பின்பற்றுபவர்கள்

7 ஏப்ரல், 2009

பதிவர் தமிழ் ப்ரியனுக்கு பாராட்டுகள் !

வலையுலகம் சாராத நண்பர்களிடமும் அவர்களின் சாதி என்ன என்று அறிய விரும்புவதில்லை, இங்குள்ளது (பதிவுலகில்) போல் ஒருவரின் சாதியை எப்படியாவது தெரிந்து கொண்டு எவனோ செய்யும் தப்புக்கெல்லாம் கேள்வி கேட்டு அந்த சாதிக்காரனைப் பொறுப்பேற்றுக் கொள்ளச் சொல்லி தூற்றுவது (சாதிப் பெருமை பேசுபவர்களை அவ்வாறு தூற்றவும் செய்யலாம் என்பது என் தனிப்பட்ட கருத்து) குறைவு என்பதால் வெளி உலக நண்பர்கள் எதோ ஒரு காரணத்திற்காக தங்கள் சாதி என்ன என்று வெளிப்படுத்தினாலோ, அல்லது எப்படியோ தெரியவந்தாலோ பெரிய பிரச்சனைகள் எதுவும் இல்லை. பதிவுலகம் சாராத வன்னிய நண்பரிடம் இராமதாஸ் கூட்டணி மாறியதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன்.

"அவன் கிடக்கிறான்ங்க.....அவனால வன்னியர்களுக்கு என்ன நன்மை ?, ஜால்ரா அடிக்கும் ஒரு குழுவை ஏற்படுத்திக் கொண்டு வானளாவிய சொத்து சேர்த்து இருக்கிறான், அதற்கு ஆதரவு கொடுத்து தொண்டர்கள் என்ற பெயரில் ஒட்டிக் கொள்கிறவர்கள் பதவி பெறுகிறார்கள், சம்பாதிக்கிறார்கள்.....இதனால் ஒட்டுமொத்த வன்னியர்களுக்கு என்ன லாபம் ?......என்னைக் கேட்டால் வன்னியர்கள் அனைவரும் சேர்ந்து பாமகவைத் தோற்கடிக்கனும், ஓட்டு வங்கியை உருவாக்கி சுயலாபம் அடைந்தது தவிர்த்து இராமதாஸ் வன்னிய சமூகத்துக்கு பெருசா ஒண்ணும் பண்ணிவிடவில்லை" என்றார்

"உங்க சாதி ஆளுங்களுக்குத்தான் பிரதி நிதித்துவம் கிடைக்குதே... அதுல உங்களுக்கு பெருமை இல்லையா ?...ஒரு வன்னியர் மத்திய மந்திரியாக இருப்பது வன்னியர்களுக்குத் தானே லாபம் ?" என்று அவரிடம் கேட்டேன்.

"ஆகுறான்..ஆகட்டம்... இவன் ஒரு ஆள் மத்திய மந்திரி ஆகிவிட்டால் வன்னியர் வாழ்க்கைத் தரம் உயர்ந்துவிடுமா ?... தான் வன்னியர் என்று சொல்லி ஓட்டு வாங்கி வெற்றி பெறுகிறான்...அவ்வளவு தான்...அவனோட வாழ்க்கைத் தரம் மட்டும் தான் உயரது... இதுல பெருமை பட என்ன இருக்கிறது...மத்திய மந்திரியாக இருப்பதாலேயே வன்னியர்களுக்கு என்று குறிப்பிட்டு எதையும் வாங்கிட முடியாது....அந்தந்த பகுதியில் எதாவது நலத் திட்டம் அறிவிக்கலாம்...அதுலையும் பாதி காசை கமிசன் அடிச்சிடுவானுங்க, இது தானே நடக்குது....இதுல வன்னிய மக்களுக்கு தனிப்பட்ட பலன் இருப்பதாக எனக்குத் தெரியலைங்க....என் ஜாதிக்காரன் மந்திரியாக இருக்கிறான் என்று சொல்வது ஒரு வரட்டு கவுரவம் தான்... பைசா ப்ரோயஜனம் இல்லை" என்றார்

