பின்பற்றுபவர்கள்

16 அக்டோபர், 2008

பிறக்காத குழந்தையின் ஜாதகம் !

சிங்கையில் மிகவும் வியப்படையும் வாழ்க்கை முறையில் கர்பிணி பெண்கள் குழந்தை பெறும் முந்தைய நாள் வரையில் வேலைக்குச் செல்வது தான். காரணம் அவ்வளவு சிறப்பானது இல்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், கற்பகாலத்தின் முதிர்ந்த நாள்களில் வீட்டில் இருந்தாலும் ஒத்தாசைக்கு யாரும் இருக்க மாட்டார்கள், அதற்கு பதிலாக பலர் பார்வையில் அலுவலகத்திற்குச் சென்று வந்தால், ஓரளவு மன துணிவுடன் இருப்பார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிலும் பெற்றோர்களுடன் வசிப்பவர்கள் மிகக் குறைவு காரணம் பெற்றோர்களின் வயது முதல் பல சூழல்கள். எனவே மகப்பேற்றிற்கு மனைவியை இந்தியாவிற்கு அனுப்பாதவர்கள் தவிர்த்து அனைவரின் நிலையும் பரிதாபமானது தான். இவ்வளவு துயரமும் நல்லவற்றையும் தருகிறது, கணவன் செய்யும் ஒத்தாசைகள், கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பை இருவரும் புரிந்து கொள்ள அது நல்ல வாய்ப்பாக அமைத்திருக்கும்.

வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தை ஆணா / பெண்ணா என்பதை விருப்பம் இருந்தால் அறிந்து கொள்ளலாம். அது சட்ட எதிரானதும் அல்ல. அப்படி தெரிந்து கொள்ளும் போது குழந்தைக்கு பெயர் வைப்பது முதல், முதல் குழந்தையாக இருந்தால் அதனை வளர்க்கும் முறைகளெல்லாம் கற்பக் காலத்தில் அறிந்து கொள்வார்கள். ஆண் / பெண் பாகுபாடு இல்லாததால் என்ன குழந்தைகள் தெரிந்து கொண்டு எவரும் மனம் உடைந்து போவதும் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தை பிறக்கும் வரை மற்றவர்களுடன் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்று பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். குழந்தையைக் கொடுப்பது கடவுள் என்ற நம்பிக்கையில் இருக்கும் நம் தேசத்தவர்கள் தான் பெண்குழந்தை என்று அறிந்து கொண்டால், அதை கருவிலேயே அழிக்கவும் அல்லது பிறந்தவுடன் கள்ளிப் பால் ஊற்றவோ, குப்பைத் தொட்டியில் போடவும் துணிவு உள்ளவர்கள். நம் நாட்டிற்கு பிறக்கும் முன் ஆண் / பெண் பால் அறிந்து கொள்வதை தண்டனைச் சட்டமாக வைத்திருப்பது மிகச் சரியே.

குறிப்பிட்ட மருத்துவ மனையில், குறிப்பிட்ட மகப்பேறு மருத்துவரிடம் தான் மாதப் பரிசோதனை முதல் மகப்பேறு வரை செல்வதே எந்த நாடாக இருந்தாலும் நடைமுறை. நாங்களும் அவ்வாறு இந்திய மருத்தவ பெண்மணியிடம் ஆலோசனைக்குச் சென்றுவந்திருக்கிறோம், சரியாக குழந்தை பிறக்குப் போகும் 3 வாரத்திற்கு முன்பு சென்று அவரை அலோசனைக்காக சந்தித்த போது, 'நான் பதினைந்து நாளில் வெளிநாட்டிற்கு மேற்படிப்புக்குச் செல்கிறேன், அடுத்த வாரம் டெலிவரி செய்துடலாமா ?' என்று கேட்டார். மனைவியும் நானும் ஒருவரை ஒருவர் வியப்புடன் அச்சத்துடன் மாறி மாறி பார்க்க, 'இருவாரங்களில் செயற்கைத் தூண்டலின் வழி குழந்தை பிறக்க செய்ய முடியும்... நான் உங்களை அவசரப்படுத்தவில்லை, உங்களுக்கு இயற்கைகையாக வலி எடுத்து பிறக்கும் நாளில் குழந்தை பிறக்க உதவியாக வேறொரு மருத்துவரை வேண்டுமானால் பரிந்துரைக்கிறேன்...நீங்கள் யோசித்து சொல்லுங்கள்... எனக்கு உங்களின் மருத்துவ ஹிஸ்டரி முழுவதும் தெரிவதால் முன்கூட்டியே நானே மகப்பேறுக்கு உதவி செய்கிறேன்..." என்றார். நாங்கள் இருவரும் வெளியே வந்து யோசித்துப் பார்த்தோம்., கடைசி நேரத்தில் வேறு மருத்துவரை நாடவும் ஒப்புதல் இல்லை. இரண்டாவதாக சரியான நேரத்திற்கு குழந்தை பிறக்கும் முன் வலி எடுக்கும் போது மருத்துவ மனைக்கு அழைத்து வரவதற்கு ஆள் இல்லை என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது, முடிவு செய்து...செயற்கை தூண்டுதல் வழியாக மருத்துவர் சொல்வது போல் அடுத்த வாரம் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து மருத்துவரிடம் சரி சொல்லிவிட்டோம். அந்த வாரத்திலேயே என் அம்மாவும் சிங்கை வர. மருத்துவர் சொன்ன அந்த நாளில் மருத்துவமனையில் மகப்பேற்றிற்காக மனைவியைச் சேர்த்தேன். குழந்தை சரியாக திரும்பி இருந்தாலும் குழந்தை பிறக்கும் கடைசி நிமிடம் வரை வழக்கமான பிறப்பா, அறுவை சிகிச்சை வழியாக பிறப்பா என்று சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்கள். காலையில் செயற்கை தூண்டுதலுக்காக கொடுத்த மருந்துகள் மாலை 4 மணிக்குத்தான் வேலை செய்ய ஆரம்பித்து வலி எடுக்க ஆரம்பித்து நல்லிரவு தாண்டியே பிறந்தது.

