பின்பற்றுபவர்கள்

17 ஆகஸ்ட், 2006

அறிவுரையும் அக்கரையும் !

இரண்டும் ஒன்றுபோல் பொருள் தந்தாலும். புரிந்துகொள்ளுதல் என்ற நிலையில் பொருள் மாறுபடுகிறது. அறிவுரை சொல்வது அல்வா சாப்பிடுவது போல் எல்லோருக்கும் எளிது. தம் மேதாவித்தனத்தை காட்டுவதற்கே அறிவுரையை பெரும்பாலோர் கையில் எடுக்கின்றனர். இரு காதுடன் யாராவது வாய் பேசாதவர்கள் எக்கு தப்பாக மாட்டிவிட்டால் போதும், 'இந்த பிடி அட்வைஸ்' என்று நம் முழுத்திறமையையும் கேட்பவர் காது இரத்தம் வழியும் வரை நாம் விடுவதில்லை.

சரி அறிவுரை எங்கு செல்லுபடியாகிறது. நம்மை யாராவது மதித்தால், அப்படி நம்மை மதிப்பவர் விரும்பிக் கேட்டுக் கொண்டால் மட்டுமே அறிவுரை அறிவுரையாக கேட்கப்படும். அப்படி இல்லாமல் வழியே சென்று அறிவுரை சொல்கிற பேர்வழியாக நம்மை நினைத்துக் கொண்டு 'இதை நீ செய்வதைக் காட்டிலும் உருப்படியாக வேறு ஏதாவது செய்' என்று சொன்னால் அது அறிவுரையாகப் பார்க்கப்படுமா ? இல்லவே இல்லை அது அகம்பாவ உரை என்று புறந்தள்ளிவிடுவர். நாம் பிறருக்கு அறிவுரை சொல்லும் முன் நாம்மை முதலில் பார்த்துக் கொள்ள வேண்டும். அதாவது மற்றவர்கள் அறிவுறுத்தலை நாம் ஏற்றுக் கொள்கிறோமா, அறிவுரை சொல்வதற்கான சூழல் இருக்கிறதா, எல்லாவற்றையும் விட நமக்கு அந்த தகுதி இருக்கிறதா என்று. அப்படி சீர்தூக்கிப் பார்க்காதவர் ஏதோ பொது நல விரும்பி போல் அவதாரம் எடுக்க முயன்றால் அவருக்கு ஏச்சுக்களும் பேச்சுக்களும் மட்டுமே மிஞ்சும்.

அறிவுரை சொல்பவர் ஆசானாக இருக்கவேண்டும், இல்லை என்றால் அனுபவப் பாடம் படித்தவரோ, உணர்ந்தவராக இருக்கவேண்டும், அத்தகையவரை யாராவது இனம் கண்டு 'இந்த பிரச்சனைக்கு என்ன தீர்வு ?' என்று கேட்டால் மட்டுமே அறிவுரை சொல்லலாம். இல்லை என்றால் ஆபத்தில் இவர் சிக்கப் போகிறார், இதனால் இவருக்கு பெரும் துன்பமோ கேடோ நிகழப் போகிறது என்று முன் கூட்டியோ நாம் உணர்ந்திருந்தால் அந்த நபருக்கு அறிவுரை சொல்லலாம். அல்லது இதைச் செய்வதால் நீங்கள் போற்றப்படுவீர்கள் என்று அவரே உணராததை ஒரு வேளை நாம் நன்கு உணர்ந்திருந்தால் அறிவுறுத்தலாம். செல்லுபடியாகாது என்று தெரிந்தே அறிவுரை சொல்லப் போனால் பெரும்பாலும் அவமானமே மிஞ்சும்.

அக்கரைக்கும் அறிவுரைக்கும் நூலிழைதான் வேறுபாடு, இதைச் சரியாகப் புரிந்து கொள்ளாததால் தான் உறவுகளுக்குள் விரிசல் ஏற்படுகிறது. நமக்கு வேண்டியவர்கள் நமக்கு அறிவுரை சொன்னால், உடனே என்ன சொல்லுகிறார் எனக் கவனியாமல், உடனே சொல்பவர் தகுதியை எடை போடக் கூடாது. மாறாக எதற்காக இவர் நமக்கு அறிவுரை சொல்கிறார் என்று பார்க்க வேண்டும். அவ்வாறு பார்க்கும் போது நம்மால் ஒரு விசயத்தை நன்கு புரிந்து கொள்ள முடியும். அதாவது நம் மீது இவர் வைத்துள்ள அன்பின் காரணத்தால் நமக்கு அறிவுரை சொல்கிறார் அது அறிவுரையின் பெயரில் செலுத்தும் அக்கரை. அங்கே அறிவுரை அக்கரையாக பார்க்கப் படாவிட்டால் ஈகோ (ஆணவம்,ஆகம்பாவம்
) தலை தூக்க ஆரம்பித்து யார் அறிவாளி என்ற எதிர்க்கேள்வி ஏற்பட்டு உறவுகள் சீர்கெட ஆரம்பிக்கும்.

ஆகவே நண்பர்களோ, சொந்தங்களோ எதையாவது அறிவுறுத்தினால் நாம் அங்கு பார்க்க வேண்டியது அன்பின் வெளிப்பாட்டில் மறைமுகமாக சொல்லப்படுவது அறிவுரை மட்டின்றி அதையும் தாண்டிய நம் மீதான அக்கரை!

17/ஆகஸ்ட்/2006

16 ஆகஸ்ட், 2006

சர்சைக்குறிய பதிவுகளுக்கு பின்னூட்டம் !

வலைப்பதிவுகளில் குழுக்கள் அதிகமாகிவிட்டதால் புழுக்கம் அதிகமாகிவிட்டது. யாரை எவ்வாறு கவிழ்ப்பது என்ற போட்டியில், எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன. இதில் தமிழை தமிழிலேயே எழுதி வசைபாடுபவர்கள், சாதி சார்ந்த குழுக்கள், நமீத ரசிகர்மன்றம் இன்னும் எத்தனையோ அடக்கம்.

விவாதங்கள் ஆரோக்கியமானதாக செல்வதும், அறிவுப் பூர்வமாக இருப்பது அவசியம். சில வலைப்பதிவாளர்கள் எழுத்தில் எதிராளிகளே வியக்கும் வண்ணம் அழகாக சுவைபட எழுதுகிறார்கள். எதிராளிகளை தங்களின் நிலைப்பாடுகளினால் உள்ளுக்குள் பாராட்டினாலும் வெளிப்படைய பாராட்டமுடியாமல் பலர் தவிர்கின்றனர். எதிராளிகளின் கட்டுரைகளில் வைக்கப்படும் சில 'பஞ்ச்' நகைச்சுவையாகவோ அல்லது நச் என்றோ இருக்கும். கட்டுரை முழுவதிற்கும் நாம் எதிர்நிலையில் இருந்தாலும் சில 'பஞ்ச்' ஏற்றுக் கொள்ளக் கூடியதாகவோ, ரசிக்கக் கூடியதாகவோ இருக்கும்.

எதிர்நிலையில் எழுதுவர் என்பதால் நாம் அவர்களை பாராட்டாமல் இருந்துவிடுவதும் உண்டு. எதிராளி என்பதால் நாம் பாராட்டமுடியாமல் போவதற்குக் காரணம் நாம் ஒரு குழுவை சார்ந்து இருப்பதுதான். 'நம்ம ஆளுங்க இதுக்கு பின்னூட்டம் போட்ட என்ன நெனச்சிக்குவாங்களோ' என்ற ஒரு தவறான நினைப்புதான் தயக்கத்திற்குக் காரணம். குழுக்களில் உறுப்பினர்களுக்குள் அவ்வாறு நினைப்பதும் இயற்க்கை தான். இதையெல்லாம் மீறி நாம் எதிராளிகளை எவ்வாறு பாராட்டுவது ?

கவலையை விடுங்கள். உங்கள் எதிராளி எழுதும் கட்டுரையில் உங்களுக்கு பிடித்த சர்சையில் சிக்காத வரிகளை தனியே எடுத்துப் போடுங்கள். உதாரணத்திற்கு

இதே கட்டுரையில் மேலே கண்டதை எடுத்து இங்கே போட்டுக்காட்டுகிறேன், அதற்கான பின்னூட்டத்தை எப்படி எழுதுவது (ஒரு சாம்பிள்) என்று காட்டுகிறேன்

******************************************
//எழுத்துச் சுதந்திரம், கருத்துச் சுதந்திரம் மற்றும் இன்னபிற என்ற பெயரில் கல்லரையான அரசியல் தலைவர்கள் பெயர்கள் கூட தோண்டி எடுக்கப்பட்டு சூடான விவாதங்கள் நடைபெறுகின்றன //

கோவி.கண்ணன் அவர்களே ! எழுத்து சுதந்திரம் என்ற பெயரில் அமரரான தலைவர்களை இழிவு படுத்துவதை நகைச்சுவையாக சொல்லியிருக்கிறீர்கள். ரசித்தேன் ! பாராட்டுக்கள் !!

பின்குறிப்பு : எனது இந்த பின்னூட்டம் மேற்கண்ட வரிகளுக்குதான் ... முழுக்கட்டுரைக்கான கருத்து அல்ல!

******************************************

இப்படி ஒரு பின்னூட்டம் போட்டுவிட்டால் எதிராளி முதலில் உங்கள் பாராட்டும் குணத்திற்காக சந்தோசப்பட்டு இணக்கம் ஏற்படும். அதன்மூலம் நல்லதொரு புரிந்துணர்வு வளர வழிசெய்யும். அதே சமயத்தில் உங்கள் குழுவில் இருக்கும் மற்ற உறுப்பினர்களும் நீங்கள் தவறான பாதையில் சென்று கொண்டிருப்பதாகக் கூறி உங்களுக்கு அவசர தனிமடலும் அனுப்பமாட்டார்கள். இதை சரியாக நாம் செய்யும் போது போலிப் பதிவர்கள் பக்கத்திற்குக் கூட சென்று நம்மால் பின்னூட்டம் இடமுடியும்

பின்குறிப்பு : வலைப்பதிவாளர்கள் நினைவு கொள்ள வேண்டியது ஒன்றே ஒன்று, உங்கள் கட்டுரைக்கு யாராவது பின்னூட்டம் போட்டார்கள் என்றால் அவர்கள் உங்கள் முழுக்கட்டுரையையும் ஆதரிக்கிறார்கள் என்று தவறாக எண்ணி விடாதிர்கள். அது ஒரு தவறான புரிதல்.


எதிராளிகளாக இருந்தால் என்ன ? எதோ ஒரு நல்ல செயலுக்காக நிச்சயம் பாராட்டலாம் !

14 ஆகஸ்ட், 2006

புதிய "தமிழ்மணம்" நிர்வாகத்தினருக்கு வாழ்த்துக்கள்

தமிழ்மண நிர்வாகக் குழுவில் மாற்றம் நடைபெற்று அதன் மூலம்,
ஆகஸ்ட் 13ம் தேதி முதல் "தமிழ்மணம்" தமிழ் மீடியா இண்டர்நேஷனல் நிறுவனத்தால் ஏற்று நடத்தப்படுகிறது என்று தெரியவருகிறது.

தமிழ் மீடியா இண்டர்நேஷனல் - புதிய பொறுப்பாளர்களுக்கு வலை அன்பர்கள் சார்பாக (?) வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

அதே சமயத்தில் முன்னாள் தமிழ்மணம் நிர்வாகத்திற்கும் பாகுபாடின்றி சிறந்த சேவை வழங்கயதற்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம் !

12 ஆகஸ்ட், 2006

இஸ்லாம் என்றால் தீவிரவாத மதமா ?

தனிமனிதர்கள், குழுக்கள் ஒரு இழி செயலை செய்தால் பெரும்பாலும் அந்த குழுக்களைச் சார்ந்த மதம் வெளியில் தெரியாது. அந்த குழுக்களின் அல்லது அந்த தனிமனிதனின் செயல் மட்டுமே விமர்சிக்கப்படும் கண்டிக்கப்படும்.


நியூயார்க செப் 11 இரட்டைக் கோபுர தாக்குதல் வரை அப்படித்தான் இருநதது. அதன் பிறகு தீவிரவாதிகள் மீதான பார்வை பெயரை வைத்து மதம் சார்ந்ததாக போதிக்கப்பட்டு, இஸ்லாம் என்ற மதத்தையே இழிவு படுத்தும் செயல் நடந்து வருகிறது. இஸ்லாமைப் பின்பற்றுபவர் அந்த மதத்தில் உள்ள பெயரைத் தானே வைத்திருபார்கள். தீவிரவாதியின் பெயரை மட்டும் பார்த்துவிட்டு அவன் எந்த (கேடுகெட்ட) காரணத்திற்கு செய்கிறான் என்று பார்க்காமல் உடனடியாக இஸ்லாம் மீது புழுதிவாரி தூற்ற ஒரு நல்ல சந்தர்பமாக எதிரிகள் வதந்திகளை கிளப்பிவிட்டு இஸ்லாம் பற்றிய ஒரு தவறான கருத்தை விதைத்து வருகிறார்கள்.

உண்மையான (ஈமான் கொண்ட) முஸ்லிம்களோ ... இறைவேதமாக சொல்லபடுகின்ற திருக்குரானோ தீவிரவாதம் பேசுகிறதா என்று பார்த்தால் அவ்வாறு இல்லை. கீதையைப் போலவே போர்களத்தில் நிற்கும் போது என்ன சிந்திக்க வேண்டுமோ அதை மட்டும் போதிக்கிறது. அவற்றை கவணத்தில் கொள்ளாமல் இஸ்லாம் போரைத் தூண்டுவதாக இஸ்லாம் மார்க்கத்தை தூற்றுபவர்களும், அப்பாவி மக்களின் ஆதரவு கிடைக்கும் என்ற நப்பாசையில் தீவிரவாதிகளும் திருக்குரானை தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.

கொடுங்கோல் ஆட்சி நடத்திய ஒளரங்கசீப்பை கடைசியில் மனிதன் ஆக்கியது திருக்குரான். வரலாறுகளில் தங்களுக்கு சாதகாமான தனிமனித தவறுகளை மாட்டும் படித்துவிட்டு ஒட்டு மொத்தமாக இஸ்லாம் மார்க்கத்துக்கு எதிராக தங்கள் விசவிதைகளை தொடர்ந்து பலர் விதைத்து வருகின்றனர். இவற்றை பல இஸ்லாமிய சகோதரர்கள் ஞாயமான முறையில் தான் பதிலளித்தும் வருகின்றனர்.

இஸ்லாமிய சகோதரர்கள் யாரும் ஒட்டு மொத்த மாற்று மதத்தினரை மதத்தை குறிப்பிட்டு குறை சொல்வதில்லை. ஆனால் இஸ்லாமிய சகோதரர்களையும், இஸ்லாமையும் ஒட்டுமொத்தமாக தீவிரவாதிகளாக காட்டும் முயற்சி ஒரு சிலரால் தொடர்ந்து நடந்துவருவதும் பலருக்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது.

இஸ்லாமியர்கள் தன் மதத்தைச் சேர்ந்தவன் தீவிரவாதி என்றாலும் தயங்காமல் பிடித்துக் கொடுத்துவிடுவார்கள் என்பதற்கு சிறந்த எடுத்துக் காட்டாக தற்போதைய மாபெரும் தீவிரவாத செயலை காட்டிக் கொடுத்து முறியடிக்கப்பட்டது தெரியவந்திருக்கிறது. அந்த செயல் முறியடிக்கப் பட்டிருக்காவிட்டால், இன்னும் ஒரு செப். 11 நிகழ்வை உலகம் சந்தித்திருக்கும் என்று எச்சரிக்கை செய்திருக்கிறார்கள். பாகிஸ்தான் அரசின் இந்த செயல் மாற்று மதத்தினர் இஸ்லாம் மீது மேலும் நம்பிக்கை கொள்ளச் செய்கிறது. நம் இருநாடுகளுக்கிடையே காஷ்மிர் பிரச்சனை இருந்தாலும் அதிபர் முஷ்ரப்பையும், பாகிஸ்தான் அரசையும் மனம் திறந்து பாராட்டலாம்.

இஸ்லாமில் தீவிரவாதம் இல்லை என்பதை எல்லோரும் உணரும் சம்பவமாகவும்அ, மெய்ப்பிக்கும் விதமாக இது நடந்துள்ளது.

ஒப்புக்கொள்ள பெரும்தன்மை இல்லாதவர்கள் முஷ்ரப் அமெரிகாவின் பாராட்டும் பரிவையும் எதிர்பார்த்துத் தான் இதைச்செய்தார் என்றும் கூட சொல்வார்கள் !

இந்த ஆக்கத்திற்கு
ஊக்கமளித்த தொடர்புடைய சுட்டிகள் :
உறவுக்குக் கைகொடுப்போம்! - என்று கையை முதலில் கொடுத்த திரு எஸ்கே
பாகிஸ்தானுக்கு நன்றி - சொன்ன திரு சிவபாலன்

8 ஆகஸ்ட், 2006

பல்வேறு தமிழ் இணைய தளங்களுக்கு வேண்டும் பொதுக் கட்டணம் !

பாலச்சந்தர் கனேசன் ... குமுதம் கட்டணத் தளமாகிறது என்று குறிப்பிட்டிருந்தார் ... ஏறக்குறைய அனைத்து இணைய செய்த்தித்தாள்கள் மற்றும் வார இதழ்கள் கட்டண தளமாகிவிட்டது... ஓசி பேப்பர் படிக்கும் என்போன்றவர்களுக்கு தலையில் பலத்த இடி ...! குமுதம் அரசு பதில்கள் படிக்கவில்லையென்றால் தூக்கம் வராதவர்களில் நானும் ஒருவன் :)

நம் தமிழ் செய்தி நிறுவணங்கள் சில வழிமுறைகளை கையாளலாம்... இதன் மூலம் கட்டணத்தளமாக இருந்தாலும் பலர் சென்று படிப்பதற்கு பயனுறும். அதாவது எதாவது பொது நிறுவணங்கள் மூலம் (like paypal) கட்டணம் வசூலித்து அதன் உறுப்பினர்களாக இருக்கும் பத்திரைக்களுக்கும், அதன் சந்தா தாரர்களுக்கும் எல்லா பத்திரிக்கைகளும் படிப்பதற்கு ஏதுவாக மாற்றப்பட முடியும்.

இதன் மூலம் பல்வேறு இணைய தளங்களுக்கு தனித்தனியே கட்டணம் செலுத்த வேண்டியுதில்லை. எல்லா பத்திரிக்கைளுக்கும் வாடிக்கையாளர்கள் கிடைப்பதற்கும் வாய்ப்பாக இருக்கும். கட்டணம் என்றால் வாடிக்கையாளர்களை இழக்கும் பத்திரிகைகளும் பயன்பெறுவர். போட்டியும் நல்ல ஆக்கங்களும் இதன் மூலம் வருவதற்கு வாய்ப்பாக இருக்கும்.

ஹிட்டு கணக்கை வைத்து அந்த பொது நிறுவணம் கட்டணங்களை சம்பந்தப்பட்ட பத்திரிக்கைகளுக்கு பணம் கொடுக்கலாம். இதன் மூலம் சிறந்த பத்திரைக்கைக்கு அதன் பலன் நிச்சயம் போய் சேரும். வாசகர்களும் ஒரே பத்திரிக்கையை விதியே என்று படித்துக் கொண்டிருக்காமல் பல் சுவை செய்திக்களையும் படிக்கும் வாய்ப்பாக இருக்கும்.

இதற்கு பத்திரிக்கைகள் இணைந்து ஒரு அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இல்லையென்றால் கட்டண இணைய தளங்கள் கட்டண கழிவறை போன்று தேவையானவர்கள் மட்டும் பயன்படுத்தப்பட்டு மற்றவர்கள் அங்கு செல்வதற்கான சூழலே இல்லாமல் போய்விடும். செய்வார்களா நம் பத்திரிக்கையாளர்கள் ?

6 ஆகஸ்ட், 2006

ஒரு வார்த்தைப் போதுமே !

முன்குறிப்பு: நட்பின் சுவையறிந்திருந்தால் அதன் மூலம் வாழ்க்கையையும் சுவையாக மாற்றமுடியும். நண்பர்கள் தின நன்நாளில் ஒரு சிறுகதை மூலம் நட்பென்ற உறவை உயர்த்துவதற்காக எழுதப்பட்ட சின்ன சிறுகதை. அன்பு நண்பர்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்களைக் கூறிக்கொள்கிறேன்.

