பின்பற்றுபவர்கள்

29 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் (Disney Land, Paris) - 6

ஆங்கில நாடுகள் (UK) தவிர்த்து ஐரோப்பிய நாடுகளில் ஆங்கிலம் என்பது மதிக்கத்தக்க மொழிமட்டுமே, ஏற்றுக் கொண்ட மொழி என்று கூற முடியாது. உலகநாடுகளில் பலர் ஆங்கிலம் தெரிந்திருக்கிறார்கள் என்பதற்காக தகவல்கள், அறிவிப்புகள் ஆகியவற்றில் தேவையான போது மட்டுமே ஆங்கிலம் பயன்படுத்துவதை ஐரோப்பிய பயணத்தின் போது கண், செவியுற்றேன். செல்லும் இடம் எங்காவது ஆங்கில அறிவிப்பு வரும் போது 'தாய் மொழி'யைக் கேட்பது போன்று இருந்தது. காரணம் அதைத்தவிர அங்குள்ள வட்டாரமொழிகள் பற்றிய சிறிதேனும் அறிந்திருக்கவில்லை. 'பொது' மொழியை முன்னிலைப் படுத்தும் மொழி அரசியல்வாதிகள் இதைப் புரிந்து கொள்வது நல்லது. ஏனெனில் தேவையின்றி எந்த ஒரு மொழியும் திணிக்கப்பட்டால் அது பிரிதொருமொழியை அழுத்தும் அல்லது அழிக்கும் என்பதைத் தாண்டி பொதுப் பயனாக அமைவது கிடையாது.

இந்தியாவில் இந்தி ஆதிக்கம் வட்டார, மாநில மொழிகளை அழித்துவருகிறது என்பதே உண்மை. என்றோ ஒரு நாள் விடுமுறைக்காக, சுற்றிப்பார்க்க நான் ஐரோப்பா செல்வதற்கு அந்தநாடுகளில் உள்ள அனைவருக்கும் ஆங்கிலம் தெரிந்திருந்தால் நான் தொடர்புகளுக்கு கடினப்படமாட்டேன் என்று நினைப்பது அறிவீனம், என்னையோ, என்னைப் போன்று அங்கு செல்லும் மிகச் சிலரையோ கருத்தில் கொண்டு அங்குள்ளவர்கள் தேவையின்றி ஒரு மொழியை பொது மொழியாக ஏற்கவேண்டும் என்கிற சுயநல எதிர்பார்ப்புகள் தவறு, அது கூறுகள் அற்றது என்பது என்கருத்து. தெரிந்தோ தெரியாமலோ இந்தி பொதுமொழியானால் இந்தியர்களுக்கு 'நல்லது' என்று கருத்துக் கொண்டோர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

ஆங்கிலம் மட்டுமே அறிந்தவர்களுக்காக உதவி செய்ய அந்தந்த நாட்டு அரசுகள் உதவி மையங்கள் அமைத்திருக்கிறது, எந்த ஒரு சுற்றுலா தளத்திலும் இதுவே நடைமுறை. அங்குள்ள கடைகளுக்கு பன்னாட்டு மக்கள்கள் சென்றுவருவதால் பழக்கத்தின் காரணமாக அவர்களுக்கு ஓரளவுக்கு ஆங்கிலம் பேசும் திறன் இருக்கிறது, அவை போதுமானதே. அதைத் தவிர்த்து நான் எதிர்படும் ஒருவரிடம் வழிகேட்க ஆங்கிலம் பயன்படுத்தினால், அவருக்கு அது புரியவில்லல என்றால், அவருக்கு ஆங்கிலம் தெரியவில்லையே இந்த நாட்டு மொழிக்கொள்கை சரி இல்லை என்று நினைத்தால் மொழிபற்றிய எனது அறிவு சுய நலம் சார்ந்த, சுறுங்கிய ஒன்று என்பதைத் தவிர்த்து அது பரந்த சிந்தனை அல்ல.

*****

21 /அக்/2009 புதன் கிழமை, பாரிஸ் பயணத்தின் இரண்டாம் நாள், ஈபிள் கோபுரத்திற்கு அடுத்து சுற்றிப்பார்க்க நினைத்த இடம் டிஸ்னி லேண்ட். உலகில் ஒருசில நாடுகளில் டிஸ்னி நிறுவனத்தால் அமைக்கப்பட்ட பொழுது போக்கு பூங்காக்களில் ஐரோப்பாவில் பாரிசிலும் ஒன்று இருக்கிறது, பாரிஸ் நகரத்தில் இருந்து 40 மைல் தொலைவில் அமையப்பெற்றிருக்கிறது. அன்று லேசான மழை பெய்து கொண்டிருந்தது. இலண்டனில் இருந்து மகள் ஆசைப்படி ஏற்கனவே ஒரு குடை எடுத்து வந்திருந்தோம், அதையும் எடுத்துக் கொண்டு கிளம்பினோம்.

பாரிஸ் நகரிலிருந்து RER எனப்படும் மற்றொரு புறநகர் இருப்புப்பாதை தொடர்வண்டி வழித்தடங்களின் வழியாக அந்த இடத்திற்கு நேரடியாகச் செல்ல முடியும் என்பதை தங்கிய விடுதியின் வரவேற்பாளர்களிடம் கேட்டுக் கொண்டோம். முதல் நாளும் கடுமையான அசதியின் காரணமாக காலை 9 மணிக்கு மேல் தான் எழ முடிந்தது, விடுதியில் இருந்த ஐரோப்பிய காலை உணவுகளாக ரொட்டி(ப்ரெட்), கலவை பழச் சாந்து (ஜாம்), பழச் சாறுகள் கிடைத்தன. நகர தொடர் வண்டியில் சென்று chatelet என்ற நிலையத்திற்கு சென்று,



அங்கிருந்து RER தடத்தில் சிவப்பு நிற வழித்தட தொடர்வண்டியை எடுத்து marne-laa-vallee நோக்கி செல்லும் தொடர் வண்டியில் ஏறினால் டிஸ்னிலேண்ட் அருகில் நிற்கும்.

