பின்பற்றுபவர்கள்

31 டிசம்பர், 2007

இந்துக் கடவுள்கள் புத்தாண்டை புறக்கணிக்கிறதா ?

ஆங்கில நாள்காட்டி முறையே உலகம் தழுவிய அளவில் பயன்படுத்துப்படுகிறது, மாத ஊதியம் ஆங்கில மாத அடிப்படையிலேயே உலகம் முழுவது வழங்கப்படுகிறது. அனைத்துலக பயண தேதிகள் ஆங்கில முறையிலேயே இருக்கிறது. ஆங்கில நாள்காட்டித் தவிர்த்து உலகம் ஒரே இல்லம் என்பதற்கு வேறெந்த பொதுத்தன்மையும் கிடையாது. இதிலும் மதவாதிகள் மூக்கை நுழைத்து ஆங்கில முறை புத்தாண்டாக வரும் ஜனவரி ஒன்றையும், புத்தாண்டு பிறக்கும் இரவையும் புறக்கணிக்க வேண்டும் என்கிறார்கள். காரணம் ஆங்கில புத்தாண்டு வழக்கம் கிறித்துவ மதம் சார்ந்ததாம்.

உலகில் எந்த ஒரு மனிதனும் தனக்கு வயது இது என்பதை ஆங்கிலம் தவிர்த்து தமிழ் உட்பட வேறு எந்த மொழியின் மாதத்தை வைத்து, ஆண்டை வைத்து எந்த கணக்கையும் சொல்ல முடியாது, பிறந்த தேதியை குறிப்பிட அந்தந்த மொழியின் மாதத் தேதியை வேண்டுமானல் குறிப்பிட முடியும், ஆண்டைக் குறிப்பிட வேண்டுமானல் ஆங்கில முறை ஆண்டைத் தவிர்த்து குறிப்பிடவே முடியாது. உதாரணத்திற்கு ஒருவர் திருவள்ளுவர் ஆண்டு 2210ல் சித்திரை 13ல் பிறந்தேன் என்று சொன்னால், கண்டிபாக உங்கள் வயது என்ன என்று கேட்டால் தான் வயதை கண்டுபிடிக்க முடியும்.

வழக்கம் போல் வரட்டு *வேதாந்திகள்* நாள்காட்டி முறையில் இந்துத்துவ தீ(யவை)யை வளர்க்க முயற்சிக்கிறார்கள். அதற்கு சொல்லப்படும் காரணம் கோவில்களில் எந்த நேரத்திற்கு என்ன செய்ய வேண்டும் என்ற முறை இருக்கிறதாம். அதன் படி நள்ளிரவு தாண்டி கோவிலை திறக்கக் கூடாதாம். இந்து முறைப்படி சூரிய உதயத்தை வைத்தே நாள் தீர்மானிக்கப்படுகிறதாம், அந்த கணக்குபடி, சூரிய உதயம் காலை 6.05 மணிக்கு என்றால் அந்த தேதி காலை 6.05க்குத்தான் பிறக்கிறதாம். நல்ல வேளை நம் இந்தியாவில் டைம் சோன் எனப்படும் நேர பகுதி முறை இல்லை, இருந்தால் மேலும் பலகுழப்பங்கள் இருக்கும், பஞ்சாங்கங்கள், ஜோதிடம் எல்லாமே குழப்பமாக இருந்திருக்கும், ஒருவர் இராகுகாலம் பார்த்து, முடிந்துவிட்டது என்று புறப்பட்டால் ரோட்டுக்கு அந்த பக்கம் இராகுகாலம், இப்படியெல்லாம் கூட இருக்கும் டைம் சோன் -க்கு ஜோதிடத்தில் பரிகாரம் செய்வார்களோ ? :)

கிராம புறங்களில் இரவு 12 மணிக்கு மேல் மதுரை வீரன் வேட்டைக்கும், ஊர் காவலுக்கும் செல்லும் என்று சொல்லுவார்கள். இந்து கோவில்களில் நடை சாத்துவது, என்ற பெயரில் தாலாட்டுப் பாடி கோவில் கதவு சாத்தும் அன்றாட நிகழ்வு உண்டு. அதன் பிறகு காலையில் பள்ளி எழுச்சி பாடுவார்கள். வைகுண்ட ஏகாதேசி அன்று விடிய விடிய விழித்திருப்பார்கள் இதெல்லாம் ஒரு வழக்கம் என்று வைத்துக் கொள்ளலாம், ஆனால் அதையே காரணம் காட்டி புத்தாண்டுக்கு கோவிலுக்குச் சென்று வணங்கினால் அந்த ஆண்டுமுழுவதும் நல்லது நடக்கும் என்ற *நம்பிக்கையில்* வருபவர்களை சாடுகிறார்கள். சாமி பக்தர்களுக்காக ஒருநாள் கண்விழித்தால் குறைந்து போய்விடுமா ? சாமி தூங்கிக் கொண்டிருந்தால் இரவு நேரத்திலும் திருப்பதி, சபரிமலை ஏறுபவர்களுக்கு அந்தந்த சாமி ஆபத்து நேர்ந்தால் விழித்தெழுந்து கருணை காட்டாதா ? சாமி தூங்குகிறது என்பதே ஒரு அபத்தம்.

நமெல்லாம் கோவணம், வேட்டி, புடவை எல்லாவற்றிலிருந்தும் மாறிவிட்டோம், கோவில் மண்டபங்களில் மாடவிளக்குக்கு பதில் மின்விளக்குகள் எரிகிறது. சில இடங்களில் குளிசாதன வசதியும் வந்துவிட்டது, ஒலிப்பெருக்கி, மணியில் கூட எலெக்ட்ரானிக் வந்துவிட்டது. நமக்கெல்லாம் வாகனம் மாறி கான்டசா, எமகா, ஏரோப்ளேன் என்று உலகை சுற்றுகிறோம். ஆனால் சாமிகள் மட்டும் மிக பழைய ஸ்டைல் காஸ்ட்யூம்சில், விலங்குகளின் வாகனத்தில் தான் இன்னும் இருக்கிறது.

********

ஒருநாள் இரவு 12 மணி தாண்டி கோவிலை திறந்தால் சாமிகள் கோவில்களை விட்டு ஓடிவிடுமா ? கோவில்கள் புத்தாண்டை புறக்கணிப்பது போல் தெரியவில்லை. இந்துத்துவாக்கள் பக்தர்களின் நம்பிக்கையில் மண்ணைப் போடுவதுடன், குருக்கள்களின் வருமானத்தில் :) பாராங்கல்லையும் போடுகின்றனர். இந்தியாவில் 12 மணிக்கு தூங்கிய அதே சாமி அதே நேரத்தில் அமெரிக்காவிலோ, லண்டனிலோ கொட்ட கொட்ட கண் விழித்திருக்காதா ? :)

மதங்களின் வளர்ச்சி என்பது அது எந்த அளவு பழமை வாதத்தில் இருந்து மீண்டு தன்னைப் புதுப்பித்துக் கொண்டது என்பதில் தான் இருக்கிறது. எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அதில் உள்ள அடிப்படை வாதிகளுக்கு இதெல்லாம் புரியவே புரியாது.

*********

பதிவர்கள், திரட்டிகள், பதிவை படிப்பவர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துக்கள்.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

30 டிசம்பர், 2007

2007 நான்கு வரி மட்டும்.

பெனாசிர் பூட்டோவை வால்பகுதியின் பசியாக விழுங்கிவிட்டு இந்த ஆண்டின் 'தீவிர' தன்மை அடங்கி இருக்கிறது. உலகம் முழுதும் வன்முறைகள், லண்டனில் முறியடிகக்ப்பட்ட குண்டுவெடிப்பு சதி, தமிழ்ச்செல்வன் படுகொலை, மலேசிய தமிழர்களின் கிளர்ச்சி என அரசியல் நிகழ்வுகள் அரங்கேறி இருக்கின்றன.

பாகிஸ்தானில் ஜனநாயகம் மலருமா ? பலரது கேள்விக்கும், பெரிய அண்ணனின் தயவால் (?) சென்ற ஆண்டின் ஈராக்கில் ஜனநாயகம், அதன் அவசர நிகழ்வாக சாதமின் தூக்குதண்டனை, இந்த ஆண்டு பெரியயாண்ணனின் பாகிஸ்தான் மீதுள்ள ஜெனநாயக பரிவின் காரணாமாக, அவர்தம் அன்பு வேண்டுகளை தட்ட முடியாமல் பெனாசிர் பாகிஸ்தான் சென்றதாக அரசியல் பார்வையாளர்கள் கருதுகிறார்கள், பெரியண்ணனின் முடிவை தீவிரவாதிகள் ஏற்றுக் கொள்வார்களா ?

பெனாசீர் என்ற இஸ்லாமிய பெண் தலைவர்களின் படுகொலையுடன் இந்த ஆண்டு முடிவுக்கு வந்திருக்கிறது. வரும் ஆண்டுகளில் பெரியண்ணனின் கருணை பார்வை வேறு எந்த நாட்டிலும் விழுந்துவிடக் கூடாது, குறிப்பாக இஸ்லாமிய நாடுகளில் விழுந்துவிடக் கூடாது என்று நினைக்க வேண்டி இருக்கிறது.

இந்தியாவில் வெ(ற்)றியின்கரமாக தூண்டிவிடப்பட்ட 'இந்து' உணர்வு காவிக்கொடியை நாட்டி இருக்கிறது.

27 டிசம்பர், 2007

போலி சாமியார்களை ஒழிக்க எளிய வழிகள் !

குடிசைத் தொழில்களை விட சாமியார் தொழில்கள் தமிழகத்தில் மலிந்துவிட்டது, ஒருத்தன் சொல்கிறான், 'இரண்டு பொண்டாட்டி கட்டினேன், ஒன்னுஞ் சரியில்லை சாமியாராக போய்டேன்' சாமியாராக போவதற்கு இதெல்லாம் காரணமாம். இவன் உடலில் பெருமாள் சாமி வந்து இறங்கி 'உலகை காப்பது இனி உன்பொறுப்பு' என்று சொல்லி உடலில் தங்கிவிட்டதாம்.

சாமியார்களின் வசதி வாழ்க்கையைப் பார்த்தே பலருக்கு சாமியார் ஆகும் ஆசை வந்திருக்க வேண்டும், வியர்வை சிந்தி உழைக்காமலேயே வேளாவேளைக்கு அறுசுவை உணவு, கால் கை பிடிச்சு விட பக்தகைகள், அரசர்களைப் போலவே 'அந்த' புரங்கள், ஐ மீன் ஓய்வெடுக்கும் தனி பங்களாக்கள் என அனைத்தும் உழைக்காமலேயே ஈஸ்வரனோ, கிருஷ்ணனோ எவன் பெயரையோ சொல்லி, அது தான் தான் என்று சொல்லி அவதாரம் ஆகிவிடுகின்றனர். உலக அளவில் ஹைடெக் விபச்சார கூடம் எது என்றால் அது சாமியார்களின் ஆசிரமங்கள் தான்.

பிரேமனந்தா மாதிரி நீதித்துறையால் கவனிக்கப்பட்ட ஆட்கள் மிகக் குறைவு, பிரேமனந்தா கூட போட்டியாக இருப்பதால் ஒரு சில சாமியார்களே அவரை உள்ளே வைப்பதற்கு எல்லா பேருதவிகளும் செய்திருப்பார்கள் என்று நினைக்கத் தோன்றுகிறது. எனென்றால் பணபலம் படைத்த சாமியார்கள் யாரும் அவ்வளவு சுலபமாக பிடிபட்டு விடமாட்டார்கள்.

துறவறம் என்ற வாழ்க்கை முறை, ஒரு காலத்தில் தமிழரிடையேவும் உண்டு. துறவறம் என்றால் வயதான காலத்தில் மனைவியுடன் சேர்ந்தே புன்னியதலங்களுக்கு சென்றுவிடுவார்கள் சிலர் சென்று வருவார்கள். குடும்ப பொறுப்பை வாரிசுகளிடம் விட்டுவிடுவார்கள். ஆனால் இன்று பெண்ணாசை, மண்ணாசை அனைத்தையும் வைத்திருக்கிறான் அவனும் துறவறமாம் சாமியாராம். இல்லறவாசிகளே தேவலை, ஒரு மனைவி ஒரு சிறிய குடும்பத்துடன் திருப்தி அடைந்துவிடுகிறார்கள். எல்லா சாமியார்களும் அப்படியா ? ன்னு கேட்காதீர்கள் புல்லுறுவிகள் தான் அதிகம், சாமியார் என்றாலே கேவலமாக நினைக்கும் அளவுக்கு ஆகிவிட்டது.


//போலி சாமியார்கள்-உளவுப் பிரிவு ரகசிய சர்வே
புதன்கிழமை, டிசம்பர் 26, 2007

சென்னை: தமிழகத்தில் போலி சாமியார்களால் பெண்கள் ஏமாற்றப்பட்டு வருவதும் கற்பழிப்புகள் நடந்து வருவதையும் தொடர்ந்து போலிகளை அடையாளம் காணுமாறு போலீசாருக்கு காவல்துறை தலைமையகம் உத்தரவிட்டுள்ளது.

இதையடுத்து மாநிலம் முழுவதும் போலிச் சாமியார்கள் குறித்த கணக்கெடுப்பு ரகசியமாக நடந்து வருகிறது.

இந்தப் பணியில் உளவு பிரிவு போலீசார் இறங்கியுள்ளனர். போலி சாமியார்கள் எனக் கருதப்படுவோர் குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது.

இவர்கள் மீது ஏற்கனவே காவல் நிலையங்களில் புகார்கள் ஏதும் உள்ளனவா என்றும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

உளவுப் பிரிவினர் தரும் தகவல்களின் அடிப்படையில் போலிகள் மீது அந்தந்தப் பகுதி காவல் நிலையங்கள் நடவடிக்கை எடுக்கும் எனத் தெரிகிறது.//

இது செய்தி.

போலி சாமியார் யார் என்று கண்டு பிடிக்க இவ்வளவு கஷ்டப்படனுமா ?

சில நடைமுறைகளை அரசாங்கம் ஏற்படுத்தி அதை அரசாங்க விதியாக வைத்திருந்தால் ஒரு பயலும் சாமியார் ஆக மாட்டான்

* சாமியார்கள் எல்லோரும் ஆசிரமம் நடத்த முறைப்படி இந்திய அரசிடம் அனுமதி வாங்க வேண்டும்
* சாமியார்கள் அனைவரின் வருமானத்தை முறைப்படி அரசாங்கத்துக்கு செலுத்தி, அதன் அடிப்படையில் அரசு தரும் மடங்களில் தான் சாமியார்கள் தங்கி இருக்க வேண்டும்
* சாமியார்கள் 'திக்' விஜயம், வெளியூருக்கு சென்றால் அங்கு இருக்கும் காவல் நிலையத்திலும், செல்லும் ஊரில் உள்ள காவல் நிலையத்திலும் இரண்டு நாளைக்கு முன்பே தகவல் கொடுக்க வேண்டும்.
* சாமியார்கள் எவரும் குடும்ப உறுப்பினர்களை நேரடியாகவோ மறைமுகமாகவோ தொடர்பு வைத்திருக்கக் கூடாது
* எந்த சாமியாரும் பெண்களை மாலை ஆறுமணிக்கு மேல் சந்திக்கக் கூடாது, பகலில்
* பெண் பக்தைகள் சாமியாரை சந்திக்க விரும்பினால் போலிஸ் லாக்கப்பினுள், அரசு பாதுகாப்பில் தான் சந்திக்க வேண்டும்.
* கஞ்சா பொட்டலங்கள் சாமியார் வசிக்கும் ஏரியாவில் விற்பது தெரிந்தால், அந்த சாமியார்கள் உடனடியாக போலிசுக்கு தகவல் கொடுக்க வேண்டும்
* ஒவ்வொரு சாமியாரும் மூன்று மாதத்திற்கு ஒருமுறை ஹெஐவி பாசிடிவ் சோதனை மேற்கொள்ள வேண்டும்
*
இதையெல்லாம் விட முக்கியமாக சாமியார்களாக மாற விரும்புவர்கள் அனைவரும் 'ஆண்மை' நீக்கம் செய்து கொள்ள வேண்டும்.

இந்த கண்டிசனுக்கெல்லாம் ஒப்புக் கொண்டால் சாமியார், இல்லை என்றால் மாமியார் வீடு என்று அரசாங்கம் அறிவிக்கலாம், அதை விட்டு போலி சாமியார் யார் ? நல்ல சாமியார் யாரு எப்படி கண்டுபிடிப்பது, எல்லா சாமியார்களுமே பழனி சித்தனாதன் விபூதியைத்தான் பூசி இருக்கானுங்க. மாட்டுற வரைக்கும் நல்ல சாமியார்தான் :)

26 டிசம்பர், 2007

சர்வேசனால் சோதனைமேல் சோதனை :)

உங்க சிறு கதையை நீங்களே "இந்த கதைய பரிசுக்காக அனுப்பினது ஏன்னு ஒரு தனி பதிவு போடுங்களேன் :)" என்று சிரிப்பானோட சர்வேசன் பின்னூட்டத்தில் சொன்னாரு,

ஏன் அனுப்புவாங்களாம், ஐயா சாமி போட்டின்னு சொன்னிங்க எழுதினோம், அனுப்பினோம் வேற என்ன காரணம் இருக்கும் ? கதையை படிச்ச தண்டனைப் போதாத்துன்னு காரணத்தையும் நீங்களெல்லாம் படிக்கனுமாம். உங்க மேலெல்லாம் அவருக்கு எம்புட்டு கோவம் இருக்கனும். அண்ணாச்சி ஆசைப்படுறார், எழுதாங்காட்டி போட்டியில் இருந்து நீக்கிடுவார் இல்லாங்காட்டி ஒரு வேளை சிறந்த கதைன்னு தேர்ந்தெடுத்திருந்தால் கமுக்கமாக அமுக்கிடுவாறோன்னு பயம் வந்துட்டு. :)

*********
காதல் காதல் காதல் - இதைத்தவிர வாழ்க்கையில் முக்கியமாக ஒண்ணுமே இல்லிங்க. காதலிக்கும் திறமையோ அதற்கான வாய்ப்போ கிடைக்காத என்னிய மாதிரி ஆளுங்க காதல் என்றால் மிகப்பெரிய உணர்வு, கடவுள் வரம் அது இதுன்னு ஏகப்பட்டதை கற்பனை பண்ணி வச்சிருப்போம். காதலித்து கலியாணம் பண்ணிக்கிட்டவங்காளைக் காட்டிலும் காதலுக்கு அல்லது காதல் மீது பெரிய மரியாதை வைத்திருப்பவர்கள் என்னிய மாதிரி பெத்தவங்களா பாத்து கல்யாணம் கட்டிவைக்கப்பட்ட ஆளுங்கதான். காதல் கதை எழுதுகிறவர் எவருமே காதலித்திருக்க மாட்டார்கள். :)

சரி கதைக்கு வருவோம்...

காதல் குற்றமா ? இல்லவே இல்லைங்க, கல்யாணம் ஆகாத ஆளுங்க கல்யாணம் ஆகாத எதிர்பாலினரை காதலிப்பது தப்பே இல்லிங்க. திருமணம் ஆகாத ஆண்கள், மறு திருமணத்துக்கு சம்மதம் சொல்லக் கூடிய கைம்பெண்களைக் கூட காதலித்து திருமணம் செய்யலாங்க, பலரது ஆசிர்வாதம் கிட்டுங்கோ.

காதல்னா எதோ முகம் தெரியாதவர்களிடம் 100 / 1000 மைல்களுக்கு அப்பால் இருக்கிறவர்களிடம் வராதுங்க, தெரிஞ்சவங்க, அறிஞ்சவங்க, அடுத்த தெரு, பக்கத்து தெரு, பஸ்ஸில் பயணம் செய்யும் ஜன்னல் ஓர நிலா இது மாதிரி தெரிஞ்ச வட்டாரத்தில் தானுங்க காதல் வரும். அதுக்காக கார் டிரைவர் முதலாளி பெண்ணை காதலிக்கலாமா ? அவளை சந்தோசமாக வைத்து காப்பாற்ற முடியும் என்ற நம்பிக்கை இருந்தால் காதலிக்கலாமுங்க இல்லாட்டி அந்த பொண்ணு வாழ்நாள் முழுவதும் மூக்கு சிந்தியே சாகடிச்சிடும். அவ்வை சண்முகி படம் பார்த்திங்கல்ல... காதலிக்கும் சூழல் வேறு..அது வெறும் கனவு, உணர்வு, ஆனா எதார்த்த வாழ்க்கையில் அடுத்த வேளை சாப்பாட்டுக்கு சங்கடம் இல்லாமல் இருக்கனும்...அப்படி இருந்தால் காதல் அந்தஸ்தெல்லாம் பார்க்காது. ரொம்ப அறுக்கிறனோ ?

கதைபடி இருநண்பர்கள் ஒரு நண்பர் மற்றவரின் தங்கையை காதலிக்கிறார். இருவருமே அடுத்தவரின் தங்கையை காதலிக்கிறார்கள் என்று முடிவில் 'நச்' வைத்து முடிக்கப்பட்டு இருக்கிறது. நண்பனின் தங்கையை காதலிப்பதால் இரு அட்வாண்டேஜ் ஒண்ணு நண்பன் வாழ்நாள் முழுவதும் கூடவே இருக்கும் உறவு காரணாக மாறிவிடுவான், இரண்டாவது நாமே தேர்ந்தெடுத்துக் கொண்ட காதலின்பம், வேறென்ன வேண்டும்.
சும்மா மச்சி, மாப்ளன்னு கூப்பிட்டுக் கொள்வதைவிட இது ரியாலாக மாறுச்சுன்னா சந்தோசம் தானே. தப்பாக சொன்னேன்னு நினைச்சா விஜய் - சூர்யா நடித்த ப்ரண்ட்ஸ் படம் பாருங்க, அப்பறம் கதையிலேயே சொல்லி இருக்கிறேன் 'கண் எதிரி தோன்றினால்' அதே போன்று கதைதான்.

