பின்பற்றுபவர்கள்

29 ஜனவரி, 2010

இராமானுஜர்,வடகலை, தென்கலை !

இராமானுஜரின் பெயர், அவருடைய விஷிட்டாத்வைதம் தத்துவம் பரவலாக்கம் செய்யப்பட்டு பெயர்பெற்றதாக இருப்பதை வைத்து அவருடைய காலம் கிமுவாக இருக்கலாம் என்று நினைத்துக் கொள்வதுண்டு. பொதுவாக இராமானுஜர், ஆதிசங்கரர் ஆகியோர்களின் பிறப்பை தெய்வீகப் பிறப்பு என்று சொல்லி வருவதன் மூலம் அவர்கள் காலத்திற்கு அப்பாற்பட்டவர்களாக நினைக்க வைத்துவிடுகிறது, இவர்கள் இருவருமே கிமுக்கு பிறகு பிறந்தவர்கள் தாம். இராமனுஜர் கிபி 1017 - 1137 (இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகள் முன்பு வாழ்ந்தவர்)

இராமனுஜரையும், அவரைப் பின்பற்றியவர்களையும் சைவ சமயத்தினர் துன்புறுத்தியதாகத்தான் வரலாற்றில் சொல்லப்படுகிறது. தசவதாரம் படத்திலும் அப்படி ஒரு காட்சி இருக்கும். இராமனுஜரை கொலை செய்ய முயன்றவர்கள் பலர், அதில் கிருமி கண்ட சோழனும் ஒருவன், அந்த நிகழ்வில் இருந்து அவரை தப்பிக்க வைக்க அவருக்கு பதிலாக அவர் பெயரில் சென்றவர் தான் கூரத்தாழ்வார் என்கிறார்கள். கூரத்தாழ்வர் இராமானுஜர் அல்ல என்று ஒற்றர்கள் மூலமாக தகவல் பெற்ற சோழன் கூரத்தாழ்வாரின் கண்களைப் பிடிங்கிவிடுவாரென்றும் அல்லது ஆழ்வாரே பிடிங்கிக் கொள்வார் என்றும் சொல்லப்படுகிறது.

இராமனுஜரின் காலமும் பக்தி இயக்கம் என்ற பெயரில் வைதீக சைவமும் ஒரே காலத்தில் தான் தோன்றி வளர்ந்திருக்கின்றன. சைவம் ஆதிசங்கரரின் அத்வைதத்துடன் இணைந்த வைதீக சைவமாக வளர்ந்து வந்தது, இதற்கு உரமிட்டவர்கள் மூவர் தேவரம் பாடியதாகச் சொல்லப்பட்ட அப்பர், சுந்தரர், ஞான சம்பந்தர். இதில் அப்பர் தவிர்த்து மற்ற இருவரும் பார்பனர்கள். இராமனுஜரும் பார்பனரே. முழுமுதல் கடவுள் யார் என்பதை முன்னிறுத்துவதில் தான் சைவத்திற்கும் வைணவத்திற்கும் போட்டியே, இரண்டுமே வேத சார்ப்புடையது வேதங்களில் தங்கள் தெய்வத்தைதான் போற்றி இருப்பதாக இருவரது வாதமும். ஆனால் வேதம் சிவனையோ, கிருஷ்ணனையோ போற்றி இருக்கிறது என்றால் உண்மையில் அவ்வாறு இல்லை, வேதங்களில் பிந்தைய மண்டலங்களில் தான் இருவரும் அறிமுகம் ஆகின்றனர். ரிக்வேதத்தின் முக்கிய இறைவணக்கமே இந்திரனுக்கு உரியதுதான். வேதம் பாஷ்யங்கள் (விளக்கம்) மற்றும் உபநிஷத்துகள் (வேத சாரம் என்பார்கள்) ஆக வளர்ச்சி பெற்றபோது சிவனும் விஷ்ணுவும் முன்னிலைப்படுத்தப்படுகின்றன. அந்த காலகட்டத்தில் ஏற்கனவே ஜைனமும், பவுத்தமும் நன்கு வளர்ந்திருந்தது, வேத விளக்கங்களுக்கு இந்திரன் தவிர்த்து ஆரியர் அல்லாதவர்களின் நடைமுறையில் இருக்கும் தெய்வங்களை இணைத்துக் கொண்டால் தான் வேதங்களைப் பரவலாக்கம் செய்ய முடியும் என்பதால் சிவன், விஷ்ணு, வினாயகர் போன்ற வணக்கங்களுக்கும் முன்னுரிமை கொடுக்கப்பட்டது.

அவ்வாறு இணைக்கும் போது கந்தபுராணம், விஷ்ணு புராணம், சிவ புராணம் போன்ற கதைகளை எழுதி சேர்ப்பதன் மூலம் இந்த தெய்வங்களுக்கு வேத தெய்வங்கள் என்கிற தகுதியும் கொடுக்கப்பட்டது, வழக்கமாக கதையின் அரசியல் (அதை வேண்டுமானால் தத்துவம் என்பதாக கொள்க) என்ன வென்று தெரியாமல் கதையை மட்டும் உண்மை என்று நம்பும் வழக்கத்தால் இந்த தெய்வங்கள் முன்னிலைக்குச் சென்று, மூல வேதத்தில் போற்றப்பட்ட இந்திரன் காணாமல் போனான். மேலும் மிகுதியாக வைதீகமயமாக்கியதில் தம்மையும் மறந்து இந்திரன் குறித்து மிகவும் ஆபாசமான கதைகளை புனைந்து இந்திரன் என்பவன் ஒரு காமவெறியன் என்ற அளவுக்கு கதையை கேட்பவர்கள் நினைக்க இந்திரனின் சிறப்புகள் எனக் கூறப்பட்டவை அனைத்தும் மறைந்து, நாட்டார், தொல்திராவிட தெய்வங்கள் வேதமயமாயின. மாயோன் (கிருஷ்ணன்), சேயோன்(முருகன்), துர்கை, சிவன் ஆகியவை வேதம் போற்றாத காலத்தில் பார்பனர்கள் அல்லாதவர்கள் வணங்கி வந்தவையே. கருப்பு நிறந்தில் இருந்த கிருஷ்ணன், முருகன் போன்ற தெய்வங்கள் இப்பொழுது பலிங்கு வெண்மைக்கு மாறி பூணூலுடன் வைதீக தெய்வமாக மாறிக் கொண்டன.

பழம் இந்தியா முழுவதிலும் கிருஷ்ணனை வழிபட்டவர்கள், சிவனை வழிபட்டவர்கள் என்பதாகத்தான் தனித்தனி நம்பிகையுடன் இருந்தனர். வேத சார்பில் இவ்விரு தெய்வங்களையும் வேதமயமாக்கியவுடன் யாருக்கு முக்கியத்துவம் கொடுப்பது என்பதில் ஏன் பெரும் குழப்பம் ஏற்பட்டது என்றால் இத்தெய்வங்களை வழிபடுபவர்களிடம் ஆளுமை செலுத்த இரண்டையும் ஒன்றாக்குவதும், ஒன்றை மட்டும் உயர்த்துவது என்பது சாத்தியம் இல்லாமல் போய்விட்டது. வழி வழி வந்த வழிபாடுகளை விட்டுவிட எவரும் துணியாததால். வைதீக மயமாக்கப்பட்ட கிருஷ்ணன் மற்றும் சிவ வழிபாடுகள் முறையே வைதீக வைணவம், மற்றும் வைதீக சைவம் என்று இரண்டுமே பார்பனத் தலைமையால் பிரிந்தன.

சைவ(பக்தி இயக்க) சமண சண்டையைப் போல், வைண சைவ சண்டை பெரிதாக நடக்கவில்லை, காரணம் இரண்டுமே வேத சார்ப்புடையது என்பதால் தான். மற்றபடி இரண்டிற்கும் ஏற்பட்ட சிறு பூசல்கள் அரச ஆதரவு பெறுவது யார் என்பதில் ஏற்பட்ட பிணக்குகளே. வைணவ பெற்றோர்களுக்கு பிறந்த இராமனுஜர் முறைப்படி வேத கல்வி பெற அத்வைத குரு யாதவ பிரகாசரிடம் சென்றார், அவர் கொடுத்த விளக்கங்களில் இராமனுஜர் மனநிறைவு அடையவில்லை.

'தஸ்ய யாதகப்யாஸம் புண்டரீக மேவமக்ஷிணி' இந்த வேத மந்திரத்திற்கு அத்வைத குரு கொடுத்த விளக்கம் 'பிரம்மனின் கண்கள் குரங்கின் பின்புறம் போல் சிவந்து இருந்தது' இதைக் கேட்ட இராமனுஜர் அதிர்ச்சியுற்றார், ஏனெனில் இராமனுஜருக்கு அத்வைதம் தெரியாமல் இருக்கலாம் ஆனால் வடமொழி புலமை பெற்றவர், புண்டரீகம் என்பதற்கு தாமரை என்ற பொருளும் உண்டு, குருவின் விளக்கத்திற்கு மாற்றாக 'பிரம்மனின் கண்கள் (செந்)தாமரை போன்று சிவந்திருந்தது' என்று சொல்கிறது என்றார். குரு அதிர்ச்சியுற்றாலும், இராமனுஜர் தன்னை மறுக்கிறார் என்று நினைத்து சினம் அடைந்தார் என்றும், மேலும் குரு சொல்லிக் கொடுக்கும் 'நான் கடவுள்' என்று சொல்லும் அத்வைத சித்தாந்தை பலமாக மறுத்து வந்தவர் என்பதாலும் அத்வைததிற்கு ஆபத்து என்று அலறிய யாதவ பிரகாசர், இராமனுஜரை தீர்த்துக்கட்ட முயன்றார், இராமனுஜரை கங்கைக்கு பயணப்பட வைத்து அங்கு மற்ற மாணக்கரில் ஒருவர் மூலமாக கங்கை ஆற்றில் இராமனுஜரை தள்ளிக் கொல்லும் திட்டம், இராமனுஜர் உறவினர் ஒருவர் உதவியால் தப்பித்து வந்துவிடுவார், அன்றிலிருந்து குருவும், இவரும் பிரிந்துவிடுவார்கள். இது தான் இராமனுஜரை கொலை செய்ய முயற்சிக்கும் முதல் நிகழ்வு, அதன் பிறகு சோழன், அதன் பிறகு திருவரங்கத்தில் ஆதிக்கம் செலுத்திய மற்ற பார்பனர்கள், இராமனுஜர் பிச்சை ஏற்கும் போது பிச்சையிடும் ஒருவரின் உணவில் விசம் வைத்துக் கொள்ள முயன்றதாகவும் அதிலும் இராமனுஜர் பிச்சையிட்டவரின் அப்போதைய முகபாவம் வைத்து தெரிந்து கொண்டு தப்பினார் என்கிறது இராமனுஜர் பற்றிய (இந்திரா பார்த்தசாரதியின் இராமனுஜர்பற்றி நூல்)

இராமனுஜரின் விஷ்டாத்வைததில் இருந்து பிரித்ததே மத்வரின் த்வைதம், இராமனுஜர் போற்றிய அனைத்து சாதிகளையும் அடக்கிய வைணவம் 18 ஆம் நூற்றாண்டில் தான் யார் காஞ்சியா ?, திருவரங்கமா ? யார் ஆளுமை செலுத்துவது என்கிற போட்டியில் மனவாள மாமுனிகள் (தென்கலை, லட்சுமி வணக்கம், சாதிவேறுபாடு கூடாது என்பவர்) மற்றும் வேதாந்த தேசிகர் (வடகலை பார்பனர் தலைமையே சிறப்பு என்பவர்)ஆகியோர்களை பின்பற்றிவோர் களுக்கிடையேயான போட்டியாக வடகலை (வட மொழி வேதம் போற்றுபவர்கள்), தென்கலையாக (நாலாயிரம் திவ்ய பிரபந்தம் போற்றுபவர்கள்) பிரிந்தது என்கிறது இராமனுஜர் பற்றிய தொடர்புடைய தகவல்கள்.

மற்றபடி சைவ சித்தர்கள் 18, நாயன்மார்கள் கதைகளுக்கும், வைணவ 12 ஆழ்வார்கள் கதைகளுக்கும் பூச்சுற்றல் அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை, சமயம் வாய்க்கும் போது ஆழ்வார்கள் பற்றி எழுதுகிறேன்.

இன்றைக்கு பலரை போலி சாமியார்கள் என்கிறோம், காரணம் தோற்றம் ஒன்றாகவும் செயல் வேறொன்றாகவும் இருக்கும், பொதுவாக வைதீக சமயங்களில் சமயத்தலைவர்கள் முற்றிலும் மழித்துக் கொள்வது வழக்கத்தில் இருந்தது இல்லை. சிறிய உச்சிக் குடுமி உண்டு. பழைய புராணங்களில் இருக்கும் அனைத்து ரிஷிகளும், குருமார்களும் சடைமுடி வைத்திருப்பதாகத்தான் காட்டினார்கள். இராமனுஜரும் சரி, ஆதிசங்கரரும் சரி அப்போது முழுதாக மொட்டை அடித்துக் கொள்ளும் சமண, பெளத்தர்களைப் போல் தாங்களும் முழுதாக மழித்துக் கொண்டார்கள், இவர்கள் பரப்பியது இவர்களது வேதமே என்றாலும் கூட அவர்களின் கோலங்கள் பெளத்தசாமியார்களைப் போன்றே இருந்தது, இதில் ஆதிசங்கரர் பெளத்தர்களின் மாயவாதத்தை புதிய ஞானமாக திரித்து அதை அத்வைதம் என்றார். அத்வைதம் முழுமுதற்கடவுள் என்று எதையும் காட்டவில்லை என்பதால் அத்வைதத்தை 'பிரசன்ன பவுத்தம்' அதாவது போலி பவுத்தவாதம் என்று பழித்தவர்களில் இராமனுஜரும் ஒருவர்.

துறவிகள் போலி வேசம் போடுவது புதியதும் அல்ல, இந்தியாவுக்கு பிரச்சாரத்திற்கு வந்த கிறிஸ்துவ பாதிரியார்கள் இந்துசாமியர்களைப் போல் தான் உடை அணிந்திருந்தார்கள். மக்கள் எதை சிறப்பாக கருதுகிறாகளோ அந்த வேடத்தைத்தான் துறவிகள் போட்டுக் கொள்கிறார்கள். நாளடைவில் அது அவர்களது அடையாளமாகவே போய்விடுகிறது. எனக்கு இராமனுஜர் உருவத்தைப் பார்க்கும் போது நாமம், கொடிகளை எடுத்துவிட்டுப்பார்த்தால் நீண்ட காது மற்றும் மொட்டையுடன் சமண மற்றும் பவுத்த துறவி போன்றே தெரிகிறார். பெளத்த, சமண புலால் மறுத்தலை உயர்வாக இராமனுஜர் மற்றும் சங்கரர் பின்பற்றி வரித்துக் கொள்ள பிறகே தென்னிந்திய பார்பனர்கள் சைவ உணவுக்கு மாறினார்கள்.

28 ஜனவரி, 2010

கலவை 28/ஜன/2010 !

தேசிய விருது : இசை ஞானி இளையராஜாவுக்கு பத்ம பூசன் விருது கிடைத்திருக்கிறது. அடப்பாவிகளா, இன்னுமா கொடுக்காமல் வைத்திருந்திங்கன்னு கேட்கத் தோன்றுகிறது. இசை புயல் ரகுமான் எவ்வளவோ எட்டாத உயரத்திற்குச் சென்றிருந்தாலும் இளையராஜா - ரகுமான் ஒப்பீடுகள் இன்னும் தொடருகிறது, இளையராஜாவுக்கும் ரகுமானுக்கும் ஒரே நேரத்தில் விருதா ? இளையராஜா ரசிகர்களுக்கு முகம் சுளிப்பாக இருக்கும். ரகுமானை வெளிநாட்டினர் பாராட்டிய பிறகே இந்தியா பாராட்டுது என்று நினைங்கப்பா, ரகுமானுக்காவது சரியான நேரம் கடப்பதற்குள் கொடுத்துவிட்டார்களே என்று நினைக்கலாம். இளையராஜா இசை ராஜா என்பதால் அவரது அந்த கலைத் திறமைக்கு என்றும் போற்றப்படுபவர் என்பதில் மாற்று கருத்து இல்லை. மற்றபடி அவரது தனிமனித செயல்களை முட்டுக் கொடுப்பவர்கள் வெறும் துதிப்பாடிகள் என்றே நான் சொல்லுவேன். தேசிய விருதுகளில் தமிழர்கள் புறக்கணிக்கப்படுவது புதிதல்ல நடிகர் திலகத்திற்கே அந்த அவமானங்கள் நடந்திருக்கின்றன. வழக்கமாக மலையாளப்படங்கள் நிறைய விருது பெருவதற்கு காரணம் தேசிய விருது குழுவில் கனிசமான மலையாளிகள் அமர்ந்திருப்பதும் காரணமாக சொல்லும் குற்றச் சாட்டு உண்மை இல்லாமல் இல்லை, சென்ற ஆண்டு எத்தனையோ பசங்க, நாடோடிகள் போன்ற ஓரளவு சிறப்பான படங்கள் வந்திருந்தாலும் கவுதம் 'மேனனின்' வாரணம் ஆயிரம் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதை சந்தேகக் கண் கொண்டு பார்க்கக் கூடாது என்று சொல்வதற்கு இல்லை. எவனும் குழுவாக சேர்ந்தாலும் அரசியல் பண்ணிடுவானுங்க, இதுல மலையாளிகள் மட்டும் விதிவிலக்கா என்ன ?

அம்மா அரசியல் : அம்மா டெல்லிக்கு போய் வந்ததும் லேசான பரபரப்பு கிளம்பியது, சோனியாவை சந்தித்தார் என்று சொன்னார்கள், ஐந்து நிமிடத்திற்கும் குறைவாக ஒரு அறையில் சந்திக்க நேர்ந்ததாம், ஒருவருக்கொருவர் ஹலோ சொல்லிக் கொண்டதுடன் சரியாம். 'பதி பக்தி இல்லாதவர்' என்ற ஜெவின் தூற்றலை சோனிய மறந்திருப்பாரா என்ன ? அவர் தான் இராஜிவுக்காக இலங்கை அரசியலையே மாற்றியவர் ஆயிற்றே. இருந்தும் சோ இராம சாமி போன்றோருக்கு ஜெ வரவேண்டும் என்கிற ஆசை இருக்கிறது. அதற்குக் காரணம் நல்ல அரசியல் சூழல் தமிழகத்தில் வரவேண்டும் என்பதா ? வழக்கமான கருணாநிதி வெறுப்புதான். பெரியவா சின்னவாவை உள்ளே தள்ளியது உட்பட ஆயிரம் தான் பிணக்கு இருந்தாலும் அம்மாவின் ஆட்சி அவர்களது ஆட்சி என்று நினைக்கிறார்கள் போலும். எதிர்காலத்திலும் கூட சோனியா - ஜெ கூட்டணி ஏற்படுவது கடினமே. இருவருமே மக்களுக்காக அரசியல் நடத்துவதைவிட சுய நலத்திற்க்காக......வெற என்னத்த சொல்வது எதையாவது இட்டு நிறப்பிக் கொள்ளுங்க.

