பின்பற்றுபவர்கள்

11 பிப்ரவரி, 2007

பூவினும் மெல்லியது...(அன்பர் நாள் சிறுகதை)

கண் விழிக்க முயல்வது போல் இருந்தாலும், முடியாமல் உடம்பை முறுக்குவது மாதிரியான வலி, கழுத்தை யாரோ அறுப்பது போன்ற ஒரு வேதனையான உணர்வு, மின்சாரம் தீரப்போகும் டார்ச் லைட் மிக மங்கிய ஒளியை காட்டுவது போல் லேசாக திறந்த கண்களின் வழியாக பிம்பங்கள் தெரிந்தன.

இரைச்சல் மாதிரி கேட்கப்பட்ட ஒலி தெளிவின்றி காதில் கேட்டது, மெது மெதுவாக அதிகரித்த இரைச்சலில், அப்பா அம்மாவின் அழுகைச் சத்தமும், அண்ணா அண்ணா - என்ற தங்கையின் குரலும் கிணற்றுக்குள் இருந்து வருவது மாதிரி கேட்டது.

'பேசன்ட் கண்ணை முழிச்சிட்டார்ன்னு நினைக்கிறேன், யாரும் தொந்தரவு செய்...' அதற்குள் மறுபடியும் மயங்கிப்போனேன், நினைவுச் சுழல், சுழன்று சுழன்று ஒரிடத்தில் நின்றது.

என்னுடைய அலுவலகதில் நான் சேர்ந்து ஆறாவது மாதம் சென்றபின், புதிதாக விற்பனைப் பிரிவில் உதவியாளராக வேலைக்கு சேர்ந்தாள் ஒருத்தி. ஐந்தரை அடி உயரத்தில் நல்ல மாநிரத்தில் நேர்த்தியான ஒற்றை பின்னலுடன் வசீகரிக்கும் அழகு இல்லாவிட்டாலும் ஒரு கிராம தேவதை ஜீன்ஸ் அணிந்தவந்தது மாதிரி இருந்தாள்.

அவளை எல்லோருக்கும் அறிமுகப்படுத்திய அவளுடைய மேலாளர், என்முறை வந்ததும், 'மிஸ் உமா, தி ஈஸ் மூர்த்தி, நம்ப அக்கவுன்ட் டிபார்ட்மென்ட்ல அக்கவுன்ட் எக்ஸிகுயூட்டிவா இருக்கார்' என்று அறிமுகப்படுத்தினார். என்னை நிமிர்ந்து பார்த்து கண்களை விரித்து பார்த்து மெல்லியதாக புன்னகைத்து ஒரு சின்ன ஹலோ சொல்லிவிட்டு கடந்து சென்றாள்.

சூரியனை எட்டிப்பார்க்கத் துடிக்கும் விதையின் கொழுந்து பூமியை மெதுவாக பிளப்பதுபோல், எனக்குள் ஏதோ கொழுந்துவிட ஆரம்பித்தது. ஏனோ அவளை திரும்பவும் பார்க்க
வேண்டும் போல் இருந்தது.

அன்று மதியமே அவளுடன் பேச வாய்ப்புக் கிடைக்கும் என்று நான் எதிர் பார்க்கவில்லை, அன்று என்னுடைய உணவை எடுத்துக் கொண்டு மதிய உணவிற்கான அறைக்குச் சென்றபொழுது அவள் தனிமையில் அமர்ந்து அவளுடைய உணவை சாப்பிட்டுக் கொண்டிருந்தாள்.

நான் அருகில் சென்று, ஒரு ஹலோ சொல்லிவிட்டு எதிரில் உட்கார்ந்து கொண்டேன், எனது உணவை சாப்பிட தாயாராய் எடுத்துவைத்துக் கொண்டு, "மிஸ் உமா, என்ன தனியா சாப்பிட வந்திருக்கிங்க, உங்க டிபார்ட்மென்ட்லர்ந்து யாரும் உங்க கூடவரலையா"

"ஆமாம் மூர்த்தி சார், அவுங்கல்லாம் இன்னைக்கு வெளியில் சாப்பிடப் போறாங்களாம், நான் மட்டும் தனியா சாப்பிட வந்திருக்கேன், எனக்கு ஹோட்டல் சாப்பாடு பிடிக்காது, அதான் அவுங்க கூட போக முடியல"

"ஓகோ" என்று அமைதியாக கேட்டுக்கொண்டேன்.

எனக்கு மின்னல் அடித்ததுபோல் ஆச்சிரியமாக இருந்தது, ஒரே நாளில் முப்பது பேருக்கு அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டவள், அதுவும் இன்றைக்கு தான் வேலைக்கு வந்தவள், ஒருமுறை தான் அறிமுகம் ஆகியிருக்கிறது, அதற்குள் என்னுடைய பெயரை நினைவு வைத்திருக்கிறாளே. எனக்கு ஆச்சரியம்! நான் வேலைக்கு சேர்ந்த அன்று முதல்நாள் என்னுடைய மேலாளரின் பெயரை பலமுறை, சாரி சொல்லி கேட்டு கேட்டு, ஒழுங்காக நினைவுக்கு கொண்டுவர மூன்று நாள் ஆகியது.

பரஸ்பரம் விசாரிதுக் கொண்டோம், அவளுக்கு ஒரு தங்கை இருப்பதையும், அவள் அப்பா ரிடையர்ட் மிலிடெரி ஆபிஸரென்றும் சொன்னாள். நானும் என் குடும்பம் பற்றி சொன்னேன். பண்மைகளை தவிர்த்து ஒருமையில் அழைத்தால் போதும் என்றும் கேட்டுக்கொண்டாள். அவள் என்னிடம் நெருங்கவதாகவும் நான் நொருங்குவதாகவும் உணர்ந்தேன்.

நாளாக, நாளாக எனக்கு அவளின், நினைவுகள் அடிக்கடி வர ஆரம்பிக்க எனக்குள் ஊர்ஜிதப் படுத்திக்கொண்டேன், அவள் வேலைக்கு வராத நாட்களில், என் மனம் அவளை தேடுவதில் தீவிரமாவதை வைத்து, எனக்கு அவள் மேல் காதல் அரும்பியிருந்தது தெளிவானது.

எனக்குள் பலவாறான எண்ணங்கள், நான் காதலில் விழுந்தது நிஜமா ? காதலுக்கு கண் இல்லையென்று சொல்வது மிகச் சரி. கண் ஒரு தீப்பொறியை பார்த்துவிட்டு அல்லது காட்டிவிட்டு அது முடித்து கொள்கிறது, அதன்பிறகு காதலுக்கு கண் எதற்கு, இதயங்கள் தானே இணையப்போகிறது.

