பின்பற்றுபவர்கள்

மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மலேசியா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

19 ஜூன், 2013

பாமெண்ணையால் வந்த வினை !

செய்திகளில் படித்திருப்பீர்கள், கடந்த மூன்று நாட்களாக கோலாலம்பூர், சிங்கப்பூர் உள்ளிட்ட நகரங்களில் புகைமூட்டம், ஜூன் மாதம் துவங்கி அக்டொபர் வரையிலும் இந்த பகுதிகளில் புகைமூட்டம் இருக்குமாம், இந்தோனேசியா சுமத்திரா தீவில் காட்டுத்தீ 'ஏற்படும்' அதனால் தான் புகை என்றே நான் இதுவரை கேள்விப்பட்டு இருக்கிறேன், வெயில் காலத்தில் காட்டில் தீ பற்றுவது இயல்பு, அது காட்டுத்தீயாக பரவி புகை மூட்டம் கிளம்பும் போல என்றே நினைத்துக் கொண்டு இருந்தேன். 

சிங்கப்பூர் துவங்கி மலேசியா கோலாலம்பூர் நோக்கிய பேருந்து பயணத்தில் வழியெங்கும் பாம் எண்ணை மரங்களைக் காணலாம், ஆயிரக்கணக்கான சதுர கிலோ மீட்டர் காட்டுப்பகுதிகளை அழித்து தான் அவை உருவாக்கியுள்ளனர் என்பது அவற்றைப் பார்க்கும் பொழுதே விளங்கிக் கொள்ள முடியும். தென்னை மரங்களைவிட பாம் எண்ணை மரங்கள் மகசூல் மிகுதியாகக் கொடுத்து முதலாளிகளுக்கு மிகுதியான பணம் ஈட்டித்தருவதால் மலேசியாவில் கிட்டதட்ட பாதி நாட்டு பரப்பளவில் பாமாயில் விவாசயம் தான். 

கடந்த மூன்று நாளில் இன்று உச்சமாக சுற்றுச் சூழல் காற்று எண் 290 (PSI index) தொட்டு இருக்கிறது, முன்பு 1997ல் 224 ஆக இருந்ததே உயரிய அளவாம், அது இன்று முறியடிக்கப்பட்டுள்ளது. காலையில் கொஞ்சம் குறைந்தது போல் இருந்தது 120....140... பகல் 2 மணிக்கு 160 பின்னர் 4 மணிக்கு 172 ஐ நெருங்கியது. பிறகு குறையவே அலுவலகம் முடிந்து மாலை 8 மணிக்கு 190ஐ தொட்டது, 100க் மேல் சென்றாலே புகை வாடையையும் உணர முடியும், 190 என்று தெரிந்தவர்கள் முகத்தில் முகமுடியுடன் சென்றார்கள், இரவு 9 மணிக்கு PSI 290 ஐ தொட்டு இருக்கிறது, 300க்கும் மேல் சென்றால் எதிரே வருபவர்கள் தெரியாது, போக்குவரத்திற்கு வாய்ப்பில்லை, கப்பல் விமானப் போக்குவரத்துகள் முற்றிலும் நிறுத்தப்படும், அல்லது பாதிவழியிலேயே நிறுத்தப்படும், குழந்தைகள், முதியவர்கள், நோயாளிகள் மூச்சு திணறலால் பாதிக்கப்படுவார்கள்.

வழக்கமாக இரவு 11 மணி வரை நடமாட்டம் இருக்கும் பகுதிகளில் ஆள் அரவே இல்லை, அவரவர் வீட்டுக்கு சென்றுவிட்டனர், சாலைகள் வெறிச்சோடி கிடக்கின்றன, அனுமதிக்கப்பட்ட குறிப்பிட்ட இடம் தாண்டி புகைப்பிடித்தால் தண்டம் கட்ட வேண்டிய சிங்கப்பூரில் எல்லா இடத்திலுமே புகை. நிலமை இன்னும் சில நாட்கள் நீடித்தால் .....அவசரகால அறிவிப்புகள் கூட வெளிவந்தால் வியப்பில்லை, எங்கள் வீட்டில் முடிந்த அளவு பகல் பொழுதில் கூட சன்னல் கதவுகள் அனைத்தையும் சாத்திதான் வைத்திருக்கிறோம், இருந்தும் வீட்டினுள்ளும் புகை நெடியை உணர முடிகிறது.


வரலாறு காணாத புகை மூட்டம் என்று தலைப்பிட்டு தொலைகாட்சியிலும், இணைய செய்திகளிலும் தகவல்கள் வெளி இடுகிறார்கள். சுற்றுலா வந்தவர்களுக்கு மோசமான அனுபவங்கள், நிலமை சரியாக இன்னும் சில நாட்கள் ஆகலாம். ஆனால் இவை வெறும் காட்டுத் தீயால் ஏற்பட்டது தானே என்று என்னைப் போல் நினைத்தவர்களுக்கு. கிடைக்கும் தகவல்கள் மனித பேராசைகளே இதற்கு காரணம் என்று தெரியவர அதிர்ச்சி தான். புகையை கட்டுப்படுத்த ஏதாவது செய்யுங்கள் என்று சிங்கப்பூர் சுற்றுச் சூழல் அமைச்சு இந்தோனேசியாவை கேட்க, அவர்கள் எங்களால் முடிந்ததைச் செய்கிறோம், ஆனால் அதற்கு முற்றிலும் உதவ எங்கள் நாட்டில் முதலீடு செய்துள்ள சிங்கப்பூர் - மலேசிய முதலாளிகளும் ஒத்துழைக்க வேண்டும் என்று பதில் கூறியுள்ளனர். அதாவது



சமையல் எண்ணை நிறுவனங்கள் மலேசியா முழுவதும் பாம் எண்ணை மரங்களை நட்டு விளைச்சல் பார்த்தது போதாது என்று 20 ஆண்டுகளுக்கும் மேலாக இந்தோனேசியா காடுகளிலும் கை வைத்துள்ளனர், இவற்றில் முதலீடு செய்தவர்கள் அனைவரும் சிங்கப்பூர் மலேசியாவை சேர்ந்த முதலாளிகளாம், காடுகளை அழித்து அவற்றை கொளுத்திவிட்டு அங்கே பாம் எண்ணை மரங்களை நடுவது ஆண்டு தோறும் ஜூன் மாதம் துவங்கி நடைபெறும் செயலாம். இந்த ஆண்டு கூடுதலான பகுதிகளை அழித்திருக்க வேண்டும், அதன் எதிர்விணையைத் தான் தற்பொழுது நாங்கள் அனுபவிக்கின்றோம்.

இந்தோனேசியா ஏழை நாடு இத்தனை ஆண்டுகளுக்கு பாமாயில் மரங்களுக்கு குத்தகைக்கு இடம் வேண்டும் என்றால் காடுகளை கைகாட்டிவிட்டு கையெழுத்து போட்டு ஒப்பந்தம் செய்து கொள்வார்கள், அவர்களையும் குறை சொல்ல முடியாது. போட்டித் தன்மை நிறைந்த உலகத்தில் எதையாவது அழித்தால் வருமானம் வந்தால் சரி என்று நினைக்கும் முதலாளிகளை குறைச் சொல்ல முடியாமல் அரசுளும் கையை பிசைகின்றன, ஏனென்றால் எல்லாம் அரசாங்கம் அனுமதித்தப்படியே நடக்கின்றன, விளைவு ? மக்களுக்கு தான் எல்லா வகையிலும் இழப்பு.

பாமாயில் வாங்குவதை நிறுத்தினால் ஒருவேளை காடுகள் பாமாயில் பண்ணைகளாக மாற்றப்பட்டுவதை தடுக்கலாம்,  ஆனால் அவையெல்லாம் கடல்கடந்து வெளிநாடுகளுக்குத்தான் ஏற்றுமதி செய்யப்படுகின்றன என்ற நிலையில் அதற்கும் வாய்ப்பில்லை, இந்தோனேசியா, மலேசியா மற்றும் சிங்கப்பூர் இணைந்து பாமாயிலுக்காக முதலிடு செய்யப்படுவதை தடுத்தால் எரியும்  காடுகளை தடுக்கலாம். பெரிய அளவு உயிர் சேதம் நடந்தால் ஒருவேளை அவர்கள் அது பற்றி யோசிக்கக் கூடும். அதுவரை இவை வழக்கம் போல் ஆண்டுதோறும் நடைபெறும் நிகழ்வாகிவிடும்.

இதை எழுதி முடித்துவிட்டுப் பார்த்தால்

The three-hour Pollution Standards Index (PSI) soared to 321 at 10pm local time 

Singapore haze hits 'hazardous' levels of PSI 321.

பொழைச்சு கிடந்தால் பின்னர் பார்ப்போம். (குறைந்துவருவதாகவுக் குறிப்பிட்டுள்ளனர்.

