கோவியார் கூற்று !

மதத் தீவிரவாதங்கள் , பழமை வாதங்கள் மறுக்கப் படமால் ஆன்மிகம் பேசுவது பொருளற்றது, பயனற்றது.

மதம் என்பது இறை நம்பிக்கை அல்ல... அது பிரிதொரு மத நம்பிக்கையின் நாத்திகக் குறியீடு





முதல் சுற்றில் வாக்குகள் அளித்து கரையேற்றிவீட்டஅனைத்து பதிவுலக உறவுகளுக்கும் நன்றி, அடுத்தச் சுற்றிற்கும் உங்கள் பொன்னான வாக்குகளை,

பிரிவு: பயண அனுபவங்கள், ஊர்/வாழ்வு நினைவோடைகள்

யாதும் நாடே யாவரும் பாரீர் - 1

பிரிவு: அரசியல், சமூக விமர்சனங்கள்

பாலியல் நாட்டங்கள் மற்றும் இயற்கை - 1

என்ற இடுகைகளுக்கு பிடித்து இருந்தால் போடுங்கள் ! நன்றி !!

யாதும் நாடே யாவரும் பாரீர் - 1

Monday, October 26, 2009

எந்த ஒரு நாட்டிலும் பெரும்பாண்மை இனம் என்று ஒன்று உண்டு, அந்த நாட்டை உருவாக்கியவர்கள் என்கிற முறையில் அவர்களது பண்பாடும், மொழியும் அங்கு ஆளுமை பெற்றிருக்கும், (இலங்கை, இஸ்ரேல் தவிர்த்து)நாடுகள் தோறும் சுருக்கமான வரலாறு இவைதான். பெரும்பாண்மை மக்கள் என்பதைத் தாண்டி அந்தந்த நாடுகளில் பிற இன மக்கள் தொழில் தொடர்பிலும், அவர்களது வாரிசுகள் பிறப்பின் அடிப்படையிலும் அங்கே வசிக்கக் கூடும். நாடுகளின் எல்லைகளை திறந்துவிட்டால் அனைத்தும் ஒரே பூமியின் ஒரே நிலப்பரப்பு தான், எல்லைகள் அந்நாடுகளின் இயற்கை வளம், அம்மக்களின் உழைப்பு ஆகியவையற்றை உள்ளடக்கி உருவா(க்)கி இருப்பதால் அனைவருக்கும் திறந்துவிடுவதென்பது நடைமுறையில் இயலாத ஒன்று, ஒருவரின் உழைப்பை உழைக்காமல் இருக்கும் பிறர் பகிர்வது போன்றது எனவே தான் பல இனம் சேர்ந்து உருவாகிய நாடுகளுக்கும் எல்லைக் கோடுகளும் சட்டதிட்டங்களும் தனித்தனியாகவே இருக்கின்றன.

*****

ஆசிய நாடுகள் தவிர்த்து மனைவியின் பணித் தொடர்பில் சுவிஸ்சர்லாந்து சென்றுவரும் வாய்ப்புக் கிடைத்ததால், கூடவே ஐரோப்பிய நாடுகள் சிலவற்றிற்கு சுற்றுலா செல்லும் வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு, இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சுவிச்சர்லாந்து செல்வது என்று இல்லத்தினருடன் முடிவு செய்தோம். 'இந்தியன் என்று சொல்லடா எங்கும் பெருமை இல்லைடா' என்கிற நிலமையில், அதாவது நம்ம அசோக சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு வண்ண அட்டை பாஸ்போர்ட்டுக்கு எந்த நாட்டிலும் கதவு திறந்து வைப்பதில்லை. சிங்கை மலேசிய போன்ற நாடுகளின் பாஸ்போர்டுகள் நுழைவு அனுமதி (விசா) இல்லாமல் மூன்று மாதம் கூட தங்கும் அனுமதி பல நாடுகள் தருகிறது, இருக்கிறது. நம் இந்திய பாஸ்போர்ட் தெற்காசிய நாடுகள் தவிர்த்து எங்கும் நுழைவு அனுமதி இன்றி செல்லமுடியாது. இந்திய அரசியல்வாதிகள் டிப்ளமோட் என்னும் தூதரக சிறப்பு பாஸ்போர்ட் வைத்திருப்பார்கள் அவர்களுக்கு நுழைவு அனுமதி கிடைப்பதும் எளிது. நம் பாஸ்போர்டுக்கெல்லாம் நுழைவு அனுமதி வாங்க நிறைய நடைமுறைகள் பின்பற்ற வேண்டி இருக்கிறது. நம் வெளி உறவுத்துறை ரொம்ப பலவீனமானது என்பதை நாம் பிற நாட்டுக்கு நுழைவு அனுமதி பெற முயற்சிக்கும் போது தான் தெரியும். நுழைவு அனுமதிக்காக ஒவ்வொரு தூதரகத்திலும் ஏறி இறங்குவதும் அதற்காக விடுப்பு எடுத்து நேரங்களை வீனாக்குவதும் பெரும் எரிச்சல்.

இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆவணங்களாக அவர்கள் கேட்பது

1. குறைந்தது ஆறுமாதத்திற்குள் முடிவுறாத கடவு புத்தகம் (passport should be valid and not expired within 6 month)
2. கடந்த மூன்று மாத வங்கி வரவு செலவு கணக்கு (Last 3 months bank Staments with Transaction details)
3. உறுதிப்படுத்தப்பட்ட பயணச் சீட்டு (Confirmed Air ticket)
4. தங்கப் போகும் விடுதியின் முன்பதிவு ஆவணம் (Hotel Booking details)
5. தங்கும் நாட்களுக்கான பயண காப்பீடு (Travel insurance)
6. திருமணம் ஆனவர்கள் இல்லத்தினருடன் சென்றால் திருமண சான்றிதழ்
7. குழந்தைகளின் பிறப்பு சான்றிதழ் மற்றும் பள்ளி விடுமுறை கொடுத்ததன் ஒப்பம்
8. அலுவலக விடுமுறை ஒப்பம் பெற்ற சான்றிதழ் (vacation approval letter from employer)
9. பயணச் செலவுக்கான கையிருப்பு விவரம்
10. விசா கட்டணம் 160 வெள்ளி (for One passport)

