பின்பற்றுபவர்கள்

30 ஜூன், 2010

ஆத்திக நாத்திகருக்கான பொதுக்கடவுள் !

நம்பிக்கை என்பது தவிர்த்து எந்த ஒரு தரவும் இல்லாத ஒன்று கடவுள் நம்பிக்கை என்று சொன்னால் அதை மறுக்க எவரும் கிடையாது அல்லது நம்பிக்கை என்பது தவிர்த்து கடவுள் இருப்பிற்கான நிருபனம் எதுவுமே இல்லை என்பது பொதுவான ஆத்திக கூற்று. நம்பிக்கைகள் நிருபனம் ஆகாது அல்லது நம்பிக்கைகளுக்கு நிருபனம் தேவை இல்லை என்கிற முரணான கூற்றுகள் புரிந்துணர்வின் அடிப்படையில் ஒருவாறு ஏற்றுக் கொள்ளப்படுகிறது. நிருபனத்திற்கு அப்பாற்பட்ட நம்பிக்கைகள் கொண்டவர்கள் ஆத்திகர்கள் மட்டுமே என்பது தவறான கூற்று ஆகும், நாத்திகர்களுக்கும் நம்பிக்கைகள் உண்டு, ஆனால் அவை நம்பிக்கைகள் என்பதாக கருதப்படாததால் அதுபற்றி பொதுவாக யாரும் பேசுவதில்லை.

குறிப்பாக காலம் அல்லது நேரம் இவை. காலம் அல்லது நேரம் இவை உண்மையிலேயே இருக்கிறதா என்று பார்த்தால், அப்படி எதுவும் அறுதி இட்டு சொல்ல முடியாது. நமது நேரம் மற்றும் கால கணக்கிடின் அடிப்படை முதலில் புவியின் இயக்கம் அதாவது பகல் இரவு, அதில் காலை, நண்பகல், மாலை, இரவு என்னும் பகுப்பாக அறியப்பட்டு, பின்னர் அந்தப் பகுப்பின் சுழற்சியை மணித்துளிகள், நொடித்துளிகள் என்பதாக மாற்றி நேரக்கணக்கிடுகளின் அடிப்படையும், திங்கள் வளர்ச்சி மற்றும் தேய்வு என்பதாக திங்கள் (மாதக்) கணக்கும், பிறகு பருவ காலங்களின் அடிப்படையில் ஆண்டு அடிப்படைகளும், பிறகு புவியின் சுழற்சியை துள்ளியமாக அறிந்த பிறகு லீப் ஆண்டு கணக்குகளும் ஏற்பட்டன. ஒட்டுமொத்த பரவெளி, பால்வெளி இயக்கத்தின் கணக்குகளும் தற்பொழுது புவி சுழற்சியின் அடிப்படையிலான மணித் துளிகள், ஆண்டுகள், (தொலைவுகள் ) ஒளி ஆண்டுகள் என்பதாக கணக்கிடப்படுகிறது.

நாம் இருப்பதாக நம்பும் கால நேரங்கள் உண்மையிலேயே எப்போதும் இருந்ததே இல்லை அல்லது எப்போதுமே இருக்கிறது. இவை பற்றிய பகுப்புகள் வரலாறுகள் அடிப்படையில் நம்மால் நம் வசதிக்கேற்ப முன்னோர்கள் அமைத்துக் கொண்ட ஒன்றே. சமூகம் என்பதை மனிதன் ஏற்படுத்திக் கொண்டது போலவே, தனக்கான கால நேரங்களை ஒரு ஒழுங்கு முறைக் கணக்குக்குள் மனிதன் அமைத்துக் கொண்டான். காலம் இருக்கிறது என்பது தற்போது ஆத்திகர் நாத்திகர் அல்லாது பொதுவாக மனித குல நம்பிக்கை ஆகிவிட்டிருக்கிறது. நாம் பகுத்து அறிந்து கொண்ட காலங்கள் எதுவும் பிற உயிரினங்களுக்கு தாவிர வகைக்களுக்கு நம்பிக்கை என்ற அளவில் கூட கிடையாது. நாம் தற்போது நடைமுறையில் வைத்திருக்கும் நாள் ஒன்றுக்கு 24 மணி நேரங்கள் என்பது கூட முன்பு இந்திய அளவில் நாள் ஒன்றுக்கு 60 நாழிகைகள் என்பதாக கணக்குகளாக இருந்தன. 24 மணி நேரம், 365 நாட்கள் இப்படியாக நாம் அமைத்துக் கொண்டவற்றிலும் நல்ல நேரம் கெட்ட நேரம் என்பவை எல்லாம் வெறும் கற்பனையே. இந்த கற்பனைகள் இல்லாவிட்டாலும் கூட நேரம், மணி (Time Exists) இவை எல்லாம் இருப்பதாகவே நாத்திகரும் நம்புகிறார்கள்.

நம்பிக்கைகள் கடவுள் என்றால், நாத்திகரும் நம்பும் கடவுள் நேரம் (Time), ஆனால் அவை இருக்கிறது என்றும் இல்லை என்றும் நினைப்பது யாவும் நம் நம்பிக்கையே. பரவெளி இயக்கம் என்னும் பேரியக்கச் செயலை நம் அறிவின் நுகர்சியால் உணரக்கூடிய, மிக குறுகிய கால எல்லைக்குட்பட்ட,பகல் இரவு புவி இயக்கத்தின் ஊடாக அளக்க முயற்சிக்கிறோம். அதை முற்றிலும் அளக்க முடியாத சூழலில் பரவெளி இயங்குகிறது என்பதாக நாம் உணர்ந்து கொண்டிருக்கிறோம். பெருவெடிப்பு நிகழ்ந்தகாக பில்லியன், ட்ரில்லியன் (அதற்குமேல் எண்ணியலை மனிதனால் கற்பனை செய்து கொள்ள முடியவில்லை) களில் ஆண்டுகணக்கைச் சொல்லுகிறார்கள். பெருங்கடலை அளவிட இன்னும் பீப்பாய்கள் தவிர்த்து பெரிய களன் அளவைகள் கிடையாது. வேண்டுமானால் பெருங்கடளின் கொள்ளளவு பல கடல்களை உள்ளடக்கியது என்று மட்டுமே தோராயமாகச் சொல்ல முடியும். குழப்ப(ம்) ஒன்றும் இல்லை :), நம்மால் கற்பனை செய்ய முடியாதவற்றின் அளவுகளை நம் கற்பனைக்குள் உள்ள அளவிடுகளை வைத்து அளக்க முயற்சிக்கிறோம் என்பதாக புரிந்து கொள்ள வேண்டும்.

கற்பனைக்கு அப்பாற்பட்டவற்றை கற்பனைக் கட்டுக்குள் கொண்டுவர எளிதான வழி நம்பிக்கை. பலரால் ஏற்றுக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பது கால நம்பிக்கை. இரண்டிம் கற்பனைகளுக்கு ஒழுங்குவடிவம் கொடுத்திருந்தாலும், ஓரளவுக்கு ஒழுங்கான வடிவமாக இருப்பது காலம் தான். அதுவும் புவி தன் வட்டப்பாதையை மாற்றிக் கொள்ளாதவரை, சுழற்சியில் சோர்ந்து போகதவரை மட்டுமே.

பயன் கருதி அமைத்துக் கொண்டு வரையறை செய்யப்பட்டுள்ளது காலம், பயன் இருக்குமா இருக்காதா என்பதைவிட பயத்தினால் அமைத்துக் கொள்ளப்பட்டது கடவுள் நம்பிக்கை. காலம் அல்லது நேரம் ஆத்திக நாத்திகருக்கான பொது நம்பிக்கை என்றாலும் காலத்தை அனைவருமே வணங்குவதில்லை. காலக் கற்பனையின் எல்லைக்குட்பட்ட உருவ(க)ம் மணியாரம்(கடிகாரம்).

நாத்திகரும் நம்பும் கடவுள் "கால" பைரவன் :)

29 ஜூன், 2010

தற்பெருமை (க.அ.உ) !

சாயங்காலம் அலுவலகம் முடிந்து வீட்டுக்குச் செல்லும் வழியில் நல்ல பசி, இடையில் பேருந்து மாற வேண்டி இருந்தது, நல்லவேளை அங்கு கோமளாஸ் உணவகம் இருந்தது, சாப்பிட சிற்றுண்டிகளை வாங்கிக் கொண்டு உணவு மேசையில் அமர்ந்து உண்டு கொண்டிருந்தேன், கூட்டம் மிகுதியானதால் இருவர் அமரும் சிறிய மேசையே கிடைத்தது, எதிரில் இன்னொருவர் அமர்ந்து உண்ணலாம். எதிர்பார்க்காதபடி இன்னொரு இந்திய ஆடவர் 30 வயதிருக்கும் அவரும் எதோ ஒரு சிற்றுண்டியை வாங்கிக் கொண்டு வந்து எதிரில் வந்து, 'இங்கே உட்காரலாமா ?' என்று அனுமதி கேட்டு அமர்ந்தார்.

வழக்கமாக எதிரில் அமர்ந்திருபவர் முகம் பார்க்காது உண்ணுவது தான் எனது வழக்கம், அவராகவே...

'என்னங்க .......நீங்க இந்தியாவில் இருந்து வந்திருக்கிங்களா ?' என்று கேட்டார்

மனதுக்குள் 'பரவாயில்லையே.....நம்ம ஆட்கள் கூச்சப்படாமல் அறிமுகம் ஆகாதவர்களை விசாரிக்கிறார்கள், நாம முந்திக் கொண்டு கேட்டு இருக்கலாம்.....நமக்குத்தான் ஈகோவோ ?' என்றெல்லாம் நினைத்துக் கொண்டே,

'ஆமாங்க.....நான் இந்தியா...தமிழ்நாட்டில் இருந்து வந்தேன்.....வந்து பத்து ஆண்டுகள் ஆகிற்று' என்றேன்

நாம பத்து ஆண்டுகளாக இருக்கோம் என்று சொன்னால் நம்மை மேலும் மதிப்பார்கள் என்பதாக கேட்காமலேயே கூடுதல் தகவலாக சொல்லிக் கொண்டு இருந்தேன்

'எங்கே வேலை செய்றிங்க.....?' என்றார்

'நீங்க ஐட்டியில் வேலை செய்றிங்களா ?' கேட்டேன்

'எப்படி கரெக்டாக கேட்கிறிங்க ?' என்றார்

'முழுக்கை சட்டையோட்.....இன்சர்ட் செய்து.....மாலை நேரத்திலும் கசங்காத உடை......இதைப் பார்த்தாலே நீங்க ஐட்டின்னு தெரியுது' என்றேன் 'நாம அறிவாளி என்பதை நம்ம ஊகமே வெளிப்படுத்துது என்பதை எதிரே உள்ளவர் நினைத்து வியப்படையனும்....என்ற எண்ணம் உள்ளுக்குள் ஓடி என் உச்சி குளிர்ந்து கொண்டிருந்தது...எதிர்பார்த்தபடியே அதே போன்ற வியப்பை முகத்தில் காட்டினார்....

'நான் இங்கே தான் பக்கத்தில் ஒரு சீன நிறுவனத்தில் சிஸ்டம் என்ஜினியராக இருக்கிறேன்' என்றேன்

'க்ளையண்ட் ப்ளேசா ?'

'இல்லிங்க.....அதுதான் கம்பெணியே' என்றேன்

என் பெயரெல்லாம் கேட்டு....

'உங்களுக்கு திருமணம் ஆச்சா ?' என்றார்

'அதெல்லாம் எப்போவோ ஆச்சு.......பத்து ஆண்டுகள் ஆச்சு...இப்ப எனக்கு 9 வயதில் மகள் இருக்கிறாள்.......என் வயது.....இப்ப' என்பதாக சொன்னேன்

மறுபடியும் வியப்பு காட்டினார்

அதற்குள் உணவை உண்டு முடித்துவிட்டு....மேலும் நம்மைப் பற்றி நம்பும் படி இருக்கட்டும் என்பதாக விசிட்டிங்க் கார்டையும் கொடுத்துவிட்டு கைகழுவ சென்றேன், கைகழுவும் இடம் எதிரில் என்பதால் எனது அலுவலக பை அங்கேயே விட்டுச் சென்றேன்.

திரும்ப வந்து பையை எடுத்துக் கொண்டு அவருடன் மேலும் பேச காலம் போதவில்லை என்பதால்

'மறக்காம மெயில் போடுங்க, அதில் மெயில் ஐடி இருக்கு.......' என்றேன்

'மொபைல் போன் நம்பர் கொடுக்கிறிங்களா ?'

'அதிலேயே இருக்குங்க' என்பதுடன் அதைக் காட்டிவிட்டு

'நான் தமிழ் ப்ளாக்ஸெல்லாம் எழுதுவேன்.....உங்களுக்கு அனுப்பி வைக்கிறேன்....மெயில் போடுங்க' என்று கூறி விடைபெற....

'கண்டிப்பாக போடுறேங்க' என்றார்

ஐந்தடி சென்றதும்.........'ச்சே........நம்ம பேரு தகவெல்லாம் கேட்டார்......பதிலுக்கு நாம அவர் பேரைக் கூட கேட்கவில்லையே என்பதாக நினைத்து வந்து.....திரும்பி வந்து

'சாரி..... உங்க பேரை கேட்க மறந்துட்டேன்........'

'என் பேரு கிருஷ்ணா' என்றார் (உண்மை பெயர் மாற்றப்பட்டுள்ளது)

******

பரவாயில்லை முன்பின் அறிமுகம் இல்லாதவர்களுடன் அறிமுகப்படுத்திக் கொண்டு பேசுபவர்கள் மிகக் குறைவு, இந்த காலத்தில் இப்படிப்பட்டவர்கள் கூட இருக்கிறார்களே.......நம்ம தமிழ் வலையுலகத்தை அறிமுகப்படுத்திவிட்டு தமிழ் சேவை ஆற்றுவோம்... ஆற்றவைப்போம்..என்றெல்லாம் நினைத்து கொண்டு திரும்பினேன்.....அவரு சும்மா சொன்னாரா......இப்போதெல்லாம் ஐட்டியில் வேலை செய்கிறாவர்களுக்கு நேரம் கிடைத்து, நினைத்துக் கொண்டு மெயில் போடுவர்கள் இருக்கிறார்களா......அவராகத்தானே அறிமுகப்படுத்திக் கொண்டார் கண்டிப்பாக மின் அஞ்சல் அனுப்புவார் என்று நினைத்துக் கொண்டே.....அடடா........நாம அவருடையை கைபேசி எண்ணை கேட்காமல் வந்துவிட்டோமே.... அது எப்படி நம்மைப் பார்த்தாலே நம்மிடம் வந்து பேசத் தோணுமோ.....அதான் முகராசி என்று சொல்லுவார்களோ......நினைக்க நினைக்க பெருமையாகக் கூட இருந்தது. வெள்ளிக்கிழமை மாலை நடந்த அந்த நிகழ்வை பிறகு மறந்தே போனேன்.

இருநாட்கள் சென்று ஞாயிற்றுக் கிழமை மாலை 7 மணிக்கு குட்டி இந்தியாவிற்கு சென்றேன்.....கூடவே இன்னொரு பதிவர் நண்பரும் வந்திருந்தார்.....இடையில் அலைபேசி அடித்தது, புதிய எண் அழைப்பு முகப்பில் தெரிந்தது

'ஹலோ........யார் பேசறது ?'

'நான் தான் கிருஷ்ணா ?'

மண்டைக்குள் அடித்த டார்ச்......அன்னிக்கு கோமளாசில் பார்த்து பேசியவர் என்று உணர

'சொல்லுங்க கிருஷ்ணா......அன்னிக்கு கோமளாசில் பார்த்தோமே......ரொம்ப மகிழ்ச்சி சரியாக நினைவு வைத்துப் மறக்காமல் பேசுகிறீர்கள்......மிக்க நன்றி'

'உங்க கிட்ட முக்கியமா ஒண்ணு பேசனும்.......அதான் அழைத்தேன்.....' என்றார்

'சொல்லுங்க சொல்லுங்க'

'இப்ப ஒண்ணும் டிஸ்டர்பன்ஸ் இல்லையே'

'அதெல்லாம் ஒண்ணும் இல்லை ......சொல்லுங்க'

'ஒரு ஈ காமர்ஸ் பிஸ்னஸ் நானும் நண்பரும் செய்கிறோம்.....பார்ட்னர்ஸ் தேவைப்படுது'

கொஞ்ச நாளாக எதாவது பிஸ்னஸ் செய்யதால் நல்லா இருக்கும் என்று அடிக்கடி சொல்லும் என் மூளைக்கு சற்று பிரகாசம் ஏற்பட அதற்காகவே காத்திருந்தது போல்

'ஓ தாரளமாக செய்யலாம்.....நேரில் வேண்டுமானாலும் வருகிறேன்.......சொல்லுங்க' என்றேன்

'நாளைக்கு மாலை ப்ரியா இருப்பிங்களா.......'

'இல்லிங்க நாளைக்கு கடினம் நண்பர் வீட்டில் டின்னருக்கு கூப்பிட்டு இருக்கிறார்கள்......நாளை மறுநாள் வேண்டுமானால் வருகிறேன்' என்றேன் உண்மையும் அது தான்.

