பின்பற்றுபவர்கள்

உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உளவியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

22 ஏப்ரல், 2010

பொறுமை என்பது இளிச்சவாய்த்தனம் !?

எந்த ஒரு இயல்பான நிகழ்வும் பெரிதாக (பெரிய விசயமாக) மாறுவதற்கு நம் எண்ணங்கள் தான் ஏதுவாக (காரணமாக) அமைகிறது என்பது என் நம்பிக்கை. சின்ன தவறுகளைக் கூட பெரிய கேடுகளாக மாற்றிக் கொள்வது நம் மனம் தான். விட்டுக் கொடுத்தல் என்னும் ஒரு எண்ணம் அந்த நேரத்தில் ஏற்படாதால் நிகழ்வுகள் (சம்பவம்) எதிர்பாரா நிகழ்வுகளாக (அசம்பாவிதமாக) மாறிவிடும். சில வேளைகளில் இவை நன்கு புரிந்தாலும் கூட நம்முடைய உயர்வு மனப்பாண்மை விரைவாக வேலை செய்து எல்லாவற்றையும் கெடுத்துவிடும்.

பேரங்காடி ஒன்றின் பின் ஒன்றாக பணம் செலுத்தி பொருள்கள் பெற்றுக் கொள்ள அமைக்கப்பட்ட இடத்தில் (Payment Counters) முன்பு நின்றவர் முதலில் இருக்கும் இடத்தில் பணம் செலுத்தி பெற்றுக் கொண்டு மூட்டைக் கட்டுகிறார் என்பதாக நினைத்து நான் அவரைத் தாண்டி அடுத்த இடத்தில் பணம் செலுத்தப் போனேன். பிறகு தான் தெரிந்தது எனக்கு முன்னால் இருந்தவரும் வரிசையில் இருந்தவர் தான் என்பது. ' மன்னிக்கவும் நீங்கள் பொருள் வாங்கிவிட்டீர்கள் என்பதாக நினைத்து முன்னே வந்துவிட்டேன், நீங்க முன்னால் போங்க' என்றேன், நான் கையில் வைத்திருந்தது ஒரே ஒரு பொருள் தான் என்பதாலோ அல்லது அவரின் இயல்பான குணத்தினாலோ சிரித்தபடி 'பரவாயில்லை......நீங்க வாங்கிட்டு போங்க' என்றார், பதிலுக்கு திரும்பவம் நானும் சிரித்துக் கொண்டே 'தவறு நிகழ்ந்துவிட்டது நீங்க போங்க' என்று சொல்ல அவரும் மறுபடியும் சிரித்து கொண்டு 'பரவாயில்லை' என்றார். நான் வாங்கிவிட்டு வந்துவிட்டேன்.

இந்த நிகழ்வில் நான் செய்தது அறியா பிழை, ஆனால் அதை அவர் நான் வேண்டுமென்றே செய்வதாக நினைத்திருந்தால் என்னை கடுப்படித்திருப்பார். நானும் பதிலுக்கு நீங்க ஏன் ஒழுங்காக வரிசையில் நிற்கவில்லை, நீங்க தான் என்னை குழப்பினீர்கள்... ஒண்ணே ஒண்ணு தானே வாங்கப் போகிறேன்' என்று பதிலுக்கு கடித்திருப்பேன், பேச்சு வார்த்தை வளர்ந்து கடையை விட்டு வெளி ஏறும் போது மன உளைச்சலோடு சென்றிருப்பேன், அவரும் அப்படியே சென்றிருப்பார். மற்றொருவருக்கு நம் செயலில் உடன்பாடு இன்மை என்று வந்துவிட்டாலே, நம் தரப்பு தவறு என்றாலும் கூட ஒப்புக் கொள்வது கடினமாக போய்விடும்.

உலகத்தில் 600+ கோடியினர் இருந்தாலும் அதில் நமக்கு தெரிந்தவர் ஒரு 1000 (0.00000016 %) பேர் என்று வைத்துக் கொண்டாலும் கூட நாம் பழக, பேச இவர்கள் மட்டும், இவர்கள் மட்டுமே தான் நமக்கு கிடைத்திருக்கிறார்கள். அதிலும் கூட நமக்கு நெருக்கமானவர் நூறோ இருநூறோ தான். இந்த 1000 தவிர மற்றவர்களை நாம் சந்திக்க நேரிட்டால் கூட அந்த சந்திப்பு எதிர்பாராவிதமானது மற்றும் ஒரே ஒரு முறைதான், அதன் பிறகு நம் வாழ்க்கையில் அவர்கள் வரப் போவதே இல்லை, ஆனால் அம்முகம் தெரியாதவர்களிடம் கூட கடுப்பு அடித்து காயப்படுத்திவிட்டு பின்னால் வருந்தினால் நாம் யாரிடம் சென்று மன்னிப்பு கேட்க முடியும் ? அதனால் பயன் ஏதும் இல்லை. நன்கு தெரிந்தவர்களிடையே கூட தவறுக்கான மன்னிப்பு என்பது அவரவர் வாழ்ந்து கொண்டு இருக்கும் வரையில் மட்டுமே. நமக்கு தெரிந்த அந்த 1000 பேர்களில் சிலரிடத்தில் அன்பு செலுத்த முயற்சிக்காமல் கசப்பை தொடர்ந்தால், நாமும் ஒரு மனிதனாக பிறந்ததற்காக உலக மக்களிடத்தில் அன்பு செலுத்துகிறோம் என்று எண்ணுவது வெறும் எண்ணம் தான் செயலில் ஒன்றும் கிடையாது.

பொறுமை என்பதை இளிச்சவாய்த்தனம் என்பதாக பலர் கற்பிதம் செய்தும் கொள்கிறார்கள். 'நெருப்பை நெருப்பினாலோ, வெறுப்பை வெறுப்பினாலோ நீக்க முடியாதென்பது' புத்தனின் வாக்கு. எந்த ஒரு நிகழ்விற்கும் நாம் காரணம் ஆகவிட்டாலும் அதை பெரிது படுத்தாமல் கடந்து செல்வது நம் எண்ணத்தில் தான் உள்ளது.

8 பிப்ரவரி, 2010

ஏதுமறியாதவர்கள் முக்தி பெற (Mukthi for Dummies) !

பிறவி பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்

மு.வ : இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது
கருணாநிதி : வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்
சாலமன் பாப்பையா : கடவுளின் திருவடிகளைச் சேர்ந்தவர் பிறவியாகிய பெருங்கடலை நீந்திக் கடப்பர்; மற்றவர் நீந்தவும் மாட்டார்.

*****
இங்கு திருவள்ளுவர் சொல்லுவது பிறவியா பிறவிகளா ? சரியாகத் தெரியவில்லை. இருந்தாலும் மூவரும் பிறவி என்னும் ஒருமைக்கு விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், முவ பற்றி சரியாகத் தெரியவில்லை, முக பிறவிகள் மீது நம்பிக்கையற்றவர், சாலமன் பாப்பையா கிறித்துவர் என்பதால் அவரும் பிறவிகள் மீது நம்பிக்கையற்றவர். மூவருமே பிறவி என்பதற்கு வாழ்க்கை என்பதாக விளக்கம் சொல்லி இருக்கிறார்கள், இதில் கருணாநிதி தவிர்த்து இருவரும் இறைவன் என்பதற்கு நேரடி பொருளைச் சொல்லி இருக்கிறார்கள், கருணாநிதி இறைவன் என்பதற்கு தலைவன் என்பதாக அவருடைய பொருளைச் சொல்லி இருக்கிறார்.

இதே குறளுக்கு சைவ சித்தாந்தம் மற்றும் ஆத்திகவாதிகள் பிறவி என்பதை பல்வேறு பிறவி அல்லது பிறவிகள் (மறு பிறப்புகள்) என்பதாக சொல்லி பெரும் துன்பத்தைத் தரும் இவ்வுலக வாழ்வை விட்டு நீங்க வேண்டுமெனில் பிறவாத் தன்மையைத் தரும் இறைவனின் திருவடிகளைப் பற்ற வேண்டும் என்பதாக விளக்குவர்.

திருவள்ளுவர் எந்த சமயத்தைச் சேர்ந்தவர் என்கிற ஆராய்ச்சியில் அவர் சமணர், பெளத்தர், சைவர், வைணவர் மற்றும் கிறித்துவர் என்பது போல் சொல்லும் பல்வேறு ஆராய்ச்சிகள் செய்து திருவள்ளுவர் குறிப்பிட்ட சமயத்தைச் சார்ந்தவராக சொல்ல முனைகின்றனர். இஸ்லாமியர்கள் மட்டுமே இன்னும் அது போல் செய்யவில்லை, திருவள்ளுவர் கிறித்துவர் என்றாலே அவர் இஸ்லாமியர் என்பதாகும், எப்படியெனில் கிறிஸ்து சமயம் என்று ஒன்று கிடையாது ஆப்ரகாமிய மதங்கள் அனைத்தும் இஸ்லாம் என்பது கிறித்துவர்கள் ஏற்றுக் கொள்ளாவிடினும் அது இஸ்லாமியர்களின் நம்பிக்கை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்தவர் எந்த மதத்தைச் சேர்ந்தவர் என்று ஆராய்ந்து அவர் இந்த மதத்துக்காரர் என்று சொல்ல முயற்சிக்கும் கொடுமை திருவள்ளுவருக்குத் தான் நடந்திருக்கிறது, இப்படி ஆகும் என்று தெரிந்திருந்தால் அவர் தின்றுவிட்டு தூங்கி இருப்பார். :) திருக்குறளில் இடம் பெறும் சில சொற்கள் குறிப்பாக எண் குணத்தான், மலர்மிசை ஏகினான், பகவன் என்ற சொற்கள் சமணம் மற்றும் பெளத்த மதத்தைச் சார்ந்த சொற்கள் என்பர், எனவே திருவள்ளுவர் இந்த இரு மதங்களில் ஒன்றைச் சார்ந்தவராக இருப்பதற்கான வாய்ப்புகள் மிகுதி. மற்றபடி திருவள்ளுவர் சைவரா, வைணவரா, கிறித்துவாரா என்பதற்கு சான்றுகள் குறைவு மற்றும் அவர் காலங்களில் இவை மூன்றும் மதங்களாக/சமயங்களாக அறியப்படாதவை.

சைவம், வைணவத்தின் கூறுகள் பழந்தமிழர் மற்றும் பார்பனர்களின் வேத வழிபாடுகளின் கலவைகளால் ஏற்பட்ட பின்னாளில் சமயங்களாக வளர்ந்தவை, ஆதிசங்கரரை இவ்வாறு சைவம், வைணவம் என்று அடைப்பார்களா ? ஆனாலும் திருவள்ளுவரை ஏன் முயற்சிக்கிறார்கள் என்பது புதிராகவே இருக்கிறது, அவ்வாறு முயற்சிப்பது அவரை சிறுமைப் படுத்தும் முயற்சியாகும், நான் திருவள்ளுவரை சமணர் பெளத்தர் என்று நினைக்கவில்லை, இருந்தாலும் அவ்வாறு இருக்க கூறுகள் மிகுதி என்பதை அறிஞர்கள் காட்டும் போது ஒப்புக் கொள்கிறேன்.

*****

சொல்ல வந்தது முக்தி பற்றி அல்லவா ? முக்தி என்பது பிறவி அற்ற நிலையாம். அப்படி என்றால் ஜீவன் முக்தி என்கிறார்களே அது என்ன என்று கேட்டால் ஒருவரும் சரியாகச் சொல்வதில்லை. ஜீவன் என்பதற்கு வாழ்க்கை என்று பொருள், இல்லாவிடில் எல் ஐ சி பாலிசிகளில் 'ஜீவன்' என்கிற சொல் இடம் பெற்றிருக்காது :) ஜீவன், ஜீவ என்பதன் பொருள் உயிரோட்டமுள்ள என்பதாக வடமொழியில் வழங்கப்படும். ஜீவா என்றால் ஜீவித்திருப்பவர், அதாவது வாழ்பவர் என்ற பொருள். ஜீவன் முக்தி என்றால் ? வாழும் நிலையிலேயே முக்தி பெற்றவராம். முக்தி என்பது 'தன்னை' அழிப்பது, பிறவா நிலை என்று விளக்கம் சொல்பவர்கள், ஜீவன் முக்திக்கான விளக்கத்தில் சறுக்குகிறார்கள். இதுவே இப்படி இருக்கையில், முக்திவேண்டுவோர் நாட வேண்டிய இடம் ? கேட்பதற்கு வானொலி விளம்பரம் போன்று இருந்தாலும் இப்போதெல்லாம் ஆத்திகம், உயர்தர ஆன்மிகம் ( உயர்தர சைவ உணவகம் போல்) முக்தி என்பது பற்றி பரவலாகப் பேசப்படுகிறது, பிறவா நிலையை அடைவதே வாழ்வின் உயர்ந்த நோக்க(லட்சிய)மாம். இருந்துவிட்டு போகட்டுமே. என்று நினைக்கும் படி அது போன்ற விளம்பரங்கள் இல்லை,

இந்துத்துவம் சார்ந்த இணைய தளம் ஒன்றில் முக்தி பற்றி படிக்க நேர்ந்தது, மூன்று வழியில் முக்தி அடையலாம் என்று சொல்லி இருக்கிறார்கள்,
சிவனையே பரப்பிரம்மமாக வணங்குபவர்களுக்கு முக்தி கிட்டுமாம், நாராயணனை முழுமுதல் கடவுளாகவும், பரப்பிரம்மமாகவும் நினைத்து வழிபடுபவர்களுக்கு முக்தியாம், இவர்களின் வழியாக முக்தி பெற விரும்புபவர்கள் இவர்களைத் தவிர வேறு இறைவனை நினைக்கக் கூடாது, அப்படிச் சொல்வதால் பிற தெய்வங்களை குறைகூறலாம் என்ற பொருள் இல்லையாம். மூன்றாவது சொன்னது தான் சிறப்பே, கிடைப்பதற்கரிய பிராமணப் பிறவி அடைந்து அதன் வழி ஒழுகுவது முக்தியாம், 'பிராமணப் பிறவி பெற்று' என்று நேரடியாக எழுதினால் கண்டனங்கள் வரும் என்பதைத் தவிர்க்க பிரம்ம தேஜஸ் (பிரமண உடல்) பெற்று முக்தி அடைவானாம்.

கிறித்துவம், சமணம், பவுத்தம், இஸ்லாம் போன்ற புறச் சமயங்களுக்கு முக்தி கிடைக்காதாம், இதில் பிறந்தவர்கள் வேதம் போற்றும் இந்து மதத்தில் எப்போதாவது மறு பிறவி எடுத்தால் முக்தியை நோக்கி முதல் அடியை எடுத்துவைப்பார்களாம்.

ஐயோடா சாமி, தேவ நாதன் (அவர்கள் சொல்லும்) பிரமணாகத்தான் பிறந்தான், இந்த பிறவியில் தப்பு செஞ்சுட்டான், மீண்டும் மீண்டும் பிரமணாகவே பிறந்து முக்தி அடைவானா ? அல்லது கிடைப்பதற்கரிய பிரமணப் பிறவியில் அவன் தப்பே செய்திருந்தாலும் மனு சூத்திரங்களின் மெய்வாக்கின் படி அவை தப்பாக கருதப்படாது அவனுக்கு முக்தி கிடைக்குமா தெரியவில்லை.

முக்தியை நாட விரும்புவரா நீங்கள் ?
மூன்றே வழி உண்டு,

1. சிவனை துதிப்பது
2. நாராயணனை நமஸ்கரிப்பது
3. இறுதி பிறவியான பிரமணாக பிறவி எடுக்க வேண்டிக் கொள்வது.

முக்தியை மூன்று ப்ளாட் போட்ட ரியல் எஸ்டேட் விற்பனை போல் இருக்கிறதா ?

செத்தவன் திரும்ப பிறந்தானா ? முக்தி அடைந்தவன் மீண்டும் பிறக்கவே இல்லையா ? இதற்கெல்லாம் எந்த ஒரு சான்றுகளும் கிடையாது. நம்பிக்கையின் பேரில் தான் விற்பனைகள்.

இதுக்குமேல முக்தி வேண்டும், அடைந்தே தீருவேன் என்று முக்தி மேல் பற்று கொண்டோர் யாராவது உண்டா ? முக்தி விற்பனை மட்டுமல்ல, நிரந்தர சொர்கம் கிடைக்கும் வாருங்கள் என்று கூவும் மதவியாபரங்கள் கூட இப்படித்தான். இவர்களின் விளக்கங்கள் யாவும் மிகவும் தட்டையானது, குறுகியதும், கற்பனையனாதும் பொது அறிவுக்கு ஏற்றவையல்லாததும் ஆகும்.

*****

என்னைக் கேட்டால் 'அறியும்' நிலை தரும் பிறவி எதையும் அறியா நிலை என்னும் முக்தி (எனும் கற்பனை)யைவிட மேலானது. அப்படி ஒன்று இருந்தாலும் கூட அதைப் பிறவியின் வழியாகத்தானே அறிந்து கொள்ள முடியும். இருந்த இடமும் , ஏற்றிய ஏணியும் துன்பம், ஏறிய இடம் தான் உயர்வு என்பதான வாதம் எந்த விதத்தில் சிறந்தது என்று தெரியவில்லை. கருப்பை துன்பம், வாழ்க்கை இனிமை என்று சொன்னால் அது ஞாயமா ? கருப்பை இல்லை என்றால் இருப்பே இல்லே. அது போல் தான் வாழ்க்கை நரகம், துன்பம், பிறவா நிலையே மேலானது என்கிற கூற்றும்.

நம்மால் சொர்கமாக்கக் கூடிய வாழும் பூமியை நரகமாக்கிவிட்டு இல்லாத சொர்கத்துக்கு எண்ணற்ற புனைவுகள். மனிதன் கற்பனைக் கோட்டையே இது போன்ற சொர்க்கம், முக்தி பற்றிய கட்டுமானங்கள். இந்த கோட்டைகள் உடையாது, வெறும் உளவியலுக்காக தமக்கு தாமே எழுப்பிக் கொள்வது, இந்த கனவுக் கோட்டைகள் உடைந்தாலும் நட்டம் யாருக்கும் கிடையாது. இருந்தாலும், வாழும் உலகை இன்பமயமாக்க ஏதாவது செய்துவிட்டு கற்பனைச் சொர்கம், முக்தி பற்றிப் பேசினால் ஏற்றுக் கொள்ளலாம்.

23 நவம்பர், 2009

புனித குற்றங்கள் (Sacred Crime) !

"தவறிழைத்தாலும் அரசன் மன்னிப்பு கேட்பது என்பது அரசனுக்கே இழுக்கு" - இது வெள்ளைக்காரர்களின் பண்பாட்டுக் கூறு. Man in the iron mask என்கிற படம் பார்த்தேன், அதில் இளவரசன் தவறுதலாக ஒரு கண்ணாடி கோப்பையை உடைத்துவிட்டு 'Sorry' சொல்ல, 'A king cannot ask sorry' என்று அவனுக்கு பயிற்சி கொடுப்பவர் அறிவுரை சொல்லுவார். முதலாளிகள், பணக்காரவர்கம், செல்வாக்குப் படைத்தவர்கள் தவறு செய்வது இயல்பு என்பதே அதன் பொருள். அடிமைசாசனத்தின், ஆளுமைகளின் அனைத்து கயவாளித்தனங்களும் அதில் இருந்தே வளர்ச்சி பெருகின்றன. தவறு செய்தவன் தன் னளவில் மன்னனே, மன்னனின் மகனே ஆனாலும் அவனுக்கும் தண்டனை உண்டு என்பதே நமது கோட்பாடு. 'நானே கள்வன்' கண்ணகிக் கதையின் முடிவு கூட இப்படியாகத்தான் அமைந்திருந்தது. நீதி என்ற சொல்லை இந்தியர்கள் பயன்படுத்துவதற்கும், பிறர் பயன்படுத்துவதற்கும் பெரிய வேறுபாடு உண்டு. இருந்தாலும் பெரிதாக பீற்றிக் கொள்ள ஒன்றும் இல்லை என்பது போலவே பார்பனுக்கு ஒரு நீதி.....பறையனுக்கு மறு(!) நீதி என்பதாக சாதிய வருணாசிரம் கோட்பாடுகள் நாக்கை நீட்டி பழிப்பு காட்டுவதையும் நாம் மறந்துவிடலாகாது.

