பின்பற்றுபவர்கள்

28 டிசம்பர், 2013

குட்டி இந்தியா கலவரம் பற்றி ...

சிங்கையில் இவ்வளவு நடந்திருக்கிறது, சிங்கையில் இருக்கும் இவரு ஏன் வாயத்திறக்காமல் இருக்காருன்னு பலர் நினைக்கக் கூடும், நேரமின்மைத் தவிர்த்து, இந்தியசார்பு ஊடகங்களில் இவை எவ்வாறெல்லாம் திரித்து எழுதப்பட்டு, உணர்ச்சி தூண்டுதலை உருவாக்குகிறார்கள் என்று கவனித்து வந்தேன்.

சென்ற டிச 9 ஆம் தேதி அலுவலகம் சென்ற பிறகு தான் முதல்நாள் இரவு குட்டி இந்தியாவில் கலவரம் நடந்தது பற்றி தெரியவந்தது. இந்தியர்கள் குறிப்பாக ஒப்பந்த பணிக்கு முகவர்களிடம் லட்சக்கணக்கில் பணம் கட்டி வந்தவர்கள் இவ்வாறு நடந்து கொண்டனர் என்பது தெரிய வந்ததும் மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது, 'உங்காளுங்க ...?' என்பது போல் பிற இனத்தவரும், வட இந்தியர்களும் நம்மைப் பார்த்து பார்வையிலேயே கேட்கும் பொழுது விட்டுக் கொடுக்க முடியாமலும், மென்று விழுங்க முடியாமலும் கொஞ்சம் அவமானமாக கூனிக்குறுகியது உண்மை.

ஒப்பந்த வேலைக்கு வந்தவர்கள் பொத்திக் கொண்டு இருக்க வேண்டும் என்கிற கருத்தில் எனக்கு உடன்பாடு இல்லை, ஆனாலும் இவ்வளவு உணர்ச்சிவசப்பட்ட கூட்டம் அங்கு சென்றிருக்கும் சீனர்களை தாக்கி இருந்தால் நிலமையின் விபரீதம் குறித்து அச்சமுற்றேன். கலவரம் ஏற்படுத்தியவர்களுக்கு இவ்வளவு கோபம் ஏன் என்பது புரியாத புதிராகவே இருக்கிறது, என்னைக் கேட்டால், எடுத்துக்காட்டிற்கு ஒரு சிலர் குடித்திருக்கும் ஒரு பெரிய கூட்டத்தில் கல் எரியும் போது ஏற்படும் கொந்தளிப்பிற்கு பிறகு அவற்றை பார்க்கும் பொழுது ஒட்டுமொத்தமாக ஏற்படும் கோபம் அதனால்  'உணர்ச்சிவசப்படுதல்' என்பது தவிர்த்து பெரிய காரணம் இல்லை. ஒரு விபத்தில் / விபத்தாக ஏற்பட்ட மரணமும், அதில் இரத்த்தை கண்டதால் ஏற்பட்ட கட்டுக்கடங்காத கோபமும் இந்த  கலவரத்தை ஏற்படுத்தி இருக்கும் என்றே கருதுகிறேன்.

இங்கு வேலைக்கு ஆள் எடுக்கும் நிறுவனங்கள் எதுவும் ஒப்பந்த ஊழியார்களுக்கு சிங்கப்பூரின் கட்டுப்பாடுகள் குறித்து தெளிவாக சொல்வது கிடையாது, இங்கு எந்த ஒருகாரணத்திற்காகவும் வேலை புறக்கணிப்பு அல்லது எந்த போராட்டமும் செய்வதற்கு அனுமதி இல்லை, குறைகளை மனித வள அமைச்சிடம் தெரிவிக்கலாம். எந்த ஓரு ஆயுதம் ஏந்திய தாக்குதல் என்றாலும் கடுமையான தண்டனைகள் உண்டு இதற்கு சிங்கப்பூர்வாசிகளுக்கும் சிறப்பு சலுகை எதுவும் கிடையாது. சிங்கப்பூரில் குப்பைப் போடக்கூடாது, எச்சில் துப்பக் கூடாது என்று வேலைக்கு எடுப்பவர்களிடம் முகவர்கள் சொல்கிறார்களே அன்றி, வேலை புறக்கணிப்பு போராட்டம் மற்றும் கலவரம் செய்தால் கிடைக்கும் தண்டனைகள் குறித்து தெளிவாக அறிவுறுத்துவதில்லை, இதற்கு காரணம் இவ்வாறெல்லாம் நடக்காது என்கிற அசட்டுதனமான நம்பிக்கை அல்லது முற்றிலும் எதிர்பார்க்கவில்லை என்று கூறலாம்.

சிங்கபூரின் பொருளாதாரம் வெளிநாட்டு நிறுவனங்களின் முதலீடுகள், சுற்றுலாத் துறை இவற்றை நம்பியே இருக்கிறது, தவிர தனிமனித பாதுகாப்புக்கும், அவர்களது உடமைகளுக்கும் முதன்மைத்துவம் கொடுப்பதால் பெண்களால் இரவு இரண்டு மணிக்கு மேல் கூட வேலையில் இருந்து வீட்டுக்கு தனியாகவே திரும்ப முடிகிறது, இவை அனைத்தையும் கெடுக்கும் துவக்கமாக கலவரம் நடந்ததுவிட்டதோ என்று நினைக்க சிங்கப்பூரின் எதிர்காலம் / பொருளாதாரம் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக் கூடாது, இவற்றை ஒடுக்கவேண்டும், கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு தண்டனை தரவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை.

இந்தியர்கள் / தமிழர்கள் கூட்டமாக இருந்தாலும் கலவரம் செய்யமாட்டார்கள் என்று நம்பித்தான் அரசு அவர்களை பொது இடத்தில் கூடவும், குடிப்பதைக் கூட கண்டும்காணமால் இருந்தது, இப்படிக் கொடுத்த நல்ல வாய்ப்பை கெடுத்துவிட்டார்கள் என்பதே தமிழர்களின் மனநிலையாக உள்ளது, இவர்களால் அந்தப்பகுதி வியாபாரிகளுக்கும் பெருத்த நட்டம், நிலைமை பழையபடிக்கு திரும்ப ஆறுமாதகாலம் கூட ஆகலாம், ஏற்கனவே ஞாயிற்றுக்கிழமை குட்டி இந்தியாவிற்கு செல்வதையே பலர் தவிர்க்கும் பொழுது அந்த எண்ணிக்கையை மேலும் மிகுதியாக்கிவிட்டது இந்த நிகழ்வு.

இந்த பிரச்சனையில் அறிக்கைவிடுகிறேன் என்கிற பெயரில் தமிழக அரசியல்வாதிகளும், சன் தொலைகாட்சியில் நடந்து கொண்டது மிகவும் அநாகரீகம், பொத்தாம் பொதுவாக இனக்கலவரம், தமிழர்கள் தாக்கப்படுகிறார்கள், முடங்கிக்கிடக்கிறார்கள் என்றெல்லாம் அறிக்கைவிட்டார்கள், இந்தியாவில் / தமிழகத்தில் கலவரத்திற்கு பிறகு நடக்கும் 'விசாரணைகளை' ஒப்பிட லிட்டில் இந்தியா பகுதிகளிலும், ஒப்பந்தப் பணியாளர்கள் தங்கி இருந்த விடுதிகளிலும் நடந்த விசாரணைகள் மிகவும் கண்ணியமானவை. அமைச்சரே நேரில் சென்று தவறு செய்யாதவர்கள் யாரும் அச்சப்படத் தேவை இல்லை என்று ஆறுதல் கூறிவந்தார்.


அடிப்பட்டு உருக்குலைந்த ஆம்புலென்ஸ் உள்ளிட்டு, அங்கு பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் உண்டு என்பதால் அப்பாவிகள் யாரும் தண்டிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள் என்றே நம்புகிறோம்

இந்திய ஊடகங்களுக்கும், அரசியல்வாதிகளுக்கும் சொல்லிக் கொள்வது என்னவென்றால் சிங்கையில் மத / இனப்பாகுபாடுகள் பார்த்து சிங்கை அரசு செயல்படுவது கிடையாது, திறமை உள்ளவர்கள் முன்னுக்கு வருவதை அரசு ஊக்குவிக்கிறது, இதற்கு எந்த ஒரு இனமும் /மதமும் விதிவிலக்கு இல்லை, எந்த ஒரு இனத்திற்கும் தனிப்பட்ட சலுகைகளை அரசு வழங்குவது இல்லை, அரசைப் பொருத்தவரை சிங்கப்பூர் பல இன சமூகம், அதன் ஒற்றுமைகள் எந்தவிதத்திலும் கெட்டுவிடக்கூடாது என்பதில் உறுதியாகவே இருக்கிறது.

இந்தியா உள்ளிட்ட மற்ற நாடுகளை ஒப்பிட குடியுரிமை பெற்ற / நிரந்தரவாச இந்தியர்கள் / தமிழர்கள் பாதுகாப்புடனும், நல்லவசதியுடனும் மகிழ்வுடனும் இருக்கிறார்கள். வெளிநாட்டு ஒப்பந்த ஊழியர்களுக்கும் வேலை இடத்தில் முறையான பாதுகாப்பும், ஊதியத்தேதிக்கு அன்றே ஒப்பந்தம் செய்த ஊதியம் அளிக்கப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பது தவிர்த்து ஒப்பந்த ஊழியர்களின் பாதுகாப்பு 100 விழுக்காடு உறுதி செய்யப்படுகிறது. முற்றிலும் எதிர்பாராத விபத்திற்கும் உரிய இழப்பீடு வழங்கப்படுகிறது. இவ்வெறெல்லாம் இந்தியா உள்ளிட்ட வேறுநாடுகளிலும் நடக்கிறதா என்பதே கேள்விக்குறி. எனவே அரசியல்வாதிகளும் தமிழக செய்தி இதழ்களும் கண்ணியத்துடனும் உண்மைகளை விசாரித்த பிறகே எழுதவும், தேவையற்ற இனப்பூசல்களுக்கான தூபம் சிங்கப்பூருக்கு வெளியே ஏற்படுத்துவது ஒரு நாட்டினரின் மேல் இருக்கும் பொறாமை / பெறுப்பின்மை என்று நினைக்கத் தோன்றுகிறது.

நடந்த கலவரத்தை பெரிதுபடுத்தாமல் சிங்கப்பூரும் சிங்கப்பூர் வாழ்தமிழ்மக்களும் மென்மேலும் வளருவார்கள்.

6 டிசம்பர், 2013

சத்தமில்லாமல் பணம் சு(ருட்)டும் பட்ஜெட் விமான சேவைகள் !

கட்டுபடியான கட்டண சேவை என்ற அளவில் பட்ஜெட் விமான சேவைகள் கொடிகட்டி பறக்கின்றன, இதன் மூலம் நடுத்தர வர்கம் விமான சேவையைப் பயன்படுத்தி ஓரளவு பிற நாடுகளையும் பார்த்து உள்நாட்டிலும் பயணிக்க வசதியாக உள்ளது. ஆனால் பட்ஜெட் விமானங்களுக்கு குறைந்த கட்டணம் எப்படி வாய்ப்புக் கூறு ஆகிறது என்று பார்த்தால் மயக்கம் போடும் அளவுக்கு அதன் பின்புலன்கள் நம்மை வியக்க வைக்கின்றன. 

ஒரு பட்ஜெட் விமானத்தில் முன்பே திட்டமிருந்தால் ஒரு ஆண்டுக்கு முன்பு முன்பதிவு செய்துவிட்டால் கட்டணம் மிக மிகக் குறைவு.ஆனால் இவ்வாறு திட்டமிட்டு பயணம் செய்பவர்கள் மிகக் குறைவே, இதனை தூண்டும் விதமாக 75 வெள்ளிக்கு சென்னை - சிங்கப்பூர் என்று குறிப்பிட்ட தேதிக்கான சிறப்புக் கட்டணம் என்று கூறி ஆறுமாதம் முன்பு விளம்பரம் செய்வார்கள், 75 வெள்ளிகள் என்றால் இந்திய ரூபாய்க்கு 3750. இது ஒருவழிக்கு மட்டுமே திரும்பும் கட்டணம் 75 வெள்ளி ஆக 7500 ரூபாய். பொதுவான விமானக் கட்டணம் 15,000 ரூபாய் என்றால் இது அதில் பாதி அளவே என்பதால் சரி முன்பதிவு செய்வோம் என்று முண்டியடித்து பலர் முன்பதிவு செய்துவிடுவார். விமான சிறப்பு கட்டண விளம்பரத்தில் தெளிவாக தேதி மாற்ற முடியாது மாற்றினால் கட்டணத் தொகை திரும்ப கிடைக்காது என்பதையும் குறிப்பிட்டுவிடுவார்கள்.

இவ்வாறு முன்பதிவு செய்தவர்களில் குறிப்பிட்ட தேதியில்  பயணிக்க விடுப்பு மற்றும் உடல் நிலை ஒத்துழைப்பு கிடைப்பவர்கள் சரிபாதியோ அல்லது அதற்கு சற்று மேலும் கூட இருக்கலாம். குறிப்பிட்ட நாளில் விமான சேவைக்கு தடங்கல் ஏற்பட்டால் வேறு தேதிக்கு பயணச் சீட்டு தருவார்கள் என்றாலும் அன்றைக்கும் செல்ல முடிந்தவர்கள் கனிசமாக குறைந்துவிடுவர். முன்பதிவு செய்தவர்களில் 50 விழுக்காட்டினர் வரமுடியாத நிலையில் விமானம் பறக்கும், வரமுடியாதவர்கள் கட்டியப் பணம் அம்பேல் தான். 75 வெள்ளி பயணச் சீட்டில் 25 வெள்ளி இருக்கைக்கும், 50 வெள்ளி அரசாங்க வரிக்கும் செல்லும், பயணி வராத நிலையில் 50 வெள்ளியை அரசாங்கத்திற்கு செலுத்த தேவை இல்லை என்ற விதி இருப்பதால், அவையும் சேர்த்தே விமான நிறுவன பாக்கெட்டிற்கு சென்றுவிடும்.

இவ்வாறு பயணிகள் பயணிக்காமல் விமான சேவை அரசு வரியாக பட்ஜெட் விமான நிறுவனங்களுக்கு கிடைக்கும்  பணம் ஆண்டுக்கு பல மில்லியன்கள். எந்த அரசும் பயணிக்காத விமான சீட்டுக்கு வரி வாங்க முடியாது என்பது விதி எனவே பட்ஜேட் விமான நிறுவனங்கள் பணத்தால் நிறம்பியே இருக்கும்.

பயணச் சீட்டுக்கு வரியாக கட்டிய பணத்தை திரும்பப் பெரும் உரிமை முன்பதிவு செய்தவருக்கு உண்டு என்றாலும், அவற்றை தந்திரமாக தன் வசம் வைத்திக் கொள்ளவும் பட்ஜெட் விமான நிறுவனங்கள் பல வழிகளை கையாளுக்கின்றன, பயணிக்க இயலாத நிலையில் 50 வெள்ளி வரியாக செலுத்திய பணத்தை திரும்ப பெறலாம் என்று நிறுவனத்தை அழைத்தால், கண்டிப்பாக தருவோம் ஆனால் அதற்கு நடைமுறைக் கட்டணம் (Process / Admin Fee) 100 வெள்ளி ஆகும் என்று கூறுவார்கள், யாராவது 50 வெள்ளியை திரும்ப வாங்க 100 வெள்ளி செலவு செய்ய முன்வருவார்களா ? அவ்வாறு வந்தாலும் அதிலும் பட்ஜெட் விமானங்கள் இன்னும் ஒரு 50 வெள்ளியை கரந்துவிடும்.

இந்த குளறுபடி ஏமாற்று எல்லாம் உலகில் உள்ள அனைத்து அரசுகளுக்கும் தெரிந்தாலும் எல்லோருமே ஒட்டுமொத்தமாக மவுனியாகத்தான் இதனை பார்த்துக் கொண்டு இருக்கிறார்கள்.

ஒருவரால் குறிப்பிட்ட தேதியில் பயணிக்க முடியாமல் போனால் குறிப்பிட்ட விமான பயணச்சீட்டை வேண்டாம் (Cancel) என்று பதிந்துவிட்டால் வரியில் ஒருபகுதி அரசிற்கு செல்லுமாம், இல்லை என்றால் மொத்தமாக அரசுக்கும், பயணிக்கும் பட்டை நாமம்.