'அப்ப சரி.......நாளை மறுநாள் அதாவது டே ஆப்டர் டுமாரோ பார்ப்போம்' என்றார்

'சரி......ஆனால் என்னால் மாலை 7 மணிக்கு மேல தான் வரமுடியும்'

'அது பரவாயில்லை......பிஸ்னஸ் பற்றி என்னுடைய ப்ரண்டு தான் சொல்லுவார் நானும் அவரும்....இன்னும் சிலரும் செய்கிறோம்.......நான் வரமாட்டேன்........என்னுடைய பிரண்டு தான் உங்களிடம் எக்ஸ்ப்ளைன் பண்ணுவார்' என்றார்

மண்டைக்குள் பழைய நினைவுகள் ஒன்று பளிச்சிட

'நீங்க என்ன மாதிரி பிஸினஸ் செய்றிங்க........இந்த ஆம்வே.....கீம்வேன்னு.........எதுக்கு நான் கேட்கிறேன் என்றால் அதிலெல்லாம் எனக்கு இண்ட்ரஸ்ட் இல்லை'

எதிர்முனையில் ஐந்து செகண்ட் கள்ள மவுனம்.......... மனதுக்குள் எனக்கு அப்பாடா தப்பித்தேன் என்கிற உணர்வு ஏற்பட்டது

'நீங்க ஏற்கனவே அதை செய்திருக்கிறீர்களா ?' என்றார்

'ஆமாங்க.....நான் செய்யல.......ஒரு நண்பர் கொண்டு போய் விட்டார்.........எனக்கு அதில் விருப்பமில்லை.......நான் செய்யவில்லை' என்றேன்

'ஏன் ஏன் ........'

'இல்லிங்க அதுபோன்ற பிஸினசில் எனக்கு விருப்பமில்லை...ஆம்வே என்றால் என்னை கூப்பிடாதிங்க.....' என்றேன்

சுருதி குறைய

'அப்ப சரி........ஓகே......' என்று அவர் சொல்ல

'ரொம்ப.................ப தாங்க்ஸ்... ! '

விசிட்டிங்க் கார்டெல்லாம் கொடுத்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்ளப் பார்த்து....அப்பாடா தப்பித்தோம்..... என்று நினைத்துக் கொண்டே நிம்மதி பெருமூச்சுடன் போனை துண்டித்தேன்.


பின்குறிப்பு : தலைப்பில் க.அ.உ - கதை அல்ல உண்மை

28 ஜூன், 2010

350 கோடி செலவில் இல்லவிழா !

தமிழர் நலனை புறக்கணிக்கும் மைய அரசு நூற்றாண்டுகள் (காலம்) கடந்து செம்மொழி என்னும் தகுதியை தமிழுக்கு கொடுத்ததால் தமிழ் தற்பொழுது தான் தாவணி உடுத்திக் கொண்டது போலவும், அதனால் "மஞ்சள்" நீராட்டுவிழா என்பதாக முதன் முதலில் தமிழுக்காக என்பதாக 18 ஆண்டுகளுக்கும் மேலாக பல்வேறு காலகட்டத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர் முதன் முறையாக மாநாடு நடத்திய கருணாநிதி அதை செம்மொழி மாநாடு என்று பெயரிட்டு நடத்தினார். முதல் செம்மொழி மாநாடு என்னும் பெயர் அரசியலில் இதுவரை தமிழுக்காக எந்த ஒரு நிகழ்வும் நடந்ததே இல்லை என்கிற தோற்றம் ஏற்படுத்தினார். தமிழ்மொழி மாநாடு நடப்பது முதன் முறையன்று. இதற்கு முன்பு செம்மொழி மாநாடு நடத்திய எம்ஜிஆர் மற்றும் ஜெவின் பெயர்கள் மாநாட்டில் திட்டுவதற்குக் கூட பயன்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தக்கது.

மாநாட்டில் கவியரங்கம் என்பதாக முழுக்க முழுக்க கருணாநிதியின் புகழ்பாடினார்கள் அண்டிப்பிழைக்கும் கவிஞர்களும், கவிதாயினிகளும், உச்சகட்டமாக கருணாநிதியின் உமிழ்நீரும் தமிழ் நீர் என்று செம்மொழி மீது பச்சையாக மஞ்சள் எச்சிலை உமிழ்ந்தார் தமிழச்சி தங்கபாண்டியன் என்கிற ஒரு ஒருகவிதாயினி. ஏற்கனவே கவிதைவடிவில் இருக்கும் புராண புளுகுகளுக்கு புதுக்கவிதை புனுகு பூசி உலாவிட்ட வாலி ஒருபடி மேலே போய் கருணாநிதியை வாழ்த்துவது ஜெவைச் சாடுவதாது தான் என்பதாக புரிந்து கொண்டு "மாமிகள், சாமிகள் என்று, அறிவாலயம்" என்றெல்லாம் எளுதி கூடவே பார்பனர்களையும் வம்பிக்கிலுத்தார், வாலி அக்கிரகாரத்து அக்மார்க் என்பது அனைவருக்குமே தெரிந்த உண்மை, இருந்தாலும் பொற்கிழி பெரும் ஆர்வக் கோளாரில் வாய்கிழித்துப் பாடுவதாக நினைத்து இவர் பாடிய ஆசனவாய்கவிதைகள் அருவெருப்பானவையே.

முதல்வர் இல்லத்தில் இருந்து மொத்தம் 84 பேர் கலந்து கொண்டார்களாம். இது இல்லவிழா இல்லை என்றும் யாரும் உதட்டுச் சாயம் கூடப் பூசி சாயம் ஏற்படுத்த வேண்டாம் என்று முதல்வர் சொன்னதால் கட்சி பேனர்கள் அகற்றப்பட்டதாம், ஆறுமாதங்களாக நடக்கும் ஏற்பாடு, திமுக அரசின் ஏற்பாடு இதில் உடன்பிறப்புகள் எந்த அளவுக்கு வரவேற்புகாட்டுவார்கள் என்பது கூட ஒரு முதல்வரால் யூகிக்க முடியாமல் போனதும் அதை வைக்கும் முன்பே தவிர்க்கச் சொல்ல தடுக்கச் சொல்ல ஒரு முதல்வரால் முடியாமல் போனதை அனைவரும் நம்பித்தான் ஆகவேண்டும். உடன்பிறப்புகள் பேனர் வைத்தப் பிறகு அகற்றச் சொன்னது பெருந்தன்மை என்றெல்லாம் கூட சில அப்பாவிகள் எழுதுகிறார்கள், நினைக்கிறார்கள். வைக்கச் சொல்லி எடுக்கச் சொல்லுவது பெரும்தன்மையாம்.


மாநாட்டில் நடுவில் திரு சுதர்சனம் மறைவு. அந்நிகழ்வை 'இதயத்தை தாக்கிய இடி' என்று குறிப்பிட்டு இருக்கிறார் கருணாநிதி. இதற்கும் சேர்த்து 'இடியையும் இதயத்தில் தாங்கும் எங்கள் ஒரே தலைவன்' என்று எவரேனும் அடுத்து பாராட்டுவிழா ஏற்பாடு செய்தாலும் வியக்க ஒன்றுமில்லை.

மாநாட்டை பிடிக்காதவர்கள் விமர்சிக்க இதை செம்மொழி மாநாடு இல்லை என்று உடன்பிறப்புகளைப் போல் சொல்லிவிட்டு போனால் யார் விமர்சிக்கப் போகிறார்கள் ? அதுவும் அரசு வரிப்பணத்தில் நடக்காவிட்டால் யார் விமர்சனம் செய்வார்கள்? பொதுமக்கள் வரிப்பணத்தில் இப்படி ஒரு கேலிக்கை நடந்ததை விமர்சனம் செய்வது வெறும் காழ்புணர்வு அன்று.

இங்கு, அங்கு எநத ஒரு அசாதராண சூழலும் இல்லை, கிரிக்கெட் நடக்கிறது பாருங்கள் என்று முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் நடுவில் கிரிக்கெட் நடத்திக் காட்டியாது இலங்கை, அதற்கு வீரர்களை அனுப்பி ஆசிர்வதிதது இந்தியா, அதன் தொடர்ச்சியாக தமிழர்கள் மத்தியில் துயர் இல்லை, இதோ அவர்கள் கொண்டாடும் மனநிலையில் தான் இருக்கிறார்கள், அப்படி இல்லை என்றால் மொழிக்கு மகுடம் சூட்ட அவர்களால் இயலுமா ? இராஜபக்சே கூப்பிட்டு சுட்டிக்காட்ட உலகினருக்கு இன்னொரு நிகழ்வு நடந்து முடிந்த கேலி(க்கை) செம்மொழி மாநாடு.......வெற்றி வெற்றி........மாபெரும் வெற்றி!

படம் நன்றி : ஜூவி

நெஞ்சு பொறுக்குதில்லையே - செம்மொழி (திரு வந்தியத்தேவன்)

26 ஜூன், 2010

சந்துல "சிந்து" !

ஒரு இனத்தை அழிப்பெதென்பது இனத்தின் தொண்மைகளை அழித்துவிட முயற்சிப்பது, பிறகு அந்த இனத்தினை கொஞ்சம் கொஞ்சமாக அழித்துவிட்டால் அந்த இனத்தையே அழித்துவிடலாம், அமெரிக்காவில் வேட்டையாடி கொல்லப்பட்ட செவ்விந்தியர்கள் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடிகளை வெள்ளை இன ஐரோப்பியர்கள் அழித்துவிட்டு அவ்விடங்களை தங்கள் ஆளுமைக்குக் கொண்டு வந்தார்கள். இருந்தாலும் வரலாறுகள் மண்ணில் மறைத்துவிட்டால் மறையாது துளிர்த்தெழும் விதைகளைக் கொண்டிருக்கிறது என்பதை இன ஒழிப்பாளர்கள் மறந்துவிடலாகாது என்பது போல் இன ஒழிப்பின் கதைகள் நூற்றாண்டுகள் கடந்து விழிப்படைகிறது. வரலாறுகளை திரிப்பதும் மாற்றி எழுதுவதும் தற்காலிகமேயன்றி அவை உறுதியான ஒன்று அல்ல. கட்டுமானங்கள் அனைத்துமே விரிசல் ஏற்பட்டு என்றோ ஒரு நாள் உதிரும் என்பது விதி.

பழந்தமிழர் பண்பாட்டுச் சின்னங்களையும், அரிய நூல்களைக் கொண்ட மாபெரும் களஞ்சியமாக திகழ்ந்திருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டதை தமிழர்கள் குறிப்பாக இலங்கை வாழ்தமிழர்கள் மறக்க் கூடியதே அல்ல. ஆசியாவின் மிகப் பெரிய நூலகமாக திகழ்ந்த யாழ் நூலகம் இலங்கையில் தமிழர்களின் ஆயிரம் ஆண்டு வேர்களை தாங்கி நின்று கொண்டிருந்தது, அதை அழிப்பதன் முலம் இலங்கையில் தமிழர்கள் நூற்றாண்டுக்கு முன்பு பிழைப்புக்காக வந்த மலையகத் தமிழர்களாக வரலாறுகளில் காட்டிவிடலாம் என்று முனைந்தே அந்த யாழ்நூலகத்தை எரித்து மகிழ்ந்தனர் சிங்களர்கள். தற்போது எரிப்பு குறித்த மன்னிப்புகளை இலங்கை அமைச்சர் ஒருவர் கேட்டு இருக்கிறார். மன்னிப்புகள் மனக்காயங்களை அகற்றிவிடாது என்பது தெரிந்தவை தான் என்றாலும் குற்றங்களை ஒப்புக்கொள்வதை வரலாறுகள் பதிந்து கொள்கிறது என்பதாக எடுத்துக் கொள்ளலாம்.

தமிழர்களின் தொண்மைகளை முற்றிலும் அழித்துவிட முடியாது என்பதை கடல்கோள்களுக்கே புரிய வைத்து வாழ்கிறது தமிழ். செம்மொழிகள் என்று அடையாளம் கூறப்பட்டவை எதுவுமே வாழும் மொழியாக இல்லாத காலகட்டத்தில் வாழும் மொழியாக குன்றா இளமையுடன் திகழும் தமிழை ஒரே யாழ் நூலகம் மட்டும் தாங்கி இருந்ததாக நினைத்த சிங்களர்களின் சிறுமதியை எள்ளி நகையாடும் நிகழ்வுகளும் நடந்து கொண்டே இருக்கின்றன.

செம்மொழி மாநாடும், அதை நடத்துபவர்களின் தன்னலமும் கேள்விக்கும் கேலிக்கும் உரியது என்பதாக எதிர்ப்புகளை பல்வேறு தரப்பினரும் பதிய வைத்திருக்கின்றனர். செம்மொழி மாநாடு இச்சூழலில் தேவையற்றது என்பதை மறுப்பதற்கே இல்லை. இருந்த போதினும் செம்மொழி மாநாட்டு சின்னமாக அறிமுகப்படுத்தப்பட்ட திருவள்ளுவர் மற்றும் அதன் பின்னனி சின்னங்களில் மிக அழகாக தமிழர் தொண்மங்கள் பதிய வைக்கப்பட்டு இருக்கின்றன என்பதை மறுப்பதற்கு இல்லை. கடல்கோள்களால் கொள்ளப்பட்ட தமிழகத்தை உணர்த்தும் வண்ணம் கடற்கோள் அலைகளின் பின்னனியில் எழுச்சி சின்னமாக திருவள்ளுவர் சிலை, காலம் கடந்து தமிழ் வாழ்ந்து வருவதை உணர்த்துவதாகவும், சிந்து சமவெளி சின்னங்கள் சுற்றிலும் அமைத்து தமிழ் மொழி உலக நாகரிங்களுக்கு முற்பட்டவை அல்லது நாகரிகங்களின் துவக்கம் என்பதாக சிந்து சமவெளி எழுத்துகள் மற்றும் சின்னங்களுடன் அமைக்கப்பட்டு இருப்பது பாராட்டத்தக்கதே ஆகும்.

சிந்து சமவெளிக்கு தமிழர்கள் உரிமை கொண்டாடலாமா ? என்னும் கேள்வியை புறந்தள்ளும் வண்ணம் அண்மையில் ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சிகளில் கிடைத்த தமிழர் தொண்மங்கள் சிந்து சமவெளி நாகரிகத்தின் காலத்தை ஒட்டியது மட்டுமின்றி சிந்துவெளியில் கிடைத்த அதே எழுத்துருக்கள் கிடைத்தது அனைவரையும் வியப்ப அடைய வைத்ததுடன் சிந்துசமவெளி நாகரிகம் முன்னாள் திராவிடநாகரீகம் என்பதை தெளிவுபடுத்தாவிட்டாலும் இரண்டிற்குமிடையேயான தொடர்புகள் உறுதிப்படுத்தப்பட்டு தமிழர் நிலம் தமிழ்நாடு சிந்துவெளி காலத்தை ஒட்டிய வரலாற்று சிறப்பு மிக்கது என்பதுடன் சிந்துவெளி வரை பரவியிருந்தது என்பதை ஏற்கும் வண்ணம் அமைந்தது.

சிந்துசமவெளி ஆராய்ச்சியில் ஈடுபட்டவரின் மிகவும் அறியப்பட்டவர்கள் இருவர், அஸ்கோ பர்போலா மற்றும் ஐராவதம் மகாதேவன் இருவருமே கிட்டதட்ட சிந்து சமவெளி நாகரிகம் திராவிடச் சார்புடைய நாகரிகம் அல்லது திராவிட நாகரீகம் என்பதை நம்புவர்கள், சிந்துசமவெளியை அழித்தது ஆரிய படையெடுப்பா என்பதில் தான் இருவருக்கும் மாறுபட்ட கருத்துகள். ஆதிச்ச நல்லூர் தொல்பொருள்களுக்கு பிறகு சிந்துவெளி நாகரீகம் என்பது திராவிட நாகரீகமே என்பதில் உறுதியாக நிற்கின்றனர். இவர்கள் இருவரையும் உயர்வுபடுத்தும் வண்ணம் இருவருக்கும் செம்மொழி மாநாட்டில் விருதுகள் வழங்கப்பட்டது. சிந்துசமவெளி ஆராய்ச்சியில் வாழ்நாளை அற்பணித்த இருவரும் செம்மொழி மாநாட்டுச் சின்னத்தில் சிந்துவெளி சின்னம் இருப்பதைப் பற்றி எந்த ஒரு எதிர்கருத்தும் கூறவில்லை. மாறாக அவர்களின் ஒப்புதலில் தான் சின்னமே உருவாகப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ்மொழி, தமிழர்கள், தமிழின் தொண்மை என்பவை தொல்காப்பியத்தை ஒட்டி இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டவை என்பதை தாண்டி, சிந்துவெளி ஆராய்ச்சிகளின் முடிவில் ஐந்தாயிரம் ஆண்டுகளைக் கடந்து எடுத்துச் செல்லப்பட்டு இருப்பதை மாநாட்டின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு இவ்விரு ஆராய்சியாளர்களும் மிக முதன்மையான பங்காற்றி இருக்கிறார்கள் இவர்கள் இருவருக்கும் தமிழர்கள் மிகவும் கடமைப்பட்டவர்கள்.

******

இவையெல்லாம் அறிந்தே தாமும் தமிழர்கள் என்று கூறிக் கொள்பவர்கள், சிந்துவெளி சின்னம் மாநாட்டின் சின்னத்தில் செதுக்கி இருப்பதை மறைமுகமாக கண்டனம் செய்வதுடன், அவ்விரு ஆராய்ச்சியாளர்கள் மீதும் அதிருப்தியை தெரிவித்திருக்கிறார்கள், அதற்குகாரணமாக அவர்கள் கூறும் சப்பைக்காரணம் தமிழின் தொண்மையும் தொடர்ச்சியும் ஆரிய நாகரிகம் எனப்படும் வேத நாகரிகத்துடன் மிக நெருங்கிய தொடர்பு உள்ளவையாம் அதற்கு ஆதாரமாக குறுந்தொகைப் பாடலைக் கூறி இமயமும் தென்குமரியும் பற்றி பாடல்களில் வருகிறது அதையெல்லாம் மாநாட்டில் புறக்கணித்துள்ளார்கள் என்றும் கூறி இருக்கின்றனர்.

கடவுள் நிலைய கல்ஓங்கு நெடுவரை
வடதிசை எல்லை இமயம் ஆக
தென்அம் குமரியொடு ஆயிடை அரசர்

சிந்துவெளி தற்பொழுது பாகிஸ்தானில் இருக்கிறது, அதுவரை சென்றுவிட்ட அடையாளத்தை இமயம் வரை மட்டுமே குறுக்கி இருந்திருந்தால் போதும் என்பதாகவும் அவை மறைகப்பட்டதாகவும் ஓலம் இடுகிறார்கள். ஐராவதம் மகாதேவன் ஒரு பார்பனர், நேர்மையாளர், சிந்துசமவெளி நாகரிகம் ஆரியத்தொடர்புடையது என்றும் கண்டுபிடிக்கப்பட்ட காளை சின்னத்தை குதிரையாக காட்டச் சொன்ன வட ஆரியர்களின் கோரிக்கைகளை புறம் தள்ளியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது, ஏனெனில் சிந்துவெளியில் குதிரைகள் கிடையாது. ஆரியர்களின் படையெடுப்புகளுக்கு பிறகே குதிரைகள் இந்தியாவிற்குள் வந்தன.

