பின்பற்றுபவர்கள்

13 ஆகஸ்ட், 2007

மரணத்தை கொண்டாட முடியுமா ?

'எம் மகன்' படத்தில் ஒரு காட்சி அதில் வயதான கிழவர் (கிழவர் சொல்லக்கூடாதா ? ) மரணமடையும் போது அதை விமர்சையாக கொண்டாடுவார்கள். அந்த படத்திற்கு முன் இப்படி ஒரு காட்சியை திரையில் பார்த்தது இல்லை. ஆனால் பொதுவாக வயதானவர்கள் இறக்கும் போது மனைவி மகன் - மகளைத் தவிர வேறு எவரும் அழுவதில்லை. பேரப்பிள்ளைகள் எதுவும் நடக்காதது போல அங்கும் இங்கும் ஓடிக் கொண்டிருப்பார்கள், பேரப்பிள்ளைகள் நெய்பந்த நேரத்திற்கு வந்து அதனுடன் சுற்றிவருவதுடன் சரி. பொதுவாக மிகச் சிறுவயது குழந்தைகளை மன அளவில் மரணம் பாதிப்பதில்லை (பின்னால் சிரமப்படுவதைச் சொல்லவில்லை) என்பது இயற்கை அவர்களுக்கு கொடுத்திருக்கும் ஒரு பண்பு.

இறந்தவர் வயதானவராக இருக்கும் போது மரணம் அச்சமூட்டுவதாக அமைவதில்லை. பிறக்கும் முன்பே மரணம் நிச்சயிக்கப்படுகிறதென்பதுதான் உண்மை. முழுவாழ்கை என்பது பெற்றோர்கள் பராமரிப்பில் வளர்வது, பின்பு தனக்கென்று ஒரு குடும்பம், அதன்பிறகு பெற்றோர்களை பாதுகாப்பதுடன், பொறுப்புணர்வுடன் பிள்ளைகளை வளர்த்து அவர்களுக்கென ஒரு குடும்பம் அமைத்துவிட்டு அதனை செய்துவிட்ட பிறகு தனிப்பட்ட வாழ்க்கையில் (சிலருக்கு பணம் தவிர்த்து ?) வேறு எந்த குறிக்கோளும் இல்லை.

இவற்றை முறையாக செய்துவிட்டால் வயதான பின்பு எந்தவித ஏக்கமும் இருக்காது என்றே நினைக்கிறேன். முழுவாழ்க்கை வாழ்ந்த திருப்தி இருக்கவே செய்யும். வயதானவர்களிடம் உறையாடும் போது 'எனக்கென்ன எல்லாத்தையும் பார்த்துவந்தாச்சு, செய்யவேண்டிய கடமைகளை செய்தாச்சு, நேரம் வந்தால் போய் சேரவேண்டியதுதான் பாக்கி' என்று தெளிவாக சொல்லுவார்கள். இப்படிப் பட்டவர்களின் மரணம் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியதே.

இளைஞர்களில் சிலர் 'தப்பு' செய்துவிட்டு, 'எனக்கென்ன எல்லாத்தையும் அனுபவித்துவிட்டேன் செத்தா கூட பரவாயில்லை' என்பதைக் கேட்டு இருக்கிறேன். வாழ்க்கை என்பது கலவியில் இருக்கிறது அதை அடைந்தால் எல்லாவற்றையும் அனுபவித்துவிட்டதாக சொல்வதைக் கேட்கும் போது வாழ்வையும் மரணத்தைப் பற்றியும் தவறான புரிதாலாக அது தெரிகிறது. இன்னும் சிலர் திருமண பந்தத்தில் சிக்குவதற்கே அச்சப்படுகிறார்கள். குடும்பப் பொறுப்பைப் பற்றி தவறாக நினைக்கும் படி அவர்களின் வாழ்க்கையில் எதாவது நடந்திருக்கும் அல்லது தனிமனித சுதந்திரத்திற்கு முக்கியதுவம் கொடுத்து அவ்வாறு சொல்பவர்களாகக் கூட அவர்கள் இருக்கலாம்.

