பின்பற்றுபவர்கள்

விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விவாதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 ஏப்ரல், 2012

* சிங்கப்பூர் - மலேசியா, இந்தியா - பாகிஸ்தான் !

திட்டமிடுவதைவிட தற்செயலாக நடப்பது பல வேளைகளில் நன்றாகவே இருக்கும், நட்சத்திரப் பதிவு எழுத இரண்டு வார முன்கூட்டியே தகவல் கிடைத்து, நேரம் கிடைத்திருந்தை வைத்து, நூலகத்தில் இருந்து சில நூல்களை எடுத்து வந்து அதில் இருப்பவற்றில் சிலவற்றை எழுதலாம் என்றிருந்தேன், ஆனால் இடைப்பட்ட காலத்தில் காதில் விழுந்தவைகளை வைத்து எழுதுவதே சிறப்பு என்று எடுத்துக் கொடுப்பதாக சில நடந்தேறியது. இந்த இடுகையையும் தற்பொழுது (இன்று) எழுதுகிறேன். 

********

நானும் அலுவலக தோழர் / தோழிகளும் அலுவலகம் முடிந்ததும் ஒன்றாக செல்வது வழக்கம், அதில் வாகனம் வைத்திருப்பவர் அழைத்துச் சென்று அருகில் உள்ள தொடர்வண்டி நிலையத்தில் அல்லது பேருந்து நிறுத்ததிற்கிடையே விடுவார். அப்படிச் செல்லும் போது எதையாவது பேசிக் கொண்டு செல்வோம், சென்றவாரம் உடன் பணிபுரியும் பெண் தோழர் மலேசியாவில் இருந்து சிங்கப்பூரில் குடியேறி குடியுரிமை பெற்றவர், பேச்சின் தொடர்பில் சொன்னார், 'சிங்கப்பூரில் இருந்து மலேசியா பிரியும் முன் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு'. அதற்கு மற்றொரு நண்பர், அவரும் மலேசியவாசிதான் ஆனால் சிங்கப்பூரில் தொடர்ந்து தங்கும் உரிமை பெற்றவர், 'அப்படியெல்லாம் இல்லை, நீ போய் வரலாற்றைப் படி, நீ வரலாறு பாடத்தை பள்ளியில் சரியாகப் படிக்கவில்லை" என்று நகைச்சுவையாகக் குறிப்பிட்டார். எனக்கும் ஓரளவு சிங்கப்பூர் வரலாறு தெரியும் ஆதலால் அவர் சொன்னதை ஆமோதித்தேன்.

சிங்கப்பூரில் பிறந்து வளர்ந்தவர்கள் தவிர்த்து குடியேறிய பிறரும், மலேசியர்களும் சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான மாநிலமாக முன்பு எப்போதும் இருந்தது என்றே நம்புகிறார்கள், ஆனால் வரலாறு வேறுவிதமாகத்தான் இருக்கிறது, சிங்கப்பூர் தனி நிலமாகத்தான் வெள்ளைக்காரர்கள் மற்றும் ஜப்பானியர்களின் ஆளுமைக்குள் விழுந்திருந்தது, வெள்ளையர்களின் ஆதிக்கத்தில் இருந்த மலேசியா, சாபா, சரோவாக் ஆகிய பகுதிகள் விடுதலை அடைந்த போது சிங்கப்பூரும் விடுதலை அடைந்தது, அப்போதே தொழில் துறை மற்றும் கப்பல் கட்டுமானங்களில் சிங்கப்பூர் தனித்து இயங்கியது. வெள்ளையர்களிடம் இருந்து விடுதலைக் கிடைத்த பிறகு சிங்கப்பூர் தனிநாடாக இயங்கப் போதிய இயற்கை வளங்கள் இல்லை என்பதால் அப்போதைய சிங்கப்பூர் அரசியல் தலைவர்கள் மலேசியாவின் மாநிலப் பகுதியாக இணைந்து கொண்டனர், இது நடந்தது 31 ஆகஸ்ட் 1963, இதன் பிறகு சிங்கப்பூர் அரசியல்வாதிகள் சிங்கப்பூருக்கு சிறப்பு உரிமைகள் கோரவே, ஏற்றுக் கொள்ளாத மலேசிய தலைமை சிங்கப்பூர் தனித்து இயங்கலாமே என்று கூறி 9 ஆகஸ்ட் 1965ல் சிங்கப்பூர் தனித்து விடப்பட்டது, இருந்தாலும் நீர் மற்றும் போக்குவரத்திற்கான ஒப்பந்தங்களுடன் சிங்கப்பூர் தனித்தே இயங்கலாம் என்ற துணிவுடன் தனிநாடு என்று அறிவித்துக் கொண்டதுடன், சிங்கப்பூரை உலக வர்தக மையமாக மாற்றி, சில ஆண்டுகளிலேயே சிங்கப்பூர் வெள்ளியை மதிப்பு மிக்கதாக மாற்றி ஆசியாவின் முதலில் முன்னேறிய நாடு என்ற பெருமையைப் பெற்றுத்தந்தார் சிங்கபூர் முன்னாள் பிரதமரும் இன்றைய மதியுரை அமைச்சருமான திரு லீ க்வான் யூ. இது கடந்த 50 ஆண்டுகளில் சிங்கப்பூர் பற்றிய சுருக்கமான வரலாறு. 


