் சரவண பவனுக்குச் செல்வோம் என்று திட்டம் போட்டிருக்கும் போது 'இந்த பக்கமாக வந்தேன் அப்படியே பாத்துட்டுப் போவலாம்னு வந்தேன்' என்று ஒருவர் வீட்டுக்குள் நுழைந்தால், கேட்கும் நமக்கு நெருப்பில் உட்கார்ந்திருப்பது போல் இல்லாவிட்டாலும், 'தினமும் உங்க சாப்பாட்டை மனுசன் சாப்பிடுவானா ?' என்று மகிழ்வோடு வெளியே இருந்த குழந்தைகள் கணைத் தொடுப்பார்கள். முன்கூட்டியே தகவல் சொல்லிவிட்டு பார்க்கப் போனால் யாரும் அதைக் குறை காண்பது இல்லை.

முதலில் உறவுக்காரர்களாக இருந்தாலும், நெருங்கிய நண்பர்களாக இருந்தாலும் மற்றவர் வீட்டுக்குச் செல்ல போதிய காரணம் இருக்க வேண்டும், சும்மா பார்த்துச் செல்ல காதுகுத்தி, திருமணம், வளைகாப்பு, பிறந்த நாள் அழைப்புகள் என்று எத்தனையோ குடும்ப நிகழ்ச்சிகள் இருக்கிறது, நான் ஆண்டுக்கு ஒருமுறை தமிழகம் சென்றாலும் எனக்காக விடுமுறை எடுக்காதீர்கள் என்றே என் அக்கா, தங்கையிடம் சொல்வதுண்டு, அன்றைக்கு எதுவும் மற்ற வேலை இருந்தாலும் போய்விட்டு வாருங்கள், பக்கத்தில் எங்காவது சாப்பிட்டுக் கொள்கிறேன் என்று சொல்வதுண்டு, 'நான் எப்போ ஒருமுறை வருகிறேன், என்னைக் கவனிப்பதைவிட உனக்கு என்ன வேலை ?' என்று நாம் கேட்டால் அவர்களுக்கும் வெளியே சொல்லமுடியாத சங்கடங்களையும் சேர்த்தே கட்டிவிடுகிறோம், தவிர்க்க முடியாத நிகழ்ச்சிகள் தவிர்த்து ஒருவரை பிடித்து இழுத்து வைப்பது நாம் சென்ற பிறகு அவர்களுக்கு பிற சங்கடங்களை ஏற்படுத்தி இருக்கும். சீனர்கள் விடுமுறை நாட்களில் எவரையும் வீட்டுக்கு அழைப்பது கிடையாது. நான் சென்று வந்த சீன நண்பர்களின் வீடுகள் அனைத்திற்கும் எதாவது நிகழ்ச்சியின் அழைப்பின் பேரில் மட்டுமே சென்றிருக்கிறேன், அக்கம் பக்கம் சீன வீடுகளில் உறவினர் நடமாட்டங்களும் மிக அரிதாகவே இருக்கும்.

முன்பெல்லாம் உறவுக்காரர்கள் வீட்டுக்குச் செல்ல பலகார மூட்டையும் கூடவே செல்லும், இப்பொழுது பலரும் நீரிழிவு, இரத்தக் கொதிப்பு, கூடுதல் எடை என பல்வேறு உடல் நலச் சீர்கேட்டால் இருக்கும் போது, அல்லது உடலை கெடுக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்று ஓரளவு உடல் நலம் பற்றிய அக்கரையில் உணவுக்கட்டுப்பாட்டில் இருக்கும் போது, அவர்கள் நாம் வாங்குவதை திண்பார்களா இல்லையா என்று எதுவும் அறியாமல் வாங்கிச் செல்லும் இனிப்புப் பண்டங்கள் பெரும்பாலும் குப்பைக்குத்தான் செல்கின்றன, என்வீட்டுக்கு வரும் இனிப்புகளில் 80 விழுக்காடு குப்பைக்குத்தான் செல்லும், மாற்றாக பழங்களாக வருபவற்றை நாங்கள் வீணாக்குவது இல்லை, ஒருவர் வீட்டுக்குச் செல்லும் போது குழந்தைகள் இருந்தால் கொஞ்சம் பிஸ்கெட் அல்லது சாக்லெட், பெரியவர்களுக்கு சத்தான பழங்களை வாங்கிச் செல்லலாம், அர்சனா / கிருஷ்ணா / ஆனந்தபவன் ஸ்வீட் வகைகளில் ஒருகிலோ / இரண்டு கிலோ வாங்கிச் சென்றால் தான் அன்பா ? நெய் கலந்த கொழுப்பு மிக்க பண்டகளை தற்காலத்தில் யாரும் விரும்பி சாப்பிடுவது இல்லை. ஒருவேளை வாங்கி வந்துவிட்டார்களே வீணாக்காமல் தின்போம் என்று தின்றுவிடுவர்கள் நாற்பது வயதிற்கும் மேற்பட்டவர்களாக இருந்தால், இரத்ததில் கொழுப்புக் கூட... அதற்கு தனியாக மருத்துவம் பார்க்க வேண்டி இருந்தாலும் இருக்கும். உறவினர் வீட்டுக்கு செல்லும் போது அவர்கள் 'இருங்க காபி எடுத்துவருகிறேன்' என்று சொல்லும் போதும் அல்லது சொல்லாமல் எடுத்துவரும் போதும் உங்களுக்கு இனிப்பு ஆகாது என்றால் அவர்களிடம் தெளிவாகச் சொல்லிவிடுங்கள், யாரும் அதை சங்கடமாக நினைப்பது இல்லை. உடலுக்கு கெடுதல் என்ற வகையில் இனிப்பு சாப்பிட முடியாதவர்களை யாரும் கட்டாயப்படுத்தி 'திருப்பதி லட்டு, பிரசாதம்' இது சாப்பிட்டே ஆகவேண்டும் என்று சொன்னால் அது விசம் கொடுப்பதற்கு ஒப்பானது. உறவினர் / நண்பர் வீட்டுக்குச் சென்று காபி வருமா வராதா என்ற அளவுக்கு அங்கே உட்கார்ந்து பேசும் நிலைக்குச் செல்லும் முன் கிளம்புவது நல்லது. கிளம்புவது போல் பாவனைக்காட்டினாலே அவர்கள் காப்பி தருவார்களா இல்லையா என்பது தெரிந்துவிடும்.

இன்றைக்கு இருவரும் வேலைக்குச் செல்லும் வாழ்க்கைச் சூழலில் ஆணுக்கு ஆசை இருந்தாலும் பெண்ணின் விருப்பம் குறித்த புரிந்துணர்வு இருப்பதால் கணவன் - மனைவி இடையே கட்டாய பாலியல் வல்லுறவுகள் கிடையாது. பெண்ணின் விருப்பம் குறித்தும் கேட்கப்படுகிறது, இன்றைக்கு ஆண் சமூகம் எவ்வளவோ அடக்கப்பட்டுள்ளது, அல்லது அடக்கி வைக்கப்பட்டுள்ளது, அடங்கும் சூழலில் உள்ளது, அதையெல்லாம் ஒப்பிட 60 வயதிற்கு மேலானவர்கள் அதிர்ஷடக்காரர்கள், அவர்களுக்கு தன்னளவில் இழப்பு என்று எதுவுமே இருந்திருக்காது, பெரு நகரச் சூழலில் கணவன் - மனைவி இடையே பாலியல் உறவு கூட திருமணம் ஆன சில ஆண்டுகளில் வாரம் ஒருமுறை பின்னர் மாதம் ஒருமுறை, அதன் பிறகு ஆண்டுக்கு ஒருமுறை என்றே குறைந்துவிட்டது. இவற்றையெல்லாம் யாரும் விரும்பிப் ஏற்படுத்திக் கொள்வது கிடையாது, வாழ்க்கைச் சூழல் அழுதத்தினால் ஏற்பட்ட மாற்றங்கள், இவை தனிமனித தவறுகள் இல்லை. இதைப் புரிந்து கொள்பவர்கள் காலத்தை ஒப்பிட்டுப் பேசுவது கிடையாது. 