இப்ப தான் தெரிகிறது நம்ம தமிழ் நாட்டு சகோதரர்கள் ஏன் பட்ஜெட் விமான நிறுவன சேவையிலும் கால் பதித்தார்கள் என்பதே.

தொடுப்புகள் :

10 நவம்பர், 2013

சந்தானம் நடிக்கும் படங்களில் 'சரக்கு' இருக்கு !

இன்னிக்கு (தட்ஸ் தமிழ்) செய்திகளில் "ஒரு பொண்ணை சைட் அடிக்கிறாங்க... தவறாம டாஸ்மாக்ல சரக்கடிக்கிறாங்க' - ராதிகா காட்டம்" என்ற செய்தியும் இடம் பெற்றிருந்தது.

அதைப் படித்துக் கொண்டு வரும் பொழுது வாசகர் 'கருத்தில்' படுமோசமாக ராதிகாவின் திருமண வாழ்க்கையை கொச்சைப்படுத்தி விமர்சித்திருந்தனர். ஒரு பெண் திருமணம் ஆகாமலேயே இருந்தால் அவளையும் சமூகம் நல்ல பார்வையில் / விமர்சனத்தில் வைப்பதில்லை, விதவைகளையும் நிம்மதியாக இருக்கவிடுவதில்லை, மறுமணம் செய்துக் கொள்பவர்களையும் பாராட்டாவிட்டாலும் தூற்றாமல் இருப்பதில்லை. ஒரு பெண் பாலியல் தொழிலாளியாக இருந்தால் அவளுடைய தொழிலைவிட கேவலமாக அவளை சொல்லித் தூற்ற ஏதேனும் உண்டா என்று ஆராய்ச்சி நடத்தும் நம் சமுகம். ஒரு பெண் எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை (ஆண்) சமூகம் முடிவு செய்வதும், தீர்ப்பு சொல்வதுமாக இருக்கும் வரை பெண் விடுதலை பெற்றுவிற்றாள் என்று சொல்ல எதுவும் இல்லை. ஒரு பெண் மறுமணம் செய்து கொள்வது கூட சமூக இழிவு என்பது போல் சித்தரிக்கும் கும்பல் செய்தி ஊடகங்களிலும் சமூக தளங்களிலும் எழுதுவது இன்றைய அறிவியல் வளர்ச்சியை தவறாக பயன்படுத்திக் கொள்ளும் 21ஆம் நூற்றாண்டின் இழிந்த நிலை என்று தான் சொல்ல முடியும்.

சரி ராதிகா சொன்ன கருத்திற்கு வருகிறேன், ராதிகா எந்த நடிகர் குறித்து அந்த கருத்தை சொன்னார் என்று தெரியவில்லை, அவரது ஆஸ்தான திமுக இளைஞர் அணி தலைவர் முக.ஸ்டாலின் அவருடைய புதல்வர் நடித்த ஒ.க.ஒ.க படத்திலும் கூட மேற்கண்ட காட்சிகள் உண்டு, எனவே பொதுவாக இப்போது வரும் படங்களில் 'சரக்கு' இல்லாத படங்கள் வெகு அரிது.






குறிப்பாக சந்தானம் இடம் பெறும் நகைச்சுவை காட்சிகளில் பாரும் (குடியகம்), பீரும் இல்லாத படங்களே சொற்பம் தான். செண்டி'மண்டுகள்' நிறைந்த  திரை உலகில் சந்தானம் ஹீரோவுடன் தண்ணி அடிக்கும் காட்சி வைத்தால் படம் 'சூப்பர் ஹிட்' என்கிற நம்பிக்கை உலவும் போல, தொடர்ந்து அவர் நடித்து வெளி வந்த படங்களில் 'தண்ணி அடிக்கும்' காட்சிகள் இடம் பெற்றே வருகின்றன.

மக்களுக்கு கட்டுபாடுகள் இல்லாத நாடுகளில் சட்டம் போட்டு தான் கட்டுப்படுத்துவார்கள். புகைப்பிடிப்பதை காட்சியாக வைக்கும் பொழுது தன்னை மானசீக தலைவனாக நினைக்கும் ரசிகர்கள் அதே பாதையில் சென்றுவிடுவார்கள் / பொது இடத்தில் புகைப்பதை பற்றி சற்றும் கவலைப்படமாட்டார்கள் என்பதை நடிகர் ஒப்புக் கொள்வதில்லை, அரசு தடைகாரணமாக இப்பொழுது (ஸ்டைலாக) புகைப்பிடிக்கும் காட்சிகள் படங்களில் வருவதில்லை, அதனால் தான் அடுத்தவங்க மூக்கில் நேராக புகையை விட்டு முகம் சுளிக்க வைக்கும் பொது இடப் புகைப்பழக்கம் குறைந்தும் வருகிறது.

திரையுலகின் ஓவ்வொரு அசைவும் சமூகத்தில் ஏதாவது ஒரு பாதிப்பை ஏற்படுத்ததான் செய்கின்றன, இல்லை என்றால் நமக்கு திரையுலகை சார்ந்தவர்கள் முதலமைச்சர் ஆகுவதற்கான வாய்ப்பே இல்லை. 

அந்த பொறுப்பை உணர்ந்தால் இயக்குனர்கள் மக்களை தவறான பாதைக்கு திருப்ப மாட்டார்கள், நடிகர்களும் தம்மை வைத்து இத்தகைய காட்சி வேண்டாம் என்று கூறுவார்கள். 

ரசிகர்கள் பார்வைக்கு பாரில் வைக்கும் காட்சிகளைப் பற்றி சந்தானம் போன்ற வளரும் நடிகர்கள் சிந்திக்க வேண்டும். ராதிகா சொல்வதை நான் முழுமையாக ஆதரிக்கிறேன்.

21 அக்டோபர், 2013

சிங்கப்பூர் கோவில்கள் தானே எழுந்தவையா ?

இன்னிக்கு சிங்கப்பூரில் மாரியம்மன் கோவில் தீமிதி, பெருமாள் கோவில் செரங்கூன் சாலையில் இருந்து டாங்க் சாலை வரை கிட்டதட்ட 4 கிமி சாலை தடுப்புகள் அமைக்கப்பட்டு போக்குவரவுக்கு இடையூரா வண்ணம், தீ மிதிக்கு அன்பர்களுக்கு வழி அமைத்துக் கொடுத்து பாதுகாவலர்களையும் அமர்த்தி நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற அரசு சார்பு ஏற்பாடுகளையும் செய்துள்ளது சிங்கப்பூர் அரசு, இது போன்று தைபூசம் காவடிக்கும் அரசு தரப்பு சிங்கப்பூர் வாழ் தமிழர்களை மதித்து ஏற்பாடுகளை செய்யும், சாலை போக்குவரத்தில் குறிப்பிட்ட மணிகளுக்கு ஒரு சில மாற்றங்களையும் செய்துகொடுப்பார்கள். தமிழர்கள் சிறுபான்மை சமூகமாக வாழும் சூழலில் இத்தகைய ஏற்பாடுகள் (மலேசியா தவிர்த்து) வேறு நாடுகளில் எங்கும் கிடைக்காத ஒன்று. 

இன்றைக்கு 4000 ஆண்கள் தீ மிதிக்கிறார்களாம். வெறும் முற்போக்கு சிந்தனை என்றால் 'என்ன கருமாந்திரம், நாடுவிட்டு நாடு வந்து வாழ்ந்தாலும்' தீ மிதி சாமியாடுவது, தீச்சட்டி என்று பழமையிலே வாழ்கிறார்களே என்கிற எண்ணம்  எனக்கு இருந்திருக்கும், ஆனால் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தி அதைத் தொடர இங்கு குடியேறியவர்கள் எத்தகைய முயற்சிகளையெல்லாம் எடுத்திருக்கக் கூடும் என்று நினைக்க அவர்களை பாராட்டவும், பெருமை கொள்ளவும் நேர்கிறது, சிங்கப்பூர் இந்திய சமூகம் என்பவை இன்றைக்கு எங்களைப் போன்று படித்தவர்களாக பாதுக்காப்புடன் குடும்பமாக குடியேறியவர்களும் அல்லர், வெள்ளைக்காரனின் எடுபிடி ஆட்களாக இங்கேயே தங்கும் சூழலில் கலப்பினங்களை மணந்து உறவுகளைப் பெருக்கிக் கொண்டும், தமிழகத்தில் இருந்து உறவுக்காரர்களை மணந்து பெருகிக் கொண்டர்வளாகவும் பெருகியவர்கள் தாம். 

தம்மை பெருளாதாரத்தில் வளர்த்துக் கொள்ளாவிட்டாலும் சமூமாக முன்னேறுவதன் மூலம், வரும்கால வாரிசுகள் சமூகம் ஏற்படுத்தி வைக்கும் வசதி வாய்ப்புகளைப் பெருக்கிக் கொண்டு முன்னேறும் என்ற  நம்பிக்கையுடன் தமிழ் சார்ந்த அமைப்புகளையும், கோவில்களையும் ஏற்படுத்து வைத்துள்ளனர், இங்கும் சாதிகளுக்கு பாத்தியப்பட்ட கோவில்கள் உள்ளன என்றாலும் யார் யார் கோவிலுக்கு வரலாம் என்ற வரையறையெல்லாம் எதுவும் கிடையாது கோவிலுக்கு ஏற்ற உடையுடன் செருப்பு அணியாமல் யார் வேண்டுமானாலும் கோவில்களுக்கு சென்று வரலாம், சிங்கப்பூர் இந்தியர்களில் (தமிழர்களில், இவர்களெல்லாம் இந்திய சுதந்திரத்திற்கு முன்பே வந்தவர்கள், ஏன் தமிழர்கள் என்று சொல்லிக் கொள்ளாமல் இந்தியர்கள் என்கிறார்கள் என்பதற்கு காரணம் பெரிய நிலப்பரப்பை சொல்வது சமூகம் சார்ந்த அடையாளத்தில் கூடுதல் மதிப்பை தரும் என்கிற எண்ணமாகக் கூட இருக்கலாம்) இந்துக்கள் மட்டுமின்றி, தமிழ் கிறித்துவர்கள் மற்றும் தமிழ் இஸ்லாமியர்களுக்கும் தேவலயங்கள் மற்றும் மசூதிகள் உள்ளன.



கடந்த 30 ஆண்டுகளுக்கு எங்களைப் போன்று குடியேறியவர்கள் முன்பு குடியேறியவர்கள் அமைத்துள்ள வசதி வாய்ப்புகளைத் தான் பயன்படுத்திக் கொள்கிறோம், சிங்கப்பூரில் முருங்கைகாயும், பனங்கெழங்கும் கிடைக்கிறதென்றால் அவற்றை விற்பனை செய்யும் கடைகள் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பே உருவானவைதான், செரங்கூன் சாலைக்கு சென்றால் தமிழகத்தின் பகுதி போல் தோன்றும், மனதிற்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் இவையெல்லாம் ஒரே இரவில் உருவானவை அல்ல.  இவற்றை இன்னும் மிகுதிப்படுத்தி இருக்க முடியும்.

ஆனால் கடந்த 50 ஆண்டுகளில் தமிழகத்தில் இருந்து சிங்கப்பூரில் குடியேறியவகளில் 50 விழுக்காட்டினருக்கும் மேல் சேற்றில் ஒரு காலும் ஆற்றில் ஒருகாலுமாக இங்கே ஈட்டுவதை தமிழத்தில் சொத்துவாங்குவது அங்கு 'சிங்கப்பூர்காரர்' என்ற புகழுடன் வாழ்வதையே விருப்பமாகக் கொண்டு செயல்பட்டதால் சீனர்களைப் போல் மிகப் பெரிய தொழில் அதிபர்களாகவோ, சிங்கப்பூரில் சொத்து வைத்திருப்பவர்களாகவோ இந்திய சமூகம் பெரிய அளவில் வளர்ந்திருக்கவில்லை, சீனர்களில் பணக்காரர்கள் 10 விழுக்காடு என்றால் 10 விழுக்காடே வசிக்கும் இந்தியர்களில் பணக்காரர்கள் 1000ல் ஒருவர் அல்லது இருவர் மட்டுமே.

முகவரிடம் பணம் கட்டி தனியாக வேலைக்கு வந்தவர்கள் தவிர்த்து, சிங்கப்பூரில் குடும்பமாக வசித்தவர்கள் இந்தியாவில் சொத்துவாங்காமல் இங்கேயே முதலீடு செய்திருந்தால் இந்திய சமூகம் தன்னிறைவு அடைந்திருக்கும், ஆனால் எங்கு கடைசிகாலம் என்பதை குழப்பி குழப்பி இந்தியாவில் சொத்து வாங்கி அங்கேயும் சென்று வசிக்காமல், தானும் அனுபிக்காமல் சொந்தக்காரனை சொத்து அனுபவிக்கவிட்டவர்களால் தான் நம்மால் பெரிய அளவில் சமுக உயர்வை பெற முடியவில்லை என்பதை இங்குள்ள பெரிசுகள் ஒப்புக் கொள்கிறார்கள்.

இந்தியாவில் குறைந்த கல்விகட்டணம் மற்றும் இட ஒதிக்கீட்டில் படித்து அங்கு சில ஆண்டுகள் வேலை செய்துவிட்டு, இங்கே வந்து இங்குள்ள இந்தியர்கள் கழிவறைகளில் வேலைபார்ப்பதைப் பார்க்கும் பொழுது முகம் சுளித்து (நம்ம சமூகத்திற்கு தலைகுணிவு என்றெண்ணி அவர்களுடன் பேச விரும்பாதவர்களே மிகுதி. இங்கேயே பிறந்தவர்கள் ஏன் இந்த வேலையை செய்கிறார்கள் என்று வருபவர்கள் யாரும் சிந்திப்பதே கிடையாது, கழிவறையில் வேலைபார்க்கும் சிங்கப்பூர் இந்தியர்கள் பெரும்பாலும் 50 வயதிற்கு மேற்பட்டவர்களே, அவற்றிற்கும் கீழே உள்ளவர்களில் படிக்காதவர்கள் ஓட்டுனர் வேலைக்கும், பாதுகாவலர் வேலைக்கும் சென்றுவிடுகிறார்கள், ஆனால் தற்பொழுது 25க்கு உட்பட்ட இளைஞர்கள், பெண்கள் உள்ளிட்ட அனைவருமே படிப்பில் ஆர்வத்துடன் இருப்பதுடன் நல்ல வேலைக்கும் செல்கிறார்கள்.

தற்போதைய குடியேறிகளான எங்களுக்கு உறவுக்காரர்கள் கூட இல்லை என்பதைத் தவிர்த்து பெரிதாக குறை எதுவும் இல்லை, அதும் இன்றைய அலைபேசி வசதியிலும் தீர்ந்துவிடுகிறது, பட்ஜெட் விமானத்தில் ரூபாயில் 10,000 நேரடியாக சென்று பார்த்துவிடலாம், இணையத்திலும் வீடியோ வழியாக பார்க்க முடிகிறது, 50 ஆண்டுகளுக்கு முன்பு குடியேறியவர்கள் நிலமை ?

வெளிநாடுகளில் எங்கேயாவது நம் பண்பாட்டு சார்ந்த வழிபாட்டுத் தளங்களுக்கு சென்றால் அங்கு உள்ள கடவுளை கும்பிடுவதற்கு முன் இவற்றை நமக்காக ஆக்கி வைத்திருப்பவர்களையும் நன்றியோடு நினையுங்கள். நான் சொல்வது சென்னைக் கூட பொருந்தும், படித்துவிட்டு சென்னைக்கு குடியேறுபவர்கள் சென்னைக்காக எதை கிள்ளிப் போட்டார்கள் ?

8 செப்டம்பர், 2013

மூணு கோடு தெரிஞ்சா ! (சிறுகதை மாதிரி) !

