பின்பற்றுபவர்கள்

27 பிப்ரவரி, 2010

கார்த்திக் - ஜெஸ்ஸி - பாஸ்தா !

இளைய சூப்பர் ஸ்டார் என சிம்புவின் அறிமுகத்துடன் துவங்குகிறது படம், பொறியியல் கல்லூரி முடித்து திரையில் இயக்குனராக வாய்ப்புக்கு அலையும் வாலிபனாக சிம்பு, மலையாளம், ஆங்கிலம் கூடவே தமிழ் மிகுதியாக பேசும் சிம்புவை விட வயதில் கூடியவராக த்ரிஷா அறிமுகம் ஆகுகிறார்கள், முதல் சந்திபிலேயே இருவருக்கும் பற்றிக் கொள்கிறதாம், அதை சிம்பு வெளிப்படுத்த துடித்து வெளிப்படுத்துகிறார். மதம், பெற்றோர் எதிர்ப்பு இவைகளை சுட்டிக்காட்டி மறுத்தப்படியே சிம்புவுக்காக ஏங்கும் த்ரிஷா. த்ரிஷாவை விரட்டிக் கொண்டு கேரளா வரை செல்லும் காதல் பின்னர் சென்னை திரும்பும் வழியில் இருவரும் நெருக்கமாக இருக்கும் தொடர்வண்டி காட்சிகள். த்ரிஷாவின் வீட்டுக்கு தெரிவதால் காதலுக்கு பலமான எதிர்ப்பு, இடையில் த்ரிஷாவுக்கு தேவலயத்தில் ஆலப்புழையில் திருமணம் நடை பெறும் நேரத்தில் வேண்டாம் என்று ஓடிவரும் த்ரிஷா......எனக்கு ஏன் உன்னை புடிச்சிருக்கு, உன்னை ஏன் நான் காதலிக்கனும் படம் முழுவதும் இதையே திரும்ப திரும்ப பேசி சலிக்க வைக்கிறார்கள். காதல் திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பம் பெற்றே ஆகவேண்டும் போன்ற படித்தவர்களிடம் எடுபடாத இந்த காலத்திலும் அலைகள் ஓய்வதில்லை மற்றும் பல படங்களில் காட்டிய அதே பார்முலா.....திகட்டுகிறது......போதும் விட்டுடுங்க

படத்தின் இறுதி காட்சியாக காதலர்கள் சேர்ந்தாங்கன்னு சிம்பு எடுக்கும் படத்தின் முடிவாகவும் சேரவில்லை என்பது படத்தின் முடிவாகவும் காட்டுறாங்க படம் முடிவினால் தொங்கினால் எதையாதாவது ஒண்ணை வெட்டிவிட்டு ஒட்டலாம் என்ற திட்டம் போல. கவுதம் மேனன் தமிழ் சினிமாவை ஒலக தரத்திற்கு மாற்றுகிறேன் என்கிற பேரில் முத்த காட்சிகளை படம் முழுவதும் ஓட விடுகிறார். சிறுவர்களையும் பெண்களையும் அழைத்துச் செல்பவர்கள் நெளியக் கூடும். நாயகனும் நாயகியும் அழகானவர்களாகவும் அவங்க இல்லத்து உறுப்பினர்கள் சுமாரனவர்களாகவும் காட்டுவது இந்த படத்திலும் தொடருகிறது. ஏஆர் ரஹ்மான் இசை பாடல்கள் வரி தெளிவாக புரியவில்லை. வரிகள் இருக்கிறது என்பதை ஆங்கில துணை தலைப்புகள் மூலம் தான் தெரிந்து கொள்ள முடிகிறது (வெளி நாட்டில் வெளியாகும் படங்களில் இவை உண்டு)

சிம்புவுக்கு நண்பராக வரும் கேமராமேன் சிரிப்பை வரவழைக்கும் இயல்பான பேச்சுரை மற்றும் நடிப்பு சிறப்பாக இருந்தது. படத்தில் சிம்புவும் அவரும் மட்டுமே நன்றாக செய்திருக்கிறார்கள், 75 விழுக்காடு சிம்பு த்ரிஷா காட்சிகள் தான், மற்ற கவுதம் மேனன் படங்களைப் போலவே கதாநாயகனின், நாயகியின் குரல் படம் முழுவதும் பேசுகிறது. கவுதம் மேனனின் ஆக்சன் படங்கள் அளவுக்கு காதல் படங்கள் எடுபடவில்லை. சி செண்டர் எனப்படும் சிறு நகரங்களில் படம் ஒடாது என்றே நினைக்கிறேன். மிகவும் மெதுவாக நகர்கிறது. கல்லூரி மாண மாணவிகளுக்கு த்ரிஷா மேல் ஈர்ப்பு இருக்குமான்னு தெரியவில்லை ஏ பி செண்டர்களிலும் ஓடுமான்னு தெரியவில்லை, தயாரிப்பாளர் உதய நிதியின் கவலை அதை விடுவோம். திருமணம் ஆகாத இளம் பெண்கள் புடவை கட்டுவது இந்த படத்தின் வழியாக மறுபடியும் பேஷனாகலாம், படத்தில் த்ரிஷா புடைவைக் காட்சிகள் நிறைய இருக்கிறது.

இந்த படத்தின் மூலம் என்ன சொல்லவருகிறார்கள் என்றே தெரியவில்லை, கிறித்துவ மலையாள பெண்ணை தமிழ் இந்து வாலிபன் காதலித்தால் அவன் நிறைய அலையனும் கிடைக்காமல் போகவும் வாய்ப்பு இருக்கிறது தான் கவுதம் சொல்ல வருகிறாரான்னு தெரியல. படம் முழுவதும் காதல் பிரிவு ஏற்கனவே 80 களில் தென்றலே என்னைத் தொடு ஜெயஸ்ரீ மற்றும் மோகன் நடிப்பில் வெளியாகி இருந்தது, அது சுவையார்வமாக இருந்தது. உதட்டு முத்தம் சென்சார் படாம இருக்க அதை அமெரிக்க சூழலில் எடுக்கலாம் என்பதைத் தவிர கவுதம் அமெரிக்கா வரை படத்தை இழுத்ததற்கு வேறு அழுத்தமான காரணம் தெரியவில்லை. பிரிவின் வலி பிடிச்சிருக்காம், த்ரிஷா அடிக்கடி சொல்கிறார்.

படம் பார்த்தவர்களுக்கு காதுவலியும் காதில் இரத்தம் வராத குறையாக வெளியே முணுகிக் கொண்டே செல்கிறார்கள். படப் பிடிப்பும், சிம்புவின் இயல்பான நடிப்பும், நகைச்சுவையாக பேசும் கேமரா மேனாக வரும் கணேஷ் ஆகியோர் தான் படத்தில் குறிப்பிட்டு சொல்லும் படி இருக்கிறது.

விண்ணைத் தாண்டி வருவாயா ? காதலில் பிசிஸ்க்ஸும் தெரியல கெமிஸ்ட்ரியும் தெரியல. சிம்பு மட்டும் பாஸ். படத்தில் எதையோ பெரிய முடிவாகச் சொல்லப் போகிறார்கள் என்ற எதிர்பார்பு ஏற்படுத்தி தொடர்ந்து பார்க்க வைத்ததைத் தவிர்த்து வேறொன்றும் இல்லை. விண்ணைத் தாண்டி வருவாயா ? பழைய பாஸ்தா மாவு.



பிகு: இந்த படத்தை பதிவர்கள் டொன்லி, ஜோதிபாரதி, விஜய் ஆனந்த், முரு, சரவணன், வெற்றி கதிரவன்,ஜெகதீசன் ஆகியோருடன் பார்த்தேன். யாரும் நல்லா இருக்கிறது என்று சொல்லவில்லை.

25 பிப்ரவரி, 2010

சச்சினுக்கு பாராட்டு குறித்து அஜித் பேச்சு !

ஒட்டுமொத்த பதிவுலகத்திற்கும், அன்பான வாசகர்களுக்கும் வணக்கம்!

இங்கே... இப்போ.. ஐந்தரை அடி இந்தியாவை நம்ம முன்னாடி டெண்டுகல்கர் உருவத்துல பார்க்கிறோம். கிரிக்கெட் ரசிகர்கள் அவர் இரட்டை சதம் எடுத்ததற்காக பாராட்டுகிறார்கள், அதைப் பாராட்ட நான் இங்கே எழுதவில்லை. அப்படி எழுதினால் அது சுயநலம். 30 வருஷத்துக்கும் மேல இந்தியாவுக்கு, இந்திய மக்களுக்காகவும், அவரோட வாழ்க்கையை அர்ப்பணிச்சுக்கிட்ட ஒரு மாபெரும் மனிதருக்காகத்தான் நான் எழுதுகிறேன். நாங்‌கெல்லாம் எழுதுகிறோம். சச்சினை வாழ்த்த வயசு தேவையில்லை. மன்மோகன் செய்தி குறிப்பில் சச்சினுக்கு வாழ்த்தி நன்றி சொல்லியிருக்காரு. ஒவ்வொரு உலக கோப்பையிலும் இந்தியாவுல சச்சினுக்கு விசில் அடிச்சி நன்றி சொல்கிறோம். அதனால கிரிக்கெட் உலக சூப்பர் ஸ்டார் சச்சின், நம்மை உலக மேடையில் பெருமை படுத்தியவர் சச்சி பல்லாண்டு வாழணும்னு வாழ்த்தி, நன்றி சொல்றேன். நன்றி!

