பின்பற்றுபவர்கள்

12 செப்டம்பர், 2007

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(ய) தேசியவாத பம்மாத்தும் !

தேசியம் என்ற கட்டமைப்பில்... இந்து தேசியம் என்ற சொல்லில் பெரும்பாண்மையினரை நிலைநிறுத்த முயற்சிப்பது போலவே, தேசிய மொழி என்ற பெயரில் இந்தி ஓட்டகம் ஒவ்வொரு மாநிலத்திலும் தலையை நுழைத்து அங்கு இருக்கும் மொழிகளை காலி செய்து வருகிறது.

மராட்டிய மாநிலத்தில் மாராட்டிய மொழி பேசுபவர்கள் குறைந்து, மராட்டிய மொழி திரைப்பட தொழிலும் நசிந்து அந்த இடத்தை இந்தி ஆக்கிரமித்துக் கொண்டாதாக சொல்கிறார்கள்.. இந்த பிரச்சனை தற்பொழுது கர்நாடகாவில் பூதகரமாக உருவெடுத்து வருகிறது.

இந்தி தெரியாதவர்கள் இந்தியாவை நேசிக்காதவர்கள் போலவும், தேச விரோதிகள் போலவும் அந்த அந்த மாநிலத்தில் இருக்கும் இந்தி 'அபிமானிகளால்' தூற்றப்படுகிறார்கள். இந்திய மாநிலங்கள் அனைத்தும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்டதே அந்த அந்த மொழிக்கள் பேசும் மக்கள் உணர்வுகள் மதிக்கப்படவேண்டும், வட்டார மொழிகள் பாது காக்கப்படவேண்டும் என்ற சித்தாந்தத்தின் அடிப்படையில் தானே. இந்திய தேசியம் என்றால் வேற்றுமையில் ஒற்றுமை அடிப்படையில் அதில் ஒருங்கிணைந்த பல்வேறு மாநிலங்களுக்கும் அவற்றில் பேசப்படும் மொழிகளுக்க்கும் முதன்வைத்துவம் கொடுக்க வேண்டும் என்பது தான் முதன்மையானதாக இருக்க முடியும், இல்லை என்றால் மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்டது பொருளற்றது.

தேசிய கட்சிகள் இந்தியா முழுவதும் தேர்தல் பிராசாரம் செய்வதற்கு எளிதாக இருக்கும் என்பதைத் தவிர்த்து இந்தி மொழியின் இந்திய நிலப்பரப்பு தழுவிய பயன் வேறு எதுவும் இருக்கிறதா ?

மராட்டிய மாநிலத்தை விழுங்கியதைப் பார்த்தும், பிறமொழி படங்களால் கன்னட திரையுலகம் நசிந்து வருவதைப் பார்த்தும், மாநிலமுழுவதும் இந்தியின் ஆக்கிரமிப்பால் நம் அண்டை மாநிலமான கர்நாடகத்திற்கு விழிப்பு ஏற்பட்டுள்ளது.ஏனென்றால் மத்திய அரசு நிறுவனங்கள் அனைத்திலும் மருந்துக்கு கூட கன்னட மொழி பயன்படுத்தப்படவில்லை,
இந்தி விளம்பர சொற்றொடரை (வாசகத்தை) ஆங்கிலத்தில் எழுதி வைத்திருக்கிறார்கள் அதனால் கன்னடம் புறக்கணிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் கன்னட வலைப்பூக்களில் வந்து கொண்டிருக்கின்றன. கன்னடம் மற்றும் ஆங்கிலம் ஆகிய இருமொழிக் கொள்கைகளை வலியுறுத்தி பரவலாக பேசுகிறார்கள்.

இந்தி அறிந்தால் இந்தி சீரியல் / சினிமா பார்க்கலாம் என்ற பலனைத்தவிர மொழிவாரி மாநிலத்தவர் கண்ட பலன் வேறு எதுமில்லை. கர்நாடகாவில் நகர்புறங்களில் பேச்சுவழக்கில் இருந்து கன்னடம் முற்றிலும் மறைய கூடிய நிலையில் இருப்பதாக வெளிப்படையாக சொல்கிறார்கள். 'இந்தி' தேசிய மொழி என்பது முட்டாள் தனாமான வாதம் என்று தற்பொழுது கண்டு கொண்டிருக்கிறார்கள். விழித்துக் கொண்டதை பாராட்டுவோம். திராவிட மொழிக் குடும்பத்தில் தமிழுக்கு அடுத்து பழைமையான மொழி என்றால் கன்னடம் தான். திராவிட மொழிகளான கன்னடம் மற்றும் தெலுங்கு ஆகியவற்றிற்கு செம்மொழி தகுதிகள் இருக்கின்றன என்று பாவாணர் ஆய்ந்து சொல்லி இருக்கிறார். செம்மொழி தகுதிக்கு கன்னடியர்கள் முயன்றுவருவதால் தற்பொழுதி இந்தி ஆக்கிரமிப்பு வெளிப்படையாக அவர்களுக்கு தெரிய ஆரம்பித்திருக்கிறது.

மொழிவாரி மாநிலங்களின் தத்தம் மொழிகளை தொலைத்துவிட்டால் அந்தந்த மாநிலங்களின் பண்பாடும் சேர்ந்தே தொலைந்து போகும். இந்தி தேசிய மொழி என்று இந்திய சட்டஅமைப்பில் இல்லாத போது ... இந்தி தெரியாதவன் இந்தியன் இல்லை என்பதோ, தேசியத்திற்கு எதிரானவன் என்று சொல்லும் விஷமத்தனங்கள் கண்டிக்க தகுந்தவை. மாநிலங்களின் மொழியை விழுங்கி ஏப்பமிடவும், புறக்கணிக்கவும் ஆயுதமாக பயன்படுத்திக் கொள்ளும் இந்தி மொழிக் கொள்கை என்ன வகையான தேசிய வாதம் ?


