பின்பற்றுபவர்கள்

24 ஜனவரி, 2008

காளியாத்தாவுக்கு என் மீது கோபம்... !!!

சென்ற வாரம் ஊரில் இருந்து எனது தம்பி, பள்ளி விடுமுறைக்காக தமிழகம் சென்ற எனது ஏழுவயது மகளை கொண்டுவந்து சிங்கையில் சேர்த்தான். அவனுக்கு ஊரெல்லாம் சுத்தி காண்பித்தாகிவிட்டது, புறப்படும் முன் ஊரில் சிவில் என்ஜினியராக வேலை பார்க்கும் எனது சிறுவயது நண்பர் ஒருவர் தமிழகத்தில் இருந்து தொலைபேசி வழி , 'பில்டிங் புகைப்படம் எடுக்க வேண்டி இருக்கு ஒரு நல்ல கேமரா செல் போன் ஒண்ணு வாங்கி கொடுத்து அனுப்பு' என்றான். சரி தம்பி இந்தவாரம் ஊருக்கு திரும்புகிறான் வாங்கி கொடுத்து அனுப்புகிறேன் என்று வாக்கு கொடுத்துவிட்டேன்.

சிங்கையில் இருக்கும் மற்றொரு தம்பியையும் அழைத்துக் கொண்டு, ஊரில் இருந்துவந்தவன் ஊருக்கு செல்லும் முதல் நாள் அவனுடைய இரு பசங்களுக்கு சாக்லேட்ஸ் வாங்கிவிட்டு, நண்பருக்கு கொடுத்தனுப்ப நிரஞ்சன் கடை என்ற அனைவரும் அறிந்த எலெக்டானிக் கடையில் கேமரா வைத்த செல்போன் w810i என்ற செல்லை வாங்கினேன், விலை 247 வெள்ளி, நான் அதே வடிவமைப்பை (மாடல்)வைத்திருக்கிறேன் நன்றாக இருக்கிறது எனவே அதையே வாங்கிக் கொடுக்க முடிவு செய்து வாங்கினேன்.

அதன் பிறகு நானும் என் தம்பிகள் இருவரும் செராங்கூன் சாலைக்கு சென்று ஒரு சிறிய சூட்கேஸ் வாங்கலாம் என்று சென்றோம். போகும் வழியில் வீரமாகாளியம்மன் கோவிலைப் பார்த்துவிட்டு சாமி கும்பிடப் போவதாக இருவரும் சொன்னார்கள், நான் அரை டிராயர் அணிந்திருந்ததால் கோவிலுக்குள் செல்வதற்கு தயக்கம், அதைத்தவிர கோவிலுக்குள் எனக்கென சுண்டல் புளியோதரைத் தவிர்த்து வெறெதுவும் எதுவும் கிடையாது என்பதால் அவர்களை மட்டும் அனுப்பிவிட்டு வெளியே நின்றேன்.

ஐந்து நிமிடம் சென்று இருவரும் புளியோதரை சுண்டலுடன் வெளியே வந்து என்னையும் உள்ளே அழைத்தார்கள், சிறிது தயக்கத்திற்கு பிறகு புளியோதரை மற்றும் சுண்டல் போட்ட தூண்டிலால் செருப்பை வெளியே விட்டுவிட்டு அவர்களுடன் கோவில் சுற்றில் (பிரகாரம்) சென்று புளியோதரை மற்றும் சுண்டலை கட்டுகட்டிவிட்டு, வெளியே வந்து வேறொரு கடையில் சூட்கேஸ் வாங்கிவிட்டு வீடு இரவு 9.30 மணிக்கு திரும்பினோம்.

வீட்டுக்கு வந்தவுடன் எனது தம்பி சாக்லேட் மற்றும் செல்போன் வைத்திருந்த பை எங்கே என்று கேட்டான்.

திடுக்கிட்டு 'அடப்பாவி உன்னிடம் தானே கொடுத்தேன்', என்று சொல்ல எங்கு தொல்லைத்தோம் என்றே எவருக்குமே தெரியவில்லை. சாக்லேட் மற்றும் புது செல்போன் திறக்கப்படாமலேயே ஒரு பையுடன் காணாமல் போய்விட்டது. 'நீ சாமியை பழிச்சே... அதனால் தான் போச்சு ' என்று என் தம்பி வேறு என்னை சீண்டினான். போன் வாங்கிவரச் சொன்ன நண்பரின் குணம் தெரியும் என்பதால் 'ம்கும் எல்லாம் ஒன்னுதான்...போனை வாங்கிக் கொடுத்தும் நண்பரிடம் காசு வருமான்னு தெரியாது...உண்டியலில் போடுவது போன்றதுதான்'...என்றேன்.