சிங்கப்பூர் மலேசியாவின் மாநிலமாக இயங்கிவந்தது வெறும் இரண்டே ஆண்டுகள் தான். மற்றபடி சிங்கப்பூர் வரலாற்றில் மலேசியாவின் பகுதியாக சொந்தமாக இருந்த வரலாறே கிடையாது, தவிர மலேசியாவும் பல்வேறு குறுநில மன்னர் ஆட்சிகளால் ஒரே மொழிப் பேசுபவர்களின் தனித்தனி மாநிலமாகவே இருந்தது, மலேசியாவின் பழங்குடிகள் மலைவாசிகள் தான், இன்னும் அவர்கள் மலைவாசிகளாகவே சொல்லப்பட்டு அவர்களை பூமி புத்ரா என்று கூறித் தனிச்சலுகையும் பெறுகிறார்கள், பின்னர் இந்த பூமி புத்ரா சலுகைக்குள் மலாய்காரர்களும் பெரும்பான்மை என்னும் அரசியல் காரணங்களுக்காக இடம் பெற்றுவருகின்றனர், அங்கேயே பிறந்து வளர்ந்த சீனர்களுக்கு அந்த உரிமை கிடையாது. 

இதே போன்று தான் இந்தியச் சொல்லாடல்களில் பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்து பிரிந்து சென்றது அல்லது பாகிஸ்தான் என்பது இந்தியாவிலிருந்து பிடுங்கிக் கொள்ளப்பட்ட பகுதி என்கிற கருத்தியல் இந்திய மக்களிடம் வரலாறாகச் சொல்லப்படுகிறது, பரதன் ஆண்டான் என்கிற எழுதப்படாத நம்பிக்கைத் தவிர்த்து மொத்த இந்தியாவையும் ஒரே குடையின் கீழ் ஆண்ட மன்னர்கள் இந்தியாவில் இல்லை, பல குறுநில மன்னர்கள் மொழி வாரி அடிப்படையில் ஆட்சி செலுத்தி வந்தனர், அவர்களுக்குள் ஒற்றுமைகள் என்பதே இல்லாமல் இருந்தது, தமிழகத்தைப் பொருத்த அளவில் சேர, சோழ, பாண்டிய பரம்பரைகளும் அவர்கள் ஆளுமைக்குட்பட்டவைகள் மூன்று நாடுகளாக அறியப்பட்ட வரலாற்றை ஒப்பிட்டு மொத்த இந்தியாவையும் பார்க்க நூற்றுக் கணக்கான மன்னர்கள் இந்தியாவெங்கும் பல்வேறு நாடுகளாகப் பிரித்து ஆட்சி செய்திருக்க வேண்டும், ஒரே மன்னரின் ஆளுகைக்குள் இருந்திருந்தால் மொகலாயர்களோ அதற்கு முன் லோடிகளோ, கில்ஜிகளோ இந்தியாவிற்குள் நுழைந்து கைப்பற்றி இருக்க முடியாது, தவிர இஸ்லாமிய மொகலாய ஆட்சியாளர்களின் ஆட்சிக்காலம் வெறும் 200 ஆண்டுகள் தான் அவர்களாலும் மொத்த இந்தியாவையும் கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை, அல்லது அந்த முயற்சிக்கு முன்பே வெள்ளையர்கள் வசம் இந்தியா வீழ்ந்ததால் ஒட்டுமொத்த இந்தியாவை ஆண்ட பெருமையை வெள்ளையர்களே பெற்றார்கள்.

