பின்பற்றுபவர்கள்

கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கட்டுரைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

11 செப்டம்பர், 2016

முடவனும் கொம்புத் தேனும்...!

சொல்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள், எண்ணிப் பாருங்கள், நான் உலக நாடுகள் பலவற்றிற்கு சென்றிருக்கிறேன், மனிதாபிமானம் / மனிதர் மீதான அன்பு என்ற கோட்டைத் தொட இந்தியர்கள் பயணிக்க வேண்டிய தொலைவு மிகுதி, ஒரு சில தனிநபர்கள் மனிதாபிமான மிக்கவர்கள், அவர்கள் நாட்டின் பின்புலத்தால் வழிகாட்டலால் அவ்வாறு இல்லை, இயல்பிலேயே அவ்வாறு உள்ளவர்களாக இருக்கக் கூடும். எதோ ஒரு தனிமனித மனிதாபிமானச் செயல் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடைபெறுவதை நாட்டிற்கு பொதுவானதாக காட்டுவதற்கு / எடுத்துக் கொள்வது இயலாத ஒன்று, இதே கூற்றைத் தான் சாதி / மத ஆர்வமிக்கவர்கள் குறித்தும் நான் கூறிவருகிறேன், அதாவது ஒரு சாதியில் / மதத்தில் ஒருவன் நல்லவனாக இருந்தால் அது அந்த சாதி / மதத்தின் அடையாளமன்று, அது அவனின் தனித்தன்மை, தெரிந்தோ தெரியாமலோ அவனோ / அவனைச் சார்ந்தவர்களோ அதை சாதி மதப் பெருமையாக அடகு வைத்து அவனை முன்னிறுத்தி சாதி / மதத்தின் பிழைகளை மறைக்க முயல்கிறார்கள்.

*****

பொதுவாகவே இந்திய மனநிலையில் / மதவாதிகளின் மனநிலையில் ஊனம் என்பது கடவுளின் தண்டனை / முற்பிறவியில் செய்தவினை என்று பார்க்கப்படுவதால் குறிப்பிட்ட உடற்குறையுற்ற நபரின் இல்லத்தினர் தவிர்த்து உறவினர் உள்ளிட்ட ஏனையோர் ஏளனமாக பார்ப்பதும், பிணக்குகளின் போதும் 'அதான் உனக்கு/உன் குடும்பத்திற்கு கடவுள் தண்டனை கொடுத்திருக்கானே, தெரிந்துமா ஆடுறே...?' ஒற்றை கேள்வியில் கூனிக்க்குறுக வைப்பர்.

உடைந்த பொருள்கள் என்றாலே அபசகுணம் என்று உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும் என்று பதைப்புடன் அதனை வீட்டில் இருந்து வெளியேற்றுவர், கடவுள் சிலை என்றாலும் உடைந்த்தால் அது குப்பைத் தொட்டிக்குத் தான், உடற்குறையுற்றோர் / திருநங்கைகள் எந்த இனக்குழுவிலும் / சமூகங்களிலும் உண்டு, ஆனால் இவர்களை பெருமைப்படுத்தும் புராணக் கதைகளோ, கடவுள் உருவங்களோ, மதரீதியான கதைகளோ சொல்லப்பட்டதே கிடையாது, இவர்களைப் பொருத்த அளவில் உடற்குறை என்றாலே அவமானம், அதனால் தான் குருடர்களை பார்க்க வைப்போம், முடவர்களை நடக்க வைப்போம் என்ற அற்புதங்கள் இங்குண்டு என்ற ரீதியிலெல்லாம் மதங்களை வளர்க்கிறார்கள், முடவர்களை பாதிரி ஆக்குவோம், முடவர்களை புரோகிதர் ஆக்குவோம், பார்வையற்றவரை இமாம் ஆக்குவோம் என்றெல்லாம் இவர்கள் என்றுமே கூற மாட்டார்கள், அவர்களைப் பொருத்த அளவில் 'ஊனம்' இறைவனின் தண்டனை, ஒருவேளை இறைநாடி இருந்தால் அவன் ஊனமில்லாது பிறந்திருக்கக் கூடும் என்றே அவர்கள் நினைக்கின்றனர்கள். மதங்கள் உடற்குறையுற்றோரையும் உங்களைப் போன்ற மனிதர்களாவே கண்ணியமாக நடத்துங்கள் என்று கூறவில்லை. ஒருவேளை கூறி இருந்ததால் அவர்கள் சமூகத்தில் தனித்து நடத்தபடமால் இருந்திருக்கக் கூடும்.

கைவிடப் பெற்றோர் தவிர்த்து உடற்குறையுற்றோர்கள் அனைவரும் யாரிடமும் உதவி கேட்பதில்லை, தங்களுக்கான வசதிகள் இல்லை, தங்களுக்கு வழங்கப்படும் வாய்ப்புகள் குறைவு என்று தான் கூறிவருகின்றனர், ஊனமுற்றோர் தங்களின் மீது பரிதாபம் கொள்ளச் சொல்லி கெஞ்சுவதில்லை, எங்களால் என்னவெல்லாம் முடியும் என்று புரிந்து கொண்டு எங்களுக்கான வழிவகைகள் செய்துதரவேண்டும் என்று தான் கேட்கிறார்கள், அது உரிமை அல்ல, அரசுகள் பொது நிறுவனங்கள் செய்ய மறந்ததைத் தான் கேட்கிறார்கள்.

******

நான் சென்று வந்த நாடுகளில் உடற்குறையுற்றோர் வீட்டுக்குள் முடங்கிக் கிடப்பதில்லை, அவர்கள் வெளியே சென்றுவரும் வகையில் அரசுகள் பேருந்து வசதிகளில் அவர்கள் ஏறுவதற்கும், அவர்களுக்கான இருக்கைகளை அமைத்து தருகிறது, அனைத்து பேருந்துகளிலும் சர்கரநாற்காலி ஏறக்கூடிய வசதி உண்டு, ஓட்டுநர் சாய்தளம் அமைத்து அவர்கள் ஏறுவதற்கும் இறங்குவதற்கும் ஏற்பாடு செய்து தருவார். உடற்குறையுற்றோருக்கான கைப்பிடிகளுடன் கூடிய மின்தூக்கி வசதிகள் உண்டு, பார்வையற்றவர்கள் மின்தூக்கி மற்றும் தொடருந்துகளை பயன்படுத்த அவர்கள் பாதங்கள் உணரக்கூடிய தனிப்பட்ட ஒற்றையடி பாதைகளை அமைத்திருப்பார்கள், யாருடைய உதவியுமின்றி அவற்றின் தடத்தை மிதித்துக் கொண்டே மின் தூக்கி அல்லது ரயில் கதவுகள் இருக்கும் இடத்தின் அருகே வந்துவிட முடியும், குறிப்பாக கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைகள் உள்ளது போலவே உடற்குறையுற்றோருக்கு தனி கைப்பிடிகளுடன் கூடிய கழிவறைவசதிகள், அதனுள் உதவி தேவை என்றால் தொடர்பு கொள்ள அழைப்பு பொத்தான்களும் இருக்கும்.

ஆனால் இந்திய மனநிலையில் உடற்குறையுற்ற ஒருவர் வீட்டில் தன் வீட்டில் உள்ளவர்களிடம் வெளியே அழைத்துச் செல்லச் சொன்னாலும், 'உன்னால தான் முடியலையே, நீ எல்லாம் எதுக்கு இப்படி ஆசைப்படுறே, எங்களையும் ஏன்படுத்துறே...'ன்னு பட்டென்று சொல்லிவிடுவார்கள், இதுக்கு காரணம் நாம காலம் காலமாக உடற்குறையுற்றோர் குறித்து கேட்டுவந்த பழமொழிகள் தான், உடல்குறையுற்றோர்கள் என்றால் மற்றவர்கள் போல் அவர்கள் ஆசைகள் வைத்திருக்கக் கூடாது, இதுதான் தலைப்பு 'முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா ?' கால் ஊனமுற்றோர் மரத்தில் உள்ள தேனை அருந்த ஆசைப்படலாமா ?' ஆசைப்படுவதில் என்ன தப்பு, தேன் சாப்பிடுகிற அத்தினிபேரும் தானே மரத்தில் ஏறி தேனை எடுத்து பயன்படுத்துகிறார்களா ? எவரோ விற்பனைப் பொருளாக அதனை எடுத்து தர பணம் கொடுத்து வாங்கிப் பயன்படுத்துகிறார்கள், கால் இல்லாததற்கும் தேன் சாப்பிடுவதற்கும் என்ன தொடர்பு ? தேன் சாப்பிடுவது நாக்கு தானே...?

கண்ணு தெரியாத கபோதி... கவனக்குறைவாக உள்ளவரை திட்டுவதற்கு அவருக்கு இல்லாத ஒரு உடல் குறையை ஏளனாமாக பயன்படுத்துகிறோம், செவிடன் காதில் ஊதிய சங்கு > காதுகேளாதவர் என்று தெரிந்தும் சங்கு ஊதிப்பார்ப்பவன் தானே மடையன், காதுகேளாதவருக்கு சங்கின் ஒலி ஏன் கேட்க வேண்டும் என்று நினைக்கிறார்கள் ? சொன்னதை செய்யாதவர்களை இழிக்க செவிடன் காதில் ஊதியது / ஓதியது என்று சொல்வது என்று ஊனமுற்றோர்களை ஒழிங்கினக் குறியீடுகளாகவே நாம் கேட்டுவந்திருக்கிறோம், அதனால் நம் மனநிலையில் அவர்களை நம்மில் ஒருவராக பொதுவானவர்களாக பார்க்கவே முடியவில்லை.

வாய்ப்புக் கிடைத்தால் நாங்கள் சாதிப்போம் என்று ஒட்டுமொத்த இந்தியாவையும் ஒரே தாண்டலில் திரும்பிப் பார்க்க வைத்திருக்கிறார் தங்கவேலு, தங்கவேலுவின் சாதனை மாற்றுத் திறனாளிகளுக்கு நம்பிக்கைக் கொடுப்பதுடன், அவர்கள் யார் உதவியுமின்றி வெளி இடங்களுக்கும் சென்றுவரும் வசதி வாய்ப்புகளை பெருக்கித்தரும் என்று நம்புகிறேன். 

உடற்குறையுறோர் குறித்த தமிழ் சார்ந்த பழமொழிகளையும் ஒழித்து அவர்களை தலை நிமிர செய்வோம்.

31 மே, 2014

அப்பாவின் நண்பர்கள் !

நட்பு என்பது நம்மோடு முடிந்து போகும், உறவுகள் மட்டுமே நிலைக்கும் என்பதால் தான் உறவுகள் தொடர்கதை என்று உணர்ந்தே சொல்லி இருக்கிறார்கள் என்றே நினைக்கிறேன்.

ஒவ்வொரு முறையும் ஊருக்கு செல்லும் போது எண்ணங்களை சுமந்து கொண்டு வரும் போது வெறுமையுடன் திரும்புவது எனக்கு வாடிக்கைதான். அப்பா மறைந்து 25 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அப்பாவின் செயல்களை தம்பி ஞாபகப்படுத்துவான், அப்பா எடுக்கும் காவடி அப்பா செல்லும் சபரிமலை பயணம் இதெல்லாம் நினைவு வைத்திருந்து தம்பி செய்து கொண்டுவருகிறான். எனக்கு தனிப்பட்ட முறையில் காவடி எடுப்பதில் உடன்பாடு இல்லாவிட்டாலும், பார்த்து பழகியது, அப்பாவை நினைவு படுத்துவது என்பதால் முடிந்த வரையில் மே மாதம் காவடி நிகழ்வின் போது ஊரில் இருப்பதற்கு முடிந்த வரையில் முயற்சி செய்து சென்றுவிடுவேன்.
(இது என் தம்பி)
அம்மாவின் முயற்சியில் இல்லாம் விவாசயத்தை முதன்மை தொழிலாகக் கொண்டிருந்தாலும் அப்பாவிற்கு அவ்வப்போது கொத்தனார் வேலை தான், நாகப்பட்டினத்தில் கொத்தனார் சங்கத்தை முன்னின்று உருவாக்கியது, மாநில அளவில் சங்க தலைவர்களை பொன் குமார் உள்ளிட்டவர்களை அழைத்துவந்து கொத்தனார் தொழிலில் ஒரு மரியாதையை ஏற்படுத்தியவர் என்பதால் நாகைப் பகுதி கொத்தனார்களுக்கு நன்கு அறிமுகமாகியவர், கொத்தனார் சங்கத்தின் சார்பில் நாகை மாரியம்மன் கோவில் திருவிழாவின் போது எடுக்கப்படும் 'கைலாச வாகன' ஊர்வல நிகழ்வில் அப்பாவிற்கு மாலை அணிவித்து பரிவட்டமெல்லாம் கட்டுவார்கள், மாரியம்மன் கோவில் திருவிழாவின் முதல் நாள் இரவில் ஒவ்வொரு ஆண்டும் தவறாமல் நடக்கும்,  இந்த முறை சென்றிருந்த போது கூடப் பார்த்தேன், அங்கு வந்த கொத்தனார்களில் அதில் ஒருவரையும் எனக்கு தெரியவில்லை, அந்த நாளில் அதேநேரத்தில் மறுநாள் காவடிக்காக, நிகழ்வு நல்லபடியாக நடக்க காத்தவராயன் பூசை செய்ய நாங்கள் அங்கு இருப்போம், அங்கு வந்தவர்களில் சிலரை தெரியும் என்றான் தம்பி.

அப்பாவும் நாகை கொத்தனார் சங்கத்தில் தலைவராக இருந்தார் பின்னர் தலைவராக இன்னொருவருக்கு வழிவிட்டார், பெரும்பாலும் சங்கக் கூட்டம் எங்கள் வீட்டுவாசலில் திங்களுக்கு (மாதம்) ஒருமுறை நடக்கும், 25 லிருந்து 50 பேர் வரை வருவார்கள், அவர்களில் 20 பேராவது எனக்கு தெரிந்திருந்திருக்கும், அண்ணன் மாமா என்றெல்லாம் உறவு முறைகளில் அவர்கள் அழைத்துக் கொள்வார்கள். அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பா வைத்திருந்த கரனை, ரசமட்டம், மட்டப் பலகை உள்ளிட்டவற்றை ஞாபகார்த்தமாக சிலர் வாங்கிச் சென்றார்கள், அப்பாவின் மறைவிற்கு பிறகு கொத்தனார்களும், கொத்தனார் தொழிலும் சற்று தள்ளிப் போனாலும் அண்ணன் சிவில் பொறியாளர் என்பதால் அவர்களில் சிலரிடம் இன்னும் தொடர்பு இருக்கிறது, எனக்குத்தான் ஒருவரையும் தெரியவில்லை.

