பின்பற்றுபவர்கள்

சாதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சாதியம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

5 ஜூலை, 2013

இளவரசனைக் கொன்ற வருணாசிரமம் !

இளவரசனின் மரணச் செய்தி வருணாசிரமவாதிகளுக்கு சாதிகள் அழியாது என்று வயிற்றில் பால் வார்த்திருக்கும், சாதியம் என்பது மனித குல மேன்மைக்கு வேதங்கள் வழிவகுத்து காத்துவருபவை என்பதே வருணாசிரமவாதிகளின் அசைக்க முடியாத நம்பிக்கை. சாதியும் மதமும் சொந்த இனத்தையே கொன்று போடும் தன்மை வாய்ந்தவை என்பதைத் தான் நாம் இதுபோன்ற ஒவ்வொரு நிகழ்விலும் பார்த்துவருகிறோம். குலத்தொழிலையும் அதைச் சார்ந்தவர்களையும் சேர்த்து சாதியமாக மாற்றிய பிறகே செய்யும் தொழிலால் இழிவு என்று மக்கள் பிளவுபடுத்தப்பட்டனர்.

திருவள்ளுவர் காலத்தில் செய்தொழிலை வைத்து திருக்குறள் பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்.....என்ற நிலையில் இருந்தவை ஒவ்வையார் காலத்தில் 'சாதி இரண்டொழிய......' என்ற சாதிய நடைமுறைக்குள் தமிழகம் வந்துவிட்டு இருந்ததை குறிப்பிடுவனயாகும், இன்றைய தாழ்த்தப்பட்ட பிரிவினர் ஒருகாலத்தில் புத்த மதத்தைப் பின்பற்றியவராக இருந்தனர், புத்தமதம் வீழ்ந்த பிறகு அதைப் பின்பற்றியவர்களை ஒடுக்கி, ஒதுக்கி, அவர்களது வழிபாட்டு சின்னங்களை அழித்து, வரலாறுகளை அழித்து, தம்முடைய வரலாறு என்ன என்பதையே அவர்கள் அறியாவண்ணம் நூற்றாண்டு காலங்களும் அவற்றின் சுவடுகளை அழிக்க, இந்த மண்ணில் பிறந்து, மண்ணிற்கு சொந்தமானவர்களையே தாழ்த்தி பார்த்து, தீண்டத்தகாதவர்கள் என ஒதுக்கி வைத்திருக்கும் அவலம், பாரத திருநாட்டைத் தவிர்த்து வேறெந்த நாட்டிலும் நடக்காத கொடுஞ்செயல்.

மனித உடம்பில் சாதிய உறுப்பு என்று ஒன்று இல்லாமலேயே 1000 ஆண்டுகளாக அவை மரபு ரீதியாக கடத்தப்பட்டு அதன் பலனை(?) இன்றும் அனுபவிக்கிறோம், வெளிநாட்டிலேயே தங்கியவர்கள் கூட கூடவே எடுத்துச் சென்ற சாதியை விடாமல் பின்பற்றியே வருகின்றனர், அப்படி என்ன தான் சாதியில் இருக்கிறது ? நினைத்துப் பார்த்தால் குல தெய்வ வழிபாடு, பரம்பரை பெருமை (அதுவும் சிலருக்கு தான்), திருமண உறவு இதைத் தாண்டி எதுவுமே இல்லை, வீட்டை விட்டு வெளியே வந்தால் பல்வேறு தரப்பினரிடம் தொடர்பு கொள்ள வேண்டிய நிலையில் சாதியின் பலன் என்று எதுவும் தனித்து இருப்பதாகத் தெரியவில்லை.

இன்றைய சாதியம் என்பவை ஓட்டு வங்கி என்ற நிலையை அடைந்திருக்கிறதன்றி, அந்தந்த சாதியில் ஏழையாக இருந்தவன் ஏழையாகத்தான் இருக்கிறான்,  எத்தனையோ சாதியத் தலைவர்கள் கல்லூரிகள் துவங்கி இருக்கிறார்கள், அந்தந்த சாதியைச் சார்ந்த ஏழைகளுக்கு இலவசமாக இடம் கொடுத்திருக்கிறார்களா ?

*********

மாநகரங்கள் தவிர்த்து தமிழக நகரங்கள், கிராமங்கள் இன்னும் சாதி பற்று நீங்காமல் தான் இருக்கின்றன, காரணம் சாதிக்கான தனித் தனி தெருக்கள் இன்னமும் உண்டு. நகரங்களில் / மாவட்ட தலைநகரங்களில் தாழ்த்தப்பட்ட சாதியைத் சார்ந்த ஆணை மாற்று சாதி பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டால், வெட்டிப் போடுவது, தற்கொலை நாடகம், இருதரப்புகள் அடித்துக் கொள்ளுதல் இவையெல்லாம் இருக்காது, அதற்கு பதிலாக பெண்ணின் பெற்றோர் பெண்ணை தலை முழுகிவிடுவார்கள், பெண்ணின் பெற்றோர் சார்ப்பு உறவினர்கள் கூட யாரும் தொடர்பு வைத்துக் கொள்ளமாட்டார்கள், பெண்ணுடைய அப்பா / அம்மா  இறந்தாலும் அவளால் வீட்டு வாசலை மிதிக்க முடியாது, கூடப் பிறந்தவர்களே 'பரப்பய கூட ஓடிப் போனவளுக்கு உறவு என்ன வேண்டிக்கிடக்கிறது...........?' என்று தூற்றி விரட்டிவிடுவார்கள். நான் புதிதாக எதுவும் சொல்லவில்லை, இவை எல்லோருக்கும் தெரிந்தவை தான்.

எங்கள் சொந்ததிலேயே அதுபோன்று தலை முழுகப்பட்ட பெண்கள் உண்டு, இதை எழுத எனக்கு கூசுகிறது, இதுபற்றி நானும் உறவுக்காரர்களிடம் பலமுறை பேசியும், யாரும் அவற்றையெல்லாம் பொருட்படுத்தவும் இல்லை. இத்தனைக்கும் தாழ்த்தப்ப்ட்டவர்கள் அல்லாத சமூகம் சார்ந்த கலப்பு திருமணங்கள் எங்கள் உறவுக்காரர்களிடம் மிகுதி. வீட்டில் உள்ள மாடுகளை மேய்க்க, அவற்றை குளிப்பாட்ட, பால் கரக்க, வயலில் வேலை செய்ய எல்லாவற்றிற்கும் பறையன் / பள்ளன் ஆகுமாம், ஆனால் சம்பந்தி என்கிற வட்டத்திற்குள் கொண்டு வந்தால் ஊரு ஒலகம் தூற்றும் என்று அச்சப்படுவார்கள்.  பேருந்தில் சென்று வந்தால் உடனே குளிப்பவர்கள் கூட உண்டு, ஏனென்றால் அதில் கண்ட சாதிக்காரனும் ஏறி இருப்பான், கூட்டத்தில் அவர்களையெல்லாம் ஒருவேளை தொட நேரிட்டிருக்கலாம் என்பார்கள். 

கிரமங்களில் சாதிய மோதல் என்பவை எந்த சாதிக்காரகள் மிகுதியாக வசிக்கிறார்கள் என்பதைப் பொருத்ததே, தாழ்த்தப்பட்டவர்கள் மிகுதியாக வசிக்கும் இடத்தில் மற்ற சாதியினர் வசிக்கமாட்டார்கள், அடுத்த அடுத்த கிராமத்தில் வேறொரு சாதிக்காரகள் வசிப்பார்கள், இந்த பெண்ணைக் காதலிக்க வேண்டும் என்று முடிவெடுத்து யாரும் செயல்படுவதில்லை, இளம் பெண்களைப் பொருத்த அளவில் தன்னை நேசிப்பவர் மீது உடனேயே காதல் வயப்படுவது எங்கேயும் நடைபெருவதே, இன்றைய காலத்தில் பொருளாதரமும் கல்வித் தகுதியும் பெண்கள் உணர்ச்சி வசப்படுவதில் இருந்து கொஞ்சம் மட்டுப்படுத்தியுள்ளது, மற்றபடி ஒரு ஆண் தன்னை நேசிக்கிறான் என்று தெரியும் பொழுது ஒரு பெண் அவன் எந்த சாதியைச் சார்ந்தவன், மதத்தைச் சார்ந்தவன் என்றெல்லாம் பார்க்கவே மாட்டாள்,  இந்தவிதத்தில் பெண்களை கட்டுப்படுத்தும் எந்த சமூகம் அமைப்பும் அடிக்கடி தோல்வியையே சந்திக்கின்றன, எத்தனை ஆண்கள் தன்னை விட தாழ்ந்த சமூத்தில் காதல் திருமணம் செய்து கொள்கிறார்கள் ? கிராமங்களில் தாழ்த்தப்பட்ட கலப்பு திருமணங்கள் பெரும்பாலும் கொலை / தற்கொலையில் தான் முடியும்.

ஒரு ஆணுக்கு தான் தன்னுடைய காதல் கைகூடுமா ? அதனால் ஏற்படும் பிரச்சனைகள் என்ன என்று தெரிந்திருக்க வேண்டும், இளவரசன் செய்தது தவறு, சாதித் தீ எப்போதும் எரிந்து கொண்டிருக்கும் நெருப்பு வளைய கிராமத்தில் இருந்து கொண்டு காதல், ஓடிப் போய் திருமணம் என்றெல்லாம் சென்று மிகப் பெரிய அழிவுகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். இளவரசனின் மரணம் மிகவும் வருத்தமான நிகழ்வு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, சாதிகள் ஒழியும் என்று எந்த நம்பிக்கையும் அது ஏற்படுத்தவில்லை. 

தாழ்த்தப்பட்டவரை கலப்பு திருமணம் - திரைப்படத்தில் கூட காட்ட முடியாத அவல நிலை தான் தமிழகத்தில் உள்ள நிலை, சேரன் எடுத்த பாரதி கண்ணம்மா படத்தில் ஒரு முயற்சி எடுத்து அதிலும் காதலர்களைக் கொன்றுவிடுவார்.  தாழ்த்தப்பட்டவர்களை யாரும் கலப்பு திருமணம் செய்து கொள்வதில்லையா ? இருக்கிறார்கள் அவையெல்லாம் சென்னை போன்ற மாநகரங்களில் உண்டு, சிறு நகரங்களில் ஒதுக்கி வைக்கப்படுவது, கிராமங்களில் கொலை செய்யப்படுவதும் தான் நடைபெற்றுவருகிறது.

திவ்யாவின் அப்பங்காரன்  தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கு சாதிவெறியனா ?  என்றெல்லாம் சிலர் நினைக்க கூடும், இது சாதிவெறியால் நிகழ்ந்த தற்கொலை அல்ல, ஒரு பெண் வீட்டை விட்டு அதுவும் தாழ்த்தப்பட்டவருடன் திரும்ப முடியாத / கண்டுபிடிக்க முடியாத இடத்திற்கு சென்றால் கொஞ்ச நாள் ஊருக்குள் கலவரம் நடக்கும், பின்னர் அமுங்கிவிடும், ஆனால் அக்கம் பக்கம் எதாவது சண்டை என்றால் மொத்த குடும்பத்தையே 'பரப்பய கிட்ட கூட்டிக் கொடுத்த குடும்பம் தானே உன்னது' என்று ஒரே வார்த்தையால் கூனிக் குறுக வைத்துவிடுவார்கள், அந்த அவமானத்தை நினைத்து தான் திவ்யாவின் தந்தை தற்கொலை செய்து கொண்டிருக்க வேண்டும், தற்கொலை செய்து கொள்ள மனதில்லாதவர்கள் ஊரைக் காலி செய்து கண் காணாத இடத்திற்கு சென்றுவிடுவார்கள்.

*************

தமிழினக்காக முத்துக்குமார் உள்ளிட்டோர்  பலர் உடலில் தீ வைத்துக் கொண்டு தீயில் கருகினார்கள், அவர்களின் தியாகம் பேசப்படுகிறது, அவர்களை ஒப்பிட இளவரசனின் தற்கொலை / கொலை மரணம், திவ்யாவின் தந்தை தற்கொலை ஆகியவை ஒரு கிராமத்தில் நடந்த சாதி வெறியின் ஊடகக் படப்பிடிப்பு காட்சிகள் என்பது தவிர்த்து, மக்கள் மனதில் சாதி வெறிகள் நீங்காதவரை. வருணாசிரம வேதங்களை ஒழிக்காதவரை இவற்றைப் பற்றியே பேச ஒன்றும் இல்லை என்பது எனது சொந்தக் கருத்து, இவை தமிழக கிராமங்களில் எங்கும் எப்போதும் நடைபெறுவையே, பாமக மற்றும் விடுதலை சிறுத்தைகளின் அரசியலுக்காக அவை ஊடக வெளிச்சத்திற்குள் வந்துள்ளன.

12 நவம்பர், 2012

சாதிவெறி கிராமத்தில் மட்டும் தானா ?


தலித் ஆடவர் வன்னிய பெண்ணை காதலித்து மணந்து கொண்டார் என்பதற்காக பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ள அவரது உறவினர்கள் கிளர்ந்தெழுந்த பெரும் கலவரத்தில் தலித் உடமைகள், வீடுகள் எரிக்கப்பட்டு இருக்கிறது. சாதியத்தின், வருணாசிரமத்தின் கொடுமைகளின் கோரமுகங்கள் அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகளில் வழியாக தற்போதும் வெளிப்பட்டு இருக்கிறது, இதைத் தவிர்த்து இதற்கு வேறென்ன முக்கியத்துவம் ?

இருக்கிறது. ஆம் தமிழகத்தில் கலப்பு திருமணங்கள் நடக்காமல் இல்லை, ஆனால் அவை அனைத்தும் தலித்துகளுடன் தொடர்பில்லாமல் பல்வேறு சாதியத் திருமணங்கள் நடந்தேறிவிடுகின்றன, நாடார் மனமகனை முதலியார் பெண் மணந்துவிட்டாள், தேவர் சாதி ஆண் செட்டியார் பெண்ணை மணந்துவிட்டான் என்பதெல்லாம் சாதிப் பிரச்சனையாகுவதோ, கலவரங்களை உருவாக்குவதோ இல்லை, ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்த பிற சாதிய கலப்பு மணங்கள் ஓரளவு சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, எங்கள் உறவினர்களில் பல்வேறு சாதியைச் சார்ந்தவர்களுடன் திருமணங்கள் நடந்தேறியுள்ளன, அவையெல்லாம் எந்த ஒரு காலத்திலும் பிரச்சனையாகிப் போனதுமில்லை, இவற்றில் காதல் திருமணங்களும், பார்த்து வைத்த திருமணங்களும் கூட உண்டு, ஆனால் தலித் ஆடவர் ஒருவருடன் ஓடிய உறவுக்காரப் பெண்ணையும் அவரது தாயாரையும் இதுவரை எங்கள் உறவினர்கள் சேர்த்துக் கொண்டதே இல்லை, நான் தலித் சமூகம் சார்ந்தவன் இல்லை என்று வெளிச்சம் போட இதை நான் எழுதவில்லை, இதை எழுதுவதையே கூச்சமாகக் கருதுகிறேன்,  ஒரு நாடாரையும், ஒரு பத்தரையும், ஒரு நாயுடுவையும், தஞ்சாவூர் கள்ளரையும் , ஒரு பார்பனரையும் திருமண சம்பந்ததில் வைத்திருக்கும் எங்கள் உறவினர்கள் தலித்துகளுடன் ஏற்பட்ட திருமண பந்தத்தை மட்டும் அவமானகரமாக நினைக்கிறார்கள்.

