பின்பற்றுபவர்கள்

7 டிசம்பர், 2012

தம்பியின் கைபேசி எண் !

சிங்கையில் 1998 ஆம் ஆண்டு கைப்பேசிகள் புழக்கத்தில் வந்த பிறகும் நான் அவை தேவையற்ற ஆடம்பரம் என்றே வாங்காமல் இருந்தேன், 'அட வாங்கி வைத்துக் கொள், எப்போ வேண்டுமானாலும் எங்கு வேண்டுமானாலும் பேசலாமே என்று எனக்கு ஒன்றை அவனது கணக்கிலேயே வாங்கிக் கொடுத்தான் என் தம்பி. தம்பிக்கு எனக்கும் வயது வேறுபாடு 2.5 ஆண்டுகள் தான், அவன் எனக்கு முன்பாக சிங்கை வந்திருக்காவிட்டால், எனக்கு சிங்கப்பூருக்கு வேலைக்குச் செல்லலாம் என்ற எண்ணமே வந்திருக்காது, அவன் சிங்கைக்கு வந்து ஒரு ஆண்டுகள் முடிய எனக்கும் பகுதி நேர பிஇ படிப்பு முடிய நாமும் சிங்கப்பூர் செல்லலாம் என்று முடிவெடுத்தேன், செல்லும் செலவு, முகவருக்கு பணம் எல்லாம் தம்பி தான் கட்டினான், திருப்பிக் கொடுத்துவிட்டேன் என்றாலும் அந்த நேரத்தில் எனக்காக செலவழிக்கப்பட்டது பெரிய தொகை, சிங்கைக்கு  வேலைக்கு வந்த புதிதில் நண்பர்கள் யாரும் இல்லாத நிலையில் தம்பியும், தம்பி அறையில் தங்கி இருந்தவர்களும் தான் நண்பர்கள், சனி ஞாயிறுகளில் அவர்களது அறைக்குச் சென்று அங்கேயே இருந்துவிட்டு திங்கள் காலையில் வேலைக்குச் செல்லுவதற்காக ஞாயிறு இரவு கிளம்புவது வழக்கமாகவும் இருந்தது, வந்த ஒரு மாதத்திற்குள் சிங்கப்பூரில் இருந்த அனைத்து இடங்களுக்கும் அழைத்துச் சென்றுவிட்டான். 

ஏற்கனவே சென்னையில் ஒன்றாக ஒரே வீட்டிலும் வசித்தோம், பிறகு பணி இடம் தொடர்பில் வேறு வேறு இடத்திலும் வசித்தோம், சிங்கையிலும் ஒன்றாகவும் தனித்தனியாகவும் வசிக்கும் வாய்ப்பும் கிடைத்தது, வேலைக்காக வீட்டை விட்டு வெளியே வந்த பிறகு, திருமணத்திற்கு முன்பு வரை அதிக நாட்கள் நாங்கள் இருவரும் ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்திருக்கிறொம் என்ற வகையில் என்னுடன் பிறந்தவர்கள் இன்னும் ஐந்து பேர் என்றாலும் எனக்கு அடுத்து பிறந்தவனான இவனுடன் மட்டும் தான் நீண்ட நாட்கள் ஒன்றாக இருக்கும் வாய்ப்பும் கிட்டி இருந்தது. கிட்ட் தட்ட 20 ஆண்டுகள் ஒன்றாக வசிக்காவிட்டாலும் அருகருகே மாதம் ஒருமுறையேனும் பார்க்கக் கூடிய அளவில் வசித்து வந்தோம்,. சிங்கையில் சில ஆண்டுகள் அவனும் தனது குடும்பத்துடன் வசித்தான், பிறகு தனியாகவும் வசித்து வந்தான், கடந்த 10 ஆண்டுகளாக நீரிழிவு குறைபாட்டுடன் வாழ்ந்து வந்தவனுக்கு 2009 ஆம் ஆண்டு உடலுறுப்புகள் கொஞ்சம் கொஞ்சமாக பாதிப்பு அடைய, இனி இங்கே இருப்பது சரிபட்டு வராது என்று கூறி தமிழகத்திற்கே அனுப்பி வைத்தேன்,  தமிழகத்திற்கு புறப்படும் முன்பு வரை தம்பியின் பெயரில் பதிந்திருந்த அலைபேசி எண்ணைத்தான் வைத்திருந்தேன், போகும் முன்பு என் பெயரில் மாற்றிக் கொடுத்துச் சென்றான், அதே தொலைபேசி எண்ணை 12 ஆண்டுகளுக்கும் மேலாக பயன்படுத்தி வருகிறேன்.

சிங்கையில் இருந்து சென்று ஒரு ஆறுமாதத்தில் நீரிழிவு மோசமடைய, இரு சிறுநீரகங்களும் பழுதடைய டயாலிசிஸ் செய்ய வேண்டிய நிலைக்கு சென்று கிட்டதட்ட ஓராண்டுகள் டயாலிசிஸ் என்னும் இரத்த சுத்திகரிப்பு செய்து வந்தான், பிறகு அவனது மாமியாரின் (தாய் மாமனின் மனைவி) சிறுநீரகம் பொருத்தமாக அமைய 2011ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அதனை மாற்று சிறுநீரகமாக வைத்தோம், நன்கு பொருந்தினாலும் கணையம் ஏற்கனவே பழுதடைந்த நிலையில் வைத்த சிறுநீரகமும் கொஞ்சம் கொஞ்சமாக செயலிழக்கத் துவங்கி இருந்தது, இந்த கணையப் பிரச்சனையை முன்பே கண்டிருந்தால் நீரிழிவு ஏற்பட்டிருந்திருக்காது, மருத்துவர்கள் நீரிழிவிற்கான சிகிச்சை மட்டுமே அளித்து வந்திருந்தனர், பிரச்சனை கணையத்தில் தான் என்பதை நீரிழிவு முற்றும் வரை யாரும் அறிந்திருக்கவில்லை,

மூன்றுவாரம் முன்பு 10 நாள் விடுமுறையில் ஊருக்குச் சென்ற பொழுது தம்பியின் உடல் நிலை சற்று கவலைக்கிடமாகவே இருந்தது, விசாரித்ததில் இவரு இப்படிதான் படுத்திருப்பார் பிறகு எழுந்துவிடுவார் என்றார்கள், என்னிடம் நன்றாகத் தான் பேசினான், எழுந்து உட்கார கொஞ்ச முயற்சி எடுத்தான், கூடவே கொஞ்சம் காய்ச்சல், இரண்டு நாளாக காய்ச்சல் டாக்டரிடம் கூப்பிட்டால் சரியாகிவிடும் தேவை இல்லை என்கிறார் என்று தம்பியின் மனைவியும், என்னுடைய இன்னொரு தம்பியும் கூறினர், இதற்கிடையே நான் வேறு ஊர்களுக்கு சென்று திரும்பும் பொழுது மருத்துவ மனையில் சேர்த்திருப்பதாக எனக்கு அழைத்துச் சென்னார்கள், மருத்துவ மனைக்குச் சென்று பார்த்த பொழுது உடல் மிகவும் நலிவுற்று கைகால்கள் சோர்ந்தே இருந்தது, ரொம்பவும் அளவாகப் பேசினான், இவ்வளவு உடல் வலிகளை எப்படித்தான் தாங்கிக் கொள்கிறானோ என்று கவலையாக இருந்தது, நல்லாப் பார்த்துக் கொள்ளுங்கள் என்று பக்கத்தில் பார்த்துக் கொண்டு இருந்த அம்மாவிடம் சொல்லிவிட்டு எனக்கும் சிங்கைத் திரும்ப வேண்டி சில வேலைகள் இருந்ததால் திரும்பிவிட்டேன், 

சிங்கைத் திரும்பிய மூன்றே நாட்களில் (புதன், 28 நவம்பர் 2012) 'கிட்னி மாற்றிய பிறகு ரெகுலர் செக்கப் செல்லும் சென்னை மருத்துவ மனைக்குக் வழக்கமான செக்கப்புக்கு அழைத்துச் சென்றோம், இங்கே சோதித்துப் பார்த்து டெங்கி காய்சல், இரண்டு நாள் முன்பே அழைத்து வந்திருக்கலாம் என்கிறார்கள், ரொம்ப சீரியஸ் கண்டிசன்' என்று எனக்கு இன்னொரு தம்பியும், தங்கையும் அழைத்துச் சொன்னார்கள், வீட்டில் உள்ள அனைவருக்கும் பயண ஏற்பாடுகள் செய்து கொண்டு இருக்கும் பொழுதே, மருத்துவர் இன்னும் இரண்டு மணி நேரம் மட்டும் டைம் கொடுத்திருக்கிறார், நுரையீரலில் இரத்தக் கசிவு இனிமே எதுவும் செய்ய முடியாதாம், செயற்கை சுவாசம் கொடுக்கிறார்கள், நாம சொன்னா எடுத்துவிடுவாங்க, (இன்னொரு) அண்ணன் வரட்டம் என்று காத்திருக்கிறேன் என்று திரும்ப அழைத்துச் சொன்னார்கள். அப்போது என் (அடுத்த) தம்பியிடம், உடல் உறுப்பு தானம் செய்ய ஏதேனும் வாய்பிருக்கிறதா என்று கேளேன், என்றேன், 'இதுக்கு தான் ஏற்கனவே கிட்னி பிரச்சனை, கண்ணும் பார்வை குறைவாகத்தானே இருந்தது, இப்ப நுரையீரலும் போய்விட்டது தானம் செய்யும் அளவுக்கு எதுவும் இல்லையே' என்றான், தம்பியின் உடலுறுப்புகளில் ஏதேனும் ஒன்றையாவது வாழ வைக்க முடியும், அவனது இருப்பை நிலைநிறுத்திக் கொள்ளலாம் என்ற நம்பிக்கையும் பொய்ததது, ,    மரண செய்திகளைவிட இன்னும் கொஞ்ச நேரத்தில் மரண செய்தி வரப்போகிறது என்று உறுதியாக தெரியும் பொழுது ஏற்படும் கையறு நிலையையும் வேதனையும் விவரிக்க முடியாது,

சரியாக விமானநிலையத்திற்கு புறப்படும் முன் 'நம்முடைய சகோதரன் நம்மைவிட்டு போய்விட்டான்' என்று உறுதியான தகவலாக குறுந்தகவலை அனுப்பி இருந்தான் இன்னொரு தம்பி. சென்னை மருத்துவ மனையில் எல்லா வழக்ககங்களையும் முடித்து உடல் நாகை வரும் முன்பே, நான் திருச்சியில் இறங்கி தஞ்சைக்கே வந்துவிட்டேன்,  அங்கிருந்து இரண்டு மணிநேர பயணத்தில் அதிகாலை 4 மணிக்கு நகைச் சென்று தம்பி வீட்டிற்குச் செல்ல, வாசலில் பந்தல், ஜெனரேட்டர் வைத்து மின் விளக்குகள், உறவினர் பெண்கள், தம்பி மனைவி, எங்கள் அக்கா, தங்கை, அம்மா என பெண்கள் குழுமி இருக்க, நடுக்கூடத்தில் ஐஸ் பெட்டியினுள் தூங்குவது போல் படுக்க வைத்திருந்தனர், பார்த்து நான்கு நாள் தானே ஆகிறது, அதற்குள் இப்படியா ? என்னைப்பார்த்ததும் அம்மா, அக்கா, தங்கை எல்லோரும் கதறினார்கள், அவனது மனைவி பிரமைப்பிடித்தது போல் இருந்தார், அவனது 10 வயது மகனுக்கு இப்படி ஒரு நிகழ்வு வீட்டில் நடந்தது தெரியாதது போல் தூங்கிக் கொண்டு இருந்தான்,

ஊரில் அப்பா காலத்தில் இருந்தே எங்கள் குடும்பம் ஓரளவு அறிமுகமானது தான், அண்ணன் சிவில் எஞ்சினியர், தம்பி சிங்கையில் இருந்து திரும்பிய பிறகு எலக்டிகரிகல் ஸ்டோர் நடத்தி வந்தான் என்ற வகையில் அஞ்சலிக்காக பெரிய கூட்டமே கூடி இருந்தது, ரொம்ப நேரம் வளர்த்தாமல் முதல் நாள் மூன்று மணிக்கு இறந்தவனை மதியம் 12 மணிக்கு இறுதிப் பயண ஏற்பாடு செய்துவிட்டோம், தனது அப்பா இனி வரமாட்டார் என்று தெரியாமல் தம்பியின் மகன் செல்போனில் விளையாடிக் கொண்டு இருந்தான், பிறகு அவனுக்கு மொட்டை அடித்து, தண்ணீர் தூக்க வைத்து, எனது மகளும், மகனும் கூட சித்தப்பாவிற்காக தண்ணீர் குடம் சுமந்து வந்தனர்.

இறுதிப்பயணம் புறப்பட 

ஆறில் ஒண்ணு போகுதே,,,,,,,,,,,,என்ற என் தங்கையின் கதறலும்

'ஒண்ணும் தெரியாத புள்ளையை கொள்ளிப் போட கூப்பிட்டுப் போறியே' இறந்த தம்பியின் மனைவியின் கதறல், தம்பியின் சேர்ந்து எரியச் சென்ற உயிருடன் இருக்கும் அவனது மாமியார் தானமாக கொடுத்த கிட்னி ஆகியவற்றை நினைக்க மிகுந்த சோகமாக இருந்தது

*****

யாருக்கு ஒருவருடைய அருகாமையும் ஆதரவும் தொடர்ந்து தேவைப்படுதோ அவர்களை அவருடைய மரணம் பாதிக்கும், மற்றவர்களுக்கு எங்கும் நடைபெறும் சாதரண நிகழ்வு, தம்பியின் குடும்பதிற்கும், பெற்றவள் என்ற முறையில் அம்மாவிற்கு மகனின் இழப்பு, காலம் மருந்திடும், தம்பிக்கு பால் ஊற்றிய அன்றே, 'அவளுக்கு (மருமகளுக்கு) சின்ன வயசு, மறுமணம் செய்து கொடுத்துவிடலாம்; என்று என் அம்மாவே முன்மொழிந்துள்ளார்,  விதவை வாழ்வு பற்றி அம்மாவுக்கும் தெரியும், தம்பி மனைவிக்கு மறுமணம் நடக்க வேண்டும் என்பதே எங்கள் அனைவரது விருப்பமும் என்று சொல்லி வந்தோம்.