இது எப்படி நடக்க முடியும், கல்லூரி படித்த காலங்களில் வாராத காதல் இப்பொழுது எப்படி வந்திருக்க முடியும் ? ஒரு வேலை அவளின் தோற்றமா ? அப்படி சொல்வதற்கொன்றும் இல்லை, அவளுடைய பளபளக்கும் கண்களாக இருக்கலாம், அல்லது அவளுடைய ஆடை உடுத்தும் அழகா? தெரியவில்லை. முட முடப்பான சேலை அணிந்து வந்தால் நல்ல தமிழ்பெண் என்ற அடையாளமாக தெரிந்தாள், சுடிதார் அணிந்திருந்தாலும் அதுவும் அவளுக்கு பொருத்தமாக இருந்தது, பேன்ட் சட்டையிலும் மிடுக்காக இருந்தாள், மொத்தத்தில் ட்ரெஸ்ஸிங் சென்ஸ் என்று சொல்லுவார்களே அது அவள் உடுத்தும் ஆடைகளிலும், அதற்கு ஏற்றவாறு தலை அலங்காரங்களும் தெளிவாக தெரிந்தது.

உடைகள் அணியும் விதம் ஒழுக்கங்களை வெளிச்சமிடும் என்று சொல்லுவது போல் அவள் ஒழுங்கின் இலக்கணமாகவும் இருந்தாள், அதிகம் பேசாதவளாக இருந்தாலும் அதேசமயத்தில், அவசியமானதை தயங்காமலும் தெளிவாகவும், எவரையும் தவிர்க்க வேண்டும் என்பதுபோல் நடந்து கொள்ள மாட்டாள். அவள் மீது கொண்ட காதல் உணர்வால் சற்று மிகையாக அவளைப் பற்றிய எண்ணமோ இது என்ற சந்தேகமும் அவ்வப்போது எனக்கு வரும். யாராவது அவளைப் பார்த்து ஹலோ சொல்லி சிரித்தால் பதிலுக்கு மென்மையாக சிரித்து வைப்பாள்.

மூர்த்தி, மூர்த்தி என்று என்னிடம் மட்டும் அதிகம் பேசுவது அலுவலகத்தில் அனைவரையும் ஆச்சர்யப் படுத்தியது. மூர்த்தி நீங்களும் உமாவும் லவ் பண்ணுகிறார்களா ? சிலர் என்னிடமே கேட்டு வைத்தார்கள். அவசரமாக மறுத்திருக்கிறேன், மேலும் என்னிடம் கேட்ட மாதிரி அவளிடம் கேட்டுவிடாதீர்கள் என்று வேண்டியிருக்கிறேன்.

நானே அவளிடம் சொல்லி, அவள் என்னிடம் சொல்லி உறுதிப்படுத்திக்கொள்ளாத விசயத்தை எப்படி மற்றவர்களிடம் உறுதியாக கூறமுடியும். எனக்கு அவள் மேல் காதல் என்பதுபோல் எனக்கு தெரியும், அவளுக்கும் என் மீது ஈர்ப்பு என்பதை உறுதிபடுத்திக் கொள்ளாதவரை அவளிடமே முதலில் சொல்லக் கூடாது என்பதில் எச்சரிக்கையுடன் நடந்து கொண்டேன்.

யாராவது என்பெயரை சொல்லி கூப்பிடும் போது, அவள் தனக்குள் சிரித்துக் கொள்வதை பலமுறை ஊர்சிதப் படுத்திக் கொண்டேன்

நாளுக்கு நாள் எங்களின் பழக்கம் நெருக்கமாக ஆக, உமாவின் வீட்டு நாய் குட்டி போட்டது வரை, என்வீட்டில் தங்கை பரிச்சையில் பெயிலானது வரை எல்லா விசயங்களும் பற்றி பேசினோம்.

இதற்கிடையில் என் அப்பா,

"மூர்த்தி, உனக்கு கல்யாணம் பேச வேண்டிய நேரம் நெருங்கிடுச்சி ..."

"அதுக்கு என்னப்பா அவசரம் ?"

"அவசரம்னு, இல்லப்பா மூர்த்தி, இது எல்லாம், அந்தந்த வயசில அவசியம்"

"உனக்கு தான் தெரியுமே, நான் இந்த காலத்து ஆளு, நீ ஏதாவது பொண்ணை நெனெச்சிட்டு இருந்தால், சொல்லிடு அவளையே பேசி முடிச்சிடலாம்"

நான் உமாவை நினைத்துக் கொண்டு இருந்தாலும்,

"அப்படியெல்லாம் இல்லப்பா, நீங்க என்னோட சந்தோசத்திற்கு குறுக்கே நிற்கமாட்டீங்கறது எனக்கு தெரியும்"

"பின்னெ என்னப்பா, தயங்கிற"

"இல்லப்பா, நான் இன்னும் நல்ல பொசிசனுக்கு வரனும்-னு ஆசைப்படுறேன்"

"சரிப்பா, அதுக்கும் கல்யாணத்துக்கும் என்ன சம்பந்தம்"

"இருக்குப்பா, என் பிரண்டு ரொம்ப சின்ன வயசில கல்யாணம் பண்ணிட்டு அவஸ்தை படுறான், என்னோட மற்ற நண்பர்கள் கல்யாணத்துக்கு தயாராகிறப்ப நானே உங்களிடம் சொல்கிறேன்" என்று சமாளித்து வைத்தேன்.

"சரி, இன்னும் கொஞ்ச நாள் போகட்டும், என் பிரண்டு சந்தானம் என்னோட சம்பந்தியா ஆகனும்-னு ஆசைப்படுறான், அவன் பொண்னுதான் உனக்கு தெரியுமே, சின்ன வயசில பார்திருப்பியே மேகலா. அவள்... அவளோட பாட்டி வீட்டுலிருந்து தங்கிதான் காலேஜ் எல்லாம் படிச்சி முடிச்சாளாம், நல்ல நட்போட பழகுற பொண்ணு, ஒனக்கு நூறு சதவிகிதம் பொருத்தமானவ ..."

"சந்தானம் எனக்கு பால்ய சினிகிதன் மட்டுமல்ல... என்னை மாதிரி முற்போக்க இருப்பவன்... அவன் நம்ம சாதி இல்லாட்டிலும் நட்பை அதிகம் நேசிக்கிறவன், எங்களோட நட்பு அடுத்த தலைமுறைக்கும் தொடரனும்னு ஆசைப்படுகிறான் ..."