அன்று மதியம், உணவு நேரத்தின் போது, வழக்கமான உற்சாகத்துடன் வந்து... பார்த்தவுடன்,

"என்ன குமார், இன்னிக்கு நீ ரொம்ப டல்லா தெரியுது ...உங்க டிபார்ட்மென்டல எதாவது பிரச்சனையா ?" ராமு உரிமையுடன் கேட்டான்.

'இவங்கிட்ட சொல்லலாமா ? வேண்டாமா ?' சில வினாடிகள் நெற்றியை சுருக்கி யோசனை செய்துவிட்டு குமார்,

"அதெல்லாம் ஒன்னுமில்ல ராமு... ஆபிஸ் பிராப்ளம் எதுன்னாலும் சாமளிச்சிடுவேன்... இது வேற... லேச தலைவலி" என்றான்

"ஏய், எங்கிட்ட பொய் சொல்லாதே, வழக்கமா உங்கிட்ட இருக்கிற உற்சாகம், லஞ்ச் டயத்தில காணப்போயிடறது... இன்னைக்கு ரொம்பவும் டல்லா இருக்கியே... எங்கிட்ட சொல்றதா இருந்த சொல்லு ... வேண்டான்னா விட்டுடு" விடுவது இல்லாதது மாதிரிதான் கேட்டு வைத்தான் ராமு.

குமார் சிறிது நேர அமைதிக்கு பிறகு,

"அது ஒன்னுமில்லடா, எனக்கும் என் ஒய்ப்புக்கும் சின்னச் சின்ன பிரச்சனை ..."

ராமு ரொம்ம தமாசாக,

"அதானப் பாத்தேன், எவன் ஆபிஸ் பிரச்சனைக்கு தலையில கைவைச்சிக்க போறான் ?"

குமார் கொஞ்சம் கண்ணை மூடி அவனை முறைத்துப் பார்த்துட்டு,

"உனக்கென்னப்பா, உன் ஒய்ப் அறுசுவையோட சமைச்சித்தர்றா, ஒன்னும் பிரச்சனையில்லாம, உன் வண்டி ஓடுது" என்று சொல்லிவிட்டு தொடர்ந்து,

"என் சாப்பட்டையும், எத்தனை தடவை ஷேர் பண்ணி சாப்பிட்டிருக்க ... கொஞ்சமாவது உப்போ, ஒரப்போ இருந்திருக்கா, எங்கிட்ட பெயருக்கு சூப்பர்டான்னு சொல்லிட்டு போயிடுவே ..."

ராமு கொஞ்சம் சீரியஸாகவும், சங்கடமாகவும்

"சாரிடா, உன் சாப்பாடு நல்லாதாண்டா இருந்துச்சி... அதான் அப்படி சொல்லி இருக்கேன்" என்றவன்,

"சரி, சரி என்ன உன் பிராப்ளம் ?"

குமார் மறுபடியும் தயங்கியபடி,

"ராமு, நம்ப நட்புக்காக, என்னோட சாப்பாடு நல்ல இருக்குன்னு சொல்ற, ஆனால் தினம் சாப்பிடுற எனக்குத் தாண்ட அதோட கஷ்டம் என்னான்னு தெரியும்..."

"சரி... என்னான்னு சொல்லு கேட்போம்" என்றான் மறுபடியும் உற்சாகமாக ராமு.

"அதுதான, அடுத்தவன் குடும்ப கதையின்ன உடனே, காதை தொடச்சிட்டு வந்திடுவியே" என்று குமார் ராமுவை கிண்டல் செய்தான்

ராமு பெரிதாக எடுத்துக்கொள்ளவிட்டாலும், கொஞ்சம் சுதி குறைந்து

"என்னமோ போப்பா... எதோ உனக்கு என்னால ... ஏதாவது உதவ முடியுமான்னு கேட்டேன்"

"மண்ணிச்சிக்க ராமு, உன் கிட்ட சொல்லாமல் யாருகிட்ட சொல்லப்போறேன்...?" என்று ஆரம்பித்தான் குமார்

"ராமு, எனக்கு கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆயிடுச்சி உனக்கு தெரியுமில்ல..."

"அது தான் தெரியுமே, கல்யாணம் ஆகி ஒருவருசம் ஆனாதுதான் ப்ராபளமா ?, குழந்தைக் குட்டிக்கெல்லாம் ஒரு வருசத்துக்குள்ள தவிக்கிறது ரொம்ப தப்பு ...!"

"தாமாஸ் பண்ணாதடா... சீரியஸ்சா கேளு... ஒரு வருசம் ஆகியும் என் ஒய்புக்கு சமையல்-ன்னா என்னானே தெரியல ..."

"எங்க பேரன்ட்ஸ விட்டு தனியாதான் இருக்கோம் ஆனாலும், சாப்பாட்டால அடிக்கடி சண்டை வருது, அடிக்கடி மூஞ்சிய தூக்கிவைச்சிட்டு இருக்கிறா ..."

"எதையாவது கிண்டி வச்சிட்டு, எனக்கு இதுதான் தெரியும், வேணும்னா சாப்பிடுங்க, பிடிக்கலைன்ன, ஓட்டலில் சாப்பிடுங்கன்னு சொல்றாடா ..."

"ஓட்டல்ல சாப்பிடறத்துக்காகவா கல்யாணம் பண்ணிக்கிறோம், எனக்கு ரொம்ப சங்கடமாயிருக்கு ராமு ..."

"சரிடா குமார், அவளுக்கு சமைக்க தெரியாதுங்கறது, உனக்கு திருமணத்திற்கு முன்பே தெரியாதா ?"

"போடா, அவளை முதலில் பாத்தவுடன் எங்கே அதையெல்லாம் கேட்கனும் நினைச்சேன், இப்பதான் மாட்டிக்கிட்டேன்"

"கல்யாணம் ஆன புதுசுல எங்க அம்மாவும் அவளை சமைக்கவிடலை, நாங்களும் ஊர் ஊரா ஹனிமூன்னு சுத்தினோம்..."

"இந்த ஆபிஸல சேர்ந்த பிறகுதான், குமார் ஆபிசுக்கு நேரத்தோட போறமாதிரி வீடாப் பாத்துக்கோன்னு எங்க அப்பா சொல்லிட்டாரு... தனிக்குடித்தனம் ஜாலின்னு ... இங்க பக்கத்துல வீடெடுத்து வந்து ஆறுமாசம் ஆகுது ... இப்பதான் தெரியுது அவ சமைக்கிற அழகு" சொல்லிவிட்டு குமார் பெருமூச்சிவிட்டான்.

"சரிடா, நீ இத உங்க அம்மாகிட்ட சொன்னியா ?"

"அதெல்லாம் இல்லடா, இதபோயி சொன்னா, அப்பறம் மாமியார்-மருமகள்னு பாலிடிக்ஸ் கிளம்பிடும், இதக்காட்டிலும் அது பெரிய மண்டையிடிடா... அதனால நானே சமாளிக்கலாம்-னு பார்த்தால் ... தினமும் முடியலைடா..." சொல்லி முடித்ததும் சோர்வானான் குமார்.

"நல்ல காரியம் செஞ்சிருக்க, இத பெரியவங்கட்ட போய் சொல்லி... அது தலைமுறை இடைவெளியினால், உறவுகளிலையும் இடைவெளியை ஏற்படுத்திடும் ..." என்ற ராமு தொடர்ந்து, குமாரைப் பார்த்து கேட்டான்

"சரி, உங்கிட்ட ஒன்னு கேக்கிறேன், சரியா பதில் சொல்லு"

"சொல்லுடா... ராமு "

"என்னைக்காவது ஒரு நாள், உன் ஒய்ப் நல்லா சமைச்சிருக்காளா ?" ராமு முடிப்பதற்குள்

"எனக்கு தெரிஞ்சு அப்படி நடக்கவே இல்லை, அதாண்டா, எரிச்சல் எரிச்சலா வருது..." என்றான் குமார்

"குமார், தப்பு உன் பேரிலும் இருக்கு !"

"என்னடா, உளரறே ?"

"உளரலடா, நான் சொல்றத யோசிச்சு பாரு..." என்று தொடர்ந்தவன்

"நீ இந்த ஆபிஸல சேர்ந்தப்ப, இந்த அலுவலக சூழ்நிலைய புரிய ஒனக்கு எப்படியும் ஒருவாரம் ஆகியிருக்கும் தானே ?"

"ஆமாம், ஆரம்பத்துல, கொஞ்சம் கஷ்டமாக இருந்திச்சு, எல்லாம் கொஞ்சம் ஹெல்ப் பண்ணினாங்க"

"எல்லோரும் ஹெல்ப் பண்ணிங்க இல்லையா ?"

"ஆமாண்டா, அதை நினைச்சா எனக்கு நெகிழ்ச்சியா தான் இருக்கு, அது மட்டுமில்லடா, எல்லோரும் சின்ன சின்ன செயல்களுக்கெல்லாம் அடிக்கடி பாராட்டி உற்சாகப் படுத்தியதால்... நான் சுறுசுறுப்பா வேலை செய்தேன், நல்ல புரோமோசனும் கெடச்சிச்சி..." என்றவன்

"ஏன்டா அலுவலகத்தை பற்றி பேசி, டாபிக்க மாத்திற உனக்கு என்ன, என்னுடைய புரோமோசன் பொறாமையா இருக்கா ?"

அவர்கள் ஒருவரை ஒருவர் வார்த்தைகளால் தாக்கிக்கொண்டாலும் கோபித்துக்கொள்வதில்லை.

"ஏன்டா, அதுகுள்ள அவசரகுடுக்கை மாதிரி பேசுற ..." என்ற ராமு

"விசயம் இருக்குடா, சொல்றேன் கேட்டுக்க"

"நாம ஆபிசல வாங்குற சம்பளத்துக்கு மட்டுமா வேலை செய்றோம் ? இல்லையே! அதற்கும் மேல, ஏன்னா ?" என்று நிறுத்தியவன்

தொடர்ந்தான்

"நம்ப உயர் அதிகாரிகள், நம்மளை பாராட்டனும், ப்ரோமசன் தரணும்-னு எதிர்பார்த்து தான் எல்லாத்தையும் இழுத்துப்போட்டு செய்கிறோம்"

"நம்ம உழைப்புக்கு பாராட்டும் கிடைக்குது..."

"அப்படி பாராட்டு கிடைக்கிலைன்ன, நம்பளால உற்சாகமாக எதையும் செய்ய முடியாது, கடமைக்கு அழுதுட்டு சாயங்காலம் வீட்டுக்கு கிளம்பி போய்டுவோம் ..."

"சரியா ?" என்று நிறுத்தினான் ராமு.

"நீ சொல்றது நூத்துக்கு நூறு சரிடா ..."

"பலன் இல்லைன்னா யாரு பாடுபடறது ? அட்லீஸ்ட் ஒரு பாராட்டாவது கிடைக்னும் இல்லையா அதுதானே நியாயம் ?" என்றான் குமார்

மெதுவாக கண்ணை மூடிய ராமு, கண்ணை திறந்து,

"அப்பாடா, எனக்கு இது போதும் உனக்கு புரியவைச்சிடுவேன் ..." என்று ராமு தொடர்ந்து, குமாரை பேச விடாமல்

"குமார், என்னைக்காவது உன் ஒய்ப்பை சமையலுக்காக பாராட்டியிருப்பியா ?"

"அப்படி ஒருநாள் பாராட்டியிருந்தால் கூட, அவ உற்சாகமாய் உனக்காக, விதவிதமாக சமைக்க கத்துக்கிட்டு இருந்திருப்பா ..."

"நீ என்ன செஞ்சிருப்ப ? அவ மொதல்ல சமைத்தன்னைக்கு சுளித்த முகத்தை, இன்னும் அப்படியே வச்சிருக்க ..."

"என்னாச்சு ? 'என்ன சமைச்சு என்ன ஆகப்போகுது, நாம என்ன சமைச்சாலும் அவருக்கு பிடிக்கவா போவுதுன்னு' அவ நினைக்கிறமாதிரி இது ஆகிப்போச்சு..."

"முதல் முதலா சமைக்கிறாளேன்னு சின்னதா பாராட்டியிருக்கனும், அத நீ செய்யலை !"

"குமார்... நாம சின்ன சின்ன விசயங்களை அலட்சியப்படுத்தி கண்டுக்காம விட்டுடுறோம் ..."

"சின்ன சின்ன விசயம்னாலும், 'பாராட்டு' என்ற ஒரு வார்த்தை போதும். அது தருகிற மறைமுக அங்கிகாரத்தினால், சின்ன விசயமெல்லாம் சிறப்பான விசயம் ஆகிவிடுகிறது ..."

"எல்லோரோட மனசிலையும் எதிர்பார்புகள் இருந்துகிட்டுதான் இருக்கும் குமார், அது கணவன் - மனைவியாக இருந்தாலும் சரி, பெற்றோர் - பிள்ளையாகளாக இருந்தாலும் சரி ..."

"அதை நேரடியாக சொல்லவோ, கேட்கவோ தெரியாதபடி உளவியல் ரீதியான காரணங்களினால், ப்ராபளம் பெரிசாக ஆயிடுது ..."

"நம்ப அம்மா தானே, சமைச்சிப்போடறது... அவுங்க கடமைதானேன்னு நினைச்சிடுறோம்..."

"மனைவி-ன்ன நம்பள கவனிக்கிறது அவ கடமை-ன்னு நினைச்சிடுறோம் ..."

"என்ன தான் கடமையாக இருந்தாலும், அதுக்கு ஒரு அங்கிகாரம் வேணும்ங்கிற ஏக்கம் இருந்துகிட்டு தான் இருக்கும் ..."

"அவுங்க, அவுங்க கடமைன்னு நினைச்சிடுறதால சில விசயங்கள், நமக்கு தெரியமலேயே ஒதுக்கப்பட்டு நின்று விடுகிறது..."

"சுமார படிக்கிற பையனையும் தட்டிக்கொடுத்தால், அவனால முதன் மாணவனாக வரமுடியும் ..."

"அதவிட்டுவிட்டு மட்டம் தட்ட ஆரம்பிச்சிட்டோம் என்றால், அவுங்களுக்கு இயல்பிலேயே இருக்கிற உற்சாகமும் குறைந்து ... நம்பளால இதுதான் முடியும்னு நினைச்சி... அதிகம் செயல் படவிடாமா அது முடக்கி போட்டுடுது..."

"நீ, உங்க அம்மா சாப்பாட்டை சின்ன வயசிலேர்ந்து பழகினதால, உன் ஒய்ப் சமைத்தது உனக்கு சுவையாய் படவில்லை..."

"இதான் உன் விசயத்தில நடந்திருக்கு... ஒரு தடவை உன் ஒய்பை பாராட்டிப் பாரு... நான் சொல்றது சரி-ன்னு ஒனக்கு புரியும் ..."

குமாரின் மூளை கொஞ்சம் கொஞ்சமாக பிரகாசமாக, ராமுவின் கைகளை பிடித்துகொண்டான்

"ரொம்ப, தாங்க்ஸ் டா... இந்த லாஜிக் தெரியாம இருந்திட்டேன் ..."

"புரிஞ்சிகிட்டா, சரிடா, என் அப்பா-அம்மாதான் என்னை அடிக்கடி பாராட்டி, எனக்கு இந்த பழக்கத்தை ஏற்படுத்தினாங்க ..."

"ஆரம்பத்துல என் ஒய்ப்பும் சுமாரா சமைப்பாள் ..."

"சந்தோசம் என்கிற தீபம் வாழ்கையில் என்றைக்கும் எரியனும் என்றால், பாராட்டுதல் என்ற எண்ணையை அவ்வப்போது நாம நிரப்பிக்கிட்டு இருக்கனும் ..."

"இன்னும் ஒரு விசயம்... சாப்பட்ட மட்டுமல்ல, எந்த விசயமானாலும் மனசுக்கு பிடித்தால் யாராயிருந்தாலும் உடனே பாராட்டிட வேண்டும் ... அதே சமயத்தில் மாற்று கருத்து இருந்தால் அதையும் நிதானத்தோட புரிய வைக்கனும் ... அப்பொழுதுதான் அவர்களின் செயல் பற்றி சரியா தப்பான்னு நாம் சொல்வதும், நாம் நேர்மையாய் செயல் படுகிறோம் என்பதும் அவர்களுக்கு விளங்கும் ..."

"சரிடா, குமார் நான் ஒருவாரம் லீவுல போகிறேன் அடுத்தவாரம் பேசலாம் ..." என்றவன்

"என்னையும் மதிச்சி, உன் குடும்ப பிரச்சனையை சொல்லியிருக்கிற, என் மூலமா ஒரு நல்ல தீர்வு உனக்கு கிடைச்சா எனக்கு மகிழ்ச்சி தான். தாங்ஸ்டா "

என்று எழுந்து சொன்றான்.

குமார் நட்பின் ஆழத்தையும் அன்று நன்றாகவே உணர்ந்தான்.

ஒருவாரம் கழித்து அன்று மதியம், அதே இடத்தில் குமார் தன்னுடைய சாப்பாட்டு கேரியரை திறக்க, அங்கு வந்த ராமு,

"குமார், என்ன கல்யாண வீட்டு சமயக்கட்டுல நுழைஞ்ச மாதிரி, வாசனை ஒரே தூக்கா தூக்குது ?"

"வாடா, ராமு எல்லாம் உன் புண்ணியம் தான், நீ சொன்ன டானிக் நல்ல வேலை செய்யுது"

"கொஞ்சம் விபரமாக சொல்லேண்டா "

"நீ சொன்னபடி, அன்றைக்கு சாயந்தரமே, என் ஒய்ப் செஞ்ச கோழி கொழம்பை இதமாக பாராட்டினேன் ..."

"அப்பறம் ... என்னாச்சு ?"

"ரொம்ப உற்சாகமாயிட்டா, அப்புறமா அவ சாப்பிடுறப்ப ..மெதுவா சங்கடபட்டுகிட்டே சொன்னாள் 'என்னங்க இன்னைக்கு கொஞ்சம் தீஞ்ச வாடை அடிக்கிறமாதிரி இருக்கு, இன்னைக்கு போயி நல்ல இருக்குன்னு சொல்றிங்களே, நாளைக்கு பாருங்க, மீன் கொழம்பு செஞ்சு அசத்திடுறேன்' என்றாள் ..."

"ராமு ... ஒரு வாரமா ... எங்க வீட்டுல சமையல் வாரமா போயிட்டுருக்குடா ... அதோட அவள் விடல..."

"எங்க அம்மாகிட்ட அடிக்கடி போன் பண்ணி, எனக்கு என்னென்ன புடிக்கும்னு கேட்டு கேட்டு, பெரிய லிஸ்டும் கையுமா இருக்காள் ..."

"நல்ல செய்திதான், கொஞ்சம் பாத்துடா, ஒரு மாசம் கழிச்சு ஆபிஸல ரெண்டு கதவையும் தெறந்து வச்சாதான் உன்னால உள்ள வரமுடியும்கிற மாதிரி உன் ஒடம்பு ஆகிடப்போவுது"

"தாங்ஸ்டா, ராமு உன்னோட அறிவுறுத்தலால் உணவு மட்டுமல்ல, உறவும் சுவை கூடியிருக்கு என்பது நிஜம்"

"இனிமே உன் பொண்டாட்டி பாகற்காய் செஞ்சா கூட ஒனக்கு இனிப்பாதாண்டா தெரியும்"

குமார் கையில் எடுத்த தண்ணீரை ராமுவின் மீது தெறிக்க, ராமு சரியாக விலகிக் கொண்டு சிரித்தான்.

4 ஆகஸ்ட், 2006

கோவி.கண்ணனின் திரு(ட்டு)விளையாடல்கள் :)

அன்றாடம் வரும் செய்திகளில் நாம் சம்பந்தப் படாவிட்டாலும், அது நம் பெயரைத் தாங்கி வந்தால் ... அச்செய்தி ஒரு வேளை அது நல்ல செய்தியாக இருந்தால் கொஞ்சம் மகிழ்ச்சி வருவது இயல்பு. அதுவே பெயரைக் கெடுக்கும் விதாமான கெட்ட செய்தியாக இருக்கும் பட்சத்தில் சிறு வருத்தம் வருவதும் இயல்பு. மேலும் அத்தகைய செய்தி இனிசியலோடு வரும் போது ... கொஞ்சம் உணர்வுகள் தூக்கலாகவே இருக்கும். அப்படி ஒரு செய்தி என் பெயருக்கும், என் உணர்வுக்கும் கிட்டியது.

