பின்பற்றுபவர்கள்

20 ஏப்ரல், 2009

படைப்புக் கொள்கை ...2

முந்தைய பகுதியை இங்கே வாசிக்கவும். விலங்குகளுக்கும் நமக்கும் உள்ள அறிவின் வேறுபாடு ஒப்பிட்டு நமக்கு தேவையானவற்றை, விருப்பத்திற்கு ஏற்ப நம் செயல்களை அமைத்துக் கொள்ளும் திறன். விலங்குகளுக்கும் ஒப்பீட்டு அறிவு உண்டு, நண்பர் வீட்டுக்கு முதல் நாள் சென்றால் நம்மைப் பார்த்து குறைக்கும் நாய், இரண்டொரு நாளில் நம்மிடம் வால் ஆட்டுவதும் கூட ஒப்பீட்டு அறிவின் வழியாகத்தான். நாயைப் பொறுத்த அளவில் ஒப்பீட்டு அறிவு என்பது தெரிந்தவர்கள் / தெரியாதவர்கள் என்ற அறிதலை ஒப்பீடு செய்வதுடன் முடிகிறது. விலங்கு காட்சி சாலைகளில் விலங்குகள் செய்யும் திறன்மிக்க செயல்கள், அவற்றை அவ்வாறு பழக்குவதுன் மூலம் அவற்றை ஒரு செயலாக கற்றுக் கொண்டு செய்கிறது.

கிளிகள் எண்களை எண்ணுவதாகச் சொல்லி சட்டங்களில் எண்கள் பலகையை மாட்டிவிட்டு கிளி கூட்டல் கணக்கு செய்வதாக நம்மிடம் சொல்லுவார்கள், இரண்டு எண்களைப் (3,5) பற்றி நம்மிடம் சொல்லிவிட்டு அதன் கூட்டுத் தொகையை தற்பொழுது கிளி காட்டப்போவதாக நம்மிடம் சொல்லுவார்கள் அதே போல் இரண்டு எண்களின் கூட்டுத் தொகையான ஒரு எண்ணை வரிசையாக (9,8,6,7) மாட்டப்பட்டிருக்கும் எண்ணில்(8) ஒன்றை தேர்வு செய்து கிளி காண்பிக்கும். கிளிக்கு கூட்டல் தெரிந்திருக்கிறது, சொல்லிக் கொடுத்திருக்கிறார்கள் என்றே நாம் வியப்போம். ஆனால் கூட்டல் தொகையாக வரும் எண்ணை எப்போதும் ஒரே இடத்தில் தான் மாட்டி வைப்பார்கள். மற்றொரு முறை அதே நிகழ்ச்சிக்குப் போகும் போது வேறு வேறு (4,2) எண்ணைச் சொல்லி கிளியைக் கூட்டச் சொல்லிவிட்டு அதன் கூட்டுத்தொகைப் பலகையை (9,6,8,7) முன்பு கிளி எங்கே தொட்டுக் காட்டியதோ(8 இருந்த இடத்தில்) அதை இடத்தில் (6 ஐ) வைத்திருப்பார்கள்.

விலங்குகளுக்கான அறிவு எல்லைக் குட்பட்டது தான், உணவு தேடுவது, இனப்பெருக்கம் செய்து இனத்தைப் பெருக்கிக் கொள்வது, ஆபத்துகளில் இருந்து தன்னைக் காத்துக் கொள்வது இவைதான் அவற்றின் அறிவில் அடங்கி இருக்கும். அவற்றின் மரபு காரணிகளின் படி சொல்லிக் கொடுக்காவிட்டாலும் அப்படியே நடந்து கொள்ளும், உதாரணத்திற்கு கோழி தன் கால்களால் குப்பையைக் கிளறுகிறது என்பது நமக்கு தெரியும், ஒரே ஒரு கோழிக்குஞ்சாக வளர்க்கப்படும் கோழிக்குஞ்சும் வளர்ந்ததும் சொல்லிக் கொடுக்காமலேயே குப்பையைக் கால்களால் கிளறும். தாய்கோழியுடன் வளரும் கோழிக்குஞ்சு அதை விரைவாக கற்றுக் கொள்ளும் அவ்வளவுதான் வேறுபாடு. மிகச் சில விலங்குகளே காணமால் போன தனது கூட்டத்தில் இருந்த விலங்கு பற்றி நினைவு வைத்திருக்கும். யானைக் கூட்டத்தில் உள்ள யானை ஓர் இடத்தில் இறந்தால் அந்த இடத்தைக் கடக்கும் போதெல்லாம் இறந்த யானை (எலும்புகள்) கிடந்த இடத்தில் யானைக் கூட்டம் சிறிது நேரம் நின்றுவிட்டுப் போகுமாம். மற்றபடி விலங்குகளுக்கு மனிதர்களுக்கு இருப்பது போல் இறப்பும், இறப்பிற்கு பிறகு என்ன ஆவோம் என்கிற எண்ணங்களோ, 'இறைவன்' இருக்கிறான் என்ற சிந்தனைகளெல்லாம் இருக்காது.

