பின்பற்றுபவர்கள்

நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நகைச்சுவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

28 ஜனவரி, 2013

கமலஹாசன் ஏற்கனவே இஸ்லாமியர்களை இழிவு.....


எதோ விஸ்வரூபம் படத்தில் மட்டும் தான் கமலஹாசன் முல்லா ஓமர் மற்றும் ஆப்கானிய தலிபான்களை தீவிரவாதிகளாகவும், அவர்கள் கையில் வைத்து புனித போருக்கு அழைப்பு விடுக்கும் புனித புத்தகத்தை தீவிரவாத நூலாகக்கி கேவலப்படுத்தி இழிவு படுத்தினார் என்பதில்லை, கமலஹாசன் இஸ்லாமியர்களை இழிவுபடுத்துவதை ஏற்கனவே துவங்கிவிட்டார், அவ்வை சண்முகி படத்தை மீண்டும் மீண்டும் பார்த்தீர்கள் என்றால் நீங்கள் ஏற்கனவே கமல் இஸ்லாமியர்களை இழிவுபடுத்தி இருப்பதை தெரிந்து கொள்ளலாம், அந்த படத்தில் கமலின் நண்பராக வரும் நாசர் ஒரு முஸ்லிம் சமையல்காரனாக காட்டப்பட்டு இருப்பார், காலம் காலமாக தமிழ் சினிமாவில் கடத்தல் காரர்களாக சித்தரிக்கப்படும் இஸ்லாமியர்களை கமல் இந்தப்படத்தில் சமையல்காரனாக சித்தரித்திருந்ததை முஸ்லிம் பார்த்திரத்திற்கு  புரோமோசன் கொடுத்திருப்பதாக நினைக்காதீர்கள், அந்த சமையல்காரன் வேடத்திலும் முதலாளியிடம் பணத்தை கையாடல் செய்த நபராகத்தான் நாசரைக் காட்டி இருப்பார், இந்தப் படத்தைப் பார்த்தவர்கள் இஸ்லாமியர்கள் படிப்பறிவு அற்றவர்கள், சமையல் வேலைக்கு தான் சரியாக இருப்பார்கள், இருந்தாலும் அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று நினைக்க வைக்குமா வைக்காதா ?

நன்றாக பேசும் நாசரை அடுத்தக் காட்சியில் ஊமையாக்கி ஒரு பார்பனர் வீட்டில் பொய் சொல்லி வேலைக்குச் சேரும் ஆளாகவும் காட்டி இருப்பதால் இஸ்லாமியர்கள் பொய் சொல்ல ஊமையாகக் கூட நடிக்கத் தயங்கமாட்டார்கள் என்பதுடன், அவர் வாய்பேச இயலாத நிலையில் சொல்லும் இறை வேத மந்திரங்களை எதோ காயத்திரி மந்திரம் சொல்லுவதாக டெல்லிகனேஷ் எடுத்துச் சொல்வதாக அவர்களுடைய வழிபாட்டை கொச்சைப்படுத்தி இருப்பார், மீனா வழுக்கி விழ தரையில் எண்ணையைக் கொட்ட நாசர் சொல்லித்தருவது போலவும், குறுக்குவழிக்கு வழி சொல்லுபவர்களாகவும் ஒரு இஸ்லாமியரைக் காட்டி இருப்பதை இவ்வளவு நாள் யாரும் பார்க்காமல் விட்டது வியப்பாக இருக்கிறது. ஐந்துவேலை நமாஸ் செய்யும் நாசருக்கு நெற்றியில் பட்டைப் போட்டு ஊமையாக்கி.........கமலஹாசன்.........

தசவதாரம் படத்தில் ஒரு நெட்டை பையனை ஆப்கான் உடையில் காட்டி இஸ்லாமியர்கள் என்றால் இப்படி இருப்பார்கள் என்றெல்லாம் ஒரு கருத்தாக்கத்தை உருவாக்கி இருந்தார், அதுமட்டுமன்றி பலதெய்வ வணக்கம் அம்மன் வேட நடிகையான கேஆர் விஜயாவை இஸ்லாமிய பெண்மணியாக காட்டி இருப்பது இஸ்லாமியர்களின் மீதான தொடர்சியான இழிவாகவும், வண்மமாகவும் இருந்தும் இதுவரையாரும் கண்டுகொள்ளாமல் கண்டனம் தெரிவிக்காமல் விட்டது வியப்பளிக்கிறது. கமல் மட்டுமா ? ஆர்யா என்கிற இஸ்லாமிய நடிகரை இந்து சாமியாராக்கி நெற்றியில் பட்டைப்போட்டு இஸ்லாமியர்களுக்கு முற்றிலும் மாற்றான 'நான் கடவுள்' என்ற கடவுள் நிராகரிப்பு தலைப்பில் இஸ்லாமிய நடிகரை இழிவு படுத்தி இருந்தார் இயக்குனர் பாலா.

வடிவேலு ? ஒரு பைத்தியத்திடம் பின்லேடன் அட்ரஸ் பற்றிய காட்சியை நகைச்சுவையாக்கி பின்லேடன் என்கிற இஸ்லாமியரை இழிவுபடுத்தி இருந்தது,.........தொடர்ச்சியாக தமிழ் பட உலகம் இஸ்லாமியர்களை இழிவு படுத்துகிறது படுத்துகிறது........ப...டு,,,த்,,,து,,,,கி,,,,ற,,,து.

எனக்கு ஒரு ஐயம்.......பின்லேடனுக்கும், முல்லா ஓமருக்கும் அட்ரஸ் தமிழ்நாடா ? அவர்களைப் பற்றி எடுக்கப்பட்ட படத்தை பார்த்தும், பின்னே ஏன் இவர்கள் இஸ்லாமியர்கள் இழிவுபடுத்தப்படுவதாக விஸ்வரூபத்தின் கழுத்தில் கத்தி வைத்து தலிபான் பாணியில் தண்டிக்க விரும்புகிறார்கள் ? ஞாயமாக தங்கள் ஒட்டுமொத்தப் பெயரையும், புனித நூலையும் கெடுத்த பின்லேடன், முல்லா ஓமர்மீதல்லா இவர்களுக்கு கோபம் வரவேண்டும் ? பின்லேடன் இறப்புக்கு சிறப்பு தொழுகை நடத்தும் பொழுது இழிவுபடாமல் இருந்த இஸ்லாமிய சமூகம், முல்லா ஓமர் பற்றிய படத்தால் இழிவுபடுத்துப்பட்டுவிடுமா ?

16 அக்டோபர், 2012

மின்சாரம் இல்லைன்னா ?

இப்போதைக்கு ஏதோ டீசல் பெட்ரோல் வைத்து ஜெனரேட்டரைப் போட்டு மின்சாரம் இல்லாமல் செய்யும் வேலைகளை சமாளிக்கிறார்கள், எரிபொருளே இல்லை என்றால் மின்சார உற்பத்திக்கு வாய்ப்பே இல்லாத நிலையில்.

  • மின் தூக்கி இயங்காத நிலையில் ஒரு பயலும் அடுக்குமாடி வீட்டை வாங்க முன்வரமாட்டான்
  • மின்கலம் உற்பத்தித் திறன் ஆகியவை மின்சாரம் சார்ந்தே இருப்பதால் போதிய அளவுக்கு மின்கல உற்பத்தி செய்ய முடியாத நிலையில் அவற்றின் விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
  • காற்றாலை மற்றும் அனுமின்சாரம் ஆகியவை அடிப்படை வசதிகளுக்கே மட்டுமே வாய்ப்பு என்ற நிலையில் மிஸ்டு காலுக்கும் கட்டணம் என்றாகி  மிஸ்டு கால் கொடுப்பதற்கு மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும்,
  • பழையபடிக்கு வேப்ப மரக் காற்று தான் சிறந்த ஏசியாக இருக்கும்
  • சைக்கிள் விற்பனை படுஜோராக இருக்கும்
  • மாவாட்டும் வேலைக்கு நல்ல ஊதியம் கிடைக்கும்
  • மாட்டு வண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் வேலைக்கு மாடு குளிப்பாட்டும் தகுதி இருந்தால் போதும் என்று சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
  • மாடுமேய்க்கும் வேலையையோ, பன்றி மேய்க்கும் வேலையையோ யாரும் விமர்சனம் செய்யமாட்டார்கள்
  • குதிரை வண்டிகளை, ரிக்சாக்களை பழையபடி சாலையில் பார்க்கலாம்.
  • சாலைகள் எதுவுமே புதிதாகப் போடாமல், செப்பனிடாமல் கிடக்கும்
  • நான்கு குதிரை பூட்டிய வண்டிக்கு சொந்தக்காரர் பணக்காரன்
  • மின்சாரமே இல்லை என்றால் இணையமோ, இணைய இணைப்போ இருக்காது, பழையபடிக்கு கையெழுத்து படிவங்களாக செய்திகளுக்கு பகிர்ந்து கொள்ளப்படும்
  • மின்சாரம் சார்ந்து இயங்கும் பொறியல் துறையே முடங்கிவிட பட்டப்படிப்புகளைப் படிக்க யாருமே முன்வரமாட்டார்கள்
  • விவாசயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே தங்கும்
  • மனித வளத்தை சார்ந்திருக்கும் நாடுகள் பொருளாதார இழப்பை சந்திக்கும்
  • புனிதப் பயணம் செய்பவர்களுக்கு ஒட்டகம், குதிரை மாட்டுவண்டிகள் தான் ஒரே பயண நண்பன், இரண்டு ஆண்டுகள் கழித்து (போக வர) புனிதபயணத்தில் இருந்து திரும்பியதாக வந்து சொல்வார்கள்.
  • வீட்டுக்கு வீடு கிணறு தோண்டுவார்கள்
  • இயற்கை வளம் மிக்க நாடுகளை பலமிக்க நாடுகள் ஆக்கிரமிக்கத் துவங்குவார்கள்
  • சினிமா சார்ந்த தொழில்கள், தொலைகாட்சி ஊடகங்கள் முற்றிலுமாக செயல்படாது
  • பொழுது போக்குக்கு பழையபடி தெருகூத்து, பொம்மலாட்டம் களைகட்டத் துவங்கும்
  • பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அடிப்படைக் கல்வி தவிர்த்து வேறு படிக்க முன்வரமாட்டார்கள்
  • இல்லத்து ஆண்களின் துணித்துவைக்கும் வேலை கிண்டல் செய்யப்படாது
  • பலசரக்கு கடைகள், உணவு விடுதிகள் மட்டுமே நகரங்களில் வேலை வாய்ப்புள்ள நிறுவனங்களாக செயல்படும்
  • தண்ணீர் வரத்தும், ஓட்டமும் இல்லாத இடங்கள் பாலைகளாக மாறும்
  • வெள்ளைக்காரனையும், வெள்ளைத் தோலையும் பொறாமை கொள்ளத் தக்கது என்று எவரும் நினைக்கமாட்டார்கள்
  • வாழும் வாய்பிற்கு இனம் சார்ந்த குழுக்களே ஏற்பாடு செய்யும் என்ற நிலையில் இனம் சார்ந்து ஒன்று திரட்டல்கள் நிகழும்,
  • கோவில் மணி அடிக்கும் வேலைகள் ஆள் எடுப்பார்கள், கடுப்பேற்றும் மத வழிபாட்டு முழக்கங்களுக்கு ஸ்பீக்கர் இருக்காது
  • நெய்விளக்கும், ஆமணக்கு விளக்கும் தான் ஒளி உற்பத்திக்காக (பவர் சோர்ஸாக) இருக்கும் 
  • மின்சாரத்தை நம்பிய பெரு உற்பத்தி முற்றிலும் நின்று போக பட்டினிச் சாவால் மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைந்து போகும்
  • பெட்ரோலுக்கே வழியில்லாத பொழுது ஏரோபிளேனுக்கு ஈத்தர் கிடைக்காது, பெரும் பாய்மரப் படகில் தான் நாடுவிட்டு நாடு பயணம்
  • நவீன மருத்துவ வசதிகள் அனைத்தையும் இழந்துவிடுவோம்
  • முடிந்த அளவுக்கு விமானப் பயணம் மற்றும் வாகனங்களை அனுசக்தி மூலம் இயக்க முயற்சிப்பார்கள், இதன் மூலம் அனுகதிர் வீச்சு, மற்றும் விபத்துகளும் மிகுதியாகும்.

