நேற்று சிங்கை கவிமாலை கவிஞர்கள் சார்பாக, ஈழத்தமிழர்கள் குறித்த கலந்துரையாடல்களுடன் கூடிய மதிய உணவுடன் தொல்.திருமாவுடன் சந்திப்பு ஏற்பாடு செய்திருந்தனர், அதற்கும் நண்பரும் பதிவர்களுமான ஜோதிபாரதி மற்றும் பாண்டிதுரை ஆகியோர் அழைத்திருந்தனர் அலுவல் அழுத்தம் காரணமாக செல்ல முடியாமல் போயிற்று.
நேற்று சொல்லமுடியாமல் போனதால் இன்று எப்படியும் திருமாவைக் கண்ணுற வேண்டும், பேச்சை கேட்டுவரவேண்டும் என்று சென்றேன். மாலை 6 மணிக்கு தொடங்குவதாக இருந்த நிகழ்ச்சி காலமெடுத்து 7 மணிக்கு துவங்கியது.
இன்றைய நாள் உலக மகளிர் நாளாக இருப்பதால் சிங்கப்பூர் கவிமாலை கவிஞர்கள் சார்பாக அறியபெற்ற கவிதாயினி திருமதி மலர்விழி இளங்கோவன் தலைமையில் மகளிர் நாள் பற்றிய கவியரங்கத்துடன் விழா தொடங்கியது
கவிதாயினிகள் உஷா, சாந்தி, பாரதி மற்றும் இன்பா ஆகியோர்களின் பெண்ணிய கவிதைகள் இன்றைய நன்னாளுக்கு சிறப்பு சேர்க்கும்படி அமைந்தது.
அதன் பிறகு தொல்.திருமா அவர்களின் சிறப்புரை தொடங்கியது. தொடங்கும் முன்பே திருமா அவர்களிடம் சில இளைஞர்கள் தங்களுக்கு தமிழ் பெயர் சூட்டுமாறு வேண்டுகோள் வைத்தனர். (வடமொழி) கடவுள்கள் (இங்கே அந்த பெயர்களை நான் குறிப்பிட விரும்பவில்லை) பெயர் தாங்கி இருந்த இருவருக்கும், முத்தழகன், அறிவழகன் என்று பெயர் சூட்டினார். திருமாவிற்கு ஆவலுடனும் மகிழ்ச்சியுடன் பலர் பொன்னாடை போத்தினார்கள். பிறகு தனது உரையைத் தொடங்கினார் திருமா.
"அடங்கமறு, அத்துமீறு, திமிறி எழு, திருப்பித்தாக்கு" என்பதை ஒடுக்கப்பட்டவர்களின் எழுச்சி முழுக்கமாக வைத்திருக்கும் திருமா, வள்ளுவரையும் வள்ளலாரையும் பற்றிப் பேசச் சொல்வது அவரது வீர உரையை கேட்கவேண்டும் என்பதற்காக செல்லும் என்போன்றவர்களுக்கு ஏமாற்றம்தான், ஆனால் திருமா மிகச் சிறப்பாகவே பேசினார். பெளத்தம், சமணம், வள்ளுவம், வள்ளலார் கொள்கை இவற்றிற்கிடையேயான ஒற்றுமைகள் அவை வழியுறுத்துவது என்ன என்பதை மிகவும் சிறப்பாக பேசினார். எல்லா மதங்களுமே மனிதர்களிடம் அன்பு வைக்கச் சொல்கிறது, ஆனால் புத்தரும், வள்ளலாரும், வள்ளுவரும், பிற உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு செய்யச் சொல்லி இருக்கிறார்கள், வாடிய பயிறை கண்ட வள்ளலாரும், பிறப்பொக்கும் எல்லா உயிர்களுக்கும் என்ற திருவள்ளுவரும், அன்னப் பறவையை காப்பாற்றி மருந்திட்ட புத்தரும் உயிர்கள் அனைத்தின் மீதும் அன்பு செய்யச் சொல்லி இருக்கிறார்கள், ஆனால் நாமோ ஒரு மனிதன் விபத்தில் சிக்கினால், அவன் சொந்தக்கரான, சாதிக்காரனா, மதத்தைச் சேர்ந்தவனா, இந்தியனா என்றெல்லாம் பார்த்தே அவர்களுக்காக வருந்துகிறோம்"