மரணம் என்பது கொடியதோ, பயமுறுத்தலோ அல்ல அது ஒரு உண்மை, உடல் நலிவுற்று உயிர்வாழத் தகுதியற்றது என்ற நிலைவரும் போது மரணம் இயற்கையாக நிகழ்கிறது. முதுமையில் 'மரணம் என்பது நம்புவர்களுக்கு அடுத்த பிறவியின் திறவுகோல், சொர்கத்தை நம்புவர்களுக்கு உலக வாழ்கையிலிருந்து விடுதலை. நாத்திகர்களுக்கு இயற்கை நிகழ்வு.

வயதான பிறகு நிகழும் மரணத்திற்கு தமிழில் அழகான சொல்பதம் உண்டு 'இயற்கை எய்துதல்' , மரணம் என்பது இயற்கை அதை அடைவதே 'இயற்கை எய்துதல்'. வாழ்கையின் குறிகோள் இது என்று வகுத்துவிட்டு அதன் படி வாழ்ந்து முடிக்கும் போது மரணம் அழகான முடிவையே தருகிறது. அவர்களுக்கு மரண பயம் என்பதே இருக்காது.

மற்ற வகை மரணங்கள் ? அவைகள் தான் மரணத்தைப் பற்றி அச்சத்தை நமக்கு எப்போதும் கொடுக்கின்றன. அவை பெரும் சோகங்கள் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

இயற்கை மரணம் என்பது ஆன்ம விடுதலை மற்றும் பயன்படுத்திய உடல் நிரந்தர ஓய்வு பெற்றுக் கொள்வதறகான நிகழ்வு ! இயற்கை மரணத்தை வரவேற்கலாம், கொண்டாலாம் !

11 கருத்துகள்:

பெயரில்லா சொன்னது…

அண்ணா,
அற்புதமான பதிவாக வந்திருக்கிறது. கோர்வையான வார்த்தைகள்.
மரணத்தை பற்றிய சிந்தனை எப்போதுமே எனக்கு இருந்துகொண்டிருக்கும். ஏன் இறக்கிறார்கள் என்பதிலிருந்து தடுத்துவிடமுடியாதா என்ற ஏக்கம் வரை. மரணத்தை நிரந்தர தூக்கம் என்று சிலர் சொல்வதை கண்டால் சில சமயம் சிரிப்பு வருகிறது.

மரணம் என்பது ஒரு நிகழ்வாக இருக்கிறது, அது நாம் பிறக்கும்போதே தொடங்கிவிடுகிறது என்று சொல்லியிருக்கிறார் யாரோ ஒருவர். மிகச்சரியான கருத்தாகப்படுகிறது.

எனக்கென்னமோ மரணம் ஆச்சரியத்தையோ, அதிர்ச்சியையோ தருவதில்லை. உயிரோடு இருப்பதுதான் மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. உயிர் போவதற்கு இத்தனை வழிகள் இருந்தும் இன்னும் எப்படி மூச்சு சீராக இருக்கிறது என்பதிலிருந்து பல கேள்விகள்.

மரணத்தை நிச்சயம் கொண்டாடத்தான் வேண்டும்.இறந்தவருக்காக அழுவதென்பது அவரது வாழ்கையை கேவலப்படுத்துவதாகவே உணர்கிறேன். நமது ஆசைகளுக்கு அவர் வாழவில்லை என்பது கூட காரணமாக இருக்கலாம்.
இயற்கை எய்துதல், என்பது to become one with existence என்ற பொருளிலேயே பயன்படுத்துவதாக நினைக்கிறேன்.

careerன் உச்சத்தில் இருக்கும் ஒரு விளையாட்டு வீரரோ, கவிஞரோ, அரசியல்வாதியோ retire ஆனால் எப்படி நமக்கு வருத்தம் இருப்பது இயல்போ அப்படித்தான் மரணம் அடைந்தவருக்கு நாம் அழுவதும், எப்படா சனியன் ஒழியும் என்று காத்திருந்து இறப்பவர்களுக்காக போலியாக அழுது கூட பார்த்ததில்லை.

