பின்பற்றுபவர்கள்

இந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

12 ஆகஸ்ட், 2014

வடமொழி கிழமை கொண்டாட்டம் !

நான் தனிப்பட்டு எந்த ஒரு மொழிக்கும் எதிரானவன் இல்லை, ஆனால் மொழித் திணித்தலும் பண்பாட்டு அழித்தலும் ஒன்றில் ஒன்று தொடர்புடையது என்கிற புரிதல் உள்ளவன், ஒருவர் விருப்பப்பட்டு எந்த மொழியையும் எத்தனை மொழியையும் கற்கலாம், அவை வரவேற்கத்தக்கது, ஆனால் எந்த ஒரு பலனும் முன்னே இல்லாத ஒரு மொழியை பெரும்பான்மையினர் பேசுகின்றனர் என்று சிறுபான்மையினரிடம் திணிப்பது வன்மையாக கண்டிக்கத் தக்கதே.

சிங்கப்பூரில் 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டாயமாக மலாய் கற்றுக் கொடுக்கப்பட்டது, பின்னர் பன்னாட்டு நிறுவனங்களால் தான் உள்நாட்டு பொருளியல் வளரும் எனவே அனைவரும் ஆங்கிலம் கற்று தொடர்பு மொழியாக அதனைப்பயன்படுத்தலாம் என்று முன்னெடுக்கப்பட்டு ஆங்கிலம் கற்றுக் கொடுக்கப்பட்டு, பாமரர்களும் பேச எளிமையான வடிவில் சிங்கப்பூர் ஆங்கிலம் உருவாகி, அனைவரும் ஆங்கிலமே தொடர்பு மொழியாக பயன்படுத்துவதால் பெரும்பான்மை மக்களின் சீன மொழியோ, வட்டார மொழியான மலாய் மொழியோ அம்மொழி பேசாதவர்கள் தவிர்த்து வேறு யாருக்கும் திணிக்கப்படுவதில்லை, மாறாக அவரவர் தாய்மொழி கல்வி இரண்டாம் மொழியாக அனைவருக்குமே பயிற்றுவிக்கப்படுகிறது, சிங்கப்பூரின் முன்னேற்றத்திற்கு அதன் நில அமைப்பு, மக்களின் உழைக்கும் திறன் தவிர்த்து தொடர்பு மொழி ஆங்கிலம் என்பதால் ஆசியாவில் அமைந்த ஐரோப்பிய நாடு என்கிற எண்ணத்துடன் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் முதலீடு செய்து சிங்கப்பூரை வளமாக்கினார்கள்.

இது போல் அல்லாமல் எந்த ஒரு வகையிலும் பயனிளிக்காத இந்தியையும், வடமொழியையும் அனைத்து மாநிலங்களிலும் திணித்தே தீருவோம் என்று பொறுப்பேற்றுள்ள மோடி அரசு முதலில் இந்தியை அரசு சமூக ஊடகத் தொடர்பு மொழியாக அறிவித்து, பின்னர் எதிர்ப்பு கிளம்பவே வடமொழியை முன்னிருத்துகிறார்கள், வடமொழியில் இராமயண ம(ஹா)பாராத கதைகள், மற்றும் வேத உபநிசத்து, காம சாத்திரம், பிற இந்து சமயம் சார்ந்த நூல்களே உள்ளன, அது தவிர்த்து வடமொழி கற்றுக் கொள்வதால் வேறெதையும் புதிதாக அறியமுடியாது, வடமொழியில் அன்றாட செய்தி இதழ்களோ, கிழமை இதழ்களோ, திங்கள் இதழ்களோ வெளி வருவது கிடையாது, இந்தியை வடமாநிலங்கள் முன்னெடுத்த போதே வடமொழி வளர்ச்சி என்பது முற்றிலும் நின்று விட்ட ஒன்றாகும், ஆனால் வடமொழி காணாமல் போனதற்கு அல்லது புழக்கமற்று போனதற்கு கருணாநிதியை குறை சொல்கின்றனர், கருணாநிதி காரணமென்றால் இந்தியா என்பது தமிழ்நாடு அல்லது கருணாநிதியின் செல்வாக்கு இந்திய துணைகண்டத்தில் ஆளுமை மிக்கதாக இருக்க வேண்டும், இவற்றில் எதுவுமே உண்மை கிடையாது. வடமொழி வழக்கொழிந்து போனதற்கு இந்தியை வட மாநிலங்கள் தாங்கிப் பிடித்ததே ஆகும்,

ஏற்கனவே வடமொழி சார்ந்த நூல்களில் காமசூத்திரம் உள்ளிட்டவை ஆங்கிலத்தில் மொழி பெயர்கப்பட்டுவிட்டன, மாபாரதம் உள்ளிட்டவை ஆங்கில அசைபடங்களாக வெளிவந்துவிட்டன, ஆங்கிலம் அறிந்தவர்களும் அவையே போதுமானதாக உள்ளது, நான் பார்த்த லிட்டில் கிருஷ்ணா அருமையாக ஆங்கிலத்தில் ஆக்கி இருக்கிறார்கள், எனவே வடமொழி அறிந்து வடமொழியை அறிந்தால் மட்டுமே வடமொழியில் உள்ளவற்றை கற்றுக் கொள்ளலாம் என்பதில் யாதொரு உண்மையும் கிடையாது. தவிர வடமொழியை அறிவதால் அந்த நூல்களை படிக்க முடியும் என்பது தவிர்த்து பெரும் பயன் எதுவும் இல்லை. ஏற்கனவே வேதம் படிக்கிறவர்கள் பார்பனர் அல்லாதவர்கள் என்றால் காதில் ஈயத்தை காய்ச்சி ஊத்தவேண்டும் என்று சொல்லி இருப்பதை வடமொழி அறிந்து படிப்பதால் அம்மொழி மீது மேலும் வெறுப்பே மிஞ்சும். மற்றபடி பாரம்பரியம், நமது இந்திய மொழி போன்ற கூற்றுகள் அடிப்பட்டுப் போய்விட்டன.

விக்கிப்பீடியாவில் வடமொழி இந்தோ - ஐரோப்பிய பிரிவை சார்ந்தது என்று தெளிவான சான்றுகளுடன் சொல்லி இருக்கிறார்கள், எந்த ஒரு வடமொழி ஆர்வளரும், மொழியாளரும் அதை இதுவரை மறுக்க முடியவில்லை, ஆங்கிலம் உள்ளிட்ட ஐரோப்பிய மொழிகளில் வடமொழிச் சொற்கள் கனிசமான அளவில் இருப்பதற்கு வாய்ப்பும் அம்மொழியின் தாயகம் இந்தியாவாக இருக்கமுடியாது என்பதால் தான் என்றே சொல்லுகிறார்கள்,

இன்றைக்கு இந்திய மொழிகளில் ஆங்கிலம் நீக்கமற கலந்து தமிழ் உள்ளிட்ட பல்வேறு மொழிகளை திரிப்பது போன்று தான், வடமொழி பல்வேறு மொழிகளில் கலந்து அவற்றை சிதைத்தது, மற்றபடி வடமொழி இந்திய மொழிகளுக்கும் தாய் என்பது தவறான மற்றும் புறந்தள்ளக் கூடிய கூற்றுமாகும், அதற்கு எந்த ஒரு சான்றும் இல்லை, மொழியைப் பற்றி பெருமை பேசுபவர்கள் மொழி ஆராய்ச்சியாளர்களாக மட்டுமே இருந்தால் இது போன்ற தவறான கூற்றுகள் ஏற்பட்டிருகாது, மொழிப்பற்றாளார்கள், தம்மொழி மீது பெருமை கொண்டவர்கள் இட்டுக்கட்டிக் கூறித் திரித்தவையே இவையாகும். 

வடமொழி தென்னிந்திய மொழிகளில் கலந்ததற்கு எனக்கு தெரிந்து இருவாய்ப்புகள் தான், தென்னிந்தியாவில் பார்பனர்களின் பரவல், மற்றும் இராமயண மாபாரத இதிகாசங்களின் சொற்பொழிவுகள். கோவிலை பிழைப்பிடமாகக் கொண்ட வடமொழி கற்ற பார்பனர்கள் பிறருடன் உரையாடும் போது கலந்தவை, இராமயண, மாபாரத சொற்பொழிவுளில் அதன் செய்யுளை வடமொழியில் சொல்லி பின்னர் வட்டார மொழியில் கதைவிளக்கம் கொடுப்பார்கள், இராமயணக் கதை ஊடுருவல் என் டி ஆரை கிருஷ்ணராகவே பார்க்க வைத்துள்ளது என்றால் அந்த கதையின் தாக்கம் தெலுங்கில் எந்த அளவில் இருந்திருக்க வேண்டும் என்று நினைத்துப்பாருங்கள். தமிழ்நாட்டில் வடமொழி கலப்பு குறைந்ததற்கு வில்லிபாரதம் தமிழில் எழுதப்பட்டதும், கம்ப இராமயணம் தமிழில் மொழிமாற்றப்பட்டதும் ஆகும், இல்லை என்றால் மலையாள, கன்னட மற்றும் தெலுங்கு மொழிகளைப் போல் 50க்கு 50 என்ற கணக்கில் தமிழ் சிதைந்திருக்கக் கூடும், உரைநடைகள் வளர்ந்த 100 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழில் வடமொழி கலப்பு மிகுந்திருந்தது, ஏனெனில் தமிழ் உள்ளிட்ட மொழிகளை கற்றுக் கொடுக்கும் வேலையில் குருகுலம் அமைத்த்து பார்பனர்கள் தான் அதனையும் செய்துவந்தனர், அவர்களிடம் தமிழ் கற்றவர்களின் பேச்சு வழக்கில் இயல்பாகவே வடமொழி கலப்பு ஏற்பட பெரியார் உள்ளிட்டவர்களின்  மேடைப்பேச்சில் நீங்கள் வடமொழிக்கலப்பு மிகுந்திருப்பதைப் பார்க்கலாம், பின்னர் தனித்தமிழ் இயக்கம் தோன்றிய பிறகே அவை முற்றிலுமாக களையப்பட்டு, செந்தமிழ் இல்லாவிட்டாலும் நல்ல தமிழில் எழுத முடிந்தது.

இந்தி போன்ற பெரும்பான்மையினர் பேசும் ஒரு மொழியை திணிப்பது அல்லது படிக்கச் சொல்லி அறிவுறுத்துவது தவறா ? இந்தியர்களுக்கு பொதுவான இந்திய மொழி ஒன்று இருந்துவிட்டு போகட்டுமே ? கொஞ்சம் சிந்தித்துப்பாருஙகள், எந்த ஒரு மொழியும் தகவல் தொடர்பு என்ற அளவில் இருந்தால் கெடுதல் இல்லை, ஆனால் தற்கால தொலைகாட்சி மற்றும் திரை ஊடகங்களின் தாக்கம் உடனடி விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது, நன்கு திறமையானவர்கள், நாம் ஏன் 6 கோடி தமிழர்கள் மட்டும் பார்க்கும் ஒரு நிகழ்ச்சியை படைக்க வேண்டும் ? என்ற கேள்வியில் பெரும்பான்மையினர் பாராட்டுகளே முதன்மையானது என்று மாற்றிக் கொள்வார்கள். கலைஞர்கள், எழுத்தாளர்கள் உள்ளிட்ட திறமையானவர்கள் அனைவருமே இந்தி பேசும் பெரும்பான்மையினருக்காக உழைக்க முடிவெடுத்தால், தமிழை பாமரனும் தாய்மொழியாக வீட்டில் பேசுபவன் மட்டுமே வாழ வைக்க முடியுமா ?