சாதிப் பெயரில் ஆதரவு திரட்டி பெரிய பதவிகளைப் பெருவதன் மூலம் சாதிக்காக எதையும் யாரும் சாதிப்பதில்லை, வெளிப்படையாக அவ்வாறு செய்ய சட்டத்திலும் இடம் இல்லை என்பதாகத் தான் அவரது கருத்தை புரிந்து கொண்டேன். எனவே சாதிப் பெயரைச் சொல்லி 'நம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப் பாடுபடுங்கள்' என்னும் தேர்தல் கால ஜாதிப் பற்று கோஷங்களை 'தாழ்த்தப்பட்டவர்கள்' தவிர்த்து எவரேனும் சொன்னால் அது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றே.

*****

இதெ கருத்தில் பதிவர் தமிழ் ப்ரியன் "முஸ்லிம்கள் ஓட்டு எங்களுக்கு தேவை இல்லை தி.மு.க சூசகம்! " என்ற அதிரை POST பதிவில் பின்னூட்டத்தில் பின்வருமாறு தெரிவித்திருந்தார்.

தமிழ் பிரியன் said...
திமுக ஒரு முஸ்லிமுக்கு சீட் கொடுப்பதன் மூலம் அவர் வந்து முஸ்லிம்களுக்கான ஒன்றையும் கிழிக்கப் போவதில்லை... முஸ்லிம்கள் அல்லாதவர்களே முஸ்லிம்களுக்கு சிறப்பு செய்கின்றார்கள். முஸ்லிம்களின் ஓட்டை வாங்கி சட்டமன்றம், பாராளுமன்றம் செல்லும் முஸ்லிம் உறுப்பினர்கள் சொத்தை மட்டுமே சேர்க்கின்றனர். இதில் எல்லா எழவுகளும் அடக்கமே.. அது முஸ்லிம் லீக்காக இருந்தால் என்ன? மமகவாக இருந்தால் என்ன ?


*****

அதைப் படித்ததும் உண்மையில் மிக்க நெகிழ்சியாக இருந்தது, மனிதம் மறந்து சாதியையும், மதத்தையும் வளர்க்க வேண்டும், அதைத் தூண்டவேண்டும் என்று நினைப்போருக்கு தமிழ் ப்ரியனின் பின்னூட்டம் சரியான சவுக்கடி. தமிழ் ப்ரியன் ஒரு இஸ்லாமிய பதிவர் நண்பர் தான். மத உணர்வின் வழி உணர்ச்சித் தூண்டலை இவரைப் போல் பலரும் புறக்கணித்தால் தமிழகத்தில் மதச் சண்டைகள் இல்லாது இருக்கும். தமிழ் ப்ரியனைப் பாராட்டி மகிழ்கிறேன்.

எல்லா மாநிலங்களில் ஓரளவு பலமும், பெரும்பான்மையோ பெரும் நிலையில் இருக்கும் பாஜக தமிழகத்தில் பரிதாப நிலையில் இருப்பதைப் பாருங்கள், தமிழகத்தில் 'பெரும்பான்மை இந்துக்கள்' என்கிற சொல்லாடலை 'தமிழக இந்துக்கள்' யாரும் காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. இதே மனநிலையில் 'முஸ்லிம்' பெயரைச் சொல்லும் சக்திகளுக்கு எதிராக 'தமிழக இஸ்லாமியர்கள்' நடந்து கொண்டால், தமிழகத்தில் மதவாதங்களும் அதன் வழி மதவெறி நுழைந்து வன்செயல் நடத்திவிட முடியாது

26 கருத்துகள்:

கிரி சொன்னது…

வழிமொழிகிறேன்

Tech Shankar சொன்னது…

தமிழ் பிரியனின் மனது உண்மையான வெள்ளை மனம் கொண்டது. அதனால்தான் இப்படி அவரால் தெளிவாக உரைக்க முடிந்தது.

அவருக்கு எனது வாழ்த்துகள்.

நட்புடன் ஜமால் சொன்னது…

அவர் இயல்பறிந்து பாராட்டிய தங்களுக்கும் பாராட்டுகள்.

மார்க்கம் என்று சொல்லியிருப்பது வாழ்க்கை முறையே அன்றி வேறில்லை.

இதை உணராதவர் பலர் என்றால்

இதை உணர்ந்து உணர்த்தாவர் அதை விட அதிகம்.

மனிதத்தோடு வாழும் வாழ்க்கையே வாழ்ந்த்தாக அர்த்தம்.

மனிதம் செத்துவிட்டால் பின்பு மதமென்ன மார்க்கமென்ன.

சம்பவங்களை சம்பவங்களாக மட்டுமே பார்க்கும் பாங்கு இன்னும் வரவில்லை. யாரோடு தொடர்பு படுத்தி பார்க்க இயலும் என்றே திரிகின்றார்கள்.

பெயர் அறிந்து கொள்ளும் நோக்கமே அவரின் வேறு அடையாளங்களை அறியும் நோக்கமாக உள்ளது.

இவற்றை விடுத்து
மனிதம் காப்போம்

ஆளவந்தான் சொன்னது…

பொதுவா சர்ச்சைக்குறிய விசயங்களை முடிந்த அளவுக்கு தவிர்த்து வருகிறேன்.

இருந்தாலும் பதிவில் ஏகப்பட்ட உள்குத்து இருக்குதே..

ஜாதிய ஒழிக்கனும்.. மதத்தை ஒழிக்கனும்.. .அதுக்கு ஒரு சாதியையோ மதத்தையோ உதாரணம் சொல்லி தான் ஒழிக்கனுமா என்ன?

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க.. சாப்பிடும்போது குரங்க பத்தி நினைக்காதேனு.. (சாப்பிடும்போது எல்லாம் சொல்லுவாங்களாம்) அந்த மாதிரி இருக்கே.

குப்பையை அகற்றுகிறீரா.. இல்ல கிளறுகிறீரா?

No offence intended :)

கோவி.கண்ணன் சொன்னது…

தம்பி ஜமால்,

முதன் முதலில் நீண்ட பின்னூட்டம் போட்டு என்னை திக்குமுக்காட வச்சிட்டே. உன் பதிவில் இவ்வளவு நீளமாக இடுகையை நீ எழுதி நான் பார்த்தது இல்லை.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//ஆளவந்தான் said...
பொதுவா சர்ச்சைக்குறிய விசயங்களை முடிந்த அளவுக்கு தவிர்த்து வருகிறேன்.

இருந்தாலும் பதிவில் ஏகப்பட்ட உள்குத்து இருக்குதே..

ஜாதிய ஒழிக்கனும்.. மதத்தை ஒழிக்கனும்.. .அதுக்கு ஒரு சாதியையோ மதத்தையோ உதாரணம் சொல்லி தான் ஒழிக்கனுமா என்ன?

எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாங்க.. சாப்பிடும்போது குரங்க பத்தி நினைக்காதேனு.. (சாப்பிடும்போது எல்லாம் சொல்லுவாங்களாம்) அந்த மாதிரி இருக்கே.

குப்பையை அகற்றுகிறீரா.. இல்ல கிளறுகிறீரா?

No offence intended :)
//

உறுத்தல் ஆனாலும் முள்ளை முள்ளால் எடுப்பதும் வழக்கம் தானே.

கோவி.கண்ணன் சொன்னது…

//கிரி said...
வழிமொழிகிறேன்
//

நன்றி !

கோவி.கண்ணன் சொன்னது…

//தமிழ்நெஞ்சம் said...
தமிழ் பிரியனின் மனது உண்மையான வெள்ளை மனம் கொண்டது. அதனால்தான் இப்படி அவரால் தெளிவாக உரைக்க முடிந்தது.

அவருக்கு எனது வாழ்த்துகள்.
//

தமிழ்நெஞ்சம் நன்றி !

அத்திவெட்டி ஜோதிபாரதி சொன்னது…

தங்கள் நண்பர் எப்படி தங்களிடம் பேசினாரோ அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!
இதை கலைஞர் படித்திருந்தால் அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாம் என்றிருப்பார்!

தமிழ்ப் பிரியன் ஆதங்கத்தில் சொன்னாரா, அல்லது வெறுத்துப் போய் சொன்னாரான்னு தெரியலை. இதெல்லாம் ஆரோக்கியமான விடயம் என்பது எனது தாழ்மையான கருத்து.
ஒரு அரசியல் கருத்து...! சரி சரி, வேண்டாம்!!

கோவி.கண்ணன் சொன்னது…

ஜோதிபாரதி said...
தங்கள் நண்பர் எப்படி தங்களிடம் பேசினாரோ அப்படியே எழுதியிருக்கிறீர்கள்!
இதை கலைஞர் படித்திருந்தால் அவன் இவன் என்று ஏக வசனம் வேண்டாம் என்றிருப்பார்!

தமிழ்ப் பிரியன் ஆதங்கத்தில் சொன்னாரா, அல்லது வெறுத்துப் போய் சொன்னாரான்னு தெரியலை. இதெல்லாம் ஆரோக்கியமான விடயம் என்பது எனது தாழ்மையான கருத்து.
ஒரு அரசியல் கருத்து...! சரி சரி, வேண்டாம்!!
//

ஜோதி பாரதி, 'முஸ்லிம்கள் அல்லாதவர்களே முஸ்லிம்களுக்கு சிறப்பு செய்கின்றார்கள்' என்று அவர் தெளிவாக குறிப்பிட்டு இருக்கிறார், இதை ஆதங்கம் அல்லது வெறுப்பு என்று நினைக்க முடிகிறதா ?

ஆ.ஞானசேகரன் சொன்னது…

சாதிய மதம் ரீதியான அரசியல் வரவேற்கதக்கது அல்ல என்பதும் என் எண்ணங்கள்... அது தாழ்த்தப்பட்ட இன சார்பாக இருந்தாலும் சரி அரசியலில் சமுக நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது என் ஆசைகள்...

TBCD சொன்னது…

நானும் படித்தேன் அந்த பின்னுட்டத்தை.

நானும் இனைந்துக்கொள்கிறேன் பாராட்டுவதில் :))

சென்ஷி சொன்னது…

தமிழ் பிரியனுக்கு எனது பாராட்டுக்களும் :-)

முகவைத்தமிழன் சொன்னது…

//இதே மனநிலையில் 'முஸ்லிம்' பெயரைச் சொல்லும் சக்திகளுக்கு எதிராக 'தமிழக இஸ்லாமியர்கள்' நடந்து கொண்டால்//

நடந்து கொள்வதால்தான் தமிழகத்தில் மதவாதம் தலைதூக்கவில்லை என்பதை தோழர் நினைவில் கொள்ளவும்.

Mahesh சொன்னது…

பதிவுல இருக்கற செய்தியை விட சக பதிவரை பாரட்டும் உங்கள் குணம் சிறப்பு !!

பாராட்டுகளும் வாழ்த்துகளும்... உங்களுக்கும் தமிழ் பிரியனுக்கும் !!

Athisha சொன்னது…

தமிழ்பிரியன் அண்ணனுக்குள்ளயும் என்னவோ இருந்திருக்கு பாரேன்..!

சூப்பரண்ணே..

கோவிண்ணே நல்ல தேவையான பதிவு.

