பின்பற்றுபவர்கள்

நம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நம்பிக்கைகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 பிப்ரவரி, 2013

ஏக(ப் பட்ட) இறைவன்கள் !


கடவுள் நம்பிக்கைக் குறித்து நம்பிக்கையுள்ளவர்களிடம் கேள்வி எழுப்பினால் விடை சொல்லத் தடுமாறும் நிலையில் கடைசியாக நமக்கு கிடைக்கும்  பதில் அல்லது மழுப்பல் 'நமக்கு மேல் ஒருவன் இருக்கான்னு நான் நம்புறேன் அவ்வளவு தான்' என்பதாக முடியும், இந்த பதிலில் நம்பிக்கை சார்ந்த தம் சடங்கு, சம்ப்ராதயம், வேதப் புத்தகம், வேள்வி, வழிபாடு முறை, நோன்பு, படையல், நரகம், சொர்கம் இவற்றையெல்லாம் தற்காலிகமாக புறக்கணித்துவிட்டு / தவிர்த்துவிட்டு தான் அதனை முடிவாக சொல்கிறார் என்பதும் அடங்கும்.

இனக்குழுக்கள் தங்களுக்கான அடையாளம் என்ற அளவில் தான் வழிபாட்டு முறைகளையும் அவரவர் கடவுள்களையும் ஏற்படுத்திக் கொண்டனர், எதிரி நாட்டுப் படையெடுப்பு எப்படியெல்லாம் நில ஆக்கிரமிப்பு செய்கிறதோ, கொள்ளையடிக்கிறதோ அதனால் பாதிப்பு பொருளியல் ரீதியானது மட்டுமே, ஆனால் அவர்கள் அவ்விடத்தில் முடிவாக தொடர்ந்து தங்கும் நிலை ஏற்பட்டால் அவர்களது வழிபாட்டு முறைகள், பழக்க வழக்கங்களையும் புதிய இடத்தில் திணிப்பர், ஏனெனில் தம்முடைய பண்பாட்டு தொடர்ச்சி பேணப்படவேண்டும், மற்றவர்களுடைய பண்பாடு நம்முடையதல்ல என்று தெளிவாகவே அதைச் செய்வர். படையெடுப்புகள் இல்லாமல் எந்த மதங்களும் பரவியதில்லை. 

தற்காலத்தில் படையெடுப்புகளால் மதம் பரவச் செய்வது எளிதன்று. மக்கள் எல்லோரும் தெளிவாகவே இருக்கிறார்கள், மதம் என்பது நிலம் சார்ந்த பண்பாடுகளை அழிக்கக் கூடியது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கின்றனர், அதனால் மதவாதிகளின் தற்போதைய உத்தி மனித இனத்தில் ஏற்றத் தாழ்வு, மற்றும் நிற வேறுபாடுகளை சுட்டிக்காட்டி அங்கு கடைவிரிப்பது தான். 

இனக்குழு கடவுளை பொதுக் கடவுளாக முன்வைக்கப்படும் உத்தி தான் 'ஏக' இறைவன் பற்றிய கருத்துகட்டுமானங்கள், இந்தியாவிலேயே ஏகப்பட்ட ஏக இறைவன்கள் உண்டு, சமண மதத்தை எடுத்துக் கொண்டால் ஏக இறைவன் 'ஆதி பகவன்' என்ற பெயரில் இருபபர், அவரை அருகன் என்றும் சொல்லுவார்கள், ஒரு சமணருக்கு அருகனைத் தவிர வேறு இறைவன் கிடையாது, அவர்களைப் பொறுத்த அளவில் அருகன் ஏக இறைவன், பிறகு பவுத்த மதம், புத்தர் தன்னை கடவுளாகக் கூறிக் கொள்ளாவிட்டாலும் பவுத்தர்களுக்கு ஏக இறைவன் புத்தர் தான், புத்தனைத் தவிர வெற இறைவன் இல்லை என்பார்கள்.

சைவம் மதம் சிவன் தான் முழு முதல் கடவுள் ஏக இறைவன், மற்ற கடவுள்களெல்லாம் சிவனுக்கு ஏவல் செய்யும் கடவுள்கள் தான், சிவனுக்கு கட்டுப்பட்டவை, வைணவர்களுக்கு கிருஷ்ணன் தான் ஏக இறைவன், கிருஷ்ணனை வழிபடுவது அன்றி முக்திக்கு வாய்ப்பில்லை என்பார்கள், இஸ்கான் அமைப்பும் முழுக்க முழுக்க கிருஷ்ணன் தான் ஏக இறைவன் என்று பிரச்சாரம் செய்துவருகிறது. சைவத்தையும் வைணவத்தையும் இணைக்கும் முயற்சியில் புதிதாக ஒரு ஏக இறைவன் முன்வைக்கப்பட்டார் அவர் தான் பிள்ளையார், முழு முதற்கடவுள் விநாயகனே என்று ஒருசாரர் கூறுவர், சக்தி வழிபாட்டுக் குழுவினர் எல்லாம் ஆதி சக்தியில் இருந்து உண்டானவை எனவே ஆதிக்கு தொடர்புடையவள் ஆதி சக்தி, அவளே ஏக இறைவன்(ள்) என்பார்கள். சீக்கியர்களுக்கும் (Waheguru ) ஏக இறைவன் வழிபாட்டாளர்கள்.

இது தவிற ஒவ்வொரு இல்லத்திற்கும் குல தெய்வம் என்று ஒன்று உண்டு, அவரவர் இல்லத்திற்கு அவரவர் குல தெய்வமே ஏக இறைவன், அதைத் தாண்டிய வழிபாட்டு முறைகள் இரண்டாம் பட்சமே. 

ஆபிரகாமிய மதங்களில் ஏகப் பட்ட ஏக இறைவன் உண்டு, யூதர்கள் பழைய ஏற்பாட்டு ஜெகோவா, அல்லோலேயாவின் பரிசுத்த ஆவி, கிறித்தவர்களுக்கு ஏசு. இஸ்லாமியர்களின் அல்லா இவர்களெல்லாம் ஏக இறைவன் பட்டியலில் உள்ள மேற்கத்திய ஏக இறைவன்கள், இதில் இஸ்லாமியர்கள் குறிப்பிடும் அல்லா யூதர்களுக்கும் கிறித்துவர்களுக்கும் பொதுவானவர் என்று முஸ்லிம்கள் கூறிக் கொண்டாலும், அதை அவர்கள் ஏற்றுக் கொண்டது போல் தெரியவில்லை.

