பின்பற்றுபவர்கள்

31 மார்ச், 2011

பாமகவின் தேர்தல் பயம் !

மகனுக்கு மந்திரிப் பதவி என்னும் அடிப்படை கோரிக்கையுடன் திமுகவில் கைகோர்த்திருக்கும் பாமக நிறுவனர் மருத்துவர் இராமதாஸ் திமுக - காங்கிரஸ் கூட்டணி உறுதியானதும் தான் 'பாதி கெணறு தாண்டியாச்சு' என நிம்மதி பெருமூச்சு விட்டார். காங்கிரஸு - திமுக உடன்பாடு ஏற்பட்டால் இராமதாசின் அடிப்படை கோரிக்கையே ஆட்டம் கண்டு அவரும் திமுக கூட்டணியில் இருந்து உடனேயே வெளி ஏறி இருப்பார்.

வடமாநிலத்தில் தேமுதிகவிற்கு ஓரளவு ஆதரவு இருப்பது உண்மை தான் என்பதை விருத்தாச்சலம் மெய்பித்தது. தற்போது அதிமுகவின் வாக்குகளும் கிடைக்கும் என்பதால் தேமுதிக பல இடங்களில் அதன் வெற்றி வாய்ப்பு எட்டும் கனியாகவே பழுத்து வருகிறது.
தேமுதிக வட மாநிலங்களில் வென்றால் பாமகவின் வளர்ச்சி பாதிக்கப்பட்டு பலவீனமடையும் எதிர்காலத்தில் அதிமுக மற்றும் திமுக பாமகவை கூட்டணிக்கு அழைக்கவே யோசிப்பார்கள் என்பதால் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவை பாமக மிகுதியாக தாக்கிப் பேசி வருகிறது.

விஜயகாந்தும், பாமகவை கடுமையாக விமர்சனம் செய்வதால் பாமகவின் (சாதிய ரீதியான) எதிர்ப்பு ஓட்டுகளைஒட்டுமொத்தமாக அறுவடை செய்துவிட முடியும் என்று நினைத்து பாமகவின் பசுமை தாயக்கம் பற்றியும், பாமவின் மரங்கள் குறித்தான அக்கரை குறித்தும் சாடிவருகிறார்.

இந்த சாடல் பாமகவினரை குறிப்பாக வன்னியர் சங்கத்தலைவர் காடுவெட்டுக் குருவையும், பாமக நிறுவனர் இராமதாஸையும் எரிச்சல் படுத்துகிறது. "பிரச்சாரத்திற்கு வரும் விஜயகாந்து ஒழுங்கத் திரும்பிக் போகனும் என்றால் அடக்கி வாசிக்கனும்" என்கிற ரீதியில் காடுவெட்டி குருவால் பகிரங்க மிரட்டலே விடப்படுகிறது.

ஒரு கட்சித்தலைவரை மிரட்டுவது பெரிய விசயமே இல்லை, இதை எந்தக் கட்சியும் கண்டிக்கவில்லை. ஆனால் விஜயகாந்து தன்னுடைய வேட்பாளரை அடித்துவிட்டார் என்று கேள்விப்பட்டதும் அனைவருமே விஜயகாந்தை கடுமையாக விமர்சனம் செய்து பேசிவருகிறார்கள். அதாவது யாரை வேண்டுமானாலும் (வாய்ச் சவடலால்) மிரட்டலாம் ஆனால் அடித்துவிடக் கூடாது என்பது தான் அரசியல் நாகரீகம் போலும்.

விஜயகாந்து வேட்பாளரை அடித்தது அவர்கள் கட்சியின் உள்விவகாரம், மாற்றுக்கட்சி வேட்பாளரை அடித்திருந்தால் தான் குய்யோ முறையோ என்று கத்திக்கேள்வி கேட்கமுடியும், அடிவாங்கியவரே விஜயகாந்திற்கு ஆதரவாக இருக்கும் போது மற்றவர்களின் விமர்சனம் எடுபடுமா ?

நொண்டிக் குதிரைக்கு சறுக்கியது தான் சாக்கு என்பார்கள். விஜயகாந்தின் அடியைப் பற்றி விமர்சனம் செய்யும் பாமகவின் நிலையும் இது தான்.

சத்திய மூர்த்தி பவன் அடிதடிகளைவிடவா விஜயகாந்தின் அடிதடி சுவாரிசியமாக இருந்தது ?
நான் விஜயகாந்த் அபிமானியோ பாகைமானியோ இல்லை. அரசியலுக்கு வரும் உரிமை தமிழகத்தில் பிறந்து, வளர்ந்து வாழும் யாருக்கும் உள்ளது என்ற அளவில் விஜயகாந்தின் அரசியல் எனக்கு உவர்பானது இல்லை. யாரையும் அடிக்க யாருக்கும் உரிமை இல்லை. அதே நேரத்தில் அதைத் தவறு என்று சுட்டுபவர்களின் யோக்கிதைகளும் வெளிச்சத்திற்கு வரத்தான் செய்கிறது. உள்கட்சி விவகாரத்தால் மதுரையில் தினகரன் ஊழியர்கள் கொலை செய்யப்பட்டதற்கு இந்த அரசியல்வாதிகளில் எத்தனைபேர் அதனை அ(இ)ன்றைய சூழலில் சுட்டிக்காட்டினார்கள்/ காட்டுவார்கள் ?

பின்குறிப்பு : என்ன கொடுமைசார். இந்தக் கருணாநிதியின் கேவலமான தன்நலஅரசியல் நிலைபாடுகளால் திராவிடப் பிரியாணியின் பித்தம் அஜிரணமாகி, ஒதுங்கிப் போய் வெறுத்துப் போய் யார் யாருக்கோ நான் (அரசியல் ஆதரவு) காவடி எடுக்க வேண்டி இருக்கு. இன்னும் அஜிரணமாகதவர்களும் இருக்காங்க, அவங்க ரொம்ப ஸ்ட்ராங்க். இடியே இடித்தாலும் (இன அழிப்புகள், இமாலய ஸ்பெக்ட்ரம் ஊழல்), மழையே கொட்டோ கொட்டுனு கொட்டினாலும் (தொடரும் மீனவர் படுகொலைகள்) அப்படியே எருமைமாடாத்தான் தான் இருப்பாங்க. மைனஸ் ஓட்டுப் போடுறவங்களெல்லாம் வரிசையில் வாங்க.

28 மார்ச், 2011

ஜெயலலிதாவுக்கு திமுகவின் பிரச்சாரம் !

திமுக உட்பட திமுக கூட்டணியினர் ஜெவின் கூடுதலான இலவச தேர்தல் அறிக்கைக்கு அன்றாடம் விளம்பரம் செய்துவருகிறார்கள். கூட்டம் தோறும் ஜெ என்ன என்ன திட்டம் அறிவித்தார் என்றெ ஜெ வே செல்லத் தேவை இல்லாத அளவுக்கு கருணாநிதி, இராமதாஸ், திருமாவளவன் ஆகியோர் மேடையில் ஜெவின் திட்டங்களை அறிவித்து அதை செயல்படுத்த முடியாது என்று பிரச்சாரம் செய்துவருகின்றனர். சென்ற முறை தேர்தலின் ஹைலைட் இலவசத் திட்டம் தான். அந்த வகையில் தமிழக வாக்காளர்களை இலவச அடிமையாக்கிய பெருமை கருணாநிதியையே சாரும். கருணாநிதி கொடுப்பார் ஜெயலலிதா கொடுக்கமாட்டார் என்கிற எதிர் பிரச்சாரம் எந்த விதத்தில் எடுபடும் என்று தெரியவில்லை. இவர்கள் யாரும் கைகாசைக் கொடுக்கப் போவதில்லை என்பதை மக்கள் அறியாதவர்கள் அல்ல எனும் போது அறிவித்தவர்கள் யாரும் கொடுக்கமாட்டார்கள் என்பதை மக்களும் நம்பத் தயாராக இல்லை.

கருணாநிதி இல்லத்து பெண்கள் குறிப்பாக, மகள், மருமகள், பேத்தி என அனைவரும் தேர்தல் களத்தில் நிற்பதைப் பார்க்கும் போது திமுகவின் தோல்வி பயம் வெளிபடையாகவே தெரிகிறது, அரசியலும் பதவியும் குடும்பச் சொத்து போல் இவர்கள் அதைக் காப்பாற்ற முயற்சி செய்கிறார்கள், அல்லது போராடுகிறார்கள் என்பதை இலவசங்களை அறுவடை செய்யாத நடுத்தர வர்கம் நன்றாகவே உணர்ந்துள்ளது. தமிழ்நாட்டின் ஒரு லட்சம் கோடிக் கடன் என்பது நடுத்தரவர்கத்தின் வரியினால் தீர்க்கப்பட வேண்டிய கடன் என்பதால் நடுத்தரவர்கம் இலவசத் திட்டங்கள் தங்களுக்கான மேல் சுமை என்பதில் கருணாநிதி மற்றும் ஜெ மீதி எரிச்சல் அடைந்திருந்தாலும் ஆள்பவர்களுக்கே தொடர்ந்து வாய்ப்பு வழங்கத் தயாராக இல்லை. மேலும் செய்திகளை அன்றாடம் வாசிக்கும் நடுத்தர வர்க்கமும், டீக்கடை பெஞ்சுக்காரர்களும் கருணாநிதி குடும்பத்தின் சொத்துக் கணக்கையும் திரைத் துறை மட்டும் ஊடகத் துறையில் அவர்களின் வலுவான கரங்களையும் நன்கு அறிந்திருக்கிறார்கள் என்பதால் நடுத்தரவர்கத்தின் வாக்குகள் கருணாநிதிக்கு கிடைப்பது ஐயமே. டெஸ்மாவில் பாதிக்கப்பட்ட 2 லட்சம் அரசு ஊழியர்கள் தவிர்த்து காவல் துறை உள்ளிட்ட அரசு ஊழியர்கள் ஜெவிற்கும் வாக்களிக்கும் மனநிலையில் தான் உள்ளனர். பொதுவாகவே காவல் துறை ஜெவுக்கு விசுவாசமாகவே நடந்து கொள்ளும் என்பதால் இந்தத் தேர்தலில் தேர்தல் முறைகேடுகளை முறியடித்து காவல் துறையினரின் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள் ஜெவுக்கு ஆதரவாக நடந்து கொள்வார்கள் என்றே நினைக்கிறேன்.