நண்பருக்கு வேறொன்று வாங்கிக் கொடுத்து அனுப்ப போதிய நேரமும் இல்லை. ஏனென்றால் காலையில் 6 மணிக்கு அவன் சென்னை செல்வதற்கு விமான நிலையம் செல்ல வேண்டி இருந்தது. பொருட்களை தொலைத்தற்காக இருவரையும் மாறி மாறி
திட்டி தீர்த்துவிட்டு மறுநாள் சென்ற இடமெல்லாம் சென்று விசாரிக்க வேண்டும் என்று முடிவு செய்தேன், நாங்கள் செல்போன் வாங்கிவிட்டு சென்றது கோவில் மற்றும் சூட்கேஸ் கடை மட்டும் தான், தம்பியை மறுநாள் காலையில் ஊருக்கு அனுப்பிவிட்டு, விசாரிக்கப் போனேன்.

எங்கு காணாமல் போய் இருக்கும் ? புளியோதரை சாப்பிடும் போது கீழே வைத்துவிட்டு மறந்து விட்டு வந்திருக்க வேண்டும், அல்லது சூட்கேஸ் கடையில் விட்டு வந்திருக்க வேண்டும்,

எதற்கும் முதலில் கோவிலில் சென்று கேட்கலாம் என்று சென்று கேட்டேன்,

முகப்பில் அபிஷேக டிக்கெட் விற்பவரிடம் "சார்...நேற்று இரவு 9 மணிக்கு கோவிலில் ஒரு பையை விட்டுச் சென்றுவிட்டேன், அதனுள் புது செல்போன் பாக்ஸ் மற்றும் சாக்லெட்ஸ் இருக்கும்..."

மேலேயும் கீழேயும் பார்த்துவிட்டு,

"ஆபிசரைப் பாருங்க..." என்று அழுத்தாமாக சொன்னார்

அங்கு இருப்பது மனதுக்கு உறுதியானது,

"உங்கள் பை தான் என்பதற்கு என்ன ஆதாரம் ?" கேட்டார்

"அதனுள் இருந்த பொருள்களைக் குறிப்பிட்டு சொன்னேன்"

அதன் பிறகு முகவரி, தொடர்பு எண்களை வாங்கிக் கொண்டு

"இங்கு அதை எடுத்து கொடுத்தவரே....யாரும் கவனித்துவிட்டார்கள் என்று கருதி வேறொருவரை அனுப்பி வாங்கிவர முயற்சிக்கலாம். உள்ளே என்ன இருந்தது பொருளின் மதிப்பு என்ன என்று கேட்டார்."

வெவரமானவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்று எண்ணி,

உள்ளே செல்போன் பாக்ஸுக்குள் விலை ரசீது 247 வெள்ளி என்றிருக்கும் பாருங்கள் என்றேன். பாக்ஸை பிரித்து பார்த்து....சரி என்று செல்லி கையில் அந்த பையை கொடுத்துவிட்டார்.

அப்பறம் மனசு கேட்கல...

பாக்கெட்டில் இருந்து 20 வெள்ளியை எடுத்து கோவில் நன்கொடைக்கு வைத்துக் கொள்ளுங்கள் என்று கொடுத்தேன். ரசீதுகொடுத்தார்.

"உங்களுக்கு நல்ல நேரம்...உங்க காசு நல்ல காசாக இருப்பதால் திரும்ப கிடைக்குது....இங்கே தொலைத்தேன் என்று வருபவர்கள் அனைவருக்குமே தொலைந்து போனவை கிடைப்பது இல்லை"

கோவில் அலுவலரிடம் நன்றி சொல்லிவிட்டு வந்துவிட்டேன்.

"ஆத்தாவுக்கு 20 வெள்ளி கூலி செலுத்தியாச்சு......எனக்கு யாரும் சும்மா உதவி செய்ய வேண்டாம்...நன்றி கடன் வேண்டாம்" - இது என் தம்பியிடம் போன் செய்து தொலைந்தது கிடைத்ததாக நான் சொன்ன போது சொல்லியது.

