பின்பற்றுபவர்கள்

21 ஜூலை, 2012

கால ஓட்டத்தில் காணமல் போனவை - அச்சுத் தொழில் !


நான் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிந்து 11 ஆம் வகுப்புக்கு காத்திருக்கும் நிலையில் என்ன செய்வது, வெட்டியாகப் பொழுதை ஓட்டினாலோ, சேர்க்கை சேர்ந்தாலோ கெட்டுவிடுவேன் என்பதற்காக என்னைக் கொண்டு சென்று ஒரு ஆட்டோமொபைல் கடையில் வேலைக்கு சேர்த்தார்கள், 15 வயது பையனுக்கு அனுபவம் இல்லாத வேலைக்குப் போகும் போது என்ன வேலை கொடுப்பாங்க ? அங்கே பழுது பார்க்க வந்து நிற்கும் கார்களை துடைப்பது தான், அந்த ஆட்டோமொபைல் முதன்மைச் சாலையில் இருந்ததால், நான் கார் துடைத்துக் கொண்டு இருப்பதை கூட படித்த மாணவர்கள் பார்த்தால் அவமானம் என்று நினைத்து ஒரே நாளில் எனக்கு இந்த வேலை பிடிக்கவில்லை கையெல்லாம் பிசு பிசுப்பாக இருக்கிறது என்று சொல்லிவிட்டு மறுநாள் முதல் அந்த வேலைக்குச் செல்லவில்லை, பிறகு ஒரு சில நாள் சித்தாள் வேலைக்குப் போனதுடன் சரி. அதன் பிறகு தேர்வு முடிவுகள் வரவே வாங்கிய மதிப்பெண்களுக்கு பாலிடெக்னிக் கிடைக்காத நிலையில் அடுத்து மேல்நிலைப் பள்ளியில் சேர்ந்து தொழில் படிப்புத் துறையில், இது தான் நல்லது என்கிற பிறர் பரிந்துரையில்  'ஜெனரல் மெசினிஸ்ட்' என்ற சிறப்புப் பாடத்திட்டத்தில் சேர்த்துவிட்டனர். அந்த ஆண்டு முதல் தான் +2 பாடத்த்திட்டத்தில் அந்தப் பிரிவு புதிதாக இடம் பெற்றது, பாடத்திட்டம் எல்லாம் புதிது என்ற நிலையில் அதை நடத்திய ஆசிரியர் தவறி பின் தேறிய பலிடெக்னிக்கில் மெக்கானிக் படித்த ஆசிரியர், இருந்தும் நன்றாகவே பாடம் நடத்தினார், லேத் (கடைசல் பொறி) ஓட்டுவது, ட்ரில்லிங் (துளையிடும் பொறி), மில்லிங்க்(இழைக்கும் பொறி), ஷேப்பிங் மிசின் (வடிவமைக்கும் பொறி)ஆகிய இயந்திரங்களைப் பயன்படுத்துவது உள்ளிட்டப் பாடங்களை செயல்முறைகளுடன் படித்தேன். பாடத்திட்டமும் முழுக்க முழுக்க தமிழில் தான், செயல் முறை விளக்கத்துடன் ஆன பாடம் என்பதால் எனக்கும் கூடுதல் ஆர்வமாக திறம்படவே செய்தேன், இன்னிக்கும் எங்கேயாவது லேத் , ட்ரில்லிங் மெசினைப் பார்த்தால் எனக்கு +2 படித்த நினைவைக் கொண்டு வந்துவிட்டுவிடும். +2 படிப்பில் முதலாண்டு தேர்வு முடிந்த இடைவெளியில் என்ன செய்வது என்கிற கேள்விக்கு விடையாக என்னுடன் பத்தாம் வகுப்பில் படித்து தேறாத வகுப்புத் தோழன் அச்சு அலுவலகம் ஒன்றில் வேலை செய்வது தெரியவர, அவனுடைய பரிந்துரையிலும் ஒரு மாதம் மட்டுமே வேலை பார்ப்பேன் என்கிற வேண்டுகோளுடன் அச்சு அலுவலகம் ஒன்றில் வேலைக்குச் சேர்ந்தேன். சித்தாள் வேலைக்குச் செல்வது கவுரமற்றது என்று கருதிய பெற்றோர்கள், அச்சு 'ஆபிஸ்' வேலை என்றதும் அதை ஒரு கவுரவ வேலையாகக் கருதி தடை எதுவும் போடவில்லை, ஆனால் அச்சாபிசில் நாள் கூலி வெறும் 5 ரூபாய் தான், என்றாலும் அப்போதைய ஐந்து ரூபாயில் மூன்று வேளை சாப்பிட்டது போக திரைப்படம் பார்க்கவும் முடியும்.

*****

மிழ் எழுத்துகள் அச்சுவடிவத்திற்கு வந்து 3 நூற்றாண்டுகள் ஆகிறது, தமிழை முதன் முதலில் அச்சு ஏற்றியவர் என்ற பெருமைக்குரியவர் வீரமாமுனிவர், அவர் தான் 'ஏ' எழுத்து வடிவத்தையும் கொண்டுவந்தார், அதற்கு முன் 'ஏ' எழுத 'எ' மட்டுமே எழுதப்பட்டு சொற்கள் அடிப்படையில் அவை 'ஏ' என்று படிக்கப்படும், அச்சு எழுத்து வடித்திற்கு  'எ' வின் முடிவில் கீழே இழுத்துவிட்டு 'ஏ' வை உருவாக்கினார் அவர், கிறிஸ்துவ மிசனரிகள் மதமாற்றம் செய்ய வந்தார்கள் என்கிற பரப்புரைகளின் நடுவே அவர்களின் தமிழ் தொண்டுகள் மறைக்கப்பட்ட வரலாறாகத்தான் உள்ளது, என்றாலும் தேவநேயப் பாவணர் போன்றோர் கிறிஸ்துவ மிசனரிகளின் தொண்டுகளை பின்னர் போற்றி ஆவணங்களாக ஆக்கியுள்ளனர்.

அச்சு அலவலகங்களின் வேலைகள் திருமண அழைப்பிதழ் அடிப்பது, நூல்களை உருவாக்குவது, பைண்டிங், மற்றும் துண்டு விளம்பரம் அடித்தல், அரசாங்க கோப்புகளை அச்சடித்து தருதல் உள்ளிட்ட பல தரப்பட்ட அச்சுடன் தொடர்ப்புடைய வேலைகளைச் செய்வார்கள், அச்சு எந்திரங்கள் காலால் மிதித்தும் மின்சாரம் மூலமாக செயல்படுவதாக இருவகையும் சேர்ந்தே உருவாக்கப்பட்டு இருக்கும், மின்சாரம் இல்லாத வேளைகளில் காலால் மிதித்து இயக்குவார்கள், தவிர புதிதாக கற்றுக் கொள்பவர்களையும் காலால் மிதித்து இயக்கவே பயிற்சிக் கொடுப்பார்கள், அதுவும் அச்சு அலுவலகத்தில் தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் வரையில் பணி புரிந்தால் பதவி உயர்வு என்கிற அடிப்படையில் அச்சு இயந்திரத்தை இயக்கும் வாய்ப்பு கிடைக்கும், அதற்கு அடிப்படைக்காரணம், கவனம் இல்லாமல் செயல்பட்டால் கை முழுவதுமாக நசுங்கிவிடும், தவிர்த்து அச்சு எழுத்துகள் நசுங்கிவிடும், அல்லது எந்திரத்தில் ரோலர்கள், மை வட்டு ஆகியவை பழுதாகிவிடும் என்பதால் அச்சு இயந்திரம் இயக்க போதிய அனுபவம் வர காத்திருக்க வேண்டும், ஒருமாதம் தான் வேலை செய்வேன் என்கிற வேண்டுகோளுடன் வேலைக்கு சென்ற எனக்கு அச்சு எந்திரம் துடைக்கக் கூட வாய்ப்புக் கிடைக்கவில்லை, ஆனால் அச்சுக் கோர்ப்பது, பையிண்டிங்க் செய்வது, அச்சுக் கோர்த்த உடன், முதல் அச்சு எடுக்கப்பட்டு அதில் எழுத்துப் பிழை பார்ப்பது (ப்ரூப் ரீடிங்), பைண்டிங்க் செய்ய தேவையான பசை காய்ச்சுவது உள்ளிட்ட பணிகள் கிடைத்தன.

அச்சு கோர்ப்பது ஒன்றும் எளிதாகக் கற்றுக் கொள்ளும் தொழில் அல்ல, குறைந்தது ஒருவாரம் பழகிய பின்னரே கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக் கொள்ள முடியும், தட்டச்சு எந்திரத்தில் போன்று எழுத்துகளில் ஒற்றைக் கொம்பு, இரட்டைக் கொம்பு, கால்,  உள்ளிட்ட எழுத்துகள் ஒரு மீட்டருக்கும் சற்று குறைவான அகலத்தில் உள்ள மர சட்டத்தில் செவ்வக அறைகள் ஏற்படுத்தி அடிக்கடிப் பயன்படுத்தும் எழுத்துகளை கீழ் சட்டத்திலும் அதன் மீது சாற்றிய நிலையில் இன்னொரு சட்டத்தில் குறைந்த பயன்பாட்டில் வரும் எழுத்துகளை கைக்கு எட்டும் தொலைவிலும் வைத்திருப்பார்கள், அதாவது தமிழ் எழுத்துகளைப் பொருத்த அளவில் இரண்டு பகுதியாக உள்ள மரச் சட்டத்தில் கிட்டத்தட்ட 150 செவ்வக அறைகள் இருக்கும், எழுத்துகளின் பயன்பாட்டிற்கேற்ப அறைகளின் அளவும் இருக்கும், உயிர் மெய் எழுத்துகள் கீழ் சட்டத்திலும், உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்துகள், இ(கி),ஈ(கீ),உ(கு),ஊ(கூ), உள்ளிட்ட உயிர்மைய் எழுத்துகள் மேல் சட்ட அறைகளிலும் இருக்கும், ஆ(கா), எ(கெ), ஏ(கே), ஐ(கை), ஒ(கொ), ஓ(கோ) உள்ளிட்ட எழுத்துகள் இயல்பிலேயே தனித்தனி குறியிடுகள் கொண்டுள்ளதால் அவை குறியிடுகள் மற்றும் மெய் எழுத்து என்ற வகையில் கீழ் சட்டத்தின் அறைகளிலேயே இருக்கும். அச்சு எழுத்துகள் காரீயம் சேர்த்து அச்சுகளாக உருவாக்கப்பட்டவை தான், எழுத்துகளின் அளவுக்கேற்ற அகலத்தில் 2 செமீ உயர செவ்வக வடிவ காரீயத் துண்டுகளின் மேல் எழுத்துகள் பொறிக்கப்பட்டு, கண்ணாடியில் பார்த்தால் தான் படிக்க முடியும்  என்பதாக ரப்பர் ஸ்டாம்பில் இருப்பது போன்று வலம் இடமாகப் படிப்பதாகத்தான் இருக்கும். ஸ்பேஸ் தவிர்த்த மற்ற எழுத்துகளின் முன்பக்க அடையாளக் குறியீடடிற்காக பிறைவடிவத்தில் எழுத்து நிற்கும் உயரத்தின் நடுப்பகுதின் அமைப்பு இருப்பதால், விரலில் எடுக்கும் பொழுதே சரியான பகுதிக்கு திருப்பி எழுத்தைப் பார்க்காமலேயே நேராகப் பொருத்த முடியும்.,  அவற்றில் இடைவெளி குறியீடு (ஸ்பேஸ்) சற்று உயரம் குறைவாக இருக்கும், அச்சாக அடிக்கும் பொழுது ஸ்பேஸ் அச்சில் விழக் கூடாது என்பதற்காக ஸ்பேஸ் சற்று உயரம் குறைவாக உருவாக்கப்பட்டு இருக்கும். குறிப்பிட்ட எழுத்து அறைக்குழிக்குள் வேறு எழுத்துகள் கலக்காவிடில் கம்போஸ் செய்யும் பொழுது தவறு ஏற்படாது, தொடர் பயிற்சினால் எந்த அறையிலும் உள்ள எழுத்துகள் மனப்பாடம் ஆக, பழகிய தட்டச்சு விரல் போன்று எழுத்துகளை எடுத்து படித்துப் பார்க்காமல் கோர்பில் சேர்க்க முடியும். கம்போஸ் ஸ்டிக்கை பிடித்தி இருக்கும் இடது கை கடைசியாக வைக்கும் எழுத்தை சேர்த்துப் பிடிக்க வரிகள் சரியாமல் இருக்கும், மேலும் கையை திருப்பாமல் இருக்க வேண்டும், கவனக் குறைவாக திருப்பினஅல் மொத்த எழுத்துகளும் அப்படியே தரையில் கொட்டிவிடும்,

