பின்பற்றுபவர்கள்

திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
திரை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 டிசம்பர், 2009

வேட்டைக்காரன் வெளிவராத காட்சிகள் !

நான் சென்னையில் இருந்த பொழுது எங்கள் வீட்டின் எதிரே உள்ள பங்களாவில் வேட்டைக்காரன் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்ததாகச் சொன்னார்கள். இரண்டு நாளைக்கு ஒருமுறை அங்கே படப்படிப்பு நடக்கும். கேரவன்கள், உணவு வாகனங்கள், படக்கருவி இழுவை வண்டிகள், உதவியாளர்கள், உதவி இயக்குனர்கள் மற்றும் படத்தில் பணி புரிபவர்கள் என பெரியக் கூட்டம் சூழ்ந்திருந்தது. அன்றைய காட்சி நடிகர் சாயாஜி சிண்டே வேகமாக ஜீப்பில் வந்து பங்களாவில் இறங்குவது போன்ற காட்சி. மூன்று முறை அடுத்தார்கள், அடுத்தக் காட்சியாக விரக்தியாக வீடு கைவிட்டுப் போகிறதே என்பது போல் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறுவது போன்ற காட்சி இதையும் மூன்று முறை எடுத்தார்கள்.

படத்தில் அந்த இரு காட்சிகளுமே இல்லை, ஆனால் வீட்டினுள் பிடிக்கப்பட்டக் காட்சி காட்டப்பட்டு இருந்தது. கதை படி சாயாஜி சிண்டே வில்லனுக்கு ஆதரவான உயர் காவல் அலுவலர். அவரது சின்னவீடு தான் அந்த வீட்டில் இருப்பார். வில்லன் அவரது சின்ன வீட்டையும் வளைத்துவிட வெறுத்துப் போய் வீட்டை விட்டு வெளி ஏறுவார். வீட்டுனுள் வில்லனும், சின்னவீடும் இருக்கும் காட்சியும் அவர்களை ஒன்றும் செய்ய முடியாத விரக்தியில் வெளியே வருவார். வெளியே வந்ததும் சின்ன வீடும், பங்களாவும் கைவிட்டுப் போய்விட்டதே என்று வெறுத்து, வெறுப்பில் பார்த்துவிட்டு ஜீப்பில் ஏறுவார். வீட்டுனுள் எடுக்கப்பட்ட காட்சியை நான் பார்க்கவில்லை. வெளியே எடுத்தக் காட்சியைத் தான் பார்த்தேன். படத்தில் வீட்டுனுள் எடுத்தக் காட்சியே இடம் பெற்றிருந்தது. வெளியே எடுத்தக் காட்சி நீளம் கருதி வெட்டப்பட்டதாக நினைக்கிறேன். காரணம் ஏற்கனவே படம் 3 மணி நேரத்திற்கும் மேல் மாபெரும் இழுவை. வேட்டைக்காரன் படத்தில் சிறப்பாக செய்திருந்தவர்களில் சாயாஜி சிண்டேவும் ஒருவர்.







படப்பிடிப்பைப் பார்த்துக் கொண்டே எங்கள் வீட்டு பால்கனியில் இருந்து நான் படம் எடுத்துக் கொண்டிருத்தேன். எடுக்கக் கூடாது என்று சைகை காட்டினார்கள். சரி என்று சொல்லிவிட்டேன். எடுத்த வரை ஆறு படங்கள் இருந்தது. ஒரு திரைப்படம் உருவாக பலரது உழைப்பும், பெரிய அளவில் பணமும் புழங்குகிறது, திரை உலகம் என்பது மபெரும் தொழிற்சாலை தான். வெற்றி பெற்றால் பணத்துடன் புகழ் வெளிச்சமும் சேர்ந்தே கிடைக்கிறது. அதிலும் டைட்டில் எனப்படும் படத் தலைப்பில் தனியாக பெயர் போடப் படுபவர்களுக்கு மட்டுமே. மற்றவர்களது உழைப்பு பெரிதாக வெளியே தெரியாது என்றாலும் ஒரு படம் தோல்வி அடைந்தால் அந்த மற்றவர்கள் பாதிப்பு அடையமாட்டார்கள், தனியாக பெயர் போடப்படுபவர்கள் தான் பாதிப்பு அடைவார்கள். திரையுலகம் கலை சார்ந்தது என்றாலும் அது ஒரு மாபெரும் சூதாட்டம், ஒரு இயக்குனர் வரிசையாக இரண்டு தோல்வி படங்கள் கொடுத்தால் பிறகு அவருக்கு தயாரிப்பாளரே கிடைக்க மாட்டார். ஆனால் நடிகர்கள் ? நான்கு படம் தோல்வி அடைந்து ஐந்தாவது வெற்றிப்படம் அமைந்தால் அதன் காரணமாக அடுத்த நான்கு தோல்விப் படங்களுக்கு அவருக்கு இயக்குனரும், தயாரிப்பாளர்களும் கிடைப்பார்கள். ஏனென்றால் முகராசி என்பதை திரையுலகம் வெகுவாகவே நம்புகிறது அதுவும் நடிகைகளுக்குக் கிடையாது. எந்த ஒரு வெற்றிப்படமாக இருந்தாலும் பொதுமக்களிடம் நேரடி அறிமுகம் பெற்றவர் என்பதால் ஒரு நடிகரின் புகழ் அந்தப் படத்தின் இயக்குனரை விட வெகுவாகவே பரவும், இயக்குனரின் புகழ் திரையுலகிலும், நடிகர்களைத் தாண்டி திரைப்படங்களை ரசிப்பவர்களிடம் மட்டும் தான் பரவும்.

என்னைப் பொருத்த அளவில் திரைக் கலைஞன் என்றால் முதலில் இயக்குனரே அதன் பிறகு இயக்குனரின் கற்பனைக்கு வடிவம் கொடுக்கும் நடிகர் நடிகைகள். வளர்ந்த நடிகர்களைப் பொருத்த அளவில் ஒரு படத்தின் தோல்வி என்பது அந்த படத்தை இயக்கியவர்களின் தோல்வி (இவளவு பெரிய நடிகரை வச்சே பணம், படம் பண்ணத் தெரியலையே என்பார்கள்). ஒரு படத்தின் வெற்றி அந்த நடிகரின் வெற்றி என்பதாகவும் திரையுலகினுள்ளேயே பிரித்து அறியப்படுகிறது. வளர்ந்த நடிகர் தோல்வி படமானால் அடுத்தப் படத்துக்கு இயக்குனரை மாற்றிக் கொள்வார். வெற்றிப்படம் மென்றால் அடுத்தப்படத்தில் அதைவிட நிறைய செலவு செய்யும் படமாக இருக்க வேண்டும் என்று தயாரிப்பாளரையே மாற்றிக் கொள்வார். திரையுலகம் ஒரு கனவு தொழிற்சாலை என்று சரியாகச் சொல்கிறார்கள். சில கனவுகள் பலிக்கும், பல கனவுகள் பழிக்கும். இதில் நட்டம் அடைபவர்கள் என்றால் இயக்குனரோ, நடிகர்களோ கிடையாது வட்டிக்கு பணம் வாங்கி தயாரிக்கும் தயாரிப்பாளர்களும், படத்தை வாங்கி வெளியிடும் விநியோகஸ்தர்கள் எனப்படும் படம் வெளியீட்டாளர்களும் தான். இயக்குனர்கள், நடிகர்கள் படு தோல்வி என்றாலும் அவர்கள் தஞ்ச மடைய சின்னத் திரையுலகம் இருக்கு. தயாரிப்பாளர் தோல்வி அடைந்தால் கடன் தொல்லையில் தப்பிக்க விடுதி அறையில் தஞ்ச மடைந்து முழம் கயிற்றில் முடித்துக் கொள்கிறார்கள். ஆனால் இது சன்/திமுக, ஏவிஎம் குடும்பம் போன்று பெரிய அளவிலான பலதொழில் புரியும் திரைப்படத் தயாரிப்பாளர்களுக்கு பொருந்தாது, வட்டிக்கு கடன் வாங்கி படம் எடுப்பவர்களுக்குத்தான் அந்த நிலை.

பின்குறிப்பு : வேட்டைக்காரன் விமர்சனம் எழுதினால் பதிவுலகில் இருந்து தள்ளி வைக்கப்படுவீர்கள் என்று பலமான எச்சரிக்கை பல தரப்பினரிடம் இருந்து வந்ததை முன்னிட்டும், வேறு வழியே இல்லாததால் என் பங்குக்கான வேட்டைக்காரன் பதிவு இது என்ற அளவில் எடுத்துக் கொள்ளுமாறு விஜய் ரசிகர்களைக் கேட்டுக் கொள்கிறேன். :)

18 டிசம்பர், 2009

வேட்டைக்காரன்... அடேங்கப்பா !




படம் இன்னிக்கு தான் வெளியாகுது, முன்பதிவு தொடங்குகிறது என்ற கேள்விப்பட்டதும், சிங்கப்பூர், கோல்டன் வில்லேஜ் யூசுன் திரையரங்கில் நேற்று மாலை நுழைவுச் சீட்டு பெற காந்திருந்தவர்களின் நீண்ட வரிசை தான் மேலே பார்க்கும் படம்.

14 நவம்பர், 2009

20...12 சொல்லும் செய்தி !

தீர்ப்பு நாள்... ஏன் இவ்வளவு பேர் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று தெரியவில்லை, உலகெங்கிலும் திரையிட்ட இடங்களிலெல்லாம் அரங்கு நிறைந்து ஓடிக் கொண்டு இருக்கிறது. உலகம் அழிய வேண்டும் என்று நினைப்பவர்களை விட அழியலாம், அழிய வேண்டும் என்று நினைப்பவர்கள் இருக்கிறார்கள். இதற்கு ஆன்மிகம், மத நம்பிக்கை இவை காரணமென்றாலும், அந்த காரணங்களுக்கு வலு சேர்பதாக உலகெங்கிலும் நடைபெறும் தீவிரவாதம், தன்ன நம்பிக்கை இன்மை, மனித உறவுகளுக்கு இடையே இணக்காமான போக்கு இல்லாமை, மனிதர்களின் பேராசைகள், அரசியல் வாதிகளின் தன்னலம், முதலாளித்துவ நாடுகளின், நிறுவனங்களின் பேராசைகள் இவற்றில் எதோ ஒருவகையில் ஒவ்வொருவரையும் வருத்தியே வருகிறது. இன்றைக்கு உலகம் மகிழ்ச்சியாக இல்லை என்று நினைப்போர் விழுக்காட்டு அளவில் மிகுதி. இறப்பு வலியற்றதாக இருந்து மகிழ்ச்சி கொடுப்பதற்கான உறுதி கொடுக்கப்பட்டால் இறப்பதற்கு பலர் ஆயத்தம் என்பது போன்று உலக வாழ்க்கைச் சூழல் அமைந்திருக்கிறது, அதன் காரணமாக உலகம் அழியுமா ? இப்போது தான் உலகம் முற்றிலும் கெட்டுவிட்டதே, ஏசு வருவார், அல்லா சொல்லி இருக்கிறார், கல்கி அவதாராம் ஆலிழை கண்ணன், தீர்ப்பு நாள் அண்மையில் இருக்கிறது.....என்றெல்லாம் மத நம்பிக்கையாளர்கள் சொல்லி வருகின்றார்கள்.

'தீர்ப்பு நாட்களின் அருகாமை' பற்றி சென்ற நூற்றாண்டுகளில் புலம்புயவர்கள் பற்றி நமக்கு பெரிய குறிப்புகள் எதுவும் கிடைக்காததால், அண்மைய புலம்பல்களை வைத்து தற்போது தீர்ப்பு நாள் குறித்த நம்பிக்கை வலுப்பெற்றிருப்பதாக அல்லது விரைவில் நடக்கும் என்கிற எதிர்பார்ப்புகள் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கு இல்லை, 2000 ஆண்டு உலகம் அழியும் என்று பலர் 31.12.1999 வரை சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதன் பிறகு கொஞ்ச நாள் அடங்கி இருந்தது. தீர்ப்பு நாள் பற்றிய மத நம்பிக்கைகள் 2000ல் எதுவும் நடக்கவில்லை என்பதால் அது பற்றிப் பேசுவோர், கவலைப்படுவோர், அதை உண்மை என்று நம்பியோர்கள் கேலிக்கு ஆளாக்கப்பட்டார்கள். மதநம்பிக்கை முற்றிலும் அறைகூவலாக அமைந்த 'தீர்ப்பு நாள்' பற்றி சிறிது காலம் யாரும் பேசவில்லை, இரட்டை கோபுரங்கள் தகர்ந்த போதும் சுனாமி அலைகள் ஏற்பட்ட போதும் 'தீர்ப்பு நாள்' குறித்த பேச்சுகள் மீண்டும் உயிர் பெற்றன. 2000 ஆண்டு வரை உலகில் மாயன் நாள்காட்டி என்று இருப்பதையோ, அதில் 2012ல் உலகம் அழியும் என்கிற குறிப்பு இருப்பதாக எங்கும் பெரிதாகப் பேசப்படவில்லை. 2000 ஆண்டுக்கு பிறகு மாயன் நாட்காட்டி தூசி தட்டி மதநம்பிக்கையாளர்கள் முன்பு மீண்டும் வைக்கப்பட்டு இருக்கிறது. அதை விளம்பரப் படுத்த இணைய தளங்கள், 2012 உலகம் எப்படி அழியும் என்பதைப் பற்றிய அசைபடங்கள், அதற்கான ஆதாரங்கள், சூழல்கள் அமைய இருப்பதாக எழுதப்பட்ட கட்டுரைகள் மீண்டும் 'தீர்ப்பு நாள்' பற்றிய நம்பிக்கைக்கு தூபம் போடத் தொடங்கி, 2012ற்கு இன்னும் மூன்றே ஆண்டுகள் இருப்பதால் அது பற்றிய பேச்சும் மிக மிக, சோனி நிறுவனம் அதைப் பற்றிய படமாக்கி தங்கள் நிறுவனத்திற்கு பணமாக்கி இருக்கிறார்கள்.

