பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2009

மல்லாந்து எச்சில் துப்புவது கலைஞருக்கு அழகா ?

தேர்தல் லாவனிகள் ஒருபக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபக்கம் இவ்வளவு கேவலமானவர்களா ? அரசியலுக்காக அம்மணமாகக் கூட நிற்கிறார்களே என்று நினைக்கவும் வேண்டி இருக்கிறது. அரசியலில் எந்த காலத்திலும் நாகரீகம் இருந்தது இல்லை. அத்திபூத்தார்போல் சில தழுவல்கள் கூட வரும்காலத்தில் நாங்களெல்லாம் நாகரீகமாக நடந்து கொண்டோம், இளைய அரசியல் வாதிகள் அவ்வாறு இல்லை என்று காட்டுவதற்கான நாடகமே அன்றி வேறொன்றும் இல்லை,

வைகோ திமுகவின் வருங்காலத் தலைவராக தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள நினைத்திருந்தார், முயன்றார் என்பதை எதோ குற்றாச் சாட்டு போல் கவிதை வடித்து இருக்கிறார் கலைஞர்.

தலைவர் பதவிக்கு குறி வைத்த தம்பி - கருணாநிதி கவிதை

பெரியாருடன் அண்ணா இணைந்த பிறகு அண்ணாவின் எழுத்தாற்றல், பேச்சு கண்டு பெரியார் மகிழ்ந்து பாராட்டி, இயக்க வளர்ச்சிக்கு பயன்படுத்த தட்டிக் கொடுத்தார். தலைமைப் பண்பின் அடையாளம் என்பது ஆற்றல் மிக்க தொண்டர்கள் வளர்வதைப் பாராட்டி மேலே கொண்டு விட தூண்டு கோலாக இருப்பது தான். பெரியாரிடமிருந்து பிரிந்தது அண்ணா பிரிந்தது வேறு கதை, அது கட்சி அபகரிப்புத் திட்டத்தில் வராது. அதே போன்று அண்ணாவினால் தொடங்கப்பட்ட திமுக கழகத்தில் மேடை நாடகம், திரையுலகம், இலக்கியம் போன்றவற்றிலும், அரசியலிலும் திரம்பட செயல்பட்டதால் அண்ணாவின் அன்பு தம்பி என்ற பாராட்டைப் பெற்ற கருணாநிதி அண்ணாவின் ஆட்சி அமைக்கிறேன் என்று அண்ணாவிற்கு பிறகு திமுகவை நடத்தி வருகிறார். அண்ணாவுக்கு பிறகு திமுக தலைவர் ஆகும் தகுதி தனக்கு இருக்கிறது என்கிற நினைப்பு கலைஞருக்கு இருந்திருக்காதா ? ஒரே நாளில் 'தலைவா....அண்ணாவுக்கு பிறகு நீ தான் தலைமை ஏற்கவேண்டும்' என்று கூறி முள் கிரிடத்தை தொண்டர்கள் கலைஞரின் தலையில் வைத்தார்களா ? கட்சிவிசுவாசிகள், கட்சிக்காக கடுமையாக உழைப்பவர்கள் யாரும் தியாகிகள் கிடையாது, நாளை தனது உழைப்பு அங்கீகரிக்கப்படும் என்று நினைப்பது மனித இயல்பு, அதுவும் அரசியலில் நோக்கமின்றி உழைப்பவர்கள் எவருமே கிடையாது.



வைகோ எதோ படுபாதகம் செய்யத் துணிந்தது போல் கவிதை தீட்டி இருக்கிறார் கலைஞர். அதோடு மட்டுமின்றி வைகோ அதை யாருடன் ஆலோசித்தார் என்பதை குறிப்பிடும் விதமாக

"ஆனால் -
துரைமுருகன் ரகசியத்தைக் காப்பாற்றுவதில் இரும்புப் பெட்டி!
ஆற்காட்டாரோ -அசல்; கண்ணாடிப் பேழை -
எனினும்
ஆண்டுகள் சில பல கடந்த பிறகே;
அன்றைய குமரி முனையில் குமுறிய எரிமலையின்
குட்டை மனப் பேராசையின் வெளிப்பாட்டைக் கூறினர் எனக்கு!"


அந்த கவிதையை படித்ததும் மனதில் ஏற்படும் எண்ணங்கள், இரும்பு பெட்டி ஆண்டுகள் பல ஆனதும் துரு ஏறி உடைந்து விட்டதா என்று தெரியவில்லை. ஆக வைகோ சொன்னதை என்னிடம் இவர்கள் போட்டுக் கொடுத்துவிட்டார்கள் என்று சொல்வதாகத் தான் அதனை புரிந்து கொள்ளமுடிகிறது. மூவரின் நம்பகத் தன்மைகளை கேலி செய்வதாக நினைத்து குடும்ப அரசியலை ஞாயப்படுத்தும் விதமாக ஸ்டாலினின் அருமை பெருமைகளைச் சொல்லி தன்னையே கேவலப்படுத்திக் கொண்டு இருக்கிறார் கலைஞர்.

வைகோவுக்கு கவிதை பாடியவர் அதே போன்று எம்ஜிஆருக்கு பாடி இருக்க முடியாது, ஏனெனில் எம்ஜிஆர் 'திமுகவை நீயே வைத்துக்கொள்' என்று உதறித்தள்ளி, வெளி ஏறி, திமுகவையும், கலைஞரையும் ஓரம் கட்டினார். வைகோவும் அதே போல் வளர்ந்திருந்தால் இந்த கவிதை திமுக கழகத்தினரையே கேலி செய்யும். எப்படியோ...கலைஞரின் பெரும்தன்மை இன்மையால் அண்ணாவின் திமுக. அதிமுக, மதிமுக என மூன்றாகியது.

****

விஜயகாந்து திருமணத்துக்கு தாலி எடுத்துக் கொடுத்தார் கலைஞர், விஜயகாந்த் நன்றி மறந்தவராக கலைஞரை தாக்குகிறார் என்று பேராசிரியர் சொல்லிக் காட்ட, பதிலடியாக நான் திரையுலகினரை திரட்டி கருணாநிதிக்கு விழா எடுத்தேன், தங்கப்பேனா கொடுத்தேன் என்கிறார் விஜயகாந்த். இவர்களெல்லாம், ஒருவருக்கொருவர் எதிர்பார்ப்பை வைத்தே எதையும் செய்துவிட்டு மக்கள் மேடையில் இந்த கருமாந்திரங்களைப் பேசி மக்களை முட்டாள் ஆக்குகிறார்கள்.

நான் இங்கே வைகோ தூய்மையானவர், விஜயகாந்த் சொக்கத் தங்கம் என்று சொல்லவரவில்லை, 30 ஆண்டுகளுக்கும் திமுகவின் தலைமை ஏற்று பலமுறை முதல்வராக இருந்தவரின் மேடைப் பேச்சுகளும், கவிதைகளும் இவர் மீது அரசியல் பொதுப்பார்வையாளர்களுக்கு எரிச்சலையே ஊட்டுகிறது. முதிர்ச்சி இன்மை பற்றி கலைஞர் பேசினால் அது இனி காமடிதான்.

நாத்திகனின் கடவுள் பூனை !

நண்பர்கள் இருவர், ஒருவர் ஆத்திகர் மற்றொருவர் இறை மறுப்பாளர்

ஆத்திக நண்பர் : உங்க விஞ்ஞானத்தால் ஒரு உயிரை தோற்றுவிக்க முடியுமா ?

நாத்திகர் : விஞ்ஞானத்தால் உயிரை பெருக்க முடியும். ஒரு நெல்லை விதைத்தால் 10க்கும் மேற்பட்ட நெற்கதிர்களை பெற முடியும், விந்தையும் கருமுட்டையும் இணைத்து கருத்தறிக்க வைக்க முடியும்

ஆத்திகர் : எதுவும் இல்லாமல் நெல்லை உருவாக்க முடியுமா ?

நாத்திகர் : எதுவும் இல்லாமல் யார் நெல்லை உருவாக்கினார்கள் ?

ஆத்திகர் : கடவுள் உருவாக்கினார்

நாத்திகர் : நீ பக்கத்தில் இருந்து பார்த்தியா ?

ஆத்திகர் : கடவுள் படைக்காமல் நெல் என்ற ஒரு உணவு பொருள் உருவாகி இருக்க வாய்ப்பே இல்லை

நாத்திகர் : செத்த எலியை கண்டு கொள்ளாமல் விடு, மறுநாள் அதன் மீது புழுக்கள் பெருகும், அதை கடவுளா கொண்டு வந்துவிடுகிறார் ?

ஆத்திகர் : புழுவையும் படைத்தது கடவுள் தான்

நாத்திகர் : நான் இந்த வெளையாட்டுக்கு வரவில்லை

ஆத்திகர் : இறைவனின் இருப்பை நீ ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்

நாத்திகர் :நான் இருக்குன்னு சொல்லி என்னுடைய கடவுள் பெயரைச் சொன்னால் என்னை விட்டுவிடுவியா ?

ஆத்திகர் : முதலில் ஒப்புக் கொள் அதன் பிறகு உன்னோட கடவுள் யாருன்னு சொல்லு

நாத்திகர் : ஆமாம் இருக்கு, என்னோட கடவுள் பெயர் பூனை

ஆத்திகர் :என்னது பூனையா ?

நாத்திகர் : யோவ் என்னைய்யா ? கடவுளை ஒப்புக் கொள் என்று சொன்னே, நானும் இருக்கு, எனக்கும் நம்பிக்கை இருக்கு, என்னோட கடவுள் பெயரைச் சொன்னால் பழிக்கிறியா ?

ஆத்திகர் : பூனையெல்லாம் கடவுளாக இருக்க முடியுமா ?

நாத்திகர் :அப்ப உன்னோட பிரச்சனை கடவுள் இல்லை, கடவுள் பெயரும் அதன் கட்டமைப்பும் தான்

ஆத்திகர் அது வந்து....கடவுள் என்றால் படைத்தல் காத்தல் அழித்தல் இதெல்லாம் செய்யனும் வேத புத்தகமெல்லாம் இருக்கனும்

நாத்திகர் : என்னோட பூனையும் இதெல்லாம் செய்யும், குட்டிப் போடும், வீட்டைக் காக்கும், எலியை அழிக்கும்....ம் வேத புத்தகம்........இனிமேல் தான் எழுதனும்

ஆத்திகர் : அது மிகச் சாதாரண வேலை, கடவுளின் தகுதிக்கு இதெல்லாம் போதாது, உன்னுடைய பூனை கடவுள் அல்ல

நாத்திகர் : என்னோட கடவுளை நான் எதிரே பார்க்கிறேன்....உன்னுடைய கடவுள் கற்பனை

ஆத்திகர் : பூனை எப்படி கடவுளாகும் ?

நாத்திகர் : எனக்கு பூனைதான் கடவுள்

ஆத்திகர் : நான் ஒப்புக் கொள்ளவே மாட்டேன்

நாத்திகர் : அப்ப என் கடவுளை நீ மறுக்கிறாய்



*****

தன்னுடைய நம்பிக்கைக்கும், கட்டமைபிற்க்கும் உட்பட்டத்தையே கடவுள் என்று நம்புகிறார்கள், உண்மையிலேயே இங்கு நாத்திகன் என்று குறிப்பிடுவது எதோ ஒரு மாற்று மதத்தைத் சேர்ந்தவரைத் தான். ஏனெனில் ஒவ்வொரு மதத்தினரும் அடுத்த மதத்தினருக்கு கடவுள் 'பெயரால்' நாத்திகரே, மற்ற மதத்தினரின் கடவுள் பூனையிலும் கேவலமானதாக நினைப்பார்கள். இந்த கூத்தில் நாத்திகனுக்கு கடவுள் நம்பிக்கை ஊட்ட முயல்வதும், கூடவே நாத்திகர்கள் பிறரை நேசிக்கத் தெரியாதவர்கள் என்றும் தூற்றுகிறார்கள்

29 மார்ச், 2009

ஆறாம் அறிவுக்கு மேல்... !

அறிவு என்றால் ஒன்றைப் பற்றிய உண்மையை உணர்ந்து தெளிதல், அல்லது அறிந்து கொண்டு தெரிந்து வைத்திருத்தல் என்று சொல்லலாமா ? நம்முடைய அறிவு என்பது இதுவரை முந்தைய தலைமுறையின் பட்டறிவின் தொகுப்பு. மனித அறிவுக்கும் ஏனைய உயிரனங்களின் அறிவுக்கும் ஒரே வேறுபாடு, பட்டறிவை(அனுபவ) சந்ததிகளுக்கு எழுதி வைப்பதன் மூலம் வெற்றிகரமாக மாற்றுவது மட்டுமே. மின்சாரம் மற்றும் ஏனைய கண்டுபிடிப்புகள், உண்மைகள், தத்துவங்கள் ஆகியவற்றின் நம் அறிவு என்பவை முன்னோர்கள், முந்தைய கண்டுபிடிப்பாளர்கள் நமக்கு தொகுத்துத் தந்தவையே. குழப்பமான அல்லது நம் புலனுக்கு எட்டாதவைகளைப் பற்றிய எதையும் அதன் தன்மைகளை பிரித்து அறிவதன் மூலம் நமக்கு அவை பற்றிய உண்மை தெரிகிறது. கண்டுபிடிப்புகள் அனைத்துமே பல்வேறு மூலப்பொருள்களின் சேர்க்கை அல்லது மாற்றம் என்பவைதானே. பொருள்களின் தன்மையை ஆராய்ந்து அவற்றில் இருக்கும் ஒழுங்குகளைக் கண்டு கொண்டு, அவற்றில் மாற்றம் ஏற்படுத்திக் கொடுப்பது தான் கண்டு பிடிப்புகள். நாம் கண்டுபிடிக்காதவை அனைத்துமே நம் அறிவைப் பொருத்தவரை ஒழுங்கற்ற அல்லது குழப்பமானவை என்று சொல்வதே பொருத்தமானது. கண்டுபிடித்த பொருள்கள் ஒழுங்கான, தெளிவான என்ற நிலைக்கு அதன் சமன்பாடுகள் அறியப்பட்டு, வரையறைக்குள் வந்துவிடுகிறது. அதாவது உலக, பிரபஞ்ச பொருள்கள் அதன் இயக்கங்கள் இவற்றை ஒழுங்கான (கண்டுபிடிக்கப்பட்ட) மற்றும் ஒழுங்கற்ற (இது வரை கண்டறியப்படாத) என்ற இரு வகைக்குள் தான் இருக்கின்றன.

மனித மூளை அறிவின் சிகரம் என்று நினைப்பது எந்த அளவுக்கு உண்மை ? மனித மூளையின் நினைவுத் திறனையும் அதன் மூலம் பகுத்தறியும் தன்மையையும் வியக்கிறோம் ஆனால் மனித மூளையை அறிவின் சிகரம் என்று சொல்ல முடியுமா ? ஆறாவது அறிவைத் தாண்டி எதுவுமே இருந்துவிட முடியாதா ? பகுத்தறிவாதிகளைக் கேட்டால் இருக்க முடியாது என்றே சொல்லுவர். உலகைப் பற்றிய அறிவு மனித மூளைகளின் கண்டுபிடிப்புகளால் வந்தவை, மனித மூளையும் அதன் ஆறாவது அறிவும் இல்லை என்றால் நாமும் விலங்குகள் போல் தான் என்று சொல்லுவர். ஆறாவது அறிவு இருட்டு அறையில் இருக்கும் ஒரு பொருளைப் பார்க்க உதவும் ஒரு விளக்கைப் போன்றது மட்டுமே. அறையில் அந்த பொருள்கள் எப்படி வந்தன, எப்படி அவை ஒழுங்கு தன்மையில் அறையினுள் இயங்கிக் கொண்டிருக்கின்றன என்பதை சொல்லிவிடாது. அல்லது எந்த ஒரு தெளிவான பதிலையும் ஆறாவது அறிவின் மூலம் பெற முடியாது. ஊகமாக இப்படி இருக்கலாம் என்று சொல்லலாம். டார்வின் கோட்பாடுகள் கூட இப்படிப்பட்டதே. புல்லாகி பூண்டாகி, பூச்சாகி விலங்காகி, குரங்காகி மனிதனான் என்பதே டார்வின் கொள்கை, கோட்பாடு அளவில் இவை சரி ஆனால் இவை உயிர்களின் தோற்றம் குறித்த முடிவான கோட்பாடுகள் இல்லை. அறிவியலாளர்கள், அறிவியல் அடிப்படையில் அந்த ஊகத்தை ஏற்றுக் கொள்வர், அறிவியலாளர்கள் ஏற்றுக் கொள்வதால் அதனை படித்தவர்கள் ஏற்றுக் கொள்வர். பெருவாரியான மக்கள் ஆதரவு இருந்தால் மதவாதிகள் அதனை மதத்திலும் சொல்லப்பட்டு இருப்பதாக எதாவது ஒரு செய்யுளுக்கு (திரித்து) பொருள் கூறி அறிவியலும் உள்ள மதம் என்று புரியவைத்து மதம் வளர்க்க முயல்வர். ஆப்ரகாமிய மதங்கள் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்ளவில்லை, ஏனெனில் மனிதன் களிமண்ணால், இரத்தக் கட்டியால் படைக்கபட்டவன் என்பதே அவற்றின் கொள்கை (அது வேறு காமடி), இந்திய சமயசார் தத்துவங்கள் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்கின்றன. டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்வதில் இந்திய மதங்களுக்கு இருக்கும் மறைமுக சிக்கல், உயிரினங்களின் தோற்றம் என்பவை காலமாற்றத்தினால் ஏற்பட்ட ஜீன்களின் உருமாற்றத்தால் உருவானவை என்கிற அடிப்படையில் அமைந்திருப்பதால், இங்கே இறைவனின் படைப்புக் கொள்கையை எங்கே இடைச் சொருகுவது என்பது அந்த சிக்கல். டார்வின் கொள்கையை ஒரு மதம் ஏற்றுக் கொண்டால், அது கிட்டதட்ட இறைவனின் படைத்தல் தொழிலை மறுப்பது போன்றதாகும், படைத்தல் தொழிலையே மறுக்கும் படி அமைந்திருப்பதால் மனிதனை இறைவன் படைத்தான் காக்கிறான், எனவே வணங்குங்கள் என்று சொல்வது எந்த விதத்தில் ஞாயமானவை என்று தெரியவில்லை. வெறும் இறை அச்சம் என்பதைத் தவிர்த்து இறைவணக்கம் செய்யச் சொல்ல எந்த காரணத்தையும் டார்வின் கொள்கையை ஏற்றுக் கொள்ளும் மதத்தினரால் சொல்லவே முடியாது.


