பின்பற்றுபவர்கள்

18 அக்டோபர், 2008

அவதாரங்களை ஏன் புறக்கணிக்க வேண்டும் ?

தசவதாரக் கதைகளின் ஒருங்கிணைப்பின் ( கமலஹாசன் கதை அல்ல) காலம் கிபிக்கு பிறகே ஏற்பட்டு இருக்கலாம் என்று நினைக்கிறேன். ஆதிசங்கரர் காலத்திற்கு முற்பட்டவையாக இருக்க முடியாது. பக்தியிலும் மெய்ஞானத்திலும் சிறந்தவர் என்று கருத்தப்பட்ட ஆதிசங்கரின் சரிதையிலும், அவரது கோட்பாடுகளிலும் அவதாரங்கள் பற்றி எதுவும் சிலாகித்தோ, குறிப்பாகவோ கூட கூறப்படவில்லை என்பதால் இவை காலத்திற்கு பிந்தியததாகவும், பல்வேறு கிருஷ்ண கதைகளின் தொகுப்பாக பின்னார் ஏற்பட்டவையே தசவதாரக் கதைகளின் தொகுப்பு. கிட்டதட்ட பெரிய புராணம் ஏற்பட்டு சிவபெருமானை வைத்து நாயன்மார்கதைகள் எழுதப்பட்ட காலத்தில் அதற்கு இணையாக எழுதப்பட்டு இருக்க வேண்டும். தமிழகம் தவிர்த்து இந்திய சமய நம்பிக்கையில் இராமன், ஆயர்குல கிருஷ்ணன் தவிர்த்து ஏனைய அவதாரங்கள் பற்றியோ, நாயன்மார்கள் கதைகளோ பெரிய அளவில் எவரும் அறிந்திருக்கவில்லை. இதில் இராமன், கிருஷ்ணன், பலராமன், பரசுராமன் தவிர்த்து வேறு எந்த கிருஷ்ணனின் அவதாரமும் பிறந்து வளராமல் குறிப்பிட்ட சமயத்தில் திடீர் என்று தோன்றியதாகவே சொல்லப்படுகிறது.

ஒரே சமயத்தில் பலராமனும், கிருஷ்ணனும் அண்ணன் தம்பியாகவே பிறந்து வளர்ந்திருக்கிறார்கள். இருவரும் ஒருவரே என்றால் கிருஷ்ணனின் சிறப்பைப் போற்றும் அளவுக்கு பலராமன் பற்றிய புகழ்ந்துரைகளோ, காலிங்க நர்தனம், வெண்ணைத் திருடியது, பெண்களின் மனம் கவர்ந்தது போன்ற குழந்தை விளையாட்டுக்களை வைத்து கிருஷ்னைப் பாடியது போல் பலராமனைக் குறித்த புகழ் உரைகளோ இல்லை, கண்ணன் என்ற கதையாடலில் இருந்த பலராமன் என்கிற ஒரு பாத்திரத்தை பத்து அவதாரத்திற்கு கணக்கு காட்ட பற்றக் குறையினால் சேர்க்கப்பட்டு இருக்க வேண்டும் என்றே நினைக்கிறேன். இந்த தசவதாரக் கதைகள் புத்தரின் சாதக மற்றும் அவதாரக் கதைக்கு மாற்றாக அல்லது போட்டியாக பின்னர் ஏற்பட்டு இருக்க வேண்டும். வைணவ அன்பர்கள் தசவதாரக் கதைகளின் காலம் பற்றி விளக்கினால் அறிந்து கொள்வேன்.