பெரியவர்கள் மட்டுமல்ல எல்லாக் காலத்திலும் குழந்தைகளும் ஒன்று போல் தான் இருக்கிறார்கள், அவர்களிடம் மாற்றமாக நாம் பார்ப்பது இன்றைய காலத்தில் அவர்களுக்கு கிடைத்த வசதிகளில் கிடைத்த கூடுதல் அறிவுதான், எந்த காலத்திலும் குழந்தைகளிடம் நெருப்பைக் கொண்டு சென்றால் எட்டிப்பிடித்து நெருப்பில் விரலைச் சுட்டுக் கொள்ளத்தான் செய்வார்கள். 

நோய்வாய்ப்பட்டு படுத்தப்படுக்கையாக மருத்துவமனையில் இருந்தபோது தன்னை வந்துப் பார்க்கவில்லை என்று முகம் தூக்கிக் கொள்பவர்களும் தற்பொழுது குறைவு, அவரவருக்கு என்ன வேலையோ என்று நினைத்து மற்றவர்களின் நேரங்களை புரிந்து கொண்டிருக்கிறார்கள். பழைய காலத்தவர்கள் கொடுத்து வைத்தவர்கள், தற்பொழுது பலவற்றை இழந்து தான் வாழ்க்கையையே ஓட்ட வேண்டி இருக்கிறது. இதில் தனிமனிதனையோ, இன்றைய சமூகத்தையோ குறையாகப் பார்க்க ஒன்றும் இல்லை

14 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 3 !


விடுதியில் முதல்நாள் காலைப் பொழுதிற்கும், அடுத்த நாள் காலைப் பொழுதிற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை, வழக்கம் போல் எழுந்து நான் மட்டும் விடுதியை விட்டு வெளியே கடற்கரைக் பகுதிக்கு வந்தேன், முதல் நாள் போன்றே கடல் உள்வாங்கி இருந்தது. அப்படியே கடற்கரை ஓரமாக நடக்க பறவைகள் வைத்திருந்த இடம் நோக்கிய நடைச் சாலை, அது பிரியும் இடத்தில் நேராக நடந்து சென்று பார்ப்போம், அங்கும் எதோ விடுதிகள் போன்று தெரிகிறதே என்று நினைத்தேன், பிறகு தான் தெரிந்தது அந்த இடம் நேற்றே விடுதி இலவசப் பேருந்தில் ஏறி அங்கு ஏற்கனவே வந்திருக்கிறோம் அது தான் படகு மற்றும் நீர் விளையாட்டுகளுக்கான இடம் என்று தெரிந்தது, எல்லாம் ஒரே வளாகம் அருகருகே இருப்பது தான் பேருந்தில் வரும் போது சற்று சுற்றி வருவதால் அது வேறு இடம் போன்று தோற்றம் அளித்திருந்தது, கடற்கரைக்கு அருகே பாதுகாப்பு மற்றும் விளையாட்டுகளை நடத்தி தருபவர்களுக்கான சிறிய குடில், குளியல் அறைகள் இருந்தன, ஒரு பணியாளரிடம் இந்த சுற்றுலாத் தளம் ஏன் இவ்வளவு ' எக்ஸ்பென்சீவ் ?', பாலி கூட இவ்வளவு எக்ஸ்பென்சீவ் இல்லையே ? என்று கேட்டு வைத்தேன், அவரும் எத்தனை நாள் இங்கு தங்குகிறீர்கள் என்றெல்லாம் அக்கரையாக விசாரித்துவிட்டுச் சொன்னார், 'இந்த சுற்றுலாத் தளம் இந்தோனேசியா அரசும் சிங்கப்பூர் முதலாளிகளின் முதல்களாலும் நடத்தப்படுகிறது, இங்கு தங்குபவர்கள் அனைவருமே சிங்கப்பூர் வழியாக வருபவர்கள், எனவே தான் இங்கு சிங்கப்பூர் வெள்ளி தான் பணமாகப் பயன்படுத்தப்படுகிறது, பாதுகாப்புக் கருதி வெளி ஆட்கள் யாரையும் எதற்கும் அனுமதிக்காததால் மலிவானப் பொருள்களை இங்கு நீங்கள் வாங்க முடியாது, பாலி சென்று வந்ததால் உங்களால் ஒப்பிட்டு பார்க்க முடிகிறது, மற்றவர்கள் விலை ஏற்றம் பற்றி கவலைப்படுகிறார்களா என்று தெரியாது என்றார். 

அவர் சொல்வது சரிதான், பெரும்பாலும் ஐந்து நட்சத்திர ஓட்டலில் சொந்த செலவில் தங்குபவர்களுக்கு இங்கு பணம் செலவு செய்வதற்கு 'அழமாட்டார்கள்' ஆனால் சராசரி சிங்கப்பூர்காரர்கள் ? ஒவ்வொன்றையும் ஒப்பிட்டு தான் பார்ப்பார்கள், பின்டனுக்கு வரும் சிங்கப்பூரைச் சேர்ந்த பயணிகள் மிகக் குறைவு, நிறுவன விழா அல்லது தேனிலவு என்று அவர்கள் வந்தால் உண்டு, பள்ளி விடுமுறைகளில் ஒரு சிலர் குழந்தைகளுடன் வருகிறார்கள், மற்றபடி பின்டன் வருபவர்களில் பெரும்பாலோனோர் சிங்கப்பூர் வழியாக வரும் வெளி நாட்டு பயணிகள் தான், சிங்கப்பூரர்களிடையே பின்டன் அவ்வளவாக புகழ்பெறவில்லை, காரணம் கூடுதல் செலவு என்றாலும் சிங்கப்பூர்களுக்கு பிடித்த அடுத்த நாடு மலேசியா, பின்னர் ஆஸ்திரேலியா, தாய்லாந்து, தென் கொரியா, ஜப்பான் மற்றும் தைவான் கடைசியாக ஜப்பான். தொலை தூரம் சென்றுவருவதைத்தான் சுற்றுலா என்று நினைப்பதால் பின்டன் வரும் சிங்கப்பூர் வாசிகள் மிகக் குறைவு தான். சிங்கப்பூர் வாசிகள் மலேசியாவின் விடுமுறைத் தளங்களுக்குச் செல்வது கட்டுபடியான செலவு என்று நினைப்பதால் அவர்களை பின்டன் தங்குமிடத் தளங்கள் (ரிசார்ட்) பெரிதாக ஈர்க்கவில்லை. குறிப்பாக சாப்பாடு அவர்களுக்கு பிரச்சனை இங்கே, விருப்பப்படி 10 வகை உணவுகளுடன் இரவு உணவு சாப்பிடுபவர்களுக்கு இங்கு ப்ரைட் ரைஸ் 12 வெள்ளி என்னும் போது பின்டன் அவர்களுக்கு கட்டுப்படியாகாது, குறிப்பாக சிங்கப்பூர் சீனர்களைத்தான் சொல்கிறேன். சிங்கப்பூர் பயணிகளின் விருப்பத்திற்கேற்ப பாலியில்(Bali) உணவு வகைகள் கிடைப்பதால் அருகே இருக்கும் பின்டனைவிட பாலிக்கு செல்லும் சிங்கப்பூர் பயணிகள் மிகுதி.

******

விடுதி அறைக்குச் சென்று குளித்துவிட்டு நாங்கள் அனைவரும் காலை உணவிற்காக விடுதி உணவகத்திற்கு வந்தோம், நேற்றைக்கும் இன்றைக்கும் உணவு வகைகளில் பெரிதாக மாற்றம் இல்லை, அவற்றின் இடங்களை மாற்றி வைத்திருந்தனர், நேற்று சாப்பிட்ட அரிசு மாவு கூழ் நன்றாக இருந்தது, அரிசி மாவை நன்றாக வேக வைத்து அதில் பனைவெல்லம் தேங்காய்பால் சேர்த்து கலந்து வைத்திருந்தார்கள், இனிப்பு கூடுதல் தான், நன்றாகத்தான் இருந்தது, இன்றைய உணவில் அதற்கு மாற்றாக ப்ரெட் புட்டிங், ப்ரெட்டை புட்டு மாதிரி செய்து வைத்திருந்தனர், சுவைக்க இனிப்புடன் நன்றாகத்தான் இருந்தது, மற்றபடி பழங்கள், காப்பி, கெலாக்ஸ் கலவை மற்றும் ஒரு கோப்பை பச்சரிசி கஞ்சி காலை உணவு முடிந்தது. பின்னர் குழந்தைகளைக் கூட்டி கடற்கரைக்கு சென்றோம் மணி காலை 10 ஆகி இருந்தது, 12 மணிக்குள் விடுதி அறையை ஒப்படைக்க ஏற்கனவே நினைவுபடுத்தி இருந்தனர், இன்னும் 2 மணி நேரம் இருக்கே ? கடற்கரை வழியாக நடந்தோம், நேற்று பார்த்த படகு விளையாட்டு இடம் அருகில் தான் இருக்கிறது என்று கூறி அழைத்துச் சென்றேன், துடுப்புபடகில் இலவசமாக ஒரு மணி நேரம் துடுப்புப் போட அனுமதி கூப்பான் இருந்தது, ஆனால் அதை எடுத்துவர மறந்துவிட்டோம். அங்கிருந்து 5 நிமிடத் தொலைவில் விடுதி அறை இருப்பதால் விடுதிக்கு திரும்பி அறையையும் ஒப்படைத்துவிட்டு வந்துவிடலாம் என்று அறைக்கு திரும்பிவிட்டோம். 