அப்பாவின் அடுத்த நடவடிக்கை ஆண்டு தோறும் சபரிமலைக்கு செல்வது, 12 வயதில் என்னையும் ஒருமுறை அழைத்துச் சென்றிருக்கிறார், அப்பாவின் சபரிமலைக்கு மாலை போடும் நண்பர்கள் என்கிற பெரிய நண்பர் வட்டமே இருந்தது. வாரத்தில் ஒருநாள் / இரண்டு நாள் ஐயப்பன் பூசை என்று அவ்வப்போது அழைப்பு வரும், அப்பா மலைக்கு செல்லத்துவங்கியது முதல் அப்பாவின் பெயர் 'சாமி' என்றே நிலைத்தது, அவருடன் பழகும் யாருக்குமே அவருடைய பெயரே தெரியாது, சபரிமலை சீசன் இல்லாத காலங்களிலும் அழைத்துப் பழகியவர் என்பதால் 'சாமி' என்றே அழைப்பார்கள், இவரும் 5 வயது குழந்தைகள் முதல் எந்தவயது பெரியவர் என்றாலும் 'சாமி' என்றே கூப்பிடுவார். வீட்டில் நாங்களும் அப்பா என்று கூப்பிட்டத்தைவிட 'சாமி' என்றே கூப்பிட்டுவந்தோம், 

அப்பாவுக்கு இருமுடிகட்டும் குருசாமி அப்படியே அவர்கள் அனைவரையும் மன்னார் குடி அருகே இருக்கும் லட்சுமாங்குடிக்கு அழைத்துச் என்று அங்குள்ளவர்களுக்கு முடிகட்டி பின்னர் சபரிமலைக்கு செல்வார்கள், ஆண்டுக்கு ஒருமுறை வெறும் 5 நாட்கள் சந்தித்தவர் என்ற முறையில் அந்த ஊரில் உள்ள ஒரு அயப்ப சாமிகள் அப்பாவுக்கு நண்பர்களாகவும் ஆனார்கள், அதில் ஒருவர் அப்பாவின் காலம் வரையில் ஆண்டுக்கு ஒருமுறையேனும் வீட்டுக்கு வந்து செல்வார், சபரிமலை பெருவழியில் நான் நடக்க முடியாமல் திணறிய போது என்னை தூக்கிக் கொண்டு சென்றவர்களில் அவரும் ஒருவர்/. அவரின் பெயர் எங்களைப் பொருத்த அளவில் 'லட்சுமாங்குடி சாமி' சபரிமலை சீசன் முடிந்து ஒருமுறை அவர் வீட்டுக்கு வந்த போது அவருக்கு அளித்த விருந்தில் தான் அவர் அசைவம் சாப்பிடுகிறார் என்று வியப்படைந்தேன், 'லட்சுமாங்குடி சாமி' சாமி என்று நினைத்துவந்ததால் என்னவோ அவர் அசைவம் சாப்பிடமாட்டார் என்று நினைத்திருந்தேனோ என்னவோ ? அப்பாவின் மறைவிற்குப் பிறகு லட்சுமாங்குடி சாமி என்ன இருக்கிறாரா ? இல்லையா என்றே தெரியவில்லை.

அப்பா காலை 6 மணிக்கு எழுந்ததும் டீ கடை, அங்கு தான் காலை ஒரு மணி நேரம் செல்லும், பெரும்பாலும் கடையாக இடம் பெயராவிட்டால் டீ கடையை மாற்றமாட்டார், ஒரு மணி நேரத்தில் இரண்டு டீ, மைனர் சேட் பீடி, செய்தித் தாள் அங்குள்ளவர்களுடன் அரட்டை மற்றும் அரசியல், அப்பாவை தேடிவருவர்களிடம் டீ கடையில் இருபபர் என்று எளிதாக வழிகாட்டிவிட முடியும், அப்பா அங்கு இல்லை என்றால், 'சாமி எப்போ போனார் ?' என்று கேட்டால் அரை மணி நேரத்திற்கு முன்பே சென்றுவிட்டாரே என்று சொல்லிவிடுவார்கள். டீ கடை நடத்துபவர்களும் அங்குள்ள பணியார்களும் உறவினர்கள் போலவே பழகி வீட்டிற்கெல்லாம் வந்து செல்வார்கள். அதே போன்று ஆண்டு கணக்கில் அப்பா ஸ்டார் திரையரங்கு அருகே இருக்கும் முடித்திருத்தகத்திற்கு மட்டுமே செல்வார், அது எந்தக் கடை என்று எனக்கு இன்றுவரை தெரியாது. அங்கு யார் யாரிடம் பழகினார் என்கிற விவரமும் தெரியாது.

அப்பா வேலைக்குச் செல்லாத நேரங்களிலும் மாலை வேளைகளிலும் அப்பாவின் மற்றொரு பொழுது போக்கிடம் இரண்டு மரக்கடைகள், ஒருவர் நாயர், இன்னொருவர் திருமேணி, அங்கு செய்தி தாள்கள் இருக்கும், அதைப் படிக்க வயது வேறுபாடின்றி சிறுவர் முதல் பெரியவர் வரை எந்நேரமும் நான்கைந்து நபர்கள் இருப்பார்கள், அவர்களில் சிறுவர்களிடம் 'கட்டியால் எட்டு கட்டி... கால் அரை முக்கால் மாற்று....' என்ற விடுகதைப் போடுவது, கழுத கால் ரூபாய், குதுரை முக்காருவ...' போன்ற கணக்கு போட்டு திணறடிப்பது, பெரியவர்களிடம் அரசியல் என்று ஓடும், அங்கு செய்தித்தாள் படிக்க வரும் என்னுடன் +2 வில் சேர்ந்து படித்த எஸ்  இரவிச்சந்திரனுக்கும் அப்பாவிற்கும் நல்ல நட்பு போல, 'என் பையனும் ஆண்டனீஸ் பள்ளியில் தான் படிக்கிறான் என்றார், பேரைக் கேட்டேன், 'கண்ணன்' என்று சொன்னார்' நீ ஏண்டா அவருடைய பையன் என்று சொல்லவே இல்லை ?' என்று கேட்டப்போது அப்பா பீடி குடிப்பார், கொத்தனார் வேலை செய்பவர் என்பதால் வெளிப்படையாக இவர் தான் என் அப்பா ? என்று நான் ரவிச்சந்திரனிடம் முன்பே அறிமுக்கப்படுத்ததால் எனக்கு சற்று அவமானமாகவே இருந்தது. அவனிடம் எதோ சொல்லி சமாளித்தேன். 

அப்பாவிற்கு சோதிடத்தில் நல்ல நாட்டம், கட்டம் பார்த்து சொல்லுவார், பாம்பு பஞ்சாங்கம் பார்ப்பார், புலிப்பாணி புத்தகம், மற்றும் 50 க்கும் மேற்பட்ட புத்தகம் வீட்டில் இருக்கும், செவ்வாய் வெள்ளி கிழமைகளில் மாலையில் வீட்டு வாசலில் பெரும் கூட்டமே சோதிடம் கேட்க வரும், அதில் பெரும் பகுதியினர் பக்கத்தில் உள்ள நம்பியார் நகர் மீனவ கிராமத்தினர் உள்ளிட்ட ஏழைகள் தான், பொண்ணுக்கு கல்யாணம் எப்போ நடக்கும், காணாமல் போன மாடு கிடைக்குமா ? போன்றவைகள் குறித்து கேட்க வந்திருப்பர், கட்டணமாக எதுவுமே வாங்குவதில்லை, அவர்கள் வாங்கிவரும் வெற்றிலைபாக்கு நாலண காசு, அது மட்டும் தான், காசை பக்கத்தில் உள்ள கோவில் உண்டியலில் போட்டுவிடுவார், வெற்றிலை பாக்கை போடுவர்களிடம் கொடுத்துவிடுவார், சோதிடம் பார்க்க வருபவர்கள் தவிர்த்து சோதிட ஆர்வம் உள்ள, சோதிடம் தெரிந்த நண்பர் கூட்டமும் அப்பாவுக்கு உண்டு, அவர்களெல்லாம் என்ன ஆனார் என்றே தற்போது தெரியவில்லை.

இது தவிர்த்து குழுமமாக செயல்பட்டு எடுக்கும் எட்டுக்குடி காவடி, முத்துமாரியம்மன் கோவில் காவடி, அரப்ஷா தர்கா சந்தனக்கூடு என்கிற இன்னொரு நண்பர்கள் வட்டத்திலும் அப்பா இன்றியமையாதவராகவே இருந்தார், நாகை வெளிப்பாளையத்தில் சாமி வீடு எது ? என்று கேட்டால் எங்க வீட்டுக்கு வழிகாட்டும் அளவுக்கு அப்பாவிற்கு அந்த பகுதியில் நல்ல அறிமுகமே இருந்தது. அப்பாவின் மறைவிற்கு பிறகு அப்பாவின் நெருங்கிய நண்பர்களில் சிலர் ஓரிரு ஆண்டுகளில் இறந்துவிட்டனர். அப்பாவின் சிறுவயதில் அவர் வளர்ந்த இடமான நாகை சவுரிராஜ பெருமாள் மேல வீதியில் இருந்த நண்பர்களில் அவரைவிட சிறியவர்கள் 'ரமண்ணா'  (ராமன் அண்ணா), என்று அப்பா வயதினர் 'டேய் ராமன்' என்றும், பெரியவர்கள் 'ராமு' என்று கூப்பிடுவதை பார்த்திருக்கிறேன், அப்பா வழி உறவுக்காரகளுக்கு அப்பாவின் பெயர் 'ராமன்', எங்கள் பள்ளி சான்றிதழ்களில், அழைப்பிதழ்களில் கோவிந்தராஜு', மற்றவர்கள் எல்லோருமே கூப்பிடுவது 'சாமி', அப்பாவின் ஒன்றுவிட்ட அண்ணன் மறைந்த பிறகு 'இராமன்' என்று அப்பாவை உரிமையுடன் குறிப்பிட்டு சொல்ல இன்று யாரும் இல்லை, அவர் சிறுவயதில் வாழ்ந்த இடத்தில் இன்றும் வாழும் ஒரு சிலர் 'ராமண்ணா பையனா வா, எப்படி இருக்கே ?' என்று கேட்பார்கள்.

இந்ந முறை ஊருக்கு சென்ற போது தம்பியிடம் அப்பாவின் நண்பர்கள் குறித்து கேட்க, சற்று நகைச்சுவையாக 'அப்பாவின் (அப்பா வயது) பிரண்ட் எல்லோருமே டிக்கெட் வாங்கிட்டாங்க...அதில் மீதம் சமூன் பாய் மட்டும் தான் இன்னும் இருக்கார்' என்றான். சமூன் பாய் இன்னும் இருக்க காரணம், அவருக்கு அப்பாவைவிட 15 வயது குறைவு, ஆனால் அவரை வெளியில் பார்க்க முடியவில்லை.

***

இதை நான் அப்பாவின் நண்பர்கள் குறித்து மட்டுமே எழுதவில்லை, தனிப்பட்ட முறையில் ஒருவருக்கு எவ்வளவு தான் நெருக்கம் என்றாலும் நட்புகள் என்பவை அது அவர் வாழும் வரை மட்டுமே, அதை தொடர நண்பர்களுடன் திருமண உறவை அமைத்துக் கொள்ள வாய்ப்பு இருந்தாலும், 'சாதி' என்கிற ஒன்று குறுகே நிற்பதால், நண்பர்களின் நட்பு நாம் இருக்கும் வரை மட்டுமே, அப்பாவின் நினைவுகளைப் போற்றுகிறோம், ஆனால் அவருடைய நண்பர்களை சந்திக்க முயற்சித்தில்லை. நண்பரின் மறைவின் பிறகு நண்பரின் வீட்டை கடந்து  செல்லும் / நினைக்கும் நண்பர்கள் மனம் குறித்து நாம் நினைப்பது இல்லை. அப்பாவின் மறைவிற்கு பிறகு தேடிச் சென்று பேசினால் அவர்களுக்கு கிடைக்கும் மகிழ்ச்சியும் நெகிழ்ச்சியும் அளவில்லாதது என்பதை நாம் என்றுமே உணர்ந்தது இல்லை.

நட்புகள் நம்மோடு சேர்ந்தே மறித்துவிடுகின்றன. 

இதை வாசிக்கும்  நீங்கள் தந்தையை இழந்தவரென்றால் உங்கள் அப்பாவின் மற்றும் அவர் நண்பர்கள் பற்றிய நினைவை இவ்விடுகை கிளறிவிட்டிருக்கும் என்றே நினைக்கிறேன், நீங்களும் உங்கள் பதிவில் உங்கள் அப்பாவின் நினைவுகளையும் அவர் தம் நண்பர்களையும் போற்றுங்கள். 

இது நான் தான்

25 ஆகஸ்ட், 2013

நாமலும் சாமியார் தான் !

இராமகிருஷ்ண பரமகம்சரின் சாமியார் தன்மை பற்றி இராமகிருஷ்ண மடாலயங்களில் ஒரு தகவல் சொல்வதுண்டு, அதாவது அவர் காசுகளை கையினால் தொடுவதில்லையாம், வெற ? காலால் தொடுவாரான்னு கேட்காதிங்க, ஆதாவது ரிசிகள், ஞானிகள் சாமியார்கள் ஆகியோருக்கு பொருளாசைகளோ வேறெந்த ஆசைகளோ அறவே இருக்காதாம், மீறி காசுகளைத் தொட்டால் என்ன ஆகும் ? இராமகிருஷ்ணரின் சீடர் ஒருவர் தனது குருவை சோதிக்க நினைத்தாராம், காசை இவர் கையில் தான் வாங்கமாட்டார், பேசாமல் காசை அவர் தூங்கும் பொழுது தலைக்கு அடியில் (தலையாணை வைச்சிருந்தாரான்னு கேட்காதிங்க) இருக்கும் படி படுக்கை விரிப்புக்கு அடியில் வைக்க, இராமகிருஷ்ணர் படுக்கைக்கு வந்து தலையை சாய்க்க, தலையே வெடித்து விட்டது போல் துடி துடித்தாராம், தன் செய்த (சூழ்ச்சி) சோதனையைச் சொல்லி 'குருவே என்னை மன்னிக்க வேண்டும்' என்று சீடர் சொல்ல, இனிமேல் அவ்வாறு செய்யாதே என்று இராமகிருஷ்ணர் சீடரை மன்னித்ததாகவும், சீடர் தெரியாமல் தவறு இழைத்து விட்டோடும் என்று மிகவும் மனம் வருந்தியதாகவும் ஒரு குட்டிக் கதையாக இராமகிருஷ்ணர் மடத்தினர் சொல்வதுண்டு.

காசு என்பது ஒரு உலோகம், அவை பண்டமாற்றுக்கு பயன்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்பது தவிர்த்து அந்தந்த உலோகத்தின் அடிப்படை மதிப்பு சொற்பமே, செப்புகாசு, பித்தளை காசு ஆகிய செய்யப்படும் உலோகத்தின் மதிப்பைவிட அதில் பொறிக்கப்பட்டிருக்கும் விலை மதிப்பு எப்போதும் கூடுதலாகத்தான் இருக்கும். ஒரு உலோகம் தலைக்கு அடியில் இருந்ததற்காக இராமகிருஷ்ணர் பதறினார், துடித்தார், துன்பம் அனுபவித்தார் என்பதெல்லாம் எல்லை மீறிய கட்டுக்கதை என்பது தவிர்த்து அவற்றில் உண்மை எதுவும் இருப்பது போல் தெரியவில்லை, செம்புகளும் பித்தளைகளும் பாத்திரங்களாக பழங்கிய காலத்தில் அவை காசுகளாகவும் அச்சடிக்கப்பட்டிருக்கும், எனவே குடிக்க செப்புக் குவளையை கையில் எடுக்கும் பொழுது ஏற்படாத அதிர்வலைகள் செம்பு காசால் ஏற்பட்டது என்பதை நான் நம்புவதில்லை, இருந்தாலும் அந்தக் கதையை சாமியார்கள் காசு பணத்தின் மீது பற்றுதல் கொண்டிருக்கமாட்டார்கள் என்பதற்காக சொல்லப்படும் சற்று மிகைப்படுத்தப்பட்ட கதை என்று மட்டுமே எடுத்துக் கொள்கிறேன்.

நாமலும் கொஞ்ச கொஞ்சமாக சாமியார் ஆகிக் கொண்டு இருக்கிறோம், அச்சடித்த பணமும், காசுகளும் நமது பணப் பைகளின் செலவு இருப்பாக திணித்து வைத்துக் கொள்ளும் வழக்கம் குறைந்து கொண்டே வருகிறது, எல்லாவற்றிற்குமே அட்டையின் (Card) வந்துவிட்டது, ரொக்க அட்டை (debit) மற்றும் கடனட்டைகளை (credit) கையில் வைத்திருந்தாலே போதும், எங்கும் சென்று வந்துவிடலாம், பணம் களவு போகும் பயம் இருக்காது. பொட்டிக்கடைகளில் சிறிய அளவில் எதுவும் வாங்குவதற்கான தேவை என்பது தவிர்த்து பாக்கெட்டில் பணத்தை திணித்துக் கொண்டு வைத்திருக்கும் வழக்கம் படிப்படியாக குறைகிறது. முன்பெல்லாம் வாரத்திற்கு 50 வெள்ளிகளை மேல் பாக்கெட்டில் வைத்திருக்கும் நிலைமை தற்பொழுது 20 வெள்ளிகளாக சுருங்கியுள்ளது, காரணம் எல்லாவித கட்டணங்களுமே அட்டைகளால் நிறைவேற தானியங்கி பணமெடுக்கும் இயந்திரத்திற்கு சென்று வரிசையில் நிற்பதுவும் குறைந்துள்ளது.