"சரிப்பா, இதப்பத்தி பிறகு பேசலாம்னு, சந்தானம் அங்கில்கிட்ட, கொஞ்ச நாள் போகட்டும்-னு சொல்லாம, ஒரு வருசம் ஆகட்டம் பிறகு பேசுவோம்னு சொல்லுங்கப்பா, சம்பந்தத்தைப் பற்றி உறுதியாக எதுவும் இப்போதைக்கு கூறவேண்டாம்"

அப்பா என் மீது வைத்திருக்கும் அன்பினால், நான் சொல்வது நிசம் என்று நம்பினாலும், அப்பாவை ஏமாற்றுகிறோம் என்ற சின்ன குற்ற உணர்வு எனக்கு இருந்தது.

ஏதோ, இப்போதைக்கு சமாளித்துவிட்டால் போதும், பின்பு உமாவை பற்றி சொன்னால் புரிந்து கொள்வார். ஆனால் உமா என்னை காதிலிக்கிறாள என்று உறுதியாக தெரியவில்லையே, ஆனால் அவள் என்னிடம் மற்றவர்களைவிட நன்கு பழகுவது, நடந்து கொள்வது என்பதை வைத்து ஓரளவு அவளுக்கும் என்மீது ஈர்ப்பு என்பது மட்டும் புரிந்தது"

ஆண் ஒரு பெண்ணிடம் முதலில் காதலை தெரிவிப்பது என்பது இயல்பு, ஏற்றுக்கொள்ளா படாவிட்டால் அவனுக்கு பெரிய இழப்பில்லை, பெண் ஒரு ஆணிடம் காதலை தெரிவித்து அவன் ஏற்றுக்கொள்ளவிட்டால் அது அவளுக்கு பெருத்த அவமான மாகிவிடுவது என்பது சமூக அமைப்பின் அவலம். ஒரு பெண், ஆணிடம் முதலில் காதலை சொல்லி அவன் ஏற்றுக்கொண்டால் அவன் பெரும் அதிர்ஷ்ட சாலி, அப்படி ஒரு அதிர்ஷ்ட சாலி ஆகவேண்டும் என்று என் காதலை மிகவும் ரகசியாமாக வைத்திருந்தேன். எனக்கு தவிப்புகள் அதிகமானாலும், பொறுமையாக இருந்தேன். அவள் என்வீட்டிற்கும், நான் அவள் வீட்டிற்கு சொன்று வருவதும் கூட அதிகமானது.

அவள் என்வீட்டிற்கு வந்த ஒரு நாள், அவளிடம் அப்பா நேரிடையாக கேட்டார்.

"ஏம்மா, உமா இவன் யாரையாவது லவ் பன்றானா?

நெற்றியை சுருக்கி, ஆழ்ந்து யேசித்து,

"இல்லை அங்கிள், அப்படி ஏதாவது ஒன்னு-ன்னா எங்கிட்ட சொல்லியிருப்பாரே"

"இல்லம்மா, அவன்கிட்ட பொண்ணுப் பாக்கலாம்னு சொன்னா கொஞ்சம் தயங்குகிறான், அதான் கேட்டேன்"

என்னை கேள்வியாக பார்த்தாள் உமா, கொஞ்சம் கோபம், ஏமாற்றம் எல்லாம் தெரிந்தது

"மூர்த்தி, நீங்கள் என்கிட்ட வரவர எதுவும் சொல்றதே இல்லை, உங்களை நாளைக்கு பார்த்துக் கொள்கிறேன்" என்று சொல்லி சென்றுவிட்டாள்.

ஒரு வேளை அதிர்ச்சி அடைந்திருப்பாளோ, அன்று எனக்கு தூக்கமே வரவேயில்லை.

மறுநாள் அலுவலகத்தில், பேசுவதைக் கூட தவிர்த்தாள், நான் தயங்கி, தயங்கி பேசினாலும் அதிகம் ஆர்வம் காட்டாதவள் போல நடந்து கொண்டாள்.

"உமா, ஒரு சம்பிர்யாதக்குத்தான் அப்பா என் கல்யாண விசயத்தை பேசினார்... நான் இப்ப வேண்டாம்-னு சொல்லிட்டேன், அதான் உங்கிட்ட சொல்லவில்லை"

"மூர்த்தி, நீங்க இதைப்பற்றி என்னிடம் மூச்சிவிடவில்லை என்பது எனக்கு வருத்தமாக இருக்கிறது ..." என்றாள்

கொஞ்சம் கொஞ்சமாக சகஜ நிலைக்கு அவள் திரும்ப ஒருவாரம் ஆகியது.

ஒரு நாள் மலை அலுவலகம் முடிந்தது அவள் வீட்டிற்கு அழைத்துச் சொன்றாள், அவள் தங்கை அவளுக்கு நேர் மாதிரியாக இருந்தாள், செகன்டரி ஸ்கூல் இறுதியாண்டு படிக்கிறாளாம், அவள் ஒரே வாயாடி என்று உமா சொல்வதை நேரடியாக பார்தேன்.

"மூர்த்தி அங்கிள், உமா காதலிக்கிற விசயம் உங்களுக்கு தெரியுமா ?"

எனக்கு ஆயிரம் ரோஜாக்களை தலையில் கொட்டியதுமாதிரி ஒரு உணர்வு, என்னை தவிர யாரை காதலிக்கப் போகிறாள் எனக்குள்ளே சொல்லி கொண்டேன். எனக்கு கொஞ்சம் வியர்த்தது.

"ஏய் யமுனா, கொஞ்சம் வயசுக்கு தகுந்த மாதிரி பேசுறியா ?" அதட்டினால் உமா

"என்னக்கா, போட்டுகுடுத்திட்டேன், பார்கிறியா, எப்படியும் மூர்த்தி அங்கிலுக்கு தெரியத்தான போறது".

"சும்மா...யிருடி, யாருகிட்ட எதை சொல்லனுமோ, அதுக்கான நேரம் வர்ரப்ப சொன்னாதான் அவுங்க சந்தோசப்படுவாங்க ..., சும்ம ஏதாவது உளரி கொட்டாதே ..."

கூச்சமும், சங்கடமாக என்னிடம்

"சாரி மூர்த்தி, இவள் ஏதோ உளருகிறாள், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க" என்றாள்

"நேரம் வர்ரப்ப நானே சொல்கிறேன் ..."

'அவ ஒன்னும் உளரல, சரியாத்தான் சொல்லுறா, நீ என்ன சொல்லப்போறன்-னு எனக்கு தெரியும் அதை, நீ உன் வாயால எப்ப சொல்லுவேன்னு தான் நான் வெயிட் பண்ணுகிறேன்' என்று நினைத்துக் கொண்டேன்

"சரி உமா, நாளைக்கு பார்கலாம்" என்று விடை பெற்று கொண்டேன்.