வழக்கத்துக்கு மாறாக சூரியனில் ஏற்படும் பெரிய பெரிய தீப்பிழம்புகள் பூமியின் வெப்பத்தை உயர்த்தி அழிவை தொடங்கி வைப்பதாகவும், வட திசை , தென் திசை ஈர்ப்பு விசையின் நேர் எதிர் நிலைகள் மாறுதல் ஏற்படப் போகிறது என்பதாலும் உலகம் அழிவை நெருங்குகிறது, மாயன்கள் அதை தங்களது நாட்காட்டிகளில் 5000 ஆண்டுகளுக்கு முன்பே எழுதி வைத்திருக்கிறார்கள் என்ற கருத்தை ஒட்டி படம் எடுக்கப்பட்டு இருக்கிறது. கிறித்துவ, இஸ்லாம் மத நம்பிக்கைகளில் இருக்கும் 'நோவா' கப்பல் போல், இறுதிக் கட்சியில் வின்வெளி ஓடம் போன்ற பாதுகாப்புடன் செய்யப்பட்ட கப்பல் ஒன்றில் ஜோடி விலங்குகளுடன், சிலர் பிழைத்து புதிய உலகம் காண்கிறார்கள். படத்தில் ஒருவர் 1 பில்லியன் ஈரோ கொடுத்து கப்பலில் இடம் வாங்குவார். உலகமே அழிந்த பிறகு அவரிடம் வாங்கும் ஈரோ செல்லுமா ? அந்தப் பணத்தை வைத்து என்ன வாங்க முடியும் ? ஒரு பணக்காரன் பணபலத்தை வைத்து அந்தக் கப்பலில் பாதுக்காப்பாக இருக்க முயற்சிக்கிறான் என்பதைச் சொல்லுகிறோம் என்கிற பெயரில் ஹாலிவுட்காரர்களும் அபத்தமாக, லாஜிக் இல்லாமல் படம் எடுப்பார்கள் என்பதற்கான காட்டு அது. கணிணி வரைகலையாக (கிராபிக்ஸ்) முழுப்படக் காட்சியும் ஓரளவு நன்றாகவே இருக்கிறது. கிறித்துவ, தேவாலயங்கள், வாடிகன் நகர், இந்து கோவில்களெல்லாம், பிரேசில் ஏசு நாதர் சிலை கூட அப்படியே சாய்ந்து உடைந்து விழுவதாக காட்டப்படும் படத்தில் வளைகுடா நாடுகளை அல்லது ஒரு மசூதி அழிவதாகக் கூடக் காட்டப்படவில்லை, ஒரே ஒரு அரேபிய இஸ்லாமியர் நான்கு பெண்களுடன் அந்த நோவகப்பலில் பயணப்படுவார். 911 க்கு பிறகு ஹாலிவுட்காரர்கள் இஸ்லாமியர் என்றால் வேண்டாம் வீன்வம்பு என்பது போல் ஒதுங்குவது இந்தப் படத்திலும் பின்பற்றப்படுகிறது.

தீர்ப்பு நாளில் காப்பாற்றப்படுபவர்கள், அல்லது புதிய உலகிற்கு செல்வோர் என நல்லவர்களைத் தான் அந்நாளில் காப்பாற்றப்படுவதாக மதக் கதைகள் சொன்னாலும் படத்தில் அப்படியெல்லாம் தேர்வு இல்லை. தீர்ப்பு நாளில் நோவா கப்பலில் பயணம் செய்பவர்களாக யார் யாரைத் தேர்ந்தெடுக்கிறார்கள், எந்த அடிப்படையில் என்றால் அறிவாளிகளையும், நாடுகளின் அதிபர்களையும், பணக்காரர்களையும் தேர்ந்தெடுப்பதாகக் கதையில் சொல்லி இருக்கிறார்கள், அதில் காப்பாற்றப்படுபவர்களில் இந்தியர்கள் யாரும் இல்லை, ஆனால் இந்தியாவில் தான் படம் தொடங்குகிறது. ( இந்து மதத்தையே தீர்ப்பு நாள் அழிவின் மூலம் ஒழிச்சிட்டாங்க :).......மிசெனரிகளின் சதி என்கிற கண்டன ஆர்பாட்டங்கள் படத்துக்கு எதிராக இந்தியாவில் நடக்குமா ? ன்னு தெரியவில்லை.

ஆங்கிலப் படங்களில் வேற்றுகிரகவாசிகள் எத்தனையோ முறை உலகை அழிக்க முயற்சித்தாக அமெரிக்க நகரங்களை கிராபிக்ஸ் மூலம் அழித்து அழித்து அசதியாகி ஒட்டு மொத்த உலகை பகுதி பகுதியாக எரிமலை, பெரும் சுனாமி போன்றவற்றால் இந்தப் படத்தில் உலகை அழித்திருக்கிறார்கள். ரொம்ப எதிர்பார்ப்போடு படத்திற்கு சென்றால் படம் ஈர்க்காது.

படம் என்ன செய்தியைச் சொல்லுது ? அறிவாளிகள், நாட்டின் தலைவர்கள், பணக்காரர்கள், அவர்களுக்கு சில வேலைகாரர்கள் இவர்கள் தான் உலக அழிவுக்கு பிறகு தேவைப்படுபவர்களாம், கூடவே கொஞ்சம் விலங்குகள், நாய்குட்டிகள் போன்றவை அவற்றின் தொடர்ச்சிகாக காப்பாற்றப்பட வேண்டியவையாம்.

உலகம் அழிந்தால் மீண்டும் உயிர்பெற, உயிரின தொடர்ச்சிக்கு நோவா கப்பல் தேவை, அதன் வழியே தான் உயிரினம் காப்பாற்றப்படும் என்பது மனிதர்களின், மதங்களின் கற்பனை. என்னமோ போங்க......உலகம் உயிரினம் முற்றிலும் அழிந்ததலும், இதற்கு முன் எப்படி தோன்றியதோ, எப்படி உயிரினங்கள் உருவானதோ, எப்படி மனித நாகரீகம் வளர்ந்ததோ அப்படியே மீண்டும் ஏற்படாதா என்ன ? முன்பும் உயிரினங்கள் தோன்றியதற்கு, ஆயிரம் ஆயிரம் காலங்கள் வாழ்ந்ததற்கு இருந்த அனைத்துக் காரணங்களும் சூழல்களும் உலகம் எத்தனை முறை அழிந்தாலும் அவை மீண்டும் ஏற்படலாம், 2012 இறுதி என்றாலும் அது பற்றி அலட்டிக் கொள்ள எதுவும் இல்லை.


இணைய தளங்கள் :
http://www.2012warning.com/
http://www.2012officialcountdown.com/?a=essinkf
http://www.endoftheworld2012.net/
http://www.endoftheworld2012.net/

and

http://en.wikipedia.org/wiki/2012_phenomenon

26 அக்டோபர், 2008

ஏகன் ! தல ஏன் ?

டிஸ்யூம் டிஸ்யூம் சண்டை நடக்கும் காட்சியின் போது தான் திரையரங்கினுள் நுழைந்தேன். வில்லன் சுமனுக்கு எதிராக சாட்சி சொல்ல நீதிமன்றம் செல்ல இருந்த அப்ரூவர் வில்லன் (பாட்ஷா படத்தில் நக்மா அப்பாவாக நடிப்பவர்) குழுவிடமிருந்து தப்பிச் செல்லும் காட்சி. அதன் பிறகு அஜித் அறிமுகக் காட்சி, பாபு ஆண்டனியை ஞாபகப் படுத்தும் கெட்டப். வில்லனின் ஹாங்காங் ஏஜெண்டை பட் பட் என்று சுட்டு வீழ்த்துகிறார்.

போலிஸ் உயர் அதிகாரி நாசரின் (வளர்ப்பு மகனான - அதற்கு ஒரு கண்ணீர் சிந்த வைக்க முயலும் ப்ளாஷ் பேக் படத்தின் பின்பகுதியின் வைத்திருக்கிறார்கள், மிஸஸ் மணிரத்னம் வந்து போகிறார் ) வளர்ப்பு மகனான அஜித் அப்ரூவரை கண்டுபிடித்து கைது செய்வதும் வில்லனை போட்டுதள்ளுவதுடன் கதை முடிந்துவிடுகிறது.

அப்ரூவரின் மகளை வில்லன் கும்பல் குறிவைக்கும் என்று அறிந்து, ஊட்டி கல்லூரியில் மாணவனாக பாதுகாப்புக்காக அனுப்பப்படுகிறார் அஜித். அஜித் மாணவனா ? பார்பவர்கள் கிண்டல் செய்யக் கூடும் என்பதை உணர்ந்தே அவர்களே திரைக்கதையில் அதைச் செய்துவிட்டார்கள்.

முக்கிய பாத்திரம் நயன்தாரா, கல்லூரி விரிவுரையாளராக அறிமுகம் ஆக அவரை துறத்தி காதலிக்கும் மாணவனாக அஜித் என இடையே திரைக்கதை நகர்த்தப்படுகிறது. முந்தானை முடிச்சு தீபா கெட்டப்பில் ஸ்லீவ் லெஸ் ஜாக்கெட்டுடன் கூடுதல் கவர்ச்சியுடன் நயன் தாரா கல்லூரி விரிவுரையாளர் ஆகவருவது, கல்லூரிகளின் தரத்தைக் கேவலப்படுத்தும் செயல், இப்பொழுதெல்லாம் எல்லா கல்லூரிகளிலுமே மாணவ - மாணவிகளுக்கே ட்ரெஸ் கோட் உண்டு.

எனக்கு படத்தில் பிடித்த மற்றொரு பாத்திரம் ஜெயராமன், இவரது குழந்தைத்தனமான நடிப்பு எப்போதும் எனக்கு பிடிக்கும், இந்தப்படத்திலும் நிறைவாகச் செய்திருக்கிறார். அவர்தான் அந்த கல்லூரியின் முதல்வர் அஜித்துக்கு உதவுகிறார், அவருடன் சேர்ந்து சத்தியன் காமடி செய்ய முயன்றிருக்கிறார். ஈஎம்சி ஹனிபா அஜித்தின் உதவியாளராக நகைச்சுவைக்காக சேர்க்கப்பட்டு நன்றாகவே செய்தார். படம் சீரியஸ் கதையாக காட்டப்பட்டு பிறகு முழுநீள நகைச்சுவையாக்க முயன்று தோற்று இருக்கிறார்கள்.

பாடல் இசையில் சத்ததத்தைத் தவிர வேறெதும் காணும், பிரபுதேவாவின் அண்ணன் ராஜு சுந்தரம் இயக்கம் என்பதால் 5 பாட்டுக்கு குத்துப்பாட்டு டான்ஸ் இருக்கிறது. பாடல்கள் எதுவும் நினைவுக்கு வரவில்லை. ராஜு சுந்தரம் கன்னி முயற்சியாக இயக்கம் வசனங்களில் கவனம் செலுத்திய அளவுக்கு காட்சியில் திரைகதையில் கவனம் செலுத்தவில்லை, அவ்வளவாக அனுபவமின்மையைக் காட்டுகிறது. விஜயை வைத்து பிரபுதேவா போக்கிரியைக் எடுக்க முயன்றது போல் அஜித்தை வைத்து ராஜு சுந்தரம் முயன்று... ஹூகூம் என்றே சொல்ல வைக்கிறது. நாசர் போலிஸ் அதிகாரி அவரது மகன் அதைச் சுற்றி க்ரைம் கதை, இதுபோல் தமிழில் 10 படங்களுக்கும் மேல் வந்துவிட்டது. போக்கிரி கதை போலவே :(

பில்லா வெற்றியை நம்பி அஜித் - நயன் தாராவை ஜோடி சேர்த்து ஒரு சொதப்பலான கதைக்கு பயன்படுத்த முயன்று இருக்கிறார்கள் என்பதைத் தவிர்த்து வேறெதும் படம் பார்பவர்கள் உணரப் போவதில்லை. அஜித் சண்டைக்காட்சிகளும் மற்ற படத்தில் வந்தவைப் போன்றே இருந்தது. பில்லா படம் ரீமேக் என்றாலும் படத்தில் ஒரு ரிச்னஸ் இருந்தது, இதில் அதுவும் இல்லை. தல ஏன் இப்படி என்று கேட்க வைக்கிறது ? ரசிகர்களால் ஓடினால் உண்டு.