என்கூட வேலை பார்த்த நண்பர் ஒருவர், திருமணம் ஆகி இரண்டு ஆண்டு ஆகியது, திருமணம் ஆன புதிதில் அரபு நாட்டுக்கு (கணிணி) வேலைக்கு சென்றவர், உடன் மனைவியை அழைத்துச் செல்ல போதிய சூழல் அமையாததால் ஒரு ஆறுமாதம் அவர் மட்டும் வேலை பார்த்துவிட்டு பின்னர் ஒரு முகவர் வழியாக சிங்கப்பூருக்கு வேலைக்கு வந்தார், இங்கு சிங்கையில் சுமார் ஒராண்டு வேலை பார்த்துவிட்டு நான் பணிபுரிந்த நிறுவனத்திற்கு வேலைக்கு வந்த பிறகு என்னுடன் அறிமுகமானார், வயது வேறுபாட்டால் என்னை அண்ணன் என்று தான் அழைப்பார், பிறகு சிங்கைக்கு மனைவியை அழைத்து வருவதாக சொல்லி அழைத்து வந்து தங்கி இருந்தார். ஓரளவு என்னிடம் தனது சொந்த வாழ்க்கை விவரங்களையும் சொல்லுவார், ஆலோசனை கேட்பார். நம்மீது மதிப்பு மரியாதையும் வைத்திருக்கிறார் என்பதால் நானும் ஆலோசனைகளை (இலவசம் என்பதால்) வாரி வழங்குவதுண்டு.

"அண்ணே.....இந்த மாசமும் பெயிலியர் ஆகிப் போச்சுண்ணே......கலியாணம் ஆகி இரண்டு ஆண்டு ஆச்சு.......எல்லோரும் கேக்க ஆரம்பித்துவிட்டார்கள்' என்று தன் மனைவிக்க்கு இன்னும் குழந்தை உருவாகவில்லை என்று வருத்தத்துடன் சொல்லுவார்.

"எல்லாத்துக்கு நேரம் வரனும், ஆரோக்கியமான உடல் இருக்கும் போது  ஏன் கவலைப்படுறிங்க, பதட்டப்படாமல் உங்க வேலையை சரியா பாருங்க.......எல்லாம் நடக்கும் போது நடக்கும்.......இது ஒண்ணும் கம்ப சூத்திரம் இல்லை, சாதாரண காம சூத்திரம்... 99 விழுக்காட்டினருக்கு பெரிசா முயற்சி எடுக்கும் படி இயற்கை சோதிக்காது...எல்லாம் நேரக் கணக்கு மட்டும் தான்...இந்த மாசம் சரியா அமையவில்லை என்றால் அடுத்த மாதம்......என்னமோ கலியாணம் ஆகி 10 வருசம் ஆன மாதிரி கவலைப்படுறே.......இப்பதான் நீங்க இரண்டு பேருமே நீண்ட நாள் கூடவே இருப்பது போல் அமைச்சுருக்கு.....வேலையைப் பாரு...நல்லது நடக்கும்' என்று சற்று நகைச்சுவையாக சொன்னேன்.

"உங்க வாக்கு பலிக்குணும்ணே" என்றார்

நானும் அவரும் இணைந்து வேலை பார்த்தது என்னவே வெறும் இரண்டு மாதங்கள் தான், நான் அந்த வேலையை விட்டு வந்த பின்னர், ஒரு நாள் எனக்கு அழைத்துச் சொன்னார்

"அண்ணே......10 நாள் தள்ளிப் போச்சு.......இன்னிக்கு டாக்டரிடம் கூட்டிப் போகிறேன்......எல்லாம் நல்ல செய்தியாக வரும்' னு நினைக்கிறேன்.

"நல்வாழ்த்துகள், இங்கே யாரும் சொந்தக்காரங்க கிடையாது, நீ தான் நல்லா பார்த்துக் கொள்ளனும்" என்றேன்

அடுத்த நாள் அலைபேசியில் அழைத்து

"கன்பார்ம் ஆயிடுச்சிண்ணே, ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கு.......உங்க வாய் முகூர்தம்" என்றார்

"நல்லது, நல்வாழ்த்துகள், சாயங்காலம் தினமும் மாலையில் நடக்க கூட்டிச் செல், சத்தானதெல்லாம் வாங்கிக் கொடு, ஆசைப் பட்டதெல்லாம் வாங்கிக் கொடு..நீயும் கொஞ்ச நாளைக்கு ..........சும்மா இரு"

"புரியுதுண்ணே, தாங்க்ஸ்" என்றார்.

அதன் பிறகு 10 நாளுக்கு ஒருமுறையாவது பேசுவார், ஐந்து மாதம் ஓடியது, ஒரு நாள் அழைத்து

"அண்ணே.......ஸ்கேனிங்க்ல பொம்பள புள்ளைன்னு சொல்லிட்டாங்க.......என் பொண்டாட்டி அழறா"

(எதிரில் இருந்திருந்தால் கண்டிப்பாக திட்டி இருப்பேன். அவரு கடவுள் நம்பிக்கை உள்ளவர் என்பதால்)

"....ம் மூணு கோடு தெரிஞ்சா இது கண்டிப்பாக இராமன் இல்லை......சீதா லட்சுமி  உனக்கு பிறக்கப் போறா ....ஏன் உனக்கு பொம்பள புள்ளை புடிக்காதா ?"



"என் உள் மனது எனக்கு முதலில் ஆம்பள புள்ளை தான் சொன்னது.......ஸ்கேனிங்கில் மூணு கோடு தெரியுது அதனால் பொம்பள புள்ளைன்னு சொல்றாங்க......ஸ்கேனிங்க் தப்பாகாவும் காட்டும் தானே......மாற வாய்ப்பு இருக்கா......உங்களுக்கு சொன்னதெல்லாம் சரியா இருந்துச்சா"

"யோவ்.....எந்த குழந்தையாக இருந்தால் என்ன ? என்னமோ 10 புள்ளை பெத்து அது அத்தனையும் பொட்டப் புள்ளையாக ஆனது போல் புலம்புறே....."

"இல்லண்ணே என் உள் மனசு....."

"இங்கெல்லாம் ஸ்கேனிங் ரிசல்ட் மாற வாய்பே இல்லை, குழந்தை பாக்கியமே இல்லைன்னு 10 - 15 ஆண்டு தவம் இருக்கிறவங்கெல்லாம் இருக்காங்க, உன்னை மாதிரி ஆளுங்க....முதலில் குழந்தை உண்டாகலனு புலம்புவிங்க அப்பறம் நடந்த பிறகு உங்க விருப்பு வெறுப்ப எதிர்ப்பார்ப்புன்னு நிறைய வச்சிக்குவிங்க.....ஊரான் பொம்பள புள்ளை பெத்தா நீங்க கட்டிகுவிங்க...... நீங்க பெத்துகனும்னா....கசக்குதா ?"

"இல்லண்ணே என் மனைவி தான் அழறாங்க...முதலில் ஆண் குழந்தைண்ணா.......அடுத்து ஆணோ பெண்ணோ பிரச்சனை இருக்காதில்லே.......?"

(என்ன கொடுமை சாமி இது ஆண்குழந்தைக்கு பிறகு ஆண் குழந்தையே பிறந்தால் பிரச்சனை இல்லையாம், அதாவது இரண்டு குழந்தையும் ஆணாகவே இருந்தால் பிரச்சனை இல்லையாம்....இரண்டும் பெண்ணா பிறந்தால் மட்டும் தான் பிரச்சனையாம்)

"முதலில் நீ அது போல் நினைப்பது தவறு, பசங்க தான் பெற்றவர்களை நட்டாற்றில் விட்டுறானுங்க, இந்தகாலத்து பொம்பளை புள்ளைங்க மாமியார் மாமனாரை விரட்டிவிட்டு தன்னோட அம்மா அப்பாவை நல்லா பார்த்துக்கிறாங்க"

"சரிதான்.......ஆனா என் மனைவி ஆம்பள புள்ளை பிறக்கனும் தான் ஆசை பட்டாங்க"

"நீ அவங்கள என்ன பாடுபடுத்தினியோ இதே மாதிரி தனக்கும் ஒரு பெண் பிறந்து படனுமான்னு அவங்க நினச்சிருக்கலாம்.....இல்லேண்ண ஒரு பெண்ணே தனக்கு பொம்பள புள்ளை பிறக்கக் கூடாதுன்னு நினைப்பாங்களா ?"

"நான் ஒண்ணும் படுத்தல, நான் தான் அவளை சமாதானம் பண்ணி வச்சிருக்கேன்"

"ஆம்பள புள்ள தான் வேணுனு நினைக்கிறே......அது பிறந்து ஒரு வேளை உடல் குறைபாட்டோடு பிறந்துட்டா மகிழ்ச்சியாக இருக்குமா ? (சற்று கடுமையாகவே) பிறக்கும் பொழுது சரியாக ஆணாக பிறந்து வளர்ந்த பிறகு இரண்டும் கெட்டானாக போனால் இதுக்கு எனக்கு பொம்பள புள்ளையே பிறந்திருக்கலாம்னனு நினைப்பே இல்லை ?"

"புரியுது......எனக்கு முதலில் பெண் குழந்தைதான், ஸ்கேனிங்கில்  மாறினாலும் மாறும்னு இனி நினைக்க மாட்டேண்ணே......ஆண்டவன் முடிவு பண்ணிட்டான்.......அடுத்தது ஆண்குழந்தை பிறக்கும்னு நம்புறேன்"

"அப்பாடா......முதல் குழந்தையை நல்லபடி பெற்றெடுங்க.......ஒரு இரண்டும் மூணு ஆண்டுகள் ஆகட்டும்.....அப்பறம் கேள் ஆண் குழந்தைக்கு பெத்துக்க என்ன செய்யனும்னு.........எனக்கு தெரிஞ்சத விவரமாக சொல்றேன்"

********

பிகு : இத படிச்சுட்டு யாரும் தனி மின்னஞ்சல் அனுப்பி கடைசி பத்திக்கு என்னிடம் யோசனை கேட்க வேண்டாம். :)

2 செப்டம்பர், 2013

செவ்வாயோ வெறும் வாயோ !

மதப் புத்தகங்களுக்கு மாற்று விளக்கம் சொல்ல வேளை வந்துவிட்டது, பூமியில் உயிர்கள் தோன்றுவதற்கான அடிப்படை மூலக் கூறுகள் பூமியில் இருந்ததற்கான வாய்ப்புகள் இருக்கவில்லை, அவை ஒருவேளை செவ்வாயில் இருந்திருக்கலாம் எனவே செவ்வாய் தான் உயிரின தோற்றத்தின் மூலமாக இருக்க வேண்டும் என்று அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர், அறிவியல் கூற்றுகள் காலத்திற்கும் ஏற்றவை என்பதை அறிவியலே ஏற்றுக் கொள்வது கிடையாது, அறிவியல் கொள்கைகள், அறிவியல் கூற்றுகள் மாறக் கூடியது என்பதை அறிவுள்ளவர்கள் ஒப்புக் கொள்வார்கள், அதில் நானும் ஒருவன், எனக்கு செவ்வாய் தான் மூலமா, பவுத்திரமா ? என்பதில் எனக்கு தனிப்பட்ட முறையில் எந்த கருத்தும் இல்லை. :)


ஏற்கனவே மதத்தையும் அறிவியலையும் கலந்து பேதிக்கு / போதிக்கும் மருந்தாக கொடுப்பவர்களுக்கு தான் இந்த கருத்துகள் அடுத்து என்ன செய்யலாம் என்று மண்டை குடைய வைத்திருக்கும். நானே சிலவற்றை எடுத்து தருகிறேன்.

இறைவன் ஆறு நாளில் உலகை படைத்தான் என்று போதித்த முந்தைய விளக்கங்களை இனி உலகம் என்றால் அம்மையப்பன் அம்மையப்பன் என்றால் உலகம் என்ற ரீதியில் உலகம் என்றால் செவ்வாயும் பூமியும், செவ்வாயும் பூமியும் என்றால் உலகம் என்று புது விளக்கம் அளிக்கலாம்.

அது சரி, களிமண்ணில் இருந்து மனிதனை உருவாக்கினார் என்பதை எப்படி சொல்வதாம் ? என்று கேட்போருக்காக, களிமண்ணால் மனிதனை படைத்தார், என்பது உண்மை தான் என்று கூறிவிட்டு, ஆனால் அதனை செவ்வாயில் இருந்து எடுத்த களிமண் என்பதை இப்போது தான் அறிவியலாளர் கண்டுபிடித்துள்ளனர் என்று கூறுவீராக. ஆக மனிதனை (செவ்வாயில் இருந்து எடுத்த) களிமண் மூலமாக படைத்தான் என்று அடைப்புக் குறிக்குள் எழுதிவிட்டால் விளக்கமாகிப் போகும்.

இதுக்கெல்லாம் இந்து மதத்தினர் எளிய விளக்கம் கொடுப்பார்கள், எப்படி என்று கேட்கிறீர்களா ? கிருஷ்ணரின் பவளச் 'செவ்வாயில்' இருந்து தான் உலகமும் உயிர்களும் தோன்றியது என்பதை இந்து கூற்று மெய்பிக்கிறது என்பார்கள்.  படிச்சா செவ்வாய்க்கே செவ்வாய் தோஷம் ஏற்பட்டது போல் இருக்கா ?

:)

இணைப்பு:



25 ஆகஸ்ட், 2013

நாமலும் சாமியார் தான் !

இராமகிருஷ்ண பரமகம்சரின் சாமியார் தன்மை பற்றி இராமகிருஷ்ண மடாலயங்களில் ஒரு தகவல் சொல்வதுண்டு, அதாவது அவர் காசுகளை கையினால் தொடுவதில்லையாம், வெற ? காலால் தொடுவாரான்னு கேட்காதிங்க, ஆதாவது ரிசிகள், ஞானிகள் சாமியார்கள் ஆகியோருக்கு பொருளாசைகளோ வேறெந்த ஆசைகளோ அறவே இருக்காதாம், மீறி காசுகளைத் தொட்டால் என்ன ஆகும் ? இராமகிருஷ்ணரின் சீடர் ஒருவர் தனது குருவை சோதிக்க நினைத்தாராம், காசை இவர் கையில் தான் வாங்கமாட்டார், பேசாமல் காசை அவர் தூங்கும் பொழுது தலைக்கு அடியில் (தலையாணை வைச்சிருந்தாரான்னு கேட்காதிங்க) இருக்கும் படி படுக்கை விரிப்புக்கு அடியில் வைக்க, இராமகிருஷ்ணர் படுக்கைக்கு வந்து தலையை சாய்க்க, தலையே வெடித்து விட்டது போல் துடி துடித்தாராம், தன் செய்த (சூழ்ச்சி) சோதனையைச் சொல்லி 'குருவே என்னை மன்னிக்க வேண்டும்' என்று சீடர் சொல்ல, இனிமேல் அவ்வாறு செய்யாதே என்று இராமகிருஷ்ணர் சீடரை மன்னித்ததாகவும், சீடர் தெரியாமல் தவறு இழைத்து விட்டோடும் என்று மிகவும் மனம் வருந்தியதாகவும் ஒரு குட்டிக் கதையாக இராமகிருஷ்ணர் மடத்தினர் சொல்வதுண்டு.

காசு என்பது ஒரு உலோகம், அவை பண்டமாற்றுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தவிர்த்து அந்தந்த உலோகத்தின் அடிப்படை மதிப்பு சொற்பமே, செப்புகாசு, பித்தளை காசு ஆகிய செய்யப்படும் உலோகத்தின் மதிப்பைவிட அதில் பொறிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பு எப்போதும் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு உலோகம் தலைக்கு அடியில் இருந்ததற்காக இராமகிருஷ்ணர் பதறினார், துடித்தார், துன்பம் அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லை மீறிய கட்டுக்கதை என்பது தவிர்த்து அவற்றில் உண்மை எதுவும் இருப்பது போல் தெரியவில்லை, செம்புகளும் பித்தளைகளும் பாத்திரங்களாக பழங்கிய காலத்தில் அவை காசுகளாகவும் அச்சடிக்கப்பட்டிருக்கும், எனவே குடிக்க செப்புக் குவளையை கையில் எடுக்கும் பொழுது ஏற்படாத அதிர்வலைகள் செம்பு காசால் ஏற்பட்டது என்பதை நான் நம்புவதில்லை, இருந்தாலும் அந்தக் கதையை சாமியார்கள் காசு பணத்தின் மீது பற்றுதல் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதற்காக சொல்லப்படும் சற்று மிகைப்படுத்தப்பட்ட கதை என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.