தேசிய மொழி : இந்தி தேசிய மொழி இல்லை, பெருவாரியான மக்கள் பேசப்படும் ஒரு மொழி மட்டுமே என்று குஜராத் நீதிமன்றம் கருத்து தெரிவித்து இருந்ததாம். இப்போது தான் மொழி பற்றிய புரிந்துணர்வுகள் பல்வேறு மாநிலங்களில் வரத் தொடங்கி இருக்கிறது. உலக மொழிகள் முற்றிலும் அழியும் முன் முழுதாக விழித்துக் கொண்டால் சரி. ஆங்கிலத்தினால் உலக மொழிகளில் சிதைவும், இந்தியால் இந்திய மொழிகள் அழியும் என்பதில் உண்மை இல்லாமல் இல்லை. இப்பவே ஒரு வீட்டில் நன்கு ஆங்கிலம் தெரிந்த கணவன், மனைவி, குழந்தைகள் யாரும் தாய் மொழியைப் பேசுவதில்லை. இந்தி நுழையும் மாநிலங்களிலும் இதே நிலைமை தான். மொழிப் பற்றால் பலர் தாய் மொழியில் பேசுகிறார்கள், நாளடைவில் அல்லது நாளைய தலைமுறையில் அதுவும் குறையும். இந்தியாவின் பொது மொழியாக ஆங்கிலம் இந்தி எது இருந்தாலும் ஒன்று தான் என்றாலும் ஆங்கிலம் உலக அளாவிய தொடர்பையும் அறிவையும் தரவல்லது. இந்திக்கு கொடி பிடிப்பவர்கள் சிந்திக்க வேண்டும்.

தர்மபுரி இளைஞரின் தர்மம் : தர்மபுரி இளைஞர் ஒருவர் குடியரசு நன்னாளில் அரசு மருத்துவமனை சென்று அங்குள்ள நோயாளிகளுக்கு இலவசமாக முக மழிப்பு செய்தாராம். பணக்காரன் தான தர்மம் என்று கோவில் உண்டியலில் காசு போட்டு புண்ணியம் கிடைக்காதா என்று நினைக்கிறான். ஒன்றும் இல்லாத இவரைப் போன்ற ஏழைகளோ மனம் இருந்தால் எப்படியேனும் தர்மம், தானம் செய்ய முடியும் என்பதைக் காட்டுகிறார்கள். மக்கள் சேவையே மகேசன் சேவை என்பார்கள். அவர் பெயர் கனேசன், அந்த இளைஞரை வணங்குகிறேன் வாழ்த்துகிறேன். அந்த தகவலும் படமும் : நன்றி தினமலர்


மத நல்லிணக்கம் : மேதகு முன்னாள் குடியரசு தலைவர் திரு அப்துல் கலாம் அவர்களின் படம் ஒன்றை இணையப்பக்கம் ஒன்றில் பார்த்தேன். என்ன ஒரு தெய்வீகக் களை. இஸ்லாமியர் நெற்றியில் இந்து அடையாளம். பார்த்ததும் தமிழ் மணம் குழுவில் ஒருவரும் பதிவருமான தமிழ் சசி எழுதிய கட்டுரை நினைவுக்கு வந்ததை தவிர்க்க முடியவில்லை.

*****

"நீங்க ஏன் ஆ.ஒ படத்துக்கு ஆ.இரண்டாவது விமர்சனம் எழுதவில்லை, படம் அவ்வளவு மோசமா ?"

"வேற ஒண்ணும் இல்லை, இன்னும் படமே பார்கலைப்பா :) "

26 ஜனவரி, 2010

நான் வித்யா - 'நான்' !

வலைப் பதிவில் படிப்பதற்கும் எழுதுவதற்கும் தொடங்கிய பிறகு சமூகம் குறித்த பொதுப் புத்தி சிந்தனைகள் எனக்கு வெகுவாக மாறி இருக்கின்றன என்பதைச் சொல்வதில் எனக்கு தயக்கம் இல்லை. அதற்கும் முன்பு இதே போன்ற புரிதலில் இல்லை என்பது என் ஒப்புதல் வாக்குமூலம் தான், அரசியல், மதம், சமூகம் ஆகிய மக்கள் அமைப்புகளில் தனிமனித மனம் முடிந்த அளவுக்கு சார்பு நிலையில் இயங்குவது தவறு என்கிற புரிதல் வலைப்பதிவு வாசிப்புகளால் ஏற்பட்டது, அதன் தாக்கமே எனது எழுத்துகளில் பல்வேறு வாசிப்பு துய்ப்பு தாக்கங்களினால் ஏற்பட்டு இருக்கிறது.

என்னுடைய அடையாளமான பால், தாய் மொழி, சமயம், சாதி, இவற்றில் பால் அடையாளம் நம்மைக் கேட்டு அமைவது இல்லை, தாய் மொழியும் தன்னால் அமைவது தான், ஆனால் சமயம், சாதி ஆகியவை தேவை என்றால் மாற்றிக் கொள்ள, துறக்க முடியும் என்பதால் சமயம் சாதி ஆகியவற்றில் எனக்கு பெரிதாக பற்றுதல் இல்லை. பால், தாய் மொழி ஆகியவை எனக்கு கிடைத்தது என்பதாக நான் நினைக்க முடியும் என்பதால் அதன் மேல் பற்றுதல் என்பதைத் தவிர்த்து இரண்டையும் தன்மை(சுயம்) சார்ந்த ஒரு இயற்கை அடையாளமாக கொள்கிறேன்.

திருநங்கைகள் எனப்படும் இருபால் தன்மை கொண்டோர்கள் பற்றி முன்பே அவர்கள் நடவெடிக்கைகளை அறிந்திருந்தாலும் அவர்களைப் பற்றிய புரிதல் குறைவாகவே இருந்தது. லிவிங் ஸ்மைல் வித்யா வலைப்பக்கம் துவங்கி தன்னைப் பற்றியும், திருநங்கைகள் குறித்தும் எழுதியவற்றைப் பற்றி படித்த பிறகே திருநங்கைகள் குறித்த பரவலான புரிதல் எனக்கும் பல்வேறு வாசிப்பாளர்களுக்கும் ஏற்பட்டு இருக்கும் என்றே நினைக்கிறேன்.

உடல் மேல் உயிர் வந்து ஒன்றுவது இயல்பே என்பது உயிர்மெய் குறித்த தொல்காப்பியமோ நன்னூலோ எதோ ஒன்றில் இருக்கும் இலக்கணக் குறிப்பு. சொல்லின் இறுதியின் மெய் எழுத்தும் அடுத்த சொல்லின் உயிரெழுத்து துவக்கமும் ஒன்றிணைந்துவிடும், ( தமிழ் + ஆதவன் > தமிழாதவன் என்பது போல்). இந்த இயல்பான இலக்கணக் குறிப்பும் கூட பிழையாகிப் போன பிறவிகளாக அமைந்திருப்பவர்கள் தாம் திருநங்கைகள். ஆண் உடலில் பெண் உயிர்(மனது) அமைந்துவிடுவதால் அவர்களின் உடலும் உயிரும் ஒன்று படமால் போய்விடுகிறது. தாம் ஆண் உடலில் இருக்கும் பெண் என்கிற எண்ணம் ஏற்பட்டு அவர்கள் தங்கள் நடவெடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் போது அவர்களுடைய பெற்றோர்களுக்கு ஏற்கனவே இருக்கும் திருநங்கைகள் குறித்த பொதுப் புத்திப் புரிதலால் இல்லதினரால் பல்வேறு வகையில் துன்புறுத்தப்பட்டு, வீட்டை விட்டு ஓடினால் தான் தொடந்து வாழமுடியும் என்கிற நிலைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இவர்கள் மீதான இயற்கைச் சிக்கலை புரிந்து கொள்ளாத சமூகமும் அதை அவர்களின் தனிமனித செயலாக நினைத்து அவர்களை முரண்பட்டவர்களாக சித்தரித்து புறக்கணிப்பதும், அவர்களை இழிவு படுத்துவதுமாகவும் அவர்களை ஒரு தனிக் குழுவாக சேர்ந்துவிடச் செய்யும் கட்டாயத்திற்கு தள்ளிவிட்டது. இல்லை என்றால் இந்தியாவிலும் திருநங்கைகள் பிற ஐரோப்பிய நாடுகளைப் போல் அனைத்து சமூகத்திலும் ஒன்றிணைந்தவர்களாகவே தொடர்ந்திருப்பர். மதரீதியில் இந்து மதத்தில் அரவாணிகள் சமூகத்தில் ஒன்றாக இருந்தவர்களாக இதிகாசங்களில் காட்டப்பட்டுள்ளது, பிற மதங்களில் அவர்களை மத ரீதியாக எந்த விதத்திலும் அங்கீகரிக்கவில்லை. அவர்களுக்கான பிற நாடுகளின் அங்கீகாரம் என்பது சமூக ரீதியானது. மதரீதியானது அல்ல. மத ரீதியான அங்கீகாரம் கொடுக்கும் இந்திய சமயங்களோ அவர்களை சமூக ரீதியாக அங்கீகரிக்கவில்லை. ஆனால் மத ரீதியான அங்கீகரங்களை விட சமூக ரீதியான அங்கீகாரங்களே அவர்களுக்கு வாழ்வியலில் பயன்படும் என்பது மறுக்க முடியாத உண்மை. மதத்தையும் சமூக வாழ்வியலையும் பிரித்து பார்க்கும் பக்குவம் இன்னும் இந்தியர்களுக்கு வரவில்லை என்பதையே இது காட்டுகிறது.

சகோதரி லிவிங் ஸ்மைல் வித்யாவை சென்னையில் ஒரு பதிவர் சந்திப்பின் போது நேரடியாக பார்த்து பேசி இருக்கிறேன். நமக்கு தெரிந்து தன்வரலாறு எனப்படும் ஆட்டோபயகரபிகளை படித்து இருக்கிறோம். நமக்கு தெரிந்தவர் தம்மைப் பற்றிய வரலாறுகளை எழுதும் போது அதை நாம் படிக்கும் துய்ப்புகள் பிறர் எழுதும் தன்வரலாறுகளைப் படிக்கும் போது ஏற்படுவதில்லை என்பது லிவிங் ஸ்மைல் வித்யாவின் நூலின் உள்ளடக்கம் தாண்டி ஏற்பட்ட உணர்வு. அதில் இடம் பெறும் ஒவ்வொரு வரியும் அவர் எதிரே அமர்ந்து நமக்கு சொல்லிக் கொண்டு வருவது போன்ற உணர்வு படிக்கும் போது ஏற்பட்டது.

வித்யா 30 வயதிற்கும் குறைந்தவர் என்றே நினைக்கிறேன். இந்த வயதிற்குள் தன்வரலாறு எழுதுபவர்கள் பெரும்பாலும் வேதனையைத்தான் எழுத முடியும் என்பதாக விளங்கிக் கொண்டேன். ஏனெனில் சாதனையாளர்கள் அல்லது அவர்களைப் பற்றி இறுதியில் தான் வரலாறு எழுதுவார்கள். வாழ்வின் தொடங்கள் வேதனையாகவே தொடங்குவதும் கூட வரலாறுகளாக, இலக்கியமாக மாறிப் போகிறது என்பது வித்யாவின் நூலில் இருந்து நமக்கு தெரியும் மற்றொரு பாடம்.

நூலைப்பற்றி, நூலில் அவர் சொல்லி இருக்கும் பல்வேறு அவமானங்கள் திருநங்கைகள் அனைவருக்கும் பொது என்றாலும், நன்கு படித்த ஒருவர் (மொழியியல் முதுநிலை) கற்றறிந்த மனநிலையில் அத்தகைய அவமானங்களை சந்திப்பது மனரீதியில் பன்மடங்காகவே இருக்கும், இத்தகைய அவமானங்கள் அம்பேத்கார் போன்ற மேதைகளுக்கு சாதி ரீதியில் ஏற்பட்டது என்பதை நினைவு கூரலாம். அவர் எல்லா அவமானங்களையும் எதற்காக தாங்கிக் கொண்டார் என்றால் தன்னை முழுப் பெண்ணாக வடிவமைத்துக் கொள்வதற்கு தாம் சென்ற வழி அத்தகையதாக இருந்ததை அவர் உணர்ந்திருந்தார் என்பதால் தாங்கிக் கொள்ள நேரிட்டதாம். திருநங்கைகள் குறித்த சமூக புரிதல்களை நன்கு விளங்கியவர் என்பதால் அவருடைய கோபங்கள் தனிமனிதர்கள் மீது எதிரொலிக்காமல் பார்த்துக் கொள்கிறார். நிர்வாணம் எனப்படும் ஆணுறுப்பு அறுப்பு சடங்கு தன்னை மறுபிறவி எடுக்க வைத்து தன்னை உணரவைத்தாக சொல்கிறார். மற்றபடி அவருக்கு உதவிய பல்வேறு தரப்பினரையில் காட்சி மாந்தர்களாக நூல் முழுவதும் வருகிறார்கள்.

எனக்கு நூலைப் படித்ததும் ஒரே ஒரு கேள்வி இன்னும் ஓடிக் கொண்டு இருக்கிறது, தன்னை நன்கு அறிந்த படித்தவர்கள் பலர் நண்பர்களாக பெற்ற அவர் அவர்களிடம் எநத உதவியும் கேட்காமல் புனே சென்று பிச்சை எடுத்து 'நிர்வாணத்திற்காக' அனைத்து அவமானங்களையும் சந்தித்து, அவர் மிகவும் அவசரப்பட்டுவிட்டாரோ என்று நினைக்கவே வைக்கிறது. ஏனெனில் நிர்வானத்துக்கு அவருக்கு பிச்சை வழி கிடைத்து தாம் அறுவை சிகிச்சை உட்பட செய்த செலவுகளாக சுமார் 20,000 ரூபாய். இதை ஈட்டுவதற்கு பொருமையோ, நண்பர்கள் உதவியோ நாடாமல் மிகவும் அவசரப்பட்டது ஏன் என்றும் புரியவில்லை. எப்போதாவது விளக்குவார் என்று நினைக்கிறேன்.

*****

நான் யார் ? எந்த கேள்வியிலேயே அட்டைப் படத்தில் துவங்கும் வித்யாவின் நூல் அவரின் மூன்றாண்டுக்கு முந்தையவரை நடப்புகள் அனைத்தையும் சுறுக்கமாக முடித்திருக்கிறார்.

'இந்த நான் யார் ?' கேள்வியைத்தான் ஆன்மிகவாதிகளும் கேட்டுவருகிறார்கள். 'நான்' உடலல்ல..........'நான்' உடலல்ல............'நான்' உயிர்....உடலை இயக்கும்....'நான்' ஆன்மா...இந்த உடல் கருவியே அன்றி இதில் பெருமை பட சிறுமை பட ஒன்றும் இல்லை....இந்த புரிதலை ஏற்படுத்திக் கொள்ளும் போது ஆண் / பெண் உடல் பேதங்களும், அதன் மீதான உளவியல்/உணர்வு ரீதியில் ஏற்படும் வெறுப்புகளும், ஈர்ப்புகளும், உறுப்பு அறுப்புகளும் கூட தேவையற்றதாகிவிடும் என்பது எனது தாழ்மையான கருத்து. பால் சார்ந்த பிறப்பு உறுப்புகளைத் தவிர்த்து உடல் சார்ந்த மன உணர்வுகள், வேறுபாடுகள் சமூக கட்டமைப்பின், சமூகக் கூறுகளின் தாக்கம் என்பது என் எண்னம்.

உடல் ரீதியான சமூக கட்டுமானங்களும் எண்ணங்களுமே ஒரு திருநங்கையை தனக்கு பெண் உடல் இருப்பதே சிறப்பு, இயற்கையானது என்பதாக நினைக்க வைத்து பிறப்பு உறுப்புகளை நீக்கிக் கொள்ள வேண்டும் என்று தூண்டுதலுக்கு இட்டுச் சென்று தற்கொலைக்கு ஒப்பான 'நிர்வாண' அறுவை சிகிச்சை வரை இட்டுச் சென்றுவிடுகிறது.

நாயகி பாவம் என்று பக்தி இலக்கியத்தில் ஒரு ஆண் தன்னை பெண்ணாக நினைத்துக் கொண்டு கடவுளின் மனைவி என்பதாக உருவகித்துப் பாடுவதை பெருமை பொங்க பக்தி கூட்டங்களில் மெய்சிலிர்த்து பேசுகிறோம். திருநங்கைகளை என்றும் நாயகி பாவம் கொண்டவர்களாக அங்கீகரித்துவிட்டால் இவர்கள் ஏன் கொடுமையான அறுவை சிகிச்சைகளை செய்துக் கொள்ளப் போகிறார்கள் ? திருநங்கைகள் பிறப்பு உறுப்புகளை நீக்கிக் கொள்வது தற்காலிக தீர்வு தான், திருநங்கைகள் ஒவ்வொருவருக்கும் அதைச் செய்வது நிரந்தர தீர்வு ஆகாது. நிரந்தரத் தீர்வு என்பது மன ரீதியிலான சமூக மாற்றம் அதை அவர்களும், அனைத்து சமூகங்களும் ஏற்படுத்திக் கொண்டால் அறுவை சிகிச்சைகள் தேவையற்றது ஆகிவிடும். 'நான்' என்பது உடலல்ல......மனம். அதற்கு பால் பேதம் இல்லை, உடல் கூறுகள் பொருட்டு அல்ல.

நான் இங்கு கடைசியாக எழுதியவை அபத்தமாக தெரிந்தாலும் ஆண்/பெண் 'உடல்' குறித்த குழப்பங்களுக்கு ஆன்மிக ரீதியான நல்லதொரு சமுக புரிதல் தீர்வுகள் கிடைக்கவேண்டும் என்ற நப்பாசை தான்.

25 ஜனவரி, 2010

மாதவிலக்கும் மதவிலக்கங்களும் !