படைப்புக் கொள்கை எதுவாக இருந்தாலும் கோழி முதலில் படைக்கப்பட்டதா ? முட்டை முதலில் படைக்கப்பட்டதா ? என்று கேட்டால் கோழியைத்தான் சொல்லுவார்கள். கோழியும் சரி முட்டையும் சரி உயிர்த்தன்மை உள்ள ஒரு உயிரின வடிவத்தின் இருநிலைகள் என்று சொல்வது தான் சரி என்றே நான் நினைக்கிறேன். வண்ணத்துப் பூச்சிகள், முட்டை, புழு, பூச்சி என மூன்று நிலைகளைக் கொண்டு இருக்கிறது. மற்றவையெல்லாம் உயிரனு, அது சூழலில் முட்டையுடன் இணையும் போது கருவளர்ச்சி / முட்டையாக உருப்பெருதல் என்பதாக இருக்கிறது, வளர்ந்த உயிரினம் (adult) பல உயிரனுக்களைத் தோற்றுவிக்கும் நிலையைப் பெருகிறது, அதாவது இனம் பெருக்குதல் அல்லது இனப்பெருக்கம்.

உயிரனங்களில் வளர்ச்சி மற்றும் இறப்பு தவிர்த்துப் பார்த்தால் அவற்றின் தொடர்ச்சி என்றென்றும் இருப்பதாக கொள்வதில் தவறு இல்லை என்றே கருதுகிறேன். பொதுவாக மனித மனம் பொருள்கள் எதற்குமே மூலம் என்று ஒன்று இருப்பதாகவே நம்பும். அப்படி எண்ணித்தான் இன்றைய அறிவியல் என்பது பிரபஞ்ச தோற்றம் பெருவெடிப்பில் தொடங்குவதாக நம்புகிறது. இதற்குக் மாற்றாக மத நம்பிக்கையாளர்கள் இறைவன் தன் சித்தத்தில் அனைத்தையும் தோன்ற வைத்ததாக நம்புகிறார்கள். விருப்பு வெறுப்பு அற்றவன் என்று சொல்லப்படும் இறைவன் உலகையும், உயிரனங்களையும் தோன்றச் செவதற்கான அவன் விருப்பம் எத்தகையது ? அது விருப்பத்தில் வராதா என்று கேட்டால் நேரடியாக பதில் வருவதே இல்லை. ஒரு சிலர் இறைவன் தான் தோன்றி என்கிறார்கள். இங்கே தோன்றி என்று சொல்வதன் மூலம் எதோ ஒரு நாள் இறைவன் வெளிப்பட்டதாகவும், அதன் பிறகு அனைத்தையும் படைத்ததாக நம்புகிறார்கள், அப்படி என்றால் இறைவன் தான் தோன்றுவதற்கு முன் எதுவுமே இல்லையா என்று தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்பவர்களாகவும் அவர்கள் இல்லை.

இன்னும் சிலர் இறைவன் என்றென்றும் இருப்பவன், அழிவற்றவன் அவனே அனைத்தையும் தோன்றச் செய்தான் என்கிறார்கள். தோன்றச் செய்தல் என்ற செயல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு முன் எவ்வளவு காலம் இறைவன் அப்படியே இருந்தான் ? என்ற கேள்விக்கு இவர்கள் சரியான விளக்கம் அளிப்பது இல்லை. இறைவன் தான் தோன்றி என்றால் படைப்புகள் என்று சொல்லப்படுபவைகள் ஏன் தான் தோன்றியாக இருக்கக் கூடாது, இறைவன் என்றென்றும் இருப்பவன் என்றால் பொருள்கள், உயிரினங்கள் அனைத்தும் என்றென்றும் இருப்பவை என்று ஏன் சொல்லக் கூடாது என்று கேட்டால் அதற்கு பதில் சொல்லாது தவிர்பர்.