அதன் பிறகு வந்த நாட்கள் ஒவ்வொன்றும் எனக்கு ஆவல் மிகுந்து இருப்புகொள்ளாமல் இருந்தது, இப்படி உணர்வுகளை எப்படித்தான் அடக்கிவைத்துக் கொண்டிருக்க முடியுதோ, தெரியவில்லை. இந்த பெண்கள் இவ்வளவு ஆழமான மனது உள்ளவர்களா ? நான் அவளுக்கு முந்தி காதலை தெரிவித்தால், நான் அதிர்ஷ்டகாரானாக முடியாதே, என்ற என் உணர்வுகள் அவளிடம் என் காதலை தெரிவிப்பதற்கு தடையாக இருந்தது.


அன்றைக்கு எனக்கு அது மறக்க முடியாத நாளாக இருக்கும் என்று நினைக்கவில்லை, வழக்கத்துக்கு அதிகமாக அவளுடைய முகத்தில் ஒரு பூரிப்பு தெரிந்தது, யோசித்தபடியே மெதுவாக உணவு சாப்பிட்டுக்கொண்டு இருந்தாள்,

"என்ன உமா, ஏதோ நீ மகிழ்சியாக இருப்பது மாதிரி இருக்கு"

"ஆமாம், எல்லோரும் போகட்டம் அப்புறம் சொல்கிறேன், அதுக்குதான் நிதான மாக சாப்பிடுகிறேன்" என்றாள் மெதுவாக

வழக்கத்தை விட என்னை பார்பதும் சிரிப்பதுமாக இருந்தாள், அனைவரும் சென்றவுடன் என்னிடம், ஒரு தயக்க புன்சிரிப்புடன்

"மூர்த்தி உங்களிடம் ஒன்று தெரிவிக்கப் போகிறேன். சாயங்காலம் அலுவலகம் முடிந்ததும் நாம, நேரா ஹோட்டலுக்கு போறோம், சாப்பிட்டுகிட்டே பேசலாம்" என்று சொல்லிவிட்டு ஒரு வெட்கச் சிரிப்பை உதிர்த்துவிட்டு சென்றாள்.

'வார்ரே, வா, இன்னைக்குத்தானா அந்த பொன் நாள்' என்று ஆனந்தப்பட்டுக்கொண்டேன், எனக்குள் பருவகாலப்பூக்கள் ஒரே நாளில் ஆயிரக்கனக்காக பூப்பது போன்ற உணர்வு, உள்ளம் நிறைந்து போனது, மனித்துளிகள் நகராமல் வாட்டி வதைப்பது ஒரு இன்ப வேதனையாக இருந்தது ஒரு வழியாக அலுவலகம் முடிந்ததும்,

"மூர்த்தி உங்க பைக்கிலேயே இன்னைக்கு நாம போகலாம்"

ஒரு வினாடி பேச்சற்று போனேன், எத்தனை தடவை கெஞ்சி கேட்டும், என் பைக்கில் ஏறாதவள், இன்னைக்கு வருகிறேன் என்றால், அதுதான் அதுதான் என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்

"என்ன உமா, முன்பெல்லாம் பைக்ல போகலாம்-னு கூப்பிடும் போதெல்லாம், யாராவது தப்பா நினைச்சுப்பாங்கன்னு, ரொம்ம பிகு பண்ணிக்குவ"

"இனிமே, அப்படியெல்லாம் நினைக்க மாட்டாங்க, இன்னைக்கு உங்களுக்கு தெரியப்போவது, நாளைக்கு அவுக்களுக்கு தெரியப்போவுது"

"சரி, சரி.... நீ ஏதோ சொல்லப் போறேன்-னு ரொம்ப ஆவாலாக இருக்கேன், இருப்பு கொள்ளவில்லை சீக்கிரம் ஏறு"

"மூர்த்தி, நீங்க நேரா ஹோட்டல் பார்க் இன்-னுக்கு போங்க" என்றாள் அமர்ந்ததும்.

"உமா, நல்ல கெட்டியாக சீட்ட புடிச்சுக்க"

என்று சொல்லிவிட்டு பைக்க அழுத்த, இத்தனை நாள் வெறும் பைக்காக இருந்த வாகனம் ஏதோ இறக்கை முளைத்து சொர்கத்துக்கு அழைத்துச் செல்வது போன்று இருந்தது.

பைக்கை நிறுத்திவிட்டாலும், இதயம் பட் பட் என சத்தமாக அடிப்பது எனக்கு கேட்டது, கைகளின் நடுக்கத்தை கவனித்த உமா,

"மூர்த்தி, நான் தான் இன்னும் விசயத்தை சொல்லவில்லையே, ப்ளீஸ் கூல் டவ்ன்" என்று சொல்ல, எனக்கு பேச்சு வரவில்லை, ஒரு வழியாக மேசையில் அமர்ந்ததும்

"மூர்த்தி என்ன சாப்பிடுரிங்க" என்று கேட்டாள்

இதயங்கள் இணைய போகிற நேரத்தில், உணவில் மட்டும் வேறுபாடு எதற்கு என்று நினைத்தபடி,

"உமா, உனக்கு என்ன பிடிக்குமோ, அதையே எனக்கும் சொல்லு" என்று சொன்னேன்

சிறிது நேரம் மவுனம், அவள் முகத்தை முதல் தடவையாக பார்பது மாதிரி இருந்தது, வகுப்பில் முதலில் வரும் பாஸான மாணவன் தன்னுடைய மதிப்பெண்ணை தெரிந்து கொள்ள புறப்படும் போது ஏற்படும் உணர்வலைகள் ஏற்பட்டது, மெதுவாக ஆரம்பித்தாள்

"மூர்த்தி, என்னை பாருங்கள், இன்னைக்கு நான் ரொம்ப சந்தோசமா இருக்கிறேன்" பிறகு தீர்கமாக என்னைப் பார்த்து

கண்களாலேயே சொன்னேன் 'தெரிகிறது'

"யெஸ், ஐ லவ் மூர்த்தி"

உடல் லேசாகி பறப்பது போன்ற உணர்வு, இதற்கு தானே இத்தனை நாள் காத்திருந்தேன்

அத்தனையும் ஒரு வினாடி கூட நீடிக்கவில்லை.