ஐயா.. பதிவுலகில்(ப்ளாக்கில்) எல்லோரும் எவ்‌ளோ எழுதுறோம்னு உங்களுக்கு தெரியும். கொஞ்ச நாளா எல்லாருக்கும் விளையாட்டு துறை மீது ஒரு கோபம், அவங்க கிரிக்கெட்டை வச்சு சூதாடினதில் கோபம், வெளம்பரத்தில் கோடிக் கணக்கா சம்பாதித்து, மட்டமான பொருளை கூட ஜனங்க தலையில் கட்டிவிடுகிறார்களேன்னு கோபம். ஏன் நாமெல்லாம்... நமக்கு தேவையில்லா விஷயத்துல கிரிக்கெட் வீரர்கள் தலையிடுறோம்னு கோபம். அதுக்கு நாங்க... பதிவர்கள் மட்டும் காரணம் கிடையாது. தம்பி சச்சின் நீங்க எவ்ளோ வெளையாட்டு வெளையாடி இருக்கிங்க. இன்னிக்கு ஒரு பணிவான வேண்டுகோள். இனிமே சென்சிட்டிவ் இஷ்யூஸ், பொலிட்டக்கல் இஷ்யூஸ்ல பளாக்கர்ஸ் தலையிட வேண்டாம்னு ஒரு அறிக்கை விடுங்க. ப்ளிஸ்... கெஞ்சிக் கேட்டுக்கிறேன். ஒவ்வொரு முறையும் இஷ்யூஸ் வர்றப்ப ப்ளாக்கராக பொறுப்புல இருக்குற ஒரு சிலர் எங்களை எப்படியாவது சச்சினுக்கு ஒரு வாழ்த்து பதிவு போடுன்னு இல்லாட்டி பின்னூட்டமாவது போடுன்னு டார்சர் பண்ணுறாங்க. அதனாலதான் நாங்க போடுறோம். வலைப்பதிவு ஒரு பொதுவான தளமாக இருக்கணும். அதுக்கு ஒரு வழி காட்டுங்க சச்சின் தம்பி. வி ஆர் டயர்ட்.

ஒரு பிரச்னை வரும்போது அரசாங்கம் ரீ-ஆக்ட் பண்றதுக்குள்ளேயே... பதிவில இருக்கிற ஒரு சிலர் அறிக்கை விட்டுடுறாங்க. நாங்க பதிவு போட்டு இருக்கோம்னு டுவிட்டரில் மெசேஜ் போடுறாங்க. பதிவில இருக்கிற ஒரு சிலர், பதிவர்கள் எல்லாரும் சச்சினுக்கு வாழ்த்து பதிவு போடனும்னு சொல்லி மிர‌ட்டி எழுத வைக்கிறாங்க. அதுக்கு ஒரு முடிவு கட்டுங்க தம்பி. வாழ்த்து பதிவு போடாவிட்டால் எங்க பதிவை படிக்க மாட்டோம்னு மிரட்டுறாங்கய்யா. முடிங்கய்யா. அதுக்கு ஏதாவது ஒரு வழி பண்ணுங்க. அதுக்கு பயந்து பதிவு போட வேண்டியிருக்கு. சப்போஸ்... எழுதாவிட்டால்... அத வேற மாதிரி திசை திருப்பி தேசப் பற்று இல்லைனு கிளப்பி விடுறாங்க. ப்ளீஸ் ஹெல்ப் டமில் ப்ளாக் வேர்ல்ட் . வேண்டாம். எங்களுக்கு விளையாட்டு அரசியலோ அரசியல் விளையாடோ வேண்டாம். விளையாட்டு விஷயங்கள்ல பதிவர்கள் அனைவருமே தலையிடணுமா வேண்டாமான்னு நீங்க ‌சொல்லுங்கய்யா. அதுல ப்ளாக்கர்ஸ் தலையிட வேண்டாம். சச்சின் சாதனையை வெளம்பரப் படுத்த செய்தி தாள்கள் இருக்கு, அதை படிக்க மக்கள் இருக்கிறார்கள். நீங்க பாத்துக்குவீங்க. கிரிக்கெட் சாதனை, சோதனைகளில் எங்களைப் போன்ற சாதாரண பதிவர்கள் என்ன செய்ய முடியும். யார் விளையாண்டாலும் வெறும் வாழ்த்து தான் சொல்ல முடியும், எங்களுக்கு எதுவும் கிடைக்கப் போவதில்லை. கிரிக்கெட் ரசிகர்கள் தான் கிரிக்கெட்டை பார்ப்பார்கள். அவர்கள் விசிலடிப்பார்கள். பதிவர்களை எழுதவிடுங்கள். அரசியலையும், விளையாட்டையும் ஒண்ணு சேர்த்து பதிவு அரசியலில் சேர்க்காதீர்கள். நாங்க நிம்மதியா பதிவு எழுதனும். ஏதாவது பண்ணுங்க தம்பி. நாங்க டயர்டா இருக்கோம்.

சச்சின் இரட்டை சதத்துக்கு எல்லோரும் ஆளுக்கு ஒரு பதிவு போடனுமா ? அஜித் பேசிய பேச்சு சரியா, தவறா? என்ற உங்களது கருத்துக்களை பகிர்ந்து கொள்ளுங்கள் பதிவர்களே..!

பிகு : இந்த பதிவு முழுக்க முழுக்க கற்பனை அஜித் மேடையில் பேசியதன் தழுவலில் எழுதியது.

படம் : நன்றி தினமலர்

ஹலோவுக்கு உரிய இறைவன் மிகப் பெரியவன் !

இறை என்ற தமிழ் சொல்லுக்கு பொருந்தும் வகையில் வேற்று மொழிகளில் இறையின் பொருள் அவ்வளவு சிறப்பாகக் கூறப்பட்டு இருக்கிறதா என்று தெரியவில்லை. தேடல் என்கிற சொல்லின் தன்மையுடன் 'இறை' (அழை), தொழு, வேண்டு, நினைவில் கொள் என்ற பொருளாக இறைவன் > நினைக்கப்பட்டவன், நினைக்கபடுகிறவன், நினைக்கப்படுபவன் அல்லது அழைக்கப்பட்டவன், அழைக்கப்படுகிறவன், அழைக்கபடுபவன் என்னும் வினைத் தொகையாக (முக்கால வினைச் சொல் பகுதி) தனிச் சிறப்பு வாய்ந்த சொல்லாக பயன்படுத்தபடுகிறது. மற்ற மொழியின் சொற்களில் இத்தகைய தனிச் சிறப்பு இருக்கிறதா என்று தெரியவில்லை.

மொழி காட்டும் பொருளை விட எந்த ஒரு மதம் சார்ந்த சொல்லும் அந்த ஒரு தனிப் பொருளை தருகிறதா என்று தெரியவில்லை. இருந்தாலும் இறைவன் என்ற சொல்லை தத்தம் மதத்தின் (காட்)கடவுளைக் குறிப்பதாக தமிழர்கள் நம்புகிறார்கள். இன்றைக்கு பெரிய மதங்கள் என்றால் நான்கே நான்கு தான் மற்றவை சிறியவை அவை சீக்கிய,பார்ச்சி என்பது போல் இனக்குழுவுக்குள் அடங்கிவிடும். இந்த நான்கு பெரிய மதங்களின் சின்னங்களான வழிபாட்டு தளங்கள் உலகெங்கிலும் சம அளவில் உள்ளன. இதில் யார் பணக்கார கடவுள் என்பதை யாரும் எளிதாகச் சொல்லிவிட முடியாது, திருப்பதி கோவிலுக்கு வரும் உண்டியல் வருமானம் உலகில் எந்த ஒரு வழிபாட்டு தளத்திற்கும் கிடைக்காத ஒரு பெருமை. அதே போல் சிவன் கோவில்களுக்கு இருக்கும் சொத்துக்களின் மதிப்புகள் அளவிட முடியாதவை. உலகங்கிலும் இருக்கும் சர்சுகள், மசூதிகள், புத்தவிகார்கள், இந்துக் கோவில்கள் எண்ணிக்கையில் சம அளவானவை, தாய்லாந்து போன்ற புத்த நாடுகளில் பிள்ளையார் கோவில் போல் புத்தவிகார்களை வீதிக்கு வீதி காணலாம், ஆசிய நாடுகளில் இருக்கும் புத்தர் கோவில்களின் எண்ணிக்கை ஒட்டு மொத்த இந்தியாவிலும் உள்ள இந்து கோவில்கள் எண்ணிக்கைக்கு சமமானவை, இதே போன்ற எண்ணிக்கையில் தான் உலகெங்கிலும் சர்ச்சுகளும் மசூதிகளும் இருக்கின்றன.