இந்த கட்டுரையைக் கூட கண்ணன் மீது இருக்கும் வெறுப்போ, காழ்புணர்வோ ஏற்பட்டு அதனால் எழுதி இருக்கிறேன் என்றெல்லாம் கருத வேண்டாம். வெறும் நம்பிக்கை என்ற பெயரில் புகழ்வதோ, நம்பிக்கை இன்மையால் இகழ்வதிலோ எனக்கு ஒப்புதல் இல்லை. கண்ணன் குறித்த வழிபாடு இந்திய சமய வரலாறு எழுதப்பட்ட காலத்திற்கு முந்தியது என்பதை ஒப்புக் கொள்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை.
இன்னும் தெளிவாகச் சொல்வதென்றால் சிவ லிங்க வழிபாடுகள் இருந்த காலத்திலிருந்தே கிருஷ்ணனை வழிபடுவதும் இருந்தே வந்திருக்கிறது. அரியும் சிவனும் ஒன்று என்ற ஒரு சொல்லாடலை உருவாக்கி பாமரனுக்கு அதைக் கூறியதைத் தவிர்த்து இவ்விருவர்களையும் மன அளவில் கூட இணைத்தும் பார்க்கும் முயற்ச்சி ஆன்மிகவாதிகளிடம் எப்போதும் இருந்ததோ, நடந்ததோ இல்லை என்பதை ஒப்புக் கொள்வீர்கள் என்றே நினைக்கிறேன்.

******

ஞானசம்பந்தருக்கு பார்வதி பால் கொடுத்தாள் என்று கூறப்பட்ட கதையும், நாயன்மார்களை சிவபெருமான் ஆட்கொண்டார் என்ற கதைகளையும் தவிர்த்து இறைவன் நேரடியாக தோன்றினான் என்றும் அவதாரம் எடுத்துவந்தான் என்றும் தமிழ் இலக்கிய வரலாறுகளின் பிற்பகுதியில் எதுவுமே கூறப்படவில்லை. அதாவது ஞானசம்பந்தர் காலத்திற்கு பிறகு இறைவன் காட்சி கொடுத்தான் என்று கூட எந்த இலக்கியத்திலும் எழுதப்படவில்லை. இதுபோன்ற சைவ கதைகளைப் போலவே வைணவ சார்பில் ஆழ்வார்கள் குறித்த கதைகளும் அவர்களுக்கு பெருமாள் காட்சிக் கொடுத்தார், ஆட்கொண்டார் என்ற கதைகளும் உண்டு. இவையெல்லாம் சமகாலத்தில் தோன்றியவை அல்லது கொஞ்சம் முன்பே அல்லது பின்பு இருக்கலாம். அதன் பிறகு இராமனுஜர், சங்கரர் போன்ற சமயத் தலைவர்களையே இறைக்கு ஒப்பாக போற்ற ஆரம்பித்தனர் அல்லது அவர்களையும் இறைவனின் அவதாரங்களாக எழுதப்படாமல் மன அளவில் ஏற்றுக் கொண்டு வழிபாடு செய்ய ஆரம்பித்தனர். சங்கரமடத்தில் சங்கரருக்கு பிறகு வந்த சங்கராச்சாரியர்கள் எவருமே சங்கரர் அளவுக்கோ, அல்லது சிறு அளவில் அவர்களின் பெயர் தெரியும் அளவுக்குக் கூட புகழடையவில்லை. அவை குறை அல்ல, இயல்பு. மதங்களும் கொள்கைகளும் காலப் போகில் நீர்த்துப் போகும் அல்லது அவற்றின் பயன்பாடு இல்லாது போய் இருக்கும் என்ற உண்மையால் நிகழ்ந்த மாற்றங்கள் என்று கொள்ளலாம்.

வள்ளலார் கடவுளைக் கண்டாரா ? இல்லை என்றே நினைக்கிறேன். ஒரு முடிவுக்கு வந்தவராக கடவுள் சச்சிதானந்தம் அதாவது ஜோதி சொருபம் என்ற முடிவுக்கு வந்தவராக ஒளியைக் கடவுளாகக் கருதி அனைவருக்கும் அதையே பரிந்துரைத்தார். அதன் பிறகு இராமகிருஷ்ணர் பரமஹம்சர் தனக்குமுன் காளிதேவி தோன்றியதாகவும் சொன்னார், பிறகு யோக நிலையில் அப்படி காட்சி கிடைப்பது யோக நிலையின் ஒரு படி அல்லது தோற்றம் என்றும் சொல்லிய படியால் அவரது சீடரான விவேகநந்தர், அதுபோன்று இறைக் காட்சிக்கெல்லாம் ஆசைப்படாமல் அத்வைத சித்தாந்தம் வழியில் சென்றுவிட்டார்.