நாம பகட்டு, வசதி என்று நம்பிக் கொண்டுருப்பவை நமது பொருளீட்டல் மற்றும் கல்வி சார்ந்தது மட்டுமே இல்லை, அவை எல்லாம் அறிவியல் கண்டுபிடிப்பான மின்சாரம் போடும் பிச்சையும் கூட. பெட்ரோலையும் மின்சாரத்தையும் நம்பி அம்மி கொத்துவது முதல் கைத்தரி நெசவு உள்ளிட்ட நேரடியாக செய்யும் தொழில்கள் அனைத்தையும் விட்டுவிட்டோம், நாளை மின்சார உற்பத்திக்கு வாய்பே இல்லாத நிலையில் பழைய வாழ்க்கைக்கு நம்மால் திரும்பிச் செல்லும் பொழுது கையறு நிலையில் தான் நாம் இருப்போம். தமிழ் நாட்டினர் தவிர்த்து வேறு எவரும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி இருக்கமாட்டார்கள் என்ற நிலையில் தமிழினம் என்று வீழாது என்று இறுமாப்பு கொள்வோம். :)

எல்லாவற்றையும் கடவுள் படைச்சதுன்னு சொல்லும் முட்டாள்கள் உண்டு, நமக்கு தெரிந்து மின்சாரம் கடவுள் கொடுத்த கொடையன்று, மனித அறிவின் படிப்படியான வளர்ச்சியினால் கிடைத்த நன்மையே, மின்சாரத்தை கடவுள் படைக்காவிட்டாலும் அதைப் படைக்கும் ஆற்றல் உள்ள மூளையைக் கடவுள் தான் கொடுத்தார் என்று எடக்காகக் கூறினால் அதுக்கு முன்பு வாழ்ந்தவர்களை ஏன் இருட்டுக்குள்ளே கடவுள் இருக்கவிட்டார் நாம மட்டும் என்ன ஸ்பெசல் ?

கடவுள் கத்தியையும், துப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும், அனுகுண்டுகளையும் படைக்காத பொழுது மின்சாரத்தைப் படைத்ததாக மட்டும் பொறுப்பேற்றலாமா ?

26 செப்டம்பர், 2012

பூ மிதிக்கலாம் வாங்க !


பூ மிதிக்க ஆசைப்பட்டு போன கவுண்டமணி,  நல்லா அடிவாங்கிக் கொண்டே கொஞ்சாதீங்க கொஞ்சாதிங்க என்று சொல்லும் ஜனராஜ் கேரக்டர் ஞாபகம் தான் வருது அண்ணன் சுபி எழுதிவருவதைப் பார்க்கும் பொழுது, எவ்வளவு அடிச்சாலும் தாங்குவாங்க, இவங்களுக்கு தடித்த தோலுடா ன்னு நாம மார்க்க அறிஞர்களைப் பார்த்து தான் தெரிஞ்சு கொள்ளனும், மதங்களும் மார்க்கங்களும் எதை எதையெல்லாம் சொல்லிக் கொடுக்குதோ இல்லையோ தடித்தத் தோலை ஆடையாகக் கொடுக்கிறது, அது அல்லேலோயா கோஷ்டியாக இருக்கட்டும், இந்துத்துவா குருப்பாக இருக்கட்டும், நம்ம மார்க அறிஞ்ஞர்களாக இருக்கட்டும் சொல்லி வச்சது போல் அவங்க அவங்க அளவுக்கு தோலாடை அணிந்து கொண்டு தான் பொது இடத்தில் வந்து "கருத்து" சொல்கிறார்கள். நமக்கு மார்க அறிஞ்ஞர்களுக்கு மார்க்கு போடுவது வேலை இல்லை என்றாலும் மார்க்க அறிஞ்ஞர்களாக ஓடிவந்து தமக்கு மார்க்கு போடுங்க என்று முதுகை காட்டி வரத்தான் செய்கிறார்கள்.  ஏற்கனவே நிறைய பேர் நிறைய மார்க்கு போட்டுவிட்டார்களே என்றாலும் நாம யோசிச்சு மார்க் போடத்தான் வேண்டி இருக்கு காரணம் மேலே சொன்னவை தான்.

*****

கற்பழிப்பு என்று சொல்வது பாலியல் வண்புணர்வால் பாதிக்கப்பட்ட பெண்ணை இழிவு படுத்துவதாகும் என்ற தந்தை பெரியாரின் கூற்றுபடி நாம் பன்னெடுங்காலமாக அவ்வாறு சொல்லக் கூடாது எழுதிவருகிறோம், தமிழில் கற்பொழுக்கம் என்பது பெண்மை சார்ந்த பாலியல் ஒழுக்கம் என்பது தவிர்த்து வேறெந்த பொருளும் இல்லை, அதாவது கற்பு என்பதற்கு ஒழுக்கம் என்கிற பொருள் தவிர்த்து வெறெதும் இல்லை, எனவே பாலியல் வண்புணர்வு செய்யப்பட்ட பெண் ஒருத்தியை ஒழுக்கம் கெட்டவள் அல்லது அவளுடைய ஒழுக்கம் அழிக்கப்பட்டது என்ற பொருள் தரும் கற்பழிப்பு என்ற சொல்லைப் பயன்படுத்துவது காட்டுமிராண்டி தனம் மற்றும் ஆணாதிக்க சிந்தனை என்று சொல்வதில் யாதொரு தவறும் இல்லை, கற்பு என்ற சொல்லை ஒருவனுக்கு ஒருத்தி என்ற பொருளில் பெண்களுக்கு பொருத்திப் பார்க்கும் பொழுது மணவிலக்கு பெற்ற பெண் இரண்டாவது கணவருடன் வாழ்க்கை நடத்துவதை இரண்டாம் கற்பு பெற்றவள் அல்லது கற்பு மாற்றம் செய்து கொண்டவள் என்று சொன்னால் அது எப்படி பொருந்தாதோ, அபத்தமானதோ அது போன்றதே தானாக எந்த ஒரு ஒழுக்கக் கேட்டையும் செய்துவிடாது பாலியல் வேட்கை வெறியால் சிதைக்கப்பட்ட பெண்ணை கற்பிழந்தவள், கற்பழிக்கப்பட்டவள் என்று சொல்லுவதும் ஆகும். இது போன்ற முறையற்ற, பொருள் தராத, திரிக்கப்படக் கூடிய வகையில் பெண்களை இழிவுப் படுத்தும் சொல் தான் "கற்பு" என்பதால் பெரியார் அதனைப் பற்றிய கடுமையான விமர்சனங்களைச் செய்தார்.

தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினரை அரிசனங்கள் என்று காந்தி சொன்னபோது கடுமையாக எதிர்த்தவரும் பெரியார் தான்,  ஹரி ஜனங்கள் அதாவது மகாவிஷ்ணுவின் மக்கள் என்ற பொருளில் தாழ்த்தப்பட்டவர்களை அழைக்கலாம் என்கிற காந்திஜியின் பரிந்துரை தாழ்த்தப்பட்டவர்களை இந்துமத சாக்கடைக்குள்ளே அடைத்து அதை அள்ளச் சொல்லும் பார்ப்பனிய வாதிகளுக்கு தான் சாதமாக இருக்கும் எனவே ஹரிஜன் என்று தாழ்த்தப்பட்டவர்களை அழைப்பது கண்டிக்கத் தக்கது என்று கூறினார் பெரியார்,  தாழ்த்தப்பட்டவர்களை வெறும் சொற்களால் "வள்ளல் வாரிசுகள்" என்று அழைப்பதினால் மட்டுமே அவர்களின் பொருளாதாரா நிலை மாறிவிட்டதாக நாம் கூறிக் கொள்ள முடியுமா ? எனவே ஹரிஜன் என்று சொல்வது தாழ்த்தப்பட்டவர்களை மேலும் இழிவிலேயே வைத்திருக்கும் என்பதால் ஹரிஜன் என்று சொல்வது முற்றிலுமாக தடை செய்யப்பட்டது மாறாக தலித் என்ற சொல்வது அவர்களைக் குறிக்கும் பொது அடையாளச் சொல்லாக இந்தியாவெங்கிலும் வழக்கில் உள்ளது, தமிழகத்தில் மு.கவின் பரிந்துரைப்படி அவர்கள் தாழ்ந்தவர்கள் இல்லை, "தாழ்த்தப்பட்டவர்கள்" என்று தமிழில் சொல்லிவருகிறோம்.

அண்ணன் சுவனப்பிரியன் அரிசனத் தெரு அவலம் என்ற பெயரில் 'எங்கள் ஊருக்கு பக்கத்தில் அரிசனத் தெரு இருக்கிறது அவர்கள் சுத்தம் தெரியாதவர்கள் தண்டவாளப்பாதையில் திறந்தவெளியில் மலம் கழிப்பார்கள், இவர்கள் எங்கள் மதத்தவர்களைப் பார்த்து திருந்தவேண்டும் என்று திருவாய் மலர்ந்திருந்தார், வவ்வால் போன்றவர்கள் அரிசனம் என்று சொல்லக் கூடாது இழிவு படுத்துவதாகும் என்று சொல்லியும் மாற்றிக் கொண்டது போல் தெரியவில்லை. தலித்துகளின் நிலை குறித்து பாலைவன ஊற்றாக கண்ணீர் வடிக்கும் சுவனப்பிரியன் தாழ்த்தப்பட்டவர்கள் ஏன் திறந்த "வெளிக்கு" போகிறார்கள், அவர்களுக்கு கழிவறையையும் அவர்களது  கழிவறையை  தூய்மை செய்யவும் ஏன் ஆட்கள் இல்லை ?, தம்பகுதி மக்களின் கழிவறையை யார் துப்புறவு செய்கிறார்கள் ? என்ற கேள்வியெல்லாம் எழவே இல்லை. இவர் தான் தாழ்த்தப்பட்டவர்களுக்கு  இவரின் தாரைக் கண்ணீரில் கோரைப் பாயை ஊறவைக்கிறார்.

அடுத்து அண்ணாரின் இன்றைய பதிவு "கற்பழிக்கப்பட்ட தலித் பெண்ணுக்காக விட்ட கண்ணீர்", ஏனுங்க வர வர உங்கப் பதிவு ஏன் இந்துத்துவ எழில் பதிவு போல் அவலங்களை மட்டும் அதும் இந்தியாவில் நடக்கும் அவலங்களை மட்டும் எடுத்து எழுதுகிறீர்கள், நீங்கள் பாலாறும் தேனாறும் ஓடுவதாக சொல்லும் சவுதியில் இவையெல்லாம் நடைபெறுவதே இல்லையா ?" என்ற என் பின்னூட்டத்திற்கு அண்ணன் அளித்துள்ள மறுமொழி

கோவி.கண்ணன் said...