வெளிநாட்டில் இருக்கும் ஆண்களுக்கு மகப்பேறு நேரத்தில் மனைவியுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும், நானும் அவ்வாறு எனது மகள் பிறக்கும் போது அருகில் இருந்திருக்கிறேன். பிரசவ வேதனை என்று சொல்வதை ஆண்கள் உணர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பு. வலி தெரியாமல் இருக்க உடலை வளைத்து முதுகு தண்டுவடத்தில் ஊசி ஏற்றி.....அதையும் மீறி எடுக்கும் வலியில் பெருகும் கண்ணீரும், வேதனையான கூப்பாடும் அருகில் இருக்கும் கணவன் அறிந்து கொள்ளும் போது அடுத்த ஓர் ஆண்டுக்குள் இன்னொரு குழந்தைக்கு எந்த கணவனும் ஆசைப்பட்டு மனைவியை தொல்லை படுத்த மாட்டான். அதுமட்டுமல்ல... குழந்தை வெளியே வரும்போது வழி குறுகலாக இருந்தால் நேரம் மிகுந்து எடுக்கும், குழந்தைக்கு எதும் நேர்ந்துவிடலாம் என்று அதைத் தவிர்க்க பிறப்பு உறுப்பின் கீழ் பகுதியை ஒரு அங்குலம் அளவிற்கு கத்திரிக்கோளால் வெட்டிவிடுவார்கள், பீறிட்டு அடித்து குளமாக தேங்கும் இரத்ததையோ, வெட்டியதையோ அறியமுடியாத அளவுக்கு, பெண்கள் அதைவிட பெரிய வலியை தாங்க முயன்று கொண்டி இருப்பார்கள். வெட்டிய கீழ் பகுதியை குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே மருத்துவர் தைத்துவிடுவார். அது குணமாக ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். எல்லா நாட்டிலும் 50 விழுக்காட்டிற்கு பெண்களுக்கு மகப்பேறின் போது பிறப்புறுப்பில் கத்தரிவெட்டு விழுவது நடைமுறைதான். அப்படி நடப்பதை பெண்கள் ஆண்களிடம் சொல்வது கிடையாது, மிகவும் எளிதாக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் விழுக்காட்டு அளவில் 20 விழுக்காடு கூட இருக்காது.


********

தலைப்புக்கு வருவோம்,

கொடுப்பினை (அதிர்ஷ்டம்) என்பதே எதிர்பாராமல் நிகழ்வதுதானே, பிறந்த நேரத்தை வைத்துத்தான் ஜாதகங்கள் எழுதப்படுகிறது. அதிர்ஷ்டத்தை தனது வாரிசுகளுக்கு ஆக்கிக் கொள்ள இப்பொழுதெல்லாம் பெற்றோர்களே குழந்தை பிறக்கும் நேரத்தையும் தீர்மாணிக்கிறார்கள், இந்த கூத்தெல்லாம் இந்தியாவில் தான் நடக்கிறது, இதற்கு மருத்துவர்களும் முழு ஆதரவு என்பதை நினைக்கும் பொழுது மருத்துவத் தொழிலின் புனிதம் கூட கேள்விக் குறியாகிறது. சரத்குமார் - ராதிகா தம்பதிகள், தங்கள் பெற்ற குழந்தைக்கு நாடாளும் ஜாதக நேரத்தை ஜோதிடர்களுடன் ஆலோசித்து, சரியான நேரத்தில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்தார்களாம். தமிழ்நாட்டில் முதன் முறையாக(?) அடுத்த காமராஜர் ஆட்சி சரத்குமாரின் மகன் தான் தலைமையில் ஏற்படுமோ ?

