பின்பற்றுபவர்கள்

பகிர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
பகிர்தல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

14 ஏப்ரல், 2012

* போகாத ஊருக்கு சில வழி !

ரு இடத்தில் மனிதனின் காலடிபடுவதால் பூமிக்கு ஒண்ணும் பெருமை கிடையாது, மனிதன் காலடிபட்டால் காடுகள் அழிக்கப்படும், மனிதர் தவிர்த்த உயிர்வாழ்க்கைக்கு அங்கு எந்த ஒரு உத்திரவாதமும் இல்லை

****

ண்டார்டிக்கா பற்றி பாட நூல்களில் படித்திருக்கிறோம், அதில் எவ்வளவு தகவல்கள் நினைவில் இருக்கின்றன என்று தெரியாது. உலகின் மிகப் பெரிய நிலப்பரப்புகளில் அண்டார்டிக்கா ஐந்தாம் இடத்தில் வருகிறது. 96 விழுக்காடு பனிக்கட்டிகளால் பரவி இருக்கும் கண்டம், தென் துருவம் இங்கு தான் அமைந்திருக்கிறது.  தெற்குமுனைப் பெருங்கடலால் முழுவதுமாக சூழப்பட்ட தீவு கண்டம். மொத்தப் பரப்பளவு 1 கோடியே 50 லட்சம் சதுர கிமீ. அண்டார்டிக்கா பல மில்லியன் ஆண்டுகளுக்கு முன் அண்டார்டிக்கா கண்டமும் பூமியின் ஒரே நிலப்பரப்பாக இணைந்திருந்து பின்னர் பிரிந்து சென்றுள்ளதாம். தற்பொழுது ஆண்டுக்கு 10 மீட்டர் என்ற அளவில் தென் அமெரிக்காவின் பக்கமாக நகர்ந்துவருகிறதாம். 


வெப்ப நிலை : அண்டார்டிக்காவின் தட்பவெப்பம் உறை நிலைக்கு கீழேயே ஆண்டு முழுவதும் இருக்கிறது, குளிர் சூறைக்காற்றுடன் குளிர்காலங்களில் அதன் வெப்ப நிலை - 82 டிகிரி, கோடை காலங்களில் கடற்கரையை ஒட்டிய பகுதிகளில் 5 டிகிரி வரை இருக்குமாம். முழுவதுமாக பனிக்கட்டியால் சூழப்பட்டுள்ளதால் பனிப்பாலைவனம் என்றும் சொல்லப்படுகிறது, கடற்கரைப் பகுதிகளில் பென்குயின் மற்றும் சீல் போன்ற கடுங்குளிர் வாழ் உயிரினங்கள் வாழ்கின்றன, மையம் நோக்கிச் செல்லச் செல்ல அதுவும் கிடையாது, சில பறவை இனங்களும், நுண்ணியிரிகளும் தென்பட்டதாக குறிப்புகள் இருக்கின்றன. அண்டார்டிக்கா என்பதற்கு  (ரோமன் மொழியில்) 'தென் முனையம்' என்பதே மொழிப் பெயர்ப்பாம். உலக நன்னீரின் 70 விழுகாடு அண்டார்டிக்காவில் மட்டுமே பனியாக உறைந்துள்ளதாம். அதெல்லாம் சேர்ந்து உருகினால் கடல் மட்டம் 200 அடிக்கு உயரும் என்கிறார்கள். அண்டார்டிக்காவில் பாலாறும் தேனாறும் ஓடவில்லை ஆனால் உறைந்த நிலையில் ஏரிகள் பல உள்ளனவாம், அவற்றிளுள் துளையிட்டு ஆராய அப்பரப்பு வியாழன் கோளின் சந்திரனை ஒத்து இருப்பதால் ஏரியில் ஏதேனும் உயிரினம் வசித்ததாக கண்டிபிடித்தால் வியாழனின் சந்திரனிலும் உயிர் வாழ்க்கைக்கு வாய்ப்புள்ளது என்று தெரியவருமாம்.