நண்பனின் தங்கையை காதலிப்பது சரிதான், அதுக்கு அவ 'சிம்ரன்' போல இருக்கனும் என்று சொன்னால் அடிதான். காதல் முகத்தை பார்த்து வரக்கூடாது, மனசை பார்த்து வரனும், கண்கள் சந்திந்தித்து காதல் வெளிப்பட்டாலும் அது இதயத்தை மட்டுமே பார்த்ததாக இருக்கனும். தத்துவம் ஓகேவா ?

கல்யாணம் ஆகாத சின்னப்பசங்களே, உங்க வீட்டில் கல்யாணம் ஆகும் வயதில் தங்கை இருந்தால் தங்கை உள்ள நண்பர்கள் இருந்தால் மட்டுமே நட்பு வச்சிகுங்க.

இடுகையின் தலைப்பு ?? எனக்கு அல்ல உங்களுக்குத்தான் :)))

இன்று சுனாமி நினைவு நாள்

மறக்க வேண்டிய நிகழ்வாக இருக்க வேண்டியது, எழுதவேண்டாம் என்று தான் நினைத்தேன், நேற்று சன் செய்தியில் சுனாமி அழிவு காட்சிகள் சிலவற்றைக் காட்டினார்கள், தமிழ் மணம் பரணில் சில இடுகைகள் சுனாமி பற்றியதாக வலப்பக்கம் இருக்கிறது.

சுனாமியில் அதிகம் பாதிக்கப்பட்ட இந்திய நகரம் நாகப்பட்டினம் சொந்த ஊர் என்பதால் சுனாமியின் தாக்கம் இன்றும் கூட இதயத்தில் இருக்கிறது. சென்றவாரம் ஒரு நண்பரை சந்தித்தபோது அவர்,

"கிறிஸ்துமஸ் பொருட்டு வேளாங்கன்னிக்கு கைக்குழந்தையுடன் சென்றோம், காலை எட்டுமணி வாக்கில் வேளாங்கன்னி கடற்கரையில் நிகழ்ந்த கோர நிகழ்வும், கைக்குழந்தையுடன் அலறி அடித்து தப்பி ஓடிவந்த அந்த காட்சியை நினைத்தால் இன்னும் கூட படபடக்கிறது" என்று சொன்னார்,

கிரேன் எந்திரம் மூலம் பெரிய குழியை வெட்டி அடையாளம் காணமுடியாமல் குவியலாக பிணங்களை புதைத்தக் அவலம் சுனாமி சோகங்களில் மிகப் பெரியது. கடற்கரை அருகில் குடி இருந்தவர்கள், நடை பயிற்சிக்கு சென்றவர்கள், கடற்கரையில் கிரிக்கெட் ஆடிய மாணவர்கள் என குடும்பத்துக்கு ஒருவர் என்று அலைகளால் அடித்து கொல்லப்பட்டவர்கள் கதையை நாகை குடும்பங்களின் சோகக் கதையாக இருந்தது.

இந்திய மைந்தர் அனைவரும் கைகோர்த்து உதவி சுனாமியில் இழந்தோர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தந்தது நெகிழ்வான விசயம். தொண்டுள்ளங்கள், நல்லுள்ளங்கள் இருப்பதை இது போன்ற சோக நிகழ்வுகளின் பிறகே புரிந்து கொள்ள முடியும் என்ற ஒரே ஆறுதல் மட்டுமே கிடைத்து.

மதம், சாதி, ஏழை, பணக்காரன் எவரையும் சமமாக பார்பது இறைவனுக்கு மட்டுமல்ல, இயற்கைச் சீற்றங்களும் பொருந்தும். இவற்றையெல்லாம் புரிந்து கொண்டு நிதானித்து செயல்படும் முன்பே நமது காலமும் முடிந்து போகிறது.

சுனாமியில் இறந்த அனைவருக்கும் அஞ்சலிகள், அவர்கள் உறவினர்களுக்கு ஆறுதல்கள் கூறிக் கொள்கிறேன்.

சுழலும் நினைவு(அலை)கள் !
(முதலாண்டு நினைவஞ்சலிக்கு எழுதியது)

கடந்த ஆண்டின் கறுப்பு ஞாயிற்றில்,
காலணைக்கும் நீலக் கடல் அலை,
காலனை அணைத்து அழைத்து வந்து,
கயமையுடன் கழுத்துகளை அமிழ்த்தி நெறித்தது !

குற்ற நிமிடத்தின் பெரிய அவலமாக,
பெற்றோரை இழந்த பச்சிளம் சிறுவர்கள்,
பெற்ற பிள்ளையை இழந்த பெற்றோர்கள்,
உற்ற துணையை இழந்த கனவன்,

பற்றிய மஞ்சள் கயிறையிழந்த மனைவி,
சுற்றம் உறவுகளை தொலைத்த சொந்தங்கள்,
வெற்றாய் உணவற்று, உறங்கவும் இடமில்லாமல்
குற்றவாளிபோல் ஊரைவிட்டு ஓடிய மக்கள் !

உலகையே திரும்பி பார்க்க வைத்த
நிலையற்ற சோக சின்னங்களாக மக்கள்,
அலைகடலை கலக்கிய மீன்பிடிப் படகுகள்
விலைபோகமல் உடைத்த விறகாக இன்று !

விழிக்க மறுத்த கண்களை நினைத்து
அழுகையுடன் தூங்க மறுத்த கண்களுடன்,
ஆழியின் அடிவயிற்றை வெறித்து, வெறித்து,
நாழிகள் கடந்து ஆண்டு ஒன்றாகிவிட்டது !

கலங்கரை விளக்காய் தேசங்களின் நேசக்கரங்கள்
கலங்கிய இதயத்தின் உதிரம் துடைக்க,
காலன் அழித்ததை, காலம் மறக்கவைத்து,
துலங்கிய புதுவாழ்வில் புத்தொளி பிறந்தது !

வயிற்றுப்பாட்டுக்கு மீண்டும் கடலில் மீனவர்கள்,
பெயர்ந்து சிதைந்த குடில்களுக்கு மாற்றாக,
உயர்ந்த பகுதியில் மின்விளக்கு வீடுகள்,
பயம்தொழைந்து பாதுகாப்பு இல்லங்களில் சிறுவர்கள் !

காயங்கள் ஆறியது, கண்ணுறக்கமும் வந்தது,
மாயங்கள் செய்த தழும்புகளாக இன்னும்
தாயெங்கள் கடற்கரையின் இறைச்சலில், அவள்
சேய்களின் மரணஓலம் கேட்டுக்கொண்டே இருக்கிறது !

25 டிசம்பர், 2007

விஜயகாந்தின் விளம்பர 'அரசியல்'

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 8.5% விழுக்காடு ( மொத்த வாக்குகளில் அல்ல, பதிவான வாக்குகளில்) பெற்றதால் தேமுதிக மூன்றாவது பெரிய கட்சி என்ற செய்தியை அந்த கட்சியே வலிய பரப்பியது, அதன் தலைவர் விஜயகாந்தைத் தவிர வேறு யாரும் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது வேறுவிசயம். 30 இடங்களில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி இட்ட காங்கிரசும், 234 தொகுதிகளிலும் அறிமுகமே இல்லாதா வேட்பாளர்களை நிறுத்திய தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியா ? என்றெல்லாம் கேட்காதீர்கள். பெற்ற ஓட்டு எண்ணிக்கைத்தான் கணக்கு :) இதை விட கூத்து மதுரை இடைத்தேர்தலில் தேமுதிக 2 ஆவது இடத்திற்கு வந்ததால் கட்சி வளர்ச்சி அடைந்துவிட்டதாம், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிகவை மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் அள்ளிவிடும் என்பதை தற்போது ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக புரியாதவர்களுக்குக் கூட வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

விஜயகாந்தின் கல்யாணம் மண்டபம் முறையற்று கட்டி இருந்து மத்திய அரசால் இடிக்கப்பட்டால் அதையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டு 'தேமுதிக வளர்வது பிடிக்காமல் அழிக்க நினைக்கிறார் கருணாநிதி' என்ற குண்டை தூக்கிப் போட்டு வந்தார். டிஆர் பாலு இதையெல்லாம் புறம்தள்ளி இடித்துத் தள்ளிவிட்டார். விஜயகாந்த் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் பற்றி வாய்திறக்க மாட்டார். காரணம் உங்களுக்கே தெரியும். :)

'இராமர் எந்த கல்லூரியில் படித்து பாலம் கட்டினார் ? என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார் என்பதற்காக 'திருவள்ளுவர் எந்த காலேஜில் படித்தார் ?' என்ற கேள்வி எழுப்பி தனது தமிள்(?) பற்றை மெய்பித்தார் விஜயகாந்த். இது வீம்பிற்காக மீடியாவில் தம்பெயரும் கட்சியின் பெயரும் வரவேண்டுமென்பதற்கான வரட்டு அரசியல். இப்பொழுதெல்லாம் திமுகவையோ, கருணாநிதியையோ குறைச் சொல்லி நாளொரு அறிக்கை விடாவிட்டால் அடுத்த தேர்தலுக்குள் தன்னையோ, தன் கட்சியையோ பொதுமக்கள் மறந்துவிடுவார் என்று நினைக்கிறார் போல, காரணம்,

நேற்று மதுரையில் எம்ஜிஆர் நினைவு நாளுக்கு மாலை போடுவது யார் என்ற போட்டா போட்டியில் அதிமுகவும், தேமுதிக தொண்டர்கள் அடித்துக் கொண்டு கலவரம் வரை சென்று கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர், அதிமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றன. கருப்பு எம்ஜிஆர் என்ற பெயரில் இவரது கட்சி தொண்டர்கள் இவரை அழைப்பதைத் தவிர்த்து எம்ஜிஆருக்கும் தேமுதிக / விஜயகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை தெரிந்த அதிமுகவினர், மேலும் மதுரையில் தேமுதிகவினால் ஓட்டுக்கள் பாதிக்கப்பட்டதாக நினைக்கும் அதிமுகவினர், தேமுதிகவினர் எம்ஜிஆருக்கு மாலை அணிவிப்பதை எப்படி பொறுத்துக் கொள்வார்கள் ?

இதில் ஈடுபட்டு சிறை சென்ற தொண்டர்களைப் பற்றி சிறிதும் கவலையின்றி பழியைத் தூக்கி திமுகமீது போட்டு 'தேமுதிகவின் வளர்ச்சி பொறுக்க முடியாத திமுகவின் தூண்டுதலால் அதிமுக - தேமுதிக தொண்டர்கள் மோதிக் கொள்கிறார்கள்' என்று மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கிறார். கருணாநிதி ஆட்சியில் இவர் வளர்ந்து, வளர்ச்சியைப் பற்றி பேச முடிகிறது, இதுவே ஜெ ஆட்சியாக இருந்தால் விஜயகாந்த் மீது கஞ்சா வழக்கே பாய்திருக்கும்.

திமுகவின் ஓட்டு வங்கி வைகோ பிரிந்து சென்ற போது எவ்வளவு இருந்ததோ அதே அளவில் தான் இருக்கிறது, அதிமுகவின் ஓட்டு வங்கி எம்ஜிஆர் ரசிகர்களால் உருவானது, சினிமா மோகம் உள்ள வாக்காளர், திரை கதாநாயகனை பார்த்து வாக்களிக்கும் வாக்களர்கள் அதிமுகவில் தான் இருக்கிறார்களேயன்றி திமுகவில் இல்லை, அப்படி இருந்த்திருந்தால் திமுகவினால் நிறுத்தப்பட்ட நடிகர்கள் எவரேனும் தேர்தலில் வென்றிருக்க வேண்டும். நெப்போலியன், டிராஜேந்தர் தவிர்த்து திமுக சார்பில் நடிகர்கள் வென்றதே இல்லை. திமுகவின் வெற்றி அல்லது வளர்ச்சி சினிமா ரசிகர்களால் தீர்மாணிக்கப்படுபவை அல்ல. பின்பு ஏன் திமுக அதிமுகவின் சினிமா ரசிகர்களின் வாக்கு தேமுதிகவிற்கு சொல்வதைத் தடுக்கப் போகிறது ? திமுகவைப் பொறுத்து தேமுதிக அதிமுகவின் ஓட்டுகளைப் பிரிக்கும் கட்சி. வளர்ச்சியை தடை செய்வதைவிட வளர்த்துவிடவே கருணாநிதியும் விரும்புவார். இது விஜயகாந்துக்கு தெரியாதா ? தெரியும், மேலும் இதுதெரிந்த,

ஜெவின் எதிர்ப்பை, அதிமுகவின் எதிர்ப்பை சமாளிக்கவே கருணாநிதிமீது அள்ளித்தெளிப்பதும், அட்டாக் செய்வதுமாக, தன் இருப்பைக் காட்டிக் கொள்ளவும் விளம்பர அரசியல் செய்வதில் தேமுதிகவின் / விஜயகாந்தின் கொடி பறக்கிறது.

24 டிசம்பர், 2007

பின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.

ஏழுஸ்வரங்களுக்குள் இசையெல்லாம் அடக்கம் என்றாலும் தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டது திரை இசை. தியாகராஜ பாகவதர் காலத்து பாடல்களைக் கேட்டால் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...சுப்ரமண்ய சுவாமி எனை மறந்தேன்..." சாஸ்திரிய சங்கீத அடைப்படையில் மூன்று நிமிடம் சொன்னதையே சொல்லி சொல்லி பத்து நிமிடத்திற்கு பாடல்களை இழுப்பார்கள். ஓரளவு சங்கீத ஞானம் அல்லது இசை மீது ஆசை உள்ளவர்கள் பாட முயற்சிப்பார்கள். 'ஆரியமாலா ஆரியமாலா..." ஒரே வரியே திரும்ப திரும்ப ஒரு பாடலில் வரும். இதுபோன்று சங்கீதத்துடன் தொடர்புடைய பாடல்கள் தான் 1950க்கு முன்பு வந்த படங்களின் திரை இசைப்பாடல், பொதுவாழ்க்கைக்கும் பாடலுக்கும் சற்றும் பொறுத்தமில்லாத பாடல்களாக இருக்கும்.

அதன் பிறகு திரை இசைத்திலகம் கேவி மகாதேவன் மற்றும் பலர் திரை இசையை கேட்டவர்களெல்லாம் பாடமுடியும் என்று வகையில் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் ஆகியோர்களின் வரிகளில் எழுதப்பட்ட பாடல்கள் திரை இசை என்ற புதிய வடிவத்தில் கொண்டு சொல்ல பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றன. திரை இசைப்பாடல்கல் கிராமங்களைத் தொட்டது 1950 காலகட்டங்களில் தான்.

அதன் பிறகு வந்த விஸ்வநாதன் இராம மூர்த்தி போன்றோர் அதற்கு மெருகூட்டினர், இளையராஜா திரை இசையை சிம்மாசனத்தில் உட்காரவைத்தார், ஏஆர்ரகுமான் உலக அளவில் தமிழ் திரை இசைக்கு பெருமை சேர்த்தார். இது சுறுக்கமான எனக்குத் தெரிந்த வரலாறு

*******

அண்்மையில் எதோ ஒரு விழாவில் பாடகர் எஸ்பிபாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு ஸ்டேண்ட் மெண்ட் விடுக்க, திரையுலக இசை அமைப்பாளர்களிடையே சலசலப்பை கிளப்பி இருக்கிறது, 'இன்று இருக்கும் இசை அமைப்பாளர்களின் இசை எம் எஸ் விஸ்வநாதன் துப்பிய எச்சிலில் இருந்து பொறுக்கியவை' என்று சொல்லி இருக்கிறார். அவரது குருபக்தி மெச்சத்தக்கது, காரணம் ஒரு திருமணவிழாவுக்கு செல்ல வேண்டி இருப்பதால் தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் பாடலை பாடிக் கொடுக்க முடியாது என்று டிஎம்எஸ் சொன்னதை கவுரவ குறைவாக நினைத்த எம்ஜிஆர் டிஎம்எஸக்கு பாடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து எம்எஸவிஸ்வநாதனின் ரெகமெண்டேசனின் பேரில் எஸ்பிபி பாடகர் ஆனார்.

அவர் பாடிய முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா'. எஸ்பிபி திறமை குறைந்தவர் அல்ல என்பதை அந்த ஒரு பாடலே நிரூபித்ததும், அதன் பிறகு பின்னனிப்பாடகர் வரிசையில் தனக்கென தனியிடம் பிடித்தார். எஸ்பிபியை அறிமுகம் படித்தியவர் என்ற முறையில் எம்எஸ்விஸ்வநாதனுடன் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் எஸ்பிபி அவர் காலில் விழுந்து பொதுமக்கள் ரசிகர்களுக்கு முன்னிலையில் எம்எஸ்விக்கு குருவணக்கம் செய்வார். நானும் ஒரு நிகழ்ச்சியில் இதை பார்த்திருக்கிறேன். அதே போன்று பாடகர் மனோ இளையராஜாவின் காலில் விழுவார். குரு என்ற அடிப்படையில் எஸ்பிபி குருவணக்கம் செலுத்துவது அவரது நன்றி உணர்வு. அதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் தற்போதைய இசை அமைப்பாளர்கள் அனைவரும் எம்எஸவியின் எச்சிலை இசையாக்குகிறார்கள், காப்பி அடிக்கிறார்கள் என்ற தொனியில் சொல்லி இருப்பது, ஒரு மாபெரும் பாடகர் சிகரத்தின் பொருத்தமான செயல் இல்லை.

எம்எஸ்வி இசையில் அறிமுகமாகி இருந்தாலும் இளையராஜாவின் பாடல்கள் தான் அவருக்கு பாடும் நிலா என்ற உருவகத்தைத் தந்தது. அவர் தனியாக பாடி புகழ்பெற்ற பாடல்களில் 80 விழுக்காட்டுக்கும் மேல் இளையராஜாவின் இசையில் வந்தவை. இளையராஜா கிராமத்தில் இருந்துவந்தவர், கிராம மண்ணின் மணத்தை முதன் முதலில் இசையில் கலந்தவர், அவருக்கென ஒரு பாணியை உண்டாக்கிக் கொண்டவர் இளையராஜா இசையில் தொடாத விசயமே இல்லை என்பது எஸ்பிபிக்கு தெரியாமல் இருந்திருக்குமா ?

திரை இசை என்பது எம்எஸ்விக்கு முன்பே வடிவம் பெற்றுவிட்டது, அவர் தனக்குறிய வழியில் இசை அமைத்தார். இளையராஜா அவருக்கென தனிப்பாதையில் சென்றார். அவர் மகன் யுவன் கூட தனிப்பாதையில் தான் செல்கிறார். ஏஆர்ரகுமான் மற்றும் இன்றைய இசை அமைப்பாளர்கள் பலர் அவர்களுக்கென தனிப்பாதையை வைத்திருக்கிறார்கள். எவரையும் பின்பற்றி இருந்தால் எந்த இசை அமைப்பாளரும் தனித்திறமை என்று சொல்லிக் கொள்ளவே முடியாது புறக்கணிக்கப்பட்டு இருப்பர். இன்றைய இசை அமைப்பாளர்கள் எம்எஸவி போல் புகழ்பெற வேண்டும் என முன்னோடியாக கருதுவார்களேயன்றி அப்படியே காப்பி அடிப்பதெல்லாம் இன்றைய இசை வளர்ச்சியில் முற்றிலும் எடுபடாது.

அவரவர் பாணியில் இசை அமைப்பது கூட அலுப்பு தட்டுவதாக இருக்கிறது என்பதால் தான் வளர்ந்த இசை அமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர்ரகுமான் போன்றோர்கள் பல புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீதெல்லாம் ஒட்டுமொத்தமாக புழுதிவாறி தூற்றுவதை எஸ்பிபி போன்ற மாபெரும் பாடகர் செய்வது சரியா ?

அவரவர் காலத்து இசை அவரவர்க்கு உயர்ந்ததாக தெரியும், வழக்கமாக பெரிசுகள் பேசும் 'நாங்கள் அந்த காலத்தில...எங்க காலத்தில் எல்லாம்...' வகையில் ஒப்பீடு அளவில் எம்எஸ்வி சிறந்த இசையமைப்பாளராக எஸ்பிபிக்கு தெரிகிறது போல. புதிய இசைக்கருவிகள், மேற்கத்திய இசை என்று தமிழ் திரை இசையில் மாற்றம் நிகழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது தெரிந்தும், தானே அறியாத 'ஜெனரேசன் கேப்' தனக்கு இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்பிபி. ஒருவேளை ரீமிக்ஸ் பாடல்களைக் கேட்டு எஸ்பிபி 'எச்சில்' என்கிறாரோ அவருக்கே வெளிச்சம். எஸ்பிபியின் வெறித்தனமான ரசிகன் எனக்கும் அவரது பேச்சில் ஒருவிழுக்காடு கூட உடன்பாடு இல்லை.

ஒப்பீடுகள் என்பது சமகாலத்தவர்கள் குறித்த சிந்தனை/கருத்து என்பதை எஸ்பிபி போன்ற பெரிசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

23 டிசம்பர், 2007

மரணதண்டனை தேவையா ?

மரணம் என்பது ஒருவரின் அல்லது ஒரு உயிர் உடலில் வாழ்ந்த வாழ்வின் முடிவு. விபத்து, நோய், தற்கொலை, கொலை, முதுமை என எப்படி வந்தாலும் மரணம் வாழ்வின் முடிவு. அதாவது உடலசைவின் இறுதி நாள். அந்த உடலை வைத்துக் கொண்டு அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது, உயிர் நீங்கியவுடனே உடலும் அழுகத் தொடங்கிவிடும். பெளதீகம் தத்துவம் என்று எப்படிப் பார்த்தாலும் உடலை (விட்டு) உயிர் நீங்குவதே மரணம்.

