பின்பற்றுபவர்கள்

இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இந்தியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

6 அக்டோபர், 2015

மும்பையின் வியப்புகள் !

மும்பைக்கு அலுவலக பயணமாக மும்முறை கிட்ட தட்ட 60 நாட்கள் நாரிமன் பகுதியில் உள்ள ட்ரைடென்ட் விடுதியில் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. இந்தி தெரியாமல் அவமானப்பட்டேன், அசிங்கப்பட்டேன் என்று சொல்லும் திராவிட எதிர்ப்பு மற்றும் இந்தி ஆதரவு தூற்றிகள் சொல்வது போல் எதுவும் நடக்கவில்லை. 

60 நாட்கள் தங்கியதில் முதல் 15 நாட்களுக்கு வாடகை உந்துகளில் தனித்து சொல்ல நேரிடிகையில் செல்லும் இடம் குறித்தும் இறங்கும் இடம் குறித்தும் 
விளக்கிச் சொல்ல கடினமாக இருந்தது, அது நமக்கு ஆங்கிலம் தெரியாத வெளிநாடுகளுக்கு செல்லும் போது ஏற்படும் அனுபவம் போன்றது தான், ஆனால் அடுத்த 15 நாட்களில் பேச்சுக்களை உன்னிப்பாக கவனித்து ஓரளவு இந்தியில் தெரியும், தெரியாது, இங்கே அங்கே, அதற்கு பக்கத்தில் (ஏர் இண்டியாகா பில்டிங்கே பாஸ்) என்ற அளவுக்கு இந்தி புலமை வந்துவிட்டதால் பிறகு வாடகை உந்திகளில் எங்கும் செல்லவும் தயக்கமின்றி சென்று வந்தேன். எந்த மொழியையும் ஊட்டவேன்றுமென்ற தேவையில்லை, அந்த மொழியை மதித்து அவற்றை கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருந்தாலே குறிப்பிட்ட மொழி பேசும் நகரத்தில் தங்க நேறும் பொழுது 6 மாதங்களுக்குள் நன்றாகவே பேச முடியும். இந்த திறமை யற்றவர் எவ்வளவு தான் ஒரு மொழியை படிப்பின் வழி திணித்தாலும் பேச கற்றுக் கொள்ளாவே முடியாது. ஒன்றாம் வகுப்பில் இருந்து கல்லூரி வரை ஆங்கில வழி கல்வி கற்பவர்களாலும் கல்லூரியை விட்டு வெளியே வந்தவுடன் சரளமாக ஆங்கிலத்தால் பேசமுடியும் ? தயக்கமின்றி பேசி பயிற்சி எடுத்தால் மட்டுமே கல்வியாக கற்ற எந்த மொழியையும் பேச முடியும், 


இந்தி கற்றுக் கொடுத்திருந்தால் நாங்கள் வடநாட்டுக்காரனிடம் அசிங்கப்பட்டிருக்கமாட்டோம் என்று மொழியியில் அறிவின்றி கூறுவோரைக் கண்டால் திராவிட இயக்கங்களைத் திட்டும் பாவம் பைத்தியம் என்றே எனக்கு நினைக்கத் தோன்றும். கொத்து வேலைக்கு வடநாட்டுக்கு செல்லும் தமிழக கூலிகள் எந்த பள்ளியில் படித்து அங்கே இந்தி பேசக் கற்றுக் கொள்கிறார்கள், பிழைக்கும் வழிக்கு அங்குள்ள மொழியின் முக்கிய தேவை என அறிந்தோர் ஆர்வத்தினால் கற்றுக்கொள்வர், 

மலேசியாவில் முடித்திருத்தும் வேலைக்கு வருபவர்கள், மூன்று மாதங்களில் மலாய் பேசுகிறார்கள், எந்த பள்ளியில் படித்து கற்றுக் கொண்டார்கள் ? 

**********

மும்பை என்றதும் இரயில் வெடிகுண்டு வெடிப்புகளும், அண்மையை ஆண்டில் நிகழ்ந்த தாஜ் ஹோட்டல் துப்பாக்கி சூடு நிகழ்வுகளும் தவிர்க்க முடியாதவை, மும்பையை பொறுத்த அளவில் இந்த நிகழ்வுகளால் இந்திய இந்து இஸ்லாமிய சமயத்தினரிடையே கண்ணுக்குத் தெரியாத மெல்லிய திரை பிரித்துள்ளதை உணர முடிகிறது, அங்குள்ள இந்துக்களிடம் தனிப்பட்ட முறையில் பேசும் பொழுது இஸ்லாமியர்கள் குறித்து அவர்களுக்கு ஒரு நல்ல எண்ணம் இருப்பதாக நினைக்கவே முடியவில்லை, ஒரு 7 விழுக்காட்டு மக்கள் அவர்களால் தான் இங்கே பிரச்சனை என்பதாக குறிப்பிடுகிறார்கள், பெருகும் பிள்ளையார் ஊர்வலங்கள் அவர்கள் சொல்வதை மெய்ப்பிப்பதாகவே காணமுடிகிறது. இந்துக்களின் பலம் என்பது இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பினால் கட்டப்பட்டுள்ளது. 


வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் மாநில ரீதியான எதிர்ப்புகளை சமாளிக்க இந்துப் போர்வை அவர்களுக்கு தேவைப்படுவதால் அவர்களின் ஆதரவுகளினால் அவை அணையாத நெருப்பாக காக்கப்படுவதை யாகூப் மோனன் தூக்கில் இடப்பட்ட நிகழ்வுகளினால் உறுதி செய்யமுடியும், எந்த ஒரு ஊடகமும் யாகூப் மோமனின் இறுதி ஊர்வலத்தை ஒளிபரப்ப முன்வரவில்லை, மாறாக புறக்கணித்தன.


இவற்றை அரசியல் சமூக ரீதியில் நான் பார்த்தாலும் மும்பையின் மாறுபட்ட முகமாக வேறு சிலவும் என் கவனத்தை ஈர்த்தது, இந்திய நகரங்களில் பொதுக்கழிவறைகள் நிறைந்த நகரம், பொது இடத்தில் சிறுநீர் கழிப்பவர்களை காண்பது அரிது. பொதுக்கழிவறைகளில் சிறுநீர் கழிப்பதற்கு கட்டணங்கள் கிடையாது, ஒரு பொதுக்கழிவறை இருந்தால் அங்கு அருகே நடைபாதை வாசிகளின் கூடாரங்களை காணமுடியும். அவர்களுக்கு கழிப்பறை, குளியல் அறை எல்லாமே பொதுக்கழிப்பிடம் தான். 

வேறெந்த நகரங்களைவிட கொசுக்கள் மும்பையில் குறைவே, மாலை ஏழுமணிக்கு மேல் திறந்த வெளியில் நின்றாலும் கொசுத் தொல்லைகளை உணரமுடியவில்லை, அவ்வளவு பெரிய நகராட்சியில் கொசு இனப்பெருக்கத்தை கட்டுப்பாட்டில் வைத்திருப்பது மும்பையின் சிறப்பு, மீட்டருக்கு மேல் பணம் கேட்கும் வாடகை உந்திகளின் நச்சுக்கள் மிகக் குறைவு.

வெறெந்த நகரங்களைவிட சிலெம் எனப்படும் சேரிப்பகுதிகள் மும்பையில் மிக மிக அதிகம், மும்பையில் மொத்த மாக 50 சேரிகளுக்கு மேல் உண்டு, சேரிகளின் பெருக்கம் கட்டுப்படுத்த முடியாத ஒன்று, காரணம் மும்பைக்கு தேவைப்படும் கூலியாட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் மிகுவதால் சேரிகளின் எண்ணிக்கையும் மிகும், மும்பையின் வீட்டுமனைகளின் விலைக்கு குறைந்த கூலி வாங்குபவர்களால் வாடகைக்கு வீட்டின் ஒரு அறைகூட எடுக்க முடியாது, கூலியாட்களை அல்லது வேலைக்கு ஆள் எடுக்கும் எந்த நிறுவனமும் தங்குமிட வசதி எதுவும் செய்து தராததால் அவர்களின் புகலிடம் சேரிதான், அதற்குள்ளும் இடம் கிடைக்காத நிலையில் நடைபாதையில் டெண்ட் அடித்து தங்கிவிடுவார்கள், குடும்பம் குடும்பமாக மும்பையின் வணிக தளமான நாரிமன் பகுதியிலும் கூடாரங்களை பார்க்க முடிகிறது, அவர்களை அப்புறப்படுத்தவும் முடியாது, அவ்வாறு செய்தால் அந்த பகுதியில் கூலி வேலைக்கு ஆட்கள் கிடைக்காது.

மும்பை போன்ற மாநகரங்களில் சேரிகளும் கூடாரங்களும் தவிர்க்க முடியாதவை, என்னைக் கேட்டால் அவைகள் நகரத்தின் ஒரு அங்கம் அதற்காக முகம் சுளிக்கத் தேவை இல்லை. சேரிகளை பார்த்து முகம் சுளிப்பவர்கள் நகரங்களில் சேரிகளுக்கான தேவை ஏன் வந்ததது என்று நினைத்தால் சேரிகளில் வசிப்பவர்களின் இன்னல்களுக்காக பரிதாபப்படுவார்கள்.

மும்பை வெடிகுண்டு வெடிப்பினால் பல உயிர்கள் பலியாகி இருந்தாலும் பல கோடிகள் இழப்புகள் ஏற்பட்டிருந்தாலும் எந்த நகரத்தையும் விட பாதுகாவலர் பணிக்கு மிகுந்த அளவில் ஆட்களை வைத்திருக்கும் நகரம் மும்பை தான், எந்த ஒரு கட்டிடங்களில் பாதுகாவலர்களின் சோதனைகளை கடக்காமல் நுழைந்துவிட முடியாது, கிட்டதட்ட 25 லட்சத்திற்கும் மிகுதியானவர்கள் குறைந்த படிப்பு படித்தவர்கள் பாதுகாவலர் உடையணிந்து ஆண் பெண் இருபாலரும் பணியில் இருக்கின்றனர், எந்த ஒருநிறுவனமும் லாபத்தில் 5 - 10 விழுக்காடு பாதுகாப்புகளுக்காக செலவிடுகிறது. மும்பையில் வெடிகுண்டே வெடிக்காமல் அமைதியாக இருந்திருந்தால் படிக்காத அல்லது குறைந்த படிப்பு படித்த 25 லட்சம் பேருக்கு மிகுதியானவர்களுக்கு வேலை வாய்ப்புகள் என்பதை அரசாங்கமோ தனியாரோ ஏற்படுத்தி கொடுத்திருக்க முடியுமா ? 


நான் மும்பை வெடிகுண்டு நிகழ்வு ஏற்படுத்தியிருக்கும் ஆக்கப்பூர்வமான பின் விளைவுகளைப் பார்த்து உண்மையில் வியந்தேன், லாபத்தில் முழுவதையும் பாக்கெட்டில் போட்டுக் கொள்ளும் நிறுவனங்களி 5 - 10 விழுக்காட்டை பாதுகாப்புக்கு கட்டாயமாக செலவிடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது, நகரத்தில் வேலை வாய்ப்பை கூட்டும் ஒரு கூறுகாக அமைந்துள்ளதை முற்போக்கான மனநிலையில் தான் கொள்ள வேண்டும். ஓரளவுக்கு அனைவருக்கும் வேலை கிடைக்கிறது என்பதால் அங்கு சமூகம் சார்ந்த திருட்டு குற்றங்கள் குறைவு தான்,  இரயில் பிதுங்கி பயணம் செய்தாலும் பிக்பாக்கெட் திருட்டுகள் அரிது தான், சிக்கியவன் செத்துவிடுவான் அது வேற ஆனாலும் வேலை வாய்ப்புகள் கிடைப்பதால் திருட்டு தொழிலில் ஈடுபடுபவர்கள் சோம்பேரிகளாகவும் உழைக்க விரும்பாதவர்களாகவும் தான் இருக்கக் கூடுமே தவிர வேலை கிடைக்காதவர்கள் என்ற வாய்ப்பு மும்பையில் இல்லை.

வெங்காயமும் உருளை கிழங்கும் உற்பத்தி நின்றால் மிகுதியாக பாதிக்கப்படுவது மும்பை வாசிகளாக இருக்கக் கூடும், அவர்களின் அன்றாட உணவுகளில் அவை இல்லாத நாட்களே இல்லை, வெறெந்த நகரங்களைவிட மும்பை பெண்கள் ஆண்கள் குறித்து அச்சப்படுவதில்லை, பொது இடங்களில் அவர்கள் புகைப்பதை பார்க்க முடிகிறது, ஆடைகளும் விரும்பிய அளவிற்கு அணிகிறார்கள், பெரிதாக யாரும் அவற்றை வெறித்துப் பார்ப்பதும் இல்லை, குடியகத்திற்கு (பப்) வருகிறார்கள், சேர்ந்தும் குடிக்கிறார்கள், ஆண் பெண் சமநிலை மும்பையில் பேணப்படுகிறது.

மும்பை அனைத்துலக விமான நிலையம்  உள்கட்டமைப்பும் சேவைகளும் சர்வதேசத் தரத்துடன் உள்ளது.


மும்பையில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் வசிக்க நேரிடுபவர்களால் மும்பையை விட்டுச் செல்ல முடியாது, அவர்களை எல்லா விதத்திலும் மும்பை ஈர்த்துவிடும் அம்சம் மும்பையில் உண்டு. வெடிகுண்டு அச்சுறுத்தல்கள் தவிர்த்து மும்பையில் இயல்பு வாழ்க்கைக்கான தனிமனித பாதிப்புகள் வெறெந்த இந்திய நகரங்களைவிட குறைவே.

16 ஆகஸ்ட், 2014

கணிணிக்கு ஏற்றமொழி என்னும் புரட்டு !

