பின்பற்றுபவர்கள்

23 ஏப்ரல், 2014

யாருக்கு வாக்களிக்கலாம் ?

இந்தியாவில் கால் நூற்றாண்டுகளாகவே எதாவது சர்வாதிகாரி ஆட்சிக்கு வந்தால் நாடு உருப்பட்டுவிடும் என்று சொல்லத் துவங்கிவிட்டனர், இன்றும் கூட சஞ்சய்காந்தியைக் குறிப்பிட்டு சஞ்சய்காந்தி பிரதமராக இருந்திருந்தால் நாடு முன்னேரும், முதல்வன் படத்தில் ஷங்கர் நாட்டை திருத்த ஒரு முதல்வர் உருவாக்கியதைப் போல் சஞ்சய்காந்தி இந்தியாவை உருவாகி இருப்பார், பாகிஸ்தானை பயப்பட வைத்திருந்திருபபர் என்ற எண்ணங்கள் பரவலாக ஏற்பட்டு இருந்தது, காங்கிரசுக்கு மாற்று அரசு காங்கிரசில் இருந்து ஒருவரால் ஏற்பட்டிருக்கக் கூடும் என்றே எண்ணி வந்தனர், நடப்பு காங்கிரசு ஆட்சியில் ஊழல் பூதங்கள் வெளிப்பட்ட பிறகு சர்வாதிகாரி குறித்த இந்திய வாக்களர்களின் தேர்வில் 'நான் தான் அது' என்று தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல் குஜராத் கலவரங்கள் மூலம் மக்கள் மனதில் பதியவைத்தவர் தான் நரேந்திரமோடி, அந்த பிம்பத்துடன் குஜராத் வளர்ச்சி என்னும் இட்டுகதைகளைக் கட்டி அவரை இந்தியாவைக் காக்க வந்த ஆபத் பாந்தவலு என்று முன்னிறுத்துகின்றனர். ஆளுமை, செயல் திறன் மிக்கவர் மோடி என்றும் அது தான் மோடி அலை என்னும் மாய வலையாக சரியாக பின்னப்பட்டு அவை விரிக்கப்பட்டு பலரால் 'ஆம்' என்று எண்ண வைத்ததே அவர்கள் பரப்புரைகள் மூலம் செய்த சாதனை. 

மின்பற்றாக்குறை என்பதைத் தவிர்த்து வேறு எந்த அரசு சார்ந்த புள்ளி விவரங்களிலும் மோடி ஆளும் குஜராத் தமிழ்நாட்டைவிட முன்னே நிற்கவில்லை அதற்கும் காரணம் குஜராத்தைவிட தொழிற்சாலைகளின் எண்ணிக்கை தமிழகத்தில் மிகுதி என்பதை பல்வேறு கணிப்புகள் காட்டுகின்றன, இதை ஒப்புக் கொள்ளவும் மறுக்கவும் வழியில்லாமல் மோடி ஆதரவாளர்கள், தமிழ்நாட்டி சாராயம் விற்ற பணத்தில் குஜராத்தைவிட வளர்ந்துள்ளதாக காட்டுகிறார்கள், மற்றபடி மோடி சாரயம் விற்காமலே டீ விற்று குஜராத்தை வளப்படுத்தியுள்ளார் என்று கூறுகின்றனர். குஜராத்தில் கள்ளச் சாராய சாவுகள் குறித்து பேச நம்மிடம் போதிய தகவல்கள் இல்லை, குஜராத்தில் நட்சத்திர ஓட்டல்களிலும் சரக்கு விற்பதில்லையா ? அல்லது அங்குள்ளவர்கள் குடியையே மறந்துவிட்டார்களா ? என்பதெல்லாம் நமக்கு தெரியவில்லை. தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில் கள்ளச் சாராய சாவுகள் முற்றிலுமாக ஒழிந்துவிட்டது என்பதைத் தவிர்த்து நான் சாராயக்கடைகள் திறந்து வைத்துள்ளதற்கு எந்தவித ஞாயத்தையும் கற்பிக்கமாட்டேன். அரசு சாரயம் விற்கவில்லை என்றால் குடிப்பவர்கள் எண்ணிக்கையும், அளவும் குறையலாமே அன்றி குடி முற்றிலும் ஒழிந்துவிடும் என்று நம்புவதற்கில்லை. தமிழ்நாட்டில் அரசு மது விற்காத முன்பும் பிற மாநிலங்களை ஒப்பிட்ட அனைத்து வகைகளிலுமே முன்னேற்றம் கண்டிருத்தது, அதற்கு காரணம் திராவிடக் கட்சிகளின் ஆட்சியும், அவர்கள் கல்வி வளர்ச்சிக்கு எடுத்த நடவடிக்கைதான். எனவே சாராயத்திற்கு முன், பின் எப்போதும் பிற வடமாநிலங்களை, தென்மாநிலங்களை ஒப்பிட தமிழ்நாடு பல துறைகளில் முன்னேறி தான் இருந்தது.