பாராளுமன்றத்தில் குண்டு வெடித்த வழக்காக இருக்கட்டும் பஸ் எரிப்பு வழக்காக இருக்கட்டும் மரணதண்டனை என்பது சட்ட வழியில் சரி என்று வைத்துக் கொண்டாலும் மரணத்திற்கு மரணம் தண்டனை என்பது ஒப்புக் கொள்ள முடியாததாகவே இருக்கிறது. மரணதண்டனை பெற்ற ஒருவர் மரணத்தின் வலியை மரணதண்டனை மூலம் அடைவானா என்பதே சந்தேகத்துக்கு உரியதுதான். அப்படி மரணத்தின் வலியை தூக்கு தண்டனையின் போது உணர்ந்தால் இறந்த பிறகு அவனுக்கு தண்டனை என்பதே இல்லாமல் போகிறது. அல்லது மரணத்தின் வலியை உணராமலேயே இறக்கிறான் என்றே நினைக்கிறேன்.

மிருகமாக மாறி ஒருவன் தன்னிலை மறந்து கொலை(கள்) செய்ததை 'மரணம் விளைவித்த கொடியவன் என்கிறோம், கொலையின் மூலம் மரணம் விளைவிப்பது மாபெரும் குற்றம். அதையே சட்டத்தின் முலம் அதே போன்ற தண்டனைகள் கொடுப்பதை எப்படி ஞாயம் என்று கொள்ள முடியும் ?

குற்றவாளிகள் குறித்து மன்னிப்பு வழங்கவேண்டும் கருணை கடவுளாக நடந்து கொள்ள வேண்டும் என்றெல்லாம் சொல்லவேண்டாம். ஆனால் மரணதண்டனை என்பது சர்சைக்குறியதாகவே இருக்கிறது. இன்றைய காலங்களில் சாட்சிய அடிப்படை நீதிகள் என்பது தானே கிடைக்கிறது. குற்றம் சுமத்தப்பட்டவர்கள் நிரபராதி என்றால் அவர் தம்மைத் தாமே நிரூபித்துக் கொள்ள வேண்டும் என்ற சூழல் கண்ணகி காலத்தில் இருந்தே இருக்கிறது. சாட்சிய அடிப்படையில் கிடைக்கும் நீதிகள் உண்மையான நீதிகள் இல்லாதபோது அதன் வழி கிடைக்கும் தண்டனைகள் மட்டும் ஞாயமானதா ? இந்த வழக்குகளுக்காக இதைச் சொல்லவில்லை. பொதுவாக நீதிபதிகள் எவருமே கடவுள் இல்லை, சாட்சிய அடிப்படையில் நீதி வழங்கும் 'நீதிபதி தொழில்' செய்யும் மனிதர்கள் தான்.

மரணத்திற்கு மரணம் தண்டனையாகாது. அரசாங்கமே அதைச் செய்வதற்கும் கொலைகாரனுக்கும் வேறுபாடு இல்லை. இது பலரைப் போல் எனது தனிப்பட்ட கருத்துதான். சரியான தண்டனை என்பது அத்தகைய குற்றவாளிகள் சாகும் வரை மனிதர் எவரையும் பார்க்க முடியாமல் தனிச்சிறையில் அடைத்து வைத்திருப்பதுதான். தண்டனைகள் திருந்துவதற்கு வாய்ப்பு கொடுக்காவிட்டாலும் 'குற்றம் செய்ததால் தண்டனை அடைந்திருக்கிறேன்' என்ற என்ற பாடத்தை, உணர்வை அவனுக்கு கொடுக்க வேண்டும். மரண தண்டனை மூலம் இது சாத்தியமே இல்லை. அவன் இறந்தும் அவன் செய்த குற்றங்களின் வடுக்கள் இருந்து கொண்டுதான் இருக்கும். அவனுடைய மரணத்தில் அவன் மட்டுமே மறைவான். இதில் எவருக்கும் எந்த லாபமும் இல்லை.

உயிரும் வாழ்வும் நாமே கேட்டுப் பெற்றதில்லை என்று ஆன்மிக தத்துவம் பேசுகிறோம். அப்படிப்பட்ட ஆன்மிக வாதிகள் கூட வழக்கையும் கொடுரத்தையும் பொறுத்து மரண தண்டனையை மனிதன் தீர்மாணிப்பது சரி என்கிறார்கள். உயிரை உண்டாக்குவது நம் கையில் இல்லை என்றால் உயிரை எடுப்பது மட்டும் நம் கையில் இருக்கிறதா ?

22 டிசம்பர், 2007

விருதுக்கு அல்ல :)

உலக அழகிகள் என்று தேர்ந்தெடுக்கிறார்கள். அதில் உள்ளூர் அழகிகள் இடம் பெறவில்லை என்று வருந்தினால் உலக அழகியை தனிப்பட்ட முறையில் ஓரக்கண்ணால் ரசிக்காமல் இருக்கலாம். அல்லது புறக்கணிக்கலாம். உலக அழகி என்று ஒருவரை தேர்ந்தெடுத்தால் இன்னொரு குழு பிரபஞ்ச அழகி (miss universe) என்று தேர்ந்தெடுக்கிறது, அதாவது வேற்று கிரகத்தில் இருந்து ஏலியன் கூட கலந்து கொள்ளாத ஒன்றை உலக அழகிகளே கலந்து கொள்ளும் ஒன்றை பிரபஞ்ச அழகி என்று முடிசூட்டுகிறார்கள். அவரவர் டைட்டிலுக்கு ஏற்றவாறு மிஸ் யுனிவர்ஸ் முதல் மிஸ் கூவாகம் வரையில் அழகி போட்டிகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது. உலக அழகி மட்டுமே அழகி (Miss World) என்று எவரும் சொன்னால் நகைப்புக்கு இடம் தான். உலக அழகி போட்டியே தேவையற்றது என்று சொல்பவர்களின் கருத்து உலக அழகி போட்டி வேண்டும் என்று நினைப்பவர்களின் கருத்துடன் ஒத்துவராதது தான். யாரோ ஒரு சிலருக்கு பிடிக்கவில்லை என்பதற்காக அவர்களும் போட்டிகளை நிறுத்தப் போவதில்லை. பிடிக்காதவர்கள் அதைப்பற்றி விமர்சனத்துடன் நிறுத்திக் கொள்வது அல்லது கண்டு கொள்ளமல் புறக்கணிப்பது என்பது நல்ல அனுகுமுறை.

நாலு பதிவர்கள் ஒன்று சேர்ந்து விருதுவழங்க முடிவு செய்வது என்பது அவர்கள் விருப்பம், அவர்கள் இவர்களையெல்லாம் நடுவராக வைத்திருக்கிறோம் என்று சொன்னால் தங்களுக்கு நடுவர் பொறுப்பு வேண்டாம் என்று சொல்வது நடுவர்களின் தனிப்பட்ட விருப்பு. அதில் விமர்ச்சிக்க ஒன்றும் இல்லை. அதேபோல் சிறந்த பதிவர்கள் என்ற போட்டிப் பட்டியலில் தங்கள் பெயர் சேர்க்கப்பட்டு இருந்தால் விரும்பவில்லை என்றால் 'எனக்கு விருப்பமில்லை எனது பதிவு இடம் பெறவேண்டாம்' என்று சொல்லி முற்றுப் புள்ளி வைத்துவிடலாம். ஆனால் அது தேவையற்றது என்று பொதுக் கருத்தை சொல்லும் போது இது எனது தனிப்பட்ட கருத்து என்று சொன்னால் நல்லது, அதிகப்படியான விமர்சனங்கள் தேவையற்றது. எல்லோரும் எல்லாவற்றையும் கேட்டு முடிவு செய்ய வேண்டும் என்ற சூழல் வீட்டிற்குள் கூட சாத்தியம் இல்லை. தமிழின் பெயரால் இணைந்திருப்பவர்களை ஒற்றை ஐடெண்டியில் கொண்டு வருவதோ, அவர்களின் கருத்து ஒன்றுபோல் இருக்கும் என்ற எதிர்ப்பார்பு பாசிட்டீவ் சிந்தனை என்ற அளவில் தவறல்ல. ஆனால் விருப்பமில்லாதவர்ளின் கருத்தை ஒத்த கருத்தாக பெற முயற்சிப்பது, நினைப்பது ஒருவகையில் அவர்களது கருத்து சிந்தனையை கட்டாயப்ப்படுத்துவது போன்ற தவறுதான்.

இண்டி ப்ளாக் என்ற விருது நிகழ்ச்சியை கூட பலர் புறக்கணித்தனர், பலர் ஏற்றனர். அதில் பலன் பெற்றவர்களை எவரும் இதய சிம்மாசனத்தில் ஏற்றிவைத்தோ, 'பதிவுலகம் காக்க வந்த படைப்புச் செம்மல்' என்றோ கொண்டாடவில்லை. அவர்கள் கொடுத்தார்கள் இவர் வாங்கிக் கொண்டார் என்ற அளவில் தான் பதிவர்கள் நினைக்கிறார்கள். இது போன்றுதான் பதிவர்களுக்கான விருது அறிவிப்புகள். இதில் நன்மை எதுவும் இல்லை என்று கருதும் பட்சத்தில் தீமையும் இல்லை என்றே கருதலாம்.

தமிழ்மணம் அல்லது மற்ற அமைப்புகள் தாம் தேர்ந்தெடுக்கும் பதிவர்களுக்கு விருது கொடுப்பது சரியான செயலா ?

ஒரு திரட்டி தன்னிடம் பதிந்துள்ள பதிவர்களை தேர்ந்தெடுத்து ஊக்கப்படுத்தலாம் என்று நினைப்பது அந்த திரட்டியின் உரிமை. அதில் கலந்து கொள்ள விருப்பம் உடையோர் ஓகே சொல்லலாம், மற்றவர்கள் டேக் ஆப் ஆகலாம். வெரி சிம்பிள். மற்றபடி இதில் அரசியல் இருக்கலாம், அல்லது அதை வைத்து அரசியலை உருவாக்கலாம், விளம்பரம் தேடிக் கொள்ளலாம் என்று நினைப்பதும் அவரவர் சுதந்திரமே.

ஜெண்டில் மேன்ஸ் இது என்னோட தனிப்பட்ட கருத்து. சக நண்பர்கள் இது தங்களுக்கும் ஏற்புடைய ஒத்த கருத்து என்று நினைதால் நான் பொறுப்பல்ல :)))

21 டிசம்பர், 2007

நஒக : அச்சில் வார்த்த பதுமை !

தாமோதரன் ஐம்பது வயதை கடந்தவர், ஈஸிசேரில் சாய்ந்தபடி, யோசனை செய்து கொண்டிருந்தார். அவர் மனதில், அவளைப் பற்றிய நினைவுகளால், கவலைகள் அழுத்திக் கொண்டிருந்தது. மூன்றாண்டுக்குமுன் முடிந்து போன உறவுவை நினைத்து, பல நாட்கள் தூக்கத்திலிருந்து விடியற்காலை வரை வெறித்துப் பார்த்தபடி முழித்துக் கொண்டிருப்பார். அவருடைய மனைவி கமலாவிற்கும் தெரிந்தது தான். அவள் இருக்கும் நிலையில் கணவருக்கு ஆறுதல் சொல்வது என்பது அவர் மனதை தூண்டிவிடுவது மாதிரி ஆகிவிட்டால் ? என்று பேசாமல் அமைதியாகி விடுவாள்.

எத்தனை நாளைக்குத் தான் இப்படி மனதை கட்டுப்படுத்திக் கொண்டிருப்பது, ஒரு கடைத்தெருவில் எப்போதோ கண்ணில் பட்டவளாக ... கடைசியாய் பார்த்து கிட்டத்தட்ட மாதக்கணக்கில் நீண்ட நாட்கள் ஆகிவிட்டது , அவளுக்கு ஒரு வயதுள்ள குழந்தை என்று யாரோ ஒரு நண்பர் சொன்னதை கேள்விபட்டதிலிருந்து ஒரே தவிப்பாக இருக்கிறது.

"என்னப்பா... தாமோதரா, யாரு சொல்லனும்னு எதிர்பார்கிற, ஆனது ஆகிப் போச்சு...உன்னோட வாரிசை நீ போய் பாக்கறத்துக்கு எதுக்கு, யாருக்காக தயங்குற, அது உன்னை மாதிரியே அச்சு அசலாக இருக்காமே" என்று அவருடைய நண்பர் தினமும் ஞாபகப்படுத்திக் கொண்டிருந்தார்.

அவர் சொல்வதில் ஞாயம் இல்லாமல் இல்லை, அவருக்கும் பார்க்க வேண்டுமென்று ஆசைதான், அவளை ஒரேடியாக உன் உறவே வேண்டாமென்று தலைமுழுகியதையும் மறக்க முடியவில்லை. தாமோதரன் ரொம்ப பிடிவாதம் கொண்டவர். அவர் தீர்மானித்தால் உடனே செயல்படுத்திவிடுவார், எப்படியோ அவரின் இந்த முடிவுக்கு, அவர் மனைவி கமலாவும் அதிகம் பாதிக்கப்பட்டவள் என்பதால் அவளை நினைக்கும் போதெல்லாம், 'துரோகி' என்றே நினைத்து அமைதியாக இருந்தாள். ஆனால் அவளுக்கும் இந்த வாரிசு விசயம் தெரியவந்ததும், தன் கனவரின் மனநிலை குறித்து கவலை அதிகமானது.

இன்று எப்படியும் ஒரு முடிவு எடுத்துவிடுவது என்று நினைத்துக்கொண்டு அலுவலகம் புறப்பட்டார். நாளெல்லாம் புதுவாரிசின் நினைவிலேயே
கையும் ஓடவில்லை, காலும் ஓடவில்லை. மனைவியை எப்படியும் சமாளித்து விடலாம், நியாயமாக எடுத்து சொன்னால் புரிந்துகொள்வாள், ஒரு வாராக தன்னை தேற்றிக்கொண்டு 'இப்போ அவ எங்கே இருக்கிறா ?' என்று நண்பரிடம் இடம் விசாரித்துவிட்டு...அவளின் வீடு தேடிசென்றாள்.

மெதுவாக அக்கம், பக்கம் பார்த்துவிட்டு, வீட்டிற்குள் சென்றார். கதவு சாத்தி இருந்தது...அச்சத்துடன் அதன் மேல் கைவைக்க ... தாள்பாள் போடாமல் இருந்ததால் திறந்து கொண்டது...உள்ளே சென்றார்... வீட்டின் கூடத்தில் யாரும் இல்லை, குளியல் அறையில் குளிக்கும் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது. தூளியில் குழுந்தை தூங்கிக் கொண்டிருந்தது, மெதுவாக தூளியை விளக்கி எட்டிப் பார்த்தார். அப்படியே தாமோதரரை உரித்துவைத்து அச்சில் வார்த்த பதுமை மாதிரி அழகாக இருந்தது. அந்த நிமிடம் அவருடைய அனைத்து உணர்வுகளும் எழுந்தது, பாசமுடன் குழந்தையின் தலையில் மெல்லமாக வருடிவிட்டு, பூப்போன்று தூக்கி உச்சியில் முத்தமிட்டுவிட்டு...மீண்டும் படுக்க வைத்துவிட்டு... சத்தமில்லாமல் வெளியேறினார்.

அன்று இரவு இந்த விசயத்தை எப்படி மனைவியிடம் சொல்வது, எப்படி ஆரம்பிப்பது என்று குழம்பியிருந்தாலும், ஏதோ ஒரு இனம் புரியாத மகிழ்ச்சியில் மெதுவாக படுக்கையை விட்டு வெளியே வந்து ஈஸிச்சேரில் அமர்ந்தார். மெதுவாக கேட்ட காலடி சத்தம் நெருங்க திரும்பிபார்த்தார்.

"என்னங்க, நான் ஒரு விசயம் கேள்விப்பட்டேன், சரியான்னு சொல்லுங்க, மனசை புடுங்குது" என்றாள் அவர் மனைவி

"என்ன விசயம் கேள்விபட்டம்மா?"

"நீங்க அவவீட்டுப் பக்கம் போனத பாத்ததா எதிர்வீட்டுக்காரங்க சொன்னாங்க..."

சற்று அதிர்ச்சியுடன், மெதுவாக ஆரம்பித்தார்,

"கமலா, நான் போனது உண்மை தான்" என்றார் தாமோதரன். கணவரை ஆச்சர்யமுடன் பார்த்தாள் கமலா, தாமோதரன் தொடர்ந்து,

"இவ்வளவு நாள், வைராக்கியமா இருந்தது உண்மை தான், ஆனால் எவ்வளவு நாளைக்கு தான் இப்படியே இருக்கமுடியும், எனக்கும் வயச்சாயிடுச்சி"

மேலும் தொடர்ந்தார்.

"பாரு கமலா, நம்ப மகள், காதல்னு, அவளா தன்னுடைய வாழ்கையை அமைத்துகிட்டத நாம ஏத்துக்காம அவளை அவமானப் படுத்தியதும்,
நாம அவளை விலக்கி வைத்து, எங்கமேல் நம்பிக்கை இல்லாமல் எங்களுக்கு ஒரு துரோகத்தை பண்ணிட்டியே ...எங்க மூஞ்சில இனி முழிக்காதே என்று நம்மகிட்ட ஆசி வாங்க வந்த அவளையும், அவள் கணவனையும் துரத்தியதை நினைத்து நினைத்தே... ஊர்வாயிக்கு பயந்து இவ்வளவு நாள் மெளனமாக, புழுங்கி வாழ்ந்தது போதும்..."

******* இன்னும் வேண்டுமானால் தொடர்ந்து படிக்கலாம் ********

"அவளை நாம தண்டிக்கல, நாமதான் நமக்கு தண்டனை கொடுத்துகிட்டு இருக்கோம், மூன்று வருடமாக அவள் செத்தாளா, இருக்காளான்னு தெரியாமல் வைராக்கியமாக இருந்துவிட்டோம், நமக்கு பேரன் பொறந்து இருக்கிறான், அவனுக்கு வயசு ஒண்ணாகுதுன்னு கேள்வி பட்டதிலிருந்து என்னால அவனை பார்க்காமல் இருக்கமுடியவில்லை. ஊர்வாயிக்கு பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை. ஆனா நம்ப பேரன் நாளைக்கு வளர்ந்து கேள்விகேட்டால், நம்பளால பதில் சொல்லமுடியாது, அதுதான் என்னோட வைராக்கியமெல்லாம் ஒடைஞ்சி போயிடுச்சு, போயி பார்த்தேன், அப்படியே அவனை அள்ளிக்கனும் போல இருந்தது"

"நாளைக்கு காலையில முதல் வேளையா, நாம ரெண்டுபேரும், போயி நம்ப மகளையும், மருமகனையும் பார்த்துவிட்டு, நம்ப பேரனை நம்ப வீட்டுக்கு அழைத்து கொண்டுவரனும்" என்று சொல்லி கண் கலங்கினார்

"எனக்கும் இந்த விசயமெல்லாம் தெரியுங்க, ஒவ்வொரு நாளும், நீங்கள்படும் அவஸ்தையை பார்த்துகிட்டுதான் இருக்கேன், என்னைக்காவது நீங்க, பிடிவாதத்தை தளர்த்தி, மனம் மாரமாட்டிங்களான்னு காத்துக்கிட்டு இருந்தேன், என் வயித்தில பால வார்த்திட்டிங்க" என்று உணர்ச்சி வசப்ப்பட்டாள் கமலா.

இரண்டு வருடங்களுக்கு பிறகு, மன நிறைவுடன், நாளைய விடியலை எதிர்ப்பார்த்து தூங்கப்போனார்கள் தாமோதரன் தம்பதிகள்.

பின்குறிப்பு : குமுதம் டைப் பழைய கதை படிப்பவர்களுக்கு அர்பணம், இதை எழுதியும் 2 ஆண்டுகள் ஆகிவிட்டது. கதையில் வரும் கதை வசனம், பெயர்கள் அனைத்தும் கற்பனையே. ஆனால் இது போன்று நடப்பவைகள் நிஜமானால் நல்லதுதான். இந்த கதை போட்டிக்கு அல்ல.

20 டிசம்பர், 2007

நட்பா ? உறவா ? எது சிறந்தது ?

நாம் ஒருவர் தான் ஆனால் இரத்தம் தொடர்புடைய சொந்தங்கள் மூலம் ஆணாக இருந்தால் தாத்தா, அப்பா, மாமா, மச்சினன், சகலை, மகன், மருமகன், பேரன் என்றும் பெண்ணாக இருந்தால் பாட்டி, அம்மா, அத்தை, மச்சினிச்சி, உவர்படியாள் (?), மகள், மருமகள் பேத்தி என்று உறவுக்கு ஏற்றார்போல் அழைக்கப்படுகிறோம். நல்லதுதான்.

உறவு முறை என்பதில் அன்பும் கடமையும் இருக்கிறது என்பதும் சரிதான். கடமைகளைத் தாண்டி உறவுக்குள் எதிர்ப்பார்ப்பும் இருப்பது கூட ஞாயம் தான். உறவுகளே உதவவில்லை என்றால் வேறு யார்தான் உதவுவார்கள் ? ஆனால் அந்த எதிர்ப்பார்ப்பு சக்திக்கு மீறியதாக இருந்தால் உறவு உடைந்து போகிறது, அதுபோல் இருப்பவர்கள் தகுந்த நேரத்தில் (எதிரில்)இருந்தும், (பொருள்) இருந்தும் உதவவில்லை என்றால் 'உறவென்று இருந்தும் என்ன பயன் ?' என்று நினைக்கத்தான் தோன்றும். தனது சந்ததிகள் மகன் - மகள் - பேரன் - பேத்தி ஆகிய சிறியவட்டத்திற்கு மேல் தமது உதவிகளை மனம் விரும்பி செய்வதற்கு எவருக்கும் மனம் வருவதில்லை. காரணம் செய்யும் உதவிகள் எல்லாம் திரும்ப கிடைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு செய்யும் போதே வந்துவிடும், அப்படி திருப்பிச் செய்ய முடியாத உறவுகளுக்கு உதவுவதென்பது உவர்ப்பாகவே இருக்கும். இப்படி நினைப்பது தவறு என்றாலும் பொருளியல் வாழ்வில் தனது சந்ததிகளுக்காக என்று ஒருவர் ஈட்டும் பொருள் மற்ற உறவுகளுக்கு விரயமாவதில் எவருக்கும் ஒப்புதல் இருக்காது என்பதும் இயல்புதான். பெற்றவர்கள் இருக்கும் வரைதான் உடன்பிறப்புக்கள் ஒன்றாக இருக்க முடியும், அதன் பிறகு அவரவர் குடும்பம் அவரவருக்கு. எதாவது விழா, பண்டிகை ஆகியவற்றில் ஒன்றாக அமர்ந்து உணவு உண்ண நேரம் கிடைப்பதே அரிதாகிவிட்டது.