நண்பர் சிறில் அலெக்ஸ் இதைப் பற்றி பதிலிளிப்பாரா கோவி. கண்ணன்? என்று ஒரு தமாஸ் பதிவு போட்டிருந்தார். அதைப் படிக்கும் முன்பே ...அதே நாள் (ஜுலை 3) சன் செய்திகளில் அந்த செய்தியும், 'கோவி.கண்ணன்' பெயரும் நன்றாக அடிபட்டதை பார்க்க நேர்ந்தது. கொஞ்ச நாளைக்கு தமிழ்நாட்டிற்கு சென்று என் பெயர் கோவி.கண்ணன் நான் ஒரு வலைப்பதிவாளர் என்று சொன்னால் அதுக்கு தனி 'மறியாதை' கிடைக்கும் என்று நினைக்கிறேன்... காரணம் அந்த கோவி.கண்ணன் 'சன்னதி' என்ற மாத இதழ் நடத்தி வருகிறானாம். அந்த அளவுக்கு செய்தித்தாள்களில் என் பெயர் அடிப்பட்டுவிட்டது. கோவி.கண்ணன் லீலைகள் பற்றி லத்திகா சரண் கூட பேட்டி அளித்துள்ளார்.

என் பெயரில் ஏற்பட்ட ஒரு களங்கம், அதாவது கோவி.கண்ணனின் திருட்டு விளையாடல்கள் பற்றிய படமும் செய்தியும் இங்கே :


படமும் செய்தியும் : தினமலர் (நன்றி)

நான் அவனில்லை, ஆனால் இந்த செய்தியில் இருப்பது நான் என்று நினைத்து தமிழ்மணம் திரட்டியிலிருந்து உடனடியாக என்னை நீக்கக் பலர் கோரியதாகவும் தெரிகிறது - இது என்னோட ரீலு :)

2 ஆகஸ்ட், 2006

புரட்சித் தலைவர், சூப்பர் ஸ்டார் எங்கள் ஜாதி ...!

நடிகர் திரு ரஜினிகாந்த் அவர்களை எல்லோரும் விரும்புவது ஏன் ? எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், முதல் நாளே அவருடைய படம் பார்க்கவில்லை என்றால் தூக்கம் வராது, அதிகபட்சமாக சில படங்களை இருமுறை பார்த்ததுண்டு, அதில் சமீபத்தில் வெளிவந்து வேட்டையன் ராஜாவாக கலக்கிய சந்திரமுகியும் அடக்கம். சிவாஜி எப்பொழுது வரும் ? எதிர்பார்பவர்களில் நானும் ஒருவன். அவரிடம் எல்லோருக்கும் பிடித்தது அவரது ஸ்டைலா ? நடிப்பா ? முடியைக் கோதிவிட்டு 'கண்ணா ... ஆறுலையும் சாவு, நூறுலையும் சாவு' சொல்லும் போது விசில் தூள்பறக்கும்.

நடிப்பு ?
எனக்கு தெரிந்து கருப்பு வெள்ளைப் படங்களுக்குப் பிறகு ரஜினி நடிக்கவில்லை. அதன் பிறகு ஓரிரு படங்கள் 'ராகவேந்திரா, தளபதி, சந்திரமுகி, எஜமான்' போன்ற படங்களில் ஓரளவு நடித்துள்ளார். மற்றப் படங்களெல்லாம் அக்மார்க் ரஜினி மசாலா படங்கள் தான் . கொஞ்சம் பைட்டு , நிறைய ஸ்டைலு, அம்மா, தங்கை சென்டிமென்ட் ... இதில் எம்ஜிஆர் செய்யாதது ஸ்டைலு மட்டும்தான். மற்றபடி ரஜினி பார்முலா படங்களும், எம்ஜிஆர் பார்முலாபடங்களும் ஒரே மாதிரி ரீல்களில் ஒடிய ரீலுகள்தான்.

எம்ஜிஆர் அம்மா சென்டிமென்ட் வெச்சிக்கிட்டு 200 நாள் ஓட்டியிருந்தால், ரஜினி அதுகூட கொஞ்சம் ஸ்டைலையும் நுழைத்து 250 நாள் முன்னூறு நாட்கள் தன் படத்தை ஓட்டிக்காட்டினார்.அம்மாவுக்கு பூஜைப் போட்டுட்டு காதலியுடன் மாந்தோப்பில் ஒரு மாங்காய் பாடலை பாடி பெண்ணியத்தின் கண்ணியம் காப்பார்கள். பெரும்பாலன படங்கள் ஏழை பொதுமக்களின் கூலித் தொழில் (ரிக்சா காரன், ஆட்டோ காரன்) ஏதோ ஒன்றில் இருவரது பாத்திரமும் பின்னப்பட்டிருக்கும். இருவரும் திரையில் பணக்காரர்களை வெளுத்து வாங்கிவிட்டு அவர்களது மக(ள்க)ளை முடிவில் திருமணம் செய்து பணக்காரத் திமிரை திருத்துவார்கள்.

ஏன் இப்படி ? திரையரங்குக்கு சென்று படம் பார்க்க வருகிறவர்களெல்லாம் பெரும்பாலும் ஏழைகள் எனவே கதைகள் அதை ஒட்டி இருக்கவேண்டிய கட்டாயம். அதுமட்டுமா ஏழையின் கோபம், ஏக்கம், வஞ்சமான பணக்காரத் தனத்தை உண்டு இல்லை என்று சாடினால் தான் திரையரங்கில் சூடுபறக்கும். பெரும்பாலும் ஏழைகளுக்காகவே குரல் கொடுப்பது போன்றே இவர்கள் படம் இருக்கும். 5 / 10 ரூபாய் டிக்கட்டில் பணக்காரர்களை திருந்தியதைப் பார்த்து நிம்மதியுடன் அடுத்த நாளும் அதே மக்கள் அதே படத்துக்கு திரையரங்கில் வரிசையில் நிற்பார்கள்.

ஏழைகளைத் தாண்டி இந்த இருவரும் எப்படி பொதுமக்களுக்கும் பிடித்தவர்கள் ஆனார்கள் ? தமிழகத்தில் நல்ல நடிகர்களே இல்லையா ? அவர்கள் ஏன் எல்லா தரப்பு மக்களையும் கவரவில்லை ? நல்லா யோசிச்சா ஒன்னே ஒன்னு தான் காரணம் என்று தெரிகிறது. அது தமிழகத்தில் புறையோடி போயுள்ள சாதிவெறி. எல்லா நடிகருகும் சாதியால் அடையாளப்படுத்தப் பட்டுவிட்டார்கள். இந்த நடிகர் இந்த சாதி ஆள் என்று தெரிந்துவிட்டது. எல்லா பெரிய நடிகர்களின் ரசிகர் மன்றங்களும் பின்னால் இருப்பது அவர்கள் சாதியை சேர்ந்த இளைஞர்கள் தான். சரத்குமார் நாடார் என்றும் , விஜயகாந்த் தெலுங்கர் நாயுடு என்றும், கார்த்திக் தேவர் என்றும் ... இன்னும் பலர் சாதிச் சாயம் பூசிக் கொண்டனர்.

கமல் நன்றாக நடித்தும் பலருக்கு ஏன் பிடிக்கவில்லை, அவர் ஏன் ரஜினிகாந்த் அளவுக்கு வரமுடியவில்லை? அது அவரே விரும்பாவிட்டாலும் அவர் மேல் விழுந்த ஒரு சாதி முத்திரையைத் தான் காரணம். அதுமட்டுமல்ல அவரின் விரும்பம் இல்லாவிட்டாலும் ... தாங்கள் அவரை தூக்கி நிறுத்துவது கடமை போல் வெளிப்படையாக ஆதரிக்கும் ஒரு சமூகத்தினால் ... அந்த சமூகத்தை விரும்பாதவர்களின் வெறுப்பும், பெரும்தன்மையின்மையும் கமல் போற்றப் படாததற்குக் காரணம். இது விஜயகாந்த், கார்த்திக் போன்றவர்களுக்கும் பொருந்தும். தற்போது நடிகர் விஜய்க்கு கிறித்துவர் என்ற முத்திரையும் குத்தப்பட்டுவிட்டது. செவாலியர் சிவாஜி மாபெரும் நடிகராக வளர்ந்தும் (அவரே தேடிக்கொண்ட) தேவர் சமூகத்தைச் சேர்ந்தவர் என்ற முத்திரையும் அவரால் அரசியலில் வளர்ச்சி பெற முடியாமல் செய்துவிட்டது.

இது போன்ற தமிழகத்தில் உள்ள சாதிகளுக்குள் சிக்கிக் கொள்ளாதவர்கள் என்பதால் எம்ஜிஆர் மற்றும் ரஜினிகாந்த் ஆகிய "இருவர்" க்கு சாதீய அடையாளம் இல்லாது போனது. இது பொதுமக்கள் மத்தியில் இருவருக்கும் அமோக வரவேற்ப்பு கிடைப்பதற்கு மறைமுக காரணமாக அமைந்தது. மேலும் அவர்கள் ஏழை மக்களை கவரும் வண்ணம் திரைக் கதைகளை அமைத்துக் கொண்டதன் மூலம், ஏழைமக்கள் மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் விரும்பும் மாபெரும் நடிகர்களாக வளர்ந்தனர். ஜெயலலிதாவிற்கு பிறகு அதிமுக போன்ற இயக்கங்களுக்கு சாதி அடையாளம் இல்லாத தலைவர்கள் கிடைப்பது அரிது. திமுகவிற்கு இந்த அடிப்படையில் ஸ்டாலினைத் தவிர்த்து மாற்றும் இல்லை.

தமிழகத்தில் எல்லோரும் விரும்பும் தமிழ் நடிகர் வருவதற்கான வாய்ப்பு தமிழகத்தில் இல்லை. சாதி வெறுப்பு, சாதி பாசம் போன்ற நோய் பீடித்துள்ளதால் தமிழனே விரும்பி தமிழ்நாட்டை சாதிய அடையாளம் இல்லாத அண்டை மாநில நடிகர்கள் கையில் கொடுக்க துணிவதும் தமிழனே தேடிக்கொண்ட விதிதான்.

ரஜினிக்குப் பின் நிற்பது அன்பினால் வந்த கூட்டமா ? ஓரளவுக்கு உண்மையென்றாலும் அதிகம் இருப்பது ...சாதி நடிகர்களையும், சாதி அரசியல் வாதிகளையும் வெறுத்து நொந்தக் கூட்டம். அந்த கூட்டத்தில் நானும் ஒருவன்... ரஜினி தேர்தலில் நின்றால் அவருக்குத் தான் என் ஓட்டும் !

பின்குறிப்பு : தமிழ்நாட்டு எந்த நடிகர்களின் நடிப்புத் திறமையையும் நான் குறைத்து மதிப்பிடவில்லை. சிவாஜி அவர்களின் பெயருக்கும் முன் செவாலியர் என்று பட்டத்துடன் எழுதியிருப்பதும் அந்த நினைவில் தான். தமிழக நடிகர்கள் எப்படி அடையாளப் படுத்தப்படுகிறார்கள் என்ற வேதனையில் எழுதியது தான் இது. எல்லோரும் ஏற்றுக் கொள்ளும் தலைவன் ஆகும் தகுதியை தடுப்பது எது என்று சொல்ல முயன்றிருக்கிறேன். கட்டுரையை திசைத் திருப்புவதற்காக நடிகர்களின் பெயரைக் குறிப்பிட்டு நடிப்புத் திறமையை கேவலப் படுத்துவதாக சொல்வது ஏற்றுகொள்வதற்கு இல்லை. நீங்கள் கேள்வி கேட்கவேண்டுமென்றால் ரசிகர்கள் பலத்துடன் தமிழகத்தை ஆளத் துடிக்கும் நடிகர்களிடம் தான் கேட்கவேண்டும். அதற்காக நடிகர்களுக்கு நாடாளும் திறமை இல்லையென்று சொல்லவில்லை. நம்மைப் போன்று அவர்களும் தமிழர்களே அந்த உரிமை எல்லோருக்கும் உண்டு. தமிழகத்தில் மாபெரும் தலைவராக இவர் வருவார் என்று ஸ்டாலினைத் (அதுவும் திமுக என்ற தனிக்கட்சிக்கு மட்டும் பொருந்தும்) தவிர்த்து, சாதிய அடையாளமே இல்லாமல் அடுத்து யாரையாவது ஒருவரை உங்களால் காட்டமுடியும் என்றால் இந்த கட்டுரையை எடுத்துவிடுகிறேன்.

1 ஆகஸ்ட், 2006

பொன்னியின் செல்லம்மா : சிறுகதை (தேன்கூடு போட்டி)

என்னோட பெயர் பொன்நிலவன். எனக்கு எட்டு வயசு ஆகுது. என்னோட அப்பா, அம்மா என்னை பொன்னி பொன்னி-னு கூப்பிடுவாங்க. ஆனா சொல்லம்மா மட்டும் தம்பி தம்பி-ன்னு தான் கூப்பிடும். செல்லம்மா யாருன்னு நா செல்லலேல்ல ? எங்க அம்மா அப்பா வேலைக்கு போறதால, அது எங்க வீட்டல என்னெ பாத்துக்க வந்த பணிப்பெண்ணு-ன்னு அம்மா சொல்லுவாங்க. செல்லம்மாவுக்கு முன்னாடி செல்லம்மாவோட அம்மாதான் என்னெ பொறந்ததுலேர்ந்து பாத்துக்கிட்டாங்களாம். அப்புறம் தான் செல்லம்மா சிலோன்லேர்ந்து நாலு வருசத்துக்கு முன்னால வந்து என்னை பாத்துக்குச்சி.

ஆமாம் நான் ஏன் செல்லம்மாவ பத்தி சொல்றேன் தெரியுமா ? இன்னைக்கு ராத்திரி எட்டு மணிக்கு... செல்லம்மா ஏர்லெங்கன்ல சிலோனுக்கு போவுது. ஏர்போர்டல அழுதுகிட்டே இருந்திச்சி.

"தம்பி, நீ நல்லா படிக்கனும், சமத்தா இருக்கணும், அடம்பிடிக்க கூடாது" திரும்ப திரும்ப சொல்லிக்கிட்டே இருந்துச்சி.

எனக்கு கூட அழுகை வர்றமாதிரி இருந்துச்சி, அதுக்குள்ள அப்பா,

"வாடா பொன்னி, மேல போயி, நெறையா பிளைட் நிக்கும் பாத்துட்டு வரலாம்" னு வியூவிங் கேலரிக்கு அழைச்சிட்டு போய்ட்டாரு

அம்மா, செல்லம்மாவோட கைய புடிச்சிக்கிட்டு பேசிக்கிட்டு இருந்தாங்க,

பிளைட்டு பாத்துட்டு திரும்பி வர்றத்துக்குள்ள, செல்லம்மாவ காணும், அம்மா தான் சொன்னாங்க, சீக்கரமா ஏர்லங்கா கெளம்ப போறதா ஸ்பீக்ரல சொன்னாங்களாம், அதுனால செல்லம்மா ஏர்போர்டுக்குள்ள போயிடுச்சாம். எங்கிட்டெ செல்லம்மா டாடா சொல்லாம போயிடுச்சே நினைச்சிக்கிட்டு இருந்தேன், அப்பா என்னெ தூக்கி வச்சிட்டு, சரி வீட்டுக்கு போலாம்-னு சொன்னார். நான் எப்ப தூங்கினேன்னு தெரியல.

காலையில அம்மா எழுப்பினாங்க,

"பொன்னி, ஒன்னெ ஸ்கூல்ல விட்டுட்டு நான் ஆபிசுக்கு போகணும், சீக்கரம் எழுந்து குளிச்சிட்டு கெளம்பு"

சோம்பலாக இருந்தது, ஸ்கூலுக்கு டயம் ஆகல, ஆனா அம்மா எப்பவும் ஏழுமணிக்கு ஆபிசுக்கு கெளம்பிடுவாங்க,

செல்லம்மா இருந்தப்ப...

"தம்பி, அம்மா அப்பா ஆபிசுக்கு போய்டாங்க, நீ குளிச்சிட்டு, சாப்பிடணும் எழுந்திருன்னு" என்னை மெதுவாதான் எழுப்பிவிடும்.

அம்மா சொன்னதும் எழுந்து பாத்ரூமுக்கு போனேன்.

முன்னெல்லாம், செல்லம்மாதான் என்னை குளிச்சி விடும், ஒரு நாள் சன்டே அன்னிக்கு நானே குளிச்சிகிட்டேன்.

அப்பா செல்லம்மக்கிட்ட கேட்டாரு, 'என்ன பொன்னி ... அவனே குளிச்சிக்கிட்டு இருக்கான், நீ குளுப்பாட்டலயா ?" என்றார்

அதுக்கு செல்லம்மா

"ஐயா, தம்பிய பாத்துரூம்ல நிக்க சொல்லிட்டு துணிகாயவைக்க போனேன், அதுக்குள்ள தம்பி அதுவா குளிச்சிக்கிச்சி, பரவாயில்லைங்கைய்யா, நா இன்னொரு தடவை குளிப்பாட்டி விடுரேன்" னு சொல்லிச்சு.

அதுக்குள்ள அம்மா வந்து, என்னை கட்டிக்கிட்டு

"வெரிகுட், நீயே குளிக்க ஆரம்பிச்சிட்டியே" ன்னு என்னை கொஞ்சினாங்க.

எனக்கு யாராவது என்னை பாரட்டினால் ரொம்ப புடிக்கும்.

அம்மா மறுபடியும் சொன்னாங்க "என் செல்லம், பொன்னி நீ பெரியபுள்ளயா ஆயிட்டா, அதான் நீயே எல்லாத்தையும் செஞ்சிகிற" ன்னு சொல்லி முத்தம் கொடுத்தாங்க.

"பொன்னி, அங்க ஒக்கார்ந்து என்ன யோசிச்சிக்கிட்டே இருக்க, நான் ஆபிஸ் போவனும், சீக்கரம் குளிச்சிட்டு வா"

செல்லம்மாவ பத்தி நினைச்சிக்கிட்டு இருந்தேனா ? நேரமாச்சுன்னு நினைக்கிறேன் அதான் அம்மா, சீக்கரமா குளிக்க சொல்லுறாங்க

தண்ணீரை மேலுக்கு சாய்ததும், காலுக்கு சோப்பு போட்டுக்கொண்டேன். "தம்பி, காலு கையெல்லாம் சுத்தமா வெச்சிருக்கனும், அதான் உனக்கு எப்பவும் ரண்டு தடவை காலுக்கு சோப்பு போடுறேன்" னு முன்னெல்லாம் செல்லம்மா சொல்லும்.

குளிச்சிட்டு வெளியே வந்தேன், டவலை எடுத்து தலையை துடைத்தேன்

"தம்பி, தலையில ஈரம் இருக்க கூடாது, சளி பிடிக்கும்" னு செல்லம்மா சொன்னது ஞாபகம் வந்தது, செல்லம்மா தலையை நல்லா அழுத்தமா தொடைக்கும், கொஞ்சம் வலிக்கும். நான் தலையை ஆட்டி ஆட்டி அடம் புடிப்பேன்

"இன்னும் தலையில டவல வெச்சு தொடச்சிக்கிட்டு ... என்ன யோசனை பண்ணிக்கிட்டு இருக்க" அம்மா வந்து டவலை வாங்கி வைத்துவிட்டு, எனக்கு தலைவாரி விட்டார்கள்.

"என்னங்க, பொன்னிக்கு யூனிபார்ம மாட்டிவிடுங்க" ன்னு அப்பாவை கூப்பிட்டு விட்டு அம்மா எனக்கு காலை சாப்பாடு எடுத்து வைக்க சமையல் அறைக்கு சென்றுவிட்டார்கள்

அப்பா தான் யூனிபார்ம மாட்டிவிட்டார், செல்லம்மா எனக்கு யூனிபார்ம் மாட்டிவிட்டு தினமும் என் கன்னத்துல செல்லமாக கிள்ளி முத்தம் கொடுக்கும், ஆனா அப்பா முத்தம் எதுவும் கொடுக்கல.

"பொன்னி, ஸ்கூல் பேக்க எடுத்து வெச்சிட்டு சாப்பிட போ" ன்னு சொல்லிட்டு அப்பா கெளம்பி ஆபிசுக்கு போய்டாரு

நான் சாப்பிட போனேன்.