அதுவே அந்த வழித்தடத்தில் இறுதி நிலையமாகும். திரும்புவதற்கும் சேர்த்தக் கட்டணமாக மூவருக்கும் 10 Euro பெற்றுக் கொண்டார்கள்.

டிஸ்னி பொழுது போக்கு பூங்காவிற்கு பெரியவர்களுக்கு நுழைவு கட்டணம் நபருக்கு 52 Euro, சிறுவர்களுக்கு நபருக்கு 45 Euro வாக டிஸ்னி லேண்ட் மற்றும் டிஸ்னி ஸ்டுடியோ ஆகிய இரண்டு பகுதிகளுக்கும் சேர்த்து பெற்றுக் கொண்டார்கள். பூங்கா வழிகாட்டி வரைபடங்களைக் கொடுத்தார்கள். உள்ளே சென்றதும் அழகாக வடிவமைக்கப்பட்ட கட்டிடம் இருந்தது,

அதைத் தாண்டி இருபக்கமும் டிஸ்னி தனிப்பட்ட தயாரிப்புகள் விற்கப்படும் கடைகள் இருந்தன,

இந்த மாத இறுதியில் ஹாலோவின் திருவிழா வருவதை ஒட்டி அது தொடர்பான கொண்டாட்ட பரங்கிப் பழ அலங்காரங்கள் அங்கங்கே இருந்தன. பல ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்ட மிகப் பெரிய பூங்க, சுழன்று தலைகீழகாக சுழலும் வண்டி (ரோலர் கோஸ்டர்) சவாரிகளில் பலவிதங்களில் பல இடங்களில் அமைக்கப் பட்டு இருந்தன. மையப்பகுதியில் அலாவுதீன் மாளிகையும் அதன் இடது பக்கம் அகழி போன்ற அமைப்பின் நடுவில் எரிமலைப் போன்ற உயரமான செயற்கை மலைகள் அமைக்கப்பட்டு அதனைச் சுற்றிலும் சுழலும் வண்டி ஓடியது, அதைச் சுற்றி இருந்த் ஆழமான தண்ணீரில் மிகப் பெரிய சுற்றுலா படகு பார்வையாளர்களை ஏற்றிக் கொண்டு சுற்றிவந்தது. இரண்டிலும் ஏறி சுற்றி வந்தோம்.





அங்கெல்லாம் சென்று வரவே மாலை மணி 3க்கும் மேல் ஆகியது, அங்கங்கே வரிசையில் நிற்கவேண்டும், கூட்டம் மிகுதியாக ஈர்க்கும் ஒரு சில விளையாட்டுகளில் முன்கூட்டிய பதிவு வசதி இருக்கிறது, அதில் பதிந்துவிட்டால் அதில் உள்ள நேரத்தில் அதாவது சுமார் 1 - 2 மணி நேரம் கழித்து ஒரு நேரம் ஒதுக்கும், அப்போது அங்கிருந்தால் போதும், வரிசையில் நிற்பதை தவிர்த்துக் கொள்ளலாம்.

பூங்காவின் நடுவே அமைந்த அலாவுதீன் மாளிகையின் கீழ் தளத்தில் அசையும் ட்ராகன் ஒன்றை வடிவமைத்து காட்சிக்கு வைத்திருந்தார்கள். மேல் தளத்தில் கடைகள் இருந்தன. அந்த மாளிகையின் பின் பகுதியின் சற்று தொலைவில் ஆப்ரிக்கர்களின் பாரம்பரிய இசை முழக்கம் அவ்வ்போது நடை பெற்றுக் கொண்டிருந்தது.



அதன் வலது பக்கம் பெரிய செயற்கை மரம் மேலே ஏறிச் செல்ல படிக்கட்டுகளுடன் இருந்தது. அதன் அருகிலேயே செயற்கைக் குகை. அதைத் தொடர்ந்து செயற்கையான ஆறு, அதில் உடைந்த படகு போன்ற அமைப்பும், அதற்கு அடுத்து கடற்கொள்ளைகள் பற்றிய காட்சிகள் இருந்தன, அந்த காட்சிகளுக்கு உள்ளே தொடர் படகின் வழியாக சென்று பார்க்கும் வசதிகள் இருந்தன.

அலாவுதீன் மாளிகையின் வலப்பக்கம், கோப்பைகளில் அமர்ந்து சுற்றிவரும் ராட்டின விளையாட்டுகள்,

குதிரை,யானை,கடல்குதிரை,பல்லக்கு ஆகியவற்றுடன் மேலே கிழே இறங்கி சுழலும் ராட்டினம், ஆகியவையும். பக்கதில் அமைக்கப்பட்ட லிட்டில் வேர்ல்ட் எனும் பெரிய கூடத்தில் தொடர் படகு வழியாக அழைத்துச் சென்று அங்கு பன்னாட்டு பண்பாடுகளை சிறுவர் பொம்மைகளின் ஆடல்பாடல்களுடன் காட்சியாக வைத்திருந்தார்கள்.