தொலைந்து போனது கிடைக்கும், கிடைக்காமல் போகும், பொருள் திரும்ப கிடைப்பதற்கும் வேண்டுதலுக்கும் தொடர்பே இல்லை. இதுபோன்ற நிகழ்வுகளில் கோவில் தொடர்பு இருந்தால், இதே நிகழ்வை தங்களுக்கே உரிய பாணியில் ஆன்மிக அன்பர்கள் ஒரு 'கடவுள் செயலாக' சொல்வார்கள்.

--
அன்புடன்,

கோவி.கண்ணன்

27 கருத்துகள்:

VSK சொன்னது…

ஒரு முக்கியமான மனித நேய ஆன்மீகப் பதிவு!

கடைசி பத்தியைத் தவீர்த்திருக்கலாம்!

நம்பிக்கை உள்ளவர்க்கு நீங்கள் சொன்ன மாதிரி வேறு விதமாகத்தான் புரியும்!

அதற்காக அவர்களைக் கோபிக்காதீர்கள்!

ஆத்தா கருணையே கருணை!

அவளுக்கு பேதமில்லை!

கோவி.கண்ணன் சொன்னது…

விஎஸ்கே ஐயா, நன்றி !

கடைசி பத்தி, கோவில் அலுவலர் சொல்லிய,

"இங்கே தான் தொலைத்தேன் என்று வருபவர்கள் அனைவருக்குமே தொலைந்து போனவை கிடைப்பது இல்லை"

என்பதலிருந்து தான் எழுதினேன்.

இங்கு யாரையும் கோவிக்கவில்லை. மனநிலை குறித்த கருத்து அது !

:)

வவ்வால் சொன்னது…

//இதே நிகழ்வை தங்களுக்கே உரிய பாணியில் ஆன்மிக அன்பர்கள் ஒரு 'கடவுள் செயலாக' சொல்வார்கள்.//

ஹா ஹா ..நல்லா சொன்னிங்க, சொன்னதும் ஒரு ஆத்திக அன்பர் வந்து ஆத்தா புகழ் பாடிட்டாரே :-))

நல்லவேளை ஆத்தாவே அந்த பார்சலை எடுத்து கோவில் ஊழியரிடம் கொடுத்தது என்று சொல்லாமல் போனாரே!

கோவி.கண்ணன் சொன்னது…

//வவ்வால் said...
//இதே நிகழ்வை தங்களுக்கே உரிய பாணியில் ஆன்மிக அன்பர்கள் ஒரு 'கடவுள் செயலாக' சொல்வார்கள்.//

ஹா ஹா ..நல்லா சொன்னிங்க, சொன்னதும் ஒரு ஆத்திக அன்பர் வந்து ஆத்தா புகழ் பாடிட்டாரே :-))

நல்லவேளை ஆத்தாவே அந்த பார்சலை எடுத்து கோவில் ஊழியரிடம் கொடுத்தது என்று சொல்லாமல் போனாரே!
//

வவ்வால்,

ஆத்தா தன் மகிமையைக் காட்ட இது போன்ற திருவிளையாடல்களை பக்தர்களிடம் செய்வது உண்டு.

ஆனால் எனக்கு ஏன் ?
:))))

Unknown சொன்னது…

20 வெள்ளி உண்டியல் காசுக்காக உங்க பையைத் தொலைக்க வைத்து திரும்பக் கிடைக்கச் செய்த காளியாத்தாவின் மகிமையே மகிமை :)

வடுவூர் குமார் சொன்னது…

தொலைப்பேசிக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தமோ!!

சுரேகா.. சொன்னது…

கோயிலுக்கு போகாம இருந்திருந்தா காணாம போயே இருக்காதே..!!!

அப்புறம் ஏன் 20வெள்ளி செலவு!

இதிலிருந்தே தெரியலையா?

ஆத்தா..நீ பாட்டுக்கும் உன் வேலையப்பாரு மகனே..வந்தா இதுதான் கதின்னு சொல்றான்னு!

ஜெகதீசன் சொன்னது…

எல்லாம் ஆத்தாவின் மகிமை!!!!
:))

கோவி.கண்ணன் சொன்னது…

//சுரேகா.. said...
கோயிலுக்கு போகாம இருந்திருந்தா காணாம போயே இருக்காதே..!!!

