பின்பற்றுபவர்கள்

விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விஜயகாந்த் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

29 மார்ச், 2009

"கை" காட்டும் விஜயகாந்த் !

ஒவ்வொடு தேர்தல் கூட்டத்திலும், அதிமுகவும், திமுகவும் (ஏற்கனவே) ஊழல் செய்துவிட்டன அதனால் எனக்கு(ம்) வாய்ப்புக் கொடுங்கள் என்கிறார் விஜயகாந்த் :)

ஏற்கனவே காங்கிரசுடன் போட்டுக் கொண்டுள்ள (மறைமுக) ஒப்பந்தத்தின் படி, காங்கிரஸார் நிற்கும் தொகுதிகளில் தேமுதிக தனது வேட்பாளரை நிறுத்தப் போவதில்லை என்பதை பல்வேறு செய்தி இதழ்கள் அறிவிக்கின்றன, தேமுதிகவின் இந்த உதவிக்கு பண்டமாற்றாக தேமுதிகவின் தேர்தலுக்கு ஆகும் ( பல கோடிகள்) செலவுகளை காங்கிரஸ் கவனித்துக் கொள்வதாக ஒப்பந்தமாம்.

விஜயகாந்தின் தேர்தல் முழக்கத்தைக் கேட்போருக்கு இவை வெளிச்சமாகவே தெரிகிறது, தமிழக திராவிடக் கட்சிகளை சாடும் வி.காந்த் மறந்தும் கூட காங்கிரஸ் ஆட்சியை விமர்சிப்பது இல்லை. 40 தோகுதிகளிலும் தேமுதிக நிற்பதாக எந்த கூட்டத்திலும் அறிவிக்கவில்லை. இதன் மூலம் தெரியவருவது என்ன வென்றால் தமிழக காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பிரச்சாரம் செய்கிறதோ இல்லையோ ஆனால் காங்கிரஸ் வேட்பாளர்களை எதிர்த்து தேமுதிக வேட்பாளர்களை நிறுத்தாது என்று அறிய முடிகிறது. இதனை உறுதி படுத்தும் விதமாக, வி.காந்த், நான் "கை" காட்டும் வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என்கிறார்.

"கை" மற்றும் அதன் அல்லக்கைளின் வேட்பாளர்களை துடைத்தொழிக்கப்பட வேண்டும் என்பதே பெரும்பாண்மை ஈழ ஆதரவு தமிழர்களின் நிலை. கை ஆதரவு நிலை எடுத்திருக்கும் தேமுதிகவும் ஈழ ஆதரவு தமிழக வாக்களர்களால் (அடையாளம்) கண்டு கொள்ளப் போகிறார்கள். "கை" காட்டும் விஜயகாந்துக்கு அவரது கையே அவருக்கு கிடைக்கும் வாக்குகளில் கை வைத்து விடும் போல் ஊகிக்க முடிகிறது. இது மறைமுக மாக அம்மா கூட்டணிக்கு லாபமாக மாறி வெற்றி வாய்ப்புகளை கூட்டும்.

மக்களோடும் தெய்வத்தோடும் கூட்டணி என்கிறார் வி.காந்த். மற்றவர்களெல்லாம் மாக்களோடும் பேய்களோடும் (சத்தியமாக நான் காங்கிரஸ் பற்றி சொல்லவில்லை) கூட்டணி வைத்திருக்கிறார்களா என்ன ?

20 அக்டோபர், 2008

வி.காந்தின் ஈழத்தமிழர்கள் பற்று !