செல்வ வளம் என்ற அடிப்படையும் எந்த மதத்தின் கடவுள் பணக்காரர் என்று சொல்வது கடினம் தான். செல்ல வசதி படைத்த பெருமாளும், நில உடமைதாரர் சிவனும், ஆயிரம் கைகளை உடைய புத்தரும், தனக்காக போர் புரியும் வீரர்களைக் கொண்ட அல்லாவும், பணக்கார மேற்கத்திய நாடுகளின் ஆதரவு பெற்ற ஏசுவும் ஒவ்வொரு விதத்தில் மக்கள் செல்வாக்கு பெற்றவர்களாகத்தான் இருக்கிறார்கள். இதில் யார் மிகப் பெரியவன் ?

உலக மக்கள் தொகையில் சுமார் 17 விழுக்காடு கத்தோலிக்கர்கள் இருக்கிறார்களாம், அதே போன்று தான் இஸ்லாமியர், இந்து, பவுத்த மதத்தினரும் இருப்பார்கள், மீதம் உள்ள விழுக்காடு உதிரி மதங்களைச் சார்ந்தவையாக இருக்கும். வருங்காலத்தில் இந்த மத இறைவன் தனிச் சிறப்பு வாய்ந்தவன் என்று சொல்லி மதம் மாற்றுவது கடினமாகத்தான் இருக்கும், காரணம் மக்கள் ஆதாரத்தின் படியே முடிவு எடுப்பவர்களாக உள்ளனர். மதக் கொள்கைகளைக் காட்டலாம், ஆனாலும் அதிலும் சிக்கல் உதாரண புருஷன் என்று சொல்லிக் கொள்ளக் கூடிய மதப் பற்றாளர்கள் எவருமே இல்லை. அதனால் தான் மதவாதிகள் அறிவியல் அறிஞர்கள் பின்னே ஓடுகிறார்கள், ஒரு அறிவியலாளர் மதம் சார்ந்த நல்ல கருத்துச் சொல்லிவிட்டால் அவரது அறிவியல் அறிவு முழுவதும் மதத்தை தாங்கிப் பிடிக்கும் கேடயம் என்பது போல் பேசுகிறார்கள். இன்றை சூழலில் அறிவியல் துணை கொண்டு கடவுள் நம்பிக்கையை மெய்பிக்க வேண்டும் என்பதைவிட மதக் கொள்கைகளை மெய்பிக்க முடியுமா என்கிற முயற்சியும் மெய்பிக்கிறது என்பதாக கட்டுரைகளும் எழுதப்படுகிறது. இதில் குழப்பம் அடைபவர்கள் மதவாதிகள் அல்ல, இறை நம்பிக்கை உடைய ஒருவன் தான் குழப்பம் அடைக்கிறான், ஒருவேளை இவர்கள் சொல்வது தான் சரியோ என்பது போன்ற குழப்பம் அடைகிறான்.

நேற்று படித்த ஒரு பதிவு செய்தி உண்மையிலே வியப்படைய வைத்தது. 'வணக்கம் தமிழகம்', 'காலை வணக்கம்' போன்ற வணக்க சொற்களை இறைவனுக்கு இணை கற்பிக்க தடை விதிகப்பட்ட இஸ்லாமிய வானொலி, தொலைகாட்ச்சி அறிவிப்பாளர் பயன்படுத்தலாமா ? அப்படி அவர்களை சொல்லச் சொல்லி கட்டாயப்படுத்துவது மத நல்லிணக்கத்தை குலைப்பதாகும், இஸ்லாமியர்களை இழிவு படுத்துவது ஆகும் என்றெல்லாம் படித்தேன். எப்படியெல்லாம் யோசிக்கிறாங்க என்பதைத் தவிர்த்து வேறெதும் தோன்றவில்லை.

'வணக்கம்' என்ற ஒரு சொல்லை பொதுவாக இந்துக்கள் 'கும்பிடுதல்' என்ற சொல்லின் மாற்றாக பயன்படுத்துவதில்லை. வணக்கம் என்பது ஒரு மதிப்பு குறித்து தனக்கு முன்னால் இருப்பவர்களுக்கு 'அறிமுகச்' சொல் தான். அதற்கு மேல் பொருள் இருப்பதாகத் தெரியவில்லை. வணங்குதல் என்றால் பக்தி குறித்த சொல்லாகவும் அது பயன்படுத்தப் படுகிறது. ஆனால் அந்த சொல் வெறும் பக்தி சார்ந்தது மட்டுமே இல்லை. உள்ளேன் ஐயாவுக்கு பதில் 'வணக்கம் ஐயா' என்று சொல்லும் மாணவர்களும், பள்ளிகளும் உண்டு, இவை வெறும் பழக்கம் சார்ந்தவை தான். ஆங்கிலத்தில் இருக்கும் 'Sir' க்கு மாற்றாக 'ஐயா' வைப் பயன்படுத்துகிறோம், அதே போன்று தான் 'வணக்கம்' 'Hello' என்பது போல் பேச்சு வழக்கில் பயன்படுத்தப்படுகிறது. எனக்கு தெரிந்து நிறைய நண்பர்கள் தொலைபேசியில் அழைக்கும் போது 'ஹலோ' க்கு பதிலாக 'வணக்கம்' சொல்லுவார்கள். கண்டவர்களையெல்லாம் வணங்கி இறைவனுக்கு இணை வைக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா ? இஸ்லாமியர்களைப் பொருத்த அளவில் வணக்கம் பெரும் பிரச்சனையாகவே இருக்கிறது.

வணக்கத்துக் குரியவன், வணங்கத்தக்கவன் இறைவன் ஒருவனே என்பதற்கு பதிலாக கும்பிடுவதற்கு உரியவன், கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொண்டால் 'வணக்கம்' சொல்வது ஒரு பெரும் குற்றமாகிவிடாது என்று நினைக்கிறேன். இறைவன் மிகப் பெரியவன் ஆனால் அவன் மொழி ஆராய்ச்சி செய்து இணை வைக்கிறார்களா என்று பார்த்து 'வணக்கம்' சொல்லும் இஸ்லாமியர்களுக்கு மறுமையில் தண்டனை விதிப்பானா என்று தெரியவில்லை. அப்படி அச்சப்பட்டால் வணக்கத்தை பின் தள்ளிவிட்டு வேண்டத்தக்கவன் அல்லது கும்பிடத்தக்கவன் இறைவன் என்று மாற்றிக் கொள்ளலாமே. எனக்கு தெரிஞ்ச இஸ்லாமிய சகோதரர்கள் நிறைய பேர் எனக்கு வணக்கம் தெரிவித்து அலைபேசியில் தொடங்குகிறார்கள். அவர்களெல்லாம் இறைவனுக்கு இணை வைப்பதாக நான் நினைக்கவில்லை. வணக்கத்துக்கு உரியவன் இறைவன் என்ற நீளமான சொல் கூடத் தேவையற்றது, ஏனெனில் மேலே சொன்னது போல் 'இறை'வன் என்று சொன்னாலே அதில் வேண்டுதல், அழைத்தல், கும்பிடுதல் என பல பொருள்களை உணர்த்தும் 'இறை' என்ற வினைத் தொகையுடன் தான் இருக்கிறது.

இறைவன் அல்லா, ஆண்டவராகிய ஏசு கிறித்து, இந்து கடவுள் என இறைவன், ஆண்டவன், கடவுள் என்ற சொல்லை மூன்று மதங்களும் பயன்படுத்துகின்றன. இந்த மூன்றும் தற்காலத்தில் ஒரே பொருளைக் குறித்தாலும் அரபியில் அல்லா எனச் சொல்லப்படுகின்ற சொல்லுக்கு நேரடி பொருள் கொண்டது தானா 'இறைவன்' என்ற சொல் என்று எத்தகைய ஆராய்ச்சியும் நடந்தது போல் தெரியவில்லை. ஏன் கடவுள் என்றோ, ஆண்டவன் என்றொ சொல்லுவதில்லை என்று தெரியவும் இல்லை. ஆனால் கும்பிடுதல், வேண்டுதல் என்ற பொருளில் 'வணக்கத்தை' எடுத்துக் கொண்டு அதை அவ்வப்போது விவாதமாக மாற்றி வருவதற்கு இஸ்லாமியர்கள் முற்றுப் புள்ளி வைப்பது நல்லது. வணக்கத்திற்கு மாற்று வேண்டுமென்றால் 'தொழு' வையே வைத்துக் கொண்டு 'தொழுகைக்கு' உரியவன் இறைவன் என்றே சொல்லி வரலாமே.