குடும்பங்களில் நடக்கும் நல்லவை கெட்டவை அனைத்திலும் கலந்துகொள்ள தற்பொழுதெல்லாம் நண்பர்களை முக்கியமாக கருத வேண்டி இருக்கிறது, காரணம் தற்பொழுது வாழ்க்கை முறையில் உறவுகளெல்லாம் எங்கோ ஒரு மூலையில் இருப்பார்கள், நம்மை சுற்றி உள்ளவர்கள் ஓரளவுக்கு நாமே விரும்பி ஏற்றுக் கொண்ட நண்பர்கள் தான். நட்பில் எதிர்பார்ப்பு இருக்காது என்று சொல்லமுடியாது, அந்த எதிர்ப்பார்ப்பு எந்த அளவுக்கு அவர்களை நெருங்கி இருக்கிறோம் என்ற அளவில் இருக்கும். அப்படி இருக்கும் போதுதான் 'இவனிடம் இவ்வளவு நாள் பழகியும், ஒரு சின்ன உதவிக்குக்கு கூட ... நேரமில்லை ...அல்லது சாரி என்று சொல்வார்களா ?' என்றெல்லாம் நினைக்கத்தோன்றும். எதிர்பார்ப்புகளைத் தவிர்த்து பார்த்தால் நட்பில் கிடைப்பது ஓரளவுக்கு நன்மைதான். குறிப்பாக ஆலோசனைகள் கிடைக்கும், எதாவது பிரச்சனைகள் என்றால் எப்படி தீர்ப்பது என்று தடுமாறிக் கொண்டிருப்பதை நண்பர்களிடம் மனம் விட்டால் ஓரளவுக்கு சில தீர்வுகளைச் சொல்வார்கள். அதைத் தவிர்த்து மனம் விட்டு பேச உறவுகளைவிட நட்பு சிறந்ததாகவே படுகிறது, சொல்வதைக் கேட்டுக் கொண்டு சமயம் வரும் போது 'நீ அப்படி இருந்தவன் தானே ?' என்று சொல்லிக் காட்டமாட்டார்கள், அதற்கான தேவையும் நட்பில் இல்லை என்பதால், மனம் விட்டுப் பேச ஓரளவு புரிந்துணர்வு உள்ள நட்பே சிறந்ததாக நினைக்கும் மனநிலையில் இருக்கிறோம்.

உறவா ? நட்பா ? எது சிறந்தது ? என்ற கேள்விக்கு எளிய விடை...நாங்கள் அண்ணன் - தம்பி போல பழகுவதில்லை, என் அப்பா, அப்பா - மகன் போல் பழகுவதில்லை, என் அம்மாவும் நானும் தோழிகளாக பழகுகிறோம், இதைவிட (கொடுமை ?) நானும் கணவரும் நல்ல நண்பர்கள் போல் பழகுகிறோம் என்று பலரும் சொல்கிறார்கள். கணவன் - மனைவி என்ற உறவில் நன்கு புரிந்து கொண்டு மகிழ்வாக இருக்கிறோம் என்று சொல்லும் அளவுக்கு கணவன் - மனைவி என்ற உறவின் பெயர் பயமுறுத்துகிறதோ ? தெரியவில்லை. மனம் ஒத்த தம்பதிகள் கூட 'நாங்கள் நல்ல ப்ரெண்ட்ஸ்' சண்டை வந்தாலும் நண்பர்கள் நெருக்கமாக இருக்கிறோம், அதனை மறந்துவிடுகிறோம் என்கிறார்கள்.

இவ்வாறு 'நட்பை' சிறந்ததாக கருதும் அளவுக்கு உறவுகள் அல்லது உறவு முறைகளின் பெயர் அதன் கடமைகளை மறந்து அல்லது தவறி எதிர்பார்ப்பு அல்லது கட்டுப்பாடு என்று போலித்தனமாக மாறிவிட்டது என்ற மனநிலை அவ்வாறு இல்லாத குடும்பங்களுக்கு கூட ஏற்பட்டுவிட்டது என்று நினைக்க முடிகிறது. நன்றாக புரிந்துணர்வு உள்ள உறவும் உன்னதமானது என்பதை நாம் தோற்றுவிக்க முயலவேண்டும் என்பதைக் கூட பலர் நினைப்பதில்லை. உறவுகளின் உன்னதம் மறக்கப்பட்டு வருகிறது. நட்பு உயர்வுதான் அதே சமயத்தில் நல்ல புரிந்துணர்வு உள்ள எல்லா உறவுகளுமே அதைவிட தாழ்ந்தது இல்லை. கெட்டுப்போனது, விட்டுப்போனது உறவுமுறைகளோ, உறவு முறைகளின் பெயர்களோ அல்ல அவற்றின் மீதுள்ள புரிந்துணர்வுதான். புரிந்துணர்வு நட்பில் இருக்கிறது என்ற 'தோற்றம்' இருப்பதால் நட்பு உயர்வாக தெரிகிறது.

'தோள் கொடுப்பான் தோழன்' என்பது எவ்வளவு உண்மையோ அது போல் தான் 'மலை ஏறினாலும் மச்சான் (தயவு) வேண்டும்' என்பதும்.

பின்குறிப்பு : சன் டிவியில் நீங்கள் கேட்ட பாடல் நிகழ்ச்சியில் ஒரு மனம் ஒத்த தம்பதிகள் நாங்கள் கனவன் - மனைவி என்பதைவிட நல்ல நண்பர்களாக ஒருவருக்கொருவர் பழகுகிறோம் என்றார்கள். அதுதான் கட்டுரைக்கு மூலம்.

18 டிசம்பர், 2007

உழைப்பாளிகளின் வியர்வைதான் இவர்களுக்கு தங்க காசு ? நடிகர் சங்க கலை நிகழ்ச்சி !

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதிதிரட்டுவதற்காக சிங்கை - மலேசியாவில் 'தமிழ்சினிமாவின் '75 ஆவது ஆண்டு கலைவிழா' என்ற பெயரில் கலை நிகழ்ச்சி நடத்துவதாக (தென் இந்திய ?)நடிகர் சங்கம் அறிவித்து அதன் படி சிங்கை மற்றும் மலேசிய வானொலிகளில் அறிவிப்புகள் செய்யப்படுகிறது. வரும் ஞாயிறு அன்று மலேசியா கோலாலம்பூரிலும் அடுத்த ஞாயிறு சிங்கையிலும் நடத்தப் போகிறார்களாம். இதைப்பற்றி பல்வேறு விமர்சனங்களை நக்கீரன் இதழில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

மலேசியாவில் இந்தியர்கள் பல்வேறு போரரட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் நடிகர்கள் கலை நிகழ்ச்சி நடத்துவது அங்கு பிரச்சனையே இல்லாதது போல் காட்டுவதற்கு உதவும் என்பது போல் எண்ணி மலேசியா அரசாங்கமும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துருப்பதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

*****

எனது கருத்தாக.......
நடிகர் சங்கம் என்பது திரை உலகில் உள்ள பல்வேறு அமைப்பில் ஒன்று. மற்ற திரைக்கலைஞர்களான இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய பிரிவுகளை கலக்காமல் நடிகர்கள் மட்டும் பங்கு பெறும் 'தமிழ் சினிமாவின் 75 ஆவது ஆண்டு கலைவிழா' என்ற பெயர் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நடிகர்கள் மட்டுமே சினிமா துறை போன்று நினைத்துக் கொண்டு இதனை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். நலிந்த கலைஞர்களை நடிகர் சங்கம் கண்டுகொள்கிறார்களா ? என்பது பற்றி பெரிய அளவில் எவருக்குமே தெரியாது. மூன்றாண்டுகளுக்கு சின்னத்தம்பியில் குஷ்புவுக்கு இளைய அண்ணனாக நடித்தவர், வாய்ப்பு இழந்து கடைசியாக எவர் ஆதரவின்றி தனிமையில் செத்துப் போனார். கூடவே நடிக்கும் நடிகைகள் ஒரு சுற்று பெருத்துவிட்டாலோ, அவர்களின் அறிமுக படம் அல்லது இரு படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலோ தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கிறார்களோ இல்லையோ நடிகள் புறக்கணிக்காமல் அக்கா அண்ணி அம்மா வேடத்துக்கு சிபாரிசு செய்கிறார்கள். இநத அளவில் தான் நடிகைகளுக்கு நடிகர் சங்கம் உதவுகிறது.

அதைவிட கோடி கோடியாக சம்பளம் வாங்கிக் கொண்டு ஒரு படத்தில் நடிக்கும் நன்கு அறிமுகமான நடிகர்கள் படம் ஊற்றிக் கொண்டதும்...வாங்கிய சம்பளத்தில் பைசா கூட தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுப்பதில்லை என்ற புகார் எப்போதும் இருக்கிறது. படம் வெற்றிபெற்றால் அதே தயாரிப்பாளரின் அடுத்தப்படத்திற்கு இன்னும் அதிகமாக உயர்த்தி ஊதியம் கேட்பதுதான் நடிகர்களின் வழக்கம். வெற்றிபெற்றால் தன் முகத்துக்கும் நடிப்புக்கும் படம் ஓடுவதாக சொல்லும் நடிகர்கள் தோல்வி அடைந்தால் தாம் சரியான படத்தை தேர்வு செய்யவில்லை என்று மறைமுகமாக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் குறைசொல்லிவிடுவார்கள். இதை பெரிய நடிகர்கள் (சீனியர்) முதல் இன்று களம் இறங்கியிருக்கும் இளைய நடிகர்கள் ( ஜூனியர்) வரை சின்னத்திரையில் நேர்கானலின் போது சொல்வதைப்பார்கலாம்.

மூன்று படங்களில் நடித்த மிக இளைய நடிகர்கள் தவிர மற்ற அறிமுகமான எல்லா இளம் வயது நடிகர்களின் படத்திற்கான ஊதியம் ஒரு கோடி முதல் ஐந்து கோடிவரை மார்கெட் ரேட் இருப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் வாங்கும் ஊதியத்தில் 5 விழுக்காடு நடிகர் சங்க நிதியாக அளித்தால் கூட ஐந்து மாடி குமரன் ஸ்டோர் அளவுக்கு பெரிய கட்டிடத்தை நடிகர் சங்கத்துக்காக கட்டமுடியும், அதைத்தவிர நலிந்த கலைஞர்களுக்கு மாத ஊதியமாக பத்து ஆயிரம் வரை கொடுக்க முடியும். இவர்களை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு இலவச அண்ணதானம் நாள் தோறும் வழங்க முடியும். இவர்களால் காணாமல் போன இயக்குனர்களுக்கு லோ பட்ஜட் சின்னத்திரை மெகசீரியல் எடுக்க உதவி புரிய முடியும். நடிகர்கள் மனம் உவந்து தங்கள் நடிகர் சங்கத்துக்கு நிதி கொடுப்பது அவர்களின் விருப்பமாக இருக்கட்டும் யாருக்கும் எந்த பிணக்கும் இல்லை. ஆனால் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் இவர்கள் வெளிநாட்டில் திரட்டும் பணம் உண்மையிலேயே பணக்கார ரசிகர்களிடம் இருந்து வருகிறதா ?

சிங்கை, மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களில் 80 விழுக்காடு வரை உடல் உழைப்பாளிகள், அதிகம் படிக்காதவர்கள் மாதமொன்றுக்கு அவர்களுக்கு ஊதியமாக இந்திய ரூபாய் மதிப்பில் 6,000 /- முதல் 10,000 /- வரை கிடைத்தால் அதுவே அதிகம், அதில் சாப்பாட்டு செலவு மற்றும் அன்றாட செலவுகள், ஏஜெண்டுகளுக்கு செலுத்தவேண்டிய கடன், குடும்பத்து அனுப்ப வேண்டியது அதைத்தவிர்த்து வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து சிறிய அளவு கேளிக்கைகள் என்ற அளவுக்கு அவர்களுக்கு செலவு உண்டு. அவர்களுக்கு பொழுது போக்கு சினிமா பார்ப்பது, இதுபோன்ற கலைநிகழ்ச்சிக்கு எப்போதாவது செல்வதுதான்.

கலைநிகழ்ச்சிக்கு விற்கப்படும் டிக்கெட்டின் மிகக் குறைந்த மதிப்பு சிங்கப்பூர் வெள்ளியில் S$50/- கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பு 1,400/- வரும். இந்த விலை ஒரு ஊழியரின் மூன்று நாள் நாள் ஊதியம். திரை அரங்கில் திரைப்படம் பார்க்க ஒரு டிக்கெட் விலை 10 வெள்ளிகள் ஆகும், அந்த வகையில் அவர்களின் பணம் ஏற்கனவே திரைத்துறைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. நடிக - நடிகர்களின் பட்டாளமே வருகிறது என்று கேள்விப்படும் வெளிநாட்டு ஊழியர்கள், 'இந்தியாவில் தான் இவர்களைப் பார்க்க முடியாது, இங்காவது நேரில் பார்கலாம்' என்ற ஆவல் வைத்திருப்ப்பார்கள் என்று அறிந்து அவர்களை குறிவைத்துதான் கட்டணங்களுடன் கூடிய திரை கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கிறது. நிகழ்ச்சி அரங்கின் அளவை பார்க்கும் போது அவர்கள் வாங்கிய மிகக் குறைந்த விலை உள்ள டிக்கட்டுகளுக்கு கொடுக்கப்படும் இருக்கைகளுக்கான தூரத்தில் இருந்து பார்த்தால் நிகழ்ச்சிகளை சின்னத்திரையில் பார்பதைவிட மோசமாக இருக்கும். கொடுத்த காசுக்கு தூர தரிசனம் பெற்றுவிட்டு வருவார்கள். அதைத்தவிர நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது பொதுப்போக்குவரத்துக்கள் எதுவுமே இருக்காது, வாடகை வாகனங்களில் தான் திரும்பவேண்டும்.

ஏன் இதைகுறிப்பிடுகிறேன் என்றால் அதிக விலை உள்ள மற்ற டிக்கெட்டுகளெல்லாம் ஸ்பான்ஸர் சிப் வழியாக விற்றுமுடிந்துவிடும் அவை வெறும் 20 விழக்காடு மட்டுமே அவை பணக்கார வர்கம் பெற்றுக் கொள்ளும், மீதம் 80 விழுக்காடு டிக்கெட்டுகள் வெளிநாட்டு ஊழியர்களை நம்பித்தான் நடக்கிறது. அவர்களின் திரை மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடக்கும் சுரண்டல் என்று கூட சொல்லலாம்.

இப்படியெல்லாம் நடிகர்கள் நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்துக்கு பணம் ஈட்ட முயல்வது போல் மற்ற மற்ற தமிழர் பிரச்சனைகளுக்கு ஏன் நடிகர்கள் உதவவில்லை ? காவிரி திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்த பெரிய நடிகரின் ஸ்டேட்மெண்ட் கூட செயல்வடிவம் பெறாமலே இருக்கிறது. இவர்கள் ஈட்டும் பணம் அனைத்தும் தமிழனின் வியர்வையில் விளைந்த தங்ககாசுகள் தானே.

சூப்பர் வரிசையில் இருக்கும் நடிகர்களில் மூன்று நடிகர்கள் தங்கள் ஒருபடத்தின் ஊதியத்தைக் கொடுத்தால் 10 கோடி பொருட் செலவில் கட்டிடத்தை கட்ட முடியும். அப்படி நினைக்காமல் வெளிநாட்டில் உழைக்கும் கட்டுமான ஊழியர்களின் வியர்வையை உறிஞ்சி கட்டமுடியும் என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள் நினைக்கிறர்கள் போல இருக்கிறது. வெளிநாட்டு ஊழியர்களுக்காக இதுவரை நடிகர் - நடிகைகள் அனைவரும் சேர்ந்து ஒரே ஒரு இலவச நிகழ்ச்சி நடத்தி எப்போதாவது மகிழ்ச்சி அளித்திருந்தால் யாரும் இதுபற்றி பேசப்போவதோ விமர்சனம் செய்யப் போவதும் இல்லை.

நஒக: ஆண்கள் மட்டும் தானா ?

'இன்னும் அரைமணி நேரத்திற்குள் எப்படியும் ஏர்போர்ட் போய்ச் சேர்ந்துவிட முடியும் ... காரணம் அன்று ஞாயிற்றுக் கிழமைதான். சீரான போக்குவரத்து இருக்கிறது ... இன்னும் பலவாறு எண்ணங்களுடன்...சென்னை நந்தனம் பகுதியை நெருங்கியதும்... போக்குவரத்து விளக்கில் சிகப்பு நிறம் வர காரை நிறுத்த வேண்டியதாகிவிட்டது திவ்யாவிற்கு. காரின் பின் இருக்கைப் பக்கம் பார்த்தாள்,

தூக்கக் கலக்கத்தில் எழுப்பியதால் பின் சீட்டில் இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான் மூன்று வயது மகன் .

வலது பக்க கண்ணாடி வழியாக பார்த்தாள்... பக்கத்துக் காரில் அவனைப் பார்த்ததும் அதிர்ச்சியுற்றாள். அவன் ஒரு பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தான் பக்கத்தில் நான்கு வயது பெண் குழந்தை...அவனது குடும்பமாகத்தான் இருக்கும்... அவன் வேறு யாருமல்ல...

*******

ஐந்து ஆண்டுகளுக்கு முன்

'டிஜிட்டல் ட்ரீம்ஸ்' என்ற விசுவல் கம்யூனிகேசன் நிறுவனத்தில் விற்பனை பணியின் உதவியாளராக (சேல்ஸ் அசிஸ்டெண்ட்) திவ்யா வேலைக்குச் சேர்ந்தாள்.

அலுவலகத்தில் விற்பனைப் பிரிவின் மேலாளாரான 'நரேன்' அவளை நேர்முகம் செய்து அந்த வேலைக்கு எடுத்திருந்தான். பார்ப்பதற்கு அவ்வளவு பர்சனாலிட்டி இல்லாவிட்டாலும், உடை மற்றும் நடவடிக்கையில் ஒழுங்கை கடைபிடிப்பவனாகவே இருந்தான்.

"மிஸ் திவ்யா...உங்களுக்கான வேலை தொடர்புடைய எல்லா டீடெய்ல்ஸ் இதுல இருக்கு...எதாவது புரியவில்லை என்றால் உடனே கேளுங்க..."

"ம் சரி சார்..."

"என்னது சாரா ? ...எனக்கு அதெல்லாம் பிடிக்காது...நரேன் என்று பெயரைச் சொல்லியே கூப்பிடுங்க...பேரண்ட்ஸ் பெயர் வைத்திருப்பதே கூப்பிடுவதற்குத்தானே..."

"ம் சரி சார்..."

"மறுபடியும் சாரா ... சரி அடுத்த முறை கூப்பிடும் போது பெயரைச் சொல்லியே கூப்பிட்டு பழகுங்கள்..."

அவளைவிட ஐந்து வயதாக அதிகம் இருக்கும் என்று நினைத்தாள்...இன்னும் அவனுக்கு திருமணம் ஆகவில்லை என்பதும் பிறகு தெரிந்தது

பத்து நாள் சென்று,

"மிஸ்டர் நரேன்....நான் அனுப்பிய கொட்டேசனில் ஒரு மிஸ்டேக்...க்வாண்டிட்டி தப்பாக எண்டர் பண்ணிட்டேன்...வெர்ரி சாரி"

"கொஞ்சம் கவனாமாக இருங்க...நான் பார்த்து சரி பண்ணி அனுப்பி இருக்கிறேன்...பரவாயில்லை...அடுத்து அடுத்து இருமுறை சரி பார்த்துக் கொள்ளுங்கள்...போஸ்ட் வெரிபிகேசன் மிக முக்கியம்...தப்பாக இருந்தால் ஆர்டர் கைக்கு வராது..."

"கவனம் எடுத்துக் கொள்கிறேன் மிஸ்டர் நரேன்..."

"மிஸ்டர் கூட வேண்டாம் ... நரேன் என்று சொன்னால் போதும்...நமெல்லாம் ஒரே நிறுவனத்தில் ஒரு குடும்பமாக இருக்கிறோம்"

"ஓகே நரேன்..." சிரித்துக் கொண்டே சொன்னாள்

அவனது அணுகு முறை அவளுக்கு பிடித்திருந்தது..முன்பு வேலை பார்த்த இடத்தில் கொட்டேசனில் ஒரு சின்ன தவறு செய்திருந்தாள் கூட இவளது மேலாளர் இவளை அழவைத்துப் பார்த்ததையும் ... நரேன் நடந்து கொள்வதையும் ஒப்பிட்டுப் பார்த்தாள் மகிழ்வாக இருந்தது. ஒரு மேலாளரைப் போன்று இல்லாமல் நட்புடன் அவன் நடந்து கொள்ளும் விதம்...உணவு இடைவேளையில் ஒன்றாக அமர்ந்து சாப்பிடுவது என செல்லச் செல்ல அவளுக்குள் அவன் நிறைந்துவிட்டான்.

'ஒரு ஆண் தான் சொல்லனும்... என்று எதிர்பார்க்கனுமா...என்னை அவருக்கு பிடித்து இருக்கு...எனக்கு அவரை...' மனதுக்குள் நினைத்துக் கொண்டாள்.

அவன் விடுப்பு எடுத்தால் கூட சோர்ந்து போகும் நிலைக்கு அவனை நினைக்க ஆரம்பித்துவிட்டாள் என்பதை அவன் விடுப்பு எடுத்த அன்று தெரிந்து கொண்டாள்.

மறுநாள் காலையில்,

இன்னிக்கு எப்படியும் அவரிடம் தன் விருப்பத்தை முந்திக் கொண்டு வெளிப்படையாக சொல்லிவிடவேண்டியதுதான் என்று முடிவெடுத்தாள்.

வழக்கத்துக்கு மாறாக கொஞ்சம் படபடப்பாக இருந்தது...அவன் அன்று கொஞ்சம் தாமதமாகத்தான் வந்தான், ஒரு சிரிப்பை உதிர்த்துவிட்டு அவனது அறைக்குள் சென்று விட்டான்.