தமிழ் மற்றும் தென்னிந்திய இயக்குனர்களுக்கு இந்திபடம் இயக்க வேண்டும் என்பதே கனவு. அதை நான் தவறு என்று சொல்லமாட்டேன். ஆனால் அவர்கள் எல்லோரும் அங்கு சென்றுவிட்டால் நமக்காக படம் எடுப்பவர் யார் ? ரஜினியோ கமலோ இந்தியில் தொடர்ந்து வென்றிருந்தால் அவர்கள் தமிழ் சூப்பர் ஸ்டார்களாக நம் முன் நிற்கமாட்டார்கள், அவர்களுக்கு இந்தி பேசத் தெரிந்தாலும் பெரிதாக வரவேற்பு இருக்க வில்லை, ஆனால் தென்னிந்திய இயக்குனர்கள், இசை அமைப்பாளர்கள் இந்தியில் வெற்றிக்கொடிகட்டுகின்றனர், முதல் போடுபவர் இந்திகாரராக இருக்கும் பொழுது படமும் வெற்றி என்னும் பொழுது இயக்குனரின், இசை அமைப்பாளரரின் திறமையை நமக்கு ஒரு அடிமை சிக்கிவிட்டான் என்பது போல் தான் அவர்கள் வரவேற்கின்றனர்.  வட இந்தியர்கள் தென்னிந்தியரின் முகத்தை திரையில் பார்க்க விரும்பமாட்டார்கள், ஆனால் திரைக்கு பின்னால் இருக்கும் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள்

இந்தியா முழுவதும் இந்தி மயமாகிவிட்டால், தமிழ் படம் என்று வரவே வராது, தமிழ் சார்ந்த செய்திதாள்களின் எண்ணிக்கை குறைந்து போகும், தமிழ் சார்ந்த கலைகளோ தொண்மங்களோ வளராது. தமிழின் வளர்ச்சி முற்றிலுமாக நின்று போய்விடும், அண்டை மாநிலங்களில் அவ்வாறு நடைபெற வில்லையே ?

கன்னடப் படங்கள் நன்றாக ஓடுவது குறைவு, அதனால் தான் கன்னட திரையுலகம் பல்வேறு கட்டுப்பாடுகளை பிற மொழி படங்களின் மீது விதிக்கிறது. தெலுங்குக்கு அந்த நிலமை வர சற்று காலம் எடுக்கலாம் ஆனால் நடக்காது என்று சொல்ல ஒன்றும் இல்லை. கேரளத்தினர் தம்படைப்புகள் மீது ஆழ்ந்த மதிப்பு வைத்திருப்பவர்கள் என்பதால் அவர்களும் தப்பி வருகின்றனர், அதுவும் எவ்வளவு நாள் என்று சொல்ல முடியாது.

ஒரே சமயத்தில் இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ், பிரபு தேவா, ஏஆர் ரஹ்மான் ஆகியோருக்கு இந்திபட வாய்ப்பும் தமிழ் பட வாய்ப்பும் கிடைத்தால் எதை தேர்ந்தெடுப்பார்கள் என்பதை உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன். நான் அவர்களை மொழி பற்று இல்லாதவர்கள் இல்லை என்று சொல்லவரவில்லை, ஆனால் தமிழனாக இல்லாமல் 'இந்தியானாக' வெற்றி பெருவதையே அவர்கள் விரும்புவார்கள், ஊடகங்களில் பிற மொழி நுழைந்தால் தாய் மொழியின் வளர்ச்சி குறைந்து கொண்டே நாளடைவில் நின்று போகும், இது தான் இந்தி மொழி வளர வளர வடமொழி வளர்ச்சி தடைபட்டு நின்று போனதற்கும் காரணம்.

தமிழகத்தில் பிறமொழி தாக்கம் ஏற்பட ஏற்பட அவற்றை அறிந்தவர்களின் ஊடகத் தேர்வும் அம்மொழியை நோக்கியும் திரும்பும். நாளடைவில் தமிழ் வெளிநாடுகளில் மட்டுமே வாழும் மொழியாகிவிடும். வடமொழி வளர்ச்சி நின்று போனது ஏன் என்று விடை அறிந்துவிட்டு பின்னர் வடமொழி கிழமை (வாரம்) கொண்டாடுங்கள்.

19 ஜூன், 2014

மதம் மாறிய மொழி !

மனிதர்கள் தானே மதம் மாறுவார்கள், மொழி மதமாறுமா ? என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், மதம் தாங்கிப்பிடிக்கும் மொழிகள் பல உள்ளன என்பதை நினைவு கூறுங்கள், மொழிகளுக்கும் இனத்திற்கும் உள்ள தொடர்புகள் போலவே சிற்சில மொழிகளுக்கும் மதத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு, எனவே குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு மொழியை தங்களது ஆக்கிக் கொள்ள அந்த மொழிக்கு தங்கள் மதத்து ஆடையைக் கட்டிவிடுவார்கள். 

இந்தி என்ற சொல் இந்தி மொழிக்கு பெயராக வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட இல்லை என்றால் உங்களில் பலரலால் நம்ப முடியாது, ஆனால் உண்மை அது தான்.  துளசி தாசர் (1532–1623) இந்தியில் இராமாயணத்தை எழுதவில்லையா ? என்று என்று உங்களால் கேட்க முடியும். துளசிதாசர் இந்தியில் இராமாயணத்தை எழுத வில்லை, மொகலாயர்கள் ஆண்ட அந்த காலகட்டத்தில் இந்தி வடிவமே பெறவில்லை, மொகலாயர்கள் பேசிய பெர்சியன் மொழி கலந்து, மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் வட்டார வழக்கான கரிபோலியும் (நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழி போன்ற ஒரு பிரிவு) கலந்து உருவான 'அவதி' என்ற மொழியில் வடமொழியை எழுதப்பயன் படுத்தப்பட்ட எழுத்துக்களான தேவநகரியில் தான் இராமாயணத்தை எழுதினார், எனவே துளசி தாசர் எழுதிய இராமாயணம் என்பது வால்மிகி இராமயணத்தின் வட்டார வழக்கு மொழி மாற்றம் மட்டுமே. 

தற்போதைய நிலையில் துளசி தாசர் எழுதிய இராமாயணத்தை இந்தி தெரிந்தவர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது, எனெனில் மொகலாயர்கள் ஆட்சியில் இருந்து வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிக்கும் வரையில் கிட்டதட்ட மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் பேசிய வட்டார மொழி கலந்த பெர்சியன் மொழி திரிந்து திரிந்து உருதாக வடிவம் பெற்றது, மொகலாயர்காலத்திலேயே உருதை பெர்சியன் எழுத்தில் தான்  (அரபி எழுத்து வடிவம் தான்) எழுதினார்கள். உருது எழுத்து தெரியாத மற்றவர்கள் எழுதும் பொழுது (தற்பொழுது எழுதப்படும்) தேவ நகரி எழுத்தைப் பயன்படுத்தினார்கள், அதுவும் 1881க்கு பிறகே அரசுவழியாக முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கு இந்துஸ்தானி மொழி என்ற சிறப்பும், இந்தி என்ற பெயரும் கொடுக்கப்பட்டது, ஆக இந்தி மொழி 'இந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டு' 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

மொகலாயர்கள் பேசிய இந்தியும் உருதும் ஒன்று தானே, பிறகு ஏன் அவற்றிற்கு தனித்தனி எழுத்துக்கள், ஏன் இரண்டு பெயர்களுடன் ஒரே மொழி ? அதற்கான அடிப்படைகாரணம், உருது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது, உருது என்ற பெயரில் இருப்பதாலும் மொகலாயர்களின் மொழி என்பதாலும் அவற்றை பேசுவர்களுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியே, அந்நிய மொழியை பேசுகிறோம், இதை மாற்ற என்ன வழி என்று சிந்தித்த போது, ஏற்கனவே துளசிதாசரின் வழிகாட்டல் இருந்ததால்,  உருதிற்கு இந்திய மொழியின் (தேவநகரி) எழுத்துச் சட்டையைப் போட்டுவிட்டால் அது இந்திய மொழி / இந்திய வழித்தோன்றல் மொழி ஆகிவிடும் என்று நினைத்து இந்துக்கள் பேசும் (உருது) இந்தி என்றும் இஸ்லாமியர்கள் பேசுவது உருது என்றும் சொல்லப்பட்டது.

தற்போது பாகிஸ்தானில் உருது அலுவலக மற்றும் தேசிய மொழி, மொகலாயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனைத்து இந்திய மாநிலங்களிலும் இந்தி அலுவலக மொழி, உருதிற்கு கிடைத்த தேசிய மொழி பெருமை இந்திக்கு கிடைக்க வேண்டும் என்று இந்திக்காரர்கள் விரும்புவதுடன், அவர்கள் நோகாமல் தமிழகம் வந்து செல்ல தமிழகத்திலும் இந்தி இருப்பது கட்டாயம் என்று திணிக்க முற்பட்டனர்.


ஆங்கிலம் எந்த அளவுக்கு அந்நிய மொழி என்பது உண்மையோ, அதே அளவுக்கு இந்தியும் வெளியில் இருந்து வந்து இந்திய வடிமாக சிதைந்த மற்றொரு அந்நிய மொழி, இரண்டும் இந்தியாவிற்கு நுழைந்ததில் ஆங்கிலத்திற்கு முற்பட்டு இந்தி நுழைந்தில் வேறுபாடும் வெறும் 200 ஆண்டுகள் தான், கிபி 1500களில் மொகலாயர்கள் ஆட்சி, கிபி 1700 களின் இறுதியில் வெள்ளையன் நுழைந்துவிட்டான். தவிர ஆங்கிலமும் இந்தியும் மொழிக்குடும்ப அடிப்படையில் ஒரே மொழிக்குடும்ப பிரிவை சார்ந்தவையே, அதாவது இந்தோ - ஐரோப்பியன்' மொழி குடும்பத்தை சார்ந்தவையே. உருதிற்கும் இந்திக்கும் சில நூறு வடமொழிச் சொற்கள் உள்வாங்கியதில் மட்டுமே வேறுபாடு, ஒரு சில சொற்கள் இந்தி வடமொழியில் இருந்தும் அதே சொற்கள் உருது அரபி மொழிக் குடும்பத்திலிருந்தும் எடுத்துக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு வேறு சட்டைப் போட்ட இரண்டும் இரட்டைப் பிறவிகள்.

வெறும் 300 ஆண்டுகளில் வடமாநிலங்களை மொகலாயர்கள் இந்தி / உருது பேச வைத்துவிட்டனர், வெள்ளையர்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆண்டிருந்தால் வட இந்தியர் ஆங்கிலத்திற்கு மாறி இருப்பார்கள். நம்மை இந்திப் படிக்கச் சொல்லி வருந்தி இருக்கமாட்டார்கள். தென்னிந்திய திராவிட மொழியை ஒப்பிட ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழி என்பதால் வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் எளிது.

இந்தியோ, ஆங்கிலமோ இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொழி அல்ல, இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் அரசு ஆணையாக / பயன்பாடாக இந்தியாவை கைப்பற்றியவர்களால் திணிக்கப்பட்டவையாகும்.

இந்த உண்மைகள் தெரியாத நம்மில் சிலரும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் எல்லோரும் 'கட்டாயமாக' படிக்க வேண்டும் என்கிறார்கள்.

மொழி மீதான  தனிப்பட்ட ஆர்வம் என்பது தவிர்த்து, இந்திப் படிக்காததால் வேலை வாய்ப்புகள் எதுவும் பறிபோகாது, என்றோ ஒருநாள் வட இந்தியா சுற்றுலா போனால் பயன்படலாம் அல்லது இந்திவாலாக்கள் தமிழகம் வந்தால் வழிகாட்டலாம், சாருக்கான் படம் பார்க்கலாம் மற்றபடி அதைப் பாடச் சுமையில் ஒன்றாக படித்து சுமப்பதால் ஒரு பயனும் இல்லை.

தமிழகத்தைவிட இலங்கையில் இருந்து புத்தகயா செல்லும் சிங்களவர்கள் தான் மிகுதி, அவர்களையும் வடவர்கள் இந்திபடிக்க பரிந்துரைக்கலாமே, செய்யமாட்டார்கள், காரணம் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்கள் குறைவு, கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு போனால் தான் உண்டு. ஆனால் தென்மாநிலங்களுக்கு அவர்கள் சுற்றுலா வருவது மிகுதி, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்தி தெரிந்தால் நாம இங்கும் வந்து ஆளுமையை காட்டலாம் என்பதற்காகவே தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்கிறார்கள். தற்பொழுது இந்திக்காரர்கள் தான் தமிழகத்தில் பரவலாக கூலிவேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களால் முடியும் பொழுது இந்தி 'படித்தவர்களால்' தமிழகத்தில் குப்பை கொட்ட முடியாதா ?

ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர் ( அகவை 60தை தாண்டியவர்) வட இந்தியா சுற்றுலா போனபோது இந்தி தெரியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம், அவரிடம் நீங்கள் சிங்கை வந்த போது சீன மொழி தெரியாமலும், மலேசியா சென்ற போது மலாய் தெரியாததாலும் மன உளைச்சல் அடையவில்லையே என்று கேட்டேன், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். சிங்கப்பூரில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றலாம், ஆனால் மலேசியாவில் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியாது, இவர் எப்படி சென்று வந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது.

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் படிப்பதில் உள்ள நன்மைகள் எதுவும் இந்திக்கு பொருந்தாது, வடமொழி பற்றாளர்கள் இந்தி தேவநகரி எழுத்தில் எழுதுவதால் வடமொழியை (சமஸ்கிரதம்) மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்தி ஆதரவளர்களாக இருக்கிறார்கள், மற்றபடி தென்னிந்தியாவில் இந்திக்கான ஆதரவு குறைவே, பெங்களூர் அல்லது ஹைத்ராபாத் வாசிகளிடமோ, உங்கள் தலைநகரில் இந்தி ஆதிக்கம் உங்களுக்கு பெருமையான ஒன்றா என்று கேட்டுப்பாருங்கள், ஒருவரும் ஆமோதிக்கமாட்டார்கள், அந்த நிலைமை சென்னைக்கும் வர வேண்டாம்.

இந்தி என்பது உருது மொழியின் இந்து / இந்திய வடிவம் மட்டுமே, மனிதனை மதமாற்றுவது போல் ஒரு மொழியையே மதம் மாற்றி இந்திய மொழி என்கிறார்கள்.

ஒருவேளை முகலாய பேரரசு தமிழகத்தையும் கைப்பற்றி இருந்தால் இந்தி ஆதிக்கத்திற்கு நாமும் அடிமை பட்டிருக்கக் கூடும்.

பின்குறிப்பு : எனக்கு இந்தி ஓரளவு தெரியும், மொழிகளின் மீதான தனிப்பட்ட ஆர்வங்களால் இந்தியையும் ஓரளவு கற்றுள்ளேன். என் குழந்தைகளுக்கு விருப்பமில்லாத எந்த மொழியையும் நான் திணிப்பதும் இல்லை.

இணைப்பு : 

http://en.wikipedia.org/wiki/Ramcharitmanas
http://en.wikipedia.org/wiki/Hindi

Turkey the birthplace of Hindi, English: study

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் ! 


10 செப்டம்பர், 2012

வெட்கம் கெட்டவர்களுக்காக !


ஐயோ இது சிங்களன் வரைந்த ஜெ-கார்டூன் பற்றி இல்லை, அந்த இழிபிறவிகளைப் பற்றி எழுத ஒன்றும் இல்லை, நாவில் கூடுதலாக எச்சில் இருந்தால் அந்த திசை நோக்கி துப்பலாம், இல்லை என்றால் அந்த பக்கம் திரும்பி ஒண்ணுக்கு அடிக்கலாம், அதுக்கு மேல் அதற்கு முக்கியத்துவம் கொடுக்கத் தேவை இல்லை, பெண்ணும் ஆணும் எதோ இந்தியாவில் மட்டும் தான் அரசியல்வாதிகள் என்பது போன்று நினைத்துக் கொண்டு இருக்கின்றனர். அதே போல் அதைவிட கேவலமாகவோ அவர்கள் தலைவர், தலைவிகளை நம்மால் இழிவு சித்திரம் தீட்ட முடியும் என்றாலும் ஒரு ஆணையும் பெண்ணையும் அவ்வாறு வரைவது எண்ணத்தில் கூட நமக்கு ஏற்புடையது இல்லை.

*********

ஹாஜா மைதீன் என்பவர் மலேசியாவில் ஒரு மலாய்காரனால் வெட்கம் அடைந்தாராம், அது தான் இங்கே தலைப்பு, அவரு மட்டுமல்ல அவரு போல் இந்திப் படிக்காததால் வெட்கம் அடைந்து அரசியல் வாதிகளால் கெட்டுவிட்டோம் என்று மனம் புழுங்குபவர்களுக்கும் சேர்த்தே தான் எழுதுகிறேன், இது போல் நான் எழுதுவது இது முதல் முறை இல்லை என்றாலும், இந்திக்கு பந்தி வைக்கவில்லை என்று ஆண்டுக்கு ஒருவராவது இப்படி சமூக அக்கரையுடன் மூக்கு சிந்தும் பொழுது நம்மால் முடிந்த அமிர்தாஞ்சனமாக இதை எழுதத்தான் வேண்டி இருக்கிறது.

"நான் தமிழ்நாட்டுக்காரன்  அதனால்  என் மொழி தமிழ்தான் என்றேன்...அப்ப  தமிழ்நாடு இந்தியாவில் இல்லையா  என கேட்டார் ?நான்  முழிக்க  ஆரம்பித்தேன் ...அவர் மேலும் விடாமல் நீங்கள் வேலை  பார்க்க வந்த  நாட்டின் மொழியான  மலாய்  மொழியை அறிந்து பேசுகிறீர்கள் ஆனால் உங்கள் நாட்டின்  மொழியான  இந்தியை தெரியாது என்கிறீர்கள்...ஏன் இந்த முரண்பாடு என்றார்..... பொட்டில் அறைந்தது போல இருந்தது...என்னால் பதில் சொல்ல முடியவில்லை....வீடு வரும்வரை  மவுனத்தையே  அவருக்கு பதிலாக கொடுத்தேன்" - ஹாஜா மைதீன்

அவரு எழுதியதில் முக்கியமான வரிகள் இவை தான், அதாவது ஒரு மலாய்காரனுக்குஇந்தி இந்தியாவின் தேசிய மொழி என்று தெரிந்துள்ளதும், அதன் முக்கியத்துவமும் இவருக்கு தெரியாமல் போச்சாம். மேலும் இந்தி தெரியாமல் இருப்பதே தமக்கு பெருத்த அவமானம் என்றும் எழுதியுள்ளார், அவர் அவமானப்படுவது கூனிக் குறுகுவதெல்லாம் அவரின் மன நிலைத் தொடர்பானது என்று விட்டுவிடுவோம், ஆனால் இந்தியை தாய்மொழியாக கொண்டிருக்காதவர்கள் அதை தெரியாமல் இருப்பதற்கு எந்த வித அவமானமோ தலைகுனிவே பெறத் தேவை இல்லை.

இங்கே சிங்கப்பூரில் சீனர்கள் பெரும்பான்மையாகத்தான் வசிக்கின்றனர், சீன மொழி தெரியவில்லையே என்று சீனர்களிலும் கூட சீனர் அல்லாதவர்களிடம் கூட எவரும் வெட்க்கப்பட்டதாகத் தெரியவில்லை.  சிங்கப்பூரில் பெரும்பான்மை சீனர்கள் பேசும் மொழி சீன மொழியை எல்லோரும் அறியவில்லை என்பதற்காக நாட்டின் பொருளாதார வளர்ச்சி எந்த விதத்தில் மலேசியாவிற்கு குறைந்து போய்விடவில்லை.  மலேசியாவில் மலேசியர் அல்லாதவர் மலாய் பேசாமல் இருப்பதாலும் எவருக்கும் சங்கடங்கள் இருந்ததும் இல்லை, அவற்றை மீறிக் கற்றுக் கொள்பவர்களுக்கு பேருந்து உள்ளிட்டவற்றில் பயணம் செய்யும் பொழுது சில்லரை வாங்க பயனாக இருக்கும் என்பது தவிர்த்து மலாய் படங்களைப் பார்க்கலாம் என்பதும் தவிர்த்து தமிழனிடம் ஒரு தமிழன் மலாயிலேயே பேசலாம் என்பதும் தவிர்த்து வேறு பெரிய பலன்கள் இருப்பது போல் தெரியவில்லை, மலேசிய தமிழர்கள் அவர்களுக்குள் மலாயில் பேசிக் கொள்கிறார்கள், காரணம் பெரிதாக இல்லை, நம்மைப் போன்றவர்களுக்கு அவர் பேசினால் புரியக் கூடாது என்பது தவிர்த்து பேச எளிமையாக இருக்கும், 

மலேசியாவில் இரண்டு ஆண்டு வசித்தால் மலாய் சொல்லிக் கொடுக்காமலேயே வந்துவிடும், மலாய்காரர்கள் தவிர்த்து சீனர்கள் மற்ற இனத்தினர் மலாய் பேசுவதற்கு அவர்கள் பள்ளிக் கூடத்தில் படித்துக் கற்றுக் கொண்டார்கள் என்பதில்லை, பேசிப் பழக்கம் தான், ஹாஜா மைதீன் எந்த பள்ளியில் சென்று மலாய் படித்திருப்பார். நான் மாதம் ஒருமுறையேனும் முடித்திருத்தம் செய்ய மலேயா ஜோகூர் செல்வதுண்டு, காசு குறைவு என்றாலும் போய் வரும் செலவும், வெட்டுபவர்களுக்கு கொடுக்கும் அன்பளிப்புத் தொகையும் சேர்த்து ஒப்பிட சிங்கையில் வெட்டுவதை விட கூடுதல் என்றாலும் பொழுது போக்காகச் சென்றுவருவதற்காக மலேசியாவில் தான் முடித்திருத்தம் செய்து கொள்வேன்.

முடித்திருத்தம் செய்பவர்கள் அனைவரும் வேலை அனுமதியில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்தவர்கள்.

"தம்பி எந்த ஊரு"

"மன்னர்குடிங்கண்ணே "

"எவ்வளவு நாளாச்சு இங்கே வந்து"

"வர்ற நாலாம் மாசம் வந்தா இரண்டு வருசம் ஆகும்"

"சீனன் கூட இவ்வளவு சூப்பராக மலாய் பேசுறிங்க ?"

"பேச வேண்டியது தானே...சுத்தி அதான் பேசுறாங்க.......கேட்டு கேட்டு நாமும் பேசிட முடியும்"

மலாய் கற்றுக் கொள்ள எடுக்கும் காலம் இவ்வளவு தான். 

மலேசியாவில் மலாய் எல்லோரும் படியுங்கள் என்று திணிப்பது கிடையாது, அரசு பள்ளிகளில் பாடமாக உண்டு, மலேசியாவில் அரசு பள்ளியில் படிக்கும் அனைவரும் மலாய் கற்றுக் கொடுக்கப்படுகிறது, அது சீனர் என்றாலும் இந்தியர் என்றாலும் கற்றுக் கொள்கிறார்கள். ஆனால் மலாய் மொழி சொல்லி க்கொடுக்காத தனியார் பள்ளிகளும் உண்டு, எனக்கு தெரிந்த பல மலேசிய சீனர்களின் குழந்தைகளுக்கு மலாய் தெரியாது. ஆனாலும் அவர்கள் அங்கேயே வளர்ந்தால் இயல்பாக கற்றுக் கொள்வார்கள். மலேசியா நாட்டுக்கு வேலைக்கு வர்றிங்க மலாய் தெரியாமல் வருவதற்கு நீங்க வெட்க்கப்படுங்களேன் என்று யாரும் கூறுவதும் இல்லை,  யாரும் அவ்வாறு கூறித்தான் ஹாஜா மைதீன் மலாய் கற்றுக் கொண்டாரா தெரியவில்லை. கூலி வேலைக்கு வருபவர்கள் ஒராண்டிற்குள் கற்றுக் கொள்ள முடியும் என்ற அளவுக்கு மலாய் மொழி எளிமையானது தான், இந்தியும் பள்ளியில் கற்றுக் கொடுத்தால் தான் கற்றுக் கொள்ள முடியும் என்ற மொழியும் கிடையாது, வடநாட்டுக்கு கொத்து வேலைக்குச் செல்பவர்களெல்லாம் வரும் பொழுது இந்திப் பேசுகிறார்கள். நான் படிச்சவன் நான் படிச்சவன் என்று படம் காட்டுகிறவர்களுக்குத்தான் துவக்கப் பள்ளியில் இருந்து சொல்லிக் கொடுக்கனுமாம்.