கிபிக்கு பிறகு இந்திய சமய வரலாறு தோறும் எங்கும் அவதாரம் நிகழ்ந்தாகவே தெரியவில்லை. எல்லாம் ஆன்மிக அனுபவம் மட்டுமே. ஆனால் தற்பொழுது பல சாமியார்கள் தங்களை கடவுளின் அவதாரங்கள் என்றுக் கூறிக் கொள்கிறார்கள். சமய வரலாற்று அறிவுகள் இருக்கும் பலரும் கூட இவற்றையெலலம் எதிர்க்காதது ஏன் என்றே தெரியவில்லை. வள்ளலார் மற்றும் விவேகந்தர் செய்த சாதனை அளவுக்கு இன்றைய (போலி) சாமியார்கள் என்ன சாதித்துவிட்டார்கள் ? வாந்தியெடுத்து லிங்கம் எடுப்பதும், வெறும் கையால் விபூதி வரவழைப்பதும் அவதாரங்கள் செய்யக் கூடியவையா ? இராமன் அவதாரம் என்று சொல்லப் பட்ட இராமயணக் கதைகயிலும் கூட அவன் இதுபோன்ற சித்துக்கள் எதையுமே செய்யவில்லையே. இந்த போலி சாமியார்கள் ஒரிஜினல் கிருஷ்ண அவதாரங்களை விட எந்த விதத்தில் சிறந்தவர்கள் ? 22 கேரட் கோல்டில் பத்தர்களால் மட்டுமே செய்யக் கூடிய மோதிரங்கள் இவர்களுக்கு எவ்வாறு கிடைக்கிறது ? இவர்களால் வேறு வேறு சீரியல் எண்களுடன் கூடிய 1000 ரூபாய் நோட்டுகளை உருவாக்கித் தரமுடியுமா ? கண்மூடித்தனமாக நம்பிக்கை என்ற பெயரில் (போலி) சாமியார்களின் புகழை ஆன்மிகவாதிகளும் சேர்ந்தே பரப்புவது இறை சக்திக்கு எதிரான துரோகம் தானே. நாத்திகன் இறை சக்திக்கு எதிராக இதைவிட கொடுமை எதும் செய்து இருக்கிறானா ?

12 கருத்துகள்:

கிருஷ்ணா சொன்னது…

// வெறும் நம்பிக்கை என்ற பெயரில் புகழ்வதோ, நம்பிக்கை இன்மையால் இகழ்வதிலோ எனக்கு ஒப்புதல் இல்லை.

தற்பொழுது பல சாமியார்கள் தங்களை கடவுளின் அவதாரங்கள் என்றுக் கூறிக் கொள்கிறார்கள். சமய வரலாற்று அறிவுகள் இருக்கும் பலரும் கூட இவற்றையெலலம் எதிர்க்காதது ஏன் என்றே தெரியவில்லை. வள்ளலார் மற்றும் விவேகந்தர் செய்த சாதனை அளவுக்கு இன்றைய (போலி) சாமியார்கள் என்ன சாதித்துவிட்டார்கள் ?

கண்மூடித்தனமாக நம்பிக்கை என்ற பெயரில் (போலி) சாமியார்களின் புகழை ஆன்மிகவாதிகளும் சேர்ந்தே பரப்புவது இறை சக்திக்கு எதிரான துரோகம் தானே. நாத்திகன் இறை சக்திக்கு எதிராக இதைவிட கொடுமை எதும் செய்து இருக்கிறானா ?

//

அருமை

வடுவூர் குமார் சொன்னது…

ஆன்மிகத்தில் பற்றுதல்கள் உள்ளவர்கள் கூட இவ்வளவு ஞாபகம் வைத்து அலசுவார்களா? என்று தெரியவில்லை.
நன்றாக இருக்கு.