காலம் காலமாக தாழ்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் இறந்த விலங்குளை உண்ணுபவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம், அவர்களை சம்பந்தியாக்கிப் பார்பதில் உடன்படுவதில்லை என்பது தவிர்த்து வேற எந்த காரணமும் தெரியவில்லை, ஒரு காலத்தில் தீண்டத்தகாத சமூகமாக கருதப்பட்டு தோள் சீலை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் சமூகங்கள் அந்த நிலையை மிகுந்த ஒற்றுமையுடன், பொருளியல் ரீதியாக முன்னேற அவர்கள் மீதான சாதிய தாழ்வு நிலையை அவர்கள் என்றோ கடந்து வந்துவிட்டார்கள், ஆனால் தலித்துகள் ஏன் அவ்வாறு வளரவில்லை ? சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் நிலை மாறவில்லையா ? கண்டிப்பாக மாறி இருக்கிறது, ஆனால் அவர்களுடைய சாதிப்பிரிவு நான்காம் பிரிவில் வருவதே காரணம். தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பிற சாதியினர் குடியானவர்கள், 'சாதி தமிழர்கள்' என்கிற அடைமொழியை தனக்கு தாமே கொடுத்துக் கொண்டு வைசிய, சத்திரிய பிரிவை கிட்டதட்ட பிராமணப் பிரிவுக்கு இணையாக உயர்த்திக் கொண்டார்கள், இதில் பார்பனர்கள் பங்கு என்று எதுவும் கிடையாது, தனக்கு கீழே ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இருந்தால் தன் சாதி தாழ்ந்ததல்ல என்கிற எண்ணத்தில் அனைத்து சாதிகளுமே தலித்துகளின் முன்னேற்றத்தை ஏற்றுக் கொண்டதும் இல்லை, அவர்களை அரவணைத்துக் கொண்டதுமில்லை.

எட்டணா காசைக் கீழே வைத்தால் கும்பிடு போட்டு குணிந்து பொறுக்கி எடுத்துக் கொண்டு போவான், இன்னிக்கு பேண்டு போட்டுவந்து சரிக்கு சமமாக நின்னு கூலிய தெனாவெட்டாகக் கேட்கிறான், வெட்டியானுக்கு திமிரைப் பாருங்க என்றெல்லாம் தன் தவறை உணராது கூழைக் கும்பிடு போடாத தலித்துகளை 'திமிர்' தனம் என்று சொல்லும் சுடுகாட்டுக் காட்சிகளை நேரில் பார்த்தே இருக்கிறேன்,  எங்கள் சாதி சமூகத்தில் எவனும் பிச்சை எடுத்ததில்லை, விபச்சாரம் செய்ததில்லை, மாமா வேலைப் பார்த்ததில்லை என்று சொல்லும் நிலையில் எந்த சாதியும் இல்லை என்பதே உண்மை, பட்டினி சாவை எந்த சாதியாவது தடுத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை, டாஸ்மாக் எச்சில் க்ளாசில் சாராயம் குடிக்கும் பொழுது அதற்கு முன் அதில் குடித்தவன் எந்தசாதி (தற்பொழுது பேப்பர் டம்ப்ளர் வைத்திருக்கிறார்கள்), வேற ? எந்த சாதி பாலியல் தொழிலாளியிடம் செல்லுகிறோம் என்றேல்லாம் அவ்வாறு செல்பவர்கள் ஆராய்ச்சி நடத்துவதும் இல்லை, ஆனால் திருமணம் நீண்டகால பந்தம் என்று நம்புவதால் அதற்கு மட்டும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் சாதி என்றால் முகம் சுளிக்கிறார்கள், 

நாங்கள் சாதிக் கொடுமைகள் எதையும் செய்வதில்லை என்று பார்ப்பனர்கள் மார் தட்டுகிறார்கள், ஆனால் /பிராமணர்களுக்கு மட்டும் வீட்டுவாடகை; என்னும் அவர்களது அறிவிப்பு பலகைகள் அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதாதைக் காட்டுகிறது, பார்பனர்கள் சாதிக் கொடுமை செய்யாததற்கு அவர்கள் திருந்திவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை, ஆனால் இதுபோன்ற குழுசார்ந்த கொடுமைகள் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு ஆள் பலம் போதாது என்பது தவிர்த்து வேறொன்றும் இல்லை, வெளிமாநிலங்களில் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்தே வருவாதால் தமிழ் நாட்டு பார்பனர்கள்  திருந்திவிட்டார்கள் என்பது மாற்றம் என்றாலும் அந்த மாற்றத்திற்கு காரணம் எண்ணிக்கை தான், அதையும் ஒப்புக் கொள்ள மனமில்லை என்றால் பெரியாரைத்தான் காரணாமாகச் சொல்ல முடியும், பெரியாரின் பெண் விடுதலையால் முழுக்க முழுக்க பயன்பெற்றவர்கள் பார்பனப் பெண்களே, மொட்டை அடித்துக் கொண்டு காவி புடவையுடன் தென்படும் பார்பனப் பெண்கள் கனிசமாக குறைந்து மறைந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுதியாகிவிட்டார்கள், இது பிறமாநிலங்களை ஒப்பு நோக்க தமிழகத்தில் மிக அதிகம்,

சென்னையிலோ, திருச்சி போன்ற பெருநகரங்களிலோ கலப்பு திருமணங்கள் பெரிய அளவில் கலவரமாக வெடிப்பதில்லை, ஏனெனில் சாதிய பெரும்பான்மையுடன் ஒரு இடத்தில் வசிக்கும் வாய்ப்பு நகரங்களில் குறைவு, கிராமங்களில் சாதி வாரியாக சிறுபான்மை பெரும்பான்மை என்று வசிப்பதால் அங்கு இவை அன்றாடப் பிரச்சனையாகிப் போகிறது. மற்றபடி நகரத்தில் வசிப்பவர்கள் நாகரீகம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை.

பிரசன்னவோ அல்லது சினேகாவோ அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் அவர்களுடைய சாதி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருசாதி வழக்கப்படி திருமணம் நடந்திருக்குமா ?

இன்றைய தேதிக்கு பார்பனர்கள் மட்டுமே உயர் சாதியினர் இல்லை, தலித்துகள் அல்லாத அனைத்து சாதிகளுமே தங்களை உயர்சாதியாக நினைத்துக் கொண்டும், அவர்களுக்கு நேர் எதிர் தாழ்ந்த சாதியாக ஒட்டுமொத்த தலித்பிரிவுகளையும் வைத்துள்ளனர், என்னைக் கேட்டால் இதற்கு நிரந்தர தீர்வு தலித்துகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக மதம் மாறி இவர்கள் முகத்தில் காரி உமிழ்வது தான் சிறந்த தீர்வாக இருக்கும். 

தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்ளும் வரையில் தலித் விடுதலை சாத்தியமற்றது, அதைப் பெரும்பான்மை பிறசாதிகள் கொடுத்துவிடவும் மாட்டார்கள்.

*******

அனைவருக்கும் தோழர் நரகாசூரன் நினைவு நன்னாள் வாழ்த்துகள்.

14 மே, 2010

இரட்டை தம்ளர் மற்றும் பிராமின்ஸ் ஒன்லி !

பொதுப்புத்திக்காரர்கள் அனைவருமே சொல்லுவது,

* சாதிக் கொடுமையை பார்பனர்கள் செய்கிறார்களா ?

* சாதிக்கலவரங்களில் பார்பனர்கள் ஈடுபடுகிறார்களா ?

* இரட்டை தம்ளருக்கும் 'பிராமணர்களுக்கும்' ஏதாவது தொடர்பு இருக்கிறதா ?

பிறகு ஏன் சாதிக் கொடுமைகள் குறித்து சாடுதலில் பார்பனர்களை இழுக்கிறீர்கள் என்று.

பொதுச் சமூகத்தில் சாதிக் கொடுமை என்பது சிறுபான்மை பெரும்பான்மை என்ற அளவில் நடக்கிறது. பிற்பட்ட சாதியினர்கள் நிறைந்துள்ள கிராமங்களில் தலித்துகளைத் தள்ளி வைப்பது பெரும்பான்மை எனும் பெயரில் பிற்பட்ட சாதியினர் செய்யும் வன்கொடுமை. சிறு நகரங்களில் தீண்டாமைச் சுவர், இரட்டை தம்ளர் முறைகளை வைத்திருக்கிறார்கள். கிராமங்களில் நடக்கும் வன்கொடுமை பெரும்பாலும் அந்த கிராமத்தினரின் பெரும்பான்மையினர் சாதியினரால் நடத்தப்படுகிறது. இதில் அனைத்து சாதிக்காரர்களுமே அடக்கம். இதையெல்லாம் பாப்பான் செய்கிறானா ? அவனை ஏன் இதில் தேவை இன்றி இழுக்கிறீர்கள் என்பதாக பொதுப் புத்திக் குற்றச் சாட்டு எழு(து)வது வாடிக்கை தான். நினைத்துப் பார்த்தால் சொல்வது ஞாயம் தானே... !. பார்பனர்கள் எல்லோருமே படித்துவிட்டு நகரங்களுக்கு குடி பெயர்ந்துவிட்டார்கள், 'அவாள் உண்டு, அவா வேலை உண்டுன்னு இருக்கா' அவாளை ஏன் இழுக்கிறேள்...?', என்று நினைக்கத் தோன்றும்.

கிராமங்களில் நடக்கும் வன்கொடுமைகளுக்கு பார்பனர்கள் காரணமில்லை, அவர்கள் என்றோ அங்கிருந்து இடம் பெயர்ந்துவிட்டார்கள். 'பெருங்காயம் இருந்த டப்பா வாசனைப் போகாது' என்பது போல், பார்பனர்கள் உயரடுக்கில் அமர்ந்து கொண்ட வருண அடுக்கு முற்றிலும் சரிய இன்னும் கூட ஒரு நூற்றாண்டு பிடிக்கும், ஆனால் சாதி எதிர்ப்புக்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்றால் இன்னும் 50 ஆண்டுகளிலும் கூட சாதிப் பகைமைகள் ஒழியலாம். பிறப்பு வழியாகப் புகுத்தப்பட்ட ஒன்றை மனிதர்கள் அனைவருக்குமே ஞாபகமறதி என்ற நோய் தாக்கி தாம் எந்த சாதி என்பது கூட மறந்துவிட்டது என்பது ஏற்பட்டால் சாதி உணர்வு முற்றிலும் மறையலாம்.

இன்றைய தேதிக்கு மது, மாமிசம், மீன், முட்டை தொடாத பார்பனர்கள் மிக மிகக் குறைவு, உணவு வாழ்க்கை முறை அனைத்திலும் பார்பனர்களுக்கும் பிற சாதிமதத்தினருக்கும் பெரிய வேறுபாடுகள் கிடையாது, கிராமங்களில் இரட்டை தம்ளர் முறை வெளிப்படையானது, ஆனால் பெருநகரங்களில் வீடுகளை வாடகைக்கு விடும் பார்பனர்களில் பலர் 'பிராமணர்களுக்கு மட்டும்' என்று விளம்பரம் செய்வது நன்கொடுமையா ? வீடு வாடகைக்கு எடுக்கிறவன் வாடகைக் கொடுககப் போகிறான். அது எவனாக இருந்தால் என்ன ? முன்பாவது 'நாங்களெல்லாம் அசைவம் சாப்பிடாதவா....ஆச்சாரமானவா' என்று பீலா விடுவார்கள், இப்பொழுது பார்பனர்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கே அசைவம் சாப்பிடாதவர்கள் உண்டு. அவன் வீடு அவன் வாடகைக்கு விடுகிறான் என்றாலும் கூட இதுவும் மறைமுகமாக பிற சாதியினரிடம் எந்த விதத்திலும் கலந்துவிடக் கூடாது என்பதான நவீனத் தீண்டாமை தான், இரட்டை தம்ளர் வன்கொடுமைகளுக்கு முற்றிலும் மாற்றான நகரத் தீண்டாமை இது. இரட்டை டம்ளர் கடை நடத்துபவனும் யாரும் என் கடைக்கு வா... என்று அழைக்காமல் தான் அந்த இழிவை வருகிறர்களுக்கு நடத்துகிறார்கள். பார்பனர்கள் முடிந்த அளவு தீண்டாமை கடைபிடித்து தான் வருகிறார்கள். எக்சப்சன் உண்டு, அது அந்த ஒரு சிலரின் தனிப்பட்ட சிறப்பு குணம். அதை சாதியின் பெருந்தன்மை என்று கொள்ள முடியாது.

பார்பனர்கள் மிகப் பெரிய அளவிலான தீண்டாமைகளில் தொடர்பில்லாமல் இருக்க அவர்களின் அங்குள்ள எண்ணிக்கை தான் அடிப்படையே அன்றி பிற சாதியினரைப் போல் குழுவாக வாழும் இடத்தில் எல்லாக் கொடுமையையையும் பிறரைப் போல் செய்தே வருகிறார்கள் என்பது பிராமணாள் ஒன்லி டூ லெட் போர்டுகளே சாட்சி. எனக்கு தெரிந்து சென்னை வாடகை வீடு விளம்பரங்களில் செட்டியார் ஒன்லி, நாடார் ஒன்லி, முதலியார் ஒன்லி என்று நான் பார்த்தது கிடையாது.

பாப்பான் தீண்டாமையை விட்டுவிட்டான், பார்பனர்கள் செய்வது இல்லை, பிராமணர் தீண்டாமையோ, வன்கொடுமையோ செய்வதில்லை போன்றவை பொது புத்தி சார்ந்த புரிதல்கள் மற்றும் பரப்புதல்களே. தாழ்த்தப்பட்டவர்கள் என்பதாக ஒரு சாரரை ஒதுக்குவதைப் போலவே, ஒட்டுமொத்தமாக பார்பனர் அல்லாத அனைத்து சாதியினரையும் புறக்கணிப்பதன் பெயர் என்ன ?