மனிதர்களுக்கு விளங்காது, ஆனால் தேவர்களுக்கு விளங்கும் மொழி அதனால் தான் தேவ பாஷை என்றார்கள், ஆனாலும் வடமொழியை வளர்த்து எடுக்க முடியவில்லை, மனிதர்கள் மனிதர்களோடு உரையாட தேவ பாஷை எதற்கு என்பதாலோ அல்லது அதன் கடின இலக்கண வரையரைகளினாலோ, அண்மைய இலக்கியத்தின் உரைநடை, புதுக்கவிதை போன்ற புதிய உத்திகளை ஏற்றுக் கொள்ள வாய்ப்பு இல்லாத தாலோ, அல்லது சொல்லிக் கொடுப்பவர்கள் ஆங்கிலம் என்கிற பிழைப்பு சார்ந்த மொழியை நாடிய தாலோ வடமொழியை 19 ஆம் நூற்றாண்டில் வளர்த்து எடுக்க முடியவில்லை, எனக்கு தெரிந்து 19ஆம் நூற்றாண்டில் உருவாக்கப்பட்ட புதிய நூல்கள் என்று எதுவுமே வடமொழியில் இல்லை, இருந்தால் தெரிவிக்கவும் என் கருத்தை மாற்றிக் கொள்கிறேன், தற்பொழுது தான் சங்கரமடம் உள்ளிட்ட வடமொழி பற்றாளர்களால் வடமொழியில் தொலைகாட்சி நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன, புரியாவிட்டாலும் வடமொழி 'ஸங்கீதத்தை' தலையாட்டி ஆட்டி கேட்பது போல் ஒரு கூட்டம், ஒருவேளை சொர்கத்தில் பலன் தரக்கூடும் தேவர்களுடன் பேச பயன்படக் கூடும், தவறவிடக்கூடாது என்று கேட்கின்றனர். 

மற்றபடி அண்மைய கணக்கு எடுப்பின்படி வடமொழி பேசுவர்களின் எண்ணிக்கை 120 கோடி இந்திய மக்கள் தொகையில் வெறும் 15 ஆயிரம் பேர் மட்டுமே. இந்த எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கக் கூடியதாக உள்ளதுடன், நாளடைவில் அதுவும் குறைந்து பேசப்படாத வெறும் வழிபாட்டு மொழி என்கிற நிலையை அடையலாம், மாறாக பலரும் கூறும் கருத்து வடமொழி என்றைக்குமே மக்களால் பேசப்பட்ட மொழி கிடையாது, அந்த 15 ஆயிரம் பேரும் வேண்டுமென்றே வடமொழியை வாழவைக்க வேண்டும் என்பதற்காக வலிந்து தான் பேசுகின்றனர் என்கின்றனர்.

நான் அறிந்த அல்லது படித்து தெரிந்த வரையில் வடமொழிக்கு தமிழுக்கு இருப்பது போன்று பிராமி (தமிழி) எழுத்து பின்னர் வட்டெழுத்து என்று தொன்று தொட்டாக, வரலாற்றின் தொடர்ச்சியாக எழுதும் முறைகள் கிடையாது, திருவள்ளுவர் காலத்திற்கு முன்பு தமிழுக்கு எழுத்துகள் பயன்படுத்தப்படுவதால் 'எண்ணென்ப ஏனை எழுத்தென்ப...' என்று குறளில் எழுத்துகள் பற்றியும் எழுத முடிந்திருக்கிறது, மீன் இலட்சினை சிந்து சமவெளி நாகரீகத்தில் விண்மீனைக் குறிக்கப் பயன்படுத்தப் பட்டதாலும் தற்கால அல்லது பண்ணெடுங்காலமாக தமிழில் விண்மீனை  வான் மீன் என்ற இடப்பெயர் சொல்லாக மீன் என வழங்கும் வழக்கும் உள்ளது தவிர சிந்துசமவெளி மக்களின் சிவ வழிபாடு திராவிட வழி வந்தவை என்பதாலும் வேறு சில சான்று அடிப்படையில் சிந்துவெளி நாகரீகம் பண்டைய திராவிட நாகரீகம் தான் என்று ஐராவதம் மகாதேவன் மற்றும் ஐரோப்பிய ஆய்வளர்கள் உரைக்கின்றனர்,  திராவிட மொழிப்பிரிவில் ஒன்றான Brahui மொழி பேசுவர்கள் தற்காலத்திலும் சிந்துசமவெளி அமைந்த பாகிதான் பகுதியில் வாழ்ந்துவருகின்றனர், வடமொழியில் வேதகாலம் முதலாக / முன்பாக மீன் என்ற சொல் 'மச்ச' என்றும்.  வின்மீன் 'நக்‌ஷத்திர' என்றும் வழங்கப்படுவது குறிப்பிடத் தக்கது.


அஃதாவது 11 ஆம் நூற்றாண்டுவரை எழுத்தே இல்லாத மற்றும் ஆண்குறி வழிபாடு என்று சிவ வழிப்பாட்டை வேதங்களினால் பழித்த வடமொழிக்கு சிந்துவெளி நாகரீக தொடர்பு இருக்க கூறுகளே இல்லை என்கிறனர், சிந்துவெளியில் பயன்படுத்தப்பட படக்குறி (சித்ர / Symbol) எழுத்துகளின் தொடர்ச்சியாக திராவிட எழுத்து முறையான பிராமியும், அதே பிராமியில் கூடுதல் எழுத்துக்களுடன் மாற்றம்  செய்து 'அசோகர் பிராமி' பாலி மொழியில் அசோகர் காலத்து கல்வெட்டுகள் எழுதப்பயன்பட்டதாக ஆய்வாளர்கள் கூற்று, முதலில் வடமொழிக்கு எழுத்து முறைகள் தோன்றி அது தமிழுக்கு பயன்படுத்தப்பட்டிருந்தால் நாமும் 31 எழுத்துகளுக்கு (உயிர், மெய் மற்றும் ஆய்தம்) மாற்றாக 51 எழுத்துகளைத் தான்  பயன்படுத்தி இருப்போம், எனவே தமிழ் பிராமி எந்த மொழியிலும் இருந்தும் பெறப்படவில்லை மாறாக அவை தமிழுக்காக உருவாக்கப்பட்டது என்கிறனர்.

வடமொழிக்கு எழுத்து வடிவம் கிடைத்ததே 11 ஆம் நூற்றாண்டுகளில் தான், அதற்கு முன்பு (10 நூற்றாண்டு) வரை குறிப்பாக தஞ்சாவூர் கல்வெட்டுகளில் கூட வடமொழியை தமிழ் எழுத்தில் தான் எழுதி வந்திருக்கின்றனர், விக்கிப்பீடியாவில் வடமொழி தொடர்பான சான்றாவணமாக தமிழ் எழுத்தில் எழுதப்பட்டதைத் தான் காட்டுகின்றனர்,


( இது தற்பொழுது விக்கியில் நீக்கப்பட்டுள்ளது)



அது மட்டும் தான் முதன் முதலில் வடமொழி எழுத்துவடிவாக அமைந்ததற்கான தகவல், பின்னர் தேவநகரி என்னும் (தற்போது உள்ள) எழுத்துவடிவம் 51 எழுத்துகளுடன் அமைக்கப்பட்டு அவற்றை 11 ஆம் நூற்றாண்டுகள் முதல் வடமொழியை எழுதப் பயன்படுத்துகின்றனர். ஒரு பேச்சுக்கு சிந்து சமவெளி நாகரீகத்திற்கும் வடமொழி / வேத நாகரீகத்திற்கும் தொடர்பு இருந்தால் இடைப்பட்ட காலத்தில் வடமொழிக்கு எழுத்துகளே இல்லாது போனது ஏன் ? என்று நினைக்க, 'ஸ்மிருதி' அல்லது மனனம் செய்யும் அடைப்படையில் மட்டுமே வடமொழி வழி வழியாக பயிற்று விக்கப்பட்டுவந்திருப்பது தெளிவாகிறது. ஆசிரியர் - மாணவர்கள், பின்னர் அவர்களின் மாணாக்கர்கள் என தொடர்ந்து அவை பாதுக்காப்பட்டது அன்றி எழுதி வைக்கப்பட்ட ஒன்று அல்ல, வால்மிகிக்கு காலத்தில் ஓலைச் சுவடிகளில் வடமொழியை எழுதி வாய்ப்பிருக்கவில்லை, அதாவது 17 லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு குரங்குகள் கட்டிய பாலத்தில் செங்கற்களில் 'राम' (ராம்) என்று 11 ஆம் நூற்றாண்டில் உருவான எழுத்தில் எழுதப்பட்டிருப்பதாக காட்டுவதே ஒரு மோசடியும் முரண்பாடானதும் ஆகும், ஸ்வஸ்திக் சின்னம் தவிர ॐ உள்ளிட்டவை தேவநகரி எழுத்து உருவான பின்பு பயன்படுத்தப்படுவையே. வடமொழியின் எழுத்து வரலாற்றின் சுருக்கம் இவை. 

வடமொழி கணிணிக்கு வேறெந்த மொழியைக்காட்டிலும் ஏற்ற மொழி என்றும், அதை நாசா உறுதி செய்துள்ளதாகவும் இணையம் பொதுப்பயன்பாட்டுக்கு கடந்த 20 ஆண்டுகளாக இட்டுக்கட்டிய கட்டுரைகள் குப்பைகளாக குவிந்துள்ளன, இதையெல்லாம் எந்த சுனாமியும் தூக்காது என்கிற இறுமாப்பில் தொடர்ந்து பரப்புகின்றனர், எந்த வகையில் கணிணிக்கு சிறந்தது என்பதற்கு இவர்கள் வடமொழியில் உள்ள வேற்றுமை உருபுகளாக (they call it is vibhakti) காட்டும் சான்றுகள் அனைத்தும் திராவிட மொழிகள் அனைத்திற்குமே பொதுவானது.

அதாவது பெயரெழுத்தின் விகுதியை மாற்றி வரிகள் அமைப்பது

இராமனை அடைந்தனர்,
இராமனால் கொல்லப்பட்டான்,
இராமனுக்கு பசித்தது,
இராமனின் வேண்டுகோள்,
இராமனது வில்
இராமன்கண் விடப்பட்டது
இராமனிடம் வந்து சேர்ந்தனர்,
இராமனே கொன்றான்,
( ஐ, ஆல், கு, இன், அது, கண், இடம் மற்றும் விளி வேற்றுமை)

இதில் கண் வேற்றுமையும்,  இட வேற்றுமையும் தற்போதைய இலக்கணத்தில் ஒன்றாகவே பயன்பாட்டில் உள்ளது,

ஆக எட்டு வேற்றுமைகள் தமிழிலும் உள்ளது. இதே எட்டு வேற்றுமைகள் தான் வடமொழியிலும் உள்ளன. ஆங்கிலத்தில் இது போன்று பெயர் சொற்களை மாற்றி வரிகள் அமைப்பது கடினம், Belong to Ram > Ram's (இது கூட அண்மையில் ஏற்பட்டவையே) Raamaa feel hungry, Raavana Killed by Raamaa, Raamaa Request... இது போல் இராம் தனித்து மட்டுமே வரும், தவிற ஒவ்வொரு செயலுக்கும் வினைச் சொற்கள் மாறுபடும்m முன்னிலையின் (Subject) விகுதி மாறாது,  இந்த பெயர்ச் சொல் விகுதி மாற்றம் என்னும் வேற்றுமை உருபு இலக்கணம் மட்டும் ஆங்கிலத்தில் மாறுபடுகிறது, இதனால் ஆங்கிலத்தை விட வடமொழி கணிக்கு Object Oriented Program, மற்றும் Class' எழுத மிகவும் பயனுள்ளது, அதனால் கணிக்கு மிகவும் ஏற்ற மொழி என்கிறார்கள். இவர்களுக்கு வடமொழி தவிர்த்து திராவிட மொழியும் அதன் இலக்கண அமைப்பு குறித்து கொஞ்சமும் தெரியாது அல்லது அவற்றை மறைத்துவிட்டு வடமொழியே சிறந்தது என்று நிறுவ முயற்சிக்கின்றனர்.

வடமொழியில் ஒன்றின் பால், இரண்டின் பால், பலவின்பால் என்கிற இலக்கண விதிகள் உண்டு, அதாவது, Baaley (குழந்தையினுள் - Singular) , Baalayo (குழந்தையருள் Dual ), Baaleshu (குழந்தைகளுக்குள் Plural), காலப்போக்கில் தமிழில் உள்ள இருமை 'ர்' விகுதி மதிப்புக்காகப் பயன்படுத்துவதால் தந்தையர், தாயார் என்று ஒருமை சார்ந்த விகுதியாவிட்டது,

குழந்தை அழுதது (Singular)
குழந்தையர் அழுதனர் (Dual)
குழந்தைகள் அழுதனர்  (Many / Plural)

ஒன்றிற்கு மேற்பட்டவை பல என்பதால் தற்காலத்தில் திராவிட மொழிகளில் இருமை குறிப்புகள் எழுவாயின் விகுதியாக வருவதில்லை.

மற்றபடி தமிழிலோ, திராவிட மொழிகளிலோ, இருமை விகுதிகள் இல்லை என்று சொல்வதற்கில்லை, அதுவும் வடமொழிக்கான தனிச்சிறப்பும் இல்லை, பயன்பாட்டில் இல்லாத மொழியின் தனிச்சிறப்புகள் என்பவை வானவில்லின் வண்ணம் போன்றவை அவற்றை எடுத்து வந்து கலந்து சுவற்றில் பூசமுடியுமா ? எனக்கு தெரிந்து வடமொழியில் திராவிட மொழிகளைக்காட்டிலும் அணி இலக்கணங்கள் ஏனெனில் அணி (உவமை அணி, இல்பொருள் உவமை அணி...போன்றவை)  சற்று கூடுதல், அதனால் அது கணிக்கு ஏற்ற மொழி என்று கூற ஒன்றும் இல்லை, அணி இலக்கணத்திற்கும் Computer Program or Object Oriented Program க்கும் எந்த ஆணித் தொடர்பும் இல்லை.

