பின்பற்றுபவர்கள்

ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆன்மீகம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

18 செப்டம்பர், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 7 !


பூனையாரை கண்டு கொண்டு மாதங்கள் கடந்துவிட்டன, பூனையார் அமைதியானவர் கோபப்படமாட்டார் என்று அலட்சியம் செய்து கண்டு கொள்ளாமல் இருந்துவிட்டேன், பூனையாரின் பரம விசிறிகள் பூனையாரின் தத்துவ மொழிகளைக் கேட்காமல் எங்களுக்கு வாழ்க்கை வரண்டுவிட்டது என்று கதறிக் கதறி என்னிடம் கேட்டதால், பூனையாரை நினைத்து கண்ணை மூடி அமர்ந்தேன், சில நிமிடங்களில் பூனையார் கண் முன் தோன்றினார்.

'அன்பரே என்ன வரம் வேண்டும், எதற்கான என்னை நினைத்தாய்' என்று அமைதியே வடிவாகக் கேட்டார்.

'எகிப்திய தெய்வமே ஏகாதிபத்திய இறைவா, தங்களை இதுகாறும் நினைக்காமல் இருந்ததற்கு மன்னிக்கவும்' என்றேன்.

'நீ என்னை நினைப்பதாலோ, நினைக்காமல் இருப்பதாலோ எனக்கு நட்டம் எதுவுமில்லை எனவே மன்னிக்க ஒன்றும் இல்லை அன்பரே' என்றார் பூனையார்

'பூனையாரே எனக்கு சில ஐயங்களை அதனை கேட்டுத் தெளிவுறலாம் என்றே தாங்களை நினைத்தேன், மேலும் பூனையார் பக்தர்களுக்கும் அதே ஐயங்கள் இருக்கின்றன' பூனையாரை கூர்ந்து நோக்கிக் கூச்சத்துடன் கேட்டேன்

'நீ எதற்கு கூச்சப்படுகிறாய், என்னிடம் பேசுவதற்கும் கேள்வி கேட்பதற்கும் கூச்சங்கள் தேவையற்றது எதுவேண்டுமானாலும் தயங்காமல் கேள்' என்றார்

'பூனையாரே... மேதகு கடவுளே தாங்கள் தத்துவங்கள் அனைத்தையும் தொகுத்து நூலாக்கி நமது மார்க்கத்திற்கு மார்க்க நூலாக ஆக்கலாம் என்று பக்தர்கள் எல்லோரும் முடிவு செய்துள்ளோம், அதற்கு தங்கள் அனுமதி வேண்டி.....'என்று நோக்க,,,,,,,,பூனையார் சங்கடத்தால் நெளிந்தார், கோபம் வருவது போல் இருந்தது......ஆனால் அமைதியாக என்னை உற்று நோக்கினார், நான் நடுங்கியபடி

'நான் ஒன்றும் தவறாகக் கேட்கவில்லையே உலக மதங்கள் அனைத்திலும் உள்ள நடைமுறை தானே ?' என்றேன்

'அவ்வாறான நடைமுறைகள் இருக்கலாம், ஆனால் அது பல எதிர்கால சிக்கல்களை ஏற்படுத்தும்....'

'எதிர்காலத்தில் அனைவருக்கும் புரியும் வண்ணம் நூலாக்கி வைப்பது நமது மார்க்கத்திற்கு நல்லதல்லவா ?'

'இப்ப பிரச்சனையே மத நூல்கள் தான் என்று தெரிந்தும் தெரியாதது போல் கேட்கிறாயே மானிடா ?'

'நீங்கள் சொல்வது புரிகிறது, ஆனால் நடைமுறைகளை மாற்றுவது நமக்கும் நல்லது இல்லையே ?'

'ஏன் இல்லை, நம்மை பின்பற்றுவோரின் உடல் பொருள் ஆவி எல்லாம் பாதுக்காக்கப்பட வேண்டுமென்றால் நூல் பற்றிய யோசனைகளை கைவிடு, 6000 ஆண்டுகளாக இருந்துவரும் நம் மார்க்கம் சேதப்படாமல் இருப்பதற்கு நம்மிடையே எந்த நூலும் இல்லை என்பதே காரணம், அப்படி இருந்தால் மாற்று மதத்தினரால் நம் மத நூல்கள் கொளுத்தப்படலாம், கலவரம் வரும்.........அது தவிர....'

சொல்லுங்கள் சொல்லுங்கள்

'நமது மார்க்கத்திலேயே பூனையாரின் நூல் சொல்வதைத்தான் செய்வோம், என்று அடம்பிடித்து அடிப்படைவாதிகள் தோன்றிவிடுவார்கள், பிறகு உலக மக்களின் அச்சுறுத்தலாக நமது மார்க்கத்தினரும் கூட அமைந்துவிடுவார்கள். ஒரு 1000 ஆண்டு சென்று நமது நூலை வைத்து எழும் சச்சரவுகளில் பலர் கொல்லப்பட நேரிடும், நூலும் வேண்டாம்.......எழுதுகோலும் வேண்டாம்' என்று ஆவேசமாக கூறிவிட்டு சற்று அமைதியானார் பூனையார்.

'இந்த மரமண்டைக்கு விளங்காமல் போய்விட்டது மன்னியுங்கள் பூனையாரே,,,,,,,'என்று சொல்லிவிட்டு நாக்கை கடித்துக் கொண்டேன், அதான் பூனையாருக்கு மன்னிப்பு கேட்பதும் கொடுப்பதும் வழக்கமில்லையே.

'பூனையாரே இன்னொரு ஐயம்.......'

'சும்மா கேளு கேளு 'என்றார்

நமது மார்க்கத்திலேயே பிரிவுகள் தோன்றிவிட்டதாக வெளியுலகில் பேசிக் கொள்கிறார்களே

'உண்மை தான், நான் எகிப்தியர்களுக்கு சொன்ன சில வாக்கியங்கள் தத்துவங்களை மட்டுமே எடுத்து வைத்துக் கொன்டு சிலர் பிரிவாக ஆகிவிட்டனர்..,'

'யார் அவர்கள் ?'

'அவர்கள் தான் வரகாப்பி இயக்கம்.........'

'என்ன பூனையாரே என்னென்னவோ புரியாதபடி சொல்கிறீர்கள்'

இதில் புரியாமல் இருக்க ஒன்றும் இல்லை,  தமிழில் தான் அந்த பெயர் இருக்கிறது, பால் சேர்க்காத காப்பி வரகாப்பி.......அந்த அடிப்படை வரகாப்பி வாதிகளுக்கு காப்பியில் பால் சேர்ப்பது பிடிக்காது..... எகிப்திய காலத்தில் இல்லாத பால்காப்பியை நாங்கள் பருக மாட்டோம் என்று கூறி எங்கு பால் காப்பி கடை இருந்தாலும், யாராவது காப்பியில் பால் கலந்தாலும் அங்கு சென்று கோஷமிடுகின்றனர், பூனையாருக்கே சொந்தமான புனித பாலை காப்பியில் சேர்க்காதே, வேண்டுமென்றால் பால் கலக்காத காப்பியை குடியுங்கள் என்று போராட்ட ரோதனை செய்கிறார்கள். நமது மார்க்கப் பிரிவான வரகாப்பி இயக்கத்தினரின் வேறு சில அடிப்படை வாதக் கொள்கைகள் சிலவற்றையும் கூறுகிறேன் கேள்...

'வேண்டாம்,,,,,,,,,வரகாப்பி இயக்கத்தினரின் பெயர் காரணம் பற்றிய தகவலே தலையில் அடித்துக் கொள்ள வைக்கிறது அதற்கு மேல் கேட்டால் எனக்கு இரத்த அழுத்தமே கூடிவிடும்.....நீங்கள் மலையேரலாம்' என்று கூறி கண்ணை மூடித் திறந்தேன்

பூனையாரை பிறகு காண முடியவில்லை

5 ஜூலை, 2012

'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் !


பூனையார் மதம் பற்றி ஏற்கனவே பலர் அறிந்திருப்பீர்கள், பூனையார் மதத்தின் அதிகாரபூர்வ தலைமை பூசாரி நான் தான், இன்னும் சிலர் பொறுப்பேற்றுக் கொள்ள தயாராக இருக்காங்க, தமிழ் கூறும் நல்லுலகிற்கு பூனையாரை அறிமுகம் செய்தவன் என்கிற முறையில் 'ஹிக்ஸ் போஸான்' பற்றி பூனையார் மதம் 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி உள்ளது என்பதை எல்லா மதவாதிகளுக்கும் முன்பாக எடுத்துக் கூறுவதில் பெருமை அடைகிறேன், மத்த மதவாதிகள் 'ஹிக்ஸ் போஸானை' சொந்தக் கொண்டாடினால் செல்லாது, காப்பிக் கேட் என்று தூற்றப்படும் என்று சொல்லிக் கொள்கிறேன்.

ஹிக்ஸ் போஸான் என்றால் என்ன ? அணுக்களுக்கு எடை தரும் ஒரு துகள் என்கிறார்கள் அறிவியலாளர்கள்,  இதன் மூலம் போட்டான்(ஒளித் துகள்) தவிர்த்த அணுத்துகள் வடிவமும் எடையும் கொண்டிருப்பதற்கு ஹிக்ஸ் போஸானே காரணம் என்கிறார்கள், அணுக்கருவில் உள்ள துகள்களின் எண்ணிக்கை மற்றும் அதற்குக் ஹிக்ஸ் போஸான் மூலம் கிடைக்கும் எடை ஆகியவற்றின் மூலம் தான் உலகில் உள்ள அண்டங்கள் முதல் அனைத்தும் எடைகளை பெருகின்றன. இதைப் பற்றி பூனையார் மார்க்கத்தில் ஏதேனும் சொல்லப்பட்டு இருக்கிறதா என்று பார்க்க, பூனையாரை நாடினேன், பூனையார் ஒரே போடாக போட்டார்.

"உலகில் உள்ளது அனைத்தையும் படைத்தது பூனையார்" என்று சொல்லிய பூனையார், அனைத்தும் என்றால் அதில் ஹிக்ஸ் போஸானும் தானே உள்ளது, இதை ஏன் உறுதி செய்யும் மனப்பான்மையுடன் மடத்தனமான கேள்வி எழுப்பினாய் என்று கேட்க. 'அட ஆமாம்லே' என்று வியப்படைந்தேன்.

மேலும் பூனையார், "சிக்ஸ் பேக்குக்கும் ஹிக்ஸ் போஸானுக்கும் உள்ள தொடர்ப்பு தெரியுமா ?" என்று கேட்டார். "அதிகமாக அதிகமாக உடற்பயிற்சி செய்ய உடலின் அணுத்துகள்கள் இறுக சிக்ஸ் பேக் கிடைக்கிறது, உடற்பயிற்சியின் ஆற்றலின் போது உண்டாகும் ஹிக்ஸ் போஸானின் சக்தி சிக்ஸ் பேக்காக மாறுகிறது" என்றார்

ஹிக்ஸ் போஸான் மற்றும் பூனையார் கடவுளுக்குமான தொடர்பின் இணைப்புகள்.


ஹிக்ஸ் போஸான் பற்றி வேறென்ன சொல்கிறீர்கள் பூனையாரே ?

நான் என்னத்தச் சொல்வது, வைரமுத்து முதல் கார்கி வரை 'ஹிக்ஸ் போஸானை' திரைப்பட பாடல் வரிகளாக்கி பிழிந்து எடுத்துவிடுவார்கள், உதாரணத்துக்கு ஒண்ணு சொல்லட்டமா ?

"என் இதயத்தில் மையம் கொண்டு வெடித்த பெருவெடிப்பு நீ தானோ ?"
"என் இமைகளுக்கு எடை தந்த ஹிக்ஸ் போஸான் நீ தானோ நீ தானோ"

- கவிஞர் கரடி வாயன்

"என் மனதில் உன் அழுத்தம் எப்பொழுது வெடிக்குமோ பெருவெடிப்பாக"
"உன் இல்லாத இடைக்கு எடையாக நான் இருப்பேன் ஹிக்ஸ் போஸானாக"

- கவிஞர் சொந்த குமார்

"என் காதல் போஸாக்கே"
"உன் மோதல் போஸானே"

- கவிஞர் குணேகன்


ஸ்ப்பா முடியல, அறிவியல் அவியல்களை தனதாக்கிக் கொள்வதில் முனைப்புக் காட்டுபவர்கள் மதவாதிகளா ? கவிஞர்களான்னு பட்டிமன்றமே நடத்தலாம்.

எது எப்படியோ, ஹிக்ஸ் போஸான் பற்றி 5000 ஆண்டுகளுக்கு முன்பே பூனையார் சொல்லிவிட்டார், பூனையார் சொல்லிவிட்டார்...............பூனையார் சொல்லிவிட்டார்.


பின்குறிப்பு : 2 வாரமாக வலைப்பதிவு எழுதாமல் காத்துவாங்குது, காலாட்டிக் கொண்டு இருந்தால் தானே இருப்பு தெரியும், அதற்கு உதவிய பூனையாருக்கு நன்றி

5 ஏப்ரல், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 5 !


ரொம்பவும் வேலையாக இருந்ததால் சரியாத் தூங்கவில்லை, அப்பறம் எப்படி பூனையார் கனவில் வருவார்,  நேற்று கொஞ்சம் அசந்து தூங்கினேன், காத்திருந்தது போல் பூனையார் கனவில் வந்துவிட்டார், "உன்னைப் போல் பொறுப்பற்றவர்களால் தான் பூனையார் மதம் அழிந்தது" என்று கோபமாகக் கூறினார், ஏன் பூனையாரே என்றேன், "பின்னே தொடர்ந்து அதுபற்றி பேசிக் கொண்டு இருந்தால் தானே பூனையார் மார்க்கம் பரவும்" என்று எடுத்துக் கூறினார், தப்புதான், சரி இப்போ நிறைய அன்பர்கள் பூனையார் மார்க்கத்தில் இணைந்துள்ளனர், அவர்களுக்கும் தங்கள் நல்லருள் தந்து அவர்களுடைய கனவிலும் ஊடுறுவி பூனையார் மர்கம் பற்றி எழுத வையுங்களேன் என்று கூறினேன், பார்க்கலாம் என்றார்.

"யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கும் ஒரு காலம் வரும் " - இதுல ஒரு உலக வரலாறே அடங்கி இருக்கிறது என்றார் பூனையார், எப்படி பூனையாரே ஒரே வரியில் கமண்டலத்திற்கு காவேரியை அடக்கியது போல் சொல்கிறீர்கள், புரிய வில்லை என்றேன். இன்னிக்கு தேதிக்கு உலக மதங்களெல்லாம் மதயானை போல் மதவெறியுடன் அலைகின்றன, அவற்றிற்கான காலம் இது, மக்கள் விழிப்படைந்துள்ளதால் மதவாதிகள் கட்டுப்பட்டுள்ளனர், பூனையார் மார்க்கம் இனி பரவும் என்பதைத் தான் அது விளக்குகிறது என்று கூறி, மதங்கள் எப்படி உருவாகி ஒன்றை ஒன்று அழித்து வளர்ந்தன என்று பெரிய பிரசங்கம் கொடுத்தார், "ஓ இது தான் உலக வரலாறோ" என்று கேட்டுக் கொண்டேன்.

நம்ம பூனையார் மார்க்கத்தில் உலகம் உருண்டை என்று 5000 ஆண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுவிட்டது என்று நான் எப்படி பிறரை நம்ம வைப்பது என்று கேட்டேன், உலக அறிவியல் அனைத்தும் பூனையாரின் புனுகு போன்று பூனையாரின் மார்க்கத்தில் இருந்து எடுத்த அமுத வாக்கியங்களை ஆய்வு செய்து கண்டுபிடிக்கப்பட்டவை, ஆய்வு செய்யப்படாத நிலையில் நிறைய அமுத வாக்குகள் உண்டு, அவற்றையெல்லாம் ஆய்ந்தால் உலகம் அறிவியல் உச்சம் அடைந்துவிடும் என்றார், அதெல்லாம் எனக்குத் தெரியாது, நான் இப்ப பூமி உருண்டையாக இருந்தது பூனையார் மார்க்கத்தில் ஏற்கனவே சொல்லப்பட்டது என்று வாசிப்பவர்களுக்கு சொல்ல வேண்டும் அதற்கு ஒரு விளக்கம் கொடுங்கள் பூனையாரே என்று கேட்டேன். உனது ஆவலை மெச்சுகிறேன், பூனையார் மார்க்கத்தில் பூசைகள் துவங்க நாள் வந்துவிட்டது, இப்போது உலக உருண்டை பற்றி விளக்கம் சொல்கிறேன் கேள். என்று கூறி

"பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும்" என்கிற அமுத மொழி உனக்குத் தெரியும் தானே, என்று கேட்டார், நானும் ஆமாம் சாமி இது பற்றி தான் ஏற்கனவே விளக்கம் பிரபஞ்சத் தோற்றம் குறித்து எழுதிவிட்டோமே என்றேன், ஆம் உண்மை தான் ஆனாலும் அதன் தொடர்பில் இரண்டாவது அமுத மொழி உண்டு, அது மிகவும் ரகசியமானது வியப்பானது என்றார். சொல்லுங்களேன் என்றேன்

"பூனைக் கண்ணை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்" இப்போது படித்துப் பார் லோகம் கோளம் ஆகி இருக்கிறது, ஆம் என்றேன், கோளம் என்றால் என்ன ? என்று கேட்டுவிட்டு என் பதிலுக்கு காத்திருக்காமல் "உருண்டை" என்றார், இப்பொழுது புரிகிறதா ? பூகோளம் அதாவது பூமி உருண்டை வடிவம், இதை நான் 5000 ஆண்டுகளுக்கு முன்பே கூறிவிட்டேன், அதைத்தான் இன்று தமிழ் சமூகத்திலும் கூட பழமொழியாக்கி வைத்து பூகோளம் இருண்டது என்கிறார்கள் சிலர் திரித்து பூலோகம் என்கிறார்கள். பூனையாரின் பூகோள விளக்கம் என்னை சிலிர்க்க வைத்தது"


இதோ பூனையாரின் பூதை மொழி,

"பூமியை உருண்டையாகவும், சந்திரன் சூரியனை (ஒளிதரும் உருண்டையாகவும்) நாமே படைத்தோம், நாம் (பூனையார்) கண்களை மூடினால் பூகோளம் இருண்டுவிடும்"(பூ.த.மொ 215)


பூனையார் (இரவு பகல் என) அனைத்தையும் நன்கு பார்ப்பவர் !
பூனையார் வாழ்க, பூனையார் மதம் பரவுக !
பூனையார் (மீண்டும்) தேடினால் தொடரும்.