குழந்தை பிறக்கும் நேரத்தையும், நாளையும் மனிதர்கள் தீர்மாணிக்கும் அளவுக்கு சென்று விட்ட காலத்தில், ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்து எழுதப்படும் ஜாதகம் எந்த அளவுக்கு சரி ? பிறந்த பிறகுதான் ஒருவரின் ஜாதகமே பலனுக்கு வருகிறது என்று சொல்லப்படுவதால், பிறக்காத குழந்தைக்கு பிறக்கும் நேரத்தை மனிதர்களே முடிவு செய்து கொள்வதால், 'இந்த நேரத்தில் தான் இந்த குழந்தை பிறக்கும்' என்பது யாருடைய ஜாதகத்தில் எழுதப்பட்டு இருக்கும் ?

39 கருத்துகள்:

துளசி கோபால் சொன்னது…

நல்ல பதிவு.

'அவனன்றி ஓர் அணுவும் அசையாது'

லக்ஷ்மி சொன்னது…

'கற்ப்பம்' - 'கர்ப்பம்' தான் சரின்னு நினைக்கறேன்.
நீங்க சொல்ல வந்த விஷயம் சரியே. ஆனா இது எதோ இப்பத்தான் புதுசா வந்திருக்கற விஷயம் மாதிரி நினைக்காதீங்க. கோச்செங்கண்ணான் அப்படின்ற சோழ மன்னனைப் பத்தி ஒரு கதை இருக்கு. ஒரு குறிப்பிட்ட முகூர்த்ததுல குழந்தை பிறந்தா அவன் ரொம்ப சிறப்பா இருப்பான்னு அரண்மனை சோதிடர் சொல்லவும், ராணி அந்நேரம் வரை தனக்கு பிரசவம் ஆகிவிடாமலிருக்க தன்னை தலைகீழாக கட்டித் தொங்க விடச் சொல்கிறாள். சரியான முகூர்த்ததில் குழந்தை பிறந்தாலும் அம்மா அவுட். இப்படி டெக்னாலஜி வளராத காலத்துலயே இப்படியெல்லாம் சாதனை செஞ்சவுங்கதான் நம்ம மக்கள். இப்ப கேக்கணுமா? ரொம்ப அபத்தமான சிந்தனை, செயல்பாடுகள். சிசேரியனுக்கு டைம் குறிச்சு கொடுக்கறதையே தனி வேலையா செய்யற ஜோசியர்கள் கிளம்பினாலும் ஆச்சரியப் படறதுக்கில்லை.

கோவி.கண்ணன் சொன்னது…

// துளசி கோபால் said...
நல்ல பதிவு.

'அவனன்றி ஓர் அணுவும் அசையாது'
//

பாராட்டுக்கு நன்றி !

நீங்கள் கிண்டலுக்கு சொன்னிங்களான்னு தெரியாது.

பெண் குழந்தை என்று அறிந்து வயிற்றுக்குள்ளேயே சமாதிக் கட்டுவதற்கும் அவன் எப்படி காரணமாக இருக்க முடியும் ? எல்லாம் அவன் செயல் என்று சுமையையும், தவறுகளையும் கூட ஆண்டவன் மேல் ஏற்றுகிறார்கள். இதுக்கு நாத்திகனே பரவாயில்லை தானே ?

கோவி.கண்ணன் சொன்னது…

//லக்ஷ்மி said... சிசேரியனுக்கு டைம் குறிச்சு கொடுக்கறதையே தனி வேலையா செய்யற ஜோசியர்கள் கிளம்பினாலும் ஆச்சரியப் படறதுக்கில்லை.//

சோழ மன்னன் குறித்து தங்கள் குறிப்பிட்டு இருப்பது புதிய செய்தி, தகவலுக்கு நன்றி !

சிசேரியனுக்கு டைம் குறித்துக் கொடுத்தாலும் மருத்துவர்கள் மனது வைத்தால் இந்த இழிவையெல்லாம் அகற்ற முடியும்.

கிருஷ்ணா சொன்னது…

மிக அருமையா எழுதியிருக்கீங்க...