தாயாரின் சாதிய மனநிலையால் பார்பனர்களுக்கு மட்டுமே வீட்டை வாடகைக்கு விட்ட பார்பனரின் மோசமான அனுபவம் ஆங்கிலத்தில் To-Let:Brahmins Only « Maami's Weblog

14 ஏப்ரல், 2010

அண்ணல் அம்பேத்கார் !

இந்திய அரசியல் தலைவர் ஒருவரை சாதியினால் புறக்கணிக்கும் கொடுமை இன்றும் அம்பேத்காருக்கே நடந்துவருகிறது. புத்தாண்டு சித்திரை ஒன்று தான் என்று உறுதிப்பாட்டுடன் பரப்பிவரும் நாளிதழ்கள் எதுவும் இன்று அம்பேத்கார் பிறந்த நாள் என்று தகவலுக்காகக் கூட செய்தி வெளி இடக்காணும்.

அம்பேத்கார் சொன்னவைகளில் மிக முக்கியமானது என்று இந்துத்துவ வாதிகள் எடுத்துச் சொல்வது 'பார்பனர்கள் வந்தேறிகள் இல்லை' என்று அம்பேத்கார் தனது ஆராய்ச்சியில் குறிப்பிட்டார் என்பதைத்தான். இதை வைத்து அவர் இந்து மதத்திற்கு ஆதரவானவர் என்றும் மறைமுகமாக வருணாசிரமத்தை ஆதரித்தார் என்றும் தோற்றத்தை ஏற்படுத்துகிறார்கள். 'நான் ஒரு இந்துவாக சாகவிரும்பவில்லை' என்பதில் உறுதியாக இருந்து புத்தமதத்திற்கு மாறியவர் அம்பேத்கார். அம்பேத்கார் ஒரு ஆன்மிகவாதி பல்வேறு மதங்களை ஆராய்ந்தே பின்னர் அவர் அம்முடிவுக்கு வந்திருக்க வேண்டும், பெண்களின் நிலை, குல ஏற்றத்தாழ்வு போன்ற பல்வேறு சமூகவியல் காரணங்களை ஆராய்ந்து இறுதியில் புத்த மதத்திற்கு மாறி இருக்கிறார். பார்பனர்களில் இந்தியாவிற்குள் நுழைந்தவர்கள் உண்டு, ஆனால் பார்பனர்கள் அனைவருமே வெளியில் இருந்து வந்தவர்கள் இல்லை என்பதை நானும் நம்புகிறேன். பல்வேறு உடல் நிறங்கள் தவிர்த்து இந்தியர்கள் அனைவருக்குமே பொதுவான தோற்றம் உண்டு, அந்த வகையில் பார்பனர்கள் வெளியில் இருந்து வரவில்லை என்பதை அம்பேத்காரும் நம்பினார். ஆனால் அவரது இந்து மதம் குறித்த பார்வையில் பார்பனர்களின் மேலாதிக்கத்தையும், அதற்கு ஆதரவு நல்கும் இந்து மதத்தையும் கடுமையாக எதிர்த்தார் என்பதே உண்மை.

அம்பேத்கார் வாழ்கை வரலாறுகளை பதிவு செய்த அம்பேத்கார் படம் சரியாக ஓடவில்லையாம். இது இயல்பான ஒன்று தான். அவதார புருஷர்கள் சாய்பாபா, ராகவேந்திரா, அண்ணமாச்சாரியா என்று படம் எடுத்தால் ஓடும், ஏனெனில் அவர்கள் அற்புதங்கள் செய்திருக்கிறார்கள் என்கிற பசைகளுடன் வருவதால் ஆன்மிக வியாபாரமாக படங்கள் ஓடிவிடுகின்றன. மற்றபடி தனி நபர் குறித்த வரலாறுகள் நடந்தவை என்பதால் மக்கள் பெரிதாக ஆர்வம் காட்டுவதில்லை. பெரியார் படம் ஓரளவுக்கு ஓடியது. மற்றபடி தலைவர்களின் படங்கள் ஒரு ஆவணம் என்ற வகையில் தொகுப்பட்டிருப்பது வருங்காலத்தில் சுறுக்கமாக அறிந்து கொள்ள ஒரு நல்ல வாய்ப்பைக் கொடுக்கும் அவ்வளவு தான் அதன் பயன்பாடு, மேலும் தலைவர்களை நினைவு கூறத்தகுந்த காரணங்கள் இன்றைய சமூகத்தில் அவ்வளவாக இல்லை, அவர்கள் போராட்டத்தின் நோக்கம் நிறைவேறி இருக்கலாம், அல்லது அது இன்றைய தேவையாக இல்லாமலும் போய் இருக்கலாம். இன்றைய காலத்தில் விதவை மறுமணம் என்பது பொதுவான நிகழ்வுகள் ஆகிவிட்டபடியால், விதவை மறுமணத்திற்கு போராடுகிறவர் என்கிற லேபிளை அணிந்து கொண்டு ஒரு தலைவர் உருவாகி விட முடியாது. அதே போல் உடன்கட்டை மற்றும் இத்யாதிகள். சமூகமாற்றத்திற்கான தேவைகள் தற்போது எதுவும் இல்லாத சூழலில் ஏற்கனவே அம்மாற்றம் குறித்து போராடியவர்கள் நினைவு கூறப்படுவர் மற்றபடி எப்போதும் மக்கள் அவர்களையே நினைத்துக் கொண்டிருப்பார்கள் என்பதெல்லாம் உண்மை இல்லை. இவை அண்மையில் மறைந்த காமராசர், எம்ஜிஆர் ஆகியோருக்கும் பொருந்தும். எனவே அம்பேத்கார் படம் ஓடவில்லை என்கிற கவலையும், தூற்றலும் கூட தேவையற்ற சிந்தனையும், குழப்பம் ஏற்படுத்துவதன் வெளிப்பாடுகள் மட்டுமே.

தமிழக தென்மாவட்டங்களில் அதிகமாக உடைபடுவது அம்பேத்கார் சிலைகளே. தலித்துகளுக்காக போராடிய ஒருவரை பிறப்பு வழி சாதிய அடிப்படையில் ஒரு தலித்தாகவே பார்த்து சிலையை உடைப்பதும் தமிழகத்தில் தலித்துகளுக்கு எதிரான வன்முறை தொடர்வதையே ஆவணப்படுத்துகிறது. ஆண்டாள் பிராட்டி பக்கத்துல அந்த சூத்திரன் மாணிக்க வாசகர் இருக்கலாமா? பகவானுக்கே அபச்சாரம் திருப்பணாழ்வார் தலித் என்பதற்காக பெருமாள் பக்கத்தில் வைப்பது கூட பெருமாளுக்கு தீட்டு என்பதாக மதாச்சாரியார்களால் தீட்சிதர் ஒருவரால் சிலையிலும் தீண்டாமை முன்மொழியப்பட்டதையெல்லாம் நினைக்கும் போது வருணாசிரம சாதிய அடுக்கை ஒப்புக் கொண்டு அதன் படி நாம அதில் ஒரு சாதி என்றும் நமக்கும் கீழே வேறொருவன் இருப்பதால் எனது சாதி உயர்ந்தது தான் என்று நினைக்கும் சுய நினைவு அற்றவர்களின் செயலை நாம் எப்படி விமர்சனம் செய்ய முடியும் ?

இன்றைக்கும் சரி என்றைக்கும் ஒடுக்கப்பட்டவர்களுக்கு போராட அவர்களுக்குள்ளேயே தான் ஒருவர் வரவேண்டும் என்பது விதியாக இருக்கிறது. வேறு யாராவது போராடினால் அவரது தனிமனித செயலை அவருடைய சாதி சமூகத்தைச் சேர்ந்தவர்கள் தனது சாதிக்கான பெருமையாக மாற்றிக் கொள்ளும் இழிசெயல் இன்றும் நடப்பதால் ஒடுக்கப்பட்டவர்கள் பிறர் போராடுகிறோம் என்று முன்வருவதை ஏற்கிறார்களோ இல்லையோ நம்புவதில்லை. தலித்துகளுக்கான ஒதுக்கீடு சட்டமன்ற தொகுதிகளில் தலித் வேட்பாளர்களை நிறுத்தி அதை தனது கட்சிக்கான வாக்கு பலமாகவும், சட்டமன்ற பலமாகவும் தான் அனைத்து கட்சிகளும் ஆக்கிக் கொள்கின்றன. மற்றபடி தலித்துகளுக்காக பெரிதாக எதையும் கட்சிகள் செய்வது கிடையாது. இதனை எதிர்த்து தான் தலித் கட்சிகளை தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயங்கிவருகின்றன.

பெரியாரை நாயக்கர் என்றும் பலிஜா நாயிடு உட்பிரிவு வரை குறிப்பிடும் சாதிவெறியர்கள் அம்பேத்காரின் சாதியைக் குறிப்பிட்டு எழுதாதது அவர்களுக்கு அம்பேத்காரின் மீதான மரியாதை என்பதாக இல்லை மாறாக வன்கொடுமை வழக்கு வரும் என்பது தான்.

8 ஏப்ரல், 2010

அண்ணாச்சிகள் உயர்சாதிக்கு மாறிவிட்டார்களா ?

ஒரு காலத்தில் சென்னையில் ஓட்டல்களாக இருந்தாலும் பெரிய துணிக்கடைகளாக இருந்தாலும் செட்டியார்களாலும், பார்பனர்களாலும் பெருவாரியாக நடத்தப்பட்டன. ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக நாடார் சமூகம் என்று அழைத்துக் கொள்ளும் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் கை ஓங்கி இருக்கிறது. அங்காடித்தெரு படத்த்தில் காட்டியது போல் அண்ணாச்சிக் கடைகளில் பணிக்கு இருப்பவர்கள் அதே சாதியைச் சேர்ந்த இளைஞர்கள் என்றாலும் அண்ணாச்சிகள் அந்த சமூகத்து இளைஞர்களை தங்களின் லாபத்திற்கான உற்பத்திப் பொருளாகத்தான் பார்க்கிறார்களேயன்றி அந்த சமூகத்தின் முன்னேற்றத்திற்கு என்று பெரிதாக ஒன்றும் இல்லை. தங்கள் தொழில் நொடித்துவிடக் கூடாது என்பதற்காக நாடார் சங்கங்களுக்கு மிகுதியான நிதிவுதவி செய்துவருகின்றனர். நாடர்களைப் பொருத்த அளவில் ஒரு நாடார் இந்து நாடார் கிறித்துவ நாடார் என்ற பாகுபாடெல்லாம் கிடையாது, தங்கக் கடற்கரை முதலாளி கிறித்துவராக இருந்தாலும் சரி, முருகனைப் போன்று (பார்பன மற்றும் பார்பன அல்லாத பெண்) வல்லி மற்றும் கார்திகா என இரு தாரமும் அதற்கு மேலும் ஆசைப்பட்டு சிக்கலில் மாட்டிய ஜீவஜோதி புகழ் அண்ணாச்சியாக இருந்தாலும் சரி அவர்களைப் பொருத்த அளவில் நாடார்கள் என்பது அவர்களது தனிச் சமூகம்.

என் நண்பன் ஒருவன், கட்டுனா என் சாதிக் காரப் பொண்ணைத்தான் கட்டுவேன், அது கிறித்துவ மதமாக இருந்தாலும் ஒண்ணும் பிரச்சனை இல்லை, எங்களை விட கிறித்துவர்கள் பணக்காரர்களாகத்தான் இருக்காங்க, மதமா சோறுபோடுது என்பது போல் பேசி சாதிக்கு சாமரம் வீசினார். எல்லோரும் தான் சாதியில் திருமணம் செய்கிறார்கள் இருந்தாலும் சாதிக்கு மதம் ஒரு தடையாக இல்லாதிருப்பது நாடார்களிலும் தலித்துக்களிலும் கூடுதலாக நடைபெறுகிறது. இவ்வாறு மதம் மாறி திருமணம் செய்து கொண்டாலும் அவர்களில் மதம் தொடர்புடைய பெரிய குழப்பங்கள் ஏற்படுவது இல்லை.

எதுக்காக இதைச் சொல்கிறேன் என்றால் மதம் மாறுவது சாதியை அழித்துவிட வில்லை. குருடன் நடக்கிறான், செவிடன் பார்க்கிறான் என்பது போன்றும் பாவிகளான உங்களுக்கு பரலோக ராஜ்ஜியம் அதுக்கு நாங்க கேரண்டி என்று கூறியவர்களும் மதம் மாறி வந்த அந்தந்த சாதியினரை அப்படியே தான் (விட்டு) வைத்திருக்கிறார்கள். வருணாசிரம கருமாந்திரத்தை ஒழிக்க மதம் மாறுவது தீர்வே இல்லை, மேலும் தலித்துகளுக்கு அரசாங்க சலுகை இழப்பும் ஏற்பட்டுவிடுகிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்து பெரும்பாண்மையைக் காக்க வேண்டும் என்பதற்காக மதம் மாறினால் உனக்கு சலுகை கட் என்பதாகத்தான் 'மதச் சார்பற்ற' இந்தியாவும் சட்டதிட்டங்களை வைத்திருக்கிறது. ஒருவர் மதம் மாறினால் அவரின் பொருளாதாரத்திற்கும் கல்வி அறிவிற்கும் நாங்க கேரண்டி என்று எந்த ஒரு மத அழைப்பாளர்களும் இதுவரை சொல்லாத போது மதம் மாறும் தலித்துகளுக்கான சலுகை பறிப்பு இந்தியாவின் கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்று சொல்வதில் தவறே இல்லை (எது எதற்கோ பொது நல வழக்கு தொடுப்பவர்கள் இதற்கு ஏன் தொடுப்பதில்லை என்று தெரியவில்லை, அப்படித் தொடர்ந்தால் சம்பந்தப்பட்ட மத நிறுவனங்கள் தலைகுனிய நேரிடும் என்பதால் அவர்களும் பாதிப்பட்ட தலித்துகள் குறித்து அக்கரை காட்டுவதில்லை)

திரும்பவும் தலைப்பு......நாடார்கள் நிறுவனங்கள் நடத்தி பணக்காரர்கள் ஆகிவிட்டார்கள், முதலாளிகளாக இருக்கிறார்கள், அப்படி என்றால் அவர்கள் உயர்சாதிக்காரர்கள் பட்டியலில் சேர்த்துவிட உயர்சாதி சமூகம் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சாதி சமூகங்கள் அதற்கு தயாராக இருக்கிறார்களா ? பனமரம் ஏறியவனெல்லாம் இன்னிக்கு முதலாளி ஆகிவிட்டான் என்று தூற்றவே செய்வார்கள்.