மதவாதிகளுக்கும் மதங்களும் பெண்கள் என்றாலே ஆகாது, அதுக்கு காரணமாகச் சொல்லப்படுபவை பருவமடைந்த பெண்ணினிடம் இருந்து மாதவிலக்கு உதிரம் எனப்படும் கெட்ட உதிரம் வெளிப்படும், அது தூய்மையற்றது அதனால் அன்னாளில் விலக்கப்பட வேண்டியவள். மாதவிலக்கு உதிரம் தூய்மையற்றது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. உடலில் இருந்து வெளியாகும் அனைத்து கழிவுகளிலுமே தூய்மையற்றது தான் அல்லது தூய்மையற்றதாக மாறி இருக்கும், அந்த நிலையில் அவை உடலில் தங்ககுவது உடலுக்கு கேடுவிளைவிப்பது எனவே தான் உடல் கழிவுகள் பல்வேறு உந்துததல்கள் மூலம் வெளியாகிறது, இது வியர்வை, சீழ், சிறுநீர் மலம் பொருந்தும். பருவமடைந்த பெண்ணின் மாதவிலக்கு இரத்தமும் கழிவு பொருள் தான், அதனை கட்டுப்படுத்த முடியாது, மூன்று - ஐந்து நாள் வரை கசியும் தன்மை கொண்டது. பழங்காலத்தில் அடிக்கடி தூய்மை படுத்திக் கொள்ள முடியாத காலங்களில் தவிர்பதற்காக அல்லது ஓய்வு கொடுக்க பெண்ணை அந்த நாள்களில் தள்ளி வைத்திருந்தது என்பது தவிர்க்க முடியாத செயலாக இருந்திருக்க ஞாயங்கள் உண்டு என்று ஒப்புக் கொண்டாலும். இன்றைக்கு பெண்கள் வெளியே வேலைக்குச் செல்வது தவிர்க்க முடியாத சூழலில், பல்வேறு அணிய(ஆயத்த) பஞ்சுறைகள் (நாப்கின்) கிடைக்கும் சூழலில் தூய்மைக் கேடு பேசுவது பழமைவாத சிந்தனையே ஆகும்.

கிறித்துவம் தவிர்த்து ஏனைய மதங்களில் பெண்களின் மாதவிலக்கு பல்வேறு காலங்களாக விவாதப் பொருளாகவே இருந்து வந்திருக்கிறது. காஞ்சி 'புகழ்' பெரியவர் எங்கோ ஒரு கல்லூரிக்கு விஜயம் செய்தாரம், முன்கூட்டியே அதில் கலந்து கொள்ளும் மாணவிகளுக்கு யார் யாருக்கு மாதவிலக்கு இருக்கிறதோ அவர்கள் கலந்து கொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டதாம். இத்தனைக்கும் பெண்கள் பற்றிய பெரியவரின் மன நிலைகளை ஆன்மிக உலகம் நன்றே அறிந்து இருக்கிறது (நான் ஏதும் தவறாக சொல்லிவிட்டேனா ?)

பெண்களுக்கு வழிபாட்டு உரிமைகள் கிடைத்தது கூட வரலாற்றுக் காலங்களுக்கு பிறகே, காரைக்கால் அம்மையார் போன்ற ஒரு சிலரே விதிவிலக்கு, அதற்கும் கூட அவர் தன் கணவனால் விலக்கப்பட்டார். காரைக்கால் அம்மையார் வாழ்வும் கதையா இல்லையா என்னும் ஆராய்ச்சிக்கு நான் செல்லவில்லை. 63 நாயன்மார்களில் பெண்கள் ஐவர் அதில் அம்மையாரும் ஒருவராகத்தான் திருத்தொண்டர் மற்றும் சேக்கிழாரின் திருவிளையாடல் புராணங்களில் எழுதப்பட்டுள்ளது. உலகில் உள்ள சமயங்களையும் மதங்களின் தோற்றங்களைப் பார்த்தால் அதன் தோற்றத்திற்குக்கு காரணமாக ஒரு பெண்ணும் வரலாற்றில் எழுதப்படவில்லை, அல்லது அவர்களுக்கு மதம் தோற்றுவிக்கும் தகுதி இருப்பதாக மனித சமூகம் கருதவில்லை. மேரி ஏசுவின் தாய் என்பதால் அவருக்கும் ஆலயங்கள் எழுப்பட்டது என்பது மட்டுமே ஆப்ரகாமிய மதங்களில் பெண்களின் மீது கொஞ்சம் மரியாதை இருந்திருக்கிறது என்பதற்கான சான்று. இந்திய மதங்களிலும் பெண் தெய்வ வழிபாடு மற்றும் வணக்கங்கள் சமணர்களைப் பின்பெற்றி எழுந்தவையே (மயிலை வேங்கடசாமி போன்றோர் இது பற்றிய குறிப்புகள் எழுதியுள்ளனர்), காஞ்சி காமாட்சி கோவில் கூட முன்பு புத்தமதத்தில் வணங்கப்படும் தாரா தேவியின் கோவில் என்பதாக சமய ஆய்வாளர்கள் எழுதியுள்ளனர். வேதங்களில் பெண் தேவர்கள் பெயர்கள் ஒரு சில இருக்கின்றன, ஆனால் இந்திரனுக்கு கூறும் புகழ்ச்சியைப் போல் அவற்றிற்கு பெரிதாக மதிப்பு எதுவும் கொடுக்காமல் வெறும் குறிப்பு அளவில் சில பெயர்கள் உண்டு. அந்த பெயர்களை வேதம் படித்தவர்களில் எத்தனை பேர் தெரிந்து வைத்திருக்கிறார்கள் என்பதும் ஐயமே. தற்பொழுது இருக்கும் இந்திய பெண் தெய்வங்களின் காலம் சுமார் 3000 ஆண்டுகளுக்கு பிற்பட்டவை தாம்.

பெண்களின் சமூக பங்களிப்புகளும், தேவைகளும் ஏற்படும் போது பெண்ணுக்கான உரிமைகள் வழங்கப்பட்டுவருகிறது, அவர்களின் பங்கு தேவை இல்லை என்னும் போது தந்திரமாகவும் தடுக்கப்படுகிறது. மற்றபடி பெண்களுக்கான சுதந்திரமோ உரிமையையோ எந்த ஒரு சமூகமும் மனம் உவந்து கொடுத்துவிடவில்லை. நாம் இப்போது பார்க்கும் பெண் உரிமைகள், பெண் விடுதலைகள் என்பது ஒரே நாளில் அனைவரும் மனம் மாறி தந்துவிடவில்லை. ஒரு பெண்ணை ஒரு சமூகம் சுதந்திர மாக நடமாடவிடுகிறது என்றால் அவளின் ஊதியம் அந்த சமூகத்து தனி மனித (அவளைச் சார்ந்த) இல்லங்களுக்கு தேவை என்கிற நிலையில் ஒரு பெண்ணுக்கான சுதந்திரம் கிடைத்திருக்கிறது என்று சொல்வது தான் நாம் காணும் பெண் விடுதலைகளின் விளக்கமாக இருக்கமுடியும். இது சூழலால் ஏற்படும் ஒரு சமூக மாற்றம் மட்டுமே. சரி எடுத்துக் கொண்ட தலைப்புக்கு வருவோம்.

பெண்கள் மாதவிலக்கின் போது கோவிலுக்குப் போகலாமா ? பூசை அறைக்குள் நுழையலாமா ? புனித நூல்களைத் தொடலாமா ?

என்ன கொடுமை இது, மாதவிலக்கின் போது பஞ்சுறைகள் பயன்படுத்தும் இந்த காலத்திலும் இந்த கேள்விகள் தேவையா ?

மனக்கோவிலுக்குள் இருக்கும் இறைவன் ஒரு பெண் மாதவிலக்கானால் உடனேயே வெளி ஏறிவிடுவானா ? மனக் கோவில் கட்டி வழிபாடு நடத்திய பூசலார் பெண்ணாக இருந்திருந்தால் ஒவ்வொரு மாதவிலக்கின் போது அவர் புதிய கோவில் கட்ட வேண்டி இருந்திருக்கும் :)

அவள் மனனம் செய்திருந்த மந்திரங்கள், இறைவசஙனங்கள் அன்று மட்டும் மனதில் இருந்து மறைந்துவிடுமா ? புனித நூல்கள் என்பவை காகிதத்தாலும் மையாலும் ஆனவை மட்டுமே, அதில் எழுதி இருப்பற்றை கல்வி, மொழி அறிவு உள்ளவர்களால் படிக்க முடியும், மற்றபடி மனதில் ஏற்கனவே முழுதாக மனனம் செய்துவிட்ட வசனங்களைவிட அதே வசனங்கள் அந்த நூலிலும் இடம் பெற்றிந்தால் மனதை விட அந்த நூல் புனிதத் தன்மை வாய்தவை என்று சொல்லிவிட முடியுமா ?

புனித நூலில் இருந்து வழிபாட்டு இடங்களில் இருந்து ஒரு மாதவிலக்கு பெண் தள்ளி நிற்க முடியும். ஆனால் மனதில் பதிந்த மந்திரங்களை, இறைவசனங்களை அவள் என்ன செய்வாள் ? நமக்கெல்லாம் மருந்து குடிக்கும் போதுதான் குரங்கு ஞாபகம் வருமே ! :)

இந்த சிக்கலுக்காகவும் மதத்தின் புனிதத் தன்மைகள் என்றும் எந்த சூழலிலும் காக்கப்பட வேண்டும் என்பதற்குத்தான் பெண்கள் மதவிவகாரங்களில் இருந்து விலக்கி வைக்கப்பட்டனர் என்று யாரேனும் விளக்கம் சொன்னாலும் சொல்லுவார்கள். :)

இராமகி ஐயாவுடன் ஒரு சந்திப்பு !

பெரியவர் தமிழ் பதிவுலகின் முன்னோடி, தமிழ் பதிவு கூறும் நல்லுலகிற்கு பல புதிய (வலைப்பக்கம், பின்னூட்டம், இடுகை என பல) கலைச் சொற்களை ஆக்கித் தந்தவர் வளவு இராமகி ஐயாவை நேற்று பதிவர்களுடன் சந்தித்தோம். நான் ஏற்கனவே அவரை சென்னையில் சந்தித்திருந்தாலும் அருகாமையில் எதெரெதிரே அமர்ந்து அளவளாவும் அறிய வாய்ப்பு நேற்று தான் கிட்டியது. குறித்த நேரத்தில் அங்மோகியோ நூலகம் அருகில் வந்துவிட்டார். மேலும் சில பதிவர்களுடன் நூலகத்தின் பின் பகுதியில் அமர்ந்தோம்.
இராமகி ஐயா மற்றும் இராம் குமார்
இராமகி ஐயா மற்றும் இராம் குமார்

பேச்சு சங்க இலக்கியம், தமிழக பண்டைய அரசர்கள், அசோகர் குறிப்புகள் என இலக்கிய காலம் பற்றிய பல்வேறு தகவல்களைப் பகிர்ந்து கொண்டார். இலக்கிய காலம் அல்லது வரலாற்றின் காலம் வரையறுத்தலில் பயன்படுத்தும் Absolute Marker எனப்படும் குறிப்பு முறைகளைப் பற்றி சொல்லத் தெரிந்து கொண்டோம். வரலாற்றின் காலம் கிறித்துவ ஆண்டின் அடிப்படையில் ரோமப் பேரரசுகளின் குறிப்புகளை ஒட்டி அவற்றுடன் தொடர்புடைய தகவல்களால் வரலாற்றின் காலம் வரையறுக்கப்படுகிறது. இதன் படி சங்க இலக்கியத்தின் காலம் கிமு 1000 வரையில் கூட இருக்கவும், சிலம்புவின் காலம் கிமு வுக்கு முற்பட்டதாக இருக்கலாம் என்பதாக தெரிவித்தார். நம் தமிழக இலக்கிய வரலாற்றை கிமுவுக்கு பிறகே சொல்லி வைத்திருக்கிறார்கள், அது தவறாக குறுக்கப்பட்டு இருக்கிறது என்பதாக குறிப்பிட்டார். தமிழர்களின் தொல் சமயம் ஆசிவகம் எனப்படும் சமண வகையைச் சார்ந்ததாக இருப்பதற்கான கூறுகளாக சங்க இலக்கியத்தில் எண்ணற்றக் குறிப்புகள் காணக் கிடக்கின்றன என்றார். ஆசிவகம், பெளத்தம், திருத்தங்கர்களைப் பின்பற்றும் ஜைன சமயம் ஆகியவை சமணம் என்பதாகக் குறிப்பிட்டார். சமணம் என்கிற சொல் தனிப்பட்ட சமயம் சார்ந்ததல்ல அது ஒரு குறியீட்டுப் பெயர் சம்மணமிட்டு உட்கார்ந்திருப்பது சம்மணர் அதுவே சமணர் என்பதாகியது அந்த வகையில் புத்தர், மகாவீரர், ஆசிவகர் ஆகியோர் சமணர் எனப்பட்டனர் என்பதாக கூறினார்.

கிட்டதட்ட 2 மணி நேரத்திற்குமான உரையாடலில் தமிழ் தொடர்புடைய பல தகவல்களை தெரிந்து கொண்டோம். பேச்சு எழுத்து சீர்த்திருத்தம் தொடர்பாகவும் சென்றது. தற்போது இருக்கும் எழுத்து அமைப்பு போதுமானதாகவே உள்ளது, எழுத்துச் சீர்திருத்தம், மாற்றம் தேவை என்பதாக நடைபெறவிருக்கும் இணைய தமிழ் சொம்மொழி மாநாட்டில் தேவையற்றது என்பதாக குறிப்பிட்டார். அச்சுத் தமிழில் இருந்த எழுத்து எண்ணிகையின் அடிப்படையில் சேர்க்கப்படும் அச்சுக் கோர்ப்புகள் குறைபாட்டிற்கு பெரியார் பரிந்துரை மாற்றாக இருந்தது ஒப்புக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான். ஆனால் பெரிய அளவு மாற்றமாக இகர, உகர மெய்யெழுத்துச் சீர்த்திருத்தம் தேவை அற்றது, இந்த சீர்த்திருத்தப் பரிந்துரையின் படி இகர வரிசையிலான 'கு முதல் னு' மற்றும் 'கூ முதல் னூ' வரையிலான தனி எழுத்துக்குப் பதில் 'க்+உ,ஊ -> கு,கூ என்பதற்கு பதில் ஜு, ஜூ க்கு இருக்கும் மேற் குறியீட்டைப் பயன்படுத்தலாம் என்பது போன்ற பரிந்துரையாம், இதன் மூலம் இகர உகர வரிசை எண்ணிக்கையிலான நெடுங்கணக்கு குறியீடுகள் வெகுவாக குறைக்கப்படும், எனவே கற்றுக் கொள்ள எழுது என்பதாக பரிந்துரைச் செய்ய இருக்கிறார்கள் இன்றும் இது தமிழுக்கு பெரும் தீங்கு ஏற்படுத்தும் என்றார். அவருடைய பதைபதைப்புக் காரணமாக,

இந்த மாற்றம் சிறிய மாற்றம் அல்ல, வீரமாமுனிவர் செய்தது 3 விழுக்காடு, பெரியார் செயத்து 2 விழுக்காடு, ஒப்பீட்டு அளவில் புதியவகை மாற்றம் எழுத்து அமைப்பில் பெரும் சிதைவை ஏற்படுத்தும், ஏற்கனவே இருக்கும் இலட்சக்கணக்கான நூற்களை புதியவகை எழுத்துக்கு மாற்றி மீள் பதிப்பு செய்யப் போகிறவர் யார் ? அப்படிச் செய்யவில்லை என்றால் அவை பயன்படாமல் அழிந்துவிடவோ, வாசிக்க முடியாத ஒன்றாகவே ஆகி இலக்கிய பயன்பாட்டில் இருந்து முற்றிலும் மறைந்துவிடும். இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பேரிழப்பு.

எழுதும் முறைகள் கற்கள், துணி, ஓலைசுவடி, தாள், கணி(னி) என்று வளர்ந்து வந்திருக்கிறது, கணி(னி)யில் தட்டச்சு செய்வதற்கும் சேமிப்பதற்கும் தற்போதைய நடைமுறை எழுத்துக்களால் எந்த ஒரு தடையும் இல்லை, மேலும் எளிதாக மாற்றினாலும் தற்போதைய கணிணி நுட்பத்தினால் பெரும் மாற்றம் ஏற்படும் அளவுக்கு அந்த மாற்றம் பயனளிக்காது என்றார். அச்சுக் கோர்க்கும் காலத்தில் தேவை என்பதற்கு இருந்த எழுத்துச் சீர்திருத்தமும், தற்போதைக்கு வலிந்து வழியுறுத்தப் போகும் எழுத்துச் சீர்த்திருத்தமும் ஒன்று அல்ல, அது தேவையற்றதுமாகும் என்றார். உண்மையில் சொல்லப் போனால் ஆங்கில பெரிய சிறிய எழுத்துக்களின் எண்ணிக்கையில் ஒப்பிடுகையில் தற்போது நாம் படுத்தும் தமிழ் தட்டச்சு எழுத்துகள் எண்ணிக்கையில் குறைவே. உயிர், மெய், உயிர்மெய் என்ற எண்ணிக்கையில் நெடுங்கணக்கு குறியீடுகள் 247 எழுத்து என்றாலும் நம் பயன்படுத்தும் தட்டச்சு எண்ணிக்கைக் குறிய எழுத்துகள் 48க்கும் குறைவே, பெரும்பாலும் உயிர்மெய் எழுத்துக்கள் உயிர் + மெய் எழுத்துகளை சேர்த்து தட்டச்சும் போது நமக்கு கிடைக்கும் படி மென் பொருள் அமைக்கப்பட்டு இருக்கிறது என்பதால் மொத்தம் 247 எழுத்துகள் தமிழில் இருப்பது உண்மை என்றாலும் அவற்றை மொத்தம் 46க்கும் குறைவான தட்டச்சு விசை பொத்தான்களினுள்ளேயே அமைப்பட்டு இருக்கிறது. தங்கிலீஸ் முறையில் அல்லாமல் தமிழ் 99 முறையில் நாம் தட்டச்சு செய்யும் போது அந்த எண்ணிக்கை இன்னும் குறைவே. எனவே 247 எழுத்துகள் தனித் தனிக் குறியீடாக நம் விசைப்பலகையில் இல்லை என்பதையும் நாம் கவனம் கொள்ள வேண்டும்.

என்னிடம்(கோவி) தமிழில் எத்தனை எழுத்துகள் என்று பிறமொழி பேசுவோரிடம், நான் 247 என்று சொல்வது இல்லை, பெரிய சிறிய என மொத்தம் ஆங்கிலத்தில் இருக்கும் 48 எழுத்துகளைவிட தமிழ் குறியீட்டுச் சொற்கள் எண்ணிக்கை குறைவு என்றே சொல்வதுண்டு.