மதவாத இஸ்லாமியர் மற்றும் பெரும்பான்மை இந்துக்கள் என்ற அடிப்படையில் வெள்ளையர்கள் விட்டுச் சென்ற பாரதம், பாகிஸ்தான் என்றும் இந்தியா என்றும் தனித்தனி பகுதிகளாக தற்பொழுது அறியப்படுகிறது, பாகிஸ்தானில் அங்குள்ளப் பாடத்திட்டத்தில் பாகிஸ்தானில் இருந்து பிரிக்கப்பட்ட / பிடுங்கப்பட்ட பெரும்பகுதி நிலப்பகுதியே இந்தியா என்று சொல்லப்படுகிறது என்கிற பாடம் இருந்தால் நமக்கு ஏற்பாக இருக்குமா ? ஆனாலும் இந்தியப் பாடங்களாக தேசப்பற்று என்ற ஊசியாக போடப்படுவது பாகிஸ்தான் இந்தியாவின் பகுதியாக இருந்தது என்பதே, கிழக்கு பாகிஸ்தான், மேற்கு பாகிஸ்தான் அரசியல் ரீதியாக பிரிந்த பிறகும் பங்களாதேஸ் பாகிஸ்தானின் பகுதியாக இருந்தது என்று எப்படிச் சொல்ல முடியாதோ அப்படித்தான், அப்படி இருந்திருந்தால் பாகிஸ்தானின் பெயர் இன்றும் மேற்கு பாகிஸ்தான் என்றே சொல்லப்பட்டு வந்திருக்கும், அரசியல் காரணங்களுக்காக நிலப் பரப்புகளின் பெயர்களை வைத்துக் கொள்கிறார்களே தவிர ஒன்றில் இருந்து மற்றொன்று பிரிந்தது என்பதெல்லாம் வெறும் அரசியல் பேச்சுகள் தான், வடகொரியா தென்கொரியா இவைகளில் உண்மையான கொரியா எது என்பதற்கு விடைகள் கிடையாது, கொள்கை ரீதியாக அவர்களின் அரசியல் சார்ந்த நிலம் பிரிந்து பெயர் வழங்கப்படுகிறது.

ஒரு பேச்சுக்கு அல்லது வெற்றிகரமாக இந்தியாவை வளர்ப்பதற்கு இந்தியா வட இந்தியா தென் இந்தியா என்று பிரிவதாக வைத்துக் கொள்வோம், அப்போது எது இந்தியாவில் இருந்து பிரிந்தது என்று எப்படிச் சொல்வது எதை உண்மையான இந்தியப் பகுதி என்று எப்படிச் சொல்வது ?

  • சிங்கப்பூர் மலேசியாவிற்கு சொந்தமான நாடு இல்லை
  • பாகிஸ்தான் இந்தியாவிற்கு சொந்தமான நாடு இல்லை (வேண்டுமானால் பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் பாகிஸ்தான் இருந்தது என்று சொல்லலாம், அதே பிரிட்டிஸ் இந்தியாவின் பகுதிக்குள் இலங்கையும் உண்டு)
  • பங்களாதேஸ் பாகிஸ்தானுக்கு சொந்தமான நாடு இல்லை
  • இலங்கை எந்த ஒரு காலத்திலும் இந்தியவிற்கு சொந்தமான நாடாக இருந்ததே இல்லை.
  • அந்தமான் நிக்கோபார் நில அமைப்பின் படி இந்தோனேசியாவின் சுமத்திரா தீவின் தொடர்ச்சியாக இருக்கிறது, ஞாயமாகப் பார்த்தால் அது இந்தோனேசியாவின் பகுதியாக அல்லது தாய்லாந்தின் பகுதியாக தொடர்ந்திருக்கும், இந்திய கைதிகளை அடைக்கப் பயன்படுத்தியதால் வெள்ளைக்காரர்கள் அதை கொடையாக இந்தியாவிற்குக் கொடுத்து இந்தியப் பகுதியாக மாற்றிச் சென்றனர்.

6 நவம்பர், 2009

சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் !

உலகில் இருக்கும் அனைத்தையும் படைத்ததவன் இறைவன் என்பதாக அவ்வப்போது ஆன்மிகவாதிகளால் சொல்லப்படுகிறது, இதே கருத்து மதவாதிகளிடமும் பலமாகவே உள்ளது. மதவாதிகள் மதத்தை மார்கெட் செய்யும் உத்தியில் தங்களை முழுமனதாக ஊக்கப்படுத்திக் கொள்ளுவதற்கு 'தங்கள் இறைவனும், தங்கள் வேதபுத்தகமுமே' முழுக்க முழுக்க உண்மையானது மற்றவையெல்லாம் மனிதர்களே படைத்துக் கொண்டார்கள், போலியானவை என்று விளம்பரம் செய்வார்கள் அல்லது பிற மதங்களைப் பின்பற்றும் மனிதக் குழுக்களிடம் இருக்கும் குறைகளைக் குறிப்பிட்டு, அவை நீங்கள் பின்பற்றும் மதத்தின் காரணாமாக அமைந்தது என தூற்றுவார்கள்.