அச்சு கோர்க்கப் பயன்படுத்தும் கைப்பிடியுடன் படத்தில் உள்ளபடி மரம் அல்லது உலோகத்தில் செய்யப்பட்ட அமைப்பு, நான் பார்த்தவை 'A4' பக்கம் உருவாக்கக் கூடிய அகலத்தில் உள்ள மரத்தில் செய்யப்பட்ட பொருத்தி தான், அதை கம்பாஸிங்க் ஸ்டிக் என்று சொல்லுவார்கள், எதை அச்சுக் கோர்க்க வேண்டுமோ அது பற்றிய தகவல் அடங்கிய தாள்களை மேல் சட்டத்திலோ, அல்லது பக்கத்திலோ வைத்துக்கொண்டு ஒவ்வொரு எழுத்தாக எடுத்து அடுக்க வேண்டும், வலது கையில் காம்பாஸிங்க் ஸ்டிக் இருக்கும், இடத்து கை விரலால் எழுத்துகளை எடுத்து அதில் வரிசையாகப் பொருத்த வேண்டும், சொற்களின் இடைவெளிக்கு ஸ்பேஸ் எழுத்தைப் பயன்படுத்த வேண்டும், பத்திகளின் இடைவெளிக்கு உயரம் குறைவான நீள ஸ்டீல் அல்லது மர அட்டைகள் வைத்திருப்பார்கள், அதைப் பொருத்த வேண்டும், அடிக்கோட்டிற்கு எழுத்து அளவு உயரமுள்ள மெல்லிய பட்டைகளை அடுத்த வரியில் அதற்கு நேராகப் பொருத்துவோம். முதல் வரி முடிந்து அடுத்த வரிக்கு செல்லும் முன் கடைசி சொற்களுக்கு போதிய இடம் இல்லை என்றால் பொருள் தரும் வகையில் சொற்களைப் பிரித்துக் கொள்ளலாம், அல்லது மீதம் இருக்கும் இடைவெளியை நிறப்ப ஒவ்வொரு சொற்களுக்கு இடையேயும் கூடுதலாக ஸ்பேஸ் வைத்து திணிக்க அந்த வரி அலைன் செய்யப்பட்டுவிடும், அடுத்த அடுத்த வரிகளும் அப்படியே, பத்தி முடியும் பொழுது பத்திகான அட்டை, ஒரு கம்பாஸிங்க் ஸ்டிக் முழுவதும் எழுத்துகளை அடுக்கிவிட்டால் பின்னர் அதிலிருந்து மொத்தமாக அப்படியே லாவகமாக எடுத்து பக்கங்களை சேர்க்கும் மறறொரு தட்டையான சட்டத்திற்கு மாற்றுவோம், கடைசி வரியை முட்டுக்கொடுத்து தடுப்புகளை வைக்கலாம், அல்லது சாய்வானப் செவ்வக பலகைப் பரப்பில் வைக்க அப்படியே நிற்கும், அடுத்த கோர்ப்பு முடிந்ததும் அதை தொடர்ச்சியாக ஏற்கனவே வைக்கப்பட்டதன் மீது பொறுத்துவார்கள், இப்படியாக ஒரு 'A4' பக்கமோ அல்லது அச்சடிப்பின் அளவுகளுக்கு ஏற்ப பக்கங்கள் உருவாக்கப்படும், எழுத்துகளை கம்பாஸிங் ஸ்டிக்கில் சேர்க்கும் பொழுதோ, சேர்த்ததை மொத்தமாக எடுத்து வைக்கும் பொழுதோ கவனக் குறைவானால் மொத்தமாக தரையில் கொட்டிவிடும். வெறும் கம்பாஸிங்க் ஸ்டிக் ஒரு 50 கிராம் எடை என்றால் அவற்றில் எழுத்துகளை சேர்க்க சேர்க்க இரண்டு கிலோ அளவுக்கு எடை கூட இடது கை வலிக்கும், அது மட்டுமல்ல, செவ்வகக் குழிகளில் விரல்களை விட்டு எழுத்தை எடுக்கும் பொழுது, எழுத்து செய்யப்பட்ட உலோகம் கடினமானது கூடவே சற்று கூரான முனைகளைக் கொண்டது என்பதால் விரல் நகக் கண்களை கிழித்துவிடும்.

எழுத்துகளைச் சேர்த்து பக்கமாக உருவாக்கிய பிறகு அவற்றை வைத்திருக்கும் செவ்வகப் பலகையில் இருந்து ப்ரூப் பிரிண்டிங்க் மேடைக்கு எடுத்துச் சென்று  எழுத்துப் பகுதி சற்று உயரமாக இடுப்பதால் அப்படியே உறுதியான நூலில் கட்டி மேடையில் மெதுவாகத் தள்ளி வைத்துவிட்டு சுற்றிலும் அணைப்பு கொடுத்துவிட்டு, மையை நன்றாக உருட்டி பின் மை உருளையை பக்கத்தின் மீது இரண்டு மூன்று முறை ரொம்பவும் அழுத்தம் கொடுக்காமல் உருட்டுவார்கள், ரொம்பவும் அழுத்தம் கொடுத்தால் எழுத்தின் மூடிய பகுதிகளில் மை இறங்கிவிடும், அச்செடுத்தால் எழுத்து தெளிவாக இருந்தாலும் பார்க்க நன்றாக இருக்காது, அதாவது கண்ணன் என்ற சொல்லில் உள்ள எழுத்தில் இருக்கும் வட்டங்கள் எல்லாம் கருப்பு மையால் நிரம்பி இருந்தால் பார்க்க நன்றாக இருக்குமா ? அதன் பிறகு அதன் மீது தாளை வைத்து மையற்ற இன்னொரு உருளையால் அல்லது மேலிருந்து அமுக்கும் தட்டையான கை எந்திரம் வழியாகவோ அமுக்குவார்கள், எடுத்துப் பார்த்தால் அச்சுகள் படிக்கும் படி தெளிவாக தாளில் பதிந்து இருக்கும், ப்ரூப் பார்த்து எதேனும் மாற்றம் தேவைப்பட்டால் பக்கத்தின் குறிப்பிட்டப் பகுதியை மட்டும் எடுத்து சரி செய்துவிட்டு திரும்பவும் பொருத்த வேண்டும். பின்னர் முறையாக அச்செடிக்கும் செட்டிங் அமைப்பில் வைத்து முடுக்கி அச்சு எந்திரத்தில் ஏற்றி எத்தனை படிகள் (காப்பிகள்) வேண்டுமோ அத்தனைக்கும் சற்று கூடுதலாக அடிப்பார்கள். பக்கங்களில் பயன்படுத்தும் புகைப்படங்கள் ஆகியவை 'போட்டோ ப்ளாக்' என்ற அச்சு அமைப்புகளாக  உருவாக்கவேறு நிறுவனங்களில் கொடுத்து செய்துவந்து அதை கம்போஸிங்க் செய்யும் போது இடையே பொருத்திக் கொள்வார்கள்.

ஒரே பக்கத்தை வண்ணப்பக்கங்களாக உருவாக்க எத்தனை வண்ணம் பயன்படுத்துகிறோமோ, அத்தனை வண்ணத்திற்கான தனித் தனி பக்கங்களை உருவாக்க வேண்டும், அதாவது தலைப்பில் பச்சை நிறமும், கீழே வேறு நிறமும் பயன்படுத்த வேண்டும் என்றால், தலைப்பு மட்டுமே தனிப்பக்கமாக உருவாக்கப்பட்டு அச்சடிக்கப்பட்டு, பின்னர் அடுத்த நிறத்திற்கான பக்கமும் உருவாக்கப்பட்டு, அச்சு எந்திரத்தில் வண்ணம் மாற்றப்பட்டு பின்னர் அச்சடிக்கப்படும், 'காம்பினேசன் கலர்' என்ற வகையில் கலர் புகைப்படங்களை அச்சடிக்க மூன்று போட்டோ ப்ளாக் மற்றும் நீளம், மஞ்சள், ஊதா நிறங்கள் மாறி மாறி பயன்படுத்தி வண்ணப் புகைப்படங்களை அச்சடிப்பார்கள்.

இந்தத் தொழிலில் கவனக் குறைவாக இருந்தால் நிறைய ஆபத்துகள், விபத்துகள் ஏற்படும், புத்தகங்களை அளவாக வெட்டும் பொழுதும், தாள்களை அளவாக வெட்டும் பொழுதும் எந்திர வெட்டிகள் தான் பயன்படுத்தப்படும், 500 தாள்களை ஒன்றாக வைத்து வெட்டும் பொழுது ப்ளேடின் கூர்மை, வேகம் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு கைகளை இடையே விடாமல் கவனத்துடன் செயல்பட வேண்டி இருக்கும்.

இந்த வேலையில் நூல் பைண்டிங்க் தவிர்த்து பிற வேலைகளை பெண்கள் செய்வது அரிது, காரணம் முழுப்பக்கத்தை கோர்த்து கட்டித் தூக்க காரீய எழுத்துகளின் எடை சேர ஐந்து  கிலோ அளவுக்கு எடை இருக்கும், தவிர எந்திரங்களை இயக்குவதும் கடினமானது,  அச்சுக் கோர்ப்புக்கு வேலைக்கு வருபவர்கள் பெரும்பாலும் பள்ளிப்படிப்பை பாதியில் விட்டு விட்டு கவுரமான வேலை என்று வருபவர்கள் தான், 25 வயது வரை வேலை பார்த்துவிட்டு சம்பளம் கட்டுப்படி ஆகவில்லை என்று பெயிண்டராகவே அல்லது வேறு வேலைக்கோ சென்றுவிடுவார்கள், கொஞ்சம் பேர் தான் தொடர்ந்து வேலை செய்வார்கள்,  அவ்வாறு நீண்ட நாள் வேலை செய்பவர்கள் தொழில் தெரிந்தவர் என்ற அடிப்படையில் நான்கைந்து அச்சு நிறுவனங்களில் ஒரே நேரத்தில் தேவையின் அடிப்படையில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்து வருமானத்தை சரி செய்து கொள்வார்கள், அச்சுக் கோர்ப்பில் வேலை செய்பவர்கள் எல்லாம் இளம் வயதினர் என்பதால் முதலாளி இல்லாத வேளைகளில் கலகலப்புக்கும் சினிமா நடிகர் நடிகைகள் பற்றிய கதைகளுக்கும் குறைவிருக்காது, நான் தொடர்ந்து படிப்பவன் என்பதால் முதலாளி என்னிடம் அதட்டி, திட்டி வேலை வாங்கியது இல்லை, கொஞ்சம் பாசமாகவே நடந்து கொண்டார். இப்பவும் பார்த்தால் கூட தன்னிடம் வேலை பார்த்தவன் என்கிற நினைப்புகளை குறைத்து எனது கல்வித் தகுதிக்காக என்னிடம் அன்பாகத்தான் பேசுவார், அந்த அச்சு நிறுவனத்தில் சுஜாதாவின் புத்தகங்கள் அச்சடிக்கப்பட்டு 'இமைய பதிப்பக வெளியிடுகள்' என்பதாக வெளி வந்தன, சுஜாதாவும் எப்போதாவது வந்து போவார், நான் பார்த்திருக்கிறேன், சுஜாதாவின் நாவல்களை அச்சுக் கோர்க்கும் வாய்ப்புகள் கூடக் கிடைத்தன.

அச்சு அலுவலங்களில் அன்றாட வேலைகள் அழைப்பிதழ்கள் அடிப்பது தவிர்த்து பிற அச்சு வேலைகளும் இருக்கும், தேர்தலுக்கு முன் அச்சு அலுவலகங்கள் படு பிசி ஆகிவிடும், காரணம் வாக்களர் பட்டியலை உருவாக்கியப் பின் அச்சாக்கும் பொறுப்பு அச்சு நிறுவனங்களுக்கு வழங்கப்படுவதால் இரவு பகலாக வேலை பார்ப்பார்கள்,வாக்களர் பட்டியல் மாவட்டம், வட்டம், தாலுகா, கோட்டம் உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் ஆண் / பெண் வாக்களர் பெயர்கள் வரிசை அவர்களின் வயது விவரங்களுடன் பட்டியலாக உருவாக்க வேண்டும், ஒவ்வொன்றிலும் 50 காப்பிகள் வரையில் அச்சடிப்பார்கள், அச்சுக் கோர்ப்பு தான் கடினமானது, மொத்தப் பட்டியலை உருவாக்கி அடிக்கப் போதிய எழுத்துகள் இல்லாத நிலையில் ஒரு பகுதியை அடித்த பின் எழுத்துகளை பிரித்துப் போட்டுவிட்டு அடுத்தப் பகுதியை உருவாக்க வேண்டும், கோர்பதைவிட அச்சுப் பிரிப்பது எளிது தான், அச்சடித்த பின் எழுத்தின் மீதான மையை நீக்க மண் எண்ணையை தூரிகையில் எடுத்து அழுந்த துடைத்துவிட்டு, கொஞ்சம் காய்ந்ததும், இடது கையில் ஆள்காட்டி விரலுக்கும், பெருவிரலுக்கும் இடையே கொள்ளும் அளவுக்கு பத்தியின் கடைசியில் இருந்து வரிகளை எடுத்துப் பொருத்திக் கொண்டு, அதில் வரியாக எடுத்து படித்துப் பார்த்துவிட்டு செவ்வக அறைகளில் அதனதன் இடத்தில் ஒவ்வொன்றாக போட வேண்டும், திறனுக்கு ஏற்ப வேக மாகபோட முடியும், விரல் லாகவமாகப் பயன்படுத்துவதாலும் எழுத்துக்குழிகள் ஏற்கனவே மனப்பாடம் ஆன நிலையில் அச்சுப் பிரிப்பில் பொழுது படபட வென்ற வேகமாகவே எழுத்துகளை எடுத்து பிரித்துப் போடுவார்கள், ஒரு கம்பாஸிங்க் ஸ்டிக் அளவுக்கு அச்சுக் கோர்க்க 30 நிமிடம் எடுத்தால் அதைப் பிரித்துப் போட 3 நிமிடம் தான் ஆகும்.

எழுத்துகளின் தன்மைக்கெற்ப தனித் தனி செவ்வகப் பலகை சட்டங்கள் இருக்கும், உதாரணத்திற்கு இட்டாலிக், மற்றும் போல்ட் எழுத்துகள் இவை தனித் தனியான சட்டங்களில் இருக்கும், வரிகளுக்கு இடையே தேவையான இடங்களில் பொருத்த அந்த சட்டப் பகுதிக்குச் சென்று எடுத்துப் பொருத்த வேண்டும் பிரிக்கும் பொழுதும் அப்படியே. ஆங்கில எழுத்துக் கோர்ப்பு எளிது, காரணம் எண்ணிக்கை அடிப்படையில் சட்டங்களில் குழிகளும் குறைவாகவே இருக்கும், சிறிய மற்றும் தலைப்பு (Small & Capital)  எழுத்துகளில் சிறிய எழுத்துகளை கீழ் பகுதியிலும் தலைப்பு எழுத்துகளை மேல் பகுதியிலும் வைத்திருப்பார்கள், ஆங்கில எழுத்தில் 'e' க்கு மட்டும் பெரிய செவ்வக குழி இருக்கும்,'e' எழுத்துகளும் எண்ணிக்கை அடிப்படையில் கூடுதலாகவே இருக்கும். ஆங்கிலத்தில் பயன்படுத்தும் எழுத்துகளில் 'e' தான் பயன்பாட்டு அளவில் முதன்மையாக இருக்கிறது.