ஒருவழியாக கூப்பானை தேடி எடுத்து, பயணப் பெட்டிகளை புறப்பட எடுத்து வைத்து, அதை விடுதி வரவேற்பில் வந்து ஒப்படைத்துவிட்டு பணம் கட்டிவிட்டு, திரும்ப படகு செலுத்தும் கடற்கரைக்கு சென்று சேரவும் பையன் கண் அசரவும் சரியாக இருந்தது, அம்மாவும் பெண்ணும் துட்டுப்படகுக்கு அனுப்பிவிட்டு பையனின் தூக்கத்திற்கு நான் காவல் இருந்தேன், மகளுக்கு நீச்சல் தெரிந்தாலும் மனைவிக்கு தெரியாது, பாதுகாப்பு சட்டைகள் போட்டுத்தான் படகில் ஏறினார்கள், இரண்டு பேர் அமர்ந்து துடுப்புப் போடும் கயாக்கிங்க் வகை படகு, ஒரு 10 அடி செல்வதற்குள் படகு கவிழ அணிந்திருந்த ஆடைகள் நனைந்துவிட்டது, அதன் பிறகு இன்னும் 10 அடி தொலைவுக்குச் சென்று ஒரு ஐந்து நிமிடத்தில் மனைவி 'பயமாக' இருக்கு என்று திரும்பிவிட்டாள், அதன் பிறகு நானும் என் மகளும் படகை செலுத்தினோம், படகுனுள் ஈரம் எனது உடைகளை நனைத்தது,

கரையில் இருந்து படகைக் கிளப்ப கொஞ்சம் முயற்சி மற்றும் சக்தி தேவையாக இருந்தது அதன் பிறகு துடுப்புப் போடவும் திருப்பவும் எளிதாக இருந்தது, 200 மீட்டர் அளவுக்கு கடலுக்குள் சென்றேன், மகளுக்கு நீச்சல் தெரிந்தாலும் பயந்து தான் உட்கார்ந்திருந்தாள், அதற்குள் அந்த பக்கமாக வந்த பாதுகாப்பாளர்கள் அவ்வளவு தொலைவெல்லாம் செல்லாதீர்கள் இங்கு நீரோட்டம் மிகுதி (High Current), அப்படியே கடலுக்குள் இழுத்துச் செல்லும் என்றார், அவர் சொன்னதை கவனிக்காமல் இருந்த மகள் என்ன சொன்னாங்க ? என்று என்னிடம் கேட்க, இங்கே ஆழம் வரக்கூடாது என்று சொன்னார்கள் என்றேன், இழுத்துச் செல்லும் என்று சொல்லி இருந்தால் பயந்து இருப்பாள், மீண்டும் கரைக்கு திரும்பி, திரும்பவும் அதே போல் கடலுக்குள் ஒரு வட்டம் அடித்து வர அரை மணி நேரத்திற்கும் கூடுதலாக ஆகி இருந்தது, பின்னர் விடுதிக்குச் சென்று எடுத்து வைத்த துணிகளை பெட்டிகளைக் கேட்டு வாங்கி மாற்றுடைகளை அணிந்து கொண்டு சிங்கப்பூருக்கு திரும்ப, படகுத்துறைக்கு அழைத்துச் செல்லும் பேருந்துக்காக ஒரு மணி நேரம் காத்திருந்தோம். அதற்கு மேல் சுற்றிப்பார்க்க அங்கே எதுவும் இல்லை, உடலில் பலமும் இல்லை. வீட்டுக்கு போய் எப்படா சோற்றைக் கண்ணால் பார்ப்போம் என்றாகிவிட்டது.

பேருந்து அழைத்துச் சென்று படகு முனையத்தில் விட்டது, அங்கும் ஒரு மணி நேர காத்திருத்தல், பின்னர் படகில் அனுமதிக்க சிங்கப்பூர் வந்து சேர்ந்தோம், புறப்படும் போது 3 மணி பயணம் ஒரு மணி நேரம், சிங்கை வரும் போது 5 மணி, நேர வேறுபாடுகளால் ஒரு மணி நேரம் இழப்பு, செல்லும் போது கிடைத்த ஒரு மணி நேரத்தை சாப்பிட்டு ஏப்பம் விட்டது, இந்தப் பகுதியில் கடல் மாசு மிகுதி, படகில் வரும் வழியெங்கும், குப்பைகள், ப்ளாஸ்டிக் பாட்டில்கள் ஆகியவை அங்காங்கே மிதப்பதை காண முடிந்தது. 

*****

ஏன் 'திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம்' என்றேன் ?

1. இரண்டு நாளுக்கு தங்குவதற்கு படகு கட்டணம், விடுதிக்கட்டணம் உள்ளிட்டு செய்த செலவு 800 வெள்ளிகள், இதில் 75 விழுக்காடு செலவுக்கு மலேசியா கேமரான் குளுகுளு மலையில் / லங்காவியில் தங்கிவிட முடியும், அங்கு பகல் முழுவதும் ஊர்சுற்ற, நம் விருப்பம் போல் சென்று வர இடங்கள் உண்டு, இங்கு பின்டன் ரிசார்டுகள் ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே, அதில் ஒரு நாளைக்கு மேல் தங்குவதில் எந்த ஒரு மகிழ்வும் இல்லை, அதற்கு பதிலாக வீட்டில் இருப்பதுடன் பக்கத்தில் இருக்கும் கடற்கரை பூங்காவிற்குச் சென்றுவருவதும் ஒன்றே, பைசா செலவே இல்லாமல் முடிந்துவிடும்

2, ஹோட்டல் செக் இன் டைம் என்ற பெயரில் மாலை மூன்று மணிக்கு மேல் அறை தரும் விடுதி நிர்வாகம், 12 மணிக்குள் செக் அவட் செய்ய கட்டாயப்படுத்துகிறார்கள், 3 மணிக்கு முன்னால் முன்கூட்டிய செக்கின் செய்யும் போது மணிக்கு, நபருக்கு  20 வெள்ளி என்ற அளவில் கூடுதல் கட்டணம் வாங்குகிறார்கள், ஒரு நாளைக்கு மேல் தங்காவிட்டால் விடுதியில் தங்கும் நேரம் 24 மணி நேரம் கிடையாது 21 மணி நேரம் மட்டுமே. 

3. கடற்கரையில் அமைந்த ஒரு விடுதி என்பது தவிர்த்து பெரிய சிறப்புகள் எதுவும் இல்லை. இது போன்று நிறைய கடற்கரை விடுதிகள் சிங்கப்பூரிலும் மலேசியாவிலும் உண்டு, இதைவிட கட்டணங்களும் குறைவு

4. உணவுப்பொருள் உள்ளிட்ட அனைத்து அன்றாடப் பொருள்களும் சிங்கப்பூரைக் காட்டிலும் விலைக் கூடுதல்.