நமக்கு கிடைக்கும் அறிவின் தொகுப்பு பகுத்தறிவு, அறிவியல் ஆன்மிகம் இப்படி எதன் மூலம் வந்திருந்தாலும் அவை இயங்கு பொருள்களில் இருக்கும் ஒழுங்குமுறையை அறிந்து கொள்வதை மட்டுமே தந்திருக்கிறது. அந்த ஒழுங்கு முறை ஏன் எப்படி ஏற்பட்டது என்பதை அறிவது மிக மிகக் கடினம், சரியாக 356.25 நாட்கள் பூமி ஒரு ஆண்டைக் கடந்து மீண்டும் அதே இடத்தில் தொடங்குகிறது. நமக்கு வேண்டுமானால் நமது எண்ணியல் அடிப்படையில் அது ஏன் 365.25 நாள் எடுத்துக் கொள்கிறது, ஏன் 365 டிகிரியில் வட்டமான வட்டப்பாதையில் இன்றி நீள்வட்டத்தில் செல்கிறது என்பதற்கான விடை தெரியாமல் இருக்கலாம், ஆனால் (இயற்கையின்) இயக்கம் என்னும் பேரறிவு என்பது மனித அறிவிக்குள் அடங்காது, பேரறிவிற்கும் நமது எண்ணும் முறைக்குக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. 10 அடிமான முறையில் நாம் எண்ணுகிறோம். இயற்கைக்கும் அதன் இயக்கத்திற்கும் நமது 10 அடிமான முறை எதுவும் தெரியாது, காரணம் 10 அடிமான முறை, கோண அளவீடுகள் நம்மால், நமது கணக்கு வழக்குக்காக ஏற்படுத்தப்பட்டவையே. இயற்கையும் நமது கணக்கியல் முறைகளில் தான் இயங்க வேண்டும் என்பதற்கு எந்த வித தேவையும் இல்லை. அவற்றின் இயக்கங்களை நம்முடைய அளவீட்டு முறைகளில் ஒப்பிட்டு இயற்கையில் இருக்கும் ஒழுங்கு முறைகளைக் கண்டு கொண்டு, அதன் வழியாக கணக்கிட்டு சாட்டிலைட் போன்றவற்றை நிலை நிறுத்துகிறோம், அதாவது இயற்கை இயக்கத்திற்கு பொருத்திக் கொள்ளும்படி நமது கணக்கியலில் சமண்பாடுகளை உருவாக்கி அதனை ஒப்பிட முடிகிறது.

இவற்றை பூமி இயக்கத்தைக் குறித்து மட்டுமே சொல்லவில்லை. எட்டுக்கால் பூச்சிக்கு எட்டு கால் ஏன் இருக்கின்றன ? ஐந்து இதழ் பூக்கள், அமீபா போன்ற ஏன் அனைத்து உயிரனங்களின் அமைப்பிற்கும், கனிம பொருள்கள் அனைத்திற்குமே பொருந்தும், நாம் பொருள்களின் இயக்கத்தை நமது கணக்கியலில் பொருத்தி சமண்பாடுகளை உருவாக்கிக் கொள்கிறோம் அதைத்தான் மனித அறிவு வளர்ச்சியால், முயற்சியால் இதுவரை செய்யப்பட்டு இருக்கிறது, அதையே பகுத்தறிவு அல்லது ஆறாவது அறிவு என்கிறோம். நம்மால் அறிய முடியாத, காரணங்கள் அனைத்தையுமே அறிந்து கொள்ள முடியாத அளவில் பேரியக்கம் இருக்கிறது. அதை இயற்கை என்போர் சிலர், இறைவன் என்போர் பலர். இயக்கத்திற்குக் காரணம் அதன் தன்மையிலேயே இருப்பதாக புரிந்து கொள்வதால், நம்புவதால் அவற்றை இறைவனின் லீலைகளாக நான் நினைப்பது இல்லை.

எண்ணற்ற உயிர்கள், அவற்றின் தோற்றம், அவற்றின் ஒவ்வொரு வித்தும் வளர்ந்து பல வித்துக்களைத் தோற்றுவிப்பதன் மூலம், ஒரு வட்டத்திற்குள்ளேயே அவ்வுயிர்கள் தோன்றி பெருக்கிக் கொண்டு தொடர்கின்றன. ஒரு வித்திற்குள் முழுவளர்ச்சியின் தன்மையை அடங்கி இருப்பது மிக மிக நுட்பமான ஒன்று, நம் மனித அறிவால் விளங்கிக் கொள்ளவும் முடியாது, ஜீன்களின் மூலம் அவற்றின் தன்மைகளை மட்டுமே அறிய முடியும், நாம் கண்டு கொண்டது தவிர்த்து இயற்கையின் பல செயல்படும் தன்மைகளின் அறிவு, மனித மூளையுடன், மனிதனின் கணக்கியல் சமண்பாடுகளுடன் மிகச் சரியாக ஒப்பிட முடியாத பேரறிவு. அதாவது இயக்கத்தின் தன்மைகளையோ, அவை ஏன் அவ்வாறு ஒரு (ஏதோ ஒரு) முறையில் இயங்குகின்றன என்பதை மனித கணக்கு மற்றும் எண்ணியல் மூலமாக முற்றிலுமாக அறிந்து கொள்ளவே முடியாது. ஆறாம் அறிவின் மூலம் இயற்கையை முழுவதுமோ ஆராய்ந்துவிட முடியும் என்கிற மனித முயற்சி இயற்கையின் பேரறிவுக்கும் முன்பு பெரும் அறைகூவல் தான். பகுத்தறிவாளர்கள் அல்லது இறைமறுப்பாளர்கள் இறைவனை நம்பத் தேவையில்லை என்றாலும் மனித அறிவுடன் ஒப்பிட முடியாத அளவுக்கு இயற்கை பேரறிவு மிக்கது என்பதை ஒப்புக் கொண்டே ஆகவேண்டும்.

"கை" காட்டும் விஜயகாந்த் !

ஒவ்வொடு தேர்தல் கூட்டத்திலும், அதிமுகவும், திமுகவும் (ஏற்கனவே) ஊழல் செய்துவிட்டன அதனால் எனக்கு(ம்) வாய்ப்புக் கொடுங்கள் என்கிறார் விஜயகாந்த் :)

ஏற்கனவே காங்கிரசுடன் போட்டுக் கொண்டுள்ள (மறைமுக) ஒப்பந்தத்தின் படி, காங்கிரஸார் நிற்கும் தொகுதிகளில் தேமுதிக தனது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என்பதை பல்வேறு செய்தி இதழ்கள் அறிவிக்கின்றன, தேமுதிகவின் இந்த உதவிக்கு பண்டமாற்றாக தேமுதிகவின் தேர்தலுக்கு ஆகும் ( பல கோடிகள்) செலவுகளை காங்கிரஸ் கவனித்துக் கொள்வதாக ஒப்பந்தமாம்.

விஜயகாந்தின் தேர்தல் முழக்கத்தைக் கேட்போருக்கு இவை வெளிச்சமாகவே தெரிகிறது, தமிழக திராவிடக் கட்சிகளை சாடும் வி.காந்த் மறந்தும் கூட காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பது இல்லை. 40 தோகுதிகளிலும் தேமுதிக நிற்பதாக எந்த கூட்டத்திலும் அறிவிக்கவில்லை. இதன் மூலம் தெரியவருவது என்ன வென்றால் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பிரச்சாரம் செய்கிறதோ இல்லையோ ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து தேமுதிக வேட்பாளர்களை நிறுத்தாது என்று அறிய முடிகிறது. இதனை உறுதி படுத்தும் விதமாக, வி.காந்த், நான் "கை" காட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார்.

"கை" மற்றும் அதன் அல்லக்கைளின் வேட்பாளர்களை துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாண்மை ஈழ ஆதரவு தமிழர்களின் நிலை. கை ஆதரவு நிலை எடுத்திருக்கும் தேமுதிகவும் ஈழ ஆதரவு தமிழக வாக்களர்களால் (அடையாளம்) கண்டு கொள்ளப் போகிறார்கள். "கை" காட்டும் விஜயகாந்துக்கு அவரது கையே அவருக்கு கிடைக்கும் வாக்குகளில் கை வைத்து விடும் போல் ஊகிக்க முடிகிறது. இது மறைமுக மாக அம்மா கூட்டணிக்கு லாபமாக மாறி வெற்றி வாய்ப்புகளை கூட்டும்.

மக்களோடும் தெய்வத்தோடும் கூட்டணி என்கிறார் வி.காந்த். மற்றவர்களெல்லாம் மாக்களோடும் பேய்களோடும் (சத்தியமாக நான் காங்கிரஸ் பற்றி சொல்லவில்லை) கூட்டணி வைத்திருக்கிறார்களா என்ன ?

27 மார்ச், 2009

இப்படி வாழ்த்துகள் சொல்லாமே !

எப்படி வாழ்த்து சொல்வது என்பதில் பல்வேறு நம்பிக்கைகள் இருந்தாலும், வாழ்த்துகள் சொல்வது பிறரை மகிழ்விக்க, அன்பை தெரிவிக்க என்கிற புரிந்துணர்வில், வாழ்த்துகள் பலிக்குமா ? இல்லையா ? என்ற கேள்வியை புறம் வைத்துவிட்டு இறைமறுப்பாளர்கள் கூட பிறருக்கு வாழ்த்து தெரிவிப்பது வழக்கம்.

பொதுவாக தமிழர் பண்பாட்டில் புதுமண இணையர்களை பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க என்று வாழ்த்துவது வழக்கம், அந்த பதினாறு எது என்று தெரியாமல், எல்லோரும் சொல்கிறார்களே என்று சொல்லி வைப்பதும் வழக்கம், அதுக்காக பதினாறு என்ன வென்று மனப்பாடம் செய்து வைத்திருப்பவர்கள் தான் வாழ்த்தனுமா ? என்றெல்லாம் கேட்கக் கூடாது, அவை என்ன வென்று தெரிந்து கொள்வதில்லை என்பதாக மட்டும் புரிந்து கொள்வோம். எல்லா வளங்களையும் பெற்று என்பதற்கும் என்ன என்ன வளம் என்று ஆராய்ச்சி நடத்துவது இல்லையே அதனால் பதினாரையும் அப்படியே எடுத்துக் கொள்வோம், ஒண்ணும் தவறு இல்லை. இணையத்தில் பதினாறு என்னவென்று தேடினால் தமிழ் விக்கிப்பீடியாவிலேயெ தொகுத்து வைத்திருந்தார்கள்

கல்வி
புகழ்
வலி(மை)
வெற்றி
நன் மக்கள்
பொன்
நெல் (உணவு)
நல்லூழ்
நுகர்ச்சி (அனுபவம்)
அறிவு
அழகு
பொறுமை
இளமை
துணிவு
நோயின்மை
வாழ்நாள்
இந்த பட்டியல் வெறும் தகவலுக்காக எடுத்து எழுதினேன்

பொதுவாக வாழ்த்தும் போது மனைவி மக்களோடு (குழந்தைகளோடு) நல்லா இருங்க, நல்ல இருக்கனும் என்று வாழ்த்துவது வழக்கம், வாழ்தும் படியே . குழந்தைகள் மனைவியுடன் நலமாக இருப்பார்கள், ஆனால் 50 - 60 வயதுடைய பெற்றோர்களை விட்டுவிடுவார்கள்.

அடுத்தமுறை வாழ்த்தும் போது, பெற்றோர்கள் துணையுடனும், மனைவி மக்களுடனும் நலமும் வளமும் நிறைந்து வாழ்க அல்லது எப்படி வாழ்த்துச் சொன்னாலும் அதில் பெற்றோர்களை சேர்த்துச் சொல்லிப் பழகலாம்.

ஒருவர் தன்னுடைய 60 வயது வரையிலும் அவரின் 85 வயது பெற்றோர்களுடன் சேர்ந்து வாழ்வதைவிட சிறப்பான வாழ்க்கை இருக்க முடியுமா ?

வாழ்த்துகள் பலிக்குதோ இல்லையோ.....ஒருவரை வாழ்த்தும் போது பெற்றோர்கள் இருந்தால் அவர்களின் பெற்றோர்களின் நலனையும் சேர்த்து வாழ்த்தும் போது, அவை வெறும் (formal) வாழ்த்துச் சொற்கள் அல்ல என்று நினைக்காமல் பெருமகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் அடைவார்கள்.

26 மார்ச், 2009

நாளைய செய்தி - பாமக !

மார்ச் 27, சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாமக கட்சியின் நிறுவனரான மருத்துவர் இராமதாஸ், இலங்கை பிரச்சனையை முன்னிட்டு ஏன் காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து விலகிக் கொள்ளவில்லை என்று கேள்விக்கு பதில் அளித்தார். அவர் கூறியதாவது. கடந்த நவம்பர் முதல் ஈழத்தமிழர்களை கொன்று குவிக்கும் இலங்கை அரசுக்கு எதிராக பல்வேறு போராட்டங்களை பாமக நடத்திவந்தது. அதில் ஒரு கட்டமாக காங்கிரஸ் அமைச்சரவையில் இருந்து பாமக உறுப்பினர்கள் விலக்கவும் முடிவு செய்யப்பட்டது. பின்னர் பொதுக்குழுவை கூட்டி விவாதித்த போது, தேர்தலுக்கு ஒரு சில மாதங்களே இருப்பதால், பாமக விலகும் பட்சத்தில் காங்கிரஸ் அரசு கவிழும் வாய்ப்பு இருந்ததால் பாமக தன் முடிவை ஒத்தி வைக்க வேண்டி ஆகிற்று. 1000 கோடிகளில் தேர்தல் செலவு செய்து தேர்ந்தெடுக்கப்படும் ஒரு இந்திய அரசை கவிழ்ப்பதால் மக்களின் வரிப்பணம் வீணடிக்கப்படும், எப்படியும் ஆறு மாதங்களில் பொதுத் தேர்தலை சந்திக்கும் நிலையில் இருக்கும் பொழுது இடையில் காங்கிரசின் ஆதரவை விலக்கிக் கொள்வது மத்தியில் பெரும் குழப்பத்தையே விளைவிக்கும் என்பதால் இந்திய நலனையும் கருத்தில் கொண்டு காங்கிரஸ் அவையில் தொடர்ந்தோம். அதே சமயத்தில் ஈழத்தமிழர்களுக்கு இந்த காங்கிரஸ் அரசும் அதன் தமிழக கூட்டணி தலைமையும் எதுவும் செய்துவிட வில்லை என்பதால் அந்த கூட்டணியில் இருந்து விலகுகிறோம்.

திமுக அரசு ஈழத் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை கைகழுவி விட்டது, அரசு மதுக்கடைகளுக்கு எதிராக நாங்கள் எவ்வளவோ போராடினோம், குறைந்த பட்சம் தமிழகத்தில் மதுவிலக்கை அமுல்படுத்தி தமிழக நலனைக் காக்கவும் திமுக முயலவில்லை, இலவசம் திட்டம் என்ற பெயரில் மக்களுக்கு இலவசங்களை வழங்கிவிட்டால் ஓட்டுக்களை தங்கள் வசம் ஆக்கமுடியும் என்று நினைத்து தவறாக செயல்படுகின்றன. திமுக அரசின் செயல்பாடுகளை நாங்கள் தொடர்ந்து எதிர்த்துவருகிறோம், திருந்துவார்கள் என்று நினைத்தோம், தற்பொழுது வேறு வழி இன்றி கூட்டணியில் இருந்து பிரிகிறோம். ஆளும் கட்சியாக இருக்கும் கருணாநிதியைவிட சகோதரி ஜெயலலிதா ஈழ நலன்களில் மிகுந்த அக்கரை காட்டுகிறார். திமுகவின் மக்கள் விரோத அரசை இந்த தேர்தலில் முற்றிலுமாக மக்கள் புறக்கணிப்பார்கள்.

நிருபர் : அதிமுகவுடன் நீங்கள் கைகோர்த்தால் ஈழபிரச்சனை உடனே தீர்ந்துவிடுமா ?

மருத்துவர் : நோ கமெண்ட்ஸ்



முழுவதும் வாசிக்க... உண்மையான பேட்டி இங்கே

25 மார்ச், 2009

சரஸ்வதி, லக்ஷ்மி கடாச்சம் !

நான் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அரங்க.சுப்பையா என்கிற தமிழ் வாத்தியார் பாடம் எடுப்பார். அவர் ஒரு நாத்திகர், மாணவர்களின் அடுக்கப்பட்ட கட்டுரை குறிப்பேடுகளின் (கட்டுரை நோட்) மீது தான் அவ்வப்போது உட்காருவார், நானெல்லாம் நாள் தோறும் பட்டை போட்டுச் செல்வதால் வாத்தியாரின் செயல் அருவெருப்பாக எண்ணி, சரஸ்வதியை அவமானப் படுத்துவதாகவும் மனம் புழுங்குவேன். இறைமறுப்பாக பேசாமல் அடிக்கடி எதாவது கிண்டல் அடித்துக் கொண்டே இருப்பார், 'விளையாட்டுக்கும் திருவிளையாட்டுக்கும் என்ன வேறுபாடு தெரியுமான்னு கேட்டுவிட்டு, நாம விளையாண்டால் விளையாட்டு அதுவே கடவுள் விளையாண்டால் திருவிளையாடலாம்...நாம் வெளையாண்டால் வாலிபால்....அதுவே கடவுள் விளையாண்டால் திருவாலிபால்' என்பார். நான் எண்ணி இருந்ததற்கு மாற்றான கடவுள் பற்றிய எதிர்மறை கருத்துகள் ஆதலால் அவை அப்போது மனதில் பதிந்தது, அவரை நினைக்கும் போதெல்லாம் நினைவுக்கு வரும். மற்றபடி அவர் எப்போதும் நல்ல ஆசிரியர், ஏழை மாணவர்களுக்கு தன்னால் முடிந்த கல்வி மற்றும் பொருள் உதவி செய்தவர், அதன் பிறகு அவரை பார்த்தே இல்லை, தற்காலம் தஞ்சை பல்கலை கழகத்தில் பணி புரிந்துவருவதாக கேள்வி, இந்நேரம் ஓய்வு பெற்றிருந்தாலும் வியப்பு இல்லை.


பேராசிரியர் அரங்க சுப்பையா (முனைவர் மு இளங்கோவன் பதிவில் இருந்து)


பாட புத்தகங்கள் மற்றும் எழுதும் குறிப்பேடுகளில் தப்பித்தவறி கால் பட்டுவிட்டால், தொட்டு கும்பிடுவது இறை நம்பிக்கையுடய தமிழர்கள் வழக்கம். மேலேயே ஏறி உட்கார்ந்திருப்பது நினைத்துப் பார்க்காத செயல், ஏனென்றால் நமக்கு பெற்றோர்கள் வழி ஊட்டப்படும் பழக்கங்களில் பாடம் தொடர்புடையவற்றை அலட்சியப்படுத்தக் கூடாது என்பதில் குறிப்பேடுகளில் கால் படக் கூடாதது என்பதும் ஒன்றே. ஆனால் வெறும் தாள், செய்தித்தாள், ஏனைய தாள்களை சரஸ்வதியாக நினைத்துக் கொள்ள வேண்டும், அதன் மீது கால்படுவது சரஸ்வதியை அவமதிப்பதாகும் என்பதெல்லாம் மூடநம்பிக்கையாகவே படுகிறது,
இப்போதெல்லாம் சரஸ்வதியும், லஷ்மியும் ஒன்றாக இருக்கும் படிதான் நாட்டின் செல்வ செழிப்பு இருக்கிறது. அதாவது முன்பெல்லாம் தங்கம், வெள்ளி, செம்பு நாணயங்களே இருந்தன, தற்பொழுது உயர் ரக தாள், அதில் மதிப்பு அச்சிடப்பட்டு பணம் என்று அழைக்கப்படுகிறது, தாள் சரஸ்வதி அதன் மதிப்பு லக்ஷ்மி, இருவரும் சேர்ந்தே தான் டாஸ்மாக் முதல் விலைமகளிர் இல்லம் வரையில் நுழைகிறார்கள், இன்னும் தாள்களுக்கு அப்படி ஒரு மரியாதை கொடுப்பது பழைய பழக்கவழக்கத்தினால் வந்த பொருளற்ற செயலாகவே எனக்கு தெரிகிறது.