தேர்தல் வாக்காளர் பட்டியல் அச்சுக் கோர்ப்பில் கோர்பாளர்கள் திணறுவது இஸ்லாமிய பெயர்களை கோர்க்கும் பொழுது தான், காரணம் பொரும்பாலும் இஸ்லாமியப் பெயர்கள் வடமொழி எழுத்துகளைக் கொண்டு இருப்பதால் அவ்வெழுத்துகள் உயரமான மற்றும் குறுகலான குழிகளில் இருக்கும், பொதுப் பயன்பாடு என்ற அளவில் அவ்வெழுத்துக்களின் எண்ணிக்கையும் குறைவாகவே இருக்கும், போதிய எழுத்துகளே கிடைகாத நிலையில் நாங்களே பெயர்களை தமிழ்படுத்தி அச்சில் ஏற்றுவோம், இப்ப இருக்கும் பெரும்பாலான தமிழ் பெயர்களும் அப்படியே தான் இருக்கின்றது என்பது வேற. உதாரணத்திற்கு அஹமது என்று எழுத்துக் கோர்க்க, 'ஹ' இல்லாவிடில் 'அகமது' என்று மாற்றிவிடுவோம், இல்லை என்றால் தவிர்க்க முடியாத இடங்களில் அஉறமுது (உ வையும், ற வையும் சேர்த்துப் போடுவது) ஹரிஹரன் என்பதை உறரிஉறரன் என்று எழுதினால் எப்படி இருக்கும் அது போலவே,  ஜான்சி என்கிற பெயரை சான்சி, ஜமீலா - சமீலா என்று அமைப்போம், வேற வழி இல்லை,  மொத்தமாக ஐந்தாயிரம் பக்கம் அடிக்க எழுத்துகள் 20 பக்கத்திற்கு தான் வரும் என்ற நிலையில், உருவாக்கிய பக்கங்களை அடித்துக் கொண்டிருக்கும் பொழுது பிற பக்கங்களை உருவாக்கும் சூழலில் எழுத்துப் பற்றாக் குறைகள் இவ்வாறு தான் சரி செய்யப்படும், இந்த எழுத்துப் பற்றாக் குறை விவரம் வாக்காளர் பட்டியல் கொடுத்த அரசு நிறுவனங்களும் தெரியும் என்பதால் விவகாரம் எதுவும் கிளம்பாது. 

நான் வேலை பார்த்த அச்சு அலுவலகத்து ஜாப் ஆர்டர் என்ற வகையில் நீதிமன்றங்களின் தீர்ப்பு ஆணைகளின் தட்டச்சு நகல்வடிவம் வரும், அதை அச்சாக்கி 10 காப்பிகள் வரையில் கொடுக்க வேண்டும், அதை தான் வழக்கின் தீர்ப்பு நகலாக கையெழுத்து இட்டு வாதி மற்றும் எதிர்வாதியிடமும் கொடுப்பார்கள், உள்ளூர் வெளியூர் வழக்கு விவரங்கள் அனைத்தையும், தீர்ப்பையும் அச்சு கோர்க்கும் போதே படித்துவிடலாம், கள்ளத் தொடர்ப்பு, கொலை, சொத்து தகராறு உள்ளிட்ட நீதிமன்ற நடவடிக்கை தீர்ப்பு விவரங்கள் மற்றும் அதனுடன் இணைந்த பிற சான்றிதழ்கள் பற்றிய தகவல் அனைத்தும் தெரியவரும், சில படிக்க சுவாரிசியமாக இருக்கும். சில 50 பக்கங்கள் வரை நீண்டு கொண்டே இருக்கும். 

எப்பொழுதெல்லாம் நீண்ட பள்ளி விடுமுறை கிடைக்கிறதோ அப்போதெல்லாம் அச்சு அலுவலகத்திற்கு வேலைக்குச் சென்றுவிடுவேன், கிடைக்கும் பணத்தின் எனக்கு தேவையான புத்தகங்களை வாங்குவது உள்ளிட்ட செலவுகளைப் பார்த்துக் கொள்வேன், +2 படித்து முடித்த நிலையில் பகல் நேர பட்டப்படிப்பிற்கு வாய்ப்பு கிடைக்காத நிலையில், பகல் நேர பாலிடெக்னிக்கிற்கும் போதிய மதிப்பெண்கள் இல்லாத நிலையில் பகுதி நேரமாக பாலிடெக்னிக் படிக்கும் சூழல் ஏற்பட்டது, பி.இ படிக்க வைக்கவோ, பணம் கொடுத்து இடம் வாங்கவோ முடியாத நிலையில் உள்ளூரிலேயே படிக்க பகுதி நேர பாலிடெக்னிக் வாய்பாக இருந்து தகுதி அடிப்படை இடம் கிடைக்கவும், தொடர்ந்தேன், பகல் நேரத்தில் அச்சு அலுவலகம் தான், வேலைக்குச் சென்றாலும் படிப்பில் கவனம், தேர்வு காலங்களில் வேலையை தவிர்ப்பது உள்ளிட்ட திட்டமிட்ட நேரங்களினால் பாலிடெக்னிக் படிப்பில் வகுப்பில் முதல் மாணவனாக வர முடிந்தது, என்னுடல் +2 படித்தவர்கள் பலரும் என்னுடைய மதிப்பெண் அளவே பெற்றிருந்ததால் அவர்களுடனேயே படித்து முடித்தேன், படிப்பில் தொடர்வின்மையும் ஏற்படவில்லை. படித்து முடித்ததும், இனிமேல் இந்த வேலைக்கு வந்தால் உன் எதிர்காலம் வீணாகிவிடும் என்று அச்சு அலுவலக உரிமையாளர் அன்புடன் கடிந்து கொண்ட பிறகே அந்த வேலையை விட்டேன்.

அச்சு அலுவலக பயிற்சி எனக்கு பிற்காலத்திலும் பல வகையில் பயன்பட்டது, கணிணிகளில் வேர்ட் அல்லது அதற்கு முந்தைய வேர்ட் ஸ்டார் ஆகியவற்றில் பக்கங்களை  தட்டச்சும் பொழுது காற்புள்ளி, அரைப்புள்ளி மற்றும் புள்ளி வைப்பது அதன் பிறகு இடைவெளி விடுவது, இடைவெளிகள், தலைப்பு, வலது, இடது, கீழ் ஆகிய பகுதிகளின் அளவு உள்ளிட்டவற்றை எப்படி அமைக்கலாம் என்பதற்கு உதவியது, பக்க வடிவமைப்பு நன்கு தெரிவதால் பவர் பாயின்ட் ஸ்லைடுகள் ஆகியவற்றை சிறப்பாக வடிவமைக்கும் ஆற்றலைக் கொடுத்தது. 

(அச்சு அலுவலக்கத்தில் என்னுடன் வேலை பார்த்தவர்கள்)

அச்சுத் தொழில் நசிந்தது ஏன் ?


எல்லாம் கணிணி மயம் ஆகும் பொழுது பாரம்பரிய அச்சுக் கோர்ப்பு முற்றிலும் நசிந்தது, காரணம் அச்சுக் கோர்பில் செய்து வந்த அனைத்து வேலைகளும் கணிணிகளால் எளிதானது, கூடவே ஸ்க்ரீன் பிரிண்டிங்க் உள்ளிட்ட புதிய அச்சு முறைகள், பழைய அச்சுக் கோர்ப்பு முறைகளை ஒழித்து கட்டியது, 90 களின் இறுதி வரை இயங்கி வந்த சிறிய அளவிலான அச்சு அலுவலகங்கள், கட்டாயமாக மூடப்படும் நிலைக்குச் சென்றுவிட்டது, அதில் வேலைப் பார்த்தவர்கள் ஆப்செட் பிரிண்டிங்க் உள்ளிட்ட போஸ்டர் அடிக்கும் தொழிலுக்குச் சென்றுவிட்டார்கள், புத்தகங்கள் மற்றும் துண்டு விளம்பரங்கள் அடிப்பது அனைத்தும் கணிணீ மயமாகிவிட 300 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவந்த பாரம்பரிய அச்சுத் தொழில் மூடுவிழா கண்டது, கம்யூட்டர் பிரிண்டர்களால் அச்சுத் தொழில்  முற்றிலும் புதிய வடிவம் பெற்றது.

*****

நான் அச்சுத் தொழிலை கைவிட்ட பிறகு, பாலிடெக்னிக் படித்து முடித்த பிறகு வேறு இரண்டு படிப்பு சார்ந்த தொழில்களையும் (Technical Job) சில ஆண்டுகள் வேலையாகவே செய்து பார்த்துவிட்டு அதில் நிபுணத்துவம் பெற்ற நிலையில் பின்னர் முற்றிலும்  கைவிட்டேன், அதற்கான காரணங்கள் பல, அவைபற்றி பின்னர் எழுதுகிறேன்.


19 ஜூலை, 2012

கட்டிடத் தொழிலாளர்கள் பற்றி அறியாதவை !

சாதி, மதம், குலம் பார்க்காமல் நடைபெறும் தொழில்களில் எனக்கு தெரிந்து இரண்டே இரண்டு தான், ஏனைய தொழில்கள் பெரும்பாலும் சாதி / மதம் / பெற்றோர் வழி அல்லது பெருமைக் குரிய என்ற அளவில் தேர்ந்தெடுக்கப்படுவது தான், அப்பன் மருத்துவர் என்றால் வாரிசுகளை எப்படியாவது மருத்துவர் ஆக்கிவிட வேண்டும் என்பது போல் அப்பன் விவசாயி என்றால் மகனும் விவசாயி என்கிற நிலைமை மாறிவிட்டது, காரணம் அதில் செலவிடும், உழைப்பும் பணமும் சரியான லாபத்தை ஈட்டாமல் விவாசயத்தை தலைமுழுக வைத்தது, அது விவசாயத் தொழிலின் குறை இல்லை, அரசின் பொருளாதாரக் கொள்கையினால் உள்ளூர் விவாசாயம் நட்டத்தில் தான் நடக்கிறது. சாதி மதம் குலம் சாராத இரண்டு தொழில் என்று சொன்னேனே... ஒன்று பள்ளிக் கல்வியை முடித்தோ அல்லது முடிக்காமலோ செய்யும் கட்டிடத் தொழில் சித்தாள், கொத்தனார் மற்றும் மேஸ்திரி ஆகியவர்கள் பள்ளிக் கல்வியை பாதியிலேயே நிறுத்தியவர்கள் மற்றும் முற்றிலும் பள்ளிக் கூடம் பக்கமே எட்டிப் பார்க்காதவர்கள், ஒரு ஆண் சித்தாளாக சேர்ந்து மேஸ்திரி நிலைக்கு உயர பத்தாண்டுகள் ஆண்டுகள் பிடிக்கும், அடிப்படைத் தகுதி மண், செங்கல்,செமெண்ட் கலவை சட்டியைத் தூக்கத் தெரிந்தால் போதும், பின்னர் சில நாட்களில் கலவைப் போடக் கற்றுக் கொண்டு, பின்னர் செங்கல்லை சுவர் கட்டப் பொருத்தவும், பொருந்தாத இடத்தில் அளவாக உடைத்து பொருத்தவும் அதன் மீது சரியான அளவு சிமெண்ட் கலவையும் பூசத் தெரிந்து, கடைசியாக சுவரும் தரையும் பூசக் கற்றுக் கொள்வதுடன் முழுக் கொத்தனார் ஆகிவிடுவார் ஒரு (ஆண்)சித்தாள், இதற்கு ஒரு ஐந்து ஆண்டுகள் பிடிக்கும், இடையே கரணை(சட்டியில் இருந்து சிமெண்ட் அள்ளப் பயன்படுத்தும் கைக்கருவி) , மட்டப் பலகை மற்றும் ரசமட்டம் ஆகியவற்றைப் பயன்படுத்தும் திறனும் வளர்ந்திருக்கும், கொத்தனார் வேலையில் ஒரு ஐந்து ஆண்டுகாலம் நீட்டித்தப் பிறகு தானாகவே மேஸ்திரி என்று அறிவித்துக் கொள்வார்.


இத்தகைய பதவி உயர்வுகளை அவர்களாகவே கொடுத்துக் கொள்வர். 'நல்ல சுத்தமான வேலைக்காரன்' என்று நாலு பேர் பாராட்டுவது தான் அவர்களுக்கான சான்றிதழ். மேஸ்திரியாக உயர்ந்தவர்களுக்கு சிமெண்ட் மற்றும் செங்கல் வாங்கும் இடங்களில் போதிய அளவு கமிசன் கிடைக்கும், மேஸ்திரிகளில் சிலர் வீடுகளை வடிவமைப்பதிலும் கைதேர்ந்தவர்களாக இருப்பர், சிலர் சொதப்பலாகவும் வடிவமைப்பர். கட்டிடவேலைகளில் ஆபத்துகள் நிறையவே உண்டு, அஸ்திவாரம் துவங்கி மேல் தளம் போடும் வரை பெரும்பாலும் வெயிலில் தான் வேலை, மேல் தளம் போட்ட பிறகு தான் பிற வேலைகளை செய்ய அவர்களுக்கு நிழல் கிடைக்கும், அதன் பிறகானவேலை 25 விழுக்காடு தான் என்பதால் கட்டிடத் தொழில் சார்ந்தவர்கள் பெரும்பாலும் வெயிலில் தான் வேலை செய்ய வேண்டி இருக்கும்.