ஒரு கன்னடியரின் இந்திக்கு எதிரான மனநிலையில் வெளிப்பட்ட கருத்து கீழே,

vasant ಅಂತಾರೆ:
nudi-gudi blog inda kaDa tandaddu:

The three pronged approach (through administration, education and media / entertainment) of central govt to impose Hindi has met with success to a considerable degree in some of the states of India. Many of the languages like Bhojpuri, Maithili, Santhali, Rajasthani, Haryanvi, etc have been systematically reduced to "dialects" of Hindi. Many other languages like Punjabi, Marwari, Gujarati, Bengali, Marathi have lost their entertainment industries and are happy entertaining themselves in Hindi, an alien language to most people living in those states. Students in most of the states have been brainwashed that Hindi is the national language of India. Loyalty and patriotism to the nation has been reduced to acceptance of Hindi as the sole "National" and "Link" language. Any Indian having a different opinion on this is branded as not being nationalist enough! A bigger problem this has created is the false sense of superiority in the Hindi speakers. Their expectation that the whole of India speaks Hindi, their reluctance to learn the language of the place they settle in, arrogance that they display in their interaction with fellow non-Hindi speaking Indians is the biggest threat to national integration.
8. I never knew all this was happening. I am aware of this issue now. What should I do?
• Be aware that Hindi is not the ONLY national language of India. All the languages spoken in India are National languages. Please create this awareness in people around you.
• If you are residing in non-Hindi states, ensure that you conduct all the transactions at central government offices and banks in the language of the land or English. Do not use Hindi.
• Boycott Hindi films and music in non-Hindi speaking states. Encourage the media and entertainment industry of the place you live.
• Boycott schools and colleges that teach ONLY Hindi and not the local language in non-Hindi states.
• In non-Hindi states, converse with Hindi speakers in the language of the land or English. Do not converse / transact with them in Hindi.



அன்புடன்,

கோவி.கண்ணன்

18 கருத்துகள்:

ஜமாலன் சொன்னது…

வழக்கம்போல ஒரு மையமான பிரச்சனையுடன் வந்திருக்கிறீர்கள். மையம் எல்லாமே பிரச்சனைதானே. தற்சமயம் இவ்விழிப்புணர்வு பிற மாநிலங்களில் வரத்துவங்கியிருப்பது ஒரு நல்ல அறிகுறிதான். கருநாடக மக்களின் இக்குரலுக்கு ஆதரவாக தமிழர்களாகிய நாமும் தமிழ் என்று சொல்லிக் கொள்ளும் இயக்கங்களும் போராட்டக்களத்தில் இறங்க வேண்டும். காவிரி பிரச்சனையை மனதில் கொண்டு இதனை பார்க்கக்கூடாது. இந்திய தேசியம் என்பது ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பிதம். இந்தியாவை ஒரே நாடாக சுரண்டவதற்கான ஒரு ஏற்பாடு. இந்திய தரகுப்பெருமுதலாளி வர்க்கம் தேசியம் பேசி தொடர்கிறது சுரண்டலை இன்றும் . கர்நாடக மற்றும் மகாராட்டிர மக்களின் மொழி உண்ர்வுக்கும் இன்னும் சிறு சிறு மொழிகளுக்கும்கூட பாதுகாப்பு உத்திரவாதப்படுத்தி இந்தி மேலாண்மையை தகர்க்க வேண்டும். இந்தி-இந்து-இந்தியா என்கிற மூன்ற அச்சுகள் பற்றி எஸ்.வி.ஆர் - ஒரு விரிவான நூல் எழுதி உள்ளார். இந்திய பாசிசம் மொழியாக மதமாக எப்படி உருவாகி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. தாய்மொழி பாதுகாப்பு இயக்கம் ஒன்று இந்தியா முழுவதும் கட்டப்பட வேண்டும்.

Unknown சொன்னது…

மும்பையைப் போலவே பிற மாநில மக்கள் அதிகமாக கர்நாடகத்தின் நகரங்களில் உழைக்கிறார்கள் / இருக்கிறார்கள். அவர்களுக்குள் கருத்து பரிமாற்றத்திற்கு பொதுவான மொழியொன்று தேவைப்படுகிறது. மேல்தட்டு மக்கள் ஆங்கிலத்தில் உரையாடிக் கொள்வர். ஆங்கிலம் கடினமானதென பொதுவாக அடித்தட்டு மக்கள் நினைக்கின்றனர். அப்போது அடுத்ததாக பொதுவில் வருவது ஹிந்தி. அது பொதுமைப் படுத்தப்படுகிறது. சந்தர்ப்பத்தை வலுவாக சில ஹிந்தி ஆதரவு இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்கிறன்றனர். உங்களுடைய பதிவைப் படித்த பின் என் மனதில் தோன்றியது இது.

குமரன் (Kumaran) சொன்னது…

//தேசிய கட்சிகள் இந்தியா முழுவதும் தேர்தல் பிராசாரம் செய்வதற்கு எளிதாக இருக்கும் என்பதைத் தவிர்த்து இந்தி மொழியின் இந்திய நிலப்பரப்பு தழுவிய பயன் வேறு எதுவும் இருக்கிறதா ?
//

ரொம்ப நல்ல கேள்வி. :-))

தமிழுக்கு அடுத்துப் பழமையான மொழி கன்னடம் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏதாவது தரவுகள் இருக்கிறதா கோவி.கண்ணன்.

நான் மற்ற மூன்று மொழிகளை அவரவர்கள் பேசிக் கேட்டவரை மலையாளம் இன்னும் தமிழ்ச்சொற்களை அப்படியே பயன்படுத்துகிறது; அதனால் மிக இளையதாக இருக்கலாம். தெலுங்கில் சிறிதே மாற்றங்களுடன் தமிழ்ச்சொற்கள் புழங்குகின்றன. கன்னடத்திலும் தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன; ஆனால் பெரும் மாற்றத்துடன் புழங்குகின்றன. வ, ப ஆவதும் இ, ப ஆவதும் என பல மாற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அவை தெலுங்கு, கன்னடம் இவற்றில் எது மூத்தது என்று சொல்லும் படி இல்லை. இது என் அனுபவப் பார்வை மட்டுமே. அம்மொழி இலக்கிய இலக்கண வரலாறு தெரியாது. அதனால் தான் கேட்கிறேன் ஏதேனும் தரவுகள் உண்டா என்று.