அப்புறம் ஏன் 20வெள்ளி செலவு!

இதிலிருந்தே தெரியலையா?

ஆத்தா..நீ பாட்டுக்கும் உன் வேலையப்பாரு மகனே..வந்தா இதுதான் கதின்னு சொல்றான்னு!
//

சுரேகா,

புளியோதரையும் சுண்டலும் சாப்பிட ஆசைப்பட்டதால் 20 வெள்ளி போச்சு. இல்லை என்றால் தொலைந்திருக்காது.

:)

கருப்பன் (A) Sundar சொன்னது…

அப்படியே ஆத்தாவுக்கு தீச்சட்டி, பூமிதி, பால்குடம் எல்லாம் எடுத்து குளிர்விக்கிறது..!

உமக்காக செல்போனேல்லாம் கண்டுபிடுச்சு குடுத்திருக்கா... இதுகூட செய்யாட்டி எப்படி??

என்னோட ஃபோனை மட்டும் கண்டுபுடுச்சு குடுத்தா... கண்டிப்பா தீச்சட்டி/பால்குடம் எடுத்தே தீருவேன்...

சதுக்க பூதம் சொன்னது…

பின் குறிப்பு:
இந்த பதிவை 100 பேருக்கு forward செய்தால் சிங்கை அம்மனின் அருள் கிடைக்கும்

பெயரில்லா சொன்னது…

கதை நல்லாயிருக்கு. ஆனா கவனக்குறைவா பையை மிஸ் பண்ணிட்டு காளியாத்தாவுக்கு என் மீது கோபம்னு பதிவிட்டுருக்கீங்க. இது நல்லாயிருக்கா?

கோவி.கண்ணன் சொன்னது…

//நவன் said...
கதை நல்லாயிருக்கு. ஆனா கவனக்குறைவா பையை மிஸ் பண்ணிட்டு காளியாத்தாவுக்கு என் மீது கோபம்னு பதிவிட்டுருக்கீங்க. இது நல்லாயிருக்கா?
//

நவன்,
அது...சும்மா தலைப்பிற்காக, கடைசி பத்தியை படித்தீர்கள் தானே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//நவன் said...
கதை நல்லாயிருக்கு. ஆனா கவனக்குறைவா பையை மிஸ் பண்ணிட்டு காளியாத்தாவுக்கு என் மீது கோபம்னு பதிவிட்டுருக்கீங்க. இது நல்லாயிருக்கா?
//

நவன்,
அது...சும்மா தலைப்பிற்காக, கடைசி பத்தியை படித்தீர்கள் தானே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//சதுக்க பூதம் said...
பின் குறிப்பு:
இந்த பதிவை 100 பேருக்கு forward செய்தால் சிங்கை அம்மனின் அருள் கிடைக்கும்
//

சதுக்கபூதம்,

அப்படியே அதன் பிறகு எழுதும் பதிவில் பின்னூட்டமும் தாரளமாக கிடைக்கும் என்றும் பலன் சொல்லி இருந்தால் நன்றாக இருக்கும்.

பொங்கல் செவ்வாய் கிழமை வந்ததால் ஆண்களுக்கு ஆகாதுன்னு ஒரு வதந்தி உலாவுதாமே.
:)

கோவி.கண்ணன் சொன்னது…

//தஞ்சாவூரான் said...
20 வெள்ளி உண்டியல் காசுக்காக உங்க பையைத் தொலைக்க வைத்து திரும்பக் கிடைக்கச் செய்த காளியாத்தாவின் மகிமையே மகிமை :)
//

தஞ்சாவூரார்,
அதுமட்டுமா, அதற்க்காக ஒருமுறை என்றூ என்னை இருமுறை கோவிலுக்குள் வரவைத்த ஆத்தாவின் மகிமையே மகிமை !

கோவி.கண்ணன் சொன்னது…

//வடுவூர் குமார் said...
தொலைப்பேசிக்கும் உங்களுக்கும் ஏழாம் பொருத்தமோ!!
//

:) சரிதான். ஆனால் திரும்ப கிடைத்துடுது. இதுவரை 3 முறை தொலைத்துவிட்டு திரும்ப கிடைத்திருக்கிறது

கோவி.கண்ணன் சொன்னது…

//ஜெகதீசன் said...
எல்லாம் ஆத்தாவின் மகிமை!!!!
:))
//

ஆத்தாவுக்கு அரோகரா......