வெண்பூ சொன்னது…

//
எனவே மகப்பேற்றிற்கு மனைவியை இந்தியாவிற்கு அனுப்பாதவர்கள் தவிர்த்து அனைவரின் நிலையும் பரிதாபமானது தான். இவ்வளவு துயரமும்
//

ம‌ன்னிக்க‌வும் கோவி க‌ண்ண‌ன். இதை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். என் ம‌னைவி 6 மாத‌மாக‌ இருந்த‌ போது நாங்க‌ள் அமெரிக்கா சென்றோம். அங்கேயேதான் குழ‌ந்தை பெற்ற‌தும். இருவ‌ருக்குமே, மிக‌ மிக‌ ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து. க‌ண்டிப்பாக‌ இந்தியாவில் இருந்திருந்தால் எப்ப‌டி இருந்திருப்போமோ அதை விட‌ 100 ம‌ட‌ங்கு மகிழ்ச்சியாக‌வே இருந்தோம். பெற்றோர் யாரும் இல்லை, நானும் என் ம‌னைவியும் ம‌ட்டும்தான்.

//
நல்லவற்றையும் தருகிறது, கணவன் செய்யும் ஒத்தாசைகள், கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பை இருவரும் புரிந்து கொள்ள அது நல்ல வாய்ப்பாக அமைத்திருக்கும்.
//

இதை அனுபவப் பூர்வமாக உணர்ந்திருக்கிறேன்..

வெண்பூ சொன்னது…

பிரசவத்தின் போது உடனிருப்பதும் அந்த வேதனையை காண்பதும், குழந்தை வெளிவரும் பரவச நிமிடங்களும் ஒவ்வொரு ஆணும் மிஸ் செய்யக்கூடாத விசயம் கோவி.. எனக்கு அந்த பாக்கியம் கிடைத்து என்பதை பெருமையாகக் கருதுகிறேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ம‌ன்னிக்க‌வும் கோவி க‌ண்ண‌ன். இதை நான் முற்றிலும் எதிர்க்கிறேன். என் ம‌னைவி 6 மாத‌மாக‌ இருந்த‌ போது நாங்க‌ள் அமெரிக்கா சென்றோம். அங்கேயேதான் குழ‌ந்தை பெற்ற‌தும். இருவ‌ருக்குமே, மிக‌ மிக‌ ம‌கிழ்ச்சியாக‌ இருந்த‌து. க‌ண்டிப்பாக‌ இந்தியாவில் இருந்திருந்தால் எப்ப‌டி இருந்திருப்போமோ அதை விட‌ 100 ம‌ட‌ங்கு மகிழ்ச்சியாக‌வே இருந்தோம். பெற்றோர் யாரும் இல்லை, நானும் என் ம‌னைவியும் ம‌ட்டும்தான்.
//

வெண்பூ, மறுக்கவில்லை, கூடுதல் தகவலாக,
முதல் குழந்தையின் போது வளைகாப்பு நிகழ்வு பெண்களுக்கு மிகவும் தேவையானது, தாய்வீட்டில் இருந்து ஒரு தாயின் பராமரிப்பில் செய்யப்படுவதையெல்லாம் ஒரு கணவரால் அவ்வளவு சிறப்ப்பாக செய்துவிட முடியாது. தாயின் பரமரிப்பில் இருக்க வேண்டும், கணவர் அருகில் இருக்க வேண்டும் என்றே ஒவ்வொரு பெண்ணும் நினைப்பாள். மற்றபடி மகிழ்ச்சியாக இல்லை என்று சொல்லமுடியாது, நாம்படும் வேதனைகளை மறக்க அந்த மகிழ்ச்சி எல்லாமும் நாமாகவே இருந்தோம், நாமாகவே செய்து கொண்டோம் என்ற நினைப்பில் கிடைப்பது தான்

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said...
மிக அருமையா எழுதியிருக்கீங்க...

12:24 PM, October 16, 2008
//

கிருஷ்ணா,

மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ said...
பிரசவத்தின் போது உடனிருப்பதும் அந்த வேதனையை காண்பதும், குழந்தை வெளிவரும் பரவச நிமிடங்களும் ஒவ்வொரு ஆணும் மிஸ் செய்யக்கூடாத விசயம் கோவி.. எனக்கு அந்த பாக்கியம் கிடைத்து என்பதை பெருமையாகக் கருதுகிறேன்.
//

சரிதான். நம்பக் கூடியது என்றாலும் வியப்பாக, குழந்தை பிறக்கும் அந்த நொடியில் இருந்தே குடும்ப உறுப்பினர் எண்ணிக்கை உயர்ந்துவிடும். :)

வெண்பூ சொன்னது…

//
தாய்வீட்டில் இருந்து ஒரு தாயின் பராமரிப்பில் செய்யப்படுவதையெல்லாம் ஒரு கணவரால் அவ்வளவு சிறப்ப்பாக செய்துவிட முடியாது.
//

சரியா சொன்னீங்க கோவி.. ஒருவேளை இந்தியாவில் இருந்திருந்தால் கண்டிப்பாக அவரது அம்மா வீட்டில்தான் பிரசவ‌ம் பார்த்து இருப்பார்கள். :(

RATHNESH சொன்னது…

உடல் உழைப்பு என்பது அடியோடு பெண்களுக்குக் குறைந்து விட்ட இந்த நாட்களில் சுகப்பிரசவம் அரிதான விஷயமாகி விட்டது.