இந்த இடுகையில் மையப் பொருளினை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன். இந்திய நாடு இந்தி நாடு இல்லை. வட இந்திய மரபு மட்டுமே இந்திய மரபு இல்லை. இந்திய நாடு இந்து நாடு இல்லை. இந்திய நாடு பல மொழிகளின், இனங்களின், தேசியங்களின், மதங்களின் கூட்டமைப்பு. அதில் நம்பிக்கை உடையவரே இந்த நாட்டின் மேல் தேசியப்பற்று கொண்டவர்கள். ஒரே மொழியை, ஒரே மதத்தை, ஒரே மரபை, ஒரே தேசியத்தை இந்தியாவின் உருவாகக் காட்ட நினைப்பவர்கள் எல்லாம் நாட்டுப்பற்று இல்லாதவர்கள்.

RATHNESH சொன்னது…

நண்பரே, திராவிட இயக்கங்கள் போராடி இருமொழித் திட்டத்தைக் கட்டாயமாக்கி வைத்திருக்கிறார்கள். இருந்தும் இன்னும் தமிழ் மொழிக் கல்வி வந்த பாடில்லை. ஆனால் அந்த அளவு தீவிர தமிழ் உணர்வு கொண்ட தலைவர்கள் அடுத்த தலைமுறையில் தென்படாத இந்த நாளில் தமிழின் எதிர்காலம் குறித்து எண்ணினால் கொஞ்சம் கலக்கமாகத் தான் இருக்கிறது. என்ன தான் உங்கள் கட்டுரையில் தனித் தன்மை இழந்து விட்டதாகச் சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் மொழிகள் எல்லாம் (மராட்டி தவிர்த்து) மிக இளமையானவை; அதிக தூரம் இலக்கிய மண்ணில் வேர் பதிக்காதவை நம் தமிழ் ஆயிரமாயிர ஆண்டுகள் தொன்மையானது என்று சமாதானம் செய்து கொள்ள முயன்றலும் வேரில் வெந்நீர் பாய்ச்சும் வேலை தொடர்ந்து நடந்தால் இந்த விருட்சத்தையும் சாய்த்து விடுவது சாத்தியமில்லாத ஒன்று அல்ல.

சில தமிழ்ப்பத்திரிக்கைகள், "இந்தி தெரியாவிட்டால் வடநாட்டில் வேலை கிடைப்பதில்லை; தமிழர்கள் தவிர மற்ற எல்லா தென்னக மக்களும் வடநாடுகளில் வேலை கிடைத்து செட்டில் ஆகிறார்கள்; தமிழர்கள் மட்டும் தான் இந்தி தெரியாததால் வடஇந்தியா மட்டுமின்றி அரபு நாடுகளிலும் இங்கே சுற்றி உள்ள தீவுகளில் கூட வேலை கிடைத்துப் போனாலும் அங்கே பிரகாசிக்க முடியமல் கஷ்டப்படுகிறார்கள் என்றெல்லாம் விடாமல் விஷம் ஏற்றிக் கொண்டு வருகிறார்கள், வாசிப்போர் சிந்தனைகளில். இந்த வேலை கடந்த பல வருடங்களாக நடந்து வருகிறது. குறிப்பாக ஒரு தினசரி தன்னுடைய இணையத்தில் சிந்தனை மேடை ஒன்று வைத்திருக்கிறது. அதில் மாதம் தவறாமல் இரண்டு மூன்று கடிதங்களாவது இந்தப் பொருளில் வரும். உடனே அவற்றைச் சிலாகித்து, கருணாநிதியின் மீதான காழ்ப்புணர்வுகளைக் கொட்டித் தீர்க்க "இவன் பிள்ளைகள் இந்தி மீடியத்தில் படிக்கின்றன; ஆங்கிலப் பள்ளிகளில் இந்தி படிக்கின்றன நம் போன்ற பாமரர்களை ஏமாளியாக்கி இந்தி படிக்க விடாமல் நம் வாழ்க்கையைக் கெடுத்து வருகிறார்கள்" என்று வரிந்து கட்டிக் கொண்டு சிலர் எழுதுவதும் வாடிக்கை.

நான் அந்தப் பக்கத்தில் பல புனை பெயர்களில் கிட்டத்தட்ட ஒரு வருடம் போராடி இருக்கிறேன் அந்தக் கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதி.

நான் அடிப்படையாக வைத்தது ஐந்து கருத்துக்கள் தான்:

1. இந்தி தெரிந்தால் வேலை நிச்சயம் என்றால் உபி பீகார் மாநிலங்களில் வேலை இல்லாத் திண்டாட்டமே இருக்கக் கூடாதே

2. இந்தி தெரியாமல் வடக்கே சமாளிக்க முடியாது என்கிற சிந்தனை தவறு. எந்தப் புதுச் சூழலுக்கும் பழக்கப்பட ஆறுமாதங்கள் ஆகலாம் அதிக பட்சமாக. அந்தத் தடுமாற்றங்களுக்கு மொழியை மட்டும் காரணியாக்குவது தைரியமின்மையின் அடையாளமே தவிர மொழி தெரியாதது இல்லை

3. பாடத்திட்டத்தில் இந்தியை வைத்து விட்டால் இந்தியில் பேசிக் கழற்றி விடலாம் என்கிற எண்ணம் இன்னும் தவறு. தமிழ் மீடியத்தில் படித்து வரும் மாணவர்கள் கல்லூரி நாட்களில் கூட ஆங்கிலத்தில் கடிதம் எழுதத் திணறுவது எல்லோருக்கும் தெரியும். பாடப் புத்தக இந்தி அப்படி ஒன்றும் மொழிப்புலமையை வளர்த்து விடாது.