பொருளாதார மற்றும் தொழில் வள அடிப்படையிலும் உயர்சாதின்னு ஒரு இழவும் கிடையாது, தனது சாதியை முன்னிலைப் படுத்த எத்த(னிப்பவ)ர்கள் அவ்வாறுக் கூறிக் கொண்டார்கள். பார்பனீயம் என்பதற்கு மாற்று சொல்லாக நான் ஏன் உயர்சாதியம் என்று பயனபடுத்துவதில்லை என்றால் எந்த ஒரு சாதி சாக்கடையையும் நான் உயர்சாதி என்று உயர்த்திக் குறிப்பிட விரும்பவில்லை. ஒரு கோடுகள் தத்துவம் தான், ஒரு பிரிவினரை உயர்சாதி என்று குறிப்பிடும் போதே அதில் இல்லாதவர்கள் தாழ்ந்த சாதி என்கிற பாகுபாட்டை ஏற்படுத்திவிடும். சாதி என்பது கொடுமையான ஒன்று, மனிதர்களை ஒன்று சேர விடாத ஒன்று, மேல் சொன்னது போல் ஒரு நாடார், முதலியார், வன்னியர், தலித் ஆகியோர்கள் கிறித்துவராக இருந்தாலும் ஒருநாளும் அவர்களது சாதி அழிவதற்கு இந்திய சூழலில் வாய்ப்பே இல்லை. இவை வருணாசிரம கருமாந்திரத்தால் பீடித்த நோய், இந்திய நோயான சாதியத்தை சாடுவதற்கு அதற்கு தலைமை ஏற்பதுடன், ஞாயப்படுத்துவதற்கும் வருண அடுக்கில் மேலே உள்ளவர்களாகவும் பார்பனர்கள் தங்களை அறிவித்துக் கொண்டுள்ளதால், ஒட்டுமொத்த சாதி இழிவுகளின் அடையாளமாக 'பார்பனீயம்' என்ற சொல் எனக்கு ஞாயமாகவே படுகிறது. சாதியைப் பெரிய விசயமாக கருதாதவர்கள் இதைப் புறந்தள்ளலாம்.

3 ஏப்ரல், 2010

நானும் பார்பனியமும் !

பார்பனியம் என்பதன் என் புரிதல் பூணூலோ, பார்பனர்களாக பிறந்த அனைவருமே இல்லை, உயர்சாதி மனப்பான்மையில் மேட்டிமையாக நடந்து கொள்பவர்கள் அனைவரும் பார்பனர்களே. உயர்சாதியம் என்று எழுதுங்களேன் என்று சில பார்பனர்களும் பார்பன ஆதரவாளர்களும் சொல்வதில் எனக்கு ஒப்புதல் இல்லை, உயர்சாதியம் என்று உயர்வு படுத்தி எந்த சாதியையும் நான் குறிப்பிட விரும்புவதில்லை ஏனெனில் எல்லா சாதியிலும் பணக்காரர்களும் உண்டு ஏழைகளும் உண்டு, ஏழைகள் என்றுமே தாழ்ந்தவர்களாகவே சமூகம் பார்க்கிறது, பொருளாதார ரீதியாகக் கூட எந்த ஒரு சாதியையும் உயர்சாதி என்று சொல்லிவிட முடியாது. முகத்திலிருந்து பிறந்தவனே எல்லாவற்றிலும் உயர்ந்தவன் என்கிற ஒட்டுமொத்தமாக தங்களை மனித குலத்தின் உயர்ந்தவர்கள் என கூறிக் கொள்பவர்கள் பார்பனர்களே என்பதால் பார்பனியம் என்ற சொல்லைப் உயர்சாதியத்திற்கு ஒட்டுமொத்தமாகக் குறிப்பிடுவது சரி என்றே பலரும் நினைப்பதால் நானும் அந்தச் சொல்லைப் பயன்படுத்துவது என்று முடிவு செய்து பயன்படுத்திவருகிறேன். இது குறித்து என்னிடம் வாதிடுபவர்களுக்கும் எனது பதில் இது தான்.

பார்பனியத்திற்கு பூணூல் அடையாளம் என்று நான் கருதுவதில்லை. பூணூல் என்பது சடங்கு என்ற அளவில் இந்துக்களின் இறப்பு சடங்கின் போதும் பல்வேறு இந்து சாதியினரால் பயன்படுத்தப்படுவதால் ஒருவர் பூணூல் அணிந்திருப்பதை சாதியம் என்று பார்க்காமல் பண்பாடு, பழக்கவழக்கம், சடங்கு சம்பிரதாயம், பெற்றோர்களின் விருப்பம் இந்த எதோ ஒன்றின் காரணமாகக் கூட ஒருவர் பூணூல் தொடர்ந்து அணிகிறார் என்கிற புரிதல் எனக்கு உண்டு, அதனால் ஒருவர் பூணூல் அணிந்திருக்கிற ஒரே காரணத்தினால் அவர் உயர்சாதி மேட்டுமையுடன் நடந்து கொள்வார் என்பதை நான் ஏற்பது இல்லை. ஆனால் பூணூலை உயரிய சாதி அடையாளமாக அணிந்து கொண்டு தாங்கள் பிராமணர்கள் என்று கூறிக் கொள்ளும் பார்பனர்களை நான் இந்த பட்டியலில் சேர்க்கவில்லை. இப்படியான உயர்சாதி மேட்டிமைத் தன பார்பனர்களை சாதிக்காக சாதிக்க முயற்சிக்கும் சாதி அபிமானிகள் அல்லது சாதி வெறியர்கள் என்று அவர்களின் தீவிரத்திற்கு ஏற்ப அவர்களின் அடையாளாமாகுகிறார்கள் என்று நினைக்கிறேன். இவர்களுக்கு பார்பனர்கள் தாம்ராஸ் எனப்படும் பார்பன சாதி சங்கத்தில் சிலைகளோ, புகைப்படமோ வைப்பது ஏற்பாடு கூட ஆகியிருக்கும் அதனால் அவர்கள் சாதிப் பெருமையை சாதி வெறியுடன் பரப்புகிறார்கள் என்று நினைக்கிறேன்.

ந்த ஒரு சாதி சார்ந்த நடவடிக்கையில் ஈடுபடாத ஒருவரை இவன் பார்ப்பான் என்று கூறும் தனிமனித தாக்குதல் என்னைப் பொருத்த அளவில் ஒருவர் பூணூல் அணிந்திருப்பதற்காக தூற்றுவது கண்டிக்கத்தக்கதே. முன்வரிசையில் அமர்ந்திருந்த பார்பனர்கள் என்று கூறிய சர்சைக்குரிய பதிவுக்கு என் பின்னூட்டம் அவர் அதை மனதில் வைக்காமல் வெளிப்படையாக பேசினார் என்பதற்கு மட்டுமே அன்றி வேறொன்றும் இல்லை. முன் வரிசையில் யார் யார் அமர்ந்திருந்தார்கள் என்று எனக்கு தெரியாது. ஒரு உண்மையைச் சொல்லப்போனால் பார்பனர்களாக அடையாளப்படுத்தப்படும் (அவ்வாறு தங்களைக் கூறிக் கொள்ளாதவர்களை) பல பதிவர்கள் எனக்கு நெருக்கமானவர்கள், அவர்களிடம் ஒரு சக பதிவர் என்பதையும் தாண்டி உள்ளார்ந்த நெருக்கத்துடன் உறவு முறைப் பெயர்களிலேயே அவர்களை அழைத்தும் வருகிறேன்.
என்னைப் பொருத்த அளவில் ஒருவரின் அடையாளம் எதுவேண்டுமானாலும் இருக்கலாம் அது அவர்களின் அரசியல் நிலைப்பாடு என்றும் அந்த நிலைப்பாடுகளள சமூகக் கெடுதல்களைக் கொண்டிருக்கும் கருத்து ஆதரிக்காவிடில் அவர்கள் இன்ன சாதியைச் சேர்ந்தவர்கள் என்றெல்லாம் நான் பார்ப்பது இல்லை. என்னைப் பொருத்த அளவில் அவர்கள் எனக்கு நெருக்கமான உறவினர் போன்ற நண்பர்கள்.

பார்பனர்களாக அடையாளப் படுத்தப்பட்டவர்கள் எனக்கு நண்பர்களாக இருப்பதாலேயே நான் பார்பனக் கருத்துகளை ஆதரிக்கவேண்டும், அல்லது பார்பனீயம் பற்றி எழுதக் கூடாது என்று எந்த ஒரு அடையாளப்படுத்தப்பட்ட பார்பன நண்பரும் என்னை கடிந்து கொண்டது கிடையாது.

பார்பனீயத்தை ஒழிக்கிறேன் என்ற பெயரில் பூணுல் வெளியே தெரிகிறவர்களையெல்லாம் வம்பிலுப்பது என்னைப் பொருத்த அளவில் கண்டிக்கத்தக்கதாகவே இருக்கிறது. அப்படியும் கூட விடாமல் பூணூல் போடாத பார்பனர்களையும் சிலர் பார்பனியவாதிகளாகவே அடையாளப்படுத்துகிறார்கள். குறிப்பாக எழுத்தாளர் ஞானி போன்றவர்கள் தாங்கள் பார்பனிய கருத்துகளை ஆதரிக்கவில்லை என்று வெளிப்படையாக எழுதினாலும் அவர் சில அரசியல் கருத்துகளைக் கூறும் போது பார்பனிய புத்தி என்றும் பூணூல் நெளிகிறது என்றும் விமர்சனம் செய்கிறார்கள். இது போன்ற வம்படி அரசியல்களை நான் அதரிப்பது இல்லை. பார்பனரின் அடையாளம் பூணூல் என்போர், அந்த பூணூலை கழட்டிய பார்பனர்களையும் பார்பனியவாதிகளாகவேப் பார்த்தால், பார்பனியத்தை அழிப்பது என்பது பார்பனர்கள் அனைவரையும் அழிப்பதா ? அல்லது அடிமை ஆக்குவதா ? என்ற கேள்விக்கு இதுவரை யாரும் சரியாகப் பதில் சொல்லுவது போல் தெரியவில்லை.

ழிக்கப் படவேண்டியது சாதிகள் மட்டும் தான் தனி மனிதர்கள் இல்லை. ஒரு சாதியில் பிறந்த ஒரு காரணத்திற்காக தலித்துகள் அனுபவிக்கும் அத்தனை கொடுமைகளையும், பார்பனர்களாகப் பிறந்து சாதியே வேண்டாம் என்றும், சாதி எந்த உயர்வையும் தரவில்லை என நினைக்கும், நம்பும் பார்பனருக்கும் நடக்க வேண்டுமா ? பள்ள நாயே என்று திட்டுவதற்கும் பார்பன நாயே என்று திட்டுவதற்கும் வேறுபாடுகள் கிடையாது, அதையும் ஒருவர் பார்பனராக பிறந்தார் என்பதற்காக எந்த ஒரு சாதி அடையாளமும் போற்றாதவர்களையும் 'பார்பான்.......பார்பான்.... பார்பான் புத்தி ' என்று கூவுவது அருவெறுப்பையே தருகிறது.

பார்பனீயம் என்கிற அரசியல் நிலைப்பாட்டை உயர்சாதி அடையாளமாகச் சொல்வதை ஏற்கும் என்னால் பார்பனர்கள் அனைவருமே பார்பனீயவாதிகள் என்று கூற்றை ஏற்க இயலாது. ஒருவர் தன்னை பார்பனர் என்று அடையாளப்படுத்திக் கொள்ள விழையாதபோது அவர்களுக்கு 'பார்பனர்கள், பார்பனியவாதிகள்' என்று சாதிச் சாயம் பூசுவதும் கூட குறிப்பிட்ட சாதி இருக்கவே கூடாது என்று நினைக்கும் ஆளுமை மனப்பான்மையாகும் அதற்கு நான் ஆதரவு கொடுப்பது இல்லை. குறிப்பிட்ட மதத்தினர் அனைவரும் தீவிரவாதிகள் என்று சொல்வது எவ்வளவு மடத்தனமோ, மதவெறியோ.....அப்படித்தான் பார்பனர்களாக பிறந்த ஒரே காரணத்திற்காக அதைப் பற்றி பேசாதவர்களையும் பார்பனர்களாகவே அடையாளப்படுத்திப் பார்ப்பதும் மடத்தனமே.

நான் பார்பன ஆதரவாளன், பார்பன எதிரி என்று கட்டமைப்பவர்களுக்கு இது தான் என் நிலைப்பாடு என்று கூறிக் கொள்கிறேன்.

7 ஜனவரி, 2010

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 3

இதன் முந்தைய பகுதிகள் சுட்டி 1 | சுட்டி 2

இடம் பெயராத சமூகம் முன்னேறுவதற்கு வாய்ப்பு இல்லை, உலகில் மிகுதியாக இடம் பெயர்ந்தவர்கள் என்றால் அது சீனராகவோ, இந்தியராகவோ இருக்கும் என்று நினைக்கிறோம், ஆனால் உலகிலேயே மிகுதியாக இடம் பெயர்ந்தவர்கள் ஐரோப்பியர்கள் அதிலும் குறிப்பாக ஆங்கிலேயர்கள் தான். காரணம் இயற்கை வளம் உடைய பகுதிகளுக்குச் சென்று தங்கள் ஆளுமையை ஏற்படுத்திக் கொண்டு எப்போதும் முதலாளிகளாகவே வாழவேண்டும் என்ற விருப்பம் உடையவர்கள் வெள்ளைக்காரர்கள். இந்தியர் குறிப்பாக தமிழர்கள் உட்பட பிற இனங்கள் வெளி நாடுகளுக்கு இடம் பெயர்ந்ததற்குக் காரணம் அவர்களை சென்ற நூற்றாண்டுக்கு முன்பே வெள்ளைகாரர்களால் தோட்டத் தொழிலாளியாக அழைத்துச் செல்லப்பட்டு இருந்தனர். தோட்டத் தொழிலாளர்களாக செல்லாமல் இடம் பெயர்ந்த பிற சாதியினரும் உண்டு, ஆனால் அவர்கள் மற்றவர்களை விட எண்ணிக்கையில் குறைவு. கடந்த 50 ஆண்டுகளில் பலரும், குஜராத்திகள், பஞ்சாபிகள் உட்பட வட இந்தியர்களும் கனிசமான அளவில் புலம் பெயர்ந்து வருகிறார்கள்.