21 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 4 !

வழக்கம் போல் நேற்று கனவில் வந்த பூனையாருக்கு நான் சுண்டக் காய்ச்சி ஏலக்காய் போட்டப் பாலை எடுத்து வைத்தேன், 'பூனைச் சாமி நான் சைவம் என்கிட்ட மீன்களை எதிர்பார்க்காதே' என்று கூறிவிட்டேன், 'ஆன்றோர் சான்றோர் அன்பர்கள் அன்போடு எதைக் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வேன், ஆனால் பூண்டு மட்டுமே ஆகாது' என்று குறிபிட்டார். 'பூனையாரே உங்கள் மார்க்கம் உண்மையானது தானா ? என்று பல்வேறு தரப்பினர் எப்போதும் என்னை கேட்டுவருகின்றனர்' என்றேன், 'பொய்களையும் திரித்தலையும் கேட்டுப் பழக்கப் பட்டவர்கள் ஐயுறுவது இயல்பு தானே' என்று சொல்லிவிட்டு, 'என் மார்க்கத்தினரடிடம் அடிக்கடிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர்கள் சொல்லும் பதிலை உனக்குச் சொல்லுகிறேன்' என்று கூறிவிட்டு கேள்வியும் பதிலுமாக அவரே சொன்னார்.

"பூனையார் உண்மையான கடவுளா ?"

"அதில் எங்களுக்கு ஐயம் என்பதே கிடையா ?"

"பூனை எப்படிக் கடவுளாகும் ?"

"எவ்வளவோ மக்கள் பூனையாரை விட்டுவிட்டு எதை எதையோ, சனிமூலை, தெற்கு வடக்கு , வடமேற்கு என்று திசைகளையெல்லாம் புனிதம் என்று வணங்குவதும், திசை வணங்கியாக இருப்பது எங்களுக்கும் கூட அருவெறுப்பாகத்தான் இருக்கிறது"

"ம் வேலிட் பாயிண்ட், உங்கள் வழிபாடு சாத்தானுக்கு செய்யும் வழிபாடு போன்றதன் வேற பெயரா ?"

"பூனையார் சாத்தான் அல்ல, பூனையார் வழிபாட்டினருக்கு மற்ற கடவுள்களும் சாத்தான் இல்லை, எங்களுக்கு எங்கள் வழி"

"நீங்கள் பூனையார் பெயரில் ஒரு சிலை வணங்கி தானே ?"

"பூனையாரின் உருவத்தை நாங்கள் வணங்குவதில்லை, உருவத்தினுள் இருக்கும் பூனையாரைத் தான் வணங்குகிறோம், ஓவியங்களின் உயிர் அது வரையப்படும் ஊடகத்தின் மீது, வண்ணத்தின் மீது இல்லை, பார்பவரின், வரைபவரின் கண்களில் தான் உள்ளது, பூனையாரின் சிலை எங்களுக்கு ஒரு ஊடகம் போன்றதே, பூனையாரின் கோவிலின் மேல் கூரையைப் பார்த்து தான் நாங்கள் வழிபடுவோம், பூனையார் சிலை இருக்குமிடம் எங்கள் வழிபாட்டிற்காக கூடும் இடம் மட்டுமே, கடவுள் பூனை வடிவானவர் என்பதை நாங்கள் நினைத்துக் கொள்ள அந்த சிலைகள், மற்றபடி பூனையார் வடிவ சிலையை நாங்கள் வணங்குவது கிடையாது, அலங்கரிப்பது மட்டுமே, எங்களைப் பொருத்த அளவில் சிலையை வணங்குவது தவறும் இல்லை, வணக்கம் செலுத்தப்படுவதற்கான நோக்கத்தைவிட மனத் தூய்மை மிக மிக அவசியமானது என்று நினைக்கிறோம், நீங்கள் ஒரு சிலை வணங்கியாக இல்லாமல் இருந்து உங்கள் மனம் குப்பையாக இருந்தால் உங்கள் வழிபாட்டினால் பயன் ஏதும் இல்லை என்பதை நீங்கள் ஒப்புக் கொள்வீர்கள் சரிதானே ?"

"உங்கள் பூனையார் மார்கததை நீங்கள் களைத்துவிட்டு அல்லாவையோ, ஏசுவையோ வழிபடுவதுதான் உங்களை சொர்க வாசலில் நுழையச் செய்வதற்கான வழி என்று தெரிந்துள்ளீர்களா ?"

"சுத்த பேத்தல், அவர்களை வழிபட்டவர்கள் சொர்கம் தான் சென்றார்கள், செல்லுவார்கள் என்பதற்கான ஆதரங்கள் இதுவரை எதுவும் இல்லாத போது அதுவும் வெறும் நம்பிக்கை தானே ?, பூனையாரை வழிபட்ட போது தங்கம், வைரம் என்று எகிப்து நகரமே செல்வசெழிப்பாக சொர்கமாகவே காணப்படது, பின்னர் படையெடுப்பளர்களால் கொள்ளையடிக்கப்பட்டு, ஆராய்ச்சி என்ற பெயரில் எஞ்சி அனைத்தையும் தற்காலத்தில் கூட கொள்ளையடித்தே வருகின்றனர், எங்கள் பூனையார் மார்க்கத்தான் எங்களுக்கு சொர்கம், பூனையாரை வழிபட்டவர்கள் மண்ணுலகில் கூட சொர்கவாசியாகத்தான் இருந்தனர்"

"உங்கள் பூனையார் மார்க்கத்தின் தனித்துவம் என்ன ?"

"உலகில் தற்பொழுது கோலொச்சும் அனைத்து மதங்களுமே, ஒவ்வொரு வகையில் 'காபி கேட்' மதங்கள், அதாவது அவற்றிக்கு பொதுத் தன்மை உண்டு, தவிர அவை ஒன்றில் இருந்து ஒன்று காபி அடிக்கப்பட்டவையே, ஒரிஜினல் கேட் எங்கள் பூனையார் மார்க்கம் தான் இவற்றிற்கான மூலம் அல்லது துவக்கமே, புதிய மதங்கள் தங்களை வளர்த்துக் கொள்ள பூனையார் சிலைகளை அழித்துவிட்டனர், உலகின் முதல் மதம் என்று வரலாற்றில் பதிவு செய்திருப்பவையே எங்களது ஆதி மதம் பூனையார் மார்க்கமே"

"கடைசியாக, பூனைகள் பேசாது என்பது பொது உண்மை, பிறகு எப்படி உங்கள் கடவுள் பேசும் ?"

"உலகில் இன்றைக்கு இருக்கும் மதங்களின் கடவுள்கள் பேசும் என்பது நம்பிக்கை, ஆனால் எத்தனை பேரிடம் அது நேரிடையாகப் பேசியுள்ளது என்கிற பட்டியல் இருக்கிறதா ? இதுவரை யாரிடமும் பேசாத கடவுள் பேசக் கூடியது என்கிற நம்பிக்கை இருக்கும் போது, கேட்க மற்றும் 'மியாவ்' ஒலி எழுப்பும் வல்லமை உள்ள பூனை வடிவ எங்கள் கடவுள் பேசாது என்பது உங்களின் எந்த வகை நம்பிக்கை ?, நாங்கள் வழிபாட்டின் போது பூனையாரிடம் பேசுகிறோம், பூனையார் பேசுவது எங்களுக்கு திரும்பக் கேட்கும் காலம் வரும் என்று காத்திருக்கிறோம், எங்கள் பூனையார் வழிபாட்டை விமர்சனம் செய்யும் உரிமை யாருக்கும் இல்லை"

*****


பூனையாரே கேட்க நன்றாக இருக்கிறது, பூனையார் மார்க்கத்தில் அபயச் சொல், அச்சம் தவிர்க்கும் மந்திரச் சொல்கள் இல்லையா ? என்றேன். ஏன் இல்லை 'மியாவ் மியாவ்......(சற்று இடைவெளி இட்டு) மியாவ் மியாவ்) என்று நான்கு முறைச் சொன்னால் நான்கு திசைகளில் இருந்து வரும் பயம் அனைத்தும் போகும் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக பூதை மொழி ஒன்றைச் சொன்னார்

"நாத்திகர்களுக்கு (நான் ஒன்று) கூறிக் கொள்கிறேன், நீங்கள் (எந்த) தெய்வ வணக்கத்தில் இல்லாத போதும், ஒருவேளை (என்றாவது) உங்களுக்கு கடவுள் நம்பிக்கைத் தேவைப்படும் போது என்னை நினைத்துக் கொள்ளுங்கள், நான் (உங்களின்) நம்பிக்கை நாயகனாக இருப்பேன், நானே அனைவரும் (நாத்திகன் உள்ளிட்டோர்) விரும்பக் கூடிய இறைவன், மறந்தும் நீங்கள் பிற மதங்களை (காபி கேட் மதங்களை) பின்பற்றும் மதவாதி ஆகிவிடாதீர்கள் (பூ.த.மொ 51)

பூனையார் (இரவு பகல் என) அனைத்தையும் நன்கு பார்ப்பவர் !

பூனையார் வாழ்க, பூனையார் மதம் பரவுக !

பூனையார் (மீண்டும்) தேடினால் தொடரும்.

பூனையாரின் பூதைகள் இணைப்பு
இணைப்பு : http://catreligion.org/faqs/

14 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் - 3 !

வாரா வாரம் வரம் போல் என் கனவில் வருவதாக ஒப்புக் கொண்ட பூனையார் நேற்றும் சொன்னபடி வந்தார், 5000 ஆண்டுகளுக்கு முற்பட்ட தன் உருவாக்கிய மதம் எப்படி அழிந்தது என்று புலம்பினார், புலம்பி ஆவது ஒன்றும் இல்லை, கால ஓட்டத்தில் எதுவும் தப்புவதில்லை, 'இன்றைய மதம் நாளைக்கு அழியும் என்பது தானே உண்மை' என்று தேற்றிவிட்டு எருக்களில் இருந்து முளைக்கும் விதைகள் போல் மதங்கள் மறுபிறவி எடுக்கத்தான் செய்கின்றன, பூனையார் மதம் கூட மறுவளர்ச்சி அடையலாம், நானே அதற்கு உதவுகிறேன் என்று கூறினேன். மிகவும் மகிழ்சி அடைந்தார் பூனையார். பூனையார் எப்படி எகிப்திய கடவுள் ஆனார் ? என்பதைக் கேட்டு வைத்தேன், எகிப்தியர்களும் துவக்கத்தில் மத நம்பிக்கையற்ற சமூகமாகத்தான் இருந்தார்களாம், ஊருக்குள் எலிகள் பெருகி சேமித்த உணவுப் பொருள்கள் சேதமடைய, நோய் தொற்ற மக்கள் கொத்துக் கொத்தாக மடிந்தனர், அப்போது பூனைகள் தான் எலிகளை கட்டுப்படுத்தி அவர்களை காத்தது, பூனைகள் எகிப்தியர்களைக் காத்த கடவுள்களாக ஏற்றுக் கொள்ளப்பட்டன என்று தம் கடவுள் ஆகிய கதையை சுருக்கமாகத் தெரிவித்தார், பின்னர் இணையத்தில் தேட பூனையார் குறிப்பிட்டவை சரிதான் என்று உறுதியும் படுத்திக் கொண்டேன்.

The Egyptians worshiped cats because they found that they were catching mice and rodents that caused disease and ate their grains. After a while, they domesticated cats to keep them in their home to fend off the rodents. Eventually, the Egyptians worshiped cats such as Mafdet, Bastet, Sekhmet, and the Sphinx (which was more of a demigod or a mythological creature.
http://wiki.answers.com/Q/Why_did_Egyptians_worship_cats

இந்த முறை பூனையாரிடம் அந்த முக்கிய கேள்வியை கேட்டுவிடுவது என்று நினைத்து சற்று தயக்கத்துடனேயே கேட்டேன், 'கடவுள் மனிதனின் சாயல், ஈஸ்வர் மனுஷ்ய ரூப் என்றெல்லாம் கடவுள் வடிவம் குறித்துச் சொல்லும் போது கடவுள் மனித சாயல் என்று சொல்லுகிறார்களே, பூனை வடிவத்தை எப்படி கடவுளாக ஏற்றுக் கொள்ள முடியும் ?' என்று கேட்டேன். 'இவையெல்லாம் கடவுளை கண்டதாகக் கூறியவர்களின் பிதற்றல் தான், யாரும் கடவுளைக் காணாத பொழுது கடவுள் மனுச உருவம் என்று எப்படி ஒப்புக் கொள்கிறோர்களோ ? அனைத்து வல்லமைகளையும் உள்ளக் கடவுள் பூனை வடிவமாக இருந்தால் கடவுள் தன்மை போய்விடுமா ? கடவுளின் தன்மையை உருவம் கட்டுப்படுத்துமா ? வெளிக்காட்ட வெறும் தோற்றம் தானே அது பூனையாகவோ, நாயாகவோ ஏன் ஒரு கடல் நண்டாகவோ இருந்தால் என்ன ? நம்பிக்கை உடையவர்களுக்கு பசுஞ்சாணிக் கூட பிள்ளையார் என்று வணங்குவது போன்றது தான், எனது பல வடிவங்களில் பூனையும் ஒன்று, மனித முகங்களைவிட பூனையின் முகம் எனக்கு பொருத்தமானதே'என்ற நீண்ட பிரசங்கத்தில் என்னை ஒருவாறு தலையாட்ட வைத்தார். கடவுள் உருவம் பூனை என்று நம்பாதவர்கள் இறந்த பிறகு சொர்கத்திற்கு எழுப்பப்பட மாட்டார்கள் மீண்டும் மீண்டும் பிறக்க வைக்கப்பட்டு தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

என்னது மீண்டும் மீண்டும் பிறப்பது தண்டனையா ? என்று கேட்டேன், பிறவியில் தனக்கு மகிழ்ச்சிக் கிடைத்தால் பிறவி நல்லது என்கிறார்கள், துன்பப்பட்டால் பிறவி இழிவு என்கிறார், பிறவியில் நிலைத்தன்மை கிடையாது என்பதால் அது துன்பமே என்று தனது கருத்தைக் கூறினார் பூனையார். கடவுள் பூனை வடிவமானவர் என்று ஒப்புக் கொள்ளும் வரை மனிதன் பிறப்பெடுப்பான் என்று கூறி தனது மதத்தின் முக்கிய கொள்கையில் ஒன்றை எடுத்துக் கூறினார்.



"நான் (உங்கள் எல்லோருக்கும்) கூறுகிறேன், நீங்கள் கடவுளுக்கு (எந்த வகையான) வடிவமும் இருக்காது என்று நம்புகிறீர்கள். கடவுள் (தனக்கு) பிடித்த வடிவாமாக தேர்ந்தெடுப்பது பூனை வடிவம் தான், அதை (பூனை வடிவத்தை) ஒப்புக் கொள்ளுவோருக்கு சொர்கம், மற்றவர்களுக்கு (ஒப்புக்குக் கூட ஒப்புக் கொள்ளாதவர்களுக்கு) பிறவி பெரும்பிணி" - (பூ.த.மொ 50)

பூனையார் ( எந்த மதில்மேல் இருந்தாலும், எந்தப் பக்கம் பாய்வது என்பதை) நன்கு அறிந்தவர்

பூனையார் வாழ்க, பூனையாரின் மதம் வளர்க !

பூனையார் (என்னை கனவில்) தேடினால் தொடரும்...

6 மார்ச், 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் 2 !