இறக்குவானை நிர்ஷன் சொன்னது…

ஏய்!!! நான் ஆத்தா பேசுறேன்...
சும்மா இருக்க முடியாம.. என்ன பத்தியா புளொக்ல எழுதுற... அடுத்த முறை வந்தா உன் தலை இருக்காது. மரியாதையா மன்னிச்சுக்கோ ஆத்தானு சொல்லு...

பெயரில்லா சொன்னது…

ஆமாங்க படிச்சன். இதில் கடவுள் செயல் ஒன்றுமில்லை.

இதுக்காக நீங்க 20 வெள்ளி கூலி கொடுத்திருக்க வேண்டியதுமில்லை தான்.

ஆத்திக அன்பர்களுக்கு,

ஆத்தாவுக்கு இதுக்கெல்லாமா நேரமிருக்கும்? :)

துளசி கோபால் சொன்னது…

ஆத்தா.உன் மகிமையே மகிமை.

அது என்னன்னா.........
ஆத்திகனோ நாத்திகனோ யாராக இருந்தாலும் அடுத்தவங்களை நோகடிக்கக்கூடாதுன்னு நினைப்பு வச்சுருக்கறவங்களைக் 'கடவுள்' காப்பாத்துவார்.

அந்த 20 வெள்ளியை வேற யாராவது உங்க போனைக் கண்டுபுடிச்சுக் கொடுத்திருந்தா நன்றின்னு சொல்லி தந்துருப்பீங்கதானே?

எல்லாம் சுபம்.

Unknown சொன்னது…

திரும்ப கிடைத்தது மகிழ்ச்சியான செய்தி.

அதை எடுத்து தனக்காக வைத்துக் கொள்ளாமல், நிர்வாகத்திடம் ஒப்படைத்து, நல்ல மனிதராக நடந்து கொண்டவர் சிறப்புக்குரியவர்.

முக்கியமாக கடவுளை வணங்க வந்த இடத்தில் 'வேண்டாமே' என நினைத்திருப்பாரோ.
கடவுள் நம்பிக்கையால் எந்த நன்மையுமில்லையா? என்ன சொல்கிறீர்கள் ஜிகே.

கோவி.கண்ணன் சொன்னது…

//சுல்தான் said...
திரும்ப கிடைத்தது மகிழ்ச்சியான செய்தி.

அதை எடுத்து தனக்காக வைத்துக் கொள்ளாமல், நிர்வாகத்திடம் ஒப்படைத்து, நல்ல மனிதராக நடந்து கொண்டவர் சிறப்புக்குரியவர்.

முக்கியமாக கடவுளை வணங்க வந்த இடத்தில் 'வேண்டாமே' என நினைத்திருப்பாரோ.
கடவுள் நம்பிக்கையால் எந்த நன்மையுமில்லையா? என்ன சொல்கிறீர்கள் ஜிகே.

4:04 PM, January 24, 2008
//

சுல்தான் ஐயா,

திரும்ப கிடைத்ததில் மற்றற்ற மகிழ்ச்சி.

கோவிலோ கோவிலுக்கு வெளியிலோ இழந்த பொருள் பிறர்பொருளுக்கு ஆசைப்படாதவர்களிடம் கிடைத்தால் கிடைத்துவிடும்.

உரிமையாளர் அடையாளம் இல்லாத ஒன்றை பொதுவாக பூங்கா அல்லது வேறு இடங்களில் விட்டு வந்தால் எடுத்தவர் பொருளை யாரிடம் ஒப்படைப்பது என்பதில் திணறி ஒருவேளை அவரே வைத்துக் கொள்வார். கோவிலாக இருந்ததால் திரும்ப கிடைத்ததற்கு அதுவும் காரணம்.

மற்றபடி கோவிலுக்கு செல்பவர்கள் / இறைநம்பிகை உடையவர்கள் எல்லாருமே நல்ல மனதுக்காரர்கள் என்பதை நீங்கள் கூட ஒப்புக் கொள்ள மாட்டீர்கள் என்றே நினைக்கிறேன்.
:)

பெயரில்லா சொன்னது…

//ஆத்திகனோ நாத்திகனோ யாராக இருந்தாலும் அடுத்தவங்களை நோகடிக்கக்கூடாதுன்னு நினைப்பு வச்சுருக்கறவங்களைக் 'கடவுள்' காப்பாத்துவார்//

அது சரிங்க..