தமிழ் இந்துக்கள் என்று கூறிக் கொள்ளும் இவர்கள் வட ஆரியர்களின் சூழ்ச்சிகளில் சிக்கி இருப்பதுடன் தமிழின் தொண்மை போற்றும் சிந்துசமவெளி நாகரிகம் பற்றி தவறான தகவல்களை தொடர்ந்து எழுதிவருவதுடன், இன்று மாநாட்டில் அச்சின்னத்தை அமைத்திருப்பதையும் கடுமையாக எதிர்க்கிறார்கள். தமிழுக்கு எதிரிகள் தரணியில் இல்லை, அவன் தமிழருள் ஒருவனாகவே இருக்கிறான்.

24 ஜூன், 2010

இனியவை 40 - இன்னா 400 !

போர்வாள்களாகத் துணியவில்லை,
கேடயங்களாக இருக்கத்தான் இயலவில்லை,
காயங்களை ஆற்றவும் மனமுமில்லை,
காயங்கள் தானே ஆறுவதற்குள் பொறுமையுமில்லை,
ஊர்வலத்தின் முன்பே தெரியும்
ஊர் அவலக்காட்சிகள்
மறைக்க மனத்திரை ஒன்றை
மாநாட்டில் தேடிப்பார்த்தேன்
தென்படவில்லை...
இன்றைய இனியவை நாற்பதின்
மயிலாடும் முகத்தின் மறைவில்
நேற்றைய மறக்க முடியாத
காட்சிகளாக தொடர்காட்சிகளாக.........இன்னா நானுறு !


23 ஜூன், 2010

இராவணன் பற்றி வாய்திறக்காத இந்துத்துவாக்கள் !

க(ளி)ம்புகளை கையில் வைத்துக் கொண்டு இந்து மதம் திரைப்படங்களில் புண்படுத்தப்பட்டு, காயப்படுத்தப்பட்டு இருக்கிறதா என்று கண் காணித்து மருந்து போடவும், மண்டையை உடைக்கவும் தயாராகும் இந்துவாக்கள், இராவணன் படம் பற்றி வாய்த் திறக்காதது வியப்பளிப்பையும் வியப்பின்மையையும் ஒருசேரவே அளிக்கிறது. கருணாநிதி இந்து மதத்தை கொச்சைப்படுத்திவிட்டார், இராமனை இழிவு படுத்திவிட்டார் என்றெல்லாம் கூப்பாடு போட்டு கண்டனம் தெரிவிப்பவர்கள் இராமயணம் பின்னனியில் எடுக்கப்பட்ட ஒரு கதையில் இராமன் இழிவாகவும், இராவணன் உயர்வாகவும் காட்டப்பட்டிருப்பதை பார்த்து இவர்கள் கொதித்திருப்பார்கள் என்றே பலரும் நினைத்தது சற்று ஏமாற்றம் தான்.

* படத்தில் (அசோக) வனச் சீதையாக வலம் வந்த ஐஸ்வர்யா ஆடைகளில் கண்ணியம் இல்லை, படம் முழுவதும் ஜாக்கெட்டை திருப்பிப் போட்டுக் கொண்டதைப் போன்றே அணிந்து இருந்தார் (நன்றி திரு பரிசல்காரன்)

* சீதை மீது இராவணன் விழுவது போன்ற காட்சியாக ஐஸ்வர்யா மீது விக்ரம் தடுமாறி விழுவது, பிறகு சீதையை நெருங்கி உடலெங்கும் கையால் படர்வது போன்ற காட்சிகள், இந்த காட்சி இந்திப் படத்தில் இல்லை. (இந்தி ரசிகர்கள் டென்சன் ஆவார்கள் என்று தவிர்தார்களோ), இராமயணக் கதைபடி இராவணன் சீதையை தொடவே மாட்டான், பெண்ணின் விருப்பமில்லாமல் பெண்ணைத் தொட்டால் தலை வெடித்துவிடும் என்கிற சாபம் இருந்ததாம். முதல் காட்சியில் தண்ணீரில் தள்ளிவிடப் படும் சீதையை பிற ஆடவன் தொட்டு தூக்கி காப்பாற்றுவது போன்றவை இவை எல்லாம். இராவ(ண)ன் படங்களில் சீதை மீது இராவணன் விழுவது போன்ற காட்சி இதிகாச மீறல்.

* இராமயணக் கதையில் சீதை மீது சந்தேகப்படுபவன் பிற ஆடவன் தான், குறிப்பாக துணி துவைக்கும் ஒருவர் சீதை மீது சந்தேகப்பட இராமன் சீதையை தீக்குளிக்கச் சொல்லுவான். இதில் இராமன் பாத்திரமே சீதை ஐஸ்வர்யா மீது சந்தேகம் கொண்டு மருத்துவ சோதனைக்குச் செல்லச் சொல்கிறது.

* அனுமாராக வரும் கார்திக்கை படம் முழுவதும் தண்ணி அடிக்கும் குடிகாரன் பாத்திரமாகக் காட்டி அனுமாரைக் கொச்சைப் படுத்தியது

* இதைவிடக் கொடுமையோ கொடுமை..... சொல்லவென்னா கொடுமை தமிழில் வரும் இராவணன் இந்தியில் வரும் சீதைக்கு கணவன் :)

* இராமயணத்தில் சீதை மீட்கப்படுவதற்கு முன்பே இராவணன் அழிந்துவிடுவான், அல்லது அழிந்த பிறகு மீட்கப்படுவாள், இதில் சந்தேகப்படும் இராமனிடமிருந்து விலகி இராவணனைத் தேடி வருவதாகக் காட்டுகிறார்கள். கடைசி காட்சியில் இராவணன் சீதையை தொட்டு அப்புறப்படுத்துகிறான். இவை எல்லாம் இதிகாச மீறல்
. இவையெல்லாம் இராமயணத்தின் மீது விழுந்த கீறல். :)

புனிதனாகவே பார்த்துவரும் இராமனையும், சீதையும் ஏகத்திற்கும் பந்தாடி, இராவணனை குற்றமற்றவன், நல்லவனாகக் காட்டி இருப்பதை இந்துதுவ ஆதரவாளர்கள் எப்படிப் பொறுத்துக் கொண்டார்கள் என்பது வியப்பென்றாலும். வியப்பின்மைக்கு காரணம், படம் எடுத்தது மணிரத்னம் என்கிற பார்பனர் என்பதால் இந்த புதினா (எழுத்துப் பிழை இல்லை) இராமயணம் புதுமை, புரட்சி என்று நினைக்கிறார்களோ, இவையும் எதிர்ப்பார்த்து தானே என்கிற வியப்பின்மையும் ஏற்படுகிறது. எந்த ஒரு மாறுபட்ட நிகழ்விலும் 'அவா செய்தா புரட்சி மத்தவா செய்தால் அபத்தம்' என்பது தான் வழக்கமான பார்பன பொது புத்தி விமர்சனம், அதற்கு மேல் சொல்லிக் கொள்ள ஒன்றும் இல்லை.

இரவின் கரிய வண்ணத்தைக் நிறமாகக் கொண்டவன் என்கிற பெயர் காரணத்தைக் பெயராக வைக்கப்பட்ட இராவ(ண்)ணன், இரவணன் > இராவன் என்பது திரிந்த தமிழ் பெயர், இராவணன் என்பவன் தமிழன், திராவிட இனத்தைச் சார்ந்தவன், வழக்கமாக திராவிடர்களை அசுரர்களாகக் காட்டுவதே வட இந்திய பாணிக் கதைகள் என்பதாகவும் சொல்லபப்டும் இராமயணக் கதையின் மீள் பதிப்பில் இராவணனை நல்லவனாக மாற்றி வட இந்தியாவிற்கு புதிய இராமயணம் வழங்கிய இயக்குனர் மணிரத்னத்தை வெகுவாக பாராட்டுகிறேன்.

ராவணன் ராமாயணம் அல்ல..! - மணிரத்னம்

படம் : ராவணன் இணைய தளம்

22 ஜூன், 2010

செம்மொழி மாநாடும் புலிகள் ஆதரவும் !

நடைபெறும் செம்மொழி மாநாட்டிற்கு பரவலான எதிர்ப்பும், எதிர்ப்பு ஏன் என்பது பலரும் அறிந்ததே. இருந்தாலும் சுருக்கமாக சிலவற்றைச் சொல்கிறேன்.

* தமிழ் என்பது நிலம் சார்ந்த மொழி என்பதை கடந்து.. கடந்த நூற்றாண்டுகள் பல ஆகிவிட்டது, எனவே தமிழ் மொழி சார்ந்த பொதுவானவற்றைப் பற்றிய நிகழ்வுகள் பல்வேறு நிலங்களில் வசிக்கும் தமிழர்களிடம் பரிந்துரை மற்றும் அளவளவல்கள் கேட்டு இருக்க வேண்டும். இல்லை என்றால் தமிழ்நாடு அரசு நடத்தும் செம்மொழி மாநாடு என்று இருந்திருக்க வேண்டும், உலக செம்மொழி என்று சொல்லும் வண்ணம் பல்வேறு தமிழர் தரப்புகளிடம் கலந்து பேசவில்லை

* முதன்மையாக இலங்கையில் சிறைபிடிக்கப்பட்ட தமிழர்கள் முற்றிலும் அவர்களது இடத்தில் மீள் குடியேற்றம் செய்யப்படாத நிலையில், எந்த ஒரு தமிழ் சார்ந்த அமைப்பும் தற்போதைய சூழலில் மகிழ்ச்சியாக இல்லை, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட அல்லது ஆண்டுகளாக தொடரும் நிகழ்ச்சிகளை மட்டுமே நடத்திவருகிறார்கள், இத்தகைய சூழலில் ஒட்டுமொத்த உலக தமிழர்களின் அடையாளமான மொழிக் குறித்தான மாநாட்டை நடத்துவது என்பது ஏற்புடையது அல்ல

* தமிழர்கள் பெரும்பான்மையாக வசிக்கும் தமிழகத்தில் அரசு அலுவலகங்களில் தமிழ் முன்னிலைப்படுத்தப்பட வில்லை (தமிழை வழக்கின் மொழியாகச் சொல்லி நடத்தும் போராட்டம் குறிப்பிடத் தக்கது)

இது பற்றி துளி கூடக் கவலைப்படாமல் தமிழக அரசால் தன்விருப்ப உலகத் தமிழ் செம்மொழி மாநாடு நடத்துவதை மொழி மற்றும் தமிழர் நலன் சார்ந்தவர்கள், பற்றாளர்கள் புறக்கணிக்கிறார்கள்.

********

விடுதலைப் புலிகளின் மீதான தடை இந்தியாவில் தொடர்ந்துவருவது அனைவரும் அறிந்ததே, தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு நேரிடையாகவோ, மறைமுகமாகவே ஒப்புதல் அளிப்பவர்கள் மீது கடுமையான சட்டம் பாயும் என்று அண்மையில் கூட நாடாளுமன்றத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டு நடைமுறைக்கு வந்துள்ளது. நேரிடையாக ஆதரவு தெரிவிப்பவர் மீதான சட்டம் பாயும் என்பது கூட புரிந்து கொள்ளக் கூடியது தான், ஆனால் மறைமுகமாக ஆதரவு தெரிவிப்பவர்கள் மீதும் பாயும் என்று சொல்லுவது மிகவும் ஆபத்தானது, இதன் மூலம் ஐயத்தின் பலனை ஒருவருக்கு அளித்து இவர் விடுதலைப் புலிகளுக்கு உதவ முயன்றார் என்ற குற்றச்சாட்டில் உள்ளே வைக்க முடியும், இதற்கெல்லாம் குற்றம் சாட்டப்பட்டவர் தானே அல்லது தன்னார்வளர்களால் முயற்சி மேற்கொள்ளப்பட்டால் தான் ஒருவர் தம்மை குற்றவாளி இல்லை என்று கூறிவிட்டு வெளியே வரமுடியும், வெறொரு குண்டுவெடிப்பு வழக்கில் குனங்குடி மஸ்தான் 15 ஆண்டு சிறைவாசத்திற்கு பிறகு குற்றமற்றவர் என்பதாக வெளியே வந்திருக்கிறார் என்பதை நோக்குக. இடையில் குற்றம் சாட்டப்பட்டவர் இழப்பது எவ்வளவோ. சொல்ல வந்த தகவல் விடுதலைப் புலிகளை எதிர்ப்பது ஆதரவு கொடுப்பது பற்றியது அல்ல.

செம்மொழி மாநாட்டுக்கு விடுதலைப் புலிகள் ஆதரவு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள், மகிழ்ச்சி அளிக்கிறது என்பதாக மாநாட்டை நடத்தும் முதல்வர் அறிவிப்பது, மாநாட்டுக்கு பல்வேறு தரப்பில் இருக்கும் எதிர்பை மறைமுகமாக ஒப்புக் கொள்வதாகும். இல்லை என்றால் ஒரு முதல்வரால் இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் கடிதம் மாநாட்டை வாழ்த்துகிறது என்று வெளிப்படையாகக் கூறிக் கொள்ள முடியுமா ? மாநாட்டை விடுதலைப் புலிகள் தான் எதிர்க்கிறார் என்கிற தோற்றம் இருந்தது போலவும் தற்பொழுது அவர்களே கடிதம் அனுப்பி ஆசிர்வதித்து இருக்கிறார்கள் என்பது போலக் கூறுவது எதிர்ப்புகளை மறைக்கும் ஒரு உத்தி மட்டுமே. இது தவிர்த்து விடுதலைப் புலிகள் கடிதம் என்றால் காங்கிரஸ் முகம் சுளிக்கும் என்று தெரிந்தே... அல்லது கவலைப்படாமல் தடைசெய்யப்பட்ட இயக்கத்தின் கடிதத்தை முதல்வர் குறிப்பிடக் காரணம் வேறு என்னவாக இருக்கும். தூக்கு தண்டனை அல்லது மரண தண்டனைக் கூடாது என்று மனித உரிமை போராளிகள் கூறும் போது காசாப்பை தூக்கிலிடச் சொல்லி காஷ்மீர் தீவிரவாதிகள் இந்திய அரசுக்கு பாராட்டு கடிதம் அனுப்பி இருக்கிறார்கள் என்று மன்மோகன் சிங் அறிவித்தார் என்று சொன்னால் மனித உரிமை போராட்டக்காரர்கள் அதைச் சரி என்று சொல்லிவிடுவார்களா ?

மாநாட்டுக்கு பலமான எதிர்ப்புகள் இருக்கிறது என்பது உண்மை ஆனால் பாதுகாப்பு அச்சுறுத்தலும் இருக்கிறது என்பதாக 10,000 காவலர்கள் பாதுகாப்பு வளையம்.......அமைத்து மாநாடு நடைபெறுகிறது. விடுதலைப் புலிகளே ஆதரவு அளித்துவிட்டார்களே, பிறகு வேறு யாரால் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுவிடப் போகிறது ? மாநாட்டை எதிர்பவர்கள் அனைவரும் தமிழ் தீவிரவாதிகளா ? இல்லை ஆயுதம் ஏந்தி போராடுபவர்களா ? 10,000 காவலர்கள் வந்தால் தான் மாநாடு நடத்த முடியும் என்கிற அளவில் எதிர்ப்பு இருக்கிறது என்பதாக இம்மாநாட்டை முதல்வர் வரலாற்றில் பதிய வைக்கிறாரா ? அப்படி என்றாலும் கூட இவ்வளவு எதிர்ப்பையும், எதிர்பாளர்களின் உணர்வுகளையும் முதல்வர் புறக்கணித்து, கண்டு கொள்ளாது தன் முடிவில் பிடிவாதமாக இருந்தார் என்பதை வரலாறு கண்டு கொள்ளாமல் விட்டுவிடுமா ? அல்லது உறுதியான முதல்வர் சொன்னபடி நடத்தி முடித்தார் என்று வரலாறு பதிவை தம் முதுகில் ஏற்றிக் கொள்ளுமா ?



செம்மொழி மாநாடு காணும் மங்கள நாயகன், மஞ்சள் நாயகன், முதல்வர் கருணாநிதி வாழ்க, அவர் தம் அழியா புகழ் வாழ்க !

20 ஜூன், 2010

இராவ(ண)ன் !