சுகப்பிரசவ வலியை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டியது என்ன அவசியம்?

குழந்தையின் வளர்ச்சியை ஸ்கேன் செய்து தெரிந்து கொள்ளும் மருத்துவர் சொல்கிற நாளில் ஏதோ நம்பிக்கைக்குரிய ஒரு முட்டாள் ஜோதிடன் சொல்கிற நேரத்தில் சிசேரியன் செய்து பிறக்க வைப்பதில் என்ன தவறு? இப்போதெல்லாம் சிறந்த மகப்பேறு நிபுணர்கள் குழந்தையின் தலை அளவுக்கு மட்டும் கீறி அழகாக வெளித் தெரியாத தையல் போட்டு விடுகிறார்கள். தையல், பிரிக்க வேண்டிய அவசியம் இன்றி தானே உதிர்ந்து விடும் அல்லது உடலால் உறிஞ்சப்பட்டு விடும். நிஜமாகவே பிரசவ வேதனையின் ஒப்பீட்டில் பெண்களுக்கும் சுகம். ஜோதிட வெறி உள்ள மூடர்களும் குடும்பத்தில் நடக்கும் தற்செயல் துர்நிகழ்வுகளுக்குக் குழந்தை பிறந்த நேரத்தைக் குறை சொல்லிக் குத்திக்காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

நவநீதன் சொன்னது…

சமூகம் புரையோடிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோணவில்லை.

குழந்தை பெற்றுக் கொள்வதின் கஷ்டங்களை பற்றி எழுதி இருக்கிறீர்கள். இதை படிக்கும் போது கல்யாணம், குழந்தை என்ற சமூக சின்னங்கள் தேவையா? என்றே எண்ணத் தோன்றுகிறது.

ஸ்வாமி ஓம்கார் சொன்னது…

திரு கோவி கண்ணன்,

கட்டுரை அருமை. தந்தையின் வலி அதில் தெரிகிறது.

முன்பே முடிவு செய்யப்பட்ட பிறப்பு எனும் கருத்தில் ஒர் பதிவு போட எண்ணி இருந்தேன்.

அதற்கான மைய கருவே திரு லஷ்மி அவர்கள் சொன்ன கதை.

உண்மையில் அந்த கதை பெரியபுராணத்தில் வரும் செங்கண்ண நாயனாரின் கதை.

கதை என்னமோ சரிதான். முடிவில் தான் இருக்கு முடிச்சு.

விரைவில் அதை பதிவிடுகிறேன்

கோவி.கண்ணன் சொன்னது…

//RATHNESH said...
சுகப்பிரசவ வலியை அவர்கள் அனுபவித்தே தீர வேண்டியது என்ன அவசியம்? //

இதற்கான பதிலை மருத்துவர்களும் பெண்களும் தான் சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்து யாரும், எந்த கட்டாயமும் இன்றி வலிய சென்று சிசேரியன் செய்து கொள்ள விரும்புவதில்லை.

//ஜோதிட வெறி உள்ள மூடர்களும் குடும்பத்தில் நடக்கும் தற்செயல் துர்நிகழ்வுகளுக்குக் குழந்தை பிறந்த நேரத்தைக் குறை சொல்லிக் குத்திக்காட்டிக் கொண்டிருக்க மாட்டார்கள்.

1:35 PM, October 16, 2008//

அப்படியெல்லாம் திருப்தி பட்டுக் கொள்வார்கள் என்று நினைக்கிறீர்களா ? அது பெண் குழந்தையாக இருந்தால் வயது வந்த நேரத்தை வைத்து ருது ஜாதகம் என்று ஒன்று எழுதுவார்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//நவநீதன் said...
சமூகம் புரையோடிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைத் தவிர வேறொன்றும் சொல்லத் தோணவில்லை. //

பக்தி முற்ற முற்ற மூட நம்பிக்கையும் சேர்ந்தே முற்றுகிறது என்பதே மறுக்க முடியாத உண்மை.

//குழந்தை பெற்றுக் கொள்வதின் கஷ்டங்களை பற்றி எழுதி இருக்கிறீர்கள். இதை படிக்கும் போது கல்யாணம், குழந்தை என்ற சமூக சின்னங்கள் தேவையா? என்றே எண்ணத் தோன்றுகிறது.