இறைவன் மிகப் பெரியவன் தான், வணக்கம் மிகச் சிரியது இதற்கெல்லாம் இவ்வளவு முதன்மைத்துவம் கொடுக்க வேண்டுமா ? இறையச்சம், இறை வேண்டுதல் போன்ற அரபியில் பொருள் தரும் ஒரு சொல்லுக்கு (அரபி சொல் எது என்று தெரியவில்லை) பதிலாக 'வணக்கத்தை' பயன்படுத்துவது வெறும் மொழிப் பெயர்ப்பு சிக்கல் மட்டும் தானே.

வணக்கம் சொல்லுவது தவறு என்றால் 'ஹலோ' சொல்லுவது கூட தவறு தான். எனக்கு தெரிந்து ஹலோவுக்கு பதிலாகத்தான் பல இடங்களில் வணக்கம் பயன்படுகிறது. இஸ்லாமிய நண்பர்களில் பலர் கூட வணக்கம் என்றே அலைபேசியில் பேசத் தொடங்குகிறார்கள். இஸ்லாமியர்கள் எடுத்துக் கொள்ளும் வணக்கப் பொருள் 'ஹலோ' என்றால், ஹலோவுக்கு உரியவன் அல்லா, அல்லாவைத்தவிர யாருக்கும் ஹலோ சொல்லக் கூடாது என்று சொன்னால் அது சரியா ? வணக்கத்தை (மத)அரசியல் ஆக்குவது வெறும் மதவாதமாகத்தான் தெரிகிறது.

24 பிப்ரவரி, 2010

பதின்ம கால நினைவுகள் (எச்சரிக்கை தொடர் பதிவு) !

முதலில் 'பதின்ம' என்றால் என்னவென்று சொல்லிவிடுகிறேன், ஆங்கிலத்து 13 முதல் 19 வரை இருக்கும் எண்களில் அகவை உடையோரை 'டீன் ஏஜ்' என்று சொல்வதுண்டு, அதுவே தான் தமிழில் பயன்படுத்தும் போது பதின்ம அகவை அல்லது வயது என்றாகிறது. 'பதி' மூன்று முதல் 'பதி'னொன்பது(பத்தொன்பது) வரையிலான அகவை 'பதி'ன்ம அகவை என்கின்றனர்.

அந்த அகவையில் எட்டாம் வகுப்பிலிருந்து இளநிலை பட்டப்படிப்பு முதல் / இரண்டாம் ஆண்டுவரை படித்திருப்போம் (6 ஆம் வகுப்பை ஆறுமுறை படிக்கிறவர்களை கணக்கில் சேர்க்கவில்லை). எட்டாம் வகுப்பில் படிக்கும் போது தான் சில பசங்க சைட் அடிப்பதையும், 'அவ என் ஆளு' என்று சொல்வதையும் அரசல் புரசலாக கேள்வி பட்டேன். நான் எட்டாம் வகுப்பு படிக்கும் போது ஒன்பதாம் வகுப்பு மாணவர்களில் சிலர் மாணவிகளை காதலிக்கத் தொடங்கி இருந்தனர். அடுத்தது ஒன்பதாம் வகுப்பு, ஒரு மாணவன் பள்ளி விடுமுறையின் போது மரணம் அடைந்துவிட்டான், ஒரு சிலர் மாற்றலாகி சென்றுவிட்டார்கள். ஒன்பதாம் வகுப்பு படிக்கும் போது உடன்படிக்கும் மாணாவர்களில் சிலர் முழு கால்சட்டை எனப்படும் பேண்ட்டும், சிலர் வேட்டி அணிந்து வந்தார்கள் (நம்புங்கள் அப்போதெல்லாம் (எப்போதுன்னு கேட்கபடாது) வேட்டி அணிந்து வருவதால் இழுக்கு இல்லை, ஆசிரியர்களும் ஒப்புதல் அளிக்காவிட்டாலும் எதிர்ப்பு காட்டவில்லை) மாணவர்கள் மட்டுமே இருக்கும் வகுப்பு ஆகையால் பெண்களுடன் படிக்கும் அரிய வாய்ப்பு கிடைக்காமல் போய்விட்டது. பெண்களுக்கான தனி வகுப்புகளில் மாணவிகள் பலர் தாவணி அணிந்திருந்தார்கள். 'டேய் என்னடா......' ன்னு பேசும் மாணவிகள் தாவணிக்கு மாறியதும், எதிர்படும் போது தலையைக் குணிந்து கொண்டு சென்றார்கள் (வெட்கப்பட்டு சிரித்தார்கள் என்று பொய்யெல்லாம் சொல்ல மாட்டேன்), மனித உறவுகள், குழந்தை பேறு இவை பற்றிய அறிவு வளர்ச்சி அடைந்திருந்தது. பத்தாம் வகுப்பு படிக்கும் போது அறிவியல் வகுப்பு ஆசிரியர் தான் ஆண் பெண் இனப்பெருக்க உருப்புகள் குறித்தும், இனப்பெருக்கம் எப்படி நடைபெறுகிறது என்பது பற்றியெல்லாம் சிறிய பாடம் நடத்தினர். அதுவரையில் ஆண் பெண் திருமணம் செய்து கொண்டால் பிள்ளை பிறக்கும், வயிற்றை பிளந்து குழந்தை பிறந்ததும் வயிறு தானாகே மூடிக் கொள்ளும் என்கிற கற்பனையெல்லாம் முடிவுக்கு வந்தது. சுமாராக படிக்கும் மாணவன் தான். ஆங்கிலம் என்றால் அலர்ஜி அதற்கு காரணம் தமிழ் வழி மாணவர்களுக்கு புரியக் கூடிய வகையில் எந்த ஒரு ஆங்கில ஆசிரியரும் பாடம் எடுப்பதில்லை. ஆங்கிலத்தில் தேறுவது தான் பெரும் க(வ)லையாகவே இருந்தது, எப்படியோ எல்லை மதிப் பெண் எடுத்து தேறி, பட்டாம் பூச்சி பருவமான +1, +2 வில் சேர்ந்தேன்.

வீட்டில் கூடப் பிறந்த அண்ணன் தம்பிகள் மூவர் (என்னுடன் சேர்த்து 4 பேர், மேலும் அக்கா, தங்கை) இருந்தாலும் அடித்துக் கொண்டது, புத்தகங்களைக் கிழிப்பது, மிதிவண்டியை உடைப்பது போன்ற ஓற்றுமையைத்தான் செயலில் காட்டி வந்தேன். திரைப்படங்களில் காட்டுவது போல் அண்ணன் தம்பி பாசம் இருக்க வேண்டுமென்றால் அவர்களுக்கு இடையே நிறைய ஆண்டு வேறுபாடு இருக்கவேண்டும் இல்லை என்றால் இருவர் அல்லது மூவராக குறைந்த எண்ணிக்கையில் உடன்பிறந்த உறவு முறைகள் இருக்க வேண்டும். ஆனால் இருபது அகவைக்கு மேல் உடன் பிறப்புகளின் மீதான ஈர்ப்பு இயல்பாக வந்துவிடும்.

+1, +2 படிக்கும் போது நானும் பேண்ட் - க்கு மாறிவிட்டேன், ஜட்டி போட்டு போடனுமாம், அதுக்கு முன்பு வரை அரை ட்ராயர் போடும் போது அந்த வழக்கம் இல்லை. (பெரு)நகர் புறங்களிலும், படித்த பெற்றோர்களின் பிள்ளைகளிடமும் அந்த வழக்கம் இருந்தது, தற்போது வசதி குறைந்த மாணவர்கள் கூட ஜட்டி அணியாமல் அரை ட்ராயர் அணிவது கிடையாது. என் தம்பி மகன்கள் வெறும் அரைடிராயருடன் செல்வது இல்லை. அப்போதெல்லாம் அரை ட்ராயர் பின்னால் கிழிந்து தபால் பெட்டி என்று கிண்டல் செய்வோரும் உண்டு, எப்படிடா உங்களுக்கெல்லாம் பின்னால் கிழியுது என்று கேள்வி கேட்பார்கள், அதில் ஒன்றும் புதிர் இல்லை, சறுக்கு மரம் எனப்படும் சாய்வு ஏறி (ஸ்லைடிங் ரெய்ட்) சிமெண்டால் தான் செய்யப்பட்டு இருக்கும், தற்போது ப்ளாஸ்டிக்கில் செய்கிறார்கள், சிமெண்ட் சாய்வில் சருக்கும் போது அரை ட்ராயரின் பின்பக்கம் தேய்ந்து ஓட்டை ஆக்கிவிடும், வீட்டில் உள்ளவர்கள் போடக் கூடாது என்று சொல்லும் வரை தபால் பெட்டி அரை ட்ராயருடன் வெளியே சென்றதில் அப்போதைய மாணவர்கள் யாரும் வெட்கப்பட்டது போல் தெரியவில்லை.