(அசைபடம் : யுட்யூப்)
அடுத்த பகுதியில் வின்வெளிப் பயணம் (ஸ்பேஸ் ரைடு) என்னும் ஒரு விளையாட்டுக் கூடம் இருந்தது, மிக விரைவாக செல்லும் ஏற்றம், மேலே சென்றதும் கும்மிருட்டு அறைக்குள், ரோலர் கோஸ்டர் போலவே தலைகீழகாக மேலும் கீழுமாக சுழன்று சுழன்று வந்தது.


அதையெல்லாம் முடித்து வருவதற்குள் மாலை மணி 6 ஐ நெருங்கியது. பூங்காவின் நடுப்பகுதிக்கு வந்தோம்.

ஹோலோவின் அலங்கார வண்டியும், வேசமிட்டவர்களின் ஆடல்பாடல்களுடன் அதிரும் இசையுடன் அந்தப் பகுதியில் ஊர்வலமாகச் சென்றார்கள்.


ஏற்கனவே மாலை 7 மணிக்கு அடுத்த பகுதியின் டிஸ்னி ஸ்டுடியோ மூடிவிடும் என்று சொல்லி இருந்தார்கள். டிஸ்னி பூங்காவை முழுவதும் பார்க்க முடியவில்லை, இன்னும் ஒரு மணி நேரம் தான் இருக்கிறது, அதற்குள் அங்கு என்னதான் இருக்கிறது என்று அங்கும் சென்றும். மொத்தம் 7 ஸ்டுடியோ, முதல் ஸ்டுடியோவிற்கு மட்டுமே செல்ல முடிந்தது. அங்கு கார்டூன் அசைபடங்கள் எவ்வாறு அந்தகாலத்திலும் இந்த காலத்திலும் எடுக்கிறார்கள் என்பதை காட்சிக்கு வைத்திருந்தார்கள்.



கூடவே டிஸ்னி படங்க்களில் வரும் அனைத்து உருவங்களையும் வைத்து ஒரு குறும்படக் காட்சியை ஓடவிட்டார்கள். அதற்குமேல் அங்கு பார்க்கப் பிடிக்கவில்லை. மற்ற ஸ்டுடியோக்களையும் பார்க்க நேரமில்லை. மீண்டும் டிஸ்னி லேண்ட் சென்று அதை சுற்றிவரும் உள் ரயில் வண்டியில் ஏறி ஒருமுறை சுற்றிப்பார்த்துவிட்டு திரும்பிவிட்டோம். அனைவருமே பூங்கா மூடும் நேரம் ஆகையால் திரும்பினர்.

நாங்களும் விடுதிக்கு வந்து சேர இரவு 9 மணி ஆகியது.

டிஸ்னிலேண்ட் 'ஒன்ஸ்மோர் போலாமா டாடி'ன்னு கேட்கும் அளவுக்கெல்லாம் கவரவில்லை. ஒரு முறை பார்க்கலாம். நுழைவுக் கட்டணம் அதற்கு செலவிடும் நேரமும் மிகுதி, உடல் அசதி இவையெல்லாம் சென்று வந்த பிறகே உணரப்படும் என்பதால்.....மீண்டும் மீண்டும் பார்க்கத் தோன்றாது.

இரண்டு நாளே பாரிஸில் இருப்பதற்கு முடிவு செய்திருந்த படியால், அடுத்து நாள் விடுதி நடைமுறை படி 11 மணிக்கு வெளியேற வேண்டும் .....மதியம் 3 மணிக்கு ஏர் ப்ரான்ஸில் ஜூரிக் செல்ல வேண்டி இருந்தது, காலையில் கிடைக்கும் மூன்று மணி நேரத்திற்குள் வேறு என்ன பார்க்க நேரம் இருக்கும் ? இருந்தாலும் கொஞ்சம் முயற்சி செய்து இரு இடங்களுக்கு சென்று வந்தோம்.

28 அக்டோபர், 2009

யாதும் நாடே யாவரும் பாரீர் - (பாரிஸ், ஈபிள் கோபுரம், ஒரு பதிவர்) 5

முற்றிலும் முகம் தெரியாதவர் இருக்கும் நாடுகளுக்கு சுற்றுலா செல்வதில் அனைத்து விவரங்கள் தெரியாது பெரிய காரணம் இல்லை என்றாலும், போதுமான பணம் இருந்தும் 'மொழி தெரியாத இடம்' என்கிற லேசான கலக்கம் இருக்கும். பாரிஸ் செல்ல வேண்டும் என்று முன்கூட்டியே முடிவு எடுத்த பிறகு எனக்கு தெரிந்த ஒரே ஒருவர் பாரிஸ் பதிவர் நம் யோகன் அண்ணன் அவர்கள் தான். அவருடன் ஓரிரு முறை மின் அஞ்சல் தொடர்புகள் இருந்தது, அவருடைய புகைப்படம் கூட பார்த்தது இல்லை. முன்கூட்டியே பாரிஸ் வருவதைப் பற்றிச் சொல்லி இருந்தேன். தங்குவதற்கு ஏற்பாடுகள் செய்வதாகவும் அல்லது அவரது வீட்டிலேயே தங்கலாம் என்று சொல்லி இருந்தார். இருந்தும் பாரிசில் நாங்கள் தங்குவதற்கு முன்கூட்டியே வேறொரு ஓட்டலில் உறவினர் லண்டனில் இருந்தே முன்பதிவு செய்துவிட்டார். லண்டனில் இருக்கும் போது அதை யோகன் அண்ணனிடம் சொல்லிவிட்டேன். பரவாயில்லை வந்ததும் போன் செய்யுங்கள் எங்கிருந்தாலும் வந்து சந்திக்கிறேன் என்று சொல்லி இருந்தார். பாரிஸ் என்றதும் ஈபிள் கோபுரம் மற்றும் டிஸ்னி லேண்ட் மற்ற இடங்கள் தவிர்த்து வேறெதுவும் இருப்பது தெரியாது. எங்கு எப்படி செல்ல வேண்டும் என்கிற விவரம் எதுவும் தெரியாமல் ஓட்டல் முகவரியை மட்டுமே எடுத்துக் கொண்டு செல்லும் வழியை கூகுள் மேப் வழியை நிழல்படக் கருவியில் படமெடுத்துக் கொண்டேன்.