SUBBU சொன்னது…

கோவி இந்த பதிவு ஆவி மாதிரி இருக்கு :))))))))))))

நாகை சிவா சொன்னது…

//எனவே சாதிப் பெயரைச் சொல்லி 'நம் மக்களுக்கு பிரதிநிதித்துவம் கிடைக்கப் பாடுபடுங்கள்' என்னும் தேர்தல் கால ஜாதிப் பற்று கோஷங்களை 'தாழ்த்தப்பட்டவர்கள்' தவிர்த்து எவரேனும் சொன்னால் அது புறக்கணிக்கப்பட வேண்டிய ஒன்றே.//

அது என்ன தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து. என்னை பொறுத்துவரை அவர்களும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான். உ.தா. நாகை தொகுதியை எடுத்து கொள்ளுவோம். எஸ்.சி தொகுதி பல ஆண்டுகளாக, செல்வராஜ், பத்மா, ஏ.கே.எஸ். விஜயன் என்ற தனிமனிதர்கள் அவர்கள் குடும்பத்தை தவிர்த்து அந்த சமூக மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? இவர்கள் தனிப்பட்ட கட்சியை சார்ந்தவர்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. அவர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சிகள் சாதித்ததை விட அந்த அந்த கட்சினருக்கும் இருக்கும் சுய இருப்பு வெறுப்புகளுக்கு தான் முன்னுரிம்மை.

கோவி.கண்ணன் சொன்னது…

//அது என்ன தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து. என்னை பொறுத்துவரை அவர்களும் அதே குட்டையில் ஊறிய மட்டை தான். உ.தா. நாகை தொகுதியை எடுத்து கொள்ளுவோம். எஸ்.சி தொகுதி பல ஆண்டுகளாக, செல்வராஜ், பத்மா, ஏ.கே.எஸ். விஜயன் என்ற தனிமனிதர்கள் அவர்கள் குடும்பத்தை தவிர்த்து அந்த சமூக மக்களுக்கு கிடைத்த நன்மை என்ன? இவர்கள் தனிப்பட்ட கட்சியை சார்ந்தவர்கள் என்பதை மறுப்பதற்கு இல்லை. அவர்களுக்காக தொடங்கப்பட்ட கட்சிகள் சாதித்ததை விட அந்த அந்த கட்சினருக்கும் இருக்கும் சுய இருப்பு வெறுப்புகளுக்கு தான் முன்னுரிம்மை.//

சிவா, ஏகேஎஸ் விஜயன் திமுக வேட்பாளர், அவர் ஜாதிப் பெயரைச் சொல்லி வாக்கு கேட்டால் அவரும் புறக்கணிக்கப்பட வேண்டியவரே என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. தாழ்த்தப்பட்டவர்கள் விழிப்புணர்வு குறைந்தவர்களாக இருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. தனித்தொகுதிகள் அவர்களுக்காக ஏற்படுத்தப்பட்டாலும் அதையும் கட்சி சார்பில் ஒருவரை நிறுத்தி அறுவடை செய்துவிடுகிறார்கள், பிறகு அம்மக்களுக்கு நன்மை எங்கே வரப்போகிறது ? அரசியல் சார்பாக அவர்கள் வாழ்வுரிமைக்கு எந்த வித போராட்டமும் நடத்தாக கட்சிகள் அந்த இடங்களையும் அபகரிப்பது ஜெனநாயக கொள்ளை. ஒதுக்கப்பட்டவர்கள் ஒன்றாக ஒன்றிணைவது தவிர்க்க முடியாத ஒன்று, எந்தப் பெயரில் புறக்கணிக்கப்படுகிறார்களோ, அதே பெயரில் இணைந்து தானே போராட முடியும், பிறசாதிக்காரர் எவர் மீதும் தீண்டாமைக் கொடுமைகள் நிகழ்த்த முடியாது, ஆனால் எல்லா சாதிக்காரனும் சேர்ந்து இவர்களை இழிவு செய்து கொண்டே இருக்கிறான் என்பதை மறுக்கமாட்டீர்கள்.