"என்ன மூர்த்தி ஏதும் பேசாம இருக்கிங்க, மூர்த்தி யாருன்னு கேளுங்க, சரி நீங்க ரொம்ப படபடப்பா இருக்கிங்க, நானே சொல்லிவிடுகிறேன்"

"அவர் பெயரும் மூர்த்திதான், என்னோட கிளாஸ் மெட், நானும் அவரும் நாலு வருசமா லவ் பண்ணுகிறோம்"

ஒரு சில வினாடிகளே நீடிக்கும் பூகம்பம் பூமியை பிளந்து போடுவது போல், உணர்வுகள் அத்தனையும் நொருங்க, நெஞ்சில் அதிர்ச்சி அலைகள் வலிகளை ஏற்படுத்த, பேச்சற்று போனேன்

மேலும் சொல்லிக் கொண்டே போனாள்

"மூர்த்தி, இது உங்களுக்கு அதிர்ச்சியாக இருக்கும், ஏன்னடா, இவ இவ்வளவு நாள் பழகி நம்மகிட்ட சொல்லவேயில்லைனு நினைப்பிங்க"

"என்னோட லவ்வர் 'பேச்சிலர் டிகிரி' முடிந்ததும், மாஸ்டர் டிகிரி படிக்க சென்றுவிட்டார்"

"மூனு மாசத்துக்கு முன்னதான் அவருடைய டிகிரி படிப்பு முடிந்தது"

"அவர்தான், நம்ப வீட்டல சம்மதிக்குமுன் யாரிடமும் சொல்ல வேண்டான்-னு சொன்னார், அதனால்தான் உங்களிடம் வெளிப்படையாக சொல்ல முடியல"

"அவுங்க வீட்ல, ஆரம்பத்துல ஒத்துக்கொள்ளவில்லை, இரண்டு மாத்ததுக்கு முன்புதான் நானே எங்க வீட்ல சொன்னேன்"

"அன்னைக்கு நீங்க என் வீட்டுக்கு வந்தப்ப, என் தங்கை உங்களிடம் உளரினாளே அதற்கு முன்புதான்"

"எங்க அப்பா கொஞ்சம் தயங்கினாலும், ஆனால் இதுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை"

"ரொம்ம பிடிவாதமாகதான், அவருடைய பெற்றோர்களை சம்மதிக்க வைத்தார்"

"நம்முடைய நட்பை பற்றி அவரிடம் நிறைய சொல்லியிருக்கேன், ரொம்பவும் உங்களின் நட்பை நெகிழ்சியுடன் பாராட்டுவார்..."

"மூர்த்தின்-னு என்னுடைய லவ்வருடைய பெயர் உங்களுக்கு இருப்பதால், உங்களிடம் நெருக்கமான நட்புடன் பழகு முடிந்தது என்று ஒன்றிருந்தாலும், நீங்க உண்மையில் அதைவிடவும், நல்ல நட்பிற்கு தகுதியானவர்தான் "

"உங்களை பார்க்கும் போது, உங்களை யாராவது மூர்த்தின்னு பெயர் சொல்லி அழைக்கும் போதும், என்னவரை அடிக்கடி நினைத்துக் கொண்டு மனதுக்குள் சிரித்துக் கொள்வேன்"

என்று அவள் சொல்ல சொல்ல மழை வேண்டிய மரம், இடியினால் கருகியது போன்ற கருகி போனேன்.

"நீங்க நிஜமாக ஒரு ஜென்டில் மேன், உங்களுடைய நட்பு எங்க திருமணத்துக்கு பின்பும் தொடரனும்னு அவரும் விரும்புகிறார்"

"அவர்தான் சொன்னார், நீங்க தான் எங்கள் கல்யாணத்துக்கு சீப் கெஸ்ட்"

"சரி, சரி மூர்த்தி நான் உங்களிடம் கோபித்துக் கொண்டது மாதிரி, நீங்களும் கோபித்துக் கொண்டீர்கள்னு நினைக்கிறேன்"

"இவ்வளவு நாள் இந்த விசயத்தை மறைத்ததற்கு, என்னை மன்னிச்சிடுங்க..."

"அவர் இன்னைக்கு, ஏழு மணிக்கு கோவிலுக்கு போகலாம்-னு வரச்சொல்லி இருக்கார், நேரம் ஆச்சு"

"நீங்க சாப்பிட்டுபோங்க, இன்னைக்கு என்னோட ட்ரீட் பில்லை கவுண்டரில் கட்டிட்டு போயிடுறேன்"

"நான் டாக்ஸி பிடித்து போய்க்கிறேன், உங்க அம்மா, அப்பா கிட்ட விசயத்தை சொல்லிடுங்க"

"கல்யாண வேலை இருக்கு அதனால் ஒருவாரம் லீவு போட்டிருக்கேன், அடுத்த வாரம் நானும் அவரும் உங்க வீட்டுக்கு நேரில் வந்து சொல்லிவிடுகிறேன், மறுபடியும் மன்னிப்பு கேட்கிறேன், மன்னிச்சிங்க மூர்த்தி" என்னிடம் எந்த ரியாக்ஸனும் இல்லாத்தால் ஒரு குழப்பமான பார்வையுடன் என்று எழுந்து சென்றாள்

ஆறரை மணி ஆகியருந்தாலும் இன்னும் சூரிய நிழல்களாய் வெளிச்சம் எங்கும் இருந்து கொண்டிருந்தது, பைக்கை ஓட்டிச் செல்ல முடியுமான்னு தெரியவில்லை, தட்டு தடுமாறி ஹோட்டலை விட்டு வெளியே வந்து, டாக்ஸிக்கு கைகாட்டி ஏறிக்கொண்டு என் விட்டின் உடைந்து போன குரலால் முகவரியை சொன்னேன்.

"சார், நீங்க ரொம்ப படபடப்பா இருக்கிங்க, கவலைப்படாதிங்க உங்களை பத்திரமாக விட்டுவிடுகிறேன்" என்று சொன்னார் டாக்ஸி ட்ரைவர், வீட்டில் இறக்கிவிட்டான், எவ்வளது டாக்ஸிக்கு கொடுத்தேன் என்று தெரியவில்லை.

வீட்டில் யாரும் இல்லை, ஆமாம் இன்னைக்கு வெள்ளிக்கிழமை கோவிலுக்கு சென்றிருப்பார்கள்.

மழை வேண்டிய தளிரை வெள்ளம் அடித்து சென்றது போல், மணவரையில் மணித்துளியில் மண்டபம் இடிந்து மணமகனை இழந்தது போல் என் மனதில் ஒவ்வொரு துடிப்பும் வெறுமையையும், இடியையும் மாறி மாறி உணர்ந்தேன்

அழுகையும் ஆத்திரமும் கொப்பளித்தது, உமாவின் மேல் கோபம் வரவில்லை, மாறாக என்மீது வெறுப்பு வந்தது, உலகமே இருண்டது போல் ஆக, தட்டுத்தடுமாறி ஒரு பேப்பரை எடுத்து, சுருக்கமாக எழுதிவைத்தேன், "காதலில், நான் என்னையே ஏமாற்றிக் கொண்டுவிட்டேன், என் மனம் என்னை கேலி செய்கிறது... என்னையும், உங்களையும் ஏமாற்றி வந்திருக்கிறேன், என்னோட இந்த முடிவுக்கு வருத்தப்படாதீர்கள் ..."