அண்டார்க்டிக்கா பற்றி நாம் முதன்மையாக தெரிந்து கொள்ள வேண்டியது அதன் கடுங்குளிர், பனிப்பாறைகள் தான் உலகின் அனைத்து கடல்களில் தட்பவெப்பங்களை சரி செய்து நாம் வாழும் நிலப்பரப்புகளின் சுற்றுச் சூழலை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது, அண்டார்டிக்காவின் பனி உருகினால் கடல் மட்டம் உயருவதுடன் வெப்பமும் மிகுதியாகும். அதனால் தான் அண்டார்டிக்காப் பகுதி பண்ணாடுகளால் சுற்றுச் சூழலுக்கு மாசு ஏற்படாத வண்ணம் பாதுகாக்கப்படுகிறது, பசிபிக் கடலில் நடக்கும் அணுகுண்டு சோதனைகள் அண்டார்டிக்காவில் நடப்பது இல்லை. ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்தில் உருகும் பனி கடல் நீரில் சேர்ந்து பின்னர் குளிர்காலத்தில் கடல் நீரிலிருந்தே பனிக்கட்டிகள் உருவாகிவிடுமாம், அதனால் அண்டார்டிக்காவின் வெப்ப நிலை தம்மைத் தாமே சரி செய்து கொள்வதாக சொல்கிறார்கள். வட துருவத்தைக் காட்டிலும் தென் துருவ அண்டார்டிக்காவில் குளிர் மிகுதி ஏனெனில் இது கடல் மட்டத்திற்கு மேலே இருக்கும் நிலப்பரப்பில் அமைந்திருப்பதால் தான் என்கிறார்கள்.




பகல் இரவு :  ஐரோப்பிய சாலைகள் அனைத்தும் ரோமை நோக்கிச் செல்கிறது என்று சொல்வது போல் அண்டார்க்டிக்காவின் மையத்தில் இருந்து எந்தப் பக்கமும் பயணம் செய்ய அது வட திசை நோக்கியே அழைத்துச் செல்லுமாம், அண்டார்க்டிக்கா தென் முனையமாக இருப்பதால் அதன் எந்த பக்கமும் வட திசை நோக்கியதே.  திசை நோக்கித் தொழ வாய்ப்பு இல்லை, பண்ணாடுகள் அங்கு ஆய்வுக்கூடங்கள் அமைத்துள்ளன, அவர்களையும் சுற்றுலாவிற்காக வருபவர்களுக்கும் அங்கு கிறிஸ்துவ தேவாலயங்கள் ஒன்று இரண்டு அமைக்கப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். ஆண்டில் ஒரே ஒரு பகலும் ஒரே ஒரு இரவும் மட்டுமே அங்கு வருகிறது.  அக்டோபர் துவங்கி பிப்ரவரி வரை சூரிய வெளிச்சம் கிடைக்கும், பின்னர் முழுவதுமாக இருட்டு தான், அந்த வேளையில் சூரியன் வட துருவத்திற்கு வெளிச்சம் கொடுத்துக் கொண்டு இருக்கும். பகலாக இருக்கும் பொழுதுகளில் சூரியன் அதிக பட்சமாக 23.5 டிகிரி கோணத்திற்கு மேல் வருவது கிடையாது, நமக்கு தெரிவது போன்று கிழக்கு உதயம் மேற்கு மறைவு போன்ற நிகழ்வுகள் கிடையாது, 0 டிகிரியில் இருந்து 23 .5 டிகிரிவரை மூன்று மாத காலம் உயரவும் பின்னர் குறைந்து அடுத்த மூன்று மாத காலமும் மறையவும் துவங்கும், சூரியன் வட்டப் பாதையில் தரையில் இருந்து வானில் 23.5  டிகிரி சாய்வில் கடிகார திசைக்கு எதிராக வளையமாக சுற்றிவருதாகத் தெரியும். துருவங்களில் சூரியப் புயலினால் தாக்கம் வண்ண வேடிக்கையாகவும், பனித்துகளின் தூசிகளால் பல சூரியன்களும், சூரியனைச் சுற்றி பெரிய ஒளி வட்டமும் (Sun Dog) காட்சிக்கு வருவது இந்தப் பகுதியில் நடக்கும் இயற்கைக் காட்சிகள்.