தங்கம் என்கிற உலோகப் பொருளை எடுத்துக் கொள்வோம், பூமியில் இருக்கும் பல்வேறு கனிம பொருள்களில் அதுவும் ஒன்று. அதன் பயனையும், மதிப்பையும் மனிதர்கள் தான் முடிவு செய்து பயன்படுத்துகிறார்கள். மதம் தொடர்பான எந்த நூலிலும் பூமியில் இன்னின்ன கனிம வளங்களை புதைத்து வைத்திருப்பதாக சொல்லி இருக்கவில்லை. அப்படி சொல்லி இருந்திருதால் அறிவியலாளர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி நடத்தி அவற்றை பிரித்தெடுக்கும் வழிகளைக் கண்டு கொள்வதற்கு எளிமையாக இருந்திருக்கும், எந்தந்த இடத்தில் திரவ எரிபொருள் கிடைக்கிறது என்பதும் எந்த ஒரு மதத்திலும் சொல்லப்படவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும், குறைந்த அளவாக திரவ எரிபொருள்கள் பற்றி மதங்களில் எதுவும் கூறப்பட்டு இருக்கிறதா என்று பார்த்தால் அதுவும் இல்லை. வானத்திற்கு எல்லை இல்லை என்பதை நம்பினாலும்...கண்டிப்பாக வானம் / அல்லது பரவெளிக்கு எல்லை இருக்கும், அதற்கும் பின்னாலும் எதோ இருக்கும் என்பதையும் அதே மனம் நம்பும். பொருள்களும், உயிரினங்களும் படைக்கப்பட்டதாக நம்புவதும் அப்படித்தான்.

படைப்புக் கொள்கை தொடரும்...

19 கருத்துகள்:

VIKNESHWARAN ADAKKALAM சொன்னது…

மற்ற உயிரினங்களைக் காட்டினும் யானைக்கு ஞாபக திறன் அதிகம் என சொல்லப்படுகிறது.

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

தொடரட்டும்....

Gajani சொன்னது…

நன்றி உங்கள் உங்கள் படைப்பு இன்னும் தொடரட்டும்

Unknown சொன்னது…

//சட்டங்களில் எண்கள் பலகையை மாட்டிவிட்டு கிளி கூட்டல் கணக்கு செய்வதாக நம்மிடம் சொல்லுவார்கள்//
எல்லாவற்றிலும் சில விதி விலக்குகளும் உண்டு. சமீபத்தில் தொலைக்காட்சியில் Pet Animals என்ற ஒரு காட்சி பார்த்தேன். அதில் ஒரு பெண் தான் வளர்க்கும் கிளியைக் கொண்டு சில நிமிட நிகழ்ச்சி செய்தார். அந்தக் கிளியிடம் ஒற்றை இலக்க எண்ணில் கூட்டல் கணக்குகளை கேட்டால் அதன் கூட்டுத் தொகைக்கேற்ப தன் தலையை ஆட்டிக் காண்பித்தது. பார்வையாளர்கள் நடுவர்கள் சிலரும் கேள்வி கேட்டனர். சரியான கூட்டுத் தொகையை கிளி தலையசைத்துக் காண்பித்தது அதிசயமாக இருந்தது. சில அசாதாரணமானவற்றில் இதுவும் ஒன்று.

மற்றவற்றுக்கு மீண்டும் வருவேன்.

கோவி.கண்ணன் சொன்னது…

//எல்லாவற்றிலும் சில விதி விலக்குகளும் உண்டு. சமீபத்தில் தொலைக்காட்சியில் Pet Animals என்ற ஒரு காட்சி பார்த்தேன். அதில் ஒரு பெண் தான் வளர்க்கும் கிளியைக் கொண்டு சில நிமிட நிகழ்ச்சி செய்தார். அந்தக் கிளியிடம் ஒற்றை இலக்க எண்ணில் கூட்டல் கணக்குகளை கேட்டால் அதன் கூட்டுத் தொகைக்கேற்ப தன் தலையை ஆட்டிக் காண்பித்தது. பார்வையாளர்கள் நடுவர்கள் சிலரும் கேள்வி கேட்டனர். சரியான கூட்டுத் தொகையை கிளி தலையசைத்துக் காண்பித்தது அதிசயமாக இருந்தது. சில அசாதாரணமானவற்றில் இதுவும் ஒன்று.//

