பின்பற்றுபவர்கள்

அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அறிமுகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஆகஸ்ட், 2010

பிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் !

முதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மற்றும் குட்டிக் கோவியாரின் வணக்கம்.




*****

ஐந்தாண்டுக்கு முன்பு வரை இருந்த இரண்டாம் குழந்தை ஆசை பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனது, காரணம் பெரிதாக இல்லை, ஒரு குழந்தையையே வீட்டில் வைத்து வளர்க்க (வேறு) வழியில்லாமல் பள்ளி முடிந்ததும் மாணவ காப்பகத்திற்கு அனுப்பி வைத்து மனைவியோ, நானோ இருவரில் முன்பே செல்லும் ஒருவர் அலுவலகம் முடிந்த பிறகு அழைத்துவரும் நிலையில் இரண்டாவது தேவையா ? என்கிற எண்ணம் தான். பிறகு சென்ற ஆண்டு மகளாகவே கேட்கத் துவங்கினாள், எங்கு சென்றாலும் பல இடங்களில் இரு குழந்தைகளைப் பார்த்துவிட்டு.....'நம்ம வீட்டில் ஏன் இன்னொரு பேபி வரவே இல்லை.......எப்போதான் வருமோ ?' என்று ஒருவித ஏக்கமாக கேட்க்கத் துவங்கினாள். பொருளியல் தேவையை சீராக வைத்திருக்கவும், மகளின் எதிர்காலத்திற்கு நல்லக் கல்வியைக் கொடுக்கவும் எண்ணம் இருப்பதால் உடனடியாக மனைவி வேலையை விட மனதில்லா சூழலில் 'பணிப் பெண்ணை அமர்த்திப் பார்த்துக் கொள்ளச் செய்யலாம்.....இரு குழந்தைகளை மாணவ காப்பகத்தில் விடுவதும் பணிப்பெண் வைத்திருப்பதிற்கும் மிகப் பெரிய செலவின வேறுபாடுகள் இல்லை என்பதால் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வது என்று முடிவாகியது.

இருந்தாலும் எங்களது வயது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அடுத்து பெண் குழந்தையாகப் பிறந்தால் அவளுக்கு திருமணம் முடிக்கும் வரை கூட பொறுப்புணர்வு என்கிற டென்சன் இருக்குமே என்கிற டென்சன் இருக்கத்தான் செய்தது. எப்படி இருந்தாலும் நம் குழந்தை தான், அப்படியே பெண்ணாக பிறந்தாலும் ஏற்கனவே இருக்கும் மகளைப் போல் இன்னொரு மகள் தானே பிறப்பாள், அவளை நேசிப்பது உண்மை என்றால், அவள் செயல்களை போற்றுவது உண்மை என்றால் பிறக்கப் போகும் மற்றொரு பெண் குழந்தையையும் அவ்வாறு நேசிக்க முடியாமலோ போய்விடும் ? என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆணோ பெண்ணோ எதுவாகிலும் சரி என்ற முடிவில் செயலாற்ற, மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு பள்ளி விடுமுறைக்குச் தமிழகம் சென்ற அந்த திங்களிலேயே அவள் ஆசை நிறைவேறத் துவங்கியது.

என் மகள் தெளிவாக இருந்தாள், தம்பி தங்கச்சி எதுவாகிலும் என்னுடையவர்கள் தானே என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். சிங்கையில் குழந்தை வளர்ச்சியை ஸ்கேனிங்க் செய்து பார்க்கும் போது பாலினம் தெரிய துவங்கும் ஐந்தாம் திங்களில் பெற்றோர்கள் விரும்பினால் குழந்தையின் பாலினம் பற்றிச் சொல்லிவிடுவார்கள். அவ்வாறு தெரிந்து கொள்வது பெற்றோர்களின் உரிமை என்பதால் சிங்கையில் பாலினம் தெரிந்து கொள்வது சட்டப்படி எந்த குற்றமும் இல்லை. ஐந்தாம் மாதத்தில் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள், இருந்தும் குழந்தை பிறக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பது மனைவியின் அடிப்படை பயம் கலந்த கட்டளையாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து இரண்டாம் குழந்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