இராமகி ஐயா சொல்வது போல் தமிழில் மேலும் எழுத்துச் சீர்திருத்தம் தேவை அற்றது என்பதுடன் அவர் சொன்னது போல், அத்தகைய பரிந்துரை நடைமுறைக்கு வந்தால் அது தமிழ் வளர்ச்சி என்னும் தொடர்ச்சியில் பெரிய பாறாங்கல்லைப் போட்டு பழந்தமிழுக்கும் தற்காலத்திற்கும் இடையே பெரிய தடையாகிவிடும் வாய்ப்பு மிகுதியாவே இருக்கிறது. எப்போதுமே வளர்ச்சி என்பதில் பழமைக்கும் புதுமைக்கும் நுட்பமான தொடர்பு இருக்கும் அந்த தொடர்பே வளர்ச்சியின் அளவீடாகவும் அமையும் அப்படியே அமையும் வளர்ச்சி மிக மிக மெதுவானதாகவும் தேவையானதாகவும் அமையும் போது அதனால் மொழிக்கு பயனுண்டு ஆனால் புகுத்தப்படும் பெரும் வளர்ச்சிகளினால் மொழி முற்றிலும் சிதையும் பேருங்கேடு உள்ளது. இதன் காட்டிற்காக பல்வேறு மொழிகளில் புகுத்தப்பட்ட நடைமுறைகளையும் அவை சிதைந்து போனதையும் குறிப்பிட்டார்.

இராமகி ஐயாவின் வேண்டுகோள், பல்வேறு துறைகளில் இருப்பவர்கள் என்ன எழுதினாலும் கூடவே அவ்வப்போது துறை சார்ந்த ஆக்கங்களை ஒன்றிரண்டாவது எழுதினால் நன்றாக இருக்கும், துறைச் சார்ந்த இடுகைகள் மிகவும் குறைவாக இருக்கின்றன என்றும் குறிப்பிட்டார்.

நேற்றைய மாலை மாலை 6.30 வரை நடந்த சந்திப்பு சிறப்பானதாகவும், பயனுள்ளதாகவும் அமைந்தது. இராமகி ஐயாவுக்கு மிக்க நன்றி.

இராமகி ஐயாவுடனான சந்திப்புக்கு வந்திருந்தவர்கள் ஜோசப் பால்ராஜ், இராம் குமார், ஜெகதீசன், விஜய் ஆனந்த், வெற்றிக் கதிரவன்(விஜய்), பிரியமுடன் பிரபு, ஜோ மில்டன் மற்றும் நான்.

*******

இணைப்பு: தமிழ் எழுத்துச் சீர்திருத்தம் தேவை அற்றது எனக்கோரும் மலேசிய பதிவர் திரு சுப.நற்குணன் அவர்கள் தனது திருத்தமிழ் பதிவில் எழுதிய இரு இடுகைகள் மற்றும் கருத்துரைகள்.
1.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (1)

2.தமிழ் எழுத்து மாற்றம்:- சீர்திருத்தமா? சீரழிப்பா? (2)

21 ஜனவரி, 2010

பிள்ளையார் சுழி - பிஸ்மில்லா 786 !

திருவள்ளுவருக்கு முன்பே 'அல்லா' என்ற சொல் வழக்கு தமிழில் புழங்கி இருந்தால் ஒருவேளை 'அகரமுதல் எழுத்தெல்லாம் ஆதி அல்லா முதற்றே உலகு' என்று எழுதி இருந்தாலும் எழுதி இருப்பார் வள்ளுவர். 'அல்லா' என்றால் இறைவன் தானே. இன்ஷா அல்லா !!! :). திருவள்ளுவருக்கு திருநீறும் பூணூலும் அணிந்து அழகு பார்த்து அவரை சைவர் என சுறுக்கி குறுக்கி பரப்பும் இந்துத்துவாக்களின் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்ள விருப்பம் இல்லை, அதைவிடுகிறேன்.

பிள்ளையார் சுழி போட்டு எழுதும் பழக்கம் தமிழகத்தில், தமிழில் சைவ எழுச்சி அல்லது பக்தி இயக்கம் ஏற்பட்ட காலத்திற்கு பிறகே ஏற்பட்டு இருக்கலாம், அதற்கு முன் சங்க இலக்கியங்களில் பிள்ளையார் வணக்கத்துடன் பாடல்கள் இல்லை. திருமந்திரம் பாடலில் துவக்கத்தில் வருவதாகச் சொல்லபபடும் 'ஐந்துகரத்தனை ஆனை முகத்தனை' பாடல் கூட திருமூலர் எழுதியதில்லை பிற்காலத்திய இடைச் சொருகல் என்று சொல்லப்படுகிறது (யார் சொன்னது என்று கேட்பவர்கள் இணையத்தில் தேடலாம்) தமிழர் இறை இலக்கிய மரபுகளில் பக்தி இலக்கியங்களில் 'உலகெலாம்' என்று துவங்குவது பலபாடல்களில் மரபாக இருக்கிறது என்பதையும் நோக்க வேண்டும். திருமூலர் திருமந்திரத்தை சைவ இலக்கியம் என்கிற வழியுறுத்தலை வைத்து எழுதவில்லை, ஆனால் சைவ வெறியர்களால் திருமந்திரம் சைவ இலக்கியம் என்ற அளவிற்கு சுறுக்கப்பட்டு சிறைபட்டுள்ளது என்பதில் எனக்கும் வருத்தம் உண்டு, தமிழில் இருக்கும் பல்வேறு பக்தி இலக்கியங்களில் திருமந்திரம் சிறப்பானதும் பெயர்களைத் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் சமய சார்பற்றதும் ஆகும், அதில் பல்வேறு இடைச் சொருகல் புகுத்தப்பட்டு திருமந்திரம் வேத சார்புடையது, சைவ நூல் என்பதாக திரிக்கப்பட்டது தனிக்கதை. திருமந்திரத்திரத்தில் 'அந்தணர் ஒழுக்கம்' போன்ற பகுதிகளை தவிர்த்துவிட்டு படித்தால் உண்மையிலேயே சிறப்பாகவே இருக்கும்.

பிள்ளையார் முழுமுதற்கடவுள் என்று தமிழர்களுக்கும் வலிந்து சொல்லப்பட்ட பிறகு 'அ' போட்டு எழுதத் தொடங்கும் நடை முறை 'உ' போட்டு தொடங்குவதாக அமைந்திருக்கும் என்று நினைக்கிறேன். எழுத்தறிவித்தால் போதும் என்ன போட்டு தொடங்கினால் என்ன ? என்பதாக அவற்றைவிட்டுவிடலாம். மளிகை பட்டியல் இடும் போது பிள்ளையார் சுழி போட்ட பிறகு 'மஞ்சள்' என்று எழுதி பிறகு பிற பொருள்களை எழுதுவார்கள், வீட்டில் மஞ்சள் இருந்தாலும் பொருள் வாங்கும் துவக்கம் மங்களமாக இருக்கட்டுமே என்பதாகச் சொல்லுவார்கள், சிலர் 'லாபம்' என்று எழுதுவதும் உண்டு. திருமணப் அழைப்பிதழில் 'லாபம்' இருக்காது பிள்ளையார் சுழியும் விருப்ப தெய்வப் பெயருடன் தான் துவங்கும். நாம (அதாவது இந்துக்கள்) பிள்ளையார் சுழி போட்டு துவங்குவது போலவே இஸ்லாமியர்கள் '786' போட்டும், கிறித்துவர்கள் சிலுவைக் குறியீடான '+' போட்டு துவங்குவதையும் பார்த்திருக்கிறேன்.

786 இஸ்லாமியச் சின்னம் என்பதாக பலர் தெரிந்தும் வைத்திருக்கிறார்கள். 786 எதைக் குறிக்கிறது என்பதை பலரும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாற்று மதம் என்பதைத் தவிர்த்து அந்த மதம் சார்ந்தவற்றை அறிந்து கொள்ளுவதை பலரும் விரும்புவது இல்லை, இது எந்த மதத்தினருக்கும் பொருந்தும் கூற்றுதான். திக கூட்டங்களில் பரிசுத்த ஆவியில் இட்டலி வேகுமா ? 786 என்ன அல்லாவின் வீட்டு நம்பரா ? என்கிற மென்மையான பகுத்தறிவு சீண்டல்களைக் பலரும் கேள்விப் பட்டிருக்கிறோம். இந்து நம்பிக்கையை வன்மையாக கண்டிக்கும் திகவினர் மற்ற மதங்களை மென்மையாகத்தான் கண்டிப்பார்கள் அது அவர்களது நேர்மை (?) என்று சந்தேகிப்பதைவிட அவர்களின் மததிற்குள்ளிருந்து கண்டிக்கிறார்கள் என்பதால் அவர்களுக்கு அந்த உரிமையும் உண்டு என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

சரி, 786 க்கு வருவோம், 786 என்றால் என்ன ? இதற்கும் (முகமது நபிக்கும், பிறகான) இஸ்லாமிய வரலாற்றிற்கும் எதாவது தொடர்பு இருக்கிறதா ? என்று தேடிப்பார்த்தேன். நியூமராலஜி எனப்படும் எண் கணித முறை ஆங்கில எழுத்துகளுக்கு எண் வடிவம் கொடுத்து இருப்பது போன்று வேறொரு முறையில் அரபி எழுத்துகளுக்கு எண் வடிவம் கொடுக்கப்பட்ட முறையில் 'BISMILLAAHIR RAHMAANIR RAHEEM (பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம் - இறைவனின் திருப்பெயரால்) ' என்பதன் சுறுக்கமாக '786' எழுதப்படுகிறது. அப்படி எண்ணாக மாற்றி எழுதும் போது 787 வரும் என்றும் 786 வரும் என்று இருவேறு குழப்பங்கள் இருப்பதாகவும் சொல்கிறார்கள். இருந்தாலும் 786 என்று எழுதுவது பரவலாக புழக்கத்தில் இருக்கிறது. இதிலும் விவகாரமான தகவல் என்னவென்றால் 'ஹரே ராமா ஹரே கிருஷ்ணா' என்பதை அரபியில் எழுதி அந்த எண் முறைக்கு மாற்றினாலும் '786' தான் வரும் என்று '786 உண்மைகள்(The Myth of 786)' பற்றிய ஆங்கிலக் கட்டுரையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

786 என்று எழுதுவது குரான்(வஹீ என்னும் இறைச் செய்தி), மற்றும் ஹதீஸ்(முகமது நபியின் வாழ்க்கை மற்றும் பொன்மொழிகள்) ஆகியவற்றில் இடம் பெறவில்லை எனவே அவ்வாறு எழுதுவதை ஈமான் (நம்பிக்கை) கொண்ட இஸ்லாமியர்கள் பின்பற்றக் கூடாது அதற்கு பதிலாக 'பிஸ்மில்லா ஹிர்ரஹ்மானிர்ரஹீம்' என்று எழுதவேண்டும் என்றும் கூறிவருகிறார்கள். '786' பற்றிய இஸ்லாமிய இணையத் தள தமிழ் கட்டுரை இது.

20 ஜனவரி, 2010

பெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ...

Joseph Paulraj
to me

அன்புள்ள பெரியவா,
உங்கள் பதிவை வாசிக்கும் பெயர் குறிப்பிட விரும்பாத உங்கள் வாசகி ஒருவர் எனக்கு இந்த ஃபைலை அனுப்பி உங்களுக்கு அனுப்ப சொன்னார்.

படிக்கவும்.

அன்புடன்,
ஜோசப் பால்ராஜ் (தென்கலை ஐயங்கார்)






சிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு ! - என்ற பதிவுக்காக இந்த மின் அஞ்சல் வந்திருப்பதாக நினைக்கிறேன்.

அந்த வாசகியின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுத்து இதனை பதிவில் வெளி இட்டு இருக்கிறேன். அந்த வாசகிக்கு நன்றி !

*****

இது போன்ற பாம்பு தேவநாதன் புகழ் மச்சேஸ்வரர் கோவிலினுள்ளும் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும். ஒரு நாத்திகனின் பார்வையிலும் வைணவம் மற்றும் மாற்றுக் (மத) இறைக் கொள்கையாளர்கள் பார்வையிலும் ஆட்டுக்கார அலமேலு ஆட்டைவிட இந்த பாம்பு நன்றாகவே செய்கிறது.

19 ஜனவரி, 2010

விதி !

அண்மையில் (2 ஜென 2010) சிங்கையில் ஓர் நிகழ்வில் சொல்வேந்தர் சுகி.சிவத்தின் சொற்பொழிவை கேட்கும் வாய்ப்புக் கிடைத்தது. கற்பு நிலை பற்றிப் பேச்சினிடையே பேசினார். 'பத்தினியை பகவதியாக்கியது, பரத்தையை பத்தினி ஆக்கியது - சிலப்பதிகாரம்' என்கிற ஒற்றைவரி விளக்கம் கொடுத்தார். சுகி.சிவத்தின் ஆன்மிகப் பேச்சுகள் மற்றவர்களைப் போலவே வேதம் சார்ந்த வழ வழ கொழ கொழ ரகம் என்றாலும் அவரது சமூக இலக்கிய பேச்சுகள் என்னை ஈர்க்கும். பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைப்பது எப்படி என்பதாக ஒரு நிகழ்வைக் கூறினார். 85 வயதில் பாட்டி ஒன்று செத்துப் போக தூக்கம் விசாரிக்க வந்தவர்கள், எப்படி இறந்தார் என்று கேட்க, பதிலைக் கேட்டுக் கொண்டு அப்படி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் இப்படி செய்திருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பதாக வந்தவர்கள் அனைவருமே அறிவுரை மழை பொழிய கடுப்பான மகன் அடுத்து 'பாட்டி எப்படி இறந்தார்கள் ?' என்று கேட்க, 'விதி போய் சேர்ந்துட்டாங்க' என்று சொன்னதும் மறு பேச்சே எழவில்லையாம்.
எந்த ஒரு தீர்க்க முடியாத, நடந்து போன பிணக்குகளை 'விதி' யாக பார்ப்பதன் மூலம் எளிதாக அதிலிருந்து விலகிவிடலாம், மறந்துவிடலாம், அதைவிடுத்து அடுத்து நடக்கப் போவதில் கவனம் கொள்ளலாம் என்பதாக சொல்லி முடித்தார்.

விதி பற்றிய சித்தாந்தங்களுக்கான (சுகியின்) விளக்கம் அப்படியாக இருக்கும் போது கேட்பதற்கும் நன்றாகவே இருக்கிறது. கண்ணுக்கு முன் நடக்கும் கெடுதல்களை தவிர்க்க அல்லது தொடர்ந்து செய்ய அவற்றை விதியென்று காரணம் காட்டி விலகுதலும், அங்கெல்லாம் விதியைப் பயன்படுத்தி தப்பிக்க நினைப்பதும் கோழைத்தனம் தான். விதி பற்றிய எனக்கு பல்வேறு எண்ணங்கள் அவ்வப்போது ஏற்படுவது உண்டு.

விதி என்று உண்மையிலே எதுவும் உள்ளதா என்று பார்த்தால், மனிதனின் எண்ணங்களுக்கும் அவனது செயல்களுக்கும் எந்த ஒரு விதித்தடையும் இல்லை, 'உனக்கு இது தான் விதி என்று அவரது இழிநிலை / தாழ்வு நிலை தொடர எவரும் ஆசிர்(?) வதித்தால் அவை புறம்தள்ளக் கூடியதே. பிறப்பு அடிப்படை உயர்வுகளை கற்பித்துக் கொள்வோர் இது போன்று விதியை காரணமாக வெட்கமில்லாமல் சொல்லுவார்கள். ஆனால் அவர்களை பிறர் தூற்றும் போது அதை 'சாதி துவேசம், காழ்புணர்வு' என்றெல்லாம் திரிப்பர். அனைத்தும் விதி என்றால் ஒரு சமூகத்தின் தாழ்வு விதி என்று சொல்லப் படுவது போலவே ஒரு சமூகத்தைத் தூற்றுவதாக சென்றுக் கொண்டிருக்கும் சமூக நிலையும் விதியென்று ஒப்புக் கொள்ள வேண்டும் அல்லவா ? அவ்வாறு ஒப்புக் கொள்ளாதவர்கள் விதி பற்றிப் பேசவும், விதியின் புகழ்பாடவும் எதாவது தகுதி இருக்கிறதா ? என்று கேட்டுக் கொள்ள வேண்டும்.

முற்றிலும் சுட்டுப் போட்டாலும் படிப்பு வராத மாணவன் வருத்தமுறும் போது உனக்கு படிப்பு ஏறவே ஏறாது என்று அவனை மட்டம் தட்டுவதைவிட 'விடு வேறேதாவது தொழிலை செய்து முன்னேற முயற்சி செய்' என்று சொல்வது விதியை மறைமுகமாக புரிய வைப்பதற்கான வழி. 'படித்தவன் ஆசிரியர் ஆகிறான், படிக்காதவன் கல்லூரி நிறுவனர் ஆகிறான்' என்று படிப்பு வராத மாணவனிடம் சொன்னாராம் சுகி.சிவம்.

விதிகள் உண்மையா பொய்யா என்கிற ஆராய்ச்சிகளை விட 'விதி' என்ற சொல்லை எப்பொழுது பயன்படுத்தலாம் என்பதே முதன்மையானது. வருத்தம், துயரம், ஆற்றாமை ஆகியவற்றை முற்றுப் புள்ளி வைத்து அவற்றையெல்லாம் மறந்து மனதை புத்துணர்ச்சி அடைய வைக்க 'விதி' பயன்படுத்துவது தனி மனிதனுக்கு நன்மையே அளிக்கும். எந்த ஒரு குழுவையோ, இனத்தின் வீழ்ச்சியையோ விதி என்று சொல்லுவது அவர்களின் மீதான காழ்புணர்வே அன்றி வேறொன்றும் இல்லை.

விதியை மதியால் வெல்வதென்பது நடந்து முடிந்த ஒன்றில் இருந்து விரைவாக மீள அதற்கு 'விதி நடந்துவிட்டது' என்று முற்றுப் புள்ளி வைப்பதேயாகும். மற்றபடி விதியை உண்டாக்கியது யார், விதியில் இருந்து மீள பரிகாரம் செய்ய முடியுமா ? என்பதெல்லாம் (போலி)சாமியார்களின், (போலி)சோதிடர்களின் பிழைப்பு வாதம். விதி உண்மையானால் அதைத் தடுப்பதும் இயலாத ஒன்றே அதை பரிகாரம் செய்து தவிர்க்க முடியும் என்பதோ, முன்கூட்டி தெரிந்து கொண்டோ எதுவும் ஆகப் போவதுமில்லை. விதி என்ற சொல்/செயல் முற்றிலும் உண்மை என்றால் 'முயற்சி' என்ற செயல் முற்றிலும் தோல்வி அடைந்துவிடும்.