கூலித் தொழில்களில் கட்டிடத் தொழிலில் ஒரளவும் ஊதியம் கட்டுப்படி ஆகும் படி தான் இருக்கும்,  தற்போதைய நிலவரத்தில் மேஸ்திரிக்கு 500, கொத்தனாருக்கு 350, ஆண் சித்தாளுக்கு 200, பெண் சித்தாளுக்கு 150 வரைக் கொடுக்கிறார்கள், மேஸ்திரி இல்லை என்றால் வேலை நடக்காது என்பதால் மேஸ்திரி வேலை செய்யாவிட்டாலும் அவருக்கு ஊதியம் அதிகம் தான், காரணம் எல்லோரையும் வேலை வாங்குவதுடன் ஆட்களை கொண்டுவரும் பொறுப்பும், குறிப்பிட்ட காலத்தில் முடிக்க வேண்டிய பொறுப்பும் கொடுக்கப்பட்டு இருக்கும், கட்டிடத் தொழில் கடுமையான வேலை தான் என்றாலும் கலகலப்பான வேலை என்றே சொல்லலாம், காரணம் கொத்தனார்கள் - சித்தாள்கள் பழகும் முறைகள், பழகும் விதம், அவர்களின் நெருக்கம், நேரம் போகமல் இருக்க சித்தாள்களை கிண்டல் செய்து கொண்டே வேலை செய்வார்கள், பெரும்பாலும் இரட்டை பொருள் உள்ள சொல்லாடல்களைப் பேசுவார்கள், ஆனால் சித்தாள்கள் கோவித்துக் கொள்ளமாட்டார்கள், அடிப்படையில் பொழுது போக்குக்காக கிண்டல் செய்வதை சீரியஸாக எடுத்துக் கொள்ளக் கூடாது என்கிற புரிந்துணர்வு அவர்களிடம் இருக்கும், அவர்களிடையே அந்தரங்க உறவுகள் சாத்தியம் என்றாலும் பெரும்பாலும் அவ்வாறு நடைபெறாது, காரணம் சித்தாள்கள் மற்றும் கொத்தனார்கள் குழுமமாகத் தான் வேலைக்குச் செல்வார்கள், அவர்களிடையே பலக் குழுக்கள் இருந்தாலும் ஒருவருக்கு ஒருவர் தெரிந்தவர் என்ற நிலையில்  அவர்கள் வேலைக்குச் செல்வதால் எல்லைகளை மீறமாட்டார்கள், ஏணியில் ஏறச் சொல்லி கீழே நின்று பார்ப்பவன் இவன் என்று ஒரு கொத்தனார் பற்றி ஒரு சித்தாளுக்கு தெரிந்தோ, அனுபவப்பட்டோ இருந்தால் அவரிடம் சேர்ந்து அடுத்த நாள் வேலைக்குச் செல்லமாட்டார்கள், கள்ள உறவுகளும்  ஆபாசப் பேச்சுகளும் அவர்களிடையே மிகுந்து இருக்கும் என்பது சமூகத்தால் மிகைப்படுத்தப்பட்டுப் பார்க்கப்படுவது தான், ஆண் - பெண் வேலை செய்யும் இடங்களில் நடப்பவைகளே அவர்களிடமும் நடக்கும்.

வேலை நேரங்களில் நகைச்சுவைக் கலந்த இருபொருளில் பேசுவார்கள், தமிழ் சினிமாவை ஒப்பிட அவர்கள் பேசும் இரு பொருள்கள் மிகக் குறைவு தான். அவர்களிடையே நன்றாக குரல் எடுத்துப் பாடுபவர்களும் உண்டு, வேலை செய்யும் போது நேரம் போவதே தெரியாது, 9 மணிக்கு வேலை துவங்குவார்கள், 11 மணிக்கு தேனீரும், வடை/ போண்டா வரும், பின்னர் 1 மணிக்கு மதிய சாப்பாடு, கொஞ்சம் தூக்கம், பின்னர் 3.30 மணிக்கு தேனீர் மற்றும் பகோடா, 5.30 மணிக்குள் பயன்படுத்திய சிமெண்ட் படிந்த பொருள்களைக் கழுவி மூட்டைக் கட்டிவிடுவார்கள், மேல் தளம் போடும் நாள்களில் தான் இரவு 10 மணி வரையிலும் ஆகிவிடும், மேல் தளவேலையைத்(சீலிங்) துவங்கிவிட்டால் கலவை காய்வதற்குள் மேல் தளம் முழுவதையும், அதனை முடித்துவிட வேண்டும் என்பதால் விடிய விடிய வரை கூட வேலை நடக்கும், அன்னிக்கு அவர்களுக்கு கிடைக்கும் ஊதியம், கவனிப்புகள் அதிகமாகவே இருக்கும். அவர்களிடையே கலைத் திறன் மிக்கவர்களும் இருப்பார்கள், மிக அழகாக காகிதங்களை வெட்டி அதை வைத்து சிமெண்ட் தரைகளில் பூ வடிவங்கள் உருவாக்குதல், வீட்டு முகப்புச்சுவர்களை கலையாக இருக்கும் படி அமைப்பது உள்ளிட்டவற்றை தெரிந்து வைத்திருப்பார்கள், தற்பொழுது டயில்ஸ் மற்றும் க்ராணைட் கல்களிலேயே அவ்வாறான வடிவங்கள் கிடைப்பதால் மெனக்கட்டு எதையும் செய்வதோ, கற்று வைத்திருப்பதோ இல்லை.

நான் முன்பு குறிப்பிட்டது போல் கட்டிடத் தொழிலாளர்கள் குறிப்பிட் டசாதி/மதத்தையையும் சார்ந்தவர்களாக  இருக்கமாட்டார்கள், அவர்களிடையே சாதிப் பார்த்துப் பழகுவதையும் நான் அறிந்தது இல்லை. அவர்களின் வேலை இடத்து பாதுகாப்பு குறித்து எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை, மேலிருந்து தவறி விழுந்தாலோ, கீழே நிற்கும் போது தலையில் கல் விழுந்து இறந்தாலோ, காயம் பட்டாலோ எந்த ஒரு இழப்பீடும் கிடைக்காது, பெரிய நிறுவனங்கள் வேலைக்கு எடுக்கும் போது பாதுகாப்பு தலை கவசங்கள் உள்ளிட்டவை தந்தாலும் அவர்களுக்கு நடக்கும் விபத்துகளுக்கு போதிய இழப்பீடும் வழங்கப்படுவதில்லை, அவர்களுக்கு சங்கங்கள் அமைப்புகள் இருக்கிறது என்றாலும் அதை அரசியல் ரீதியாகவும், வாக்கு வங்கியாகவும் பயன்படுத்திக் கொள்ளத்தான் முயல்கின்றனர், ஒரு கட்டிடத் தொழிலாளி விபத்தில் இறந்தால் இந்தியாவில், தமிழ் நாட்டில் இழப்பீடுகள் எதுவும் கிடைக்காத நிலையில் தான் அவர்கள் தொடர்ந்து வேலை பார்க்கிறார்கள், நேற்று வரை உடன் வேலை செய்தவர் விபத்தில் இறந்தாலும் மறு நாள் அதே இடத்தில் இழப்பை நினைத்து அச்சப்படாமல் வேலை செய்யும் நிலை தான் அவர்களுடையது. மற்றக் கூலித் தொழில்களை விட இவர்களுக்கு சற்று கூடுதலான ஊதியம் என்றாலும் கட்டிடத் தொழிலாளர்களில் 90 விழுக்காட்டினர் வேலை முடிந்ததும் மது அருந்தும் பழக்கத்தைக் கொண்டிருப்பார்கள், காரணம் உடல் வலி என்றும் சொல்லுவார்கள். இந்தப் பழக்கம் அவர்களுக்கு சேர்க்கை என்ற அளவில் ஏற்பட்டுவிடும். தவிர திரைப்படங்கள் பார்ப்பது, சீட்டாடுவது உள்ளிட்ட வகையில் பணத்தை செலவு செய்வதால் அவர்களிடம் சேமிப்புகள் பெரும்பாலும் இருக்காது, அன்றாடம் வேலை செய்தால் தான் வாழ்க்கையை ஓட்ட முடியும் என்ற நிலையை அவர்களே ஏற்படுத்திக் கொள்வார்கள், மழை பெய்தால் வீட்டினுள் செய்யக் கூடிய பூச்சு வேலை அல்லது கழிவறை கட்டுவது உள்ளிட்ட சில வேலைகள் தவிர்த்து வேறெதும் கிடைக்காது என்பதால் மழைகாலங்களில் பாதிக்குமேற்பட்டவர்கள் வேலை இல்லாமல் இருப்பார்கள், கந்துவட்டிக்கு பணம் வாங்கி அதை பின்னர் அடைத்துக் கொண்டு இருப்பார்கள். அவர்களால் அந்தச் சூழலில் இருந்து மீளவும் முடியாது. அவர்களுக்கும் ஏன் மற்ற கூலி வேலை செய்பவர்களைவிட ஊதியம் அதிகம் ? ஒரு (ஆண்) சித்தாள் கொத்தனாராக உருவாக சுமார் 5 ஆண்டுகள் வரையிலும் பிடிக்கும், வீடு தொடர்பான வண்ணம் பூசுவது உள்ளிட்ட மற்ற வேலைகளை எவரும் செய்ய முடியும் என்கிற நிலையில் கட்டிடத் தொழிலாளர் தவிர்த்து வீடு கட்டுவது இயலாது என்பதால் அவர்களின் ஊதியங்களை குறிப்பிட்ட ஆண்டு இடைவெளியில் அவர்கள் கூட்டிக் கொள்வார்கள். இந்தத் தொழிலில் பெண் தொழிலாளிகள் கொத்தனாராக, மேஸ்திரியாக உருவாகிவிட முடியாது, அதற்கு பெரிய காரணம் எதுவும் இல்லை என்றாலும் அவர்களும் அதை ஆர்வமாகக் கற்றுக் கொள்வதில்லை, கல் மண் கலவை சுமப்பதுடன் நிறுத்திக் கொள்கிறார்கள்.

எங்கள் ஊரில் (நாகை) கட்டிடத் தொழிலாளர்களின் கோவில் திருப்பணியாக மாரியம்மன் கோவில் திருவிழாவின் பொழுது திருவிழாவின் முதல் நாள் இரவில் கைலாச வாகன திருப்பணி கட்டிடத் தொழிலாளர்களின் ஆதரவு மற்றும் பொருள் உதவியால் நடக்கும், அவர்களின் தலைவருக்கு கோவிலில் மரியாதை செய்வார்கள்.

கட்டிடத் தொழிலாளிகள் பற்றி எனக்கு தெரிந்திருக்கக் காரணம் எங்கள் குடும்பங்களில் கொத்தனார்கள், மேஸ்திரிகள் உண்டு, நானும்  பள்ளி விடுமுறைகளில் வீட்டுக்கு தெரியாமல் கைச் செலவுக்கு ஆகும் என்பதால் சிறுவயதில்  (15 -16 வயதில்) சித்தாள் வேலைக்குச் சென்றிருக்கிறேன், அப்போதெல்லாம் நாள் கூலி 15 ரூபாய் கிடைக்கும். படிப்பு முக்கியம் என்பதால் அங்கெல்லாம் போகக்  கூடாது என்று வீட்டில் சொல்லிவிட்டார்கள். இப்பவும் ஊருக்குச் சென்றால் உரிமையுடன் வந்து தோளில் கைபோட்டுப் பேசும் கட்டிடத் தொழிலாளர்கள் உண்டு.

படங்கள் : தமிழ் வலைப்பதிவுகளில் இருந்து சுட்டவை
******

சாதி மதம் பார்க்காத தொழிலில் இன்னொன்று தகவல் தொழில் நுட்பத்தில் பொட்டி தட்டுவது, அது பற்றிப் பிறகு பார்ப்போம்.


17 ஜூலை, 2012

பழைய சோறு நல்லதா ?


காலை உணவு குறித்து இன்றைய இளைஞர்கள் இளைஞிகள் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை, காலையில் எதுவும் சாப்பிடாமல் இருப்பேன் என்பதை பலர் பெருமையாகச் சொல்கிறார்கள், காரணம் வறுமை இல்லை என்றாலும் காலை உணவைத் தவிர்ப்பது எதோ ஒரு புதிய உடற்பயிற்சி போன்று நம்பப்படுவதுட்ன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் என்றும் நம்புகிறார்கள், உண்மையில் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு நீரிழிவு குறைபாடு வருவதற்கான வாய்ப்பு மிகுதி. இரவு உணவிற்கும் காலை உணவிற்குமான இடைவெளி ஏற்கனவே குறைந்தது 8 மணி நேரமாக இருக்கும் பொழுது, அதை தவிர்த்துவிடுவதால் அந்த இடைவெளி கூடுதலாகி 12 மணி நேரம் வரையிலும் கூட நீட்டிக்கப்படுகிறது, உடலில் உற்பத்தியாகும் இரத்ததிற்கேற்ற அளவில் தான் கணையம் வேலை செய்து இன்சுலினைச் சுரந்து இரத்தத்தில் உள்ள சர்கரையை எரிக்கிறது, காலை உணவு எடுத்த்துக் கொள்ளாததால் இரத்த உற்பத்திக் குறைந்த நிலையில் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதும் இயல்பாகவே குறைய, நாளடைவில் கணையத்தின் இன்சுலின் உற்பத்தித் திறனும் குறைந்துவிடும். இதனால்  இன்சுலின் சுரப்பதில் கட்டுப்பாடு ஏற்பட, வேளை விட்டு சாப்பிடும் போது உண்டாகும் உபரியான இரத்தத்தில்  உபரியாக உற்பத்தியான சர்க்கரையை எரிக்க முடியாமல் அவை இரத்ததில்யே தங்குவதைத் தான் நீரிழிவு குறைபாடு என்கிறார்கள், அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை எரிக்கப்படாமல் இரத்ததுடன் கலந்து இருப்பதைத் தான் நீரிழிவு என்கிறது மருத்துவ்ச உலகம், இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுவிட முடியாது, ஏனெனில் இரத்தத்தில் சேரும் சர்க்கரை இரத்ததின் நீர்மத் தன்மையை கெட்டியாக்குவதுடன் இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. 