முன்னெல்லாம் செல்லம்மா தான் ஊட்டி விடும், ஒரு நாள் அது சாப்பாட்ட எடுத்துவச்சிட்டு என்னெ டீவி பாக்க சொல்லிட்டு குளிக்க போயிடுச்சி, அது வர்றத்துக்குள்ள நானே சமர்த்தா சாப்பிட்டுட்டேன். சாயந்தரம் அம்மா வந்தோன்ன சொன்னேன். அம்மா, "வெரிகுட் பொன்னி, கீப் இட் அப்" அன்னைக்கும் என்னெ ரொம்ப பாராட்டினாங்க. அதுக்கப்பறம் அம்மாவே செல்லம்மாகிட்ட சொல்லிட்டாங்க, 'இனிமே பொன்னிக்கு ஊட்டி விடாதே, அவனே சாப்பிட பழகட்டும்' என்றார்கள்

"சாப்பாட்ட வெச்சிக்கிட்டு என்ன யோசிக்கிட்டு இருக்க, சீக்கரம் சாப்பிடு, எனக்கு ஆபிசுக்கு டயம் ஆச்சு" அம்மா சொல்ல வேகம் வேகமாக சாப்பிட்டு ஸ்கூலுக்கு ரெடியானேன்

"பொன்னி, சாவிய பத்தரமா வெச்சுக்க"

"சரிம்...மா"

"ஸ்கூல் முடிஞ்சதும் நேர வீட்டுக்கு வந்துடு"

"சரிம்...மா"

"யாரு கதவ தட்டினாலும் திறக்காதே"

"சரிம்...மா"

"எதாவது சொல்லனும்னா எனக்கு இல்லாட்டி அப்பாவுக்கு ஒடனே போன் போடு"

"சரிம்...மா"

ஸ்கூலுக்கு போக அம்மாவுடன் கெளம்பினேன்.

செல்லம்மா இருந்தப்ப, ஸ்கூலுக்கு கெளம்பி ரெடியானதும் "எனக்கு திருஷ்டி சுத்தி, தம்பி ரொம்ப சுமார்டா இருக்க நீ, என் கண்ணே பட்டும்" னு சொல்லும்

அம்மா அதெல்லாம் செய்யவில்லை. என்னை ஸ்கூல்ல விட்டுவிட்டு அம்மா சொன்னாங்க

"பொன்னி, இன்னும் ஒருவாரத்துக்கு தான் அம்மா ஸ்கூல்ல கொண்டுவந்து விடுவேன், அப்பறம் நீ எங்கூடவே கெளம்பி, ஸ்கூலுக்கு தனியா வந்திடனும் சரியா ?" ன்னு கேட்டாங்க

"சரிம்...மா, பை... பை"

அவுங்களும் "பை.. பை பொன்னி, சீ யூ ஈவினிங்" னு சொல்லிட்டு ஆபிசுக்கு போய்டாங்க

எனக்கு தனியா வீட்டுக்கு போகத்தெரியும்! ஒரு நாள் செல்லம்மாவுக்கு ஒடம்பு சரியில்ல. அன்னைக்கு என்னெ ஸ்கூல்ல கொண்டு வந்து உட்டுட்டு க்ளினிக்குக்கு போச்சு, ஆனா ஸ்கூல் விட்டப்ப செல்லம்மாவ காணும், நானே தனியா வந்துட்டேன். ஆனால் செல்லம்மா வந்து தான் வீட்டு கதவ திறந்து விட்டுச்சி.

அன்னைக்கு சாயங்காலம் அம்மாகிட்ட சொன்னேனா, அம்மா நீ ஒரு வீட்டு சாவிய வெச்சுக்கன்னு சொல்லி என் ஸ்கூல் பேக்கல போட்டுடாங்க. அன்னையிலேர்ந்து செல்லம்மாவுக்கு வீட்ல வேலை அதிகமா இருந்துச்சின்னா நானே வீட்டுக்கு வந்துடுவேன்.

இன்னைக்கு ஸ்கூல் ரொம்ப போரடிக்குது, பிரண்ட்ங்கெல்லாம் வந்து 'என்னடா பொன்னி, வெளயாட மாட்டேங்கறான்'னு கேட்டாங்க. நான் ஸ்கூல் முடியர வரைக்கும், செல்லம்மா எனக்கு டாடா சொல்லாம போனத பத்தி நெனெச்சிக்கிட்டு இருந்தேன்.

மதிய சாப்பாட்டை நானே சாப்பிட்டேன். ஆறிப்போயிருந்தது.

போன வெள்ளிக்கிழமை வரைக்கும் செல்லம்மா, சரியா ஸ்கூல் ப்ரேக்கப்ப வீட்லேர்ந்து சூடாக மதிய சாப்பட்டை எடுத்துவந்து, அதுவே ஊட்டிவிடும், ப்ரன்ட்ஸ் செல்லாம் கிண்டல் பண்ணுவாங்க, சில சமயம் எனக்கு வெக்கமாக இருக்கும்.

"தம்பிக்கு வெக்கத்தப்பாரு" செல்லம்மாவும் கூடவே கிண்டல் பண்ணும்

ஸ்கூல் முடிச்சிருச்சி, அம்மா சொல்லி இருக்காங்க, நேரா வீட்டுக்கு போகனும், வர்ற வழியில ப்ளே கிரவுன்ட பாத்துக்கிட்டே போனேன்.

செல்லாம்மா என்னை ஸ்கூல்லேர்ந்து கூட்டிட்டு வர்றப்ப, இந்த ப்ளே கிரவுண்டுக்கு அழைச்சிட்டு போகும், என் கூட அதுவும் வெளயாடும்.

செல்லம்மா கூட வெளயாடுனதை நெனெச்சிக்கிட்டு வந்தேனா, வீடு வந்திடுச்சி.

வீட்டுக்கு வந்து கதவை திறந்து உள்ளே வந்தேனா, வீட்டுல யாரும் இல்லாததால் கொஞ்சம் பயமா இருந்திச்சு. கதவை சாத்திவிட்டு உள்ளேர்ந்து பூட்டிட்டேன். "அப்பறம் உள் தாப்பாவும் கண்டிப்பா போடனும்" அம்மா சொன்னது ஞாபகம் வந்துச்சி.

வெளியில போய்ட்டு வந்தால் மூஞ்சில தூசி படிஞ்சிருக்குமாம் ... செல்லம்மா சொல்லும். எப்பவும் ஸ்கூல்லேர்ந்து வந்ததும் செல்லம்மா என் முகத்தை கழுவிவிடும். அதுதான் என்னோட சாக்ஸ், ஷூவெல்லாம் கழட்டி விடும். ஷூவையும், சாக்சையும் கழட்டி ஓரமாக வைத்துவிட்டு, பாத்ரூம் சென்று முகத்தை கழுவிக்கொண்டேன். ஒரு மாதிரியாக இருந்துச்சி. செல்லம்மாவ பார்க்கணும்னு-னு தோனிச்சி

ஆல்பம் எங்கே இருக்கும்னு எனக்கு தெரியும், எடுத்து வைத்தேன்.

போன் அடித்தது

"ஹலோ"

"நான் அம்மா பேசுறேன்"

எனக்கு கொஞ்சம் சந்தோசமாக இருந்தது

"ஹலோ அம்மா"

"பொன்னி நீ பத்தரமா வீட்டுக்கு வந்திட்டியான்னு பாக்கத்தான் போன் பன்னினேன்"

"சரிம்...மா"

"நல்லா தூங்கு, தூங்கி எழுந்ததும். ரொம்ப நேரம் டீவி பாக்கக்கூட்டாது சரியா ?

"சரிம்...மா"

"கிச்சன்னல ஸ்னாக் வெச்சிருக்கேன், எடுத்து நாலு மணிக்கு சாப்பிடு"

"சரிம்...மா"

"சரி, மதியம் நல்லா சாப்பிட்டியா ? "

"சாப்பிடேன்ம்மா"

"என் சமத்து, அப்புறம் பொன்னி, அம்மா வேளை நேரத்தில மறந்துடுவேன், நாளையிலேர்ந்து வீட்டுக்கு வந்தோன எனக்கு போன் பண்ணிடு சரியா ?"

"சரிம்...மா"

"சீ யூ " சொல்லி வைத்துவிட்டார்கள்

நான் போட்டோ ஆல்பங்களை கொஞ்ச நேரம் புரட்டி பார்த்துக்கொண்டுருந்தேன். செல்லம்மா இருந்த எல்லா போட்டோவிலும் நானும் கூடவே இருந்தேன். ஆல்பத்தை மூடி ... அது இருந்த இடத்தில் வைத்துவிட்டு படுக்கைக்கு சென்று படுத்தேன். தூக்கம் வரவில்லை. கொஞ்சம் பசி எடுத்து.

முன்னெல்லாம் நாலு மணிக்கு பிஸ்கட் அல்லது பழம் எதாவது ஒன்றை செல்லம்மா சாப்பிடச் சொல்லும். அதான் அம்மா என்னை நாலு மணிக்கு சாப்பிடச் சொன்னாங்க. கிச்சனுக்கு சென்று டப்பாவை திறந்து பிஸ்கட்டை எடுத்து தின்றேன். . 'தம்பி பிஸ்கட் சாப்பிடும் போது கூடவே தண்ணி குடிக்கனும் இல்லேன்னா தொண்டையில் அடச்சிக்கும்' தண்ணீரை எடுத்து குடித்தேன் ... செல்லம்மா சொல்லிகுடுத்திருக்கு. செல்லம்மா இருந்த அறையை பார்த்தேன், நன்றாக சுத்தம் செய்யப்பட்டு பொருள்கள் எல்லாம் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது. துணி துவைக்கப் போடும் கூடையில் செல்லம்மாவின் புடவை ஒன்று கிடந்தது. எடுத்துட்டுப்போக மறந்துடிச்சி போல, அம்மா கிட்ட சொல்லனும். கொஞ்ச நேரம் அதைப்பார்த்துக் கொண்டிருந்தேன்

அப்பறம் திரும்பவும் வந்து படுத்து கொண்டேன். செல்லம்மா கூட நான் பீச்சுக்கு போனது, கோவிலுக்கு போனது எல்லாம் மாறி மாறி நினைவுக்கு வந்தது. கடிகாரத்தைப் பார்த்தேன் மாலை ஐந்து மணியாகி இருந்தது. எழுந்து போய் டீவியை போட்டு கார்ட்டூன் பார்த்தேன். தூக்கம் வருவது போல் இருந்தது.

செல்லம்மா சொல்லும் 'தம்பி, ரொம்ப நேரம் டீவி பாக்காதே கண்ணு கெட்டு போயிடும், அப்புறம் அம்மா கிட்ட சொல்லிடுவேன்' நினைவுவர டீவியை அணைத்துவிட்டு படுக்கைக்கு சென்று ரொம்ப நேரம் விழித்துக் கொண்டே இருந்தேன்.

காலிங் பெல் கிர்ர்ர்ர்னு அடித்தும் எழுந்து திறந்தேன்.

அம்மா வந்து விட்டார்கள்

"பொன்னி நல்லா தூங்கினியா ?"

"இல்லம்மா, எனக்கு தூக்கம் வரல"

"சரி, ஸ்னாக் சாப்பிட்டியா ?"

"சாப்பிட்டேன்மா"

"போயி முகம் கழுவிட்டு வா, சாமி கும்பிடணும்"

"சரிம்...மா"

பேஸ் வாஷ் பண்ணிவிட்டு திரும்பவும் கார்டுன் பார்த்தேன். அம்மா சாமி கும்பிட கூப்பிட்டாங்க. நானும் அம்மாவும் சாமி கும்பிட்டோம், அப்பாவும் வந்துவிட்டார்.

"என்னங்க அங்க டீ இருக்கு, பொன்னிக்கு ஊத்தி கொடுத்துட்டு நீங்களும் சாப்பிடுங்க, அப்படியே அவனை படிக்க சொல்லி பாத்துக்குங்க"

"சரி நான் செய்றேன், அதான் செல்லம்மா இப்ப இல்லயே, நாம தான் எல்லாத்தையும் பாத்துக்கணும், உனக்கு எதாவுது ஹெல்ப் பண்ணனும்னா சொல்லு" என்றார் அப்பா

அப்பா கூட கொஞ்ச நேரம் கேரம் விளையாடிவிட்டு, படிக்க ஆரம்பித்தேன். செல்லம்மாவுக்கு படிப்பு சொல்லிக்கொடுக்க தெரியாது. எங்கிட்டேர்ந்து தான் கொஞ்ச கொஞ்சமாக இங்லீஸ் கத்துகிச்சு

அம்மா, அப்பா, நான் மூவரும் சாப்பிட்டு முடித்தோம்

"அம்மா, சாப்பிட்டு பல்லு விளக்கணுமாம், செல்லம்மா சொல்லியிருக்கு" என்றேன்

"வெரிகுட் பாய், போய் வெளக்கிட்டு வந்துரு, சீக்கரம் படுத்தாதான் காலையில சீக்கரம் எழுந்திருக்க முடியும்" என்றார்கள் அம்மா

அப்பா, அம்மா நான் நடுவில் படுத்துகொண்டோம். அம்மாவும் அப்பாவும் செல்லம்மாவை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்புறம் தூங்கிவிட்டார்கள்.

எனக்கு தூக்கம் வரவில்லை. அம்மாவும் அப்பாவும் நன்றாக தூங்கி கொண்டிருந்தார்கள்.

நான் மெதுவாக எழுந்து கதவை திறந்து கொண்டு ஹாலுக்கு வந்தேன். கொஞ்சம் இருட்டாக இருந்தது. அப்படியே செல்லம்மாவும் நானும் தூங்கும் அறைக்கு வந்தேன், அங்கும் கொஞ்சம் இருட்டாக இருந்தது.

நேராக சென்று செல்லாம்மாவின் புடவை எடுத்து கொண்டு வந்து, அருகில் இருந்த கட்டிலில் ஏறி படுத்துக்கொண்டேன்.

ஹாலில் லைட் போட்டது மாதிரி தெரிந்தது. அம்மாவும் அப்பாவும் வந்துவிட்டார்கள் என நினைக்கிறேன். அம்மா 'பொன்னி ஏன் இங்க வந்து படுத்தேன்னு கேப்பாங்களே' கண்ணை மூடிக்கொண்டேன், அருகில் வருவது மாதிரி தெரிந்தது

"என்னங்க, இங்க வந்து தூங்கிறான், எழுப்பாம அப்படியே தூக்கிட்டு வந்து நம்ம பெட்ரூம்ல படுக்கவைங்க"

"அதுக்கு தான் நான் அப்பவே, சொன்னேன் செல்லம்மாவை இன்னும் இரண்டு வருசம் கழிச்சி அனுப்பலாம்னு"

"என்னங்க பண்றது, அவனே அவனுக்கு வேண்டியதை எல்லாத்தையும் செஞ்சு பழகிக் கொண்டான், அதுதான் செல்லம்மாவை அனுப்பலாம்னு முடிவுபண்ணினேன்"

"எனக்கு என்னவோ, இவன் ஏங்கிடுவானோன்-னு பயமா இருக்கு"

"அதுக்காக தாங்க ... செல்லம்மாவை ப்ளைட்டுக்கு அனுப்பும் முன்பு இவனைக் தூர கூட்டிக்கிட்டு போய் வேடிக்கை காட்டுங்க என்று ஜாடை காட்டினேன் ...எல்லாம் ஒருவாரத்துல சரியாயிடுங்க, செல்லாம்மாவும் அதோட பையனை நாலுவருசமா பாக்காம தானே இருந்திச்சு?"

"நீங்க ஒண்ணும் பயப்படாதிங்க, ஒருவாரத்தில எல்லாத்தையும் மறந்திடுவான், நான் நாளைக்கு அவனுக்கு வெளக்கமா சொல்லுகிறேன்"

"என்னமோ நீ தான் சொல்ற..."

"செல்லம்மா நாளைக்கு சிலோன்லேர்ந்து போன் பண்றேன்னு சொல்லியிருக்கு... பொன்னிய பேசச் சொல்லுவோம், பயப்படாதிங்க"

"சரி, பொறுத்துதான் பார்ப்போம்" என்றார் அப்பா

நான் கேட்டுக்கொண்டிருந்தேன் ஆனால் கண்ணை திறக்கவில்லை. திரும்பவும் நான் அப்பா அம்மாவுக்கு இடையில் படுக்க வைக்கப்பட்டேன்.

'ஆமாம்ல... செல்லம்மா சொல்லியிருக்கு, அதுக்கும் ஒரு பையன் இருக்கானாம் அவனுக்கு ஆறு வயசாகுதாம், அவன் பேரு முத்தழகனாம், போட்டோ கூட காட்டியிருக்கு. அவனும் என்னெ மாதிரிதானே செல்லம்மா இல்லாம கஷ்டப்பட்டிருப்பான், இனிமே முத்தழக்குக்கு ஜாலி ! செல்லம்மா கூடவே அவன் இருக்க போறான், நாளைக்கு செல்லம்மா பேசும்போது மறக்காம முத்தழகு நல்லா இருக்கானான்னு கேட்கணும், அம்மாவுக்கு சிரமம் கொடுக்காமல் சீக்கிரமே காலைல எழுந்திடணும் ....' என நினைத்துக் கொண்டிருக்கும் போது... இப்ப நல்லாத் தூக்கம் வருது.

குட் நைட்.

பின்குறிப்பு : இரத்த சம்பந்தபட்ட உறவுகள், நட்பு உறவுகள் இவற்றைத் தாண்டி செவிலியர் (பணிப்பெண்) என்ற ஒரு உறவும் உள்ளது. கடமையென்று செய்யாமால், அம்மா, பெரியம்மா, சித்தி, பாட்டி, அத்தை போன்று எந்த உறவுக்குள்ளும் இல்லாமல் ... ஆனால் அதற்குண்டான உணர்வுகளுடன் எல்லாவற்றையும் செய்து ... உணர்வுகள் கண்டுகொண்ட அந்த உறவு நிரந்தரமாகப் பிரியும் போது அது ஏற்படுத்தும் உணர்வுகளை சொல்ல முயன்ற ஒரு சிறுகதை இது. நீங்களோ அல்லது உங்கள் குழந்தைகளோ செவிலியர்களிடம் வளர்ந்து... அவர்களை பிரிய நேரிட்டபோது ... நீங்கள் அவர்களிடம் கண்டது ... உறவா ? உணர்வா ? இங்கே பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்கள்.


உங்கள் பாராட்டுக்கள் வாக்குகளாக மாறும் என்ற நம்பிக்கை இருக்கிறது :)

படம் : நன்றி http://in.rediff.com/

31 ஜூலை, 2006

உங்கள் வீட்டு புதையல்

உங்கள் வீட்டு புதையல்

புத்தகங்களை புதையல் என்று சொல்லலாம்... நிறைய பேருக்கு பக்கத்தில் புதையல் இருந்தாலும் கண்டுகொண்டு பயனடைவர் சிலரே. எல்லாருடைய வீட்டிலும் புத்தகப் புதையல் இருக்கும். அதை ஏதோ ஒரு பூதம் காப்பது போல் எல்லோரும் காத்து வருவதும் உண்மைதான்.

ஒரு மனிதனைப் பற்றி தெரிந்து கொள்ளவேண்டுமானால் அவருடைய நண்பர்கள் பற்றி தெரிந்தால் தெரிந்து கொள்ளலாம் என்பார்கள். அதில் 100 % உடன்பாடு இல்லை. மாறுபட்ட கருத்துள்ளவர்களும் நல்ல நண்பர்களாக இருக்கலாம். அது போல் ஒருவரைப் பற்றி தெரிய வேண்டுமானால் அவர் சேர்த்து வைத்திருக்கும் புத்தகங்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதுவும் 100% சரியில்லை. ஓரளவுக்குத்தான் மாறுபட்ட கருத்துக்களை தர்கம் செய்வதற்காக விரும்பி படிப்பவர்களும் இருக்கிறார்கள் (என்னிய மாதிரி கோஷ்டிகள்).

எப்படியோ புத்தங்கள் தான் நமக்கு முதன்மையான நண்பன் அதன் பிறகு தான் மத்தவர்கள் எல்லோரும். விசய ஞானமோ, விச ஞானமோ புத்தகங்களே போதித்து நமக்கு ஆசானாகவும் இருக்கிறது. புத்தகங்கள் நம் சுய சிந்தனைகளை, நம் சொந்தக் கருத்துக்களையும் மாற்றி நல்வழிப்படுத்துகிறது.

