பின்பற்றுபவர்கள்

19 ஜனவரி, 2014

தேவ மொழி ஆகிவரும் ஆங்கிலம் !

மொழி என்பது பண்பாட்டுக் கூறுகளை உள்ளடக்கியது, இதில் எந்த ஒரு மொழியும் விதி விலக்கு இல்லை, மொழிகளின் அழிவுக்கு அதனை பேசுபவர்களின் பொறுப்பின்மையும், அதன் மீது பூசப்படும் அளவுக்கு மிகுதியான புனிதமும் தான் காரணமாக இருக்க முடியும், ஒரு மொழியின் வளர்ச்சி பற்றி அதனை தாய்மொழியாக பேசுபவர்கள் தவிர்த்து யாரும் அக்கறை கொள்வதில்லை/தேவையுமில்லை, இருந்த போதிலும் தமிழகத்தில் பிறந்தவர்கள், வாழ்ந்தவர்கள் பல்வேறு மாநிலத்தை சார்ந்தவர்கள் நாடுகளைச் சார்ந்தவர்களும் தமிழ் மொழி வளர்ச்சிக்கு பாடுபட்டுள்ளனர்.

இன்றைய நாள்களில் ஆங்கிலம் தவிர்த்து பட்டப்படிப்பின் வழியாக படித்து சோறுபோடும் மொழிகள் அரிது. எனவே தான் ஆங்கிலத்திணிப்பையும் பிறமொழித் திணிப்பையும் ஒப்பிட முடியாது. ஆங்கிலம் தவிர்த்து மூன்றாம் மொழியை கற்றுக் கொள்ளும் பொழுது பேசுபவர் தவிர்த்து கேட்பவருக்கும் பயன் தான். அது ஒரு தகவல் தொடர்பு என்ற அளவில் மட்டுமே பயன் தரும், நமக்கு அன்றாட வாழ்க்கைக்கு பயனாக இருக்கும் ஆங்கிலத்தை எளிமையாகவும் புரியும்படியும் பேச வேண்டும், எழுத வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் ஆங்கிலம் பற்றிய பொதுவான புரிதல் அதனை பேசுபவர்களிடையே இலக்கணம் குன்றாமல் பேசவேண்டும் என்றெல்லாம் அறிவுறுத்துகிறார்கள்.

எந்த ஒரு மொழியும் கால போக்கில் சிதையும் என்பதற்கு ஆங்கிலம் விதிவிலக்கு இல்லை, அதனால் தான் அமெரிக்க ஆங்கிலம், ஆப்ரிக்க ஆங்கிலம், ஆஸ்திரேலிய ஆங்கிலம், இங்கிலாந்து ஆங்கிலம் என்ற வேறுபாடுகள் விளைந்துள்ளது, உலகத்திலேயே ஆங்கிலத்தை மிக எளிமையாக மாற்றி பேசும் வழக்கம் சிங்கப்பூரிலும் அருகே மலேசியாவிலும் உண்டு, சிங்கை ஆங்கிலத்தை சிங்க்லிஸ் என்பார்கள், நாமெல்லாம் சரியாக முறைபடியான ஆங்கிலம் பேசுவதில்லை என்று 'ஸ்பீக் குட் இங்கிலிஸ்' என்ற அரசால் கூட அறிவுறுத்தப்பட்டது, ஆனாலும் நான் அறிந்தவரையில் சிங்கையில் ஆங்கிலத்தில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை என்பது தான்.

பேசும் மொழி எளிதாக இருந்தால் தான் அவை சில ஆண்டுகளில் எல்லோரையும் சென்று அடையும் என்பதற்கு சிங்கையில் பேசப்படும் ஆங்கிலமே நல்ல எடுத்துக்காட்டு. 90 விழுக்காடு சிங்கை ஆங்கிலம் இங்குள்ளவர்களால் பேசப்படுகிறது, வேலை நடைபெறுகிறது, தகவல் பரிமாற்றம் நடைபெறுகிறது, இதற்கு மேல் ஆங்கிலம் பேசுவதால் வெளிநாட்டிலிருந்து வரும் வெள்ளைகாரர்கள் தவிர்த்தும், இங்குள்ளவர்கள் வெளிநாட்டிற்கு சென்றாலும் பயன் என்பதும் தவிர்த்து வேறொன்றும் இல்லை.

'அவன் பேசுற இங்கிலேசைப் பாரு, இதுக்கு பேசமாலே இருக்கலாம்' என்று நக்கல் அடிப்பவர்கள், ஒரு முறை சிங்கப்பூர் வந்தால் ஆங்கிலம் குறித்த அவர்களது மாயையும், எண்ணிய புனிதமும் அடிப்பட்டு போகும். தாய் மொழியில் வினைச்சொற்களையெல்லாம் ஆங்கிலத்தில் சொல்லி 'பண்ணி' த்தமிழ் பேசுபவர்களும் கூட ஆங்கிலத்தில் எவரேனும் ஈஸுக்கு வாஸ் போட்டுவிட்டால் அதற்காக வெள்ளைக்காரனுக்கு அவமானம், மரியாதை இழப்பு ஏற்பட்டுவிட்டது போல் பேசுபவரை எள்ளி நகையாடுகிறார்கள், 