மேற்கத்திய மதங்களுக்கும் கிழக்கு மதங்களுக்கும் உள்ள வேறுபாடு, முழுமுதற்கடவுள் நேரடியாகப் பேசமாட்டார், தூதர் ஒருவர் இருக்க வேண்டும், அதனால் தான் தூதர் இல்லாத மதங்களை மேற்கத்திய மதத்தினர் மதங்கள் மதமாக நம்புவதில்லை, ஆனால் கிழக்கில் இந்த பார்முலா 'அவதாரம்' என்ற பெயரில் வருகிறது, சங்கராச்சாரியார் முதல் சாயிபாபாவரை எல்லோரையும் அவதாரங்கள் என்றும் சிலர் அவர்கள் தான் மனித உருவில் வந்த ஏக இறைவனின் துளி என்றும் நம்புவார்கள். இந்திய மனங்கள் இறைவனுக்கு தமக்கும் இடையே தூதர் / தரகர் தேவை இல்லை என்று நினைக்கும் அதனால் தான் இந்திய மதங்கள் இறைத்தூதர்கள் உருவாக்கிக் கொள்ளவில்லை,  பகவானுக்கும் பக்தனுக்கும் இடையில் பூசாரி எதற்கு ? இப்படித்தான் புனித நூல்களை வேதங்களை உருவாக்கிக் கொண்டு, இறைவனே தன் வாக்கினால் கீதையை உருவாக்கி புனித நூலாக்கினார், இது வேறெந்த புனித நூல்களைக் காட்டிலும் நேரடியானது  மிகப் பழமையான பெருமை கொண்டது என்பர்

ஏக இறைவன் கோட்பாடு மேற்கத்திய மதங்களிலும் சரி, கிழக்கு மதங்களில் சரி எந்த ஒரு ஒருமைப்பாட்டையும் ஏற்படுத்த வில்லை, காரணம் இவர்கள் சுட்டிக்காட்டும் ஏக இறைவனின் பண்பு நலன்கள் ஒன்றுக்கொன்று மாறுபட்டவை, என்ன தான் ஏக இறைவன் என்றாலும் மதப்புத்தகம், அதில் காட்டும் சொர்கம் நரகம் இவற்றில் வேறுபாடுகள் இருப்பதால் நமது ஏக இறைவன் தவிர ஏகப்பட்ட பிற ஏக இறைவனெல்லாம் ஒன்றல்ல என்று நம்புகிறார்கள்.

கிரேக்க நாகரீக காலத்தில் வாழ்ந்த ஏக இறைவன்கள் நாகரிகம் மாறிய பொழுது மறைந்து போனார்கள்.

நமக்கு மேல ஒரு கடவுள் உண்டு நம்புவதோடு விட்டுவிட்டு அது எந்த மதம் குறிப்பிடும் கடவுள் என்று ஆய்ந்து பார்த்தால், இதுக்கு பதிலாக நாமே ஒரு ஏக இறைவன் ஆகிவிடலாமோ என்று தோன்றலாம், இப்படித்தான் நித்தி, கல்கி போன்ற சாமியார்கள் தன்னை ஏக இறைவனாக ஆக்கிக் கொண்டனர்,  மதங்கள் கட்டமைக்கும் கடவுள் எல்லாம் பித்தலாட்டம் என்று தனிமனிதனாக ஒருவர் நம்பாவிட்டாலும் அவர் சார்ந்திருக்கும் மதக்கடவுள் தவிர்த்து அனைத்தும் பித்தலாட்டம் என்றே நம்புவர். இந்தியர்களுக்கு எல்லாம் ஒரே கடவுள் என்கிற நம்பிக்கை இருந்தது, அதனால் தான் மேற்கு மதங்கள் ஊடுறுவிய பொழுது அவர்கள் அதை வரவேற்காவிட்டாலும் பெரிதாக எதிர்க்கவில்லை, ஆனால் அதற்கும் இந்துத்துவவாதிகள் வேட்டு வைத்த பிறகு ஏக இறைவன் கோட்பாடுகள் உலகினர் எல்லோராலும் ஏற்றுக் கொள்ளும் படி தெளிவாக வரையறுக்கப்படவில்லை, வரையறுக்கவும் முடியாது என்றே சொல்லலாம், ஏனெனில் எந்த ஏக இறைவன் கோட்பாடு என்றாலும் அவை நிலம் சார்ந்த பண்பாடுகளை உள்ளடக்கியதாகவும் ஆண் பெண் மற்றும் பிற உயிரினங்களுக்கு பொதுவானதாக இருக்க வேண்டும்,

கூகுள் தேடலில் 'one and only God' என்று தேடினால் பலவேறு படங்கள் தான் வருகின்றன. என்னைக்காவது கூகுள் ஹேக் செய்யப்பட்டு ஒரே படம் வந்தால் ஏக இறைவனின் ஒரே மாதிரியான படம் வரலாம், மற்றபடி எந்த காலத்திலும் ஏக இறைவனுக்கு ஒரே படம் தேடலில் வர வாய்ப்பில்லை.

பணம் இருக்கிறவர்களுக்கு பாதுகாக்க வங்கி தேவைப்படும், அன்றாடம் காய்சிகள் ஏழைபாழைகள் கதவுக்கு பூட்டு இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டார்கள்,   கடவுள், மதம் இத்யாதிகள், எல்லாம் பணம் காசு உள்ளவர்களுக்கு அடிக்கடி தேவைப்படும் வஸ்து. முக்தி, சொர்கம், நரகம் இதுபற்றியெல்லாம் அதிகம் கவலைப்படுவார்கள், ஆனால் ஏழைகளுக்கு உணவே சொர்கம், பசியே நரகம். இதில் ஏழைகளிடம் ஏக இறைவன் பற்றிய அறிவை எங்கனம் ஊட்டுவது ?

நம்ம தல அஜித் கூட ஏக இறைவன் தான் அவர் ஏகன் என்ற படத்தில் நடித்திருக்கிறார் அவரது ரசிகர்களுக்கு அவரே ஏக இறைவன்

22 ஜூன், 2012

பசு மாடுகளை கொல்லலாமா ?