20 அக்டோபர், 2012

குக்குப் சதுப்பு நிலத் தீவு - 2 !


மனித வாழ்க்கையாக இருந்தாலும் தாவிரங்கள் உள்ளிட்ட ஏனைய உயிர்வகையாகட்டும் விதிவிலக்குகள் எதுவும் கிடையாது, வாழ்கை என்பது போராட்டம் தான் . தன்னை காப்பாற்றிக் கொள்வது சந்ததிகளைப் பெருக்கிக் கொள்வது தவிர்த்து உயிர்வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்வதற்காக எந்த உயிரும் உருவாகுவதில்லை, இதற்கு மேம்பட்டும் மனித வாழ்க்கையில்  வசதிகளின் தேடல், அதைப் பெருக்கிக் கொள்ளுதல், ஆளுமைகள், இருப்பதை இழக்கக் கூடாது என்பதில் செய்யப்படும் முன்னேற்பாடுகள்  இவற்றைச் செயல்படுத்தத் துனியும் தன்னலம் இவை மட்டும் தான் மனித வாழ்கைக்கும் ஏனைய உயிர் வாழ்கைக்குமான வேறுபாடுகள். எதிர்கால சேமிப்புகள் ஆகியவற்றில் எறும்புகள் உள்ளிட்டவை முனைந்து செயல்பட்டாலும் தலைமுறைகள் தாண்டி பயன்படுத்தும் சேமிப்புகளை மனித இனம் தவிர்த்து வேறெந்த விலங்கினமும் செய்வதில்லை. இனம்பெருக்கம் தன்னலம் தாண்டிய மறு உற்பத்தி என்ற அளவில் மனித இனத்திற்கும் ஏனைய உயிரினத்திற்குமான வேறுபாடுகள் வியக்க வைக்கும் அளவில் நடைபெறுகின்றன, ஏனைய உயிரினங்களில் இனப்பெருக்கம் என்பவை சூழல் பாதுகாப்புகள் உள்ளிட்டவையாகவும், அதனை கட்டுப்படுத்தும் திறனும் அதே சூழலில் அமையப் பெற்றதாகவும் உள்ளன, இனப்பெருக்கம் உற்பத்தி மிக பெரிய அளவில் நடக்கும் உயிரனங்களில் அதன் வாழ்நாள்கள் மற்றும் பாதுகாப்பு மிகவும் சொற்பமானதே, மாறாக நெடுநாள் வாழக்கூடிய உயிரினப் பெருக்கத்தின் உற்பத்தி திறன் குறைவாகவும், அதன் பாதுகாப்புகள் பலமிக்கதாகவும் இருக்கும், மனித வேட்டையாடலில் மறைந்து போன உயிரனங்கள் தவிர்த்து இந்த அளவுகோளில் ஏனைய உயிரன உற்பத்திகளை இயற்கை சமஅளவில் வைத்திருக்கிறது


*****


விசைப் படகில் எங்களைத் தவிர்த்து மற்ற மூன்று சுற்றுலாவாசிகள் மற்றும் படகு செலுத்துபவர், தீவிற்கும் கரைக்கும் இடைப்பட்ட தொலைவு முக்கால் கிமி  இருக்கும், செம்மண் நிற கலங்களான கடல் தண்ணீர், கரையை ஒட்டிய கடல் பகுதிகளிலும், கடலின் நடுப்பகுதிகளிலும் மீன் வளர்ப்பு தொட்டிகள் 1000க் கணக்கானவை அங்காங்கே அமைந்திருந்தது,  இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன் வகைகளை வளர்த்து எடுத்து ஏற்றுமதி செய்கிறார்கள், கடல்நீருக்குள்ளேயே இவ்வாறு மீன் வளர்ப்பது அதன் சூழலில் வளரவிடுவது என்றாலும் அதற்கான இரைகள் போடப்பட்டுதான் வளர்க்கப்படுகின்றன,  மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு பல்வேறு உத்திகளை கையாள்கிறார்கள், இவ்வாறு வளர்க்கப்படும் மீன்களுக்கும், உரம் போட்டு வளர்க்கப்படும் பயிரினங்களுக்கும் உற்பத்தியைக் கூட்டுதல் விரைவாக அறுவடை செய்தல் ஆகியவை பொதுவானவை என்பதால் அவற்றின் சத்துகள் கேள்விக்குறிதான், எனினினும் தரையில் தொட்டிகள் அமைத்து வளர்க்கப்படும் மீன்களைவிட இவை கூடுதலான சத்துகள், செரிவுகள் கொண்டவகையாக இருக்கக் கூடும்.


தீவுப்பகுதியின் கரைப்பகுதி அடர்ந்த மரங்களால் நிறைந்திருந்தது, அங்கே நாரைகள் பல அமர்ந்திருந்தன, சதுப்பு நிலக்காடுகள் அமைந்தப் பகுதிகளில் நாரைகளுக்கு உணவுக்கு கிடைக்கும் மீன்களுக்கு குறைவு இருக்காது என்பதை உணர்த்தும் படி ஏகப்பட்ட நாரைகள், அதன் கரகர கீச் கீச் ஒலி கேட்டுக் கொண்டு இருந்தது, படகு தீவின் முகப்படை அடைந்ததும் இறங்கினோம், திரும்பி வரும் பொழுது அலைபேசியில் அழைத்தால் வந்து அழைத்துச் செல்வதாக படகோட்டி   அங்கு ஒட்டப்பட்டு இருந்த எண்களைக் காட்டினார், தீவு முகப்பில் நுழைவுக் கட்டிடம், 'ஜோகூர் மாநிலத்தின் தேசிய பூங்கா என்ற பொருளில் அறிவுப்புடன் நுழைவாயில், உள்ளே சென்றால் தீவிற்குள் நுழைவுக் கட்டணம் செலுத்தி பின்னர் செல்ல வேண்டும், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு 25 ரிங்கிட்டும், உள்நாட்டினருக்கு 5 ரிங்கிட்டும் கட்டணம் வாங்குகிறார்கள், நண்பர் மலேசியவாசி என்பதால் 10 ரிங்கிட்டுக்கு இரண்டு நுழைவுச் சீட்டுகளைப் பெற்று வந்தார், அந்த தீவின் முகப்பு கட்டிடமே கடல் தண்ணீரினுள் தான் அமைக்கப்பட்டிருந்தது, சுற்றுலா வளர்ச்சிகாக பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டு அரசாங்கம் பல வசதிகளை செய்து தந்திருப்பதாக நண்பர் குறிப்பிட்டு இருந்தார், 

கட்டிடத்தை பின்வாசல் வழியாகக் கடக்க, தீவின் நுழைவாயி, ல் அதன் பிறகு வழியாக மரப்பாலங்கள் தான் தென்பட்டன, 1 1/2 மீட்டர் குறுக்களவில் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட பாதைகள் தான் போடப்பட்டிருந்தன, நேராக ஒரு வழி தொடர்ந்து செல்ல அதன் இடையே 200 மீட்டர் தொலைவில் நான்கு மாடி உயரக் கோபுரம்,. அதன் உச்சியில் இருந்து அங்கே ஓடும் சதுப்பு நில ஆற்றைக் கடந்து அடுத்துப் பகுதிக்குச் செல்லும் தொங்கு பாலம், டவரில் கழிவறை வசதிகள் இருந்தன,  தொங்கு பாலத்தில் மூவருக்கு மேல் நடந்து செல்லக் கூடாது, அவர்கள் கடந்த பின்பு தான் அடுத்தவர்கள் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புகள் இருந்தன, தொங்கு பாலத்தில் ஏறினேன்,  நம் எடைக்கும் காற்றுக்கும் ஏற்றபடி கொஞ்சம் ஆட்டம் தான், புகைப்படம் எடுக்கும் பொழுது செல்பேசி தவறி விழலாம் என்பது தவிர்த்து அந்த ஆட்டம் ஒன்றும் பயமுறுத்தவில்லை. அடுத்தப் பகுதி கோபுரத்தை அடைந்து கீழே இறங்க இன்னொரு மரப் பாலப் பாதை சற்று வளைந்து சென்றது.