ஏகன் ஏமாற்றம் !

13 அக்டோபர், 2008

மெல்லிசை மன்னருக்கு, இசைஞானிக்கு ஆனாதுதான் இசைப் புயலுக்கும் ஆச்சு !

முரளிக் கண்ணன் பதிவில் ஏ.ஆர் ரகுமானுக்கு என்ன ஆச்சு, ஏன் ஹிட் ஆகலை என்ற ஆராய்ச்சிக் கட்டுரையை எழுதி இருந்தார்.

இசைக்கு நாடு, மொழி இல்லை என்பது ஓரளவு உண்மை இல்லை என்றாலும், காலத்தால் அழியாத பாடல்கள் இருக்கிறது என்பதும் உண்மை என்றாலும் இசை அமைப்பாளர்களுக்கு காலம் இருக்கிறது.

"எங்கேயும் எப்போதும் சங்கீதம் சந்தோசம்......" மெல்லிசை மன்னர் அடித்து தூள் பரப்பிக் கொண்டிருக்கும் போது தான் இளையராஜா வந்தார். 'அன்னக் கிளியே உன்னைத் தேடுதே......" கிராமிய மணம், மக்களை எழுப்பியது மண்ணோடு ஒன்றிய பாடலாக இருந்ததால் 'ஏர் முனைக்கு நேர் இங்கே எதுவுமே இல்லை' போன்ற நாட்டுப்புற வரிகளைக் கொண்ட பாடல்களையெல்லாம் மறக்க வைத்தது, நாட்டுபுற வரிகளுக்கு நாட்டுப்புற இசையை இராஜாவால் போடப் பட்டபோது இசையும், வரியும், குரலும் இணைந்து முற்றிலும் புதிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அன்று ஆரம்பித்த ராஜா ஏஆர்ரகுமான் வரும் வரை களத்தில் ஆடிக் கொண்டு இருந்தார்.

ஆரம்ப கால ஏஆர் ரகுமான் இசையைப் பற்றி அப்போது இளைய ராஜாவிடம் கேட்ட போது, 'கிரிக்கெட் ஆட்டம் நன்றாக நடைபெறும் போது, மைதானத்திற்கு கவர்ச்சி ஆட்டக்காரி வந்தால், அவளது பக்கம் தான் ரசிகர்களின் கவனம் உடனே திரும்பும்' என்ற ரீதியில் பேட்டி அளித்து புதிய இசை அமைப்பாளரைப் பற்றி இவ்வளவு புகழ்ச்சியுடன்(!) வரவேற்புக் கொடுத்தார். அதே போன்று அவரது மகனுக்கும் சொல்லுவாரா என்பதை இளையராஜாவின் தீவிரவிசிறிகளின் மனசாட்சிக்கே விட்டுவிடுகிறேன். இளைய ராஜாவின் இசையில் எனக்கும் ஆழ்ந்த ரசனை உண்டு.

காலத்திற்கு ஏற்றவகையில் இசை அமைக்கப்படும் இசைகளே அப்போது வாழும் இளைஞர்களைக் கவர்ந்து இசை அமைப்பாளர்களுக்கு புகழை ஈட்டுத்தரும், இசை அமைப்பாளர்கள் புகழ்பெறுவது 20 முதல் 35 வயது ரசிகர்களின் ரசனையால் தான், இது எந்த இசையமைப்பாளருக்கும் பொருந்தும், இசை ரசிகர்களின் வயதும் இசையமைப்பாளர்களின் வயதும் ஒன்றாக இருக்கும் போது, பெரும்பாலும் இசை அமைப்பாளர்கள் 20 வயதைக் கடந்தவர்களாக இருக்கும் போது அன்றைய இளைஞர்களின் சிந்தனையும், விருப்பமும், அவர்களது நாடிகளையும் இவர்களும் கொண்டிருப்பதால், ரசிகர்களின் ரசனையுடன் இவர்களுது இசையும் கலந்து வெற்றிகரமாக அமையும். 40 வயதை நெருங்கும் போதே இசை அமைப்பாளர்கள் வீழ்ச்சியை நோக்கி சென்று கொண்டு இருப்பார்கள், காலத்திற்கு ஏற்ற சிந்தனை வராது, இளையராஜா மட்டுமே 50 வயதைத் தாண்டியும் தனியாக ஆடிக் கொண்டு இருந்தார், ஏனெனில் ஏஆர்ரகுமானுக்கு முன்பு வந்த தேவா போன்றோர் புதிய முயற்சியாகவோ, புதிய வடிவ இசையையோ முழுதாகக் கொடுக்க முடியவில்லை, ராஜாவும் 'எப்பவும் நான் ராஜா' என்று மார்த்தட்டிக் கொண்டு இருந்தார்.

தியாகராஜர் பாகவதர் காலத்துப் பாடல்கள் அவரது காலத்தில் ரசிக்கப்பட்டது, அதன் பிறகு விஸ்வநாதன் இராம மூர்த்திப் பாடல்கள் வந்த காலத்தில் 'பாகவதர் பாட்டு மாதிரி இல்லை' என்றார்கள், இளையராஜா காலத்தில் 'மெல்லிசை மன்னர் காலத்து பாடல்கள் போல் இனிமை இல்லை' என்றார்கள், ஏஆர் ரகுமான் காலத்தில் 'இசை ஞானியை யாரும் அடித்துக் கொள்ள முடியாது என்றார்கள்' தற்பொழுது ஏஆர் ரகுமான் பாடல்கள் ஆரம்பத்தில் இருந்தது போல் இல்லை என்கிறார்கள் (ஏனெனில் இன்னும் கூட அதிக ஊதியம் பொறுபவராக இருப்பதால்) இவையெல்லாம் பழசை அசைப்போட்டு ஒப்பிட்டுப் பார்க்கும் 40 வயது கடந்தவர்களின் கணிப்புதான். ஆனால் இன்றைய இசை என்பது 20 வயதிலிருந்து 35 வயது உள்ள இசை ரசிகர்களால் ரசிக்கப்பட்டு இந்த கால இசையாக தீர்மாணிக்கப்படுவது.

எந்த இசை அமைப்பாளராக இருந்தாலும் அவர்கள் ஏற்கனவே இசைத்த இசை காலத்தை வென்றதாக இருக்கலாம், ஆனால் அதே இசையமைப்பாளர்கள் இன்று இசைக்கும் இசையின் வெற்றி தோல்வியை நடப்புக் காலமே தீர்மாணிக்கும், அந்த வகையில் இசை முன்னோடிகளுக்கு இருந்த காலத்திற்கேற்ற இசை என்னும் சிந்தனையில் ஏற்படும் தடையே ஏஆர் ரகுமானுக்கும் ஏற்பட்டு இருக்கிறது.


எனக்கு பிடித்த தலைமுறை இசையமைப்பாளர் வரிசையில் மெல்லிசை மன்னர், இசைஞானி, இசைப்புயல் இருக்கிறார் என்பதில் எனக்கு எந்த ஐயமும் இல்லை, இவர்களின் (அன்றைய) இசையை எப்போதும் ரசிக்கிறேன்.

"பழையன கழிதலும், புதுவன புகுதலும் வழுவல வாழ்க்கை வழியதுதானே" - இசையமைப்பாளர்களுக்கும் பொருந்தும் ! இதில் ஏஆர் ரகுமான் மட்டும் விதிவிலக்கா ?

8 ஆகஸ்ட், 2008

சாகுற மாதிரி க்ளைமாக்ஸ் வைத்தால்... கஜினி பின்னூட்டத்திற்கான பதில் !

//ghajini has left a new comment on your post "ரஜினி - ஒரு இருதலைக் கொள்ளி எறும்பு !":

கோவி.கண்ணன் உங்கள் பல பதிவுகளை ரசித்திருக்கிறேன். ஆனால் இது ஏமாற்றம் தருகிறது
சார் தமிழ்நாட்டில் பல பேர் உங்களை போல் வார்த்தைக்கு வார்த்தை அர்த்தம் கண்டுபிடிக்க தெரியாத துர்பாக்கியசாலிகள் சார்.
. நடிகனை நடிகனாய் பார்க்கும் நீங்களே தாங்கமுடியாமல் அவரது சினிமா சம்பந்தமில்லாத தனிப்பட்ட சறுக்கலை வலிந்து வக்காலாத்து வாங்குகிறீர்கள்.
அப்படியானால் அந்த பாமர ரசிகன்??
சக பிற நடிகர்களின் ரசிகர்களால் கேலி செய்யப்படும் அவன்????
எல்லாமே அவன் தவறா??
மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவுக்கு இல்லையே! இப்படி எதிர்பார்ப்புகள் மற்றும் வேதனைகள் அனுபத்ததில்லையே.
இப்போதும் அவன் தான் தவறா?? ஏன்?? யாரால்???
பதில் சொல்லும் முன் - உங்களை போல் நாங்கள் புத்திசாலிகள் இல்லை. எளிதில் உணர்ச்சிவசப்பட்டே(அன்பு காட்டுவது ,கட் அவுட்டுக்கு பால் ஊற்றூவது முதல் அவமானத்தால் தண்ணீயடித்து உளறுவது வரை) எதையும் செய்பவர்கள் என்பதை மனதில் வைத்து சொல்லவும். //

திரு கஜினி,

என்னுடைய எழுத்துக்களை தொடர்ந்து ரசித்துப்படிப்பதாக சொல்வதற்கு மிக்க மகிழ்ச்சி.
ரஜினி பேசுவதற்கு பொருள் கண்டுபிடிப்பவர் நீங்களோ, நானோ அல்ல. அவரை கடவுளுக்கும் மேலாக நினைத்து கட் அவுட் காலையும் நக்கும் தீவிர ரசிகர்களும், ரஜினி தங்கள் பிழைப்பில் மண் போடுவதாக நினைக்கும் அவரைப் பிடிக்காதவர்களும் தான். அந்த இடுகையில் நான் எடுத்துக் கொண்டது ரஜினிக் கன்னடனாக இருப்பதால் 'கன்னடரிடம் மன்னிப்புக் கேட்கிறார் இதில் நாம கவலைப்பட என்ன இருக்கிறது?' என்கிற ஒரு ரஜினி ரசிகனின் ஜூனியர் விகடன் குமுறல் பற்றியது தான்.


'குசேலன்' படத் தயாரிப்பாளர்கள் நஷ்டப்பட்டுவிடுவார் கள் என்று கன்னட மக்களிடம் கருணைக் கோரிக்கை வைத்தீர்களே... 'தலைவர் படம் பிய்ச்சுக்கிட்டுப் போகும்' என்று நம்பி, பல லட்சங்களை முதலீடாப் போட்டு ரசிகர் மன்ற ஷோ எடுத்து நடத்திய அத்தனை மாவட்ட ரசிகர்களும் கையைச் சுட்டுக்கொண்டு தவிப்பது உங்களுக்குத் தெரியுமா? பட ரிலீஸன்று கொடி பிடிக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும்தான் நாங்கள் உங்களுக்குத் தேவை. மற்றபடி, நாங்கள் கையைச் சுட்டுக்கொண்டால் என்ன... தலையை வெட்டிக்கொண்டால் என்ன?

நீங்கள் கர்நாடக மக்களிடம் வருத்தம் தெரிவித்ததற்கு நாங்கள் ஏன் அவமானப்படுகிறோம் என்றால், இப்போதும் உங்களைப் பச்சைத் தமிழனாக நினைப்பதால்தான். இல்லை என்றால் 'ஒரு கன்னடத்து ஆள் கன்னடத்து மக்கள்கிட்ட மன்னிப்புக் கேட்டதில் என்ன ஆச்சர்யம்' என்று நினைத்துக்கொண்டு எங்கள் வேலைகளில் மூழ்கியிருப்போமே...! அப்ப... நீங்க தமிழகம்தான் எனக்கு எல்லாமே என்று சொல்றதெல்லாம் 'குசேலன்' படத்துல வர்ற மாதிரி கெஸ்ட் ரோல்தானா?