கடைகுட்டி, மூத்தவ(ள்)ன், நடுவுள்ளவ(ள்)ன் என்கிற செல்லப் பெயர்களெல்லாம் தற்போதான இருகுழந்தை கட்டுப்பாடுகளினால் காணாமல் போய்விட்டது, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா இதில் ஏதோ ஒன்று தான் இரு குழந்தைகளாக பிறக்கும் குழந்தைகளின் வாரிசுகளுக்கு கிடைக்கும் உறவுப் பெயர்கள், அதிலும் ஒரே குழந்தையாக வளரும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆனதும் தன்னைப் போன்றே தனித்து பிறந்தவர்களை திருமணம் செய்ய அவர்களின் வாரிசுகளுக்கு இந்த உறவு முறைகளில் எதுவுமே கிடைக்காது.

பெண்ணோ ஆணோ எந்த குழந்தையும் சரி என்று முடிவு செய்திருந்தாலும் ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரண்டாவதாக ஆண் குழந்தை என்று அறிந்த போது கூடுதல் மகிழ்ச்சி தான் ஏற்பட்டது. மகப்பேறுக்கு முதல் நாள் வரையில் சீனர்கள் அலுவலகம் சென்று வருவார்கள், ஆகஸ்ட் 30 ஆம் தேதி பேறு நடக்கலாம் என்று மருத்துவர் சொல்லி இருந்தார் இன்னும் நாள் இருக்கிறதே என்பதாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தார் மனைவி. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க கடந்த 17 ஆம் தேதி அலுவலகம் சென்று திரும்பியதும், அருகில் இருந்த கடைத் தொகுதிக்குச் தன் தாயாருடன் சென்று திரும்பும் நேரத்தில் பனிக்குடம் உடைந்துவிட்டதாக உணர்ந்த மனைவி மகிழுந்தில் ஏறி உடனே வீட்டுக்கு வந்தார். பனிக்குடம் முழுதாக உடையாமல் கசிவாக இருந்ததால் சிறுது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வலி ஏற்பட்டதுடன் செல்லலாம் என்று காத்திருந்தோம், மேலும் கசிவு ஏற்பட..உடனடியாக வலி ஏற்பட்டால் பதட்டம் ஆகிவிடும் என்பதால் உடனடியாக இரவு 11:50 வாக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டோம். மருத்துவ மனையில் சோதனை செய்து மகப்பேறு அறையில் உடனடியாக சேர்த்துவிட்டார்கள், நானும் மகப்பேறு அறையில் மகள் பிறக்கும் போது இருந்தது போலவே அருகில் இருந்தேன்.

