பின்பற்றுபவர்கள்

மகப்பேறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மகப்பேறு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

27 ஆகஸ்ட், 2010

பிறந்த மற்றொரு புது உலகம் - குட்டிக் கோவியார் !

முதலில் குட்டிக் கோவியார் வருகைக்கு அலைபேசி, பதிவு, Buzz, மின் அஞ்சல், குறுஞ்செய்தி மற்றும் நேரில் என பல்வேறு வகையில் வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி மற்றும் குட்டிக் கோவியாரின் வணக்கம்.




*****

ஐந்தாண்டுக்கு முன்பு வரை இருந்த இரண்டாம் குழந்தை ஆசை பிறகு மெல்ல மெல்ல காணாமல் போனது, காரணம் பெரிதாக இல்லை, ஒரு குழந்தையையே வீட்டில் வைத்து வளர்க்க (வேறு) வழியில்லாமல் பள்ளி முடிந்ததும் மாணவ காப்பகத்திற்கு அனுப்பி வைத்து மனைவியோ, நானோ இருவரில் முன்பே செல்லும் ஒருவர் அலுவலகம் முடிந்த பிறகு அழைத்துவரும் நிலையில் இரண்டாவது தேவையா ? என்கிற எண்ணம் தான். பிறகு சென்ற ஆண்டு மகளாகவே கேட்கத் துவங்கினாள், எங்கு சென்றாலும் பல இடங்களில் இரு குழந்தைகளைப் பார்த்துவிட்டு.....'நம்ம வீட்டில் ஏன் இன்னொரு பேபி வரவே இல்லை.......எப்போதான் வருமோ ?' என்று ஒருவித ஏக்கமாக கேட்க்கத் துவங்கினாள். பொருளியல் தேவையை சீராக வைத்திருக்கவும், மகளின் எதிர்காலத்திற்கு நல்லக் கல்வியைக் கொடுக்கவும் எண்ணம் இருப்பதால் உடனடியாக மனைவி வேலையை விட மனதில்லா சூழலில் 'பணிப் பெண்ணை அமர்த்திப் பார்த்துக் கொள்ளச் செய்யலாம்.....இரு குழந்தைகளை மாணவ காப்பகத்தில் விடுவதும் பணிப்பெண் வைத்திருப்பதிற்கும் மிகப் பெரிய செலவின வேறுபாடுகள் இல்லை என்பதால் இரண்டாம் குழந்தை பெற்றுக் கொள்வது என்று முடிவாகியது.

இருந்தாலும் எங்களது வயது ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு அடுத்து பெண் குழந்தையாகப் பிறந்தால் அவளுக்கு திருமணம் முடிக்கும் வரை கூட பொறுப்புணர்வு என்கிற டென்சன் இருக்குமே என்கிற டென்சன் இருக்கத்தான் செய்தது. எப்படி இருந்தாலும் நம் குழந்தை தான், அப்படியே பெண்ணாக பிறந்தாலும் ஏற்கனவே இருக்கும் மகளைப் போல் இன்னொரு மகள் தானே பிறப்பாள், அவளை நேசிப்பது உண்மை என்றால், அவள் செயல்களை போற்றுவது உண்மை என்றால் பிறக்கப் போகும் மற்றொரு பெண் குழந்தையையும் அவ்வாறு நேசிக்க முடியாமலோ போய்விடும் ? என்றெல்லாம் எண்ணம் தோன்ற ஆணோ பெண்ணோ எதுவாகிலும் சரி என்ற முடிவில் செயலாற்ற, மகள் தனக்கு உடன்பிறப்பு வேண்டும் என்று சொல்லிவிட்டு பள்ளி விடுமுறைக்குச் தமிழகம் சென்ற அந்த திங்களிலேயே அவள் ஆசை நிறைவேறத் துவங்கியது.