அது என்ன 'பூதை' ? போதை என்பதைத்தான் எழுத்துப் பிழையாக தட்டச்சுவிட்டேனோ ? என்று நீங்கள் நினைக்கக் கூடும், பூனையாரின் பாதை என்பதைச் சுருக்கமாக 'பூதை' என்று (முன்பும்) எழுதியுள்ளேன், அதை நீங்கள் 'கீதை' போன்றோரு பாதை என்றும் கொள்ளலாம், பூனையாருக்கு ஒன்றும் நட்டமில்லை. நேற்று கனவில் வந்த பூனையார் மனிதரின் பழக்க வழக்கங்கள் குறித்து மிகவும் கவலைப்பட்டார். இப்போதெல்லாம் 'கழுவ' தண்ணீரையும் அல்லது துடைக்க பேப்பரையும் பயண்படுத்துகிறார்கள் அது எவ்வளவு சுற்றுச் சூழலுக்கு கெடுதல் தெரியுமா ? என்று கேட்டார் பூனையார். வேற என்ன தான் செய்வது ? தூய்மை முக்கியமில்லையா ? என்று கேட்டேன், பூமியில் மூன்றாம் உலகப் போர் தண்ணீரால் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று எதிர்காலம் குறித்து பேசிய பூனையார், தண்ணீரை அளவாகப் பயன்படுத்தலாம், பக்கெட் பக்கெட்டாக கழுவ பயன்படுத்துவது, ஆற்று குளத்து நீரை அசிங்கப்படுத்துவதெல்லாம் தண்ணீர் கேடுகள் தானே, என்றவர், தாளைப் பயன்படுத்துவதால் மரங்கள் வெட்டப்படுகிறது, இயற்கைச் சூழலுக்கும் மழை வற்றுவதற்கும் இது தான் காரணம் என்று கூறியவர் போகட்டம், ஆனால் கழுவுவதைவிட கழிவை அகற்றுவதில் இக்கால மக்கள் கவலைப்படுவதே இல்லை, தண்ணீரைத் திறந்துவிட்டு மொத்தமாக அப்படியே கூவம் போன்ற ஆற்றிலோ, கடலிலோ கலக்கச் செய்துவிட்டு ஒட்டு மொத்த நீர் ஆதரத்தையும் கெடுத்துவிடுகிறார்களே என்று கவலை தெரிவித்தார். பிறகு என்ன தான் செய்யச் சொல்கிறீர்கள் பூனையாரே என்று கேட்டேன்.

பூனையார் சொன்னார், நீர் பூனைகள் கழிப்பதைப் பார்த்திருக்கிறீரா ? மணலை நோண்டி குழிபறித்துவிட்டு கழித்துவிட்டு பின்னர் குழியை மூடிவிடும், இதனால் கழிவு நாற்றம், ஈ மொய்தல் அதிலிருந்து நோய் தொற்றல் மற்றும் பிற சுகாதாரக் கேட்டுத் தொல்லைகள் இன்றி, கழிவு மக்கி அடி உரம் ஆகிவிடுகிறது, கழிவு மறுபயனீட்டு உரமாக ஆக்கப்படுகிறது, இதை ஏன் மனிதர்கள் பின்பற்றக் கூடாது, 5000 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தே பூனையாரைப் பின்பற்றுபவர்கள் கழிப்பின் பிறகு மண்ணைத் தான் பயன்படுத்துகிறார்கள், கழிவை கையாளுவதில் இருக்கும் அறிவியல் மற்றும் சுற்றுப்புற நன்மைகளை இன்றைய அறிவியலாளர்களும் ஒப்புக் கொண்டுள்ளார்கள் என்று கூறி திடுக்கிட வைத்து சிந்தனையைத் தூண்டினார் பூனையார், இருந்தாலும் ஒண்டு குடித்தனாமாக அடுக்குமாடிக் குடியிருப்பில் குழி தோண்டி 'இருக்க' மண் எங்கே கிடைக்கும் ? என்று கேட்டேன், அது உங்கள் வாழ்க்கை முறை, இயற்கையோடு இணைந்த வாழ்க்கை முறையை நீங்கள் மாற்றிவிட்டதால் உங்களால் மண்ணைப் பயன்படுத்த முடியவில்லை, மற்றபடி பூனையார் கழிவு இருத்தல் மூடுதல் செயல்முறைகள் எக்காலத்திற்கும் ஏற்றதே. இன்றும் கூட கிராமங்களில் நடைமுறையில் உள்ளது, உங்கள் வாழ்க்கை முறையின் மனிதத் தவறுகள் எப்படி பூனையாரின் கொள்கைத் தவறாகும் என்று கேட்டு மடக்கினார். சரி தானே என்று நினைத்தேன். 5000 ஆண்டு காலப் பழமையான தன் பூதைத் தத்துவத்தில் ஒன்றை பூனையார் குறிப்பிட்டார்.



" உங்களுக்கு பூனையார் அறிவுறுத்துகிறேன், நீங்கள் திறந்த வெளியில் (மலம்) கழிக்காதீர்கள், சுகாதார கேடுகளை (தண்ணீர் வீணாகுதல் , மற்றும் நோய் பரவல்) கருத்தில் கொண்டு மண் குழிகளை பயன்படுத்துங்கள், நீங்கள் எத்தனை (முறை) குழிப் பறித்தீர்கள் என்பதை பூனையார் அறிவார், ஏனெனில் பூனையார் அறிவானவர், அன்பானவர் (மதில்) மேலானவர் " (பூ.த.மொ 99)

அடுத்ததாக பூனையார் "சந்திரன் பூமியை ஏன் சுற்றுகிறது என்று தெரியுமா ?" என்று கேட்டு என் பதிலுக்காக என்னை நோக்கினார்.

என்னது 'பூதை அறிவியலா ? இன்னொரு நாளைக்கு பார்க்கலாம், தவிர அவுங்க அளவுக்கு உன்னால் அறிவியலை மிக்ஸியில் போட்டு அடித்துக் கொடுக்கும் திறமை இருக்கிறதா ? என்று தெரியவில்லை, என்றேன். ஒரு முறை முறைத்துவிட்டு கனவில் இருந்து காணாமல் போனார், இன்னொரு நாளைக்கு கனவில் வரும் போது பால் வைத்து, மன்றாடித் தான் பூனையாரின் பூதைகளைப் பெற வேண்டும் போல

பூதையார் பூனையார் வாழ்க !

பின்குறிப்பு 1 : பூனையாரின் பூதை மார்கத்தில் சேர்ந்து கொண்டால் உங்கள் முன் ஜென்மப் பாவங்களில் 85 விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும், முன்பிறவி நம்பிக்கை இல்லை என்றாலும் பரவாயில்லை, இப்பிறவியின் பாவங்களை 90 விழுக்காடு பூனையார் எடுத்துக் கொண்டு நற்கதிக் கொடுக்கத் தயாராக உள்ளார், உடனே முந்துங்கள் (நன்றி பூனையார் பூதை மார்க்கத்து தலைமை பூசாரி திரு தருமி ஐயா)

பின்குறிப்பு 2 : இந்த இடுகையை 2 - 3 ஆண்டோ அதற்கு பிறகோ படிப்பவர்கள், கோவியாருக்கு இடைப்பட்ட (இந்த காலத்தில்) என்ன ஆயிற்று, பூனையார் பூதையார் என்றெல்லாம் எழுதியுள்ளாரே என்று நினைக்கக் கூடும், குறிப்பிட்ட (இந்த காலத்தில்) பதிவுலகில் மதப் பிரச்சார நெடிகள் மூக்கைத் துளைத்ததால், மதச் சுதந்திரம் மற்றும் மதப் பிரச்சார சுதந்திரம் என்ற அடிப்படையில் கோவியார் மற்றும் பூனையாரின் பூதை மார்கத்தினரால் 'கடவுள் பூனையார் ' அதில் இறக்கிவிடப்பட்டுள்ளார் என்பதை தகவலாகப் பெற்றுக் கொள்ளவும்.

இணைப்புகள் :
பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் (எளிய அறிமுகம்)
முக நூல் : Cat Worship

5 மார்ச், 2012

தி.க தோழர்கள் படித்த திருவாசகம் !

நேற்று சிங்கை இலக்கிய வட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பெரியவர் பொற்கிழிக்கவிஞர் சொ.சொ.மீ சுந்தரம் அவர்களின் 'கம்பனுக் கை கொடுத்தவர்கள்' என்ற தலைப்பில் நிகழ்த்திய 2 மணி நேர உரையைக் கேட்க நேர்ந்தது. சுமார் இரண்டு மணி நேரம் அருவியாக மேடைப் பேச்சு இலக்கியம் இடையே நகைச்சுவை, கிளைக் கதைகள் என கம்பராமாயண சிறப்பைப் பற்றியும் அதைப் புகழ்ந்தவர்கள் மற்றும் அவர்களது சிறப்புகளையும் பேசினார். கேட்கக் கேட்க அது போன்று அடுத்தத் தலைமுறைகளுக்கு பேச்சாளர்கள் கிடைப்பார்களா என்ற எண்ணமே எனக்கு தனியாக ஓடியது, ஆம் ! பொருளியல் மற்றும் வசதியான வாழ்க்கைத் தேடலின் ஓட்டங்களின் இடையே இளைப்பாறும் பொழுது போக்குகளாக மேற்கத்திய இசையும், திரைபடங்களும் ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன, பாரம்பரிய இசை மற்றும் தமிழர் இலக்கியமெல்லாம் வெறும் ஆவணங்களாக தொகுக்கப்பட்டு பாதுகாப்பாக திறந்து பார்க்கப்படாமலேயே முடங்கிக் கிடக்கின்றன, விரல்விட்டு எண்ணும் அளவுக்கே அதுவும் ஐம்பது அகவையைக் கடந்தவர்களாக இன்றைய இலக்கிய பேச்சாளர்களின் எண்ணிக்கை உள்ளது. அவர்களும் இன்னும் 20 - 30 ஆண்டுகளில் மறைந்து போக ஒருவேளை தமிழன் தன் இலக்கிய பாரம்பரியத்தை உணர்ந்து கொள்ளும் போது டைனசர்களின் படிவங்களைத் தேடிக் காட்சிக்கு வைத்து டைனசர் இப்படி இருந்தது, இவ்வளவு வலிவு மிக்கது என்று காட்டுவது போல் தமிழ் இலக்கியம் மற்றும் அதன் சுவைகளைத் தேட வேண்டி இருக்கும்.

******

பெரியவர் சொ.சொ.மீ.சுந்தரம் கம்பனைப் போற்றியவர்கள் என்று பேச்சுகளின்டையே கம்பனைப் போற்றிய திரு வி கலியாண சுந்தரம் என்கிற திருவிக பற்றியும் குறிப்பிட்டார். ஒரு முறை திருவிக திருச்சிக்கு கம்பராமயண சொற்பொழிவிற்காக இரயிலில் வந்தார், அவரை வரவேற்க ஏராளமான அன்பர்கள் (பக்தர்கள்) மற்றும் ஏற்பாட்டாளர்கள் இரயில் நிலையத்தில் குழுமி இருந்தனர், வேறொரு நிகழ்ச்சிகாக பெரியாரும் அதே இரயில் நிலையத்தில் இறங்கி திருவிகவும் அன்று திருச்சி வருவாத அறிந்த பின்னர் திருவிகவைப் பார்த்துவிட்டுச் செல்ல நினைத்து காத்திருந்தாராம்.

திருவிக வந்து இறங்கிய பின்னர் அவரை வரவேற்க வந்தவர்கள் அழைக்க, பெரியாரைக் கண்ட திருவிக தாம் தற்போது பெரியாருடன் செல்ல விரும்புவதாகவும், குறிப்பிட்ட நேரத்தில் ஏற்பாட்டாளர்களில் நிகழ்ச்சிக்கு வந்துவிடுவதாகவும் கூறி பெரியாருடன் சென்றுவிட்டாரம், ஏற்பாட்டாளர்களுக்கு திருவிக 'நாத்திகன் இராமசாமி நாயகனுடன்' சென்றுவிட்டாரே என்ற வருதத்துடன், திருவிகவை பெரியாருடன் செல்லவேண்டாம் என்று வற்புறுத்தவும் முடியாமல் சென்றுவிட்டனராம்.

அதன் பிறகு திருவிக மற்றும் பெரியார் திருச்சி முக்கொம்பு காவேரிக் கரைக்குச் சென்று பேசிக் கொண்டு இருந்துவிட்டு திருவிக நிகழ்ச்சிக்குச் செல்லும் முன் தீர்த்த குளியல் (ஸ்னானம்) முடித்துவிட்டு ஆற்றில் இறங்கிக் குளிக்க, குளித்து முடித்து வந்ததும் திருவிகவின் பையில் இருந்து திருநீரை எடுத்து பூசிக் கொள்ளக் கொடுத்தாராம் பெரியார். அதன் பிறகு அன்றைக்கு தாம் பேசம் போகும் கம்பராமயணப் பகுதிகளைப் பற்றி பெரியாரிடம் கூறிக் கொண்டு வந்தவர் இடையே திருவாசகம் பற்றிக் குறிப்பிட்டு நெகிழ்ந்தவராக திருவிக சொன்னாராம், தாம் இறந்தால் இறுதிச் சடங்கின் போது திருவாசகம் படிக்கப்பட வேண்டும் என்பதே என் விருப்பம். பெரியாரும் அதை அமைதியாக கேட்டுக் கொண்டுவந்தாரம், பிறகு திருவிக தன் சொற்பொழிவுக்குப் போக, பெரியாரும் அவரது நிகழ்சிக்கு செல்ல விடை பெற்றுக் கொண்டார்கள்.

பாரதி தாசன், அண்ணா போன்று திருவிகவும் பெரியாருக்கு முன்பே மறைந்துவிட்டார், பெரியாருக்கு தம் அருமை நண்பர் திருவிக சொன்னது நினைவுக்கு வந்தது, திருவிகவின் இறுதிச் சடங்கிற்குச் சென்றவர். தம் தொண்டர்களை அழைத்து திருவிகவின் இறுதிச் சடங்கு ஆசையான திருவாசகத்தை திருவிகவின் உடல் அருகே நின்று படிக்க சொல்லி பணித்தாரம். திருவிகவின் ஆசை நிறைவேற்றப்பட்டது.

*****

பெரியார் தூற்றிகள் இவற்றை அறிந்திருந்தாலும் இது பற்றி எழுதினால் பெரியாரை புகழ்ந்தது போல் ஆகிவிடும் என்று மறைத்துவிடுவர். பெரியார் பிழைப்புவாதிகளான தற்கால திக குழுவினர் இது பற்றி எழுதினால் 'பெரியார் திருவாசகம் படிக்கச் சொன்னார் என்பது நாத்திகத்திற்கு இழுக்கு' என்று அடக்கிக் கொள்வர். பெரியாரை வெறும் பார்பன எதிர்பாளராகவும் நாத்திகராகவும் காட்டுவதற்கான முயற்சியில் தான் இவர்கள் செயல்படுகிறார்கள், மனித நேயம் தெரிந்த மாமனிதன், மனித இழிவுகளை அகற்ற பெரியாருக்கு நூற்றாண்டு வாழ்க்கைத் தேவை என்பதால் தான் இயற்கையும் பெரியரை 90 அகவைக்கும் மேல் விட்டு வைத்திருந்தது, இன்னும் 200 நூற்றாண்டுகளுக்கு சாதி மதப் பேய்கள் ஒழியும் வரை பெரியார் எம்போன்றவர்களால் எடுத்துச் சொல்லப்படுவார்.

இணைப்பு:

27 பிப்ரவரி, 2012

பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் !

எம்மதமும் சம்மதம் ஆனால் பூனை மதமே என் மதம், இன்றைய உலக மதங்களுக்கு முன்னோடியானது பூனை மதமே, ஆம் ! பிரமீடு கால எகிப்தில் பூனையே கடவுளாக கொண்டாடப்பட்டது. பூனை மதத்தை நான் ஏன் தேர்ந்தெடுத்தேன் ? உலகில் உள்ள மதங்களில் யாவும் போலி சாமியார்களும், மதவாதிகளும் ஆகிரமித்து அதை மாற்றிவிட்டதால் நான் ஆதி மதமான பூனை மதத்தை உயிர்பித்து அதில் சேர்ந்து கொள்ள முடிவு செய்தேன்.

பூனைக்கு கடவுள் தகுதி இருக்கிறதா ? ஆக்கல் காத்தல் அழித்தல் என்ற மூன்று நிலைகளில் பூனை இருப்பதால் அதற்கு முழுமையான தகுதி உண்டு. ஏராளமான குட்டிகளை ஈன்று ஆக்குகிறது, அவைகளில் பலவற்றை கவ்விச் சென்று காக்கிறது, நம்மை ஏமாற்றும் எலிகளை அழித்து நம்மைக் காக்கிறது, இவற்றையெல்லாம் வெறெந்த தெய்வமாவது செய்கிறதா ? இவற்றையெல்லாம் நாய் செய்கிறதே அதுவும் கடவுள் இல்லையா ? நாய் ஏற்கனவே பைரவராக தத்தெடுக்கப்பட்டு உப தெய்வமாக தன்னை மாற்றிக் கொண்டதால் முழுத் தெய்வ தகுதியை அது இழந்துவிட்டது.