17 ஆம் தேதி முடிய 18 ஆம் தேதியும் முடிய போகும் நேரம் வரை குறைவாக விட்டு விட்டு வலி ஏற்பட்டது தவிர்த்து பெரிதாக வலி ஏற்படவில்லை, பனிக்குடம் முழுதாக கசிந்தும் குழந்தை சரியான அமைப்பில் இருந்தும் வெளிவர முயற்சிக்காமல் வழக்கம் போல் உதைத்துக் கொண்டு தான் இருந்தது, ஆனால் நாடித் துடிப்பு குறையத் துவங்கியது, பனிக்குடத்தில் தண்ணிர் இல்லை என்றால் தொப்புள் கொடி சுருங்கி குழந்தைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைய நாடித் துடிப்பு குறையுமாம் , உணர்ந்து கொண்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுப்பது தான் தாய்கும் சேய்க்கும் நல்லது என்று சொல்லி, என்னை அனுப்பிவிட்டு அறுவை சிகிச்சை அறைக்கு சென்று, 18 ஆம் தேதி இரவு 11:55 வாக்கில் அறுவையை துவங்க சரியாக இரவு 12 மணி தாண்டிய சில நிமிடங்களில் ஆங்கில நாள் படி ஆகஸ்ட் 19ல் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி தாயையும் சேயையும் பிரிக்கப்பட்டார்களாம். அறுவை சிகிச்சை அறையில் கணவரை அனுமதிக்கமாட்டார்கள். அறுவை முடிந்து தையல் போடும் நேரத்தில் குழந்தையை குழந்தைகள் வைக்கும் இடத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். நல்லிரவுக்கு மேல் என்பதால் அங்கு கண்ணாடி தடுப்பு இருந்ததும் நாங்கள் பார்க்க வசதியாக அருகில் தள்ளிக் கொண்டு வந்து விட்டனர். ஈரம் முற்றிலும் காயாத நிலையில் பிறந்த 10 ஆம் நிமிடத்தில் கழுத்தைத் திருப்பி அனைவரையும் நன்றாகப் பார்த்து பிறகு மெலிதாக சிரித்தான்.

பிறக்கும் குழந்தை பெயரில்லாமல் பிறக்கக் கூடாது என்பது என் விருப்பம் அதனால் மகளுக்கும் பிறக்கும் மூன்று திங்களுக்கு முன்பே பெயரை முடிவு செய்து பிறந்த மறுநாளே பிறப்பு சான்றிதழில் பதிந்துவிட்டேன். அதே போன்று மகனுக்கும் பெயரை முடிவு செய்யும் போது தமிழ் பெயர் தான் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தேன், கூப்பிட எளிதாக அழகாக இருந்தால் எந்தப் பெயராக இருந்தாலும் சரி என்று சொல்லி இருந்தார் மனைவி. பத்து பெயர்கள் வரை முடிவு செய்து அதில் இரண்டை தெரிவு செய்து மனைவியிடம் சொன்னேன். எல்லோருக்கும் பிடித்தப் பெயராக இருக்க வேண்டும் என்பதாக அதிலிருந்து அவர் தெரிவு செய்து முடிவு செய்தப் பெயர் தான் 'சிவ செங்கதிர்' கூடவே மனைவி பெயரின் முதலெழுத்து, என் பெயரின் முதலொழுத்து சேர்த்து 'GK சிவ செங்கதிர்' என்று மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் செல்லும் முன்பே பதிந்து பதிவு சான்றிதழ் பெற்றுவிட்டு சென்ற சனிக்கிழமை வீட்டுக்கு வந்துவிட்டோம். படுக்கையில் அடிக்கடி மகனின் ஒண்ணுக்கு தீர்த்தம்.....வீட்டில் மகிழ்ச்சி மழை தான்.

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பால்புட்டி, பால்பவுடர், பேம்பர்ஸ்..... ஈரத் தாள்...வாங்கச் சென்று வருகிறேன். இன்னொரு புது உலகம் எனக்கு கிடைத்து போன்று உணர்வுகளாக மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றான் மகன் கதிர் .

பின்குறிப்பு : பதிவர்களில் பலர் என் நெருங்கிய நண்பர்களாகவும் நலம் விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்க நேரமின்மையால் இடுகை வழியாக அறிவிக்க, தெரிவிக்க இப்பதிவை எழுதினேன். மற்றபடி இதைப் பதிவாகவே எழுதுவது எனக்கு தயக்கமான ஒன்று தான்.

19 ஆகஸ்ட், 2007

*நட்சத்திரம்* : ஒருவார 'காலம்' உங்களோடு ...