இன்னும் வேறுமாதிரி சொல்லவேண்டுமென்றால் உடல் உறுப்புகள் அனைத்தும் தனித்தனியாக முதன்மைத்துவம் வாய்த்தவை, விரல்களின்றி கையின் பயன்பாடு குறைவு, கால்களின்றி நடக்கவே முடியாது, இதில் வலது கை புனிதம், இடது கை பீச்சாங்கை என்றெல்லாம் இழித்து பேசுவதும், இடது கையால் பொருளை எடுத்துக் கொடுக்க கூடாது, சாப்பிடக் கூடாது என்பது மூட நம்பிக்கைகளின் எச்சங்களாக நம்மிடையே இருந்துவருகிறது. கையை விட கால்கள் எந்த விதத்தில் மதிப்பு குறைந்தது என்று தெரியவில்லை. ஒரு தாளில் கால் தெரிந்தோ, தெரியாமலோ படுவதால் என்ன குற்றம் ஆகிவிடப் போகிறது ? தலைக்கு தலையணையும் உட்கார மென்மையான இருக்கைகளை தேடுகிறோம், கால்களுக்கு முட்டுக் கொடுத்து, அல்லது கால்களுக்கு அணையாக எதோ ஒன்றை பயன்படுத்துவதால் என்ன தவறு ? அண்மையில் கம்பவாருதியின் சொற்பொழிவை கேட்ட போது இறைவணக்கம் எப்போதும் இறைவனின் கால்களுக்கு செலுத்தப்படுகிறது, 'இறைவனடி' சேர்ந்தார் என்று காலை பெருமை படுத்தித்தான் சொல்கிறார்கள், போற்றிப்பாடல்கள் காலில் தொடங்கி தலையில் முடியும், மூத்தோர் கால்களில் விழுவதும் கூட சிறப்பானது தான். காலை இழிவு என்று ஒருபோதும் நினைக்கக் கூடாது என்றார். (அம்மாவின் கால்களில் விழுபவர்கள் அப்படித்தான் நினைக்கிறார்கள், சுயமரியாதை செம்மல்கள் தான் கால்களை இழிவாக நினைத்து கால்களில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு என நினைக்கிறார்களோ :))

தாள்களில் வெறும் பாடம் தொடர்புடையது மட்டுமா அச்சடிக்கப்படுகிறது ? சரோஜா தேவி வகை ஆபாச கதைகள், ஆபாச படங்கள், மற்றும் திரை உலக கிசுகிசுக்கள் எல்லாம் அச்சடிக்க பயன்படும் தாளை சரஸ்வதி ரேஞ்சுக்கு உயர்த்துவது உச்சகட்ட பக்தியின் அச்சம் தான், இதையும் மீறி படங்கள் வரைந்து பாகங்களை குறித்து வைத்திருப்பார்கள் பல குறும்புக்கார மாணக்கர்கள். துள்ளும் இளமை வயது.....:) புது தொலைக்காட்சி பெட்டிக்கு தீப ஆராதணை செய்து பயன்படுத்தியவர்களையெல்லாம் பார்த்திருக்கிறேன் :) அதில் அடுத்தவாரம் பையன் யாருக்கும் தெரியாமல் நண்பர்களுடன் நீலப்படம் பார்த்து கொண்டிருப்பான். கையினால் மாட்டு சாணியை பிள்ளையாராக பிடித்து வணங்குபவர்கள், தாளை சரஸ்வதியாக நினைத்து கால்படக் கூடாது என்று சொல்வது முரணாக இருக்கிறது.

ஆனால் வழிபாட்டு உருவங்களை டாய்லெட் பேப்பர்களில் அச்சிடுவது மிகவும் தவறான ஒன்று, சமூக ஒற்றுமைக்கு எதிரானது, அந்த செயல் நம்பிக்கை உடையவர்களை அவமதிப்பதாகும். அந்த கடவுளை வணங்குபவர்களின் மனங்களை புண்படச் செய்யும். அதை எல்லாம் தவிர்கலாம்.

தாள்களுக்கு தனியான மரியாதை தேவை இல்லை, அவற்றை மறுபயனீடாகவும், அளவுடன் பயன்படுத்தினால் அவற்றின் தேவைக்காக வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை குறையும், இதைத் தவிர்த்து தாள்களுக்கு வேறொரு மரியாதை சிறப்பாக செய்துவிட முடியுமா ?

குறிப்பு : இந்த பதிவு ஸ்வாமி ஓம்கார் பதிவுக்கு பின்னூட்டமிட்டதின் நீட்சி.

ஆளும் கட்சிகள் செய்யும் தேர்தல் கால தவறுகள் !

தேர்தல் ஆணையம் தானியங்கி நிறுவனம் என்றாலும் அரசுடன் ஒத்துழைப்புடன் நடந்து கொள்ளவில்லை என்றால் ஆணைய வளர்ச்சிகள், வசதிகள் இவற்றை அரசும் கண்டுகொள்ளாது, எனவே எழுதப்படாத ஒப்பந்தமாக அரசுசார்(ந்த) நிறுவனங்கள் எதுவென்றாலும் அதில் அரசியலும், ஆளும் அரசியல்வாதிகளின் நலனும் கலந்தே இருக்கும், டி என் சேசனுக்கு முன் தேர்தல் ஆணையம் ஒன்று இருப்பதே யாருக்கும் தெரியாது. தேர்தல் ஆணையம் என்பது ஆளும்கட்சியை சார்ந்த நிறுவனம் அல்ல தனித்து செயல்படும் அரசு நிறுவனம் என்று பொதுமக்கள் அறிந்து கொண்டது டி.என்.சேஷனால் தான். தேர்தல் ஆணையத்தின் மீது அரசியல்வாதிகளுக்கு பயமும், அவர்களால் விமர்சனமும் செய்யும் அளவுக்கு கொண்டு சென்ற பெருமை டி.என்.சேஷனையே சாரும். அதில் இருந்து ஓய்வுபெற்ற பிறகு அவரது அரசியல் நடவடிக்கைகளுக்கு பெரிய அளவில் ஆதரவு இல்லை என்பது வேறு தகவல்கள்.

தேர்தலுக்கு முன் தேர்தல் எப்போது நடத்துவது என்பதை எழுதப்படாத மரியாதை நிமித்தமாக ஆளும்கட்சிகளிடம் தேர்தல் ஆணையம் கலந்து முடிவெடுப்பது வழக்கம், குறிப்பாக புதிய அரசு தலைமைகள் மாறும் போது தேர்தல் ஆணையர்கள் சென்று அந்த அரசியல் தலைமைகளை சந்தித்து வருவதும் வழக்கமாம், அதை தமிழக தேர்தல் ஆணையர் செய்யவில்லை என்று கலைஞர் அண்மையில் மனம் புழுங்கி இருந்தார். அப்படி செய்வது எங்களுக்கு ஆணை வழியாக வழியுறுத்திச் சொல்லப்படவில்லை என்று ஆணையரும் பதில் சொல்லி இருந்தார். இருவரும் போட்டி போட்டு செய்தி இதழ்களில் பேட்டிக் கொடுத்தார்கள். மக்கள் தலைவர்களை அரசு உயர் அலுவலர்கள் மதிப்பதற்கு தயாராக இருப்பதில்லை என்பதாகத் தான் விளங்கிக் கொண்டேன். இதுவே வேலை தகுதி மேம்பாடு (ப்ரமோஷன்) கிடைக்கும் வாய்பென்றால் ஆளும் அரசியல் வாதிகளை காக்கைகள் கூட்டம் போல் அரசு உயர் அலுவலர்கள் மொய்திருப்பார்கள். சரி.... சொல்ல வந்தது வேறு

தேர்தல்கால திருவிழாவாக கருத்து கணிப்புகளை செய்தி இதழ்கள் வெளி இடுவது முந்தைய வழக்கம், பெரும்பாலும் கருத்துக் கணிப்புகள் ஆளும் கட்சிக்கு எதிரானவையாகவே இருக்கும், இந்தியா ஒளிருகிறது என்று கோடிக்கணக்கில் அரசு பணத்தை செலவு செய்து அடுத்த தேர்தலிலும் கொழிக்கலாம் என்று நினைத்த பாஜவுக்கு அப்போதைய கருத்து கணிப்புகள் பெரும் தலைவலியாக இருந்தன. வேறு வழியின்றி கருத்து கணிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் தடை விதிக்க வேண்டும் என்கிற திரைமறைவு கோரிக்கையை பரிசீலனை செய்து 'கருத்து கணிப்புகளை வெளி இடுவது, மக்களை சுயமாக முடிவெடிக்க முடியாமல் செய்துவிடும் தவறான உத்திகள்....அவற்றில் உள்நோக்கம் கொண்டவையும் தவறான கருத்துக்கணிப்புகளும் கூட இருக்கலாம்' என்று தேர்தல் ஆணையம் லாஜிக்காக விளக்கம் கொடுத்து கருத்து கணிப்புகளை வெளி இட ஊடகங்களுக்கு தடைவிதித்தது.

தற்பொழுது ஈழத்தமிழர்கள் படும் துயரங்களை மக்கள் முன் கொண்டு சென்று ஆளும் காங்கிரசுக்கு எதிராக பெரிய எதிர்ப்பலையை ஏற்படுத்த ஈழநல அமைப்புகள் திட்டமிட்டு இருந்தன, இதிலும் தேர்தல் ஆணையம் மூக்கை நுழைத்து அதற்கும் தடை விதித்திருப்பதாக அறிய முடிகிறது, இதில் காங்கிரசின் தலையீடுகளே இருக்காது என்று எவரும் சொன்னால் அவரின் நம்பகத் தன்மை எத்தகையதாக இருக்கும் என்பதை யாரும் சொல்லி தெரிந்து கொள்ள வேண்டியதில்லை. தேர்தல் காலங்களை மக்கள் திருவிழா போலவே கொண்டாடினார்கள், இப்போதெல்லாம் இரவு 10 மணிக்கு மேல் பேசக்கூடாது........முதல் ஏகப்பட்ட கூடாதுகளை தேர்தல் ஆணையம் விதித்திருக்கிறது, அவை ஒழுங்கு முறை நடவடிக்கையா ? தேர்தல் ஆணையத்தின் அதிகார வெறியா என்கிற ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. சட்டத்தில் அனுமதி இருந்தால் கொலை கூட ஞாயமானதே என்பதாகவே புரிந்து கொள்ளப்படும், பேசப்படும், வழியுறுத்தப்படும்.

ஈழத்தமிழர்களின் அவலங்களையும், ஈழம் தொடர்பானவற்றையும் தேர்தலில் பயன்படுத்தக் கூடாது என்று சொல்லும் தேர்தல் ஆணையம் வரும் காலத்தில் (அகால) மரணம் அடையும் தலைவர்களின் பிணங்களைக் கட்டி மக்களிடம் அனுதாபம் அலையை ஏற்படுத்த முயன்றால் அதனையும் தடுக்க முயற்சி எடுக்கவேண்டும்.

யானை தன் தலையில் தானே மண்ணை வாரி போட்டுக் கொள்வது போல் ஆளும் கட்சியாக இருக்கும் போது தேர்தல் ஆணையத்திடம் ரகசிய ஆணை பிறப்பிக்கும், கோரிக்கை வைக்கும் அரசியல் கட்சிகள் அதற்கான எதிர்பலனை எதிர்கட்சியாக இருக்கும் போது அடைகின்றன

24 மார்ச், 2009

அம்மாவும் ஐயாவும் ஒண்ணாக வாராங்க !

பலருக்கு அதிமுக - பாமக கூட்டு வியப்பாக இருந்தாலும் இதெல்லாம் எதிர்பார்த்தது தான், காங்கிரசுக்கு பலத்த அடி கொடுக்க முடிவு செய்த தமிழக மக்கள் காங்கிரஸ் கூட்டணிக்கும் சேர்த்தே வேட்டு வைப்பார்கள் என்பது எதிர்பார்க்கப்படும் ஒன்றுதான். இலங்கை அரசு ஈழத்தமிழர்களை காங்கிரஸ் உதவியுடன் அழிக்கிறது என்பது தெரிந்தவை தான் என்றாலும் அன்றாடம் இலங்கை இராணுவத்தினரால் சுடப்படும் இந்திய மீனவர்கள் குறித்து யாதொரு நடவடிக்கையும் காங்கிரஸ் அரசு செய்தது இல்லை. தமிழனை வெறும் குதிரையாக நினைத்து சவாரி செய்யலாம் என்கிற காங்கிரஸ் நினைப்புக்கு இந்த முறை தமிழர்கள் பாடம் சொல்லிக் கொடுக்கப் போகிறார்கள் என்பதை தமிழக சிறுவன் கூட அறிந்திருப்பான், இதை அறிந்ததால் பாமக திமுக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்து ஜெ வுடன் கூட்டணியில் இணைய முடிவு செய்து அதற்கு ஏதுவான சூழலை ஏற்படுத்த ஜெ வை ஈழத்ததமிழர்களுக்காக உண்ணாவிரதம் இருக்கக் கேட்டுக்கொண்டு அதன் படியே பாமக அரசியல் காய்நகர்த்தல் நடைபெறுகிறது. ஈழத்தமிழர்களின் நலன் என்ற ஜெ வின் உண்ணாவிரத்ததை தமிழக மக்கள் எந்த அளவுக்கு நம்புவவர்கள் என்று தெரியாது. ஆனால் காங்கிரசை வீழ்த்த நினைக்கும் வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு கிடைக்க வாய்ப்புள்ளது.

விஜயகாந்த் இதுவரையில் தான் ஒரு தெளிவான அரசியல்வாதி என்பதாகக் கூட மக்கள் மன்றத்தில் காட்டவில்லை. ஒருகூட்டத்தில் திமுக தனது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்தி வருவதாகவும், மறுநாள் கூட்டத்தில் திமுக அரசு எதுவுமே செய்யவில்லை என்பதாக நாளொரு பேச்சு பேசி வருகிறார். எதுவுமே செய்யாதவர்கள் இவரது தேர்தல் அறிக்கையை காப்பி அடித்து செயல்படுத்துவதாக முன்னுக்கு பின் முரணாக பேசுவதில் இருந்தே விஜயகாந்தின் அரசியல் வெறும் தூற்றல் தான் என்பதை விளங்கிக் கொள்ள முடியும். சென்ற சட்டமன்ற தேர்தலில் 'பதிவான' வாக்குகளில் வி.காந்த் வாங்கியது வெறும் 8 விழுக்காடு, அதாவது 'மொத்த' வாக்களர்களில் 5 விழுக்காட்டினர் வி.காந்துக்கு வாக்களித்தனர், அதிலும் 3 விழுக்காட்டினர் முதல் முறை நிற்கிறார் என்பதாலும் திராவிட கட்சிகளைப் பிடிக்கவில்லை என்பதற்காக கிடைத்த வாக்குகள் தான். 1 விழுக்காடு ரஜினி கட்சி ஆரம்பிக்காத எரிச்சலில் வி.காந்தை ஆதரித்த ரஜினியின் முன்னால் ரஜினி ரசிகர்க்கள், 1 விழுக்காடு சரத்குமாருக்கும் மதுரை இடைத்தேர்தலுக்கு கிடைத்தது போல் தெளிவற்ற வாக்களர்களால் போடப் பட்டது, அதிலும் மீதம் ஒரே ஒரு விழுக்காடு தான் விஜயகாந்தின் ரசிகர்கள் மற்றும் அவரது சாதியைச் சேர்ந்தவர்களில் வாக்குகள், வி.காந்தின் வாக்கு வங்கி என்றால் அது அந்த ஒரு விழுக்காடு மட்டுமே, சென்ற முறை வி.காந்துக்கு வாக்களித்த மற்ற 4 விழுக்காட்டினர் எப்போதும் அளிப்பார்கள் என்று சொல்ல முடியாது.

இந்த கணக்கு பெரிய கட்சிகளுக்கு தெரியாமல் இல்லை, வி.காந்தை கூட்டணியில் சேர்ப்பதன் மூலம் கூட்டணியின் பலம் கூடுவதாக மக்கள் மன்றத்தில் கணக்கு காட்ட வி.காந்துக்கு அழைப்பு விடுத்தனர். எல்லோரும் ஊழல் செய்தவர்கள் என்று தொடர்ந்து கூறிவிட்டு அவர்களுடன் கூட்டணியில் இணைவாரா சங்கடமாக இருக்காதா, அதற்குத்தான் அவர் தயங்குகிறார் என்பது போல் விஜயகாந்த் கூட்டணி குறித்து எந்த முடிவையும் எடுக்காததை வைத்து சிலர் பேசிக் கொள்கிறார்கள். அரசியலிலாவது தயக்கமாவது அதெல்லாம் ஒன்றும் இல்லை, கலைஞரின் காலில் பலமுறை விழுந்த வி.காந்த் அரசியல் என்று வந்த பிறகு படுகேவலாமாகவெல்லாம் பேசி இருக்கிறார். அதே போன்று இராமதாசும் கலைஞரை பலமுறை பேசி இருக்கிறார், ஜெவையும் பலமுறை பேசி இருக்கிறார். அரசியல்வாதிகளைப் பொறுத்து வசையாடல்கள் இயல்பானதே, அப்படி செய்பவர்களைத் தான் தங்கள் அரசியல்வாதி தொழிலைச் சேர்ந்தவர்கள் என்றே நினைப்பார்கள் எவ்வளவு கேவலாமாக பேசினாலும் தேர்தல் நெருங்க, புகழ்ச்சிக்கும், இகழ்ச்சிக்கும் ஆயத்தமாகிவிடுவார்கள், இப்படியெல்லாம் இருந்தும் எதாவது திராவிடக் கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் அடுத்த தேர்த்தலில் தாம் வருங்கால முதல்வர் என்று பிரச்சாரம் செய்ய முடியாது என்பதே வி.காந்தின் எண்ணம், அடுத்த தமிழக தேர்த்தலுக்கு இன்னும் இரு ஆண்டுகளே உள்ளன, வி.காந்த் கொஞ்சம் காலம் மருத்துவரிடம் பாடம் பாடிக்கலாம்.

இராமதாஸ் அடிக்கடி கூட்டணி தாவுகிறார் என்கிற பரவலான குற்றச் சாட்டுகளை அவர் தாவும் அணிக்கு எதிரணி சாட்டுவது எப்போதும் வாடிக்கைத்தான், அவர் கூட்டணி தாவுவர் என்று தெரிந்தே சேர்த்துக் கொள்வதும் அதே அரசியல் வாதிகள் தான், சொல்லப் போனால் தாவித் தாவித்தான் பாமகவை மத்திய அமைச்சர் அவை வரையில் வளர்த்துச் சென்றிருக்கிறார் இராமதாஸ். மற்ற கூட்டணிகளில் சொல்வது போல் கொள்கை கூட்டணி என்ற சொல்லாடலைப் பயன்படுத்தாமல் 'தேர்தல் கால கூட்டணி...தேர்தலுக்கு பிறகு நிலமை எப்படி போகும் என்று சொல்ல முடியாது'என்கிற சொல்லாடலை அரசியலில் நுழைத்தவரே இராமதாஸ் தான். அதனை கவனத்தில் கொண்டே பல கட்சிகளும் தேர்தல் காலக் கூட்டணிகளை அமைத்துக் கொள்வதுடன் கொள்கைப் பற்றி பெரிதும் அலட்டிக் கொள்வது இல்லை, வைகோ அம்மா கூட்டணி கூட இப்படித்தான் விடுதலை புலிகள் பற்றிய கருத்தில் வைகோவும் அம்மாவும் எதிரெதிர் கருத்து கொண்டவர்கள்.

