பின்பற்றுபவர்கள்

2 செப்டம்பர், 2014

Who is செல்லாத்தா ?

என்னுடைய மனம் புண்பட்டது, அதனால் தான் இந்த கட்டுரையை எழுதுகிறேன், கட்டுரையைப் படிக்கும் பலரில் சிலரது மனமும் புண்படலாம், அப்படி புண்பட்டால் ? முதல் வரியை படிக்கவும். 

தமிழன் இந்து தேசிய நீரோட்டத்தில் கரைந்து போகும் விதமாக பிள்ளையார் சதுர்த்தியை வெகு சிறப்பாக கொண்டாடிவருகிறான். பகுத்தறிவாளர்கள் பிள்ளையார் தோன்றிய 'அழுக்கு' கதைகளை எடுத்துச் சொன்னாலும் வழிபாடுகள் புறக்கணிக்கப்படுவதில்லை மாறாக ஆண்டுக்கு ஆண்டு வளர்ந்தே வருகின்றன. 'மதம்' என்ற சொல்லும் யானைக்கும் தொடர்பிருப்பதால் தானோ, யானை முக பிள்ளையார் வழிபாடு எழுதப்படாத மதவெறி விழாகவாக பல இடங்களில் வளர்த்தெடுக்கப்படுகின்றன. தமிழர்களுக்கென்றே தனிப் பெருமையும் குலவழிபாட்டு அம்மன் தெய்வங்களுக்கும், தொன்று தொட்ட மாயோன் சேயோன், சிவ வழிபாடுகளும் இருக்கும் பொழுது, பொது தெய்வம் என்ற கட்டமைப்பில் ஆரியமயமாக்கப்பட்ட / வேத தெய்வமாகக் காட்டப்பட்ட வடிவங்களை மட்டுமே வணங்குவது வளர்ந்த நாகரீகப் பண்பாடுகள் போல் கிராம தெய்வமான முனீஸ்வரனுக்கும் பூணூல் அணிவித்து சைவ படயலிட்டு வணங்கி வருகின்றனர்.

ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகு தமிழகத்தில் பரவலாக கட்டப்பட்ட 108 வைணவ ஆலயங்களும், 108 சிவாலயங்களும், அவற்றிற்கான பஞ்சமி நிலங்களும் படிப்பு வழி வேலை அல்லது நிரந்தர வேலை வாய்ப்பு இல்லாத காலங்களில் குறிப்பிட்ட பிரிவினரின் வயிற்றுப்பாட்டுக்காக உருவாக்கப்பட்டவை. இவற்றில் முருகனின் அறுபடை வீடுகளும் அடக்கம்,  19 ஆம் நூற்றாண்டு துவக்கம் வரை அஹ்ரகாரங்களில் பஞ்சம் பசி பட்டினி என்பதே கிடையாது. தாது வருட பஞ்சத்தில் மாண்டோர் எல்லாம் அஹ்ரகாரம் சாராதோர்களே.

தமிழர்கள் வஞ்சப் புகழ்ச்சி அணியை இலக்கணத்தில் படித்திருந்தாலும், அது மிகவும் நுட்பமாக கட்டப்பட்டு திணிக்கப்படும் பொழுது அறியாமையால் அவற்றை உண்மை என்றும், தாம் தாழ்த்தப்படுகிறோம் என்கிற அறியாமையால் அவற்றையும் போற்றுகின்றனர், உதாரணத்திற்கு தமிழர் பழம் பெரும் தெய்வமான முருகனுக்கு அறிவு குறைவு என்பதால் அம்மையப்பன் தான் உலகம் என்று உணராது புற உலகை சுற்றிவிட்டான், ஞானப் பழம் பெரும் தகுதியற்றவன் என்கிற கதையை 'சிவபெருமானின் திருவிளையாடல்' கதை என்று சிலாகிக்கின்றனர். 4 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்டு வணங்கப்பெரும் முருகனை பொது ஆண்டு (கிபி) யில் அறிமுகப்படுத்த பிள்ளையாருக்கு தம்பி என்றாலும் ஏற்கின்றனர். அது எப்படி முன்னடி அறியப்பட்டவனுக்கு பின்னால் வந்தவன் தம்பியாவான் ? வட இந்தியாவில் கந்தன் என்று சொல்லப்படுவன் பிள்ளையாருக்கு அண்ணன், அங்கு பிள்ளையாரும் இருமனைவிகளுடன் திருமணமானவர், தமிழர்களுக்காகவே முருகன் பிள்ளையாருக்கு தம்பி என்றும் பிள்ளையார் மணமாகதவர் (பேச்சிலர்) என்று சொல்லப்படுகிறது. நம்ம தமிழக வழக்கத்தில் அண்ணனை விட்டு அல்லது முன்பே தம்பி திருமணம் செய்து கொள்வானா ? 