+1, +2 படிக்கும் போது தான் சாதிய முகங்கள் அறிமுகம் ஆகின, மாணவர்களுக்குள்ளேயும், இவன் பறையன், பள்ளன், செட்டி(யார்), முதலி(யார்), பூணூல்காரன் என்றெல்லாம் சாதிய அடையாள பட்டப் பெயர் வைத்து அழைத்துக் கொள்வார்கள். என்னுடன் படித்த பார்பன மாணவர்கள் யாரும் சொல்லிக் கொள்ளும் வகையில் வகுப்பில் முதலாக வந்ததே இல்லை. ஆங்கில அகர வரிசை படி வகுப்புகளின் மாணவர் வருகைப் பதிவேடு வாசிப்பதன் மூலம் ஒரிரு வாரங்களில் அனைவரின் பெயர்களும் தெரிந்துவிடும், எப்படியோ கூடவே அதே மேசையில் அமர்ந்திருக்கும் மாணவர்கள் அவர்களுக்குள் நட்பை மேலும் வளர்த்துக் கொள்வார்கள், அவர்களுக்கு பிடித்தவர்கள் என வகுப்பினுள் குழுக்கள் உருவாகி இருக்கும், இப்படியாக உருவாகும் குழுக்கள் உடற்பயிற்சி வகுப்பின் போது அவிழ்த்து விடுவதை வாய்ப்பாக்கிக் கொண்டு காமக் கதைகளையும், பாலியல் பற்றிய அறிவுகளை வளர்த்துக் கொள்வார்கள், கற்பத்தடைகள் வகைகள் பற்றியெல்லாம் அப்போது தான் உடன்படிக்கும் மாணவர்கள் சொல்லக் கேட்டுக் கொண்டேன். என்னுடன் படித்த மாணவர்களில் மிகச் சிலரே நல்ல நிலையில் இருக்கிறார்கள். மற்றவர்களின் முகவரிகள் தெரியவில்லை.

பிறகு கல்லூரிக்குச் செல்வார்கள், எனக்கு கல்லூரி செல்லும் வாய்ப்பு அப்போது கிடைக்கவில்லை (பிறகு கிடைத்தது, பின்னர் பகுதி நேரமாக இளநிலை முடித்தேன்), பெரிதாகவும் முயற்சிக்கவில்லை, பாலிடெக்னிக் எனப்படும் பட்டய படிப்பில் தான் சேர்ந்தேன். கூடவே 20 மாணவர்கள் வரை படித்தார்கள், 18 அகவை ஆகி இருந்தது, உடன் படிப்போர் அவர்களது வீட்டுக்குச் செல்லும் போது அவர்களின் தங்கைகள் பார்த்துவிட்டால் உள்ளே சென்று அறையினுள் முடங்கிவிடுவார்கள். ஒவ்வொரு முதிர்நிலை பதின்ம வயது மாணவனுக்கும் தன்னுடைய நண்பனின் தங்கையை சைட் அடிப்பது அல்லது அவள் தன்னை காதலிக்கிறாளோ என்கிற நினைப்பு இருக்கத்தான் செய்கிறது. பதின்ம வயதில் மட்டுமல்ல, நான்காம் வகுப்பு படிக்கும் போது என்வயதை ஒட்டிய என்னுடன் அப்போது நான்காம் வகுப்பு நண்பன் (அதே தெருவில் இருப்பவன்) ' அந்த (எட்டாம் வகுப்பு)அக்காவை லவ் பண்ணப் போகிறேன்' இன்னொரு மாணவனிடம் சொல்லி, அவன் அதை வெளியே சொல்ல இரண்டு பக்கமும் பெற்றோர்களிடம் நன்றாக முதுகு வீங்கும் அளவுக்கு வாங்கினான், நினைத்தால் இன்றும் சிரிப்பு வருகிறது.

மற்றபடி அந்த வயதில் பெற்றோர்களுடனோ, உடன் பிறந்தோர்களுடனோ நல்லதொரு புரிந்துணர்வு வளர்ந்தது என்று சொல்ல முடியவில்லை. அவையெல்லாம் பின்னால் வேலைக்குச் சென்ற பிறகே ஏற்பட்டது.

பதின்ம வயதுகள் மன முதிர்ச்சி வளரத்தொடங்கும் வயது, பாலியல் ஆர்வம், கல்வித் தேர்வு என பல அறை கூவல்களை உள்ளடக்கியது.

என்னை தொடருக்கு அழைத்த இயற்கை நேசி, நண்பர் தெகா அவர்களுக்கு நன்றி. இத் தொடரைத் தொடர நான் அழைக்க விரும்புவது...

பெரியவர் மதுரை கிருஷ்ண மூர்த்தி (Consent tobe Nothing)

பெரியவர் மதுரை சீனா ( அசைபோடுவது)

துளசி அம்மா (துளசி தளம்)

இளைஞர் அக்பர் (சினேகிதன்)

இளைஞர் ஸ்டார்ஜன் (எ) ஷேக் (நிலா அது வானத்து மேலே)

என்றும் இளைஞர் சஞ்செய் காந்தி (முன்னாள் பொடியன், இன்னாள் SanjaiGandhi)

(பழைய நினைவுகளில் விருப்பம் உள்ளவர்கள் எல்லோரும் வெட்கப்படாமல் எழுதுங்க)

பிகு : மேலே உள்ள படம் இணையத்தில் கிடைத்தது மற்றபடி எனக்கு படத்துக்கும் தொடர்ப்பு இல்லை.

மீண்டும் கல(ர்)ப் படங்கள் !

சிங்கையில் ஆண்டுக்கு ஒரு முறை சுற்றுலாவினரை ஈர்க்க சிஙகே ( Chingay 2010) அணிவகுப்பு நடக்கும், Chingay அணிவகுப்பு என்றால் வட தென் அமெரிக்கா, கனடா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நடக்கும் ஓரின (Gay Lesbian) புணர்ச்சியாளர்களின் அணிவகுப்பு போன்றதல்ல. அலங்கார வண்டிகளுடன் பல்வேறு குழுக்கள், அதன் செயல்பாடுகள், நிறுவனங்களின் செயல்பாடுகளின் விளம்பரம் போன்ற காட்சி வண்டிகள் அணிவகுப்பில் கலந்து கொள்ளும், இந்த ஆண்டு 10,000 க்கும் மேற்பட்ட தன்விருப்ப (Volunteer) ஆர்வலர்களின் பங்களிப்புடன் நடத்தப்படுகிறது. நாடுகள் சார்பிலும், குறிப்பிட்ட இன, குழு பண்பாட்டினரைச் சார்ந்த குழுக்களும் இதில் இடம் பெறுகிறது.

இந்த ஆண்டு கடந்த காரிக் கிழமை இரவு 8 மணிக்கு துவங்கி இரவு 10 மணி வரை கிட்டதட்ட 2 மணி நேரங்கள் நடந்தது. இந்த அணிவகுப்பு இரவு நேரங்களிலும் சில ஆண்டுகளில் பகலிலும் கூட நடக்கும், இந்த ஆண்டு இரவில் நடந்தது, வண்ணங்கள் பொதுவாக அழகு, அதை இரவு நேரத்தில் மின் விளக்குகளால் ஏற்படுத்தும் போது கொள்ளை அழகு, இரவில் வண்ண மின்னல்களாக பளிச்சிடும் ஒளி விளக்குகளுடன் சென்ற ஊர்வல அணிவகுப்பு அதைக் காண வந்த வெளிநாட்டு பயணிகளையும் உள்நாட்டினரையும் ஈர்த்தது என்றால் அது மிகையல்ல. அணிவகுப்பின் முடிவில் வானவேடிக்கைகள் அருகில் இருந்து பார்க்கும் போது பலவண்ணங்களில் .... பெருவெடிப்பு கூட இப்படித்தான் நிகழ்ந்திருக்குமோ என்று நினைத்தேன்.






















மேலும் படங்களுக்கு http://www.chingay.org.sg

************

பகலில் பார்த்தவற்றை இரவில் பார்க்கும் போது எல்லாம் ஒளிகலன் இருந்தது.





22 பிப்ரவரி, 2010

அஜித்தின் கலகக் குரல் !

அரசியல் வாதிகளுக்கும் அரசியலுக்கு வரத்துடிக்கும் நடிகர்களுக்கும் எதிரான அஜித்தின் எதார்த்தமான பேச்சு நன்றாக வேலை செய்கிறது, இதை அவர் மீதான 'தமிழ்' எதிரி என்கிற விமர்சனங்களின் மூலம் தெரிந்து கொள்ளலாம். நடிகர்கள் அரசியலுக்கு வரக்கூடாது என்பதை அரசியல் சார்ந்துள்ளவர்கள் விமர்சனம் செய்யும் போது நடிகரின் தாய் மொழியை முன்னிலைப் படுத்துகிறார்கள், இது போன்ற சகிப்புத்தன்மை அற்ற விமர்சனங்கள் திரையில் நடித்திருக்காத பெரியார் அவர்களுக்கே நடந்திருக்கிறது, அவர் கன்னடர் என்றும் இராமசாமி நாயக்கர் என்றும் இன்றும் கூட வரிந்து எழுதும் சாதி வெறியர்கள் உண்டு. இவ்வாறு விமர்சனம் செய்பவர்களுன் தமிழ் பற்றும் சாதி எதிர்ப்பும் கேள்விக்கும் கேலிக்கும் உரியவையே, ஏனெனில் இவற்றில் தனக்கே உரிய சார்ப்பு நிலைகளில் இருந்து கொண்டு தான் இந்த விமர்சனங்களைச் செய்கிறார்கள்.