அந்தப் பகுதிகள் முழுக்க முழுக்க சதுப்பு நிலக் காட்டு மரவகைகள் இருந்தன, அவற்றின் வேர்கள், வேர்கள் கிளைத்த மரங்கள், கடல் நீர் ஏற்ற இரக்கம் இந்தப் பகுதியில் எப்படி இருக்கும் என்பதன் அளவுகோலாக இருந்தன,  சதுப்பு நிலத்தில் வாழும் தவளை இனம் போனறு கால்கள் உடைய  மீன்வகைகள், நண்டுகள், இவைகள் பெரும்பாலும் தண்ணீரிலும் ஈரத்தரையிலும் வாழக்க் கூடியவை, அடந்த நிழல்களும், சேற்று நீரின் குளுமையும் மிகவும் இனிமையாக இருந்தது, ஒரு 200 மீட்டர் நடந்த பிறகு ஒரு மரப் பாலம் வழியாக முன்பு துவங்கிய வழியை குறுக்காக அடையும்  இடம் இருக்கிறது, அங்கே துடுப்பு ஓடங்கள் இருந்தன, வெள்ளம் பெருகும் நாள்களில் அந்த காட்டினுள் சுற்றுலா படகு பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளாக அவைகள் இருந்தன, நாங்கள் சென்றது செவ்வாய் கிழமை என்பதால் எங்களையும் சேர்த்து ஐவர்  மட்டுமே தீவுக்குள் இருந்தோம், எங்களுடன் வந்த மற்ற மூவர் எங்களைப் பின் தொடரவும் இல்லை, தீவின் நடுப்பகுதிக்குச் செல்லும் மரப்பாதைக்கு வந்தோம், குரங்குகள் பல இருந்தன, எல்லாம் கொஞ்சம் பயந்தது போல் நம்மைப் பார்த்து விலகியே சென்றன, பாலி  தீவு குரங்குகள் போல் எதையும் தட்டிப் பறிக்க முயற்சிக்கவில்லை.


கொஞ்சம் தூரம் நடந்த பிறகு இயற்கை ஆர்வலர்கள் அவ்வப்போது அங்கு வந்து மரங்களை நட்டுப் பாதுகாக்கும் இடங்கள் பல இருந்ததைப் பார்க்க முடிந்தது, இங்கே எதற்கு வந்து நட வேண்டும், இயற்கையாகவே அவை வளருகின்றன அல்லவா ? சதுப்பு நில மரவகைகள் 100க் கணக்கானவை உண்டு, அவற்றின் இனப்பெருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான், மரத்தில் முருங்கைகாய் போன்று நீளமாக ஆனால் பட்டை பட்டையாக இல்லாமல்  10 செமி விட்டத்தில் ஒரு சற்று கூறிய முனையுடன் அடிக் குச்சி  தண்டு காயாகவும்  அதன் மேல் முனை மொட்டுப் பகுதிகள் மரத்தில் தொங்கி வளர்ந்து வருகின்றன, அவை நீளமாக இருந்தாலும் உறுதியானவை கிடையாது, உடைத்தால் எளிதில் உடையும், குரங்குகள் பறித்து அந்த காய்களை கடித்து உண்ணுகின்றன,  மரம் சுமார் 20 அடி உயரும் பொழுது காய்க்கத் துவங்குகின்றன, மரங்கள் 100 அடி வரை வளர்க்கின்றன, குரங்குகள் தவிர்த்து வேறு எதுவும் அந்த காய்களை உண்ணுவதாக தெரியவில்லை, காய்கள் முற்றிய நிலையில் காம்புகள் நைந்து போக காற்றடிக்கும் பொழுது அவை செங்குத்தாக கீழே விழுந்து சேற்றில் சொருகினால் அவை கீழ் பகுதி வேராகவும், மேல் பகுதி இலையாகவும் வளரும் வாய்ப்புகள் உள்ளன,  அவ்வாறில்லாமல் காய்ந்த சேற்றிலோ, வேரிலோ விழுந்தால் உடைந்துவிடும், செங்குத்தாக விழ போதிய எடை மற்றும் ஈரப்பதம் இருந்தாலும்  காற்றடிக்கும் பொழுது விழுவதால் செங்குத்தாக விழும் வாய்ப்புகள் மிகவும் அரிது,  எனவே இவ்வகை மரம் காய்க்கும் காய்களில் இருந்து இனப் பெருக்க வாய்ப்பு வெறும் 10 விழுக்காட்டு காய்களுக்குத் தான் கிடைக்கின்றனவாம், அவற்றிலும் அடந்த கருநிழலைத் தாண்டி வளர்ந்து வருபவை மிகக் குறைவு.  அந்த மரங்களின் அடர்வில் மீதம் 90 விழுகாட்டு விதைகள் முளைத்தாலும் வளர வாய்ப்பில்லை, வெறும் இரண்டு விழுக்காட்டு மறு உற்பத்திகள் தான் காய்கின்ற விதைகளில் இருந்து நடக்கின்றன,  அடர்வு குறைந்த பகுதியை சீர் செய்ய அந்த விதைகளை செயற்கையாகவே நட்டு வளர்த்து வேறு இடத்தில் வைக்கிறார்கள்.




சுமார் 600 மீட்டர் வரை உள்ளே மரப் பாதை செல்கிறது, அதன் முடிவில் 5 மாடி அளவுக்கு உயர்ந்த கோபுரம், சுற்றிலும் பார்வை இட அமைத்திருக்கிறார்கள், மரப் பாதைத் தவிர்த்து வேறு வழி இல்லாத இந்த இடத்தில் அந்த கோபுரமே அங்கு ஓடும் சதுப்பு நில ஓடை வழியாக படகுகள் மூலம் கட்டுமானப் பொருள்கள் கொண்டு வந்து கட்டி இருக்க வேண்டும் என்பது தவிர்த்து வேறு வாய்ப்பில்லை, கோபுரத்தின் மீது ஏறினோம், உலகில் இருக்கும் பெரிய சதுப்பு நிலக்காடுகளில் இந்த குக்குப் தீவும் ஒன்றாம், குக்குப் என்றால் தடுப்பு, அதாவது நில அரிப்பை தடுக்கும், மற்றும் சுனாமி அலைகள் உள்ளிற்றவற்றை இந்த தீவைக் கடந்து செல்லாது நிலப்பகுதியைக் காக்கும் தீவாம், உச்சியில் நின்று பார்க்க சுற்றிலும் மரங்களின் தலைகள், பச்சை தளைகள். நடுக்கடலில் நின்று பார்க்க சுற்றிலும் கடல் நீர் சூழப்பட்டது போல் இருப்பது போன்றே சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய வரை பசுமை பசுமை. அனை அனுபவிக்க ஏதுவாக குளிர்ந்த காற்று. அப்படியே அங்கேயே ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்தோம், 






அங்கே எங்களுடன் படகில் வந்த மூவரும் வந்து சேர அவர்கள் சேர்ந்து நிற்கும் நிழல்படம் எடுக்க உதவினோம், அவர்களும் எங்களுக்கு அவ்வாறே உதவினார்கள், பசி களைகட்டி திரும்பிச் செல்ல நச்சரிக்க கையில் கொண்டு சென்ற தண்ணீரில் கொஞ்சம் குடித்துவிட்டு கோபுரத்தில் இருந்து இறங்கினோம், திரும்பிச் செல்ல நடந்து கொண்டிருக்கும் பொழுது சட சடவென்று மழைக் கொட்டத் துவங்கியது, திரும்பவும் கோபுரத்தின் அடிக்கு வந்து மழை நிற்க காத்திருக்க, ஐந்து நிமிடத்தில் தூறல்களாக மாறியது, திரும்பவும் ஒரு 100 மீட்டர் நடந்ததும் பழையபடி இன்னும் பலத்த மழை, ஓட்டம் ஓட்டம் வேற வழியில்லை, ஒதுங்க இடமில்லை, 600 மீட்டர் ஓடினால் முகப்பு கட்டிடத்தை அடைய முடியும்,  முன்னே நண்பர் ஓட, பின்னே செல்பேசி நனைத்துவிடாமல் பாக்கெட்டில் போட்டு கையில் பிடித்துக் கொண்டு நானும் பின் தொடர்ந்து ஓடினேன். கொஞ்சம் உணவு பொருளோ அல்லது குடையோ எடுத்து வந்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. நடுவே ஒரு மரப்பாலத்தின் அருகே அமைந்த ஓய்வு குடிலில் சற்று நேரம் இளைப்பார மழை நிற்கவும், படகுத்துறைக்குச் செல்ல படகும் காத்திருந்தது ஏறி வந்து சேர்ந்தோம்,


பசிப் போக்க அதே சீனர் கடைக்குச் சென்றோம், அவர் சொன்னது போலவே வெஜிடேரியன் ப்ரைடு ரைஸ் எனக்கும், நண்பருக்கு நண்டு மற்றும் நூடுல்ஸ் உணவு, நான் நினைத்த அளவிற்கெல்லம கவுச்சி வாடை எதுவுமே அடிக்கவில்லை, மிகவும் தூய்மையாக, சுவையாக வெஜிடேரியன் ப்ரைட் ரைஸ் இருந்தது, அங்கே அந்த உணவு கிடைப்பது கொடுப்பினை தான், நண்பருக்கு நண்டை உடைக்க பாக்கு வெட்டி போன்ற ஒன்றையும் கொடுத்திருந்தனர், பொறுமையாக உடைத்து சாப்பிட்டார். அவர் சொன்னது போல் ரிலாக்ஸாக இருக்க வந்திருக்கிறோம், எதற்கு அவசரம் ? அதற்கான தேவையும் இருக்கவில்லை, 



பின்னர் கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று கடைபாட்டியிடம் மற்றொரு தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு கார் பார்த்துக் கொண்டதற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம், ஏற்கனவே வழியில் பார்த்த ப்ழக் கடையில் சில பழங்களை வாங்கிவிட்டு ஜோகூர் வந்து சேர்ந்தோம்.