எழில் என்பவரது பதிவின் வஹாபிய வர்சன் போல் எழுதத் துணிந்த சுவனப்பிரியனுக்கு நல்வாழ்த்துகள்.

ஏழைகளுக்கும் அடிமைகளுக்கும் போக்கிடம் இல்லை என்பதை பல ஆண்டுகளாகவே சொல்லிவருகிறோம்.

தேனாறும் பாலாறும் ஓடும் சவுதியில் பெண்கள் வேலைக்கு வரும் வெளிநாட்டு பெண்கள் நிலை ஒன்றும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு இல்லை, வயிறு எரியும் அளவுக்கே உள்ளது என்கிறார்கள். வழக்கம் போல் 'இஸ்லாமை முழுமையாக பின்பற்றாதவர்களின் செயல், அல்லது அமெரிக்க பத்திரிக்கைகளின் கட்டுக்கதை' என்று முட்டுக் கொடுக்க நீங்கள் இருக்கிறீர்கள்.

http://www.topix.com/forum/religion/islam/TB11PD6GPEFAKJLVQ


"சவுதியில் எங்காவது இது போன்று கற்பழிப்புகள் நடந்ததாக நான் கேள்விப்படவில்லை. வீட்டு வேலைக்கு வரும் வெளி நாட்டு பெண்களிடம் சில சவுதி காமுகர்கள் தவறாக நடப்பதை நாமும் மறுக்கவில்லை. காவல் துறைக்கு தெரிய வரும் பட்சத்தில் பாரபட்ச மற்ற பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை நான் அறிவேன். 


ஆனால் நமது இந்தியாவிலோ கற்பழித்து அதற்கு சாட்சியாக அவர்களே அதனை மொபைலில் வெளியிடவும் செய்கிறார்கள். வெளியிட்ட அவர்கள் சுதந்திரமாக வெளியிலும் உலாவுகிறார்கள். சவுதி சம்பவத்துக்கும் நமது நாட்டு சம்பவத்துக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது என்பதை ஏனோ கோவி கண்ண்ன் கவனிக்கத் தவறி விடுகிறார்."


அதாவது அண்ணன் சுபி கற்பழிப்பு  பற்றி சவுதியில் இவர் கேள்விப்பட்டதே இல்லையாம், அங்கு நடைபெறுவதெல்லாம் சில பெண்களிடம் தவறாக நடப்பது மட்டும் தானாம். படிப்பவர்களுக்கு ஏதோ சுவனப்பிரியன் தான் ஒப்புக் கொண்டுள்ளாரே என்று நினைக்கத் தோன்றும், தவறாக நடப்பதெல்லாம் என்றால் என்ன பொருள் ஈவ் டீசிங்கா ? அதாவது சவுதியில் வேலைக்கு வரும் பணிப்பெண்களுக்கு நடைபெறும் பாலியல் வண்புணர்வுக்கு பெயர் "தவறாக நடப்பதாம்"  ஆனால் இந்தியாவில் நடப்பது "கற்பழிப்பாம்",  சவுதியில் உள்ள பாலியல் குற்றவாளிகள் அதை மொபைலில் படம் பிடித்து சிக்கலில் மாட்டிக் கொள்ளமாட்டார்கள், அவர்கள் அறிவாளிகள் என்றும் மறைமுகமாக எடுத்துச் சொல்லியுள்ளார்.

அண்ணன் சுபியின் சவுதிய அகராதிபடி சவுதியில் 
கல்லால் எறிந்து கொல்லப்பட்டால் அதன் பெயர் பூ எறிதல், பாலியல் தொழில் செய்த குற்றத்திற்காக சவுதியில் இன்று நான்கு பெண்கள் மீது பூக்கள் எறிந்தனர்

கழுத்து வெட்டி கொல்லப்பட்டால் அதன் பெயர் மாலை சூடுதல், திருட்டு வழக்கில் இரண்டு சவுதி ஆண்களுக்கு இன்று மாலை சூடப்பட்டது

பாலியல் வண்புணர்வு செய்யப்பட்டிருந்தால் அதன் பெயர் தங்கம் உரசுதல் ஏதோ இரக்கப்பட்டு இதற்கு மட்டும் "தவறாக நடத்தல்" என்று சொல்கிறார் போலும் கை வெட்டப்பட்டால் "இறுக்கி அணைத்து உம்மா கொடுத்தல்" என்று சொல்லுவாரோ

எவ்வளவு அடிச்சாலும் தாங்கும் அண்ணன் சுவனப்பிரியனுக்கு வாழ்த்து சொல்லுவோம், ஆனால்  'வாழ்த்து' அவருடைய அகராதிபடி இல்லை.

இன்ஷா அல்லா ..........இந்த இம்சைகளை ஒடுக்க இன்னொரு இறைத் தூதரை அனுப்பு. அதன் பிறகு அவரை வைத்து அடுத்த 1400 ஆண்டுகளுக்கு பின் நடப்பதை நாம் அப்பறம் பார்ப்போம்.
:)

************

சவுதியை / தம்சார்ந்த மதத்தை உயர்த்தி/த இந்தியாவை/இந்தியாவின்  அவலங்களைப் பழிப்பதே, வெளிச்சம் போடுவதே இந்திய சமயங்களைப் பழிப்பதாகும் என்று கணக்கு போட்டு செயல்படும் அண்ணாரின் செயல் கண்ணாடி வீட்டினுள் இருந்து கொண்டே கல் எறிவதாகும், அண்ணாந்து எச்சில் துப்புவதாகும் என்பதை இவ்ர்கள் புரிந்து கொள்வதே இல்லை, பெரியவர் வாஞ்சூரும் அதைத்தான் தொடர்ந்து செய்கிறார், இவரும் தொடர்சியாகவே செய்துவருகிறார். இவர்களின் செயலால் இந்துத்துவாதிகள் ஊக்கம் அடைந்துள்ளனர்.

18 செப்டம்பர், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 7 !


பூனையாரை கண்டு கொண்டு மாதங்கள் கடந்துவிட்டன, பூனையார் அமைதியானவர் கோபப்படமாட்டார் என்று அலட்சியம் செய்து கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன், பூனையாரின் பரம விசிறிகள் பூனையாரின் தத்துவ மொழிகளைக் கேட்காமல் எங்களுக்கு வாழ்க்கை வரண்டுவிட்டது என்று கதறிக் கதறி என்னிடம் கேட்டதால், பூனையாரை நினைத்து கண்ணை மூடி அமர்ந்தேன், சில நிமிடங்களில் பூனையார் கண் முன் தோன்றினார்.

'அன்பரே என்ன வரம் வேண்டும், எதற்கான என்னை நினைத்தாய்' என்று அமைதியே வடிவாகக் கேட்டார்.

'எகிப்திய தெய்வமே ஏகாதிபத்திய இறைவா, தங்களை இதுகாறும் நினைக்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும்' என்றேன்.

'நீ என்னை நினைப்பதாலோ, நினைக்காமல் இருப்பதாலோ எனக்கு நட்டம் எதுவுமில்லை எனவே மன்னிக்க ஒன்றும் இல்லை அன்பரே' என்றார் பூனையார்

'பூனையாரே எனக்கு சில ஐயங்களை அதனை கேட்டுத் தெளிவுறலாம் என்றே தாங்களை நினைத்தேன், மேலும் பூனையார் பக்தர்களுக்கும் அதே ஐயங்கள் இருக்கின்றன' பூனையாரை கூர்ந்து நோக்கிக் கூச்சத்துடன் கேட்டேன்

'நீ எதற்கு கூச்சப்படுகிறாய், என்னிடம் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் கூச்சங்கள் தேவையற்றது எதுவேண்டுமானாலும் தயங்காமல் கேள்' என்றார்

'பூனையாரே... மேதகு கடவுளே தாங்கள் தத்துவங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி நமது மார்க்கத்திற்கு மார்க்க நூலாக ஆக்கலாம் என்று பக்தர்கள் எல்லோரும் முடிவு செய்துள்ளோம், அதற்கு தங்கள் அனுமதி வேண்டி.....'என்று நோக்க,,,,,,,,பூனையார் சங்கடத்தால் நெளிந்தார், கோபம் வருவது போல் இருந்தது......ஆனால் அமைதியாக என்னை உற்று நோக்கினார், நான் நடுங்கியபடி

'நான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லையே உலக மதங்கள் அனைத்திலும் உள்ள நடைமுறை தானே ?' என்றேன்

'அவ்வாறான நடைமுறைகள் இருக்கலாம், ஆனால் அது பல எதிர்கால சிக்கல்களை ஏற்படுத்தும்....'

'எதிர்காலத்தில் அனைவருக்கும் புரியும் வண்ணம் நூலாக்கி வைப்பது நமது மார்க்கத்திற்கு நல்லதல்லவா ?'

'இப்ப பிரச்சனையே மத நூல்கள் தான் என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்கிறாயே மானிடா ?'

'நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் நடைமுறைகளை மாற்றுவது நமக்கும் நல்லது இல்லையே ?'

'ஏன் இல்லை, நம்மை பின்பற்றுவோரின் உடல் பொருள் ஆவி எல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டுமென்றால் நூல் பற்றிய யோசனைகளை கைவிடு, 6000 ஆண்டுகளாக இருந்துவரும் நம் மார்க்கம் சேதப்படாமல் இருப்பதற்கு நம்மிடையே எந்த நூலும் இல்லை என்பதே காரணம், அப்படி இருந்தால் மாற்று மதத்தினரால் நம் மத நூல்கள் கொளுத்தப்படலாம், கலவரம் வரும்.........அது தவிர....'

சொல்லுங்கள் சொல்லுங்கள்

'நமது மார்க்கத்திலேயே பூனையாரின் நூல் சொல்வதைத்தான் செய்வோம், என்று அடம்பிடித்து அடிப்படைவாதிகள் தோன்றிவிடுவார்கள், பிறகு உலக மக்களின் அச்சுறுத்தலாக நமது மார்க்கத்தினரும் கூட அமைந்துவிடுவார்கள். ஒரு 1000 ஆண்டு சென்று நமது நூலை வைத்து எழும் சச்சரவுகளில் பலர் கொல்லப்பட நேரிடும், நூலும் வேண்டாம்.......எழுதுகோலும் வேண்டாம்' என்று ஆவேசமாக கூறிவிட்டு சற்று அமைதியானார் பூனையார்.

'இந்த மரமண்டைக்கு விளங்காமல் போய்விட்டது மன்னியுங்கள் பூனையாரே,,,,,,,'என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன், அதான் பூனையாருக்கு மன்னிப்பு கேட்பதும் கொடுப்பதும் வழக்கமில்லையே.

'பூனையாரே இன்னொரு ஐயம்.......'

'சும்மா கேளு கேளு 'என்றார்

நமது மார்க்கத்திலேயே பிரிவுகள் தோன்றிவிட்டதாக வெளியுலகில் பேசிக் கொள்கிறார்களே

'உண்மை தான், நான் எகிப்தியர்களுக்கு சொன்ன சில வாக்கியங்கள் தத்துவங்களை மட்டுமே எடுத்து வைத்துக் கொன்டு சிலர் பிரிவாக ஆகிவிட்டனர்..,'

'யார் அவர்கள் ?'

'அவர்கள் தான் வரகாப்பி இயக்கம்.........'