நோய்வாய்பட்டு தேர்தல் களத்தையே காணாமல் வெற்றிப் பெற்று ஆட்சியை தக்கவைத்துக் கொண்ட எம்ஜிஆரையும், ஓய்வெடுக்க வேண்டிய வயதில் சர்கர நாற்காலியில் பிரச்சாரப் பயணம் மேற்கொண்டு 6 ஆம்முறையாக அரியணையை காக்கக் போராடிவரும் கருணாநிதியையும் ஒப்பிட்டால் வாரிசு அரசியல் மற்றும் பதவி ஆசை தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கையை எந்தப்பாடு படுத்துகிறது என்று உணரலாம்.

ஏற்கனவே காங்கிரசிற்குள் கோஷ்டி மோதல் அந்தக் கட்சியின் வெற்றியைக் கேள்விக் குறியாக்கி இருக்கிறது, இந்தத் தேர்தலில் இதயத்தில் மட்டுமே இடம் கிடைத்த உபிகள் இடநெருக்கடி காரணமாக எகிரிக் குதித்து சுயேட்சையாக நின்று கண்ணீரை வரவழைக்கிறார்கள், கழுத்தை அறுக்கிறார்கள் என்று புலம்புகிறார் கருணாநிதி இதுவெல்லாம் எதிர்கட்சிக்கு அனுகூலம் தான், அதிருப்தியாளர்களை காசுக்கு வளைப்பது அரசியலில் கைவந்தக் கலை என்பதால் அங்கெல்லாம் அதிமுக கூட்டணி எளிதாகவே வெற்றிபெரும். இவர்களுக்காக மேடையில் ஏகவசனத்தில் பேசிவரும் நடிகர் நடிகைகள் குறிப்பாக வடிவேலு மற்றும் குஷ்பு இவர்களின் எதிர்காலம் தான் புதிரானது. இருந்தும் அரசியலில் சரண்டர்களும் சாதாரணமானவையே ஜெ-வை மிகவும் தாழ்ந்து விமர்சனம் செய்த எஸ் எஸ் சந்திரனே பின்னர் அம்மா தான் எல்லாமும் என்று மாறிவிடவில்லையா ? நக்கீரன் கோபால் நிலைமை தான் பரிதாபம், அறிவிக்கப்படாத முரசொலி போல் திமுகவிற்கான பிரச்சாரத்தையும் எதிர்கட்சி மீதான இருட்டடிப்பையும் கட்டவிழ்த்துவிட்டுள்ளது. ஆட்சி மாறினால் திமுகவினரைவிட பாதிக்கப்படுவது அவர்கள் தான் என்பதால் தான் இப்படி முனைந்து பிரச்சாரம் செய்கிறார்களோ என்று நினைக்கத் தோன்றுகிறது, ஒரு காலத்தில் நக்கீரன் கோபால் சமூகப் போராளி என்பதற்கு ரோல் மாடலாகவே இருந்தார் என்று நினைக்கையில் இப்போதைய அவர்களின் நிலைப்பாடு வருத்தம் கொள்ள வைக்கிறது. இதற்கு ஏன் இவர்கள் நடுநிலை நாளேடு என்று கூறி பொதுமக்களிடம் கடைவிரிக்க வேண்டும் வெளிப்படையாகவே தங்கள் திமுகவின் அரசியல் செய்தி இதழ் என்று அறிவித்துக் கொள்ளலாமே.

திமுக கூட்டணி வெற்றி பெற்றால் தனிபட்ட சொத்துகளுக்கு பங்கம் இல்லை, இல்லை என்றால் பங்கு கொடுக்கனும் மற்றபடி கவலை கொள்ளும் அளவுக்கெல்லாம் வெற்றி தோல்விகளில் பெரிதும் நடக்காது. பங்கு கொடுப்பதற்குத்தான் இப்படி அழுது பிரச்சாரம் செய்கிறார்களா ? அதுவும் அதிமுகவுக்கு சாதகமாகவே......அந்தோ பரிதாபம்.
:)))

25 மார்ச், 2011

ஜெயலலிதாவின் அறிவிப்பு திமுக அதிர்ச்சி !

சென்ற முறை ரூ-வாய்க்கு அரிசி என்ற இலவச திட்டம் அறிவித்து திமுக வாக்குகளை அள்ளியது. அதே வாக்குறுதியை ஜெயலலிதாவும் சொன்னால் அது தேர்தலில் எடுபடாது போட்டிக்கு அறிவித்திருக்கிறார்கள் என்று எதிர்மறை விளைவுகளை மக்கள் இடையே ஏற்படுத்தும் என்று ஜெயலலிதா அடக்கி வாசித்தார், இருந்தும் தேர்தல் நெருங்கும் போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியுடன் கூடுதலாக ஒருகிலோ அரிசி இலவசம் என்று அறிவித்தார். ஆனாலும் பெரிதாக எடுபடவில்லை. ஒரு லட்சம் கோடி தமிழ்நாட்டிற்கு கடனும் வாங்கி மேலும் டாஸ்மாக்கை நடத்துவதால் அரிசியை இலவசமாகக் கூடக் கொடுக்க முடியும் என்பதை கருணாநிதி செய்து காட்டியப் பிறகு, இலவசத் திட்டங்கள் சாத்தியமானது தான் என்பதை மக்கள் ஓரளவு நம்பத் துவங்கி இருக்கிறார்கள். அனைத்தும் இலவசம் என்கிற அறிவிப்புகளில் பாலியல் தொழிலாளியிடம் செல்வோருக்கு ஆணுறை இலவசம் அப்படியும் நோய் கண்டவர்களுக்கு சிகிச்சையும் இலவசம் என்று சொல்லாதது மட்டும் தான் அனைத்தும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையாக இருக்கிறது.

திமுகவின் இலவச அறிவிப்பை விட இருமடங்கு இலவசங்களை அதிமுக அறிவித்துள்ளது. இது திமுகவிற்கு கூட்டணிக் கட்சிகளுக்கும் வயிற்றில் வினிகரையே கரைத்தது போல் இருக்கிறது.

திருமா "அதிமுகவின் இலவச அறிவிப்பு அப்பட்டமான காப்பி" என்கிறார். காப்பி அடிக்காமல் இருக்க இலவச அறிவிப்புகளை யாரும் காபிரைட் செய்யவில்லை என்பது இவருக்கு தெரியாதா ? வீடுகட்ட கல்லை இலவசமாகக் கொடுக்கும் போது கனவில் வரும் மாளிகையை கட்டித் தருவதாக பேச்சுக்காக சொல்வதற்கு எதற்கு நா கூச வேண்டும் என்று ஒரு அரசியல்வாதியாக இருக்கும் இவருக்குத் தெரியாதா என்ன ?

அந்த அம்மா டாஸ்மாக்கில் குடிமகன்களுக்கு சரக்கும் இலவசம் என்று கூட சொன்னாலும் கூட இலவச அறிவிப்புகளினால் மக்களின் மனதைக் களைப்பவர்களுக்கு என்ன ரோசம் வேண்டிக்கிடக்கிறது ?

நேற்று தஞ்சையில் வேட்பாளர் அறிமுகப்படுத்திப் பேசிய கருணாநிதி ஜெ-வின் இலவச அறிவிப்பு ஏலம் விடுவதைப் போல் இருக்கிறது என்று நொந்து போய் புலம்பி இருக்கிறார்.

"தி.மு.க., தேர்தல் அறிக்கை, கம்யூ., கட்சிகளும், கூட்டணி கட்சிகளும் விரும்பும் தேர்தல் அறிக்கை. அதில், மேலும் சிலவற்றை சேர்க்க கூட்டணி கட்சிகள் விரும்பியதால், சிலவற்றை சேர்த்து வெளியிட்டோம். இன்று அதற்கு போட்டியாக ஏலம் விடுவது போல், தேர்தல் அறிக்கை விட்டுள்ளனர். - கருணாநிதி

ஏலம் பற்றி திமுகவிற்கு தான் நன்கு தெரியும். திகார் சிறையில் கம்பி எண்ணும் ராசாவைக் கேட்டால் இன்னும் நன்றாகவே விளக்கிப் பேசுவார்.

(நாகை மாவட்டத்தில் ஒரே ஒரு தனித் தொகுதி - கீழ்வேளுர் தவிர்த்து அனைத்தையும் கூட்டணிக் கட்சிகளுக்கு கொடுத்துள்ளது திமுக. நாகைத் தொகுதிக்குள் திமுக கூட்டணி ஒரு இடம் கூட பெற தொண்டர்கள் முயற்சி செய்யப் போவதில்லை)





படம் நன்றி தினமலர்

22 மார்ச், 2011

வைகோவின் நிலைப்பாடு பாராட்டதக்கது !