- இப்படிக்கு
நேற்று வரை உங்கள் ரசிகனாக
இருந்த தமிழன்.

(ஜூனியர் விகடன் http://www.vikatan.com/jv/2008/aug/10082008/jv0501.asp)

அதாவது இதுவரை தெய்வத்துக்கும் மேலாக புகழ்ந்தவர்கள், ரஜினி தமிழ் மூச்சு, தமிழ் பால் என்றதையெல்லாம் பெருமை பொங்க அடுத்த நடிகர்களின் ரசிகர்களிடம் கூறிக் கொண்டு இருந்தவர்கள் ரஜினியின் இந்த வெளிப்படையான பேச்சில் அதிர்ச்சி அடைந்தனர். மற்ற நடிகர்களின் ரசிகர்களால் கிண்டலுக்கும் கேலிக்கும் ஆளாகி இதுநாளும் ரஜினி தமிழர்களின் நகையும் சதையும் என்றுக் கூறிய தாங்கள் அவமானம் அடைந்தாக நினைத்து 'எழவு வீடு' போல புலம்ப ஆரம்பித்துவிட்டார்கள். இவ்வளவு உணர்ச்சிவசப்படுவது தேவையற்றது, எந்த ஒரு மனிதனுக்கும் தாய்மொழிப் பற்றும், அதைப் பேசுபவர்களிடம் அவர்களின் தொடர்பில்லாது தனித்து வசிக்கும் போதும், இனப்பற்று இருக்கவே செய்யும். அதைக் குறிப்பிடத்தான் அந்த இடுகையை எழுதினேன். மற்றபடி ரஜினி வருத்தம் தெரிவித்தது சரி / தவறு என்றெல்லாம் சொல்லவில்லை. அது அவரது முடிவு. அதுல நம்மைப் போன்றோர் கருத்து சொல்ல ஒன்றும் இல்லை. ரஜினி பிடித்தவர்களுக்கும், பிடிக்காதவர்களும் செய்யும் வேலை அது. தமிழ்தவிர்த்து பிற தாய்மொழியைப் பேசும் தமிழர்கள் தங்கள் தாய்மொழியை வெறுத்தால் தான் அவனை தமிழன் என்று சொல்ல முடியும் என்றெல்லாம் நினைப்பது அபத்தம் தானே.

திரை நட்சத்திரங்களின் ரசிகர் ஆவது தவறு அல்ல, உலகமுழுவதும் உள்ள நடைமுறைத்தான். சிலருக்கு சிலரைப் பிடிக்கும் வெகு சிலரே திரைப்படம் பொழுது போக்கு சாதனம் என்றே நினைப்பார்கள். நான் வக்காலத்து வாங்கவில்லை நடைமுறையில் இருப்பதைத் தான் சொன்னேன். திரைப்படம் பொழுது போக்கு சாதனம் என்பதில் எல்லோருக்கும் தெளிவு கிடையாது. சமூக சீர்கேட்டில் முன்பெல்லாம் ஆன்மிகமும், அரசியலும் தான் கலந்து இருக்கும், இப்போது இவற்றுடன் திரையுலகமும் சேர்ந்து கொண்டுள்ளது.

எல்லோருமே தீவிர ரசிகர்கள் அல்ல, ஒரு சில வேலையத்த வீனர்கள் தங்கள் இன்னாருக்கு ரசிகர் என்று சொல்லிக் கொண்டு திரிந்தால் அது தனக்கான பெருமை என்பதாகவே நினைத்து நாளடைவில் அடிமையாகவே ஆக்கிக் கொள்கிறார்கள். இது பெருமைக்குரிய ஒன்றே இல்லை. இன்னாருக்கு ரசிகன் என்று சொல்வது பெருமைக்கானதா ? தனக்கென்று சிறிதளவாவது தனிப்பெருமை தேடாமல் அடுத்தவரின் புகழ்நிழலில் காலெமெல்லாம் ஒதுங்கி இருப்பது தான் பெருமையா ? தனது எஜமானர் எவ்வளவு கொடியவனாக இருந்தாலும் அவரிடம் விசுவாசமாக இருக்க வேண்டும் என்று ஆறரிவு இல்லாதா விலங்குகள் மட்டுமே நினைக்கும். மனிதர்களான நாம் இன்னாருக்கு ரசிகராக இருப்பது தப்பே இல்லை. அடுத்த வேளை அடுப்பு எரிவது அவரை நம்பி இல்லை அதனால் அவர் சொல்வதையெல்லாம் தற்காக்க வேண்டிய தேவையில்லை. இது திரையுலக நட்சத்திரங்கள் எவருக்கும் தீவிர ரசிகர்களாக இருப்பவர்களுக்கும் பொருந்தும்.

"சாகுற மாதிரி க்ளைமாக்ஸ் வைத்தால், ரசிகர்கள் தாங்கிக் கொள்ளமாட்டார்கள், படம் ஊத்திக்கும்" என்று சொல்வதெல்லாம் எந்த அளவு ஒரு ரசிகன் எந்த ஒரு நடிகனுக்கும் தனக்குத் தெரியாமலேயே அடிமை ஆகி இருக்கிறான் என்று சொல்வதையே காட்டுகிறது. அது போன்று கண்மூடித்தனமாக பற்று வைத்து என்னை அவமானப்படுத்தாதீர்கள் என்று எந்த நடிகரும் சொல்வதும் இல்லை. தமிழன் படம் தோல்வி ஏன் என்று கேட்ட போது எஸ்ஏ சந்திரசேகர் சொன்னாராம், 'படத்தில் கடைசி காட்சியில் விஜய் உயிருக்குப் போராடுவது போன்று இருப்பதால், ரசிகர்கள் இரண்டாவது முறை பார்க்க தயங்கினார்கள் அதனால் படம் தோல்வி..' என்று. இதெல்லாம் கேட்கும் போதே மிகக் கொடுமையாக இருக்கிறதே. தன்(மான) உணர்வையெல்லாம் நடிகர்களின் காலில் வைத்துவிட்டார்களே ! விழியற்றவராக இருந்து வாழ்க்கையில் போராடி வெற்றி பெற துடிக்கிறவர்களைப் பார்க்கிறோம், கால் ஊனமுற்றோர் அதே போல் போராடி வெற்றி பெருவதையெல்லாம் பார்க்கிறோம். எல்லாம் சரியாக இருந்தும் இன்னாரின் செயல்பாடுகளையே தங்கள் வாழ்க்கையாக நினைத்து மன ஊனமாகி தனது எதிர்காலத்தையே கேள்விக்குறியாக ஆக்கிக் கொள்பவர்களைப் பற்றி உயர்வாக நினைக்க ஒன்றுமே இல்லை.

'மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இந்த அளவுக்கு இல்லையே! 'ஏன்று நீங்கள் சொல்வதை மறுக்கிறேன். நீங்கள் சொல்வதைப் போல் வைத்துப் பார்த்தால் ஒவ்வொரு நடிகரின் தீவிர ரசிகர்களுக்கும் தனித்தனி குணம் இருப்பதாகச் சொல்கிறீர்கள். எதோ ஒரு காரணம் சொல்லி இவரைப் பிடிக்கிறது என்று ரசிகராகுகிறார்கள், எல்லோரும் ஒரே ரகம் தான். சைவம் சாப்பிடுவன் சாது, அசைவம் சாப்பிடுபவன் கொலைகாரன் என்று சொல்வது போல் இருக்கு. மற்ற ரசிகர்களின் எண்ணிக்கையை விட ரஜினிக்கு மிக மிக அதிகமான ரசிகர்கள் இருக்கிறார்கள், அதனால் அவர்கள் செயல் உங்களுக்கு மிகைப்பட்டதாக தெரிகிறது. அவ்வளவுதான்.

முன்பெல்லாம் எம்ஜிஆர் படத்துக்குக் கூடும் வயதான பெண்கள்...'வந்துட்டான் பாரு கட்டயில போறவன்' நம்பியார் முகம் தெரிந்தவுடனே திட்ட ஆரம்பித்துவிடுவார்கள். :)

இனிமேல் ரசிகர்கள் ரஜினியை வாய்ஸ் கொடுக்கச் சொல்லி சிறிது காலம் வற்புறுத்தமாட்டார்கள். :)))

26 ஜூலை, 2008

ரோபோ ஸ்டில் !



நன்றி : தட்ஸ் தமிழ்

கதை இங்கே :) பழசுதான் படிச்சுட்டு பொழந்து கட்டிடாதிங்கோ...!

24 ஜூன், 2008

தமிழ்த் திரையில் சிறந்த நடிகர், படாலாசிரியர், இசையமைப்பாளர் யார் ?

எந்த ஒரு தொழிலிலும் நிபுணத்துவம் என்று ஒன்று உண்டு. அந்த இலக்கை சரியாக அடைபவர்களே போற்றப்படுகிறார்கள். பொழுதுபோக்கு ஊடகங்களில் நடிகராக, இசை அமைப்பாளர்களாக, கவிஞர்களாக இருந்தாலும் சரி ஒவ்வொன்றிலும் உயர்வை எட்டியவர் வெகுசிலரே.

"சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...." என மூன்று மணிநேரம் .... ஐந்து நிமிடத்திற்கு ஒரு பாடல் என படங்கள் இருந்த காலத்தில்...கண்களில் நெருப்புப் பறக்க பராசக்தி வசனம் பேசிய ஒருவரின் தனித்திறமை அனைவரின் கவனம் ஈர்க்கப்பட பின்னாளில் அவரது நடிப்புத்திறன் பேசப்பட்டு 'நடிகர் திலகம்' ஆனார். வி.சி. கனேசனுக்கு சிவாஜி கனேசன் என தந்தை பெரியார் சூட்டிய பெயரே அவரது சிம்மக் குரலுக்கு பொருத்தமான பெயராக இருந்ததுமில்லாமல் நடிப்பின் உச்சத்தின் அடையாளாமாக மாறி...கோடம்பாக்கத்திற்கு கனவுடன் நுழைபவர்களுக்கெல்லாம் அவர் ஒரு ரோல் மாடல் ஆகிப் போனார்.

பல திரைப்படங்களின் வெற்றிக்கு காரணம் அவற்றில் பொழுது போக்கு அம்சங்கள் அடங்கி இருந்தாலே போதும் என்று நிலை இருக்கிறது. அவ்வகைப் படங்கள் அறியப்பட்ட நடிகர்களின் ப்ராண்டட் / மசாலா படமாகவே இருக்கும். அதைத் தவிர்த்து இயக்குனர் பாணி படங்களும் பல வெற்றிப்படங்களாக இருக்கிறது. இவற்றையெல்லாம் திரைப்படங்கள் என்ற இலக்கணத்தில் மட்டுமே சொல்லாம் அன்றி திரைப்படக் கலை என்று வரையரைக்குள் அவை வராது. அவை பொழுதுபோக்கு அம்சம் கொண்டவை. வியாபார நோக்கம் சார்ந்தவை.

திரைப்படக் கலை என்பது வேறொரு தளத்தில் பயணிப்பது, அவற்றின் நோக்கமும் பொழுதுபோக்கு என்ற நிலை இருந்தாலும்...அவை பார்பவர்களின் எண்ணங்களில் பாதிப்பை ஏற்படுத்துபவை. அவ்வகைப்படங்களில் நமக்கு பழக்கப்பட்ட பாத்திரங்களை அல்லது புதிய பாத்திரங்களை உருவாக்கி காட்டுவார்கள். அங்கு நடிகனின் வேலை அந்த பாத்திரத்தின் தன்மையை வெளிப்படுத்திக் காட்டுவதுதான்.

நடிகன் என்பவன் தன்னைத் தொலைத்து ஒரு பாத்திரமாக கண்முன் வந்து சென்று அந்த பாத்திரம் அனைவராலும் பேசப்படும் பொழுது அவன் சிறந்த நடிகன் என ஏற்றுக் கொள்ளப்படுகிறான். அவ்வாறு வரலாற்று பாத்திரங்களைக் கண் முன் நிறுத்திக் காட்டியவர் தான் நடிகர் திலகம் சிவாஜி கனேசன்.