அரசனோ, தலைவனோ குற்றம் செய்வது பற்றிய பெரிய கருத்துகள் விவாதம் சுயநலம், பொதுநலம் என்ற நோக்கில் சொல்லப்படுவது அவரவர் இன வாழ்வியல் முறை என்றாலும், அனைத்தையும் அறிந்தவர்கள், அனைவருக்கும் பொதுவானவர்கள் என்று சொல்லும் இறை பணியாளர்கள், சாமியார்கள் செய்யும் குற்றங்களுக்கும் அவ்வித அளவீடுகள் பொருந்துமா ? காமம் அல்லது பாலியல் மற்றும் உடல்உறவு குறித்து அனைத்து மதங்களுமே கட்டுபாடுகள் கொண்டிருப்பதாகத்தான் அறிகிறோம். விலை மாந்தர்கள் பற்றிய கருத்துகள் மதவாதிகளினால் மிகவும் தூற்றப்பட்ட நிலையில் தான் இருக்கிறது. ஒருவரை புனிதராகக் காட்ட அவர் காமத்தை துறந்தவர் அல்லது காமத்தில் கட்டுபாடு மிக்கவர் என்பதாகச் காட்டுகிறார்கள்.

பொதுவாக மதத்தின் பெயரால் செய்யப்படும் குற்றங்கள் வெளியே தெரியாமல் அமுக்கப்படும் அல்லது பிற மதத்தினரால் மிகுதியாகப் பேசப்படும், அம்மதத்தைச் சேர்ந்தவர்கள் அதைப் பற்றி விவாதிப்பது குறைவு அல்லது கிடையாது, அவ்வாறு விவாதம் செய்வதும் கூட பிற மதத்தினரால் தூற்றப்படுவோம் என்கிற ஐயம் காரணாமாக விவாதிப்பது இல்லை என்பதைவிட மதப்புனிதம் கெட்டுவிடும் என்பதாகவே அதை மறைத்தே பழகுகிறார்கள். வேதங்களில் பெருமையாகப் பேசப்பட்ட இந்திரன் தற்பொழுது எங்கு சென்றான் என்றே தெரிய்வில்லை, தமிழகத்து முருகனின் மாமனார் என்கிற ஒரு பதவிதவிர்த்து இந்திரன் குறித்து தற்காலத்து இந்து சமயவாதிகளால் பேசப்படுவதில்லை, ஏனெனில் இந்திரன் குறித்துக் கூறப்பட்ட கதைகளில் ஒன்று இந்திரன் காமவயப்பட்டு முனிவர் வேடம் கொண்டு முனிவரின் மனைவியை அடைய முயற்சித்தான், அவளும் அறியாமையால் அதற்கு ஒத்துழைத்ததால் கல்லாக மாறும் படி சாபம் பெற்றாள், இந்திரனும் உடெலெங்கும் பெண் குறிகள் தோன்றக்கடவது என்று சாபம் பெற்றான் என்பதே அந்தக் கதை அந்தக் கதையின் தொடர்ச்சியாக இராமயணத்தில் இராமன் கால்கள் பட்டதும் உயிர்பெற்றாள் என்றும் அவளை இராமன் அன்னையே என்று அழைத்து மகிழ்ந்தான் என்றும் இராமயணக் கதையில் கூறப்பட்டுள்ளது.

அகலிகை (மறு அல்லது மீண்டும்) புனிதம் அடைந்தாளா இல்லையா என்பதைவிட இராமனின் கால் அடிக்கு இருக்கும் புனிதத்துவம் உணர்த்துவதாக அந்தக் கதையின் கட்டமைப்பு இருக்கிறது. பெண்ணாசை மிக்கவன் என்பதாக கதையில் கூறப்பட்டு கதை பரவலாகப் வழங்கிவருவதால் இந்திரன் வணக்கம் வழிபாடுகள் அனைத்தும் புறக்கணிக்கப்பட்டன என்பதாகத்தான் நினைக்கிறேன். மற்றபடி இந்திரன் வணங்கத்தக்கவனா இல்லையா என்கிற புரிதல்களை நான் எழுப்பவில்லை. பக்திமார்க்கத்தில், சமயத்தில் முறையற்ற காமம் என்பதற்கு கொடுக்கப்படும் தண்டனைகள் கடுமையானவை என்பதாகவும் அந்தக் கதைகள் புரிய வைக்கப்படுகின்றன.

இறை தொண்டாற்றுபவர்கள் காம வயப்பட்டார்கள் என்று கூறுவது கூட மதத்திற்கு இழுக்கு என்பதாகவே அனைத்து கதைகளும் கட்டமைக்கப்படுகின்றன. பண்டைய இதிகாச உதாரனங்களைவிட அண்மைய ஆறாம் நூற்றாண்டு கதைகளை குறிப்பாக திருவிளையாடல் புராணம் பெருமையாக பேசும், திருமுறைப் பாடல்கள் பாடியவருமான ஞான சம்பந்தன் திருமணம் முடித்தவுடனேயே அங்கு கலந்துகொண்டவர்களுடன் இறை சோதியில் ஐக்கியம் ஆனதாக கதை சொல்கிறார்கள். ஞானசம்பந்தரை இல்லறவாசியாகக் காட்டவேண்டியதற்கு தேவை அவர் வாழ்வில் முழுமை பெற்றார் என்பதற்கும், அவர் அன்றே சோதியில் ஐக்கியமானார் என்பதை தெய்வீகம் புறக்கணிக்கும் காமத்தை தொடாத, துய்காத புனிதர் அவர் என்று நாம் எடுத்துக் கொள்ள வேண்டும் போல:) இவ்வாறெல்லாம் மறைத்து மறைத்து காமம் என்பது ஆன்மிகத்திற்கு மிகத் தொலைவு என்றெல்லாம் கட்டமைத்துவிட்டு ஒரு சாமியார் காம லீலைகள் புரிகிறார் என்று சொன்னால் நடக்கக் கூடாத இழுக்கு நடந்ததாக கூனிக்குறுகிக் கொள்கிறார்கள், அல்லது அப்படியெல்லாம் நடக்க வாய்ப்பே இல்லை என்று நம்புகிறார்கள். ஸ்வாமிகள் மலம் கழிப்பார்களா ? என்று நினைப்பது கூட அப்படிப் புனிதப்படுத்தப் படுவதால் ஏற்படும் ஒரு ஐயம் தான், சாமியார்கள் மலம் கழிப்பதுடன் அவர்களே தனக்குத்தானே கழுவியும், மலம் கழிப்பவர் கிறித்துவ வெள்ளைக்கார பாதிரிமார்கள் என்றால் அவர்களே அதைத் தாளால் துடைத்தும் கொள்ள வேண்டும், ஏனென்றால் பக்தர்கள் கொடுக்கும் பிரசாதங்கள் வயிற்றுக்குள்ளேயே சமாதி ஆகிவிடாது :)

சாமியார்களின் புனிதம் குறித்து மிகுந்த கட்டுமானம் செய்திருப்பதால் தான் என்னவோ, அவர்கள் தவறு இழைக்கும் போது ஒன்று அதை ஏற்க அடியார்களுக்கு மனம் வருவதில்லை, அல்லது அவர்கள் தவறுகள் மன்னிக்கப்படலாம் என்கிற கருத்தும் வருகிறது. அவன் அங்கு அந்த பதவிக்கு தகுதியற்றவனாகிறான் என்பதை அவனுடைய பதவியில் புனிதம் இருப்பதாக நம்புவர்கள் நினைப்பது குறைவு. ஒரு சாமியார் எவ்வளவுதான் தவறு செய்தாலும் அவை மறைக்கப்படுகிறது அல்லது மறைமுகமாக ஏற்கப்படுகிறது கையும் களவுமாக மாட்டுபவர்கள் மிக எளிமையாக தப்பித்துவிடுகிறார்கள் சிங்கையில் மூன்றாண்டுகளுக்கு முன்பு ஒரு கிறித்துவ பாதிரி பணமோசடி செய்தாதாக கைது செய்யப்பட்டு நூடுல்ஸ் சாப்பிட்டுக் கொண்டு கம்பி எண்ணுகிறார், நேற்று ஒரு புத்தமத சாமியார் பணமோசடியில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். நம் நாட்டு மதத்தலைவர்களுக்கு அரசியல் செல்வாக்கு மிகுதி.

கருவறையில் பல்வேறு பெண்களுடன் உல்லாசமாக இருந்ததாக பிடிபட்ட கோவில் குருக்கள் தேவநா(த்)தன் 'பகவான் என்னை ஏற்கனவே தண்டிச்சிட்டான்' என்று வாக்கு மூலம் கொடுத்திருக்கிறான். இவ்வளவு நாட்கள் தான் பகவானுக்கு அர்சனை செய்வதாகச் சொல்லி பெண்களை ஏமாற்றி வந்தவன், இன்று பகவான் தண்டித்துவிட்டதாகச் சொல்கிறான், இவனை பகவான் தண்டிச்சாரா இல்லையா ? இவனுக்கு எப்படி தெரியும் ? இவனுடன் இரவோடு இரவு பேசி நான் உன்னை தண்டித்துவிட்டேன் என்று சொன்னாரா ? அவன் செய்தது சராசரி மனிதத் தவறே என்றாலும் கூட பல்வேறு தரப்பினரின் நம்பிக்கைக்கு உலை வைத்தவன், இன்னும் 'பகவான்' பெயரைச் சொல்ல எதுவும் இருக்கிறதா ? இருந்தாலும் தொடர்ந்து சொல்லுவான் ஏனென்றால் அவன் செய்தது புனித அர்சனைத் தொழிலாம், அவனுடைய முறையற்ற பாலியல் நடவெடிக்கை மட்டும் 'தெரியாமல் நடந்த தவறுகலாம், அதை கடவுள் மன்னிப்பாராம்'. இவன் சிக்கியது, இவனைப் பற்றிய செய்திகள் இவற்றிற்கு கொடுக்கப்படும் முதன்மைத்துவம் மற்றவையாவும் இவன் ஒரு பெரிய மடத்தின் தலைவராக இருந்தால் வெளியே தெரிந்திருக்கவே தெரிந்திருக்காது, அப்படியே தெரிந்தாலும் அவை நம்பட மாட்டாது.

சாதரண மக்கள் தவறிழைத்துவிட்டால் அது அவர்கள் இழிபிறப்பு, அவர்கள் தவறு செய்யவே பிறந்தவர்கள், மோசமானவர்கள் என்பதும், அதுவே சாமியார்கள், புனிதர்கள் தவறு செய்துவிட்டால் மழுப்பலாக 'நேரம் சரி இல்லை தப்பு நடந்துவிட்டது, கிரக நிலை சரி இல்லை, சேருவார் தோசம்' என்றெல்லாம் பழியை பிறர் மீது சொல்வதும் வாடிக்கை தான்.

புனித குற்றங்களுக்கு மன்னிப்பே கிடையாது என்பதைவிட அவற்றிக்கு தண்டனையே கிடையாது எனெனில் அவைகள் வெளியே தெரியவும் தெரியாது, தெரிந்தாலும், அவை நம்பப்படவே படாது. மனு நீதியாக மறு(த்துவிடும்) நீதியாக இன்னும் புனித குற்றங்கள் தொடரத்தான் செய்கிறது.

15 அக்டோபர், 2009

தன்னிலை மறத்தல் !

விழிப்பு தூக்கம் இவை மாறி மாறி வருவதில் தூக்கம் என்பது ஓய்வுக்கென்றாலும் நல்லதொரு சூழலில் தூங்கும் மகிழ்வே தனிதான். தூக்கம் என்பது தற்காலிகம் என்பதால் தூக்கத்தை விரும்பாதவர் எவரும் இல்லை, விழிப்போமா இல்லையா என்கிற எந்த ஒரு உத்திரவாதமும் இல்லாவிடிலும் தூங்குவதிலும் தூங்கச் சொல்வதிலும் இருக்கும் மகிழ்ச்சியே தனிதான். எந்த ஒரு சலனமும் இல்லாத அமைதியை மனம் விரும்புகிறது என்பதே தூக்கம் வராவிட்டாலும் கூட நாம் தூங்க விரும்புவதைக் குறிக்கிறது. விழிப்பு வாழ்க்கையில் அன்று எதோ ஒரு சாதனை நிகழ்த்தியவர்கள் கூட இந்த மகிழ்ச்சியை கொண்டாட, அந்த உணர்விலேயே இருக்க நாம் தூங்கமலேயே இருப்போம் என்றெல்லாம் நினைப்பதே இல்லை, அதற்கு மாறாக மகிழ்வுடன் உறங்கிப் போவார்கள். சாதனைகள் கொடுக்கும் மன மகிழ்ச்சியைவிட மனம் விரும்புவது நல்லதொரு அமைதியையே என்பதே நாம் உணராமல் தான் இருக்கிறோம். சோம்பல்களினால், அசதிகளினால் வரும் தூக்கங்களைத் தவித்துப் பார்த்தால் சாதனைகள், பிற மகிழ்வுகள் அனைத்தும் தற்காலிகமானவை என்பதை நம் உள்ளுணர்வு உணர்ந்துள்ளதால் அதிலெல்லாம் கிடைக்காத ஒரு மனமகிழ்வு தூக்கத்தில் தான் கிடைக்கிறது என்பதால் நாம் தூக்கத்தை பெரிதும் விரும்புகிறோம்.

மனித மனம் விரும்புவது தெளிந்த நீரோடை போன்ற மன அமைதியே, கூடவே மிதப்பது பறப்பது போன்ற ஒரு உணர்வு இருந்தால் அதை பெரிதும் விரும்பும். அதுபோன்ற தேடலில் சிலர் ஆன்மிகத்தை நாடுகிறார்கள், பலர் மதுவை, பிற போதைகளை நாடுகிறார்கள். தன்னிலை மறப்பதற்கான தீர்வு அல்லது மன உந்துதல் ஆகியவற்றை முன்னிட்ட தேடலாக இறைத்தேடல் அதன் தொடர்பில் ஆன்மிகம், தியானம், யோகம், வழிபாடு, தொழுகை இவையெல்லாம் ஏற்பட்டு இருந்தாலும் அதில் மனதை நிறுத்துவது இயலாத ஒன்று அல்லது உடனடியாக பலன் கிடைக்காது அல்லது பொறுமை அற்றவர்கள் தன்னிலையை மறக்க நாடுவது மதுவகைகள். கடவுள் நம்பிக்கை ஆன்மிக நம்பிக்கையற்றவர்களின் உள்ளுணர்வுகளின் தோடல் கூட தன்னிலை மறப்பதைப் பற்றியதாக இருப்பதால் அதன் தீர்வுக்காக மதுவை நாடுபவர்களும் உள்ளனர். வயது வந்தவர்களின் காமவேட்கையும் கூட உடலின்பம் சார்ந்தது என்றாலும் அதைத்தாண்டிய தன்னிலை மறப்பு அதில் கிடைக்கிறது என்பதால் அதை விரும்பாதவர்க்கள் குறைவு. மதுவோ, தூக்கமோ, காமமோ இவை தன்னிலை மறப்பதற்குக் கிடைக்கும் தற்காலிகத் தேவைகளே, ஆகையால் தான் அவைகள் 'சிற்றின்பமாகச்' சொல்லப்படுகிறது.

என்றைக்காவது விழிப்போம் என்கிற நம்பிக்கை இருந்தால் இறப்புக் கூட பெரும் தூக்கம் என்பதாகவே எடுத்துக் கொண்டு அது பற்றிய பயம் குறைந்து அதை வரவேற்கும் மனது ஏற்பட்டிருக்கும், ஆனால் இறப்பு என்பது விழிக்காத தூக்கம் என்பதால் அதைத் தவிர்த்து புற மகிழ்ச்சியாக நாம் நினைத்திருந்தது எதுவுமே நமக்கு திரும்பக் கிடைக்காது என்பதால் தான் மரணம் மனிதனுக்கு பயத்தை ஏற்படுத்துகிறது. உண்மையில் மரணம் என்பது உடலை துறக்கும் பயம் என்பதைவிட உறவுகளை, உடமைகளை இழக்கிறோம் என்பதால் தான் ஏற்படுகிறது.

மரணம் மீண்டும் விழிப்பு நிலை தராது என்கிற அறிவு இல்லாத விலங்குகள் எதற்குமே மரணபயம் கிடையாது, அவைகள் தன்னை தற்காத்துக் கொள்ளத் துடிக்கும் பயம் என்பது அவை ஏற்படுத்தும் உடல் சார்ந்த வலிகளில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கு மட்டுமே.

தன்னிலை மறப்பதும், அது தற்காலிகமாக இருக்க வேண்டும் என்பதும் ஒவ்வொரு மனித மனத்தின் விருப்பமாகத்தான் இருக்கிறது. எவ்வளவு மகிழ்ச்சியுடன் ஒருவரை வைத்திருந்து நீங்கள் விழித்துக் கொண்டு தான் இனி இருக்கப் போகிறீர்கள் என்று வரம் கொடுத்தால் அதை அவர் சாபமாகத்தான் கொள்வர். ஏனெனில் மனம் தற்காலிக விழிப்பு நிலையை விரும்புவது போலவே தற்காலிக தன்னிலை மறப்பதையும் விரும்புகிறது.

பிறரை துன்புறுத்தாத காமம், குடி, போதைப் பொருள் போன்ற சிற்றின்பமாக தேடிக் கொள்பவை உடலின்பம் என்றாலும் அதை நாடுபவர்களின் உள்ளுணர்வு தற்காலிக தன்னிலை மறப்பை நாடுகிறது என்றும் கொள்ளலாம் என்றே நினைக்கிறேன். அவற்றில் கிடைக்கும் இன்ப நுகர்ச்சியின் மன அமைதியின் காலம் போதுமானவையாக இல்லை என்பதாலும், அவை கிடைக்கும் வழிகள் பல்வேறு உடல் கோளாறுகளை ஏற்படுத்தக் கூடியவை என்பதாலும் அதை சிற்றின்பமாக, கேடுவிளைவிப்பதாகச் சொல்லி, காலம் நீட்டித்துக் கிடைக்கக் கூடிய பேரின்ப வழிகளாக ஒரு சில ஆன்மிகக் கோட்பாடுகள், தியானம், யோகம், வழிபாடு, தொழுகை என வேறுவழியில் கொஞ்சம் நீட்டித்து கிடைக்கக் கூடியதை தேடுபவர்கள் ஆன்மிகவாதிகளாகவும் அவை பேரின்ப வழிகள் எனச் சொல்லப்படுகின்றன. எது எப்படியோ மனித மனம் என்றும் விரும்புவது தன்னிலைமறக்கக் செய்யக் கூடிய ஒரு நல்ல உணர்வைத்தான்.

*****

அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். மீண்டும் அக்டோபர் 26 ஆம் தேதிக்குப் பிறகு சந்திக்கிறேன்

13 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 7

பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6

பகுத்தறிவு, ஆன்மிகம் என எந்த நோக்கில் பார்த்தாலும் உயிரினங்கள் பிறப்பு வளர்ச்சி முடிவு என்கிற சுழற்சிக்கு ஒவ்வொன்றும் தன்னால் இயன்ற பங்களிப்பை செய்து பூமியை உயிர்ப்புடன் வைத்திருக்க உதவுகிறது, இதுதான் இயற்கை. இந்த உயிர்த்தன்மையின் கூறுகளாக தாவரங்களும் சிலவகை ஒரு செல் உயிரனங்கள் தவிர்த்து தன்னைத் தானே பெருக்கிக் கொள்ளும் வாய்ப்புகள் கிடையாது, உயிரினப் பெருக்கத்திற்கு ஆண் / பெண் என ஒரே உயிரினப் பிரிவின் இருவகை உயிரினங்களின் சேர்க்கை இன்றியமையாததாகும். ஆண் பெண் சேர்க்கையால் உயிரினப் பெருக்கம் என்கிற சமண்பாட்டில் தூண்டும் பொருள்களாக புலனின்பம் என்கிற பயனும், இனப்பெருக்கம் என்பது அதன் ஈடுகளும் ஆகும். இனப்பெருக்கம் என்கிற செயலுக்கான நற்பலனை செயல்படும் போதே பெருவது பெருவதே கலவி இன்பம் அல்லது உடல் இன்பம். உயிர்ப்புக்கான இனப்பெருக்கம் என்னும் செயல்பாட்டின் புறக்காரணிகள் தான் ஆண் / பெண் உடல் கூறுகள், அதில் பெறப்படும் பிற பயன் உடலின்பம். சமூகமாக மாற்றிக் கொண்ட மனித இனத்தின் நோக்கம் இனப்பெருக்கம் என்கிற மையத் தன்மையில் இருந்து விலகி பெண் உடலில் பெரும் இன்பத்தை தனது சமூகத்திற்கு வசப்படுத்துவதன் மூலம், தனது சமூகம் சார்ந்த இனப்பெருக்கம் செய்வதற்கு சமூகக் கட்டுப்பாடுகளை விதித்துவிட்டதன் கூறுகள், இயல்பான ஆண் பெண் ஈர்ப்பு என்பதில் மன ரீதியான சிக்கல் ஏற்பட்டுவிட்டதாகக் கருதுகிறேன். உடலின்பம் என்பது ஆண் பெண் ஈர்ப்பு அல்ல, தன்னலம் சார்ந்த ஒன்று என்பதாக மரபுக் கூறுகளில் மாற்றம் ஏற்பட்டு, உடலின்பத்திற்குத் தேவை இரு உடல்கள் மட்டும் இருந்தால் போதும் என்கிற மனமாற்றம் ஏற்பட்டு, எதிர்பால் ஈர்ப்புகள் குறைந்து அல்லது இல்லாது, தன்பால் சேர்க்கை விருப்பிற்கு சிலரின் மனம் ஏற்பாக மாறிவிட்டது சமூகம் மாற்றத்தினால் ஏற்பட்ட பக்க விளைவு.