பசுமாடு புனிதம் என்று நான் நினைப்பதில்லை, ஆனால் அதன் மீது மிகுந்த மதிப்பு உண்டு, எந்தவித பலனும் பாராமல் நமக்கு பாலை தருவதால் சிலர் அதை தாய்க்கு ஈடாகப் போற்றுவதில் எனக்கு உடன்பாடு உண்டு, பால் சைவமா ? பால் கன்றுக்குத் தானே, அதையே நீங்க திருடி குடிக்கிறீர்கள் என்று கேட்பவர்களில் எவரும் மாட்டு இறைச்சியையோ, வேறு எந்த விலங்கின் இறைச்சியையோ உண்ணாதவர்கள் இல்லை, பசுவதைப் பற்றி விவாதங்கள் வரும் போது எதிர் தரப்பு 'பசும் பால்' பற்றிய கேள்வியை எழுப்பி பசுவிடம் பால் சுரப்பது கன்று குட்டிக்குத் தானே ? என்று கேட்பர். பசுக் கொலைகள் என்பதில் நான் புனிதத்துவத்தை முன்னிறுத்தி தடுக்க விரும்பியதில்லை, மாறாக அதன் மூலம் பெற்ற பாலிற்கான நன்றிக்கடன் என்ற அளவில் அவற்றை கொல்லாமல் விட்டால் என்ன என்றே கேட்பதுண்டு. பசுவைப் பொருத்த அளவில் பல ஆயிரம் ஆண்டுகளாக மனிதனால் வீட்டு விலங்காக வளர்க்கப்படுபவை, மற்ற வீட்டு விலங்குகளுக்கு இருப்பது போல் காம்புகளின் எண்ணிக்கையையும் மடியையும் ஒப்பிட, பசுவிடம் சுரக்கும் பால் அதன் இனவிருத்திக்கு மறைமுகமாக உதவுவதற்கு வளர்ப்பவர்களுக்கு இரண்டு காம்பு, கன்றுக்கு இரண்டு காம்பு என்றே அமைந்திருக்கும், பன்றி, நாய் உள்ளிட்ட விலங்குகளுக்கு பல காம்புகள் அமைந்திருந்தாலும் அவை ஈனும் குட்டிகளுக்கு அவை சரியாகவே இருக்கும், தவிர அவற்றை பயன்படுத்தி மனிதனுக்கு பழக்கம் இல்லை, உபரியான பால் என்பதை உற்பத்தி செய்வதில் மாடும், அடுத்து ஆடும் உள்ளன, சிலர் ஆட்டின் பாலையும் விரும்பிக் குடிப்பார்கள், அவற்றை ஆடு இழப்பதால் குட்டிகளுக்கும் பெரிய இழப்பு இல்லை, காரணம் கன்று குட்டிகளைப் போல் அன்றி ஆட்டுக் குட்டிகள் பிறந்த அடுத்த நாளே புல்லை சுவைக்கக் கற்றுக் கொள்ளும்,என்பதால் ஆட்டின் பாலைக் கறப்பதையும் வழக்கமாக வைத்திருந்தனர். 

பசு இரண்டு கன்றுகள் போடுவது எப்போதாவது நடைபெறுவது தான், மரங்கள் தன் இனவிருத்திக்கு விதையை மூடியிருக்கும் பழத்தை இலவசமாகக் கொடுப்பது போல் பசுக்களின் பரிணாமத்தில் பால் உற்பத்தி என்பது கன்று அருந்தும் அளவை விட மிகுதியானது, குறிப்பாக மனிதர் உள்ளிட்ட விலங்கினங்கள் அனைத்திற்கும் பலவகையான சுரப்பிகள் உண்டு, குறிப்பிட்ட பருவகாலங்களில், சுரப்பிகள் தூண்டுதலில் வர உடலில் இரத்த ஓட்டம் இருக்கும் பொழுது அவை தொடர்ந்து வேலை செய்யும், பால், தேன், மனித உமிழ் நீர் மற்றும் அனைத்து சுரப்பிகளும் அதன் உற்பத்தியை செய்து கொண்டு தான் இருக்கும், எனவே இரத்தம் தான் பாலாக மாறுகிறதா, தேனாக மாறுகிறதா என்பதவிட சுரப்பிகள் சுரப்பதற்கு இரத்தம் எரிபொருளாக பங்காற்றுகிறது என்பதைத் தவிர்த்து, இரத்தம் தான் பாலாக மாறுகிறது எனவே சைவ விரும்பிகள் அதை குடிப்பது தவறு என்பதை நான் புறம் தள்ளுவேன், தீவிர பவுத்த சைவர்கள் இரத்தம் தான் பால் என்று கருத்தில் சோயா பாலைத்தான் குழந்தைகளுக்கும் கொடுத்து பழக்குகிறார்கள். நாம் சாப்பிடுவது சைவ சாப்பாடே என்றாலும் உடலில் அதன் மூலம் உற்பத்தி ஆவது இரத்தம் தான் என்பதால் இது குறித்த கருத்துகளை புறம் தள்ள முடியும். பசு மட்டுமல்ல காளையின் உடல் அமைப்பும் அதன் உறுதியான மேல் கழுத்தும் உழவு செய்வதற்கு அதனைப் பூட்டுவதற்ப உறுதியாகத்தான் இருக்கும். மனிதர்களுக்கு லாபம் தர அவைகளால் முடியவில்லை என்றால் அவற்றை வீட்டு விலங்குகளாக வளர்த்திருக்கவும் மாட்டார்கள்.