தனிக் குடும்பம் என்று ஆகிவிட்டதால் தம்பியின் இறப்பு ஒரு இரு நாள் கடைமை என்று ஆகிவிட்டது, இறுதிப் பயண ஏற்பாடு, அதற்கு முன் தம்பிக்கான சிகிச்சைகள் எல்லாவற்றிலும் ஊரில் இருந்த அண்ணன், தம்பி, அக்கா, தங்கை செய்துவந்தனர், என் பங்குக்கு நான் குடும்பத்துடன் சென்று வந்தேன் என்பது தவிர்த்து எதையும் செய்யவில்லை,  விமான டிக்கெட் வாங்கி விமானத்தில் வந்தவர் என்ற முறையில் மரண வீட்டிலும் நமக்கு விஐபி அந்தஸ்து கொடுத்து நம்மை கவனிக்கின்றனர், வெளிநாட்டில் வசித்தால் நெருங்கிய சொந்தத்தின் சாவில் கூட நமக்கு என்று எந்த பொறுப்பும் கிடையாது, எல்லாவற்றிலும் இறங்கி, எடுத்து செய்ய வேண்டிய நாம் எல்லாவற்றிலும் ஒதுங்கி இருக்கும் படி ஆகிவிட்டதே என்று வெட்கமாகவும், வருத்தமாகத்தான் இருந்தது. 

கடந்த மூன்று ஆண்டுகளாக எதைத் தின்றாலும் வாந்தி, கடுமையான வயிற்றுவலி உடல் உபாதைகளில் இருந்து தம்பி நிரந்தர விடுதலை அடைந்துவிட்டான் என்று நாங்கள் அனைவருமே தேற்றிக் கொண்டோம், இறக்கும் முன்று நாட்களுக்கு முன்பு பார்த்து வந்தது எனக்கு கூடுதலான ஆறுதல்

தேவையற்ற அலைப்புகளை தடுக்க, ரொம்ப நாளாக அலைபேசி எண்ணை மாற்ற நினைத்திருந்தேன், இனிமேல் மாற்றும் எண்ணம் வராது

28 நவம்பர், 2012

வேலைப் போனால் கோழை - 1


நமக்கு எதுவும் நடக்காது என்கிற நம்பிக்கை நம்மை கவிழ்த்துவிடும் என்பது பலருக்கு தெரியாத உண்மை, நல்லாத்தானே போய்கிட்டு இருக்கு எதுக்கு மாறி பிரச்சனைக்கு வழி தேடனும் ? என்று ஆண்டு கணக்கில் தனியார் நிறுவனங்களில் சம்மணமிட்டு பணிபுரிபவர்களை அம்மணமாக்கி ஆப்பு எப்போ வைபார்கள் என்று தெரியாது, ஆனா ஆப்பு கிடைப்பது உண்மை, இதற்கு காரணம் திறமை இன்மை அல்லது சோம்பல் ஆகிய காரணங்களைவிட குறிப்பிட்ட சூழலில் வேலைப் பார்த்து பழகிவிட்டு வெளியே போனால் ஒப்பேற்ற முடியாது, காலம் தள்ள முடியாது என்கிற காரணங்களையும் தவிர்த்து நாம தான் நிறுவனத்தைத் தாங்குகிறோம் என்கிற நினைப்பும் சேர ஒரு சிலரை ஒரே நிறுவனத்தில் பல ஆண்டுகள் அழுத்திவிடும். சென்ற ஆண்டு சீனா, மலேசியா என்று பறந்து பறந்து வேலை செய்தாலும் இந்த ஆண்டு சொல்லிக் கொள்ளும் அளவுக்கு எனக்கு தொடர்ச்சியான வேலை இல்லை, 

காரணம் எல்லாம் சரியாக செயல்பட்டுக் கொண்டு இருப்ப்பதால் சிஸ்டம் / சர்வர் பரமரிப்பு வேலைகள் தவிர்த்து அன்றாட வேலைகள் மிகக் குறைவே, யோவ் யாராவது வேலை கொடுங்கைய்யா என்று கெஞ்சாத குறையாக ஏதாவது கணிணி பிரச்சனை என்று சொன்னால் விழுந்தடித்து செய்து முடித்துவிட்டு வழக்கம் போல் கூகுள் ப்ளஸ் அல்லது வலைப்பதிவில் மேய்வது, திரட்டியை பார்ப்பது தான் முழுநேர வேலை என்றாக, வாங்கிற சம்பளத்துக்கு வேலை செய்யவில்லை என்பதுடன், என்னை தொடர்ந்து வைத்திருப்பது நிறுவனத்திற்கும் நட்டமே, இது சரிப்படாது என்கிற முடிவில் பிற நிறுவனங்களுக்கு ஏன் வேலைக்குச் செல்ல முயற்சிக்கக் கூடாது ? என்கிற நினைப்பில் முட்டுக்கட்டையாக இரண்டு மாத நோட்டீஸ் என்கிற நடப்பு நிறுவனத்தின் ஒப்பந்ததை கிடப்பில் போட்டுவிட்டு, கடந்த ஜூலை 26 முதல் அதையே விண்ணப்ப படிவங்களில் குறிப்பிட்டு பயோடேட்டா என்னும் தற்குறிப்பு கல்வித் தகுதி, அனுபவத் தகுதியை நிரப்பி அனுப்பத் துவங்கினேன்,


இங்கே சிஸ்டம் மற்றும் சர்வர் தொடர்பில் வேலை வாய்ப்பு என்பவை பெரிய நிறுவனங்களில் ஒப்பந்த அடிப்படையிலும் சிறு நிறுவனங்களில் நேரடி பணியாளராகவும் எடுப்பார்கள், ஆனாலும் நம்மை வேலைக்கு எடுப்பவர்கள் இரண்டு மாதம் தான் சென்று சேருவேன் என்று சொன்னால் ஏற்றுக் கொள்வார்கள் என்பது அரிதே, 

எதாவது முன்கூட்டிய திட்டமாக (ப்ராஜெக்ட்) மூன்று மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் அவ்வாறு எடுக்க வாய்ப்புள்ளது, அல்லது ஏதாவது கிளை நிறுவனம், அல்லது புதிய நிறுவனம் இரண்டு மாதம் கழித்து துவங்குவதாக இருந்தால் இரண்டு மாதம் கழித்து சேருகிறேன் என்றால் ஏற்றுக் கொள்வார்கள், அவ்வாறான வாய்ப்புக் கிடைப்பதும் அரிதே, 50க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் போட்டும் அழைத்தவர்கள் ஓரிருவர்கள் மட்டுமே அவர்களும், சிஸ்டம் என்ஜினியரிங்களில் குறிப்பிட்ட துறையில் (வெப் அட்மின், நெட் ஒர்க் அட்மின் போன்று)  மட்டுமே வேலை என்பதால் அதற்கான சிறப்பு தகுதி தனித்து இல்லை, நான் ஆல் இன் ஒன் என்பதால் எடுக்கவும் தயங்கினார்கள், இவ்வாறாக  வாரம் ஒரு நேர்முகத் தேர்வு என்று சென்று வந்து கொண்டிருந்து, 40 நாட்கள் கடந்த நிலையில் செப்டம்பர் 6 ஆம் தேதி, நிறுவன உரிமையாளர் உன்னிடம் பேச வேண்டும் அறைக்கு வருகிறாயா ? என்று அழைப்பு விடுத்தார்.

நினைத்தது போலவே 'நீ ஏன் வெளியே வேலை தேடக் கூடாது ?' உனக்கு தேவையான நேரம் எடுத்துக் கொள், நாங்க உடனடியாக செல்ல வேண்டும் என்று சொல்லவரவில்லை, நிறுவனத்தில் இந்த ஆண்டு பிஸ்னஸ் சரி இல்லை, ஐடி வேலையை அவுட் சோர்ஸ் கொடுத்துடலாம் என்று நினைக்கிறேன், எல்லா டாகுமெண்டுகளையும் தாயார் செய்துவிடு.......' என்று சொல்ல, எனக்கு ஒன்றும் அதிர்சியாக இல்லை, நான் ஏற்கனவே அதைத்தான் செய்து வருகிறேன் என்று அவரிடம் சொல்லாமல் மனதுக்குள் சிரித்துக் கொண்டு, 'நானே சொல்லாம் என்று இருந்தேன், எனக்கு கொடுக்கும் சம்பளம் உங்களுக்கு கட்டிப்படியாகாது, வேற யாராவது ஜூனியர் பார்த்து எடுத்துக் கொள்ளுங்கள், நான் பயிற்சி கொடுத்துவிட்டு செல்கிறேன் என்று நான் சொல்ல இருந்தேன், ஆனால் எனக்கு இங்கு வேலை செய்ய விருப்பம் இல்லை என்று நீங்கள் தவறாக நினைக்கக் கூடும் என்பதால் சொல்லவில்லை, என்றேன், பின் அவரே தொடர்ந்தார், நீ இங்கே ஆறு ஆண்டு வேலை செய்திருக்கிறாய், உனக்கு ஏதாவது இழப்பீடு தருகிறோம் என்று சொல்ல எனக்கு பருத்தி புடவையாக காய்தது போலவே இருந்தது, சரி என்று சொல்லிவிட்டு சிரித்து கொண்டே வெளியே வந்தேன், அப்பாடா இனி திருட்டுத் தனமாக இண்டர்வியூ செல்லத் தேவை இல்லை, 
ஒருவாரம் கழித்து ஒருமாதத்திற்குள் நான் அனைத்து தகவல்களையும் கோப்பாக்கி ஒப்படைப்பதுடன் பணியில் இருந்து விலகுவதாக எழுதிக் கொடுத்துவிட்டு, அடுத்த நாள் முதல் ஏதாவது நேர்முகத் தேர்வென்றால் நிறுவனத்தில் சொல்லிக் கொண்டே சென்றேன்,  அதன் பிறகு வேலைக்கு இரண்டு மாதம் காத்திருப்பு தேவை இல்லை என்பதால் வாரத்திற்கு நான்கு நேர்முகத் தேர்வுக்கான அழைப்புகள் வரத் துவங்கியது. கார்ப்ரேட் நிறுவனங்களில் கக்கூஸ் கழுவச் சென்றாலும் ஏற்கனவே வேற கார்ப்ரேட்டில் கக்கூஸ் கழுவி இருந்தால் தான் நல்லா கழுவத் தெரியும் என்று நம்புவார்கள் போல, என்னை அழைத்த கார்ப்ரேட் நிறுவனங்களெல்லாம் கார்ப்ரேட் எக்ஸ்பீரியன்ஸ் இல்லை என்று இரண்டாம் கட்ட நேர்முகத்திற்கு அழைக்கவில்லை, இந்த நிலையில் நாளை மறுநாள் (அக்டோபர் 12) முதல் வேலை இல்லை என்ற நிலையில் அன்று மட்டுமே காலை ஒன்றும் மாலை ஒன்றுமாக இரு நேர்முகத்திற்கான அழைப்புகள், இது கண்டிப்பாக கிடைத்துவிடும் என்ற நம்பிக்கை, ஏனெனில் அதில் ஒன்று வீட்டுக்கு வெகு அருகில்...... அக்டோபர் 11 ஆம் தேதி என்ன ஆச்சு என்றால்............?

12 நவம்பர், 2012

சாதிவெறி கிராமத்தில் மட்டும் தானா ?


தலித் ஆடவர் வன்னிய பெண்ணை காதலித்து மணந்து கொண்டார் என்பதற்காக பெண்ணின் தந்தை தற்கொலை செய்து கொள்ள அவரது உறவினர்கள் கிளர்ந்தெழுந்த பெரும் கலவரத்தில் தலித் உடமைகள், வீடுகள் எரிக்கப்பட்டு இருக்கிறது. சாதியத்தின், வருணாசிரமத்தின் கொடுமைகளின் கோரமுகங்கள் அவ்வப்போது வெளிப்படும் நிகழ்வுகளில் வழியாக தற்போதும் வெளிப்பட்டு இருக்கிறது, இதைத் தவிர்த்து இதற்கு வேறென்ன முக்கியத்துவம் ?

இருக்கிறது. ஆம் தமிழகத்தில் கலப்பு திருமணங்கள் நடக்காமல் இல்லை, ஆனால் அவை அனைத்தும் தலித்துகளுடன் தொடர்பில்லாமல் பல்வேறு சாதியத் திருமணங்கள் நடந்தேறிவிடுகின்றன, நாடார் மனமகனை முதலியார் பெண் மணந்துவிட்டாள், தேவர் சாதி ஆண் செட்டியார் பெண்ணை மணந்துவிட்டான் என்பதெல்லாம் சாதிப் பிரச்சனையாகுவதோ, கலவரங்களை உருவாக்குவதோ இல்லை, ஆனால் தாழ்த்தப்பட்ட சமூகம் தவிர்த்த பிற சாதிய கலப்பு மணங்கள் ஓரளவு சகிப்புத் தன்மையுடன் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன, எங்கள் உறவினர்களில் பல்வேறு சாதியைச் சார்ந்தவர்களுடன் திருமணங்கள் நடந்தேறியுள்ளன, அவையெல்லாம் எந்த ஒரு காலத்திலும் பிரச்சனையாகிப் போனதுமில்லை, இவற்றில் காதல் திருமணங்களும், பார்த்து வைத்த திருமணங்களும் கூட உண்டு, ஆனால் தலித் ஆடவர் ஒருவருடன் ஓடிய உறவுக்காரப் பெண்ணையும் அவரது தாயாரையும் இதுவரை எங்கள் உறவினர்கள் சேர்த்துக் கொண்டதே இல்லை, நான் தலித் சமூகம் சார்ந்தவன் இல்லை என்று வெளிச்சம் போட இதை நான் எழுதவில்லை, இதை எழுதுவதையே கூச்சமாகக் கருதுகிறேன்,  ஒரு நாடாரையும், ஒரு பத்தரையும், ஒரு நாயுடுவையும், தஞ்சாவூர் கள்ளரையும் , ஒரு பார்பனரையும் திருமண சம்பந்ததில் வைத்திருக்கும் எங்கள் உறவினர்கள் தலித்துகளுடன் ஏற்பட்ட திருமண பந்தத்தை மட்டும் அவமானகரமாக நினைக்கிறார்கள்.