30 நிமிடங்கள் கடந்ததும் இண்டர்காமில் அழைத்தான்.

நடுக்கத்தை மறைத்துக் கொண்டு அவன் எதிரில் அமர்ந்தாள்

"திவ்யா...யாரிகிட்டேயும் இதுவரை சொல்லவில்லை"

'.....' உள்ளுக்குள் நடுக்கத்துடன் அவனை பார்த்துக் கொண்டிருந்தாள்

"உங்களிடம் தான் முதலில்... சொல்கிறேன்..."

"பலர் என்னுடன் வேலை பார்த்திருக்கிறார்கள்..."

"........"

"... கொஞ்சம் சகஜமாக பேசினால் கூட ... அவர்களிடம் வழிவதாகவும்... தப்பாக நினைச்சிடுறாங்க... நீங்க கிரேட்..."

'......'

'இந்தாங்க இன்விட்டேசன்...அடுத்த மாதம் திருமணம்...அப்பா அம்மா மற்றும் குடும்பத்தை கூட்டிவந்துவிடுங்கள்...முடிந்தால் உங்க வீட்டுக்கு நேரில் வந்து அழைப்பிதழ் கொடுக்கிறேன்...'

உள்ளுக்குள் பிரளயம் நடந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளமால்

'கங்கிராட்ஸ் நரேன்.......' அவனுக்கு கைகுலுக்கிவிட்டு வெளியே வந்தாள்.'

அந்த உணர்வில் இருந்து விடுபட நினைத்தவளாக... அதன்பிற்கு அவளுக்கு அங்கு வேலை செய்யவிருப்பம் இல்லை ... எதோ காரணங்களைச் சொல்லி வேலையை விட்டுவிட்டு வந்துவிட்டாள்.

*********
கார் ஹாரன்ங்கள் பலமாக அடிக்க நினைவில் இருந்து மீண்டவள் மீண்டும் வலப்பக்கம் பார்த்தாள். அவனது கார் அங்கு இல்லை.

பின் சீட்டில் இருந்து குரல்...

"அம்மா...அம்மா....அப்பா இன்னேரம் ப்ளைட்டில் இருந்து இறங்கி நமக்கு வெயிட் பண்ணிக்கிட்டு இருப்பாரா ?"

கண்விழித்து மழலைக் குரலில் கேட்டான் நரேன்.

பின்குறிப்பு : கதையில் வரும் பாத்திரங்கள், நந்தனம் சிக்னல், அலுவலகம்... கார் மற்றும் எல்லாம் கற்பனையே.

16 டிசம்பர், 2007

நஒக : எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்...(adults only)

மாலை 6.30 மணி மகாபலிபுரம் கடற்கரை மணலில் அருகருகே நெருக்கமாக உட்கார்ந்திருந்தார்கள் சிவாவும், சித்ராவும்.

3 வருடமாக காதலிக்கிறார்கள், சித்ரா நெருப்பு மாதிரி இதுவரை அவனை நெருங்க விட்டதே இல்லை. அவளது உணர்வுக்கு மதிப்பு கொடுத்தான் சிவா... சித்ரா ரொம்ப ஓவர் ... முத்தத்துக்காக அவ்வப்போது அவளுடன் சினுங்குவதைக் கூட அனுமதிக்கமாட்டாள்.

'ஒரு முத்தம் தானே கொடுத்துடலாம்னு நினைப்பேன்...' - சித்ரா

'அப்பறம்....ஏன் விலகி விலகி ஓடினாய்?' - சிவா

'அது இல்லேடா...அப்பறம் ஒண்ணு ஒண்ணாக ..தவறில்லைன்னு நினைக்க ஆரம்பிச்சு எல்லை மீறிடுவோம்...'

கோபமாக சிவா 'அப்படியே மீறினால் தான் என்ன ? ... ஏய் என்னை சந்தேகப்படுறியா...எல்லாம் முடிஞ்சு உன்னை விட்டுடு...'

அவன் வாயை தன் கையால் பொத்தினாள்

'நம்ம கல்சருக்கு சரிவராது சிவா...இதெல்லாம் தெரிஞ்சா என் பேரண்ட்ஸ் வெட்டி போட்டுடுவாங்க...எனக்கும் விருப்பம் இல்லை'

எப்போதாவது சிவா உணர்ச்சி வசப்படும் போதெல்லாம் இதுபோன்று எதாவது பேசி சமாளித்துவிடுவாள்

*****

மூன்றுமாதமாக ப்ளான் பண்ணி இன்னிக்கு மகாபலிபுரம் கூட்டி வந்திருக்கிறான். மேலே சொன்னது போல் நெருக்கமாக அமர்ந்து கொண்டு அவள் தோள் மீது சாய முற்பட்டான்

'சிவா...பப்ளிக் ப்ளேஸ்...அங்க பாரு நம்மை கவனித்துக் கொண்டு இருக்கிறார்கள்' கண்களால் காட்டினாள்

'பார்த்தால் பார்கட்டும்..நாம...'

'நீ ஆண் உனக்கு கூச்சம் இருக்காது...எனக்கு உடல் கூசுகிறது...வா...நாம் போய்டலாம்...'

'ம்...சரி..ஹோட்டல் ரூமுக்கே போய்டலாம்' என்று கண்ணடித்து எழுந்து அவளுக்கு கைகொடுக்க இருவரும் எழுந்தார்கள்

'சீ...போடா' என்று வெட்கத்துடன் சொன்னாள் ஆனால் அவளால் தட்ட முடியவில்லை.அவனது கைகளைப் பற்றிக் கொண்டு அவன் பின்னே பழகிய நாய் குட்டிப் போன்று சென்றாள்

ஹோட்டல் அறைக்கு சென்று

இருவரும் குளித்துவிட்டு...கட்டிலில் அமர்ந்தார்கள்...

டிவியை ஓடவிட்டு...

அவளது மடிமீது தலைவைத்தான் அவன்...சிவா...இனிமேல் அவளால் செய்வதற்கென்று எதுவும் இல்லை என்று நினைத்தவளாகவும்...விருப்பத்துடனும்

ஆதரவாக அவன் தலையை கோதிவிட்டாள்

இருவரும் மெல்ல மெல்ல நெருங்கி....

அதன் பிறகு அவளால் எதையும் பேசவோ...தட்டவோ முடியவில்லை...

'டேய் லைட்டையாவது ஆப் பண்ணேண்டா...ஒரே வெட்கமாக இருக்கிறது'

'இன்னும் உனக்கு வெட்கமா ?'

அவர்கள் இருந்த மன நிலையினை கெடுப்பது போல் அவளது செல்போன் ரிங்கானது

'உன் போனா ... இந்த நேரத்தில்...?' அலுப்பாக அவன் சொல்லி முடிக்கும் போது

அருகில் வைத்திருந்த்த செல்போனை ஒரு கையை நீட்டி எடுத்தாள்,

'ஹலோ'


'ம் சரி...புரியுது...சீக்ரம் வந்திடுறேன்...ம் சரிப்பா'

'சித்ரா போனில் யாரு..?'

ஒரு கையால் போனை பொத்திக் கொண்டு

'அப்பா...தான் உங்க கிட்ட பேசினுமாம்'

அந்த நேரத்து படபடப்பிலும் வாங்கி பேசினான்

'சரிங்க மாமா...' தொடர்ந்தான்

'கல்யாண பத்திரிக்கை எடுத்து வந்திருக்கிறோம்...அதெல்லாம் ஒண்ணும் பிரச்சனை ஆகாது... காலையில் சீக்கிரமாக வீட்டுக்கு வந்துடுறோம்...நானே ட்ரைவ் பண்ணி வந்துடுறேன் யாரையும் அனுப்ப வேண்டாம்'

பேசி முடித்ததும்...போன்களையும்...லைட்டையும் ஆப் பண்ணிவிட...அறையில் மிதமான இருட்டும் மனதில் புத்துணர்வும் இருவருக்கும் பிறக்க...

ஹோட்டல் நிர்வாகத்தால் நன்கு அலங்கரிகப்பட்ட கட்டிலில் இருவரும்...(போதும் வேண்டாம்...ச்சீ)

அவர்களுக்கு இன்று காலை தான் திருமணம் நடந்தது. இன்னிக்கு அவங்களுக்கு...முதல் பகல் முடிஞ்சு 3 மணிநேரம் ஆச்சு

15 டிசம்பர், 2007

இதயத்தை வருடும் பாடல்கள் வரிசை...

இசைஞானி இளையராஜாவின் இசையில் மிகச்சிறத்த பாடலாக நினைத்து... அடிக்கடி கேட்கும் பாடல்...ஆனால் இசை யுவன் சங்கர் ராஜா என்று பதிவு நண்பர் ரவிசங்கர் கீழே சொன்னபோதுதான் தெரிந்தது. :)

பாடலின் இசை...பாடல்வரிகள்...பாடும் குரல்(கள்)...காட்சி அமைப்புகள்...நடிப்புகள் போட்டி போட்டுக் கொண்டு இனிமை சேர்த்த பாடல்...ஸ்டீரியோவில் கேட்க ஒரு சிறப்பான பாடல். நீங்களும் கேளுங்க...!

படம் : நந்தா
இசை : இசைஞானியின் இளைய வாரிசு (யுவன்)
பாடல் வரி : நா.முத்துக்குமார்(?)

14 டிசம்பர், 2007

நஒக : அதுக்கு பினாமி கிடைக்கவில்லை...

"இந்த ஆட்சியைப் பார்த்து நான் கேட்கிறேன்...இந்த தொழிற்சாலை இங்கு தேவையா ? அடுத்த மாநிலத்தால் கைவிடப்பட்ட மோசமான திட்டம். இந்த திட்டத்தினால் மக்களுக்கு பயனா ? ஒரு மண்ணாங்கட்டியின் பயன்கூட இல்லை..., இந்த திட்டத்தினால் மாசு ஏற்படும், நிலத்தடி நீர் பாதிக்கப்படும், நாடு சுடுகாடு ஆகிவிடும், இறுதியாக எச்சரிக்கிறேன்...இந்த திட்டத்தை கைவிடாவிட்டால், நான் தீக்குளிக்கவும் தயார்..."

பலத்த கைத்தட்டல் வானைப் பிளக்க, தனது உரையை முடித்துக் கொண்டார்... எதிர்கட்சியின் முக்கிய பொறுப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் சங்கரபாண்டி (அரசியல் வாதிகளுக்கெல்லாம் டிவி சீரியல் மற்றும் திரைப்படத்தில் இந்த பெயரைத்தான் வைக்கிறார்கள்)

இரண்டு நாள் சென்று சங்கரபாண்டியின் கட்சி அலுவலகத்தில் உதவியாளர் எழப்புளி ஏகாம்பரம் (இழைப்புளியால எதிர்கட்சித் தலைவன் தேர்தல் பிரச்சாரத்துக்கு வந்தபோது மண்டையில் அடிச்சு இரத்தம் ஒழுக வைத்ததால் அந்த சிறப்பு பெயராம்) ஒரு கையால் வாய்பொத்தி பவ்யமாக குனிந்து.. சன்னமான குரலில்...

"அண்ணே உங்களை தாஜ் ஹோட்டலில் சந்திக்கனுமாம் அமைச்சர் கலிவரதன் சீக்ரட்டாக சொல்லி அனுப்பி இருக்கிறார்' என்று கிசுகிசுத்தார்

சங்கரபாண்டிக்கு உற்சாகம் பொங்க...

"எழப்புளி....ஒருமாதம் ஆச்சு அவரைப் நேரில் பார்த்து ...சரி அந்த அமீதா நடிகைக்கு ஏற்பாடு பண்ணி இரவு 10 மணிக்கு தாஜ்ஜில் ரூம் புக்பண்ணிட்டு ... கலிவரதன் அண்ணனை அங்கே வரச் சொல்லி சொல்லிவிடு"

********
ஹோட்டல் தாஜ் இரவு 9.00 மணிக்கு,

சிக்கன் மட்டன் இன்னும் பலவகை ஊர்வன அயிட்டங்கள் பொன்னிறமாக வறுபட்டு டேபிளை நிறைக்க, பொன்னிற திரவ கோப்பைகளில் ஐஸ்கட்டிகள் மிதக்க...சிக்கனைக் கடித்துக் கொண்டே குளறலான குரலில்

".... சங்கரபாண்டி...நீ எதிர்கட்சி ஆளுதான்...ஆனா எப்போதும் நம்ம ஆளு...என் ஆளு..."

" ....ம்...ம் கலியண்ணே...நாம பார்காத அரசியலா...எங்க கட்சி தலைவனுக்கே நான் தாண்ணே தலைவன்...என்கிட்டதான் அம்புட்டு சீக்ரெட்டும் இருக்கு..."

"சரிதான் சங்கரபாண்டி...எப்படி எப்படி...தீக்குளிக்கப் போறியா...?" வெடிச்சிரிப்பாக சிரித்தார் கலிவரதன்

"நீயே சத்தம் போட்டு காட்டிடாதே கலியண்ணே...நம்ம டீலு அது....மறந்துடாதே கமிசன்..."

"இங்க ஒரு பயலும் இல்ல...எப்படி...? திட்டத்த எதிர்கட்சி எதுர்க்கலைன்னா...சமூக ஆர்வலர்கள் போராடுவாங்க...முடங்கிடும்... நானே எதிர்கிறேன்...பத்து பர்சண்ட் கமிசனை வெட்டு...கண் துடைப்பாக எதிர்கிறேன்னு...சொன்னமாதிரியே நல்லாதான்யா நடிச்சே...சினிமாகாரன் தோத்தான் போய்யா..." மறுபடியும் வெடிச்சிரிப்பாக சிரித்தார்

"அண்ணே நீங்க தான்ணே தெறமசாளி ...சாராயக்கடையில் ஊறுகா வித்துட்டு இன்னிக்கு தொழில் துறை அமைச்சராக...."

"ஹஹ்ஹஹ் ஹா.....இதெல்லாம் படிப்படியான வளர்ச்சி தானே சங்கரபாண்டி...நாம ஒண்ணுகுள்ள ஒண்ணு... நாம ஒரே ஊரு... ஒரே சாதி...நம்பிக்கை பாசம் தானே ...நான் உன் சொந்தக்காரன் பேரிலும்...நீ என் சொந்தக்காரன் பெயரிலும் ஏகப்பட்டதை சுருட்டி வச்சிருக்கோம்..."

"சீக்கரம் முடிங்கண்ணே...அமீதா நமக்காக வெயிட்டிங்...அவ சினிமாவில் சிக்குனு ஆடும் போது பார்க்கிறதைவிட இன்னிக்கு ஆட்டத்தை நேரில பாருங்க..."

உட்கார்ந்தபடியே இடுப்பை குலுக்கிக் காட்டினார் சங்கரபாண்டி

"ஆட்டத்தை மட்டும் தனா ?" கலிவரதன் சொல்லி முடிக்கும் போது

இந்த முறை சங்கரபாண்டி இடிமுழக்கமாக சிரித்தார்...சிரிப்பு அடங்கும் முன்னே

நெஞ்சைப்பிடித்துக் கொண்டு...

"கலிவரதண்ணே....ஆ.... ஆ" அவ்வளவுதான் வாயைப் பிளந்து அப்படியே சாய்ந்துவிட, விழிகள் மேலே பார்க்க, சிக்கன் மசாலா உதட்டின் ஓரங்களில் காய ஆரம்பித்து

முதல் அட்டாக் வந்தது முன்பே அறிந்தவர் என்றாலும்...இன்று திணறிய மூச்சை சீராக்க பினாமி இதயம் ஒன்றைக் கூட அவர் இதுவரை வளைத்துப் போட வில்லை என்பதால் அவரின் ஒரிஜினல் இதயம் ஏக்கத்துடன் கடைசி துடிப்பை நிறுத்திக் கொண்டது

13 டிசம்பர், 2007

எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம்...!

தலைப்பைப் பார்த்து 'விதி'க்கு வக்காலத்து வாங்குகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். எல்லாத்துக்கும் நேரம்தான் காரணம் என்பதன் பொருள் விளங்காததாலேயே அதை விதியோடு தொடர்பு படுத்துகிறோம்.

எங்கள் ஊரில் லக்ஷ்மண நாடார் லாரி சர்வீஸ் என்ற ஒரு லாரி நிறுவன்த்தில் 15 - 20 லாரிகள் ஓடும். அந்த லாரிகள் அனைத்திலுமே பொறிக்கப்பட்டு இருக்கும் வாசகம் "காலதாமதம் ஊழலை உருவாக்கும்"... படிக்க தெரிந்தநாள் முதல் பொருள் தெரியமலேயே மனதில் நன்றாக பதிந்ததொரு வாசகம். குறிப்பிட்ட வேலையை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் காலம் தாழ்த்தினால் அந்த வேலை வாழ்வியல் தேவை என்னும் நெருக்கடிக்கு வரும் போது அதனை எப்படியாவது செய்து முடிக்க வேண்டும் என்று குறுக்குவழியில் செய்து முடிக்க எத்தனிப்பர் அல்லது செய்து முடிப்பதற்குள் மிகவும் துன்பத்தை அனுபவித்துவிடுவர் அல்லது முடிக்காமாலேயே சோர்ந்துவிடுவர்.

நேரத்திற்கும் மற்ற நம் செயல்களுக்கும் அதன் வழி ஏற்படும் நம் உணர்வுகளுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. எப்போதாவது ஏதோ ஒரு தோல்வியில் துவண்டு போகிறோம். ஏனென்று பார்த்தால் திரும்பவும் வெற்றி என்பதை அடைய குறிப்பிட்ட காலம் அதாவது நேரம் தேவைப்படும்...அதே போன்ற அல்லது அதைவிட அதிக செயல்வேகம் தேவைப்படும்...மேலும் சூழல் சரியாக அமையவேண்டும்... அதற்கான பணவிரயம் இன்னும் மற்ற இத்யாதிகள் எல்லாமும் எண்ணியதை ஈடேற்ற முடியாமல் ஏற்படும் பக்க விளைவுகள். அப்படியே மறுமுறை திட்டமிட்டாலும் வெற்றி நிச்சயம் என்பதற்கான உத்திரவாதம் எதுவும் இல்லாமல் தான் முயற்சியையும் தொடரவேண்டும். செலவு செய்த நேரம் வீண் என்பதைவிட மீண்டும் நேரம் எடுக்கும் அதனை அடைவதற்கு என்பதால் தோல்விகள் துவளவைக்கின்றன. வெற்றி / தோல்வி ஆகியவற்றிற்கு வேறு எதாவது பொருள் இருக்கிறதா ? ஒரு திட்டமிட்ட செயலின் கடந்த காலம் பயனற்றதாகிவிட்டது என்பதன் மறைமுக உணர்வு வடிவமே தோல்வி. கடந்த காலம் பயன்மிக்கதாக மாறி இருந்தால் அதன் உணர்வு வடிவம் வெற்றி.

திருட்டு என்ற ஒரு தீயசெயலை எண்ணிப்பார்த்தாலும்...குறிப்பிட்ட காலத்திற்கு தமக்கு தேவையான பொருளை ஈட்ட தம்மால் முடியாது அதற்கான திறமையும் தம்மிடம் இல்லை என்பதால் திருட்டு என்ற பேராசையின் தீ சிலருக்கு வளர்ந்துவிடுகிறது.

குறுகிய காலத்திற்குள் நினைத்ததை அடையவேண்டிய ஆசை நிறைவேறாமல் போகவே பல்வேறு சூதாட்டம் போன்ற (குற்றச்)செயல்கள் நடை பெறுகின்றன. மூன்று மாதத்திட்டதிற்கு (ப்ராஜெக்ட்) ஒர் ஆண்டு அவகாசம் கொடுத்தால் யாராவது தட்டுவார்களா ? ஆனால் 1 மாதத்திற்குள் முடிக்கவேண்டும் என்று சொன்னால் அவ்வளவு தான் பலரும் பின்வாங்கி விடுவார்கள். பலரால் இயல்பாக முடியாத ஒன்றை 'அவன்கிட்ட போனால் காரியம் சக்ஸஸ்' என்றால் என்ன ?அலையும் நேரமும் மற்றும் நீண்ட நேர விரயம் மிச்சம் என்பது தானே பொருள். ஆனால் அவன் செய்து கொடுக்கும் சக்ஸஸ் எப்படி நடக்கிறது ?எல்லாம் குறுக்கு வழியாகத்தான் இருக்கும்.


தன்னை குறுகிய காலாத்திற்குள் உயர்த்திக் கொள்வது எப்படி ? அடுத்தவனை கீழானவன் என்று சித்தரிக்கனும்.

பணத்துக்கும் நேரத்திற்குமே வலுவான தொடர்புகள் உண்டு தொழில் அதிபர்கள் அடுத்தவர் நேரத்தை பணமாக்குகிறார்கள். அவர்களை வைத்து சம்பாதிப்பதில் ஒரு பகுதியை அவர்களுக்கே ஊதியமாக கொடுப்பார்கள். தன் உழைப்புக் கென்ற ஒரு தொழிலாளியின் நேரத்தின் ஒருபகுதி லாபத்துடன் முதலாளிகளுக்குச் செல்கிறது. நேரம் பணமாகிறது. அதன் பெயர் நேரத்திருட்டு என்று எங்கேயோ படித்தேன். எல்லோருக்கும் 24 மணி நேரம் சமம் தான். அறிவின் மூலதனமாக அடுத்தவர்களின் நேரத்தை பயன்படுத்துக் கொள்வதே முதலாளிகளின் திறன் என்கிறார்கள். அதாவது முதலாளிகள் தங்களுக்கான 24 மணி நேரத்தை தொழிலாளர்களின் நேரத்துடன் பண்மடங்கு பெருக்கிக் கொள்கிறார்கள்.


நினைத்து ஒன்றை குறிப்பிட்ட நேரத்தில் செய்ய முடியாமல் போகும் படி நேரம் கிடைக்காமல் போவதால் தான் பலர் டென்சன் ஆவதற்கு காரணமே.