இந்தி உள்ளிட்ட எந்த மொழியையும் விருப்பத்தின் பேரில் கற்றுக் கொள்வதில் தவறே இல்லை, ஆனால் இது தான் தேசியமொழி எல்லோரும் பேசுகிறார்கள், அதனால் எனக்கும் கற்றுக் கொடுத்திருக்க வேண்டும் என்று கூறுவது கண்டிக்கத் தக்கது, தனிப்பட்ட ஒருவரின் விருப்பு வெறுப்பிற்காக எல்லோர் மீதும் பாடச் சுமையை ஏற்றுவது அறிவுடைய செயலும் இல்லை, இந்தி படிக்காமல் நொந்து போய்விட்டோம் என்று புலம்பும் மூத்தவர்களில் எத்தனை பேர் தங்கள் குழந்தைகளுக்கு அதை பாடமாக்கி இருக்கிறார்கள் ? ஏற்கனவே இருக்கும் பாடச் சுமையுடன் இவற்றையும் ஏற்ற விரும்பமாட்டார்கள், இந்தியை அல்லது வடமொழியை இரண்டாம் மொழிப் பாடமாக எடுத்துப் படிப்பவர்களில் தமிழையும் சேர்த்துப் படிப்பதும் இல்லை, தன் குழந்தைக்கு ஏதோ ஒன்று மட்டும்  இரண்டாம் மொழிப்பாடமாக இருந்தால் போதும், கூடுதல் சுமை தேவை இல்லை என்று கருதுவோரில் பலர் தாம் இந்திப் படிக்காமல் பாழாகிப் போய்விட்டோம் என்று புலம்புவது முரண்பாடாக இருக்கிறது.

மேற்கண்ட ஹாஜா மைதீனிடம் ஒருவர் பின்னூட்டத்தில் கேட்டுள்ளார், இந்தியாவில் இருந்து வந்த நீங்கள் இந்து இல்லையா ? அரேபிய மதத்தையா பின்பற்றுகிறீர்கள் ? என்று கேட்டிருந்தால் அதை ஒருவேளை அவர் அவமானம் என்று கருதுவாறாயின் அந்த அவமானத்தைத் துடைக்க அவரால் என்ன பதில் சொல்லி இருக்க முடியுமோ அதையே ஏன் அவர் தாம் இந்தி கற்காமல் போனதற்கும் சொல்ல முடியாமல் போனது ?

* இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல
* இந்தி இந்தியாவில் தோன்றிய மொழியும் அல்ல
* இந்தி இந்தியாவில் ஊடுருவியதற்கும் ஆங்கிலம் ஊடுருவியதற்கும் வெறும் 100 ஆண்டுகளே வேறுபாடு, இஸ்லாமிய படையெடுப்பு மற்றும் கிழக்கிந்திய கம்பெனி வருகைப் பற்றிப் படித்தால் இந்தியும்,  ஆங்கிலமும் எப்போது இந்தியாவை விழுங்கின என்று தெரியும்.
* இந்தி ஆங்கிலம் போல் அறிவியல் / இலக்கிய வளங்கள் நிறைந்த மொழியன்று
* ஆங்கிலம் கற்றுக் கொண்டால் உலக நாடுகளில் சுற்றிவரலாம்,
* இந்தித் தெரிந்தாலும் பாம்பே மிட்டாய் விற்பவருக்கு தொழிலைத் தாண்டிய வருமானத்தை இந்தி மொழித் தரவில்லை
* தமிழகத்தில் இந்தி நுழைந்திருந்தால் கன்னடப்படங்களுக்கு நேர்ந்த கெதி தமிழ் படத்திற்கு எப்போதோ ஏற்பட்டிருக்கும்
*உருதும் இந்தியும் அக்கா  தங்கைகள் தான், ஒரு பேச்சுக்கு உருதை தேசிய மொழி ஆக்கிவிடலாமா ? இந்தியை சமஸ்கிருத 'அம்சமாக' பார்க்கும்  பெருவாரியான பார்பனர்களே  வேண்டாம் வேண்டாம் என்று அலறுவார்கள்.

******

இந்தி படிக்க எழுந்த ஆர்வம் காரணமாக 20 வயதில் சென்னை திநகர் இந்தி பிரச்சார சபாவில் காலை வகுப்பில் சேர்ந்தேன், மொத்தமே மூன்று நாள் வகுப்பு தான் சென்றிருப்பேன், அங்கே இந்தி கற்றுக் கொள்ள வந்த வாண்டுகள் 'அங்கிள்......அங்கிள்' என்று கூப்பிடத் துவங்கியதும், இந்தியும் வேண்டாம், மந்தியும் வேண்டாம் என்று வந்துவிட்டேன், பின்னாளில் என்னுடைய தனி முயற்சியால் ஓரளவு கற்றுக் கொண்டேன்.

முன்பு மாதிரி இல்லை தற்பொழுது தமிழக தொலைக்காட்சி இணைப்புகளில் இந்தி சானல்கள் ஒரு 20 - 30 ஆவது இருக்கும், கலைஞர் டிவியில் மானாட மயிலாட பார்ப்பதைத் தவிர்த்து இந்தி சானல்களைப் பார்த்தால் மூன்றே மாதத்தில் நாம பாம்பே வாலா ஆகிவிட முடியும். எல்லாவற்றிற்கும் உந்துதல் இருக்க வேண்டும். தமிழ் மற்றும் ஆங்கிலம் தவிர்த்து, எனக்கு கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஓரளவு இந்தி கொஞ்சம் சீன மொழி கூடத் தெரியும், இதையெல்லாம் நான் எந்த பள்ளியிலும் படித்து கற்றுக் கொள்ளவில்லை.

முடியவில்லை, ஆண்டுக்கு ஒருவரேனும் இது போல் இந்தி தெரியாததால் வெட்கம் அடைந்தோம் என்று கண்ணீர் வடிக்கிறார்கள்.



இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் ! 

10 நவம்பர், 2009

மஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)

இருமொழி திட்டம் என்ற பெயரில் தேசிய ஒருமைப் பாட்டுக்கு ஏற்ற ஹிந்தி மொழியை தமிழகத்தில் நுழைய விடாமல் செய்துவிட்டனர் திராவிட இன வெறியர்கள். தந்தை பெரியார் என்று அழைக்கப்படும் இராமசாமி இதற்கு தலைமை ஏற்று தேசிய மொழி ஹிந்தியை புறக்கணிக்கச் செய்தார்

ஹிந்தியை பேசவும் எழுதவும் கேட்கவும் முடியாததால் தமிழ்மக்கள் பட்ட துன்பங்களாக சான்றோர்கள் ஆவணப்படுத்துவது,

1. அமிதாப்பச்சன், ஷாருக்கான் போன்ற ஹிந்தி சூப்பர் ஸ்டார்களின் திரைப்படங்களை தமிழக மக்கள் பார்க்க முடியாமல் அவதி உறுகின்றனர்
2. தமிழகத்தில் இருந்து வட இந்தியாவிற்கு சுற்றுலா செல்லும் தமிழக மக்கள் அங்கு எல்லா மாநிலங்களிலும் இருக்கும் ஹிந்தி அறிவிப்புகளை படிக்க முடியாமல் திணறுகின்றனர்
3. தமிழகத்திற்கு தேர்தல் பிரச்சாரத்திற்கும் வரும் தேசியத் தலைவர்களால் இந்திய தாய் மொழியான ஹிந்தியால் உரையாற்ற முடியாமல் போவதால் அவர்களால் தமிழக மக்களோடு மக்களாக பழகவோ, அவர்களை உள்ளப்பூர்வமாக அறிந்து கொள்ளவோ முடியவில்லை
4. பாம்பே மிட்டாய் விற்பவரும், சேட்டுகளும் தமிழ் கற்றுக் கொண்டால் தான் தமிழகத்தில் பிழைக்க முடியும் என்கிற துர்பாக்கிய நிலைக்கு இந்தியாவின் பிற பகுதி மக்கள் தமிழகத்திற்கு பிழைக்க வரும் போது அடைய நேரிடுகிறது
5. ஹிந்தியும், இந்துஸ்தானி இசையும் தமிழக மக்களிடம் அன்னியப்பட்டு நிற்பதால் இந்திய தேசியத்தின் பொது அடையாளமான தேசிய உணர்வுகள் அவமானப்பட்டுக் கிடக்கிறது

ஹிந்தியும் ஹிந்தி பேசுவதன் மகத்துவத்தையும் நாம் உணராததால் வட இந்திய மக்களுடன் நம்மால் ஒற்றுமையுடன் இந்தியாவை பகிர்ந்து கொள்ள முடியவில்லை. இதற்கெல்லாம் காரணம் தமிழ் இனவாத திராவிட சித்தாந்த திராவிட கட்சித் தலைவர்களே.

திராவிட தலைவர்களின் ஹிந்தி எதிர்ப்பு காற்று மகாராஷ்டிரா பக்கமும் வீசிவிட்டதோ என்னவோ, இப்போதெல்லாம் மகாராஷ்டிராவில் ஹிந்தி மொழிக்கும், ஹிந்தி பேசுபவர்களுக்கும் எதிராக வன்முறைகள் நடக்கின்றன. தேசிய மொழி ஹிந்தியில் பதவி பிராமணம் செய்து கொண்டது தவறாம், மஹாராஷ்டிராவில் நடந்த வன்முறைகளைப் இங்கே பாருங்கள், குறிப்பாக அதற்கு வாசகர்களிடம் இருந்து வந்த எதிர்வினையைப் பாருங்கள். திராவிடக் கலாச்சாரம் இந்தியாவையே கெடுத்துக் கொண்டிருக்கிறது. தேசிய உணர்வாளர்களே விழுமின் எழுமின் :)

டிஸ்கி : இந்தப் பதிவு தற்சிந்தனையில், நல்ல மனநிலையில் எழுதியது. சொல்வதெல்லாம் உண்மை :)

எதற்கும் இதையும் படித்துவிடுங்கள் : (வட) இந்தியர்கள் ஆஸ்திரேலியாவில் தாக்கப்படுவது ஏன் - எழுத்தாளர் ஜயமோகன்

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:


அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் !

28 ஆகஸ்ட், 2009

ஜெய்'ஹிந்தி'புரம் !

நண்பர் பீர்/Peer, இந்தி கற்பது பாவச் செயலா ? என்று கேட்டு இருக்கிறார். இந்தி மட்டுமல்ல எந்த ஒரு மொழியையும் கற்பது பாவச் செயலே அல்ல.

//பணிநிமிர்த்தமாகவோ அல்லது சுற்றுலா போன்ற இதர காரணங்களுக்காகவோ தன் தாய் மாநிலத்திற்கு வெளியே செல்லும், எல்லையில் வரையப்பட்டிருக்கும் ஒரு கோட்டைத்தாண்டி செல்லும் ஒருவர் தாய் மொழி தவிர வேறு மொழி தெரியாத போது தான் அனுபவிக்கும் சிரமங்களை சொல்லித்தெரிய வேண்டியதில்லை. 1997ல் மும்பை சென்றபோது நான் அனுபவித்திருக்கிறேன். நம் அண்டை மாநிலமான கேரளா செல்லும் போது மலையாளமும், அதேபோல ஆந்திரா, கர்நாடகா செல்லும் போது தெலுகும், கனடமும் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது சற்று சிரமமே. ஆந்திராவை தாண்டி சென்று விட்டால், ஹிந்தி பொதுமொழியாக இருக்கிறது. ஹிந்தி என்ற ஒரு மொழி பேச தெரிந்தால் பெரும்பாலான வட மாநிலங்களில் சிரமமின்றி தம் தேவையை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஹிந்தி என்ற, இந்தியாவில் பெரும்பாலானோர் பேச்சு மொழியாக கொண்டிருக்கும் மொழியை வெளி மாநிலங்களோடு தொடர்பு இருக்கும் அனைவரும் பேச கற்றுகொள்ளுதல், அவரவர் வாழ்வில் நன்மைபயக்கும். நம் அண்டை மாநிலத்தவர் எப்போதோ இதை ஏற்றுக்கொண்டு விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.//

இவர் குறிப்பிடும் பணி நிமித்தமாக அண்டை நாடுகளுக்கு செல்பவர்கள் 5 விழுக்காடு இருக்கலாம், இதில் படித்தவன் முதல் பாமரன் அனைவரும் அடங்கும். பாமரன் எவனும் நான் இந்திப் படிக்காததால் பிற மாநிலங்களில் கூலி வேலை செய்யமுடிவதில்லை என்று புலம்புவது கிடையாது, தட்டு தடுமாறி மூன்றே மாதங்களில் எந்த மாநிலத்திற்கு செல்கிறார்களோ அந்த மாநில மொழியைக் கற்றுக் கொண்டு சரளமாக பேசுகிறார்கள். படித்தவர்களுக்கு ஆங்கிலம் தெரிவதால் யாரும் இடற்படுவது போல் தெரியவில்லை. இந்திப்படங்கள் புரியவில்லை, இந்தி பெண்களுடன் பேச முடியவில்லை, போன்ற அற்ப காரணங்களுக்காக பிற மாநிலங்களுக்கு செல்லும் 5 விழுக்காட்டினரிலும் ஒரு சிலருக்காக ஏற்கனவே இருக்கும் கல்வி பாடச் சுமையில் மேலும் ஒன்றாக இந்தியையும் 95 விழுக்காட்டினர் படிக்கலாம், படிக்க வேண்டும் என்று சொல்வதில் ஏதேனும் ஞாயம் உண்டா ? அப்படியும் விரும்பிப் படிபவர்களை யாரேனும் கையை பிடித்து தடுக்கிறார்களா ?