காலம் காலமாக தாழ்தப்பட்டவர்களை தீண்டத்தகாதவர்கள் என்றும் இறந்த விலங்குளை உண்ணுபவர்கள் என்றும் நினைத்துக் கொண்டிருக்கும் சமூகம், அவர்களை சம்பந்தியாக்கிப் பார்பதில் உடன்படுவதில்லை என்பது தவிர்த்து வேற எந்த காரணமும் தெரியவில்லை, ஒரு காலத்தில் தீண்டத்தகாத சமூகமாக கருதப்பட்டு தோள் சீலை அணிய தடைவிதிக்கப்பட்ட நாடார் சமூகங்கள் அந்த நிலையை மிகுந்த ஒற்றுமையுடன், பொருளியல் ரீதியாக முன்னேற அவர்கள் மீதான சாதிய தாழ்வு நிலையை அவர்கள் என்றோ கடந்து வந்துவிட்டார்கள், ஆனால் தலித்துகள் ஏன் அவ்வாறு வளரவில்லை ? சுதந்திரம் அடைந்து 65 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையிலும் அவர்கள் நிலை மாறவில்லையா ? கண்டிப்பாக மாறி இருக்கிறது, ஆனால் அவர்களுடைய சாதிப்பிரிவு நான்காம் பிரிவில் வருவதே காரணம். தாழ்த்தப்பட்டவர்கள் தவிர்த்து பிற சாதியினர் குடியானவர்கள், 'சாதி தமிழர்கள்' என்கிற அடைமொழியை தனக்கு தாமே கொடுத்துக் கொண்டு வைசிய, சத்திரிய பிரிவை கிட்டதட்ட பிராமணப் பிரிவுக்கு இணையாக உயர்த்திக் கொண்டார்கள், இதில் பார்பனர்கள் பங்கு என்று எதுவும் கிடையாது, தனக்கு கீழே ஒரு தாழ்த்தப்பட்ட சாதி இருந்தால் தன் சாதி தாழ்ந்ததல்ல என்கிற எண்ணத்தில் அனைத்து சாதிகளுமே தலித்துகளின் முன்னேற்றத்தை ஏற்றுக் கொண்டதும் இல்லை, அவர்களை அரவணைத்துக் கொண்டதுமில்லை.

எட்டணா காசைக் கீழே வைத்தால் கும்பிடு போட்டு குணிந்து பொறுக்கி எடுத்துக் கொண்டு போவான், இன்னிக்கு பேண்டு போட்டுவந்து சரிக்கு சமமாக நின்னு கூலிய தெனாவெட்டாகக் கேட்கிறான், வெட்டியானுக்கு திமிரைப் பாருங்க என்றெல்லாம் தன் தவறை உணராது கூழைக் கும்பிடு போடாத தலித்துகளை 'திமிர்' தனம் என்று சொல்லும் சுடுகாட்டுக் காட்சிகளை நேரில் பார்த்தே இருக்கிறேன்,  எங்கள் சாதி சமூகத்தில் எவனும் பிச்சை எடுத்ததில்லை, விபச்சாரம் செய்ததில்லை, மாமா வேலைப் பார்த்ததில்லை என்று சொல்லும் நிலையில் எந்த சாதியும் இல்லை என்பதே உண்மை, பட்டினி சாவை எந்த சாதியாவது தடுத்திருக்கிறதா என்றால் அதுவும் இல்லை, டாஸ்மாக் எச்சில் க்ளாசில் சாராயம் குடிக்கும் பொழுது அதற்கு முன் அதில் குடித்தவன் எந்தசாதி (தற்பொழுது பேப்பர் டம்ப்ளர் வைத்திருக்கிறார்கள்), வேற ? எந்த சாதி பாலியல் தொழிலாளியிடம் செல்லுகிறோம் என்றேல்லாம் அவ்வாறு செல்பவர்கள் ஆராய்ச்சி நடத்துவதும் இல்லை, ஆனால் திருமணம் நீண்டகால பந்தம் என்று நம்புவதால் அதற்கு மட்டும் தன்னைவிட தாழ்ந்த நிலையில் இருக்கும் சாதி என்றால் முகம் சுளிக்கிறார்கள், 

நாங்கள் சாதிக் கொடுமைகள் எதையும் செய்வதில்லை என்று பார்ப்பனர்கள் மார் தட்டுகிறார்கள், ஆனால் /பிராமணர்களுக்கு மட்டும் வீட்டுவாடகை; என்னும் அவர்களது அறிவிப்பு பலகைகள் அவர்களது சொல்லுக்கும் செயலுக்கும் தொடர்பில்லாதாதைக் காட்டுகிறது, பார்பனர்கள் சாதிக் கொடுமை செய்யாததற்கு அவர்கள் திருந்திவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை, ஆனால் இதுபோன்ற குழுசார்ந்த கொடுமைகள் செய்யும் அளவுக்கு அவர்களுக்கு ஆள் பலம் போதாது என்பது தவிர்த்து வேறொன்றும் இல்லை, வெளிமாநிலங்களில் வன்கொடுமைகள் தொடர்ந்து நடந்தே வருவாதால் தமிழ் நாட்டு பார்பனர்கள்  திருந்திவிட்டார்கள் என்பது மாற்றம் என்றாலும் அந்த மாற்றத்திற்கு காரணம் எண்ணிக்கை தான், அதையும் ஒப்புக் கொள்ள மனமில்லை என்றால் பெரியாரைத்தான் காரணாமாகச் சொல்ல முடியும், பெரியாரின் பெண் விடுதலையால் முழுக்க முழுக்க பயன்பெற்றவர்கள் பார்பனப் பெண்களே, மொட்டை அடித்துக் கொண்டு காவி புடவையுடன் தென்படும் பார்பனப் பெண்கள் கனிசமாக குறைந்து மறைந்துவிட்ட நிலை ஏற்பட்டுள்ளது, வேலைக்குச் செல்லும் பெண்கள் மிகுதியாகிவிட்டார்கள், இது பிறமாநிலங்களை ஒப்பு நோக்க தமிழகத்தில் மிக அதிகம்,

சென்னையிலோ, திருச்சி போன்ற பெருநகரங்களிலோ கலப்பு திருமணங்கள் பெரிய அளவில் கலவரமாக வெடிப்பதில்லை, ஏனெனில் சாதிய பெரும்பான்மையுடன் ஒரு இடத்தில் வசிக்கும் வாய்ப்பு நகரங்களில் குறைவு, கிராமங்களில் சாதி வாரியாக சிறுபான்மை பெரும்பான்மை என்று வசிப்பதால் அங்கு இவை அன்றாடப் பிரச்சனையாகிப் போகிறது. மற்றபடி நகரத்தில் வசிப்பவர்கள் நாகரீகம் அடைந்துவிட்டார்கள் என்று சொல்ல ஒன்றும் இல்லை.

பிரசன்னவோ அல்லது சினேகாவோ அவர்களில் ஒருவர் தாழ்த்தப்பட்ட பிரிவைச் சார்ந்தவராக இருந்தால் அவர்களுடைய சாதி வெளிப்படையாக அறிவிக்கப்பட்டு இருசாதி வழக்கப்படி திருமணம் நடந்திருக்குமா ?

இன்றைய தேதிக்கு பார்பனர்கள் மட்டுமே உயர் சாதியினர் இல்லை, தலித்துகள் அல்லாத அனைத்து சாதிகளுமே தங்களை உயர்சாதியாக நினைத்துக் கொண்டும், அவர்களுக்கு நேர் எதிர் தாழ்ந்த சாதியாக ஒட்டுமொத்த தலித்பிரிவுகளையும் வைத்துள்ளனர், என்னைக் கேட்டால் இதற்கு நிரந்தர தீர்வு தலித்துகள் அனைவருமே ஒட்டுமொத்தமாக மதம் மாறி இவர்கள் முகத்தில் காரி உமிழ்வது தான் சிறந்த தீர்வாக இருக்கும். 

தங்களை இந்துக்கள் என்று அறிவித்துக் கொள்ளும் வரையில் தலித் விடுதலை சாத்தியமற்றது, அதைப் பெரும்பான்மை பிறசாதிகள் கொடுத்துவிடவும் மாட்டார்கள்.

*******

அனைவருக்கும் தோழர் நரகாசூரன் நினைவு நன்னாள் வாழ்த்துகள்.

27 அக்டோபர், 2012

டிவிட்டர் சுட்ட...தடா !


இராஜன் விவகாரம் ஊதி வெடித்தப் பிறகு டிவிட்டரில் முனைப்பாக செயல்பட்ட டிவிட்டர்கள் கணக்கை மூடிவிட்டு ஓடிவிட்டனர். எனக்கு நெருங்கிய டிவிட்டர்/பதிவர் ஒருவரிடம் கேட்டேன், 'இங்கே இந்தியாவில் கருத்து சுதந்திரம் இல்லைண்ணே அதனால் மூடிவிட்டேன்' என்கிறார், பெரும்பாலனவர்கள் டிவிட்டரில் ஆபாச மொழி நடை என்கிற பெயரில் குற்றம் சுமத்தப்பட்ட சாக்கில் கருத்து சுதந்திரத்தில் கை வைத்திருப்பதாகவே நினைக்கின்றனர்.  ஆபாச மொழி நடை என்பதன் மொழி நடையை வரையறுப்பதன் சிக்கல்களும், அவற்றின் மீதான தவறான புரிந்துணர்வுகள் ஆபாச மொழி நடைகளைவிட ஆபாத்தானவை என்கிற கருத்தாக்கம் வலுப்பெறத் துவங்கியுள்ளது, உதாரணத்திற்கு சென்னையில் வெகு சாதாரணமான மொழி நடை மற்றும் பதிவர் ஜாக்கி சேகர் பயன்படுத்தும் **த்தா என்பது கேட்பதற்கு ஆபாசம் என்றாலும் அதன் வீச்சு மிகக் குறைவு, தென் தமிழகத்தை சேர்ந்த ஒருவர் சென்னைக் காரர் தன்னை **த்தா என்று திட்டிவிட்டார் என்று வருத்தப்பட்டால் அவரை வட்டார வழக்கு புரிந்துணர்வு அற்றவர் என்று தான் முதலில் புரிந்து கொள்ள முடியும், பிறகு தான் அந்த சொல் அவரை ஏன் காயப்படுத்தியது என்று ஆராய்ச்சிக்கு செல்ல முடியும்.

பார்பனர்களிடையே அன்றாடம் பயன்படுத்தப்படும் சூத்திரவா என்பதன் பொருள் மிகவும் கீழ்த்தரமான பொருள் கொண்டதாகவே சொல்லப்படுகிறது, சூத்திரன் என்றாலும் அடுத்த ஐந்தாம் பிரிவான பஞ்சமன் என்பதன் பொருளும் கிட்டதட்ட வேசி மக்கள் என்பதன் பொருள் கொண்டதாம், பார்பனர் ஒருவர் உங்களை சூத்திரன் என்று சொல்லாவிட்டாலும் தன்னைத் பிராமணன் என்று கூறிக் கொண்டாலே எதிரே உள்ளவர் பார்பனர் அல்லாதவர் அல்லது அவர் உங்களை மறைமுகமாக சூத்திரன் என்று வரையறுக்கிறார் என்றே பொருள், இதை உணர்ந்து தான் மொழி நடைகளில் பிராமணர் என்று சொல்லுதல் நல்லதற்கில்லை என்பதற்காகவே பாரதி போன்றோர் 'பார்பனர்' என்கிற சொல்லாடலைப் பயன்படுத்தி வந்தனர் என்பது கவனிக்கத் தக்கது. பொதுவெளியில் தன்னை பிராமணர் என்று பிரகடனப்படுத்திக் கொள்பவர் மற்றவர்களை சூதிரனாக சித்தரிக்கிறார் என்று குற்றம் சாட்டினால் அதற்கான எந்த விளக்கங்களும் ஏற்கத்தக்கதல்ல.

இந்தியாவில் கருத்து சுதந்திரம் இருக்கிறதா ? பிரபலங்களிடம் அவை இருக்கிறது, ஏனெனில் அவர்களை சட்டம் எந்த விதத்திலும் தண்டிக்காது, ஆளும் காங்கிரசை பாஜாகவினர் பாராளுமன்றத்தில் தேச துரோகிகள் என்று ஊழல் குறித்த குற்றச்சாட்டுகளின் குறியீடாகச் சொல்கின்றனர், அதற்காக அவர்கள் மன்னிப்பு கேட்டது போலவும் தெரியவில்லை, சட்டமன்றத்தில் ஜெ கருணாநிதியை விமர்சிக்கின்றார், கருணாநிதி ஜெவை விமர்சிக்கின்றார் விஜயகாந்தும் ஜெ-வும் பலமுறை மேடைகளில் தனித் தாக்குதல்கள் நடத்திக் கொள்கின்றனர், இதற்கெல்லாம் எந்த அவதூறு வழக்குகள் கிடையாது, நன்றாக வாசிக்கக் கூடியவர் என்று சாதிய அடிப்படையில் கருணாநிதியை கிண்டல் அடித்தவர் தானே இளங்கோவன், இவையெல்லாம் மேடை நாகரீகமாகவும், அரசியல் ரீதியான கருத்து சுதந்திரமாகப் பார்க்கப்படுவதை செய்தித்தாள்களின் படிக்கும் எவரும் தமக்கும் அந்த உரிமை இருப்பதாக நினைத்து கொண்டு இருக்கின்றனர், அரசியல்வாதிகள், திரைப்படத் துறையினர் பற்றிய அன்றாட அநாகரீக விமர்சனங்கள் என்றும் நடக்கத்தான் செய்கிறது, ஆனால் அவற்றை எழுத்து சாட்சியாக இணையங்களில் செய்யும் பொழுது பிரபலங்களின் மீதான மானப் பிரச்சனையாக ஓட்டு எந்திரங்கள் தண்டிக்கப்படுகின்றனர். இத்தகைய தண்டனைகள் காயம்பட்டவர்களுக்கான வலி நிவாரணியா என்று பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை, இத்தகைய ஆபாசத்தாக்குதல்கள் பெருங்கடலில் விழுந்த காக்கையின் எச்சம் போன்று கரையக் கூடியது என்றே அவர்கள் உணர்ந்திருந்தாலும் சாமனியனுக்கு பெற்றுத்தரும் தண்டனைகள் தனது ஆளுமையைப் பற்றி பயம் கொடுக்கச் செய்யும் என்றே நம்புகிறார்கள். 

இணையத்தளங்களில் ஆபாசங்களுக்கு தண்டனைக் கொடுக்க வேண்டுமென்றால் ஜெயமோகனை கீழ்தரமாக, ஆபாசமாக எழுதும் சாரு போன்றவர்களும் விதி விலக்குகளாக இருக்க என்ன இருக்கிறது. ஆனால் அதே சாருவே இதுபற்றி மாற்றுகருத்தாக இணையங்களில் ஆபாசம் தண்டனைக்குரியது என்று திருவாய்மலர்கிறார், ஆக இவர்களின் ஆபாசம் குறித்த அலறல்கள், சாதரணவர்கள் பிரபலங்கள் மீது செய்துவிடக் கூடாது என்கிற எச்சரிக்கை  மற்றும் மறைமுக மிரட்டல்களாகவே  நினைக்க முடிகிறது.