4. (நான் உள்பட) பொதுத்துறை நிறுவனங்களில் வேலை செய்யும் தமிழர்களில் நூற்றுக்குத் தொண்ணூறு பேர் தமிழகத்தை விட்டு வெளியே வரும் போது இந்தி தெரியாமல் தான் வந்திருக்கிறார்கள். மொழி அறிவின்மையால் சோடை போனதாக என்னுடைய அனுபவத்தில் எங்கள் நிறுவனத்தில் எவரும் இல்லை. மாறாக தமிழர்கள் என்றால் ஒரு வித தனி மரியாதையைத் தான் வேலை விஷயத்தில் சம்பாதித்திருக்கிறோம்.

5. முக்கியமாக இருமொழித் திட்டம் அமலுக்கு வருவதற்கு முந்தைய நாட்களில் இந்தியும் சேர்த்துப் படித்த நம் தாத்தாக்கள் வட இந்தியாவுக்குப் பயணம் போய் என்ன சாதித்து விட்டார்கள்?

ஆனால் ஒரு விஷயம் நண்பரே, உங்கள் கன்னட நண்பர் எழுதி இருப்பது போல் வட மாநிலங்களில் இந்தியை விலக்கி வாழ்க்கை நடத்த முடியாது. (டெல்லி, மும்பை, கொல்கத்தா சென்னை போன்றவை அந்தந்த மாநில மொழிகளுக்கான நகரங்கள் அல்ல). தமிழகத்தின் வேலை வாய்ப்பு எல்லைகளை உலகளாவியதாக்கி இருக்கும் கணினி மற்றும் IT துறைகள் தான் இந்தி குறித்த மாயையை ஓரளவு நீக்குகின்றன. இந்தத் துறைகளில் இருப்பவர்களும் வெளிநாடு வாழ் தமிழர்களும் காட்டுகின்ற தமிழார்வம் தான், தமிழ் மீதான நம்பிக்கையை அடுத்த தலைமுறைக்கு வளர்க்கும். பிடிக்கிறதோ இல்லையோ தமிழ்த் திரைப்படங்களும் தொலைக்காட்சி சேனல்களும் எண்ணிக்கையில் பெருகி இருக்கும் வரை தான் அந்த இடத்தை இந்தி வந்து ஆக்கிரமித்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள இயலும். நம் இலக்கிய வளம் குறித்த கடை விரிப்பு பெரிதாக பிரம்மாண்டமாக இருக்கும் படிப் பார்த்துக் கொள்வது அவசியம். சில குறுகிய குழுச் சண்டைகளை விடுத்து மொழி அபிமானம் வெறியாக வளர்ந்து விடாத எச்சரிக்கையோடு புகட்ட முயன்றால் ஒழிய அடுத்த தலைமுறை தமிழை அலட்சியப்படுத்தி ஒதுக்குவது தவிர்க்க இயலாமல் போய் விடும்.

நன்றி

RATHNESH

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜமாலன் said...
வழக்கம்போல ஒரு மையமான பிரச்சனையுடன் வந்திருக்கிறீர்கள். மையம் எல்லாமே பிரச்சனைதானே. தற்சமயம் இவ்விழிப்புணர்வு பிற மாநிலங்களில் வரத்துவங்கியிருப்பது ஒரு நல்ல அறிகுறிதான். கருநாடக மக்களின் இக்குரலுக்கு ஆதரவாக தமிழர்களாகிய நாமும் தமிழ் என்று சொல்லிக் கொள்ளும் இயக்கங்களும் போராட்டக்களத்தில் இறங்க வேண்டும். காவிரி பிரச்சனையை மனதில் கொண்டு இதனை பார்க்கக்கூடாது. இந்திய தேசியம் என்பது ஆங்கிலேயர்களால் கட்டமைக்கப்பட்ட ஒரு கற்பிதம். இந்தியாவை ஒரே நாடாக சுரண்டவதற்கான ஒரு ஏற்பாடு. இந்திய தரகுப்பெருமுதலாளி வர்க்கம் தேசியம் பேசி தொடர்கிறது சுரண்டலை இன்றும் . கர்நாடக மற்றும் மகாராட்டிர மக்களின் மொழி உண்ர்வுக்கும் இன்னும் சிறு சிறு மொழிகளுக்கும்கூட பாதுகாப்பு உத்திரவாதப்படுத்தி இந்தி மேலாண்மையை தகர்க்க வேண்டும். இந்தி-இந்து-இந்தியா என்கிற மூன்ற அச்சுகள் பற்றி எஸ்.வி.ஆர் - ஒரு விரிவான நூல் எழுதி உள்ளார். இந்திய பாசிசம் மொழியாக மதமாக எப்படி உருவாகி வருகிறது என்பதையே இது காட்டுகிறது. தாய்மொழி பாதுகாப்பு இயக்கம் ஒன்று இந்தியா முழுவதும் கட்டப்பட வேண்டும்.
//
ஜமாலன் நீங்கள் சொல்வது சரிதான், திராவிட மொழி என்ற அடிப்படையில் கன்னடர்களின் போராட்டத்துக்கு தார்மீக ஆதரவு கொடுப்பது தமிழர்களின் கடமை.