இந்த பட்டியலில் இருப்பது அனைத்தும் இருந்தால் தான் நுழைவு அனுமதி தருவார்கள். ஆங்கில நாடுகளுக்கான (united kingdom) விசாவிற்கும், ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் விசாவிற்கும் (schengen visa ) ஒரே மாதிரியான விசா பெரும் நடைமுறைதான். UK விசா வாங்கினால் இங்கிலாந்து, வேல்ஸ், ஐயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகிய நாடுகளுக்குச் செல்ல முடியும், ஆறுமாத விசா தருகிறார்கள். ஐரோப்பிய நாடுகளுக்கான விசா எத்தனை நாள் அங்கு இருக்கிறோமோ பயணச் சீட்டு விவரப்படி அந்த தேதிகளுக்கு மட்டுமே தருவார்கள். இவ்வளவு விவரங்களும் கொடுத்து விசா வாங்கியாகிவிட்டது. போறது தான் போறோம், கொஞ்சம் கூடுதல் செலவானாலும் பரவாயில்லை வேறு ஆடம்பர செலவுகளை, ஷாப்பிங் போன்றவற்றைக் குறைத்துக் கொள்வோம் என்று, அன்மைய புதிய வரவான 700 பேர் வரை அமர்ந்து செல்லக் கூடிய A380 விமானத்தில் செல்வதற்கு பயணச் சீட்டும் வாங்கிவிட்டோம்.

மகளுக்கு மாதந்திர தேர்வு அதனால் மனைவியுடன் சேர்ந்து கிளம்ப முடியாத சூழலில் மனைவியை முன்பே அனுப்பிவிட்டு நானும் மகளும் ஐந்து நாட்கள் கழித்து திட்டமிட்ட படி இலண்டன் செல்லும் A380 யில் கடந்த அக்டோபர் 16 ஆம் தேதி நன்பகல் 12:40 மணிக்கு அமர்ந்தோம், அதற்கு முந்தைய சிறு குழப்பமாக பயணம் செய்யும் விமானத்தின் நுழைவாயில் எண்ணை சரியாக படிக்காததால்,
போடிங் பாஸையும் சரியாக பார்க்கமல், எதோ ஒரு குழப்பத்தில் வேறொரு நுழைவாயிலுக்கு சென்று அங்கு அறிவுறுத்தலின் படி காத்திருந்துவிட்டு, விமானம் புறப்படும் ஐந்து நிமிடத்திற்கு முன்பு எதற்கும் உதவி/தகவல் மையத்தில் கேட்கலாம் என்று சென்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே பெயரைச் சொல்லி மூன்றாம் நிலையம் (terminal three) முழுவதும் அறிவிப்பு கேட்க, பதறி அடித்து நுழைவாயில் நோக்கி நடக்கும் போது, 'you are the 2 indian passengers ?, Sir, do you know time of your boarding ?' என்ற மிக மென்மையான கடிந்து கொண்ட கேள்வியுடன், எங்களது போர்டிங்க் பாஸை சரிபார்த்து, அங்கே உள்ளுக்குள் விரைவாக செல்லும் பேட்ரி காரில் ஏற்றிக் கொண்டு விமானம் நுழைவு பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.

என்னைப் போன்ற நடுத்தரவர்க்கத்தில் பிறந்து, வளர்ந்து படித்தவர்களுக்கு வெளிநாட்டு வாழ்க்கையும், வேலையும் தற்பொழுது மிகவும் இயல்பான ஒன்று என்றாலும் படிக்கிற காலத்தில், சிறுவனாக இருந்த காலத்திலும், ஏழ்மையின் பிடியில் வளர்ந்த இல்லச் சூழலில் முற்றிலும் கற்பனையில் கூட நினைத்துப் பார்க்க முடியாத பயணம் தான் ஐரோப்பிய நாடுகளுக்குச் சுற்றுலாவிற்காகச் செல்வது என்பதை விமானத்தின் இருக்கையில் அமர்ந்திருந்த போது நினைக்காமல் இருக்க முடியவில்லை. இலண்டனில் குளிர் தொடங்கிவிட்டதால், சுற்றுலா செல்வோரின் எண்ணிக்கை குறைந்து, 50 விழுக்காடு இருக்கைகளே நிறைந்திருந்தது. பிற காரணங்களுக்காக ஐந்து நிமிடம் தாமதமாக விமானம் புறப்பட்டது. நேரடியாக சிங்கப்பூரிலிருந்து இலண்டன் ஹீத்ரூ மொத்தம் 13+ மணி நேரப் பயணம், பயணிகள் விமானங்களில் மிகப் பெரியதும், இரு தளங்கள் கொண்டதும், மிகுதியான இருக்கைகளும் கொண்ட விமானம், விமானப் பணிப்பெண்களின் கனிவான கவனிப்பு என பயணம் தொடர்ந்தது, இந்துமா கடலைக் கடந்து, இந்தியாவின் மீது ஒரிசா பகுதியில் நுழைந்து ஆப்கானிஸ்தான், ரஷ்யா எல்லை, கருங்கடல், ஐரோப்பிய நாடுகள் ஆகிவற்றை கடந்து இலண்டனை அடையும் போது மாலை சரியாக 7 ஆகி இருந்தது. பயணப்பதிவின் போதே இந்திய சைவ உணவு என்று குறிப்பிட்டு இருந்ததால் சைவ உணவு கிடைத்தது என்றாலும் இருமுறை உணவு நேரத்திற்கு அதே உணவைத்தான் திரும்பவும் கொடுத்தார்கள்.