அனைத்தையும் படைக்கும், இயக்கும் இறைவன், நடைபெறும் மதவெறிச் செயல்களுக்கும், இயற்கைச் சீற்றங்களுக்கும் காரணமா ? என்றால், அது மனிதர்களின் தவறான செயல் என்றும், இயற்கைச் சீற்றங்கள் பற்றிய மழுப்பலான பதில்களே வருவதுண்டு. இதற்கெல்லாம் ஏற்றுக் கொள்ளும் வகையிலான சிறப்பான விளக்கம் எந்த ஒரு மதத்திலும் இல்லை என்பதே உண்மை. தனிமனித, இனக்குழு செயல்களுக்கும், இயற்கையின் போக்கில் ஏற்படும் மாற்றங்களுக்கெல்லாம் மதமோ, மதங்கள் காட்டும் இறைவனோ பொறுப்பு ஏற்றுக் கொள்ளமுடியுமா என்ன ? விட்டுத்தள்ளுவோம், அவை என்றுமே பதில் பெற முடியாத கேள்விகள். வேதப்புத்தகங்களிலும், மதப்பற்றாளிடமும் அனைத்து கேள்விகளுக்கும் விடை இருக்கும் என்று நினைப்பது ஞாயமற்றது

தன்மதம் மனிதர்களிடையே ஒற்றுமை போற்றும் என்பதாகவும், பிற மதங்கள் பிரிவினையை ஏற்படுத்தக் கூடியதாக அம்மதங்களிலேயே சொல்லப்பட்டுள்ள உண்மை என்றெல்லாம் வியாக்யானங்கள் வருவது உண்டு.

இந்துக்களின் வேதம் எனச் சொல்லப்படும் பகவத் கீதை பற்றிய சர்சைகள் ஒருபுறம் இருந்தாலும் (இதை பொதுவான இந்து வேதம் என்று சொல்லமுடியாது, பிற மதங்களுக்கு வேதப்புத்தகங்கள் இருக்கிறது, அவை நீதிமன்றங்களில் சத்தியவாக்குப் பெற பயன்படுத்தப்படுகிறது என்பதால் வைணவ தத்துவ நூல்களில் ஒன்றான பகவத்கீதை பாலகெங்காதாரா திலகர் போன்றோரால் முன்மொழியப்பட்டது, இந்திய சமயங்கள் அனைத்தையும் இந்து மதம் என்று சொல்வதால், பகவத் கீதை பொதுவானது என்று சொல்லப்படுவது நிராகரிக்கக் கூடியதும் ஆகும், குறிப்பாக சிவனை வழிபடுபவர்களுக்கு பகவத் கீதை சிவ நெறிகளைவிட உயர்ந்தது கிடையாது) , பகவத் கீதையின் கீழ்கண்ட செய்யுள் எப்போதும் பெரிதும் சர்சை செய்யப்படுகிறது, குறிப்பாக பகவத் கீதையின் தத்துவங்கள் சார்ந்த பிற செய்யுள்களை அறிந்திடாத பகுத்தறிவாளர்களும், பிறமதத்தினரும் தெரிந்துவைத்திருக்கும் ஒரே செய்யுள்,

"சதுர் வர்ணம் மயா சிருஷ்டம் குண கர்ம விபாகஷ:
தஸ்ய கர்தாரம் அபி மாம் வித்யாகர்தாரம் அவ்யயம்"
- பகவத் கீதை

இதன் பொருளாகக் கூறப்படுவது யாதெனில்,

நான்கு வர்ணங்களை உருவாக்கியவன் நானே. ஒருவனின் குணத்திற்கும் கர்மத்திற்கும் செயலுக்கும் ஏற்றவாறு நான் உருவாக்கினேன். மனிதர்கள் தம்மை செம்மைப்படுத்தி மேன்மை அடைய நாம் அவற்றை படைத்தோம், மனிதர்களின் செயல்கள் குணம் அமைப்பு படி அவர்களுக்கான வருணம் அவர்களுக்கு கிடைக்கிறது அவற்றை நான் படைத்திருப்பினும், நான் செயலற்றவன், அழிவற்றவன் என்று உணர்.