இதோ ஐயாவும் அம்மாவும் தேர்தல் கால கூட்டணியில் செருகிறார்கள், தேர்தலுக்கு மறு நாளே......'ஜெ ஒரு நல்ல அரசியல்வாதி அல்ல...பழிவாங்கும் நோக்கம் கொண்டவர் என்று ஐயாவும், 'பாமக ஒரு சாதிக்கட்சி, இராமதாஸ் ஒரு மரம் வெட்டி' என்று அம்மாவும் சொல்லப் போவதையும் நாம் கேட்கலாம்.

23 மார்ச், 2009

சோதிடனால் சீரழிந்த சரவணபவன் இராஜகோபால் !

ஓட்டல் தொழிலுக்கு முன்னோடியாக பலரால் வியப்பும், பொறாமையும் அடையும் படி மாபெரும் வளர்ச்சி பெற்று சாதனைப் படைத்த இராஜகோபால் இன்று ஏவல் பரிவாரங்களுடன் ஆயுள்தண்டனை அடைந்து சிறைக் கம்பிகளுக்கு பின்னால் நிற்கிறார். காரணம் ஜோதிடம், தன்னை முருகனாகவே நினைத்துக் கொண்டு தன்னிடம் வேலை பார்க்கும் பெண் பார்பதற்கு அழகாக இருந்தால் தாரமாக்கிக் கொள்ளும் நிலைக்குச் சென்றதுமல்லாமல், அதிலும் சோதிடம் பார்த்து வானாளாவிய பணக்காரனாகிவிடலாம் என்ற பேராசையில் ஜீவஜோதியுடன் ஐக்கியமாகத் துடித்து அவரின் (முன்னாள்) கணவனை கொலை செய்துவிட்டு, குற்றம் நீருபணம் செய்யப்பட்டு தண்டனை பெற்று ஜாமீனில் வந்து, வழக்கை நீர்த்து போக வைக்க ஜீவஜோதியின் தாய்மாமன்களையெல்லாம் சரிகட்டி, கடைசில் எதுவும் பலனளிக்கமல் போகவே, தண்டனை அடைந்தார். கிடைத்தது 10 ஆண்டு கடும்காவலும் அபராதமும். அது போதாது என்று அரசு தரப்பில் மேல் முறையீடு செய்ய ஆயுள் தண்டனையாக உயர்த்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப் பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மாற்றான் மனைவியை கவருவென்பது தமிழ்பண்பாட்டில் ஏற்கமுடியாத ஒன்று திருவள்ளுவர் ஏனைய பலரும் அதனை வழியுறுத்தி இருக்கிறார்கள், ஏன் இராவணன் அழிந்ததற்குக் கூட மாற்றான் மனைவியை கவர்ந்ததே காரணமாகக் காட்டப்படுகிறது.

படித்தவன் பணக்காரனாக ஆனபிறகும் பாமரன் பணக்காரன் ஆனபிறகும் இருக்கும் பெரிய வேறுபாடு, பாமரனுக்கு நல்லதை எடுத்துச் சொல்ல எவருமே இருக்க மாட்டார்கள், சுற்றி இருக்கும் கூட்டம் அனைத்தும் புகழ்ந்து பேசி, அடிவருடி, ஆசைச் சொல் கூறி நிலைதடுமாற வைத்து சொத்துக்களை சுருட்டுவதற்கு ஆன எல்லா வழிகளையும் வெற்றிகரமாக ஏற்படுத்துவர். அப்படித்தான் இராஜகோபால் வீழ்ந்தார், எண்ணிப் பார்க்க முடியாத அளவுக்கு கொட்டும் பணம், சென்னையையே விலைக்கு வாங்க முடியும் என்கிற பேராசையில் சோதிடனிடம் போய் நிற்க அவன் காட்டியது தான் ஜீவஜோதியை மூன்றாம் தாரமாக மணந்து கொள்ள வேண்டும் என்ற தீய வழியை. பணம் இருக்கிறது எதையும் செய்யலாம் என்கிற துணிச்சலில் ஜீவஜோதியின் கணவன் பிரின்ஸ் சாந்தக்குமாரை கொடைக்கானலுக்கு கடத்திச் சென்று கொலை செய்யும் அளவுக்கு சென்று, எப்படியும் ஜீவஜோதியை திருமணம் செய்து சென்னையை வாங்கலாம் என்ற வெறியில் தன்னையே அழித்துக் கொண்டு நிற்கிறார் இராஜகோபால். அப்பன் தான் இப்படி என்றால் மகனும் தவறான தகவல்களைக் கொடுத்து சிலருக்கு அமெரிக்க விசா பெற்றுத் தந்த குற்றச் சாட்டில் தலைமறைவாக இருப்பதாக செய்திகள் வந்தது.

ஒருமனிதன் எவ்வளவு விரைவாக முன்னேறலாம் என்பதற்கும் எப்படி விரைவாக சீரழிந்து போகலாம் என்பதற்கு சரவணபவன் இராஜகோபால் சாட்சியாக நிற்கிறார். 50 லட்சம் நஷ்டு ஈடு பெற்று ஜீவஜோதி இரண்டாம் திருமணத்துடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார், அவரை துறத்திய அண்ணாச்சி ஏகப்பட்ட வியாதிகளுடன் ஆயுள் தண்டனையில் எஞ்சிய வாழ்நாளை கழிக்கப் போகிறார். இந்த தண்டனையை பலரும் வரவேற்கிறார்கள். குறிப்பாக ஓட்டல் தொழிலில் சரவணபவனுக்கு போட்டியாக இருந்தவர்கள் அனைவருமே வரவேற்பார்கள். காசு கொடுத்து (அ)நீதி இழைத்துவிட முடியாது என்பதற்கு சரவணபவன் இராஜகோபாலின் தீர்பே சாட்சி.

மண்ணாசை, அடங்கா பெண்ணாசை இரண்டுமே மனிதனை மானம் மரியாதை இழக்க வைத்து முடிவில் அவனையே அழித்துவிடும். சோதிடனின் பேச்சைக் கேட்டு தன்னிறிவை இழந்து இப்படி படுகுழிக்குள் செல்வோர் பலபேர். வாழும் உதாரணங்கள் இருந்தும் ஒருவனுடைய கெரகம் அவன் எப்போதும் சோதிடம் பார்பவனாக இருந்தால் அவனை வீழ்த்தாமல் ஓயாது.

எங்கோ படித்தேன்... பிரின்ஸ் சாந்தகுமார் கொலைக்கு நீதி கிடைத்துவிட்டது. .சங்கர இராமன் கொலைக்கும் கிடைத்தால் நீதியின் மீது மக்களுக்கு மேலும் நம்பிக்கை பிறக்கும்.

ஹிந்து மதத்தின் வீழ்ச்சி ஏன் !

'ஹிந்து மதம்', 'ஹிந்து' என்ற சொல் இந்திய சமயத்தினர்கள் மீது வெள்ளைக்காரர்கள் திணித்ததே. இந்தியாவில் மதம் என்ற பெயரில் எதுவுமே இருந்தது கிடையாது, தமிழில் சமயம் என்றும் வடமொழியில் 'தர்ம(ம்)' என்றே வழங்கப்பட்டு வந்தது. சடங்குகளையும், கொள்கைகளையும் சார்ந்தது சமயங்கள் அவற்றின் வேறுபாடுகளை வைத்து வைதீகம் (பார்பனர்களின் சமயம்), பவுத்தம், ஆசிவகம், சமணம், வைணவம், சைவம், சிறுதெய்வ சமயம் என்று பல்வேறு பெயர்களில் வழங்கப் பெறலாயிற்று. ஆதி இந்தியர்கள் இவற்றில் எதோ ஒரு சமயம் சார்ந்தவர்களாக இருந்தனரேயன்றி அனைத்தையுமே ஏற்றுக் கொண்டவர்கள் அல்லர். பெளத்தன் சமணனை சாடுவதும், இருவருவரும் ஒருவருக்கொருவர் சாடுவதும், சேர்ந்து வைதீக சமயத்தைச் சாடுவதுமாக இருந்தனர்.

இந்திய புறச் சமயத்தினரான வெள்ளைக்காரர்களும், அவர்களுக்கு முன்பே வந்த லோடி வம்சமும், கஜினி முகம்மதுவும் இங்கே இந்தியாவில் நிலவிய சமயங்கள் அனைத்தையும் பொதுவான ஒன்றாகவே பார்த்தனர், சிந்து நதிக்கு கிழக்கே இருப்பதால் 'இந்தியா' என்று இங்கு நிலவிய சமயங்கள் அனைத்திற்கும் பொதுவான பேராக 'ஹிந்து' சமயம் என்றும் பெயரிட்டனர். அந்த பெயர்கள் அவர்களுக்குள் அழைத்துக் கொள்வதற்காக வைக்கப்பட்டதே அன்றி, பாரத நாட்டினரான நீங்கள் இன்று முதல் இந்தியராகவும், இந்துக்களாகவும் அழைத்துக் கொள்ளுங்கள் என்றெல்லாம் ஆணை பிறப்பிக்கவில்லை. அதாவது சைனா நாட்டினரை சீனர்கள் என்கிறோம், ஒரு சீனரிடம் சென்று நாம் அவர்களை 'சீனர்கள்' என்று சொல்வதைச் சொன்னால் தான் அவனுக்கு அப்படி அழைக்கப்படுவதே தெரியும். இந்தியர்கள் குறிப்பாக தமிழர்கள் தங்களை 'சீனர்கள்' என்று அழைக்கிறார்கள் என்பது சீனருக்கு தெரியாது. இப்படி புறசமயத்தினர் தங்களுக்குள் அழைத்துக் கொண்ட ஒன்றை, விடுதலை போராட்ட்ட காலத்தில் இந்திய சமயத்தினரை ஒன்று திரட்ட இங்குள்ளவர்கள் பயன்படுத்தத் தொடங்கிய போது தான் 'இந்தியா', ஹிந்து என்ற சொல் பரவலாக பயன்பாட்டுக்கு வந்தது. அதுவரை மக்களின் முகவரிகள் எதோ ஒரு இந்திய சமயம், பாரத தேசத்தை / நாட்டை சேர்ந்தவன் என்பதாகத் தான் இருந்தது. கடவுள் கொள்கை என்றால் அதை மதம் என்றே அழைத்து பழகிய புறசமயத்தினர் (வெளிநாட்டினர்) பாரத சமயங்களை மதம் என்ற ஒற்றைச் சொல்லுடன் 'ஹிந்து' என்ற பெயருடன் அழைத்தனர், அதுவே 'ஹிந்து' மதம் ஆகிற்று.

இந்தியர்களை ஒருங்கிணைக்கும் சொல் அல்லவா ? என்று நினைக்கலாம். ஆனால் இந்தியா என்பது பல்வேறு கலச்சார நம்பிக்கைகள் கொண்டது, அவரவர் நம்பிக்கையே அவரவர்களுக்கு உயர்வானது, சைவ - வைணவ சண்டைகள் இன்றும் தொடர்வதையும், யானைக்கு வடகலை நாமமா ? தென்கலை நாமமா ? என்கிற வழக்கு இன்று முடிந்தபாடில்லை என்றே சொல்கிறார்கள். இப்படி இருக்கையில் 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லால் யாருக்கு லாபம் ? வேற்றுமையில் ஒற்றுமை காணப்பயன்படுகிறதா ? அப்படி எல்லாம் இருப்பது போல் தெரியவில்லை. இன்றும் வைணவர்கள் சிவனை பொருட்டாக நினைப்பது இல்லை, சைவ சமயத்தினரும் அப்படியே. ஆதிசங்கரின் அறுசமயமும் கொள்கையாக ஏற்கப்பட்டதே அன்றி, அதைத் தவிர்த்து அவை யாதொரு வளர்ச்சியும் பெறவில்லை, ஏனெனில் அவை வலிந்து புகுத்தப்பட்ட ஒன்று. அதாவது சமயங்களை ஒற்றைப் புள்ளியில் இணைப்பது, அல்லது அந்த புள்ளியில் இருந்து பிரிப்பது, அப்படி பிரித்து வழங்க முற்பட்டதே ஆதிசங்கரின் அறு சமயம், ஆனால் அதன் பிறகு இராமனுஜர் போன்றவர் அவருக்கென கொள்கைகள் வைத்திருந்தால் ஆதிசங்கரரின் அறுசமயம் வளர்ச்சியடையவில்லை. எதுக்கு இதைச் சொன்னேன் என்றால், ஒற்றைத் தன்மையில் அடைக்க முயலும் எதுவுமே வெற்றிபெறுவதில்லை என்பதற்காக சுட்டினேன்.

மேலே சொன்னது போல் சுதந்திர போராட்ட காலத்தில் இந்தியாவில் இருந்த சமயங்களை ஒருங்கிணைக்க சமயவாதிகளால் புறசமயத்தினர் கொடுத்த 'ஹிந்து' இந்தியா பெயர்கள் பயன்படுத்த முயற்சி நடந்தது, ஆனால் அவை இன்றும் கூட வெற்றி பெறவில்லை என்பதே உண்மை. நமக்கு ஆவணங்களில் 'ஹிந்து' இந்தியா என்று போட்டுக் கொள்கிறோம், கொடுக்கிறார்கள் என்று நினைக்கலாம். ஆனால் தமிழனை இந்தியனாக நினைக்கும் கர்நாடகத்தவர் இல்லை என்பதையும் நாம் பார்க்க வேண்டும். ஏனெனில் மொழிகளால் இந்தியா வேறுபட்டது. ஒரு படத்தில் கவுண்டமணி சொல்வது போல் 'புண்ணாக்கு' விற்பனெல்லாம் தொழில் அதிபர் என்கிறான் என்பது போல், கார்ப்ரேட் சாமியார்களாலும், போலி சாமியார்களாலும் 'ஹிந்து' என்ற சொல் ஆன்மிக விற்பனையின் லேபிளாக பயன்படுத்தப்படுகிறது. அதாவது பொண்ட்டியின் தொல்லையில் இருந்து தப்பிக்க ஓடியவனெல்லாம் தன்னை 'ஹிந்து' சாமியார் என்று அழைத்துக் கொள்வதால் 'ஹிந்து' சமயத்தின் பெயர் வெகுவாகவே பாதிக்கப்படுகிறது என்பதை நினைவில் கொள்க. அதுமட்டுமில்லாமல் வாயில் வந்ததையெல்லாம் உளறி கொட்டி அதை சமய இலக்கியம் என்றும், அறிவுக்கு ஒவ்வாத கதைகளையும் புராணங்களையெல்லாம் 'ஹிந்து' என்ற பெயரில் சேர்த்துக் கொள்வதால், அவற்றிக்கு விளக்கமும் சப்பைக் கட்டுகளையும் செயயும் வீன் வேலைக்கு ஆன்மீக வாதிகள் தள்ளப்படுகின்ரனர். மூட நம்பிக்கைகளுக்கு
முட்டுக் கொடுப்பதே வேலையாகப் போனால் சமயங்களையும் ஆன்மீக நம்பிக்கைகளையும் ஊட்டுவது எங்ஙனம் ? இராமகிருஷ்ணர், விவேகநந்தர் போன்ற எத்தனையோ மகான்கள் தோன்றினாலும், புற்றீசல்கள் போல் போலிசாமியார்களும் தோன்றி சமய நம்பிக்கைகளை சீர்குலைப்பதால் உண்மையான ஆத்திகருக்குக் கூட சமய நம்பிக்கைள் மீது சந்தேகங்கள் எழும். இவை அனைத்திற்கும் காரணமே தேவைக்கு மிகுதியாக கட்டுக் கதைகளை அவைகள் 'ஹிந்து' மதததைப் போற்றுகிறது என்ற பெயரில் உள்வாங்கியதே.

'ஹிந்து' மதம் என்கிற ஒற்றைச் சொல் ஒருங்கிணைப்பால் இந்திய சமயங்கள் வீழ்ந்ததேயன்றி எழவேயில்லை. பிரித்தாழும் சூழ்ச்சி போல் இவை சேர்த்தறியும் சூழ்ச்சி போலாகும். இந்திய சமயங்கள் அனைத்தும் சேர்ந்து ஒவ்வொன்றின் முரண்பாடுகளையும் ஏற்றுக் கொள்வது தான் ஹிந்து மதம் என்றும் அவனே 'ஹிந்து' என்ற கட்டாயத்துக்கு இட்டுச் சென்றுவிட்டது. எவனோ ஒருவன் நரபலி இடுவதை 'இந்து சமய நம்பிகை இல்லை' என்று நம்மால் துணிந்து சொல்ல முடியவில்லையே, இப்படி 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லில் நம்மை நாமே அழைத்துக் கொள்ளாமல் இருந்தால் 'நரபலி இடும் பழக்கம்' சைவ, வைணவத்தில் இல்லை என்று சொல்ல முடியும். இந்திய சமயத்தினர் தங்களின் சமயப் பெயரை விட்டு தம்மை 'ஹிந்து' என்று அழைத்துக் கொள்வது முட்டாள் தனமானது. அப்படி அழைத்துக் கொள்வது இந்திய சமய, தத்துவ நம்பிக்கைளை வீழ்ச்சிக்கே அழைத்துச் செல்லும், அப்படி நடந்ததால் தான் தீண்டாமையால் தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பலர் இந்திய சமய நம்பிக்கைகள் மீது நம்பிக்கை இன்றி புற சமயங்களை நாடி இருக்கின்றனர். பகுத்தறிவு வாதிகளும் இந்திய சமயங்களின் நம்பிகை எது ? மூட நம்பிகை எது ? என்று அறியாமல் ஒட்டுமொத்தமாக 'ஹிந்து' என்ற ஒற்றைச் சொல்லைக் குறிவைத்தே செயல்படுகின்றனர். ஹிந்துத்துவா வாதிகளும் அரசியல் நோக்கிற்காக 'ஹிந்து' என்ற சொல்லைப் பயன்படுத்துவதால் மேற்கொண்டு என்ன சொல்ல ? மீண்டும் இடுகைத் தலைப்பு.