5. குழந்தைகளை ஈர்க்கும் எந்த ஒரு நிகழ்ச்சிகளும், இடங்களும் இங்கு இல்லை

6. வெளிநாடு சென்று வந்தோம் என்ற திருப்தி எதுவும் கிடைக்கவில்லை, காரணம் பின்டன் ரிசாட்டை விட்டு வெளியே செல்லும் வாய்ப்புக் குறைவு. அந்த நாடு எப்படி இருக்கும் என்பதை பின்டன் ரிசாட்டைவைத்து முடிவு செய்ய முடியவில்லை. பொதுமக்களை காணவோ, அங்கு வசிப்பிடச் சூழல், கடைகள் எதையும் பார்ப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை

*******



மற்றபடி நல்ல பாதுகாப்புச் சூழல் உள்ளது, மாற்றத்திற்காகவும் மன அமைதிக்காகவும் செல்ல விரும்புவர்கள் செல்லலாம், முதல் உதவி என்ற வகையில் மருத்துவ அறை ஒன்றையும் மருத்துவர் ஒரிருவரை வைத்திருக்கிறார்கள் ,மற்றபடி உயிர்காக்கும் அவசரசிகிச்சை உடனடி மருத்துவம் என அந்த ரிசார்டை விட்டு மருத்துவமனைகளுக்குச் செல்ல ஒரு மணி நேரத்திற்கும் மேல் பயணிக்க வேண்டி இருக்கும்.

பாலித் தீவு சென்று வந்ததை 10 இடுகைகளாக எழுதினேன், இங்கும் செலவிட்டது அதே 3 நாள் 2 இரவு என்றாலும் 'பின்டன்' பற்றி எழுத இதற்கு மேல் நான் அறிந்த வகையில் எதுவும் இல்லை.

13 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 2 !

எதிர்ப்பார்ப்புகளுடன் எங்கு சென்றாலும் அது கொஞ்சமேனும் நிறைவேறாவிட்டால் பிறகு எதையும் ரசிக்க முடியாது, 'பின்டன்' ரிசார்டுகள் அவ்வளவு மோசமில்லை என்றாலும் என் போன்றவர்கள் சுற்றுலாத் தளத்தில் பகல் முழுவதும் சுற்றி சுற்றி வந்து எதாவது செய்து ((Activities) கொண்டு அந்த இடத்தை முற்றிலும் சலிக்கும் வரை இல்லாவிட்டாலும் கால் வலிக்கும் வரை சுற்றிவர விரும்புவர். 

******

இங்கு 'பின்ட'ன் சுற்றுலா வளாகம் என்பது ஒரு குறிப்பிட்ட எல்லை வரை மட்டுமே என்பதால் நம் விருப்பப்படி சுற்றிவர எதுவும் இல்லை, அதற்கான வசதி வாய்ப்புகளும் இல்லை என்ற எண்ணம் வர நாளைய பொழுதை எப்படி கழிப்பது ? என்றவாறு நினைத்துத் தூங்கி காலை 7:30 மணிக்கு எழுந்தேன், குழந்தைகளும் எழுந்து கொண்டார்கள், அவர்களை கிளப்பச் சொல்லிவிட்டு ரெடிமேட் காப்பியை சுடுநீரில் கலக்கி குடித்துவிட்டு அறையை விட்டு கடற்கரைக் பகுதிக்கு வந்தேன்.


நேற்று மாலைப் பார்த்த கடலா இது ? கடல் தண்ணீர் 200 மீட்டர் தொலைவு வரை உள் வாங்கி இருந்தது, கடற்கரை பாறைத் திட்டுகள் மற்றும் பாசிகளால் நிறைந்திருந்தது, ஒரு 100 மீட்டர் தொலைவு வரை உள்ளே சற்று பயத்துடன் தான் நடந்தேன், ஏனெனில் கடல் தரைகளை நம்ப முடியாது, புதை மணலாக இருந்து உள்ளே இழுத்தால் ? அப்படி ஒரு ஆபத்தான அனுபவம் வீட்டருகே இருக்கும் கடற்கரையில் எனக்கு நேர்ந்ததால், நிதானமாக காலடிகளை எடுத்து வைத்தேன், ஈரம் என்பது தவிர்த்து கட்டாந்தரை போல் தான் இருந்தது நேற்று மாலையில் கடல் நீர் இருந்த பகுதிகள். 200 மீட்டர் உள் வாங்க 2 மீட்டர் உயரத் தண்ணீர் கீழே இறங்கி இருக்க வேண்டும், ஆனால் அவை எங்கு சென்றது ? ஒரு வேளை சுனாமி ? அந்தப் பகுதிகளில் நிலநடுக்கம் இருந்தாலும் சுற்றிலும் நாடுகள் அரணாக இருப்பதால் பெரிய சுனாமிக்கு வாய்ப்பில்லை. அந்தப் பகுதியில் கடல் நீரோட்டங்கள் அந்தக் கடற்கரைப் பகுதி நீரை உயர்வாகவும் தாழ்வாகவும் ஆக்குகிறது என்பது பிறகு தான் புரிந்தது, நான் சென்று வந்த பிறகு சரியாக ஒரு மணி நேரத்தில் நேற்று மாலைப் பார்த்த அளவுக்கு கடல் நீர் கரை வரை வந்திருந்தது. மறுநாள் காலையும் இதே போன்று தான் கடல் நீர் உள்வாங்கி இருந்தது.



கடற்கரையைச் சுற்றிவிட்டு முந்தைய நாள் சென்ற விலங்குகளின் காட்சிக் குடில் வழியாக திரும்பவம் விடுதியை அடைந்தேன், இது போன்ற 3 - 5 நட்சத்திர அந்தஸ்து உள்ள விடுதிகளில் காலை உணவு இலவசம் தான், 50க்கும் மேற்பட்ட உணவு வகைகளை விருப்பம் போல் எடுத்து திண்ணும் பபே முறையில் அமைத்திருப்பார்கள், பழச்சாறுகள் மற்றும் காபி, தேனீர் கூட இருக்கும், ரொட்டி வகைகள், நூடுல்ஸ், சோறு, கஞ்சி, ஆம்லேட், ஆப்பாயில், வெட்டிய பழங்கள், சோள மாவில் செய்யப்பட்ட கெல்லாக்ஸ் வகைகள், எல்லாமும் இருக்கும், சைவ உணவு தான் சாப்பிடுவது வழக்கம் என்பதால் எனக்கு ப்ரெட், கெல்லாக்ஸ் மற்றும் கஞ்சி தவிர்த்து வேற எதுவும் ? கொஞ்சம் தள்ளி சூடான இட்லிகள், வடைகள், பில்டர் காபி இருந்தது, அதனருகில் இந்திய முகங்கள் நிறைய பேர் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர், ஆனால் தமிழ் குரல் எதுவும் கேட்கவில்லை,  ஆகா இட்லி என்று நினைத்து அருகே சென்றால் அது தனியாக ஒரு தனியார் நிறுவனம் அவர்கள் ஊழியர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாம்,  விடுதியில் தங்கி இருப்பவர்களுக்கு அதில் பங்கு இல்லை என்றார்கள், போச்சுடா.....சரி என்று சொல்லிவிட்டு அறைக்கு திரும்பி குளித்துவிட்டு தயாராக இருந்த குழந்தைகளை கூட்டி வந்து அதே உணவகத்திற்கு வந்து, சாப்பிட முடிந்த வகைகளை மட்டும் சாப்பிட்டோம், அடுத்து எங்கு செல்வது என்கிற திட்டம் எதுவும் இல்லாததால் பொறுமையாக சாப்பிட்டு முடிக்க 45 நிமிடம் ஆகியது. அங்கிருந்து கடற்கரைப் பகுதிக்கு வந்தோம் முன்பு சொன்னது போல் கடல் நீர் கரை வரை வந்திருந்தது, சுற்றிப் பார்த்துவிட்டு 15 நிமிடம் நடந்து நேற்று உருட்டு பந்து விளையாண்ட இடத்திற்கு வந்து சேர்ந்தோம்.