ஈழவிடுதலை போராட்டத்தின் ஆரம்ப காலங்களில் ஈழத்தமிழர்களுக்கு தமிழக தமிழர்களிடம் பேராதரவு இருந்த பொழுது, அதைத் தன் புகழுக்காக பயன்படுத்திக் கொண்டதைத் தவிர்த்து வி.காந்த் ஈழத்தமிழர்களுக்கு என்ன செய்தார் ? கேப்டன் பிரபாகரன் என்ற படத்தில் நடித்தார். தமிழர்களுக்கு பிரபாகரன் மீது இருந்த பற்றினால் வி.காந்துக்கு பெரிய அளவில் ஆதரவு கிடைத்தது. முன்னாள் இந்திய பிரதமரின் படுகொலைக்குப் பிறகு பலரைப் போலவே இவரும் ஒதுங்கிக் கொண்டார். பலசோதனைகள் வந்தாலும் ஈழ விடுதலை ஆதரவை விலக்கிக் கொள்ளாத பழ.நெடுமாறன் ஐயா மற்றும் சுப.வீரபாண்டியன், பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் இராமதாஸ் மற்றும் தொல்.திருமாவளவன் ஆகியவர்கள் போன்று தொடர்ந்து ஆதரவு அளித்தவர் அல்ல வி.காந்த்.

தற்போதைய சூழலில் தமிழர் தலைவர்களில் பெரும்பாலோனர் இந்தியா இலங்கைக்கு ஆயுதம் வழங்குவது வெளிப்படையாக தெரிந்த போது அதை எதிர்த்துவரும் வேளையில், இந்திய அரசின் நிலையை ஆதரித்தவர் தான் வி.காந்த். இந்திய ஆயுதங்களால் கொல்லப்படுபவர்கள் ஈழத்தமிழர்கள் மட்டும் அல்ல இராமேஷ்வரம் மீனவர்களும் தான் என்று கூட இவருக்குத் தெரியாதது போல் தொடர்ந்து அதே நிலையில் தான் இருக்கிறார். தற்பொழுது கலைஞர் கருணாநிதி ஈழத் தமிழர்கள் நசுக்கப்படுவதை எதிர்த்து தனது மைய அமைச்சர்களை பதவி விலகச் சொன்னது, வி.காந்துக்கு வேறு மாதிரி தெரிகிறதாம். அதாவது மைய அமைச்சர் ராஜாவின் மீது சொல்லப்பட்டுள்ள ஸ்பெக்டரம் ஒதுக்கீடு தொடர்பான ஊழல் புகார்களை மறைப்பதற்க்காக கலைஞர் ஈழத் தமிழர்கள் பக்கம் ஆதரவு காட்டுவதாக சொல்கிறார்.

பற்றி எரிகிற வீட்டில் பிடுங்குவது ஆதாயம் என்பது போல் தனது கட்சி வளர்ச்சிக்காக தமிழன உணர்வோடு செயல்படுபவர்களையெல்லாம் இப்படி கண்டபடி தூற்றித்தான் வி.காந்த் அரசியல் செய்யவேண்டி இருக்கிறது போலும். கருணாநிதிதான் நாடகம் ஆடுகிறார், ஈழத்தமிழரின் நலம் விரும்பியாக தன்னைக் காட்டிக் கொண்டு வளர்ந்த வி.காந்த் இந்த இக்கட்டான வேளையில் அவர்களுக்காக எந்தவிதமான போராட்டம் அல்லது தீர்வைச் சொல்லுகிறார் என்று யாராவது சொல்லுங்களேன். கலைஞர் அரசின் மத்திய அமைச்சர்கள் அப்பழுக்கற்றவர்கள் என்று சொல்லவரவில்லை. ஆனால் அதையெல்லாம் மறைக்கத் தான் அவர்களின் ஈழ ஆதரவு என்று சொல்லும் வி.காந்தின் குற்றச் சாட்டுகள் படுகேவலமானது. இவற்றையெல்லாம் அரசியல் செய்து, தமிழர்கள் கொண்டிருக்கும் ஈழ மக்கள் ஆதரவுக்கு எதிராக குழப்பம் ஏற்படுத்த முயலும் இவரிடம் தெளிந்த அரசியல் செய்யக் கூடிய முதிர்ச்சி இருப்பது போலவோ, ஈழத்தமிழர்களுக்கு ஆதரவோ இருப்பதாக தெரியவில்லை.