மனிதர்களில் சிலர் இருப்பது போல் பிற உயிரினங்களில் எப்போதுமே தற்பால் சேர்க்கை நாட்டம் உள்ள உயிரினம் எதுவும் கிடையாது. அப்படி இருக்கும் உயிரினங்கள் இருபால் நாட்டம் கொண்டவை, இனப்பெருக்கத்திற்கும் உதவும், தற்பால் நாட்டத்திலும் இருக்கும், அதன் செயல்பாடுகள் ஒற்றைத் தன்மை வாய்ந்தவை கிடையாது. ஆளுமைச் சமூகம் என்கிற ஒரு அமைப்பை ஏற்படுத்திக் கொள்ளாதால் பிற உயிரனங்களில் தற்பால் நாட்டம் இருந்தாலும் அவை நிலைத்த தன்மை கொண்டது இல்லை. தனிமனிதனின் பருவத் தேவையாக இணையைத் தேடுவது, இனப்பெருக்கம் செய்வது, அவற்றை வளர்ப்பது, உடல் முதிர்ச்சி அடைந்ததும் மறைவது. பெண் உடலின் இயற்கை அமைப்பு பூப்பு எய்தியதிலிருந்து சுமார் 45 வயது வரை இனப்பெருக்கத்திற்கு தேவையான முட்டைகளை திங்கள் தோறும் வெளி ஏற்றும், அதன் பிறகு முதுமைப் பருவம், அதற்கு மேல் இயற்கையும் பெண்களை தொல்லைப் படுத்த விரும்பாததால் அல்லது உடல் தன்மை இனப்பெருக்கத்திற்கு ஏற்றதல்ல என்பதால் முட்டை உற்பத்தி நின்றுவிடுகிறது. இவை பெண்களைப் பொருத்த அளவில் கலவி இன்பத்திற்கான காலமும் இதுவே. ஆணுக்கு இந்தக் கட்டுபாடுகளை இயற்கை விதிக்கவில்லை சீரான உடல் நிலை உள்ள ஆண் இனப்பெருக்கத்திற்கு முடிந்த வரையில் உதவ முடியும் என்பதே இயற்கை விதியாக இருக்கிறது. இணையாக சேர்ந்த பெண் மாதவிலக்கு நின்ற பிறகும் ஆணுக்கு ஒத்துழைப்புக் கொடுக்கக் கூடிய கட்டாயத்தில் வைத்திருப்பது இயற்கை கிடையாது, சமூகம் மற்றும் இருவருக்கிடையே ஆன வயது வேறுபாடு அவற்றை நீட்டிக்கிறது, ஆணையும் கட்டுக்குள் கொண்டுவரவும் பெண்களை அதற்குமேலும் தொல்லை படுத்துவது நல்லது அல்ல என்பதால் இந்திய சமூகச் சூழலில் ஆணுக்கு வாலிபம், இல்லறம், துறவறம் என மூன்று பருவகாலங்கள் பிரிக்கப்பட்டு, இல்லறக் கடமைகள் முடிந்த ஆண் துறவரம் மேற்கொள்வது நல்லது என்கிற வழியுறுத்தல் இருந்தது. ஆனால் பலரும் அப்படி இருக்கவில்லை. ஒன்றுக்கும் மேற்பட்ட மனைவிகளுடன் 90 வயது வரை அனுபவித்துக் கொண்டிருந்தார்கள்.

உடல் நிலை காரணங்கள் தவிர்த்து வயதின் காரணாமாக இந்தகாலத்தில் செயல்படாத ஆணுக்கு வய்க்கரா போன்ற மருத்துவ வில்லைகளும், மாதவிலக்கு நின்ற பெண்களின் வரண்ட குறிகளுக்கு களிம்பு வகைகளையும் பரிந்துரை செய்து இல்லற இன்பம் சாகும் வரை என்பதாக நீட்டிக்கப்பட்டு இருப்பது இயற்கையா என்று பார்த்தால், கலவி இன்பத்திற்கு இருக்கும் இயற்கைத் தடைகளையெல்லாம் உடைத்து எரிந்துவிட்டிருக்கிறோம் என்றே தெரிகிறது. கலவி இன்பத்தின் நோக்கமான இனப்பெருக்கம் என்கிற காரணங்களே இல்லாத போது கலவி இன்பம் என்பதை ஆண் பெண் ஈர்ப்பின் நோக்கத்தில் எதிர்பாலினரிடம் மட்டும் தான் ஏற்பட வேண்டும் என்பது சரியான வாதமாக வைக்கும் அளவுக்கு இயற்கையின் கட்டுப்பாடுகளுக்கு நாம் கட்டுப்படவில்லை என்பதே உண்மை. சேர்க்கையின் நோக்கம் உடலின்பம் மட்டுமே என்கிற எண்ணங்களில் சேரும் உடல்களில் பால் தன்மைகள் விருப்பப்படி எப்படி இருந்தாலும் எதுவும் கெட்டுவிடப் போவதில்லை. அந்த வகையில் தற்பால் சேர்க்கையை இயற்கை செயற்கை வகைப்படுத்திப் பார்ப்பது தவறு.

***

ஒரு தனிமனிதன் இல்லறத்திற்குள் நுழைவது என்பதன் முதல் சடங்கு திருமணம், இதன் மூலம் எதிர்பாலினரிடம் கருத்தொற்றுமையுடன், இல்லற இன்பம் பெற்று, குழந்தைகள் பெற்று சந்ததி பெருக்கத்திற்கு உதவுவதாக சமூகத்தின் மூன்பு தன் சார்ந்துள்ள சமுக / மதப் பழக்கவழக்கப்படி உறுதி மொழி ஏற்கிறார்கள், அரசாங்க சட்ட அளவில் இருவருக்கும் பாதுகாப்பாக சொத்து உரிமை இன்னும் பல உரிமைகளை வழங்குகிறது. திருமணம் என்பது சமூகங்களை ஏற்றுக் கொண்டோரின் மன ஒப்புதலுடன் கூடிய முழுக்க முழுக்க சமுகம் சார்ந்த சடங்கு. இந்த சடங்கின் வழி அந்த சமூகத்தின் சந்ததிகள் பெருகிவளர்கின்றன. அனைத்து சமூகங்களின் திருமணச் சடங்குகளின் வழியாக பூமியின் உயிர்த்தன்மை நிலைத்து இருக்கிறது.

இப்படி ஒரு திருமணச் சடங்கை தற்பால் சேர்க்கையாளர்கள் உரிமையாகக் கேட்பது திருமணம் என்கிற பொருள் பொதிந்த சடங்கையே கேலிக்கூத்தாகுவதாகவே நினைக்கிறேன். திருமணத் தேவை என்பதற்கு தற்பால்சேர்க்கையாளர்கள் முன்வைக்கும் காரணங்களாக, சொத்துரிமை மற்றும் துணை இறந்துவிட்டால் அடக்கம் செய்யும் உரிமை அல்லது இறுதி நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் உரிமை ஆகியவை திருமணம் செய்து கொள்வதால் கிடைக்கும் என்கிறார்கள். இவையும் 'திருமணத் தேவைக்கு' ஏற்றுக் கொள்ளும் காரணங்களாகத் தெரியவில்லை.


பொதுச் சட்டங்களில் வழி, தனிமனிதன் தன்னுடைய சொத்துக்களை யாருக்கு வேண்டுமானாலும் எழுதி வைக்க சட்டங்களில் இடம் இருக்கிறது, தனிமனிதன் ஒருவன் தன்னலனில் அக்கரை கொண்டவர்கள் தனது இறப்பிற்கு பிறகு எப்படி நடந்து கொள்ளலாம் என்பற்கான அனுமதியும் சட்டத்தின் மூலம் பெறமுடியும். இதற்கு திருமணம் என்கிற சமூகச் சடங்குகளெல்லாம் தேவை இல்லை என்பது என் கருத்து. இன்னொரு காரணமாக நான் நினைப்பது ஓரின தம்பதிகளில் ஒரு சிலர் தவிர்த்து நீண்டகாலம் சேர்ந்து வாழ்வதில்லை, ஒருவர் உடல் நிலை பாதிக்கப்பட்டு உடலின்பம் கொடுக்க இயலாத சூழலில் இருந்தால் இன்னொருவரை நாடிவிடுவார்கள், இவர்களின் பெரும்பாலோனோரின் நோக்கம் வெறும் ஈர்ப்பு மட்டுமே, அதில் எழுதப்படாத ஒப்பந்தமாக மனம் ஒப்புதலுடன் சேர்ந்து இருப்பார். அந்த ஈர்ப்பின் செயல் தன்மை பாதிக்கப்படும் போது வெறொருவர் பக்கம் சாய்ந்துவிடுவர், இவை உடலின்பம் பெறும் ஆண் / பெண் ஈர்ப்பிலும் மணவிலக்காக இருந்தாலும் அவர்களின் வாரிசுகளுக்கு சில சட்டக் கடமைகள் தேவைப்படுவதால் அந்தத் திருமணமும் ஓரினவாதிகள் கேட்கும் திருமண அங்கீகாரமும் ஒன்று அல்ல. சீரான உடல் நிலையுடன் இருந்தும், பிள்ளைப் பெற்றுக் கொள்ள விருப்பப்படாமல் திருமணம் செய்து கொள்ளும் ஆண் / பெண் இணைகளை என்னவென்று சொல்வது, அவர்களைப் போல் தானே ஓரின விருப்பர்களும் ?

திருமணம் என்பது இரு உடல்களின் சங்கமத்திற்கு ஒப்பந்தம் போடும் ஒரு நிகழ்வு என்பதாக மட்டும்மல்லாது திருமணம் என்பது இனப்பெருக்கத்திற்கு முன்மொழியப்படும் முதல் சடங்கு என சமூகத்தில் திருமணம் பற்றிய புரிந்துணர்வுகள் இருக்கிறது. அப்படி இல்லை என்றால் திருமணச் சடங்குகளே இல்லாது போய் இருக்கும், இன்றும் கூட சமூகத்தில் திருமணம் என்பது உடல் இணைப்பிற்கான சடங்கு அல்ல அதற்கும் மேலாக இல்லற ஒப்பந்ததில் சந்திகளை நல்ல முறையில் கொண்டு சென்று உயிர்த்தன்மையை அடுத்த தலைமுறைக்கு அனுப்பி வைக்க முயற்சிக்கும் ஒரு தொடக்கம், அதனை பெற்றோர்கள் வாழ்த்துகிறார்கள். அதை வெறும் சட்டங்களுடன் தொடர்பு படுத்திப் பார்த்து ஓரினவாதிகள் திருமணம் சமூகத்தால் அங்கிகரிக்கப்பட வேண்டும் என்று கூறுவதும், தாங்கள் திருமணம் செய்து கொண்டதாக அறிவிப்பதும், கேலிக் கூத்தாகத் தான் நினைக்க முடிகிறது. நல்ல உடல் நிலையில் இருந்து அடுத்தலைமுறை தேவைகள் என்கிற எந்த ஒரு நோக்கமும் இல்லாமல் வாழ்ந்து இறந்து போவது உயிர்புடன் வைத்திருக்க முயலும் சமூகத்திற்கு பேரிழப்புதான்.

இந்த காரணங்களுக்காக சமூகம் தற்பால் புணர்ச்சியனரின் செயல்பாடுகளை மாற்றிக் கொள்ளச் சொல்லி வழியுறுத்தலாம். ஆனால் பருவ வயதினரிடையே அவர்கள் தங்கள் ஒப்புதலுடன் நிறைவேற்றிக் கொள்ளும் தற்பால் இன்பங்களை மதங்களுக்கு எதிரானது என்கிற பழமை வாத சப்பைக் காரணங்களைக் காட்டி, குற்றமாகக் கருதி கடுமையான தண்டனை கொடுக்க வேண்டும் என்று சொல்ல எந்த வெறெந்த ஞாயமான காரணமும் இல்லை.

முடிவாக,
தனிமனிதனின் பாலியல் நாட்டங்களில் இயற்கை செயற்கை என்று எதுவும் கிடையாது, அப்படி இருப்பவை அனைத்தும் சமூக மாற்றங்களினால் ஏற்பட்ட கூறுகளே, ஒத்த பாலின நாட்டத்திற்கு தனிமனித மனம் தவிர்த்து சமூகத்தில் ஏற்பட்ட உடலின்பம் குறித்த செயல்பாடுகளில் ஏற்பட்ட மாற்றமும் காரணி ஆகிறது என்பதால் சமூகமும் அதற்கு காரணமாக அமைகிறது, இதில் விரும்பி ஈடுப்பட்டவர்களுக்கு அங்கீரமின்மையால் ஏற்படும் உணர்ச்சிப் பூர்வமான, மான - அவமான தற்கொலை, கொலை, மற்றும் புதியவர்களின் விருப்பம் இல்லாமல் அதில் நுழைவதற்கு மறைமுகமாக தடை ஏற்படுத்த, தற்பால் சேர்க்கை அங்கீகரிக்கக் தேவையானது தான். அங்கீகரிக்கப்பட வேண்டும்.

ஓர்பால் விருப்பர்களின் திருமணம் ? என்னால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை, ஏற்றுக் கொள்ள வேண்டும் என்போர் சரியான காரணங்களைக் கூறவும்.

தற்போதைக்கு தொடர் முற்றும்.

12 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 6

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4 | பகுதி 5
பாலியல் தொடர்பில் ஆண்களின் நடவெடிக்கை தனிப்பட்ட அவர்களுக்கு மட்டுமே தெரியும், ஆண்கள் அதில் ஆர்வத்துடன் செயல்படுவது, தொடர்வது யாருக்கும் தெரியாமல் செயல்படுவதும் எளிது. ஏனெனில் பாதுகாப்பற்ற என்பதில் இருக்கும் பாலியல் நோய் தாக்கம் தவிர்த்து ஆண்கள் உடல் ரீதியாக பாதிப்பு அடைவதில்லை. பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் இல்லாத நாடுகளில் அது நடைபெறுவதே இல்லை, குறைவு என்பதெல்லாம் வெறும் கணக்கியல் கூறுகள் தான். பலருக்கு வாடிக்கையாக இருக்கும் ஒருவர் அல்லது குழு , திருமணம் பந்தம் இல்லாது ஒருவரின் ஆளுமையில் 'வைத்து இருப்பதும்' என்பதாக படுக்கை அறை என்பது கண்காணிக்கக் கூடியதல்ல என்கிற சமூகப் புரிந்துணர்வின் சாதகத்தை மூலதனாமாக வைத்து அங்கீகாரம் இல்லாத பாலியல் தொழில்கள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.

ஆண் சமூகத்தில் திருமணம் மூலம் உடலின்பத் தேவை தடையில்லாது கிடைக்கும் சூழல் உள்ளவர்கள் பாலியல் தொழிலை அரும்வெறுப்பாகத்தான் பார்பார்கள். தேவையான போது உடலின்பம் பெற வாய்பில்லாதவர்கள் அனைவரும் முனிவர்கள் கிடையாது, கட்டுக்குள் வைத்திருக்க எந்த ஒரு பயிற்சியும் இல்லாத ஆண் சாமியாராகவே தொடரவேண்டும் என்கிற சமூக எதிர்பார்ப்பு அவர்களுக்கு என்ன தீர்வை சொல்லிவிட முடியும் ? தன்னின்பம், இதற்கும் மதவாதிகள் தடா போடுகிறார்கள். ஒரு ஆண் சட்ட சிக்கல் இல்லாத பாலியல் வேட்கைத் தனிப்பு என்றால் பாலியல் தொழிலாளியைத் தான் நாடவேண்டும் என்கிற சூழல் இருப்பதை ஒப்புக் கொண்டு தான் ஆக வேண்டும். இது வெளியே சுதந்திரமாக இருப்பவர்களுக்கு ? ஆனால் ஆண்களுடனேயே பணியாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருப்போர்கள் சக ஆண்களை நாட வேண்டிய சூழல் அமைந்துவிடுகிறது, குறிப்பாக கப்பலில் பணியாற்றுபவர்கள், இராணுவவீரர்கள், சிறைக் கைதிகள் இவர்களிடையே தற்பால் சேர்க்கை மிக இயல்பாக நடைபெறுவதாகச் சொல்கிறார்கள். இவர்களுக்கு சமூகமும், மதமும் என்ன வகையாக தீர்வு சொல்கிறது என்றே தெரியவில்லை. பாலியல் தேவை கட்டுப்படுத்தியக் கூடியதென்றாலும் அனைவருமே புலனடக்கத்தில் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க முடியுமா ?

பல ஆண்கள் தற்பால் சேர்க்கை விருப்பில் செல்வதற்கு சூழல் காரணமாக அமைந்துவிடுகிறது, நான் பட்டயப்படிப்பு கடைசி ஆண்டு படிக்கும் போது என்னுடன் படிக்கும் வெளியூர் மாணவர்கள் வீடு எடுத்து தங்கிப் படிப்பது வழக்கம், அவர்கள் அறைக்கு வெளியூரில் இருந்து தங்கி பாடம் நடத்தும் விரிவுரையாளரும் வருவார், அவருக்கும் மாணவர்களுக்கும் ஒரு 6 வயது தான் வேறுபாடு, அப்படி வரும் அந்த விரிவுரையாளர் மாணவர்களுன் மாணவராக பழகுபவர், தேவையான நேரத்தில் வாங்கும் சம்பளத்தில் குறிப்பிட்ட அளவு மாணவர்களுக்கு கொடுத்து உதவுவார், திருமணம் ஆகி 2 வயதில் குழந்தை உடையவர். மாணவர்கள் அனைவருக்குமே அவரை மிகவும் பிடிக்கும். மாணவர்களுடன் இரவு படம் பார்த்துவிட்டு சில வேளைகளில் அவர்களுடன் படுத்துவிடுவார்.

பலநேரங்களில் வெளியூர் மாணவர்களுடன் சேர்ந்து படிப்பேன். தேர்வு நெருங்கும் போது, ஒரு நாள் எனக்கு நண்பனான ஒரு மாணவன் மிகவும் மன அழுத்ததில் பாதிக்கப்பட்டவனாக இருந்தான், படிப்பில் கவனம் செலுத்தமால் இருந்தான், என்ன நடந்தது ஏன் இப்படி இருக்கிறான் என்று அறிந்து கொண்டு ஆறுதல் படுத்தலாம் என தனியாக அழைத்து விசாரித்த போது, யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று பலமுறைக் கேட்டுக் கொண்டு, சத்தியம் வாங்கிக் கொண்டு, விரிவுரையாளரின் பெயரைக் குறிப்பிட்டு, போனவாரம் இரவு தூங்கும் போது, அவரு 'அங்கு' கைவச்சிட்டார், அந்த நேரத்தில் எனக்கு தடுக்க முடியாமல், பக்கத்தில் இன்னும் இரண்டு ரூம் மெட் நல்ல தூக்கத்தில் இருந்தாங்க, வாத்தியார் மேல் வைத்திருந்த மரியாதையில் அவர் அப்படி செய்யும் போது தட்டிவிட முடியவில்லை, அந்த நேரத்தில் அது எனக்கு தேவையாக இருந்தது, அன்னிக்கு காலையில் இருந்து மனசே சரி இல்லை, அவரு அப்படி நடந்து கொள்வார்னு நான் எதிர்பார்க்கவில்லை, நானும் அவரது செயலை தடுக்க முயற்சிக்கல' என்றான். வாத்தியார் இப்படிபட்டவரா எனக்கும் ரொம்ப அதிர்ச்சியாக இருந்தது, வாத்தியாரிடம் போய் கேட்க அந்த வயதில் அச்சமாக இருந்தது.
என்னிடம் சொல்லிவிட்டதால் கொஞ்சம் கொஞ்சமாக அவன் பழைய நிலைக்கு திரும்பிவிட்டான். வாத்தியாரும் அதன் பிறகு அங்கு போனதில்லை, அவரை கல்லூரியில் பார்க்கும் போது எப்போதும் இருப்பது போல் வெகு இயல்பாகவே இருந்தார். அவரிடம் பிறரும் பாதிக்கப்பட்டார்களா ? பாதிக்கப்படவில்லையா ? அவர் அன்று மட்டும் தான் உணர்ச்சிவசப்பட்டவராக நடந்து கொண்டாரா ஊகித்துப் பார்த்தால் அவரது நடவடிக்கை தொடர்ந்திருந்தால் பலருக்கும் அவரைப் பற்றி தெரியவந்திருக்கும் என்பதால் தொடர்ந்திருக்க மாட்டார் என்றே கருத முடிகிறது.