கன்னடர்களும் தமிழர்களின் தனித்தமிழ் இயக்கம் வெற்றிக்கண்டதை பல வலைப்பூக்களில் பேசி அதுபோல் இயக்கம் தொடங்குவது குறித்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

தங்கள் அனைத்து கருத்துக்களுக்கும் பாராடுகளுக்கும் மிக்க நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
மும்பையைப் போலவே பிற மாநில மக்கள் அதிகமாக கர்நாடகத்தின் நகரங்களில் உழைக்கிறார்கள் / இருக்கிறார்கள். அவர்களுக்குள் கருத்து பரிமாற்றத்திற்கு பொதுவான மொழியொன்று தேவைப்படுகிறது. மேல்தட்டு மக்கள் ஆங்கிலத்தில் உரையாடிக் கொள்வர். ஆங்கிலம் கடினமானதென பொதுவாக அடித்தட்டு மக்கள் நினைக்கின்றனர். அப்போது அடுத்ததாக பொதுவில் வருவது ஹிந்தி. அது பொதுமைப் படுத்தப்படுகிறது. சந்தர்ப்பத்தை வலுவாக சில ஹிந்தி ஆதரவு இயக்கங்கள் பயன்படுத்திக் கொள்கிறன்றனர். உங்களுடைய பதிவைப் படித்த பின் என் மனதில் தோன்றியது இது.
//

சுல்தான் ஐயா,

நீங்கள் சொல்வது போல் பெங்களூர் மட்டுமல்ல. இந்தி வாசனையே அறியாதத வெளிநாடுகளிலும் உழைக்கும் வர்கத்தினர் வேலை செய்கிறார்கள். குறிப்பாக சிங்கப்பூர் வரும் போது அவர்களுக்கு அடிப்படை ஆங்கிலம் தெரியாது. தொடர்புக்கு தேவை என்ற கட்டாயத்தில் சிறிதளவு பேச்சு வழக்கு ஆங்கிலத்தை கற்றுக் கொண்டு வேலை இடத்தில் சமாளிக்கிறார்கள். எனவே பள்ளியில் இந்திபடித்தால் தான் வெளிமாநிலத்தில் சமாளிக்க முடியும் என்பது அனுபவ அளவில் அடிபட்டு போகிறது. பள்ளியில் இந்தி சொல்லிக் கொடுத்தாலும் பள்ளிக்கே செல்லாதவர்கள் எப்படி இந்தி கற்றுக் கொள்ள முடியும் ? யாரோ சிலர் 5 விழுக்காட்டிற்கும் குறைவானவர்கள் வெளிமாநிலங்களுக்கு வேலைக்குப் போகிறார்கள் என்பதற்காக ஒரு மொழியை மாநில அளவில் வளர்பதால் மாநிலத்தின் மொழி அழியும். இந்து புழங்கும் மாநிலங்களில் அழிந்துவருகிறது. இதை இந்தி ஆதரவு இயக்கம் பயன்படுத்திக் கொள்கின்றன என்பதை சரியாக சொல்லி இருக்கிறீர்கள்.

நன்றி ஐயா.

கோவி.கண்ணன் சொன்னது…

//குமரன் (Kumaran) said...


ரொம்ப நல்ல கேள்வி. :-))

தமிழுக்கு அடுத்துப் பழமையான மொழி கன்னடம் என்று சொல்லியிருக்கிறீர்கள். ஏதாவது தரவுகள் இருக்கிறதா கோவி.கண்ணன்.

நான் மற்ற மூன்று மொழிகளை அவரவர்கள் பேசிக் கேட்டவரை மலையாளம் இன்னும் தமிழ்ச்சொற்களை அப்படியே பயன்படுத்துகிறது; அதனால் மிக இளையதாக இருக்கலாம். தெலுங்கில் சிறிதே மாற்றங்களுடன் தமிழ்ச்சொற்கள் புழங்குகின்றன. கன்னடத்திலும் தமிழ்ச்சொற்கள் இருக்கின்றன; ஆனால் பெரும் மாற்றத்துடன் புழங்குகின்றன. வ, ப ஆவதும் இ, ப ஆவதும் என பல மாற்றங்கள் இருக்கின்றன. ஆனால் அவை தெலுங்கு, கன்னடம் இவற்றில் எது மூத்தது என்று சொல்லும் படி இல்லை. இது என் அனுபவப் பார்வை மட்டுமே. அம்மொழி இலக்கிய இலக்கண வரலாறு தெரியாது. அதனால் தான் கேட்கிறேன் ஏதேனும் தரவுகள் உண்டா என்று.
//

குமரன்,
ஒத்த கருத்துக்களுக்கு நன்றி.

கன்னடம் தெலுங்கு இவற்றில் கன்னடமே பழமையானது. கிருஷ்ண தேவராயர் தெலுங்கை தாய்மொழியாகக் கொண்டு கன்னட நிலப்பரப்பை தலைநகரமாக கொண்டு ஆந்திரம் இணைந்த பெரும் நிலப்பரப்பை ஆண்டவ அரசர். இவர்காலத்திற்கு முன்பு தெலுங்கு பேச்சு மொழி மட்டுமே. கன்னட எழுத்துக்களை சிறிது உருமாற்றி தெலுங்குக்கு எழுத்துவடிவத்திற்கு பயன்படுத்தியதாக வரலாறுகள் சொல்லுகின்றன. இந்த தகவல்கள், கன்னட ஆங்கில வலைப்பூக்களில் கிடைக்கின்றன. கன்னடர்கள் தெலுங்கை தனக்கென்று தனி எழுத்து இல்லாத மொழி என்று பழிப்பர்.

