எனக்கு தெரிந்து 'இஸ்லாமியர்கள் பிற மதப் பண்டிகைகளுக்கு வாழ்த்து தெரிவிக்கலாமா ?' அதாவது காஃபிர்கள் கொண்டாடும் பண்டிகைக்கு காஃபிர்களை இஸ்லாமியர்கள் வாழ்த்தலாமா ? என்ற சர்சைகள் தமிழ் பேசும் இஸ்லாமியர்களின் ஒருபிரிவிற்குள் ஓடிக் கொண்டு இருக்கிறது, அந்த கேள்வியின் தேவை குறித்து ஆராய்ந்து அவர்களே பதிலும் சொல்லி இருக்கிறார்கள். அதாவது இஸ்லாம் மீது நம்பிக்கையற்றவர்கள் இஸ்லாமிய இறைவனை வழிபடுவது இல்லை, அவர்கள் இணை வைப்பவர்கள் மற்றும் அவர்கள் வணங்கும் கடவுளுக்கும் இஸ்லாத்திற்கும் தொடர்பே இல்லாததால் அவர்களுக்கு வாழ்த்து சொல்வது ஹாரம் (விலக்கப்பட்டுள்ளது) ஆக்கப்பட்டுள்ளது என்று சொல்கிறார்கள், இதைப் படித்துவிட்ட நான் 'எனக்கு தமிழ் மற்றும் இந்து பண்டிகை நாள்களில் மதக் கட்டுப்பாடுகளை மீறி வாழ்த்து சொல்லும் இஸ்லாமிய நண்பர்கள் நன்மதிப்பு மிக்கவர்களாகவும் சமூக நேயம் தெரிந்தவர்களாகவும் தெரிந்தனர். ஏனெனில் கொஞ்சமாக மதத்தைக் கடைபிடிக்கலாம் என்பது போன்ற அனுமதிகள் அங்கு இல்லை, தன்னை இஸ்லாமியர் என்று உணர்ந்தவர் எவரும் இஸ்லாத்திற்கு புறம்பானவற்றை செய்யக் கூடாது என்பதே அம்மதம் வழியுறுத்துவதாகவும், மீறிச் செயல்பட்டால் அதற்கு ஏற்ற குறைவான நிரந்தர சொர்கப் பலன்கள் கிடைக்குமாம். எனவே தனது நிரத்தர சொர்கத்தின் பலன்களை நமக்கு வாழ்த்துச் சொல்வதால் செலவழிக்கிறாரே என்ற நெகிழ்ச்சியே இஸ்லாமிய நண்பர்கள் வாழ்த்து சொல்லும் போது எனக்கு ஏற்படும்.
மேலே சீனப் புத்தாண்டுக்கு வாழ்த்துப்பாடல் பாடும் மலாய்காரர்கள் (இசைக்குழு) பழமைவாதத்தை புறக்கணித்துவிட்டு சமூக நல்லிணக்கத்தை முன்னிட்டு சீனப் புத்தாண்டை வரவேற்கின்றனர்.
*******
தமிழ் கிறித்துவர்களில் கத்தோலிக்கப்பிரிவினர் பொங்கல் கொண்டாடி அவர்கள் மதவழக்கப்படி மாதாவுக்கும் ஏசுவிற்கும் படைத்து உண்ணுகின்றனர். அவர்கள் பொங்கல் நாளில் சூரியனை வழிபடுவது போல் தெரியவில்லை, நான் அறிந்தவரையில் அனைத்து மதங்களைச் சேர்ந்த சீனர்களுக்குள் சீனப் புத்தாண்டு பொதுவாகவே கொண்டாடப்படுகிறது. குறிப்பாக சீனாவில் பல்வேறு மதத்தை சேர்ந்த சீனர்களும், இஸ்லாமிய சீனர்களும் சீனப் பெயர்களைத்தான் இட்டுக் கொள்கின்றனர், அவர்கள் பெயர்களில் அரபு வாசனையோ, ஆங்கில வாசனையோ குறைவு, பவுத்த மற்றும் தாவோ இச சீனர்கள் ஹாங்காங், சிங்கப்பூர் மற்றும் தைவான் சீனர்கள் மற்றுமே பிறர் கூப்பிடுவதற்காக தனக்கு தானே ஆங்கிலப் பெயர்களை வைத்துக் கொள்கின்றனர், இது பொதுவாக அவர்கள் கடவுச் சீட்டு மற்றும் அடையாள அட்டையில் இல்லாத முற்றிலும் மாறுபட்ட பெயராக வெறும் அலுவலகம் சார்ந்த பெயராகவே அந்த ஆங்கிலப் பெயர்கள் இருக்கும். ***மலேசிய சீனர்கள் இஸ்லாமுக்கு மாறும் போது அவர்கள் பெயரும் அரபி பெயருக்கு மாறும் ஏனெனில் மலேசியா சீனர்கள் பெரும்பான்மை பெற்ற நாடு அல்ல*** ஆனால் சீனப் பெயர்கள் மதம் சார்ந்தவை அல்ல என்பதால் சீன நாட்டின் சீனர்கள் அப்பெயர்கள் அவர்களின் மதங்களுக்கு பொதுவான ஒன்றாகவே கருதி தம் மொழியில் பெயர் வைத்துக் கொள்கின்றனர். இங்கு தமிழ்நாட்டில் அவ்வாறு நடைபெறுவது மிக மிக அரிதே. தமிழிலும் ஏராளமான பொது பெயர்கள் உண்டு ஆனால் அதை இந்துக்கள் தவிர்த்து வைப்பவர்கள் விரல் விட்டு எண்ணும் அளவே.
