பின்பற்றுபவர்கள்

13 பிப்ரவரி, 2009

நாளையை நினைத்த இவரு பாவம்...இந்நாளே நன்னாள் !

சேக்கிழாரின் சைவ நெறியில் எனக்கு எந்த ஈடுபாடும் கிடையாது. நந்தனார் வரலாறு நடந்தவையா...திருத்தொண்டர் புராணத்தில் ஒரு கதையா என்ற ஆராய்ச்சிக்கெல்லாம் செல்லவில்லை. அது எப்படியோ இருந்துவிட்டு போகட்டும். ஆனால் நந்தனார் என்பவர் தாழ்த்தப்பட்ட மக்களின் பக்தி நெறியின் குறியீடு என்பதை கண்டிப்பாக அனைவரும் புரிந்து கொள்ளவேண்டும்.

நந்தனார் வரலாறு பலருக்கும் தெரிந்தவை என்பதால் அதை இங்கே சொல்லப் போவதில்லை. இறுதியில் நந்தனார் 'ஜோதியில்' ஐக்கியம் ஆனார், என்று சொல்கிறார்கள். 200 நூற்றாண்டுகளுக்குள் வாழ்ந்த இராமலிங்க அடிகளாரின் 'முக்தி'யும் கூட ஐயமாகவே இருப்பதால், சேக்கிழாருக்கு முன்பு வாழ்ந்தவராக சொல்லப்படும் நந்தனார் 'ஜோதி' மயமானது பற்றிய உறுதியான தகவல்கள் எதுவுமே கிடையாது.

சேக்கிழார் சிவநெறியைப் போற்றியவர்கள் என்ற வரிசையில் நந்தனாரையும் குறிப்பிட்டு நாயன்மார்கள் வரிசையில் வைத்துள்ளார். நாயன்மார்களில் ஒருவர் என்ற அளவில் நந்தனாருக்கு முதன்மைத்துவம் எதுவும் இல்லை. பிற நாயன்மார்களைவிட நந்தனார் நேரடியாக தில்லைக்கு தொடர்புடையவர் என்பதால், நந்தனார் அங்கே முக்திபெற்றவர் என்று கூறி தனியாக சிலை நிறுவப்பட்டு போற்றப்பட்டதாக சொல்கிறார்கள்.

'தாழ்த்தப்பட்டவனுக்கு தனி மரியாதையா ?' சிலையிலும் தீண்டாமை கொடுமை செய்து நந்தனார் சிலையை கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு தீட்சிதர்கள் அப்புறப்படுத்தியதாகவும், கண்ணகி சிலைபோல் நந்தனார் சிலையும் காணாமல் போனதாகவும் சொல்லப்படுகிறது. ஐம்பது ஆண்டுகள் கணக்கு என்பது மிகச் சரியாக இல்லாவிட்டாலும், பாரதியார் பாடலில் நந்தனார் சிலை இருந்த இடத்தைப் பற்றிய பாடல் இருப்பதால், பாரதி காலத்தில் சிலை கோவினுள் கண்டிப்பாக இருந்திருக்கும் என்றே சொல்கிறார்கள்.


ரே கல்தான்....சிற்பியின் கைவண்ணத்தில் சாமி சிலையாகவும், அடியார் சிலையாகவும் ஆகிறது, அந்த கல்லில் உள்ள வடிவத்தை வைத்து தீண்டாமை பார்பது என்பது வருணாசிரம கொள்கையின் உச்ச கட்ட கொடுமை. சைவம் சைவம் என்று கூவும் சைவ அன்பர்கள் சிலையை மீண்டும் நிறுவவதற்கு முயற்சி எடுத்தார்களா ? அது தில்லை தீட்சிதர்களிடம் செல்லுபடியானதா என்ற தகவலெல்லாம் தெரியவில்லை. தமிழில் பாடுவதற்கே நாத்திகர்களின் போராட்டம் தேவைப்படும் போது, வருணாசிரம கொள்கைகளை இந்து மத, சைவ கொள்கைகளாக நினைக்கும் ஆன்மிகவாதிகளுக்கு நந்தனார் சிலை அகற்றப்பற்றதற்கு ஏதும் கவலைப்பட்டிருப்பார்களா என்பது ஐயமே. போகட்டும்.