கருணாநிதியை எதிர்த்து கட்சி துவங்கிய வைகோ கருணாநிதியுடன் கூட்டணியில் இணைந்திருந்தார். கருணாநிதியின் தவறுகளால் ஆளுமையால் அதனை எதிர்த்து உருவாகிய அரசியல் கட்சிகள் அதிமுக, மதிமுக. அதிமுக வெற்றிகரமாக ஆட்சியில் அமர்ந்ததால் திராவிடக் கட்சிகளில் மக்கள் பலமிக்கத் தலைவர் தாமே என்பதை எம்ஜிஆர் நிருபனம் செய்தார். ஏற்கனவே உடைந்த திமுக கட்சியில் இருந்து பிரிந்ததால் வைகோவால் ஒரு மாற்று சக்தியாக உருவாக முடியவில்லை, இருந்த போதிலும் 50 தொகுதிகள் வரையிலான வெற்றித் தோல்விகளை முடிவு செய்யும் ஒரு கட்சியாக மதிமுகவை வளர்த்துவந்தார்.

ஜெ தனிப்பட்ட காழ்புணர்வின் மூலமாக பொடோ சட்டத்தில் ஓர் ஆண்டு வைகோவை சிறையில் அடைத்திருந்தாலும் கருணாநிதியை நம்பி அரசியல் எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வைகோ விரும்பவில்லை. காரணம் திமுகவுடன் இணைந்து செயல்படும் மதிமுகவிற்கு கொள்கை என்று எதுவும் தனியாக இருக்காது, கட்சி வளர வாய்ப்பில்லை என்ற முடிவில் அவமானப்பட்டாலும் பரவாயில்லை என்றே ஜெவுடன் கூட்டணியில் தொடர்ந்தார்.

இதற்கிடையே இந்தத் தேர்தலுக்கு முன்பே வைகோ கட்சி பெருந்தலைகளை திமுக இழுத்துக் கொள்ள அரசியல் பலமில்லாதா வைகோவின் கட்சியை அதிமுகவும் கைப் பற்றிக் கொள்ள விரும்பவில்லை. அவர்களாகவே வெளியே செல்லட்டும் என்கிற ரீதியில் 8, 7 என எண்களைக் காட்ட இதற்கு மேல் ஜெ கூட்டணியில் தொடர்வது தனக்கு தனிபட்ட அவமானம் என்பதாக வைகோ தேர்தலை புறக்கணித்துள்ளார்.

வைகோ தேர்தலை புறக்கணிப்பதால் மதிமுக தொண்டர்களின் வாக்கு ? தன்னுடைய கட்சி தனித்து தேர்தலில் நின்றால் வாக்குகள் பிரியும் கருணாநிதியை ஆட்சியில் இருந்து அகற்றவதற்கு தடையாக அமையும் என்று தெளிவாகச் சொல்லி இருப்பதன் மூலம் மறைமுகமாக மதிமுக தொண்டர்களின் வாக்குகள் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக இருக்க வேண்டும் என்ற விருப்பம் தெரிவித்துள்ளதாக எடுத்துக் கொள்ளமுடிகிறது. வாக்குகள் சிதறாமல் அல்லது பிரியாமல் இருக்க அதிமுக கூட்டணிக்கே வாக்கு அளியுங்கள் என்று சொல்வதாகத்தான் இதனை எடுத்துக் கொள்ளமுடியும்.

இதற்கிடையே முன்னால் போயாஸ் தோட்டாத்து பூசாரி வீரமணி வழக்கம் போல் பார்பன சதி, ஆரியமாயை என்றெல்லாம் ஒரு கடிதத்தை வைகோவிற்கு எழுதியுள்ளார். இதன் மூலம் அதிமுகவிற்கு செல்லும் மதிமுகவினரின் வாக்குகளை முடிந்த வரையில் தடுக்க முடியும் என்பது திருவாளர் வீரமணியின் நம்பிக்கை.

ஈழப்படுகொலைக்கு ஆதரவு, இமாலய ஸ்பெக்டரம் ஊழல், சிக்கியவர்களின் தற்கொலைகள் என்று காட்சிகள் நடந்து வரும் வேலையில் திமுக கூட்டணி பக்கம் செல்லாமல் தேர்தலை புறக்கணித்ததுடன் வாக்குகள் சிதறாமல் திமுக - காங்கிரஸ் கூட்டணிக்கு எதிராக வாக்களிக்கச் சொல்லும் வைகோவின் நிலைப்பாடு சரிதான் என்று தோன்றுகிறது.

கட்சித் தொடங்கிய இருபது ஆண்டுகளுக்கு பிறகு வைகோவின் கட்சிக்கு அமைந்திருக்கும் இன்றைய நிலை நாளை தேமுதிகவிற்குக் கூட ஏற்படலாம். ஏனெனில் இந்தக்கட்சிகள் உருவாக வேண்டும், வளரவேண்டும் என்ற மக்கள் தேவை/விருப்பமாக இவை தோன்றாமல் தனிப்பட்ட மனிதர்களின் விருப்பங்களினால் தோன்றியுள்ளன.

வைகோ அரசியல்வாதி என்பதைத் தாண்டி நல்ல தமிழ் உணர்வாளர் என்பதால் அவரின் இந்த முடிவுகள் ஏற்றுக் கொள்ளத் தக்கதே. வைகோவின் அரசியல் வாழ்க்கை எந்த ஒரு தொண்டனும் ஒரு வாரிசு அரசியல் கட்சியைச் சார்ந்து தானும் தலைவராக வளரமுடியும் என்று நினைத்தால் அதற்கு வாய்ப்புகள் மிகவும் குறைவே என்பதைக் காட்டுகிறது. அதாவது வைகோ திமுகவின் செயல்பாடுகளுக்கு ஜால்ரா போட்டுக் கொண்டே வந்திருந்தால் ஒரு வீரபாண்டியாரைப் போலவே திமுக அமைச்சராக ரிடையர் ஆகி இருக்க முடியும்.

சிரஞ்சிவியைப் போன்று அதிமுகவுடன் மதிமுகவை இணைத்து அரசியல் லாபங்களை அறுவடை செய்திருக்க முடியும், அது தனக்கு மட்டுமே நன்மை என்று நினைத்ததால் அதனை கைவிட்டிருப்பார் என்றே நினைக்கிறேன். இன்றைய தமிழகத்திற்குத் தேவை போலி திராவிட எதிர்ப்பு அரசியல் தான். வைகோ சீமானுடன் இணைந்து செயல்படுவது தான் மதிமுகவின் வளர்ச்சிக்கு வழி வகுக்கும். திமுகவும், அதிமுகவும் திராவிடக் கட்சிகள் என்று சொல்லிக் கொள்ளும் அருகதையற்றவை. திமுக ஆட்சியில் இருந்து உடனடியாக அகற்றப்பட வேண்டிய கட்சி என்பதை இந்த சூழலிலும் வைகோ சுட்டியுள்ளார். அரசியல் தெளிவுகளைப் பெற இந்த தற்காலிக அரசியல் ஓய்வு வைகோவிற்கு பயனளிப்பதாகவே இருக்கும் என்று நம்புகிறேன்.

21 மார்ச், 2011

சீனத்துப் பட்டுமேனி !

வெளிநாடு என்றதும் அந்த ஊர் மண் பச்சைக் நிறத்தில் இருக்குமோன்னு பேரார்வம் எழுவதும், அங்கு போய் பார்த்தப் பிறகு தான், அதுவும் நம்ம ஊர் மண் போல் தான் இருக்கு, என்ன வேறுபாடு மக்கள் பண்பாடு, நாகரீகத்தில் சிறிது மாற்றம் இருக்கும், மற்றபடி வெளிநாட்டினர் வாயினால் தான் கை உதவியுடன் நம்மைப் போல் தான் உணவு உட்கொள்கிறார்கள் என்பதையும், அவர்கள் உணவுப் பொருள்களில் வகையும் சுவையும் மாறுபடுகிறது என்பதையும் அறியலாம்.

*****

அலுவல் தொடர்பில் சீன நாட்டின் ஷாங்காய் நகருக்கும் அதன் தொடர்ச்சியாக அமைந்திருக்கும் சூச்சூவ் (Suzhou) தொழில் நகருக்கும் சென்று வரும் வாய்ப்புக் கிடைத்தது. சூச்சூவ் பட்டுக்கு பெயர் பெற்ற நகரம், பட்டு உற்பத்தியில் செய்யப்பட்ட ஆடைகளுக்கு தனிப்பட்ட கடைகள் உண்டு. பட்டுமேனியாக இருந்த சூச்சூவ் தற்பொழுது பரந்து விரிந்த தொழில் நகரமாகவும், சுற்றுலாத்தலமாகவும் மாறிக் கொண்டு இருக்கிறது. சீனா என்ற சுவடு எழுத்திலும், உணவிலும் தெரிவிதத்தைத் தவிர்த்து சூச்சூவ் நகர் முழுக்க முழுக்க ஐரோப்பிய நகரிய வடிவமைப்பை ஆடையாக அணிந்து கொண்டு காட்சி அளிக்கிறது. ஐரோப்பிய நாடுகளைப் போலவே குளிரான தட்பவெப்ப சூழல் அமையப் பெற்றிருக்கிறது. சுறுக்கமாகச் சொல்லப் போனால் சூச்சூவ் என்பது சீனாவில் அமைந்துள்ள ஐரோப்பிய நகர்.