*****

குக்குப் தீவுக்குச் சென்று வர ஜோகூரில் இருந்து பேருந்துகள் உண்டு, நாள் ஒன்றுக்கு 2 - 4 பேருந்துகள் வரை இருக்கலாம், கட்டணம் தொலை அடிப்படையில் பார்க்க 10 ரிங்கிட்டுகள் வரை இருக்கும், கடற்கரை கிராமம், கடலில் படகு பயணம், இயற்கை வளமாக அமைந்த சதுப்பு நிலக் காடுகள், புகைப்படம் எடுப்பது இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள்,  கடலுணவு விருப்பர்கள், சென்றுவரலாம் ஒரு நாள் போதுமானதாகும். விடுதிகள் கூட அங்குண்டு.

18 அக்டோபர், 2012

குக்குப் சதுப்பு நிலத் தீவு - 1 !

சீனர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது அவ்வளவு எளிதன்று, இதுவரை நீண்ட நாள் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன், அதில் மிகவும் நெருக்கமாக பழகியவர்கள் வெகுசிலரே, மற்றவர்கள் அலுவலகம் விட்டுச் சென்றதும் மறந்துவிடுவார்கள், சீனர்கள் நட்புலகம் அலுலகம் தாண்டியதாக இருப்பதும் குறைவே, சனி-ஞாயிறு இல்லத்தினருடன் செலவிடும் நாள் என்பதில் தெளிவாக இருப்பார்கள், மற்றபடி அலுவலகம் தாண்டிய தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு அழைத்தால் வருவார்கள், நெருங்கிப் பழகுதல் என்பது என்னைப் பொருத்த அளவில் அலுவலகம் தாண்டியும் சேர்ந்து ஊர் சுற்றுவது, ரொம்பவும் எதிர்ப்பார்ப்புகள்: வைக்கமல் பழகக் கூடியவர்கள் கிடைப்பது அரிது என்ற நிலையில் அவர்களில் ஒரு சிலரை நட்புகளாகத் தொடர்வதும் மிக அரிதே, அந்த வகையில் ஓரிரு சீன நண்பர்கள் எனக்கு உண்டு, இல்லத் தகவல்களையும் பகிர்ந்து கொள்வார்கள், அப்படி கிடைத்த என் வயதை ஒத்த நண்பர் ஒருவருடன் பலமுறை ஜோகூருக்குச் சென்றுள்ளேன், பெரும்பாலும் அவரது பைக்கில் தான் பயணம், நண்பர் ஜோகூரில் கார் வைத்திருப்பவர் என்றாலும், அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பதால் மலேசிய பதிவு எண் காரை சிங்கப்பூருக்குள் எடுத்துவர இயலாது, அனுமதியும் இல்லை. எனவே எங்களது பயணம் பெரும்பாலும் அவரது சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட அவரது பைக்கில் தான் இருக்கும், அவரும் காரை மாற்றி புதுகார் வாங்கியது முதலாக என்னை என்றாவது ஒரு நாள் அதில் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சென்றவாரம், தனது மேலாளர் வெளிநாடு செல்லும் பொழுது மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டு என்னை காரில் கூட்டிக் கொண்டு ஒரு தீவுக்குச் சென்றுவரலாம் வாக்களித்திருந்தார்,  சொன்னபடியே நானும் திங்கள் காலை 10 மணிக்கு ஜோகூர் சோதனை சாவடிகளை கடந்து காத்திருக்க வந்து அழைத்துச் சென்றார்.


அவர் சொன்ன தீவின் பெயர் குக்குப் தீவு இதை ரோமன் எழுத்தில் KuKup Island என்றே எழுதியுள்ளனர், மலாய் அகராதிகளைப் பார்க்க தடுப்பு தீவு என்ற பொருளில் உள்ளது, ஜோகூர் நகரத்தில் இருந்து ஜோகூர் மாநிலத்தினுள்ளேயே சிங்கப்பூர் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் 80 கி.மீ தள்ளி அமைந்துள்ளதாம்,. நாம இன்னிக்கு ரிலாக்ஸாக இருக்க வந்திருக்கோம், எனவே காரை விரைவாக ஓட்டமாட்டேன் பொறுமையாகவே போவோம் என்று காரை பொதுவான வேகத்தில் ஓட்டினார், தென்படும் ஊர்கள் பற்றி தமக்கு தெரிந்த தகவல்களை சொல்லி வந்தார் இடை இடையே அலைபேசி அழைப்புகள் வர ஓரமாக நிறுத்திப் பேசிவிட்டு சுமார் 2 மணி நேரம் பயணம் செய்து தீவின் பகுதி அமைந்த கடற்கரை கிராமத்திற்குச் சென்றோம், விரைவுச் சாலை வழியாக அந்த இடத்திற்கு செல்ல முடிந்தாலும் எந்த தேவையும் இல்லாததால் ஊருக்குள் செல்லும் சாலை வழியாகத்தான் சென்றோம், போய் சேர பகல் 12 மணி ஆகி இருந்தது, , பேருந்து நிலையம் ஒட்டி கார்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு கடைக்கு முன்பு காரை நிறுத்தி பூட்டிவிட்டு, பூட்டு என்றதும் மலேசியாவில் காருக்கு இரண்டு பூட்டு போடுவார்கள், ஒன்று கார் சாவியை முடுக்கிவிடுவது, இரண்டாவது ஸ்டியரிங்கில் ஒரு குடை கைப்பிடி கொக்கி போன்று ஒன்றை மாட்டி இன்னொரு பூட்டும் போடுவார்கள் இல்லை என்றால் கார் நிறுத்திய இடத்தில் இருக்காதாம், அது தவிர காருக்குள் மடிக்கணிணி, அலைபேசி உள்ளிட்ட எந்த பொருளையும் வைத்திருக்கமாட்டார்கள், அப்படி வைத்துவிட்டு வந்து பார்த்தால் காருக்கு கண்ணாடியும் இருக்காது, வைத்தப் பொருளும் இருக்காது, நாங்கள் எடுத்துச் சென்ற கைப் பைகளையும், என்னுடைய கடவுச் சீட்டு உள்ளிட்ட வற்றையும் காரினுள் பின்பகுதி பொருள் வைக்குமிடத்து (டிக்கி) ரகசிய அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கே கடையில் தண்ணீர் வாங்கிக் கொண்டு காரைப் பார்த்துக் கொள்ளச் சொன்னோம், அங்கே வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் ஒப்பிட்டு சிரம் மேற்கொண்டு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதாக கடைக்கார சீனப்பாட்டி சொல்ல,  கார் நிறுத்தும் கட்டணம் எதுவும் இல்லாமல் பாதுகாப்பிற்கும் இலவசமாகவே ஏற்பாடு செய்தாகிவிட்டது என்கிற நிம்மதியில் கடற்கரையின் முகப்பில் அமைந்த படகு வழி சோதனைச் சாவடிகளை நோக்கிச் சென்றோம், செல்லும் வழியில் இருபக்கமும் கடைகளும் வீடுகளும் இருந்தன, மேம்பட்டு வளர்ந்துவரும் ஒரு கிராமம், எனக்கென்னவோ வேளாங்கண்ணி நகர் அமைப்பை நினைவுபடுத்தியது, 

பேருந்து நிலையத்தை அடுத்து அமைந்த பகுதிகள் பெரும்பாலும் கடல் மீது கட்டப்பட்ட வீடுகளாகவே அமைந்திருந்தன, அவற்றின் நடுவே சாலைகளுக்காக மண் கொட்டி மேடுபடுத்தி சாலைகள் இட்டிருக்க வேண்டும், ஏனெனில் வீடுகள் அனைத்தும் மிதவை வீடுகள் போன்று தூண்கள் மீது தரைத்தளம் அமைத்து அதன் மீது கட்டியிருந்தனர், அடியில் தண்ணீர், சாலையின் இருபுறமும் உணவு விடுதிகள் பல்பொருள் கடைகள் இருந்தன, படகுத்துறை சோதனை சாவடி அருகே இடது பக்கம் அமைந்துள்ள கடலுணவு கடையில் காபி குடுத்துவிட்டு சாப்பாடு பற்றி விசாரித்தது, கொஞ்சம் வயதானவர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளராகவே இருந்தவர் 'தூய சைவ சாப்பாடு செய்துதருவேன், எங்க அண்ணன் அடிக்கடி இங்கே வந்து சாப்பிடுவார், அவரும் சைவம் தான்' என்று கூறி பாலை வார்த்தார், சுற்றிப்பார்த்துவிட்டு வந்து சாப்பிடுவதாக வாக்களித்துவிட்டு கடையை ஒட்டி அடுத்து அமைந்த குறுகிய மரச் பாதை  நடக்க அந்த பகுதி முழுக்க முழுக்க கடல் மீது கட்டப்பட்ட வீடுகள்.