என் மகள் தெளிவாக இருந்தாள், தம்பி தங்கச்சி எதுவாகிலும் என்னுடையவர்கள் தானே என்று சொல்லிக் கொண்டு இருந்தாள். சிங்கையில் குழந்தை வளர்ச்சியை ஸ்கேனிங்க் செய்து பார்க்கும் போது பாலினம் தெரிய துவங்கும் ஐந்தாம் திங்களில் பெற்றோர்கள் விரும்பினால் குழந்தையின் பாலினம் பற்றிச் சொல்லிவிடுவார்கள். அவ்வாறு தெரிந்து கொள்வது பெற்றோர்களின் உரிமை என்பதால் சிங்கையில் பாலினம் தெரிந்து கொள்வது சட்டப்படி எந்த குற்றமும் இல்லை. ஐந்தாம் மாதத்தில் பிறக்கப் போவது ஆண் குழந்தை என்று சொல்லிவிட்டார்கள், இருந்தும் குழந்தை பிறக்கும் வரை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்பது மனைவியின் அடிப்படை பயம் கலந்த கட்டளையாக இருந்தது. நெருங்கிய நண்பர்கள் தவிர்த்து இரண்டாம் குழந்தை பற்றி யாரிடமும் சொல்லவில்லை.

கடைகுட்டி, மூத்தவ(ள்)ன், நடுவுள்ளவ(ள்)ன் என்கிற செல்லப் பெயர்களெல்லாம் தற்போதான இருகுழந்தை கட்டுப்பாடுகளினால் காணாமல் போய்விட்டது, சித்தி, சித்தப்பா, பெரியம்மா, பெரியப்பா, அத்தை, மாமா இதில் ஏதோ ஒன்று தான் இரு குழந்தைகளாக பிறக்கும் குழந்தைகளின் வாரிசுகளுக்கு கிடைக்கும் உறவுப் பெயர்கள், அதிலும் ஒரே குழந்தையாக வளரும் குழந்தைகள் வளர்ந்து திருமணம் ஆனதும் தன்னைப் போன்றே தனித்து பிறந்தவர்களை திருமணம் செய்ய அவர்களின் வாரிசுகளுக்கு இந்த உறவு முறைகளில் எதுவுமே கிடைக்காது.

பெண்ணோ ஆணோ எந்த குழந்தையும் சரி என்று முடிவு செய்திருந்தாலும் ஏற்கனவே பெண் குழந்தை இருப்பதால் இரண்டாவதாக ஆண் குழந்தை என்று அறிந்த போது கூடுதல் மகிழ்ச்சி தான் ஏற்பட்டது. மகப்பேறுக்கு முதல் நாள் வரையில் சீனர்கள் அலுவலகம் சென்று வருவார்கள், ஆகஸ்ட் 30 ஆம் தேதி பேறு நடக்கலாம் என்று மருத்துவர் சொல்லி இருந்தார் இன்னும் நாள் இருக்கிறதே என்பதாக அலுவலகம் சென்று வந்து கொண்டிருந்தார் மனைவி. எல்லாம் நல்லபடியாக சென்று கொண்டிருக்க கடந்த 17 ஆம் தேதி அலுவலகம் சென்று திரும்பியதும், அருகில் இருந்த கடைத் தொகுதிக்குச் தன் தாயாருடன் சென்று திரும்பும் நேரத்தில் பனிக்குடம் உடைந்துவிட்டதாக உணர்ந்த மனைவி மகிழுந்தில் ஏறி உடனே வீட்டுக்கு வந்தார். பனிக்குடம் முழுதாக உடையாமல் கசிவாக இருந்ததால் சிறுது நேரம் வீட்டில் இருந்துவிட்டு வலி ஏற்பட்டதுடன் செல்லலாம் என்று காத்திருந்தோம், மேலும் கசிவு ஏற்பட..உடனடியாக வலி ஏற்பட்டால் பதட்டம் ஆகிவிடும் என்பதால் உடனடியாக இரவு 11:50 வாக்கில் மருத்துவமனைக்கு புறப்பட்டோம். மருத்துவ மனையில் சோதனை செய்து மகப்பேறு அறையில் உடனடியாக சேர்த்துவிட்டார்கள், நானும் மகப்பேறு அறையில் மகள் பிறக்கும் போது இருந்தது போலவே அருகில் இருந்தேன்.