மற்றபடி பசு தெய்வம், என்பதையோ புனிதம் என்பதையோ நான் ஏற்றுக் கொள்வதில்லை, பால் கொடுக்கும் உயிர்களில் தாய்க்கு அடுத்து பசு வருவதால் அதன் மீது மதிப்பு உண்டு, எங்கள் வீட்டில் ஒரே வேளையில் நான்கு பசுமாடுகள் வரை வளர்த்திருக்கிறோம், எங்க ஊரில் உடமையாக பசு வைத்திருக்து பால் கறந்து குடிப்பது ஒரு மதிப்பு என்று பெற்றோர்கள் நினைத்திருந்தார்கள், வீட்டுக்கு பயன்படுத்தியது போல் 'சாஸ்திரத்திற்கு' என்று கொஞ்சம் தண்ணீரை ஊற்றி மற்றவர்களுக்கு விற்பார்கள், கறந்த பாலை அப்படியே கொடுத்தால் நல்லது இல்லையாம், என்கிற முட நம்பிக்கையும் பெற்றோர்களுக்கு உண்டு, சென்ற முறை ஊருக்குச் சென்ற பொழுது மாடுகள் ஒன்றையும் காணும், ஏன் என்று கேட்க, அவற்றை பராமரிக்க முடியவில்லை என்று அம்மா சொன்னாங்க, அம்மாவுக்கு பசு மாடு லஷ்மி என்ற நம்பிக்கை உண்டு, மாடுகளுக்கு லஷ்மி, சரஸ்வதி என்றெல்லாம் பெயர் வைத்து அழைப்பார்கள். இன்றும் கூட வீட்டு வாசலில் சாணம் தெளிப்பதை வளக்கமாகத்தான் வைத்திருக்கிறார்கள், சாணக் கரைசல் ஒரு கிரிமி நாசினி என்றே சொல்லப்படுகிறது, பெரும்பாலும் களி மண் சுவர்களையும் தரையையும் கொண்ட குடிசை வீடுகளில் சாணம் கரைத்து மொழுகுதல் இன்றைக்கும் வழக்கத்தில் உள்ளது. அந்த காலத்தில் வீடுகளைச் சுற்றி புதர்கள் இருந்ததால் சாண வாசனை போகும் வரைத ஊர்வன மற்றும் பூச்சி வகைகள் வீட்டுக்குள் வராது என்பதற்காக மாதம் ஒருமுறையேனும் வீட்டை மொழுகுவது பெண்களின் வீட்டு வேலைகளில் ஒன்றாக இருந்தது. பசு மாடு லக்‌ஷிமி என்கிறீர்களே வளர்த்ததில் எதாவது ஒரு பசு மாட்டையாவது அவை வயதாகி சாகும் வரை வளர்த்திருக்கிறீர்களா ? நான்கு ஈற்றுகள் முடிந்த பிறகு வேறு எங்காவது இரண்டாம் ஈற்று என்று விற்றுவிடுவது தானே வழக்கம், வாங்கியவர்கள் அதை கேரளாவுக்கு தானே கொண்டு செல்வார்கள், என்று கேட்டதற்கு அம்மாவிடம் இருந்து வந்த பதில் 'அதோட தலையெழுத்து நாம என்ன செய்ய முடியும் ?' என்பதே, பசுமாடு வளர்ப்பவர்களின் அனைவரும் நிலைகளும் இது தான். இதைப் பார்க்கும் பொழுது பசுவின் மீது கட்டப்படும் புனிதத்தை அதனை நம்புவர்களே மீறிவிடுகிறார்கள் என்னும் போது மற்றவர்கள் பசுவை அடித்து திண்பதில் நாம் என்ன குறை சொல்ல முடியும் ? 

பசுக்களை அடிமாடுகளாக மாற்றுவது அதனை வளர்த்தவர்களின் செயலே அன்றி அதனை வாங்குபவர்களோ, வெட்டி திண்பவர்களோ கிடையாது, கைவிடப் பட்ட மாடுகள் தான் அடிமாடுகள் ஆகின்றன. எருமையும் தானே பால் கொடுக்கிறது, அதனை ஏன் புனிதமாகக் கருதாமல் எமனாகக் கருதுகிறார்கள், நம் மனதில் இருக்கும் கருப்பு பற்றிய தாழ்வு மனப்பான்மையும் அதனை இழிவு படுத்திப் பார்ப்பதில் வரும் மகிழ்ச்சியும் தான், தமிழர்களில் பெரும் விழுக்காட்டினர் கருப்பு நிறம் தான் என்பதால் தமிழர்களுக்கு எருமை மாடுகளை எமனாகக் காட்டுவதற்கு தகுதியே கிடையாது.

அந்த காலத்து ஆட்கள் எல்லாவற்றையும் மதித்தார்கள், போற்றினார்கள் என்று பொத்தாம் பொதுவாக பலர் கூறுவதும், நம்பிக்கை கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள், பசு புனிதம் என்று நம்பப்பட்ட காலங்களில் சிறுநகரங்களிலும், சிற்றூர்களிலும் (கிராமம்) ஊருக்கு ஒன்றாவது கால்நடை பட்டி உண்டு, இந்தப் பட்டிகள் பெரும்பாலும் ஆடுமாடுகளை அடைத்து வைப்பதற்காகப் பயன்படுத்தப்படும், அடுத்தவர் வயலில் இறங்கி மேயும் போது அவை பிடிபட்டால் பட்டியில் ஒப்படைக்கப்படும், பட்டி நடைமுறைகள் ஆடுமாடுகளுக்கு உடைமையானவர்கள் அவற்றிற்கு நஷ்ட ஈடு தலையாரியிடம் கொடுத்து அவற்றை விடுவிக்க வேண்டும், விடுவிக்கும் வரை பட்டியில் அடைக்கப்பட்ட ஆடுமாடுகள் பட்டினிதான், அப்படி பட்டினி போட்டு அடைத்து வைத்திருப்பது 10 நாட்கள் வரை தொடரும், அதற்குள் உடல் வற்றி வெறும் எலும்பும் தோலுமாக ஆக அவற்றை ஏலம் விடுவார்கள், ஏலம் எடுப்பவர்கள் ரூ 20 க்கும் 30க்கும் ஏலம் எடுத்துச் செல்வார்கள். பெரும்பாலும் வழி தவறி வந்த ஆடுமாடுகள் தான் மீட்பவர் வரும் வரை பட்டினி கிடக்க நேரிடும். இது எவ்வளவு கொடுமை பாருங்க, தான் செய்தது தவறே என்று அறியாத விலங்கினங்களை எப்படியெல்லாம் கொடுமைபடுத்தி இருக்கிறார்கள். அவ்வாறு அடைக்கப்படும் ஆடுமாடுகளில் ஈனும் நிலையில் உள்ளவைகளும் கூட உண்டு, எங்கள் வீட்டு மாடு ஒரு முறை பின் தொடையில் ஆழமான பேனா கத்தி கீரலுடன் வந்து சேர்ந்தது, எங்கு சென்றது யார் கீறினார்கள் என்றே தெரியவில்லை, பேச இயலாத உயிர்களை முன்பு வாழ்ந்தவர்கள் எப்படியெல்லாம் கொடுமை செய்திருக்கிறார்கள், அதற்கு பதிலாக அவற்றை ஒரு நிமிடத்தில் வெட்டி இறைச்சி ஆக்குவது அவற்றிற்கு செய்யும் கொடுமைகளில் மிகவும் குறைவானது தான். முன்னோர்களெல்லாம் தவறு செய்யாதவர்கள் அவர்கள் விலங்குகளிடம் எவ்வளவு அன்பு செலுத்தி இருக்கிறார்கள் பாருங்கள், இன்றைக்கு புளுகிராஸ் அமைப்புகள் பெருகியதால் பட்டிகள் மறைந்துவிட்டன, ஆனாலும் அடிமாட்டு விற்பனைகளுக்கு குறைவே இல்லை.


இன்றைய மக்கள் தொகையின் தேவைகளுக்கு ஈடு கொடுக்க பசுவிடம் பால் எந்திரம் வழியாகத்தான் கறக்கப்படுகிறது. எந்திரங்கள் உறிஞ்சும் போது மாடுகளுக்கு ஏற்படும் வலி கூடுதல் ஆனதே. 