மாணவவிடுதிகள், மேன்சன்கள் ஆகியவற்றில் தங்கும் ஆண்கள் நெருங்கிப் பழகுபவர்களிடம் இருந்து எதிர்பாராதவிதமாக தற்பால் சேர்க்கை விருப்பிற்குள் விழுந்துவிடுகிறார்கள். நெடும் தொலைவு இரவு பேருந்துப் பயணங்களில் நடுத்தரவயதிற்கு மேற்பட்ட ஆண்கள் அருகில் அமர்ந்திருக்கும் பருவ வயது இளைஞர்களை சீண்டுவார்கள், பலருக்கும் இது போன்ற பாலியல் தொல்லை அனுபவங்கள் இருக்கும். ஆனால் இப்படி நடப்பது தற்காலிகம், அதை இடம்மாறி உட்கார்ந்து அல்லது கூச்சல் போட்டு தவிர்க்கமுடியும், உடன் தங்கி இருக்கும் நண்பர்கள், அறையை பகிர்ந்து கொள்பவர்களினால் ஏற்பட்டால் விருப்பம் இல்லை என்றால் அவர்களிடையே நட்பு கெடும், விருப்பம் இருந்தால் அந்தப்பழக்கத்திற்கு அடிமையாகிவிடுவார்கள். இந்திய ஆசிய நாடுகளைப் பொருத்த அளவில் தற்பால் சேர்க்கை நாட்டம் பிறப்பிலேயே மனதில் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் குறைவு, நமது கலாச்சாரத்தின் மரபு கூறுகளும் அத்தன்மை வாய்ந்தது இல்லை. பிறரின் தூண்டுதலால் அந்தப் பழக்கத்தை ஏற்று தொடர்பவர்களே மிகுதி, இவர்களின் விழுக்காடுகளில் திருமணம் ஆன ஆண்கள் பெரும்பகுதியாக இருப்பர், திருமணம் தவிர்க்க ஆண்கள் இந்தக்காரணத்தைச் சொன்னால் பெற்றோர்களுக்கு பெருத்த அவமானமாகிவிடும் என்பதால் திருமணம் செய்து கொண்டும் தொடர்கிறார்கள் என்றே ஊகிக்கிறேன்.

சூழலால் அல்லாது பிறப்பிலேயே தற்பால் நாட்டம் அமையப்பெற்றவர்கள் அதுபற்றிய புரிந்துணர்வுகள் இல்லாத சமூகத்தில் வளர்ந்தால் தன்னை எதிர்பாலினம் என்று நினைத்து, அதாவது மன அளவிலும் ஆணாகவே இருப்பவர் பருவ வயதில் தனக்கு ஏற்படும் ஆண்கள் மீதான நாட்டம் குறித்து எண்ணும் போது தான் ஒரு பெண்ணோ என்று திருநங்கைகளைப் போல் நினைத்துவிட்டால் அப்படியே மாறிவிடக் கூடிய சாத்தியக் கூறுகள் மிகுதி. திருநங்கைகளாக மாறியவர்களில் சிலர் ஆண் நாட்டம் கொண்ட ஆண்களாக இருந்து பாலியல் நாட்டம் (Sexual Orentation) பற்றிய (தவறான) சமூகப் புரிந்துணர்வு படி, தன்னையும் மாற்றிக் கொண்டவர்களாகவோ, மாற்றப்பட்டவர்களாகவும் இருக்கிறார்கள். ஆண் உடலில் பெண்ணாக தன்னை நினைக்கும் திருநங்கைகளும் ஓர்பால் சேர்க்கை நாட்டம் உள்ளவர்களுக்கும் மன அடைப்பிடையிலான பாலியல் விருப்புகள் முற்றிலும் வேறானவை. திருநங்கைகள் தான் ஆண் என்று மன அளவில் நினைப்பதையே வெறுப்பவர்கள் என்பது குறிப்பிடத் தக்கது, அதனால் தான் அவர்கள் அறுவை சிகிச்சைகள் செய்து கொள்கிறார்கள். தற்பால் புணர்ச்சியனர் பாலின்பத்திற்கு ஒத்த பாலினர் மீது நாட்டம் கொண்டவர்கள்.
உடலளவிலும், மன அளவிலும் தன்னை மாறுபட்ட பாலினமாக நினைப்பது இல்லை.

சட்ட அங்கீகாரம் இருந்தால் தற்பால் சேர்க்கை விருப்பர்களாக புதியவர்கள் மாறும் / விழும் வாய்பு குறையும். சட்ட அங்கீகரம் இல்லாததால் ரகசியமாக செயல்பட வேண்டி இருப்பதால் புதியவர்கள் அதில் சிக்க வைக்கப்படுகிறார்கள். தற்பால் சேர்க்கைக்கு சட்ட அங்கீகாரம் வரவேற்கப்படக் கூடியதே. மற்றபடி பாலியல் வன்கொடுமை, குழந்தைகளிடம் (சிறுமி/சிறுவர்களிடம்) சில்மிஷம் இதை அனைத்துத் தரப்பும் செய்கிறது என்பதால் அதைத் அவர்கள் மீதான தனிப்பட்ட குற்றச் சாட்டாக பார்க்க முடியவில்லை. பாலியல் தொழிலுக்கு சட்ட அங்கீகாரம் கொடுக்கப்பட்ட நாடுகளில் பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமைகள் குறைவு. குறிப்பாக தாய்லாந்து போன்ற நாடுகளில் பெண்களை கடத்திச் சென்று பாலியல் கொடுமை செய்வது அன்னாட்டின் அன்றாடச் செய்தி கிடையாது.

தற்பால் விருப்பர்களின் திருமண அங்கீகாரம் தேவையா ? தொடர்ந்து பேசுவோம்

தொடரும்...

10 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 5

பகுதி 1 | பகுதி 2 | பகுதி 3 | பகுதி 4
உடல்கூறுகளின் வளர்ச்சியினால் பருவம் அடைதல் என்று சொல்வது ஆண்/பெண் இருவரும் ' இனப்பெருக்கத்துக்கு ஆயத்தம் ஆகிவிட்டார்கள் என்பாதாக பொருள். உடலியல் மாற்றங்களில் சுரப்பிகள் வளர்ந்து பணியைத் தொடங்க அதன் ரசாயன மாற்றங்கள் மனதில் தூண்டுதல் ஏற்படும் பாலியல் உணர்வு என்பது உடல்சார்ந்த இச்சை என்றாலும் மனதின் செயல்பாடுகளே அதன் தீர்வுகளை முடிவு செய்கிறது. பாலியல் வேட்கையும் தணிப்பும் உடல் இன்பம் என்றே சொல்லுவார்கள்,
வேறெந்த உயிரினங்களும் வெறும் இச்சைக்காக கூடுவதே இல்லை, பெண் உயிரினங்கள் இனப்பெருக்கத்துக்கு ஆயத்தமாகும் போது அதனை அறிந்து கொண்ட ஆண் உயிரினம் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்கிறது. மனித இனத்தில் மட்டும் தான் உடல் இன்பம் ஆண்/பெண் இருவருக்கும், குறிப்பாக ஆணுக்கு அன்றாட தேவை என்கிற அளவில் உடல்கூறுகள் அமைந்துவிட்டது. ஒருவனுக்கு ஒருத்தி அல்லது எப்படி வாழ்ந்தாலும் மனிதனின் அன்றாட உடல் இன்பத் தேவை என்பது குழந்தைப் பெருவதற்காக அல்ல என்ற நிலையில், உடல் இன்பம் என்பது ஒப்புதலுடன் கூடிய இரு உடல்களின் தற்காலிக சேர்க்கை என்பதாகத் தான் பொருள்படும்.

மனித இச்சைகள் உடல் சார்ந்த ஈர்ப்புக் கொண்டிருக்கத் தான் வேண்டும், மனம் இயற்கை அமைப்புபடி மாற்றுப் பாலினரைத்தான் நாடமுடியும் என்பது சரியான கூற்றா ? தனிப்பட்ட மனித மனத்தின் விருப்பு வெறுப்பு என்பது இயற்கைச் சார்ந்தது அல்ல. சூழல் சார்ந்ததே. பிறவிக் கலைஞர்கள் ஒருசிலர் நல்ல பாடும் திறன், ஓவியத் திறன், கலைத் திறன் பெற்று இருப்பார்கள், இவர்கள் பரம்பரையில் முன்பு அப்படி ஒருவரும் இருந்திருக்க மாட்டார்கள். அந்த சிலரின் செயல்பாடுகள் மற்றவர்களை விட மாறுபட்டு இருப்பதை யாரும் இயற்க்கைக்கு மீறிய ஒன்றாக நினைப்பது இல்லை, மாறாக வியக்கிறார்கள். ஒரு தனிமனிதனின் பிறவியிலேயே கிடைத்திருக்கும் கலைத்திறன் வரங்கள் இயற்கைக்கு மீறிய ஒன்றுதானே. அதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் சமூகம் தனிப்பட்ட ஒரு ஆண் அல்லது பெண் ஒத்தப் பாலினரிடம் ஈர்ப்பு கொண்டிருப்பதை இயற்கைக்கு மாறானது என்று எப்படிச் சொல்ல முடியும். வேண்டுமென்றால் குடும்ப அமைப்புக்கு எனும் சமூக அமைக்கு எதிரானது என்று சொல்லமுடியும், இயற்க்கைக்கு எதிரானது என்று சொல்ல முடியாது.

ஆண் / பெண் சேர்க்கையின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமல்ல, அது ஒரு அன்றாடத் தேவையாகிப் போனதை இயற்கை என்று சொல்ல முடியுமா ? இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த எத்தனை முறைகளை பயன்படுத்தினாலும் அவை அனைத்துமே இயற்கைக்கு மாறுபட்ட ஒன்று தானே. இன்றைய இனப்பெருக்கத் தேவையை தனிமனிதனின் வருமானமும், மனைவி/கணவன் ஆகியோரின் உடல் நிலையும், அதை ஏற்றுக் கொள்ளும் இருவரின் மன நிலையும் தான் முடிவு செய்கிறது. இனப்பெருக்கம் தான் நோக்கம் அதனால் ஈர்ப்பு இருப்பது இயற்கையாகவே இருக்கும் என்றால் உடலியல் குறைபாடுகளால் இனப்பெருக்கம் செய்ய முடியாத தம்பதியினர் கூடிக் களிப்பதை இயற்கைக்கு எதிரானது, தேவையற்றது என்று எவரும் சொன்னால் அது அறிவீனம். மனித உடல் அமைப்புகளையும், மனம், பொருளாதாரச் சூழல் சமூகம் இவற்றைப் பார்த்தால் இச்சைகளின் நீண்டகாலத் தேவை உடல் இன்பம் மட்டும் தான். மாற்றுபாலின சேர்க்கையாளர்கள் (Normal Sex Orentation) நாடும் உடல் இன்பம் உறுப்பு சங்கமங்களினால் மட்டும் தான் தனித்துக் கொள்வதில்லை, பல்வேறு 'வழிகளிலும்' அடைகிறார்கள், இவையெல்லாம் மற்றும் சுய இன்பம் காண்பது இயற்கையா ? உடல் இன்பம் பெறும் முறைகளை இயற்கை செயற்கை என்று வகைப்படுத்த முடியாமல் போவதற்கு அதன் நோக்கம் இனப்பெருக்கம் மட்டுமல்ல என்பதே உண்மை. அப்படி இருக்கும் போது கூட விரும்பும் உடல்களுக்கு சட்ட சிக்கல் எதுவும் இல்லை என்றால் அது தற்பாலினமாகவோ இருந்தால் அதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை

குழந்தை பெற்றுக் கொள்ள விரும்பாமல் வெறும் Live together ஆக குடும்பம் நடுத்துபவர்களின் நோக்கம் கூட உடல் இன்பம் மட்டுமே, சிலர் தேர்ந்தெடுக்கும் வாழ்க்கை வெறும் உடல் இன்பம் தேவை மட்டும் தான் என்பதையெல்லாம் ஏற்றுக் கொள்ளும் சமூகம்,
ஓர் பால் சேர்க்கையினரை இயற்கைக்கு எதிரானவர்கள் என்று சொல்வதுவதன் காரணம் சமூகக் கட்டமைப்பு மற்றும் மதக் கொள்கை மட்டுமே.

ஆண் / பெண் இருவரது மனங்களும் மாற்றுப் பாலினரை (Opposite Sex) மட்டும் தான் நாடும் என்பது அவரவரின் சொந்த கற்பனை. பிறவிக் கலைஞர்களைப் போல் பிறவியிலேயே ஒத்த பாலினர் சேர்க்கை விருப்பர்கள் உண்டு. மேற்கத்திய நாடுகளில் இடது கையால் எழுதுவோரை சாத்தான்கள் என்று விளித்து பின்னார் மாற்றிக் கொண்டு அவர்களும் சக மனிதர்கள் என்றே ஏற்றுக் கொண்டார்கள். இடது கையால் எழுதுவோர்களை பிறவிக் குறைபாடு உடையவர்கள் என்று சொன்னால் அது அறிவீனம் தான். தற்பால் சேர்க்கை விருப்பர்களின் பலரின் இயற்கை மன அமைப்பு அவ்விருப்பத் அத்தன்மை கொண்டது என்றே சொல்லலாம்,

எங்களது அலுவலகத்திற்கு விற்பனைத் தொடர்பில் வரும் அமெரிக்கர் ஒருவரை, 'திருமணம் ஆகிவிட்டதா ? ' என்று கேட்டேன். அதில் தனக்கு நம்பிக்கைக் கிடையாது, தான் ஒரு ஓரின சேர்க்கை விருப்பர் என்று சொன்னார். 'உங்களுக்கெல்லாம் பெண்கள் மீது ஆர்வம் ஏற்படாதா ? என்று கேட்டேன், பெண்களை வெறுப்பது கிடையாது, மிகவும் மதிக்கிறேன். தனக்கு நெருங்கிய பெண் நண்பர்கள் உண்டு, ஆனால் பெண்ணுடன் சேருவது தன்னால் நினைத்துப் பார்க்க முடியாத ஒன்று, தனது விருப்பம் ஆண் சேர்க்கைதான் என்றார். உயர்நிலை பள்ளிப் படிப்பின் போது சக மாணவனுடன் ஏற்பட்ட பழக்கம், அதன் பிறகு தானும் மாற்றிக் கொள்ள நினைக்கவில்லை, தான் விருப்பத்துடன் அப்படியே ஓரின சேர்க்கையாளராக தொடர்வதாக குறிப்பிட்டார்.

திருநங்கையர் போல் தற்பால் சேர்கையினர் அனைவருமே பிறவியிலேயே அதில் நாட்டம் கொண்டவர்கள் கிடையாது, பலர் மற்றவர்களின் தூண்டுதலால் அந்த பழக்கத்தை தொடர்ந்து, பின் அதுவே அவர்களது விருப்பம் என்பதற்கு அழுத்தமான காரணமாக அவர்களின் சேர்க்கையாளர்களுடன் ஏற்படுத்திக் கொண்ட உணர்வு அடிப்படையிலான நெருக்குதல்களால், பிணைப்புகள், அதில் இருந்து மீள விருப்பம் ஏற்படும் சூழல் இல்லாது, அவர்கள் அப்படியே தொடர்கிறார்கள். ஐரோப்பிய அமெரிக்க நாடுகளில் திருமணம் செய்து கொண்டவர்களிடையேயும் குடும்பம் என்பதில் நம்பிக்கை குறைந்துவதால் அதிலிருந்து மீள வேண்டும் என்கிற சமூகக் பொறுப்பிற்கான சூழல் சார்ந்த தேவையும் ஓரின சேர்க்கையாளர்களுக்கு இல்லாமல் இருக்கிறது.

ஆண்/பெண் திருமணம் செய்து கொண்டவர்களிடமும் ஓர்பால் சேர்க்கை விருப்பம் மற்றும் செயல்பாடுகள் சிலரிடையே உண்டு (Bi-Sexual Activities) . தற்பால் விருப்பர்களின் பொறுப்பின்மையால் ஏற்படும் சமூகத் தொல்லைகள் எவை ? பிறகுபேசுவோம்.

9 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 4

பகுதி 1பகுதி 2பகுதி 3
மனித உணர்வுகளில் வழி செயல்பாட்டிலும், பழக்க வழக்கங்களிலும் எது இயற்கை என்பது பற்றி பல்வேறு கருத்துகள் இருக்கிறது. எவையெல்லாம் இயற்கை எவையெல்லாம் இயற்கைக்கு எதிரானது என்பதை முடிவு செய்யும் போக்கு சமூகம் சார்ந்தது என்பதைவிட மதம் சார்ந்ததாகவே இருக்கிறது. சமூகம் சார்ந்த இயற்கை அந்த சமூகத்துக்கு பழக்க வழக்கங்கள், பழக்க வழக்கங்கள் என்பதால் அது ஏற்படுத்திக் கொண்ட ஒன்றுதான். உதாரணத்துக்கு வெளிநாட்டில் அறிமுகம் இல்லாதவன் ஒரு தமிழன் என்று அறிந்தால் இன்னொரு தமிழன் கண்டு கொள்ளாமல் போவான். அதுவே இரு மலையாளிகள் அறிமுகமாகதவர்கள் என்றாலும் மலையாளி என்று அறிந்தால்....'நிங்கள்கு பாலகாடோ' என்று பேசத் தொடங்குவார்கள் ஆற்றாமையால் குறிப்பிட்டேன், சொல்லவந்தது அதுவல்ல. தான் சார்ந்துள்ள சமூகத்திற்காக தனிமனிதன் தனது செயலில் நடவடிக்கைகளில் மாற்றம் அமைத்துக் கொள்வது சமூகத்தினால் ஏற்பட்ட, ஏற்படுத்திக் கொண்ட இயற்கை செயல்பபடுகள் என்றாலும், பிற இனமக்களை ஒப்பிடும் போது செயற்கைத் தனமானது.

உடல்சார்ந்த செயற்கைத் தனம், இதற்கு நிறைய உதாரணங்கள் இருக்கின்றன. உடலில் பல்வேறு அழகு சிகிச்சைகள் செய்து கொள்வது, தலைமுடியின் நிறத்தை மாற்றிக் கொள்வது, பச்சை குத்திக் கொள்வது, பிறரின் கவனத்தை உடனடியாக ஈர்ப்பதற்கு உடலில் மாற்றத்தையும், உடனடியாக கவனம் ஈர்க்கும் ஆடைகளை அணிந்து கொள்வது இன்னும் பல செயற்கைத் தனங்கள், இவற்றை பலரும் விரும்பியே செய்கிறார்கள், அது சரி தவறு என்று சொல்லவரவில்லை, செயற்கை இயற்கைக்கு வைக்கப்படும் அளவுகோளில் தற்பால் புணர்ச்சி விருப்பை கொண்டு வரும் முன் மனித இனத்தில் ஏற்றுக் கொள்ளப்படும் உணர்வு / செயல்பாடு குறித்த அனைத்துமே இயற்கையான செயல்கள்தானா என்று சர்சை எழுப்புபவர்கள் சிந்தனை செய்து பார்க்கவேண்டும்.