மேலும் 'I Love You' என்பது போன்ற ஆங்கில வரியின் சொற்களை இடம் மாற்றினால் 'You Love I', Love I You' போன்றவை ஆங்கிலத்தில் பொருள் தராது மற்றும் குழப்பத்தை ஏற்படுத்தும், வடமொழியில் எழுதப்பட்டும் வரிகளின் சொற்களை மாற்றினால் பொருள் மாறாது, இந்த வசதி ஆங்கிலத்தில் இல்லை அதனால் வடமொழியே ஆங்கிலத்தைக்காட்டிலும் சிறந்த மொழி என்கிறார்கள், அதனால் வடமொழியைப் பயன்படுத்துவதால் கணிணியின் விரைவுத் திறன் கூடுமாம், திராவிட மொழிகளிலும் சொற்களை இடம் மாற்றினால் பொருள் மாராது,

இராமதாசு மரத்தை வெட்டினார்,
இராமதாசு வெட்டினார் மரத்தை,
மரத்தை வெட்டினார் இராமதாசு,
மரத்தை இராமதாசு வெட்டினார,
வெட்டினார் மரத்தை இராமதாசு,
வெட்டினார் இராமதாசு மரத்தை ,


ஆறுவகையாக இடம்மாற்றில் எழுதினாலும் இதில் எங்காவது பொருள் மாறுகிறதா ? ஆக சொற்களை இடம் மாற்றி பொருள் மாறாமல் இருக்கும் இலக்கண அமைப்பு திராவிட மொழிகளுக்கும் பொதுவானதாகும் எனவே வடமொழி மட்டும் தான் கணிணிக்கு ஏற்ற மொழி என்பது முற்றிலும் புறக்கணிக்கக் கூடிய கூற்றாகும், ஒருவேளை அவ்வாறு அவற்றை பலரும் ஒரு பேச்சுக்கு ஒப்புக் கொள்ள நேர்ந்தாலும் கணிக்கு ஏற்ற மொழிகள் இந்திய மொழிகள் அனைத்துமே என்பதே சரியானதாக இருக்கக் கூடும். 

என்னைக் கேட்டால் இன்றைய மேம்பட்ட தொழில் நுட்பத்தில் மிகவிரைவு கணிணிகளும் (Super CPU, I7 Processor), அளவுக்கு மிதியான நினைவு சில்லுகளும் (Memory in TB) வந்துவிட்டதால் கணிணியில் பயன்படுத்தப்பட இது சிறந்த மொழி என்று எந்த மொழியையுமே பயன்படுத்திவிட முடியும், ஒரு குறிப்பிட்ட மொழியைப் பயன்படுத்திப் பெறப்படும் விரைவுத் திறன் குறித்த கூற்றெல்லாம் இன்றைய தொழில் நுட்பத்திற்கு முன்பு ஒன்றுமே இல்லை. ஒருவேளை இவர்கள் இந்த பொய்களை பரப்பும் காலத்தில் இருந்த 8 Bit CPU, 16MB Memory க்கு மேல் எதிர்காலத்தில் மேம்பட வாய்ப்பே ஏற்படாது என்று தவறாக நினைத்திருக்கக் கூடும். மற்றபடி இந்த 'வடமொழி மட்டுமே கணிக்கு ஏற்ற மொழி' என்பது முற்றிலும் அடைப்படை அற்ற கூற்று, மற்றும் புறந்தள்ள வேண்டியதும் ஆகும்.

கணிணிகள் பொதுப் புழக்கத்திற்கு (Even Before Internet) வந்த பிறகு வடமொழி கணிக்கு ஏற்ற மொழி என்று ஏறக்குறைய 25 ஆண்டுகளாக பரப்பட்டுவருகிறது, இந்திய அரசுகள் கோடிக்கணிக்கில் மக்கள் வரிப்பணைத்தை வாரி இறைத்து வடமொழி வளர்ச்சிக்கு செலவிட்ட போதிலும் அந்த 36 விழுக்காடு நாசா பொறியார்களில் ஒருவரும் வடமொழியை கணிணியில் ஏற்றி இவர்களின் கூற்றை மெய்ப்பிக்கவும் முயற்சிக்கவில்லை,  தவிர இவ்வாறு தவறான கூற்றை பரப்புவர்களும் இதுவரை அதை செய்து காட்டவும் இல்லை, வெறும் பரப்புரையாக மட்டுமே இவை நம்ப வைக்கப்படுகிறது.



அகண்டபாரதம் இருந்தால் நல்லா இருக்குமே என்பது போன்ற வெறும் கற்பனை கனவே கணிணியில் வடமொழி ஏறும் என்பதும், சிறந்த கணிணி மொழியாக திகழும் என்பதும். இதை மறுப்பவர்கள் தகுந்த சான்றுகளுடன் வந்து வடமொழியே கணிணிக்கு சிறந்தது என்று கூறலாம். எனக்கு மனத்தடை எதுவும் இல்லை.

பின் இணைப்பு :

http://www.vedicsciences.net/articles/sanskrit-nasa.html (புரட்டு 1)
http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (புரட்டு 2)

Similarities between Sanskrit and Programming Languages (புரட்டு 3)

http://uttishthabharata.wordpress.com/2011/05/30/sanskrit-programming/ (எதிர்வினை)
http://mushafiqsultan.com/nasa-and-sanskrit-hoax/ (எதிர்வினை)

19 ஜூன், 2014

மதம் மாறிய மொழி !

மனிதர்கள் தானே மதம் மாறுவார்கள், மொழி மதமாறுமா ? என்ற கேள்வி உங்களுக்கு வந்தால், மதம் தாங்கிப்பிடிக்கும் மொழிகள் பல உள்ளன என்பதை நினைவு கூறுங்கள், மொழிகளுக்கும் இனத்திற்கும் உள்ள தொடர்புகள் போலவே சிற்சில மொழிகளுக்கும் மதத்திற்கும் நெருங்கிய தொடர்புகள் உண்டு, எனவே குறிப்பிட்ட பலர் சேர்ந்து ஒரு மொழியை தங்களது ஆக்கிக் கொள்ள அந்த மொழிக்கு தங்கள் மதத்து ஆடையைக் கட்டிவிடுவார்கள். 

இந்தி என்ற சொல் இந்தி மொழிக்கு பெயராக வழங்கப்பட்டு 100 ஆண்டுகள் கூட இல்லை என்றால் உங்களில் பலரலால் நம்ப முடியாது, ஆனால் உண்மை அது தான்.  துளசி தாசர் (1532–1623) இந்தியில் இராமாயணத்தை எழுதவில்லையா ? என்று என்று உங்களால் கேட்க முடியும். துளசிதாசர் இந்தியில் இராமாயணத்தை எழுத வில்லை, மொகலாயர்கள் ஆண்ட அந்த காலகட்டத்தில் இந்தி வடிவமே பெறவில்லை, மொகலாயர்கள் பேசிய பெர்சியன் மொழி கலந்து, மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட பகுதியின் வட்டார வழக்கான கரிபோலியும் (நரிக்குறவர் பேசும் வக்ரபோலி மொழி போன்ற ஒரு பிரிவு) கலந்து உருவான 'அவதி' என்ற மொழியில் வடமொழியை எழுதப்பயன் படுத்தப்பட்ட எழுத்துக்களான தேவநகரியில் தான் இராமாயணத்தை எழுதினார், எனவே துளசி தாசர் எழுதிய இராமாயணம் என்பது வால்மிகி இராமயணத்தின் வட்டார வழக்கு மொழி மாற்றம் மட்டுமே. 

தற்போதைய நிலையில் துளசி தாசர் எழுதிய இராமாயணத்தை இந்தி தெரிந்தவர்களாலும் படித்து புரிந்து கொள்ள முடியாது, எனெனில் மொகலாயர்கள் ஆட்சியில் இருந்து வெள்ளையர்கள் இந்தியாவைப் பிடிக்கும் வரையில் கிட்டதட்ட மொகலாயர்கள் ஆட்சிக்கு உட்பட்ட இடங்களிலெல்லாம் அவர்கள் பேசிய வட்டார மொழி கலந்த பெர்சியன் மொழி திரிந்து திரிந்து உருதாக வடிவம் பெற்றது, மொகலாயர்காலத்திலேயே உருதை பெர்சியன் எழுத்தில் தான்  (அரபி எழுத்து வடிவம் தான்) எழுதினார்கள். உருது எழுத்து தெரியாத மற்றவர்கள் எழுதும் பொழுது (தற்பொழுது எழுதப்படும்) தேவ நகரி எழுத்தைப் பயன்படுத்தினார்கள், அதுவும் 1881க்கு பிறகே அரசுவழியாக முறையாக அறிவிக்கப்பட்டு, அதற்கு இந்துஸ்தானி மொழி என்ற சிறப்பும், இந்தி என்ற பெயரும் கொடுக்கப்பட்டது, ஆக இந்தி மொழி 'இந்தி என்ற பெயரில் வழங்கப்பட்டு' 100 ஆண்டுகள் கூட ஆகவில்லை.

மொகலாயர்கள் பேசிய இந்தியும் உருதும் ஒன்று தானே, பிறகு ஏன் அவற்றிற்கு தனித்தனி எழுத்துக்கள், ஏன் இரண்டு பெயர்களுடன் ஒரே மொழி ? அதற்கான அடிப்படைகாரணம், உருது இந்தியாவிற்கு வெளியில் இருந்து வந்தது, உருது என்ற பெயரில் இருப்பதாலும் மொகலாயர்களின் மொழி என்பதாலும் அவற்றை பேசுவர்களுக்கு ஏற்பட்ட தாழ்வுணர்ச்சியே, அந்நிய மொழியை பேசுகிறோம், இதை மாற்ற என்ன வழி என்று சிந்தித்த போது, ஏற்கனவே துளசிதாசரின் வழிகாட்டல் இருந்ததால்,  உருதிற்கு இந்திய மொழியின் (தேவநகரி) எழுத்துச் சட்டையைப் போட்டுவிட்டால் அது இந்திய மொழி / இந்திய வழித்தோன்றல் மொழி ஆகிவிடும் என்று நினைத்து இந்துக்கள் பேசும் (உருது) இந்தி என்றும் இஸ்லாமியர்கள் பேசுவது உருது என்றும் சொல்லப்பட்டது.

தற்போது பாகிஸ்தானில் உருது அலுவலக மற்றும் தேசிய மொழி, மொகலாயர்கள் ஆளுகைக்கு உட்பட்டிருந்த அனைத்து இந்திய மாநிலங்களிலும் இந்தி அலுவலக மொழி, உருதிற்கு கிடைத்த தேசிய மொழி பெருமை இந்திக்கு கிடைக்க வேண்டும் என்று இந்திக்காரர்கள் விரும்புவதுடன், அவர்கள் நோகாமல் தமிழகம் வந்து செல்ல தமிழகத்திலும் இந்தி இருப்பது கட்டாயம் என்று திணிக்க முற்பட்டனர்.


ஆங்கிலம் எந்த அளவுக்கு அந்நிய மொழி என்பது உண்மையோ, அதே அளவுக்கு இந்தியும் வெளியில் இருந்து வந்து இந்திய வடிமாக சிதைந்த மற்றொரு அந்நிய மொழி, இரண்டும் இந்தியாவிற்கு நுழைந்ததில் ஆங்கிலத்திற்கு முற்பட்டு இந்தி நுழைந்தில் வேறுபாடும் வெறும் 200 ஆண்டுகள் தான், கிபி 1500களில் மொகலாயர்கள் ஆட்சி, கிபி 1700 களின் இறுதியில் வெள்ளையன் நுழைந்துவிட்டான். தவிர ஆங்கிலமும் இந்தியும் மொழிக்குடும்ப அடிப்படையில் ஒரே மொழிக்குடும்ப பிரிவை சார்ந்தவையே, அதாவது இந்தோ - ஐரோப்பியன்' மொழி குடும்பத்தை சார்ந்தவையே. உருதிற்கும் இந்திக்கும் சில நூறு வடமொழிச் சொற்கள் உள்வாங்கியதில் மட்டுமே வேறுபாடு, ஒரு சில சொற்கள் இந்தி வடமொழியில் இருந்தும் அதே சொற்கள் உருது அரபி மொழிக் குடும்பத்திலிருந்தும் எடுத்துக் கொண்டிருக்கும். மற்றபடி வேறு வேறு சட்டைப் போட்ட இரண்டும் இரட்டைப் பிறவிகள்.

வெறும் 300 ஆண்டுகளில் வடமாநிலங்களை மொகலாயர்கள் இந்தி / உருது பேச வைத்துவிட்டனர், வெள்ளையர்கள் இன்னும் 100 ஆண்டுகள் ஆண்டிருந்தால் வட இந்தியர் ஆங்கிலத்திற்கு மாறி இருப்பார்கள். நம்மை இந்திப் படிக்கச் சொல்லி வருந்தி இருக்கமாட்டார்கள். தென்னிந்திய திராவிட மொழியை ஒப்பிட ஒரே மொழிக்குடும்பத்தை சார்ந்த மொழி என்பதால் வட இந்தியர்களுக்கு ஆங்கிலம் கற்றுக் கொள்வதும் எளிது.

இந்தியோ, ஆங்கிலமோ இந்தியாவை பிறப்பிடமாகக் கொண்ட மொழி அல்ல, இரண்டுமே வெவ்வேறு காலகட்டத்தில் அரசு ஆணையாக / பயன்பாடாக இந்தியாவை கைப்பற்றியவர்களால் திணிக்கப்பட்டவையாகும்.

இந்த உண்மைகள் தெரியாத நம்மில் சிலரும், இந்தி இந்தியாவின் தேசிய மொழி என்றும் எல்லோரும் 'கட்டாயமாக' படிக்க வேண்டும் என்கிறார்கள்.

மொழி மீதான  தனிப்பட்ட ஆர்வம் என்பது தவிர்த்து, இந்திப் படிக்காததால் வேலை வாய்ப்புகள் எதுவும் பறிபோகாது, என்றோ ஒருநாள் வட இந்தியா சுற்றுலா போனால் பயன்படலாம் அல்லது இந்திவாலாக்கள் தமிழகம் வந்தால் வழிகாட்டலாம், சாருக்கான் படம் பார்க்கலாம் மற்றபடி அதைப் பாடச் சுமையில் ஒன்றாக படித்து சுமப்பதால் ஒரு பயனும் இல்லை.

தமிழகத்தைவிட இலங்கையில் இருந்து புத்தகயா செல்லும் சிங்களவர்கள் தான் மிகுதி, அவர்களையும் வடவர்கள் இந்திபடிக்க பரிந்துரைக்கலாமே, செய்யமாட்டார்கள், காரணம் வட இந்தியாவில் இருந்து இலங்கைக்கு செல்பவர்கள் குறைவு, கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு போனால் தான் உண்டு. ஆனால் தென்மாநிலங்களுக்கு அவர்கள் சுற்றுலா வருவது மிகுதி, தமிழகத்தில் உள்ளவர்களுக்கு இந்தி தெரிந்தால் நாம இங்கும் வந்து ஆளுமையை காட்டலாம் என்பதற்காகவே தொடர்ந்து கட்டாயப்படுத்தி திணிக்க முயற்சிக்கிறார்கள். தற்பொழுது இந்திக்காரர்கள் தான் தமிழகத்தில் பரவலாக கூலிவேலை செய்கிறார்கள் என்பது குறிப்பிடத் தக்கது. அவர்களால் முடியும் பொழுது இந்தி 'படித்தவர்களால்' தமிழகத்தில் குப்பை கொட்ட முடியாதா ?