உத்திரமும், கயிறும் தவிப்புடன் இருக்க, என்னை சிறுவயதில் தாலாட்டிய உத்திரத்திற்கு நன்றி சொல்லிவிட்டு, நாற்காலியை நகர்த்தி ஏறி, கண்களை இறுகமூடி, கழுத்தில் கயிறை மாட்டி கடைசியாக ஒருமுறைப் கண்கள் திறந்து பார்க்க, குடும்பப் புகை படம் தெரிந்தது. சின்னவயதில் சிரித்தபடி நான், தங்கை, அப்பா, அம்மா. அடைத்த தொண்டை திறப்பதற்கு முயற்சித்தி தோற்க, கண்களை மூடி, நாற்காலியை கால்களால் தள்ளினேன், கழுத்தில் இறங்கியது இடி, நெஞ்சின் துடிப்பா, வெடிப்பா என்று உணர துடித்து, கைககால்கள் உதர..."

"ஏய்.. ஏய்.. மூர்த்தி என்னாடா ஆச்....."

அதற்கு மேல் எனக்கு கேட்கவில்லை. இப்பொழுது புறிகிறது அடையாளம் கண்டுகொண்டேன்.

அது அப்பாவின் குரல்தான்

மெல்ல மெல்ல கண்கள் திறக்க முயற்சிக்க, நான் படுத்து கொண்டிருக்கிறேன் என்று உணர்ந்தேன்.

இமைகள் விலகிய கண்கள் வழியாக பார்த்தேன், அப்பா வாயில் துணியை வைத்துக்கொண்டு வெறித்தபடி என் கால்களை பார்த்துக் கொண்டிருந்தார். நான் சாகவில்லை என்பதை உணர்ந்தேன்.

என் கால் விரல்கள் மெதுவாக அசைய, வேகமாக எழுந்து என்னை பார்த்து

"நர்ஸ், இங்க வாங்க, என் பையன் கண்ண திறந்துட்டான்" என்று கூவியடி, என் கண்களைப் பார்த்தபடி என் கண்ணத்தை மெல்லவருடினார், பதட்டத்துடன்,

"மூர்த்தி, அப்பா மூர்த்தி, எனக்கு இப்பதாண்டா உயிர்வந்திச்சு ..."

"இப்ப பாத்து, தங்கச்சிய கூட்டிட்டு வீட்டுவரைக்கும் போய்டுவரேன் சொல்லிட்டு போய்டாளே உங்க அம்மா..."

"சரி, நான் போன் பண்ணி சொல்லிடுறேன்.."

அங்கு வந்த நர்ஸ்,

"சார் நீ கொஞ்சம் அமைதிய இருங்க", என்றாள்.

"என்னப்பா, காதல் தோல்வியா ?, படிச்ச பையனா இருக்க"

"உங்க அப்பா, அம்மா மூனு நாளா தூங்கல தெரியுமா?, எப்ப கண்ணு திறப்பன்னு காத்து கிடந்தாங்க"

"விடும்மா, பையன் பொழச்சிட்டாந்னு நான் சந்தோசப் படறப்ப, தேவையில்லாம ஏதோ ஏதோ பேசதம்மா" என்று நர்ஸை அடக்கினார்

"சாரி, சார் இந்த மாதிரி பசங்களுக்கு, பெத்தவங்க தெய்வமாக இருந்தாலும் தெரியாம, கிறுக்குத்தனமா இப்படி செஞ்சிடுறாங்க ..."

"எங்கள மாதிரி ஆளுங்க, நல்லா உரைக்கிற மாதிரி சொன்னால் தான்... இவங்களுக்கெல்லாம் திருந்துவாங்க ..."

"இல்லென்னா... ஏன் காப்பாத்தினேன்-னு... மறுபடியும் பிரச்சனை பண்ண ஆரம்பிச்சிடுவாங்க..."

"இனிமே, உங்க பையனுக்கு ஒன்னும் ஆகாது, சாயங்காலமா வீட்டுக்கு அழைச்சிட்டுப் போங்க" என்று சொல்லிவிட்டு சொன்றாள்

அவள் சொன்னது குத்திகாட்டுவது போல் இருந்தாலும், நான் செய்த செயலால் எல்லோருக்கும் எத்தனை பெரிய அவமானம் ?

அப்பா என்னை மெதுவாக தலையை கோதிவிட்டு, அன்புடன் பார்த்தபடி,

"ஏன்டா, இப்படி செய்த என்று கேட்டார்" குழுங்கி குழுங்கி அழுதுகொண்டு கேட்டார்

அவமானமாக இருந்தது, என்னுடைய உணர்வுகளுக்கு என்றுமே மதிப்பு கொடுப்பவர் அப்பா.

குரல் உடைய அழுகைவந்தது, கைகளை பற்றிக்கொண்டு

"என்ன மன்னிச்சிக்குங்க..."

அவர் கண்களின் ஈரம், கன்னத்தில் வழிய

"அதல்லாம் இருக்கட்டம்பா ..."

"நீ முதல்ல, நடந்தத சொல்லு, ஏதோ உனக்கு காதல் தோல்வின்னு தெரியுது, நீ எழுதிவைத்த லெட்டரில் அவ யாருன்னு சொல்லவில்லை"

"சொல்றேன்பா ...", கூனிக் குறுகி ஒருவேளை அலுவலகத்துக்கு தெரிந்திருக்குமோ, உமாவுக்கு தெரிந்திருக்குமோ என்று பதட்டம் இருந்தது. கடவுளே இதெல்லாம் யாருக்கும் தெரிந்திருக்க கூடாது, அப்படி தெரிந்திருந்தால் யாருடைய முகத்திலும் விழிக்க முடியாதே என்று எண்ணியவாறு, சற்று ஆழ்ந்த மவுனத்திற்கு பிறகு, முகத்துக்கு நேரே கேட்க கூசியதால்,

"அப்பா, இது போலிஸ் கேசா, ஆயிடுச்சாப்பா" என கேட்டேன்

"அப்படி, எதுவும் நடக்கலப்பா, உனக்கு தான் தெரியுமே, இது நம்ப டாக்டர் ருத்ர மூர்த்தியோட கிளீனிக், அவர் முதலில் தயங்கினாலும், பொழைக்கிறத்துக்கு சான்ஸ் இருக்கு, சாமளிச்சிடலாம்னு சொல்லிட்டார், ஆண்டவன் புண்ணியத்தில போலிஸ் கேஸ் ஆகல, உங்க ஆபிஸ்லேயும் நீ வெளியூருக்கு அவசரமா போயிருக்கிறதா சொல்லிட்டேன்"

நிம்மதி பெருமூச்சி வந்தது, பின்பு ஒவ்வொன்றாக நடந்ததை சொன்னேன்

என் கைகளை பிடித்துக்கொண்டு

"இவ்வளவு நடந்திருக்கு, இதை ஊகித்து சரிப்படுத்த முடியாமல் போனதை நினைத்து, எனக்கு வெட்கமாக இருக்குடா மூர்த்தி" என்றார்

"யாருக்கும் தெரியவேண்டாம்னு, நான் தான் ரொம்ப கவனமாக நடந்துகிட்டேன், இதுல உங்க தப்பு எதுவுமில்லை" என்றேன்.