தவிர நமக்கெல்லாம் நன்கு தெரியும் குறிஞ்சி நிலம் சார்ந்ததே முருக வழிபாடு, குறிஞ்சி, குற்றால குறவஞ்சி ஆகியவை முருகனோடு நெருங்கிய தொடர்பில் உள்ளவை, இயல்பிலேயே குறவஞ்சி வள்ளி தான் முருகனின் ஒரே மனைவியாக இருக்க வாய்ப்புகள் உள்ளது. ஆனால் வேதக் (கட்டுக்) கதைகளில் தேவேந்திரனின் மகள் தேவயானி தான் முதல் மனைவி என்றும் தாழ்ந்த குலத்து வள்ளி இரண்டாம் மனைவி என்று சொல்லப்படுகிறது.

அடிப்படை அல்லது பண்பாட்டுக் கூறுகள் எதையும் ஆராயும் சிந்தனை எதுவுமின்றி, தமிழர் குறித்து தமிழர்களுக்கு சொல்லப்படும் தமிழர்கள் அல்லாதோரின் கதைகளை அப்படியே தமிழர்கள் நம்புவது வேறெந்த இனத்தினரும், மொழியினரும் செய்யாத ஒரு மூடத்தனம் என்று கூறுவதைத் தவிர்த்து வெறென்ன சொல்வது ?

தமிழ்நிலத்தில் பன்னெடுங்காலமாக மாரியம்மன் வழிபாடு, கோடைக்கு பிறகு மழைவேண்டி, அறுவடை இல்லாத ஓய்வுகாலமான கோடைகாலத்தில் கொண்டாடப்படுகிறது, மாரி என்றால் மழை.

பின்னர் வேதவழி தெய்வம் என்று கூற புனையப்பட்ட மாரியம்மன் கதையும், பிள்ளையார் கதையும் எடுத்துக் கொண்டால் கிட்டதட்ட இரண்டும் ஒன்று போன்றதே, பரசு இராமன் தந்தை சிவனின் ஆணையை நிறைவேற்ற தன் தாய் பார்வதியின் கழுத்தை வெட்டுவான், பின்பு தவறை உணர்ந்து அவ்வழியாக செல்லும் தாழ்ந்த குலப் பெண்ணின் தலையை ஒட்டிப் முண்டத்தை பார்வதியின் உடலில் பொருத்துவார்கள், இது தான் மாரியம்மன் வழிபாட்டிற்கு சொல்லப்படும் ஆரிய வழிக்கதை. மாறாக குளிக்கச் செல்லும் முன் காவலுக்காக பார்வதி தன் அழுக்கினால் செய்யப்பட்ட பிள்ளையார் (மனித) உருவத்தை, மாற்றோன் என்று ஐயம் கொண்டு பிள்ளையார் தலையை வெட்டி, பின்னர் தவற்றை உணர்ந்த சிவன், அந்த பக்கமாக சென்ற குட்டியானையின் தலையை வெட்டி பொறுத்தப்பட்டதால் தான் பிள்ளையாருக்கு யானைத் தலையாம்.

மாரியம்மன் கதையை உண்மை என்றே நம்பி இன்றும் தமிழகத்தில் பல பல மாரியம்மன் கோவில்களில் பார்வதியின் தலையை மட்டும் சிலையாக வைத்து வைத்து வணங்குகிறார்கள், தாழ்ந்த குலப் பெண்ணில் உடலை வணங்கக் கூடாதாம். ஆனால் பிள்ளையாருக்கு அவ்வெறெல்லாம் அவமரியாதை இல்லை, ஏனெனில் யானை என்னும் விலங்கு தலையை விட தாழ்ந்த குலப் பெண்ணின் உடல் அசுத்தமானது போலும். பரசு இராமன் கதையில் உயிரோடு இருக்கும் பார்வதியின் தலை போன்று, பிள்ளையார் கதையில் பிள்ளையாரின் தலை வெட்டியதும் பிள்ளையாரின் (ஒரிஜினல்) தலை இல்லாமல் போவதும் அதன் பொருட்டு யானைத் தலையை ஒட்டவைப்பதும் வியப்பானதே. மாரியம்மனுக்கு சொல்லப்படும் பரசு இராமன் கதை, பிள்ளையார் கதைக்கு பிந்தியது என்பதால் தலை ஒட்டும் தொழில் நுட்பம் வளர்ந்துள்ளது என்று நாம் கொள்ள வேண்டும் போல். 

மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுவதும் கொண்டாடுவதும், ஆடித் திங்களில் தான், ஆடித் திங்கள் ஜூலை 15 - ஆகஸ்ட் 15 வரையில் வரும், அந்த திங்களில் வெள்ளிக் கிழமைகளில் (ஆடிவெள்ளி) ஒன்றில் அம்மன் கோவில்களில் விழா களைகட்டியிருக்கும், அப்பொழுது பள்ளிகள் துவங்கும் காலம், தேர்வுகள் நடைபெறும் காலமும் அல்ல, ஆனால் அவற்றை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் தேர்வுக்கு படிக்கும் பொழுது, அம்மன் பாடல்கள் குறிப்பாக 'செல்லாத்தா செல்ல மாரியாத்தா...' பாடல் குடிசைபக்கத்தில் இருந்து இரைச்சலாக கேட்பதாகவும், படிப்பு கெடுவதாகவும் எந்திரன் படத்தில் காட்சி வைக்கப்பட்டு, அதை எந்திரன் நக்கல் அடித்து 'Who is செல்லாத்தா ?' என்று கேட்க படம் பார்ப்பவர்களுக்கு அது ஒரு (மலிவான) நகைச்சுவை காட்சியாக வைக்கப்பட்டுள்ளது. காரணம் மாரியம்மனை கும்பிடும் ஏழை எளியோர் எதிர்ப்பு காட்டமாட்டார்கள் என்று துணிந்தே அந்த காட்சியை நகைச்சுவை என்ற பெயரிலும், அவ்வாறு மாரியம்மனை கும்பிடுவர்களில் ரவுடிகள் உண்டு, அவர்கள் 'ஆத்தாள கும்பிட்டுட்டு துண்ணூறு வாங்கிப் பூசிட்டு போ...பாஸாகிவிடுவாய்' என்கிற மூட நம்பிக்கை கொண்டுள்ளனர் என்றும் காட்சியாக்கப்பட்டுள்ளது.

உண்மையில் தேர்வு நெருங்கும் காலமென்றால் அது ஐயப்பன் சீசன் தான், ஜனவரி 12 ஆம் தேதிவரை ஐயப்ப சாமிக்கு மாலை போட்டவர்களின் பூசை புனஸ்காரங்கள் தான் நடைபெறும், ஆடியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஒன்றோ அல்லது இரண்டோ வெள்ளிக்கிழமைகள் சார்ந்த நிகழ்வு, ஆனால் ஐயப்ப சீசன் என்பது 42 நாள்களுக்கு அங்கங்கே உள்ள கோவில்களில் ஒலிப்பெருக்கிக் கட்டி வீரமணி அல்லது வீரமணி தாசன் பாடல்களை போடுவார்கள், ஷங்கர் போன்றோருக்கு 'Who is Saranam Ayyappaa ?' என்று அவற்றை நகைச்சுவையாக்கி கேட்கும் துணிவும் இல்லை, ஒரு வேளை கேட்டிருந்தால் இந்து இயக்கம், அந்த படத்தில் அந்த காட்சியை நீக்காமல் ஓட விட்டிருக்காது. இளிச்சவாய்கள் கூழ் ஊற்றிக் கொண்டாடுபவர்களும் அவர்களது நம்பிக்கையும் தான்.

போலிப் பகுத்தறிவு வாதியான நடிகர் விவேக் போன்றோர், லாரிக்கு எலுமிச்சைபழம் கட்டி இருப்பதை கிண்டல் அடிப்பார்கள், ஹெலிக்காப்பட்டரின் சர்கரத்தில் வைக்கும் எலுமிச்சைக்கும். மாலைக்கும் அவர்களிடம் இருந்து எந்த நகைச்சுவை காட்சியும் வைக்கத் தெரியாது.


தமிழகத்தில் இந்து என்று கூறிக் கொள்ளும் அனைவருக்குமே குலதெய்வம் என்று ஒன்று உண்டு, அந்த தெய்வங்களை வணங்குபவர்கள் அவர்களே தொட்டு கழுவி, பூசை செய்வது வழக்கம், ஆனால் அங்கு பிறந்த குழந்தையின் காது குத்திக்கு, முதல் மொட்டைக்கும் செல்வதுடன் சரி, பிறகு பொட்டல் காட்டில் கூரை இல்லாது அந்த குலசாமி அப்படியே தான் நிற்கும், ஆனால் இவர்களோ ஆகமவிதி கோவில்களில் திருக்கல்யாண உற்சவத்திற்கு ரூ 50,001 கட்டி  10 - 20 அடி தள்ளி உட்கார்ந்து 'திருக்கல்யாண கோலம்' பார்த்து முக்தி அடைந்ததாக நினைத்துக் கொள்வர். தமிழுக்கு இரண்டாம் இடமே என்று அறிவிக்கும் 'இங்கு தமிழிலும் அர்சனை செய்யப்படும்' எந்த ஒரு தமிழனையும் உறுத்தாது. 

மலேசிய தமிழர்களைப் பாருங்கள், இந்தியாவில் நீ பிள்ளையாருக்கோ அல்லது, பிற தெய்வங்களுக்கோ என்ன வேத கதைகளை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போ, எங்களுக்கு எங்கள் தமிழ் முருகனே உயர்வானவன், எங்களது குல சாமிகளே உயர்ந்தது என்று போற்று கின்றனர், தமிழ் இந்துகளுக்கு தை பூசமே பெருநாள், சிறப்பாகக் கொண்டாடத்தக்க திருநாள்,  என்று அவர்கள் போற்றுகின்றனர்.