எம்ஜிஆரின் அரசியல் நுழைவின் போதும் அவரை விமர்சனம் செய்ய அவர் மலையாளி என்பதாக குரல் எழுந்து அடங்கியது. மக்களின் அன்பைப் பெற்றுவிட்டால் அத்தகைய விமர்சனங்களால் பயன் ஏதும் இல்லை என்பதை எம்ஜிஆர் மறையும் வரை அவர் அரசே அமைந்திருந்ததன் வழியாக காணமுடியும், சாதி சார்ப்பு, மதச் சார்ப்பு அரசியல் இவை நிலையானதும் அல்ல. ஒரு அரசியல் இயக்கத்தின் தேவை மக்கள் மனதின் ஏக்கமாக இருந்தால் மட்டுமே அது வளர்ச்சி பெற்று ஆட்சியை பிடிக்க முடியும், அந்த வகையில் திராவிட அரசுகள் தமிழகத்தில் ஏற்பட்டன. இவற்றிற்கு மாற்றான அரசு என்று கூறிக் கொள்ளும் தகுதியில் அதன் பிறகு எந்த ஒரு கட்சியும் வளர்ந்துவிடவில்லை எனவே திராவிடக் கட்சிகளே தொடர்ந்து ஆண்டுவருகின்றன, ஆனால் முன்பைப் போல் தனிப் பெரும்பான்மை என்பது கேள்வி குறியாகிவிட்டபடியால் சிறுபான்மை அரசு, கூட்டணி ஆதரவு என்பதாகத்தான் திராவிட ஆட்சிகள் நடந்துவருகின்றன, இதற்கு கருணாநிதியோ ஜெ வோ விதிவிலக்கு இல்லை.

அரசியலுக்கான தகுதி முன்பைப் போல் மக்கள் தொண்டாற்றியவர்கள் என்ற தகுதியில் புதிதாக உள்ளே ஒருவர் நுழைவதற்கான வாய்ப்புகளே இல்லை அல்லது குறைவு, திராவிட இயக்க ஆட்சி ஏற்படும் முன் பண்ணையார் மேலாண்மை, முதாலாளித்துவ, பார்பனிய மேலாண்மையுடன் தொடந்த காங்கிரசு ஆட்சியை ஒழிக்க வேண்டும் என்ற பரவலான எண்ணம் ஏற்பட்டு பிற்பட்ட சமூகத்தினரின் முன்னெடுப்பகளால் பெரியார் வழியாக திராவிட இயக்கங்கள் ஆட்சி அதிகாரத்தைக் கைப் பெற்றின. அதன் பிறகு 40 ஆண்டுகள் திராவிட இயக்கங்களின் ஆட்சியே நடந்துவருகிறது, 40 ஆண்டுகளாக அண்ணாவின் ஆட்சியை அமைக்கிறோம், அண்ணாவின் நாமம் என்று சொல்லிக் கொண்டே திமுக, அதிமுக ஆகிய இரு அரசுகளுமாக மாறி மாறி ஆண்டன. திராவிட இயங்கங்களின் சித்தாந்தங்கள் அனைத்தும் நிறைவேறி இருந்தால் அல்லது அதன் தேவைகள் இன்றும் இருந்தாலோ இந்த இரு கட்சியில் எதோ ஒன்று தான் தொடர்ந்து வந்திருக்க வேண்டும்.

இவர்களின் கடந்த 20 ஆண்டுகால அரசியல் கூட்டணி பலம் என்ற ஒன்றை மாற்றி அமைப்பதின் மூலமே மாறி மாறி நிறைவேறி வருகிறது அன்றி, மக்கள் விரும்பித் தேர்ந்தெடுக்கும் அரசுகள் இவை என்று சொல்வதற்கு ஒன்றுமே இல்லை. பதவி அதன் அதிகாரம் எதையும் சாதித்துவிட முடியும் என்பதாக அதிமுக ஒரு மாற்றுவழியை அரசியல் தக்கவைப்பிற்கு பயன்படுத்தியது, அதையே தான் திமுகவும் செய்துவருகிறது, கூடுதலாக பணம், இலவசம் ஆகியவற்றுடன் திமுக திராவிட இயக்க ஆட்சிகளின் பரிணாமம் என்பதாக மாற்றிக் கொண்டுள்ளது.

இத்தகைய சூழலில் புதிய அரசியலுக்கு வருகிறவர் மக்களுக்கு நன்கு அறிமுகமானவராக இருந்தாலே நாமும் ஏன் அரசியலில் இறங்கக் கூடாது என்கிற ஆசை வருவது இயல்பு. விஜயகாந்த் அப்படித்தான் அரசியலுக்கு வந்தார். விஜய் போன்றவர்களின் நாற்காலிக் கனவுகளும் தெரிந்தவையே. நடிகனை நடிக்க விடுங்க, அரசியலுக்கு இழுக்காதீர்கள் என்கிற அஜித்தின் குரல் கலகக் குரலாக திரைத்துறையுனுள்ளேயே புயலைக் கிளப்பி இருக்கிறது, மேலும் திரை நடிகர்களை தேர்தலுக்கு தேர்தல் பயன்படுத்தும் அரசியல் கட்சிகளுக்கும் பெரிய பின்னடைவு ஏற்பட்டு இருக்கிறது. இதன்காரணமாக ஜாக்குவார் தங்கம் போன்றவர்களை தூண்டி அஜித் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றெல்லாம் தகவல் வருகிறது. நாடாச் சங்கம் கொதிக்குதாம், இன்னும் என்னன்ன சாதி சங்கங்களெல்லாம் கொதிக்குதாம், சாதி சங்கங்கள் எந்த ஒரு ஓடாத, ஊத்திக் கொண்ட படத்தையும் ஓட வைத்தது இல்லை, நாடார் சங்கம் கொதித்து நாடார்கள் அனைவரும் பார்த்திருந்தால் ஜக்குபாய் உட்பட எத்தனையோ சரத்குமார் படங்கள் ஓடி இருக்கும், சரத்குமார் சென்ற தேர்தலில் பிணைத் தொகை கூட கிடைக்காமல் தோல்வியை சந்தித்தார். அஜித் பேச்சை சாதி மற்றும் மொழிச் சார்ப்பில் மாற்றித் திரிப்பது மிகவும் கீழ்த்தரமான ஒன்று, இதை முன்பு பெரியார் மற்றும் எம்ஜிஆருக்கும் செய்தார்கள், இரஜினிக்கும் செய்தார்கள், அவரும் தான் கன்னடன் தான் என்று கூறியோ அல்லது தன் மகள்களுக்கு பெங்களூரில் திருமணம் முடிக்கவில்லை, அவரது மருமகன்கள் கூட சென்னையைச் சேர்ந்தவர்கள் தான் என்பதையும் தாம் ஒரு தமிழன் என்பதை சொல்லாமல் உணர்த்தி வருகிறார். திராவிடக் கட்சிகளிடம் அவமானப் பட்டவர்கள் அனைவருமே தனித்தனி கட்சியை நடத்தி பின்னால் திராவிடக் கட்சியினரால் கூட்டணிக்கு இழுக்கப்பட்டனர், குறிப்பாக இராமதாசு, திருமாவளவன் தற்போது வி.காந்த்

ரஜினி அஜித் இவர்களை சீண்டுவதன் மூலம் இவர்கள் அரசியலுக்கு வரப் போவது உறுதி என்று நம்புகிறேன். திராவிடக் கட்சிகளின் ஆட்சி ஒழிப்பு ஒருவேளை இவர்கள் மூலமாக இவர்களின் கூட்டணி வழியாகக் கூட நடக்க வாய்ப்புள்ளது.

நண்டு கொழுத்தால் வலையில் இருக்காதாம், ஆட்சி அதிகாரம் பெற்ற அரசியல்வாதிகளுக்கு நன்கு பொருந்தும்.

19 பிப்ரவரி, 2010

பக்கத்து வீட்டு பாட்டி !