தமிழ் குறித்த ஆராய்ச்சியில் திராவிட மொழிகள் தமிழில் இருந்து தோன்றியதாகத்தான் மொழி ஆராய்ச்சி குறிப்புகள் கூறுகின்றன. இதை கன்னடர்கள் ஒத்துக் கொள்ள மாட்டார்கள். தமிழும் கன்னடமும் ஒரே மொழிக் குடும்பத்தின் இரு கிளைகள் என்றுதான் சொல்லுவார்கள். :) அது ஓரளவு உண்மையும் கூட புதிய சொற்களை கணக்கில் கொள்ளாமல், சிதையாமல் இருக்கிறது என்பதால் தமிழ் அப்படியே இருக்கிறதாக நாம் சொல்கிறோம். தமிழில் இருந்து ஒப்பிட்டு பார்பதால் கன்னடம் சிதைந்துவிட்டதாக தெரிவதால் தமிழில் இருந்து தோன்றியதாக நமக்கு தெரிகிறது. குறிப்பாக 100க் கனக்கான மூலச் சொற்கள் பொதுவாக இருப்பதால் அவர்கள் சொல்லும் கூற்று கூட சரியென்றே எண்ணத் தோன்றுகிறது. இருமொழிகளும் வட்டாரமொழிகளாக இருந்திருக்கின்றன என்றாலும் தமிழ் எழுத்துக்கள் தோன்றும் முன்பே கன்னடம் பிரிந்து இருக்க வேண்டும், பின்னாளில் அது கிரந்த எழுத்து முறைகளை பின்பற்றி எழுத்துருவை அமைத்துக் கொண்டிருக்க கூடும் என்பது கன்னட எழுத்துக்களின் எண்ணிக்கையையும் ஒலியையும் வைத்து சொல்ல முடியும். கன்னடத்திலும் கிமு 350 காலகட்டத்தில் கன்னட் எழுத்துக்கள் உருவாகிவிட்டதாகவும் இந்த விவாத களத்தில் குறிப்புகள் இருக்கிறது. அதில் அவர்கள் தமிழ் குறித்து சொல்லியுள்ளவை கற்பனையானவை.

கோவி.கண்ணன் சொன்னது…

//அம்மொழி இலக்கிய இலக்கண வரலாறு தெரியாது. அதனால் தான் கேட்கிறேன் ஏதேனும் தரவுகள் //

திராவிட மொழிக் குடும்பங்கள் அனைத்திற்கும் ஒரே இலக்கண முறைதால்.

எழுவாய் பயனிலை செயப்படுபொருள் வரிசையில் தான் இருக்கும்.

ராமன் மரத்தை வெட்டினான் :)))

வடமொழி சார்புள்ள மொழிகளும், மேலை ஆரியமொழிகளான ஐரோப்பிய மொழிகளும், சீனமும் கூட 'rama cuts tree' போன்ற ஆங்கில சொற்றொடர் அமைப்பு முறைதான்.

வியக்கத்தக்க வகையில் ஜப்பான் மொழியின் இலக்கண அமைப்பு தமிழ் மொழியைப் போன்றே இருக்கும். அதாவது மேலே சொன்ன 'ராமன் மரத்தை வெட்டினான்' இந்த தகவலை இரு ஆண்டுகளுக்கு முன் படித்தேன்.

Tamil hypothesis
A few scholars have suggested that Japanese may be related to Tamil and possibly other Dravidian languages, mostly spoken in South India. This is supported by a very few scholars, such as Robert Caldwell, Susumu Shiba, Susumu Ōno[7][8] and Akira Fujiwara. Evidence for this theory is that Japanese and Tamil are both agglutinative languages and also have similar vocabularies and phonetics, though Tamil's retroflex consonants are very different from Japanese. This hypothesis has little support outside of the scholars mentioned here, and has been criticized by other scholars of Japanese and Dravidian.[citation needed] Ōno was criticized for making errors in history and archaeology, and for various methodological errors in applying the comparative method,[citation needed] such as positing multiple correspondences without giving conditioning factors (for example, Tamil c : Japanese s; Tamil c : Japanese ∅; and Tamil ∅ : Japanese s), and several other shortcomings in data and application of theory.[citation needed]

http://en.wikipedia.org/wiki/Japanese_language_classification#Tamil_hypothesis


http://arutkural.tripod.com/tolcampus/jap-tamil.htm

கோவி.கண்ணன் சொன்னது…

RATHNESH,
உங்கள் கருத்துக்கள் அனைத்தும் அருமை. ஏற்றுக் கொள்ளக் கூடியவை.

//நான் அந்தப் பக்கத்தில் பல புனை பெயர்களில் கிட்டத்தட்ட ஒரு வருடம் போராடி இருக்கிறேன் அந்தக் கடிதங்களுக்கெல்லாம் பதில் எழுதி//

இதற்கு உங்களை பாராட்டுகின்றேன். நற்செயல். விக்கிபீடியா என்னும் தகவல் களஞ்சியத்திலும் பலர் தமிழ் குறித்தும், தமிழர் தலைவர்கள் குறித்தும் தவறான கருத்தை வேண்டுமென்றே பதிகிறார்கள். இதில் என்ன கொடுமை என்றால் அவர்களில் பலர் தமிழை தாய்மொழி என்று கூறிக் கொள்பவர்களாம்.

நன்றி ரத்னேஷ் அவர்களே.

சிவபாலன் சொன்னது…

நல்ல கட்டுரை. முழுதும் உடன்படுகிறேன்.

மேலும் ஒரு சில தினங்களுக்கு முன் ஏதோ பதிவில் படித்தேன்.. தமிழ் இனி மெல்லச் சாகும்.. அதாவது இன்னும் 100 ஆண்டுகளில்..

அங்கே சொல்லப்பட்ட விடயம் மிகவும் சிந்திக்க வேண்டியது.

அதாவது, ஆதிக்க செலுத்துவோர் பேசும் மொழி சாமானியனின் மொழியை பொருளாதார ரீதியாக அழிக்கும் என்றும், சாமானியன் ஆதிக்க மொழிக்கே மாறுவான் எனவும் குறிப்பிடப்பட்டது.

அவ்வாறு தமிழ் மொழியும் அழியும் எனவும் சொல்லப்பட்டிருந்தது.

ஹிந்தி மற்றும் பெங்காளி தவிர ஏனைய மொழியில் அழியும் என சொல்லப்பட்டிருந்தது.

சிந்தனையை தூண்டும் அந்தப் பதிவு நம் அனைவருக்கு ஒரு பாடம்.

சுட்டி கிடைத்தால் தருகிறேன்.