பூமி சுற்றும் திசைக்கு எதிர் பயணம், அன்று பகல் 1 மணி வரை ஏழு மணி நேரப் பகல், அதைத்தொடர்ந்து 13+ மணி நேரப் பகல் பயணம், மொத்தமாக எனக்கு அன்று கிடைத்த பகல் 7 + 13 = 20 மணி நேரம். நீண்ட (நேர) பயணத்தில் தொடர்ந்து 20 மணி நேரம் சூரிய வெளிச்சத்தைப் பார்ப்பது கூட வியப்பு தானே. இலண்டன் விமான நிலையம் சிங்கப்பூர் அளவுக்கு அழகும், வசதிகளோ இல்லை. பெட்டி வைத்து இழுக்கும் தள்ளும் சிறு வண்டி (Trolly) கூட இழுக்கும் போது 'கிரீச்....கிரீச்' சத்தமிட்டது. சாலை போக்குவரத்து நெருக்கடியில் சிக்கிய உறவினர் இல்லத்தினருடன் என் மனைவியும் வந்து அழைத்துச் செல்ல சற்று கால தாமதம் ஆகியதால், மகளை மக்கள் நடமாட்டம் உள்ள வெளியேறும் வாயில் அருகில் பாதுகாப்பாக உட்கார வைத்துவிட்டு, அருகிலேயே இருக்கும் வெளியோறும் வழியில், விமான நிலையத்தை விட்டு வெளியே வந்து நின்றேன்...பழக்கமில்லாத கடும் குளிர் 8 டிகிரி... நான்கு அடி நடக்கும் போதே உடலெங்கும் நடுக்கியது.

தொடரும்...

பகுதி 2 (இலண்டனில் தீபாவளி, அரண்மனை)
பகுதி 3 (இலண்டன் மெழுகு அருங்காட்சியகம்)
பகுதி 4 (இலண்டன் கடற்கரை)
பகுதி 5 (பாரிஸ் - ஈபிள் கோபுரம்)
பகுதி 6 (பாரிஸ் - டிஸ்னி பொழுது போக்கு பூங்கா)
பகுதி 7 (பாரிஸ் - அருங்காட்சியகம்)
பகுதி 8 (சுவிஸ் - ஐரோப்பாவின் உயரமான இடம்)
பகுதி 9 யாதும் நாடே யாவரும் பாரீர் (Swiss, Singapore And Expenses) - 9

54 கருத்துக்கள்:

  • துளசி கோபால்
     

    நல்லா வந்துருக்கு கோவியாரே.

    அடுத்த பகுதியை விரைவில் போட்டுருங்க. குளிரில் ரொம்ப நிக்க முடியாது:-)

  • ஆ.ஞானசேகரன்
     

    //எதோ ஒரு குழப்பத்தில் வேறொரு நுழைவாயிலுக்கு சென்று அங்கு அறிவுறுத்தலின் படி காத்திருந்துவிட்டு, விமானம் புறப்படும் ஐந்து நிமிடத்திற்கு முன்பு எதற்கும் உதவி/தகவல் மையத்தில் கேட்கலாம் என்று சென்று கேட்டுக் கொண்டிருக்கும் போதே பெயரைச் சொல்லி மூன்றாம் நிலையம் (terminal three) முழுவதும் அறிவிப்பு கேட்க, பதறி அடித்து நுழைவாயில் நோக்கி நடக்கும் போது, 'you are the 2 indian passengers ?, Sir, do you know time of your boarding ?' என்ற மிக மென்மையான கடிந்து கொண்ட கேள்வியுடன், எங்களது போர்டிங்க் பாஸை சரிபார்த்து, அங்கே உள்ளுக்குள் விரைவாக செல்லும் பேட்ரி காரில் ஏற்றிக் கொண்டு விமானம் நுழைவு பகுதிக்கு அழைத்துச் சென்றார்கள்.//


    எபொழுதுமே இப்படிதானா? பதிவுக்காகவா?

  • ஆ.ஞானசேகரன்
     

    நல்ல அனுபவ பணயக்கட்டுரை நல்லாயிருக்கு கண்ணன்

  • பித்தனின் வாக்கு
     

    தங்களின் பயண அனுபவங்களை படிக்க ஆர்வமாக உள்ளேன். விரைவாக எழுதவும். நன்றி.

  • சிவபாலன்
     

    GK,

    Very Nice! Pls Continue!

  • கோவி.கண்ணன்
     

    //துளசி கோபால் said...
    நல்லா வந்துருக்கு கோவியாரே.

    அடுத்த பகுதியை விரைவில் போட்டுருங்க. குளிரில் ரொம்ப நிக்க முடியாது:-)
    //

    பதிவர்களின் பயணக்கட்டுரைகளுக்கு நீங்கள் தான் முன்னோடி. எழுதும் போது உங்களை நினைக்காமல் எழுத முடியவில்லை. முடிந்த அளவுக்கு தகவல் தருவதற்கு முயற்சிக்கிறேன்.

  • கோவி.கண்ணன்
     

    //எபொழுதுமே இப்படிதானா? பதிவுக்காகவா?

    12:27 PM, October 26, 2009
    //

    பதிவுக்காக ரிஸ்க் எடுக்க முடியாது. ரிஸ்கானதைப் பற்றி பதிவில் எழுதலாம்

    //ஆ.ஞானசேகரன் said...
    நல்ல அனுபவ பணயக்கட்டுரை நல்லாயிருக்கு கண்ணன்
    //

    நன்றி ஞானசேகர்

  • கோவி.கண்ணன்
     

    //பித்தனின் வாக்கு said...
    தங்களின் பயண அனுபவங்களை படிக்க ஆர்வமாக உள்ளேன். விரைவாக எழுதவும். நன்றி.
    //

    :) நன்றி !

    சிங்கம் கோட்டு சூட்டெல்லாம் போட்டு கலக்கலாக மாறி இருக்கிறது.