24 செப்டம்பர், 2008

விஜய்காந்தை எதிர்க்கும் வடிவேலுவின் தகுதி ?

'வி'னா 'வா'னா விவாகரத்தில் வடிவேலு அதுவும் சின்ன கவுண்டர் படத்தில் விஜயகாந்த்துக்கு குடை பிடித்தவர் அவரை எதிர்த்து தேர்த்தலில் போட்டி இடுவேன் என்பதும் அதற்காக கட்சி ஆரம்பிப்பேன் என்று கூறுவதெல்லாம் சரியா ? என்பது போல் சில கருத்துக்களை சில இடங்களில் படிக்க நேர்ந்தது.

இந்த அளவீட்டில் பார்த்தால் விஜயகாந்த் கலைஞர் காலில் பொது நிகழ்ச்சியில் பலமுறை விழுந்து இருக்கிறார். கலைஞருடன் அரசியலுக்கு ஆதரவளித்து தன்னை திமுக ஆதரவாளனாகவே காட்டிக் கொண்டு இருந்தார். இப்போதெல்லாம் அவர் கலைஞருக்கு கொடுக்கும் மதிப்பு எல்லோரும் அறிந்தது தான். மூத்த அரசியல் வாதி, வயதானவர் என்பதைக் கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாது, விஜயகாந்த் செய்தி இதழ்களுக்கு பேட்டி அளிக்கையில் கைதேர்ந்த அரசியல் வாதியாக மட்டுமே தெரிகிறாரேயன்றி, நலமான அரசியல் நடத்துபவராகத் தெரியவில்லை.

அரசியல் என்று இறங்கிவிட்டாலே முன்பு தெரிந்தவர், மூத்தவர், குடைபிடித்தவர் என்றெல்லாம் கிடையாது, போர்களத்தில் எதிரே நிற்பவர் போன்று தான், இது தவறுதான் என்றாலும் விஜயகாந்த் இதைச் சரியாகச் செய்கிறார். வடிவேலு அப்படி செய்யக் கூடாது என்பது மட்டும் என்ன ஞாயம் ?

வடிவேலுக்கு தகுதி இருக்கிறதா ? என்பது போல் கேட்கப்படும் கேள்விகளெல்லாம் நிராகரிக்கப் படவேண்டியவை. வடிவேலு அரசியலில் ஈடுபடுவதும் தொடர்ந்து நகைச்சுவை நடிகராக இருப்பதும் அவருடைய விருப்பம், நாட்டின் கடைசி குடிமகன் வரையிலும் அரசியலுக்கு வரும் தகுதி இருக்கிறது. தகுதி, திறமை, முன்பு இப்படி இருந்தாயே என்பது போல் பேசுவதெல்லாம் ஆண்டை மனப்பான்மையே. அரசியலில் மேலே வந்தவர்களில் பலர் விபத்தாக வந்தவர்கள், போட்டியில் வந்தவர்கள், வாரிசாக வந்தவர்கள் என்றெல்லாம் இருக்கிறது, யாருமே பிறவி அரசியல் வாதியாகப் பிறக்கவில்லை.

விஜய்காந்துக்கு கலைஞரைக் கேள்வி கேட்க என்ன தகுதி இருக்கிறதோ, அதே தகுதி வடிவேலுவுக்கும் உண்டு !

வடிவேலு தொடர்ந்து கைப்புள்ளையாக, நகைச்சுவை நடிகராக இருக்க வேண்டும் என்று தான் நான் விரும்புகிறேன்.

17 பிப்ரவரி, 2008

மீனுக்கு தலை - விஜயகாந்தின் அரசியல் !