நேரப் பகுதி : அண்டார்டிக்காப் பகுதியை எந்த ஒரு குறிப்பிட்ட நேரப்பகுதி (Time Zone) பகுதிக்குள் அடக்க முடியததால், தனிப்பட்ட நேரம் கிடையாது, ஆனாலும் வசதிக்காக நியூசிலாந்தின் நேரத்தை ஆராய்ச்சியாளர்கள் பின்பற்றுகிறார்கள். 

மக்கள் நடமாட்டம் : அண்டார்டிக்காவில் முதன் முதலாக கால் பதித்தவர்கள் என்கிற பெருமையை 31 அக்டோபர் 1956ல் Admiral George J. Dufek  என்பவரின் அமெரிக்க கடற்படை குழுமம் பெற்றிருக்கிறது, பிறகு பல நாடுகளில் இருந்து அங்கு ஆராய்ச்சி பயணம் மேற்கொண்டவர் பலர், டிசம்பர் 30, 1989, Arved Fuchs மற்றும் Reinhold Messner ஆகிய இருவர் அண்டார்டிக்காவின் கடற்கரைப் பகுதியில் இருந்து மையம் நோக்கி நடந்தே சென்று அடைந்துள்ளனர்.  அதன் பிறகு 2009ல் Todd Carmichael என்கிற அமெரிக்கர் 39 நாட்கள் நடைபயணமாக அடைந்திருக்கிறார், பின்னர் மற்றொரு நார்வேகாரர் Hercules Inlet என்பவர் அதே தொலைவை 2011 ஆம் ஆண்டில் 29 நாட்களில் அடைந்து சாதனைப் படைத்துள்ளார்.  தற்பொழுது 1000 - 5000 பேர் ஆராய்ச்சியாளர்களாக பல நாடுகளைச் சார்ந்தவர்களாக அங்கு தங்கி இருக்கிறார்களாம்.

அண்டார்டிக்கா தனி கண்டம் என்றாலும் மையப்பகுதியில் இருந்து கோணம் கோணமாக பகுத்து அதனை அமெரிக்கா, அர்ஜென்டைனா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் பங்கு போட்டுக் கொண்டுள்ளன, அண்டார்டிக்காவிற்கு தனிப்பட்ட இணைய தள குறியீடாக .aq  (https://www.google.com/search?q=site:aq) உண்டு, அதில் 100க் கணக்கான இணைய தளங்கள் இயங்கிவருகின்றன. அண்டார்டிக்கா பகுதிகள் பல்வேல்வேறு நாடுகளால் பங்கு போட்டுக் கொண்டாலும் அந்த கண்டத்திற்கு யார் வேண்டுமானாலும் சென்று வரலாம், முழுக்கண்டமும் சுற்றுச் சூழல் பாதுகாப்பிற்காக எந்த ஒரு நாட்டின் இராணுவ செயல்பாடுகளும் தடுக்கபப்ட்டுள்ளது. கொஞ்சம் இயற்கை வளங்கள், தாதுத் பொருள்கள் இருந்தாலும் அவற்றை எடுப்பதற்கும் தடை உள்ளது.

ஓசோன் திறந்தவெளி அண்டார்டிக்காவின் மீது உள்ளது, ஆண்டுக்கு ஆண்டு பெரிதாகிவருவதால் அண்டார்சிக்காவின் பனி உருகினால் உலமே தண்ணீரில் மூழ்கிவிடும்.