சீனாவின் விசா நடைமுறைகள் எளிது தான். சுற்றுபயணத்திற்கான விசா பெருவது எளிது, மூன்று திங்கள் வங்கிக் கணக்கு புழக்கம் குறித்தப் பட்டியலுடன், விண்ணப்பத்தை நிரப்பி, விடுதியில் முன்பதிவு செய்த தகவல்களைக் கொடுத்தால் ஒரு முறை சென்று வருவதற்கான நுழைவு அனுமதி கொடுக்கிறார்கள். 30 நாட்கள் வரையில் தங்களாம்,. நான் சென்று வந்தது பிஸ்னஸ் விசா எனப்படும் தொழில்முறை பயணத்திற்கான விசா. செய்தியாளர்களுக்கான தனியான விசா நடைமுறைகளும் உண்டு, எனவே செய்தியாளராகச் சென்றால் அந்த விசாவில் தான் செல்லமுடியும், கண்காணிப்பு இருக்கும், மற்ற விசாக்களில் சென்று செய்திகள் திரட்டினால் சீனச் சிறை கண்டிப்பாக உண்டு, சீனா தங்களைப் பற்றியத் தகவல்கள் குறிப்பிட்ட முன் அனுமதியின்றி செல்வதை விரும்பவதில்லை. அதற்காகவே விசா நடைமுறைகளில் கடுமையைக் கடைபிடிக்கிறது. சீன நாணயம் ஒரு சிங்கப்பூர் வெள்ளிக்கு 5 யுவான் (ரெமிங்பி) அல்லது ஏழு இந்திய ரூபாய்க்கு ஒரு யுவான் என்ற அளவில் இன்றைய நிலவரம் உள்ளது.

நானும் எனது மற்ற இரு சீன நண்பர்களும் சிங்கை - ஷாங்காய் அலுவல் தொடர்பான விமானப் பயணத்தில் ஷாங்காய் நகரில் இறங்கும் போது மாலை 4 மணி ஆகி இருந்தது. சூச்சூவ் நகருக்கான விமான நிலையம் தனியாக இல்லை எனவே சூச்சூவ் செல்பவர்கள் ஷாங்காய் சென்று அதன் பிறகு அங்கிருந்து சூச்சூவ் செல்ல முடியும். எங்களை அழைத்துச் செல்ல எங்கள் நிறுவனத்தின் சிற்றுந்து முன்னேற்பாட்டின்படி அங்கு வந்திருந்தது. அன்று ஞாயிறு ஆகையால் அலுவல் எதுவும் இல்லை. எனவே ஷாங்காய் நகரை சுற்றிப் பார்த்துவிட்டுச் செல்லலாம் என்று நகருக்குள் நுழைந்தோம். மிகவும் நெருக்கமான நகர், மக்கள் தொகையும் மிகுதி என்றாலும் சிறுவீடுகள் எதையும் பார்க்க முடியவில்லை, நகர் முழுக்க சிறிய பெரிய கட்டிடங்களால் நிரம்பி வழிந்தது. சென்னையைப் போலவே ஷாங்காய் திட்டமிடாமல் எழுந்த நகரம். எனவே நேரான சாலைகள் எல்லாம் நகருக்கு வெளியே தான். இருந்தும் நகரின் ஊடாக உயரமான பாலங்களைப் போல் (ப்ளைஓவர்) சாலைகள் வளைந்து செல்கின்றன. சாலைக்கு மிக அருகில் வீடுகள் இருப்பதால் சாலைகளின் போக்குவரத்து இரைச்சல் வீட்டில் உள்ளவர்களை தொந்தரவு செய்யாமல் இருக்க சாலையில் இருபுறமும் கண்ணாடி தடுப்புகளை அமைத்து இரைச்சல் (Noise Pollution) சாலையைக் கடந்து செல்வதைத் தடுத்து வைத்திருக்கின்றனர். இது போன்ற கண்ணாடி தடுப்புகளுடன் ஆன சாலைகளை சீனாவில் மட்டும் தான் பார்த்தேன்.

ஷாங்காய் நகரின் மையத்தில் ஒரு ஆற்றை ஒட்டி அமைந்திருக்கிறது அதன் வானுயர்ந்த கட்டிடங்கள். இரவில் பார்க ஒளிசிந்தும், மின்னும் வண்ண மின் விளக்குகள் அந்த இடமே செயற்கையும் அழகுதான் என்பதாக காட்சிப்படுத்தி இருந்தது. வங்கிகள் மற்றும் பணப் பரிமாற்றம் தொடர்பான நிறுவனங்கள் அந்தக் கட்டிடங்களில் செயல்படுகின்றனர். அந்தப் பகுதி சிங்கப்பூர் ராபிள் ப்ளேஸ் அமைப்பை நினைவுபடுத்தியது. அதன் அருகேயே ஐரோப்பிய நாடுகளின் கட்டிட வடிவமைப்பிலான கட்டிடங்களும் நிறைய இருந்தன. அந்தப் பகுதியில் நிற்கும் போது ஏதோ ஒரு ஐரோப்பிய நாட்டில் இருப்பது போனற உணர்வைக் கொடுத்தது, கூடவே நடுங்க வைக்கும் 6 டிகிரி குளிர் மற்றும் முகத்தில் அறையும் காற்று, அதை மேலும் வலுப்படுத்தியது. அங்கு ஒரு 30 நிமிடங்கள் இருந்துவிட்டு அடுத்து உணவுத் தேடலுக்காக சிற்றுந்தில் சென்றோம். நகர் முழுவதும் ஐரோப்பிய வணிக நிறுவனங்களின் கடைகள் இருந்தன. சீனத்தயாரிப்புகளான சீனக் கடைகள் மிகவும் குறைவு (That means it is hard to find Chinese product stores in china)

சீனாவுக்கு செல்லும் ஐரோப்பியர், ஆப்ரிக்கர் மற்றும் சீனர் தவிர்த்து பிற இனத்தார் குறிப்பாக இந்தியர் மற்றும் எந்த இஸ்லாமியர் ஆனாலும் உணவு மிகவும் அறைகூவலான ஒன்று, அசைவ உணவுப் பிரியர்கள் சமாளிக்க முடியும், சைவர்களுக்கு உணவு மிகவும் கடினம், இஸ்லாமிய உணவான ஹலல் அதைவிடக் கடினம். நான் முன்கூட்டிய சப்பாத்தி, இட்லி மற்றும் உடனடி அரிசி நூ(டு)ல்(ஸ்) (சீனாவுக்கே நூடுல்ஸ்!) கொண்டு சென்றிருந்தேன். என்னுடன் வந்திருந்த சீனர்களுக்கு அங்கிருக்கும் உணவு பொருட்ட அல்ல என்றாலும் அவர்களுடைய சுவையும், உணவுக் கூட்டும் (இன்கிரியண்ட்) வேறுபட்டது என்பதால் தேர்ந்தெடுத்த ஒரு சில உணவுகளை நாடுகிறார்கள். அன்று மதியம் விமானத்தில் கொடுக்கப்பட்ட உணவு எனக்கு போதுமானதாக இருந்ததால் மெக்டோனல்ட் போன்ற ஒரு கடையில் உருளைத் துண்டுகள் (ப்ரஞ்ச் ப்ரைஸ்) மற்றும் சோயா பாலுடன் உணவை முடித்துக் கொண்டேன்.
(Shanghai - Suzhou Huning Exp. way)
இரவு உணவை முடித்த பிறகு சூச்சூவ் நோக்கி இரவு 8:20 வாக்கில் அலுவலக ஊர்தியிலேயே சென்றோம், ஷாங்காயிலிருந்து சுமார் 100 கிமி தொலைவில் அமைந்திருக்கிறது சூச்சூவ் , ஷாங்காயிலிருந்து சூச்சூவ் - விற்கு அதிவிரைவு தொடர்வண்டி (புல்லெட் ட்ரெயின்) சேவைகள் உண்டு 20 நிமிடங்களில் அடைகிறது. ஷாங்காய் - சூச்சூவ் 100 கிமி தொலைவு என்றாலும் அது ஒரு தொடர்ச்சியாகத்தான் இருக்கிறது, அதாவது இருநகரங்களுக்கும் இடையே தொடர்சியாக வீடுகளும் தொழில் கூடங்கள், கட்டிடஙகள் வழிநெடுகிலும் உண்டு, ஷாங்காய் - நான்ஜிங் அதிவிரைவு பெருஞ்சாலையின் வழியில் ஷாங்காயின் துணை நகரமாக சூச்சூவ் அமைந்திருக்கிறது (கூகுள் வரைபடத்தில் தெளிவாகப் பார்க்கலாம்). சென்றடையும் போது இரவு 9:20 ஆகி இருந்தது.120 கிமி வேகத்தில் (நான்கு வாகனங்கள் வழித்தடத்துடன்) செல்லும் அளவுக்கு சாலையின் நீளமும் அகலமும் அமைந்திருந்தது. சீனா என்றதும் மக்கள் நெருக்கம் அமையப் பெற்ற இந்தியாவைப் போன்ற இன்னொரு நாடு என்கிற நினைப்பை முற்றிலும் மாற்றி இருந்தது சாலைகளும், கட்டிடங்களும், தட்பவெப்பமும் என்றால் மிகையல்ல.

