சில இஸ்லாமிய தளங்களில் மாற்று மத அன்பர்களுக்கு வாழ்த்து சொல்லலாமா ? கூடாதென்றெல்லாம் கேள்வி கேட்டு பதில் சொல்லி, சொல்லக் கூடாது மீறிச் சொன்னால் மத நம்பிக்கைக்கு எதிரானது என்றெல்லாம் சொல்கிறார்கள், என்று முன்பு சுட்டிகளோடு எழுதி இருக்கிறேன். இப்ப அதே நிலைமை தமிழ் புத்தாண்டிற்கும் ஏற்பட்டிருப்பதை இங்குச் சொல்கிறேன்.
ஆன்றோர் சான்றோர் எது தமிழ் புத்தாண்டு என்று சொன்னார்கள், கொண்டாடினார்கள் என்கிற ஆராய்ச்சிக்குப் போகவிரும்பவில்லை, அது பற்றி ஏற்கனவே திரு இராமகி ஐயா மற்றும் கண்ணபிரான் ரவிசங்கர் (கே ஆர் எஸ்) எழுதியுள்ளனர், நான் எனது தமிழ் புத்தாண்டை திருவள்ளுர் ஆண்டின் தைத் திங்களில் மாற்றிக் கொண்டு நான்கு ஆண்டுகள் ஆயிற்று, அதன் பிறகு சித்திரை திங்கள் ஒன்றாம் தேதியை எப்போதும் வந்து போகும் ஒரு நாளாகத்தான் பார்க்கிறேன், இதற்குக் காரணம் கருணாநிதி தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக அறிவித்தார் என்பதற்கு அல்ல, இந்த தமிழ் புத்தாண்டு நாள் மாற்றம் ஏற்கனவே 71 ஆண்டுகளுக்கு முன்பே தனித் தமிழ் ஆர்வலர்களால் பரிந்துரைக்கப்பட்டவையே, கருணாநிதி ஆட்சி ஆளுமைகளில் இருந்ததால் நாளைய வரலாறு என் பேர் சொல்லும் என்பதாக சென்ற ஆட்சியில் மாற்றினார், ஆனால் இதை அவர் முன்பு எப்போதோ செய்திருக்க வேண்டியது. தனித்தமிழ் ஆர்வலர்கள் என்றால் யாரு ? அவர்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை என்போர் கே.ஆர்.எஸ் இடுகையைப் படிக்கவும்.
(இதில் யாரும் இறை மறுப்பாளர்கள் இல்லை)
என்னைப் பொருத்த அளவில் 100 ஆண்டு காலக் கோரிக்கைகளுக்குப் பிறகு சென்ற சில ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் செம்மொழி என்பதை மைய அரசு அறிவித்தது, அவ்வாறு அறிவிக்காத முன்பு தமிழ் சொம்மொழி வரையறைக்குள் வரவில்லை அல்லது தகுதி இல்லாமல் இருந்தது என்கிற கூற்று இருந்தால் அதில் எள்முனை அளவும் அறிவார்ந்த சிந்தனைகள் இல்லை என்பது போல் தான். கருணாநிதி அறிவிக்காத முன்பு சித்திரை 1ல் தான் புத்தாண்டு இருந்தது தைக்கு பொங்கல் வைப்பதைத் தவிர்த்து வேறெந்த சிறப்பும் இல்லை என்பது போன்ற கூற்றும். தமிழுக்கு செம்மொழிக்கான அனைத்து தகுதி இருந்தும் செம்மொழியாக அறிவிக்க மைய அரசைக் கெஞ்சியது போன்று தை 1 க்கு தமிழ் புத்தாண்டை மாற்றக் காரணங்கள் ஏற்கனவே இருந்தது, அதற்காகவே தமிழார்வளர்கள் காத்திருந்ததும் உண்மையே. தை 1 ஐ தமிழ் புத்தாண்டாக மாற்றிக் கொண்டால் தமிழ் புத்தாண்டை தமிழர்கள் மதச் சார்பற்று கொண்டாடலாம் என்கிற பரிந்துரைகளும் இருந்தது, சித்திரை 1ஐ புத்தாண்டாகக் கொண்டாடும் வழக்கம் தமிழ் இந்து பண்டிகையைப் போன்று வடை பாயசத்தோடு படையல் மற்றும் அன்று மாலை கோவிலுக்குச் செல்வது என்பதுடன் முடிந்துவிடுகிறது. பிற மொழிப் பேசுபவர்கள் தங்கள் புத்தாண்டுகளை பெரிய அளவாக மதச் சார்பற்று கொண்டாடுவதைப் ஒப்பிட்டுப் பார்க்கையில் நாம் தமிழ் புத்தாண்டு என்று சித்திரை 1ல் கொண்டாடுவதில் எந்த ஒரு தனிச் சிறப்பும் கிடையாது. சித்திரை 1 என்பது ஆடி அமாவாசை, ஆவணி அவிட்டம், வைகாசி விசு, ஆடிப் பூரம், மாசி மகம், தைப் பூசம் போல் வந்து போகும் வெகு சாதாரண ஒரு இந்துப் பண்டிகை என்ற அளவிலேயே மொழிச் சார்ந்த தனி அடையாளத்தைச் சிதைத்து சுருக்கி இருக்கிறார்கள்.