தீட்சிதர்களின் அடாவடிக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த வழக்கில் கோவிலை கையகப்படுத்தும் படி நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. ஆறுமுக ஸ்வாமி போராடித்தான் உள்ளே சென்றிருக்கிறார். இறுதி மூச்சு வரை போராடிய நந்தனார் எப்போது செல்வார் ?

ஆன்மிக அன்பர்களும், தாழ்த்தப்பட்ட மக்களின் நலனை மேலாக நினைப்பவர்களும் நந்தனார் சிலையை தில்லையில் மீண்டும் நிறுவ முயற்சி செய்ய வேண்டும், அதற்காக மாதவி பந்தலார் முயற்சியில் வேண்டுகோள் விண்ணப்பம் மின் பெட்டி உருவாக்கப்பட்டுள்ளது, அதில் உங்கள் கையொப்பம் இடுங்கள் கையொப்ப எண்ணிக்கைக்கு ஏற்ப நந்தனார் கோவிலுக்குள் செல்லும் நாள் முடிவு செய்ப்படும்.

மின் விண்ணப்பம்:


நாளைப் போவேன் என்று நாள்கள் செலத் தரியாது
பூளைப் பூவாம் பிறவிப் பிணிப்பு ஒழியப் போவாராய்
பாளைப் பூங்கமுகுடுத்த பழம் பதியின் நின்றும் போய்
வாளைப் போத்து எழும் பழனஞ் சூழ் தில்லை மருங்கணைவார்


'நாளைப் போவோம்...நாளைப் போவோம்' என்று காத்திருந்தற்காகவே நந்தனாருக்கு 'திருநாளைப் போவார்' என்ற பெயருண்டு. நம் காலத்தில் நாளை வேண்டாம்....இன்றே அவரை அழைப்போம்.


*******


மதுரை மீனாட்சிக் கோவிலினுள் தெற்குவாசல் வழியாக நுழையும் போது இந்த சிலை இருக்கிறது. சிலை(யில்) கண் பளிச்சிடவே கிளிக்கினேன். 'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்' இவர் மீனாட்சிக் கோவில் சொத்தில் அமைந்த வயலில் நாத்து நட்டாரா ? களையெடுத்தாரா ? அம்மனுக்கு மஞ்சள் (சாத்த) அரைத்துக் கொடுத்தாரா, அல்லது நாயனாரா ? தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள். 'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்' திவ்வியமாக பூசை புனஸ்காரங்களுடன் நின்றுகொண்டு இருக்கிறார் காரணம் பெயர் ராசி மற்றும் குலம். நந்தனார் சிலை அகற்றப்பட்டதற்குக் காரணமும் குலம் தான், அவர் புலையர் குலத்தை சேர்ந்தவராம்.

13 கருத்துகள்:

T.V.ராதாகிருஷ்ணன் சொன்னது…

கையொப்பம் இட்டாகி விட்டது

கோவி.கண்ணன் சொன்னது…

// T.V.Radhakrishnan said...
கையொப்பம் இட்டாகி விட்டது
//

மிக்க நன்றி ஐயா.

Senthil Kumar Vasudevan சொன்னது…

இதை பற்றி தெரிவித்தமைக்கு நன்றி..

நையாண்டி நைனா சொன்னது…

/*மதுரை மீனாட்சிக் கோவிலினுள் தெற்குவாசல் வழியாக நுழையும் போது இந்த சிலை இருக்கிறது. சிலை(யில்) கண் பளிச்சிடவே கிளிக்கினேன். 'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்' இவர் மீனாட்சிக் கோவில் சொத்தில் அமைந்த வயலில் நாத்து நட்டாரா ? களையெடுத்தாரா ? அம்மனுக்கு மஞ்சள் (சாத்த) அரைத்துக் கொடுத்தாரா, அல்லது நாயனாரா ? தெரியவில்லை. தெரிந்தவர்கள் சொல்லுங்கள்.*/

இப்ப... இந்த கல்லூரிகேல்லாம் போனீங்கன்னா... அங்கே பழைய ப்ரின்சுபால் படம் வச்சிருப்பாங்க, அத மாதிரி இவரு பழைய தலைமை பூசாரி. அந்த காலத்திலே போட்டோகிராபி கிடையாது அதனாலே சிலையாவே வச்சிட்டாங்க.