உடல்சார்ந்த செயற்கை மா(ற்)றுதல் களில் இந்துக்கள் காதில் சிறு துளையிட்டு காதணிகள் அணிந்து கொள்ளப்படுகிறது. காதில் துளையிடும் பழக்கம் ஆதிவாசிகளாக (நாகரீக வளர்ச்சி இல்லாத காலகட்டங்களில் இருந்து - என்று எழுதத் தயங்குகிறேன், நாகரீகம் என்பது தம்மை உயர்த்திச் சொல்ல தற்கால சமூகம் அமைத்துக் கொண்ட சொல், எனக்கு உடன்பாடு இல்லை, இன்றைய நவநாகரீகம் என்று சொல்லப்படுபவை பல, பிற்காலத்தில் பிற்போக்குத் தனமாகக் கூட நினைக்கப்படலாம்) வாழ்ந்த போது ஏற்பட்டு தொடர்ந்து வரும் ஒரு பழக்கமாக இருக்கும், முகங்களை அழகாகக் காட்ட காதணி அணிவது நன்றாக இருக்கிறது என்பதால் பல்வேறு பிற இன சமூகங்களிலும் விருப்பமுடையவர்கள் காதில் துளையிட்டுக் கொள்கிறார்கள். ஆனால் இந்திய சமூகத்தில் இதற்குச் சொல்லப்படும் மறைமுகக் காரணம் 'காதில் துளையிடுவதன்' மூலம் அக்குபஞ்சர் போல் நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்களை குறைக்க பயன்படுகிறது, அதற்காகத் தான் நம் முன்னோர்கள் செய்து கொண்டார்கள் என்று கதை விடப்படுக்கிறது. மற்றொன்று விருத்த சேதனம் (சுன்னத்) என்று சொல்லப்படுகின்ற ஆண்குறியின் மொட்டு (Glans) பகுதியின் மென்மையைப் காக்கும் முன்தோலை (Foreskin) அகற்றிக் கொள்ளும் யூதச் சடங்கு, விருத்தசேதனம் யுதப்பழக்கமாக இருந்தது பின்னார் இஸ்லாம் சமயத்தினராலும் பின்பற்றப்படுகிறது.

முன்தோலை அகற்றிக் கொள்வதால் ஏற்படும் நன்மைகள் என்று சொல்லப்படும் காரணங்கள்.

1. உடல் தூய்மை பேணுகிறது, 2. நோய் தொற்றுவதை (ஓரளவுக்கு) குறைக்கிறது, இதில் தவறு ஒன்றுமே இல்லை. சொல்வதும் உண்மைதான். முன் தோலில் தங்கும் கழிவுப் படலம் (கலோக்கியல் ஆங்கிலத்தில் Cock Cheese என்று சொல்லப்படும், smegma - sebaceous paste collects under the foreskin near the base of the head) முன் தோலை அகற்றிக் தடுக்கப்படுகிறது அதன் மூலம் பால்வினை நோய்கள் தொற்றும் வாய்ப்புகளை 50 விழுக்காடு குறைக்கிறது ( முற்றிலும் தடுக்கிறது என்று சொல்லவதற்கு இல்லை) ஆனால் ஆண்குறி முனையின் (Glans) மென்மைகள் போய்விடும் என்பதால், நீண்ட நேரம் உறவு கொள்ள விரும்புவர்களுக்கு பயனாக இருக்கும். அல்லது உடல் ரீதியான குறையால் மனம் செயல்பாடுகளின் வழி உணர்வுகளை கட்டுப்படுத்தி தேவையான நேரம் உறவு கொள்ள இயலாதாவர்களுக்கு மென்மையற்றதன்மை பயனளிக்கும். சிலருக்கு பிறவியினாலும் ஒரு சில திடீர் உடல் நோய்களால் முன் தோல் இழுவை (Flexiblity) தன்மை இல்லாமல் மிகவும் குறுகியதாக விட்டமாக இருக்கும், அவர்கள் அகற்றிக் கொள்வதால் பயன் உண்டு. மற்றபடி இது மனித குலத்துக்கே பயனானது அனைவரும் செய்து கொள்ள வேண்டும் என்கிற வழிகாட்டுதால், அறிவுறுத்தல் தவறான ஒன்று.

உடலில் இருக்கும் அனைத்து வகையான அமைப்புகளிலும் நகமும், மயிரும் தான் வெட்டினாலும் வளரும் தன்மை உடையது, வெட்டுவேண்டும் என்பதாலாயே எப்போது வளரும் தன்மையும் உடையது. முடி உடல் வெப்ப நிலையை சீர்படுத்தவும், நகம் விரல் செயல்பாட்டில் அழுத்தம் கொடுக்கும் போது விரல் முனையை பாதுகாக்கவும் இருக்கிறது, மற்ற உடல்பாகங்கள் எவையும் வெட்டினால், வெட்டுபட்டால் வளருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதால் அதன் தேவைகள் இன்றியமையாத ஒன்றாகவே இயற்கை அமைப்பின் கூறுகளாகவே உள்ளன. ஆண்குறி மொட்டின் மென்மை பாதுகாக்கப்படவேண்டும் என்பதால் முன் தோலும் இயற்கையாகவே அமைந்திருக்கிறது. வெறும் உடல் தூய்மைக் கெடலாம் அதானால் அகற்றிக் கொள்வது நல்லது என்றால், ஒரு நாள் பல் துலக்காவிடினும் வாய் துர்நாற்றம் ஏற்படுவதையும், பற்சிதைவு ஏற்படுவதற்கு வாய்ப்பை ஏற்படுத்திவிடும். காய்சலைவிட பல்வலி கொடுமையானது, நீங்கள் தண்ணீர் இல்லாத ஊருக்குச் சென்றால் உங்களால் பல்விளக்க முடியாமல் போகலாம், வாயில் துர்நாற்றம் ஏற்படும், பல்வலி ஏற்படும், அதனால் முன்யோசனையாக பற்கள் அனைத்தையும் அகற்றிவிடுங்கள், உடல் நலத்துக்கு ஆரோக்கியமானது என்ற அறிவுறுத்தல் எவ்வளவு மடத்தனமோ அவ்வளவு மடத்தனம் விருத்த சேதனம் அனைவரும் செய்து கொள்வதே நலம் என்கிற அறிவுறுத்தல்.

நாள்தோறும் குளிக்கிறோம், ஆண்குறி முனையை மூடி இருக்கும் தோல் பகுதியை பின்னால் தள்ளிவிட்டு கழுவ எவ்வளவு நேரம் எடுத்துக் கொள்ளும் ? அதுமிகவும் கடினமான செயலா ? பால்வினை நோய் தொற்றுவதைத் தடுக்க அகற்றிக் கொள்ளலாம் என்றால் அப்படி விலைமகளிரிடம் செல்பவர் மட்டும் தானே அதையெல்லாம் செய்து கொள்ளவது நல்லது. நல்ல ஒழுக்கத்துடன், தூய்மையுடன் உடல் நலம் பேணும் ஆண்கள் அனைவருக்கும் பொதுவான ஒன்றாக விருத்தசேதனம் செய்வதே சரி என்பது தவறான கூற்றாக கருதுகிறேன். விருத்தசேதனம் செய்து கொள்ள வழியுறுத்த்துவது மதம் சார்ந்த வழியுறுத்தல் தவிர அதை மறைத்துச் சொல்லப்படும் தூய்மைக் காரணங்கள் சொற்பமே, உடல் தூய்மை அன்றாடம் பேணுவோருக்கு தேவையற்றதும் ஆகும். யூதர்களிடமோ, அவர்களுக்கு முன் காட்டுவாசிகளிடமோ உடல் தூய்மை பேனாத காரணத்தினால் இந்தப் பழக்கம் ஏற்பட்டு பின்னர் அது இனப்பழக்கமாகி, பின்னர் அந்தப் பகுதியில் தோன்றிய மதம் என்பதால் இஸ்லாமிய பழக்கமாக இவை ஏற்பட்டு இன்றும் தொடர்கிறது என்பதைத் தவிர்த்து இந்த வழக்கத்தின் தோற்றம் குறித்து மிகச் சரியான காரணங்கள் தெரியவில்லை. முன்தோல் (Foreskin) அகற்றிக் கொள்வது காது குத்திக் கொள்வது போல் மதவழிச் சடங்கு தான். யூத இனத்தில் தற்பொழுது விருத்தசேதனம் செய்து கொள்வது தவர்க்கப்படுகிறது.

எது இயற்கை, எது செயற்கை என்பதை மதம் தான் முடிவு செய்கிறது, இதற்கு எந்த ஒரு மதமும் விதி விலக்கு அல்ல.

Ref: http://www.cirp.org/ ; http://www.historyofcircumcision.net/

தொடரும்...

8 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 3

பகுதி 1 பகுதி 2

பண்டைய மேற்கத்திய ஐரோப்பிய கிரேக்க மற்றும் ரோமன் பேரரசுகளின் இல்லங்களில் ஆண்கள் பெண்களுடன் தனது வாரிசுகளை உருவாக்க வேண்டுமென்ற காரணத்தினால் கூடினார்கள். உடலின்பத்திற்கு பல ஆண்கள் மற்ற ஆண்களை சார்ந்திருந்தார்கள் என்பது வராலாற்று வழி அறியவருவதாகும்.

ஆசிய நாடுகளில் பெண்களை உயர்வாக நடத்தினார்களா ? ஆசிய ஆண்களின் ஆண்மையின் பெருமை அவனுடைய அறிவுத் திறமை, உடல்பலம் மற்றும் எத்தனை மனைவியைக் கொண்டிருக்கிறான், எத்தனை குழந்தைகளைக் கொண்டிருக்கிறான் என்பதாக கட்டமைக்கப்பட்டிருந்தது. மற்றபடி ஆசிய ஆண்களும் பெண்களை சமாக நடத்தி இருக்கவில்லை. போரில் தோற்கும் இனங்களது பெண்களை அடிமையாகவும், மணந்து கொள்ளவும் முற்பட்டனர். அரபு நாடுகளில் இன்றும் பலதாரமணத்துக்கு வருமானத் தடைகள் தவிர்த்து மனதளவில் கூட தடையேதும் இல்லை.

இந்திய சமூகச் சூழலில் இராமயணம் மகாபாரதம் போன்றக் கதைகளில் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தாலும் பலதார மணம் இயல்பாகச் சொல்லப்பட்டு இருக்கிறது. (சீதை) பெண்களை கவர்ந்து செல்வதும், (பாஞ்சாலி)அவமானப்படுத்துவதும் செயல்களைக் காட்டி இருப்பதால் பெண் ஆணுக்கு அடிமைப்பட்டவளாகவே இருந்ததாள் என்று சொல்லாமல் தெரியவரும் செய்திகள். பெண்கள் நிறைந்திருக்கும் அந்தப்புரம் இல்லாத அரண்மனைகளே இல்லை என்பது போல் தான் கதைகளில் படிக்கிறோம். இந்திய சூழலில் தாய்மைக்கு முதன்மைத்துவம் கொடுத்திருந்தாலும் பெண் ஆணின் சொத்து என்பதாக நினைத்து கணவனை இழந்த பெண்களை உடன்கட்டை ஏறச் செய்வது தமிழ் சூழலில் கூட இருந்ததற்கு சங்க இலக்கிய குறிப்புகள் உண்டு. ஆசிய ஆண்கள் பெண்களை பிள்ளை பெறும் இயந்திரமாகவே நடத்தினர். தமிழ்ச் சூழலில் பலதார மணம் தவறு என்பதை சிலப்பதிகாரமும், கம்பைராமாயணமும் வழியுறுத்தி கட்டுபடுத்த முயன்றது.

மேற்கு நாடுகளில் நாகரீக வளர்ச்சியின் காரணமாக பெண்கள் சமமாக நடத்தப்படும் நிலையும் வளர்ந்தது, வெள்ளையர்கள் எங்கெல்லாம் ஆட்சியைப் பிடித்தார்களோ அங்கெல்லாம் அவர்களைப் பார்த்து பிற இனத்தினரும் ஒருதார மணத்திற்கு கொஞ்சம் கொஞ்சமாக மாற்றிக் கொண்டனர். கூடவே அவர்களிடம் இருந்த தற்பால் புணர்ச்சி வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக பிற இனத்தினரிடையேயும் பின்னபற்றப் பட்டது. ஆனால் இன்றும் கூட கிரமாத்தினரிடையே 'தற்பால் புணர்ச்சி செயல்கள் நகரங்களில் இருக்கிறது' என்று செய்தியாகச் சொன்னால் உடனடியாக முகம் சுளிப்பார்கள். கிராமத்தினரைப் பொருத்த அளவில் அது நினைத்துக் கூட பார்க்காத செயல்.

மேற்கத்திய நாகரீகத்தில் நாகரீகம் என்பது தனிமனித சுதந்திரம் என்று முன்வைக்கப்பட்டு, அது முதன்மையாக்கப்பட்டதால் அவர்களிடையே முன்பு இருந்த ஓர் பால் சேர்க்கை குறித்த சமூகக் கருத்துகளில் மாற்றம் ஏற்படவில்லை, அல்லது மாற்றுக்கருத்தே ஏற்படவில்லை என்றும் சொல்லலாம். பிறரை துன்புறுத்தவில்லை என்றால் பொது இடத்தில் நிர்வாணமாக நடக்க நினைப்பவருக்கு அந்த உரிமை உண்டு என்றே சொல்லுவார்கள். தனிமனித சுதந்திரம் பற்றிய மேற்கத்திய நாடுகளின் கொள்கை பிறநாடுகளுக்குப் பிடித்திருந்தாலும் தற்பால் சேர்க்கைகள் சமூகத்தில் என்னவிதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கையில், முதலில் அவர்கள் திருமணம் செய்து கொள்வதில்லை, அப்படியே செய்து கொண்டாலும் குடும்பத்தில் நாட்டம் வைத்திருக்கமாட்டார்கள் என்று கருதி சமூக வளர்ச்சிக்கும் இன வளர்ச்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தும் என்றெல்லாம் எண்ணி, தற்பால் புணர்ச்சிக்கு ஆசிய நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்து மதங்களின் வழியான தடைகளை போட்டு வைத்திருந்தனர். வெளிப்படையாக் தற்பால் சேர்க்கையினர் செயல்படாவிட்டாலும், அரசாங்கம் எவருடைய படுக்கை அறையையும் கண்காணிக்கும் அளவுக்கெல்லாம் ஆற்றல் பெற்றிருக்கவில்லை என்பதால் தற்பால் புணர்ச்சியினர் மறைமுகமாகவே இயங்கி வருகின்றனர்.

தற்பால் விருப்பர்கள் மறைமுகமாக செயல்படுவதில் பல்வேறு சிக்கல்கள் உண்டு. என்றாவது ஒரு நாள் வெளியே தெரியும் போது அது அவர்கள் சார்ந்துள்ள குடும்பத்திற்கே பெரிய தலைகுனிவு ஏற்படுத்தி உறவுச் சிக்கலை ஏற்படுத்துவதுடன், அத்தகைய விருப்பர்கள் தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு மன உளைச்சல்களை ஏற்படுத்திவிடும். நல்ல உடல் நிலையுடன், பொருளாதாரக் குறை எதுவும் இல்லாத ஆண் ஒருவர் தற்கொலை செய்து கொண்டால் 1. காதல் / திருமணம் தோல்வி, 2. இரத்த சொந்தங்களிடம் / சிறுவர்களுடன் முறையற்ற பால் உறவு, 3 வெளியே தெரிந்த போன தற்பால் தொடர்புகள் இவற்றில் ஒன்று காரணமமக இருக்கும்.

பல்லாண்டு பழகிய மிகவும் நெருங்கிய நண்பர் ஒருவர், வெளிநாடு செல்வதை முன்னிட்டு அவரை சந்தித்து, ஒரு மாலை பொழுதில் ஒரு உணவகத்தில் சிற்றுண்டி சாப்பிட்டுக் கொண்டே

"நாம நெருகமானவர்கள் தான் என்றாலும் என்கிட்ட எதாவது மறைத்து இருக்கியா ?" என்று கேட்டேன்

யோசித்துப் பார்த்துவிட்டு மெதுவாக

"ஆமாம்.....ஆனால் அதை நான் வெளியே சொல்ல முடியாது" என்றான்

"ம் நான் ஊகமாகச் சொல்கிறேன்....நண்பர்களிடம் மறைக்கக் கூடியது தனிப்பட்ட செக்ஸ் நடவடிக்கை அதுவும் சொல்லக் கூச்சமான பிரச்சனையாகத் தான் இருக்கனும்" என்றேன்

என்னை வியப்புடன் பார்த்தான்

"ஆமாம்.....நேரம் கிடைக்கும் போது சொல்கிறேன்..." என்றாலும், தயக்கத்துடன்

"தனித்து இருக்க வேண்டிய சூழலில் என்னுடைய 19 வயதில், என்னைவிட ஒரு வயது குறைந்த எனக்கு தங்கை முறை உள்ள சித்தியின் மகளுடன்.... முறை தவறி நடக்க முயற்சித்தேன்... அவள் இணங்கவில்லை, அதுவுமில்லாமல் வீட்டில் அனைவரிடமும் சொல்லிவிட்டாள் தெரிஞ்சு போய் அவமானமாகிவிட்டது... முழுதாக தப்பு செய்யவில்லை என்றாலும் 'தங்கை முறை உள்ளவளிடம்....' அதை மறந்து நான் நார்மலாக ரொம்ப நாள் ஆச்சு" என்று சொன்னான்

வெகு சிலரே சட்டசிக்கல் இல்லாத அல்லது சிக்கலில் சிக்காத முறையற்ற, பால் உறவுகள் வெளியே தெரிந்துவிட்டால் அவமானத்துடன் மன அழுத்தத்துடன் மீண்டு வருவார்கள். பலர் தற்கொலை செய்து கொள்வதுண்டு. ஆண் பெண் ஈர்ப்புகளுக்கே சமூகம்/குடும்ப நல நோக்கில் இவ்வளவு சமூகக் கட்டுப்பாடு என்றால் தற்பால் புணர்ச்சி இந்திய சமூகத்தில்? முதலில் சமூகம் ஏற்றுக் கொள்கிறதோ இல்லையோ தன் குடும்பத்தைச் சார்ந்தவர்களிடம் கூட அதைப் பற்றி மூச்சுவிட முடியாது என்பதே அவர்களின் நிலை. உளவியல் பூர்வமாக அறிவுறுத்தி தடுக்க வேண்டியதை உணர்ச்சி பூர்வமாக அணுகினால் பெரும் சிக்கலும் உயிர் இழப்பும் தான் ஏற்படும். இரு பருவ வயதினரிடையே விருப்பத்துடன், சம்மதத்துடன் கூடிய தற்பால் புணர்ச்சி தவறா ? என்பதை தொடர்ந்து பேசுவோம்

தொடரும்...

பின்குறிப்பு : சமூக சூழலைப் பற்றிப் பேச உளவியல் படித்தவராக இருக்க வேண்டியதில்லை, எதையும் வழியுறுத்தவோ, அறிவுரையாகவோ சொல்லவில்லை, கண்டது கேட்டது படித்தது என்ற வகையில் சில மேற்கோள்களுடன் எழுதிவருகிறேன். தொடரில் தவறான தகவல்கள் / தகவல் பிழைகள் இருந்தால் குறிப்பிடும் படிக் கேட்டுக் கொள்கிறேன்.

7 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 2

பகுதி 1
ஆசிய கலாச்சாரம் இவை தான் என்று சீனக்கலாச்சாரம் மட்டும் பார்க்கப்படுவது, காட்டப்படுவது போலவே, ஐரோப்பிய கலாச்சாரக் கூறுகளின் மாற்றங்களைத் தான் உலக வாரலாறுகளில் மிகுதியாக பதிய வைக்கப்பட்டு இருக்கின்றன. உலகம் நாகரீகம் என்பது ஐரோப்பிய நாகரீகமாக பார்பதும், வலியுறுத்துவதும் ஐரோப்பிய வெள்ளையின அரசியல். ஓரினபுணர்ச்சி பற்றி வரலாறுகளில் என்ன கூறப்பட்டு இருக்கிறது என்பதற்கு வெள்ளை இன வரலாறுகளைப் பார்த்து அதற்கான எடுத்துக்காட்டுகள் காட்டப்படுகிறது. குறிப்பாக அலக்சாண்டர் போன்ற மாவீரர்களும் அவனது வழிகாட்டி அரிஸ்டாட்டில் போன்ற தத்துவமேதைகளும் தற்பால் புணர்ச்சியில் நாட்டம் கொண்டவர்கள் என்று வரலாற்றில் பதியப்பட்டு இருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதில் வெளிப்படுத்தப்பட்ட ஒரு சில உண்மைகளில் அவர்கள் காலத்தில் பெண்ணை இனப்பெருக்க பாலினமாகமட்டுமே பார்த்திருக்கிறார்கள். பெண்ணிடம் கூடுவது தனக்கான வாரிசுகளை உருவாக்கி கொள்வதற்காகத் தான் அதாவது வாடகைத் தாய் என்கிற நிலையில் தான் பெண்களின் நிலை இருந்திருக்கிறது என்பதாகச் சொல்லுகிறார்கள். இதற்கு முக்கிய காரணம் பேரரசுகளை அமைப்பது ஆணின் பலத்தினாலும் அறிவினாலும் மட்டும் நடக்கிறது என்பதால் 'ஆண்' என்பவன் மனித இனத்தின் உயரிய படைப்பு என்கிற எண்ணம் ஒவ்வொரு ஆண்மகனின் எண்ணங்களிலும் இருந்திருக்கக் கூடும்.