நாமலும் கொஞ்ச கொஞ்சமாக சாமியார் ஆகிக் கொண்டு இருக்கிறோம், அச்சடித்த பணமும், காசுகளும் நமது பணப் பைகளின் செலவு இருப்பாக திணித்து வைத்துக் கொள்ளும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது, எல்லாவற்றிற்குமே அட்டையின் (Card) வந்துவிட்டது, ரொக்க அட்டை (debit) மற்றும் கடனட்டைகளை (credit) கையில் வைத்திருந்தாலே போதும், எங்கும் சென்று வந்துவிடலாம், பணம் களவு போகும் பயம் இருக்காது. பொட்டிக்கடைகளில் சிறிய அளவில் எதுவும் வாங்குவதற்கான தேவை என்பது தவிர்த்து பாக்கெட்டில் பணத்தை திணித்துக் கொண்டு வைத்திருக்கும் வழக்கம் படிப்படியாக குறைகிறது. முன்பெல்லாம் வாரத்திற்கு 50 வெள்ளிகளை மேல் பாக்கெட்டில் வைத்திருக்கும் நிலைமை தற்பொழுது 20 வெள்ளிகளாக சுருங்கியுள்ளது, காரணம் எல்லாவித கட்டணங்களுமே அட்டைகளால் நிறைவேற தானியங்கி பணமெடுக்கும் இயந்திரத்திற்கு சென்று வரிசையில் நிற்பதுவும் குறைந்துள்ளது.

பேரங்காடி, தொடர்வண்டி நிலையம், பெரிய / நடுத்தர உணவகங்கள், பேருந்துகள் ஆகியவற்றிற்கும் அட்டைகளே பயன்படுவதால், அவற்றில் போதுமான தொகையை நிரப்பி வைத்துவிட்டால் வாரம், திங்கள் முழுவதும் அவற்றை பயன்படுத்த முடிகிறது. சில்லரைகளை (பத்துவெள்ளி, 20 வெள்ளி) கடனாக கேட்பவர்களுக்கும் கையில் போதிய இருப்பு இல்லை என்று கைவிரிக்க முடிகிறது (அவங்க வங்கி எண்ணுக்கு மாற்றிவிடச் சொல்லி கேட்காதவரையில் எளிதாக சமாளிக்கலாம்),
பிச்சைகாரர்களைப் பார்த்தால் பாக்கெட்டை தடவிவிட்டு நம்மிடம் சில்லரை எதுவுமே இல்லை என்று நடையைக் கட்டலாம். பக்கெட் அடிப்பவனுக்கும் ஏமாற்றம் (சிங்கையில் எனக்கு அந்த அனுபவம் நேர்ந்ததில்லை, இங்கே பாக்கெட் துண்டிப்பவர்கள் இல்லை என்னும் அளவுக்கு கடுமையான சட்டம், மாட்டினால் ஆயுதம் வைத்து கொள்ளை என்று பிடித்தவுடன் பிரம்படி கொடுத்துவிடுவார்கள், அது தவிர மிகவும் நெருக்கமான நேர பயணங்களில் அடுத்தவர் மூச்சு மேல் படும் அளவுக்கு அருகே நிற்பவரும் குறைவு), அப்படியே பாக்கெட் அடித்தாலும் 20 வெள்ளிக்கு நிரப்பிய எம்ஆர்டி அட்டை போய்விடும், வைத்திருந்த 20 வெள்ளிக்கும் குறைவான பணம் போய்விடும், மற்றபடி வங்கி அட்டைகளை உடனேயே காலாவதி செய்துவிட முடியும், பெரிய அளவில் மன உளைச்சல் இல்லை என்றாலும் எல்லாவற்றையும் புதிதாக வாங்க இரண்டு மூன்று நாள் ஆகும், வங்கி அட்டைகளை உடனடியாக மாற்றி வாங்கிக் கொள்ள முடியும்.


தற்பொழுது அட்டைகளுக்கு மறை எண்களை அடிக்க வேண்டி இருக்கிறது, அதிலும் மாற்றமாக Visa Pay Wave  விசிறிவிட்டு சென்றுவிடலாம், மறை எண்ணும் கையெழுத்தும் தேவை இல்லை, அட்டை வேறு யாரிடமும் மாட்டினால் ? ஒவ்வொரு பயன்பாட்டின் பொழுதும் செல்பேசிக்கு குறும் தகவல் வந்துவிடும், எனவே வங்கிக்கு தெரிவித்து உடனடியாக கண்டுபிடித்து அட்டையை முடக்க முடியும், உடனடியாக செயல்பட்டு எந்த கடையில் எந்த நபர் அந்த அட்டையை பயன்படுத்தி இருக்க முடியும் என்பதை கேமரா கண்காணிப்பு அந்த நபர் வெளி ஏறும் முன்பு கண்டுபிடித்துவிடுவார்கள்.

அட்டைகளெல்லாம் எதற்கு கைரேகை வைத்தால் போதும்  வங்கியில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் வாங்கிவிடலாம், மணிபர்சே தேவை இல்லை என்னும் காலம் கூட 20 - 30 ஆண்டுகளில் ஏற்பட்டுவிடும்.

கேஷ்லெஸ் (தாள் பணமற்ற) பரிமாற்றத்தினால் நல்ல பயனுண்டு, அரசுகள் பெரிய அளவில் பணத்தை அச்சடிக்கத் தேவை இல்லை, வீட்டில் பெரிய அளவில் பணத்தை வைத்திருக்கத் தேவை இல்லை, என்ன ஒன்று ? ஊதிய பணமோ, வியாபார ஈட்டலோ வங்கிக்கு வரும், வங்கியில் இருந்தே போகும் நாம் அவற்றை எண்ணால் பார்க்க முடியும் கண்ணால் பார்க்க முடியாது. அப்பறம் என்ன காசு பணத்தை கையினால் தொடவில்லை என்றால் நாமும் சாமியார்கள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் தானே ?

இதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் பொழுது எனக்கு தெரிந்த நண்பர் அவருக்கு தெரிந்த (சென்னை) போக்குவரத்து காவலர் ஒருவர் பணத்தை கையால் தொடுவதில்லை என்றார், அவ்வளவு நேர்மையான பண்பாளரா ? என்று கேட்டேன், மறுத்த நண்பர் இல்லை இல்லை அவர் எதிரே இருக்கும் பெட்டிக்கடைக்காரரை வாங்கி வைத்துக்கச் சொல்லி அவர் மூலம் தனது வங்கியில் போடச் சொல்லிவிடுவாராம். கடைசி பத்தி தென்கச்சி கோ சுவாமிநாதனை நினைத்து எழுதினேன், அப்படித்தான் கொஞ்சம் கடியான நகைச்சுவையுடன் இன்று ஒரு தகவலை அவர் முடிப்பார்.

24 ஜூலை, 2013

கிறித்துவர்களின் இறைவன் யார் ?

அண்மையில் மலேசியாவிற்கு வாடிகனால் அனுப்பப்பட்ட ஒரு கிறித்துவ மதபிரசங்கி பிரச்சனைகளை எதிர்நோக்குகிறார். மலேசிய கிறித்துவர்களை வழிநடத்த வந்த அவர், மலேசியாவில் மலாய் பேசும் கிறித்துவர்கள் தங்களுடைய இறைவனை 'அல்லா' என்று அழைக்கலாம், என்று ஒப்புதல் கொடுத்தார், ஏற்கனவே மலாய் மொழியில் இறைவன் என்ற சொல்லுக்கு 'அல்லா' என்றே வழங்கிவருகிறார்கள், எனவே மலாய் இஸ்லாமியர்கள் அல்லாத மலாய் கிறித்துவர்கள், மற்றும் இந்தோனேசிய கிறித்துவர்கள் வழிபாட்டின் பொழுது 'அல்லாவிடம்' தான் மன்றாடுவார்கள், மலாய் இஸ்லாமியர்களுக்கு எண்ணிக்கையில் சிறுபான்மையாக இருக்கும் மலாய் கிறித்துவர்களும் 'அல்லா'வைத்தான் வணக்குத்துக்கு உரியவராக வழிபடுகிறார்கள் என்பது தெரியும்.  இது போன்று அல்லாவை வணங்குபவர்களில் அரபியை தாய்மொழியாகக் கொண்ட கிறித்துவர்களும் உண்டு. அதாவது அரேபிய மொழியில் இறைவன் என்பதற்கு 'அல்லா' என்ற சொற்பதம் பயன்படுத்தப்படுகிறது. 'அல்லா ஹு அக்பர்' என்றால் இறைவன் மிகப் பெரியவன் என்றே பொருள்.

இந்துக்கள் வழிபடும் இறைவன் சிவன், கண்ணன், பிள்ளையார் மற்றும் முருகன் அரேபியில் எழுத நேரிட்டால் இந்துங்களின் அல்லா சிவன், இந்துக்களின் அல்லா கண்ணன், இந்துக்களின் அல்லா பிள்ளையார் மற்றும் இந்துக்களின் அல்லாக்களில் மற்றொருவர் அல்லா முருகன் என்று எழுதுவார்களா ? எனக்கு தெரியவில்லை, ஆனால் மலாய் மொழிப் பெயர்ப்பில் கூகுள் மலாய் மொழிப் பெயர்ப்பு அப்படித்தான் காட்டுகிறது.  


ஏற்கனவே மலாய் கிறித்துவர் ஒருவர் தன்னுடைய கடையின் பெயரில் 'அல்லா' வை சேர்த்து எழுதி இருந்ததை மலாய் இஸ்லாமியர்கள் எதிர்ப்பு காட்ட பிரச்சனை நீதிமன்றம் வரை சென்று மலாய் கிறித்துவர்கள் 'அல்லா'வைப் பயன்படுத்தலாம் என்று தீர்ப்பாகியது, இருந்தாலும் பிற கிறித்துவர்கள் (மலேசிய இந்திய கிறித்துவர்கள் மற்றும் மாலேசிய சீனக் கிற்த்துவர்கள்) அவ்வாறு பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தல் எதுவும் இல்லை. இப்படி இருக்கையில் போப்பின் தூதுவர் மலேசிய கிறித்துவர்கள் அனைவரும் பைபிள் வாசிக்கும் பொழுதும் வழிபாட்டின் பொழுதும் 'அல்லா' வை பயன்படுத்தச் சொன்னதும் மீண்டும் பிரச்சனைகள் தலைதூக்கி, மலேசியாவில் பிறர் அல்லாவைப் பயன்படுத்தலாமா என்பதை அரசோ / நீதிமன்றமோ முடிவு செய்யாத நிலையில் இருக்கும் பொழுது இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று மலேசிய அரசு தரப்பு மதபோதகருக்கு கடுமையான கண்டனங்கள் தெரிவித்துள்ளது. மதபோதகரும் அங்கு தொடர்ந்து தங்கி மதபோதனை செய்ய வேண்டிய சூழலில் மன்னிப்பு கேட்டுக் கொண்டுள்ளார்.

அடைப்படையில் கிறித்துவர்களின் நம்பிக்கையும் இஸ்லாமியர்களின் நம்பிக்கையும் ஒன்றே, கிறித்துவர்கள் முகமது நபியை இறைத்தூதராக ஒப்புக் கொள்ளமாட்டார்கள், ஏசு கிறித்துவே (சுதன்) இறைவன் அவரே  மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையில் உள்ளனர், இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் ஏசு கிறித்து இறைவன் அல்ல இறைத்தூதர்களின் ஒருவர், அப்படி என்றால் யார் இறைவன் ? கிறித்துவர்களின் இறைவன் தான் இஸ்லாமியர்களுக்கும் இறைவன், ஆனால் ஏசு கிறித்து இறைவன் அல்ல என்பது இஸ்லாமிய தரப்பினரின் குரான் வழி நம்பிக்கை.

விக்கிப் பீடியாபடி முகமது நபிக்கு முன்பு இருந்த பாகன் பல தெய்வ வழிபாட்டு முறையில் இருந்த இறைவனுக்கும் அல்லா என்று தான் பெயர், ஹிப்ரு மொழியிலும் அரபி மொழியிலும் வழங்கப்படும் 'அல்லா' என்று சொல் வழக்கு உச்சரிப்பு என்ற வகையில் பெரிய வேறுபாடும் இல்லை. சவுதி அரபி கிறித்துவர்கள் இறைவழிப்பாட்டில் அல்லா என்று சொல்ல எந்த தடையும் இல்லை, அது ஒரு இறைவன் குறித்த சொல் என்பதுடன் இருவரின் இறைவனும் ஒன்றே, அவர்களும் அல்லாவைத் தான் வழிபடுகிறார்கள் என்கிற புரிதல் உள்ளது, ஆனால் மலாய்காரர்கள் 'அல்லா' தனிப்பட்ட முறையில் இஸ்லாமியரின் பயன்பாட்டிற்கானது என்று சொல்லுகிறார்கள். நம்ம தமிழ் முஸ்லிம்களும் 'வணக்கம் சொல்லுதல்' என்றால் அல்லாவுக்கு வணக்கம் சொல்லுவதுடன் முடித்து போட்டுக் கொண்டு முடிந்தவரை வணக்கம் சொல்லவே தயங்குவார்கள், மறுப்பார்கள், வணக்கம் சொல்லுவதற்கும் கும்பிடுவதற்கும் நிறைய வேறுபாடு உண்டு, தமிழ் தெரிந்தும் தமிழ் இஸ்லாமியர்களிடையே இவ்வளவு தகறாரு என்றால் 'அல்லா' என்ற ஒற்றைச் சொல்லை யார் யாரெல்லாம் சொந்தம் கொண்டாடுவது என்பது தான் இப்போது மலேசியாவில் மலாய் இஸ்லாமியர்கள் கிளப்பும் பிரச்சனை.

அரேபியாவில் கிறித்துவர்களுக்கு அனுமதி இருக்கும் ஒரு சொல் மலேசியாவில் மறுக்கப்படுவதற்கு உணர்ச்சி வசப்படுதல் அல்லது வெறும் மொழி மற்றும் மொழிப் பெயர்ப்பு பிரச்சனை என்பதைத் தவிர எனக்கு வேறொன்றும் தோன்றவில்லை, 'இறைவன்' என்பது பண்பு மற்றும் தொழில் பெயராகப் பயன்படுத்தலாம், 'இறைவன் சிவன்' என்னும் பொழுது வைஷ்ணவர்கள் ஒப்புக் கொள்ளாவிட்டாலும்  அதை பிரச்சனையாக்குவதில்லை, அது நம்பிக்கை சார்ந்த ஒன்று என்ற வட்டத்திற்குள் வந்துவிடும். அரபியில் அல்லாவுக்கு வேறு எதுவும் பெயர் இருந்தாலும் (அளவற்ற அருளாளன், நிகரற்ற பொருளாளன் மற்றும் 100க் கணக்கான பெயர்கள் இருந்தும்) அவை புழக்கத்தில் பெயராக அழைக்க அல்லது பயன்படுத்தப்படாததால் தான் இத்தகைய குழப்பங்கள் வருகிறது என்றே நினைக்கிறேன்.

*******

மலேசியாவில் இஸ்லாமியர் அல்லாத பள்ளி மாணவர்களை நோன்பு (ரம்ஜான்) மாதத்தில் ஒரு பள்ளி மதிய உணவிற்கு கழிவறை / குளியல் அறையில் இடம் ஒதுக்கியது கடும் கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது,  அதாவது இஸ்லாமிய மாணவர்கள் பகலில் சாப்பிடாமல் நோன்பு இருக்கும் பொழுது மற்ற மாணவர்கள் உணவருந்தினால் இஸ்லாமிய மாணவர்களின் நோன்பு பாதிக்கப்படும் என்று விளக்கம் சொல்லி இருக்கின்றது பள்ளி நிர்வாகம், சிங்கப்பூரில் மலாய்காரர்கள் நடத்தும் உணவுக் கடைகளில் 80 விழுக்காடு விற்பனை நடந்து கொண்டு தான் இருக்கின்றது, காரணம் மலாய் உணவை பிறரும் உண்ணுகிறார்கள் என்பதுடன் ஒரு மாதம் கடையை அடைத்தால் பின்பு கடைக்கு வாடகை எப்படி கொடுக்க முடியும் என்பதுடன் ஒரு மாதத்திற்கு பின்னர் வாடிக்கையாளர்கள் தொடர்ந்து வருவார்களா என்கிற அச்சமும் இருப்பதால் மலாய் இஸ்லாமியர் உணவு கடைகள் அடைக்கப்படுவதில்லை. மாணவர்கள் நிலைமை வேறு என்றால் கழிவறையில் இடம் ஒதுக்கிக் கொடுப்பது மட்டும் எப்படி சரியாகுமோ ? அதற்கு மாற்றாக உணவு இடைவேளையில் கேண்டின் பக்கம் இஸ்லாமிய மாணவர்கள் செல்வதை தவிர்க்கும் படி அறிவுறுத்தி இருக்கலாமே.