கோவி.கண்ணன் சொன்னது…

//Subbu said...
கோவி இந்த பதிவு ஆவி மாதிரி இருக்கு :))))))))))))

1:17 PM, April 07, 2009
//

ஆவியா ? பதிவு சூடாக இருக்குங்கிறிங்களா ?

கோவி.கண்ணன் சொன்னது…

//முகவைத்தமிழன் said...
//இதே மனநிலையில் 'முஸ்லிம்' பெயரைச் சொல்லும் சக்திகளுக்கு எதிராக 'தமிழக இஸ்லாமியர்கள்' நடந்து கொண்டால்//

நடந்து கொள்வதால்தான் தமிழகத்தில் மதவாதம் தலைதூக்கவில்லை என்பதை தோழர் நினைவில் கொள்ளவும்.
//

முகவைத்தமிழன் மிக்க நன்றி, இதே நிலை தொடர வேண்டும் என்பதே நல்லிணக்கம் போற்றுவோர்களின் எண்ணம்.

Vishnu - விஷ்ணு சொன்னது…

//உறுத்தல் ஆனாலும் முள்ளை முள்ளால் எடுப்பதும் வழக்கம் தானே.//

சரியாக சொன்னீர்கள். நேரரியாக சொன்னால் தானே யாரெல்லாம் தவறுகள் செய்கிறார்கள் என்பது தெரியவரும். சாதிகள் பெயரை நேரரியாக சொல்லி வாக்குகள் சேகரிப்பதை விட இது ஒன்றும் தவறாக தெரியவில்லை.

ராம்.CM சொன்னது…

சாதிய மதம் ரீதியான அரசியல் வரவேற்கதக்கது அல்ல என்பதும் என் எண்ணங்கள்... அது தாழ்த்தப்பட்ட இன சார்பாக இருந்தாலும் சரி அரசியலில் சமுக நோக்கம் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது என் ஆசைகள்...//

இதை நான் ஆமோதிக்கிறேன்.

சி தயாளன் சொன்னது…

தமிழ் பிரியனின் கருத்துடனும் ,ஜமாலின் கருத்துடனும் நான் ஒத்துப் போகின்றேன்..

மதம் மனிதத்துவத்தை மறைக்க கூடாது...

எம்.எம்.அப்துல்லா சொன்னது…

//எல்லா மாநிலங்களில் ஓரளவு பலமும், பெரும்பான்மையோ பெரும் நிலையில் இருக்கும் பாஜக தமிழகத்தில் பரிதாப நிலையில் இருப்பதைப் பாருங்கள், தமிழகத்தில் 'பெரும்பான்மை இந்துக்கள்' என்கிற சொல்லாடலை 'தமிழக இந்துக்கள்' யாரும் காதில் போட்டுக் கொள்வதே கிடையாது. இதே மனநிலையில் 'முஸ்லிம்' பெயரைச் சொல்லும் சக்திகளுக்கு எதிராக 'தமிழக இஸ்லாமியர்கள்' நடந்து கொண்டால், தமிழகத்தில் மதவாதங்களும் அதன் வழி மதவெறி நுழைந்து வன்செயல் நடத்திவிட முடியாது //

வரிக்கு வரி....
வரிக்கு வரி....
வரிக்கு வரி....
வரிக்கு வரி....
வரிக்கு வரி....
வரிக்கு வரி....

வழிமொழிகின்றேன். பாராட்டுகள் தமிழ் அண்ணா.

வால்பையன் சொன்னது…

அருமை!

ஆயிரம் மொக்கைகளை கை வலிக்க எழுதுவதை விட்டுவிட்டு இது மாதிரி நாலு பதிவு போட்டாலும் நச்சுன்னு இருக்கும்!

நண்பர் தமிழ் பிரியனுக்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்