பேரங்காடி, தொடர்வண்டி நிலையம், பெரிய / நடுத்தர உணவகங்கள், பேருந்துகள் ஆகியவற்றிற்கும் அட்டைகளே பயன்படுவதால், அவற்றில் போதுமான தொகையை நிரப்பி வைத்துவிட்டால் வாரம், திங்கள் முழுவதும் அவற்றை பயன்படுத்த முடிகிறது. சில்லரைகளை (பத்துவெள்ளி, 20 வெள்ளி) கடனாக கேட்பவர்களுக்கும் கையில் போதிய இருப்பு இல்லை என்று கைவிரிக்க முடிகிறது (அவங்க வங்கி எண்ணுக்கு மாற்றிவிடச் சொல்லி கேட்காதவரையில் எளிதாக சமாளிக்கலாம்),
பிச்சைகாரர்களைப் பார்த்தால் பாக்கெட்டை தடவிவிட்டு நம்மிடம் சில்லரை எதுவுமே இல்லை என்று நடையைக் கட்டலாம். பக்கெட் அடிப்பவனுக்கும் ஏமாற்றம் (சிங்கையில் எனக்கு அந்த அனுபவம் நேர்ந்ததில்லை, இங்கே பாக்கெட் துண்டிப்பவர்கள் இல்லை என்னும் அளவுக்கு கடுமையான சட்டம், மாட்டினால் ஆயுதம் வைத்து கொள்ளை என்று பிடித்தவுடன் பிரம்படி கொடுத்துவிடுவார்கள், அது தவிர மிகவும் நெருக்கமான நேர பயணங்களில் அடுத்தவர் மூச்சு மேல் படும் அளவுக்கு அருகே நிற்பவரும் குறைவு), அப்படியே பாக்கெட் அடித்தாலும் 20 வெள்ளிக்கு நிரப்பிய எம்ஆர்டி அட்டை போய்விடும், வைத்திருந்த 20 வெள்ளிக்கும் குறைவான பணம் போய்விடும், மற்றபடி வங்கி அட்டைகளை உடனேயே காலாவதி செய்துவிட முடியும், பெரிய அளவில் மன உளைச்சல் இல்லை என்றாலும் எல்லாவற்றையும் புதிதாக வாங்க இரண்டு மூன்று நாள் ஆகும், வங்கி அட்டைகளை உடனடியாக மாற்றி வாங்கிக் கொள்ள முடியும்.


தற்பொழுது அட்டைகளுக்கு மறை எண்களை அடிக்க வேண்டி இருக்கிறது, அதிலும் மாற்றமாக Visa Pay Wave  விசிறிவிட்டு சென்றுவிடலாம், மறை எண்ணும் கையெழுத்தும் தேவை இல்லை, அட்டை வேறு யாரிடமும் மாட்டினால் ? ஒவ்வொரு பயன்பாட்டின் பொழுதும் செல்பேசிக்கு குறும் தகவல் வந்துவிடும், எனவே வங்கிக்கு தெரிவித்து உடனடியாக கண்டுபிடித்து அட்டையை முடக்க முடியும், உடனடியாக செயல்பட்டு எந்த கடையில் எந்த நபர் அந்த அட்டையை பயன்படுத்தி இருக்க முடியும் என்பதை கேமரா கண்காணிப்பு அந்த நபர் வெளி ஏறும் முன்பு கண்டுபிடித்துவிடுவார்கள்.

அட்டைகளெல்லாம் எதற்கு கைரேகை வைத்தால் போதும்  வங்கியில் பணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் எதையும் வாங்கிவிடலாம், மணிபர்சே தேவை இல்லை என்னும் காலம் கூட 20 - 30 ஆண்டுகளில் ஏற்பட்டுவிடும்.

கேஷ்லெஸ் (தாள் பணமற்ற) பரிமாற்றத்தினால் நல்ல பயனுண்டு, அரசுகள் பெரிய அளவில் பணத்தை அச்சடிக்கத் தேவை இல்லை, வீட்டில் பெரிய அளவில் பணத்தை வைத்திருக்கத் தேவை இல்லை, என்ன ஒன்று ? ஊதிய பணமோ, வியாபார ஈட்டலோ வங்கிக்கு வரும், வங்கியில் இருந்தே போகும் நாம் அவற்றை எண்ணால் பார்க்க முடியும் கண்ணால் பார்க்க முடியாது. அப்பறம் என்ன காசு பணத்தை கையினால் தொடவில்லை என்றால் நாமும் சாமியார்கள், ஞானிகள் மற்றும் முனிவர்கள் தானே ?

இதைப் பற்றி பேசிக் கொண்டு இருக்கும் பொழுது எனக்கு தெரிந்த நண்பர் அவருக்கு தெரிந்த (சென்னை) போக்குவரத்து காவலர் ஒருவர் பணத்தை கையால் தொடுவதில்லை என்றார், அவ்வளவு நேர்மையான பண்பாளரா ? என்று கேட்டேன், மறுத்த நண்பர் இல்லை இல்லை அவர் எதிரே இருக்கும் பெட்டிக்கடைக்காரரை வாங்கி வைத்துக்கச் சொல்லி அவர் மூலம் தனது வங்கியில் போடச் சொல்லிவிடுவாராம். கடைசி பத்தி தென்கச்சி கோ சுவாமிநாதனை நினைத்து எழுதினேன், அப்படித்தான் கொஞ்சம் கடியான நகைச்சுவையுடன் இன்று ஒரு தகவலை அவர் முடிப்பார்.

13 ஏப்ரல், 2013

தவிட்டு ரொட்டிக்கு மாறுங்கோ !


தவிட்டு ரொட்டி என்று ஒண்ணு உண்மையிலேயே தனியாக இருந்ததா ? இன்றும் இருக்கிறதா என்று தெரியாது. ஆனால் குருவி ரொட்டி (பறவைகள், விலங்குகள் போன்ற உருவங்களால் செய்யப்பட்டது), உப்பு ரொட்டி, ஐஞ்சு ரொட்டி (ஐஞ்சு பைசாவுக்கு ஐஞ்சு - பழைய 25 பைசா அளவில் இருக்கும்), சாரொட்டி (சென்னையில் வரிக்கி அல்லது பொறை என்பார்கள், சாரொட்டி என்ற பெயர் காரணம் தெரியவில்லை, ஒருவேளை சறக் மொறுக் என்பதால் அல்லது முற்றிலும் ஈரச் சாறு இல்லாமல் சாரற்ற ரொட்டி சாரொட்டி என்று மறுவியதா தெரியவில்லை)  இது போன்று இன்னும் சில ரொட்டிகளை சிறுவயதில் வாங்கி தின்றிருப்பேன், இவற்றில் சாரொட்டி தவிர்த்து ஏனையவற்றில் தவிடும் அரிசி மாவும் இருப்பது தவுடு சுவை அறிந்தவர்களால் உணர முடியும், தவிடு / உமி என்றாலே பலருக்கு என்னவென்று தெரியாது என்றே நினைக்கிறேன், அரவை மில்லில் நெல்லை இட்டு அரைக்கும் பொழுது நெல்லின் தோலும் மாவாக அரைக்கப்பட்டே வெளியே வரும், அதில் ஒரு கையளவு நெல் அரைத்து முடித்த பின் மீண்டும் போட்டு அரைப்பார்கள், காரணம் கடைசியாக எந்திரத்தில் இருக்கும் நெல்லும் அரைந்து வெளியே வந்துவிடும். அரைத்த அரிசியை மறுபடியும் ஒரு சல்லடை எந்திரத்தினுள் கொட்டுவார்கள், அது அரிசி தனியாகவும், நொய் / குருணை  (பாதிக்கும் குறைவாக உடைந்த அரிசி, ஆங்கிலத்தில் Grain அல்லது fine grain என்று சொல்லி முடித்துவிடுவான்) தனியாகவும் பிரித்து வெளியே கொட்டும், ஏற்கனவே அரவை கட்டணம் செலுத்தி இருந்தாலும் இரண்டு கை சேர்த்து மூட்டைக்கு ஒரு கை அளவு அரிசியை அரைக்கும் தொழிலாளிக்கு கொடுத்துவிட்டு அரிசி, நொய் மற்றும் தவிட்டை கட்டிக் கொண்டு வீடு வருவோம்.

நொய் கஞ்சு காய்த்து குடிக்கவும், தவிடு மாடுகளுக்கு கழுநீரில் (கழனி தண்ணி) கொட்டி கலக்கி வைக்க, பிரியாணி சாப்பிடுவது போல் சுவைத்து சாப்பிடும், தவிட்டின் பயன் அத்துடன் முடியாது, அடுப்பில் விறகு நன்றாக எரியும் போது அதன் மீது கொஞ்சம் தூவி விட மேலும் நன்கு எரியும், பெரும்பாலும் புழுங்கல் அரிசிக்காக நெல் வேக வைக்கும் பொழுது எரியூட்டியாக பயன்படும், தவிட்டு அல்லது உமி ( ஒதுக்கப்பட்டது / உமிழ்ந்தது என்ற பொருளில் உமி வந்திருக்கும் என்றே நினைக்கிறேன்)  அடுப்பில் உமி தான் முதன்மையான எரிபொருள். இப்போதெல்லாம் மாடும் இல்லை, உமி அடுப்பும் இல்லை, தவிடு எரிக்கப்பட்டு மறுப்பயனீட்டு உரமாக்கப்படுகிறதா என்று தெரியவில்லை, நெல் அரவை நிலையங்களில் எரிக்கப்பட்ட தவிடு முன்பெல்லாம் உரமாக எடுத்துச் செல்லப்படும்.

அரவை எந்திரங்கள் வராத பொழுது உரல் உலக்கை தான் நெற்களில் இருந்து அரிசியையும் உமியையும் பிரித்து எடுக்க பயன்படும், அவ்வாறு எடுக்கப்படும் அரிசியை அரவை எந்திரங்கள் வந்த பிறகு கைக்குத்தல் அரிசி என்பார்கள், அதற்கு முன்பு நெல் குத்துவதற்கு தனியாக பெயர் தேவைப்படாமல் இருந்தது, தமிழில் அரிசி என்பது தோல் நீக்கிய அனைத்து தானியங்களுக்குமான பொதுப் பெயர் தான், நெல் அரிசி, வரகரிசி, சாமை அரிசி, கேப்பரசி, கம்பரிசி, திணை அரிசி என்று தான் சொல்லுவார்கள், கால மாற்றத்தில் அவற்றை உண்ணும் வழக்கம் மறைந்ததால் நெல் அரிசிக்கு மட்டுமே அரிசி என்ற பெயர் வழங்கிவருகிறது, அரிசி தான் ஆங்கிலத்தில் Rice க்கும் மூலச் சொல், காரணம் விவசாயம் பண்டைய காலம் தொட்டே (இன்றும் செயலபடும் கல்லணை தான் உலகின் முதல் அணை) தமிழகத்தில் நடந்து, ஏற்றுமதி செய்யப்பட்டவை என்பதால் அந்த சொல் தமிழகத்தில் இருந்தே பல்வேறு மொழிகளுக்கு சென்றிருக்க வேண்டும் A-RI-CE (அ-ரி-சி), இவற்றில் 'அ' வை விழுங்கிவிட்டு ரிசி யை (Rice) ரைஸ் ஆக்கி நம்மையும் அவ்வாறே சொல்ல வைக்கிறார்கள், தமிழகத்தில் ரைஸ் / ஷாதம் என்று சொல்வது தான் நாகரீகம் என்ற நிலைக்கு வளர்ந்துள்ளது, யாராவது சோறு என்று கேட்டால் பிச்சைகாரனோ ? என்பது போல் முகத்தை ஏறிட்டு பார்க்கிறார்கள், உலகினருக்கு ஒரு உணவுப் பொருளின் சொல் பிச்சை அளித்து அவற்றை திரும்பவும் நாமே வாங்கி உண்கிறோம் :)


Etymology

First attested in English in the middle of the 13th century, the word "rice" derives from the Old French ris, which comes from Italian riso, in turn from the Latin oriza, which derives from the Greek ὄρυζα (oruza). The Greek word is the source of all European words (cf. Welsh reis, German Reis, Lithuanian ryžiai, Serbo-Croatian riža, Polish ryż, Dutch rijst, Hungarian rizs, Romanian orez).[7][8][9] The origin of the Greek word is unclear. It has sometimes held to be from the Tamil word அரிசி (arisi), or rather Old Tamil arici.[10][11] However, Krishnamurti[12] disagrees with the notion that Old Tamil arici is the source of the Greek term, and proposes that it was borrowed from descendants of Proto-Dravidian *wariñci instead. Mayrhofer[13] suggests that the immediate source of the Greek word is to be sought in Old Iranian words of the types *vrīz- or *vrinj-, but these are ultimately traced back to Indo-Aryan (as in Sanskrit vrīhí-) and subsequently to Dravidian by Witzel and others.

நன்றி விக்கி

*****

கைக்குத்தல் அரிசிகளில் தானியங்களின் சத்துகள் நிரம்ப இருக்கும், அரவை எந்திரங்கள் மூலம் அரைக்கப்படுவதில் அரிசியின் மேற்பகுதி நன்றாக தீட்டப்பட்டு வெறும் மாவுப் பொருள் மட்டுமே நமக்கு உணவாக கிடைக்கிறது, இவற்றை கால விரைவாக உணர்ந்து கொண்டவர்கள் தற்போதும் வெளிநாட்டினரே, குறிப்பாக ஐரோப்பியர்கள் உணவுக்காக தயாரிக்கப்படும் ரொட்டிகளில் தானியங்களின் உமியும் கலந்த (whole meal) ரொட்டிகளே சத்தானவை என்று பரிந்துரைக்கப்படுகிறது, whole meal bread விற்பனை தற்போது விரும்பி வாங்கப்படும் ரொட்டி உணவு வகையாக மாறியுள்ளது, தானியங்களின் மேல் தோல் உள்ளிட்டவைகளில் புரத சத்துகள் உண்டு, என்பதால்  whole meal உணவு பொருள்கள் பல்வேறு சுவையூட்டத்துடன் கிடைக்கிறது.  புரதம், நார்சத்து, கொழுப்புசத்து, இரும்பு சத்து ஆகியவை தானியத்தின் தோல் மற்றும் அவற்றின் முளைகளில் உண்டு,  தீட்டபட்ட அரியினுள்  மாவு சத்து மட்டுமே உண்டு, அதனால் தான் உடல் பருமன் மிகுவது மற்றும் நீரிழிவு குறைபாடு உள்ளவர்களுக்கு உண்டவுடனேயே சர்கரை அளவு கூடுவது போன்ற உடல் மாற்றங்கள் ஏற்படுகின்றன.

whole meal க்கு விக்கி ஒரு பக்கமே திறந்து வைத்து அதன் பயனை தெரிவித்துள்ளனர், நெல் மட்டுமின்றி அனைத்து தானியங்களிலுமே அனைத்து சத்துகளும் அவற்றின் தோலையும் சார்ந்தவையாகவே உள்ளது. இந்த whole meal, digestive   Biscuit ஆகியவை நாம் முன்பு தவிட்டு ரொட்டி என்ற பெயரில் சாப்பிட்ட ரொட்டி. சுவை தான், கொஞ்சம் சக்கை போன்று சற்று சுவை குறைந்ததாக (சப்பென்று) இருக்கும், வெள்ளைக்காரன் சாப்பிடும் தவிட்டு ரொட்டிக்கு whole meal என்று பெயர் வைத்ததால் அவற்றை உண்ணுவது உடல் நல மேன்மை மற்றும் நாகரீக உணவு என்ற நிலையை அடைந்துள்ளது. 