அண்டார்டிக்காவில் நிரந்தரமாக வசிப்பவர்கள் யாரும் கிடையாது, பன்னாட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டு முழுவதும் ஆள் மாற்று (ஷிப்ட்) முறையில் மாறி மாறி தங்கிச் செல்கிறார்கள், மற்றபடி சுற்றுலா சாதனையாளர்கள் வந்து செல்கிறார்கள், ஆராய்ச்சியாளர்கள் தவிர்த்து வேறு யாரும் (அதாவது அக்டோபர் - மார்ச்) தவிர இரவு பொழுதுகளில் ஏப்ரல் - செப்டம்பர்) வரை வந்து செல்வது கிடையாது, சில நாட்களில் குறைவான நிலா வெளிச்சம் தவிர்த்து எப்போதும் இருட்டாகவே இருக்கும்.

சிலி நாட்டிலிருந்தும் ஆஸ்திரேலியாவில் இருந்தும் சுற்றுலா பயணிகளை அண்டார்டிக்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர், அதற்கான சுற்றுலா நிறுவனங்கள் இயங்குகின்றன. ஆஸ்திரேலியாவில் இயங்கும் சுற்றுலா நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பிப்ரவரி வரையில் விமானப் பயணங்களை ஏற்பாடு செய்துள்ளனர், இந்த விமானங்கள் அண்டார்டிக்காவில் தரையிறங்காது, ஆஸ்திரேலியாவிற்கு அருகே இருக்கும் அண்டார்டிக்காப் பகுதியில் தாழ்வாகப் பறந்து வட்டமடித்து திரும்பிச் செல்லும், அண்டார்டிக்காவின் கடும்பனியில் ஓடுதளம் அமைக்கவோ அதனை பரமரிக்கவோ வாய்ப்பில்லை என்பதால் அண்டார்டிக்காவின் குளிர் குறைவாக இருக்கும் காலங்களில் மேலே இருந்து சுற்றிப் பார்க்கும் ஏற்பாட்டை ஆஸ்திரேலியா நிறுவனங்கள் செய்துவருகின்றன.

கோடை காலங்களில் (குறைவான குளிர் காலங்களில் மற்றும் சூரிய வெளிச்சம் உள்ள காலங்ங்களில்) சிலி நாட்டின் புன்டோ ஏரிஸ் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து 100 பேர் பயணம் செய்யும் சிறிய ரக விமானங்கள் அண்டார்டிக்காவுக்கு அருகே இருக்கும் கிங்க் ஜார்ஜ் தீவிற்கு செல்கிறது, அங்கிருந்து சிறிய கப்பல் வழியாக அண்டார்டிக்கா கடற்பகுதியை அடைகின்றனர், இது 7 நாள் கொண்ட சுற்றுலாவிற்கு அமெரிக்க வெள்ளிகள் 15,000 வரை செலவாகும்.

பூமியின் வியப்புகளில் அண்டார்டிக்கா ஆகப் பெரிய வியப்பு

22 மே, 2007

மதமாற்றம் என்றால் என்ன ?

தீண்டாமை மற்றும் சமூக ஏற்றத்தாழ்வு காரணங்களை விடுவோம். ஏனென்றால் அப்படிபட்ட குற்றச் சாட்டுகளை கூறிக் கொண்டுதான் (அவற்றில் உண்மையும் உண்டு) மதம் மாற்றம் பெரிய அளவில் நிகழ்கிறது. காதல் திருமணத்தால் ஒரு கட்டாயத்தின் பேரில் மதமாற்றம் நிகழ்கிறது.

இவ்விரண்டு முக்கிய காரணங்கள் இன்றி எவரேனும் தன்னுடைய மதத்தை மாற்றிக் கொள்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். அவ்வாறு மாறுவதற்கு என்னென்ன காரணங்கள் இருக்க முடியும் ? உங்களுக்கு தெரிந்து அவ்வாறு யாரும் மாறி இருக்கிறார்களா ?

தீண்டாமை கொடுமைகள் இல்லாத ஆசிய நாடுகளில் பிலிப்பைன்ஸ், சீனா, கொரியா போன்ற பல நாடுகளில் கிறிஸ்துவத்தை மக்கள் தழுவியிருக்கிறார்கள், இஸ்லாத்தை தழுவியிருக்கிறார்கள். ஆனால் அப்படி மாறியவர்களில் எல்லோருமே புத்தமதத்தைச் சேர்ந்தவர்கள் இல்லை. குறிப்பாக மங்கோலிய இன (ஆசிய மக்களிடம்) இன வேறுபாடும் குறைவு. சிங்களர்களில் வேற்று மதத்தினர் இருக்கிறார்களா ? என்று எனக்கு தெரியவில்லை. அப்படி இருந்தால் தெரியபடுத்துங்கள்.