கட்சி ஆரம்பிக்கும் போது திராவிட கட்சிகளின் தொண்டர்களைக் குறிவைத்து கட்சியின் பெயராக தேமுதிக அதாவது தேசிய முற்போக்கு 'திராவிடக் கழகம்' என்று பெயர் வைத்தார் வி.காந்த். அண்ணன் கட்சிப் பெயரிலேயே தேசியமும் திராவிடமும் பேசுகிறார் பாருங்கள் எல்லாம் வசதிக்காகத்தான். எம்ஜிஆர் கூட தனது கட்சியை அ.இ. ( அனைந்து இந்திய) அதிமுக என்று வைத்தார், அதைக் கொஞ்சம் மாற்றி 'அனைத்து இந்திய' என்றால் தேசியம் தானே, அதனால் 'தேசியம்' தழுவிய பெயராக வைத்தார் வி.காந்த். இப்போவவது நம்புங்கப்பா, 'விஜயகாந்த் ஏன் தன்னை எம்ஜிஆரின் வாரிசு என்று சொல்கிறார்' என்று. எனக்கு ஒன்னும் வயிற்றெரிச்சல் இல்லை. நல்ல இருக்கட்டும். :). முன்னோட்டம் இல்லாமல் பதிவெழுதினால் என்ன சொல்கிறோம் என்று புரியவில்லை என்பார்கள். விசயத்துக்கு வருவோம்.

மீனுக்கு தலை, அதாவது
விஜயகாந்த் வெளிப்படையாக அரசியல் பேசிய காலத்தில் இருந்தே திமுக சார்பாக இருந்தவர். சில நேரங்களில் கலைஞர் தனக்கு அரசியல் ரோல் மாடல் என்று கூறிக் கொண்டவர். பொதுமேடையில் கலைஞரின் காலைத் தொட்டு கும்பிட்டு உபிகளின் நெகிழ்சியை நுகர்ந்திருக்கிறார். தன்னை ஒரு திராவிடப் பற்றாளன், கொள்கையாளன் என்று தான் இதுவரைக் காட்டிக் கொண்டார். கட்சியின் பெயரிலும் திராவிடம் இருக்கிறது. கட்சி ஆரம்பித்தபோது ராகுகாலம், எமகண்டம் எல்லாம் பார்த்து விபூதி சகிதத்துடன் ஆரம்பிக்கப்பட்ட கட்சி துவக்கவிழா ஒரு 'இந்து திருவிழா' போன்றே நடந்தது. பலதரப்பு மக்களையும் இந்துக்களை குறிவைக்கும் உத்தியோ. நல்லா வளரட்டுமே. :)

பாம்புக்கு வால், அண்மையில் நடுவன் அமைச்சர் அருண்குமாரை விமானத்தில் சந்தித்தப்போது தன் குடும்பம் 'காங்கிரஸ் பாரம்பரியம் கொண்டது, அப்பா, தாத்தா எல்லோரும் காங்கிரஸ், நானும் மூப்பனாரோடு நெருக்மாக இருந்தவன். எதிர்கால அரசியல் இளைஞர்கள் கையில் இருக்கிறது, தமிழகத்தில் என் பின்னால் இளைஞர்கள் திறள்கிறார்கள், தேசிய அளவில் காங்கிரசில் ராகுல் காந்திக்கு பின்னால் இளைஞர்கள் திறள்கிறார்கள். தேமுதிகவின் கொள்கை(?)யும் காங்கிரஸ் போன்றதுதான். எனவே நாம் அடுத்த தேர்தலில் கூட்டணி அமைத்து தேர்தலை சந்திக்கலாம்' என்று சொல்லி இருக்கிறார். காமராஜருக்கு பின் கோட்டையை பிடிக்காத காங்கிரசுக்கு விஜயகாந்தின் ஆசை வார்த்தை 'தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி' கனவு கோட்டையை ஏற்படுத்தி இருக்கிறது. தாரளமாக கூட்டணி அமையுங்கய்யா. நல்லா இருங்க.
:)


***

தனித்து 2011ல் கோட்டையைப் பிடிக்கும் வி.காந்தின் கனவு 2016க்கு தள்ளிச் சென்றுவிட்டது போல் தெரிகிறது. 2011ல் தங்கள் ஆட்சி என்று சரத்குமார் கூறிக் கொண்டிருக்கிறார். ஷங்கர் முதல்வன் பகுதி 2 எடுத்தால் இவர்கள் யாரையாவது ஒருவரை வைத்து எடுக்கலாம். இந்த பத்திக்கு முன்பே இடுகை முடிந்துவிட்டது. :)))