மழைத்தூறல் இருந்தது, விடுதியில் கொடுத்த பொழுது போக்கு விளையாட்டுகளுக்கான கூப்பானில் நடைபெறும் பல்வேறு பொழுது போக்கு நிகழ்வுகளுக்கான இடம் அங்கு தான் இருந்தது, கொஞ்சம் உயரமானப் பகுதி அது கீழே இறங்க கடற்கரையில் முடிந்தது, அதாவது  ஒரு பக்கம் கடற்கரையில் விடுதி மறுபக்க கடற்கரையில் இந்த பொழுது போக்கு திடல். துப்பாக்கி சுடுவது மற்றும் வில் அம்பு ஆகியவற்றை செயல்படுத்த நமக்கு அனுமதி இருந்தது, 30 அம்புகளைக் கொடுத்தார்கள், எதிரே 30 மீட்டர் தொலைவில் இருந்த வட்டக் குறியில் (டார்கெட்) அடிக்க வேண்டும், நானும் மகளும் அம்புகளை எய்தினோம் (இந்த 'எய்' என்கிற தமிழ் வினைச் சொல்லில் இருந்து தான் Aim வந்திருக்குமோ ?) . பயிற்சிகள் இல்லாததால் பாதிக்கு மேல் டார்கெட்டில் விழவில்லை, அதன் பிறகு மழை பொழிந்ததால் அம்பு எய்தலை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது. அங்கும் சில வட இந்தியர்கள் குழந்தைகளுடன் வந்து கரே முரே என்று பேசிக் கொண்டு வந்துவிட்டார்கள், பின்னர் துப்பாக்கி சுடுதலில் கொஞ்சம் நேரம் சுட்டுவிட்டு வந்தேன், முப்பது குண்டுகள் வரைக் கொடுத்தார்கள், இரண்டு மிமி நீளம் உள்ள மிக சிறிய ஈயக்குண்டு தான், பொருத்துவதும் எளிதாகத்தான் இருந்தது.  குறிப்பார்த்து துப்பாக்கிச் சுடுவது எளிதாகத்தான் இருந்தது. மழை கொஞ்சம் குறைந்திருந்தது, அடுத்து ? யானை ஏற்றம் குதிரை ஏற்றம் எல்லாம் அங்கே நடப்பதாகச் சொனனர்கள், ஆனால் அதெல்லாம் மாலை மூன்று மணிக்கு மேல் தானாம். அங்கிருந்து விடுதி இலவசப் பேருந்திற்கு ஒரு 20 நிமிடம் காத்திருந்து ஏறினோம், நான் முந்தைய நாள் இரவு உணவு வாங்கிய விடுதிக்கு அருகே இறக்கிவிட அங்குள்ள கடற்கரையை ஒட்டி நடந்தோம், சற்று தொலைவில் கடற்கரை படகு விளையாட்டுகளுக்கான பகுதி இருந்தது, அங்கும் வட இந்தியர்கள் தான் கடல் விளையாட்டுகளில் மும்மரமாக இருந்தனர். 


வட இந்தியர்களெல்லாம் பணக்காரர்களா ? பெயருக்குக் கூட தென்னிந்தியர்கள் ஒருவரையும் பார்க்க முடியவில்லை, வட இந்தியர்களைப் பொருத்த அளவில் பணக்காரர்கள் ஏழைகள் என்கிற இரண்டே வர்கம் உண்டு போலும், பணக்காரர்கள் குடும்பமாக வந்து நன்றாக நாடுகளை சுற்றிப் பார்த்து அனுபவிக்கிறார்கள். பணத்தை தண்ணீராக செலவு செய்கிறார்கள். அந்தப் பகுதியில் சற்று நேரம் நின்றுவிட்டு மணியைப் பார்க்க மாலை 2 ஐ நெருங்கியது, அங்கிருந்து பேருந்தை எடுத்து விடுதிக்கு வந்தோம், விடுதி முகப்பில் இந்தோனேசிய பாரம்பரிய சிறிய நிகழ்ச்சி ஒன்று நடந்து கொண்டு இருந்தது, சற்று நேரம் பார்த்துவிட்டு அறைக்குச் சென்று, ரெடிமேட் நூடுல்ஸ் உள்ளிற்றவற்றை தின்றுவிட்டு ஓய்வெடுத்துவிட்டு விடுதி மையப்பகுதிக்கு வந்தோம்.

மாலை 3 மணி, இந்த விடுதியை விட்டு பிறப் பகுதிகளைப் பார்க்கவே முடியாதா ? பேருந்தில் 10 கிமீ தொலைவில் உள்ள மற்றொரு கடைத்தெருவுக்கு கூட்டிச் செல்வதாகச் சொன்னார்கள், ஆனால் பேருந்திற்கு பெரியவர்களுக்கு 5 வெள்ளியும் குழந்தைகளுக்கு 3 வெள்ளியும் கட்டணமாம், எப்படியாவது இங்கிருந்து சென்றால் சரி தான் என்று நினைத்துக் கொண்டிருந்தோம், அதற்குள் யானை ஏற்றமும் குதிரை ஏற்றமும் நினைவுக்கு வர, மீண்டும் காலையில் சென்ற பொழுது போக்குப் பகுதிக்குச் சென்றால் அங்கு உயரமான கோபுரத்தில் (டவரில்) இருந்து கயிற்றில் தொங்கிவரும் மற்றொரு செயல்பாடுகளும் துவங்கி இருந்தது, எனக்கு உயரம் அச்சமில்லை என்றாலும் மனைவியும் மகளும் விரும்பினார்கள், சிறுவனை நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறிவிட்டு அவர்களை கயிற்றில் தொங்கிவரும் அந்த விளையாட்டுக்கு அனுப்பி வைத்தேன், 70 அடி உயர கோபுரத்தில்  50 அடி உயரத்தில் இருந்து கயிறு 200 மீட்டர் நீளத்திற்கு மற்றொரு உயரம் குறைவான பகுதியில் இணைக்கப்பட்டு இருக்கும், அதில் பாதுகாப்பு பட்டிகளைக் மாட்டிவிட்டு தொங்கவிடுகிறார்கள், 20 வினாடிகளில் மறுபக்கம் சறுக்கியபடி வந்துவிடமுடியும், அதில் தொங்கி வரும் போது கைகளை விரித்து வந்தால் பறப்பது போல் ஒரு அனுபவம் கிடைக்கும், அனுபவம் நன்றாக இருந்ததாக மனைவியும் மகளும் தெரிவித்தார்கள்.


அந்தப் பகுதிக்குச் சற்று கீழே யானைச்  ஏற்றத்திற்கான  இடம் இருந்தது, 7 யானைகள் வரை வைந்திருந்தார்கள், அதில் 4 பெண் யானைகளாம், 3 ஆண் யானைகளாம், யானை மீது பயணம் செய்பவர்கள் பாகனின் தொள் பட்டையைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ள வேண்டும், அம்பாரியெல்லாம் கிடையாது, மகளும் மனைவியும் அச்சப்பட நான் மட்டும் தான் யானைச் ஏற்றத்திற்கு சென்றேன், அது இலவசம் தான், ஓட்டல் கட்டணத்துடன் இணைந்தது தனியாக பணம் கொடுக்கத் தேவை இல்லை. யானைகளில் ஏறுபவர்களும் பாகனும் காலணி அணிந்திருந்தனர், எனக்கு யானை கணபதி, வினாயகர் என்கிற எண்ணம் எல்லாம் எதுவும் இல்லை, அது தவிர்த்து உட்காரப் போகும் யானை ஆணா பெண்ணா (பெண் யானையும் பிள்ளையாரா ?) என்றெல்லாம் தெரியாது, இருந்தாலும் காலணியை கழட்டுவது என்றே நான் முடிவு எடுத்து இருந்தேன். காரணம் யானை மனிதர்களுடன் நெருக்கமாக, அன்பாகப் பழகும் ஒரு விலங்கு அதன் மீது காலணியுடன் ஏறுவதற்கு எனக்கு மனதில்லை.  நெல்லு மூட்டை அடுக்கிய மாட்டு வண்டியில் மூட்டை மீது ஏறி உட்கார்ந்திருப்பதைப் போன்று தான் இருந்தது, யானை அசைந்து நடக்க கொஞ்சம் அதன் தசைகள் அசைய, நமக்கு  இருக்கமான மூட்டையில் அமர்ந்திருப்பதைக் காட்டிலும் நொழ நொழ உணர்வு ஏற்படும்,  தொலைவில் பார்க்க பாறை உடம்பு போல் இருக்கும் யானை, மேல் அமர்ந்து பார்க்க முதுகில் கூரான முடிகள் நெருக்கமாக இருந்தது, மேலே துணி இருந்ததால் முடி என் உடலில் குத்தவில்லை. யானைப் பாகன் உற்சாகமாகப் பேசினார். 8 ஆண்டுகளாக பாகனாக இருக்கிறாராம், நாள் தோறும் அவருடைய ஊரில் இருந்து 30 கிமீ பைக்கில் வந்து செல்வாராம், ஊதியமாக சிங்கை வெள்ளி மதிப்பில் 700 வெள்ளிகள் கொடுக்கிறார்களாம். 7 யானைக்கும் சேர்ந்து 10 பேர் பணியில் இருக்கிறார்கள், யானை காடு போன்ற பகுதிகுள் நடந்து சென்றது, அங்கிருந்து சற்று சரிவில் ஏறிச் சென்றது, மேலே உட்கார்ந்திருக்கும் போது சற்று அச்சமாகத்தான் இருந்தது, தமிழில் தானே இருக்கிறது யானைக்கும் அடி சறுக்கும் பழமொழி. பயப்படாதீர்கள், யானை ரொம்பவும் வலிமையான விலங்கு நிதானமாக ஏறும் என்றார், 10 நிமிடங்களில் புறப்பட்ட இடத்திற்கு கொண்டு வந்து விட்டார், இறங்கி காலணிகளை அணிந்து கொண்டேன், அடுத்து யானைகளை வைத்து (வித்தை) காட்சியாம். துவங்க இருந்தார்கள், ஆனால் அதற்கு கட்டணம் பெரும் தலைக்கு 20 வெள்ளி, சிறியவர்களுக்கு 10 வெள்ளி. 50 வெள்ளி அழ என்னால் முடியாது தவிர யானை வித்தைகளை ஏற்கனவே சிங்கை விலங்கியல் பூங்காவில் பார்த்து 2 திங்கள் கூட ஆகாத நிலையில் அங்கிருந்து கிளம்பிவிட்டோம் ஒரு யானை ஏற்றத்திற்கான மற்ற கூப்பனும் பயன்படுத்தவில்லை.