விதி உண்மையென்றால் முயற்சியும் அந்த விதியினுள் இருக்கும் மற்றொரு விதிச் செயல்பாடுதான். என்னதான் விதி முயற்சி இவற்றின் போட்டியில் 'காலம்' சரியாக வாய்க்கப்படும் போது விதியையும் மீறி எதுவும் கைகூடிவிடும் என்பதும் விதிதான். :) அதாவது விதியை மீறி நடைபெறும் நிகழ்வும் விதியின் மற்றொரு கூறே.

எந்த விதியும் காலத்திற்குள் அடக்கம் விதிகள் காலத்தாலும் மாறும். விதி என்ற சொல் செயல்பாடுகளைப் பற்றிக் கூறும் போது மிகவும் கவனத்துடன் பயன்படுத்த வேண்டிய சொல், அடுத்தவரின் இழிநிலையை விதியாக சுட்டும் உரிமையும், தகுதியையும் யாருக்கும் இல்லை.

'விதி'யை ஆறுதலுக்காக பயன்படுத்தலாம் அவதூற்றுக்கு பயன்படுத்துவது தவறு. அவ்வாறு முறைகேடாக பயன்படுத்துவது ஆன்மிகமோ, மெய்ஞானமோ இல்லை, முறைகேடாக விதியைக் காரணம் சொல்வது பிழைப்பு வாதம், காழ்ப்பு மற்றும் அறிவீனம் எனப்படும். விதி பயன்படுத்தப் பட வேண்டிய இடம் கடந்த கால நிகழ்விற்கு மட்டுமே, நிகழ்காலம் ? எதிர்காலம் ? அவை அவரவரின் கைகளில் நல்ல முயற்சி என்னும் மற்றொரு விதிக் காரணியால் மாற்றி அமைக்கப்(படும்)படலாம்.

கடன் அன்பை முறிக்கும் !

கடன் என்ற சொல்லுக்கு ஏனைய மொழிகளில் இருக்கும் பொருளை விட தமிழில் அதன் பொருள் வெறும் கொடுக்கல் என்பதைவிட மிகுதியானது. சில சொற்களின் பொருள் மொழிப் பெயர்ப்பில் முழுமையான பொருளைத் தந்துவிடாது அப்படிப் பட்ட சொற்கள் பல்வேறு மொழிகளிலும் உண்டு. 'எச்சரிக்கை' என்ற சொல்லை நாம் தமிழில் பயன்படுத்துகிறோம். அந்தச் சொல்லின் மூலம் திராவிட மொழித் தொகுப்பில் இடம் பெறும் மற்றொரு பழம் பெரும் மொழியான கன்னடத்தில் இருந்து தமிழுக்கு வந்தது என்பதை பலர் அறியோம். எச்சரிக்கை என்பது பாதுகாப்பு மற்றும் கவனம் ஆகிய இரண்டும் தேவை என்பது குறித்த ஒரே சொல். இதற்கு ஏற்றச் சொல் பிறமொழிகளில் கிடையாது. எதற்கும் 'எச்சரிக்கையாக நடந்து கொள்ளுங்கள்' என்று சொல்வது 'எண்ணம் சிதறாமல் கவனத்துடன்' நடந்து கொள்ளவும் என்பதன் எளிமையான சொல் வடிவம் 'எச்சரிக்கை'. இதற்கு ஆங்கிலத்தில் Caution and Alert என்கிற இரு சொல்களை அந்த வரியில் அமைத்து எழுதினால் தான் வரி அதே பொருள் மாறாமல் முழுமை அடையும். சரி கடனுக்கு வருவோம்.

ஏனைய துன்பங்களைப் போலவே பொருள் சார்ந்த தேவையும் அது இல்லையென்றால் ஏற்படும் துன்பமும் அளப்பெரியது. அதற்கு மாற்று வழி கடன் பெறுவது. அதனால் தான் என்னவோ இறுதியில் மிகவும் துயரம் மிக்கவனாக இருந்தான் இராவணன் என்பதை வழியுறுத்தும் விதமாக 'கடன் பெற்றான் நெஞ்சம் போல்' என்ற சொற்றடரை அமைத்திருந்தார் கம்பர். இன்றைய தேதியில் வங்கி அல்லது ஏதோ ஒரு வழியில் கடன் பெறாதவர் அல்லது கடனே இல்லாதவர் என்று எவரும் இலர். கடன் வாங்குவது என்பது தேவையாகவும் கடன் என்பது விற்பனையாகவும் ஆகிவிட்டதால் கடன் கொடுப்பது என்பது இன்றைய உலகில் பொருளியலுக்காக இயங்கும் மாபெரும் சந்தை. வாராக் கடன்கள் வங்கிகளையே வாரிவிடும் கடன் சுமை ஆகிப் போகும் போது வங்கிகள் காணாமல் போகின்றன. வங்கிகளினால் நட்டம் அடைபவர்கள் வங்கி நடத்துபவர்கள் அல்ல, அதில் பணம் செலுத்திவிட்டு வட்டி கிடைக்கும் என்று காத்திருந்தவர்கள் தான். கடன் பெற்றவர்களும், வங்கி நடத்துபவர்களும் வங்கி நலிவடையும் போது வேலை, தொழில் இழப்பு என்பது தவிர்த்து பெரிதாக நலிவு அடைவதில்லை. ஏற்கனவே இருக்கும் அறிவு நுட்பத்தால் அதே போன்று வேறொரு பெயரில் அவர்களே மீண்டும் திறந்துவிடுவார்கள். வங்கி மூழ்குவது ஒட்டுமொத்தமாக பயனீட்டாளர்களின் பாதிப்பாக அமையுமே அன்றி வங்கி உரிமையாளர்களுக்கு பெரிதாக நட்டம் எதுவும் ஏற்படுவதில்லை அப்படியே ஏற்பட்டு இருந்தாலும் அவர்கள் அதில் முதலீடு செய்தது கண்டிப்பாக பாட்டான் முப்பாட்டன் சொத்தாகவும் இருக்காது எங்கேயோ விரைவாக ஈட்டியதை இங்கே இழக்கிறார்கள். பெரும் முதலீட்டில் நட்டமும் பெரிதாகத்தான் இருக்கும். கந்து வட்டிகளை அது போன்ற வங்கிகளை விடுவோம் அவை எந்த ஒரு நெறிமுறை விதியிலும் அடங்காது.

'நான் கடனே வாங்க மாட்டேன்' என்று எந்த ஒருவரும் அப்படியே வாழ்க்கையை ஓட்டிவிட முடியாது, எதாவது ஒரு சூழலில் இருப்புக்கு மிகுதியாக பணத்தின் தேவை ஏற்படும் போது கடன் வாங்குவது தவிர்க்க முடியாதது. கடன் வாங்குவதற்கு தேவையான ஆவணங்கள் இருப்பவர்கள் வங்கியை நாடுவார்கள். அப்படியான ஆவணங்கள் இல்லாதவர்கள் அல்லது விரைவில் கொடுத்துவிட முடியும் என்ற நிலையில் இருப்பவர்கள் உடனடியாக நெருங்கிய உறவினர்களையோ, நண்பர்களையோ தான் நாடுவார்கள். அவர்களில் மனது உள்ளவர்களே உதவி செய்வார்கள். உறவினரோ, நண்பரோ அவர்களிடம் இருப்பு இருப்பதை அறிந்து 'கொடுத்தா குறைந்தா போய்விடுவார்கள் ?' என்கிற நினைப்பாக புதிய தேவைகளை ஏற்படுத்திக் கொண்டு கடன் கேட்கவருபவர்களை விடுவோம், அப்படியாக வருபவர்களின் தேவை அப்படி ஒன்றும் மூழ்க்கக் கூடியது இல்லை என்றால் அவர்களுக்கு உதவுவதும் உதவாததும் அவரவர் விருப்பம் தான். ஆனால் உண்மையிலேயே இக்கட்டான சூழலில் கடன் உதவி கேட்பவர்களுக்கு செய்வதால் நமக்கு கிடைக்கும் மனநிறைவு விலை கொடுத்து வாங்க முடியாத ஒன்று. நம்மையும் மதித்து ஒருவர் உதவி கேட்கிறார் என்பது தனிப்பட்ட மனிதருக்கு பெருமையான ஒன்று தான்.
அதைவிட வாங்கும் சூழலைவிட கொடுக்கும் சூழல் நமக்கு அமைந்திருக்கிறது என்று நினைத்தால் தெரிந்தவர்களுக்கு உதவி செய்வது என்பது ஒருவரின் வாழ்க்கையில் கிடைத்த கொடுப்பினை தான்.

நாம கடன் கொடுப்பது போல் நமக்கு யாரும் கடன் தருவார்களா என்று நினைப்பதைவிட நாம் கேட்கும் நிலையில் இல்லை கொடுக்கும் நிலையில் இருக்கிறோம் அவ்வாறு அமைந்தது என் கொடுப்பினை அல்லது வாங்கி வந்த வரம் என்று நினைத்தால் 'கடன் அன்பை முறிக்கும்' என்று கொடுக்க மனம் அமையாதவர்களின் சொல்லையே நாமும் தெரிந்தவர்களிடம் பயன்படுத்த மாட்டோம்.

காலத்தினாற் செய்த நன்றி சிறிதெனினும் ஞாலத்தின் மாணப் பெரிது - கடன் கொடுப்பதற்கும் பொருத்தமான குறள்.

18 ஜனவரி, 2010

சிவனுக்கு அர்சனை செய்த நல்ல பாம்பு !

என்ற தலைப்பில் படத்துடன் ஒரு தகவலை வெளி இட்டிருக்கிறது தினமலர், இந்த தகவலை ஆத்திக அன்பர் ஒருவர் அனுப்பி அதில் இருக்கும் பின்னூட்டங்களையும் படிக்கச் சொல்லி அனுப்பினார்.

பாம்பு மரத்தில் ஏறி வில்வ இலையைப் பறித்து வந்து பறித்து வந்து அர்சனை செய்ததாம். படிப்போருக்கு மெய் சிலிர்க்க வைக்கும் தகவல். மாட்டுக் கண்ணில் கிருஷ்ண பகவான் தோன்றுவது, பிள்ளையார் பால் குடித்தது, ஏசுவின் கண்ணில் இரத்தம் வழிவது மண்ணறையில் கடுமையான தண்டனை கிடைப்பதற்கான ஆதாரமாக ஒரு பிணத்தை தோண்டி காட்டியது போன்று பல்வேறு மத நம்பிக்கை வதந்திகளில் இதுவும் ஒன்று. பாம்பு அபிஷேகம் செய்வது, தாலாட்டுவது, இதையெல்லாம் ராமராஜன் படத்தில் என்றோ பார்த்துவிட்டோம். பல ஆண்டுகளுக்கு முன்பு குரங்கு ஒன்று கோவிலுக்குள் சென்று அங்கு பக்தர்கள் கொடுக்கும் தேங்காயை உண்டு வாழ்ந்து அங்கேயே இறந்ததாம். அனுமாரே வந்ததாக கிளப்பி விட்டனர். எங்கும் யாரும், காக்கைகளும் துறத்தாத இடம், உணவு கிடைக்கும் இடம் என்றால் குரங்கு நகராமல் அங்கேயே இருப்பதில் அதிசயம் ஒன்றும் இல்லை. பாம்பு சிலை மீது படுத்து இருப்பதும், தன்னுடைய பாதுகாப்பிற்காக யாரும் வருகிறார்களாக என்கிற கவனத்துடன் தலையை முன்பாக வைத்திருப்பதும் அதிசயம் இல்லை. வில்வ இலையைப் பறித்து அர்சனை செய்ததாக சொல்லி இருப்பது வெறும் வதந்தி என்றே நினைக்கிறேன்.


"இதே போன்ற சிவலிங்க சன்னதியின் கருவரையில் தான் தேவ நாதன் என்பவன் காம லீலைகளையும் நடத்தினான். பாம்பு அர்சனை செய்தது உண்மை என்றால் அது போன்ற மற்றொரு பாம்பு தேவ நாதனுக்கு கொத்த வேண்டிய இடத்தில் கொத்தி இருக்க வேண்டும், அப்படியெல்லாம் எதுவுமே நடக்காமல் தேவ நாதன் தொடர்ந்து பல பெண்களுடன் கருவரையை விந்தாபிஷேகம் செய்து வந்திருக்கிறான். பல நாள் திருடன் என்கிற ரீதியில் தான் தேவ நாதன் சிக்கினான்."


மனிதர்கள் தொட்டாலே தீட்டு, பாம்பு படுத்து இருந்தால் தெய்வீகமாம், அதிசயமாம். எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே.........தமிழ்நாட்டிலே. இதை இறை அற்புதம், அதிசயமாகக் காட்டுவதன் மூலம் மக்கள் மனதில் வேதனையாக இருக்கும் தேவநாதன் திருவிளையாடலை மறக்க வைத்துவிடும் என்கிற ஒரு நம்பிக்கையோ என்றும் எண்ணத் தோன்றுகிறது. சிலந்தி அர்சனை செய்ததாக கூறிய பெரிய புராணக் கதையின் தற்கால வடிவமாக இதனைக் கொள்ளலாம் போலத் தெரிகிற


எத்தனையோ கோவில்கள், புராணங்கள், மந்திரங்கள், பக்தி நூல்கள் இருந்தும் கடவுள், மனிதனுக்கு இறை நம்பிக்கை ஏற்படுத்த, வலுப்படுத்த ஒரு வாயில்லா உயிரை நம்புகிறார் என்று நினைப்பது பக்தியா ? அறியாமையா ?

சிவன் கோவிலில் பாம்பு வில்வ அர்சனை செய்தது என்று கேள்விப்பட்டால் உடனடியாக முகம் சுளிபவர் இந்து வைணவர்கள் மற்றும் மாற்று மதத்தைச் சேர்ந்தவர்கள் அனைவரும் தான், நாத்திகனுக்கு இவை பெரிய விசயமே இல்லை வழக்கமான ஒன்று தான்.

தினமலர் இணையப்பக்கத்தில் குறிப்பிட்ட தகவலுக்கு வந்த சுவையான பின்னூட்டங்கள் :

அன்புள்ள வாசகர்களே,

"இந்த செய்தியை படித்த இவளவு மக்கள் கமெண்ட் எழுதிகிறார்கள் என்றால் அதுவே இறை நம்பிக்கைக்கு வெற்றி, அதிலும், வரலாற்றில் படித்து, பெரியோர் சொல்லி கேட்டு,பெற்ற அனுபவத்தை கட்டிலும் இதுபோன்ற தெய்வதினம் மிக்க விஷயம் கண்டிப்பாக நாஸ்திகர் மனதிலும் ஒரு மிக மெகா பெரிய கேள்வி எழுப்பும், யோசி, யோசி, யோசித்திகொண்டே இரு ஒரு நாளேனும் விஷயம் புரியும் , அயல் நாடுகளில் வசிக்கும் மனிதனும் கர்ம பலன்களை நம்புகிறான், வினை விதைத்தவன் வினை அறுப்பான் என்று இன்டியானகிய எனக்கு சொல்கிறான்,இனியாவது கேடு செய்யாதே, இறைவன் இருக்கிறான், அவன் , சிவனாக இருந்தால் என்ன, ஏசுவாக இருந்தால் என்ன, அல்லாவாக இருந்தால் என்ன, புத்தனாக, இருந்தால் என்ன, அல்லது வேறு உருவில் இருந்தால் என்ன, அவன் மீது நம்பிக்கை வைத்து நல்லதையே செய், நிச்சயம் பலன் உண்டு."


" நமஸ்தே அஸ்து பகவன் விஸ்வேஸ்வராய மஹாதேவாய த்ரியம்பகாய த்ரிபுராந்தகாய த்ரிகாக்னி காலாய காலாக்னி ருத்ராய நீலகண்டாய மிர்தியுன்ஜெயாய
ஸர்வேஸ்வராய சதாசிவாய ஸ்ரீமண் மகாதேவாய நமக
இந்த மந்திர்ரத்தை தினமும் சொல்லுங்கள் ஒரு மணி நேரம்
உங்கள் வாழ் முழுவதும் உங்களுக்கு ஒருநாள் சித்தி கெடைக்கும் இது முழு உண்மை . ஆனால் நீங்கள் இதை யாரிடமும் உங்களுக்கு சித்தி கெடைக்கும்வரை நான் இந்த மந்திரத்தை சொல்வதாக சொல்லக் கூடாது, பொதுப்படையாக இந்த மந்திரத்தை சொல்லுங்கள் உங்களுக்கு சித்தி கெடைக்கும் என்று சொல்லலாம் "


" உண்மை என்ன?! எல்லோருக்கும் புரிய வேண்டும். பொதுவாக, விஞ்ஞான ரீதியாக, இயற்கை ரீதியாக, நடப்பது இதுதான்: இங்கும் கிரிஸ் நாட்டில் பாம்புகள் பெரிய பாறைகள் புதர்கள் பக்கத்தில் முட்டைகள் இட்டு அவைகளை எதிரிகளிடம் இருந்து காப்பாற்ற வேண்டி, இலைகள் பூக்கள் போன்றவைகளை பறித்து வந்து மூடும்; அடிக்கடி வந்து எல்லாம் சரியாக இருக்கிறதா என்று பார்த்துவிட்டு செல்லும்; இது இயற்கையில் நடக்கும் உண்மை; இதுதான் அங்கும் நடந்திருக்கும்! பாம்பு வகைகளுக்கு மட்டும் அல்ல; பல விலங்கினங்களுக்கே மனிதனைவிட அறிவுக்குர்மை அதிகம் என்பதை யாரும் மறுக்க முடியாது!! வீணாக கடவுள் அது இது என்று புலம்ப வேண்டாம்! நாங்களும் நம்பிக்கை உடையவர்கள்தான் ; ஆனால் மூடர்கள் அல்ல!! "


"
பாம்பு செய்தது தெய்வச் செயல் என்பது போல் பரவசப்படுபவர்கள் மச்சேஸ்வரர் கோவில் பாம்புகளே வசிக்காத நகரத்தில் இருக்கவில்லை என்பதையும் நினைத்துப் பார்க்க வேண்டும். அதிசயங்கள் நிகழ்வதாகக் கூறிக் கொள்வது எதுவுமே ஆன்மிகம் சார்ந்த ஒன்று அல்ல. அதை குடுகுடுப்பைக்காரன் மற்றும் மோடிமஸ்தான்களாலும், ப்ளாக் மேஜிக் காரர்களாலும், மேஜிக் காரர்களாலும் நிகழ்த்த முடியும். எல்லாம் தெரியமல் 'மெய் பொருள் காண்பதறிவு' என்று முன்னோர் சொல்லி வைத்துவிடவில்லை."