இந்தி பிராச்சார சபாவில் 3 வயது முதல் 100 வயது வரை உடையவர்களுக்கு மாதம் 50 ரூபாயில் இந்தி சொல்லிக் கொடுக்கிறார்கள், நான் கூட ஒரு 3 மாதம் சென்று இருக்கிறேன். அதைப் படிக்கலாமே. அதைத் தடுப்பவர்கள் ஏவரேனும் இருக்கிறார்களா ? பெருவாரியான மக்கள் பேசும் மொழியை ஒருவர் தெரிந்து கொண்டால் அம்மக்களோடு கலந்து உறவாட, உரையாட ஏதுவாக இருக்குமாம். இலங்கையில் சிங்களம் தெரியாத தமிழர்கள், தெரிந்த தமிழர்கள் அனைவரும் ஒன்றாகத்தான் நடத்தப்படுகிறார்கள். இந்தியில் சிறப்பாக பாடிய வாணி ஜெயராமுக்கு வாய்ப்புக் கொடுத்தால் நான் பாடமாட்டேன் என்று மிரட்டி வாணி ஜெயராமை சென்னைக்கே திருப்பிய அனுப்ப செய்தவர்தான் இந்தி குயில் (பேரை வேறு சொல்லனுமா ?) இந்தியில் நன்றாக பேசி நடிக்க முடியும் என்று நிரூபணம் செய்த கமலஹாசன் முதல் அனைத்து தென்மாநில நடிகர் அனைவ்ருமே பிடறி தெறிக்க ஓடும்படி துறத்தப்பட்டனர். சாருக்கான் முதல் இந்தி வாலாக்களின் படங்கள் அனைத்து மாநிலங்களிலும் நன்றாக ஒடும் என்பதைத் தவிர்த்து அனைத்து மாநிலங்களுக்கும் ஏதேனும் பொதுப் பயன் இருக்கிறதா ?

கேரளாவில் 50 விழுக்காட்டினர் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள், அப்படிச் செல்லும் போது அவர்கள் இடற்படக் கூடாது எனவே கேரள மாநிலத்தினர் அனைவருக்கும் அரபி கட்டாயப் பாடம் ஆக்கவேண்டும் என்று கேரளா முடிவு செய்தால் அதற்கு இந்தி இடிதாங்கி மைய அரசு அதனை போற்றி பாராட்டி, உதவியும் செய்யுமா ? மொழி அரசியல் தெரியாதவர்கள் தாம் ஒரு சூழலில் இடற்பட்டோம் என்பதை பொதுப் பிரச்சனையாக்குவதில் ஏதேனும் பொது நலம் இருக்கிறதா ? மொழி வலியுறுத்தல் என்பது ஆளுமையின் அடையாளம். மொழியை வைத்து பெரும்பாண்மை சிறுபாண்மை அரசியல் மிகக் கேவலமான பிற்போக்குத் தனம். பெரும்பாண்மையினர் பேசும் மொழி என்று ஒரு மொழியை பொதுப்படுத்தி பிறமொழிகள் பயனற்றவையாக ஒதுக்கும் நிலையும், அழிக்கும் நிலையும் வந்தால் மொழிப் பெரும்பாண்மை ஞாயம் என்றும் அதைப் பொதுப்படுத்த வேண்டும் என்போர் பெரும்பாண்மை புயலால் அழியும் மொழிகளை சீர்படுத்த என்ன நடவடிக்கை எடுப்பார்கள் ? ஒதுங்கிக் கொண்டு... அது சிறுபான்மை மொழிப் பேசுபவர்களின் தலையெழுத்து, அவர்கள் மொழியை பாதுகாப்பது அவர்களின் செயல், அதை செய்யத் தவறிவிட்டார்கள் என்று சொல்லுவார்கள் தானே!

அண்டை மாநிலங்கள் ஏற்றுக் கொண்டுவிட்டதாகச் சொல்கிறார். மும்பையில் மஹாராஷ்டிர மொழியை இந்தி அழித்துவிட்டது என்று அண்மையில் கலவரங்கள் வெடித்தது நண்பருக்கு தெரியாதா ? அல்லது பிற மாநிலக்காரர்கள் சுரணை குறைவாக இருந்து விழித்துக் கொள்ளாமல் இருக்கிறார்கள் என்பதற்காக இப்படி குறிப்பிடுகிறாரா என்று தெரியவில்லை. கர்நாடகாவில் இந்திக்கு எதிராக கலகக் குரல்கள் எப்போது தொடங்கிவிட்டன.

//தமிழ்நாட்டிற்கு வரும் வெளி மாநிலத்தவரும் தமிழ் பேசுவது மகிழ்ச்சியளிப்பது போலவே, சிங்கப்பூர், மலேசியா பொன்ற நாடுகளில் தமிழ் இரண்டாம் மொழியாக இருப்பதால், அங்குவரும் மற்ற இந்திய மாநிலத்தவர் / நாட்டவர் தமிழ் கற்றுக்கொண்டு பேச முயற்சிப்பதும் மகிழ்ச்சியளிக்கிறது.//

இது இவருடைய கற்பனை மட்டுமே, ஆனால் இப்படி பிற மாநிலத்தினர் தமிழை பேச முற்பட முயற்சிப்பது ஒரு சிலர் மட்டுமே. அண்மையில் வட இந்தியர் ஒருவருக்கு செல்பேசியில் தமிழ் ரிங்க் டோனை செல்பேசி நிறுவனம் இணைத்ததற்காக அவர் வானத்துக்கும் பூமிக்கும் குதித்ததை ஜெய் ஹிந்திபுரம் தம்பி அறிந்ததில்லை என்று நினைக்கிறேன். அதன் சுட்டி இங்கே இருக்கிறது, அதில் இருக்கும் பின்னூட்டங்களை கவனமாகப் படிக்கவும்.

பிறமாநிலங்களுக்கு வேலைக்குச் செல்லும் 5 விழுக்காட்டினர் நன்மை பெருபவர்கள் படிக்க வேண்டும் என்பதற்காக மீதம் 95 விழுக்காட்டினருக்கு அது கட்டாயப்பாடமாக்குவதால் 95 விழுக்காட்டினர் பெரும் நன்மைகள் என்ன என்பதை ஜெய்ஹிந்திபுரம் தம்பி பட்டியல் இட்டால் எனது விவாதங்களை தொடருவேன். ஏற்கனவே பொது மொழி தகுதி, இந்தி கட்டாயம் என்று அறியாமையால் பிதற்றுபவர்களுக்காக நான் பல்வேறு பதிவுகளை எழுதி இருக்கிறேன்.

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

8 ஏப்ரல், 2008

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

தேசிய வாத பம்மாத்தில் மிக்கவையாக வலிந்து வலியுறுத்தப்படுவது இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்ற சொல்லாடல். அப்படி ஒன்றும் அரசியல் சட்டத்தில் இல்லை. இனியும் கூட அவ்வாறு இடம் பெற முடியாது. வடஇந்தியாவில் பரவலாகப் பேசப்படுகிறது என்பதைத் தவிர்த்து, அனைந்திந்திய மொழி என்று சொல்லும் தகுதி இந்தி உட்பட இந்திய மொழிகள் எதற்குமே கிடையாது.

பிறகு எப்படி இந்தி தமிழ்நாட்டின் தலை வரை நுழைந்தது ? வரலாறுகளைப் பார்க்க வேண்டும், முகலாயர்கள் காலத்திற்கு முன்பு 'இந்தி' என்ற மொழி இந்தியாவில் இருந்ததற்கான அடையாளமே (ஆதாரம்) இல்லை. முகலாயர்கள் ஆட்சியில், அவர்கள் பேசிய இரானிய பிரிவைச் சேர்ந்த உருதே, வடமொழிகளான சமஸ்கிரதம் மற்றும் பாலி ஆகியவற்றுடன் கலந்து வட்டார மொழி என்ற அளவில் டெல்லி பகுதியில் வழங்கப்பட்டது, இஸ்லாமியர் ஆட்சி இந்தியாவில் விரிவு அடைந்த போது ஆதிக்கத்தின் வழி தெற்கே மைசூர், ஹைதராபாத் வரை இந்தி மொழி பரவலாயிற்று.

தாய்மொழியின் பால் அக்கறை இல்லாதவர்கள் ஈரானிய வட இந்திய மொழிகளை கலந்தே பேசி இந்தி என்ற ஒரு கலப்பு மொழியை உருவாக்கினார்கள். இந்தி - அதை செயற்கை மொழி என்றும் சொல்லலாம், காரணம் எந்த ஒரு இயற்கை மொழியும் தோன்றிய காலகட்டங்கள் பற்றிய ஆராய்ச்சி தவிர்த்து அவை இயற்கை மொழியாக (வெறும் சொல்லாடல் தான்) அறியப்படுவதற்கு அவற்றை எழுதுவதற்கான எழுத்துகளும் அவை பேசப்படும் காலம் முதலே இருக்க வேண்டும்.

இந்தி ஒரு மொழியாக உணரப்பட்ட போது அவற்றை எழுத்துவடிவில் எழுதும் சிக்கலில் எந்த எழுத்துருவை அதற்கு கொடுக்க வேண்டும் என்று முனைந்ததில், சமாஸ்கிரத கிரந்த எழுத்துக்களையே இந்தியை எழுதுவதற்கும் பயன்படுத்த ஆரம்பித்தார்கள். இதுவும் உலக வழக்குதான். எழுத்தில்லாமல் 100க் கணக்கான மொழிகள் எழுத்துவடிவம் பெற்றது எப்படி என்றால் அவை அந்த பகுதியில் எழுத்துடன் புழங்கிவரும் மற்றொரு மொழியின் எழுத்துக்களை ஏற்றுக் கொண்டு அதன் வழியே எழுத்து மொழியாக மாறும். தெற்காசிய மொழிகளில் பாசா மலாய், பாசா இந்தோனேசியா போன்றவைகளுக்கு எழுத்து கிடையாது, அவை ஆங்கில் 26 எழுத்துக்களையே பயன்படுத்தி எழுதப்பட்டு வருகிறது. ஐரோப்பிய மொழி பிரிவுகளிலும் இதே நிலைதான். அவற்றில் எழுத்துக்களின் எண்ணிக்கையும் வடிவத்தில் சற்று மாறுபட்டு இருக்கும்.

பதியப்பட்டுள்ள இந்திய 3000 ஆண்டு வரலாற்றில் 500 ஆண்டுகளுக்கு முன்பு தான் இந்தி, செயற்கையாக உருவானது அதாவது உருது மொழியின் ஒரு பிரிவு, அவற்றில் பழம்பெரும் காப்பியங்களோ, இதிகாச புராணங்களோ இல்லை, இந்தி இலக்கியம் அத்தனையும் 500 ஆண்டுகளுக்குள் ஏற்பட்டவையே, இந்தியில் புதிதாக ஒரு சொல்லை உருவாக்க வேண்டுமென்றால் அது சமஸ்கிரதம் அல்லது உருது மொழியைச் சார்ந்தே அமைக்க முடியும். இந்தி சொம்மொழி கிடையாது.