ரீமேக் எனப்படும் மாற்று மொழியில் மறு உற்பத்தி செய்யப்பட்ட படங்கள் வெவ்வேறு காலகட்டங்களில் வெளிவரும். இராவணன் மூலக் கதையும் காட்சிகளும் மாறாமல் ஐஸ்வர்யா மற்றும் பிரியாமணி பாத்திரங்கள் மாறாமல் நடிகர்களை மாற்றி தமிழ் ஹிந்தி தெலுங்கு மொழிகளில் ஒன்று போல் வெளிவந்திருக்கிறது. தமிழக நடிகர்களை அணைத்துக் கொள்ளாத இந்தி(ய) திரைப்பட உலகம் இசை அமைப்பாளர்களையும் மணி ரத்னம் மற்றும் ஏஆர் முருகதாஸ் போன்ற இயக்குனர்களையும் ஏற்றுக் கொள்வது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இல்லை, அவர்களது திறமையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்பது மட்டுமே. ஏஆர் ரஹ்மானை கொண்டாடுவதும் கூட இந்தவகையில் தான். மற்றபடி தென்னிந்திய ஆண்களின் முகங்களை திரையில் பார்ப்பதற்கு இந்தி பட உலகம் முயற்சித்ததோ வரவேற்றதோ இல்லை. கமல், ரஜினி போன்றவர்கள் இந்தியில் நடித்திருந்தாலும் அவர்களை அடையாளம் கண்டு கொள்ளும் அளவுக்கு வட இந்திய மக்கள் இந்திப் படங்களில் பார்த்திருக்கும் வாய்ப்புகளை இந்திப் பட உலகம் தென்னிந்தியர்களுக்கு வழங்கியதில்லை. மற்றபடி நடிகைகளை வட இந்திய தென்னிந்திய திரைத் துறைகள் ஊறுகாயாகப் பயன்படுத்திக் கொள்வதில் எந்தக் குறையுமில்லை என்பதை நடிகை ஸ்ரீதேவி, ஜெயபிரதா, ரேகா மற்றும் ஐஸ்வர்யா போன்றவர்களே காட்சி

*****

தென்னிந்திய இயக்குனர்களும், இசை அமைப்பாளர்களும் வட இந்திய திரைகளில் ஆளுமை துவங்கி இருப்பது வரவேற்கத்தக்கது, அந்த வகையில் மணிரத்னம் போன்றவர்கள் பாராட்டத்தக்கவர்கள், இவர்களைப் போன்றவர்களால் தான் தென்னிந்திய திரை உலகினரின் திறமைகள் மற்றும் தென்னிந்திய வாழ்க்கை முறைகளை ஓரளவுக்கு அங்கே காட்சி படுத்துகிறார்கள். தமிழக நடிகர் விக்ரமை இந்தியில் அறிமுகப்படுத்தி விழிகளை விரிய வைத்திருக்கிறார் மணி. பொதுவாக வில்லன் வேடத்திற்கு மாறுபட்ட முகம் என்பதாக தென்னிந்திய திரையுலகம் நடிகர்களை வட இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்துவருகின்றன. ஏ ஆர் முருகதாஸ் ரியாஸ்கானுக்கு இந்தி கஜினியிலும் மணி விக்ரமுக்கு இராவன் படத்திலும் வாய்ப்புகளைப் பெற்றுத் தந்திருக்கிறார்கள்.

மணி ரத்னம் படம் என்கிற எதிர்பார்ப்புகளை மணி ஓரளவு நிறைவு செய்திருக்கிறார். மிகப் பெரிய பணக்காரர், உலக அழகி என்ற பெயருக்கு உரிமையாளரான நடிகை ஐஸ்வர்யாவையும் கடுமையாக வேலை வாங்கி இருக்கிறார். சோகம், கோபம், ஆற்றாமை போன்ற முக உணர்சிகளையும் அடர்காடு போன்ற சூழலில் அந்த நடிகையை கயிறுகளைப் பிடித்து தொங்கி ஏறும் மலை ஏற்றம் என பிழிந்து எடுத்திருப்பது அவரது இயக்குனர் ஆளுமையைக் காட்டுகிறது. விக்ரம் வழக்கம் போல கலக்கல், சிவாஜி, கமல் வரிசையில் காட்சிக்கு மெனக்கட்டு நடிக்கும் மற்றொரு நடிகராக இயக்குனர்களின் தேர்வாக இருக்கிறார் என்றால் மிகை அல்ல என்றே அவரது காட்சிகள் நினைக்க வைக்கிறது. பாய்ஸ் பட வீழ்ச்சியில் இருந்து மீள ஷங்கரும் நாடியது விக்ரம் தானே. ஏஆர் ரஹ்மானின் இசையும் பின்னனியும் படத்திற்கு வலுவைக் கூட்டி இருக்கிறது. எழுந்தாட வைக்கும் இசை, இதயத் துடிப்பை எகிறச் செய்யும் மிரட்டல் இசை குறிப்பாக பாலத்தின் மீதான சண்டைக் காட்சிகள் என படம் முழுவது ரஹ்மான் கலக்கல்.

கார்திக், பிரபு குறைவான காட்சிகளே என்றாலும் நிறைவாக செய்திருக்கிறார்கள். பிரியாமணி ஏற்கனவே வன்புணர்வு காட்சிகளில் விருது பெற்றவர் என்பதால் ஒரே ஒரு காவலர் மேலாடையிலும் கண்கள் உதடுதளின் துடிப்பு என்பதில் காட்டி மிரட்டி இருக்கிறார். ஒளிப்பதிவு...படப்பிடிப்பு காட்சிகளை கண்ணெதெரே நிறுத்தி இருக்கிறார்கள் என்றாலும் வெளிச்சம் குறைவும் மழைகள், சொதசொதப்பு என படம் முழுவதும் மணி ரத்னம் படம் இப்படித்தான் இருக்கும் என்று நினைக்க வைத்துவிடுகிறது.

பிரியாமணியின் திருமணக் காட்சியின் பின்னனியை தென்னிந்திய சூழலில் மாற்றி இருக்கலாம், அதே காட்சியை இந்தியில் பார்க்கும் போது அபத்தமாக இல்லை.

*********

போலிசாக வரும் விக்ரம் ஏற்கனவே சாமியில் பார்த்ததினால் நமக்கு தோற்றம் மாறுபட்டு தெரியவில்லை, இந்தியில் அவருக்கு கொடுத்திருக்கும் நடிப்பு வாய்ப்புகள் குறைவு, பிரிதிவிராஜ் அளவுக்குத்தான் செய்திருக்கிறார். ஒருவேளை புதிய போலிஸ் இந்திக்காரர்களுக்கு பிடித்து இருக்கலாம். விக்ரம் இடத்தில் அபிஷேக் பச்சன் அவ்வளவாக ஈர்க்கவில்லை, விக்ரமின் உடல் மொழி, முக அசைவு, நடிப்பு பச்சனிடம் அவ்வளவாக இல்லை. இந்திப்பாடல்கள் தமிழ்பாடல்களை விட தாளம் போட வைக்கும் அளவுக்கு காட்சிகள் எடுக்கப்பட்டு இருந்தது. வீரையனை பீரா.....என்று மாற்றி இருக்கிறார்கள் இந்தியில். ஹீரோ ஏன் இராவணன் ஆகிறான் என்பதற்கு அவன் மாற்றான் மனைவியை கடத்தினான் என்பது தவிர்த்தும், தங்கையின் சாவு தவிர்த்து பலமான பின்னனிகள் எதுவுமே இல்லாதது படத்தின் அழுத்ததைத் குறைத்திருக்கிறது. படம் உணர்த்தும் பாடம் என்பது போன்ற மேசேஜுகள் எதுவும் கிடையாது, ஹிரோ நல்லவன் என்பதை சொல்லும் மற்றொரு படம், நாலு பேருக்கு நல்லது செய்தால் எதுவுமே தப்பில்லை என்பதை மீண்டும் இராவணன் மூலம் மூன்று மொழி பேச வைத்திருக்கிறார் மணி.

ரிப்பீட் ஆடியன்ஸ் எனப்படும் மறுவருகையாளர்களை ஈர்க்க படத்தில் பெரிதாக எந்த தாக்கமும் இல்லை. மணி ரத்னம், விக்ரம், ஐஸ், அபிசேக் ரசிகர்கள் ஒருமுறை பார்க்கலாம்.

மேட்டுகுடிப் பிரச்சனைகள் எதுவுமே அழுத்தமாக பதிவு செய்யாதப் படம் ஒரு சில வசனங்களைப் பேசுவது வெறும் மார்கெட்டிங்க் மட்டுமே, மேட்டுக்குடி ஆளுமை பற்றி படம் எடுத்தால் அதை ரிலையன்ஸ் வெளி இட்டுவிடுமா ? தேசிய பிரச்சனைகள் என்பதாக படம் எடுக்கும் மணி இதில் ஷங்கர் அளவுக்கு கூட லோக்கல் பிரச்சனைகளை தொடவில்லை. பொதுமக்களின் திரைப்படப் பொழுது போக்குக்கான குறிப்பிட்ட அளவிலான பணத்தை ரிலையன்ஸ் கொடுத்து இருக்கிறார் என்கிற ஆதங்கம் ஏற்பட்டது, ஏற்கனவே நடுத்தர வர்கம் நுகரும் சில்லரை விற்பனையாளர்களின் வாயில் மண்ணைப் போட்டு நடுத்தரவர்கத்திற்காக கடை திறந்தவர்கள் ரிலையன்ஸ். இவர்களின் விற்பனையில் படத்தில் எதாவது மெசேஜ் இருக்கும் என்று எதிர்பார்க்க ஒன்றும் இல்லை. எல்லாம் விற்பனைக்கானது தான். பொழுது போக்குக்காக செல்லலாம், அதன் பிறகு குறை என்று சொல்ல ஒன்றுமே இல்லை :)

தமிழ் மற்றும் இந்தி இராவ(ண)ன் படங்களில் காட்சிகளும், படப்பிடிப்பு கோணங்களும் 99.99 விழுக்காடு அதே தான். ஐஸ்வர்யா தனித்து தோன்றும் காட்சிகள் 100 விழுக்காடு அதே காட்சி. இந்திப் படத்துக்கான காட்சி அமைப்புகளில் தமிழ் நடிகர்களின் பின்புலத்தில் படம் எடுக்கப்பட்டிருப்பதைத் தவிர்த்து இரண்டு படங்களும் எந்த ஒரு மாறுதலும் இல்லை.

18 ஜூன், 2010

'தமிழகத்தின்' செல்லக் குரல் 'மலையாளி'யுடையது !

விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் ஜூனியர் நிகழ்சி பற்றி எல்லோருக்கும் தெரியும், நிகழ்ச்சி அறிவிப்பும், பாட்டுகளும் தான் 'தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடல்' என்பது தவிர்த்து தமிழ் வாசனைகள் நிகழ்ச்சியில் குறைவு.

நிகழ்ச்சியில் நடுவர்களாக நிகழ்ச்சி முழுவதும் பங்காற்றியவர்களில் பாடகர் மனோ, சுபா ஆகியோர் தெலுங்கு தேசத்தைச் சார்ந்தவர்கள் (எனக்கு அவர்களின் குரல்களைப் பிடிக்கும்), நிகழ்ச்சி தொகுப்பாளினி மலையாளி. இசைக்கு மொழி கிடையாது....... இவன் என்ன கிளப்புகிறான் ? என்றால் நிகழ்ச்சிக்கு 'தமிழகத்தின் செல்லக் குரலான தேடல்' என்றே சொல்லி இருக்க வேண்டியது இல்லை என்பது எனது கருத்து. முதல் பரிசாக 25 லட்சம் பெருமான முள்ள வீட்டைப் பெற்றதாகச் சொல்லும் சிறுமி அல்கா அஜித் கேரளாவில் இருந்து வந்து பரிசை தட்டிச் சென்றிருக்கிறார். இவருக்காக தமிழகத்தின் பொதுமக்கள் பெருவாரியான வாக்குகளைத் தந்து இருக்கிறார்கள், தமிழனுக்கு பெரிய மனசுதான். குழந்தை , குரல் இனிமையெல்லாம் பார்த்து அது மட்டுமே போதும் என்பதாக அவர் எங்கிருந்து வந்தவர் என்கிற ஆராய்ச்சி எதுவுமே செய்யாமல் முடிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது, பெரும் தன்மையானது என்றாலும், இது போன்ற மனநிலைகள் அண்டை மாநில மக்களுக்கு இல்லாத நிலையில் தொடர்ந்து தமிழர்களையும் தமிழையும் இழிவு படுத்திவரும் வேலையில், இங்கே தமிழகத்தின் குழந்தைகளுக்காக படைக்கப்பட்ட தொரு நிகழ்ச்சியில் பங்கெடுத்து அவர்களுக்கான பொன்னான வாய்ப்பை பறித்துச் சென்றதை வெறும் திறமை, குரல் வளம் என்ற சொல்லாடலில் மறைத்து பாராட்டும் பெரிய மனது சத்தியமாக எனக்கு இல்லை.

இங்கு சிங்கப்பூரில் கூட அதே போன்ற கூத்துகளை பலமுறை பார்த்து இருக்கிறேன். ஆண்டு ஆண்டுகளாக சமூக மன்றத்தில் சேவை செய்துவருவர்களும், ஆண்டுகணக்கில் இங்கே வசிப்பவரும் சேர்ந்து சில சமயம் இது போன்ற பாட்டுப் போட்டி நடத்தும் போது அண்மையில் தமிழகத்தில் இருந்து வந்து பாட்டு வாத்தியாரிடம் பாட்டு பயிற்சி பெற்ற ஒரு குழந்தை தலையை நன்றாக ஆட்டி குரல் எடுத்துப் பாடி பரிசைப் பெற்றுச் சென்றுவிடும், அதன் பிறகு அதன் பெற்றோர்களோ அல்லது அந்த குழந்தையையோ அந்த மேடைகளில், அந்தப் பகுதியின் பொதுச் சேவை நிகழ்ச்சிகளில் பார்க்கவே முடியாது. போட்டியில் பங்கெடுத்த சேவையாளர்களின் குழந்தைகளெல்லாம் என்றோ ஒரு நாள் கிடைக்கும் பொன்னான வாய்ப்பும் பறிபோனது கூடத்தெரியாமல் பரிசு பெற்றவருக்காக கைதட்டி மகிழ்வார்கள்.

சிங்களர்களை நல்லவனாகவும் ஈழமக்களுக்காக போராடியவர்களை கெட்டவர்களாகவும் காட்டும் படத்தை ஒரு மலையாளி தான் எடுத்திருக்கிறான். நல்லவேளை அது தமிழகத்தில் தடைசெய்யப்பட்டு இருக்கிறது, இல்லை என்றால் நம் இனம் கேவலாமானது என்று ஒரு மலையாளி எடுத்தப் படத்தை நாமே காசு கொடுத்துப் பார்த்து அவன் கல்லாவை நிறப்பு அனுப்பி இருப்போம்.

இசைக்கு மொழி கிடையாது, சாதி கிடையாது, இனம் கிடையாது என்று பேசுவது பெருந்தன்மையானது தான், ஆதான் அதில் டாமினேட் செய்பவர்களெல்லோருமே அதைச் சார்ந்து தான் செய்கிறார்கள் என்பதை பெருந்தன்மை பேசுபவர்கள் மறந்துவிடுகிறார்கள்.

சூப்பர் சிங்கர் ஜூனியர் வின்னர்-அல்கா அஜீத் ற்கு என்னால் வாழ்த்துச் சொல்ல முடியவில்லை, நம்ம தமிழ்நாட்டின் செல்லக் குரலுக்கான குழந்தை ஒருவரின் வாய்ப்பைப் பறித்தக் குழந்தையாகத் தான் பார்க்கிறேன். இதற்குகாரணமான நிக்ழ்ச்சி நடத்துபவர்கள் மீது தான் எரிச்சல் ஆகிறது. நம்மூர் குழந்தைகளுக்கு அந்த தகுதி இல்லை என்பதை தமிழ் நிகழ்ச்சி என்பதாகக் காட்டி அதையும் நம்மை வைத்தே கைத்தட்டி, நம்மை வைத்தே தேர்ந்தெடுக்க வைத்தது மிகப் பெரிய மோசடி.

:(

ஒரு தமிழனின் பார்வையில் தமிழ்பாடல் நிகழ்ச்சியில் திறமையின் அடிப்படையில் ஒரு மலையாளிக்கு பரிசு தந்தது பெரும்தன்மையாக இருக்கலாம். ஆனால் மலையாளிக்களின் பார்வையில் தமிழ்நாட்டில் நம்மைவிட திறமையுள்ளவர்கள் இல்லை என்கிற ஏளனம் இருக்குமா இருக்காதா ?

டிஸ்கி : தமிழகத்தின் செல்லக் குரலுக்கான தேடலில் தமிழகத்தில் வாழும் எந்த ஒரு மொழியையும் தாய்மொழியாகக் கொண்டிருக்கும் பெற்றோர்களின் குழந்தைகள் மற்றும் பிற மாநிலங்களில் வசிக்கும் தமிழை தாய்மொழியாக கொண்ட பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தைகள் கலந்து கொண்டு பரிசு பெற்றிருந்தால் நான் இந்த நிகழ்ச்சியை வரவேற்றிருப்பேன். தமிழ்பாட்டை யார் வேண்டுமானாலும் பாடாலாம் என்ற போட்டியில் தமிழகதின் செல்லக் குரலுக்கான தேடல் என்கிற தலைப்புக் கொடுத்திருக்கத் தேவை இல்லை என்பது எனது கருத்து

17 ஜூன், 2010

அருகிவரும் தமிழ் பெயர்கள் அருகில் வருமா ?

தமிழகத்தில் மருத்துவ இளங்கலை படிப்பில் சேர விரும்பும் மாணவர்களில் மிகுதியான மதிப்பெண் பெற்றவர்களின் பட்டியல் ஒன்றை நண்பர், பதிவர், மருத்துவர் புருனோ வெளி இட்டு இருந்தார். அதில் இடம் பெற்றிருக்கும் மாணவர்களில் யாருமே பார்பனர்கள் இல்லை. ஆனால் ஒரே ஒருவர் பெயர் 'செல்வ மலை முத்துக்குமரன்' என்ற பெயரைத் தவிர்த்து அனைவரின் பெயர்களும் தமிழ் பெயரே இல்லை என்பது எனக்கு அதிர்ச்சியாக இருந்தது.