மணிகண்டன் சொன்னது…

எனக்கும் விபூதி, லிங்கம், மோதிரம் வரவழைக்கறதுல உடன்பாடு இல்ல. ஆனா அத நீங்க ஆன்மீகத்தின் பெயரினால் செய்யப்படும் துரோகமா பாக்கறீங்க. ஆனா ஆன்மீகத்த பரப்ப செய்யப்படும் யுக்தியா ஆன்மீகவாதிகள் பாக்கறாங்க. அவ்வளவு தான் வித்தியாசம். அந்த செயல் ஒரு தூண்டுகோள் என்ற அளவிலேயே பார்க்கப்பட வேண்டும். அவர்களே ஆயிரகணக்கான நோயாளிகளுக்கு இலவச சேவை செய்தும் ஆன்மீகத்த பரப்பிக்கிட்டு தான் இருக்காங்க. பல ஊர்களுக்கு சாக்கடை வசதியும், தண்ணீர் வசதியும் செய்து தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆறேழு நாட்களாவது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியே வருகின்றனர்.
அதுனால இக்கால சாமியார்கள் எல்லாம் துரோகம் மட்டுமே செய்கிறார்கள் என்று ஒத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது.

Reach சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஒரு பத்து/பதினைந்து பேரை மட்டுமே சென்றடைய வேண்டுமென்றால் இந்த pyrotechniques தேவைப்படாது.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

ராம அவதாரமும்,கிருஷ்ண அவதாரமும்..ஆண்டவன் மனிதனாகப் பிறந்ததைக்கூறுவது..அதனால் சித்து வேலையில் ஈடுபடவில்லை..ஆனால் நீங்கள் சொல்லும் சாமியார்கள் ஆசாமிகள்..சாமிகளாகக் கூறிக் கொள்கிறார்கள்..அதனால் தான் லிங்கமும்..செயினும் வரவழிக்கிறார்கள்..துரைமுருகன் மாதிரிய வேஷதாரிகள் அவர்களிடம் செயினைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.

தருமி சொன்னது…

கடைசியில் வரும் அந்த பஞ்ச் நல்லா இருக்கு.

ரொம்ப ஆழமா ஆன்மீகத்துக்குள் புகுந்து புறப்பட்டு வந்துள்ளீர்களே .. நன்று.

Dr.Rudhran சொன்னது…

what do we do about the allegedly futuristic but presently profiting kalk

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...

அருமை//


கிருஷ்ணா,

பாராட்டுக்கு நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
ஆன்மிகத்தில் பற்றுதல்கள் உள்ளவர்கள் கூட இவ்வளவு ஞாபகம் வைத்து அலசுவார்களா? என்று தெரியவில்லை.
நன்றாக இருக்கு.
//

பற்றுதல் என்பது வேறு ஈடுபாடு என்பது வேறு, பற்றுதல் என்பது (வெறும்) நம்பிக்கை என்பதோடு சென்றுவிடும், ஈடுபாடும் சேர்ந்தே இருந்தால் 'அது' என்னவென்று அறிந்து கொள்ளும் வேட்கையும் இருக்கும். எனக்கு பற்றுதல் இல்லை என்பது உண்மைதான் ! :)

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
எனக்கும் விபூதி, லிங்கம், மோதிரம் வரவழைக்கறதுல உடன்பாடு இல்ல. ஆனா அத நீங்க ஆன்மீகத்தின் பெயரினால் செய்யப்படும் துரோகமா பாக்கறீங்க. ஆனா ஆன்மீகத்த பரப்ப செய்யப்படும் யுக்தியா ஆன்மீகவாதிகள் பாக்கறாங்க. அவ்வளவு தான் வித்தியாசம். அந்த செயல் ஒரு தூண்டுகோள் என்ற அளவிலேயே பார்க்கப்பட வேண்டும். அவர்களே ஆயிரகணக்கான நோயாளிகளுக்கு இலவச சேவை செய்தும் ஆன்மீகத்த பரப்பிக்கிட்டு தான் இருக்காங்க. பல ஊர்களுக்கு சாக்கடை வசதியும், தண்ணீர் வசதியும் செய்து தருகிறார்கள். ஒவ்வொரு வருடமும் ஆறேழு நாட்களாவது மக்களுக்கு சேவை செய்யும் எண்ணத்தை ஏற்படுத்தியே வருகின்றனர்.
அதுனால இக்கால சாமியார்கள் எல்லாம் துரோகம் மட்டுமே செய்கிறார்கள் என்று ஒத்துக்கொள்வது கடினமாக இருக்கிறது.