பசு புனிதம் என்று கூறுவதால் அவற்றை போற்றத் தேவையில்லை, ஆனால் அவற்றின் பலன் பெற்ற நன்றி உடையவர்கள் என்பதால் அதனைப் போற்றுவதில் தவறு இல்லை. பசுவதைகள் மட்டுமல்ல எந்த ஒரு விலங்கையும் வதைப்பது மிகப் பெரிய தவறு அதற்கான உரிமையும் நமக்கு இல்லை. இன்றைக்கு இறைச்சிக்காகவும் பாலுக்காகவும் வெளிநாடுகளில் மாடுகள் பெருகியதே ஓசோன் படலம் விரிந்ததன் காரணமாகச் சொல்கிறார்கள், மாடுகளின் சாணத்தில் மீத்தேன் இருப்பதால் அவை ஓசோன் மண்டலத்தை ஓட்டைப் போடுகிறது என்கிறார்கள், சாணங்களை உடனடியாக உரமாக மறுபயீனீடு செய்யாமல் அவற்றை தேக்கி வைத்திருப்பதாலும், அவற்றை முறையாக அப்புறப்படுத்தாமலும் கொட்டுவதால் அவற்றில் உற்பத்தியாகும் மீத்தேன் அளவும் மிகுதி. மாடுகள் உற்பத்தியை, மாட்டுப் பண்ணைகளை குறைத்துவிட்டால் பனிப் பகுதிகளின் ஆயுளை கூட்டி, கடல் நீரால் உலக அழிவு என்கிற பேரபத்தையும் தள்ளிப் போடலாம். 

மாடுகளை கொன்று திண்பவர்களை விட, செத்தமாடுகளை உண்பவர்கள் தாழ்வானவர்கள் இல்லை, ஏனெனில் மாடுகள் இன்னார் உண்ணுவார்கள் என்பதற்காக இறப்பதில்லை, மாடுகளின் பாலைக் குடிப்பதில் தவறு இல்லை, மாடுகளை பாலுக்காக மட்டுமே வளர்த்து பின் அதனை புறக்கணிப்பது தவறு , அது போல் மாட்டு இறைச்சிகள் உண்பது தவறு இல்லை, ஆனால் தவிர்க்கலாம், போதிய இறைச்சிகாக அதன் உற்பத்தியை கூட்டுவதும் தவறே, அதன் எதிர் பலனை நாம் தான் அனுவிப்போம்.

'பிஸ்மில்லா' என்று சொல்வது கூட மாடுகளைக் கொல்வதன் கட்டுப்பாடுகள் குறித்தது, ஆனால் கறியின் சுவையில் அதனை உரிமையாக்கிக் கொ(ள்)ல்கிறார்கள். விலங்கினங்களை கொல்வது தவறு என்கிற கருத்து இல்லை என்றால் அவற்றை கொல்லும் போது பிஸ்மில்லா சொல்வதும், அவற்றை அப்படி சொல்லப்பட்டதை மட்டுமே 'ஹலால்' என்று சொல்வதும் கூட தேவையற்றது தானே.

12 ஏப்ரல், 2012

* உலக அழிவை நாடும் மத நம்பிக்கைகள் !


ரே ஒரு பெரிய நில அதிர்வு அன்றைய செய்திகளையெல்லாம் பின்னுக்குத்தள்ளி ஊடகங்களை விழுங்கிவிடுகிறது. மனிதர்களை விட இயற்கையே 'சூப்பர் ஸ்டார்கள்'. உடனேயே உலக மக்களின் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன, ஊடகங்களுக்கு முழுத்தீணியாக இயற்கைப் பேரிடர்களே என்றும் உள்ளன.

****

அனைத்து மதவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை 'கடவுள் உலகையும் மனிதன் உட்பட ஏனைய உயிர்களைப் படைத்தார்' என்பதே. மனிதனின் ஆறாம் அறிவு செயல்படத் துவங்கியதிலிருந்து உயிர் தோற்றம் குறித்த சிந்தனைகளில் ஒரு முடிவை எட்டாமல் நம்பிக்கையின் அடைப்படையில் 'இவை கடவுளின்' செயல் என்று முடித்துக் கொள்வதால் கடவுள் குறித்த கேள்விகளை தவிர்த்துவிட்டு கடவுளின் அன்பைப் பெற முடியும் என்ற நம்பிக்கையின் விளைவாக இதில் நம்பிக்கையாளர்கள் நிறைவு பெற்றுக்கொண்டார்கள்.  இறப்பிற்கு பிறகான வாழ்கை என்ன ? என்ற கேள்விக்கு விடையாக சொர்க நகரக் கோட்பாடுகளும், பொருள்கள் என்றால் அழிவுக்கு உட்பட்டது என்ற வரையறையின் நீட்சியாக இந்த உலகமும் ஒரு நாள் அழியக் கூடியது தான் என்பது புரிந்துணர்வு என்பதால், உலகம் அழிக்கப்பட்டால் அல்லது அழிந்துவிட்டால் என்ன வாகும் என்ற கேள்விக்கும் கதைகளையும் நம்பிக்கைகளையும் வைத்துள்ளனர்.

ஆப்ரகாமிய மதங்களைப் பொருத்த அளவில் பிரளயக் காலம் என்பது நடந்துள்ளது, நடக்கும் என்பது அவர்களது நம்பிக்கை, அதில் பூமி முற்றிலுமாக அழியாது, நீரினால் கொள்ளப்படும் என்பதும், அவ்வாறு அழியும் போது அனைத்து உயிரினங்களிலும் ஒரு இணை (ஜோடி) காப்பாற்றப்பற்று பின்னர் தொடர்ந்து வாழ அனுமதிக்கப்படும் என்று கூறுகிறார்கள். இதையும் படைப்புக் கொள்கை மற்றும் மறுமை ஆகியவற்றை ஒப்பிட்டுப் பார்த்தால் ஒன்றுக்கு ஒன்று முரணாக இருப்பது நன்கு விளங்கும். அதாவது உலகை ஆறு நாளில் படைத்துவிட்டு ஏழாம் நாள் ஓய்வெடுக்கப் போன கடவுளால் மீண்டும் அவ்வாறே செய்யாமல் ஏன் மக்கள் அனைவரும் கெட்டவர்கள் ஆன பிறகு அதில் இருந்து நல்லவர்களை மட்டும் ஏன் தேர்ந்தெடுத்து காப்பாற்றி வைக்க வேண்டும் ? தவிர அவர்களை இந்த உலகில் தொடர்ந்து வாழ வைக்காமல் நேரடியாக சொர்கத்திற்கே அழைத்துச் சென்றிருக்கலாமே ? என்ற கேள்வியும் வருகிறது, ஊழிக்காலத்தின் போது நோவா கப்பலும் அதில் ஏற்றப்படும் உயிரினங்கள் பற்றிய கதை உங்களுக்கு நன்கு தெரியும் என்றே நினைக்கிறேன்.