அந்த குறுகிய மரப்பாதைகள் கிளைகளாக பிரிந்து செல்ல செல்ல அங்கங்கே வீடுகள் பல  காங்க்ரீட் தூண்கள் மீதும் சில மரத் தூண்கள் மீதும் கட்டப்பட்டு இருந்தன, நண்பர் சொன்னார், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வந்த பொழுது பெரும்பாலும் மரவீடுகள் தான் இருந்தனவாம், உள்ளே ஒரு அரை கிமி நடந்தோம், மூன்றடுக்கு சீன ஆஞ்சநேய கோவில் ஒன்று உள்ளே இருப்பதாகவும், அதன் மாடியில் ஏறிப்பார்க்க அந்தப்பகுதி முழுவதும் தெரியும் என்றார், அவர் சொன்ன கோவிலை அடைந்தோம், அதுவும் தூண்கள் மீது கட்டப்பட்டு இருந்தது. கழிவறை வசதிகளும் இருந்தன, முன்பெல்லாம் அங்குள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கடலுக்குள் நேரடியாக சங்கமிக்க உடல் நலச் சீர்கெடு, நோய், கெட்ட வாடை ஆகியவற்றைக் கருத்தில்  அனைத்துவீடுகளின் கழிவுகளையும் குழாய் இணைப்புகளின் வழியாக கடலுக்கு வெளியே எடுத்துச் செல்கிறார்களாம், பின்னர் சுத்திகரிக்கப்பட்டு கடலில் கலக்கப்படுமா ? அல்லது கடலில் பிறபகுதிகளில் கொண்டு சென்றுவிடுவார்களா தெரியவில்லை, சீனக் கோவிலின் மூன்றாம் மாடியில் நின்று பார்க்க சுற்றிலும் கடலில் மிதப்பது போன்று வீடுகள், அதைத் தாண்டி கடல், அதன் பிறகு ஒரு தீவு. அந்த தீவு தான் குக்குப் தீவு என்று நண்பர் சொன்னார், அங்கே நாம் போகலாம், விசைப் படகில் போகவேண்டும் என்று சொன்னார், அந்தப்பகுதி கடற்கரைப் பகுதிகளுக்கே உரிய லேசான கவுச்சி வாடையுடன் இருந்தது, சுமார் 1000 வீடுகள் அமைந்திருந்தது, வீடுகளின் முடிவில் கடல் பகுதியில் பல்வேறு வகைப்படகுகள் நின்று கொண்டு இருந்தன.

இந்த ஊருக்கு வரும் வழியெங்கும்  வெற்றான நிலங்கள் பல இருக்க, இவர்கள் ஏன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள இந்த இடத்தில் அதுவும் கடல்மீது வீடுகட்டிக் கொண்டு இருக்க வேண்டும் ? காரணம் ஒன்றே ஒன்று அவர்கள் அனைவரும் கடல் சார்ந்த பல்வேறு தொழில் செய்பவர்களாக உள்ளனர், பெரும்பாலும் சிறு குழந்தைகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைத்தான் பார்க்க முடிந்தது, மற்றவர்கள் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கிருக்கும் மர வழிகளில் கைப்பிடி அல்லது பாதுகாப்பு தடுப்புகள் கிடையாது, ரொம்பவும் அநாயசமாக சைக்கிளிலும் பைக்கிலும் உள்ளே வசிப்பவர்கள் சென்றுவருகிறார்கள், உள்ளே கார்களோ அல்லது கை வண்டிகளோ செல்ல வாய்ப்பே இல்லை, உள்ளே அங்கங்கே கடைகளும், சிறிய அளவிலான உணவு கடைகளும் உண்டு, அவை வசிப்பவர்களுக்கானது சுற்றுலா பயணிகளும் வாங்கலாம். பூட்டப்படாத வீடுகள்கள் பல இருந்தன, அங்கே வசிப்பவர்கள் தவிர்த்து வெளியாட்கள் வந்து திருடுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் பொருள் பாதுகாப்புகளுக்கு அவர்களுக்கு பெரிய அறைகூவல் இல்லை, தரையில் இருக்கும் வீடுகள் போன்றே அனைத்து வசதிகளுடன் வசதிக்கேற்ப கட்டியுள்ளனர், சிலர் வீடுகளுக்கு முன்பே மலர் தொட்டிகளை வைத்துள்ளனர். நண்பர் சொன்னார், இந்த வீடுகள் எதையும் அரசு அங்கீகரிக்கவில்லை, அவர்கள் உரிமை கொண்டாடமுடியாது, ஆனால் அவர்களுகான மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை இணைத்து கொடுத்திருக்கிறது அரசு. கடல்மட்டம் கூடினால் இந்த வீடுகள் அனைத்தும் வசிக்க வாய்பில்லாதவீடுகள் ஆகிவிடும்.

பின்னர் சென்ற வழியை ஒரு சுற்று சுற்றி அடைந்தோம் திரும்பவும் துவங்கிய இடத்திற்கு வந்து சேர படகு துறை சோதனைச் சாவடி இருநதது, முன்பெல்லாம் சிங்கப்பூருக்கு இங்கே நேரடி படகுச் சேவை இருந்ததாம், தற்போது அந்த சேவையை நிறுத்திவிட்டார்கள், ஆனாலும் இந்தோனேசிய சுமத்திரா பகுதிகளுக்கு படகு சேவைகள் நடைபெறுகின்றனவாம், நாங்கள் அதன் வழியாக குக்குப் தீவுக்குப் போகத் தேவையில்லை, 


படகுதுறை சோதனையகம் வெளிநாட்டுப் பயணத்திற்கானது, பின்னர் குக்குப் தீவிற்கு எப்படிச் செல்வது ? சோதனைச் சாவடியின் இடதுபுறம் அமைந்த தனியார் படகுதுறை வழியாக தீவிற்கு கூட்டிச் செல்கிறார்கள், பயணம் ஒரு ஐந்து நிமிடம் தான், படகு கட்டணம் ? கூட்டத்திற்கேற்றாற்ப் போல, 10 சவாரி கிடைத்தால் ஆளுக்கு மூன்று ரிங்கிட், ஆனால் நாங்கள் படகுக்குச் செல்லும் போது யாரும் சுற்றுலாவிற்கு வரவில்லை, எனவே எங்களிடம் இரண்டு பேருக்கும் சேர்த்து மொத்தமாக 25 ரிங்கிட் கொடுத்தால் கொண்டு சென்று திரும்பவும் அழைத்துவருதாக உறுதி கூறினார்கள். பணத்தைக் கொடுத்துவிட்டு ஏறி அமர்ந்தோம், பின்னர் மேலும் 3 பயணிகள் வந்து சேர்ந்தனர், அவர்களிடம் படகுக்காரர் எவ்வளவு வாங்கினார் என்று தெரியவில்லை. படகு ஓடத்துவங்கியதும், படகு வந்தவழியில் திரும்பிப் பார்க்க  படகுத்துறை சோதனைச் சாவடி சிறிதாகிக் கொண்டு இருந்தது.


அந்த தீவில் என்ன தான் இருக்கும் ? பதிவு நீளம் கருதி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

10 ஏப்ரல், 2012

* சிங்கப்பூர் - மலேசியா, இந்தியா - பாகிஸ்தான் !

திட்டமிடுவதைவிட தற்செயலாக நடப்பது பல வேளைகளில் நன்றாகவே இருக்கும், நட்சத்திரப் பதிவு எழுத இரண்டு வார முன்கூட்டியே தகவல் கிடைத்து, நேரம் கிடைத்திருந்தை வைத்து, நூலகத்தில் இருந்து சில நூல்களை எடுத்து வந்து அதில் இருப்பவற்றில் சிலவற்றை எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் இடைப்பட்ட காலத்தில் காதில் விழுந்தவைகளை வைத்து எழுதுவதே சிறப்பு என்று எடுத்துக் கொடுப்பதாக சில நடந்தேறியது. இந்த இடுகையையும் தற்பொழுது (இன்று) எழுதுகிறேன். 