17 ஆம் தேதி முடிய 18 ஆம் தேதியும் முடிய போகும் நேரம் வரை குறைவாக விட்டு விட்டு வலி ஏற்பட்டது தவிர்த்து பெரிதாக வலி ஏற்படவில்லை, பனிக்குடம் முழுதாக கசிந்தும் குழந்தை சரியான அமைப்பில் இருந்தும் வெளிவர முயற்சிக்காமல் வழக்கம் போல் உதைத்துக் கொண்டு தான் இருந்தது, ஆனால் நாடித் துடிப்பு குறையத் துவங்கியது, பனிக்குடத்தில் தண்ணிர் இல்லை என்றால் தொப்புள் கொடி சுருங்கி குழந்தைக்குச் செல்லும் இரத்த ஓட்டம் குறைய நாடித் துடிப்பு குறையுமாம் , உணர்ந்து கொண்ட மருத்துவர் உடனடியாக அறுவை சிகிச்சை செய்து எடுப்பது தான் தாய்கும் சேய்க்கும் நல்லது என்று சொல்லி, என்னை அனுப்பிவிட்டு அறுவை சிகிச்சை அறைக்கு சென்று, 18 ஆம் தேதி இரவு 11:55 வாக்கில் அறுவையை துவங்க சரியாக இரவு 12 மணி தாண்டிய சில நிமிடங்களில் ஆங்கில நாள் படி ஆகஸ்ட் 19ல் குழந்தையின் தொப்புள் கொடியை வெட்டி தாயையும் சேயையும் பிரிக்கப்பட்டார்களாம். அறுவை சிகிச்சை அறையில் கணவரை அனுமதிக்கமாட்டார்கள். அறுவை முடிந்து தையல் போடும் நேரத்தில் குழந்தையை குழந்தைகள் வைக்கும் இடத்திற்கு கொண்டு வந்திருந்தார்கள். நல்லிரவுக்கு மேல் என்பதால் அங்கு கண்ணாடி தடுப்பு இருந்ததும் நாங்கள் பார்க்க வசதியாக அருகில் தள்ளிக் கொண்டு வந்து விட்டனர். ஈரம் முற்றிலும் காயாத நிலையில் பிறந்த 10 ஆம் நிமிடத்தில் கழுத்தைத் திருப்பி அனைவரையும் நன்றாகப் பார்த்து பிறகு மெலிதாக சிரித்தான்.

பிறக்கும் குழந்தை பெயரில்லாமல் பிறக்கக் கூடாது என்பது என் விருப்பம் அதனால் மகளுக்கும் பிறக்கும் மூன்று திங்களுக்கு முன்பே பெயரை முடிவு செய்து பிறந்த மறுநாளே பிறப்பு சான்றிதழில் பதிந்துவிட்டேன். அதே போன்று மகனுக்கும் பெயரை முடிவு செய்யும் போது தமிழ் பெயர் தான் கண்டிப்பாக வைக்க வேண்டும் என்ற உறுதியில் இருந்தேன், கூப்பிட எளிதாக அழகாக இருந்தால் எந்தப் பெயராக இருந்தாலும் சரி என்று சொல்லி இருந்தார் மனைவி. பத்து பெயர்கள் வரை முடிவு செய்து அதில் இரண்டை தெரிவு செய்து மனைவியிடம் சொன்னேன். எல்லோருக்கும் பிடித்தப் பெயராக இருக்க வேண்டும் என்பதாக அதிலிருந்து அவர் தெரிவு செய்து முடிவு செய்தப் பெயர் தான் 'சிவ செங்கதிர்' கூடவே மனைவி பெயரின் முதலெழுத்து, என் பெயரின் முதலொழுத்து சேர்த்து 'GK சிவ செங்கதிர்' என்று மருத்துவமனையை விட்டு வீட்டுக்குச் செல்லும் முன்பே பதிந்து பதிவு சான்றிதழ் பெற்றுவிட்டு சென்ற சனிக்கிழமை வீட்டுக்கு வந்துவிட்டோம். படுக்கையில் அடிக்கடி மகனின் ஒண்ணுக்கு தீர்த்தம்.....வீட்டில் மகிழ்ச்சி மழை தான்.

சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் பால்புட்டி, பால்பவுடர், பேம்பர்ஸ்..... ஈரத் தாள்...வாங்கச் சென்று வருகிறேன். இன்னொரு புது உலகம் எனக்கு கிடைத்து போன்று உணர்வுகளாக மகிழ்ச்சியில் திளைக்க வைத்துக் கொண்டிருக்கின்றான் மகன் கதிர் .

பின்குறிப்பு : பதிவர்களில் பலர் என் நெருங்கிய நண்பர்களாகவும் நலம் விரும்புவர்களாகவும் இருக்கிறார்கள், அவர்களுக்கு தனித்தனியாக அறிவிக்க நேரமின்மையால் இடுகை வழியாக அறிவிக்க, தெரிவிக்க இப்பதிவை எழுதினேன். மற்றபடி இதைப் பதிவாகவே எழுதுவது எனக்கு தயக்கமான ஒன்று தான்.

16 அக்டோபர், 2008

பிறக்காத குழந்தையின் ஜாதகம் !

சிங்கையில் மிகவும் வியப்படையும் வாழ்க்கை முறையில் கர்பிணி பெண்கள் குழந்தை பெறும் முந்தைய நாள் வரையில் வேலைக்குச் செல்வது தான். காரணம் அவ்வளவு சிறப்பானது இல்லை. கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் செல்வதால், கற்பகாலத்தின் முதிர்ந்த நாள்களில் வீட்டில் இருந்தாலும் ஒத்தாசைக்கு யாரும் இருக்க மாட்டார்கள், அதற்கு பதிலாக பலர் பார்வையில் அலுவலகத்திற்குச் சென்று வந்தால், ஓரளவு மன துணிவுடன் இருப்பார்கள். வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்களிலும் பெற்றோர்களுடன் வசிப்பவர்கள் மிகக் குறைவு காரணம் பெற்றோர்களின் வயது முதல் பல சூழல்கள். எனவே மகப்பேற்றிற்கு மனைவியை இந்தியாவிற்கு அனுப்பாதவர்கள் தவிர்த்து அனைவரின் நிலையும் பரிதாபமானது தான். இவ்வளவு துயரமும் நல்லவற்றையும் தருகிறது, கணவன் செய்யும் ஒத்தாசைகள், கணவன் மனைவிக்கு இடையே உள்ள அன்பை இருவரும் புரிந்து கொள்ள அது நல்ல வாய்ப்பாக அமைத்திருக்கும்.

வெளிநாடுகளில் பிறக்கும் குழந்தை ஆணா / பெண்ணா என்பதை விருப்பம் இருந்தால் அறிந்து கொள்ளலாம். அது சட்ட எதிரானதும் அல்ல. அப்படி தெரிந்து கொள்ளும் போது குழந்தைக்கு பெயர் வைப்பது முதல், முதல் குழந்தையாக இருந்தால் அதனை வளர்க்கும் முறைகளெல்லாம் கற்பக் காலத்தில் அறிந்து கொள்வார்கள். ஆண் / பெண் பாகுபாடு இல்லாததால் என்ன குழந்தைகள் தெரிந்து கொண்டு எவரும் மனம் உடைந்து போவதும் இல்லை. பெற்றோர்கள் தங்கள் குழந்தை பிறக்கும் வரை மற்றவர்களுடன் தங்களுக்கு என்ன குழந்தை பிறக்கப் போகிறது என்று பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். குழந்தையைக் கொடுப்பது கடவுள் என்ற நம்பிக்கையில் இருக்கும் நம் தேசத்தவர்கள் தான் பெண்குழந்தை என்று அறிந்து கொண்டால், அதை கருவிலேயே அழிக்கவும் அல்லது பிறந்தவுடன் கள்ளிப் பால் ஊற்றவோ, குப்பைத் தொட்டியில் போடவும் துணிவு உள்ளவர்கள். நம் நாட்டிற்கு பிறக்கும் முன் ஆண் / பெண் பால் அறிந்து கொள்வதை தண்டனைச் சட்டமாக வைத்திருப்பது மிகச் சரியே.