உங்கள் வீட்டு புத்தங்கள், புத்தகப் புழுக்கள் போல் அதன் பெருமையை அதுவும் அறியாமலே இருந்து இருக்கும். எனவே அன்பு வலை நண்பர்கள் எல்லோரும் தங்கள் வீடுகளில் இருக்கும் புத்தகங்களை தூசி தட்டி எடுத்து அதன் பட்டியலை தனிப்பதிவாக வெளியிட்டு, சிபா என்கிற 'அருமை' நண்பர் திரு சிவபாலன் வேண்டுகோளின் படி சுட்டியை அவர்பதிவிலோ, அல்லது என்பதிவிலோ இட்டீர்கள் என்றால் அவர் தொகுப்பதற்கு வசதியாக இருக்கும்.

போங்கப்பா போரடிக்காதீர்கள் இதனால் என்ன நன்மை ஆகி விடப்போகிறது ? சரஸ்வதி பூஜைக்குத் தான் நாள் இருக்கிறதே என்று கேட்டால்.

1. உடனடி நன்மை ஒரு புதிய பதிவு
2. உங்கள் புத்தகங்களை நீங்கள் படித்திருக்காவிட்டால் அதைப் படித்தவர்கள் அதன் சிறப்புகளை சுட்டிக்காட்டி உங்கள் புத்தகத்திற்கு ஒரு நல்ல விமோசனம் கிடைக்கும்
3. நீங்கள் விரும்பும் புத்தகங்கள் ஒரு வேளை மற்றவர்களிடம் இருந்தால் அவரிடம் பதிப்பகம் மற்ற இதர விபரங்களை கேட்டு அறியலாம்.
4. நமக்குத் தெரியாத புத்தகங்களின் அறிமுகம் கிடைக்கும்
5. புத்தகங்களை எழுதி வெளியிட பலருக்கும் விருப்பம் இருக்கும், குறைந்த பட்சம் புத்தக பட்டியலையாவது வெளியிட்டு முதல் முயற்ச்சி எடுக்கலாம்.

சரி எந்த மாதிரி புத்தகங்களின் பட்டியலை வெளியிடுவது ?
'அந்த' மாதிரி புத்தகங்களின் பட்டியல், டிக்ஸ்னரி, எல்கேஜ் மற்றும் கல்வி சம்பந்த பட்ட புத்தகங்களின் பட்டியல் வெளியிடத் தேவையில்லை. நல்ல கருத்துச் செரிவுள்ள புத்தகங்கள், கதையோ, கவிதையோ, கட்டுரைகளோ, வரலாறோ இன்னும் பிறவோ பற்றிய புத்தகங்களின் பட்டியலை தனிப்பதிவாக வெளியிடவும்.

ஒரு மனிதனுக்கு அசையா சொத்து என்றால் அது அவரவர்வீட்டு புத்தகங்கள் தான். யாரும் கடனும் கேட்க மாட்டார்கள், நாமும் விற்க மாட்டோம். உங்கள் வீட்டு அசையா சொத்துக்கள் எவை எவை என்பதை அனைவரும் தெரிந்து கொள்ள ஆவல். இதை சங்கிலிப் பதிவு போல் வேண்டுகோளாக, நீங்கள் வெளியிட்டு உங்கள் பதிவில் நீங்கள் விரும்பும் வலைப்பதிவாளர்களை ஒன்றோ, சிலரோ அழைத்து வெளியிடச் சொல்லலாம்.

நான் ஏற்கனவே புத்தக பட்டியலை வெளியிட்டு விட்டேன். எனவே நான் தங்கள் புத்தகங்களை வெளியிட அழைக்கும் நண்பர் மற்றும் நண்பிகள்

1. திரு எஸ்கே
2. திருமதி துளசிகோபால்
3. திருசெந்தழல் ரவி
4. திரு குமரன் (எண்ணம்)

பி.கு: தமிழ்மண முகப்பில் பதிவர் வட்டம் மற்றும் 'புத்தகம்' என்ற பிரிவில் வகைப்படுத்துதல் நலம் !

29 ஜூலை, 2006

புத்தம் புதிய புத்தகமே !

நண்பர் சிபா (சிவபாலன்) அன்போடு கேட்டுக் கொண்டதற்கு இணங்கி இந்த பதிவு !

என் வீட்டு அலமாரிகளில் புத்தக குவியல் இல்லை. வெளி நாட்டில் இருப்பதால் புத்தகங்களை வாங்கி அடுக்குவதற்கு அதிகம் யோசனை செய்ய வேண்டியிருக்கிறது. வலைப் பதிவுகள் எழுத ஆரம்பித்த பிறகு பித்தமாகி புதிய நூல்கள் எதுவும் வாங்கவில்லை. சமீபத்தில் திருவாடுதுரை சூரிய நாராயணன் கோவிலுக்கு குடும்பத்தினர் அழைத்துச் சென்றனர். அப்பொழுது கோவிலில் விற்ற புத்தகங்கள் சிலவற்றை கோவிலுக்கு சென்று வந்த ஞாபகமாக இருக்கட்டமே என்று வாங்கினேன். நம்ம குமரன் போன்றோர்கள் தெரிந்து கொள்ள ஆவலாக இருந்தால் ஸ்கேன் பண்ணி போடுவேன். அதை மனதில் வைத்தும் வாங்கியது தான் இந்த புத்தகங்கள்.

வாங்கிய புத்தகத்தை தவறுதலாக சென்னை பெரியப்பா வீட்டில் எடுத்துச் சென்றுவிட்டார்கள். அதன் பிறகு சென்னைக்கு விமானம் ஏற வந்த பொழுது துறத்திப் போய் திரும்ப வாங்கி வந்தேன். இதுதான் மிக மிக சமீபமாக இரண்டு மாதத்திற்கு முன்பு வாங்கியது. இன்னும் புரட்டிக்கூட பார்க்க வில்லை. மேலூம் சில சித்தர் பாடல் புத்தகங்களை அக்கா வீட்டிலிருந்து எடுத்து வந்தேன்.
பட்டியல் இதோ:


1 . சூரியனார் கோவில் தல வரலாற்றுச் சுருக்கம்
2. நவக்கிரக ஸ்தலங்களின் திருமுறைத் திரட்டு (வரை படத்துடன்)
3. விதியை வெல்வது எப்படி - திருவாடுதுறை ஆதினம்
4. சித்தர் பாடல்கள் - டாக்டர் ச.மெய்யப்பன்
5. வெற்றி நிச்சயம் - திரு சுகி சிவம்
6. சைவ சித்தாந்த உண்மை விளக்கம் - திரு பா.கமலக்கண்ணன் (இவரை பார்க்க வேண்டும் என்று ஆவல் உள்ளது, இவர் என் நண்பருக்கு நண்பர் 65 வயது ஆகிறது, தற்போது சைவ சமய சித்தாந்த மடம் வைத்து ஏழைகளுக்கு இலவசக் கல்வியும், இடமும் அளித்துவருகிறார் - அவரைப் பார்க்கும் வாய்ப்பு சிங்கையிலேயே கிடைத்தது, 2007 வந்து சென்றார்)
7. Art of happines (Hand Book for living) - HH Dalai Lama
8. Be a Lamp upon yourself (Buddist Book) -
9. The Teaching of Buddha
(7,8,9 புத்தகங்கள் இருப்பது இன்று தான் தெரியும் ! இலவசமாகக் கிடைத்தது என்று நினைக்கிறேன்)
10. Bhagavat - Gita as it is - Swami Prabupada
11. நாலே கால் டாலர் - ஜெயந்தி சங்கர்(சிங்கை)
12. ஏழாம் சுவை ஜெயந்தி சங்கர்(சிங்கை) - நூல் வெளியீட்டு விழாவுக்கு சென்ற போது வாங்கியது
13. Long Man Dictionary
14. IT Books Related to Windows Serer and Networking
15. இந்த நாள் இனிய நாள் - திரு வலம்புரி ஜான்
இது தவிர நக்கீரன், ஜூவி வாரம் இருமுறை வாங்குவதுண்டு, படித்ததும் தூக்கிப் போட்டுவிடுவதுதான் வழக்கம். பதிவுகள் படிக்க ஆரம்பித்த பிறகு அதில் படிக்கும் தகவல்கள் ஆறிய தகவல்களாக இருப்பதால் அதிகம் வாங்குவதில்லை.

மற்ற எல்லா புத்தகங்களுமே தூங்குகின்றன.

"புத்தம் புதிய புத்தகமே உன்னை புரட்டிப் பார்க்காத புலையன் நான் !"

28 ஜூலை, 2006

கஜினி .... :)

மரணத்தை வென்றவர்கள் சகோதரிகள் நிலா, லிவிங் ஸ்மைல் வித்யா, மற்றும் பொன்ஸ் ஆகிய மகளிர் அணிக்கு வாழ்த்துக்கள். 50% இடஒதுக்கீடு கேட்பவர்கள் 100% சதவிகிதம் பறித்துக் கொண்டதை போட்டி என்பதால் பொறுத்துக் கொள்ளலாம் :)

மரணத்துடன் நேருக்கு நேர் - எனது பதிவுக்கு வாக்கு அளித்த அனைத்து நல்ல உள்ள அன்பர்களுக்கு நன்றிகள். போட்டிகளில் கலந்துகொள்வது மகிழ்சியை தருவதால் கஜினியை தாண்டி படையெடுப்புகள் தொடரும்.


27 ஜூலை, 2006

இம்சை அரசன் அடித்த மணி !

அனைவரும் அர்சகராகலாம் என்ற திட்டத்தை கேள்விப்பட்ட நம்ம கைப்புள்ள, அண்ணன் பார்த்திக்கு பயந்து ஓடி ஒளிந்து கொள்ள சரியான இடம் கோவில்தான் என்று எப்படியோ அர்சகர் ஆகிவிட்டார். அறனிலைய துறை அதிகாரியான பார்த்தி ஒரு நாள் சாமி கும்பிட வருகிறார். உடம்பு முழுவதும் பட்டை அடித்துக் கொண்டு பக்திப் பழமாக இருக்கும் கைப்புள்ள அவரைப் பார்த்துவிடுகிறார்

தனக்குள்
கைப்பு : 'அடி ஆத்தி... இவனுக்கு பயந்துக்கிட்டுதான் இங்கிட்டு வந்தோம் ... இங்கிட்டும் வந்துப்புட்டானே ....
என்று தலையில் துண்டைப் போட்டு மறைத்துக் கொண்டார்
பார்த்தி : சாமி ... இங்க பாருங்கோ ... இத எடுத்துட்டுப் போய் அர்சனைப் பண்ணி எடுத்துட்டுவாங்கோ
கைப்பு : ஆகட்டும் பா ... ஆகட்டும் ... வொடனே செஞ்சுடுவோம் ... அதுக்குத் தானே இருக்கோம்
பார்த்தி : இந்த குரல எங்கேயே கேட்ட மாதிரி இருக்கே ... சாமி கொஞ்சம் பாருங்க ...
கைப்பு : சாமி இன்னெக்கு மவுன விரதம்... பேசக் படாது ...
பார்த்தி : மவுன விரதம் ... வாயத்தானே மூடனும் ... நீங்க தலைய மூடியிருக்கிங்க ... சரி சாமி ... நீங்க பேச வேனாம் ... முகத்தையாவது இப்படி காட்டுங்க ...
கைப்பு : மண்ணிக்கனும் சாமி மண்ணிக்கனும் ... தலையில வவ்வா உச்சா போயிடுச்சி ...
பார்த்தி :ஹூம் ... அதான் இந்த நாத்தம் நாறுதா ? ... பராவியில்ல விடுங்க சாமி ... பால் வடியும் மொகத்தை கொஞ்சம் காட்டுவிங்கன்னு பார்த்தேன், சரி வவ்வா வடிச்ச தலையை யாவது காட்டுங்கள்
கைப்பு மனதுக்குள் ... விடமாட்டான் போலப்பு .... ஆகா மாட்டிக்கிட்டேனே என்று தலையில் மறைத்த துண்டை விலக்குகிறார்
கைப்பு : அப்பு அப்பு வேணாப்பு ... உனக்கு பயந்துக்கிட்டுதான் இங்க வந்து சேந்திருக்கேன் கெடுத்துடாதே ... ஒனக்கு என்ன வேணும் எடுத்துக்க ... தேங்கா ... பழம் ... பூ என்று உளர ஆரம்பிக்கிறார்
அவரை ஏற இறங்க பார்த்த பார்த்தி ...
பார்த்தி : ஓ ... எலி அம்மனமா இங்க வந்து ஒளிஞ்சிக்கிச்சா
கைப்பு : எலின்னாலும் ஞ்சொல்லு கிலின்னாலும் ஞ்சொல்லு விட்டுடுப்பா ... கையெடுத்து கும்புடுகிறார்
பார்த்தி : சரி விடுரேன் ... ஆனா இங்க என்ன பண்ணுற தெரிஞ்சாகனும் ?
கைப்பு : ம் .. பாத்தா தெரியலப்பா ... மணியடிச்சு பூஜை செய்றேன் ... பூஜை
பார்த்தி : பூஜை செய்யுறியா ... உனக்கு தேவாரம் எல்லாம் தெரியுமா ?
கைப்பு : அது தெரியாமல இங்க வந்துருக்கேன் ... இன்ட்ர்வுயூ பண்ணாங்கப்பு
பார்த்தி : ஒன்ன அவுங்க இன்டர்வுயூ பண்ணினாங்களா ?
கைப்பு : அட ஆமாப்பு, சாமிக்கு மணியடிக்கிற சோலி பண்ண ... எல்லாரும் போறாங்களே, என்னான்னு கேட்டா, தேவராம் தெரியனும் சொன்னாகப்பு ... ஆக நமக்கு தெரியாத தேவாரமான்னு கேட்டுபுட்டு ... போனேன்... எல்லாரையும் கேட்டுட்டு ... கோட்டவா உட்டுக்கிட்டே எங்கிட்டயும் கேட்டகப்பு ... நல்ல தெரியும்னு சொன்னதால தானப்பு இங்க அனுப்பிச்சாங்கெ
பார்த்தி கையெடுத்து கும்பிட்டு ...
பார்த்தி : கைப்புள்ள நீ அவ்வளவு பெரிய ஆளா, ஒனக்கு தேவாரம் தெரியுமா ?
கைப்பு : என்ன அப்புடி கேட்டுப்புட்ட ... சின்ன பசங்களுக்கு தெரிஞ்ச சின்ன விசயம் எனக்கு தெரியாதா... ஐஜியா இருந்தவர தெரியாம இருக்குமா ... வீரப்பன புடிச்சாருல்ல ... அவுர தெரியாதுன்ன எப்படிப்பு .... சின்னப்புள்ள தனமால்ல இருக்கு
பார்த்தி அதிர்ச்சி அடைந்து விடுகிறார்.
பார்த்தி : வேண்டாம்னு பார்த்தேன் ... இல்ல நீ மாட்டிக்கிட்ட
கோபமாகிய கைப்பு,
கைப்பு : சாமிய கும்புட்டமா, துன்னூற பூசிக்கிட்டமான்னு போவனும், இப்டி நோண்டப் படாது ...
பார்த்தி : நான் நோண்டாமல் வேர ஒங்கப்பனா வந்து ...
கைப்பு : ஏன்பா ... நீ யாரு ... நீ எதுக்கு நோண்டனும் ... கைப்புத் தேன் ... பைப்பு இல்லப்பா ... வேணாம் விட்டுடு
பார்த்தி : அறநிலைய அதிகாரி நான் கேட்காம வேற எந்த கேனயன் வந்து கேட்பான்
கைப்பு பயந்து மென்று முழுங்குகிறார்.
கைப்பு : அப்பா அப்பா தெரியாம சொல்லிட்டன்ப்பு ... தேவரம் சரியாத் தானப்பு சொன்னேனப்பு பார்த்தி : அடே மடயா ... தேவரங்கிறது ... பக்திப் பாட்டு ...
கைப்பு தெம்பாகிறார்
கைப்பு : பூ ... இவ்வளவு தானா .... பாடுறேன் கேட்டுக்க ..... 'கோடி மலைகளிலே கொடுக்கும் மலை எந்த மலை'
பார்த்தி : நிறுத்து ... இது தேவாரம்னு ஒனக்கு எந்த மடையன் சொன்னான்
கைப்பு : யாரு சொன்னா என்னப்பு ... சாமிபாட்டு ... நான்ந்தே பாடினேன் ...
பார்த்தி : சீர்காழி பாட்ட உம் பாட்டுன்னு சொல்றியா
கைப்பு : சீர்காழியோ ... டிம் எஸ்சோ இருந்தா என்னப்பா ... தேவர் படத்துல தானப்பா வந்துச்சி ... அப்ப தேவரம் இல்லையா ?
தலையில் அடித்துக் கொண்டே,

பார்த்தி : மடையா மடையான்னு திட்டியே ... நான் மடையான் ஆயிடுவன் போல இருக்கே... தேவரங்கிறது அப்பர் சாமி பாடினது.
பயந்தபடி ...
கைப்பு : அப்பு எனக்கு அப்பர் சாமியும் தெரியாது ... அப்பா சாமியையும் தெரியாது ... வயுத்துப் பொழப்புக்காக வந்துட்டேன் ... பொழப்புல மண்ணப் போட்டுடாதப்பு ... பொண்டாட்டி புள்ளெங்களெல்லாம் பட்டினியா கெடக்கும் ... பாவம் அப்பு விட்டுடு ... அவ்வ்வ்வ்
பார்த்தி : அடச்சீ நிறுத்து ... ஒன்ன மாதிரி மாங்க மடையனை அர்சகரா வெச்சிருந்தா, என் பொழப்பு தான் நாறிப் போய்டும்
கைப்பு : வேணாப்பு ... ஒன் சோளிய கெடுத்த பாவம் எனக்கு வேணாம் ... நீயே பாத்து ... நம்ம கைப்புள்ள கஸ்டப் படப்படாதுன்னு ...இங்கேயே ஓரமா ஏதோ ஒரு சோளி போட்டுக் குடு
பார்த்தி மனம் இறங்குகிறார்
பார்த்தி : ம் .... ஒனக்கு என்ன வேலை கொடுக்கிறது ... ஆங் ... அங்க யானை நிக்குது பார்
கைப்பு : யானைக்கு சோறு வடிச்சி போடனும் சொல்ற ... ம் விதியாரா வுட்டுச்சி ... செய்யிறேன் அப்பு செய்றேன்
பார்த்தி : யானைக்கு சோறு போட ஆளு இருக்கு ... நீ என்ன பண்ணுற இந்த லத்தி இருக்கு பாரு லத்தி அதை அள்ளிக் கொட்டுற ? என்னது ? லத்தி அதாவது யானை சாணி
கைப்பு : வேணாப்பு ... வேண்டாம் யானைக்கு சாணியள்ளிக் கொட்டுற சோலியெல்லாம் சரிப்பட்டு வராது ... கைப்புவ பாத்தா பாவமா இல்லையா ?
பார்த்தி : ஏற்கனவே வவ்வா உச்சாப் போயி ... கிட்ட வந்த நாத்தம் தாங்க முடியலை ... இந்த வேலைக்கு அனுப்பிச்ச ... யானையே ஒடினாலு ஓடிடும் ... வேற என்ன செய்யலாம் ...
யோசனை செய்து கொண்டிருக்கும் போது கோவில் மணி அடித்து ...
பார்த்தி : நினைச்சேன் ... மணி அடிக்குது ...
கைப்பு : பாத்திய பாத்தியா அந்த சாமிக்கே கைப்பு சாணி அள்ளுறது புடிக்கல
பார்த்தி : ஆமா ஆமா எனக்கும் புடிக்கல ... அதுனால கோவில் மணிய இனிமே நீ தான் அடிக்கிற ... புரிஞ்சுதா ?
கைப்பு : அடிக்கிறம்பா அடிக்கிறேன் ... நங்கு நங்குன்னு நச்சின்னு அடிக்க மாட்டேனா ?
பார்த்தி : அடிக்கலைன்னா ... அப்புறம் உன் மணியை கட் பண்ணிவிடுவேன்

கைப்பு அவசரமாக கையை எங்கோ வைத்து பொத்துகிறார்.
பார்த்தி : அடச்சே யாருக்கு வேணும் அது ... நான் சொன்னது M O N E Y உன் சம்பளத்தை
கைப்பு : உசிரு போயி ... உசிரு வந்துச்சி ஓ.. அந்த மணிய செல்லுறியாப்பு நீயீ
பார்த்தி சென்றவுடன் கைப்பு புலம்புகிறார்
கைப்பு : ஆகா ஆட்ட வெச்சுட்டான்டா... ஆட்ட வெச்சுட்டான் ... சின்ன மணியா அடிச்சு, அங்கனுக்குள்ளேயே நின்னு நாளு பொம்பள புள்ளெங்கள பாத்தோமா இருந்தோமன்னு இருந்த என்ன இப்படி பெரிய மணியா அடிக்க வெச்சுட்டானே ... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

25 ஜூலை, 2006

ஆறு வார்த்தைகளில் ஆறு கதை !