'என்ன பூனையாரே என்னென்னவோ புரியாதபடி சொல்கிறீர்கள்'

இதில் புரியாமல் இருக்க ஒன்றும் இல்லை,  தமிழில் தான் அந்த பெயர் இருக்கிறது, பால் சேர்க்காத காப்பி வரகாப்பி.......அந்த அடிப்படை வரகாப்பி வாதிகளுக்கு காப்பியில் பால் சேர்ப்பது பிடிக்காது..... எகிப்திய காலத்தில் இல்லாத பால்காப்பியை நாங்கள் பருக மாட்டோம் என்று கூறி எங்கு பால் காப்பி கடை இருந்தாலும், யாராவது காப்பியில் பால் கலந்தாலும் அங்கு சென்று கோஷமிடுகின்றனர், பூனையாருக்கே சொந்தமான புனித பாலை காப்பியில் சேர்க்காதே, வேண்டுமென்றால் பால் கலக்காத காப்பியை குடியுங்கள் என்று போராட்ட ரோதனை செய்கிறார்கள். நமது மார்க்கப் பிரிவான வரகாப்பி இயக்கத்தினரின் வேறு சில அடிப்படை வாதக் கொள்கைகள் சிலவற்றையும் கூறுகிறேன் கேள்...

'வேண்டாம்,,,,,,,,,வரகாப்பி இயக்கத்தினரின் பெயர் காரணம் பற்றிய தகவலே தலையில் அடித்துக் கொள்ள வைக்கிறது அதற்கு மேல் கேட்டால் எனக்கு இரத்த அழுத்தமே கூடிவிடும்.....நீங்கள் மலையேரலாம்' என்று கூறி கண்ணை மூடித் திறந்தேன்

பூனையாரை பிறகு காண முடியவில்லை

12 ஜூலை, 2012

Kiasu என்றால் என்ன ?


சிங்கப்பூரில் சீனர்களிடமும் அவர்கள் மூலமாக பிறரிடமும் வழங்கும் சொல்வழக்கு 'Kiasu' இதன் பொருளும், இதன் விளக்கமும் விக்கிப்பீடியாவில் தனிப்பக்கமாக இடம் பெரும் அளவுக்கு இந்த சொல் புகழ்பெற்றது.  'fear of losing' என்பதே அதன் பொருளாகும். அதாவது தனக்கு உடைமை உடைய ஒன்றை இழந்துவிடுவோமே என்ற அச்சம் எப்போதும் உடையவர்களை இந்த க்யாசூ என்ற சொல்பதத்தில் அழைப்பார்கள்.

போற்றிப் பயன்படுத்தும் அவரவர் உடலே மண்ணுக்குள்ளோ, நெருப்பிலோ போகக் கூடியது தான் என்கிற ஆள்மன உணர்வுகள் இருந்தும் ஒப்புக் கொள்ள மனதின்றி தனக்கு உடைமையான பொருள் மீது தீவிர காதல் கொண்டர்வளே இந்த க்யாசு வகையினர். எங்க வீட்டில் வீட்டை ஒழுங்கு செய்வது என்கிற எண்ணத்தில் தேவையற்ற பொருள்கள் என்று என் மனைவி அள்ளிப் போட்டு குவித்து வைத்திருப்பதை கிளறிப் பார்த்துவிட்டு தூக்கிப்  போடுவோம் என்கிற எண்ணம் ஏற்படும் போது 'மிகவும் தேவையானது என்றால் அலட்சியமாக வைத்திருக்க மாட்டோம்' என்கிற நினைப்பில் கிளறிப் பார்க்காமல் விட்டுவிடுவேன், அப்போது எனக்கு தோன்றும் எண்ணம் 'அப்படியே ஒருவேளை இருந்தால் போனால் போகட்டுமே... மனுச உடம்பே மண்ணுக்குள் போகக் கூடியது தானே' வாங்க முடியாத பொருள்கள் எதுவும் இருக்காது என்று தேற்றிக் கொண்டுவிடுவேன், கொஞ்சம் பதைப்பாகத்தான் இருக்கும், காரணம் சில தடவைகள் கவனக் குறைவினால் வங்கி அட்டைகள் கூட குப்பைக்குள் சென்றிருக்கிறது. 

நம் வீட்டுக்குள் வந்த சாக்கில் அங்கேயே தங்கிவிடும் பயனற்ற பொருள்கள் நிறைய உண்டு, இருந்தாலும் எதற்காவது பயன்படும் என்றே அதனை  தூக்கிப் போட மனதின்றி ஆண்டுக் கணக்காக அதற்கு ஒரு இடம் கொடுத்து வைத்திருப்பார்கள், எப்போதோ பயன்படுத்திய பழைய 14" கருப்பு வெள்ளை தொலைக்காட்சிப் பெட்டி பழுதாகி பயன்படாமல் இருந்தாலும் எங்கம்மா அதை இன்னும் பத்திரமாக பிரோவில் பூட்டி வைத்திருக்கிறார்கள், 'இந்த கருமத்தை தூக்கிப் போட்டால் தான் என்ன ?' என்று எத்தனையோ முறை கேட்டு இருக்கிறேன், அப்போதெல்லாம் வரும் ஒரே பதில், 'உனக்கு தேவை இல்லாமல் இருக்கலாம், யாராவது வந்து ஆராய்ச்சிக்கு என்று கேட்டாலும் கேட்பார்கள்' என்பது அம்மா சொல்லும் பதில், 14" பழைய டிவியில் ஆராய்ச்சி நடத்தப் போகிறவர் எப்பொழுது வருவார் எம்ஜிஆரின் 'கிழக்கு ஆப்பிரிக்காவில் ராஜு' எப்போதும் வரும் என்கிற எதிர்ப்பார்ப்பு போல் நானும் காத்திருக்கிறேன். அம்மா மட்டுமல்ல அண்ணன் வீட்டில்  கூட அப்படித்தான், எதையும் தூக்கிப் போட மனமின்றி காலியான சின்ன சின்ன மருந்து பாட்டிலைக் கூட தூக்கிப் போடாமல் வைத்திருப்பார்கள். சிறுவர்களாக இருந்த போது தீபாவளிக்கு வாங்கிய மத்தாப்பு, வெடிகளை நாங்களெல்லாம் வெடித்து முடித்துவிடுவோம், அண்ணன் மட்டும் கார்த்திகைக்கு வெடிக்கலாம் என்று எடுத்து தனியாக வைத்திருப்பார், கார்திகைக்கும் வெடிக்கப்பட்டு இருக்காது. 

திருமணம் ஆன புதிதில் பெங்களூரில் வசிக்கும் நண்பர் வீட்டுக்கு மனைவியுடன் சென்றேன், நண்பர் ஆறுமாதம் முன்பே எனக்கு  முன் திருமணம் முடித்தவர், ஓரளவு வசதியான வாடகை வீட்டில் மனைவியுடன் (தனிக்குடித்தனமாக) வசித்தார், இருவரும் வேலைக்குச் செல்பவர்கள், பெங்களூரில் ஓட்டல் எடுத்து தங்கி இருந்த நிலையில் நான் அங்கு சென்ற போது, எங்கள் வீடு இருக்கும் போது எதற்கு ஓட்டலில் தங்கவேண்டும் என்று செல்லமாக கோவித்துக் கொண்டு, அன்று காலையில் நான் தங்கி இருந்த ஓட்டலுக்கு வந்து அறையைக் காலி செய்யச் சொல்லிவிட்டு அவரது வீட்டில் விட்டுவிட்டு வேலைக்குச் சென்றுவிட்டனர் இருவரும். நாங்களும் பகல் பொழுதில் வீட்டில் இருந்து கிளம்பி ஊர் சுற்றிவிட்டு, மாலை வீட்டுக்கு வந்ததும், அவர்கள் சிறப்பாக சமைத்திருந்த இரவு உணவை முடித்துவிட்டு பேசிக் கொண்டு இருந்து படுக்கச் செல்லும் நேரம் ஆக, எங்கள் படுக்கை அறையில் படுத்துக் கொள்ளுங்கள், அட்டாச்ட் பாத்ரூம் இருக்கு வசதியாக இருக்கும், நாங்கள் அடுத்த அறையில் படுத்துக் கொள்கிறோம் என்று நாங்கள் புதிதாக திருமணம் ஆனவர்கள் என்பதால் எங்களுக்கு அவர்களது படுக்கை அறையை விட்டுக் கொடுத்தனர். 

ரொம்பவும் மகிழ்ச்சியாக இருந்தது, படுக்கை அறைக்கு சென்று படுக்கையில் உட்கார 'மொட மொட' என்ற சத்தம், மாமனார் சீராகக் கொடுத்த படுக்கையின் பாலித்தீன் கவர்கள் பிரிக்கப்படாமல் அதன் மீது மெல்லிய படுக்கை விரிப்பு போடப்பட்டு இருந்தது, அதில் படுக்கலாம், ஆனால் உருண்டு பிரளவோ, வேறெதுவும் செய்ய முடியாது, பிரண்டாலே அடுத்த அறைக்கு 'மொட மொட' சத்தம் கேட்கும் நிலையில் நானும் மனைவியும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்த நிலையில் தூங்கி எழ விடிந்திருந்தது. காலையில் நண்பர் 'வீடு வசதியாக இருந்ததா ?' நாங்கள் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக் கொண்டோம், 'இருந்தது.....ஆனா பெட்டில் சத்தம் தான்...ஏன்பா மாமனார் வாங்கிக் கொடுத்தார் என்பதற்காக பாலித்தீன் கவரைக் கூட கழட்டாமல் வைத்திருக்கிறாயே ? என்று கிண்டல் அடிக்க நினைத்து அவர் மனைவியும் உடன் இருப்பதால் நிறுத்திக் கொண்டேன், ஏழ்மை நிலையில் இருந்து மேலே வந்தவர்கள் வசதி வாய்ப்புகள் பெற்றதும் அதில் இருந்து இறங்கிவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருப்பர். நண்பர் மிகவும் ஏழைக் குடும்பத்தில் பிறந்தவர், 20 ஆயிரம் பொறுமானமான படுக்கை எப்போதும் புதிதாகவே இருக்க வேண்டும், படுக்கையில் தண்ணீர் பட்டால் உள்ளே இறங்கிவிடக் கூடாது என்பதற்காக பாலித்தின் கவரை எடுக்காமலேயே வைத்திருந்தார், ஆனாலும் படுக்கையின் மென்மையை அவர்கள் அனுபவித்தார்களா ?  இல்லை என்று தான் சொல்ல வேண்டும், பல ஆண்டுகள் கடந்த நிலையில் இன்னும் அந்த படுக்கை அறை பாலித்தீன் கவர் பற்றி அவரை கிண்டல் அடிப்பது உண்டு.

அவர் மட்டுமல்ல பெரும்பாலான நடுத்தர குடும்பங்களின் படுக்கைகள் இன்னும் கூட பாலித்தின் கவரால் தான் சுற்றப்பட்டு இருக்கும், புதிதாக வெளிநாடு சென்று வந்தவர்கள் மட்டுமின்றி பல முறை சென்றுவந்தவர்கள் கூட ஏர்போர்ட் பட்டி(டேக்) சுழற்றாமல் பெட்டியை வைத்திருப்பார்கள், தனது கவுரவே அதில் தான் அடங்கி இருக்கிறது என்பதால் அதனை இழக்க அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

இப்போதெல்லாம் எல்சிடி டிவிகள் வாங்கிப் பலர் வைத்திருக்கிறார்கள், அதில் மூளையில் ஒட்டப்பட்டிருக்கும் ஸ்டிகர் (ஒட்டி) அப்படியே தான் இருக்கும், திரையில் படம் கொஞ்சம் மறைக்கப்பட்டால் கூட கவலைப்படமாட்டார்கள், காரணம் வீட்டுக்கு வருபவர்கள் பார்க்கும் போது அது 'புதிய டிவி' என்று தெரியனுமாம். அந்த மாதிரியான க்யாசுகளிடம் நான் சொல்வது, 'இப்ப அந்த ஸ்டிக்கரை பிய்த்துப் போடாமல் விட்டால் தொலைகாட்சியின் வெப்பத்தில் அப்படியே ஒட்டிக் கொள்ளும், நாள் ஆக ஆக வெளுத்துவிடும், எடுக்கவும் வராது, பார்த்து செய்ங்க' என்பது தான்.