இந்தியாவிற்குள் ஆரியர்கள் பல்வேறு தென்னிந்திய மாநிலங்களுள் புலம் பெயர்ந்ததும் வேலை வாய்ப்புத் தேடி என்பதைவிட வெள்ளைக்காரர்களைப் போல் அல்லாமல் முதலாளிகளுக்கும் தொழிலாளிகளுக்கும் இடைப் பட்ட வர்க்கமாக வாழுவதற்கான வாய்ப்புகள் அன்றைய மன்னர் ஆட்சியில் அமைந்திருந்ததால் மன்னர்களுக்கு ஆலோசனைக் கூறுபவர்களாகவும், பல்வேறு புதிய கோவில்கள் ஏற்படும் போது அவற்றில் புரோகிதம் செய்வதற்காகவும் இடம் பெயர்ந்தனர். கோவில்களின் எண்ணிக்கையைப் பொருத்தே அந்த அந்த ஊர்களில் பார்பனர்களின் எண்ணிக்கையும் இருந்தது, குறிப்பாக கும்பகோணம் காஞ்சிபுரம் ஆகிய சிறு நகரங்களில் பார்பனர்களின் எண்ணிக்கை கனிசமான அளவில் உண்டு. மற்ற ஊர்களில் பார்பனர்களிடம் நிலம் இருந்தாலும் பெரும்பாலும் குத்தகை சாகுபடியாகத்தான் நில மேலாண்மை செய்து வந்தார்கள். மக்கள் தொகை உயர உயர அனைத்து பார்பனர்களுக்கும் கோவில்களில் வேலை வாய்ப்பு என்பது கூட்டுக் குடித்தனம் போல் கோவில் வருமானத்தை பிரித்துக் கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டது, அதில் நிகர வருமானம் குறையவே வெள்ளைக்காரர்கள் ஆண்ட போது அவர்களுக்கு உயர் அதிகாரியாக ஆகுவதன் மூலம் கனிசமான வருமானம் வரவே படித்த பார்பனர்களில் பலர் வெள்ளைக்காரர்கள் தலைமைகளாக செயல்பட்ட சென்னை, மும்பை, கல்கத்தா போன்ற பெரு நகரங்களில் வெள்ளைக்காரர்களின் கீழ் வேலை செய்ய இறங்கிவிட்டனர். அதுவரை அக்ரகாரங்களில் சூழ்ந்திருந்த பார்பனர்கள் நகரங்களுக்கு தங்கள் இடங்களை மாற்றிக் கொண்டார்கள். புரோகிதம், நிலமேலாண்மை இது தவிர்த்து வேறெந்த தொழிலும் தெரியாத பார்பனர்கள் (உடலைத் தொட்டு செய்யும்) மருத்துவம், இராணுவம் மற்றும் ஏனைய அரசு உயர் பதவிகளில் போய் அமர்ந்து கொண்டது இப்படித்தான். இதற்கு விலையாக அதுகாரும் அவர்கள் கட்டிக்காத்துவந்த தீண்டாமை மற்றும் ஏனைய சமூகத் தீட்டுகளை புறம் தள்ள வேண்டி இருந்தது.


திருவாளர் சோ இராமசாமி என்ன சொல்கிறார் என்றால்

"புரோகிதத் தொழிலில் வருமானம் இல்லை, முன்பிருந்த கௌரவமும் இல்லை ஆகவே புரோகிதர்கள் இம்மாதிரி செய்வதை புரிந்து கொள்ள முடிகிறது என்கிறார். டாக்டரின் மகன் டாக்டர், வக்கீலின் மகன் வக்கீல், அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி. ஏனெனில் அத்தொழில்களில் வருமானம், அதிகாரம், கௌரவம் எல்லாம் உண்டு. அப்படியிருந்தும் தொழில் செய்யும் புரோகிதர்கள் வணக்கத்துக்குரியவர்களே. புரோகிதர் இல்லாத திருமணம் என்றதும் பகுத்தறிவு கல்யாணம் என்று வந்து அதிக செலவு செய்து நடத்துபவர்கள் பகுத்தறிவு கருமாதியும் செய்வதுதானே எனக் கேட்கிறார். ஆனால் செய்ய மாட்டார்கள், ஏனெனில் அதில் கௌரவம் இல்லை. ஆனால் புரோகிதர் அதையும் செய்கிறார் என்கிறார் சோ." - நன்றி திருவாளர் டோண்டு

தேவநாதன் கூட புரோகிதம் தான் செய்தான், அவனெல்லாம் வணக்கத்துக்கு உரியவனா ? புரோகிதத்தொழில் வருமானம் இல்லாமல் இல்லை, ஆனால் அது போதும் என்று சொல்லக் கூடிய அளவுக்கு இல்லை என்று வேண்டுமானால் சொல்லலாம். பார்பனர்கள் புரோகிதம் பார்ப்பது மிகச் சிறிய கோவில்களோ, பாழடைந்த கோவில்களோ அல்ல, பெரும்பாலும் ஆறுகால பூசைக்கு வருமானம் உள்ள கோவில்களில் மட்டுமே வேலை பார்த்து வருகின்றனர். சோ இராமசாமியின் கூற்று படி "டாக்டரின் மகன் டாக்டர், வக்கீலின் மகன் வக்கீல், அரசியல்வாதியின் மகன் அரசியல்வாதி. ஏனெனில் அத்தொழில்களில் வருமானம், அதிகாரம், கௌரவம் எல்லாம் உண்டு" ஆக பார்பனர்கள் இது காரும் கூறி வந்த குல கவுரவம், வேதம் வேதாந்தம் இத்யாதிகள் யாவும் வருமானம் இல்லை என்றால் அவற்றைக் கட்டிக்காக்க தேவை இல்லை என்கிற ஒப்புதல் போலவே உள்ளது. ஏனெனில் டாக்டர், வக்கில், அரசியல் ஆகியவற்றில் கனிசமான அளவு பார்பனர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள். மேலும் சோ இராமசாமியின் கூற்றுபடி, மலம் அள்ளுபவன் கவுரப்படுத்தப்பட்டு நல்ல வருமானமும் கிடைக்கப்பெற்றால் மலம் சுமப்பதும் தவறு அல்ல என்றும் பார்பனர்களும் அள்ளலாம் என்றே சொல்லுவார் போல் தெரிகிறது. எல்லாம் பிழைப்பு வாதத்திற்கான வேசமே என்று திருவாய் மலர்ந்துவிட்டு 'வேதந்த விளக்கப்படி அனைத்து அம்சங்களு நிறைந்த பிராமணன் என என்றுமே இல்லாத பிராமணனை எதற்கு தேடுகிறார்கள் என்பது தெரியவில்லை. சோ இராமசாமி குறிப்பிட்ட படி ஈமச் சடங்குகள் செய்யும் பார்பனர்கள் மிக மிகக் குறைவு, அதைச் செய்யும் பார்பனர்கள் பார்பனர்களுக்குள்ளேயே விலக்கி வைக்கப்படுகின்றனர். அவர்களை சவுண்டி பார்பான் என்று சொல்வது ஒரு சிலருக்கு தெரியலாம்.

இன்றும் சாதிக் கொடுமை கிராமங்களில் இருக்கிறது, இரட்டை குவளை முறைகள் கூட அமுலில் இருக்கின்றன அது தொடர்வதற்கு பார்பனர்கள் காரணமில்லை என்பது போலவே அவர்கள் அந்த கிராமங்களை விட்டு எப்போதோ வெளி ஏறிவிட்டார்கள் என்பதும் உண்மை தான். நினைவுச் சின்னங்கள் / அவமானச் சின்னங்கள் அதைக் கட்டியவர்கள் இருக்கும் வரை தான் காப்பாற்றப்பட்டப்பட்டிருக்கிறது என்பதற்கான உலக வரலாறுகள் குறைவு, சமூக (சாதி) அமைப்புகளிலும் அப்படித்தான் ஒரிரு ஆண்டுகளில் மாற்றம் ஏற்பட்டுவிடாது.

சோ இராம்சாமியின் 'எங்கே பிராமணன் ?' தேடல் படி ஒரு பார்பனர் தன்னை பிராமணன் என்று நம்பினால் பிச்சை எடுத்து உண்ண வேண்டுமாம். பிற்போக்கு வாதிகளை பின்பற்றினால் பிச்சை எடுக்க வேண்டி இருக்கும் என்பதை நாம் இதன் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பார்பனர்கள் தம்மை பிராமணர்கள் என்று கருதிய காலங்களில் தீண்டாமையும், சமூக ஏற்றத் தாழ்வுகளும் தலைவிரித்து ஆடின, சோ இராமசாமியின் 'எங்கே பிராமணன் ?' தேடல் கூட அந்த நிலை மீண்டும் உருவாக வேண்டும் என்கிற கெடுதலான எண்ணமோ !

17 டிசம்பர், 2009

இல்லாத பிராமணனைத் தேடும் பார்பனர்கள் - 2

உலகத்தில் நல்லவர்கள் இருவர் தான், ஒருவர் இறந்துவிட்டார் இன்னொருவர் பிறக்கவே இல்லை, இது தான் நல்லவர்கள் யார் என்பதற்கு பல்வேறு தரப்பினர் ஏற்றுக் கொள்ளும் விளக்கம், காரணம் நல்லவர் என்ற சொல்லின் முழுமைக்குப் பொருத்தமானவர் என்றுமே இருந்தது இல்லை. பிராமணன் என்று வருண வாதிகளால் சொல்லப்படும் குண மேன்மையுடன் எப்போதும் ஒருவன் இருநத்தே இல்லை, ஆனாலும் அப்படி எவரேனும் இருக்கிறார்களா ? என்ற தேடுதலும் தன்னை அப்படி உயர்த்திக் கொள்ள ஒரு சில பார்பனர்கள் முயற்சி செய்வதாக இந்து சமய பழமைவாதியும் பார்பனருமான சோ இராமசாமியின் கற்பனைகதைகளே எங்கே பிராமணன் தேடல் நூலாகவும், தொலைக்காட்சித் தொடராகவும் வெளி வந்திருக்கிறது. இது குறித்து முன்பு எழுதிய பதிவில் இதிகாச அடிப்படையில் பிராமணன் என்பவன் இருந்தது இல்லை என்று சொல்லி இருந்தேன். இங்கே தமிழக வரலாற்று அடிப்படையில் பிராமணன் இருந்தானா ? என்று பார்ப்போம்.

பிராமணன் என்பவன் வாழ்ந்தே இருந்திடாவில்லை என்று தெரிந்தும் அப்படி ஒரு குண மேன்மை எங்களுக்கு வாய்க்க வாய்ப்புகள் உண்டு, அதற்கான வாழ்வு முறை எங்களது என்கிற கட்டுமானத்தில் பார்பனர்கள் தங்களை பிராமணர்களாக அறிவித்துக் கொண்டு அந்த பிராமணத் தகுதி என்பதை தொழில் முடிவு செய்தாக எழுதிக் கொண்டதும், தொழிலானது பிறப்பின் வழியாக அடுத்தத் தலைமுறைக்கு எடுத்துச் செல்லப் பட்டு வழிவழியாக தொடர வேண்டும் என்கிற ஏற்பாட்டில் பிராமணத் தகுதி என்பதை பார்பனர்களின் நிரந்தர உடைமை ஆக்கியதுடன், பிராமணனிடம் பிற சமூகத்தினர் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்கிற வருண கோட்பாடுகளை வகுத்து, பிற வருணத்தினர் தங்களின் மேலாண்மையையும், வழிகாட்டுதலையும் ஏற்றுக் கொள்வது அவரவர் குல தர்மம் என்பதாக ஆக்கி அதை மனுஸ்மிருதி முதற்கொண்டு பல்வேறு பார்பன சார்பு, பார்பன நல மேன்மை காக்கும் நூல்களில் ஆக்கி வைத்து அதன் படியான நீதி வழுவாமல் பார்த்துக் கொள்வதே அரசக் கடமை, அரச நீதி என்றெல்லாம் வழிகாட்டப்பட்டது. இதன் படி பல முட்டாள் அரசர்கள் தங்களை பார்பனர்கள் மூலம் சந்திர வம்சம், சூரியவம் என்றெல்லாம் புகழச் செய்து பாடல்கள் ஆக்கிக் கொண்டு மனு நீதி வழுவாத அரசாட்சி நடத்தினார்கள் என்பதை சமய சார்பற்றவர்கள் எழுதும் மாற்றுப் பார்வைகள் மூலம் வெளிச்சத்துக்கு வருகின்றன.

நிலம் பொது உடமையாக இருந்த சங்க காலத்தில் திருக்குறள் உட்பட பதினென்கணக்கு நூல்கள் 'சாதி' என்றச் சொல்லை அறிந்ததே இலலை. குலம் குலவழக்கம் ஆகியவை அவரவர் செய்யும் தொழிலுக்கு ஏற்ப அமைந்தும், களவு மணம் என்னும் காதல் மணம் மண வாழ்க்கையின் வாசலாக இருந்தது என்பதை அகத்திணை புறத்திணை ஆகிய நூல்கள் வழியாக நமக்கு தெரிய வருவதாகும். குலக் கலப்பு இழுக்கு என்பதாக் எநத் ஒரு குறளிலும் திருக்குறளில் சொல்லி இருக்கவில்லை என்பதை ஒப்பு நோக்க அப்படியான களவு மண முறை குலம் சார்ந்த ஒன்று அல்ல அனைத்தும் குலமும் தொழில் என்பதை பொருளீட்டலுக்கு செய்து வந்தார்களேயன்றி அதைத் தனியார் உடைமையாக்கி இருக்க வில்லை என்பதை அறியலாம்.

ஓதுதல் ஓதுவித்தல் ஆகியவை சிலப்பதிகாரக் காலமான 3 - 6 ஆம் நூற்றாண்டு காலத்தில் தொடங்கி இருந்த ஒன்று என்றும் 'மாமுது பார்பன் மறை வழிகாட்டிட' என்கிற செய்யுள் அதை உறுதிப் படுத்துவதாக அமைந்திருகிறது என்கின்றனர். அதாவது அந்த காலத்தில் மண முறைகள் குலத்துக்குள்ளேயே நடந்திருக்கிறது, அதை அகமணமுறை (பெற்றோர்களால் உறுதிப்படும் திருமணம்) என்றும் அதை பார்பனர்கள் நடத்தி தருவது வழக்கம் ஆக தொடங்கி இருக்கிறது என்பர். சிலப்பதிகாரப் பாடல்களிலும் சாதிச் சாடல் மிகுதியாக இல்லை. சங்கம் மறுவிய காலத்தில் குறுநில மன்னர்களாக இருந்த கடையேழு வள்ளல்கள் ஆட்சி புரிந்த காலத்தில் சாதி வேறுபாடுகள் மிகுதியானது என்பதைக் காட்டுவிதமாக கொன்றை வேநதனில் 'சாதி இரண்டொழிய வேறில்லை' என்கிற சாதிச் சாடால் பாடல்களும், அப்பாடல்கள் முழுவதும் சங்கச் செய்யுள்கள் போலில்லாது தெளிவாக புரியும் படியான தமிழ் நடையில் எழுதப்பட்டிருப்பதை ஒப்பு நோக்க சாதி அமைப்புகள் வேறூன்றியது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே என்பது தமிழாராய்சியாளர்களின் கருத்தாக இருக்கிறது.