வணக்கம் நண்பர்களே,

தமிழ்மணத்தில் இருந்து நட்சத்திர பதிவுகள் எழுத நான்கு வாரங்களுக்கு முன்பே அழைப்பு வந்துவிட்டது. பல பதிவர்களை பாராட்டிய மேடை என்பதால் கூட்டத்துடன் கோஷமிட்டுக் கொண்டிருந்த எனக்கு இது கொஞ்சம் கூச்சமாக இருந்தாலும், அந்த கூட்டத்தில் ஒருவனான எனக்கும் தனிமேடையாக ஒருவாரத்துக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். அதற்காக தமிழ்மணம் நிறுவனத்தாருக்கு எனது நன்றிகள்.

****************

ஓர் ஆண்டுக்கும் மேலாக எழுதுவதால் என்னைப் பற்றிய தன்(சுய) அறிமுகம் தேவை இல்லை என நினைக்கிறேன். மேலும் என்னைப் பற்றிய இலவச விளம்பரங்களை அவ்வப்போது நெருங்கிய நண்பர்களே அன்புடன், மகிழ்வுடன் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள், தி(க?)ட்டாமல் வேண்டுகோளும் வைத்திருக்கிறாகள் என்பதால் அறிமுகம் முற்றிலும் தேவை இல்லை. போற்றுவார் போற்றலும் தூற்றுவார் தூற்றலும் போகட்டும் (என் 'காலத்திலும்') கண்ணனுக்கே. :))

கிழே பெரிய டிஸ்கி... :))

வலைப்பதிவு எழுதுவதற்கு முன், பதிவு நடப்புகள் ஓரளவுக்கு தெரிந்ததால் எழுத ஆரம்பிக்கும் போது எதை எதையெல்லாம் எழுதலாம் என்று ஒரளவுக்கு தெளிவு கிடைத்தது. மூன்று விடயங்களில் பொதுவாக எல்லோரும் ஆர்வம் செலுத்துகிறார்கள். ஒன்று சமூகம், இரண்டு அரசியல், மூன்றாவது அன்றாடம் புதிதாக முளைக்கும் எல்லாம் கலந்த பிணக்குகள். கும்மிகள் தனிவகை :)). எனவே இதில் கும்மியைக் குறைத்துக் கொண்டு எழுதுவது எனக்கு கடினமாக இருக்கவில்லை. பத்து ஆண்டுகளுக்கு மேலாக அரசியல் நிகழ்வுகளைப் பார்த்து வருவதால் அரசியலில் நடக்கும் கூத்துக்களை விமர்சித்திருக்கிறேன். தவறுகளைச் சுட்டிக் காட்டுவதில் தயங்கியதில்லை. அதே சமயத்தில் திராவிடக் கட்சிகள் பிடிக்கும் என்பதால் சப்பைக் கட்டும் கட்ட முயற்சிக்கவில்லை என்றே நினனக்கிறேன். அடுத்தது சமூகம் ... நேற்று வெற்றி அடைந்த காதல் திரைப்படம் வரை சாதீயக் கெடுதிகளைப் பொதுப்படுத்திப் பேசதவர்களே இல்லை. சாதியம் என்பது ஒரே இனத்தைச் சேர்ந்த மக்களை கூறுபோட்டு பிரிவினையை வளர்ப்பதே. அன்றாடம் சாதிகளை மையமாக வைத்து பிணக்குகள் எழும் போது அவற்றைப் பற்றி பேசமால் இருக்க முடியாது.