ஒரு வலைப்பதிவு நண்பர் ஒருவர் ( அகவை 60தை தாண்டியவர்) வட இந்தியா சுற்றுலா போனபோது இந்தி தெரியாததால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானாராம், அவரிடம் நீங்கள் சிங்கை வந்த போது சீன மொழி தெரியாமலும், மலேசியா சென்ற போது மலாய் தெரியாததாலும் மன உளைச்சல் அடையவில்லையே என்று கேட்டேன், என்னுடன் பேசுவதை நிறுத்திவிட்டார். சிங்கப்பூரில் ஆங்கிலத்தை வைத்து ஒப்பேற்றலாம், ஆனால் மலேசியாவில் எல்லோருக்குமே ஆங்கிலம் தெரியாது, இவர் எப்படி சென்று வந்தார் என்பது எனக்கு இன்னும் வியப்பாகவே இருக்கிறது.

இந்தியாவின் இணைப்பு மொழியாக ஆங்கிலம் படிப்பதில் உள்ள நன்மைகள் எதுவும் இந்திக்கு பொருந்தாது, வடமொழி பற்றாளர்கள் இந்தி தேவநகரி எழுத்தில் எழுதுவதால் வடமொழியை (சமஸ்கிரதம்) மீட்டுவிடலாம் என்ற நம்பிக்கையில் இந்தி ஆதரவளர்களாக இருக்கிறார்கள், மற்றபடி தென்னிந்தியாவில் இந்திக்கான ஆதரவு குறைவே, பெங்களூர் அல்லது ஹைத்ராபாத் வாசிகளிடமோ, உங்கள் தலைநகரில் இந்தி ஆதிக்கம் உங்களுக்கு பெருமையான ஒன்றா என்று கேட்டுப்பாருங்கள், ஒருவரும் ஆமோதிக்கமாட்டார்கள், அந்த நிலைமை சென்னைக்கும் வர வேண்டாம்.

இந்தி என்பது உருது மொழியின் இந்து / இந்திய வடிவம் மட்டுமே, மனிதனை மதமாற்றுவது போல் ஒரு மொழியையே மதம் மாற்றி இந்திய மொழி என்கிறார்கள்.

ஒருவேளை முகலாய பேரரசு தமிழகத்தையும் கைப்பற்றி இருந்தால் இந்தி ஆதிக்கத்திற்கு நாமும் அடிமை பட்டிருக்கக் கூடும்.

பின்குறிப்பு : எனக்கு இந்தி ஓரளவு தெரியும், மொழிகளின் மீதான தனிப்பட்ட ஆர்வங்களால் இந்தியையும் ஓரளவு கற்றுள்ளேன். என் குழந்தைகளுக்கு விருப்பமில்லாத எந்த மொழியையும் நான் திணிப்பதும் இல்லை.

இணைப்பு : 

http://en.wikipedia.org/wiki/Ramcharitmanas
http://en.wikipedia.org/wiki/Hindi

Turkey the birthplace of Hindi, English: study

இந்தி, தேசியமொழி வாதம் ஆகியவை குறித்து நான் எழுதிய பிற பதிவுகள்:
அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் ! 


31 மார்ச், 2014

இந்துத்துவாவை மறைமுகமாக வளர்பவர் யார் ?

இன்னிக்கு செய்தி ஒன்றை படித்தேன், 'நாணயத்தில் ஸ்ரீவைஷ்ணவதேவி உருவப்படம்: - ' முஸ்லிம் அமைப்புகள் கண்டனம். இந்தியாவில் கண்டனம் செய்வதற்கு காரணங்களே தேவை இல்லை. ஏதாவது ஒன்றை தமக்கு எதிர்ப்பாக நினைத்துக் கொண்டாலே போராட்டம், சாலை மறியல், மனு கொடுப்பது உள்ளிட்டவற்றை செய்துவிடலாம்.

காலம் காலமாக பணத்தை லெட்சுமி, தெய்வம் என்ற பொருளில் தான் இந்தியர்கள் நம்பிவந்தார்கள், இன்றும் நம்பிக் கொண்டார்கள், ஒருசிலரின் மதமாற்றத்திற்கு பிறகு ஒட்டுமொத்தமாக அனைவருமே அந்த நம்பிக்கையை தூக்கி எரியவேண்டும் என்கிற எதிர்பார்ப்புடன் அனைவரும் 'மதச்சார்பின்மை' என்ற போர்வைக்குள் ஒளிந்து கொள்ளவேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன்.

'ஹலல்' என்ற எழுதப்பட்ட கறிவிற்கும் கடையில் 'அல்லா சாமியை வேண்டி' வெட்டியதை நாங்கள் வாங்கமாட்டோம் என்று ஏனைய மதத்தினர் புறக்கணித்தால், கறிக்கடைக்காரர் வயிற்றில் ஈரத்துணியை நனைத்துப் போட்டுக் கொள்ள வேண்டியது தான், இதெல்லாம் விட நாத்திகரும் வாழும் நாட்டில் குழாய் ஒலிப்பெருக்கியில் 'அல்லாஹு அக்பர்' தொழுகை நேர அறிவிப்பு மற்றவர்களின் மதசார்பின்மையெல்லாம் கேட்டு தான் பின்னர் எழுப்பப்படுகிறதா ?

கிட்டதட்ட 95 விழுக்காடு நெல்வயல்களும் தாணியங்களும் பயிறிடும் முன் விருப்ப தெய்வத்திற்கு வேண்டிவிட்டு தான் விதைக்கப்படுகின்றன, அது போன்று அறுவடையில் முதலில் படையலுக்கு எடுத்துவைத்துவிட்டு தான் பிறகு விற்பதற்கான தாணியங்களை அறுத்து எடுக்கிறார்கள், ஏன் விளைச்சல் நன்றாக விளைந்தால் தான் நம்பிய கடவுள் கொடுத்தவையே அவை என்று நம்புகிறார்கள். மேற்கண்ட போராட்ட அமைப்புகள் இந்த தாணியங்களையெல்லாம் வாங்கி உண்ணாமல் எதை உண்ணுகிறார்கள் ? மதச்சார்பற்ற தாணியங்கள் என்று ஏதேனும் விளைகிறதா ?

உலகிலேயே இஸ்லாமியர்கள் மக்கள் தொகையில் முதலில் இருக்கும் இந்தோனிசியாவில் பிள்ளையார் படத்தை ரூபியாவில் அடித்து புழக்கத்தில் விட முடிகிறது, இராமயண நாயகர்களை, இந்து கோவில்களை பணத்தில் அச்சடித்து விட முடிகிறது, அங்கெல்லாம் அந்த நாட்டு இஸ்லாமிய அமைப்புகளிடம் எந்த எதிர்ப்பும் இல்லை.




தீவிரமாக இந்து நம்பிக்கைக் கொண்ட ஒருவன் மேற்கண்ட செய்தியைப் படித்தால் தனக்குள்ளே கேள்வி கேட்கவே மாட்டானா ? இந்து பெரும்பான்மை உள்ள ஒரு நாட்டில் தங்கள் நம்பிக்கை சார்ந்த ஒன்றை கவுரவப்படுத்தும் பொழுது அதனை எதிர்ப்பது தனது நம்பிக்கையை மதிப்பதையும் எதிர்பதாகும் என்று நினைக்கமாட்டானா ?

மதச்சார்பின்மை என்பது எனது எல்லைக் கோட்டிற்குள் நீ வராதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படுகிறது, அதனால் இந்தியாவிற்கு தேவை மதச்சார்பின்மை அல்ல மதச் சகிப்புத் தன்மையே. இவர்களின் எதிர்ப்பு தேவையற்ற காழ்புணர்வுகளையும் இந்துத்துவத்தை வளக்கவே உதவும். இவர்களது வைஷ்ணவி உருவம் பதிக்கப்பட்ட நாணய எதிர்ப்புணர்வும், இஸ்லாமியர் கடைகளில் பொருள் வாங்காதே என்கிற இந்துத்துவ கோஷமும் ஒன்றே.

இன்னும் இவர்கள் தமிழ்நாட்டு அரச முத்திரையில் இருக்கும் கோபுரத்தை தூக்கவேண்டும் என்று சொல்லாதது வியப்பளிக்கிறது, ஒருவேளை தமிழ்நாட்டின் அரசு சின்னத்தில் கோபுரம் இருப்பதை இவர்கள் கவனிக்கவில்லையோ என்று தான் எண்ணத் தோன்றுகிறது.

மேற்கண்ட போராளிகள் ஏனைய இஸ்லாமிய நாடுகளில் ஏதேனும் ஒருவகையில் மதம் அல்லது வேலை ஆகிவற்றில் தொடர்பு வைத்திருப்பவர்கள் தான், இவர்கள் ஏன் அந்த நாடுகளில் இவர்கள் விரும்பும் மதசார்பின்மையை பரிந்துரைத்து ஏக உலகத்தில் மதசார்பு அற்ற அரசுகள் ஏற்படுவதை முன்னெடுக்கக் கூடாது ?

23 ஜூன், 2013

மோடி ஆண்டால் என்ன கேடி ஆண்டால் என்ன ?

சிறுபான்மை பெரும்பான்மை என்ற சொல்லாடலும் அதன் சூழலும் இல்லாத நாடுகளும் இல்லை, இந்தியாவைப் பொருத்த மட்டில் ஊர்களில், மாநிலத்திற்குள் சாதி பெரும்பான்மை, நாட்டிற்குள் மதப் பெரும்பான்மை, வெளி நாடுகளில் இனப் பெரும்பான்மை சிறுபான்மை, அரபு நாடுகளில் மதப்பெரும்பான்மை, அதனுள் இனப் பெரும்பான்மை என்பவை காலம் காலமாகவே அமைந்துள்ளது, நல்லாட்சி என்பது அனைத்து மக்களையும் சமமாக நடத்துதல், அனைத்து உரிமைகளையும் கொடுப்பது என்பது பற்றியது தான் அன்றி யார் ஆளுவது என்ற கேள்விக்கே இடமின்றி பெரும்பான்மையினரின் பிடியில் ஆட்சிகள் இருப்பது தான் நடைமுறை. சிறுபான்மையினருக்கு உரிமை மறுக்கப்பட்டாலோ, பெரும்பான்மையினர் ஆட்சி அதிகாரம் இழந்தாலோ அங்கே பூசல்கள் கலவரம் வெடிக்கும் என்பது உண்மை. 

மதம் / இனம் சார்ந்த சொல்லில் அடைக்கப்பட்ட மக்கள் நிறைந்த ஒரு  எந்த ஒரு நாடும் சிறுபான்மையினரை ஆளவிட்டு பார்த்துக் கொண்டு இருக்காது, அதற்கான சகிப்பு தன்மைகள் தாம் ஒரே இனம் என்ற அளவில் அனைவருக்கும் இருந்தால் இன்றி வாய்ப்பில்லை, சுதந்திர இந்தியாவில் அப்படியான எண்ணங்கள் இருந்து அவை படிப்படியாக கரைந்து போனது, சிறுப்பான்மை மதப் பிரிவை சேர்ந்த ஒருவரை (இராசசேகர ரெட்டியைப் போன்று) மாநில முதல்வர் ஆக்குவதே கூட அத்திப் பூத்தாற்போல் நடைபெறும் நிகழ்வு, இந்தியாவிற்கு சிறுபான்மை மதத்தைச் சார்ந்த பிரதமர் ? இன்ற அளவில் வாய்ப்பற்றது, வழிபாடு, நம்பிக்கை என்பதைத் தாண்டி மதங்களால் இறுக்கிப் பிடிக்கப்பட்டுள்ள நாம் அதனை மீறி தம்முடைய விருப்பத்தை நிறைவேற்றுவது இயலாத ஒன்று. இருந்தாலும் இந்தியாவில் பாஜக ஆட்சி அமைவதை முற்போக்காளர்கள் அல்லது பகுத்தறிவாளர்கள் ஏன் எதிர்க்கிறார்கள் என்றால், பாஜக என்பது மதவாத கட்சி என்பதற்காகவே அல்ல. இந்துக்கள் / கிறித்துவர்கள் / இஸ்லாமியர்கள் பெரும்பான்மையினராக வசிக்கும் இடத்தில் / தொகுதியில் எந்த ஒரு தேசிய / மாநில கட்சியும் மாற்று மத வேட்பாளரை நிறுத்த முயற்சிக்கவே மாட்டார்கள், என்பதால் பாஜக மட்டுமே மதவாத கட்சி என்று கூறுவது அரைகுறையான அடிப்படை புரிந்துணர்வு அற்ற கருத்து. ஆனாலும் பாஜக ஏன் இந்துகளாலேயே எதிர்க்கப்படுகிறது என்பதற்கான காரணம் மிகவும் வெளிப்படையானது. 

பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து மதக் கொள்கையை அனைத்து இந்துக்களும் பின்பற்ற வேண்டும். இந்து மதக் கொள்கை என்றால் என்ன ? நான்கு வேதங்களும் அதில் கூறப்பட்டுள்ள அடிப்படை மனித உரிமை மறுக்கும் நான்கு வருண கோட்பாடுகள், சுறுக்கமாகச் சொல்லப்போனால் பார்பனரை ஏனைய இந்துக்கள் பிராமணர் என்று ஒப்புக் கொள்ளப் பட வேண்டும், பிறப்பு அடைப்படையில் பார்பனர் அதிகார வரம்புகள் அனைத்தையும் பெறுவதை எதிர்த்துக் கேட்டால் இந்து மதத்திற்கு எதிரானவன் என்று பழிக்கப்படலாம், அல்லது பேச்சு உரிமை மறுக்கப்படலாம், இடப்பங்கீடுகள் மறுக்கப்படலாம், தவிர தீண்டத்தகாதவர்களின் சாதி அமைப்பும் அவர்களது தொழிலும் அழித்து ஒழிக்கப்படாது, மலம் சுமக்கும் மனிதன் சொர்கத்திற்குப் போவான் என்று திருவாளர் மோடி கூட ஒருமுறை திருவாய் மல(ர்)ந்துள்ளார், பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்து மதம் சார்ந்த பழமை வாதங்கள் தலை தூக்கும் என்பதாலேயே பகுத்தறிவாளர்கள், ஒரு சில சமய சார்பற்றவர்கள் ஆகியோர் எதிர்க்கின்றனர், மற்றபடி இந்து சமய பெரும்பானமை அரியணை ஏறினால் இந்தியாவின் மதச் சார்பின்மை அழிந்துவிடும் போன்றவை எடுபடா வாதம், மதச் சார்பின்மை என்பது இன்றைய சூழலில் போலியானவையே. போலி மதச் சார்பின்மை இல்லை என்றால் இந்தியாவில் காங்கிரஸ் என்றோ அழிந்திருக்கும்.