உடல் பலம் ரீதியாகவும், குழந்தை பெற்றுக் கொண்டு பேணி வளர்க்கும் பொறுப்புகள் என்றும் இருப்பதால் சமூகம் மற்றும் பேரரசு, அரசு அமைப்பில் பெண்களின் பங்கு என்பதே இல்லை. அடிமையாகவும், குழந்தை பெரும் பாலினமாகத்தான் பெண்கள் நிலை இருந்திருக்கிறது. பெண்நிலை கீழாக இருந்ததால் உடலுறவு 'இன்பம்' தரக்கூடியவள் என்கிற தகுதியைக் கூட அவளுக்கு இருப்பதாகவோ, அப்படி ஒரு தகுதியைக் கொடுக்கவோ ஆண் சமூகம் தயாராக இருந்ததில்லை. கிளர்ந்தெழும் பால் உணர்வுகளை தனித்துக் கொள்ள ஆண்கள் ஆண்களையே நாடும் அவல நிலையைஅவர்களே விரும்பியும், வழியின்றியும் ஏற்படுத்திக் கொண்டிருந்திருக்கிறார்கள்.

நாட்டை வளப்படுத்தவும், வீரத்தை உலகரிய செய்யவேண்டும், தன்னைச் சார்ந்தவர்களின் ஆளுமையைப் பரப்ப வேண்டும் என்பதற்கு எளிய வழிகளாக பேரரசுகளும், மன்னர்களும் நினைப்பது பிறநாட்டினரிடம் போரிட்டு அவற்றைக் கைப்பெற்றி தனது ஆளுமைக்குக் கொண்டுவருவதைத் தான். அப்படிச் செய்வதன் மூலம் வீழ்ந்த நாட்டின் உலோக செல்வங்களும், அடிமைப்பட்ட மன்னன் செலுத்தும் வரியும் தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருக்கும், இதனால் பண்டையகாலத்தில் உலகங்களிலும் இருந்த மன்னர் ஆட்சிகள் எப்போதும் போருக்கான ஒத்திகையும், போரையும் தொடர்ந்து செய்துவந்திருக்கின்றன. வடக்கு ஆசியாவில் சீன மன்னர்கள் ஆட்சியைப் பார்த்தால் பெரும்பாலான மன்னர்கள் இயற்கை எய்தியதே இல்லை, போரில் சண்டையிட்டே இறந்திருக்கிறார்கள். சீனாவின் பண்டைய வரலாறுகள் சண்டைகளும் அரசு எழுச்சி வீழ்ச்சி என மாறி மாறி நிகழ்ந்ததை அறிய முடிகிறது. (From the Qin dynasty to the Qing dynasty, there have been nearly 400 Emperors - சீனாவின் மெகாசீரியல்களுக்கு இவைதான் கதைக் களம்) இவை ஆசிய அளவில் சீனப் பேரரசுகள் கம்போடியா, தாய்லாந்தைக் கூட ஆளுமைகளுக்கு கீழ் கொண்டு வந்திருக்கிறது.

ஐரோப்பிய அலக்சாண்டரின் பேரரசு இந்தியாவின் வடமேற்குவரை வெற்றிக் கொள்ள படையெடுக்கப்பட்டு இருக்கிறது. பண்டைய பேரரசுகளில் ஆண்களின் முதன்மைத் தொழிலே போர்வீரராக அரசனின் படையில் இருப்பது தான். எந்தகாலமும் போரும் ஒத்திகையாக இருக்கும் போது ஆண்கள் பால் உணர்வுகளின் தீர்வுகளாக இன்னொரு ஆணையே நாடவேண்டிய கட்டாயத்திற்குள் தள்ளப்பட்டதற்கு ஏதுவாக அமைந்திருந்தது ஏற்கனவே அவர்கள் பெண்களை போகப் பொருளாகவோ, பொருட்டாகவோ நினைத்திருக்கவில்லை என்கிற உளவியல் காரணிகள். எனவே பண்டைய ஐரோப்பிய சமூகத்தில் ஓர்பால் ஈர்ப்பு என்பது இயல்பாக இருந்ததற்கு பெண்ணடிமைச் சமூக சூழலும், ஆண்கள் எப்போதும் போர்களத்திலும், போர் ஒத்திகையிலும் இருந்ததது ஆகும். மும்முறை பெண்களை திருமணம் செய்து கொண்ட அலெக்சாண்டருக்கு ஆண்களின் மீதான நாட்டம் இருந்ததாக வரலாறு எழுதியவர்கள் சொல்கிறார்கள்

பண்டைய ரோமாபுரியில் குடும்ப அமைப்பு இல்லை, அனைவரும் அப்படித்தான் என்று ஒட்டுமொத்தமாக, தவறாக குறிப்பிட வில்லை. தற்பால் புணர்ச்சி ஐரோப்பிய கலாச்சாரத்தில் அனுமதிக்கப்பட்ட, விரும்பபட்ட ஒன்றாக இருந்திருக்கிறது. அதை வைத்து பிற இனங்களில் இருக்கும் தற்பால் புணர்ச்சியினர் விருப்பர்கள், ஆதரவாளர்கள் தங்களுக்கு ஆதரவாக பண்டைய ஐரோப்பியக் கலாச்சாரத்தில் ஏற்கனவே இருந்த ஒன்று தான் சுட்டிக்காட்டி பேசுவது சரியான வாதமா ? அதற்கு முன்பு ஆசிய, அரபு நாடுகளின் பண்டைய அரசியலைப் பார்க்க வேண்டும். பிறகு தனிமனிதனின் பால் வேட்கைத் தனிப்பு உறுப்புகளின் புணர்சியுடன் மட்டும் தொடர்புடையதா ? புணர்ச்சியின் நோக்கம் இனப்பெருக்கம் மட்டும் தானா ? என்பதையும் பற்றிப் பேசுவோம்.

ஐரோப்பிய பேரரசுகள் பற்றிய ஆங்கில பரிந்துரை பதிவு இங்கே

தொடரும் ...

6 ஜூலை, 2009

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1

எந்த ஒரு இயக்கம் என்றாலும் அதில் ஈர்ப்புத் / விலக்குத் தன்மை அந்த இயக்க விசையில் இருக்கும். முழுப் பரவெளிக்கும் (பிரபஞ்சம்) பொருந்தும் உண்மை. உயிரினங்கள் அனைத்தின் தொடர்சியும் இனப்பெருக்கம் மூலமே நடைபெறுகிறது. வாழை மரம் போன்ற தாவிர வகைகள் மற்றும் நுண்செல்கள் தவிர்த்து மாற்றுப் பாலினம் இன்றி இனப்பெருக்கம் நடைபெறுவது உயிரினங்களின் வகைகளில் மிக மிகக் குறைவே. இயற்கை அமைப்புப் படி ஒரு இனத்தில் இருபால் பகுப்புகளும் இனப்பெருக்கத்திற்கு அவை இரண்டின் பங்களிப்புகளும் இணைந்தால் தான் உதவ முடியும் என்பது இயற்கை விதியாக இருக்கிறது.

உயிரினங்களில் தாய்மை இனப்பெருக்கத்துக்கு பொறுப்பேற்றுக் கொள்வதுடன் பெருக்கும் தன் இனங்களை தன்னிச்சையாக செயல்படும் வரை காப்பதற்கும் பொறுப்பேற்றுக் கொள்வதும் அதே இயற்கைத் தன்மை வழி சொல்லிக் கொடுக்காமல் நடைபெறும் ஒரு வியப்பு. ஒரு சில உயிரினங்களில் குட்டிகளை, குஞ்சுகளை ஆண் இனமும் பேணிக் காப்பது உண்டு. அவை பெரும்பாலும் இணை இணையாகவே வசிக்கும். பெரும்பாலும் அனைத்து உயிரினங்களிலுமே வளர்ப்பது தாயின் செயலாகவே நடைபெறுகிறது. அவ்வாறு செயல்படுவதற்கு அவற்றின் உடல்கூறில் அமைந்துள்ள பெண்பால் மரபியல் அமைப்பு என்பதைத் தவிர்த்து அந்த தாய்களுக்கு தனிப்பட்ட பலன் எதுவுமே இல்லை. தனது கடமை என்ற அளவில் இனப்பெருக்கத்துக்கு துணை புரிவதுடன் வளர்ப்பதிலும் பங்காற்றுகின்றன. இனப்பெருக்கத்திற்கு உதவும் ஆண் உயிரினங்களுக்கு சிற்றின்பங்கள் கிடைக்கின்றன. அவற்றிற்கு இன்பம் ஏற்படுகிறதா ? யார் கண்டது ? அவை அவற்றை விரும்பிச் செய்கிறதா ? உந்துதலால் செய்கிறதா ? என்று பார்த்தால் ஆண் இனங்கள் இன்பம் அடைவதாகத் தான் கொள்ள முடிகிறது. கன்றுக் குட்டியின் தாடையை, முதுகை வருடிக் கொடுத்தால் அது காட்டிக் கொண்டே இருக்கும், எனவே உயிரினங்களுக்கு உடல் பசிக்கு உடனடியாக கிடைக்கும் உணவுகளில் ஏற்படும் நிறைவு போலவே அவைகளுக்கும் பல்வேறு உணர்வுகளும் இன்ப நுகர்சிகளும் தேவையாக இருக்கிறது என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டும்.

மனித இனத்தின் சிக்கல், ஆண் சமூகக் கட்டமைப்புதான். சமூகமாக வாழ்வதும், அதை அடையாளப்படுத்திக் கொள்வதும், அதையே முன்னிலைப் படுத்துக் கொள்வ விளைவதும் இதன் தொடர்ச்சிக்கு சந்ததிகளைப் பெருக்கிக் கொள்ளும் பொருட்டு தங்கள் சமூகப் பெண்களை கட்டுப்பாட்டில் கொண்டுவந்தனர். ஆண் பெண் வேறுபாடுகள் சமூகத்தின் முதன்மைக் காரணியாக இருக்கின்றன. ஆண் பெண்ணிற்கு இயல்பாக இருக்க வேண்டிய ஈர்ப்பு, இந்த ஆணியக் கட்டமைப்புகளினால் ஆட்டம் கண்டு போனாதால் ஏற்பட்டதே மனித சமூகத்தில் ஓரின சேர்க்கைக்கான ஈர்ப்புகள் என்று கருதுகிறேன். பெண்ணை அடிமைப் படுத்ததாத ஆதிவாசிகளிடம் ஓரின ஈர்ப்புப் பழக்கங்கள் கிடையாது. நாகரீக மக்களிடம் தான் இவை மிகுதியாக இருக்கின்றன. இதற்கு முக்கிய காரணம் தன்னால் குடும்பமாக இருக்க விருப்பமின்மை, தன்னுடைய உணர்ச்சிகளே முதன்மை வாய்ந்தவை என்கிற தன்னலம், இவை எதுவும் இல்லாமல் மீறி ஒருவர் ஓரின ஈர்பாளர் ஆகுவதற்கு மற்றொரு காரணம் சிறுவயதில் ஒத்த பாலினரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளானதால் ஏற்பட்ட பாதிப்பு. ஒத்தபாலின நாட்டத்தில் திருநங்கையரை தவிர்த்துவிட்டு பார்த்தால்,

பொதுவானவர்களிடம் ஆணுக்கு ஆணோ, பெண்ணுக்கு பெண்ணோ ஈர்ப்புகள் இருப்பது இல்லை என்றே சொல்ல முடியாது, பெரும்பாலும் தலைமை விசுவாசிகள் தலைவனின் செயல்பாட்டின் வழி தலைவன் மீது ஈர்ப்பு கொண்டிருப்பார்கள், ஆனால் அவை பாலியல் வேட்க்கையில் அடங்கும் ஈர்ப்பாக இருக்காது. அழகான ஆண்கள் யார் என்று கேட்டால் ஓரின பால் நாட்டம் இல்லாத ஆண்கள் கூட சில ஆண்களைக் குறிப்பிட்டு இவர்களெல்லாம் அழகானவர்கள் என்று சொல்வார்கள். அது அவர்களை மனதுக்குள் பாலியல் சார்ந்த ஈர்பாக நினைத்துக் கொள்கிறார்கள் என்று பொருள்படாது. மற்றபடி அவர்களின் உடலமைப்புடன், திறமை, நடவெடிக்கை ஆகியவற்றில் எதோ ஒன்றில் அவர்களைப் பிடித்திருக்கிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம். இவ்வகை ஒத்தபாலினர் ஒருவர் மீதான ஈர்ப்பு அவருடைய திறமையின் காரணாமாக ஏற்படும் ஒருவகை ரசனைத் தனமான ஈர்ப்பு அதன் பெயரில் அவர் மீது வைக்கும் அன்பு, அது மிகுதியாகும் போது வெறித்தனமான ரசிகர் ஆகிவிடுவார்கள். மற்றபடி பாலியல் ஈர்ப்பு என்ற உணர்வுக்குள் ஒத்த பாலினர் மீது கொண்டுள்ள ரசனை வந்துவிடாது, எவை எவையெல்லாம் தற்பால் நாட்டத்தில் வராது என்பதற்காக இதைச் சொல்கிறேன்.

ஓரிணப் புணர்ச்சி விருப்பர்கள் ஒத்தப் பாலினரை விரும்புவதற்கான காரணங்கள் சமூக, உளவியல் காரணிகளை உள்ளடக்கியது. ஒரினப் புணர்ச்சியின் மீதான நாட்டம் சிலருக்கு ஏற்படுவது இயற்கைதான், அவர்களின் செயல்களுக்கு அங்கீகாரம் கொடுக்கலாம் என்கிறார்கள்,
சில நாடுகளில் கொடுத்தும் இருக்கிறார்கள். ஓரின புணர்ச்சி நாட்டம் இயற்கை என்று சொல்வதை ஏற்றுக் கொள்வது கடினாமாக இருக்கிறது, மனித வாழ்க்கையே இயற்கைக்கு எதிரான பல்வேறு போராட்டம் தான், இயற்கை நமக்கு எதிராக இருக்கும் போது மாற்றி அமைத்துக் கொண்டு அல்லது அதிலிருந்து பாதுகாத்துக் கொண்டே வாழ்கிறோம். ஓர்பாலின ஈர்ப்பு இயற்கை என்றாலும் அதைத் தொடர்வது சமூகத்திற்கும், இயற்கையில் அமைந்த ஆண்/பெண் உடலமைப்புகள், இனப்பெருக்கம் மனித இனத் தொடர்ச்சி இவற்றிற்கு எதிரானது என்றே கருதுகிறேன். இவை பற்றி தொடர்ந்து பேசுவோம்

தொடரும்...

பகுதி 2
பகுதி 3
பகுதி 4
பகுதி 5
பகுதி 6
பகுதி 7

5 டிசம்பர், 2008

காமம் மற்றும் பாலுறவு புனிதமா ?

இதுபற்றி வெளியே பேசினாலே 'பாபம்' என்பதாகச் சொல்லப்படுவதாலேயே அதுபற்றிய அறியாமையிலும் ஆர்வத்திலும் சிலபல தவறுகள் நிகழ்ந்துவிடுகிறது. 'காமம்' என்பதே மனித இன சாபமாகவே நினைக்க வேண்டி இருக்கிறது. காமமின்றிய வாழ்கை நினைத்துப் பார்த்தால் பலர் தற்கொலை கூட செய்து கொள்வார்கள். காமம் என்பது தெய்வீகம் என்றெல்லாம் கட்டமைக்கும் போதே சிலர் பக்தி / ஆன்மிக வழியில் காமம் என்பது புனித மற்றது அதாவது காமம்(பாலுணர்வு), குரோத (சினம்), லோபம்(பேராசை) , மோகம் (பெரும்பற்று / ஆசை) மற்றும் அகங்காரம் (செருக்கு) எனும் ஐந்து விகாரங்களில் (பஞ்சவிகாரங்களில்) ஒன்றாக அதாவது மனிதனின் தீய குணங்களில் ஒன்றாகவே காமம் சொல்லப்படுகிறது.

காமம் என்பது மனம் சார்ந்த உணர்வு என்றாலும் அன்பு, கருணை, ஈகை, பொறுமை போன்ற உயர்ந்த குணம் சார்ந்த உணர்வுகளில் ஒன்றாக வைக்க முடியாத தீய உணர்வு என்பதால் தான் காமத்தை முறைப்படுத்துதல் என்பதில் திருமணம் என்கிற சடங்கு மிகத்தேவை என்றாகியது. இறை வழிபாடு என்கிற இறைத் தொடர்பில் காமம் (வழிபாட்டின் போது காம சிந்தனைகள்) என்பது விலக்கப்பட்டதாகவே அனைத்து சமயங்களும் வலியுறுத்துகின்றன.

காமம் மனித இன சாபமாக நினைத்தாலும் கூட அதனை ஆண்/பெண் இருவருக்கிடையேயான அன்பிற்கு விதையாக மாற்றிக் கொண்டதில் மனிதன் ஓரளவு அந்த (தீய) உணர்வை கட்டுப்படுத்தி, முறைப்படுத்திக் கொள்வதில் வெற்றி பெற்றான் என்று கண்டிப்பாகச் சொல்ல முடியும். காமம் என்பது பலர் சொல்வது போல் புனிதம் என்றால் அது புனிதம் என நினைக்கப்படுவது தம்பதியினருக்கு இடையே நடைபெறும் உடலுறவு குறித்து மட்டுமே என்ற அளவில் தான் புரிந்து கொள்ளப்பட வேண்டும்.

காமம் என்பது தனிப்பட்டவர்களின் இச்சை சார்ந்த உணர்வு, தவறு அல்ல என்று சொன்னாலும் அதற்கு வடிகாலாக (பலருக்கு) இன்னொருவர் தேவைப்படுவதால் அது தன்னை மட்டுமே சார்ந்த ஒரு உணர்வு என்றுச் சொல்ல முடியாது. பிள்ளைப் பேற்றிற்றாக இயற்கை ஆக்கிவைத்த ஆண் / பெண் ஈர்ப்பு என்ற உணர்வு அன்றாட தேவையில் ஒன்றாக மாறிப்போனது பரிணாமத்தின் கூறுகளா என்று ஆராய்ந்துப் பார்க்க வேண்டிய ஒன்று. ஏனென்றால் மனித இனத்தைத் தவிர்த்து மற்ற உயிரனங்களுக்கு மனம் சார்ந்த தேவையாக காமம் இருப்பது இல்லை. விலங்குகளின் பருவ வயதிற்கு பிறகு, அவைகளின் அன்றாட எண்ணங்களிலும் அவை இருப்பது இல்லை. தாய்மை அடைய தேவையான பருவ காலங்களில், அதன் குறிப்பு அறிந்து, தேவை கருதியே மற்ற உயிரனங்களிடம் உடலுறவு நடைபெறுகிறது. காமம் என்பது உடல் சார்ந்த தனிமனித தேவையாகிவிட்ட பிறகு ஆண்/ஆண், பெண்/பெண் என்பதுகூட தவறு அல்ல என்பதாகவே சமூகம் காமம் குறித்த கருத்துக்களை மாற்றிக் கொண்டுள்ளது

எவையெல்லாம் முதன்மையான தேவை (Demand) , அவை இல்லாமல் இருக்க முடியாது (must) என்ற நிலை ஏற்படுகிறதோ அங்கே தான் முறைகேடுகளும் நடைபெற ஆரம்பிக்கின்றன. அவை சந்தைப் படுத்துவதில் நகர்ந்து வியாபாரமாக மாறுகிறாது. பாலியல் என்கிற தொழில் உறுவானதற்குக் காரணம் காமம் தவிர்க்க முடியாது என்று ஆகிப் போனதால் தான் என்றே நினைக்க வேண்டி இருக்கிறது. புனிதம் புனிதம் என்று சொல்லப்படுகின்ற காமம் அன்புடன் சேர்ந்தால் மட்டுமே புனிதம் என்பதாகச் சொல்லப்படுகிறது, பலரும் நாடிய அதே புழையை அதாவது பாலியல் தொழிலாளிடம் செல்வது கூட சில நாடுகளில் குற்றமாகக் கருதப்படுகிறது, காமவெறி அதாவது பாலியல் வன்புணர்வாக அது மாறும் போது அவை குற்றமாகக் கருத்தப்பட்டு தண்டனையும் கிடைப்பதால், காமம் பாலுறவு என்பதற்கு எவ்வகையான புனிதத் தன்மையும் சமூகம் கொடுத்துவிடவில்லை.