பிற்காலச் சோழர்களும், பல்லவர்களும் பார்பனர்களின் வழிகாட்டுதலில் ஆட்சி நடத்தியதால் 1000க் கணக்கான ஆகம கோவில்களும், அதற்கு நிலங்களாக காடுகள் அழிக்கப்பட்டு சதுர்வேதி மங்களங்கள் உருவாக்கப்பட்டு பார்பனர் வசம் ஒப்படைப்பட்டு, அவர்கள் மூலமாக காவேரி படுகை முழுவதும் விவசாய நிலங்கள் ஏற்படுத்தப்பட்டு வேளாண்மை தொழில் அறிமுகம் ஆனதாகச் சொல்கிறார்கள். கங்கைச் சமவெளியில் இருந்து வந்திருந்ததால் பார்பனர்களுக்கு விவாசய நுட்பம் தெரிந்திருந்திருக்க, புதிய விவாசாய முறைகளும் விளை நிலப்பரப்புகளும் விரிவடைவதற்கும் அவர்களின் நுட்பம் பயன்பட்டது என்கிறார்கள். பார்பனர்கள் நேரடியாக விவாசயம் பார்க்காமல் கோவிலை மையப்படுத்தி அதன் வழியாக சமூக ஆளுமை செய்து கொள்ள எடுத்த முடிவாக பார்பனர்களுக்கு வழங்கப்பட்ட நிலங்கள் பார்பனர்களாலேயே குத்தகை தாரர்களிடம் கொடுக்கப்பட்டு, அப்படியா குத்தகைக்கு எடுத்து வேளாண்மை செய்து வந்தவர்கள் பிள்ளைமார் சமூகம் அல்லது வேளாளர் சமூகம் என வழங்கப்பட்டது. நில உடமைதாரர்களாக இருந்த வேளாளர்களும், பார்பனர்களும் சேர்ந்து சமண ஆதிக்கத்தை ஒழிக்க முற்பட்ட ஏற்படுத்தியது தான் பக்தி இயக்கம். சேக்கிழார் போன்ற வேளாளப் புலவர்கள் பார்பனர்களை அந்தணர்கள், ஐயர்கள் என்று அழைக்க அவர்கள் இவர்களுக்கு பிள்ளைமார் பட்டம் கொடுத்து இருவரும் சைவ வழி உணவு உண்ணுவதன் மூலம் தனியான மேன்மையான தகுதி தங்களுக்கு கிடைக்கும் என்பதை புத்த / சமண மதங்களில் நடை முறையில் இருந்த உணவு வழக்கமான சாத்விக உணவு பழக்கத்தைப் பின் பற்றினர். வைணவம் தனிக்கதை.

ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே சதுர் வருணம் என்கிற நான்கு வருணம் தமிழக குல அமைப்புகளில் பின்பற்றப்பட்டது. பவுத்த, சமண சமயம் வீழ்ந்த பிறகு அதைப் பின்பற்றியவர்களில் உயிருக்கு பயந்தவர்கள் நிலவுடைமைகளில் வேலை செய்யும் அடிமைகள் ஆக்கப்பட்டும், அவரவரர் செய்து வந்த தொழில் அடிப்படையில் சாதியாக அடையாளப்படுத்தப்பட்டும் தீண்டாமை கடுமையாக நுழைக்கப்பட்டது. இதற்கு ஆதரவாக இருந்த உயர்சாதி சூத்திரர்கள் வேளாளர்கள், கோவில் முழுமையும் பார்பனர் ஆதிக்கத்தில் சென்றதால் பிற்காலத்தில் அவர்களுக்கும் பார்பன ஆளுமையை எதிர்த்துள்ளனர் என்பதை மறைமலை அடிகளார் போன்றோர்களின் பார்பன எதிர்ப்பை வைத்து அறிந்து கொள்ளலாம். நான்கு வருணம் என்பது பார்பனர்களால் முன்மொழியப் பட்டாலும் பார்பனர் அல்லாதவர்கள் அனைவருமே பார்பனர்களைப் பொருத்த அளவில் சூத்திரர்களே, பார்பனர்கள் இன்றும் கூட பார்பனர் அல்லாதவர்களை சூத்திராள் என்றும் சொல்லும் வழக்கு இருந்து வருவதை ஒப்பு நோக்கு.

வானளாவி வளர்ந்து நிற்கும் தமிழக ஆகம வழி அமைப்பட்ட கோவில் கோபுரங்கள் அனைத்துமே சமூகம் கூறுபட்டதன் சாட்சிகளே. அவற்றை வரணாசிரமத்தின் தலைமை பீடங்கள் எனலாம். இவற்றையெல்லாம் அறிந்தோர். கோவில் கூடாது என்றோம் ஏனெனில் அவை கொள்ளையர்களின் கூடாரம் ஆகிப் போனதால் என்றார்கள். பொருள் பொதிந்தது தானே இதைப் பற்றிய எனது மற்றொரு பதிவு ஆகமம் ஆலயம் ஆன்மா !


********
பார்பனர்கள் நம்பும் அனைத்து சமூகத்திற்கான நால்வருண வாழ்க்கை என்பது சமூகச் சமச்சீர் அற்றது, முதலாளித்துவம் என்னும் தனியார் மேலாண்மை போற்றுவதுமாகும். எங்கே பிராமணன் என்கிற தேடல் குண அடிப்படையிலான பிராமணன் இருக்கிறானா ? என்கிற ஆராய்ச்சியை நோக்கியது கிடையாது, ஏனெனில் அப்படி ஒருவன் இருப்பதற்கான சாத்தியம் எக்காலத்திலும் ஏற்பட்டது இருந்தததில்லை என்பதை சோ இராமசாமி போன்ற பார்பனர்கள் ஒப்புக் கொள்கிறார்கள். ஆனாலும் தேடல் தொடர்கிறது என்பதன் அரசியல் பின்னனி அப்படி ஒரு உயர்வை பிராமணனுக்கு கற்பித்தால் தொடர்ந்து வர்க / பிறப்பு வழியாக தம்மை பிராமணர் என்று அழைத்துக் கொள்ளும் பார்பன/ஆரிய இனம் பிறசமூகத்தால் எந்த ஒரு செயலுக்காக இன்றியும் மதிக்கப் படலாம் என்கிற நப்பாசையே. பார்பனர்களும் பார்பனரல்லாத சமூகங்களும் சோ இராமசாமி போன்ற அடிப்படை மற்றும் பழமை வாதப் பார்பனர்களின் செயலை ஊக்குவிப்பது கற்காலத்துக்கு இட்டுச் செல்லும் வழியாகும். எங்கே பிராமணன் ? என்கிற தேடல் அனைத்து சமூகத்தாலும் நிராகரிக்கக் கூடிய ஒன்று.


பின்குறிப்பு : இன்றைய தேதியில் பல பார்பனர்கள் தம் முன்னோர் செய்த தவறுகளை ஒப்புக் கொண்டு, தமிழக மக்களிடையே வேற்றுமைகள் களையப்பட்டதை வரவேற்கிறோம் என்பதாக மாறி இருக்கிறார்கள். எனவே இந்தக் கட்டுரை இன்றைய முற்போக்கு பார்பனர்களைக் குறித்ததும் அல்ல. இந்தக் கட்டுரையை பார்பன வெறுப்பு என்று வகைப்படுத்துவதை / பொதுப் படுத்துவதை நான் நிராகரிக்கிறேன்.

குறிப்புகள் : நூல் : கோவில் - நிலம் - சாதி ஆசிரியர் பொ. வேல்சாமி (காலச் சுவடு பதிப்பகம்)

16 டிசம்பர், 2009

பெண்ணுடலால் வளர்க்கப்படும் சாதீயம் !

மதங்கள் அனைத்தும் ஆண்கள் தலைமையில் உருவாகி இருந்தாலும் அன்னிய (மத/சாதி) ஆண் / பெண் ஈர்ப்பில் அந்த அமைப்பு சிதைந்துவிடாமல் இருக்கவும், அவ்வமைப்பில் குழப்பம் ஏற்படாமல் இருக்கவும் பெண்களின் வழியாக அவற்றைக் கட்டிக்காக்க முடியும் என்ற நம்பிக்கையில் மதக் கொள்கைகளின் வழியாக பெண்களின் மீதான கட்டுப்பாட்டில் அவை செயல்படுகின்றன. மதம் மாறி காதல் திருமணம் செய்துக் கொள்ளும் போது அங்கு பெண்களின் நிலை எப்போதுமே கவலைக்கிடம் தான். தான் இதுவரை வணங்கி வந்த கடவுள்களை மறந்து புதிய வகை வணக்கத்திற்கும், பழக்கவழக்கத்திற்கும் தன்னை அவள் ஆயத்தப்படுத்திக் கொள்ள வேண்டி இருக்கும். ஒவ்வொரு மதத்திலும் அந்நிய ஆண்களிடம் பெண்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது சமயப் பாடமாகவே நடத்தப்படுகிறது. அவை பெண்களின் கண்ணியம், கற்பு என்கிற புனிதங்களாக நிறுவப்பட்டு இருக்கும்.

இந்தியாவின் சிறப்புத் தன்மையாகவும், இந்து மதத்தின் பொதுத் தன்மையாகவும் இருக்கும் சாதியத்தில் பெண்களின் நிலைகுறித்து பல்வேறு சாதிய சமூகங்களும் பல்வகைக் கோட்பாடுகளைக் கொண்டிருக்கிறது. குறிப்பாக பெண்கள் மறுமணம் செய்து கொள்ளலாமா வேண்டாமா என்பதை அவர்கள் சார்ந்த ஆண் சமூகத்தின் விருப்பமே தீர்மணம் செய்திருக்கிறது. இதற்கு அனுமதித்த, மறுத்த சமூகங்கள் அனைத்திலும் பெண்கள் எடுக்க வேண்டிய முடிவுகளை ஆண்கள் சமூகமே பரிந்துரை செய்து வந்திருக்கிறது. மறுமணம் செய்வதில் உடன்பாடு உள்ள சில சாதியினரிடம் கூட அம்மறுமணம் கூட அப்பெண் யாரை திருமணம் செய்ய வேண்டும் என்பதை ஆண்களே முடிவு செய்துவிடுவார்களாம். கணவனை இழந்த பெண்கள் கணவரது தம்பியை திருமணம் செய்து கொள்வது கூட வழக்கில் இருந்திருக்கிறது. காரணம் சொத்து யாருக்கு என்பதில் அது உறவுமுறைகளைக் கடந்து வேறொருவருக்கு போய்விடக் கூடாது என்பதைத் தவிர்த்து மறுமணம் பெண்களின் மறுவாழ்வை மறு உறுதி படுத்துகிறது என்பதற்காக அல்ல என்பதாக இத்தகைய மறுமணங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன.

பெண்களின் கற்பு என்பதை அவளுடைய பெண் குறியுடன் தொடர்பு படுத்தி புனிதம் கட்டமைக்கப்பட்டுவிட்டதால், கணவனின் இறப்பிற்கு பிறகு அவளது பெண் குறி வன்முறையாகத் தீண்டப்பட்டால் அவளுடைய தெய்வீகத் தன்மைக்கு இழுக்கு என்கிற சித்தாந்ததில் கணவன் பிணத்துடனேயே 18 ஆம் நூற்றாண்டுகள் வரை உயிருடன் பெண்கள் (உடன்கட்டை என்கிற) புனிதச் சடங்கு என்ற பெயரில் கொளுத்தப்பட்டு இருக்கிறார்கள், தமிழ் சூழலிலும் அது போன்ற நிகழ்வுகள் நடந்தேறியதாக புறநானூற்றுக் குறிப்புகள் உள்ளன. ஒரு ஆண் எத்தனைப் பெண்ணுடன் உறவு கொண்டிருந்தாலும், அவன் மாற்று சாதிப் பெண்களுடன் உறவு கொண்டிருந்தாலும் அவனுக்கு 'கற்பு' பாதிப்பு ஏற்படாது. ஆனால் ஒரு பெண் வன்முறையால் தீண்டப்பட்டால் கூட அவள் தீட்டுப்பட்டவள் ஆகிறாள் என்கிற சித்தாந்தங்களில், சாதியத்தின் நிலைப்பு அல்லது விளைச்சல் என்பது அந்த சாதியைச் சேர்ந்த பெண் அந்த சாதியைச் சேர்ந்த ஆணுடன் கூடிப் பெறும் குழந்தைகளினால் மட்டுமே ஏற்படக் கூடியவை என்பதால் பெண் குறியின் மீது ஏகப்பட்ட கட்டுபாடுகளை விதித்து 'பதிவிரதா, பத்தினி' தர்மங்கள், கோட்பாடுகள் எழுதப்பட்டன.

இன்னும் கூட உச்சமாக பெண்ணுக்கான ஆன்ம விடுதலை என்பது அவள் தன் கணவனுக்கு எவ்வளவு உண்மையாகவும், அவனுக்கே அற்பணிப்பாக வாழ்கிறாள் என்பதே முடிவு செய்துவிடும் எனவே பெண்கள் ஆண்களைப் போன்று கடுமையான சாதகப் பயிற்சியினால் ஆன்மிக முன்னேற்றம் அடைவதைவிட அது எளிய வழிகள் என்பதாகச் சொல்லப்பட்டன. ஆன்மிகம், சமூகம் அனைத்து வழியிலும் பெண்கள் மாற்று ஆடவரை திருமணம் செய்வது அவளுடைய புனிதத் தன்மைக்கு இழுக்கு என்பதாகவே சமூகம் கட்டமைத்து இருக்கிறது பெண் குறியை மூன்று தெய்வங்கள் காவல் காக்கின்றன என்பதாக மனுஸ்மிருதிகள் எழுதப்பட்டன. வேற்று (சாதி) ஆடவனை அங்கே எந்த சூழலிலும் அனுமதித்திவிட்டால் பெண் குறியை காவல் காக்கும் தெய்வங்களுக்கு தெரிந்து போய்விடும், அவள் தண்டனை அடைந்துவிடுவாள் என்கிற மனம் சார்ந்த பயத்தை பெண்களுக்கு ஏற்படுத்துவதன் முலம் பெண் தனது பிற ஆடவர் குறித்த மன அளவிலான சிந்தனையைக் கூட கட்டுபடுத்திவிட முடியும் என்கிற உளவியலுக்காக பெண் குறி தெய்வங்கள் அங்கே குடிகொண்டி இருப்பதாக கதைகள் உண்டாகின.

உயர்சாதி ஆண்களை காதல் மணம் புரியும் போது பெண்ணின் பெற்றோர்கள் அதை எதிர்க்க மாட்டார்கள், அவர்களுக்கு அது பெருமை என்பதாகவும், தாழ்ந்த சாதி ஆண்களை காதல் திருமணம் செய்து கொள்ளும் போது அந்தப் பெண்கள் பெற்றோர்களால் கைகழுவி விடப் பட வேண்டும் என்பது சமூக ஏற்பாடாகவே இருக்கிறது. காதல் திருமணம் செய்து கொள்ளும் பெண்களெல்லோருக்கும் இந்த காலத்தில் எதிர்ப்பு அவ்வளவு இல்லை என்றாலும் தன்னுடைய அடையாளத்தை அவள் துறந்தாகவே வேண்டும் என்கிற நிலையில் தான் இன்றைய சமூக அமைப்பும் இருக்கிறது.