குறிப்பிட்ட மருத்துவ மனையில், குறிப்பிட்ட மகப்பேறு மருத்துவரிடம் தான் மாதப் பரிசோதனை முதல் மகப்பேறு வரை செல்வதே எந்த நாடாக இருந்தாலும் நடைமுறை. நாங்களும் அவ்வாறு இந்திய மருத்தவ பெண்மணியிடம் ஆலோசனைக்குச் சென்றுவந்திருக்கிறோம், சரியாக குழந்தை பிறக்குப் போகும் 3 வாரத்திற்கு முன்பு சென்று அவரை அலோசனைக்காக சந்தித்த போது, 'நான் பதினைந்து நாளில் வெளிநாட்டிற்கு மேற்படிப்புக்குச் செல்கிறேன், அடுத்த வாரம் டெலிவரி செய்துடலாமா ?' என்று கேட்டார். மனைவியும் நானும் ஒருவரை ஒருவர் வியப்புடன் அச்சத்துடன் மாறி மாறி பார்க்க, 'இருவாரங்களில் செயற்கைத் தூண்டலின் வழி குழந்தை பிறக்க செய்ய முடியும்... நான் உங்களை அவசரப்படுத்தவில்லை, உங்களுக்கு இயற்கைகையாக வலி எடுத்து பிறக்கும் நாளில் குழந்தை பிறக்க உதவியாக வேறொரு மருத்துவரை வேண்டுமானால் பரிந்துரைக்கிறேன்...நீங்கள் யோசித்து சொல்லுங்கள்... எனக்கு உங்களின் மருத்துவ ஹிஸ்டரி முழுவதும் தெரிவதால் முன்கூட்டியே நானே மகப்பேறுக்கு உதவி செய்கிறேன்..." என்றார். நாங்கள் இருவரும் வெளியே வந்து யோசித்துப் பார்த்தோம்., கடைசி நேரத்தில் வேறு மருத்துவரை நாடவும் ஒப்புதல் இல்லை. இரண்டாவதாக சரியான நேரத்திற்கு குழந்தை பிறக்கும் முன் வலி எடுக்கும் போது மருத்துவ மனைக்கு அழைத்து வரவதற்கு ஆள் இல்லை என்பதால் கொஞ்சம் பயமாகவும் இருந்தது, முடிவு செய்து...செயற்கை தூண்டுதல் வழியாக மருத்துவர் சொல்வது போல் அடுத்த வாரம் பெற்றுக் கொள்ளலாம் என்று முடிவு செய்து மருத்துவரிடம் சரி சொல்லிவிட்டோம். அந்த வாரத்திலேயே என் அம்மாவும் சிங்கை வர. மருத்துவர் சொன்ன அந்த நாளில் மருத்துவமனையில் மகப்பேற்றிற்காக மனைவியைச் சேர்த்தேன். குழந்தை சரியாக திரும்பி இருந்தாலும் குழந்தை பிறக்கும் கடைசி நிமிடம் வரை வழக்கமான பிறப்பா, அறுவை சிகிச்சை வழியாக பிறப்பா என்று சொல்ல முடியாது என்று சொல்லிவிட்டார்கள். காலையில் செயற்கை தூண்டுதலுக்காக கொடுத்த மருந்துகள் மாலை 4 மணிக்குத்தான் வேலை செய்ய ஆரம்பித்து வலி எடுக்க ஆரம்பித்து நல்லிரவு தாண்டியே பிறந்தது.