******

மோடி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படும் இன்றைய சூழலில் பலர் வெளிப்படையாக எதிர்க்கிறார்கள், அதற்கு காரணமாக கோத்ரா ரயில் எரிப்புக்கு பின்னர் நடந்த சம்பவங்களைக் குறிப்பிடுகிறார்கள், இதே போன்று அத்வானியை பாஜக முன்னிறித்திய பொழுது பாபர் மசூதி உடைப்பு பற்றி கூறி எதிர்த்தார்கள், ஆனால் பாபர் மசூதி உடைப்புக்கு பிறகே இந்தியாவில் இருமுறை பாஜக ஆட்சியை பிடித்தது, ஒரு முறை ஜெ-வால் கவிழ்ந்தது, மறுமுறை கருணாநிதியால் நீடித்தது. அத்வானி பாஜகவின் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பொழுது எதிர்க்கக் காரணம் இருந்தது போல் மோடிக்கும் காரணங்கள் இருக்கிறது என்கிறார்கள், ஆனால் வெங்கைய்யா நாயுடுவையோ, சுஷ்மா சுவராஜையோ பாஜக முன்னிறுத்தினால் இவர்களெல்லாம் மனம் மாறி காங்கிரஸுக்கு மாற்றாக பாஜகவிற்கு வாக்களிக்கும் எண்ணம் கொண்டிருந்தார்களா ? என்றால் அதுவும் இல்லை, பாஜக மதவாத கட்சி, சிறுபான்மையினருக்கு ஆபத்து அதனால் நாங்கள் ஆதரிக்கமாட்டோம் என்ற நிலையில் இருந்து கொண்டு அத்வானி ஆகாது, மோடி கூடாது என்கிற கருத்து முத்துகளினால் ஆகப் போவது என்ன ? பாஜகவில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறதோ அவர்களை நிறுத்துவது சரியான முடிவு என்று அவர்கள் முடிவெடுப்பது அவர்களது உள்கட்சி விருப்பம், அதில் அவர்களுடைய கட்சியை எந்த காலத்திலும் ஆதிர்க்காதவர்களின் எதிர்ப்புக்கும், எதிர்க்கருத்திற்கும் அடிப்படை ஞாயம் என்று ஏதேனும் உண்டா ?

வாஜ்பாய் ஆட்சியின் பொழுது எந்த மதக் கலகவரமும், சிறுபான்மை அச்சுறுத்தலும் இருக்கவில்லை,கார்கில் நிகழ்வுகளுக்கு பின்னும், கோடிக்கணக்கில் செலவு செய்து இந்தியாவின் பரம எதிரியான பாகிஸ்தானின் பிரதமர் முஷ்ரப்பை டெல்லி வரவழைத்து சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்தார், அவர் வளர்ந்த இடங்களையெல்லாம், வீடுகளையும் புதுப்பித்து, மெருகூட்டி அழைத்துச் சென்று காட்டினார், இவையெல்லாம் காங்கிரசு ஆட்சியில் கூட நடைபெற்றதில்லை, ஆனாலும் வாஜ்பாயை போலி மதவாத எதிர்ப்பாளர்கள் ஆதரிக்கவும் இல்லை.

சிறுபான்மை காவலன் என்ற பெயரில் காங்கிரசை ஆட்சியில் உட்கார வைத்து நாட்டில் ஊழல்கள் பெருத்துவிட்டதும், லட்சம் கோடி என்ற அளவில் எல்லாம் ஊழல் நடைபெறுவதும், இந்திய பண மதிப்பு பாதளத்திற்கு சென்றதையும் கண்ணுறுகிறோம், 10 விழுக்காட்டு மக்களின் மன திருப்திக்காக மீதம் 90 விழுக்காடு மக்கள் வதைபடுவது ஞாயம் அது தான் மதச் சார்பின்மை என்றால் நாட்டில் பெரும்பான்மை மக்களின் நலனைவிட சிறுபான்மையினரின் விருப்பமே மேலானது என்கிற மனப்போக்கு வெகுவிரைவில் மதம் சார்ந்தே மீதம் இருக்கும் 90 விழுக்காட்டினரை அழைத்துச் சென்றுவிடும் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பும் பெரும்பானமியினரின் கையில் ஆட்சி இருப்பதும் தான் எந்த ஒரு நாட்டிற்கும் நல்லது, அவை இல்லை என்றால் தொடர்ந்து குழப்பங்கள் ஏற்படும்.  இந்திய  மக்கள் பல்வேறு மதவாதிகளின் /  மதங்களின் கையினுள் சிக்கிவிட்டார்கள் என்பதால் தான் இவ்வாறு எழுதுகிறேன். 

***

75 விழுக்காடு சீனர் வசிக்கும் சிங்கப்பூரில் ஒருமுறையாவது இந்தியரோ, மலாய்காரரோ பிரதமாராக வந்தால் நல்லா இருக்கும் என்றே நாம நினைக்கலாம் ஆனால் சீனார்களுக்கு அவை பெருமையானது அல்ல அதற்கான வாய்ப்புகளும் ஏற்படாது, அவை ஞாயம் என்ற அளவுகோலிலும் வைத்துப் பார்க்க முடியாது. இந்தியர்களும், மலாய்காரர்களும் சீனர்களுக்கான உரிமையுடன் இருக்கிறார்களா ? என்பது மட்டும் தான் இங்கே முக்கியம்.

20 மார்ச், 2013

முதியோர் இல்லம் - நல்லதொரு தொழில் !


இல்லறவாழ்வில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு மறைமுகமாக பல விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது, கூட்டுக் குடும்ப வாழ்கை முறையில் இருந்து விலகிய 60 வயதிற்கு மேற்பட்டவர்களின் வாழ்வியலில் இரு குழந்தைகள் கட்டுப்பாடு பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது, பெற்றோருடன் தாத்தா பாட்டியையும் வைத்து பாதுகாக்கும் வழக்கம் மறைந்துவிட்டதை நம் இன்றைய காலத்தில் பார்க்கிறோம், ஓரிரு குழந்தைகள் பெற்று அதையும் வெளிநாட்டு வேலைக்கு அனுப்பிவிட்டு தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், அல்லது நகர சூழலில் வாழப் பிடிக்காமல் தாம் வாழும் சூழலிலேயே வாழப் (பிடிவாதம்) பிடித்து தனிமையில் வாடும் பெற்றோர் ஒருபுறம், பெற்றோர் சுமை என்றே புறக்கணிப்பில் வாழும் பெற்றோர் ஒருபுறம், ஆண் வாரிசுகளைப்  பெற்றோருக்கும் இந்நிலை தான், அதனால் ஆண் குழந்தையைப் பெருவது பெருமையானது இல்லை என்று தனிமையில் இருக்கும் பொழுது தான் பெற்றோர் உணரத் துவங்கியுள்ளனர். ஆணைப் பெற்றவர்களுக்கும் பெண்ணைப் பெற்றவர்களுக்கும் எந்த வேறுபாடும் இல்லை, ஆணைப் பெற்றவர்களிடம் பிறர் மருமகள் சேர்த்துக் கொள்வாளா என்ற எந்த ஒரு கேள்வியும் பற்றி சிந்திக்காமல் நீங்கள் உங்க மகன் வீட்டில் இருக்கலாமே ? என்று கேட்பார்கள், அதன் சிக்கல் பெற்றோர்களுக்கு தெரியும் என்பதால் நகர வாழ்க்கை பிடிக்கவில்லை என்று கவுரவமாக சொல்லிக் கொள்ள முடியும், பெண்ணைப் பெற்றவர்களுக்கு மருமகன் வீட்டில் இருப்பது இழுக்கு என்று நினைத்துக் கொள்வார்கள், மாமனார் மாமியார்களையும் பெற்றோர்களாக நினைத்து கூட வாழ அனுமதிக்கும் மருமகன்கள் இன்றும் குறைவே, இதிலும் யாரையும் குறை சொல்ல முடியாது, வேலை முடிந்து அலுப்புடன் வந்தால் பணி விடை செய்யும் மனைவி இன்று கிடையாது, அவளும் வேலைக்கு சென்று அதே அலுப்புடன் தான் திரும்பி இருப்பாள், இன்றைய வாழ்க்கைச் சூழலில் மனைவியையும் வேலைக்கு அனுப்புவது தவிர்க்க முடியாது என்பதால் வயதான பெற்றோர்களை உடன் வைத்திருந்தால் கவனிப்பது யார் என்ற கேள்வி, அதைப் புரிந்து கொண்ட பெற்றோர் தனிமையிலேயே வாழ முடிவு செய்துக் கொள்கின்றனர்.

வயது ஆனாலும் கணவன் மனைவி இருவரும் இருக்கும் வரை இருவருக்கும் பாதுகாப்பு, உணவு, பணம் பற்றி எந்த ஒரு பிரச்சனைகளும் பெரிதாக எழுவதில்லை. ஆனால் அதில் ஒருவர் மறையும் பொழுது சொந்தங்கள் இருந்தும் ஆதரவற்றோர் என்ற நிலைக்கு ஆளாகின்றனர், எங்கு செல்வது எங்கு காலம் தள்ளுவது ? என்ற கேள்விகளுக்கு முன்பு விடையாக முதியோர் இல்லங்கள் தான் விடைகளாக இருக்கின்றன. சென்னைக்கு சென்றிருந்த பொழுது பழைய பெண் நண்பரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது அவரது தாயார் தனிமையில் இருப்பது பற்றி தெரிவித்தார், தாம் கூட வைத்திருக்க விரும்பினாலும் வர மறுப்பதாகவும் கூறினார், அவரது தாயாருக்கு 85 வயதை கடந்து இருந்தது, காலை வேளையில் ஒரு பணிப் பெண் அன்றைக்கு தேவையானதை சமைத்துக் கொடுத்துவிட்டு வீட்டை துப்புறவு செய்துவிட்டு செல்வது தவிர்த்து வேறு யாரும் எட்டிப் பார்ப்பது இல்லையாம், இவருக்கு கவலை தாயார் ஏடாகூடமாக கழிவறை செல்லும் பொழுது விழுந்து கிடந்தால் என்ன ஆகுமோ ? ஒருவழியாக முதியோர் இல்லத்தில் சேர தாயார் ஒப்புக் கொண்டாராம், ஆனால் இவர்கள் பார்த்து வைத்துள்ள பெருங்களத்தூர் முதியோர் இல்லத்தில் தற்போதைக்கு இடமில்லை, பதிந்து வைத்துள்ளோம், யாராவது போய் சேர்ந்தால் தான் இவருக்கு வாய்ப்பு கிடைக்கும் யாராவது சீக்கரம் போய் சேரனும் பெருமாளே என்று வேண்டி வருவதாக கூறினார், காரணம் அந்த முதியோர் இல்லம் பல வசதிகளுடன் தனி அறை, தனிக் கட்டில், தனி தொலைகாட்சி மற்றும் விருப்பப் பட்டால் தாம் பயன்படுத்தி வருகின்ற குளிச்சாதன பெட்டி கட்டில் ஆகியவற்றை எடுத்துச் சென்று வீட்டில் வசித்தது போலவே வசிக்கலாமாம், பணிவிடைகளும், தனிப்பட்ட கவனிப்புகளும் உண்டாம். சென்னையில் இருப்பதிலேயே நல்ல முதியோர் இல்லம், வாரம் ஒருமுறையாவது சென்று பார்த்து வரவவும் வசதியானது என்று கூறினார், யாராவது போய் சேர்ந்தால் தகவல் சொல்லி அனுப்புவார்கள், இடம் கிடைக்கும் என்று காத்திருக்கிறார்கள்.

முதிர்கண்ணன்கள் பெருவிட்ட காலத்திலும் முதிர்கன்னி கவிதை எழுதுவோர் உண்டு, முதியோர் இல்லம் என்றால் எதோ சமூகம் சீரழிந்து வருகிறது என்று பொங்குபவர்களும் உண்டு, இவையெல்லாம் காலத்தின் கட்டாயம் என்பதை ஏற்க மறுப்பவர்கள் இருக்கிறார்கள், அவர்கள் முதியோர் இல்லம் குறித்து கண்ணீர் கவிதை எழுதிவருகிறார்கள், தாமும் வயதான பிறகு முதியோர் இல்லம் தான் செல்வோம் என்று நல்ல தெளிவு உள்ளவர்கள் தயங்காமல் பெற்றோர்களை அங்கு அனுப்புகிறார்கள். முதியோர் இல்லங்களுக்கு பெற்றவர்களை அனுப்புவது அவர்களை புறக்கணிப்பது என்று பலர் புரிந்துள்ளது போல் அல்ல, அவர்களது எஞ்சிய காலம் கவனிக்கப்பட வேண்டும் அவர்களை ஒத்த வயதினருடன் பொழுது போக்கிக் கொள்வது மற்றும் தனிப்பட்ட கவனிப்பு, பாதுகாப்பு எப்போதும் இருக்கும் என்பதால் தான் முதியோர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாடுகளில் இவை வெகு சாதாரண நடைமுறை, நமக்கு இவை அதிர்ச்சியாக தெரிகிறது, இன்னும் 30 - 40 ஆண்டுகளில் இவை நடைமுறை ஆகிவிடும். நண்பரிடம் பேசியதில் இருந்து நல்லொதொரு முதியோர் இல்லம் கிடைப்பது தான் தற்பொழுது பெரிய பிரச்சனை மற்றபடி செல்லுபவருக்கோ, அனுப்பி வைக்கப்படுவருக்கோ எந்த ஒரு மனத் தடையும் இல்லை.

எல்கேஜி அனுமதிக்கு வயிற்றில் இருக்கும் பொழுதே பதிய வேண்டும் என்பது போல் ஐம்பவது வயதில் முன்கூட்டியே பதியாமல் விட்டால் நல்லதொரு முதியோர் இல்லம் கிடைக்காது என்ற நிலைமை ஏற்படலாம்.


முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்களை அனுப்புவர்கள் குறித்து புரிந்துணர்வு இன்றி தூற்றுவதும் அவ்வாறு செல்பவர்களை ஆதரவற்றோர் என்று நினைப்பதையும் நாம் மாற்றிக் கொள்ள வேண்டும், தாய் மட்டுமல்ல தந்தையும் கூட அங்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர், பள்ளி வாழ்க்கை முடிந்ததும் கல்லூரி வாழ்கையில் ஆஸ்டல் வாழ்க்கையை நாம் ஏற்கனவே பழகி இருக்கிறோம் அவையெல்லாம் உறுத்தாத போது முதியோர் இல்லங்கள் மட்டும் ஏன் நாம் கலாச்சார சீரழிவாக நினைக்க வேண்டும் ? முடிந்தால் நல்லொதொரு முதியோர் இல்லங்களை அமைப்பது தொழிலாகவும், சேவையாகவும் கூட மாற்றிக் கொள்ளலாம்.

17 மார்ச், 2013

பாலியல் தொழிலுக்கு பால் வார்க்கும் செய்தி நிறுவனங்கள் !


அண்மையில் இந்தியா சென்றிருந்த பொழுது பெங்களூரு சென்றிருந்தேன், விடுதியில் கொடுக்கப்படும் நாளிதழில் பார்வையை ஓட்டும் பொழுது வரி விளம்பரப் பகுதி கண்ணில் பட்டது, அதில் மசாஜ் விளம்பரங்கள், படித்தவுடனேயே கோபம் கொப்பளித்தது, இந்த மாதிரி ஈனத்தனமான விளம்பரங்களில் வருவாய் தேடும் நாளிதழ்களால் தான் சமூதாயம் சீரழிகிறது என்பதை அழுத்தமாகவே பதிய வைக்க விரும்புகிறேன், செய்தியின் தரம், விளம்பரத்தின் தரம் என்று எந்த விதிமுறைகளும் இல்லாததால் அவை நாளிதழ்கள் வாசிக்கும் இதயங்களில் கழிவு நீராக கலந்துவிடுகின்றன, ஆண்மைக் குறைவுக்கு வரும் விளம்பரங்களாகட்டும், ஈமு கோழி விளம்பரங்களாகட்டும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் விளம்பரமாகட்டும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்கள், வீட்டில் இருந்தபடியே மாதம் 30000 ஆயிரம் சம்பாதிக்கும் வாய்ப்பு, பல்லடுக்கு தொழில் (மல்டிலெவல்) இவற்றில் மக்கள் எந்த அளவுக்கு அவைகளை நம்பி பணம் போட்டுவிட்டு பாதிப்பு அடைவார்கள் என்று இவர்கள் கொஞ்சமும் ஆய்வு நடத்தாமல் விளம்பர நிறுவனங்கள் கொட்டிக் கொடுக்கும் பணத்தில் கொழித்துக் கொண்டு நாங்கள் நான்காவது தூண்கள் என்றெல்லாம் மார்தட்டுகிறார்கள்.

சேலம் சித்தவைத்தியர்கள்  ஆண்மை இழந்த எத்தனை பேருக்கு எழுச்சி ஏற்படுத்தினார்கள் என்கிற எந்த ஒரு கணக்கும் கிடையாது, ஆனாலும் அத்தகைய விளம்பரங்களை நம்பி பணம் விரயம் செய்பவர்கள் எந்த காலத்திலும் இருப்பார்கள், சரி ஆகாவிட்டாலும் இதை வெளியே சொன்னால் வெட்கம் என்று பணத்தை கொட்டிவிட்டு செல்பவர்கள் என்றும் உண்டு என்பதே இத்தகைய விளம்பரங்கள் இன்றும் நாளிதழ் தாண்டி தொலைகாட்சி விளம்பரங்களாகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஈமு கொழிகளுக்கு விளம்பரம் கொடுக்காத புலனாய்வு நாளிதழ்கள் / வார இதழ்கள் / வாரம் இருமுறை புலனாய்வு இதழ்கள் ஏதேனும் உண்டா ? ஆனாலும் ஈமு கோழி ஏமாற்றுப் பேர்வழிகள் ஓடியதும் ஏதோ அவர்கள் மட்டுமே மக்களை ஏமாற்றியது போன்று கட்டுரைகள் எழுதி தங்கள் நேர்மையையும் புலனாய்வு திரனையும் பறைசாற்றுவார்கள்.

நான் பார்த்த மசாஜ் விளம்பரங்களில் மசாஜ் செய்துவிடுபவராக இந்தியர், வெளிநாட்டினர், விளம்பர மாடல்கள், மாணவ / மாணவியரும் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர். இந்தியர் வெளிநாட்டினர், விளம்பர மாடல்கள் மசாஜ் செய்துவிடுவது பெரிய குற்றமில்லை ஆனால் மாணவ / மாணவியரும் பணியாற்றுவதாக விளம்பரம் செய்வதும், அதை ஈனப்பிழைப்பாக பத்திரிக்கைகள் வெளி இடுவதும் கண்டனத்துக்குரியது ஆகும், மசாஜ் என்ற பெயரில் 90 விழுக்காடு பாலியல் தொழில்கள் தான் நடைபெறுகின்றன என்பதற்கு விளம்பரத்தில் மாணவ மாணவியர் சேவை இருப்பதாக காட்டி இருப்பதை விட வேறு என்ன சான்று கொடுக்க முடியும் ? உண்மையில் உடல்வலிக்காக அல்லது சிகிச்சைக்காக மசாஜ் செய்து கொள்பவர் மாணவ மாணவியர் அதை செய்தால் திருப்தியாக இருக்கும் என்று நினைப்பார்களா ? பிறகு ஏன் இவர்கள் மாணவ / மாணவியர் மசாஜ் சேவை இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள் ? அதை ஒரு ஏமாற்று விளம்பரம் என்று வகைபடுத்தினாலும் கூட பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் ஒரு விளம்பரம் என்று தானே கொள்ள முடியும் ?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து தற்பொழுது தான் கொஞ்சமேனும் விழிப்புணர்வு எட்டியுள்ளது. இது போன்ற விளம்பரங்கள் சமூக வாழ்வை சீர்குலைக்கச் செய்வதுடன், சமூக அமைப்பையே சிதைக் கூடியது ஆகும், மாணவ மாணவியர் மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவனுக்கு இந்த விளம்பரம் வாய்பை அளிக்கிறதோ இல்லையோ, மாணவ மாணவியரிடம் சில்மிசம் செய்யலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும், தவிர ஏழை மாணவ / மாணவியர் அல்லது விருப்பம் போல் செலவு செய்ய ஏங்கும் / நினைக்கும் அவர்களின்  கண்களில் இது போன்ற விளம்பரங்கள் பட்டால் அந்த மசாஜ் நிறுவனங்களில் மசாஜ் செய்வராக வேலை செய்ய விருப்பம் தெரிவித்து பாலியல் தொழில் பாதாள குழிக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்

மத்திய அரசிலும், மாநில அரசிலும் தணிக்கை துறைகள் உண்டு, அவர்களின் கண்களில் இந்த விளம்பரங்கள் படுவதில்லையா ? ஏன் அவற்றையும் குறிப்பிட்ட பத்திரிக்கைகளையும் தடை செய்வதில்லை ? 

************

பத்திரிக்கை நான்காவது தூண் என்று எவரும் சொன்னால் செருப்பைக் கழட்டிக் காட்டலாம், ஈமு கோழிகள் வளர்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்றெல்லாம் மோசடி பேர்வழிகள் சிக்கும் பொழுது நடைபெரும் போராட்டங்களில் குறிப்பிட்ட விளம்பரங்களை வெளியிட்ட செய்தி இதழ்/ தாள் நிறுவனங்கள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இரு தரப்பில் இருந்தும் நட்ட ஈடு பெற்று தந்தால் ஒழிய இத்தகைய ஈனத்தனம் ஒழியாது. மாணவ மாணவியர் மசாஜ் சேவையில் உள்ள  வரும் வெளம்பரத்தை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் மீது ஏன் யாரும் பொது வழக்கு தொடுக்கக் கூடாது ?  அந்த பத்திரிக்கைகளை ஏன் தடை செய்யக் கூடாது ? 

பலர் நாடிப் படிக்கும் செய்தி இதழ்களில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதும், முறையற்ற பாலியல் தொழிலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இவர்களும் ஒருவகையில் 'மாமாக்களே'

5 மார்ச், 2013

யார் அந்த அதிகாரி ?


நான் செய்தி நிறுவனங்கள் எதையும் முழுதாக நம்புவதில்லை, செய்தி ஊடகங்கள் அனைத்துமே அரசு சார்பு அல்லது எதிர்ப்பு ஊடகங்கள் தான், தாங்கள் கட்டுப்பாடற்றவர்கள் என்று செய்தியாளர்கள் கூறிக் கொண்டாலும் ஆளும் கட்சிக்கு ஆதரவாக அல்லது தனக்கு வேண்டிய எதிர்கட்சிக்கு ஆதரவாக, அல்லது தாம் சார்ந்த அமைப்புகளுக்கும், தங்கள் கொள்கைக்கு எதிராகவும் செய்திகளை திரித்து வெளி இடுவது அல்லது தேவையற்ற தகவல்களை திணிப்பது இவை தான் செய்தி இதழ்களின் தலையாயப் பணி,  செய்திகளை முந்தித்தருவது என்றெல்லாம் போட்டித் தன்மை சமாளிப்பு என்ற பெயரில் மக்கள் மூளையை கிறங்கச் செய்வதில் செய்தியாளர்களுக்கு நிகர் அவர்களே தான், ஒருவரை உயர்த்திப் பிடிப்பதும், சாதனைகளை கண்டுகொள்ளாமல் விட்டு புறக்கணித்து முன்பு தூக்கியவர்களை கீழே போடுவதும் அவர்களின் சர்குலேசனுக்கு ஏற்ற கலை.

செய்தியாளர்கள் பொதுச் சேவையாளர்கள் இல்லை, அவை நிறுவனங்கள் தான், எல்லா தொழில்களிலும் லாபம் ஈட்டும் நோக்கமே முதன்மையானது என்பது போல் தான் செய்தி நிறுவனங்களும், இவர்களின் செய்திகளின் தரம், அதில் நேர்மை இவற்றின் விழுகாட்டு வேறுபாடுகள் தான் ஒரு செய்தி நிறுவனம் மக்கள் இடையே புகழடைந்து விற்பனையில் கூடுகிறதா இல்லையா என்பதையெல்லாம் முடிவு செய்யும், தகவல் என்ற அடிப்படையில் எதையும் நாம் அவர்களிடம் இருந்து தெரிந்து கொண்டாலும் அவர்கள் அதில் விதைத்துள்ள அல்ல மறைத்துள்ள அரசியலையும் சேர்த்தே நுகர்கின்றோம் என்பதே உண்மை. எனவே செய்தி இதழ்களின் எந்த நிகழ்வு பற்றிய தகவல்களுக்கு நாம் உணர்ச்சி வசப்படலாம் என்பதையெல்லாம் அவரவர் தெளிந்து முடிவு செய்வதே நன்மை இல்லாவிட்டாலும் இரத்த அழுத்தம் கூடாமல் இருக்கும், செய்தியாளர்களால் புரட்சி நடந்திருக்கிறது, ஆட்சி மாற்றம் நடந்திருக்கிறது, ஊழல்கள் வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது என்பதெல்லாம் கூட உண்மை தான், ஆனாலும் அவற்றைக் காரணமாக வைத்து அவர்கள் என்னேரமும் மக்கள் நலன் குறித்து சிந்திக்கிறார்கள், அதுபற்றி எழுதுகிறார்கள் என்று சொல்வதற்கில்லை

கிழே உள்ள இரண்டு செய்திகளை கவனமாக படிக்கவும், அவை ஒன்றுக்கொன்று தொடர்புடையவை

************

சென்ற மாதம் ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....

ஹைதராபாத்தில் நடந்த குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கூறி ஜார்க்கண்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சியில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் மன்சர் இமாம் என்று விசாரணையில் தெரிய வந்துள்ளது. அவரது விவரங்களை அளிக்க இமாம் மறுத்துவிட்டார்.

ஏற்கனவே அகமதாபாத் குண்டு வெடிப்புச் சம்பவத்தில் தொடர்பிருப்பதாகக் கண்டறியப்பட்டு, கடந்த இரண்டு ஆண்டுகளாக மன்சர் இமாம் தேடப்பட்டு வந்துள்ளார். இவருக்கு ஹைதராபாத் குண்டு வெடிப்பிலும் தொடர்பிருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

Read more at: http://dinamani.com/latest_news/article1487767.ece

இன்று ஹைதராபாத் இரட்டை குண்டு வெடிப்பு தொடர்பில் வெளி வந்த செய்திகளில் ஒன்று.....

டெல்லி: ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு தொடர்பான விவரங்களை பாகிஸ்தான் உளவாளிக்கு கொடுத்த தேசிய பாதுகாப்பு படை (என்.எஸ்.ஜி) அதிகாரி விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளார். 

இந்திய ராணுவத்தில் மேஜர் நிலையில் பணியாற்றிய அதிகாரி ஒருவர் தேசிய பாதுகாப்புப் படைக்கு மாற்றப்பட்டார். சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் உளவாளி என்று சந்தேகிக்கப்படும் ஒருநபர் அவரை தொலைபேசியில் அழைத்திருக்கிறார். ஆனால் அவருக்குப் பதிலாக வேறு ஒரு அதிகாரி பேசியிருக்கிறார். அந்த உளவாளியும் குறிப்பிட்ட அதிகாரியிடம்தான் பேசுகிறோம் என்று நினைத்து சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருக்கிறார். இது தேசிய பாதுகாப்பு படை அதிகாரிகளுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. 

பாகிஸ்தான் உளவாளியுடன் தொடர்பில் இருந்த அதிகாரி, ஹைதராபாத் இரட்டை குண்டுவெடிப்பு இடத்தை நேரில் பார்வையிட்ட ஆய்வு செய்தவர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தத் தகவல் மற்ற புலனாய்வு அமைப்புகளுக்கும் தெரியப்படுத்தப்பட்டு உஷார் படுத்தப்பட்டனர். 

இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு படை தலைவர் அர்விந்த் ரஞ்சன், அந்த அதிகாரியை தொலைபேசியில் அழைத்த நபர் யார் என்று தெரியவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்றார். 