*****

சூச்சூவ் நகரில் ஷாங்காயைப் போல் வின்முட்டும் கட்டிடங்கள் ஓரு சில இருந்தன, இன்னும் ஐந்தாண்டுகளில் 100க் கணக்கான உயரக்கட்டிடங்கள் எழுவதற்கான கட்டுமானங்கள் நடந்துவருகின்றன. சுமார் 100 கிமி பரப்பளவில் நிறைய தொழில் பூங்காக்கள், பலமாடிகளுடன் அமைந்த தொகுப்பு வீடுகள், நேரான சாலைகள், நூற்றுகணக்கான மேம்பால சாலைகள், மருத்துவமனைகள், நட்சத்திரவிடுதிகள், விளையாட்டு மைதானங்கள், அழகிய ஏரிகள், அதனை ஒட்டிய பூங்காக்கள், தொகுப்புக் கடைகள் (மால்)காட்சிக் கூடங்கள், அறிவியல் மையங்கள், கடைத் தெருக்கள் நிறைந்து காணப்படுகின்றன. மேற்சொன்னது போல் பெயர் பலகைகளில் சீன எழுத்துக்கள் தவிர்த்து அந்த நகரை சீனாவின் ஒரு பகுதி என்று நம்புவது கடினம் போல் முற்றிலும் ஐரோப்பிய நாடுகளின் நகரைப் போன்றே இருந்தது. கேபிள் தொலைகாட்சி சேவையில் 100க் கணக்கான சீன சானல்கள், அதில் ஒன்றில் அனுபம்கெர் மாண்ட்ரினில் பேசும் நெடுந்தொடர் ஓடியது (டப்பிங் என்றே நினைக்கிறேன்)

குப்பைகளை யாரும் வீசி எறிவதில்லை, தூய்மைக்கு சிங்கப்பூரைப் போன்றே சூச்சூவ் நகரும் எடுத்துகாட்டாக உள்ளது. புகைச்சலான வாகனங்கள் எதையும் பார்க்க முடியவில்லை. இரவில் ஒரு சில பிச்சைக்காரர்கள் தொண்படுகிறார்கள், மற்றபடி அந்த நகரின் உள் அமைப்புப்படி ஏழைகள் வசிக்க வாய்ப்பே இல்லை என்பதால் பணக்காரக் களையுடன் காட்சி அளிக்கிறது நகர். முற்றிலும் பணக்காரத் தன்மை இருந்தால் அங்கு பணத்தை இரைத்து நகரை ஒழுங்குபடித்தி வைத்திருக்க முடிகிறது என்றே நினைக்கிறேன். நகருக்கு வெளியே 15 கிமி தொலைவே நெருக்கமான வீடுகள் அமைந்த கிராமங்கள் காணப்படுகின்றன, அங்கிருந்து துப்புறவு தொழிலாளர்கள் சூச்சூவ் நகருக்கு வந்து செல்கிறார்கள். சீனாவில் எந்த நகரிலும் எனக்கு தெரிந்து ஒரே ஒரு அருவெறுப்பான காட்சி கழிவரையில் துடைக்கும் தாளை கழிவரையனுள் ஒரு குப்பை கூடை வைத்து அதனுள் போடுகிறார்கள். மற்ற நாடுகளில் கழிவுடன் துடைக்கும் தாளை போட்டு தண்ணீர் திறந்துவிடுவது தான் வழக்கம்,. இவர்கள் அதை தனியாக சேகரித்து என்ன செய்கிறார்கள் ? மறுப்பயனீடா ? சீனத் தயாரிப்புகளில் தாளில் செய்யப்பட்ட பொருள்களை வாங்கலாமா என்றெல்லாம் யோசனை வந்தது. நான் அதுபற்றி விவரம் கேட்டபோது யாருக்கும் அதற்கான காரணம் தெளிவாகத் தெரியவில்லை. சீனாவில் வெஸ்டர்ன் டாய்லெட் அறிமுகம் இல்லாத காலங்களில் கழிவை பொட்டலம் கட்டுவதன் வழக்கமாக இந்தப் பழக்கம் தொடர்ந்து இருக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். பயன்படுத்தப்பட்ட ஆணுறைகள் மறுபயனீடாக வேறுறொரு பொருளின் தயாரிபில் இருந்தது அண்மையில் தெரிய வந்து சர்சைக்குள்ளானது. நேற்று ஒரு பதிவில் சிறுவர்களின் சிறுநீரில் அவித்த முட்டை சீனாவில் விரும்பி உண்ணுகிறார்கள் என்ற செய்தியையும் படித்தேன். இவையெல்லாம் சீனாவில் சில அருவெறுப்பான நடைமுறைகள் தொடர்கின்றன என்பதற்கு சான்றாக உள்ளன. மற்றபடி தொழில்வளத்திலும், உள் கட்டமைப்பிலும் வியத்தகு வளர்ச்சி கண்டுள்ளது. அதனை எட்டிப்பிடிக்க இந்தியாவிற்கு 20 ஆண்டுகள் கூட ஆகலாம்.





உலகின் எந்த நாட்டில் வசிக்கும் சீனர்கள் அவர்களின் மொழிப் பிரிவில் எதை தாய்மொழியாகக் கொண்டிருந்தாலும் அனைவரும் அறிந்த மொழியாக மாண்டரின் மொழி அவர்களிடையே பேசப்படுகிறது, பயிற்றுவிக்கப்படுகிறது. சீனாவின் ஒவ்வொரு மாகானத்திலும் தனித்தனி தாய்மொழி இருந்தாலும் அவர்களுக்கான பொது மொழி மாண்டரின். சூச்சூவ் என்பது கூட அதன் மொழிப் பிரிவின் பெயர் தான். எந்த ஒரு சீனரும் எந்த ஒரு பிறப் பகுதி சீனருடன் உரையாட மாண்டரின் பயன்படுத்துகிறார்கள். சீனாவின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு இந்த பொது மொழி பயன்படுகிறது, அலுவலக மொழியாகவும் மாண்டரின் பயன்படுத்துகிறார்கள். சீனாவில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் மிகவும் குறைவு. எங்களது சீன அலுவலகத்தில் ஆங்கிலம் தெரிந்தவர்களே இல்லை. 99 விழுக்காட்டினர் சீனாவில் ஆங்கில அறிவு அற்றவர்களாக உள்ளனர். ஆனால் சாலைகளின் பெயர்கள் மற்றும் பிற தகவல் பலகைகள் ஆங்கிலத்திலும் எழுதப்படுகிறது. அந்த வகையில் ஆங்கிலம் தெரிந்தவர்கள் சீனாவினுள் சென்று வர வாய்ப்பு ஏற்படுத்தித் தரப்படுள்ளது. மாண்ட்ரின் மொழி சொம்மொழி மற்றும் இலக்கிய வளம் நிறைந்த மொழி என்பதால் அவர்களால் அதை சீனர்களுக்குள் பொதுப்படுத்திக் கொள்ள முடிந்தது.

நம் இந்தியாவில் இந்தியை அவ்வாறு கொண்டு வர முயற்சித்து தோல்வியில் முடிந்தது, காரணம் இந்தியில் இலக்கிய வளமோ, செம்மொழி தகுதிகள் எதுவுமே இல்லாத ஒரு வளர்ச்சியடையாத மொழி (ட்ரைபல் லாங்குவேஜ், இந்தி அபிமானிகள் மன்னிக்க), குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் தொடர்பு மொழி என்பதைத் தவிர்த்து சீனர்களுக்கு ஆங்கிலத்தின் பயன் குறைவு. ஏனெனில் அனைத்து வகையான படிப்புகளையும் சீன மொழியிலேயே அவர்களால் படித்துவிடும் அளவுக்கு அவர்களின் மொழியில் இலக்கிய வளம் உண்டு. இந்தியாவில் ஒரு காலத்தில் சமஸ்கிரதம் பொது மொழி என்ற தகுதியுடன் வளைய வந்தது. வேதம் படிப்பவனை நக்கை அறு மூக்கை அறு என்று மனுவா(ந்)திகள் மொழி ஆளுமையை கையில் எடுத்ததும், பிறரால் சமஸ்கிரதம் புறக்கணிக்கப்பட்டது. என்னைக் கேட்டால் ஆங்கிலம் இந்தியாவிற்கான பொதுமொழிக்கான அனைத்துத் தகுதிகளையும் கொண்டது என்பேன். ஆங்கிலம் பொதுமொழியானால் இந்தியர்களுக்கு அது உலக நாடுகளுடன் ஆன தொடர்பிற்கும், தொழில் வளர்த்திற்கும் எல்லாவிதத்திலும் பயனளிக்கும், இந்தியா சீனாவிற்கு கடுக்காய் கொடுக்க ஆங்கில அறிவே முதன்மையாக உள்ளது. இந்தியாவின் மொழிதான் இந்தியாவின் பொதுமொழிக்கான தகுதி பெற்றதாக அமையமுடியும் என்ற கூற்றை நான் வெகுவாகவே எதிர்கிறேன். ஏனெனில் இந்தியாவில் இந்தி நுழைந்ததற்கும் ஆங்கிலம் நுழைந்ததற்கும் ஒரு சில நூற்றாண்டுகளே வேறுபாடு என்பதை எவரும் மறுக்க முடியாது.





(Jinjihu - Lake)
சூச்சூவ் நகருக்குச் செல்வோர் அங்கிருக்கும் அழகிய ஏரிகளை தவிர்க்கக் கூடாது. "ஜின்ஜிஹு" என்ற பெயருடன் அழகிய ஏரி நகரின் நீர் தேவைகளை நிறைவு செய்வதுடன், வார இறுதியின் பொழுது போக்கிடத்தின் ஒன்றாகவும் அமைந்திருக்கிறது. "hu" என்றால் ஏரியாம், அப்படி என்றால் அந்த ஏரியின் பெயர் "ஜின்ஜி" அதே போன்று சாலைகளின் பெயர்களுடன் "லு" அமைந்திருக்கிறது, லு என்றால் சாலை. முகமன் கூற "நீ ஹாவ்" என்கிறார்கள் அதாவது அதன் பொருள் "நீங்கள் நலமா ?" அதற்கு விடையாக "ஹாவ்" என்றால் நலம் என்று பொருள். "ஸ்ஸீ.....ஸ்ஸீ(xie xie)" என்றால் நன்றி வருகிறேன் என்று பொருள். சீன மொழிக்கும் தமிழுகும் பொதுவான சொல் "நீ", தமிழில் அதன் பொருள் முன்னிலை ஒருமை. சீன மொழியில் முன்னிலை மட்டுமே ஒருமை பண்மை விகுதி தனியாக சேர்த்துக் கொள்கிறார்கள்.