*****
அக்டோபர் 20, 2009, அன்று மதியம் 12:29க்கு Euro Star விரைவு தொடர் வண்டியில் லண்டனில் இருந்து பாரிஸ் Gare Du Nord என்னும் நிலையத்திற்கு பயணம் செய்ய வேண்டும். அன்று காலை 9 மணிக்கு வீட்டை விட்டு கிளம்பிச் செல்லும் திட்டத்துடன் எழுந்தும் கிளம்புவதற்கு 10 மணி ஆக்விட்டது. வழியெங்கும் மெதுவான போக்குவரத்து 11:40 க்கு அங்கிருந்தால் தான் நுழைவு அனுமதி சீட்டு பெறமுடியும், நெரிசல் காரணமாக மொதுவான போக்குவரத்து பிரதமர் இல்லம் வழி சாலை வழியாக இரயில் நிலையத்திற்கு சென்றி கொண்டிருந்தோம். ஒருவழியாக 12:00 மணிக்கு இரயில் நிலையத்தை அடைந்து விரைவாக அனைத்து பெட்டிகளை எடுத்துக் கொண்டு, குடிநுழைவு சோதனைகளைத் தாண்டி செல்லும் போது 12:20 ஆகி இருந்தது, உறவினர்களுக்கு விடை சொல்லிவிட்டு சரியாக இரயில் புறப்படும் 5 நிமிடத்திற்கு முன்பே உள்ளே சென்றுவிட்டோம்.




Euro Star மிக நீளமான தொடர்வண்டி, உள்ளேயே பானங்களுடன் சிற்றுண்டி விற்பனை பெட்டியும் நடுவில் இருந்தது. விலை எல்லாம் பவுண்டுகளில் லண்டனைக் காட்டிலும் இருமடங்கு இருந்தது. இரயில் நகரத்துக்குள் மெதுவாக விரைவெடுத்து நேரம் செல்லச் செல்ல மிகவும் விரைவாக சுமார் மணிக்கு 200 கிலோ மீட்டர் வேகத்தில் சென்றது.




வண்டியில் ஆட்டம், இரைச்சல் எதுவும் இல்லை. மகளுக்கும், மனைவிக்கும் லண்டனை விட்டுச் செல்வதில் ஆற்றமை இருந்தது. 'லண்டனிலேயே இன்னும் இருந்திருக்கலாம்' என மகள் அழுது கொண்டே வந்தாள். இலண்டனில் இருந்து ஐரோப்பாவிற்குள் கடல் சுரங்கப் பாதைவழியாக சென்றது. கடல் சுரங்கத்தின் ஊடாக சுமார் இருபது நிமிடப் பயணம். கடலுக்குள் தான் செல்கிறது என்பதை உணரும் படி எதுவும் இல்லை. சுமார் இரண்டு அரை மணி நேரப் பயணம், இலண்டனும் பிரான்சும் நேர அளவுகளில் 1 மணி நேர வேறுபாடு, பிரான்ஸ் 1 மணி நேரம் முன்னதாக இருந்தது. பிரான்ஸ் பாரிஸ் கார் டு நா(ர்)ட் (Garu Du Nord) நிலையத்தை அடையும் போது மாலை 4க்கு மணிக்கும் மேலாக ஆகி இருந்தது. இடையில் அண்ணன் யோகன் அழைத்து நாங்கள் வருவதை உறுதிப்படுத்திக் கொண்டு அன்று மாலையே சந்திப்பதாகச் சொல்லி இருந்தார். நாங்கள் ஓட்டலுக்குச் சென்று பெட்டிகளைப் போட்டுவிட்டு ஈபிள் கோபுரம் பார்க்கச் செல்கிறோம், அங்கு வந்துவிடுங்கள் என்று சொல்லி இருந்தேன்.


Garu Du Nord நிலையத்தில் இருந்து அடுத்த gare du li ist என்ற நிலையத்தின் அருகில் தான் தங்கும் விடுதி, நடந்து செல்லும் தொலைவு என்றாலும் வழிகளைத் தேடி, பெட்டிகளை இழுத்துக் கொண்டு செல்வது சற்று கடினமாகவே இருந்தது, இருந்தாலும் மாலை 5 மணி வாக்கில் விடுதியை அடைந்து, சிறுது நேரம் ஓய்வு எடுத்துவிட்டு 5:30 மணிக்கு ஈபிள் கோபுரம் பார்க்கக் கிளம்பினோம்.