ஒரு செயலுக்கான குறிப்பிட்ட நேரத்தை புறக்கணிக்கும் போதும் அல்லது சுறுக்க முயற்சிக்கும் போது அதற்கான பக்க விளைவுகள் இருக்கவே செய்யும்.

நமக்கு நடக்கும் நல்லது கெட்டது எல்லாமும் நமக்கு கிடைத்த நேரத்தை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதைப் பொறுத்தே இருக்கிறது.

பார்பனர் சரி ... மற்றவர்களுக்கெல்லாம் சாதி அடையாளம் எது ?

பார்பனர் மற்றும் சில சைவ செட்டியார்களை பூணூல் போட்டிருப்பதை வச்சு சாதி கண்டுபிடிச்சிடலாம். எங்க அலுவலகத்துக்கு பெங்களூரில் இருந்து ஒரு கிளைண்ட் வந்தார். கொஞ்சம் ட்ரான்ஸ்பெரண்ட் சர்ட் போட்டு இருந்தார். அவ்வளவு திக்காக கூட பூணூல் போடுவாங்கன்னு எனக்கு அவரைப் பார்த்து தான் தெரியும். மற்றவர்களையெல்லாம் சாதி எப்படி கண்டுபிடிப்பது ? கொஞ்சம் வெள்ளையாக இருந்தால்... இவன் நம்ம ஆளான்னு பார்பதற்கு முதுக தடவி பார்பாங்களாமே ? கேள்வி பட்டு இருக்கிங்களா ?

எனது நண்பர் சொன்னார்...'நான் பேங்குக்கு போனால் ஸ்பெசல் மரியாதையே கிடைக்கும்'

'ஏன் ஏன் ?' என்று கேட்டேன்

'பார்ப்பதற்கு பாப்பான் போல இருக்கேன் இல்லையா, போனவுடனே 'ஆத்துல எல்லாம் சவுக்கியமா' ன்னு கேட்பாங்க...'எல்லோரும் நன்னா இருக்காங்க ... உங்காத்துல மாமி சவுக்கியமா ?ன்னு கேட்பேன் என்றார்.

'அவனுங்க சாதிவெறியை எனக்கு வேலை சுலபமாக நடக்க பயன்படுத்திக் கொள்வேன்'
என்றார். கொஞ்சம் அதிர்ச்சியாக இருந்தாலும் சிரிப்பாக இருந்தது. இப்படியும் மனுசங்க எப்போதும் இருக்காங்க.

கொஞ்சம் வெள்ளையாக இருந்தால் வெள்ளாளனா ?

கருப்பாக இருந்தால் தலித்தா ?

நான் கருப்பு பார்பனர் பலரை பார்த்திருக்கிறேன். பாஷையை வச்சுத்தான் இவரு பிராமணருன்னு தெரியும்.

பொதுவாக சாதியை கண்டுபிடிக்க பேச்சு வழக்கு பெரிதும் உதவும்... சென்னையில் அதுவும் அடிபட்டுபோய்விட்டது...'ங்...go..தா' பேசுறவனுங்க எல்லா சாதியிலும் இருக்கானுங்க.

சரி பொண்ணுங்களை எப்படி சாதி கண்டுபிடிப்பது...ரொம்ப அழகாக இருந்தால் பிராம்னாளோ ? என்று நினைப்பானுங்க அப்பறம் அந்த பெண் 'ஞான் கேரள குட்டியாக்கும்' என்று சொல்லும் போதுதான்..நம்ம ஊரு பொண்ணுங்களை விட கேரளா சூப்பர்னு தெரியவரும்.

இன்னும் சிலபேர் நம்ம சாதி என்னன்னு தெரிஞ்சிக்க 'உங்களுக்கு 'கொல' தெய்வம் எது ?' எந்த ஊருள்ள இருக்கு ?' ன்னு கேட்பாங்க...நாம வெள்ளந்தியாக இருந்து சொல்லிவிட்டால் போதும்..எப்படியோ அந்த ஊரு ஆளுங்களைப் பிடிச்சு...அந்த சாமியை கும்புடுறவன் எந்த சாதின்னு கண்டுபிடிச்சு...நம்ம சாதியை தெரிஞ்சுகுவாங்க சாதி வெறிபிடிச்சவனுங்க..உண்மையிலேயே இவனுங்க தான் கீழ்சாதி காரணுங்க'

இன்னும் கூட டெக்னிக் எல்லாம் பயன்படுத்துவாங்க நம்ம ஊரில் எந்த சாதி அதிகம் என்று தெரிந்து வைத்துக் கொண்டு...'உங்க ஊருல பட்டு நெசவு தானே அதிகம்' உங்களுக்கும் தொழில் தெரியுமா ?' தெரியாதுங்க நான் அந்த சாதி இல்லை... நான் '****' என்று சொல்லிவிடுவோம் என்பது எதிர்பார்ப்பு.

இன்னும் சிலர் ரொம்ப விவரமானவங்களாம்...பாண்டின்னு பேரு வச்சா அவன் தேவனாகத்தான் இருக்கும் னு நெனப்பாங்க..இராமநாதபுரம் பக்கம் வெள்ளாளரில் கூட பாண்டி இருக்காங்கன்னு அவனுங்களுக்கு தெரியாது

அப்பறம் பாலாஜி, கோவிந்தராஜூ, சீனிவாசன், கண்ணபிரான் இந்த மாதிரி பேரை வச்சிருக்கவங்க வாயிலிருந்து ப்ராம்னாள் பாசை வரலைன்னா ? அவன் நாயுடுவாகத்தான் இருக்கும் ஏனென்றால் நாயுடுங்கதான் கிருஷ்ணனின் பெயர்களை வைத்திருப்பார்கள் என்ற அரிய கண்டுபிடிப்பைச் சொல்லுவார்கள்.

எதுக்கு எதுக்கு இதெல்லாம்னு கேட்கிறிங்களா .... பல பதிவுகளில் ஒரு சொறி நாய் உச்சா போய் வச்சிருக்கு

'கோடி.குண்ணன்'... நாயுடு சாதியை சேர்ந்தவன் வீட்டில் தெலுங்கு பேசுவானாம்...இவன் தமிழனே இல்லை'

இது எப்படி இருக்கு ... இந்த கண்டுபிடிப்புக்கு காரணம் 'கோவி'ந்தராஜூ.கண்ணன்...கிருஷ்ணன் பெயர்...அதனால் நாயுடுவாம்.அடங்கொக்காமக்கா...என் தம்பி பெயர் செந்தில், அண்ணன் பெயர் ரவி... அம்மா பெயர் 'பார்வதி அம்மாள்' இதெல்லாம் நாயுடு பேராடா முண்டம் ? னு கேட்கத்தோனுது..அரிப்பை சொறிந்து கொண்டு போகட்டும்... நீ நாயுடு இல்லை உனக்கு எப்படி தெலுங்கு தெரியும் ? ... மடையா எனக்கு தெலுங்கும், கன்னடமும் பழக்கமானது பெங்களூர் மற்றும் ஹைதராபாத்தில் வேலை பார்த்த காரணங்களினால் ஆர்வமுடன் கற்றுக் கொண்டேன்.

நாய் சிறுநீரை முகர்ந்து பார்த்து எதாவது நாய் பக்கத்தில் இருக்கான்னு கண்டுபிடிக்குமாம். இதுபோல் தான் முயற்சிக்கிறானுங்க சாதியை பெயரை வச்சு கண்டுபிடிக்க முயலுறவனுங்கள்

வெளியில் தெரியும்படி பூணூல், நாமம் போன்ற புற அடையாளம் இல்லாவிட்டால், குறிப்பிட்ட 'பாஷை' பேசாவிட்டால் எந்த நாயும் எந்த சாதி என்றே தெரியாது.
மற்றபடி இந்து நாய்களுக்கென்றே தனித்தனியான அடையாளம் எதுவும் இல்லை.

பெண்ணின் கருமுட்டை ஆண்விந்துவுடன் சேர்வதற்கும் சாதி தொடர்பு இல்லை. ஐ மீன் சாதி பார்பதில்லை :)

11 டிசம்பர், 2007

நஒக : மோகம் முப்பது நாள் ! (adults only)

"என்ன வளர்த்திருக்காங்க கொஞ்சம் கூட பொறுப்பு இல்லை..."

கல்யாணம் ஆகி ஒரே வாரத்துல கணவன் தினேஷ் இப்படி கேட்பான்னு வித்யா சற்றும் எதிர்பார்க்கவில்லை, அதிர்ச்சி கலந்த வியப்புடன்

"என்னங்க என்ன சொல்றிங்க..."

"வீட்டை கழுவுறேன்னு வீடு முழுவதும் தண்ணியா நிற்குது...அம்மா வழுக்கி விழுந்தாங்கன்னா ?" கேள்வியாக பார்த்தான்

"அவள ஏண்டா திட்டுறே...நான் தான் கொஞ்ச நேரம் ஊறவைத்து திரும்ப தேய்த்து கழுவி விட்டால் தரை பளிச்சென இருக்கும்னு சொன்னேன்..."

"அம்மா...உங்களுக்கு ஒன்னும் தெரியாதும்மா....கவனக் குறைவாக விழுந்துட்டிங்கன்னா ... என்ன செய்றது...அதெல்லாம் வேண்டாம் அத்தை நானே சோப் வாட்டர்... டெட்டால் லிக்விட் போட்டு தேய்த்து கழுவுகிறேன் என்று இவ சொல்லி இருக்கனும்...இன்னேரம் தரையெல்லாம் காய்ஞ்சிருக்கும்"

அடுத்த இரு நாள் சென்றதும், காலையில்

"வித்யா...இது என்ன ?"

பயந்து கொண்டே கேள்வியாக பார்த்தாள்

"இது என்ன சட்னி வாயில வைக்க சகிக்கலை...காரம் கம்மியாக இருக்கு...உப்பு குறைவாக இருக்கு...?"

நிஜமாகவே உப்பும் காரமும் குறைவாகவே இருந்திருக்கிறது

"என்னங்க நேற்று உப்பு ஜாஸ்தின்னு சொன்னிங்க..இன்னிக்கு கம்மின்னு சொல்றிங்க..."

"அப்ப நான் பொய் சொல்றேன்னு சொல்றியா...நீயே நாக்குல தொட்டுவச்சு பாரு.."

"டேய் அவளை ஏண்டா எப்போ பார்த்தாலும் குறை சொல்லிக்கிட்டே இருக்கே...நான் வயுறு கடுப்பாக இருக்கு காரம் கம்மியாக வையுன்னு சொன்னேன்..காரம் கம்மியாக இருக்கிறதால உப்பு கம்மியாக இருப்பதாக தெரியும்..."

"மருமகளுக்கு சப்போர்டா...என்னம்மோ போங்கம்மா"

********

இரவு 10:30 மணிக்கு அவன் புத்தகம் படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தும் பார்க்காதுபோல் வந்து முதுகுபக்கத்தைக் காட்டியபடி படுத்துக் கொண்டாள்

மெல்ல நெருங்கிய தினேஷ், அவள் முதுகை அசைத்து

"ஏய் வித்யா எம்மேல கோபமா ?"

சோகமாக அவனை ஏறிட்டு பார்த்துவிட்டு

"உங்களுக்கு இராத்திரி ஆனாதான் நான் ஒருத்தி இருப்பதே ஞாபகம் வரும்....கல்யாணம் ஆன 10 நாளைக்குள்ள உங்களுக்கு நான் கசந்துட்டேனா ?"

"இல்லே வித்யா..."

"பொய் சொல்லாதிங்க...எதைச் செஞ்சாலும் எதாவது ஒரு குறை சொல்லிக் கிட்டே இருக்கிங்க..." வருவதற்கு தயாரான அழுகையுடன் கோபம் காட்டினாள்

பக்கத்தில் இருந்த ஸ்விட்சை அழுத்தி..அறையின் வெளிச்சத்தைக் குறைக்க...இரவு விளக்கை மட்டும் போட்டுவிட்டு....மெதுவாக பேசு என்று அவளது வாயைப் பொத்திவிட்டு...மிக குறைவான குரலில்.. அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே

"வித்யா...எங்க வீட்டுல நம்ம கல்யாணத்துக்கு முந்தி நானும் அம்மாவும் மட்டும் தான் இருந்தோம் அது உனக்கும் எல்லோருக்குமே தெரியும்...அக்கம்பக்கத்து அம்மாவோட செட் பெண்கள் எல்லாம்...ஒரு மருமக வந்துட்டா அப்பறம் மூலையில் தான் உட்காரனும் .. உன் மகன் உன்னை கண்டுக்க மாட்டான் னு சொல்லி சொல்லி வச்சிருந்தாங்க...அதை அம்மா ஒண்ணும் பெருசா எடுத்துக்கல...

"........" அவன் பேசுவதை கவனமாக கேட்டுக் கொண்டிருந்தாள்

"...இருந்தாலும் திடிரென்று அவங்க மேல இருக்கிற கவனம் குறைஞ்சு போச்சுன்னு அவங்க நினைக்க ஆரம்பிக்கலாம்..காரணம் கல்யாண தம்பதிகள் எல்லோருக்குமே அவங்க உலகம் மட்டும் தான் அவங்களுக்கு தெரியும்...பெரியவங்களுக்கு இதெல்ல்லாம் புரியாது..என்ன எதுக்குன்னே தெரியாமல் உள்ளே உண்டாகும் அந்த வெறுமையை கோபமாக மருமக பக்கம் திருப்புவாங்க...அதுக்கு இடம் கொடுத்தா அப்பறம் மாமியார் மருமகள் பிரச்சனை விஷ்வரூபம் எடுத்துடும்..."

"...ம்..." அவன் கைகளைப் பற்றிக் கொண்டாள்

"... அப்பறம் தனிக்குடித்தனம் போ என்று வீம்புக்கு சொல்லுவாங்க..அவங்களால தனியா இருக்கிறது கஷ்டம் ... தனிமை இன்னும் வெறுப்பை வரவழைச்சிடும்... அதுக்குதான் நான் உன் மேல் பிடிப்பு இல்லாதது போல் அவங்க காதில, பார்வையில விழறமாதிரி நடந்து கொண்டேன்... அப்பெல்லாம் அவங்க உனக்கு எவ்வளவு சப்போர்டாக விட்டுக் கொடுக்காமல் இருக்காங்க ...புரிஞ்சிக்க ப்ளீஸ்"

அவன் பேச பேச உணர்வலைகள் மாறி மாறி வந்து அவனுடைய பெரும்தன்மையும், பொறுப்புணர்வையும் நினைத்து ....அவன் உள்ளங்கையில் தன் விரலால் கோலமிட்டுக் கொண்டே...

"சாரிங்க...இது எனக்கு புரியலைங்க.."

"நான் உங்கிட்ட சொல்லிட்டே அதுபோல் நடந்திருப்பேன்..நடத்துறது நாடகம் என்று தெரிந்த நீ 'களுக்' என்று சிரித்து காட்டிவிட்டால்... அப்பறம் அவர்களை ஏமாத்துவதாக தவறாக நினைத்துடுவாங்க...ஒரு இரண்டு மாசம் ஆனால் அப்பறம் இதெல்லாம் தேவைப்படாது...நம்ம இருவர் நடவடிக்கையின் மேல் உள்ள கவனம் குறைந்துவிடும்... ஒருவருசத்துல ...பேத்தியோ...பேரனோ பிறந்தால் அது கூடவே பொழுதை ஓட்டிடுவாங்க ..."

வித்யா வெட்கப்பட...

அதற்கு மேல் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது போர்வைக்கே கேட்டு இருக்காது... நமக்கு ஏன் அவ்வளவு அந்தரங்கமெல்லாம் ?

*****************

அடுத்த நாள் காலையில் குளியல் அறையில் இருந்து அவன் குரல்

"ஒரு வெந்நீர் கலக்கி கூட வைக்கத் தெரியலையே... உங்க வீட்டில் நிஜமாகவே மகாராணியாகத்தான் இருந்தியோ...?"

"என்னடா காலையிலேயே ஆரம்பிச்சிட்டியா அவளை கரிச்சு கொட்ட..." -ஹாலில் இருந்து அம்மா

சமையல் அறையில் இருந்த வித்யா சுற்றிலும் முற்றிலும் பார்த்து 'களுக்' என்று சிரித்துக் கொண்டு குளியலைறைக்குள் சென்றாள். எங்கு கிள்ளினாள் என்று தெரியவில்லை.

"ஆ...அம்மாடி...." என்று கத்தினேன்

"தினேஷ்...என்னடா ஆச்சு...?" பதட்டத்துடன் அம்மாவின் குரல்

"ஒண்ணும் இல்லைம்மா....வெந்நீர் பதமாக இருக்கான்னு பார்த்தேன் ...ரொம்ப சூடு கையை சுட்டுக்கிட்டேன்... நீங்க பதறாதிங்க..."

ஸ்ரீ கிருஷ்ணர் தான் அடுத்த பிரதமர் !

ஸ்ரீராமனுக்கு பிறகு பாரத புண்ணிய பூமியில் மானிட பிறவிகளே அரசாளுகின்றன. ஏன் இராமனே கூட மனித அவதாரம் தான். இந்த குறையை போக்கி பாரதத்தை புண்ணிய பூமியாகவும், கலியுகத்தை சத்திய யுகமாகவும் மாற்ற ஒரே ஒரு அவதார புருஷரால் தான் முடியும். மக்களும், நாடும் சுபிக்ஷ்ம் அடைய போகிறார்கள். வரும் பொற்கால ஆட்சியின் விடிவெள்ளி, ஞான சூரியன், தேவதி தேவன் யார் தெரியுமா ? 'அத்வானி ஜீ' என்று பாரதத்தின் 80 கோடி இந்துக்களால் அன்புடன், பாசத்துடன் அழைக்கப்படும்... ஒரே இறைவன் ''லால் கிருஷ்ண அத்வானி தான் அந்த வேட்பாளர்.

மக்கள் படும் பெரும் துண்பங்களுக்கெல்லாம் விடுதலை கிடைக்க ஸ்ரீ கிருஷ்ணனின் ஆட்சியும் அவர் தம் நரேந்திர மோடி அமைச்சரவையும் இந்தியாவின் நலனை பாது(கையாக)காக்கும்.


செய்தி இதுதான்...




டெல்லி & அமகதாபாத்: குஜராத்தில் நாளை தேர்தல் நடக்கவுள்ள நிலையில் அடுத்த மக்களவைத் தேர்தலில் பிரதமருக்கான பாஜக வேட்பாளராக அத்வானி இன்று அறிவிக்கப்படவுள்ளார். ...

நஒக : பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள ...

"லொக்...லொக்" சிகரெட் புகை நாற்றத்தைத் தொடர்ந்து பலமான இருமல் சத்தம்

"வீட்டுக்கு வெளியே போய் அந்த கர்மத்தை வச்சிக் கூடாதா ?, லொக் லொக்...போட்டுக் கொண்டே... இந்த கண்டராவியை விட்டுத் தொலைஞ்சா தான் என்ன குடி முழுகிடவா போவுது ?"

ஐம்பத்து நான்கு வயதை நெருங்கும் ராமசாமியிடம் சொல்லிக் கொண்டிருந்தாள்... அவர் மனைவி கமலம்

ஆழமாக சிகெரெட்டை இழுத்துவிட்டுக் கொண்டே

"ஏண்டி நீ தாளிக்கும் போது வர்ற பொகையை விடவா, இது மோசம் ?"

"நான் ஒருவார்த்தை அதைப் பற்றிக் கேட்டால் ... உடனே என்னைய கொற சொல்லனும், அப்படியும் இல்லாட்டி என் குடும்பத்தை இழுக்கனும் அதைத்தானே பண்ணுவிங்க ?"

சத்தமில்லாமல் இருந்தார். 'வர வர ஞாபக மறதி அதிகம் ஆச்சு' வழக்கமாக எட்டு ஸ்டிக் சிகெரெட்தான் பிடிப்போம், நேற்று இரண்டு கூட ஆகி இருக்கு, குறைக்கனும்' என்று நினைத்துக் கொண்டிருந்தார்.

மறுநாள் எண்ணி எண்ணிதான் பிடித்தார், அப்படியும் எண்ணிக்கையில் இரண்டு குறைந்து போனது ஆச்சரியமாகிவிட்டது. 'அவனாக இருக்குமோ, எதுக்கும் மனைவியிடம் கேட்டுவிட வேண்டியதுதான்.

"கமலா, கதிரு புதுசா சிகரெட் பிடிக்க பழகி இருக்கானா ?"

அதிர்ச்சியும் கோபமாக அவரைப்பார்த்து

"அந்த வேலையெல்லாம் என் பையன் செய்ய மாட்டான்...."

"இல்லடி, இரண்டு சிகெரெட்டை காணும்.....அதான்"

"எடுத்து பற்றவைக்காமல் மறந்துட்டு எங்கேயாவது வச்சிருப்பிங்க ... தேடி பாருங்க..."

"எதுக்கும் அந்த பய சட்டையை துவைக்கும் போது பாக்கெட்டில் சிகரெட் தூள் எதுவும் இருக்குதான்னு பாரேன்"

"பெத்த புள்ளையை கூட நம்ப மாட்டிங்களே..."

நாளுக்கு நாள் சிகரெட் காணாமல் போவது ஒருவாரம் தொடர்ந்தது, தாமே கண்டு பிடிக்க வேண்டும் என்று நினைத்தார்

அன்று இரவு பத்து மணிக்கு மேல் கட்டிலில் அரை தூக்கத்தில் படுத்து இருந்தார்.

மனைவி கமலா சமையல் அறையில் அன்றைய வேலைகளை முடிப்பதற்கு பாத்திரங்களை தேய்த்துக் கொண்டிருந்தாள்

யாரோ வருவது போன்று இருந்தது, அவன் தான் ... மகன் கதிர் ...அவர் தூங்கும் படுக்கை அறைக்குள் மெல்லமாக அடியெடுத்து வைத்து வருகிறான். ' நினைச்சேன்... நினைச்சேன்' என்று நினைத்தவர் தூங்குவது போல் இருந்து கொண்டே கவனிக்கிறார்.

சிகரெட் பாக்கெட்டை திறந்து இரண்டு சிகரெட்டுகளை எடுத்துக் கொண்டு சத்தமில்லாமல் வெளி ஏறினான்.