மற்றொரு நடிகர் கமலஹாசன். 16 வயதினிலே படத்தில் சப்பானியை மிகச் சிறப்பாக செய்திருந்தார். அதன் பிறகு பேசப்படும் பாத்திரப் படங்களை செய்வதற்கான வாய்ப்புக் கிடைக்காததாலோ, அல்லது தன்னை நிலை நிறுத்துக் கொள்ள வேண்டும் மென்பதற்காக சகலாகலவல்லவன், ஜப்பானில் கல்யாண ராமன் போன்ற மசாலா படங்களில் நடித்தார். சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் தான் கமலஹாசன் ஒரு சிறந்த நடிகர் என அறியப்பட்டர். தனக்கிருக்கும் திறமையையும் அவர் அப்போதுதான் உணர்ந்து கொண்டிருக்கக் கூடும், அதன் பிறகு ஒவ்வொரு படங்களிலுமே தனிப்பட்ட முத்திரை பதிக்க வேண்டும் என்று சிரத்தை எடுத்து தேவர்மகன், மகாநதி, குணா போன்ற படங்களைக் கொடுத்தார். ஹேராம் போன்ற படங்களில் நடிப்பு, இயக்கம் ஆகியவற்றை முழுதும் உள்வாங்கி செய்தார். கமல் படம் வெற்றிப்பட்மா தோல்விப்படமா என்று ஆராய்வதைவிட அவர் அந்த பாத்திரத்தை முழுமையாக செய்திருந்தார் என்பதே பேசப்பட்டது. இப்பொழுதும் கூட எடுத்துக் கொண்ட பாத்திரத்தில் குறைவைக்காமல் சிறப்பாக செய்யக் கூடிய ஒரே நடிகர் கமல்தான்.

சரி விசயத்துக்கு வருவோம். சிறந்த நடிகர் யார் நடிகர் திலகம் ? உலக நாயகன் ?
அவர் காலத்தில் அவர்...இவர் காலத்தில் இவர். சிறந்த நடிகர் என்றால் எல்லாரையும் விட சிறந்த நடிகர் என்று ஒப்பீட்டு அளவில் சொல்வது தவறு என்றே கருத்துகிறேன். நடிப்பின் எல்லையைத் தொட்டவர்கள் இவர்கள். சிறந்த நடிகர் என்பது ஒரு உயரம் / எல்லை...அது எவருக்கும் சொந்தமானது அல்ல... நேற்று நடிகர் திலகம் அதன் மீது ஏறினார்...இன்று உலகநாயகன் ஏறி இருக்கிறார்...நாளை வேறுருவர் ஏறுவார். இன்றைக்கு பல இளைய நடிகர்கள் அதன் பரிசோதனையில் தான் இருக்கிறார்கள்...நாளை அதில் சிலர் அந்த இடத்திற்கு வரக் கூடும். புதிதாக ஏறுபவர்கள் ஏற்கனவே ஏரியவர்களை தள்ளிவிட்டார்கள் என்று பொருள் கொள்ளல் ஆகாது.

இதுபோல் தான் கவிஞர்கள் இயக்குனர்கள் இசை அமைப்பாளர்கள்...அந்தந்த காலத்தில் சிலர் ஜொலிக்கிறார்கள். ஆனால் அந்த இடம் ஒருவருக்கே நிலையானது என்று சொல்வது அபத்தம். அபிமானிகள் தவிர்த்து வேறுயாரும் அதுபோன்று அபத்தங்களைச் செய்யமாட்டார்கள்.

நமது காலத்திலேயே பார்த்துவிட்டோம் மெல்லிசை மன்னர் > இசைஞானி > இசைப்புயல் என்றெல்லாம் தமிழ் திரை இசையின் பயணம் மாறிக் கொண்டே இருக்கிறது. ஒவ்வொருவருக்கும் தனிச்சிறப்பு உண்டு. ஒப்பீட்டு அளவில் ஒருவரே மற்றவரைவிட சிறந்தவர் என்று சொல்வது அபத்தம்.

சிறந்த கவிஞர் நேற்று கண்ணதாசன்...இன்று வைரமுத்து... வேண்டுமானால் கவியரசர், கவிப்பேரசரர் என்ற அடைமொழிக்குள் அவர்களை அடக்கலாம். ஆனால் அவை வேறுபடுத்திக் காட்டுவதன் பெயரேயன்றி ஒப்பீட்டு அளவில் யார் சிறந்தவர் என்று சொல்வதற்கான அடையாளம் அல்ல.

எளிமையாக சொல்வதென்றால் ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் அதற்கு முந்தைய ஆண்டு பள்ளியின் முன்னாள் மாணவர்களில் சிலர் முதல் பரிசு பெற்று இருப்பார்கள்.

10 மே, 2008

ரஜினி தன் விருப்பத்தை திரை ரசிகர்களிடம் திணிப்பது சரியா ?

ரசிகர்களின் நாடி பார்த்து படம் எடுக்கிறோம், என்று திரைத்துறையினர் சொன்னாலும், வெற்றி சமன்பாடு(பார்முலா) இல்லாவிட்டாலும் எந்த படமும் ஊத்தல் தான்.

நடிகர்களுக்கான கதை என்று எடுத்து, சரக்கு இல்லாமல் பிரபலமான நடிகரின் முகத்தைக் காட்டினாலே பணத்தை அள்ளிவிடலாம் என்ற நினைப்பெல்லாம் 'பாபா' படத்துடனேயே முதலும் கடைசியுமான முயற்சியாக கோணல் ஆகியது. அதை வைத்துதான் தனது முகத்துக்காக எந்தப் படமும் ஓடவில்லை என்று பிற நடிகர்களும் உணர்ந்து கொண்டு அடக்கிவாசிக்கின்றனர். கூடவே அவரவர்களுக்கான 'ஸ்டைல்' என்ற பெயரில் 10 விரல்களையும், கட்டு தலைமயிரையும் சிலுப்பி சிலுப்பி பஞ்சு வசனம் ( காது அடைக்கிறது என்று ரசிகர்கள் வைத்துக் கொள்வதாலா?) பேசித்தான் படத்தையும் பிழைப்பையும் நடத்துகிறார்கள். 3 படம் தொடர்ந்து வெற்றிபெற்றால் தனுஷ் போல அறிமுக நடிகர்கள் கூட கோடிகளில் சம்பளமும், 2 லட்சம் பதிவு செய்யப்பட்ட ரசிகர்கர் மன்றங்கள் இருப்பதாக அள்ளிவிடுவார்கள். 'உரக்க பேசினால் தான் இருப்பு நிரந்தரம்' என்பதே திரைத்துறையின் 'பார்முலா'. படம் ஓடினால் தன்னுடைய சிறப்பான நடிப்பினாலும், ஓடாவிட்டால் மாறுபட்டக் கதை என்பதால் இது ஒரு மாறுபட்ட முயற்ச்சி என அப்போது நேர்முகம் (பேட்டி) கொடுப்பார்கள். பிறகு தவறான படத்தை யோசனை இல்லாமல் ஒப்புக் கொண்டதாகவும், இமயமாக இருந்த இவர்களின் புகழை அந்த படம் கெடுத்துவிட்டது போலவும் ரொம்பவே 'ப்லிம்' காட்டுவார்கள்.

'ஓடக்கூடிய படம் என்று நம்பியதைவிட, ஓடிய படத்தில் நடித்தால் வெற்றி உறுதி' என்று ஓரளவு தீர்மனிப்பதால் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் அவர் மருமகன் தனுஷ் வரை நன்கு ஓடிய வேற்று மொழிப்படங்களின் கதைகளை தேர்ந்தெடுத்து தமிழில் மறுபதிப்பு செய்கிறார்கள்.

இதே வெற்றி நினைப்பில் தான் சரத்குமார், டாக்டர் ராஜசேகர் நடித்து தெலுங்கில் சக்கைப் போடுபோட்ட படத்தில் தமிழில் மறுபதிப்பாக நடிக்க, தமிழ் மக்களால் மறந்து போன ராஜசேகரும், அதே படத்தை தமிழில் மொழி மாற்றி வெளியிட்டால் மீள் அறிமுகம் கிடைக்கலாம் என்ற ஆசையில் வெளியிட்டார். இருகதைகளும் ஒரே கதை என்று தெரிந்து போனதால் இரண்டு படமும் திரையரங்கை விட்டே ஓடியது.

ஜெயம்ரவி, விஜய் மேலும் பல நடிகர்களும் புதிய கதையில் நடிப்பதைவிட மற்றமொழிகளில் ஓடி வெற்றிப்பெற்ற கதைகளிலேயே நடித்து தங்கள் படங்களை ஓட வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். தரணி கொடுத்த தைரியத்தில் சோதனை முயற்சியாக குருவியில் விஜய் முற்றிலும் தனது ஹீரோயிசத்தைக் காட்ட, தற்போதுதான் அவருடைய இரட்டை வேட இம்சையில் தப்பிவந்த ரசிகர்களுக்கு குருவியில் ஒற்றை வேடமாக அதையே (ஓட்டப்பந்தயம், கார் ரேஸ்) மீண்டும் செய்து காட்ட, படத்தில் எதுவும் இல்லை என்ற சலிப்பில் குருவி 'தூக்கு'னாங்குருவியாக சுருண்டு முடங்கும் அளவுக்கு சென்றுவிட்டது. இதை ஈடுகட்ட அடுத்தப்படம் ? விஜய் மீண்டும் ரீமேக் படத்தில் நடிப்பார் என்றே நினைக்கிறேன்.

மறுதயாரிப்பு (ரீமேக்) படங்களில் நடிகர்கள் நடிப்பது தவறல்ல, ரீமேக் படங்கள் என்று எந்த ரசிகர்களும் ஒதுக்குவதில்லை. ஒவ்வொரு படத்திலும் ரசிகர்களுக்கு புதிய கதையாக காட்டவேண்டும் என்றால் நடிகர்கள் / தயாரிப்பாளர்கள் / இயக்குனர்கள் எங்கு செல்வார்கள்? அவர்களும் கூடவே வெற்றிபெற்றாகனுமே. ஆனால்...

எந்த நடிகரும் தனக்கு பிடித்த கதை இது என்று என்றோ ஓடிய வேற்று மொழியின் பழைய படங்களை (பில்லா, நான் அவனில்லை பற்றி சொல்லவில்லை - அது மீள்தயாரிப்பு) மறு தயாரிப்பாக ரசிகர்களின் தலையில் கட்டுவதில்லை. அதாவது தனக்கு மிகவும் பிடித்த கதை என்று தனது ரசிகர்களிடம் அதைக் கொண்டு சென்று விற்பனையாக்குவதில்லை. அண்மைய படங்களைத்தான் ரீமேக் செய்கிறார்கள். ரஜினிகாந்த் மட்டுமே தனக்கு பிடித்ததெல்லாம் தன் பாணியில் மாற்றி ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கிறார். அந்த வகையில் சந்திரமுகி தற்போது குசேலன் இரண்டும் முன்பே எடுக்கப்பட்ட மலையாளப் படங்கள். இந்த இருபடங்களும் வெகு அண்மையில் வெளியான படங்கள் இல்லை. ரஜினி தனக்கு பிடித்ததாக இருக்கிறது என்ற காரணத்தால் தன் பாணிக்கு கதையை மாற்றி ரசிகர்களுக்கு படைக்கிறார். தனக்கு பொருந்தவேண்டும் என்பதற்காக சந்திரமுகி கதையை கொத்து பராட்டா போட்டதைப் பற்றி நண்பர் ஜமாலன் விரிவாக எழுதி இருக்கிறார். இருந்துவிட்டு போகட்டும். ஆனால் இது போன்ற தனக்கு விருப்பமான, பிடித்தமான கதைகளைத்தான் ரசிகர்களும் பார்க்க வேண்டும் என்று தன் விருப்பத்தை ரசிகர்களின் மீது திணித்து கொண்டு சென்று, அதைப் பார்ப்பதுதான் அவர்களின் தலையெழுத்து என மாற்றுவதை ஏற்கமுடிகிறதா ?

இந்த படத்தில் ரஜினி தனது ரஜினி பாத்திரத்திலேயே நடிக்கிறார் வருகிறாராம், அவருக்கு இருக்கிற (மாய) புகழையெல்லாம் காட்டினால் தான் படம் இயல்பாக இருப்பது போன்று தோற்றம் வரும், வழக்கமாக வாரிவளங்கும் பாரிவள்ளல் கதையாக இருப்பதால் ரஜினி இதைத் தேர்ந்தெடுத்ததில் வியப்பு இல்லை. தனது செல்வாக்கு எவ்வளவு என்றும் இந்த படத்தில் (காட்சிக்க) காட்டி ரசிகர்களுக்கு விருந்து வைப்பார். பிறந்தநாளன்றாவது பார்க்க முடியுமா ? என வழக்கமாக (அன்பினால்) சென்னை வந்து காத்துக் கிடந்துவிட்டு திரும்பும் கூட்டம் இருக்கவே இருக்கிறது அவர்களுக்காக தாம் தாமாகவே ஒரு படம் முழுவதும் வந்து அருள் தரப்போகிறார். ரஜினிக்கு பிடித்த கதை, ரசிகர்களுக்கும் பிடித்தே ஆகவேண்டும்.

குசேலன் படம், ரஜினி அடுத்த கட்சிக்கு கட்டத்துக்கு செல்வதற்கான முன்னோடியாக இருக்கும் என எதிர்ப்பார்க்கலாம்.