    உங்க ப்ரொபைல் படம் தான்

  • கோவி.கண்ணன்
     

    // சிவபாலன் said...
    GK,

    Very Nice! Pls Continue!
    //

    ஏறக்குறைய 2 ஆண்டுகளுக்கு பிறகு சிவபாலன் உங்கள் பின்னூட்டம் மனதுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது

  • நிகழ்காலத்தில்...
     

    \\இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆவணங்களாக அவர்கள் கேட்பது\\

    இதில் கண்ட பத்து விசயங்களும் வருங்காலத்தில் பயணம் செய்ய நிச்சயம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்..

    பயணக்கட்டுரை மிக நன்றாக தொடர்ச்சியாக வருகிறது.,

    அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

  • ..:: Mãstän ::..
     

    <<<
    'இந்தியன் என்று சொல்லடா எங்கும் பெருமை இல்லைடா'
    >>>

    என்ன கோவிஜி இப்படி பட்டுன்னு உண்மைய போட்டு ஒடச்சுட்டீங்க :(

    <<<

    நம் பாஸ்போர்டுக்கெல்லாம் நுழைவு அனுமதி வாங்க நிறைய நடைமுறைகள் பின்பற்ற வேண்டி இருக்கிறது. நம் வெளி உறவுத்துறை ரொம்ப பலவீனமானது என்பதை நாம் பிற நாட்டுக்கு நுழைவு அனுமதி பெரும் போது தான் தெரியும்.
    >>>

    உண்மையோ உண்மை.எக்கச்சக்கமா ஆமோதிக்கிறேன்.

    <<<
    இலண்டன் விமான நிலையம் சிங்கப்பூர் அளவுக்கு அழகும், வசதிகளோ இல்லை. பெட்டி வைத்து இழுக்கும் தள்ளு வண்டி கூட இழுக்கும் போது 'கிரீச்....கிரீச்' சத்தமிட்டது.
    >>>
    சிங்கை ரெம்ப புடிச்சு போச்சு போல???

    சீக்கிரமா தொடருங்க, படிக்க காத்திருக்கிறோம். :)

  • SanjaiGandhi
     

    புக் மார்க் பண்ணிக்கிட்டேன்.. அப்பாலிக்கா படிச்சிக்கிறேன்.. பயணம் இனிதே அமைந்ததா?

  • கிருஷ்ணமூர்த்தி
     

    பயணக்கட்டுரை ஆரம்பித்தாயிற்றா?

    இங்கே வெளியுறவுத்துறை, வெளியுறவுக் கொள்கை எல்லாம் பேரளவுக்குத்தான்.பலவீனம் என்று சொல்வதை விட, ஒருவிதமான கோழைத்தனம் என்று கூட சொல்லலாம்!

    ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு நடந்த பிரச்சினையில், இந்திய அரசு உறுதியாக நின்று, பிரச்சினையை ஆஸ்திரேலியா சரியாகக் கையாளும் வரை, மேல்படிப்புக்காக மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஒரு முடிவு எடுத்திருந்தால், ரிசல்ட் இன்னும் கொஞ்சம் விரைவாக வந்திருக்கும்.
    இப்போது, தன்னுடைய கல்வி வியாபாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் ஆஸ்திரேலிய அரசு பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதை செய்திகளில் படித்துக் கொண்டிருக்கிறேன்.

    நம்மிடமும், இடம் பொருள் ஏவல் தெரிந்து நடக்கத் தெரியாத கோளாறுகள் ஏராளமாகவே உண்டு.

    நீங்கள் சந்தித்த மனிதர்கள், நீங்கள் புரிந்துகொண்ட விஷயங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்!

  • கோவி.கண்ணன்
     

    //நிகழ்காலத்தில்... said...
    \\இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சுற்றுலா செல்ல ஆவணங்களாக அவர்கள் கேட்பது\\

    இதில் கண்ட பத்து விசயங்களும் வருங்காலத்தில் பயணம் செய்ய நிச்சயம் உதவியாக இருக்கும் என நம்புகிறேன்..

    பயணக்கட்டுரை மிக நன்றாக தொடர்ச்சியாக வருகிறது.,

    அடுத்த பகுதிக்கு ஆவலுடன் காத்திருக்கிறேன்...

    2:47 PM, October 26, 2009
    //

    சிவா, நன்றி !

  • கோவி.கண்ணன்
     

    //..:: Mãstän ::.. said...
    <<<
    'இந்தியன் என்று சொல்லடா எங்கும் பெருமை இல்லைடா'
    >>>

    என்ன கோவிஜி இப்படி பட்டுன்னு உண்மைய போட்டு ஒடச்சுட்டீங்க :(

    <<<
    //

    மஸ்தான்,
    நாம நமக்குள் தானே பலவீனங்களைப் பட்டியல் இட்டுப் பேசிக் கொள்கிறோம், இதுல உண்மை கசப்பாக இருந்தாலும் நாம சொல்லித்தான் ஆக வேண்டி இருக்கு. அப்பதான் நமக்கு ஆறுதல் கிடைக்கிறது

    //நம் பாஸ்போர்டுக்கெல்லாம் நுழைவு அனுமதி வாங்க நிறைய நடைமுறைகள் பின்பற்ற வேண்டி இருக்கிறது. நம் வெளி உறவுத்துறை ரொம்ப பலவீனமானது என்பதை நாம் பிற நாட்டுக்கு நுழைவு அனுமதி பெரும் போது தான் தெரியும்.
    >>>

    உண்மையோ உண்மை.எக்கச்சக்கமா ஆமோதிக்கிறேன்.

    <<<
    //
    :))

    //இலண்டன் விமான நிலையம் சிங்கப்பூர் அளவுக்கு அழகும், வசதிகளோ இல்லை. பெட்டி வைத்து இழுக்கும் தள்ளு வண்டி கூட இழுக்கும் போது 'கிரீச்....கிரீச்' சத்தமிட்டது.
    >>>
    சிங்கை ரெம்ப புடிச்சு போச்சு போல???