பூனையாரின் தத்துவங்கள் :



பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் - இதை நாம் பூனையார் கொடுத்த 'பகூத்' அறிவைக் கொண்டு சிந்துத்து ஆய்ந்து பார்த்தால் தான் இது எவ்வளவு பேருண்மைகளை அறிவியலைக் கொண்டுள்ளது என்றே நாம் உணருவோம், மேம்போக்காகப் பார்த்தால் இது வெறும் பழமொழிதான். அதாவது பூனைக் கண்ணைத் திறத்தல் மூடுதல் என்ற இரு நிகழ்வாக இந்த ஒரு பழமொழியை நாம் ஆய்(வு) செய்ய வேண்டும், இன்றைய அறிவியல் விஞ்ஞானிகள் என்ன சொல்லுகிறார்கள் ? உலகம் பெருவெடிப்பில் இருந்து தோன்றியது என்று தானே சொல்லுகிறார்கள், அதாவது பெருவெடிப்பின் துவக்கம் பூனை கண்ணைத் திறத்தல், பூனையின் கண் திறந்திருக்கும் வரையில் பிரபஞ்சத்தின் தோற்றம் அதைத் தொடர்ந்து கேலக்ஸிகள், சூரியன், இந்த பூமி மற்றும் நாம் எல்லோரும் இருப்போம், பூனை கண்ணை மூடத் துவங்கும் அந்த வினாடியில் பிரபஞ்சம் சுருங்கத் துவங்கி புள்ளி ஆகிவிடும், பிரபஞ்சம் சுருங்க ஆரம்பித்தால் பூமி இருக்குமா ? அதைத் தான் பூனைக் கண்ணை மூடினால் பூலோகம் இருண்டுவிடும் அதாவது இருட்டு என்பது அழிவு, பூமி அழிந்துவிடும் என்கிறார்கள், இந்த எளிய தத்துவத்தில் பிரபஞ்ச பேருண்மையே அடங்கி இருப்பதை சிந்திக்கமாட்டீர்களா ? என்று பூனையார் அரைகூவல் விடுக்கிறார்,. இதை யாரோ எவரோ சொல்லி இருந்தால் இவ்வளவு தத்துவத்தையும் ஒன்றாகச் சொல்லி இருக்க முடியுமா ? இதைவிட இதன் சிறப்பு இந்த தத்துவம் எகிப்திய பிரமீடுகள் தோன்றிய போது அதாவது 3500 ஆண்டுகளுக்கு முன்பே இது சொல்லப்பட்டுவிட்டது தான்.

இரவு வணக்கத்திற்கு உரியவர் பூனையார் மட்டுமே : உங்களில் பலர் இரவு வணக்கம் சொல்லி வருகிறீர்கள், ஆனால் அதை யாருக்கு சொல்லுகிறீர்கள் என்பது தான் முக்கியம், தூங்கப் போகிறவர்களுக்கு இரவு வணக்கம் சொல்லுவதால் என்ன பயன் ? சிந்திக்க மாட்டீர்களா ? பூனையார் கடவுளாக இரவு முழுவதுமே விழித்திருப்பவர், உங்கள் (பால், மீன் தவிர்த்த) உணவு பொருட்களை எலிகளிடம் இருந்து காப்பவர். அவருக்குச் சொன்னால் உங்கள் வணக்கத்தை நினைவு வைத்துக் கொண்டு உங்களுக்கு உதவி செய்து கொண்டே இருப்பார், அதைவிடுத்து வேறு யாருக்கும் சொன்னால் என்ன பயன் ஏற்படப் போகிறது. பூனையார் உங்களை எச்சரிக்கிறார்.

இரவு வணக்கத்திற்குரியவர் (வீட்டுப்) பூனையார் மட்டுமே காட்டுப் பூனையார் இல்லை:
. உஙகளில் பலர் பூனை என்றால் அனைத்துப் பூனையும் தானே என்றே நினைகின்றீர்கள், காட்டுப் பூனையும் வீட்டுப் பூனையும் ஒன்றா ? காட்டுப் பூனை கள்ளப் பூனை அது நீங்கள் தூங்கும் நேரங்களில் உங்கள் வீட்டுக் கோழிகளை திருடிச் சென்றுவிடும், ஆடுகளின் குரல்வளையைக் கடித்து இரத்தம் குடித்து கொன்றுவிடும். அதனால் உங்களுக்கு பொருள் நட்டமே, எனவே நீங்கள் இரவு வணக்கம் சொல்லும் போது எந்தப் பூனைக்குச் சொல்லுகிறீர்கள் என்பது தான் முக்கியம், குறிப்பாக பூனையாருக்கு இரவு வணக்கம் சொல்லும் போது காட்டுப் பூனையைப் பற்றி நினைக்கவே நினைக்காதீர்கள், காட்டுப் பூனை மனிதனுக்கு மாறும் ஊறும் செய்துவிட்டது அதை பூனையார் அவ்வாறு செய்யததற்காக சபித்தே விட்டார், அதனால அவை ஓடி ஒழிந்து இரவில் மட்டுமே வெளிவருகின்றன.

உங்களை (அவர்களை) நான் எச்சரிக்கிறேன் (காட்டுப் பூனைக்கு வணக்கம் சொல்லுபவர்களை), உங்களில் யார் இரவு வணக்கத்தை (இடைவிடாது) இரவு நேரங்களில் (எனக்கு மட்டும்) சொல்லுகிறீர்களோ, (அவர்களுக்கு) பிரமீடு தேசத்து அடுத்த வாழ்க்கையில் இரவு பகலாக ஊர் சுற்றிக் காட்டுவேன், மற்றவர்களின் பகலும் இருட்டாக்கப்படும்(பூ.த.மொ 211)

பூனைகளில் நானே மிகப் பெரிய பூனை (பூ.த.மொ 142)

*********
எகிப்து நாடுடைய இறைவா போற்றி !

குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்தது..........போன்ற பூனையாரின் பூதைத் தத்துவ மொழிகள் பின்னர் ஆய்வு செய்யப்படும்

பூனையார் நாடினால் மேலும் (மேலும்) தொடரும்...

5 அக்டோபர், 2011

இவர்களின் ஆயுதங்களுக்கு பூஜை உண்டா ?

'செய்யும் தொழிலே தெய்வம்' என்ற பம்மாத்து உண்மை என்றால் இவர்களின் (கழுவிய)
ஆயுதங்களுக்குக் கூட பூசைப் போட சொல்லலாம் அல்லவா ?





13 ஜூன், 2011

படைப்புக் கொள்கை - 4

மதவாதிகளின் படைப்புக் கொள்கை பற்றி ஆழ்ந்து சிந்தித்தால் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ஆளுக்கு ஒரு நாள் எண்ணிக்கையைக் குறிப்பிடுகிறார்கள், அவர்கள் கூறுவதிலிருந்து உச்ச அளவாக ஒரு பத்து நாளில் படைப்பு நடந்ததாகக் ஏற்றுக் கொண்டாலும் 'எல்லாம் வல்லக் கடவுள்' நினைத்த மாத்திரத்தில் ஏதும் நிகழாதா ? அதுக்கு ஏன் இத்தனை நாள் ? என்கிற என்போன்றோரின் கேள்விகளுக்கு பதில் எதுவும் வருவதில்லை. கடவுள் கற்பனைக்கெட்டாதவர் என்று கற்பனை செய்து கொள் உனக்குள் சந்தேகங்களே வராது என்பது போல் பதிலளிக்க முனைகிறார்கள், அதாவது கடவுள் அல்லது கடவுளின் ஆற்றல் என்பது நாம் நினைப்பதற்கெல்லாம் அப்பாற்பட்டதாம். உலகம் இருட்டு என்பதை உணர நீ கண்ணை மூடிக் கொண்டால் உலகம் இருட்டாகிவிடும் என்பது போன்ற பாடங்களைத்தான் கடவுளின் ஆற்றல் பற்றி கேட்போர்களுக்கு பதிலாக வருகிறது. ஆனால் இவ்வாறு கடவுள் பற்றி நினைத்த மாதிரி கேள்வி எழுப்புவது எவ்வளவு தவறோ அது போலவே கடவுள் பற்றி அளவுக்கு மிகுதியாக அளந்துவிடுவதும் பலமடங்கு தவறு என்பதை இவர்கள் உணரமாட்டார்கள், ஏனெனில் கடவுள் பற்றிய மிகுதியான புகழ்ச்சியின் வழியாக கடவுளின் கருணை இவர்களுக்கு கிட்டும் என்றெல்லாம் நம்புகிறாகள்.

தீவிர இறை நம்பிக்கையாளர்களிடம் 'கடவுளை நிருப்பிக்க முடியாமா ?' என்றால் யாதொரு பதிலும் இல்லாதது போலவே, எந்த ஒரு உயிர் அல்லது பொருளின் மூலம் அல்லது தோற்றம் குறித்து கடவுளை நம்பாதவர்களிடம் கேள்வி எழுப்பும் போது அவர்கள் பரிணாமத்தை விடையாகச் சொல்வார்கள். இந்திய சமயங்களிலும் பரிணாம வளர்ச்சி பற்றி எந்த ஒரு குறிப்பும் இல்லை, ஆனால் அறிவியலை புறக்கணிப்பது மதவளர்ச்சிக்கு பேராபத்து என்றே உணர்ந்து 'பரிணாமம்' இந்து மதம் ஏற்கிறது என்று இந்துமதவாதிகள் கூறுவது மட்டுமின்றி 'புல்லாகி பூண்டாகி' பாடல்களெல்லாம் பரிணாமம் பேசுவதாகவும். கிருஷ்ணனின் 10 அவதாரமும் கூட பரிணாமத்தை மெய்பிக்கும் கூறுகளாகும் என்பர். புல்லாகி பூண்டாகிப் பாடல்களும், தசவதாரம் இவையெல்லாம் மறுபிறவி நம்பிக்கைகளின் கூறுகளேயன்றி அவற்றிற்கும் அறிவியல் பரிணாமக் கொள்கைக்கும் யாதொரு தொடர்பும் இல்லை. இதற்கு முற்றிலும் மாறாக ஆபிரகாமிய மதவாதிகள் பரிணாமம் என்பதே அறிவியலாளர்களின் அறிவீனக் கூற்று என்றும் இறைவன் படைக்காது 'எயிட்ஸ் கிரிமிகள்' கூட தோன்றி இருக்காது என்பர் :)

அடக்கொடுமையே அதுவும் உண்மை என்றால் இந்தந்த விலங்குளை படைத்தார் என்று வைத்துக் கொண்டாலும், இன்னின்ன விலங்குகளெல்லாம் உண்ணத்தக்கவை அல்ல என்று கட்டுப்பாடு விதித்திருப்பது ஏன் ? அவ்வாறு கட்டுப்பாடுவிதித்து மீறுகிறார்களா இல்லையா என்று கண்காணிப்பதற்கு பதிலாக அவற்றை படைத்திருக்காமலேயே விட்டிருக்கலாமே ? பதில் வராது ஏனெனில் இவற்றை படைத்தாக நம்பப்படும் கடவுள் இவர்களிடம் இது பற்றி (அதாவது பயனற்ற படைப்புகள்) குறித்து குறிப்பு எதையும் வைக்கவில்லை.

மதவாதிகளிடம் தொடர்ந்து கேட்கும் கேள்வியே இது தான். 'கடவுள் தான் அனைத்தையும் படைத்தான் என்றால் படைப்பிற்கான நோக்கம் என்ன ? இதற்கான விடைகளை எவரும் இதுவரை கூறியதே இல்லை. இப்போது நான் ஒரு கடவுள் ஆக இருக்கிறேன் அல்லது ஷங்கர் படம் போல் ஒரு நாள் கடவுளாகிறேன், உலகம், பிரபஞ்சம் எதுவுமே இல்லை, எனக்கு போர் அடிக்கிறது, எதையாவது செய்து என்னை ஊக்கப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறேன், 'எறும்புகள் உண்டாகட்டம்' என்கிறேன் எறும்புகள் உருவாகிறது, பிறகு அவற்றிற்கு கட்டுபாடு விதிக்கிறேன், அவை சொன்னபடி கேட்கவில்லை, அவற்றை மூட்டிய நெருப்பினுள் போட்டு பொசுக்குகிறேன், சில எறும்புகள் அழுகையிலும் ஆற்றமையிலும், கோபத்துடனும் 'உனக்கு வேலை இல்லை என்று எங்களை உருவாக்கி சீண்டிப்பார்க்கிறாய், நீ கொடியவன் தானே ?' இல்லை இல்லை என் பேச்சை கேட்ட எறும்புளுக்காக அரிசி மலை கட்டி வைத்திருக்கிறேன், அவை ஆனந்தமாக உண்டு வருகின்றன நான் ரொம்ப........ப நல்லவன் என்று நான் பதிலுரைத்தால் கொல்லப்படும் எறும்புகள் கொல்லப்படும் முன் இந்த தீர்ப்பை ஏற்குமா ? பொழுது போகாத பொம்முவாக பொம்மைகளை படைத்து அதை தீயில் போடுவதும்,அதில் சில தேர்ந்தெடுக்கப்பட்ட பொம்மைகளை ஊஞ்சல் ஆட்டுவதுமாக இருந்தால் அதை ஒரு இறைச்செயலாக ஏற்றுக் கொள்ள முடியுமா ? கடவுள் குறித்தான படைப்புவாதக் கொள்ளைகள் அனைத்தும் படைப்பு கடவுளால் தோன்றியது என்கிறன ஒழிய அவற்றிற்கான காரணம் இன்னது என்று ஏற்றுக் கொள்ளும் வகையில் எந்த ஒரு மதப்புத்தகமும் எடுத்து இயம்பவில்லை.

சமணம் தழைத்தோங்கிய காலத்தில் நீலி எனப்படும் சமணத் துறவிக்கும், வைதிக மதவாதிக்கும் இடையில் நடந்த வாக்குவாத உரையாடலின் முடிவில்

'நட்ட நடுத்தெருவில் எவருக்கும் தெரியாமல் கிடைக்கும் மலம் தானாக தோன்றியது என்று கூறிவிடமுடியாது' என்றே முடியும்.

எக்ஸிடன்ஸ் அல்லது பொருளின் இருப்பு குறித்து அறிவியலின் கருத்து எந்த ஒரு பொருளும் தானாக உருவாகி இருக்க வாய்ப்பில்லை என்பதே, அவை பிரிதொரு பொருளின் மறுவடிவம் அல்லது தொடர்ச்சி என்பதே. அதாவது எந்த ஒரு பொருளையும் யாராலும் உருவாக்கிவிட முடியாது, மலைகள் சிதையும் போது மண், அவை வேறுறொரு வெப்பநிலையில் இறுகும் போது மலை.

*********

மொத்த பிரபஞ்சங்களின் தூசியும் கோள்களும், அவற்றின் ஒலி ஒளி மின் காந்த ஆற்றல்கள், சுற்றுவிசை ஆகியவை கோள்களை, பூமிகளை, நட்சத்திரங்களை, சூரியன்களை உறுவாக்கிக் கொண்டு உயிரினங்களை தோன்றவைத்து அழித்துக் கொண்டு இருக்கும், அறிவியல் கோட்பாட்டின் படி ஆற்றல்கள் அழிக்கப்படும் போது அது வேறொரு ஆற்றலாக மாறுகிறது. அவை முற்றிலும் சிதைவதோ மறைவதோ இல்லை. மனிதனின் ஒட்டுமொத்த நாகரீக வளர்ச்சி மற்றும் அறிவியல் புலன் எல்லைகள் அவற்றின் கால எல்லையை அல்லது முழுப்பிரபஞ்சம் பற்றிய அறிவை வரையறுத்துவிட முடியாது, அந்த ஆற்றாமையால் தான் இவையெல்லாம் கடவுளின் படைப்பு என்று சொல்லி திருப்தி அடைந்துவிடுகிறார்கள். எளிமையாக சொல்லவேண்டுமென்றால் படைப்பு என்பது எப்போதும் இல்லை ஆனால் பிரபஞ்ச பெளதீகப் பொருள்கள் அனைத்தும் என்றுமே இருப்பவையே அவற்றின் மாறுபட்ட தோற்றங்களும், அவற்றின் சிலவற்றின் உயிர்த்தன்மையும், சிந்திக்கும் ஆற்றலும், தன்னை காப்பாற்றிக் கொள்ள முனைவதும், இனப்பெருக்கம் செய்யும் ஆற்றலும் அவற்றின் கூறுகளே ஆகும். ஆங்கிலத்தில் எளிமையாகச் சொல்லப்போனால் Everything is exists.

நிருபனம் இல்லாத கொலைகள் கண்டிப்பாக தற்கொலை தான் என்பது போன்றே எதையும் நிருபனம் செய்யமுடியாத மதவாதிகள் பார்த்து வியப்பது மட்டுமின்றி தாம் வெறுப்பது என அனைத்தும் கடவுளின் படைப்பு என்கிறார்கள்.

பிரிதொரு பதிவில் தொடருவோம்....

முந்தைய பாகங்கள்..

முந்தைய பகுதிகள் 1, 2 மற்றும் இறைவன் படைக்கிறானா ?

எப்போதும் இடும் பின்குறிப்பு : நான் இறைவன் இருக்கிறானா இல்லையா என்று எங்கும் விவாதிப்பது இல்லை, ஆனால் இறைவனின் செயல்கள் இவை இவை என்று சொல்லப்படுவற்றை என்னால் கேள்வி எழுப்பாமல் இருக்கவே முடியாது, அந்த வகையில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்று சொல்லப்படும் கூற்றை எப்போதும் நான் நிராகரித்தே வருகிறேன்.

20 ஜனவரி, 2011

பிள்ளைக்கறி, பலி கேட்ட கடவுள்கள் !