உலகில் எந்த ஒரு செயலுக்கும் மனிதனுக்கு துணைத் தேவைப்படாவிட்டாலும், இதற்குத் துணை கண்டிப்பாக தேவைப்படுவதால் காமம் உள்ள மனிதன் எவரையுமே சுதந்திரமானவர், பிறரின் சுதந்திரத்தில் தலையிடாதவர் என்று சொல்லிவிட முடியாது. எங்கோ ஒருவர் பாலியல் தாகத்திற்காக கட்டிய மனைவியை விட்டு வேறொருபவரை நாடுபவராகவும், பெற்றப் பிள்ளைகளை விட்டுவிட்டு கள்ளக் காதலனுடன் ஓடுவதால் மட்டுமே காமம் புனிதமற்றது என்று சொல்லிவிடமுடியாது என்று கூடச் சிலர் சொல்லலாம். ஆனால் அவற்றின் தேவை சரிவரக் கிடைக்காதவர்கள் பலரும் சரியான சந்தர்ப்பம் கிடைத்தால் தவறு செய்பவர்களாகவே, மாற்று நாடுபவர்களாகவே மாறுவார்கள். ஆண்கள் என்று பார்த்தால் இதற்கு தூணிபவர்களின் விழுக்காடு மிகுதி. திருமணமானவர்களின் காமத்தின் தேவை என்பது 'இல்லறக் கடமை' என்ற பெயரில் காமத்தை பலர் புரிந்து கொள்ளாதிருந்தால் சமூக ஒழுக்கம் கூட சீரழிந்திருக்கும். கட்டுப்படுத்தப் பட்ட காமத்தினால் தான் சமூக ஒழுக்கம் காக்கப்படுகிறது.

*****

தனி மனிதனின் காமம் என்பது மற்ற நல்ல உணர்வுகளைவிட, குணங்களைவிட மேலானது என்ற கருத்து திணிக்கப்படுவதாலேயே 60 வயதுக்கும் மேலான ஆண்கள் கூட அதன் மீது தீராத மோகம் கொண்டு, 'முடியாத' போது வயக்ராவரை சென்றுவிட்டார்கள், ஆனால் மெனோபாஸ் எனப்படும் மாதவிலக்கு சுழற்சிக்கு பிறகு பெண்களுக்கு இதில் ஆர்வம் இருப்பதில்லை, கணவர் முறைதவறி சென்றுவிடக் கூடாது என்பதற்க்காக பெண்கள் மாதவிலக்கிற்கு பிறகு அனுமதிக்கிறார்கள் என்பதை பல ஆண்கள் புரிந்து கொண்டவர்களாக இல்லை. 60 வயதில் குறி எழுச்சி அடையாமல் போனால் வாழ்வே போய்விட்டதாகவே ஆண்கள் புலம்புவதால் பாலியல் மருத்துவர்களின் வருமானம் பலமடங்குப் பெருகிறது, மேலும் போலி மருத்துவர்களிடம் ஏராளமான பணத்தை இழக்கிறார்கள், சிறுமிகளுடன் உறவு கொண்டால் சரியாகிவிடும் போன்ற தவறான கருத்துகளையெல்லாம் கூட நம்புகிறார்கள்.

"இல்லற வாழ்வை நிறைவுடன் நடத்தியவர்களுக்கு 50 வயதுக்கு மேல் காம உணர்வென்பது அன்றாடத் தேவையின் ஒன்றாக இருப்பது இல்லை, அன்பும், பாசமும் பெருக்கெடுத்த வாழ்க்கையில் காமம் பற்றிய சிந்தனைகள் கூட ஏற்படுவதில்லை" - 'இந்த நாள் இனிய நாள்' நிகழ்ச்சியில் சுகிசிவம் குறிபிட்டார்

உண்மைதான், தம்பதியினரிடையே உண்மையான அன்பு வெறும் காமத்தால் கட்டமைக்கப்பட்டால் அது தகற்வதற்கு நாட்கள் எடுக்காது. காமம் என்பது கழிவை வெளியேற்ற ஏற்படும் உணர்வு போன்ற அடக்க முடியாத உணர்வு, ஏற்படும் கிளர்ச்சியில் மட்டுமே வேறுபாடு. மற்றபடி காமம் என்பது புனிதத் தன்மையோ, தவிரக்க முடியாத ஒன்றோ அல்ல. அது இல்லாவிட்டால் வாழ்க்கை நரகம் என்பதெல்லாம் அன்பை அறியாதவர்களின், உணராதவர்களின், முட்டாள்களின் பேச்சு.

காமம் என்பது ஆண் / பெண் இருவருக்கும் பொதுவான ஒரு உணர்வென்றாலும் 'பெண்ணாசை' அதாவது பெண்களின் மீதான ஆசை என்றே அதை வகைப்படுத்தி இருப்பதும் கூட, ஆணிய சிந்தனையில் காம உணர்வின் விளைவுகளை பெண்களின் மீதான பழியாக போடும் ஆண்களின் தாழ்வுணர்வுச் சொல்லாக கருத முடிகிறது.

காமம் புனிதமற்றது என்ற சமயவாதிகளும், ஆண்களின் பிரம்மச்சாரியத்தை உயர்வாகக் கருதினார்களேயே யன்றி, கணவனை இழந்து பெண்களுக்கு, அவளுக்கு இருக்கும் வழியெல்லாம் அடைத்துவிட்டு கைம்பெண் என்கிற பட்டதைக் கொடுத்து ஓரமாக ஒதுக்கி வைப்பட்டதையும் பார்க்க வேண்டும். மறுமணம் என்ற பேச்சுக்கே இடமின்றிய காலகட்டத்தில் கணவனை இழந்த ஒவ்வொரு பெண்ணும் 'யோகியாகவே' வாழ்ந்திருக்கிறாள் என்பதை மறுக்க முடியுமா ? காமம் நல்ல உணர்வென பெண்களும் கருதி இருந்தால் சமூகம் என்றோ சீர்கெட்டுப் போய் இருக்கும்.

காமம் என்பது மனித இன சாபம் தான். திருமணம் ஆனவர்களாக இருந்தாலும் காமம் மட்டுமே வாழ்க்கை என்று நினைப்போர், தன் இணையர்களில் ஒருவர் சரியாக ஒத்துழைக்காவிடில் கள்ளக் காதலன் / காதலியுடன் ஓடிப்போவார்கள்.

3 டிசம்பர், 2008

தே... பையன் மற்றும் கருத்தியல் !

சுத்தியல், பொரியல், பொறியியல், அவியல் எல்லாம் எல்லோருக்கும் தெரியும். கருத்தியல் என்றால் என்ன ? வலைப்பதிவுக்கு வரும் முன் இப்படி ஒரு கருமத்தை (கருமம் என்றால் செயல்/ செயல்பாடு என்ற பொருளும் உண்டு) நான் கேள்விப்பட்டதே இல்லை. வலைப்பதிவு ஊடகம் வழியாக பலபுதிய சொற்களையும் அவை எங்கு கையாளப்படுகின்றன என்பதையும் என்னப் போலவே பலரும் கற்றுக் கொண்டுள்ளனர். ஒருவர் மீது வீசப்படும் சொற்களைக் கூட ஆராய்ந்து அந்த சொல் எப்படி வந்தது, உண்மையிலேயே அந்த சொல் எதிரியின் செயலைத் தாக்குகிறதா ? அல்லது வெறுமனே உணர்ச்சியைத் தூண்டுகிறதா என்றெல்லாம் சொல்லுகிறார்கள்.

"தேவடியாப் பையன்" என்று ஒருவரைத் திட்டும் போது சொல்லப்படும் "தேவடியா" என்ற சொல் பெண்மையை மட்டுமே இழிவு படுத்தும் சொல், பாலியல் தொழில் என்பது வாடிக்கையாளர்கள் இல்லை என்றால் இருக்கவே இருக்காது. வாடிக்கையாளர்களைப் பற்றி எதுவுமே சொல்லாமல் அதைச் செய்யும் பெண்களை மட்டும் இழிவாக சித்தரிக்கும் சொல்தான் விபச்சாரி, தேவடியா போன்ற சொற்களெல்லாம். ஆனால் அந்த பெண்ணை வைத்து வியாபாரம் செய்யும் ஆணை "மாமா அல்லது மாமா பையன்" என்று உறவுப் பெயரிலேயே குறிப்பிடுகிறார்கள், இழிதொழில் செய்பவன் ஆண் என்றால் அவனை உறவு பெயரில் கூட அழைப்பதற்கு சமூகம் தயாராகிவிடுகிறது. பாலியல் தொழில் செய்யும் பெண்ணுக்கும் ஆணுக்குக் கொடுக்கும் பெயர்களின் தன்மைகள் இப்படித்தான் முரண்பாடாக இருக்கிறது.

ஒருவனை ஆபாசமாகத் திட்டுவதற்கு அவனது தந்தையை கேவலப்படுத்த முடியாது என்பதால் தாயின் ஒழுக்கத்தை கேள்விக்குறியாக்கி சொல்லாக வீசுவதே "தேவடியா பையன் / தேவடியா மகன்" என்று சொல்வதன் நோக்கமாகும். தந்தை பல பெண்களுடன் உறவு வைத்திருந்தாலும் அதை பெருமையாக நினைக்கும் சமூகம், தாய் என்றால் அவள் கற்பின் சொரூபமாகத்தான் இருக்க வேண்டும் என்ற புனிதம் கற்பிக்கப்படுவதால், அப்படி ஒரு சொல்லைச் சொல்லி திட்டுவதன் கெட்ட நோக்கமும், திட்டுவாங்கியவரின் எதிர்வினையாற்றுவதும் ஒரே புள்ளியில் சந்திக்கிறது. பெண்ணைத் தூற்றுவதற்காகவே அவளை புனிதப் பொருள் என்று முன்னேற்பாடாக போற்றி வைக்கிறது சமூகம். கற்பு கத்திரிகாய்கள் எல்லாம் இவ்வாறுதான் அவள் மீது தேவையற்ற சுமையாக்கி வைத்திருக்கின்றனர். எந்த மொழியிலும், எந்த இனத்திலும் "தேவடியா மகன் அல்லது அதற்கு இணையான பெண்மையை இழிவு படுத்தி திட்டும் வழக்கம் இருக்கிறது

******

பதிவர்களால் எழுதப்பட்டும் பலகட்டுரைகள், நகைச் சுவைகள் ஆகியவற்றை படிக்கும் போது ஏற்படும் எண்ணங்களையும், அந்த பதிவர்களின் எழுத்துக்களைப் பற்றி சில நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வதுண்டு. "அவரு என்ன எழுதி இருக்காரு...மொக்கை...கருத்தியல் ரீதியாக எதுவுமே இல்லையே...இவரெல்லாம் பதிவர்னு நீங்கதான் சொல்லனும்...மற்றவங்களை விடுங்க...நீங்க நிறைய எழுதிறிங்க கருத்தியல் ரீதியாக உங்கள் பதிவுகளைப் பார்த்தால் ஒண்ணுமே இல்லையே..." என்பார்கள். அடப்பாவிகளே இதுகூட தெரியாமலா ஒரு 'அவதூறு ஆறுமுகம்' என்னை 'கருத்து கந்தசாமி' என்று சொல்லி மகிழ்ந்தார் ? என்று கேட்டேன். "கருத்தியல் ரீதியாக" என்பதில் எனக்கு உடன்பாடு ஏற்படுவதில்லை. நான் படித்த கருத்தியல் பதிவுகள் அனைத்துமே நடந்து முடிந்தவைப் பற்றி அதனுடைய காரண செயல்பாடுகள், இதனால் என்று ஆராய்ச்சி ரீதியில் எழுதப்பட்ட பதிவுகளாகவே உள்ளன. அதாவது கருத்தியல் என்பதே நடந்து முடிந்தது பற்றிய ஒரு ஆய்வறிக்கை மட்டுமே. அதை எப்படி அன்றாட நிகழ்வுகளை பற்றி எழுதுபவர்கள், சிறுகதை எழுத்தாளர்கள், கவிதை புனைவோர்களுக்கு ஒட்டவைக்க முடியும் ?

ஒரு இடத்தில் குண்டுவெடிக்கிறதென்றால் அதைப் பற்றிய செய்தியைத் தான் பதிய முடியும், அதையெல்லாம் கருத்தியல் ரீதியாக எழுதவேண்டுமென்றால் ஒருமாதம் கழித்து தகவல் திரட்டிய பிறகு, இதன் காரணம் என்ன, உளவியலா, புண்ணாக்கா, வெடிச்ச பஞ்சா என்றெல்லாம் எழுத முடியும்.

கருத்தியல் ரீதியான எழுத்து என்பது வெறும் காரண காரியங்களை எழுதும் ஆய்வறிக்கை மட்டுமே, அதை ஒரு சிறந்த எழுத்து என்று சொல்லமுடியாது. படிப்பதற்கு படிப்படியான தகவல்கள் இருக்கும், கோர்வையாக இருக்கும் என்பதெல்லாம் சரி. படிப்பதற்கு சோர்வளிக்காமல் நகைச்சுவையாக இருக்குமென்றெல்லாம் சொல்ல முடியாது. இயல்புகளைக் கூட "பொது புத்தி" என்று பேசுவதுதான் கருத்தியலின் வழக்கம்.
கருத்தியல் ரீதியில் எதையும் எழுதினால் அதை கருத்தியல் ஆசாமிகள் மட்டுமே படிப்பார்கள், மற்றவர்களெல்லாம் "பெரும் அறிவாளி போல இருக்கு" என்று சொல்லிவிட்டு ஒரு பத்திக்கு மேல் வாசிக்க மாட்டார்கள். கருத்தியல் நடைமுறையில் இருக்கும் சில பல தவறுகளை சுட்டுக் காட்டுகிறது (உதாரணம் மேலே சுட்டிய தேவடியா பையன் சொல்) என்பது சரிதான் அதனடிப்படையில் கருத்தியலில் பேசுவது தவறல்ல, ஆனால் அதையே பேசிக் கொண்டு இருப்பது இயல்புக்கு மாறானது. அன்றாட நிகழ்சிகளை எழுதுவதோ, விமர்சிப்பதோ கருத்தியலால் இயலாத ஒன்று என்றே நினைக்கிறேன். இது கருத்தியல் பற்றிய எனது தவறான கருத்தியல் என்று நினைக்கும் கருத்தியல் ஆசாமிகள் சுட்டிக்காட்டவும்.

7 நவம்பர், 2008

நீலிக் கண்ணீர் !

சொற்களின் பொருள் தெரியாமல் அதைப் பயன்படுத்தி வருவதில் இந்த 'நீலிக் கண்ணீர்' என்ற சொற்பதமும் ஒன்று. 'நீலி' என்பதன் பொருள் என்ன என்பது பலருக்கும் தெரியாது. ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான குண்டலகேசி - நீலிக்கேசியில் வரும் சமண பெண் துறவியும், காப்பியத் தலைவியுமான நீலி தான் நீலிக் கண்ணீர் என்று சொல்லிள் வருபவர். நீலிக்கும் கண்ணீருக்கும் என்ன தொடர்பு ?

பெளத்த சமண சித்தாந்தங்களுக்கு மாற்றாக, அதாவது சூனிய வாதத்திற்கு மாற்றாக ஆதிசங்கரர் முன்மொழிந்த அத்வைத கோட்பாடுகள் மேலோங்கி இருந்த நேரத்தில் சமணத் துறவிகள் மிகவும் துண்புறுத்தப்பட்டனர். சமணர்களின் வாதம் 'உலகில் எதுவுமே தான் தோன்றி கிடையாது, பெருட்களின் உருமாற்றம் தான் நிகழ்கிறது' என்பதே. மலை தேயும் போது மண் ஆகும், மண் இறுகும் போது மலையாகும். அதில் இருக்கும் துகள்களின் தன்மை மாறும் ஆனால் அவை முற்றிலும் ஒருக்காலமும் அழிந்துவிடாது என்பதே, அனைத்தையும் கடவுள் படைத்தார் என்கிற கோட்பாடுகளை ஒப்புக் கொள்ளமாட்டார்கள்.

இவை முற்றிலும் அத்வைத,துவைத தத்துவங்களுக்கு எதிரானவை, ஏனென்றால் படைப்பு என்பது தான்தோன்றி (சுயம், சுயம்பு, வெளிப்பாடு) இறைவனின் சித்தத்தால் ஏற்படுவது என்பதே இவர்களின் நம்பிக்கை. சமணர்களும் அத்வைதிகளும் வாதத்தில் ஈடுபட்ட போது, அத்வைதிகள் எல்லாம் இறைவன் அல்லது பரம்பிரம்மத்தின் சித்தம், தான் தோன்றி என்றார்கள். நீலிகேசி அதை பலமாக மறுத்தாள், ஆதாரம் கேட்டாள், அவர்கள் சொன்னதையே திரும்ப திரும்ப சொல்லி வந்தார்கள், அப்பொழுது நீலிகேசி வெகுண்டு 'நடு இரவில், நடுவீதியில் எவருக்கும் தெரியாமல் ஒருவர் மலம் இருந்து சென்றால், காலையில் எழுந்து பார்க்கும் நீங்கள் அதைத் தான்தோன்றி, கடவுள் படைத்தது என்று சொல்லுவீர்களா ?' என்று ஆவேசமாகவே கேட்டாள். இதற்கு மேல் இவளிடம் வாதத்தில் வெல்லவே முடியாது என்பதால் அத்வைத சைவ ஆதாரவு அரசரின் ஆதரவுடன் அவளை சிறைப்பிடித்து மரணதண்டனைக் கொடுக்கப்போவதாக இழுத்துச் சென்றார்கள். அப்போது அவள் கண்ணீர் விட்டு சபித்திருக்கிறாள். அவளது கண்ணீரைப் பார்த்து...'எதற்கும் கலங்காத நீலியே கண்ணீர் வடிக்கிறாள் பார்...ஹஹ்ஹஹ் ஹா' என்று கேலி செய்து பலமாக சிரித்திருக்கிறார்கள். அதற்கு பிறகு சமணவாதங்களின் போதெல்லாம் நீலியின் கண்ணீரை குறிப்பிட்டு தூற்றுவதே வழக்காக மாறி, பழிப்பதற்கு பயன்படுத்தும் ஒரு பதமாக மாறியது.

உண்மையில் நீலி பயந்து போயோ, பொய் சொல்லிவிட்டதாக நினைத்தோ கலங்கவில்லை, உண்மையை உணராத மூடர்களிடம் சிறைபட்டுவிட்டேனே என்றே கண்ணீர்விட்டு வருந்தினாள். சமண மதப் பெண் வீரத் துறவியை பழிக்கும் விதாமாக இழித்துக் கூறிய சொல் நாளடைவில் போலியாக அழுபவர்கள் குறித்த பழிப்புச் சொல் ஆகியது. 'நீலி' என்ற அடைமொழியாக மாறி ஒரு சொல் காலம் கடந்து நிற்பதால் இவை வரலாறு வழி வந்தவை என்று சொல்லிவிட முடியும்.