நன்றி

சிவபாலன் சொன்னது…

இது தான் அந்த சுட்டி. தினகரனில் வந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.

http://maganadigan.blogspot.com/2007/09/blog-post.html

PRABHU RAJADURAI சொன்னது…

"இந்தி தெரியாமல் வடக்கே சமாளிக்க முடியாது என்கிற சிந்தனை தவறு"

"1996 முதல் 2004 வரை மும்பையில் குப்பை கொட்டியிருக்கிறேன்...ஆனாலும் ஹிந்தி இன்றும் தெரியாது.

வெட்டிப்பயல் சொன்னது…

ரத்னேஷின் கருத்துக்கள் அருமை...

நல்ல பதிவு.

Unknown சொன்னது…

//தமிழும் கன்னடமும் ஒரே மொழிக் குடும்பத்தின் இரு கிளைகள் என்றுதான் சொல்லுவார்கள். :) அது ஓரளவு உண்மையும் கூட //
ஏதோ ஒரு பழந்தமிழ் இலக்கியத்தில் (எந்த நூல், என்ன செய்யுள் என்பதெல்லாம் எனக்கு சரியாக நினைவில்லை.) கன்னடப் பகுதியில் தமிழும் வடுகும் கலந்த ஒரு மொழி பேசப்படுகிறது என்று உள்ளதாகப் படித்திருக்கிறேன். மேலும் கல்கியின் சிவகாமியின் சபதத்திலும் புலிகேசியும் அவன் படையினரும் தமிழும் பிராகிருதமும் கலந்த ஒரு மொழி பேசினார்கள் என்று ஓரிடத்தில் கூறியிருப்பார். அப்படிப் பார்த்தால் மூலதிராவிட மொழி ஒன்று இல்லாதபோது அல்லது அழிந்த பிறகும் கன்னடம் என்ற ஒரு முழுமையான மொழி உருவாக வில்லை என்றே தெரிகிறது.

RATHNESH சொன்னது…

//கோவி.கண்ணன் said...
//அம்மொழி இலக்கிய இலக்கண வரலாறு தெரியாது. அதனால் தான் கேட்கிறேன் ஏதேனும் தரவுகள் //

திராவிட மொழிக் குடும்பங்கள் அனைத்திற்கும் ஒரே இலக்கண முறைதால்.

எழுவாய் பயனிலை செயப்படுபொருள் வரிசையில் தான் இருக்கும்.

ராமன் மரத்தை வெட்டினான் :)))

வடமொழி சார்புள்ள மொழிகளும், மேலை ஆரியமொழிகளான ஐரோப்பிய மொழிகளும், சீனமும் கூட 'rama cuts tree' போன்ற ஆங்கில சொற்றொடர் அமைப்பு முறைதான்.//

கோவி. கண்ணன் சார், ஒரு சிறு குறுக்கீடு: ஐரோப்பிய மொழிகள், சீனம் பற்றித் தெரியாது. ஆனால், இந்தி, குஜராத்தி மொழிகளில் தமிழ் மாதிரியான இலக்கண அமைப்புத் தான். ராமன் மரத்தை வெட்டினான் என்பதை விடுங்கள்; இந்த மொத்த பத்தியையும் இந்தியில் மொழி பெயர்ப்பதென்றால் கூட வார்த்தைக்கு வார்த்தை மொழி பெயர்த்தால் போதும். தென் இந்தியர்கள் குறிப்பாகத் தமிழர்கள் வடக்கே வந்து இந்தி கற்க முனைந்தால் மூன்றே மாதத்தில் உபி காரர்கள் வியக்கும் வண்ணம் அழகாகப் பேசுவதற்கு இது தான் காரணம். (நான் அறிந்த வகையில் இலக்கண முறைகள், பிரக்ஞையை மீறி ரத்தத்தில் ஊறியிருக்கும் மொழியினர் தமிழர். அது தான் மொழியியலில் அவர்களை எளிதில் விற்பன்னர்களாக்குகிறது). நன்றி, தொடருங்கள்.

RATHNESH
http://rathnesh.blogspot.com

Unknown சொன்னது…

//இந்தி, குஜராத்தி மொழிகளில் தமிழ் மாதிரியான இலக்கண அமைப்புத் தான்.//
நீங்கள் வாக்கிய அமைப்பு(syntax) பற்றிக் கூறுகிறீர்கள் என்று நினைக்கிறேன். அதை அப்படியே ஏற்றுக்கொள்ளமுடியாது. கா.அப்பாத்துரையாரின் புத்தகம் ஒன்றில் படித்திருக்கிறேன் தற்போதைய இந்திய மொழிகளின் வாக்கிய அமைப்பு என்பது தமிழின் கொடை என்று. இந்த வாக்கிய அமைப்பானது சம்ஸ்கிருதத்திலிருந்து வரவில்லை. மேலும் நானறிந்தவரை வாக்கிய அமைப்பானது பேச்சு இந்தியைப் பொறுத்தவரை இரண்டாக இருக்கிறது.
நேற்று ஒரு மராட்டிய நண்பருக்கும் ஒரு தமிழ் நண்பருக்கும் நடந்த உரையாடலிலிருந்து ஒரு உதாரணம் சொல்கிறேன்.
தமிழ் நண்பர் "க்யோன் நஸ்றாஹை?"(ஏன் சிரிக்கிறாய்?) என்றார். அந்த மராட்டிய நண்பர் பதிலுக்கு "நஸ்றாஹை க்யோன் மத்லப்" (சிரித்தேன் ஏன் என்றால்) என்று தொடர்ந்தார். இதையே தமிழராக இருந்தால் "க்யொன் நஸ்றாஹை மத்லப்" (ஏன் சிரிக்கிறேன் என்றால்)என்றிருப்பார். எனவே இரண்டு வகையான வாக்கிய அமைப்புகள் புழக்கத்தில் இருக்கின்றன. அவர்களுக்கென்று ஒரு வாக்கிய அமைப்பும் இருக்கிறது. மேலும் நம்முடையதையும் பயன்படுத்துகிறார்கள் என்று நினைக்கிறேன். நேற்று இதைப்பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். இங்கு சொல்வதற்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்து விட்டீர்கள்.