நரபலி என்றதும் எதோ போலி சாமியார் அல்லது மந்திரவாதிகள் செய்யும் கொடிய செயல் என்று நினைக்கிறோம். ஆனால் இவை பக்தி ஆன்மிகம் என்ற பெயரில் போற்றபடுவது எத்தனை பேருக்குத் தெரியும். தான் விரும்பும் ஒன்றை வேண்டுதல் நிறைவேறியதும் கடவுளுக்காக விட்டுக் கொடுப்பது என்பது காலம் காலமான இறை நம்பிக்கையில் ஒன்று அதன் நீட்சியாக பெற்றப் பிள்ளையை பலி கொடுப்பது, அல்லது வேண்டிய வரம் கிடைக்க மாற்றான் பிள்ளையை கடத்தி பலி கொடுப்பது இவையெல்லாம் அண்மைக் காலம் வரையிலும் கூட நடந்தேறிவருகிறது. மின்னொளி காலத்திலேயே இப்படி என்றால் படிப்பறிவும், உலக அறிவும் இல்லாதா இருண்ட காலங்களில் இவை நடைபெற்றது மிகுதியாவே இருந்திருக்க வேண்டும்.

சேக்கிழார் "அருளிச்" சமைத்த திருத்தொண்டர் என்னும் பெரிய புராணத்தில் பெற்ற பிள்ளையை இறையடியார்களுக்கு கறி சமைத்துக் கொடுத்த சிறுதொண்டர் என்னும் அடியார் பற்றிய கதை ஒன்று உண்டு, தட்டச்சப் பொறுமையில்லை, அதில் புதிதாக ஒன்றும் சொல்லப் போவதில்லை, எனவே கூகுளிட்டத் தேடலில் கிடைத்தக் கதையை அப்படியே தருகிறேன்.

சிவனடியாருக்கு அன்னம் அளித்தப்பின் தான் சிறுதொண்டர் சாப்பிடுவது வழக்கம். மன்னரின் சேனதிபதியான பரஞ்சோதியாரே இவர். ஒரு நாள் அவ்ர் வீட்டிற்கு ரொம்ப நேரமாகியும் ஒரு அடியாரும் வராததால் அடியாரைத் தேட இவர் வெளியில் சென்றார். அவரைச் சோதிக்க எண்ணி சிவபெருமானே இப்படி ஒரு நாடகம் நடத்தினார். சிவனே ஒரு பைரவர் சடாதாரி வேஷத்தில் வந்து சாப்பிட கேட்டார். அவரது மனைவி மகிழ்ந்து, "அடியாரைத் தேடித்தான் என் கண்வர் போயிருக்கிறார். இதோ வந்துவிடுவார் என்றார். சிவனும் வெளியே ஒரு மரத்தடியில் அமர்ந்தார். பின் சிவன் வந்தபின் சாப்பாடு தயாராக இருந்ததால் இலை போடப்பட்டது, ஆனால் சிவனோ அவரது மகனைக் கறி செய்து படைத்தால்தான் தான் சாப்பிடுவேன் என்று சொல்ல, அடியாருக்கு அன்னம் படைப்பதே தன் முதல் கடமை என்பதால் அதேபோல் தன் ஐந்து வயது மகன் சீராளத்தேவன் பள்ளியிருந்து வந்ததும் அவன் சம்மதத்துடன் தம்பதிகள் இருவரும் அவனை வெட்டிக் கறி சமைத்தனர். பின் உணவு உண்ணும் சமயம் சிவன் ரூபத்தில் இருந்த அடியார், "பிள்ளை இல்லாத வீட்டில் நான் உண்ண மாட்டேன் என்று சண்டி பண்ண, சிறுத்தொண்டர் மனம் கலங்கி சிவபெருமானை வேண்ட, பின் வெட்டப்பட்டு உணவாக இருந்த மகன் உயிருடன் திரும்பி வந்தான்.

இந்தக் கதை உண்மை என்றால் இது போன்றச் செயல்கள் கண்டிக்கப்பட வேண்டியது மற்றபடி கற்பனையாக இருந்தால் இது போன்ற சமூகக் கேடு மற்றும் மூட நம்பிக்கையின் உச்சமான அபத்தக் கற்பனை என்பதால் நிராகரிப்பதுடன் கண்டிக்கத்தக்கது. இதை இலக்கியமாக பதித்த சேக்கிழார் தற்போது இல்லை என்பதால் இதை மிகச் சிறந்த பக்தியின் / அன்பின் வெளிபபடு என்பவர்கள் கண்டிக்கத் தக்கவர்கள். இது போன்ற அபத்த கற்பனைகளும், நடப்புகளும் சைவ சமயத்திலோ அல்லது இந்து மதத்திலோ மட்டும் தான் இருக்கிறது என்று கருதத் தேவை இல்லை.

ஆப்ரகாமிய மதங்களில் ஒரு பொதுக் கதை உண்டு, இது பழைய ஏற்பாட்டிலும், குரானிலும் சொல்லப்படுகிறது, இஸ்ரவேலர்கள் பின்பற்றும் பழைய ஏற்பாட்டில் சொல்லப்படுவது படி ஆப்ராகாமின் இருமனைவிகளான ஹகர் மற்றும் சாராவிற்குப் பிறந்த குழந்தைகள் முறையே ஈசாக் மற்றும் இஸ்மாயில் என்பவர்கள் ஆகும், முதல் மனைவியான சாராவுக்கு குழந்தைப் பேரு இல்லாததால் இரண்டாவதாகப் மணந்து கொண்ட எகிப்திய மனைவியான ஹகருக்கு பிறந்தவர் இஸ்மாயில், இஸ்மாயில் பிறந்த பதினான்கு ஆண்டுகளுக்கு பிறகு சாராவும் ஒரு மகனைப் பெற்றெடுத்தார், அவர் பெயர் ஈசாக். இஸ்மாயில் எகிப்திய மனைவி குழந்தையாதலால் இஸ்லாமாயிலை இஸ்ரவேலர்களும் சாராவும் வாரிசாக அங்கீகரிக்கவில்லை. பின்பு அவர்கள் எகிப்திற்கே திரும்பச் சென்றுவிட்டார்கள். ஈசாக் இஸ்ரவேலர்களின் வாரிசாகத் தொடர்ந்தார். ஆப்ரகாமை சோதிக்க விரும்பிய இறைவன் ஈசாக்கை பலி இட பணித்தார், இறைவன் விருப்பதை ஏற்ற ஆப்ரகாம் ஈசாக்கை பலியிட வாளை உயர்த்த இறைவனால் தடுக்கப்பட்டு, ஆப்ராமின் நேர்மை பாராட்டப்பட்டு ஈசாக்கு பதிலாக ஒரு கம்பளி ஆட்டை பலியிடச் சொன்னார் இறைவன் என்பதாகக் கதை முடிகிறது. ஈசாக் வழிவந்தவர்கள் இஸ்ரவேலர்கள் எனவும், இஸ்மாயிலின் வழிவந்தவர்கள் இஸ்லாமியர்கள் என்பவும் இஸ்ரவேலர்களுக்கு மற்றொரு இறைத் தூதரான மோசஸ் கிடைத்தார் என்பதும் பழைய ஏற்பாட்டை பின்பற்றுபவர்களின் நம்பிக்கை.


இதே கதை சற்று மாறுபட்ட வடிவத்துடன் குரானிலும் சொல்லப்படுகிறது. இப்ராஹிம் (ஆப்ரகாம்) மகன் இஸ்மாயில் என்று சொல்லபடுவதுடன் மகனைப் பலியிட இறைவன் கட்டளை இட்டான், பலியிடும் நேரத்தில் இறைவனால் தடுக்கப்பட்டு மகனுக்கு பதிலாக ஆட்டைப் பலியிட்டால் போதும் என்று இறைவன் பணித்தான் என்பது குரானில் சொல்லப்படும் கதை. குரானில் இஸ்மாயிலின் தாய் பெயர் குறிப்பிடப்படவில்லை என்கிறார்கள். இரண்டு கதையிலும் கம்பளி ஆடும், ஆடும் இடம் பெறுகிறது, பலி இடப்படுபவர் பெயர் வேறு, ஆனால் அவர்களின் தந்தை ஒருவரே. இஸ்ரவேலர்கள் சொல்லுவது திரிக்கப்பட்டக் கதை எனவும் குரானை அல்லாவே நேரடியாக ஜிப்ரல் (காப்ரில்) மூலமாக இறைத்தூதர் முகமது நபிக்குச் சொன்னதால் அல்லாச் சொன்னதே உண்மையான கதை என்று இஸ்லாமியர்கள் நம்புகிறார்கள். பலி இட கட்டளை இட்டது ஈசாக்கையா அல்லது இஸ்மாயிலையா என்று குரானில் தெளிவாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும் இஸ்லாமியர்கள் இஸ்மாயிலையே பலியிடச் சொல்லி இருக்கக் கூடும் என்பது இஸ்லாமியர்களின் நம்பிக்கை, மேலும் இஸ்லாமியர்கள் தொழுகையை நோக்கிய புனிதத் தலமான காஃபாவை கட்டியவர் இஸ்மாயில் என்பதும் அவர்களின் நம்பிக்கை. இஸ்மாயிலை இப்ராஹிம் நபி பலியிடத் துணிந்ததைத் தான் தியாகத் திருநாள் (பக்ரீத்) என்று கொண்டாடப்படுகிறது.

*****

மேற்கண்ட இந்துமத (சைவ சமய) கதைகளிலும், சரி ஆப்ரகாமிய மதக்கதைகளிலும் சரி குழந்தைகள் உயிருடன் மீண்டதாக அல்லது பலியிடாமல் மீண்டதாகச் சொல்லப்படுவது சற்று ஆறுதலான முடிவு. இறைவன் நரபலி கேட்பதாகவும், கொடுப்பதாகவும் அதுவும் பெற்ற மகனையே இறைவன் கேட்பதாகச் சொல்லப்படும் கதைகள் எந்த ஒரு தனிபட்ட மதத்திற்கும் உடையகதைகளோ, அவைகள் மட்டும் தான் மூட நம்பிக்கைகளைக் கொண்டிருந்தது என்று சொல்ல எதுவும் கிடையாது. ஆனால் இம்மதங்கள் ஒன்றை ஒன்று மூடநம்பிக்கைக் கொண்டுள்ளதாகத் தான் சாடிக் கொள்கின்றன எவ்வளவு நகைமுரணானது என்பதே இந்த இடுகையில் நான் ஒப்பிட்டு அளவில் பதிய வைத்துள்ளேன்.

இணைப்புகள் :
சிறுதொண்டர்
ஈசாக்
இஸ்லாமியில்
ஆப்ரகாம்

8 அக்டோபர், 2010

ஷங்கர் குழப்பியுள்ள கடவுள் மற்றும் உயிர் !

நாம எதைப் பற்றி மிகுதியான ஆர்வம் கொண்டிருக்கிறோமோ, அது நம்மைக் கடக்கும் போது அதை கண்டிப்பாக தவறவிட்டுவிடமாட்டோம். அது நம் எண்ணத்தில் ஊறிய சமூகம் சார்ந்த கருத்துக்களாக இருந்தாலும் சரி, நாம் விரும்பும் ஒரு பொருளாக இருந்தாலும் சரி.

*****

கடவுள் இருக்கிறாரா ? இல்லையா ? இது எந்திரன் படத்தில் ரோபோவிடம் கேட்கப்படும் கேள்வி...

இதற்கு ரோபோ சொல்லும் விடை

'என்னைப் படைச்சவர் இவர், இதே போல் ஒவ்வொரு படைப்பிற்கும் பின்னால் ஒருவர் இருக்கிறார்......எனவே கடவுள் இருக்கிறார்;

இந்த விடைக்கு திரையரங்கில் பலர் கைத்தட்டினார்கள்.

ரோபோவே சொல்லிவிட்டது எனவே கடவுள் உண்டு என்று கொள்வதா ? அல்லது கடவுளுக்கு ரோபோ சாட்சியா என்பதையெல்லாம் விட ரோபோவுக்கு என்ன (புரோகிராம் வழி) சொல்லப்பட்டு இருக்கிறதோ அதன் படிதான் சொல்லும், எனவே இந்த விடையை ரோபோ சொல்லிய விடை அல்லது ரோபோ கடவுள் இருப்பிற்கு சாட்சி என்றெல்லாம் கொள்ள முடியாது. ரோபோ என்ன ரோபோ நம்ம ஊரில் பாம்பு பால் குடித்துவிட்டு, பிள்ளையார் கழுத்தில் படர்ந்து கடவுள் இருப்பதை நிருபனம் செய்துவிடும். நல்ல பாம்புகள் நிருபனம் செய்யாத வேறொரு கடவுளையா ரோபோ நிருபனம் செய்துவிடப் போகிறது...... ?
நம் நாட்டில் நாகப் பாம்புகள் அதற்காவே புற்றுகளில் குடி இருக்கின்றன. :))))

இது நகைச்சுவைக்கு என்றாலும் கூட, எந்திரன் படத்தில் முதலில் கடவுள் இருப்பை உறுதிப்படுத்தும் ரோபோவை விஞ்ஞானி எந்திரன் குழப்பி இருப்பார். அதாவது ரோபோவுக்கு 'உயிர் மற்றும் உணர்ச்சிகள்' பற்றி விளக்கும் காட்சி, அந்த இடத்தில் ரோபோ உயிர் என்றால் என்ன ? என்று கேட்க....'எப்படிச் சொல்றது......பூமியில் உயிர் என்பதே.....பல்லாயிரம் கோடி ஆண்டுகளுக்கு முன்னால் எதோ ஒரு (கோள்) மோதலில் ஏற்பட்ட விபத்தினால் ஏற்பட்ட ஒன்று' என்பதாக பரிணாம கோட்பாட்டை விளக்குவார்

இதை படம் பார்க்கும் எத்தனை பேர் உள்வாங்கினார்கள் என்று தெரியவில்லை, ரோபோ விடையாக சொல்லும் கடவுள் உண்டு என்பதற்கு முற்றிலும் மாற்றாக பிற்பகுதியில் உயிர்களின் உருவாக்கம் என்பது தற்செயலாக நடந்த ஒன்று விஞ்ஞானி அறிவியல் (பரிணாமக்) கோட்பாட்டை விளக்கி இருப்பார். பார்வையாளர்கள் எப்படி உள்வாங்கி கொள்ள வேண்டும் ? கடவுள் இருக்கார் ஆனால் எதையும் படைக்கல, மனிதர்கள் எந்திரங்களை படைக்கிறார்கள் எந்திரங்களுக்கு மனிதர்கள் தான் கடவுள். பரிணாமக் கோட்பாட்டின் படி தற்செயலாக நடந்த விபத்தில் யாராலும் படைக்கப்படாத மனிதனுக்கும் கடவுளுக்கும் என்ன தொடர்பு ?

இந்த படத்தில் சொல்லும் இந்த 'கடவுள்' மற்றும் 'உயிர்' குறித்த தகவல் ஒரு விவாதத்தை தோற்றுவித்துள்ளது என்று நினைக்க ஒன்றும் இல்லை. படத்தில் இடம் பெறும் இந்த இரு சொல்லாடல்கள் முற்றிலும் ஒன்றுக்கு ஒன்று தொடர்பு அற்றவையாகவும் முரண்பாடாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதற்கு முற்றிலும் மாற்றாக கடவுள் பற்றிய கேள்வியில் தசவதாரம் படத்தில் கமல் 'கடவுள் இல்லைன்னு சொல்லவில்லை, இருந்தா நல்லா இருக்கும்...' என்று தான் சொல்லுகிறேன் என்றது கொஞ்சம் நகைச்சுவையாக இருந்தாலும் குழப்பமற்ற 'நச்'

22 ஜூலை, 2010

படைப்புக் கொள்கை ...3

கடவுள் அனைத்தையும் படைத்ததாக மதங்கள் நம்பிக் கொண்டு இருக்கின்றன, கடவுள் 7 நாளில் உலகைப் படைத்ததாக ஆப்ரகாமிய மதங்களின் அடிப்படை நம்பிக்கை, அதன் பிறகு ஓய்வெடுக்கச் சென்றவர் தூதர்களை அடையாளம் காட்டுவதுடன் நிறுத்திக் கொண்டார் என்பதுடன், இவர் தான் இறுதித் தூதர் என்பது முறையே ஏசு மற்றும் முகமது ஆகியோர் பற்றி ஆப்ரகாமிய மதங்களின் கோட்பாடு, இறுதித் தூதர் யார் என்பதன் நம்பிக்கை தான் அம்மதங்களின் பெயர்களாக முறையே யூத மதம் (மோஸஸ்) கிறித்துவ மதம்(ஏசு), இஸ்லாம் (அ) முகமதிய மதம் (முகமது) என்று வழங்கப்படுகிறது, இஸ்லாம் மற்றும் கிறித்துவ நம்பிக்கைகளையும் அந்த இறைத்தூதர்களை ஏற்றுக் கொண்ட பார்சி மற்றும் அகமதியா மதங்களும் உள்ளன ஆனால் இவற்றின் அடிப்படை கடவுள் கொள்ளை மற்றும் படைப்பு சார்ந்த நம்பிக்கைகள் அனைத்தும் ஒன்று தான், அதாவது கடவுள் ஏழு நாளில் உலகைப் படைத்தார். இந்து மதம் சார்ந்த நம்பிக்கைகளும் இவை போன்று தான் என்றாலும் கூட ஏழு என்றநாள் எண்ணிக்கைக்கு பதில் ஆண்டுக்கணக்கில் சொல்லபடுகிறது மற்றபடி அவை உயர்ந்ததொரு நம்பிக்கை என்று கொள்ள முடியாது. மதங்கள் அனைத்தின் அடிப்படை நம்பிக்கைகளும் கடவுள் உலகை படைத்தார் அல்லது சிருஷ்டித்தார் என்பதான நம்பிக்கை. படைத்தல் அல்லது சிருஷ்டித்தல் என்பது இல்லாத ஒன்றை உருவாக்குவது என்பதாம். இவற்றை ஏன் படைக்க வேண்டும் என்பதற்கு எந்த ஒரு மதமும் தெளிவான ஒரு விடையைத் தந்ததுவிடவில்லை, அது கடவுளின் விருப்பம் என்கிற எளிய விடையைக் கூறி கேள்விகள் எழாது என்று நினைத்துக் கொள்வர்.