முற்றிலும் இந்திய சூழலில், சாதிகளின் தற்காப்பு கேடயமாக இருப்பது மதம், எந்த மதம் ? கிறித்துவத்தில் சாதி பார்பது வழக்கில் உள்ளதை கிறித்துவ பதிவர்கள் சிலர் எழுதி இருக்கின்றனர், இஸ்லாமிலும் கஃபீர் என்ற சொல் இஸ்லாமியர் அல்லாதவர்களைக் குறித்தாலும் காஃபிர் என்ற சொல்லை தாழ்வாக விளிப்பதற்கான குறீயீட்டுச் சொல்லாக வழக்கில் பயன்படுகிறது என்பதை வெளிப்படையாக இஸ்லாமிய சகோதரர்கள் ஒப்புக் கொள்ள மறுப்பர், ஆனாலும் இன ரீதியான மோதல்களை 'ஆம்' என்று சொல்வர். எனக்கு மற்ற மதங்கள் பற்றிய கவலை தேவையில்லை. அதை அந்த மதத்துக்கு சகோதரர்கள் பார்த்துக் கொள்ளட்டும். பிறக்கும் போதே என் மீது விழுந்திருக்கும் மதத்தின் மேலுள்ள சேறுகளை அகற்றி தூய்மை படுத்துவதற்கு என்னளவில் நான் நான் முயற்சிப்பது தவறில்லை என நினைக்கிறேன். என்மதத்தை சேர்ந்த சீர்திருத்தவாதிகள் விவேகநந்தர் முதல் திரு சுகிசுவம் வரை பலரும் சீர்படுத்துவதில் முயன்றிருக்கிறார்கள், வருகிறார்கள் என்பதையும், தந்தைப் பெரியாரும் மதத்திலிருந்து கொண்டே சவுக்கை சுழற்றினார் என்பதையும் அறிந்திருக்கிறேன்.

சாதியத்தை மத ஆர்வலர்கள் தாங்கிப் பிடிக்கும் போது சாதியத்தால் விளைந்த கேடுகளை குறித்து கேள்வி எழுப்ப வேண்டியது தேவை (அவசியம்) என்றாகிறது, அதன் காரணிகளாக, தொடர்ச்சியாக மதத்தில் காணப்படும் கண்மூடித்தனமான மூடநம்பிக்கைகளை குறைசொல்லாமல் இருக்க முடியாது. இன்றைக்கு, தாம் இந்த சாதியில் பிறந்தோம் என்பதை மாற்ற முடியாவிட்டாலும் சாதிப் பெருமைப் பேச பொதுவாக இளைஞர்கள் தயங்குகிறார்கள் என்பதைப் பார்க்கும் போது சாதியத்தை பலரும் கடுமையாக விமர்சிப்பதே அந்த நல்ல மாற்றத்திற்கான காரணம் என்பது ஒப்புக் கொள்ள வேண்டிய உண்மை. சாதியம் வேண்டும் என்பவர்களின் காட்டுக் கூய்ச்சல் எப்போதும் கேட்டுக் கொண்டிருக்கத்தான் செய்யும், அவற்றைப் புறம் தள்ளி குலப் பெருமை பேசும் எந்த சாதியாக இருந்தாலும் அவை முற்றிலும் நிராகரிக்கப்பட வேண்டியதே. [என் குடும்பத்தை இழுத்து என் உறவுகளை பல சாதி ஆண்களுக்கு பங்கு வைத்தால் சமத்துவம் காணமுடியும், எனவே முயற்சி செய்யேன் !!! என்ற பொருள்படும் ஆபாச சொற்களால் எழுதப்பட்ட பின்னூட்டங்கள் *அறி'வுறுத்தகள்' ?* கூட வந்திருக்கிறது.] மனக்குப்பையை கொட்டி தூய்மைப் படுத்திக் கொள்ளட்டுமே. இறைவன் இருப்பதை நம்பும் 'எவரும் பாவமண்ணிப்பு கேட்கும் போது தம் பாவங்களைத்தானே எடுத்துக் கொள்ளச் சொல்லி நன்மைக்காக வேண்டுவார்கள் இல்லையா ?' அந்த நோக்கில் அவர்களின் (மன) அழுக்குகளை ஏற்கலாம்.

***********

எதிர்பாராத விதமாக சாதிகளின் பெயரில் (ரீதியான) இருக்கும் இட ஒதிக்கீடுகளினால் சாதிப்பற்றாளர்களின் சாதிபோற்றும் ஆசையில் இன்னும் சில காலங்களுக்கு மண் விழாது என்று அவர்கள் ஆறுதல் பட்டுக் கொள்ளலாம். ஆனாலும் முன்பு போல் எவரையும் சாதியைச் சொல்லி தாழ்த்த முடியாது என்பதால் வரும் காலத்தில் சாதியின் பயன்பாடு குறைந்து சாதிகள் அழியும் சாத்திய கூறுகள் உருவாகும் என்றே கருதுகிறேன்.