********

நானும் அலுவலக தோழர் / தோழிகளும் அலுவலகம் முடிந்ததும் ஒன்றாக செல்வது வழக்கம், அதில் வாகனம் வைத்திருப்பவர் அழைத்துச் சென்று அருகில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் அல்லது பேருந்து நிறுத்ததிற்கிடையே விடுவார். அப்படிச் செல்லும் போது எதையாவது பேசிக் கொண்டு செல்வோம், சென்றவாரம் உடன் பணிபுரியும் பெண் தோழர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூரில் குடியேறி குடியுரிமை பெற்றவர், பேச்சின் தொடர்பில் சொன்னார், 'சிங்கப்பூரில் இருந்து மலேசியா பிரியும் முன் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு'. அதற்கு மற்றொரு நண்பர், அவரும் மலேசியவாசிதான் ஆனால் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கும் உரிமை பெற்றவர், 'அப்படியெல்லாம் இல்லை, நீ போய் வரலாற்றைப் படி, நீ வரலாறு பாடத்தை பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எனக்கும் ஓரளவு சிங்கப்பூர் வரலாறு தெரியும் ஆதலால் அவர் சொன்னதை ஆமோதித்தேன்.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் தவிர்த்து குடியேறிய பிறரும், மலேசியர்களும் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான மாநிலமாக முன்பு எப்போதும் இருந்தது என்றே நம்புகிறார்கள், ஆனால் வரலாறு வேறுவிதமாகத்தான் இருக்கிறது, சிங்கப்பூர் தனி நிலமாகத்தான் வெள்ளைக்காரர்கள் மற்றும் ஜப்பானியர்களின் ஆளுமைக்குள் விழுந்திருந்தது, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த மலேசியா, சாபா, சரோவாக் ஆகிய பகுதிகள் விடுதலை அடைந்த போது சிங்கப்பூரும் விடுதலை அடைந்தது, அப்போதே தொழில் துறை மற்றும் கப்பல் கட்டுமானங்களில் சிங்கப்பூர் தனித்து இயங்கியது. வெள்ளையர்களிடம் இருந்து விடுதலைக் கிடைத்த பிறகு சிங்கப்பூர் தனிநாடாக இயங்கப் போதிய இயற்கை வளங்கள் இல்லை என்பதால் அப்போதைய சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் மலேசியாவின் மாநிலப் பகுதியாக இணைந்து கொண்டனர், இது நடந்தது 31 ஆகஸ்ட் 1963, இதன் பிறகு சிங்கப்பூர் அரசியல்வாதிகள் சிங்கப்பூருக்கு சிறப்பு உரிமைகள் கோரவே, ஏற்றுக் கொள்ளாத மலேசிய தலைமை சிங்கப்பூர் தனித்து இயங்கலாமே என்று கூறி 9 ஆகஸ்ட் 1965ல் சிங்கப்பூர் தனித்து விடப்பட்டது, இருந்தாலும் நீர் மற்றும் போக்குவரத்திற்கான ஒப்பந்தங்களுடன் சிங்கப்பூர் தனித்தே இயங்கலாம் என்ற துணிவுடன் தனிநாடு என்று அறிவித்துக் கொண்டதுடன், சிங்கப்பூரை உலக வர்தக மையமாக மாற்றி, சில ஆண்டுகளிலேயே சிங்கப்பூர் வெள்ளியை மதிப்பு மிக்கதாக மாற்றி ஆசியாவின் முதலில் முன்னேறிய நாடு என்ற பெருமையைப் பெற்றுத்தந்தார் சிங்கபூர் முன்னாள் பிரதமரும் இன்றைய மதியுரை அமைச்சருமான திரு லீ க்வான் யூ. இது கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் பற்றிய சுருக்கமான வரலாறு. 


சிங்கப்பூர் மலேசியாவின் மாநிலமாக இயங்கிவந்தது வெறும் இரண்டே ஆண்டுகள் தான். மற்றபடி சிங்கப்பூர் வரலாற்றில் மலேசியாவின் பகுதியாக சொந்தமாக இருந்த வரலாறே கிடையாது, தவிர மலேசியாவும் பல்வேறு குறுநில மன்னர் ஆட்சிகளால் ஒரே மொழிப் பேசுபவர்களின் தனித்தனி மாநிலமாகவே இருந்தது, மலேசியாவின் பழங்குடிகள் மலைவாசிகள் தான், இன்னும் அவர்கள் மலைவாசிகளாகவே சொல்லப்பட்டு அவர்களை பூமி புத்ரா என்று கூறித் தனிச்சலுகையும் பெறுகிறார்கள், பின்னர் இந்த பூமி புத்ரா சலுகைக்குள் மலாய்காரர்களும் பெரும்பான்மை என்னும் அரசியல் காரணங்களுக்காக இடம் பெற்றுவருகின்றனர், அங்கேயே பிறந்து வளர்ந்த சீனர்களுக்கு அந்த உரிமை கிடையாது. 

இதே போன்று தான் இந்தியச் சொல்லாடல்களில் பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்து பிரிந்து சென்றது அல்லது பாகிஸ்தான் என்பது இந்தியாவிலிருந்து பிடுங்கிக் கொள்ளப்பட்ட பகுதி என்கிற கருத்தியல் இந்திய மக்களிடம் வரலாறாகச் சொல்லப்படுகிறது, பரதன் ஆண்டான் என்கிற எழுதப்படாத நம்பிக்கைத் தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட மன்னர்கள் இந்தியாவில் இல்லை, பல குறுநில மன்னர்கள் மொழி வாரி அடிப்படையில் ஆட்சி செலுத்தி வந்தனர், அவர்களுக்குள் ஒற்றுமைகள் என்பதே இல்லாமல் இருந்தது, தமிழகத்தைப் பொருத்த அளவில் சேர, சோழ, பாண்டிய பரம்பரைகளும் அவர்கள் ஆளுமைக்குட்பட்டவைகள் மூன்று நாடுகளாக அறியப்பட்ட வரலாற்றை ஒப்பிட்டு மொத்த இந்தியாவையும் பார்க்க நூற்றுக் கணக்கான மன்னர்கள் இந்தியாவெங்கும் பல்வேறு நாடுகளாகப் பிரித்து ஆட்சி செய்திருக்க வேண்டும், ஒரே மன்னரின் ஆளுகைக்குள் இருந்திருந்தால் மொகலாயர்களோ அதற்கு முன் லோடிகளோ, கில்ஜிகளோ இந்தியாவிற்குள் நுழைந்து கைப்பற்றி இருக்க முடியாது, தவிர இஸ்லாமிய மொகலாய ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலம் வெறும் 200 ஆண்டுகள் தான் அவர்களாலும் மொத்த இந்தியாவையும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, அல்லது அந்த முயற்சிக்கு முன்பே வெள்ளையர்கள் வசம் இந்தியா வீழ்ந்ததால் ஒட்டுமொத்த இந்தியாவை ஆண்ட பெருமையை வெள்ளையர்களே பெற்றார்கள்.

மதவாத இஸ்லாமியர் மற்றும் பெரும்பான்மை இந்துக்கள் என்ற அடிப்படையில் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற பாரதம், பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் தனித்தனி பகுதிகளாக தற்பொழுது அறியப்படுகிறது, பாகிஸ்தானில் அங்குள்ளப் பாடத்திட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்ட / பிடுங்கப்பட்ட பெரும்பகுதி நிலப்பகுதியே இந்தியா என்று சொல்லப்படுகிறது என்கிற பாடம் இருந்தால் நமக்கு ஏற்பாக இருக்குமா ? ஆனாலும் இந்தியப் பாடங்களாக தேசப்பற்று என்ற ஊசியாக போடப்படுவது பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்தது என்பதே, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிரிந்த பிறகும் பங்களாதேஸ் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித்தான், அப்படி இருந்திருந்தால் பாகிஸ்தானின் பெயர் இன்றும் மேற்கு பாகிஸ்தான் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கும், அரசியல் காரணங்களுக்காக நிலப் பரப்புகளின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்களே தவிர ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிந்தது என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சுகள் தான், வடகொரியா தென்கொரியா இவைகளில் உண்மையான கொரியா எது என்பதற்கு விடைகள் கிடையாது, கொள்கை ரீதியாக அவர்களின் அரசியல் சார்ந்த நிலம் பிரிந்து பெயர் வழங்கப்படுகிறது.

ஒரு பேச்சுக்கு அல்லது வெற்றிகரமாக இந்தியாவை வளர்ப்பதற்கு இந்தியா வட இந்தியா தென் இந்தியா என்று பிரிவதாக வைத்துக் கொள்வோம், அப்போது எது இந்தியாவில் இருந்து பிரிந்தது என்று எப்படிச் சொல்வது எதை உண்மையான இந்தியப் பகுதி என்று எப்படிச் சொல்வது ?

  • சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு இல்லை
  • பாகிஸ்தான் இந்தியாவிற்கு சொந்தமான நாடு இல்லை (வேண்டுமானால் பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் பாகிஸ்தான் இருந்தது என்று சொல்லலாம், அதே பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் இலங்கையும் உண்டு)
  • பங்களாதேஸ் பாகிஸ்தானுக்கு சொந்தமான நாடு இல்லை
  • இலங்கை எந்த ஒரு காலத்திலும் இந்தியவிற்கு சொந்தமான நாடாக இருந்ததே இல்லை.
  • அந்தமான் நிக்கோபார் நில அமைப்பின் படி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் தொடர்ச்சியாக இருக்கிறது, ஞாயமாகப் பார்த்தால் அது இந்தோனேசியாவின் பகுதியாக அல்லது தாய்லாந்தின் பகுதியாக தொடர்ந்திருக்கும், இந்திய கைதிகளை அடைக்கப் பயன்படுத்தியதால் வெள்ளைக்காரர்கள் அதை கொடையாக இந்தியாவிற்குக் கொடுத்து இந்தியப் பகுதியாக மாற்றிச் சென்றனர்.

31 ஜனவரி, 2012

சொந்தக் கதை இரண்டு !

வழக்கம் போல் சீனப் புத்தாண்டுக்கு சென்ற வாரம் முழுவதும் விடுமுறை, எழுதவோ படிக்கவோ நேரமில்லை, விடுமுறையின் முதல் இரு நாட்களில் அதாவது சென்ற ஞாயிறு 22 ஜெனவரி 2012 மற்றும் மறு நாள் திங்கள் சிங்கப்பூருக்கு வெகு அருகில் அமைந்துள்ள மலேசியாவின் ஜோகூர் மாவட்டத்தில் அமைந்துள்ள 'பத்து பகாட்' என்ற சிறு நகருக்குச் இல்லத்தினரை அழைத்துச் சென்றேன். சிங்கப்பூரைக் கடந்து மலேசியாவில் நுழைந்து பேருந்து எடுத்தால் இரண்டு மணி நேரப் பயணத்தில் அந்த ஊரை அடைந்துவிடலாம். முன் பதிவு செய்யவில்லை, அங்கெல்லாம் விடுதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் ஏற்கனவே சென்று வந்த ஊர் என்பதால் சென்றேன், நம்பிக்கை பொய்க்கவில்லை, சீனப் புத்தாண்டின் துவக்க நாள் என்பதால் கூடுதலாக 30 ரிங்கிட்டுகள் வாங்கிக்கொண்டு 153 ரிங்கிட்டுக்கு 8 ஆம் மாடி அறை கிடைத்தது. அங்கு செல்லும் போதே இரவு 8 மணி ஆகி இருந்ததால் சிறுது ஆசுவாசப்படுத்திக் கொண்டு அருகில் இருந்த கடை பெருவளாகத்திற்கு சென்று விட்டு திரும்ப இரவு 11 மணி ஆகி இருந்தது, விடுதியில் இருந்து அருகே உள்ள இடம் என்றாலும் இரவு நேரத்தில் விடுதிக்கு திரும்ப வாடகை உந்திகளுக்கு காத்திருந்தால் எதுவும் கிடைக்கவில்லை. போகும் போது வாடகை உந்தியில் தான் சென்றோம், வேறு வழியில்லாமல குழந்தைகளைக் கூட்டிக் கொண்டு நடந்தோம், சீனப் புத்தாண்டின் இரவு என்பதால் நடமாட்டங்கள் இருந்தன. வான வேடிக்கைகள் துவங்கி இருந்தது, விடுதிக்கு வந்து சன்னலை திறந்து வைக்கவும் மணி இரவு 12 ஐ நெருங்க வான வேடிக்கைகளை சீனர்கள் கொளுத்திக் கொண்டு இருந்தனர், மேலிருந்து பார்க்க நகர் முழுவதும் வெடிச் சத்தமும் உயரே சென்ற வானங்களும் ஒளிக்கு அழகு சேர்ப்பது இரவு தான் என்று காட்டியது. ஒரு அரை மணி நேரம் அந்தக் காட்சியைப் பார்த்துவிட்டு பிறகு தூங்கிவிட்டோம்.

மறு நாள் காலையில் விடுதியின் பாடாவதி உணவில் ரொட்டிகள், காஃபி தவிர்த்து எதையும் சாப்பிட முடியவில்லை, எல்லாவிற்றிலும் அசைவம், நெத்திலி கருவாடு இல்லாமல் மலாய்காரர்கள் எதையும் சமைக்க மாட்டார்கள் போல, விடுதியை அடுத்து அங்கே அருகில் ஒரு சில தமிழர் உணவகங்களும் மலையாளிகளின் உணவகங்களும் இருந்தது. ஏற்கனவே தின்ற ரொட்டி (ப்ரட்) துண்டுகள் போதுமானவையாக இருந்தால் வேறு இடத்தில் எதையும் சாப்பிடாமல் பத்து பகாட் மால் எனப்படும் மிகப் பெரிய கடை பெருவளாகத்திற்கு செல்ல முனைந்தோம், பேருந்து நிலையம் அருகே ஆறு ஒன்று ஓடுவதாக விடுதியாளர்கள் சொன்னார்கள், அதையும் பார்த்துவிட்டு பிறகு பெருவளாகத்திற்குச் செல்லலாம் என்று நினைத்து ஆற்றுப் பகுதிக்குச் சென்றோம், கரை புறண்ட வெள்ள மாக பெரிய ஆறு ஓடிக் கொண்டு இருந்தது.


ஆற்றின் கரைகளில் நிறைய உணவகங்கள் இருந்தன ஆனால் அவை மாலை வேளைகளில் தான் திறக்கப்படுமாம், ஒவ்வொரு உணவகத்திற்கு பின்னும் ஆற்றின் கரைப் பகுதி இருந்தது, இறங்கி கால் நினைக்கும் அளவுக்கு வசதிகள் இல்லை, தடுப்புகள் இருந்ததன, படகு சவாரி செய்யும் இடங்களும் இருந்தன, சுள்ளென்ற வெயில் அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை, பிறகு பேருந்து நிலையம் வந்து கடை பெருவளாகத்திற்கு பேருந்து ஏறினோம். பெருவளாகத்தில் பசிபிக் என்ற பேரங்காடி இயங்கியது அங்கு குழந்தைகளுக்கு உடைகளை எடுத்துக் கொண்டு திரும்ப மாலை 3 மணி ஆகியிருந்தது ஏற்கனவே பேருந்தில் மாலை 4 மணிக்கு முன் பதிவு செய்திருந்ததால் விடுதிக்கு வந்து சிறிது நேரம் ஓய்வெடுத்துவிட்டு பேருந்தில் ஏறி சிங்கப்பூருக்கு திரும்பினோம்.

பத்து பகாட் சிறிய நகரம் தான் சுற்றுலா நகரம் இல்லை, சிங்கப்பூரில் இருந்து காலையில் புறப்பட்டால் மாலைக்குள் வந்துவிடலாம், ஒரு நாள் அங்கு தங்குவது குழந்தைகளுக்கும் மாற்றாக இருக்கும் என்றே சென்று தங்கி வந்தோம், கைக் குழந்தையை வைத்துக் கொண்டு நெடும் தொலைவு பயணம் அதுவும் பேருந்தில் சென்றுவருவது எளிதல்ல, இரண்டு மணி நேரம் பேருந்தினுள் இருப்பதற்கே படுத்திவிட்டான்.