மனித அறிவின் படி கடந்த கால வரலாற்றில் புதிதாக எந்த ஒரு உலோகமும் தோன்றி இருக்கவில்லை, இவை அனைத்தும் அறியும் போது இவை இருக்கிறது என்பதாக தெரிந்து கொண்டனர். சிந்துவெளியில் இரும்பைப்பற்றிய அறிவில்லை என்பதால் சிந்துவெளிக்கு பிறகே இரும்பு தோன்றியது என்பது பொருளல்ல, இரும்பு கண்டுபிடிக்கப்படாமல் அல்லது பயன்படுத்தப்படாமல் இருந்திருக்கிறது என்பது தான் பொருள். இன்று நாம் பயன்படுத்தும் அனைத்துவிதாமான பொருள்களும் நாம் அறிவியல் வளர்ச்சி பெறாத காலத்திலும் இருந்தவையே, அவற்றில்கலவை செய்து பெயரிட்டு புதிய பெருள்கள் என்கிறோம், மற்றபடி முற்றிலும் முன்பு மூலங்கள் எதுவுமே இல்லாத பொருள் என்று எதுவுமே கிடையாது. இவைகள் நோய்கிருமிகளுக்கும் பொருந்தும், உயிர்கொள்ளி நோய் கிருமிகள் கூட இருந்திருக்கலாம், அல்லது புதிய பரிணாமாக அவை பிரிதொரு கிரிமியின் வளர்ச்சியாக மாறி இருக்கலாமே அன்றி அவை மூலங்கள் எதுவும் இல்லாமல் தான் தோன்றியாக தோன்றி இருக்க வாய்புகள் இல்லை, மேலும் அவை பரவும் சூழல் போதிய தட்பவெட்பம் ஆகியவை அவை எளிதில் பரவுவதற்கு வழி செய்திருக்கின்றன. அதாவது நாம் பெயர் வைத்திருக்கும் புதிய நோய்கள் கிருமிகள் அனைத்துமே முன்பு பெயரில்லாமல் இருந்தவை அல்லது பரவாமல் இருந்தவை. அறிவியலாளர்கள் புதிதாக ஒரு கோள் அல்லது நட்சத்திரம் பற்றிய அறிமுகம் கொடுக்கிறார்கள் என்றால் அவை முன்பு இல்லாமல் இருந்தது கிடையாது, அவை அறிவியல் புலனுக்குள் அறியப்பெற்றிருக்கிறது என்பதே பொருள், கருங்குழிகள், பெருவெளிகள் அனைத்துமே இல்லாத எந்த ஒரு பொருளையும் உருவாக்கிவிடாது அவற்றில் இருக்கும் வாயு மண்டல மூலக் கூறுகள் ஒன்றிணைந்து அல்லது சிதைந்து திடப் பொருள் உருவாக்கத்தை நடத்துகின்றன என்பது தான் அறிவியல் உண்மை.

அடிப்படையில் உயிரினங்கள் அனைத்தும் உற்பத்தி (இனப்பெருக்கம்) வளர்ச்சி, முதிர்ச்சி எனபதனுள்ளும், ஒன்றை ஒன்றும் உண்ணும் சுழற்சியில் இருக்கின்றன. இவற்றில் நீண்ட வாழ்நாள் கொண்டவற்றின் உற்பத்தி குறைவாகவும், குறுகிய வாழ்நாள் கொண்டவை மிகுதியான உற்பத்தித் திறனையும் பெற்றிருக்கின்றன. வேட்டையாடி அழிக்கப்பட்ட உயிரனங்களைக் கருத்தில் கொள்ளாவிட்டாலும், இயற்கைச் சீற்றங்களினால் முற்றிலும் அழிந்த உயிரினங்களின் மறு உற்பத்திக்கு கடவுள் என்ன செய்திருக்கிறார் என்கிற கேள்விக்கு மதங்கள் விடை சொல்லுவது இல்லை. படைப்பிற்கான காரணம் இறை விருப்பம் என்றாலும் அவை முற்றிலும் அழிந்து போனதற்கு என்ன காரணமாக இருக்கும் ? அவற்றை படைத்ததின் நோக்கத்தை அப்படைப்புகளும் தோன்றியதன் நோக்கத்தை நிறைவு செய்துவிட்டனவா என்பதற்கு தெளிவான எந்த ஒரு பதிலையும் இறைவனின் படைப்பு என்கிற நம்பிக்கையாளர்கள் விடை தேடியதில்லை. இத்தகைய கேள்வியில் படைப்பு என்று எதுவும் கிடையாது, உயிரினத் தோற்றம் சூழலால் அமையப் பெற்றது என்பதையும் பரிணாமம் அல்லது ஏதோ ஒன்றினால் நம்ப வேண்டி இருக்கிறது. நன்னீரில் உற்பத்தியாகாத புழுக்கள், பூச்சிகள், கொசுக்கள் தேங்கிய குட்டையில் (தோன்றி) வளர்வதற்கு சுற்றுச் சூழல் என்பது தானே வேறுபாடு.

தாவிர வகைகள் உட்பட, உயிர்களின் நோக்கம் உணவு தேடுதல் (தன்னைப் பாதுகாத்தல்), இனப்பெருக்கம் இவை தவிர்த்து எதுவும் கிடையாது. வாழுதல் அதில் கிடைக்கும் இன்பம் எனப்படுபவை தாவிர வகைக்கள் தவிர்த்து உயிரினங்களுக்கு இருந்தாலும், தாவிர வகைக்களுக்கு வாழும் இன்பம் என்னும் மனம் சார்ந்த உணர்வுகள் கூட கிடையாது, வாழும் இன்பம் தவிர்த்து எந்த ஒரு உயிரனத்திற்கும் வாழுதலுக்கான வேறு எந்த தனிப்பட்ட பலனும் கிடையாது, நாம் ஏன் வாழனும் என்கிற கேள்வியே எழாமல் உடல் சார்ந்த, இச்சை, பாசம் என்பதை வளர்த்துக் கொண்டு மனித இனம் வாழுதலை நேசித்தாலும், பிற உயிரனங்களுக்கு தாம் ஏன் வாழனும் என்கிற எண்ணம் எதுவுமே இல்லாமல் தன்னிச்சை எனப்படும் தூண்டலில் தோன்றி, வளர்ந்து, இனப்பெருக்கம் செய்து மறைகின்றன. உயிரினம் வாழுதலுக்கான நோக்கம் என்னவாக இருக்கும் என்கிற தேடலில் மறைந்த (இறந்த) பிறகான நிரந்தர மற்றும் தற்காலிக சுவர்கங்களையும் மதங்கள் காட்டுகின்றன. ஆனாலும் இவை பற்றிய கற்பனையில் சிக்காத மனித இனம் மதங்கள் தோன்றுவதற்கு முன் வாழ்ந்து மறைந்தும் இருக்கின்றன. படைப்பு அதற்கான நோக்கம் இவற்றின் தெளிவுகள் எதுவுமே வரையறுக்கப்படாத சூழலிலும் கூட மனிதன் உட்பட உயிரினங்கள் தோன்றி மறைந்திருக்கின்றன எனும் போது அதற்கு காரண கருத்தா என நம்பப்படும் கடவுள் அவர்களுக்கு மட்டும் ஏன் எதையும் (தெளிவாக, மறைமுகமாகக் கூடச்) சொல்லி வைக்க வில்லை என்ற கேள்வியில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்கிற கொள்கைகள் என்னால் எப்போதும் நிராகரிக்கப்படுகிறது.

எந்த ஒரு தானியங்கி (சுழற்) விசையும் தொடந்து செயல்பட புற விசையின் எப்போதுமான தூண்டல் என்பது தேவை. எடுத்துக்காட்டிற்கு பூமியின் பருவகாலம் மாறி மாறி ஆண்டுக்கு ஒரு முறை வருவதற்கு (அதன் வழி தொடர்சியான தானிய பொருள் உற்பத்திக்கு, உயிர் தோற்றங்களுக்கு) பூமி சுற்றுவதும் சூரியனும் புறக்காரணிகள், இந்த வெளிப்புற தூண்டல் இல்லை என்றால் பூமியில் பருவகாலம் என்பதே ஏற்படாது. பரவெளியெங்கும் இது போல் கோள்கள் அனைத்துமே ஒன்றை ஒன்று சார்ந்து இயங்குகின்றன, இதைத் தவிர்த்து புறத்தூண்டல்கள் எதுவுமே இல்லாத சூழலில் படைப்புகள் என்று நம்புவை அனைத்தும் வெறும் நம்பிக்கை மட்டுமே என்று நான் கருதுகிறேன். இவை அனைத்தையும் இறைவனின் சித்தம்/விருப்பம் செயல்படவைக்கிறது என்று பூசி மொழிகினாலும், இவை எல்லாம் செயல்பட வைப்பதில் இருக்கும் இறைவனின் விருப்பம் என்ன ? என்று கேட்டால் விடை கிடைப்பது இல்லை. இறைவனுக்கு விருப்பம் நோக்கம் எதுவுமே கிடையாது என்று வைத்துக் கொண்டாலும், மனிதன் நல்லவனாக வாழனும் அதன் பிறகு சொர்கம் கிடைக்கும் என்பதும் மதங்கள் காட்டும் இறைவனின் விருப்பம் என்று எடுத்துக் கொள்ள முடியுமா ?

விருப்பம் எதுவும் இல்லாத கடவுள் விரும்பிய படி உலகையும் ஏனையவற்றையும் படைத்தார் என்பது முரணனான கூற்றுகள். அப்படியே கடவுளுக்கு விருப்பம் இருந்து படைத்திருந்தாலும் படைப்பின் பிழைகளுக்கு இறைவன் தான் பொறுப்பு என்று குற்றம் சொல்லுபவர்களை நாம் புறந்தள்ளவும் முடியாது. படைப்பில் பிழையே இல்லை என்பவர்களும் எல்லாவற்றையும் சரியாக படைத்த கடவுள், மனிதனுக்குள் இத்தனை பிரிவினைகளை ஏற்படுத்தாத சூழலை மட்டும் படைக்கவில்லை என்று சொன்னாலும் அது முரண் தானே. இறைவன் நாடினால் எல்லாம் நல்லபடியாக நடக்கும் என்பதும் கெட்டவை நடந்ததில் இறைவனின் பங்கு இல்லை என்பது போன்ற முரணான கூற்றுகளை எப்போதும் நிராகரிக்கிறேன், அந்தக் கூற்று உண்மை என்றால் படைப்பில் பாராபட்சம் என்பதும் உண்மையாகத்தானே இருக்க முடியும் ?

நான் இறைவன் இருக்கிறானா இல்லையா என்று எங்கும் விவாதிப்பது இல்லை, ஆனால் இறைவனின் செயல்கள் இவை இவை என்று சொல்லப்படுவற்றை என்னால் கேள்வி எழுப்பாமல் இருக்கவே முடியாது, அந்த வகையில் அனைத்தும் இறைவனின் படைப்பு என்று சொல்லப்படும் கூற்றை எப்போதும் நான் நிராகரித்தே வருகிறேன்.

முந்தைய பகுதிகள் 1, 2 மற்றும் இறைவன் படைக்கிறானா ?

(என்றாவது) மீண்டும் தொடரும்......

30 மே, 2010

சோதிடர்களுக்கு சுண்ணாம்பு தடவினால் என்ன ?

உலகில் இருவகைப் பொருள்கள் தான் உண்டு, ஒன்று உயிருள்ளவை மற்றது உயிரற்றவை. உயிருள்ளவற்றில் தானியங்கி இயக்கம் இருக்கும், மிகப் பெரிய திடப் பொருள்களான பூமி உள்ளிட்ட கோள்களான உயிரற்றவற்றில் இருக்கும் இயக்கம் புறத்தூண்டல்களினால் ஏற்படுவது. இந்த புறத்தூண்டல் பால்வெளி, பரவெளி ஆகியவற்றில் பிணைந்(த்)திருக்கும் காந்தவிசை.

அசைவு என்பது தவிர்த்து உயிருள்ளவை, உயிரற்றவை இவற்றின் வேறுபாடுகள் அவை மாற்றத்திற்கு உட்படப் போகும் காலம் மட்டும் தான். இரண்டிற்குமே சிதைவு என்பது என்றோ ஒரு நாள் ஏற்படும் உறுதியான ஒன்று. உயிருள்ளவை குறுகிய காலத்திற்குள் முழுவளர்ச்சி அடைந்த பிறகோ, விபத்துகளாலோ சிதைவைடையும், உயிரற்றவை சுற்றுச் சூழல் (குறிப்பாக நீர் மற்றும் காற்றின் இரசாயன சேர்க்கை) இவற்றினால் என்றோ ஒரு நாள் மூலக் கூறுகளில் மாற்றம் ஏற்பட்டு சிதைவடையும், அல்லது அதை மனிதர்களே சிதைப்பதன் மூலம் அவற்றின் தன்மை மற்றும் அமைப்பு மூலக் கூறு ஆகிய அனைத்தும் சிதைந்து பிற வடிவம் எடுக்கும். ஆனால் எந்த ஒரு பொருளையும் ஆக்கவோ அழிக்கவோ முடியாது அதன் வடிவங்களை மூலக்கூறுகளை மாற்றி அமைக்கலாம் இது தான் இயற்பியல் தத்துவத்தின் பேருண்மை. மனிதன் வரலாறுகளின் வரையரை காலம் முதல் இன்று வரை (நிலவின் மண் என்பதைத் தவிர்த்து) புதிய பொருள்கள் என்று எதுவுமே 'தோன்றியது' இல்லை. இருப்பவற்றைத் தான் பயன்படுத்துகிறோம். வெறும் கடற்கரை மணல் அதில் கடல் நீரைச் சேர்த்து பிசைந்து அவற்றை உருவங்கள் ஆக்குவது போன்றது தான் நமது கண்டுபிடிப்புகள் அனைத்துமே. குறிப்பாக சொல்லப் போனால் ஆற்றல்களின் தன்மைகளை மாற்றி பயன்படுத்திக் கொள்வது (நீரின் விசையில் இருந்து மின்சாரம், சூரிய ஒளியில் இருந்து மின்சாரம் என்பது போல்) இவற்றைத்தான் மனித அறிவின் வழி செய்திருக்கிறோம்.

மனிதன் எத்தனை ஆண்டுகள் பின்னோக்கி பயணித்தாலும் அழியாத பொருள், மாற்றத்திற்கு உட்படாத பொருள் என்று எந்த ஒன்றையும் அடையாளப்படுத்துவிட முடியாது. அதற்கு சாட்சியாக சிதைந்த வடிவத்தில் இருக்கும் எகிப்து பிரமீடுகளைப் பார்க்கிறோம். அவை 5 ஆயிரம் ஆண்டுகள் கடந்து நின்றாலும் அவற்றின் சிதைந்த வடிவத்தைக் காண்கிறோம், இன்னும் ஓர் 5 ஆயிரம் ஆண்டோ அல்லது அதற்கு மேற்பட்ட ஆண்டுகளிலோ அங்கு பிரமீடுகள் இருந்தன என்கிற தடயமே இல்லாமல் போய்விடும்.

பிரமீடுகள் மட்டும் அல்ல அனைத்துவகையான மத வழிபாட்டுத்தளங்களும், கோவில் சிலைகளும் கூட சிதைவுக்கு உட்பட்டவையே. ஒரு காலத்தில் மிகப் பெரிய அளவில் வணங்கப்பட்ட புத்தர் சிலைகள் ஆசிய நாடுகளில் சிதைந்த வடிவில் பல்வேறு இடங்களில் காணப்படுகின்றன. கவனிப்பார் இன்றிய கோவில்கள் பல சிதலமடைந்து கிடக்கின்றன. கவனிப்பு கவனிப்பு இன்மை இவை இரண்டு காரணிகள் தவிர்த்து எந்த ஒரு பொருளும் சிதைவை நோக்கிய பயணத்தில் தான் இருக்கின்றன, கவனிப்பினால் அந்த சிதைவின் காலம் சற்று தள்ளப்படும் மற்றபடி எந்த ஒரு பொருளின் சிதைவையும் முற்றிலும் தடுத்து நிறுத்திவிட முடியாது. பொருள்கள் அனைத்துமே சிதைவுக்கு உட்பட்டவை. பொருள்கள் அனைத்தும் சிதைவுக்கு உட்பட்டவை என்பது தத்துவமோ, புதிய சிந்தனையோ, கண்டுபிடிப்போ இல்லை, காலம் காலமாக நாம் கண்ணுறும் உண்மை.