திடுக்கிட்டவர்....வேகமாக எழுந்து அவன் பின்னால் சென்று கைகளை பிடித்துக் கொண்டார்

"அப்பா ... அது வந்துப்பா....." அகப்பட்டுக் கொண்டோம் என்று விழுங்கினான்

"எனக்கு தெரியும்டா...இன்னும் பதினெட்டு வயசு கூட ஆகலை அதுக்குள்ள தம்மு கேட்குதா ?"

இவர் போட்ட சத்தத்தில் மனைவி கமலாவும் வெளியே வந்து, நடந்ததை புரிந்து கொண்டு பேச முடியாமல் நின்றாள்

"அப்பா...சாரிப்பா...நான்..."

"என்னடா சொல்லப் போறே...எல்லா வயசு பசங்களும் செய்றது தானேன்னு தானே, நானெல்லாம் எங்க அப்பா காசுல சல்லிக் காசைக் கூட என் பழக்கத்துக்கு பயன்படுத்தியது இல்லை...என் சம்பாத்தியத்தில தான் இதெல்லாம் செய்ய தொடங்கினேன்..."

"அதுல்லப்பா...."

"நான் உன்னை தடுக்கல...நீ சம்பாதிக்கும் போது உன் விருப்பபடி செய்...இப்படி செய்வேன்னு நான் எதிர்பார்க்கலடா......சிகரெட்டைக் காணும் நமக்குத்தான் ஞாபக மறதின்னு நினச்சேன்"

"அப்பா....அப்பா..."

"....என்ன சொல்லப் போறே....இனிமேல் செய்ய மாட்டேன்னு தானே...கையும் களவுமாக மாட்டிக் கொண்டால் எல்லா பசங்களும் இப்படித்தானே செய்வானுங்க"

கண்ணை சுறுக்கி மூடிக் கொண்டு அதற்கும் மேல் பொறுமை இழந்தவனாக. கண்ணைத் திறந்து நேராக அவர் கண்களைப் பார்த்து

"என்னை மன்னிச்சிடுங்கப்பா....சிகரெட் பழக்கத்தை உங்களால் நிறுத்த முடியலை... அதிகமாகவே இறுமுறிங்க...இந்த வயசு காரங்களுக்கு ஹார்ட் அட்டாக் வர்றத்துக்கு புகைப்பிடிப்பது தான் முக்கிய காரணம் என்று டாக்டர் சொல்றாங்க.... நான் சொன்னால் கேட்பிங்களா... எங்கே நானும் சிகரெட் பிடிக்க ஆரம்பித்துவிட்டேன் என்று உங்களுக்கு தெரிந்தால் ... ஒரு வேளை நிறுத்திடுவிங்க என்று நினைத்துதான் ... உங்க சிகரெட்டெல்லாம் அவ்வப்போது எடுத்தேன்... இங்கே பாருங்க எல்லாம் அப்படியே இருக்கு"

மேசை கீழ் டிராயரின் அடிப்பகுதியில் அத்தனை சிகரெட்டுகளும் இருந்தன.

பேச்சற்று ... கண்களில் கண்ணீர் முட்ட ... மகனை அப்படியே தழுவிக் கொண்டார். கமலம் மகனின் செயலை நினைக்க புடவை தலைப்பும் ஈரமானது.

*************

(தம் பொருள் என்ப தம்மக்கள் அவர்பொருள்
தம்தம் வினையான் வரும்..
- குறள்

தம்முடைய மக்கள் தமக்குச் செல்வம். என்றாலும், செல்வத்தைப்போல மக்களும் பல நண்மைகளுக்கு உதவக்கூடிய நற்குண் நற்செயல்கள் அமைந்தவர்களாகப் பிறப்பது மக்களைப் பெற்றவர்களுடைய வினைப்பயனைப் பொருத்துத்தான்.)

10 டிசம்பர், 2007

நஒக : பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை !

"டேய் முரளி....இந்த மேட்ரி மோனியல் ஆட் பாருடா..."

"என்னம்மா ... நீயே பார்த்து சொல்லேன்..."

"வட்டம் போட்டு வச்சிருக்கு... யார் அப்பாவோட வேலையா ?"

"நான் இல்லைடா... ஆனா நானும் பார்த்தேன்..படிப்பு ...வேலை ... உயரம் ...மற்ற இத்தியாதிகள் எல்லாம் சரியாத்தான் இருக்கு... இதே ஊர் தான்...ஆனா சாதி மட்டும் நம்ம சாதி இல்லையேடா..."

"ம்...சாதியில பார்த்திங்க எதுவும் சரியா அமையலையே...எனக்கும் பிடிக்கலையே..."

"நீ தானடா அது சரி இல்லை ...இது சரி இல்லைனு... கொற சொல்லி தட்டக்கழிச்சே..."

"என்னப்பா ஒருதரம் கல்யாணம் பண்ணப் போறோம்...மனசுக்கு பிடிச்சதாக இருக்க வேண்டாமா ?"

"அதுவும் சரிதான்..நானும் உங்க அம்மாவை கட்டிக்கிட்டு..."

"என்னப்பத்தி என்ன பேச்சு வருது....?" அம்மா முறைத்தார்

"எதுவும் பேசமுடியலைன்னு சொன்னேன் இல்ல...நீயே பாருடா" - இது அப்பா

"போதும் உங்க கோழி சண்டையை விடுங்க..."

"அந்த பெண்ணை பார்த்து வருவோம் அதுக்கு எதும் ஏற்பாடு பண்ணனுங்க..."

********

பெண் பார்பதற்கு நன்றாக அழகாகத்தான் இருந்தாள், பேரு ப்ரியாவாம்...

பெண் பார்க்கும் படலம் முடிந்ததும், அருகருகே அமர்ந்து கொண்டு

"அம்மா இந்த பொண்ணு வேணாம்மா " மெதுவாக சொன்னான்

"ஏண்டா ... "

"பொண்ணுக்கு... கொஞ்சம் கூட வெட்கம் இல்லை... வருவது மாதிரியும் தெரியலையே..."

"மெதுவா பேசுடா ... அவ காதில் விழுந்திடப் போறது... "

ஒரு சுட்டிப் பெண் அதை கேட்டுவிட்டு வேகமாக ப்ரியாவிடம் கிசுகிசுக்கிறாள்.

அவள் அங்கிருந்தே இவன் பார்க்கும் போது முறைத்தாள்

"ஆமாண்ட மத்த பொண்ணுங்க கிட்ட முக்கு சரியில்லை, ட்ரெஸ்ஸிங் சென்ஸ் இல்ல..இப்படி எதாவது காரணம் சொல்லி சொல்லி வேணாம்னு சொன்னே..."

"...."

"எனக்கென்னமோ இது நல்ல இடமாகத்தான் தெரியுது பேசி முடிச்சிட வேண்டியதுதான்.." மேலும் அம்மா சொன்னார்

"முரளி...என்னால அலைய முடியலடா...பெண்ணையும் அவ வீட்டாரையும்... குறை சொல்ல எதுவுமே படலைடா" இது அப்பாவின் சன்னமான குரல்

"ம்ம் ...பச்....எனக்கு தலையெழுத்து இதுதான் என்றால் மாற்றவா முடியும்... உங்க கஷ்டமும் புரியுது...ம் எதோ செய்யுங்க..."

"வேண்டா வெறுப்பாக சொல்லாதே...எல்லாம் விசாரிச்சோம்...எல்லாம் நமக்கு பொருத்தமாகத்தான் இருக்கு " - அம்மா, அப்பாவைப் பார்த்து

"பேசி முடிச்சிடுங்க" என்று ஜாடை காட்டினார்

"சரி...சம்பந்தி.....சம்பந்தம் பேசி முடிச்சிடலாம்...என்ன சம்பந்தின்னு சொல்றேன்னு பார்க்கிறிங்களா...எல்லாம் முடிவு செஞ்சாச்சு அப்பறம் சம்மந்திதானே..."

எல்லோருக்கும் மகிழ்ச்சி...நிச்சயதார்தம் செய்ய தேதி குறிப்பதாக பேசிக் கொண்டார்கள்

மெல்ல வீட்டின் உள்ளே பார்த்தான்

ப்ரியா இன்னும் முறைத்துக் கொண்டிருந்தாள்

*************
மாலை மணி 7.00

தாசப்பிராகாஷ் ஓட்டலில் உணவு மேசையில் மெல்லிய வெளிச்சத்தில் அருகருகே அமர்ந்து கொண்டு

"டேய் முரளி... இரண்டு வருசமாக பழகுறோம் ... உன்னை பார்த்து எனக்கு புதுசா வெட்கம் வரனுமோ ?" இடுப்பை கிள்ளினாள்

"கொஞ்சமாவது நீ நடிக்க வேண்டாமா ?"

"சரிடா...விடு...நாம நாடகம் போட்டோம்னு தெரிஞ்சுடுமோன்னு... என் பயம் எனக்குத்தான் தெரியும்.."

"நானும் இரண்டு மூணு பொண்ணுங்களை பெண் பார்க்கப் போய் பிடிக்கலைன்னு பொய்யாக சொன்னது கஷ்டமாகத்தான் இருக்கு...."

"...சரி தாண்டா...சந்தர்பம் கிடைச்சால் அவர்களைப் நம் கல்யாணத்துக்கு பிறகு பார்த்து மன்னிப்பு கேட்போம்.."

"அதுதான் செய்யனும்..."

"இருந்தாலும் என்னை தெரியாதது போல் காட்டி... நான் என்ன மோசமான பெண்ணா ? உறுத்தலாகவே இருக்குடா.."

"என்ன பண்ணறது ப்ரியா...பெத்தவங்க என்ன தான் நல்லவங்களாக இருந்தாலும், அவங்க பார்த்து மருமகளாக கொண்டுவர்ற பொண்ணுங்க கிட்டதான் பிரியமாக இருக்காங்க"

"இந்த நடிப்பை திருமணத்திற்கு பிறகும் தொடரமுடியும்னு நினைக்கிறியா ?"

"நீ 'டா' போடாமல் இருந்தால் தெரியாது...ஆரம்பத்தில் அவங்களுக்கு பிடித்துவிட்டால் போதும்...அப்பறம் தெரிஞ்சாலும் நிலமை தலைகீழாக மாறாது என்ற நம்பிக்கைதான்"

மேலும் அவள் முகத்தைப் பார்த்துக் கொண்டே சொன்னான்

"உங்கிட்ட சொன்னது தானே...எங்க அக்கா...அத்தான் லவ் மேரேஜ்தான்... அத்தான் அக்கா மேல பிரியமாக தான் இருக்கிறார்...இருந்தாலும் பையனை முந்தானையில் முடிந்துவிட்டாள்.. என்று அவ மாமியார் பேசுற பேச்சுக்கு ஒண்ணும் செய்ய முடியாமல்... அத்தான் கைய பெசையுறார்...எங்களுக்கும் புரியுது...அந்த நிலமை என்வீட்டில் உனக்கு வந்துடக் கூடாது இல்லையா... பெரியவங்க கிட்டதட்ட ஒரே மாதிரி தான் இருப்பாங்க... ஒரு சிலர் தவிர...உங்க அம்மா அப்பா பெரும் தன்மையாக நம்ம காதலை ஏத்துக்கிட்டாங்க..."

"ஈசியாக சொல்றேடா...ஆனால் மேட்ரி மோனியல் ஆட் இதெல்லாம் கொடுக்கச் சொல்லி அவர்களை ரொம்பவே டார்சர் படுத்திட்டே முரளி..."

"சாரி ப்ரியா...அதெல்லாம் மாமனார் மாமியாருக்கு திருமணத்துக்கு சூப்பர் பட்டு வேட்டி பட்டுப் புடவை எடுத்து கொடுத்து அசத்தி சரி பண்ணிடுவேன்...நீ இப்ப என்னை சரிபண்ணனும்...யாரும் பார்க்காத போது சூடாக ஒரு முத்தம் கொடுத்து கூல் பண்ணு பார்க்கலாம்..." சொல்லிவிட்டு காலால் அவள் காலை வருடிவிட்டு கண் அடித்தான்

"பின்னிபுடுவேன் பின்னி...எல்லாம் திருமணத்திற்கு பிறகுதான்....வேண்டுமெனால் ஐஸ் கிரிம் பாதி திண்ணுட்டு எச்சியோட தர்றேன் கூலாக சாப்பிட்டு சரியாயிடு..."

அதன்பிறகு அவர்கள் அந்தரங்க பேச்சுக்கு அவசரதடையாக

"எஸ்கியூஸ்மி சார்...." மெனுகார்டை நீட்டினார் சர்வர்

***********
பின்குறிப்பு : சிறுகதைகள் நீண்ட நாட்களாக எழுதாமல் இருந்தேன்..நஒக போட்டின்னு நமக்கு யானைப்பசியை தூண்டிவிட்டார்கள். நல்லாருங்க சாமிகளா.

8 டிசம்பர், 2007

நஒக - நண்பனின் தங்கை...

தேவா நெற்றியை சுறுக்கி யோசித்துக் கொண்டிருந்தான், அடுத்த வாரத்துக்குள் சொல்லியே ஆகவேண்டும்...தள்ளிப் போடப் போட படபடப்பு அதிகம் ஆகிறது.

"என்னடா, ரொம்ப டென்சனாக இருக்கே..." - தேவாவின் தங்கை விமலா

"சும்மா இருடி, ஆபிஸில் ஒரே டென்சன்"

"சரி சரி...நான் என் வேலையைப் பார்க்கிறேன், மண்டை உடைஞ்சு ரத்தம் சொட்டறத்துக்குள்ள சாப்பிட வந்திடு...அம்மா சாப்பாடு எடுத்து வச்சிருக்காங்க"

"போடி வர்றேன்"

"உன் கூட சுற்றிக் கொண்டிருந்தானே உன் பிரண்டு எங்கேடா அவனைக் காணும் ?"

"அவனுக்கு கொஞ்சம் வேலை இருக்காம் நாளைக்கு வருவான்.."

"சரிடா...சீக்கிரம் சாப்பிட வந்துடு"

தேவாவுக்கும், விமலாவுக்கு 3 வயது வேறுபாடு, ஒருமையில் அழைத்துக் கொள்வதால் அண்ணன் தங்கை என்பதைத் தாண்டி நண்பர்கள் போல் பழகுகிறார்கள்.

தேவாவுக்கு வேறு பிரச்சனை, இரண்டு வருடமாக தேவாவும் ராஜூவும் நல்ல நண்பர்கள் ஆகிவிட்டனர், காரணம் ஒரே அலுவலகம், ஒரே மாதிரியான அலுவல் அதற்கும் மேலாக இருவருக்கும் ஒரே 23 - 24 வயது. இது போதாதா ? கல்லூரி படிப்பிற்கு பிறகு கிடைத்த முக்கிய நட்பாக இருவருக்குமே நினைக்க ஆரம்பித்து, ஒன்றாகவே அவரவர் பைக்கில் வேலை நேரம் தவிர்த்து ஊர் சுற்றினர்.

அதுமட்டுமா ? இருவர் வீட்டுக்கு இருவரும் ஞாயிறுகளில் சென்று உரிமையுடன் ஒருவருக்கு இருக்கும் உணவை தின்று தீர்த்துவிடுவார்கள், அதையே காரணமாக வைத்து 'ஆண்டி, இவன் சாப்பாட்டை நான் சாப்பிட்டிவிட்டேன், இந்த பாவி சாபம் இடுவதற்குள் இவன் வயத்தை அடைக்கனும், சரவணபவன் வரைக்கும் போய்டு வந்துடுறோம்' என்று சொல்லி இருவரும் கிளம்புவார்கள், அப்பறம் இரவுதான் திரும்புவார்கள். ஞாயிறு வெளியில் செல்வதற்கு அவர்களுக்கென்றே எதாவது ஒரு உத்தியை பயன்படுத்திக் கொள்வார்கள்.

இதற்கும் மேல் இவர்கள் நட்பை விவரிக்க வேண்டுமென்றால் 'கண்ணதிரே தோன்றினால்' படத்தின் கரன், பிராசாந்த் இருவரின் பாத்திரங்களைத்தான் குறிப்பிட வேண்டும்.

அந்த படத்தில் வந்தது போலவே, கொஞ்சம் மாற்றாக

ராஜூவின் தங்கை வசந்தி மீது தேவாவுக்கு ஈர்ப்பு வந்துவிட்டது. சில சமயங்களில் அவளது குறுகுறு பார்வையும், இவனைக்கண்டால் வெட்கப்பட்டு பார்க்காதது போல் அவள் நடந்து கொள்வதும் மெல்ல மெல்ல அவள் பக்கம் இவன் மனம் சென்று கொண்டிருந்தது.

"டேய் தேவா, என் தங்கச்சி இருக்காளே சரியான லூசுடா, எப்போதும் புத்தகமும் கையுமாக இருக்கிறாள் பாரு நல்லா சாப்பிடுவாள், நல்லா தூங்குவாள், எந்த வேலையும் செய்ய மாட்டாள் எல்லாத்தையும் அம்மாதான் செய்யனும்"

"எங்க வீட்டில் மட்டும் என்ன வாழுது, அங்கேயும் அதே கதைதான்..." சமாதானம் சொல்வான் தேவா

"இந்த வருசம் படிச்சு முடிந்ததும் கல்யாணம் பண்ணி வச்சிட வேண்டியதுதான், பொண்ணுங்களை நம்ப முடியாது யாரையாவது லவ் பண்ணி தொலைச்சு ... அவன் நல்லவனா கெட்டவனான்னு தெரியாமல் ...அப்பறம் கண்ணை கசக்கினால் என்ன செய்வது..."

"...ம் சரிதாண்டா..."

'நானே விரும்புகிறேன் என்று சொல்வதற்கு தேவாவுக்கு கூச்சமாகத்தான் இருந்தது, சொல்லலாம் ஆனால் அதற்கு முன் வசந்திக்கு என்னைப் பிடிகிறதா ன்னு தெரியனுமே' நினைத்துக் கொண்டிருந்தான்.

"தேவா...இன்னுமா சாப்பிட வரலை..."

"நீ சாப்பிட்டு எனக்கு எடுத்து வை டி..."

"சரிடா... சாப்பாடு ஆறுவதற்குள் வந்து சாப்பிட்டு தொலை..."

வசந்திக்கு காதலை சொல்லவேண்டுமே, எஸ்எம்எஸ். ம்ஹூம் பெரியவங்க யாரும் பக்கத்தில் இருந்து போனை எடுத்துட்டா காரியம் கெட்டுவிடும். வேற என்ன செய்யலாம், போன் பேசலாமா ? ம்கூம் மேட்டரை ஆரம்பிக்கும் போது தொண்டைக்குள் இருக்கும் குறல் வெளியே வராது, எத்தனை படத்தில் பார்த்திருக்கோம்...அசடு வழிஞ்சு அவமானமாகப் போனால்...முடிவாக ஒரு முடிவெடுத்தான்.

காதல் கடிதம் தான் ஒரே வழி, எழுதி ராஜூ வீட்டுக்கு போகும் போது, நைசாக அவள் கையிலோ, அவள் ஹேண்ட் பேக்கிலோ, புத்தகத்திலோ அவள் பார்க்கும் போது யாரும் இல்லாத போது சொருகிடவேண்டியதுதான். என்று துணிந்தவனாக..

'என்ன எழுதலாம் ? கவிதை, கடிதம் ?'

'கவிதையா ? பொண்ணுங்க பாதிபேருக்கு காதல் வராதிருப்பதற்கு கவிதைகள் தான் காரணம் !!!' கைவிட்டுவிட்டு கடிதமே எழுதலாம் என்று நினைத்தான்.

எப்படி எழுதுவது ?

"உன்னைக் கண்ட நாள் முதலாய் ...உன் மீது எனக்கு காதலும்.. ஈர்ப்பும் இருப்பது உண்மைதான், இருந்தாலும் நண்பனின் தங்கை ஆயிற்றே, நண்பனுக்கு துரோகம் அல்லவா ? என்று நினைத்தேன். காதல் பொதுவாக 1000 மைல்களுக்கு அப்பால் முகம் தெரியாதவர்களிடம் வருவது அல்ல... உடன் படித்த பெண், கூடவே வேலை செய்யும் பெண், நிதம் பஸ் ஸ்டாப்பில் நிற்கும் பெண்.... இப்படி தெரிந்த... சுற்றி உள்ளவர்களிடம் தான் வரும்... எனவே நண்பனின் தங்கையை காதலிக்கிறேன் என்று சொல்லும் என் காதல் தவறென்று நினைத்துவிடாதே...பிடிக்கவில்லை என்றால் சொல்லிவிடு... நான் நிச்சயம் தேவதாஸ் ஆகிவிடமாட்டேன்... அதே சமயத்தில் இந்த சூழலை மறக்க வேறு ஊருக்கு வேலைக்கு சென்றுவிடுவேன். நான் நல்லவன் தான் என்பதை உன் அண்ணன் அறிவான், அவனிடமே நேரிடையாக கேட்க முடியும்....ஆனால் அதற்கு முன் உனக்கு என் மீது விருப்பமா ? என்று தெரியவேண்டும்... நான் கேட்டு ... அவன் சரி என்று சொல்லி ... உனக்கு என்னை பிடிக்காமல் போய்விட்டால் ? நன்றாக யோசனை செய்து நல்ல முடிவாக எனக்கு சொல்.

இப்படிக்கு,

மேலான அன்புடன்,

தேவா

நினைவில் இருப்பதை உடனே அழகான கையெழுத்தில் எழுதிவிடவேண்டுமே...

தங்கை விமலா இன்னும் மேலே பார்த்துக் கொண்டு யோசனையுடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இதுதான் சமயம்...அந்த குட்டிச்சாத்தான் தான் பேப்பர் பேனாவெல்லாம் வைத்திருக்கும்.

அவள் அறைக்குச் சென்று வெள்ளைப் பேப்பரும், பேனாவும் எடுத்துவரச் சென்றான்.