//ஆத்தாவுக்கு 20 வெள்ளி கூலி செலுத்தியாச்சு......எனக்கு யாரும் சும்மா உதவி செய்ய வேண்டாம்...நன்றி கடன் வேண்டாம்//

அப்பிடீன்னு போன் பண்ணி சொல்லியிருக்கீங்க.

ஆனா,

//இதே நிகழ்வை தங்களுக்கே உரிய பாணியில் ஆன்மிக அன்பர்கள் ஒரு 'கடவுள் செயலாக' சொல்வார்கள்//

அப்பிடீன்னு வேற முடிவில சொல்றீங்க.

ஏன் இந்த முரண்பாடு?

//அந்த 20 வெள்ளியை வேற யாராவது உங்க போனைக் கண்டுபுடிச்சுக் கொடுத்திருந்தா நன்றின்னு சொல்லி தந்துருப்பீங்கதானே?//

இதை லஞ்சம்னு நான் சொல்ல வரலீங்க.

கோவி.கண்ணன் சொன்னது…

நவன் said...

அது சரிங்க..

//ஆத்தாவுக்கு 20 வெள்ளி கூலி செலுத்தியாச்சு......எனக்கு யாரும் சும்மா உதவி செய்ய வேண்டாம்...நன்றி கடன் வேண்டாம்//

அப்பிடீன்னு போன் பண்ணி சொல்லியிருக்கீங்க.

ஆனா,

//இதே நிகழ்வை தங்களுக்கே உரிய பாணியில் ஆன்மிக அன்பர்கள் ஒரு 'கடவுள் செயலாக' சொல்வார்கள்//

அப்பிடீன்னு வேற முடிவில சொல்றீங்க.



ஏன் இந்த முரண்பாடு?
//

--- முரண்பாடு இல்லைங்க போன் பண்ணி சொன்னது என் தம்பியை கலாய்பதற்கு. அது கிண்டல் தான். கிழே சொன்னது பதிவின் பொருள்.

ஆத்தாவுக்கு கோபம் என்று தலைப்பிட்டு இருக்கிறேன். பதிவில் அதன் பொருள் எங்கும் இல்லையே. முரண்பாடு எதுவும் இல்லை.

//அந்த 20 வெள்ளியை வேற யாராவது உங்க போனைக் கண்டுபுடிச்சுக் கொடுத்திருந்தா நன்றின்னு சொல்லி தந்துருப்பீங்கதானே?//

இதை லஞ்சம்னு நான் சொல்ல வரலீங்க.

- நானும் லஞ்சம் என்று சொல்லவில்லை. கைமாறு தான். முன்பு ஒருமுறை டாக்சியில் போனை விட்டுவந்து, டிரைவர் கொண்டுவந்து கொடுத்துச் சென்றார். அவருக்கும் 20 வெள்ளி கொடுத்தேன். அவராகவே கேட்டு வாங்கிக் கொண்டார். கேட்காவிட்டாலும் கொடுத்து இருப்பேன்.

ஆத்தாவிடம் சொல்லிவிடவேண்டும் செல்போனுக்கு 20 வெள்ளிக்கு மேல் கொடுக்க முடியாது.

பெயரில்லா சொன்னது…

vsk said,

//நம்பிக்கை உள்ளவர்க்கு நீங்கள் சொன்ன மாதிரி வேறு விதமாகத்தான் புரியும்!//

இப்போ எனக்குப் புரிஞ்சிடுச்சு.

நன்றி இருவருக்கும்.

உடன்பிறப்பு சொன்னது…

இங்கே நடந்த மொத்த சம்பவத்துக்கும் உளவியல் காரணங்கள் உண்டு. கோவிலில் புளியோதரை சாப்பிட்டதால் அதை ஈடுகட்ட உங்கள் மனம் நிகழ்த்திய நாடகம் தான் இது. இப்போது நீங்கள் கோவிலுக்கு நன்கொடை கொடுத்தவுடன் உங்கள் மனமும் திருப்தி அடைந்துவிட்டது உங்கள் பொருளும் திரும்ப கிடைத்துவிட்டது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்