இரத்த சர்க்கரை அளவு கூட உடலில் அனைத்து பாகங்களுக்குமான தேவையான இரத்த ஓட்டம் குறைய இயல்பாகவே உடல் பாகங்கள் சீர்கேடு அடைகின்றன, அதனால் தான் மற்ற நோய்களைவிட நீரிழிவு நோய் மனித வாழ்க்கையின் மிகப் பெரிய அரைகூவலாக இருக்கிறது. நீரிழிவு குறைபாடு இதனை நோய் என்று சொல்லமுடியாது) முற்றிலும் குணப்படுத்தப்படாவிட்டாலும் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்பது தான் தற்காலிக மருத்துவத் தீர்வு, அதாவது இரத்தச் சர்க்கரையைக் கூட்டாத வண்ணம் உணவு பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதுடன் தேவையான போது அதற்குறிய மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இதைத் தவிர்த்து மருத்துவ உலகம் நீரிழிவு குறித்து முழுமையான எந்த ஒரு தீர்வையும் இதுவரை கண்டிபிடிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை. மற்றொரு நிரந்தர தீர்வு மாற்று கணையம் பொறுத்துவது தான், ஆனாலும் உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து கணையம் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது, கணையம் சிறுநீரகங்களைப் போல் இரண்டாக இல்லாமல் ஒன்றாக இருப்பதால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை, மூளைச் சாவு கண்டவர்களிடம் இருந்து கணையம் பெறப்பட்டாலும் அவை முற்றிலும் பழுதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொறுத்தப்படுவதால் பொதுவான நீரிழிவு குறைபாட்டினருக்கு மாற்று உறுப்பு சிகிச்சைகளுக்கான வாய்புகள் கிடையாது. மாற்றுக் கணையம் பொருந்துவதும் மிகக் கடினம், பிழைப்பதற்கான வாய்ப்புகளும் அரிது. இதனால் தான் நீரிழிவுக்கு  இரத்த சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடும் தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. 

எனக்கெல்லாம் எந்த நோயும் அண்டாது என்று நம்புவர்களும் இருக்கிறார்கள்', இவையெல்லாம் நாற்பது வயதுவரையான நம்பிக்கையாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நாற்பது வயதிற்குமேல் இப்படியான நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இதய துடிப்பு, சிறுநீர், கண்கள் ஆகியவற்றை சோதனை செய்து அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் இயங்குகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறையான சோதனை நோய்களின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுப்பிடிக்கப்படுவதால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள வாய்பாக அமையும் அலட்சியம் காட்டினால் 'நேற்று வரை நன்றாகத் தான் இருந்தார் என்று நாலு பேர் தன்னைப் பற்றிப் பேசும் போது கேட்க முடியாமல் போய்விடும், இதை பயமுறுத்தல் என்று எடுத்துக் கொள்ளாமல் பரித்துரை என்ற அளவில் பார்த்தால் தனக்கும் தனக்கும் பின்னால் இருக்கும் குடும்பத்தின் மீதான நன்மை கருதியவை என்று புரிந்து கொள்ளப்படும். சர்கரை நோய் 50 - 60 வயதிற்கு மேல் தான் வரும் என்ற நம்பிக்கையும் பலரிடம் உள்ளது, அதன் துவக்க காலம் 30 வயதில் கூட துவங்கி இருக்க இன்றைக்கு வாய்ப்புகள் இருப்பதால் 35 வயதில் நீரிழிவு குறைபாடுகள் வெகு சாதாரணமானவையாக உள்ளது. நீர்ழிவு நோய்களில்  இருவகைப் பிரிவில் ஒன்று (Type 2) பெற்றோர் வழியாக பரம்பரையாக வருவது என்பதால் காலை உணவு எடுத்துக் கொள்ளாதவர்களை அவை 30 வயதிலேயே பற்றிவிடுகிறது. தனக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அறிந்து கொள்ளலாம், நீரிழிவினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் (Symptoms) குறித்து நூற்றுக் கணக்கான இணையத் தளங்கள் தகவல்களைத் தருகின்றன.


நீரிழிவு குறைபாட்டால் ஏற்படும் உடல் மாற்றங்களில் பொதுவானவை

1. சிறுநீர் பையில் தேவையான அழுத்தம் இல்லாவிட்டாலும் குளிர்ந்த நீரில் அல்லது பச்சைத் தண்ணீரில் காலோ கையோ படும் பொழுது  சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும் கழிவரை உள்ளிட்ட இடங்களில் எறும்புகளைப் பார்க்க முடியும், சிறுநீரில் இருக்கும் சர்கரையை நுகர எறும்புகள் சேறும்.

2. கணுக்காலிலும் அதற்கும் கீழேயும் கால் பகுதிகளின் தோல் உடல் தோலின் நிறத்தைவிட கருமையாக அல்லது கருமைத் திட்டுகள் காணப்படுதல் மற்றும் காலில் அடி விரல் உள்ளிட்ட சில பகுதிகளில் உணர்வுகள் குறைந்திருத்தல்

3. ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் வெடிப்பு, இவை பாலியல் ரீதியான அல்லது அப்பகுதிகளில் காற்றோட்டம் குறைவானதாக  இருப்பதால் ஏற்படும் வியர்வையினால் உற்பத்தி ஆகும் பாக்டீரியா வகைச் சார்ந்த நோயாக இருக்கும் என்று நினைத்து களிம்புகளை தடவி குணப்படுத்திக் கொள்வர். இவை சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும், காரணம் சிறுநீரில் சேர்ந்திருக்கும் சர்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து தோலின் கடினத் தன்மையைக் குறைக்க வெடிப்பு ஏற்படும். இவற்றைக் மருத்துகளின் மூலமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் மருந்துகளற்ற நிரந்தரத் தீர்வு 'முனைத் தோல் நீக்கம் (சுன்னத்)' இங்கே அடிக்கடி அந்த குறைபாடு கண்டவர்களுக்கான பரிந்துரை என்ற அளவில் சுன்னத் பரிந்துரை உள்ளது மற்றபடி நலமாக இருப்பவர்களுக்கு சுன்னத் செய்வது உறுப்பு சேதம், பல் சொத்தை ஆகமல் தடுக்க அதை எடுத்துவிடுவது தான் நல்லது என்பது போன்ற முட்டாள் தனமான பரிந்துரை.

4. எப்போதும் தாகம் எடுப்பது

5. வழக்கத்துக்கு மாறான சோர்வு மற்றும் உடல் எடை குறைவு

6. உடலில் பல பகுதிகளில் ஏற்படும் அரிப்பு, இரத்த ஓட்டக் குறைவினால் தோல் உலர்ந்து போவதால் ஏற்படும்

7. கண் பார்வை அவ்வபோது மங்குதல்

8. காலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுப்பது.

*********

பசுமாடு பற்றிய தலைப்பில் ஏன் தென்னை மரம் பற்றி எழுதி இருக்கிறீர்கள் ? என்று வாசிப்பவர்கள் நினைக்கக் கூடும், பழைய சோற்றில் மிகுந்த சத்துகள் இருப்பதாகவும் பழைய சோற்றை நாம்  புறக்கணித்ததால் தான் பல வித நோய்கள் நமக்கு ஏற்படுவதாகவும் சில பெரிசுகள் மற்றும் முற்போக்கு இளசுகளும் கருத்துகளைப் பரப்புகின்றனர், பழைய சோறு பாரம்பரிய உணவு என்பது தவிர்த்து மற்ற காலை உணவுகளை ஒப்பிட அதில் சத்துகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்களா ? என்று தெரியவில்லை, பழைய சோற்றில் நீர் சேர்த்து இரவு முழுவதும் வைத்திருப்பதால் சற்று ஈஸ்டுகள் சேர்ந்திருக்கும், தவிர்த்து பெரிய சத்துகள் எதுவும் கிடையாது, அதில் இருக்கும் ஈஸ்டுகள் மற்றும் சத்துகளின் அளவு இட்லி தோசையில் இருப்பதைவிடக் குறைவே, இட்லி மாவில் உளுந்து சேர்த்து அரைக்கபடுவதால் புரத சத்து கூடுதலாக இருக்கும், பழைய சோற்றில் அதுவும் கிடையாது, பொதுவாக அரிசி உணவில் கூடுதல் சர்க்கரை இருக்கும் என்பது பழைய சோற்றுக்கும் பொருந்தும். 

பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது, தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை ஆகியவையே இருந்தன,  மாவாக அரைத்து கூழாகவோ, களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச் சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது, இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால் நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள் கிடைத்துக் கொண்டிருக்கும், நெல் அரிசியை உணவ உட்கொள்ளும் வழக்கம் கடந்த 60 ஆண்டுகளில் பரவலாகியவை தான், மற்ற உணவு பொருள்களை விட விலை கூடுதல், சமைக்க / பரிமார / கலந்து சாப்பிட எளிது என்ற வகையில் வசதியானவர்கள் நெல் அரிசி உண்பது மேம்பட்ட நிலையின் உணவுச் சின்னம் அல்லது பழக்கமாகிப் போனதால் அரிசி உணவை உண்பது கவுரமாகக் கருதப்பட அவை பரவலாக்கம் ஆகி அரிசி உற்பத்தியும் பெருக, தற்போதைக்கு அரிசி உணவு விலை மற்ற உணவு பொருளைவிடக் குறைவாக இருக்கிறது என்பது தவிர்த்து அரிசி உணவில் எந்த ஒரு தனிச் சிறப்பும் இல்லை. மேலும் அரிசிக்கும் கோதுமைக்கும் சர்கரை அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அரிசிக்கு மாற்றாக கோதுமை சப்பாத்தி, பூரி போன்றவை சர்கரை நோயைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, ஆனாலும் கோதுமை பரிந்துரை என்பது செரிமான நேரத்தை நீட்டிக்கும் என்பதால் கோதுமை குறைந்த பட்சத் தீர்வு என்ற அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது ஆனால் மாற்றுத் தீர்வு இல்லை, அரிசிக்கு மாற்றாக கோதுமை என்றால் சர்கரை குறைபாடு கண்ட சர்தாஜி என்ன சாப்பிடுவான் ? என்றும் கேட்கிறார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்.

பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால் உடலில் குளிர்ச்சி கிடைக்கும் என்பது தவிர்த்து பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது, பழைய சோற்றைத் தொடர்ந்து காலை வேலையில் சாப்பிடுவதால் பீர் குடிக்காமலேயே தொப்பையை வளர்க்கலாம், கிராமத்தினர் பழைய சோறு தின்றுவிட்டு தெம்பாக வேலை செய்யவில்லையா ? அவர்கள் செய்யும் கடுமையான உடல் உழைப்பினால் பழைய சோறு மட்டுமல்ல எந்த ஒரு உணவும் அவர்களின் உடலை பாதிக்காது. ஆனால் உடல் உழைப்பற்ற மற்றவர்களுக்கு அது பொருத்தமான உணவு அல்ல. பழைய சோற்றில் தனிச் சிறப்புகள் எதுவும் கிடையாது அதை உணவாக எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடையாது. பொதுவாகவே அரிசி சார்ந்த நூடுல்ஸ் உள்ளிட்ட எந்த உணவிலும் சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும் என்பதில் பழைய சோறும் சேர்த்தி தான்.  பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும். நான் பழைய சோற்றைப் பழிக்கவில்லை, ஆனால் அவற்றை பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச் சிறப்புகள் இல்லை என்று மட்டுமே சொல்கிறேன்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எதைத் தான் சாப்பிடுவது ? எதையும் சாப்பிடலாம் ஆனால் ஒரே வேளையில் கட்டு கட்டுவோம் என்று உண்ணக் கூடாது, அளவோடு குறிப்பிட்ட இடைவெளியில் எந்த உணவையும் சாப்பிடலாம், இரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் கூட்டும்   படி எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, இவ்வாறு உடனடி சர்கரை மாற்றங்கள் (Blood Glucose In-Balance) உடலின் இரத்த ஓட்டத் தன்மைகளிலும் அளவிலும் ஏற்றம் இரக்கம் காட்டுவதால் இயல்பாக செயல்படும் உடலுறுப்புகள் திணறும், பழுதடையும்.

இந்த இடுகையில் முதன்மையாக சொல்ல வந்தது காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காதீர்கள், இருவரும் வேலை செய்யும் சூழலில் உணவு செய்வதற்கு அலுப்பாக இருந்தாலும் வாட்டிய இரண்டு துண்டு பிரட் அல்லது (கடையில் வாங்கிய) இரண்டு இட்லி, ஒரு தோசை, பாலில் ஊறவைத்த சோள சொதில்கள் (சீரியல்) ஆகியவற்றில் எதோ ஒன்றுடன் தேவையான நீர் சத்திற்காக ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீர் பருகலாம்.

15 ஜூலை, 2012

கடன் வாங்கிக் களித்தல் !