மேலும் ஒரு அதிகாரி... 

இதனிடையே ராஜஸ்தானில் கைதான ஐஎஸ்ஐ உளவாளியுடன் தொடர்புடைய மற்றொரு அதிகாரியிடம் டெல்லி போலீசாரும் புலனாய்வு அமைப்பினரும் விசாரணை நடத்தினர். கடந்த மாதம் பொக்ரானில் நடைபெற்ற விமானப் படைப் பயிற்சியின்போது பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்புக்கு உளவு பார்த்ததாகவும் சில முக்கியத் தகவல்களை அந்த அமைப்புக்கு அளித்ததாகவும் சுமர் கான் என்பவர் சிக்கினார். அவருடைய தொலைபேசி அழைப்புப் பட்டியலில் உள்துறை அமைச்சகத்தில் வெளிநாட்டவர் விவகாரங்கள் துறையில் பணியாற்றும் அதிகாரி ஒருவருடன் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. இதையடுத்து அந்த அதிகாரியிடம் புலனாய்வு அமைப்பினரும் போலீசாரும் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் அவர் பலருக்கு முறையற்ற வழியில் விசா நீட்டிப்பு செய்து தந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/03/05/india-hyderabad-blasts-nsg-official-facing-probe-170958.html

********

இரண்டு தகவல்களும் வெவ்வேறு ஊடகங்களில் வந்த தகவல் தான், முதல் செய்தியில் குற்றவாளி என்று கருதப்படுபவரின் பெயரை வெளி இட்டுள்ளனர், குற்றவாளியின் பெயரை  (மன்சர் இமாம்) வைத்து என்ன மதத்தை சேர்ந்தவர் என்று கண்டுபிடிப்பது அவ்வளவு கடினமானதல்ல, ஆனால் இரண்டாம் செய்தியில் இந்திய தேச துரோகம் என்ற அளவுக்கு குற்றம் செய்தவனை ஒரு அதிகாரி, அந்த அதிகாரி என்றெல்லாம் மொட்டையாகவே செய்தி போட்டு இருக்கின்றனர், மேஜர் நிலையில் பணியாற்றிய 'அந்த அதிகாரிக்கு' பெயர் இல்லையா ? பெயரை வெளி இடாமல் இருக்க பாதுகாப்பு காரணம் என்றால் அதை ஏன் செய்தியாளர்களுக்கு தகவலாக தரவேண்டும், உள்ளுக்குள்ளேயே அமுக்கி இருக்கலாமே, எல்லாவற்றையும் நோண்டுவோம், நொங்கெடுப்போம் என்று அறைகூவும் செய்தியாளர்கள் அந்த தேச துரோக குற்றம் சாட்டப்பட்டவரின் பெயரை தெரிந்து கொள்ள முயற்சிக்கவில்லையா ? ஒருவேளை 'அந்த அதிகாரி' பெயரை வைத்து இந்து என்று கண்டிபிடித்து காரித்துப்பினால் பிறகு இஸ்லாமியர்களை மட்டுமே குறிவைத்து செய்திகள் போட முடியாது என்கிற நட்ட நடுசெண்டர் நிலையோ ?

குற்றங்களும் குற்றவாளிகளும் தாங்கள் சார்ந்துள்ள மதங்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறித்து கண்டுகொள்ளாமல் செயல்பட்டாலும், குறிப்பிட்ட மதத்தினரை மட்டுமே வெளிச்சம் போட்டு மற்றதை மறைப்பது நல்லதில்லை. ஒருதலைப்பட்சமான தகவல்கள் தேவையற்ற வெறுப்புகளையும், அச்சத்தையும் வளரவைக்கும். குற்றங்கள் நிருபனம் செய்யப்பட்டு தண்டனைகள் அறிவிக்கப்படாதவரை எவருடைய பெயரையும் புகைப்படத்தையும் இன்னார் தான் குற்றவாளியாக கைது செய்யப்படுகிறார் என்று காட்டுவதை தவிர்கலாம். பிழைப்புவாதிகளான செய்தியாளர்கள் செய்வார்கள் என்று நம்பிக்கை இல்லை.

12 பிப்ரவரி, 2013

மறுபடியும் மறுபடியும் மரண தண்டனை !


அஜ்மல் தூக்குக்கு வாய் திறக்காதவர்கள் கூட அப்சல்குருவிற்கு நிறைவேற்றப்பட்ட தூக்கு தண்டனைக்கு எதிராக வாய்த்திறக்க துவங்கி இருக்கிறார்கள், இது மரண தண்டனைக்கு எதிராக திறந்த வாய்கள் இல்லை, மாறாக அப்சல்குருவிற்கு கொடுக்கப்பட்ட தண்டனை நியாமற்றது என்று வழக்கு ரீதியில், வழக்கு தவறாக நடந்ததாகவும், குற்றவாளியின் மரண தண்டனை நிறைவேற்றம் குறித்து பின்னர் தான் அவரது குடும்பத்திற்கே தெரிவிக்கப்பட்டதாகவும் கூறுகிறார்கள், அரசு இதில் அவசரம் காட்டியதன் மர்மம் பிஜேபிக்கு எதிரான காய் நகர்த்தல், இந்து வாக்குகள் அறுவடை குறித்த காங்கி-கின் எதிர்ப்பார்ப்புகள் என்று நாம் சந்தேகிக்க இடம் உள்ளது. பாபர் மசூதி இடிப்பிற்கு பிறகு பெரும்பாலும் காங்கிரசு தான் பல ஆண்டுகளாக ஆட்சி செய்துவருகின்றன, பாபர் மசூதி வ்ழக்குகள் முடிந்தபாடில்லை, காங்கிரசு ஆட்சியின் போது தான் பாபர் மசூதியும் இடிக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது, ஆனால் சிறுபான்மையினருக்கு பாதுகாப்பு என்ற பெயரில் காங்கிரசு வாக்குகள் அறுவடை செய்வதும் ஆட்சியில் தொடர்வதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது, இந்த சூழலில் பாஜகவை நாம் இந்துத்துவ கட்சி என்றோ சிறுபான்மை எதிரி என்றோ பார்க்கத் தேவை இல்லாத அளவுக்கு காங்கிரசின் முகத்திற்கும் பாஜகவிற்கும் பெரிய வேறுபாடு இல்லை என்றே சொல்லலாம். இந்தியாவில் பெரும்பான்மை இந்து சமயத்தினர் எனும் பொழுது பாஜக நேரடியாக மதவாதமாக வாக்குக் கேட்பதை காங்கிரசு மறைமுகமாக செய்துவருகிறது. 

நான் அதுபற்றி மிகுதியாக சொல்ல விரும்பவில்லை, இந்த அரசியல் ஏமாற்றுகளிலும் கட்சிகளிலும் எனக்கு பெரிய நம்பிக்கைகள், ஈர்ப்புகள் கிடையாது, நான் எந்த ஒரு கட்சியையும் தொடர்ந்து ஆதரிப்பதாக எழுதுவதும் இல்லை, நான் இங்கு சொல்ல வந்தது மரண தண்டனைகள் குறித்து தான், அப்சல் குருவிற்கு கொடுக்கப்பட்டது தண்டனை என்றாலும் அரசு அவரது குடும்பத்திற்கு செய்தது அநீதி, அப்சல் உடலை உறவினர்கள் வாங்க மறுத்ததாகவும் சிறை வளாகத்திலேயே அடக்கம் செய்யப்படுவதாகவும் ஒரு ஊடகம் எழுதி இருந்தது, மற்றொரு ஊடகத்தில் அப்சலுக்கு தண்டனை நிறைவேற்றிய இரண்டு நாள் குறித்து தான் தண்டனை நிறைவேறப் போவது குறித்த கடிதம் உறவினர்களுக்கு சென்று சேர்ந்ததாம், இரண்டு நாள் சென்று கடிதம் கிடைத்தவர்கள் உடல் அடக்கம் பற்றிய கருத்துகளை எப்படி கூறி இருப்பார்கள் ? ஆக உடல் அடக்கம் குறித்த உரிமை கூட உறவினர்களுக்கு வழங்கப்படவில்லை என்றே சந்தேகம் கொள்ள நேரிடுகிறது.

மரண தண்டனை ஆதரவாளர்கள் எல்லோரும் ஒன்று போலவே, 'உங்கள் குடும்பத்தில் இப்படி நடந்திருந்தால் குற்றவாளியை தண்டிக்கச் சொல்லமாட்டீர்களா ?' என்றே கேட்கிறார்கள், பழிக்கு பழி , இரத்தத்திற்கு இரத்தம் என்பவை காட்டுமிராண்டி கலாச்சாரம் என்றே நாமும் எழுத வந்த காலத்தில் இருந்தே எழுதிவருகிறோம், தனக்கு இழைக்கப்பட்டது அநீதி என்று நினைப்பவர்கள்  அதையே தண்டனையாக அநீதி இழைத்தவர்களுக்கும் செய்யச் சொல்வார்களா ? உதாணத்திற்கு பக்கத்து வீட்டுக்காரன் ஆத்திரப்பட்டு பலிவாங்கும் நோக்குடன் அடுத்தவீட்டுக்  குழந்தையை   கொன்றுவிடுகிறான், அதே வேதனையை அவனும்  அனுபவிக்க வேண்டும் என்று விரும்புவர்கள் அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும் என்று விரும்புவார்களா ? அல்லது ஒருபாவமும் அறியாத அவனது குழந்தையைக் கொல்வது தான் சரி,  'இழப்பு' என்றால் அவன் அறியச் செய்ய தரும் சரியான தண்டனை என்று சொல்லுவார்களா ? உண்மையில் அவனை மட்டும் தண்டித்தால் அவனுக்கு 'இழப்பு' என்றால் என்ன வென்று தெரியாமல் அது செய்த குற்றத்திற்கான தண்டனை என்ற அளவில் மட்டுமே அவனால் உணர முடியும், அது தான் அவனுக்கான சரியான தண்டனை என்று இங்கு குறிப்பிட முடியுமா ? இல்லை இல்லை அவனுடைய குழந்தையையும் கொல்லுவது தான் அவனுக்கான தண்டனை என்று மரண தண்டனை நியாவான்கள் தீர்ப்பு எழுதிவிட்டால், அதை 'சரியான தீர்ப்பு' என்று அறிவுடையோர், சமூக அக்கரை உள்ளோர் அதை ஆமோதிக்க முடியுமா ?

மரண தண்டனைகள் மூலம் இழப்பு என்பது கொலைகாரனுக்கு அல்ல, அவனது குடும்பத்தினருக்கு மட்டுமே, கொலை வழக்கிற்கான மரண தண்டனைகள் எல்லாமும் ஒரு குடும்பம் மற்ற குடும்பத்தை பழிக்கு பழி வாங்குதல் என்ற பக்க விளைவுகளை மட்டுமே ஏற்படுத்துகின்றன என்பது மறுக்க முடியாத உண்மை. கொலைகாரனை பெற்றவர்கள், கொலைகாரனின் மனைவி, கொலைகாரனின் வாரிசுகள் என்கிற தூற்றலை சுமந்து கொண்டு ஏற்கனவே அந்த குடும்பம் பல தண்டனைகளை நாள் தோறும் அனுபவத்து வருகின்றன, இதில் கொலை செய்தவனுக்கு கொடுக்கப்பட்ட மரண தண்டனை எந்த ஒரு விளைவை ஏற்படுத்தும் என்று தெரியவில்லை ? அவசரத்தில், கோபத்தில் அல்லது தூண்டுதலில் செய்த கொலைக்கு அரசு ஆதரவுடன் தீர்ப்பு என்ற பெயரில் கொடுக்கப்படும் மரண தண்டனை மற்றொரு கொலை தான், ஒன்று கேட்காமல் செய்யப்படுகிறது மற்றொன்றோர் ஆன்றோர் சான்றோர் ஆமாம் போட நடைபெறுகிறது. உயிரெடுக்கும் உரிமை யாருக்கும் இல்லை என்ற பெயரில் கொடுக்கப்படும் தண்டனை உயிரெடுப்பது தான் என்றால் அதை நீதி நேர்மை நியாயம் என்ற வகைப்படுத்தல் இன்றி வெறும் தண்டனை என்ற சொல்லாடலில் இட்டு நிரப்புங்கள்.

சந்தர்ப்ப சாட்சியம், சாட்சியம் என்ற பெயரில் தான் தீர்ப்புகள் எழுதப்படுகின்றன மற்றபடி ஒருவர் குற்றவாளியா இல்லையா என்பதை நீதிபதிகள் முற்றிலும் அறிந்து தான் எழுதுகிறார்கள் என்று சொல்ல அவர்கள் முக்காலத்தை உணர்ந்தவர்களும் இல்லை, மரண தண்டனைகள் மூலம் ஆயிரக் கணக்கானோர் தண்டிக்கப்பட்டாலும் ஒரே ஒருவர் குற்றமற்றவராக இருந்து அவருக்கும் சந்தர்ப சாட்சியங்கள் வழியாக மரண தண்டனை தீர்ப்பு எழுதிவிட்டால் தவறாக நிறைவேற்றப் பட்ட தண்டனைக்கு மரண தண்டனை ஆதரவாளர்கள் பொறுப்பேற்பார்களா ?

நேற்று கூகுள் ப்ளஸில் நண்பர் ஒருவர் 'அப்சலுக்கு இழைத்தது அநீதி என்றால் ஆண்டவன் அநியாயமாக தீர்ப்பு எழுதியவர்களை தண்டிப்பார்' என்று வருத்தப்பட்டு இருந்தார், அவரும் மரண தண்டனைக்கு ஆதரவானவர் என்பது குறிப்பிடத் தக்கது. ஒருவேளை அப்சல் அப்பாவியாக இருந்து தண்டிக்கப்பட்டிருந்தால் அநியாயமாக தீர்ப்பு எழுதியவர்களுக்கு எங்கோ கிடைக்கும் தண்டனையைப் பற்றி எந்த கருத்தும் இல்லை, அது நாம் அறியாத ஒன்று, ஆனால் அப்சல் குடும்பத்திற்கு ஏற்பட்ட இழப்பு யார் இட்டு நிரப்புவது ஆண்டவனா ?