பொங்கல் இந்து அடையாளத்துடன் சூரியனுக்கு படைத்து கொண்டாடப்படுவது தான் பொதுப் பண்டிகையாகக் கொண்டாடத் தடை என்றால் கத்தோலிக்க கிறித்துவர்கள் போன்று மதம் சார்ந்து கொண்டாடலாமே ? நான் ஆயுத பூசை அன்று ஆயுதங்களுக்கு பொட்டிட்டு அவல் பொறிகடலையுடன் அல்லாவுக்கு தொழுது கொண்டாடும் இஸ்லாமியரைப் பார்த்திருக்கிறேன் அது போல் செய்பவர்கள் மிகக் குறைவே. தமிழ்நாட்டில் தமிழ் சார்ந்த பண்டிக்கை என்று தான் பொங்கல் தமிழர் திருநாளாகக் கொண்டாடப்படுகிறது, அதை தத்தம் மத விதிகளின் படி கொண்டாடத் தடை எதும் இல்லை என்னும் போது, கொண்டாடுவதில் தவறென்ன. அதற்கான முயற்சிகள் இதுவரை மெத்தடிஸ்ட், பெந்தகோஸ் கிருத்துவரும் இஸ்லாமியரும் எடுத்தது போல் தெரியவில்லை.
சிங்கப்பூரைப் போல் சிறந்த ஆட்சியாகவும் தொழில் வளமான நாடாகவும் தமிழ் நாடு மாறுவது எப்போது? என்ற ஏக்கம் எப்போதும் என் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கவில்லை, இந்திய அரசியல் சூழலில் மக்கள் நெருக்கம் காரணமாக ஊழல் என்பது தவிரக்க முடியாத ஒன்று ஆகிவிட்டது, மேலும் தேசிய நிரோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அப்படி ஆகுவதற்கான வாய்ப்பு எந்த அளவுக்கு என்று உங்கள் சிந்தனைக்கு விட்டுவிடுகிறேன்,
ஆனால் தமிழருக்கு பொதுவான நாள், தமிழர் திருநாள் தமிழ்பேசும் அனைத்து மதத்தினரால் பொதுவாகக் கொண்டாடப்படுவது எப்போது என்ற ஏக்கம் இருந்து கொண்டே இருக்கிறது, அந்த ஏக்கம் கூட இங்கிருக்கும் சீனர்களைப் பார்த்து வந்தது தான், பல்வேறு மதம் சார்ந்து இருந்தாலும் அவர்கள் பேசும் மொழிசார்ந்து அவர்கள் அனைவரும் சீனப்புத்தாண்டை கோலாகலமாகக் கொண்டாடிவருகின்றனர்.
பொங்கல் கொண்டாடினால் தான் தமிழனா ?
நமக்கான பொது அடையாளம் மொழி என்ற அளவில் இருப்பதுடன் சேர்த்து ஒரு பொதுவிழா ஒருமித்து கொண்டாடுவதன் மூலம் நாம் அனைவரும் கொண்டாட்டங்கள் ஒன்றிலும் இணைந்துள்ளோம் என்ற உணர்வு ஏற்பட்டு நம்மிடையே பிணைப்பை ஏற்படுத்தும், மேலும் நாம் வேறு வேறு மதத்தை சார்ந்தவர் என்று பிரித்துப் பார்க்கும் கூறுகளையும் ஆண்டுக்கு ஒருமுறையாவது தகர்க்கும்.
******
இன்றைய நாளை தமிழ்புத்தாண்டு மற்றும் பொங்கல் திருநாளாகக் கொண்டாடும்
மற்றும்
பொங்கலாகக் (மட்டும்) கொண்டாடும் அனைத்து தமிழர்களுக்கும் நல்வாழ்த்துகள்.
அனைத்து தமிழர்களுக்கும் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்.