எப்படி செல்வது என்கிற குழப்பம். நேராக gare du li ist நிலையம் சென்று தொடர்வண்டி வழித்தடங்களைப் பார்த்தால் தலையைச் சுற்றும் அளவுக்கு குறுக்குக் கோடுகள். ஒருவழியாக நிலைய உதவியாளரிடம் கேட்க பாரிஸ் நகரத்தின் மையப்பகுதிகளுக்குச் செல்லக் கூடிய இரண்டு நாட்களுக்கான பயணச் சீட்டுகளை மொத்தம் 32 Euro விற்கு மூவருக்கும் சேர்த்து கொடுத்திருந்தார். இடையில் நிலையம் மாறி இரண்டு தொடர்வண்டிகள் வழியாக பயணத்து குறிப்பிட்ட இடத்தில் இறங்கினால் தான் ஈபிள் கோபுரத்திற்கு செல்ல முடியும். வழித்தட வழிகாட்டியில் ஈபிள் கோபுரத்தைச் சுற்றி மூன்று நிலையங்கள் இருப்பது போன்று குறிப்பிட்டு இருந்தது, அதில் எதற்கு, எந்த தொடர்வண்டியில் எந்த பக்கம் செல்வதில் ஏறுவது என்கிற குழப்பம் ஏற்பட, வழித் தடம் மாறும் இடத்தில் தடுமாறிக் கொண்டு இருந்தோம்.

நாங்கள் விழிப்பதைப் பார்த்த ஈழத்து சகோதரி ஒருவர் அழைத்துக் கொண்டு சென்று சரியான தொடர்வண்டி நுழைவாயிலுக்கு அழைத்துச் சென்று விட்டு, இந்த நிலையத்தில் இறங்கினால் புகைப்படம் எடுத்துக் கொண்டே செல்லலாம் என எங்கே இறங்க வேண்டும் என்றும் சொல்லிச் சென்றார் ( அங்கங்கே பாரிஸில் தடுமாறும் இந்தியர்களுக்கு ஈழத் தமிழர்களே பெரிதும் உதவுகிறார்கள், அவர்கள் எல்லோருமே விரைவாக ஓடிக் கொண்டு இருந்தாலும் நமக்காக நின்று விவரம் சொல்லிவிட்டுச் செல்கிறார்கள், அதை அங்கிருந்த மற்ற நாட்களிலும் உணர்ந்தேன்)

நிலையத்தை விட்டு வெளியே வந்து வலப்பக்கமாக திரும்பி Avenue de President Wilson பகுதியின் இருபெரும் கட்டிடங்களுக்கு இடையே பார்த்தால் சுமார் 500 மீட்டர் தொலைவில் ஈபிள் கோபுரம் வியப்பூட்டியது. வெளிச்சம் மங்கும் நேரம், விளக்குள் எரியத் தொடங்கவில்லை. இயற்கை எவ்வளவோ அறைகூவல் இட்டாலும் இதுவும் ஒரு அறைகூவல் என மனித அறைகூவலாக ஈபிள் கோபுரம் நிற்கும் காட்சியை எத்தனை படக்கருவியில் எடுத்துப் படத்தைப் பார்த்திருந்தாலும் நம் கண்ணின் முன்பே சாட்சியாக நிற்பதைப் பார்ப்பதற்கு ஈடு இணை கிடையவே கிடையாது. நாங்கள் நின்று கொண்டிருந்தது நிழல்படம் எடுக்க ஏற்ற இடம், கொஞ்சம் உயரமான இடம் நிறைய பேர் அங்கு நின்று கொண்டு இருந்தனர். அங்கிருந்து ஈபிள் கோபுரம் நோக்கி நடந்தோம். கோபுரத்தில் விளக்குள் எரியத் தொடங்கின. இன்னும் கொஞ்சம் இருட்டியது. இன்னும் கொஞ்சம் தொலைவை நெருங்க நெருங்க. மின்னி மின்னி மறையும் விளக்கொளிகளை ஈபிள் கோபுரம் முழுவதும் மின்னியது. பார்க்கக் கண் கொள்ளாக் காட்சி.




அந்த இடத்தை நெருங்கும் போது யோகன் அண்ணா தொலைபேசியில் அழைத்து வந்து கொண்டிருப்பதாகச் சொன்னார். மணி மாலை 7 ஆகி இருந்தது 7:30 மணிக்கு வந்துவிடுங்கள் என்றேன். கோபுரத்தை நெருங்க, இரவு வேளையில் பாரிஸ் நகரை கோபுரத்தின் மீதிருந்து பார்க்க சரியான தொரு சுற்றுலாவினர் கூட்டம் அனுமதிச் சீட்டுக்கு வரிசையில் நின்று கொண்டிருந்தனர். நாங்களும் நின்றோம் 5 நிமிடத்திற்கு பிறகு உச்சிக்கு செல்ல நபர் ஒன்றுக்கு பெரியவர்களுக்கு 13 ஈரோ. சிறுவர்களுக்கு 9.90 ஈரோ. எங்களுக்கு 35.90 Euro ஆகியது.

முதலில் சரிவான கோபுரப் பகுதிக்கு இழுவை இரயில் போன்ற ஊர்தி செல்கிறது, அது சுமார் 15 வினாடி தான். அந்த தளத்திலிருந்து மேலே செல்ல 4 மின் தூக்கிகள் செயல்படுகின்றன. மின் தூக்கி விரைவான வேகம்...சுமார் ஒரு நிமிடத்திற்கும் மேலாக செல்லச் செல்ல....உயரம் அடி வயிறு கூசியது....'Still Going...Still Going' என்று சிலர் ஒருவித அச்சத்துடன் சொல்லிக் கொண்டு இருந்தனர். உச்சியிலும் இரு தளங்கள். ஒன்று முழுவதும் கண்ணாடி வழியாக பார்பதாகவும், அதற்கு மேல் உள்ள தளம் கம்பி வேலிகள் வழி பார்ப்பதற்காகவும் அமைக்கபட்டு இருந்தன. கண்ணாடி அமைக்கப்பட்டத் தளத்தில் காற்றின் வேகம் குறைவு. மேல் தளத்தில் முகத்தில் அறையும் காற்று. அங்கிருந்து சுற்றிப்பார்க்க கண்ணுக்கு எட்டிய தொலைவு வரை பாரிஸ் நகரம் ஒளிப் பூக்களாக தெரிந்தன. அதன் அழகை மேலும் கூட்ட ஈபிள் கோபுரத்தில் இருந்து ஒளிக்கற்றைகள் நான்கு நகரங்களுக்கு மேலாக சுழன்றது. மின் தூக்கி வழியாக கீழே இறங்கி வந்தோம். இழுவை வண்டியின் மிகப் பெரிய சக்கரங்கள் சுழன்று கொண்டிருந்தன.






கீழே இறங்கி வந்து மகளையும் மனைவியையும் ஒர் இடத்தில் உட்கார வைத்துவிட்டு, யோகன் அண்ணா நின்று கொண்டிருப்பதாகச் சொன்ன இடத்தை நெருங்கும் முன் அவரே எதிர் கொண்டார். முன்பின் புகைப்படத்தில் காணாத மற்றொரு மனிதர். அருகில் வந்து கைகளைப் பற்றிக் கொண்டு தழுவல்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்டார். அப்படியே பேசிக் கொண்டே மகளையும், மனைவியையும் அழைத்துக் கொண்டு இறங்கிய தொடர்வண்டி நிலையம் நோக்கி நால்வராக நடந்தோம். மீண்டும் கோபுரத்தின் ஒளி பின்னனியில் புகைப்படம் எடுக்க உதவி செய்தார்.



அவரே அழைத்துச் செல்ல இரயில் நிலையம் சென்று அவர் வீட்டுக்கு அருகில் இறங்கி 10 நிமிடம் நடை. அவர் விரைவாக நடந்தார், எங்களால் அவர் நடைக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. காரணமாக பயணக்களைப்பும் சேர்ந்து சோர்ந்து போக வைத்திருந்தது. அவர் வீட்டுக்குச் சென்று அவர் மனைவியுடன் அறிமுகம் செய்து வைத்தார், பின்னர் இளைப்பாறிவிட்டு, அவர்கள் தந்த சுவையான சிகப்பு அரிசி கோதுமை மாவு சேர்த்து செய்த ஈழத்துப் புட்டு பல்வேறு குழம்புகள் (பருப்பு, பால்கறி, முருங்கைக்காய் குழம்பு, கத்திரிக்காய் குழம்பு, சம்பால், இன்னும் பல) கறிகளுடன் உண்டோம். மகள் மிகவும் களைப்பாக இருந்ததால் எங்கள் உணவில் கலந்து கொள்ளாது தூங்கிவிட்டாள்.



யோகன் அண்ணா பேசுவதைக் கேட்டுக் கொண்டே இருக்கத் தோன்றும். கொஞ்சும் ஈழத்து தமிழ், மிகவும் மென்மையான கொஞ்சம் விரைவான பேச்சு, அன்பு மழையாகவே அவரும் அவரது மனைவியும் பேசிப் பேசி கவனித்து திக்குமுக்காட வைத்துவிட்டார்கள். எனக்கும் என் மனைவிக்கும் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. முதன் முதலில் பார்ப்பவர்கள் நீண்ட நாள் உறவினர் போல் அன்பு பாராட்டுவதும், அப்படியே உணரவைப்பதும் இந்த உலகில் மிகக் குறைவான நடைமுறைதான். அவர்களிடம் அந்த அன்பை உணர்ந்தோம்.

அவர்கள் இல்லத்திற்குச் சென்ற பிறகு தான் முன்பே இங்கேயே வந்து தங்கி இருக்கலாமே என்று தோன்றியது. நேரம் இரவு 10:40க்கும் மேல் ஆகியது. புகைப்படங்களை எடுத்துக் கொண்டு புறப்பட்டோம். ஓட்டலில் விடுவதற்காக அவரும் கூடவே கிளம்பினார். இரயிலில் செல்லலாம் என்று அருகில் இருந்த மற்றொரு பேருந்து நிறுத்தம் சென்றோம். மகளுக்கு இருந்த உடல் அசதியைப் பார்த்துவிட்டு, மனதுக்குள் ரயில் பயணம் சரிவராது என்று நினைத்தவராக உடனேயே கையைக் காட்டி ஒரு வாடகைக் காரை நிறுத்தி ஓட்டலுக்கே கொண்டு வந்து விட்டுவிட்டு அதற்கும் 16 Euro கட்டணம் அவரே செலுத்திவிட்டு, அங்கே சிறிது நேரம் பேசிக் கொண்டு இருந்து அவர் வீட்டுக்கு திரும்பினார் அப்போது மணி இரவு 11:30க்கும் மேலாக ஆகி இருந்தது.

இப்படியும் மிக மிக நல்ல மனிதர்கள் நெருங்கிய உறவினர்கள் போல் எனக்கு உலகெங்கும் கிடைக்கிறார்களே.....இதைவிட பதிவில் எழுதுவதற்கு வேறு என்ன பயன் இருக்கிறது ? நினைக்கையில் மகிழ்ச்சியும், நெகிழ்ச்சியும் ஏற்பட்டது.