இதுவும் மலேசிய தகவல் தான், ஒரு சீன வலைப்பதிவர் ஒருவர் தனது நண்பியிடன் சேர்ந்து ரம்சான் நோன்பு துவங்கும் நாளில் 'ஹேப்பி ஹரிராயா ஹேவ் எ நைஸ் ஹலல் பாக் த்குதே' என்று வலையில் வெளியிட்டு கைதாகியுள்ளார், பாக் குத்தே என்பது பன்றி இறைச்சியில் செய்யப்படும் ஒருவகை சூப் உணவு. பிரச்சனைக்கு வேறு எதுவும் வேண்டுமா ? இங்கு சீன சைவ உணவு வகைகளில் சோயாவில் செய்த சைவ மீன், சைவ மட்டன், சைவ இறா உள்ளிட்டவைகள் உண்டு, கிட்டதட்ட அதே பொருளில் தான் மேற்கண்ட  பொருளில் தான் கொஞ்சம் சீண்டிப்பார்க்கும் எண்ணத்துடன் சொல்லி வம்பில் மாட்டிக் கொண்டுள்ளார், ஹலல் பீர் இருக்கும் பொழுது, அனுமதிக்கப்படும் பொழுது (தெரியவில்லை என்றால் அண்ணன் சு.பி பதிவை பாருங்கள்') ஒருவேளை சோயாவில் செய்து அதை  ஹலல் பாக் த்குதே என்று சொன்னாலும் தவறாகுமோ ?

**********

இஸ்லாமியர்களிடம் ஒருபக்கம் அல்லாவை 'அனைவருக்கும் ஒரே (ஏக) இறைவன்' என்கிற பிரச்சாரமும், மறுபக்கம் 'இஸ்லாமியர்களுக்கான தனிப்பட்ட இறைவன்' என்கிற பிரச்சாரமும் நடக்கின்றது, இதில் நம்ம சுவனப்பிரியர்கள் விட்டுக்கொடுக்காமல் இரண்டு பக்கமும் பேசுவாங்க.  

இணைப்புகள் :

http://www.malaysia-chronicle.com/index.php?option=com_k2&view=item&id=130332:heat-is-on-alvin-vivian&Itemid=2#.Ue_1fI2bdh0

22 ஜூலை, 2013

'சாதி'க்கலாம் வாங்க !

எப்படி இருந்த தமிழ் மணம் எப்படி ஆகிவிட்டது ? சாதி / மதம் சார்ந்த பதிவுகளை எழுதுவது தமிழ்மணம் விதிகளுக்கு முரணானது......ஆனால்.....வஹாபிகள் தங்கள் இடுகைகளில் மதம்சார்ந்து 9ம், 10 ஆவது வேற எதாவது எழுதி விலக்கு பெற்றுவிட்டார்கள், நம்ம 'ப..சுமை பக்கம் அருளாரும் மாற்றி மாற்றி எழுதி நான் சாதி சார்ந்து (மட்டுமே) எழுதுவதில்லைன்னு சத்தியம் செய்துவிடுவார்.

ஆனால் பச்சையாகவே சாதிப் பெயர் தாங்கி பதிவுகள் வருவது அதிர்ச்சி அளிக்கிறது.

வன்னியர்களின் சாதிவெறிக்கு எதிரான வன்னியர்கள் !

இன்னும் ஒரு மாதம் சென்றால் இப்படியெல்லாம் வலைப் பதிவு தலைப்பு வைத்து பதிவு வருமோ ?
சாதிவெறி பார்பனர்களின் சாதிவெறிக்கு எதிரான நல்ல பார்பனர்கள் !
செட்டியாரின் சாதிவெறிக்கு எதிரான செட்டியார்கள் !
தேவர்களின் சாதிவெறிக்கு எதிராக தேவர்கள் !
கவுண்டர்களின் சாதிவெறிக்கு எதிராக கவுண்டர்கள் !
முதலியார்களின் சாதிவெறிக்கு எதிராக முதலியார்கள் !
சாதிவெறி பிள்ளைமார்களுக்கு எதிராக நல்ல பிள்ளைமார்கள் !
.
.
.
இந்துக்களின் மதவெறிக்கு எதிராக இந்துக்கள் !
இஸ்லாமியர்களின் மதவெறிக்கு எதிராக இஸ்லாமியர்கள் !
கிறித்துவர்களின் மதவெறிக்கு எதிராக கிறித்துவர்கள் !

இதையெல்லாம் நாம படிச்சி, அதை சூடான இடுகையாகவும் ஆக்கி எவ்வளவு தமிழ் சேவை செய்கிறோம்..........!

சாதி சங்கம் நடத்தவும், விளம்பரம் செய்யவும், முகநூல் இருக்கு, ஏன் வலைப்பதிவிலேயே கூட செய்யலாம், அதையெல்லாம் நூல்குறி (புக்மார்க்) செய்து விரும்பியவர்கள் படிக்கட்டும், ஆனால் பலரும் எட்டிப் பார்க்கும் திரட்டிகளில் இவை வருவது......எழுதும் ஆசையில் எழுதவருபவர்களுக்கு 'இதைத்தான் வலைப்பதிவில் எழுதுறானுங்களா ?' ன்னு நினைத்து தலை தெறிக்க ஓடமாட்டார்களா ?

20 ஜூலை, 2013

ஆங்கில மோகமும் சமஸ்கிருத தாகமும் !

இந்தியாவில் ஆங்கிலம் நுழைந்ததால் எல்லாம் கெட்டுவிட்டது என்று பழைய பல்லவியை மறுபதிப்பு (ரீமேக்) செய்துள்ளது பாஜக,

"ஆங்கில மொழி இந்தியாவுக்கு பெரும் இழப்புகளை ஏற்படுத்தி விட்டது. நாம் நமது மொழி மற்றும் கலாச்சாரத்தை இழந்து வருகிறோம். நாட்டில் சமஸ்கிருதத்தில் பேசுபவர்கள் வெறும் 14 ஆயிரம் மக்கள் மட்டுமே உள்ளனர். ஆங்கிலத்தின் மூலம் நாம் அறிவைப் பெறுவதில் தவறில்லை. ஆனால் இளைஞர்களிடம் ஆங்கில கலாச்சார மோகம் ஊடுருவுவது ஆபத்தானது" - ராஜ்நாத்சிங் 

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/20/india-row-erupts-over-rajnath-singh-anti-english-remarks-179514.html

ஆங்கிலத்தில் இருந்து அறிவை மட்டும் பெற்றுக் கொள்ளலாமாம், ஆங்கிலம் படிக்காமல் அறிவை மட்டும் எப்படி பெறுவது என்பதை அந்த மேதை விளக்கவில்லை, அவரது கவலையெல்லாம் சமஸ்கிரதம் பேசுவோர் எண்ணிக்கை 14 ஆயிரம் பேர் மட்டும் தான் என்பதை சுட்டிக் காட்டுவதற்காகவும், அதற்குக் காரணமாக ஆங்கிலத்தை கூறி உள்ளார்,  இந்த 14 ஆயிரம் என்பது ஆண்டு 2001 கணக்கெடுக்கின்படி வரும் எண்ணிக்கை என்பதை விக்கிப்பீடியா குறிப்பிட்டுள்ளது, இடைப்பட்ட 13 ஆண்டுகளில் இந்த எண்ணிக்கை குறைந்திருப்பதற்கு தான் வாய்ப்பே அன்றி கூடுவதற்கான வாய்ப்பு எப்பொழுதும் இல்லை. மொழி வளர்ச்சி என்பது குறிப்பிட்ட மொழிப் பேசுபவர்களின் மக்கள் தொகை உயர்வு என்பதைத் தாண்டி, அதை படித்தால் பயனுண்டு என்று படிப்பவர் இருந்தால் மட்டுமே வாய்ப்புள்ளது. 

 எந்த மொழியும் அன்றாடப் பயன்பாட்டில் இல்லை என்றால் அது அழிவதன் துவக்கத்தில் பயணம் செய்யும், இந்த இடத்தில் ஒரு இடைச் சொருகல் அப்பன் மகன் பேரை ஒன்றாகப் பார்த்தால் மட்டுமே தற்பொழுது ஒருவரை பெயரை வைத்து தமிழர் என்று அறிய முடிகிறது, இன்னும் 40 ஆண்டுகளில் அதுவும் கடினம், கருப்பையா ரமேஷ், தந்தை பெயர் கருப்பையா, மகன் பெயர் ரமேஷ், ரமேஷுக்கு தமிழ் பெயர்கள் பற்றி பெரிதாக ஆர்வம் இல்லை என்றால் அவருடைய வாரிசுகளுக்கும் எதோ ஒரு மொழியில் உதாரணத்திற்கு ஞானேஷ் என்று பெயர் வைக்க, முகத்தை பார்க்காமல் 'ரமேஷ் ஞானேஷ் 'என்ற பெயரை நாம் பட்டியலில் படித்தால் எந்த மாநிலத்துக்காரர் என்றும் தெரியாது, ஒருவேளை முகத்தைப் பார்த்தாலும், பேசாவிட்டால் தென்னிந்தியாவில் எந்த மாநிலத்தை சேர்ந்தவர் எண்டு கண்டுப்பிடிப்பதும் கடினம். நான் பொதுவாக வழியுறுத்துவது, தமிழிலும் அழகான எளிமையான பெயர்களை உருவாக்கலாம், இருக்கிறது, அவற்றை பயன்படுத்துங்கள், உங்கள் குழந்தைக்கு தமிழ் பெயர் சூட்டுவதால் தமிழை இன்னும் ஒரு 80 ஆண்டுகளுக்கு (சராசரி வாழ்நாள்) 'பெயரளவில்' ஆவது புழக்கத்தில் வைக்கக்  உங்களால் செய்யப் படக் கூடிய சிறு துரும்பு.

நான் சமஸ்கிரத்திற்கோ வேறெந்த மொழிக்கோ எதிரானவன் இல்லை, எனக்கு எல்லா மொழிகளும் பிடித்தமானவையே, நான் மொழிகளை விரும்பிப் படிப்பதை பொழுதுபோக்காகவும் வைத்துள்ளேன், ஒரு மொழியை அறிவதன் மூலம் அம்மொழி பேசுபவர்களைப் பற்றி அவர்களது பண்பாடுகளை அறிய முடியும் என்பது நான் மொழிகளை படிப்பதன் மூலம் நேரிடையாக அறிந்து கொண்ட ஒன்று. மொழி பற்றிய எந்த அறிவும் இல்லாமல், மொழி என்பது வெறும் தகவல் தொடர்பு ஊடகம் என்று கூறுபவர்களை நான் எப்போதும் புறம் தள்ளுவேன், முடிந்தால் அது அவ்வாறு இல்லை என்றே கொஞ்சம் விளக்கிச் சொல்வேன், மொழிகள் என்பது அறிவுக் கருவூலங்கள், அவை பண்பாடுகளை தலைமுறை தாண்டி எடுத்துச் செல்லும், ஒரு மொழி அழியும் பொழுது அவற்றை பேசியவர்களின் பண்பாடு மற்றும் கலை ஆகியவையும் சேர்ந்தே அழியும், ஒரு மொழியின் ஆளுமை மற்றொரு மொழியினரின் பண்பாடுகளை எவ்வாறு அழிக்கும் ? 

நாம் வேட்டிக் கட்டுவதை கைவிட்டு பேண்டுக்கு மாறி ஒரு 50 ஆண்டு காலம் ஆகி இருக்குமா ? நாம் தமிழ் நாட்டில் பேண்ட் அணிவதன் தேவை என்ன ? ஒன்றுமே இல்லை, ஆனால் படித்தவனின் ஆடை, அலுவலக ஆடை என்ற அடையாளத்தில் நம் உடை முற்றிலும் மாறிவிட்டது அல்லவா ? இப்போது பண்டிக்கைக்கும், திருமணத்திற்கும் வேட்டிக்கட்டும் பழக்கம் இன்னும் ஒரு 50 ஆண்டுகள் நீடித்தாலே பெரிது, என்னுடைய நண்பர் ஒருவர் வேட்டிக்கட்ட வெட்கப்பட்டு,  அதை வேட்டிக்கட்டத் தெரியாது என்று காரணமாகக் கூறி மணமேடையில் பேண்ட் அணிந்தே தாலி கட்டினார், பண்பாடு கலாச்சாரம் குறிப்பாக அதிக விலையிலானது என்பதால் பெண்கள் விடப்பிடியாக பட்டுப்புடவை கட்டிவருவது ஆறுதல். அதுவும் இல்லம் சார்ந்த விழாக்களில் மட்டும் தான், எப்போதாவது அலுவலகத்திற்கும் கட்டிச் செல்கிறார்கள், ஆனால் இன்றைய சூழலில் நாம் வேட்டிக்கட்டி பொது நிறுவனம் எதற்குள்ளும் வேலைபார்க்க சென்றுவிட முடியாது. வேட்டிப் போச்சு. ஆங்கிலம் அலுவலக மொழியாகும் பொழுது அதற்கான ஆடைகளும் மாறிவிடுகிறது, நமது அடையாளம் பிட்சா, பர்கர்னு கொஞ்சம் கொஞ்சமாக பிறவற்றிலும் இப்படித்தான் மாறிப் போகும்.

இன்றைய கல்வி மற்றும் பொருளாதார சூழலில் ஆங்கிலம் படிப்பதை நம்மால் தவிர்க்கவே முடியாது, எல்லாவற்றையும் தமிழிலேயே படித்தால் நமக்கு வேலையும் கிடைக்காது, குறைந்த அளவாக தமிழர்களிடையே தொடர்பு மொழியாக தொடர்ந்து பேச ஒரு வாய்ப்பு என்ற அளவில் 10 ஆம் வகுப்பவரையிலாவது தமிழை படிப்பது மொழி அழிவை தடுக்க நாம் செய்யும் கைமாறு, அதைத் தவிர்த்து தமிழை தொடர்ந்து படித்தால் நமக்கு எந்த பயனும் இல்லை, ஒரு வேளை எழுத்தாளன் ஆகலாம், அதற்கும் தமிழை கல்லூரிப்படிப்பாகத்தான் படிக்க வேண்டும் என்பதுமில்லை. ஏனென்றால் நமது வேலை வாய்ப்புகள் என்பவை தமிழ் சார்ந்தவை இல்லை, இதை புரிந்து கொள்ள மறுப்பவர் வைக்கும் வாதங்கள் எவையும் ஏட்டுச் சுரைக்காய் போன்றதே.

ஒரு மொழியின் வளர்ச்சி என்பவை அவற்றை பேசுபவர்கள் பொருளாதார வளர்ச்சியில் மேம்பட்டு வேலை வாய்ப்புகளை பெருக்கி வெளிநாட்டினருக்கும் அந்த வாய்ப்புகளை வசதியாக்கி தந்தால் அந்த மொழியின் மீது பிற மொழிப் பேசுபவர்களுக்கு நாட்டம் ஏற்படும், உதாரணத்திற்கும் சீனாவில் 80 விழுக்காட்டிற்கும் மேல் பொது மொழியான மேன்டரின் பேசப்படுகிறது, சீனா தற்பொழுது பண்ணாட்டு நிறுவனங்களுக்கு கதவையும் திறந்து விட்டுள்ளது, சீனாவில் வர்தக தொடர்பு அல்லது  தொழிலில் முதலீடு செய்தால் நல்ல லாபம் என்று நினைக்கும் பண்ணாட்டு நிறுவனங்கள் சீனாவிற்கு செல்லும் தனது அலுவலர்களை சீன மொழியை படிக்கக் கோறும், அவ்வாறு இல்லை என்றால் அங்கு வேலைக்கு செல்பவர்களுக்கு பேச வாய் இருந்தாலும் சொல் இருக்காது, சீனாவில் வேலை செய்யும் பெரும்பாலான ஐரோப்பியர்கள் ஆங்கிலம் படிக்கிறார்கள், சீனா இன்னும் வல்லரசாகி அண்டை நாடுகளை ஆளுமைக்குள் கொண்டு வந்து அந்த அந்த பகுதிகளின் அலுவல் மொழியாக சீனமொழியை அறிவித்துவிட்டால் வேறு வழியின்றி சீன மொழியை அடிமைபட்ட நாடுகளும் அரசிடம் வேலை செய்ய கற்றுக் கொள்வர், இதைத் தான் வெள்ளைக்காரன் அன்று செய்தான் ஆங்கிலம் காமன்வெல்த் நாடுகளின் தொடர்பு மொழியானது, ஒருவேளை உலகப் போரில் ஜப்பான் காரன் வெற்றிபெற்றிருந்தால் நாம் ஆங்கிலத்திற்கு மாற்றாக ஜப்பான் மொழியில் படித்து வேலைபார்ப்போம், மொழி பரவுவதற்கு இதைத் தவிர வேறு வாய்ப்புகள் கிடையாது.