ஆனால் தமிழகத்தில் ? பெரியாரை தமிழன் மறக்க மறக்க பெருச்சாளிகளின் ஊர்வலங்கள் தான் பெருகிவருகிறது. உண்மை தானே ?

13 கருத்துகள்:

viyasan சொன்னது…

// தமிழ் இந்துகளுக்கு தை பூசமே பெருநாள், சிறப்பாகக் கொண்டாடத்தக்க திருநாள், என்று அவர்கள் போற்றுகின்றனர்.//

இந்து என்பதை விட நாங்கள் தமிழ்ச் சைவம்(சிவனியம்) அல்லது விண்ணவம் (திருமாலியம்) என்று குறிப்பிடுதலே பொருத்தமானது என்பது எனது கருத்தாகும். குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் இந்து என்ற சொல்லைப் பாவிப்பது அரிது. நாங்கள் சைவம் என்பார்கள் (அதில் பெருமாளும் அடக்கம்).

நாங்கள் தமிழர்கள் இன்று வைதீகமயப்படுத்தப்பட்டுவிட்ட எமது முன்னோர்களின் கடவுளர்களையும், நம்பிக்கைகளையும் தமிழ்மயப்படுத்த வேண்டுமே தவிர, அவை எங்களுடையவை அல்ல என்று வெறுத்து ஒதுக்கக் கூடாது. உதாரணமாக பிள்ளையார் வழிபாடு கூட, தமிழகத்தில் தான் தோன்றியது என்ற கருத்தும் உலவுகிறது. தமிழ்நாட்டிலிருந்து தான் வடக்குக்குப் போய், அங்கிருந்து மீண்டும் தமிழ்நாட்டுக்கு வந்தது என்கிறார்கள் சிலர்.

எமது முன்னோர்களின் எவ்வளவோ கண்டுபிடிப்புகள், அறிவியல் எல்லாமே திருடப்பட்டும், இரவல் வாங்கப்பட்டும், திரிக்கப்பட்டும், பின்னர் அவற்றை வேறு வடிவத்தில் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்திய பின்னர், தமிழர்களின் கலைகளையும், அறிவியலையும் தமிழர்கள் வடக்கிலிருந்து இரவல் வாங்கியதாகக் கூறுகின்றனர் என்பது தான் உண்மை. பிள்ளையார் வழிபாடு கூட அதிலொன்றாக இருக்கலாமல்லவா?

viyasan சொன்னது…

என்னைப்பொறுத்த வரையில் தமிழர்களின் வரலாற்றை பார்ப்பன எதிர்ப்பு, பெரியாரிசக் கண்ணடியினூடாக பார்ப்பதை நாங்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும். உண்மையில் பெரியாருக்கும் பகுத்தறிவுக்கும் தான் தொடர்பிருக்கிறதே தவிர தமிழுக்கும், தமிழர்களின் வரலாற்றுக்கும் பண்பாட்டுக்கும் அல்ல.

viyasan சொன்னது…
இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.
? சொன்னது…

"பரசு இராமன்" தந்தை சிவன் தந்தை சிவனல்ல. அவர் ஜம்த்கினி முனிவர். மேலும் பரசுஇராமன் விஷ்ணுவின் ஆறாவது அவதாரம். ஆக பார்வதி அவருக்கு சகோதர் முறை!ரேணுகா ஒரு மனிஷி, தெய்வமல்ல. இதுதான் புராணங்களில் உள்ள (ஆரியவழி கதை) நீங்கள் எழுதிய கதை தென்னிந்திய வாய்வழியான கதை. வடக்கில் இந்த கதை இல்லை, ரேணுகாதேவி,எல்லையம்மன் வழிபாடும் வழக்கில் இருப்பதாக தெரியவில்லை.

மேலும் ரேணுகா தேவியை வழிபட்டோர் அவரை எல்லையம்மனாவும் காளி அவதாரமாகவும் ஆக்கிவிட்டிருக்கிறார்கள். லாஜிக் படி பார்த்து Head transplant surgery-ஆல் ரேணுகாவில் தலை மட்டுமே அவருடையது என்பதால் தலையை மட்டும் வழிபட்டிருப்பார்களோ? ஆனால் ரேணுகா தேவி கதையின் தொடர்ச்சியாக, கீழ்சாதி பெண்ணின் உடலை கொண்டிருந்தாலும் ரேணுகாவின் தலை கொண்ட உடலை மனைவியாக ஏற்றுக்கொண்டிருகிறார் ஜமத்கினி (கதாசிரியர் அந்த காலத்திலேயே மூளைதான் முக்கியம் என அறிந்திருக்கிறார்!). ஜமத்கினி செத்த பிறகு தீ குளித்தவிட்டார் ரேணுகா. அப்போது அவரை விட்டுவிட்டு திரும்ப பரசுராமர் திரும்பி வந்தபோது உடல் எரிந்து தலைமட்டுமே மிஞ்சியிருந்தாம்- இதிலிருந்துதான் தலை வழிபாடு வந்திருக்கிறது.