1:50 PM, October 16, 2008
//

அப்படியெல்லாம் இல்லை, இதைப் படித்த பிறகு பெண்களின் மீது பெரும் மதிப்பு வருவாதாக நீங்கள் ஏன் உணரக் கூடாது ?

கோவி.கண்ணன் சொன்னது…

//ஸ்வாமி ஓம்கார் said...
திரு கோவி கண்ணன்,

கட்டுரை அருமை. தந்தையின் வலி அதில் தெரிகிறது.

முன்பே முடிவு செய்யப்பட்ட பிறப்பு எனும் கருத்தில் ஒர் பதிவு போட எண்ணி இருந்தேன்.//

ஸ்வாமி, நான் எழுத நினைத்தை நீங்கள் தொட்டு நீங்கள் ஒரு கட்டுரை எழுதி இருக்கிறீர்கள் என்று உங்கள் பதிவில் சொல்லி இருந்தேன். நீங்களும் அதே போல் சொல்கிறீர்கள். ஈஎஸ்பி வேலை செய்யுதோ ! :)
உண்மையாகக் கூட இருக்கலாம்.

பாராட்டுக்கும் நன்றி !

//அதற்கான மைய கருவே திரு லஷ்மி அவர்கள் சொன்ன கதை.

உண்மையில் அந்த கதை பெரியபுராணத்தில் வரும் செங்கண்ண நாயனாரின் கதை.

கதை என்னமோ சரிதான். முடிவில் தான் இருக்கு முடிச்சு.

விரைவில் அதை பதிவிடுகிறேன்
//

நீங்கள் எழுதும் போது எழுத்தும் நடையும் முத்தாய்ப்பு செய்தியும் நன்றாக இருக்கும். எழுதுங்கள் !

Sridhar V சொன்னது…

நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

சமீபத்தில் நமது நண்பர் ஒருவர் தனது கேர்ள் ஃப்ரெண்டின் பிரசவத்திற்காக விடுமுறை எடுத்துக் கொண்டு அவர் கூடவே தங்கியிருந்தார். அவர்தான் குழந்தைக்கு தகப்பனார் என்பதும் ஒரு காரணம் :-). குழந்தை பிறப்பிற்கு பெற்றோர் இருவரும் பங்கேற்பது மிகவும் முக்கியமாக வலியுறுத்தப்பட வேண்டும்.

கர்ப்பினி; கர்ப்பம் - தான் சரி (சின்ன 'ர' வரவேண்டும்).

கற்பையும் பெண்ணையும் சேர்த்தே பார்த்து பழகிவிட்டத்தால் கற்ப்பம் என்று எழுதிவிட்டீர்கள் போல :-)

ஜாதகம் என்பது வெறும் கணக்குதான். அதன் பலன்களைத்தான் ஜோசியம் என்று சொல்கிறார்கள். மற்றபடி அதில் ஒன்றுமில்லை என்பது எனது தாழ்மையான கருத்து.

வெண்பூ சொன்னது…

//
பழகிவிட்டத்தால் கற்ப்பம் என்று எழுதிவிட்டீர்கள்
//

என் தமிழ் அறிவு சரியென்றால் "ற்" வந்தால் அதை அடுத்து ஒற்று வரக்கூடாது. உதாரணம் முயற்சி (முயற்ச்சி அல்ல) . சரியா? அதனால் இதை எழுதும்போது தவறான "ற்" போட்டாலும், "கற்பம்" என்றுதான் வரவேண்டும்.

(ஆஹா.. வெண்பூ.. எங்கியோ போய்டடா நீயி)

கிருஷ்ணா சொன்னது…

//பெண் குழந்தை என்று அறிந்து வயிற்றுக்குள்ளேயே சமாதிக் கட்டுவதற்கும் அவன் எப்படி காரணமாக இருக்க முடியும் ? எல்லாம் அவன் செயல் என்று சுமையையும், தவறுகளையும் கூட ஆண்டவன் மேல் ஏற்றுகிறார்கள். இதுக்கு நாத்திகனே பரவாயில்லை தானே ?
//

உண்மை தான் கோவி ஸார்,
ஆனால் பெண் குழந்தை யை கொல்லும் மக்கள் இந்த ஆத்திகம் நாத்திகம் பற்றி எல்லாம் அறிந்தவர்கள் இல்லை. அவர்கள் எல்லாம் சிந்தித்து ஆத்திகத்தையோ நாத்திகத்தையோ எற்றுக்கொண்டவர்கள் இல்லை.
அவர்களுக்கு கடவுள் என்பதெல்லாம் கற்பிக்கப்படட ஒன்று.

அதனால் அவர்க்ளை வைத்து நாம் ஆத்திகம் நாத்திகம் பற்றி பேச வேண்டாம்.