இந்த அடிப்படை கூடத் தெரியாதவர்கள் என்று நாம் நமது சோதிடக்காரர்களை சொல்லிவிட முடியாது, இது முற்றிலும் படிக்காத பாமரனுக்குக் கூடத் தெரிந்த உண்மையே. ஆனாலும் சோதிடக்காரர்கள் ஏன் 'காளகஸ்தி கோவில் கோபுரம் இரண்டாக பிளந்ததை வைத்து பல்வேறு தரப்புகளை பயமுறுத்துகிறார்கள் என்றால் வெறும் பிழைப்பு வாதம் தான். மனிதனுக்கு இருக்கும் அடிப்படை பயம் அதைப் பயன்படுத்திக் கொண்டு இன்னின்ன ராசிக்காரர்களுக்கு கோபுரம் சிதைந்தால் பாதிப்பு என்று கிளப்பிவிட்டால் கல்லா நிறையாதா என்கிற பேராசையே. நாட்டில் நாடுகடுத்தப் படவேண்டியவர்களில் போலி சாமியார்களுக்கு அடுத்தபடியாக போலி சோதிடர்களைச் சேர்க்கலாம். மதப் பழமைவாதிகள் எப்படி மக்களை கற்காலத்துக்கு கட்டி இழுத்துச் செல்கிறார்கள் என்றால் அவர்களுக்கு தட்டிக் கொடுத்து கூடவே சேர்ந்து கயிறு இழுப்பவர்கள் இந்த சோதிடர்கள் தான்.

கோபுரம் இடிந்ததால் நாட்டுக்கு ஆபத்தாம், அரசாள்பவர்களுக்கும், அரசியல் வாதிகளுக்கு ஆபத்தாம், ஆறு ராசிக்காரர்களுக்கு ஆபத்தாம். பாபர் மசூதியை இடித்த பிறகு ஏற்பட்ட ஆபத்துகளைவிடவா ஏற்பட்டுவிடப் போகிறது ?

போலி சாமியார்களை விரட்டுவது போலவே போலி சோதிடர்களையும் விரட்டினால் தான் பில்லி சூனியம் போன்ற ஒரு மாய நம்பிக்கையின் வழியில் வழிபாட்டு நம்பிக்கைகள் செல்லாது.

தொடர்புடைய செய்தி : காளஹஸ்தி ராஜகோபுரம் இடிந்ததால் அரசியல் தலைவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமா?

29 மார்ச், 2010

கால் கழுவும் கலாச்சாரம் !

பண்பாடு என்ற அளவில் அன்றாட செயல்களில் சிலவற்றை நேரிடையாக சொல்வது நாகரீகமின்மையாக கருதப்பட்டு அவை மறை பொருளாகச் சொல்லப்படும், அதுவே இடக்கரடக்கல் என்னும் இலக்கணச் சொல், சளி சிந்துதல் என்று சொல்லாமல் மூக்கு சிந்துதல் என்பார்கள், குண்டி / சூத்து கழுவுதலை கால்கழுவுதல் என்பார்கள். இடக்கரடக்கல், குழூக்கூறி ஆகியவை மறை பொருளாகச் சொல்லப்படும் செயல் குறித்த சொற்களின் மறுவடிவம் அல்லது குறியீடு. இருந்தாலும் இங்கே கால் கழுவுவது என்றால் நான் இடக்கரடக்கலான குண்டி கழுவுவது பற்றிச் சொல்லவில்லை.

*****

ஒருவரின் இழிவுகளை சுமப்பதன் மூலம் நாம் அவரைப் போற்றுகிறோம் என்பது பண்பாடாம். இப்படித்தான் இராமன் என்னும் அண்ணனை உயர்வு படுத்த தம்பி பரதன் அவனது செருப்பை வைத்து நாடாண்டான் என்பது இராமாயணக் கதை. உன் கால் செருப்பு கூட எனக்கு உயர்வு தான் என்று சொல்வதாகப் பொருள். பிறரை எதை வைத்து 'செருப்பால் அடிப்பேன்' என்று கேவலப்படுத்துகிறோமோ, மற்றவருக்கு 'செருப்பாக இருப்பேன்' என்று உயர்வாகச் சொல்வது போன்ற பண்பாட்டு விழுமியங்கள் காலந்தோறும் இருந்தே வருகின்றன. என்னைப் பொருத்த அளவில் இது தேவையில்லாத உணர்ச்சி மிகுதலின் வெளிப்பாடுகள், ஒருவரின் காலில் விழுதலும் மற்றவரை காலை வாரிவிடுவதும் கிட்ட தட்ட ஒன்று தான். ஒன்றின் பெயர் பணிவாம் மற்றொன்று துணிவாம்.

திருமணச் சடங்கின் போது பெற்றோர்களுக்கு பாத பூசை செய்வது பார்பனிய வழி இந்து திருமண முறையில் ஒரு சடங்கு. பெற்றோர்களின் காலில் பூசை செய்வதை பிள்ளைகள் விரும்பியே செய்கின்றனர் என்றாலும் இது பெற்றோர்களுக்கு பேரனந்ததை தந்துவிடுமா ? அப்படியே என்றாலும் அந்த நிகழ்வின் போது எந்த ஒரு விதவை தாய்க்கும் அந்த தகுதி கொடுக்கப்படுவதில்லை. விதவை தாயின் மக்களின் திருமணத்தின் போது வேறொரு மூத்த பெரியப்பா, சித்தப்பா தம்பதிகளுக்கு அந்த பாத பூசை நடக்கும், அவர்களே முன்னின்று திருமணத்தை நடத்தி வைப்பார்கள். பாத பூசை என்பது பெற்றோர்களுக்கு மதிப்பதற்கு செய்யும் ஒரு சடங்கு என்றாலும் இரு பெற்றொரும் இருந்தால் மட்டுமே அதுவும் கிடைக்கும்.

கால்களை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்பது தவிர்த்து கால் உட்பட பிற(ர்) உடல் உறுப்புகளுக்களை ஒருவர் மதிக்க வேண்டியது இல்லை. ஒருவரின் மீதான மரியாதை என்பது அவருடைய முழுவுருவத்திற்கும் அன்றி தனித்தனியாக கால், கை, தலை முதலியவற்றிற்கானது அல்ல. சாமியார்கள் என்று சொல்லிக் கொள்ளும் புனித பிம்பங்கள் முற்றையும் துறந்ததாகச் சொல்லிக் கொண்டு பக்தர்கள் கால் கழுவி, பாத பூசை செய்யச் சொல்வதைவிட சக மனிதனை இழிவு படித்தும் நிகழ்வு எதுவும் இல்லை. அப்படியே செய்ய அது என்ன கழிவரைக்கே செல்லாத காலா என்ன ? இதையும் விடக் கொடுமை காஞ்சிப் பெரியவாள்கள் திறந்த வெளியில் தான் ஆய் போவார்களாம், அதும் வாழையில் தான் போவார்களாம், அவர்களுக்கு பயபக்தியோடு வாழை இலைப் போடுவது மட(த்தின்) வழக்கமாம். அதை புனித பணியாக சிலர் செய்துவருவதாகவும் பலர் படித்திருக்கக் கூடும். மனித உடல்கழிவுகள் ஒருவருக்கு சந்தனமாகவும், மற்றவருக்கு மலமாகவும் போகுமா என்ன ? இது போன்ற இழிவுகளையும் ஒரு மனிதன் தன்னைத் தாழ்த்திக் செய்வதையெல்லாம் இறைப் பணி என்று உளறவும் செய்கிறார்கள்.

பெற்றோர்கள் குழந்தைகளுக்கு மனம் உவந்து செய்யும் இந்த செயல்களையெல்லாம் கூட வயது வந்த பெற்றொர்களுக்கு பிள்ளைகள் செய்யாமல் வேலைக்காரர்களை வைத்து செய்யும் நிலையில் ஒரு சாமியாரின் கழிவுகளுக்கான பணிவிடைகளில் என்ன புனித தன்மை இருந்துவிடப் போகிறது.

தன்னை கடவுளின் அவதாரம் என்று கூறிக் கொள்ளும் சாமியார்கள், சாமியாரிணிகள் பலரும் பக்தர்கள் பாத பூசை செய்வதை அனுமதிப்பதும் இல்லாமல் அதற்கு கட்டணம் வேறு வைத்து வசூலிக்கிறார்கள். இந்த நாற்றம் பிடித்த சாமியார்களின் செயல்களை இந்து மத இடிதாங்கிகள் கண்டித்ததே இல்லை. பாத பூசை செய்வதில் பக்தனுக்கு பலன் உண்டு என்றால் அதே சாமியார்களுக்கு குண்டி கழுவி விடுவது பன்மடங்கு பலன் தரும் என்று சொல்லிவிட முடியுமா ? அந்த அளவுக்கு இன்னும் செல்லாதது ஓரளவு ஆறுதலே அளிக்கிறது, அதுவும் ஒரு புனித சேவை என்று எதோ ஒரு பக்தி இலக்கியத்தில் கோடிட்டு இருந்தால் சாமியார்களுக்கு குண்டி கழிவி விட டெண்டர் விட்டு வசூல் நடத்தினாலும் நடத்திவிடுவார்கள்.

*****

சாமியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் அனைவருமே நம்மைப் போல் எலும்பும் சதையும், கழிவு உறுப்புகளும் உள்ள மனிதர்கள் தாம், அவர்கள் உடலில் இருந்து வியர்வை, சீழ், மலம், சிறுநீர், விந்து, கண்ணீர் ஆகிய அனைத்து கழிவுகளும் வெளியேறும். இன்னும் சொல்லப் போனால் நம்மைப் போலவே பெற்றோர்களின் உடல் உறவின் மூலம், கழிவு உறுப்பின் வழியாக பிறந்தவர்கள் தான் அனைத்து மத சாமியார்கள் மற்றும் மத போதகர்கள் அனைவருமே. அவர்களது தனித்தன்மை என்பது அவர்கள் நடவடிக்கை மட்டுமே அன்றி உடல் அல்ல. சாமியார்களுக்கு கால்கழுவுதல், இலை போடுதல் போன்றவற்றிற்கு பதிலாக முதியோர் இல்லங்களுக்குச் சென்று குளிக்கக் கூட இயலாத நிலையில் நலிவுற்றிருக்கும் மூத்தவர்களுக்கு அப்பணிவிடைகளைச் செய்தால் கிடைக்கும் அவர்களின் மனதிலிருந்து கொடுக்கும் வாழ்த்தும், ஆசியும் எந்த ஒரு முக்தி பெற்ற அல்லது முக்தி பெற்றதாகச் சொல்லிக் கொள்ளும் சாமியார்களால் கூட அளிக்க முடியாது.






எந்த ஒரு சாமியார் பாத பூசையால் மகிழ்கிறானோ, அவ்வாறு செய்ய அனுமதிக்கிறானோ, பணிவிக்கிறானோ அவன் போலி சாமியாராகவே இருக்க வேண்டும். ஏனெனில் மக்களை இழிவு படுத்திப் பார்பவன் ஒரு உண்மையான துறவியாக இருப்பதற்கு வாய்பே இல்லை. தன்னை அவதாரம் மற்றும் கடவுள் என்று விளம்பரம் செய்ய இவ்வாறு செய்கிறார்கள்.

24 மார்ச், 2010

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை மற்றும் பக்தி வளர்ச்சி !

'கோவில்கள் கூடாது என்றோம் ஏனெனில் அவை கொடியவர்களின் கூடாரம் ஆகிப் போனதால்' என்று திரைவசனங்கள் வந்த போது தற்போதைய நவீன கேமராக்கள் இல்லாததால் அதை யாரும் பெரிதாக எடுத்துக் கொண்டு அலட்டிக் கொள்ளவில்லை. எனக்கும் அந்த வரிகளின் மீது மனவருத்தம் உண்டு, 'கோவில்' என்பதற்கு பதிலாக 'வழிபாட்டுத் தலங்கள்' என்று சொல்லி இருந்தால் இன்னும் பொருத்தமாகவும் மதச் சார்பற்ற சமூக சிந்தனைத் தொடராக அமைந்திருக்குமே என்கிற மனவருத்தம் தான். ஏனெனில் வழிபாட்டுத் தலங்கள் தான் சமூக எதிரிகளின் புகலி(ழி)டமாக இருக்கின்றன என்பதை பல மதங்களின் வழிபாட்டுத் தலங்களும் அவ்வநிருபனம் செய்துவருகின்றன

*****

மூட நம்பிக்கைக்கும், இறை நம்பிக்கைக்கும், ஆன்மிகத்திற்கும், பகுத்தறிவிற்கும் விளக்கம் தெரியாத ஆத்திக, நாத்திக தரப்புகளின் கேள்விகளும் பதில்களும் என்னாளும் கேட்கப்பட்டுவருபவையே. நிறுவன மயமான ஆன்மிக வியாபரங்களைக் கேள்வி கேட்கிறேன் என்கிற பெயரில் தனிமனித இறை நம்பிக்கையை கேலிசெய்யும் நாத்திகர்களின் பொதுவான கேள்வி, "கடவுள் என்று இல்லாத ஒன்றை கற்பனையாக படைத்துக் கொண்டு வழிபடுவது மூடத்தனம் தானே ?" இதற்கு பதிலாக ஆத்திகர்கள் என்ற பெயரில் பலர் சொல்லும் ஒரே விடை, "கற்பனையானது என்றால், நாள் தோறும் வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டு வருகிறது, எனவே கடவுள் நம்பிக்கை எப்படி வெறும் கற்பனையாகும் ?"

என்னைப் பொருத்தவரை தனிமனிதனின் நம்பிக்கையைப் பற்றிக் கேள்வி எழுப்புவதும் தவறு, அதற்கு பதிலாக ஒரு சமூகத்தின் செயலை விடையாக கூறுவதும் தவறு, அது சரியானவிடை என்பதைவிட அதில் சப்பைக் கட்டுதல் அல்லது கட்டுமானம் மட்டும் தான் இருக்கிறது என்பதாக எனது புரிதல். நமக்கு பிடிக்காத உணவு மற்றவருக்கு பிடித்த உணவாகக் கூட இருக்கும், இங்கு உணவின் சுவை என்பது மாறுபடாது, பிடித்தது பிடிக்காதது என்பது இருவரின் வேறு வேறு உணர்வுகள் மட்டுமே. இதில் எந்த ஒருவர் உணவைப் பற்றிக் கற்பனை செய்து கொண்டிருக்கிறார் என்று உறுதியாகச் சொல்ல முடியும் ? பிறரை எந்தவிதத்திலும் பாதிப்புக்கு உள்ளாக்காத தனிமனித உணர்வுகள், விருப்புகள் அவரவருடைய தனிப்பட்ட முடிவு, இதை விமர்சனம் செய்வது அறிவுடைமை அல்ல. இது தனிமனிதனின் இறை நம்பிக்கைக்கும் பொருந்தும். என்னைப் பொருத்த அளவில் தனிமனித இறை நம்பிக்கையை நான் மதிக்கிறேன்.

வழிபாட்டுத்தலங்களின் எண்ணிக்கை ? என்பது நம்பிக்கையாளர்களின் எண்ணிக்கையைப் பொருத்த தேவையா அல்லது நம்பிக்கையாளர்களின் பக்தி உணர்வுகள் மிகுந்ததன் அடையாளமா ?

30 ஆண்டுகளுக்கு முன்பு உணவகங்களின் எண்ணிக்கை என்பது அங்கொன்றும் இங்கொன்றுமாக இருக்கும், ஆனால் தற்போது உணவகங்களின் எண்ணிக்கை தெருக்களின் எண்ணிக்கையை விட மிகுதி, இதை வைத்து மக்கள் ஓட்டல் உணவுகளை மிகுதியாக நாடுகிறார்கள் என்று சொல்ல முடியும், காரணம் சமையல் என்பதே ஒரு சுமையான வேலையாக போய்விட்டது, வீட்டில் சமைப்பதற்கு ஆயத்தம் செய்வதும், அதன் பிறகு பாத்திரங்களை கழுவி வைப்பதும் பெரிய வேலையாகிவிட்டது, ஆண் பெண் இருவரும் வேலை செய்வதால் சமையல் என்பது சுமையாகிவிட்டது எனலாம். ஓட்டல்களின் எண்ணிக்கையும் மிகுந்ததற்குக் காரணம் வீட்டில் சமைக்கும் வேளைகளின் எண்ணிக்கை குறைந்ததுவும் ஒரு காரணம். இந்த காரணங்களை வைத்து ஓட்டல்களில் தரமான உணவைத் தான் தருகிறார்கள் அதனால் தான் ஓட்டல்கள் எண்ணிக்கை கூடி இருக்கிறது, மக்களுக்கும் ஓட்டல்கள் என்றென்றும் தேவையாக இருக்கிறது என்று தீர்ப்பு எழுதிவிட முடியமா ?