மேலும் அவர் முகத்தைப் பார்க்காமல்,

"எனக்கு கல்யாணமே வேணாம்பா, நான் உங்க பிள்ளையா இப்படியே இருந்திடுறேன்" என்றேன்

என் கண்ணத்தில், அவர் கையை பதித்து பேச ஆரம்பித்தார்

"மூர்த்தி, உனக்கு சின்ன வயசிலேர்ந்து ... விரும்பியதெல்லாம் கிடைத்தும் ... கேட்காதது கூட கிடைத்தும் ஏமாற்றம்னா என்னான்னு உனக்கு தெரியல"

"முதன் முறையாக, நீயே விரும்பிய ஒன்று, உனக்கு எப்பவும் கிடைக்காதுன்னு தெரிஞ்சப்ப உன்னால தாங்கிக்க முடியல... அதுக்கு காரணம் ..." என்று சொல்லி நிறுத்தி, மறுபடியும் தொடர்ந்தார்.

"மூர்த்தி, இந்த உலகத்தில் வாழுற ஒவ்வொருவரும் அடைய துடிக்கிற உணர்வு, காதல் ..."

"காதல் ஒரு ஈர்ப்பு சக்தி மட்டுமல்ல, அதுதான் மனிதனின் இதயத்தில் தூங்கிக்கொண்டிருக்கும் அன்பு உணர்வுகளை எழுப்பிவிடுகிறது "

"நம்ப கூடயே இருக்கும், வரும் உறவுகள்கிட்ட நாம வைக்கிற அன்பு என்பது இயற்கையா அமைந்தது, அவர்களை பிரியும் போது, அந்த இழப்புகளில் ஏக்கம் இருந்தாலும் நம்மாளால் ஏற்றுக்கொள்ள முடிகிறது, எப்படியும் அவர்களிடம் ஒரு நாள் சேருவோம் என்று நம்பிக்கொண்டிருப்போம்"

"நட்பு கூட அப்படித்தான், துரோகம் என்ற கருநிழல் படியும் வரைக்கும், நட்பை நாம் மிக ஆழமாக நேசிப்போம், ஒரு வேளை நன்பன் துரோகியாகும் போது, சில சமயம் முற்றுப்புள்ளியும், மண்ணிக்கவும் மனம் இடம் கொடுக்கிறது"

"ஆனால் காதல் என்பது, மன தூண்டுதலால், நமக்கு இது கிடைக்கவேண்டும் என்று விரும்பி நேசிப்பதாலும் ... தன்னுடைய விருப்பும், சந்தோசமும் சேர்ந்த சுயநலம் சேர்ந்திருப்பதாலும்... தோல்வியின் போது அது நம்மை சோர்ந்து போக வைத்துவிடுகிறது"

"காதல் ஒரு அற்புதமான உணர்வு, சிலருக்கு மட்டுமே வெளிப்படும் அற்புத உணர்வு, மென்மையானவர்களின் இதயம் அதனை அடையாளம் காட்டி பற்றவைத்துவிடுகிறது"

மேலும் மெதுவாக சொல்லிக்கொண்டே போனார்

"காதல் உணர்வு என்றுமே நிலையானது, அது காதலியுடன் சம்பந்தப் பட்டிருந்தாலும் அது ஒரு தனியான உணர்வு, அது காதலியிடம் குவிந்து துண்டப்படுவதால், காதலையும் காதலியையும் ஒன்றாக நினைத்துவிடுகிறோம்"

"காதலியை அடையமுடியாத போது, காதல் தோல்வி என்கிறோம், உண்மையில் காதல் அப்படியல்ல"

"அன்பு, பாசம் என்ற உணர்வுகளை விட அற்புதமானது காதல், அன்போ, பாசமோ கிடைக்காமல் போகும் அல்லது மறுக்கப்படும் போது, நாம் அன்பு தோல்வி என்றோ, பாச தோல்வி என்றோ சொல்வதில்லை, ஏனோ காதலை, காதலியுடன் சம்பந்தப்படுத்தி, கிடைக்காமல் போகும் போது காதல் தோல்வி என்று நம்மை நாமே ஏமாற்றிக்கொள்கிறோம்"

"தன்னோட காதலன் பெயர் உனக்கு இருக்கறதால, உமா உன்கிட்ட நேசமாக பழக முடிந்திருக்கிறது, இது தான் காதல்"

"ஐம்புலன்களையும் கட்டிப் போடவைப்பதும், திக்குமுக்காட வைப்பதும் காதல்"

"அது கடவுள் வரம், அது தூண்டப்பட்டவர் அடைவது பேரின்பம்"

"அந்த உணர்வை தேடுபவர்கள் பலரை அது தேடி வருவதும் இல்லை, தேடாதவர்களை விட்டுவைப்பதும் இல்லை"

"காதலி தனக்கு இல்லையென்று ஆகிவிட்டதால், காதல் செத்துவிட்டதாக நினைப்பது மடமை"

"அன்பின் ஆழத்தை போதித்து, உணர்த்தி பரவசப்படுத்தும் காதலை வெற்றி என்றோ தோல்வியென்றோ வீனாக போட்டு எல்லோரும் குழப்பிக்கொள்கிறோம்"

"என்னை பொறுத்தவரை, காதல் என்ற உணர்வை அனுபவிக்காதாவர்களை தான் காதலில் தோல்விகண்டவர்கள் என்று சொல்லுவேன்"

"அது மலரினும் மெல்லிய உணர்வு, அதை நீ அடைந்தை நினைத்து ஆனந்தப் பட்டுக்கொள்"

அப்பா சொல்லச் சொல்ல, நெஞ்சின் பாரம் கொஞ்சம் கொஞ்சமாக இறங்கியது

அப்பாவின் கைகளைப் மெதுவாக பற்றிக் கொண்டு,

"அப்பா, எனக்கு புரியவைச்சிட்டிங்க ..." என்றேன், நெகிழ்சியோடு என்னைப் பார்த்து,

"சரிப்பா, உன் மனசை ஆறவைக்கனும் நினைக்கிறேன்... அதுக்கு ஒரே வழி உன்னோட திருமணம் ..." என்றார். நிதானமாக,