மதநம்பிக்கை என்பதை அந்த மதங்களைச் சேர்ந்த சடங்குகளின் நம்பிக்கையாகத் தான் பார்க்கிறேன். இறை நம்பிக்கை என்பது எல்லா மதத்திலும் இருக்கிறது என்பதை கவனத்தில் கொள்க. மதமாற்றம் என்பது மன மாற்றம் என்று பலர் சொல்கின்றனர். அப்படி மாறுகிறவர்கள் முழுதும் அந்த மதத்தை (வேத புத்தகத்தைச் குறித்து சொல்லவில்லை) தெரிந்து கொண்டு மாறுகிறார்களா ? என்று தெரியவில்லை. எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது முருகன் படங்களில் அதிகம் நடித்து பக்தி பழமாக இருந்த முன்னாள் நடிகர் ஏவிஎம் இராஜன் கிறிஸ்துவ மதத்தை தழுவியது. ஏனென்றால் இவர் வறுமையிலும் வாடியது போல தெரியவில்லை. அதே சமயத்தில் இந்துமத நம்பிக்கையில் இவருக்கு பிடிப்பு இல்லாமல் போனது ஏன் ? என்று தெரியவில்லை. அவர் பணத்துக்காக மாறினார் என்று எவரும் சொன்னால் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாது.

எனது நண்பர் ஒருவர் (10 ஆண்டுகளுக்கு முன்) மாற்று மதத்தைப் பற்றி பேசும் போது 'அவுங்க சாமிக்கு சக்தி அதிகம் இருக்கும் போல இருக்கு ... அவங்களில் நிறைய பேரு பணக்காரனாக இருக்காங்க பாரேன்' - என்றார். இறை நம்பிக்கை உடையவர்கள் 'அந்த சாமிக்கு சக்தி அதிகம் இருக்கும்' என்று நம்புகிறார்கள் என நினைக்கிறேன் உதாரணத்துக்கு திருப்பதியில் கூடும் கூட்டத்தை குறிப்பிடலாம்.

பின்குறிப்பு : மதங்களை குறை சொல்லும் பின்னூட்டங்களை இடாதீர்கள். எல்லா மதத்திலும் குறைகள் இருக்கின்றன.

8 மார்ச், 2007

சுற்றிச் சுற்றி வந்தேங்க - சென்னை 2

சிங்கையில் இருந்து கிளம்பும் முன் நண்பர் குழலியிடம் சென்னை வலைப்பதிவாளர்கள் தொடர்பு எண்கள் கேட்டிருந்தேன். பாலபாரதியின் எண்ணைக் கொடுத்து ... 'எப்போதும் வலை நண்பர்களின் தொடர்பில் இருக்கும் பாலபாரதியைப் பார்த்தீர்கள் என்றால் அவர் அங்கிருக்கும் நண்பர்களை சந்திக்க உதவுவார்' அதன் படியே முதலில் பாலபாரதியை சந்திப்போம் என்று வித்தலோகா சென்றேன். ஏற்கனவே நண்பர் குழலி என் நிழல்படம் அவரது நிழல்படக் கருவி மூலம் காட்டி இருந்தார் எனவே பாலபாராதி வித்தலோகா கடையின் கண்ணாடி தடுப்பு சுவருக்கு பின் இருந்தே என்னை அடையாளம் கண்டு கொண்டு கை அசைத்தார்.