இந்தியும் உருதுவும் சகோதர மொழிகள் என்பது பலருக்கு தெரியுமா ? உருது பேசுபவர்களுக்கு இந்தி புரியும். இந்தி பேசுபவர்களுக்கு உருதும் புரியும், 60 விழுக்காடு சொற்கள் வரை இரண்டிற்கும் பொதுவாக உள்ளவை. இந்திக்கும் உருதுக்கும் ஒரே பெரிய வேறுபாடு எழுத்து வடிவம் மட்டுமே, உருது அரபு எழுத்துக்களைப் பயன்படுத்துகிறது, இந்தி சமஸ்கிரத எழுத்துக்களை பயன்படுத்துகிறது.

எந்த ஒரு பழம்பெருமையும், முன்னோர்வழி (பாரம்பரிய) இலக்கியமும் அற்ற ஒரு மொழியை தேசிய மொழி என்று சொல்வதில் என்ன பெருமை இருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. அனைவராலும் பேசப்படும் ஒரு மொழி தேசியமொழியாக வரவேண்டும், அதனால அனைவரும் பயன்பெற வேண்டும், அந்த மொழி தாக்கத்தால் மாநில மொழி சீர்கெடக் கூடாது என்றால் அதற்கு சரியான மொழி ஆங்கிலம் தவிர்த்து வேறொரு மொழி இந்தியாவில் இல்லை. 'இந்திய மொழிகளில் உள்ள பழமையான ஒரு மொழியை மட்டுமே, இந்தியாவின் பொது மொழியாக வைத்திருப்பதுதான் இந்தியாவிற்கு பெருமை' என்றால் Sorry to Say அந்த தகுதி இந்திக்கு இல்லவே இல்லை. அதற்கான காரணம் மேற்கண்டது தான்.

இந்தியாவின் தேசிய மொழியாக ஆங்கிலம் இருக்கக் கூடாதா ? என்னைப் பொருத்து இருக்கலாம், அதற்கான பயனும் அளவிடப் பெரியது, அதைவிட மற்றொரு முதன்மைக் காரணம் இந்தி இந்தியாவில் நுழைந்தற்கும் ஆங்கிலம் நுழைந்தற்கும் இடையே உள்ள ஆண்டுகள் வேறுபாடு வெறும் 200 ஆண்டுகளே.

இந்தி வலியுறுத்தப்படுவதற்கு உண்மையிலேயே தேசிய வாதம், பொதுமொழி என்ற காரணங்கள் மட்டும் தானா ? இன்னொரு மறைமுக காரணமும் உண்டு, இந்தி மொழி ஆதிக்க அரசியலும் அதைச் சார்ந்ததே, இந்தி எழுத்துக்களைப் பார்க்கும் போது அது வடமொழி எழுத்துக்களைக் கொண்டிருப்பதால் (இறந்தவர்களின் நிழல்படத்தைப் பார்த்து ஆறுதல் பட்டுக் கொள்வது போல) விட்டுக் கொடுக்கக் கூடாது என்பதற்க்காவே, வடமொழியின் வடிவமாகவே பார்த்து, வடமொழி தேவ பாசை என்று உயர்வு கற்பித்தவர்களே, இந்திக்கு தேசிய அடையாளம் கொடுக்க வேண்டும், இந்தி தேசிய மொழி என்றெல்லாம் பரப்புகிறார்கள், வெறொன்றும் பெரிய காரணம் இல்லை.

வடமொழியை இந்திவழி உயிர்கொடுத்து நடமாட வைக்க முடியும் என்று நினைப்பது வெறும் கற்பனையே, இந்தியைப் போல் வடமொழி பேசப்படும் மொழியாக இருந்ததே இல்லை, எழுதுவத்ற்கு பயன்பட்ட எழுத்து மொழி மட்டுமே, வடமொழி எந்த காலத்திலும் இந்தியாவின் எந்த மாநிலத்திலும் பேசப்பட்ட மொழியாக அறியப்பட்ட வரலாறுகள் இல்லை. அதற்கு உயர்வு கற்பித்து ஒரு குழுவுக்குள் வழங்கி வந்ததாலேயே அதன் வளர்ச்சியும், பரவலும் முடங்கி, கோவில் கருவரை என்ற அளவில் சுறுங்கிவிட்டது.

கிட்டதட்ட மறைந்துவிட்ட மொழியை எப்படியாவது மீட்டெடுக்க வேண்டும் என்று நினைக்கும் வடமொழிப் பற்றாளர்களுக்கு இருக்கும் பதட்டம் / பொறுப்புணர்வு கூட வாழும் மொழியை பேசிக் கொண்டிருக்கும் தமிழர்களுக்கு இல்லை. மொழிக்கலப்பால் தமிழ் அழிந்துவிடுமா கற்பனை பண்ணாதீர்கள் என்கிறார்கள். மொழிக்கலப்பால் மட்டுமே மொழி அழிவதில்லை, புழக்கத்தில் இல்லாமல் போனாலும் கூட மறையும் என்பதற்கு 'நமது' தேவபாசையே சான்றாக இருக்கிறது.

மீண்டும் இடுகை தலைப்பிற்கு வருகிறேன். இந்தியும் இந்தியாவிற்குள் நுழைந்த மொழி, செயற்கை மொழி, எழுத்தில்லாமல் வடமொழி எழுத்துக்களை பயன்படுத்திவரும் மொழி, குறிப்பாக பழம்பெரும் இலக்கியம் இல்லாத மொழி. எந்த தகுதியை வைத்து இந்தியை தேசிய மொழி என்று சொல்ல முடியும் ? அப்படி சொல்ல முனைந்தால் ஆங்கிலத்தைத்தான் முதலில் அப்படி சொல்ல வேண்டும். ஆங்கிலத்தின் பயனும் உலக அளவில் அதன் வீச்சும் கற்றுக் கொண்டால் இந்தியர்களுக்கு உலக அளவில் செயல்படும் தகுதிகளும் பலன்களும் கிட்டும். சீனா நம்மிடம் போட்டியிட திணறுவதற்கு முதன்மை காரணமே சீனர்களுக்கு ஆங்கிலம் வராது அவர்கள் ஆங்கில காலனியாக இருந்தது இல்லை.

மற்றபடி இந்தி மொழி பரவலை தேசிய மொழி என்ற பெயரில் அனுமதித்தால் எப்போதும் வடக்கு வாழ்கிறது தெற்கு தேய்கிறது என்று புலம்பலில் இருக்க வேண்டியதுதான். மொழிகள் எப்போதும் ஆதிக்கம் செலுத்தவே பரப்பப்படுகிறது, முகலாயர்கள் ஆட்சி இந்தியா முழுவதும் பரவியபோது அங்கெல்லம் இந்தியின் ஆதிக்கமே இருக்கிறது என்பதை வைத்து தெரிந்து கொள்ளலாம், இது வட நாடு முழுவதும், தென்நாட்டில் சில மாநிலங்களிலும் ஆதிக்கதின்
வழியாக நுழைந்திருப்பது கண்கூடு.

ஆங்கிலம் ஆங்கில காலனி ஆதிக்கத்தால் ஏற்பட்ட திணிப்பு ஏற்றுக் கொள்ள வேண்டுமா என்றால், இந்தியும் முகலாய (ஈரானிய) ஆதிக்கத்தின் வழியான திணிப்பே. ஆண்டுகள் இடையே தான் வேறுபாடு. இந்தியர்களுக்கு ஆங்கிலத்தின் பயன்பாடு இந்தியுடன் ஒப்பிடுகையில் அளவிட முடியாதது.

தமிழ் சிறந்த மொழிதானே அது ஏன் பரவவில்லை ?
தமிழர்கள் எங்கும் ஆதிக்கம் செலுத்த முற்பட்டதாகவோ அதற்கு கருவியாக(ஆயுதமாக) தமிழை பயன்படுத்தினார்கள் என்ற வரலாறு கிடையாது. சோழர்கள் கடாரம் போன்ற நாடுகளை வென்றதுடன் திரும்பிவிட்டார்கள் அங்கேயே தங்கிவிடவில்லை.ஆசிய நாடுகளில் பரவி இருக்கும் தமிழ் ? அதை தமிழகள் தவிர யாரும் பேசுவதும் இல்லை. மக்கள் பரவியதைத் தொடர்ந்து தாய் தமிழையும் பேசிவருகிறார்கள். என் மொழியை பேசுங்கள், உயர்வானது என்று தமிழன் எவரிடமும் வலிந்து தனது மொழியை திணித்தது கிடையாது.

உண்மையான தேச ஒற்றுமை, பொது மொழி வேண்டுமென்றால் ஆங்கிலமே அதற்கான தீர்வு.
ஆங்கிலேயர்கள் ஆண்ட காலத்திலேயேயும் பொது மொழியாக ஆங்கிலம் தான் இருந்தது. ஆங்கிலம் கற்றுக் கொள்வதன் மூலம் தேச ஒற்றுமை என்ன உலக ஒற்றுமையே போற்ற முடியும்
:)

பின்குறிப்பு : இங்கே இந்தி மொழியை குறைத்து மதிப்பிட்டு, அதனை ஏளனம் செய்ய வில்லை. தம்மை ஏளனம் செய்யாத பிறமொழிகளை ஏளனம் செய்யும் தகுதி எவருக்கும் கிடையாது, இங்கே 'இந்தி' அதன் உருவாக்கம் தன்மை, பயன்பாடு, அதன் தாக்கம் பற்றி எழுதி இருக்கிறேன். இந்தி மீது எனக்கு எந்த வெறுப்பும் கிடையாது.

15 நவம்பர், 2007

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

//இந்தியன் என்று சொல்லிக் கொண்டு வெளிநாடு வந்து எல்லோருடனும் கலக்கும் போது இந்திப் பரீட்சியம் என்பது இன்றியமையாதது. முடிந்தால் இந்தி கற்றுக் கொள்ளுங்கள். நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம். இந்தியும், ஆங்கிலம் போல் ஒரு மொழிதான். கற்றுக் கொள்ளுங்கள். அப்போதும் இந்தியும், தமிழும் கலந்து பேசாதீர்கள்.

வாழ்க நற்றமிழர். - நா.கண்ணன்//


நா.கண்ணன் ஐயா அவர்களே,

இந்தி வேண்டும்...... இந்தி வேண்டும் ..... தமிழர்கள் இந்தி படிக்க வேண்டும், மீண்டும் இந்தி கட்டாயமாக்கப் பட வேண்டும், இதுபோன்ற குரல்கள் மென்மையாகவும், கோபமாகவும், 'நல்லெண்ண அடிப்படையிலும்' போன்ற பலவழிகளில் அவ்வப்போது வெளிப்படுகிறது. இதற்கு பலரும் பலவழிகளில் பதில் சொல்லியாயிற்று அப்படியும், இதுபோல் எப்போதாவது ஒன்றை யாராவது விதைத்துவிட்டு செல்வார்கள். இவர்கள் வைத்திருக்கும் இந்தி சார்ந்த நம்பிக்கை அல்லது இவர்களுக்கு நம்ம வைக்கப்படது, என்ன வென்றால்

1. இந்தி இந்தியாவின் தேசிய மொழி
2. இந்தி தெரியாதவன் இந்தியன் அல்ல
3. இந்தி பிடிக்காதவன் தேச துரோகி

நா.கண்ணன் ஐயா இதில், நீங்கள் எந்த கருத்தைக் கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை.
இந்தி தேசிய மொழி கிடையாது, இந்தி சில மாநிலங்களில் அதிகமாக பேசப்படும் ஒரு இந்திய மொழி. வெளி நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறவர்களுக்கு ஓரளவுக்கு ஆங்கில அறிவு இருக்கும், எனவே அவர்களிடம் உரையாடுவதற்கு ஆங்கிலத்தை விட இந்தி இயல்பானது என்பதை கண்ணன் ஐயா, எப்படி நம்புகிறீர்கள் என்று தெரியவில்லை. இதையெல்லாம் விட வழக்கமாக சிலர் 'இந்தி படிக்கவிடாமல் பெரியாரும், அண்ணாவும் என் தலையில் மண்ணைப் போட்டுவிட்டார்கள்' என்பதை' வேறு மாதிரி 'நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்' சொல்லி இருக்கிறீர்கள்,