ஆங்கிலமும் பல குறைகளை உள்ள மொழி தான், 26 எழுத்தில் எல்லாவற்றையும் எழுதுகிறேன் என்று பல்வேறு ஊர்பெயர்களை, பெயர் சொற்களை சிதைத்தே எழுதுகிறார்கள். வெள்ளைக்காரனுக்கு மாற்றாக ப்ரெஞ்சுகாரனோ, டச்சுக்காரனோ உலகை ஆளுமைக்குள் கொண்டுவந்திருந்தால் இன்றைக்கு ஆங்கிலத்திற்கு இருக்கும் இடம் ப்ரெஞ்சு அல்லது டச்சுக்கு கிடைத்திருக்கும், மற்றபடி ஆங்கிலம் வானத்தில் இருந்தெல்லாம் குதித்துவிடவில்லை, செம்மை ஆக்குதல் என்கிற பெயரில் ஆங்கில அகராதியில் அன்றாடம் பல மொழிகளைச் சேர்ந்த சொற்கள் சேர்க்கப்பட்டுவருகின்றன, மற்ற மொழி இலக்கணங்களை விட ஆங்கில இலக்கணம் கடினமானது மட்டுமின்றி பல குறைகள் உள்ளதும் கூட. தமிழில் ஆங்கிலத்தைப் போல பல்வேறு மொழிகளில் இருந்து கடன் வாங்கி சேர்த்தால் தமிழ் வளரும் என்று சிலர் உளறுவதும் உண்டு, அதுக்கு தான் ஏற்கனவே ஆங்கிலம் இருக்கிறதே தமிழை ஏன் கெடுக்க வேண்டும் ? பிற மொழி பேசுபவர்களுக்கு பொருளீட்டல் பயனில்லாத எந்த ஒரு மொழியும் அவர்களிடமும் வளர வாய்பே இல்லை. ஒரு தமிழன் இந்தி படித்தாலோ, இந்திகாரன் தமிழ் படித்தாலோ புதிதாக நாம் சேர்த்துக் கொள்ளும் ஒரு சொல்லால் எந்த பயனும் இல்லை, பேச்சுவழக்கிற்கு, மொழி சார்ந்த, மண் சார்ந்த கலைகளுக்கு தேவையான சொற்கள் ஒரு மொழியில் இருந்தாலே அதுவே நிறைவானது.

தமிழைத் தப்பும் தவறுமாக பேசுனாலும் எழுதினாலும், பண்ணித் தமிழ் பேசினாலும் தமிழிக்கு இழுக்கு இல்லை என்பது போன்று தான் ஆங்கிலத்திற்கும், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுவது ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் ஆசானாக இருந்தால் தவிர்த்து மற்றவர்களுக்கு அது குறையோ இழுக்கோ இல்லை. 

ஒருகாலத்தில் வடமொழி என்னும் சமசுகிரதம் இந்தியாவெங்கும் வட்டார மொழிகளில் உள்ள சொற்களை உள்வாங்கியும், கலந்தும் மொழிச் சிதைவுக்கும் வழிவகுத்து தமிழில் மணிப்ப்ரவளம் உட்பட கன்னடம், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட தென்னிந்திய மொழிகள் ஏற்பட காரணமாக அமைந்தது ஆனால் வரலாற்றையே புரிந்து கொள்ளாதவர்கள் இந்தியா மட்டுமின்றி அனைத்து மொழிகளிலும் வடமொழியில் இருந்து பிறந்தது என்று கதைக்கிறார்கள். இன்றைய ஆங்கிலப் பரவலில் உலகில் பல்வேறு மொழிகள் அழிந்துவருகின்றன, தமிழ் உள்பட பல்வேறு மொழிகள் சிதைந்தும் வருகின்றன, ஆனால் பண்டைய நாட்களைப் போல் இல்லாமல் தற்பொழுது வரலாறுகள் தொகுப்படுவதால் ஒருவேளை ஆங்கிலத்தின் வழியாக பல்வேறு வட்டார / நாடுகள் சார்ந்த ஆங்கில மொழிகள் ஏற்பட்டாலும் ஆங்கிலம் தான் அனைத்து மொழிகளுக்கும் மூலம் என்று சொல்ல முடியாமல் போகும்.

ஆங்கிலம் தவிர்த்து ஏனைய மொழிகள் அழியும் பொழுது வழிபாட்டு மொழி என்னும் சிறப்பை ஆங்கிலம் கைப்பற்றும், பின்னர் ஆங்கிலத்தின் வழியாக ஏற்படும் மொழிகளுக்கு ஆங்கிலம் தான் தேவ மொழி.

ஆங்கிலத்திற்கு தேவையற்ற முதன்மைத்துவம் கொடுத்து அதனை புனிதப்படுத்தாதீர்கள், ஆங்கிலம் தப்பும் தவறுமாக பேசுபவர்களிடம் சரியான சொல்லைச் சொல்லிக் கொடுங்கள், ஒருவர் தப்பும் தவறுமாக ஆங்கிலம் பேசுவது அவரின் தகுதி இழப்பு ஆகிவிடாது, தாய்மொழி சரியாக பிறமொழி கலப்பின்றி பேசப்படுகிறதா என்பது பற்றி பெரிய அக்கறை இல்லாத போது ஆங்கிலம் குறித்த அக்கறையெல்லாம் நமக்கு எதற்கு ? அவையெல்லாம் வெள்ளைக்காரன் கவலை !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்