கிளி சோசியத்தில் ஒவ்வொரு சீட்டை எடுக்கும் போதும் சோதிடரின் விரல் ஆடுகிறதா என்று கிளி பார்த்துவிட்டு எடுக்கும், அவர் நிப்பாட்டியதும் அந்த சீட்டை எடுத்துக் கொண்டு வந்து கொடுக்கும். அதே போல் அந்த பெண் கிளியை எதாவது ஒரு செய்கைக்கு பழக்கப்படுத்தி ஒற்றைப்படை எண்ணின் கூட்டுத்தொகைக்கு தலையாட்ட வைத்திருப்பார்

Suresh சொன்னது…

நான் ஈழம் பற்றி ஒரு பத்வு செய்திருக்கிறேன் படித்து சொல்லுங்க நன்பா

Suresh சொன்னது…

யானைக்கு அறிவு ஜாஸ்தி

Unknown சொன்னது…

//அந்த பெண் கிளியை எதாவது ஒரு செய்கைக்கு பழக்கப்படுத்தி ஒற்றைப்படை எண்ணின் கூட்டுத்தொகைக்கு தலையாட்ட வைத்திருப்பார்//
விரல்களின் மூலம் எந்த சைகையும் செய்யவில்லை. ஏனெனில் அதை நான் குறிப்பாக கவனித்தேன். மற்றவர்கள் கேள்வி கேட்டபோது அவர் கிளியைப் பார்க்காமல் பார்வையாளர் பக்கமே பார்த்திருந்தார். வேறெதும் உடல் மொழி சைகை கொடுத்தாரா என விளங்கவில்லை.

Unknown சொன்னது…

இடுகையிலுள்ள சில கருத்துகளுக்கு நானறிந்த வரையில், இஸ்லாமிய முறையில் சில விளக்கங்கள்.

//விருப்பு வெறுப்பு அற்றவன் என்று சொல்லப்படும் இறைவன் உலகையும், உயிரனங்களையும் தோன்றச் செவதற்கான அவன் விருப்பம் எத்தகையது? அது விருப்பத்தில் வராதா என்று கேட்டால் நேரடியாக பதில் வருவதே இல்லை//
இறைவன் நீதி செலுத்துபவன். விரும்பியதைச் செய்பவன். அவன் கேள்வி கேட்கப்படுபவனல்லன், கேள்வி கேட்பவன். இப்போது உங்கள் கேள்வியே எழாது.

//ஒரு சிலர் இறைவன் தான் தோன்றி என்கிறார்கள். இங்கே தோன்றி என்று சொல்வதன் மூலம் எதோ ஒரு நாள் இறைவன் வெளிப்பட்டதாகவும், அதன் பிறகு அனைத்தையும் படைத்ததாக நம்புகிறார்கள், அப்படி என்றால் இறைவன் தான் தோன்றுவதற்கு முன் எதுவுமே இல்லையா என்று தங்களுக்குள்ளேயே கேட்டுக்கொள்பவர்களாகவும் அவர்கள் இல்லை//
இறைவன் படைத்தவற்றிலேயே இன்னும் எத்தனை எத்தனையோ கோடி சூட்சுமங்கள் மனித அறிவுக்குள் அடைபடாமல் விஞ்சி நிற்கிறது. அவன் எப்போதும் நிலைத்திருப்பவன். அவனுக்கு முன் என்ற வார்த்தையே தவறானது. அத்தகைய ஆராய்ச்சிகளினால் மனித சமூகத்துக்கு எத்தகைய நன்மைகளும் கிடைக்கப் போவதில்லை.

//தோன்றச் செய்தல் என்ற செயல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு முன் எவ்வளவு காலம் இறைவன் அப்படியே இருந்தான் ? என்ற கேள்விக்கு இவர்கள் சரியான விளக்கம் அளிப்பது இல்லை//
படைப்புகளுக்கு முற்பட்ட காலம் பற்றி இஸ்லாமிய வழிமுறைகளில் சில குறியீடுகள் கிடைக்கின்றன. வெறும் காற்று மண்டலம்தான் என்று சொல்வதை விடவும் இஸ்லாம் கூறும் புகை மண்டலம் என்பதே அறிவியலுக்கு மிகவும் பொருந்தி வருவதாக சில அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

//இறைவன் தான் தோன்றி என்றால் படைப்புகள் என்று சொல்லப்படுபவைகள் ஏன் தான் தோன்றியாக இருக்கக் கூடாது, இறைவன் என்றென்றும் இருப்பவன் என்றால் பொருள்கள், உயிரினங்கள் அனைத்தும் என்றென்றும் இருப்பவை என்று ஏன் சொல்லக் கூடாது//
படைப்புகள் சில நியதிகளுக்கு கட்டுப்பட்டு, அந்த வரையறைகளை மீறாமல் அவை இயங்கி வருவதை காணும்போது, இந்த நியதிகளை உருவாக்கி இயக்கும் ஒன்று அல்லது ஒருவன் இருக்க வேண்டும் என்றே மனது சிந்திக்கிறது.