நகரில் பொதுப் போக்குவரத்து பேருந்துகள் முழுக்க முழுக்க குளிரூட்டப்பட்டவை, நடத்துனர் கிடையாது. ஓட்டுனர் மட்டுமே. வாடகை சிற்றுந்துகளில் ஓட்டுனரைச் சுற்றிலும் பாதுகாப்புத் தடுப்பு உள்ளது. அதன் மூலம் ஓட்டுனர் சமூக எதிரிகளால் தாக்கப்படுவது தடுக்கப்படுவதும், அவரிடம் இருந்து பணம் பிடுங்கிக் கொண்டு ஓடுவதும் தவிர்க்கபடுகிறதாம். நகருக்குள் சுற்றிப்பார்க்க சுற்றுலா நிறுவனங்கள் ஏற்பாடு செய்து தருகின்றன. சைவ உணவு ? அது பெரிய இடற் இல்லை. சீன உணவு எல்லாம் (ஆர்டரின் பெயரில்) உடனடியாக செய்து தரப்படுபவை. நமக்கு தேவையான சீன உணவு வகையில் அசைவம் தவிர்த்து சமைக்கச் சொல்லிக் கேட்டால் கிடைக்கிறது. குழாய் தண்ணீர் குடிப்பதற்கேற்ற சுவையில் இல்லை. ஷாங்காய் புத்தோங் விமான நிலையம் சிங்கப்பூர் அளவுக்கு சிறப்பாக இல்லை என்றாலும் சர்வதேச தரத்துடன் அமைந்திருக்கிறது. சிங்கப்பூர் 40 ஆண்டுகளில் கண்ட வளர்ச்சியை சூச்சூவ் 5 ஆண்டுகளில் கண்டுள்ளது, இதற்கு முதமைக் காரணம் சிங்கப்பூர் தொழில் அதிபர்களின் சூச்சூவ் நகரில் செய்துள்ள முதலீடு ஆகும். சிங்கப்பூரில் உள்ள இந்தியர்கள் இந்திய இந்தியர்களிடம் தங்களுக்கு கொம்பு முளைத்துள்ளது போன்று நடந்து கொள்வதைப் போலவே சீனாவிற்கு வெளியே பிற நாடுகளில் வசிக்கும் சீனர்கள், சீனாவின் சீனர்கள் வளர்ச்சி கண்டிருந்தாலும் அவர்களைப் பற்றி இவர்கள் அவ்வாறே நினைப்புக் கொண்டிருக்கிறார்கள், கொள்கிறார்கள். வளர்ந்த நாடுகளில் வசிப்பவர்கள் யாரும் வளரும் நாடுகளின் வளர்ச்சியை போற்றுவதில்லை, காரணம் பொறாமை என்பதைவிட ஒப்பீட்டு அளவில் தாங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்வதற்கான காரணம் மறைந்துவருகிறது என்கிற தாழ்வுணர்ச்சியாகக் கூட இருக்கும் என்றே நினைக்கிறேன்.









(புறநகர் பகுதி மற்றும் சுற்றுலா தலம், டைகர் ஹில்ஸ் சீனக் கோவில்)

போதுமென்றே நினைக்கிறேன். எழுதத் தகவல்கள் இருந்தாலும் படிப்பவரின் அயற்சியையும் கருத்தில் கொண்டு முடித்துக் கொள்கிறேன். நல்லது நண்பர்களே. எழுத்துப் பிழைகளை பொறுத்துக் கொள்க. மடிக் கணனியில் தட்டச்சும் பொழுது எழுத்துப் பிழைகள் தட்டச்சு விசை மாறுபாடுகளால் ஏற்பட்டுவிடுகிறது. மேசைக்கணிணியில் என்னால் பிழையின்றி தட்டச்ச முடியும்.

7 மார்ச், 2011

திமுக - காங்கிரஸ் ஒன்று படுமா ?

அரசியல் கட்சிகளின் கூட்டணி துரோகங்கள் அரசியல் களத்திற்குப் புதியவை அல்ல. மாநிலம் தோறும் நடப்பவை தான். இப்போதெல்லாம் தேர்தல்காலக் கூட்டணிகள் தோர்தலுக்குப் பிறகு எப்படிச் செயல்படலாம் என்ற திட்ட வரையறையை முன்கூட்டியே முடிவு செய்துவிட்டு கைகோர்கின்றன. இதன்படி தேர்தலுக்குப் பின் அணிமாறும் மருத்துவர் இராமதாஸ் போன்றே அனைத்துக் கட்சிகளும் நடந்து கொள்கின்றன. தமிழக காங்கிரசின் திட்டம் திமுகவுடன் கூட்டணி ஆட்சி என்று ஒப்பந்தம் போட்டு தேர்தலுக்கு பிறகு அதிமுகவுடன் கூட்டணி அமைத்து திமுகவை ஒடுக்குவதே. இதன் மூலம் ஸ்பெக்டரம் விவகாரத்திற்கும் தங்களுக்கும் தொடர்பில்லை என்று ஒட்டுமொத்த இந்தியாவிற்கு திமுகவே காரணம் என்று காட்டிவிட்டு தொடர்கைதுகளை நடத்த காங்கிரசு திட்டமிட்டு இருந்தது. இதனை அறிந்து கொண்ட கருணாநிதி காங்கிரசின் கூட்டணி ஆட்சி என்ற கோரிக்கைக்கு உடன்படாமலும், முடிந்தவரை காங்கிரசின் கூட்டணி இடங்களைக் குறைப்பதன் மூலம் அதனைத் தடுக்கமுடியும் என்று நினைத்தார். திமுகவின் மனநிலை அறிந்து கொண்ட காங்கிரசும் முடிவில் இறங்கிவர மறுத்தது. காங்கிரசை வைத்துக் கொண்டாலும், கழட்டிவிட்டாலும் பாதிப்பு என்று உணர்ந்த கருணாநிதி காங்கிரசை கழட்டிவிடுவதே சரி, அதுவும் விஜயகாந்த் அதிமுக கூட்டணிக்குச் சென்ற பிறகு செய்தால் காங்கிரசால் தனித்து நிற்பதைத் தவிர்த்து ஒன்றும் செய்துவிடமுடியாது, தனித்து நின்றால் அவர்கள் வெற்றிபெறமாட்டார்கள், அதிமுகவுடன் சேர்ந்து தனக்கும் கட்சிக்கும் அவர்களால் ஆபத்து ஏற்படுத்த முடியாது என்றே முடிவெடுத்து இருக்கிறார் என்றே நம்ப வேண்டி இருக்கிறது.

மற்றபடி காங்கிரஸ் இத்தைகைய துரோக அரசியலுக்கு வரைபடம் வைத்திருக்காவிடில் காங்கிரசுடன் கைகோர்த்து கூட்டணி அரசமைப்பதில் திமுகவிற்கு எதுவும் கவுரவப் பிரச்சனை இருப்பது போல் தெரியவில்லை, ஏனினெல் கடந்த 7 ஆண்டுகளாக காங்கிரசுடன் கைகோர்த்து மத்திய அமைச்சரைவையில் கனிசமான இடங்களைப் பெற்ற திமுக, சட்டசபைத் தேர்தலிலும் அத்தகைய புரிந்துணர்வில் கூட்டணி அரசாகத் தொடர்வதில் சிக்கலோ, தன்மானத்திற்கு இழுக்கு என்பதற்கோ அரசியல் மொழியில் எதுவுமே இல்லை. கருணாநிதி கூட்டணி அரசு என்பதை ஒப்புக் கொள்ளும் மனநிலையில் இருந்தாலும் தேர்தலுக்குப் பிறகும் அதைத் தொடர்வதற்கு காங்கிரஸ் விரும்பவில்லை, திமுகவை கழட்டிவிடுவதன் மூலம் மிஸ்டர் க்ளீன் என்று தனது மத்திய அரசை காட்டமுடியும் என்று காங்கிரஸ் நம்புகிறது, சட்டமன்றத் தேர்தல் உடனடியாக இல்லாவிடில் காங்கிரஸ் - திமுக உறவு என்றோ முடிவுக்கு வந்திருக்கும், திமுகவுடன் நிபந்தனைகளுடன் இணைந்து சட்டமன்றத் தேர்தலுக்குப் பிறகு கழண்டு கொள்ளலாம் என்கிற காங்கிரசின் திட்டம் பொய்யாகிப் போய் இருக்கிறது. காங்கிரசை தனிமைப்படுத்தியது கருணாநிதியின் சாணக்கியத்தனம் என்று திமுகவினர் பெருமைப் பேசிக் கொண்டாலும் தலைவரின் குடும்பத்துக்கும் அரசியலுக்கும் இனிதான் ஆபத்தே என்று உணர்ந்துள்ளனர். எவ்வளவு அடித்தாலும் எங்களுக்கு வலிக்கவில்லையே என்கிற பாணியில் கருணாநிதியின் முடிவுக்கு தொண்டர்கள் பட்டாசு வெடித்தாகச் செய்திகள் வருகின்றன. காங்கிரஸ் தரப்பிலும் இதுவே தான்.

ஸ்பெக்டரம் விவகாரத்தில் ராசா கைது திமுகவினருக்கு காங்கிரஸ் அரசால் அவமானம் என்றால், அதே ஸ்பெக்டரம் விவகாரத்தால் திமுகவினால் காங்கிரசின் ஒட்டுமொத்தப் பெயரும் கெட்டுவிட்டதாக காங்கிரசார் கருதுகின்றனர். இவ்வளவு கொதிப்புகள் தொண்டர்களிடையே இருந்தாலும் மேல் மட்டத்தில் காங்கிரஸ் தரப்பில் திமுகவின் மீது பெரிதாக நடவடிக்கை எடுக்காததற்குக் காரணம் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டே. திமுகவுடன் பேசி அதிக இடங்களைப் பெற்றுவாருங்கள், எங்களுக்கு எதிராக நீங்கள் நிற்கும் தொகுதிகளில் உங்களுக்கு வாக்களிக்கிறோம் என்று அதிமுக காங்கிரசுடன் இரகசிய ஒப்பந்தம் செய்திருக்க வேண்டும் என்றே கருத வேண்டி இருக்கிறது.