எங்க அண்ணன் வீட்டில் கூட கணிணி திரையும், கீ போர்டும் மேலே மெல்லிய ஊடுறவக் கூடிய ஸ்கிரீன் போட்டு தான் பயன்படுத்தப்பட்டுவருகிறது. அது இல்லாவிட்டால் 'ஸ்க்ராட்ச்' விழுந்துடும் என்று அண்ணன் சொல்லுவார். 

ஒவ்வொரு வீட்டிலும் ஐந்து வகையான பொருள்கள் உண்டு

1. மிகவும் பாதுகாக்க வேண்டியவை
2. அடிக்கடி பயன்படுத்த வேண்டியவை
3. எப்போதாவது பயன்படத்தக் கூடியவை
4. என்றுமே பயன்பாட்டுக்கு வராதவை
5. யாருக்குமே பயனற்றவை

இந்த நான்காவது, ஐந்தாவது வகைப் பொருள்கள் எவை எவை என்று பார்த்து தனக்கு பயன்படாதவை என்றால் பயன்படுத்தக் கூடியது என்ற நிலையில் அவற்றை பயன்படுத்துபவர்களுக்கு அவர்கள் விரும்பினால் கொடுக்கலாம், உதாரணத்திற்கு காபி மேக்கர் யாரோ எப்போதோ பரிசு பொருளாகக் கொடுத்தது, நமக்கு அதைப் பயன்படுத்துவது கூடுதல் நேரம் பிடிக்கும் என்பது மட்டுமின்றி அதனை கழுவி வைப்பது அறைகூவல் என்ற நிலையில் அவற்றை விரும்புவர்களுக்கு அதனை கொடுத்துவிடலாம், ஆனால் நல்ல பொருள் என்று பாதுகாப்பாக வைத்திருப்பதால் வீட்டில் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும் என்பது தவிர்த்து வேற என்ன பயன் ? ஐந்தாவது சொல்லி இருப்பதில்  உதாரணத்திற்கு பழைய பாய் அல்லது நசுங்கிய சொம்பு, ஒரு கால் உடைந்த ஒரு இருக்கை,  அதனை சரி செய்து வைத்திருந்தாலும் கவுரவக் குறைச்சல் என்ற நிலையில் அதைத் தூக்கிப் போட்டால் என்ன ? அதனை பயன்படுத்திய பொருள் என்பதற்காக இடத்தை அடைத்துக் கொண்டிருக்க விடலாமா ?

நல்ல தரமான ஓட்டலில் மூக்குப் பிடிக்க நாலு பேர் 500 ரூபாய்க்கு சாப்பிடும் குடும்பங்களிலும் கூட பாக்கெட்டுக்கு 10 காசு கிடைக்கும் என்ற அடிப்படையில் மூக்கைப் பிடித்துக் கொண்டு காலி பால் பாக்கெட்டுகளை சேர்த்து வைப்பவர்களும் உண்டு, நான் இங்கே சிக்கனத்தைக் குறைச் சொல்லவில்லை, ஆனால் நாம் எல்லா விதத்திலும் சிக்கனமாக இருக்கிறோமோ, அல்லது உப்புக்கு பெறாத பொருள்களில் மட்டும் சிக்கனத்தை பார்க்கிறோமோ என்பது தான் பிரச்சனை, தவிர அம்மா தாயே, ஐயா கொஞ்சம் இரக்கம் காட்டுங்கள் என்பவர்களை திரும்பிக் கூடப் பார்காமல் அர்சனைத் தட்டில் ஒற்றை ரூபாயாக 500 ரூபாய் போட்டுவருபவர்களை சிக்கனவாதிகள் என்றும் 'பிச்சைக்காரர்களை ஊக்கப்படுத்த விரும்பாதவர்கள்' என்றும் சொல்ல முடியுமா ?

ஒரு பொருளை பாதுகாப்பாக வைத்திருந்தாலும் அதன் முழுப் பயன்பாட்டை அனுபவிக்காமல் இருப்பதனால் என்ன பயன் ? கஷ்டப்பட்டு சேமித்து ஈட்டும் பணம் செலவழிக்கப்படாமல் இருந்தால் சேமிப்பின் பயன் தான் என்ன ?

கியாசுவாக இருப்பதால் எந்த ஒரு பொருளின் முழுப் பலனையும் அவர்கள் என்றுமே அனுபவிப்பது இல்லை, மற்றவர்களையும் அதை அனுபவிக்க அனுமதிப்பது இல்லை.

5 ஜூலை, 2012

'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் !


பூனையார் மதம் பற்றி ஏற்கனவே பலர் அறிந்திருப்பீர்கள், பூனையார் மதத்தின் அதிகாரபூர்வ தலைமை பூசாரி நான் தான், இன்னும் சிலர் பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இருக்காங்க, தமிழ் கூறும் நல்லுலகிற்கு பூனையாரை அறிமுகம் செய்தவன் என்கிற முறையில் 'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் மதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளது என்பதை எல்லா மதவாதிகளுக்கும் முன்பாக எடுத்துக் கூறுவதில் பெருமை அடைகிறேன், மத்த மதவாதிகள் 'ஹிக்ஸ் போஸானை' சொந்தக் கொண்டாடினால் செல்லாது, காப்பிக் கேட் என்று தூற்றப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

ஹிக்ஸ் போஸான் என்றால் என்ன ? அணுக்களுக்கு எடை தரும் ஒரு துகள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்,  இதன் மூலம் போட்டான்(ஒளித் துகள்) தவிர்த்த அணுத்துகள் வடிவமும் எடையும் கொண்டிருப்பதற்கு ஹிக்ஸ் போஸானே காரணம் என்கிறார்கள், அணுக்கருவில் உள்ள துகள்களின் எண்ணிக்கை மற்றும் அதற்குக் ஹிக்ஸ் போஸான் மூலம் கிடைக்கும் எடை ஆகியவற்றின் மூலம் தான் உலகில் உள்ள அண்டங்கள் முதல் அனைத்தும் எடைகளை பெருகின்றன. இதைப் பற்றி பூனையார் மார்க்கத்தில் ஏதேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க, பூனையாரை நாடினேன், பூனையார் ஒரே போடாக போட்டார்.

"உலகில் உள்ளது அனைத்தையும் படைத்தது பூனையார்" என்று சொல்லிய பூனையார், அனைத்தும் என்றால் அதில் ஹிக்ஸ் போஸானும் தானே உள்ளது, இதை ஏன் உறுதி செய்யும் மனப்பான்மையுடன் மடத்தனமான கேள்வி எழுப்பினாய் என்று கேட்க. 'அட ஆமாம்லே' என்று வியப்படைந்தேன்.

மேலும் பூனையார், "சிக்ஸ் பேக்குக்கும் ஹிக்ஸ் போஸானுக்கும் உள்ள தொடர்ப்பு தெரியுமா ?" என்று கேட்டார். "அதிகமாக அதிகமாக உடற்பயிற்சி செய்ய உடலின் அணுத்துகள்கள் இறுக சிக்ஸ் பேக் கிடைக்கிறது, உடற்பயிற்சியின் ஆற்றலின் போது உண்டாகும் ஹிக்ஸ் போஸானின் சக்தி சிக்ஸ் பேக்காக மாறுகிறது" என்றார்

ஹிக்ஸ் போஸான் மற்றும் பூனையார் கடவுளுக்குமான தொடர்பின் இணைப்புகள்.


ஹிக்ஸ் போஸான் பற்றி வேறென்ன சொல்கிறீர்கள் பூனையாரே ?

நான் என்னத்தச் சொல்வது, வைரமுத்து முதல் கார்கி வரை 'ஹிக்ஸ் போஸானை' திரைப்பட பாடல் வரிகளாக்கி பிழிந்து எடுத்துவிடுவார்கள், உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லட்டமா ?

"என் இதயத்தில் மையம் கொண்டு வெடித்த பெருவெடிப்பு நீ தானோ ?"
"என் இமைகளுக்கு எடை தந்த ஹிக்ஸ் போஸான் நீ தானோ நீ தானோ"

- கவிஞர் கரடி வாயன்

"என் மனதில் உன் அழுத்தம் எப்பொழுது வெடிக்குமோ பெருவெடிப்பாக"
"உன் இல்லாத இடைக்கு எடையாக நான் இருப்பேன் ஹிக்ஸ் போஸானாக"

- கவிஞர் சொந்த குமார்

"என் காதல் போஸாக்கே"
"உன் மோதல் போஸானே"

- கவிஞர் குணேகன்


ஸ்ப்பா முடியல, அறிவியல் அவியல்களை தனதாக்கிக் கொள்வதில் முனைப்புக் காட்டுபவர்கள் மதவாதிகளா ? கவிஞர்களான்னு பட்டிமன்றமே நடத்தலாம்.

எது எப்படியோ, ஹிக்ஸ் போஸான் பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்பே பூனையார் சொல்லிவிட்டார், பூனையார் சொல்லிவிட்டார்...............பூனையார் சொல்லிவிட்டார்.


பின்குறிப்பு : 2 வாரமாக வலைப்பதிவு எழுதாமல் காத்துவாங்குது, காலாட்டிக் கொண்டு இருந்தால் தானே இருப்பு தெரியும், அதற்கு உதவிய பூனையாருக்கு நன்றி

14 மே, 2012

கழிவறைச் சின்னங்கள் !

மனிதனுக்கு (ஆண் / பெண் இருவருக்கும் தான்) அமைதி படுக்கை அறையில் கிடைக்கிறது என்றால், உடல் அழுத்தக் குறைவதும், புத்துணர்வும் கிடைப்பது கழிவறையில் தான், இதன் பிறகே பூசை அறையின் முக்கியமெல்லாம், ஒருவீட்டில் நல்லப் படுக்கை அறையும், கழிவறையும் இல்லை என்றால் அங்கு குடி இருப்பது மறைவான தெருவோரங்களில் குடியிருப்பதற்கு ஒப்பானது. பூசை அறைகளின் நறுமணங்களின் முக்கியங்களைவிட கழிவறைகளின் தூய்மையும் உலர்வும் மிகவும் இன்றியமையாதது. நாகரீக மேன்மை என்பதைவிட உலகின் பசிப்பிணி அகற்றமே மனித சமூகத்தின் முதல் நோக்கம் என்பது போல் தூய்மையான கழிப்பிடம் மிகவும் இன்றியமையாதது மற்றும் நோக்கமாகவும் இருக்க வேண்டும். 'தனித்திரு, பசித்திரு' - இதில் முதலில் வரும் தனித்திரு பூசை அறையில் யோக நிலையில் அல்லது தொழுகை / வழிபாட்டில் தனித்திருப்பதைக் காட்டிலும் கழிவறையில் தனித்திருத்தல் தான் தனிமனிதனின் உன்னதமான தேவையாக இருக்கிறது. நல்ல சுகாதாரமான, காற்றோட்டமான கழிவறையில் ஒரு ஐந்து நிமிடம் அமர்ந்திருந்தாலும் அதில் கிடைக்கும் மன அமைதிக்கு ஈடு இணையை எந்த ஒரு வழிபாடும் தந்துவிடமுடியாது என்பதை நான் இங்கு பதிக்கிறேன். உண்மையைச் சொல்லப் போனால் உடலின் கழிவேற்றம் உடலுக்கும் மனதிற்கும் சிறு இன்பத்தைத் தான் கொடுக்கும், அந்தக் கழிவு உயிர்நீர், சிறுநீர் மற்றும் உணவுக்கழிவாகக் கூட இருக்கலாம். 