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கை உயர்வுக்கு மக்கள் தொகை உயர்ந்ததும், நகரங்கள் பெருகியதும், புதிய புற நகரங்கள் தோன்றியதும் காரணம், அந்தந்த பகுதிகளில் ஒவ்வொரு மதத்தின் வழிபாட்டுத் தலம் என்பது மறுக்க முடியாத தேவை ஆகி இருக்கிறது என்பது காரணம் அன்றி, அது வழிபடுபவர்களின் பிரச்சனைகளை தீர்க்கிறது, தீர்த்து வைக்கிறது, மக்களுக்கு இறை நம்பிக்கைக் கூடி இருக்கிறது என்பதற்கான அடையாளம் இல்லை. வழிபாட்டுத் தலங்களினால் மக்கள் பிரச்சனைகள் தீர்ந்தது என்பது உண்மையானால் அவற்றின் எண்ணிக்கையில் வளர்ச்சி ஏற்பட்டு இருக்காது என்பதே உண்மை. ஒரு வழிபாட்டுத் தலத்தினால் பிரச்சனைகள் தீர்ந்தவர்கள் அந்த வழிபாட்டுத் தலத்தையே அவர்களது சந்ததிகளுக்கும் பரிந்துரைப்பார்கள் புதிது புதிதாக வழிபாட்டுத் தலங்களின் தேவைக்கு வாய்ப்பே இருந்திருக்காது.

வழிபாட்டுத் தலங்களின் எண்ணிக்கைக்கை உயர்வுக்கு காரணம் மக்கள் தொகை வளர்ச்சியும், புதிய நகர, புற நகர விரிவாக்கமே அன்றி அது பக்தி வளர்ந்ததின் அடையாளமோ, அளவுகோலோ இல்லை.

100 ஆண்டுகளுக்கு முன் வெளி நாடுகளில் இந்து கோவில்கள் குறைவு, தற்பொழுது 100க் கணக்கில். அந்நாட்டு மக்கள் இந்துக்களாக மாறிவிட்டார்கள் என்று இதற்கு விடை சொல்ல முடியுமா ? மாறாக இந்துக்கள் அந்த நாடுகளில் இடம் பெயர்ந்துள்ளார்கள் என்பது மட்டும் தானே விடை.

****

நித்யானந்தம் போன்ற போலி சாமியார்களின் ஆன்மிக ஆதிக்கத்தால் பணக்காரர்களிடமிருந்து பெரிய அளவில் வருமானம் குன்றிய கோவில்களில் தற்போது உண்டியல் வசூல் மிகுந்து இருக்கிறதாம், இதை வைத்து மக்களுக்கு ஆன்மிக உணர்வும் இறை நம்பிக்கையும் வளர்ந்ததாகச் சொல்ல முடியுமா ? போலி சாமியாருக்கு போடும் பணத்தை பணக்காரர்கள் கோவில் உண்டியலில் போடுகிறார்கள் அவ்வளவு தானே.

10 மார்ச், 2010

தினமலர் பரிந்துரை செய்த ஆன்மிக சிந்தனையாளர் நித்தி !

நித்தியை ஆன்மிகவாதி என்ற லேபிள் கொடுத்து மக்கள் முன் அறிமுகப் படுத்தியவர்கள் பலர், நித்தி அம்பலப்பட்ட பிறகு தடாலடியாக பலர் நித்திக்கும் தமக்கும் தொடர்பில்லை என்பது போல் நித்தி பற்றிய எதிர்கருத்துகளைத் திரட்டி எழுதிவருகிறார்கள், நித்தியின் விடியோவைப் போட்டு காசு பார்த்தாலும் நக்கீரன் சென்ற ஆண்டே நித்தி ஒரு கல்லூரியில் மாணவிகளுக்கு கட்டுபிடி சிகிச்சை செய்து கசமுசா செய்தார் என்று வெளி இட்டிருந்தது. நக்கீரன் குழுமம் நடத்தும் ஆன்மிக இதழ் மற்றும் தினகரனில் நித்தி கட்டுரைகள் வந்ததா என்று சரியாக தெரியவில்லை. குமுதம் நித்திக்காக கதவை திறந்து வைத்திருந்தது. தினமலர் நித்தியை சிறந்த ஆன்மிகவாதிகளுல் ஒருவர் பட்டியலில் இணைத்து அவரின் அருளுரைகளை வெளி இட்டுவந்தது. இவை எல்லாம் நித்தி வீடியோவில் சிக்கும் முன்பு தான். தினமலர் தற்போது நித்தியை ஆன்மிக அருளாளர்கள் பட்டியலில் இருந்து எடுத்துவிட்டிருந்தது.

தற்போது இருக்கும் பட்டியலில் நித்திபெயர் இல்லை. தினமலர் முன்பே நித்தியை நம்பவில்லையோ என்று நினைத்துக் கொண்டிருந்தேன். எதற்கும் கூகுள் கேச் வழியாகத் தலைப்பைத் தேடலாம் என்று பார்த்தால் நித்தி அம்பலப்படும் முன் தினமலர் நித்தியையும் ஆன்மிகவாதிகளின் பட்டியலில் இணைந்திருந்தது தெரிய வந்திருக்கிறது.

நித்தி சிக்கிய பிறகு


நித்தி சிக்குவதற்கு முன்
****

லோக குரு, ஜெகத் குரு, அவதாரம் இவை எல்லாம் ஒரு சாதாரண மனிதனுக்கு செய்தி இதழ்கள் சூட்டும் வெறும் புகழ்ச்சி மகுடம், வேடம் களையும் போது செய்தி இதழ்களே தொடர்புடைய அந்த நபருக்கு செருப்பு மாலை போடுகிறார்கள். இவர்கள் ஆன்மிகவாதிகள் என்று அறிமுகப்படுத்தும் நபர்களே இப்படி என்றால் 'வாலிப வயோதிக அன்பர்களுக்கான சிட்டுக்குருவி லேகியம், சித்தவைத்திய விளம்பரம், அவர்களாகவே இட்டுக்கட்டி எழுதிக் கொள்ளும் திரைச் செய்திகள் இவை எல்லாம் அப்பாவிகளை ஏமாற்ற செய்தி இதழ்கள் தரும் தரமற்ற சேவை விளம்பரங்களின்றி வேறென்ன ?

8 மார்ச், 2010

சிங்கையில் ஸ்வாமி ஓம்காரின் திருமந்திரம் சொற்பொழிவு !

வரும் வெள்ளி அன்று மாலை மணி 7:00 - 9.00 மணி வரை, பிரபல வலைப்பதிவர் மற்றும் ஆன்மிக அடியார் திரு ஸ்வாமி ஓம்கார் அவர்களின் சொற்பொழிவு நடை பெற இருக்கிறது.

இடம் : வடபத்திர காளியம்மன் கோவில்
நாள் : 12 மார்ச் 2010, வெள்ளிக்கிழமை; நேரம் மாலை 7:00 - 9:00

அனைவரும் வருக அனுமதி இலவசம். சிற்றுண்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

*****

நாத்திகம் பேசும் நீ ஏன் ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சி பற்றி அறிவிப்பு வைத்திருக்கிறாய் என்று பல நண்பர்கள் வியப்புடன் கேள்வியாகவே கேட்கிறார்கள். நான் என்னவோ ஆன்மிக எதிரி என்றும் தீவிர பகுத்தறிவாளன் பெரியார் தொண்டன் என்கிற பிம்பத்தை படிப்பவர்கள் ஏற்படுத்திக் கொண்டுள்ளார்கள். மூடநம்பிக்கையையும், மதவெறி, சாதிவெறியையும் எதிர்ப்பவன் இறை நம்பிக்கையற்றவனாகத்தான் இருக்க வேண்டும் என்பதே ஆன்மிக மற்றும் நாத்திக நண்பர்களின் எண்ணமாக இருக்கிறது. இது மிகவும் தவறு. மக்களுக்கு பயனிளிக்க வேண்டிய ஒன்று எந்த பெயரில் இயங்கினால் என்ன என்பதை நினைக்க மறந்துவிடுகிறார்கள்.

இந்த பொது புத்திப் புரிதலில் கொள்கை ரீதியான தவறுகள் பெரும்பாலும் மறைக்க அல்லது மன்னிக்கப் படுகிறது. நிறுவனம் அல்லது வணிக மயமாகி இருக்கும் கொள்கைகள் என்ற அளவில் (நாள்பட்ட) தலைமையில் கீழ் இயங்கும் பகுத்தறிவு வாதமோ, ஆன்மிகமோ எல்லாம் ஒன்று தான். எந்த ஒரு கொள்கையும் தலைமையை வைத்து அளவிட செய்ப்படுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. கொள்கைக்கான தொண்டன் என்ற பெயரில் தலைமை முறைகேடுகளை சகித்துக் கொண்டே ஆகவேண்டும் என்று எழுதாத விதியாக எல்லாவித அமைப்புகளிலும் உண்டு.

எனது நிலைப்பாடுகள் என்ற அளவில் பலமுறை நான் எழுதி இருப்பவை, சாதி எதிர்ப்பு அல்லது சாதிச் சம உரிமை. மதவாத எதிர்ப்பு, மூட நம்பிக்கை எதிர்ப்பு, தாய் மொழி உணர்வு இதன் அடிப்படையில் தான் நான் எழுதிவருகிறேன். பிறரைத் தாழ்த்தாத வீழ்த்தாத நம்பிக்கைகள் எதையும் நான் குறை சொன்னது கிடையாது. ஓப்பீட்டு அளவில் எங்கள் மதத்தில் தான் அனைவரும் உய்வு அடைகிறார்கள் போன்ற மதபற்று போலி ஆன்மிகத்தை கடுமையாகவே சாடி இருக்கிறேன். பார்பனியம் என்கிற தளத்தில் உயர்வர்க்க, ஆளுமைகளைச் செய்யும் பார்பனர்களையும் பிற சாதியினரையும் கடுமையாகவே சாடி இருக்கிறேன். மற்றபடி பல்வேறு மதம், சமூகம் சார்ந்த நெருக்கமான நண்பர்கள் எனக்கு உண்டு. கொள்கை அளவிலான முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டும் போது அங்கே நட்பையோ, தனிப்பட்ட குணநலன்களையும் நான் கருத்தில் கொள்வது இல்லை. எனக்கு பல தரப்பு நண்பர்கள் உண்டு, அதிலும் ஆன்மிகம் பேசுபவர்கள், ஆன்மிக வாதிகள் நிறையவே உண்டு. நான் கண்ணை மூடிக் கொண்டு நாதிகன் பேசுபவனும் அல்ல கண்ணை மூடிக் கொண்டு ஆன்மிகம் என்ற பெயரில் அடவாடிகள் செய்யும் மதவாதிகளை ஆதரிப்பவனும் அல்ல. நான் பெரியார் மற்றும் வள்ளலார் ஆகியோரை சமமாகவே போற்றுகிறேன் என்பது என் வலைப்பதிவில் அவர்கள் இணைந்திருக்கும் படமே தரவு.

*****

ஸ்வாமி ஓம்கார் பதிவுகள் தமிழ் மணத்தில் புதிதாக இணைந்த போது அவருக்கு பின்னூட்டம் இட்டவர்கள் மிகக் குறைவு, ஏனெனின்றால் இந்து ஆன்மிகம் என்ற பெயரில் பார்பனிய மேலாண்மை போற்றும் கருத்துகளே வெளிவருகிறது என்பதால் ஸ்வாமி ஓம்கார் எழுத வந்த போது, இவரும் ஒரு இந்துத்துவவாதியோ என்று நினைக்க வைத்திருக்கும். நான் அவரது தொடக்க கால 'குரு கீதை' பதிவுகளுக்கு பின்னூட்டம் இட்ட போது கூட அப்படியாக நினைத்தேன். ஆனால் அவரது மறுமொழிகள் இந்துமதத்தை தாங்கிப் பிடிப்பதாக இல்லாமல் ஆன்மிகம் சார்ந்ததாகவே இருந்தது. மேலும் புனிதம், புனிதத்துவம் என்ற இனிப்பு தடவி எதையும் எழுதாமல் எதார்த்தமாக எழுதிவந்தார். பிறகு அவருடன் மின் அஞ்சல் தொடர்பு என நட்பாக தொடர்ந்தது அவரது அறிமுகம். தமிழகம் சென்றிருந்த போது கோவையில் நேரடியாக சந்தித்தேன். ஆசிவாங்கவோ, ஜோதிடம் பார்க்கவோ செல்லவில்லை. இணையத்தின் வழியாக அறிமுகம் ஆன நண்பர் என்ற அளவில் தான் எங்கள் சந்திப்பு அமைந்தது. இன்றளவிலும் அப்படித்தான். ஸ்வாமி ஓம்கார் மற்றவர்களுக்கு சாமியார், ஸ்வாமிஜி. வால்பையன் , கல்வெட்டு போன்றவர்கள் பார்வையில் மற்றொரு போலி சாமியார். எப்படியோ....என்னைப் பொருத்த அளவில் மனம் விட்டுப் பேசக் கூடிய நல்ல நண்பர்.

சிங்கையில் தமிழ் நிகழ்ச்சி ஒன்றை நடத்துங்களேன் என்று கேட்டுக் கொண்டேன். எனக்கு தெரிந்தது சோதிடம் மற்றும் ஆன்மிகம், ஆன்மிக நிகழ்ச்சி நடத்தலாம், என்னுடைய மாணக்கர் ஒருவர் இருக்கிறார். அவரும் கூட சிங்கையில் நிகழ்ச்சி நடத்தக் கேட்டுக் கொண்டார் என்று ஸ்வாமி ஓம்கார் என்னிடம் குறிப்பிட்டார். அவரது தினம் தினம் திருமந்திர நூல் வெளியான பிறகு, ஏற்பாடு செய்யுங்கள் திருமந்திரம் பற்றி சொற்பொழிவு நடத்துகிறேன் என்றார். அவரது மாணக்கருடன் கலந்து பேசினேன். அவருக்கு தேவை ஸ்வாமி ஓம்கார் நடத்தும் யோகா வகுப்புகள் தான். ஏனெனின்றால் அவரால் 10 - 15 நாட்களுக்கு இந்தியாவில் தங்கி ஸ்வாமி ஓம்காருடன் யோகா கற்றுக் கொள்ள நேரம் வாய்கவில்லை. கூடவே அவரது நண்பர்கள் பலருக்கும் யோக கற்றுக் கொள்ள ஆவல் (யோகாவும் இந்திய ஆன்மிகம் ஒன்றுக் கொண்டு தொடர்புள்ளது என்றாலும், இப்பொழுதெல்லாம் எளிமை படுத்தி ஆன்மிகம் கலக்காமல் பலர் மதச் சார்பற்ற யோகா நடத்துகிறார்கள்)
எனவே திருமந்திரம் சொற்பொழிவுடன் யோகா வகுப்புகளும் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டு, ஸ்வாமி ஓம்காருக்கு தேதிகளைக் குறிப்பிட்டு, தங்கும் இடம் முதல் அனைத்தும் ஏற்பாடுகளையும் ஸ்வாமியின் மாணக்கர் மற்றும் நான் இணைந்து செய்தோம்.

ஸ்வாமி ஓம்கார் நிகழ்ச்சியினூடே சனி அல்லது ஞாயிறு பதிவர் சந்திப்புகள் உண்டு. தேதி முடிவு செய்யவில்லை. பின்னர் சிங்கைப் பதிவர்களுடன் கலந்து பேசிவிட்டு எழுதுகிறேன்.

இசை, இயல் தமிழில் இருக்கும் பல்வேறு பக்தி இலக்கியங்களில் திருமந்திரம் சிறப்பு வாய்ந்தது, அதனை ஸ்வாமி ஓம்கார் எளிய விளக்கங்கள் மூலம் திருக்குறள் போல் எளிமை படுத்தி பக்தியாளர்களுக்கு பயனளிக்கும் நூல் ஒன்றை எழுதி இருக்கிறார். ஸ்வாமி ஓம்காரின் சொற்பொழிவு அவரது நூல்கருத்தையும் உள்ளடக்கியதாக இருக்கும். இந்த குறிப்பிட்ட நிகழ்ச்சியைப் பொருத்த அளவில் ஸ்வாமி ஓம்கார் ஆன்மிகம் சார்ந்த ஒரு இலக்கிய பேச்சாளர் என்பதாகத்தான் நான் அவரை வரவேற்க மற்றும் முன்மொழிய முடிவு செய்தேன்.

நித்யானந்தன் அம்பலப்பட்டு கிடக்கும் இந்த வேளையிலும் ஒப்புக் கொண்டுள்ளபடி நிகழ்ச்சி நடத்த துணியும் ஸ்வாமி ஓம்காரை மனதாரப் பாராட்டுகிறேன்.

சொற்பொழிவு நிகழ்ச்சிக்கு சிங்கைப் பதிவர்கள் தெரிந்தவர்கள் அனைவரிடம் தெரிவித்து அழைக்க வேண்டுகிறேன். யோக வகுப்புகளுக்கு பதிவு செய்வோர் என்னையோ அல்லது ஸ்வாமி ஓம்காரின் மாணாக்கர் திரு வைரவன் (9750 4503) அவர்களையோ அழைத்து பதிந்து கொள்ளலாம். நிகழ்ச்சிகள் இலவசம்.



பதிவர்கள் அனைவரின் வருகையால் ஆதரவால் நிகழ்ச்சி வெற்றிகரமாக அமையும். நிகழ்ச்சிக்கு அனைவரும் வருக !

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்