பின்பற்றுபவர்கள்

25 ஆகஸ்ட், 2013

நாமலும் சாமியார் தான் !

இராமகிருஷ்ண பரமகம்சரின் சாமியார் தன்மை பற்றி இராமகிருஷ்ண மடாலயங்களில் ஒரு தகவல் சொல்வதுண்டு, அதாவது அவர் காசுகளை கையினால் தொடுவதில்லையாம், வெற ? காலால் தொடுவாரான்னு கேட்காதிங்க, ஆதாவது ரிசிகள், ஞானிகள் சாமியார்கள் ஆகியோருக்கு பொருளாசைகளோ வேறெந்த ஆசைகளோ அறவே இருக்காதாம், மீறி காசுகளைத் தொட்டால் என்ன ஆகும் ? இராமகிருஷ்ணரின் சீடர் ஒருவர் தனது குருவை சோதிக்க நினைத்தாராம், காசை இவர் கையில் தான் வாங்கமாட்டார், பேசாமல் காசை அவர் தூங்கும் பொழுது தலைக்கு அடியில் (தலையாணை வைச்சிருந்தாரான்னு கேட்காதிங்க) இருக்கும் படி படுக்கை விரிப்புக்கு அடியில் வைக்க, இராமகிருஷ்ணர் படுக்கைக்கு வந்து தலையை சாய்க்க, தலையே வெடித்து விட்டது போல் துடி துடித்தாராம், தன் செய்த (சூழ்ச்சி) சோதனையைச் சொல்லி 'குருவே என்னை மன்னிக்க வேண்டும்' என்று சீடர் சொல்ல, இனிமேல் அவ்வாறு செய்யாதே என்று இராமகிருஷ்ணர் சீடரை மன்னித்ததாகவும், சீடர் தெரியாமல் தவறு இழைத்து விட்டோடும் என்று மிகவும் மனம் வருந்தியதாகவும் ஒரு குட்டிக் கதையாக இராமகிருஷ்ணர் மடத்தினர் சொல்வதுண்டு.

காசு என்பது ஒரு உலோகம், அவை பண்டமாற்றுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தவிர்த்து அந்தந்த உலோகத்தின் அடிப்படை மதிப்பு சொற்பமே, செப்புகாசு, பித்தளை காசு ஆகிய செய்யப்படும் உலோகத்தின் மதிப்பைவிட அதில் பொறிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பு எப்போதும் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு உலோகம் தலைக்கு அடியில் இருந்ததற்காக இராமகிருஷ்ணர் பதறினார், துடித்தார், துன்பம் அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லை மீறிய கட்டுக்கதை என்பது தவிர்த்து அவற்றில் உண்மை எதுவும் இருப்பது போல் தெரியவில்லை, செம்புகளும் பித்தளைகளும் பாத்திரங்களாக பழங்கிய காலத்தில் அவை காசுகளாகவும் அச்சடிக்கப்பட்டிருக்கும், எனவே குடிக்க செப்புக் குவளையை கையில் எடுக்கும் பொழுது ஏற்படாத அதிர்வலைகள் செம்பு காசால் ஏற்பட்டது என்பதை நான் நம்புவதில்லை, இருந்தாலும் அந்தக் கதையை சாமியார்கள் காசு பணத்தின் மீது பற்றுதல் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதற்காக சொல்லப்படும் சற்று மிகைப்படுத்தப்பட்ட கதை என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.

நாமலும் கொஞ்ச கொஞ்சமாக சாமியார் ஆகிக் கொண்டு இருக்கிறோம், அச்சடித்த பணமும், காசுகளும் நமது பணப் பைகளின் செலவு இருப்பாக திணித்து வைத்துக் கொள்ளும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது, எல்லாவற்றிற்குமே அட்டையின் (Card) வந்துவிட்டது, ரொக்க அட்டை (debit) மற்றும் கடனட்டைகளை (credit) கையில் வைத்திருந்தாலே போதும், எங்கும் சென்று வந்துவிடலாம், பணம் களவு போகும் பயம் இருக்காது. பொட்டிக்கடைகளில் சிறிய அளவில் எதுவும் வாங்குவதற்கான தேவை என்பது தவிர்த்து பாக்கெட்டில் பணத்தை திணித்துக் கொண்டு வைத்திருக்கும் வழக்கம் படிப்படியாக குறைகிறது. முன்பெல்லாம் வாரத்திற்கு 50 வெள்ளிகளை மேல் பாக்கெட்டில் வைத்திருக்கும் நிலைமை தற்பொழுது 20 வெள்ளிகளாக சுருங்கியுள்ளது, காரணம் எல்லாவித கட்டணங்களுமே அட்டைகளால் நிறைவேற தானியங்கி பணமெடுக்கும் இயந்திரத்திற்கு சென்று வரிசையில் நிற்பதுவும் குறைந்துள்ளது.