உள்ளே சென்றேன்... மற்ற நண்பர்கள் போலவே தழுவி ... கைகுலுக்கி கொண்டோம். அவர் நல்ல உயரம் ... உயரத்துக்கேற்ற உடல் வாகு ... எதற்கும் கவலைப்படாமல் எல்லாவற்றையும் சந்திக்க முடியும் என்பது போன்ற முக உணர்வுகள் ... உண்மையிலும் இளைஞர். புத்தகக் கடையில் உள்ள புத்தகங்களைக் காட்டினார். வலையுலகை அறியாத என் நண்பர் சுஜாதாவின் நாவல்களை வாங்கினார். எனக்கு பாலபாராதியே புத்தகங்களைத் தேர்வு செய்து கொடுத்தார். 'தெரிந்தவர்களுக்கு தள்ளுபடி இல்லையா ?' என்றேன். 'அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை' எனச் சொல்ல ... புத்தகங்களில் இருந்த விலைப்பட்டியல் படி ரசீதுக்கு பணம் கொடுத்துப் பெற்றுக் கொண்டேன்.

'மற்ற வலைபதிவு நண்பர்களுக்கு தொலைபேசியில் தெரிவித்து நாளை பகல் உணவுக்கு வரச் சொல்கிறேன், நாளை பிற்பகல் 1 மணிக்கு வந்துவிடுங்கள் ' என்றார். சரி என்று சொல்லிவிட்டு அங்கிருந்து நானும் என் நண்பரும் மாலை 6 மணிக்குக் கிளம்பினோம். பின்பு தேவி காம்ளெக்ஸ் சென்று 7 மணி காட்சி 'தீபாவளி' படத்துக்கு 2 சீட்டுக்கள் பெற்றுக் கொண்டு ... படத்திற்கு நேரம் இருந்ததால் ஹக்கின் பாதாம்ஸ் சென்று எதாவது புத்தகங்கள் வாங்கலாம் என்று அங்கு சென்றேன். 'மறைந்து போன தமிழ் நூல்கள்' - மயிலை சீனி. வெங்கடசாமி எழுதிய புத்தகம் ஒன்று வாங்கிக் கொண்டேன். பின்பு மாலை 7 மணியை நெருங்க தீபாவளி படம் பார்த்துவிட்டு வீட்டுக்குச் செல்ல அன்றைய நாள் முடிந்தது.

மறுநாள் 22 பெப் 2007 அன்று வேறொரு நண்பரை அழைத்து பகல் 12:50க்கு வித்தலோக சென்றேன். பாலபாரதியுடன் பேசிக் கொண்டு இருக்கும் போது முதலில் வந்தவர் எனக்கு அறிமுகம் இல்லாதவர். பாலபாரதி அறிமுகப் படுத்தினார். இவர் 'தங்கவேலு' புளியமரம் என்ற பெயரில் பதிவு வைத்திருப்பவர் என்றார். பதிவின் பெயரைக் கேட்டதும் எனக்கு நினைவு வந்தது ... 'நான் தந்தையான போது' என அந்த பதிவில் எழுதப்பட்ட ஒரு இடுகை. மிக நல்ல கட்டுரை ... என்று சொல்வதைவிட ... நிகழ்வைப் பற்றி இயல்பாகவும் நெகழ்வாகவும் எழுதப்பட்ட ஒரு இடுகை. அந்த இடுகை நினைவு வந்ததும் ... அந்த இடுகையை எழுதியவர் இவர் என்று தெரிந்து கொண்டு அது குறித்துப் பாராட்டிப் பேசினேன். எனது இடுகைகளையும் படித்துவருவதாக சொன்னார்.