"இந்த அதிசயம் மூலம் இறைவன் சகல ஜீவராசிகளுக்கும் சொந்தமானவன் என்று நம்மால் உணரமுடிகிறது. இதை நாம் பல கதைகளில் படித்தும் இருக்கிறோம். அனால் கொடுமை என்னவென்றால் இந்த சம்பவத்தை படித்து கேலி சேயும் பல ''''பகுதரிவளிகள்'''' ஒரு பாம்பு சிவ வழிபாடு செய்வதை ஒப்புகொள்வது இல்லை, தான் பிராணிகளைவிட கேவலமானவர்கள் என்று நிருபிகின்றனர். ஈசன் ஒருவனால் மட்டுமே இவர்களை காபற்றமுடியும்."



"
இது அனைவரையும் மெய் சிலிர்க்கவைத்த காட்சியாக இருந்தது என்று செய்தியில் இருந்தாலும் ஒரு அர்ச்சகர் மட்டும்தான் பார்த்தார் என்று கூசாமல் கமென்ட் அடித்த நாத்திக அன்பரின் இச்செய்தி பொய்யாக வேண்டும் என விரும்பும் உள் உணர்வு நன்கு தெரிகிறது பூனை கண்ணை மூடினால் எனும் பழமொழி தான் நினைவுக்கு வருகிறது ஓம் நமசிவாயா சிவாய நாம ஓம் = விஜயகோபால் "


"நாத்திகம் பேசுபவனும் நிச்சயம் ஒரு நாள் ஆதிக்கம் பேசுவான்...இதற்கு எந்த கொம்பனும் விதி விலகு கிடையாது ...இதற்கு ஒரு நல்ல எடுத்து காட்டே '''' மஞ்சள் சலவை '''' போர்த்தி கொண்டு பவனி வரும் தமிழின தலைவர்..எல்லா வற்றுக்கும் காலம் பதில் சொல்லும்.பாலாவிற்கும் இது தான் பதில்.ஓம் நமாஹ் சிவாய."


"தயவு செய்து தினமலர் இதை பிரசுரிக்க வேண்டும்.......

நம சிவாய வாழ்க, நாதன் தாள் வாழ்க இமைப்பொழுதும் நம் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க.
நாதர் முடியில் இருக்கும் நல்ல பாம்பே ..உன்னை பார்த்த பிறகாவது நல்ல புத்தி வருமா இவர்களுக்கு சொல்லு பாம்பே ..
உன் வாயில் வில்வம் இருப்பதை பார்த்த பிறகாவது அறிவுக்கண் திறக்குமா இவர்களுக்கு சொல்லு பாம்பே ..ஓம் சிவோஹம், ஓம் சிவோஹம்!!! "

17 ஜனவரி, 2010

தம2009 - வாக்களித்தவர்களுக்கு நன்றி !

தமிழ்மணம் விருதுகள் 2009 போட்டியில் பிரிவு 5ல் எனது பயணக் கட்டுரைக்கு இரண்டாம் இடம் பெற்று தந்து வெற்றி பெற வைத்த பதிவர் நண்பர்களுக்கு நன்றி.

போட்டிக்காக என்று எதையும் எழுதாவிட்டாலும் போட்டி நடைபெறும் பொழுது போட்டிக்காக எதை அனுப்பலாம் என்பதில் பெரும் மனக் குழப்பமே ஏற்பட்டுவிடுகிறது. போட்டிகளுக்கு அனுப்பப்படும் கட்டுரைகள் என்பதில் ஒரளவு தரமும் உண்மைத் தகவல்களும் இடம் பெற வேண்டும் என்பதால் அதற்குரிய தகுதி இருப்பதாக எனது இரு தொடர் கட்டுரைகளைத் தான் அனுப்பினேன். இரண்டுமே முதல் சுற்றில் வாக்குகளைப் பெற்று தேர்வாகி இருந்தது. இரண்டாம் சுற்றிலும் வெற்றிபெறுமா என்பது ஐயமாகவே இருந்தது, எனக்கு வாக்கு அளியுங்கள் என்று போட்டி முடியும் வரை யாரிடமும் தனிப்பட்ட அளவில் கேட்டுக் கொண்டதில்லை. அவ்வாறு கேட்டு வாங்கி வெற்றிபெறுவதிலும் எனக்கு உடன்பாடு இல்லை. போட்டிகளை கொடுக்கல் வாங்கலாக கொச்சைப் படுத்திவிடக் கூடாது என்பதில் உறுதியாகவே இருந்தேன். நான் போட்டிக்கு அனுப்பிய பிரிவுகளில் மிகவும் ஆக்கபூர்வமாகவும் வாசகர்கள் மிகுதியாக உடையவர்களும் போட்டி இட்டு இருந்தனர் என்பதால் இரண்டாம் சுற்றில் எனது கட்டுரைகளில் எதாவது ஒன்றாவது வெற்றிபெருமா என்கிற ஐயமும் இருந்தது. நல்ல கட்டுரைகள் வெற்றி பெறவேண்டும் என்கிற எண்ணம் இருந்தாலும் நாம் எழுதுவதும் நல்ல கட்டுரை என்கிற தீர்ப்பு வரவேண்டும் என்கிற விருப்பம் இருந்ததை இல்லை என்று சொல்வதற்கில்லை. போட்டியில் கலந்து கொண்டது மகிழ்ச்சி அதன் பிறகு முதல் சுற்றில் தேர்வானதும் கூடுதல் மகிழ்ச்சி, இறுதி சுற்றில் பயணக் கட்டுரைக்கு இரண்டாம் இடம் கிடைத்ததில் மட்டற்ற மகிழ்ச்சி.



நாம் வெற்றிபெருவதைவிட வெற்றிபெறுவது அனைத்தும் நல்லக் கட்டுரைகளாக இருக்க வேண்டும் என்று எல்லோரைப் போல் நானும் விரும்புகிறேன்.

போட்டியில் கலந்து கொண்ட அனைவருமே போட்டியில் பங்கு பெறுவது என்பதில் முதல்கட்ட வெற்றியை அடைந்துவிடுகிறார்கள். மற்ற முடிவுகள் எல்லாம் ஒரு அங்கீகாரம் என்ற அளவில் தான் கொள்ளப்பட வேண்டும். திருநங்கைகள் பற்றி மேலும் விழிப்புணர்வுகள் வளரவேண்டும் என்கிற சமூகப் புரிதலில் சகோதரி லிவிங் ஸ்மைல் வித்தியாவின் 'திருமண வாழ்க்கையில் திருநங்கைகள்' என்ற கட்டுரை வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தேன் இரு சுற்றுகளிலும் அவருக்காக வாக்களித்தேன். நினைத்தபடி வெற்றியும் பெற்றிருக்கிறார். திருநங்கையின் எழுத்து என்கிற பொது புத்தி சாயம் கூட அவரது எழுத்துக்கு தேவையற்ற ஒன்று. தேர்ந்த எழுத்தாளரின் எழுத்துக் கூறுகள் அவரது எழுத்துகளில் உண்டு என்பதை அவர் பலமுறை நிருபணம் செய்திருக்கிறார். வெற்றி பெற்ற 'லிவிங் ஸ்மைல் - வித்யா' விற்கு நல்வாழ்த்துகள்.

மருத்துவர் புரூனோ, வினவு மற்றும் தமிழ் சசி ஆகியோர் இரு பிரிவுகளில் போட்டி இட்டு இரு பிரிவுகளில் வெற்றிகளும் பெற்றிருக்கிறார்கள். புதிய பதிவர்கள் நிறைய பேர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். புதியவர்களுக்கு மேலும் வழிவிட அடுத்த (இந்த) ஆண்டு போட்டி நடைபெற்றால் அதில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முடிவு செய்திருக்கிறேன்.


வெற்றி பெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள், போட்டியில் பங்கு பெற்ற அனைவருக்கும் பாராட்டுகள், வாக்களித்த அனைவருக்கும் நன்றிகள். போட்டி நடத்திய தமிழ்மணம் குழுமத்திற்கு நன்றியும் பாராட்டுகளும் தெரிவித்துக் கொள்கிறேன்

14 ஜனவரி, 2010

பொங்க(ல்) வச்சாச்சு !

வேலை நாளில் பொங்கல் வந்தால் சிங்கையில் பொது விடுப்புக் கிடைக்காது, அதி காலையில் , மாலையில், விடுப்பு எடுத்து மூனு வழியில் பொங்கல் வைக்கலாம். விடுப்பு எடுத்து வைத்தால் தொலைக்காட்சிகளின் பொங்கல் சிறப்பு நிகழ்ச்சிகளில் சிக்க வேண்டி இருக்கும் என்பதால் அதைத் தவிர்க்க. காலையில் எழுந்து வைப்பது என்று முடிவு செய்தோம்.

அதிகாலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, காலை 5:15 மணிக்கு செய்ய துவங்கி சேனை, பனங்கிழங்கு, பரங்கிக்காய், பூசனிக் காய், வாழைக்காய், பச்சை மொச்சை, பச்சை துவரை, வள்ளிக் கிழங்கு, கத்திரிக்காய், உருளை கிழங்கு, முருங்கை காய் எல்லாம் போட்டு பொங்கல் கறி மற்றும் சர்கரை வெண் பொங்கல் செய்து முடிக்க காலை 6.15 ஆச்சு.




ஒரு மணி நேரத்தில் மிகவிரைவாக எல்லாம் முடித்து 6:30க்கு படையல் போட்டு முடிந்தது. (பொங்ல் வைக்க நாள்காட்டியில் நேரம் இருக்குமாம், நமக்கு நாள் நட்சத்திரத்தில் நம்பிக்கை இல்லை, எல்லா நாளும், நேரமும் நல்ல நாள் தான்)



எல்லாம் முடித்து சாப்பிட அமர்ந்து சன் தொலைக்காட்சியை ஓடவிட்டால் நமீதா பொங்கல் கிண்டுறாங்க.




பொங்கல் புத்தாண்டு சேர்த்தே கொண்டாடினாலும் புதுத் துணி எடுக்கும் வழக்கம் இன்னும் ஏற்படுத்திக் கொள்ளவில்லை. அடுத்த ஆண்டுக்கு புத்தாடைகளுடன் பொங்கல் மற்றும் புத்தாண்டு கொண்டாடவேண்டும் என்பது இந்த ஆண்டு பற்றுறுதி.

சென்ற ஆண்டு, பொங்கல் பதிவு:

பொங்கல் புராணம் !



அனைவருக்கும் இனிய விழாக்கால வாழ்த்துகள் !

சித்திரைக்கு புத்தாண்டு கொண்டாட இருப்பவர்களுக்கு பொங்கல் நல்வாழ்த்துகளையும், மற்றவர்களுக்கு (கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து சொல்லனுமா ? இல்லையா ?) பொங்கல் மற்றும் புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

13 ஜனவரி, 2010

தமிழ் புது புத்தாண்டு வாழ்த்துகள் !

நான் தை 1ஐ புத்தாண்டாக கொண்டாடுவதற்கு மாறிவிட்டேன். கடந்த இரு ஆண்டுகளாக பொங்கலையும் தமிழ் புத்தாண்டையும் சேர்த்தே கொண்டாடுவது வழக்கமாகிவிட்டது. ஏப்ரல் 14 ? வழக்கம் போல் ஒரு நாளாக செல்கிறது.

இது பற்றி சென்ற ஆண்டுகளில் எழுதிய பதிவுகள்.

பொங்கல் புராணம் (ஆன்மீக பதிவு அல்ல) (2009) !
தமிழ்ப் புத்தாண்டு வாழ்த்துகள் ! (2008)

வைப்பதற்கும் சிரைப்பதற்கும் அது என்ன மீசையா தேதியை மாற்றி மாற்றி வைக்க என்று வழக்கம் போல் தை 1 ஐ தமிழ் புத்தாண்டு என்று சொன்னால் சிலர் சினந்து எழுகிறார்கள்.

நானும் 'தீபாவளி', 'மகர சங்கராந்தி', 'கிருஷ்ண ஜயந்தி', 'ஆவணி அவிட்டம்', 'அட்சய திருதியை', 'கோகுலாஷ்டமி', 'புரட்டாசி சனிக்கிழமை', 'பங்குனி உத்திரம்', 'மாசி மகம்', 'சித்திரா பவுர்ணமி', 'ஆடி அமாவாசை', 'ஆடி பூரம்', 'வைகாசி விசாகம்', 'வைகுண்ட ஏகாதேசி', 'சிவ ராத்திரி', 'மாளய அமாவாசை' 'சித்திரை விசு','ரஜினி பிறந்த நாள்', 'விஜய் பிறந்த நாள்' இவையெல்லாம் சங்கப்பாடல்களில் இடம் பெற்றிருக்கிறதா ? இவை சங்கத்தமிழர்களால் கொண்டாடப்பட்டு இருக்கிறதா என்று தேடிப்பார்த்தேன், கிடைக்கவே இல்லை. இவை யெல்லாம் சத்தமில்லாமல் நுழைந்து அவற்றையும் ஏற்றுக் கொண்ட பிறகு ஒரே ஒரு நாள் தமிழறிஞர்களின் அறிவுறுத்தலின் பேரில் தமிழ் புத்தாண்டு தேதியை மாற்றி அமைப்பதால் தமிழுக்கு எந்த குடியும், தமிழர் குடியும் முழுகிவிடாது என்று தெரிந்தது. நம்மைக் கேட்காமலேயே எவ்வளவோ மாற்றம் புகுத்தப்பட்டு புகுந்து நிகழ்ந்திருக்கிறது. தை 1 புத்தாண்டாக அறிவித்ததும் இருந்துவிடட்டுமே என்றே நினைக்கிறேன்.




வழக்கமாக கொண்ட்டாடும் புத்தாண்டுக்கு பதிலாக இந்த ஆண்டு தை 1 ஐ தமிழ் புத்தாண்டாகவும் பொங்கலாகவும் கொண்டாடும் அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் வாழ்த்துகள். மற்றவர்களுக்கு பொங்கல் வாழ்த்துகள், அவர்களையும் வரும் காலம் மாற்றும்.

தமிழ் புத்தாண்டும் சீனர்களின் சீனப் புத்தாண்டு போல் மதச் சார்பற்று அல்லது அவரவர் மத வழக்கப்படி தமிழர்கள் அனைவராலும் கொண்டாடுவது எதிர்காலத்தில் நடக்கும் என்று நம்புவோமாக.

11 ஜனவரி, 2010

பனை !

தமிழ் எழுத்துக்கள் ஓலையில் எழுதியதால் தப்பித்தது என்கிற ஒரு கூற்றை (பனையண்ணன் என்கிற) ஒரு நூலில் படித்தேன். எதுவும் இயற்கைக்கும் கால மாற்றத்திற்கும் தப்பாது, முன்னோர்கள் முடிந்த அளவுக்கு நடப்புகளை கல்வெட்டு, பானையோடு, தந்தம், ஆமை ஓடு ஆகியவற்றில் எழுதி வைத்தனர். உலகெங்கிலும் எழுத்தாவணங்களை எழுதுவதற்கு தாள் கண்டுபிடிக்காத காலத்தில் பல்வேறு முறைகள் பயன்பட்டனவாம். எழுதும் முறைகள் ஏற்படுத்தி எழுதுவதற்காக கற்காலம் முதல் சென்ற நூற்றாண்டுவரையில் எலும்புகள், சிப்பிகள், சங்குகள், ஆமை ஓடுகள், விலங்குகளின் தோல்கள் ஆகியவற்றில் எழுதி வந்திருக்கிறார்கள். ஐரோப்பியர்கள் ஆட்டுத் தோல் மற்றும் இளங்கன்றுத் தோல்களில் எழுதி வந்தனராம். சுமேரியர்கள் சுட்ட களிமண் மீது எழுதி வந்தனராம். எகிப்தியர்கள் 'பப்ரைஸ்' (பைபிள் என்னும் சொல்லின் மூலம்) என்ற ஒருவகை நாணல் புல்லில் எழுதினராம். மூங்கில் கண்டுபிடிக்கும் முன் துணிகளிலும் மூங்கில் மீதும் எழுதுவது சீன(ர்) வழக்கம். தமிழ் நாட்டிலும் பண்டைய இந்தியாவிலும் துணிகளிலும் ஓலைச் சுவடிகளிலும் எழுதி வந்திருக்கின்றனர். பழைய எழுது பொருள்களில் ஓலைகளின் எழுதுவது அவற்றை நூல்கள் போல் இதழ்களாக வைத்திருப்பதற்கும், எழுதுவதற்கும், பாதுகாப்பதற்கும் ஏற்றவையாக இருந்தபடியால் ஓலைகளில் எழுதுவது சீனர்களால் தாள்கள் கண்டுபிடிக்கும் வரையில் இந்தியாவில் நடைமுறையில் இருந்தன. 100 ஆண்டுகளுக்கு முன் சாதகங்கள் கூட ஓலைச்சுவடிகளில் எழுதப்பட்டு வந்திருக்கின்றன. தாத்தாவின் ஓலைச் சுவடியில் எழுதப்பட்ட சாதகமும், பலன்களும் வீட்டின் பூசை அறையில் இருந்ததைப் பார்த்திருக்கிறேன்.

இன்றைக்கு நாம் பார்க்கும் பனைமரங்கள் பண்டைய இலக்கிய வாழ்வின் எஞ்சிய சின்னங்கள் தாம். பனை ஓலைகள் இல்லாவிடில் தமிழுக்கு இவ்வளவு எண்ணிக்கையிலான பழந்தமிழ் இலக்கியங்கள் கிடைத்திருக்க வாய்ப்பில்லை. பனை ஓலையில் எழுதுவதில் மற்றோர் வசதியும் இருந்திருக்கிறது. உலகெங்கிலும் இல்லாத ஒரு நடைமுறையாக இலக்கிய தரம் அறிய நம்மவர்கள் வைத்த சோதனைகள் மிகுதி. ஒரு நூல் நல்ல நூலா இல்லையா என்பதை அறிய அதை ஆற்றில் வீசியும், நெருப்பில் இட்டும் நிறைய சோதனைகள் செய்திருக்கிறார்கள். அதை மூட நம்பிக்கை என்பதைவிட உண்மை, நேர்மை ஆகியவற்றிற்கு கொடுத்த முதன்மைத்துவமாகவும் எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு அரச சபையில் வெளி இடப்படும் நூல் கற்றோர்களால் சோதிக்கப்பட்ட பிறகு அது மக்களுக்கு பயன்படுமா என்பதை அறிய ஆற்றில் வீசப்படுமாம், ஆற்றில் அடித்துக் கொண்டு செல்லாவிடில் நல்ல நூல் என்பதாக அதை அறிமுகப்படுத்துவார்கள், அதே போன்று தீயில் இட்டு சோதனை செய்திருக்கிறார்கள். அனல் வாதம், புனல் வாதம் என்பவை கூட இப்படிப் பட்டவை தான் என்றாலும், சமண நூல்கள் எண்ணாயிரம் ஒருமுறை இலக்கிய தரச் சோதனைக்காக அவற்றில் எண்ணாயிரம் ஆற்றில் வீசப்பட அவற்றில் அடித்துக் கொண்டு செல்லாமல் மிதந்தவை வெறும் நானுறு, அவற்றை எடுத்து வந்து 'நன்னூல்' என்னும் தொகுதியாக வெளி இட்டதாக இலக்கிய குறிப்புகள் உண்டு.