எங்க பக்கத்து வீட்டு சீனப் பாட்டி முந்தா நாள் இரவு 1:30 மணிக்கு போய் சேர்ந்து விட்டது. 87 வயது ஆன பாட்டி. இரண்டு ஆண்டுகளாக வீட்டுக்குள் இருந்தது, எப்போதாவது பார்க்கும் போது மலாய் மொழியில் எங்களுடன் பேச முயற்சிக்கும், இந்தியர்களுக்கு மலாய் நன்றாக தெரியும் என்று சீனப்பாட்டிகள் நினைப்பார்கள். எங்களுக்கு மலாய் தெரியாததால் நாங்க பேசுவதை கான்டனீசில் (சீன வட்டார மொழி வழக்கில் ஒன்று) மொழிப் பெயர்த்து அந்த பாட்டியிடம் சொல்லுவார்கள். சிரிப்பு முக மொழிகளுடன் மட்டும் தான் அந்த பாட்டியிடம் பேச முடியும்.அன்பாக எங்களைப் பற்றி கேட்டுக் கொள்கிறது என்று மட்டும் தான் பாட்டி சொல்ல வருவது விளங்கும்.

இங்கே சீனர்கள் வழக்கப்படி இறந்த உடலை கீழே குடியிருப்பின் அடித்தளத்தில் தற்காலிக பந்தல் அமைத்து வசதியைப் பொருத்து ஒரு சிலர் ஒருவார காலமும், சிலர் மூன்று நாட்கள் வரையிலும் வைத்திருக்கும் வழக்கம் உண்டு. உடல் வைத்திருக்கும் இடத்திற்கு நேர் மேலாக முதல் தளத்தின் படுக்கை அறை இருக்கும், முதல் தளத்தில் குடி இருப்பவகளுக்கு மன அளவில் சங்கடங்கள் உண்டு. இருந்தாலும் உடலை மூன்று நாள் வரை வைத்திருப்பது சீனர் வழக்கம் என்பதால் புரிந்து கொள்கிறார்கள். திருமணத்திற்கு முன்பு நான் குடியிருந்த வீடு கூட அப்படித்தான், கீழே தரைதளத்தில் உடல் பெட்டியில் கிடத்தப்பட்டு இருக்கும், முதல் தளத்தில் நான் தங்கி இருந்த வீட்டின் படுக்கை அறை இருந்தது. படுக்கும் போது நமக்கும் கீழே ஒரு பிணம் இருக்கிறது என்று நினைத்துப் பார்கும் போது தூக்கம் வருவது ஐயமும் அச்சமும் ஏற்படுத்துவதாக இருக்கும். நல்ல வேளை இப்போது இருக்கும் எங்கள் வீட்டின் நேர் கீழே மின் சார அறை இருப்பதால் அந்த பகுதி முழுவதும் இது போன்ற நிகழ்வுக்கு பயன்படுத்த வாய்பில்லை, தூங்கும் போது அச்சம் ஏற்படுவதில்லை.

இறந்த உடலில் ஒருவார காலம் வரை உயிர் தங்கி இருப்பதாக சீனர் நம்பிக்கை, அதனால் தான் ஒருவார காலத்திற்கு உடலை புதைக்கவோ, சிதைக்கு எடுத்துச் செல்லவோ மாட்டார்கள், நாள் தோறும் புத்த மத வழக்கப்படி சிறப்பு வழிபாடுகள் நடக்கும், பெரிய வட்ட மேசைகளில் துக்கம் கேட்க வந்திருப்பவர்கள் அமர்ந்திருப்பார்கள். பெரும்பாலும் வெள்ளை நிற உடை, சிலர் கருப்பு நிற உடைகளில் உறவினர்கள் துக்கம் கேட்க வருவது வழக்கம். மற்றவர்களுக்கு உடை நிறக் கட்டுபாடு எதுவும் கிடையாது. வட்ட மேசையில் சுற்றிலும் அமர்ந்து விசாரித்துக் கொண்டிருப்பார்கள், அவர்களுக்கு தோல் நீக்காத வருத்த வேர்கடலை மற்றும் இனிப்பு சாக்லேட்டுகள், குளிர்பானங்கள் வழங்கப்படும், இந்திய வழக்கப்படி துக்கத்தின் போது தண்ணீர் தவிர வேறு எதையும் உண்பது கிடையாது, அரை நாள் ஒரு நாள் என்பதுடன் இந்திய துக்கம் முடிவுக்கு வந்துவிடும். ஒரு பக்கம் இறந்த உடலை போட்டு வைத்துக் கொண்டு மறுபக்கம் தின்று கொண்டிருப்பது அவர்களைப் பொருத்த அளவில் பெரியது இல்லை, அவர்களது பண்பாடு பழக்கவழக்கம் அப்படி இருக்கிறது என்பதால் அது தவறாக தெரியவில்லை. அந்த பகுதியின் ஒதுக்குபுறத்தில் ஒரு விளக்கு அல்லது வத்தியை எரியவிடுவார்களாம்.

உடலை பெட்டியில் வைத்திருப்பார்கள், அதைச் சுற்றி முன்பக்கம் தவிர்த்து சின்ன தடுப்பு போல் அமைத்து வைத்திருப்பார்கள், பெட்டியில் முகத்திற்கு நேராக கண்ணாடியால் அமைக்கப்பட்ட திறப்பு இருக்கும், அந்த தடுப்புக்கு முன் பக்கம் இறந்தவரின் கருப்பு வெள்ளைப் படம் ஒன்று இருக்கும். ஏழு நாள் வரை உடல் கெடாமல் இருக்க இறந்த உடனேயே பதப்படுத்துபவர்களால் உடலுக்கு தேவையான ரசாயனங்களை உடலுனுள் வைத்த உடன் உடல் பெட்டியில் வைக்கப்படுகிறது. அந்த பாட்டியின் முகத்தை பார்த்தேன், நன்றாக ஆழமாக தூக்கத்தில் இருப்பது போன்று இருந்தது. சீனர்களுக்கு அவர்களுடைய புத்தாண்டின் போது பெரியவர்களின் வாழ்துகள் மிக முதன்மையானது, அந்த பாட்டியின் மகனுக்கு துக்கம் இருந்தாலும், அவங்க அம்மா சீனப் புத்தாண்டு வரை இருந்து அனைவருக்கும் ஆசி வழங்கினார்கள் என்பதை நினைவு கூர்ந்து மகிழ்ந்தார்.

அரசு விதி முறைகளின் படி இடுகாட்டில் இறந்த உடலை புதைத்து வைக்க 17 ஆண்டுகள் மட்டுமே ஒப்புதல் வழங்குகிறார்கள், அதனால் பலர் எரிக்கும் முறைக்கு மாறி இருக்கிறார்கள். ஐந்தாண்டுக்கு முன்பு உருவாகப்பட்ட உட்லே எனப்படும் மிகப் பெரிய பூங்கா ஒன்று முன்பு கிறித்துவ இடுகாடு அமைந்த இடம், அங்கு இடுகாடு இருந்ததை நான் பார்த்திருக்கிறேன். அங்கு ஐந்தாண்டுகளாக ஒரு தொடர் வண்டி நிலையம் கூட உண்டு, ஆனால் அது இன்னமும் திறக்கப்படவில்லை. சீனர்களுக்கும் ஓர் ஆண்டு துக்கம், ஓர் ஆண்டுகளில் எந்த ஒரு மகிழ்ச்சியான நிகழ்வும் இருக்காது, கருப்பு வெள்ளை ஆடைகளை அணிவார்கள், காலணி தவிர்த்து வேறு அழகு அணிகள் எதுவும் அணியமாட்டார்கள்.

சீனர்களின் நம்பிக்கை படி வயதானவர் இறக்கும் போது அருகில் இருக்கும் மகனோ மகளோ தான் அவர்களுக்கு என்று பிறந்த உண்மையான வாரிசு என்ற பெருமை இருக்குமாம். மற்றவர்கள் அவர்களுக்கு பிறந்திருந்தாலும் கடைசியில் கூடவே இருப்பவர்கள் மட்டுமே அவர்களின் மனதிற்கும் அன்பானவர்களாக கடவுள் காட்டும் வாரிசு என்று நம்புகிறார்கள். அப்படி இறக்கும் போது அருகில் இருக்கும் மகனோ மகளோ அந்த பெருமையை அடைகிறார்கள்.

சிங்கையில் வயதானவர்களைப் பார்த்துக் கொள்வது மிகக் கடினம், ஆண் பெண் இருவரும் வேலைக்குச் செல்வதால் முதியோர்களைப் பார்த்துக் கொள்ள வசதியானவர்கள் பணிப் பெண்ணை அமர்த்துகிறார்கள், மற்றவர்கள் முதியோர் இல்லங்களுக்கு அனுப்புகிறார்கள், எப்படி என்றாலும் அதை முதியவர்களும் புரிந்து கொள்கிறார்கள். பக்கத்து வீட்டுப் பாட்டியை பணிப் பெண் தான் கவனித்துக் கொண்டிருந்தாள். வரும் திங்கள் கிழமை தான் உடல் எரியூட்ட எடுத்துச் செல்லப்படுமாம்.