குழந்தைகளின் பெயர்களுடன் இல்லப் பெயராகச் சூட்டுவது உலக வழக்கு, இந்தியாவில் இந்த நிலை தொடராமல் போனதற்குக் காரணம் இல்லப் பெயர்கள் என்பவை சாதிப் பெயர்களாகப் போனதால் அது சரியான நடைமுறை இல்லை என்பால் தமிழ்நாட்டு அளவில் மாற்றிக் கொள்ளப்பட்டது. அப்படியும் நரேஷ் ஐய்யர், அனுசா ஐய்யர் போன்ற பெயர்கள் அண்மைகாலமாக தலைதூக்குகின்றன என்பவை கவலைக்கிடமான ஒன்று. சாதிப் பெயர்களை அடைமொழியாகக் கூப்பிட்ட வழக்கம் படிப்படியாக குறைந்துவரும் வேளையில் இவை போன்ற (சாதிய மன நிலையின் தவறான)முன்னெடுப்புகள் பட்டுப் போகும் நிலையில் இருக்கும் சாதிய வேர்களுக்கு வலிந்து சேவை செய்வதாகும். சாதிப் பெயர்கள் என்பது தவிர்த்து குழந்தைகளுக்கு தாத்தா பாட்டியின் பெயர்களை, குல தெய்வப் பெயர்களை சூட்டுவது வழக்கமாக இருந்தது, எண்கணித சோதிடம், மற்றும் சோதிடர்களின் பரிந்துரை என்ற பெயரில் தனக்கும், இல்லத்திற்கும் முற்றிலும் தொடர்பில்லாத பெயர்களை பல்வேறு தமிழர்கள் சூட்டுகிறார்கள், அவை பெரும்பாலும் வடமொழிப்பெயர்களாகவே இருக்கின்றன, நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டும் வழக்கம் ஏறக்குறைய நின்றுவிட்டது என்பதைத்தான் அந்த பட்டியல் உறுதிபடுத்தி இருக்கிறது. பார்பனர்கள் தமிழ் சமூகத்தைக் கெடுத்துவிட்டார்கள் என்று குற்றச் சாட்டுகளை தொடர்ந்து பலரும் கூறிக் கொண்டு இருந்துவரும் வேளையில் அந்த இடத்தில் பல்வேறு சாதியினர் அமர்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற நிலையை பெயர்களே பறைசாற்றுகின்றன.

எனக்கு தெரிந்து நல்ல தமிழ் பெயர்களைச் சூட்டிம் பார்பனர்களைப் பார்த்திருக்கிறேன். தமிழ்வழித் தகவலாக தெரிந்தது, சூரிய நாராயண சாஸ்திரி என்ற பெற்றோர் வைத்தப் இயற்பெயரையே மாற்றிக் கொண்டு 'பரிதிமாற் கலைஞர்' ஆனவரும் ஒரு பார்பனர் தான். பார்பனர்கள் அல்லாதவர்களும் பார்பனர்களாக வேடம் போட்டு மாறிக் கொண்டு வருகிறார்கள். பார்பனியத்தை ஒழிக்கிறேன் என்று கூறிக் கொண்டு இருப்பவர்களின் பார்வைகள் இந்த நவீன பார்பனர்களின் மீது திரும்புவது எப்போது ?

அண்மையில் ஒரு நண்பர் ஒருவர் இல்லவிழாவிற்காக அவர் வீட்டுக்குச் சென்றிருந்தேன், மகன் பெயர் மணீஷ் என்றார்கள், அங்கே இன்னொருவர் 'என் மகன் பெயரைப் பார்த்து தானே நீங்களும் அந்தப் பெயர் வைத்தீர்கள் ?' என்று கூறியதுடன், அவர் தன் மகனுக்கு மணீஷ் என்ற பெயர் வைத்திருப்பது எவ்வளவு பரவலாக எல்லோராலும் பின்பற்றப்படுகிறது என்பதாக பெருமைக் கூறினார். இவர்களெல்லாம் தாத்தாப் பாட்டிகளை முற்றிலும் மறந்து போனது வியப்பே.

தேவநேய பாவாணரின் பற்றாளரான தமிழ் சான்றோர் ஒருவர், தமிழ் மீது கொண்ட பற்றின் காரணமாக கோபால கிருஷ்ணன் என்ற தனது இயற்பெயரை வெ.கரு.கோவலங்கண்ணன் என்று மாற்றிக் கொண்டார்.
திரு வெ.கரு.கோவலங்கண்ணன்


குழந்தைகளுக்குச் சூட்டும் பெயர்களில் தமிழ் பெயர்கள் இல்லாவிட்டாலும் மூதாதையர்களை நினைவு கூறும் வண்ணம் அவர்களின் பெயர்களையோ அல்லது பெயரின் பகுதியையோ,குல தெய்வப் பெயரையோ வைப்பது நாம் அவர்களுக்குச் செலுத்தும் நன்றிக்கடன் அதையெல்லாம் விட்டுவிட்டு விளங்காத சோதிடன் உங்க மகன் நாடாள்வான் என்று எதையோ கிளப்பிவிட வாயில் நுழையாத பெயர்களையெல்லாம் பெயராக வைத்து அழைப்பது வாழும் சமூகத்தை முற்றிலும் மறந்துவிடும், அவமதிக்கும் செயலாகும்.

தொடர்புடைய சுட்டிகள்:

தமிழர் பெயர்கள் (எழுதியவர் ரவிசங்கர்)

அபித குஜலாம்பாள் !

16 ஜூன், 2010

மாநில மொழிகளை தொடர்ந்து புறக்கணிக்கும் மைய அரசு !

"இந்தி' தெரியாமல் பறிபோகும் பதவிகள் : கர்னல் தாமஸ் ஆபிரகாம் கவலை - என்ற தலைப்பில் தினமலர் வழக்கம் போல் தேசிய மற்றும் இந்தி ஆதரவு வாந்தியை எடுத்து இருக்கிறது. இந்த செய்தியை மேலோட்டமாகப் பார்த்தால், இந்தியை புறக்கணித்து தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தவறு செய்துவிட்டார்களோ என்று பொது புத்திவாசகர்களால் நினைக்கக் கூடும். மேற்கண்ட கட்டுரைக்கு வந்துள்ள 90 விழுக்காடு கருத்துகளும் அப்படித்தான் இருக்கிறது.

ஆனால் இதை நாம் வேறு கோணத்தில் பார்த்தால் அனைத்து மொழிகளையும் சமமாக நடத்துவோம் என்று உறுதி கொடுத்து மொழிவாரி மாநிலங்களை இந்தியா என்ற பெயரில் இணைத்துக் கொண்ட மத்திய அரசில் அமர்ந்திருக்கும் இந்தி அபிமானிகளின் மோசடி என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

பல்வேறும் மொழி பேசும் மாநிலங்களில் இருந்து சென்று இராணுவத்தில் பணியாற்ற உடல் தகுதியும் கல்வித் தகுதியும் உள்ள ஒருவருக்கு இந்தி தெரியவில்லை என்பதற்காக பதவிகள் மறுக்கப்படுகிறதாம். பெரும்பான்மையினர் மொழிகளே ஆளவேண்டும் என்கிற பாசிச எண்ணத்தின் வெளிப்படையாக இவ்வாற கருத்துகள் தேசப்பற்று என்ற பெயரில் பரப்பப்படுகின்றன.

உலகில் பெரும்பான்மையினர் பேசும் மொழிகளை அனைவரும் படிப்பது நல்லது என்ற கருத்து நிலவினால் அனைவரும் சீன மொழியான மாண்டரின் மொழியைத்தான் அறிந்து கொள்ள வேண்டும். ஏனெனில் சீன மொழியைப் பேசுபவர் உலக மக்கள் தொகையில் 5 ல் ஒருவராக உள்ளனர்.

சீனப் பெரும்பான்மை உள்ள சிங்கப்பூரில் அனைவரும் சீனம் படிக்க வேண்டும் என்ற வலியுறுத்தல்கள் எதுவும் கிடையாது. குறிப்பிட்ட சில்லரை விற்பனை கடைகள் மற்றும் சீனர்களுடன் தொடர்புடைய விற்பனைகள் தவிர்த்து சீன மொழித் தகுதி ஒருவருக்கு இருக்க வேண்டும் என்பதை எந்த ஒரு நிருவனமும் இங்கு வழியுறுத்துவது இல்லை.

எத்தனையோ பழங்குடிகளும் அவர் தம் மொழியும் இருக்கும் நாட்டில் அவர்களுக்கெல்லாம் நாங்கள் சேவை ஆற்ற வேண்டும் என்றால் அவர்களுக்கு இந்தி தெரிந்திருப்பது இன்றியமையாதது என்று ஒரு மைய அரசு அலுவலர் சொன்னால் அதில் இருப்பது நாட்டுப்பற்றா மொழிப்பற்றா ?

இந்தி இந்தியாவின் தேசிய மொழி அல்ல என்று மும்பை வரை குரல்கள் ஒலித்தாலும் கேட்காத காதுகள் அவற்றை கண்டு கொள்ளாது என்பது அவ்வப்போது நிருபனம் செய்யப்படுகிறது.

இந்தி ஆட்சி மொழியில் இருக்கும் மாநிலங்களை விட பிற மாநிலங்களின் பொருளியலும் வாழ்க்கைத் தரமும் சிறப்பாக இருக்கிறது என்பதை உணர்ந்தும் தொடர்ந்து இந்திப் பெருமை பேசி பரப்பும் மந்திகளுக்கு யாராலும் விளங்க வைக்க முடியாது. முடிந்த வரையில் அவ்வாறான பரப்புரையின் போது ஒரு சிலருக்காவது விழிப்புணர்வு ஊட்டலாம்.

இந்தி தெரிந்தால் தான் வேலை என்பதை ஒரு அரசு அலுவலரே, உயர் அலுவலரே தரவு அடிப்படையில் தெரிவிக்கும் போது அதனைக் கொண்டு பார்த்தால், மைய அரசின் இந்தி சார்புகள் பிற மாநில மொழிகளை (பிற மொழி பேசும் மக்களை புறக்கணிக்கும் சப்பைக் காரணம் !!!) புறக்கணிக்கும் இந்திய இறையாண்மைக்குக்கு எதிரான கயமைத் தனமாகும், இவைபற்றி மத்திய அரசுகள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில அரசுகள் அல்லது வேலை புறக்கணிக்கப்படும் தனி நபர்கள் ஏன் பொது நல வழக்கு தொடுக்கக் கூடாது ?

தொடர்புடைய பிற சுட்டிகள் :

அரசியல்வாதிகள் இந்தி படிக்கவிடாமல் செய்துவிட்டனர் !

மொழிவாரி மாநிலங்களும், இந்தி(யா ?) தேசியவாத பம்மாத்தும் !

இந்தி யா ?

நா.கண்ணன் ஐயாவின் - "நாங்கள் ஒரு தலைமுறை பாழாய்ப்போனோம்."

இந்தியாவின் பொது மொழித் தகுதி ! ஆங்கிலம் ? இந்தி ?

ஜெய்'ஹிந்தி'புரம் !

மஹா ராஷ்ட்ராவில் பரவும் திராவிட வியாதி :)

15 ஜூன், 2010

அதிரை பாரூக்கிற்கு - சிவனின் நல்லருள் கிட்டட்டும் !

திரு அதிரை பாரூக் அவர்களுக்கு,

ஏக இறைவனின் திருப்பெயராலேயே அனைவருக்கும் வாந்தியும் பேதியும் இல்லாமல் போகட்டும்,

தங்களின் இஸ்லாம் சமய இறைச் செய்திகள் நாள் தோறும் மின்அஞ்சல் வழியாக கிடைக்கப் பெற்று மகிழ்ந்தேன். (இதுக்குத்தான் பொது இடத்தில் தப்பி தவறி மின் அஞ்சல்களை வைத்துவிடக் கூடாது). தாங்கள் இந்துக்களிடம் விரும்பி இஸ்லாம் சமய செய்திகளையும், போதனைகளையும் திணிப்பதைப் போலவே உங்களைப் பார்த்து நெக்குறுகி, தங்கள் வழியிலேயே நானும் இந்து சமயம் சார்ந்த தகவல்களையும் படங்களையும் உங்களுக்கு அனுப்பி சமய நல்லிணக்கம் பேணலாம் என்று எண்ணியுள்ளேன். இதற்கு அல்லாவிடமிருந்து எனக்கு எதுவும் எதிர்ப்பு இருக்காது, ஏனெனில் அல்லாவின் கட்டளைகள் தங்களைப் போன்ற இஸ்லாமியர்களுக்கும், முழுமையாக பின்பெற்ற முயலும் மும்மின்களுக்கு மட்டுமே, எனவே உருவ வழிபாட்டுப் படம் நான் உங்களுக்கு அனுப்பி வைப்பதால் எனக்கு ஒன்றும் ஹரம், காரம் எதுவும் இல்லை.

இதோ உங்களுக்காக காந்திஜி வாழ்நாள் எல்லாம் வழியுறுத்த முயன்ற ஈஸ்வரனும் அல்லாவும் ஒன்றே என்பதில் இருக்கும் ஈஸ்வரனின் திருவுருவப்படம். இதை இந்துக்கள் சிவலிங்கம் என்று சொல்லுவார்கள்.



தாங்களும் சிவனை வழிபட்டு நல்லருள் பெறுங்கள். படம் நல்ல பலன் கொடுத்தால் தங்கள் நண்பர்களுக்கும் இந்தப் படத்தை அனுப்பவும்.

ஈஸ்வர அல்லா தேரே.......நாம்.

அல்லாவும் ஈஸ்வரனும் ஏக இறைவனின் வெவ்வேறு திருப்பெயர்கள்.

ஓம் நமசிவாய.......ஓம் நமசிவாய.........!

(அதிரை பாரூக் வலைப்பதிவை படிக்கிறாரா என்பது தெரியவில்லை, அவருக்கு உற்ற நண்பர்கள் இருந்தால் இந்த வலைப்பதிவின் சுட்டியை அவருக்கு அனுப்பி வைத்து ஏக இறைவனின் நல்லருளைப் பெறுங்கள்)

அதிரை பாரூக்கின் மின் அஞ்சல் தொடர்ந்து கிடைக்கப் பெரும் இந்து நண்பர்கள் அவருக்கு இந்த சுட்டியை அனுப்பி வைக்கும் படிக்கேட்டுக் கொள்கிறேன்

14 ஜூன், 2010

தண்டவாளத் தகர்பில் தி*மலரின் பங்கு !

இந்தியாவில் குண்டு வெடித்தால் இஸ்லாமிய சதி என்று (ஊகம்) கிளப்பி விடும் நாளிதழ்களில் நமது தி*மலருக்கு சிறப்பான இடம் உண்டு. மலேக்கான் குண்டு வெடிப்பு இந்துத்துவ சதி என்பது அம்பலமாகிய பிறகு யார் குண்டு வைத்தது என்று முந்திக் கொண்டு அறிவிப்பதில் சற்று சுனக்கம் காட்டினார்கள்.

வடகிழக்கில் இந்திய அரசுக்கு எதிராக மாவோயிஸ்டுகளின் செயல்பாடுகள் தொடர்ந்து வரும் வேளையில் தி*மலரின் தேசிய பற்று சற்று தூக்கலாகவே உள்ளது. இதன் காரணமாக பொதுப் புத்தி வாசகர்களை உருவாக்கி டீக்கடை பெஞ்சுகளில் தீவிரவாதிகளை கண்டிக்கும் தொடர் கூட்டங்களுக்கு தேவையான பணிவிடைகளை தினமலர் செய்துவருகிறது.

கடலூர் அருகே தண்டவாளத் தகர்ப்பில் இராஜபக்சே வருகைக்கு எதிரான துண்டு அறிவிப்புகள் கிடந்ததாம். இதைவைத்து 'விடுதலை புலி ஆதரவு இயக்கங்கள் மீண்டும் தலை தூக்கல்?' என்ற கேள்விகளுடன் ஒரு கட்டுரையை எழுதி வெளி இட்டிருக்கிறது தினமலர்.

* குண்டு வெடித்த இடத்தில் தி*மலர் நாளிதழ்களின் வாசகர் கடிதப் பகுதிகள் கிடந்தால் தி*மலர் தான் குண்டு வைத்தது என்று சொல்லிவிட முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'இராஜிவ் காந்தி வாழ்க !' என்ற துண்டு அறிவிப்பு கிடந்தால், தமிழ்நாட்டின் எதோ ஒரு காங்கிரசு கோஷ்டி சார்பில் குண்டு வைக்கப்பட்டது என்று கொள்ள முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'புரட்சி தலைவி வாழ்க' என்ற அறிவிப்பு கிடந்தால் அதிமுக காரன் குண்டு வைத்தான் என்று சொல்ல முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'நமீதா வாழ்க, குஷ்பு வாழ்க' என்று எழுதி இருந்தால் கவர்ச்சி சினிமா ரசிகர் எவரோ குண்டு வைத்தார் என்று சொல்ல முடியுமா ?
* குண்டு வெடித்த இடத்தில் 'தாமபிராஸ் வாழ்க' என்று எழுதி இருந்தால் தமிழ்நாடு வாழ் பார்பனர்கள் தான் வைத்தார்கள் என்று சொல்ல முடியுமா ?

குண்டு வெடிப்பிற்கும் கிடைக்கும் அறிவிப்புகளுக்கும் தொடர்பு இருக்கும் என்பது போலவே அவை திசை திருப்பும் நோக்கில் கூட செய்யப்பட்டிருக்கலாம் என்று இவர்களால் ஏன் சிந்திக்க முடியவில்லை. சதிச் செயல் என்று ஒரு செயல் உருவாகும் போது சுய விளம்பரத்திற்காக மட்டும் தான் இவற்றையெல்லாம் செய்வார்களா என்ன ? வேறொரு அமைப்பை சிக்க வைப்பதற்கும் சதிச் செயல்கள் நடைபெறும் என்பதை மலேக்கான் நிகழ்வுகள் சுட்டிக் காட்டிய பிறகும் இவர்களின் பார்வைகள் கோணல் பார்வையாக இருப்பதன் காரணம் என்ன ?

பிரபாகரன் கொல்லப்பட்டார் என்று செய்திகள் வெளியான பிறகு,
முள்ளி வாய்கால் படுகொலை தொடர்வது தெரிந்த பிறகு
இராஜ பக்சே மகிழ்ச்சியுடன் போர் வெற்றிக்கு நன்றி தெரிவிக்க திருப்பதி வந்த பிறகு
கடந்த ஓராண்டுகளாகவே இலங்கையிலும் எந்த ஒரு தண்டவாளத்திலும் வெடிக்காத குண்டு
இராஜபக்சே டெல்லி வந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து தற்போது மட்டும் தான் வெடிக்குமா என்ன ?