தமிழ்நாட்டில் காங்கிரசை ஒழிப்பது பற்றி பேச்சுக்கே இடமில்லை, காரணம் காமராஜருக்கு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக கைகழுவி, தமிழக வாக்களர்கள் தற்பொழுது கையை உதறியே விட்டார்கள், காங்கிரஸ் தொண்டர்கள் தவிர்த்து பொதுமக்களிடம் காங்கிரசுக்கு எந்த செல்வாக்கும் இல்லை, எனவே காங்கிரசுக்கு வாக்களிக்காதீர்கள் என்று சொல்வது கூட அவர்கள் தேர்தலில் நிற்கிறார்கள் என்று சொல்லும் விளம்பரமாக அமைந்துவிடும் என்பதால் அதனை தவிர்க்கிறேன்.

பாஜகவிற்கு வாக்களிக்கலாமா ? தமிழ்நாட்டிற்குள் தேசிய கட்சிகளை வளர்த்துவிடுவது தமிழக நலனை தமிழர்களே கைவிடும் நிலைக்கு இட்டுச் சென்றுவிடும், நாம் ஏற்கனவே பார்த்தபடி தமிழக காங்கிரசாரின் தமிழகம் சார்ந்த எந்த ஒரு திட்டத்திற்கும் அன்னை சோனியாவின் கை அசைவிற்காக காத்துக் கொண்டு இருப்பார்கள், அல்லது 'அன்னை சோனியாவின் வழிகாட்டுதலுடன் என்றே பேசத் துவங்குவார்கள்' பாஜகாவும் தேசியவாதக் கட்சி தான், அவர்களால் தமிழ்நாட்டிற்கு என்று சிறப்பு கவனிப்பாக எதையும் செய்துவிட முடியாது, மையத்தில் ஆட்சியில் அமரும் எந்த தேசிய கட்சிக்கும் தமிழ்நாடு என்பது 22 மாநிலங்களில் ஒன்று எனவே நாம் அவர்களிடம் இருந்து தனித்து எதையும் பெற்றுவிட முடியாது. தமிழ்நாட்டில் தேசிய கட்சிகளை வளர்த்துவிடுவதன் மூலம் நமது தனிப்பட்ட பலத்தை, போராட்ட குணத்தை, தனித்தன்மையை இழந்துவிடுவோம்.

திமுக ஊழல் செய்யவில்லையா ? அதிமுக ஊழல் செய்யவில்லையா ? ஒருவேளை 2ஜி ஏலத்தின் போது பாஜக ஆட்சியில் இருந்தால் ஊழல் நடைபெற்றிருக்காது என்பதற்கு எந்த முகாந்திரமும் இல்லை, மறைந்த முன்னால் மத்திய அமைச்சர் பங்காரு லெட்சுமனன் டெகல்ஹா வீடியோவும், அதன் பிறகு நடந்த்தையும் நாம் அறிவோம், பக்கத்து மாநிலத்தில் பாஜக ஆட்சியில் நடைபெற்ற கிரானைட் ஊழல்கள் புகழ்பெற்றவை, எனவே பாஜக மிகப் பெரிய ஊழல்கள் செய்யாத கட்சி என்பதற்கு அவர்கள் ஆட்சியில் 2ஜி ஏலத்திற்கு வரவில்லை என்பது தவிர்து வேறு காரணம் இல்லை.  திமுக அல்லது அதிமுக நாம் நினைத்தால் அவர்களில் ஒருவரை ஆட்சியில் இருந்து அகற்ற முடியும், பாஜகவை வளர்த்துவிட்டால் அந்த வாய்ப்பை பாஜக எடுத்துக் கொள்ளும், தமிழகத்தில் யாருடைய ஆட்சி என்பதை தமிழகத்தில் கூட்டணி சேரும் காங்கிரஸ் முடிவு செய்யும் நிலையில் இருந்தது, பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி அவ்வாறு ஆதரவளித்து அதில் ஒருமுறை மண்ணையும் கவ்வினார்கள். அப்பொழுது தமிழக காங்கிரசார் எவ்வளவோ மன்றாடியும் காங்கிரஸ் தலைமை செவி சாய்க்கவில்லை, பாஜகவை வளர்த்துவிட்டால் தமிழக முதல்வர் யார் என்பதை முடிவெடுக்கும் சக்தியாக மாறுவார்கள், அது திராவிட சிந்தனைகளுக்கும் நாளடைவில் நெருக்கடியாகவே அமையும்.