உங்களின் கட்டுரையில் லாஜிக்கும் இடிக்கிறது. கீழ்சாதி மக்களின் வழிபாடு தெய்வம் மாரியம்மன், பிராமணர்களின் தெய்வமல்ல. தங்களில் ஒருத்தியின் உடலை ஏன் அவர்கள் வழிபட மறுத்து தலைய வைத்து கும்பிட வேண்டும்? ஆனால் பிள்ளையாரோ சூத்திரக்கடவுள் என்கிறார் மனு. (தமிழ் மதம்- சைவர்களின் தெய்வம் என கொண்டாப்படும் சிவனை பார்ப்பன தெய்வம் என்றும் சொல்கிறார் மனு).ஆனால் பார்ப்பனராலும் வழிபடப்படுபவர் சூத்திர பிள்ளையார்! அவரைக்கு அவமரியாதை இல்லை என்று நீங்களே சொல்கிறீர்கள். அப்படியிருக்க சூத்திர உடலை ஒதுக்கி ஏழைகள் ஏன் தங்களை தாங்களே இழிவு செய்ய வேண்டும்?

பெயரில்லா சொன்னது…

இந்தியா முழுவதும் வாழ்ந்த ஒவ்வொரு பழங்குடி இனமும் பல கடவுள்களை வணங்கி வந்தார்கள். ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு பெயர். வடமேற்கில் இருந்து பரவிய பிராமண மதத்துக்கு இங்குள்ளவர்கள் மாறிக் கொண்ட போது இங்கிருந்த கடவுள்களையும் பிராமண மதம் சுவீகரித்துக் கொண்டது. காலப் போக்கில் இரண்டும் இரண்டறக் கலந்து கொண்டன. கால்டுவெல் தமது முருகனும் அழகும் என்ற கட்டுரையில் பண்டைய திராவிட மக்கள் இரண்டு பெருந்தெய்வங்களைத் தான் வணங்கினார்கள் எனக் கூறுகின்றார். அது முருகு மற்றும் கொற்றவை. கொற்றவையின் மகனே முருகு எனவும் கூறுகின்றார். இந்த பண்டைய திராவிட சமயத்தில் இன்றைய விநாயகர், சிவன், விஷ்ணு போன்ற ஆரிய கடவுள்கள் ஏதும் இருந்திருக்கவில்லை என்பது அவரது ஆய்வின் முடிவு. சங்க இலக்கியங்களும் இதனையே காட்டுகின்றன.

முருகு, கொற்றவையோடு மேலும் மாயவன், வஞ்சிக்கோ, உப்பிலவன் போன்ற தெய்வங்களும், பற்பல எல்லை தெய்வங்களும் சிறு தெய்வங்களும் இருந்திருக்கின்றன.

ஆனால் காலப் போக்கில் இவை அனைத்தும் ஆரியமயமாக்கப்பட்டு விட்டதை வரலாற்றில் காண முடிகின்றது. முருகு சுப்பிரமணியனாகவும், கொற்றவை காளியாகவும், மாயவன் திருமாலாகவும், வஞ்சிக்கோ இந்திரனாகவும், உப்பில்வன் வருணனாகவும் மாற்றப்பட்டதோடு, சமண, பவுத்த சிறு தெய்வங்களும் பற்பல இந்து தெய்வங்களாக மாற்றப்பட்டன.

பவுத்த மதத்தின் சாத்தன் அய்யப்பனாகவும், விநாயன் கணபதியாகவும், சமண மதத்தின் அருகன் அய்யனாரகவும், கண்ணகி மாரியம்மனாகவும், பகவதியாகவும் மாற்றப்பட்டிருப்பதை அறிய முடிகின்றது.

மாயவனின் திருவிழாவான திருவோணம் இன்று திருமாலின் திருவிழாவாகவும், முருகனின் திருவிழா தைபூசமாகவும் ( பௌசம் என்றாலே சமஸ்கிருதத்தில் தை மாதத்தின் பெயராகும் ) மாற்றப்பட்டன.

இவ்வாறு தமிழர்களின் பழம் சமய நெறிகள் வைதிக மத எழுச்சியால் விழுங்கப்பட்டன. பிற்காலங்களில் தோன்றிய வைதிகத்தின் பிரிவுகளான சைவமும், வைணவமும் தத்தமது மதங்களுக்குள் இந்த தமிழ் கடவுளர்களையும், பவுத்த, சமண தெய்வங்களையும் இழுத்துக் கொண்டன.