//அதிர்ஷ்டத்தை தனது வாரிசுகளுக்கு ஆக்கிக் கொள்ள இப்பொழுதெல்லாம் பெற்றோர்களே குழந்தை பிறக்கும் நேரத்தையும் தீர்மாணிக்கிறார்கள்.

இதற்கு மருத்துவர்களும் முழு ஆதரவு என்பதை நினைக்கும் பொழுது மருத்துவத் தொழிலின் புனிதம் கூட கேள்விக் குறியாகிறது.
//

படித்தவர்கள் நாகரிகமானவர்கள் என்று சொல்லிக்கொண்டு இவர்கள் செய்யும் காரியங்களை(ஜோஸியம்/ஜாதகம்) கண்டிக்கவேண்டும்.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிருஷ்ணா said... உண்மை தான் கோவி ஸார்,
ஆனால் பெண் குழந்தை யை கொல்லும் மக்கள் இந்த ஆத்திகம் நாத்திகம் பற்றி எல்லாம் அறிந்தவர்கள் இல்லை. அவர்கள் எல்லாம் சிந்தித்து ஆத்திகத்தையோ நாத்திகத்தையோ எற்றுக்கொண்டவர்கள் இல்லை.
அவர்களுக்கு கடவுள் என்பதெல்லாம் கற்பிக்கப்படட ஒன்று.

அதனால் அவர்க்ளை வைத்து நாம் ஆத்திகம் நாத்திகம் பற்றி பேச வேண்டாம்.
//

ரொம்ப அப்பாவியாகவே இருக்கிங்க, பெண் குழந்தைகளை கொலை செய்பவர்கள் இருப்பது போலவே பெண் குழந்தை பெரியவள் ஆனதும் அவளை மருமகளாக்கிக் கொள்ள வியாபரம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். இரண்டில் எது தாழ்ந்தது ? தனது வாரிசுகளை சுமக்கப் போறவளின் பெற்றோர்களிடம் பெற்றுக் கொள்ளும் பணம் யாருடைய உழைப்பு ? இவர்களுக்கெல்லாம் கடவுளைப் பற்றி ஒன்றுமே தெரியாதா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//வெண்பூ 2:44 PM, October 16, 2008
//
பழகிவிட்டத்தால் கற்ப்பம் என்று எழுதிவிட்டீர்கள்
//

என் தமிழ் அறிவு சரியென்றால் "ற்" வந்தால் அதை அடுத்து ஒற்று வரக்கூடாது. உதாரணம் முயற்சி (முயற்ச்சி அல்ல) . சரியா? அதனால் இதை எழுதும்போது தவறான "ற்" போட்டாலும், "கற்பம்" என்றுதான் வரவேண்டும்.

(ஆஹா.. வெண்பூ.. எங்கியோ போய்டடா நீயி)
//

வெண்பூ,
நானும் அப்படித்தான் எழுதி இருந்தேன். எனக்காகவும் சொல்லி இருக்கார்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Sridhar Narayanan said...
நன்றாக எழுதியிருக்கிறீர்கள்.

//

Sridhar Narayanan,

பாராட்டுக்கும் மற்ற கருத்துக்களுக்கும் மிக்க நன்றி !

பரிசல்காரன் சொன்னது…

மிகச் சிறந்த பதிவு!

கிருஷ்ணா சொன்னது…

//
பெண் குழந்தைகளை கொலை செய்பவர்கள் இருப்பது போலவே பெண் குழந்தை பெரியவள் ஆனதும் அவளை மருமகளாக்கிக் கொள்ள வியாபரம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். இரண்டில் எது தாழ்ந்தது ? தனது வாரிசுகளை சுமக்கப் போறவளின் பெற்றோர்களிடம் பெற்றுக் கொள்ளும் பணம் யாருடைய உழைப்பு ? இவர்களுக்கெல்லாம் கடவுளைப் பற்றி ஒன்றுமே தெரியாதா //


அருமையன பதில்/கேள்வி.

கோவி.கண்ணன் சொன்னது…

//பரிசல்காரன் 4:36 PM, October 16, 2008
மிகச் சிறந்த பதிவு!
//

பரிசல்,

மி(க்)க நன்றி !

