பின்பற்றுபவர்கள்

28 நவம்பர், 2012

வேலைப் போனால் கோழை - 1


நமக்கு எதுவும் நடக்காது என்கிற நம்பிக்கை நம்மை கவிழ்த்துவிடும் என்பது பலருக்கு தெரியாத உண்மை, நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு எதுக்கு மாறி பிரச்சனைக்கு வழி தேடனும் ? என்று ஆண்டு கணக்கில் தனியார் நிறுவனங்களில் சம்மணமிட்டு பணிபுரிபவர்களை அம்மணமாக்கி ஆப்பு எப்போ வைபார்கள் என்று தெரியாது, ஆனா ஆப்பு கிடைப்பது உண்மை, இதற்கு காரணம் திறமை இன்மை அல்லது சோம்பல் ஆகிய காரணங்களைவிட குறிப்பிட்ட சூழலில் வேலைப் பார்த்து பழகிவிட்டு வெளியே போனால் ஒப்பேற்ற முடியாது, காலம் தள்ள முடியாது என்கிற காரணங்களையும் தவிர்த்து நாம தான் நிறுவனத்தைத் தாங்குகிறோம் என்கிற நினைப்பும் சேர ஒரு சிலரை ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் அழுத்திவிடும். சென்ற ஆண்டு சீனா, மலேசியா என்று பறந்து பறந்து வேலை செய்தாலும் இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு தொடர்ச்சியான வேலை இல்லை, 

காரணம் எல்லாம் சரியாக செயல்பட்டுக் கொண்டு இருப்ப்பதால் சிஸ்டம் / சர்வர் பரமரிப்பு வேலைகள் தவிர்த்து அன்றாட வேலைகள் மிகக் குறைவே, யோவ் யாராவது வேலை கொடுங்கைய்யா என்று கெஞ்சாத குறையாக ஏதாவது கணிணி பிரச்சனை என்று சொன்னால் விழுந்தடித்து செய்து முடித்துவிட்டு வழக்கம் போல் கூகுள் ப்ளஸ் அல்லது வலைப்பதிவில் மேய்வது, திரட்டியை பார்ப்பது தான் முழுநேர வேலை என்றாக, வாங்கிற சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்பதுடன், என்னை தொடர்ந்து வைத்திருப்பது நிறுவனத்திற்கும் நட்டமே, இது சரிப்படாது என்கிற முடிவில் பிற நிறுவனங்களுக்கு ஏன் வேலைக்குச் செல்ல முயற்சிக்கக் கூடாது ? என்கிற நினைப்பில் முட்டுக்கட்டையாக இரண்டு மாத நோட்டீஸ் என்கிற நடப்பு நிறுவனத்தின் ஒப்பந்ததை கிடப்பில் போட்டுவிட்டு, கடந்த ஜூலை 26 முதல் அதையே விண்ணப்ப படிவங்களில் குறிப்பிட்டு பயோடேட்டா என்னும் தற்குறிப்பு கல்வித் தகுதி, அனுபவத் தகுதியை நிரப்பி அனுப்பத் துவங்கினேன்,


இங்கே சிஸ்டம் மற்றும் சர்வர் தொடர்பில் வேலை வாய்ப்பு என்பவை பெரிய நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலும் சிறு நிறுவனங்களில் நேரடி பணியாளராகவும் எடுப்பார்கள், ஆனாலும் நம்மை வேலைக்கு எடுப்பவர்கள் இரண்டு மாதம் தான் சென்று சேருவேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அரிதே, 

எதாவது முன்கூட்டிய திட்டமாக (ப்ராஜெக்ட்) மூன்று மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் அவ்வாறு எடுக்க வாய்ப்புள்ளது, அல்லது ஏதாவது கிளை நிறுவனம், அல்லது புதிய நிறுவனம் இரண்டு மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் இரண்டு மாதம் கழித்து சேருகிறேன் என்றால் ஏற்றுக் கொள்வார்கள், அவ்வாறான வாய்ப்புக் கிடைப்பதும் அரிதே, 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் போட்டும் அழைத்தவர்கள் ஓரிருவர்கள் மட்டுமே அவர்களும், சிஸ்டம் என்ஜினியரிங்களில் குறிப்பிட்ட துறையில் (வெப் அட்மின், நெட் ஒர்க் அட்மின் போன்று)  மட்டுமே வேலை என்பதால் அதற்கான சிறப்பு தகுதி தனித்து இல்லை, நான் ஆல் இன் ஒன் என்பதால் எடுக்கவும் தயங்கினார்கள், இவ்வாறாக  வாரம் ஒரு நேர்முகத் தேர்வு என்று சென்று வந்து கொண்டிருந்து, 40 நாட்கள் கடந்த நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி, நிறுவன உரிமையாளர் உன்னிடம் பேச வேண்டும் அறைக்கு வருகிறாயா ? என்று அழைப்பு விடுத்தார்.