பாஸ்டன் பாலா பிள்ளையார் சுழிபோட, இனிதே தொடங்கிய ஆறு வரிக் கதைகள் எல்லோருடைய கவனதையும் ஈர்த்தது. நான் எழுதிய ஆறு கதைகள் இங்கே !

6

1. கத்தியின்றி ரத்தமின்றி யுத்தமொன்று நடக்குது - இங்கே வலைப்போர் !


2. திரு காசி செய்த கைமா(ற்)று - தமிழ்மணம் விற்பனைக்கு !

3. அம்பலத்தான் இங்கு ஆடுகிறான் - நமசிவாய வாழ்க - சிதம்பரம் !

4. சிவாஜி வாயிலே ஜிலேபி - சர்சையில் இருந்த இடம் !

5. தென்னை மரத்தில் கொட்டிய தேள் - ப்ளாக்ஸ்பாட் முடக்கம் !

6. ஊர் சிறிதா? பங்களா சிறிதா? - சிறுதாவூர் வெவகாரம் !


இந்த கதைகள் பிடிக்கவில்லை என்றால் இங்கே ஒரு சைவ, ஒரு அசைவ கதையும் உண்டு

24 ஜூலை, 2006

கடவுள் நம்பிக்கை (சிறு கதை) !

சேகரை சென்று பார்க்க வேண்டும். பார்த்து இரண்டு நாளாகிறது. அவன் இரண்டு நாட்களுக்கு முன் எதிர்பாராத விதமாக மோட்டர் பைக் விபத்தில் சிக்க, தற்செயலாக வேறொரு வேலையாக அதே வழியில் சென்ற நான் இரத்த வெள்ளத்தில் துடித்து, சுயநினைவற்றுக் கிடந்த அவனை ஆஸ்பத்திரியில் சேர்த்துவிட்டு வந்து இரண்டு நாட்கள் ஆகிறது.

சேகரின் நட்பைப் பற்றி நினைத்துக் கொண்டே ஆஸ்பத்திரி நோக்கி பைக்கை செலுத்தினேன்.

சேகர் என்னுடைய நண்பன், +2 படிக்கும் போது அருகருகே உட்கார்ந்திருந்ததில் நெருக்கமானோம். பாடங்களை ஒன்றாகப் படிப்பது, ஒரே வாத்தியாரிடம் ஸ்டூசன், பக்கத்துத் தெருவில் வீடு என நெருக்கமான விசயங்கள் எங்கள் நட்பை ஆழப்படுத்தியது.

+2 முடித்ததும் இஞ்சினியரிங் சேர்ந்தோம், அவன் எலக்டிரிகலும், நான் எலக்டரானிக்ஸ் பாடமும் எடுத்துப் படிக்க, இருவரும் அடிக்கடி சந்திக்கும் வாய்ப்புக் குறைந்திருந்தது. ஆனாலும் இருவரும் விசேச நாட்களில் கோவிலுக்கு சேர்ந்து செல்வதை வாடிக்கையாக வைத்திருந்தோம். +2 படித்து முடித்ததும், கண்ட கண்ட புத்தகங்களைப் படித்து நெற்றி பட்டைக்கு, நான் பட்டை போட்டுவிட்டேன். அதன் பிறகு கோவில் விசயங்களில் ஆர்வம் ஏற்படவில்லை. சேகருடன் பேசிக் கொண்டு செல்வதற்கு ஒரு வாய்ப்பாகவும், பெரிய சிவன் கோவிலில் உள் பிரகாரத்தில் உள்ள குளிர்ச்சியையும், அங்கு நிலவும் அமைதியை ரசிக்கவும் அவனுடன் செல்வதுண்டு. சேகர் என்னைப் போல இல்லை, ஆழ்ந்த பக்தி உள்ளவன் பாசுரங்களை மனப்பாடம் செய்து நன்றாக பாடுவான், அர்சகர் கொடுக்கும் விபூதியை பயபக்தியுடன் பூசிக் கொள்வான்.

நான் சாமி விசயத்தில் ஈடுபாடு காட்டாததை எதிர்த்து வாதிடுவான். நானும் பதிலுக்கு

'சாமியே நேரில் வந்து சொன்னால் கோவிலுக்கு வருகிறேன்' என்று சமாளிப்பேன். சில சமயங்களில் என்னுடைய பகுத்தறிவு பேச்சு அவனுக்கு பிடிக்காவிட்டாலும்,

'நீ சொல்வதும் சரிதான், ஆனால் கடவுள் நம்பிகை இல்லை என்றால், யாரும் பாவ புண்ணியங்களுக்கு பயப்பட மாட்டார்கள், எனக்கு .. இதில் திருப்தி கிடைத்திருக்கு நண்பா' என்று சொல்வான்.

'அப்பறம் ?'

'அப்பறம் என்ன அப்பறம், கடவுள் நம்பிக்கை இல்லை என்று சிலைகளை உடைப்பவர்களின், செய்கைகளையும் நான் கண்டிக்கிறேன்'

'தாராளமாக, அடுத்தவர் நம்பிக்கையை பாழ்படுத்துபவர்களும் அயோக்கியர்கள் தான், நீ ஒன்றை மறந்தும் பேசுகிறாய்?'

'நீ என்ன சொல்ற புரியல?'

'கடவுள் நம்பிக்கையற்றோர், சாமி சிலைகளை உடைத்திருக்கிறார்கள் அது கண்டிக்கத் தக்கது உடன்படுகிறேன், ஆனால் மசூதிகள், கோவில்கள், சர்ச் இவற்றையெல்லாம் உடைத்துவிட்டு, வெட்டிக் கொண்டு சாகிறவர்கள் யார் ? கடவுள் நம்பிக்கை அற்றவர்களா ?' என்றேன் தொடர்ந்து

'நம்பிக்கை என்பது நம்மீது திணிக்கப்பட்டதாக இருக்கக் கூடாது, நாம் ஏற்றுக் கொண்டதாக மட்டுமே இருக்கவேண்டும், அந்த விதத்தில் என்னால் உணர முடியாத ஒன்றை ஏற்றுக் கொள்வதும் என்னால் முடியாது' என்று சொன்னேன்.

'நமக்கு மேலே ஒரு சக்தி இருக்கிறது, அதுதான் கடவுள்' என்றான்

'நீ சொல்வது சரி என்றாலும், அது எந்த கடவுள் ? அல்லாவா, ஜீசஸ் அல்லது நம்ம சிவன், விஷ்ணு?'

'உன் அளவுக்கெல்லாம் ஆராய முடியாது, எனக்கு நம்பிக்கை இருக்கிறது'

'அப்படி என்னதான் உன் நம்பிக்கை ?'

'கந்தன் என்னும் மந்திரத்தை - என்ற பித்துகுளி முருகதாஸின் பாடலைக் கேட்டுப்பார், அதில் உள்ள உருக்கம், என்னை உருக்குவது, நிஜம். இந்த மாதிரி பக்திப் பாடல்கள் என்னை ஒருவாறு கடவுளை உணர வைக்கிறது. உனக்கு நம்பிக்கையில்லை என்றால் நான் ஒன்றும் சொல்வதற்கில்லை' என்றான் சேகர்

'சேகர், நானும் பல பாடல்களைக் கேட்டிருக்கிறேன்... நல்ல மனதில் குடியிருக்கும் நாகூர் ஆண்டவா, கடலலை தாலாட்டும் வேளாங்கண்ணிப் பாடல்கள் கூட உருக்கமான பாடல்கள் தான், அவை ஏன் உன்னை உருக்கவில்லை?' என்றேன்.

'பித்துக்குளியார் பாடலில் உள்ள நெருக்கம் இந்த பாடல்களில் எனக்கு இல்லை என்பது உண்மைதான்'

இப்படியாக எங்கள் விவாதங்கள் சென்றாலும், நட்பில் நெருக்கம் குறையவில்லை. சேகரின் பெற்றோர்களுக்கு என் பேச்சின் சாமி நம்பிக்கை குறித்த மாற்றம் பிடிக்காமல் போனதும் உண்மை. என் பெற்றோரிடம் பகுத்தறிவு பற்றி நான் பேசுவதில்லை, எங்கு கோவிலுக்கு கூப்பிட்டாலும் முன்பு போல் ஈடுபாடு காட்டாததால், வயசில் இப்படித்தான் இருப்பான் என்று விட்டுவிட்டார்கள்.

சேகரும், நானும் கல்லூரியை முடித்துவிட்டோம், வேலைத் தேடவும் தொடங்கினோம். இனிமேல் சைக்கிள் உனக்கு சரிப்பட்டு வராது என்று யமகா பைக் ஒன்றை வாங்கிக் கொடுத்தனர் என் பெற்றோர்.

நல்லதாகப் போயிற்று என்று நானும் சேகரும் வெளியூர்களில் சென்று புதுப்படங்களைப் பார்பதற்கும், ஊர்சுற்றுவதற்கும், அது நல்ல வசதியாகப் போயிற்று.

அன்று ஒரு நாள் புதுப் படம் பார்க்க செல்லும் போது

'என்ன சேகர், பக்திப் பழமாகவும் இருக்க, கவர்ச்சி நடிகைகளையும் ரசிக்கிற... எனக்கு புரியல நண்பா'

'டேய், அது வேற! அது வேற உணர்வு, இது ஒரு உணர்வு, ரெண்டையும் போட்டுக் குழப்பிக்கொள்ளாதே' என்பான்

'அதாவது சாப்பிடும் போது வேற எதாவதையும் நினைக்கக் கூடாது, வேறு எதாவது செய்யும் போது சாப்பிடுவதை நினைக்கக் கூடாது, அதானே' ?

'எப்படி வேண்டுமானலும் வெச்சிக்க'

'சேகர், எனக்கு வேலைக் கிடச்சிடுச்சிடா அடுத்த மாதம் முதல் செல்ல இருக்கிறேன், அனேகமாக நம்ம ஊர் சுற்றுவதற்கு இதோட முற்றுப் புள்ளி வச்சிடலாம்'

'சரிடா, நண்பா எங்க வீட்டில் சொல்லி நானும் புது பைக் வாங்கிக் கொள்கிறேன், இப்பல்லாம், சைக்கிளிலோ, பஸ்ஸில் செல்வதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை, எல்லாம் உன் பைக்கை ஓட்டி ஓட்டி நானும் அடிக்ட் ஆயிட்டேன்' என்றான்

அடுத்த ஒரு வாரத்தில் ஒரு வெள்ளிக் கிழமை என்னுடைய வண்டி போலவே ஒரு வண்டியை வாங்கப் போவதாக சொன்னான்.

வாங்கியிருக்கிறான். அவன் சொன்ன வெள்ளிக் கிழமை இரவு 8 மணிக்குத் தான் அந்த விபத்தும் நடந்து இருக்கிறது. தற்செயலாக அந்த வழியாக சென்ற நான் அவனை விபத்திலிருந்து மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தேன்.

அவனைத் தான் இன்று மீண்டும் பார்க்கச் செல்கிறேன். பைக் ஆஸ்பத்திரியில் நுழைந்ததும், நிறுத்திவிட்டு உள்ளே சென்றேன்.

சேகர் கை,கால்கள் மற்றும் தலையில் பலமாக கட்டு போடப்பட்டிருந்தது. அவனுடைய அம்மா வரவேற்றார்கள்.

'வாப்பா, உன்னைத் தான் நூறுதடவைக்கு மேல் கேட்டுக் கொண்டிருந்தான், நீ அலுவலக வேலையில் புதிதாக சேர்ந்திருக்கிறாய், உன்னை தொந்தரவு செய்யக் கூடாது என்று சொல்வில்லை' என்றார் சேகரின் அம்மா

'ஆமாம், அம்மா புதிதாக ஒரு அசைன்மன்ட் கொடுத்துவிட்டார்கள், அதுதான் சனி ஞாயிறில் ஊரில் இருக்க முடியாமல் போயிற்று'

'பராவாயில்லப்பா, நீ மட்டும் அன்னிக்கு சரியான நேரத்துக் கொண்டு வந்து சேகரை சேர்த்து, ப்ளட் கொடுக்காமல் இருந்திருந்தால், நாங்கள் இன்நேரம் சேகரை இழந்திருப்போம்' நெகிழ்ந்தார் சேகரின் அம்மா.

'அம்மா, அது என்னோட கடமை, நண்பனுக்கு இது மாதிரி வேளைகளில் உதவவில்லை என்றால், உடலில் இரத்தம் ஓடியும் என்ன பயன்?' என்றேன்.

'உன்ன மாதிரி, நல்ல ப்ரென்ட் கிடைச்சதுக்கு சேகர் கொடுத்து வச்சிருக்கான்னு நினைக்கிறேன், சரி நீ பேசிக்கிட்டு இரு, நான் போயி வீட்டிற்கு சென்று சாப்பாடு எடுத்துக் கொண்டு வருகிறேன்' என்று விடைபெற்றார்.

அவர் சென்றதும் சேகரைப் பார்த்தேன். அவன் நன்றிப் பெருக்குடன் என்னைப் பார்த்து நா தழுதழுக்க நன்றி சொல்ல வந்தான். அவன் கைகளை பிடித்துக் கொண்டேன்.

'அதான் எல்லாம் சரியாகிடுச்சில்ல, நாங்கள்லாம் எதுக்கு இருக்கோம், நண்பா' என்றேன்

'டேய், எனக்கு சாமின்னாலே, இப்ப வெறுப்பு வந்துடுச்சிடா, உனக்குத் தான் தெரியுமே, நான் எவ்வளவு கடவுள் நம்பிக்கை உடையவன் என்று' என்றான்

'சரி, அதெல்லாம் இப்ப பேசவேணாம்'

'இல்லடா, புது பைக் வாங்கி ஆசை ஆசையா கோவிலுக்கு எடுத்துச் சென்று பூஜைப் போட்டுவிட்டுதான், பைக்கையே ஓட்டினேன். நான் இவ்வளவு பக்தியாக இருந்தும் இதெல்லாம் நடந்திருக்குன்னா, சாமி இல்லேன்னுதானே அர்த்தம்?'

'சேகர், உணர்ச்சி வசப்படாதே'

'இல்லடா, எனக்கு ஏண்டா இதெல்லாம் நடக்கனும் ?, கும்புடுறவங்கள கைவிடுறதெல்லாம் சாமியா ?'

'சேகர், நான் ஒன்னு சொல்றேன், தப்பா நெனச்சிக்காதே', விபத்துக்கள் யாரா இருந்தாலும் கவனக்குறைவாக இருந்தால், அது நிச்சயம் நடக்கத்தான் செய்யும், அதையும் நம்பிக்கையையும் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது'

'நீ எனக்கு, சமாதானம் சொல்றேன்னு நினைக்கிறேன்'

'சமாதானமெல்லாம், இல்ல சேகர், இது உண்மைதான், ஒரு விபத்தை வைத்து நம் நம்பிக்கையை எடை போடக் கூடாது, உன்னை மாதிரி நானும் கவனக் குறைவாக இருந்து, விபத்து எனக்கு ஏற்பட்டு இருந்தால், நான் சாமி கும்பிடாததால் தான் என்னைக் சாமி தண்டிச்சிடுச்சின்னு நான் நினைக்க முடியுமா ?' அப்படி நினைத்தால் என் நம்பிக்கை வெறும் வெளி வேசம் தானே?'

'இல்லடா, சாமியும் இல்லை, ஒரு மண்ணும் இல்லை' என்று எங்கேயோ வெறித்துப் பார்த்தான்

'சேகர், உனக்கு இருக்கிற உடம்பு வலியில் இப்படி பேசுகிறாய் என்று நினைக்கிறேன், ஒன்று ஏன் உனக்கு தோன்றவே இல்லை?'

'நீ என்ன சொல்ற'

'சேகர், கடவுள் நம்பிக்கை உள்ள நீ ஏன் இப்படி நினைத்துப் பார்க்கக் கூடாது ?'

'எப்படி நினைத்துப் பார்ப்பது, அதான் எனக்கு அதெல்லாம் பொய்யின்னு புரியுதே'

'நினைத்துப்பார், விபத்து நடந்தது எதிர்பாராதது என்றாலும், நான் அந்த நேரத்தில் அங்கு இருந்தது'

'நீ என்ன சொல்ல வருகிறாய் ?'

'உனக்கு விபத்து நடந்த நேரம், சரியாக நான் அங்கு வந்தது ஒரு தற்செயலாக இருக்க முடியாது, என்னை ஒரு வேளை சாமி தான் அந்த வழியாக அனுப்பி உன்னை காப்பாற்ற வைத்தது என்று ஏன் உன்னால் நினைக்க முடியவில்லை ?'

சேகர் என்னை வினோதமாக பார்தான், கண்கள் பனித்தன, மெய்சிலிர்ப்பு அவன் தேகத்தில் தெரிந்தது.

உடனே அவன் என் கைகளை இருக்கமாக பற்றிக் கொண்டான்.

'நான் அவசரப்பட்டு, சாமி மேல் சந்தேகப் பட்டுவிட்டேன், அதே போல் நாத்திகம் பேசுகிறவர்கள் இறை நம்பிக்கையை கேலி மட்டுமே பேசுவார்கள், அதன் உணர்வுகள் அவர்களுக்குத் தெரியாது என்றும் தப்பாக நினைத்துக் கொண்டிருந்தேன்'

'நம் நம்பிக்கைகள் எதுவாக இருந்தாலும், அந்த நம்பிக்கைகளை கடைபிடிப்பதன் மூலம், அவைகள் அடுத்தவர்களிடம் நம்மை உயர்த்திக் காட்டுவதாக இருக்கவேண்டும், மாறாக அவைகள் அடுத்தவர் நம்பிக்கையை கெடுப்பதாக இருக்கக் கூடாது' மேலும் தொடர்ந்து,

'அடுத்தவர்களின் நம்பிக்கையை கேலி செய்யும் நம்பிக்கைகள் எல்லாமுமே அவநம்பிக்கைகள் தான்' என்றேன்

'உன்னிடம் பலநாள் பழகியும், எனக்கு புரியாத விசயம் உன் நாத்திக நிலைப்பாடுதான், அது இப்ப தெளிவாகிவிட்டது' என்றான்

'சரி சரி, ரொம்ப உணர்ச்சி வசப்படாதே, அம்மா கொண்டுவந்த சிவன் கோவில், திரு நீறு அங்கே இருக்கிறது, அதை எடுத்துத் தருகிறேன், நம்பிக்கையுடன் பூசிக் கொள், சீக்கிரமே குணமாகிவிடுவாய்' என்றேன்

நான் எடுத்துக் கொடுக்கவும், அதை பயபக்தியுடன் எடுத்துப் பூசிக்கொண்டான்.

'சேகர், டாக்டரிடம் விசாரித்தேன் மூன்று வாரத்தில் டிஸ்ஜார்ஜ் பண்ணிடுவாங்களாம், உனக்கு பிடிச்ச நடிகையோட புதுப் படம் வருது, மூன்று வாரம் கழித்து போகலாம் தானே' என்று கண் அடித்தேன்.

காலால் எட்டி உதைக்க முயன்று வலி பொருக்க முடியாமல் 'அம்மா' என்றான்.

22 ஜூலை, 2006

சார்பு நிலை - வலை அரசியல் !

தனித்தன்மை என்ற சிறப்பை அழிப்பது சார்பு நிலை என்னும் தன்மையே ஆகும். சார்பு நிலை என்றால் ஒன்றைச் சார்ந்து இருப்பது என்று எல்லோருக்கும் தெரியும். ஏன் ஒன்றைச் சார்ந்தே இருக்கவேண்டும் ? என்பதை எத்தனைப் பேர் தங்களுக்குள் கேட்டுக்கொள்கிறார்கள் என்பதுதான் தெரியவில்லை.

நமக்கு சில விசயங்கள் பிடித்திருக்கும், அதன் மூலம் ஒத்த கருத்துக்களை உடைய ஒருவரை நமக்கு பிடிக்க ஆரம்பித்துவிடுகிறது. ஒத்தக் கருத்துடயவருக்கும் நமக்கும் சில விசயங்களில் கருத்து வேற்றுமை இருக்கலாம். ஆனால் அந்த கருத்து வேற்றுமைகளை நாளடைவில் நம்மைச் சார்ந்தவர் வைத்திருப்பது என்பதால் நாமும் நாளடைவில் அந்த வேற்றுக் கருத்துக்களை முதலில் சகித்தாலும், பிறகு ஊள்வாங்கிக் கொள்வதால் நாளடைவில் மாற்றம் ஏற்பட்டு, அந்த கருத்துக்களை வைத்திருப்பவரைக் காட்டிலும் அதிகம் விரும்ப ஆரம்பித்துவிடுவோம்.