ஹி..ஹி..ஹி... எப்படி? நம்ம கற்பனை.

sa சொன்னது…

தங்கள் பதிவை www.newspaanai.com இல் சேர்த்து பலருடன் பகிர்ந்து கொள்ளுங்கள். www.newspaanai.com தமிழ் சோசியல் பூக்மர்கிங் சைட்

தங்கள் பதிவில் newspaanai பட்டனை சேர்த்து பதிவுகளை www.newspaanai.com ல் எளிதாக சேர்க்கலாம்.

மேலும் விபரங்களுக்கு கீஷே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

http://www.newspaanai.com/easylink.php

நன்றி.

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

முதற்கண் நன்றி!
இடைக்கண் நன்றி!!
கடைக்கண் நன்றி!!!

நன்றி-ண்ணா!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//இறுதியில் நந்தனார் 'ஜோதியில்' ஐக்கியம் ஆனார், என்று சொல்கிறார்கள்//

இறைவனின் ஜோதி மயமான ரூபத்தில் ஐக்கியம் ஆதல் என்பது பல சமயங்களும் பேசுகின்ற ஒன்று தான் கோவி அண்ணா!

தில்லையில் கூட நந்தனார் மட்டுமே அப்படி ஐக்கியம் ஆனதாகச் சொல்லப்படவில்லை!
மாணிக்கவாசகர், அப்பைய தீட்சிதர் முதலானோரும் தில்லை ஜோதியில் ஐக்கியம் ஆனார்கள் தான்!

ஆனால் நந்தனார் விதயம் மட்டும் சற்று ஓங்கிப் பேசப்படுவதன் காரணம்:
அவர் ஜோதியில் ஐக்கியம் ஆகும் முன்னரே....

அவரை தீக்குழிக்குள் இறங்கச் சொன்ன சம்பவம் தான்!

வேறு யாரும் அப்படி தீக்குழிக்குள் இறங்கினார் இல்லை! தானாக ஐக்கியம் ஆனார்கள்!
நந்தனார் மட்டுமே தீக்குழிக்குள் இறங்கினார்/இறக்கப்பட்டார்!

அதனால் தான் இந்த விதயம், தற்காலத்தில் இப்படி முக்கியத்துவம் பெறுகிறது!

எது எப்படியோ...
* அன்று தில்லைக்குள் வர,
நந்தனார் வரவேற்கப்பட்டரா? என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்!
* இன்று தில்லைக்குள் வர,
நந்தனாரை முழுமூச்சாய் வரவேற்போம்! பூரண பொற் குடம் எடுப்போம்!

பதிவுக்கு நன்றி!
ஒப்பமிட்ட அனைவருக்கும் சிரம் தாழ்த்தி அடியேன் நன்றி!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//பாரதியார் பாடலில் நந்தனார் சிலை இருந்த இடத்தைப் பற்றிய பாடல் இருப்பதால்,//

ஒரே ஒரு மேலதிக விளக்கம்:
இது கோபால கிருஷ்ண பாரதியார்! மகாகவி சுப்ரமணிய பாரதியார்-ன்னு நினைச்சிடப் போறாங்க! முழுப் பேரையும் பதிவில் போடுங்க!

இவர் நந்தன் சரித்திரம் என்ற கீர்த்தனைகள் தொகுப்பினை இயற்றியவர்.
இசை-நாடகமாகவும், வெறுமனே இசைப் பாட்டாகவும் கூட இந்தக் கீர்த்தனைகள் பாடப்படுகின்றன!

பின்னாளில் இதுவே கதா காலட்சேபம், பரதநாட்டியம் என்றெல்லாம் கலைவடிவம் பெற்று, கடைசியில் திரைப்படங்களாகவும் வெளி வந்தது!