இந்த புரிதலின்றி பலர் ஆங்கிலம் போல் தமிழும் பல மொழிச் சொற்களை கடன் வாங்கிக் கொண்டால் தமிழ் வளர்ச்சி பெரும் என்று அறியாமையால் நம்புகிறார்கள், பல மொழியில் கடன் வாங்கி தமிழில் வைத்துக் கொள்வதற்கு மாற்றாக ஆங்கிலத்தை இரண்டாம் மொழியாகப் பயன்படுத்துவதில் என்ன தவறு ? குறைந்தது தமிழ் மொழியாவது தன்மை மாறாமல் இருக்கும், நான் எழுத வந்ததை விட்டுவிட்டு எங்கெங்கோ பயணித்துவிட்டேன்.

ஆங்கிலத்தின் வளர்ச்சி ஆங்கிலத்தில் போதிய சொற்கள் இல்லாததால் பிறமொழியில் அவை கடன்வாங்கி அகராதியை நிரப்பிக் கொண்டே வரும், ஏனென்றால் ஆங்கிலத்தின் மூலம் பரவலான அறிவை கொண்டுவர முடியும் என்று நம்புகிறார்கள், 2 மில்லியன் சொற்கள் ஆங்கிலத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக கூறுகிறார்கள், ஆனால் நன்றாக ஆங்கிலம் தெரிந்தவருக்கு அவற்றில் பாதி அளவு அகராதியை புரட்டாமல் தெரியுமா என்பதே ஐயம், குறிப்பாக மருத்துவம் சார்ந்த சொற்களுக்கு ஆங்கிலம் நிறையவே கடன்வாங்கியுள்ளது. ஒரு நூல் ஆங்கிலத்தில் முழுமையடைய ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை கடன் வாங்காமல் முடியாது என்பதால் ஆங்கிலத்திற்கு பிறமொழியின் சொற்களை கடன் பெறுவது இயல்பு. ஆங்கிலத்தின் முழுவளர்ச்சி இந்த நூற்றாண்டாடில் ஏற்பட்டு மிகுதியாகவும் மாற்றம் கண்டுள்ளது, இன்றைய கணிணி உலகில் ஆங்கிலம் 1000க் கணகான புது சொற்களை இணைத்துக் கொண்டது. இவை பெரும்பாலும் லத்தீன், கிரேக்கம், ரோமன் மொழிகளின் கலவையே.

இந்த நூற்றாண்டில் ஆங்கில உருவாக்கம் வளர்ச்சி என்பது போல் தான் 2000 ஆண்டுகளுக்கு முன்பு பல்வேறு மொழிகளை கடன் பெற்று பண்பட்ட மொழி என்ற புதிய மொழி உருவாக்கமாக சமஸ்கிரதம் உருவானது, ஆனால் அதை எழுதுவதற்கு மட்டும் தான் பயன்படுத்தினார்களேயன்றி அன்றாட பேச்சு மொழியாக இருந்திருக்கவில்லை, இதிகாசங்கள், புராணங்கள் ஆகியவற்றையும், இலக்கிய நூல்களை எழுதவும் அதை பிறமொழிப் பேசுபவற்களிடம் பரப்பவும் ஒரு கருவியாக சமஸ்கிரதம் இருந்துவந்தது, அந்த நூலின் புழக்கம், அவற்றை சொற்பொழிவு செய்பவர்களின் (பிரசங்கம்)  செய்பவர்களால் புழக்கத்தில் விடப்பட்டு வட்டார மொழிகளில் கலக்க பல்வேறு மொழிகளாக அவை உருவானது, தென்னிந்திய மொழிகள் ஒருகாலத்தில் வட்டார மொழிகளாக (நெல்லை, கோவை தமிழ் போல்) இருந்து பின்னர் சமஸ்கிரத கலப்பு விழுக்காட்டு வேறுபாடுகளில்  தென்னிந்திய மொழிகள் தனித்தனி வடிவம் பெற்றன. மற்றபடி சமஸ்கிரத்தில் இருந்து எந்த தென்னிந்திய மொழியும் வேர் சொற்களை பெற்றிருக்கவில்லை, தோன்றவில்லை, கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் பொதுவான தென்னிந்திய மொழியின் சிதைந்த வடிவம் என்று சொல்லலாம்.

சமஸ்கிரதம் படிப்பதால் இன்றைய தேதியில் என்ன பலன் ? ஒன்றும் இல்லை இராமயணம் உள்ளிட்ட வடமொழி நூல்களின் மொழிப் பெயர்ப்பு எல்லா மொழிகளிலும் வந்துவிட்டன. வேதம் உபநிசத் ஆகியவற்றை கோவில் கருவறைக்குள் வைத்து பார்பனர்கள் பூட்டிக் கொண்டுள்ளனர், சமஸ்கிரதத்தை முழுமையாக கற்று தேர்ந்தாலும் பார்பனர் அல்லாதவர்களுக்கு கோவிலில் அர்சகர் வேலையும் கிடைக்காது என்ற நிலையில் அதைப் படிப்பதனால் என்ன பயன் ? அர்சகர் அர்சனையின் போது கருமாதி மந்திரம் சொல்லாமல் இருக்காரா என்று தெரிந்து கொள்ளலாம், வேறு பயன் எதுவும் இல்லை,  சமஸ்கிரதம் பேசும் போது அதிரும் புதிரும் என்றால் எச்சிலும் தெறிக்கும் என்பதையும், பல கோவில்கள் பாழடைந்து சாய்ந்ததற்கு அர்சகர் ஓதிய மந்திரத்தின் அதிர்வு தான் காரணமாக இருக்குமோ என்று கேட்கத் தோன்றுகிறது.

இதையெல்லாம் வீட 'நாசாவுக்கு தண்ணீர் காட்டிய திருநள்ளாறு' என்று எந்த ஒரு ஆதரமும் இல்லாமல் ஒரு கட்டுரை எழுதி இன்னும் கூட அவை முக நூல்களில் பரிந்துரைக்கப்பட்டு பல்வேறு அப்பாவிகளால் அப்படியா என்று கேட்க வைக்கப்பட்டு லைக்கப் படுகிறது, அது போல் நாசா சமஸ்கிரத ஒலியை விண்வெளிக்கு அனுப்பி அதன் எதிரொலியை பதிவு செய்கிறது, என்று ஒரு தகவலை பரப்பிவிட்டு இருக்கிறார்கள், முதலில் அவ்வாறு செய்வதால் என்ன பலன் என்பதை கட்டுரை எங்கும் விளக்கவில்லை, அதைவிட நாசா அவ்வாறு செய்ததற்கு ஆதாரணமான எந்த சுட்டியும் அதில் காணும். நானும் நாசா வலைத்தளத்தையும் வலைபோட்டேன் அப்படி எதுவும் அகப்படவில்லை. இன்னும் கூட பலரால் கணிணிக்கு ஏற்ற மொழி சமஸ்கிரதம் என்று பரப்பப்படுகிறது ஆனால் எந்த விதத்தில் ?  8 Bit ஆக இருந்த ASCII code இன்றைக்கு 64 Bit ஆக மாறியுள்ளது ஏலியன் மொழியைக் கூட அதில் ஏற்றி வைத்து கணிணியை இயக்க முடியும். கணிணியை இயக்க எந்த மொழியாக இருந்தாலும் உள்ளுக்கு இயங்குவது இரண்டடிமானம் (Binary) தான், சமஸ்கிரத்தை கணிணி மொழியாக மாற்றி பயன்படுத்துவதால் என்ன பலன் ? ஆங்கிலத்தில் 26 எழுத்து, அதை வைத்து தமிங்கிலத்தில் கூட விரைவாகவே தட்டச்சுவிடுகிறோம், சமஸ்கிரத அறிவியல் பேசுபவர்கள் இவற்றையெல்லாம் கருத்தில் கொள்வதே இல்லை.

இப்போதே ஆங்கிலம் பல்வேறு வட்டார ஆங்கிலமாகத்தான் இருக்கின்றது,  3000 ஆண்டு பழமையான சமஸ்கிரதம் புழக்கம் முற்றிலும் குறைந்து போய் வெறும் 14,000 பேர் தான் பேசுகிறார்கள் என்றால் ஆங்கிலத்திற்கு அந்த நிலை வர 200 ஆண்டுகள் ஆகலாம், ஏனெனில் இன்றைய தகவல் தொடர்பும் மக்கள் பரவலாக்கமும் மொழிகளில் மாற்றத்தை வெகுவிரைவாகவே ஏற்படுத்திவிடும். உலகமொங்கும் எளிமையான ஆங்கிலம் பரவலாகவும் வாய்ப்புள்ளது.

ஆங்கில மோகம் தான் சமஸ்கிரதம் அழிந்ததற்கு காரணம் என்பது பொய்யான முதிர்ச்சி அற்ற வாதம், சமஸ்கிரதம் ஆங்கிலேயார்கள் உள்ளே நுழையாத காலத்திலும் கூட பெரிதாக மக்களால் பேசப்படவில்லை, அது ஒரு பூசை மொழி என்று பரிந்துரைக்கப்பட்டு பொதுப் புழக்கத்தில் இருந்து உள்நோக்கத்துடன் தடுக்கப்பட்டே வந்தது, இந்தியை வலுகட்டாயமாக நுழைக்க முயற்சிப்பதும், முதலில் ஹிந்தி ஒட்டகத்தின் கழுத்தை நுழைத்து சமஸ்கிரத்த்தை மீட்டு எடுக்கலாம் என்பதன் முயற்சியே, அதுவெற்றி பெறாது ஏனெனில் ஹிந்திபடிப்பதனால் வேலை வாய்ப்பு கூடும் என்ற அளவில் எந்த வேலை வாய்ப்பும் கிடையாது., ஹிந்தி தெரிந்தவனும் பிறமாநிலங்களில் பாம்பே மிட்டாய் தான் விற்கிறான் என்பதை நினைக்க ஹிந்தி வாங்கிதரும் வேலை வாய்ப்புகள் பூஜ்ஜியம்.

18 ஜூலை, 2013

வாலி வாலி லாலி !

உன்னைப் படித்ததும் தான் அறிந்தேன்
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?

கம்ப ராயமயணத்தை சொல்லால்
வளைத்த கொம்பன் நீ !

தனை மறைந்து தாக்கிய இராமனுக்கும்
நீ, நினைந்து மறை தந்த மற்றோர்
ஆன்றோர் நேயன் !

நீ எழுதியவை
துட்டுக்கு பாட்டா மெட்டுக்கு பாட்டா ?
விட்டுத் தள்ளிவிட்டு சொல்லாம், அவை
எம் செவி மொட்டில்
விழுந்த தேன் சொட்டு !

நீ தமிழுக்கு வாழ்க்கைப்பட்டு
வாழ்ந்த காலங்களிலேயே
வாழ்த்தப்பட்டவன்
நீ !

புதுமைக்கவிஞன் இவன் என்று
போற்றப்பட்டவன் நீ !

விந்தை நீ, புதுக்கவிதைகளின்
தந்தை நீ.

உன்னிடத்தில் சிக்காத சொற்கள் இல்லை,
அவற்றில் சொக்காத சொற்கள் இல்லவே இல்லை !

உன்னிடத்தில் சொற்கள் அடைந்தன
நிறம், அவை பெற்றன
சாகா வரம் !

தமிழும், தமிழரும் நம்பிய மற்றோர்
தாடி நீ,
இன்றைய கவிஞர்களின்
டாடி நீ !

மாண்ட பொழுதில் தமிழ்தாய் பெரிதும்,
வேண்டும் இவன் வேண்டும் இவன்
மன்றாடி புலம்பப் பெற்ற மற்றோர்
சான்றோன் நீ,
தமிழ் சான்றோர்களின் சான்று நீ !

இன்னொரு முறை இவனே பிறப்பானா ? என்று எம்
தமிழ்தாய் இழந்து ஏங்கும்
குழந்தைகளில் இன்னொருவன் நீ !


இப்பவும் நம்புகிறோம்,
எண்ணத்திற்கு முதுமை என்னத்திற்கு ?

ஒரு வேளை ஓய்வும்.
உறக்கமும் தேவைப்பட்டு இருக்குமோ ?
வாலி வாலி லாலி.............

14 ஜூலை, 2013

"நச்" !

நடக்கூடியது,மிகவும் ஆபத்தானது எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.......என்றெல்லாம் நாம எது நடக்கூடாதுன்னு நினைக்கிறமோ, எவ்வளவு எச்சரிக்கையாக இருந்தும் அது நமக்கே நடக்கும் பொழுது....நடந்த பிறகு ஏற்பட்ட வலியை மீறி......நாம நினைச்சது போல் நடந்துவிட்டது என்று முன்கூட்டிய உள்ளுணர்வை நாமே மெச்சிக் கொண்டு, நம்மை தீர்க்க தரிசியாக நினைப்பது வலிகளை மீறிய ஒரு பெருமிதமான உணர்வு, ஆனால் அது அசட்டுத்தனமானது என்று நமக்கே அது தெரியும்.

************

இங்கே எல்லாம் காப்பீட்டு திட்ட முகவர்கள் காப்பிட்டுக்காக பேசும் பொழுது தன்னை குறிப்பிட்டு ஒருவேளை நான் விபத்தில் போய் சேர்ந்தால் இன்ன இன்ன நன்மைகள் காப்பீட்டு திட்டத்தால் கிடைக்கும் தன்மை விளக்கமாக விளக்குவார்கள், 'நீங்க போய்டிங்கன்னா' என்று முன்னிலை விளக்கினால் முகவரை செருப்பால் அடிக்காத குறையாக துறத்திவிடுவார்கள், காப்பீடுகள் விபத்தின்பிறகு பயனிளிக்கக் கூடியவை என்று நமக்கு நன்கு தெரிந்து தான் வாங்குகிறோம், இதில் அபசகுணம், ஆபாசகுணம் என்று எதுவும் இல்லை என்றால் 'இன்சூரன்ஸ் வாங்கி வைத்துவிட்டால் விபத்து எதுவுமே நடக்காது.....' என்பது பெருவானவர்களின் நம்பிக்கை. மற்றபடி விபத்து நடந்தாலும் நட்டமில்லை, குடும்பத்திற்கு உதவும் என்றே காப்பீடுகளுக்கு ஒப்புக் கொண்டு வாங்கி வைத்துக் கொள்கின்றனர், 

ஒருமுறை 'கேக்ரான், மேக்ரான்' கொம்பேனியில் இருந்து ஒருவர் காப்பீட்டுக்காக அழைத்துப் பேசினார், ஒரு நாளைக்கு இத்தனை அழைப்புக் கணக்கில் அவர்களுக்கு ஏதேனும் கமிசன் கிடைக்கலாம், என்பதால் 'காப்பீட்டு நிறுவனத்தில் இருந்து பேசுகிறேன்' என்றதும், நாம விரும்பி தலையைக் கொடுக்காவிட்டால் இவர்களிடம் பேசுவதில் எதுவும் நட்டமில்லை என்றே 'சரி சொல்லுங்க; என்றேன், எல்லாம் விசாரித்துவிட்டு, உங்க வீட்டில் குழந்தை இருக்கிறது என்கிறீர்கள், உங்க குழந்தை கை கதவில் சிக்கிக் கொண்டால் கூட எங்க காப்பீட்டு திட்டம் பயன்கொடுக்கும் என்றார், நெருப்புன்னா வாய் வெந்திடுமா ? என்று கேட்பவரிடம் செருப்பு பிய்ந்துவிடும் என்று சொன்னால் கன்னம் பழுத்துவிடுமா ? என்று கேட்டுப்பாருங்கள் பதில் வராது, அப்பறம் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுவிடுவார். இது போன்று தான் குழந்தை கை நசுங்குவதைப் பற்றிப் பேசுகிறானே என்று எனக்கு 'திக்' என ஆகியது. 'தயவு செய்து நான் திட்டுவதற்குள் போனை வைத்துவிடுங்கள்" என்று கூறி இணைப்பை துண்டித்துவிட்டேன், காப்பீட்டு முகவர்களில் 'இங்கிதம்' தெரியாதவர்களும் உண்டு, என்பதற்காக இதைக் குறிப்பிட்டேன், குழந்தைகளுக்கு கையில் அடிபடுவது ஆங்காங்கே நடைபெறும் நிகழ்வு என்றாலும் அதற்கு குழந்தைகளின்  வலியை மீறி பெற்றோர்களுக்குத்தான் வலி மிகுதி, முற்றிலும் எதிர்பாராத விபத்து என்பவைத் தவிர்த்து குழந்தைகள் சிக்கிக் கொள்ளும் விபத்துகள் பெற்றோர்களின் கவனக் குறைவும் பெறுப்பின்மையும்  தான் காரணம், அந்த அளவுக்கு அசட்டையாக இருந்தால் குழந்தையைப் பெற்றுக் கொண்டு பெருமைப்பட்டு சீராட்டுவதில்  என்ன பயன், அதற்கெல்லாம் காப்பீடு எடுத்து அதை வாங்க நேரிடும் கொடுமையைப் பற்றி நினைக்க விரும்பாததால் அந்த முகவரிடம் என்னால் தொடர்ந்து பேசவிருப்பமில்லை.