தனிமனிதனின் இறப்புக்கு பின்னார் சொர்கம் / நரக கட்டுமானங்களைத் தீர்வு போல் சொல்லும் மதங்கள், ஒட்டுமொத்த மக்களும் கெட்டுவிட்டால் அதற்கான தீர்வு என்ன என்கிற சிந்தனையின் தொடர்ச்சியாக நோவா கப்பல் கதையும், பிரளயம் என்பது ஒரு நிகழ்வு தான் என்றும் அதற்கு பின்னரும் பூமியும் உயிர்களும் உண்டு என்றே சொல்கின்றன. இங்கு தான் மேற்குறிப்பிட்ட கேள்வி, எதற்கு காப்பாற்றி மறுபடியும் உலவ விடவேண்டும், அவர்களை நேரிடையாக சொர்கத்தில் விட்டுவிட்டு அங்கு வாழவைக்கலாமே ? தவிர மனித தவறுகளுக்காக ஒட்டுமொத்த உலகையும் நீரைக் கொண்டு அழிப்பதால் பாழ்படும் பிற உயிரினங்கள் என்ன தவறு செய்தன ? அவற்றையும் ஏன் ஜோடி ஜோடியாக காப்பற்ற வேண்டும் ? கடவுளின் படைப்புத் திறனால் ஆகுக என்று சொன்னபோது தோன்றிய பூமியும் உயிரினமும், பின்னர் ஏன் அவ்வாறே செய்து தோன்ற வைக்க முடியாது ? எதனால் அவை காப்பாற்றப்பட்டு தான் மீண்டும் வெளியில் விட வேண்டும் ?

இந்த முரண்பாடுகளின் தொகுப்புகளை வைத்துப் பார்க்கும் போது கடவுள் படைக்கவில்லை என்பதை நேரிடையாக ஒப்புக் கொள்ளத் தயங்கிய மனநிலையில், பூமி அழியும் ஆனால் தொடரவேண்டும் என்கிற மன நிலையில், நோவா கப்பலும் அந்தக் கதைகளும் வந்திருக்க வேண்டும். கடவுள் எதையும் படைக்கவில்லை என்று மதங்களே ஒப்புக் கொள்வதற்கு நோவா கப்பல் கதைகளே சாட்சியாகக் கிடக்கின்றன.

கெட்டுப் போன வேலை செய்யாத கணிணியை தூக்கி வீசிட்டு புதுக்கணிணி வாங்கிக் கொள்ளலாம் என்பது போல் கடவுள் ஏன் பழைய பூமியை அழித்துவிட்டு புதிதாக இன்னும் அதிக பரப்பளவுடன் ரியல் எஸ்டேட் பிரச்சனை இல்லாமல், ஆறு நாளைக்கு பதில் 10 நாளே எடுத்துக் கொண்டு மிகப் பெரிய அளவுக்கு மற்றொரு கோளை உருவாக்கி அதில் புதிய உயிரினங்களை படைக்கக் கூடாது ? 

ஆப்ரகாமிய மதங்களில் மட்டுமா பிரளய காலத்தில் ஜோடி ஜோடியாக காப்பற்றப்பட்ட கதை ?  அகத்தியர் நாடியில் இதே போன்ற கதைவருகிறது,  ஒவ்வொரு யுகம் முடியும் போது உலகம் நீரினால் சூழப்படுமாம், அப்போது பாதுகாப்பட்டவேண்டிய அனைத்து உயிரினங்களையும் ஒரு கலசத்தில் போட்டு இமயமலையின் உச்சியில் வைப்பாராம் பிரம்மன், பின்னர் வெள்ளம் வடிந்த பிறகு அவை விடுவிக்கப்பட்டு வாழவிடப்படும், யுகங்களின் தொடர்சிகள் இவ்வாறாக இருக்கின்றது என்கிறது இந்து மதப் புராணம்,

 ‘பிரளய நீரில் நீந்திய ஜீவ கும்பத்தை பாணமொன்றால் கயிலாயநாதன்
தகர்க்க கண்டோமே; அமிர்தமது நின்ற துவித்தலமும்
மகாமகமொடு பொற்றாமரை பொய்கையானதே
சிவனே தன்னமிர்த கரத்தால் கும்பத்தைக் கூட்டி
மலரசஞ்சாய்ந்து மணலிங்கமாக்கிட்டானே’

கடவுள் குறித்த மனித சிந்தனைகளும், படைப்பு, உயிர், அழிவு குறித்த சிந்தனைகளும் உலகெங்கிலும் ஒன்று போல் தான் இருந்திருக்கின்றன, எனபதற்கு இவ்வெவ்வேறு கதைகளும் சாட்சி.


பூமி ஏன் அழியும் ? அழிய வேண்டும் என்கிற நம்பிக்கை ஏற்பட வேண்டும் ? ஒவ்வொரு காலத்திலும் மனிதர்கள் பிறழ்ந்துவிடுகிறார்கள், வாழ்கை நெறியைக் கெடுத்துவிடுகிறார்கள், அவர்களுக்கு அச்சமூட்டவேண்டும் என்பதே காரணம் என்பது தவிர்த்து நோவா கதைகளிலோ, அகத்தியர் நாடியிலோ சுற்றுப் புறச் சூழல், ஓசோன் ஓட்டை பற்றியெல்லாம் எதும் சொல்லப்படாததால் நாம் அவற்றை சுற்றுப் புறச் சூழல் தொடர்பில் உலகம் அழியும் என்று தொடர்புபடுத்திவிட முடியாது. ஆக மனிதன் என்றுமே நல்லவனாக நீடித்தது இல்லை, மனிதர்கள் கெட்டுவிடும் போது உலகம் அழிவதில் தவறில்லை, அழிய வேண்டும் என்கிற எண்ணமும், அதே சமயத்தில் பூமியில் மனித இனம் / உயிர்கள் தொடர்ந்து வாழும் என்கிற நம்பிக்கையாவே இந்தக் கதைகளின் உளவியல் விளங்குகிறது. 