    சீக்கிரமா தொடருங்க, படிக்க காத்திருக்கிறோம். :)
    //

    சிங்கை பிடிக்காமல் இருக்குமா ? பண்பாட்டுக் கூறுகளில் பெரிய மாற்றம் இல்லை, தமிழகத்திற்கு மூன்றே மணி நேர்ரத்தில் செல்ல முடியும். சிங்கை சின்ன வீடு ( ஐ மீன் குட்டி நாடு) என்றாலும் எங்களுக்கு புகுந்த வீடு மாதிரி.
    :)

  • கோவி.கண்ணன்
     

    //கிருஷ்ணமூர்த்தி said...
    பயணக்கட்டுரை ஆரம்பித்தாயிற்றா?

    இங்கே வெளியுறவுத்துறை, வெளியுறவுக் கொள்கை எல்லாம் பேரளவுக்குத்தான்.பலவீனம் என்று சொல்வதை விட, ஒருவிதமான கோழைத்தனம் என்று கூட சொல்லலாம்!//

    அரசியல்வாதிகள் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை மட்டும் எதிர்கட்சிகள் ஒப்புதல்களுடன் பெற்றுக் கொள்கிறார்கள். கூட்டுக்களவானிகள்.

    //ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களுக்கு நடந்த பிரச்சினையில், இந்திய அரசு உறுதியாக நின்று, பிரச்சினையை ஆஸ்திரேலியா சரியாகக் கையாளும் வரை, மேல்படிப்புக்காக மாணவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று ஒரு முடிவு எடுத்திருந்தால், ரிசல்ட் இன்னும் கொஞ்சம் விரைவாக வந்திருக்கும்.
    இப்போது, தன்னுடைய கல்வி வியாபாரம் பாதிக்கப்படும் என்ற அச்சத்தில் ஆஸ்திரேலிய அரசு பெயரளவுக்கு நடவடிக்கை எடுத்துக் கொண்டிருப்பதை செய்திகளில் படித்துக் கொண்டிருக்கிறேன்.//

    இந்தியர்கள் அடிவாங்குவதை தடுப்பதற்கு இந்திய தூதரகம் எப்போதும் முயற்சித்தது கிடையாது. மற்ற நாடுகளின் குடிமகன்கள் அந்நாட்டு தூதரகங்களை உரிமையுடன் அனுகி தீர்வுகளைப் பெருகிறார்கள். நாம அப்படி நம் நாட்டு தூதரகத்தை அனுகும் போது பலவித அலட்சியங்களை எதிர்கொள்கிறோம். அங்கும் அவர்களுக்கு தாங்கள் அரசு ஊழியர்கள் என்கிற மமதையும் போதையும் இருப்பதை பார்த்தும் வருகிறோம். என்னத்தச் சொல்ல.

    //நம்மிடமும், இடம் பொருள் ஏவல் தெரிந்து நடக்கத் தெரியாத கோளாறுகள் ஏராளமாகவே உண்டு.//

    சரியாகச் சொன்னிங்க. சேவை என்பதைவிட அவர்கள் அதை வேலை என்பதாகவே நினைப்பதுடன் பணிக்குகிடைக்கும் ஊதியம் சுகமாகவும், பணியைச் சுமையாகவும் கருதுகிறார்கள்.

    //நீங்கள் சந்தித்த மனிதர்கள், நீங்கள் புரிந்துகொண்ட விஷயங்களைத் தொடர்ந்து எழுதுங்கள்!
    //
    நினைவில் இருப்பதை எழுதுகிறேன். மிக்க நன்றி ஐயா

  • கபிலன்
     

    பயணத் தொடர் அருமையா இருக்கு !
    தொடருங்கள் : )

    விசா மேட்டர் நிஜம் தான்...இத்தாலி செல்ல ஷெங்கன் விசா எடுக்க நாங்க பட்ட பாடு ...அடேங்கப்பா....

  • Starjan ( ஸ்டார்ஜன் )
     

    அருமையான அனுபவங்களை நினைக்கும் உள்ள சுகமே தனிதான் !!

    உங்கள் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள்

  • ஸ்வாமி ஓம்கார்
     

    //அதாவது நம்ம அசோக சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு வண்ண அட்டை பாஸ்போர்ட்டுக்கு எந்த நாட்டிலும் கதவு திறந்து வைப்பதில்லை. //

    இதை கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்.

    ஒரு ஐரோப்பியர் இந்தியாவிற்கு விசா எடுக்கு 5 மணி நேரம் போதுமானது. விசா வீட்டிற்கு வந்து சேரும்.

    இதே இந்தியன் ஐரோப்பிய விசா எடுப்பது என்பது ______சபை நாகரீகம் கருதி எழுதவில்லை.

    அதுவும் என்னை போன்ற ஆட்கள் அவர்கள் முன் நின்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி மிகவும் தர்மசங்கடமானது.

    கோவியார் எதிர்காலத்தில் ஐ.நா சபை உறுப்பினராக இதற்கு மாற்றம் கொண்டுவருவார் என நம்புகிறேன் :)

  • மணிகண்டன்
     

    முன்னாடி சொல்லி இருந்தா மீட் பண்ணி இருக்கலாம்.

    ரொம்ப நாளா எதுவும் எழுதல, அதுனால இந்தியா போயிருப்பீங்கன்னு நினைச்சேன்.

  • kannabiran, RAVI SHANKAR (KRS)
     

    //பழக்கமில்லாத கடும் குளிர் 8 டிகிரி...//

    8 degree ellam "kadung kuLiraa"? ithellam too much govi anna!
    -6 la new york, boston pakkam vaanga! :))

    //நான்கு அடி நடக்கும் போதே உடலெங்கும் நடுக்கியது//

    choodaana pathivu poda vendiyathu thaane? :)

  • kannabiran, RAVI SHANKAR (KRS)
     

    //கோவியார் எதிர்காலத்தில் ஐ.நா சபை உறுப்பினராக இதற்கு மாற்றம் கொண்டுவருவார் என நம்புகிறேன் :)//

    swamigal aasirvathathukku oru repeateyyy! :)

  • ஜெகதீசன்
     

    :)

  • கோவி.கண்ணன்
     

    //கபிலன் said...
    பயணத் தொடர் அருமையா இருக்கு !
    தொடருங்கள் : )

    விசா மேட்டர் நிஜம் தான்...இத்தாலி செல்ல ஷெங்கன் விசா எடுக்க நாங்க பட்ட பாடு ...அடேங்கப்பா....
    //

    ம்கூம், யார் இந்திய அரசு மொத்தனத்தை தட்டி எழுப்பச் சொல்லுவது !
    :(

  • கோவி.கண்ணன்
     

    //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அருமையான அனுபவங்களை நினைக்கும் உள்ள சுகமே தனிதான் !!