//மதம் தொடர்பான எந்த நூலிலும் பூமியில் இன்னின்ன கனிம வளங்களை புதைத்து வைத்திருப்பதாக சொல்லி இருக்கவில்லை. அப்படி சொல்லி இருந்திருதால் அறிவியலாளர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி நடத்தி அவற்றை பிரித்தெடுக்கும் வழிகளைக் கண்டு கொள்வதற்கு எளிமையாக இருந்திருக்கும்//
நெல் எங்கே நன்றாக விளையும்? பயிர்களில் எங்கெங்கு எப்போது பூச்சி அடித்து நாசமாகும்? என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தால் விவசாயிகள் அதிக துயரமில்லாமல் நன்மையடைய முடியும்தான். மனித வாழ்க்கையின் தேடல்களுக்காக இறைவன் சில அறிவுகளை மறைத்து வைத்து சிந்தியுங்கள் என்ற கட்டளையும் இட்டுள்ளான். அறிவை நோக்கி பயணப்பட அழைப்பும் விடுக்கின்றான்.

உதாரணமாக எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு என்பது இஸ்லாமிய நம்பிக்கை. இறைவன் சில புதிர்களை மனிதன் ஆயந்தறிந்து கொள்ள மறைத்து அமைத்துள்ளான். அவன் கேள்வி கேட்கப் படுபவனல்லன்.

அந்த அமைப்பிலுள்ள நன்மைகளை அறியாது மனிதம் அவசரப்பட்டு விடலாம்.

ஆ.ஞானசேகரன் சொன்னது…

நல்ல பதிவு,, நீங்கள் என்னதான் சொல்லுங்கள்... கடவுள் கடவுள்தான்.
அவனின்றி ஒன்றும் ஆகாது... ஹிஹிஹிஹி... எனக்கு தெரியாது எல்லாரும் சொல்லுகின்றார்கள்,.. அதனால்தான் என் பதிவில் இங்கு முடிவில் மானுடம் காக்காப்படவேண்டும் என்றே முடித்துள்ளேன்..

கோவி.கண்ணன் சொன்னது…

கோவி.கண்ணன் said...
//VIKNESHWARAN said...
மற்ற உயிரினங்களைக் காட்டினும் யானைக்கு ஞாபக திறன் அதிகம் என சொல்லப்படுகிறது.
//

உடல் திறனும் மிகுதி !
அதனால் அசைவ உணவை தவிருங்கள் !
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//T.V.Radhakrishnan said...
தொடரட்டும்....
//

யுகம் தோறுமா ?
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Gajani said...
நன்றி உங்கள் உங்கள் படைப்பு இன்னும் தொடரட்டும்
//

நன்றி.

கோவி.கண்ணன் சொன்னது…

// Suresh said...
நான் ஈழம் பற்றி ஒரு பத்வு செய்திருக்கிறேன் படித்து சொல்லுங்க நன்பா
//

உங்களுக்கு பின்னூட்டியாச்சு !

கோவி.கண்ணன் சொன்னது…

//Suresh said...
யானைக்கு அறிவு ஜாஸ்தி
//

யானை அறிவு மிக்கது அல்லது யானைக்கு அறிவு மிகுதி என்று சொல்வதே சரியான சொற்பதம் !

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
//அந்த பெண் கிளியை எதாவது ஒரு செய்கைக்கு பழக்கப்படுத்தி ஒற்றைப்படை எண்ணின் கூட்டுத்தொகைக்கு தலையாட்ட வைத்திருப்பார்//
விரல்களின் மூலம் எந்த சைகையும் செய்யவில்லை. ஏனெனில் அதை நான் குறிப்பாக கவனித்தேன். மற்றவர்கள் கேள்வி கேட்டபோது அவர் கிளியைப் பார்க்காமல் பார்வையாளர் பக்கமே பார்த்திருந்தார். வேறெதும் உடல் மொழி சைகை கொடுத்தாரா என விளங்கவில்லை.

