மனிதனின் செயற்கை அழகுகளுக்கு எதிராக இயற்கையில் பல அறைகூவல்கள் உண்டு, அவற்றில் ஒன்று தான் வானவில். நேற்று மாலை அலுவலகம் முடிந்து அலுவலக பேருந்தில் வரும் போது சுற்றுச் சூழல் தூறலும் மஞ்சள் வெயிலுமாக இருந்தது, பேருந்து கண்ணாடி வழியாக வெளியே கண்களை ஈர்த்தது வண்ணங்கள், மிக அழகான வானவில், இதுவரை இவ்வளவு அடர்த்தியான வண்ணத்தில் வானவில்லை நான் பார்த்ததே இல்லை. நிழல்படக் கருவி பையிலேயே இருந்ததால் அழகை நிழல்படக் கருவிக்குள் அடைத்துவிட்டேன்.
பேருந்து செல்ல செல்ல ஒவ்வொரு பகுதியிலும் வானவில்லின் தோற்றம் மனதை கொள்ளை கொண்டது.





(படத்தில் தெரியும் பேருந்துனுள் இருந்து தான் மேலே இருக்கும் படங்களை எடுத்தேன்)
பேருந்தைவிட்டு கிழே இறங்கியதும் மீண்டும் பார்த்தேன்.


இரட்டை வானவில் (பெரிதாக்கி பார்க்கவும்)
வானவில்லுக்கு மேல் மற்றோர் வானவில், ஆகா வண்ணம் அடர்த்தி குறைந்திருந்தாலும் ஒரு சேர பார்பதற்கு மிக அழகாகவே இருந்தது. 20 நிமிடங்கள் பார்த்துக் கொண்டு இருந்தேன், அதன் பிறகு தொடர்வண்டியில் ஏறினேன். வண்டி வளைந்து சொல்ல செல்ல வானவில்லின் திசையும் மாறிக் கொண்டே வருவது போன்ற தோற்றம். உடனே நம்(ம) ஆமத்தூர் ஜெகதீசனை அழைத்து, வானவில் அழகாக தெரியுது புகைப்படம் எடுத்து வை. என்றேன். சிங்கையில் ஒரு இடத்தில் பார்க்க முடிந்தால், நாடுமுழுவதும் எங்கிருந்தாலும் பார்க்க முடியும். அவரும் ஆர்வமுடன் வீட்டிற்கு கிழே இறங்கி... சில படங்களை எடுத்துவிட்டு அதன் பிறகு புகைப்படம் எடுத்ததை அழைத்துச் சொன்னார். வானவில் நான் பார்த்த தொடக்கம் முதல் சுமார் 1 மணிநேரம் அழியாமல் காட்சி கொடுத்தது. அதன் பிறகு தொடர்வண்டி சுரங்க பாதைவழியாக செல்லவே வானவில்லை காணமுடியவில்லை. வண்டியை விட்டு இறங்கியதும், வானம் இரவின் தொடக்கத்தை கடந்து இருந்தால் வானவில்லும் காணாமல் போய் இருந்தது. ஒரு மணி நேரத்திற்கும் மிகுதியாக தொடர்ந்து அடர்த்தியான வண்ணத்தில் வானவில் அழியாமல் இதுவரை பார்த்ததே இல்லை.
வானவில் என்ற சொல் சரியான பெயர் சொல் இல்லை என்றே நினைக்கிறேன். Train என்பதை புகைவண்டி என்பதாக மொழிப் பெயர்த்து வழங்கிவந்து தற்பொழுது தொடர்வண்டி என்கிறோம். எனெனில் இப்போதெல்லால் எந்த Train னும் புகைவிடுவதில்லை. வானவில்லுக்கு சரியான சொல் மழைவில் ஆங்கிலத்தில் இருக்கும் Rainbow என்கிற அதே பொருளில் வரும். வானவில் என்கிற பெயர் சொல்லை வானத்தில் தொடர்பு படுத்துவதைவிட மழையுடன் தொடர்பு படுத்துவதே சரி. மலையாளத்தில் மழைவில் என்றே சொல்கிறார்கள். இனிமேல் மாற்றி சொல்வதும் கடினம் தான். சங்கப் பாடல்களில் வானவில்லை எப்படி அழைக்கிறார்கள் என்பது தெரியவில்லை, தெரிந்தவர்கள் சொல்லுங்கள். அறிந்து கொள்கிறேன்.
ஜெகதீசன் எடுத்த படங்கள்:

