பின்பற்றுபவர்கள்

30 ஜூலை, 2009

லேசா லேஸா ஈசா ஈஸா !

அதிரை போஸ்ட் என்னும் வலைப்பக்கத்தைப் படிக்க நேர்ந்தது, முஸ்லிமை "லேசா" நினைத்து மி(ம)திக்கும் சினிமா ! என்ற தலைப்பில் ஓர் இடுகை. அதில் சொல்லப்பட்டு இருப்பது திரை உலகினர் இஸ்லாமியர்களை கேவலாமாக சித்தரிக்கிறார்கள் என்கிற குற்றச் சாட்டு, அதில் உண்மை இல்லாமல் இல்லை, தீவீரவாதிகள், கள்ளக் கடத்தல்காரர்களின் பெயர்களும் அவர்களின் செயல்கள் அரபு நாடுகளுடன் தொடர்புடையதாகவும், ஷேக்குகளுக்கு மத்தியில் கவர்ச்சி நடிகையின் குத்தாட்டாங்கள் நடைபெறுவதாகவும் பல படங்களில் காட்டப்படுவது உண்மையே. அதைப் பலரும் எழுத்துகளால் கண்டித்துள்ளனர். அந்தப் போக்கு திரையில் அண்மைய காலங்களில் குறைவாக இருக்கிறது.

ஆனால் அந்த இடுகையை எழுதிய நண்பர், "இது மட்டுமன்றி முஸ்லீம் பெண்ணை இந்து மற்றும் கிறிஸ்தவ ஆண்களோடு காதல் வயப்படுவதாக தொடர்ந்து காட்டுவது; இவ்வாறு சினிமாவிற்கு சம்மந்தமில்லாத முஸ்லிம்களை சினிமாவில் இழிவு படுத்துவதே தலையாய பணியாக ஒரு கூட்டம் செய்து வருகிறது." என்றும் குறிப்பிட்டுள்ளார்.

திரையில் தனிமனிதர்களின் வாழ்க்கையில் நடந்தக் கதையை திரித்து அவ்வாறு காட்டவில்லை. புனைவுக்காக அது போன்ற கதைகளைக் காட்டுகிறார்கள், எனினும் உண்மையகாவே இஸ்லாமியராக பிறந்த பெண்களை இந்து ஆண் காதலித்து திருமணம் செய்து கொள்வது போலவே, இஸ்லாமிய ஆண் இந்துப் பெண்ணை மணந்து கொள்வது நடந்தே வருகிறது. இந்து ஆண் பெரும்பாலும் திருமணம் செய்து கொண்ட முஸ்லிம் பெண்ணின் பெயரை மாற்றுவதோ, மதம் மறுவதற்கோ வற்புறுத்துவதில்லை. ஆனால் இந்துப் பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட இஸ்லாமிய ஆண் அவளை கட்டாயமாக மதம் மாறச் சொல்கிறான். எனது நண்பரின் தங்கைக்கே இந்த நிலை ஏற்பட்டு இருக்கிறது. பிரச்சனை அதுவல்ல. மதம் மாறி காதலிப்பது குற்றமா ? அதைப் படத்தில் புனைவாகச் சொல்வது குற்றமா ? பாத்திமா (பாபு), நதியா போன்ற இஸ்லாமிய பெண்கள் இந்து ஆண்களை மணந்து கொண்டு வாழ்கிறார்கள் அது உண்மை இல்லையா ?


காதலிப்பதும் காதலிக்கப்படுவதும் ஆண் பெண் மனது, அவர்களுக்கிடையே உள்ள ஈர்ப்பு, இதில் மதம் எங்கிருந்து வந்தது ? பிறக்கும் எவருக்கும் பிறக்கும் போதே எதாவது மத அடையாளம் இருக்கிறது என்று எவரேனும் நிரூபனம் செய்தால் நான் எழுதியது அனைத்தையும் அழித்துவிடுகிறேன். மதம் என்பது நாம விரும்பாமலேயே நம்மீது திணிக்கப்படும் ஒன்று, இதில் பெருமைப் பட ஒன்றுமே இல்லை, உலகத்தினரோடு நம் ஒட்டிவாழாமல் இருக்க நம்மீது மதம் என்கிற பெயரில் திணிக்கப்படும் அசிங்கத்தை நினைத்து உண்மையிலேயே ஒவ்வொருவரும் வருத்தம் தான் அடைய வேண்டும். அண்மையில் இஸ்லாமிய சகோதரிக்கும் இந்து சகோதரிக்கும் பிறந்த குழந்தை யாருடையது என்பதில் பெரிய சர்சையே ஏற்பட்டு முடிவில் மரபு பரிசோதனை மூலம் இஸ்லாமிய சகோதரியிடம் குழந்தை ஒப்படைக்கப்பட்டது, பிறக்கும் எவருக்கேனும் ஆணுறுப்பு அல்லது பெண்ணுறுப்பு, பெற்றோர்களைப் போன்ற உடலியல் தவிர்த்து மத அடையாளம் என்று எதையாவது சொல்ல முடியுமா ? ஆடையில்லாமல் தான் பிறக்கிறோம் அப்படியே இருந்துவிடுகிறோமா அது நம்மீது திணிக்கப்படுவதில்லையா என்று எதிர்த்து குதர்கமாக கேட்கத் துடிக்கும் மதவாதிகளுக்கு நான் சொல்லும் பதில் நம் குடும்பத்தினர் முன் நம்மால் அப்படி நிற்க முடிந்தால் அது தேவை இல்லை என்றே சொல்வேன். ஒருவாராலும் முடியாது. எனவே ஆடையையும் மதத்தையும் தொடர்பு படுத்தாதீர்கள். சட்டையை கழட்டிப் போட முடியும் வேறு அணிந்து கொள்ளமுடியும், விரும்பி அணியும் மத அடையாளங்கள் என்றாவது களையப்படுகிறதா ?

பம்பாய், ராமன் அப்துல்லா போன்ற படங்களில் முஸ்லிம் பெண்ணை இந்து ஆண் காதலிப்பதாகக் காட்டுகிறார்கள் அது இஸ்லாமியர்களை அவமானப்படுத்துவதாகச் சொல்கிறார். கள்ளழகர் என்ற படத்தில் இஸ்லாமியராக நடிக்கும் விஜயகாந்த் கதைபடி கடைசியாக தான் இஸ்லாமியர் என்று சொல்லுவார். அதற்கு முன்பே இந்துப் பெண்ணை காதலிப்பார். இதையெல்லாம் பார்த்துவிட்டு இந்துக்கள் கொதித்தி எழுந்து போஸ்டரை கிழிக்கச் சென்றதாகத் தெரியவில்லை.

அதைவிடப் பெரிய காமடி, 'ஈசா' என்ற பெயரில் வரப் போகும் ஒரு படம் இஸ்லாமியர்கள் இழிவுப் படுத்துகிறதாம். தெளிவாக அச்சிட்டிருக்கும் 'ஈசா' இவருக்கு 'ஈஸா'வாக தெரிவது யாருடைய குறை ?, ஈஸா என்பது இஸ்லாமியர்களின் இறைத்தூதர் ஒருவரின் பெயர், அதைப் பயன்படுத்தி இருப்பது இஸ்லாமியர்களை புண்படுத்துகிறது என்கிறார். இஸ்லாமிய நம்பிக்கைப் படி கிறித்துவர்களின் ஏசு(ஜீஸஸ்) தான் இஸ்லாமியர்களுக்கு ஈஸா. ஈஸா இஸ்லாமிய இறைத் தூதர் என்று இஸ்லாமியர்கள் சொல்வதை இதுவரை எந்த ஒரு கிறித்துவரும் ஏற்றுக் கொண்டது இல்லை. மாறாக இஸ்லாம் கிறித்துவ மதத்தின் கிளை என்று மட்டுமே ஒப்புக் கொள்வார்கள். அதனால் தான் இரு மதங்களும் சேர்த்து ஆப்ரகாமிய மதங்கள் அதாவது ஆப்ரகாம் மற்றும் ஆதாம் தொடர்புடன் வரும் மதங்கள் மேல்நாட்டு முற்போக்குவாதிகளால் அழைக்கப்படுகிறது. "கிறித்துவர்கள் அனைவருமே முகமது நபியை ஏற்றுக் கொள்ளாத இஸ்லாமியர்கள் ஏனெனில் ஈஸா இஸ்லாமிய இறைத் தூதர்" என்று கிறித்துவர்கள் ஒப்புக் கொள்ளாத ஒரு கருத்தை அவர்கள் மீது தொடர்ந்து திணிக்கிறோம் என்பதை இஸ்லாமியர்கள் என்றாவது எண்ணிப் பார்த்தது உண்டா ? அதைவிடுகிறேன், அது தேவையற்றதும் கூட

சிவனை ஈசன் என்று குறிப்பிடுவதும் இந்துக்களின் வழக்கம், 'ஈஸ்வர் அல்லா தேரா நாம்' மகாத்மாவின் புகழ்பெற்ற வாக்கியத்திலும் ஈசன் என்பது சிவனைக் குறிக்கும் சொல்லாக அடையாளப்படுத்தப்பட்டு இருக்கிறது. கேசவனை கேசவா....என்று விளிப்பது போல் ஈசனை 'ஈசா... எனக்கு அருள் !' என்று சொல்வதும் ஈசா என்று விளிப்பது சொல்வழக்கு. இவருக்கு ஈசா என்று தெளிவாக எழுதி இருப்பது ஈஸா என்று தெரிவது வியப்பாக இருக்கிறது. அவர் எழுதியது போன்ற அரைகுறைப் புரிதல் நம்பிக்கையாளர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தும். இருமதத்தினரிடையே தவறான புரிந்துணர்வை ஏற்படுத்தும். மத நல்லிணக்கத்தையே கெடுத்துவிடும். இது குறித்து சுறுக்கமாக நான் எழுதிய பின்னூட்டங்கள் இரண்டில் ஒன்றை அந்த நண்பர் வெளி இடவில்லை.

இஸ்லாமியர்கள், 'தனது மதத்தை பழிக்கிறார்கள்' என்று கண்டு ஆவேசம் அடைய வேண்டியது முதலில் யாரிடம் என்றால் இஸ்லாம் பெயரில் இயங்கும் தீவிரவாத கும்பல்களை நோக்கித்தான். இந்துத்துவாக்களைக் கண்டிக்க எந்த ஒரு இந்துவும் முன்வருவது போல் இஸ்லாமிய சமூதாயம் தங்களுக்குள் களையெடுக்க முன்வருவதும் மிக மிகத் தேவை.

29 ஜூலை, 2009

இவனையெல்லாம் பிடிச்சு முட்டிக்கு முட்டி...

ஒரு சில குழந்தைகளுக்கு பிறவியிலேயே ஆற்றல் உண்டு அவை கலைகள், விளையாட்டு மற்றும் படிப்பு அறிவுடன் தொடர்புடையது மட்டும் தான். தனது குழந்தையை சாதனை செய்யவைக்க வேண்டும் என்று வெறி கொண்ட பெற்றோர்களால் கடுமையான பயிற்சிக் கொடுக்கப் படும் குழந்தைகளுக்கும், தெருக் கூத்து, கம்பங்க் கூத்தாடி துன்புறுத்தி வித்தை செய்ய வைக்கும் குழந்தைகளுக்கும் இடையே ஒன்று சாதனை என்ற பெயரில் மற்றது பிச்சை வயிற்றுப் பாடு என்பதைத் தவிர்த்து பெரிய வேறுபாடு இல்லை.

குழந்தைத் தொழிலாளர்களை ஒழித்துவிட்டோம், குழந்தைகளை வைத்து வேலை வாங்குபவர்களுக்கு தண்டனைக் கொடுக்கிறோம் என்று அரசு சொல்கிறது. சாதனைக்காக பயற்சி என்ற பெயரில் துன்புறுத்தப்படும் குழந்தைகளின் நிலைகளை கண்டு கொள்பவர்கள் குறைவே, ஏனெனில் இவை பெற்றோர்களின் ஆசியுடன் நடக்கும் சாதனை வன்முறை.

படத்தில் இருக்கும் பெண் குழந்தைக்கு பணிரெண்டு வயதிற்குள் தான் இருக்கும், பைக் ஓட்டும் படுபாவியின் கவனம் கொஞ்சம் பிசகினாலும் அவள் வயிற்றிலோ, மார்பிலோ மொத்த பைக் எடையும் இறங்கி அவளது வாழ்க்கையையே முடக்கிவிடும். சாதனைகள் தவிர்த்து, கடுமையான பயிற்சியின் போது காயம்படும் குழந்தைகள், இறக்கும் குழந்தைகள் பற்றிய செய்திகள் வெளியே வருவது கிடையாது என்பதை நாம் எண்ணிப் பார்க்க வேண்டும்.

(படம் நன்றி தினமலர்)

குழந்தைகளை அவர்களது மனதுக்கும் வயதுக்கும் மீறிய செயல்களை செய்ய வைப்பதும், அதனை சாதனையாக எண்ணி மகிழ்வதும், பெற்றோர் தம் வீண் பெருமைக்கும் பேராசைக்கும் குழந்தைகளை வற்புறுத்துவதும் எந்த இடத்தில் நடந்தாலும் உடனடியாக கண்டிக்கப் படவேண்டும், அந்தக் குழந்தையைத் தவிர்த்து அனைவரும் கைது செய்யப்பட வேண்டும். 18 வயதுக்கு குறைந்தவர்கள் உடலை வருத்திக் கொண்டு செய்யும் சாதனைகள் முயற்சிகள் அனைத்தும் தடை செய்யப்படவேண்டும்.

குழந்தைகளை வேலை வாங்குவது, அடிப்பது, காயப்படுத்துவது போலவே அவர்களுக்கு கடுமையான பயிற்சி கொடுப்பதும் கூட குழந்தைகளுக்கு எதிரான வன் செயல்கள் (Child Abuse) தான்.

28 ஜூலை, 2009

வீரமணி ஐயாவின் பகுத்தறிவு எத்தன்மையது ? தமிழ் ஓவியா ஐயா விளக்க வேண்டும் !

சென்னை: தந்தை பெரியாரின் எழுத்துக்களை பெரியார் திராவிடர் கழகம் நூலாக வெளியிடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.

தந்தை பெரியாரின் எழுத்துக்களுக்கும், கருத்துக்களுக்கும் யாரும் தனிப்பட்ட முறையில் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் தலைவராக இருந்த தந்தை பெரியார் 1925ம் ஆண்டு முதல் 1938ம் ஆண்டு வரை குடியரசு பத்திரிகையில் வெளியிட்ட கட்டுரைகளையும், கருத்துக்களையும் தொகுத்து நூல்களாக வெளியிட கொளத்தூர் மணியை தலைவராகக் கொண்ட பெரியார் திராவிடர் கழகம் திட்டமிட்டது.

இதை எதிர்த்து திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.

அதில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் செயலாளராக நான் இருந்து வருவதால் தந்தை பெரியாரின் எழுத்துக்களும், கருத்துக்களும் தங்களுக்கே சொந்தமானவை. இவற்றை வெளியிட எங்களுக்குத்தான் காப்புரிமை உள்ளது.

இதனால் எனவே, பெரியார் திராவிடர் கழகம் பெரியாரின் கருத்துக்களை நூல்களாக தொகுத்து வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கோரியிருந்தார் வீரமணி.


இதை விசாரித்த உயர்நீதிமன்றம் பெரியார் திராவிடர் கழகம் நூல்களை வெளியிடுவதற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் இடைக்காலத் தடை விதித்தது.

இந்தத் தடையை நீக்கக்கோரி பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் மணி, பொதுச் செயலாளர் கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கே.சந்துரு, பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக் கால தடையை நீக்கி இன்று உத்தரவிட்டார்.

இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனுவை நீதிபதி தள்ளுபடி செய்தார்.

தனது தீர்ப்பில் நீதிபதி கூறியுள்ளதாவது:

கடவுள் இல்லை, மதம் இல்லை, ஜாதி இல்லை என்று பிரச்சாரம் செய்தவர் தந்தை பெரியார். சமூகத்தில் மண்டிக்கிடந்த மூட நம்பிக்கைகளுக்கு எதிராக குரல் கொடுத்தவர். தன்னுடைய கருத்துக்களை அவர் குடியரசு பத்திரிகையில் எழுதியுள்ளார்.

முதல் உலகப் போருக்கும், இரண்டாம் உலகப் போருக்கும் இடையிலான மிகச் சிக்கலான காலக்கட்டத்தில் அவர் தன்னுடைய கருத்துக்களை துணிச்சலாக வெளியிட்டார். சமூக நீதிக்காக பலம் மிகுந்த காங்கிரசுக்கு எதிராகவும் அவர் கருத்துக்களை வெளியிட்டு வந்தார்.

தன்னுடைய கருத்துக்களும், எழுத்துக்களும், பேச்சுக்களும் எல்லோரையும் சென்றடைய வேண்டும் என்பதே பெரியாரின் நோக்கம். நூறு ஆண்டுக்கு பிறகும் இளைய சமுதாயத்தினர் அவருடைய கொள்கைகளை தெரிந்து கொள்வது நல்லது.

எனவே, பெரியாரின் கருத்துக்களுக்கும், எழுத்துக்களுக்கும், யாரும் உரிமையோ, காப்புரிமையோ கோர முடியாது. காப்புரிமை என்ற பெயரில் அவரது கருத்துக்களை முடக்கவும் கூடாது. வழக்கு ஆவணங்களுக்கு இடையே அவரது கொள்கைகளை முடக்கி, அடைத்து விடக்கூடாது. அவரது கருத்துக்கள் அனைவருக்கும் சொந்தமானவை.

எனவே பெரியாரின் கருத்துக்களை நூல்களாக வெளியிட பெரியார் திராவிடர் கழகத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை நீக்கப்படுகிறது. இது தொடர்பாக வீரமணி தாக்கல் செய்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று தனது உத்தரவில் கூறியுளளார் நீதிபதி.

நன்றி: தட்ஸ் தமிழ்

***

பெரியாரின் தொண்டராக இல்லாமல் ஒரு நீதிமன்றத்தின் நீதியரசராக அமர்ந்திருக்கும் நீதியரசருக்கு பெரியாரின் கருத்துக்கள் முடக்கப்படாமல் அனைவரையும் சென்று சேர்வதின் தேவையும் பலனும் தெரிந்திருக்கிறது. பெரியாரின் இயக்கத்தை நடத்தி வரும் திரு வீரமணி ஐயாவுக்கு அது தெரியவில்லை. பெரியாரின் எழுத்துக்களை காப்புரிமை என்ற பெயரில் பூட்டி வைப்பதால் யாருக்கு பயன் ? பெரியார் திராவிடக் கழகத்தினர் பெரியாரை இழிவு படுத்துவதற்காக பெரியாரின் கருத்துகளை வெளி இடவில்லை. பிறகு ஏன் திரு வீரமணி ஐயா ஏகபோக உரிமை தமக்கே என்று கேட்க வேண்டும் ? பெரியாரின் எழுத்துகளை விற்பனை யாக்குவதைவிட, உரிமை கோருவதைவிட அதை பரவலாக்குவதன் தேவையை உணராமல் தடுக்கும் அவரது பகுத்தறிவு எத்தன்மையது ?

நீதிபதியின் தீர்ப்பை உண்மையான பெரியார் தொண்டர்கள் வரவேற்பார்கள்.

***

இதையெல்லாம் விட்டுவிட்டு எப்போதோ அறுந்து போன அனுமார் வாலையும், எங்கேயோ உள்ள செனகல் பற்றியும் எழுதும், தமிழ் ஓவியா ஐயா அவர்களுக்கு, 'தலைமையை கேள்வி கேட்காமல் தலைமைக்கு ஆதரவாகவே எப்போதும் இருப்பவர்களின் பெயர்கள் அன்புத் "தொண்டர்கள்" இல்லை, அடகு வைக்கப்பட்ட அடிமைகள். துடிப்பான உங்கள் பணியும், பெரியார் பற்றும் உங்களை பெரியார் தொண்டராக நினைக்கும் படி இருக்க வேண்டும் என்றே வாழ்த்துகிறேன்.

நீங்க பிரபல பதிவர்..இவிங்களுக்கு என்ன தெரியும் ?

"டேய் மச்சான் ப்ளாக் எழுதுறண்டா...."

"என்னது ?"

அவனுக்கு விளக்கி.....ப்ளாக் முகவரியெல்லாம் கொடுத்துட்டு,

"என்ன படிக்கிறியா ?"

"உனக்கு அவ்வளவு நேரம் கிடைக்குதா ? எனக்கு நேரம் கிடைச்சா படிக்கிறேன்"

அடுத்த முறை பார்க்கும் போது "என்னோட ப்ளாக்கை படிச்சியா ?"

"மறந்துட்டு....இன்னொரு தடவை ப்ளாக் யூ ஆர் எல் மெயிலுக்கு அனுப்பு"

- இவிங்களெல்லாம் எப்போதும் படிக்கவே மாட்டாங்க.

இது தெரிந்தும் மக்கள்ஸ் அவர்களிடம் சென்று 'நான் பிரபல பதிவராக்கும்' னு காலரை தூக்குவதை என்னச் சொல்வது :)

நாம வலையில மொக்கைப் போடுவது பற்றி நம்ம நண்பர்களிடம் சொன்னால்....'ஆகா இம்புட்டு பெரிய எழுத்தாளன் ஆகிட்டியான்னு மகிழுவாங்க' ன்னு நினைக்கிறோம், ஆனா ஒரு பய மதிப்பது இல்லை. எழுத்து அது எழுத்தாளர்கள் தான் எழுதுவாங்ககிறது போல் பலர் நினைக்கிறாங்க.

***

"நீ தான் எனக்கு அறிவு இல்லேம்ப......என் எழுத்தையும் நாலு பேர் படிச்சுட்டு பாராட்டுறாங்க.....ஒரு நாள் படிச்சு பாரு நான் எப்படி எழுதுறேன்னு"

மனைவியிடம் திருமணம் ஆனவங்க புலம்பி இருப்பிங்க(போம்)

"பொழுதன்னிக்கும் லொட்டு லொட்டுன்னு தட்டிக் கிட்டு இருக்கிறதுக்கு பர்மிசன் கொடுப்பதே பெருசு.....இதுல அவங்க வேற படிச்சுப் பாராட்டுனுமாக்கும்" என்று தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.

***

இப்பெல்லாம் மாப்பிள்ள வீட்டுக்கு வந்தாலும் லேப்டாப்போடு வர்றார்......அடிக்கடி நெட் செண்டருக்கு போய்டுறார்..... என்னம்மா நடக்குது ? ஆபிசில் வேலை மிக அதிகமோ !

நாம பிரபல, பிராபல பதிவர்னும், நமக்கு வலையைப் பக்கம் வரலைன்னா தூக்கம் வராதுன்னும் அவிங்களுக்கு என்ன தெரியும் ?

***

மொக்கை அல்லது மொக்கையற்ற கவிதை, ஜோக் சொன்ன நண்பரிடம்

'இவ்வளவு அருமையாக யோசிக்கிறிங்க...நீங்க ஏன் ப்ளாக் ஆரம்பிக்க கூடாது ?'

'அப்படிங்கிறிங்க......'

உண்மையிலேயே நாம ப்ளாக் எழுதுங்க படிங்கன்னு சொன்னதைக் கேட்டவங்க அவரு மட்டும்தான்

***

கடைசியாக உள்ளது நான் ப்ளாக் தொடங்கும் முன்பு எனக்கு ஒரு ப்ளாக்கர் சொல்லி இருந்திருப்பார். இப்படி நானாத்தான் சிக்கினேனா ?

பருவ காலம் !

பூமி சூரியனை சாற்று சாய்வுடனும் சுற்றிவரும் பாதை ஒரு நீள் வட்டமுமாக இருப்பதால் தான் நான்கு பருவகாலங்கள் நமக்குக் கிடைக்கிறது. பருவகாலங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதில் மனிதனைவிட பிற உயிரினங்களே முன்னிலை வகிக்கின்றன. பருவம் மாறும் போது முட்டையிட பிற நாடுகளுக்கு பறந்து செல்லும் பறவைகள், பருவ காலத்தின் ஈரப்பதத்தை சரியாகப் பயன்படுத்தி பூத்துக் குலுங்கும் மரங்கள், சரியான நீர் ஓட்டம், வெப்பம் இருக்கும் காலத்தில் முட்டையிடும் மீன் இனங்கள் என அனைத்து உயிரினங்களுமே இயற்கையில் பூமியில் நடக்கும் பருவ மாற்றங்களுக்கு ஏற்ப தனது இனப்பெருக்கச் செயல்பாடுகளையும், வளர்ச்சிகளையும் ஏற்படுத்திக் கொண்டன. அல்லது அவைகளின் இயல்பான இயற்கை அமைப்பே இயற்கையின் மாற்றங்களுக்கு ஏற்ப செயல்படுவதாகவே இருக்கின்றன.

200 ஆண்டுகளுக்கு முன்பு வரை பூமத்திய ரேகையை ஒட்டியுள்ள நாடுகளில் மனிதர்களின் பெரும்பகுதியினர் வசித்தனர். அவைகள் மனிதன் வசிப்பதற்கு ஏற்ற இடமாக விளைச்சலுக்கு ஏற்ற பருவகாலங்கள் மாறி மாறி வந்ததும் ஒரு காரணம். மனிதன் உலக நிலப் பரப்புகளைத் தேடிக் கண்டு கொண்ட பிறகு பல்வேறு குடியேற்றங்கள் என பூமியின் நிலப்பரப்பு முழுவதுமே மனிதன் காலடிப் பட்ட இடங்கள் ஆகிவிட்டது. ஆதிவாசிகள் மனிதர்கள் இல்லையா ? அவர்களெல்லாம் பழங்குடி இனராக அநதந்த கண்டங்களில் இருந்தவர்கள் தானே ? சரிதான். கண்டங்கள் ஒன்றாக இருந்த போது ஒரே இடத்தில் இருந்த மனித இனம் கண்டங்கள் பிரிந்த போது அந்தப் பகுதியில் இருந்தவர்கள் அப்படியே இருந்துவிட்டார்கள். பெரும்பாலும் வேட்டை ஆடுவதால் அவர்களுக்கு அன்றாட வாழ்வில் பிறவகையான அறிவு வளர்ச்சியும் அறிவியல் வளர்ச்சியும் தேவை இல்லாது போய்விட்டது. பழங்குடி இன காட்டுவாசிகள் காடுகளை அழித்துவிட்டு நகரங்களை உருவாக்க வில்லை.

ஐரோப்பியர்களின் ஆதிக்கத்திற்கு பல்வேறு கண்டங்கள் வந்த பிறகு பெருவாரியான குடியேற்றத்தின் காரணமாக காடுகளாக இருந்த நிலப்பரப்புகள் அழிக்கப்பட்டன. இவை இனப்பெருக்கத்தின், மனித இன இடப் பெயர்ச்சியின் தேவைகள் என்றாலும் இயற்கையுடன் இணைந்த வாழ்க்கை என்பதிலிருந்து மனித சமூகம் விலகியதே சுற்றுப் புறச் சூழல் அச்சுறுத்தலுக்கு முதன்மைக் காரணியாக இருக்கிறது

இயற்கையோடு இணங்கிய வாழ்க்கை, இதில் இந்தியர்கள் மிகச் சரியாக செயல்பட்டுக் கொண்டிருந்தனர். ஒவ்வொரு பருவகாலத்திற்கும் ஏற்ற செயலாக பயிரிடுதல், அறுவடை, நிலத்தை பதப்படுத்துதல் ஆகிய விவசாயம் சார்ந்தது மட்டுமின்றி, சில பிற உயிரினங்களைப் போல் முட்டையிடும் பருவம் என்று தனியாக காலக் கட்டங்கள் இல்லாததால் பருவம் மடைந்த மனிதனுக்கு கற்ப காலம் என்று எதுவும் தனியாகக் கிடையாது எனவே குழந்தை எந்த மாதத்தில் உருவாகுவதைத் தடுத்தால் குழந்தையும் தாயும் துன்பமின்றி இருப்பார்கள் என்பதையெல்லாம் கணக்கிட்டே கணவன் - மனைவியை 'ஆடியில் தள்ளி' இருக்கச் செய்தனர். இந்தியர்களின் வாழ்வியல் முறை முழுவதும் அந்த ஆண்டு பருவ சுழற்சிக்கு ஏற்பவே அமைத்துக் கொண்டு இருந்ததாக தெரிகிறது. நில அமைப்புகளையும் நெய்தல், பாலை, குறிஞ்சி, முல்லை, மருதம் என்கிற வகைப்பாட்டிற்குள் வைத்து அதற்கேற்ற பயிர்களையே செய்து வந்தனர். மழைத்தப்பி பஞ்சம் ஏற்பட்டு இருந்தாலும் பருவகாலங்களையும், நிலப் பரப்பு சார்ந்த தொழில்களைத் துறந்து புதிய தொரு தொழில்களுக்கு எந்த ஒரு காலத்திலும் இந்தியர்கள் முயன்றிருக்கவில்லை. அதாவது இயற்கையை பெரும அளவு அழித்துவிட்டு தனக்கேற்றவாறு மாற்றிக் கொள்ளத் துணிந்ததில்லை. அன்றைய நகரங்கள் எதுவும் மக்கள் நெருக்கம் மிகுந்ததாக இல்லாமல், தலைமை செயல்படும் இடங்களாக, பாதுகாப்பான இடங்களாகவும் மட்டுமே இருந்தன.

நிலப்பரப்புகளை மண்ணின் தன்மைக்கு, அங்கு நிலவும் இயற்கைச் சூழலுக்கு ஏற்ப எப்படி பிரித்து பயன்படுத்துவது என்பதை இந்தியர்கள் தவிர்த்து பிற நாட்டினர் அறிந்திருப்பார்களா என்பதே கேள்விக் குறிதான். விவசாயம் என்பது முதன்மைத் தொழிலாக இருந்தது இந்தியாவில் தான். பிற நாட்டினர் முதன் முதலில் முறைப்படுத்தப்பட்ட விவசாயம் இந்தியாவிலிருந்தே கற்று இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். இந்தியாவில் இருந்து உலகம் கற்றுக் கொண்டிருக்க வேண்டிய ஒன்று இயற்கை சார்ந்த வாழ்வியல் முறை. ஆனால் அதை அவர்களும் கற்றுக் கொள்ளாமல், அவர்களைப் பார்த்து நாமும் கெடும் வண்ணம் சொகுசான வாழ்க்கை முறைக்கு மாற, கெட்டுப் போனவை காடுகள் அழிக்கப்பட்டதால் அழிந்து போன இயற்கை. உடல் உழைப்பை விட்டுவிட்டு, வியர்வை வரவழைக்க உடற்பயிற்சி எந்திரங்களில் ஓடிக் கொண்டு இருக்கிறோம்.

உற்பத்தி மிகுதி இன்றைய தேவைதான். காரணம் மக்கள் தொகை பெருக்கம் என்கிற காரணங்கள் மிகவும் சொற்ப காரணங்களே ஆண்டுக்கு ஆண்டு டன் கணக்கில் தானியங்கள் கடலில் கொட்டப்படுகின்றன. இயற்கை சார்ந்த விவசாயங்கள் எதுவும் நடைபெறுவதில்லை, அனைத்து செயற்கை உரங்கள், ஊட்டச் சத்துகளால் நடக்கின்றன. 24 மணி நேரமும் புகையைக்கக்கும் மாபெரும் தொழிற்சாலைகள் ஆண்டுமுழுவதும் செயல்படுகின்றன. என்ன கிடைக்கிறது ? சொகுசான வாழ்க்கைக்கு தேவையான அனைத்தும் கிடைக்கிறது, அதுவும் நம்முடைய இந்த தலைமுறைக்குத்தான், அடுத்த தலைமுறைகள் பிழைக்குமா என்பதே கேள்விக் குறி. அறிவியல் வளர்ந்து விட்டது என்று வியக்கும் நாம் அதனால் பெற்றது நம் இழந்தவைகளை ஒப்பிட சொற்பமே.

இன்றைய தேதியில் பருவகாலங்களை மனித இனம் மதிப்பதே இல்லை. அது ஒரு இயற்கைச் செயலாக வந்து போகிறது. மனிதனின் உற்பத்தி எப்போதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அறிவியல் சாதனைகள் என்பது புலன்களின் திறனை நீட்டிக்க உதவியது மட்டுமே. அவை இல்லாத காலகட்டங்களிலும் மனித இனம் நன்றாகவே வாழ்ந்திருக்கிறது. நமது அறிவியல் சாதனைகளை எண்ணி வியப்பது போலவே நாம் பூமிக்குச் செய்யும் கெடுதல்களின் பலனாக அவை திருப்பித் தாக்கும் போது வருந்தியே அழிவோம்.

எதைக் கொண்டுவந்தாய் எதை இழப்பதற்கு ? வெறும் தத்துவம் தான். ஆனால்

எதையுமே கொண்டுவராமல் எல்லாவற்றையும் அழிக்கிறோமே இதற்கு என்ன பெயர் சொல்வது ?

27 ஜூலை, 2009

தீர்ப்பு நாள் !

'கலி முத்திடுத்து, கல்கி வரப்போறான்', 'ஜீஸஸ் வருகிறார்', 'இஸ்லாமியர்கள் குறிப்பிடும் 'தீர்ப்பு நாள்' - இவையெல்லாம் உண்மை தானோ ? என்று நினைக்கும் படி அன்று காலை அலுவலக கணனியில் திடிரென்று தனி திரையாக வெளிப்பட்ட செய்தி அதிர்ச்சிக்குள்ளாக்கியது

"நாளை க்ரீன்விச் நேரம் காலை 11.00 மணிக்கு மிகப் பெரிய எரிகல் ஒன்று பூமியைத் தாக்குகிறது, ஒளியின் வேகத்திற்கு சற்று குறைவாக எரிகல் பூமியை நோக்கி வருவதால் முன்கூட்டியே நாசா விஞ்ஞானிகள் கணிக்க தவறிவிட்டனர்... எரிகல் தாக்கினால் அப்போது பூமியில் ஏற்படும் வெப்பம், பூகம்பம், சுனாமி ஆகியவற்றால் பூமியின் உயிரனங்கள் அழிந்துவிடும் என்று ஊகிக்கப்படுகிறது, பொதுமக்கள் உடனடியாக தங்கள் உறவினர்களிடம் சென்று சேர்ந்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்...வீடுகளை விட்டு திறந்த வெளியில் அமர்ந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்"

படித்து முடித்ததும் வியர்த்தது, உடலெங்கும் நடுங்கியது,அடுத்த சில வினாடிகளில் அலுவலகம் எங்கும் கூச்சல் குழப்பம், அலுவலகத்துக்கு வெளியே வாகனங்கள் சீறிச் செல்லுகின்ற ஓசை. அலுவலகத்தின் ஒவ்வொருவரும் அழுகை வெடிப்புடன், பயத்துடன், பரபரப்பாக வீட்டுக்குக்கு கிளம்பிக் கொண்டு இருந்தனர்.

திடிரென்று மின்சாரமும் நின்றுவிட்டது, ஒருவேளை மின்சார ஊழியர்களும் அப்படியே விட்டுவிட்டு வீட்டுக்கு கிளம்பிவிட்டார்களோ, ஒருவருக்கு ஒருவர் பேசும் நிலையிலோ, ஆறுதல் கூறும் வழிவகைகளோ இல்லை, 'ஐயோ.....பசங்களை ஸ்கூலில் இருந்து கூட்டிவருனுமே...'......வீட்டுக்கு உடனே போகனுமே' என்பதாக திருமணம் ஆனவர்கள் பரபரத்துக் கொண்டே ஓடிக் கொண்டு இருந்தனர். நானும் அதே காரணங்களினால் நானும் இறங்கி ஓடினேன். மின்சாரம் இல்லாததால் மின் தூக்கிகள் இயங்கவில்லை, பத்து மாடி இறங்குவதற்குள் மூச்சு வாங்கியது, நான்காவது மாடியில் லிப்டுக்குள் சிக்கியவர்களின் உதவி கேட்கும் பெரும் குரல், யாருக்கும் கேட்டும் கேட்காதது போல் ஓட...நானும் படியில் இறங்கி ஓடிக் கொண்டு இருந்தேன். எப்படி வீட்டுக்குச் செல்வது, வழி தெரியும், தொலைவு 15 கிமீ......ஓடிச் சென்று விட வேண்டியது தான்.

அலுவலக கட்டிடத்தை விட்டு வெளியே வந்து பலருடன் ஓடிக் கொண்டு இருந்தேன். அவசரத்தில் அலுவலகத்தில் சாவியை வைத்துவிட்டு வந்துவிட்டேன்......சாப்பிடக் கூட ஒண்ணும் எடுக்க முடியாதே....என்ன பண்ணுவது என்று தெரியவில்லை என்று அழுது கொண்டே ஒருவர் ஓடிக் கொண்டு இருந்தார். மின் சாரம் இல்லாததால் நின்று போன போக்குவரத்து விளக்குகள், அவசரத்தில் கடக்கும் வாகனங்கள் ஒன்றை ஒன்று முட்டி மோதிக் கொண்டு இருந்தன. சாலை எங்கும் வாகன இறைச்சல், டமால் டாமல் என்று மோது சத்தம், ரத்த வெள்ளத்தில் பலர். போக்குவரத்து நின்று போனதால் காரில் இருந்து இறங்கி பலர் ஓடிக் கொண்டு இருந்தார்கள்.

தண்ணீர் தண்ணீர் என்று பலர் கத்திக் கொண்டே ஓடிக் கொண்டும் சிலர் மயங்கி விழுந்து கொண்டும் இருந்தார்கள். விழுபவர்களைப் பார்த்தாலும் யாரும் நின்று உதவுவதற்குத் தயாராக இல்லை, அவர்கள் எண்ணமெல்லாம் வீட்டிற்கு விரைவாகச் சென்று குழந்தைகளை பெரியவர்களை ஒன்று சேர்க்க வேண்டும் இறுதி நேரத்தில் அன்புக்குரியவர்களிடம் இருக்க வேண்டும் என்பதாக இருந்தது.

இரயில் நிலையத்தை தொடும் தொலைவில் பெரிய தொரு மேம்பாலத்தில் ரயில் பாதியில் நின்று கொண்டிருக்க, ட்ரைவரும் அப்படியே நிறுத்தி விட்டு ஓடி இருக்க வேண்டும் என்று புரிந்தது, பலர் ரயில் டிராக்கில் ஒருவரை ஒருவர் கீழே தள்ளிவிட்டுவிட்டு ஓடிக் கொண்டு இருந்தனர். அங்கும் ஒரே ஓலம். சிலர் மேம்பாலத்தில் இருந்து குதித்துக் கொண்டு இருந்தார்கள். 'நாளை காலைதானே பொருமையாக வீட்டுக்குச் சென்றிருக்கலாமே ஏன் எல்லோரும் இப்படி அவரப்பட்டுவிட்டார்கள், கடவுளே இன்னும் எவ்வளவு தூரம் தான் ஓடுவது, தண்ணீர் தாகம், எதிரே கிழே விழுந்து கிடந்தவரின் அருகே பையில் தண்ணீர் பாட்டில் எட்டிப்பார்க்க எடுத்துக் குடித்துக் கொண்டே ஒட்டிக் கொண்டு இருந்தேன். தண்ணீர் தாகம் நிற்கவே இல்லை. சாலை எங்கும் ஓடுபவர்களின் பேரிரைச்சல், கூச்சல், அழுகை, கடவுளைத் திட்டிக் கொண்டும், காப்பாற்றும் படியும் வேண்டிக் கொண்டு ஓடிக் கொண்டு இருந்தார்கள், அல்லா, ஜீஸஸ், முருகா, பெருமாளே காப்பாற்று காப்பாறு என்ற வேண்டுதல்களுடன் ஓடிக் கொண்டும், முடியாததால் நிற்கவும் முடியாமல் மெதுவாக முகத்தில் அசதி தெரிந்தாலும் முனுகியபடி நடந்து கொண்டிருந்தனர்,

அங்கங்கே எங்கும் வாகனங்கள் உறுமிக் கொண்டு நின்று கொண்டும், ஒன்றை ஒன்று மோதிக் கொண்டு, அதில் சில எரிந்து கொண்டும் இருந்தன. அங்கங்கே சிதறிக் கிடந்த சில்லரைகளையும், பணத்தையும், இறந்தவர்களின் கழுத்தில் இருக்கும் நகைகளையும் யாரும் கண்டு கொள்ளாமல் ஓடிக் கொண்டே இருந்தனர்.

மேலே ஹெலிக்காப்டர் சத்தம், ஒரு சில ஹெலிக்காப்டர்கள் வட்டமிட்டபடி துண்டு சீட்டுகளை வீசியது, எடுத்துப் படித்தேன் 'பொதுமக்கள் பீதி அடையாமல் பொறுமையாக செல்லும் படி அறிவிப்பு' இருந்தது, எதும் உதவி கிடைக்குமா என்று எதிர்பார்ப்புடன் இருந்தவர்கள் மட்டும் எடுத்துப் படித்துவிட்டு வீசி எறிந்து நடந்து கொண்டிருந்தார்கள். ஒரு 4 கிலோ மீட்டர் நடந்திருப்பேன், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களில் சிலர் பெரிய திடல் ஒன்றில் கூச்சல் குழப்பத்துடன் கூடி இருந்தார்கள். ஐயோ நான் வீட்டுக்குச் செல்ல இன்னும் 9 கிலோ மீட்டர் நடக்கனும், தாங்க முடியாத கால்வலி..........என்னால் முடியல.......நானும் கீழே விழப் போகிறேன். என்னால முடியல...ஒவ்வொரு அடியும் 100 கிலோ எடையை தலையில் ஏற்றியது போன்ற அவஸ்தையுடன் எடுத்து வைப்பதாகவே இருந்தது......'என்னால முடியல.......கால் வலிக்கிறது....முடியல.......எனக்கு மயக்கம் வருவது போல் இருந்தது.......அப்படியே கிழே விழுந்துவிட்டேன்'

முகத்தில் யாரோ தண்ணீர் தெளித்தார்கள், வீட்டுக்குப் போகனும்.......நடக்கனும் நடக்கனும்.......என்று எழ முயன்றேன்

*****

"கட்டிலில் இருந்து தவறி விழுந்திட்டிங்க......எழுப்பி எழுப்பிப் பார்தேன்...மயக்கமாக இருந்திங்க......எழுந்திருங்க காலை 7 மணி ஆச்சு ....அலுவலகம் கிளம்புங்க" லேசான பதட்டத்துடன் கவலையுடன், மனைவியின் குரல்.

ஆழப் பெருமூச்சு வந்தது..........அப்படின்னா கண்டதெல்லாம் கனவா ?

(மதவாதிகள் அது பற்றி சிறிதும் கற்பனை இன்றி சொல்லும் உலகம் அழிவு ... என்ன நடக்கும் என்று கற்பனை செய்து பார்த்தேன்....நம்ம கற்பனையைவிட அப்படி ஒரு நிகழ்வு நடந்தால் .... அது இன்னும் மோசமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்)

24 ஜூலை, 2009

டோண்டு சாருக்காக...! இங்கே பார்பனன்...எங்கே பிராமணன் ?

டோண்டு சாரின் இந்தப் பதிவில் சோ இராமசாமியின் எங்கே பிராமணன் என்கிற ஜெ டிவி தொடர் நிறைவு பெற்றதைத் தொடர்ந்து இவாறு கூறுகிறா

"சோவின் நண்பர் அசோக் யாருமே பிராமணன் இல்லைன்னு சம்பந்தப்பட்டவாளையே சொல்ல வைத்தது பற்றி அங்கலாய்க்கிறார். சோவோ கண்களை உருட்டியபடி அதுதானே உண்மை என்பதுதான் இந்த சீரியலின் முக்கிய விஷயம்னு சொல்கிறார். அசோக் தேடுவது வர்ணரீதியான பிராமணனை. ஆனால் தறசமயம் இருப்பவர்களோ சாதி ரீதியான பிராமணர்கள் என்கிறார் அவர். பிறகு நான்கு வர்ணங்களையும் அவர் ஒரிஜினலாக கொடுத்த விளக்கங்கள் பிரகாரம் வர்ணிக்கிறார். அவற்றில் பிராமணன் என்பவன் பொது நலனுக்காக பிரும்ம ஞானத்தை நோக்கி செல்பவன். க்ஷத்திரியன் தனது வலிமையால் மற்றவர்களை காப்பவன். வைசியன் பொருள்களில் வணிகம் செய்து செயல் புரிபவன். சூத்திரன் என்பவன் பிறர் துன்பம் காண சகிக்காமல் அவர்களுக்கு சேவை செய்பவன். ஆக, பழைய முறையில் வகுக்கப்பட்ட வர்ணங்கள் ஒன்றும் அப்படியே நிற்கவில்லை. காலத்தின் கட்டாயத்தில் அவை மாறி விட்டன. ஒன்று வேண்டுமானால் கூறலாம். இப்போது இருக்கும் நிலையில் எல்லோருமே ஒரு விதத்தில் வைசியர்களே. பிராமணன் புரோகிதம் செய்து பொருள் ஈட்டுகிறான். போர் வீரர்களும் தங்கள் சேவைகளை விற்கிறார்கள். சூத்திரர்களும் அவ்வாறே. ஆக, எல்லோருமே வைசியர்கள் ஆகிவிட்டார்கள்.

சாதி என்பது பிறப்பால் மட்டுமே என ஆகிவிட்ட பிறகு. சாதியை மாற்றிக் கொள்ள இயலாதுதான். ஆனால் வர்ண ரீதியாக மாறவியலும் என்பது பல முறை பார்க்கப்பட்டு விட்டது. இருப்பினும் பிராமண சாதி மட்டும் அதே வர்ணப் பெயரில் அறியப்படுவதற்கான காரணமே அவர்களில் பலர் இன்னும் பழைய கொள்கைகளை ஓரளவுக்கு கடைபிடிப்பதே ஆகும்."


- என்று குறிப்பிட்டு இருக்கிறார்.

பார்பனர்கள், பிராமணன் எங்கே இருக்கிறான் ? என்று தேடிக் கொண்டு இருப்பதாகவும், பிராமணன் இவன் தான் என்று காட்டும் படி தற்போது(ம்) எவருமே இல்லை என்பதாக அங்காலாய்பதாகக் குறிப்பிட்டு இருக்கிறார். பிராமணன் பிச்சை எடுத்து உண்பது என்கிற ஒரு விதி இருக்கிற படியால் இன்றைய தேதியில் பிச்சை எடுத்து வயிறு வளர்ப்பது இயலாத ஒன்று என்பதற்காக பார்பனர்கள் அக்மார்க் 'பிராமணிய' வழியில் செல்வதை விட்டுவிட்டார்களா தெரியவில்லை. காஞ்சி சங்கர மடத்தின் தலைமை பார்பனர் 'சங்கராச்சாரியார்' கூட பிச்சை எடுத்து உண்ணுவது கிடையாது. பிறகு எங்கே பிராமணர்களைத் தேடுவது.

வருண பிராமணனோ, வர்க்கப் பார்பனரோ தீவிரமாக பிராமணியத்தில் இருந்த போது தீண்டாமை ஆலமரமாக வளர்ந்து இருந்தது

பிராமணன் இருக்கிறானா இல்லையா என்பதை விட, இன்னொன்று தான் உறுத்தலாகவும் ஏமாற்று வேலையாகவும் தெரிகிறது, பார்பனர்களே பிராமணர் எங்கிருக்கிறார்கள் என்று தெரியவில்லை என்கிற உண்மை ஒப்புக் கொண்டு வேளையில், பார்பனர்கள் கோவில்களில் அமர்ந்து கொண்டு கடவுளுக்கு நாங்கள் முகவர்கள் என்று கூறுவதில் எதுவும் பொருள் இருக்கிறதா என்றே தெரியவில்லை. பிராமணர்கள் கடவுளைக் காட்டினார்கள் முகவர்களாக செயல்பட்டார்கள் என்பதை ஒப்புக் கொண்டாலும், பிராமணர்கள் யார் என்றே அறிந்திடாத, பூணூல் தவிர்த்து எந்த ஒரு மனத் தூய்மை, செயல் தகுதி எனக்காட்டப்படும் அந்த தன்மையில் எதுவும் இல்லாதவர்கள் தங்களை பிராமணர்கள் என்று அழைத்துக் கொள்வதுடன் நிற்காமல் கடவுளை நாங்கள் தற்போதும் காட்டுகிறோம் என்பதில் ஏதேனும் உண்மை உண்டா ? உண்மையிலேயே கடவுளைக் காட்ட, முகவராக செயல்பட வர்கவழி பார்பனர்களுக்கு புரோகிதம் பரம்பரைத் தொழில் என்பதைத் தவிர்த்து பூசை செய்யும் உரிமைக்கு வேறு என்ன தகுதி இருக்கிறது ?

பொதுமக்கள் 'பார்பனர்களை சக மனிதனுக்கு மேலாக மதிக்கப் படவேண்டும்' என்பதற்கு வேறு எதாவது ஒரே ஒரு காரணம் உண்டா ?

பிராமணனையே பார்க்காத, காட்டமுடியாத பார்பனர்கள் கடவுளைக் காட்டுவேன் / காட்டுவார்கள் என்று சொல்வது கலியுகப் பித்தலாட்டமா ? கலி முற்றியதன் வெளிப்பாடா ?

வாத்தியார் வகுப்பறையில் 500 மாணவர்கள் !

வலையுலக இளைஞர்களை மிஞ்சும் வகையில் சுப்பையா வாத்தியார் 500 பின்தொடர்பவர்களைப் (Followers) பெற்ற முதல் தமிழ் பதிவர் ஆகிறார். இன்னும் சில தளங்கள் 500+ ல் இருந்தாலும் அவை குழுப்பதிவுகளா தனிப் பதிவுகளா என்பது எவருக்கும் தெரியாது.

பின் தொடரும் பதிவர்கள் எண்ணிக்கைப் பட்டியலில் முன்னனியில் இருக்கும் சுப்பையா வாத்தியாருக்கு வாழ்த்துகள்.


வாத்தியாரின் ஜோதிடப் பதிவுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை ஆனாலும் அந்தப் பதிவுகளில் அவர் தரும் மற்ற தகவல்களை விரும்பிப் படிப்பேன். இந்த வயதிலும் உற்சாகமாக என்று எழுதினால் 'வயசை ஞாபகப் படுத்தாமல் இருக்க முடியாதான்னு' கேட்பார். அதனால் வயது வேண்டாம். 65 வயதுக் காரர்களே இளைஞர்கள் என்று சொல்லிக் கொள்ளும் போது (யூ மீன் தருமி ?) வாத்தியாருக்கு அவ்வளவெல்லாம் ஆகவில்லை. உடம்பைக் கொஞ்சம் குறைச்சிட்டு (யாருப்பா அது... அவர் பேசுவதையும் கொஞ்சம் குறைச்சிட்டுன்னு சொல்வது ?) இன்சர்ட் பண்ணிட்டு டி சர்டோடு வந்தார் என்றால் நாடோடிகள் பட நாயகன் சசிகுமார் போல இருப்பார்.

****

பின்னோக்கிய நினைவுகள் சில...

SPVR சுப்பையா ஐயா அவர்களின் 'பல்சுவை' வலைத்தளம் ஒன்று ஆகஸ்ட் 2006 வாக்கில் தமிழ்மணத்தில் இணைக்கப்பட்டு இருந்தது. அப்போதெல்லாம் பெ.மகேந்திரன், உங்கள் நண்பன் சரவணன், நாமக்கல் இன்னும் சில வ.வா. சங்கப் பதிவர்களும் நானும் சேர்ந்து அனானி / அதர் ஆப்சன் திறந்து வைத்திருப்பவர்கள் பதிவில் இப்போது பலர் அடிப்பது போல் நகைச்சுவை கும்மி அடிப்பது வழக்கம். சுப்பையா அவர்களின் பதிவு இணைந்த போது.... அவரது புகைப்படத்தைப் பார்த்து ஆகா நம்ம வகுப்பு வாத்தியார் போல இருக்கிறார்... வாங்க அவரைக் கலாய்போம் என்று வலை நண்பர்களுடன் சாட்டிவிட்டு... அவரது பதிவுக்குச் சென்று வாத்தியார் பட்டம் கொடுத்து கும்மி அடித்தோம். மட்டுறுத்தல் வைத்திருந்தார். அவர் பின்னூட்டம் வெளி இடும் முன்பே அதே பின்னூட்டத்தை மற்றவர்களிடம் கொடுத்து..... அதை பேஸ்ட் செய்து ..... வழிமொழிகிறோம்..... முன்மொழிகிறோம் அல்லது அதற்கு பதில் சொல்லி பின்னூட்டம் போடுவது என்று ஒரே பின்னூட்ட நகைச்சுவை. 'நாம வெளி இடும் முன் அந்தப் பின்னூட்டத்தை வேறொருவர் எப்படி அறிந்து கொண்டு அதை ஒட்டி எழுதுகிறார் ?' என்று அவரை குழப்புவது தான் திட்டம். திரு சுப்பையா ஐயா அசராமல் ஆடினார்.

டெக்னாலஜி படுத்தும் பாடு - பேசும் கம்ப்யூட்டர் - என்ற அவரது பதிவில் அவருக்கு கொடுத்த வாத்தியார் பட்டம் அவரை ஊக்கப்படுத்தியது முதல், நாங்களும் மாணாக்கராக பின்னூட்டம் போட்டோம், அதன் பிறகு வகுப்பறை என்னும் தனிப் பதிவைத் திறந்து வலைப்பதிவு ஆசிரியாராக வெற்றிகரமாக தொடர்கிறார்.

*****

பல சிறுகதைகள் எழுதி இருக்கிறார், அதை நூலாகவும் வெளி இட்டிருக்கிறார். பதிவர்களுக்கு அடிக்கடி பொன்னாடை போர்த்தி கவுரவிப்பது அவரது வழக்கம். (கைப் பையில் எப்போதுமே ஒரு பொன்னாடை இருக்கும்). அவருக்கு பிடித்தது பில்டர் காபி. அதை அவரே பல பதிவுகளில் சொல்லி இருக்கிறார். சிறுவயது முதலே இலக்கிய ஆர்வமிக்கவராக இருந்தவருக்கு வலைப்பதிவு சரியான ஊடகமாக அமைந்திருக்கிறது. அவரை சந்திக்க வேண்டும் என்கிற ஒரே காரணத்திற்காக 2007ல் கோவை சென்று அவரை சந்தித்திருக்கிறேன். கோவை செல்வதற்கு இரவு 11 மணி ஆகியது, அதுவரை காத்திருந்து பேசிவிட்டு, உணவு அளித்துவிட்டு 12 மணிக்கு மேல் விடைபெற்றார். ஜோதிடம் பற்றி முழுமையாக தெரிந்து வைத்திருக்கிறார். அதில் ஆர்வம் உள்ளவர்களுக்கு அவரது ஜோதிடப் பாடங்கள் பயனளிக்கிறது என்பதைத் தான் அவரது பின் தொடர்பவர் பட்டியலின் எண்ணிக்கைக் காட்டுகிறது. வாத்தியார் ஜோதிடம் மட்டுமல்ல நகைச்சுவையிலும் கலக்குபவர் என்றால் அது மிகை அல்ல,

பிறரைப் பழித்து அதன் மூலம் புகழ்தேடதவர் என்னும் பக்குவம் அவர் எழுத்திலும் பழக்கத்தில் தெரிகிறது. வாத்தியார் பிரபல பதிவர் மட்டுமல்ல மூத்தப் பதிவரும் கூட. பதிவர் வாத்தியார் சுப்பையா அவர்களுக்கு மீண்டும் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

மின்னணு வாக்கு இயந்திரங்களை முற்றிலும் அழிக்கலாம் !

மின்னணு வாக்குப் பதிவு வரவேற்க்கக் கூடிய ஒன்று தான். இதன் மூலம் கள்ள வாக்குப் பதிவை தவிர்க்க முடியாதெனினும் விரைவாக வாக்கு எண்ணிக்கைக்கு வழி வகை செய்கிறது. ஆனால் இவற்றிற்கும் ஆன செலவுகளுக்கான பலனை இவைத் தரவில்லை என்பதே உண்மை, வாக்குப் பதிவின் போது இயந்திரங்கள் பழுதானதும் செல்வாக்கு மிக்க அரசியல்வாதிகள் தங்கள் அடுப்பொடிகள் மூலம் வாக்குப் பதிவு இயந்திரங்களை கைப்பெற்றிக் கொண்டு தங்களுக்கே வாக்களித்துக் கொண்டு வாக்களர்களைத் துறத்தினார்கள் என்றும் செய்திகள் வந்தன. வாக்குப் பதிவை வீடியோ எடுப்பது போன்ற நடவெடிக்கைகள் வெறும் வாக்களர் கண் துடைப்பாகத்தான் நடைபெறுகின்றன. வாக்காளர்களின் சான்றாவணங்களில் எதோ ஒன்று இருந்தால் போதும் வாக்காளர் அடையாள அட்டையைக் காட்டி வாக்களிக்க முடியும் என்றெல்லாம் தேர்தல் ஆணையம் விளக்கம் கொடுத்தாலும் மின்னனு வாக்குப் பதிவு முழு வெற்றிப் பெறவில்லை. தேர்தல் ஆணையம் எதிர்கட்சிகளின் குற்றச் சாட்டுகளை மறுப்பதற்கும் திணறுகிறது. முறைகேடு நடைபெறுவதில்லை என்கிற தேர்தல் ஆணையத்தின் வெறும் நம்பிக்கை வழியுறுத்தல் மட்டுமே என்பதாகவே எதிர்கட்சிகள் கருதுகின்றனர்.

உலகில் முதன் முறையாக, உலகில் மாபெரும் மின்னணுவாக்குப் பதிவு என்பதெல்லாம் வெறும் சாதனை வாக்கியங்கள் தானா ? மின்னணு வாக்குப் பதிவை முறை படுத்த முடியாதா ? கண்டிப்பாக முறைப் படுத்த முடியும். அதற்கு முதலில் வாக்குப் பதிவு மின்னணு எந்திரங்களை எல்லாம் ஒரு பெரிய திடலில் குவித்து வைத்து புல்டவுசரை விட்டு ஏற்றி அழித்துவிட்டு மக்கும் குப்பையாக மாற்றி ஆழக் குழியில் புதைக்க வேண்டும். தொழில் நுட்பம் எவ்வளவோ முன்னேறிவிட்டது, இன்றும் இந்த பழைய முறை வாக்குப் பதிவு இயந்திரங்களை வைத்துக் கொண்டிருந்தால் தேர்தல் தோறும் குழப்பமே வரும். மின்னணு வாக்குப் பதிவை தற்போது இருக்கும் தொழில் நுட்ப முறையில் இன்னும் சிறப்பானதாக 100 விழுக்காடு நம்பகத் தன்மையுடன் நடத்த முடியும்.

எப்படி ?

இன்று உள்ள சிறப்பான மின்னணு தொழில் நுட்பங்கள் இதற்கு உதவி செய்யும்
1. கிளைன்ட் சர்வர் எனப்படும் பொதுவான டேட்டாபேஸ் சர்வர் மற்றும் அதனை தொடர்பு கொள்ளும் கணிணிகள்
2. தொடுதிரைகள்
3. கம்பியில்லா (வயர்லெஸ்) இணைப்பு
4. வாக்களர்களின் ஆள்காட்டி விரல் ரேகை பதிவு (நன்றி பதிவர் அறிவிலி - இராஜேஷ் குமார்)

வாக்காளர்களின் பெயர் மற்றும் முகவரியுடன், புகைப்படம் மற்றும் அவர்களின் விரல் ரேகைகளை தொகுதிக்கு ஒன்றாக சர்வர் கணிணியில் பதிந்துவிட்டு, அந்த சர்வர் கணிணியை பல்வேறு வாக்குச் சாவடியில் வைக்கப்படும் க்ளைண்ட் கணிணியுடன் இணைத்து, கைரேகை படிக்கும் கருவியுடன் இணைத்துவிட்டால் போதும்.
ஒவ்வொரு வாக்களர் வாக்களிக்கும் போதும் கைரேகையை ஒப்பிட்டு வாக்களிக்க அனுமதிக்கும் படி மென்பொருள் அமைத்துவிட்டால் போதும். வாக்களர்கள் கைரேகையை சரிபார்த்தவுடன் விரும்பிய வேட்பாளரின் சின்னத்தை தொடுதிரையில் தொடுவதன் மூலம் வாக்குப் பதிவை செய்யலாம். ஒரு 17" தொடுதிரைக்கு 20 வேட்பாளர் வரை விரல் தொடுவதற்கு ஏற்ற அகலங்களுடன் வடிவமைத்து வைக்க முடியும். 40 வேட்பாளர் இருந்தால் அருகருகே இரண்டு தொடுதிரை வைத்துவிட்டால் போதும், கணிணிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட தொடுதிரை இணைக்க கிராபிக்ஸ் வன்பொருளை (Video Graphic Cards) அதே எண்ணிக்கையில் சேர்த்தாலே போதும். கணிணிகளில் இந்த வசதியை சேர்ப்பதும் எளிதுதான். மிகுந்த அளவாக 100 வேட்பாளர்கள் உள்ள ஒரு வாக்குச் சாவடிக்கு ஒரு கணிணியும் 5 தொடுதிரைகளும் போதுமானது. இன்றைய தேதிகளில் இதற்கு ஆகும் செலவு ஒரு தொகுதிக்கு ரூ 50,000 மட்டுமே, இந்த கணிணிகளை தகுந்த மின் கலன் Backup உடன் வைத்துவிட்டால் திடீர் மின்சாரம் தடைபெற்றாலும் தொடர்ந்து இயங்கும். 32" தொடுதிரைகளைப் பயன்படுத்தினால் ஒன்றுக்கும் மேற்பட்ட தொடுதிரைகள் தேவை இருக்காது.

வாக்குப்பதிவு க்ளைண்ட் கணிணிகள் அணைத்தும் சர்வர் கணிணியுடன் வயர்லஸ் இணைப்புடன் இருப்பதால் பாதுகாப்பான இடத்தில் இருந்தால் முறைகேடுகள் நடக்கவும் வாய்ப்பில்லை.
வாக்களித்தவர் மீண்டும் வாக்களிக்காத வண்ணம் விரல் ரேகை பதிவை ஒப்பிட்டு கணிணி மென் பொருள் தடுக்கும் வண்ணம் அமைத்துவிட்டால் போதும். வாக்குப் பதிவை ஆளில்லா பணமெடுக்கும்
இயந்திரம் அமைப்பது போல் அமைத்துவிட்டு ஒரு ஏகே 47 னுடன் ஒன்று/இரண்டு காவல் அலுவலரைப் போட்டாலே போதும், வேண்டுமென்றால் பாதுகாப்பு கேமரா ஒன்றே ஒன்று பொருத்தலாம். வாக்குப் பதிவுக்கு இவ்வளவு அலுவலர்களும் அவர்களின் பந்தாக்களும் வெகுவாக குறைக்க முடியும்.

அனைத்து சர்வர் கணிணிகளையும் (ஏற்கனவே) தலைமை சர்வர் கணிணியுடன் இணைத்துவிட்டால் போதும், வாக்குப் பதிவு முடிந்ததும் சில நொடிகளில் வெற்றியாளர்களையும், அணைத்து வாக்குப் பதிவு விவரங்களையும் அறிவித்துவிட முடியும். இன்று வளர்ந்துள்ள தொழில் நுட்பத்தில் இதைச் செயல்படுத்துவது மிகவும் எளிது, பழைய வாக்குப் பதிவு இயந்திரங்களைவிட வாக்களிக்கும் முறையும் எளிது, மிகவும் பாதுகாப்பானது. வாக்குப் பதிவு க்ளைண்ட் கணினியைத் தூக்கிக் கொண்டு ஓடினாலும், தண்ணீரையே அதில் கொட்டினாலும் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாக்குகளை ஆளுமை அதிகாரவர்கத்தால் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த முறை மின்னணு வாக்குப் பதிவின் தேர்தல்கள் பூசல், புகார்கள் குறைந்து அமைதியாகவும் நம்பகத் தன்மையுடனும் நடக்கும்.

23 ஜூலை, 2009

பதிவர் திரு செல்வராஜ் அவர்களுக்கு !

பதிவர்களுக்குள் விருது வழங்குவது பற்றி குறைப் பட்டுக் கொண்டு 'பதிவர்களுக்கு பல்கலைகழகம் என்று நினைப்போ? ' ஒரு பதிவை எழுதி இருக்கிறீர்கள். அதில் நீங்கள் குறிப்பிட்டு இருப்பது,

"இன்று பல்கலைகழகங்களின் விருதே கேலிக்கூத்தாகி விட்டது.(கூத்தாடிகளுக்கு கொடுத்து) ஒரு காலத்தில் முனைவர் என்றால் எங்கோ ஒன்றோ இரண்டோ பேர் இருப்பார்கள். உண்மையிலே அவர்கள் அதற்கு தகுதியானவர்களாக இருப்பார்கள். ஆனால் என்று அரசியல்வாதிகளுக்கும், திரைப்படத்துறையினருக்கும் பட்டம் கொடுத்தார்களோ! அன்றே அது கேலிக்கூத்தாகி விட்டது"

அங்கீகாரம் பெற்றப் பல்கலைக் கழகங்கள் நடத்தும் கேலிக் கூத்துகள் உங்களுக்குத் தெரியாதா ? "டாக்டர்" பட்டம் பெற்ற கலைச் சேவை நடிகர்களின் கலைத் திறன் தரம் பற்றி இந்தப் பல்கலைக் கழகங்கள் என்ன வகையான ஆய்வுகள் இதுவரை நடத்தி இருக்கிறது. ஒரு பல்கலைக் கழகம் வழங்குகிறது என்பதைத் தவிர்த்து அந்த பட்டங்களுக்கு ஏதேனும் பொருளோ மதிப்போ உண்டா ? - என்று கேட்கிறீர்கள், அது முறைகேடு. அவ்வாறு நடக்கக் கூடாது. ஒப்புக் கொள்கிறேன்.

அங்கீகாரம் பெற்றவர்கள் தான் ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என்றால் பொதுமக்களால் நேரடியாக இல்லாவிட்டாலும் மறைமுகமாக பிரதமர் யார் வரவேண்டும் என்று ஓட்டளிப்பதையெல்லாம் மக்கள் ஆட்சி கேலிக் கூத்து என்பீர்களா ?

வலைப்பதிவார்கள் தங்களுக்குள் விருது கொடுப்பது சிலப் பதிவர்களின் எழுத்திறன் தனிப்பட்ட வகையில் அவர்களுக்கு பிடித்திருப்பதை வெளிப்படுத்திக் காட்டுவதற்காக மட்டுமே. அந்த விருதை வைத்துக் கொண்டு யாரும் பெரிய ஊடகங்களில் காட்டி ஏமாற்றி எந்தப் பதவியையும் அடைய முடியாது என்கிற அறிவு அற்று நடந்து கொள்வதில்லை. விருது பெற்றவர்கள் அப்படி எதும் முறைகேடடக நடந்து கொண்டிருக்கிறார்கள் என்று நீங்கள் எடுத்துக்காட்டினால் உங்கள் குற்றச் சாட்டுகளில் ஞாயம் இருக்கிறது எனலாம்.

இப்போது இந்த நோய் பதிவுலகில் பரவி இருக்கிறது. இதை ஒரு ஆரோக்கியமான அமைப்பின் கீழ் கொண்டு வருவது மிகவும் அவசியம். குறைந்த பட்சம் இதை "தமிலிஷ்" "தமிழ்மணம்" மற்றும் இப்போது புதிதாக வந்திருக்கும் தமிழ் திரட்டிகள் கொடுக்கலாம். அதை விட்டுவிட்டு ஆளாளுக்கு பட்டாம் பூச்சி விருது, கரப்பான் பூச்சி விருது, வெண்டைக்காய் விருது, சுண்டைக்காய் விருது என கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். அதை வாங்குபவர்களும் "பத்மஸ்ரீ" பட்டம் கிடைத்ததைபோல பெருமைப்பட்டுக்கொண்டு, அவர்களுக்கு உடனே ஒரு நன்றி பதிவு வெளியிட்டு தாங்களும் அதற்கு தகுதியானவர்போல காட்டிக்கொள்கிறார்கள். ஏன்? இப்படி பூச்சி விருது கொடுப்பவர்கள், அதன் கூட பணமும் கொடுக்கவேண்டியதுதானே? ஏனெனில் கௌரவமான விருதுகளுடன் பணமும் வழங்கப்படுகிறது என்பதை ஏன் மறக்கிறீர்கள் அல்லது மறைக்கிறீர்கள்?

வலைப்பதிவினரிடையே புரிந்துணர்வையும் எழுத்துத் திறணையும் ஊக்கப்படுத்த பதிவர்களுக்குள் நடக்கும் இது போன்ற நிகழ்வுகளை மனம் திறந்து பாராட்டுவதே சரியாகும். திரட்டிகள் எதுவும் வானத்தில் இருந்து குதித்துவிடவில்லை. பெரிய ஊடகம் சாராத எழுத்தார்வமிக்கவர்கள் குறிப்பாக பதிவர்கள் தான் அல்லது பதிவர்கள் துணையுடன் தான் திரட்டிகள் நடக்கிறது. நோக்கங்கள் வெவ்வேறாக இருந்தாலும் இதுவரை அனைத்து திரட்டிகளும் சேவை மனப்பாண்மையால் தான் இயங்குகின்றன. மாதம் 5000 முதல் ஆண்டுக்கு 1 லட்சம் வரை திரட்டி நடத்துபவர்கள் செலவு செய்கிறார்கள். அதில் அவர்களுக்கு இணைய ஊடகப் புகழ் என்பதைத் தவிர்த்து எந்த ஒரு பொருள் லாபமும் கிடையாது. அவர்கள் மட்டும் தான் விருதுகள் வழங்க வேண்டுமென்றால் தனி நபர்களாக இன்னும் எவ்வளவு செலவுகளை அவர்களால் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்ய முடியும். அப்படியே நடத்தினாலும் அதுவும் குழுசார்ப்பில் இருக்கிறது என்று விமர்சனம் செய்பவர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

திரு தேன்கூடு சாகரன் இருக்கும் வரை இயன்றவரை போட்டிகள் நடத்தினார். அவரும் ஒரு பதிவர் தான். தமிழ்மணம் திரட்டி சென்ற ஆண்டு போட்டி அறிவித்தது, வழி நடத்த ஆள் பற்றாக்குறையும், நேரமும் இல்லாததால் போட்டிப் போக்கை மாற்றி திடிரென முடிவுகள் அறிவித்தார்கள். திரட்டிகள் அனைத்தும் நிர்வாக அடிப்படையில் இயங்கினாலும் பகுதி நேரமாகத்தான் அதனை ஒரு சேவையாக நடத்துகிறார்கள். பதிவர்களும் திரட்டிகளின் சேவையைத் தவிர்த்து பெரிததாக எதுவும் எதிர்பார்க்க முடியாது.

பதிவர்கள் ஒருவருகொருவர் புரிந்துணர்வை வளர்க்க வேறு வழி இல்லாமல் தங்களுக்குள் விருதுகளை அறிவித்துக் கொள்கிறார்கள். இதில் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. எந்த ஒரு பதிவரும் 'விருது' களை எடுத்துக் கொண்டு போய் மார்வாடிக் கடையில் அடகு வைத்ததாகவோ, அதைக் கேவலப்படுத்தியதாகவோ தெரியவில்லை.

விருதும் பணமும் கொடுக்க திரட்டிகள் முன்வருவதற்கு நீங்கள் ஆதங்கப்படுவதற்கு பதிலாக ஒரு குழுவை அமைத்து அந்த நடவடிக்கையில் நீங்கள் அவர்களுக்கு உதவலாமே. பதிவர்கள் நடத்தும் போட்டிகள் பற்றி அபி.அப்பா ஏற்கனவே எழுதி இருக்கிறார். அதை மீண்டும் இங்கே சொல்வதைத் தவிர்க்கிறேன். பதிவர் ஒருவர் "சிறப்பாக எழுதுபவர் யார் ?"" என்பதை பலருக்கு அடையாளம் காட்ட யாருடைய அங்கீகாரம் பெற வேண்டும் ?

குறை சொல்லும் முன் எதாவது செய்துவிட்டு சொன்னால் நீங்கள் சுட்டும் குறைகள் புரிந்து கொள்ளப்படும். எதுவுமே செய்யாமல் குறைச் சொல்வது ஞாயமே இல்லை. உங்கள் குற்றச் சாட்டுகள் ஏற்றுக் கொள்ளும் வண்ணம் இல்லை.

பெரியவர்களுக்கான வடை உணவு டிப்ஸ் !

வடை என்பது அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒரு பலகாரம். அதை நாம் எப்படி கடித்து மெல்லுகிறோம் என்பதைப் பொறுத்து நம் நாக்கிற்கு அதன் சுவையைக் கூட்ட முடியும். இது சிறுவர் பெரியவர் இருவருக்கும் பொருந்தும் என்றாலும் இந்த முறை பெரியவர்களுக்காக இதைக் கூறுகிறேன். இதுவரை எழுதிய இடுகைகளில் பெரியவர்கள் வடை சாப்பிடுவதைப் பற்றி தனியாக எதையும் எழுதியதில்லை. எனவே அதற்காக :)

வடை விசயத்தில் முக்கியமான ஒன்று அனைவரும் நம் உடல் நலத்துக்கு எது ஏற்றதோ அந்த வகையான வடைகளையே சாப்பிட வேண்டும். ஆசைப்படுகிறோம் என்பதற்காக எண்ணை அதிகம் சேர்ந்து கொண்ட வடைகளை தின்றுவிட்டு வயிற்றைக் கலக்கி அடிக்கடி பாத்ரூம் செல்லும் படி நடந்து கொள்ளக் கூடாது. சரியான வடைகளையே தின்பதன் மூலம் நாம் அறிந்த வடை சுவையின் மைனஸ்களை பிளஸ்களாக மாற்றலாம். எடுத்துக்காட்டாக குண்டாக கொழுப்பு அதிகமாக இருப்பவர்கள்,ரொம்ப ஒல்லியாக இருப்பவர்கள், எனக்கு நல்ல பசியெடுக்குது ஆனால் சாப்பிட சுவையான வடை கிடைக்கவில்லை என்று நினைக்கிறவங்க எல்லோரும் இந்த பிரச்சனையை முழுவதும் இல்லை என்றாலும் ஓரளவு சரி செய்யலாம்.

முதலில் குண்டாக இருப்பவர்கள்

இவர்களுக்கு தாங்க இருப்பதிலேயே ரொம்ப சிரமம், எந்த வடை சாப்பிட்டாலும் திருப்தி இல்லாமல் இருப்பாங்க, அதற்கு காரணம் எக்ஸ்ட்ரா லார்ஜ் ஆன இரைப்பைதான். உடற்பயிற்சி அது எது இதெல்லாம் இருந்தாலும் நாம் வடையின் மூலம் எவ்வாறு ஒரளவு சரி செய்யலாம் என்பதைப் பார்ப்போம்.

குண்டாக இருப்பவர்கள் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான எண்ணை வழியும் வடைகளை சாப்பிட தேர்வு செய்யக் கூடாது. காரணம் அவ்வகை வடைகள் எண்ணைக் கொழுப்புகளை உடலுக்கு ஏற்றி உடல் பாகங்களை இன்னும் ஊதச் செய்துவிடும். குறிப்பாக தொப்பை, தொடை, தாடை இது பார்பவர்களுக்கு அருவெறுப்பையே தரும். இவ்வகையான எண்ணை வழியும் வடைகளை தவிர்த்துவிடுவது நல்லது. இல்லிங்க எனக்கு எண்ணை சேர்ந்த வடைகள் தான் பிடிக்கும் என்றால் இருப்பதிலேயே குறைவான எண்ணை சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் செய்த வடைகளை சாப்பிடுங்கள். எண்ணையற்ற ஆவியில் வேகவைத்த வடைகளே சிறந்தது. ஏங்க ! எனக்கு என்ன அவ்வளவு தொப்பையா கூடிப் போச்சு ! ஆவியில் வெந்த வடைகளை திங்க ! என்றால் ஆவியில் வேகை வைக்கும் வடைகளில் பலவகை சுவையான வடைகளும் உண்டு என்பது உங்களுக்கு தெரியும். எனவே அதில் எதாவது ஒன்றை (ஒன்றெல்லாம் போதுமா ?) தேர்வு செய்யலாம்.

குள்ளமாக குண்டாக இருப்பவர்கள்

இவர்களும் கண்டிப்பாக ரொம்ப வழுவழுப்பான எண்ணை வழியும் வடைகளை தவிர்த்தே ஆக வேண்டும் வேறு வழியே இல்லை. இவ்வகை வடைகள் கொழுப்பைக் கூட்டி இன்னும் உயரம் குறைந்தவர்களாக காட்டும். பெண்களுக்கு மிக முக்கியமான அம்சம் குறிப்பாக குள்ளமாக இருப்பவர்களுக்கு வயிறு அகலமாக இருப்பது, உங்கள் வயிறு அகலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒரு சிலரை பார்த்தால் அவர்களுக்கு வயிறு அகலம் குறைவாக இருக்கும், அவர்களுக்கு இருக்கும் ஒரே வழி ஆவியில் வெந்த வடைகள் தான், இவைகள் தான் உங்கள் கொழுப்பைக் கூட்டாமல் மறைத்து வயிரை மட்டும் அகலப்படுத்தி காட்டும், அதோடு ஆவியில் வெந்த வடைகள் என்பதால் சதை பகுதிகளை அப்பட்டமாக கூட்டாது.

பெரியவர்கள் வடை சாப்பிடும் போது கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் மள மளவென்று திங்கக் கூடாது கூடாது குறிப்பாக குள்ளமாக குண்டாக உள்ளவர்கள், அதே போல ரொம்ப மொறு மொறுப்பாகவும் இல்லாமல் வடையின் நடு பகுதி மொறு மொறுப்பு குறைத்து ஓரளவாவது மென்று சாப்பிடும் படி இருக்க வேண்டும். ரொம்ப மொறுப்பாக இருந்தால் திங்கும் போது வாய் அசிங்கமாக தெரியும். எனவே வடையில் ஓரளவு மென்மை இருக்க வேண்டும்

ஒல்லியாக உள்ளவர்கள் ஆவி வடையைத் தவிர்க்க வேண்டும், இவை உடலை குச்சி குச்சியாக காட்டும். எலும்புகள் துருத்திக்கொண்டு அசிங்கமாக இருக்கும். வடை சாப்பிடும் போது கைக்கு குறைவாக எடுக்கக் கூடாது. இது உங்களின் நீண்ட கைகளை (ஒல்லியாக இருப்பதால்) இன்னும் நீட்டி நிறைய கை கொண்ட அளவுக்கு எடுத்துக் கொள்ளலாம். தேர்வு செய்யும் வடைகள் சத்தாக இருக்கும் படி தேர்ந்தெடுத்து சாப்பிடுவது நல்லது.

நான் குண்டும் இல்ல ஒல்லியுமில்ல குள்ளமும் இல்ல பர்ஃபெக்ட்டான ஸ்ட்ரக்சர் இருந்தாலும் சுவையான வடை கிடைக்கவில்லை என்று வருத்தப்படுகிறீர்களா! இதற்கெல்லாம் காரணம் வடை செய்பவர்களின் பக்குவம் மட்டுமே. ஏனோ தானோவென்று வடை செய்வதாலே அவ்வாறு தெரிகிறது. இதற்க்கும் உங்கள் சுவை உணர்வுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

பல் கூர்மையாக பலமாக இருப்பவர்கள் மொறுமொறுப்பான வடைகளை தேர்வு செய்வது நலம். நீங்கள் சைட் டிஸ்ஸாக சாப்பிடுவர்கள் என்றால் வடைகளுக்கென்றே வகையான சட்டினிகள் வைக்கிறார்கள் அதை பயன்படுத்தலாம். சட்டினி மற்றும் வடை சேர்ந்து சாப்பிடுவது தான் மிகச் சுவையானது, தற்போதைய ஸ்பெசல், சூடான வடையே வாசனையாகவும் கூடுதல் சுவையாகவும் இருக்கும். ஆமை வடை சாப்பிடுபவராக இருந்தால் சரியான பதமான சூட்டில் சிறிதளவு தேங்காய் சட்டினியுடன் சாப்பிட வேண்டும். வெறும் வடை அவ்வளவாக சுவைக்காது.

எனக்கு மசால் வடை பிடிக்கவில்லை, மெதுவடையும் பிடிக்கவில்லை கீரை வடை மட்டும் தான் சாப்பிடுவேன் என்று சொல்கிறீர்களா! கவலையே படாதீங்க. உலகிலேயே சத்தான வடை என்றால் அது கீரை வடைதான். எந்த வயதினருக்கும் ஏற்ற வடை கீரை வடை.

கீரைவடை சாப்பிடுவதும் பெரியவிசய மில்லை. நல்ல முறையில் யாராவது செய்து தரவேண்டும். என்ன நீங்க... எவ்வளவு வருசமாக கீரை வடை சாப்பிடுகிறேன் எனக்கு கீரை வடை பற்றி சொல்றிங்களே என்று கோவப்படாதிங்க. ஒரு சிலர் கீரை வடையில் சுவையான கீரையைப் பயன்படுத்தி இருக்கமாட்டாங்க. இஞ்சி போட்டு இருக்க மாட்டாங்க, பூண்டு போட்டு இருக்கமாட்டாங்க, வெங்காயம் குறைவாக இருக்கும். இவையெல்லாம் சரியான பக்குவத்தில் அளவில் இருக்க வேண்டும், வடை அகலம் குறைவாக இருக்கும், கீழ் பகுதியில் சரியாக வெந்து இருக்காது, அவசரபட்டு எடுத்து விட்டதால் வேகாமல் இருக்கும், வடையை கருகிப் போகும் அளவுக்கு வேகவைத்து எடுத்திருக்கக் கூடாது.

முக்கியமான விஷயம் சுண்டலுடன் வடைகள். பெரும்பாலும் இதை போல இப்போதைய பெரியவர்கள் திங்க விரும்புகிறார்கள், ஆனால் அது அனைவருக்கும் நன்றாக இருக்காது. ஒரு சிலருக்கு மட்டுமே நன்றாக இருக்கும். இதை விலாவாரியாக விவரிக்க முடியாது என்பதால் நீங்களே புரிந்து கொள்ளுங்கள் ;-) சுவையாக இருக்க வேண்டுமே தவிர கேஸ் ட்ரபுலை ஏற்படுத்திவிடக் கூடாது அல்லது மற்றவர்கள் பார்த்து வேறு விதமாக கிண்டலடிக்கும் படியோ மூக்கு முட்ட வடை திங்கக் கூடாது. அதிகப்படியான காரம் உள்ள வடைகள் மற்றும் சட்டினிகள் அவ்வாறான வயிற்றுப் போக்கை தந்து விடும். ஒரு சிலருக்கு அது ஒத்துக் கொள்ளலாம், ஆனால் அவர்கள் பெரும்பான்மையானவர்கள் கிடையாது.

அதே போல பெரியவர்களுக்கு உள்ள எண்ணம் மிகவும் விலை உயர்வான பைவ் ஸ்டார் ஓட்டல் வடையே சுவையானது என்று, இது முற்றிலும் தவறான எண்ணம். மிக குறைந்த விலைகளில் கூட சுவையான வடைகள் உள்ளது, எந்த வடையாக இருந்தாலும் நம் பட்ஜட்டுக்கு பொருத்தமாக உள்ளதா என்று தான் பார்க்க வேண்டுமே தவிர, விலை உயர்ந்ததாக உள்ளதா என்று பார்க்க கூடாது.

நான் கூறிய எல்லாவற்றையும் விட மிக மிக மிக முக்கியமானது தன்னம்பிக்கையும், தாழ்வு மனப்பான்மை இல்லாமல் இருப்பதும் தான். ஒருவரை மிக அழகாக காட்டுவதில் மிக முக்கிய பங்காற்றுவது வடை தான், எனவே இப்படி எல்லாம் இருக்கிறோமே என்று வருத்தப்படாமல் வடைகளை உங்கள் உடல்வாகிற்கு தகுந்த மாதிரி வடைகளை மாற்றி சாப்பிடுவதன் மூலம் நம்மிடம் உள்ள சில குறைகளை வெற்றி கொள்ள முடியும். இது வரை உங்களை கண்டு
கொள்ளாமல் இருந்தவர்கள் நீ மட்டும் வடை சாப்பிடுவது தெரிந்திருந்ததால் மணிப் பர்சை வீட்டில் மறந்து வைத்துவிட்டு வந்திருப்பேன், தண்டம் அழுவதில் இருந்து தப்பி இருப்பேன் என்று சொல்லுபடி ஆகி விடும். அதே போல இன்னொரு முக்கியமான விஷயம் வடை விசயத்தில் நன்கு ஆர்வம் இருப்பவர்களால் மட்டும் தொடர்ந்து இதை பின் பற்ற முடியும், மற்றவர்கள் ஆசைக்கு ஒரு வடை சாப்பிட்டுவிட்டு விட்டு வழக்கம் போல புலம்பி கொண்டு இருப்பார்கள். எந்த ஒரு செயலிலும் ஆர்வம் இருந்தால் மட்டுமே அது சிறப்பாக இருக்கும் என்பது அனைத்திற்கும் பொருந்தும் நம் வடை தேர்வு உட்பட.

பின் குறிப்பு

மேற்கூறிய அனைத்தும் பிரச்சனை உள்ளவர்களுக்கு மட்டுமே, மற்றவர்கள் இதை மனதில் வைத்துக்கொள்ளலாம், அதே போல ஓரளவு குண்டாக உள்ளவர்களுக்கு மட்டுமே நமது வடைத் தேர்வை மாற்றி அமைப்பதின் மூலம் ஓரளவு சரி செய்யலாம், அதிக குண்டாக உள்ளவர்கள் வடையைத் தவிர்ப்பது தவிர வேறு வழி இல்லை. மணமிருந்தால் மார்க்க பந்து :-)

இந்தப் பதிவுக்கும் பதிவர் கிரியின் பெண்களுக்கான உடை அழகு டிப்ஸ்! - இந்தப் பதிவுக்கும் தொடர்பு இல்லை :)

21 ஜூலை, 2009

கலவை 21-Jul-2009 !

இடைத்தேர்தல்.

அதிமுக தலைவி ஜெ இடைத் தேர்தல் புறக்கணிப்பு எதிர்ப்பார்த்த ஒன்று தான், எப்படியும் திமுக தான் வெற்றிபெறும் தேவையின்றி போட்டி என்று இறங்கி தொண்டர்களை பலியாவதைத் தடுக்கலாம் என்று நினைத்திருப்பார் போலும். தேர்தல் புறக்கணிப்புக்கு எதிர்கட்சிக்கு அழகு இல்லை என்றாலும் இடைத்தேர்கள் நடக்கும் லக்ஷ்ணம் நாடே அறிந்தவை தான், இதற்கு முந்தைய காலகட்டங்களில் ஜே கூட இதுபோன்ற இடைத் தேர்தலில் வெற்றி பெற்றிருகிறார். திமுகவுக்கு தேர்தல் செலவு தொகுதிக்கு 100 கோடி மொத்தம் 400 கோடி மீச்சம். இடைத்தேர்தல் என்றதும் உற்சாகமாக கிளம்பிய தொண்டர்கள் சோர்ந்து இருப்பாங்க. சட்டமன்ற தேர்தல் வரை தொண்டர்களுக்கு வருமானத்துக்கு வழி ? எல்லாம் கலைஞர் ஐயா பார்த்துப்பார்

***

வெறும் கண்ணால் பார்க்கக் கூடாது சரி... சூரிய கிரஹணத்தின் போது சாப்பிடலாமா ? கூடாதா ? அமாவாசை அன்று சந்திரனின் ஈர்ப்பு சக்தியால் கடல் பொங்குகிறது, எந்த ஒரு இயக்கங்களின் ஒழுங்கான இயக்கத்தில் எதாவது ஒரு திடீர் தடை / இயற்கைத் தடைகள் ஏற்படும் போது அதன் விளைவுகள் இருக்கத்தான் செய்யும். சூரிய கிரஹணம் போன்ற நிகழ்வுகள் கண்டிப்பாக பூமியில் இயக்க ரீதியான பாதிப்புகளை ஏற்படுத்தும், ஏனெனின்றால் சூரிய ஒளியே புவியின் அனைத்துவிதமான இயக்கங்களுக்கும் எரிபொருள். மரம் செடிக் கொடிகள், இலைகள் பெரும் பச்சையம் (ஸ்டார்ச்) ஆக இருந்தாலும் சரி ஆவியாகும் நீராக இருந்தாலும் சரி, இவை அனைத்திற்கும் சூரிய ஒளியே எரிபொருளாக இருக்கிறது. சூரிய ஒளி சந்திரன் இருக்கும் இடத்தின் தொலைவில் இருந்து திடீர் தடையாகும் போது சூரிய ஒளியால் கிடைக்கும் பலன்களில் பாதிப்பு உண்டு. இவற்றின் பாதிப்பு சூரியன் இல்லாத இரவையோ மேகம் மறைக்கும் சூரிய ஒளி அற்ற நிழல் தன்மைக்கு முற்றிலும் மாறுபட்டது.

அறிவியல் ரீதியாக அளவிட முடியாத பாதிப்புகள் உயிரனங்களின் உடல்களில் ஏற்படலாம். உடலில் சமச்சீரின்மை ஏற்படலாம், கிரஹணத்தின் போது கற்பிணிப் பெண்கள் எதையும் கிழிக்கவோ, வெட்டவோ கூடாது என்பார்கள். அப்படி செய்தால் கருவில் இருக்கும் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படும் என்பார்கள். இந்துமதம் தவிர்த்து பிற மதங்களில் கிரஹணம் பற்றிய அவ்வளவு முன்னெச்சரிக்கைக் கிடையாது என்பதால் அது தொடர்பான எச்சரிக்கைகளுக்கு அவ்வளவு முக்கியத்துவம் தேவை இல்லை என்றே நினைக்கிறேன். ஏனெனில் இயற்கைக் குறித்த மனித சிந்தனைகள் கிட்ட தட்ட பிற இனங்களிலும் ஒன்று போல் தான் இருக்கும். கடவுள் குறித்த நம்பிக்கைகள் கூட இப்படிதான். கொள்கைகளும் கோட்பாடுகளும் நில அமைப்பு, பண்பாடுகளுக்கு ஏற்ப மாறுபட்டு இருக்கும். கிரஹணத்தின் போது உண்வு உண்பது உட்பட விலங்குகளின் நடவெடிக்கைகளில் எந்த மாற்றமும் இல்லை என்பதால் மனிதர்கள் உணவு உண்ணாதிருக்க பெரிய தொரு காரணங்கள் சிந்தித்துப் பார்த்தாலும் கிடைக்கவில்லை. கிரஹணம் நேரம் 3 மணி நேரத்திற்குள் முடிந்துவிடுவதால் உணவை தவிர்பவர்களுக்கு பசிப்பிணி நோய் வந்துவிடாது, கிரஹண நம்பிக்கையோடு உணவு தவிர்பவர்களைக் குறைச் சொல்ல ஒன்றும் இல்லை. மேலே சொன்னது போல் புவியில் சூரிய கிரஹணத் தாக்கம் நிச்சயம் உண்டு என்று நம்புபவர்கள் சாப்பிடாமல் இருப்பதால் யாருக்கும் நட்டமும் இல்லை. தி.கவின் கிரஹண விருந்து கண்டுக் கொள்ளத் தேவை இல்லை.

***

இது கண்டு கொள்ள வேண்டிய ஒன்று...திருவள்ளுவர் சிலையை பெங்களூரில் திறக்க கடுமையான எதிர்ப்பாம். என்னைக் கேட்டால் சிலைத் திறக்கத் தேவை இல்லை. எதாவது ஒரு கலவரம் என்றால் முதலில் உடைபடுவது திருவள்ளுவர் சிலையாகத்தான் இருக்கும், எதற்கு அப்படி ஒரு வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் ? தமிழ் நாட்டில் தந்தை பெரியார் சிலைகளுக்கே ஆபத்து என்கிற நிலையில் நாம இருந்து கொண்டு பெங்களூரில் திருவள்ளுவர் சிலையை நிறுவ நினைப்பது நம் பேராசை. தமிழனாக பிறந்த ஒரே காரணத்தினால் திருவள்ளுவர் அவ்வப்போது அவமானப்படனுமா ? திருவள்ளுவர் சிலையை அந்தந்த தமிழ்சங்கக் கட்டிடத்தினுள் நடுக் கூடத்தில் வைத்து மாலை மரியாதை செய்து வருவது பாதுகாப்பானது.

"இந்திய தேசியம்" என்பது ஒரு மாயச் சொல் என்பதை இப்போதாவது தேசியவியாதிகள் புரிந்து கொண்டால் சரி.

***

மாயச் சொல் பற்றிய ஒரு நகைச்சுவை,

சிஷ்யன் 1 : 'எல்லாம் இன்ப மயம்' என்று அடிக்கடிச் சொல்லிக் கொண்டு இருந்த நம்ப குரு. கொஞ்ச நாளாக மந்திரத்தை மாற்றிட்டார்

சிஷ்யன் 2 : அப்படியா நான் கவனிக்கவில்லையே

சிஷ்யன் 1: புது சிஷ்யை இன்பா வந்ததிலிருந்து 'எல்லாம் இன்பா மயம்' என்று சொல்கிறார்

வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிப்பது இல்லை !

"வாசகர் பரிந்துரையில் வரனும் என் பதிவுக்கு ஒரு ஓட்டுப் போடுங்க" அப்படின்னு சிலர் வெளிப்படையாக உரையாடியில் கேட்கிறார்கள், எழுதிய பதிவை படிச்சுப் பார்த்துவிட்டு ஓட்டுப் போடுங்க என்று சொன்னாலும் அவர் எழுதியதை அவரே மதிக்கிறார் என்று நினைக்கலாம், எழுதியவர் பெயர் முகப்பில் தெரிய வைக்க வேண்டும் என்கிற அற்ப ஆசையில் தான் பலர் உரையாடியில் கேட்டு வைக்கிறார்கள். வேண்டுமென்றால் பதிவர் சர்வேசனிடம் சொல்லி "வாசகர் பரிந்துரை பதிவுகளைப் படிக்கும் வாசகர்கள் விழுக்காடு எவ்வளவு ?" என்று கணக்கெடுப்பு நடத்திப் பார்க்கலாம்.

வாசகர் பரிந்துரை பதிவுகள், அதிக ஓட்டு வாங்கும் பதிவுகளில் 70 விழுக்காடு பதிவுகள் இப்படிப்பட்ட வாக்களிப்பில் தான் பரிந்துரை செய்யப்படுகிறது. வாசகர் பரிந்துரை பதிவுகளை நான் படிக்காமல் விடுவதற்கும் இதுவே காரணம், அறிந்து கொள்ள வேண்டிய, நல்ல தகவல் அடங்கியப் பதிவுகளை பதிவர் நண்பர்கள் உரையாடியில் காட்டும் போது படிப்பதுண்டு.

ஒரு நாளைக்கு 500 பதிவுகள் வரையில் வருவது, தவறான பரிந்துரைகள் மூலம் அதில் இடம் பெறும் மொக்கை பதிவொன்றை ஒருவர் படிக்கும் போது, உண்மையிலேயே பிற நல்லப் பதிவுகளை ஒருவர் படிக்கும் நேரம் தேவையின்றி இதில் சென்றுவிடுகிறது, நல்ல சில பதிவுகள் படிக்கப்படாமல் போவதற்கும் இதுவே காரணம்.

நாம படிக்கும் பதிவு மிகவும் சிறப்பானது பிறருக்கு பரிந்துரைக்கும் அளவுக்கு அதில் தகவல் உள்ளன என்று அறிந்தால் அதை அவரவர் பதிவு பக்கத்தில் 'படித்ததில் பிடித்தது' என்ற பட்டியல் படுத்தி வைக்கலாம், வாரம் ஒருமுறை அந்த பட்டியலை மாற்றி அமைக்கலாம். ஒவ்வொருவரின் எண்ணம் எழுத்து எவை என்பதை படிப்பவர்கள் அறிந்துள்ளனர், நான் ஒன்றை பரிந்துரைத்தால் அது என் எண்ணப்படித்தான் இருக்கும் என்பதை பலர் அறிவர்

வாக்கு, பரிந்துரை இவைகள் செயல்படும் விதங்களில் திரட்டிகளைக் குறைச் சொல்வதும் தேவையற்றது, அவர்கள் இடம் கொடுக்கிறார்கள், அதைப் பதிவர்கள் முறையாகப் பயன்படுத்தவில்லை, அதைக் கண்காணிக்கவும் திரட்டிகளால் முடியாது.

இப்போதுமட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக வாசகர் பரிந்துரைகள் யார் விருப்பப் படுகிறார்களோ அவர்களது பதிவுகளை அதில் கொண்டுவர முடியும் என்கிற நிலை இருக்கிறது. அவரவர் திருந்தினால் தான் உண்டு. பரிந்துரைகளை நம்பிப் படிக்கிறவர்களின் நேரம் தான் விரயமாகுது.

புதிதாக பதிபவர்களுக்கு ஒரு மூன்றுமாதக் காலம் பதிவு காற்றுவாங்கும், அவர்கள் பிறருடன் பதிவின் வழியாக தொடர்பு வைத்துக் கொண்டிருந்தால் பிறகு அவர்களது பதிவும் எழுத்துச் சிறப்பாக இருந்தால் கண்டிப்பாக படிக்கப்படும்.

தொடக்க காலத்தில் ஏறக்குறைய 100 - 150 இடுகைகளே ஒரு நாளில் வெளியாகும் 75 விழுக்காடு இடுகைகள் அனைவராலும் படிக்கப்படும், தற்போதும் ஒரு நாளில் வெளியாகும் இடுகைகள் எண்ணிக்கை 500க்கும் மேல் இருக்கும், அனைத்தையும் படிக்க முடியாது. வழக்கமாக நாம படிக்கும் பதிவுகளை வார இறுதியில் படிக்கலாம், புதியவர்களின் இடுகைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கலாம்.

இது நல்லதொரு பதிவு என்று வரையறை செய்வது கடினம் தான். அதற்கான அளவுகோள் எதுவும் கிடையாது, பதிவர்கள் அனைவருக்குமே வாசிக்கும் அனுபவம் உண்டு, அதனால் தான் எழுதுகிறோம், அந்த அனுபவத்தின் மூலம் நாம் பரிந்துரைக்கும் பதிவுகள் உண்மையிலேயே அனைவரும் அவர்களது நேரங்களை விழுங்கி வாசிப்பதற்கு ஏற்றது தானா என்று எண்ணாமல் வாசகர் பரிந்துரைகள் வாக்குகள் மூலம் ஒரு மறைமுகக் பதிவு திணிப்பை வாசகர்களிடம் திணிப்பது ஏற்கமுடியவில்லை.

பூக்கடைக்கு விளம்பரம் தேவை இல்லை, நல்ல எழுத்துவளம் உள்ள பதிவரும் வம்படியாக வாசகர் பரிந்துரையில் போய் உட்கார்ந்து கொள்வது அன்று பரிந்துரைக்கப் பட வேண்டிய ஒரு பதிவின் இடத்தைப் பிடித்துக் கொண்டு அடம் பிடிப்பது போல் ஆகும்.

வாசகர் பரிந்துரைக்கும் மிகுதியாக ஓட்டு வாங்கிய பதிவுகளை அது அவ்வளவு ஓட்டு வாங்கி இருக்கிறதா என்று என்னை வியப்படைய வைப்பது கிடையாது, அவற்றை அந்த ஒரு காரணத்திற்க்காக வாசகர்கள் அனைவரும் படிக்கிறர்கள் என்று யாரும் சொல்ல முடியாது

20 ஜூலை, 2009

வெற்றிபெறாத கடவுள் மறுப்பு மற்றும் பிராமணத் தகுதி !

பெரியாரின் கடவுள் மறுப்பு வெற்றிபெறவில்லை, பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்றிருப்பதை பார்பனர்களே ஒப்புக் கொள்கிறார்கள். தமிழர்கள் இறைபற்று மிக்கவர்கள், பார்பனர்களின் ஆதிக்கத்தை முன்னிட்டு பெரியாரின் கடவுள் மறுப்பை தமிழர்கள் ஏற்றுக் கொள்ளாதிருக்க ஆயிரம் காரணங்கள் உண்டு, அதில் முதன்மையானது தமிழர்களுக்கென்றே முருகன் (சேயோன்), மாயோன்(திருமால்), கொற்றவை(மாரியம்மன்), மாடன் (சிவன்) தெய்வங்கள் உண்டு. 6 ஆம் நுற்றாண்டு காலத்திற்கு பிறகே அவைகள் பார்பனர்களது வைதீக சமயத்துடன் முடிந்து வைக்கப்பட்டு பூணுல் மற்றும் பிற சடங்குகளுடன் வைதீகமயமானது. பார்பன எதிர்ப்பில் தங்கள் தெய்வங்களையும் விட்டுவிட தமிழர்கள் விரும்பவில்லை, அதனால் தான் பெரியாரின் பார்பன எதிர்ப்பு வெற்றி பெற்ற அளவுக்கு இறை மறுப்பு வெற்றிபெறவில்லை. என்னைக் கேட்டால் இறை மறுப்பு வெற்றி பெறவேண்டும் என எண்ணுவதற்கு மூட நம்பிக்கைகள் தவிர்த்து மிகப் பெரிய காரணங்கள் எதுவும் இல்லை. மூட நம்பிக்கைகள் அனைத்து மதங்களிலுமே நிரம்பிக் கிடக்கின்றன. இறைமறுப்புக்கு பதிலாக மதமறுப்பாக திராவிட இயக்கம் சென்றிருக்கலாம், சிறுபான்மை ஓட்டு அரசியல் என்கிற பெயரில் அவையெல்லாம் கண்டு கொள்ளப் படமால் போனது பெரியாருக்குப் பிறகு இறைமறுப்பு அவ்வளவாக எடுபடவில்லை என்பது "மஞ்சள்" தூண்டால் வடிகட்டிய "உண்மை".

"பிரமணன் என்பவன் பார்பனன் அல்ல, ஒருவனின் பிராமணத் தகுதி பிறப்பினால் வருவதன்று, தகுதியால் வரும்" என்கிற 2000 ஆண்டு புளுகுகள் இன்றும் தொடர்கின்றனர். ஆனால் அவர்களே அதை அவ்வபோது உடைத்து வருகின்றனர், ஒப்பிட்டுப் பார்க்காதததல் நாமும் அவர்கள் சொல்வது சரிதானோ என்று எண்ணிவிடுவோம். அண்மையில் படித்த ஒரு கட்டுரையில், 'இராமன் பிராமணன் அல்ல, வியாசர் பிராமணன் அல்ல......இன்னும் பல இதிகாச பாத்திரங்களை பிராமணன் அல்ல" என்று தெளிவாகச் சொல்லுகிறார்கள், ஆனால் அவர்கள் பிராமணர் என்று சுட்டிக்காட்டும் பாத்திரங்களும், ஆதி சங்கரர் உட்பட அனைவருமே பார்பனர்கள், அதாவது பார்பனர்கள் மட்டுமே பிராமணர்கள் என அழைக்கப்படுகின்றனர். எதாவது ஒரே ஒருவர் அல்லது பாத்திரம் சத்திரியனில் இருந்து பிராமண நிலை அடைந்திருப்பதாக எந்த ஒரு புராணங்களிலும் காட்டப்படவில்லை, பிறகு ஏன் இந்த "பிரமணன் என்பவன் பார்பனன் அல்ல, ஒருவனின் பிராமணத் தகுதி பிறப்பினால் வருவதன்று, தகுதியால் வரும்" என்பது எப்போது நடைமுறையில் இருந்தது என்று சொல்லாமல் தொடர்ந்து புளுகி வரவேண்டும் என்றே தெரியவில்லை. ஆனால் அதில் உள்ள அரசியலை ஆழ்ந்து யோசித்தால்,

பிராமணர் என்கிற சொல் பார்பனர் குறித்த சொல் இல்லை என்றே வைத்துக் கொண்டாலும் இதுகாறும் அவை பார்பனர்களையின் தகுதியையும், சமூக அந்தஸ்தையும் நிலைநிறுத்த நுழைக்கப்பட்டு வழங்கப்படும் சொல்லாகவே இன்றுவரை பயன்படுத்தப்பட்டு வருகிறது. இல்லை என்று மறுப்போர் சரியான ஆதாரங்களைத் தாருங்கள் கருத்தை மாற்றிக் கொள்கிறேன்.

இது இப்படி இருக்கையில், சோ இராமசாமி போன்றோர் 'எங்கே பிராமணன் ?' என்ற தொடர் பார்பனத் தகுதிகளை பார்பனர்களுக்கு காட்டும் ஒரு முயற்சியாகத் தான் நினைக்க முடிகிறது. அதை இந்துமதம், பண்பாடு, சமயக் கூறுகள் என்றெல்லாம் பொதுப்படுத்த முடியாது, ஏனெனில் பிராமணன் என்பவன் எந்த ஒரு காலத்திலுமே மற்ற மூவர்ணங்களில் இருந்து தகுதியால் உயர்த்திக் கொண்டவன் இல்லை. முழுக்க முழுக்க பார்பனர்களே பிரமணர்களாகவும் காட்டப்பட்டுள்ளனர். 'எங்கே பிராமணன் ?' பார்த்து சிலாகிக்கும் பார்பனரல்லாதவர்கள் சிந்திக்க வேண்டும்.

"மிட்டாய் அனைவருக்கும் உண்டு.....ஆனால் கிடைத்தவர்கள் அனைவரிடமும் பூணூல் இருந்தது" - மிட்டாய் பூணூல் அணியாதவருக்கு கிடைத்ததே இல்லை என்பது உண்மை. இங்கு மிட்டாய் என்பது 'பிராமணர்' ஆகும் தகுதி.

பெரியாரின் கடவுள் மறுப்பு நீற்றுப் போனாலும், பார்பன எதிர்ப்பு என்றும் நிலைபெற்றிருப்பதற்குக் காரணம் இன்றும் பார்பனர்கள் 'தகுதி' பேசுவதே. சிறுநீரும் மலமும் பார்பனர், பார்பனர் அல்லாதோர் அனைவரிடமும் உள்ளவை தான், எதன் அடிப்படையில் பார்பனர்களை "பிராமணர்" என்று அழைப்பது ? எந்த ஒரு பார்பனரும், 'பிராமணர் என்பதற்கு' பார்பனர்கள் எழுதி வைத்திருக்கும் விளக்கங்களையும், சோ இராமசாமியின் வியாக்யாணங்களையும் படித்தால் தன்னை பிராமணன் என்று அழைத்துக் கொள்வது தன்னைப் போலவே இருக்கும் பிற மனிதர்களை அவமதிக்கும் செயலாகும் என்று நினைப்பான்.

19 ஜூலை, 2009

சுவையார்வ பதிவு/பதிவர் !

எனக்கு விருது கொடுத்தவர் பதிவர் திரு இளைய பல்லவன், இலக்கிய ஆர்வமிக்கவர், வரலாறுகளை மிகுதியாகப் படிப்பவரென்பதால் தான் வரலாற்றுக் குறுநாவல்களை (சக்கர வியூகம் பாகம் 1 & 2 ) வலைப்பதிவில் எழுதி வருகின்றார். அவரது வரலாற்றுத் தொடர் பாகம் ஒன்றை விமர்சனம் செய்திருக்கிறேன். அவர் எனக்கு விருது கொடுப்பது எனக்கு மகிழ்ச்சி கொடுத்தது. விருது கொடுப்பதற்கான காரணங்களாக எனது எழுத்துத்தன்மை குறித்து குறிப்பிட்டு சொல்லி இருந்தார். நடுநிலையாக எழுதுகிறேன் என்று சொல்லி இருக்கிறார். பொதுவாக 'நடுநிலை' என்ற சொல்லில் ஒப்புதல் இல்லை, நடுநிலையாக எழுதுபவர்கள் யாருமே கிடையாது. நாம் எழுதுவது அனைத்தும் நம்மைச் சுற்றியுள்ள சமூகம், அரசியல் சார்ந்தவையே, அரசியலில் நடுநிலையாக இருப்பதாகச் சொல்ல முடியும், அதுவும் கூட எது சிறந்தது என்கிற நோக்கில் தான், எதிர்ப்பு அல்லது ஆதரவு என்கிற நிலை ஒன்று இருந்தே தீரும் என்றே நினைக்கிறேன், அதில் இருக்கும் தீவிரத் தன்மையின் ஏற்ற இரக்கம் தான் ஒரு வேளை நடுநிலையோ தெரியவில்லை. எனக்கு திமுக / அதிமுக இரண்டையும் பிடிக்கவில்லை என்று மாற்று அரசியல் வாதிக்கு வாக்களிப்பது நடுநிலையா ? அதுவும் ஒரு எதிர்நிலை தானே. சமூகம் சார்ந்த பார்வைகள் எழுத்துகள் இவற்றில் கூட ஒருவர் நடுநிலையாக எழுதிவிட முடியாது. சமூகம், அரசியல் இவற்றில் நடுநிலை என்றால் அந்த சமூகம் சேர்தவர் அல்லாதோர் (ஆப்ரிக்கர் தமிழர்களைப் பற்றி எழுதுவது போன்று), வெளியே இருந்து கவனித்து எழுதுபவர்கள் தான் நடுநிலையாக எழுதுவார்கள். மொழிக் கொள்கைகள், தமிழ் சமூகம், திராவிடம் இவற்றைப் பற்றிய கருத்துகள் எதிராக வரும் போது இவற்றிற்கு ஆதரவாக எழுதும் போக்கு என்னிடம் உண்டு. ஒரு பார்பனர் பார்பனராக நடந்து கொள்ளாமல் பிறரைப் போல் நடந்து கொண்டு, பார்பனர்களைக் குறைத்து எவராவது சொல்லும் போது 'எல்லா பார்பனரும் அப்படி இல்லை என்பதை என்னைப் பார்த்துமா நீங்கள் உணரவில்லை ?' என்று அவர் கேட்டால் அவர் பார்பனர்களுக்கு எதிரான சிந்தனை உடையவர் என்று சொல்ல முடியுமா ? அல்லது வக்காலத்து வாங்க காதிருந்தார் என்று சொல்ல முடியுமா ? அவர் அப்படி சொல்லுவது நடுநிலையா ? தாம் நடுநிலை என்று எவரும் தனக்குத்தானே சொன்னால் அது கேள்விக் குறியானது. எனது எழுத்துகள் நண்பர் இளைய பல்லவனுக்கு நடுநிலையாக தெரிந்ததற்கு நான் பொறுப்பு அல்ல. :)

நடுநிலை என்பது ஒரு மாயச் சொல், 'பிரபலம்' பற்றிய சொல்லின் தன்மையை நீங்களே முடிவு பண்ணிக் கொள்ளுங்கள். :)


*****

நான் இந்த விருதை பலருக்கும் கொடுக்க வேண்டும். நடு இரவு 2 மணிக்கு மேல் யோசித்தால் ஒருவரைத் தவிர சட்டென்று யாருமே நினைவுக்கு வரலை. நேற்று படித்த ஒரு பதிவு மிகவும் மனம் கவர்ந்தது, தமிழ் சமூகத்தில் இருக்கும் போலித் தன்மையை அதாவது, பெண்களின் புடவையில் காக்கப்படும் தமிழ் பண்பாடு குறித்து, கீழ்கண்டவாறு எழுதி இருக்கிறார்.


போன நூற்றாண்டில் செத்த மூளை கலாசாரம் காக்கும் தமிழ் வம்சம்


"அதிலும் ஒழுக்கம் என்கிற விடயம் பெரும்பாலும் கற்பு நோக்கியும் பெண்கள் நோக்கியும் தான் அதிகம் பிரயோகிக்கப்படுகின்றது. இதற்கு நல்ல உதாரணம் இங்கு நடைபெறூம் திருமண விழாக்கள். ஆண்கள் கோட்டும் சூட்டும் போட்டு களைகட்ட பெண்கள் எங்காவது சேலை கட்ட தெரிந்த ஒருவரை தேடிப் பிடித்து சேலை அணிந்து தலையில் பிளாஸ்டி பூ அணிந்து ஒரு நாற்பது பவுண் நகையை காவிக்கொண்டு வந்தால் அது தமிழ் கலாசார காப்பு. சில சமயம் இன்னும் கொஞ்சம் கூடிய தமிழ்ப் பற்றான ஆண்கள் குர்தா அணிந்து தம்மை நிரூபிப்பதும் உண்டு. தப்பி தவறி யாராவது ஒரு பெண் சேலை தவிர்த்து வேறு உடை அணிந்து வந்தால் அந்த பெண்ணின் கற்பு அன்றைய தினம் பூரணமாக விவாதிகப்படும். ஏன் பொதுவாக மாப்பிள்ளைகள் கூட மாப்பிள்ளை சூட் என்றொன்று அணிந்து பாப்பிள்ளைகளாகத்தான் (எமது ஊரில் பொம்மைகளை பாப்பிள்ளைகள் என்றும் சொல்வார்கள், சில சமயங்களில் ஆண்களின் இந்த மணக்கோலம் கம்பீரம் தொலைந்த பொம்மைகள் போன்றும் எனக்குத் தோன்றுவது உண்டு) காட்சி தருகின்றனர். முதலில் யோசித்துப் பாருங்கள். பெண்கள் சேலை அணிந்து தான் கலாசாரத்தை காக்க வேண்டும் என்றால் ஆண்களும் வேட்டிதானே அணியவேண்டும். பிறகெப்படி கோட்டும் சூட்டும் குர்தாவும் ஆண்களுக்கான கலாசார ஆடைகளாகின."

*****

மீதியை அவர் பதிவிலேயே படியுங்கள்,



அவர் நகைச்சுவையாக அந்த இடுகையை எழுதவில்லை, அவரது பதிவுகள் பலவற்றில், அவர் பயன்படுத்தும் எழுதுக்களின் சொற்கள் பயனற்ற சிந்தனைகள் எதையும் உருவாக்கவில்லை என்கிற உறுதி தருவதால், சுவையும், ஆர்வமும் ஏற்படுத்தும் இடுகைகளைப் படைப்பவர் என்று நான் கருதி, நான் வழங்கும் சுவையார்வ பதிவு/பதிவர் விருது, "சொல்வதெல்லாம் உண்மை" என்கிற பதிவில் எழுதும் பதிவர் திரு.அருண்மொழிவர்மன் அவர்களுக்கே.

சுவையார்வ பதிவு/பதிவர் விருது பெரும் திரு.அருண்மொழிவர்மன் அவர் சுவையார்வ பதிவர்களாக கண்டு கொள்ளும் பிறருக்கும் அதைக் கொடுக்க வேண்டும்.

17 ஜூலை, 2009

ஷங்கர் படத்துக்கு மற்றொரு கதை !

இந்தப் பதிவைப் படித்ததும், அந்த பதிவரை (ஸ்ரீ ரமேஷ் சதாசிவம்) எப்படி பாராட்டுவதென்றே தெரியவில்லை. நம் கண்ணுக்கு முன்பே நடக்கும் பொறுப்பற்ற செயல்களை தட்டிக் கேட்கும் துணிவு ஒரு சிலருக்குத்தான் வரும், அதை திரையில் காட்டும் போது அதில் நடித்தவர்களை உண்மையான நாயகர்களாகப் பார்த்து ரசிகர் மன்றம் அமைத்து, 'உயிர் மண்ணுக்கு, உடல் தலைவனுக்கு' என்கிறார்கள். அந்த பதிவில் கண்டபடி எதாவது ஒரு உண்மைச் சம்பவம் இதுவரை படமாக்கப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை, 'அஞ்சு' பைசாவின் மதிப்பு குறித்து 'அன்னியன்' படம் எடுக்கும் இயக்குனர் ஷங்கர் போன்றோருக்கு இது போன்ற உண்மைச் நிகழ்வுகள் நல்லதொரு படம் எடுக்கும் வாய்ப்பாக அமையும். ஒரு அரசு அலுவலர் கடமையை சரியாக செய்யாமல் விடுவதாலும், பொறுப்பற்றவர்களின் செயல்களாலும் அலைக்கழிக்கப்படும் தனிமனிதன் படும் துன்பங்கள் பற்றி தெரியவந்தால் முடிந்த வரைக்கும் பாலிஷ் போட்டு படம் எடுப்பாங்க, ஆனால் உண்மையிலேயே அவற்றின் தீர்வுகள் தான் என்ன ? தீர்வு கிடைக்குமா ?

அதை நீங்களே படிங்க.... கிணறு வெட்ட பூதம்...! (கதையல்ல உண்மை, கொஞ்சம் நீளமான பதிவு)

சீனா விற்பனை செய்யும் திருநெல்வேலி அல்வா !

வேறு எதாவது ஊரில் அல்வா செய்து 'திருநெல்வேலி அல்வா ங்கிற பெயரில் விற்பது வேறு. ஆனால் அதை திருநெல்வேலியிலேயே விற்க முயற்சிக்க அங்கே ஏமாந்த சோனகிரிகள் இருக்கிறார்கள் என்று அறிந்தால் மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

ஆப்ரிக்க நாடுகளில் 'இந்திய தயாரிப்பு' என்ற வில்லைகளுடன் (லேபிள்) என்று தரமற்ற பொருள்களை ஏற்றுமதி செய்துவிட்டு மூக்குடைப்பட்ட சீனா, அதே போன்று 'மேட் இன் இந்தியா' என்ற வில்லைகளுடன் அழகு சாதனப்பொருள்களை சென்னைக்கு கப்பல் வழியாக ஏற்றுமதி செய்து இருக்கிறதாம்.

அமெரிக்காவுடன் அணு ஒப்பந்தம் எங்களுக்கு எல்லாப் பக்கமும் எரியுது, இந்தியா அமெரிக்க கைப்பாவையாவதை அனுமதிக்க மாட்டோம் என்ற கம்யூனிஸ்டுகள், சீனாவின் அத்துமீரல்களை இதுவரை ஒரு சிறிய அளவிலான கண்டன அறிக்கையின் வழி கூட கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத் தக்கது. கம்யூனிஸ்டுகள் தேசிய வியாதிகளா ? சீனாவின் கைக்கூலிகளா ? தெரிஞ்சவங்க சொல்லுங்க. கேட்டுக் கொள்கிறேன்.

போகின்ற போக்கைப் பார்த்தால், அரசியல்வாதிகளின் கரை வேட்டிகள் கூட சீனாவில் இருந்து இறங்கும் போல இருக்கு. இது தொடர்பில் முன்பு எழுதியது.

கம்யூனிஸ்டுகள் கட்டிக் கொள்ளும் சீனக் கோவணம் !



படமும் செய்தியும் : கம்யூனிஸ்டின் மீது காழ்புணர்வு அற்ற, தேசிய நலம் விரும்பி :தினமலர்
(நன்றி)

16 ஜூலை, 2009

ஆங்கிலமும் சமஸ்கிரதமும் !

பொத்தி பொத்தி வைக்கப்படும் எதுவும் பயன்படாது என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டு சமஸ்கிரதம் எனப்படும் வடமொழி. சமஸ்கிரதம் புழக்கத்தில் இருந்து மறைந்து போனதற்கு முழுப் பொறுப்பும் பார்பனர்களுடையது. இன்றைய ஆங்கிலத்தில் நூல்கள் எழுதுபவர்கள் அனைவருமே வெள்ளைக்காரர்கள் கிடையாது. பிறமொழிகளை தாய்மொழியாக் கொண்ட ஆங்கிலப் புலமைப் பெற்றவர்கள் எழுதும் நூல்கள் வெள்ளைக்காரர்கள் எழுதும் நூல்களை விட மிகுதியானவை.

பிராகிரதம் எனப்படும் வேதமொழி கிட்டதட்ட ஐரோப்பிய மொழிகளின் ஒலியமைப்பையும் இலக்கணத்தையும் ஒத்திருந்ததை வரலாற்று மொழி ஆய்வாளர்கள் ஒப்புக் கொண்ட உண்மை. ஐரோப்பிய மொழி ஒப்புமைகள் பழைய சமஸ்கிரத மொழியில் இருந்ததை வைத்துதான், சமஸ்கிரதம் இந்தியாவின் மொழி அல்ல, வெளியில் இருந்து வந்தது என்று குறிப்பிட்டு ஆரியர்கள் வருகைப் பற்றிய கருத்துகள் எழுந்தன.

விக்கிபீடியாவில் இருந்து,

Sanskrit is a member of the Indo-Iranian sub-family of the Indo-European family of languages. Its closest ancient relatives are the Iranian languages Old Persian and Avestan.[9] Within the wider Indo-European language family, Sanskrit shares characteristic sound changes with the Satem languages (particularly the Slavic and Baltic languages), and also with Greek.[10]
In order to explain the common features shared by Sanskrit and other Indo-European languages, many scholars have proposed migration hypotheses asserting that the original speakers of what became Sanskrit arrived in what is now India and Pakistan from the north-west some time during the early second millennium BCE.[11] Evidence for such a theory includes the close relationship of the Indo-Iranian tongues with the Baltic and Slavic languages, vocabulary exchange with the non-Indo-European Finno-Ugric languages, and the nature of the attested Indo-European words for flora and fauna.[12]
The earliest attested Sanskrit texts are Hindu texts of the Rigveda, which may be located in the Punjab region and dated to the mid-to-late second millennium BCE. No written records from such an early period survive.

இன்றைய தேதியில் ஆங்கிலம் பிறமொழிச் சொற்களை ஏற்றுக் கொண்டு அதை ஆங்கிலப்படுத்திக் கொள்கிறதோ அதே போன்றே பழைய சமஸ்கிரதமும் பல்வேறு திராவிட மொழிகளின் சொற்களை சமஸ்கிரத ஒலிப்பிற்கு ஏற்ப மாற்றி அமைத்துக் கொண்டது. கிமு 4 ஆம் நூற்றாண்டுவரை சமஸ்கிரதம் லட்சக்கணக்கில் சொற்களை ஏற்று வளர்ந்து கொண்டிருந்தது. அதை முறைப்படுத்தவும், கட்டுக்குள் கொண்டுவரவும் பனானி என்கிற பண்டிதரால் சமஸ்கிரதத்திற்கு இலக்கணம் எழுதப்பட்டு, எழுத்து வழக்கிற்கு பயன்படும் ஒரு மொழியாகியது. கிமு 5 ஆம் நூற்றாண்டு வரை காலத்தில் சமஸ்கிரத்திற்கு எழுத்துகள் தோன்றி அல்லது அமைப்பட்டு இருக்கவில்லை. புத்தரின் காலம் கிமு 5 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்டது, அதற்கு முன்பு எழுத்தில் இருந்தவை திராவிட மொழிகளும், பாலி மொழியும் தான். அசோகர் தனது கல்வெட்டுகள் அனைத்தையும் பாலி மொழியில் தான் எழுதினார். நாளந்தா போன்ற பழைய பல்கலைக் கழகங்களில் பாலி மொழியில் பயிற்றுவிக்கப்பட்டது. புத்த மதத்தை தகர்க்க மாற்று வேண்டும் என்று முன்னின்றவர்கள் மாற்றுமொழியாக அதுவும் எழுத்து வழக்கு மொழியாக முன்வைக்கப்பட்டது தான் சமஸ்கிரதம். பார்பனர் மட்டுமல்லாது பவுத்த மதத்திற்கு எதிரானவர்கள் அனைவரும் சமஸ்கிரத்தில் எழுதுவது பாரதம் முழுதும் பரவும் என்கிற கருத்தில் சமஸ்கிரத்தில் எழுதத் தொடங்கினர். சமஸ்கிரத நூல்களில் பார்பனர்களின் பங்களிப்பை விட பார்பனர் அல்லோதோரின் பங்களிப்பே மிகுதி.

மனு ( நான்காம் நூற்றாண்டு) க்கு பிறகு பார்பனர்கள் இந்து சமயத்தை வருண பேதத்தின் சாக்கிட்டு கையில் எடுத்துக் கொண்டபடியால், ஆளுமை செலுத்தும் நோக்கில் பிற மொழியை தாய் மொழியாக உடையவர்களுக்கு சமஸ்கிரதம் பயிற்றுவிப்பதைத் தவிர்த்தனர். பார்பனர் அல்லாதோரின் பங்களிப்புகளும் குறைய தொடங்கியது. ஞானசம்பந்தர் காலத்தில் பக்தி இயக்கம் வளர்க்கிறேன் என்ற பெயரில் புத்தமததினருக்கு எதிராக தமிழ் மொழியை பலரும் முன்னெடுக்க, தமிழ்நாட்டில் சமஸ்கிரத பயன்பாட்டிற்கும் சேர்த்தே ஆப்பு வைத்துவிட்டனர். இருந்தாலும் முடிந்தவரை வடமொழி தமிழில் கலக்கச் செய்ய மணிப்ரளவம் என்னும் உத்தி கையாளப்பட்டது, அதன் தாக்கமாக மலையாளம் என்னும் புதிய மொழிப் பிறந்ததைத் தவிர்க்க முடியாமல் போனது.

இவை பழைய வரலாறு என்ற போதிலும், மறைமலை அடிகள் காலத்தில் தமிழின் தூய்மை படுத்த தனித் தமிழ் இயக்கம் தொடங்கப்பட்ட பிறகு தமிழில் வடமொழிக்கலப்பு மிகுதியாகவே களையப்பட்டது.

வெள்ளைக்காரர்கள் வடமொழியின் மூலம் குறித்து ஆராய்ந்த போது, அடி மடியில் கைவைக்கிறார்களே என்கிற பதற்றத்தில் வடமொழி தேவ பாஷை என்னும் கட்டுக்கதைகளெல்லாம் 200 ஆண்டுகளுக்கு முன்பு கிளப்பி விடப்பட்டு இருக்க வேண்டும். எந்த ஒரு பழைய இலக்கியத்திலும் வடமொழி குறித்து அப்படி ஒரு கருத்து இருந்தது இல்லை.

வடமொழி புழக்கம் குறைந்ததற்கு அது பொத்தி வைக்கப்பட்டதும், மிகவும் உயரியதாக காட்ட பிற மொழிகளை தூற்றியதே வடமொழி மீதான பிறர் வெறுப்புக்காரணம். என்னைக் கேட்டால் உலக அளவில் பலரின் நாக்கு, தொண்டை இவற்றின் ஒலிக்கு ஏற்ப பேசப்படும் ஆங்கிலத்துக்கு மாற்றாக முன்வைக்க் கூடிய தகுதிகள் உடைய சிறந்த மொழிகளில் சமஸ்கிரதமும் ஒன்று. மிகவும் புனிதம் பூசி மறையச் செய்துவிட்டார்கள்.

இப்பவும் கூட வடமொழியின் மேன்மை என்கிற பெயரில் பரப்பரப்படும் கருத்துகளில் ஒன்று, 'ஆங்கிலத்தில் மிகுதியான சமஸ்கிரதச் சொல் இருக்கிறது, ஆங்கிலமே சமஸ்கிரத்தில் இருந்து பிறந்தது, சமஸ்கிரதம் உலக மொழிகளின் மூலம்' - இது எப்படி இருக்கிறதென்றால் தன்னைப் போல் இருப்பவன் ஒருவனைப் பார்த்து வியப்பது போல் ஆகும், இருவரின் பெற்றோர்கள் பற்றி தீரக் கேட்டுப் பார்த்தால் தான் தெரியும் அவர்களின் பெற்றோர் இருவரும் எதோ காரணங்களினால் முன்பே பிரிந்த அண்ணன் தம்பிகள் என்றும் இவர்கள் இருவரும் வாரிசுகள் என்கிற உண்மை. அதாவது சித்தப்பா மகனைப் பார்த்து அவன் சித்தப்பா மகன் என்று அறியாமல் தன்னைப் போலவே இருக்கிறான் என்கிற வியப்பும், ஒருவேளை தந்தையின் இரத்தத்தில் பிறந்தவனோ என்கிற ஐயம் ஏற்படுவது போல் ஆகும். ஆனால் சமஸ்கிரதம் - ஆங்கில ஒப்பீட்டில் இவை ஆங்கிலத்தில் பலசொற்களில் வடமொழி சொற்கள் இருப்பதால் இருப்பதால் அது வடமொழியில் இருந்து பிறந்ததாகக் பெருமையாகப் பேசப்படுகிறது.

இன்றைய ஆங்கிலம் என்பது லத்தீன், கீரேக்க மொழிகளின் கலவை, கூடவே உலக மொழிகளின் சொற்களை ஏற்றுக் கொள்கிறது, அதை 2000 ஆண்டுகளுக்கு முன்பே செய்தது சமஸ்கிரதம், தமிழில் மிகுதியான (தேவையான என்ற பெயரில் சொல்லப்படும்) பிற மொழிச் சொற்களை ஆங்கிலம் போல் ஏற்றால் என்னவாகும் என்பதை சற்றேனும் சிந்தித்து பாருங்கள். பிறமொழியில் இருக்கும் அனைத்து சொற்களையும் ஏற்கவேண்டுமென்றால் அதை அந்த மொழியிலேயே படித்துவிடலாம், அதை ஏன் தாய்மொழியிலும் சேர்க்க வேண்டும் ?

வெள்ளைக்காரர்கள் அனைவரும் சேர்ந்து கொண்டு ஆங்கிலம் வெள்ளையர்களின் மொழி என்று கூறி பிறர் படிப்பதைத் தடுத்தால் ஆங்கிலம் வளருமா ? மறையுமா ? பிறர் படிக்கக் கூடாது என பார்பனர்களால் சமஸ்கிரதம் இவ்வாறு தான் தடுக்கப்பட்டது.

இணைப்புகள் : சம்ஸ்கிருதம் - சில கேள்விகள்

Sanskrit - From Wikipedia, the free encyclopedia

15 ஜூலை, 2009

பெருகிவரும் முதியோர் இல்லங்கள் - சில எண்ணங்கள் !

முதியோர் இல்லங்கள் என்றாலே எதோ ஆதரவற்றர்களின் பாதுகாப்பகம் போல் நினைப்பது இன்னும் தமிழ் சமூகத்தின் எண்ணமாக இருக்கிறது, இதற்க்குக் காரணமாக (ரோஜாவனம் போன்ற) திரைப்படங்களில் முதியோர் இல்லங்களாக காட்டப்படுவது அனைத்திலும் பிள்ளைகளால் துறத்தப் பட்டவர்களின் புகலிடமாகவே அவை காட்டப்படுகின்றன. ஆனால் அவற்றையும் மீறி ஊடகங்கள் வழியாக வரும் தகவல்கள் மூலம், பிள்ளைகள் இல்லாத பிரபலங்கள் முதுமையை இன்னல் இன்றி கழிக்கும் ஒரு இடமாக முதியோர் இல்லங்களை நாடுவதாக தெரியவந்தது. எழுத்தாளர் இராஜம் கிருஷ்ணன் முதியோர் இல்லத்தில் இருக்கிறார். தற்பொழுது முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் திரு டி.என்.சேஷன் மற்றும் அவரது மனைவி திருமதி சேஷன் ஆகியோரும் தங்களுக்கு வாரிசு இல்லாத காரணங்களினால் முதுமை காலத்திற்கு ஏற்ற இடமாக முதியோர் இல்லம் நாடி இருக்கின்றன.

'அந்த' காலத்தில் முதியோர் இல்லம் என்ற பெயரைக் கேள்விப்பட்டதே இல்லை, பொறுப்பற்றவர்களின் செயல் வினையாக முதியோர் இல்லங்கள் முளைத்திருப்பவராக நினைப்பவரென்றால் உங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்வது நல்லது. சமூகத்தின் பல மாற்றங்களின் எதிரொலியாக முதியோர் இல்லங்கள் இன்றைய தேவை என்பதாக சூழல் அமைந்திருப்பதைப் பார்க்க வேண்டும். பொறுப்பற்ற பிள்ளைகள், வாரிசு இன்மை
இவற்றைக் காரணாமாக கருதுவதைவிட முதியோர் இல்லம் பெருகுவதற்கு முதல் காரணமாக நான் நினைப்பது. இல்லறக்கட்டுப்பாடு என்னும் சமூக நல நோக்கில் இரண்டு அல்லது ஒரு குழந்தைகளைப் பெற்றுக் கொண்டது தான். கூட்டுக் குடும்பமாக வாழாவிட்டாலும் ஒரு குடும்பத்திற்கு முன்பெல்லாம் குறைந்தது 5 குழந்தைகள் அவர்களில் ஒன்றுக்கும் மேற்பட்ட ஆண் வாரிசுகள் இருப்பார்கள், அவர்கள் மாறி மாறி பெற்றோர்களைப் பார்த்துக் கொள்வார்கள்.

மக்கள் பெருக்கம் கட்டுபடுத்தும் நல நோக்கில் கடந்த 30 - 40 ஆண்டுகளில் 80 விழுக்காட்டினருக்கும் மேல் 2 குழந்தைகளுக்கு மேல் பெற்றுக் கொள்ளவில்லை. வதவதவென்று பெற்றுவிட்டு அதை வளர்க்க வழியில்லாமல் குழந்தைத் தொழிலாளர் ஆக்கும் நிலை கடந்த 30 - 40 ஆண்டுகளில் கனிசமாகக் குறைந்தே உள்ளது, ஒன்று இரண்டாக பெரும் பிள்ளைகளை நல்ல முறையில் படிக்க வைத்து வருங்காலத்தில் அடுத்த தலைமுறையாவது நல்ல நிலையில் இருக்க வேண்டும் என்ற விருப்பம் அனைவருக்குமே இருக்கிறது. முன்புபெல்லாம் வீட்டுப் பொறுப்புகளுடன் வீட்டில் உள்ள முதியவர்களைக் கவனித்துக் கொள்ளும்பொறுப்பு பெண்களிடம் இருந்தது. இன்றைய பொருளியல் தேவைக்கு பெண்களுக்கு சம உரிமை கொடுக்கிறோம் என்ற நாசுக்கான பெயரில் பொருளியல் தேவையின் சுமையின் ஒரு பகுதியை அவள் தலையில் ஏற்றி வைத்துவிட வேண்டியுள்ளதால் முதியவர்களைப் பார்த்துக் கொள்வது யார் என்ற கேள்விக்கு தொண்டையை நெறித்துக் கொண்டு விழுங்கும் விடையாக முதியோர் இல்லங்கள் தான் தெரிகின்றன.

இந்த இடற் இல்லாத குடும்பங்களில் குடும்பத்தின் தேவையற்ற சுமையாகவே முதியோர்களை நினைக்கும் படி இளைய தலைமுறைகளின் மன நிலையும் மாறி இருக்கிறது. வாழ்க்கையே ஒரு முறைதான், மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்பதாக நினைக்கத் தொடங்கி இருக்கிறார்கள், இன்றைய முதியவர்களின் பலர் அதைப் புரிந்து கொண்டு தங்களாகவே முன் வந்து முதியோர் இல்லங்களுக்கு பயணப்படுகின்றனர்.

இல்லம் சார்ந்த தொழில்கள் மறைந்து போய் படிப்பிற்கான வேலைக்குச் செல்ல வேண்டியபடி கல்வி முறைகள் அமைந்துவிட்டபடியால் வேலை கிடைக்கும் இடத்தில் இருக்க வேண்டிய சூழலும், அங்கே பெற்றோர்களை அழைத்துச் செல்ல முடியாத சூழல்களில், அவர்களை தனியாகவிடவும் முடியாத சூழல்களில் முதியோர் இல்லம் ஒரு வாய்ப்பாக இருப்பதாகத்தான் வாரிசுகள் நினைக்கின்றனர். காரணம் இன்றைய எந்திர வாழ்க்கையில் காலையில் வேலைக்குச் செல்லும் தம்பதிகள் மாலை தான் திரும்ப வேண்டிய சூழலில் பெற்றோர்கள் அவர்களுடன் இருப்பதும், இல்லாதிருப்பதும் ஒன்றாகத்தான் தெரிகிறது, அவர்களைக் கூடவே வைத்திருந்தால் அவர்களுக்கு பணிவிடை செய்வதைவிட அவர்களை வேலை வாங்கும் சூழல் மிகுந்துவிடும் என்பதால் பெற்றோர்களுக்கு முதியோர் இல்லம் நல்ல ஓய்வைக் கொடுக்கும் ஒரு இடமாகவும் தேர்ந்தெடுக்கிறார்கள். பணிப்பெண் வைத்துப் பார்த்துக் கொள்ள முடிந்தவர்கள் அப்படியும் செய்கிறார்கள். அந்த அளவுக்கு செலவு கட்டுபடி ஆகாதவர்கள் முதியோர் இல்லங்களை தவிர்க்க முடியாத சூழலில் பெற்றோர்களுக்கு கைகாட்டி விடுகின்றனர். ஒரே ஒரு பெண் அல்லது இரண்டுமே பெண்ணாகப் பெற்ற பெற்றோர்களின் முதுமைக் காலம் ? மனைவி வேலைக்குப் போகாவிட்டாலும் கூட, பெண்ணைப் (மனைவியைப்) பெற்றவர்களைப் பார்த்துக் கொள்வதையும் தன் கடமையாக நினைக்கும் பரந்த மனப்பான்மை பலருக்கு வரவே இல்லை. அவர்களது வழிகாட்டலும் மாமானார் - மாமியாருக்கு முதியோர் இல்லங்களை நோக்கியதாகத் தான் இருக்கிறது.

மாணவ விடுதிகள் போன்று முதியோர் இல்லங்களும் பல்வேறு வசதிகளுடன், பொழுது போக்கும் இடமாகத்தான் அமைந்திருக்கிறது. உடன் இருக்கும் மற்ற முதியவர்கள் ஒவ்வொருவராக இறக்கும் போது சொல்ல முடியாத வெறுமையும், வாழ்க்கையில் வெறுப்பு வருவதும் வயதான காலத்தில் அங்கே இருக்கும் ஒருவரின் அமைதியைக் கெடுத்துவிடும் என்பதைத் தவிர்த்து முதியோர் இல்லங்களில் வசிப்பது பெரிய குறையாகத் தெரியவில்லை. முதியோர் இல்லங்களை நாடும் முதியவர்களில் பெரும்பகுதியினர் பார்பனர்களாக இருப்பது, அவர்கள் சமூக மாற்றங்களை உவந்து ஏற்றுக் கொண்டதன் விளைவா ? அல்லது சுமையாகக் கருதி அனுப்பப் படுகிறார்களா ? என்பதை சரியாக விளங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் எப்படி இருந்த போதிலும் பார்த்துக் கொள்ள இயலாத போது, முதியோர் இல்லங்களுக்கு பெற்றோர்களை அனுப்புவது அவர்களை கவனிப்பின்றி தனித்து விடுவதை விட மேலான அக்கரையையாகத் தான் தெரிகிறது.

இனப்பெருக்கக் கட்டுப்பாட்டின் காலத்தின் கோலமாகவும், படிப்பின் தொடர்பில் (தொலைவில் / வேறு நாடுகளில்) அமைந்த வேலை, பெண்கள் வேலைக்குச் செல்வது ஆகிய காரணங்கள் முதியோர் இல்லப் பெருக்கத்திற்கு முதன்மைக் காரணங்களாகவும், சமூகம் சாடும் பிள்ளைகளின் பெறுப்பின்மை சொற்பக் காரணமாகவும் தான் தெரிகிறது.
மனிதன் தனக்காக குடும்பம் அமைத்துக் கொண்டதும் பிள்ளைகளை வளர்ப்பது பொறுப்பாகவும், பெற்றோர்களை பராமரிப்பது கடமையாக இருந்தது. தற்போது பொறுப்பு மட்டும் இருக்கிறது, பண்டமாற்று முறையில் கடமை கைமாற்றி விடப்படுகிறது.



முதியோர் இல்லங்கள் சமூகச் சூழலின் கட்டாயம் என்பதை விட சமூகத்தின் ஒரு கூறாக, அங்கமாக அமைந்து விட்டது. நாம் பெற்ற நவநாகரீக வளர்ச்சியில், மெக்கலே கல்வி கற்றதன் பயனாக, பெண்களுக்கு கல்வி அளித்ததன் பயனாக, அவரவர் குடும்பம் அவரவர் வாழ்க்கை இன்னும் பல காரணிகளில் வாழ்க்கையின் நிறைவு முதியோர் இல்லங்களாக இன்றைய இளைஞர்களின் முதுமையும் இருக்கும்.

14 ஜூலை, 2009

"No" "கடிப்பவர்" மீண்டும் வந்துட்டார், ஐயா பதிவர் சாமிகளா பார்த்து எழுதுங்கள் !

No has left a new comment on your post "மதம் மற்றும் அறிவியல் !":

தயவு கூர்ந்து யாராவது நண்பர் திரு கோவி அண்ணனின் வாயை மூடினால் (அல்லது கையயை கட்டிப்போட்டால்) நாட்டுக்கு நன்மை பயக்கும்!!!!

ஒரே ஒரு ஆறுதல், இந்த கொடுமையை படிப்பவர்கள் ஒரு சிலர் மட்டுமே என்பதுதான். An epidemic cannot be created with only a miniscule population.

இது கொடுமை என்றால், Homosexuality பற்றி அண்ணன் அவர்கள் பக்கம் பக்கமாக அடித்து விட்டது உளறல்களின் உச்சக்கட்டம்!!! அன்பான அண்ணனின் total Ignorance on subject matters that he wants to write about and his overal intelectual capacity to coherently compose meaningfull pieces பற்றி நான் சில மாதங்களுக்கு முன்னமே பக்கம் பக்கமாக எழுதிவிட்டேன். இன்றைக்குதான் நீங்கள் உங்கள் reel விடும் பழக்கத்த்தை இன்னுமும் விடவில்லை என்று புரிந்தது (ரொம்ப நாட்களுக்கு பிறகு அவரின் தளத்திற்கு வர நேரம் கிடைத்தது).

ப்லோக் எழுதும் வியாதி உங்களுக்கு மிக தீவிரமாக பற்றிக்கொண்டதால், உங்களை உங்களாலேயே திரித்திக்கொள்ளும் கட்டத்தை தாண்டிவிட்டீர்கள் என்பது தெளிவாக புரிகிறது!

சகிக்கவில்லை ஐயா...............

தயவு கூர்ந்து முதலில் நன்றாக படியுங்கள்...... குப்பைகளை அல்ல....Peer reviewed articles on general science, history, biology, evolution and sociology and then......நீங்கள் எழுதுங்கள்......!

அப்படி நீங்கள் படிப்பீர்களானால் கண்டிப்பாக எழுதமாட்டீர்கள் இந்த மடத்தனத்தை எல்லாம்.....ஏனென்றால் ....Once you read properly the things writen by qualified people then you will know that your knowledge levels are totaly unfit to create your own fancifull, unsubstanstiated, ignorant, foolish and downright false theories!!!!!

எழுதவேண்டும் என்ற அரிப்பு என்ன ஆனாலும் போக மறுக்கிறதா.....இருக்கவே இருக்கிறது, சிறு கதைகள். எந்த மடத்தனத்தை வேண்டுமானாலும் கக்குங்கள் கதை என்ற பேரில். யார் உங்களை கேட்கப்போகிறார்கள்........ஏன் திரு லக்கி லுக் என்ற ஒருவர் இல்லையா......கதை என்ற போர்வயில் கண்ட குப்பைகளை அவர் கிறுக்கி தள்ளவில்லையா???? அவருக்குதான் ஜால்ரா அடிக்க ஒரு கூட்டமே இல்லையா?? உங்களுக்கு மட்டும் அது ஏன் இருக்கக்கூடாது!!! நீங்களும் அதை செய்தால் நான் ஏன் இப்படி வந்து திட்டப்போகிறேன்???? கதை..அதுவும் அசட்டுத்தனமான கதைகள் என்றாலும் திரு லக்கி லுக் பக்கமே நான் தலை வைத்துப்ப்படிப்பதில்லை தெரியுமா!!!! ஏனென்றால் அவை அப்பட்டமான அசட்டுத்தனமான, அவிந்துப்போன அரைபக்க அளப்புகள் மட்டுமே! There aro no facts in those and hence plain fictional idiocy that doesnt warrant anybody's attention at all!!!

நீங்களும் திரு லக்கி லுக் அக முயற்சி செய்யுங்கள் திரு கோவி அவர்களே...அதுதான் எல்லோருக்கும் நல்லது.....முக்கியமாக உங்களுக்கு...உங்கள் உடல் நலத்திற்கு....உங்கள் egoவிற்கு....உங்கள் எழுத்து அரிப்பிற்கு.................

உங்கள் ஸ்டைலில் ஒரு பஞ்ச் (நீங்கள் கோவி பன்ச் என்ற போட்டுக்கொண்டு உளறுவது போல்) : ".........................................................."

என்ன இது ஒன்றும் இல்லை, வெற்று இடமாக இருக்குதே என்று பார்க்குறீர்களா? வேறு ஒன்றும் இல்ல, உங்கள் பன்ச் is as good as empty space ......both signifies nothing!!!!

நிறுத்துங்கள் ஐயா....நிறுத்துங்க.........இல்ல கதை எழுதுங்க..............உலகம் ரெண்டு லக்கியை கண்டிப்பாக தாங்கும்.............

நன்றி (மீண்டும் சத்தியமாக வரவே மாட்டேன்)

****************

கோவி.கண்ணன் 2:35 PM, July 14, 2009
திருவாளர் No,

எப்போதும் ஆங்கில வா(ந்)தி (எடுக்கும்) நீங்கள், என் பதிவுக்கு தமிழில் பின்னூட்டம் இட்டிருப்பது வரவேற்கத்தக்கது. எப்படி இருந்த நீங்க இப்படி ஆகிட்டிங்க...!

அவ்வ்வ்வ்வ் ஹவ்வ்வ்வ்வ்வ்வ் ?

//நன்றி (மீண்டும் சத்தியமாக வரவே மாட்டேன்)//

இப்படியெல்லாம் சொல்லப்படாது, மிஸ்டர் நோ குணமாகிட்டாரா ? ஏன் இப்போதெல்லாம் அவரு பின்னூட்டுவதில்லைன்னு பலர் என்னை பிராண்டி எடுக்கிறார்கள். அவர்களுக்காக தயவு பண்ணி மீண்டும் மீண்டும் வாங்கோ......!

மதம் மற்றும் அறிவியல் !

அறிவியல் ஆன்மீகம் என்று தலைப்பிட நினைத்தேன். இன்றைய ஆன்மிகம் என்பது மதவாதிகளின் பிடியில் திணறிக் கொண்டு இருப்பதால் ஆன்மிகம் என்று சொல்லப்படுபதில் மேலோங்கி இருப்பது மதவாதமே, மதப் பற்றுக்கும், மதவெறிக்கும் நூல் இழைவேறுபாடுதான், கையில் தீவட்டி வைத்துக் கொண்டு தன்னை அடையாளம் காட்டுவது மதப் பற்று, அதே தீவட்டி மூலம் மாற்று மதத்தினரின் வீட்டைக் கொளுத்துவது மதவெறி, கொளுத்துவதற்கும், கையில் வைத்திருப்பதற்கும் அசம்பாவிதம் என்ற ஒரு நிகழ்வு இடையில் இல்லாதது மட்டும் தான் வேறுபாடு. அசம்பாவிதம் நடந்தால் கையில் இருப்பது எதிரியின் மீது வீசப்பட்டுவிடும். 'எனக்கு மதப்பற்று இருக்கிறது மதவெறி இல்லை' என்போர்கள் அசம்பாவித சூழலில் இல்லாதவர்கள் என்று வேண்டுமானால் சொல்ல முடியும்.

***

மனித வாழ்க்கை, மரணம், இயற்கை இது பற்றிய கேள்வியில் மனித உள்ளங்களின் இருவகை சிந்தனைகளின் செயலாக்கம் தான் மதம் மற்றும் அறிவியல். இயற்கை மீது இருந்த வியப்புக்கும், பயத்துக்கும் காரணமாக 'இறைவனை' முன்னிறுத்தி தீர்வு சொல்வதாக எழுதப்பட்டதே மதநூல்கள், இயற்கையின் செயல்பாடுகளை ஆய்ந்து பார்முலாக்களில் அடக்கி, தனது புலனில் நீட்சி செய்து கொண்டவை அறிவியல். புலன் நீட்சி என்றால் நம்மால் பறக்க முடியாது, விமானங்கள் மூலம் அதைச் செய்கிறோம், தொலைவில் உள்ள காட்சிகளை காண்கிறோம், தொலைவில் உள்ளோரிடம் பேசுகிறோம், (தொலைவின் வாசனையை நுகரவும், தொட்டு உணரவும் தான் இன்னும் முயற்சி மேற்கொள்ளப்படவில்லை, அது சாத்தியப் படவும் படாதது, ஏனெனில் கண் பார்ப்பதற்கும், காது கேட்பதற்கும் காட்சிக்கு மிக அருகில் இருக்க வேண்டிய இயற்பியல் நிலை தேவை இல்லை என்பதால் தொலைவில் இருப்பதைப் பார்பதும் கேட்பது அறிவியலால் சாத்தியம் ஆகிற்று). இயற்கையை ஒன்றும் செய்ய முடியாது, ஆனால் அதன் தன்மையைப் புரிந்து கொண்டால் அது அனுமதிக்கும் வழியில் செயல்பட்டு தனக்கு தேவையானவற்றை செய்து கொள்ள முடியும் என்கிற சிந்தனைகளின் தொகுப்பு தான் இன்றைய அறிவியல். மதங்கள் மனித சிந்தனைகளை, கேள்வி கேட்பதை விரும்புவதில்லை, அப்படியே செய்தாலும் அதற்குள் தான் சிந்திக்கவேண்டும், சொல்லப்படும் பதிலைத் தான் ஏற்கமுடியும் என்பதாகவே மதவாதிகள் சிந்தனைத் தடைகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள்.

இறைவனே எல்லாமாக செயல்படுவதும், எல்லாவற்றையும் செய்வதாக மத நம்பிக்கை. இதை இப்படியே நம்பி இருந்தால் இன்றைக்கு மனித அறிவியல் வளர்ச்சி பெற்றிருக்கவே முடியாது, அறிவியல் கூறுகளை மதங்கள் வரலாறு தொட்டே எதிர்த்து வந்திருக்கின்றனர். உலகம் உருண்டை என்றோரை கல்லால் அடித்து துறத்தியும், அறிவியல் கோட்பாடுகள், சிந்தனைகள் இறை நம்பிக்கைக்கு எதிரானவை என்றே தத்துவமேதைகள் விசம் கொடுத்துக் கொல்லப்பட்டு இருக்கிறார்கள். இன்றைக்கு மதங்கள் சொல்லும் கதைகளை யாரும் நம்புவதில்லை என்கிற காரணத்தினால் மதக் கொள்கைகள் அறிவியல் சட்டை அணிந்து வந்து பல் இளிக்கின்றன. எனக்குத் தெரிந்து எந்த ஒரு மதங்களிலும் நேரடியாக இன்றைய தேதியின் அறிவியல் உண்மைகள் சொல்லப்படவே இல்லை, அப்படிச் சொல்லப்பட்டுள்ளதாக சொல்லப்படுவதெல்லாம் மதவாதிகளின் திரித்தலே ஆகும். அது உண்மையெனில் ஒவ்வொரு அறிவியல் அறிஞனும் நாள் கணக்கில் ஆராய்ச்சிக் கூடத்தில் செலவிட்டு ஒவ்வொன்றையும் கண்டு பிடித்துச் சொல்ல வேண்டிய நிலை இருக்காது. இன்னும் சிலர் மதக் கருத்துக்களை ஆழமாக நம்பிக்கொண்டு, 'இறைவன் அனைத்தையும் மறைத்து வைத்திருப்பது நம் அறிவு திறனைத் தூண்டி நாமாக கண்டிபிடிக்கத்தான்' என்றும் சொல்கிறார்கள், இதுவும் வெறும் ஊகம் மற்றும் தன் நம்பிக்கை மீது வீசப்படும் கேள்விக்கு எதிராக தனக்குத் தானே ஏற்படும் தன்னாறுதல் மட்டுமே. மனிதன் சிந்திக்காது மதவாதிகளின் சொல்படி கேட்டு இருந்தால் இந்த உலகம் இன்னும் பழமையான உலகமாகத்தான் இருந்திருக்கும்.

இயற்கையையை யார் யாரோ செயல்படுத்துவதாகவும், அதில் நல்லது நடந்தால் இறைச் செயலாகவும், கெட்டது நடந்தால் சாத்தானின் வேலையாகவும் சொல்லப்படுகிறது. ஏனெனில் இறைவன் மிகவும் நல்லவர், இயற்கையை அவரே செயல்படுத்துகிறார் என்ற இறை நம்பிக்கை / மத நம்பிக்கைகளை தகர்க்கும் வண்னம் இயற்கைப் பேரிடர் ஏற்படும் போதெல்லாம் அந்த நினைப்பில் பாதிப்பு ஏற்படுத்துவிடக் கூடாது என்பதற்காக 'சாத்தான்' என்கிற ஒன்றை புகுத்தி வைத்திருக்கிறார்கள். மனிதன் மனச் செயல்பாடுகளில் செயல்படுகிறான். இயற்கை ? அது முழுவதும் சூழலால் பின்னப்பட்டது. சுற்றுச் சூழலால் என்றோ ஒரு நாள் அழிந்துவிடும் வாய்ப்பு இருப்பதாக அறிவியலாளரும், மறுமைக்கு முன்பு அழிந்துவிடும் என மதக் கொள்கையாளர்களும் அறிவுறுத்துகிறார்கள். பூமியும் உயிரனத் தோற்றதிற்கும் இவர்களது பங்கு எதுவுமே இருந்ததில்லை என்று பார்க்கையில் உலகம் அழிந்தால் முன்பு போல் ஏற்படாமல் இருக்க ஏதாவது வெளிப்படையான தடைகள் அல்லது மீண்டும் உலகம் உருவாகவே ஆகாது என்று சொல்லவும் முடியுமா ? இயற்கையின் மாறுதல்கள் அதாவது கால சுழற்சியில், இயற்கையின் சூழலில் எதுவுமே நடக்கும், மாறும். இயற்கையின் செயல்பாடுகளின் வியப்புகளைப் பற்றிய சிந்தனைகளின் இரு கூறுகளே மதம் மற்றும் அறிவியல்.

இயற்கை / இயக்கம் என்பவை காலத்தில் (Domain of Time) நிலைத் தன்மை, நிலையாத் தன்மை என இருவகைத் தன்மையில் செயல்படுகிறது. இதில் நிலைத்த தன்மை பற்றி பேசுவது மதம், நிலையாத் தன்மையை ஆய்ந்து எழுந்தது அறிவியல்.

எந்த விதியும் காலத்தில் அடக்கம் (எல்லாம் இறைவனுக்கு கட்டுப்பட்டது என்பதாக) - Static Nature of 'Nature' - மதம் !

விதிகள் காலத்தால் மாறும் (எல்லாம் இயற்கை மாற்றத்துக்கு உட்பட்டது, நாம் அதன் மீது அமர்ந்து செல்ல முடியும்) - Dynamic Nature of 'Nature' - அறிவியல் !


(படத்தை பெரிதாகப் பார்க்க மேலே அமுக்கவும்)

13 ஜூலை, 2009

பொடியன் சஞ்சைக்கு கடுமையான கண்டனம் !

தன்னை எதிர்பதிவு ஏகாம்பரமாக நினைத்துக் கொண்டு சஞ்சை எனது பதிவுக்கு விளம்பர நோக்கத்துடன் எதிர்பதிவு போட்டு இருக்கிறார். எனது அந்தப் பதிவு ஜக்கிவாசுதேவின் சிறுகதையைத் தான் எடுத்து எழுதி இருந்தேன். எனக்கு எதிராக எழுதுவதாக நினைத்து ஒரு ஆன்மிக அறிவாளியின் கதையை போதை, கஞ்சா என்று அஞ்சாமல் கொசசைப்படுத்தி இருக்கிறார். பொடியன் சஞ்சை பெயருக்கு ஏற்றார் போல் பொறுப்பின்றி எழுதியதற்கு கடுமையான எனது கண்டனங்களைத் தெரிவிக்கிறேன். தொலைபேசி மூலம் சமாதானம் ஏற்றுக் கொள்ளப் படமாட்டாது. இந்த கண்டனத்தை ஏற்று சஞ்சை எதிர்பதிவை தூக்கிவிட்டால் அடுத்த 5 நிமிடத்தில் எனது இந்தப் பதிவையும் தூக்கிவிடுவேன்.

***

யூசுப்பால்ராஜ் Said...

எனக்கு பொடியன் சஞ்செய் பொடியானாக ஜட்டியோடு இருக்கும் பொழுதில் இருந்தே தெரியும், நான் சொல்லித்தான் அவன் ட்ராயரில் இருந்து பேண்டுக்கு மாறினான். அப்புராணி, அவன் தெரியாமல் செய்திருப்பான். விவரம் இல்லாதவன், சித்தப்பன் ஸ்தானத்தில் இருந்து அவனுக்காக நான் மன்னிப்பு கேட்கிறேன்.

பாதுஷா said ...

கோவி போன்ற பிரபல பதிவர்களை இப்படி வம்பிலுப்பது வேண்டுமென்றே சஞ்செயின் விளம்பர புத்தியைக் காட்டுது.

பாஸ்கி said ...
பாதுஷா சொல்வதை நானும் வழி மொழிகிறேன்.

*****

அனானிகளே ! அங்கே எரிகிற தீயில் ஈத்தரை ஊற்றாதிங்கப்பா !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்