5:45 PM, April 20, 2009
//
மேஜிக் மேஜிக் போல் ஆராய்ச்சிக்குறியது

கோவி.கண்ணன் சொன்னது…

******////தோன்றச் செய்தல் என்ற செயல் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தொடங்கி இருக்க வேண்டும் என்று வைத்துக் கொண்டாலும், அதற்கு முன்

எவ்வளவு காலம் இறைவன் அப்படியே இருந்தான் ? என்ற கேள்விக்கு இவர்கள் சரியான விளக்கம் அளிப்பது இல்லை//
படைப்புகளுக்கு முற்பட்ட காலம் பற்றி இஸ்லாமிய வழிமுறைகளில் சில குறியீடுகள் கிடைக்கின்றன. வெறும் காற்று மண்டலம்தான் என்று

சொல்வதை விடவும் இஸ்லாம் கூறும் புகை மண்டலம் என்பதே அறிவியலுக்கு மிகவும் பொருந்தி வருவதாக சில அறிஞர்கள் கருத்து

தெரிவித்துள்ளனர்.******
அறிவியலை இறைக் கொள்கையுடனோ, இறைக் கொள்கையை அறிவியலிலுடனோ பொருத்துவது முரணான ஒன்று, அறிவியல் வெறும் காற்று

மண்டலம் இருந்ததாகச் சொல்லும் தகவலை நீங்கள் எங்கிருந்து பெற்றீர்கள், சுட்டிக் கொடுத்தால் நல்லது. இறையியல் என்பது முழுக்க முழுக்க

நம்பிக்கை சார்ந்த ஒன்று அறிவியல் பெளதீகம் சார்ந்த ஒன்று, மனம் தொடர்புடையது இறை நம்பிக்கை, செயல் தொடர்புடையது அறிவியல். இது

இப்படி என்றே நினைத்துக் கொள் என்று வழியுறுத்துவது இறை நம்பிக்கை. இது இப்படித்தான் என்று செய்து காட்டுவது அறிவியல். நான் அறிவியல்

உயர்ந்தது என்ற பொருளில் சொல்லவரவில்லை. அறிவியல் உண்மைகள் மாற்றத்துக்கு உட்பட்டவை. நாளைக்கே பூமியின் ஈர்ப்பு விசை குறைந்தால்

கிராவிட்டி கணக்கியல் பார்முலாக்களும் மாறும்.

******///இறைவன் தான் தோன்றி என்றால் படைப்புகள் என்று சொல்லப்படுபவைகள் ஏன் தான் தோன்றியாக இருக்கக் கூடாது, இறைவன்

என்றென்றும் இருப்பவன் என்றால் பொருள்கள், உயிரினங்கள் அனைத்தும் என்றென்றும் இருப்பவை என்று ஏன் சொல்லக் கூடாது//
படைப்புகள் சில நியதிகளுக்கு கட்டுப்பட்டு, அந்த வரையறைகளை மீறாமல் அவை இயங்கி வருவதை காணும்போது, இந்த நியதிகளை உருவாக்கி

இயக்கும் ஒன்று அல்லது ஒருவன் இருக்க வேண்டும் என்றே மனது சிந்திக்கிறது.*****

அதைத்தான் கடைசி பத்தியில் சொல்லி இருக்கிறேன். என்ன தான் வானத்துக்கு எல்லை இல்லை என்ற எண்ணம் இருந்தாலும், எல்லையில்லாமல்

ஒன்று இருக்க முடியுமா ? என்று நாம் சிந்திப்பது இல்லையா ? மணலில் தண்ணீரைக் கொட்டினால் ஆவியாகிவிடும், மறுநாள் காற்று அடிக்காமல்

இருந்தால் தண்ணீர் கொட்டிய தடயம் இருக்கும், தண்ணீர் தான் இருக்காது, இதில் எதும் அதிசயம் இருக்கிறதா ? நீர் காற்றின் வெப்பத்தினால்

ஆவி ஆகுவது இயற்பியல் விதி. சுற்றுவிசையின் காரணமாக அனைத்தும் இயங்கிவருகின்றன.