:)

Thamizhan சொன்னது…

வாழ்வையே நகைச்சுவையாய் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன் மரணத்தையும் நகைச்சுவையாக்கப் பார்த்தாராம்.தான் உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாக நண்பர்கட்குச் சொல்லச் சொல்லி விட்டாராம்.நண்பர்கள் வந்து கடிந்து கொண்ட போது எத்துனை பேர் வருவார்கள் கடன்காரர்களைத் தவிர என்று பார்த்தேன் என்றாராம்.

மரணத்திற்குக் காத்திராமல் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கட்கு,அதிலும் முதியோர்க்கு அவர்கள் உயிருடன் உள்ளே போதே சொல்வது மிகவும் நல்லது.அதுவே அவர்கட்குக் கொண்டாட்டந்தான்.

ஜெகதீசன் சொன்னது…

//'எனக்கென்ன எல்லாத்தையும் பார்த்துவந்தாச்சு, செய்யவேண்டிய கடமைகளை செய்தாச்சு, நேரம் வந்தால் போய் சேரவேண்டியதுதான் பாக்கி' என்று தெளிவாக சொல்லுவார்கள். இப்படிப் பட்டவர்களின் மரணம் உண்மையில் கொண்டாடப்பட வேண்டியதே.//
உண்மை. ஆனால் அவர்கள் இருக்கும் வரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை. சிலருக்கு மரணத்தை விட குடும்பத்தாரின் புறக்கணிப்பே வேதனை தரக்கூடியதாக இருக்கும். "நான் ஏன் இன்னும் இருக்கிறேன்" என்று அவர்கள் வேதனைப் படாதவாறு அவர்களைக் கவனித்துக் கொள்வது நம் கடமை.

கோவி.கண்ணன் சொன்னது…

//பொற்கொடி said...
அண்ணா,
அற்புதமான பதிவாக வந்திருக்கிறது.
மரணத்தை நிச்சயம் கொண்டாடத்தான் வேண்டும்.இறந்தவருக்காக அழுவதென்பது அவரது வாழ்கையை கேவலப்படுத்துவதாகவே உணர்கிறேன். நமது ஆசைகளுக்கு அவர் வாழவில்லை என்பது கூட காரணமாக இருக்கலாம்.
இயற்கை எய்துதல், என்பது to become one with existence என்ற பொருளிலேயே பயன்படுத்துவதாக நினைக்கிறேன்.

careerன் உச்சத்தில் இருக்கும் ஒரு விளையாட்டு வீரரோ, கவிஞரோ, அரசியல்வாதியோ retire ஆனால் எப்படி நமக்கு வருத்தம் இருப்பது இயல்போ அப்படித்தான் மரணம் அடைந்தவருக்கு நாம் அழுவதும், எப்படா சனியன் ஒழியும் என்று காத்திருந்து இறப்பவர்களுக்காக போலியாக அழுது கூட பார்த்ததில்லை.//

பொற்கொடி அவர்களே,

பாராட்டுக்கு முதல் நன்றி.

உங்கள் முழுக் கருத்தும் இந்த பதிவை அழகு படுத்துகிறது.

நேரம் கிடைக்கும் போது இதையும் படிங்க !

:)

கோவி.கண்ணன் சொன்னது…

//Thamizhan said...
வாழ்வையே நகைச்சுவையாய் கொண்டிருந்த கவிஞர் கண்ணதாசன் மரணத்தையும் நகைச்சுவையாக்கப் பார்த்தாராம்.தான் உயிருடன் இருக்கும் போதே இறந்துவிட்டதாக நண்பர்கட்குச் சொல்லச் சொல்லி விட்டாராம்.நண்பர்கள் வந்து கடிந்து கொண்ட போது எத்துனை பேர் வருவார்கள் கடன்காரர்களைத் தவிர என்று பார்த்தேன் என்றாராம்.