சிறிது நேரத்தில் மின்னலாக எங்கிருந்தோ வந்து சேர்ந்தார் வலைப்பூ சுனாமி என்ற அழைக்கப்படும் லக்கி லுக். அழகான லுக் ... அதிர்ஷ்ட பார்வை என்பது பொருத்தமான பெயர். நம் பக்கத்து வீட்டுப் பையன் போல எளிதில் கவரும் ...மிகச் சாதாரண தோற்றம். இயல்பாக சென்னை மொழியில் பேசும் அவரைப் பார்க்க வியப்பாக இருந்தது. அவர் இருக்கும் இடம் களைகட்டும் என்பது மிகை அல்ல. மிக அருகில் மணி அடித்ததும் அனைவரும் திரும்பிப் பார்க்க யானைத் தலைவி வந்தாங்க ... அதாவது பா.க.ச மகளீர் அணித் தலைவி பொன்ஸ் (பூரணா) தன்னுடைய வாகனத்தில் வந்து இறங்கினாங்க. ஒருவருக்கொருவர் (பரஸ்பர) வணக்கம் தெரித்துவிட்டு. நன்பகல் உணவுக்கு செல்லலாம் என தீர்மானித்தோம். எல்லோரும் இரு சக்கர வாகனம் வைத்திருந்ததால் பாலபாரதி லக்கியின் வண்டியில் பின் இருக்கையில் அமர்ந்து கொண்டார். நான் புளியமரம் தங்கவேலு அவர்களின் வண்டியில் அமரந்து கொள்ள மைலாப்பூர் நோக்கிச் சென்றோம்.

சங்கீதா ரெஸ்டாரெண்ட் வந்தோம். அது இவர்கள் அடிக்கடி சந்திக்கும் ரகசிய இடம் என்று நினைக்கும் படி இவர்களின் பேச்சு இருந்தது. மேலே குளிரூட்டப்பட்ட அறைக்குச் சென்று உணவு சொல்லிவிட்டு வருவதற்குள் பதிவுகள், பதிவர்கள், சர்சைகள் பற்றி பேச்சு நடந்தது. அமுக அமைப்பின் செயல்பாடுகள் குறித்து லக்கி பகிர்ந்து கொண்டார். பொன்ஸ், பாலபாரதி மற்றும் தங்கவேலு பா.க.ச வேர்ட் ப்ரஸ்சில் எழுதும் புதிய பதிவை எப்படி கொண்டு செல்வது என்று (கவலை ?) தெரிவித்தனர். அமுக அபிமானிகள் இருந்தும் பின்னூட்டம் திரட்டியில் காட்டுவதாக தற்போதைக்கு எந்த திட்டமும் இல்லை என்றார்கள். உணவு வந்தது எல்லோரும் சாப்பாடு சாப்பிட்டோம். பொன்ஸ் மட்டும் சிற்றுண்டி (சோளப் பொறியான்னு கேட்காதிங்க) எடுத்துக் கொண்டார். பேச்சு விவாகாரம் போளி(லி)கள் ... போண்டா என்று சென்றது.

தின்றுமுடித்து ஹோட்டலை விட்டு வெளியில் வந்ததும் என்னையும் சேர்த்து மற்ற மூவரை நிழல் படம் எடுக்க பொன்ஸ் உதவி செய்தார். அங்கேயே விடைபெறுவதாக கையைத் தூக்கி ஆசிகொடுத்துச் சென்றார். பின்பு நாங்கள் 4 பேரும் வித்தலோகா வந்து சேர்ந்தோம். புளியமரம் தங்கவேலுவை பற்றி தனிப்பட்ட முறையில் கேட்டபோது தாம் ஒரு சித்த மருத்துவர் என்றார். வலைப்பதிவில் நாள் முழுவதும் விழுந்து கிடப்பதாகவும். வீட்டுக் கணனிக்கு சுகவீனம் ஆனதால் சிறிது நாட்களாக வீட்டில் பொறுப்பாக நடந்து கொள்வதாகவும் சொன்னார். தற்போதைக்கு வீட்டு கணனிக்கு மருத்துவம் பார்க்கப் போவதில்லை. அலுவலகத்தில் மட்டுமே கணனியைப் பயன்படுத்துவது என்று மன உறுதி பூண்டுள்ளதாக சொன்னார். அவரும் விடை பெற பின்பு லக்கியிடம் சிறுது அளாவினேன் ... சிறிது நேரத்தில் கிளம்பி சென்றுவிட்டார்.