******//மதம் தொடர்பான எந்த நூலிலும் பூமியில் இன்னின்ன கனிம வளங்களை புதைத்து வைத்திருப்பதாக சொல்லி இருக்கவில்லை. அப்படி

சொல்லி இருந்திருதால் அறிவியலாளர்களுக்கு பல்வேறு ஆராய்ச்சி நடத்தி அவற்றை பிரித்தெடுக்கும் வழிகளைக் கண்டு கொள்வதற்கு எளிமையாக

இருந்திருக்கும்//
நெல் எங்கே நன்றாக விளையும்? பயிர்களில் எங்கெங்கு எப்போது பூச்சி அடித்து நாசமாகும்? என்றெல்லாம் சொல்லப்பட்டிருந்தால் விவசாயிகள்

அதிக துயரமில்லாமல் நன்மையடைய முடியும்தான். மனித வாழ்க்கையின் தேடல்களுக்காக இறைவன் சில அறிவுகளை மறைத்து வைத்து

சிந்தியுங்கள் என்ற கட்டளையும் இட்டுள்ளான். அறிவை நோக்கி பயணப்பட அழைப்பும் விடுக்கின்றான்.******
இது உங்கள் சொந்தக்கருத்து இல்லை என்றாலும், கேள்வி எழுப்பும் போது 'சில அறிவுகளை மறைத்து' என இப்படி முட்டுக்கட்டைப் போட்டுக்

கொள்வதை நீங்கள் நம்புகிறீர்கள், நான் நம்புவதில்லை :)

//உதாரணமாக எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு என்பது இஸ்லாமிய நம்பிக்கை. இறைவன் சில புதிர்களை மனிதன் ஆயந்தறிந்து கொள்ள

மறைத்து அமைத்துள்ளான். அவன் கேள்வி கேட்கப் படுபவனல்லன்.

அந்த அமைப்பிலுள்ள நன்மைகளை அறியாது மனிதம் அவசரப்பட்டு விடலாம்.//

உங்கள் நம்பிக்கையை நான் குறை சொல்லவில்லை, அதற்கு எனக்கு உரிமையும் கிடையாது, மதச் சார்பற்று இறை நம்பிக்கைப் பற்றி பொதுவாக

கேள்வி எழுப்பும் உரிமை எனக்கு இருக்கிறது :)

நேரம் தாழ்த்திய மறுமொழிக்கு வருந்துகிறேன்

Radhakrishnan சொன்னது…

நீங்கள் எழுதியிருக்கும் பல விசயங்கள் ஆன்மிகத்தால் மறுக்கப்படும் என்பது சற்றும் ஐயமில்லை, அதையே நண்பர் சுல்தான் அவர்களின் விளக்கமும் எடுத்துக்காட்டுகிறது.

நானும் உங்களைப் போலவே 'இறைவன் தேவையற்றவன்' எனும் கருத்து இஸ்லாமில் நிலவுவதைக் குறித்து என்னத் தேவைக்காக இதனையெல்லாம் படைத்தான் என கேள்வி எழுப்பி இருந்தேன், அதற்கான பதிலை அங்கே எனக்குத் தரப்படாவிட்டாலும் இங்கே 'இறைவனிடம் கேள்வி எழுப்பக்கூடாது' என சுல்தான் அவர்களது பதிவின் மூலம் அறிவுறுத்தப்பட்டேன்.

நீங்கள் சொல்லும் பல விசயங்களை நான் தொட்டுச் செல்வது கண்டு ஒரே சிந்தனையோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் பலர் இதுபோன்ற எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போவதற்கு காரணம் மதம் மற்றும் இறைவன் மேலிருக்கும் பற்றுதான். அதைத்தாண்டிய பார்வை ஒன்று எழுமெனில் இதுபோன்ற அழகிய கருத்துக்கள் மனதைக் கவரும்.

ஆன்மிகமும் இல்லை, அறிவியலும் இல்லை எனச் சொல்லும்போது எந்தப் பக்கம் சாய்வது என்கிற மனோபாவம் மனிதருக்குள் வந்துவிடுகிறது.

கோழி முட்டை பற்றி நானும் ஒரு வரி நுனிப்புல்லில் எழுதி இருக்கிறேன். நியூக்ளிக் அமிலங்கள், புரதங்கள் என!

மிகவும் அருமையான கட்டுரை.

கோவி.கண்ணன் சொன்னது…

//நீங்கள் எழுதியிருக்கும் பல விசயங்கள் ஆன்மிகத்தால் மறுக்கப்படும் என்பது சற்றும் ஐயமில்லை, அதையே நண்பர் சுல்தான் அவர்களின் விளக்கமும் எடுத்துக்காட்டுகிறது. //