******

ஒருவார விடுமுறையில் அலுவலக வழங்கிகளுக்கு (சர்வர்) மற்றும் அந்த அறையில் குளிரூட்டிக்கும் ஓய்வு கொடுக்கலாம் என்று அனைத்தையும் முறைப்படி நிறுத்திவிட்டு வெள்ளிக்கிழமை துவக்கி விடுவதாகத் திட்டம், சீனப்புத்தாண்டு விடுமுறையின் முந்தைய கடைசி வேலை நாள் முடிவில் திட்டப்படி அனைத்தையும் நிறுத்தினேன், இவ்வாறு செய்வதால் கொஞ்சம் மின்சாரம் சேமிக்க முடியும் மற்றும் வழங்கிகள் மற்றும் பிற தகவல் தொழில் நுட்ப கருவிகளின் வாழ்நாளை நீட்டிக்கலாம், தொடர்ச்சியாக ஓடுவதில் இருந்து சற்று அதற்கு சற்று ஓய்வு கிடைக்கும். திட்டமிட்டபடி சென்ற வெள்ளி அலுவலகம் சென்று வழங்கிகளை இயக்கினால் சரியாக வேலை செய்யவில்லை, இணைய இணைப்பு மற்றும் பிற வழங்கிகளையும் வழி நடத்தும் வழங்கி தொங்கி நின்றது. இரண்டு நாள் கழித்து திங்கள் தான் அலுவலக வேலைகள் துவங்குகிறது என்றாலும் முன்கூட்டியே செயல்பாட்டில் வைத்திருந்தால் திங்கள் கிழமை பதட்டம் இல்லை என்பதால் முன்கூட்டியே வெள்ளி அன்றே இயக்கத் துவங்கினேன், அன்றைக்கு எனக்கு நேரம் சரி இல்லை, அன்று முழுவதும் எத்தனையோ முந்தைய நாள் வழங்கி இயக்க சேமிப்புகளை உள் செலுத்தில் இயக்கினாலும் முரண்டு பிடித்தது. சீனர்கள் மிகவும் செண்டிமென்ட் பார்ப்பவர்கள் சீனப் புத்தாண்டு முடிந்து முதல் நாள் இணைய இணைப்பு மற்றும் கணிணிகள் சரியாக வேலை செய்யவில்லை என்றால் எரிச்சல் அடைவார்கள், இது நன்கு தெரிந்ததால் எனக்கு மன அழுத்தம் மேலும் மேலும் கூடிக் கொண்டே வந்தது அடுத்து என்ன செய்வது ? இது போன்று மிக தேவையான வேளைகளில் உதவும் தொடர்பிலுள்ள பிற நிறுவனங்களிம் விடுமுறை என்பதால் திங்கள் கிழமையை எப்படி எதிர்கொள்வோம் ? என்ற கேள்வியில் அதற்கு மேல் தெளிந்த சிந்தனைகள் ஏற்படவே இல்லை, வேலை பறிபோகுமா என்பது கூட எனக்கு கவலை இல்லை. திங்கள் கிழமை காலையில் மின் அஞ்சல் பார்க்க முடியாமல் போக, வாடிக்கையாளர் நிறுவனங்களுக்கு பதில் சொல்வது நிறுவன செயல்பாட்டையே கேள்வியாக்கிவிடும் என்ற கவலை ஏற்பட்டது.

இவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நம்பிக்கையில் முந்தைய நிறுவனத்தில் வேலை செய்த போது அங்கு சேவையாளராக வந்து உதவிய ஒரு சீன நண்பரின் அலைபேசிக்கு குறுந்தகவல் 'அனுப்பிவிட்டு காத்திருந்தேன், இத்தனைக்கும் எனக்கும் அவருக்குமான தொடர்புகள் விட்டுப் போய் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக இருந்தது, இடை இடையே பண்டிகைகளுக்கு குறுந்தகவல் அனுப்புவதுடன் சரி. உடனேயே நாளை உதவுகிறேன் என்பதாக பதில் அனுப்பி இருந்தார்

அன்றைய நாள் இரவு 9 மணி வரை வழங்கியை பல முறை முயற்சி செய்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டேன், மறு நாள் காலையில் அழைத்துப் பேசினார், மாலை வருவதாகச் சொன்னார், அன்று சனிக்கிழமை காலை 9 மணிக்கு அலுவலகம் சென்று காத்திருந்தேன் மாலை வரை வரவில்லை, பிறகு இரவு 11 மணிக்குத்தான் என்னால் வரமுடியும் என்றார். அவர் வீடு என் வீட்டில் இருந்து சில கிமி தொலைவில் இருப்பதால் நான் வீட்டுக்கு சென்று, உணவிற்குப் பின் இரவு 10 மணிக்கு ஒரு குறிப்பிட்ட இடத்தில் காத்திருப்பதாகச் சொன்னேன், சொன்னபடி அங்கு காரில் வந்து என்னை ஏற்றிக் கொண்டு அலுவலகத்திற்குச் சென்றார்

நான்கு மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு ஒரு வழங்கியை முற்றிலும் நிறுத்திவிட்டு மற்றொரு வழங்கிக்கு சேவைகள் அனைத்தையும் மாற்றிவிட்டு இயக்க அனைத்தும் இயங்கத் துவங்கியது. இங்கே பிரச்சனை என்னவென்றால் ஒரு மருத்துவர் ரத்த தொடர்புள்ளவர்களின் மீது கத்தியை வைக்க யோசிப்பது போன்றது தான், அவர் செய்த அதே வேலையை என்னால் செய்ய முடியும் இருந்தும் நம் முயற்சி வீணாகுமோ, குறிப்பிட்ட நேரத்திற்குள் முடித்துவிட முடியுமோ என்ற அச்சம். இதே உதவியை வேறு யாரும் என்னிடம் கேட்டிருந்தால் நான் செய்து முடித்திருப்பேன். பாதிப்பு நமக்கு இல்லாத இடத்தில் நம்மால் பொருமையாக சிந்தித்து செயல்பட முடியும், நம் சார்ந்தவற்றில் ஏற்படும் பாதிப்பு அதை சரிசெய்ய நேரும் போது ஏற்படும் பதட்டம் மூளையை சிந்தனை செய்யவே விடாது.

வழங்கி வேலை செய்யமல் போனது, அவற்றை சரி செய்தது இங்கு முக்கிய தகவல் இல்லை, ஆனால் தொடர்ந்து தொடர்பில் இல்லாத ஒருவர் கண்டிப்பாக உதவுவார் என்ற நினைப்பு எனக்கு ஏன் ஏற்பட்டது ? அவர் பழகியவிதம் மட்டுமே, எத்தனையோ சேவை நிறுவனங்களுடன் தொடர்பு கொண்டுள்ளேன், அவர்களுடன் இணைந்து செயல்பட்டிருக்கிறேன், ஆங்கிலத்தில் சொல்லப்படும் ப்ரண்ட்லி முறையில் இணைந்து செயல்படுபவர்கள் குறைவே, நான் உதவி செய்யக் கோரி குறுந்தகவல் அனுப்பிய போது அவர் சீனப் புத்தாண்டு விடுமுறையில் அவரது சொந்த ஊருக்கு மலேசியா சென்று திரும்பிக் கொண்டு இருந்தாரம், அவருக்கு 4 வயதிற்குள் மூன்று குழந்தைகள் வேறு, அன்றைய நாள் சனிக்கிழமை தான் மாலை தான் திரும்பி இருக்கிறார், உடனே வரமுடியாமல் போனது, வேறு யார் என்றாலும் என்னால் முடியாது ரொம்ப அலுப்பு வருந்துகிறேன் என்று மின் அஞ்சல் அனுப்பி இருப்பார்கள். வீட்டில் உள்ளவர்களின் ஒப்புதல் பெற்று இரவு 11 மணி ஆனாலும் உதவுகிறேன் என்று உதவிக்கு வந்து அனைத்தையும் சரி செய்த போது எனக்கு கடவுளாகத் தெரிந்தார், ரொம்பவும் நெகிழ்சியாக இருந்தது, என்னையும் அதிகாலை நான்கு மணிக்கு என் வீட்டின் அருகே இறக்கிவிட்டு, அருகே காபி வாங்கிக் கொடுத்துச் சென்றார். எனது அலுவலக்த்தில் என்னுடன் நல்ல நட்புடன் இருக்கும் சீனர்கள் கூட சனி / ஞாயிறு எங்காவது அழைத்தால் வரமாட்டார்கள், சனி / ஞாயிறு குடும்பத்திற்கான நாள் என்று வெளிப்படையாகவே சொல்லுவார்கள். அவர் செய்த உதவிக்கான பணத்தை என்னால் பெற்றுத் தரமுடியும் மற்றும் அவருக்கு அந்த வேலைக்கு பணம் கிடைக்கும் என்றாலும் வேறு சிலரிடம் கேட்கப்படும் இதே போன்ற நெருக்கடி வேலை உதவிக்கு முன்கூட்டியே பணம் பற்றி பேசப்படும், விடுமுறை நாள் என்பதால் மிகவும் கூடுதலாகவே கேட்பார்கள், எந்த ஒரு வேண்டுகோளும் வைக்காமல் வந்து உதவி செய்பவர்கள் மிக மிகக் குறைவே.

நாம எப்படிப் பட்டவராக இருந்தாலும் நம்முடன் பழகுபவர்கள் எப்படிப்பட்டவர்களாக இருந்தாலும் நம்முடைய இக்கட்டான நேரத்தில் யாருடைய முகம் தெரிகிறதோ அவர்கள் தான் நமக்கு முக்கியமானவர்கள். அப்படிப்பட்டவர்கள் நமக்கு கிடைக்கலாம் கிடைக்காமலும் கூடப் போகலாம் ஆனால் அப்படிப் பட்ட முகத்தை நாமும் வைத்திருக்க வேண்டும் என்பது நான் அவரிடம் கற்றுக் கொண்டது. நமக்கான உதவி சரியான வேளையில் கிடைக்க நாமும் கொஞ்சமேனும் அதற்கான தகுதியை வளர்த்துக் கொண்டு இருக்க வேண்டும், அப்படித் தான் இருக்கிறேன் என்று அவர் வந்து உதவிய போது எனக்கும் கொஞ்சம் என்னைப் பற்றிப் பெருமையாகத் தான் இருந்தது

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்