எழுத்து சுதந்திரம், கருத்து சுதந்திரம் பற்றிய எல்லைகளை அதிகார வர்க்கம் முடிவு செய்யும் நிலையில் அவைப்பற்றிய அடிப்படை புரிந்துணர்வு இல்லாமல் எழுதிவிட்டு கருத்து சுதந்திரத்தில் கைவைத்தாக நாம் புலம்புவது பொருளற்றதாகவே உள்ளது. பெண் சுதந்திரம் என்பது ஆண்வர்க்கம் விருப்பப்பட்டு இடும் பிச்சை என்று பலர் நினைப்பது போல் எழுத்து சுதந்திரம் என்பவை அதிகார வர்க்கம் கண்டுகாணாமலும் விட்டு வைத்திருக்கும் பிச்சை என்று தான் நினைக்க முடிகிறது.  எழுத்து சுதந்திரத்தின் எல்லைகள் பற்றி எந்த ஒரு கருத்தும் வரையறுக்கப்படாத நிலையில் டிவிட்டர்கள் கணக்கை மூடிவிட்டுச் செல்வது வரவேற்க்கத் தக்கது தான்.

பிரபலத்தை எதிர்ப்பது குற்றம், ஆபாசமாகப் பேசுவது குற்றம் இதற்காக சிறைச் சாலைக் கதவுகள் திறந்தே இருக்கும்  பிரபலத்தை எதிர்க்க மற்றொரு பிரபலமாக இருக்க வேண்டும் இங்கு தகுதிகள் தான் எதிர்பவரையும் எதிர்க்கப்படுவரையும் முடிவு செய்கிறது. 

23 அக்டோபர், 2012

ராஜன்லீக்ஸ் செய்த தவறு !


பிரபலங்கள் டிவிட்டுகிறார்கள், பேஸ்புக்கில் இணைந்திருக்கிறார்கள் என்றெல்லாம் அவர்களை பாலோ செய்யும் வழக்கம் எனக்கு இல்லை, தொலைகாட்சி மற்றும் செய்தி ஊடகங்களுக்கு பிரபலங்களின் கருத்து முக்கியமானதாக இருக்கலாம், ஊடகங்கள் பிரபலங்களின் பின்னால் செல்லட்டும், நமக்கு தேவை நம்மைப் போன்றவர்களின் கருத்துகள் எத்தகையது என்று அவர்களிடம் நம் கருத்தை பகுர்ந்து கொள்ளலாம் என்பதால் தான் வலைப்பதிவில் எழுதுவதை விருப்பத்துடன் பொழுது போக்காகவும் செய்துவருகிறேன், வலைப்பதிவு போன்ற பொது ஊடகத்தில் கருத்து செல்பவர்கள் பிரபலங்கள் என்றாலும் அவர்களுடைய கருத்துகளுக்கு மாற்றுக் கருத்து முன்வைக்கப்படும் பொழுது அதை எதிர்கொள்வார்கள் என்ற மனநிலையில் பிரபலங்களைப் பின் தொடருவர்கள் பட்டியல் மிகப் பெரியது, அதற்கான பலனைத்தான் இராஜன் மற்றும் பிறர் எதிர் கொள்கிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது, 

சாமானியர்கள் காவல் துறையிடம் தங்கள் பிரச்சனைகளை முறையிட்டால் காது கொடுத்துக் கேட்டு நடவடிக்கை எடுக்க நேரமில்லாமல் இருக்கும் காவல்துறை பிரபலங்கள் முறையிட்டால் உடனேயே நடவடிக்கை எடுத்துவிடுமாம், எனக்கு தெரிந்து காவல் துறையினருக்கு ஊதியம் கொடுப்பது பிரபலங்கள் இல்லை, பொதுமக்கள் வரிப்பணம் தான் அவர்களுக்கு ஊதியமாகக் கொடுக்கப்படுகிறது, ஆனால் பிரபலங்களுக்கு சேவை செய்வதற்கு கொடுக்கும் முன்னிரிமையை மற்றவர்களுக்கு கிஞ்சித்துக் கொடுப்பதில்லை, எனவே வலைப்பதிவு அல்லது டிவிட்டர் போன்ற ஊடகங்களில் இடம் பெறும் பிரபலங்களைச் சீண்டுவது அல்லது எதிர்கருத்து சொல்வதெல்லாம் யோசித்து செய்ய வேண்டிய ஒன்றே நடந்த நிகழ்வு பாடமாக ஆக்கியுள்ளது.

"பிறகொரு சமயம் ‘இடஒதுக்கீடு’ தொடர்பான கருத்து விவாதத்தில் ஒரு மாணவி நூற்றிக்கு அருகில் மதிப்பெண்கள் பெற்றிருந்தாலும், 'FC’ என்ற காரணத்தினாலும், பண வசதிக் குறைவாலும், தனது மேற்படிப்பு தடைபட்டு போன வருத்தத்தை பகிர்ந்த போது, அந்த தருணத்தில் இந்த இட ஒதுக்கீடு அவசியம் தானா என்று நினைத்தேன். அது அந்த தருணத்தில் எழுந்த உணர்ச்சியின் வெளிப்பாடு. நீங்களும் அப்படித் தான் யோசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் மீண்டும் என் சாதியைப் பிடித்து இழுத்து, ‘இட ஒதுக்கீட்டுக்கு எதிரானவள் சின்மயி’ என்று பிரச்னை கிளப்பப்பட்டது." - சின்மயி

இட ஒதுக்கீடு குறித்து இவர் டிவிட்டரில் பகிர்ந்த தனிப்பட்ட கருத்துகளுக்கு இவர் வருத்தம் தெரிவித்தது போலவும், இட ஒதுக்கீடு குறித்து இவர் தவறாக விளங்கிக் கொண்டது போலவும் எந்தக் கருத்தும் இவரது விளக்கங்களில் இல்லை, மாறாக நீங்களும் அப்படித்தான் நினைக்கக் கூடும் என்றே எழுதி இருக்கிறார், இட ஒதுகீடு என்பது தாழ்த்தப்பட்டவர்களுக்கும், பிற்பட்டவர்களுக்கும் பிடிங்கிக் கொடுக்கப்படும் அல்லது பார்பனர்களிடம் அபகரிக்கப்பட்ட சொத்து போன்று தான் இவர்கள் கருத்து கொண்டிருக்கிறார்கள், இத்தகைய புரிந்துணர்வு உள்ளவர்களிடம் விவாதம் செய்வதும் பின் தொடர்வதனாலும் சமூகத்திற்கு என்ன பலன் ?  திராவிட இயக்கங்கள் காலம் காலமாக இது பற்றிப் பேசி வந்திருந்தாலும் பார்பனர்களின் எத்தனை பேர் இட ஒதுக்கீடு பற்றி சரியான புரிந்துணர்விற்கு வந்திருக்கிறார்கள், இராஜன் போன்றவர்கள் ஏன் இவர்களிடம் போய் மண்டையை உடைத்துக் கொள்ள வேண்டும் ? மாறாக முற்றிலுமாக புறக்கணித்திருக்கலாமே. தினமலர் போன்ற பார்பன ஊடகங்களைப் படிக்கும் பொழுது நமக்கு தேவையற்ற இரத்த அழுத்தம் ஏற்படலாம் என்று நான் அவற்றைப் படிப்பதை முற்றிலும் தவிர்த்தே வருகிறேன், வலைப்பதிவிலும், கூகுள் ப்ளஸிலும் பார்பனிய கருத்துகளைக் கொண்டிருப்பவர்கள் இணைந்திருந்தாலும் நான் அவர்களை பின் தொடர்வது கிடையாது,

சமூகத்தில் பெண்ணுக்கு எதிரான அதுவும் பெண் பிரபலமென்றால் உடனேயே நடவடிக்கை அரசு எந்திரங்கள் உண்டு, காவல் துறை விசாரணைக்கு அழைத்துச் செல்லப்படும் பெண்கைதி காவல் துறையினாலே பாலியல் வண்முறை செய்யப்படும் நாட்டில் தான் இத்தகைய பெண் உரிமைகாவலர்களும் இருக்கிறார்கள் என்று நாம் பெருமைப் பட வேண்டும்.

பிரபலங்களை அதுவும் பெண் பிரபலங்களை பின் தொடர்ந்து சூடுபோட்டுக் கொள்ளாதீர்கள், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ள ஆயிரக்கணக்கானோர் இருக்கும் பொழுது அரசு எந்திரங்களை காவலாக வைத்திருப்பவர்களிடம் உங்கள் உரையாடல்கள் தேவை தானா ?

வலைப்பதிவில் பெண்கள் அதிக அளவில் எழுதுவது மகிழ்ச்சி அளித்தாலும் ஒரு பெண்ணாக நான் அசிங்கப்பட்டேன், ஒரு பெண்ணை அசிங்கப்படுத்துகிறார்கள் என்கிற பரப்புரைகள் உண்மையிலேயே பெண்கள் எழுதுவதை முடக்கிவிடும். எதாவது பிரச்சனை என்று வரும் பொழுது அதை எளிதாக திசைத் திருப்பும் ஆபத்தாக 'பெண்ணென்றும் பாராமல் என்னை இழிவு படுத்திவிட்டார்கள்' என்று உங்களை நோக்கிச் சொல்லப்படும் குற்றச் சாட்டுகளை உங்களால் எதிர்கொள்ள முடிந்தால் நீங்கள் பிரபல பெண்களின் கருத்துகளுக்கு எதிர்கருத்து சொல்லலாம்.

வலைப்பதிவில் கருத்து சுதந்திரங்கள் பாதிக்கப்படாமல் இருக்க வேண்டுமென்றால் பிரபலங்களிடம் விவாதம் செய்யாதீர்கள், இங்கு மருத்துவர் ருத்திரன் கூட மனநலமில்லாத மருத்துவர் என்று கிண்டல் செய்யப்பட்டார், மிகவும் கேவலமாகப் பேசப்பட்டார், இருந்தும் அவர் தன்னைப் போன்ற பிரபலத்தை கேவலப்படுத்துகிறார்கள் என்றெல்லாம் புலம்பியது போல் தெரியவில்லை, பொது ஊடகங்களில் மாற்றுக் கருத்து என்ற பெயரில் வசைச் சொற்கள் வழக்கமானது என்று தான் ருத்ரன் போன்ற பிரபலங்கள் நம்புகிறார்கள், திமுகவின் அழுகிய நாக்குகளான நன்னிலம் நடராஜனும் தீப்பொறி ஆறுமுகமும் பொதுவாழ்க்கைக்கு வந்த முதல்வர் ஜெ வைப் பேசாத பேச்சா ? 

வலைப்பதிவர் இராஜன் தனிப்பட்ட முறையில் பாடகி சின்மயியை தரக்குறைவாக பேசி இருந்தால் அவர் மன்னிப்பு கேட்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை, இவ்வாறு இல்லாமல் வெறும் கருத்து மோதல்களுக்காக இராஜன் தண்டிக்கப்பட்டால் பாடகி சின்மயியின் செயலுக்கு நாம் கண்டனம் தெரிவிக்க வேண்டும், இராஜன் நிபந்தனையின்றி விடுவிக்கப்பட வேண்டும்.

இது தேவையா இது தேவையா என்று எழவு விழுந்த வீடுபோல் அவரவருக்குள் பேசுவதை விட்டு வெளிப்படையான விவாதங்கள் நடத்தப்பட்டு. இது குறித்த ஸ்கிரீன்சாட்டுகள், டுவிட்டுகள் எல்லாம் வெளியே வந்தால் தான் உண்மை தெரியவரும். பிரபலத்தை எதிர்த்த ஒரே காரணத்தால் வலைப்பதிவர்கள், ட்விட்டர்களின் கருத்து சுதந்தரம் பறிக்கப்படுவதும். அவர்கள் முடங்குவதும் தான் முடிவு என்பதை நான் ஒப்புக் கொள்ளமாட்டேன்

20 அக்டோபர், 2012

குக்குப் சதுப்பு நிலத் தீவு - 2 !


மனித வாழ்க்கையாக இருந்தாலும் தாவிரங்கள் உள்ளிட்ட ஏனைய உயிர்வகையாகட்டும் விதிவிலக்குகள் எதுவும் கிடையாது, வாழ்கை என்பது போராட்டம் தான் . தன்னை காப்பாற்றிக் கொள்வது சந்ததிகளைப் பெருக்கிக் கொள்வது தவிர்த்து உயிர்வாழ்க்கையில் பெரிய சாதனைகள் செய்வதற்காக எந்த உயிரும் உருவாகுவதில்லை, இதற்கு மேம்பட்டும் மனித வாழ்க்கையில்  வசதிகளின் தேடல், அதைப் பெருக்கிக் கொள்ளுதல், ஆளுமைகள், இருப்பதை இழக்கக் கூடாது என்பதில் செய்யப்படும் முன்னேற்பாடுகள்  இவற்றைச் செயல்படுத்தத் துனியும் தன்னலம் இவை மட்டும் தான் மனித வாழ்கைக்கும் ஏனைய உயிர் வாழ்கைக்குமான வேறுபாடுகள். எதிர்கால சேமிப்புகள் ஆகியவற்றில் எறும்புகள் உள்ளிட்டவை முனைந்து செயல்பட்டாலும் தலைமுறைகள் தாண்டி பயன்படுத்தும் சேமிப்புகளை மனித இனம் தவிர்த்து வேறெந்த விலங்கினமும் செய்வதில்லை. இனம்பெருக்கம் தன்னலம் தாண்டிய மறு உற்பத்தி என்ற அளவில் மனித இனத்திற்கும் ஏனைய உயிரினத்திற்குமான வேறுபாடுகள் வியக்க வைக்கும் அளவில் நடைபெறுகின்றன, ஏனைய உயிரினங்களில் இனப்பெருக்கம் என்பவை சூழல் பாதுகாப்புகள் உள்ளிட்டவையாகவும், அதனை கட்டுப்படுத்தும் திறனும் அதே சூழலில் அமையப் பெற்றதாகவும் உள்ளன, இனப்பெருக்கம் உற்பத்தி மிக பெரிய அளவில் நடக்கும் உயிரனங்களில் அதன் வாழ்நாள்கள் மற்றும் பாதுகாப்பு மிகவும் சொற்பமானதே, மாறாக நெடுநாள் வாழக்கூடிய உயிரினப் பெருக்கத்தின் உற்பத்தி திறன் குறைவாகவும், அதன் பாதுகாப்புகள் பலமிக்கதாகவும் இருக்கும், மனித வேட்டையாடலில் மறைந்து போன உயிரனங்கள் தவிர்த்து இந்த அளவுகோளில் ஏனைய உயிரன உற்பத்திகளை இயற்கை சமஅளவில் வைத்திருக்கிறது


*****


விசைப் படகில் எங்களைத் தவிர்த்து மற்ற மூன்று சுற்றுலாவாசிகள் மற்றும் படகு செலுத்துபவர், தீவிற்கும் கரைக்கும் இடைப்பட்ட தொலைவு முக்கால் கிமி  இருக்கும், செம்மண் நிற கலங்களான கடல் தண்ணீர், கரையை ஒட்டிய கடல் பகுதிகளிலும், கடலின் நடுப்பகுதிகளிலும் மீன் வளர்ப்பு தொட்டிகள் 1000க் கணக்கானவை அங்காங்கே அமைந்திருந்தது,  இறால் உள்ளிட்ட பல்வேறு வகை மீன் வகைகளை வளர்த்து எடுத்து ஏற்றுமதி செய்கிறார்கள், கடல்நீருக்குள்ளேயே இவ்வாறு மீன் வளர்ப்பது அதன் சூழலில் வளரவிடுவது என்றாலும் அதற்கான இரைகள் போடப்பட்டுதான் வளர்க்கப்படுகின்றன,  மீன் உற்பத்தி மற்றும் வளர்ச்சிக்கு பல்வேறு உத்திகளை கையாள்கிறார்கள், இவ்வாறு வளர்க்கப்படும் மீன்களுக்கும், உரம் போட்டு வளர்க்கப்படும் பயிரினங்களுக்கும் உற்பத்தியைக் கூட்டுதல் விரைவாக அறுவடை செய்தல் ஆகியவை பொதுவானவை என்பதால் அவற்றின் சத்துகள் கேள்விக்குறிதான், எனினினும் தரையில் தொட்டிகள் அமைத்து வளர்க்கப்படும் மீன்களைவிட இவை கூடுதலான சத்துகள், செரிவுகள் கொண்டவகையாக இருக்கக் கூடும்.