இவற்றையே பின்பற்றி வந்த தமிழர்கள் பலருக்கும் இன்றைய நிலையில் உண்மை வரலாறுகளை அகழ்ந்தாய்ந்து எடுத்துக் கூறும் போது, தாம் பழகிய ஆரிய வைதிக நெறிகளை கைவிட முடியாமல் தவிக்கின்றனர். அதனால் தான் ஆரிய மதம் முழுவதையும் தமிழ் மயமாக்கிக் கட்ட அரைகுறை சொற் மயக்கங்களை ஆய்வுகளாக காட்ட முனைகின்றனர்.

இது ஒருவிதமான Obsessive Compulsive மனோநிலை. இவர்களுக்கு எத்தனை முறை எடுத்துக் கூறினாலும் இதில் இருந்து வெளியே வரமாட்டார்கள். இவர்களால் பார்ப்பனியத்தையும், சாதியத்தையும், ஆரிய மதக் கூறுகளையும் இறுதி வரை விட இயலாது என்பதே நிதர்சன உண்மை.

மாற்று மதங்களை விமர்சிக்கும் போது, ஆமாஞ்சாமி போடும் பல கருத்து கந்தசாமிகளும், வெந்தசாமிகளும் கூட தாம் பின்பற்றும் மதங்களில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டினால் பொங்கிவிடுகின்றனர், பரபரப்பு ஆகின்றனர். காரணம் தாம் பற்றியிருக்கும் நம்பிக்கை தொய்வானது குறைபாடுடையது, அது தமது ஆதி மூதாதையரது நம்பிக்கைகளில் இருந்து பல வட்டம் விலகி இருக்கின்றது, அல்லது சிதைந்து காணப்படுகின்றது எனக் கூறும் போது அதை அவர்களால் செரித்துக் கொள்ள இயலுவதில்லை.

அதனால் தான் விநாயகரை ஒருவர் தமிழ் கடவுள் எனக் கூறி திராவிட வேர்ச்சொல்லின் தன்மைகளை கூட விளங்காமல் கருத்தளிக்கின்றார். மற்றவரோ விநாயகரை சூத்திரக் கடவுள் என்பதாக வாதிடுகின்றார்.

பெயரில்லா சொன்னது…

விநாய பீடகம் என்ற பவுத்த நூல் ஒன்று இருக்கின்றது, அதில் விநாயம் குற்றங்களை களைபவன் விநாயகன் அதாவது பவுத்தன் என்ற அர்த்தப்படுத்தலில் பல சுலோகங்கள் உள்ளன. 7-ம் நூற்றாண்டில் பவுத்தம் அழிக்கப்பட்ட போது எண்ணற்ற இந்தியர்கள் வைதிக மதத்துக்கு மாறிக் கொண்டனர். அத்தோடு பல பவுத்த கோவில்களும் வைதிக மதக் கோவிலாக மாற்றம் கண்டன. பல பவுத்த சிலைகளின் தலைகள் சீவப்பட்டு, அவற்றின் மீது யானைத் தலைப் பொருத்தப்பட்டன. இந்த யானைத் தலைக் கடவுளுக்கு புராணமும், கதைகளும் கூட எழுப்பப்பட்டன. பண்டைய நான்கு வேதங்களை வாசித்தால் இந்த யானைத் தலை தெய்வமோ, மற்றவைய புதிய தெய்வங்களோ காணப்படுவதில்லை. ஏன் அசோகரது காலத்திலோ சங்க காலத்திலோ காணப்படவில்லை. ஆனால் பவுத்த வீழ்ந்த போது புதிய தெய்வங்கள் புதிய கொள்கைகளோடு சைவமும் வைணவமும் வந்து சேர்ந்தது.

இன்றளவில் கூட விநாயக யானைக் கடவுள் பூணூல் இட்டுக் கொண்டே வாழ்கின்றார். சூத்திரக் கடவுளுக்கு ஏன் பூணூல்? உபாயனம் பெறத் தகுதியற்ற சூத்திரனுக்கு பூணூல் வழங்கப்படுவதில்லை என்ற வைதிய ஆச்சாரம் கூடவா தெரியவில்லை.

கிமுக்களில் எழுதப்பட்ட எந்தவொரு உபநிடதங்களிலும் விநாயகரைப் பற்றி குறிப்புகள் கதைகள் ஏதுமில்லை. அக்காலக் கல்வெட்டுகளிலோ, குடவரைக் கோவில்களோ கிடையாது.

கிபி 200 - 600 வரையில் எழுந்த எந்தவொரு புராணத்திலும் கூட விநாயகர் குறிப்பு கிடையாது. திருமூலர் திருமந்திரத்திலும் கிடையாது.

விநாயகர் பற்றிய முதல் புராணக் கதை கிபி 12-ம் நூற்றாண்டில் கணபத்யா புராணம், முத்கால புராணம் ஆகியவற்றிலே வருகின்றது. அதன் பின்னரே கணபதி வழிபாடு இந்தியா முழுவதும் பிரச்சித்தியும் பெற்றது. இதே காலக் கட்டத்திலேயே இந்திய வணிகர்களின் மூலம் விநாயக யானைக் கடவுள் மலேசியா, தாய்லாந்து, பர்மா, இந்தோனேசியா, ஜப்பான, சீன நாடுகளுக்கும் பரவி முறையே அங்கிருந்த பவுத்த மதங்களோடு இணைந்து கொண்டது.