நினைத்தது போலவே 'நீ ஏன் வெளியே வேலை தேடக் கூடாது ?' உனக்கு தேவையான நேரம் எடுத்துக் கொள், நாங்க உடனடியாக செல்ல வேண்டும் என்று சொல்லவரவில்லை, நிறுவனத்தில் இந்த ஆண்டு பிஸ்னஸ் சரி இல்லை, ஐடி வேலையை அவுட் சோர்ஸ் கொடுத்துடலாம் என்று நினைக்கிறேன், எல்லா டாகுமெண்டுகளையும் தாயார் செய்துவிடு.......' என்று சொல்ல, எனக்கு ஒன்றும் அதிர்சியாக இல்லை, நான் ஏற்கனவே அதைத்தான் செய்து வருகிறேன் என்று அவரிடம் சொல்லாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டு, 'நானே சொல்லாம் என்று இருந்தேன், எனக்கு கொடுக்கும் சம்பளம் உங்களுக்கு கட்டிப்படியாகாது, வேற யாராவது ஜூனியர் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள், நான் பயிற்சி கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று நான் சொல்ல இருந்தேன், ஆனால் எனக்கு இங்கு வேலை செய்ய விருப்பம் இல்லை என்று நீங்கள் தவறாக நினைக்கக் கூடும் என்பதால் சொல்லவில்லை, என்றேன், பின் அவரே தொடர்ந்தார், நீ இங்கே ஆறு ஆண்டு வேலை செய்திருக்கிறாய், உனக்கு ஏதாவது இழப்பீடு தருகிறோம் என்று சொல்ல எனக்கு பருத்தி புடவையாக காய்தது போலவே இருந்தது, சரி என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே வெளியே வந்தேன், அப்பாடா இனி திருட்டுத் தனமாக இண்டர்வியூ செல்லத் தேவை இல்லை, 
ஒருவாரம் கழித்து ஒருமாதத்திற்குள் நான் அனைத்து தகவல்களையும் கோப்பாக்கி ஒப்படைப்பதுடன் பணியில் இருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் முதல் ஏதாவது நேர்முகத் தேர்வென்றால் நிறுவனத்தில் சொல்லிக் கொண்டே சென்றேன்,  அதன் பிறகு வேலைக்கு இரண்டு மாதம் காத்திருப்பு தேவை இல்லை என்பதால் வாரத்திற்கு நான்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புகள் வரத் துவங்கியது. கார்ப்ரேட் நிறுவனங்களில் கக்கூஸ் கழுவச் சென்றாலும் ஏற்கனவே வேற கார்ப்ரேட்டில் கக்கூஸ் கழுவி இருந்தால் தான் நல்லா கழுவத் தெரியும் என்று நம்புவார்கள் போல, என்னை அழைத்த கார்ப்ரேட் நிறுவனங்களெல்லாம் கார்ப்ரேட் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை என்று இரண்டாம் கட்ட நேர்முகத்திற்கு அழைக்கவில்லை, இந்த நிலையில் நாளை மறுநாள் (அக்டோபர் 12) முதல் வேலை இல்லை என்ற நிலையில் அன்று மட்டுமே காலை ஒன்றும் மாலை ஒன்றுமாக இரு நேர்முகத்திற்கான அழைப்புகள், இது கண்டிப்பாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, ஏனெனில் அதில் ஒன்று வீட்டுக்கு வெகு அருகில்...... அக்டோபர் 11 ஆம் தேதி என்ன ஆச்சு என்றால்............?

12 நவம்பர், 2012

சாதிவெறி கிராமத்தில் மட்டும் தானா ?


தலித் ஆடவர் வன்னிய பெண்ணை காதலித்து மணந்து கொண்டார் என்பதற்காக பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ள அவரது உறவினர்கள் கிளர்ந்தெழுந்த பெரும் கலவரத்தில் தலித் உடமைகள், வீடுகள் எரிக்கப்பட்டு இருக்கிறது. சாதியத்தின், வருணாசிரமத்தின் கொடுமைகளின் கோரமுகங்கள் அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகளில் வழியாக தற்போதும் வெளிப்பட்டு இருக்கிறது, இதைத் தவிர்த்து இதற்கு வேறென்ன முக்கியத்துவம் ?