தீவுப்பகுதியின் கரைப்பகுதி அடர்ந்த மரங்களால் நிறைந்திருந்தது, அங்கே நாரைகள் பல அமர்ந்திருந்தன, சதுப்பு நிலக்காடுகள் அமைந்தப் பகுதிகளில் நாரைகளுக்கு உணவுக்கு கிடைக்கும் மீன்களுக்கு குறைவு இருக்காது என்பதை உணர்த்தும் படி ஏகப்பட்ட நாரைகள், அதன் கரகர கீச் கீச் ஒலி கேட்டுக் கொண்டு இருந்தது, படகு தீவின் முகப்படை அடைந்ததும் இறங்கினோம், திரும்பி வரும் பொழுது அலைபேசியில் அழைத்தால் வந்து அழைத்துச் செல்வதாக படகோட்டி   அங்கு ஒட்டப்பட்டு இருந்த எண்களைக் காட்டினார், தீவு முகப்பில் நுழைவுக் கட்டிடம், 'ஜோகூர் மாநிலத்தின் தேசிய பூங்கா என்ற பொருளில் அறிவுப்புடன் நுழைவாயில், உள்ளே சென்றால் தீவிற்குள் நுழைவுக் கட்டணம் செலுத்தி பின்னர் செல்ல வேண்டும், வெளிநாட்டு சுற்றுலாவாசிகளுக்கு 25 ரிங்கிட்டும், உள்நாட்டினருக்கு 5 ரிங்கிட்டும் கட்டணம் வாங்குகிறார்கள், நண்பர் மலேசியவாசி என்பதால் 10 ரிங்கிட்டுக்கு இரண்டு நுழைவுச் சீட்டுகளைப் பெற்று வந்தார், அந்த தீவின் முகப்பு கட்டிடமே கடல் தண்ணீரினுள் தான் அமைக்கப்பட்டிருந்தது, சுற்றுலா வளர்ச்சிகாக பல மில்லியன் ரிங்கிட்டுகளை செலவிட்டு அரசாங்கம் பல வசதிகளை செய்து தந்திருப்பதாக நண்பர் குறிப்பிட்டு இருந்தார், 

கட்டிடத்தை பின்வாசல் வழியாகக் கடக்க, தீவின் நுழைவாயி, ல் அதன் பிறகு வழியாக மரப்பாலங்கள் தான் தென்பட்டன, 1 1/2 மீட்டர் குறுக்களவில் மரப்பலகைகளால் அமைக்கப்பட்ட பாதைகள் தான் போடப்பட்டிருந்தன, நேராக ஒரு வழி தொடர்ந்து செல்ல அதன் இடையே 200 மீட்டர் தொலைவில் நான்கு மாடி உயரக் கோபுரம்,. அதன் உச்சியில் இருந்து அங்கே ஓடும் சதுப்பு நில ஆற்றைக் கடந்து அடுத்துப் பகுதிக்குச் செல்லும் தொங்கு பாலம், டவரில் கழிவறை வசதிகள் இருந்தன,  தொங்கு பாலத்தில் மூவருக்கு மேல் நடந்து செல்லக் கூடாது, அவர்கள் கடந்த பின்பு தான் அடுத்தவர்கள் செல்ல வேண்டும் என்ற அறிவிப்புகள் இருந்தன, தொங்கு பாலத்தில் ஏறினேன்,  நம் எடைக்கும் காற்றுக்கும் ஏற்றபடி கொஞ்சம் ஆட்டம் தான், புகைப்படம் எடுக்கும் பொழுது செல்பேசி தவறி விழலாம் என்பது தவிர்த்து அந்த ஆட்டம் ஒன்றும் பயமுறுத்தவில்லை. அடுத்தப் பகுதி கோபுரத்தை அடைந்து கீழே இறங்க இன்னொரு மரப் பாலப் பாதை சற்று வளைந்து சென்றது.

அந்தப் பகுதிகள் முழுக்க முழுக்க சதுப்பு நிலக் காட்டு மரவகைகள் இருந்தன, அவற்றின் வேர்கள், வேர்கள் கிளைத்த மரங்கள், கடல் நீர் ஏற்ற இரக்கம் இந்தப் பகுதியில் எப்படி இருக்கும் என்பதன் அளவுகோலாக இருந்தன,  சதுப்பு நிலத்தில் வாழும் தவளை இனம் போனறு கால்கள் உடைய  மீன்வகைகள், நண்டுகள், இவைகள் பெரும்பாலும் தண்ணீரிலும் ஈரத்தரையிலும் வாழக்க் கூடியவை, அடந்த நிழல்களும், சேற்று நீரின் குளுமையும் மிகவும் இனிமையாக இருந்தது, ஒரு 200 மீட்டர் நடந்த பிறகு ஒரு மரப் பாலம் வழியாக முன்பு துவங்கிய வழியை குறுக்காக அடையும்  இடம் இருக்கிறது, அங்கே துடுப்பு ஓடங்கள் இருந்தன, வெள்ளம் பெருகும் நாள்களில் அந்த காட்டினுள் சுற்றுலா படகு பயணம் செய்வதற்கான ஏற்பாடுகளாக அவைகள் இருந்தன, நாங்கள் சென்றது செவ்வாய் கிழமை என்பதால் எங்களையும் சேர்த்து ஐவர்  மட்டுமே தீவுக்குள் இருந்தோம், எங்களுடன் வந்த மற்ற மூவர் எங்களைப் பின் தொடரவும் இல்லை, தீவின் நடுப்பகுதிக்குச் செல்லும் மரப்பாதைக்கு வந்தோம், குரங்குகள் பல இருந்தன, எல்லாம் கொஞ்சம் பயந்தது போல் நம்மைப் பார்த்து விலகியே சென்றன, பாலி  தீவு குரங்குகள் போல் எதையும் தட்டிப் பறிக்க முயற்சிக்கவில்லை.


கொஞ்சம் தூரம் நடந்த பிறகு இயற்கை ஆர்வலர்கள் அவ்வப்போது அங்கு வந்து மரங்களை நட்டுப் பாதுகாக்கும் இடங்கள் பல இருந்ததைப் பார்க்க முடிந்தது, இங்கே எதற்கு வந்து நட வேண்டும், இயற்கையாகவே அவை வளருகின்றன அல்லவா ? சதுப்பு நில மரவகைகள் 100க் கணக்கானவை உண்டு, அவற்றின் இனப்பெருக்கும் பெரும்பாலும் ஒரே மாதிரி தான், மரத்தில் முருங்கைகாய் போன்று நீளமாக ஆனால் பட்டை பட்டையாக இல்லாமல்  10 செமி விட்டத்தில் ஒரு சற்று கூறிய முனையுடன் அடிக் குச்சி  தண்டு காயாகவும்  அதன் மேல் முனை மொட்டுப் பகுதிகள் மரத்தில் தொங்கி வளர்ந்து வருகின்றன, அவை நீளமாக இருந்தாலும் உறுதியானவை கிடையாது, உடைத்தால் எளிதில் உடையும், குரங்குகள் பறித்து அந்த காய்களை கடித்து உண்ணுகின்றன,  மரம் சுமார் 20 அடி உயரும் பொழுது காய்க்கத் துவங்குகின்றன, மரங்கள் 100 அடி வரை வளர்க்கின்றன, குரங்குகள் தவிர்த்து வேறு எதுவும் அந்த காய்களை உண்ணுவதாக தெரியவில்லை, காய்கள் முற்றிய நிலையில் காம்புகள் நைந்து போக காற்றடிக்கும் பொழுது அவை செங்குத்தாக கீழே விழுந்து சேற்றில் சொருகினால் அவை கீழ் பகுதி வேராகவும், மேல் பகுதி இலையாகவும் வளரும் வாய்ப்புகள் உள்ளன,  அவ்வாறில்லாமல் காய்ந்த சேற்றிலோ, வேரிலோ விழுந்தால் உடைந்துவிடும், செங்குத்தாக விழ போதிய எடை மற்றும் ஈரப்பதம் இருந்தாலும்  காற்றடிக்கும் பொழுது விழுவதால் செங்குத்தாக விழும் வாய்ப்புகள் மிகவும் அரிது,  எனவே இவ்வகை மரம் காய்க்கும் காய்களில் இருந்து இனப் பெருக்க வாய்ப்பு வெறும் 10 விழுக்காட்டு காய்களுக்குத் தான் கிடைக்கின்றனவாம், அவற்றிலும் அடந்த கருநிழலைத் தாண்டி வளர்ந்து வருபவை மிகக் குறைவு.  அந்த மரங்களின் அடர்வில் மீதம் 90 விழுகாட்டு விதைகள் முளைத்தாலும் வளர வாய்ப்பில்லை, வெறும் இரண்டு விழுக்காட்டு மறு உற்பத்திகள் தான் காய்கின்ற விதைகளில் இருந்து நடக்கின்றன,  அடர்வு குறைந்த பகுதியை சீர் செய்ய அந்த விதைகளை செயற்கையாகவே நட்டு வளர்த்து வேறு இடத்தில் வைக்கிறார்கள்.




சுமார் 600 மீட்டர் வரை உள்ளே மரப் பாதை செல்கிறது, அதன் முடிவில் 5 மாடி அளவுக்கு உயர்ந்த கோபுரம், சுற்றிலும் பார்வை இட அமைத்திருக்கிறார்கள், மரப் பாதைத் தவிர்த்து வேறு வழி இல்லாத இந்த இடத்தில் அந்த கோபுரமே அங்கு ஓடும் சதுப்பு நில ஓடை வழியாக படகுகள் மூலம் கட்டுமானப் பொருள்கள் கொண்டு வந்து கட்டி இருக்க வேண்டும் என்பது தவிர்த்து வேறு வாய்ப்பில்லை, கோபுரத்தின் மீது ஏறினோம், உலகில் இருக்கும் பெரிய சதுப்பு நிலக்காடுகளில் இந்த குக்குப் தீவும் ஒன்றாம், குக்குப் என்றால் தடுப்பு, அதாவது நில அரிப்பை தடுக்கும், மற்றும் சுனாமி அலைகள் உள்ளிற்றவற்றை இந்த தீவைக் கடந்து செல்லாது நிலப்பகுதியைக் காக்கும் தீவாம், உச்சியில் நின்று பார்க்க சுற்றிலும் மரங்களின் தலைகள், பச்சை தளைகள். நடுக்கடலில் நின்று பார்க்க சுற்றிலும் கடல் நீர் சூழப்பட்டது போல் இருப்பது போன்றே சுற்றிலும் கண்ணுக்கு எட்டிய வரை பசுமை பசுமை. அனை அனுபவிக்க ஏதுவாக குளிர்ந்த காற்று. அப்படியே அங்கேயே ஒரு அரை மணி நேரம் அமர்ந்திருந்தோம், 






அங்கே எங்களுடன் படகில் வந்த மூவரும் வந்து சேர அவர்கள் சேர்ந்து நிற்கும் நிழல்படம் எடுக்க உதவினோம், அவர்களும் எங்களுக்கு அவ்வாறே உதவினார்கள், பசி களைகட்டி திரும்பிச் செல்ல நச்சரிக்க கையில் கொண்டு சென்ற தண்ணீரில் கொஞ்சம் குடித்துவிட்டு கோபுரத்தில் இருந்து இறங்கினோம், திரும்பிச் செல்ல நடந்து கொண்டிருக்கும் பொழுது சட சடவென்று மழைக் கொட்டத் துவங்கியது, திரும்பவும் கோபுரத்தின் அடிக்கு வந்து மழை நிற்க காத்திருக்க, ஐந்து நிமிடத்தில் தூறல்களாக மாறியது, திரும்பவும் ஒரு 100 மீட்டர் நடந்ததும் பழையபடி இன்னும் பலத்த மழை, ஓட்டம் ஓட்டம் வேற வழியில்லை, ஒதுங்க இடமில்லை, 600 மீட்டர் ஓடினால் முகப்பு கட்டிடத்தை அடைய முடியும்,  முன்னே நண்பர் ஓட, பின்னே செல்பேசி நனைத்துவிடாமல் பாக்கெட்டில் போட்டு கையில் பிடித்துக் கொண்டு நானும் பின் தொடர்ந்து ஓடினேன். கொஞ்சம் உணவு பொருளோ அல்லது குடையோ எடுத்து வந்திருந்தால் இன்னும் கொஞ்ச நேரம் இருந்திருக்கலாம் என்று தோன்றியது. நடுவே ஒரு மரப்பாலத்தின் அருகே அமைந்த ஓய்வு குடிலில் சற்று நேரம் இளைப்பார மழை நிற்கவும், படகுத்துறைக்குச் செல்ல படகும் காத்திருந்தது ஏறி வந்து சேர்ந்தோம்,


பசிப் போக்க அதே சீனர் கடைக்குச் சென்றோம், அவர் சொன்னது போலவே வெஜிடேரியன் ப்ரைடு ரைஸ் எனக்கும், நண்பருக்கு நண்டு மற்றும் நூடுல்ஸ் உணவு, நான் நினைத்த அளவிற்கெல்லம கவுச்சி வாடை எதுவுமே அடிக்கவில்லை, மிகவும் தூய்மையாக, சுவையாக வெஜிடேரியன் ப்ரைட் ரைஸ் இருந்தது, அங்கே அந்த உணவு கிடைப்பது கொடுப்பினை தான், நண்பருக்கு நண்டை உடைக்க பாக்கு வெட்டி போன்ற ஒன்றையும் கொடுத்திருந்தனர், பொறுமையாக உடைத்து சாப்பிட்டார். அவர் சொன்னது போல் ரிலாக்ஸாக இருக்க வந்திருக்கிறோம், எதற்கு அவசரம் ? அதற்கான தேவையும் இருக்கவில்லை, 



பின்னர் கார் நிறுத்தும் இடத்திற்கு சென்று கடைபாட்டியிடம் மற்றொரு தண்ணீர் பாட்டில் வாங்கிவிட்டு கார் பார்த்துக் கொண்டதற்கு நன்றி சொல்லிவிட்டு கிளம்பினோம், ஏற்கனவே வழியில் பார்த்த ப்ழக் கடையில் சில பழங்களை வாங்கிவிட்டு ஜோகூர் வந்து சேர்ந்தோம்.