17 மார்ச், 2013

பாலியல் தொழிலுக்கு பால் வார்க்கும் செய்தி நிறுவனங்கள் !


அண்மையில் இந்தியா சென்றிருந்த பொழுது பெங்களூரு சென்றிருந்தேன், விடுதியில் கொடுக்கப்படும் நாளிதழில் பார்வையை ஓட்டும் பொழுது வரி விளம்பரப் பகுதி கண்ணில் பட்டது, அதில் மசாஜ் விளம்பரங்கள், படித்தவுடனேயே கோபம் கொப்பளித்தது, இந்த மாதிரி ஈனத்தனமான விளம்பரங்களில் வருவாய் தேடும் நாளிதழ்களால் தான் சமூதாயம் சீரழிகிறது என்பதை அழுத்தமாகவே பதிய வைக்க விரும்புகிறேன், செய்தியின் தரம், விளம்பரத்தின் தரம் என்று எந்த விதிமுறைகளும் இல்லாததால் அவை நாளிதழ்கள் வாசிக்கும் இதயங்களில் கழிவு நீராக கலந்துவிடுகின்றன, ஆண்மைக் குறைவுக்கு வரும் விளம்பரங்களாகட்டும், ஈமு கோழி விளம்பரங்களாகட்டும், வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் விளம்பரமாகட்டும், வெளிநாட்டு வேலை வாய்ப்பு விளம்பரங்கள், வீட்டில் இருந்தபடியே மாதம் 30000 ஆயிரம் சம்பாதிக்கும் வாய்ப்பு, பல்லடுக்கு தொழில் (மல்டிலெவல்) இவற்றில் மக்கள் எந்த அளவுக்கு அவைகளை நம்பி பணம் போட்டுவிட்டு பாதிப்பு அடைவார்கள் என்று இவர்கள் கொஞ்சமும் ஆய்வு நடத்தாமல் விளம்பர நிறுவனங்கள் கொட்டிக் கொடுக்கும் பணத்தில் கொழித்துக் கொண்டு நாங்கள் நான்காவது தூண்கள் என்றெல்லாம் மார்தட்டுகிறார்கள்.

சேலம் சித்தவைத்தியர்கள்  ஆண்மை இழந்த எத்தனை பேருக்கு எழுச்சி ஏற்படுத்தினார்கள் என்கிற எந்த ஒரு கணக்கும் கிடையாது, ஆனாலும் அத்தகைய விளம்பரங்களை நம்பி பணம் விரயம் செய்பவர்கள் எந்த காலத்திலும் இருப்பார்கள், சரி ஆகாவிட்டாலும் இதை வெளியே சொன்னால் வெட்கம் என்று பணத்தை கொட்டிவிட்டு செல்பவர்கள் என்றும் உண்டு என்பதே இத்தகைய விளம்பரங்கள் இன்றும் நாளிதழ் தாண்டி தொலைகாட்சி விளம்பரங்களாகவும் வளர்ச்சி பெற்றிருக்கிறது. ஈமு கொழிகளுக்கு விளம்பரம் கொடுக்காத புலனாய்வு நாளிதழ்கள் / வார இதழ்கள் / வாரம் இருமுறை புலனாய்வு இதழ்கள் ஏதேனும் உண்டா ? ஆனாலும் ஈமு கோழி ஏமாற்றுப் பேர்வழிகள் ஓடியதும் ஏதோ அவர்கள் மட்டுமே மக்களை ஏமாற்றியது போன்று கட்டுரைகள் எழுதி தங்கள் நேர்மையையும் புலனாய்வு திரனையும் பறைசாற்றுவார்கள்.

நான் பார்த்த மசாஜ் விளம்பரங்களில் மசாஜ் செய்துவிடுபவராக இந்தியர், வெளிநாட்டினர், விளம்பர மாடல்கள், மாணவ / மாணவியரும் உள்ளதாக விளம்பரம் செய்துள்ளனர். இந்தியர் வெளிநாட்டினர், விளம்பர மாடல்கள் மசாஜ் செய்துவிடுவது பெரிய குற்றமில்லை ஆனால் மாணவ / மாணவியரும் பணியாற்றுவதாக விளம்பரம் செய்வதும், அதை ஈனப்பிழைப்பாக பத்திரிக்கைகள் வெளி இடுவதும் கண்டனத்துக்குரியது ஆகும், மசாஜ் என்ற பெயரில் 90 விழுக்காடு பாலியல் தொழில்கள் தான் நடைபெறுகின்றன என்பதற்கு விளம்பரத்தில் மாணவ மாணவியர் சேவை இருப்பதாக காட்டி இருப்பதை விட வேறு என்ன சான்று கொடுக்க முடியும் ? உண்மையில் உடல்வலிக்காக அல்லது சிகிச்சைக்காக மசாஜ் செய்து கொள்பவர் மாணவ மாணவியர் அதை செய்தால் திருப்தியாக இருக்கும் என்று நினைப்பார்களா ? பிறகு ஏன் இவர்கள் மாணவ / மாணவியர் மசாஜ் சேவை இருப்பதாக விளம்பரம் செய்கிறார்கள் ? அதை ஒரு ஏமாற்று விளம்பரம் என்று வகைபடுத்தினாலும் கூட பாலியல் தொழிலை ஊக்குவிக்கும் ஒரு விளம்பரம் என்று தானே கொள்ள முடியும் ?

பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் குறித்து தற்பொழுது தான் கொஞ்சமேனும் விழிப்புணர்வு எட்டியுள்ளது. இது போன்ற விளம்பரங்கள் சமூக வாழ்வை சீர்குலைக்கச் செய்வதுடன், சமூக அமைப்பையே சிதைக் கூடியது ஆகும், மாணவ மாணவியர் மசாஜ் செய்தால் நன்றாக இருக்கும் என்று நினைப்பவனுக்கு இந்த விளம்பரம் வாய்பை அளிக்கிறதோ இல்லையோ, மாணவ மாணவியரிடம் சில்மிசம் செய்யலாம் என்கிற எண்ணத்தை ஏற்படுத்திவிடும், தவிர ஏழை மாணவ / மாணவியர் அல்லது விருப்பம் போல் செலவு செய்ய ஏங்கும் / நினைக்கும் அவர்களின்  கண்களில் இது போன்ற விளம்பரங்கள் பட்டால் அந்த மசாஜ் நிறுவனங்களில் மசாஜ் செய்வராக வேலை செய்ய விருப்பம் தெரிவித்து பாலியல் தொழில் பாதாள குழிக்குள் தள்ளப்பட்டுவிடுவார்கள்

மத்திய அரசிலும், மாநில அரசிலும் தணிக்கை துறைகள் உண்டு, அவர்களின் கண்களில் இந்த விளம்பரங்கள் படுவதில்லையா ? ஏன் அவற்றையும் குறிப்பிட்ட பத்திரிக்கைகளையும் தடை செய்வதில்லை ? 

************

பத்திரிக்கை நான்காவது தூண் என்று எவரும் சொன்னால் செருப்பைக் கழட்டிக் காட்டலாம், ஈமு கோழிகள் வளர்ப்பு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு என்றெல்லாம் மோசடி பேர்வழிகள் சிக்கும் பொழுது நடைபெரும் போராட்டங்களில் குறிப்பிட்ட விளம்பரங்களை வெளியிட்ட செய்தி இதழ்/ தாள் நிறுவனங்கள் முன்பும் முற்றுகை போராட்டம் நடத்தி பாதிக்கப்பட்ட நபர்களுக்கு இரு தரப்பில் இருந்தும் நட்ட ஈடு பெற்று தந்தால் ஒழிய இத்தகைய ஈனத்தனம் ஒழியாது. மாணவ மாணவியர் மசாஜ் சேவையில் உள்ள  வரும் வெளம்பரத்தை வெளியிடும் செய்தி நிறுவனங்கள் மீது ஏன் யாரும் பொது வழக்கு தொடுக்கக் கூடாது ?  அந்த பத்திரிக்கைகளை ஏன் தடை செய்யக் கூடாது ? 

பலர் நாடிப் படிக்கும் செய்தி இதழ்களில் இத்தகைய விளம்பரங்களை வெளியிடுவதும், முறையற்ற பாலியல் தொழிலும் பெரிய வேறுபாடுகள் இல்லை. இவர்களும் ஒருவகையில் 'மாமாக்களே'

5 செப்டம்பர், 2012

முட்டாள்களுக்காக எழுதவேண்டியுள்ளது .....!

வாலிப வயோதிக அன்பர்களை துன்புறுத்தும் சுய இன்பம் பற்றிய  'விழிப்புணர்வு' பழனி / சேலம் சித்த வைத்தியர்களைத் தாண்டி பதிவுகளாகவும் வந்து கொண்டி இருக்கிறது, விழிப்புணர்வு என்ற பெயரில் அறிவு வெளிச்சத்தை அணைக்கும் செயலாக தன்னின்பம் பற்றிய தவறான விளக்கங்களை கொடுக்கிறார்கள், வெற்றிலைப் போட்டால் கோழி முட்டும் என்று சிறுவர்களை அந்தப் பழக்கத்தில் இருந்து காக்க நகைச்சுவையாகக் கூறுவதுண்டு, கோழி எப்படி முட்டும் ? என்று யோசித்துக் கொண்டே வெற்றிலையை மறந்துவிடுவான் சிறுவன், காம்பைக் கிள்ளிக் திண்ணக் கொடுப்பார்கள், வெற்றிலையால் கெடுதல் எதுவும் இல்லை என்றாலும் சிறுவயதில் பற்களில் கறை படுவது முகத் தோற்றத்தையும் சிரிப்பழகையும் கெடுத்துவிடும் என்பதால் அவ்வாறு கூறி தடுப்பார்கள். பருவ வயதில் கைப் பழக்கம் எனப்படும் தன்னின்பம் பற்றிய விழிப்புணர்வுகளும் அத்தகையது என்றாலும் அவை எந்த வயதிற்கு ஏற்ற பரிந்துரை அல்லது விழிப்புணர்வு என்று அடிப்படை அறிவே இல்லாமல் பொதுவாக அவை தவறு என்கிற ரீதியில் எழுதப்படுகிறது, தவறுதலாக சித்தரிக்கப்படுகிறது.

பெண் பூப்பெய்தும் பருவம் தான் ஆணின் திருமண வயதையும் முடிவு செய்கிறது என்கிற நிலையில் 60 ஆண்டுகளுக்கு முன்பு வரை திருமண வயது ஆணுக்கு 15 பெண்ணுக்கு 12 - 13 என்ற நிலையில் இருந்தது. ஆண் பெண்ணைவிட இரண்டு வயதாவது கூடுதலாக இருக்க வேண்டும் என்கிற சமூக எண்ணங்களின் செயல்பாடுகளாக ஆணின் திருமண வயது 16 என்று முடிவு செய்து வைத்திருந்தனர். ஆண் உடல் ரீதியாக வளர்சி அடைந்து கிளர்ச்சி அடையும் பருவம் 15 - 16 வயது தான், அந்த காலகட்டத்தில் திருமணம் செய்வது நடைமுறையாக இருந்தது, அன்றைய ஆண்களுக்கு பொருளாதார வழிநடத்தல்களாக இல்லம் சார்ந்த தொழில்கள் இருந்ததால் திருமணத்தைத் தள்ளிப் போட வேறு காரணங்கள் எதுவும் இல்லாத நிலையில் பருவ வயதில் திருமணம் செய்துவைப்பது நடைமுறையாக கடைபிடிக்கப்பட்டுவந்தது.  சேலம் சித்த வைத்தியர்களின் அறிவுறுத்தல்கள் 16 வயதினருக்கு ஏற்றதாக இருந்திருக்கலாம், காரணம்  சுய இன்ப நாட்டத்திலோ அல்லது பாலியல் தொழிலாளியை நாடும் எண்ணங்களையோ வளர்த்துக் கொண்டிருந்தால் திருமண வாழ்க்கைப் பற்றிய எண்ணங்கள், அதன் நன்மைகள் ஆகியவற்றை புறந்தள்ளக் கூடும் என்பதால் விலைமாந்தர்களிடம் செல்வது முறையற்ற உறவு என்ற வகையில் தடுக்கப்படுவது போலவே சுய இன்பப் பழக்கம் உடல் ரீதியாக கேடுவிளைவிக்கக் கூடியவை என்கிற அறிவுறுத்தல்களை செய்வதால் முறையான பாலியல் வடிகாலுக்கு திருமண உறவை நம்பி, விரும்பி செய்து கொள்வார்கள் என்று உளவியல் ரீதியாக கிளப்பிவிடப்பட்டவையே சுய இன்பம் பற்றிய கட்டுக்கதைகள். 

தற்பொழுது வயதும் பருவமும் திருமணத்தை முடிவு செய்ய முடியாத நிலையில் தனிமனித பொருளாதார மையம் பெரும் அறை கூவலாக அமைந்துவிட்டபடியால் கல்லூரிப் படிப்பை முடித்து பின்னர் வேலை தேடி, வேலை வாய்ப்பு பெற்று,  ஓரளவு கால் ஊன்றிவிட முடியும் என்கிற நம்பிக்கையை வளர்த்துக் கொண்ட நிலையில் திருமணம் என்கிற முடிவை எடுக்க 25 வயதிற்கு மேல் ஆகிறது. பெற்றோர்களே விரும்பிக் கொடுத்தாலும் 20 வயது பெண்ணை மணந்து கொள்ள 25 வயது இளைஞர்கள் முன்வருவதில்லை. பெண்ணுக்கான திருமண வயது அரசு 18 என்று வழிகாட்டினாலும் 22 வயதிற்கு மேல் தான் திருமணப் பேச்சு துவங்குகிறது.  ஓரளவு நிலையான வருமானம் உள்ள ஆணை பெண்ணுக்கு மணம் முடிக்க ஆணின் வயது 28 வரை காத்திருக்க வேண்டிய நிலையில் பெண்ணையும் படித்தவளாகவே கொடுப்பது தான் அவர்கள் இருவருக்கும் பொருளாதாரத்தை மேம்படுத்தும் என்பதால் பெண்ணும் படித்து வேலைக்குச் சென்ற பிறகே திருமணம் செய்விப்பது வழக்கமாகி இருக்கிறது. முதிர்கன்னி பற்றி கண்ணீர் கவிதை எழுதுபவர்கள் குறைந்துவிட்டதற்குக் காரணம் சமூகப் புரட்சி நடந்துவிட்டது என்பதல்ல. முதிர்கன்னி என்றால் எத்தனை வயதிற்கு மேற்பட்டவர்முதிர்கன்னி ? என்கிற வயது பற்றிய முடிவெடுக்கத் திணற வேண்டிய நிலையில் முதிர்கன்னிக் கவிஞர்களின் சிந்தனை சிறகுகள் படபடக்க மறுத்துவிட்டன. திருமணம் பற்றிய முடிவுகளுக்கு பருவமும், வயதும் காரணிகள் இல்லை, பொருளாதாரமே முதன்மைக் காரணம்.

தனிமனித பொருளாதார மேம்பாடு திருமணம் எப்போது என்பது பற்றித் தான் முடிவு செய்யும். ஆனால் பருவ வயதை எட்டி ஒரு சில ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் உடல் ரீதியான இச்சைகளுக்கு அவை பொறுப்பேற்றுக் கொள்ளாத போது தனிமனித பாலியல் தேவையின் வடிகாலுக்கு தீர்வு ? அரசுகளைப் பொருத்த அளவில் பாலியல் தொழிலை ஊக்குவிக்க முடியாத நிலைக்குக் காரணம் குடும்ப அமைப்புகள் சீர்கெட்டுவிடும் என்கிற அக்கரை கிடையாது, பாதுகாப்பற்ற உறவினால் நோய் பெருகும் என்பதே காரணம், ஏனெனில் தனிமனித பாலியல் தேவைக்கு வடிகால் இவை என்று திருமண பந்தம் தவிர்த்து வேறெதையும் காட்ட முடியாத நிலையில் ஒருவர் பாலியல் தொழிலாளியை நாடுவதைத் தடுக்கும் உரிமையையும் அரசுகள் கையில் எடுத்துக் கொள்ள முடியாது என்பதால் பாலியல் நோய சார்ந்த விழிப்புணர்வுகளை செய்வதை மட்டும் அரசுகள் நடைமுறைப்படுத்தியுள்ளன.