மணி மாலை 4:30 ஆகி இருந்தது, விடுதிக்குச் சென்று கட்டணப் பேருந்தில் ஏறி அவர்கள் குறிப்பிட்ட விடுதிக்கு வெளியே 10 கிமீ தொலைவில் இருக்கும் கடைத் தெருவைச் சுற்றிப் பார்க்கலாம் என்று நினைத்து அதற்கான பேருந்து வந்ததும் ஏறினோம். விடுதி வளாகத்தைவிட்டு சோதனைச் சாவடி தாண்டி ஒரு சாலையில் பிரிந்து சென்றது வாகனம், அந்த பகுதிகள் உயரம் குறைவான மரங்களாலும், செடிகளாலும் புதர்கள் அடங்கிய காட்டுப் பகுதி நடுவே சாலைகள் அமைத்திருக்கிறார்கள்,  சாலைக்கு அருகே மின் கோபுரங்களும் இருந்தன. அந்தப் பகுதியில் சுற்றுலாத் தளங்கள் தவிர்த்து பொது மக்களுக்கான குடியிருப்போ, நகங்களோ இல்லை, சுமார் 20 கிமீ பரப்பளவில் பல்வேறு விடுதிகள் கட்டப்பட்டுள்ளன, 15 நிமிடப் பயணத்திற்கு பிறகு இது தான் அந்த கடைத் தெரு என்று ஒரு இடத்தில் பேருந்து நின்றது.



அந்த கடைத்தெருவின் பெயர் 'பசர் ஒளே ஒளே(Pasar/Bazar Ole Ole)' பெரிய ஷாப்பிங்க் காம்ப்ளெக்ஸுகள் இருக்கும் என்று நினைத்து வந்த இடத்தில் 20 மர வீடுகளை அமைத்து அதில் கடைகள் இருந்தன, அவற்றில் மசாஜ் குடில்கள் மற்றும் சுற்றுலா பரிசு பொருள்கள், உணவு பொருள்கள் விற்கும் கடைகள் தவிர்த்து எதுவும் இல்லை, பேருந்து கட்டணமாக 13 வெள்ளிகள் செலுத்தி வந்தது இதைப் பார்க்கத்தானா ?

திரும்பப் போகலாம் என்று பார்த்தால் அடுத்து பேருந்து ஒரு மணி நேரம் சென்று தான் கிளம்புமாம், ஒரு மணி நேரம் அங்கே பொழுதை ஓட்டுவது கடுப்பாகத்தான் இருந்தது, அங்கு தண்ணீர் பாட்டில் விலை குறைவாக இருந்தது 2 வெள்ளிக்கு இரண்டு பாட்டில் கிடைத்தது, இதுவாவது விலைக் குறைவாக இருக்கிறதே என்று நினைத்தே வாங்கினேன், பின்னர் அக்கம் பக்கம் வீடுகளுக்குக் கொடுக்க நினைவுப் பொருள்கள் சில வற்றை வாங்கினோம், இளநீர் கிடைத்தது ஒரு இளநீர் 3 வெள்ளி, பெரிய இளநீர் தான் என்றாலும் அதே இளநீர் ஜோகூரில் 3 ரிங்கிட் அதாவது அந்த விலையில் பாதிக்கும் குறைவே, மலேசியாவை ஒப்பிட இந்தோனேசியா ஏழை நாடு தான். இங்கு விலைகள் எல்லாம் டிமாண்ட் என்ற வகையில் ஏற்றமாகவே விற்கிறார்கள், சுற்றுலாவருபவர்களுக்கு வேறு எங்கேயும் வாங்க வாய்ப்பில்லாத நிலையில் அவர்களிடம் இருந்து கரந்துவிட முடியும் என்றே விலைக் கூடுதலாகவே விற்கிறார்கள். கடைத்தெரு என்று விடுதி காட்டிய இடமும் விடுதியினரால் புறநகரில் அமைக்கப்பட்டுள்ளது என்பதைத் தவிர்த்து சிறப்பாக அதில் ஒன்றும் இல்லை, மசாஜ் செய்து கொள்ளாதவர்கள், உணவு விடுதிக்குள் செல்லாதவர்கள் தவிர்த்து மற்றவர்களுக்கு அந்த இடத்தில் 10 நிமிடத்திற்குமேல் வேலை இல்லை. ஒரு மணி நேரத்தை நகர்த்திவிட்டு பேருந்து நின்ற இடத்திற்கு வந்து பேருந்தில் ஏற பேருந்து புறப்படது, மாலை 6:30 ஆக விடுதிக்கு வந்து சேர்ந்தோம்.

விடுதிக்கு பின்னே இருந்த மாலை நேரக் கடற்கரையில் சற்று நேரம் சுற்றிவிட்டு அலைகளில் கால் நனைத்துவிட்டு விடுதி அறைக்கு வந்தோம், பொடியன் பெரிதாக பிரச்சனைகள் ஒன்றும் செய்யவில்லை, அவ்வப்போது ஐபோனைக் கேட்டு அடம்பிடித்து வாங்கி விளையாடினான். இரவு உணவு ? நேற்று சாப்பிட்ட நாண் வகை உணவு இன்னிக்கும் சாப்பிட சலிப்பு என்றார்கள் மகளும் மனைவியும், பின்னர் விடுதியில் அமைந்த உணவகத்தில் அறைக்கே உணவு எடுத்து வந்து தரும் ஏற்பாடுகள் இருந்ததால் வெஜிடேரியன் ப்ரைட் ரைஸ் மற்றும் ப்ரைட் நூடுல்ஸ் பட்டியலில் இருக்க அதைத் தேர்வு செய்து அழைத்துக் கேட்டுக் கொள்ள உணவு வந்து சேர்ந்தது, ஒரு ப்ளேட் 12 வெள்ளி மொத்தம் 24 வெள்ளி அதனுடன் சேவைக்கட்டணம், வரி உள்ளிட்டவைச் சேர்த்து 30 வெள்ளிக்கு கட்டண ரசீதும் வந்தது, பகிர்ந்து சாப்பிட்டுவிட்டு போததற்கு ரெடிமேட் நூடுல்ஸ் போட்டு சாப்பிட்டுவிட்டு, தொலைகாட்சியை ஓடவிட்டோம் சிங்கை தொலைகாட்சியின் மணல் கயிறு திரைப்படம் ஓடிக் கொண்டு இருந்தது, படுத்தப்படியே பார்த்துக் கொண்டு இருந்தோம், நான் பாதியில் தூங்கிவிட்டேன். 