"நான் என் பிரண்ட் சந்தானத்துகிட்ட பேசி மேகலாவை, உனக்கு கல்யாணம் பண்ணிவைக்கிறேன்"

நான் கொஞ்சம் தயக்கமாக,

"கல்யாணம் பண்ணிக்கொள்வதில் எனக்கு ஆட்சேபனையில்லை, ஆனால் என்னோட மனசு என்னுமோ வரப்போர மனைவிக்கு துரோகம் செஞ்சிட்டேன் நினைச்சி பீல் பண்ணும்-னு நினைக்கிறேன்"

"இது போதும்பா எனக்கு, உனக்கு தெரியாதுப்பா... சந்தானமும் உன் வயசில காதலில் மாட்டியவன் தான், அவனுடைய காதல் வாழ்கையும் உன் மாதிரிதான் முடிந்தது"

"நீயாவது காதலன் இருக்கிறான் தெரியாம காதிலிச்சிருக்க, அவன் கல்யாணமானவள் தெரியாமல் ஒருதலையா கதாலிச்சி புலம்பியிருக்கிறான்"

"நான் உன்கிட்ட காதலைப் பற்றி உயர்வாக எடுத்து சொன்னதெல்லாம், அவன் எனக்கு சொன்னதுதான், எனக்கு ஏது காதல் அனுபவம் ?"

"நானும் சின்ன வயசில அதுக்காக ஏங்கினேன், கிடைக்கவில்லை. கடைசியில் உங்க அம்மாவ பார்த்து கட்டிவெச்சிட்டாங்க... அதனால சோர்ந்து போகாம... உங்க அம்மாவை திருமணத்திற்கு பின்பு முழுமையா நேசிச்சிகிட்டுதான் இருக்கேன்"

"இது பற்றி சந்தானத்துக்கோ, மேகலாவுக்கோ தெரிந்தால் , 'என் மாப்பிள்ளையும் என்னை மாதிரிதானான்னு கேலிபண்ணி சிரிப்பான், அவங்கெல்லாம் முற்போக்கா வளர்ந்தவங்க, இருந்தாலும் கண்டிப்பாக அவர்களிடம் சொல்லிவிடுகிறேன்"

"நீ துரோகம் அது இதுன்னு... வீனா கற்பணை பண்ணிக்கொள்ளாதே"

"கல்யாணத்துக்கு பின்பு துணையை ஏமாற்றினால் தான் துரோகம், அடுத்தவர் மேல் பருவ வயதில் ஏற்பட்ட ஒரு இயற்கையான உணர்வு காதலை பற்றி சொல்வதை எப்படி வருங்கால மனைவிக்கு துரோகம்னு சொல்லமுடியும் ?"

"எனக்கு நம்பிக்கை இருக்கிறது, உன் வருங்கால மனைவியை மிகவும் நேசிப்பாய் என்று... ஏனென்றால் நேசம் என்ற ஆழமான உணர்வை அடைந்திருக்கிறாய் ! அனுபத்திருக்கிறாய் ! அந்த நேச உணர்வு, உன்னை நேசிக்க வைக்காமல் விட்டுவிடாது !" என்றார்

"தாங்ஸ்ப்பா, சந்தான மாமகிட்ட அப்ப பேசி ஏற்பாடுபண்ணுங்க" என்றேன். என் கைகளை பற்றியபடி

"எனக்கு அதைவிட்டா வேற வேலையில்லடா மூர்த்தி" என்றார்.

கடைசியில் தயக்கமாக சொன்னேன்,

"அப்பா... உமா, ஒருவாரம் கழித்து நம்ப வீட்டுக்கு வரேன்னு செல்லியிருக்கா... நடந்ததெல்லாம் அவகிட்ட சொல்லிடாதிங்க, அம்மா, தங்கையிடமும் இதைப்பற்றி அவளிடம் எதுவும் மூச்சிவிட வேணாம்னு சொல்லிடுங்க"

"உனக்கு சங்கடம் வரும், கூச்சமாக இருக்கும், எனக்கு புரியுதுப்பா, நான் சொல்லி வெச்சிடுறேன்" என்றார்

அந்த சமயத்தில் டாக்டர் ருத்ரமூர்த்தி அங்குவர, அருகில் வந்து,

"என்ன தம்பி எப்படி இருக்க, போட்டு எதையும் குழப்பிக்காதே, பாவம் உன் அப்பாவும், அம்மாவும் ரொம்ப பயந்துட்டாங்க"

"சாரி டாக்டர், டிப்ரெசன்-னால அப்படி நடந்துடிச்சி, ரொம்ப நன்றி டாக்டர் ..." வெட்கத்துடன் சொன்னேன்.

"அப்பா சொல்றபடி, கேட்டு நடந்துக்கோ" என்று சொல்லிவிட்டு, அப்பாவிடமும் பேசிவிட்டு டாக்டர் நகர்ந்தார்.

"மூர்த்தி, உங்கிட்ட பேசிக்கிட்டே, உங்க அம்மாகிட்ட விசயத்தை போன் பண்ணிக்கூட சொல்லவில்லை, அவ பதறிக்கிட்டே இருப்பாள்" என்று சொல்லி முடித்தார், அப்போது

வாசலில் கேட்ட ஆரவாரம் அவர்களின் வருகையை தெரிவித்தது. உள்ளே வேகமாக நுழைந்த அம்மாவும், தங்கையும், நான் அப்பாவிடம் பேசிக்கொண்டிருப்பதைப் பார்த்து, ஆனந்த கண்ணீருடன் என்னை ஓடிவந்து கட்டிக்கொண்டார்கள்.


நன்றி : இணைய இதழ்கள் தமிழோவியம், பதிவுகள், புதுமை

2 கருத்துகள்:

வல்லிசிம்ஹன் சொன்னது…

கருத்துள்ள கதை கண்ணன்,.
ரொம்ப நாள் கழித்து உங்கள் பதிவைப் பார்த்ததில் மகிழ்ச்சி.
ரொம்பத் தெளிவாக எழுதி இருக்கிறீர்கள். இந்த மாதிரியே எல்லா இடத்திலும் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்ட பெற்றோரும் பிள்ளைகளும் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!!

சேதுக்கரசி சொன்னது…

முழுநீள சிறுகதையா இருந்தாலும்.. ஒரே மூச்சில் படிச்சேன். நல்ல விறுவிறுப்பு. திடீர்த் திருப்பம் கொஞ்சம் ஒரு மாதிரி இருந்தாலும்.. மொத்தத்தில் நல்லா இருந்தது. கதாயின் முதல் பாதியில் நல்ல நடை...

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்