24 டிசம்பர், 2007

பின்னனி பாடகர் SPB துப்பிய எச்சில்.

ஏழுஸ்வரங்களுக்குள் இசையெல்லாம் அடக்கம் என்றாலும் தனக்கென தனிப்பாதை அமைத்துக் கொண்டது திரை இசை. தியாகராஜ பாகவதர் காலத்து பாடல்களைக் கேட்டால் 'சொப்பன வாழ்வில் மகிழ்ந்து...சுப்ரமண்ய சுவாமி எனை மறந்தேன்..." சாஸ்திரிய சங்கீத அடைப்படையில் மூன்று நிமிடம் சொன்னதையே சொல்லி சொல்லி பத்து நிமிடத்திற்கு பாடல்களை இழுப்பார்கள். ஓரளவு சங்கீத ஞானம் அல்லது இசை மீது ஆசை உள்ளவர்கள் பாட முயற்சிப்பார்கள். 'ஆரியமாலா ஆரியமாலா..." ஒரே வரியே திரும்ப திரும்ப ஒரு பாடலில் வரும். இதுபோன்று சங்கீதத்துடன் தொடர்புடைய பாடல்கள் தான் 1950க்கு முன்பு வந்த படங்களின் திரை இசைப்பாடல், பொதுவாழ்க்கைக்கும் பாடலுக்கும் சற்றும் பொறுத்தமில்லாத பாடல்களாக இருக்கும்.

அதன் பிறகு திரை இசைத்திலகம் கேவி மகாதேவன் மற்றும் பலர் திரை இசையை கேட்டவர்களெல்லாம் பாடமுடியும் என்று வகையில் கண்ணதாசன், பட்டுக்கோட்டையார் ஆகியோர்களின் வரிகளில் எழுதப்பட்ட பாடல்கள் திரை இசை என்ற புதிய வடிவத்தில் கொண்டு சொல்ல பட்டி தொட்டி எங்கும் புகழ்பெற்றன. திரை இசைப்பாடல்கல் கிராமங்களைத் தொட்டது 1950 காலகட்டங்களில் தான்.

அதன் பிறகு வந்த விஸ்வநாதன் இராம மூர்த்தி போன்றோர் அதற்கு மெருகூட்டினர், இளையராஜா திரை இசையை சிம்மாசனத்தில் உட்காரவைத்தார், ஏஆர்ரகுமான் உலக அளவில் தமிழ் திரை இசைக்கு பெருமை சேர்த்தார். இது சுறுக்கமான எனக்குத் தெரிந்த வரலாறு

*******

அண்்மையில் எதோ ஒரு விழாவில் பாடகர் எஸ்பிபாலசுப்ரமணியம் அவர்கள் ஒரு ஸ்டேண்ட் மெண்ட் விடுக்க, திரையுலக இசை அமைப்பாளர்களிடையே சலசலப்பை கிளப்பி இருக்கிறது, 'இன்று இருக்கும் இசை அமைப்பாளர்களின் இசை எம் எஸ் விஸ்வநாதன் துப்பிய எச்சிலில் இருந்து பொறுக்கியவை' என்று சொல்லி இருக்கிறார். அவரது குருபக்தி மெச்சத்தக்கது, காரணம் ஒரு திருமணவிழாவுக்கு செல்ல வேண்டி இருப்பதால் தன்னால் குறிப்பிட்ட நேரத்தில் பாடலை பாடிக் கொடுக்க முடியாது என்று டிஎம்எஸ் சொன்னதை கவுரவ குறைவாக நினைத்த எம்ஜிஆர் டிஎம்எஸக்கு பாடம் கொடுக்க வேண்டும் என்று நினைத்து எம்எஸவிஸ்வநாதனின் ரெகமெண்டேசனின் பேரில் எஸ்பிபி பாடகர் ஆனார்.

அவர் பாடிய முதல் பாடல் 'ஆயிரம் நிலவே வா'. எஸ்பிபி திறமை குறைந்தவர் அல்ல என்பதை அந்த ஒரு பாடலே நிரூபித்ததும், அதன் பிறகு பின்னனிப்பாடகர் வரிசையில் தனக்கென தனியிடம் பிடித்தார். எஸ்பிபியை அறிமுகம் படித்தியவர் என்ற முறையில் எம்எஸ்விஸ்வநாதனுடன் கலந்து கொள்ளும் இசை நிகழ்ச்சிகளிலெல்லாம் எஸ்பிபி அவர் காலில் விழுந்து பொதுமக்கள் ரசிகர்களுக்கு முன்னிலையில் எம்எஸ்விக்கு குருவணக்கம் செய்வார். நானும் ஒரு நிகழ்ச்சியில் இதை பார்த்திருக்கிறேன். அதே போன்று பாடகர் மனோ இளையராஜாவின் காலில் விழுவார். குரு என்ற அடிப்படையில் எஸ்பிபி குருவணக்கம் செலுத்துவது அவரது நன்றி உணர்வு. அதில் குறை சொல்ல ஒன்றும் இல்லை. ஆனால் தற்போதைய இசை அமைப்பாளர்கள் அனைவரும் எம்எஸவியின் எச்சிலை இசையாக்குகிறார்கள், காப்பி அடிக்கிறார்கள் என்ற தொனியில் சொல்லி இருப்பது, ஒரு மாபெரும் பாடகர் சிகரத்தின் பொருத்தமான செயல் இல்லை.

எம்எஸ்வி இசையில் அறிமுகமாகி இருந்தாலும் இளையராஜாவின் பாடல்கள் தான் அவருக்கு பாடும் நிலா என்ற உருவகத்தைத் தந்தது. அவர் தனியாக பாடி புகழ்பெற்ற பாடல்களில் 80 விழுக்காட்டுக்கும் மேல் இளையராஜாவின் இசையில் வந்தவை. இளையராஜா கிராமத்தில் இருந்துவந்தவர், கிராம மண்ணின் மணத்தை முதன் முதலில் இசையில் கலந்தவர், அவருக்கென ஒரு பாணியை உண்டாக்கிக் கொண்டவர் இளையராஜா இசையில் தொடாத விசயமே இல்லை என்பது எஸ்பிபிக்கு தெரியாமல் இருந்திருக்குமா ?

திரை இசை என்பது எம்எஸ்விக்கு முன்பே வடிவம் பெற்றுவிட்டது, அவர் தனக்குறிய வழியில் இசை அமைத்தார். இளையராஜா அவருக்கென தனிப்பாதையில் சென்றார். அவர் மகன் யுவன் கூட தனிப்பாதையில் தான் செல்கிறார். ஏஆர்ரகுமான் மற்றும் இன்றைய இசை அமைப்பாளர்கள் பலர் அவர்களுக்கென தனிப்பாதையை வைத்திருக்கிறார்கள். எவரையும் பின்பற்றி இருந்தால் எந்த இசை அமைப்பாளரும் தனித்திறமை என்று சொல்லிக் கொள்ளவே முடியாது புறக்கணிக்கப்பட்டு இருப்பர். இன்றைய இசை அமைப்பாளர்கள் எம்எஸவி போல் புகழ்பெற வேண்டும் என முன்னோடியாக கருதுவார்களேயன்றி அப்படியே காப்பி அடிப்பதெல்லாம் இன்றைய இசை வளர்ச்சியில் முற்றிலும் எடுபடாது.

அவரவர் பாணியில் இசை அமைப்பது கூட அலுப்பு தட்டுவதாக இருக்கிறது என்பதால் தான் வளர்ந்த இசை அமைப்பாளர்கள் இளையராஜா, ஏஆர்ரகுமான் போன்றோர்கள் பல புதிய முயற்சிகளில் ஈடுபடுகிறார்கள். இவர்கள் மீதெல்லாம் ஒட்டுமொத்தமாக புழுதிவாறி தூற்றுவதை எஸ்பிபி போன்ற மாபெரும் பாடகர் செய்வது சரியா ?

அவரவர் காலத்து இசை அவரவர்க்கு உயர்ந்ததாக தெரியும், வழக்கமாக பெரிசுகள் பேசும் 'நாங்கள் அந்த காலத்தில...எங்க காலத்தில் எல்லாம்...' வகையில் ஒப்பீடு அளவில் எம்எஸ்வி சிறந்த இசையமைப்பாளராக எஸ்பிபிக்கு தெரிகிறது போல. புதிய இசைக்கருவிகள், மேற்கத்திய இசை என்று தமிழ் திரை இசையில் மாற்றம் நிகழ்ந்து வளர்ந்து கொண்டிருப்பது தெரிந்தும், தானே அறியாத 'ஜெனரேசன் கேப்' தனக்கு இருப்பதை வெளிப்படுத்தி இருக்கிறார் எஸ்பிபி. ஒருவேளை ரீமிக்ஸ் பாடல்களைக் கேட்டு எஸ்பிபி 'எச்சில்' என்கிறாரோ அவருக்கே வெளிச்சம். எஸ்பிபியின் வெறித்தனமான ரசிகன் எனக்கும் அவரது பேச்சில் ஒருவிழுக்காடு கூட உடன்பாடு இல்லை.

ஒப்பீடுகள் என்பது சமகாலத்தவர்கள் குறித்த சிந்தனை/கருத்து என்பதை எஸ்பிபி போன்ற பெரிசுகள் புரிந்து கொள்ள வேண்டும்.

18 டிசம்பர், 2007

உழைப்பாளிகளின் வியர்வைதான் இவர்களுக்கு தங்க காசு ? நடிகர் சங்க கலை நிகழ்ச்சி !

நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதிதிரட்டுவதற்காக சிங்கை - மலேசியாவில் 'தமிழ்சினிமாவின் '75 ஆவது ஆண்டு கலைவிழா' என்ற பெயரில் கலை நிகழ்ச்சி நடத்துவதாக (தென் இந்திய ?)நடிகர் சங்கம் அறிவித்து அதன் படி சிங்கை மற்றும் மலேசிய வானொலிகளில் அறிவிப்புகள் செய்யப்படுகிறது. வரும் ஞாயிறு அன்று மலேசியா கோலாலம்பூரிலும் அடுத்த ஞாயிறு சிங்கையிலும் நடத்தப் போகிறார்களாம். இதைப்பற்றி பல்வேறு விமர்சனங்களை நக்கீரன் இதழில் குறிப்பிட்டு இருந்தார்கள்.

மலேசியாவில் இந்தியர்கள் பல்வேறு போரரட்டங்களை சந்தித்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் நடிகர்கள் கலை நிகழ்ச்சி நடத்துவது அங்கு பிரச்சனையே இல்லாதது போல் காட்டுவதற்கு உதவும் என்பது போல் எண்ணி மலேசியா அரசாங்கமும் நிகழ்ச்சிக்கு ஆதரவு தெரிவித்துருப்பதாக சிலர் கருத்து தெரிவித்திருந்தனர்.

*****

எனது கருத்தாக.......
நடிகர் சங்கம் என்பது திரை உலகில் உள்ள பல்வேறு அமைப்பில் ஒன்று. மற்ற திரைக்கலைஞர்களான இசை அமைப்பாளர், தயாரிப்பாளர், இயக்குனர் ஆகிய பிரிவுகளை கலக்காமல் நடிகர்கள் மட்டும் பங்கு பெறும் 'தமிழ் சினிமாவின் 75 ஆவது ஆண்டு கலைவிழா' என்ற பெயர் பொருத்தமில்லாமல் இருக்கிறது. நடிகர்கள் மட்டுமே சினிமா துறை போன்று நினைத்துக் கொண்டு இதனை செயல்படுத்த முயற்சிக்கிறார்கள். நலிந்த கலைஞர்களை நடிகர் சங்கம் கண்டுகொள்கிறார்களா ? என்பது பற்றி பெரிய அளவில் எவருக்குமே தெரியாது. மூன்றாண்டுகளுக்கு சின்னத்தம்பியில் குஷ்புவுக்கு இளைய அண்ணனாக நடித்தவர், வாய்ப்பு இழந்து கடைசியாக எவர் ஆதரவின்றி தனிமையில் செத்துப் போனார். கூடவே நடிக்கும் நடிகைகள் ஒரு சுற்று பெருத்துவிட்டாலோ, அவர்களின் அறிமுக படம் அல்லது இரு படங்கள் தோல்வி அடைந்துவிட்டாலோ தயாரிப்பாளர்கள் புறக்கணிக்கிறார்களோ இல்லையோ நடிகள் புறக்கணிக்காமல் அக்கா அண்ணி அம்மா வேடத்துக்கு சிபாரிசு செய்கிறார்கள். இநத அளவில் தான் நடிகைகளுக்கு நடிகர் சங்கம் உதவுகிறது.