அடுத்த நாள் பெரிய திட்டம் ஒன்றும் இல்லை, அதற்கு வாய்ப்புகளும் இங்கு இல்லை, 

மறுநாள் நன்பகல் விடுதி அறையை ஒப்படைக்க வேண்டும், அதுவரை என்ன செய்வது ?

12 ஜூன், 2012

திரும்பவும் போக விரும்பாத சுற்றுலாத் தளம் - 1 !

மனித வாழ்க்கையில் வேலை, உண்ணுவது உறங்குவது தவிர்த்து பொழுது போக்கும் ஒரு பகுதி தான், அவ்வப்போது மாறுபட்ட சூழலை தூய்துவருவதன் மூலம் அன்றாட வாழ்க்கையில் புத்துணர்வைக் கூட்டிக் கொள்ள முடியும், இங்கு சிங்கையில் ஜூன் திங்கள் முழுவதும் பள்ளிவிடுமுறை தான், குழந்தைகளைக் கூட்டிச் செல்ல புதிய  இடமாகவும், செலவுக் குறைவாக இருக்க வேண்டுமே என்று எண்ணி அருகே இந்தோனேசியா தீவுடன் இணைந்த பின்டன் (Bintan) தீவிற்கு செல்ல முடிவெடுத்து மூன்று நாள் இரு இரவு (3D2N) பயணத்திற்கு ஏற்பாடு செய்தோம்.

******
கடந்த வியாழன் முதல் சனி வரை சுற்றுலாவில் இருப்பது என்று முடிவாகி இருந்தது, 'பின்டன்' தீவு சிங்கையில் இருந்து கடல் வழியாக விசைப்படகு பயணத்தில் 45 நிமிடத்தில் அடையும் தொலைவில் இருக்கிறது, நாடுவிட்டு நாடு பயணம் என்பதால் கடவு சீட்டு இத்யாதிகளுடன் அதே போன்று 2 மணி நேரத்திற்கு முன்பாகச் சென்று வழிமுறைகளை முடித்துக் கொள்ள வேண்டும், படகு முனையமும் சாங்கி விமான நிலையத்திற்கு அருகே தான் உள்ளது, பேருந்து அல்லது வாடகை உந்திகளில் அந்த முனையத்தை அடைய முடியும். படகு முனையத்தில் உணவுக் கடைகள் உண்டு, விலைகள் வெளியே இருப்பதைக் காட்டிலும் ஒன்னறை மடங்கு கூடுதல். மாலை 3:00 மணி படகு பயணத்திற்கு 1 மணிக்கெல்லாம் முனையத்திற்குச் சென்று குடிநுழைவு சோதனைகளை முடித்துக் கொண்டு விசைப்படகிற்காக 30 நிமிடங்கள் காத்திருந்தோம்.


300 பேர்கள் அமர்ந்து செல்லக் கூடிய சுற்றிலும் கண்ணாடி சன்னல்கள் அமைக்கப்பட்ட குளிர்சாதன பெரிய விசைப்படகு எங்களை ஏற்றிக் கொண்டு புறப்பட்டது, இரண்டு அடுக்குகளாக இருந்த படகில் மேல் தளம் உயர்வகுப்பு பயணிகளுக்காகவும், முதல் தளம் மற்றபயணிகளுக்காகவும் ஒதுக்கி இருந்தனர் படகு முற்றிலும் பயணிகளால் நிறைந்திருந்தது, ஒரு நாளைக்கு இரண்டு பக்கமும் இரண்டு படகுகளில் 5 ஏற்றங்களில் (சவாரி)  சுமார் 1500 + 1500 பயணிகளை சிங்கப்பூருக்கும் - பின்டனுக்கும் இடையே பயணிக்க வைக்கிறார்கள், அதாவது சிங்கப்பூர் படகு முனையம் / துறையில் இருந்து ஒரு நாளைக்கு 1500 பேரை பின்டனுக்குச் சென்று சேர்க்கிறார்கள். பிற படகுகள் மற்றும் விமானம் உள்ளிட்ட பிற போக்குவரத்து வழிகளில் இருந்தும் நாள் ஒன்றுக்கு ஏறக்குறைய 2000 சுற்றுலாப் பயணிகள் பின்டனை வந்து அடைகிறார்கள்.

நாங்கள் சென்ற படகு நிரம்பி இருந்தது, குடிக்க இலவச பானம் எதுவும் கொடுக்கவில்லை, ஆனால் படகில் சிறிய திண்பண்ட மற்றும் பானக் கடை ஒன்று இருந்தது, பசி தாகம் என்றால் வாங்கலாம் என்பது தவிர்த்து பொழுது போக்குக்கு கொறிக்க வாங்கினால் கை புண்ணாகிவிடும் விலை கூடுதலாகத் தான் இருந்தது. தெரிந்திருந்தால் வெளியில் இருந்து வாங்கி வந்திருக்கலாமே ந்ன்று நினைத்தேன், பையன் படகுக்குள் ஓடிக் கொண்டு இருக்க அவனைத் துறத்தி துறத்தி இழுத்து வந்து உட்கார வைக்க 45 நிமிடங்களும் ஆகி முடிக்க படகு பின்டன் முனையத்தை அடைந்திருந்தது. மாலை மறுபடியும் 3 மணி தான். இங்கு சிங்கையைக் காட்டிலும் ஒரு மணி நேரம் நேரக் குறைவு.


வழக்காமான குடி நுழைவு சோதனைகள் இந்திய கடவுச் சீட்டுகளுக்கு 10 அமெரிக்க வெள்ளி குடி நுழைவுக் கட்டணமாக வாங்குகிறார்கள், உடைமைகளை இழுத்துக் கொண்டு வெளியே வந்தோம், பையன் அவன் தான் இழுக்கனும் என்று ஒரே அடம், அவன் இழுத்துச் செல்வதைப் பார்த்தோர்கள் அனைவரும் புன்னகையுடன் கடந்து சென்றார்கள், பின்டன் படகு முனையத்திற்கு வெளியே நாட்டுச் சின்னமாக இறக்கை விரித்த பருந்தின் சிலை இருந்தது. தங்கும் விடுதியின் பேருந்தும் ஆட்களும் வந்திருந்தார்கள், அந்த விடுதிக்குச் செல்லும் அனைவரின் உடைமைகளையும் பெற்றுக் கொண்டார்கள், பையன் கொடுக்கமாட்டேன் என்று அழுது அடம்பிடித்தான், பின்னர் ஒருவாரு அமைதியடைய வைத்து பேருந்துனுள் ஏறி அமர்ந்தோம். பேருந்து புறப்பட்டது.


15 நிமிடத்தில் ஒரு சோதனைச் சாவடியைக் கடந்து விடுதியின் முகப்பில் இறக்கிவிட்டது,  முகப்பில் யானை சிலைகள், வண்ண மீன் குளங்களுடன் விடுதி இருந்தது, அனைவருக்கும் வரவேற்பு பானம் வழங்கினார்கள். வரவேற்பு அறைக்குச் சென்று பதிவு செய்துவிட்டு (ஏற்கனவே முன்பதிவு செய்த விடுதி தான்)  , இந்த விடுதியின் பெயர் நிர்வாணா ரிசார்ட் ஓட்டல், ஐந்து நட்சத்திர வசதி கொண்டதாம், மிகப் பெரிய கட்டிடமாக இல்லாமல் கடற்கரைப் பகுதிக்கு ஏற்ற வகையில் நீளவாக்கில் வளைவாக மூன்று மாடிகளாகக் கட்டி இருந்தார்கள். அறை எண் மற்றும் சாவியைப் பெற்றுக் கொண்டு அறைக்குச் சென்றோம்,  பொழுது போக்கு விளையாட்டுகளுக்கான பற்றுச் சீட்டுகளையும் கொடுத்திருந்தார்கள், அறையின் சன்னலைத் திறந்தால் எதிரே நீலவண்ணத்தில் அமைதியான கடற்கரைத் தெரிந்தது. அறையில் சிறிது நேரம் இளைப்பாறி விட்டு விடுதி மையத்திற்கு வந்து கடற்கரைச் சென்றடைந்தோம். செல்லும் வழியில் நீச்சல் குளம் அமைத்திருந்தனர்.