மரணத்திற்குக் காத்திராமல் நாம் நன்றி சொல்ல வேண்டியவர்கட்கு,அதிலும் முதியோர்க்கு அவர்கள் உயிருடன் உள்ளே போதே சொல்வது மிகவும் நல்லது.அதுவே அவர்கட்குக் கொண்டாட்டந்தான். //

தமிழன்,

அருமையாக சொன்னீர்கள் முடிகிற தருவாயில் முதியோர்கள் அவதிக்குள்ளாவதே வாரிசுகளாலும் சொத்து சண்டைகளாலும் தான். அதனாலேயே பலர் நிம்மதி இழக்கின்றனர்.

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
உண்மை. ஆனால் அவர்கள் இருக்கும் வரை மகிழ்ச்சியாக வைத்திருக்க வேண்டியது நம் கடமை. சிலருக்கு மரணத்தை விட குடும்பத்தாரின் புறக்கணிப்பே வேதனை தரக்கூடியதாக இருக்கும். "நான் ஏன் இன்னும் இருக்கிறேன்" என்று அவர்கள் வேதனைப் படாதவாறு அவர்களைக் கவனித்துக் கொள்வது நம் கடமை.
//

ஜெகா,

இது கண்டிப்பாக வேதனை தரும் நிகழ்வுதான். சிலர் 'இதெல்லாம் இருந்து என்ன சாதிக்கப் போகிறது' காதுபடக்கூட பேசுவார்கள்.

வேதனைதான். !

சிவபாலன் சொன்னது…

GK,

வித்தியாசமான பார்வை!

துளசி கோபால் சொன்னது…

நல்ல பழுத்த வயசுலே போறதைக் 'கல்யாணச் சாவு'ன்னு சொல்லுவாங்க.
பொதுவா எல்லா மரணமே கொண்டாடப்பட வேண்டியதுதான். ஆனா நமக்குத்தான்
சொந்தம், பந்தமுன்னு துக்கம் கூடிப்போகுது. இருக்கறவங்களுக்குத்தான் அந்த
வேதனை. போனவங்களுக்குப் புது வாழ்வு.

அருமையான பதிவு.

TBCD சொன்னது…

ஒரு சிறு தகவல்.

எம் மகன் படத்தில் வந்தது நடப்பில் இருப்பவையே.

மிகவும் வயசானவர்கள்,என்றால், போகும் வயது தான், வருத்தப்பட ஒன்றுமில்லை, அவர்கள் துன்பப்படாமல், போய் விட்டார்கள் என்று சொல்லுவார்கள். பேரர்களின் பிள்ளைகளை கொஞ்சியவர்கள் இந்த பட்டியலில் சேர்க்கலாம்.

சாவிற்கு பேண்டு வாத்தியம் வைத்து, (உறுமி மேளம் தான் சாதரணமாக, அதுவே சாவு வீட்டிற்கு சிறு வயதில் ஒரு பயம் கொடுக்கும்), விமர்சையாக, சாப்பாடு போட்டு, இதுப் போன்ற சமயங்களில் நடக்கும்.

Almighty Add சொன்னது…

S.Goutham.
நண்பரே மரணம் குறித்த உங்கள் சிந்தனை மிக அற்புதம். மரணத்தைக் கண்டு பயப்படுவோர் இதனை படிக்க வேண்டும்.
என் மனதிற்குபிடித்த ஓரிரு வரிகளை என் வலைத்தளத்தில் பதிப்பிக்கலாமா? உங்கள் அனுமதியோடு...
நன்றி....

கோவி.கண்ணன் சொன்னது…

//வலைத்தளத்தில் பதிப்பிக்கலாமா? உங்கள் அனுமதியோடு...//

மிக்க மகிழ்ச்சி. பதிப்பிக்கலாம்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்