    உங்கள் பயணம் இனிதே அமைய என் வாழ்த்துக்கள்
    //

    மிக்க நன்றி !
    ஸ்டார்ஜன், பயணம் முடிந்தது.

  • கோவி.கண்ணன்
     

    //ஸ்வாமி ஓம்கார் said...
    //அதாவது நம்ம அசோக சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு வண்ண அட்டை பாஸ்போர்ட்டுக்கு எந்த நாட்டிலும் கதவு திறந்து வைப்பதில்லை. //

    இதை கண்மூடித்தனமாக வழிமொழிகிறேன்.

    ஒரு ஐரோப்பியர் இந்தியாவிற்கு விசா எடுக்கு 5 மணி நேரம் போதுமானது. விசா வீட்டிற்கு வந்து சேரும்.

    இதே இந்தியன் ஐரோப்பிய விசா எடுப்பது என்பது ______சபை நாகரீகம் கருதி எழுதவில்லை.

    அதுவும் என்னை போன்ற ஆட்கள் அவர்கள் முன் நின்றால் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி மிகவும் தர்மசங்கடமானது.//

    எல்லாம் ரஜினிஸ் சாமியார் ஏற்படுத்திய இமேஜாக இருக்கும், மேலும் கிறித்துவ ஆளுமை நாடுகளில் இந்து சமயவாதிகளுக்கு உள்ள கெடுபிடிகளாக இருக்கும் என்றும் நினைக்கிறேன்.

    //கோவியார் எதிர்காலத்தில் ஐ.நா சபை உறுப்பினராக இதற்கு மாற்றம் கொண்டுவருவார் என நம்புகிறேன் :)
    //
    :) ஆசை இருக்கு கூழ் குடிக்க, மீசை இருக்கு வழிச்சு நக்கத்தான்னு சொல்லுவாங்க

  • கோவி.கண்ணன்
     

    //மணிகண்டன் said...
    முன்னாடி சொல்லி இருந்தா மீட் பண்ணி இருக்கலாம்.

    ரொம்ப நாளா எதுவும் எழுதல, அதுனால இந்தியா போயிருப்பீங்கன்னு நினைச்சேன்.
    //

    மணி,
    நீங்கள் லண்டனில் இருக்கும் விபரம் உண்மையிலேயே தெரியாது. தெரிந்திருந்தால் மின் அஞ்சல் செய்திருப்பேன். இலண்டன் அடுத்து அடுத்து செல்லும் திட்டம் உண்டு அடுத்த முறை கண்டிப்பாக சொல்கிறேன்.

  • கோவி.கண்ணன்
     

    //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //பழக்கமில்லாத கடும் குளிர் 8 டிகிரி...//

    8 degree ellam "kadung kuLiraa"? ithellam too much govi anna!
    -6 la new york, boston pakkam vaanga! :))//

    இங்கெல்லாம் (சிங்கையில்) நார்மல் ஏசி டெம்ரேச்சர் 20க்கே எனக்கு குளிரும். அங்கு லண்டனில் சகலமும் ஒடுங்கியது :)

    //நான்கு அடி நடக்கும் போதே உடலெங்கும் நடுக்கியது//

    choodaana pathivu poda vendiyathu thaane? :)
    //

  • கோவி.கண்ணன்
     

    //kannabiran, RAVI SHANKAR (KRS) said...
    //கோவியார் எதிர்காலத்தில் ஐ.நா சபை உறுப்பினராக இதற்கு மாற்றம் கொண்டுவருவார் என நம்புகிறேன் :)//

    swamigal aasirvathathukku oru repeateyyy! :)
    //

    ஐநா நைனாக்களே வெறும் பொம்மைகள் தானே.

  • கோவி.கண்ணன்
     

    //ஜெகதீசன் said...
    :)
    //
    :)

  • T.V.Radhakrishnan
     

    நன்றாக தொடர்ச்சியாக வருகிறது.,

  • வடுவூர் குமார்
     

    விசா விஷயம் அருமை,எப்போதாவது தேவைப்படும் என்று நினைக்கிறேன்.
    மருத்துவ சான்றிதழ் ஒன்றும் தேவைப்படவில்லையா?

  • கோவி.கண்ணன்
     

    //T.V.Radhakrishnan said...
    நன்றாக தொடர்ச்சியாக வருகிறது.,
    //

    மி(க்)க நன்றி !

  • கோவி.கண்ணன்
     

    //வடுவூர் குமார் said...
    விசா விஷயம் அருமை,எப்போதாவது தேவைப்படும் என்று நினைக்கிறேன்.
    மருத்துவ சான்றிதழ் ஒன்றும் தேவைப்படவில்லையா?
    //

    சிங்கையில் வேலை பார்ப்பதால் சிங்கை அரசாங்கத்திற்கு நம் உடல் நிலை தெரிந்திருக்கக் கூடும் என்பதால் கேட்கவில்லையோ என்னவோ, இந்தியாவில் இருந்து விண்ணம் போட்டால் கேட்டாலும் கேட்பார்கள். நம்ம நாட்டுக்கு எந்த அனுமதியும் இன்றி நுழைந்தவர்கள் அவர்கள் நாட்டுக்கு ஏகப்பட்ட கெடுபிடிப் போடுவது எரிச்சல் தான் குமார் அண்ணா.