சுவடி ஏடுகளில் எழுதப்பட்டு, அதன் வழியாக பாடங்கள் நடத்தப்பட்டதால் கல்வி முறைக்கு ஏ(ட்)டுக் கல்வி என்ற பெயர் வழக்கு வந்தது. 'Edu'cation சொல்லை ஆய்வு செய்தால் அதன் வேர்ச்சொல் தமிழாக இருக்க வாய்ப்புகள் உண்டு.

எழுதப் பயன்படும் பனை ஓலைகள் பூச்சிகளால் அரிக்காமல் இருக்க பல்வேறு மூலிகை சாறுகளில் ஊறவைக்கப்பட்டு காயவைக்கப்பட்டு பிறகே எழுதுவதற்கு பயன்படுத்தப்பட்டு இருக்கிறது,ஓலைகளின் அளவு மற்றும் எடை ஆகியவற்றைக் கணக்கில் கொண்டால் பண்டைய எழுதும் முறைகளில் ஓலையில் எழுதுவது சிறந்ததாகக் கருதப்பட்டது, ஏனெனில் சேர்த்து தொகுதியாக கட்டிவைப்பதற்கும் பாதுகாப்பதற்கும் எளிதாக இருந்திருக்கிறது. நாள் கணக்கில் எடுத்துப்பார்க்கமல் இருப்பது, பாதுகாக்கப்பட்ட இடத்தின் தீ ஆகியவையே ஓலைச் சுவடிகள் அழிந்து போவதற்கு காரணமேயன்றி மற்றபடி பரமரிக்கப்பட்டல் ஓலைச் சுவடிகள் நூற்றாண்கள் தாண்டியும் நிலைக்கும் என்பதற்காக ஓலைச் சுவடியில் எழுதுவது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேற்பட்ட வழக்காகி இருந்தது.

இந்தியாவில் வேறெந்த மாநிலங்களை விட பனைமரங்கள் தமிழகத்தில் மிகுதி, சென்ற 50 ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓட்டுவீடுகள் கட்ட பனைமரத்தின் தேவை இன்றியமையாததாகவே இருந்தது. பனையின் பயன்பாடு ஓலை (சுவடி) , நுங்கு, கள், பதனீர், பனைவெல்லம் மற்றும் வாரைகள் எனப்படும் பன மரத்த்தை அறுத்த கட்டைகள் தமிழ் நாட்டின் இன்றியமையாத் தேவைகளில் ஒன்றாகவே இருந்தன. பனைமரத்தின் பயன்கள் இவ்வளவு இருந்தாலும் பனை நிழல் பயன் தராதவை என்பதற்கான 'பனை மர நிழலும்.....பய உறவும் ஒட்டாதைவை' சாதி சார்ப்பு/சாடல் பழமொழி கூட உண்டு. முன்பெல்லாம் தொடர் வண்டி பயணத்தின் போது இருப்பக்கமும் பனை மரங்களைப் பார்க்க முடியும். தற்பொழுது அரிதான காட்சியாகவே அவை இருக்கின்றன. முதல் காரணம் புதிதாக ஓட்டுவீடுகள் யாரும் கட்டுவதில்லை, பனைமரத்தின் இதர பயன்பாடான கள் ஆகியவற்றிற்கான தடை இவையே பனைமரங்கள் பெருக்கத்திற்கு எதிராக எழுந்த தடைகள். மதுவிலக்கு இல்லாத நிலையிலும் பனைமரத்தில் இருந்து கள் இறக்குவதற்கு அனுமதியும் கிடையாது. எனவே பனை மரங்களை வளர்க்க விரும்புவர்களும் அதனால் எந்த பயனும் இல்லை என்பதால் புதிய பனைமரங்கள் வளருவதற்கு தற்போதைய சூழல் மிகக் குறைவே.

பனைமரம் தென்னையைப் போன்று விரைவாகவும் வளருவதில்லை, ஒரு பனை மரம் வளர்ந்து பலன் கொடுக்க (கள் மற்றும் நுங்கு) குறைந்தது 10 ஆண்டுகளாவது ஆகும், அதுவரையில் அதன் மட்டைகளை வெட்டிப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆனால் பனை மட்டைகளில் வீடு கட்டுபவர்கள் மிகக் குறைவு. கிராமங்களில் மாட்டுக் கொட்டைகைகளை (குடில்) கட்டுவதற்கு பனை மட்டைகளை பயன்படுத்தி வந்தனர். கிராமங்களில் மாடுகளே குறைந்துவிட்ட பிறகு மாட்டுக் கொட்டைகைகள் தேடித்தான் பார்க்க வேண்டும். பனைமரங்களின் தற்போதைய பயனுக்கான தேவை முற்றிலும் குறைந்துவிட்டது அல்லது மிக மிகக் குறைவு என்றே சொல்லாலாம். பனைவெல்லத்தில் மருத்துவ பயன்கள் கரும்பு வெல்லத்தைவிட மிகுதியாக இருக்கின்றன என்றாலும் அதனை நாடுபவர்கள் குறைவே. மிகுதியாக நார்சத்து உள்ள பனங்கிழங்கை விரும்பி உண்ணுபவர்களும் குறைவு. எப்படிப் பார்த்தாலும் பழந்தமிழர் வாழ்வில் ஒன்றாக இருந்த பனைமரம் தமிழர்களால் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டுவிட்டது அல்லது மறக்கப்பட்டு வருகிறது என்பது கசக்கும் உண்மைதான்.

பனைமரத்தை வைத்து குலம் சார்ந்த தொழிலாக பனைத் தொழில் செய்து வந்த சான்றோர் (நாடார்) சமூகம் முற்றிலும் அந்த தொழிலை தொடர்ந்து செய்து வர இயலாத (குறிப்பாக கள் இறக்கத் தடை ஆகிய ) நிலையில் வேறு தொழில்களுக்கு மாறிவிட்டனர், என்பதால் குலவழியாக பனைகளை காத்துவருவதும் முற்றிலும் குறைந்துவிட்டது.

வேறெந்த மரங்களைவிட தமிழர்களோடும், தமிழோடும் நெருங்கி இருந்த பனைமரங்கள் அடுத்த நூற்றாண்டில் ஒன்றிடண்டாவது நிற்குமா என்பதும் ஐயமே. பராமரிப்பில் கவனித்து வரவேண்டிய முதியவர்கள் புறக்கணிக்கப்படுவது போல் நாம் பராமரிக்க வேண்டிய நம் பழந்தமிழ் வாழ்வியல் சின்னமான பனைமரங்களும் புறக்கணிக்கப்பட்டே இருந்துவருகிறது. ஆனால் பனைமரம் பயன்கருதி பராமரிக்காவிடிலும் அவை இதுவரை தந்தப் பயனுக்காக ஊருக்கு 100 மரங்கள் வரை பாதுகாப்பது தமிழர்கள் கடமையாகவே நினைக்கிறேன். பனைமரம் மற்ற மரங்களைப் போன்ற மரம் என்றாலும் அவை பாதுக்காக்க வேண்டிய தமிழர் சின்னங்களில் ஒன்று என்பதை நாம் மறக்கலாது.

பனை பற்றிய தகவல்கள் அடங்கிய மற்றொரு பதிவு இங்கே (வி. ஜெ. சந்திரன்)

7 ஜனவரி, 2010

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 3

இதன் முந்தைய பகுதிகள் சுட்டி 1 | சுட்டி 2

இடம் பெயராத சமூகம் முன்னேறுவதற்கு வாய்ப்பு இல்லை, உலகில் மிகுதியாக இடம் பெயர்ந்தவர்கள் என்றால் அது சீனராகவோ, இந்தியராகவோ இருக்கும் என்று நினைக்கிறோம், ஆனால் உலகிலேயே மிகுதியாக இடம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பியர்கள் அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர்கள் தான். காரணம் இயற்கை வளம் உடைய பகுதிகளுக்குச் சென்று தங்கள் ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டு எப்போதும் முதலாளிகளாகவே வாழவேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் வெள்ளைக்காரர்கள். இந்தியர் குறிப்பாக தமிழர்கள் உட்பட பிற இனங்கள் வெளி நாடுகளுக்கு இடம் பெயர்ந்ததற்குக் காரணம் அவர்களை சென்ற நூற்றாண்டுக்கு முன்பே வெள்ளைகாரர்களால் தோட்டத் தொழிலாளியாக அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர். தோட்டத் தொழிலாளர்களாக செல்லாமல் இடம் பெயர்ந்த பிற சாதியினரும் உண்டு, ஆனால் அவர்கள் மற்றவர்களை விட எண்ணிக்கையில் குறைவு. கடந்த 50 ஆண்டுகளில் பலரும், குஜராத்திகள், பஞ்சாபிகள் உட்பட வட இந்தியர்களும் கனிசமான அளவில் புலம் பெயர்ந்து வருகிறார்கள்.

இந்தியாவிற்குள் ஆரியர்கள் பல்வேறு தென்னிந்திய மாநிலங்களுள் புலம் பெயர்ந்ததும் வேலை வாய்ப்புத் தேடி என்பதைவிட வெள்ளைக்காரர்களைப் போல் அல்லாமல் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடைப் பட்ட வர்க்கமாக வாழுவதற்கான வாய்ப்புகள் அன்றைய மன்னர் ஆட்சியில் அமைந்திருந்ததால் மன்னர்களுக்கு ஆலோசனைக் கூறுபவர்களாகவும், பல்வேறு புதிய கோவில்கள் ஏற்படும் போது அவற்றில் புரோகிதம் செய்வதற்காகவும் இடம் பெயர்ந்தனர். கோவில்களின் எண்ணிக்கையைப் பொருத்தே அந்த அந்த ஊர்களில் பார்பனர்களின் எண்ணிக்கையும் இருந்தது, குறிப்பாக கும்பகோணம் காஞ்சிபுரம் ஆகிய சிறு நகரங்களில் பார்பனர்களின் எண்ணிக்கை கனிசமான அளவில் உண்டு. மற்ற ஊர்களில் பார்பனர்களிடம் நிலம் இருந்தாலும் பெரும்பாலும் குத்தகை சாகுபடியாகத்தான் நில மேலாண்மை செய்து வந்தார்கள். மக்கள் தொகை உயர உயர அனைத்து பார்பனர்களுக்கும் கோவில்களில் வேலை வாய்ப்பு என்பது கூட்டுக் குடித்தனம் போல் கோவில் வருமானத்தை பிரித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது, அதில் நிகர வருமானம் குறையவே வெள்ளைக்காரர்கள் ஆண்ட போது அவர்களுக்கு உயர் அதிகாரியாக ஆகுவதன் மூலம் கனிசமான வருமானம் வரவே படித்த பார்பனர்களில் பலர் வெள்ளைக்காரர்கள் தலைமைகளாக செயல்பட்ட சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் வெள்ளைக்காரர்களின் கீழ் வேலை செய்ய இறங்கிவிட்டனர். அதுவரை அக்ரகாரங்களில் சூழ்ந்திருந்த பார்பனர்கள் நகரங்களுக்கு தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டார்கள். புரோகிதம், நிலமேலாண்மை இது தவிர்த்து வேறெந்த தொழிலும் தெரியாத பார்பனர்கள் (உடலைத் தொட்டு செய்யும்) மருத்துவம், இராணுவம் மற்றும் ஏனைய அரசு உயர் பதவிகளில் போய் அமர்ந்து கொண்டது இப்படித்தான். இதற்கு விலையாக அதுகாரும் அவர்கள் கட்டிக்காத்துவந்த தீண்டாமை மற்றும் ஏனைய சமூகத் தீட்டுகளை புறம் தள்ள வேண்டி இருந்தது.


திருவாளர் சோ இராமசாமி என்ன சொல்கிறார் என்றால்

"புரோகிதத் தொழிலில் வருமானம் இல்லை, முன்பிருந்த கௌரவமும் இல்லை ஆகவே புரோகிதர்கள் இம்மாதிரி செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். டாக்டரின் மகன் டாக்டர், வக்கீலின் மகன் வக்கீல், அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி. ஏனெனில் அத்தொழில்களில் வருமானம், அதிகாரம், கௌரவம் எல்லாம் உண்டு. அப்படியிருந்தும் தொழில் செய்யும் புரோகிதர்கள் வணக்கத்துக்குரியவர்களே. புரோகிதர் இல்லாத திருமணம் என்றதும் பகுத்தறிவு கல்யாணம் என்று வந்து அதிக செலவு செய்து நடத்துபவர்கள் பகுத்தறிவு கருமாதியும் செய்வதுதானே எனக் கேட்கிறார். ஆனால் செய்ய மாட்டார்கள், ஏனெனில் அதில் கௌரவம் இல்லை. ஆனால் புரோகிதர் அதையும் செய்கிறார் என்கிறார் சோ." - நன்றி திருவாளர் டோண்டு

தேவநாதன் கூட புரோகிதம் தான் செய்தான், அவனெல்லாம் வணக்கத்துக்கு உரியவனா ? புரோகிதத்தொழில் வருமானம் இல்லாமல் இல்லை, ஆனால் அது போதும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். பார்பனர்கள் புரோகிதம் பார்ப்பது மிகச் சிறிய கோவில்களோ, பாழடைந்த கோவில்களோ அல்ல, பெரும்பாலும் ஆறுகால பூசைக்கு வருமானம் உள்ள கோவில்களில் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். சோ இராமசாமியின் கூற்று படி "டாக்டரின் மகன் டாக்டர், வக்கீலின் மகன் வக்கீல், அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி. ஏனெனில் அத்தொழில்களில் வருமானம், அதிகாரம், கௌரவம் எல்லாம் உண்டு" ஆக பார்பனர்கள் இது காரும் கூறி வந்த குல கவுரவம், வேதம் வேதாந்தம் இத்யாதிகள் யாவும் வருமானம் இல்லை என்றால் அவற்றைக் கட்டிக்காக்க தேவை இல்லை என்கிற ஒப்புதல் போலவே உள்ளது. ஏனெனில் டாக்டர், வக்கில், அரசியல் ஆகியவற்றில் கனிசமான அளவு பார்பனர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் சோ இராமசாமியின் கூற்றுபடி, மலம் அள்ளுபவன் கவுரப்படுத்தப்பட்டு நல்ல வருமானமும் கிடைக்கப்பெற்றால் மலம் சுமப்பதும் தவறு அல்ல என்றும் பார்பனர்களும் அள்ளலாம் என்றே சொல்லுவார் போல் தெரிகிறது. எல்லாம் பிழைப்பு வாதத்திற்கான வேசமே என்று திருவாய் மலர்ந்துவிட்டு 'வேதந்த விளக்கப்படி அனைத்து அம்சங்களு நிறைந்த பிராமணன் என என்றுமே இல்லாத பிராமணனை எதற்கு தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை. சோ இராமசாமி குறிப்பிட்ட படி ஈமச் சடங்குகள் செய்யும் பார்பனர்கள் மிக மிகக் குறைவு, அதைச் செய்யும் பார்பனர்கள் பார்பனர்களுக்குள்ளேயே விலக்கி வைக்கப்படுகின்றனர். அவர்களை சவுண்டி பார்பான் என்று சொல்வது ஒரு சிலருக்கு தெரியலாம்.

இன்றும் சாதிக் கொடுமை கிராமங்களில் இருக்கிறது, இரட்டை குவளை முறைகள் கூட அமுலில் இருக்கின்றன அது தொடர்வதற்கு பார்பனர்கள் காரணமில்லை என்பது போலவே அவர்கள் அந்த கிராமங்களை விட்டு எப்போதோ வெளி ஏறிவிட்டார்கள் என்பதும் உண்மை தான். நினைவுச் சின்னங்கள் / அவமானச் சின்னங்கள் அதைக் கட்டியவர்கள் இருக்கும் வரை தான் காப்பாற்றப்பட்டப்பட்டிருக்கிறது என்பதற்கான உலக வரலாறுகள் குறைவு, சமூக (சாதி) அமைப்புகளிலும் அப்படித்தான் ஒரிரு ஆண்டுகளில் மாற்றம் ஏற்பட்டுவிடாது.

சோ இராம்சாமியின் 'எங்கே பிராமணன் ?' தேடல் படி ஒரு பார்பனர் தன்னை பிராமணன் என்று நம்பினால் பிச்சை எடுத்து உண்ண வேண்டுமாம். பிற்போக்கு வாதிகளை பின்பற்றினால் பிச்சை எடுக்க வேண்டி இருக்கும் என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பார்பனர்கள் தம்மை பிராமணர்கள் என்று கருதிய காலங்களில் தீண்டாமையும், சமூக ஏற்றத் தாழ்வுகளும் தலைவிரித்து ஆடின, சோ இராமசாமியின் 'எங்கே பிராமணன் ?' தேடல் கூட அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்கிற கெடுதலான எண்ணமோ !

6 ஜனவரி, 2010

கண்ட கண்ட மின்னனு பொருள்களை வாங்குபவரா நீங்கள் ?

'கடைவிரித்தேன் கொள்முதல் செய்ய ஆள் இல்லை' என்னும் அளவுக்கு மின்னனு வீட்டுப் பயன்பாட்டுப் பொருள்களை சீனாவும் ஏனைய நாடுகளும் ஆயத்தம் செய்து விற்பனைக்கு அனுப்புகின்றன. ஒரு பக்கம் தேவை என்பதைவிட மலிவாக விற்கிறது என்பதற்காக கண்டதையும் வாங்கிக் குவிப்போர் உண்டு. மின்னனு பொருள்கள் குறிப்பாக படக் கருவி (கேமரா) தொழில் நுட்பம் எந்த அளவுக்குப் தனிமனிதனுக்கு பயன்படுகிறதோ, அதே அளவுக்கு சமூக எதிரிகளுக்கு பயனளிக்கிறது. அசைப் படக் கருவியின் பயன்கள் எத்தகையதாக இருந்தாலும் குற்றத் தடுப்பிற்கும், குற்றச் செயலுக்கும் அதுவே ஏதுவாக அமைந்திவிடுகிறது. எந்த ஒரு கண்டுபிடிப்பின் பயனும் கெடுதலும் அதைப் பயன்படுத்தும் முறையில் தான் இருக்கிறது. படக்கருவிகளைப் பொருத்த அளவில் காட்சிகளை பதிய வைக்கும் தொழில் நுட்பம் இருக்கிறதேயன்றி எந்தக் காட்சியை பதிய வைக்க முடியாது என்பதற்கு எந்த தொழில் நுட்பமும் கிடையாது என்பதால் தான் கருவரையிலேயே (கர்பப் பைதான், வேற ஒன்றும் இல்லை) பயன்படுத்தி கருவின் வளர்ச்சிகளைக் கூட தெரிந்து கொள்ள முடிகிறது.