தமிழ்மணத்தில் தொடர்ந்து என் இடுகைகளைப் படித்தவர்களுக்கு நன்கு தெரியும். அதாவது நான் எந்த தனிமனிதரையும் தாக்கி எழுதியது இல்லை. மூட நம்பிக்கைகளினால் பலரும் பாதிக்கப்படுவதையும், அறிவுக்கு ஓவ்வாத ஒன்றை உயர்வாக எண்ணிப் பேசுவதையும் அதை உண்மை என்று கூறி மக்களை ஏமாற்றுவதையும் பன்னெடும் காலமாக 'மகான்கள்' எதிர்த்தே வந்திருக்கின்றனர். தமிழ் சித்தர்கள் 18 பேர்களும் பக்தியை வளர்க்க பாடுபட்டது போலவே மூட நம்பிக்கைகளுக்கு எதிராக கத்தி வீசியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டால் என் எழுத்துக்கள் அதில் ஒரு விழுக்காடு கூட இருக்காது என்றே கூறிக்கொள்கிறேன். அதற்காக என்னை சித்தர்களுடன் ஒப்பிடுகிறேன் என்று தவறாகவும் பொருள் கொள்ள வேண்டாம். இந்து மதத்தில் சீர்திருத்தம் வேண்டும், மதம் மக்களுக்காக பயன்படவேண்டும் என்று நினைப்பவர்களும், இறைவன் அனைவருக்கும் பொது என்று நினைப்பவகள், குறிப்பாக தமிழக இந்துக்கள் என எவரும் என் கருத்துக்கள் அவதூறு என்று சொன்னது கிடையாது. புரியாதவர்களைப் பற்றி நான் கவலைப்படவில்லை. தூங்குபவர்களாக நடிப்பவர்களையும், செத்துப் போனவர்களையும் ஒருபோதும் எழுப்ப முடியாது. என் மதம் இழிவானது எனவே மாற்று மதத்தை நாடுங்கள் என்று தவறான கருத்தை நான் தெரிவித்தது இல்லை. என்னைப் பொருத்து மதமே தேவையற்றது. இறைவன் என்று ஒருவன் இருப்பதை நம்பும் போது அவற்றை மதத்தில் கூறப்பட்டுள்ள வழிமுறைகள் மூலமே புரிந்து கொள்ள முடியும் என்று எவரேனும் சொன்னால் அது நிராகரிக்கக்கூடிய கருத்து என்று உலகலவில் பலரும் ஒப்புக் கொள்கிறார்கள். மதங்களைக் கடந்த சூஃபி ஞானிகள் நல்லதையும், ஒற்றுமையையுமே வளர்த்து இருக்கிறார்கள் என்பதை நான் அறிவேன்.

இந்த சிந்தனையில் எனது இடுகைகளை இந்தவாரம் முழுதும் இருக்கும். அதே சமயத்தில் எல்லாமும் சமுகம் சார்ந்ததாக இருக்காது. சில சிறுகதைகள், சில கட்டுரைகள், சில விமர்சனங்கள், நகைச்சுவை(கள்) இருக்கும்.

பின்னூட்டமிட்டு வாழ்த்தப் போகும் மற்றும் கருத்துச் சொல்லப் போகிற உடன் (சக) பதிவர்களுக்கும், படிப்பவர்களுக்கும் முன்கூட்டியே நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அடுத்த இடுகை ?
கடவுள் வாழ்த்து ! :))

எந்த கடவுள் ?
தாடி வைத்த தமிழ்க் கடவுள் பற்றியது, இந்திய நேரப்படி இன்று மாலை வரும்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்