"மனித நேயம் மறைந்துவிட்டதாலேயே, துன்பப்படும் மனிதன் நமக்கு வேண்டியவர் என்றால் மட்டுமே அதுபற்றி ஏதேனும் சிந்திக்கிறோம், பிற உயிர்களை நேசிக்கத் தெரிந்தால் தான் சக மனிதனையும் நேசிக்க முடியும், இதைத்தான் வள்ளுவரும், வள்ளலாரும் வழியுறுத்தி இருக்கிறார்கள். இதைத்தான் ஆன்ம நேயம் என்கிறோம். ஆன்மநேயம் இருந்தால் மனிதன் விடுதலை பெறலாம், மனித விடுதலையே ஆன்மநேயம்" என்று முடித்தார்....ஏறக்குறைய ஒரு மணி நேர சொற்பொழிவு மிக அருமையாக இருந்தது, இடையிடையே ஈழத்தமிழர்கள் துயர் குறித்து திருமா அவர்கள் பார்வையாளர்களுக்கு நினைவு படுத்தும் விதமாக பேச்சுரையை அமைத்துக் கொண்டார்.
திருமா வள்ளலார், வள்ளுவர் பற்றிப் பேச மிகவும் தகுதி படைத்தவர் ஏனெனில் கொல்லாமை அறத்தை கடைபிடித்து புலால் உணவு மறுத்தவர் என்று பின்னர் அறிந்தேன்.
நிகழ்ச்சியின் நிறைவில் திருமா அருகில் சென்று கைகுலுக்க வாய்ப்புக் கிடைத்தது, அருகில் செல்வோர்கள் அனைவரையுமே மிக தோழமையுடன், கனிவு, அன்புடன் நடத்துகிறார். இதுபோன்ற தன்னலமற்ற தலைவர்கள் தமிழர்களுக்கு கிடைப்பது அரிதே என்றுணர்ந்தேன். அரசியல் நோக்கின்றி ஈழத்தமிழர்களுக்காக கண்ணீர் விடுவதுடன், பல வழிகளில் அவர்களின் துயர் துடைக்கும் போராட்டம் நடத்தும் ஒரே அரசியல் தலைவன் திருமா மட்டுமே.
ஏற்பாடு செய்திருந்த இடம் சிறிய இடம் என்றாலும் சுமார் 500 பேர்களுடன் அரங்கு நிறைந்திருந்தது
நிகழ்ச்சியில் பேசிய சிலர் 'பிரபாகரன்' என்ற பெயரைச் சொல்லியதும் கூட்டத்தினரின் கைதட்டல் ஆரவாரம், கனன்று கொண்டிருக்கும் நெருப்பை காற்று அடித்து வெளிக்காட்டியதைப் போன்று உணர்ந்தேன்.
திருமாவை நேரில் பார்க்க வேண்டும் என்கிற எனது ஆவல் முழுமையடைந்ததற்கு மிக்க மகிழ்ச்சி அடைந்தேன். வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த நண்பர் பாண்டித் துரைக்கும், ஜோதிபாரதிக்கும், நிழல்படம் எடுக்க உதவிய முகவை இராம் அவர்களுக்கும் நன்றி.
நிகழ்ச்சிக்கு பதிவர்கள் நண்பர்கள் சிலர் வந்திருந்தனர்.
நிகழ்ச்சி முடிந்ததும், பிறகு திருமா வசந்தம் தமிழ் தொலைக்காட்சிக்கு நேர்காணல் அளித்தார்.