தற்கொலைகளையும், கொலைகளையும் படமெடுக்கும் கேமராவால் அதைத் தடுப்பதற்கோ, அதைப் படம் பிடிக்காமல் இருக்கவோ எந்த ஒரு தடையும் இல்லை. அதாவது கேமரா நுட்பம் என்பதில் எந்த ஒரு புனிதத் தன்மையும் இல்லை, அது ஒரு தொழில் நுட்பத்தின் வழியாக புலன் நீட்டிக்க மற்றும் பதிவு செய்து பார்க்கும் வசதி கொண்ட ஒரு படக் கருவி மட்டுமே. கேமரா ஒரு கடவுள் போல கண்ணுக்கு முன்னால் எந்த அநியாயம் நடந்தாலும் கண்டு கொள்ளாது, போட்டுக் கொடுக்க பதிய வைத்துக் கொள்ளும். :)

இப்போதெல்லாம் மலிவு விலையில் கவர்ச்சிகரமான மின்னனு பொருள்கள் கிடைக்கின்றன. இவற்றை மலிவு விலையில் விற்பதற்கு மறை முகக் காராணங்களும் உள்ளன. டிஜிட்டல் டிவி என்கோடர் என்பது ஒரு மின்னனு கருவி, இதன் மூலம் இணையத்திலிருந்து படக் காட்சிகளை தொலைக்காட்சிப் பெட்டியுடன் இணைத்துக் கொள்ளலாம். பெரும்பாலும் பலர் தொலைக்காட்சிப் பெட்டிகளை படுக்கை அறையில் வைத்திருப்பார்கள். தூங்கும் முன்பு பார்த்துவிட்டு கண் அயர்ந்ததும் தூங்கலாம் அல்லது தூக்கம் வரவில்லை என்றால் ஓடவிட்டுப் பார்க்கலாம் என்பதற்காக நடுத்தர வருமான இல்லங்களிலும் கூட படுக்கை அறையில் தொலைக்காட்சி கருவிகள் இருப்பது பொதுவானவையே. தொலைக்காட்சியுடன் தொடர்புடைய மலிவு விலைக்கருவிகளின் குறியும் (டார்கெட்) அது தான். இது போன்ற கருவிகளில் ஒலிவாங்கியுடன் கூடிய படக்கருவியை கருவியுனுள் வெளியே தெரியாதபடி இணைத்து படுக்கை அறைக் காட்சிகளை படம் எடுத்து அதை நேரடியாக அதிவேக அலைவரிசை (RF) வழியாக அல்லது இணைய வழியாகவே சமூக எதிரிகளால் பதியப்பட்டு விடுகிறதாம்.

அனைத்துலக நீலப்பட விற்பனையில் இல்லங்களில் இருந்து எடுக்கப்படும் நீலப்படங்களுக்கு ஏகப்பட்ட மவுசு.நமக்கு தெரியாமலேயே நம் வீட்டுப் படுக்கை அறைக் காட்சிகள் உலகமெங்கும் சிடிகளாக வலம் வரும் அச்சமும், அவமானமும் அடையும் கொடுமைகள் நடந்துவிடலாம். எதற்கும் புதிய வகை எலக்ட்ரானிக் கருவிகளை வாங்கும் போது எச்சரிக்கையாக இருப்பது நல்லது. எலக்ட்ரானிக் கருவிகளில் அல்ட்ரா வேவ் எனும் தொழில் நுட்பம் வழியாக ரீமூட் கண்ட்ரோல் எனப்படும் தொலை இயக்கி வழியாக இயங்கும் படி அனைத்து வீட்டு மின்னனுகருவிகளுமே அமைக்கப்பட்டு இருக்கிறது. அவற்றில் அல்டாரா வேவ் இயக்கத்திற்காக கருவிப் பெட்டிகளில் சிறிய வட்டமான கண்ணாடித் திரைகள் உண்டு. அதில் ஒன்றுக்கும் மேற்பட்டு இருந்தால் அல்லது நீளமான மெல்லிய கண்ணாடி அல்லது ஒளி ஓடுருவக் கூடிய அளவுக்கு கண்ணாடித் தடுப்புகளின் பின்னால் இண்டிகேட் எல்இடிகள் கருவி இயக்கத்தை காட்டுவதற்கு அமைக்கப்பட்டு இருக்கும் (That means brown or transparent glass front panel) அதனுள் ரகசிய கேமராக்கள் பொருத்தி இருந்தால் நமக்கு தெரிய வாய்ப்பு இல்லை. நம்பக நிறுவனங்கள் தவிர்த்து பிற மலிவு விலை எலெக்ட்ரானிக் பொருள்களை வாங்குவோர் எச்சரிக்கையுடன் வாங்கி சோதித்துப் பார்த்துவிட்டு கேமாராக்கள் எதுவும் இல்லை என்றால் பயன்படுத்தலாம். முடிந்த அளவுக்கு மலிவு விலைப் பொருள்களை புறக்கணிப்பதே நல்லது.



இந்த வீடியோவின் நம்பகத் தன்மை எத்தகையது என்று தெரியவில்லை. சீனத் தயாரிப்புகளை / மலிவு விலை தயாரிப்புகளை புறக்கணிக்க /விற்பனையை முடக்க பிற நாடுகளால் அவதூறு கிளப்பி விடக் கூட இந்த வீடியோ தயாரிக்கப்பட்டு இருக்கலாம். இருந்தாலும் தற்போதைய தொழில் நுட்பத்தால் ஒருவருக்கு தெரியாமல் அவர் பயன்படுத்தும் கருவி வழியாக அவரது படுக்கை அறையைக் கூட கண்காணிக்க முடியும் என்பதற்கான கூறுகள் உள்ளன என்பதை நாம் தகவலாக எடுத்துக் கொள்ள வேண்டும்

ஏசு காத்திருக்கிறார் !

சென்றவாரம் படித்த தகவல் மத நம்பிக்கைகளில் மற்றொரு மூடத்தனத்தை வெளிச்சமிட்டிருந்தது. அதாவது கருத்தடை செய்து கொள்வதால் ஏசுவின் (மறு) வருகை காலம் எடுத்துக் கொள்கிறது என்று யூதர்கள் கருதுகிறார்களாம். இயற்கையை மனிதன் கட்டுபடுத்த முடியாது, ஆனால் அதிலிருந்து சற்று விலகி இருக்க முடியும், அல்லது இயற்கையின் செயல்பாடுகளை ஓரளவு அறிந்து கொள்ள முடியும், அல்லது இயற்கையை நன்கு ஆராய்வதால் அதன் ஒழுங்கை அறிந்து கொண்டு அதை நாம் பயன்படுத்திக் கொள்ள முடியும்.ம். இதைத்தான் அறிவியல் அல்லது மனித நாகரீக வளர்ச்சி என்கிறார்கள். இயற்கையில் இருந்து விலகி இருத்தல் என்பது புயல், கடும் மழை, வெயில் போன்றவற்றில் இருந்து தற்காத்துக் கொள்ள அதனைத் தாங்கும் வீடுகளை அமைத்துக் கொள்ளுதல் மற்றும் பல. இயற்கையின் செயல்பாடுகள் என்பவை காற்று அடிக்கும் திசை, பருவ காலங்கள் மற்றும் வேதியல், இயற்பியல் விதிகள். இயற்கையின் ஒழுங்கு என்பவை பூமி சுற்றும் கால அளவுகள், மற்றும் புவியின் சுற்றுப்பாதை, புவி ஈர்ப்பு தன்மை ஆகியவை, இவற்றை ஆராய்ந்து அதன் தன்மைக்கு ஈடுகொடுத்து பறக்கும் இயந்திரங்களை அமைத்துக் கொண்டு நாம் அதில் பயணம் செய்வது. இவையெல்லாம் அறிவியல் ரீதியானவை, மனித வாழ்க்கைக்குப் பயன்படும் மருத்துவமும் அறிவியலே. உடலியல் காரணங்கள் தவிர்த்து பருவ மடைந்த ஆண் / பெண் கூடும் போது, சரியான சூழல் வாய்க்கப்பட்டால் கருத்தரிப்பதும், அதன் வழியான இனப்பெருக்கமும் இயற்கையானதே. உடல் உறவு என்னும் செயலின் பக்கவிளைவான கருத்தரித்தலைக் கட்டுப்படுத்துவதன் மூலம் இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று கண்டு கொண்டு கருமுட்டையும் விந்தும் சேருவதைத் தடுப்பது தான் கருத்தடை எனப்படுகிறது, இது பற்றி பருவமடைந்த அனைவரும் அறிந்தது தான். கருத்தடை தேவையின் பொதுவானக் காரணம் மிகவும் வெளிப்படையானது, மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துதல், அளவான இல்லம், விரும்பும் போது பெற்றுக் கொள்ளுதல். இதைத் தவிர்த்து பிற காரணங்கள் ஆகிய யாவும் நிரந்தர, தற்காலிக கருத்தடைகளுக்குள் வந்துவிடும்.

மரம் செடி கொடி மற்றும் ஏனைய உயிரினங்கள் யாவும் மறு சுழற்ச்சி அல்லது உணவு சுழற்சி ஆகியவற்றிற்குள் வருவதால் அவற்றிற்கான இனப்பெருக்கம் இயற்கையிலேயே கட்டுப்படுத்தப்பட்ட ஒன்று தான். அதாவது இனப்பெருக்கக் கட்டுபாடு என்பவை இயற்கையுடன் இணைந்த வாழ்கையாக வாழும் உயிரினங்கள் அனைத்தின் மீதும் ஏற்கனவே இருக்கிறது. சிந்திக்கத் தெரிந்த மனித இனம் இயற்கைப் பேரிடர் அல்ல்து இனப் போர் ஆகியவற்றைத் தவிர்த்து இனப்பெருக்கக் கட்டுப்பாடுகள் எதுவும் நேரடியாக இல்லை. கட்டுப்படுத்துவது தெய்வக் குற்றம் என்பதாக மதவாதிகள் பல்வேறு காரணங்களைச் சொல்கிறார்கள். ஆணிய சமூகம் பெண்களை மதக்காரணங்களைச் சுட்டி மனித ஒற்றெடுக்கும் (copy) இயந்திரங்களாகாவே பயன்படுத்தி வந்திருக்கிறது. பெருகும் மக்கள் தொகை பட்டினிச்சாவு, இயற்கைப் பேரிடர் போன்ற புற இனப்பெருக்கக் கட்டுப்பாடுகளைத் தவிர்த்துப் பார்த்தால் மனித இனப்பெருக்கத்தைக் கட்டுப்படுத்த இயற்கையும் திணறிப் போகிறது. மனித இனம் பெருகுவதற்கேற்ப காடுகள் அழிக்கப்பட்டு நகரங்கள் ஆவதும், தேவைக்கேற்ப விளைச்சல் நிலங்கள் ஏற்படுத்துவதாலும், தொழிற்சாலைகளின் பெருக்கத்தாலும் புவி வெப்பமடைந்ததுடன், சுற்றுச் சூழல் என்பது இன்றைக்கு அறைகூவலாகவே அச்சமூட்டுகிறது. மனித இனப்பெருக்கம் கட்டுப்படுத்தாவிட்டால் அது மேலும் தீவிரம் அடையும் என்பதைத் தவிர்த்து ஒன்றும் இல்லை. புஷ் போன்றவர்கள் இந்தியர்களும் சீனர்களும் மிகுதியாகச் சாப்பிடுகிறார்கள் அதனால் தான் சுற்றுச் சூழல் கெடுகிறது என்பதாகக் கிளப்பிவிடுகிறார்கள். மிகுதியாகச் சாப்பிடுவது என்பது எண்ணிக்கை அடிப்படையிலான ஒன்றே அன்றி தனி மனிதனைப் பொறுத்ததும் அல்ல.

வேறு எந்தக் காரணங்களுக்காக கருத்தடைகள் தேவை என்பதைவிட சுற்றுச் சூழல் பாதுக்காப்பிற்காக மனித இனப் பெருக்கம் கட்டுப்படுத்துவது மிக மிக தேவையான ஒன்றே. ஏனெனில் இயற்கைச் சூழலில் உயிரினங்கள் அனைத்திலுமான உணவு சுழற்சி அமைப்பு அவற்றின் இனப் பெருக்கத்தை ஏற்கனவே கட்டுப்படுத்துகிறது, அவற்றின் உற்பத்தியை விட மிகுதியாக வேட்டையாடினால் தான் மனித இனத்திற்கு தேவையான உணவை பெற முடியும் என்கிற நிலையில் பல்வேறு உயிரினங்கள் அழிந்து வருகின்றன. கருத்தடை எதிர்ப்புக்கு மத ரீதியான காரணங்களை இயற்கை ஆர்வலர்கள் நிராகரிப்பது மனித குலத்துக்கு நல்லது. ஏசு பிறக்க கருத்தடை தடையாக இருக்கிறது என்பது ஏசு மீதே நம்பிக்கை இன்றிய வாதம், ஏனெனில் ஏசு பிறக்க வேண்டுமென்றால் பிறக்க வேண்டிய நேரத்தில் சரியாக பிறப்பார்.

யூதர்களின் இறைத் தூதர் மெசையா கூற்றுபடி ஏசு பிறந்ததை யூதர்கள் நம்பவில்லை, மெசையா சுட்டிய ஏசுவை ரோமானியர்கள் ஏற்றுக் கொண்டார்கள், யூதர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. யூதர்களைப் பொருத்த அளவில் ஏசு இன்னும் பிறக்கவே இல்லை. ஏசுவிற்கு பிறகான ஆப்ராகமிய மதங்களின் மற்றொரு இறைத் தூதரான முகமது நபியை யூதர்கள் மற்றும் ரோமானியர்கள் உட்பட அனைத்து கிறித்துவர்களும் நம்பவில்லை, ஏற்றுக் கொள்ளவில்லை. இவர்களின் வேத நூல்களின் படி இன்னொரு மீட்பர் வந்தாலும் ஏற்கனவே இருந்த நடைமுறைகளின் படி யூத, கிறித்துவ, இஸ்லாமியர் ஆகிய மூவருமே நம்பப் போவதில்லை. ஏனெனில் தாம் தான் அந்த இறைத் தூதர் என்று ஏசு, முகமது ஆகியோர் சொன்ன போது அதற்கு முந்தைய நம்பிக்கையாளர்களால் நிராகரிக்கப்பட்டே வந்திருப்பது கவனிக்கத் தக்கது. ஆப்ரகாமிய நம்பிக்கைகளின் படி இன்னொரு இறைத் தூதர் வந்தாலும் யூதர், கிறித்துவர், இஸ்லாமியர்களால் கண்டிப்பாக புறக்கணிக்கப் படுவார், காரணம் மிக வெளிப்படையானதும் ஏற்கனவே நடப்பில் இருந்தது என்றும் சொல்லலாம். இன்னொரு இறைத் தூதர் வந்தால் எப்படி அறிந்து கொள்வீர்கள் என்று கிறித்துவ, இஸ்லாமிய நண்பர்களிடம் கேட்ட போது 'நம்பிக்கையாளர்களுக்கு உள்ளுணர்வு அவர்களை நம்பச் சொல்லும்' என்றார்கள். ஏசு இறைத் தூதர் என்று யூதர்களுக்கு எந்த உள்ளுணர்வும் ஏற்பட வில்லை, இதுவே முகமதின் வருகையின் போதும் எந்த கிறித்துவர்களுக்கும் உள்ளுணர்வு ஏற்பட்டிருக்க இல்லை, புதிதாக வரும் தூதர் எந்தவிதமான உள்ளுணர்வை ஏற்படுத்தப் போகிறார் ? முகமது இறுதி இறைத் தூதர் என்பது இஸ்லாமிய நம்பிக்கை, அல்லாவே நினைத்தாலும் கூட ஏற்கனவே இருக்கும் இறுதித் தூதர் நம்பிக்கையால் இன்னொரு இறைத் தூதரை இஸ்லாமியர்களுக்கு புதிதாகக் கொடுத்துவிட முடியாது.

ஏசு காத்திருக்கிறார் இன்னொரு புதிய மதம் உருவா(க்)கும் காலத்திற்காக.

4 ஜனவரி, 2010

கூகுள் - நீயூட்டன் ஆப்பிள் !

இன்று காலையில் கூகுளை திறந்த உடன் கூகுள் தேடு பொறியின் எழுத்து ஆப்பிள் அணிந்திருந்தது, அதிலிருந்து ஒரு ஆப்பிள் ஓசை இல்லாமல் விழுந்தது, எனக்கு இருக்கும் (அறிவியல்) அறிவைக் கொண்டு அது சட்டென்று என்னவென்று ஊகித்து அறியமுடியவில்லை, சரி என்ன வென்று பார்போம் என்று ஆப்பிள் மீது அழுத்தினேன், தேடு பொறியில் 'isaac newton' என்று தேடச் சொல்லி வந்தது.

அந்தத் தேடலில் முதலிலேயே விக்கிப் பீடியாவின் ஐசக் நியூட்டன் குறித்த கட்டுரை... அதன் முதல் வரியிலேயே இன்று ஐசக் நியூட்டனின் பிறந்த நாள் என்று அறியும் விதமாக,

Sir Isaac Newton FRS (4 January 1643 – 31 March 1727 [OS: 25 December 1642 – 20 March 1727])[1] was an English physicist, mathematician, astronomer, natural philosopher, alchemist, and theologian who is perceived and considered by a substantial number of scholars and the general public as one of the most influential scientists in history.

தகவல்கள் இருந்தன.

அறிவியல் கண்டுபிடிப்புகளில் புவி ஈர்ப்பு பற்றிய அறிந்து கொண்டவையே எடை மற்றும் வேகம் ஆகியவற்றின் உண்மைகளை புலப்படுத்தியது, நியூட்டன் கலிலியோ மறைவிற்கு பின் அடுத்த ஆண்டு பிறந்தவர் இங்கிலாந்தைச் சேர்ந்தவர். அறிவியலின் தந்தைகளுள் இவரும் ஒருவர்.



நியூட்டனுக்கு என் சார்பில் ஒரு மிகப் பெரிய '.......'

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்