அதன் பிறகு என் நண்பரை வரச் சொல்லிவிட்டு பாலபாரதியுடன் பேசிக் கொண்டிருந்தேன். தாம் கவிதை எழுதுவதைப் பற்றி சில கவிதைகளைக் காட்டினார். என் நண்பர் வந்ததும் அவருக்கு தமிழ் தட்டச்சு உதவும் மென்பொருள்கள் வலைத் தளங்கள் குறித்து பாடம் நடத்தினார். இப்படி மணி மாலை 4ஐத் தொட அவர் துறத்தும் முன் பெரும்தன்மையாக விடை பெறுவதாக சொல்லி கிளம்பினேன். அன்று இரவே சென்னையில் இருந்து கிளம்பி பிறந்தகம் நாகைக்கு மறுநாள் காலை வந்து சேர்ந்தேன்.

இந்த சந்திப்பில் நான் பார்த்வர்கள் எல்லோருமே வலைப்பதிவில் அறிமுகமாகி உண்மையில் நான் முகம் பார்க்காதவர்கள் தான். ஆனால் ஒவ்வொருவரிடமும் முன்பே நன்கு பழகியது போன்ற உணர்வு அவர்களைச் சந்திக்கும் போது இருந்தது. சென்னையில் வரவனையான் செந்தில் மற்றும் மிதக்கும் வெளி சுகுனாதிவாகர் இருவரையும் சந்திக்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். வரவனையான் அன்று சென்னையில் இல்லை. சுகுனாதிவாகரிடம் சொல்வதற்கு பாலபாரதி மறந்துவிட்டேன் என்றார்.

மூன்று நாள் நாகை - திண்டுக்கல் - கோவை - சென்னை - நாகை என தொடர் பயணத்தில் 7 பதிவர்களை சந்தித்தேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு தனித்துவம் இருந்தது. இந்த இடுகைகளைப் படித்துவிட்டு முன்பே தமிழகம் செல்வதைக் குறிப்பிட்டு இருந்தால் சந்தித்து இருக்கலாம் என்று செந்தில் குமரன், உங்கள் நண்பன் சரவணன் மற்றும் கோவையில் இருந்து சூப்பர் சுப்ரா என்ற பதிவு நண்பர்கள் தெரிவித்தனர். அவர்களுக்கு வருத்தம் தெரிவித்து ... அடுத்தமுறை முன்கூட்டியே வருகையைச் சொல்லி உறுதியாக சந்திப்பேன் என்று தெரிவிக்கிறேன்.

நான் சந்தித்த திரு ஞானவெட்டியான் ஐயா, சுப்பையா ஐயா, நாமக்கல் சிபியார், ஆவிகள் அண்ணாச்சி மற்றும் அம்மணி, பாலபாரதி, லக்கி லுக், பொன்ஸ் மற்றும் தங்கவேல் ஆகியோர்களை சந்தித்தற்கு நான் பெருமகிழ்ச்சியையும் நன்றியையும் இப்பதிவின் மூலம் தெரிவித்துக் கொள்கிறேன்.

இதுவரை தொடரைப் படித்தும், படித்து பாராட்டிய அனைத்து பதிவு நண்பர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மென்மேலும் வளர்க நம் பதிவுலக நண்பர்களின் புரிந்துணர்வும் ஒற்றுமையும் .

பின்குறிப்பு : ஊருக்கு போய் வந்ததில் ஆறு இடுகைகள் எழுத எனக்கு செய்திகள் கிடைத்தது. சிங்கை திரும்பும் போது பத்து இடுகைக்கு விசயம் தேறும் என்று நண்பர் எஸ்கே ஐயா வாழ்த்தி இருந்தார் என்பதை நினைவு கூறுகிறேன். :)

நட்புடன்
கோவி.கண்ணன்


முந்தைய இடுகைகள் ...
சுற்றிச் சுற்றி வந்தேங்க - சென்னை 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 1
சுற்றிச் சுற்றி வந்தேங்க - திண்டுக்கல் 2
சுற்றிச் சுற்றி வந்தேங்க - கோவை 1
சுற்றி சுற்றி வந்தேங்க - கோவை 2

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்