22 மார்ச், 2009

படைப்புக் கொள்கை ...1

மனித அறிவு வளர்ச்சியே இறைவனின் சக்தியை முடிவு செய்யும் ஒன்றாக இருக்கிறது என்று சொன்னால் நம்புவதற்குக் கடினம் தானே ? ஆனால் அதுதான் உண்மை. எப்படி ? பழங்காலத்து இறைவனின் செயலாக பிள்ளைவரம் கொடுப்பது, பூமியை தோன்றவைத்தது, உயிரினங்களைப் படைத்தது என்பதாகத்தான் இருந்தது. ஏனென்றால் இவற்றிற்கான காரணம் தெரியாததால் இவை அனைத்தும் இறைவனின் செயல் என்று நம்பினார்கள். இன்றைய அறிவியல் வளர்ச்சிக்கு ஏற்றவாறு இறைவனின் சக்தியையும் மனித வளர்த்திருக்கிறான். அறிவியலின் வியப்புகளை அனைத்துமே இறைச் செயலாக பொருத்திப் பார்த்து மகிழ்ச்சியடைகிறார்கள். வேத புத்தகங்கள் எதுவாக இருந்தாலும் அவற்றிற்கு விளக்கம் அறிவியல் துணையுடன் மாற்றி எழுதப்படுகிறது. தசவதாரங்கள் அனைத்தும் பரிணாமக் கொள்கையை நிரூபனம் செய்வதாக அமைந்திருக்கிறது, மனிதன் விலங்கில் இருந்தே தோன்றினான் என்னும் பரிணாமத்தை தசவாதாரமும் சொல்கிறது. எனவே முன்னோர்கள் எதையும் மனம் போன போக்கில் சொல்லவில்லை, அதன் மறைபொருள் தற்பொழுதுதான் நமக்குத் தெரியவருகிறது என்றெல்லாம் சொல்கிறார்கள். ஏனென்றால் அறிவியலில் சொல்லப்படும் காரண செயல்பாடுகளைப் போன்று ஆன்மிகத்திற்கும் கட்டமைக்காவிடில் இறை நம்பிக்கையை குறிப்பாக மதங்களை மனிதன் துறந்துவிடுவான் என்கிற அடிப்படை பயமே காரணம்.

படைப்பு வியப்பு என்பதாக ஆன்மிகவாதிகளோ/ மதவாதிகளோ எழுதும் போது கேள்விகேட்காமல் இருக்க முடியவில்லை. இறைவன் மனிதனையும் ஏனைய உயிரனங்களையும் படைத்தான் என்றால் எந்த இனத்தைச் சேர்ந்த மனிதனைப் படைத்தான் என்றே கேட்கத் தோன்றுகிறது. ஆதாம் ஏவாள் ஒரு யூதன் என்பதாக கிறித்துவமதமும், அதன் பிறகு ஏற்பட்ட இஸ்லாம் மதமும் ஏற்றுக் கொள்ளும் ஏனெனில் இரண்டுமே ஒரே பகுதியில் இருந்து வந்தவையே. இதுபோல் ஏற்புக் கொள்கைகள் மதங்கள் தோன்றுமிடத்தில் அமையபெற்றிருக்கும் வட்டாரக் கதைகளை உள்ளடக்கியதாக இருக்கும், இந்திய சமயங்களிலும், பெளத்தம், சமணம் ஆகியவற்றி ஆகியவற்றிற்கான பொது நம்பிக்கையாக மறுபிறவிக் கொள்கைகள் உண்டு. மறுபிறப்பு ஏற்காத இந்திய மதங்கள் எதுவும் இல்லை. அதுபோன்று தான் உலகின் முதல் மகனாக ஆதாம் என்பதை கிறித்துவமும் இஸ்லாமும் பொது நம்பிக்கையாக வைத்திருக்கின்றன. ஆதாம் ஒரு யூதனாகவே வைத்துக் கொண்டாலும் உலகில் உள்ள மற்ற ஐந்து மனித இன மக்கள் (ஆப்ரிக்க, மங்கோலிய, இந்திய,மலாய் இனங்கள்) எங்கிருந்து உருவானார்கள் ? ஏனெனில் ஐரோப்பிய யூதர்களின் உடல் அமைப்பிற்கும் பிற இன உடலமைப்பிற்கும் அல்லது இவற்றின் ஒவ்வொன்றினிடையே, நிறம், மூக்கு, கண் மணியின் நிறம், தலை முடி, முக அமைப்பு ஆகியவற்றில் பெரிய வேறுபாடுகளே உண்டு. ஆதாமாக ஒரு ஆப்ரிக்கனை ஏன் படைக்கவில்லை என்றெல்லாம் நான் கேட்கவில்லை. ஐரோப்பியரிலிருந்து ஆப்பிரிக்க இன மக்கள் உருவாகி இருக்க முடியுமா என்பதே கேள்வி.

மனிதன் மட்டுமே அப்படி இல்லாமல், உயிரனங்களிலும் அதே போன்று ஒரே உருவ அமைப்புடன் பல்வேறு தோற்றங்களிலும் உயிரினங்கள் அனைத்துதிலுமே உண்டு ஆப்ரிக்க யானனகள், ஆசிய யானைகள், கரடிவகைகள், மாடுகள், ஆடுகள், மீன் வகைகளில் மட்டுமே 25,000 இருக்கிறதாம். இதில் எந்த ஒரு வகை மீனைப் படைக்கப்பட்டது ? கோழியைப் படைத்தானா ? முடையைப் படைத்தானா ? என்ற கேள்விக்கு விடை வராது, சேவல் கோழி இரண்டையும் அல்லது முட்டையும் அதன் மீது ஏறி அடைகாக்க கோழியும் படைத்தானா ? மதங்கள் காட்டும் படைப்புக் கொள்கைகள் எல்லாம் அறிவுக்கும், அறிவியலுக்கும் பொருந்தா ஒன்று. விளக்கம் என்று (எதையோ) சொல்லுவார்கள், அப்படியே ஏற்றுக் கொள்வது தான் அறிவுடைமை என்பார்கள். அறிவியல் வளர்ச்சியுடன் செல்லக் கூடிய கட்டாயத்தில் இருப்பதால் மதங்களில் அறிவியல் பேசப்படுவதாக மதவாதிகள் பரப்பி வருகின்றனர். ஆனால் அவ்வாரு செய்வது பரவலாக நிராகரிக்கப் பட்டுவருகிறது.

***

பிரபஞ்சமும் அதில் இருக்கும் அனைத்துமே ஒன்றில் ஒன்று பின்னப்பட்ட இயற்கைச் செயல்பாடுகளே நிறைந்துள்ளது, ஈர்ப்பு விசையால் தன்னைத் தானே சுற்றும் பூமி, சூரிய வட்டப்பாதையிலும் அதன் ஈர்ப்பில் இருப்பதால் சூரியனை சுற்றிவருகிறது, சூரியன் பால்வெளித் திரளின் ஈர்ப்பில் சுழலுகிறது, மொத்த பால்வெளித் திரளும் தன்னிச்சையாக சுழலுகிறது, இதைத் தவிர வேறெதும் புறத்தூண்டுதல் எதுவுமின்றி இவைகள் ஒழுங்கு அல்லது ஒழுங்கற்ற முறையில் இயங்குகின்றன. ஒழுங்கானது ஒழுங்கு என்பது நட்சத்திர மோதல், மோதலின்மை என்பதற்காகச் சொல்கிறேன். மற்றபடி ஒழுங்கோ, ஒழுங்கற்ற தன்மையோ அவற்றின் சுழற்சி காலத்தை வைத்து நாமே கற்பனை செய்வது தான். பூமியின் முந்தைய ஒரு ஆண்டு காலம் 367 நாட்கள் கூட இருந்திருக்கலாம், வரலாற்று காலத்துடன் பார்க்கும் போது 365.5 நாட்கள் என்பதாக அறியப்பட்டு இருக்கிறது. வரலாறு எழுதப்படாக் காலத்தில் என்ன நடந்தது என்று எவருக்குமே தெரியாது. மொத்த பிரபஞ்ச இயக்கமும் பின்னப்பட்ட சுழற்சியே. அவற்றில் பூமியில் இருக்கும் வெகு சில இயக்கங்களில் மட்டுமே காரண காரியங்களாக செயல்களை பிரித்து அறிந்திருக்கிறோம். அவையே அறிவியல் என்றும் 'கண்டுபிடிப்புகள்' என்றும் சொல்லப்படுகிறது.

கண்டுபிடிப்பு என்று மட்டுமே அறிவியலாலும் சொல்ல முடியும். உருவாக்கம் என்று சொல்லிவிட முடியாது. மூலப் பொருளின்றி எதையும் உருவாக்க முடியாது என்பதே தற்போதைய அறிவியலின் நிலை. நமது அறிவியல் வளர்ச்சியை வைத்து முழு பிரபஞ்ச இயக்கத்தையும், அதில் உள்ள உயிரினங்கள், திடப்பொருள்கள், அவற்றின் இயக்கம், ஏன் எதற்கு எப்படி என்றெல்லாம் முற்றிலுமே அறிந்து கொள்ளவே முடியாது. ஏனெனில் அறிவியல் என்பது புலன்களின் நீட்சி மட்டுமே. முழு பிரபஞ்ச இயக்கத்தின் காரண காரியங்கள் அனைத்துமே அறிவியல் துணை கொண்டு அறிய முடியும் என்று நினைப்பது மனிதனின் பேராசையாக மட்டுமே இருக்கும், இயக்கம் அனைத்தும் இறைச் செயலாக நினைத்து ஆன்மிகவாதிகள் மன நிறைவு அடைந்து கொள்கிறார்கள். அறிவியலோ ஆன்மிகமோ பிரபஞ்ச இயக்கம் பற்றிய முழு அறிவையும் ஒரு நாளும் பெற முடியாது, ஏனெனின் அறிவியலும், ஆன்மிகமும் முறையே மனித அறிவின், கற்பனையின் நீட்சி மட்டுமே. இவை இயற்கையில் பொதிந்துள்ள பேருண்மைகளை ஒப்பிடும் போது மனிதன் கண்டு கொண்டது மிக மிக சொற்பமே. பிரபஞ்சம் தோன்றுவதற்கு பெருவெடிப்பு காரணமென்று அறிவியல் சொன்னாலும், அந்த பெருவெடிப்பு நிகழ்வதற்கு என்ன காரணம், ஏன் அவ்வாறு நடக்கிறது என்பதை அறிவியல் முற்றிலுமாக தொட்டுவிடவே முடியாது, அதே போன்று படைப்புகள் அனைத்துமே இறைவன் காரணம் என்று ஆன்மிகவாதிகள் சொல்லுவர், ஏன் இறைவன் இவ்வாறு நடந்து கொள்கிறான் என்று கேட்டால், எல்லாம் அவன் விளையாட்டு என்றே முடித்துக் கொள்வர். ஆன்மிகத்திலும் அதற்கு மேல் காரணங்கள் கிடையாது.

மீண்டும் காலம் வாய்க்கும் போது தொடர்கிறேன்....

19 மார்ச், 2009

நவீன நாட்டாமைகள் எப்போது தங்களுக்கான தீர்ப்பை எழுதுவார்கள் ?

வழக்கறிஞர்கள் நீதிபதிகளை இனி 'யுவர் ஹானர்' என்று சொல்லமாட்டோம் என்று முடிவெடுத்து இருக்கிறார்கள். என்னைக் கேட்டால் இது வரவேற்கத்தக்க ஒன்றே என்று சொல்லுவேன். படித்தவர்களுக்கு இடையேயும் ஆண்டை / அடிமைத்தனத்தை போற்றி வளர்ப்பது தான் ஒருவரின் பதவியை வைத்து அவரை கட்டாயமாக மதிப்பு (மரியாதை) மிகுதியுடன் அழைக்கும் முறை. காவல் துறைகளில் நடக்கும் இப்படிப் பட்ட கூழைக் கும்பிடுகளை அனைவருமே பார்த்திருப்போம், காவலர்கள் ஏட்டுகளையும் (தலைமை காவலர் ?), அப்பா வயது உடைய ஒரு ஏட்டு 'ஐயாகள்', 25 வயது உதவி-ஆய்வாளரை 'ஐயா' என்றே கூழைக் கும்பிடுடன் அழைப்பார்கள், அதே போல் உதவி ஆய்வாளர் ஆய்வாளரை அழைபபர், இப்படியாக உயர்மட்டம் வரையில் செல்லும். படிப்பு என்பது வேலைக்கான தகுதியைக் கொடுப்பது மட்டும் தான், அது மரியாதையை தீர்மாணிக்கும் ஒன்று அல்ல. மரியாதைகள் அவர்கள் நடந்து கொள்வதைப் பொருத்து கிடைப்பவையே, அப்படி வெறும் வாய்ச் சொல் மரியாதை என்பதைவிட உண்மையான மரியாதையாகவே உணரப்படும். சிலர் கூச்சப்பட்டுக் கொண்டு அப்படி சொல்ல வேண்டாம் என்று பெரிய மனதுடன் சொல்வார்கள். பெயரைச் சொல்வது இழிவானதா ? அல்லது இழிவான பெயரைத்தான் யாரும் வைத்திருக்கிறார்களா ? 30 ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரியும் அரசு அலுவலகங்களில் கூட வயது குறைந்தவர்களை பதவியின் காரணமாக வயது மிக்கவர்கள் மிக மரியாதையுடன் அழைக்கும் நிலை இன்றும் இருக்கிறது. இதன் காரணமாகவே ஒரே அலுவலகத்தில் இருந்தாலும் ஒருவருகொருவர் இயல்பாக பழகவும் வாய்ப்பில்லாமல் இருக்கிறது

ஒரு நல்ல குணங்களும் இல்லாதவர்கள் வெறும் படிப்பின் தகுதியாலேயே, அதன் மூலம் பெற்ற பதவியினாலேயே தனக்கு கீழே வேலை பார்பவர்களை சார், ஐயா என்று முறை வைத்துக் கூப்பிடச் சொல்வது அடிமைத்தன ஏவலின் சொற்கள் தான். இவை களையப்பட வேண்டும். வெளிநாடுகளில் எந்த ஒரு உயர் அலுவலரையும் ஐயா, சார் போட்டு அழைக்கும் வழக்கம் இல்லை. வெளிநாடுகளில் இந்தியர்கள் நடத்தும் நிறுவனங்களில் அவர்கள் மேலாளராக இருக்கும் நிறுவனங்களில் சிலவற்றில் 'சார்' போட்டு அழைக்கும் பழக்கம் உண்டு. எல்லோரும் மனிதர்களே பெயர் வைத்திருப்பது பிறர் சுட்டி அழைப்பதற்குத்தான், பெயரைச் சொல்லி அழைப்பதற்கு ஒருவர் மீதான மதிப்பிற்கும் என்ன தொடர்பென்றே தெரியவில்லை. நம் இந்தியாவில் தான் பெயர் சொல்லிக் கூப்பிடுவது இழிவு என்பதாக கட்டமைத்து வைத்திருக்கிறார்கள். என்னுடன் முன்பு சிங்கையில் வேலை பார்த்த நண்பர் சிங்கப்பூர் வரும் போது 'சாரை'யும் எடுத்துக் கொண்டுவந்துவிட்டார். அதாவது எங்களுக்கு மேலாளரான சீனரை 'சார்' போட்டு தான் அழைப்பார். 'ஏன்யா...இந்தியாவில் வேறு வழியில்லாமல் கண்டவனுக்கும் சலாம் போடுறோம்...இங்கே சார் போடுவதை தவிர்த்து பழகலாமே' என்றேன். 'அப்படி கூப்பிட எனக்கு வாய்(ஸ்) வரமாட்டேன்கிறது என்றார். 'ம்...நீங்க சார்னு கூப்பிடுங்க...நான் பேரைச் சொல்லி கூப்பிடுறேன்...உங்களுக்கு மரியாதை தெரியுது...எனக்கு தெரியலைன்னு மேலாளர் நினைக்கும் படி செய்துவிடாதீர்கள்' என்றேன். ஆனாலும் அவர் மாற்றிக் கொள்ளவில்லை. சீனர்கள் இது போன்ற அற்பமான மரியாதைகளை எதிர்பார்க்கமாட்டார்கள். ஆனால் உதவிகளுக்கு நன்றிகள் சொல்வதை மறக்க மாட்டார்கள். நாம நன்றி சொல்லமல் விட்டுவிட்டால் மரியாதையின்று நடந்து கொள்வதாக நினைப்பார்கள்.

சரி... நீதிபதிகள் உயர்ந்தவர்களா ? படிப்படியாக பதவி உயர்வினால் கிடைத்த ஒரு பதவி, அதற்கும் நிறைவான ஊதியம், வேலையாட்கள், பெரிய வீடுகள் என அந்த பதிவிக்கென அரசு உதவிகள் / சலுகைகள் கிடைக்கிறது, மற்றபடி சக மனிதனைவிட நீதிபதிகள் எந்த விதத்தில் உயர்ந்தவர்கள் ? எதற்காக அவர்களை கடவுள் இடத்தில் வைத்துப் பார்க்க வேண்டும்.
என்னைக் கேட்டால் நல்ல மனம் படைத்த மருத்துவர்களை கடவுளாக பார்க்கலாம், ஏனெனில் (உயிர்)காக்கும் தொழிலை தன்னலமில்லாமல் செய்துவரும் மருத்துவர்களை (மட்டும்) கடவுளாக பார்க்கலாம். நீதிபதிகள் ? வழக்குரைஞரின் வாதங்களை ஒப்பிட்டு தீர்ப்பு சொல்பவர் மட்டுமே, வழக்குரைஞரின் வாதம் குற்றவாளியை குற்றமற்றவராகவும், மாற்றியும் காட்டினாலும் கூட, சாட்சி, ஆவண அடிப்படையில் அதை வைத்து நீதி சொல்லுபவர் நீதிபதி. அவருக்கு எந்த ஒரு (ஞானப்) பார்வையினாலும் கூண்டில் நிறுத்தப்பட்ட ஒருவரை குற்றவாளியா ? குற்றமற்றவரா ? அன்று அறியும் திறன் கிடையாது. உணர்ச்சி வேகத்தில், தனிப்பட்ட முடிவாக தான் சார்ந்திருக்கும் கொள்கை சார்பாக வழக்கில் தொடர்புடைய அனைவருக்கும் தூக்குதண்டனை கொடுத்த மான்பு மிகுக்கள் இருக்கிறார்கள். (இராஜிவ் படுகொலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பு அப்படித்தான் இருந்தது) இவர்களையெல்லலம் இறைவனுக்கு சமமாக மதிக்க வழக்குறைஞர்கள் கடமைபட்டவர்களா ? 'நீதிபதி அவர்களே...' என்று எந்த 'கனமும்' இல்லாமல் அழைப்பது எந்த விதத்தில் தவறு ? 'மை லார்ட்' எல்லாம் தேவையா ?

Judge என்கிற ஆங்கில சொல்லின் பொருள் சீர்தூக்கிப் பார்த்தல் மட்டுமே, அதற்கு அடையாளமாக கண்களைக் கட்டிய பெண்ணின் கையில் துலாக்கோலைக் கொடுத்திருக்கிறார்கள், சீர்தூக்கிப் பார்பது என்பதன் பொருள் நீதி என்ற பொருளில் வராது. வாத எடை போடுபவர்களுக்கு 'நீதி' மான் என்ற பெயர் சொல் எந்த விதத்தில் பொருத்தம் என்றே தெரியவில்லை. எதுதான் நீதி ? மனசாட்சிப் படி நடப்பதே நீதி, ஆனால் வழக்குகள் மனசாட்சி இல்லாததால் அங்கே வருகிறது என்பதையும் நோக்க வேண்டும், கையூட்டு பெற்றவர்களும், அப்படி பெற்றுக் கொண்டு அப்துல் கலாமுக்கே கைது வாராண்டு ஓலை அனுப்பியவர்களையும் 'நீதி'மான் என்றே அழைக்கிறோம். இப்படி பொதுவான சொல் அந்த பணி செய்பவர்களுக்கு பொருத்தமானது தானா ? மக்கள் ஆட்சி தத்துவத்தில் யாரையும் தேவையற்று உயர்த்துவதோ, தாழ்த்துவதும் தவறுதான். உயர்சாதி ஆட்களே அந்த பதவியை பெரும்பாலும் வகித்ததால் தங்களை 'நீதி'மான்கள் என்று பிறர் அழைக்க வைக்க விரும்பி, ஏற்பாடு செய்து கொண்டது தான் 'நீதி'மான் என்ற அடைமொழி / தொழில் பெயர் சொல் என்று எண்ணத்தோன்றுகிறது. வேண்டுமென்றால் 'படித்த நாட்டாமைகள்' அல்லது 'நவீன நாட்டமைகள்' என்று வேண்டுமானல் சொல்லலாம். ஏனெனில் மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட அரசுகளுக்கும், அவர்களின் செயல்பாட்டுக்கும் யாரும் 'பிராது' கொடுக்காமல் அவர்களுக்கு எதிராக உத்தரவு பிறப்பிப்பவர்கள் அன்றோ.