அடுத்த நாள் பயணம் புகழ்பெற்ற சிறுவர்கள் உல்லாச பூங்காவான பாரிஸ் டிஸ்னி லேண்ட் !

யாதும் நாடே யாவரும் பாரீர் - 4

பருவகாலங்கள் இயற்கை, கடுங்குளிரில் மனிதர்கள் அதில் இருந்து தற்காத்துக் கொள்ள குளிர் ஆடை பயன்படுத்துகிறார்கள். மரங்கள் செடி கொடிகள் என்ன செய்யும் ? கடுங்குளிரிலும் பனியிலும் இலைகள் கருகிவிடும் என்பதால் இலைகளை உதிர்த்து அவற்றை எதிர்கொள்ள தயாராகிவிடுகின்றன. பனிக்காலம் தொடங்கும் முன் இலையுதிர்காலம் தொடங்கிவிடுகிறது. நாங்கள் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றிருந்த போது இலையுதிர்காலம் தொடங்கிவிட்டதன் அறிகுறியாக மரங்களின் இலைகள் பழுக்கத் தொடங்கி மஞ்சள் நிற இலைகளை தாங்கி நின்று அவை உதிர தொடங்கி இருந்தது. வெப்ப நாடுகளிலும் நான்கு பருவகாலங்கள் இல்லாத நாடுகளிலும் இத்தகைய காட்சிகளைக் காண முடியாது. மரங்களின் அமைப்புக்கு ஏற்றவாறு அவற்றின் பழுப்புத் தன்மை பல்வேறு நிறங்களில் அமைந்திருந்ததைப் பார்க்கும் போது இயற்கையில் இத்தனை அழகா என்று வியக்கவைத்தது.




பனிக்காலம் தொடங்கும் முன்பு அவற்றின் இலைகள் முற்றிலும் கொட்டி வெறும் மரமாக நிற்குமாம். நகரப்புரங்களில் இருக்கும் மரங்களில் வண்ண மின் விளக்குகளை இலைக்கு பதிலான அலங்காரமாக ஆக்கிவைக்க கிறித்துவ நாடுகளில் கிறிஸ்மஸ்கால கொண்டாட்டங்களில் வெளிச்சமும் வண்ணமும் ஒருசேர இருந்து கொண்ட்டாட்ட உணர்வை ஏற்படுத்துமாம்.


இலைகள் மிக மெல்லியதாக, ஊசி போல் இருக்கும் கிறிஸ்மஸ் மரங்கள் இலைகள் உதிர்காது பனிப்பொழிவை தாக்குபிடித்து நிற்குமாம். ஐரோப்பிய நாடுகளில் மேபள் மரங்கள் (Mabel Tree) நிறைய உள்ளன.

வெளிற் பச்சை நிற இலைகளான அவற்றின் இலைகள் மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறங்களில் பழுத்து உதிர்கின்றன. கடும் பனிப்பொழிவை எதிர்கொள்ளும் மலை உச்சிகளில் மரங்கள் வளர்வதற்கான கூறுகளே இல்லை. அதனால் தான் இமய மலைகளில் உயரமானவற்றில் குறிப்பாக கைலாயம் போன்றவற்றில் மரங்கள், தாவரங்கள் எதுவும் வளர்வதில்லை

*****


19 அக்டோபர் இலண்டன் பயணத்தின் நிறையுறுவதில் முழுநாள், மறு நாள் நன் பகலில் ப்ரான்ஸ் செல்ல வேண்டி இருந்தது. ஏற்கனவே நகர் புறங்களில் இரு நாட்கள் செலவு செய்ததால் போக்குவரத்து காரணங்களினால் மீண்டும் அங்கு சென்று வேறு சில இடங்களை காண்பதற்கு விருப்பம் குறைந்திருந்தது. கோட்டையா ? கடற்கரையா ? இன்று எங்கு செல்லவெண்டும் என்று என் மகளிடம் உறவினர் விருப்பம் கேட்டார். மகளுக்கு கடற்கரை மிகவும் பிடித்த இடம் ஆகையால் கடற்கரைச் செல்ல விருப்பம் கூறி மகிழ்ச்சி அடைந்தார். அதன்படி இலண்டன் புறநகரான கடற்கரைப் பகுதிக்குச் செல்ல முடிவெடுத்தோம். நன்பகல் 12 மணிக்கு மேல், இல்லத்தில் (Sutton ) இருந்து கடற்கரை இருக்கும் Brigton Beach க்கு செல்ல முடிவெடுத்தோம், தொலைவு கிட்டதட்ட 50 மைல்கள். போகும் வழியில் West Croydon பகுதியில் இந்தியர் கடைகள் அமைந்திருந்திருந்த இடத்திற்கு சென்று அங்கு சென்னை தோசாவில் நன்பகல் உணவை முடித்துக் கொண்டு அங்கிருந்த கடைகளில் சில பொருள்களை வாங்கிக் கொண்டு, A23 (Brighton Road) சாலையில் பயணித்து,

ப்ரைட்டன் கடற்கரை அருகில் செல்ல மாலை 4.00 மணி ஆகியது. அங்கே StarBucks ல் காஃபி குடித்துவிட்டு கடற்கரைப் பகுதிக்குச் செல்ல மாலை 4:30 ஆகியது.