தலைப்பில் எழுத்துப் பிழையில்லை , நகைக்காமல் முகம் சுளிக்காமல், தொடர்ந்து வாசிக்கலாம், எனது இடுகைகளின் எழுத்துப் பிழைகள் தட்டச்சு வேகத்தினால் வருவது தவிர்த்து தமிழ் சொற்கள் குறித்த அறியாமையினால் குழப்பத்தினால் ஏற்படுவது இல்லை, மறுவாசிப்பு செய்யும் முன் வெளி இட்டுவிட்டு நேரமிருந்தால் திரும்பப் படித்து சரிசெய்வேன், அல்லது யாரேனும் சுட்டிக்காட்டினால் சரி செய்து கொள்வேன். எழுத்துப் பிழையுடன் தமிழில் எழுதுவது குற்றம் இல்லை என்றாலும் குறைத்துக் கொண்டு எழுதினால் நல்லது என்பதே எனது பரிந்துரை. தவிர பதிவு எழுதவும், வெளி இடவும் நான் நேரம் பார்ப்பது கிடையாது, அதிகாலை நான்கு மணிக்கு கூட வெளி இட்டு இருக்கிறேன், எழுதுவதற்கு கிடைக்கும் நேரம் தான் வெளி இடுவதற்கு கிடைக்கும் நேரம், அந்த நேரத்தில் வாசிப்பார்களா ? ஹிட்ஸ் தேறுமா என்பது குறித்த கவலை எனக்கு இல்லை, என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவுகளில் எழுதுவது என்பது திறந்த நாள் குறிப்பில் எழுதுவது போன்றது, வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலை கொள்வது கிடையாது, அதே நேரத்தில்  எழுதுவதில் இரண்டு வரியாவது வாசித்தவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் நேரத்தில் சில நிமிடங்களை வாசிக்கும் போது, என்(எழுத்துகளி)னால் விழுங்கப்பட்டுவிடுகிறது என்கிற புரிந்துணர்வும் பொறுப்பும் எனக்கு உண்டு. 

*****

சில வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் மூலம் கடனட்டை வழங்கும் வங்கிகள் எப்படிமுக நூல் (பேஸ் புக்)  வாடிக்கையாளர்களை பின் தொடர்கிறார்கள் என்பதைக் காட்டி இருந்தார்கள், அந்த நிகழ்ச்சியின் பெயர் குற்றமும் பின்னனியும், துப்பறிந்து மிகுந்த முயற்சியால் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு நிகழ்வு போலவும், இதன் மூலம் பேஸ் புக் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது போன்ற தொனியில் நிகழ்ச்சி படைக்கப்பட்டு இருந்தது, அதாவது முகம் தெரியாத பெண்ணிடம் அசடு வழிந்து தனது தொடர்பு எண்களைக் கொடுத்த ஒரு இளைஞர் எப்படி சிக்க வைக்கப்பட்டார் என்பது தான் நிகழ்சியில் காட்டபட்டது, இதில் சித்தரிக்கப்பட்ட காட்சியில் நடிக்கும் பெண்ணையும், பாதிக்கப்பட்டவர் பற்றியும் அவர் எவ்வாறு வீழ்த்தப்பட்டார் என்றும் காட்டினார்கள், இந்த நிகழ்ச்சியைப் பார்பவர்கள் முக நூலில் இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா ? என்று விழி விறிய வியப்படைந்தாலும் முக நூல் பயன்படுத்தும் நமக்கெல்லாம் அது ஒரு மொக்கை தகவல் தான், ஆனாலும் விஜய் தொலைகாட்சியின் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் நேர்மை கேள்விக் குறி.

கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது வெளியில் கடனே இல்லாவிட்டாலும் பெற்றக் கடன், வளர்த்தக் கடன், நன்றிக் கடன் என ஏகப்பட்ட கடன்களோடு தான் வாழ்கிறோம், அது தவிர மிகவும் தேவையான வேலைகளில் கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்று தான், கடன் வாங்குவது கேவலமான, மானக் கேடான பிழைப்பு இல்லை, ஆனால் அவற்றை முறையாக குறிப்பிட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் என்கிற நேர்மை இருக்க வேண்டும், இந்த நேர்மையை நம்பித்தான் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன, அவ்வாறு நேர்மை தவறியவர்களிடம் வசூலிக்க தான தண்டத்தையெல்லாம் பயன்படுத்துகின்றன, அவர்களின் வழிமுறைகள் தவறாக இருந்தாலும் கொடுத்த கடனை மீட்பதற்கு அவர்கள் நேர்மையற்றவர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், நான் இதில் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி தற்காத்து எதுவும் சொல்லவில்லை,  அது போன்றவே கடன் கட்டமுடியாமல் நெருக்குதலுக்கு ஆளாகி தற்கொலை செய்து  கொள்ளும் விவாசாயிகள் குறித்து எதுவும் சொல்லவில்லை, அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள், அரசே மனது வைத்து கடனை தள்ளுபடி செய்தால் தான் உண்டு, அவை வேறு,  இங்கு பேசப்படுவது வங்கிகளில் கடனட்டை மூலம் பெற்றுக் கொள்ளும் கடன் குறித்தது தான்.

குறிப்பிட்ட நிகழ்சியில் கடன் அட்டை மூலமாக செலவு செய்து கடன் வாங்கியதாகக் காட்டப்பட்ட நபர் பணத்தை தண்ணி போல் செலவு செய்துவிட்டு திருப்பிக் கொடுக்க முடியாமல் லட்சம் ரூபாய் கடனை வைத்துவிட்டு பெங்களூரை விட்டு விட்டு சென்னைக்கு ஓடி வந்து வேறொரு நிறுவனத்தில் வேலை செய்பவர். வங்கி முகநூல் வழியாக  தன் முகவரை பொறி(ரி)யாக வைத்ததால் அந்த இளைஞர் வசமாக சிக்கினார். இவ்வளவையும் காட்டிய விஜய் தொலைகாட்சி, அந்த இளைஞரிடம் உங்களைப் போன்ற நேர்மை அற்றவர்களால் தான் இது போன்று நடந்து கொள்ளும் சூழலை கடன் வழங்கும் வங்கிக்கு ஏற்படுகிறது என்பதைச் சொல்லவே இல்லை. இது போன்ற நபர்கள் அரசு துறைக்கோ, அல்லது பெரிய நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் உயரும் பொழுது கையாடல், லஞ்சம் என்ற வகையிலெல்லாம் அந்த அமைப்பிற்கே பலத்த சேதம் ஏற்படும் என்பதையும் விஜய் தொலைகாட்சி சுட்டிக் காட்டி இருக்கலாம்.

கடன் அட்டையைப் பெற்றுக் கொண்டு வங்கிகளை எப்படி ஏமாற்றுவது என்பதையும், தான் அவ்வாறு ஏமாற்றி இருக்கிறேன் என்றும் சிலர் வெளிப்படையாகப் பேசும் போது அவர்களது அடிப்படை நேர்மையை போட்டு உடைத்துவிடுகிறார்கள் என்பதை அவர்களில் பலர் நினைப்பது இல்லை, இதை ஒரு சாகச நிகழ்ச்சி போலவும், தன்னை திறமை கொண்டவராகவும் காட்டுவதாக நினைக்கிறார்கள்,நேற்று ஏமாற்றியது வங்கி என்றால் நாளைக்கு ஏமாறப்படுவது யாரோ ?

வங்கிகளை ஏமாற்றுபவர்களை வங்கி தனது இணையத் தளத்தில் நிழல்படத்துடன் வெளி இட்டால் இப்படியான வங்கிக் கொள்ளையர்கள் குறையலாம். ஆனாலும் மனித உரிமை அடிப்படை மற்றும் திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால் இவற்றை நான் பரிந்துரைக்க மாட்டேன்.

13 ஜூலை, 2012

மரண தண்டனையும் இஸ்லாமிய பதிவர்களும் !


மரண தண்டனைக்கு எதிராக வைக்கும் ஞாயங்களில் முதன்மையானது மனிதாபிமானமோ, அனுதாபமோ அல்லது மரணதண்டனைப் பெற்றவர்களின் குடும்பம் பிறகு சந்திக்கும் பாதிப்புகள் குறித்தோ அல்ல, மாறாக கொலை என்பது மரணம் விளைவித்தக் குற்றம் என்ற வகைப்படுத்தப்படும் போது மரண தண்டனை என்பது மற்றுமொரு கொலைக்கான ஒப்புதல் பெற்ற ஆணை என்றே பொருள், கொலையும் அதன் மூலம் பெறும் மரணத்தின் வலியும் அதன் பாதிப்பும் கொடுமையானது என்றே உணரும் எவரும் அதை இன்னொருவருக்கு பரிந்துரைக்க மாட்டார் என்கிற மிக மிக அடிப்படைப் புரிதலில் தான் மரண தண்டனைக்கு எதிரான வாதங்கள் வைக்கப்படுகிறது. இந்த அடிப்படையில் நான் மரண தண்டனைக்கு எதிரானவன் தான். பல கொலைகளை செய்துவிட்டு சாட்சியோடு மாட்டிக் கொள்பவன் மட்டுமே தண்டனைப் பெறுகிறான் என்பதால் மரண தண்டனை என்பது சமூகத்தில் குற்றங்களைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, 

எந்த ஒரு நாட்டிலும் குற்றங்களுக்கு கடுமையான தண்டனைகள் என்ற சட்டம் இருந்தால் அதனை லாவகமாக மீறுகிறவர்களும் இருக்கிறார்கள். மாட்டிக் கொள்ளாதவர்கள் தவிர்த்து மற்றவர்கள் தண்டனைப் பெறுகிறார்கள், கூலிப்படைகளின் செயலும், அவர்களைப் பயன்படுத்திக் கொள்பவர்களும், மதவெறியர்களும்ம், தீவிரவாதிகளும் தீட்டும் திட்டங்கள் தவிர்த்து கொலைக்கானக் காரணங்கள் முன்கூட்டியே முடிவு செய்யப்படாத நிலையில் இழைக்கப்படும் கொலைக் குற்றங்கள் யாவும் சற்றே உணர்ச்சி வசப்படுவதால் நடைபெறுவது தான். ஒன்பது கொலை செய்த ஜெயபிரகாசும் கூட திட்டமிட்ட கொலை செய்யவில்லை, உணர்ச்சி வசப்பட்டு தான் கொலை செய்தான், சிறையில் அவனது நன்னடத்தை அவனை விடுதலை செய்ய வைத்தது, எங்கு இருக்கிறான் என்றே தெரியாத நிலையில் அவனும் சமூகத்தில் இருந்து மறைந்தே வாழ்கிறான், வாழ்கிறான் என்றாலும் அவனால் நாள் தோறும் நிம்மதியாக உண்டு, உறங்கி எழ முடியுமா ? என்பது கேள்விக் குறி.

கொலைக்கு தீர்ப்பு கொலை - காட்டுமிராண்டித் தனமானது என்கிற என் சிந்தனைகளில் எந்த மாற்றமும் இல்லை.
கொலைக்கு தீர்ப்பு கொலை என்பது அடுத்த கொலை.

இறந்தவர்களை மீட்டெடுக்க திறன் அற்ற மனித சமூகத்திற்கு உயிருடன் இருப்பவர்கள் குற்றவாளிகள் என்பதால் கொன்றுவிடும் உரிமை எதை மீட்டுத் தரும் ?

கொலையால் பாதிக்கப்பட்ட சமூத்தின் மன நிலை தெரிந்தால் மரண தண்டனை எதிர்க்க மாட்டீர்கள் ?  என்று கேட்போருக்கு ..... மரண தண்டனையால் பாதிக்கப்பட்ட குற்றவாளிகளின் குடும்பத்தில் ஒருவராகவோ, அவரது மனைவியாகவோ இருந்தால் மரண தண்டனை நியாயம் என்று சொல்ல முடியுமா ?

குற்றவாளிகள் தனிமைபடுத்தப்பட வேண்டியவர்கள், கொத்தடிமையாகக் கூட மாற்றி அவர்களின் வாழ்நாள் முழுவதும் அவர்களைப் பயன்படுத்திக் கொள்ளலாம், ஆனால் முழுமையாக அழித்துவிட வேண்டும் என்பதில் எனக்கு என்றைக்குமே ஒப்புதல் இருக்காது, நானே பாதிக்கப்பட்டாலும் கூட.

*********

திட்டமிட்ட படுகொலைகள் கூட தன்னுடைய விருப்பமில்லாமல் யாரோ ஒருவரின் தூண்டுதலின் பேரில் நடைபெறும் குற்றத்திற்கும்  அதை செய்த குற்றவாளிக்குமான தொடர்ப்பு ஒரு ஆயுதம் என்ற அளவில் தான், ஆனால் தூண்டியவர்களை (ஆதாரமில்லை) என்று விட்டுவிட்டு (ரிலையன்ஸ் நிறுவனத்தின் 2ஜி ஸ்பெக்டர்ம் முறைகேட்டில் அதன் நிறுவனருக்கு சம்மன் அனுப்பாமல் உயர் அதிகாரிகளை மட்டுமே விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்து நீதிமன்ற காவலாக சிறையில் வைத்தார்கள்). கொலைக் குற்றத்திற்கான தண்டனை என்ற பெயரில் ஆயுதங்களுக்கு மட்டுமே மரண தண்டனை அளிக்கப்படுகிறது இதையெல்லாம் சரியான நீதி என்று எப்படிச் சொல்ல முடியும் ? சிங்கப்பூரினுள் போதைப் பொருள் கடத்தலுக்கு மரண தண்டனை என்பது எல்லோருக்கும் தெரியும், அதில் சிறிய மாற்றமாக கூரியர்களாக முதல் முறை குற்றம் செய்பவர்களின் தண்டனைகள் குறித்து பரீசீலிக்கப்படும் என்று அரசு சார்பில் அறிவித்துள்ளனர், இது ஒரு நல்ல மாற்றம் தான், உதாரணத்திற்கு சென்னையில் இருந்து கிளம்பும் ஒரு அப்பாவி பயணியிடம் இந்த மாத்திரையை எங்க சொந்தக்காரர் ஒருவர் சிங்கை விமான நிலையத்தில் பெற்றுக் கொள்வார், அவரிடம் சேர்த்துவிடுகிறீர்களா ? என்று கூறி போதை மாத்திரைகளைக் கொடுக்க, இன்பாமர் மூலம் தெரிந்து கொள்ளும் அரசு கொண்டுவரும் நபரை அப்படியே அள்ளி நீதிமன்றத்தில் கொண்டு சேர்த்து கையில் இருக்கும் பொருளை உறுதி செய்து மரண தண்டனை அளித்துவிடுவார்கள். இங்கு நாம் சிந்திக்க வேண்டியது கொண்டுவரும் நபர் உதவி செய்யும் மனப்பான்மையில் உள்ளவர் என்ற நிலையில் சற்று சுதாரிப்பு இல்லாத நிலையில் அவர் பெரும் சிக்கலுக்கு ஆளாகிறார்,  அந்த குறிப்பிட்ட போதைப் பொருளைக் கொடுக்கச் சொன்னவன் உறவினராகக் கூட இருப்பான், இருந்தாலும் நபர் சிக்கிய பிறகு நான் அவ்வாறு எதையுமே கொடுக்கவில்லை என்று அவனால் சாதித்துக் கொள்ள முடியும். அப்பாவியாக இருந்து ஏமாற்றப்பற்றவர்களை ஏன் தூக்கில் போட வேண்டும் ? ஆனாலும் அவர்கள் இழைத்தது குற்றம், கவனக் குறைவானது என்றாலும் குற்றம் தான் என்பதற்காக சிறை தண்டனைக் கொடுக்கலாம், அதன் மூலம் எச்சரிக்கை கொடுக்க முடியும் என்று அரசு நம்புகிறது. 