அண்மையில் இஸ்லாம் தொடர்புடைய சில நூல்களைப் படிக்கும் போது கீழ்கண்ட குரான் வசனம் ஒன்றையும் அதன் பொருளையும் படிக்க நேர்ந்தது

“மனிதர்களே! நாம் உங்களை ஓர் ஆணிலிருந்தும் பெண்ணிலிருந்தும் படைத்தோம். பிறகு நீங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமாகிக் கொள்ளும் பொருட்டு உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம். உண்மையில், உங்களில் இறைவனிடத்தில் அதிக கண்ணியம் வாய்ந்தவர்கள் அதிக இறையச்சம் கொண்டவர்கள்தாம்“. (குர்ஆன் 49:13)

மேற்கண்ட குரான் வசனங்களில் இன அமைப்பைக் குறிப்பிடும் 'உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்' என்பதற்கும், பகவத் கீதைக் குறிப்பிடும் 'நான்கு வருணமாக அமைத்தோம்' என்பதற்கும் பெரிய வேறுபாடு இருப்பது போல் தெரியவில்லை, ஏனெனில் இவை கூறப்பட்ட காலங்களில் இனங்களை ('உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் அமைத்தோம்') இருந்ததை குரான் சுட்டி இருப்பதும், 'நான்கு வருணங்கள்' இருந்ததை பகவத்கீதை சுட்டுவதாகவும் தான் கொள்ள முடிகிறது. நான்கு வருண அமைப்புகள் அரேபியாவில் இருந்திருந்தாலும், இன அடிப்படை அமைப்புகள் இந்தியாவில் இருந்திருந்தால் பகவத்கீதை மற்றும் குரான் வசனங்களில் இடம் பெரும் சொற்கள் அதற்கேற்றவாறு மாறி இருந்திருக்கும் என்பதைத் தவிர்த்து வேறெதும் வேறுபாடு இருக்காது என்றே நினைக்கிறேன். ஏனெனில் நடப்பில் இருந்ததைத்தான் இரண்டுமே சொல்கின்றன.

வருண அமைப்பிற்கும், இன அமைப்பிற்கும் பொறுப்பேற்கும் இரு வேதங்களில் ஒன்று மட்டுமே எப்போதும் தூற்றப்படுகிறது. இனக்குழுக்குள் வருணம் வேற்றுமை போற்றுகிறது என்றால், உலக அளவில் மனிதருக்குள் இனவேறுபாடுகள் அதைச் செய்கின்றன. இந்தத் தூற்றலை பகுத்தறிவாளர்களும் ஒருபக்கச் சார்பாக செய்துவருவது தான் வேடிக்கை.

என்னைக் கேட்டால், இவைகள் முறையே பகவத் கீதை காட்டும் வருணம், குரான் குறிப்பிடும் இனம் ஆகியவை உண்மை என்று ஒப்புக் கொள்ளும் போது, "வருணங்களைப் படைத்தோம் என்பதும், உங்களை சமூகங்களாகவும், கோத்திரங்களாகவும் (இனம்) அமைத்தோம்" என்கிற இரண்டுமே நிராகரிக்கக் கூடியதே, ஏனெனில் மனிதர்கள் பிரிந்து கிடப்பதே இது போன்ற பேதங்களினால் தான்.

13 அக்டோபர், 2008

வீட்டில் விஷேசம் எதும் 'உண்டா' ?

தலைப்பைத் தொட்டுத்தான் இந்த பதிவு, திருமணம் ஆகி அடுத்த மாதத்தில் மருமக(ள்) வாந்தி எடுக்கவில்லை என்றால் இப்பொழுதெல்லாம் உடனே மலடி பட்டம் கட்டுவதில்லை என்றாலும், 2 - 3 மாதம் சென்று 'என்ன ஆச்சு ...?' என்று கேட்பது நடப்பில் தான் இருக்கிறது.