இருக்கிறது. ஆம் தமிழகத்தில் கலப்பு திருமணங்கள் நடக்காமல் இல்லை, ஆனால் அவை அனைத்தும் தலித்துகளுடன் தொடர்பில்லாமல் பல்வேறு சாதியத் திருமணங்கள் நடந்தேறிவிடுகின்றன, நாடார் மனமகனை முதலியார் பெண் மணந்துவிட்டாள், தேவர் சாதி ஆண் செட்டியார் பெண்ணை மணந்துவிட்டான் என்பதெல்லாம் சாதிப் பிரச்சனையாகுவதோ, கலவரங்களை உருவாக்குவதோ இல்லை, ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்த பிற சாதிய கலப்பு மணங்கள் ஓரளவு சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, எங்கள் உறவினர்களில் பல்வேறு சாதியைச் சார்ந்தவர்களுடன் திருமணங்கள் நடந்தேறியுள்ளன, அவையெல்லாம் எந்த ஒரு காலத்திலும் பிரச்சனையாகிப் போனதுமில்லை, இவற்றில் காதல் திருமணங்களும், பார்த்து வைத்த திருமணங்களும் கூட உண்டு, ஆனால் தலித் ஆடவர் ஒருவருடன் ஓடிய உறவுக்காரப் பெண்ணையும் அவரது தாயாரையும் இதுவரை எங்கள் உறவினர்கள் சேர்த்துக் கொண்டதே இல்லை, நான் தலித் சமூகம் சார்ந்தவன் இல்லை என்று வெளிச்சம் போட இதை நான் எழுதவில்லை, இதை எழுதுவதையே கூச்சமாகக் கருதுகிறேன்,  ஒரு நாடாரையும், ஒரு பத்தரையும், ஒரு நாயுடுவையும், தஞ்சாவூர் கள்ளரையும் , ஒரு பார்பனரையும் திருமண சம்பந்ததில் வைத்திருக்கும் எங்கள் உறவினர்கள் தலித்துகளுடன் ஏற்பட்ட திருமண பந்தத்தை மட்டும் அவமானகரமாக நினைக்கிறார்கள்.

காலம் காலமாக தாழ்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் இறந்த விலங்குளை உண்ணுபவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம், அவர்களை சம்பந்தியாக்கிப் பார்பதில் உடன்படுவதில்லை என்பது தவிர்த்து வேற எந்த காரணமும் தெரியவில்லை, ஒரு காலத்தில் தீண்டத்தகாத சமூகமாக கருதப்பட்டு தோள் சீலை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் சமூகங்கள் அந்த நிலையை மிகுந்த ஒற்றுமையுடன், பொருளியல் ரீதியாக முன்னேற அவர்கள் மீதான சாதிய தாழ்வு நிலையை அவர்கள் என்றோ கடந்து வந்துவிட்டார்கள், ஆனால் தலித்துகள் ஏன் அவ்வாறு வளரவில்லை ? சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் நிலை மாறவில்லையா ? கண்டிப்பாக மாறி இருக்கிறது, ஆனால் அவர்களுடைய சாதிப்பிரிவு நான்காம் பிரிவில் வருவதே காரணம். தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பிற சாதியினர் குடியானவர்கள், 'சாதி தமிழர்கள்' என்கிற அடைமொழியை தனக்கு தாமே கொடுத்துக் கொண்டு வைசிய, சத்திரிய பிரிவை கிட்டதட்ட பிராமணப் பிரிவுக்கு இணையாக உயர்த்திக் கொண்டார்கள், இதில் பார்பனர்கள் பங்கு என்று எதுவும் கிடையாது, தனக்கு கீழே ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இருந்தால் தன் சாதி தாழ்ந்ததல்ல என்கிற எண்ணத்தில் அனைத்து சாதிகளுமே தலித்துகளின் முன்னேற்றத்தை ஏற்றுக் கொண்டதும் இல்லை, அவர்களை அரவணைத்துக் கொண்டதுமில்லை.