மரண தண்டனைகள் குறித்த சிந்தனைகள் நாட்டுக்கு நாடு மனித உரிமை மற்றும் மனிதாபிமான மன நிலை வளச்சிக்கேற்ப மாறும் போது, இஸ்லாமிய பதிவர்கள் குறிப்பாக வஹாபிகள் மரண தண்டனை தேவை என்றே வாதிடுகிறார்கள்.

மரண தண்டனைக் குறித்த வஹாபிகளின் பிடிவாதங்களுக்கு காரணம் ? கண்ணுக்கு கண், பல்லுக்கு பல்,. கைக்கு கை மற்றும் பாலியல் குற்றத்திற்காக பெண்களை கல்லால் அடித்துக் கொல்லப்படும் தண்டனைகள் சவுதியில் / ஈரானில் இஸ்லாமிய சட்டம் என்ற பெயரில் இன்னும் நடைபெறுகிறது. இஸ்லாம் சொல்வதெல்லாம் சரி என்னும் போது மரண தண்டனைக் குறித்த இஸ்லாம் பார்வையும் சரியானதே என்று சாதிப்பதற்காக வஹாபிகள் மரண தண்டனை கொள்கையில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

சரி, 
கோவை குண்டுவெடிப்பு உள்ளிட்டவை நடத்திய பாட்சா, மதானி உள்ளிட்டோருக்கு இதுவரை எத்தனை முறை நீங்கள் மரண தண்டனை தரவேண்டும் என்று வெளிப்படையாகப் பேசி இருக்கிறீர்கள் ? என்று கேட்டால் மட்டும் அவர்கள் 'ஆர் எஸ் எஸ் சிந்தனை வெளிப்பாடு இவ்வாறு உங்களைக் கேட்கத் தூண்டுகிறது பாட்சாவின் குண்டுவெடிப்பு குற்றம் நிறுபனம் ஆகும் போது பார்க்கலாம் என்கிறார்கள், ஆனால் மோடி வகையறா நீதிமன்றத்தால் தண்டனை பெறாத நிலையில் இவர்கள் அவர்களை குற்றவாளிகள் என்று தீர்ப்பு எழுதிவிடுகிறார்கள்.

மதானி குற்றவாளி இல்லை, நீதிமன்றம் விடுவித்துவிட்டது, அவரை குற்றவாளி என்று சொன்னால் நீதிமன்ற அவமதிப்பு ஆகும் என்கிறார்கள், சாட்சி அடிப்படையில், ஆதாரம் / ஆதாரமில்லா அடிப்படையில் நீதிமன்றங்கள் தீர்ப்பு வழங்குவது நமக்கு தெரியாதா என்ன ? ஆனாலும் மதானிக்கு பொறுத்திப் பார்க்கும் ஞாயத்தை இவர்கள் கொலைக் குற்றத்தில் விடுதலையாகும் காவிக் கும்பலுக்கும் பொறுத்திப் பார்ப்பார்களா ? உதட்டைத்தான் பிதுக்க வேண்டும்,


இன்னும் சிலர் நேர்மையாக பதில் சொல்வதாக, ஞாயம் பேசுவதாக நினைத்து, 'கோவை வெடிகுண்டு வெடிப்பின் மூல காரணம் அதற்கு முன் பத்தொன்பது பேரை காவிக் கும்பல் வெட்டி தீர்த்தது தான்......என்று சொல்லிவிட்டு அவர்களை தண்டித்தால் (பாட்சா என்று பெயரைக் குறிப்பிட்டு சொல்லாமல்) கோவை வெடிகுண்டு குற்றவாளிகளையும் தண்டிக்கலாம் என்கிறார்கள்

ஹலோ.......எவனோ 19 பேரை படுகொலை செய்ததற்கு கோவையில் பல்வேறு இடங்களில் குண்டு வைத்து அப்பாவி பொது மக்களை கொன்றது எந்த விதத்தில் ஞாயம் ? 40 பேர் எரித்துக் கொல்லப்பட்ட கீழவெண்மணியில் கொலைகாரனைத் (இருஞ்சூர் கோபாலகிருஷ்ண நாயிடுவை) தானே  தலையை வெட்டினார்கள் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள். மாறாக கொலைகாரனின் சாதிக்காரர்களை கொல்லவில்லையே ?  ஊரையே கொளுத்தவில்லையே, பழிக்கு பழி கொலைகளை ஏன் பொது மக்கள் மீது செயல்படுத்த வேண்டும் என்ற எனது கேள்விக்கு........ஒருவரும் பொறுப்பாக பதில் சொல்ல முனையவில்லை.

இவர்கள் மட்டுமல்ல காவிக் கும்பல் கூட சங்கர ராமன் படுகொலைக்கு பெரியவாளுக்கு மரண தண்டனைக் கேட்டு இருக்கிறதா ? கோர்ட் தண்டிக்கட்டும், குற்றவாளியாக நிறுபனம் ஆகட்டும் அப்பறம் (மேல் கோர்டில்) பார்க்கலாம் :) என்று தானே சொல்கிறார்கள்.

மரண தண்டனைக்கு ஆதரவான குறிப்பிட்ட மதரீதியிலான, அரசியல் ரீதியிலான நியாங்கள் எப்போதும் சமூகத்தின் மீதும் பொது மக்களின் மீதும் மிகுந்த அக்கறை உள்ளது போலவும், குற்றமற்ற சமூகத்தை உருவாக்குவது போலவும், நீதி நிலை நாட்டப்பட்டே ஆகவேண்டும் என்பது போலவும் நீட்டி முழக்கப்படுகிறது, அவர்களின் பின் புலன்களைப் பார்த்தால் அவர்கள் ஒருதலைப் பட்சமானவர்கள், அவர்கள் வழங்கும் பரிந்துரைகள் அவர்கள் சமூக / அரசியல் சார்ந்த குற்றவாளிக்கு பொருந்ததாது என்ற நிலையில் தான் வாதிடுகிறார்கள்.

பின்லேடன் தூண்டுதலில் அமெரிக்க ரெட்டை கோபுரம் அல்கொய்தா தீவிரவாதிகளால் தகர்க்கப்படவில்லை, அதெல்லாம் அமெரிக்காவின் திட்டமிட்ட சதி என்றே இதே மரண தண்டனை ஆதரவு நியாயவாதிகளில் பலர் வெளிப்படையாக பின்லேடனை புனிதனாக, இஸ்லாமிய போர்வீரனாக, மாவீரனாக, மாசற்றவனாக முன் நிறுத்துகிறார்கள், அதன் தொடர்பில் தான் பின்லேடனுக்கு சென்னை மசூதியில் சிறப்பு தொழுகையும் நடைபெற்றது.

உன்னைப் போல் ஒருவன் படத்தையும் விருமாண்டி படத்தையும் ஒப்பிட்டு மரண தண்டனைக் குறித்த கருத்துகளில் கமலஹாசன் தடுமாறுகிறார், தடம் மாறுகிறார், சினிமாவுக்காக எதைவேண்டுமானாலும் மாற்றிக் கொள்கிறார்கள் என்று கண்டனமாகவே நான் எழுதினேன், உன்னைப் போல் ஒருவன் படத்தின் தண்டனைகளை இவர்கள் ஞாயம் என்றும், குற்றவாளிகள் குற்ற முகாந்திரம் இருப்பதாக காட்சி இருப்பதால் அதில் தரும் மரண தண்டனை தவறு அல்ல என்றும் சொல்லுவார்களா ?

இணைப்பு :

தற்கொலை தாக்குதல்களும் மரண தண்டனைகளும் !



12 ஜூலை, 2012

Kiasu என்றால் என்ன ?


சிங்கப்பூரில் சீனர்களிடமும் அவர்கள் மூலமாக பிறரிடமும் வழங்கும் சொல்வழக்கு 'Kiasu' இதன் பொருளும், இதன் விளக்கமும் விக்கிப்பீடியாவில் தனிப்பக்கமாக இடம் பெரும் அளவுக்கு இந்த சொல் புகழ்பெற்றது.  'fear of losing' என்பதே அதன் பொருளாகும். அதாவது தனக்கு உடைமை உடைய ஒன்றை இழந்துவிடுவோமே என்ற அச்சம் எப்போதும் உடையவர்களை இந்த க்யாசூ என்ற சொல்பதத்தில் அழைப்பார்கள்.

போற்றிப் பயன்படுத்தும் அவரவர் உடலே மண்ணுக்குள்ளோ, நெருப்பிலோ போகக் கூடியது தான் என்கிற ஆள்மன உணர்வுகள் இருந்தும் ஒப்புக் கொள்ள மனதின்றி தனக்கு உடைமையான பொருள் மீது தீவிர காதல் கொண்டர்வளே இந்த க்யாசு வகையினர். எங்க வீட்டில் வீட்டை ஒழுங்கு செய்வது என்கிற எண்ணத்தில் தேவையற்ற பொருள்கள் என்று என் மனைவி அள்ளிப் போட்டு குவித்து வைத்திருப்பதை கிளறிப் பார்த்துவிட்டு தூக்கிப்  போடுவோம் என்கிற எண்ணம் ஏற்படும் போது 'மிகவும் தேவையானது என்றால் அலட்சியமாக வைத்திருக்க மாட்டோம்' என்கிற நினைப்பில் கிளறிப் பார்க்காமல் விட்டுவிடுவேன், அப்போது எனக்கு தோன்றும் எண்ணம் 'அப்படியே ஒருவேளை இருந்தால் போனால் போகட்டுமே... மனுச உடம்பே மண்ணுக்குள் போகக் கூடியது தானே' வாங்க முடியாத பொருள்கள் எதுவும் இருக்காது என்று தேற்றிக் கொண்டுவிடுவேன், கொஞ்சம் பதைப்பாகத்தான் இருக்கும், காரணம் சில தடவைகள் கவனக் குறைவினால் வங்கி அட்டைகள் கூட குப்பைக்குள் சென்றிருக்கிறது. 

நம் வீட்டுக்குள் வந்த சாக்கில் அங்கேயே தங்கிவிடும் பயனற்ற பொருள்கள் நிறைய உண்டு, இருந்தாலும் எதற்காவது பயன்படும் என்றே அதனை  தூக்கிப் போட மனதின்றி ஆண்டுக் கணக்காக அதற்கு ஒரு இடம் கொடுத்து வைத்திருப்பார்கள், எப்போதோ பயன்படுத்திய பழைய 14" கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி பழுதாகி பயன்படாமல் இருந்தாலும் எங்கம்மா அதை இன்னும் பத்திரமாக பிரோவில் பூட்டி வைத்திருக்கிறார்கள், 'இந்த கருமத்தை தூக்கிப் போட்டால் தான் என்ன ?' என்று எத்தனையோ முறை கேட்டு இருக்கிறேன், அப்போதெல்லாம் வரும் ஒரே பதில், 'உனக்கு தேவை இல்லாமல் இருக்கலாம், யாராவது வந்து ஆராய்ச்சிக்கு என்று கேட்டாலும் கேட்பார்கள்' என்பது அம்மா சொல்லும் பதில், 14" பழைய டிவியில் ஆராய்ச்சி நடத்தப் போகிறவர் எப்பொழுது வருவார் எம்ஜிஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' எப்போதும் வரும் என்கிற எதிர்ப்பார்ப்பு போல் நானும் காத்திருக்கிறேன். அம்மா மட்டுமல்ல அண்ணன் வீட்டில்  கூட அப்படித்தான், எதையும் தூக்கிப் போட மனமின்றி காலியான சின்ன சின்ன மருந்து பாட்டிலைக் கூட தூக்கிப் போடாமல் வைத்திருப்பார்கள். சிறுவர்களாக இருந்த போது தீபாவளிக்கு வாங்கிய மத்தாப்பு, வெடிகளை நாங்களெல்லாம் வெடித்து முடித்துவிடுவோம், அண்ணன் மட்டும் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என்று எடுத்து தனியாக வைத்திருப்பார், கார்திகைக்கும் வெடிக்கப்பட்டு இருக்காது. 