காங்கிரசின் திட்டம் பலிக்காமல் போனதால் காங்கிரஸ் திமுக அரசின் மீது கடுங்கோபத்துடன் இருப்பதும், அதன் வெளிப்பாடுகள் ஓரிரு நாளில் தெரியவரும் என்று அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள். இதையும் மீறி காங்கிரஸ் திமுவுடன் சுமூகமாகப் பேசி 60 இடங்களைப் பெற்றுக் கொண்டாலும், பின்னர் அதிமுகவுடன் கைகோர்க்கப் போவது உறுதிதான். ஏனெனில் ஒரு மாநில அரசியலில் கிடைகும் லாபத்தைவிட ஒட்டுமொத்த இந்திய அறுவடையையே காங்கிரஸ் விரும்புகிறது, அது ஸ்பெக்டரம் விவகாரத்தில் திமுகவை கைகாட்டிவிடுவதன் மூலமே நடக்கும் என்று காங்கிரஸ் வியூகம் அமைத்திருக்கிறது.

காங்கிரஸ் தனித்து நின்றாலும் இப்போதைய அரசியல் துரோகங்களையும், வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முனையும் எத்தனிப்பையும் ஒன்று சேர்ந்துப் பார்த்தால் அதிமுகவினர் காங்கிரசார் தங்களை எதிர்த்து நிற்காத தொகுதிகளில் வாக்களிப்பர். இப்படிச் செய்வதன் மூலம் அதிமுக - காங்கிரஸ் உறவுகள் புதுப்பிக்கப்படலாம், ஜெ வும் தன் மீதான வழக்குகளில் தற்காத்துக் கொண்டு இழந்த ஆட்சியைக் கைப்பற்றுவார்.

********

வரப்போகும் தேர்தலில் திமுகவிற்கே பாதிப்பு, ஒருவேளை இழுபறியில் ஆட்சி அமைத்தாலும் காங்கிரஸ் மைய அரசுத் தலைமை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை எழுப்பி கவர்னர் ஆட்சியை ஏற்படுத்தினாலும் திமுகவினரால் ஒன்றும் செய்யவே முடியாது, மேற்கண்ட இவை யாவும் என் ஊகங்கள் என்றாலும் நடைபெற சாத்தியம் உள்ளவை தான் என்பதை எவரும் மறுக்கமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். 90களில் ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் முடங்கிக் கிடந்த திமுக திராவிட உணர்வு என்ற திராவிட உணர்வாளர்களின் அரவணைப்பினாலும், அதிமுவின் ஊழல் குறித்து மக்கள் எதிர்ப்பினாலும் வளர்ந்து ஆட்சியில் அமர்ந்து ஜெவுக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது. குடும்ப ஆட்சி, ஊழல் ஆகியவற்றில் சிக்கி, காங்கிரசின் இரும்பிப் பிடியில் பிழியப்பட்டு கிடந்தாலும், ஈழத் தமிழர்களின் நலன் கருதி இருந்தால் திமுக தொடர்ந்து பிழைத்திருக்கும், ஏனென்றால் குடும்ப அரசியலோ, ஊழலோ ஒரு அரசியல் கட்சியையும், தலைமையையும் புறக்கணிக்க பெரியக் காரணம் இல்லை. இருந்தாலும் இனத் துரோகம் சகிக்க முடியாது என்பதால், வருத்தம் வருத்தம் தான் என்பதுத் தவிர்த்து திமுகவின் இன்றைய நிலையும், அதற்கான ஆதரவும் என்பது பற்றி இதற்கு மேல் கருத்துக் கூற வெறொன்றுமில்லை.

6 மார்ச், 2011

கூட்டணி முறிந்தது அடுத்து என்ன ?

நேற்று தான் அழகிரி 'விஜயகாந்த் தன்மானமிக்கவர் அதிமுகவுடன் கூட்டணி பற்றி இன்னும் வாய்திறக்கவில்லை' என்று கூறி கடைசிகட்ட சந்தேகப்பார்வையை அதிமுக விஜயகாந்த் மீது வீசும், என்ற நம்பிக்கையில் அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்படுத்த முயற்சித்தார். அடுத்த நாளே ஜெவும் விஜயகாந்தும் கூட்டணி என்று ஊடகங்களில் வந்தார்கள்.
தேர்தல் தேதி அறிவித்ததைச் தொடர்ந்து கூட்டணி முடிவுகள், முடிச்சுக்கள், முழுக்குகள், முறிவுகள் என அடுத்தெடுத்து அரங்கேறி ஊடகங்களுக்கு தீணி போட்டுவருகின்றன. அரசியலில் ஆர்வம் இல்லாதவர்கள் கூட அரசியல்வாதிகளின் ஊழல்கள், திருவிளையாடல்கள், நம்பிக்கைத் துரோகங்களினால் ஏற்படுத்தப்பட்ட மறைமுக / நேரடி பாதிப்புகளால் அடுத்து என்ன நடக்கும் என்று காது கொடுத்துக் கேட்கக் கூடிய நிலைக்கு மாற்றிக் கொண்டுள்ளனர்.

மத்திய அரசை ஏற்படுத்தும் போது மதவாத பாஜக, தமிழின எதிரி காங்கிரசா என்றதில் கூட இந்திய இறையாண்மைக்கு பாதுகாப்பாக வாக்களிப்போம் என்று தமிழ்நாட்டின் பெரும்பான்மையினர் மதவாதத்திற்கு எதிராக வாக்களித்தது சற்று ஏமாற்றமாக இருந்தாலும் கூட தமிழக சட்டசபைத் தேர்தலுக்கு எப்படி வாக்களிக்கப் போகிறார்கள் குழம்பிய சூழலில் ஸ்பெகட்ரம் ஊழல் விவகாரம், காமன் வெல்த் ஊழல் என மத்தியில் ஆளும் கூட்டணி கட்சியினரினால் இந்திய பொருளாதாரச் சூழல் சுரண்பட்டுள்ளதால் மக்கள் தெளிவான முடிவெடிக்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது தெரிகிறது. இந்த சந்தர்பத்தைப் பயன்படுத்திக் கொண்டு தங்களது வீழ்ச்சியையும் எழுச்சியையும் சரி செய்து கொள்ள அதிமுக - தேமுதிக கூட்டணிகள் ஒன்று சேர்ந்துள்ளது.

தமிழ் நாட்டில் காங்கிரசு ஆட்சி அல்லது ஆட்சியில் பங்கு என்ற கனவில் இருக்கும் காங்கிரஸ் திமுகவிற்கு நெருக்கடிக் கொடுக்கவும், கூட்டணி ஆட்சிக்கு ஒப்புக் கொள்ள மனமில்லாத நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணி அரசில் இருந்து விலகுவதாகவும் பிரச்சனை அடிப்படையில் ஆதரவளிப்பதாகவும் அறிவித்து, தமிழ்நாட்டில் காங்கிரசுடன் கூட்டணி இல்லை என்பதை இதன் மூலம் காங்கிரசாருக்கு அறிவித்திருக்கிறது.

திமுக - காங்கிரஸ் கூட்டணி சேரும் மகனுக்கு மத்திய அமைச்சர் பதவியைப் பெற்றுவிடலாம் என்று நினைத்து திமுகவில் இணைந்த பாமக தான் தற்போது செய்வதறியாது திகைத்துள்ளதாக நினைக்க முடிகிறது. ஏனெனில் பாமகவிற்கு அதிமுக, திமுக எந்த ஒரு கட்சியிலும் கூட்டணி அமைப்பது சிக்கல் இல்லை என்றாலும் திமுக ஆதரவினால் மட்டும் தான் அன்பு மணிக்கு மத்திய அமைச்சர் பதவி என்ற வாய்ப்பு இருந்ததால், ஊழல் விவாகரங்கள் இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தொடர்பில்லாதது போல் குடும்ப நல அரசியலில் திமுகவில் இணைந்து கையெழுத்திட்ட பாமக நிறுவனர் இராமதாசுக்கே இழப்பு, (இதைத் தவிர்க்கவே) கிடைத்த இடங்களில் சிலவற்றை விட்டுக் கொடுக்கவும் பாமக முன்வந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மூழ்கிக் கொண்டிருக்கும் கப்பலில் ஏறிவிட்டதாக உணரும் இராமதாசுக்கே காங்கிரஸ் - திமுக கூட்டணி முறிவு பேரிழப்பு. மற்றபடி திருமாவளவனுக்கோ, திமுவுடன் இணைந்த உதிரிகட்சிகளுக்கோ எந்த இழப்பும் கிடையாது. அவர்களுக்கு எதிர்பார்ப்புகள் இல்லாததால் வந்த வரை வெற்றிபெற்றால் இலாபமே.

காங்கிரஸ் தனித்து நின்று தனது பலத்தை சோதனை செய்து கொள்ள இது நல்ல வாய்ப்பு தான். விஜயகாந்து கடந்த தேர்தல் முடிவின் பிறகு சொன்னது போல் எங்களுக்கு 10 விழுக்காட்டு வாக்காளர்கள் (அல்லது அதற்கும் குறைவோ) ஆதரவு கொடுத்துள்ளனர் என்றோ சொல்லிக் கொள்வதுடன் வாக்கு வங்கியின் கையிருப்பை அறிந்து கொள்ளலாம்.

திமுக காங்கிரஸ் அல்லாத தற்போதைய கூட்டணியைத் தொடரும் போது கனிசமான வெற்றிகளைப் பெரும் என்றாலும் ஆட்சி அமைக்கும் அளவிற்கெல்லாம் வெற்றிபெற்றுவிட முடியாது, காங்கிரசுடன் கூட்டணி தொடர்ந்தாலும் இதே நிலை தான் கொஞ்சம் கூடுதலாக சட்டமன்ற இடங்கள் கிடைக்கலாம். இதை சந்தர்பமாகப் பயன்படுத்திக் கொண்டு விஜயகாந்தை கலட்டிவிட்டுவிட்டு காங்கிரசுடன் கைகோர்தால் அதிமுக தமிழகத்தில் காணாமல் போகலாம். ஜெ அவரசப்பட்டு அந்த முடிவை எடுக்கமாட்டார் என்றே நம்புவோம்.