அடக்கமுடியாமல் சிறுநீரை கழிவறைக் கிடைக்கும் வரை அடக்கிக் கொண்டு இருப்போர் கழிவறையில் அதை கழிக்கும் போது கிடைக்கும் தற்காலிக நிம்மதி பெருமூச்சு, அது தரும் புத்தணர்வு சுவையான ஐஸ்க்ரீம் உண்பதைக் காட்டிலும் உடலின்பம் தரக் கூடியவை. மலச்சிக்கல், நீர்கடுப்பு என்பதையெல்லாம் தவிர்த்துவிட்டுப் பார்த்தால் ஒவ்வொரு முறை கழிவு வெளியேற்றமும் மனிதனுக்கு கொஞ்சமேனும் உடலின்பத்தைத் தூண்டிவிட்டு தான் செல்கிறது. உங்கள் கழிவறை தனிமைகளில் இங்கு படிப்பது நினைவிருந்தால் ஒப்பிட்டுப்பார்த்து உணர்ந்து கொள்ளுங்கள். அடுத்தது பசித்திரு, பசித்திருக்க உணவு செரிமானமும் அதன் பிறகு வயிறு காலியாகவும் இருக்க வேண்டும். தனித்திரு, பசித்திரு இந்த இரு சொல்லின் பொருளை முழுமையாக உணரவைப்பது ஆழ்மனத்தேடல்களோ, ஆன்மிகத் தேடல்களோ இல்லை கழிவறைகள் தான். பூசை அறைகளைவிட கழிவறைகளின் பரப்பளவும் உள் அலங்காரமும் நன்றாகவும், தூய்மையாக இருக்க வேண்டும். மனித சமூகத்தில் இலட்சியங்களில் ஒன்றாக தூய்மையான கழிப்பிடத்தின் தேவை எங்கும் உணர்த்தப்படவேண்டும். கழிவறைகளை தூய்மை செய்ய முகம் சுளிக்காதவர்களால் தான் இதனை மேம்படுத்த வேண்டும், என்னைப் பொருத்த அளவில் என் வீட்டு கழிவறைகளை நான் கழுவுவதை விரும்பிய செயல்களுள் ஒன்றாகத்தான் செய்கிறேன். பொதுக் கழிவறைகளை கழுவ அழைத்தாலும் என்னால் தயங்கமல் மனம் உவந்து அதைச் செய்ய முடியும். தொற்று நோய்க் கூடம், நெடி என்பது தவிர்த்துப் பார்த்தால் நம் உடலில் உள்ளவை தானே அங்கும். இங்கு கழிவறை என்று பொதுவாக நான் குறிப்பிட்டு இருந்தாலும் அவை குளியல் அறையையும் சேர்த்தே குறிப்பதாகும், வீடுகளில் அவை சேர்ந்து தான் இருக்கின்றது. உடலே ஒரு கோவில் என்பது போல் உடலே கழிவறைகளினாலும் ஆனது என்றும் சொல்லலாம்.

*******

கழிவறைச் சின்னங்கள் ஒவ்வொரு நாடுகளின் ரசனைக்கேற்று வரைந்துள்ளனர், குறிப்பாக உடைகள் அந்தப் பகுதி கலைகள் உள்ளிட்டவை கூட கழிவறைச் சின்னங்களில் காட்சியாக்கப்பட்டிருக்கும். ஒரு காலத்தில் (30 ஆண்டுகளுக்க்கு முன்பு) தமிழகத்தின் பிரபல கழிவறைச் சின்னங்களாக, ஆண் பெண் கழிவறைகளைக் குறிக்க ரஜினியின் தலையையும், ஶ்ரீ தேவியின் தலையையும் வரைந்தோ அல்லது படத்தில் இருந்து வெட்டி ஒட்டியோ வைத்திருந்தனர், இவை பெரும்பாலும் நகர மற்றும் சிறு நகர திரையரங்க பொதுக்கழிவறைகளின் காட்சியாக இருக்கும். இப்போதெல்லாம் நடிகர் நடிகைகளின் படங்களைப் போடுவதில்லை. கரியால் ஆண் / பெண் உருவங்களை வரைந்து வைத்திருக்கின்றனர். ஒரு படத்தில் கூட கவுண்டமணியையும் படத்தில் அவரின் மனைவியையும் படம் பிடிக்கும் செந்தில் அதை திரையரங்க கழிவறைகளில் ஆண் / பெண் கழிவறைக் குறிக்கும் சின்னமாக ஆக்கி வைத்திருப்பார், அதைப் பார்த்துவிட்டு கவுண்டமணி செம டென்சன் ஆகிவிடுவார். கழிவறையின் முகப்புகளில் குறிப்பிட்டவரின் அனுமதி இல்லாமல் அவர்களின் படங்களை வைப்பது தமிழகத்தின் நடைமுறையாக இருந்தது, மற்றும் அதில் இடம் பெறும் படத்திற்க்குரியவர்கள் அதை விரும்பமாட்டார்கள் என்பதும் அந்தக் காட்சியில் நகைச்சுவையாகச் சொல்லப்பட்டு இருந்தது. வெள்ளைக்கார சமூகத்தின் அடி ஒற்றிய நாடுகளின் கழிவறை சின்னங்கள் பொதுவானது நீலக் கால் சட்டை அணிந்த ஆண் நிழல் உருவமும், முழுகால் வரை உடை அணிந்த நிழல் பெண் உருவமும் கழிவறைச் சின்னங்களாக இருக்கும்.

சில ரசிக்கத் தக்க நகைச்சுவையான கழிவறைச் சின்னங்கள்.

















மேலும் சில









(வளைகுடா நாடுகளில்?)




கீழே உள்ளதை பார்த்த பிறகு திறந்த ஜிப்போடு வெளியே வருபவர்கள் தான் நினைவுக்கு வந்தது :)


ரொம்ப நகைச்சுவையாக நான் ரசித்தது கீழே



அது அது........


இணைப்புகள் :

வழிபாட்டுத் தலங்களைவிட உயர்ந்தது எது ?


19 ஆகஸ்ட், 2011

மணிரத்னத்தின் அடுத்தப்பட திரைக்கதை !

மீனவ பிரச்சனைகள் படமாகிறதாம், மணிரத்னம் இயக்குகிறாராம், ஜெயமோகன் வசனம் எழுதுகிறாராம்.

சரி சரி கற்பனை கதை விவாததிற்குள் செல்வோம்

**********

மணி : நம்ம அரவிந்த்சாமி இப்ப இருக்கிற கெட்டப்புல அவரைத்தான் கட்டுமரக்கார மாரிமுத்துவாப் போடனும்னு நினைக்கிறேன்

ஜெமோ : நல்ல சாய்ஸ், அப்படியே குஷ்புவை அவரோட சம்சாரமாக போட்டுவிடுங்க

மணி : கதை என்னான்னா ? நம்ம பையன் மாதவன் மாதிரி ஒரு புதுமுகத்தைக் காட்டலாம்னு இருக்கேன்

ஜெமோ : மீன்காரனாக நடிக்க மீசை இல்லாத ஹீரோவா ?

மணி : மீன்காரனாக இல்லை, மொத்தமாக மீன் வாங்கும் தொழில் அதிபராகத்தான் காட்டுறோம்

ஜெமோ : அதை எப்படி கடலுக்குள் நடக்கும் கதைக்குள் நுழைப்பிங்க ?

மணி : பையன் ஒரு நாள் ஆர்வத்துடன் மீன்பிடி படகுல ஏறிக் கடலைப் பார்க்கப் போறான்

ஜெமோ : அப்பறம்

மணி : எதிரில சிங்களப் கடற்படை.. அதுல கடற்படை அதிகாரியாக ஒரு கன்னிப் பொண்ணு

ஜெமோ : ஒய்யாவோ ஒய்யாவோ அட என்னா ஓ....ன்னு பாடிக் கிட்டே வருகிறார்களா ?

மணி : அதிகாரி எப்படிங்க அப்படி பாடுவாங்க, கதையக் கேளுங்க, சிங்களப் படை நம்ம ஹீரோவை நெற்றியில் துப்பாக்கி வச்சு புடிக்குது

ஜெமோ : அப்படியே இலங்கைக்கு கொண்டு போய்டுறாங்களா ?

மணி : ஆமாம், ஜட்டியெல்லாம் கழட்டிட்டு நிர்வாணமாக போட்டு சக்கரை தண்ணி தெளிச்சு வெயிலில் போட்டுட்டு போய்டுறாங்க

ஜெமோ : ஷங்கர், பாலா டச் கொஞ்சம் வருது..இதுக்கப்பறம் நான் சொல்றேன்

மணி : ம் சொல்லுங்க ஒங்க கதை என் கதையோடு ஒட்டுதான் பார்க்கிறேன்

ஜெமோ : அந்த கடற்கன்னி யாருக்கும் தெரியாமல் வந்து நம்ம ஹீரோவை பாத்ரூமுக்கு கூட்டிப் போய் குளுப்பாடி தலையெல்லாம் துவட்டி விடுது, அந்த நேரமாகப் பார்த்து கடற்படை ஆளுங்க வந்து கோபமாகி அந்த பொண்ணு அதான் நம்ம படத்தோடு ஹீரோயின் அவங்களை மாருல எட்டி உதைக்கிறாங்க

மணி : ம் அட என்னோட தீ(ம்)மை வீட இது நல்லா இருக்கே

ஜெமோ : திரும்பவும் ஹீராவை கட்டிப் போட்டு, ஜீப்புல தூக்கிப் போட்டுட்டு அந்த ஹீரோயினை அங்கேயே விட்டுட்டுப் போறாங்க, போகும் போது பொட்டுத் துணி இல்லாமல் அந்த பொண்ணு ரெத்தவிளாறாக் கிடக்குது

மணி : இதுக்கப்பறம் நான் கதையைச் சொல்றேன்......

ஜெமோ : ம்

மணி : இந்த இடத்தில இன்னொரு பாட்டு வைக்கிறோம்

ஜெமோ : மொதப்பாட்டு எங்கே வைக்கிறோம்னு சொல்லவில்லையே......

மணி :மொதப்பாட்டு : அந்திமழை மேகம் ரேஞ்சுக்கு மீனவ கிராமத்தில் தான் துவங்குது.......யோவ் அதையெல்லாம் நான் ஏற்கனவே ரஹ்மான் கிட்ட டிஸ்கெஸ் பண்ணிட்டேன்யா

ஜெமோ : சரி சரி எனக்கு தெரியாது அதான் கேட்டேன்

மணி : இப்ப கதையைக் கேளுங்க.... தூக்கி வந்த ஹீரோவை கடற்படை அப்படியே கடலில் தூக்கிப் போடுது, அங்க இண்டர்வெல்

ஜெமோ : குறும்படம் எடுக்கப் போறோமா ?......