ஊகமாக யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் ஊடகம் இருக்கிறதே என்று எழுதலாம் என்றால் என்னால் கூட தண்டவாளத் தகர்ப்பில் தினமலருக்கு பங்கு இருக்கிறது என்று எழுத முடியும் அல்லவா ?

புலி என்பதாக ஈழ ஆதரவாளர்களையும், ஈழப் பொதுமக்களையும் முற்றிலும் ஒழிக்காமல் இவனுங்க அடங்கமாட்டானுங்கப் போல. அந்த அளவுக்கு தமிழர்கள் மீது கசப்புடன் இருக்கும் இவர்கள் நடத்துவதோ தமிழ் நாளிதழ், அதையும் காசு கொடுத்து வாங்கிப் படித்து சொந்த செலவில் சூனியம் வைத்துக் கொள்கிறான் தமிழன்.

12 ஜூன், 2010

பார்வதி அம்மா, டக்ளஸ், இந்திய சட்டம் !

80 வயதை கடந்த மூதாட்டி சிகிச்சைக்கு விசா அனுமதி பெற்றும் அவரை விமானத்திலிருந்து இறங்கவிடாமல் திருப்பி அனுப்பினர் மத்திய அரசின் கூலிப் படைகள். அதே மத்திய அரசு தேடப்படும் குற்றவாளியான டக்ளஸ் தேவனந்ததிற்கு விசா கொடுத்ததுடன் சிவப்பு கம்பள வரவேற்பும் கொடுத்துள்ளனர். காரணம் டக்ளசால் கொல்லப்பட்டவன் இராஜிவ் குடும்பத்தை சேர்ந்தவன் இல்லை, தமிழ் நாட்டைச் சேர்ந்த தமிழன் பொதுமக்களில் ஒருவன்.

மத்திய அரசின் அடிவருடி ஆட்சி நடத்தும் திமுக அரசின் தலைவர் கருணாநிதி பார்வதி அம்மா திருப்பி அனுப்பப்பட்ட விவரம் செய்திதாள்களைப் பார்த்து அறிந்து கொண்டதாக வெட்கம் இல்லாமல் தமிழ் நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாதது என்பது போல் ஒப்புதல் வாக்குமூலமாக அதனை தெரிவித்தது எரிச்சலை ஏற்படுத்தியது, அதற்கு பதிலாக 'சட்டம் ஒழுங்கை காப்பாற்றுகிறோம்' என்று புளுகி இருந்தாலும் அடடே ன்னு உச் கொட்டி இருக்கலாம்.

டக்களஸ் இந்தியா வந்ததும் பல்வேறு அமைப்புகளின் நெருக்கடியால் டக்ளசை கைது செய்ய முடியுமா என்ற அலோசனையில் டெல்லி காவல்துறையிடம் பேசி இருப்பதாகச் சொல்லுகிறார்கள். சிவப்பு கம்பள மரியாதை செய்யப்பட்டவரை கைது செய்ய மத்திய அரசும், மன்மோகனும் அல்லது அவரின் சாட்டை சோனியாவும் கேணையா ?

அழும் குழந்தைக்கு வாழைப்பழம் காட்டுவதைப் போல இவர்கள் காட்டுவது தமிழர்களை முற்றிலும் உணர்ச்சியற்றவன் என்று குத்திக்காட்டும் ஒரு உத்தி....... இதே போல் போனால் நாளைக்கு பாகிஸ்தான் பிரதமருடன் ஒட்டிக் கொண்டு வர தாவூத் இப்ராஹிமுக்கு கூட வாய்ப்பு இருக்கும் போல.

இவர்களெல்லாம் சட்டம் ஒழுங்கைக் காப்பாற்றுகிறார்களாம்.......தமிழர்கள், இந்தியர்களும் ஐயோ பாவம் என்று வெளிநாட்டுக்காரன் சிரிப்பான். போபால் ஆண்டர்சனை தனி விமானத்தில் தப்பவிட்டதாக குற்றச் சாட்டுகள் காங்கிரசார் மீது கூறப்படுகிறது, இதை எதிர்கொள்ளத் தயங்கும் காங்கிரசு வீரப்ப மொய்ழி வழியாக 'ஓய்வு பெற்றவர்கள் வாயையும் பின்னாடியும் மூடிக் கொண்டு இருப்பது நல்லது, எதையாவது பேசி விவகாரம் ஆக்கவேண்டாம்...' என்று அவர்களை பொத்துவதிலேயே குறியாக இருக்கின்றனர்.

டக்ளசுக்கு சிவப்பு கம்பளம் விரித்தவர்கள் பார்வது அம்மாளுக்கு நிபந்தனைகளை தளர்த்தி இருக்கிறார்களாம், நல்ல கூத்து, அவர் இங்கு வருவதாக இருந்தால் அரசியல் தலைவர்களை சந்திக்கக் கூடாதாம், ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான அரசியல்வாதிகள் மனிதர்கள் இல்லையா ? எல்லோரும் எப்போது அரசியல் முகமூடிகளை இவர்களைப் போலவே அணிந்து கொண்டு இருக்கிறார்களா ?

இலங்கை இராஜபக்சேவும், டக்ளசும் டெல்லியில் விருந்து சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் போதே இராமாஷ்வரம் பகுதியில் மீனவர்கள் மீது துப்பாக்கிசூடு, மீனவர்கள் கடத்தல் என்ற செய்திகள் வருகின்றன. எவன் எப்படிப் போனால் என்ன சோனியா வாழ்க, கருணாநிதி வாழ்க என்று கோசம் போடுபவர்களிலும் தமிழர்கள் உள்ளார்கள் என்பதைவிட இது வெட்கப்பட வேண்டிய விசயமாக தெரியவில்லை. புல்லுரிவிகளை கூடவே வைத்திருக்கும் நாம உணர்ச்சிவசப்படுவதைவிட இது விசயத்தில் வெட்கப்படவேண்டியதே முதன்மையாக உள்ளது.

10 ஜூன், 2010

செம்மொழி மாநாடு - எழவு வீட்டில் கறிவிருந்து !

தமிழ்மொழி மாநாடுகள் நெடிய வரலாறுகள் கொண்டது, அதன் துவக்கம் சங்காலத்திற்கு முன்பே துவங்கினாலும் சங்காலங்கள் வரலாற்றில் பதியப்பட்டவை. முதல் சங்க காலம் என்பவை 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பானவை.

இதோ இன்று இவரால் தான் தமிழ் பெருமைப் படப் போகிறது என்பது போன்ற தடபுடலான ஆடம்பரங்களுடன், வரலாறுகளை எழுதிக்கொள்ளும் நிகழ்வாக கோவையில் செம்மொழி மாநாடு துவங்குகிறதாம். தமிழ்மொழி என்பது நிலம் சார்ந்த மொழி என்பது தாண்டி நாடுகளைக் கடந்து அம்மொழி பேசும் மக்கள் வாழும் நிலையில் தமிழ் மொழி சார்ந்த நிகழ்வுகளை நிலப்பரப்புக்குள் அடக்கிவிடும் நிகழ்வுகள் என்னாளும் தமிழ் வளர்ச்சிக்கு பயன் தராது.

தமிழ் புத்தாண்டு துவக்கம் தை 1 ஆக மாற்றியதில் என் போன்ற பலருக்கு உடன்பாடு என்றாலும் கூட பிற நாடுகளில் வசிக்கும் தமிழர் அமைப்புகளிடம் இதுபற்றிய அளவளாவல்களைப் பெற்றபிறகாவது அறிவித்திருக்கலாம். பெரியண்ணன் வழிகாட்டி என்பது போல் ஓர் இரவில் இதுபற்றிய முடிவை அறிவித்து தமிழ் புத்தாண்டு நாளை மாற்றியது தமிழக அரசு, அதன் தொடர்ச்சியாக இவை இராண்டுகளுக்கு மேலாக பல்வேறு தரப்பினராலும் வெளிநாடு வாழும், புலம் பெயர்ந்த தமிழர்களாலும், பிற நாட்டுத் தமிழர்களாலும் தொடர்ந்து கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. சிங்கையில் ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டு என்பதாகத் தான் கொண்டாடிவருகிறார்கள், ஒருவேளை சிங்கைத் தமிழ் அமைப்புகளிடம் இதுபற்றிய பரிந்துரைகள் கேட்டு இருந்தால் தமிழ் புத்தாண்டு தேதிமாற்றம் முழுதாக ஏற்றுக் கொள்ளப்படும் நிலையோ அல்லது புரிந்து கொள்ளக் கூடிய நிலையோ ஏற்பட்டிருக்கும்.

தமிழுக்கு செம்மொழி தகுதி என்னவோ ஒரே இரவில் காசு கொடுத்து வாங்கியதைப் போன்று அண்டைமாநில மொழிகள் எந்த வித போராட்டங்களும் நடத்தாமல் தமிழுக்கு கொடுத்தீர்களே என்பது போல் கேட்டுப் பெற்றுக் கொண்ட சூழலில் செம்மொழியின் சிறப்புகள் என்பது தமிழுக்கான தனிச்சிறப்புகள் மட்டுமே இல்லை என்பது போன்ற தவறான புரிதல்களை ஏற்படுத்திவிட்டார்கள். தமிழுக்கான செம்மொழி தகுதி பெரும் கோரிக்கைகள் 100 ஆண்டுகளாக நடந்து வந்திருக்கிறது, இவ்வகையான போராட்டங்கள் எதையும் செய்யாமலேயே அண்மையில் கன்னட மொழியும் அதைத் தொடர்ந்து தெலுங்கும் செம்மொழி தகுதியை பெற்றுக் கொண்டன. அவையும் திராவிட மொழிக் குடும்பம் என்றாலும் கூட அவர்கள் மொழிகளுக்கு செம்மொழி தகுதி இருந்தாலும் கூட அவர்கள் அதைப் பெற்றுக் கொள்ள அடிப்படைக்காரணமே தமிழர்கள் தமிழுக்காக அந்தத் தகுதியைப் பெற்றுக்கொண்டது தான். அவ்வகையில் அம்மொழிபேசுபவர்கள் தமிழுக்கும் தமிழர்களுக்கும் கடமை பட்டவர்கள், ஆனால் நடைமுறையில் தமிழனுக்கும் தமிழுக்கும் ஏச்சுகளே மிஞ்சுகிறது என்பது கசப்பான உண்மை. இவை வேறு அரசியல்.

இன்றைக்கு ஏற்பாடு செய்திருக்கும் செம்மொழி மாநாடுகள் என் பார்வையில் ஒரு பெரிய இல்லத்தின் பெற்ற குழந்தைகளில் சிலர் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டு, குற்றுயுரும் குலை உயிருமாக இருக்க பெற்றோர் அறுபதாம் திருமணத்தை ஊர் கூட்டி கோலாகலமாக நடத்துவது போன்றிருக்கிறது.

இலங்கையின் இன அழிப்புப் போர் கிட்டதட்ட முடிவுக்கு வந்த நிலையில் இன்னும் ஒரு லட்சத்திற்கு மிகுதியான தமிழர்கள் வதை முகாம்களில் தங்கி இருப்பது தொடர்ந்து வரும் வேளையில் இவர்களையும் சேர்த்து இவர்களுக்கும் தலைமை அதாவது தமிழ் இன தலைமை என்று சொல்லிக் கொள்ளும் முதாட்டி ஒருத்தி தண்டட்டிப் போட்டு மினுக்கிக் கொண்டு என்னைப் பார் என் அழகைப் பார் அல்லது பல்லுபோன முதியவர் ஊன்று கோலுக்கு தங்கக் கைப்பிடிப் போட்டிருக்கிறேன் பாருங்கள், என்னோடு சேர்ந்து பெருமைபடுங்கள், கொண்டாடுங்கள் என்றால் நிலைமை தெரிந்தவர்கள் வேதனை படமாட்டார்களா ?

உலகத்திலேயே 'உன் நாட்டில் உன்னால் மனித அவலம், மக்களை காப்பாற்ற முயற்சி செய்' என்று இன்னொரு நாட்டில் இருந்து வேண்டுகோள் வைக்கும் போது அதை சிரித்துக் கொண்டே செய்துவருவதாகவும், செய்யப் போவதாகவும் சொல்லும் ஒரே அதிபர் இராஜபக்சே தான். அந்த அளவுக்கு தன்னாட்டு மக்கள் மீது அளவுகடந்த பாசம் வைத்திருப்பவர் என்பதை அண்மையில் சிங்கப்பூர் முன்னால் பிரதமர் வரை விமர்சனம் செய்துள்ளார்கள், ஹிட்லரை ஒத்த அந்த அதிபருக்கு இரத்த(ன) கம்பள வரவேற்பு வழங்குபவர்களைத் தான் செம்மொழி மாநாட்டுக்கு வருகை தந்து சிறப்பு செய்யுமாறு தமிழக அரசால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம்.

தமிழரின் ஒட்டுமொத்த அடையாளம் தாங்கள் தான் என்பதாக காட்டும் இந்த மாநாட்டு முயற்சியில் தமிழ் எழுத்துகளை மாற்றப் போகும் கூத்துகள் கூட நடைபெறப் போவதாக தமிழார்வளர்கள் பம்மியபடியும், விம்மியபடியும் முனுகிக் கொண்டி இருக்கிறார்கள்.

இந்த வேளையில் செம்மொழி மாநாடு (இவ்வளவு ஆடம்பரமாக!!!) நடந்தால், தமிழர்கள் நல்ல நிலையில் இருக்கிறார்கள், தமிழர்கள் கொண்டாடும் மனநிலையில் இருக்கிறார்கள் என்பதாக உலகினரால் புரிந்து கொள்ளப்படும் வகையில், செம்மொழி மாநாடு என்ற பெயரில் தமிழர்களின் மீதான படுகொலையை முற்றிலும் வெளி உலகுக்கு மறைக்கும் ஒரு செயலை, தமிழ் தாயின் தொடர் அழுகுரலை நிறுத்த அல்லது மறக்கக் கொடுக்கப்படும் மதுவாக இம்மாநாடு நடைபெறுவாதாக எண்ணும் நான் செம்மொழி மாநாட்டை புறக்கணிக்கிறேன்.

9 ஜூன், 2010

கொஞ்சம் தமிழக அரசியல் !

கடந்த மே 2009, மைய அரசின் தேர்தலின் போது நடந்த இலங்கையின் இன அழிப்பைக் கருத்தில் கொண்டு தமிழக வாக்காளர்களின் முடிவெடுக்கும் நிலை மாறலாம் என்கிற நப்பாசை என் போன்ற பதிவர்களைப் போலவே மருத்துவர் இராமதாசுக்கும் இருந்தது. அதைக் கருத்தில் கொண்டு அணி மாறினார். வழக்கம் போலவே ஆளும் தரப்புகளும் அவர்களுக்கு ஆதரவான செய்திகளும் இலங்கைத் துயரச் செய்திகள் எதுவும் மக்கள் காதில் விழா வண்ணம் செய்து தேர்தலிலும் வெற்றி கண்டன. ஒரு நாள் முதல்வர்களைப் போலவே ஈழத்தாயாக ஒருமாதம் மாறி இருந்த ஜெ, பிறகு இலங்கை நிலவரங்களை முற்றிலும் மறந்து நெடும் ஓய்வெடுக்கச் சென்றார். ஆப்பசைத்த குரங்காக தேர்தலில் படு அடி வாங்கிய மருத்துவர் இராமதாசும் பாமகவும் பிறகு எந்தப் பக்கம் சாய்வது என்ற குழப்பத்தில் இருந்தாலும் ஜெவுடன் ஆன கூட்டணி நீண்ட காலப் பலன் தராது என்பதாக கோபாலபுரத்தில் அடைக்கலம் ஆனார்கள்.

எம்ஜிஆருக்கு பிறகான தமிழக அரசியலில் எந்த ஒரு திராவிடக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை என்பது கிடையாது, ஆனால் அப்படி இருப்பதாகத்தான் கட்சிகள் வெளியே சொல்லிக் கொள்கின்றன. இராஜிவ் மரணம் நிகழ்ந்திருக்காவிட்டால் தமிழக அரசியலில் கூட்டணி அரசுகள் மட்டுமே அமைந்திருக்கக் கூடிய அளவில் தான் கட்சிகள் கொள்கை அடிப்படையிலும் பலவீனமாக இருந்தன. அவையெல்லாம் நடந்த கதைகள் என்றாலும், அதன் தொடர்ச்சியாக பிற கட்சிகள் ஆதரவினால், தயவினால் ஆட்சி பெற்றவர் என்ற பெருமையும் பல்வேறு பெருமைகளின் கூடுதலாக கருணாநிதிக்கே சேருகிறது என்பதை கடந்த சட்டமன்ற தேர்தல்கள் உணர்த்துகிறது.

அடுத்த தேர்தலில் தனித்து ஆட்சியை பிடிக்க முடியும் என்ற நிலை திமுக உட்பட எந்த கட்சியும் இல்லை. திமுகவின் இலவசங்கள் ? இவையெல்லாம் இனி யார் வந்தாலும் எப்போதும் இன்னும் கூடுதலாகவே ஓட்டுக்காக செய்வார்கள் என்பது தான் மக்களின் நிலையும். மக்கள் மன நிலையைப் பொருத்த அளவில் அரசியல்வாதிகளைப் பற்றிய பெரியதொரு எண்ணம் எதுவும் கிடையாது. அரசியலுக்கு முற்றிலும் புதியதொரு பிரபலம் (ரஜினியை மனதில் வைத்து சொல்கிறேன்) என்பது தவிர்த்து அலைகள், தேர்தல் சுனாமி என்று எந்த ஒரு நிகழ்வையும் தமிழக மக்களிடம் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடாது சூழலில் சட்டமன்ற தேர்தல் துவங்குகிறது.

கனிசமான ஓட்டுவங்கியை அல்லது வெற்றி தோல்வியை மயிரைழையில் முடிவு செய்யும் வாக்களர்கள் வங்கியை தேமுதிக வளர்த்திருக்கிறது என்பதில் ஐயம் இல்லை. சென்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும் தலைகள் வெறும் 400 ஓட்டு வேறுபாட்டில் கூட வெற்றி பெற்றிருக்கிறார்கள். இந்த நிலையில் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் கட்சி ஓரளவு கனிசமான இடங்களைப் பிடிக்கும் என்கிற நிலை இருப்பதால், அதிமுக தேமுதிக கூட்டணி கிட்டதட்ட உறுதியாகிவிட்டதாக ஜூவி உள்ளிட்ட புலனாய்வு இதழ்களில் குறிப்பிடுகின்றனர்.