அவள் படிக்கும் மேசை டிராயரைத் திறந்தான், ஒரு வெள்ளைப் பேப்பரை எடுத்தான்

பின்னால் எதோ எழுதி இருந்தது, திருப்பிப் பார்த்தான்,

"உன் மீது எனக்கு காதலும் ஈர்ப்பு இருப்பது உண்மைதான், நண்பனின் தங்கை ஆயிற்றே, நண்பனுக்கு துரோகம் அல்லவா ?...."

இனம் புரியாத அதிர்ச்சி கலந்த வியப்பு... நடுக்கத்துடன் தொடர்ந்து படித்தான் ... மனசாட்சி போல் மனதில் நினைத்ததெல்லாம் அதில் அழகான கையெழுத்தில் எழுதப்பட்ட அந்த கடிதம்.

மேலான அன்புடன்
ராஜூ

என்று முடிந்திருந்தது.

தினமலரில் கும்மிகள் அடிக்க மற்றும் படிக்க விரும்புவர்களா நீங்கள் ?

தினமலர் என் ஆர் ஐ கேள்விகள் என்ற பக்கத்தை திறந்தே வைத்து இருக்கிறது. புதிய சேவை(?) என்று தெரிகிறது இங்கே பதிவுலகில் பரப்ப(ரப்பாக்க) முடியாததை அங்கே பரப்ப(ரப்பாக்க)லாம். முழுச்சுதந்திரம் இருக்கும் போல இருக்கிறது.

படித்ததில் சிலவற்றை தருகிறேன்.

GENERAL
071203.சபரிமலை!! (Babu Vinothkumar,India,Coimbatore)

சபரிமலை!! போனவாரம் பாதயாத்திரையாக சபரிமலைக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு வருடமும் போவதுதான்.. இந்த முறை எனது நண்பரையும் அழைத்துக்கொண்டு.. சில விசயங்களை இங்கே அறிவித்தே ஆக வேண்டிய கட்டாயம்.. சுகாதாரம்: சுட்டுப்போட்டாலும் சுகாதாரத்தை பற்றிய எண்ணம் இந்த கேரள மக்களுக்கு வரவே வராது.. பம்பா நதியில் தினமும் லட்சக்கணக்கான மக்கள் குளித்து உடை மாற்றி, துணிகளை துவைத்து மாசு விளைவிக்கிரார்கள். தெளிந்த நீராய் வரும் நதி சில நிமிடங்களில் சாக்கடையாய் மாறும் அதிசயத்தை இங்கே காணலாம். ஒருவழியாக குளித்து( புனித நதியாயிற்றே) மலைக்கு புறப்பட தயாராணோம். வரிசையாய் கடைகள்.. விற்பது என்னோவோ சாதாரண அன்றாடம் உபயோகிக்கும் பொருட்கள்தான். விலை மட்டும் MRP இல் 75% (கூட்டி) கொடுக்கணும். உதாரணமாக 1 லிட்டர் மீனரல் வாட்டர் ரூபாய் 15 ?! தேங்காய் எண்ணை சின்ன பாக்கெட் 3 ரூபாய்?! கோல்ட் ஃபில்டர் 5 ரூபாய்?! கிங்ஸ் 7 ரூபாய்?! இப்படியாக ஒரு புது உலகத்துக்கு வந்த பின்னர், நமது வயிறு சிறிது கலக்கமடையவே.. கழிப்பிடம் தேடினோம். இருந்தது!!! 2ரூபாய் கொடுத்து நுழைவு பெற்று உள்ளே போனால் அடங்கப்பா.. உள்ளே போனால் குடலை பிடுங்கும் நாற்றம்.. பீடி சிகரெட் துண்டுகள் மூலையில் குவீயலாய்...

மேலும் அங்கே படிங்க....
ஐயப்ப சாமிகள் பீடிக் குடிக்கலாம் ...பீர் தான் குடிக்கக் கூடாது


POLITICS
061207.reply to 281107.Thaslima nasreen should be throw away from india (kannal,india,madras) (FRANKLIN ANTONY,INDIA,TIRUNELVELI)

திரு கண்ணால் அவர்களே உங்களின் வாதத்தை பார்த்து மிகவும் வெட்கப்டுகேறேன். என்றாவது நீங்கள் சுதந்திரத்தின் போது இந்தியாவில் இருந்து பாகிஸ்தான் சென்று சேர்த்த பாகிஸ்தானியாரிடம் பேசியத்ுண்டா ? பாகிஸ்தானில் எவ்வாறு நடத்தப்படுகிறாக்காள் என்று கேளுங்கள் அப்போதுதான் என் தாய்னும் மேலான என் இந்திய தேசம் என்னையும் உங்களையும் எவ்வளாய் நேசிக்கிராள் என்று புரியும். நீங்கள் நினைப்பது போல் இந்தியாவில் உள்ள இந்துக்கள் அனைவரும் இந்து காட்சிக்கு ஒட்டு போடவேண்டும் என்று நினைத்தால் பிரதமர் நார்கலில் இந்து காட்சியை தவிர வேறு யாராவது அமர முடியுமா. பிராமணர்களை ஒற்றர்கள் என்று ஒரு ஒட்டு மொத்த சமூகத்தையும் சொல்ல உங்களிலுக்கு துணிவு உண்டென்றால் ,அவர்களுக்கு உங்கள் சமூகத்தை சொல்ல எவ்வளவு எந்ரம் ஆகும் , தரம் தாழ்ந்து போக எல்லா இந்தியந்நும் கண்ணால் அல்ல சுந்தந்திர போராட்ட தியகிகளையே சமூகத்தின் பேரால் பிரிதித்த நீங்கள்,.....


மேலும் அங்கே படிங்க..
புரியுதுங்க இந்தியா - இந்து - இந்தி ... இதில் இந்தி மிஸ்ஸிங் அடுத்த தடவை சேர்த்து 'கொல்லுங்கள்'


GENERAL
061203.பெரியார் சிலை (BHARATH,INDIA,CHENNAI)

பெரியாருக்கு 95 அடி உயர சிலை வைக்கப்போகிறதாம் தமிழக அரசு. 95 அடி உயர சிலை என்றால் பீடம் பெரியதாயிருக்கும். எனவே அந்த பீடத்தில் பெரியார் கூறிய 1)தமிழ் ஒரு காட்டுமிராண்டி மொழி 2)திருக்குறள் போன்ற தமிழ் இலக்கியங்கள் எல்லாம் உதவாக்கரை.3)தமிழில் கற்பதால் எந்தப்பயனுமில்லை;ஆங்கிலம் கற்பதே சிறந்தது.4)ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்கக்கூடாது.அப்படியே கொடுத்தாலும் தமிழகத்தை மட்டுமாவது ஆங்கிலேய ஆட்சியின் கீழ் வைத்துக்கொள்ள வேண்டும்.5)பெண்கள் எத்தனை ஆண்களை வேண்டுமானாலும் வைத்துக்கொள்ளலாம் 6)பத்தினியாயிருப்பது முட்டாள்தனம் 7)நபிகள் நாயகம் ஒரு மகான் அல்ல 8)குடிப்பது தவறில்லை 9)அண்ணா பணம் சம்பாதிப்ப‌த‌ற்காக‌வே தி.மு.க‌.வை ஆர‌ம்பித்தார் 10)சுதந்திர தின‌ம் துக்க‌ தினம் போன்ற‌ கருத்துகளையும் பொறித்து வைக்க வேண்டும். இவைகள் எல்லாம் ஒரு புறமிருக்கட்டும் பெரியார் ஒரு த‌மிழ‌ரே அல்ல‌.அவ‌ர் எப்ப‌டி த‌மிழ‌ர்க‌ளுக்கு த‌லைவ‌ராக‌ முடியும்?

சரிதான்... சு.சாமியையும், மணிசங்கர் ஐய்யரையும் தமிழர் தலைவராக ஆக்கிடுவோம், அவா தான் தமிழர்.. நன்னாவும் தமிழ்பேஷுராள்

GENERAL
051207.கண்மூடித்தனமான அமெரிக்க எதிர்ப்பு தேவையா ? (BHARATH,INDIA,CHENNAI)


இந்தியா வேகமாக வளர்ந்து வரும் நாடு. உலக அரங்கில் முதன்மை இடத்தை பிடிக்க தகுதியுடைய‌ நாடு. இதன் அயலுறவுக்கொள்கை சுயச்சார்புடையதாக இருக்க வேண்டும்.அதே வேளையில் எந்த நாட்டிடமும் தீண்டாமையை கடைப்பிடிக்க வேண்டிய அவசியமுமில்லை. இன்றைய உலகின் மிகப்பெரும் ஆபத்து அமெரிக்கா என்பதை விட பெருகி வரும் பயங்கரவாதம் என்பதே சரி . இந்தியா உட்பட உலகின் பல்வேறு நாடுகள் பயங்கரவாதத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கின்றன.

சரி போய் குரங்கு அப்பம் பங்கு வைத்த கதையை படிச்சுட்டு வாங்கோ

GENERAL
021206.தமிழில் டைப் செய்ய (manikandan,india,kudanthai)


தமிழில் டைப் செய்ய www.quillpad.com/tamilக்கு செல்லவும்.

உண்மையிலேயே இது மேட்டர், நாங்கள் லிங்கை ப்ளாக்கில் சேர்த்துக் கொள்கிறோம்

GENERAL
011208.are we against hindi? (ilanchelvi selvamani, trichy) (ilanchelvi selvamani,india,tiruchirappalli)


நண்பர் ஒருவர் இந்தி படிக்காதது தனது கருத்தை வெளியிட்டிருந்தார். அவருக்கு இதோ என் பதில். தமிழ்நாட்டில் இந்திக்கு எதிர்ப்பாளர் எவருமில்லை. இந்தி திணிப்பதைத்தான் எதிர்க்கிறோம். காட்டாயமாக இந்தி படிக்க வேண்டும் என்பதைத்தான் எதிர்க்கிறோம். இந்தி படிப்பதற்கு மிகவும் எளிமையானது. அதில் கற்று கரை தேற ஒன்றுமே இல்லை. இந்தி பல பள்ளிகளில் 2ஆம் மொழியாக உள்ளது. தனியார் பலர் இந்தி பயிற்சி வகுப்பு எடுக்கிறார்கள். இந்தி பிரசார சபா என்று ஒன்று தென்னிந்திய மாநிலங்களில் இருக்கிறது. எல்லா மாட்டங்களிலும் இந்தி பயிற்றுவிக்கப்படுகிறது. தேவை உள்ளோர், இந்தி ஆதரவு காட்டுவோர் தாராளமாக இந்தி படிக்கலாம். இது வரை இந்தி கற்க கூடாது என்றோ பயிற்றுவிக்கக்கூடாது என்றோ யாரும் தடை சொல்லவில்லை. இந்தி மட்டுமல்ல எந்த மொழியை கற்றுக்கொன்டாலும் அது வசதிதான். கூடுதல் தகுதிதான். ஆனால் இலக்கிய சிறப்பு வாய்ந்த பழமையான தம் தாய் மொழியாம் தமிழை நல்ல படியாக கற்றுத் தேற வேண்டும் என்ற எண்ணம் சிறிதும் இல்லாமல் இந்திக்கு வக்காலத்து வாங்கும் நண்பரை எனென்பது? சமஸ்கிருதத்திற்கு கால் வருடியதில் நம் மொழி தேய்ந்து தேய்ந்து பிரித்துணர முடியாத அளவிற்கு சிதைந்து கிடக்கிறதே அது போதாதா? இந்திக்கு வேறு காவடி தூக்கி உள்ளதையும் இழக்க வேண்டுமா?=== இளஞ்செல்வி செல்வமணி,திருச்சிராப்பள்ளி, தமிழ்நாடு. குறித்து


இது உச்சந்தலையில் நச் ..

301108.முடி ஆசை. (astromaniam,india,Chennai)


ஒருவரைப் பற்றி அறிய அவரது கை ரேகைகளையும் மச்சங்களையும் பெயரையும் பார்த்து பலன் சொல்கின்றனர். கையில் ஒரு குச்சியை பிடித்து ஆட்டியபடி குறி சொல்கிறார்கள். கிளிகளை பழக்கி ஒருவது எதிர்காலத்தை கிளி எடுத்துப் போடும் அட்டையிலிருந்து படித்து சொல்கிறார்கள். ஒருவரது தலை முடியை பார்த்து அவர் எப்படிப்பட்டவர் என்பதையும் சிலர் கண்டு பிடித்து பலன் சொல்கின்றனர். ஆனால் ஒவ்வொரு அரசியல் வாதியும் எத்தனை மனைவிகள் வைத்துள்ளார் எவ்வளவு ரொக்க கையிருப்பு சொத்து சேர்த்து வைத்துள்ளார். பணம் சம்பாதிப்பதில் எவ்வளவு தில்லு முல்லுகள் செய்துள்ளார் என்பதை யாராலும் இதுவரை சரியாக கணித்து சொல்லமுடியவில்லை. சிக்கல் சுருட்டைகள் இல்லாமல் தலை முடி மிருதுவாக உள்ளவர் மிருதுவான சரீரத்துடன் உறுதியான உள்ளம் உடையவர். அடர்ந்த செம்பட்டை முடி உள்ளவர் உலகாயத அனுபவமுள்ளவர். அவர் பொறுமைக்கும் பதட்டமின்மைக்கும் சொந்தக்காரர். கருத்த (முடிக்கு மை அடிப்பவர்கள் தவிர )அடர்ந்த முடி உடையவர் எளிதில் உணர்ச்சி வசப்படுபவர். முடி அழுத்தமாகவும் கருமையுடன் தடித்து உள்ளவராயின் அவரது வெளித்தோற்றம் முரடாகவும் உள்ளம் கோழைத்தனமாகவும் இருப்பார். அவருக்கு எதிலும் பற்றாக்குறை இருந்து கொண்டே இருக்கும். சுருள் முடிக்காரர் அவரது தோற்றத்துக்கும் உள்ளத்துக்கும் சம்பந்தமில்லாதவர். பார்த்தால் சாது பாய்ந்தால் புலி. ஆனால் வழுக்கை தலையர்களுக்கு மட்டும் முடி ஜோசியம் கண்டு பிடிக்கப்படவில்லை.


- இதை படிச்சவுடனே சிரிப்பை அடக்க 'முடி'யில்லை....

291110.கருப்பில் வெள்ளை. (astromaniam,india,Chennai)


பெங்களூர் பிரேம். அரசியல் வாதிகள் வெள்ளை நிற வேட்டி ஷர்ட் அணிவது கொள்ளை அடிக்கும் கருப்பு பணத்தை வெள்ளையாக்க.

- இது புதுக்கவிதை

GENERAL
271105.பணம் இல்லாதவன் சாக வேண்டும்? (hayyram,india,chennai)


சென்னை தற்பொழுது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வாழவே முடியாத நகரமாக மாறிவருகிறது. மென்பொருள் நிறுவனத்தில் வேலை செய்பவர்கள் மட்டுமே வாழ முடியும் நாடாக நகரங்களை மாற்றிவருகின்றனர். எட்டாயிரம் அல்லது பத்தாயிரம் சம்பளம் வாங்கும் நடுத்தர குடும்ப வர்கத்தினர் அதற்கும் குறைவான வருமானத்தில் வாழ்பவர்கள் வாழ்ந்தால் என்ன செத்தால் என்ன என்ற கதையில் தான் விலைவாசி மற்றும் வீட்டுவாடகை ஏறிப்போகிறது. மனிதத் தன்மையற்ற இந்த வாடகை விலையேற்றம் பெருத்த துன்பத்திற்கு ஆளாக்கியிறுக்கிறது. 2000 வாடகை கொடுத்து வந்தவர்களிடம் கூசாமல் 5000 கொடுத்தால் கொடுங்கள் இல்லையேல் காலி செய்யுங்கள் என்று சொல்லும் நிலைமை அதிகமில்லை ஒரே வருடத்தில் உண்டாகியிருப்பது மிகவும் அதிர்ச்சிக்குரிய சமூக அவலம். அரசாங்கம் நடத்துவது தொழிலாகி விட்டது. அரசியல் லாபம் தரும் வியாபாரமாகி விட்டது. இனி மக்களுக்காக யோசிக்க யாருமே இல்லை. பணமிருப்பவன் தான் வாழமுடியும், இல்லாதவன் எங்காவது ஓடிப்பொகவேண்டும் இல்லை சாக வேண்டும். கேட்பார் யாரும் இல்லை. இது தான் இன்றைய நாட்டின் நிலை, இதை எழுதும் எனது நிலையும் கூட!.

சென்னை தற்பொழுது ஏழைகள் மற்றும் நடுத்தர மக்கள் வாழவே முடியாத நகரமாக மாறிவருகிறது. இதற்கு காரணம் திமுக ஆட்சி என்று சொல்வார் என்று பார்த்தேன் ஏமாற்றிவிட்டார் :))

POLITICS
271103.தி.மு.க. அரசின் சாதனை (BHARATH,INDIA,CHENNAI)


தமிழக மக்கள் விரைவில் மின்சார வெட்டை அனுபவிக்கப்போகிறார்கள் . தமிழகத்திற்கு தேவைப்படும் மின்சார அள்வில் சுமார் 1500 மெகா வாட் வரை பற்றாக்குறை ஏற்பட்டிருக்கிறது. கோடை காலத்தில் இந்தப் பற்றாக்குறை மேலும் அதிகரிக்கலாம். கடந்த 10 வருடங்களாக தமிழகத்தில் மின்சார வெட்டு என்பதே இல்லாமல் இருந்தது . தமிழக மக்களுக்கு இந்த வருட கோடை காலம் அனலாய் இருக்கப்போகிறது . இது தி.மு.க. அரசின் பரிசு.

மேலே இருந்த ஆசையை பாரத்(இந்திய புதல்வன்) நிறைவேற்றிவிட்டார்.


இன்னும் நிறைய இருக்கு அங்கேயே படிங்க, முடிஞ்சா ஆட்டையில் அங்கே கலந்துகொள்ளுங்க

6 டிசம்பர், 2007

அதெல்லாம் ஆம்பளைக்குத்தான் சரிவரும் ! (சிறுகதை)

"என்னங்க...இரண்டு குழந்தை ஆச்சு..."

"ஆமாம்... ஒரு பையன்... ஒரு பொண்ணு, இப்ப என்ன செய்யனும் ? மூன்றாவது வேண்டுமா ?" கண் அடித்தான்.

"ஆசையைப் பாரேன், நான் பத்து பெத்து போட ரெடி, வளர்த்து எடுக்கனும் முடிவு பண்ணிக் கொள்ளுங்கள்"

"ம் அதைச் சொல்லியே பயமுறுத்தாதே, வேறு என்ன சொன்னே அதைச் சொல்லு... சொன்னாதானே தெரியும் ?"

"ஒண்ணும் தெரியாத மாதிரி பேசுங்க !"

"பீடிகை போடாதே விசயத்துக்கு வா"

"சொன்னா கோவப்படாதிங்க"

"ம், சொல்லு"

"இரண்டாவது பெண் குழந்தைக்கு பிறகு, நாம யாரோ ஒருவர் நிறைவேற்றிக் கொள்ளலாம் என்று முடிவு செய்ததை... இரண்டாவது பெண் குழந்தை ஆச்சு... ஒருவருசம் ஆகி போச்சு"

"ம்...புரியுது..."

"நீங்களே செய்து கொள்ளுங்கள், ஒவ்வொரு நாளும், ஏதாவது அசம்பாவிதமாக நடந்துடுமோன்னு வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்கிறேன்"

"...ம் ... பொம்பளைங்க எதையாவது நினைச்சு புலம்பிக்கிட்டு தானே இருப்பிங்க"

"ம்கும்... சந்தட்டி சாக்கில் பொம்பளைங்களை குறைசொல்லாவிட்டால் உங்களுக்கு ஆகாதே.....என் பயம் எனக்கு "

"சரி செஞ்சிடலாம், நீ ரெடியா ?"

"நான் மாட்டேன்...அதெல்லாம் ஆம்பளைக்குத்தான் சரிவரும், எனக்கு நிறைவேற்றினால் சரிவராது, எனது தோழிகள் கூட ஆம்பளைக்கு நிறைவேற்றுவது தான் சரி, மூன்று மாதத்தில் பழையபடி தலையை கோதிவிட்டு மைனார் போல நடப்பாங்க, என்று சொல்றாங்க, நான் செய்து கொண்டால் அப்பறம் வெளியில் தலையை காட்டவே வெட்க்கமாக இருக்கும்"

"இதுக்கெல்லாம் வெட்கப்படலாமா ? "

"ஒரு பெண்ணாக இருந்தால் உங்களுக்கு புரியும், அழகான கூந்தல் உள்ள எந்த பெண்ணும் தன் கூந்தலை இழக்க முன்வரமாட்டாள்..."

"உனக்கு மொட்டை அடித்தால் ... எனக்கே உன்னை பார்க்கப் பிடிக்காதுதான்"

"அப்பாடா...இப்போதாவது புரிகிறதே... கணவன் - மனைவி பேசுவதை ஒட்டுக் கேட்கிறவர்களுக்கு புரியனுமே, கு.க என்று நினைத்துட போறாங்க ...விளக்கமாக சொல்லுங்க பார்ப்போம்..."

"இதுவும் கு.க தான் அதாவது குட்டிக் கதை ... இரண்டாவது பெண் குழந்தை பிறந்தால் யாரோ ஒருவருக்கு மொட்டை போடுவதாக, குல தெய்வத்துக்கு வேண்டிக் கொண்டதை, நானே நிறைவேற்றிக் கொள்கிறேன்"

"அப்பாடா...உங்களுக்கு மொட்டை போட்டால் 'சிவாஜி த பாஸ்' மாதிரியே இருப்பிங்க"

"க்கும், இதுக்கு ஒன்னும் கொறைச்சல் இல்லை, இனியாவது தெய்வகுத்தம் வந்து அசம்பாவிதம் நடக்கும் என்று புலம்பாமல் இருந்தால் சரி...எப்பவும் மணிபர்ஸ்க்கு நடக்கும் மோசடிக்கு மாற்றாக இப்போ என் தலையை கொடுக்கிறேன்"

"சரிங்க...அப்படியே நம்ம பொண்ணுக்கும் முதல் மொட்டை போட்டு வந்துடுவோம்"

----------

பின்குறிப்பு : இது போட்டிக்கு அல்ல.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்