நா. கண்ணன் ஐயா அவர்களே, எந்த விதத்தில் பாழாய் போனோம் ? என்று சொல்லி இருந்தால் எம்போன்ற முட்டாள்களும் தெரிந்து கொண்டு உங்களுடன் சேர்ந்து இந்திக்கு கொடி பிடிப்போம். பொத்தாம் பொதுவாக நாங்கள் 'வீணாப் போனாம், காணாப் போனோம்' என்று சொல்வது எளிது, புழுதி வாரி தூற்றுபவர்கள் இதை செய்வார்கள், நீங்கள் அவ்வாறு செய்பவர் இல்லை என்பதால் விளக்கம் அளித்தீர்கள் என்றால் நன்று. எனக்கும் இந்தி தெரியாது, பல வடநாட்டினர்களை சந்தித்திருக்கிறேன், நான் அவர்களுடன் ஆங்கிலத்தில் பேசுகிறேன், இந்தி படிக்காததால் 'பாழாய் போனதாக நினைத்தது' இல்லை. இப்போது கூட நீங்கள் 'ZEE' டிவி அல்லது எதோ ஒரு இந்தி சானல் தொலைக்காட்சிகளை 3-6 மாதம் பார்த்தீர்கள் என்றால் அப்பறம் அமிதாப்பச்சனுக்கே நீங்கள் இந்தி டூயூசன் எடுக்க முடியும். எனவே அடிப்படை கல்வி வழியாக இலவசமாக கிடைக்க இருந்த இந்தியை படிக்க விடாமால் தடுக்கப்பட்டதால் 'பாழாய் போனோம்' என்பது தவறான வாதமாக படுகிறாது, முமபைக்கு வேலைக்கு செல்லும் பெயிண்டர், கொத்தனார்,
3 மாதத்தில் இந்தி பேச ஆரம்பித்து விடுகிறார்கள், மலாய் என்ற மொழியைப் பற்றி கேள்விப்பட்டிருக்காத தமிழர்கள் மலேசியாவில் வேலைக்குச் சென்றால் 6 மாதம் தான் பேசவும், படிக்கவும். மேலும் அதை யாரும் சொல்லிக் கொடுக்க வேண்டும் என்ற நிலையே இல்லாது கற்றுகொள்வர்.

தேவையின் காரணமாக எவர் வேண்டுமானாலும் எந்த மொழியையும் படிக்க முடியும், அல்லது விரும்புவர்கள் முன்கூட்டியே படித்துவிட முடியும். அதற்கு தடையில்லை, ஆனால் உங்கள் கருத்து 'இந்தி படிப்பது என்பது பொதுத் தேவை, தேவை மிக்கது, தவிர்த்தால் எங்களைப் போன்று சிரமப்படுவீர்கள்' என்பது போல் ஒலிக்கிறது. என்றோ ஒரு நாள் ஒரு இந்தி காரனை சந்தித்து 'ஆப்கா நாம் ஹை?' என்று கேட்பதற்கு இந்தி தெரியவில்லை என்றால் சிரமப்படுவீர்கள் என்று சொல்வது மிகைப்படுத்தல்.

வெளிநாட்டை விடுங்கள், இந்தியாவில் மும்பையில் வழக்கறிஞர் பிரபு இராஜதுரை அவர்கள் 6 ஆண்டுகள் இருந்தாராம், ஹிந்தி தெரியததால் இயல்பு வாழ்க்கை பாழாகி விடவில்லை என்று சொன்னார். காமராஜருக்கு இந்தி தெரியவில்லை. ஆனாலும் அவர் அகில இந்திய காங்கிரஸ் தலைவராக இருந்தார். அவரெல்லாம் பாதிக்கப்படாத போது நீங்கள் 'பாழாய் போனது எப்படி ?' என்று சொன்னால் பலரும் திருந்த வாய்ப்பு உள்ளது

சிங்கைக்கு வேலைக்கு வரும் உடல் உழைப்பு ஊழியர் எவருக்கும் இந்தி தெரியாது, அவர்கள் ஓரளவுக்கு ஆங்கிலம் படித்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், அவர்கள் இந்தி அறிந்து வந்து என்ன செய்யப் போகிறார்கள் ? எனக்கு தெரிந்து மற்ற மொழிக்காரர்களை விட தமிழர்களே வெளிநாட்டில் அதிகம் வசிக்கின்றனர், எனவே வெளிநாட்டுக்கு செல்ல விரும்பும் இந்தியர்கள் தமிழ் படிப்பது அவசியம் என்று ஒரு கட்டுரையை ஆங்கிலத்தில் எழுதி வடமாநிலத்தில் அதை ஒரு கருத்தாக உங்களால் விதைக்க முடியுமா ?

தமிழ்நாட்டில் இந்தி நுழைந்திருந்தால் நடக்கும் நன்மைகள்,

இந்தி தெரிந்தே பாம்பே மிட்டாய் விற்கிறவர்களும் தமிழ்நாட்டில் இருக்கிறார்கள், 'நிக்கிறான், 'உட்கார்ரான்' என்று தட்டு தடுமாறி தமிழ் பேசுகிற சவுக்கார் பேட்டை சேட்டுகளுக்கும் இருக்கிறார்கள் அவர்கள் தமிழ்பேசி சிரமப் பட வேண்டி இருக்காது,

சாருக்கான்களும், சல்மான்கான்களும் சென்னை வீதிகளில் போஸ்டர்களில் சிரிப்பார்கள், காங்கிரஸ் தலைவரோ, வாஜ்பாயோ வணக்கம் என்று தமிழில் தடுமாறிச் சொல்லி புழகாங்கிதம் அடைய வேண்டி இருக்காது.

தமிழ் திரைப்படமோ, தமிழ் தொலைகாட்சிகளோ இந்த அளவுக்கு வளர்ந்து தொல்லைக் கொடுக்காத அளவுக்கு அவற்றை இந்தி தாம் கட்டுக்குள் வைத்திருக்கும்.

***************

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு மொழி உண்டு, அதனால் தான் இந்தியாவை மொழி வாரி மாநிலங்களாக பிரித்திருக்கிறார்கள், காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தால் இந்தி சுதந்திர போராட்ட காலத்திற்கு முன்பே பல மாநிலங்களில் பரவியது, இஸ்லாமிய படையெடுப்புக்கு பின்னரே, 'இந்தி' என்ற ஒரு மொழி உருது,இந்துஸ்தானி,மற்றும் சமஸ்கிரதம் ஆகியவற்றின் கலவையால் பிற்காலத்தில் எற்பட்ட கலவை மொழி, எழுத்து வடிவமாக சமஸ்கிரத கிரந்த எழுத்துக்களை ஏற்றுக் கொண்டுள்ளது, பாபர் காலத்துக்கு முன்பு 'இந்தி என்ற ஒரு மொழி இருந்தது இல்லை. பாகிஸ்தானில் பேசும் உருதும், இந்தியும் ஒன்று தெரிந்தவர்கள் மற்றதை பேசும் போது புரிந்து கொள்வார்கள். உருதின் எழுத்து வடிவம் அரபு எழுத்துக்கள், இந்தி 'தேசியவாதிகளின்' மொழி ஆதலால் சமஸ்கிரத எழுத்தை கொண்டிருக்கிறது. சிலர் சமஸ்கிரதத்தை இந்தியை வாழவைத்தால் மீட்டுவிடலாம் என்று நம்பிக் கொண்டுள்ளனர். :) அது தவறான நம்பிக்கை. பேசுவதும் வழக்கில் இல்லாததாலும், புதிய ஆக்கங்கள் எதுவும் ஏற்படாததால் சமஸ்கிரத எழுத்தை மட்டுமே காக்க முடியும், மொழியை அல்ல.


தொடர்புடைய மற்ற எனது கட்டுரைகள் :

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !
இந்தி யா ?

12 செப்டம்பர், 2007

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !

தேசியம் என்ற கட்டமைப்பில்... இந்து தேசியம் என்ற சொல்லில் பெரும்பாண்மையினரை நிலைநிறுத்த முயற்சிப்பது போலவே, தேசிய மொழி என்ற பெயரில் இந்தி ஓட்டகம் ஒவ்வொரு மாநிலத்திலும் தலையை நுழைத்து அங்கு இருக்கும் மொழிகளை காலி செய்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் மாராட்டிய மொழி பேசுபவர்கள் குறைந்து, மராட்டிய மொழி திரைப்பட தொழிலும் நசிந்து அந்த இடத்தை இந்தி ஆக்கிரமித்துக் கொண்டாதாக சொல்கிறார்கள்.. இந்த பிரச்சனை தற்பொழுது கர்நாடகாவில் பூதகரமாக உருவெடுத்து வருகிறது.

இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை நேசிக்காதவர்கள் போலவும், தேச விரோதிகள் போலவும் அந்த அந்த மாநிலத்தில் இருக்கும் இந்தி 'அபிமானிகளால்' தூற்றப்படுகிறார்கள். இந்திய மாநிலங்கள் அனைத்தும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டதே அந்த அந்த மொழிக்கள் பேசும் மக்கள் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும், வட்டார மொழிகள் பாது காக்கப்படவேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் தானே. இந்திய தேசியம் என்றால் வேற்றுமையில் ஒற்றுமை அடிப்படையில் அதில் ஒருங்கிணைந்த பல்வேறு மாநிலங்களுக்கும் அவற்றில் பேசப்படும் மொழிகளுக்க்கும் முதன்வைத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தான் முதன்மையானதாக இருக்க முடியும், இல்லை என்றால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது பொருளற்றது.

தேசிய கட்சிகள் இந்தியா முழுவதும் தேர்தல் பிராசாரம் செய்வதற்கு எளிதாக இருக்கும் என்பதைத் தவிர்த்து இந்தி மொழியின் இந்திய நிலப்பரப்பு தழுவிய பயன் வேறு எதுவும் இருக்கிறதா ?

மராட்டிய மாநிலத்தை விழுங்கியதைப் பார்த்தும், பிறமொழி படங்களால் கன்னட திரையுலகம் நசிந்து வருவதைப் பார்த்தும், மாநிலமுழுவதும் இந்தியின் ஆக்கிரமிப்பால் நம் அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு விழிப்பு ஏற்பட்டுள்ளது.ஏனென்றால் மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் மருந்துக்கு கூட கன்னட மொழி பயன்படுத்தப்படவில்லை,
இந்தி விளம்பர சொற்றொடரை (வாசகத்தை) ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள் அதனால் கன்னடம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கன்னட வலைப்பூக்களில் வந்து கொண்டிருக்கின்றன. கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைகளை வலியுறுத்தி பரவலாக பேசுகிறார்கள்.

இந்தி அறிந்தால் இந்தி சீரியல் / சினிமா பார்க்கலாம் என்ற பலனைத்தவிர மொழிவாரி மாநிலத்தவர் கண்ட பலன் வேறு எதுமில்லை. கர்நாடகாவில் நகர்புறங்களில் பேச்சுவழக்கில் இருந்து கன்னடம் முற்றிலும் மறைய கூடிய நிலையில் இருப்பதாக வெளிப்படையாக சொல்கிறார்கள். 'இந்தி' தேசிய மொழி என்பது முட்டாள் தனாமான வாதம் என்று தற்பொழுது கண்டு கொண்டிருக்கிறார்கள். விழித்துக் கொண்டதை பாராட்டுவோம். திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழுக்கு அடுத்து பழைமையான மொழி என்றால் கன்னடம் தான். திராவிட மொழிகளான கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியவற்றிற்கு செம்மொழி தகுதிகள் இருக்கின்றன என்று பாவாணர் ஆய்ந்து சொல்லி இருக்கிறார். செம்மொழி தகுதிக்கு கன்னடியர்கள் முயன்றுவருவதால் தற்பொழுதி இந்தி ஆக்கிரமிப்பு வெளிப்படையாக அவர்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.