எங்கள் வீடு அடுக்குமாடி குடியிருப்பில் 6 ஆம் தளத்தில் இருக்கிறது, மாஸ்டர் பெட்ரூம் எனப்படும் படுக்க அறைக் கதவுகள் திறந்திருக்கும் பொழுது அதை சுவற்றுடன் கூடிய காந்த பொருத்தியில் அணைத்து வைக்காவிட்டால் படுக்கை அறை சன்னல்களையும், வீட்டு வாசல் கதவையும் திறந்து வைத்தால் அறைக்குள் காற்று நுழைந்து வெளியேறும் காற்று சுழற்சியின் அழுத்ததால் படுக்கையறைக் கதவு 'மடிரென்று பெரும் ஓசையுடன் சாத்திக் கொள்ளும்' நானும் பலமுறை சன்னல் கதவை திறந்து வைத்தால் படுக்கை அறைக் கதவை மூடி வையுங்கள், என்று சொல்லிப் பார்த்து அலுத்துவிட்டேன், நான் கவனித்து இருந்தால் காற்று மிகுதியாக உள்ளே வராத அளவுக்கு கொஞ்சமாகத்தான் திறந்து வைப்பேன், வீட்டில் உள்ள மற்றவர்கள் கேட்கனுமே, எதுவும் நடக்காத என்ற நம்பிக்கையில் கதவு அறைந்து சாத்திக் கொள்ளும் சத்தத்தை அப்போது மட்டும் பொருட்படுத்தி பிறகு மறந்துவிடுவார்கள். வீட்டில் குழந்தை இருக்கிறது, நாம பெரியவங்க கை நசுங்கினால் தாங்கிக் கொள்வோம், குழந்தைக்கு ஏதேனும் ஆச்சுன்னா ? என்றெல்லாம் கூட சொல்லிப் பார்த்தேன்.

பிப்ரவரி மாதம் இங்கே நன்றாக காற்று சுழன்று அடிக்கும், ஒரு நாள் காலையில் 10 மணி இருக்கும் வசிப்பறையில் தொலைகாட்சிப் பார்த்துவிட்டு, படுக்க அறை குளியல் அறைக்கு செல்லலாம் என்று உள்ளே சென்று சட்டையை கழட்டி கதவின் பின் இருக்கும் ஹாங்கரில் மாட்ட கதவை கொஞ்சம் கைவைத்து விலக்க, ஏற்கனவே சுவற்றுடன் பொருத்தியில் சரியாக பொருந்தி இல்லாததால், அடித்த காற்றுக்கு வேகாமாக சாத்திக் கொள்ள கதவு துவங்கியது, 'மடீர்' சத்தத்தையாவது தடுக்கலாமே என்று மிக அவசரமாக, செயல்பட ஆள்காட்டிவிரல் மட்டும் முந்திக் கொள்ள, காற்றுவிசையுடன் கூடிய கதவின் (இங்கெல்லாம் தீ தடுப்பு உலோககலவையுடன் கதவு செய்திருப்பார்கள், ஒரு கதவு ஐம்பது கிலோவுக்கு குறையாது) மொத்த எடையும் கதவு தாழ்பாள் போடும் இடத்தில் ஆள்கட்டி விரலில் சரியாக நகக்கண்ணில் 'நச்ச்.......'  மிகவும் வேகமாக மோத,   மரண வலி

'நான் எவ்வளவு தலைப்பாடாக அடித்துக் கொண்டேன் கேட்டீர்களா ?' இன்னேரம் குழந்தை விரலாக இருந்தால் என்ன ஆகி இருக்கும் ? என்றெல்லாம் சொல்ல சொல்ல அதன் பிறகு கவனமாக இருக்கிறார்கள், விரல் கதவில் நசுங்கிய பிறகு தாங்க முடியாத வலி, உடனேயே இரத்தம் நகத்திற்குள் கட்டிக் கொண்டது, வெளிக்காயம் எதுவுமில்லை,  விரலில் தொடர்ந்து சுத்தியால் அடிப்பது போன்று 'விண் விண்' ஒரு மாதிரி தெறிப்பான வலி மறுநாள் காலைவரை நீடித்தது, முதல் நாள் இளம் சிவப்பாக உள்ளுக்குள் தெரிந்த நகம் நாள் ஆக ஆக கருமைக்கு மாறியது, அவ்வளவு தான் இனி ஆள்காட்டி விரலில் நகமே இருக்காது, தேவை இல்லாத பங்கம், எச்சரிக்கையாக இருந்திருக்கலாமே என்றெல்லாம் கொஞ்சம் கவலையாகவும் இருந்தது,  மூன்றாம் நாளில் இருந்து விரல் வலி முற்றிலும் குறைந்தது

கிட்டதட்ட இரண்டு மாதங்களாக  நகத்தைப் பார்க்கும் பொழுதெல்லாம் நாளுக்கு நாள் கருப்படைய கொஞ்சமும் வளர்ச்சி இன்றி இருந்ததால், ஆள்காட்டிவிரலில் கதை முடிந்தது என்றே நினைக்கத் துவங்கினேன், இரண்டு மாதம் ஆன பிறகு நகக்கண்ணில் இருந்து நகம் பிரியத் துவங்கி விரலுக்கும் நகத்திற்கும் இடையே கொஞ்சம் இடைவெளி ஏற்படத் துவங்கியது, அவ்வளவு தான் நகம் நகம்..........போச்சு என்றே நினைத்தேன், சட்டை மாட்டும் பொழுது அல்லது ஏதோ நூலிலோ, கம்பியிலோ விபத்தாக பிய்ந்துவரும் நகம் சிக்கிக் கொண்டு பெயர்த்து கொண்டால் மீண்டும் மரண வலி எடுக்குமே.... என்பதால் பேண்ட் எய்டை விரல் மீது சுற்றிக் கொண்டேன், நாள் தோறும் அதை மாற்றி மாற்றி சுற்றிக் கொண்டு வர நகக்கண்ணில் இருந்து மேலும் மேலும் நகம் வளரும் திசைக்கு பெரிய இடைவெளி விட்டு விலகிக் கொண்டே சென்றது, பின்னர் இரண்டு வாரம் கழித்து  அடிபட்ட நகத்திற்கும் நகக்கண்ணிற்குமான இடத்தை வலது விரல் நகத்தால் அழுத்திப் பார்த்தேன்.

 'அப்பாடா' நக்கண்ணில் இருந்து புதிய நகம் வளரும் அழுத்தத்தை அதில் உணர்ந்தேன், அப்போதும் முழு நகமும் நசிங்கிய பிறகு அடிச் சதை காய்ந்து போய் இருக்குமே அதன் மீது வளர்ந்து வரும் நகம் படர்ந்து வளருமா ? என்ற ஐயம் இருந்தது, நானும் தொடர்ந்து ஒரு மாதம் நாள் தோறும் பேண்ட் எய்டுகளை சுற்றி சுற்றி காத்துவந்தேன், வெள்ளைக்கரு மீது முட்டை ஓடு உருவாகுவதைப் போல் அடிபட்ட நகத்தை முட்டித் தள்ளிக் கொண்டே புதிய நகம் முன்னேற விரல் நுணியில் பாதி அளவுக்கு பழைய நகம் தள்ளப்பட்டு அதற்கு மேல் அதற்கு தாங்கிப் பிடிக்க உறுதி இல்லாததால் ஒரு நாள் பையினுள் கைவிட்டு எதோ தேட பழைய நகம் முற்றிலும் பிய்ந்து தொங்கிவிட , ஆனால் வலி இல்லை. விரல் நுணியில் பாதி வளர்ந்த நகம், மீதம் சற்று மென்மையான சதைப் பகுதியாக தெரிந்தது, இதற்கு மேல் நகம் வளராதோ ? மீண்டும் ஐயம். ஆனாலும் தொடர்ந்து விரல் நுணியை ஓரளவு ஈரப்பதத்துடன், பாதுகாப்பாக வைத்திருப்பது என்ற முடிவு செய்து பேண்ட் எய்டு சுற்றியே வைத்திருந்தேன், அதன் பிறகு 15 நாள் ஆகி இருக்கும், விரலில் நகம் விழுந்த அடையாளமே தெரியாத அளவுக்கு  வளர்ந்திருந்தது, அடுத்த அடுத்தவாரம் நகம் வெட்டும் அளவுக்கு வளர்ந்துவிடும். மீண்டும் நகம் பழையபடி வளர்ந்து ஆள்காட்டி விரலை வடிவத்திற்கு கொண்டுவந்த பிறகும், அதன் வளர்ச்சியின் போதும் எனக்கு ஏற்பட்ட மன உணர்வுகள் என்னால் மட்டும் தான் உணரமுடியும். 


இதிலிருந்து நான் அறிந்து கொண்டது, விபத்தில் விரல் பகுதி சேதமடையாமல்  நகம் முற்றிலும் சிதைந்தால் கூட மூன்று மாத இடைவெளியில் மீண்டும் வளர்ந்துவிடும். நாம் அதுவரை அப்பகுதியை தூய்மையாக பாதுகாத்து வரவேண்டும், கலவரம் / கவலை அடையத்தேவையில்லை.

ஏற்கனவே வேறொரு விபத்து, அதுவும்  இது போல்உள்ளுணர்வு சொன்னது நடந்திருக்கிறது

9 ஜூலை, 2013

குடுமி - 2

இது தொடர் இடுகை இல்லை, ஏற்கனவே குடுமி பற்றி ஒண்ணு எழுதியதால், அடுத்து இது இரண்டாவது ஆனா இது வேற தகவல். முன்பு எழுதிய குடுமிக்கும் இதற்கும் யாதொரு தொடர்பும் சிண்டு முடிதலும் இல்லை என்பதை அழுத்தம் திருத்தமாக கூறிக் கொள்கிறேன். வேண்டுமென்றால் சிங்கம் -2 மாதிரின்னு வைத்துக் கொள்ளுங்கள்

***********

எங்க ஊருல (சிங்கப்பூர்காரவுக தமிழ்நாட்டில் இருந்து வந்தவகளை ஊருக்காரவகன்னு 'செல்லமா' சொல்லுவாக, அவங்களுக்கு தமிழ்நாட்டின் தலைநகர் சென்னையிலிருந்து ஒருவர் சிங்கப்பூர் வந்தாலும் அவுகளும் ஊருக்காரவுக தான், சென்னை வாசிகளே சென்னைக்கு வருபவர்களை ஊரான் என்று சொல்லும் முன் உங்களையும் 'நாங்க' ஊருக்காரவங்கேன்னு தான் சொல்லுதோம் என்பதை நினைவில் கொள்க)  ஜெகநாத் ரத யாத்ரைன்னு பல இடங்களில் அறிவிப்பு சுவரொட்டிகள் இருந்ததன,  வீட்டுக்காரம்மாவின் தெரிஞ்சவங்க கொஞ்சபேர் ஹ(அ)ரே இராமா ஹ(அ)ரே கிருஷ்ணா  இயக்கத்தினர், ரதயாத்ரையில் நேரடியாக பங்கெடுப்பவர்கள், அதனால் நாமும் போய் பார்த்து வருவோம் என்று அழைத்தார். அரே இராமா அரே கிருஷ்ணா குழுதான் ரதயாத்ரைக்கு ஏற்பாடு செய்திருந்தது.

புள்ளைக் குட்டியோடு குடும்பமாக இரத யாத்ரை பார்க்கக் கிளம்பினோம், ரதயாத்ரை எங்கே நடந்தது என்றால் ? அது தோபாயா என்னும் இடத்தில் அமைந்த ஒரு விளையாட்டு மைதானத்தில் தான் நடந்தது. சிங்கப்பூரில் ரதயாத்ரையா ? இதுக்கு எப்படி அனுமதி கொடுத்திருப்பார்கள்,. இந்தியாவில் நடக்கும் ரதயாத்ரை குறித்து சிங்கப்பூருக்கு தெரிந்திருக்காதா ? 1988ல் இருந்து நடக்கிறதாம். இதற்கு எப்படி அனுமதி கொடுத்திருப்பார்கள் என்று கற்பனை செய்து பார்த்தேன்.

அ.ரா.அ.கி: எங்களுக்கு இரத யாத்ரை நடத்த அனுமதி வேண்டும்......நாங்க ரதத்தை ஊர்வலமாக கொண்டு போவோம்

சிங்கப்பூர்.அரசு : சிங்கப்பூரில் ஊர்வலம் செய்ய அனுமதிக்க முடியாது

அ.ரா.அ.கி: இது எங்க பண்பாடு, நாங்க ஊர்வலமாக எடுத்துச் செல்வோம், ஆடிக் கொண்டே செல்வோம், பல சமயங்களை மதிக்கிற நீங்கள் இதையும் அனுமதிக்கனும்.

சிங்கப்பூர்.அரசு :  சிங்கப்பூரில் சாலைகளில் எந்த ஒரு மதம் சார்ந்த / நம்பிக்கை சார்ந்த ஊர்வலங்களுக்கும் தடை....உங்களுக்கு சிறப்பு அனுமதி தருகிறோம், ஆனா நாங்க சொல்ற இடத்தில் தான் நடத்திக்கனும், அங்க நீங்க ஊர்வலம் போவிங்களோ, ஆடுவிங்களோ,,,,,,,வேற வாய்பில்லை

அ.ரா.அ.கி:  முடியாது...............ஆனா முடியும் - 

என்று ஒருவழியாக அனுமதிபெற்று 25 ஆண்டுகளாக இரத யாத்ரை நடத்திவருகிறார்களாம்.  விழாவில் ஒருவர் 1988ல் இருந்து நடப்பதாக அறிவித்தார்

********

ரத யாத்ரை நடந்த இடம் ஓட்டப்பந்தயம் நடத்தக் கூடிய பெரிய கோள வடிவிலான ஓட்ட மைதானம். விழாவிற்கு வருபவர்களை 'ஹரே இராமா' சொல்லி வரவேற்க இரண்டு இளைஞர்கள், அவர்களிடம் சிறப்பு குடுமி எதுவும் இல்லை, அதைத் தாண்டி உள்ளே சென்றால்  பஞ்சு மிட்டாய், அப்பறம் நூல்கள் விற்பனை, இன்னும் வெஜ்டேரியன் பிஸ்ஸா உள்ளிட்ட சில ஸ்டால்கள் இருந்தன, மைதானத்தின் நடுவில் நான்கு பலூன் சிலைகள், இரண்டு பக்கமும் நீலம் மற்றும் காவி உடை அணிந்த கைகளை தூக்கியபடி பால கிருஷ்ணன், நடுவில் ஏதோ அசுர உருவங்கள், விளையாட்டு மைதானத்தில் ஓட்டம் துவங்கும் இடத்தில் மூன்று இரதம், துவாரக கோவில் அமைப்பில் செய்யப்பட்ட ரதம், சுமார் இருபது அடி இருக்கும், அவற்றின் ஒவ்வொன்றிலும் மழுங்க சிரைத்த தலையில் பின்மண்டையில் மட்டும் கேள்விக்குறி மற்றும் ஆச்சரிய குறி அமைப்புகளில் குடுமியுடன் பூசாரிகள் நின்று கொண்டிருந்தனர், 


ஒவ்வொரு ரதத்தின் முன்பு திரளான அ.ரா.அ.கி இயக்கத்தினர் ஜிங்கச்சா மாதிரி எதையோ தட்டி தட்டி பாட்டுப் பாடிக் கொண்டே உற்சாகத்துடன் துள்ளி ஆடிக் கொண்டு இருந்தனர். ஓ இது தான் கிருஷ்ணர் அன்பில் அன்பர்கள் திளைத்திருத்தலா ? அதிலும் வெள்ளைக்காரர்கள் குடுமியோடு துள்ளிக் கொண்டு இருந்தது பரவசமூட்டியது. என்னதான் நீங்களெல்லாம் செவ்வாயில் ஆராய்ச்சி நடத்தினாலும் எங்காளுங்க உங்களையும் மொட்ட போட்டு வெறுவாயால் பாட வச்சு துள்ள வச்சிருக்காங்களேன்னு நினைக்க பரவசம்.