*****

குக்குப் தீவுக்குச் சென்று வர ஜோகூரில் இருந்து பேருந்துகள் உண்டு, நாள் ஒன்றுக்கு 2 - 4 பேருந்துகள் வரை இருக்கலாம், கட்டணம் தொலை அடிப்படையில் பார்க்க 10 ரிங்கிட்டுகள் வரை இருக்கும், கடற்கரை கிராமம், கடலில் படகு பயணம், இயற்கை வளமாக அமைந்த சதுப்பு நிலக் காடுகள், புகைப்படம் எடுப்பது இவற்றில் ஆர்வம் உள்ளவர்கள்,  கடலுணவு விருப்பர்கள், சென்றுவரலாம் ஒரு நாள் போதுமானதாகும். விடுதிகள் கூட அங்குண்டு.

18 அக்டோபர், 2012

குக்குப் சதுப்பு நிலத் தீவு - 1 !

சீனர்களை நண்பர்கள் ஆக்கிக் கொள்வது அவ்வளவு எளிதன்று, இதுவரை நீண்ட நாள் அடிப்படையில் இரண்டு நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறேன், அதில் மிகவும் நெருக்கமாக பழகியவர்கள் வெகுசிலரே, மற்றவர்கள் அலுவலகம் விட்டுச் சென்றதும் மறந்துவிடுவார்கள், சீனர்கள் நட்புலகம் அலுலகம் தாண்டியதாக இருப்பதும் குறைவே, சனி-ஞாயிறு இல்லத்தினருடன் செலவிடும் நாள் என்பதில் தெளிவாக இருப்பார்கள், மற்றபடி அலுவலகம் தாண்டிய தனிப்பட்ட நிகழ்வுகளுக்கு அழைத்தால் வருவார்கள், நெருங்கிப் பழகுதல் என்பது என்னைப் பொருத்த அளவில் அலுவலகம் தாண்டியும் சேர்ந்து ஊர் சுற்றுவது, ரொம்பவும் எதிர்ப்பார்ப்புகள்: வைக்கமல் பழகக் கூடியவர்கள் கிடைப்பது அரிது என்ற நிலையில் அவர்களில் ஒரு சிலரை நட்புகளாகத் தொடர்வதும் மிக அரிதே, அந்த வகையில் ஓரிரு சீன நண்பர்கள் எனக்கு உண்டு, இல்லத் தகவல்களையும் பகிர்ந்து கொள்வார்கள், அப்படி கிடைத்த என் வயதை ஒத்த நண்பர் ஒருவருடன் பலமுறை ஜோகூருக்குச் சென்றுள்ளேன், பெரும்பாலும் அவரது பைக்கில் தான் பயணம், நண்பர் ஜோகூரில் கார் வைத்திருப்பவர் என்றாலும், அவர் சிங்கப்பூர் நிரந்தரவாசி என்பதால் மலேசிய பதிவு எண் காரை சிங்கப்பூருக்குள் எடுத்துவர இயலாது, அனுமதியும் இல்லை. எனவே எங்களது பயணம் பெரும்பாலும் அவரது சிங்கப்பூர் பதிவு எண் கொண்ட அவரது பைக்கில் தான் இருக்கும், அவரும் காரை மாற்றி புதுகார் வாங்கியது முதலாக என்னை என்றாவது ஒரு நாள் அதில் அழைத்துச் செல்கிறேன் என்று கூறி ஐந்து ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில் சென்றவாரம், தனது மேலாளர் வெளிநாடு செல்லும் பொழுது மருத்துவ விடுப்பு எடுத்துவிட்டு என்னை காரில் கூட்டிக் கொண்டு ஒரு தீவுக்குச் சென்றுவரலாம் வாக்களித்திருந்தார்,  சொன்னபடியே நானும் திங்கள் காலை 10 மணிக்கு ஜோகூர் சோதனை சாவடிகளை கடந்து காத்திருக்க வந்து அழைத்துச் சென்றார்.


அவர் சொன்ன தீவின் பெயர் குக்குப் தீவு இதை ரோமன் எழுத்தில் KuKup Island என்றே எழுதியுள்ளனர், மலாய் அகராதிகளைப் பார்க்க தடுப்பு தீவு என்ற பொருளில் உள்ளது, ஜோகூர் நகரத்தில் இருந்து ஜோகூர் மாநிலத்தினுள்ளேயே சிங்கப்பூர் அமைந்துள்ள கடற்கரைப் பகுதியில் 80 கி.மீ தள்ளி அமைந்துள்ளதாம்,. நாம இன்னிக்கு ரிலாக்ஸாக இருக்க வந்திருக்கோம், எனவே காரை விரைவாக ஓட்டமாட்டேன் பொறுமையாகவே போவோம் என்று காரை பொதுவான வேகத்தில் ஓட்டினார், தென்படும் ஊர்கள் பற்றி தமக்கு தெரிந்த தகவல்களை சொல்லி வந்தார் இடை இடையே அலைபேசி அழைப்புகள் வர ஓரமாக நிறுத்திப் பேசிவிட்டு சுமார் 2 மணி நேரம் பயணம் செய்து தீவின் பகுதி அமைந்த கடற்கரை கிராமத்திற்குச் சென்றோம், விரைவுச் சாலை வழியாக அந்த இடத்திற்கு செல்ல முடிந்தாலும் எந்த தேவையும் இல்லாததால் ஊருக்குள் செல்லும் சாலை வழியாகத்தான் சென்றோம், போய் சேர பகல் 12 மணி ஆகி இருந்தது, , பேருந்து நிலையம் ஒட்டி கார்கள் நிறுத்தும் இடத்தில் ஒரு கடைக்கு முன்பு காரை நிறுத்தி பூட்டிவிட்டு, பூட்டு என்றதும் மலேசியாவில் காருக்கு இரண்டு பூட்டு போடுவார்கள், ஒன்று கார் சாவியை முடுக்கிவிடுவது, இரண்டாவது ஸ்டியரிங்கில் ஒரு குடை கைப்பிடி கொக்கி போன்று ஒன்றை மாட்டி இன்னொரு பூட்டும் போடுவார்கள் இல்லை என்றால் கார் நிறுத்திய இடத்தில் இருக்காதாம், அது தவிர காருக்குள் மடிக்கணிணி, அலைபேசி உள்ளிட்ட எந்த பொருளையும் வைத்திருக்கமாட்டார்கள், அப்படி வைத்துவிட்டு வந்து பார்த்தால் காருக்கு கண்ணாடியும் இருக்காது, வைத்தப் பொருளும் இருக்காது, நாங்கள் எடுத்துச் சென்ற கைப் பைகளையும், என்னுடைய கடவுச் சீட்டு உள்ளிட்ட வற்றையும் காரினுள் பின்பகுதி பொருள் வைக்குமிடத்து (டிக்கி) ரகசிய அறையில் வைத்து பூட்டிவிட்டு அங்கே கடையில் தண்ணீர் வாங்கிக் கொண்டு காரைப் பார்த்துக் கொள்ளச் சொன்னோம், அங்கே வரும் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையைப் ஒப்பிட்டு சிரம் மேற்கொண்டு கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்வதாக கடைக்கார சீனப்பாட்டி சொல்ல,  கார் நிறுத்தும் கட்டணம் எதுவும் இல்லாமல் பாதுகாப்பிற்கும் இலவசமாகவே ஏற்பாடு செய்தாகிவிட்டது என்கிற நிம்மதியில் கடற்கரையின் முகப்பில் அமைந்த படகு வழி சோதனைச் சாவடிகளை நோக்கிச் சென்றோம், செல்லும் வழியில் இருபக்கமும் கடைகளும் வீடுகளும் இருந்தன, மேம்பட்டு வளர்ந்துவரும் ஒரு கிராமம், எனக்கென்னவோ வேளாங்கண்ணி நகர் அமைப்பை நினைவுபடுத்தியது, 

பேருந்து நிலையத்தை அடுத்து அமைந்த பகுதிகள் பெரும்பாலும் கடல் மீது கட்டப்பட்ட வீடுகளாகவே அமைந்திருந்தன, அவற்றின் நடுவே சாலைகளுக்காக மண் கொட்டி மேடுபடுத்தி சாலைகள் இட்டிருக்க வேண்டும், ஏனெனில் வீடுகள் அனைத்தும் மிதவை வீடுகள் போன்று தூண்கள் மீது தரைத்தளம் அமைத்து அதன் மீது கட்டியிருந்தனர், அடியில் தண்ணீர், சாலையின் இருபுறமும் உணவு விடுதிகள் பல்பொருள் கடைகள் இருந்தன, படகுத்துறை சோதனை சாவடி அருகே இடது பக்கம் அமைந்துள்ள கடலுணவு கடையில் காபி குடுத்துவிட்டு சாப்பாடு பற்றி விசாரித்தது, கொஞ்சம் வயதானவர் கடையின் உரிமையாளர் மற்றும் பணியாளராகவே இருந்தவர் 'தூய சைவ சாப்பாடு செய்துதருவேன், எங்க அண்ணன் அடிக்கடி இங்கே வந்து சாப்பிடுவார், அவரும் சைவம் தான்' என்று கூறி பாலை வார்த்தார், சுற்றிப்பார்த்துவிட்டு வந்து சாப்பிடுவதாக வாக்களித்துவிட்டு கடையை ஒட்டி அடுத்து அமைந்த குறுகிய மரச் பாதை  நடக்க அந்த பகுதி முழுக்க முழுக்க கடல் மீது கட்டப்பட்ட வீடுகள்.

அந்த குறுகிய மரப்பாதைகள் கிளைகளாக பிரிந்து செல்ல செல்ல அங்கங்கே வீடுகள் பல  காங்க்ரீட் தூண்கள் மீதும் சில மரத் தூண்கள் மீதும் கட்டப்பட்டு இருந்தன, நண்பர் சொன்னார், நான்கு ஆண்டுகளுக்கு முன்பு அவர் வந்த பொழுது பெரும்பாலும் மரவீடுகள் தான் இருந்தனவாம், உள்ளே ஒரு அரை கிமி நடந்தோம், மூன்றடுக்கு சீன ஆஞ்சநேய கோவில் ஒன்று உள்ளே இருப்பதாகவும், அதன் மாடியில் ஏறிப்பார்க்க அந்தப்பகுதி முழுவதும் தெரியும் என்றார், அவர் சொன்ன கோவிலை அடைந்தோம், அதுவும் தூண்கள் மீது கட்டப்பட்டு இருந்தது. கழிவறை வசதிகளும் இருந்தன, முன்பெல்லாம் அங்குள்ள வீடுகளின் கழிவுகள் அனைத்தும் கடலுக்குள் நேரடியாக சங்கமிக்க உடல் நலச் சீர்கெடு, நோய், கெட்ட வாடை ஆகியவற்றைக் கருத்தில்  அனைத்துவீடுகளின் கழிவுகளையும் குழாய் இணைப்புகளின் வழியாக கடலுக்கு வெளியே எடுத்துச் செல்கிறார்களாம், பின்னர் சுத்திகரிக்கப்பட்டு கடலில் கலக்கப்படுமா ? அல்லது கடலில் பிறபகுதிகளில் கொண்டு சென்றுவிடுவார்களா தெரியவில்லை, சீனக் கோவிலின் மூன்றாம் மாடியில் நின்று பார்க்க சுற்றிலும் கடலில் மிதப்பது போன்று வீடுகள், அதைத் தாண்டி கடல், அதன் பிறகு ஒரு தீவு. அந்த தீவு தான் குக்குப் தீவு என்று நண்பர் சொன்னார், அங்கே நாம் போகலாம், விசைப் படகில் போகவேண்டும் என்று சொன்னார், அந்தப்பகுதி கடற்கரைப் பகுதிகளுக்கே உரிய லேசான கவுச்சி வாடையுடன் இருந்தது, சுமார் 1000 வீடுகள் அமைந்திருந்தது, வீடுகளின் முடிவில் கடல் பகுதியில் பல்வேறு வகைப்படகுகள் நின்று கொண்டு இருந்தன.