  • சுல்தான்
     

    இங்கு துபை விமான நிலையத்தில் Boarding-pass வாங்கி விட்டு நேரத்தை பார்க்காமல் Duty-free கடைகளில் நேரத்தை கடத்தும் இந்திய பயணிகளைத் தேடித் தேடி விமான ஏஜன்சிகளின் சிப்பந்திகள் அலையாய் அலைவதும், பின் அவர்களைப் பிடித்துக் கொண்டு போவதையும் பார்க்கும்போது கொஞ்சம் குடலைப் புரட்டும். நீங்களுமா? நீங்கள் நிறைய பயணம் செய்பவர் ஆயிற்றே.

  • திகழ்
     

    தொடருங்கள்

  • அறிவிலி
     

    அசத்தல் ஆரம்பம். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன், தொடருங்கள்

  • பீர் | Peer
     

    This post has been removed by the author.

  • பீர் | Peer
     

    அடுத்தடுத்த பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.

  • ’டொன்’ லீ
     

    ம்...நன்று...தொடரட்டும்

  • அத்திவெட்டி ஜோதிபாரதி
     

    அருமையான தகவல்களை உள்ளிருத்திய இடுகை கோவியாரே!

    சிரத்தை எடுத்து எழுதியிருக்கிறீர்கள்!

    தொடரட்டும் உங்கள் பா(ப)ணி!

  • கோவி.கண்ணன்
     

    //சுல்தான் said...
    இங்கு துபை விமான நிலையத்தில் Boarding-pass வாங்கி விட்டு நேரத்தை பார்க்காமல் Duty-free கடைகளில் நேரத்தை கடத்தும் இந்திய பயணிகளைத் தேடித் தேடி விமான ஏஜன்சிகளின் சிப்பந்திகள் அலையாய் அலைவதும், பின் அவர்களைப் பிடித்துக் கொண்டு போவதையும் பார்க்கும்போது கொஞ்சம் குடலைப் புரட்டும். நீங்களுமா? நீங்கள் நிறைய பயணம் செய்பவர் ஆயிற்றே.
    //

    சுல்தான் ஐயா, என்னுடைய தவறு கவனக்குறைவினால் ஏற்பட்டது. போடிங் பாஸ் படி நான் செல்ல வேண்டிய நுழை வாயில் A7. நான் A3-A11 என்ற வழிகாட்டல் பகுதியில் நுழைந்ததும் A7ஐ மறந்து A3 என்று தவறுதலாக நினைத்துக் கொண்டேன்.

  • கோவி.கண்ணன்
     

    //திகழ் said...
    தொடருங்கள்
    //

    நன்றி திகழ் !

  • கோவி.கண்ணன்
     

    //அறிவிலி said...
    அசத்தல் ஆரம்பம். ஆர்வத்துடன் காத்திருக்கிறேன், தொடருங்கள்
    //
    மிக்க நன்றி அண்ணாச்சி !

  • கோவி.கண்ணன்
     

    //பீர் | Peer said...
    அடுத்தடுத்த பகுதிகளையும் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.
    //

    அடுத்த மூன்று பகுதிகளும் போட்டாகிவிட்டது. நன்றி பீர்

  • கோவி.கண்ணன்
     

    //’டொன்’ லீ said...
    ம்...நன்று...தொடரட்டும்
    //

    நன்றி !

  • கோவி.கண்ணன்
     

    //அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    அருமையான தகவல்களை உள்ளிருத்திய இடுகை கோவியாரே!

    சிரத்தை எடுத்து எழுதியிருக்கிறீர்கள்!

    தொடரட்டும் உங்கள் பா(ப)ணி!
    //

    பாராட்டுக்கு நன்றி ஜோதிபாரதி

  • நாகை சிவா
     

    //'இந்தியன் என்று சொல்லடா எங்கும் பெருமை இல்லைடா' என்கிற நிலமையில், அதாவது நம்ம அசோக சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு வண்ண அட்டை பாஸ்போர்ட்டுக்கு எந்த நாட்டிலும் கதவு திறந்து வைப்பதில்லை//

    எப்போவும் எல்லோமே மஞ்சளாவே தெரியுது உங்களுக்கு ;)

    நம் பாஸ்போர்ட் டின் நிறம் நீலம்.

  • கோவி.கண்ணன்
     

    // நாகை சிவா said...
    //'இந்தியன் என்று சொல்லடா எங்கும் பெருமை இல்லைடா' என்கிற நிலமையில், அதாவது நம்ம அசோக சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு வண்ண அட்டை பாஸ்போர்ட்டுக்கு எந்த நாட்டிலும் கதவு திறந்து வைப்பதில்லை//

    எப்போவும் எல்லோமே மஞ்சளாவே தெரியுது உங்களுக்கு ;)

    நம் பாஸ்போர்ட் டின் நிறம் நீலம்.
    //

    இது பற்றி எனக்கும் அப்பாவி முருவுக்கும் ஒரு விவாதம் சாட்டில் ஓடியது.

    1:57 PM muru: அசோக சின்னம் பொறிக்கப்பட்ட கருப்பு வண்ண அட்டை பாஸ்போர்ட்டுக்கு
    அண்ணே
    கரு நீல பாஸ்போர்ட்