Reach சம்பந்தப்பட்ட விஷயம் இது. ஒரு பத்து/பதினைந்து பேரை மட்டுமே சென்றடைய வேண்டுமென்றால் இந்த pyrotechniques தேவைப்படாது
//

ஸ்வாமி விவேகந்தர் உலக அளவில் புகழ்பெற்றார், இந்திய சமயம் காட்டுமிராண்டிகளின் சமயம் இல்லை என்று அழுத்தமாகவே எடுத்துரைத்தார். இதை லிங்கம் எடுக்கும் (ஆ)சாமிகள் எவராவது செய்து இருக்கிறார்களா ? எதைத் தின்றால் பித்தம் தெளியும் என்று இருப்பவர்களையோ, உண்மையான ஆன்மிக வேட்கையில் இருப்பவர்களின் செல்வங்களைக் கடவுள் காணிக்கை என்ற பெயரில் திரட்டிக் கொண்டு, அதில் ஒரு பங்கை வெளிப்பார்வைக்காக விளம்பரமாகவே செய்யப்படுபவை ஆன்மிக சேவையாகவோ, மக்கள் சேவையாகவோ நான் கருதவில்லை.

துன்பத்திலும் துயரத்திலும் இருந்து விடுபட்டு நற்கதிக் கிடைக்காதா என்று எண்ணி ஏங்கி வருபவர்களுக்கு, ஆன்மிக சேவையாக அங்குள்ள சேவா மடங்களில் இருக்கும் கழிவறைகளை முகம் சுளிக்காமல் கழுவுங்கள் என்பது தவிர்த்து ?
இந்த சாமியார்கள் என்ன வழிகாட்டி இருக்கிறார்கள் ? அங்கு கழிவறையை பக்தியுடன் கழுவுபவர்களில் எத்தனை பேர் பொதுமக்கள் சேவையாக பொதுக் கழிவறைகளை கழுவதற்கு தயாராக இருக்கிறார்கள் ?

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
ராம அவதாரமும்,கிருஷ்ண அவதாரமும்..ஆண்டவன் மனிதனாகப் பிறந்ததைக்கூறுவது..அதனால் சித்து வேலையில் ஈடுபடவில்லை..ஆனால் நீங்கள் சொல்லும் சாமியார்கள் ஆசாமிகள்..சாமிகளாகக் கூறிக் கொள்கிறார்கள்..அதனால் தான் லிங்கமும்..செயினும் வரவழிக்கிறார்கள்..துரைமுருகன் மாதிரிய வேஷதாரிகள் அவர்களிடம் செயினைக் கேட்டு வாங்கிக்கொள்கிறார்கள்.
//

இராதாகிருஷ்ணன் ஐயா,

துரைமுருகன் போன்றோரை அமைச்சர் அவையில் வைத்துக் கொண்டு நாத்திகம் பேசும் கலைஞரை நினைத்தால் சிரிப்புதான் வருகிறது. ஊருக்கு உபதேசம் என்கிற சொல்லாடல் மிகச் சரி !

கோவி.கண்ணன் சொன்னது…

//தருமி said...
கடைசியில் வரும் அந்த பஞ்ச் நல்லா இருக்கு.

ரொம்ப ஆழமா ஆன்மீகத்துக்குள் புகுந்து புறப்பட்டு வந்துள்ளீர்களே .. நன்று.
//
தருமி ஐயா,
பாராட்டுக்கு நன்றி ! கோர்வையாக எழுதி இருக்கிறேன் மற்றபடி தகவல் பிழைகள் கூட இருக்கலாம், நான் சொல்லி இருப்பது முற்றிலும் சரி என்றோ மறுக்க முடியாத உண்மை என்றோ எப்போது கருதுவதில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

//Dr.Rudhran said...
what do we do about the allegedly futuristic but presently profiting kalk
//

Dr.Rudhran,

பங்கு சந்தையில் முதலீடு செய்வதைவிட ஒரு சின்ன முதலீட்டில் ஆஸ்ரம குடில் அமைத்து அமர்ந்தால் காலத்துக்கும் நல்ல வருமானம் கிடைக்கும், ரிடையர்மென்ட் என்பதே கிடையாது.

:)

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்