ஆக நம் தனித்தன்மையாக எதிர்த்துவந்த சில மாற்றுக் கருத்துக்களை, விரும்பி ஏற்றுக் கொண்ட ஒரு வேண்டாத பழக்கம் போல் புதிதாக ஏற்றுக் கொண்ட சார்பு நிலை மூலம் நாமே நம் தனித்தன்மை அழிக்க துணிந்தும் விடுகிறோம்.

இதுமட்டுமல்ல, முன்பு தன் சொந்தக் கருத்துக்களை, தான் விரும்பிய விசயங்களை முன்னைக் காட்டிலும் முனைப்புடன் தானே அழிப்பதில் தீவிரம் காட்ட ஆரம்பித்து விடுவோம். இதில் யாருக்கு வெற்றி ? கண்டிப்பாக சார்பு நிலைக்குள் (தெரியாமல்) சிக்கவைத்தவருக்குத் தான் வெற்றி. அவர் எதிர்க்கும் விசயங்களை அவர் தனி ஒருவராக எதிர்க்கவேண்டியதில்லை. மேலும் அவரை நேரிடையாக எதிர்க்கும் விசயங்களையும் அவரே எதிர்க்கவேண்டும் என்ற நிலை இல்லாது, அந்த வேளையை சார்பு நிலையில் பீடிக்கப்பட்டவர்கள் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் சார்பு நிலையில் பீடிக்கப்பட்டவருக்கு மூளை மழுங்கியதுதான் மிச்சம், சுய சிந்தனைகளை தொலைத்தது தான் மிச்சம்.

ஒரு விசயம் அல்லது ஒரு கருத்து நமக்கு மற்றவர்களிடம் ஒத்துப் போகிறதா ? அதைப் பாராட்டுவதுடன்,நிறுத்திக் கொள்ளலாம். அவருடைய எல்லாக் கருத்துக்களுக்கும் முட்டுக் கொடுப்பது தேவையற்றது. அவ்வாறின்றி நமக்கோ, நமக்கு பிடித்த மற்றவருக்கோ சில விசயங்களில் மாற்றுக் கருத்து இருக்கிறது என்று கவலைப்படுகிறீர்களா ? அது தவறான கருத்து எனும் போது தெளியவைக்க முயலலாம். இல்லையெனில் விட்டுவிடலாம். மாற்றுக் கருத்து இருக்கிறது என்பதற்காக முற்றிலும் நிராகரிக்கத் தேவையில்லை. அப்படி நிராகரித்தால் சார்ப்பு நிலை உங்களுக்குள் வந்துவிட்டதாக நினைத்துக் கொண்டு தெளிவடைவது நலம்.
நமக்கு தெரியாமல் வளரும் சார்பு நிலையை நாமே கண்டு கொள்ளாமல் விட்டால், தனித்தீவு, குழுமங்கள் இவற்றில் ஏதோ ஒன்றில் சிக்கிக் கொள்வோம். கிணற்றுத் தவளைக்கும் நமக்கும் பிறகு வேறுபாடு இல்லாமல் போய்விடும்.

அவரவர் கருத்து அவரவர்கே, நாம் சார்ந்துள்ளவர்களின் கருத்தாக்கங்கள் எல்லா வற்றையும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்பது தேவையற்ற செயல்தானே. ஒரு பூந்தோட்டத்தில், ஒரே இனத்தில் ஒரே தோற்றத்தில் இருக்கும் வெவ்வேறு (ரோஜா)செடிகளில், பூக்கள் வேறு நிறங்களில் பூக்களாம். இந்த வண்ணம் எனக்கு பிடிக்க வில்லை என்று அந்த வண்ணம் சார்ந்த செடிகளை வெட்டி வீசினால், மீதம் இருக்கும் செடிகளில் பூக்கள் பூத்தாலும் பூந்தோட்டம் வண்ணமயமாய் இருக்காது !


புதிய வலைப்பாதிவாளர்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வலை அரசியலில் இதுவும் ஒன்று. அவர்கள் ஏதாவது ஒரு குழுவில் சிக்கிக்கொண்டு தங்கள் சுய சிந்தனைகளைத் தொலைத்துவிடக் கூடதென்ற சின்ன அக்கறை.

இந்த பதிவுக்கு என்ன அவசியம் ? அது ஒரு சிதம்பர ரகசியம்.

இந்த கட்டுரையின் கருத்தையும் சார்பு நிலையற்றுப் படித்துத் தங்களின் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டால் நல்லது. அந்த விதத்தில் இந்கு பின்னூட்டமிட்ட திரு சிவபாலனின் கருத்துக்களை நான் மதிக்கிறேன்.

பிகு : இந்த பதிவு ... முந்தைய
இந்த பதிவின் தொடர்ச்சி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

21 ஜூலை, 2006

கேள்வி ஞானம் !

அறிவு என்ற சொல்லை ஆழப்படுத்துவது பின்னால் நிற்கும் கேள்வி. கேள்விகள் இல்லையென்றால் இன்றைய உலகம் அறிவியலில் முன்னேறியிருக்குமா என்பது சந்தேகம். நாம் பேசத்தொடங்கும் முன் முதலில் நம் கண்கள் கேள்வியை எழுப்பி விடை தெரியாவிட்டால் மருண்டு அழத்தொடங்கியது. ஆக முதல் கேள்வி என்பது நம் முதல் அழுகையிலிருந்து தொடங்கியதுதான்.

மூன்றுவயதில் கேள்வி கேட்க ஆரம்பிக்கும் குழந்தைகள் ஆறுவயது வரை கேள்வி கேட்பதை நிறுத்துவது இல்லை. ஒரு நாளைக்கு 4 வயது குழந்தை 400 கேள்விகள் கேட்டு பெற்றவர்களை திணற அடிப்பதாக தெரிகிறது. கேள்வி கேட்கும் மாணாக்கர்களையே பதில் தெரிந்த ஆசிரியர்கள் விரும்புவார்கள். பதிலுக்கு பாடத்திலிருந்து கேள்வி கேட்டு தேர்வு நேரத்தில் திணற அடிப்பார்கள். பதில் தெரியாத கேள்விகள் பல உண்டு. ஆனால் பதிலுக்கான கேள்விகள் சில மட்டுமே என்பதும் நமக்கு தெரிந்ததுதான்.


அண்மையில் 'உலக ரெட்சகர் யார் ?'என்ற கேள்வியை மாணக்கர்களுக்கு வைத்துவிட்டு, அதைத் தொடர்ந்த பல கேள்விக்கனைகளை தாக்குப்பிடிக்க முடியாமல் தமிழக அரசின் கல்வித்துறை திணறியதை பலரும் அறிந்தது.

கேள்விகள் தான் ஒரு நாட்டை வழி நடத்துகிறது. சட்டசபை கூச்சல், பாராளுமன்ற பாய்ச்சல் எதுவாக இருந்தாலும் அவை எல்லாம் கேள்வி என்ற ஒரு சொல் மூலம் தான் இயங்குகின்றன. கேள்வி கேட்கும் உரிமை மறுக்கப்படும் போது அங்கு ஜனநாயகம் செத்துவிட்டதாக சொல்கிறார்கள். கேள்வி கேட்க எப்பொழுது ஒரு சமூகம் துணிகிறதோ அப்போது அந்த சமூகம் நிமிர ஆரம்பிப்பதாக சொல்கிறார்கள். கேள்வி கேட்பதை தடை செய்யும் அரசுகள் விழுந்துவிட்டதாகவும் சொல்கிறார்கள். ஆகவே, ஒரு சமுகத்தின் வீழ்ச்சியே எழுச்சியோ அவை கிடைக்கப்படும் பதிலைக்காட்டிலும் கேட்கப்படும் கேள்விகள் மூலமே தீர்மானிக்கின்றன.


மிக மிக எளிமையான விசயமும், மிகமிக கடுமையானதும் கேள்வி கேட்கப்படுவது என்பதுதான். பதில் தெரிந்தே கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் கேள்விக்குறியாகவே பார்க்கப்படுகிறது என்பதும் நாம் உணர்ந்ததுதான்.

சிந்தனைகள் என்பது மனதில் எழும் கேள்விகளின் தொகுப்பு என்று சொல்லலாம் என்று நினைக்கிறேன். அத்தகைய தொடர் கேள்விகள் பல்வேறு தேடலாக வெளிப்படுகிறது. இப்படிப்பட்ட சிந்தனையை வளர்க்கும் கேள்விகளே, விஞ்ஞானமாகவும், ஆன்மிகமாகவும், பகுத்தறிவாகவும் வெளிப்படுகிறது.

முழு பிரபஞ்சமும் எண்ணிலடங்கா கேள்விகளை வைத்துக் கொண்டுதான் இயங்குகிறது. முதலில் அந்த கேள்விகளை ஒவ்வொன்றாக கண்டுகொண்ட நாம், அதற்கான பதிலில் அடுத்த கேள்வியை கண்டுபிடிக்கிறோம். இப்படியாக அறிவு நிலையின் வளர்ச்சி என்பது கேள்விஎன்னும் ஊட்டச்சத்தாலேயே வளர்கிறது.

இன்று எதைப்பற்றி நினைக்கலாம் என்ற கேள்வியை நமக்குள் நாம் கேட்கும் பொழுது, அதைத் தொடர்ந்து ஒரு தேடல் வெளிப்பட்டு ஆக்கங்களாக சிறகடிக்கிறது. தொடர்ந்த கேள்விகளின் தாக்குதல் உங்களுக்குள் இருந்தால் உங்கள் ஆற்றலும், அறிவும் வளர்சியில் இருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம் . இந்திய சமயங்களின் தோற்றமும் வளர்ச்சியும் தருக்க சாஸ்திரம் என்ற கேள்விகளின் அடிப்படையில் தோன்றியதுதான்.

ஞானமோ, மெய்ஞானமோ, விஞ்ஞானமோ அவைகள் யாவும் கேள்விகள் தேடித்தந்த விடைகளே!

20 ஜூலை, 2006

pk - தொடரும் இந்திய ஊடுறுவல் !

பாக்கிஸ்தானிலிருந்து செயல்படும் பல்வேறு ஊடுருவல்கள் தடைசெய்யப்பட்டும், ஒரு புதிய ஊடுறுவல் வெற்றிகரமாக தடைகளை தாண்டி வருகிறது என்பது அதிர்ச்சி அளிக்கிறது. குண்டு வெடிப்பிற்கு முன்பு இப்படி ஒரு ஊடுறுவல் பாக்கிஸ்தானில் இருப்பதே இந்தியாவுக்கும், ஊடக பாதுகாப்பு அமைப்புகளுக்கும் தெரியவில்லை.

தடைகளை நாங்கள் வெற்றிகரமாக தாண்டுவோம் என்று சவால்விட்டு வெற்றிகரமாக செயல்பட்டும் வருகிறது. நம் இந்தியர்களும் அது விரித்த வலையில் விழுந்துவிட்டார்கள் என்று சொல்லத்தான் வேண்டும்.
இதை நம் இந்தியர்களும் தங்கள் சுயநாலனுக்காக பயன்படுத்திக் கொள்வதாகவும் தெரிகிறது.

இந்திய அரசு பல்வேறு அடித்தளங்களை தடைசெய்தாலும், இந்த அடித்தளம் எல்லாவற்றையும் விஞ்சும் அளவிலும், தடைசெய்யப்பட தளங்களை தன்னுள் இணைத்து இந்தியாவுக்குள் அனுப்புவதில் வெற்றி கண்டுருப்பதைப் பார்க்கும் போது. இந்திய அரசு கண்மூடிக்கிடக்கிறதா என்று தெரியவில்லை.

பொது இடத்தில் இந்த தள அமைப்பை நம்போன்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொண்டு கொக்கறிக்கிறார்கள். நாங்கள் நினைத்ததை சாதிப்போம் தடா, பொடா எதுவோண்டுமானலும் போட்டுக்கொள் எங்கள் குரல்வளையை நெறிக்கமுடியாது என்று முழங்குகிறார்கள்.
ஆனாலும் இதன் ஆட்டமெல்லாம் இன்னும் இரண்டொரு நாளைக்குத்தான் என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்திருக்கிறது.


நமக்கு நெருக்கமாக தமிழ்மணத்திலேயே இந்த ஊடுறுவலைப் பார்த்தும், கண்டும் காணமல் எல்லோரும் இருக்கிறோம்.


ரொம்ப குழப்பமாக இருக்கிறதா ? அது pk ...pk என்று தமிழ்மண இடுகைகளின் முகப்பிலும் மறுமொழி இடுகைகளின் முகப்பிலும் தெரியும் 'pk' ..... என்ற pkblog தான் :)))

pkblog பாகிஸ்தானிலிருந்து இயங்கி blogspot சேவைகளை இணைத்துத் தருகிறது. இது தான் நியூஸ். இது ஜோக்குக்காக எழுதின பதிவு யாரும் சீரியஸ் ஆக எடுத்துக்காதீர்கள். ஆனால் செய்தி உண்மை :))))

pk என்றாலே இந்தியாவிற்கு தலைவலிதான் போலும்.

pk ஐ உபயோகப்படுத்தி இன்றைக்கு அதிகம் குழப்பத்துக்கு ஆளானவர்கள் நானும் திரு டிபிஆர் ஜோசப் ஐயாவும் தான். :)))))


அவர் pkவைப் புகழ்ந்து அவர் எழுதிய பதிவே காணமல் போய்விட்டது, அதற்கு போட்ட பின்னூடமெல்லாம்
திரும்பிப் பார்கிறேன் 175 போய் சேர்ந்து இருவரும் குழம்பி... ஒரே தமாஸ் ஆகிவிட்டது :)))

பி.கு : இந்த பதிவுக்கு பின்னூட்டம் போடுபவர்களுக்கு நான் தடைசெய்துள்ள சொற்கள்... மதம் ... தேசபக்தி ... மற்றும் உகு, வெகு



துன்பம் வரும் நேரத்திலே... :) ங்க...

அப்படி என்ன துன்பம் வந்துவிட்டது ? அந்நியன் இருக்கிறார், பிகே ப்ளாக் இருக்கிறது, நமக்கு தெரியாத குறுக்கு வழியா ? அல்லது கிறுக்கு வழியா ? ... ஆயிரம் கைகள் மறைத்தாலும் வலைப்பூக்கள் மலர்வதையும் மணம்வீசுவதையும் எவர் தடுக்கமுடியும். டிஸ்கி போதும்னு நினைக்கிறேன். எழுதிய விசயம் முகப்பில் வருவதைத் தவிர்க்கத் தான் நீட்டி முழங்குவது.


மனைவி : என்னங்க, நான் இங்க கழுதையா கத்திக்கிட்டு இருக்கேன், நீங்க என்னன்னா காதுல வாங்காம எதையோ தேடிகிட்டு இருக்கிங்க
கணவன் : ஓ... அதுதான் இங்க இருந்த நீயூஸ் பேப்பரை காணுமா !

ஒருவர்: நீங்க சொன்ன ஜோக்குக்கு சிரிப்பு வரவில்லையே ?
மற்றொருவர்: நான் சொன்னது டியூப்லைட் ஜோக் லேட்டா தான் சிரிப்பு வரும்.

நண்பர்1 : உங்களை 'டியூப் லைட்டு' சொல்லியும், சிரிக்கிறீர்களே !
நண்பர்2 : இதை கண்டுபிடிக்க உங்களுக்கு இவ்வளவு நாள் ஆனதே என்று நினைத்தேன் அதுதான் சிரித்தேன்

நர்ஸ் : டாக்டர் நீங்க கொடுத்த தூக்க மாத்திரையை சாப்பிட்டும் அந்த பேசன்ட் எழுந்து நடந்து போரார் பாருங்க
டாக்டர் : சீக்கரம் வேகமாக போய் அவரை புடிங்க, அவருக்கு இன்னும் தூக்கத்தில் நடக்கும் வியாதிக்கு மருந்து கொடுக்கவில்லை.

பக்கத்து வீட்டுக்காரார் 1: அவன் ரொம்ப கெட்டப் பையன் சார்
பக்கத்து வீட்டுக்காரார் 2: என்ன பொண்ணுங்க கூட சுத்துரானா, இதெல்லாம் இந்த வயசில் சகஜம் விடுங்க
பக்கத்து வீட்டுக்காரார் 1 : அதுதான் இல்லை, சாமியார் ஆகப்போறானாம்

18 ஜூலை, 2006

கருடா சவுக்கியமா ?


நல்ல பாம்புகள் என்றாலும்
நாக்கில் இருப்பது விசமல்லவா ?
நடராஜனின் கழுத்தை சுற்றிக் கொண்டு
நடமாடும் இந்த பாம்புகள்,
நஞ்சு மட்டுமா கக்குகின்றன கூடவே
நஞ்சை விடக் கொடும் விசமத்தையும் தான் !
நச்சுப் பாம்பை அடிக்கலாமா ? கூடாது !
நடராஜனிடம் இருக்கும் போது
நாடவேண்டாம் தெய்வ நிந்தனை !
நம்மைப் போலவே நடராஜனைத்தான் இந்த
நல்ல பாம்புகளும் நம்பியிருக்கின்றன !
நம்பினார் கெடுவதில்லை ! என்ற
நான்கு மறை தீர்ப்பு பொய்துவிடும் !
நஞ்சு தீண்டப்பட்ட நான் என்ன செய்யட்டும் ?
நல்லப் பாம்பை நமஸ்காரம் பண்ணட்டுமா ?
நஞ்சுண்ட நாதனை நாமும் பின்பற்றி
நல்லப் பாம்பிற்கும் நல்லதையே நினைப்போம், ஆனால்
நாளை நம்மை மீண்டும் கடித்தாலும் கடிக்கும், எனவே
நச்சுப் பல்லைப் பிடிங்கினால் போதும், மற்றதை
நடராஜன் பார்த்துக் கொல்வான் !

பிகு: பாம்புகள் எல்லாமே விசம் உள்ளது பாம்புகளை கொல்லவேண்டும் என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, புற்றில் 'சிவனே' என்று படுத்துறங்கும் பாம்புகளும் உண்டு, விஷ(ம)ம் அற்ற பாம்புகளும் உண்டு. அவைகளை நாம் போற்றலாம், கோவில் பாதுகாப்பில், கோவிலில் நாம் ஊற்றும் பாலை குடித்துவிட்டு, முட்டையும் கேட்கும் பாம்புகள், நாம் தெய்வத்தை கும்பிட வருவதை தெரிந்தும் சீறி கடித்தால் மட்டுமே இந்த உபாயம்.

blogger quick resoluttion (உடனடி தற்காலிக தீர்வு :)

இந்த http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 உரலை வெட்டி ஒட்டுங்கள், இது போல் உங்கள் ஐடியை, முகப்பில் நீங்கள் எழுதும் பதுவில் முதலில் சேர்த்துவிட்டால் பின்னூட்டமிடவும், மறுமொழியிடவும், பயன் படும்.

உங்களுக்கு தேவையான பதிவுகளை படிப்பதற்கும் பின்னூட்டற்கும் post ஐடியுடன் அவர்களை உங்கள் பதிவில் பின்னூட்ட மிட உங்கள் பதிவில் வேண்டுகோள் விடுங்கள். பிளாக்கர் அக்வண்ட் மூலம் நீங்கள் பின்னுட்டத்தை பார்க்க முடியும், அதன் மூலம் மூலம் பின்னூட்டமிடவும், பதிவுகளை படிக்கவும் முடியும். show original post என்ற லிங்கை அழுத்தினால் பதிவு முழுவது ப்ளாகர் வழியாகவே தெரியும். இது ப்ளாக் ஸ்பாட் மூலம் செல்லாததால் உங்களால் முழுப்பதிவையும் பின்னூட்டதையும் படிக்க முடியும்

போஸ்ட் ஐடியை கண்டுபிடிப்பது எப்படி? post command மவுசை மேய்த்தால் முழு உரலும் தெரியும்

உங்கள் பதிவின் போஸ்ட் ஐடியை, கண்டுபிடிக்க உங்கள் ப்ளாக்கர் எடிட் போஸ்ட் மீது மவுசை ஓடவிட்டீர்கள் என்றால் தெரியும், உங்களுக்கு தேவை ப்ளாக்கர் எண் மற்றும் போஸ்ட் ஐடி. இது உங்கள் பதிவிற்கு பின்னூட்டததை படிக்கவும், மறுமொழியிடவும் பயன்படும். இரண்டையும் சேர்த்து அட்ரஸ் பாரில் http://www.blogger.com/comment.g?blogID=10267267&postID=115319907938327120 ரீப்ளேஸ் செய்தால் உங்கள் எல்லா பதிவுகளும் படிப்பதற்கு தயார்.