திரைப்பட நடிகர்கள் படத்துக்கு படம் 'கெட்டப்' மாற்ற தலையிலும், மீசையிலும், தாடியிலும் .......மொத்தத்தில் முடியில் கைவைப்பது போல்.....எந்த ஒரு மத அடையாளமும் தனக்கான கட்டிங்க் ஷேவிங்க் வைத்திருக்கிறது, அ.ரா.அ.கி இயக்கத்தில் தீவிரமாக இருப்பவர்கள் இராமனுஜர் போன்று மொட்டை அடித்துக் கொண்டு பின்பக்(ங்)கம் கொஞ்சம் குஞ்சம் போன்று சிறு குடுமி வைத்திருக்கிறார்கள், அதிலும் மேல்சாதியினர் விடாப்படியாக பூணூல் அணிந்திருக்கின்றனர் (வெள்ளைக்காரன் பூணூல் போடவில்லை), அதில் ஓரளவு ஈடுபாட்டில் உள்ளவர்கள் முழுக்க மொட்டை அடிக்காமல் பின்பக்கம் ஒரு சிண்டு முடிந்து கொள்கிறார்கள். நெற்றியில் கீற்று போன்று சந்தனம் வைத்துக் கொள்கிறார்கள், 

விழாவில் சுமார் 500 பேர்கள் வரை கலந்து கொண்டு இருப்பார்கள் என்றே நினைக்கிறேன், கலந்து கொண்ட தமிழ் முகங்கள் மிகக் குறைவு, அவர்களுடைய வழிபாட்டு முறைகளும்,ரத அமைப்பும், அந்த பாடல்களும் தமிழ் பண்பாட்டிற்கும் அதற்கும் வெகு தொலைவு போல், நாம் எதோ அழைக்காத திருமணத்தில் கலந்து கொள்ளச் சென்றது போல் வெகு அன்னியமாக இருந்தது (ஏன்யா போனே ? ன்னு கேட்காதிங்க........நான் பக்தி என்ற அடிப்படை இல்லாமல் நாகையில் கோவில் திருவிழாக்களுக்கு சென்றிருக்கிறேன், வேளாங்கன்னி திருவிழாவிற்குக் கூட சென்றிருக்கிறேன், அங்கெயெல்லாம் அந்த அந்நிய உணர்வு வந்ததே இல்லை) 

*****


இதோ யாத்திரை துவங்குகிறது..என்று ஆங்கிலத்தில் சொன்னார்கள், இரதம் ஒவ்வொன்றாக கிளம்பி ஓட்டப்பந்தைய பாதையில் சுற்றத் துவங்க திரளான பக்தர்கள் இழுத்துச் சென்றனர். ரதம் விளையாட்டு மைதானத்தை சுற்றி வருவதால் என்ன நன்மையோ ? எத்தனை முறை சுற்றினார்கள் என்று தெரியாது, நான் ஒரு சுற்று முடிக்கும் முன்பே கிளம்பிவிட்டேன், இன்னும் சில நூறு ஆண்டுகள் சென்றால் கிருஷ்ணன் சிங்கப்பூர் ப்ளே க்ராவுண்டில் தான் பிறந்தார் என்ற கதைகள் கூட எழுதப்படலாம், ஆனால் இதன் பிற நன்மைகள் பார்தோமேயன்றால் பொது சனத்துக்கு எந்த இடையூறும் இல்லை, இந்த இரத யாத்திரையினால் மதக்கலவரம் இல்லை. இதையே ஏன் இந்தியாவிலும் பின்பற்றக் கூடாது ? இந்தியாவில் இரத யாத்திரை என்றாலே இரத்த யாத்திரையா என்று கேட்கும் அளவுக்கு அல்லவா இருக்கிறது.

இதே இயக்கத்தினர் ஒரு முறை தெப்பம் விடுவதாக, நீச்சல் குளத்தில் தெப்பம் விட்டு விழா நடத்தினார்கள். விழாவில் ஹைலைட் எனக்கு பிடித்தது அவர்கள் வைத்திருந்த குடுமி தான்.

ம் நிரந்தர சொர்கத்தின் ஆள் பற்றக் குறையை நீக்கனும் என்றால் இந்த சிலை வணங்களும், இணை வைப்பவர்களும் திருந்தனும் இதையெல்லாம் அல்லா எப்போ செய்து முடிக்கப் போறாரோ............? நோன்பு திறக்கும் நேரத்தில் இதை எழுதிவிட்டு எனக்கு கவலையோ கவலை.

5 ஜூலை, 2013

இளவரசனைக் கொன்ற வருணாசிரமம் !

இளவரசனின் மரணச் செய்தி வருணாசிரமவாதிகளுக்கு சாதிகள் அழியாது என்று வயிற்றில் பால் வார்த்திருக்கும், சாதியம் என்பது மனித குல மேன்மைக்கு வேதங்கள் வழிவகுத்து காத்துவருபவை என்பதே வருணாசிரமவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. சாதியும் மதமும் சொந்த இனத்தையே கொன்று போடும் தன்மை வாய்ந்தவை என்பதைத் தான் நாம் இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்விலும் பார்த்துவருகிறோம். குலத்தொழிலையும் அதைச் சார்ந்தவர்களையும் சேர்த்து சாதியமாக மாற்றிய பிறகே செய்யும் தொழிலால் இழிவு என்று மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர்.

திருவள்ளுவர் காலத்தில் செய்தொழிலை வைத்து திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....என்ற நிலையில் இருந்தவை ஒவ்வையார் காலத்தில் 'சாதி இரண்டொழிய......' என்ற சாதிய நடைமுறைக்குள் தமிழகம் வந்துவிட்டு இருந்ததை குறிப்பிடுவனயாகும், இன்றைய தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஒருகாலத்தில் புத்த மதத்தைப் பின்பற்றியவராக இருந்தனர், புத்தமதம் வீழ்ந்த பிறகு அதைப் பின்பற்றியவர்களை ஒடுக்கி, ஒதுக்கி, அவர்களது வழிபாட்டு சின்னங்களை அழித்து, வரலாறுகளை அழித்து, தம்முடைய வரலாறு என்ன என்பதையே அவர்கள் அறியாவண்ணம் நூற்றாண்டு காலங்களும் அவற்றின் சுவடுகளை அழிக்க, இந்த மண்ணில் பிறந்து, மண்ணிற்கு சொந்தமானவர்களையே தாழ்த்தி பார்த்து, தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் அவலம், பாரத திருநாட்டைத் தவிர்த்து வேறெந்த நாட்டிலும் நடக்காத கொடுஞ்செயல்.

மனித உடம்பில் சாதிய உறுப்பு என்று ஒன்று இல்லாமலேயே 1000 ஆண்டுகளாக அவை மரபு ரீதியாக கடத்தப்பட்டு அதன் பலனை(?) இன்றும் அனுபவிக்கிறோம், வெளிநாட்டிலேயே தங்கியவர்கள் கூட கூடவே எடுத்துச் சென்ற சாதியை விடாமல் பின்பற்றியே வருகின்றனர், அப்படி என்ன தான் சாதியில் இருக்கிறது ? நினைத்துப் பார்த்தால் குல தெய்வ வழிபாடு, பரம்பரை பெருமை (அதுவும் சிலருக்கு தான்), திருமண உறவு இதைத் தாண்டி எதுவுமே இல்லை, வீட்டை விட்டு வெளியே வந்தால் பல்வேறு தரப்பினரிடம் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் சாதியின் பலன் என்று எதுவும் தனித்து இருப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய சாதியம் என்பவை ஓட்டு வங்கி என்ற நிலையை அடைந்திருக்கிறதன்றி, அந்தந்த சாதியில் ஏழையாக இருந்தவன் ஏழையாகத்தான் இருக்கிறான்,  எத்தனையோ சாதியத் தலைவர்கள் கல்லூரிகள் துவங்கி இருக்கிறார்கள், அந்தந்த சாதியைச் சார்ந்த ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுத்திருக்கிறார்களா ?

*********

மாநகரங்கள் தவிர்த்து தமிழக நகரங்கள், கிராமங்கள் இன்னும் சாதி பற்று நீங்காமல் தான் இருக்கின்றன, காரணம் சாதிக்கான தனித் தனி தெருக்கள் இன்னமும் உண்டு. நகரங்களில் / மாவட்ட தலைநகரங்களில் தாழ்த்தப்பட்ட சாதியைத் சார்ந்த ஆணை மாற்று சாதி பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டால், வெட்டிப் போடுவது, தற்கொலை நாடகம், இருதரப்புகள் அடித்துக் கொள்ளுதல் இவையெல்லாம் இருக்காது, அதற்கு பதிலாக பெண்ணின் பெற்றோர் பெண்ணை தலை முழுகிவிடுவார்கள், பெண்ணின் பெற்றோர் சார்ப்பு உறவினர்கள் கூட யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள், பெண்ணுடைய அப்பா / அம்மா  இறந்தாலும் அவளால் வீட்டு வாசலை மிதிக்க முடியாது, கூடப் பிறந்தவர்களே 'பரப்பய கூட ஓடிப் போனவளுக்கு உறவு என்ன வேண்டிக்கிடக்கிறது...........?' என்று தூற்றி விரட்டிவிடுவார்கள். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை, இவை எல்லோருக்கும் தெரிந்தவை தான்.

எங்கள் சொந்ததிலேயே அதுபோன்று தலை முழுகப்பட்ட பெண்கள் உண்டு, இதை எழுத எனக்கு கூசுகிறது, இதுபற்றி நானும் உறவுக்காரர்களிடம் பலமுறை பேசியும், யாரும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவும் இல்லை. இத்தனைக்கும் தாழ்த்தப்ப்ட்டவர்கள் அல்லாத சமூகம் சார்ந்த கலப்பு திருமணங்கள் எங்கள் உறவுக்காரர்களிடம் மிகுதி. வீட்டில் உள்ள மாடுகளை மேய்க்க, அவற்றை குளிப்பாட்ட, பால் கரக்க, வயலில் வேலை செய்ய எல்லாவற்றிற்கும் பறையன் / பள்ளன் ஆகுமாம், ஆனால் சம்பந்தி என்கிற வட்டத்திற்குள் கொண்டு வந்தால் ஊரு ஒலகம் தூற்றும் என்று அச்சப்படுவார்கள்.  பேருந்தில் சென்று வந்தால் உடனே குளிப்பவர்கள் கூட உண்டு, ஏனென்றால் அதில் கண்ட சாதிக்காரனும் ஏறி இருப்பான், கூட்டத்தில் அவர்களையெல்லாம் ஒருவேளை தொட நேரிட்டிருக்கலாம் என்பார்கள். 

கிரமங்களில் சாதிய மோதல் என்பவை எந்த சாதிக்காரகள் மிகுதியாக வசிக்கிறார்கள் என்பதைப் பொருத்ததே, தாழ்த்தப்பட்டவர்கள் மிகுதியாக வசிக்கும் இடத்தில் மற்ற சாதியினர் வசிக்கமாட்டார்கள், அடுத்த அடுத்த கிராமத்தில் வேறொரு சாதிக்காரகள் வசிப்பார்கள், இந்த பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து யாரும் செயல்படுவதில்லை, இளம் பெண்களைப் பொருத்த அளவில் தன்னை நேசிப்பவர் மீது உடனேயே காதல் வயப்படுவது எங்கேயும் நடைபெருவதே, இன்றைய காலத்தில் பொருளாதரமும் கல்வித் தகுதியும் பெண்கள் உணர்ச்சி வசப்படுவதில் இருந்து கொஞ்சம் மட்டுப்படுத்தியுள்ளது, மற்றபடி ஒரு ஆண் தன்னை நேசிக்கிறான் என்று தெரியும் பொழுது ஒரு பெண் அவன் எந்த சாதியைச் சார்ந்தவன், மதத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் பார்க்கவே மாட்டாள்,  இந்தவிதத்தில் பெண்களை கட்டுப்படுத்தும் எந்த சமூகம் அமைப்பும் அடிக்கடி தோல்வியையே சந்திக்கின்றன, எத்தனை ஆண்கள் தன்னை விட தாழ்ந்த சமூத்தில் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் ? கிராமங்களில் தாழ்த்தப்பட்ட கலப்பு திருமணங்கள் பெரும்பாலும் கொலை / தற்கொலையில் தான் முடியும்.

ஒரு ஆணுக்கு தான் தன்னுடைய காதல் கைகூடுமா ? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும், இளவரசன் செய்தது தவறு, சாதித் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு வளைய கிராமத்தில் இருந்து கொண்டு காதல், ஓடிப் போய் திருமணம் என்றெல்லாம் சென்று மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இளவரசனின் மரணம் மிகவும் வருத்தமான நிகழ்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, சாதிகள் ஒழியும் என்று எந்த நம்பிக்கையும் அது ஏற்படுத்தவில்லை. 

தாழ்த்தப்பட்டவரை கலப்பு திருமணம் - திரைப்படத்தில் கூட காட்ட முடியாத அவல நிலை தான் தமிழகத்தில் உள்ள நிலை, சேரன் எடுத்த பாரதி கண்ணம்மா படத்தில் ஒரு முயற்சி எடுத்து அதிலும் காதலர்களைக் கொன்றுவிடுவார்.  தாழ்த்தப்பட்டவர்களை யாரும் கலப்பு திருமணம் செய்து கொள்வதில்லையா ? இருக்கிறார்கள் அவையெல்லாம் சென்னை போன்ற மாநகரங்களில் உண்டு, சிறு நகரங்களில் ஒதுக்கி வைக்கப்படுவது, கிராமங்களில் கொலை செய்யப்படுவதும் தான் நடைபெற்றுவருகிறது.

திவ்யாவின் அப்பங்காரன்  தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதிவெறியனா ?  என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும், இது சாதிவெறியால் நிகழ்ந்த தற்கொலை அல்ல, ஒரு பெண் வீட்டை விட்டு அதுவும் தாழ்த்தப்பட்டவருடன் திரும்ப முடியாத / கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்றால் கொஞ்ச நாள் ஊருக்குள் கலவரம் நடக்கும், பின்னர் அமுங்கிவிடும், ஆனால் அக்கம் பக்கம் எதாவது சண்டை என்றால் மொத்த குடும்பத்தையே 'பரப்பய கிட்ட கூட்டிக் கொடுத்த குடும்பம் தானே உன்னது' என்று ஒரே வார்த்தையால் கூனிக் குறுக வைத்துவிடுவார்கள், அந்த அவமானத்தை நினைத்து தான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும், தற்கொலை செய்து கொள்ள மனதில்லாதவர்கள் ஊரைக் காலி செய்து கண் காணாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.

*************

தமிழினக்காக முத்துக்குமார் உள்ளிட்டோர்  பலர் உடலில் தீ வைத்துக் கொண்டு தீயில் கருகினார்கள், அவர்களின் தியாகம் பேசப்படுகிறது, அவர்களை ஒப்பிட இளவரசனின் தற்கொலை / கொலை மரணம், திவ்யாவின் தந்தை தற்கொலை ஆகியவை ஒரு கிராமத்தில் நடந்த சாதி வெறியின் ஊடகக் படப்பிடிப்பு காட்சிகள் என்பது தவிர்த்து, மக்கள் மனதில் சாதி வெறிகள் நீங்காதவரை. வருணாசிரம வேதங்களை ஒழிக்காதவரை இவற்றைப் பற்றியே பேச ஒன்றும் இல்லை என்பது எனது சொந்தக் கருத்து, இவை தமிழக கிராமங்களில் எங்கும் எப்போதும் நடைபெறுவையே, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் அரசியலுக்காக அவை ஊடக வெளிச்சத்திற்குள் வந்துள்ளன.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்