அதைவிட கோடி கோடியாக சம்பளம் வாங்கிக் கொண்டு ஒரு படத்தில் நடிக்கும் நன்கு அறிமுகமான நடிகர்கள் படம் ஊற்றிக் கொண்டதும்...வாங்கிய சம்பளத்தில் பைசா கூட தயாரிப்பாளருக்கு திருப்பிக் கொடுப்பதில்லை என்ற புகார் எப்போதும் இருக்கிறது. படம் வெற்றிபெற்றால் அதே தயாரிப்பாளரின் அடுத்தப்படத்திற்கு இன்னும் அதிகமாக உயர்த்தி ஊதியம் கேட்பதுதான் நடிகர்களின் வழக்கம். வெற்றிபெற்றால் தன் முகத்துக்கும் நடிப்புக்கும் படம் ஓடுவதாக சொல்லும் நடிகர்கள் தோல்வி அடைந்தால் தாம் சரியான படத்தை தேர்வு செய்யவில்லை என்று மறைமுகமாக இயக்குனரையும் தயாரிப்பாளரையும் குறைசொல்லிவிடுவார்கள். இதை பெரிய நடிகர்கள் (சீனியர்) முதல் இன்று களம் இறங்கியிருக்கும் இளைய நடிகர்கள் ( ஜூனியர்) வரை சின்னத்திரையில் நேர்கானலின் போது சொல்வதைப்பார்கலாம்.

மூன்று படங்களில் நடித்த மிக இளைய நடிகர்கள் தவிர மற்ற அறிமுகமான எல்லா இளம் வயது நடிகர்களின் படத்திற்கான ஊதியம் ஒரு கோடி முதல் ஐந்து கோடிவரை மார்கெட் ரேட் இருப்பதாக சொல்கிறார்கள். இவர்கள் வாங்கும் ஊதியத்தில் 5 விழுக்காடு நடிகர் சங்க நிதியாக அளித்தால் கூட ஐந்து மாடி குமரன் ஸ்டோர் அளவுக்கு பெரிய கட்டிடத்தை நடிகர் சங்கத்துக்காக கட்டமுடியும், அதைத்தவிர நலிந்த கலைஞர்களுக்கு மாத ஊதியமாக பத்து ஆயிரம் வரை கொடுக்க முடியும். இவர்களை வைத்து படம் எடுத்த தயாரிப்பாளர்களுக்கு இலவச அண்ணதானம் நாள் தோறும் வழங்க முடியும். இவர்களால் காணாமல் போன இயக்குனர்களுக்கு லோ பட்ஜட் சின்னத்திரை மெகசீரியல் எடுக்க உதவி புரிய முடியும். நடிகர்கள் மனம் உவந்து தங்கள் நடிகர் சங்கத்துக்கு நிதி கொடுப்பது அவர்களின் விருப்பமாக இருக்கட்டும் யாருக்கும் எந்த பிணக்கும் இல்லை. ஆனால் கலைநிகழ்ச்சி என்ற பெயரில் இவர்கள் வெளிநாட்டில் திரட்டும் பணம் உண்மையிலேயே பணக்கார ரசிகர்களிடம் இருந்து வருகிறதா ?

சிங்கை, மலேசியா மற்றும் அரபு நாடுகளுக்கு வேலைக்குச் செல்பவர்களில் 80 விழுக்காடு வரை உடல் உழைப்பாளிகள், அதிகம் படிக்காதவர்கள் மாதமொன்றுக்கு அவர்களுக்கு ஊதியமாக இந்திய ரூபாய் மதிப்பில் 6,000 /- முதல் 10,000 /- வரை கிடைத்தால் அதுவே அதிகம், அதில் சாப்பாட்டு செலவு மற்றும் அன்றாட செலவுகள், ஏஜெண்டுகளுக்கு செலுத்தவேண்டிய கடன், குடும்பத்து அனுப்ப வேண்டியது அதைத்தவிர்த்து வார இறுதி நாட்களில் நண்பர்களுடன் சேர்ந்து சிறிய அளவு கேளிக்கைகள் என்ற அளவுக்கு அவர்களுக்கு செலவு உண்டு. அவர்களுக்கு பொழுது போக்கு சினிமா பார்ப்பது, இதுபோன்ற கலைநிகழ்ச்சிக்கு எப்போதாவது செல்வதுதான்.

கலைநிகழ்ச்சிக்கு விற்கப்படும் டிக்கெட்டின் மிகக் குறைந்த மதிப்பு சிங்கப்பூர் வெள்ளியில் S$50/- கிட்டத்தட்ட இந்திய ரூபாயின் மதிப்பு 1,400/- வரும். இந்த விலை ஒரு ஊழியரின் மூன்று நாள் நாள் ஊதியம். திரை அரங்கில் திரைப்படம் பார்க்க ஒரு டிக்கெட் விலை 10 வெள்ளிகள் ஆகும், அந்த வகையில் அவர்களின் பணம் ஏற்கனவே திரைத்துறைக்குத்தான் சென்று கொண்டிருக்கிறது. நடிக - நடிகர்களின் பட்டாளமே வருகிறது என்று கேள்விப்படும் வெளிநாட்டு ஊழியர்கள், 'இந்தியாவில் தான் இவர்களைப் பார்க்க முடியாது, இங்காவது நேரில் பார்கலாம்' என்ற ஆவல் வைத்திருப்ப்பார்கள் என்று அறிந்து அவர்களை குறிவைத்துதான் கட்டணங்களுடன் கூடிய திரை கலைஞர்களின் நிகழ்ச்சிகள் அவ்வப்போது நடக்கிறது. நிகழ்ச்சி அரங்கின் அளவை பார்க்கும் போது அவர்கள் வாங்கிய மிகக் குறைந்த விலை உள்ள டிக்கட்டுகளுக்கு கொடுக்கப்படும் இருக்கைகளுக்கான தூரத்தில் இருந்து பார்த்தால் நிகழ்ச்சிகளை சின்னத்திரையில் பார்பதைவிட மோசமாக இருக்கும். கொடுத்த காசுக்கு தூர தரிசனம் பெற்றுவிட்டு வருவார்கள். அதைத்தவிர நிகழ்ச்சி முடிந்து திரும்பும் போது பொதுப்போக்குவரத்துக்கள் எதுவுமே இருக்காது, வாடகை வாகனங்களில் தான் திரும்பவேண்டும்.

ஏன் இதைகுறிப்பிடுகிறேன் என்றால் அதிக விலை உள்ள மற்ற டிக்கெட்டுகளெல்லாம் ஸ்பான்ஸர் சிப் வழியாக விற்றுமுடிந்துவிடும் அவை வெறும் 20 விழக்காடு மட்டுமே அவை பணக்கார வர்கம் பெற்றுக் கொள்ளும், மீதம் 80 விழுக்காடு டிக்கெட்டுகள் வெளிநாட்டு ஊழியர்களை நம்பித்தான் நடக்கிறது. அவர்களின் திரை மோகத்தைப் பயன்படுத்திக் கொண்டு நடக்கும் சுரண்டல் என்று கூட சொல்லலாம்.

இப்படியெல்லாம் நடிகர்கள் நிகழ்ச்சி நடத்தி நடிகர் சங்கத்துக்கு பணம் ஈட்ட முயல்வது போல் மற்ற மற்ற தமிழர் பிரச்சனைகளுக்கு ஏன் நடிகர்கள் உதவவில்லை ? காவிரி திட்டத்திற்கு ஒரு கோடி ரூபாய் அறிவித்த பெரிய நடிகரின் ஸ்டேட்மெண்ட் கூட செயல்வடிவம் பெறாமலே இருக்கிறது. இவர்கள் ஈட்டும் பணம் அனைத்தும் தமிழனின் வியர்வையில் விளைந்த தங்ககாசுகள் தானே.

சூப்பர் வரிசையில் இருக்கும் நடிகர்களில் மூன்று நடிகர்கள் தங்கள் ஒருபடத்தின் ஊதியத்தைக் கொடுத்தால் 10 கோடி பொருட் செலவில் கட்டிடத்தை கட்ட முடியும். அப்படி நினைக்காமல் வெளிநாட்டில் உழைக்கும் கட்டுமான ஊழியர்களின் வியர்வையை உறிஞ்சி கட்டமுடியும் என்று நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்பவர்கள் நினைக்கிறர்கள் போல இருக்கிறது. வெளிநாட்டு ஊழியர்களுக்காக இதுவரை நடிகர் - நடிகைகள் அனைவரும் சேர்ந்து ஒரே ஒரு இலவச நிகழ்ச்சி நடத்தி எப்போதாவது மகிழ்ச்சி அளித்திருந்தால் யாரும் இதுபற்றி பேசப்போவதோ விமர்சனம் செய்யப் போவதும் இல்லை.

22 நவம்பர், 2007

திரை(மறைவு) ஊடகம் என்னும் மகா நடிகன் !

சிறுபாண்மை பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் எனக்கு விருப்பம் இருப்பதில்லை. உடன்படுவதில்லை. ஆனால் சமூகங்கள் அவ்வாறாக வலிய அடையாளப்படுத்தப்படுகின்றன. இனம் அல்லது சாதி, மதம் என பிரித்து அறிய எப்படி அவற்றின் ஒற்றை தன்மையை [எனக்கும் இதுபோன்ற சொற்கள் வருகிறது :) ]. சுட்டி வேறுபாடு காட்டப்படுகிறதோ, அதே போல் பிரித்து அறியப்படும் இனம், மதம் , சாதியும் தம்மை ஒரு குழுவாக 'இனம்' காட்டிக்கொள்ள அதில் உள்ள தனித்தன்மைகள் காரணிகளாக அமைந்திவிடுகின்றன. ( இவை உடல் அரசியலா, மன அரசியலா, வெறும் உளவியல் அரசியலா ? அந்த ஆராய்ச்சியை நண்பர் ஜமாலன் மற்றும் பாரி.அரசுக்கு அவர்களுக்கு விட்டுவிடுகிறேன்)

திரைப்படங்கள் ஆகட்டும், சின்னத்திரை நெடும்தொடர்(மெகா சீரியல்)கள் ஆகட்டும் அவை பெரும்பாண்மை சமூகத்தை மையப்படுத்தியே எடுக்கப்படுகின்றன. (சின்னத்திரைகளில் குறிப்பாக டிடி யில் ஆரம்ப காலத்தில் ஒரு குறிப்பிட்ட சமூகத்தின் கதைகள், அவர்கள் குடும்பத்தில் நடப்பவை தான் மிக்கவையாக வந்து எரிச்சலை ஏற்படுத்தியது. அதன் பிறகு வேறு வழியின்றி திருத்திக் கொண்டுள்ளது). ஒருபடத்தின் கதை நாயகன் என்பவனது பெயரும், கதையும் இந்தியாவில் 'இந்து' தன்மை வாய்ந்தாகவே இருக்கிறது. விஜய் என்னும் கிறித்துவ நடிகர் கதை நாயகனாக நடித்தாலும் ஒன்றில் கூட அவர் கிறித்துவ பெயரில் நடிக்க முடியாத நிலைமை. மசாலப்படங்களுக்கும் கதை நாயகர்களின் பெயருக்கும் என்ன தொடர்பு ? இருந்தாலும் 'இந்து' பெயரை வைத்துதான் எடுக்கின்றனர். திரை உலக ஜம்பவான்கள் கூட படம் எடுக்கும் போது இந்து இளைஞன் கிறித்துவ / இஸ்லாம் இளம்பெண் அதனால் வரும் புரட்சிக்காதல் என்ற அளவில் தான் கிறித்துவ / இஸ்லாமிய மதங்கள் இயக்குனரின் புரட்சிச் சிந்தனையை சொல்ல வருகின்றன. ( அதற்கும் மாற்றாக இஸ்லாமிய / கிறித்துவ இளைஞன், 'இந்து' பெண் என்று எடுக்க முன்வரமாட்டார்கள் ). மற்றபடி எந்த இயக்குனரும் இயல்பான காதல் கதையிலோ, வேறு மசாலா கதையிலோ அல்லது கலைப்படங்களிலோ கிறித்து / இஸ்லாமிய பெயர்களில் உள்ள பாத்திரங்களை கதை நாயகர்களாக படைப்பது இல்லை. நடப்பு (நிஜ) வாழ்க்கையில் எத்தனையோ உண்மை கதை நாயகர்கள் அப்துல் கலாம், ஏ ஆர் ரஹ்மான் போன்று உயரத்தில் இருக்கிறார்கள்.