இராதகிருஷ்ணன் ஐயா,

சுல்தான் அவர்களுக்கு மறுப்புப் போட நானும் விரும்பவில்லை, அவரது சொந்தக் கருத்து என்று எதும் இல்லை. மதத்தில் இருப்பவற்றை நம்பிக்கைக் கொண்டு இங்கு சொல்கிறார். நம்பிக்கைகளை நான் விமர்சனம் செய்வது எப்போதென்றால் அந்த நம்பிக்கையால் வேறொருவர் பாதிப்பு அடைவது போல் இருந்தால் விமர்சிப்பேன். சுல்தான் அவர்களின் நம்பிக்கையால் யாருக்கும் நட்டமில்லை :)

//நானும் உங்களைப் போலவே 'இறைவன் தேவையற்றவன்' எனும் கருத்து இஸ்லாமில் நிலவுவதைக் குறித்து என்னத் தேவைக்காக இதனையெல்லாம் படைத்தான் என கேள்வி எழுப்பி இருந்தேன், அதற்கான பதிலை அங்கே எனக்குத் தரப்படாவிட்டாலும் இங்கே 'இறைவனிடம் கேள்வி எழுப்பக்கூடாது' என சுல்தான் அவர்களது பதிவின் மூலம் அறிவுறுத்தப்பட்டேன். //

நான் இறைவன் மனிதனுக்கு தேவை அற்றவன் என்பதாக வழியுறுத்தவில்லை. மதங்கள் காட்டும் கொள்கை வழி இறைவனைப் பொருத்திப் பார்க்காதீர்கள் ஏனென்றால் நாத்திகன் ஏற்கிறானோ இல்லையோ அது பிறமதத்தினரால் ஏற்றுக் கொள்ளப்படுவது கிடையாது மற்றும் மதம் காட்டும் இறைவனை பொதுப்படுத்த முடியாது என்று சொல்லவிழைகிறேன்

//நீங்கள் சொல்லும் பல விசயங்களை நான் தொட்டுச் செல்வது கண்டு ஒரே சிந்தனையோ என எண்ணத் தோன்றுகிறது. மேலும் பலர் இதுபோன்ற எண்ணங்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்காமல் போவதற்கு காரணம் மதம் மற்றும் இறைவன் மேலிருக்கும் பற்றுதான். அதைத்தாண்டிய பார்வை ஒன்று எழுமெனில் இதுபோன்ற அழகிய கருத்துக்கள் மனதைக் கவரும். //

பிறப்பு இறப்பு இயக்கம் இறைவன் ஆகியவற்றை மதங்களைக் கடந்து சிந்திப்பவர்களின் எண்ணங்கள் ஒன்றாக இருக்க்கும், அதில் நாத்திகத் தன்மையும் இருக்கும் :)

//ஆன்மிகமும் இல்லை, அறிவியலும் இல்லை எனச் சொல்லும்போது எந்தப் பக்கம் சாய்வது என்கிற மனோபாவம் மனிதருக்குள் வந்துவிடுகிறது. //

எந்த பக்கமாவது சாய்ந்து அதற்கு முட்டுக் கொடுக்க வேண்டும் என்று நினைக்க வேண்டுமா ?
:) சுயதேடல் வழி ஆன்மிகத்திற்கு எந்தபக்கமும் இருக்கத் தேவை இல்லை

//கோழி முட்டை பற்றி நானும் ஒரு வரி நுனிப்புல்லில் எழுதி இருக்கிறேன். நியூக்ளிக் அமிலங்கள், புரதங்கள் என!//

கோழி முட்டை மட்டுமல்ல உயிரினங்கள் அனைத்திற்குமே மூலம் உண்டு என்று நான் நம்புவதில்லை. என்னைப் பொருத்த அளவில் அனைத்தும் என்றுமே இருப்பது. ஆடை அணிந்தே வாழவேண்டும் என்று மனிதனிக்கு தோல் மெல்லியதாக இருப்பதன் காராணம் என்ன ? எந்த விலங்கிற்காவது அப்படி ஒரு தேவை இருக்கிறதா ? ஹொமோ எரெக்டஸ் நிர்வாணமாக திரிந்தாக அறிவியல் சொல்லும் ஆனால் அதுவும் கோட்பாடு அடிப்படையான ஊகம் மட்டுமே. நமக்கு முன்பு பல நாகரீகங்கள் தோன்றி இருக்கலாம் அழிந்து போனதால் ஆதாரம் எதுவும் கிடைக்காமல் போய் இருக்கலாம். அழிவில் இருந்து தப்பியவர்கள் பல்வேறு குகைகளில் வாழ்ந்து மீண்டும் நாகரீக நிலைக்கு வந்திருக்கலாம் யார் கண்டது ?
:)))))))

//மிகவும் அருமையான கட்டுரை. //

நன்றி !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்