கடற்கரையில் 20 செமி உயர அலைகள், களங்கள் அற்ற தெளிவான தண்ணீர், ரவாவை மாவாக அரைத்தது போன்று மென்மையான கடற்கரை மணல், குழந்தைகளுக்கு மிகவும் பிடித்திருந்தது, கடலில் கால் நினைத்துவிட்டு கடற்கரை ஓரமாக நடந்தோம், இரண்டு மரங்களுக்கு இடையே வலையூஞ்சல் கட்டி இருந்தனர், அதில் கொஞ்ச நேரம் ஆடிவிட்டு அப்படியே நடக்க அருகில் ஜெல்லி மீன் குறித்த எச்சரிக்கை அறிவிப்பு இருந்தது, இன்னும் சற்று தள்ளி நடக்க வழித்தடங்கள் பிரிந்து ஒன்று விடுதியை நோக்கியும் மற்றொன்று நேராகவும் சென்றது, விடுதிப் பக்கம் உள்ள பாதையில் நடந்தோம், அங்கே முயல்கள், எலிமான் போன்ற விலங்குகளையும், கிளிகள், வல்லுறு மற்றும் பருந்து ஆகியவற்றை வைத்து அறைகள் அமைத்து காட்சிக்காக வைத்திருந்தனர், அதைத் தாண்டி ராஜநாகம், மலைப்பாம்பு ஆகியவற்றின் குடில்களும், முதலைகள், ஆமைகள் மற்றும் மீன்கள் ஆகியவற்றிற்கான காட்சி இடங்களும், அதைத்தாண்டி மான்களுடன் ஒரு தோட்டப் பகுதியும் இருந்தது, இன்னும் சற்று நடக்க விடுதி முகப்பு வந்துவிட்டது.





பின்னர் அங்கிருந்து விடுதிக்கு முன்பான வழித்தடத்தில் நடக்க அது அங்கு அன்றாடம் நடைபெறும் விளையாட்டுகள் மற்றும் பொழுது போக்கு நிகழ்வுகளின் இடத்திற்கு அழைத்துச் சென்றது, பொழுதும் இருட்டத் துவங்கியதால் அருகே இருந்த பொழுது போக்குக் கூடத்திற்குள் நுழைந்தோம், அது ஒரு உருட்டு பந்து கூடம் (பவுலிங்), எங்களுக்கு கொடுத்த பற்றுச் சீட்டில் இலவசமாக அங்கு விளையாட அனுமதி இருந்தது, ஆனாலும் காலுறை மற்றும் அவர்கள் தரும் காலணிகளை அணிந்து தான் விளையாட வேண்டுமாம், அதற்கு கட்டணம் 4 வெள்ளி. வேற வழி ? பற்றுச் சீட்டைப் பயன்படுத்த வேண்டும் மகளும் விளையாட ஆவலாக இருந்தாள். இரண்டு ஆட்டங்கள் விளையாடினோம், தண்ணீர் விலை விசாரித்தேன், 1 1/2 லிட்டர் பாட்டில் 9 வெள்ளியாம், தலை சுற்றியது. பின்னர் விடுதிக்கு வந்தோம். மாலை 7:30 ஆகி இருந்தது, காலையில் சாப்பிட்ட பிறகு, விடுதிக்கு வந்ததும் எடுத்து வந்த இட்லிகள் தவிர்த்து உணவாக எதுவும் சாப்பிடவில்லை, அவ்வப்போது எடுத்து வந்த திண்பண்டங்கள் ஓரளவு பசியை கட்டுப்படுத்தி இருந்தாலும் இரவு உணவுக்கு ஏதாவது சாப்பிட்டே ஆகவேண்டும். சைவம் சாப்பிடும் எங்களுக்கு என்ன கிடைக்கும் ? அந்த விடுதி வளாகம் மிகப் பெரிய கேம்பஸ் போன்றது அதனுள் பல விடுதிகளை அவர்களே அமைத்திருக்கிறார்கள், வெளி ஆட்கள் யாரும் வரமுடியாத அளவுக்கு கட்டுப்பாடு மிக்க இடம், அதனுள்ளேயே பல்வேறு இடங்களுக்குச் சென்றுவர பேருந்துகள் வைத்திருக்கிறார்கள், கட்டணம் எதுவும் கிடையாது, 30 நிமிடத்திற்கு ஒரு முறை சென்றுவரும், இந்திய உணவு 'மாயாங்க் சாரி' என்னும் பெயர் கொண்ட விடுதியில் அமைந்துள்ள உணவகத்தில் கிடைக்கும் என்றார்கள். இந்திய உணவு என்ற பெயரில் வட இந்திய 'சுட்ட சப்பாத்தி(Naan)' வகை உணவே இருப்பதாக உணவுப் பட்டியலையும் காட்டினார்கள், அனைவரையும் அறைக்குச் செல்லச் சொல்லிவிட்டு நான் உணவு வாங்கி வருவதாகச் சொன்னேன், விடுதி வளாகப் பேருந்தில் ஏற வட இந்தியக் கூட்டம் ஒன்றும் ஏறி கரே முரே என்று கத்திக் கொண்டு வந்தார்கள், ஐந்து நிமிடப் பயணத்தில் உணவகம் வந்தது, வட இந்தியர்களும் இறங்கிக் கொண்டனர்.

இரண்டு செட் 'நான்' மற்றும் அதற்கான கறிகளை வாங்கினேன், விலை ? அரசு வரி, சேவை வரி உள்பட 35 வெள்ளிகள், இதே உணவுப் பொருள் சிங்கையில் இதில் 60 விழுக்காடு தான் இருக்கும். 'நான்' தவிர்த்த கறி (பன்னீர் பட்டர், பருப்பு) மசலாக்கள் எல்லாம் ஏற்கனவே அடைத்து வைத்த (MTR Ready-made) பாக்கெட்டுகளை எடுத்து சூடாக்கித்தான் தருகிறார்கள் பிறகு ஏன் கொள்ளை விலை ? யோசிக்க, வியாபார சூத்திரம் என்பதே இன்றைய உலகில் வாய்ப்புகள் உள்ள இடத்தில் கூடுதலாக விற்று லாபம் பார்ப்பது தானே என்று நினைப்பதைத் தவிர்த்து வேறொன்றும் தோன்றவில்லை, அருகில் சுற்றுலா பரிசு பொருள்கள் விற்கும் கடையில் தண்ணீர் பாட்டில் 3 வெள்ளிகளுக்குத் தருவதாகச் சொன்னார்கள், பாட்டில் ஒன்றுக்கு முன்பு விடுதிக்கு அருகே இருக்கும் கடையில் அதே பாட்டில் தண்ணீர் 9 வெள்ளிகள். அதை  ஒப்பிட்டு இரண்டு பாட்டில் வாங்கினேன், திரும்பவும் பேருந்து எடுத்து விடுதிக்கு வந்து சாப்பிட்டுவிட்டு, பருப்பு மசாலா கெட்டுப் போய் இருந்தது மற்றதெல்லாம் பரவாயில்லை. நாளைக்கு என்னச் செய்வது ? எங்கே சுற்றுவது  ? என்று பயண வழிகாட்டி அட்டைகளைத் தேடினால் அந்த சுற்றுலா தளம் தவிர்த்து வெளியே சென்றுவர வாடகைக் கார் கட்டணங்கள் எல்லாம் தலையைச் சுற்றும் அளவுக்கு 80 வெள்ளி, 100 வெள்ளி என்றெல்லாம் போட்டிருந்தார்கள். சுற்றுலா என்று கிளம்பி வந்தது தனித் தீவில் சிக்கிக் கொண்டது போல் உணர்வு ஏற்பட்டது. இரண்டு காரணம் அங்கு பொருள்களின் விலை சிங்கையைக் காட்டிலும் மிகுதி, அந்த வளாகத்தைத் தவிர்த்து வேறு எதுவும் பார்க்கச் செல்ல இயலாது.

பேசாமல் வேறு எங்காவது சென்று வந்திருக்கலாமோ ? என்று நினைத்தவாறு...



தொலைகாட்சியை ஓடவிட்டு சிறிது நேரம் பார்த்துவிட்டு தூங்கிவிட்டோம்.

தொடரும்...


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்