தனிமனித வக்கிரம், மித மிஞ்சிய பாலியல் உணர்வுகள், வண்புணர்வுகள், கள்ள உறவுகள்  என்பதையெல்லாம் தள்ளி வைத்துவிட்டு அடிப்படை ரீதியிலான திருமண உறவற்ற தனிமனித பாலியல் தேவைக்கான தீர்வுகள் என்கிற வகையில் இருக்கும் வாய்ப்புகள் சுய இன்பம் அல்லது பாலியல் தொழிலாளியை நாடுவது ஆகிய இரண்டு மட்டுமே. பாலியல் தொழிலாளியை நாடுவதில் உள்ள ஆபத்துகள்  கடுமையான பாலியல் நோய் தொற்றுகள், அதனை பிறருக்கும் பரப்புதல் கூடவே பண விரயம். ஆனால் சுய இன்பம் எந்த ஆபத்தும் அற்றது என்பதால் தனிமனித பாலியல் தேவைக்கு சரியான தீர்வு அது மட்டுமே. 

மதங்கள் அனைத்துமே சுய இன்பத்தை பாவம் என்றும் ......செய்துவிட்டால் நரகம் என்றெல்லாம் பயமுறுத்துகின்றன, மதங்களின் கோட்பாட்டின் படி சுய இன்பத்திற்கு தண்டனைக் கிடைக்கும் என்றால் 99.9X விழுக்காடு ஆண்களுக்கு கண்டிப்பாக தண்டனை உண்டு. ஒரு நகைச்சுவைக்காக சுய இன்பத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு ஒரு கைவெட்டப்படும் என்று வைத்துக் கொண்டால் யாருக்கு கை மிஞ்சும் ? ஒரு வேளை தண்டனை எதுவும் கிடைக்காதவருக்கு ஏற்கனவே கைகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும், அல்லது செயல்படாத உறுப்பு கொண்டவராக இருக்க வேண்டும்.  மதங்கள் வேண்டுமென்றால் வேறு பிரச்சாரங்கள் செய்யலாம் அடுத்தவர் உறுப்பை அனுமதியின்றித் தொடுவது பாவம், தண்டனைக்குறியது. இது போன்ற கோட்பாடுகள் இருந்தால் வரவேற்பேன். வெளிநாடுகளில் தனிமையில் வசிக்கும் திருமணம் ஆன  ஆண்களுக்கு இதைவிட்டால் வேறு என்ன தீர்வை மதங்கள் சொல்லும் ?

நேற்று சித்த வைத்தியம் என்ற பெயரில் சுய இன்பம் பற்றி உளறி எச்சரித்த பதிவு ஒன்றை படிக்க நேரிட்டதால் தான் இதை எழுதுகின்றேன், மதவாதிகள் இதுபற்றி பெரிதாக எச்சரிக்கைக் கொடுப்பதில்லை, எழுதினால் ஏன் வம்பு என்று நக்கைக் கடித்துக் கொள்வதுடன் தன்கையையே கட்டிப் போட்டுக் கொண்டு தான் எழுத நேரிடும் என்பதால் அவர்கள் சுய இன்பம் பற்றி எழுத வெட்கம் அடைந்துள்ளார்கள் மற்றபடி நாமும் எழுதலாம், கைப் பழக்கம் இல்லாத சமூகத்தை உருவாக்கி சொர்கத்திற்கு அனுப்புவோம் என்று கனவு காணுவார்கள் ஆனாலும் அதற்கு அவர்கள் கை அனுமதிக்கனுமே ? காலத்துக்கும் ஏற்றக் கருத்துகள் எங்கள் மதப் புத்தக்கத்தில் முத்துகளாகக் கோர்க்கப்பட்டுள்ளன என்று அளந்துவிடும் எவரும் சுய இன்பம் பற்றி எழுதுவதை அடக்கி வாசித்தே வருகின்றனர்.  தனிமனிதன் யாருக்கும் தொல்லை இன்றி தாம் ஈடுபடும் சுய இன்பத்தை எந்த ஒரு அரசும் வெளிப்படையாக தடையாக அறிவிவிக்கவில்லை என்பதிலிருந்தே இது பற்றிய கருத்துகள் காலம் கடந்துவிட்டவை என்பது உறுதியாகின்றது, மதப் புத்தகங்களில் குறிப்பிட்ட பக்கங்களை பிய்து எரியுங்கள். கடவுள் மனிதர்களை எல்லை மீறி சோதிப்பது இல்லை, அதனால் தான் மனிதர்களின் உறுப்பை எட்டும் அளவுக்கு நீளமான கைகளையும் விரல்களையும் வழங்கியுள்ளான் - நம்புங்கள். :).  எந்த ஒரு அறிவியல் ஆய்வும் கட்டுப்பாடான சுய இன்பப் பழக்கத்தை தவறு என்று சொல்லவில்லை, மாறாக உடல் ரீதியான நன்மைகள் என்றே பட்டியல் இடுகின்றன. தேவையின் போது நாய் உள்ளிட்ட விலங்கினங்களும்  நாவினால் தனக்கு தானே செய்து கொள்கின்றன.  இணைப்பு

பசி, தூக்கம், உடல் அரிப்பு போன்று தனிமனித பாலியல் வேட்கையும் அதற்கான தீர்வும் தேவையான ஒன்றே, இதற்கு எளிய வழி தன்னின்ப தீர்வு தான்.  தன்னின்ப / கைப்பழக்க செயல்பாடுகள் தவறு என்றால் ஏன் தவறு ? எந்த வயதினருக்கு தவறு ? என்றெல்லாம் விளக்கிவிட்டு அதன் பிறகு அது பற்றிப் பேசலாம். மொட்டையாக விந்துவிட்டான் நொந்து கெட்டான் இவையெல்லாம் எதுகை மோனையாக எழுதப்பட்டது என்பது தவிர்த்து வேறெதும் அறிவுபூர்வமாக சொல்லவில்லை என்பதே உண்மை.

சுய இன்பம் தவறு என்கிற  முட்டாள்களின் தவறான வழிகாட்டல் மூலம் அரைகுறையாக புரிந்து கொள்ளும் பருவ வயதை எட்டிய ஒருவர் / திருமணம் ஆகாத ஒருவர், ஆண்/பெண் உறவே சரி என்று எண்ணி பாலியல் தொழிலாளியை நாடும் வழிகாட்டலாக எடுத்துக் கொள்வர், அதன் ஆபத்துகள் மிகுதி, கூடவே சிறுவர் / சிறுமியர்களையும் சீண்டிப்பார்க்க முயற்சிப்பார்கள் என்றாவது எழுதும் மடையர்களுக்கு தெரியுமா ? தெரிந்திருந்தால் அவ்வாறு எழுதமாட்டார்கள்.

17 ஜூலை, 2012

பழைய சோறு நல்லதா ?


காலை உணவு குறித்து இன்றைய இளைஞர்கள் இளைஞிகள் பெரிதாக நாட்டம் கொள்வதில்லை, காலையில் எதுவும் சாப்பிடாமல் இருப்பேன் என்பதை பலர் பெருமையாகச் சொல்கிறார்கள், காரணம் வறுமை இல்லை என்றாலும் காலை உணவைத் தவிர்ப்பது எதோ ஒரு புதிய உடற்பயிற்சி போன்று நம்பப்படுவதுட்ன் உடலை கட்டுக் கோப்பாக வைத்திருக்கும் என்றும் நம்புகிறார்கள், உண்மையில் காலை உணவை தவிர்ப்பவர்களுக்கு நீரிழிவு குறைபாடு வருவதற்கான வாய்ப்பு மிகுதி. இரவு உணவிற்கும் காலை உணவிற்குமான இடைவெளி ஏற்கனவே குறைந்தது 8 மணி நேரமாக இருக்கும் பொழுது, அதை தவிர்த்துவிடுவதால் அந்த இடைவெளி கூடுதலாகி 12 மணி நேரம் வரையிலும் கூட நீட்டிக்கப்படுகிறது, உடலில் உற்பத்தியாகும் இரத்ததிற்கேற்ற அளவில் தான் கணையம் வேலை செய்து இன்சுலினைச் சுரந்து இரத்தத்தில் உள்ள சர்கரையை எரிக்கிறது, காலை உணவு எடுத்த்துக் கொள்ளாததால் இரத்த உற்பத்திக் குறைந்த நிலையில் கணையம் இன்சுலினை உற்பத்தி செய்வதும் இயல்பாகவே குறைய, நாளடைவில் கணையத்தின் இன்சுலின் உற்பத்தித் திறனும் குறைந்துவிடும். இதனால்  இன்சுலின் சுரப்பதில் கட்டுப்பாடு ஏற்பட, வேளை விட்டு சாப்பிடும் போது உண்டாகும் உபரியான இரத்தத்தில்  உபரியாக உற்பத்தியான சர்க்கரையை எரிக்க முடியாமல் அவை இரத்ததில்யே தங்குவதைத் தான் நீரிழிவு குறைபாடு என்கிறார்கள், அதாவது இரத்தத்தில் உள்ள சர்க்கரை எரிக்கப்படாமல் இரத்ததுடன் கலந்து இருப்பதைத் தான் நீரிழிவு என்கிறது மருத்துவ்ச உலகம், இருந்துவிட்டுப் போகட்டுமே என்றுவிட முடியாது, ஏனெனில் இரத்தத்தில் சேரும் சர்க்கரை இரத்ததின் நீர்மத் தன்மையை கெட்டியாக்குவதுடன் இரத்த ஓட்டத்தையும் கட்டுப்படுத்துகிறது. 

இரத்த சர்க்கரை அளவு கூட உடலில் அனைத்து பாகங்களுக்குமான தேவையான இரத்த ஓட்டம் குறைய இயல்பாகவே உடல் பாகங்கள் சீர்கேடு அடைகின்றன, அதனால் தான் மற்ற நோய்களைவிட நீரிழிவு நோய் மனித வாழ்க்கையின் மிகப் பெரிய அரைகூவலாக இருக்கிறது. நீரிழிவு குறைபாடு இதனை நோய் என்று சொல்லமுடியாது) முற்றிலும் குணப்படுத்தப்படாவிட்டாலும் கட்டுப் படுத்திக் கொள்ள முடியும் என்பது தான் தற்காலிக மருத்துவத் தீர்வு, அதாவது இரத்தச் சர்க்கரையைக் கூட்டாத வண்ணம் உணவு பழக்கங்களை மாற்றி அமைத்துக் கொள்வதுடன் தேவையான போது அதற்குறிய மருந்துகளையும் எடுத்துக் கொள்ள வேண்டும், இதைத் தவிர்த்து மருத்துவ உலகம் நீரிழிவு குறித்து முழுமையான எந்த ஒரு தீர்வையும் இதுவரை கண்டிபிடிக்கவோ பரிந்துரைக்கவோ இல்லை. மற்றொரு நிரந்தர தீர்வு மாற்று கணையம் பொறுத்துவது தான், ஆனாலும் உயிருடன் இருப்பவர்களிடம் இருந்து கணையம் பெறுவதற்கு வாய்ப்புகள் கிடையாது, கணையம் சிறுநீரகங்களைப் போல் இரண்டாக இல்லாமல் ஒன்றாக இருப்பதால் அதற்கான வாய்ப்புகளும் இல்லை, மூளைச் சாவு கண்டவர்களிடம் இருந்து கணையம் பெறப்பட்டாலும் அவை முற்றிலும் பழுதானவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் பொறுத்தப்படுவதால் பொதுவான நீரிழிவு குறைபாட்டினருக்கு மாற்று உறுப்பு சிகிச்சைகளுக்கான வாய்புகள் கிடையாது. மாற்றுக் கணையம் பொருந்துவதும் மிகக் கடினம், பிழைப்பதற்கான வாய்ப்புகளும் அரிது. இதனால் தான் நீரிழிவுக்கு  இரத்த சர்க்கரையைக் குறைக்கும் மருந்துகளும் உணவுக் கட்டுப்பாடும் தீர்வாக பரிந்துரைக்கப்படுகிறது. 

எனக்கெல்லாம் எந்த நோயும் அண்டாது என்று நம்புவர்களும் இருக்கிறார்கள்', இவையெல்லாம் நாற்பது வயதுவரையான நம்பிக்கையாக இருந்தால் பரவாயில்லை, ஆனால் நாற்பது வயதிற்குமேல் இப்படியான நம்பிக்கை ஒரு மூட நம்பிக்கை. ஆண்டுக்கு ஒருமுறையேனும் இரத்த அழுத்தம், இரத்த சர்க்கரை அளவு, இதய துடிப்பு, சிறுநீர், கண்கள் ஆகியவற்றை சோதனை செய்து அனைத்து உறுப்புகளும் நல்ல முறையில் இயங்குகிறது என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும், ஆண்டுக்கு ஒருமுறையான சோதனை நோய்களின் ஆரம்பக் கட்டத்திலேயே கண்டுப்பிடிக்கப்படுவதால் அவற்றை குணப்படுத்திக் கொள்ள வாய்பாக அமையும் அலட்சியம் காட்டினால் 'நேற்று வரை நன்றாகத் தான் இருந்தார் என்று நாலு பேர் தன்னைப் பற்றிப் பேசும் போது கேட்க முடியாமல் போய்விடும், இதை பயமுறுத்தல் என்று எடுத்துக் கொள்ளாமல் பரித்துரை என்ற அளவில் பார்த்தால் தனக்கும் தனக்கும் பின்னால் இருக்கும் குடும்பத்தின் மீதான நன்மை கருதியவை என்று புரிந்து கொள்ளப்படும். சர்கரை நோய் 50 - 60 வயதிற்கு மேல் தான் வரும் என்ற நம்பிக்கையும் பலரிடம் உள்ளது, அதன் துவக்க காலம் 30 வயதில் கூட துவங்கி இருக்க இன்றைக்கு வாய்ப்புகள் இருப்பதால் 35 வயதில் நீரிழிவு குறைபாடுகள் வெகு சாதாரணமானவையாக உள்ளது. நீர்ழிவு நோய்களில்  இருவகைப் பிரிவில் ஒன்று (Type 2) பெற்றோர் வழியாக பரம்பரையாக வருவது என்பதால் காலை உணவு எடுத்துக் கொள்ளாதவர்களை அவை 30 வயதிலேயே பற்றிவிடுகிறது. தனக்கு நீரிழிவு இருக்கிறதா என்பதை உடலில் ஏற்படும் மாற்றங்களை வைத்து அறிந்து கொள்ளலாம், நீரிழிவினால் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் (Symptoms) குறித்து நூற்றுக் கணக்கான இணையத் தளங்கள் தகவல்களைத் தருகின்றன.


நீரிழிவு குறைபாட்டால் ஏற்படும் உடல் மாற்றங்களில் பொதுவானவை

1. சிறுநீர் பையில் தேவையான அழுத்தம் இல்லாவிட்டாலும் குளிர்ந்த நீரில் அல்லது பச்சைத் தண்ணீரில் காலோ கையோ படும் பொழுது  சிறுநீர் கழிக்க வேண்டும் என்கிற உணர்வு ஏற்படும். சிறுநீர் கழிக்கும் கழிவரை உள்ளிட்ட இடங்களில் எறும்புகளைப் பார்க்க முடியும், சிறுநீரில் இருக்கும் சர்கரையை நுகர எறும்புகள் சேறும்.