இந்த ஊருக்கு வரும் வழியெங்கும்  வெற்றான நிலங்கள் பல இருக்க, இவர்கள் ஏன் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ள இந்த இடத்தில் அதுவும் கடல்மீது வீடுகட்டிக் கொண்டு இருக்க வேண்டும் ? காரணம் ஒன்றே ஒன்று அவர்கள் அனைவரும் கடல் சார்ந்த பல்வேறு தொழில் செய்பவர்களாக உள்ளனர், பெரும்பாலும் சிறு குழந்தைகள், பள்ளிக் குழந்தைகள் மற்றும் பெரியவர்களைத்தான் பார்க்க முடிந்தது, மற்றவர்கள் வேலைக்குச் சென்றிருக்க வேண்டும். அங்கிருக்கும் மர வழிகளில் கைப்பிடி அல்லது பாதுகாப்பு தடுப்புகள் கிடையாது, ரொம்பவும் அநாயசமாக சைக்கிளிலும் பைக்கிலும் உள்ளே வசிப்பவர்கள் சென்றுவருகிறார்கள், உள்ளே கார்களோ அல்லது கை வண்டிகளோ செல்ல வாய்ப்பே இல்லை, உள்ளே அங்கங்கே கடைகளும், சிறிய அளவிலான உணவு கடைகளும் உண்டு, அவை வசிப்பவர்களுக்கானது சுற்றுலா பயணிகளும் வாங்கலாம். பூட்டப்படாத வீடுகள்கள் பல இருந்தன, அங்கே வசிப்பவர்கள் தவிர்த்து வெளியாட்கள் வந்து திருடுவதற்கு வாய்ப்பில்லாத நிலையில் பொருள் பாதுகாப்புகளுக்கு அவர்களுக்கு பெரிய அறைகூவல் இல்லை, தரையில் இருக்கும் வீடுகள் போன்றே அனைத்து வசதிகளுடன் வசதிக்கேற்ப கட்டியுள்ளனர், சிலர் வீடுகளுக்கு முன்பே மலர் தொட்டிகளை வைத்துள்ளனர். நண்பர் சொன்னார், இந்த வீடுகள் எதையும் அரசு அங்கீகரிக்கவில்லை, அவர்கள் உரிமை கொண்டாடமுடியாது, ஆனால் அவர்களுகான மின்சாரம், தண்ணீர் ஆகியவற்றை இணைத்து கொடுத்திருக்கிறது அரசு. கடல்மட்டம் கூடினால் இந்த வீடுகள் அனைத்தும் வசிக்க வாய்பில்லாதவீடுகள் ஆகிவிடும்.

பின்னர் சென்ற வழியை ஒரு சுற்று சுற்றி அடைந்தோம் திரும்பவும் துவங்கிய இடத்திற்கு வந்து சேர படகு துறை சோதனைச் சாவடி இருநதது, முன்பெல்லாம் சிங்கப்பூருக்கு இங்கே நேரடி படகுச் சேவை இருந்ததாம், தற்போது அந்த சேவையை நிறுத்திவிட்டார்கள், ஆனாலும் இந்தோனேசிய சுமத்திரா பகுதிகளுக்கு படகு சேவைகள் நடைபெறுகின்றனவாம், நாங்கள் அதன் வழியாக குக்குப் தீவுக்குப் போகத் தேவையில்லை, 


படகுதுறை சோதனையகம் வெளிநாட்டுப் பயணத்திற்கானது, பின்னர் குக்குப் தீவிற்கு எப்படிச் செல்வது ? சோதனைச் சாவடியின் இடதுபுறம் அமைந்த தனியார் படகுதுறை வழியாக தீவிற்கு கூட்டிச் செல்கிறார்கள், பயணம் ஒரு ஐந்து நிமிடம் தான், படகு கட்டணம் ? கூட்டத்திற்கேற்றாற்ப் போல, 10 சவாரி கிடைத்தால் ஆளுக்கு மூன்று ரிங்கிட், ஆனால் நாங்கள் படகுக்குச் செல்லும் போது யாரும் சுற்றுலாவிற்கு வரவில்லை, எனவே எங்களிடம் இரண்டு பேருக்கும் சேர்த்து மொத்தமாக 25 ரிங்கிட் கொடுத்தால் கொண்டு சென்று திரும்பவும் அழைத்துவருதாக உறுதி கூறினார்கள். பணத்தைக் கொடுத்துவிட்டு ஏறி அமர்ந்தோம், பின்னர் மேலும் 3 பயணிகள் வந்து சேர்ந்தனர், அவர்களிடம் படகுக்காரர் எவ்வளவு வாங்கினார் என்று தெரியவில்லை. படகு ஓடத்துவங்கியதும், படகு வந்தவழியில் திரும்பிப் பார்க்க  படகுத்துறை சோதனைச் சாவடி சிறிதாகிக் கொண்டு இருந்தது.


அந்த தீவில் என்ன தான் இருக்கும் ? பதிவு நீளம் கருதி அடுத்தப் பகுதியில் பார்ப்போம்.

16 அக்டோபர், 2012

மின்சாரம் இல்லைன்னா ?

இப்போதைக்கு ஏதோ டீசல் பெட்ரோல் வைத்து ஜெனரேட்டரைப் போட்டு மின்சாரம் இல்லாமல் செய்யும் வேலைகளை சமாளிக்கிறார்கள், எரிபொருளே இல்லை என்றால் மின்சார உற்பத்திக்கு வாய்ப்பே இல்லாத நிலையில்.

  • மின் தூக்கி இயங்காத நிலையில் ஒரு பயலும் அடுக்குமாடி வீட்டை வாங்க முன்வரமாட்டான்
  • மின்கலம் உற்பத்தித் திறன் ஆகியவை மின்சாரம் சார்ந்தே இருப்பதால் போதிய அளவுக்கு மின்கல உற்பத்தி செய்ய முடியாத நிலையில் அவற்றின் விலை உயர்வுகள் தவிர்க்க முடியாததாக இருக்கும்.
  • காற்றாலை மற்றும் அனுமின்சாரம் ஆகியவை அடிப்படை வசதிகளுக்கே மட்டுமே வாய்ப்பு என்ற நிலையில் மிஸ்டு காலுக்கும் கட்டணம் என்றாகி  மிஸ்டு கால் கொடுப்பதற்கு மிகவும் அதிகமாக செலவு செய்ய வேண்டி இருக்கும்,
  • பழையபடிக்கு வேப்ப மரக் காற்று தான் சிறந்த ஏசியாக இருக்கும்
  • சைக்கிள் விற்பனை படுஜோராக இருக்கும்
  • மாவாட்டும் வேலைக்கு நல்ல ஊதியம் கிடைக்கும்
  • மாட்டு வண்டி ஓட்டத் தெரிந்தவர்கள் வேலைக்கு மாடு குளிப்பாட்டும் தகுதி இருந்தால் போதும் என்று சேர்த்துக் கொள்ளப்படுவார்கள்
  • மாடுமேய்க்கும் வேலையையோ, பன்றி மேய்க்கும் வேலையையோ யாரும் விமர்சனம் செய்யமாட்டார்கள்
  • குதிரை வண்டிகளை, ரிக்சாக்களை பழையபடி சாலையில் பார்க்கலாம்.
  • சாலைகள் எதுவுமே புதிதாகப் போடாமல், செப்பனிடாமல் கிடக்கும்
  • நான்கு குதிரை பூட்டிய வண்டிக்கு சொந்தக்காரர் பணக்காரன்
  • மின்சாரமே இல்லை என்றால் இணையமோ, இணைய இணைப்போ இருக்காது, பழையபடிக்கு கையெழுத்து படிவங்களாக செய்திகளுக்கு பகிர்ந்து கொள்ளப்படும்
  • மின்சாரம் சார்ந்து இயங்கும் பொறியல் துறையே முடங்கிவிட பட்டப்படிப்புகளைப் படிக்க யாருமே முன்வரமாட்டார்கள்
  • விவாசயம் சார்ந்த தொழில்கள் மட்டுமே தங்கும்
  • மனித வளத்தை சார்ந்திருக்கும் நாடுகள் பொருளாதார இழப்பை சந்திக்கும்
  • புனிதப் பயணம் செய்பவர்களுக்கு ஒட்டகம், குதிரை மாட்டுவண்டிகள் தான் ஒரே பயண நண்பன், இரண்டு ஆண்டுகள் கழித்து (போக வர) புனிதபயணத்தில் இருந்து திரும்பியதாக வந்து சொல்வார்கள்.
  • வீட்டுக்கு வீடு கிணறு தோண்டுவார்கள்
  • இயற்கை வளம் மிக்க நாடுகளை பலமிக்க நாடுகள் ஆக்கிரமிக்கத் துவங்குவார்கள்
  • சினிமா சார்ந்த தொழில்கள், தொலைகாட்சி ஊடகங்கள் முற்றிலுமாக செயல்படாது
  • பொழுது போக்குக்கு பழையபடி தெருகூத்து, பொம்மலாட்டம் களைகட்டத் துவங்கும்
  • பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் அடிப்படைக் கல்வி தவிர்த்து வேறு படிக்க முன்வரமாட்டார்கள்
  • இல்லத்து ஆண்களின் துணித்துவைக்கும் வேலை கிண்டல் செய்யப்படாது
  • பலசரக்கு கடைகள், உணவு விடுதிகள் மட்டுமே நகரங்களில் வேலை வாய்ப்புள்ள நிறுவனங்களாக செயல்படும்
  • தண்ணீர் வரத்தும், ஓட்டமும் இல்லாத இடங்கள் பாலைகளாக மாறும்
  • வெள்ளைக்காரனையும், வெள்ளைத் தோலையும் பொறாமை கொள்ளத் தக்கது என்று எவரும் நினைக்கமாட்டார்கள்
  • வாழும் வாய்பிற்கு இனம் சார்ந்த குழுக்களே ஏற்பாடு செய்யும் என்ற நிலையில் இனம் சார்ந்து ஒன்று திரட்டல்கள் நிகழும்,
  • கோவில் மணி அடிக்கும் வேலைகள் ஆள் எடுப்பார்கள், கடுப்பேற்றும் மத வழிபாட்டு முழக்கங்களுக்கு ஸ்பீக்கர் இருக்காது
  • நெய்விளக்கும், ஆமணக்கு விளக்கும் தான் ஒளி உற்பத்திக்காக (பவர் சோர்ஸாக) இருக்கும் 
  • மின்சாரத்தை நம்பிய பெரு உற்பத்தி முற்றிலும் நின்று போக பட்டினிச் சாவால் மக்கள் தொகை மூன்றில் ஒரு பங்காக குறைந்து போகும்
  • பெட்ரோலுக்கே வழியில்லாத பொழுது ஏரோபிளேனுக்கு ஈத்தர் கிடைக்காது, பெரும் பாய்மரப் படகில் தான் நாடுவிட்டு நாடு பயணம்
  • நவீன மருத்துவ வசதிகள் அனைத்தையும் இழந்துவிடுவோம்
  • முடிந்த அளவுக்கு விமானப் பயணம் மற்றும் வாகனங்களை அனுசக்தி மூலம் இயக்க முயற்சிப்பார்கள், இதன் மூலம் அனுகதிர் வீச்சு, மற்றும் விபத்துகளும் மிகுதியாகும்.

நாம பகட்டு, வசதி என்று நம்பிக் கொண்டுருப்பவை நமது பொருளீட்டல் மற்றும் கல்வி சார்ந்தது மட்டுமே இல்லை, அவை எல்லாம் அறிவியல் கண்டுபிடிப்பான மின்சாரம் போடும் பிச்சையும் கூட. பெட்ரோலையும் மின்சாரத்தையும் நம்பி அம்மி கொத்துவது முதல் கைத்தரி நெசவு உள்ளிட்ட நேரடியாக செய்யும் தொழில்கள் அனைத்தையும் விட்டுவிட்டோம், நாளை மின்சார உற்பத்திக்கு வாய்பே இல்லாத நிலையில் பழைய வாழ்க்கைக்கு நம்மால் திரும்பிச் செல்லும் பொழுது கையறு நிலையில் தான் நாம் இருப்போம். தமிழ் நாட்டினர் தவிர்த்து வேறு எவரும் மின்சாரம் இல்லாமல் வாழப் பழகி இருக்கமாட்டார்கள் என்ற நிலையில் தமிழினம் என்று வீழாது என்று இறுமாப்பு கொள்வோம். :)

எல்லாவற்றையும் கடவுள் படைச்சதுன்னு சொல்லும் முட்டாள்கள் உண்டு, நமக்கு தெரிந்து மின்சாரம் கடவுள் கொடுத்த கொடையன்று, மனித அறிவின் படிப்படியான வளர்ச்சியினால் கிடைத்த நன்மையே, மின்சாரத்தை கடவுள் படைக்காவிட்டாலும் அதைப் படைக்கும் ஆற்றல் உள்ள மூளையைக் கடவுள் தான் கொடுத்தார் என்று எடக்காகக் கூறினால் அதுக்கு முன்பு வாழ்ந்தவர்களை ஏன் இருட்டுக்குள்ளே கடவுள் இருக்கவிட்டார் நாம மட்டும் என்ன ஸ்பெசல் ?

கடவுள் கத்தியையும், துப்பாக்கியையும் வெடிகுண்டுகளையும், அனுகுண்டுகளையும் படைக்காத பொழுது மின்சாரத்தைப் படைத்ததாக மட்டும் பொறுப்பேற்றலாமா ?

14 அக்டோபர், 2012

வேலை மா(ற்)றும் நாள் !


பள்ளியின் கடைசி நாட்கள், கல்லூரியின் கடைசி நாள் போன்று அலுவலகங்களின் கடைசி நாள் அனுபவம், தனியார் நிறுவனங்களில் பணி புரிபவர்களுக்கு கிடைக்கும் நல்வாய்ப்பு. நான் பதவி ஓய்வு நாள் பற்றி இங்கு குறிப்பிடவில்லை, ஒரு வேலையில் இருந்து அடுத்த வேலைக்கு மாறும் நாள் அதாவது அடுத்த நிறுவனத்திற்கு மாறும் முன் பழைய நிறுவனத்தின் கடைசி நாள் பற்றிக் குறிப்பிடுகிறேன்,  ஒரு ஆண்டுக்குள் பணிபுரிந்து விலகுபவர்களுக்கு அலுவலக கடைசி நாள் பற்றிய மிகப் பெரிய அனுபவம் இருக்காது, ஆனால் ஒன்றோ அல்லது அதற்கு மேல் பணி புரிந்து விலகுபவர்களுக்கு பழகிய அலுவலக நண்பர்களைப் பிரிகிறோம் என்கிற வருத்தம் இருக்கும்,  நான் இதுவரை பணிபுரிந்த அலுவலகம் அனைத்திலும் கடைசி நாள் எனக்கு  உணர்ச்சி மிக்கதாகவே அமைந்திருந்தது. பதவி விலகல் கடிதம் கொடுத்த அன்று முதல் உடன்புரியும் யாராவது ஒருவர் 'ஹவ்மெனி டேஸ் மோர் ?' அதைக் குறிப்பிட்டுக் கொண்டே இருப்பார். வழக்கமாக சண்டை போடுபவர்கள் கூட நட்பு பாராட்டும் விதமாக பேசுவார்கள். வேற நல்ல வேலைக்கு நல்ல ஊதியத்திற்கு வேலைக்குப் போகிறோம் என்று தெரிந்தால் வெளியே காட்டிக் கொள்ளாமல் பொறாமை அடைபவர்களும் இருப்பார்கள், ஆனாலும் இவன் போனால் நல்லது என்று நினைக்கும் நிலையை நான் இது வரை ஏற்படுத்தியதே இல்லை.