கல்வி சொல்லி கொடுக்கும் ஆசிரியர்களுக்குக் கூட 'மை லார்ட்' மரியாதையை நாம் வழங்குவதில்லை என்பதை நினைவில் கொள்ளவும். தேவையின்றி கூழைக்கும்பிடு போடுவது தன்னைத்தானே தாழ்த்திக் கொள்வதாகும், அப்படி செய்யச் சொல்லி வழியுறுத்துவது ஆண்டை மனப்பாண்மையாகும். வழக்கறிஞர்களின் முடிவு வரவேற்கத்தக்கதே. மதிப்புடன் நடந்து கொள்பவர்களுக்கு மரியாதை தானாகவே கிடைக்கும். அதை படிப்பை பதவியை வைத்து மரியாதை செய்ய வழியுறுத்துவதும் / செய்வதும் களையப்பட வேண்டும்.

இனி நீதிபதிகளை யுவர் ஆனர் என கூப்பிட மாட்டோம்: வக்கீல்கள் (செய்தி வழி: தட்ஸ்தமிழ்)

நீதிபதிகள் விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவர்களா ?

மனசெல்லாம் பட்டாம் பூச்சி !

வாழ்வே ஒடுங்கிவிட்டதென கூனி குறுகுபவர்களே... பட்டாம் பூச்சியைப் பாருங்கள், அதுவும் அப்படி ஒடுங்கி இருந்துதான் அழகான சிறகுடன் கூண்டைவிட்டு வெளியே வந்து சுதந்திரமாக பறக்கிறது. இந்த தன்னம்பிக்கை செய்தியை புதுக்கவிதை வரிகளாக 'அற்பப் புழுவென வாழ்வே முடங்கி விட்ட நிலையில் அழகான சிறகுடன் வெளியே வரும் பட்டாம்பூச்சி.... தன்னம்பிக்கையில் தன்னிகரற்ற உயிரினம்' என்ற பொருள்படும் வண்ணம் இரட்டை எழுத்தாளர்களான சுபா...எழுதி இருந்தை எங்கோ படித்ததும் வரிகள் நினைவு இல்லாவிட்டாலும் சொல்ல வந்த தகவல் அப்படியே படிந்துவிட்டது.

தாம் புழு இனம் தான், நம்மால் பறக்க முடியுமா ? என்று நினைத்தால் (புழு அப்படியெல்லாம் நினைக்குமான்னு கேட்கக் கூடாது) அழகான சிறகுடன் நினைத்த இடத்துக்கு பறந்து செல்லும் ஆற்றல் சிறகு பட்டாம்பூச்சிக்கு ஏற்பட்டு இருக்குமா ?




எங்கூரில் எங்கள் வீட்டில் தோட்டம் உண்டு, இப்போதெல்லாம் எதுவும் பயிர்செய்வது இல்லை. முன்பு பனிக்காலத்தில் ஏராளமான தும்பை செடிகள் தானாக்கவே முளைத்து வளரும், 100க்கு 100 வெள்ளை நிறத்தில் தும்பைப் பூக்கள் பூத்து இருக்கும், செடிகளின் இலைகளில் பன்னீர் தெளித்தது போன்று பனித்துளிகள் இருக்கும், காலை ஆறுமணியில் இருந்து சூரியன் சுள்ளென சுடும் காலை 8 மணி வரை பல்வேறு வகையிலான வண்ணத்துப் பூச்சிகள் அந்த தும்பை பூவின் மீது அமர்ந்து தேன் அருந்தும். சிறுவயது ஆசையில் ஒன்றாக அந்த வண்ணத்து பூச்சிகளை பிடித்து விளையாடும் ஆசையில் ஒரு தும்பை செடியை வேரொடு பிடிங்கி கையில் ஆயத்தமாக வைத்துக் கொண்டு...பதுங்கி பதுங்கி சென்று மற்றொரு செடியில் தேன் குடிக்கும் வண்ணத்துப் பூச்சியின் மீது கொஞ்சம் விரைவாகவும், மென்மையாகவும் அமிழ்த்த வண்ணத்துப் பூச்சி இரண்டு செடிகளின் இலைகளுக்கு இடையில் சிக்கிக் கொள்ளும், மென்மையாக வண்ணத்துப் பூச்சியை எடுக்க, விரல்களில் அதன் வண்ணம் படிந்துவிடும், பிறகு வண்ணத்துப் பூச்சியின் அடிவயிற்றுக்கு மேல் இரண்டு மீட்டர் அளவுக்கு உள்ள நூலின் நுனியைக் கட்டிவிட்டு, நூலின் மறு நுனியை கையில் பிடித்துக் கொண்டு வண்ணத்துப் பூச்சியை கையில் இருந்து விடுதலை செய்ய...நூல் அளவு உயரத்தில் அங்கும் இங்கு பறக்கும், 10 - 15 நிமிடங்களுக்கு பிறகு ஒரு அங்குலம் வண்ணத்துப் பூச்சியுடன் நூலை துண்டித்துவிட்டு ஒரேடியாக விடுதலைக் கொடுத்துவிடுவோம். மறுநாள் அதுவே வருகிறதா என்று பார்த்துக் கொண்டு இருப்போம், ஒரு நாளும் நூலோடு இணைந்த பட்டாம் பூச்சி வந்தது கிடையாது. ஒரு வேளை நூலின் இறுக்கத்தால் மடிந்திருக்கலாம்.

பட்டாம்பூச்சி பருவம் என்றால் நமக்கு, எனக்கு சின்ன வயது பருவம் தான் நினைவுக்கு வருகிறது. பட்டாம் பூச்சி பிடித்த காலத்தில் எந்த கவலையும், மனச் சோர்வும், குழப்பமும் இல்லாமல் பட்டாம் பூச்சி போன்றே திரிந்தோம்.

இயற்கை வியப்புகளில் வண்ணத்துப் பூச்சியின் சிறகுகளின் வண்ணமும் ஒன்று. தொடும் போது ஒட்டிக் கொள்ளும் அவ்வளவு மென்மையான வண்ணம் சிறகுகள் அடித்து பறக்கும் போது உதிராமல் இருப்பது வியப்புதானே.

வண்ணத்துப் பூச்சி:





இரகசியமாய் யாரும் பார்க்கா வண்ணம்,
இரசித்து யாரும் வியக்கும் வண்ணம்,
இருசிறகுகளுக்கு மேற்ற வண்ணம், கூட்டிற்குள்
தீட்டிக் கொள்ளும் நவீன உடல் ஓவியர்கள் !
(Tatooist)







ஸ்வாமி ஓம்கார் எனக்கு கொடுத்த விருதுக்கு நன்றி கூறிவிட்டு, பட்டாம்பூச்சி விருதை மூன்று பேருக்குக் கொடுத்து அழைக்கனும் என்பது விதி(யாம்,) யாரை விட்டது ? யாரைக் கூப்பிடுவது. அகவையாம் ஐம்பதைக் கடந்தவர்கள்...ஆனால் எண்ணங்களில் பட்டாம்பூச்சி துள்ளல்.

வாலிபமே வா...வா... :)

வீஎஸ்கே : இவரப் பற்றி என்ன சொல்வது ?எல்லோருக்கும் தெரிந்தவர்தான். புதியவர்கள் அறிந்து கொள்ள, அவரது இயற்பெயர்.....வீ சங்கர் குமார்.

அமெரிக்காவில் வட கரோலினா மானிலத்தில் மருத்துவராக பணி புரிகிறார். கண்ணை மூடிக் கொண்டு ஆன்மிகம் எழுதுபவர். ஐ மீன் ஒரு தியானம் போல் ஆன்மிகம் எழுதுபவர். மாறுபட்ட அரசியல் பார்வை கொண்டவர். நல்லவர் வல்லவர்...எனக்கு மிக வேண்டியவர், விருப்பம் உள்ளவர்கள் அவரது பாலியல் கேள்வி பதில்கள் பதிவை படிங்க, உங்களுக்கும் எதும் குழப்பம் இருந்தால் அவரிடம் பின்னூட்டத்தில் (வெட்கப்பட்டால் அனானியாக) கேளுங்க.

சீனா : சிதம்பரம் (சீனா) ஐயா வலைச்சரம் பேராசிரியராக அனைவருக்குமே நன்கு அறிமுகம் ஆனவர் தான்.

மூன்று மாதங்களுக்கு முன்பு இவருடன் பழக தொடங்கி இருந்தாலும், முப்பது ஆண்டுகாலம் பழகியதைப் போன்ற உணர்வு எனக்கு வந்தது போல் எவருக்கும் வரும்

TV இராதா கிருஷ்ணன் : செளமிய தியேட்டர் என்ற பெயரில் மேடை நாடகங்கள் நடத்துபவர். எல்லோருக்கும் நன்கு அறிமுகமானவர். அரசியல் பகடி (பகடி அரசியல்னு மாற்றி படிச்சிடாதிங்க) செய்வதில் வல்லவர்.

குறைந்த காலத்தில் சுமார் ஓராண்டுக்குள்ளேயே 600 க்கும் மேற்பட்ட பதிவுகள் எழுதிய சாதனையாளர். சூடான இடுகையில் பெரும்பாலும் இருப்பவர்... எனக்கு மிக வேண்டியவர்



பட்டாம் பூச்சியை எப்படி விடுதலை செய்யலாம் ?



1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. மூன்று அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

17 மார்ச், 2009

கம்பவாருதி திரு இ.ஜெயராஜ் !

செவிக்குள் விழும் தேனினிய தமிழோசை என்றால் நல்ல இலக்கிய சுவையுடன் கூடிய சொற்பொழிவே அது. பேச்சாற்றல் என்ற வகையில் வரும் சொற்பொழிவு நிகழ்த்துவது அவ்வளவு எளிதன்று. அதைக் கேட்கக் கூடியிருப்போரில் கற்றொரும் கல்லாதவரும் உண்டு, கற்றோர் எள்ளி நகைக்கா வண்ணமும், கல்லாதவர்க்கு திகட்டா வண்ணமும் சுவையார்வமாக பேசுவதென்பது மிகக் கடினம், அப்படி இருதரப்பையும் கவரும் வண்ணம் பேசுபவரே நல்ல சொற்பொழிவார். ஒரு எழுத்தாள்ர் எழுதி முடித்தவுடன் பலருக்கு அளிக்கும் முன்பு படித்துவிட்டு திருத்தலாம், ஆனால் சபைப் பேச்சென்பது அப்படியல்ல, சபையின் நடுநாயகர் பேசப் பேச செவிகளை அடைந்து கொண்டிருக்கும், சிறு(தகவல்) பிழை என்றாலும் கேட்பவர் முகம் சுளிப்பர். அப்படி எந்த தவறும் நேராவண்ணம் தொடர்ந்து பேசுவதென்பது மிகப் பெரிய கலை. அது சிலருக்கு மட்டுமே வாய்க்கும், சிறுவயது முதலே சரியான பயிற்சி மேற்கொண்டோர்க்கு அந்த கலை இயல்பாக அமைந்துவிடும். மற்ற மேடைப் பேச்சுக்கும், இலக்கிய சொற்பொழிவுக்கும் உள்ள பெரும் வேறுபாடே பேச்சின் தன்மைதான்.

மற்ற மேடைப் பேச்சுகளில் மக்களின் வாழ்வியல் நெறிபற்றி யாதொரு கவலையுமின்றி எடுத்துக் கொண்ட பொருளை சிறப்பாக பேசுவதாக அமையும், ஆனால் சொற்பொழிவுகள் மக்களின் உணர்வு, வாழ்வியல் நெறிகள் இதுபற்றி கருத்தில் கொண்டு அதற்கு மெருகூட்டும் வண்ணம், எடுத்துகாட்டுகளுடன் அமைத்துக் கொண்டும், நகைச்சுவயுடனும் அப்படி பேசுவது செயற்கையின்றி இயற்கையாகவும் அமைய வேண்டும், அப்படிப் பட்ட இலக்கிய சொற்பொழிவுகள் நிறைய பார்த்திருக்கிறேன். சாலமன் பாப்பையா, தென்கச்சி ஸ்வாமிநாதன் மற்றும் சுகிசிவம் ஆகியோர் தற்காலத்தில் சொற்பொழிவாற்றுவதில் சிறந்தவர்கள். இவர்கள் தமிழகத்தை சேர்ந்தவர்கள். இலங்கையில் இருக்கும் ஒருவர் இதுபோன்று பேசுவார் என்பதை கம்பவாருதி இ.ஜெயராஜ் அவர்களின் பேச்சை கேட்கும் வரை சிந்தித்ததே இல்லை. ஏனெனில் இலங்கையின் கடந்த 20 ஆண்டுகால அரசியல் நிலையில் இலங்கையைப் பற்றி நினைக்கும் போது அங்கு தமிழ் இலக்கியம் பற்றியும், அதைப் பற்றிப் பேசும் சொற்பொழிவார்கள் இருப்பார்கள் என்று நினைப்பு சிந்தையில் கூட வந்திருக்கவில்லை.

நண்பரும் பதிவருமான முகவை மைந்தன் (இராம்) சிலோன் சாலை, சென்பக விநாயகர் கோவிலில் கம்பராமயணம் ஐந்து நாள் சொற்பொழிவு நடக்கிறது வருகிறீர்களா ? என்று கேட்டார். கம்பர்மீது இருக்கும் ஆர்வம் எனக்கு இராமன் மீது இல்லையாகையால் நான் உடனடியாக வருகிறேன் என்று சொல்லவில்லை. சென்ற ஞாயிறு பதிவர் சந்திப்பு முடிந்ததும் எல்லோரும் சென்ற பிறகு உடனடியாக வீட்டுக்கு கிளம்பும் எண்ணம் ஏற்படவில்லை, அதனால் கம்பராமயண சொற்பொழிவுக்கு நானும் வருகிறேன் என்று கூறி ஜெகதீசன் மற்றும் விஜய் ஆனந்துடன் இணைந்து இராமுடன் சென்பக விநாயகர் கோவிலுக்குச் சென்றேன். சென்றதும் தான் தெரியும் அந்த கோவில் இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படுகிறது என்கிற தகவல். 'இலங்கை தமிழ் சங்கம்' என்ற அறிவிப்பு பலகை வைத்திருந்தார்கள். நாமெல்லாம் ஈழம் ஈழம் என்று எழுதிவர இவர்கள் ஏன் இலங்கை தமிழர்கள் என்கிறார்கள், 'தமிழ் ஈழம்' என்று சொல்வது உறுதிப்படுத்தப்படாத ஒன்று என்றாலும் ஈழம் என்ற சொல் இலங்கையை குறிக்கும் தமிழ் சொல்தான்,

'ஈழத்தமிழர் சங்கம்' என்று அழகாக எழுதி இருக்கலாமே ஏன் 'இலங்கை தமிழர்கள் சங்கம்' என்று எழுதி இருக்கிறார்கள் என்கிற ஆதங்கம் வேறு இருந்தது. கோவிலுக்குச் சென்றபிறகு 'தற்போதைய போர் சூழலில் இந்த மக்களுக்கு கம்ப இராமயணம் கேட்பதற்கெல்லாம் மனது வருகிறதா, இதைக் காது கொடுத்து கேட்கும் இந்த நேரம் வன்னியில் எத்தனை உயிர் பறிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறதோ தெரியவில்லை, இந்த சொற்பொழிவுக்கு செல்ல மனம் ஒப்பவில்லை இராம்' என்று கூறித் தயங்கினேன். பிறகு சென்றேன். சொற்பொழிவு தமிழ்சங்கத்தைச் சேர்ந்த ஒருவர் முன்மொழிய தொடங்கிவிட்டது.
சொற்பொழிவைக் கேட்க கேட்க, 'மனம் சிந்திக்க வேண்டுமென்றால் இது போன்ற சொற்பொழிவுகளில் சிறிது நேரம் செலவிட்டால், சோகம் தற்காலிகமாக விடைபெறும், வெறுப்பு, சினம், சோகம் என்று கூறிக் கொண்டு சோறு உண்ணாமல் இருக்கிறோமா ? நமக்குள் உணர்வுகள் செத்துப் போகாமல புத்துணர்வு கொடுக்க இது போன்ற நிகழ்ச்சிகள் இந்த நேரத்தில் மிக மிகத் தேவை என்று புரிந்தது. அதனால் மேற்சொன்ன எனது எண்ணங்களை திருத்திக் கொண்டு, சொற்பொழிவின் சுவைக்குள் மூழ்கினேன்.

கம்பவாருதி இ.ஜெயராஜ் - இப்படி ஒரு சொற்பொழிவாளரா என்று விழிகளும் மனமும் விரிய விரிய வியக்க வைத்தார். தமிழக சொற்பொழிவாளருக்கும் இவருக்கும் இருக்கும் முதன்மையான வேறுபாடு, இவர் உரையாற்றும் போது கொஞ்சி விளையாடும் ஈழத்தமிழ். அந்த ஈழ மண்ணுக்கே உரிய மண்வாசனை பேச்சு. கிட்டதட்ட 25 ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை வானொலியில் கேட்ட ஈழத்தமிழ் சுவையை கம்பவாருதி அவர்களின் பேச்சில் கேட்டது மயக்கியது என்று சொன்னால் அதில் மிகை ஒன்றும் இல்லை.
இதுவரை மூன்று நாட்கள் நாளொன்றுக்கு ஒரு மணி நேரம் வீதம் கேட்டு வருகிறேன். நாளை நிறைவு நாள். முதல் நாள் கேட்ட சொற்பொழிவு மறுநாளும் செல்ல வேண்டும் என்ற உணர்வை தூண்டியது. சொற்பொழிவார்கள் ஒவ்வொருவருக்குமே அந்த திறன் உண்டு, அப்படிப் பட்ட திறன் உள்ளவர்கள் மட்டுமே அந்த மேடைகளுக்கு வருகிறார்கள். கம்பவாருதி நாள் ஒன்றுக்கு இரண்டு அல்லது மூன்று செய்யுள்கள் மட்டுமே படிக்கிறார். ஆனால் அதனுடன் நிறைய இலக்கிய தகவல்களையும் வாழ்வியல் நெறிகளையும் அள்ளித்தருகிறார்.