2. கணுக்காலிலும் அதற்கும் கீழேயும் கால் பகுதிகளின் தோல் உடல் தோலின் நிறத்தைவிட கருமையாக அல்லது கருமைத் திட்டுகள் காணப்படுதல் மற்றும் காலில் அடி விரல் உள்ளிட்ட சில பகுதிகளில் உணர்வுகள் குறைந்திருத்தல்

3. ஆண்குறியின் முன்தோலில் ஏற்படும் வெடிப்பு, இவை பாலியல் ரீதியான அல்லது அப்பகுதிகளில் காற்றோட்டம் குறைவானதாக  இருப்பதால் ஏற்படும் வியர்வையினால் உற்பத்தி ஆகும் பாக்டீரியா வகைச் சார்ந்த நோயாக இருக்கும் என்று நினைத்து களிம்புகளை தடவி குணப்படுத்திக் கொள்வர். இவை சர்கரை குறைபாடு உள்ளவர்களுக்கு அடிக்கடி ஏற்படும், காரணம் சிறுநீரில் சேர்ந்திருக்கும் சர்கரை பாக்டீரியாக்களை உற்பத்தி செய்து தோலின் கடினத் தன்மையைக் குறைக்க வெடிப்பு ஏற்படும். இவற்றைக் மருத்துகளின் மூலமாக குணப்படுத்திக் கொள்ளலாம் என்றாலும் மருந்துகளற்ற நிரந்தரத் தீர்வு 'முனைத் தோல் நீக்கம் (சுன்னத்)' இங்கே அடிக்கடி அந்த குறைபாடு கண்டவர்களுக்கான பரிந்துரை என்ற அளவில் சுன்னத் பரிந்துரை உள்ளது மற்றபடி நலமாக இருப்பவர்களுக்கு சுன்னத் செய்வது உறுப்பு சேதம், பல் சொத்தை ஆகமல் தடுக்க அதை எடுத்துவிடுவது தான் நல்லது என்பது போன்ற முட்டாள் தனமான பரிந்துரை.

4. எப்போதும் தாகம் எடுப்பது

5. வழக்கத்துக்கு மாறான சோர்வு மற்றும் உடல் எடை குறைவு

6. உடலில் பல பகுதிகளில் ஏற்படும் அரிப்பு, இரத்த ஓட்டக் குறைவினால் தோல் உலர்ந்து போவதால் ஏற்படும்

7. கண் பார்வை அவ்வபோது மங்குதல்

8. காலில் ஏற்படும் காயங்கள் ஆறுவதற்கு நீண்ட காலம் எடுப்பது.

*********

பசுமாடு பற்றிய தலைப்பில் ஏன் தென்னை மரம் பற்றி எழுதி இருக்கிறீர்கள் ? என்று வாசிப்பவர்கள் நினைக்கக் கூடும், பழைய சோற்றில் மிகுந்த சத்துகள் இருப்பதாகவும் பழைய சோற்றை நாம்  புறக்கணித்ததால் தான் பல வித நோய்கள் நமக்கு ஏற்படுவதாகவும் சில பெரிசுகள் மற்றும் முற்போக்கு இளசுகளும் கருத்துகளைப் பரப்புகின்றனர், பழைய சோறு பாரம்பரிய உணவு என்பது தவிர்த்து மற்ற காலை உணவுகளை ஒப்பிட அதில் சத்துகள் எதுவும் பெரிதாக இல்லை என்பதை அவர்கள் உணர்ந்திருப்பார்களா ? என்று தெரியவில்லை, பழைய சோற்றில் நீர் சேர்த்து இரவு முழுவதும் வைத்திருப்பதால் சற்று ஈஸ்டுகள் சேர்ந்திருக்கும், தவிர்த்து பெரிய சத்துகள் எதுவும் கிடையாது, அதில் இருக்கும் ஈஸ்டுகள் மற்றும் சத்துகளின் அளவு இட்லி தோசையில் இருப்பதைவிடக் குறைவே, இட்லி மாவில் உளுந்து சேர்த்து அரைக்கபடுவதால் புரத சத்து கூடுதலாக இருக்கும், பழைய சோற்றில் அதுவும் கிடையாது, பொதுவாக அரிசி உணவில் கூடுதல் சர்க்கரை இருக்கும் என்பது பழைய சோற்றுக்கும் பொருந்தும். 

பழைய சோறு பாரம்பரிய உணவும் கிடையாது, தமிழர்களின் காலை உணவாக கம்பு, கேழ்வரகு, திணை மற்றும் சாமை ஆகியவையே இருந்தன,  மாவாக அரைத்து கூழாகவோ, களியாகவோ செய்து அவற்றில் அசைவம் / காய்கறி குழம்பைச் சேர்த்து உண்பது தான் வழக்கமாக இருந்தது, இத்தகைய உணவுகளில் போதிய அளவு புரதச் சத்து இருப்பதால் நாள் முழுவதுமான பகல் உழைப்பிற்கு தேவையான சத்துகள் கிடைத்துக் கொண்டிருக்கும், நெல் அரிசியை உணவ உட்கொள்ளும் வழக்கம் கடந்த 60 ஆண்டுகளில் பரவலாகியவை தான், மற்ற உணவு பொருள்களை விட விலை கூடுதல், சமைக்க / பரிமார / கலந்து சாப்பிட எளிது என்ற வகையில் வசதியானவர்கள் நெல் அரிசி உண்பது மேம்பட்ட நிலையின் உணவுச் சின்னம் அல்லது பழக்கமாகிப் போனதால் அரிசி உணவை உண்பது கவுரமாகக் கருதப்பட அவை பரவலாக்கம் ஆகி அரிசி உற்பத்தியும் பெருக, தற்போதைக்கு அரிசி உணவு விலை மற்ற உணவு பொருளைவிடக் குறைவாக இருக்கிறது என்பது தவிர்த்து அரிசி உணவில் எந்த ஒரு தனிச் சிறப்பும் இல்லை. மேலும் அரிசிக்கும் கோதுமைக்கும் சர்கரை அளவில் பெரிய வேறுபாடுகள் இல்லை என்பதால் அரிசிக்கு மாற்றாக கோதுமை சப்பாத்தி, பூரி போன்றவை சர்கரை நோயைக் குறைக்கும் என்பதற்கு எந்த ஒரு முகாந்திரமும் இல்லை, ஆனாலும் கோதுமை பரிந்துரை என்பது செரிமான நேரத்தை நீட்டிக்கும் என்பதால் கோதுமை குறைந்த பட்சத் தீர்வு என்ற அடிப்படையில் தான் சொல்லப்படுகிறது ஆனால் மாற்றுத் தீர்வு இல்லை, அரிசிக்கு மாற்றாக கோதுமை என்றால் சர்கரை குறைபாடு கண்ட சர்தாஜி என்ன சாப்பிடுவான் ? என்றும் கேட்கிறார்கள் என்பதை கவனத்தில் வையுங்கள்.

பழைய சோற்றில் இருக்கும் நீராகாரம் குடிப்பதால் உடலில் குளிர்ச்சி கிடைக்கும் என்பது தவிர்த்து பழைய சோற்றில் சத்துகள் எதுவும் கிடையாது, பழைய சோற்றைத் தொடர்ந்து காலை வேலையில் சாப்பிடுவதால் பீர் குடிக்காமலேயே தொப்பையை வளர்க்கலாம், கிராமத்தினர் பழைய சோறு தின்றுவிட்டு தெம்பாக வேலை செய்யவில்லையா ? அவர்கள் செய்யும் கடுமையான உடல் உழைப்பினால் பழைய சோறு மட்டுமல்ல எந்த ஒரு உணவும் அவர்களின் உடலை பாதிக்காது. ஆனால் உடல் உழைப்பற்ற மற்றவர்களுக்கு அது பொருத்தமான உணவு அல்ல. பழைய சோற்றில் தனிச் சிறப்புகள் எதுவும் கிடையாது அதை உணவாக எடுத்துக் கொள்வதால் கூடுதல் பலன் எதுவும் கிடையாது. பொதுவாகவே அரிசி சார்ந்த நூடுல்ஸ் உள்ளிட்ட எந்த உணவிலும் சர்க்கரை அளவு கூடுதலாக இருக்கும் என்பதில் பழைய சோறும் சேர்த்தி தான்.  பழைய சோற்றைவிட பாசிப் பயிறு சேர்த்த கஞ்சி உடலுக்கு நல்லது. பாசிப் பயிற்றில் தேவையான புரதமும் இருக்கும். நான் பழைய சோற்றைப் பழிக்கவில்லை, ஆனால் அவற்றை பரிந்துரை செய்யும் அளவுக்கு அதில் தனிச் சிறப்புகள் இல்லை என்று மட்டுமே சொல்கிறேன்.

சர்க்கரை குறைபாடு உள்ளவர்கள் எதைத் தான் சாப்பிடுவது ? எதையும் சாப்பிடலாம் ஆனால் ஒரே வேளையில் கட்டு கட்டுவோம் என்று உண்ணக் கூடாது, அளவோடு குறிப்பிட்ட இடைவெளியில் எந்த உணவையும் சாப்பிடலாம், இரத்த சர்க்கரை அளவை உடனடியாகக் கூட்டும்   படி எதையும் சாப்பிடவோ குடிக்கவோ கூடாது, இவ்வாறு உடனடி சர்கரை மாற்றங்கள் (Blood Glucose In-Balance) உடலின் இரத்த ஓட்டத் தன்மைகளிலும் அளவிலும் ஏற்றம் இரக்கம் காட்டுவதால் இயல்பாக செயல்படும் உடலுறுப்புகள் திணறும், பழுதடையும்.

இந்த இடுகையில் முதன்மையாக சொல்ல வந்தது காலை உணவை எந்த காரணத்தை முன்னிட்டும் தவிர்க்காதீர்கள், இருவரும் வேலை செய்யும் சூழலில் உணவு செய்வதற்கு அலுப்பாக இருந்தாலும் வாட்டிய இரண்டு துண்டு பிரட் அல்லது (கடையில் வாங்கிய) இரண்டு இட்லி, ஒரு தோசை, பாலில் ஊறவைத்த சோள சொதில்கள் (சீரியல்) ஆகியவற்றில் எதோ ஒன்றுடன் தேவையான நீர் சத்திற்காக ஒரு டம்ளர் பால் அல்லது தண்ணீர் பருகலாம்.

15 ஜூலை, 2012

கடன் வாங்கிக் களித்தல் !


தலைப்பில் எழுத்துப் பிழையில்லை , நகைக்காமல் முகம் சுளிக்காமல், தொடர்ந்து வாசிக்கலாம், எனது இடுகைகளின் எழுத்துப் பிழைகள் தட்டச்சு வேகத்தினால் வருவது தவிர்த்து தமிழ் சொற்கள் குறித்த அறியாமையினால் குழப்பத்தினால் ஏற்படுவது இல்லை, மறுவாசிப்பு செய்யும் முன் வெளி இட்டுவிட்டு நேரமிருந்தால் திரும்பப் படித்து சரிசெய்வேன், அல்லது யாரேனும் சுட்டிக்காட்டினால் சரி செய்து கொள்வேன். எழுத்துப் பிழையுடன் தமிழில் எழுதுவது குற்றம் இல்லை என்றாலும் குறைத்துக் கொண்டு எழுதினால் நல்லது என்பதே எனது பரிந்துரை. தவிர பதிவு எழுதவும், வெளி இடவும் நான் நேரம் பார்ப்பது கிடையாது, அதிகாலை நான்கு மணிக்கு கூட வெளி இட்டு இருக்கிறேன், எழுதுவதற்கு கிடைக்கும் நேரம் தான் வெளி இடுவதற்கு கிடைக்கும் நேரம், அந்த நேரத்தில் வாசிப்பார்களா ? ஹிட்ஸ் தேறுமா என்பது குறித்த கவலை எனக்கு இல்லை, என்னைப் பொறுத்த அளவில் வலைப்பதிவுகளில் எழுதுவது என்பது திறந்த நாள் குறிப்பில் எழுதுவது போன்றது, வாசிப்பவர்கள் என்ன நினைப்பார்கள் என்று கவலை கொள்வது கிடையாது, அதே நேரத்தில்  எழுதுவதில் இரண்டு வரியாவது வாசித்தவர்களுக்கு பிடித்திருக்க வேண்டும், ஏனெனில் அவர்களின் நேரத்தில் சில நிமிடங்களை வாசிக்கும் போது, என்(எழுத்துகளி)னால் விழுங்கப்பட்டுவிடுகிறது என்கிற புரிந்துணர்வும் பொறுப்பும் எனக்கு உண்டு. 

*****

சில வாரங்களுக்கு முன்பு விஜய் தொலைக்காட்சியில் மூலம் கடனட்டை வழங்கும் வங்கிகள் எப்படிமுக நூல் (பேஸ் புக்)  வாடிக்கையாளர்களை பின் தொடர்கிறார்கள் என்பதைக் காட்டி இருந்தார்கள், அந்த நிகழ்ச்சியின் பெயர் குற்றமும் பின்னனியும், துப்பறிந்து மிகுந்த முயற்சியால் கண்டுபிடிக்கப் பட்ட ஒரு நிகழ்வு போலவும், இதன் மூலம் பேஸ் புக் பயன்படுத்துபவர்களுக்கு எச்சரிக்கை கொடுப்பது போன்ற தொனியில் நிகழ்ச்சி படைக்கப்பட்டு இருந்தது, அதாவது முகம் தெரியாத பெண்ணிடம் அசடு வழிந்து தனது தொடர்பு எண்களைக் கொடுத்த ஒரு இளைஞர் எப்படி சிக்க வைக்கப்பட்டார் என்பது தான் நிகழ்சியில் காட்டபட்டது, இதில் சித்தரிக்கப்பட்ட காட்சியில் நடிக்கும் பெண்ணையும், பாதிக்கப்பட்டவர் பற்றியும் அவர் எவ்வாறு வீழ்த்தப்பட்டார் என்றும் காட்டினார்கள், இந்த நிகழ்ச்சியைப் பார்பவர்கள் முக நூலில் இப்படியெல்லாம் மோசடி நடக்கிறதா ? என்று விழி விறிய வியப்படைந்தாலும் முக நூல் பயன்படுத்தும் நமக்கெல்லாம் அது ஒரு மொக்கை தகவல் தான், ஆனாலும் விஜய் தொலைகாட்சியின் குறிப்பிட்ட நிகழ்ச்சியின் நேர்மை கேள்விக் குறி.

கடன் வாங்காமல் யாரும் வாழவே முடியாது வெளியில் கடனே இல்லாவிட்டாலும் பெற்றக் கடன், வளர்த்தக் கடன், நன்றிக் கடன் என ஏகப்பட்ட கடன்களோடு தான் வாழ்கிறோம், அது தவிர மிகவும் தேவையான வேலைகளில் கடன் வாங்குவதும் திருப்பிக் கொடுப்பதும் வாடிக்கையான ஒன்று தான், கடன் வாங்குவது கேவலமான, மானக் கேடான பிழைப்பு இல்லை, ஆனால் அவற்றை முறையாக குறிப்பிட்ட தவணைகளில் செலுத்த வேண்டும் என்கிற நேர்மை இருக்க வேண்டும், இந்த நேர்மையை நம்பித்தான் கடன் வழங்கும் நிறுவனங்கள் கடன் கொடுக்கின்றன, அவ்வாறு நேர்மை தவறியவர்களிடம் வசூலிக்க தான தண்டத்தையெல்லாம் பயன்படுத்துகின்றன, அவர்களின் வழிமுறைகள் தவறாக இருந்தாலும் கொடுத்த கடனை மீட்பதற்கு அவர்கள் நேர்மையற்றவர்களை எதிர்நோக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும், நான் இதில் கந்து வட்டிக் கொடுமைகளைப் பற்றி தற்காத்து எதுவும் சொல்லவில்லை,  அது போன்றவே கடன் கட்டமுடியாமல் நெருக்குதலுக்கு ஆளாகி தற்கொலை செய்து  கொள்ளும் விவாசாயிகள் குறித்து எதுவும் சொல்லவில்லை, அவர்கள் பரிதாபத்திற்கு உரியவர்கள், அரசே மனது வைத்து கடனை தள்ளுபடி செய்தால் தான் உண்டு, அவை வேறு,  இங்கு பேசப்படுவது வங்கிகளில் கடனட்டை மூலம் பெற்றுக் கொள்ளும் கடன் குறித்தது தான்.