மணி : யோவ்.....இது திரைக்கதை தான், இடையிடையே சிங்களப் படை தமிழக மீனவர்களை அடிச்சுக் கொல்றது, வலையறுக்கிறது, படகை மூழ்கடிக்கிறதெல்லாம் காட்டினால் 1.15 மணி நேரம் ஓடிவிடும், இன்னும் ஹிரோ இராமஸ்வரம் கோவிலுக்கு வரும் பெண்களை சைட் அடிக்கும் மேட்டரெல்லாம் கூட முன்பே வருது, அதுக்கெல்லாம் வசனம் நீ தான் டெவலப்பண்ணனும், சுகாசினியை எழுதச் சொன்னால், எல்லா வரியிலும் 'லே' போட்டுட்டு இது தான் திருநெல்வேலி / ராமேஸ்வரம் பாசைன்னு சொல்லிடும்.

ஜெமோ : அதுவும் சரிதான்

மணி : கடலில் தூக்கிப் போட்ட ஹீரோ மறுபடியும் இலங்கை கடறகரையில் ஒதுங்கிறார், கடலையே வெறிச்சுப் பார்த்து சிலையாய் நின்ற ஹீரோயின் பார்த்துடுறாங்க, மறுபடியும் காப்பாற்றி அங்கிருந்து கட்டுமரத்துல தூக்கிப் போட்டு இராமேஷ்வரம் வற்ராங்க, வரும் போது மீண்டும் கடற்படை கண்ணுல உப்புத் தண்ணியைத் தூவி தப்பிக்கிறாங்க, அவங்களுக்கு ராமேஷ்வரம் கோவிலில் கல்யாணம் நடக்குது, அங்க ஒரு பாட்டு, பின்னர் அவங்களுக்கு இரட்டை குழந்தை பிறக்குது, ஒரு குழந்தைக்கு தமிழ்பேரும், இன்னொரு குழந்தைக்கு சிங்களப் பேரும் வைக்கிறாங்க

ஜெமோ : இண்டர்வலுக்கு பிறகு முக்கால் மணி நேரம் ஓடும் திரைக்கதை ஆச்சு, பின்னர் ?

மணி : திடிரென்று ஒருநாள் ஹிரோயினுக்கு தன்னோட அம்மா அப்பாவைப் பார்க்கத் தோணுது, யாருக்கும் தெரியாமல் அதிகாலை 4 மணிக்கு படகுல போறாங்க, அதிர்ச்சியடைந்த ஹீரோ தன்னோட குழந்தைகளை கூட்டிட்டு இன்னொரு படகுல இருட்டுல தொடருகிறார், மறுபடியும் கடற்படை எல்லோரையும் சுற்றி வளைக்குது, ரிடையர் ஆகும் வயதில் இருக்கும் மேஜர் சுட்டுறான். சிங்களப் பேரு வச்சிருக்க குழந்தை காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து மயங்கி கடலுக்குள் விழுந்துடுது. எல்லோரையும் சுத்தி வளைக்கிறாங்க.

ஜெமோ : சுத்தி வளைக்காமல் க்ளைமாக்ஸ் சொல்லுங்க.

மணி : இதோ....இப்ப தான் எதிர்பாராத அந்த சம்பவம் நடக்குது, இலங்கை கடற்படை மேஜரை நோக்கி, அந்த ஹிரோயின்.......'அப்பா நீங்களே உங்க பேரனை சுட்டுட்டிங்களே' ன்னு சிங்களத்தில் கதறி கதறி சொல்றார். அப்போ நல்லா பொழுது விடிஞ்சிருக்கு, மகள் உருவம் மாறி இருந்ததால் அடையாளம் தெரிந்து கொள்ளாத அப்பா அதிர்ச்சி அடைந்து தன்னோட தவறுகளை உணர்கிறார், கடற்படை ஆட்களுக்கு ஆணையிட்டு குழந்தையை கடலுக்குள் தேடுறாங்க, மூச்சு பேச்சு இல்லாமல் மயங்கிக் கிடக்கும் குழந்தை, ஒரு சோகப் பாடல் முடியும் போது உதடு அசைய எல்லோர் முகத்திலும் சிரிப்பு, சிங்களத் மேஜர் தாத்தா குழந்தையை அணைத்துக் கொள்கிறார். தன்னோட வேலையை அன்றே ராஜினாமா செய்துவிட்டு, மருமகனையும் பேரனையும் ராமேஷ்வரம் நோக்கி அனுப்பிவிட்டு தன்னைத் தானே சுட்டுக் கொண்டு கடலில் வீழ்கிறார்.

ஜெமோ : க்ளாஸ். ஆனால் இது எப்படி மீனவ பிரச்சனைகளுக்கு தீர்வு கொடுக்கும்னு நாம சொல்லவே இல்லையே....

மணி : இதெல்லாம் யாரு கேட்டார்கள் ? கடற்கரை, மீன் பிடிக்கிறது, சிங்கள ராணுவம், சித்திரவதை, செண்டிமெண்ட்ஸ் இதெல்லாம் இருக்கே.....தீர்வு கிடைச்சுடாதா ? ம் சொல்ல மறந்துட்டேன் படத்தோட பேர் இராமேஸ்வரம் இல்லை, அது ஏற்கனவே வேறொரு படப்பெயராக வந்துள்ளது, படத்தோட பெயர் 'கோடியக்கரை' இல்லை என்றால் 'கச்சத்தீவு' சீட்டுக் குழுக்கிப் போட்டு ஒண்ணு எடுக்கனும்







********

ரோஜா, மும்பை மூலம் தேசிய பிரச்சனைகளுக்கு என்ன தீர்வு கிடைச்சுதோ, அதில் குறையாமல் இந்தப்படத்திலும் எதாவது சொல்லி இருப்பார் மணி, நாம் தேடித் தேடி விவாதிப்போம்.

20 ஜூலை, 2011

கருணாநிதி இந்திய பிரதமர் ஆகிறார்.

அண்மையில் சென்னைக்கு வந்த பிரணாப் முகர்ஜி முன்னாள் முதல்வர் கருணாநிதிய அவரது அலுவலகமான அறிவாலயத்தில் சந்தித்தார். அப்போது காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி முன்னாள் தமிழக முதல்வர் திரு மு.கருணாநிதியே அடுத்த பிரதமர் பதவிக்கு பொருத்தமானவராக தெரிவதாகவும், மன்மோகன் தலைமையில் காங்கிரஸ் பல சிக்கல்களை குறிப்பாக ஸ்பெக்டரம் உள்ளிட்டவற்றில் பாஜகவை சமாளிக்க முடியாமல் திணறுவதாகவும் தெரிவித்து, தேசிய முற்போக்கு கூட்டணி அரசின் புதிய பிரதமராக இந்தியாவை வழிநடத்தும் பொறுப்பை திரு கருணாநிதிக்கு வழங்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.

தமிழக மக்களையும் தமிழர்களையும் தாம் மிகவும் நேசிப்பதாலாயே அவர்களின் பாசத் தலைவர் திரு மு கருணாநிதிக்கு பிரதமர் பதவிக்கு தாம் பரிந்துரைப்பதாக சோனியா காந்தி தெரிவித்துள்ளார். முன்னாள் திமுக அரசின் பல சாதனைகளை பட்டியல் இட்டு திரு மு.கருணாநிதியிடம் பேசிய முகர்ஜி, அத்தகைய திட்டங்களை இந்தியா எங்கும் விரிவுபடுத்த கருணாநிதியே சரியான தேர்வு என்பதையும் தெரிவித்துள்ளார். முகர்ஜி சந்திப்பின் போது பக்கத்தில் இருந்த பேரன்களின் ஒருவர் 'தாத்தா எனக்கு ஹிந்திப் படம் எடுத்து வட இந்திய கலைத் துறைக்கு தொண்டு ஆற்ற ஆவல் எழுந்துள்ளது', எனவே பிரதமர் பதவிக்கான தேடிவரும் வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று சொல்ல, நெகிழுந்து போனாராம் முகர்ஜி, காரணம் தென்னிந்தியர்களுக்கு தேசிய உணர்வு குறைவு என்று நினைந்திருந்ததற்கு கருணாநிதியின் பேரனின் இ(ஹி)ந்திய தேசிய பற்று சாட்டையடி கொடுத்துள்ளதாம்.

முகர்ஜியின் வேண்டுகோளை ஏற்கத் தயங்கிய திரு கருணாநிதி, தம் மகள் மற்றும் ராசா திகார் சிறையில் இருக்க என்னைப் பிரதமர் ஆக்குவது சர்சை ஆகாதா ? என்று ஐயம் கேட்டுள்ளார், அதற்கு பதிலளித்த முகர்ஜி 'இவை எல்லாம் வட இந்திய ஆரிய பத்திரிக்கைகள் சூடான செய்திக்காக கிளப்பிவிடப்பட்ட ஆறிப்போன வதந்தி, நீதிமன்றம் அவற்றை தற்காலிகமாகத்தான் நம்பியுள்ளது, குற்றச் சாட்டுகள் ஆதரமற்றவை விரைவில் அவர்கள் விடுதலை ஆவார்கள் என்று தேறுதல் கூறினாராம், இருந்தாலும் முதுமையையும் கவனத்தில் கொள்ளச் சொன்ன கருணாநிதியை அங்கிருந்து இடைமறித்த திரு முக அழகிரி இந்தியாவின் 21ஆவது பிரதமரும், 22 ஆவது பிரதமரும் நீங்கள் தான் இதில் மாற்றம் எதுவும் இப்போது வேண்டாம் என்றும் தமிழக திமுகவின் தலைமைப் பதவியை இதற்காக விடத் தேவை இல்லை தொடரலாம் என்று கூறி உள்ளார்.

இதையெல்லாம் கேட்டு நெகிழ்ந்த திரு மு.கருணாநிதி முகர்ஜியிடம் 'பிளாட்டின வெண்ணிலவு அன்னை சோனியாவிடம் தாம் பிரதமர் பதவிக்கு இசைந்துள்ளதை மகிழ்வுடன் தெரிவித்ததாகச் சொல்லவும்' என்று விடை கொடுத்துள்ளார். அதன் பிறகு முரசொலியின் நாளைய பதிப்புக்காக நெகிழ்ச்சி குன்றாமல் உபி களுக்கு கடிதம் எழுதத் துவங்கிய கருணாநிதி

'பார்த்தாயா உடன்பிறப்பே, பதவிகள் என்னும் முள்கிரிடமும், பாராட்டுவிழாக்கள் என்னும் மலர் மாலைகளும் நான் வேண்டாம் என்றாலும் அவை என்னை நோக்கிய தேடி வருகின்றன, அன்னைத் தமிழுக்கு ஆற்றும் அரும் தொண்டாகவே நான் இந்த இடற்களை சுடர்விளாக்காக் கண்டு ஏற்றுக் கொள்கிறேன்,. மைனாரிட்டி அரசு என்று கழக அரசை இகழ்ந்த கொடை நாட்டு தென்குமரி தமிழக நலத்திட்டத்திற்கு பிரதமரிடம் கைநீட்டும் நிலை ஏற்பட்டுள்ளது, இதைத் தான் அண்ணா அன்று சொன்னார் 'ஆணவம் கூடாது அதுவும் ஆட்சியாளர்களுக்கு அறவே கூடாது' என்றார், பிரதமர் ஆனால் தாய் தமிழ்நாட்டை தற்காலிகமாக பிரிந்து செல்கிறோமே என்று வருத்தமே என்னிடம் ஏற்பட்டுள்ளது, அயல்நாடு சென்று உழைக்கும் தமிழர்களுக்கு அன்றாடம் தாய் தந்தையர் மனைவி மக்கள் நினைவு இருப்பதைப் போல் டெல்லி சென்றாலும் என் எண்ணமெல்லாம் எப்போதும் தமிழகம் மற்றும் தமிழர் நலன் சார்ந்தே இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவை இல்லை.........