எட்டணா காசைக் கீழே வைத்தால் கும்பிடு போட்டு குணிந்து பொறுக்கி எடுத்துக் கொண்டு போவான், இன்னிக்கு பேண்டு போட்டுவந்து சரிக்கு சமமாக நின்னு கூலிய தெனாவெட்டாகக் கேட்கிறான், வெட்டியானுக்கு திமிரைப் பாருங்க என்றெல்லாம் தன் தவறை உணராது கூழைக் கும்பிடு போடாத தலித்துகளை 'திமிர்' தனம் என்று சொல்லும் சுடுகாட்டுக் காட்சிகளை நேரில் பார்த்தே இருக்கிறேன்,  எங்கள் சாதி சமூகத்தில் எவனும் பிச்சை எடுத்ததில்லை, விபச்சாரம் செய்ததில்லை, மாமா வேலைப் பார்த்ததில்லை என்று சொல்லும் நிலையில் எந்த சாதியும் இல்லை என்பதே உண்மை, பட்டினி சாவை எந்த சாதியாவது தடுத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை, டாஸ்மாக் எச்சில் க்ளாசில் சாராயம் குடிக்கும் பொழுது அதற்கு முன் அதில் குடித்தவன் எந்தசாதி (தற்பொழுது பேப்பர் டம்ப்ளர் வைத்திருக்கிறார்கள்), வேற ? எந்த சாதி பாலியல் தொழிலாளியிடம் செல்லுகிறோம் என்றேல்லாம் அவ்வாறு செல்பவர்கள் ஆராய்ச்சி நடத்துவதும் இல்லை, ஆனால் திருமணம் நீண்டகால பந்தம் என்று நம்புவதால் அதற்கு மட்டும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் சாதி என்றால் முகம் சுளிக்கிறார்கள், 

நாங்கள் சாதிக் கொடுமைகள் எதையும் செய்வதில்லை என்று பார்ப்பனர்கள் மார் தட்டுகிறார்கள், ஆனால் /பிராமணர்களுக்கு மட்டும் வீட்டுவாடகை; என்னும் அவர்களது அறிவிப்பு பலகைகள் அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதாதைக் காட்டுகிறது, பார்பனர்கள் சாதிக் கொடுமை செய்யாததற்கு அவர்கள் திருந்திவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை, ஆனால் இதுபோன்ற குழுசார்ந்த கொடுமைகள் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு ஆள் பலம் போதாது என்பது தவிர்த்து வேறொன்றும் இல்லை, வெளிமாநிலங்களில் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்தே வருவாதால் தமிழ் நாட்டு பார்பனர்கள்  திருந்திவிட்டார்கள் என்பது மாற்றம் என்றாலும் அந்த மாற்றத்திற்கு காரணம் எண்ணிக்கை தான், அதையும் ஒப்புக் கொள்ள மனமில்லை என்றால் பெரியாரைத்தான் காரணாமாகச் சொல்ல முடியும், பெரியாரின் பெண் விடுதலையால் முழுக்க முழுக்க பயன்பெற்றவர்கள் பார்பனப் பெண்களே, மொட்டை அடித்துக் கொண்டு காவி புடவையுடன் தென்படும் பார்பனப் பெண்கள் கனிசமாக குறைந்து மறைந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுதியாகிவிட்டார்கள், இது பிறமாநிலங்களை ஒப்பு நோக்க தமிழகத்தில் மிக அதிகம்,

சென்னையிலோ, திருச்சி போன்ற பெருநகரங்களிலோ கலப்பு திருமணங்கள் பெரிய அளவில் கலவரமாக வெடிப்பதில்லை, ஏனெனில் சாதிய பெரும்பான்மையுடன் ஒரு இடத்தில் வசிக்கும் வாய்ப்பு நகரங்களில் குறைவு, கிராமங்களில் சாதி வாரியாக சிறுபான்மை பெரும்பான்மை என்று வசிப்பதால் அங்கு இவை அன்றாடப் பிரச்சனையாகிப் போகிறது. மற்றபடி நகரத்தில் வசிப்பவர்கள் நாகரீகம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை.

பிரசன்னவோ அல்லது சினேகாவோ அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் அவர்களுடைய சாதி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருசாதி வழக்கப்படி திருமணம் நடந்திருக்குமா ?

இன்றைய தேதிக்கு பார்பனர்கள் மட்டுமே உயர் சாதியினர் இல்லை, தலித்துகள் அல்லாத அனைத்து சாதிகளுமே தங்களை உயர்சாதியாக நினைத்துக் கொண்டும், அவர்களுக்கு நேர் எதிர் தாழ்ந்த சாதியாக ஒட்டுமொத்த தலித்பிரிவுகளையும் வைத்துள்ளனர், என்னைக் கேட்டால் இதற்கு நிரந்தர தீர்வு தலித்துகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக மதம் மாறி இவர்கள் முகத்தில் காரி உமிழ்வது தான் சிறந்த தீர்வாக இருக்கும். 

தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்ளும் வரையில் தலித் விடுதலை சாத்தியமற்றது, அதைப் பெரும்பான்மை பிறசாதிகள் கொடுத்துவிடவும் மாட்டார்கள்.

*******

அனைவருக்கும் தோழர் நரகாசூரன் நினைவு நன்னாள் வாழ்த்துகள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்