****
தீர்ப்பு நாள், கல்கி அவதாரம் 'ஜல பிரளயம்' ஏற்படும் என்றெல்லாம் நம்புபவர்களும் அதை விரும்புவர்களும் நில நடுக்கம், சுனாமி எச்சரிக்கை, இயற்கைப் பேரிடர் என்றால் வழிபாட்டுத் தளங்களில் தஞ்சம் அடைந்து காப்பாற்ற கெஞ்சுகிறார்கள், வேண்டுகிறார்கள், அப்பறம் எப்படித்தான் கடவுள் ஏற்கனவே சொன்னப்படி உலகை அழித்து நம்பிக்கையாளர்களை (மீளா) சொர்கத்திற்கு இட்டுச் செல்வாராம் ? இந்தப் பதிவை முதற்பத்தித் தவிர்த்து ஏற்கனவே எழுதி வைத்திருந்ததால் இன்று வெளியிடுவது பொருத்தமாக இருக்கும் என்றே நினைக்கிறேன்.




இந்த அவதாரங்களைப் பார்த்துவிட்டு இன்னுமா உலகம் அழியாமல் இருக்கு என்பதே எனக்கு வியப்பாக இருக்கிறது.
********

நேற்றைய சுனாமி எச்சரிக்கையால் அவதியுற்றவர்கள் நோயாளிகளும் பள்ளிக் குழந்தைகளும் தான், என்ன தான் மனித நேயம் பேசினாலும் தன் உயிருக்கும் உடைமைக்கும் ஆபத்து என்னும் போது எதிரே சாகக் கிடப்பவர்களை மிதித்துக் கொண்டு ஓடுவதே இயல்பாக நடக்கிறது, இதையும் தாண்டி இதை வாய்பாக எடுத்துக் கொண்டு சூறையாடும் கூட்டமும் உண்டு, சென்ற முறை சுனாமி ஏற்பட்டப் பிறகு கரையில் சிதறிக் கிடந்த பிணங்களின் நகைகளை, உடைமைகளை  எடுத்துக் கொண்டதுடன் தோடுகளை கழட்டி எடுத்துக் கொள்ள காலமெடுக்கும், அதற்குள் யாராவது பார்த்துவிடுவார்கள் என்று மிக விரைவாக தோடு துளைப் பகுதியை கீறி எடுத்துச் சென்றிருந்தனர். எதிரே நடந்த பேரழிவு, மரணம் இவற்றையெல்லாம் நேரில் பார்த்தும் பிறர் பொருள் பேராசை கொண்டோர் இருக்கிறார்கள் என்பது, சுனாமிகளை விட ஆபத்தான மக்களுடன் நாம் வாழ்ந்துவருகிறோம் என்பதும் உண்மை தான்.

10 ஆகஸ்ட், 2009

மனித உடல் நோய்களும், குணப்படுத்தும் சாமியார்களும் !

நமக்குக் கிடைக்கும் உணவு, மூச்சுக் காற்று, தண்ணீர் இவற்றில் இருக்கும் நச்சுத் தன்மையே உடலில் நோய்கள் தோன்றுவதற்கு ஏதுவாக அமைகிறது. அப்படி எதுவும் இல்லை என்றால் பரம்பரைத் தன்மையாக உடலில் அதன் தொடர்புடைய மரபியல் நோய்கள் தோன்றும், அதுவும் இல்லை என்றால் விபத்து போன்றவற்றால் உடலில் காயங்கள் ஏற்படும், காயங்கள் நோய்கள் இல்லை என்றாலும் அதனை சமச்சீர் செய்யும் முயற்சியில் சுரப்பிகள் மிகுதியாக வேலை செய்ய அதன் காரணமான பக்க விளைவுகளாலும், எடுத்துக் கொள்ளும் மருந்து காரணமாக உடலில் நோய்கள் தோன்றும். நோய்களில் தற்காலிக நோய், தொடரும் நோய்கள், குணப்படுத்த முடியாத நோய்கள் எனப் பலவகை உண்டு. தற்காலிக நோய்களான காய்சல், சளி, வயிற்றுப் போக்கு, தலைவலி ஆகியவை சரியான மருந்து எடுத்துக் கொள்வதன் மூலம் சரி ஆகிவிடும். குணப்படுத்த முடியாத நோய்களுக்கு மருந்துகள் எடுத்துக் கொள்வதன் மூலம் அதன் வீரியத்தைக் குறைத்து வாழ்நாளை நீட்டிக் கொள்ளலாம். உடல் நோய்கள் குறித்து எனது அறிவுக்கு எட்டிய எளிய விளக்கம் தான் இவை. எந்த ஒரு பெரிய நோய்களும் குணம் ஆகுவதற்கு மனம் முழுதாக ஒத்துழைக்க வேண்டும், எனக்கு விரைவில் குணமாகிவிடும் என்கிற நம்பிக்கை நோய்பற்றி மிகுதியாக சிந்திக்காமல் இருப்பதன் மூலம், மனம் இலகுவாக இருப்பதால் இதய இரத்த ஒட்டம் சீராக இருக்கும், அதன் வழியாக நோய்கள் விரைவில் குணமடையும். வலி என்பது நோயின் பக்க விளைவு என்பதைவிட வலி என்பது நோய் இருப்பதை மூளைக்கு உணர்த்தும் ஒரு இயற்கை ஏற்பாடு என்பதாகப் புரிந்து கொண்டால் வலியைத் தாங்கிக் கொள்ள முடியும். வலி மட்டும் இல்லை என்றால் நோய் கண்டதே நம்மால் உணர முடியாது, மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும் என்கிற உந்துதல் குறைந்துவிடும். உடல் சிதைவுக்கு இட்டுச் சென்றுவிடும். நோய் கண்ட உடலுக்கு வலிகள் மிக மிக தேவையான ஒன்று.