நான் பார்த்ததில் மிகவும் தன்னடக்கமான ஒரு சொற்பொழிவாளர் என்றால் கம்பவாருதி ஐயாவைத்தான் சொல்ல வேண்டும். மேடையில் இருப்பதால் நான் உயர்ந்தோன் அல்ல, எனக்கு முன்பே கற்றோர்களும் அமர்ந்திருக்கிறார்கள் என்கிற நடுக்கம் எனக்கு எப்போதும் உண்டு, என்றார். இப்படி மேடையில் தன்னைப் பற்றிய உண்மைகளை வெளிப்டையாக சொல்பவர்கள் அரிதே. கம்ப இராமயணம் சொற்பொழிவு என்றாலும் அதை மட்டுமே பேசவில்லை, அதற்கு தொடர்புடைய திருக்குறள், பெரிய புராணம், சைவ திருமுறைகள் ஆகியவற்றில் இருக்கும் செய்யுள்களையெல்லாம் தேவையான இடத்தில் எடுத்து நகைச்சுவையுடன் சொன்னார். அரசு பதவியில் இருப்பவர்கள், ஆண்கள் பெண்கள் என அனைத்து தரப்பையும் பேச்சின் நடுவே நாகரீகமாக கிண்டல் அடித்து நகைச்சுவையாக பேசினார். எப்பொழுது நேரம் முடியும் என்று ஒருவரும் நேரம் பார்க்கவில்லை. இத்தனைக்கும் ஞாயிறு தவிர மற்ற நாட்களிலும் இரவு 9:30 வரை சொற்பொழிவு நடந்து கொண்டிருந்தது. நேரம் செல்கிறதே...முடிந்துவிடுமோ என்கிற கவலைதான் ஏற்பட்டது. நகைச்சுவையுடன், செய்யுள்களை ஏற்ற இறக்கத்துடன் நயம், ஓசை குன்றாமல் சொல்வதில் அவரது இலக்கியத் திறன் ! கேட்க கேட்க வியந்தேன்.



இதுபோன்ற சொற்பொழிவாளர்கள் இன்னும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது நாம் வாழும் காலமும், தமிழ்ச் சூழலும் இன்னும் முழுமையாக கெட்டுப் போக இல்லை என்கிற மகிழ்ச்சியையும், மன நிறைவையும் கொடுக்கிறது. நீங்கள் வாழும் நாடு, ஊர் எதுவாக இருந்தாலும் எங்காவது கமபவாருதி இ ஜெயராஜ் அவர்களின் சொற்பொழிவு என்று எழுதி இருந்தால் உடனேயே தகவல்களை கேட்டு அவரது சொற்பொழிவை கேட்டுவாருங்கள். நான் பெற்ற இலக்கிய இன்பம் பெருவீர்கள்.






மேற்கண்ட பதிவை முதல் 27 பின்னூட்டங்களுடன் நகல் அச்சை கம்பவாருதி ஐயாவிடம் கொடுத்து உரையாடிய போது எடுத்தப் படம்.



ஜெகதீசன், விஜய் ஆனந்த் மற்றும் முகவை இராம் கம்பவாருதி ஐயாவிடம் உரையாடிய போது எடுத்தப் படம்.

புனித நீராடலும், பாவ புண்ணியமும் - பகுதி 2

முதல் பகுதியில் பெரிய விவாதங்கள் நடந்தேறியதால், இரண்டாவது பகுதியும் எழுதும் ஆவல் ஏற்பட்டது. அதில் கலந்து கொண்டு கருத்துரைத்தவர்களுக்கும், வாசித்தவர்களுக்கும் நன்றி.

உலகில் உள்ள அனைத்து தத்துவங்களுமே ஐம்பூதம் (பஞ்சபூதம்) பற்றிப் பேசுகின்றன. பிரபஞ்சத்தில் உள்ள அனைத்து பொருட்களுமே நீர், நிலம்(திடப்பொருள்), நெருப்பு, ஆகாயம், காற்று என ஐந்துப் பொருள்களின் பல்வேறு விழுக்காடு சேர்க்கையில் அடங்குபவை. இதைத்தவிர ஆறாவது ஒரு பொருள் உண்டு, அவை உயிர் மற்றும் அதுனடன் இணைந்த இயக்கம். உயிர்த்தன்மை இல்லை என்றால் மற்றவை அனைத்தையுமே உணரமுடியாது.

மேற்கண்ட ஐம்பூதங்களின் சேர்க்கையே நம் உடல், உடலில் உயிர்வாழ்தலுக்கு முதன்மையான தேவைகளாக கருத்தப்படுவது உணவும், நீரும் தான். உடலின் எடையில் 80 விழுக்காடு வெறும் நீர்தான். நீரின்றி அமையாது உலகு என்ற சொற்றொடரில் இருந்தே நீரின் சிறப்பு அனைவருக்குமே தெரியும். நீர் ஆதாரமின்றிப் போனால் பூமியும் கூட பிற கோள்களைப் போன்று வெறும் வாயுக் கோளம் தான். அதனால் தான் தண்ணீரை நம்முன்னோர்கள் பலவிதமாக போற்றினார்கள், அதன் புகழ்பாடினார்கள், அதனை பாதுகாத்து வைத்தார்கள்.

தண்ணீரின் தூய்மைக் கேடு வெகுவிரைவாக உடலில் மாற்றத்தையும் நோய்களையும் ஏற்படுத்திவிடும். முன்பெல்லாம் குளமின்றி எந்த கோவில்களையும் அமைத்ததே இல்லை, கோவில்கள் ஏற்பட்டதன் நோக்கம் மக்களை ஒன்றுதிரட்டுவதற்காகவும், அவர்களுக்கு களிப்புற பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தும் பொது இடம், அதையே கடவுள் பெயரால் செய்வதால் ஈடுபாட்டுடன் செய்வார்கள் என்பதே. முன்பெல்லாம் தற்பொழுது இருப்பதைப் போன்ற குளோரின் குடிநீர் கிடையாது, குடிப்பதற்கும், குளிப்பதற்கும் குளமோ, ஆறோ அந்த நீரைத்தான் பயன்படுத்த முடியும். புறந்தூய்மை நீரால் அமையும் என்பதே வள்ளுவர் வாக்கு. மக்கள் கூடும் கோவில்களில் தூய்மையை வழியுறுத்த குளித்துவிட்டு செல்லும் வசதிக்காக குளங்களை கட்டி வைத்தார்கள்.

கோவில் குள நீர், தீர்த்த (ஆற்றுத் 'துருத்தம்' என்கிற தமிழ் சொல்லின் மருவல்) நீர் மக்களின் உடல் தூய்மைக்கும், குடிநீருக்கும் ஆக இருப்பதால் அதான் தூய்மையை காக்கவேண்டியது அம்மக்களின் பொறுப்பே ஆகும். நீரை தூய்மையாக வைத்துக் கொள்ளுங்கள் என்கிற வெறும் அறிவிப்பாக இருந்தால் எவரும் கண்டுகொள்ள மாட்டார்கள் என்பதற்காகவே கோவில் குளம் மற்றும் தீர்த்தங்களில் குளிப்பது புனிதம் மற்றும் பாவம் போக்கும் என்று சொல்லப்பட்டிருக்க வேண்டும்.

அளவுக்கு மிகுதியான தண்ணீருக்கு நாம் பல்வேறு வழிகளில் தூய்மை கேடு விளைவிப்பதாலேயே இன்றைய தேதியில் சுற்றுப்புற தூய்மை மற்றும், சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு பெரும் அறைகூவலாக இருக்கிறது.

பலருக்கு பலனாக இருக்கும் பொது இட ஆற்று, குளத்து, அணை நீருக்கு தூய்மை கேடு செய்வது பாவம், அதை தூய்மை படுத்த உதவுவது புண்ணியம் என்று சொல்லலாம் :)
அப்படி இல்லாமல் வெறுமனே புராணம் கேட்டு இறங்கிக் குளிப்பதால் பாவமோ, புண்ணியமோ இல்லை

நீர்தான் நீர்தான் புரிந்து கொள்ளாத நீர்தான்,
புரிந்து கொண்டால் நீரூம் புனித(நீ)ர் தான் !


************************************************************
(நேரமின்மையால் எழுதியதும் சரி பார்க்கவில்லை, ஆங்காங்கே எழுத்துப் பிழைகள் தென்படும் பொருத்தருள்க !)

16 மார்ச், 2009

தேர்தலுக்கு உயிர்த்தெழும் பிணம் !

செத்துப் போன தாத்தா எலக்சனுக்கு ஓட்டு போட வந்ததாக விளையாட்டாக கள்ள வாக்குகளை கிண்டல் செய்வது வழக்கம். அதில் உண்மையும் உண்டு. உயிரோடு இருப்பவர்களின் வாக்குகளையே கள்ளத்தனமாக குத்தும் போது செத்தவர்களின் வாக்குகளை விட்டு வைப்பார்களா ?

மதச்சார்பின்மை என்கிற காங்கிரசின் 'அரசியல்' முழக்கம் அப்படித்தான். மதச்சார்பின்மை - இந்த சொல்லை தந்தை பெரியாரைத் தவிர பயன்படுத்த எவருக்கும் தகுதியே கிடையாது. இந்தியாவின் மதச்சார்பின்மை காவிகளின் தலைமை பல மாநிலங்களில் ஏற்பட்ட போதே, ஏன் அதற்கு முன்பே மகாத்மா காந்தி சுட்டுக் கொள்ள பட்ட போதே அதன் கோர பற்களால் இளித்த ஒன்று. அதையும் மீறி சில வேட்பாளர்கள் வெற்றி பெற்று வருகிறார்கள் என்றால் அது அவர்களின் நன் மதிப்புக்கு கிடைத்த பரிசு என்று தான் சொல்ல முடியும்.

இந்தியாவில் பயன்படுத்தும் பெரும்பாண்மை, சிறுபாண்மைச் சொல்லாடலின் தன்மை தேர்தல் காலங்களில் தான் நன்றாக விளங்கிக் கொள்ள முடியும். ஒரு தொகுதியில் பெரும்பாண்மை மிக்க எந்த சமூகத்திலும் அவர்களுக்கு மாற்றான ஒரு சிறுபாண்மை சமூகத்தினரை தேர்தலில் நிறுத்திவிடவே முடியாது. கிறித்துவர்கள் நிறைந்திருக்கும் ஒரு தொகுதியில், இஸ்லாமியர் நிறைந்திருக்கும் ஒரு தொகுதியில் இந்து வேட்பாளர் ஒருவரை நிறுத்த முடியாது என்பதே இன்றைய நிலை. இப்படிதான் அனைத்து கட்சிகளுமே தங்களுக்குறிய வேட்பாளரை அந்தந்த தொகுதியில் நிறுத்துகிறார்கள். இந்துக்கள் பெரும்பாண்மையினராக இருக்கும் தொகுதிகளில் எந்த சாதிக்கு செல்வாக்கு இருக்கிறதோ, அந்த சாதியைச் சேர்ந்தவரைத் தான் ஒவ்வொரு கட்சியும் வேட்பாளராக களம் இருக்கிறது. எதிர்கட்சிக்காரன் நிறுத்தி இருக்கும் அதே சாதியைச் சார்ந்த வேறொருவரைத்தான் மாற்றுக் கட்சியும் நிறுத்துகிறது. மாறாக அங்கே ஒரு கிறித்துவரையோ, இஸ்லாமியரையோ நிறுத்துவது இல்லை. பிறகு மதச்சார்பின்மை என்கிற மண்ணாங்கட்டி எங்கிருந்து வந்தது ?

மதச்சார்பின்மையெல்லாம் நாம் எப்போதோ குழி தோண்டி புதைத்துவிட்டோம். கவர்சிகர கூட்டொலியாக (கோஷம்) காங்கிரஸ் கட்சியும், மதச்சார்பு பிஜெபியுடன் முன்பு கூட்டணியில் இருந்த திமுகவும் மதச்சார்பின்மை என்ற சொல்லை அடிக்கடி பயன்படுத்தி வருகிறது. இந்துக்கள் நிறைந்த பகுதியில் ஒரு இஸ்லாமியரை வேட்பாளராக அறிவிக்கும் துணிவு இந்த கட்சிகளுக்கு இருக்கிறதா ? பிறகு ஏன் தாங்கள் மதச்சார்பிண்மையின் காவலர்கள் என்று இவர்கள் கூசாமல் பேசுகிறார்கள். அதுவும் தேசிய கட்சிகளின் இந்த கோசம் தமிழ்நாடு தாண்டி எடுபடவே இல்லை, அப்படி எடுபட்டிருந்தால் பக்கத்து மாநிலத்தில் பாஜக ஆட்சி ஏற்பட்டிருக்குமா ? பக்கத்து மாநிலத்திலோ அல்லது அல்லது பாஜக ஆளும் மாநிலத்திலோ உள்ளவர்கள் இந்து மதவெறியர்கள் என்று சொல்லிவிட முடியுமா ? காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகளுன் போலி மதச்சார்பின்மை தோல்வியுற்றது என்று தான் சொல்லமுடியும். ஏனெனின் தமிழக திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்த போது பாஜக தமிழகத்திலும் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள, அப்படி தமிழகத்தில் முன்பு பாஜக வேட்பாளர்கள் தேர்வு செய்தப்பட்ட இடத்தில் இருந்த வாக்காளர்கள் மதச்சார்பின்மை உடைய இந்துவெறியர்கள் என்று சொல்லிவிட முடியாது தானே. காங்கிரஸ் ஆட்சியின் போதுதான் பாபர் மசூதி இடிக்கப்பட்டது என்பதை நினைவில் கொள்க, அன்றைய காங்கிரஸ் பிரதமர் நரசிம்ம இராவ் நினைத்திருந்தால் பாபர் மசூதி இடிப்பை துணண இராணுவம் கொண்டாவது தடுத்து இருக்க முடியும். அப்போதெல்லாம் இந்துக்களின் நண்பன் போல அமைதி காத்த காங்கிரஸ் தேர்தலுக்கு தேர்தல் மதச்சார்பின்மை பேசுவது வெட்கக் கேடான ஒன்று.

நான் இங்கே பிஜேபி பற்றி எதையும் உயர்வாக சொல்லவில்லை. நேரடியாக மதச்சார்பில் நடந்து கொள்ளும் பாஜக மக்களிடம் குழப்பம் விளைவிக்காமல் நாங்கள் மதச்சார்பாளர் என்றே சொல்வதை பாராட்டலாம், அதனை உணர்ந்தே பிடித்தவர்கள் வாக்களிக்கிறார்கள், பிடிக்காதவர்கள் மறுக்கிறார்கள். காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டுகளின் மதச்சார்பின்மை என்னும் முழக்கம் போலித்தனமானவை.

தொகுதியில் எந்த மதத்து வேட்பாளர் வெற்றிபெறுவார் என்று பார்த்து வேட்பாளரை நிறுத்துவது எந்த வகையில் மதச்சார்பின்மையில் அடங்கும் ? மதச்சார்பின்மை பற்றி காங்கிரஸ் மற்றும் பிற கட்சிகள் பேசுகிறார்கள் ? ஊழல் ! கட்சி பாகுபாடின்று அனைத்துக் கட்சிகளுமே ஊழல் செய்து மக்களிடம் பெயர் பெற்றுவிட்டன. அவர்களிடையே நாங்கள் யோக்கியர்கள் என்று சொல்லும் விதமாக மதச்சார்பின்மையை துருப்புச் சீட்டாக பயன்படுத்துகின்றன. இதை வாக்களர்கள் என்றோ நிராகரித்துவிட்டார்கள் ஆனால் காங்கிரஸ் போன்ற போலி மதச்சார்பின்மை கட்சிகள் அதையெல்லாம் மறந்துவிட்டு 'மதச்சார்பின்மை' என்னும் என்றோ செத்த பிணத்துக்கு உயிர் கொடுத்து ஓட்டு பிச்சை எடுக்க வைக்க முயல்கின்றன.

வாய்மூடி சிரிக்கலாம் போங்க ! அரசியல்

தொண்டர் 1 : நம்ம தலைவர் கூட்டணிக்கு அழைப்பு விடுக்க இப்படியெல்லாம் அறிவிப்பு விட்டு கெஞ்சுவார்னு யாரும் எதிர்பார்க்கல

தொண்டர் 2 : என்ன அறிவிப்பு விட்டார் ?

தொண்டர் 1 : கூட்டணிக்கு சேர்ந்தால் அந்த முக்கிய கட்சிக்கு 45 சீட் தருவதாக பேச்சுவார்த்தை நடத்தினாராம்.

தொண்டர் 2: 45 ? இருப்பதே 39 தொகுதிதானே ?

தொண்டர் 1 : பக்கத்து மாநிலத்திலும் சில தொகுதிகளை கேட்டு வாங்கித்தருவாராம்

****

தொண்டர் : எங்க தலைவர் குறிப்பிட்ட தொகுதியை மட்டும் விட்டுத்தரமாட்டேன் என்று கராராக பேசிவிட்டார்

மற்றவர் : ஏன் ஏன் ?

தொண்டர் : போனதடவை அங்கே நின்னு தான் டெபாசிட் வாங்கினாராம்

***

வட்ட துணைச் செயலாளர் : நம்ம கட்சியில் தான் பெண்களுக்கு 33 % சீட் கொடுத்திருப்பதாக தலைவர் பெருமையாக பேசினாரே விவரம் என்ன ?

வட்டச் செயலாளர் : கேட்டு வாங்கிய 10 சீட்டில் 3ல் அவரது மனைவியும், மகளும், மருமகளும் நிற்கிறார்கள், அவர்களெல்லாம் பெண்கள் தானே.இந்த பெரும் தன்மை யாருக்கு வரும் ?

***

அப்பாவி : எங்க கட்சி தான் தேர்தலுக்கு கவர்சிகரமான திட்டம் அறிவிச்சிருக்காங்க

ஐயாசாமி : ஓஹோ......?

அப்பாவி : தேர்தலில் கட்சி ஜெயிச்சா, இலவச டிவியுடன், நமிதா நடித்து வெளிவர இருக்கும் ஜெகன் மோகினி பட குறும்தகடு இலவசமாக தரப் போறாங்களாம், அதுதவிர நமீத படங்களுக்கு வரி விலக்கு அளிக்கப் போகிறார்களாம்

***

மும்பை நடிகையை பிராச்சாரத்துக்கு கூப்பிட்டது தப்பாக போய்விட்டது

ஏன் ஏன் ?

எல்லோரும் நம்ம கட்சிக்கு ஓட்டுப் போடுங்கன்னு பேசச் சொல்லிக் கொடுத்தால், அந்த அம்மா 'அல்லாரும் நம் கட்ச்சிக்கு ஓட்டை போடுது' ன்னு பேசிவிட்டது. அதனால் எல்லோரும் எதிர்கட்சிக்கு ஓட்டு போட்டுவிட்டு நம்ம கட்சியை ஓட்டை ஆக்கிட்டாங்க

***

ராமசாமி : அந்த நடிகரை ஏன் தான் பிரச்சாரத்துக்கு கூப்பிட்டோம் என்று நம்ம தலைவர் நொந்து போய் இருக்கிறார்

குழந்தை சாமி : ஏனாம் ?

ராமசாமி : அவரோட ரசிகர்கள் வழியெங்கும் நம்ம முதல்வர் கண்ணில் படுவது போல் 'வருங்கால முதல்வரே வாருங்கள்' என்று நடிகருக்கு வரவேற்பு கட் அவுட் வச்சிட்டாங்களாம்

13 மார்ச், 2009

புனித நீராடலும், பாவ புண்ணியமும் !