சீனர்களின் திருமணங்கள் ஆங்கில முறைப்படியே மோதிரம் அணிந்து, கேக் வெட்டி, சாம்பேயினுடன் நடந்தாலும், இறப்பு சடங்குகள் அவர்களது பண்பாட்டு வழக்கப்படி தான் நடக்கிறது. அன்றாட (சீன) உணவு மற்றும் இறப்பு சடங்குகளில் பண்பாடு காத்துவருகிறார்கள்.

17 பிப்ரவரி, 2010

கலப்படம் !

படம் 1 : அண்மையில் சென்றிருந்த வானூர்தி கண்காட்சியில் எடுத்த சில படங்கள் இங்கே. இலவச நுழைவுச் சீட்டு கிடைத்தது, நல்ல கூட்டம், கூடவே நல்ல உச்சி வையில் கண் கூசும் சூரிய வெளிச்சம், வகை வகையான வானூர்திகள் காட்சிக்கு நின்று கொண்டிருந்தன, மனித கண்டுபிடிப்புகள் பார்க்க விலங்கின வகைகளில் சேர்கலாம் என்பது போன்ற தோற்றங்கள், குழந்தை, யானை, தொடர் வண்டி பார்பதற்கு அழகாக இருக்கும், வானூர்திகளும் அப்படித்தான். நிறைய எடுத்தேன் கொஞ்சம் இங்கே. தொலைவை கடப்பதற்கு பயன்படுத்தும் ஊர்திகள் அன்றும் இன்றும் போருக்கு பயன்பாடாக மாறிப் போகிறது, அன்று குதிரைகள் பூட்டிய வண்டி இன்று வானூர்திகள். நாம தொழில் நுட்பத்தின் உதவியால் கடக்க நினைக்கும் எல்லைகள் பாதுகாப்பு என்பதில் விழும் ஓட்டைகளாக மாறிப் போகும் போது, பாதுகாப்பு என்ற பெயரில் போர் செய்வதற்கும் அதே தொழில் உத்திகளைத் தான் பயன்படுத்த வேண்டி இருக்கிறது. முன்பெல்லாம் போர் விமானங்களைப் பார்க்கும் போது அழகாக இருப்பதாகத் தோன்றும், இப்போதெல்லாம் அவ்வாறு ரசிக்கத் தோன்றவில்லை.








திரும்பும் வழியில் சாங்கி இரண்டாம் வானூர்தி முனைய புறப்பாடு தளத்தில் அமைத்திருந்த மலர்கள் ஒப்பனை கண் கொள்ளாக் காட்சி.

*****

படம் 2 : சென்ற கிழமை (வாரம்) எங்கள் அலுவலகத்தில் சீன புத்தாண்டு நிகழ்வின் துவக்க கொண்டாட்டம் நடைபெற்றது. ஹலல் (இஸ்லாமிய பரிந்துரை) முறையில் செய்யப்பட்ட சீன உணவு வகைகள், அனைத்தும் அசைவம் தான். நான் வேடிக்கைப் பார்த்ததுடன் சரி. ஒரு தட்டில் பல வகை இனிப்புகளை ஒன்றன் மீது ஒன்றாக கொட்டி, பிறகு உணவு குச்சியால் (சாப் ஸ்டிக்) எதோ கத்திக் கொண்டு அள்ளி அள்ளி போட்டு மகிழ்ந்து பிறகு அந்த கலவையை உண்டார்கள். எந்த ஒரு சீன(ர்) கொண்டாட்டத்திலும் இது நடைபெறுகிறது.



பிறகு விருப்பம் போல் எடுத்து உண்ணும் (பபே) உணவு, புத்தாண்டின் பரிசாக ஆரஞ்சுகள் வைக்கப்பட்ட சிறு அன்பளிப்பு பை கொடுக்கப்பட்டது, அது தவிர்த்து புத்தாண்டு முடிந்து முதல் நாள் அலுவலகத்தில் நிறுவனரால் அனைவருக்கும் சிறிய சிவப்பு அட்டைப் பையில் (ரெட் பாக்கெட் அல்லது சீன மொழியில் ஹங் பாவ்) 20 வெள்ளிகள் கொடுக்கப்பட்டது. மதவேறுபாடின்றி சீனப் புத்தாண்டு கொண்டாடப்படுகிறது, சிங்கையில் இனவேறுபாடின்றி அனைவரும் சீனர்களுக்கு வாழ்த்துகளைச் சொல்லி பெற்றுக் கொள்கிறார்கள். ஆங்கில புத்தாண்டு போலவே சீனப் புத்தாண்டும் சிங்கையில் பெரும் கொண்டாட்டமாகவே நடைபெறும், சிறப்பு விற்பனைகள் தள்ளுபடிகள், விடுமுறைகள் வரும் என்பதால் மிகவும் எதிர்பார்க்கப்படும் நிகழ்வாக ஒவ்வொரு ஆண்டும் சீனப் புத்தாண்டு அமைந்துவிடுகிறது.






சீனப் புத்தாண்டு கொண்ட்டாத்தின் பகுதியாக 'ரிவர் ஹங் பாவ் ' எனப்படும் சிங்கப்பூர் ஆற்று வளாகத்தில் நடைபெற்ற பொருள்காட்சிகள் நன்றாக இருக்கும், நேற்று தான் சென்று வந்தேன். வண்ணங்களின் கலவையாக அந்த இடம், திடலின் நடுவே டீ கோப்பையில் செய்யப்பட்ட ட்ராகன் மற்றும் மயில், சர்கரை பாகில் செய்யப்பட்ட ட்ராகன், அதிர்ஷ்ட சீட்டுகளை வீசும் சீன சாமி, செயற்கையாக செய்யப்பட்ட ஒளித் தாமரை குளம் மற்றும் பல பல, ராட்டின வகைகள் சிறுவர் விளையாட்டுகள் என களை கட்டியிருந்தது

படம் 3 : சிங்கைக்கு உடமையான ஒரு சிறிய தீவிற்கு சிறிய வகை உற்சாக கப்பல்கள் செல்கிறது, சென்று வர மூன்று மணி நேரம் வரை பிடிக்கும், போக 45 நிமிடம், வர 35 நிமிடம் தீவில் சுற்றிப் பார்க்க 45 நிமிடம், கட்டணமாக பெரியவர்களுக்கு 20 வெள்ளியும், சிறியவர்களுக்கு 12 வெள்ளிகளும் வாங்குகிறார்கள், பயணத்தின் இடையே தேனீர், பிஸ்கெட் கொடுக்கிறார்கள். நகர இறைச்சல் இன்றி நல்ல அமைதியான பயணமாகவும் இருக்கும். அந்த தீவின் பெயரை தமிழில் எழுதினால் மூக்கை பிடிக்க வேண்டி இருக்கும், ஆங்கிலத்தில் இருக்கிறது, அந்த தீவில் ஆமை கோவிலும், ஆமைகளும் வளர்க்கப்படுகின்றன, ஆமைக்கு மலாய் மொழியில் Kusu என்று பெயர். அதன் பெயரில் அந்த தீவின் பெயர் Kusu ஐலண்ட். நாம வேண்டுமானாம் ஆமைத் தீவு என்று சொல்லிக் கொள்ளலாம்.







*******
தகவல் : ஸ்வாமி ஓம்கார் ஒருவார நிகழ்ச்சி ஏற்பாட்டில் சிங்கை வருகிறார். விவரம் இங்கே உள்ளது. ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சி பற்றி தனிப் பதிவு அவருடைய பதிவிலும் எனது பதிவிலும் வரும். திரு ஓம்காரின் வருகையின் போது பதிவர் நண்பர்களிடம் கலந்து பேசிய பின் சந்திப்பு நிகழ்ச்சி நடக்கும், அது பற்றிய அறிவிப்பும் வரும்.



பலர் என்னிடம் கேட்கிறார்கள், நீங்கள் ஸ்வாமி ஓம்காரின் சிஷ்யரா ? நான் பேசும் ஆன்மிகம் பற்றி தமிழ் பதிவர் உலகம் நன்கு அறிந்தது தான். ஸ்வாமி ஓம்காருக்கு நான் சிஷ்யன் அல்ல, பதிவுலகில் எனக்கு இருக்கும் நெருக்கமான நண்பர்களில் அவரும் ஒருவர்.
பார்பனீயம் பற்றியும் எழுதுகிறேன், எனக்கு நெருக்கமான பார்பன நண்பர்கள் பலர் உண்டு.
ஒத்த துருவங்களைவிட எதிர் துருவங்களே ஈர்க்கும் என்பது என்னைப் பொருத்த அளவில் நட்புக்கும் விதியாக இருக்கிறது.

******


(சிங்கையில் விரைவில் திறக்க இருக்கும் சூதாட்ட நகரம்)


பிகு: வழக்கமாக கலவையாக வரும் பதிவு, படங்களை தாங்கி வருவதால் கலப்'படம்' ஆகியது தலைப்பு. படங்கள் அனைத்தும் ஐபோன் வழியாக எடுத்தவை, அவ்வளவு துல்லியம் இருக்காது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்