தற்போதைய திரைப்படங்களில் ஒரு பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டால் அவளை அவனுக்கே திருமணம் செய்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற அபத்தங்கள் இல்லை என்றாலும், ஒரு பெண் ஒருவனை மனதார நினைத்துவிட்டால் அவள் சாகும் வரையில் பிற ஆணை நினைக்கமாட்டாள் என்கிற ஆண்கள் எழுதும் வசனங்களைப் பல்வேறு திரைப்படப் பாத்திரங்கள் பேசுவதைக் கேட்கிறோம். இவற்றின் வழியாகக் கூட பெண் என்பவள் இப்படித்தான் இருக்க வேண்டும், மனது உடலும் ஒருமுறை யாருக்கேனும் கொடுக்கப்பட்டால் அவள் சாகும் வரையில் அப்படியே தான் இருக்க வேண்டும் என்கிற ஆணிய சாதித்துவ ஆசைகளை அப்படி வெளிப்படுத்தி எழுதிவிடுகிறார்கள். அந்த வசனத்தை பெண்களின் காதலைச் சொல்லும் உறுதியான மனவியல் வசனங்கள் என்பதைவிட முன்கூட்டியே பெண் எதிர்புகளை எல்லாம் சிந்தித்து அதன் பிறகே தனது மனதை ஒருவருக்குக் கொடுக்க வேண்டும், இல்லை என்றால் அப்படியே அவள் இருக்க வேண்டியது தான் என்கிற சாதித்துவ ஆசைகள் அதில் அடங்கும். ஒரு பெண் ஏமாற்றப்பட்டாலும் அந்த ஒருவனைத் தான் நினைக்க வேண்டுமா இல்லையா என்பதைப் பெண்கள் தான் முடிவு செய்ய வேண்டுமேயன்றி ஆண்கள் எழுதும் வசனங்கள் அல்ல.

பொட்டு வைத்துக் கொள்வது, பூ வைத்துக் கொள்வது போன்றவை விதவைகளுக்கான புரட்சிகள் இல்லை, அவள் முறையாக மறுமணம் செய்து வைக்கபடவேண்டும் அதுவும் அவள் விருப்படியானதாக இருக்க வேண்டும் என்பதை சமூகம் சிந்திப்பது இல்லை. முடிந்த அளவுக்கு அதே சாதியில் ஒருவன் வந்து கட்டமாட்டானா என்றே காத்திருப்பார்கள். இன்றைய தேதியில் விதவைகளைத் திருமணம் செய்து கொள்ள ஆண்கள் பலர் முன்வந்தாலும் சாதியத் தடைகளை மீறி அத்தகைய திருமணங்கள் நடைபெறுவது அரிது.
குழந்தையற்ற விதவைகள் என்றால் திருமணம் செய்து கொள்கிறோம் என்பதாக சிலர் இருக்கிறார்கள், அவர்களுக்கான விளம்பரமாக "நோ இஸ்யூ" அதாவது அவளுக்கு குழந்தைகள் எதுவும் இல்லை, என்பதும் கூட விளம்பரப்படுத்தப்படுகிறது.

மத அடையாளம், சாதிய அடையாளம் இவை அனைத்தும் மறு தலைமுறைக்கு பெண்களின் வழியாகவே அனுப்பப் படுகிறது என்பதை விழாக்கள், விருந்துகள், பண்டிகை காலங்களில் நன்கு அறியலாம். ஆண்கள் வெள்ளைகாரனின் உடையை அணிந்திருக்க, பட்டுபுடைவை சலசலக்க பெண்களை அங்கே அழைத்துவருவது தான் பெருமையானதும், பாரம்பரியத்தைக் கட்டிக்காக்கும் வழிமுறையாகவும் சுறுக்கிக் கொண்டு இருக்கிறார்கள். குலதெய்வ வழிபாடு மற்றும் சாதிய பழக்க வழக்கங்கள் அனைத்தையும் ஆண்கள் வெளியே வெளி உலகில் காட்டாவிட்டாலும் பெண்களின் வழியாக அதைச் செய்தே வருகிறார்கள். தாய் மொழி மாறி திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் கூட தன்னுடைய குழந்தைக்கு தன்னுடைய மொழியை தாய் மொழி ஆக்கிவிட முடியாது.

வெளிநாடுகளில் சாதியற்ற சமூகங்கள் உள்ளன, அங்கே பெண்கள் மறுமணம் செய்து கொள்வது புரட்சியாகப் பார்க்கப்படுவதும் இல்லை, அது ஒரு நிகழ்வு தான். இந்தியாவில் வேலைக்கு போகும் பெண்கள் கூட ஒழுக்க மற்றவர்கள் என 'வருண' பகவான் காஞ்சி சங்கராச்சாரியால் சொல்ல முடிகிறது, வெளி நாட்டுப் பெண்கள் அனைவருமே ஒழுக்கமற்றவர்களாக இந்திய பொது ஆணிய சமூகம் அடிக்கடி பரப்பிவரும் தகவல்களை ஒப்பு நோக்குக.

பெண்களின் மீதான சாதிய பிடிகள், கற்பு சித்தாந்தங்கள் முற்றிலும் உடைபடும் போது சாதியற்ற சமூகங்கள் மலரும். அதுவரை பெண்கள் வழியாக ஆணிய சமூகம் சாதியத்தின் நிழல் கூட சாகமல் காத்துக் கொணடே வரும். சாதிகளை / மத இறுக்கங்களை காக்கும் ஆயுதங்கள் அனைத்தும் பெண்களை புனிதத்துவப் படுத்துவதன், கண்ணியப்படுத்துவதன் மூலம் சமார்த்தியமாக ஆண்கள் சமூகம் அவளிடம் திணித்து வைத்திருக்கின்றன. பெண் சமூகம் அவற்றை ஒவ்வொன்றாக வீசி எறிய எறிய சாதி அற்ற சமூகம் சாத்தியப்படும். பெண் விடுதலையில் ஆணாதிக்க சமூகம் செயல்படுத்தும் சாதி வெறியின் விடுதலையையும் சேர்ந்தே உள்ளது.

20 நவம்பர், 2009

சாதீ...யம் சில எண்ணங்கள் !

இந்தியாவின் மையப் பிரச்சனை என்றாலும் இப்போது அரசியல்வாதிகள், சாமியார்கள் மறைமுகமாக ஆதரவுக் கொடுத்து வளர்த்துவிடும் ஒன்றாகவும் சாதி இருக்கிறது. கண்ணுக்கு தெரியாத சூழ்ச்சிப் பின்னலாகவே பிரிவினைக்கும், பெண்ணடிமைத்தனத்துக்கும் சாதி மற்றும் கற்பு என்கிற சொல்லாடல்கள் சமூகத்தில் அழுத்தமாக பதிந்து கிடக்கின்றன. கற்பு பற்றிய புரிதல் குறித்த மாற்றம் சமூகத்தில் ஏற்பட்டு இருக்கிறது, ஏனெனின்றால் பாலியல் வன்முறை செய்தவனையே திருமணம் செய்துக் கொள்ளச் சொல்லி பெண்களின் கற்பை மீட்டுக் கொடுக்கும் பழக்கம் தற்போது இல்லை அல்லது மிகக் குறைவு, அதே போன்ற வன்முறையால் (கணவன் தவிர்த்து) பிறரால் பாலியல் வன்முறைக்கு உட்படும் பெண்கள், கணவனுக்காக வைத்திருந்தது களவாண்டு போய்விட்டதே என்று தூக்கில் தொங்குவதோ, தீக்குளிப்பதோ நடப்பது இல்லை, மாறாக அப்படி பாலியல் வன்முறை செய்தவர்களை கடுமையான சட்டம் கொண்டே தண்டிக்கிறார்கள், நடந்தது ஒரு எதிர்பாராத விபத்து என்பதாக பாதிக்கப்பட்ட பெண்களில் மன நிலையாக மாறி வந்திருக்கிறது.

(ஆண் ஆளுமை) சமூகத்தில் பெண்கள் மீது பழிபோட்டு அவர்களை மேலும் துன்பத்திற்கு உள்ளாக்கும் சமூக சித்தாந்தமான 'கற்பு நெறி' தூற்றி நல்ல மாற்றத்தை தமிழகத்தில் ஏற்படுத்தினார் பெரியார். பாலியல் வன்முறைக்கு தான் உள்ளானதாக முறையிட்டால் நான்கு சாட்சிகளைக் கொண்டுவர வேண்டும் என்கிற மதவாத சட்டங்கள் முசாரப் ஆட்சிக்கு முன்புவரை கூட பாகிஸ்தானில் அமுலில் இருந்ததாம், இதன் படி பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் நான்கு சாட்சிகள் கொண்டுவர முடியாமல் போனால் அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்று எடுத்துக் கொள்ளப்படுமாம். பாலியல் வன்முறைக்கு ஆளான பெண்கள் முறையிட்டு, நான்கு சாட்சிகள் இல்லை என்கிற காரணத்தால் 80 விழுக்காட்டுப் பெண்கள் சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர்கள் முஷ்ரப் ஆட்சியின் போது விடுவிக்கப்பட்டதாகவும் ஒரு நூலில் படித்தேன். பெண்கள் தனித்து வெளியே போகக் கூடாது என்கிற கட்டுப்பாட்டில் இருந்த அந்த காலத்தில் சாட்சியோடு பாலியல் வன்முறைக்கு வாய்ப்பு இருந்திருக்கலாம், இன்றைக்கு பெண்களும் வேலைக்கு, வெளியிடங்களுக்கு செல்லும் போதும் பாலியல் வன்முறை செய்பவன் சாட்சி வைத்துக் கொண்டு செய்வானா ? இந்த ஷரியத் சட்டம் சரியானது தானா ? என்பதை இஸ்லாமிய நண்பர்கள் விளக்கினால் நன்று.

சாதி பேதமற்ற சமூகம் அமைப்போம் என்று ஒரு சிலர் உண்மையேலேயே பேசினாலும், சாதி பற்றாளர்களின் புதிய சித்தாந்தம் என்னவென்றால் சாதி அமைப்பு சரியானதே, பின்னால் வந்தவர்கள் அதில் ஏற்றத்தாழ்வை உருவாக்கிவிட்டார்கள், அதை சரி செய்துவிட்டால் எல்லாம் சரியாக இருக்கும் என்பதாக கூறிவருகிறார்கள். நான் சாதிவெறியர்கள் பற்றி குறிப்பிடவில்லை, சாதிவெறியர்களின் சித்தாந்தம் சாதி கடவுளால் படைக்கப்பட்டது, விதிப்பயனால் அவன் உயர்ந்த அல்லது தாழ்ந்த சாதியில் பிறக்கிறான், சாதியைத் தாழ்த்தி வைப்பதும், உயர்த்திச் சொல்வதும் ஏற்றத்தாழ்வை போற்றும் ஆண்டவனின் ஏற்பாடு என்கிறார்கள். ஆண்டவனால் ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள் என்பதை இஸ்ரேலிய யூதர்கள் என்றுமே சொல்லிவருவார்கள், அதே போல் பார்பனர்களின் பலர் 'ஆசிர்வதிக்கப்பட்ட பிறப்புகள் நாங்கள், அதாவது பிரம்மனின் முகத்தில் பிறந்தவர்கள்' என்கிற சித்தாந்ததை நம்புகிறார்கள். இப்படிப்பட்ட நம்பிக்கை உள்ளவர்கள் சமூக ஏற்றத்தாழ்வை என்றுமே ஆதரிப்பவர்கள், அவர்களுடைய கருத்துக்கள் படி ஒரு பொதுச் சமூகம் என்றுமே உருவாகிவிட முடியாது, உருவாகக் கூடாது என்பதும் அவ்ர்களின் எண்ணம், அதனால் சாதிவெறியர்களின் சாதி குறித்த சிந்தாந்தம் மிக வெளிப்படையானது என்பதால் அதனை பேசுவது பயனற்றது, அவர்களை மாற்றவும் முடியாது.

அடுத்து சாதிப் பற்றாளர்கள், இவர்கள் அவ்வளவு தீவிரமாக சாதிவெறி கொண்டிருக்காவிட்டாலும் இவர்கள் சாதிக்கு ஆதரவாக கூறும் காரணங்களில் அடிப்படை சாதி ஆண்டவனால் ஏற்படுத்தப்பட்டது என்றே நம்பினாலும் சாதிய சமூகத்தில் இருக்கும் ஏற்றதாழ்வு களையப்பட வேண்டும், சாதியை ஏற்படுத்தி இருந்தாலும் அதில் ஏற்றத்தாழ்வை கடவுள் திணிக்கவில்லை, மனிதர்கள் தங்கள் சுயநலத்தால் ஏற்றத்தாழ்வை அதில் நுழைத்துவிட்டார்கள் என்பதே அவர்களின் சாதி குறித்த பார்வையாக இருக்கிறது.
இவர்கள் சொல்லுவது நல்லெண்ண அடிப்படையில் என்றாலும் இவர்களும் சாதி அமைப்புகள் தான் பாதுகாப்பானது என்கிற நம்பிக்கைக் கொண்டவர்களாகவும், சாதியற்ற சமூகம் அமைத்தால் அவரர்களுக்கான பண்பாடுகள் தொலைந்துவிடும் என்பதாக இவர்கள் அலறுகிறார்கள்.

சாதி முட்களின் மீது சமூக சீலையை உளர்த்திய பின், சேலை கிழியாமல் அதை எடுக்க முடியுமா ? உயர்வு தாழ்வு அற்ற சாதி அமைப்பு வேண்டும் அல்லது சாதிகளில் ஏற்றதாழ்வு தேவை இல்லை என்பது எந்த காலத்திலும் உருவாகுவதற்கு வாய்ப்புகள் இருக்கிறதா ? "சாதி சொல்லி தாழ்த்துவது" என்பது சாதிகள் இருந்தும் உயர்வு தாழ்வு அற்ற சமூகத்தால் சாத்தியப்படுகிறது என்றே வைத்துக் கொள்வோம். 'என் சாதிக்காரனை அடிச்சிட்டான் அந்த சாதிக்காரன்' என்கிற நிலமை ஏற்படாமல் இருக்க சாதி உயர்வு தாழ்வு பாராட்டாத சாதிய சமூகத்தால் ஏற்படுத்திவிடமுடியுமா ? சாதி ஏற்றத்தாழ்வு இல்லாத சமூகம் இனக்குழுக்கலாக மாறிவிடும் என்பதைத தவிர்த்து, சாதி அமைப்பு முறையில் ஏற்றதாழ்வுகளை மட்டுமே அகற்றுவதால் வேறெதுவும் நிகழ்ந்துவிடாது.