"தீர்த்த" யாத்திரை என்று கிளம்புபவர்கள் "புனித" நீராடுவது வழக்கம். தீர்த்த யாத்திரைக்கான புனித நீராடுதளமாக வடக்கில் வாரணாசி கங்கையும், தெற்கில் மகாமக கும்பகோண குளமும் உள்ளன. இந்த நூற்றாண்டின் புதிய வரவான பம்பை ஆறும் இந்த பட்டியலில் இருக்கிறது. கங்கை ஆற்றின் புனிதம் பற்றி அறிந்து கொள்ள இங்கே கிளிக்குங்கள்

பிழைப்பற்ற வேலையாக எவனோ ஒருவன் எதோ புரணக்கதை எழுதிவிட்டுப் போக, கங்கையில் கரைந்தால் பாவக் கணக்கெல்லாம் தண்ணீரில் கறைந்துவிடுமாம், நேரடியாக சொர்கம் தானாம். முன்பெல்லாம் 65 - 70 வயது வரை உள்ள பார்பன ஆண்கள் காசிக்கு யாத்திரையாக சென்று கங்கையில் குதித்து தற்கொலை செய்து கொள்வார்களாம். ஏனென்றால் கங்கையில் சாவு மோட்சம் கொடுக்குமாம். எனது பார்பன நண்பர் ஒருவர்தான் இந்த தகவலைச் சொன்னார். 'எங்க முன்னோர்கள்...அப்படியே கங்கையில் முழுகி இறந்துடுவாங்க...இப்ப அப்படியாரும் செய்வது இல்லை' என்றார்.

அதுதவிர நாளைக்கு 700 - 1000 பிணங்கள் வரை வாரணாசி பகுதியில் எரிந்தும் எரியாத நிலையில், அகோரிகள் (என்று அழைத்துக் கொள்பவர்கள்) தின்றது போக மீதம் கங்கையில் இழுத்துத் தள்ளப்படுகிறது. பார்பனர்கள் தான் கங்கை மீது அப்படி ஒரு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்றால் பார்பனர்கள் அல்லாதவர்களிலும் கங்கை என்பது எதோ சிவனின் தலையில் இருந்து நேரடியாகவே கொட்டுவதாகவும், கங்கை சிவனின் சின்ன வீடு எனவும் நம்பிக் கொண்டு கங்கைக்கு படை எடுப்பவர்களும் உண்டு.

புராணம் எழுதுகிறவர்கள் பெரும்பாலும் வருமானத்துக்கு வழி ஏற்படுத்துவதற்கான வழியையும் அதில் நுழைப்பது வழக்கம். பாவ/புண்ணியம் இந்த கதைகளையெல்லாம் சொல்லிவிட்டு கடைசியாக பரிகார படலம் என்று ஒன்றை உள்ளே நுழைப்பார்கள், பரிகாரம் தான் வருமானத்தை சீராக வைத்திருக்க செய்யும் உத்தி. கங்கையில் குளித்தால் பாவம் போய்விடும் என்று சொன்னாலும் தென்னிந்தியாவில் இருக்கும் அனைவருமே அந்த கால போக்குவரத்து வசதி இன்மையால் கங்கைவரை செல்ல முடியுமா ? கங்கையில் செய்ய வேண்டிய பரிகாரம், பூசை எல்லாம் செய்ய முடியுமா ? அந்த குறையை சரி செய்ய உண்டாகப்பட்டது தான் மகாமகக் குளம், மகா மக குளத்தின் ஐ(பொய்)தீகப்படி வடநாட்டில் உள்ள கங்கை உட்பட அனைத்து ஆறுகளும் கும்பகோண மகாமக குளத்தில் சேர்வதாக (சங்கமிப்பதாக) சொல்லப்படுகிறது. கங்கையில் குளித்தால் கிடைக்கும் அனைத்து பலன்களும் இங்கும் கிட்டுமாம், அப்படி பாவங்களைப் போக்கிக் கொள்ள சசி மற்றும் ஜெ முயன்ற போதுதான் 40க்கும் மேற்பட்டவர்கள் கூட்ட நெரிசலில் மோட்சம் அடைந்தார்கள். அதே போன்று சனீஸ்வரன் கோவில் குளத்தில் பழைய துணியைப் போட்டு பாவம் விரட்டும் செயலால் குளம் முழுவதுமே பழைய துணி பாசிகளால் நிறைந்திருக்கிறதாம்.

*****

ஒருபக்கம் தத்துவமாக பாவ / புண்ணியங்கள் ஒருவரின் செயலினால் ஏற்படுகிறது, அதை மாற்ற யாராலுமே முடியாது, அதற்கு உதாரணாமாக ஆற்றல் மாறாக் கோட்பாடுகளைக் காட்டும் இந்து மதம், மற்றொரு பக்கம் பரிகாரத்தினால் எதையும் மாற்றலாம் என்ற லாஜிக் அற்ற விசயத்தையும் சொல்லிவருகிறது. என்னைக் கேட்டால் புனித நீராடுவதால் ஒருவேளை தூய நீராக இருந்தால் உடலில் உள்ள அழுக்குகளை தேய்த்து குளித்தால் போகும். மற்றபடி பாவ/புண்ணியத்திற்கு குளியலுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அப்படி நம்புவது மூட(ர்) நம்பிக்கை !

12 மார்ச், 2009

பதிவு எழுதுவதால் வரும் பதினோரு சங்கடங்கள் !

1. கண்டிப்பாக பதிவு எழுதுவதில் நமது நேரம் விரையமாகாது என்ற மூட நம்பிக்கையுடனோ, நேரம் விரையமாகும் என்ற நம்பிக்கையுடனோ தான் பதிவு எழுத வருகிறோம், ஆனால் எப்படி நினைத்து எழுதினாலும் நேரம் வெட்டியாக போய்விடும்

2. பதிவு எழுதிய ஒரே நாளில் மீண்டும் இன்னொரு பதிவு எழுத கை அரிக்க ஆரம்பித்துவிடுகிறது

3. எழுதி முடித்ததுமே, இனி எழுதுவதை இன்னும் இரண்டொரு நாளில் நிறுத்திவிடனும் என்று நினைப்போம் - இது பதிவு எழுதும் எல்லோரும் சொல்லும் வரிகள். ஆனால் திரட்டிகளின் முகப்பில் பதிவுகளைப் பார்த்ததுமே இன்னிக்கு, நாளைக்கு, வாரத்தில், மாதத்தில், ஆண்டில், யுகத்தில் என்று எழுதுவதை நிறுத்துவது பற்றிய முடிவு நீண்டு கொண்டே போகிறது

4. எழுதுபவர் பெயர் மிஸ்டர் எக்ஸ் என்று வைத்துக் கொண்டால் எழுதத்தொடங்கிய ஓரிருவாரங்களுக்குத்தான் மிஸ்டர் எக்ஸ்சாக இருக்கிறார், அதன் பிறகு அவர் மொக்கை பதிவு போடுவதில் முன்னனியில் இருக்கிறார் என்றும், கண்டதையும் கேட்டதையும் எழுதுகிறவர் என்றும், இவரு வேலை வெட்டி இல்லாதவர் என்கிற பிம்பம் பலர் மனதில் படிகிறது


5. நாம எடுத்து எழுதிய அதே தகவலை இன்னொருவரும் கிட்டதட்ட அது போலவே எழுதி இருந்தால், இன்னொருவர் ஏற்கனவே எழுதியதை எழுதிவிட்டதாக குழப்பம் அடைகிறோம். அல்லது நாம எழுதியதையேத் தான் அவரும் எழுதி இருக்கிறார் என்கிற பழிச்சொல்லுக்கு அவரை ஆளாக்குகிறோம்.

6. எழுதிய பதிவில் சுதந்திரமாக அனானிகள் பின்னூட்டம் இட்டால் நமக்கு பிடிக்கவில்லை என்றால் எடுத்துவிடுகிறோம், இப்படியெல்லாம் கமெண்டு போடுறாங்களே, அல்லது பின்னூட்டமே வரவில்லையே என்கிற தவிப்புக்கு நம்மை ஆளாக்கிக் கொள்கிறோம்

7. உண்மையிலேயே பதிவை படித்தவர் பின்னூட்டம் போடவில்லை என்பதால், அவர் படித்தேன் பின்னூட்டம் போட நேரமில்லை என்று சொன்னால் அவரைப் பற்றி நாம் தவறாக நினைத்துக் கொள்ள முடிகிறது, உண்மையிலேயே அவர் படிக்கமலேயே அப்படி சொல்வதென்றால் ... (மீண்டும் 6வது பாராவின் கடைசி வரிகளைப் படிக்க....)

8. பின்னூட்டமே வரவில்லை என்கிற சோகத்தில் நாம் இருக்கும் போது வேறொரு நண்பர் உரையாடியில் வந்து அவர் பதிவில் இணைப்பைக் கொடுக்க பின்னூட்டமே வராத கடுப்பில் நாம் அவரது பதிவிற்கு பின்னூட்டம் இடாமல் வர, அவர் நம்மை தவறாக புரிந்து கொள்ள ஏதுவாகிறது

9. பதிவை தீவிரமாக எழுதுவதால் உழைப்பு, நேரம் இரண்டையுமே இழக்க நேரிடுகிறது என்று பட்டறிவு பதிவர்கள் சொன்னது போல அலுவலக நேரத்தில் பதிவு எழுதினால், வேலை, நேரம், ஊதியம் இம்மூன்றையுமே இழக்க நேரிடுகிறது

10. பின்னூட்டம் வரவில்லை என்றால் உடனே அடுத்த பதிவு எழுதவேண்டும் என்ற ஆவல் வராது. அதுவே பின்னூட்டம் குவிந்தால் உடனே எழுதவேண்டும், நம்மை பலர் படிக்கிறார்கள் (அல்லது அப்படி நாம் நினைத்துக் கொள்கிறோம்!)

11. நல்ல பதிவுகளை படிக்கிறோம், அதில் சில நல்ல பதிவுகளில் பின்னூட்டம் இடவில்லை என்றால் எழுதியவருக்கு கிடைக்கும் வெளிப்படையான பாராட்டுகளுக்கு தடையாக இருக்கிறோம்

நன்றி : பரிசல்காரன்

11 மார்ச், 2009

யார் யார் இந்தியன் ?

யாராவது தான் இந்தியன் என்று அறிந்து கொள்ளவேண்டுமென்றால் சத்திய மூர்த்திபவனுக்குச் சென்றால் அறிந்து கொள்ளலாம். வைகோ இந்தியனாக இருக்கத் தகுதியற்றவர் என்று திருவாய் மலர்ந்திருக்கிறார் தங்கபாலு. அதற்குக் காரணாமாக பின்வரும் கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக,

கேள்வி: இலங்கையில் இந்திய வீரர்கள் முகாமிட்டு போரில் ஈடுபடுவதாக வைகோ குற்றம் சாட்டியிருக்கிறாரே?

பதில்: அவர் சொல்வது அப்பட்டமான பொய். வைகோ, முரண்பாடுகளுக்கு சொந்தமானவர். இந்திய இறையாண்மைக்கு எதிரானவர். ராஜீவ் கொலைக்கு பிறகும் 6 மாதங்கள் விடுதலைப் புலிகளுக்கு உணவும், மருந்தும் கொடுத்து காப்பாற்றியதாக ஒப்புக் கொண்டிருக்கிறார். அவர் எப்படி உண்மையான இந்தியனாக இருக்க முடியும். இந்தியன் என்று சொல்வதற்கே வைகோ தகுதி அற்றவர்.


****

பகைவனுக்கும் அருள்வாய் நெஞ்சே.... என்னும் விதமாக அன்றைய சூழலில் இந்திய இராணுவத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவும் மருந்தும் கொடுத்ததாக வைகோ ஒப்புக் கொண்டுள்ளார்
இது தேச துரோகமாம். அப்படி என்றால் சொந்த நாட்டு இராணுவத்திற்கு பீராங்கி வாங்கியதில் ஆயிரம் கோடிகளை கையூட்டாக பெற்ற போஃபர்ஸ் ஊழல் எல்லாம் என்ன கணக்கு ? குற்றம் நிரூபிக்கப் படாததால் ஒருவர் குற்றவாளி இல்லை என்று ஆகிவிடாது. போஃபர்ஸ் விசாரணைக்கு காங்கிரஸ் ஒத்துழைப்பு கொடுத்த விவரம் நாடே நாறிய ஒன்றுதான். நாட்டின் தலைமகனாக தேர்ந்தெடுக்கப்பட்டவரே பொதுமக்கள் வரிப்பணத்தில் இருந்து வாங்கும் இராணுவா தளவாடங்களுக்கு கமிசன் பெற்றுக் கொண்டதைவிட பாதிக்கப்பட்ட ஈழத்தமிழர்களுக்கு வைகோ உதவியது ஒன்றும் மிகப் பெரிய இந்திய துரோகமாக தெரியவில்லை.

சென்னையில் நிருபர்களிடம் அவர் பேசுகையில்,

இலங்கையில் பாதிக்கப்பட்டுள்ள தமிழர்களுக்கு உதவுவதற்காக காங்கிரஸ் சார்பில் வரும் 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நிவாரண பொருட்கள் திரட்டப்படும். இந்த நிவாரண உதவிகள் அனைத்தும் 15ம் தேதி சத்தியமூர்த்தி பவனுக்கு வந்து சேரும்


***

இலங்கைக்கு ஆயுதம் கொடுத்தது போலவே அந்த ஆயுதங்களால் வீழ்ந்தவர்களுக்கு காங்கிரஸ் சார்பில் தமிழ்நாடு முழுவதும் (மரண வலி) நிவாரண பொருட்கள் திரட்டப்படுகிறதாம். மானமுள்ள தமிழன் காங்கிரஸ் தாரும் நிவாரண பொருள்களை ஏற்பார்ர்களா என்பது வேறு விசயம்.

யார் தேச துரோகிகள் ? நாடு விடுதலை அடைந்ததும் மகாத்மா காந்திஜி காங்கிரஸின் நோக்கம் நிறைவேறிவிட்டது, இனியும் அரசியல் கட்சியாக தொடர்ந்தால் வாரிசு அரசியலும் ஊழலும் பெருகும் எனவே காங்கிரசை கலைத்துவிட வேண்டுகோள் வைக்கிறேன் என்றார். ஆதிக்க வெறியர்கள், பண்ணையார்கள் தங்களுக்கு பாதுகாப்பு கொடுத காங்கிரசை கலைக்க முன்வந்தார்களா ? நேருவில் இருந்து இராகுல் காந்திவரை வாரிசு அரசியல் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.

சுதந்திர போராட்டத்தைச் சொல்லி இன்றும் காங்கிரசுக்கு வாக்கு கேட்டு ஆதிக்கத்த தக்கவைத்துக் கொள்ள, அரசு பதவி அதிகார வெறியில் செயல்படுபவர்கள் தேச நலவிரும்பிகளா ? காந்தி சொன்ன போது கலைக்காவிட்டாலும் காங்கிரஸ் முதல்முறை ஆட்சியை இழந்த போதே மக்கள் செல்வாக்கு சரிந்துவிட்டது என கருதி கட்சியை கலைத்திருக்க வேண்டும். செய்யவில்லை. இழுத்துப் பிடித்துக் கொண்டு கூட்டணி ஆட்சியில் காலம் ஓட்டிக் கொண்டு, யார் இந்தியன் யார் இந்திய தேச துரோகி என்று சொல்வதற்கு காங்கிரஸ் கட்சியில் யாருக்கும் அருகதையே இல்லை.

9 மார்ச், 2009

நியூசி - சிங்கை பதிவர்கள் சந்திப்பு - அறிவிப்பு !

வருகிற ஞாயிற்றுக் கிழமை (15-Mar-2009) நமது அன்புக்குரியவரும், டீச்சர், ரீச்சர், துளசி அக்கா, துளசி அம்மா, பதிவானந்தமயி என்று பல்வேறு விளிப்புகளில் அழைக்கபபடுகின்ற ஒரே பதிவருமான துளசி தளம் - துளசி கோபல் அவர்களின் சிங்கை வருகையை முன்னிட்டு பதிவர் சந்திப்பு நடைபெற இருக்கின்றது. துளசி அம்மா அவரது கணவர் திரு கோபால் ஐயாவுடன் சந்திப்புக்கு வருகிறார்.




பதிவுலகில் நீண்டகாலமாக எழுதிவரும் துளசி கோபால் அவர்களைப் பற்றி தனியாகச் சொல்வதற்கு எதுவுமே இல்லை, ஏனெனில் பழம்பெரும் பதிவர் முதல் புதிதாக எழுதவந்தவர்கள் என அனைவருக்குமே முதன் முதல் பின்னூட்டமிட்டு அறிமுகமானவர் தான் துளசி அம்மா. சென்ற மாதம் 15 ஆம் தேதி முதல் தமிழகத்தின் பல்வேறு ஊர்களுக்குச் சுற்றுப்பயணம் சென்று பதிவர்களை சந்தித்துவிட்டு சிங்கை இந்த மாதம் 15 ஆம் தேதி வருகிறார்.

அனைவரும் வருக ! அம்மாவின் ஆசியைப் பெருக ! :)

நாள் மற்றும் நேரம் : 15 மார்ச் 2009, மாலை 4 மணி முதல் மாலை 7
இடம் : ராபிள் ப்ளேஸ் எம் ஆர் டி நிலையம் அமைந்திருக்கும் இடம்




நிகழ்ச்சி நிரல் :

மாலை 4 மணி : சிங்கை நாதன் கொண்டு வரும் பாதாம் அல்வா பரிமாறுதல் மற்றும் தண்ணீர் வழங்கல்

மாலை 5 மணி : பதிவர்களின் அரட்டைகள்.
சிங்கப்பூரின் பொருளியலை மீட்சி செய்வது பற்றி முகவை இராம் தூயதமிழில் சிறப்புரை ஆற்றுவார்.

மாலை 6 மணி துளசி அம்மாவின் அருளுரை

மாலை 6:30 மணி : சிங்கை நாதன் கொண்டு வரும் கேரட் அல்வா பரிமாறுதல் மற்றும் குளிர்பானம் வழங்கல்

மாலை 7 மணி : புகைப்படம் எடுத்துக் கொள்ளுதல்

நிகழ்ச்சி தொகுப்பு : டொன்லீ

நிகழ்ச்சி படத்தொகுப்பு : ஜெகதீசன்

மேற்பார்வை (அல்லவா சரியாக கொடுக்கப்பட்டதா ?) : விஜய் ஆனந்த்

மற்றவர்கள் (தங்களுக்கு) ஏற்ற பொறுப்பை ஏற்றுக் கொள்வார்கள்.

(துளசி அம்மாவும் சிங்கை நாதனும் நீண்டகால பதிவர் நண்பர்கள் ஆதலால் சிங்கை நாதன் கொண்டுவரப் போகும் அல்வாக்களில் வெரைட்டி இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன், வழக்கமாக கொடுக்கும் சாதரண அல்வாவை எடுத்துவரமாட்டார்)

*****

இந்த முறை பதிவர் சந்திப்பை சிங்கப்பூர் ஆற்றில் கடல் சிங்கம் இருக்கும் இடத்தில் நடத்தலாம் என்று கலந்தாலோசித்தோம், சென்றவாரம் அந்த இடத்தில் பெரிய இடி விழுந்து கடல் சிங்கம் சிறிது உடைந்துவிட்டதாம்,அந்த இடம் திறந்த வெளியாக இருப்பதால் ஆபத்தான இடம் என்று சிங்கை நாதன் சொல்ல இடம் கைவிடப்பட்டு ராபிள்ப்ளேஸ் எம்ஆர்டி நிலையம் அருகில் சந்திப்பு முடிவு செய்யப்பட்டது.

- சிங்கை பதிவர் நண்பர்கள்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்