*****

மனித உடல் உறுப்புகளால் ஆனது என்பது போலவே அவ்வுறுப்புகள் இரத்தமும் சதையுமாக ஆனவை என்பது உண்மை. உடலியல் சூழல், விபத்துக் காரணமாக உடல் நோயைப் பற்றுவதும் முழுக்க முழுக்க இயற்கையானது. காற்றில் மாசுக்கள் சேரும் போது, தண்ணீரில் அசுத்தம் சேரும் போது அவை தூய்மை கேடு அடைவதைப் போன்றது தான் உடலில் ஏற்படும் நோய்கள். இவற்றிற்கான தற்காலிக அல்லது முடிவான தீர்வு என்பது சரியான மருத்துவரைப் பார்த்து அல்லது சரியான மருந்து பரிந்துரைகளை ஏற்றுக் கொள்வது மட்டுமே. ஆனால் நோய்களை சாமியார்கள் குணப்படுத்துவதாக பலரும் நம்புகிறார்கள். நோய்களைக் குணப்படுத்தும் சாமியார்களுக்கும், விடுதி அறை மருத்துவர்களுக்கும் எந்த ஒரு பெரிய வேறுபாடும் அல்ல, இருவருமே அற்புதங்கள் நிகழ்த்துவதாகக் கூறி நோய் கண்டவர்களின் பலவீனங்களை பணம் ஆக்குபவர்கள் தான். நாம் அறிந்தவரையில் எந்த ஒரு சாமியாரும் மூப்பு, பிணி, மரணம் இன்றி மறைந்தது கிடையாது. ஒரு காலத்தில் சித்தர்கள் எனப்பட்டோர் மூலிகை மருத்துவங்களில் சிறந்தவர்களாக இருந்தனர், அவர்கள் பல மறைச் (சங்கேத) சொற்களால் பாடல்களை எழுதி வைத்துள்ளார்கள், அவர்கள் ஆன்மீக வழியிலும் சிறந்தவர்களாக இருந்தனர். ஆனால் இன்று நோய்களை குணப்படுத்துவதாகச் சொல்லும் சாமியார்களுக்கு சித்த மருத்துவமும் தெரியாது ஆன்மீகமும் தெரியாது, அதனால் தான் தங்களின் தோற்றம் தங்களை சாமியார்கள் என்று நம்பும் படி இருக்க வேண்டும் என்பதற்கு மிகவும் கவனம் எடுத்துக் கொள்கிறார்கள், அவர்கள் சக்திவாய்ந்தவர்கள் என்று சொல்வதற்காக கையாட்களை வைத்துக் கொண்டு சாமியார் அற்புதம் நிகழ்த்துபவராக கதைகளைப் பரப்புவர்களை வைத்திருக்கிறார்கள்.

நோய்கண்டவர்கள் அனைவருமே குணம் அடையாமல் இருப்பது இல்லை, அப்படி குணம் அடைபவர்களில் சாமியார்களை நம்புவர்களும் உண்டு, ஆனால் அந்த நம்பிக்கைதான் அவர்களை குணப்படுத்துவதாக நம்ப வைக்கப்படுவதும், அவர்களே அவ்வாறு நம்புவதும், அந்த அதீத உணர்ச்சியின் வெளிப்பாடுகளாக 'சாமியாரின் அற்புதம்', 'அவதாரத்தின் அற்புதங்கள்' குறித்த நூல்களில் இவர்களது சாமியார் துதிகளையும் எழுதிவிடுவார்கள், அதாவது எந்த ஒரு மருத்துவரும் கைவிடப்பட்ட நிலையில் (அப்படி எத்தனை மருத்துவரைப் பார்த்தார்கள் என்று தெரியாது) சாமியார் 'ஓவர் நைட்டில்' குணப்படுத்தியதாக நூல்களில் எழுதுவதும், எதிர்பட்டோரிடமெல்லாம் அதே தகவலைச் சொல்வதன் மூலம் தொற்று நோயைவிட சாமியாரின் புகழ் விரைவாகப் பரவிவிடும்.

மிகச் சிறந்த ஆன்மிகவாதிகள் என்று போற்றப்படுபவர்கள் கூட தீர்க்க முடியாத நோய்கண்டே இறந்திருக்கிறார்கள், இராம கிருஷ்ண பரம ஹம்சருக்கு புற்றுநோய், அவர் முதியவர் என்றாலும் இறக்கும் போது மிகவும் தள்ளாடக் கூடிய முதியவர் அல்ல, விவேகநந்தர் இறக்கும் போது அவருக்கு வயது 40க்கும் கீழ்தான். அவருக்கும் இரத்தப் புற்றுநோய், மூல நோய் ஆகியவை இருந்தன. மகான் எனச் சொல்லப்பட்ட புத்தரும் விச உணவை உண்டதனால் ஏற்பட்ட விசம் பரவலின் மூலம் உயிர் துறந்தார். கிருபானந்த வாரியார் லண்டனில் இருந்து திரும்பும் போது விமானப் பயணத்திலேயே மாரடைப்பால் மரணம் அடைந்தார். இப்படியாக எந்த ஒரு சாமியார்களும், ஆன்மிகவாதிகளும் கடுமையான நோய் இல்லாமல் இறந்ததோ அல்லது வாழ்நாள் முழுவதும் நோய் அண்டாது வாழ்ந்தோ அல்லது மரணம் என்பதை முற்றிலும் தவிர்த்தவர்களாக இருந்ததே கிடையாது.

முடவர்களை நடக்கவைப்போம், ஊமைகளைப் பேசவைப்போம் என்கிற கிறித்துவரகளில் ஒரு பிரிவினரைப் போல் இந்து மத சாமியார்களில் பலர் சக்கர நாற்காலியில் உட்கார்ந்து கொண்டே பலரையும் குணப்படுத்துகிறார்களாம், அடிக்கடி சர்சைக்கு வரும் எழுத்தாளர் மூன்று ஆண்டுக்கு முன்பு வரை நாத்திகராக இருந்தவர் ஒரே ஒரு முறை மாரடைப்பு ஏற்பட்டதும் ஒரு சாமியாரின் பக்தர் ஆகிவிட்டார். சாமியாரின் புகைப்படத்தில் இருந்து திருநீர் கொட்டுவதாக எல்லோரிடமும் சொல்லி வருகிறாராம். ஆக ஒருவரின் மரண பயமே சாமியார்களின் ஆசிர்வாததிற்கும், புகழ் பரவலுக்கும் மூல தனமாகிறது.

***

மனித உடல் உலோகங்களால் ஆனது கிடையாது, நோயும் வலியும், நோய் முற்றினால் மரணமும் இயற்கையானது, மருந்துகள் மூலம் நோய்களை கட்டுப்படுத்தலாம், குணப்படுத்தலாம், மரணத்தையும் தவிர்கலாம், ஆனால் இதில் எதையுமே சாமியார்களின் மீது இருக்கும் நம்பிகையால், சாமியார்களின் ஆசிர்வாதங்களினால் குணம் அடைவதில்லை. புற்று நோயை 'ஒவர் நைட்டில்' குணப்படுத்துகிறார் என்று அல்லக்கைகளால், அறியாமையால் உளரும் அப்பாவி பக்தர்களால் கிளப்பிவிடப் படுவதிலெதிலும் உண்மைகள் என்பது மருந்துக் கூடக் கிடையாது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்