நடப்பது நாடாளுமன்ற தேர்தல், அறுதி பெரும்பான்மையால் மோடி ஆட்சி அமைப்பதற்கான வாய்ப்பு குறைவு, கூட்டணி ஆட்சி தான் ஏற்படும்,  தமிழக எம்பிகள் ஆதரவுடன் ஆட்சி அமைக்கும் கட்சியால் மட்டுமே தமிழகத்துக்கு நன்மை, அந்த வாய்ப்பை தேசியவாதக் கட்சிகளுக்கு வக்களித்து ஆதரிப்பதால் தமிழகம் இழந்துவிடும். காமராசருக்கு பிறகு இந்தி திணிப்பு உள்ளிட்ட தேசியவாதத்தினாலும் தேசிய கட்சிகளினாலும் தமிழகம் எப்போதும் நன்மை அடைந்ததே இல்லை. 

ஆகவே சிந்திப்பீர் வாக்களிப்பீர் !!!
தமிழகம் சார்ந்த அதிமுக, திமுக, மதிமுக, பாமக, விசி மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகளில் நிறுத்தியுள்ள வேட்பாளர்களில் நேர்மையான / செயல்படக் கூடிய வேட்பாளருக்கே உங்கள் வாக்குகளை அளியுங்கள்.

4 கருத்துகள்:

Unknown சொன்னது…

கடைசி வரைக்கும் படிக்கும் போது எனக்கும் அதுதான் தோனுச்சி.....சிந்திப்பீர் வாக்களிப்பீர்.
2ஜி முதலில் வந்தால் முன்னுரிமையே மறைந்த ப்ரமோத் மகாஜன் கொண்டுவந்த கொள்கைதான் :)

நா.முத்துநிலவன், புதுக்கோட்டை சொன்னது…

2ஜி சந்தேகமில்லாமல் பாஜக ஆட்சியின்போது துவங்கியதுதான். அதனால்தான் அவர்கள் இந்த விவகார விவாதங்களில் மௌனமாயிருந்தனர். காங்கிரஸ், பாஜக இரண்டும் தோற்க வேண்டிய கட்சிகள்தாம். மற்றபடி இடது சாரிகள் என்ன குற்றம் செய்தார்கள்? முதன்முறையாகத் தமிழகத்தில் தனித்துப் போட்டியிடும் அவர்கள் பெறும் வாக்கு ஒவ்வொன்றும் இந்திய அரசியலில் முக்கியத்துவம் பெறும் இதுபற்றிய எனது வலைப்பக்கப் பதிவு பார்க்க - http://valarumkavithai.blogspot.in/2014/04/blog-post_22.html நன்றி

suvanappiriyan சொன்னது…

பாஜக வைப் பற்றி சிறந்த அலசலோடு வந்துள்ள கட்டுரை. அதனை நான் இன்று பதிந்துள்ளேன். நேரமிருப்பின் படித்துப் பார்க்கவும்.

http://suvanappiriyan.blogspot.com/2014/04/2014.html

எனது குடும்பத்தினரின் வாக்கு திமுகவுக்கே!

கவியாழி சொன்னது…

உண்மையை சொன்னீர்கள் .தமிழ்நாட்டில் அதிக தொழிற்சாலைகள் இருப்பதாலேயே மின்வேட்டுப் பிரச்னை உள்ளதாய் எனக்கும் தோன்றுகிறது .
இல்லாவிட்டால் அயல் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் இங்கு நிம்மதியாய் மகிழ்ச்சியாய் நல்ல ஊதியத்துடன் வாழமுடியுமா?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்