சாதி அமைப்பு சரியானது, அதில் (சாதிய) ஏற்றத் தாழ்வு தேவை இல்லாதது என்ற கூற்றுகள் என்னைப் பொருத்த அளவில் ஏற்றுக் கொள்ள முடியாதும், என்றுமே சமூக மாற்றத்திற்கு எந்த ஒரு பயனையும் ஏற்படுத்தாத கூற்று ஆகும். உதிரங்களும் உறுப்புகளும் தேவைப்படும் போது பல்வேறு சாதிகள் என்று நம்பப்படும் மக்கள் ஒருவருக்கொருவர் தேவையின் காரணமாக மாற்றிக் கொள்ளும் இந்த காலத்தில் கண்ணுக்கு தெரியாத வலையாக நம்மீது பின்னப்பட்டு இருக்கும் சாதி என்கிற மாயவலையே தேவையற்றது.

‘‘இப்பல்லாம் யாருங்க சாதிப் பாக்குறா? சும்மா அதையேப் பேசிக்கிட்டுருக்காதீங்க’’ - இன்றைய தேதியில் சாதி பற்றிய பல்வேறு தரப்பினரின் எண்ணங்கள் பற்றி பதிவர் நண்பர் ஆழியூரான் சிறப்பாக எழுதி இருக்கிறார்.

17 ஆகஸ்ட், 2009

மாண்புமிகு மருத்துவ சமூகம் !

உலக நாடுகள் இந்தியாவைப் பார்த்து எப்போதும் எச்சில் உமிழ்வதற்கு இந்தியாவில் இருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வு, சாதிய படிநிலைகள் தான் காரணம் என்றால் அதை மறுப்பவர்கள் எவருமே இருக்க முடியாது. இனவேறுபாடு எதுவும் இல்லாமல் அல்லது மிகக் குறைவான ஒரு நாட்டில் ஒன்று போல் முக அமைப்பு கொண்ட மக்கள் தனித்தனியாக பிரித்து வைத்துக் கொண்டு அவர்களில் ஒரு பகுதியினரை பிறப்பை, தொழிலை வைத்து தாழ்வு படுத்தி,அடிமையாக்கி வைத்திருக்க கண்ணுக்குத் தெரியாத சாதி என்கிற மாயவலையை பிண்ணி அதில் சிக்க வைத்து வாழ்வியல் சதி(ரா) ஆட்டம் ஆடும் நிலை எந்த ஒரு நாட்டிலும் இல்லாத வழக்கம். அப்படி செய்பவர்களுக்கு முற்பட்ட, முற்போக்கு சமூகம் என்கிற உயர்ந்த பெயரையும். பாதிக்கப்பட்டவர்களை கிழான சமூகம், தீண்டத்தகாதவர்கள் என்றும் சொல்லி வந்திருப்பது 'தெய்வம் பிறந்ததாகக் வாய்கூசாமல்' சொல்லப்படும் 'பாரத திரு' நாட்டில் இன்றும் கூட நடை முறையில் தொடர்வதும், அதை தடுக்க முனையும் மனிதம் போற்றுவோருக்கு சா'தீயம்' பெரும் அறைகூவல் தான்.

***

சலூன் கடை என்றாலே சிறுவர்களாக இருந்த பொழுது அரைகுறை ஆடைகளுடன் பெண்களின் அங்கங்கள் நமக்கு அறிமுகமான இடம் என்பதாகத்தான் நாம் நினைக்கிறோம். சவரத்தொழிலாளிகள் என்பவர்கள் யார், ஏன் அவர்கள் அந்த தொழிலை செய்துவருகிறார்கள் ? அவர்களுக்கு அது குலத்தொழிலா ? என்கிற கேள்வியை நம்மில் கேட்டுக் கொண்டவர் குறைவே. எந்த ஒரு இனத்திலும் குலத்தொழிலாக இல்லாத பலத் தொழில்கள் இந்தியாவில் குலத்தொழில்களாகத் தொடர்வதில் சவரத் தொழிலும் ஒன்று. சவரத் தொழிலாளிகள் யார் ?

அம்பட்டர், பரியாரி, பார்பர், நாவிதர் என்று பல்வேறு பெயர்களில் அழைக்கபடும் மருத்துவர் என்னும் ஆதிமருத்துவர் சமூகம் எப்படி ஏற்பட்டது என்று பார்த்தால், பண்டைய இந்தியாவில் முடிகளை மழித்துக் கொள்ளும் பழக்கம் பெளத்தர்களுக்கும், சமணர்களுக்குமே உரிய வழக்கம், அவர்கள் தவிர்த்து பார்பனர்கள் தலை உச்சியைத் தவிர்த்து தலையை மழித்துக் கொள்ளும் வழக்கம் உடையவர்களாக இருந்தனர். உடலில் பூணூல் அணியாத காலங்களில் பார்பனர்கள் தங்களின் தனி அடையாளத்திற்காக உச்சிக் குடுமி வைத்து சிரைத்துக் கொள்வது வழக்கம். பூணூல் போட்டுக் கொள்வது ஆறாம் நூற்றாண்டுக்கு பிறகே வந்திருக்க வேண்டும் என்று வரலாற்று, இலக்கிய ஆர்வளர்கள் சொல்லுகிறார்கள். பூணூல் பற்றி எதுவும் குறிப்பிடாத வள்ளுவரும், மழித்தலும் நீட்டலும் வேண்டாம்' என்று அறிவுறித்தியது பார்பனர்களின் வெளிப்பகட்டைக் கண்டிப்பதற்குத்தான் என்றும் உரையாசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள்.

மருத்துவத்தை பண்டைய தமிழகத்தில் பெளத்தர்களும், சமணர்களும் செய்து வந்ததாகக் கூறுகிறார்கள், சித்தர்களில் பலர் சமண சித்தர்கள் என்றும் இந்து, சைவ சமய ஆதிக்கங்களினால் அவர்கள் பின்னாளில் இந்து சமயம் சார்ந்தவர்களாகக் காட்டப்படுவதெல்லாம் வெறும் கட்டுமானங்களே என்றும் குறிப்பிடுகிறார்கள். ஆண்களுக்கு ஆண்களும், பெண்களுக்கு பெண்களும் மருத்துவம் பார்க்கும் வழக்கம் இருந்தது, பெரும்பாலும் சமணர்களே மருத்துவக் கலையில் தேர்ந்தவர்களாகவும் அறுவை சிகிச்சை முதற்கொண்டு மருத்துவத்தில் அனைத்தையும் செய்யக் கூடியவர்களாகவே இருந்தனர். பெளத்த, சமணர், பார்பனர் தவிர்த்து மழித்துக் கொள்ளும் பழக்கம் வேறொருவருக்கு இருந்ததில்லை. சமணர்களின் ஆதிக்கம் வீழ்த்தப்பட்ட காலத்தில் சிறைபிடிக்கப்பட்ட சமணர்கள் அனைவரும் மருத்துவத் தொழிலுடன் சவரம் செய்வதையும் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அது அப்படியே ஆண்டு 1900 வரை தொடர்ந்தது.

காயங்கள் ஏற்பட்ட பகுதியில் மருத்துவம் செய்ய அந்த இடங்களில் மயிரையும் மழிப்பது வழக்கம் என்பதால் அன்றைய மருத்துவர்கள் அனைவருமே சவரம் செய்வதையும் தெரிந்து வைத்திருந்தனர். ஆறாம் நூற்றாண்டில் பார்பனர் மற்றும் சைவ வேளாளர் (பிள்ளைமார்) சமூகத்தால் பக்தி இயக்கம் என்ற பெயரில் சமணர்கள் வீழ்த்தப்படுவதற்கு முன்பு பார்பனர்கள் தங்களுக்கு தாங்களே சிரைத்துக் கொள்வது தான் வழக்கம். வீழ்த்தப்பட்ட சமண சமூகத்தில் மருத்துவம் தெரிந்தவர்களை மருத்துவர்கள் என்கிற சாதிப் பிரிவாக ஆக்கி, மருத்துவம் தெரியாதவர்களை வண்ணார்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகமாக மாற்றி ஊருக்கு ஒதுக்குப் புறம் குடி இருக்க அனுமதிக்கப்பட்டதாகத்தான பண்டைய சாதியம் தோற்றம் வளர்ச்சி பற்றி ஆய்ந்தவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தியாவெங்கும், புத்த சமண மத வீழ்ச்சி என்பது ஆதிசங்கரருக்கு பிறகு ஏற்பட்டவையே, அவர்கள் அனைவரும் தாழ்த்தப்பட்டவர்களாக தொடர்ந்ததும் ஆதிசங்கரருக்கு பிறகு நடந்த வரலாற்று நிகழ்வே.

இப்படியாக உருவான மருத்துவ சமூகம் தாழ்த்தப்பட்டவர்கள் மற்றும் உயர்சாதியினருக்கு சேவகம் செய்ய வேண்டி இருந்ததால், தீண்டாமை ஆதிக்கத்தின் பாதிப்புக்கு அவர்களும் ஆளானார்கள்.

மருத்துவர்களின் சமூகக் கடமைகளாக அவர்களுக்கு முற்பட்ட சமூகம் 'விதிக்கப்பட்டவை' எவை என்று பார்த்தால்,

* தேவையான போது தலை, முகச் சவரம் செய்துவிடுவது
* இல்லச் சடங்கின் போது ஹோமம் செய்ய வரும் பார்பனருக்கு உதவுதல்
* பூப்பு எய்தும் சடங்கு, சாவு ஆகியவற்றை பிறர்க்கு சொல்லிவிடுதல், பூப்பு எய்திய பெண்ணுக்கு மூலிகை சார் கலந்த குளிக்கும் நீரை ஆயத்தம் செய்து தருவது
* "மாப்பிள்ளை சவரம்" - திருமணத்தின் முதல் நாளின் போது மணமகனின் பிறப்பு உறுப்பு பகுதியில் முடி நீக்குதல், அப்போது அவனுக்கு எதேனும் ஆண்மை தொடர்பான நோய்கள் இருக்கிறதா என்று கண்டறிந்து சொல்லுதல்
* மணப்பெண்ணுக்கு சேலைக் கட்டிவிடுவது (மனுதர்மப்படி பால், பட்டுப் புடைவைக்கும் தீட்டு கிடையாதே !)
* ஆண் / பெண் இருபாலருக்கும் மாதம் ஒருமுறை மறைவிட மழித்தல்
* பெண்களுக்கு மகப்பேறுக்கு உதவுதல்
* சவத்துக்கு சவரம், சவத்தை குளிப்பாட்டி விடுவது, சவ ஊர்வலத்தில் சங்கு ஊதுதல், சவ அடக்கத்தில் உதவுதல்

இவைகளுக்கு "ஊர்ச் சோறும்", கூலியாக நெல் போன்ற தானியங்கள் வழங்கப்பட்டதாகவும், அவை இல்லாதவர்கள் பணம் கொடுப்பதும் வழக்கமாம். இந்த தொழிலில் ஈடுபடும் அந்த சமூகத்து ஆண்கள் மருத்துவர்கள் என்றும் பெண்கள் மருத்துவச்சிகள் என்றும் சொல்லப்பட்டனர். அவர்களில் பெண்கள் மருத்துவம் மிகுதியாக தெரிந்து வைத்திருந்ததால் 'பாட்டி வைத்தியம்' என்கிற சொல் கூட பெண்கள் சிறப்பாக மருத்துவம் பார்த்ததால் ஏற்பட்ட சொல் என்றே சொல்கிறார்கள்.

ஆங்கிலேயே மெக்கல்லே கல்வித் திட்டத்தினால் அலோபதி மருத்துவம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, குலத்தொழில் இறைவனால் விதிக்கப்பட்டது என்றும் பிறவற்றை செய்வது இறை விதிக்கு ஏற்புடையது அல்ல என்று கூறிவரும் பார்பனர்கள் மருத்துவத் தொழிலில் கிடைக்கும் பணம் புகழ் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டும், தற்போது ஏனைய பிற சமூகமும் ஆங்கில மருத்துவத் தொழிலுக்கு மாறிவிட்டார்கள். 12 நூற்றாண்டுக்கும் மேலாக மருத்துவம் பார்த்து வந்த ஆதி மருத்துவர்கள், அரசாங்க சட்டதிட்டம் காரணமாக மருத்துவத் தொழிலை தொடர முடியாமல் தங்களுக்கு தெரிந்த மற்றொரு தொழிலான சவரத்தொழிலை வேறு வழியின்றி தொடர்கின்றனர். அந்தத் தொழிலையும் கூட நகரச் சூழலில், அதற்கு ஒரு உ(ய)ரிய விலையை நிர்ணயம் செய்து 'ப்யூட்டி பார்லர்' என்ற பெயரில் முற்பட்ட சமூகம் வைத்து செய்து கொண்டு வருகின்றன.

நாம் நம் உடலைத் தொட அனுமதிப்பது மருத்துவர்களுக்கும், சவரத்தொழிலாளிக்கும் மட்டுமே. அந்த இருவேலையையும் ஒருவராக செய்துவந்த, தாழ்த்தப்பட்டவர்களாக அறிவிக்கப்பட்ட மருத்துவர் சமூகம் முடித்திருத்ததை மட்டுமே செய்துவருகிறது. அதிலும் கிராமங்களில் தலித் பிரிவினருக்கு சவரம் செய்பவர்கள் மேல்சாதிக்காரர்களுக்கு சவரம் செய்ய தடுக்கப்பட்டு இருக்கிறது


நூல் சான்று : ஆதி மருத்துவர் சவரத் தொழிலாளராக்கப்பட்ட வரலாறு (160 பக்கங்கள், விலை ரூ 90/-)

கிடைக்கும் இடம் : வல்லினம், எண் 9, Y-ப்ளாக், அரசு குடியிருப்பு, இலாசுப் பேட்டை, புதுச்சேரி - 605 008, தொலைபேசி : 0413 - 2257151

நூலில் சில பகுதிகள் உயர்சாதிக் கொடுமைகளாக சொல்லப்படுபவகளை வாசிக்கும் போதே வாசிக்குபவர்களுக்கு இரத்த கொதிப்பை ஏற்படுத்தக் கூடியவை, அதனால் அவர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகள் முழுவதையும் தற்காலச் சூழலில் எழுதுவது தேவையற்றதாக நினைத்து பதிவில் குறிப்பிடாமல் விட்டுவிட்டேன், முழுவதும் அறிந்து கொள்ள நினைக்கும் சமூக ஆர்வலர்கள் நூலை வாங்கிப் படிக்கலாம்.

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்