குறிப்பிட்ட நிகழ்சியில் கடன் அட்டை மூலமாக செலவு செய்து கடன் வாங்கியதாகக் காட்டப்பட்ட நபர் பணத்தை தண்ணி போல் செலவு செய்துவிட்டு திருப்பிக் கொடுக்க முடியாமல் லட்சம் ரூபாய் கடனை வைத்துவிட்டு பெங்களூரை விட்டு விட்டு சென்னைக்கு ஓடி வந்து வேறொரு நிறுவனத்தில் வேலை செய்பவர். வங்கி முகநூல் வழியாக  தன் முகவரை பொறி(ரி)யாக வைத்ததால் அந்த இளைஞர் வசமாக சிக்கினார். இவ்வளவையும் காட்டிய விஜய் தொலைகாட்சி, அந்த இளைஞரிடம் உங்களைப் போன்ற நேர்மை அற்றவர்களால் தான் இது போன்று நடந்து கொள்ளும் சூழலை கடன் வழங்கும் வங்கிக்கு ஏற்படுகிறது என்பதைச் சொல்லவே இல்லை. இது போன்ற நபர்கள் அரசு துறைக்கோ, அல்லது பெரிய நிறுவனத்திற்கோ தலைமைப் பொறுப்பில் உயரும் பொழுது கையாடல், லஞ்சம் என்ற வகையிலெல்லாம் அந்த அமைப்பிற்கே பலத்த சேதம் ஏற்படும் என்பதையும் விஜய் தொலைகாட்சி சுட்டிக் காட்டி இருக்கலாம்.

கடன் அட்டையைப் பெற்றுக் கொண்டு வங்கிகளை எப்படி ஏமாற்றுவது என்பதையும், தான் அவ்வாறு ஏமாற்றி இருக்கிறேன் என்றும் சிலர் வெளிப்படையாகப் பேசும் போது அவர்களது அடிப்படை நேர்மையை போட்டு உடைத்துவிடுகிறார்கள் என்பதை அவர்களில் பலர் நினைப்பது இல்லை, இதை ஒரு சாகச நிகழ்ச்சி போலவும், தன்னை திறமை கொண்டவராகவும் காட்டுவதாக நினைக்கிறார்கள்,நேற்று ஏமாற்றியது வங்கி என்றால் நாளைக்கு ஏமாறப்படுவது யாரோ ?

வங்கிகளை ஏமாற்றுபவர்களை வங்கி தனது இணையத் தளத்தில் நிழல்படத்துடன் வெளி இட்டால் இப்படியான வங்கிக் கொள்ளையர்கள் குறையலாம். ஆனாலும் மனித உரிமை அடிப்படை மற்றும் திருந்துவதற்கான வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதால் இவற்றை நான் பரிந்துரைக்க மாட்டேன்.

12 ஜூலை, 2012

Kiasu என்றால் என்ன ?


சிங்கப்பூரில் சீனர்களிடமும் அவர்கள் மூலமாக பிறரிடமும் வழங்கும் சொல்வழக்கு 'Kiasu' இதன் பொருளும், இதன் விளக்கமும் விக்கிப்பீடியாவில் தனிப்பக்கமாக இடம் பெரும் அளவுக்கு இந்த சொல் புகழ்பெற்றது.  'fear of losing' என்பதே அதன் பொருளாகும். அதாவது தனக்கு உடைமை உடைய ஒன்றை இழந்துவிடுவோமே என்ற அச்சம் எப்போதும் உடையவர்களை இந்த க்யாசூ என்ற சொல்பதத்தில் அழைப்பார்கள்.

போற்றிப் பயன்படுத்தும் அவரவர் உடலே மண்ணுக்குள்ளோ, நெருப்பிலோ போகக் கூடியது தான் என்கிற ஆள்மன உணர்வுகள் இருந்தும் ஒப்புக் கொள்ள மனதின்றி தனக்கு உடைமையான பொருள் மீது தீவிர காதல் கொண்டர்வளே இந்த க்யாசு வகையினர். எங்க வீட்டில் வீட்டை ஒழுங்கு செய்வது என்கிற எண்ணத்தில் தேவையற்ற பொருள்கள் என்று என் மனைவி அள்ளிப் போட்டு குவித்து வைத்திருப்பதை கிளறிப் பார்த்துவிட்டு தூக்கிப்  போடுவோம் என்கிற எண்ணம் ஏற்படும் போது 'மிகவும் தேவையானது என்றால் அலட்சியமாக வைத்திருக்க மாட்டோம்' என்கிற நினைப்பில் கிளறிப் பார்க்காமல் விட்டுவிடுவேன், அப்போது எனக்கு தோன்றும் எண்ணம் 'அப்படியே ஒருவேளை இருந்தால் போனால் போகட்டுமே... மனுச உடம்பே மண்ணுக்குள் போகக் கூடியது தானே' வாங்க முடியாத பொருள்கள் எதுவும் இருக்காது என்று தேற்றிக் கொண்டுவிடுவேன், கொஞ்சம் பதைப்பாகத்தான் இருக்கும், காரணம் சில தடவைகள் கவனக் குறைவினால் வங்கி அட்டைகள் கூட குப்பைக்குள் சென்றிருக்கிறது. 

நம் வீட்டுக்குள் வந்த சாக்கில் அங்கேயே தங்கிவிடும் பயனற்ற பொருள்கள் நிறைய உண்டு, இருந்தாலும் எதற்காவது பயன்படும் என்றே அதனை  தூக்கிப் போட மனதின்றி ஆண்டுக் கணக்காக அதற்கு ஒரு இடம் கொடுத்து வைத்திருப்பார்கள், எப்போதோ பயன்படுத்திய பழைய 14" கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி பழுதாகி பயன்படாமல் இருந்தாலும் எங்கம்மா அதை இன்னும் பத்திரமாக பிரோவில் பூட்டி வைத்திருக்கிறார்கள், 'இந்த கருமத்தை தூக்கிப் போட்டால் தான் என்ன ?' என்று எத்தனையோ முறை கேட்டு இருக்கிறேன், அப்போதெல்லாம் வரும் ஒரே பதில், 'உனக்கு தேவை இல்லாமல் இருக்கலாம், யாராவது வந்து ஆராய்ச்சிக்கு என்று கேட்டாலும் கேட்பார்கள்' என்பது அம்மா சொல்லும் பதில், 14" பழைய டிவியில் ஆராய்ச்சி நடத்தப் போகிறவர் எப்பொழுது வருவார் எம்ஜிஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' எப்போதும் வரும் என்கிற எதிர்ப்பார்ப்பு போல் நானும் காத்திருக்கிறேன். அம்மா மட்டுமல்ல அண்ணன் வீட்டில்  கூட அப்படித்தான், எதையும் தூக்கிப் போட மனமின்றி காலியான சின்ன சின்ன மருந்து பாட்டிலைக் கூட தூக்கிப் போடாமல் வைத்திருப்பார்கள். சிறுவர்களாக இருந்த போது தீபாவளிக்கு வாங்கிய மத்தாப்பு, வெடிகளை நாங்களெல்லாம் வெடித்து முடித்துவிடுவோம், அண்ணன் மட்டும் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என்று எடுத்து தனியாக வைத்திருப்பார், கார்திகைக்கும் வெடிக்கப்பட்டு இருக்காது. 

திருமணம் ஆன புதிதில் பெங்களூரில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன், நண்பர் ஆறுமாதம் முன்பே எனக்கு  முன் திருமணம் முடித்தவர், ஓரளவு வசதியான வாடகை வீட்டில் மனைவியுடன் (தனிக்குடித்தனமாக) வசித்தார், இருவரும் வேலைக்குச் செல்பவர்கள், பெங்களூரில் ஓட்டல் எடுத்து தங்கி இருந்த நிலையில் நான் அங்கு சென்ற போது, எங்கள் வீடு இருக்கும் போது எதற்கு ஓட்டலில் தங்கவேண்டும் என்று செல்லமாக கோவித்துக் கொண்டு, அன்று காலையில் நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்து அறையைக் காலி செய்யச் சொல்லிவிட்டு அவரது வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர் இருவரும். நாங்களும் பகல் பொழுதில் வீட்டில் இருந்து கிளம்பி ஊர் சுற்றிவிட்டு, மாலை வீட்டுக்கு வந்ததும், அவர்கள் சிறப்பாக சமைத்திருந்த இரவு உணவை முடித்துவிட்டு பேசிக் கொண்டு இருந்து படுக்கச் செல்லும் நேரம் ஆக, எங்கள் படுக்கை அறையில் படுத்துக் கொள்ளுங்கள், அட்டாச்ட் பாத்ரூம் இருக்கு வசதியாக இருக்கும், நாங்கள் அடுத்த அறையில் படுத்துக் கொள்கிறோம் என்று நாங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால் எங்களுக்கு அவர்களது படுக்கை அறையை விட்டுக் கொடுத்தனர். 

ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, படுக்கை அறைக்கு சென்று படுக்கையில் உட்கார 'மொட மொட' என்ற சத்தம், மாமனார் சீராகக் கொடுத்த படுக்கையின் பாலித்தீன் கவர்கள் பிரிக்கப்படாமல் அதன் மீது மெல்லிய படுக்கை விரிப்பு போடப்பட்டு இருந்தது, அதில் படுக்கலாம், ஆனால் உருண்டு பிரளவோ, வேறெதுவும் செய்ய முடியாது, பிரண்டாலே அடுத்த அறைக்கு 'மொட மொட' சத்தம் கேட்கும் நிலையில் நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்த நிலையில் தூங்கி எழ விடிந்திருந்தது. காலையில் நண்பர் 'வீடு வசதியாக இருந்ததா ?' நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம், 'இருந்தது.....ஆனா பெட்டில் சத்தம் தான்...ஏன்பா மாமனார் வாங்கிக் கொடுத்தார் என்பதற்காக பாலித்தீன் கவரைக் கூட கழட்டாமல் வைத்திருக்கிறாயே ? என்று கிண்டல் அடிக்க நினைத்து அவர் மனைவியும் உடன் இருப்பதால் நிறுத்திக் கொண்டேன், ஏழ்மை நிலையில் இருந்து மேலே வந்தவர்கள் வசதி வாய்ப்புகள் பெற்றதும் அதில் இருந்து இறங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பர். நண்பர் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், 20 ஆயிரம் பொறுமானமான படுக்கை எப்போதும் புதிதாகவே இருக்க வேண்டும், படுக்கையில் தண்ணீர் பட்டால் உள்ளே இறங்கிவிடக் கூடாது என்பதற்காக பாலித்தின் கவரை எடுக்காமலேயே வைத்திருந்தார், ஆனாலும் படுக்கையின் மென்மையை அவர்கள் அனுபவித்தார்களா ?  இல்லை என்று தான் சொல்ல வேண்டும், பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அந்த படுக்கை அறை பாலித்தீன் கவர் பற்றி அவரை கிண்டல் அடிப்பது உண்டு.

அவர் மட்டுமல்ல பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் படுக்கைகள் இன்னும் கூட பாலித்தின் கவரால் தான் சுற்றப்பட்டு இருக்கும், புதிதாக வெளிநாடு சென்று வந்தவர்கள் மட்டுமின்றி பல முறை சென்றுவந்தவர்கள் கூட ஏர்போர்ட் பட்டி(டேக்) சுழற்றாமல் பெட்டியை வைத்திருப்பார்கள், தனது கவுரவே அதில் தான் அடங்கி இருக்கிறது என்பதால் அதனை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

இப்போதெல்லாம் எல்சிடி டிவிகள் வாங்கிப் பலர் வைத்திருக்கிறார்கள், அதில் மூளையில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிகர் (ஒட்டி) அப்படியே தான் இருக்கும், திரையில் படம் கொஞ்சம் மறைக்கப்பட்டால் கூட கவலைப்படமாட்டார்கள், காரணம் வீட்டுக்கு வருபவர்கள் பார்க்கும் போது அது 'புதிய டிவி' என்று தெரியனுமாம். அந்த மாதிரியான க்யாசுகளிடம் நான் சொல்வது, 'இப்ப அந்த ஸ்டிக்கரை பிய்த்துப் போடாமல் விட்டால் தொலைகாட்சியின் வெப்பத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளும், நாள் ஆக ஆக வெளுத்துவிடும், எடுக்கவும் வராது, பார்த்து செய்ங்க' என்பது தான்.

எங்க அண்ணன் வீட்டில் கூட கணிணி திரையும், கீ போர்டும் மேலே மெல்லிய ஊடுறவக் கூடிய ஸ்கிரீன் போட்டு தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அது இல்லாவிட்டால் 'ஸ்க்ராட்ச்' விழுந்துடும் என்று அண்ணன் சொல்லுவார். 

ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து வகையான பொருள்கள் உண்டு

1. மிகவும் பாதுகாக்க வேண்டியவை
2. அடிக்கடி பயன்படுத்த வேண்டியவை
3. எப்போதாவது பயன்படத்தக் கூடியவை
4. என்றுமே பயன்பாட்டுக்கு வராதவை
5. யாருக்குமே பயனற்றவை

இந்த நான்காவது, ஐந்தாவது வகைப் பொருள்கள் எவை எவை என்று பார்த்து தனக்கு பயன்படாதவை என்றால் பயன்படுத்தக் கூடியது என்ற நிலையில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கு அவர்கள் விரும்பினால் கொடுக்கலாம், உதாரணத்திற்கு காபி மேக்கர் யாரோ எப்போதோ பரிசு பொருளாகக் கொடுத்தது, நமக்கு அதைப் பயன்படுத்துவது கூடுதல் நேரம் பிடிக்கும் என்பது மட்டுமின்றி அதனை கழுவி வைப்பது அறைகூவல் என்ற நிலையில் அவற்றை விரும்புவர்களுக்கு அதனை கொடுத்துவிடலாம், ஆனால் நல்ல பொருள் என்று பாதுகாப்பாக வைத்திருப்பதால் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் என்பது தவிர்த்து வேற என்ன பயன் ? ஐந்தாவது சொல்லி இருப்பதில்  உதாரணத்திற்கு பழைய பாய் அல்லது நசுங்கிய சொம்பு, ஒரு கால் உடைந்த ஒரு இருக்கை,  அதனை சரி செய்து வைத்திருந்தாலும் கவுரவக் குறைச்சல் என்ற நிலையில் அதைத் தூக்கிப் போட்டால் என்ன ? அதனை பயன்படுத்திய பொருள் என்பதற்காக இடத்தை அடைத்துக் கொண்டிருக்க விடலாமா ?

நல்ல தரமான ஓட்டலில் மூக்குப் பிடிக்க நாலு பேர் 500 ரூபாய்க்கு சாப்பிடும் குடும்பங்களிலும் கூட பாக்கெட்டுக்கு 10 காசு கிடைக்கும் என்ற அடிப்படையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு காலி பால் பாக்கெட்டுகளை சேர்த்து வைப்பவர்களும் உண்டு, நான் இங்கே சிக்கனத்தைக் குறைச் சொல்லவில்லை, ஆனால் நாம் எல்லா விதத்திலும் சிக்கனமாக இருக்கிறோமோ, அல்லது உப்புக்கு பெறாத பொருள்களில் மட்டும் சிக்கனத்தை பார்க்கிறோமோ என்பது தான் பிரச்சனை, தவிர அம்மா தாயே, ஐயா கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்பவர்களை திரும்பிக் கூடப் பார்காமல் அர்சனைத் தட்டில் ஒற்றை ரூபாயாக 500 ரூபாய் போட்டுவருபவர்களை சிக்கனவாதிகள் என்றும் 'பிச்சைக்காரர்களை ஊக்கப்படுத்த விரும்பாதவர்கள்' என்றும் சொல்ல முடியுமா ?

ஒரு பொருளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அதன் முழுப் பயன்பாட்டை அனுபவிக்காமல் இருப்பதனால் என்ன பயன் ? கஷ்டப்பட்டு சேமித்து ஈட்டும் பணம் செலவழிக்கப்படாமல் இருந்தால் சேமிப்பின் பயன் தான் என்ன ?