18-ம் நூற்றாண்டில் இந்து தேசியவாத இயக்கத்தை தோற்றுவித்த பால கங்காதர திலகர் காலத்தின் பின்னரே பிள்ளையருக்கு சிலை செய்து கடலில் இடும் பழக்கமும், திருவிழாவும் பிரபலமானது.

ஒரு சிலர் சிந்து நதிக் குறியீடுகளில் விநாயகர் இருப்பதாக கூற முயல்வர். ஆனால் எந்தவொரு சிந்து நதி நாகரிகக் குறியீட்டிலும் மனித உடலும், ஆனைத்தலையும் உடைய எதுவும் இடம்பெற்றிருக்கவில்லை. ஒரு வேளை யானைக் குறியீடுகள் எல்லாம் பிள்ளையார் தான் எனக் கூறினால், பண்டைய ஆப்பிரிக்காவிலும், ஐரோப்பாவிலும் முக்கியமாக கிரேக்க தேசங்களிலும் கூட பிள்ளையார் வணங்கப்பட்டார் என சமாதானம் சொல்ல வேண்டியது தான்.

வரலாற்றை மதக் கண்ணாடி போட்டு தேடுவோருக்கு எல்லாமே தம்முடையது என்ற மயக்கமே வரும்.

தனிப்பட்ட வகையில் பிள்ளையார் சிலைகள் கலைநுட்பம் வாய்ந்தவை, எகிப்து, கிரேக்கம் போன்ற நாடுகளில் எண்ணற்ற தெய்வங்கள், கணங்கள் மிருக தலையுடனும் மனித உடலுடனும் காணப்படுகின்றன, பல மிருக உடலோடும் மனித தலையோடும் காணப்படுகின்றன, அவை யாவும் பண்டைய கலையாக்கத்தின் வெளிபாடுகளாக நாம் கொண்டாடலேமே தவிர . அவற்றை தெய்வங்களாகவும் அவை எல்லாம் உண்மையாக ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் டைனோசார்களோடு கைகோர்த்து வாழ்ந்தது போலவும் கதைக் கட்டுவது முட்டாள் தனமான நம்பிக்கைகள்.

அந்த வகையில் பிள்ளையாரும் ஒரு வகை கற்பனை வடிவமே. பவுத்ததின் அழிவின் பின் தோற்றுவிக்கப்பட்டு இருக்கக் கூடியதற்கான சாத்தியங்கள் அதிகமுள்ள ஒரு Elephant Artifact அவ்வள்வு தான்..

வருண் சொன்னது…

உங்களுக்கு என்ன சந்தேகம்?

திராவிடர்கள் தன்னையோ, தான் உருவாக்கிய கடவுளையோ பெரிதாக நினைப்பதில்லை.

பார்ப்பனர்கள் தம்மை ஆள்வதையும், பார்ப்பனர்கள் கடவுள்களை உயர்வாக வணங்குவதையும்தான் சரி என்று முழுமனதாக நம்புகிறார்கள்.

அப்பப்போ உங்களுக்கு ஞானோதயம் வந்து "ஹூ இஸ் செல்லாத்தா?"னு "நம்ம சொந்தக்காரியை", பார்ப்பானர்கள் இழிவுபடுத்துறா னு எதையோ எழுதுறீங்க! :)))

-----------------

அப்புறம்.. ராவணன் பார்ப்பனராம்! ராமன் பார்ப்பனர் இல்லையாம்!

இந்த ஒரு விசயத்தில் பார்ப்பனர்கள் நிலைப்பாடு என்னனு உங்களுக்கு நான் சொல்ல வேண்டியதில்லை! திராவிடர்கள் இன்ஃப்ளுயண்ஸ்ல இவர்களும் நிலைதடுமாறி தன் இனத்தை சேர்ந்தவனை விட்டுவிட்டு மாமிசம் சாப்பிடும் ராமன் வகையறாவுக்குத்தான் சப்போர்ட் செய்றா!!

என்னவோ போங்க!