என்னைப் பொறுத்த அளவில் அலுவலகம் என்பது பகல் பொழுதுகளை இல்லத்தினரிடம் செலவழிப்பதைக் காட்டிலும் கூடுதலாக செலவழிக்கும் இடம். அவர்களில் சிலரை பிடிக்கிறதோ இல்லையோ அவர்களை நாள் தோறும் சந்திக்க வேண்டிய வாய்ப்புள்ள இடம், முடிந்த அளவுக்கு என் மீது தவறே இல்லாவிட்டாலும் என்னைக் குற்றம் சொல்பவர்களைப் பார்த்து முகம் திருப்பிச் செல்லும் வழக்கமும் எனக்கு கிடையாது, எதுவுமே நடக்காதது போல் அவர்களிடம் மிகச் சாதாரணமாகப் பேசுவேன், காரணம் இந்த அலுவலத்திற்கு நான் வரவில்லை என்றால் அவர்களுக்கும் எனக்குமான தொடர்புகள் வாய்பற்றது என்ற நிலையில் நபர் எப்படி பட்ட தன்னலம் கொண்டவராக இருந்தாலும் என் மீதான அவரின் குற்றச் சாட்டுகளை நிருபனம் செய்ய இயலாத நிலையில் அவமானப்படுபவர் அவரே என்று நன்கு தெரிந்த நிலையில் நான் எதையும் பெரிதாக எடுத்துக் கொள்வது கிடையாது, தவிர உடன்பணிபுரிபவர்களிடம் 'இது கூடத் தெரியாதா ?' என்று நக்கல் அடிக்காமல் கேட்கும் உதவிகளை செய்து தருவதுடன் அதில் நேரம் தாழ்வு ஏற்பட்டால் அவர்களிடம் விளக்கி மன்னிப்பு கேட்பதுடன், எப்படியாவது செய்து தரவேண்டும் என்று செய்து முடித்துவிடுவேன், முடிந்த அளவு அலுவலகத்தின் கடைநிலை ஊழியர்கள் வரையிலும் எல்லோரிடமும் அன்பாக பழகுவது தான் எனக்கான நல்ல சூழலை நான் வடிவமைத்துக் கொண்டு பணிபுரிய ஏற்ற இடமாகவும் அமையும் என்ற நம்பிக்கையுடன் அவ்வாறே நடந்து கொள்வதால் அலுவலகத்தில் எனது கடைசி வேலை நாள் எப்போதும் உணர்ச்சிகரமாகவே அமைந்துவிடும்.

ஒரு அலுவலகத்தில் நாம் எப்படி பணி புரிகிறோம் என்பதை நம்மிடம் உதவி கேட்பவர்களின் தயக்கத்தில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம், எந்த ஒரு தயக்கமும் இல்லாமல் எல்லோரும் அலுவலக உதவி கேட்கிறார்கள் என்றால் நாம் செய்து தருவோம் என்று நம்மீது நம்பிக்கை வைத்திருப்பதுடன், நாம் முடியாது என்று சொல்ல மாட்டோம் என்று நம்புகிறார்கள், அப்படியான நம்பிக்கையை நாம் ஏற்படுத்தி இருக்கிறோமா ? என்று  நாம் நம்மை எடை போட்டுக் கொள்ளலாம். பணி புரிய ஊதியம்கொடுக்கிறார்கள், செய்ய வேண்டியது நம் கடமை என்றாலும் கடமை என்கிற பெயரில் நான் பிசி... பிசி அப்பறம் செய்கிறேன் என்று சால்சாப்பு சொல்பவர்களும் எங்கும் உண்டு, சரியான காரணங்களைச் சொல்லி முடிந்த அளவுக்கு தவிர்ப்பது என்பது அலுவலக அரசியல்களின் ஒன்று என்பதை அலுவல் செய்யும் அனைவருமே உணர்ந்துள்ளனர், இந்த நிலையில் கேட்கும் உதவி கிடைக்காவிட்டால் நாமும் எதையும் குறிப்பிட்ட நேரத்திற்கு செய்ய முடியாது என்றே உணர்ந்திருப்பார்கள், அதனால் தான் 'கடமையைத் தானே செய்கிறோம்' என்றாலும் கேட்டவுடன் உதவி செய்பவர்களை அவர்களுக்கு மிகவும் பிடித்து போகும். இங்கு முதலாளியாக இருந்தாலும் பணிபுரிபவர் கேட்டவுடன் செய்து கொடுக்கும் வேலைக்கு 'நன்றி'யை உடனடியாகச் சொல்லிவிடுவார்.  இங்கு கடமை என்பது வேலை செய்வது மட்டுமல்ல ஒப்புக் கொண்டு உடனே செய்து தருவது என்றெல்லாம் பார்க்கும் பொழுது கடமையை தாண்டிய உதவி என்ற வகையில் வகைப்படுத்துவர். 

நான் இதுவரை ஒரு 10 நிறுவனங்களிலாவது பணி புரிந்து இருக்கிறேன், ஒவ்வொன்றின் கடைசி நாள்களும் மிகவும் உணர்ச்சிகரமானது. கண்ணீர், அழுகாச்சி என்றெல்லாம் இல்லாவிட்டாலும் விடைகொடுப்பவர்களிடம் ஒரு சோகமும், அதைத் தாண்டி அடுத்து நீ மேலும் மேலும் உயரவேண்டும் என்கிற வாழ்த்தும், அதுவரை ரொம்ப சாதாரணமாகப் பழகியவர்கள் கூட அவர்களை நான் மறக்கக் கூடாது என்பதை புரிய வைக்க அவர்களின் நம்மீதான கடைசி செயல்பாடுகளும் நம்மால் கவனிக்கத் தக்கதாகவே இருக்கும்,  நாம் அலுவலகத்தில் ஒழுங்காக வேலை செய்திருக்கிறோமா. எல்லோரும் பாராட்டும் வண்ணம் நடந்திருக்கிறோமா  இல்லையா ? என்பதை அலுவலகத்தின் கடைசி நாள் நமக்கு தெளிவாக சொல்லிவிடும்.

பள்ளி மற்றூம் கல்லூடியை போல் தோழமைகளை உருவாக்கித்  தரும் இடம் அலுவலகம். ஈராண்டுக்கும் மேல் பணிபுரிந்த நிறுவனங்களில் நான் பெற்ற கடைசி நாள் துய்ப்புகளை முடிந்த அளவுக்கு நினைவில் இருந்து மீட்டும் ஒவ்வொன்றாக பிறகு எழுதுகிறேன்.

8 அக்டோபர், 2012

கேபிள் சங்கருடன் பொன் மாலைப் பொழுது !


கேபிள் சங்கர் தற்பொழுது சிங்கையில் இருக்கிறார், தனது சினிமா துறை தொடர்பில் ஒரு தயாரிப்பாளரை சந்தித்து உரையாட சிங்கை வந்துள்ளார்,  நேற்று காலையில் விமான நிலையம் செல்ல இயலாத நிலையில் மாலையில் சந்திக்கலாம் என்று பிரியமுடன் பிரபு அழைக்க கேபிளை சந்திக்க மாலை 6 மணி வாக்கில் குட்டி இந்தியா சென்றேன், அங்கே ஏற்கனவே தமிழ்வெளி நிறுவனர் குழலியுடன் உரையாடிக் கொண்டிருந்தார், கட்டித் தழுவலுடன் ஒரு வரவேற்பைக் கொடுத்துவிட்டு கொஞ்சம் அளவளாவிட்டு, திரைப்படம் குறித்து பேச்சு வந்தவுடன் 'இங்கிலிஸ் விங்கிலிஸ்' பார்க்க விரும்புவதாக கேபிள் சொன்னார். அதுக்கென்ன கிளம்பிடுவோம் என்று திரையரங்கையும் காட்சி விபரங்களையும் தெரிந்து கொள்ளும் பொழுது அடுத்த 30 நிமிடத்தில் தெம்பனீஸ் ஜீவி திரையரங்கிற்குச் சென்றால் பார்க்க முடியும், கிளம்புங்க கிளம்புங்க என்று நால்வரும் கிளம்பி வாடகை வாகனம் எடுத்து கிளம்பினோம், 6:40க்கு திரையரங்கிற்குள் நுழைந்து 5 நிமிடம் வரிசையில் நின்று நுழைவுச் சீட்டு வாங்கி உள்ளே செல்லும் முன்பே முன் இருக்கை தான் என்று உறுதியாக தெரிந்த நிலையில் 45 டிகிரி கோணத்தில் திரை தெரிய படம் பார்த்தோம், திரைக்கு மிக அருகில் இருந்து பார்க்க கொஞ்சம் கழுத்து வலிக்கத் தான் செய்தது.

அடுத்த வாரிசு படத்தின் பிறகு தமிழில் ஶ்ரீதேவியின் (அரவிந்தசாமியுடன் நடித்தது அல்ல)  ரஜினியுடன் நான் அடிமை அல்ல, அதன் பிறகு தமிழ் பக்கம் ஒதுங்கவும் இல்லை, ஶ்ரீதேவியை திரையில் பார்க்க ஆவலுடன் இருந்தேன், குரல் முன்பு போல் (சற்று மூக்கால் பேசுவது போன்ற கொஞ்சும் குரலாக )இல்லாமல் கொஞ்சம் கரகரப்பு கூடி இருந்தது, பார்த்தது இந்திப் படம் என்பதால் ஶ்ரீதேவி குரல் பழக்கப்பட்ட குரல் போலும் தெரியவில்லை, எனக்கு சற்று ஏமாற்றமே, மற்றபடி ஶ்ரீதேவியின் தோற்றம் நடிப்பு சூப்பரோ சூப்பர், திரைப்படம் பற்றி விமர்சனங்களை கேபிள் எழுதிவிட்டார், அவரைவிட சிறப்பாக எழுத என்னால் முடியாது, எனவே விமர்சனங்களைத் தவிர்க்கிறேன். ரஜினி, சில்க், ஶ்ரீதேவி, அஜித் ஆகியோரைத் தான் பிரேமுக்கு பிரேம் ரசிப்பேன் என்பதால் ஶ்ரீதேவி வரும் காட்சிகள் அனைத்தையும் விழிக் கொட்டாமல் பார்த்தேன். 

கொஞ்சம் கூட சொதப்பல் இல்லாமல் ஒவ்வொரு காட்சியிலும் ஶ்ரீதேவியின் உணர்வு பூர்வமான நடிப்பு பாராட்டச் சொற்கள் இல்லை, நடிகர்கள் தவிர்த்து சென்ற தலைமுறை நடிகை ஒருவர் படம் முழுவதும் ஆக்கிரமித்து நடித்திருப்பது எனக்கு தெரிந்து ஶ்ரீதேவி ஒருவர் தான். முகத்தின் சுருக்கங்களை மேக்கப் சரிசெய்ததைவிட அவரது கண்கள் மிகுதியாகவே சரி செய்ததிருந்ததால் அதிர்ச்சி அளிக்கும் அளவுக்கு ஶ்ரீதேவியின் தோற்றம் மாறாமல் இருப்பதும் இந்தப் படத்தில் சிறப்பு, ஹார்லிக்ஸ், காம்ப்ளான் அம்மாக்களைப் போன்று படத்திற்கு மிகப் பொருத்தமாக இருக்கிறார்.

ரொம்பவும் முடிச்சுகள் இல்லாமல் கான்வெண்ட் செல்லும் பிள்ளைகள் இருக்கும் இல்லத்தில் நடக்கும் இயல்பான கதை. ஶ்ரீதேவி ரசிகர்களுக்கு மிகவும் அருமையான திரைவிருந்து.

*****

படம் முடிந்து வெளியே வந்து ஸ்டார்பக்ஸில் ஆளுக்கு ஒரு காபி குடித்துக் கொண்டே படத்தைப் பற்றிப் பேசிவிட்டு இரவு 10 மணி வாக்கில் அவரவர் கிளம்பினோம்,  வலைப்பதிவர் நண்பராக மிகவும் இயல்பாக, அன்பாகப் பேசக் கூடியவர்கள் மிகச் சிலரே, கேபிள் சங்கர் பிரபலபதிவர் என்றாலும் பெரிய இயக்குனர் ஆக ஆனாலும் இப்படித்தான் இருப்பார் என்றே நினைக்கிறேன். இது போன்ற நண்பர்கள் நம் இருக்கும் இடத்திற்கு வருகிறார்கள் என்றால் நாம பார்க்காமல் விட்டால் நமக்கும் நட்டமே. 

எழுத்து, தனிமனித பழக்க வழக்கம் இவற்றில் குழப்பிக் கொள்ள ஒன்றும் இல்லை என்று மிகத் தெளிவான புரிந்துணர்வுகள் கொண்டவர்கள் மிகச் சிலரே, அதில் கேபிள் சங்கரும் ஒருவர்.  மிகவும் வெளிப்படையாக பகட்டில்லாமல் பேசும் கேபிள்ஜி த கிரேட். அவருடன் சேர்ந்து ஶ்ரீதேவி நடித்த திரைப்படம் பார்த்த அனுபவமும் மறக்க இயலாத ஒன்று.

கேபிள் சங்கர் வரும் வியாழன் 11 அக்டோபர் வரை சிங்கையில் இருப்பார், தொடர்பு கொள்ள +65 82037082

மதமும் மார்க்கமும் !

எந்த மதத்தை ஏற்றுக் கொண்ட(?) அத்தனை மக்களும் (அல்லது 50 விழுக்காடேனும்) மன மகிழ்ச்சியோடு இருக்கிறார்களோ அதுவே உண்மையான நல்வழி மதமாகும், ஆனால் அப்படி ஒன்று உலகில் இருந்ததே இல்லை




"மதம் பிடித்தால் யானையைவிட மனிதன் மிதிக்கும் உயிர்கள் எண்ணிக்கையில் மிகுதி"



இறைவன் - மதம்

இறைவன் எந்த ஒரு மதத்தையும் படைக்கவில்லை மாறாக மதங்கள் தங்களுக்கான இறைவனை படைத்துக் கொண்டன என்று சொல்வதே சரி !
கடவுள் குறித்த கற்பனை புனிதங்களைவிட/புரிதல்களை விட அவைபற்றிய உண்மைகள் மிகவும் இயல்பானவை/எளிதானவை !

-கோவியார்