25 டிசம்பர், 2007

விஜயகாந்தின் விளம்பர 'அரசியல்'

சட்டமன்ற தேர்தலில் தேமுதிக 8.5% விழுக்காடு ( மொத்த வாக்குகளில் அல்ல, பதிவான வாக்குகளில்) பெற்றதால் தேமுதிக மூன்றாவது பெரிய கட்சி என்ற செய்தியை அந்த கட்சியே வலிய பரப்பியது, அதன் தலைவர் விஜயகாந்தைத் தவிர வேறு யாரும் டெபாசிட் கூட வாங்கவில்லை என்பது வேறுவிசயம். 30 இடங்களில் மட்டுமே கூட்டணி அமைத்து போட்டி இட்ட காங்கிரசும், 234 தொகுதிகளிலும் அறிமுகமே இல்லாதா வேட்பாளர்களை நிறுத்திய தேமுதிக மூன்றாவது பெரிய கட்சியா ? என்றெல்லாம் கேட்காதீர்கள். பெற்ற ஓட்டு எண்ணிக்கைத்தான் கணக்கு :) இதை விட கூத்து மதுரை இடைத்தேர்தலில் தேமுதிக 2 ஆவது இடத்திற்கு வந்ததால் கட்சி வளர்ச்சி அடைந்துவிட்டதாம், திமுக, அதிமுக ஆகிய கட்சிகளுக்கு மாற்றாக தேமுதிகவை மக்கள் நினைக்க ஆரம்பித்துவிட்டார்களாம். அரசியல் கட்சிகள் எப்படியெல்லாம் அள்ளிவிடும் என்பதை தற்போது ஆரம்பிக்கப்பட்ட தேமுதிக புரியாதவர்களுக்குக் கூட வெளிச்சம் போட்டு காட்டுகிறது.

விஜயகாந்தின் கல்யாணம் மண்டபம் முறையற்று கட்டி இருந்து மத்திய அரசால் இடிக்கப்பட்டால் அதையும் அரசியலுக்காக பயன்படுத்திக் கொண்டு 'தேமுதிக வளர்வது பிடிக்காமல் அழிக்க நினைக்கிறார் கருணாநிதி' என்ற குண்டை தூக்கிப் போட்டு வந்தார். டிஆர் பாலு இதையெல்லாம் புறம்தள்ளி இடித்துத் தள்ளிவிட்டார். விஜயகாந்த் வாரிசு அரசியல், குடும்ப அரசியல் பற்றி வாய்திறக்க மாட்டார். காரணம் உங்களுக்கே தெரியும். :)

'இராமர் எந்த கல்லூரியில் படித்து பாலம் கட்டினார் ? என்று கருணாநிதி கேள்வி எழுப்பினார் என்பதற்காக 'திருவள்ளுவர் எந்த காலேஜில் படித்தார் ?' என்ற கேள்வி எழுப்பி தனது தமிள்(?) பற்றை மெய்பித்தார் விஜயகாந்த். இது வீம்பிற்காக மீடியாவில் தம்பெயரும் கட்சியின் பெயரும் வரவேண்டுமென்பதற்கான வரட்டு அரசியல். இப்பொழுதெல்லாம் திமுகவையோ, கருணாநிதியையோ குறைச் சொல்லி நாளொரு அறிக்கை விடாவிட்டால் அடுத்த தேர்தலுக்குள் தன்னையோ, தன் கட்சியையோ பொதுமக்கள் மறந்துவிடுவார் என்று நினைக்கிறார் போல, காரணம்,