-----------

அப்புறம் நம்ம வியாசர் அண்ணாச்சி, வியாச முனிவர் தமிழர்தான்..10000 ஆண்டுகளுக்கு முன்னால் தமிழ்ல இருந்த மகாபாரத்தைத்தான் சமஸ்கிரத்தில் மொழிபெயர்த்து எழுதினதாக ஏதோ சொல்றாரு..:)))))


----------------
எல்லாம் கதைதானே?? நம்ம வசதிக்கு சொல்லிக்க வேண்டியதுதான். :)))

கோவி.கண்ணன் சொன்னது…

//அப்படியிருக்க சூத்திர உடலை ஒதுக்கி ஏழைகள் ஏன் தங்களை தாங்களே இழிவு செய்ய வேண்டும்?//

ஜமதக்னி கதையில் பல கதைகள் இருக்கு, ஜகதக்னிக்கு பார்வதியை வழிபட பிடிக்காது, சிவன் அர்தநாரீஸ்வராக இருக்கும் பொழுது வண்டாக சிவன் இருக்கும் பாதி உடலை துளைத்து வழிபட்டான் என்கிற கதையும் உண்டு. எனக்கு தெரிந்து எங்கள் ஊரில் மாரியம்மனின் தலையை வழிபடச் சொல்லும் காரணம் உடம்பு பரையர் குலத்தியுடையது என்பதால் என்றே சொல்லுவார்கள். அறிவு இருக்கிறவர்கள் என்று சொல்லிக் கொள்ளும் நாமே, தமிழகத்திற்கு மூத்த பிள்ளைக்கு தந்தைக்கு இணையான மரியாதை உண்டு என்று தெரிந்து வலிந்து பிள்ளையாரை அண்ணாக்கி வைத்துள்ளதை கேள்வி கேட்காமல் ஒப்புக் கொள்கிறோமே ? தாழ்ந்த குலத்தினர் தங்கள் குலத்தை சார்ந்தவளின் உடல் பார்வதிக்கு பொருத்தப்பட்டது என்று சொல்வதை பெருமையாக நினைத்துக் கொள்வதால் இழிவு படுத்தும் அறியாமையை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

Yarlpavanan சொன்னது…

சிறந்த கருத்துப் பகிர்வு
தொடருங்கள்

priyamudanprabu சொன்னது…

Follow

Kodees சொன்னது…

கோவி! சற்று தாமதமாகத்தான் தங்கள் பதிவைப் பார்த்தேன். நல்ல பதிவு, இது குறித்து சில கருத்துக்களை பகிர விரும்புகிறேன்.
நம் மக்களை , தாங்கள் விரும்பும் கருத்தை சொல்ல/செய்ய வைக்கக்கூடிய ஒரு கும்பல் எப்போதும் இருந்துகொண்டே வருகிறது (அதுதான் தனக்கு நல்லது என்று மிக நுட்பமாக நம்பவைக்கப்பட்டுள்ளார்கள்).
தடாலடி எதிர்ப்புகளோ, அறிவுரைகளோ இங்கு எடுபடாது. இது ஒரு ஜனநாயக நாடு, இங்கு மெஜாரிட்டி எதுவோ அதுவே வெல்லும் (அரசு அலுவலகங்களில் கோவில் இருப்பது அதில் ஒன்று). ஒரு சிந்தனையாளன் நிச்சயமாக கடவுள் எனும் கற்பிதத்தை நம்பமாட்டான், ஆனால் மற்றவர்கள்?
சிந்திக்கச் சிந்திக்கத்தான் மாற்றம் வரும் - ஆனால் நம்மவர்கள் சிந்திக்கவே மறுக்கிறார்கள் (சாமி கண்ணைக் குத்திவிடும் என்பது முதல், நமக்கு ஏன் இந்த வம்பு/ஆராய்ச்சி, எல்லோரும் என்ன செய்கிறார்களோ நாமும் அதே - போல)
ஏன், எதற்கு, எப்படி? என்ற கேள்வி இன்றி இங்கு எதுவுமே மாறாது!

பட்டிகாட்டான் Jey சொன்னது…

ரேணுகாதேவி & ஜமத்கினி முனிவர் ஆகிய தமபதியினரின் மகன் பரசுராமர்.

தந்தை சொல் தட்டாமல் தாயின் தலையை கொய்து... தந்தை வரம் கேட்கச் சொல்ல தாயின் உயிரை வேண்டினார் பரசுராமர்.

தாயின் தலையை எல்லம்மாள் என்ற ஒரு பெண்ணின் உடலில் சேர்க்க தாய் உயிர்பெற்றாள்.

தற்போது ஸ்ரீ ரேணுகா தேவி... ஸ்ரீ ரேணுகா தேவி எல்லம்மாள் என்றே அறியப்படுகிறாள்.

அருப்புக்கோட்டை பக்கம், குருணைகுளத்தில் உள்ள ஸ்ரீ ரேணுகதேவி எல்லம்மாள் கோவில்தான் எங்கள் குலதெய்வம் கோவில்.

நீங்கள் சொல்வது போல் ஒவ்வொருவருட மகா சிவராத்திரிக்கும், குழந்தைகளுக்கு மொட்டை போடவும் மட்டுமே செல்கிறோம் என்பது வேறு கதை.

Unknown சொன்னது…

Where to Bet on Sports To Bet On Sports In Illinois
The best wooricasinos.info sports bet goyangfc.com types and bonuses available in Illinois. The most common sports betting options 오래된 토토 사이트 available. Bet $20, Win $150, Win deccasino $100 septcasino or

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்