பெயரில்லா சொன்னது…

உணர்ந்து எழுதிஉள்ளீர்கள் ...பிரசவம் ஒரு பெண்ணிற்கு மறு பிறவி என்பதும் அவர்கள் தியாக சுடர்கள் என்பதும் உண்மை.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கர்ப்பம் என்பதே சரி.வல்லின "ற்"க்குப்பிறகு ஒற்று வராது.இடையின "ர்"ல் ஒர்ரு வரும்.
உம்- அர்ப்பணம்,சமர்ப்பணம்,பார்ப்பணர்,சுடர்க்கொடி இப்படி..ஆகவே கர்ப்பம் என்பதே சரி.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆர்.கே.சதீஷ்குமார் 9:08 PM, October 16, 2008
உணர்ந்து எழுதிஉள்ளீர்கள் ...பிரசவம் ஒரு பெண்ணிற்கு மறு பிறவி என்பதும் அவர்கள் தியாக சுடர்கள் என்பதும் உண்மை.
//

ஆர்.கே.சதீஷ்குமார்,

பாராட்டுக்கு நன்றி, ஜோதிடம் பற்றி இங்கு சொல்லி இருப்பதைப் பார்த்து டென்சன் அடையமலும் இருக்கிறீர்கள். வலைப்பதிவில் காலம் தள்ளும் பக்குவம் வந்துவிட்டதா ? வாழ்த்துக்கள் !

மணிகண்டன் சொன்னது…

**************** பெண் குழந்தைகளை கொலை செய்பவர்கள் இருப்பது போலவே பெண் குழந்தை பெரியவள் ஆனதும் அவளை மருமகளாக்கிக் கொள்ள வியாபரம் பேசுபவர்களும் இருக்கிறார்கள். இரண்டில் எது தாழ்ந்தது ? **********

நிச்சயமா கொலை செய்வது தான் ! இதுல என்ன கேள்வி ?

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

பதிவில் அருமையானப் பகிர்வு!

சரத்குமார் சாமி புள்ளையாண்டான் கையில தமிழ் நாடு போவுதா? அது ராதிகா வாழ்க தமிழகம்! பாவம் காமராஜர்!! எத்தனை பேருதான் அவரை வச்சு அரசிலை ஓட்டுவாங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

//மணிகண்டன் said...
நிச்சயமா கொலை செய்வது தான் ! இதுல என்ன கேள்வி ?
//

மணிகண்டன்,
ஸ்டவ் வெடித்து இறக்கிற பெண்களைப் பற்றிக் கேள்வி பட்டதே இல்லையா ? அவர்களெல்லாம் தற்கொலை செய்து கொண்டார்களா ?

Sridhar V சொன்னது…

கர்பிணி = கர்ப்பிணி

கற்பம் = கர்ப்பம்

ஹ்ம்ம்.. விடறதா இல்ல உங்களை. :-)

ஆனா இநேரத்துக்குள்ள நீங்க ஒரு 5-6 போஸ்ட் போட்டுட்டுப் போயிருப்பீங்கன்னு நினைக்கிறேன்... :-)

புருனோ Bruno சொன்னது…

//வெளிநாட்டில் இருக்கும் ஆண்களுக்கு மகப்பேறு நேரத்தில் மனைவியுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும், நானும் அவ்வாறு எனது மகள் பிறக்கும் போது அருகில் இருந்திருக்கிறேன்.//
தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் கூட இந்த திட்டம் தற்பொழுது வர இருக்கிறது

புருனோ Bruno சொன்னது…

//அது குணமாக ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். எல்லா நாட்டிலும் 50 விழுக்காட்டிற்கு பெண்களுக்கு மகப்பேறின் போது பிறப்புறுப்பில் கத்தரிவெட்டு விழுவது நடைமுறைதான்//

பார்க்க http://en.wikipedia.org/wiki/Episiotomy

புருனோ Bruno சொன்னது…

//முதல் குழந்தையின் போது வளைகாப்பு நிகழ்வு பெண்களுக்கு மிகவும் தேவையானது, தாய்வீட்டில் இருந்து ஒரு தாயின் பராமரிப்பில் செய்யப்படுவதையெல்லாம் ஒரு கணவரால் அவ்வளவு சிறப்ப்பாக செய்துவிட முடியாது.//

சரி தான் :)

புருனோ Bruno சொன்னது…

//நிஜமாகவே பிரசவ வேதனையின் ஒப்பீட்டில் பெண்களுக்கும் சுகம். //

:) :) !!!

புருனோ Bruno சொன்னது…

//இதற்கான பதிலை மருத்துவர்களும் பெண்களும் தான் சொல்ல வேண்டும். எனக்கு தெரிந்து யாரும், எந்த கட்டாயமும் இன்றி வலிய சென்று சிசேரியன் செய்து கொள்ள விரும்புவதில்லை.//

மறுக்கிறேன் கோவி,

சிசேரியன் தான் வேண்டும் என்று கூறுபவர்களின் (கணவன் / மனைவி) எண்ணிக்கை அதிகரித்து வருவது வேதனை. ஆனால் அதிகரித்து வருகிறது என்பது உண்மை

புருனோ Bruno சொன்னது…

//(ஆஹா.. வெண்பூ.. எங்கியோ போய்டடா நீயி)//

அப்படியே தமிழ் வகுப்பு எடுக்கலாமே

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்