மொழிவாரி மாநிலங்களின் தத்தம் மொழிகளை தொலைத்துவிட்டால் அந்தந்த மாநிலங்களின் பண்பாடும் சேர்ந்தே தொலைந்து போகும். இந்தி தேசிய மொழி என்று இந்திய சட்டஅமைப்பில் இல்லாத போது ... இந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை என்பதோ, தேசியத்திற்கு எதிரானவன் என்று சொல்லும் விஷமத்தனங்கள் கண்டிக்க தகுந்தவை. மாநிலங்களின் மொழியை விழுங்கி ஏப்பமிடவும், புறக்கணிக்கவும் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளும் இந்தி மொழிக் கொள்கை என்ன வகையான தேசிய வாதம் ?


ஒரு கன்னடியரின் இந்திக்கு எதிரான மனநிலையில் வெளிப்பட்ட கருத்து கீழே,

vasant ಅಂತಾರೆ:
nudi-gudi blog inda kaDa tandaddu:

The three pronged approach (through administration, education and media / entertainment) of central govt to impose Hindi has met with success to a considerable degree in some of the states of India. Many of the languages like Bhojpuri, Maithili, Santhali, Rajasthani, Haryanvi, etc have been systematically reduced to "dialects" of Hindi. Many other languages like Punjabi, Marwari, Gujarati, Bengali, Marathi have lost their entertainment industries and are happy entertaining themselves in Hindi, an alien language to most people living in those states. Students in most of the states have been brainwashed that Hindi is the national language of India. Loyalty and patriotism to the nation has been reduced to acceptance of Hindi as the sole "National" and "Link" language. Any Indian having a different opinion on this is branded as not being nationalist enough! A bigger problem this has created is the false sense of superiority in the Hindi speakers. Their expectation that the whole of India speaks Hindi, their reluctance to learn the language of the place they settle in, arrogance that they display in their interaction with fellow non-Hindi speaking Indians is the biggest threat to national integration.
8. I never knew all this was happening. I am aware of this issue now. What should I do?
• Be aware that Hindi is not the ONLY national language of India. All the languages spoken in India are National languages. Please create this awareness in people around you.
• If you are residing in non-Hindi states, ensure that you conduct all the transactions at central government offices and banks in the language of the land or English. Do not use Hindi.
• Boycott Hindi films and music in non-Hindi speaking states. Encourage the media and entertainment industry of the place you live.
• Boycott schools and colleges that teach ONLY Hindi and not the local language in non-Hindi states.
• In non-Hindi states, converse with Hindi speakers in the language of the land or English. Do not converse / transact with them in Hindi.



அன்புடன்,

கோவி.கண்ணன்

18 ஜூலை, 2007

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

சிங்கை விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனை முடிந்து காத்திருக்கும் இடத்தில் இருவர் பேசிக் கொண்டது காதில் விழுந்தது. பொதுவாக மற்றவர்கள் பேசுவதில் நாம் கவனம் கொள்வதற்கு அந்த விடயம் கொஞ்சமேனும் நாம் அறிந்து வைத்திருப்பவராகவோ, அதுபற்றிய ஆர்வமுடையவராகவோ இருக்கவேண்டும், அப்படி இருந்தால் உன்னிப்பாக என்ன பேசுகிறார்கள் என்று கவனிக்கவே செய்வோம்.

பேசிக் கொண்டிருந்தவர்கள் ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் இல்லாதாவர்கள் என்பதும் அவர் பரஸ்பரம் பக்கத்து இருக்கையில் அமர்ந்து கொண்டு இருப்பதால் நேர போக்கிற்கு (டைம் பாஸ்) பேசிகிறார்கள் என்பதும் அந்த இடத்திற்கு முன் இருக்கையில் முன்பே அமர்ந்துவிட்டதால் எனக்கு புரிந்தது. முதலாமவர்,

"சார்... எந்த ஊர் ?"

"சென்னையில் தான் ******* ஒர்க் பண்ணுகிறேன்...ஒரு பிசினஸ் விசயமாக வந்தேன்...நீங்க ?"

"நானும் சென்னைதான்..."

"ஓகோ"

பெயர்களை சொல்லிக் கொண்டார்கள்

முதலாமவர்,

"சார்... எனக்கு நோய்டாவில் நல்ல பொசினில் வேலை கிடைச்சு ...டெல்லி பக்கம் சென்றிருக்க வேண்டியது"

"ஏன் என்ன ஆச்சு ?"

"இண்டர்வூயூ எல்லாம் நல்லாதான் பண்ணினேன். அவன் கேட்ட அனைத்து தகுதியும் என்னிடம் இருந்தது"

"!!!???"

"கடைசியாக ஒண்ணே ஒண்ணு கேட்டுவிட்டு ... வேலை இல்லை என்று சொல்லிவிட்டாங்க "

"என்ன சார் கேட்டாங்க ?"

"இந்தி எழுதப்படிக்க தெரியுமான்னு கேட்டாங்க"

"ஏன் உங்களுக்கு தெரியாதா ?"

"போங்க சார், நம்ம அரசியல் வாதிங்க நம்மை எங்கே சார் ஹிந்தி படிக்க விட்டாங்க...?"

"ஆமாம்..."

"இவங்க போராட்டம் நடத்தி இந்தியை துறத்தியதால் நாம பாதிக்கப்படுகிறோம்..."

"புரியுதுங்க சரிதான்"

"கேடுகெட்ட அரசியல் வாதிங்க சார் "

இதுவரை பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்தவர்... உசுப்பேற்றலால் அவரும் சும்மா இருந்தால் அரசியல், நாட்டு நடப்பு ஒண்ணும் தெரியாதவர் என்று நினைத்துவிடுவார் என நினைத்தாரோ, என்னவோ... பிறகு அரசியல் வாதிக்கு எதிராகவும், இந்திக்கு ஆதரவாகவும் கருத்துக்களைச் சொல்ல ஆரம்பித்தார்

"ஆமாங்க...எல்லாம் பச்சை அரசியல்தனம், நாம் தான் பாதிக்கப்டுகிறோம்"

"அண்ணாதுரை என்ற புண்ணியவான் ஆரம்பிச்சு வச்ச இந்தி எதிர்ப்பு போராட்டம்...இப்பவும் அதை பிடித்து தொங்குறாங்க"

"நாட்டை கொடுத்துட்டானுங்க சார்...காங்கிரஸ் ஆட்சி பரவாயில்லை"

இதுக்கு மேல் பேச்சு செல்லவதற்குள் அனைவருக்கும் அழைப்பு வரவே விமானத்துக்குள் சென்றோம்

********************************************
அது உண்மை சம்பவம் தான்...

இப்படித்தான் திட்டமிட்டே பொது இடத்தில் முன்பின் தெரியாவதர்களிடம் கருத்துக்கள் பரப்பப்பட்டும், திரிக்கப்பட்டும் சொல்லப்படுகிறது. ஒன்றும் தெரியாதவராக ஒருவர் இருந்துவிட்டால் போதும் அவரையும் சேர்த்தே தலையாட்ட வைத்து எதிர்ப்புக்கு ஆள் சேர்த்துவிடுவார்கள்.

இந்தி தெரியாத தமிழ்நாடு இந்தியாவில் முன்னேற்றத்தில் பின்தங்கி இருக்கிறது? இந்தி தெரிந்த பீகார் முன்னேறி இருக்கிறது ?

"இந்தி திணிப்பு மறுத்தல்" என்பதை "இந்தி எதிர்ப்பு" என்று மட்டுமே திரித்து இன்னும் எத்தனைக் காலத்துக்கு அதையே சொல்லி ஏமாற்றுவார்களோ ?

விருப்பப்பட்டவங்க போய் படிங்க யார் வேண்டாம் என்றது. உமக்கு பிடிகிறதே என்பதற்காக நானும் மற்றும் என்னைப் போன்ற பலரும் ஏன் அந்த வேண்டாத ஒன்றை பிடித்து தொங்கிக் கொண்டிருக்கவேண்டும் ? மொழி கற்றுக் கொள்வது என்பது வேறு... இந்த மொழியை கற்றுக் கொள் என்று திணிப்பது வேறு. இந்த அடிப்படை தெரியாமல் "இந்தி வேண்டும் !" என்று பிதற்றியும் அதற்கு ஆதரவாக திரிப்பவர்களிடம் எச்சரிக்கை தேவை.

15 மே, 2006

இந்தி யா ?

ச்சே கருணாநிதி இந்தி படிக்காம விட்டதால நான் கேவலப்பட்டு போய்டேன் என்று நண்பர்கள் சிலர் புலம்புவது போல சாடமுயல்வது சிலபதிவுகளில் படிக்க நேர்ந்தது.

தமிழர்கள் அனைவரும் காஷ்மிர் முதல் கன்னியாக குமரி வரை நேசனல் பர்மிட் லாரி ஓட்டுவதற்காக தவம் செய்வது போலவும் இந்தி தெரியாததால் அத்தகைய வேலை வாய்ப்புகளை பெற்றோர் சிலர் அவமானப்படுபது போல சொல்ல விழைகிறார்கள். நம் தமிழ்னாட்டிருந்து பஞ்சம் பிழைக்க வட மானிலங்களுக்கு செல்வோர்கள் பலர் அடிப்படையில் இந்தி தெரியாதவர்கள். அவர்களுக்கு படிப்பு அறிவும் கூடக் குறைவே. அத்தகையோர் ஆறே மாதங்களில் நன்றாகவே இந்தியில் வெளுத்து வாங்குகிறார்கள்.

இந்த மெத்தப் படித்த மேதாவிகள் தாங்களுக்கு உள்வாங்கும் திறன் குறைவு என்று ஒப்புக் கொள்ளாமல், கருணாநிதியும், அண்ணாவும் குறுக்கே நின்றார்கள் என்று சொல்லுகிறார்கள். இன்று உலகமயம் பற்றி பேசுகிறோம், எல்லோரும் வேறு வேறு நாடுகளுக்கு சென்று பணியாற்றுகிறோம். வேலை நிமித்தமாக ஜெர்மன் சென்ற ஒருவர் அங்கு தடுமாறினால் தான் இந்தியனாக இருப்பதால்தான் இந்த தடுமாற்றம். அதுவும் இந்தியாவில் ஜெர்மன் சொல்லிக் கொடுக்கப்படவில்லை அதனால் தான் தனக்கு இந்த இழிநிலை என்றும் சொல்லுவாரா ?

யாரோ சிலர் ஏதோ காரணத்தால் வடநாட்டுக்கு வேலைக்கு செல்வதற்காக மொத்த தமிழகத்திலும் இந்தி நுழைய வைத்து தேவையற்றோரும் கட்டாயமாக படிக்க வேண்டுமாம். இந்தி படிக்கவேண்டாம் என்று யாரும் பிரம்பை வைத்துக் கொண்டு நிற்கவில்லை. கட்டாயமாக்கப் படக்கூடாது என்று மட்டுமே சொல்லுகிறார்கள்.

குறிப்பாக தமிழர்களுக்கு அடிப்படையில் எந்த ஒரு மொழியையும் எளிதில் கற்றுக்கொள்ளும் திறன் இருக்கிறது. தமிழ் நாட்டிலிருந்தும், கேரளாவிலிருந்தும் அரபு நாடுகளுக்கு வேலைக்கு செல்வோர்கள் வடநாட்டிற்கு செல்வதைக் காட்டிலும் பல மடங்கு அதிகம். அத்தகையோர் அரபி அறிந்து கொண்டா செல்கிறார்கள்? அல்லது கேரள அரசும், தமிழக அரசும் அரபியை பாடத்திட்டத்தில் வைக்கவில்லை என்று புலம்புகிறார்களா? அரபு தேசத்திலிருந்து திரும்பும் அனைவரும் நன்றாக அரபி பேசுகிறார்கள். பெரும்பாலும் படித்தவர்களாக இருப்பவர்கள் அவர்களுக்கு நடுவில் ஆங்கிலத்தில் உறையாடுகிறார்கள். அவர்களுக்கு அரபியும் தேவை யில்லாமல் போய்விடுகிறது.

இவர்களின் இந்தி பிரேம வாதப்படி தமிழர்கள் அனைவரும் இந்திபடிக்கவேண்டும் என்பது சரியென்றால், தமிழகத்தில் வாழும் சவுக்கார்பேட்டை சேட்டுகளுக்கும், சேட்டுகளிடம் சென்று அடகு வைக்கும் போது பேரம் பேச மட்டுமே அது தமிழர்களுக்கு பயனளிக்கும்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்