பலிக்கு பலி, பழிக்கு பழி, இரத்திற்கு இரத்தம் சரி என்றால் சமாதானம், சமரசம் என்பதன் பொருள் என்ன ? வெறும் சொத்து தகராறுக்கு மட்டும் தான் அவையெல்லாம் ? கொலைக்கு 'கொலை நீதி' தான் பெரிது என்று நம்பும் நாம் ஏன் சமதானப் புறக்களையெல்லாம் பறக்க விடாது, அவற்றின்  கறியை சூப்பு வைத்துக் குடிக்கக் கூடாது ?

இங்கு சென்றவாரம் சிங்கப்பூரில் சிமெண்ட் லாரி ஓட்டுனரின் கவனக் குறைவால் 7, 10 வயது இரண்டு ஆண் குழந்தைகளை பறிகொடுத்தப் பெற்றோர் சொன்னது 'ஓட்டுனரை மன்னிக்கிறோம், ஓட்டுனருக்கு கொடுக்கும் தண்டனை என் குழந்தைகளை மீட்டுத் தந்துவிடாது'


மரணதண்டனை தேவையா ?   (2007 ல் எழுதியது)

6 ஜனவரி, 2013

ஆண்கள் குற்றவாளிகளா ? சந்தர்பவாதிகளா ?


இந்தியாவில் இதுவரை பாலியல் வன்கொடுமைகள் எதுவும் நடக்காதது போலவும் இதுவே முதன் முறையாக நடந்தது போலவும் இவை இனி கிள்ளி எரியப்பட வேண்டும் என்று ஒட்டு மொத்த இந்தியர்களும் அதே பேச்சாக போராட்டமாக தலைநகர் டெல்லியில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமை குறித்துப் பேசுகிறார்கள், கொதிக்கிறார்கள், ஓடும் ரயில்களில் பெண்களை மானபங்கம் செய்வது தொடர்ந்து நடைபெற்றே வருகிறது, அவைகளை அன்றாடச் செய்திகள் ஆகிவிடுவதைத் தவிர அவைகளை தடுத்து நிறுத்த அரசுகள் எந்த முயற்சி எடுத்தன ? டெல்லி நிகழ்வுக்கு மட்டும் ஏன் இவ்வளவு பரபரப்பு ? காரணம் தலைநகரில் நடந்தது என்பது தவிர்த்து வேறு என்ன ? ஆளும் கட்சிக்கு இது மானப் பிரச்சனை தலைநகரிலேயே இவ்வாறு நடந்துவிட்டதே ? தலைகுனிவு என்று தூற்றக் கூடும் என்ற அச்சம, எதிர்கட்சிகளுக்கு தலைநகரில் இவ்வாறு நடந்ததால் ஆளும் கட்சி சட்டம் ஒழுங்கை காக்கவில்லை என்கிற குற்றச் சாட்டைப் பெரிதாக்க முடியும், என்பது தவிர்த்து பாதிக்கப்பட்டவர் குறித்த உண்மையான அக்கரையில் அவர்கள் செயல்படுகிறார்களா ? என்பது அவர்களுக்கே வெளிச்சம் என்று நாம் கூற முடியும் காரணம், பாஜாக உள்ளிட்டவர்களின் கருத்து பாலியல் வன்கொடுமைகளுக்கு காரணமாக பெண்களின் உடை குறித்த கருத்து விமர்சனங்கள் வெளி இடப்படுகின்றன, கொடுஞ்செயல் புரிந்த குற்றவாளிகள் தண்டனைக்குறியவர்கள், என்ன விதமான தண்டனை என்பதை பாதிக்கப்பட்டரின் குடும்பத்தாரும் குற்றவியல் சட்ட சாசனங்களும் முடிவு செய்யட்டும் என்பது தவிர்த்து எனக்கு மாற்றுக் கருத்து இல்லை, குற்றவாளிகளில் ஒருவர் 18 வயதிற்கும் குறைந்தவன் என்பதால் அவனை முழுமையாக தண்டிக்கும் விதத்தில் சட்ட வரையறைகளில் சிறுவர் குற்ற வயதைக் 16 ஆகக் குறைக்க சட்டவல்லுனர்கள் மற்றும் ஆலோசனைக் குழு ஒட்டுமொத்தமாக முடிவு செய்திருப்பதாக தெரிகிறது.

பருவ வயது என்பது பருவமடைந்த வயதல்ல, மனப் பக்குவம் அடையும் வயது என்ற அடிப்படையில் தான் 18 வயதுக்கு குறைந்தவர்களை சிறுவர் சிறுமியர் என்ற வரையறையில் வைத்து அவர்களில் குற்றவாளிகளை சிறுவர் தண்டனைச் சட்டங்களில் சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகளில் அடைக்கிறார்கள், இந்த வரையறையை 16 ஆகக் குறைப்பதன் மூலம் முன்தேதியிட்ட சட்டத்திருத்தம் என்று அடிப்படையில் அந்த குற்றவாளியை தண்டிக்க சட்டத்தில் இடமிருக்கிறதா என்று தெரியவில்லை, ஆனால் 16 வயது என்கிற வரையறையைக் கொண்டு வருவதன் மூலம் திருமணச் சட்டத்தில் பெண்ணுக்கு 18 என்றும் ஆணுக்கு 21 என்றும் இருப்பதை இவர்கள் குறைப்பார்களா என்று தெரியவில்லை, ஏற்கனவே சிறுமிகளையும் இளம் வயது திருமணங்களையும் ஆதரிக்கக் துடிக்கும் மதவாத அமைப்புகளுக்கு இத்தகைய சட்டங்கள் ஆதரவாகிவிடும் நிலை ஏற்பட்டுவிடலாம், இன்றைய திருமணங்கள் பொருளாதார தன்னிறைவு என்கிற அடிப்படையில் தான் ஆண் பெண் இருவரும் திருமணத்திற்கு தயாராகும் நிலை, ஆனால் இத்தகைய சட்ட வகைகள் திருமணம் என்பது பருவயதினால் முடிவு செய்யக் கூடியவை என்ற நிலைக்கு வரும் பொழுது, இளம் வயது திருமணங்கள் இன்றைய பொருளாதார போராட்டத்தில் தாக்குப் பிடிக்க முடியாமல் சிதைவுறும் வாய்ப்பு அதிகமாகும், போதிய பொருளாதாரமின்றிய திருமணங்கள் நிலைக்கமல் போகவும் கள்ள உறவுகள், மனமுறிவுகள் பெருகவும் வாய்பளிக்குமே அன்றி பெரிதாக சமூகத்திற்கு பலன் அளிக்காது. தவிர 18 வயதிற்கு குறைந்தோர் தற்பொழுது வேலை செய்யத் தடையும் உள்ளது, ஏற்கனவே 18 வயதிற்குட்பட்டோரை 19 வயதானவர் என்று வேலைக்கு வைத்துக் கொள்ளும் 5 மாடி ஜவுளி ஸ்டோர்கள் இனி 12 வயதான சிறுவனைக் கூட 16 வயது நிரம்பியவன் என்று சொல்லி வேலை வாங்கக் கூடும்.

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது சாக்கு என்பது போல் மதவாதங்களில் காலம் காலமாக பெண் உடையை சமூகத்தை பாதுகாக்கும் போர்வையாக அறிவிக்கும் மதவாதிகள் கருத்து கூறுகிறார்கள், பெண் என்பவளுக்கும் போஸ்ட் மார்டம் செய்யப் பட்ட பிணத்திற்கும் பெரிய வேறுபாடுகள் இல்லை என்றால் ஆண்கள் தவறு செய்ய மாட்டார்கள் என்பது போல் பெண் உடல் வெள்ளை அல்லது வேறு நிறத்  துணியால் முழுக்கப்  போர்த்தப்பட்டு முகம் மட்டும் திறந்திருந்தால் போதும் என்கிறார்கள், 21 ஆம் நூற்றாண்டில் தான் நாம் வாழ்கிறோமா ? என்பதை நாமே கேட்டுக் கொள்ள வைக்கும் இது போன்றக் கருத்துகளால் ஆணுக்கும் பெண்ணுக்குமான இடைவெளிகள் அதிகமாகி பெண் என்பவள் போகப் பெருள் என்பதை அழுதமாக பதியவைக்குமேயன்றி, ஆணும் பெண்ணும் மனிதப் பிறவிகளே என்பதை புரிந்து கொண்டு எதிர்பாலினரை மதிக்கும் போக்கு இல்லாமல் உருவாகாமல் போகும். மாற்றுப் பாலினம் என்பது தவிர்த்து ஆண் பெண்ணிற்கு பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதாக வளர்க்கப்படும் நாடுகளில் பெண்களின் உடையைக் குறித்து ஆண்கள் பெரிதாக அலட்டிக் கொள்வதில்லை, உடை என்பது அவரவர் சுதந்திரம் என்பதாகத்தான் நினைக்கிறார்கள், இங்கு சிங்கப்பூரில் பிறந்தது முதல் அரைகால் சட்டையும் ஒரு பணியனும் அணிந்து வேலைக்குப் போகும் தன் அம்மாவைப் பார்த்து வளரும் ஒரு சீன ஆண் பருவ வயதில் அதே போன்ற உடை அணியும் இளம் பெண்களைப் பார்த்து உணர்ச்சி வசப்படுவதில்லை. 

ஒருவரை கைக்குலுக்கவோ, தொட்டுப் பேசவோ குறைந்தப் பட்சம் ஒருமுறையாவது அவரிடம் பழகி இருக்க வேண்டும், இல்லை என்றால் ஒருவர் உடல் மற்றவர் மீது படுவது கூட அருவெறுப்பானது தான், கைகுலுக்குவதற்கே தெரிந்தவராக அல்லது தொடர்பில் வருபவராக இருக்க வேண்டும்  என்ற நிலையில் எந்த ஒரு சம்பந்தமும் இல்லாதவரை உரசுவதும் உடலைத் தீண்டுவதும் பாலியல் ரீதியான வன்முறைகள் தான், பாலியல் தொழிலாளியாக இருந்தாலும் அவளே விரும்பி அனுமதித்தால் அவளைத் தொட முடியும் அதையும் மீறி தொட்டால் அது பாலியல் வன்முறைதான், இதில் உடைகளை எங்கு கொண்டு வந்து இந்த மதவாதிகள் நுழைக்கிறார்கள் என்றே தெரியவில்லை,  மதவாதிகளும் சமூகவாதிகளும் ஆணுக்கும் பெண்ணுக்கும் உடல் தவிர்த்து பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதையும் ஆணும் பெண்ணும் சமாமானவர்களே என்பதையும் புரிய வைத்தாலே எந்த ஒருவரையும் யாரும் தொடுவது கூட தவறு என்று நினைப்பார்கள், அது தவிர்த்து இந்த மதவாதிகளில் கருத்து அரைகுறையாக ஆடை அணிபவர்களை ஒருவன் தாம் தண்டனைக்குப் பயப்படாமல் இருந்தால் தொடலாம் வன்முறை செய்யலாம் என்று சொல்லும் அனுமதியாக இருக்கிறது அவர்களது கருத்துகள்.

சமூக ஒழுக்க்கத்தில் பெண் உடையே முக்கிய அங்கம் என்று சொல்ல முயலும் மதவாதிகள் அனைவரும் ஆண்கள் அனைவரும் சந்தர்ப்பவாதிகள் தான் பெண்கள் தான் தம்மை காத்துக் கொள்ள வேண்டும் என்கிற கருத்தை முன்வைக்கிறார்கள், உணர்ச்சி வசப்படும் சமூகம் ஒருவர் அல்லது ஒரு குழு தவறாக நடந்து கொண்டால் ஒட்டு மொத்த ஆண்களும் குற்றவாளிகள் என்பது போல் நினைக்கிறார்கள். "Teach your son not to rape Women" இந்த வாசகத்தை தந்தை தாய் இருவரும் படித்திருக்கக் கூடும், இந்த வாசகம் தந்தையை நோக்கி சொல்லப்பட்டதா ? தாயை நோக்கிச் சொல்லப்பட்டதா ? தந்தைகளை நோக்கிச் சொன்னால் ஒட்டு மொத்த ஆண் சமூகத்தையும் குற்றவாளி ஆக்கிப் பார்ப்பதாகவும், தாயை நோக்கிச் சொல்லி இருந்தால் ? எந்த ஒரு தாயும் தன் மகனிடம்  உன் விருப்படி நீ ஒரு பெண்ணைக் கெடுக்கலாம் என்று பாடம் நடத்துவதும் இல்லை. என்னைக் கேட்டால் "Dear Religious Leaders Teach your followers not to rape women" என்று சொல்லி இருந்தால்  பெண் உடைபற்றி பேசும் முன் மதவாதி யோசிப்பான்.

இஸ்லாமியவாதிகளா இருந்தாலும் இந்துமதவாதிகளா இருந்தாலும் பெண் உடை என்ற ஒற்றைப் புள்ளியில் இணைந்து கொள்கிறார்கள். மதுரை ஆதீனம் சொன்னதில் தவறென்ன ? என்கிற பதிவை நீங்கள் படித்திருக்கக் கூடும். 21  ஆம் நூற்றாண்டில் தான் பெண் தெய்வ சிலைகள் ஜாக்கெட் அணிந்து காணப்படுகின்றன, அதற்கும் முன் கோவில் சிலைகள் பெண் உருவங்கள் திறந்த மார்பில் தான் இருக்கும் இந்த பாரம்பரியத்தில் வந்த இந்து மதவாதிகளும் பெண் உடைதான் ஆண் சமூகத்தின் தவறுக்கு ஊற்றுக் கண் என்று பேச முன்வருவதில் இருந்தே அவர்கள் பெண்களை அடங்கிப் போக வேண்டியவர்கள் என்கிற பிற்போக்கு மற்றும் அடைப்படை மதவாதக் கருத்துகளைக் கொண்டு இருக்கிறார்கள் என்பது வெள்ளிடை மலை.

********

பாதிப்பட்ட பெண் குறித்து பெண் பிள்ளையைப் பெற்றவன் என்ற முறையில் மிகவும் வருந்துகிறேன், குற்றவாளிகள் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறேன், 

"ஓடும் ரயில் பெண்" என்று கூகுளிட்டு தேடிப்பாருங்கள்... இவ்வளவு நாட்கள் அரசியல்வாதிகள், பத்திரிக்கைகாரர்கள் தூங்கிக் கொண்டு இருந்தார்களா ? என்று கேட்டுக் கொள்வீர்கள். ஏதோ தனியார் பேருந்து போட்டுனர்களும், ரவுடிகளும் தான் அவ்வாறு நடந்து கொள்வார்கள் என்பது இல்லை.


மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்