மருத்துவர் இராமதாசின் பாமக ? பாமகவின் தேர்தல்காலத் தன்மானங்கள் வெளிப்படையானதுதான் என்பதால் தேமுதிக இருக்கும் கட்சியில் சேருமா என்பதை நாம் விவாதத்திற்கே எடுத்துக் கொள்ள முடியாது. இவை திமுகவிற்கும் தெரியாத ஒன்று அல்ல, எனவே இந்த முறையும் பாமக சென்ற முறையைப் போல் 20க்கும் மேற்பட்ட இடங்களை திமுகவிடம் கேட்டுப் பெற்றுக் கொள்ளும் என்று நினைக்கிறேன். தேமுதிகவிற்கு 35 இடங்கள் வரை அதிமுகவில் ஒதுக்குவதாக செய்திகளில் படித்தேன். அதே அளவுக்கு மருத்துவரும் கேட்பார், அதனைத் தர திமுகவும், அதிமுகவும் தயங்காத நிலை இருக்கிறது. காரணம் பொன்னாகரத் தேர்த்தலில் இரண்டாவது இடம் கிடைத்ததை தன் தேர்தல் பலமாக.....பலமாக பாமக தரப்புகள் சொல்லிவருகின்றன.

ஒருவேளை பாமக அதிமுக-தேமுதிக கூட்டணி பக்கம் சாய்ந்தால் அதிமுக-தேமுதிக கூட்டணிக்கு வெற்றிவாய்புகள் அதிகம் ஆகும், இல்லை என்றால் அதிமுக ஆளும் கட்சியை எதிர்த்து வெற்றி பெற்று ஆட்சி அமைப்பது கடினம், அந்த நிலையில் தேர்த்தல் முடிவுகள் கடந்த தேர்தல் முடிவைப் போலவே தொடரும் என்றேநினைக்கிறேன். பாமகவை அதிமுக கூட்டணியில் சேர்க்கக் கூடாது என்று தான் சோ இராமசாமி ஜெவுக்கு ஆலோசனை சொல்லி இருக்கிறாராம்.

நமீதா....வினால் ட்விட்டரில் பின் தொடரப்படும் பிரபல பதிவர் !

'ஹாய் மச்சான்ஸ்' புகழ், புகழ்பெற்ற தமிழ் நடிகை நமீதா டுவிட்டரில் கலக்குவது செய்தி ஆனால் அவர் பிரபல பதிவர் ஒருவரை பின் தொடர்கிறார் என்பது தெரியுமா ?

அந்த அதிர்ஷ்டக்காரப் பதிவர் யாரும் இல்லை, புதசெவி(புரியல தயவு செய்து விளக்கவும்) பதிவர் டிபிசிடி தான்.

மலேசியா லங்காவியில் பில்லா படப்பிடிப்பில் போது நமீதா உர்கார்ந்து பயணம் செய்த மகிழுந்தின் அதே இருக்கையில் அமர்ந்து பயணம் செய்தவர் என்ற பெருமைக்குரியவர் டிபிசிடி என்பது எனக்கு தெரிந்த கூடுதல் தகவல்.

எப்போதும் வெளிவராத தகவல்: விரைவில் வலைப்பதிவு மற்றும் டுவிட்டர் நமீதா ரசிகர் குழுவின் தலைவராகவும் ஆக இருக்கிறார் டிபிசிடி . :)

பாராட்டுகள் டிபிசிடி.

தொடர்புடைய ட்விட்டர் சுட்டிகள் : tbcd ; namitha



8 ஜூன், 2010

நர்சிம்முக்கு ஒரு திறந்த கடிதம் !

அன்பு தம்பி நர்சிம்,

உங்களின் பதிவுகளின் அனைத்து பதிவுகளையும் இல்லாவிட்டாலும் பெரும்பாலான பதிவுகளை படித்து வந்திருக்கிறேன். இதற்கு இடையே நான் சென்னை வந்த பொழுது இருமுறை உங்களை சந்தித்து இருக்கிறேன். பதிவுகளை வாசித்த பிறகு சந்திப்பவர்களில் பார்த்தவுடன் பழகியது போன்ற முகங்களில் உங்களுடையது ஒன்று. என்னுடன் பழகும் பல பதிவர்களில் உரிமையுடன் அண்ணன் தம்பி உறவின் பெயரால் உரிமையில் அழைப்பவர்களில் நீங்களும் ஒருவர். கடுகடுப்பு சிரிதுமின்றி சிரித்த முகத்துடன் பேசும் பாங்கு, எந்த தயக்கமில்லாமல் மற்றொரு குழந்தையுடன் எளிதில் பழகிவிடும் குழந்தைத்தன்மான மனது இவை அனைத்துமாக இருந்த தாங்கள் புனைவு என்ற பெயரில் எழுதிய இடுகையை நான் அன்று வாசிக்கவில்லை, சிங்கையில் பதிவர் நண்பர்கள் சார்பில் பல பல நிகழ்ச்சிகள் நடந்ததால் பதிவில் என்ன நடக்கிறது என்றே தெரியாத சூழலில் உங்கள் இடுகையை வாசிக்கவில்லை, அன்று வாசித்து இருந்தாலும் கூட அதில் இருக்கும் புனைவின் புனைவு விபரீதம் தெரியாமல் ஒருவேளை நானும் கூட இரண்டு மூன்று கும்மி பின்னூட்டங்கள் போட்டிருந்திருக்கக் கூடும்.

பிறகு நடந்தவை அனைத்தையும் கேள்விப்படும் போது அதன் விபரீதம் தெரிந்து மிகவும் நொந்து போனவர்களில் நானும் ஒருவன். வலைப்பதிவுகளில் நட்புகள் கிடைக்கிறது என்பது போலவே எதிரிகளும் கிடைக்கிறார்கள் அல்லது உருவாக்கிக் கொள்கிறோம் என்பதை மீண்டும் புரிய வைக்கும் மற்றொரு நிகழ்வு என்பதாகப் பார்க்கிறேன்.

உங்களின் 'இதற்குத்தானா ஆசைப்பட்டீர்கள் ?' என்ற பதிவில் இருந்த வரிகளைக் குறிப்பிட்டு உங்களுக்கு மின் அஞ்சல் அனுப்பினேன்.

date Mon, May 31, 2010 at 10:34 AM

//தோள்கொடுத்த கார்க்கிக்கு நன்றி. மிக முக்கியமான ஆதாரத்தை பின்னூட்டத்தில் கொடுத்த லக்கிக்கும் அதிஷாவிற்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன். நன்றி//

நர்சிம்,

பதிவுலகம் எழுத்துக்களானது, அதில் கிடைக்கும் நட்புகளை எழுத்துகளில் கொண்டுவரத் தேவை இல்லை என்பது என் கருத்து. யார் யாருக்கு ஆதரவு எதிர்ப்பு போன்ற அரசியலை நாம் திரும்ப திரும்ப வலைப்பதிவில் பின்னுவதால் தான் ஒரு சிறிய பிரச்சனைகள் கூட நண்பர்கள் அல்லது எதிரிகள் என்று அடையாளப்படுத்தப்படுப்வர்களால் ஊதப்பட்டு பெரிதாகிறது.

எனக்கு பதிவுலகில் பிரச்சனைகள் வந்த பொழுது எனக்காக கோதாவில் இறங்குங்கள் என்று நான் யாரிடமும் கேட்டது இல்லை. என்னுடன் முன்பு எதிரே எதிரே நின்றவர்கள் இன்று மீண்டும் நெருங்கிய நண்பர்கள், எனக்காக யாராவது வரிந்து கட்டி இருந்தால் அவர்களுக்குத்தான் சங்கடம் ஆகி இருக்கும்.

பதிவில் எழுத்துகளையும், நட்பை பதிவுக்கு வெளியேயும் வைத்துக் கொள்வது என்பதை வழக்கமாக வைத்துக் கொண்டிருக்கிறேன். இதன் காரணமாக நான் பார்பனர்களைப் பற்றிய விமர்சனம் செய்தாலும் எனது பார்பன நண்பர்களின் நட்புகள் பாதிக்கப்படுவதில்லை. நல்ல நடைமுறை முடிந்தால் நீங்களும் பின்பற்றுங்கள் என்பது எனது பரிந்துரை.

கும்மிக்கு நாம கோஷ்டி சேர்க்க சேர்க்க கோஷ்டியில் இணையாத பிறர்களிடம் இருந்து நாம விலகுகிறோம். இந்த சமயத்தில் இந்த மின் அஞ்சல் உங்களுக்கு எரிச்சல் ஏற்படுத்தலாம். மன்னிக்கவும். எனது நோக்காம் அறிவுரை அல்ல பரிந்துரை மட்டுமே.

அன்புடன்

கோவி

*****

ஏற்கனவே மிகுந்த மன உளைச்சலில் இருந்த உங்களிடம் இருந்து இதற்கு எந்த பதில் அஞ்சலும் வரவில்லை, இதற்கிடையே 'செய்த தவறுக்கு மாற்றாக எழுதுவதை நிறுத்தப் போவதாக ஒரு பதிவின் பின்னூட்டத்தில் அறிவித்திருந்ததைப் படித்தேன்.

தெரிந்தோ தெரியாமலோ யார் காலையை மிதித்துவிட்டு காலை வெட்டிவிட்டால் சரியாகிவிடும் என்பது போன்ற உங்கள் முடிவு எழுத்துத் தற்கொலை முயற்சியாக தெரிகிறது. செய்த தவறுக்கு மனம் திருந்தி, விரும்பி மன்னிப்பு கேட்டுவிட்டீர்கள். மன்னிப்பு கொடுக்கவிட்டாலும், நட்பு என்ற பெயரில் நம்பிக்கைத் தூரோக மயிர்களால் உங்களின் மீதும் உங்களின் தந்தையின் மீதும் புனைந்த பார்பான், பார்ப்பான் புத்தி, பார்பனத் திமிர், பார்பன மலம், பணக்காரத் திமிர், ஈ, கொசு, பன்றி, ஓநாய் போன்ற சொற்களுக்குள் சிதைந்து போகாத, புதிய சொற்களுடன் ஆன புனைவுகள் உங்களுக்கான மன்னிப்புகளாக இருக்கும் என்ற காத்திருப்பில் உங்களுக்கான மன்னிப்புகள் மேலும் காலதாமதம் ஆகலாம், அல்லது கிடைக்காமலே கூடப் போகலாம்.

இது தான் சாக்கு என்கிற காத்திருப்பின் கனங்களைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டு உங்களை நோக்கி துப்பிய நாக்குகள், எச்சில் உலர்ந்த நிலையில், மீண்டும் ஊறும் வரையில் மற்றொரு சூழலுக்காக காத்திருக்கும் இடைப்பட்ட நேரத்தில் உங்களை நோக்கி அழைப்புகள் விட்டுக்கொண்டிருக்கிறது.

அவர்களையெல்லாம் புறம் தள்ளிவிட்டு உங்களை பின் தொடர்பவர்களுக்காவது எழுதலாம். நல்லோர் நினைப்பது இவைதான் 'மனிதன் தவறு செய்வதுண்டு ஆனால் மனிதன் தவறு செய்யவே பிறந்தவன் இல்லை'. செய்த தவற்றின் மன உளைச்சல் உங்களை மீண்டும் அது போல் ஒருநாளும் செய்யக் கூடாது என்ற மன உறுதி தந்து செம்மைப் படுத்தி இருக்கும், அந்த உறுதி உங்களுக்கு இருக்கும் என்பது எம்போன்றவர்களின் நம்பிக்கை. எழுத்துக்களை நேசித்த உங்கள் கைகளை எதன் பொருட்டும் கட்டிப் போடாதீர்கள்.

அன்புடன்
கோவியார்

7 ஜூன், 2010

டிவிஆருக்கு ஒரு திறந்த மடல் !

அன்பின் டிவி இராதாகிருஷ்ணன் ஐயா என்கிற சித்தப்பாவிற்கு,

பதிவில் சண்டை எப்பவும் நடப்பது தான், தனிமனித தாக்குதலில் அடிபட்டு மிதிபட்டு (சொம்பு) நசுங்கி விழிபிதுங்கிய என்னையும் சேர்த்து பலர் தொடர்ந்து எழுதிவருகிறோம். காரணம் எழுத்து அரிப்பு (மட்டுமே) இல்லை. சமூகம் மற்றும் அரசியல்களின் அவலங்களை மனதில் போட்டு அடக்கி வைத்திருந்தால் மன அழுத்தம் ஏற்படும் என்பதால் அதை விமர்சனம் செய்து, கருத்தாக பகிர்கிறோம், இது தவிர்த்து சமூகம் சார்ந்த நல்ல எண்ணங்களை எழுதி பகிர்ந்து வருகிறோம். இதற்கு கூடுதல் பலனாக உங்களைப் போன்றோர்களின் நல்ல நட்பு கிடைக்கிறது.

எதோ இருவர் (தனிப்பட்டு அவர்கள் தம் ஈகோவால்) பிரச்சனைகள் செய்து கொண்டதை வைத்தும், பதிவில் சாதி, மத, தனிமனித மோதல்கள் போன்ற விரும்பத்தக்காத விமர்சனங்கள் வருவதால் எழுதுவதை நிறுத்துவதாக தங்கள் அறிவித்ததில் எனக்கு உடன்பாடு இல்லை. எதோ ஒன்று அல்லது பல அரசியல்வாதிகள் தவறு செய்கிறார்கள் என்பதற்காக நாம ஓட்டு போடுவதை நிறுத்துவது நம்முடைய ஓட்டு உரிமையை இழப்பது என்பதாகும், இதே போன்று தான் உங்கள் கருத்து குரல்வளைகளை எவர் பொருட்டும் அறுத்துக் கொள்ளாதீர்கள். உங்களை தொடர்ந்து வந்து படிக்கும் 200க்கும் மேற்பட்ட பதிவர்களும் உங்கள் முடிவில் ஒப்புதல் கொண்டிருக்கமாட்டார்கள்.

உங்கள் பதிவு உலகு விலகல் அறிவிப்புக்கு வந்த பின்னூட்டங்களைக் கருத்தில் கொண்டு எழுதுவதை துவங்குங்கள். நீங்கள் எழுத வந்ததால் தான் உங்களின் நட்பு அறிமுகம் ஆனது இல்லை என்றால் உங்கள் நட்பு கிடைத்திருக்காது. உங்களின் நட்பு மேலும் பலருக்கு அறிமுகம் ஆகவேண்டும். இவை பதிவில் தொடர்ந்து எழுதி இயங்கினால் தான் ஏற்படும்.

6 ஜூன், 2010

தொடர்ந்து 'டூ' விட்டுக்கொள்ளனுமா !

நர்சிம், முல்லை பிரச்சனையில் என்னால ஒன்று புரிந்து கொள்ளவே முடியவில்லை. பிரச்சனை என்றாலே அது என்றும் முடியவே கூடாது என்பது போல் தான் பலர் இதில் தீவிரமாக களம் இறங்கி கருத்து சொன்னார்கள், நாட்டாமைத்தனம் செய்தார்கள்.

நாம சில சமயங்களின் மிருகமாக மாறினாலும் பல சமயங்களில் மனிதர்கள், தவறு செய்கிறவர் எவேறேனும் அதே நொடியில் திருத்திக் கொள்ளும் தீர்வையும் கையில் வைத்து கொண்டு தவறு செய்பவர்கள் கிடையாது. ஆத்திரம் கோபம் இவை நொடிகளில் சில தவறான முடிவு எடுக்க வைத்துவிடும் என்பது நம் வாழ்க்கையில் எதோ ஒரு சூழலில் நடந்தவையாகவே இருக்கும். சூழலில் தவறு செய்பவர்கள் எவருமே அதைத் தொடர்ந்து நியாப்படுத்தினால் அவர்கள் அந்த தவறை விரும்பியே செய்திருக்கிறார்கள், எல்லது அந்த சூழலுக்காக காத்திருந்தார்கள் என்பது தான் பொருள். அவர்கள் ஒருகாலமும் திருத்திக் கொள்ளமாட்டார்கள், வரட்டு பிடிவாதக்காரர்கள் இப்படித்தான் தாம் செய்வதே சரி என்பர். செய்தவறுக்கு வரும் எதிர்வினைக்கு மனது வருந்தாவிட்டாலும் நாம் சிலரை காயப்படுத்தி இருக்கிறோம் என்கிற உணர்வு வரும் போது மன்னிப்பைக் கோரும் நிலைக்கு வருவதே மனித பண்பு.

ஒரு பெண்ணை கையைப் பிடிச்சு இழுத்தா சும்மா இருப்பாங்களா ? இழுத்துவிட்டு மன்னிப்பு கேட்டால் சரியாகப் போய்விடுமா என்பது போன்ற மடக்கு கேள்விகளுக்கு நான் வரவில்லை, எழுத்து ஆபாசத்தையும் வன்புணர்ச்சியும் ஒன்று என்று என்னால் வினவு/ பைத்தியக்காரன் போல் வகைப்படுத்தவும் முடியாது. இந்த தாக்குதலின் வேர், இவை எந்த உரிமையில் தொடர்ந்தது என்பதை பார்க்க வேண்டி இருக்கிறது.