நாம விருப்பப்படி வைத்துக் கொள்ள தமிழ் புத்தாண்டின் தேதி என்ன மீசையா ? என்ற கேள்வியை சித்திரை 1 ஆம் தேதியை புத்தாண்டாகக் கொண்டாடுபவர்கள் கேட்கிறார்கள், காலத்திற்கும் எவனோ இழித்துச் சொன்ன தீண்டத்தகாதவன் என்கிற இழிச் சொல்லை சுமக்க மறுப்பது இந்த மீசை வரையறைக்குள் வருமா என்று தெரியவில்லை, இன்றைக்கு அட்சய திருதியை ஒன்றை நுழைத்திருப்பதைப் போன்று என்றோ ஒரு நாள் நுழைக்கப்பட்டதே தமிழ் திங்களின் பெயர்களும் அதன் துவக்கமும், மாற்றிக் கொள்வதால் தமிழ் தனித் தன்மையை மேலும் கூட்டிக் கொள்கிறதே அன்றி அதனால் தமிழுக்கு கெடுதலோ, சிறுமையோ கிடையாது
********
நான் முன்பு பொங்கல் அன்று தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்று கூகுள் + ல் அறிவித்திருந்தேன், நியமாகப் பார்த்தால் நாம கொண்டாடாத ரம்ஜானுக்கும், கிறிஸ்மஸ் நாளுக்கும் அந்த நண்பர்களுக்கு வாழ்த்துச் சொல்கிறோம், ஆனால் நான் தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகக் கொண்டாடுகிறேன் என்றதும் சபிக்காத குறையாக சிலர் விவாதம் என்றப் பெயரில் கருத்துக்களைக் கூறி இருந்தனர், நான் தெளிவாகச் சொன்னேன், 'நீங்கள் தான் கொண்டாடவில்லை, அதை நான் ஏன் என்றும் கேட்கப் போவதில்லை, உங்களுக்கு விளக்கினாலும் வெளங்காது, ஆனால் கொண்டாடும் என்னை நீங்கள் வாழ்துவதற்கு உங்களுக்கு என்ன தடையோ ?' இதில் புரியாதது என்றும் ஏதும் உண்டா ? 'வீம்புக்கு கொண்டாடுவதற்கெல்லாம் நாங்கள் வாழ்த்து சொல்ல மாட்டோம்' என்றனர். அப்படிப் பார்த்தால் என்னைப் பொருத்த அளவில் சித்திரை 1 யே அவர்கள் பிடித்துத் தொங்குவதும் எனக்கும் வீம்பாகத்தானே படும். வழக்கத்தை மாற்றுவது தர்மம் இல்லை, ஞாயம் இல்லை என்றெல்லாம் புலம்புகிறார்கள், தமிழ் நாட்டில் ராம நவமி என்று ஒன்று கொண்டாடப்படுகிறது, திருவரங்கம் தவிர்த்து ஏனையை பெருமாள் கோவிலும் ஒரு திங்களுக்கு முன்பு கொண்டாடப்படும் இராம நவமியின் அதே நட்சத்திரத்தில் திருவரங்கத்தில் கொண்டாடப்படுவதில்லை, அதற்குக் காரணம் சொல்கின்றனர், மற்ற கோவில்களில் கொண்டாடுவது 'சந்தர மாஸத்தை அடிப்படையாக கொண்டது, ஶ்ரீரங்கத்தில் ஸூர்ய மாஸத்தை அடிப்படையாகக் கொண்டது' இவற்றையெல்லாம் மாற்றி மாற்றிக் கொண்டாட ஏதோ ஒரு காரணத்தைக் கண்டுபிடித்து வைத்திருப்பதிலும் அதன் நடை முறைகளிலும் முரணே இல்லையாம், தமிழ் புத்தாண்டின் திங்களை மாற்றுவது தான் முரணானதாம்.
ஈழப்போரில் வென்றதன் நினைவாக இராஜபக்சே ஒரு வெற்றி நாள் அறிவித்து அதை அனைத்துக் குடிமக்களும் கொண்டாடச் சொல்லி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி வைத்திருந்தால் நூற்றாண்டுகளுக்குப் பின் தம் முன்னோர்களை அழித்து வெற்றி கொண்டதன் அடையாளம் தான் அந்த நாள் என்று தெரியாமலேயே இலங்கைத் தமிழர்களும் அதைக் கொண்டாட நேரிடும். நாம தமிழ் புத்தாண்டு என்ற பெயரில் கொண்டாடும் சித்திரைப் புத்தாண்டும் தமிழ் அடையாளங்களை அழிக்க முயன்றதின் அடையாளங்களில் ஒன்று.
என்னதான் சங்கு ஊதினாலும் கேட்காத காதில் கேட்காது.
ஆனாலும் நான் கொண்டாடாவிட்டாலும் கொண்டாடுபவர்களை வாழ்தத் தயங்கும் அளவுக்கு எனக்கு சிறுமதி இல்லை.
சித்திரையை தமிழ் புத்தாண்டாகவே கொண்டாடும் அனைத்து தமிழ் 'இந்து'க்களுக்கும் நல்வாழ்த்துகள்.
ஹேப்பி டமில் நியூ இயர் டூ யூ !