கியாசுவாக இருப்பதால் எந்த ஒரு பொருளின் முழுப் பலனையும் அவர்கள் என்றுமே அனுபவிப்பது இல்லை, மற்றவர்களையும் அதை அனுபவிக்க அனுமதிப்பது இல்லை.

16 ஜனவரி, 2012

முற்றுப் புள்ளி !

தொடர்ச்சியாக எழுதுவதனால் பயன் என்று எதுவும் கிடையாது, நம்முடைய நேரத்தை பெரிதும் விழுங்கி இருக்கும் என்கிற கெடுதல் தான் அதில் உண்டு, நிறைய பாலோயர்கள் கிடைக்கலாம், அதனால் பெரிய பலன் ஒன்றும் கிடையாது, ஆனால் பதிவில் தொடர்சியாக எழுதுபவர்கள் நினைக்கப்படுகின்றனர், அதற்கு அவர்கள் கொடுக்கும் விலை அதிகம், நம்ம சிபி செந்தில் குமார் ஆயிரம் பதிவுகளை ஒண்ணறை ஆண்டுகளில் இட்டு முடித்து இருக்கிறார், ஆரம்பகாலங்களில் காபி பேஸ்ட் செய்தவர் பின்னர் தாமாகவே எழுதி அந்த எண்ணிக்கையைத் தொட்டு இருக்கிறார், அதற்கு அவர் இழந்த நேரம் பற்றி அவருக்கு நன்றாகத் தெரியும். எனது பதிவுகள் பெரும்பாலும் நிகழ்வுகளின் விமர்சனம் என்ற வகையில் தான் எழுதப்படுகிறது. நாள் தோறும் சர்சைகள், ஒவ்வாநிகழ்வுகள், அரசியல் நிலைப்பாடுகள் மாற்றம் என்று எதாவது ஒன்று நிகழ்வதால் நாள் தோறும் எழுத விமர்சனம் செய்ய எதேனும் கிடைப்பதால் எழுதுவதன் தொடர்சிக்கு தீணி கிடைத்துக் கொண்டே இருக்கும், நான் எழுதுவதற்கு எதுவும் இல்லை என்று நினைப்பதே இல்லை. இருந்தாலும் அவற்றில் தேர்ந்தெடுத்து சிலவற்றை மட்டும் எழுதுவது என்பதன் கட்டுப்பாடுகள் காரணமாக எனது நேரத்தை நான் சரியாகப் பயன்படுத்துவதில் உறுதியாகவே உள்ளேன், இது கடந்த ஆண்டுகளின் என் நேரங்கள் விழுங்கப்பட்டதில் கற்றுக் கொண்ட பாடம், நீங்கள் தொடர்ந்து நாள் தோறும் பதிவிடுபவர், அல்லது அனைத்தையும் வாசிப்பவர் என்றால் அடுத்த சில ஆண்டுகளில் நீங்கள் இழந்த நேரங்களும், அவற்றினால் நீங்கள் இழந்தவை, செய்ய மறந்தவைப் பற்றி யார் சொல்லாமலும் அறிந்து கொள்வீர்கள்

*******

பாலாறும் தேனாறும் பற்றிய பதிவைத் தொடர்ந்து ஏகப்பட்ட எதிரிவினைகள், நானே ஓட்டுப் போடாத என் பதிவுக்கு பலரும் வாக்களித்து இருந்தனர், மிக்க நன்றி, அதே சமயத்தில் வாக்குகள் எழுத்தின் தரத்தின் தீர்ப்பு அல்ல என்பதை நான் நன்றாகவே அறிவேன். வாக்குகளையும் வாசகர்களையும் பெற ஆயிரம் வழிகள் உண்டு, பிரபலப் பதிவர்கள் என்று கூறிக் கொள்பவர்கள் அந்த உத்திகளை நன்றாக கையாளுகிறார்கள், அதில் எனக்கு எந்த குடைச்சலும் இல்லை, சும்மா உதாரணத்திற்கு சுட்டினேன்.

மதத்தீவிரவாதம் மிக மோசமானது, உலகில் மதச்சார்பற்ற நாடுகள் அனைத்தும் மதத்தீவிரவாதங்களை கடுமையாகவே எதிர்கின்றன. எனது நிலைப்பாடும் அதுவேதான், கூடவே தமிழ்நாட்டில் பிறந்ததால் சாதி எதிர்ப்பு மனநிலையும் உண்டு, ஒருவர் மதவெறியரா இல்லையா என்பதை அவர் மதம் சார்ந்த சமூகத்தை விமர்சனம் செய்யும் போது எரிச்சல் அடைவதன் மூலம் வெளிப்படுத்திக் கொள்வதால் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறார். மனிதர்கள் தான் சார்ந்த கொள்கைகள் பாதிக்கப்படாதவரை சமத்துவமானவர்களாக தெரிகிறார்கள், பிறருக்கு அறிவுரைச் சொல்பவர்களாக தெரிகிறார்கள், எனக்கு வருத்தமெல்லாம் பெருவாரியான நல்லவர்கள் தங்கள் ஏன் நல்லவன் என்பதை நினைப்பது இல்லை, பெரும்பாலும் தத்தமது நல்ல மனம் தன் சாதிமதத்திற்கு ஆதரவாக அடமானம் வைப்பதற்கு வெட்கப்படுவதே இல்லை. மதத்திற்கான அடிப்படை குணம் அது வழிபாடு அளவில் என்ற அளவில் தான், அடிமனதில் இருக்கும் நம்பிக்கை துன்ப வேளைகளில் ஒருவர் எந்த கடவுளின் பெயரைச் சொல்கிறார் என்பது மட்டுமே, மற்றபடி ஒரு மனிதனை தரம் பிரிப்பதில் மதங்களுக்கு எந்த தொடர்பும் இல்லை.

ஒருவர் நல்லவர் என்றால் அவர் தம்மை தாமே உருவாக்கிக் கொண்டதனால் ஏற்பட்ட நற்பண்புகளின் தொகுப்பு தான் அவர், அதற்கும் அவர் சார்ந்திருக்கும் மதத்திற்கும் தொடர்பு கிடையாது, ஒருவீட்டில் நால்வரில் ஒருவர் நல்லவர் என்றால் அது அந்த வீட்டில் உள்ளவர்களை மதிப்பீடு செய்ய உதவாதது என்பது போல் தான். நீங்கள் நல்லமனிதர் என்றால் இருந்துவிட்டுப் போங்கள், ஆனால் அதை உங்களின் மதத்தில் உள்ளவர்களுக்கு சாதியில் உள்ளவர்களுக்கு அடிப்படை அளவுகோல் ஆக்கிவிடாதீர்கள், அது நீங்கள் உங்களுக்கு செய்யும் துரோகம், அவ்வாறு செய்வதனால் மதத்தின் பெயரில் சாதியின் பெயரில் பிறர் செய்யும் கெடுதல்களையும் நீங்கள் உங்கள் முதுகில் சுமக்க விரும்புகிறீர்கள் என்றே பொருள்படும்.

பொதுவாக நான் எப்போதும் எழுதுவது சாதி வெறி மத வெறி குறித்த எனது பார்வை, பிரச்சனை இல்லாதவரை இவற்றினால் ஆபத்துகள் இல்லை, ஒருவர் சாதி சார்பாக இருப்பதற்கு சாதிவெறியனாக இருப்பதற்கு ஒரு நிகழ்வு தான் வேறுபாடு, உதாரணத்திற்கு சாதி சார்ந்த ஊர்வலம் செல்கிறது, யாரோ ஒருவன் ஒரு பேருந்துன் மீது கல் அல்லது யார் மீதோ கல் எறிகிறான், அது வெளியில் இருந்து வந்த கல்லாகக் கூட இருக்கும், நம்ம சாதிக்காரன் மீது கல்வீசிவிட்டான் டா என்று ஒருவன் கூவினாலே போதும் ஒட்டு மொத்தக் கூட்டமும் அந்த இடத்தை ரண களமாக்கிவிடும், முடிவில் அவை சாதிவெறியின் அடையாளமாக மாறிக் கிடக்கும், கையில் தீவட்டியுடன் ஊர்வலம் போகும் சாதி சார்ந்த கூட்டம் அதே தீவட்டியை அங்கு உள்ள வீடுகளின் மீது வீசினால் அது சாதிவெறி அங்கு கலவரங்களால் பலர் கொல்லப்படும் வாய்ப்பு மிகுதி,. ஆக சாதிவெறி / மதவெறி ஆகியவற்றிற்கு இடையே வன்செயல் என்று நிகழ்வு தான் வேறுபாடு அந்த நிகழ்வு எந்த ஒரு நொடியுலும் ஏற்படக் கூடியது என்பதால் சாதி பற்றுக்கும் சாதிவெறிக்கும், மதப்பற்றுக்கும் மதவெறிக்கும் பெரிய வேறுபாடு இல்லை.

உங்கள் சிந்தனைக்கு...

விநாயக சதுர்தியின் போது சென்னை ஐஸ் ஹவுஸ் பகுதியில் மத ஊர்வலம் தான் செல்கிறது, அது மதவெறி ஊர்வலமாக மாற எத்தனை வினாடிகள் எடுக்கும் ?

*******

மதவெறி பற்றி பேசுபவர்கள் பாதிக்கப்பட்டவர்களாக இருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர், அவற்றை நான் புறக்கணிக்கிறேன், குஜராத் மோடி அரசை விமர்சனம் செய்ய குஜராத்திகளாக இருக்க வேண்டுமா ? பின்லேடனை தீவிரவாதி என்று விமர்சனம் செய்ய இரட்டை கோபுரத்தில் எரிந்து உருக்குலைந்தவர்களின் உறவினர்களாக இருக்க வேண்டுமா ? இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என்று மேற்கத்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டும் போது ஒரு இஸ்லாமியர் தான் அதனை மறுக்க வேண்டும் என்ற யாரும் நிலைப்பாடு கொண்டிருக்கவில்லை, எனவே பாதிக்கப்பட்டவர்கள் மட்டும் தான் நிகழ்வைப்பற்றிப் பேசவேண்டும் என்பதை கடுமையாக புறக்கணிக்கிறேன்.


மதவெறி பற்றிய விழிப்புணர்வுகளை பதிவுலகில் சார்ந்த பலர் நன்றாகவே அறிந்துள்ளனர், அதற்கு எனது கடந்த சில பதிவுகளும் கூட காரணமாக இருக்கலாம், ஆனால் தொடர்ந்து இதைப்பற்றி எழுதுவதன் அயற்சி எனக்கு ஒவ்வாத ஒன்று, "தமிழ்மணத்தில் முகப்புகள் மதவாதிகளால் வாக்கு குத்தப்பட்டு ஆக்கிரமிக்கப்படுவதால் நான் தமிழ்மணம் வழியாக படிக்க விரும்பவில்லை, ரீடர் வழியாக குறிப்பிட்ட பதிவுகளை நான் வாசிக்கிறேன்" என்றார் நண்பர் ஒருவர். இதனால் பாதிக்கப்படுவது புதிதாக பதியவரும் வலைப்பதிவர் தான், ஒருவேளை அவர் நன்றாக எழுதுபவராக இருந்தால் அவர் பதிவுகள் வாசிக்கபடாமலேயே போகலாம்.

எனக்கு சூடான இடுகை, முகப்பை ஆக்கிரமிப்பதில் ஆர்வம் இல்லை, மூன்றாண்டுக்கு முன்பு எழுதியதில் பெரும்பாலனவை அங்கு வந்து சென்றவை, அப்போது பதிவர்களின் எண்ணிக்கையும் குறைவு, இப்போது அந்த இடங்களை நான் தொடர்ந்து துண்டு போட விரும்பவில்லை, புதியவர்கள் தொடருட்டுமே. என் பெயரில் பிறர் எழுதியதும் சேர்த்தே தமிழ்மணத்தை ஆக்கிரமித்தவைகள் கீழ்கண்டவை.

தொடர்ந்து ஆதரவு கொடுத்துவரும் அனைத்து நண்பர்களுக்கும் நன்றி, கடந்தவாரப் பதிவுகள் புதிய பதிவர்களுக்கு என்னை அறிமுகப்படுத்தி இருக்கும் என்று நம்புகிறேன், பாலோயர்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது.

*********

பின்குறிப்பு : முகம் தெரிந்த நண்பர்கள் பதிவுகள் தவிர்த்து எவருடைய எதிர்வினைகளுக்கும் நான் பதிவில் போடுவது கிடையாது. நான் எப்போதும் அறிவுரை செய்வதில்லை, பரிந்துரை மற்றவை விமர்சனம். என்னைத் தெரிந்தவர்களுக்கு நான் விளக்கம் சொல்லத் தேவை இல்லை, தெரியாதவர்களுக்கு என் விளக்கமும் பயன் தராது. இங்கும், தொடர்ச்சியாகவும் முன்பும் குறிப்பிட்ட மதங்களை தாக்கி நான் பதிவுகள் எழுதியதில்லை, குறிபாக இஸ்லாமியர்களுக்கும், இஸ்லாமுக்கும் இந்தப் பதிவுக்கும் தொடர்பே இல்லை என்று 100 விழுக்காடு உறுதி கூறுகிறேன், அப்படியாக அனுமானிக்கும் பின்னூட்டங்கள் நிராகரிக்கப்படும், குறிப்பாக இந்தப் பதிவின் நெகட்டிவ் ஓட்டுகளும் கடந்த ஒருவாரப் பதிவுகளின் நெகட்டிவ் ஓட்டுகளும் பாசிட்டிவ் என்றே கொள்ளப்படும், வாக்களிப்பவர்கள் முடிவு செய்க.

:)

1 நவம்பர், 2010

தங்கமீனிற்கு தூவிய பொரி !

தங்கமீனில் எழுதிய கட்டுரையை இங்கு பகிர்ந்தளிக்கிறேன். கிளிக் செய்து படிக்கவும். தங்கமீன் திங்கள் (மாத) இணைய இதழாக சிங்கையில் இருந்து நண்பர் பாலு மணிமாறன் அவர்களின் முயற்சியினால்
வெளிவந்து கொண்டிருக்கிறது. இந் நவம்பர் திங்கள் இதழில் எழுத்தாளர் சாரு வின் கட்டுரையும் உள்ளன.

"உண்மையில் தமிழ்நாட்டில் வாழ்வதென்பது மரணக் கிணற்றில் வாழ்வதற்குச் சமமாகும். இந்திய நிலைமையே அதுதான் என்றாலும் அங்கே கொஞ்சம் கலாச்சார உணர்வாவது இருக்கிறது. பா. விஜய் போன்ற ஒரு ஆளை அங்கே இலக்கியவாதி என்று சொல்லமாட்டார்கள்; இங்கே மரணக் கிணறு வாழ்க்கையோடு சேர்த்து கலாச்சார சீரழிவு வேறு விசேஷ போனஸ். அந்தக் காலத்தில் அமெரிக்காவில் ஆஃப்ரிக்க அடிமைகள் ஒரு பகல் பூராவும் விலங்குகளைப் போல் வேலை செய்ய வேண்டும். ஆனால் இரவில் அவர்கள் பாடிக் கொண்டும் ஆடிக் கொண்டும் கதை சொல்லிக் கொண்டும் இருப்பார்கள். அத்தனை நூற்றாண்டுகளாக அவர்களை உயிர்வாழ வைத்தது அவர்களுடைய இரவு வாழ்க்கைதான்; அவர்களுடைய கலாச்சாரம்தான். ஆனால், கச்சி ஏகாம்பர நாதா, அந்தக் கலாச்சாரத்தையும் இங்கே தமிழ்நாட்டில் எங்களிடமிருந்து பிடுங்கிக் கொண்டு பதிலுக்கு ரஜினிகாந்தையும் பா. விஜய்யையும் கொடுத்து எஞ்ஜாய் எஞ்ஜாய் என்கிறார்களே, இந்தக் கொடுமையை எங்கே கொண்டு போய் முறையிட?" - சாரு

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்