நர்சிம் எழுதியது முல்லையைக் குறித்து எல்லோரும் ஒப்புக் கொள்ளும் போது, அதற்கு முன்பு மயில் விஜி எழுதிய பகடி நர்சிம்மை குறித்து தான் என்பது முல்லைக்கு தெரிந்திருக்காது என்று நினைக்கமுடியவில்லை. இருவருக்கும் இடையே கசப்புணர்வு இருந்தது என்பதும் இருவரும் தெரிந்தது தான். ஏற்கனவே இருவருக்கும் வாய்க்கால் தகறாரு இருக்கும் போது இவர்கள் இருவருமே ஒருவரை ஒருவர் தாக்குவது ஆபாத்தானது என்று உணர்ந்திருக்க வேண்டும். டோண்டு இராகவன் குறிப்பிட்டது போல் எந்த உரிமையில் இப்படியான பகடி தொடர்ந்தது என்பது புரியவில்லை. இவை எல்லை மீறியதால் போது இதன் தொடர்ச்சியின மற்றொமொரு உரிமை மீறல் தான் அந்த ஆபாச புனைவு.

எல்லோரும் கண்டனம் செய்தார்கள், அவரும் கண்டனத்தை மதித்து மற்றும் குற்ற உணர்வில் பதிவை உடனே அழித்து பிறகு இருநாட்களில் வந்த எதிர்வி(னவு)னைகளைப் பார்த்து மன்னிப்பு கேட்டார். தவறு செய்தவர் திருந்த கால அவகாசம் முக்கியம்.

மன்னிப்பு கேட்டுவிட்டால் சரியாகிப் போய்விடுமா ? முற்றிலும் முகம் தெரியாதவர் என்று சொல்லிவிடவும் முடியாது. செய்ததை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டாகிவிட்டது, இதற்கு மேலும் வளர்த்த விரும்புவர்கள் பிரச்சனைகளை விரும்புகிறார்கள் என்று நான் கருதுகிறேன்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு போலி தொடர்பான பிரச்சனைகளில் செந்தழல் ரவி, கவிதா இருவருக்கும் மனக்கசப்பு, செந்தழல் ரவியின் மிரட்டல்களால் கவிதா வலைப்பதிவை விட்டுச் செல்வதாக அறிவித்துச் சென்றார். பிறகு செந்தழல்ரவி தாம் செய்தது தவறு என்று உணர்ந்து கவிதாவிடம் மன்னிப்பு கேட்டார். கவிதாவும் நிகழ்வுகளை பாடமாக எடுத்துக் கொண்டு மீண்டும் எழுதவந்தார். இதையே பாதிக்கப்படும் பெண்களும் பின்பற்றனும் என்று சொல்லவரவில்லை. ஆனால் அவர்கள் இருவரும் என்றைக்கும் எதிரியாக இருக்க வேண்டும் என்று எவருமே விரும்பவில்லை. இதைத்தான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

பிரச்சனைக்குரியவர்கள் பிரச்சனைகளை மறந்தாலும் அதைத் தூண்டிவிட்டுக் காயப்படுத்தியவர்களை இருவருமே நினைவு வைத்திருபார்கள். இதுவும் பலரும் அறிந்த உண்மை தான்.

இதே பிரச்சனை நர்சிம் தவிர்த்து வேறொரு ஆண் பதிவர் செய்திருந்தால் இவ்வளவு பெரிய கூட்டம் நாட்டாமை செய்திருக்குமா என்பதும் ஐயமே. நர்சிம் எழுத்தில் சாதித்திக் கொண்டு தான் இருந்திருக்கிறார் அவரை கும்முவதற்கு பலர் காத்திருந்திருக்கிறார்கள், அவரின் போதாத காலம் இவ்வாறு நடந்நுவிட்டது. செந்தில் நாதன் சிகிச்சைக்காக பணம் திரட்டும் பொழுது மிக அருமையாக ஆயிரம் பேர் 3000 ரூபாய் 33 லட்சம் திரட்டிவிடலாமே என்று உற்சாகப்படுத்தி சென்னையில் பணம் திரட்ட பொறுப்பும் ஏற்றுக் கொண்டு சிறப்பாக செய்து முடித்தார்.

யாவரும் கேளிர்!!...: சிங்கை நாதா ...
13 Aug 2009 ... 33 லட்சத்தை 1000 பேரால் வெறும் 3000 ரூபாயாக கொடுக்க முடியுமா முடியாதா? ...
www.narsim.in/2009/08/blog-post_13.html?showComment..(deleted)

தவறு செய்ததற்காக மன்னிப்பு கேட்டப் பிறகும் அவரை தொடர்ந்து விமர்சனம் செய்வர்களுக்கு இவையெல்லாம் நினைவு வர வாய்ப்பு இல்லை. அவர்களின் நோக்கம் நர்சிம் மன்னிப்பு கேட்டதால் ஒருவேளை பிரச்சனைகள் முடிந்துவிடுமே என்கிற எண்ணமாகக் கூட இருக்கலாம்.

நர்சிம் செய்தது மிகப் பெரிய தவறு, ஆணாத்திக்கத் திமிர் என்றெல்லாம் என்னால் நினைக்க முடிந்தாலும் அதற்காக அவர் வெறுக்ககூடியவர், ஒதுக்கப்பட வேண்டியவர் என்று சொல்வதை என்னால் ஏற்கமுடியாது.

ஒரே ஊரில் இருக்கும் நர்சிம் மற்றும் முல்லை, எதோ ஒரு பதிவரின் திருமணத்தில், இல்லவிழாவில் சந்திக்க நேர்ந்தால் தற்போதைய நடப்புகளை மறந்து நட்புகளை வளர்த்துக் கொள்ளும் சூழல் ஏற்பட்டால் அப்படி எதுவும் நடந்துவிடக் கூடாது என்பது தான் பிரச்சனைகளுக்கு எண்ணை ஊற்றுபவர்களின் எண்ணமா ?

3 ஜூன், 2010

புதுப் பதிவர்கள் தலைதெறிக்க ஓட்டம் !

ஒருவாரமாக பதிவுலகில் அவனை நீக்கு, இவனை புறக்கணி, வெட்டலாமா, குத்தலாமா என எழுத்து தீவிரவாதம், தன்னிச்சையான கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புகள்... நாட்டாமைகள், நசுங்கிய சொம்புகள் என ஒரு போர்களக் கோலம். புதிதாக பதிவு துவங்குவதாக இருந்த சில வாசகர்கள் முடிவை பரிசீலனை செய்கிறார்கள். பதிவுலக நண்பர்களில் சிலர் சிலருக்கும் நெருக்கம் காரணமாக சாதி உள்ளிட்ட பல தனிப்பட்ட தகவல்கள் தெரியும் என்பதால் இவையெல்லாம் என்று எப்போது நம்பிக்கை துரோகமாக மாறிவெளிப்பட்டுவிடுமோ என்ற அச்சம் நிலவுகிறது. மூத்தப் பதிவர் ஒருவர் எழுதுவதை நிறுத்துவதாக அறிவித்தார்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஒரு மிருகம் தூங்குவது போல் ரத்ததிற்கு பதிலாக கொஞ்சம் சாக்கடையும் ஓடும் போல, பிறருக்கு வெளிப்படும் போது முகம் சுளிக்கிறோம் அது நம் உடலின் சாக்கடை என்றால் வீரம் நிறைந்த ரத்தம் என நினைக்கிறோம்.

நடந்ததையெல்லாம் ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் குழு அரசியல், அந்த குழுக்குவுக்குள் அரசியல், தனி ஆளுமை, தனிமனித தாக்குதல் என்று துவங்கிய பிரச்சனை பெண்ணியம், சாதியமாக மறுவடிவெடுத்து நம்பிக்கை துரோகங்களில் நிற்கிறது. இதைத் தவிர்த்து இதில் தீவிரமாக இயங்கியவர்களின் அரசியல் முன்னெடுப்பு லாபம், தூபம்.

எனக்கு தெரிந்து நான்கு நாள் பிரச்சனைகளில் வெளியே தெரிந்த விசயம் இதில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண் பதிவரின் சாதி. என்ன சாதியை சேர்ந்த பெண் என்று தெரியாத ஒன்று பிற்பட்ட சாதியாகச் சொல்லப்பட்டு பிறகு மிகவும் பிற்பட்ட சாதி என்று அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.

ஒருவரின் தவறுக்காக கைகால்களை எடுப்பதைவிட குரலை நசுக்குவது கொடுமையான தண்டனை, பிறகு அவனால் தனக்காகக் கூட வாதிட்டுக் கொள்ள முடியாது. புறக்கணிப்பின் வலி எத்தகையது என தலித்துகளின் துன்பம் அறிந்தோர், அதை எழுத்துத் தீவிரவாதத்தின் வழி பிறருக்குச் செய்யச் சொல்வதில் இன்னும் கூட பார்பனியமூம், வருணாசிரம தீர்ப்புகள் வாசனை அடிக்கத்தான் செய்கின்றன.

இத்தகைய கோசங்களின் நடுவே ஆண்கள் எழுதத் தயங்கும் போது பெண்கள் ?

நல்லவேளை இவனை நீக்கு அவனை நீக்கு என்று கட்டப்பஞ்சாயத்து தீர்ப்புகளை தமிழ்மணம் சட்டை செய்யவில்லை. சர்வாதீகரமாக, தன்னிச்சையாக தீர்ப்பு சொல்வோர் வசம் தமிழ்மணத் திரட்டி இல்லை என்பது ஒரு ஆறுதலானது. தன்னிச்சை தீர்ப்பு ஆசாமிகளால் திரட்டிகள் நடத்தப்பட்டால் அதன் செயல்பாடுகள் எப்படி எல்லாம் இருக்கும் என்பதை நீக்குக விலக்குக கோசங்களில் இருந்து தெரிந்து கொள்ளலாம்.

நான் பொதுவாக குழு அரசியலுக்குள் சிக்கி கொள்வதில்லை, குழுவுக்குள் ஒருவர் செய்யும் தவறுக்கு சப்பைக்கட்ட நேரிடும் என்பதால் குழு அரசியல் தளங்களில் நான் இணைந்து கொள்வதில்லை. நட்புகள் அடிப்படைகளில் சில நிகழ்வுகளில், பதிவர் சந்திப்புகளில் இணைவதுடன் சரி. பொதுவெளியில் குழு அரசியல்கள் மிகவும் அச்சப்படக் கூடிய ஒன்று. குழு அரசியல் எதிலும் சிக்காமல் தமிழ்மணத்தை நம்பி புதுப்பதிவர்கள் எழுத வரலாம்.

திரட்டியை நானும் பயன்படுத்துகிறவன் என்பதால் தமிழ்மணத்தை பாராட்டுகிறேன்.

2 ஜூன், 2010

என் பெயரில் பின்னூட்டம் இட்டுகொள்ளும் கயவர்கள் !




ப்ளாக்கரில் கூகுள் கணக்கு வழியாக பின்னூட்டம் இட்டால் அதில் புகைப்படமும் சேர்ந்தே வெளிவரும். என்னை தொடர்புடைய பிரச்சனையில் சிக்க வைப்பதற்க்காக வேண்டுமென்றே கயவர்களால் என் பெயரில் பின்னூட்டம் இடப்பட்டு இருக்கிறது.

தொடர்புடைய பதிவின் சுட்டி

நர்சிம் எழுதி பின் நீக்கிய 'பூக்காரி' இடுகையின் உள்ளடக்க வன்மத்தைக் கருத்தில் கொண்டு அதை எங்கும் ஆதரித்து எழுதவில்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன். அந்த இடுகையை எழுதியதற்காக நர்சிம்மை கண்டிக்கும் அவரது பல்வேறு நண்பர்களில் நானும் ஒருவன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்

1 ஜூன், 2010

பூக்காரி !

தனத்தால் நம்பவும் முடியவில்லை நம்பாமலும் இருக்க முடியவில்லை, அவள் மகள் லஷ்மி இளம் விதவியாகி வீட்டோடு இருக்கிறாள், மகிழ்ச்சியை தொலைத்த சுவடுகளை முகம் காட்டி இருந்தாலும் அமைதியின் வடிவாக அலுவலகம் சென்றுவருபவள். தனம் மனதுக்குள் நினைத்து வருத்தப்பட்டாள்.

'என்கிட்ட சொன்னால் அவங்க அப்பாவிடம் சொல்லி மாற்று ஏற்பாடு பண்ணலாம்....ஆனால் எதையும் வெளியே சொல்லாமல் இப்படி செய்கிறாளே.....'

அன்னிக்கு கோவிலுக்கு போய்விட்டு வீட்டுக்கு வந்த போது ல்ஷ்மி முன்னமே வந்து உடை மாற்றிவிட்டு அவளுடைய அறைக்குச் சென்று புத்தகம் படித்துக் கொண்டிருந்தாள்.

'அம்மா நீயே பூவை எடுத்து சாமிக்கு வச்சிடேன்.....நான் இன்னிக்கு.... மூணு நாளைக்கு பூசை அறைக்கு போகமுடியாது.....'

மேசையில் இருந்து எடுத்து வைக்கும் போது தான் தனம் அதைப் பார்த்து பதறினாள், இன்றோடு மூன்றாம் நாள் சாமிக்கு வைக்கும் கட்டிய பூ.....அதில் நீள முடி... ஒருவேளை அவசர அவசரமாக எடுத்து தலையில் வைத்துவிட்டு எடுத்து வைத்திருப்பாளோ....என்றெல்லாம் நினைத்தாள். இந்த காலத்தில் விதவைகள் பொட்டு வைப்பது சகஜம் தான் என்றாலும்...லஷ்மி அந்த அளவுக்கு பக்குவப்படாதவளாகத் தான் இருந்தாள்.

நினைத்துப் பார்த்து மேலும் திடுக்கிட்டாள்.....'ஒரு நாள் என்றால் எதோ காற்றில் முடி பறந்து வந்து விழுந்துட்டு என்று நினைக்கலாம்.....ஆனா எண்ணிப் பார்க்கும் போது கடந்த மூன்று நாளாக பூவில் முடி... இது எதார்த்தமாக நடந்திருக்க வாய்ப்பில்லையே....' என்று நினைத்தவளாக

அவளிடம் கேட்டுவிடலாமா ? என்று தனத்திற்கு பதை பதைப்பாக இருந்தது.

அந்த காலத்தில் விதவைகள் திருமணம் ஆகாமல் வாழ்ந்துட்டாங்க....இப்ப அப்படி இருப்பது பாதுகாப்பும் இல்லை, ஆனால் இவ இப்போதைக்கு எதுவும் இது பற்றி பேச வேண்டாம் என்று சொல்வதுடன்.....மாமனார் மாமியார் வீட்டுக்கு சென்று அவர்களை அவ்வப்போது பார்த்தும் வருகிறாள்.

எல்லாம் சரி....தலையில் பூவைச்சுப் பார்க்கனும் என்று தோணும் போது இன்னொரு திருமணம் பற்றி நினைக்காமலா இருப்பாள்....எதுக்கும் கேட்டுவிட வேண்டியது தான்......இந்த வாரம் சனிக்கிழமை அதாவது நாளைக்கு அவளிடம் மெல்லப் பேச்சுக் கொடுப்போம் என்று நினைத்துக் கொண்டே அன்றைய வேலைகளை முடித்தாள்.

தனத்துக்கு அனறு இரவுக் கூட சாமிக்கு வாங்கிய பூவில் நீள முடி இருந்த காட்சி வந்து வந்து போனதுடன்.....மகள் மனதில் இருக்கும் ஆசை ஞாயமானது தான் நாமளே கூட அவளை பூ வச்சிக்கச் சொல்லி வற்புறுத்தி வேறொரு கல்யாணத்து சம்மதிக்க வைத்துவிட வேண்டியது தான்...என்று நினைத்தவளாக தூங்கிவிட்டாள்.

மறுநாள் காலை வழக்கம் போல ஓடியது.......அன்று மாலை வழக்கமாக வரும் பூக்காரி பார்ப்பதற்கு கொஞ்சம் மாறுபாட்டு இருந்தாள் தலையில் துணியைச் சுற்றி மறைத்திருந்தாள்.

'என்ன....தங்கம்மா...தலையில் அடிகிடி பட்டுவிட்டதா.....'

'இல்லிங்கம்மா.... எல்லாருடைய வீட்டிலும் திட்டினாங்க.......தலையில் இருந்து கொட்டும் முடி பூக்கூடையிலும் விழுந்துடுது....பூவுல ஒன்றோ இரண்டோ முடி சேர்ந்துவிடுகிறது... அதான் தலையை துணியால் சுத்தி கட்டி இருக்கேன்'

'.... மக தலையில் வச்சப் பூவை சாமிக்கு போடும் படி ஆகிவிட்டதே... மகளின் பூ ஆசை ......இன்னும் என்ன என்னவோ கற்பனை செய்திருந்ததெல்லாம்......ஒரு நொடியில் முடிவுக்கு வர நிம்மதி பெருமூச்சு விட்டாள் தனம்.

'என்னம்மா கோவமா......இப்படி பெருமூச்சு விடுறிங்களே....'

'அது ஒண்ணும் இல்லை தங்கம்.....வேறென்னவோ நினைச்சேன்......அதெல்லாம் உன்கிட்ட சொல்லிக்கிட்டு......விடு' என்று பூவை வாங்கிக் கொண்டு உள்ளே சென்றாள் தனம்.

சந்தன முல்லை பூ .....வாசம் நல்ல கமகம..... மீண்டும் மகளுக்கு பூச்சூடிப் பார்க்கும் ஆசை... அந்த பூக்களை பார்க்கும் போது தனத்துக்கு அந்த பூக்களின் வாசனையைப் போலவே பொறுப்புணர்வும் மனதுக்குள் மிகுதியாகிக் கொண்டு இருந்தது.

*******

பின்குறிப்பு : இந்த சிறுகதை எனது புனைவு அல்ல.......பல ஆண்டுகளுக்கு முன் குமுதத்திலோ ஆனந்த விகடனிலோ படித்தது.....படிக்கும் போது மனதில் பாதிப்பு ஏற்படுத்தும் சிறுகதை என்னிக்கும் மனதில் நிற்கும் என்பதற்கு இந்த கதை எனக்கே ஒரு நல்ல எடுத்துக்காடு. இங்கே பதிவில் இச்சிறுகதையின் எழுத்துக்கள் என்னுடைய வடிவம் என்றாலும் புனைவின் கரு என்னுடையது அல்ல.

கதை பிடித்து இருந்தால் ஓட்டு குத்துங்க எசமான்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்