எனக்கென்னவோ தேர்தலுக்கு முன்பே அதாவது இன்னும் ஓரிரு காங்கிரசும் திமுகவும் சமாதானமாகவே போவார்கள், 60 இடங்களைப் பெற்றுக் கொண்டு காங்கிரஸ் திமுகவுடன் தொடரும் என்றே நினைகிறேன். ஏனெனில் காங்கிரஸ் தனித்து நிற்கும் தற்கொலை முடிவுக்குப் போகாது உடன்கட்டை தம்பதிகளைப் போல் தான் இணைந்து தேர்தலை சந்திப்பார்கள். காரணம் இருவரின் அரசியல் ரீதியான தில்லுமுல்லுகளை இருவருமே அறிந்திருக்கிறார்கள், நீதிமன்றத் தலையீட்டினால் மட்டுமே ஸ்பெக்டரம் விவாகரம் சூடுபிடித்தது. அதைவைத்து மிரட்டி சட்டமன்றத் தொகுதிகளைப் பெறமுடியும் என்று நம்பியதும், அதற்கான நடவடிக்கையும் காங்கிரசின் விடா(கண்டன்) முயற்சியே. முயற்சியின் தோல்வியை உணர்ந்து காங்கிரசு திமுகவுடன் வேறு வழியில்லாமல் கைகோர்கும்.

3 மார்ச், 2011

மனதை நெருடிய படம் !

ஒருலட்சத்து 75 கோடி ஊழல் செய்கிற நாட்டில் ஏழைகள் மேலும் ஏழைகளாகவும் ஏழ்மையை மட்டுமே சொத்தாகக் கொண்டுள்ளார்கள் என்பது இந்தப் படத்தைப் பார்க்கும் போது தெரியவருகிறது.



படம் நன்றி தினமலர்.

**********

பிறந்த குழந்தைகளை வாடகைக்கு விட்டு போக்குவரத்து விளக்கு அருகே நிற்கும் வாகனங்களில் காட்டி பிச்சை எடுப்பது ஒருவகை பிழைப்பு என்றால், மேற்கண்டது போல் ஒரு கூலித் தொழிலாளி மூட்டையாக சுமந்து கொண்டே வேலை செய்யும் பரிதாப நிலை மற்றொருவகைப் பிழைப்பு. உலகமயம், நகரமயம், நிலவிலை ஏற்றம் ஆகியவை இவர்களைப் போன்ற கூலித் தொழிலாளிகளின் கூட்டுக் குடும்பங்களைவிட சிதைத்துவிட்டது, கூலித்தொழிலாளிகள் பெரும்பாலும் குழந்தைகளை முதியவர்களிடம் விட்டுவிட்டு வேலைக்குவருவார்கள், முதியோர்களை முதியோர் இல்லங்களுக்கு துறத்தாத நிலை கூலித் தொழிலாளிகளிடம் இருந்தது, அதற்குக்காரணம் முதியவர்கள் மீதான கரிசனம் என்றாலும் முதியோர் இல்லங்களுக்குச் செலவழிக்கும் அளவுக்கு அவர்களுக்கு வருமானம் இல்லை என்பது மற்றொருகாரணம், தற்போது அவர்களும் கூட்டுக் குடும்பமாக (இப்ப கூட்டுக் குடும்பம் என்றாலே பெற்றோர்களை உடன்வைத்திருப்பது தான்) வாழமுடியாத நிலை, நகரங்களில் குடிசைப் பகுதிகள் அகற்றப்பட்டத்தாலும், பொறம்போக்கு நிலங்களில் அவர்களுக்கு குடியிருக்க அனுமதி இல்லாததாலும் நடைபாதைகளில் குடியிருக்கும் நிலைதான் அவர்களது நிலை. அப்படிப்பட்ட நிலையில் குழந்தைகளை எங்கே விட்டுவருவது ?

ஒன்றாம் வகுப்பில் இருந்து இலவசக் கல்வி வழங்கும் பள்ளிக்கூடங்களுக்கு அனுப்ப குழந்தைகளுக்கு ஐந்துவயதாக ஆகி இருக்க வேண்டும், அதற்கும் குறைந்த வயது குழந்தைகளை யார் பொறுப்பில் விட்டுச் செல்வது ? இவர்கள் வாழும் நிலையில் இவர்களுக்கு குழந்தைகள் ஒரு கேடா ? என்கிற பொதுப்புத்தியுடன் நம்மால் கேள்வி எழுப்ப முடியும். அவர்களிடம் நாடுகள் விட்டுவைத்திருப்பது குழந்தை பெற்றுக் கொள்ளும் உரிமை மட்டுமே. மதிய உணவு போட்டார்கள், அதன் பெயரை மாற்றி சத்துணவு போட்டார்கள், பின் அதில் முட்டை போட்டார்கள். ஆனால் இவையெல்லாம் ஐந்துவயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்குத் தானே. அன்றாடம் காய்சிகளின் ஐந்துவயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கு என்ன கிடைக்கிறது.

இதுபோன்ற காட்சிகள் திரைப்படங்களின் துவக்கக் காட்சியாகவும் பின்னர் அதிலிருந்து நாயகன் எப்படி வெற்றிபெருகிறான் என்பதான நடிகரின் தனிமனித புகழை திரைப்படங்களின் மூலம் வளர்க்க இந்த அன்றாடம் காட்சிகள் பயன்பட்டிருக்கின்றன (உ.ம் மிஸ்டர் பாரத்). இவர்களின் வாக்குக்கு இருக்கும் மதிப்பு தெரிந்தும் கூட இவர்களின் வாழ்வியல் நிலைத்தன்மைக்கு அரசியல்கட்சிகள் எதுவும் செய்துவிடவில்லை. சென்னையில் வீட்டுவேலைக்கு பெண்கள் கிடைப்பது அரிதாகவும் அதில் நம்பிக்கையாளராகக் கிடைப்பது அரிதாகவும் போனதற்குக்காரணமே, சென்னையில் குடிசைகள் குறைந்து போனதே.

வேலை வாய்ப்பு என்பதற்காக நகரங்களுக்கு இடம் பெயர்ந்த ஏழைமக்கள் பிளாட்பாரம் வாசி ஆகிப் போய் இருக்கிறார்கள். வேகமாக வளரும் சொத்து விலை ஏற்றம் கிராமங்களிலும் நெல்வயல்களை விற்பனை மனைகளாக்கி இருக்கின்றன என்பதால் இவர்களால் மீண்டும் கிராமங்களுக்கு இடம் பெயரமுடியாது. அங்காடித்தெருவில் ஒரு சில நிமிடங்கள் வந்து போன 'பிளாட்பார வாழ்கை' 'அடுக்கு மாடிக் கடைகளில் வேலை செய்யும் இளைஞர்களின் வாழ்கையைவிடக் கொடுமையானது.

இதையெல்லாம் எதுக்கு எழுதுகிறேன், இவர்களின் குழந்தைகள் எந்த ஒரு உந்துதலால் பள்ளிக்குச் செல்வார்கள் ? அப்படியே படித்தாலும் அவர்களால் மற்றமாணவர்களுடன் போட்டியிட்டு படிக்க முடியுமா ? இட ஒதுக்கீடு என்பது இடப் பங்கிடே என்பது புரிந்து கொள்ளமல் நடுநிலைவாதிகளாக ஆகும் பலர் இட ஒதுக்கீடு என்பது தகுதியற்றவர்களுக்கு வழங்கப்படுகிறது, அவர்களால் வேலையை திறனுடன் செய்யமுடியவில்லை, அவர்களால் தான் நாட்டில் லஞ்சம் பெருகிவிட்டது என்றும் கூடவே சேர்ந்து வாசிக்கிறார்கள்.

நான் முன்பு பலமுறை எழுதியது தான் 'படிப்பே வேலையாக இருக்கும் ஒரு மாணவன் எடுக்கும் மதிப்பெண்ணும், வேலைக்கு இடையே படிக்கும் மாணவனின் மதிபெண்ணும் ஒன்றாக மதிப்பிட வேண்டும், ஒன்றாகப் போட்டியிடவேண்டும் என்கிறார்கள் பலர், அதற்கெல்லாம் மிஸ்டர் பாரத் படத்தின் நாயகன் போன்று அவதாராங்கள் ஏழைகளுக்கு குழந்தையாகப் பிறந்தால் வாய்ப்புண்டு.

வேலைக்குச் செல்லும் போது பாதுகாப்பாக குழந்தைகளை விட்டுச் செல்லும் குழந்தைப் பாதுகாப்பகம், மாணவர் பாதுகாப்பகம் என்பதில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்கும் அளவிக்கு வசதி அற்ற ஆண் / பெண் என இருவரும் உழைக்கும் ஏழைகளுக்கு ஏதாவது செய்தாகவேண்டும்

ஏழைகளின் வாக்குகளை குறிவைத்து என்னன்வோ இலவசத் திட்டமென்றப் பெயரில் இலவச அடிமைகளை உற்பத்தி செய்வது தேர்தல் அறிக்கையாக கட்சிகள் வைத்திருக்கின்றன, அவற்றின் இடையே உருப்படியாக ஏழைக் குழந்தைகளின் மூன்றுவயதிலான வளர்ச்சிக்கும், அதன்பிறகான கல்விக்கும் வாய்ப்பு வழங்கும் கட்சி எதுவாக இருந்தாலும் நான் வாக்களிப்பேன்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்