திருமணம் ஆன புதிதில் பெங்களூரில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன், நண்பர் ஆறுமாதம் முன்பே எனக்கு  முன் திருமணம் முடித்தவர், ஓரளவு வசதியான வாடகை வீட்டில் மனைவியுடன் (தனிக்குடித்தனமாக) வசித்தார், இருவரும் வேலைக்குச் செல்பவர்கள், பெங்களூரில் ஓட்டல் எடுத்து தங்கி இருந்த நிலையில் நான் அங்கு சென்ற போது, எங்கள் வீடு இருக்கும் போது எதற்கு ஓட்டலில் தங்கவேண்டும் என்று செல்லமாக கோவித்துக் கொண்டு, அன்று காலையில் நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்து அறையைக் காலி செய்யச் சொல்லிவிட்டு அவரது வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர் இருவரும். நாங்களும் பகல் பொழுதில் வீட்டில் இருந்து கிளம்பி ஊர் சுற்றிவிட்டு, மாலை வீட்டுக்கு வந்ததும், அவர்கள் சிறப்பாக சமைத்திருந்த இரவு உணவை முடித்துவிட்டு பேசிக் கொண்டு இருந்து படுக்கச் செல்லும் நேரம் ஆக, எங்கள் படுக்கை அறையில் படுத்துக் கொள்ளுங்கள், அட்டாச்ட் பாத்ரூம் இருக்கு வசதியாக இருக்கும், நாங்கள் அடுத்த அறையில் படுத்துக் கொள்கிறோம் என்று நாங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால் எங்களுக்கு அவர்களது படுக்கை அறையை விட்டுக் கொடுத்தனர். 

ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, படுக்கை அறைக்கு சென்று படுக்கையில் உட்கார 'மொட மொட' என்ற சத்தம், மாமனார் சீராகக் கொடுத்த படுக்கையின் பாலித்தீன் கவர்கள் பிரிக்கப்படாமல் அதன் மீது மெல்லிய படுக்கை விரிப்பு போடப்பட்டு இருந்தது, அதில் படுக்கலாம், ஆனால் உருண்டு பிரளவோ, வேறெதுவும் செய்ய முடியாது, பிரண்டாலே அடுத்த அறைக்கு 'மொட மொட' சத்தம் கேட்கும் நிலையில் நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்த நிலையில் தூங்கி எழ விடிந்திருந்தது. காலையில் நண்பர் 'வீடு வசதியாக இருந்ததா ?' நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம், 'இருந்தது.....ஆனா பெட்டில் சத்தம் தான்...ஏன்பா மாமனார் வாங்கிக் கொடுத்தார் என்பதற்காக பாலித்தீன் கவரைக் கூட கழட்டாமல் வைத்திருக்கிறாயே ? என்று கிண்டல் அடிக்க நினைத்து அவர் மனைவியும் உடன் இருப்பதால் நிறுத்திக் கொண்டேன், ஏழ்மை நிலையில் இருந்து மேலே வந்தவர்கள் வசதி வாய்ப்புகள் பெற்றதும் அதில் இருந்து இறங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பர். நண்பர் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், 20 ஆயிரம் பொறுமானமான படுக்கை எப்போதும் புதிதாகவே இருக்க வேண்டும், படுக்கையில் தண்ணீர் பட்டால் உள்ளே இறங்கிவிடக் கூடாது என்பதற்காக பாலித்தின் கவரை எடுக்காமலேயே வைத்திருந்தார், ஆனாலும் படுக்கையின் மென்மையை அவர்கள் அனுபவித்தார்களா ?  இல்லை என்று தான் சொல்ல வேண்டும், பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அந்த படுக்கை அறை பாலித்தீன் கவர் பற்றி அவரை கிண்டல் அடிப்பது உண்டு.

அவர் மட்டுமல்ல பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் படுக்கைகள் இன்னும் கூட பாலித்தின் கவரால் தான் சுற்றப்பட்டு இருக்கும், புதிதாக வெளிநாடு சென்று வந்தவர்கள் மட்டுமின்றி பல முறை சென்றுவந்தவர்கள் கூட ஏர்போர்ட் பட்டி(டேக்) சுழற்றாமல் பெட்டியை வைத்திருப்பார்கள், தனது கவுரவே அதில் தான் அடங்கி இருக்கிறது என்பதால் அதனை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

இப்போதெல்லாம் எல்சிடி டிவிகள் வாங்கிப் பலர் வைத்திருக்கிறார்கள், அதில் மூளையில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிகர் (ஒட்டி) அப்படியே தான் இருக்கும், திரையில் படம் கொஞ்சம் மறைக்கப்பட்டால் கூட கவலைப்படமாட்டார்கள், காரணம் வீட்டுக்கு வருபவர்கள் பார்க்கும் போது அது 'புதிய டிவி' என்று தெரியனுமாம். அந்த மாதிரியான க்யாசுகளிடம் நான் சொல்வது, 'இப்ப அந்த ஸ்டிக்கரை பிய்த்துப் போடாமல் விட்டால் தொலைகாட்சியின் வெப்பத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளும், நாள் ஆக ஆக வெளுத்துவிடும், எடுக்கவும் வராது, பார்த்து செய்ங்க' என்பது தான்.

எங்க அண்ணன் வீட்டில் கூட கணிணி திரையும், கீ போர்டும் மேலே மெல்லிய ஊடுறவக் கூடிய ஸ்கிரீன் போட்டு தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அது இல்லாவிட்டால் 'ஸ்க்ராட்ச்' விழுந்துடும் என்று அண்ணன் சொல்லுவார். 

ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து வகையான பொருள்கள் உண்டு

1. மிகவும் பாதுகாக்க வேண்டியவை
2. அடிக்கடி பயன்படுத்த வேண்டியவை
3. எப்போதாவது பயன்படத்தக் கூடியவை
4. என்றுமே பயன்பாட்டுக்கு வராதவை
5. யாருக்குமே பயனற்றவை

இந்த நான்காவது, ஐந்தாவது வகைப் பொருள்கள் எவை எவை என்று பார்த்து தனக்கு பயன்படாதவை என்றால் பயன்படுத்தக் கூடியது என்ற நிலையில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கு அவர்கள் விரும்பினால் கொடுக்கலாம், உதாரணத்திற்கு காபி மேக்கர் யாரோ எப்போதோ பரிசு பொருளாகக் கொடுத்தது, நமக்கு அதைப் பயன்படுத்துவது கூடுதல் நேரம் பிடிக்கும் என்பது மட்டுமின்றி அதனை கழுவி வைப்பது அறைகூவல் என்ற நிலையில் அவற்றை விரும்புவர்களுக்கு அதனை கொடுத்துவிடலாம், ஆனால் நல்ல பொருள் என்று பாதுகாப்பாக வைத்திருப்பதால் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் என்பது தவிர்த்து வேற என்ன பயன் ? ஐந்தாவது சொல்லி இருப்பதில்  உதாரணத்திற்கு பழைய பாய் அல்லது நசுங்கிய சொம்பு, ஒரு கால் உடைந்த ஒரு இருக்கை,  அதனை சரி செய்து வைத்திருந்தாலும் கவுரவக் குறைச்சல் என்ற நிலையில் அதைத் தூக்கிப் போட்டால் என்ன ? அதனை பயன்படுத்திய பொருள் என்பதற்காக இடத்தை அடைத்துக் கொண்டிருக்க விடலாமா ?

நல்ல தரமான ஓட்டலில் மூக்குப் பிடிக்க நாலு பேர் 500 ரூபாய்க்கு சாப்பிடும் குடும்பங்களிலும் கூட பாக்கெட்டுக்கு 10 காசு கிடைக்கும் என்ற அடிப்படையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு காலி பால் பாக்கெட்டுகளை சேர்த்து வைப்பவர்களும் உண்டு, நான் இங்கே சிக்கனத்தைக் குறைச் சொல்லவில்லை, ஆனால் நாம் எல்லா விதத்திலும் சிக்கனமாக இருக்கிறோமோ, அல்லது உப்புக்கு பெறாத பொருள்களில் மட்டும் சிக்கனத்தை பார்க்கிறோமோ என்பது தான் பிரச்சனை, தவிர அம்மா தாயே, ஐயா கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்பவர்களை திரும்பிக் கூடப் பார்காமல் அர்சனைத் தட்டில் ஒற்றை ரூபாயாக 500 ரூபாய் போட்டுவருபவர்களை சிக்கனவாதிகள் என்றும் 'பிச்சைக்காரர்களை ஊக்கப்படுத்த விரும்பாதவர்கள்' என்றும் சொல்ல முடியுமா ?

ஒரு பொருளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அதன் முழுப் பயன்பாட்டை அனுபவிக்காமல் இருப்பதனால் என்ன பயன் ? கஷ்டப்பட்டு சேமித்து ஈட்டும் பணம் செலவழிக்கப்படாமல் இருந்தால் சேமிப்பின் பயன் தான் என்ன ?

கியாசுவாக இருப்பதால் எந்த ஒரு பொருளின் முழுப் பலனையும் அவர்கள் என்றுமே அனுபவிப்பது இல்லை, மற்றவர்களையும் அதை அனுபவிக்க அனுமதிப்பது இல்லை.

5 ஜூலை, 2012

'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் !


பூனையார் மதம் பற்றி ஏற்கனவே பலர் அறிந்திருப்பீர்கள், பூனையார் மதத்தின் அதிகாரபூர்வ தலைமை பூசாரி நான் தான், இன்னும் சிலர் பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இருக்காங்க, தமிழ் கூறும் நல்லுலகிற்கு பூனையாரை அறிமுகம் செய்தவன் என்கிற முறையில் 'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் மதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளது என்பதை எல்லா மதவாதிகளுக்கும் முன்பாக எடுத்துக் கூறுவதில் பெருமை அடைகிறேன், மத்த மதவாதிகள் 'ஹிக்ஸ் போஸானை' சொந்தக் கொண்டாடினால் செல்லாது, காப்பிக் கேட் என்று தூற்றப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

ஹிக்ஸ் போஸான் என்றால் என்ன ? அணுக்களுக்கு எடை தரும் ஒரு துகள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்,  இதன் மூலம் போட்டான்(ஒளித் துகள்) தவிர்த்த அணுத்துகள் வடிவமும் எடையும் கொண்டிருப்பதற்கு ஹிக்ஸ் போஸானே காரணம் என்கிறார்கள், அணுக்கருவில் உள்ள துகள்களின் எண்ணிக்கை மற்றும் அதற்குக் ஹிக்ஸ் போஸான் மூலம் கிடைக்கும் எடை ஆகியவற்றின் மூலம் தான் உலகில் உள்ள அண்டங்கள் முதல் அனைத்தும் எடைகளை பெருகின்றன. இதைப் பற்றி பூனையார் மார்க்கத்தில் ஏதேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க, பூனையாரை நாடினேன், பூனையார் ஒரே போடாக போட்டார்.

"உலகில் உள்ளது அனைத்தையும் படைத்தது பூனையார்" என்று சொல்லிய பூனையார், அனைத்தும் என்றால் அதில் ஹிக்ஸ் போஸானும் தானே உள்ளது, இதை ஏன் உறுதி செய்யும் மனப்பான்மையுடன் மடத்தனமான கேள்வி எழுப்பினாய் என்று கேட்க. 'அட ஆமாம்லே' என்று வியப்படைந்தேன்.

மேலும் பூனையார், "சிக்ஸ் பேக்குக்கும் ஹிக்ஸ் போஸானுக்கும் உள்ள தொடர்ப்பு தெரியுமா ?" என்று கேட்டார். "அதிகமாக அதிகமாக உடற்பயிற்சி செய்ய உடலின் அணுத்துகள்கள் இறுக சிக்ஸ் பேக் கிடைக்கிறது, உடற்பயிற்சியின் ஆற்றலின் போது உண்டாகும் ஹிக்ஸ் போஸானின் சக்தி சிக்ஸ் பேக்காக மாறுகிறது" என்றார்

ஹிக்ஸ் போஸான் மற்றும் பூனையார் கடவுளுக்குமான தொடர்பின் இணைப்புகள்.


ஹிக்ஸ் போஸான் பற்றி வேறென்ன சொல்கிறீர்கள் பூனையாரே ?

நான் என்னத்தச் சொல்வது, வைரமுத்து முதல் கார்கி வரை 'ஹிக்ஸ் போஸானை' திரைப்பட பாடல் வரிகளாக்கி பிழிந்து எடுத்துவிடுவார்கள், உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லட்டமா ?

"என் இதயத்தில் மையம் கொண்டு வெடித்த பெருவெடிப்பு நீ தானோ ?"
"என் இமைகளுக்கு எடை தந்த ஹிக்ஸ் போஸான் நீ தானோ நீ தானோ"

- கவிஞர் கரடி வாயன்

"என் மனதில் உன் அழுத்தம் எப்பொழுது வெடிக்குமோ பெருவெடிப்பாக"
"உன் இல்லாத இடைக்கு எடையாக நான் இருப்பேன் ஹிக்ஸ் போஸானாக"

- கவிஞர் சொந்த குமார்

"என் காதல் போஸாக்கே"
"உன் மோதல் போஸானே"

- கவிஞர் குணேகன்


ஸ்ப்பா முடியல, அறிவியல் அவியல்களை தனதாக்கிக் கொள்வதில் முனைப்புக் காட்டுபவர்கள் மதவாதிகளா ? கவிஞர்களான்னு பட்டிமன்றமே நடத்தலாம்.

எது எப்படியோ, ஹிக்ஸ் போஸான் பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்பே பூனையார் சொல்லிவிட்டார், பூனையார் சொல்லிவிட்டார்...............பூனையார் சொல்லிவிட்டார்.


பின்குறிப்பு : 2 வாரமாக வலைப்பதிவு எழுதாமல் காத்துவாங்குது, காலாட்டிக் கொண்டு இருந்தால் தானே இருப்பு தெரியும், அதற்கு உதவிய பூனையாருக்கு நன்றி

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்