நேற்று மதுரையில் எம்ஜிஆர் நினைவு நாளுக்கு மாலை போடுவது யார் என்ற போட்டா போட்டியில் அதிமுகவும், தேமுதிக தொண்டர்கள் அடித்துக் கொண்டு கலவரம் வரை சென்று கைது நடவடிக்கை எடுக்கப்பட்டு, கலவரத்தில் ஈடுபட்ட தேமுதிகவினர், அதிமுகவினர் சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றன. கருப்பு எம்ஜிஆர் என்ற பெயரில் இவரது கட்சி தொண்டர்கள் இவரை அழைப்பதைத் தவிர்த்து எம்ஜிஆருக்கும் தேமுதிக / விஜயகாந்துக்கும் எந்த தொடர்பும் இல்லை. இதை தெரிந்த அதிமுகவினர், மேலும் மதுரையில் தேமுதிகவினால் ஓட்டுக்கள் பாதிக்கப்பட்டதாக நினைக்கும் அதிமுகவினர், தேமுதிகவினர் எம்ஜிஆருக்கு மாலை அணிவிப்பதை எப்படி பொறுத்துக் கொள்வார்கள் ?

இதில் ஈடுபட்டு சிறை சென்ற தொண்டர்களைப் பற்றி சிறிதும் கவலையின்றி பழியைத் தூக்கி திமுகமீது போட்டு 'தேமுதிகவின் வளர்ச்சி பொறுக்க முடியாத திமுகவின் தூண்டுதலால் அதிமுக - தேமுதிக தொண்டர்கள் மோதிக் கொள்கிறார்கள்' என்று மீடியாக்களுக்கு பேட்டி அளிக்கிறார். கருணாநிதி ஆட்சியில் இவர் வளர்ந்து, வளர்ச்சியைப் பற்றி பேச முடிகிறது, இதுவே ஜெ ஆட்சியாக இருந்தால் விஜயகாந்த் மீது கஞ்சா வழக்கே பாய்திருக்கும்.

திமுகவின் ஓட்டு வங்கி வைகோ பிரிந்து சென்ற போது எவ்வளவு இருந்ததோ அதே அளவில் தான் இருக்கிறது, அதிமுகவின் ஓட்டு வங்கி எம்ஜிஆர் ரசிகர்களால் உருவானது, சினிமா மோகம் உள்ள வாக்காளர், திரை கதாநாயகனை பார்த்து வாக்களிக்கும் வாக்களர்கள் அதிமுகவில் தான் இருக்கிறார்களேயன்றி திமுகவில் இல்லை, அப்படி இருந்த்திருந்தால் திமுகவினால் நிறுத்தப்பட்ட நடிகர்கள் எவரேனும் தேர்தலில் வென்றிருக்க வேண்டும். நெப்போலியன், டிராஜேந்தர் தவிர்த்து திமுக சார்பில் நடிகர்கள் வென்றதே இல்லை. திமுகவின் வெற்றி அல்லது வளர்ச்சி சினிமா ரசிகர்களால் தீர்மாணிக்கப்படுபவை அல்ல. பின்பு ஏன் திமுக அதிமுகவின் சினிமா ரசிகர்களின் வாக்கு தேமுதிகவிற்கு சொல்வதைத் தடுக்கப் போகிறது ? திமுகவைப் பொறுத்து தேமுதிக அதிமுகவின் ஓட்டுகளைப் பிரிக்கும் கட்சி. வளர்ச்சியை தடை செய்வதைவிட வளர்த்துவிடவே கருணாநிதியும் விரும்புவார். இது விஜயகாந்துக்கு தெரியாதா ? தெரியும், மேலும் இதுதெரிந்த,

ஜெவின் எதிர்ப்பை, அதிமுகவின் எதிர்ப்பை சமாளிக்கவே கருணாநிதிமீது அள்ளித்தெளிப்பதும், அட்டாக் செய்வதுமாக, தன் இருப்பைக் காட்டிக் கொள்ளவும் விளம்பர அரசியல் செய்வதில் தேமுதிகவின் / விஜயகாந்தின் கொடி பறக்கிறது.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்