கே.என்.சிவராமன் சொன்னது…

கண்ணன், இந்த தகவல் எந்த அளவுக்கு உங்களுக்கு பயனளிக்கும் என்று தெரியவில்லை. தேசியம், மொழி குறித்து நீங்கள் எழுதுவதால் சில பகிர்தல்கள்.
ஜமாலன் குறிப்பிட்டபடி, எஸ்.வி. ராஜதுரை 'இந்து, இந்தி, இந்தியா' என்ற நூலை எழுதியிருக்கிறார். ஒவ்வொரு தமிழனும் படிக்க வேண்டிய நூல் இது. இந்த நூலில் இருக்கும் விஷயங்களை சற்று விரிவாக பழ. நெடுமாறன், சமீபத்தில் தான் எழுதிய நூலில் கையாண்டிருக்கிறார்.
இதுபோக எஸ். வி. ராஜதுரை எழுதிய 'ஆகஸ்ட்: 15' நூலின் 2ம் பதிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியானது. இதுகுறித்து பெரியார் திராவிடர் கழகம் நடத்திய கூட்டத்தில் எஸ்.வி.ஆர். உரையாற்றினார். அந்த உரையின் சுருக்கம் 'புரட்சி பெரியார் முழக்கம்' வார இதழில் வெளிவந்தது. இந்த சுருக்கத்தில் வெளிப்பட்ட தமிழ் தேசியம் தொடர்பான செய்திகளை மறுத்து, தமிழ் தேசிய பொதுவுடமை கட்சியின் இதழான 'தமிழர் கண்ணோட்டத்தில்' பெ. மணியரசன் ஒரு மறுப்பை எழுதினார். அதில் தனிப்பட்ட ரீதியில் அவர் எஸ்.வி.ஆரை தாக்கியிருந்தார். இதனை கண்டித்து கவிஞர் தமிழேந்தி எழுதிய மறுப்பு அடுத்த மாத கண்ணோட்டம் இதழில் வெளிவந்தது. இந்த நிலையில் மணியரசனுக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக ராஜதுரை, 'மார்க்சியம் பெரியாரியம் தேசியம்' என்ற நூலை சென்ற மாதம் எழுதி வெளியிட்டிருக்கிறார். இந்த நூலில் 'புரட்சி பெரியார் முழக்கத்தில்' வெளியான அவரது உரையின் சுருக்கம் முதல் மணியரசனின் மறுப்பு வரை அனைத்தையும் வெளியிட்டு, தனது நிலைப்பாட்டையும் விவரித்திருக்கிறார்.
இந்த நூலில் தேசிய இன பிரச்னைகள் விவாதிக்கப்பட்டிருக்கின்றன. முடிந்தால் படித்து பாருங்கள். தவிர இந்த நூலுக்கு இந்த மாதம் 'கண்ணோட்டம்' இதழில் மணியரசன் மீண்டும் ஒரு மறுப்பு எழுதியிருக்கிறார், தொடரும் என்ற குறிப்புடன். ஆனால், தனிமனித தாக்குதல் அதிகமாக இருக்கிறது. என்றாலும் சில செய்திகள் சில கதவுகளை திறக்கலாம். அடுத்த பதுவுக்கு உதவலாம். தொடர்ந்து எழுதுங்கள்.

ஜமாலன் சொன்னது…

ரத்ணேஷ் முன்வைத்துள்ள 5 கருத்தக்களும் அருமை. அதில் எனக்கு முழு உன்பாடு உண்டு. நான் இருக்கும் அரேபியச் சூழலில் அடிக்கடி எதிர்கொள்ளும் ஒரு விவாதம். இந்தி மொழி பற்றியதுதான். அப்பொழுதெல்லாம் நண்பர்கள் முன்வைக்கும் விவாதம் ரத்ணேஷ் சுட்டிக்காட்டும் அதே கருத்து. இறுதியில் கருணாநிதியை திமுக-வை குறை சொல்வது. திமுக வின் தமிழ் பற்றுக் குறிதது அரசியல் வேறு ஆணால் இந்தி திணிப்பில் அவர்களது நிலைபாடு சரியானதுதான். அவர்களுக்கு எனது பதில் ரத்ணேஷ் சுட்டிக்காட்டும் கருத்துக்கள்தான் அது கொஞ்சம் பாமரத்தனமாக சொல்வேன். இந்தி படித்தால் இந்தியா முழுவதும் போய் பிச்சை எடுக்கலாம் என்று. வயிற்றுவலி உள்ளவன் மருந்து சாப்பிட வேண்டும். நீ இந்தி தெரியாததால் வெளி நாட்டில் சிரமப்படுவதாக நினைத்தால்.. (இப்படி எண்ணுவது ஒரு மாயை) நீ கற்றுக்கொள். உன்னை யார் தடுத்தார்கள். பள்ளியில் நீ படித்த தமிழ் மற்றம் ஆங்கிலத்தில் உன்னால் சரளமாக பேசவோ எழுதவோ முடியுமா? மொழி பள்ளிக்கல்வி மூலம் மட்டுமே வருவதில்லை.

வேலைவாய்ப்பு என்பது திட்டமிட்டட பொய். நம் ஊரில் எத்தனை வட இந்தியர்கள் பணி புரிகிறார்கள். அவர்கள் அவர்களது நாட்டில் தமிழ் கற்றுக் கொடுக்கும்படி போராடுவது இல்லை. இவ்விவாதத்தின் போக்கில் எனக்கு முழு உடன்பாடு உள்ளதையும் ரத்ணேஷ் அவர்களின் கருத்துக்கள் முக்கியமாக எல்லோருக்கும் போய் சேர வேண்டும் என்பதையும் சொல்லிக் கொள்ளவே இப்பின்னோட்டம். நன்றி.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்