    5 minutes

    2:03 PM me: ஓஹோ
    அது கருப்பு இல்லையா
    muru: அண்ணே, கலர் பிளைண்ட்னசா?
    ஆனா, அது உங்களுக்கா? இல்லை எனக்கா?
    me: வீட்டில போய் திரும்ப பார்க்கனும்
    2:04 PM ஒருவேளை என்கிட்ட தான் கருப்பு பாஸ்போர்ட் இருக்ககன்னு
    muru: கூகுளில் பாருங்க
    இருக்காது
    எப்பிடி தருவாங்க
    இல்லை நீங்களே?
    me: Regular Passport (Black cover) - Issued for ordinary travel, such as vacations and business trips (36 or 60 pages)
    http://en.wikipedia.org/wiki/Indian_passport
    2:06 PM http://www.gonomad.com/traveltalesfromindia/uploaded_images/Indian-Passport-789441.JPG
    muru: http://www.dinamalar.com/General_detail.asp?news_id=10346
    me: இரண்டு நிற பாஸ்போர்டும் இருக்கு
    muru: அப்படியா?
    me: http://images.google.com.sg/images?hl=en&source=hp&q=indian%20passport&um=1&ie=UTF-8&sa=N&tab=wi
    2:07 PM muru: அறை நண்பர்களிடம் பார்த்தவரை நீலம் தான்
    2:08 PM http://passport.gov.in/cpvhindi/CPV_Division_hindi.html

    :))

  • கோவி.கண்ணன்
     

    //எப்போவும் எல்லோமே மஞ்சளாவே தெரியுது உங்களுக்கு ;)

    நம் பாஸ்போர்ட் டின் நிறம் நீலம்.
    //


    சிவா,

    கலரை விடுங்க, காலரைத் தூக்கி நான் இங்கு எழுதி இருப்பது மற்றது பொய்யான்னு சொல்லுங்க பார்ப்போம்.
    :)

  • cheena (சீனா)
     

    அன்பின் கோவி

    அருமையான துவக்கம் - இலண்டன் போய் இறங்கி விட்டீர்கள் - கண்ணில் பட்டதை எல்லாம் படமாகவும் எழுத்தாகவும் சொல்லி விட்டீர்கள் - விசா எடுப்பது ஒரு வாரத்தில் எனக்கு முடிந்த வேலை - எப்படி என்று தெரியாது - நானே நேரடியாக அப்ளை செய்தேன் - மதுரையில் இருந்து சென்னை சென்றேன். ஒரு மணி நேரம் அங்கு - மேலும் சில தகவல்கள் கேட்டார்கள் - இன்னும் இரண்டு மணி நேரத்திற்குள் வேண்டும் - இல்லை எனில் சனி ஞாயிறு விடுமுறை. திங்கள் காலை வாருங்கள் என்றனர். மிக்க சிரமத்துடன் கேட்டவை அனைத்தும் இரண்டு மணி நேரத்தில் - அலுவல நேரம் முடியும் முன்பு கொடுத்தேன். வெள்ளி அப்ளை செய்தது - சனி ஞாயிறு விடுமுறை - புதன் மாலை மதுரையில் கூரியர் மூலமாக வந்து சேர்ந்தது. அப்படியானால் பிராஸஸிங் திங்களே முடித்து கூரியர் செய்ததால் தான் புதன் கிடைத்தது. இது நடந்த உண்மை.

    நல்வாழ்த்துகள் கோவி

  • cheena (சீனா)
     

    மறு மொழிகளைப் பெறுவதற்கான மறு மொழி

  • கோவி.கண்ணன்
     

    //அப்படியானால் பிராஸஸிங் திங்களே முடித்து கூரியர் செய்ததால் தான் புதன் கிடைத்தது. இது நடந்த உண்மை.

    நல்வாழ்த்துகள் கோவி//

    சீனா ஐயா,

    உறவினர்கள் யாரேனும் இங்கிலாந்தில் இருந்தால் விசா நடைமுறை எளிது, மற்றபடி அங்கு யாருமற்ற இந்திய கடவு சீட்டு வைத்திருக்கும் சுற்றுலா பயணி விசா எடுப்பதற்குள் தாவு தீர்ந்துவிடும், அதாவது நான் மேலே குறிப்பிட்ட நடைமுறை தான்.
    :)

  • cheena (சீனா)
     

    ஓஒ இப்படி ஒரு சிக்கல் இருக்கிறதா - அது தெரியாதே எனக்கு - சரி சரி சாரி கோவி

    நல்வாழ்த்துகள்

பதிவு பார்வைகள்

இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்

இன்றைய சிந்தனைக்கு...

நம்முடன் இருப்பவர்களை நாம் அவதூறு செய்யும் அக்கணமே, மற்றவர்கள் 'இது நாளைக்கு நமக்கும் நடக்கலாம்...' என்று நினைக்க வைத்து, நம்மீது வைத்திருக்கும் மதிப்பையும், மரியாதையையும் நாம் இழந்துவிடுவோம்

காலம் பதிவு பற்றி...

என்னைச் சுற்றி நடப்பவை, நான் அறிந்தவைகள் பற்றிய எண்ணங்களின் பகிர்தல்

கோவியானந்தாவின் பொன்மொழிகள்

பார்வைகள் : பலருக்கு நாம் எதிரியாக தெரிவது நம் கையில் இல்லை, ஆனால் அவர்களை எதிரியாக நினைக்காமல் இருக்கும் தன்மை நம் கையில் தான் இருக்கிறது.

சுயமரியாதை : தனக்கு அவமானம் என்று கருதுவதையெல்லாம் தானும் பிறருக்குச் செய்யாமல் இருந்தால் ஏற்படும் உணர்வு

உடன்பாடின்மையா ? : உடன்பாடின்மை(பிரச்சனைகள்) இருபக்கமும் இருக்கிறது என்பதை இருவருமே ஒப்புக் கொள்வது தான், அதைக் களைவதற்கான முதல் படி.

சமத்துவம் என்பது : சகித்துக் கொண்டு வாழ்வதல்ல, பிரச்சனைகளாக இருக்கும் வேறுபாடுகளைக் களைந்து வாழ்வது.

புரிந்துணர்வு என்பது : இரண்டு பேருக்கும் இடையில் ஏற்றுக் கொள்ள இயலாத மாறுபட்ட கருத்து இருந்தால், அதற்கும் மேல் புரியவைக்க முடியவே முடியாது, என்பதை இருவரும் புரிந்து கொண்டு வழக்கம் போல் இருப்பதே !

தமிழ்மண ஓடை

  © Blogger template Columnus by Ourblogtemplates.com 2008

Back to TOP