பேரங்காடி, தொடர்வண்டி நிலையம், பெரிய / நடுத்தர உணவகங்கள், பேருந்துகள் ஆகியவற்றிற்கும் அட்டைகளே பயன்படுவதால், அவற்றில் போதுமான தொகையை நிரப்பி வைத்துவிட்டால் வாரம், திங்கள் முழுவதும் அவற்றை பயன்படுத்த முடிகிறது. சில்லரைகளை (பத்துவெள்ளி, 20 வெள்ளி) கடனாக கேட்பவர்களுக்கும் கையில் போதிய இருப்பு இல்லை என்று கைவிரிக்க முடிகிறது (அவங்க வங்கி எண்ணுக்கு மாற்றிவிடச் சொல்லி கேட்காதவரையில் எளிதாக சமாளிக்கலாம்),
பிச்சைகாரர்களைப் பார்த்தால் பாக்கெட்டை தடவிவிட்டு நம்மிடம் சில்லரை எதுவுமே இல்லை என்று நடையைக் கட்டலாம். பக்கெட் அடிப்பவனுக்கும் ஏமாற்றம் (சிங்கையில் எனக்கு அந்த அனுபவம் நேர்ந்ததில்லை, இங்கே பாக்கெட் துண்டிப்பவர்கள் இல்லை என்னும் அளவுக்கு கடுமையான சட்டம், மாட்டினால் ஆயுதம் வைத்து கொள்ளை என்று பிடித்தவுடன் பிரம்படி கொடுத்துவிடுவார்கள், அது தவிர மிகவும் நெருக்கமான நேர பயணங்களில் அடுத்தவர் மூச்சு மேல் படும் அளவுக்கு அருகே நிற்பவரும் குறைவு), அப்படியே பாக்கெட் அடித்தாலும் 20 வெள்ளிக்கு நிரப்பிய எம்ஆர்டி அட்டை போய்விடும், வைத்திருந்த 20 வெள்ளிக்கும் குறைவான பணம் போய்விடும், மற்றபடி வங்கி அட்டைகளை உடனேயே காலாவதி செய்துவிட முடியும், பெரிய அளவில் மன உளைச்சல் இல்லை என்றாலும் எல்லாவற்றையும் புதிதாக வாங்க இரண்டு மூன்று நாள் ஆகும், வங்கி அட்டைகளை உடனடியாக மாற்றி வாங்கிக் கொள்ள முடியும்.


தற்பொழுது அட்டைகளுக்கு மறை எண்களை அடிக்க வேண்டி இருக்கிறது, அதிலும் மாற்றமாக Visa Pay Wave  விசிறிவிட்டு சென்றுவிடலாம், மறை எண்ணும் கையெழுத்தும் தேவை இல்லை, அட்டை வேறு யாரிடமும் மாட்டினால் ? ஒவ்வொரு பயன்பாட்டின் பொழுதும் செல்பேசிக்கு குறும் தகவல் வந்துவிடும், எனவே வங்கிக்கு தெரிவித்து உடனடியாக கண்டுபிடித்து அட்டையை முடக்க முடியும், உடனடியாக செயல்பட்டு எந்த கடையில் எந்த நபர் அந்த அட்டையை பயன்படுத்தி இருக்க முடியும் என்பதை கேமரா கண்காணிப்பு அந்த நபர் வெளி ஏறும் முன்பு கண்டுபிடித்துவிடுவார்கள்.

அட்டைகளெல்லாம் எதற்கு கைரேகை வைத்தால் போதும்  வங்கியில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் வாங்கிவிடலாம், மணிபர்சே தேவை இல்லை என்னும் காலம் கூட 20 - 30 ஆண்டுகளில் ஏற்பட்டுவிடும்.

கேஷ்லெஸ் (தாள் பணமற்ற) பரிமாற்றத்தினால் நல்ல பயனுண்டு, அரசுகள் பெரிய அளவில் பணத்தை அச்சடிக்கத் தேவை இல்லை, வீட்டில் பெரிய அளவில் பணத்தை வைத்திருக்கத் தேவை இல்லை, என்ன ஒன்று ? ஊதிய பணமோ, வியாபார ஈட்டலோ வங்கிக்கு வரும், வங்கியில் இருந்தே போகும் நாம் அவற்றை எண்ணால் பார்க்க முடியும் கண்ணால் பார்க்க முடியாது. அப்பறம் என்ன காசு பணத்தை கையினால் தொடவில்லை என்றால் நாமும் சாமியார்கள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் தானே ?

இதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் பொழுது எனக்கு தெரிந்த நண்பர் அவருக்கு தெரிந்த (சென்னை) போக்குவரத்து காவலர் ஒருவர் பணத்தை கையால் தொடுவதில்லை என்றார், அவ்வளவு நேர்மையான பண்பாளரா ? என்று கேட்டேன், மறுத்த நண்பர் இல்லை இல்லை அவர் எதிரே இருக்கும் பெட்டிக்கடைக்காரரை வாங்கி வைத்துக்கச் சொல்லி அவர் மூலம் தனது வங்கியில் போடச் சொல்லிவிடுவாராம். கடைசி பத்தி தென்கச்சி கோ சுவாமிநாதனை நினைத்து எழுதினேன், அப்படித்தான் கொஞ்சம் கடியான நகைச்சுவையுடன் இன்று ஒரு தகவலை அவர் முடிப்பார்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்