**********

ஏந்திரிங்க மணி ஆச்சு ஆபிஸ் கிளம்பல.........

அட விடியற்காலை கனவா ? இது நடந்துவிட்டால் பின்னர் ஜெ-வை பிரதமர் ஆக்கும் துர்பாக்கிய, திரிசங்கு நிலையில் வெளியில் இருந்து ஓட்டுப் போடாவிட்டாலும் ஆதரவு கேட்க வேண்டி இருக்குமோ ? தமிழகத்துக்குத்தான் சாபக்கேடுகள் தொடரும் என்று நினைத்தேன், இந்தியாவுக்குமா ? அவ்வ்வ்வ்வ்வ்வ்

நக்கீரனில் 'மத்திய மந்திரி ஆகிறார் கனிமொழி' என்பதை படித்த பிறகு இந்தமாதிரி கெட்ட கெட்ட கனவாக வருது

6 ஜூலை, 2011

குறி சாமியார் குப்பு சாமி (வெ.ஆ.மூர்த்தி - ஸ்பெசல் ) !

சாமியார் பிஸ்னஸ் நல்லாப் போகுதுன்னு நல்லாத் தெரிஞ்ச வெண்ணிற ஆடை மூர்த்தி சாமியார் வேசம் கட்டிவிட்டார். குன்றத்தூர் மலையடிவாரத்தில் குத்துக்கல்லாட்டாம் குந்திக்கிண்டு இருக்கும் அவரிடம் மக்கள் குறி கேட்க வர்றாங்க.
பக்கதில் 'குன்றத்தூர் குறிசாமியார் குப்புசாமி' ன்னு பெயர் பலகை இருக்கு.





வெ.ஆ.மூர்த்தி : ப்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்பூ.....ப்ர்ர்ர்ர்ர்ர்பூ.....(உதடால ஊதி .......ஒருபயலையும் காணுமெ.......) என்று சிந்திதபடி இருக்கிறார்

50 வயது மதிக்கத்தக்க ஒருவர் தொப்பையோடு அவரிடம் வருகிறார்

'வணக்கம் சாமி.......நான் புவனகிரி புஷ்பநாதன் மகன் புண்ணிய கோடி'

வெ.ஆ.மூர்த்தி : (ரொம்பவும் தெரிஞ்சவரிடம் பேசுவது போல) வா....புண்ணியக் கோடி..உன்னப் போலா ஆளுக்காகத்தான் ஒத்த குச்சியோட உட்கார்ந்து குறிபார்த்து குறிபார்த்து சொல்லிக்கிட்டு இருக்கேன். உன் பொண்டாட்டி யாருகூடேயும் ஓடிட்டாளா ?

பு.கோ : ஹிஹி..... அட ஆமாம் சாமி அது எப்படி உங்களுக்குத் தெரியும் ?

வெ.ஆ மூர்த்தி : அதான் மூதேவி உன் மூஞ்சப்பார்த்தாலே தெரியுதே......உன்கிட்ட இவ்வளவு நாளு அவ இருந்ததே கஷ்டம்

பு.கோ : ஹி ஹி, இப்ப நான் ஓடிப் போன பொண்டாட்டி திரும்பி வருவாளான்னு கேட்க வரல, அடுத்து எனக்கு கல்யாணம் ஆகுமான்னு பார்த்துச் சொல்லுங்க

வெ.ஆ.மூர்த்தி : டம்பி........நான் சொல்றேன்ன்னு தப்பா நெனச்சுக்காதெ, வெட வெடன்னு ஆடுற ஒன்கிட்ட இன்னொருத்தி வந்தாலும் அவ கட கடன்னு ஓடிப்போவான்னு தான் ஒன் நாடி சொல்லுது......ம்கூம்.....உன் வாயெல்லாம் ஓவரா நாறுது......கொஞ்சம் தள்ளி உட்காரு.

பு.கோ : அப்ப எனக்கு கல்யாணம் ஆகாதா ?

வெ.ஆ மூர்த்தி : ம்கூம் கல்யாணம் ஆகாது ஆனா இன்னொன்னு சொல்லுவாங்களே... கருமாதி அது ஆகும்...எந்த குறிகாரன் இல்லாட்டி குறிகாரியிட்ட கேட்டாலும், குடிகாரங்கிட்ட கெட்டாலும் அதான் சொல்லுவான், காத்தால எழுந்து நெதம் பல்லு வெளக்கு.......கல்யாணம் ஆகாட்டியும் எவன் கூடவோ ஓடிப் போன ஒம்பொண்டாட்டி திரும்பி வந்தாளும் வருவா ?

பு.கோடி பெருமூச்சு விட்டபடி எஸ்கேப் ஆகிறார்

வெ.ஆ மூர்த்தி : டேய் டேய் குறிக்கேட்டதுக்கு எதாவது கொடுத்துட்டுப் போடா........தொங்க தொங்க நாக்கு வரண்டு போய் குந்திகினு இருக்கேன்......இப்படி ஏமாத்திட்டுப் போறானே பாவி இவன் உறுப்படுவானா ?

**********

அடுத்ததாக இன்னொருவர்

கும்பிடுறேன் சாமி, நான் கொருக்குப்பேட்ட கோபாலு

வெ.ஆ.மூர்த்தி : வா கோபாலு உட்காரு கோபாலு, உனக்கு என்ன பிரச்சனை ? நல்லா ஓடிக் கிட்டு இருந்த பிஸ்னஸ் இப்ப சொம்மா ஆடிக்கிட்டு இருக்கா ?

கொ.கோ : ஆமாம் சாமி, பார்டனர் என்னை மோசம் செஞ்சுட்டான், அவனுக்கு செய்வன வெக்கனும்

வெ.ஆ.மூர்த்தி : டம்பி நான் சொல்றேன்ன்னு தப்பா நினக்காதே அதிகமா கைவென வைக்கிறவனும் செய்வென வெக்கிறவனும் அத்தாலாயே சாவான்.

கொ.கோ : செய்வின தெரியும் அது என்ன சாமி கைவின ?

வெ.ஆ.மூர்த்தி : இதெல்லாம் வெவரமா கேளு, அதிகமா கைய நீட்டுறவன் யாராலாவது அடிவாங்கியே சாவான்னேன் நான் சொல்றது சரிதானே ?

கொ.கோ : அப்ப நான் என்ன தான் தொழிலு செய்றது ?

வெ.ஆ.மூர்த்தி : டம்பி கைத் தொழில் சரி இல்லைன்னா கலைத்தொழில் எதாவது செஞ்சுப் பொழச்சிக்கலாம், உன் ரேகைப்படி உனக்கு கூத்து வரும். ஆடிப் பொழச்சுக்கோ..... சினிமாவில் சேரு....நல்லா வருவே

கொ.கோ : அப்ப நான் வாரன் சாமி

வெ.ஆ.மூர்த்தி : நீ வார்றது இருக்கட்டும், காத்தாலேர்ந்து நாஷ்டா இல்லாமல் நட்டுகிட்டு இருக்கேன், துட்டக் கொடுத்து எங்கேயாவது போய் தொல

******

அடுத்து ஒரு 30 வயது தக்க பெண் வருகிறாள்

சாமி வணக்கம்,

வெ.ஆ.மூர்த்தி : நீ ஆதம்பாக்காம் ஆளவந்தான் மக அன்னக்கிளி தானே.........?

'இல்லை அது எங்க அக்கா.......நான் வண்ணக்கிளி'

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா ....அப்ப உங்க அப்பாவுக்கு ஒரு சின்ன வீடும் இருக்கா ?

வ.கிளி : நாசமாப் போச்சு.....போய் வாயைக் கழுவுங்க சாமி......எங்கப்பாவுக்கு இரண்டு வீடு இல்ல ஒரே வீடு தான், அவ என் கூடப் பொறந்த அக்கா

வெ.ஆ.மூர்த்தி : தப்பா நெனச்சுக்காதம்மா....உங்கப்பா அந்தக்காலத்து ஆளேச்சேன்னு கேட்டேன், இப்ப ஒனக்கு என்ன கொற ?

வ.கிளி : அத ஏன் கேட்கிறிங்க....எங்க ஊட்டுக்காரர் இராவைக்கு 12 மணிக்கு மேல பூனை மாதிரி வந்து படுத்துக்கிறார்.....காத்தால அஞ்சுமணிக்கெல்லாம் வெளியே போய்டுறார்......எங்கே என்னை கைவிட்டுவாரோன்னு பயமா இருக்கு ?

வெ.ஆ.மூர்த்தி : அவனுக்கு சின்ன வீடு இருக்கான்னு குறிபார்க்கனும், அதானே ?

வ.கிளி : அந்த கண்றாவி புடிச்சவனுக்கு நான் கிடச்சதே பெருசு, அது மோரக்கட்டைக்கு இன்னொருத்தி சிக்குவாளாக்கும்

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா.......தப்பா நெனச்சுக்காதே ஒருவேளை ஒன் மோரக்கட்டையைப் பார்க்க புடிக்காமல் தான் ராவொடு வந்துட்டுப் போறானோ......

வ.கிளி : ம்கும்......இரண்டு புள்ளையை பெத்திருக்கேனாக்கும்.....புடிக்கமாலா இருக்கும்....

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா....உங்க வீட்டுல டிவி ஓடுதா ?

வ.கிளி : அதான் என்னேரமும் ஓடுது சாமி, இன்னிக்கு சீரியல் கீரியல் எதுவும் கிடையாது அதான் இந்தப்பக்கமா குறிகேட்க வந்தேன்.....நேத்திக் கூட செல்லம்மா சீரியலில் அஞ்செலி பொண்ணை அரஸ்ட் செஞ்சப்ப எழவெடுத்த கரண்டு பட்டுன்னு போச்சு, அதுக்குப் பெறகு என்ன ஆனதோ மனசு பட்டு....பட்டுன்னு அடிச்சுகுது

வெ.ஆ.முர்த்தி : பாப்பா மறுபடியும் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதே, கார்த்தாலேர்ந்து ரா வரைக்கு முழுச்சு முழுச்சு மூதேவியாட்டாம் மெகாசீரீயல் பார்த்துக்கிட்டே இருந்தீன்னா....எப்பேர்பட்ட மவராசனாக இருந்தாலும் வீட்டுப்பக்கமே ஒரு எட்டுக்கூட வந்துட்டுப் போவமாட்டான், டிவிய அணைச்சிட்டீன்னா அவன் வருவான் வந்து அவனே லைட்ட அணைப்பான்

வ.கிளி : போங்க சாமி எனக்கு வெட்கமா இருக்கு

வெ.ஆ.மூர்த்தி : பாப்பா.....வந்ததே வந்த...... அவுத்துக் கொடுத்துட்டு நல்லா முடிச்சுப் போட்டுட்டு போ.....சுத்திலும் பூறா களவானிப் பசங்க பார்த்துட்டா அப்படியே அமுக்கிடுவானுங்க.

வ.கிளி : ...ங்ஙெ.............!

வெ.ஆ.மூர்த்தி : அட சில்லரையையும் சுறுக்கு பையையும் பத்தரம்னு சொன்னேன்

*******

பின்குறிப்பு : வெண்ணிற ஆடை ரசிகர்களுக்காக இந்த புனைவு நகைச்சுவை. இதை இன்னும் கொஞ்சம் தூக்கலாக எழுத முடியும் ஆனால் சுவை ரசபாசமாகிடும், அதாவது நாரசம்...ஆபாசம்!

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்