17 ஜூலை, 2006

சகுனம் !!!













எனக்கு பின்னால் வலப்பக்கமாக சென்ற
பூனை அடுத்த நொடியில்
அடிப்பட்டது ஆம்னி பஸ் சக்கரத்தில் !

நட்சத்திரம் ஆகும் ஆசை இருக்கிறதா ?

விவாத களங்கள் சூடாகும் போது என்ன நடக்கிறது, ஆதாயம் பெற்றவர்கள் யார் ? பாதிக்கப்பட்டவர்கள் யார் ? என்று பார்த்தோமேயானால். ஆதாயம் பெற்றவர்கள் ? பெருசா ஒன்றும்மில்லை 100களை தாண்டிய பின்னூட்டங்கள் மட்டுமே. இதில் பாதிக்கப்படுவது தமிழ்மணத்தால் தேர்ந்தெடுக்கப் பட்ட *நட்சத்திரம்*.
ஆம் நட்சத்திர வாய்ப்பென்பது பதிவர்களின் கனவு. எத்தனையோ பதிவர்களின் எழுத்துத் திறமையை வெளிப்படுத்த கிடைக்கும் ஒரு பொன்னான வாய்ப்புத்தான் தமிழ்மண நட்சத்திரம் என்ற ஒரு வார அங்கீகாரம். இந்த அறிய வாய்ப்பை பயன்படுத்தி, தனது எழுத்துத் திறமையை வெளிப்படுத்தி 'நல்ல பதிவாளர்கள், சிந்தனையாளர்கள் ' என்று தம்மை அடையாளம் காட்டியுள்ளனர் பலர். ஒரு வாரத்தில் எழுதப்படும் நட்சத்திரப் பதிவுகள் எல்லாமும் சுவையாக இல்லாவிட்டாலும் சில பதிவுகள் கண்டிப்பாக கவனம் ஈர்க்கும் விதமாக அமைந்துவிடும், அதைப்பற்றிய விவாதங்கள் பின்னூட்டங்கள் வழியாக தெரியவருவதும் நடைமுறை.

ஆனால் கடந்த இருவாரங்கள் ஏற்பட்ட திடீர் சர்சைகளால் நட்சத்திரங்கள் என்ன எழுதினார்கள் என்பதே தெரியவில்லை. நட்சதிர எழுத்துக்கள் புறக்கணிக்கப்பட்டது போன்ற தோற்றம் உருவாகி, நான் சொன்னது சரி, நீ சொல்வது தவறு, புரிந்துணர்வு இல்லை, அதற்கு இது பொருளல்ல, போன்ற பதிவுகள் மாறி மாறி எழுதப்பட்டு விவாதக்களங்கள் முன் எப்பொழுதும் இல்லாதவாறு சூடாகவே காணப்பட்டது. நீண்ட விவாதங்களை மட்டும் படித்துவிட்டு, நட்சத்திரங்களின் பதிவுகளை மறந்து போனதில் நானும் ஒருவன்.

ஆரோக்கியமான விவாதங்கள் அவசியம், ஆனால் நடந்த விவாதங்கள் மூலம் ஆதங்கங்களை மட்டுமே சம்பந்தப்பட்டவர் விளக்கினர், ஆனால் பின்னூட்டமிட்ட சக பதிவாளர்களில் எவ்வளவு பேர் அதனை ஏற்றுக் கொண்டார்களா என்பது தனித்தனியே அதுபற்றிய பதிவுகள் போட்டதன் மூலம் தெரியவருகிறது. எது எப்படியோ, சக பதிவாளர் ஒருவர் நட்சத்திரமாக வலம் வரும் போது அவர்களுடைய எழுத்துக்களை சர்சைகள் மூலம் தெரியாமலோ, உணராமலோ புறக்கணிக்கப்பட்டதாக நினைக்க முடிகிறது. நட்சத்திரம் ஆகும் ஆசை உள்ளவர்கள் யாரும் இருந்தால் இது போன்ற நிகழ்வுகளை கவனத்தில் கொண்டால், ஒருவேளை தேர்ந்தெடுக்கப்பட்டு பதிவுகள் எழுதும் போது பின்னூட்டம் வரவில்லையென்றால் ஆறுதல் தேடிக்கொள்ளலாம். நட்சத்திர பதிவுகளை படிக்காமல் போனதற்கு நான் வெட்கப்படுகிறேன்.




15 ஜூலை, 2006

மிருகமும் மனிதனாகலாம் (படம்)

அடிக்குது குளிரு...

சூடு சொரணை நிறையவே இருக்கு என்று வலைகள் வெப்பம் தாங்காது அறுந்துவிடுமோ என்ற அச்சம் காரணமாக ... என்ன ஒட்டு வேலை செய்யலாம் என்று யோசித்த போது ... இந்த ஒட்டு வேலை கண்ணில் பட


இந்த பூனை பாலும் குடிக்கும் பீரும் குடிக்கும் !


நாய் பட்டப்பாடு இப்பத்தான் நல்லா புரியுது !

ஒன்னும் ஒன்னும் = ஏழு

//தமிழ்மணம் கடந்த சிறு நாட்களாக சற்றே சூடாக உள்ளது. கொஞ்சம் கவனம் திருப்ப இந்த பதிவு. மிக, மிக, அவசரமாக எழுத பட்டது. பிடித்த தமிழ் வரிகளை இங்கே தந்துள்ளேன்.// என்று எமெர்ஜென்சி பதிவை தட்டிவிட்டு நமது 1+1 =2 திருவாளர் பாலசந்தர் கணேசன். என்னையும் அன்போடு அழைத்திருக்கிறார். அவர் எதற்காக என்னை தேர்ந்தெடுத்தார் என்று குழப்பமாக இருக்கிறது ! பிடித்த தமிழ்வரிகளைப் போடவேண்டும் என்று கேட்டிருக்கிறார்



சரி ...... படியுங்கள்

1. ஒரு தாய் மக்கள் நாமென்போம் ஒன்றே நமது குலமென்போம் ( ஒரு சென்டிமென்ட் வேண்டாமா ?) :(
2. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் கண்ணனுக்கே... கண்ணனே ... படைக்கிறான்...கண்ணனே காக்கிறான் ... கண்ணனே கொலைசெய்கிறான் ...
3. வீடுவரை உறவு வீதிவரை மனைவி காடுவரை பிள்ளை (பெண்ணைப் பெற்றவர்களுக்கு அதுவும் கிடையாது )
4.உன்னைச் சொல்லி குற்றமில்லை ... என்னைச் சொல்லிக் குற்றமில்லை ...
5. ஆசையே அலைபோலே நாமெல்லாம் அதன் மேலே ஓடம் போல வாழ்ந்திடுவோமோ வாழ்நாளிலே
6. அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனவ சிரிப்பு ...
7. ஒருவன் ஒருவன் முதலாளி உலகில் மற்றவன் தொழிலாளி...


(தேவனே என்னைப் பாருங்கள்... என் பாவங்கள் தன்னை வாங்கிக்கொள்ளுங்கள் ...ஆயிரம் இருந்தும்....தும் ... தும் .... அவசரத்துக்கு எதுவும் வராததால் இப்போதைக்கு ஏழு போதும் என்று நினைக்கிறேன். )

கத்தி குத்தைவிட காயம் விளைவைப்பது உள்குத்து ஆகவே



மனம் வேண்டும்
புன்பட்ட மனதுகள் நல்பன் எடுத்துப்பாடி,
தன்பட்ட துன்பமதை இனிஎவர்பட வேண்டவென
பண்பட்ட உள்ளமதை பெற்றுவிட்டால், எவர்
கண்பட்ட தீமையும் கனபொழுதில் மறைந்துவிடும்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும் என்றும் மகிழ்ச்சி பெருகவே வேண்டும்.
அன்புடன் நட்புடன்
கோவி.கண்ணன்

13 ஜூலை, 2006

வலைப்பதிவில் ஒரு தமிழாசிரியர் !

நம் எல்லோரும் பள்ளிக்கூடத்தைவிட்டு வெளியில்வந்து வெகுநாட்கள் ஆகிவிட்டது. அதனால் ஆசிரியர் என்றால் எல்லோருக்கும் இளப்பமாகவே இருக்கும். அதுவும் தமிழ் ஆசிரியர் என்றால் சொல்லவே வேண்டியதில்லை. ஆசிரியர் - பிரம்பு இந்த எந்த பயமும் இன்றி இஷ்டம் போல் எழுதித் தள்ளுகிறோம். நமது எழுத்துப் பிழைப்பில் மண்ணைப் போடும்படி ஒருவர் இப்பொழுது பரவலாக எல்லோருடைய பதிவிலும் தென்படுகிறார்.

அவர்தான் 'எழுத்துப் பிழை' என்ற பெயரில் பின்னூட்டமிடும் ஒரு தமிழாசிரியர்(?)

முன்பு செந்தழல் ரவி அவருடைய பதிவில் 'அனானியாக' வந்தார், பின்பு என்ன நினைத்தாரோ எம்போன்ற அனானி பின்னூட்ட வசதி இல்லாதவர்களுக்காக வலைப்பதிவும் ஆரம்பித்திருக்கிறார். ஆனால் அந்தபதிவில் 'புரொபைல்' இல்லை. தேவை இல்லை என்று கூட நினைத்திருக்கலாம்.

எழுத்துப் பிழை அவர்கள் இப்பொழுது அன்பாக சுட்டிக் காட்டுகிறார். போகப் போகத்தான் தெரியும் சுட்டி மட்டும் காட்டுவாரா அல்லது தலையில் குட்டியும் காட்டுவாரா என்பது. எது எப்படியோ அன்பரது தமிழ்ச்சேவை மிகவும் நெகிழ்ச்சியாக இருக்கிறது. சண்டைகள், சச்சரவுகளுக்கு இடையில் பதிவுகளைப் படித்து பிழைகளை சுட்டிக்காட்டும் அன்பரது சேவை எம்போன்றவர்களுக்குத் தேவை.

ஆகவே அன்பர்களே, நண்பர்களே ! நீங்கள் தமிழில் தடுமாறினால் தாங்கிப்பிடிக்க ஒருவர் இருக்கிறார் என்று நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அன்பரது சேவை உங்கள் பதிவுக்கு தேவை என்றால், அவருக்கு இந்த பதிவின் மூலம் அழைப்புவிடுக்கலாம். திரு குமரன் (எண்ணம்) ஏற்கனவே முதல் ஆளாக அவருக்கு அழைப்புவிடுத்திருக்கிறார். இந்த பதிவின் நோக்கம் அவருக்கு பாராட்டுத் தெரிவிப்பது மற்றும் அவரது சேவை வேண்டுவோர் அவருக்கு அழைப்புவிடுப்பதே.

எழுத்துப் பிழை அவர்களே.. ! கருத்தினைத் தவிர்த்துப் பிழைகளை திருத்துவதோடு மட்டும் நில்லாமல், கூடவே மதிப்பெண் வழங்கினால் மிகவும் சந்தோசமாக இருக்கும். தமிழில் முதல் மதிப்பெண் பெறவேண்டும் என்பதுதான் என் போன்றவரின் ஆசை. அதாவது மொத்தவரிகளில் எத்தனை வரிகளில் பிழை இருக்கிறதோ அந்த சதவிகித அடிப்படையில் மதிப்பெண் வழங்கினால் நன்று. கூடவே பிழையின்றி எழுதுவோருக்கும் பாராட்டாக 'நன்று', 'மிக நன்று' போன்ற குறிப்புகளும் இருந்தால் நல்லது.

எழுதிப் பிழைப்பவர்கள் மத்தியில் பதிவர் திருவாளர் 'எழுத்துப் பிழை' வித்தியாசமானவரே என்று கருதுகிறேன். 'எழுத்துப் பிழை' அவர்களே பாராட்டுக்கள்

முறிந்துப்போன காதல் ...! க(வி)தை


தாயைத் தவிர வேறொரு
பெண்முகம் பார்த்தது இல்லை.
வளர்ந்தும் நான்,
வீட்டையே சுற்றி வந்தாலும்,
வெளியே அழைத்துச் சென்று வந்தாலும்,
நான் உண்டு,
என் வேலை உண்டு என
தினம் திகட்டி போன
வாழ்கை வாழ்ந்து வந்தேன் !

வேளா வேளைக்கு
உணவும், பாலும் கொடுத்து
ஊட்டி ஊட்டி வளர்த்தாலும்,
ஏதோ ஒன்றுக்காக,
ஏங்கி ஏங்கி பகலில் கூட
தூக்கம் வருவதில்லை,
என் உணர்வை யாரும்
புரிந்து கொள்வதாக தெரியவில்லை !

அது என்ன உணர்வு என்று அறிந்து,
அது முடிந்துவிட்டதாகவே
நினைத்து போது,
ஒரு மருத்துவமனையில்
தற்செயலாக அவளை சந்தித்தேன்,
கிட்டத்தட்ட என்னைப்போல்
ஏங்குபவளாக காணப்பட்டாள் !

ஒருமுறை பார்த்ததும் இருவருக்கும் காதல்.
ஆசையாய் ஒருவருக்கு ஒருவர் நோக்க,
அருகில் சென்றேன்,
அவள் பெயர், விலாசம்
அறிவதற்குள்,
"சார் ! உங்க நாய், என்
நாய்கிட்ட வருது" என்று
அவள் எசமானர் சொல்ல
இழுத்து வந்துவிட்டார்
என் எசமானர் !

12 ஜூலை, 2006

குண்டு வெடிப்பு

குண்டு வெடிப்பு - தீவிரவாதம் என்ற சொல்லிற்கு பின்னால் நின்ற இந்த சொல்லை... தூரதிர்ஷ்டவசமாக மதங்களுக்கு பின்னால் நம் சாதுர்யத்தால் நுழைத்துவிட்டோம்... குண்டுவெடிப்பினால் உயிரிழக்கும் அப்பாவிகளைக் காட்டிலும் பின்பு ஏற்படும் கலவரங்களில் எந்த காரணமும் இன்றி உயிரிழக்கும் அப்பாவிகள் அதிகம். இதற்கு நம் பொறுப்பின்மையும் அரசியல்வாதிகளுமே பொறுப்பு.

நக்ஸலைட்டுகள் குண்டு வைத்தால் அவன் இன்ன சாதி இன்ன மதம் என்று நம் ஆராய்வதில்லை. ஆனால் தீவிரவாதிகள் தங்களுக்கு சாதகாமான போர்வையில் ஒளிந்து கொண்டு இந்த கேடுகெட்ட செயலை செய்யும் போது நாமும் அவர்களைப் போல் கீழ்த்தரமாக இறங்கி மதங்களின் மீது சாணி அடிக்கிறோம் இது முறையா ?

இத்தகைய நம்முடைய தகாத செயல் மூலம் பாதிக்கப்பட்ட நபர் அந்த அமைப்பில் சேர்ந்து கொண்டு தீவிரவாதிகளின் கரங்களாக மாறுகிறார்கள். அதுமட்டுமல்ல அந்த மதத்தின் மீது பற்று உள்ளவர்களை சுட்டிக்காட்டி இவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லுகிறார்கள் என்று அவர்களை வம்புக்கு இழுத்து தூண்டுகிறோம். அவர்கள் வேறுவழியின்றி உங்கள் மதத்தில் உள்ளவர்களெல்லாம் யோக்கியர்களா என்ற கேள்வியை நம் சூழ்ச்சி அறியாது கேட்டுவைக்க. எவனோ வைத்தக் குண்டுக்கு நம் எனர்ஜி மடிகிறது, குரோதம் வளர்கிறது. இனப்போர்களை மதப்போர்களாக தீவிரவாதிகள் சித்தரித்து அப்பாவிகளை ஒரு பக்கம் கொல்லும் போது. நாமும் கத்தியின்றி ரத்தமின்றி அப்பாவிகள் மீதும் மதங்களின் மீதும் அதே பலியை சுமத்தி ... தீவிரவாதிகளுக்கு நாம் சலைத்தவர்கள் இல்லை என்று அழிவுகளை விதைக்கிறோம். அதன் அறுவடையை தீவிரவாதிகள் அனுபவிக்கின்றனர்.

தீவிரவாதிகள் - கெட்டவர்கள் ... சமூகவிரோதிகள் தான் இதில் எள்லளவும் சந்தேகம் இல்லை. இவர்களின் பின்புலனை அரசாங்கம் அடையாளப் படுத்துகிறோதோ இல்லையோ, நாம் உடனடியாக இவன் இந்த மதத்தில் இருப்பதால் தான் இவன் இவ்வாறு செய்கிறான் என்று கொளுத்திப் போடுகிறோம். எவனோ செய்யும் குற்றத்திற்காக ஒரு மதம் சார்ந்திருக்கிறான், மதத்தில் பிறந்திருக்கிறான், மதத்தில் பற்றுவைத்திருக்கிறான் என்பதற்காக சக இந்தியன் ஏன் தலைகுனிய வேண்டும் என்று எதிர்பார்கிறார்கள் என்று தெரியவில்லை. ஒன்றும் அறியாமல் உன் தாய் ஒழுக்கமற்றவள் என்பதை தன்மானம் உள்ள எந்த மகன் ஏற்றுக்கொள்வான் (நாம் தீவிரவாதம் பற்றி பேசுவோம்... மதம் மாற்றம் பற்றியெல்லாம் இங்கு வேண்டாம்)

புழுவை கொட்டி கொட்டி குளவியாக மாற்றுமாமே குளவி ... அந்த வேலையைத்தான் நாம் செய்து கொண்டிருக்கிறோம். பெருச்சாளிகளை வீட்டில் வைத்துக்கொண்டு ... ஒரு பாம்பு எவரையோ கடித்ததற்காக ... பாம்பு இனமே விசம் அதனால் பாம்புகளை முற்றிலும் அழித்து ஒழிக்க வேண்டு மென்றால் பெரிச்சாளிகளை என்ன செய்வது.

ஒற்றுமையை வளர்காமல் விரோதத்தைப் பற்றி பேசுவது தற்காலிக ஆறுதலாக இருக்கலாம். இதனால் நல்ல தீர்வு எதுவும் ஏற்படாது.
மதங்கள் ஒன்றிணைந்து தீவிரவாதிகளின் மதத்தைப் பார்காமல் அவர்களின் செயலைப் பார்த்து முற்றிலும் அழித்து ஒழிக்கவேண்டியது என்பதே நம் விருப்பம்.

எனக்கும் மாற்றுமத நண்பர்கள் எத்தனையோபேர் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் தாடி வைத்திருப்பதால், திருநீறு பூசியிருக்கிறார்கள் என்பதற்காக அவர்கள் தீவிரவாதிகள் அல்ல ... நம்பிக்கையின் காரணமாக வெறும் மதப்பற்றாளர்களே !

11 ஜூலை, 2006

காதலி vs மனைவி (கவிதை)!


உன்,
ஒற்றை பின்னல் சடையின்
ஒற்றை ரோஜாவின்
ஓற்றை இதழ் விழுமா என்று ஏங்கி
ஒற்றை காலில் தவம் செய்து, விழுந்தவுடன்
ஒற்றிக் கொண்டேன் என் கண்களில் !

உன்னை,
ஒப்புவித்து பாட ஒரு
ஒப்பு தேட,
ஒப்புகள் யாவும் அஃறிணைதான் என்று
ஒப்புக்கொள்ள, உயர்திணை நீ
ஒப்பில்லாதாவள் என உணர்ந்து கொண்டேன்!

நான்,
ஒவ்வொரு நிமிடமும்,
ஒவ்வொரு நாளும், விழித்திருந்தால் என்
ஒவ்வொரு எண்ணங்களிலும் நீ
ஒருவேளை நான் தூங்கிபோனால் கனவுகளில் நீ, என்
ஒவ்வொரு நொடியும்,
ஒரே பெயராக உன் பெயர் சொல்லியது !

என்றெல்லாம் எழுதிய உன் பேனா,
பதிவு திருமணத்தில் கணவன் என்ற இடத்தில்
பதிந்து கையெழுத்திட்டு காணாமல் போனதா ! அல்லது
மறைந்து போனதன் மாயம் நீ மறந்து போனாயா!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்