வெளிநாட்டில் இருக்கும் ஆண்களுக்கு மகப்பேறு நேரத்தில் மனைவியுடன் இருக்கும் வாய்ப்புக் கிடைக்கும், நானும் அவ்வாறு எனது மகள் பிறக்கும் போது அருகில் இருந்திருக்கிறேன். பிரசவ வேதனை என்று சொல்வதை ஆண்கள் உணர்ந்து கொள்ள அது ஒரு வாய்ப்பு. வலி தெரியாமல் இருக்க உடலை வளைத்து முதுகு தண்டுவடத்தில் ஊசி ஏற்றி.....அதையும் மீறி எடுக்கும் வலியில் பெருகும் கண்ணீரும், வேதனையான கூப்பாடும் அருகில் இருக்கும் கணவன் அறிந்து கொள்ளும் போது அடுத்த ஓர் ஆண்டுக்குள் இன்னொரு குழந்தைக்கு எந்த கணவனும் ஆசைப்பட்டு மனைவியை தொல்லை படுத்த மாட்டான். அதுமட்டுமல்ல... குழந்தை வெளியே வரும்போது வழி குறுகலாக இருந்தால் நேரம் மிகுந்து எடுக்கும், குழந்தைக்கு எதும் நேர்ந்துவிடலாம் என்று அதைத் தவிர்க்க பிறப்பு உறுப்பின் கீழ் பகுதியை ஒரு அங்குலம் அளவிற்கு கத்திரிக்கோளால் வெட்டிவிடுவார்கள், பீறிட்டு அடித்து குளமாக தேங்கும் இரத்ததையோ, வெட்டியதையோ அறியமுடியாத அளவுக்கு, பெண்கள் அதைவிட பெரிய வலியை தாங்க முயன்று கொண்டி இருப்பார்கள். வெட்டிய கீழ் பகுதியை குழந்தை பிறந்த அடுத்த நிமிடமே மருத்துவர் தைத்துவிடுவார். அது குணமாக ஒரு மாதத்திற்கு மேல் ஆகும். எல்லா நாட்டிலும் 50 விழுக்காட்டிற்கு பெண்களுக்கு மகப்பேறின் போது பிறப்புறுப்பில் கத்தரிவெட்டு விழுவது நடைமுறைதான். அப்படி நடப்பதை பெண்கள் ஆண்களிடம் சொல்வது கிடையாது, மிகவும் எளிதாக குழந்தை பெற்றுக் கொள்பவர்கள் விழுக்காட்டு அளவில் 20 விழுக்காடு கூட இருக்காது.


********

தலைப்புக்கு வருவோம்,

கொடுப்பினை (அதிர்ஷ்டம்) என்பதே எதிர்பாராமல் நிகழ்வதுதானே, பிறந்த நேரத்தை வைத்துத்தான் ஜாதகங்கள் எழுதப்படுகிறது. அதிர்ஷ்டத்தை தனது வாரிசுகளுக்கு ஆக்கிக் கொள்ள இப்பொழுதெல்லாம் பெற்றோர்களே குழந்தை பிறக்கும் நேரத்தையும் தீர்மாணிக்கிறார்கள், இந்த கூத்தெல்லாம் இந்தியாவில் தான் நடக்கிறது, இதற்கு மருத்துவர்களும் முழு ஆதரவு என்பதை நினைக்கும் பொழுது மருத்துவத் தொழிலின் புனிதம் கூட கேள்விக் குறியாகிறது. சரத்குமார் - ராதிகா தம்பதிகள், தங்கள் பெற்ற குழந்தைக்கு நாடாளும் ஜாதக நேரத்தை ஜோதிடர்களுடன் ஆலோசித்து, சரியான நேரத்தில் சிசேரியன் செய்து குழந்தையை வெளியே எடுத்தார்களாம். தமிழ்நாட்டில் முதன் முறையாக(?) அடுத்த காமராஜர் ஆட்சி சரத்குமாரின் மகன் தான் தலைமையில் ஏற்படுமோ ?

குழந்தை பிறக்கும் நேரத்தையும், நாளையும் மனிதர்கள் தீர்மாணிக்கும் அளவுக்கு சென்று விட்ட காலத்தில், ஒரு குழந்தை பிறந்த நேரத்தை வைத்து எழுதப்படும் ஜாதகம் எந்த அளவுக்கு சரி ? பிறந்த பிறகுதான் ஒருவரின் ஜாதகமே பலனுக்கு வருகிறது என்று சொல்லப்படுவதால், பிறக்காத குழந்தைக்கு பிறக்கும் நேரத்தை மனிதர்களே முடிவு செய்து கொள்வதால், 'இந்த நேரத்தில் தான் இந்த குழந்தை பிறக்கும்' என்பது யாருடைய ஜாதகத்தில் எழுதப்பட்டு இருக்கும் ?

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்