ஆனால் இவை அனைத்தும் நந்தனை இன்னும் இன்னும் "புனிதம்" தான் ஆக்கினதே தவிர,
நந்தனுக்குரிய நியாயமான இடத்தைப் பெற்றுத் தரவில்லை!

//ஆறுமுக ஸ்வாமி //

ஆறுமுகசாமி

//மாதவி பந்தலார்//

இது யாரு? :)))

//நம் காலத்தில் நாளை வேண்டாம்....இன்றே அவரை அழைப்போம்//

மிகவும் ரசித்தேன்!
திருநாளைப் போவார், திரு இன்றே போவார் ஆகட்டும்!

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அவர் புலையர் குலத்தை சேர்ந்தவராம்//

ஆவுரித்து தின்று உழலும் புலையரேனும்
அவர் கண்டீர் நாம் வணங்கும் கடவுளாரே!
- அப்பர் சுவாமிகள்

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//அவர் புலையர் குலத்தை சேர்ந்தவராம்//

பாதியாய் அழுகிய கால்-கையரேனும்
பழி தொழிலும் இழி குலமும் படைத்தாரேனும்

ஆதியாய் அரவணையாய் என்பார் ஆகில்
அவர் கண்டீர் நாம் வணங்கும் அடிகள் ஆவார்!

சாதியால் ஒழுக்கத்தால் மிக்கோரேனும்
சதுர் மறையால் வேள்வியால் தக்கோரேனும்

போதில் நான்முகன் பணிந்து போற்றும்
பொன் அரங்கம் "பணியாதார்" - "புலையர் தாமே!"

சாத்திர ஒழுக்கம் எவ்வளவு இருந்தும்,
இறைவன்-அடியார்களிடம் பணிவினைக் கொள்ளாதவர்கள் தான் "புலையர்கள்" என்று கோபமாக, ஓப்பனாகச் சாடுகிறார் ஆழ்வார்! :))))

Kannabiran, Ravi Shankar (KRS) சொன்னது…

//'மண்யம் ஸ்ரீ முத்துராமய்யர்'//

ஹா ஹா ஹா
அவசரப்பட்டு குற்றக் கண்ணோட பாத்துறாதீங்க!
தளவாய் இராமப்பையர் மாதிரி, இவரும், நாயக்கர் காலத்தில், மதுரை ஆலயத்துக்குத் திருப்பணிகள் ஏதாச்சும் செய்திருக்கக் கூடும்! அதனால் அவர் சிலை அங்கே இருக்கலாம்!

மருத மக்களிடம் கேட்டு அறியுங்கள்! கூடல், நண்பர் சிவமுருகன் அல்லது மதுரை மாநகரம் வலைப்பூவில் கேளுங்கள்!

Radhakrishnan சொன்னது…

மிகவும் நல்ல பதிவு. முதல்வேலையாக கையொப்பம் இட்டுவிட்டேன்.

வரலாற்று விசயங்கள் என்றுமே அழிந்து போகக்கூடாது. அனைத்திற்கும் பாதுகாப்பும் உரிய உரிமையும் தரப்படவேண்டும்.

மிக்க நன்றி ஐயா.

பெயரில்லா சொன்னது…

Hi

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை Tamil Blogs Directory - www.valaipookkal.com. ல் சேர்த்துள்ளோம்.

உங்களுடைய வலைப்பதிவு இணைப்பை இங்கு சரி பார்த்து கொள்ளவும்.

இதுவரை இந்த வலைப்பூக்கள் இணையதளத்தில் நீங்கள் பதிவு செய்யவில்லை எனில், உங்களை உடனே பதிவு செய்து, உங்களது புதிய வலைப்பதிவை உடனுக்குடன் பூர்த்தி செய்து, உங்கள் வலைப்பதிவை, உலகம் முழுவதுமாக பரவி உள்ள தமிழ் வாசகர்கள் முன் கொண்டு செல்லுங்கள்.

நட்புடன்
வலைபூக்கள் குழுவிநர்

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்