எல்லா துறைகளிலும் எல்லா மதத்தினரும் இருக்கின்றன. திரை துறையில் கூட இயக்குனர்கள், நடிகர்கள், இசை அமைப்பாளர்கள் பல மதங்களை சேர்ந்தவராக இருக்கின்றன. அமீர், பாசில் போன்ற இஸ்லாம் சமூகத்து இயக்குனர்கள் உள்ளனர், மம்முட்டி, இராஜ்கிரன் போன்ற இந்துமதம் சாராத நடிகர்கள் உள்ளனர். பொதுவாழ்க்கையில் எந்த மதத்துக்காரராக இருந்தாலும் சமூகத்தில் பொதுவாக எல்லோரும் சந்திப்பவற்றைத்தான் எல்லா மதத்தினரும் சந்திக்கிறார்கள். திரைப்படம் என்ற ஊடகத்தில் காட்டப்படும் பல கதைகளில் மதம் தொடர்புடைய எதுவும் இல்லாவிட்டாலும் அதில் 'இந்து' பெயரை வைத்தே கதை நகர்த்தப்படுகிறது.

ரஜினி காந்த் நடித்த 'பாட்சா' திரைப்படத்தை எடுத்துக் கொண்டால் அவரது பெயரான மாணிக்கம் என்பதை துறந்து நண்பனின் பெயரான 'பாட்சாவை' வைத்துக் கொள்வார். ஒரு ரவுடியாக காட்டுவதற்கு இஸ்லாமிய பெயரும், சாதுவாக காட்டுவதற்கு மாணிக்கம் என்ற பெயரையும் பயன்படுத்தி இருப்பார்கள்.

இருபது ஆண்டுகளுக்கு முன்பு வந்த திரைப்படங்களிலெல்லாம் ரீனா, ரீட்டா, ரோஸி ஆகிய கிறித்துவ பெண் பெயர்களை ஓட்டலில் நடனமாடுவதாக காட்டப்படும் பாத்திரங்களுக்கு வைத்திருந்தார்கள். தற்பொழுது இப்படியெல்லாம் வருவதில்லை. அதைப் பார்பவர்களுக்கு ஓட்டலில் நடனமாடும் பெண்கள் எல்லாம் கிறித்துவ மதத்தைச் சேர்ந்தவர்கள் அல்லது கிறித்துவ பெண்கள் ஓட்டலில் நடனமாடுவார்கள் என்ற எண்ணம் தானே வரும். திரைக்கு வெளியே அரபு நாடுகளுக்கு கலைகுழுக்களாக சென்று ஷேக்குகளுக்கு ஸ்பெசல் ஆட்டம் போடுபவர்கள், மகாபலிபுரம் சாலைகளிலும், டிஸ்கோத்தே கிளப்புகளின் ரைடுகளில் சிக்குபவர்களில் கிறித்துவர்கள் மட்டுமே இல்லை என்பது வேறு விசயம் :). குறிப்பாக கடத்தல் காரன், சமூக பகையாளன் போன்ற பாத்திரங்களுக்கு இஸ்லாமிய, கிறித்துவ பெயர்களை வைப்பது இன்னும் நடைமுறையில் தான் இருக்கிறது. :(

மதநல்லிணக்கம், இந்தியன் என்ற ஒருமைப்பாடு எல்லாம் வாய்கிழிய பேசுகிறோம், திரைத்துரையில் உரையாசிரியர்கள் (வசன கர்த்தா) மற்றும் இயக்குனர்களுக்கும், நடிகர்களும் எல்லாவித சமூக அநீதிகளையும் போட்டு கிழிக்கிறார்கள். போட்டு தாக்குகிறார்கள். ஆனால் திரைக்கதைகளில் பெறும்பாண்மை 'இந்து' அரசியல் என்னும் கிழிபடாத கோர முகம் அவர்களின் வயிற்றுப்பாடு என்ற கட்டுப்பாட்டில் பாதுகாப்பாக வெளியில் தெரியாமல் நடித்துக் கொண்டு இருக்கிறது.

6 ஜூலை, 2007

விஜய் அடுத்த சூப்பர் ஸ்டாரா ?

சூப்பர் ஸ்டார் கனவும் அதைத் தொடர்ந்து முதல் நாற்காலியும் இளைய நடிகர்களை மிகவும் படுத்துகிறது. சூப்பர் ஸ்டார் கனவில் தற்போது மும்மரமாக இருப்பவர்கள் இருவர் ஒருவர் ஏற்கனவே சிறுவயது முதலே லிட்டில் சூப்பர் ஸ்டார் என்ற அழைக்கப்பட்டு வரும் சிம்பு, அடுத்தவர் இளைய தளபதி விஜய்.

இவர்கள் படங்களில் பஞ்சு டயலாக் இல்லை என்றால் தயாரிப்பாளர்களுக்கே பஞ்ச் விழும் என்பதால் ஸ்டார் அந்தஸ்து இருக்கிறதே என்று தயாரிப்பாளர்களும் சகித்துக் கொள்கின்றனர்.

தமிழன் படம் ஏன் ஓடவில்லை என்பதற்கு விஜயின் அப்பாவும் இயக்குனருமான சந்திரசேகர் மிக அருமையான கண்டுபிடிப்பு ஒன்றை வெளியிட்டார். அதாவது அந்த படத்தில் விஜய் இறப்பது போல் காட்சி வைக்கப்பட்டதாம் ( ஆனால் இறக்கவில்லை, பலர் பிரார்த்தனை செய்ய எழுந்துவிடுவார்) அதனால் விஜய் ரசிகர்களுக்கு அந்த காட்சியை ஜீரணிக்கவோ, ஏற்றுக் கொள்ளவோ முடியவில்லையாம் அதனால் படம் தோல்வி அடைந்துவிட்டதாகவும், ரஜினி படம் போல், விஜய் படத்திலும் கதாநாயகன் அடிவாங்குவது போல் இருந்தாலும், அல்லது இறப்பது போல் காட்சி இருந்தால் ரசிகர்கள் திரையை கிழித்துவிடுவார்களாம்.

தற்பொழுது வரும் விஜய் படங்களெல்லாம் ரஜினியின் அறிமுக காட்சி போல காலை தூக்கிக் காட்டிக் கொண்டுதான் வருகிறார். குத்துப்பாட்டுகள் மற்றும் க்ளோசப் காட்சிகள் எல்லாமும் ரஜினி பாணியிலேயே விஜய்படங்களிலும் இருக்கிறது. தானும் ரஜினி ரசிகன் என்று ஸ்டேட்மெண்ட் விடுவதால் ரஜினி ரசிகர்களின் கூட்டமும் ஓரளவுக்கு விஜய்க்கு இருக்கிறது.

இந்த கூத்தைவிட பெரும் கூத்தாக விஜயின் வரும்கால சூப்பர் ஸ்டார் கனவுக்கு தற்பொழுது விளம்பர யுக்தி போன்று 'விஜய் ரசிகன்' என்ற நிகழ்ச்சி விஜய் டிவியில் வாரநாட்களில் ஒளிபரப்பாகிறது. அதில் கண்தெரியாதவர்கள் முதல் ஊனமுற்றோர் அனைவரும் வந்து விஜயின் புகழை பாடி செல்கின்றனர். எல்லாவற்றிக்கும் மேலாக விஜய் ரசிகர்களின் 'உடல் மண்ணுக்கு, உயிர் விஜய்க்கு' என விஜய்மீது அன்பை பிழிந்து டிவி திரையே கண்ணை மூடிக் கொள்ளும் அளவுக்கு அபத்த டயலாக்குகளை அள்ளி வீசுகின்றனர்.

எம்ஜிஆர், ரஜினி அடுத்து விஜய் மூன்றாவது தலைமுறை சினிமா ரசிகர்களை உருவாக்கிக் கொண்டிருக்கிறார். இவரது சூப்பர் ஸ்டார் கனவு இவருக்கு பலிக்குமா ? அவரையே பழிக்குமா ?

14 ஜூன், 2007

சிங்கையில் சிவாஜி இன்று வெளியாகிறது

பெரும் எதிர்(பார்ப்)பை ஏற்படுத்தி இருக்கும் சூப்பர் ஸ்டாரின் சிவாஜி இன்று சிங்கையில் நான்கு திரையரங்குகளில் வெளியாகிறது.

காட்சிகள் விபரம்:

கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 7 : இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 12:45 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 9 : இரவு 9.30 மணி மற்றும் நள்ளிரவு 1:10 மணி
கோல்டன் வில்லேஜ் ஈசூன் சினிமா 10 : இரவு 9.20 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி

தொலைபேசி 6554 4747


பிளாசா டெக்ஸ்டைல் (200 ஜலான் சுல்தான்): இரவு 9.00 மணி மற்றும் நள்ளிரவு 1:00 மணி
தொலைபேசி 6295 6417

டிக்கெட் விலை : S$15/-

திரை அரங்கில் "சிவாஜி" படம் பொறிக்கப்பட்ட பணியன்கள் கையிருப்பு இருக்கும் வரை விற்பனைக்கு உள்ளதாம்.


உலகிலேயே... ஏன் பிரபஞ்சத்திலேயே....சிவாஜி படம் முதலில் பார்த்த தமிழர்கள் என்ற பெருமை சிங்கை வாழ் தமிழர்களுக்கு கிடைக்கப் போகிறது !!!
:)))

29 மே, 2007

சிவாஜி என்னும் பூச்சாண்டி வருகிறது..

வியாபார பொருள்களை பதுக்கி வைத்தால் டிமாண்ட் ஏற்படும் போது அதிக லாபத்துக்கு விற்கலாம் என்ற மக்கள் விரோத கோட்பாடு படி, சினிமா ரசிகர்களின் பாக்கெட்டை காலி செய்யும் விதமாக இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு சிவாஜி படம் வெளிவருகிறது. சிறுவர்களாக இருக்கும் போது 'சிவாஜி வாயிலே ஜிலேபி' என்று 3 x 3 கட்டம் போட்டு எழுதுவோம். ஜிலேபிக்கு பதில் அல்வா என்று சொன்னால் பொருத்தமாக இருக்கும். கிடைப்பது ரசிகர்களுக்கு.

இதோ வருது அதோ வருது என்று தற்பொழுது ரிலிஸ் தேதி ஜூன் 15 என்கிறார்கள். சிவாஜி வெளிவந்தால் சிறுபட்ஜெட் படங்கள் படுத்துவிடுமோ என்று அச்சம் காரணமாக எடுக்கப்பட்ட பல படங்கள் பெட்டியில் உறங்குவதாக சொல்கிறார்கள்.

அப்படி ஒரு படம் தங்கர்பச்சானின் 'பள்ளிக் கூடம்' ஏப்ரல் - மே பள்ளிக் கூட விடுமுறையில் வெளி இடவேண்டும் என்ற திட்டத்துடன் ஆரம்பிக்கப்பட்டு எடுத்து முடிக்கப்பட்டு சிவாஜி பூச்சாண்டியால் வெளி வராமல் தவி(ற்)க்கிறது. தங்கர்பச்சானுக்கு வெளியிட விருப்பம் இருந்தாலும் படம் எடுக்க காசு போட்ட தயாரிப்பாளர் 'நோ' சொல்கிறாராம். விடுமுறை காலம் கழிந்து 'பள்ளிக்கூடம்' பள்ளிக் கூடங்கள் திறந்த பின்புதான் மணி அடிக்கும் போல் தெரிகிறது. பள்ளிக் கூட 'நேரம் தவறுவதற்கு' இதுவே காரணமாம். சிலருக்கு லாபம் பலருக்கு நட்டம் ! அரசியல் போல் சினிமாவும் 'இமேஜ்' தக்கவைத்துக் கொள்ள எதுவேண்டுமானாலும் செய்யும் !

இதுபோல் பலபடங்கள் ரஜினியின் 'சிவாஜி' க்கு பயந்து பெட்டியில் உறங்குகின்றன. படங்களுக்கு செலவு செய்த பணம் கொடுத்து உதவிய சேட்டுகள் வட்டிப் போட்டு கொழிக்கிறார்கள். எதிர்பார்ப்பை ரொம்பவே கிளப்பிவிட்டதால் திரை அரங்க உரிமையாளர்கள் படத்தின் லாபத்தில் குறிப்பிட்ட விழுக்காடு பங்குதரவேண்டும் என்று கோரிக்கை வைப்பதாக தெரிகிறது. டிக்கெட்விலை முதல் மாதத்தில் 500 - 1000 வரை போகும். ரசிகனின் பாகெட்டில் பெரிய ஓட்டை விழுந்து ஏவிஎம்ன் பட்ஜெட்டில் ஓட்டையை அடைத்து நிறப்பும் என எதிர்பார்கப்படுகிறது.

எல்லாம் எதற்காக ? 3 மணி நேர டயலாக்கில் ஒட்டுமொத்த இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்கப் போகும் பஞ்ச் டயலாக்குகளுக்காக ! ஜூன் 15 ஆம் தேதிக்கு முன்பே சென்னை வாசிகள் தேவையான பாலை வாங்கி கையிருப்பு வைத்துக் கொள்ளலாம். இல்லாவிடில் ஒரு வாரத்துக்கு கிடைக்காது. :)))))))))

மாயத்திரை !

சூப்பர் ஸ்டார் வாழ்க !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்