******

பொதுவாக இனிப்பு, உப்பு சுவை சேர்ந்திருந்தாலும் இளநீரும், கண்ணீரும் தூய்மையானது என்றே சொல்லுவார்கள், ஏனெனில் வெளி மாசு அவற்றில் கலந்திருக்காது, கண்களில் மாசு சேரும் போது அதை அகற்ற சுரக்கும் கண்ணீர் தூய்மையற்றதாக இருக்க முடியாது. இவை எதிர்பாராமல் தேவையான நேரத்தில் சுரக்கும் கண்ணீர். உணர்வின் போது சுரக்கும் கண்ணீர் அதன் புனித ,தன்மை தூய்மை குறித்த புரிதலுடன் எண்ணத்தில் கட்டுப்பாட்டுடனேயே அதனை வெளிப்படுத்த வேண்டும். என்றுமே அழாத ஒருவர் அழும் போது அவரது சோகத்தின் அளவுகோல் கண்ணீர் தான் என்பதால் அதன் உண்மைத்தன்மையை மேலும் உயர்த்திக் கூற கண்ணீர் புனிதமானது என்று சொல்லப்படுகிறது. மன ஈரத்தின் உருதான் கண்ணீர். கண்ணீரை பிடிவாதத்தின் அளவு கோலாக்கி தொட்டதற்கு கண்ணீர் சுரப்பவர்களின் கண்ணீர் தூற்றப்படுகிறது. மன எண்ணத்திற்கு மாற்றாக வெளிப்படையாக கண்ணீர் வரும் போது அவை போலிக் கண்ணீர் என்று சொல்லப்படுகிறது. போலிக் கண்ணீர் சுரக்கும் போது முகமே காட்டிக் கொடுத்துவிடும். எனென்றால் அவை மனத்தூண்டிதலால் இயல்பாக ஏற்படுபவையே அல்ல. இறைக்காக ஏங்கி எவரும் சிக்கவில்லை அல்லது சிக்கிவிட்டது என்பதற்காக முதலலகள் வடிக்கும் கண்ணீரே முதலைக்கண்ணீர் எனப்படுக்கிறது. அதாவது தன்னலம் சார்ந்து வெளிப்படும் கண்ணீர் முதலைக்கண்ணீர் எனப்படுகிறது. நெடும் தொடரைப் பார்த்துவிட்டு தாய்குலங்களும் சில ஆண்களும் கூட கண்ணீர் வடிப்பது 'குறுகிய கால மெகா சீரியல்' அல்லது 'தேவையற்ற' கண்ணீர் என்று சொல்லலாமா ? ஏனென்றால் இந்த கண்ணீரினால் தொடர் முடிந்த அடுத்த நிமிடமே மன பாதிப்புகள் எல்லாம் மறைந்து போய்விடும். ஆனந்த கண்ணீர் பற்றிச் சொல்லத் தேவை இல்லை. பளார் என்று கன்னத்தில் அரை விட்டு அடுத்த நிமிடமே... 'என் செல்லாம் இல்லே...' கணவர் பல்லிளித்து மன்னிப்புக் கேட்கும் அடுத்த நிமிடமே வலியால் வரும் கண்ணீர் ஆனந்த கண்ணீர் ஆகிவிடும். இதுப்போல் ஆனந்த கண்ணீருக்கு நிறைய காட்டுகள் வைக்கலாம். சபை நடுவில் போற்றப்படுபவர்கள் எவருக்குமே முதல் முறை உணர்ச்சிப் பெருக்கால் வருவது ஆனந்தக் கண்ணீர்..

கண்ணீரின் புனிதத் தன்மை கருத்தி தண்ணீரைப் போலவே வீணாக்கமல் பயன்படுத்த வேண்டும் என்றே சொல்கிறார்கள்

***

யாரையும் பழிப்பதற்க்காக 'நீலிக் கண்ணீர்' என்ற பதத்தைப் பயன்படுத்தாதீர்கள். ஒரு பெண்ணை, ஒரு சமயத்தை சாடுவதற்காக வலிந்து உருவாக்கியச் சொல் அது. அந்த அநீதிக்கு நாமும் துணை போகவேண்டாம். ஏனென்றால் நீலி போலிக் கண்ணீர் வடிக்கவில்லை, நீதியின்மைக்கு எதிராக வருத்தப்பட்டுதான் கண்ணீர் விட்டாள்.

5 நவம்பர், 2008

சகிப்புத்தன்மை !

விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் இவையெல்லாம் தனக்கு ஒவ்வாத மாறுபட்ட ஒன்றை பிறருக்காக மனம் உவந்து செய்யப்படும் செயல்கள். விட்டுக்கொடுத்தவர் கெட்டுப் போனதில்லை என்றே சொல்லுவார்கள். ஒரு சின்ன மனத்தாங்கலிள் கூட உணர்வுகளை ஈகோவுக்கு இரையாக்கிவிட்டு, 'தான் மிகவும் கோவக்காரன்' என்று சொல்வதெல்லாம் பெருமையா ? பத்து ஆண்டுகள் பழகியவராக இருந்தாலும் 10 நிமிடத்தில் இருவருக்கும் ஏற்படும் சினம் எல்லாவற்றையும் கெடுத்துவிடும். 'என்னை' எப்படி சொல்லலாம் என்ற தன்னைப் பற்றிய மிதமிஞ்சிய பெருமதிப்பில் ஆண்டுக்கணக்கில் ஒருவரை ஒருவர் எதிரே சந்தித்தாலும் வெப்பமூச்சையோ, பெருமூச்சையோ வெளி இட்டுச் செல்வார்கள், சண்டைப் போடுவதற்காகக் கூட பேசுவோம் என்று இருவருமே நினைக்க மாட்டார்கள். ஒருவர் நல்லமனதுக்காரராக இருந்துவிட்டால் நிலைமைகள் சரியாகும்.

பொதுவாக சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி அந்த நிமிடத்தின் நிகழ்வுகளை மட்டுமே திரும்ப திரும்ப ஞாபகப்படுத்திக் கொண்டு இருக்கும், அந்த கெட்ட நிகழ்வுக்கு முன்பு வரை இருவரும் ஒரே தட்டில் உண்டவர்களாகவோ, ஒருவர் மீது ஒருவர் சாய்ந்து தூங்கியவர்களாகவோ, ஒருவரின் அன்பில் மற்றவர்கள் உருகிய எண்ணற்ற நிகழ்வுகள் நடந்திருக்கலாம், அதையெல்லாம் ஈகோ நினைத்துப் பார்க்க வழிவிட்டுவிடவே விடாது. 'ச்சே.....அவனும் நானும் எப்படி எல்லாம் இருந்திருக்கிறோம்...' என்று நினைக்கும் அதே நொடியில் 'நான் ஒன்னும் அவனைக்காட்டிலும் எந்தவிதத்திலும் குறைந்தவன் இல்லை' என்ற மற்றொரு நினைப்பு பழைய நிகழ்வின் நினைவுத் தொடர்ச்சியை உடனடியாக துண்டித்துவிடும். இன்னும் கொஞ்சம் இளாகிய மனதுகாரராக இருந்தால், 'நாம அப்படி நினைக்கிறோம்...அவர் அப்படி நினைக்கணுமே...நம்ம நல்ல மனது அவனுக்கு வராது...நினைச்சுப் பார்ப்பதே வேஸ்ட்' என்று ஈகோவை மீறிய சிந்தனையை மீண்டும் ஈகோவில் மெல்லப் புதைப்பார்கள். மிகச் சிலர் மட்டுமே... 'தப்பாக நினைத்தாலும் பரவாயில்லை...எதிரே வரும் போது கண்டிப்பாக பேசி தம்மீது தவறே இல்லை என்றாலும் புரிந்துணர்வின் மலர்ச்சிக்காக மன்னிப்புக் கேட்கலாம்...ஏற்றால் பார்ப்போம்' என்று நல்ல பொழுதிற்காக காத்திருப்பார்கள்.

வாழ்க்கை முழுவதுமே எதோ ஒரு மேலான உணர்ச்சிக்கு தன்னை அடகு வைத்து அதனால் கிடைக்கும் சொற்ப சுகத்திற்கு ஈடாக மகிழ்வையெல்லாம் வட்டியாக செலுத்தி வாழ்ந்து வருவதே பெரும்பாலான மனிதருக்கு இனிப்பாக இருக்கிறது. உடல சதையாலும் இரத்தத்தாலும் இருப்பது உண்மை. மனதை அப்படி வரையறுத்துவிட முடியாது. ஆனால் அதில் வரையறை செய்து கட்டுபோட்டு வைப்பது, நல்ல எண்ணங்களை சிறைவைப்பது இவையெல்லாம் ஈகோவால் நடப்பவை.

தன்னைப் பற்றிய பிறரின் புகழ்ச்சிக்கு ஏங்குபவர்கள் பலரும் கூட அதற்கு தங்களின் பங்காக எதையும் செய்வதில்லை என்பதே உண்மை, விதை விதைக்காமலே அறுவடை நடந்துவிடுமா ? தத்துவங்கள், பேருண்மைகள் வாழ்க்கைக்கு உதவாது என்று இயல்பில் இருந்து விலகி வாழ்வை தள்ளி வைத்துக் கொள்பவர்களே மிகுதி. இரு கைகளின் விரல்கள் வேறு வேறு திசை நோக்கி இருந்தாலும் இருகைகளும் ஒன்றை ஒன்று தழுவும் போதும் திசை வேறாக இருந்தாலும் ஒன்றை ஒன்று பார்க்கும் என்பது புரிந்து கொள்ளப் படுவதே இல்லை.

550 கோடி மக்கள் வாழும் உலகில் நம்மை அறிந்தவர்கள் என இருப்பவர்கள் மிகக் குறைவே. நம்மை அறிந்தவர்கள் நம்முடைய போற்றுதலுக்கு உரியவர்கள், இவர்களைத் தவிர்த்து நாம் யாரைப் போற்றப் போகிறோம் ? அதனால் பயன் தான் என்ன ? நமக்கு தொடர்பே இல்லாத நடிகனையும், தலைவர்களின் மீது பற்று வைத்துப் போற்றுபவர்கள், தனக்கு நன்கு தெரிந்தவர்களின் மீது சின்ன சின்ன கருத்துவேறுபாட்டிற்காக விலகி இருப்பதென்பது நமக்கு தெரிந்தவர்களில், நாம் நேசிக்கக் கூடியவர்களில் ஒருவரை (மனப் படுகொலையால்) இழப்பதும் கொடுமையான ஒன்றே. சேர்த்து வைத்தப் பணத்தில் 10 ரூபாய் காணாமல் போனால் கூட கலங்கும் மனது பிரிவிற்காக கலங்கவேண்டும் அல்லவா ? நாம் சேர்த்துவைத்ததில் நண்பர்களும் உறவுகளும் அடங்கும் அல்லவா ?

சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் போன்ற செயல்களில் வழி நிமிட நேரத்தில் தீர்ந்துவிடும் பகையெல்லாம் ஈகோவின் கட்டுப்பாட்டில் மரணம் வரையில் கூட நீடித்துவிடும். ஈகோவுக்கு அத்தகைய ஆற்றல் உண்டு

சகிப்புத்தன்மை, விட்டுக்கொடுத்தல், பொறுத்துப்போதல், மதித்தல் இவை நான்குமே ஒருவர் ஈகோ வசப்படும் போது அப்படி நடந்து கொள்வது கோழைத்தனம் என்றே புரியவைக்கப்பட்டு ஒட்டாமல் ஆயுள் சிறை வைத்துவிடும்.

சேரத்துடிக்கும் கரங்களை பூட்டி இருக்கும் ஈகோ என்னும் மாய விலங்கு உடை(க்கப்)பட வேண்டும்.

மற்றொரு நற்சிந்தனையில் தொடர்வோம்.

10 அக்டோபர், 2008

தர்பூசனி சாப்பிட்டால் பாவம் !

"கடவுளே நான் நாத்திகர்களைப் பற்றிக் கூட கவலைப்படல, தயவு செய்து கோவி.கண்ணனுக்கு உன் இருப்பை புரியவைத்துவிட்டால் போதும்", "இவனுக்கு என்ன ஆச்சு, நாமெல்லாம் கடவுள் இல்லை கடவுள் இல்லை கடவுள் இல்லவே இல்லைன்னு சொல்றோம்...இவன் அடிக்கடி பெரியார் பெயரைச் சொல்லுகிறான்...ஆத்திகவாதிகளிடம் தொடர்பு வச்சிருக்கான்....லூசாப்பா நீய்யி..." என் எழுத்துக்களைப் படிப்பவர்கள் இருவகையாக நினைக்கக் கூடும். :) ஆற்றுக்கு இரண்டு பக்கமும் கரை உண்டு... அப்படி இருந்தால் தான் ஆறு. படகுக்கு நட்டாற்றில் செல்ல நடுக்கம் இருக்குமா ?

******

எனக்கு நினைவு தெரிந்து முதன் முதலில் குடும்பமாக போன மிக தொலைவிலான கோவில் திருப்பதி தான். அப்பா ரயிலில் அனைவரையும் அழைத்துச் சென்றார், எனக்கு அப்போது 7 வயது ஆகி இருந்தது. போகும் வழியில் திருவண்ணாமலைக்குச் அழைத்துச் சென்றார்கள். அதன் பிறகு போகவில்லை, இன்னும் கூட திருவண்ணாமலையில் தோற்றம் நினைவுக்கு இருக்கிறது, அங்கு வாங்கி வந்த அண்ணாமலையார் படமும் நாகையில் பூசை அறையில் ( அதை நாங்கள் சாமி அறை என்போம்... சாமிக்காக எங்க அப்பா இரண்டு கதவுடன் கூடிய ஓரளவு பெரிய அறையே கட்டி வைத்திருக்கிறார்) அந்த படத்தில் இன்னும் கூட வண்ணம் அவ்வளவாக மங்காமல் இருக்கிறது.

திருவண்ணாமலையில் இருந்து திருப்பதி சென்றோம், அப்பவும் திருப்பதி கூட்டம் தான் ஆனால் தற்போது இருக்கும் அளவுக்குக் கிடையாது, பெரிய கூண்டு போன்ற காற்றுவசதி இல்லா அறையில் அடைக்கப்பட்டு ஒவ்வொரு அறையாக திறந்துவிடுவார்கள். அப்போ பார்த்த சாமியெல்லாம் நினைவு இல்லை. கிழே இறங்கி காளஹஸ்தி, அலமேலு அம்மாள் கோவிலுக்கெல்லாம் கூட்டிச் சென்றார், இடையில் என் 4 1/2 வயது தம்பி தொலைந்து போய் களேபரம் ஆகி ஒருவழியாக கிடைத்துவிட்டான். வீட்டுக்கு வந்துவிட்டோம்.

அன்றிலிருந்து எங்க வீட்டில் சனிக்கிழமை மட்டும் அசைவம் சாப்பிடுவதை விட்டார்கள். கூடவே தர்பூசனி பழம் சாப்பிடுவதையும் விட்டுவிட்டார்கள், எங்கள் தோட்டத்தில் அதுவாகவே படந்து வளரும் தர்பூசனியை யாரும் சீந்துவதே இல்லை. யாராவது கேட்டால் பறித்துக் கொண்டு போகச் சொல்லுவோம். ஏன் தர்பூசனி நாம சாப்பிடுவதில்லை என்று அப்பாவிடம் கேட்டால், 'திருப்பதிப் போனால் எதையாவது விட்டு வரவேண்டுமாம், பலரிடம் கேட்டேன், பாவக்காய், தர்பூசனி இதுபோல் எதாவது ஒன்றை சாப்பிடுவதை நிறுத்தினாலே போதும் என்றார்கள். நம்ம வீட்டில் இனிமேல் யாரும் தர்பூசனி (நாங்க கொம்பட்டி பழம் என்போம்) சாப்பிடமாட்டோம்' என்றார். திருப்பதி போய் வந்த பிறகு அனைவருக்கும் சனிக்கிழமை எப்போதும் சைவ உணவு தான். நான் ஏற்கனவே முழுநேர சைவமாக மாறி இருந்திருந்த்தால், சனிக்கிழமை எனக்கு பிடித்த கிழமையாக ஆகி இருந்தது. என்றாவது சனிக்கிழமை என்பதை மறந்து எங்காவது அசைவம் சாப்பிட்டு வந்திருந்தால் அன்று முழுவதும் புலம்புவார்.

எனக்கு 21 வயது இருக்கும் போதே அப்பா மறைந்துவிட்டார், 25 வயது வரை தர்பூசனியை முகர்ந்தே பார்தது இல்லை, அதன் பிறகு ஆசைப்பட்டு சாப்பிடவில்லை என்றாலும் அதை சாப்பிட ஆரம்பித்தேன்.

********

கோவிலுக்குச் சென்றால் எதையாவது விட்டு வருவது என்பதில் இதுபோன்ற தவறான வற்றையே சொல்லி வைப்பதால் பலரும் தனக்கு எது பிடிக்காதோ அதை விட்டுவிடுவார்கள். திருநள்ளார் சனீஸ்வரன் கோவிலின் குளத்தில் டன் கணக்கில் பழைய துணிகளை பக்தர்கள் விட்டுச் செல்கிறார்கள்.

கோவிலுக்குச் சென்றால் மன அமைதி கிடைக்குது ரொம்ப சரி, ஆனால் பிரார்தனைகள் எவ்வாறு இருக்கிறது ?

1. அடுத்த ஆண்டுக்குள் சொந்த வீடு கட்டனும் அதுக்கு நீ தான் அருள் புரிய வேண்டும்
2. என்னோட மகளுக்கு நல்ல வரனாக அமையனும்
3. எதிர்பார்கும் பதிவி உயர்வு கிடைத்தால் பாதயாத்திரை செய்கிறேன்
4. என் மேல பொறாமை படுகிற பக்கத்து வீட்டுக்காரன் ஒண்ணும் இல்லாமல் மண்ணாக போகனும்
5. கோர்டில் நடக்கும் கேஸ் என் பக்கம் சாதகமாக முடியனும்...

இன்னும் பல பல

தன்னிடம் இருக்கும் குறைகளாக பலரும் நினைப்பது இதுபோன்ற தேவைகளைத்தான்.

ரொம்ப நல்லவராக நினைத்துக் கொள்பவர் கொஞ்சம் பெரும் தன்மையாக

"எல்லோரும் நல்லா இருக்கனும்" என்று வேண்டிக் கொள்வதுடன், 'நான் எப்போதும் எல்லோரூம் நல்லா இருக்கனும்னு தான் வேண்டிக் கொள்வேன்...பகவானுக்குத் தெரியாதா யாருக்கு என்ன கொடுக்கனும் என்று...' கேட்காமலேயே குட்டி பிரசங்கம் செய்துவிடுவார்

தன்னிடம் இருக்கும் குறை உண்மையிலேயே அது தானா ?

"எனக்கு சட்டுன்னு கோபம் வந்துடும், அப்படி வந்தால் என்ன செய்வேன்னு எனக்கே தெரியாது...அது என் சுபாவம்" தான் முன்கோபி, விலங்கைவிட கேவலமானவன் என்பது கூட தெரியாமல் தனக்கு இருக்கும் கோபத்தைக் கூட பெருமையாக பேசுபவர்கள் இருக்கிறார்கள்.

"என்னை யாரும் சந்தேகப்பட்டுவிட்டால்...ஜென்மத்துக்கும் அவங்க முகத்தில் முழிக்க மாட்டேன்" அதாவது இவன் தான் பரிசுத்தமானவன் என்று சொல்லவருகிறான். ஆனால் இவன் தான் வெறுப்பின் மொத்த உருவம் என்பதை தன்வாயால் சொல்கிறோம் என்பது கூட அவனுக்கு தெரியாமலே சொல்கிறான்.

பலகுடும்பங்களில் இல்ல உறுப்பினர்கள் கூட ஒருவருக்கு ஒருவர் பேசிக் கொள்ளாமல் ஆண்டுகணக்கில் ஒரே வீட்டுக்குள் தனக்குத் தானே சிறை வைத்துக் கொண்டு இருப்பார்கள்.

கோவிலுக்குச் செல்பவர்களில் எத்தனை பேர் கீழ்க்கண்டவாறு வேண்டிக் கொள்கிறார்கள் ?,

1. எனது கோபங்கள் முற்றிலும் நீங்க வேண்டும்
2. என்னை அறிந்தவர்கள் அத்தனை பேரிடமும் அன்பு செலுத்த வேண்டும்
3. என்னை அறியாமல் வெறுப்பவர்களையும் நேசிக்கும் சக்தியை எனக்குக் கொடு
4. என்னிடம் இருக்கும் செல்வங்களை நல்ல வழியில் பலருக்கும் உதவி செய்யும் வழியை நீ தான் காட்டவேண்டும், எனக்கு சேரும் பொருள் நல்ல வழியிலேயே சேரவேண்டும்.
5. ஒருவர் மீதும் எனக்கு சிறிதளவேனும் பொறாமை ஏற்பட்டுவிடக் கூடாது

உண்மையில் வழிபாட்டுத் தளங்களுக்குச் சென்றால் விட்டு வரவேண்டியது நம்மிடம் இருக்கும் தீய பழக்கங்களையும், பெற்று வரவேண்டியது நல்ல குணங்களையும் தான்.

எந்த கோவிலிலும் இதுபோன்ற வேண்டுதல்களை நான் பார்தது இல்லை. பொருள் வேண்டி, மற்ற வெளிப்படையான குறைகளை நீக்கச் சொல்லி வேண்டி பிச்சைக்காரர்களாகவே அங்கு வருபவர்களில் பெரும்பாலோர் நடந்து கொள்கிறார்கள், இத்தகைய மோசமான சுயநலம் சார்ந்த அதிர்வுகள் மொத்தமாக குவியும் இடமே கோவில் தான். அங்கு எனக்கு அமைதி கிடைக்கிறது' என்று சிலர் சொல்வது கூட எனக்கு வியப்பாகவே இருக்கிறது. இதே நிலைமை அனைத்து மதங்களின் வழிபாட்டுத் தளங்களிலும் இருக்கிறது. அன்பு கூர்ந்து நான் எதோ இந்து மதத்தை மட்டும் சொல்கிறேன் என்றெல்லாம் நினைத்துவிடாதீர்கள்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்