குளிர்காலம் தொடங்கிவிட்டதன் காரணமாக கடற்கரையில் மக்கள் திரள் இல்லை. நீண்டதொரு கடற்கரை அதன் கரையில் தொடங்கு 500 மீட்டருக்கு இரும்பு தளத்தில் அமைக்கப்பட்ட பொழுது போக்கு கூடம் இருந்தது, அதன் முகப்பில் Brighton Beach என்று எழுதி இருபக்கமும் இங்கிலாந்து கொடி பறந்தது. அந்த தளத்தின் இருபக்கமும் கடற்கரை பகுதிகள் இருந்தன. ஒரு பக்க கடற்கரையில் மணல், மறுபக்கம் சிறு சிறு கூழாங்கற்களால் கரைப்பகுதி இருந்தது. கூழாங்கற்கள் இயற்கையாக அமைந்ததும்,





மணல்பகுதியில் செயற்கைத் தன்மையுடன் இருந்தது. மொத்தத்தில் கடற்கரை மணல்பரப்புகள் அமைந்த இயற்கையான கடற்கரை இல்லை என்பதாக தெரிந்தது. கூழாங்கற்கள் கடற்கரை மாறுபட்ட ஒன்றாக இருந்ததால் அந்த பகுதியில் சிறிது நேரம் கழித்தோம்.




பிறகு பொழுது போக்கு கூடத்திற்குச் சென்று சில வீடியோ விளையாட்டுகளை விளையாடினோம். அப்போது மாலை 6 ஐ நெருங்க கடும் குளிர் மேலும் கடுமையானது, அங்குள்ள கடைகளை மூடிக் கொண்டு இருந்தார்கள்.

கடற் பறவைகள் கூட்டங்களாக பறந்தன. இருட்டத்தொடங்கியது.


மீண்டும் காருக்கு திரும்பி அதே சாலை வழியாக பயணத்து புறப்பட்ட இடத்திற்கு அருகே இருந்த பெரும் கடைகளில்(Tesco) பொருட்களை வாங்கிக் கொண்டு வீடு திரும்ப இரவு மணி 9:30 ஐ நெருங்கியது. அன்றைய இரவுக் குளிர் அளவு அந்தப் பகுதியில் 9 டிகிரி.


மறுநாள் பாரிஸ், ப்ரான்ஸ் செல்ல வேண்டும், பகல் 12:40க்கு Euro Star - புல்லட் இரயில் பயணம். இலண்டனை விட்டு செல்ல, உறவினர்களை குறிப்பாக அவர்களின் குழந்தையை பிரிந்து செல்ல மனமின்றி உறக்கம் தடைபட்டது, காலையில் 9 மணிக்காவது எழுந்தால் ஒரு மணி நேரம் அதாவது 11:40க்கு அங்கு சென்று முன்கூட்டி வருகை (Boarding pass) உறுதியை பதிந்து கொள்ள முடியும் என்கிற அறிவுறுத்தல் படி, நன்பகல் 12:29 மணி இரயிலுக்கு செல்ல வேண்டுமே... பிரிவும், கவலைகள் இருந்தாலும் அலைச்சல் உடல் அசதியின் காரணமாக அப்படியே தூங்கிப் போனோம்.

பயணக்குறிப்புகள்: இலண்டன் சாலைகள் அனைத்தும் செயற்கைக் கோள் கண்காணிப்பு உதவியின் மூலம் GPS (Global Positioning System) சாலை வழிகாட்டி கருவியின் மூலம் செல்ல முடியும், செல்லும் இடத்தை அதில் தேர்வு செய்துவிட்டால், எந்தந்த சாலைகள் வழியாக பயணிக்கவேண்டும், வேகக்கட்டுப்பாடு, வேகக்கட்டுப்பாடு கேமரா உள்ள இடங்களை சுட்டிக்காட்டுகிறது, எந்த இடத்தில், எந்த பக்கம் திரும்ப வேண்டும் என்பதை படம் மற்றும் குரல் வழியான தகவலாக முன்கூட்டியே அந்த இடத்தை கடக்கும் முன்பாகவே சொல்லிக் கொண்டே வருகிறது. இடையில் நாமாகவே சாலை மாறிச் சென்றாலும் அதிலிருந்து செல்லும் வழியையும் காட்டுகிறது. சிற்றுந்து ஓட்டத்த தெரிந்தவர்கள் வாடகை சிற்றுந்து எடுத்துக் கொண்டு அந்த கருவி வழிகாட்டுதல் மூலம் எந்த ஒரு இடத்திற்கும் சென்று திரும்ப முடியும். சிங்கப்பூரில் GPS கருவியை பலர் பயன்படுத்துகிறார்கள். ஆனாலும் சிங்கை மிகவும் சிறிய நாடு, நகரம் என்பதால் குடிமகன்களுக்கு அனைத்து சாலைகளும் ஓரளவு தெரிந்திருக்கும். ஆனால் வேகக்கட்டுப்பாடு கடைபிடிக்க வேண்டிய சாலைகள், வேகக்கட்டுப்பாடு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்ட சாலைகள் ஆகியவற்றை மிகத் துல்லியமாக சுட்டிக் காட்டுவதால் பலர் பயன்படுத்தத் தொடங்கி இருக்கிறார்கள். இலண்டன் சாலைகள் அனைத்தும் சாலைப் பெயருடன் A1...A2... என குறியீட்டு எண்களையும் சாலைக்கு வைத்திருக்கிறார்கள். A23 என்பது ஒரு விரைவு சாலை அதன் பெயர் Brighton Road.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்