பிள்ளைகளுக்கு திருமணம் செய்து வைப்பது கடமை என்று நச்சரித்து திருமணம் செய்து வைத்துவிடுவார்கள் (பயலும் வேண்டாம்... வேண்டாம் என்று ஒப்புக்குச் சொல்வதும் உண்டு) அதன் பிறகு, எத்தினி நாளைக்குத்தான் சுவற்றை வெறித்துப் பார்பது, எங்களுக்கும் பேரனோ, பேத்தியோ பெத்துக் கொடுக்கக் கூடாதா ? என்று கேட்க ஆரம்பித்து அனத்த ஆரம்பிப்பார்கள், முக்கால் வாசி பெற்றோர்கள் 'பேரனை'ப் பெற்றுக் கொடு என்றே கேட்பார்கள். [எனக்கு விளங்காதது ஒன்றே ஒன்று தான், மகன் / பேரன் வேண்டும் என்று விரும்புவர்களுக்கெல்லாம் அவனுக்கு மனைவியாக ஒரு பெண்ணைத்தானே தேர்ந்தெடுப்பார்கள், எவனாவது இளிச்ச வாயன் நிச்சயம் மகனுக்கான பெண்ணை பெற்றுக் கொள்வான் என்று நினைக்கிறார்களோ? :) ..... ]

இப்போதெல்லாம் திருமண வயது, பெண்களுக்கு 25க்கு மேல், ஆண்களுக்கு 30க்கும் மேல் என்றாகிவிட்டது. திருமணத்தின் போது மணமகன்களில் பலர் எல்லாவற்றையும் சம்பாதித்து வைத்திருக்கிறார்கள். சூழல்காரணமாக திருமணம் செய்துகொள்ளும் இந்த வயதினர் கூட தங்களுக்குள் புரிந்துணர்வையும், இல்லத்தைநடத்தும் பக்குவத்தையும் பெற ஓர் ஆண்டாவது ஆகும். பெரும்பாலும் இந்தவயதினர் வயதின் காரணமாக உடனடியாக குழந்தை பெற்றுக் கொள்வதுண்டு. இதில் குறை சொல்லவோ, நிறை சொல்லவோ ஒன்றும் இல்லை, முழு இல்லவாழ்க்கை என்பது குழந்தை(கள்) இன்றியமையா(த)து.

ஆனால் ஓரளவு இளம் வயதில் மணம் முடிக்கும் 21 - 29 வயதுக் காரர்களை யெல்லாம் உடனேயே குழந்தைகள் பெற்றுக் கொள்ளச் சொல்லி வற்புறுத்துவது அவ்வளவு சரியான செயலே இல்லை, எப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதை அவர்களின் விருப்பத்திற்கே விட்டுவிடுவது தான் நல்லது. முதலில் கணவன் - மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் புரிந்து கொள்ளவேண்டும், அவர்கள் இருவருக்குமான மகிழ்ச்சியையும், நெருக்கத்தையும் வளர்த்துக் கொண்டு இரு ஆண்டுகளாவது வாழ்ந்தால் தான் அது அவர்கள் இருவருக்கான தனிப்பட்ட வாழ்க்கையாகவும் அது இருக்கும், குழந்தை பிறந்துவிட்டாலே நமது இந்தியர்கள் தியாகிகள் ஆவது இயல்புதான் அது தவறாகவும் தெரியவில்லை [இப்பெல்லாம் நிறைய டிஸ்கி போடாமல் எழுதவே முடியல :)], ஆனால் அதற்கு முன்பு இருவருக்குமான வாழ்க்கையை கொஞ்சகாலமாவது வாழ்ந்து இன்புற்று இருக்க வேண்டும். அதன் பிறகு அவர்களுக்கான தனிமை, அவர்களுடைய வாரிசுகளுக்கு திருமணம் முடித்த பிறகுதான் கிடைக்கும்.

என்னைப் பொறுத்த அளவில் 30 வயதைக் கடந்தவர்கள் இரண்டு ஆண்டுக்குள்ளும், அதற்கும் கீழே உள்ளவர்கள் இரண்டு ஆண்டுகள் கழித்தும் அவர்களின் முழுவிருப்பத்துடன் யாருடைய வற்புறுத்தலுமின்றி குழந்தை பெற்றுக் கொள்வதே சரி என்று நினைக்கிறேன்.

இப்போதெல்லாம் பெற்றோர்களுடன் சேர்ந்து நண்பர்களும், வீட்டில விஷேசம் 'உண்டா ?' என்று டார்சர் செய்கிறார்கள், என்று அண்மையில் மணம் முடித்த ஒரு நண்பர் புலம்பினார்.

நண்பரின் புலம்பல் ஞாயமானதா ? இளம் வயது இணையர்கள் (தம்பதிகள்) குழந்தை பெற்றுக் கொள்வதில் விரைவு(அவசரம்) காட்டச் சொல்லி பெற்றோர்களோ, நண்பர்களோ தலையிடுவது ஞாயமா ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்